Jeyamohan's Blog, page 2291
September 1, 2011
பேக்கர்
அன்புடன்
சேது வேலுமணி
செகந்திராபாத்
அன்புள்ள வேலுமணி
தாமதமான கடிதத்துக்கு மன்னிக்கவும்
நலமாக இருக்கிறீர்கள் அல்லவா?
லாரிபேக்கர் பற்றிய கடிதம் கண்டேன். லாரிபேக்கர் பாணி கட்டிடங்கள் நம் தட்பவெப்பநிலைக்கு தாக்குபிடிக்கின்றன. ஆனால் நம்முடைய கடுமையான உபயோகத்துக்கு நிற்பதில்லை என்று சொல்கிறார்கள்
ஜெ
யாகவா வருகை
ஒருமுறை யாகவா முனிவரை சந்திக்கும் பேறு எனக்குக் கிடைத்திருக்கிறது. தொண்ணூறுகளின் கடைசியில். ஒரு ஓட்டலில் யாகவா முனிவர் தனபாலன் என்பவருடன் வந்து இறங்கி யாருடனோ ஆவேசமாகப் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டேன். அப்போது எனக்கு அவர் மேல் நம்பிக்கை வரவில்லை. அவரது ஞானமார்க்கத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.
ஆனால் இன்று திடீரென்று அவர் எவ்வளவுபெரிய மகான் என்று தெரிந்தது.நாம் பொதுவாக பெரிய மகான்களை நம் சிற்றறிவைக் கொண்டு அளவிடுகிறோம். போகிறபோக்கில் எதையாவது சொல்லிவைக்கிறோம். அது நம் அறியாமை மட்டும்தான். இப்போது வெட்கித் தலைகுனிகிறேன். அன்றைக்கு யாகவா முனிவர் சொன்னதைக் கேட்டேன் 'உலகம் அழியுதுடா.. பூகம்பம் வருது. எரிமலை வெடிக்கப்போகுது…2020லே உலகம் கெடையாதுடா…நான் சொல்றத நம்ப மாட்டே..அடுத்த ஜென்மத்திலே விஞ்ஞானியாகி வந்து சொல்றேன்..அப்ப நம்புவேடா கபோதி'
அவர் சொன்னதுபோல உண்மையிலேயே மறுபிறப்பு எடுத்து வந்துவிட்டிருக்கிறார்!!! கீழே சுட்டியைப்பார்க்க
http://www.metacafe.com/watch/1379448/tsunami/
தீராநதி நேர்காணல்- 2006
எழுத்தாளர் ஜெயமோகன் தற்காலத் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான ஒரு ஆளுமை. இவரது "விஷ்ணுபுரம்" நாவல்,தமிழ் நாவல் உலகத்தைப் புதிய திசையில் திருப்பிய ஒரு படைப்பு. இந்தியக் காவிய மரபின் வளமைகளையும் அழகுகளையும் உள்வாங்கி எழுதப்பட்ட பெரும் நாவல். பெரும் சர்ச்சைகளுக்கும் உள்ளான நாவல் இது. "ரப்பர்", "பின்தொடரும் நிழலின் குரல்", "கன்னியாகுமரி", "ஏழாம் உலகம்" ஆகியவை ஜெயமோகனின் மற்ற குறிப்பிடத்தகுந்த நாவல்கள். நாவல்கள் மட்டுமல்ல. ஜெயமோகனின் சிறுகதைகளும் விமர்சனக் கருத்துகளும்கூடத் தற்கால இலக்கியப் பரப்பில் தவிர்க்க முடியாதவை. இவரது சிறுகதைகள் மற்றும் குறுநாவல்களின் மொத்தத் தொகுப்பை "உயிர்மை" பதிப்பகம் வெளியிட்டுள்ளது. விமர்சன நூல்களை "தமிழினி" பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இனி ஜெயமோகனுடனான நேர்காணல்.
தீராநதி:- புதிதாக நீங்கள் எழுதி வெளிவரவிருக்கும் "கொற்றவை" காப்பியம் குறித்துச் சொல்ல முடியுமா? அது செய்யுள் நடையில் எழுதப்பட்டுள்ளதா என்ன?
ஜெயமோகன்:- "கொற்றவை" காப்பியம் அல்ல. புதுக்காப்பியம் அது நான் சூட்டிய அடையாளம் அல்ல. அப்படி அடையாளமிடுவது எனக்கு உவப்பானதுமல்ல. அது என் பதிப்பாளர் "தமிழினி" வசந்தகுமார் சூட்டிய அடையாளம் .அதை நாவல் எனக்கருதி வாசிக்க ஆரம்பிக்கும் வாசகன். அதன் மொழியை எதிர்கொள்வதில் குழப்பத்தை அடையக்கூடும் என்பதனால், அப்படி ஒரு தனி அடையாளம் தேவைப்படுவதாக அவர் எண்ணுகிறார்.
அது புதுக்காப்பியம் ஆதலினால், கவிதைக்கும் புதுக்கவிதைக்கும் இடையேயான இடைவெளியும் உறவும்தான் அதற்கும் காப்பியத்திற்கும் இடையே உள்ளது. "கொற்றவை" செய்யுள் வடிவில் அமைந்த நூல் அல்ல. செய்யுள் வடிவம், அச்சு ஊடகம் வந்ததுமே காலாவதியாகிவிட்டது என்றே நான் எண்ணுகிறேன். செய்யுள் வடிவங்கள், இலக்கியம் அதிகமும் "கேட்கப்பட்ட" ஒரு காலகட்டத்திற்கு உரியவை. உலகமெங்கும் அப்படித்தான். முன்னரே வகுக்கப்பட்ட தாளத்தில் அமைந்த வரிகள். பாடுவதற்கும் நினைவில் நிறுத்திக் கொள்வதற்கும் உகந்தவை என்பதனால், அவ்வடிவம் உருவாகி நிலைபெற்றது. இது நம் மரபில் தெளிவாகவே காணக்கிடைக்கிறது. இன்றைய வாசிப்பு செவிநுகர்வு அல்ல. அக வாசிப்பு. கண்ணே இன்றைய வடிவத்தைத் தீர்மானிக்கிறது. அச்சுத்தொழில் நுட்பம் வடிவங்களை உருவாக்குகிறது. புதுக்கவிதையின் இன்றைய வடிவம் அச்சுமுறையால் வடிவமைக்கப்பட்டது என்பதைக் காணலாம். பத்தி விடுதல், வரிகளை இடைவெளி விடுதல், சரிந்த எழுத்துக்கள், தடித்த எழுத்துக்கள் என பற்பல வடிவக்கூறுகள் இப்போது உருவாகியுள்ளன. நாளை மின் ஊடகங்கள் முக்கியத்துவம் பெறுமானால் அதற்கேற்ற வடிவங்கள் உருவாகலாம். இப்போதே சுட்டி கொடுத்தல். படங்களை இணைத்தல் போன்றவை மூலம் செறிபிரதி (Hyper Text) வடிவங்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன.
"சிலப்பதிகாரம்" காப்பியம் செய்யுளில் அமைந்தது. செவிக்கு இன்பம் அளித்து கருத்தைக் கவர்வது அது. ஆனால் புதுக்கவிதையைப் போலவே "கொற்றவை"யும் அச்சு ஊடகத்தின் மூலம் உருவாக்கப்பட்ட வடிவம். இது செவிநுகர் கனி அல்ல. கண்ணில் புகுந்து கருத்தைத் தீண்டுவது.
தீராநதி:- அப்படியானால் ஏன் அதை நாவல் என்று சொல்லக்கூடாது? ஏன் காப்பியம் எனவேண்டும்?
ஜெயமோகன்:- நாவல் என்ற பொது வடிவத்தில் இதை தாராளமாகப் பொருத்தலாம். நாவல்கள் இன்று எத்தனையோ வடிவங்களில் வருகின்றன. வாழ்க்கை வரலாறு வடிவ நாவல்கள். ஆய்வுக்கட்டுரை வடிவ நாவல்கள். அகராதி வடிவ நாவல்கள்…. "கொற்றவை"க்கும் அவற்றுக்கும் இடையேயான தூரம்தான். அவை புனைவின் மொழியில் உள்ளன. "கொற்றவை" புதுக்கவிதையால் உருவாக்கப்பட்ட மொழியில் உள்ளது. அதாவது கவிதைக்குரிய தனிமொழியில் (meta language) உள்ளது.
இவ்வேறுபாட்டை நாம் ஓரளவு வகுத்துக் கொள்ள முடியும். ஒரு படைப்பின் புனைவு மொழியானது, ஒன்றை சொல்லும்போது ஒட்டு மொத்தமாக ஒரு மனப்பதிவை உருவாக்குகிறது. இதை நாம் பிரதி (text) என்கிறோம். அம்மனப்பதிவின் வழியாக நாம் அதற்கு அடுத்த கட்டங்களை ஊகிக்கிறோம். இவ்வாறு ஊகிக்கும் அர்த்த தளங்களையே நாம் ஆழ்பிரதி (Sub text) என்கிறோம். நாவலின் ஆழ்பிரதி அதன் கூற்றுகளுக்கு அடியில் உள்ளது. ஆனால் கவிதையின் ஆழ்பிரதி அதன் சொற்களுக்கு இடையே மறைந்துள்ளது. சொற்களையெல்லாம் குறியீடுகளாக ஆக்கிவிடுகிறது கவிதை. உருவகங்கள், படிமங்கள் மற்றும் பிற குறிப்புறுத்தல்கள் மூலம் இதைச் செய்கிறது. ஆகவேதான் புனைவின் மொழியைவிடக் கவிதை மொழி செறிவானதாக உள்ளது. இதைக் கவிதையின் தனிமொழி (meta language) என்கிறோம். அதாவது, புனைவுமொழியை அது எதைச்சொல்கிறது என்பதற்கு முதன்மைக்கவனம் கொடுத்து வாசிக்கிறோம். கவிதைமொழியை அது எப்படிச்சொல்கிறது என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து வாசிக்கிறோம்.
"கொற்றவை" கவிதையின் தனிமொழியில் எழுதப்பட்டது. அதை புனைவாக எண்ணி வாசிக்கும்போது அதன் உண்மையான ஆழ்பிரதிகளைத் தவறவிட்டுவிடுவோம். ஆகவேதான் அதைப் புதுக்காப்பியம் என்று சொல்லவேண்டிய தேவை உருவாகிறது. கவிதை என எண்ணி இதை வாசியுங்கள் என்ற விண்ணப்பம்தான் அந்த அடையாளப்படுத்தல்.
தீராநதி:- இன்றைய நவீன இலக்கியச்சூழலில் ஒரு புதுக்காப்பியம் எழுதும் எண்ணம் ஏற்படக் காரணம் என்ன? இது பின்னால் திரும்பிச் செல்லும் முயற்சியா?
ஜெயமோகன்:- இல்லை. இது முன்னால் செல்லும் முயற்சி. நவீனத்துவம் நமக்கு சில இலக்கிய வடிவங்களை உருவாக்கி அளித்துள்ளது. சிந்தனையாலும் உள்ளுணர்வாலும் உணர்ச்சிகளாலும் செறிவூட்டப்பட்ட, அழுத்தமான வரிகளால் ஆன, கச்சிதமான வடிவமே நவீனத்துவம் முன்வைக்கும் இலட்சிய இலக்கியப் படைப்பாகும் அசோகமித்திரனின் "விடுதலை." "இன்னும் சில நாட்கள்" போன்ற குறு நாவல்கள். ஜி நாகராஜனின் நாவலான "நாளை மற்றும் ஒரு நாளே. சுந்தர ராமசாமியின் ஜே. ஜே. சிலகுறிப்புகள் போன்றவை தமிழில் இதற்குச்சிறந்த உதாரணங்கள்.
நவீனத்துவத்திற்குப் பின்பு அவ்வடிவம் உருவாக்கிய வட்டத்துக்கு வெளியே உள்ள விஷயங்கள் என்னென்ன என்ற தேடல் ஏற்பட்டது. இருவகையில் மீறல்கள் முயற்சி செய்யப்பட்டன. ஒன்று செறிவே இல்லாமல் முடிந்தவரை தட்டையான மொழியில் கதைகளை உருவாக்குவது. வெற்று மொழிபு [Zero point narration] என இது அழைக்கப்படுகிறது. இதழியல் அறிக்கை போலவோ. நாட்குறிப்பு போலவோ எழுதும் முயற்சிகள் உருவாயின. இதில் பலவகை எழுத்துக்களைக் கலந்து பார்ப்பது முயற்சி செய்யப்பட்டது தமிழில் பிரேம் – ரமேஷ் இவ்வகைப் புனைவை முயன்றிருக்கிறார்கள். இன்னொன்று நவீனத்துவத்தில் இருந்த கட்டுப்பாட்டை உதறி கற்பனையில் கட்டற்று சஞ்சரிப்பது. கற்பனை மூலம் வரலாற்றையும் மரபிலக்கியங்களையும் தொன்மங்களையும் புராணங்களையும் எல்லாம் மீண்டும் புனைந்து பார்ப்பது இவ்வகையில் பலவிதமான முயற்சிகள் தமிழில் நடந்துள்ளன. கோணங்கி நாட்டார் கதைகளை மறுபுனைவு செய்திருக்கிறார். நான் விஷ்ணுபுரத்தில் புராணமரபை மறுபுனைவு செய்திருக்கிறேன். எஸ்.ராமகிருஷ்ணன் உபபாண்டவத்தில் அதைச் செய்திருக்கிறார். கொற்றவையும் இப்படிப்பட்ட ஒரு முயற்சியே.
தீராநதி:- அதற்குக் காப்பிய வடிவத்தை ஏன் தேர்வு செய்தீர்கள்?
ஜெயமோகன்:- நான் புதிய வடிவங்களுக்காக முனைந்து தேடுவதும் சோதனை செய்து பார்ப்பதும் இல்லை. அதில் எனக்கு நம்பிக்கை இல்லை.என் மனம் இயல்பாகவே மனித வாழ்க்கையின் அடிப்படைக் கேள்விகளைச் சார்ந்து இயங்குவது.அன்றாட வாழ்க்கையைப் பற்றிப்பேசும்போதும் எப்போதைக்கும் உரிய வினாக்களாக அதை மாற்றியபடியே நான் எழுதுகிறேன். ஆகவே முழுமை, அறம், உறவு, மரணம் என சில மையங்களைத் தொட்டு நகர்பவை என் ஆக்கங்கள். அவற்றை நாம் இன்றை மட்டும் கணக்கில் கொண்டு பேசிவிடமுடியாது. அவை நம் இறந்த காலத்தில் இருந்து நமக்கு அளிக்கப்பட்டவை. நம்மால் அடுத்த தலைமுறைக்குக் கொடுக்கப்படுபவை. இவ்வாறு அடிப்படைக் கேள்விகளை முக்காலத்துக்கும் விரித்துக் கொள்ளும்போது தத்தவமும் வரலாறும் உள்ளே வந்துவிடுகிறது. தத்துவமும் வரலாறும் ஊடாடாத பெரும்படைப்பு இருக்க இயலாதென்றே நான் எண்ணுகிறேன்.
நம் மரபில் தத்துவம் வரலாறு உள்மன எழுச்சி ஆகியவை ஒருங்கிணையும் புள்ளி என்பது காப்பியமேயாகும். சங்கக் கவிமரபில் இவை தனித்தனித் துளிகளாக வெளிப்பட்டன. பௌத்தம், சமணம் மூலம் பெரும் தத்துவங்கள் இங்கு வந்தபோது ஒட்டுமொத்தமாகத் தொகுத்து நோக்கும் முறை உருவாயிற்று. காப்பியங்கள் அவற்றின் விளைவுகள், அவற்றில் தத்துவம், அரசியல், அறிவியல், வரலாறு ஆகியவை வாழ்க்கையுடன் சேர்த்து தொகுத்து ஆராயப்படுகின்றன.
இன்று மீண்டும் அடிப்படை வினாக்களை ஒட்டுமொத்த மானுடவாழ்க்கையைக் கணக்கிலெடுத்துக் கொண்டு ஆராயும்போது காப்பியம் போன்ற வடிவங்கள் தேவையாகின்றன. ஆனால் ஒரு வேறுபாடு உள்ளது. ஒரு மையத்தை ஆழமாக வலியுறுத்துபவை காப்பியங்கள். சிலம்பு,அறம் கற்பு என்ற மையங்களை நிலைநாட்டும் காவியம்.இன்றைய இலக்கியம் எதையும் வலியுறுத்துவதில்லை. ஏற்கனவே வலியுறுத்தப்பட்டவற்றைப் பிரித்து ஆராய்கிறது அதற்குரிய வடிவம்தான் புதுக்காப்பியம் என்று சொல்லலாம் அது காப்பியத்தையே பிரித்து ஆராய்ந்து புதுவகையில் அடுக்கிப்பார்க்கும் முயற்சி.
தீராநதி:- இக்காப்பியத்தின் தொடக்கம் எப்படி உருவானது?
ஜெயமோகன்:- நான் என்றுமே பெருங்காவியங்களின் வாசகன். ஏற்கனவே மகாபாரதம் குறித்துப் பல கதைகள் எழுதியிருக்கிறேன். சிலப்பதிகாரத்தைப் படிக்கையில் ஒரு வரி என்னைக் கவர்ந்தது. கண்ணகியை "வண்ணச்சீறடி மண்மகள் அறிந்ததிலள்" என்கிறார். மண்ணில் கால்படாது வாழ்ந்தவள். ஆனால் அவள் மதுரையில் பாண்டியன் அவைக்குச் செல்லும்போது அவளை வாயிற்காவலன் "கொற்றவை" என்கிறான். இந்த மாற்றம் புகார் மதுரை பயணத்தில் நடந்தது. அது சிலப்பதிகாரத்திலும் ஓரளவு சொல்லப்பட்டுள்ளது. பயணம் தொடங்கும் கண்ணகி ஒரு பேதைப் பெண். முடிக்கும் கண்ணகி அமைதியும் ஆழமும் கொண்டவள். இந்தப் பயணத்தை அவள் ஐந்து நிலங்கள் வழியாகச் செல்கிறாள் என உருவகித்துக் கொண்டு. ஓர் அகவயப் பயணமாக சித்தரித்து நாவலாக எழுதவேண்டுமென எண்ணினேன்.
ஆனால் பல பக்கங்கள் எழுதியபின் தெரிந்தது கண்ணகியை யதார்த்த சித்தரிப்புக்குள் கொண்டுவர இயலாது என. அவள் கருவறைத் தெய்வம் போன்றவள். கடைத்தெருவில் நடமாட முடியாது. ஆகவே ஒரு வகைப் படிம மொழியில் அவள் கதையைச் சொல்ல வேண்டியதாயிற்று. அவ்வடிவிலேயே பலமுறை எழுதியபின் தெரிந்தது. கண்ணகியின் கதையைக் கண்ணகியில் தொடங்க முடியாது என, அவளில் சன்னதம் கொண்ட மூலவல்லமைகளைக் கண்டடைய வேண்டும் என, ஆகவே என் புதுக்காப்பியம் குமரிக்கண்டம் நோக்கிச் சென்றது. நம் மனம் தொட முடியாத ஆழத்திலிருந்து தொடங்கினேன்.
தீராநதி:- மொத்தத் தொகுப்பாக வந்துள்ள உங்கள் சிறுகதைகளை இப்போது சேர்த்து வாசிக்கும் போது, பெரும்பாலானவற்றில், தொடக்கத்தில் ஒரு தர்க்கம் நிறுவப்பட்டு, இறுதியில் அது தகர்க்கப்படுவதைப் பார்க்க முடிகிறது. உங்கள் நாவல்களிலும் இதனைப் பார்க்க முடிகிறது. ஒரு படைப்பு சூத்திரமாக உங்களது அனேக படைப்புகளில் இது இருக்கிறது என்ற விமரிசனத்தை ஏற்றுக்கொள்வீர்களா?
ஜெயமோகன்:- இல்லை. இது மேலோட்டமான ஒரு மனப்பதிவு என்று எண்ணுகிறேன். என் ஆக்கங்கள் பொதுவாக உள்ளுணர்வின் நுண்மையான ஒரு தளம் நோக்கி எழ முனைகின்றன.
தீராநதி:- தர்க்கத்தை எவ்வளவு தூரம் முக்கியமானதாக நினைக்கிறீர்கள்?
ஜெயமோகன்:- கதைகளின் பலமும் பலவீனமுமாக நான் எண்ணுவது அவற்றின் உணர்ச்சிவேகத்தைத்தான். சிலசமயம் அவை கட்டற்றுப் பெருகிவிடுகின்றன. அதற்கு ஒருவகையான கரைகட்டும் முயற்சியாக தர்க்கத்தை நான் கையாள்கிறேன். அதைப்போலவே நுண்ணுணர்வாலான ஆழ்தளத்துக்குச் செல்லும்போது மனம் படிமங்களைக் கட்டற்றுப் பெருக்கிக் கொள்கிறது. அதையும் தர்க்கம் மூலம் எல்லைக்குள் நிறுத்த முயல்கிறேன். ஆக, தர்க்கம் என்னைப் பொறுத்தவரை ஒரு கட்டுப்படுத்தும் கூறு மட்டுமே.
நான் என்ன சொல்கிறேன் என்பது ஓரளவு தியானம் பழகியவர்களுக்குப் புரியும். தியான மரபுகள் தொடர்ந்து ஆழ்தலையும் அமைதலையும்தான் வலியுறுத்துகின்றன. தியானம் மூலம் அடையப்படும் அனைத்துமே தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட தளத்தில்தான் உள்ளன. அவற்றைப் பகிர்வதுகூட இயல்வதல்ல. ஆனால் நெடுங்காலம் முதல் எல்லா தியான மரபுகளிலும் நுண்ணிய தர்க்கமும் தேவைப்பட்டிருக்கிறது. தியானத்தில் அமர்ந்ததுமே மனம் கற்பனைகளில் திசையிழந்து தெறிக்கிறது. எதிர் எதிரே வைக்கப்பட்ட ஆடிகள் போல பிம்பங்களைப் பெருக்கிக் கொள்கிறது. சிலசமயம் பித்துப் பிடிக்கும் அளவுக்கு உணர்ச்சிவேகம் ஏற்படுகிறது. இப்படி ஒரு கொந்தளிப்பு உருவாகும்போது அதை நெறிப்படுத்த தர்க்கம் தேவைப்படுகிறது.
உதாரணமாக ஜெ. கிருஷ்ணமூர்த்தியை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் சொல்வதை ஆழ்ந்து அனுபவபூர்வமாக உள்வாங்காத ஒருவருக்கு, அவர் தர்க்கங்களைக் கட்டமைத்தபடியே செல்வதாகத் தோன்றும். வெற்று தர்க்கமாகக்கூட சிலருக்குப் படலாம். ஆனால் அவர் தொடர்ந்து தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட ஒன்றையே முன்வைக்கிறார். அங்கே செல்லும் பாதையை நமக்கு வகுத்தளிப்பதில்லை. அதை நாமே கண்டடையவேண்டும் என்பதே அவரது எண்ணம். ஆனால் பாதையின் இருபக்கக் கரைகளையும் வகுத்துத் தருகிறார். அதற்குத்தான் தர்க்கத்தைப் பயன்படுத்துகிறார்.
மெய்ஞானத்தின் திண்ணையில் பசித்த காவல்நாய் உள்ளது. நமது போத மனம்தான் அது. அதற்கு சில இறைச்சித்துண்டுகளைப் போட்டுவிட்டு உள்ளே நுழைகிறோம். அந்த இறைச்சித்துண்டுதான் தர்க்கம்.
இலக்கியத்துக்கும் இது பொருந்தும்.தர்க்கபூர்வமான மாபெரும் கட்டமைப்பு கொண்டவையே தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி, தாம்ஸ்மன், நிகாஸ் கசன் சகிஸ் போன்ற பேரிலக்கியவாதிகளின் ஆக்கங்கள். பலசமயம் இவர்களின் நாவல்கள் பலநூறு பக்கங்களுக்குத் தூய தர்க்கங்களாகவே இருப்பதைக் காணலாம். குறிப்பாக "கரமசோவ் சகோதரர்கள்". அது முற்றிலும் நேரடியான தர்க்கங்களால் ஆனது. கதாபாத்திரங்களே பக்கம் பக்கமாக விவாதிக்கின்றன. கதாபாத்திரங்கள் கருத்துத் தரப்புகளாகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால் தர்க்கம் மீது ஏறி வேறு ஒன்றை புனைவு தொடுகிறது.
ஆனால் அடிப்படை வினாக்களைக் கையாளாமல் வெறுமே யதார்த்தச் சித்தரிப்பை அளிக்கும் ஆக்கங்களுக்குத் தர்க்கம் தேவையில்லை. காரணம் அவை நுண்ணிய மையம் நோக்கி செல்வதேயில்லை. தமிழில் நாம் எழுதும் படைப்புகளில் மிகப்பெரும்பாலானவை இப்படிப்பட்டவை. இவற்றை வாசித்து நாம் எளியவாசிப்புக்குப் பழகிவிட்டிருக்கிறோம். ஆகவேதான் படைப்பின் தர்க்கம் நம்மில் பலருக்கு சிக்கலாக உள்ளது. உயர்தர்க்கம் செயல்படாத முக்கிய நாவல் ஏதும் இல்லை.
தீராநதி:- உங்கள் படைப்புகளில் தொல்குடி தாய் தெய்வமான நீலியின் படிமமும் தொடர்ந்து வருகிறது. ஏன் அது வருகிறது என்பது குறித்து விளக்க முடியுமா?
ஜெயமோகன்:- உலகம் முழுக்க முக்கிய படைப்பாளிகளின் ஆக்கங்களில் அப்படி சில படிமங்கள் அல்லது சில தொன்மங்கள் மீண்டும் மீண்டும் வருகின்றன. அவை அப்படைப்பாளியின் அகத்துக்குள் செல்லும் வழிக்கான சாவிகள். தஸ்தயேவ்ஸ்கியின் ஆக்கங்களில் பாவத்திலிருந்தும் இழிவிலிருந்தும் மீட்டுச்செல்லும் தூய இளம்பெண் ஒரு முக்கிய கதாபாத்திரம். அதே பெண்ணை அப்படியே நாம் தல்ஸ்தோய் நாவல்களில் காண்கிறோம். அவளை அதற்குமுன் தாந்தேயின் "டிவைன் காமெடி" காவியத்தில் ஃபீட்ரிஸ் தேவதையாகக் காண்கிறோம். இவை தெளிவாக வரையறை செய்யக்கூடிய விஷயங்கள் அல்ல. ஆழ்மனம் சார்ந்தவை. கலாச்சாரத்தின் ஆழத்திலிருந்து எழுபவை.
நீலி, என் குலதெய்வம்.நீலகேசி அம்மனின் ஒரு வடிவம்.நாங்கள் தாய்தெய்வ வழிபாடு கொண்டவர்கள். பெண்வழிச் சொத்துரிமை கொண்டவர்களாக ஒரு தலைமுறைக்கு முன்புவரை இருந்தோம். என்னுள் உறையும் பழங்குடிமரபுவரை செல்லும் தொன்மம் இது. அதை எழுதும்போது எனக்கு ஓர் அபூர்வ மனக்கிளர்ச்சி ஏற்படுகிறது. அதைத் தொடர்ந்து நான் வெகுதூரம் செல்ல முடிகிறது. அவ்வளவுதான் சொல்ல முடியும்.
தீராநதி:- தொடக்கத்தில் நீங்கள் கவிதைகள் எழுதியுள்ளீர்கள். அதன்பிறகு விட்டுவிட்டீர்கள். ஏன்?
ஜெயமோகன்:- எல்லாரையும்போல நானும் மொழியைத் தீட்டிக் கொள்ளவே கவிதை எழுத ஆரம்பித்தேன். என் வடிவம் நாவல் என என் போக்கில் கண்டுபிடித்தேன். வரலாற்றையும் தத்துவத்தையும் உள்ளிழுத்தபடி. உள்ளுணர்வின் ஆழங்களுக்குள் செல்ல விழைவது என் படைப்பியக்கம். அதற்குரிய வடிவம் நாவலே. அது மட்டுமே இன்று வாழ்க்கையின் முழுமையை அள்ள முனையும் வடிவம். அதற்குள் எல்லா வகையான இலக்கிய வடிவங்களுக்கும் இடமிருக்கிறது. என் நாவல்களில் நான் தூய கவிதையைத் தொட்டிருக்கிறேன் என்று எண்ணுகிறேன். ஆகவே தனியாகக் கவிதை எழுதும் எண்ணம் எழவில்லை.
தீராநதி:- உங்கள் கவிதைகளைத் தொகுத்துப் புத்தகமாகக் கொண்டுவரும் முயற்சியைத் தொடங்கி, பிறகு அதனை வேண்டாம் என்று நிறுத்தியதாக அறிகிறோம். ஏன் கவிதைகள் தொகுப்பாக வருவதைத் தவிர்க்கிறீர்கள்?
ஜெயமோகன்:- அவை என் ஆரம்பகால முயற்சிகள். இன்று அவற்றுக்கு என் இலக்கிய உலகில் இடமில்லை.
தீராநதி:- தற்கால தமிழ்க் கவிதைப் போக்கு குறித்த உங்கள் விமரிசனம்?
ஜெயமோகன்:- கவிதை, என் நோக்கில் உலகியலுக்கு அப்பாற்பட்ட ஒரு மன எழுச்சி. அன்றாடவாழ்க்கையை நாம் நம் உணர்வுகள் மற்றும் தேவைகள் சார்ந்து துண்டுதுண்டுகளாக அறிகிறோம். கவிதை, ஒட்டுமொத்தமான முழுமையான ஓர் அறிதலுக்காக முயல்கிறது. கைவிளக்கின் ஒளியால் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் காட்டை, மின்னலின் ஒளியால் காட்டித் தருகிறது. இதையே ஆன்மீகக் கூறு என்கிறேன். கவிதையின் ஆன்மீகமே அதை கவிதையாக ஆக்குகிறது. ஆகவே உலகியல் சார்ந்த மன எழுச்சிகளை நான் முக்கியமான கவிதையாக எண்ணுவதில்லை. உலகியல் சார்ந்த மனத்தூண்டல்களைக்கூட நல்ல கவிதை ஆன்மீக தளத்துக்குக் கொண்டுபோகும். ஒரு பெண்ணின் உதடுகளின் அழகைப் பற்றிய ஒரு கவிதை தன் கவித்துவ உச்சத்தை அடைகையில் பெண் மீதான ஆணின் ஈர்ப்பை, பூமி முழுக்கப் படர்ந்திருக்கும் உறவுகளின் வலையை அழகு என்ற கருத்தாக்கத்தை, அழகைத்தேடும் மனதின் உள்ளார்ந்த தாகத்தை எல்லாம் தொட்டு விரிந்தபடியே செல்லும்.அப்போதுதான் அது கவிதை.
நான் கவிதையை நேற்று இன்று எனப் பிரித்துப் பார்ப்பதில்லை. என் நோக்கில் இன்றைய கவிதை கபிலனுக்கும் பரணருக்கும் தொடர்ச்சிதான். நம் மாபெரும் மரபுடன் இணையும் தகுதிகொண்ட கவிதையை நாம் அப்படி எளிதாக எழுதிவிட இயலாது. அது நம் வழியாக நிகழ வேண்டும். நாம் நம்மை அதற்கு ஒப்புக்கொடுக்க வேண்டும்.
நம் புதுக்கவிதையில் பெருமை கொள்ளத்தக்க சாதனையாளர்கள் உள்ளனர். பிரமிள், தேவதேவன் ஆகியோர் அவர்களில் முதன்மையானவர்கள் என்பது என் விமர்சன முடிவு. அதை விரிவாக விவாதித்தும் உள்ளேன். அபி, கலாப்ரியா, ஞானக்கூத்தன், ஆத்மாநாம், சுகுமாரன், ராஜ சுந்தரராஜன் போன்று பலர் முக்கியமான கவிதைகளை எழுதியிருக்கிறார்கள். கவிஞர்கள், பொதுவாக சுடர்விட்டுத் தங்கள் எரிபொருள் தீர்ந்ததும் அணைவது வழக்கம். அது எங்குமே அப்படித்தான். இன்றைய கவிஞர்களில் பிரேம், மனுஷ்யபுத்திரன், எம்.யுவன் போன்றவர்கள் முக்கியமானவர்கள். யூமா வாசுகி போன்றோர் தொடங்கி எரிந்து அணைந்துவிட்டனர். அமலன் ஸ்டேன்லி, பிரான்ஸிஸ் கிருபா, மோகனரங்கன் போன்றோர் அவ்வப்போது ஒளிர்கின்றனர்.
நம் கவிதைக்கு ஓர் அழியாத் தொடர்ச்சி உள்ளது. ஆனால் அது சில காலங்களில் மட்டுமே கொழுந்துவிட்டெரிந்துள்ளது. மற்றகாலங்களில் கைக்குள் அகல்சுடர் போலத்தான் இருக்கிறது. ஒரு சூழலில் நல்ல கவிதை உருவாவது என்பது உண்மையில் கவிஞர் கைகளில் இல்லை. அச்சமூகத்தின் ஒட்டுமொத்தமான ஆன்மீக எழுச்சியின் ஒரு திவலையே கவிதையாக வெளிப்படுகிறது. கவிதை பெரும்பாலும் தன்னெழுச்சியான நிகழ்வு என்பதனால்தான் இப்படி.
இன்று கவிதையில் அலை என ஏதுமில்லை. ஆனால் உயிருள்ள நீட்சி இருந்துகொண்டிருக்கிறது என்றும் படுகிறது.
தீராநதி:- உங்கள் விமர்சன அளவுகோலின் அடிப்படையாக தொடர்ந்து சுந்தர ராமசாமியை நீங்கள் சொல்லி வந்திருக்கிறீர்கள். அவருடையது ரசனையை அடிப்படையாகக் கொண்ட விமரிசனம் க.நா. சு.வின் தொடர்ச்சி. உங்கள் "இலக்கிய முன்னோடிகள் வரிசை"யும் ரசனை விமரிசனத்தை அடிப்படையாகக் கொண்டது என்று சொல்லலாம். தற்காலத்தில், நவீன விமர்சன முறைகள் பல தமிழில் அறிமுகமாகியுள்ள நிலையில், ரசனை அடிப்படையிலான விமர்சனம் எந்த அளவுக்கு முக்கியமானது என்று நினைக்கிறீர்கள்?
ஜெயமோகன்:- என்னுடைய "இலக்கிய முன்னோடிகள் வரிசை" நூலின் முதல்பகுதியிலேயே இதற்கு விரிவான பதிலைச் சொல்லியிருக்கிறேன். ஒரு படைப்பு ரசிப்பதற்காகவே எழுதப்படுகிறது. அதன் முதன்மை நோக்கம் அதுவே. ஆராய்ச்சி அடுத்த படிதான். ரசனைவிமர்சகன் படைப்பின் முன் ஒரு வாசகனாகத் தன்னை நிறுத்திக் கொள்கிறான். அப்படைப்பை ரசிக்கிறான். தன் ரசனையை அளவாகக் கொண்டு அதை மதிப்பிடுகிறான். இதுவே இயல்பான முதல்படியாகும்.
ரசனை விமரிசகனின் கருவிகள் இரண்டு. ஒன்று, அவனது நுண்ணுணர்வு (Sensibility). இரண்டு அவனது பொதுப்புத்தி (Commonsense) நுண்ணுணர்வானது பேரிலக்கியங்களை வாசிப்பதன் மூலம் உருவாகக் கூடியது. நான் கம்பனையும், ஷேக்ஸ்பியரையும், ராபர்ட் ஃப்ராஸ்டையும் வாசித்ததால் இன்றைய கவிதையை அறிந்து மதிப்பிடுவதற்கான நுண்ணுணர்வை அடைகிறேன். வாழ்க்கையை கவனிப்பதன் வழியாகவும் பொது அறிவைக் கற்பதன் மூலமாகவும் எனக்கு பொதுப்புத்தி வலிமை பெறுகிறது. ஒரு நல்ல வாசகனிடமிருந்து ஓர் இலக்கியப்படைப்பு எதிர்பார்ப்பது இவை இரண்டையும் மட்டுமே.
கோட்பாடுகள், படைப்பை ஆராய்வதற்குரியவை. அங்கே ரசனை இல்லை. பலசமயம் கோட்பாடுகள் நல்ல ரசனைக்குத் தடையாகவே அமைகின்றன என்பதைக் காணலாம். ரசனைவிமரிசனம் சொல்லாத இடத்துக்குத் தன் கோட்பாட்டுக் கருவிகள் மூலம் செல்பவனே நல்ல ஆய்வாளன். அதாவது ரசனை விமரிசனமே அடிப்படை.உலகமெங்கும் அப்படித்தான் உள்ளது. பல்லாயிரம் படைப்புகள் வருகின்றன. சிலவற்றை முக்கியப்படுத்துவதே ரசனை விமரிசனம்தான். காரணம் அது வாசகனுக்கு மிக அருகே நின்றபடி வாசகன் குரலில் பேசுகிறது.
இப்படி ரசனை விமரிசனத்தின் மூலம் முக்கியமாகும் படைப்புகளையே கோட்பாட்டு ஆய்வுகள் எடுத்துக் கொள்கின்றன என்பதைக் காணலாம். ரசனைவிமரிசனத்தின் இடைவெளிகளை நிரப்புவதே பிற விமரிசனங்களின் பணி. உதாரணமாக நான் கம்பராமாயணத்தை என் அனுபவம் மூலம் உள்வாங்கி மதிப்பிடுகிறேன். ஒரு வரலாற்றுக் கோட்பாட்டாளன். குலோத்துங்கன் காலத்து அரசியல் எப்படி கம்பராமாணத்தில் வெளிப்படுகிறது என, தன் வரலாற்று ஆய்வுமுறை மூலம் கண்டறிந்து சொல்லும்போது, என் அறிதலில் உள்ள ஓர் இடைவெளி நிரப்பப்படுகிறது. இப்படி பல ஆய்வுகள் வரலாம். தமிழைப்பொறுத்தவரை ரசனை விமரிசனத்துக்கு அப்பால் செல்லும் கோட்பாட்டு விமரிசனம் அனேகமாக இல்லை. ஒரு வாசகனாகப் பாருங்கள். என் "இலக்கிய முன்னோடிகள் வரிசை" அளவுக்கு நம் இலக்கியப் படைப்பாளிகள் மீதான புதிய அவதானிப்புகளை முன்வைத்த கோட்பாட்டு விமரிசன நூல் எது?
தீராநதி:- இலக்கிய முன்னோடிகள் வரிசை புத்தகத்தை எழுதுவதற்கான எண்ணம் எப்படி உருவானது?
ஜெயமோகன்:- ரசனை விமரிசனத்துக்கு நம் சூழலில் ஒரு வலிமையான தொடர்ச்சி இருக்கிறது. ஆகவேதான் நம் சூழலில் வாசகர் எண்ணிக்கை எவ்வளவு குறைவாக இருந்தாலும் நல்ல படைப்புகளுக்கு எப்படியோ ஓர் அங்கீகாரம் கிடைத்துவிடுகிறது. தொடர்ந்து தீவிர இலக்கிய மரபு அறுபடாமல் இருக்கிறது. கோட்பாடுகள் அரசியல் ஆகிய புறச்சக்திகளால் தூக்கிக் காட்டப்படும் படைப்புகள் உடனேயே சரிக்கப்பட்டு உண்மையான ஆழம் உள்ள படைப்புகள் நீடிக்கின்றன. மார்க்ஸியத் திறனாய்வாளரான கைலாசபதி,செ. கணேசலிங்கனின் "செவ்வானம்" நாவலைத் தமிழின் முக்கியமான நாவலாகத் தூக்கிப் பிடித்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா? அ. மார்க்ஸ் போன்றோர் ஒரு கட்டத்தில் கே. டானியலின் நாவல்களை முதல்தரப் படைப்புகளாக முன்வைத்தனர். உடனுக்குடன் ரசனைமரபு அத்தகைய குரல்களை வென்று முன்னகர்ந்தபடியே உள்ளதனால்தான் இப்போது இதை உங்களுக்கு ஒரு வரலாற்றுத் தகவலாகச் சொல்ல வேண்டியுள்ளது.
நீங்கள் குறிப்பிட்டதுபோல முதல் தலைமுறையில் க.நா. சுப்ரமணியமும் இரண்டாவது தலைமுறையில் வெங்கட் சாமிநாதனும், சுந்தர ராமசாமியும் ரசனை மரபின் மையங்களாக இருந்தனர். நான் எழுதவந்தபோது ரசனைமரபின் அடுத்த காலகட்டம் வந்துவிட்டிருந்தது. ஆனால் சுந்தர ராமசாமி உருவாக்கிய முடிவுகளே பெரும்பாலும் நீடித்திருந்தன. நான் சுந்தர ராமசாமியிடம் தொடர்ந்து விவாதித்து வந்தேன். அவ்விவாதங்களை நூலாக ஆக்கவேண்டிய அவசியம் இருப்பதாக தமிழினி வசந்தகுமார் சொன்னார். ஆகவே அவை எழுதப்பட்டன.
தீராநதி:- உங்கள் விமர்சனங்களை மொத்தமாகப் பார்க்கும் போது, நீங்கள் சில படைப்பாளிகளைக் கறாராகவும் சிலரை மென்மையாகவும் அணுகுகிறீர்கள் என்று தோன்றுகிறது. உதாரணமாக மௌனியைக் கறாராகவும் ஜெயகாந்தன், அழகிரிசாமி, கி. ராஜநாராயணன் போன்றோரை மென்மையாகவும் அணுகுகிறீர்கள். இந்த முரணுக்கு என்ன காரணம்?
ஜெயமோகன்:- இப்படி ஓர் ஐயம் எழ வாய்ப்பிருப்பது உண்மையே. ஆனால் அதற்குரிய காரணங்கள் வேறு. நான் ஏற்கனவே சொன்னேன். நான் சுந்தர ராமசாமிக்குப் பின் விவாதத் தொடர்ச்சியாக அவற்றை எழுதினேன் என. சுந்தர ராமசாமியின் ரசனையும் மதிப்பீடும் நவீனத்துவம் சார்ந்தது. நவீனத்துவத்தின் அளவுகோலின்படி இலக்கிய ஆக்கம் கச்சிதமாக, உள்ளடங்கிய குரல் கொண்டதாக, மனிதமனத்தின் இருண்ட ஆழங்களை முன்வைப்பதாக, மன எழுச்சிகளை ஐயப்படுவதாக இருக்க வேண்டும். இந்நோக்கு இங்கே நிறுவப்பட்டு அதுவே இயல்பானதாகக் கருதப்பட்டது. அதுதான் கு.ப.ராஜகோபாலன், மௌனி, ஜி. நாகராஜன் போன்றோரை முன்னுக்குத் தள்ளியது. ஜெயகாந்தன், கு. அழகிரிசாமி, ப.சிங்காரம் போன்றோரைப் பின்னுக்குத் தள்ளியது.
நான் எழுதவரும்போது நவீனத்துவமும் முடிந்துவிட்டது என்றே உணர்ந்தேன். எனக்குக் கற்பனாவாத எழுத்தும் சரி, இலட்சியவாத எழுத்தும் சரி, நவீனத்துவ எழுத்தும் சரி, ஒரேபோல வரலாற்றுப் பதிவுகள் மட்டுமே.அனைவருக்கும் ஒரே அளவுகோல்தான். ஆகவே என் நோக்கில் நவீனத்துவம் சிலருக்கு அளித்து வந்த சலுகைகள் ரத்தாயின. அப்போது என்ன ஆகிறதென்றால் மௌனிக்கு நவீனத்துவம் அளித்துவந்த முதன்மை இடம் ரத்தாகி, அவர் பின்னுக்குத் தள்ளப்படுகிறார். அழகிரிசாமிக்கு நவீனத்துவம் அளித்துவந்த புறக்கணிப்பு இல்லாமலாகி அவர் சற்று முன்னகர்கிறார். இதுதான் உண்மையில் நடக்கிறது. இது பொதுப்பார்வையில் மௌனி கடுமையாகவும் அழகிரிசாமி மென்மையாகவும் நோக்கப்பட்டிருப்பதாகப் படுகிறது.
பாருங்கள். அழகிரிசாமியின் எல்லாக் குறைகளும் என்னால் சுட்டப்படுகின்றன. அவருக்கு வடிவ உணர்வு இல்லை. அவரது மொழிக்கு செறிவு இல்லை. அவை ஏற்கனவே சொல்லப்பட்டவை. அத்துடன் அவரது விவேகம் மிகுந்த கவித்துவமான அக உலகமும் சுட்டப்படுகிறது. அது நவீனத்துவம் காண மறுத்த ஒன்று. அதேபோல மௌனியின் எல்லா சாதனைகளும் குறிப்பிடப்படுகின்றன. அவரே கவித்துவத்தைப் புனைவுக்குள் கொண்டுவந்த முதல் எழுத்தாளர். மனம் நிகழ்வதை மொழியில் காட்டியவர். அவை நவீனத்துவத்தால் சொல்லப்பட்டவை. அதேசமயம் மௌனியின் குறைகள் விவாதிக்கப்படுகின்றன. அவர் மேலைக் கற்பனாவாதக் கவிமரபைப் பயிற்சியற்ற உரைநடையில் சொல்ல முயன்றவர் என்கிறேன். இவை நவீனத்துவத்தால் சொல்லப்படாதவை. ஆக, நவீனத்துவமரபின் மதிப்பீடுகளையே கண்டுவளர்ந்த இளம் வாசகனுக்கு அழகிரிசாமியின் நிறைகளும் மௌனியின் குறைகளும் சொல்லப்படுகின்றன என்று தோன்றலாம். அது ஒரு தோற்றம் மட்டுமே.
தீராநதி:- "தமிழில் நாவல்களே இல்லை" என்பதில் தொடங்கி, "கருணாநிதி இலக்கியவாதி இல்லை" என்பது வரை உங்கள் கருத்து தொடர்ந்து சர்ச்சைக்குள்ளானதாகவே இருந்து வந்துள்ளன. இதனை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?
ஜெயமோகன்:- உலக இலக்கியத்தில் இன்றுவரை எழுதிய திறனாய்வாளர்களில் விவாதங்களை உருவாக்காத ஒருவருடைய பெயரை நீங்கள் சொல்ல முடியுமா? இலக்கியச்சூழலில் ஒருவகைக் கருத்துக்கட்டமைப்பு நிலவுகிறது. அதைநோக்கியே விமரிசகன் பேசுகிறான். அதை மாற்ற முயல்கிறான். அப்போது அது எதிர்வினையாற்றுகிறது. ஒரு விவாதம் உருவாகிறது. மெல்ல மெல்ல அவனுடைய கருத்தின் முக்கியப்பகுதி அக்கருத்துக் கட்டமைப்பால் ஏற்கப்படுகிறது. அப்போது அந்த விவாதம் சரித்திரத்தின் ஒருபகுதியாக மாறிவிடுகிறது. அடுத்த விவாதம் நிகழ்கிறது. இப்படித்தான் கருத்தியக்கம் முன்னகர்கிறது.
சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன், க.நா.சுப்ரமணியம் ஆகியோர் என்னைவிடப் பெரிய விவாதங்களைத் தமிழ்ச்சூழலில் உருவாக்கியுள்ளனர். அவ்விவாதங்கள் மூலமே நாம் இன்று நம்பும் பல கருத்துக்கள் உருவாகி வந்தன.
தீராநதி:- "சொல்புதிது" என்ற சிற்றிதழைத் தொடங்கி சிறிதுகாலம் நடத்தினீர்கள். பத்திரிகை நடத்திய அனுபவத்தின் அடிப்படையில், ஒரு படைப்பாளி பத்திரிகை ஆசிரியராக இருப்பது குறித்த உங்கள் எண்ணம் என்ன?
ஜெயமோகன்:- உலகம் முழுக்க எழுத்தாளர்கள் சிறந்த இதழ்களை நடத்தியுள்ளனர். சில சிக்கல்கள் உண்டுதான். முதலில் அந்தப் படைப்பாளியின் நேரம் சிதறி அழிகிறது. இரண்டு, சில சமயம் அப்படைப்பாளியின் படைப்புக் கோணமே அப்பத்திரிக்கையின் கொள்கையாக ஆகி இதழின் விரிவைத் தடுத்துவிடுகிறது. வேறுவகை ஆக்கங்கள் அதில் வரமுடியாமலாகின்றது. ஆனால் பல சாதகக் கூறுகளும் உள்ளன. படைப்பாளி பிறரைவிட நல்ல படைப்பை நுட்பமாக அடையாளம் காணமுடியும். இலக்கியத்தில் ஒரு புதிய முளை தளிர் விடும்போது அதைக் கண்டறிந்து மேலெடுக்க முடியும். இந்த நிறை குறை இரண்டுக்குமே டி.எஸ்.எலியட்டின் "கிரைடீரியன்". சி.சு.செல்லப்பாவின் "எழுத்து" இரண்டும் உதாரணங்களாகும்.
தீராநதி:- உங்கள் திரைக்கதையில், "கஸ்தூரிமான்" திரைப்படம் சமீபத்தில் வெள
August 31, 2011
சேலத்தில் …
3-09-2011 அன்று சேலத்தில் தலித் ஆய்வுமையம் சார்பில் நடத்தப்படும் நான்கு தலித் நூல்களின் ஆய்வு அரங்கில் நான் பேசுகிறேன்
மதுரையைச்சேர்ந்த தலித் ஆய்வு-பதிப்பு நிறுவனமான எழுத்து நூறாண்டுகளுக்கும் மேலாக வெளியே தெரியாமலிருந்த முக்கியமான தலித் நூல்களை மறுபதிப்பு செய்து வெளியிட்டு வருகிறது.
அந்த அமைப்பு வெளியிட்டுள்ள நான்கு நூல்கள் மீதான விமர்சனக்கூட்டம் சேலத்தில் நிகழவுள்ளது. நூல்கள்
1. பெருந்தலைவர் எம்.சி.ராஜா சிந்தனைகள்
2. தலித் மக்களும் கல்வியும் – ஹென்றிஸ்டீல் ஆல்காட்
3. தலித் விடுதலையும் திராவிட இயக்கமும் [மறைக்கப்பட்ட உண்மைகளும் கறைபடிந்த அத்தியாயங்களும்.] தி.பொ.கமலநாதன்
4 பஞ்சமி நில உரிமை
இவற்றில் ஆல்காட் பற்றி நான் பேசுவதாக உள்ளேன்
இடம்: இலக்குமி அரங்கம், சாமுண்டி சூப்பர் மார்க்கெட் வளாகம், நான்குரோடு சேலம்-9
நாள் 03-09-2011
நேரம் மாலை 5.30
பங்கேற்போர்
1. பேராசிரியர் மார்க்ஸ் [புதுவை பல்கலை கழகம்]
2.பேராசிரியர் ஸ்டாலின் ராஜாங்கம்
3. ஜெயமோகன்
4 முனைவர் ஜெரோம் சாம்ராஜ்
ஒருங்கிணைப்பு
ஸ்பீடோ இயக்கம்
94877 01037 , 9080314744
எழுத்து
சிரோன் குடில், ஜோஸ்புரம் முதல் தெரு
பசுமலை
மதுரை 4
eluthualex@yahoo.com
பழைய கட்டுரைகள்
எம்.சி.ராஜா-வரலாற்றில் மறைந்த தலைவர்
திராவிட இயக்கத்தை நிராகரிப்பது ஏன்?
அயோத்திதாசர் என்னும் முதல் சிந்தனையாளர்
இந்திய அறிவியல் எங்கே?
அன்புள்ள ஜெ,
அயோத்திதாசர் எனும் முதற்சிந்தனையாளர் கட்டுரை தீவிரமாக சிந்திக்க வைத்தது. அயோத்திதாசர் ஒரு தலித் சிந்தனையாளர் என்று தான் கேள்விப்பட்டிருந்தேன். அவரின் அறிவாளுமை இவ்வளவு பெரியது என நீங்கள் சொல்லித்தான் தெரிந்து கொண்டேன். மரபிலிருந்து விலகிய நாம் மீண்டும் அதனுடன் தொடர்பு கொள்ளத் தங்களின் கட்டுரை ஒரு தெளிவான முன்வரைவை அளித்தது. மரபான ஞானத்தில் இருந்து நாம் துண்டிக்கப்பட்டது, துரதிஷ்டவசமாக அதை உணராமலேயே இருப்பது ஒரு பெரும் சாபக்கேடு. நம்முடைய கோயில்களில் உள்ள கட்டிட நுட்பத்தின் சிறு பகுதி கூட இன்றுள்ள கட்டிடங்களில் காண முடிவதில்லை அல்லவா.
நான் அறிவியலில் ஆர்வம் உடையவன். மருத்துவம் (சித்த,ஆயுர்வேத), அறிவியல், துறைகளில் நாம் எந்தளவிற்கு முன்னேறியிருந்தோம்? அதுபற்றி ஏதேனும் ஆய்வுகள் நடந்திருக்கிறதா? அயோத்தி தாசர் போன்ற முதற்சிந்தனையாளர்கள் இத்துறைகளில் நம்மிடையே உள்ளனரா என தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
கருத்துச்செறிவான உரைக்கு மிக்க நன்றி.
சங்கரன்
அன்புள்ள சங்கரன்,
இந்திய மருத்துவம் போன்ற துறைகளைப்பற்றி அந்தத் துறை வல்லுநர்கள்தான் சொல்லவேண்டும். நான் அறிந்தவரை ஆயுர்வேதம் போன்ற இந்திய மருத்துவமுறைகள் சமகாலத்தில் உலகிலிருந்த எந்த மருத்துவமுறையையும் விடப் பலமடங்கு மேம்பட்டவையாக இருந்தன. இயற்கையில் இருந்து பல்லாயிரம் மருந்துத்தாவரங்களை அவை இயல்பும் விளைவும் அறிந்து அட்டவணையிட்டிருப்பதை ஒரு மானுட சாதனை என்றே சொல்லவேண்டும். கேரளத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட கவனகௌமுதி என்ற ஆயுர்வேத தாவரநூலை பார்த்திருக்கிறேன். கிட்டத்தட்ட மூவாயிரம் பக்கம். அது ஒரு பெரும் கலைக்களஞ்சியம்.
பதினாறு, பதினேழாம் நூற்றாண்டில் இந்திய ஞானம் எல்லாத்துறைகளிலும் பெரும் தேக்கத்தை அடைந்தது. இருநூறு வருடங்களுக்குப்பின் இந்திய மறுமலர்ச்சிக்காலகட்டத்தில் மிகுந்த உற்சாகத்துடன் அது மறுகண்டுபிடிப்பு செய்யப்பட்டது. இன்று நாம் வாசிக்கும் பழைய செவ்வியல்நூல்கள் அறிவியல் நூல்கள் எல்லாம் அக்காலகட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டு அச்சுக்கு வந்தவை.
ஆனால் சுதந்திரத்துக்குப்பின்னர் இந்தியமறுமலர்ச்சிக்கால மனநிலைகள் தேங்கின. ஐரோப்பிய வழிபாட்டாளரும் அடிப்படையில் இந்தியமரபுமேல் மதிப்பில்லாதவருமான நேருவின் யுகம் ஆரம்பமாகியது. அவரது ஆலோசகர்களான மகாலானோபிஸ், பி என் ஹக்ஸர் போன்றவர்கள் ஐரோப்பியவழிபாட்டு – இந்திய நிராகரிப்பு மனநிலையை நவீனசிந்தனையாக கருதினர். அவர்களே சுதந்திர இந்தியாவின் கல்விக்கொள்கையை வடிவமைத்தனர். அதில் ஐரோப்பிய அறிவியலும் தத்துவமும் மட்டுமே முன்னிறுத்தப்பட்டன.
இன்று இந்தியாவில் எந்த பகுதியிலுமே கல்வித்தளத்தில் இந்தியசிந்தனை, இந்திய அறிவியல் கற்பிக்கப்படுவதில்லை. அவை இந்துமதம் சார்ந்தவையாக முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்பட்டன. அவற்றைப் பழையமையானவை என்று முத்திரை குத்தும் செயலைக் கல்வித்துறை கடந்த அறுபதாண்டுக்காலமாகச் செய்து வருகிறது. நேருயுகத்தில் கல்வி-அறிவுத்துறையில் மேலாதிக்கம் பெற்ற இடதுசாரிகள் இந்தத் தவறான எண்ணங்களை இன்றளவும் காலத்துக்குப் பரப்பி வருகிறார்கள். நமது கல்வி என்பது முழுக்கமுழுக்க மொழியாக்கக் கல்வியாக ஆகிவிட்டிருக்கிறது.
விளைவாக இதற்கு நேர் எதிரான ஒரு போக்கு உருவாகி வந்தது. எந்த ஆய்வுநெறியும் இல்லாமல் வெறுமே 'நம்ம கிட்ட இல்லாததா ஒண்ணுமே கெடையாது' என்றவகைப் பேச்சுக்கள். அவற்றுக்கான அர்த்தமற்ற ஆய்வுகள். நாசா புகைப்படத்தில் இரண்டரைலட்சம் வருடம் பழைமையான சேது பாலத்தைக் கண்டுபிடிப்பது பீமனின் எலும்புக்கூட்டை மீட்பது போன்ற அசட்டுத்தனங்கள். ஆப்ரிக்க மொழியெல்லாம் தமிழே என்பது போன்ற அதீத தாவல்கள்.
இந்திய அறிவியலை அப்படி 'சும்மா' உருவாக்கிவிட முடியாது. அது தனிப்பட்ட முயற்சிகளாலும் நிகழாது. அதற்கு மூன்றுநூற்றாண்டுக்காலப் பின்னடைவு உள்ளது. அதை எல்லாத்தளங்களிலும் உயிர்ப்பித்து அதன் பின்னடைவை சரிசெய்து நவீன யுகத்துக்குரியதாக ஆக்குவதென்பது ஒரு பெரும் கூட்டுப்பணி. அரசு மூலம் ஒரு பிரம்மாண்டமான அறிவுச்செயல்பாடாக அது நிகழ்ந்தால் மட்டுமே அந்த மறு உயிர்ப்பு நிகழ முடியும்.
ஆனால் இன்றைய அறிவுலகமே அந்த மனநிலைக்கு நேர்எதிரானதாக உள்ளது. ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் அறிந்துகொள்ளுவதே அறிவுக்குப் போதுமானது என்ற நம்பிக்கை நம் கல்வித்துறையில் சிந்தனைத்துறையில் இதழியலில் எல்லாம் வேரூன்றியிருக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அவர்களின் தாசர்களாக வாழ்ந்தவர்களின் வாரிசுகள் அந்த அடிமை மனநிலையை சுதந்திர நாட்டிலும் மைய ஓட்டமாகக் கொண்டுசெல்கிறார்கள்.
ஆகவே சென்ற அரைநூற்றாண்டுக்காலத்தில் இந்திய சிந்தனை, இந்திய அறிவியல் சார்ந்து ஒட்டுமொத்தமான எந்த ஆய்வும் நடக்கவில்லை என்பதே உண்மை. தனிப்பட்ட முறையில் ஆங்காங்கே சில ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன. ஆனால் எதிர்பார்க்கப்பட்டதுபோல சுதந்திரம்கிடைத்த பின் இந்திய ஞானமும் இந்திய அறிவியலும் புத்துயிர்கொண்டு எழவில்லை. ஆகவே இன்று வரை இந்தியா உலகுக்கு ஏதும் கொடுக்காததாக, வெறும் ஊழியர்களை மட்டும் உருவாக்கி விற்பதாக அமைந்துள்ளது.
நேருமேல் எனக்கு எப்போதும் மதிப்பு உண்டு. ஆனாலும் அவரை நல்லெண்ணம் கொண்ட அசடர் என்றே என் மனம் மதிப்பிடுகிறது. சமகாலச் சிந்தனையோட்டங்களில் அடித்துச்செல்லப்படும் எளிமையான மனம் கொண்டவர் அவர். ஒருவகையில் இந்திய மரபுக்கு அவர் அளித்தது பெரிய தேக்கத்தையே.
ஜெ
அண்ணா ஹசாரே-சில கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
அன்னா ஹஸாரே தன் அறப்போராட்டத்தை ஆரம்பித்ததும் பெரும்பாலானவர்களைப் போல நானும் சந்தேகமும், அவநம்பிக்கையும், என்ன தான் நடக்கிறதென்று பார்க்கும் வெறும் குறுகுறுப்புமாகத்தான் இருந்தேன். உங்கள் முதல் இரண்டு கட்டுரைகளைப் படித்ததும் அடிப்படையான சந்தேகங்களும், குழப்பங்களும் ஒழிந்து ஒரு ஆசுவாசம் வந்தது. அவருடன் இருப்பவர்களின் நேர்மை மற்றும் நோக்கம் பற்றி நான் கொஞ்சமும் கவலை கொள்ளவில்லை. அவர்களைப் பற்றி நீங்களும், நண்பர்களும் பகிர்ந்து கொண்ட கருத்துக்களை வெறுமனே மற்ற நண்பர்களுக்கு விளக்கும் பொருட்டு மட்டுமே படித்தேன். என் மனதில் அன்னாஜி மட்டுமே முக்கியமாகப்பட்டார்.
ஒரு கட்டத்தில் வெகு இயல்பாக நானும் உங்கள் எண்ணங்களைத் தொடர்வதாக அமைந்தது. உதாரணமாக பொதுவாக உங்களிடம் வைக்கப்பட்ட சந்தேகம் நிறைந்த கேள்விகளுக்கு என் மனதில் தோண்றிய பதில்களும், உங்கள் விளக்கங்களும் ஒன்றாகவே இருப்பதைக் கண்டு நான் சிந்திக்கும் வழியை நினைத்துத் திருப்தியடைந்தேன். ஏதோ ஒரு பொழுதில் நான் அன்னாவை மனதார நம்ப ஆரம்பித்துவிட்டிருந்தேன். யோசித்துப் பார்க்கையில் அது காந்தி மீது இருக்கும் நம்பிக்கை என்று உணர்ந்துகொண்டேன், நான் காந்தியை முழுமையாக நம்புவதற்குக் காரணம் உங்கள் மேல் வைத்துள்ள நம்பிக்கை தான். ஏன் உங்களை நம்புகிறேன் என்று கேட்டுக்கொண்ட போது, என் மனத்தின் ஆழத்தில் இருக்கும் நன்மையின் மீதான நம்பிக்கை என்று அறிந்தேன்.
உங்கள் மீதான நம்பிக்கை ஒரே நாளில் வந்துவிடவில்லை. அது ஐந்து வருடங்களாக உங்கள் படைப்புகளின் வழியாக தொடர்வதால் உங்கள் எண்ணத்தின், எழுத்தின் மற்றும் செயல்களின் மீது உண்டான நம்பிக்கை என்று உணர்கிறேன். இந்த நம்பிக்கைத் தொடரின் எந்தக் கண்ணி உடைந்தாலும் ஆழ்மனதில் உறையும் நல்லனவற்றின் மீதான நம்பிக்கை உடையாமல் இருக்கவே வேண்டிக்கொண்டேன் – அதன் மூலம் பிற எல்லாவற்றையும் மீட்டு இணைத்துவிடலாம் என்பதால்.
(அன்னா ஹசாரே) இன்றைய காந்தியைக் காட்டித் தந்ததற்கு நன்றி.
எங்கள் வறட்டு சிந்தனைகள் இளகி, நன்மையின் மீதான நம்பிக்கை விதை தளிர்க்க மெய்மையென்னும் மழையாய் வருவதற்கு மனமார்ந்த நன்றி.
- பிரகாஷ்
–
www.jyeshtan.blogspot.com
================================
வணக்கம்,
சோம்நாத் சட்டர்ஜி NDTV இல் சொன்னது:
//"அண்ணா ஹசாரே மற்றும் அவரது குழுவினர் நாடாளுமன்றத்தை விமர்சிக்கின்றனர். நாடாளுமன்றம்
சட்டங்களை இயற்றாமல், தெருவில் போகிறவர்களா சட்டங்களை இயற்றவது?"//
இதைக் கேட்டவுடன் எனக்கு வியப்பாக இருக்கிறது.
இந்தியாவின் ஒரு மூத்த அரசியல் மேதை. அறிவாளிகள் மிக பெற்ற வங்காளத்திலிருந்து வருகிறவர்.
அவரிடமிருந்து இப்படி ஒரு வாக்கியத்தை எதிர்பார்கவில்லை.
மக்கள் பிரதிநிதிகள், மக்கள் கருத்தை அரசின் அவைகளில் எடுத்துச் சொல்லத்தான், மக்களால் தேர்வு செய்ய படுகிறார்கள் என்பது என் புரிதல். மக்கள் என்பது தெருவில் போகிறவனையும் சேர்த்துதானே?.
அந்தத் தெருவில் போகிறவன் ஓட்டு போட்டுத்தானே அரசியல்வாதிகளைப் பிரதிநிதிகளாக அனுப்புகிறார்கள்.
மக்கள் வோட்டு போட்டுவிட்டு அதைப் பற்றி அடுத்த ஐந்து வருடத்துக்கு மறந்துவிடவேண்டும் என்று சட்டபூர்வமாக அரசியல் வாதிகள் கருதுகிறார்களோ?
இவர்கள் பதவிக்கு வந்தவுடன் தங்களை பிரபுக்களாக பாவித்துக்கொள்வதுதான் இதற்கெல்லாம் காரணம் போலிருகிறது!.
மக்களின் கருத்தை மக்கள் பிரதிநிதிகள் அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லாதபோது, தெருவில் போகிறவன்தான் கேள்வி கேட்கவேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து.
அண்ணா ஹசாரே தன் அடுத்த பணியாக சொன்னது இப்போது நினைவுக்கு வருகிறது.
//மக்கள் பங்கேற்ப்பு சீர்திருத்தம் -நாட்டு மக்களே முக்கியமான பிரச்சனைகளில் வாக்களித்து முடிவுகளை
எடுக்க வகை செய்வது. இதனைத் தேர்தல் கமிஷன் கண்காணிப்பில் நடைமுறைப்படுத்தலாம். //
இதுதான் உண்மையான மக்கள் பிரதிநிதித்துவம். காசு வைத்திருக்கும், மக்களின் பிரச்சினைகள் தெரியாத
அல்லது தெரிந்துகொள்ள விரும்பாத, தகுதியற்ற நபர்கள் , அரசியலை ஒரு லாபம் தரும் ஒரு தொழிலாக
எண்ணிக் கொண்டு மக்கள் அவைகளுக்கு செல்லும்போது அங்கு மக்களின் தேவைகள் பிரதிநிதித்துவம்
பெறுவதில்லை.
அண்ணாவின் சிந்தனை சரியான திசையில் செல்வதாகத்தான் எனக்கு படுகிறது.
அன்புடன்
குருமூர்த்தி
லாகோஸ்
அண்ணா ஹசரே போராட்டம் குறித்த எனது கருத்துக்கள்.
1) எனது கருத்துக்கள் பெரும்பாலும் உங்கள் கருத்துக்களுடன் ஒத்துப்போகிறது.
2) கார்ப்பரேட் எஜமானர்களின் குரல் என்று எழுதியுள்ளீர்கள். எனக்கு சோ வின் கருத்து ஒத்துப் போகவில்லை. ஆனால் நீங்கள் கூறும் காரணம் அவசரத்தில் எடுத்ததாக தோன்றுகிறது.
3) இது கொஞ்சம் ஆழமானது. ஒரு கவலை.
காந்தி அவர்கள் சொல்லும் எல்லா விஷயத்துடனும் நான் ஒத்துப் போகவில்லை. போராட்ட முறையோ, அரசியலோ அல்ல. ஆன்ம சிந்தனை. ஒழுக்கம் குறித்த விஷயங்களில் ஒரு ஆழம் இல்லாததாகவே நான் உணர்கிறேன் . . மேலோட்டமான morals தான் இருப்பதாக தோன்றுகிறது.
அண்ணாவைக் குறித்தும் அதே கவலை.
ஆப்கானிஸ்தானில் தாலிபான் corruption, bad state of affairs என்ற நிலையில் ஒரு மாறுதலாகவே புறப்பட்ட ஒன்று.
அது முரட்டு மிருகத்தனமாக ஆனதற்குக் காரணம், மக்களின் ஆதரவு, மற்றும் குரானில் இருந்த முரட்டுத்தன மேலோட்டமான ஒழுக்கம், இதில் இருந்து தான்.
யாரும் பாட்டு கேட்க கூடாது, பெண்களின் அடக்குமுறை இன்னும் பல.
நம்முடைய வேதமும், சரியாகப் புரியாமல் இருப்பவர்கள், இந்து தர்மம் என நினைப்பது, மேலோட்டமான narrow morals, women repression, இவற்றையே.
அதன் விசாலம் புரியாதவர்கள், அதன் liberal thoughts on everything including sex, drugs, alcohol, meat eating, dancing, engaging in pleasure activities குறித்த விசாலமான
பார்வையை உணராத ஒரு குற்ற உணர்ச்சியை (கிறித்துவ நெறி போல) ஏற்படுத்த முயல்பவர்கள்.
அதனால் ஒரு புறம்,சுயநலவாத கேளிக்கை
இன்னொரு புறம, ஒழுக்க ஆதாரத்தில் இருந்து வரும் நற்குணம். ஆனால் ஒழுக்கம் என்று சொல்லிக் கொண்டு அது தனி மனித சுதந்திரத்தைப் பறிக்க முயலக்கூடிய ஒரு சாத்தியம்.
இந்த விஷயத்தில், corrupt india is better than strict talibanized version என்றே தோன்றுகிறது.
மெதுவாக பதில் எழுதவும். ஒன்றும் அவசரமில்லை.
ஸ்ரீதர் விஸ்வநாத்
=================
அன்புள்ள ஜெ. மோ.
வணக்கம். தொடர்ந்து உங்களது பதிவுகளை வாசித்துவருபவன் என்ற முறையில், அண்ணா ஹசாரே, அவரது தன்னலமற்ற போராட்டங்கள், அவை குறித்த உங்களது வலிமையான கருத்துப் பதிவுகள் அனைத்தும், அய்யத்திற்கிடமின்றி ஏற்கத்தக்கதும், ஆதரிக்கத்தக்கதுமாகும்.
ஊழலை எப்படி ஒழிப்பது என்பது பற்றி நாம் பார்த்த அளவுக்கு, ஊழலுக்கான உண்மையான ஊற்றுக்கண் எது என்பது குறித்தும் பார்த்திருக்க வேண்டும் என்பது எனது பணிவான கருத்து. அரசாங்கத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க மூலதனமுடையவர்களால் உலகம் முழுவதும் கையாளப்படும் பழைமையான மற்றும் வெற்றிகரமான ஆயுதம்தான் ஊழல்.
ஊழலின் ஊற்றுக்கண்ணே இந்த மூலதனவாதிகள்தான். நாமிருக்கும் சமூகம் பன்னாட்டு, உள்நாட்டு மூலதன வாதிகளால் பல நூறு வழிகளில் வழிநடத்தப்படுவது மட்டுமல்ல கட்டுப்படுத்தப்படுகின்ற ஒன்றாக இருக்கிறது என்பது தாங்கள் அறிந்ததே. தமது கட்டுப்பாட்டை அரசியல்வாதிகள் மீதுஉறுதி செய்து கொள்ளவே, ஊழலுக்கு எதிரான மக்களின் உணர்வுகளைப் பயன்படுத்திட மூலதனக் கூட்டங்கள் முயலும். எனவே மூலதனத்தின் விருப்பங்களுக்கு மாறாக செயல்படும் அரசாங்கத்தால் மட்டுமே ஊழலின் ஊற்றுக்கண்ணைத் தூர்த்து தீர்வு காணமுடியும். நமது அரசாங்கங்களின் நேர்மை என்னவென்று ஊரறியும்.இந்த நிலையில் லோக்பால் இதில் எந்த அளவுக்கு வெற்றி பெறமுடியும்? இதுதான் எனது அடிப்படையான சந்தேகம்.
ஊழலுக்கு எதிரான மக்களுடைய உணர்வு மேற்கூறிய அடிப்படையில் உருவானதல்ல, மாறாக, அன்றாட வாழ்வில் அரசாங்கத்துறைகளிடம் அவர்கள் அடைந்த கசப்பான அனுபவங்களால் உருவானதாகும். அவமானம், அலைக்கழிப்பு, சால்ஜாப்புகள், சிவப்புநாடா முறைகளால் ஏற்படும் காலதாமதம் போன்றவற்றை சுலபமாகத் தவிர்த்து தனக்கானதை முந்திப்பெற்றுவிட,விருப்பமில்லாமல் லஞ்சம் கொடுத்து வந்தார்கள். இப்போது அண்ணா ஹசாரே வந்தவுடன், லஞ்சம் கொடுக்காமலேயே அவைகளைத் தவிர்த்து விடலாம் எனக் கருதி ஆதரிக்கின்றனர். குறிப்பாக அரசாங்கத்திடம் ஏதோ ஒரு காரணத்திற்காகத் தொடர்ந்து செல்லவேண்டிய நிலையில் உள்ளவர்கள் ஜன் லோக்பாலைத் தீவிரமாக ஆதரிக்கின்றனர். மெத்தப்படித்து பைநிறைய ஊதியம் வாங்குபவர்களை விட சாதாரண ஏழை மக்கள்தான் ஆர்வத்துடன் எதிர்பார்த்து ஆதரிக்கின்றனர். அவர்களது அன்றாடப் பிழைப்பின் காரணமாகத் தெருவுக்கு வந்து போராடமுடியவில்லை.
எதைப்பற்றியும் கவலைப்படாமல், தனது பிரச்சினைகளைத் தானே தீர்த்துக்கொள்ளமுடியுமென்ற நம்பிக்கையில், தனித்தீவாக வாழ்ந்து வந்த நடுத்தர வர்க்கத்தை,பொதுப்பிரச்சினைக்காக தெருவில் இறங்கி நம்பிக்கையுடன் முழக்கமிட வைத்த மகத்தான சாதனைக்காகவே அண்ணா ஹசாரே தமது முயற்சியில் வெற்றி பெற வேண்டுமென்று விரும்புகின்றேன்.நன்றி.
E.L. SRIDHARAN.
August 30, 2011
சேலத்தில் பேசுகிறேன்
வரும் 3-09-2011 அன்று சேலத்தில் தலித் ஆய்வுமையம் சார்பில் நடத்தப்படும் நான்கு தலித் நூல்களின் ஆய்வு அரங்கில் நான் பேசுகிறேன்
மதுரையைச்சேர்ந்த தலித் ஆய்வு-பதிப்பு நிறுவனமான எழுத்து நூறாண்டுகளுக்கும் மேலாக வெளியே தெரியாமலிருந்த முக்கியமான தலித் நூல்களை மறுபதிப்பு செய்து வெளியிட்டு வருகிறது.
அந்த அமைப்பு வெளியிட்டுள்ள நான்கு நூல்கள் மீதான விமர்சனக்கூட்டம் சேலத்தில் நிகழவுள்ளது. நூல்கள்
1. பெருந்தலைவர் எம்.சி.ராஜா சிந்தனைகள்
2. தலித் மக்களும் கல்வியும் – ஹென்றிஸ்டீல் ஆல்காட்
3. தலித் விடுதலையும் திராவிட இயக்கமும் [மறைக்கப்பட்ட உண்மைகளும் கறைபடிந்த அத்தியாயங்களும்.] தி.பொ.கமலநாதன்
4 பஞ்சமி நில உரிமை
இவற்றில் ஆல்காட் பற்றி நான் பேசுவதாக உள்ளேன்
இடம்: இலக்குமி அரங்கம், சாமுண்டி சூப்பர் மார்க்கெட் வளாகம், நான்குரோடு சேலம்-9
நாள் 03-09-2011
நேரம் மாலை 5.30
பங்கேற்போர்
1. பேராசிரியர் மார்க்ஸ் [புதுவை பல்கலை கழகம்]
2.பேராசிரியர் ஸ்டாலின் ராஜாங்கம்
3. ஜெயமோகன்
4 முனைவர் ஜெரோம் சாம்ராஜ்
ஒருங்கிணைப்பு
ஸ்பீடோ இயக்கம்
94877 01037 , 9080314744
எழுத்து
சிரோன் குடில், ஜோஸ்புரம் முதல் தெரு
பசுமலை
மதுரை 4
eluthualex@yahoo.com
பழைய கட்டுரைகள்
எம்.சி.ராஜா-வரலாற்றில் மறைந்த தலைவர்
திராவிட இயக்கத்தை நிராகரிப்பது ஏன்?
அயோத்திதாசர் என்னும் முதல் சிந்தனையாளர்
அண்ணா ஹசாரே சாதிவெறியரா?
குழும விவாதத்தில் ஒருவர் அண்ணா ஹசாரேபற்றி இன்று இடதுசாரிகளில் சிலர் முன்வைக்கும் சில குற்றச்சாட்டுகளைச் சொன்னார். அண்ணா ஹசாரேவின் ராலேகான் சித்தி கிராம அமைப்பில் தலித்துக்கள் அசைவம் சாப்பிடத் தடை இருந்தது. அப்படி சாப்பிட்ட தலித்துக்கள் கட்டிவைத்து அடிக்கப்பட்டார்கள். இரண்டு, அங்கே ஜனநாயகமே இல்லை. பஞ்சாயத்து தேர்தல்கள்கூட அனுமதிக்கப்படவில்லை. ஆகவே அவர் பிராமணிய வெறியர், சர்வாதிகாரி.
இதைச் சொன்ன ஒரு இடதுசாரி கட்டுரையாளர் இதையெல்லாம் அவரே சென்று பார்த்தது போல எழுதினாராம். அதற்கு நான் எழுதியபதில் இது.
அண்ணா ஹசாரே பற்றி தான் நேரில் போய் பார்த்ததாக அவ்விமர்சகர் சொன்னவை ராமச்சந்திர குகா அண்ண ஹசாரே பற்றி எழுதிய http://www.telegraphindia.com/1110827/jsp/opinion/story_14423092.jsp என்ற கட்டுரையில் இருந்து எடுக்கப்பட்டவை. அந்தக் கட்டுரையை மட்டும் வாசித்ததனால் முழுமையான பார்வையை உருவாக்க முடியாமல் துண்டாகச் சொல்லப்படும் முழு அவதூறுச் சித்திரம் அது.
குகா அவரது கட்டுரையியில் அண்ணா ஹசாரே பற்றி முகுல் சர்மா எழுதி வெளிவரப்போகும் ஒரு நூலில் இப்படி இருப்பதாக எழுதியிருந்தார்.
The strengths and limitations of Anna Hazare are identified in Green and Saffron, a book by Mukul Sharma that shall appear later this year. Sharma is an admired environmental journalist, who did extensive fieldwork in Ralegan Siddhi. He was greatly impressed by much of what he saw. Careful management of water had improved crop yields, increased incomes, and reduced indebtedness. On the other hand, he found the approach of Anna Hazare "deeply brahmanical". Liquor, tobacco, even cable TV were forbidden. Dalit families were compelled to adopt a vegetarian diet. Those who violated these rules — or orders — were tied to a post and flogged.
என்ற பத்தியில் இருந்து எடுத்தவை இடதுசாரிகளின் அவதூறுவரிகள். அதற்கு ஆதாரம் கேட்டால் சொல்லமுடியாது. ஆகவே தானே சென்றதாகப் பீலா விடுகிறார் அந்த விமர்சகர். பொது விவாதத்துறையில் இது மிகமிக அபாயகரமான ஓர் உத்தி. இந்தக்கட்டுரை வெளிவருவதற்கு முன் எங்குமே இவர் இதையெல்லாம் சொன்னதில்லை. அண்ணா ஹசாரே பற்றி அவருக்கு முன்பு எதுவுமே தெரியாது என்பதே உண்மை.
உண்மையில் அவர் அதே முகுல் சர்மா எழுதிய கட்டுரையை http://kafila.org/2011/04/12/the-making-of-anna-hazare/ என்ற தளத்தில் வாசித்திருந்தால் ஓரளவேனும் உண்மை தெரியும். முகுல் சர்மா அமெரிக்க ஆய்வாளர். முதலாளித்துவ நோக்கு கொண்டவர். அவர் தன்னிறைவுள்ள காந்திய அமைப்பை உருவாக்கமுயலும் அண்ணாவின் முயற்சியை எப்படிப் பார்ப்பார் என்பது நமக்கு தெரியும். ஆனாலும் அவர் எழுதுவது இவர்கள் சொல்லிய சித்திரத்தை அல்ல.
அண்ணா ஹசாரே அந்த பின்தங்கிய சாதிவெறிக் கிராமத்தில் எப்படி தீண்டாமையை முழுமையாக ஒழித்தார், எப்படி சாதிய சமத்துவத்தைக் கொண்டுவந்தார் என்று சொல்கிறார் முகுல் சர்மா.
In Ralegan, there are a few Mahars, Chamars, Matangs, Nhavi, Bharhadi and Sutars. Since the beginning of his work, Anna has been particularly emphasizing the removal of approachability and discrimination on caste basis meted out to people, who are popularly referred to as Harijans here. The concept of 'village as a joint family', or all inhabitants of the village as 'almighty God', has prompted the villagers to pay attention to the problems of Harijans. The integration of Dalits into an ideal village has two components in Ralegan. One is to assume that they were always there to perform some duties and necessary services and that their usefulness justifies their existence in the present. The other component is hegemonic, designed to get Dalits into a brahaminical fold. It is not only manifested in the way food or dress habits are propagated; it is prevalent in several other forms.
அந்த கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் கீழ்த்தரமாக நடத்தப்பட்டமைக்கு எதிராக அண்ணா ஹசாரே தனிமனிதனாக நிகழ்த்திய ஒரு போர் அது. அங்கே அவர் தீண்டாமையை ஒழித்தார். தலித் மக்களுக்குக் கிராமசபைகளில் சம அதிகாரம் கொண்டுவந்தார். அவர்களைப் பொருளாதார விடுதலை பெறச்செய்தார். அதை நம்முடைய மதுரைப் பக்க கிராமங்களில் முதலில் செய்து காட்டிவிட்டு அல்லவா இந்த இடதுசாரிகள் அண்ணா ஹசாரேவைக் குற்றம் சொல்லவேண்டும்? கண்ணெதிரே தலித்துக்கள் ஊர்-சேரி என இரண்டுபட்ட அமைப்பால் ஒதுக்கப்பட்டு வாழும்போது அதைக் கண்டும் காணாமல் ஐம்பதாண்டுகளாக அரசியல் பேசும் இவர்களுக்கு அண்ணா ஹசாரேவைப் பேச என்ன யோக்கியதை?
ராலேகான் சித்தியில் தலித் மக்களை ஒதுக்குவதற்காக உயர்சாதி சொன்ன சாக்கு அவர்கள் மாடு தின்கிறார்கள் என்பது. அதைத் தடுக்க அண்ணா ஹசாரே கண்டுபிடித்த ஓர் உத்தி அந்த மக்களை மாடு சாப்பிடுவதில்லை என அவர்களே முடிவெடுக்கவைப்பது. அந்தச் சாதிக்கட்டுப்பாட்டுக்கு அவர்கள் ஒவ்வொருவரும் கட்டுப்பட்டாகவேண்டும். அவர்களை அண்ணா ஹசாரே தண்டித்தார் என்பதை அவதூறு என்றே சொல்ல வேண்டும்
உண்மையில் வட இந்தியாவில் சாதாரணமாகவே அசைவ உணவு குறைவு. மகாராஷ்டிர கிராமங்களில் பெரும்பாலான சதவீதம் சைவ உணவுதான். சப்பாத்தி ,தயிர், வெங்காயம், சப்ஜி ,தால், கொஞ்சம் சோறு. தலித்துக்கள் மிக மிக அபூர்வமாக செத்த மாட்டின் கறி உண்பார்கள். குளத்துமீன் இன்னும் அபூர்வமாக.
வடக்கத்தி கிராமங்கள் எல்லாம் இன்றும் பல்வேறு சாதிகள் வாழும் தனிப்பகுதிகளாகவே இருக்கும்[ இங்கும்கூட பல ஊர்களில் அப்படித்தானே? ]அந்த பகுதிகளுக்குள் சந்திப்போ உரையாடலோ சாத்தியமல்ல. அண்ணா ஹசாரே உருவாக்க முயன்ற கிராமசுயராஜ்ய அமைப்பு ஒரே பொருளாதார மண்டலம். எல்லா மக்களும் ஒருவரை ஒருவர் சார்ந்து ஒரே அமைப்பாக வாழ்ந்தாகவேண்டியிருந்தது. அதில் பெரும்பான்மையினரான சாதியினருக்கு தலித் மக்கள் மேல் கடுமையான வெறுப்பு இருந்தது. தலித்துக்கள் வாழ்ந்த நிலை பொருளியல் அடிமட்டம்.
முகுல் சர்மாவே அண்ணா ஹசாரெ தலித்துக்களை உள்ளே கொண்டுவர இரு வழிகளை கையில் எடுத்தார் என்கிறார். ஒன்று, அவர்கள் ஆற்ற வேண்டிய பணியை சுட்டிக்காட்டுவது. அவர்கள் இல்லாமல் கிராமம் இல்லை என்பது. இரண்டு அவர்கள் மாடு தின்பதை விலக்குவது. அந்த சாதிக்கட்டுப்பாட்டையே அசைவம் சாப்பிடத் தடை என்று இவர்கள் இன்று திரிக்கிறார்கள்.
முகுல் சர்மாவே அவரது நூலில் அண்ணா ஹசாரேவைக் கண்டிக்கும் தோரணையில் எழுதும்போதுகூட இப்படித்தான் சொல்கிறார். கிராமமே கடவுள் என்பது அண்ணாவின் கொள்கை. அந்த அமைப்புக்குள் சமமான உரிமை கொண்டவர்களாக தலித் மக்களைக் கொண்டுவருவதற்கு அவர் கண்டுபிடித்த வழிமுறைதான் பிராமணிய தன்மையை தலித் மக்களுக்கு அளிப்பது என.
அதாவது தலித்துக்களை ஒடுக்குவதற்காக அண்ணா அதைச் சொல்லவில்லை. சம உரிமைக்காக, பொருளாதார விடுதலைக்காக அவர் அங்கே சமயோசிதமாக உருவாக்கிய ஒரு வழி அது. அதை அவரை சாதி வெறியர் என்று சித்தரிக்கப் பயன்படுத்துவது அப்பட்டமான மோசடி மட்டுமே.
அண்ணா தலித்துக்கள் மாடு உண்ணக்கூடாது என சத்தியம் வாங்கியது தப்பு என சிலர் சொல்லலாம். ஆம் அது ஒரு வலுவான வாதம். [அது பாரதி தலித்துக்களுக்கு பூணூல் போடவேண்டும் என்று சொன்னது போன்ற ஒரு செயல்] அங்குள்ள சூழலில் 1970களில் அது தேவைப்பட்டிருக்கலாம். [1986ல் அந்நிலை கண்டிப்பாக இல்லை. அங்கே சாதாரணமாகவே குளத்துமீன் சாப்பிடக்கிடைத்தது என் நேரடி அனுபவம்] அதை நானும் ஏற்க மாட்டேன். ஆனால் அண்ணா ஹசாரே அந்த மக்களுக்கு கிராமசபையில் சம இடத்தையும் பொருளியல் மேம்பாட்டையும் உருவாக்கிக் கொடுத்தார். ஆகவேதான் அவர்களின் மறுக்கமுடியாத தலைவராக ஆனார். அவர்கள் அவரை எங்கள் கடவுள் என்று சொல்லும் அளவுக்கு.
அண்ணா ஹசாரே உருவாக்க எண்ணியது ஒரு நவீன ஜனநாயகலட்சிய சமூகத்தை அல்ல. ஒரு நடைமுறைக் கிராமசமூகத்தை. அங்கே எது உடனடி சாத்தியமோ அதைத்தான் அவர் செய்ய முடியும். அவருக்கு வெறுமே உயர்ந்த ஜனநாயக லட்சியங்களைச் சொல்லிக்கொண்டு சும்மா இருப்பவரல்ல அவர். உடனடியாக கள்ளச்சாராய கிராமமாக இருந்த ராலேகான் சித்தியை ஒரு தன்னிறைவான வேளாண்மைகிராமமாக ஆக்க அவர் முயன்றார்.
சுற்றிலும் சாதிவெறி தாண்டவமாடும் ஒரு சமூகத்தில், அம்பேத்கார் சிலையைக்கூட தொடாத ஒரு சமூகத்தில், அவர் தலித்துக்களை கிராமசபைகளில் சம உரிமை கொடுக்க வைத்த சாதனையைக் கொச்சைப்படுத்த அவர் விதித்த கட்டுப்பாடுகளைப் பயன்படுத்துவதில் என்ன நேர்மை இருக்கிறது? அவரது நோக்கத்தை அங்கீகரித்து, அவரது வழிமுறைகளை ஒருவர் நிராகரிக்கலாம். ஆனால் நோக்கத்தையே சிறுமைசெய்கிறார்கள் . இதே வழிமுறையை இவர்களின் தலைவர்களிடம் செய்தால் ஏற்றுக்கொள்வார்களா என்ன?
அண்ணா ஹசாரே அந்த கிராமத்தில் அரசியல்கட்சிகள் நுழையாமல் பார்த்துக்கொண்டார். அதற்குக் காரணம் உண்டு. அது கள்ளச்சாராயத்துக்கு புகழ்பெற்ற ஊர். அந்த கள்ளச்சாராயம் அரசியலால் மீண்டு வரக்கூடாதென நினைத்தார். இன்றுகூட தமிழகத்திலும் பல மாதிரி கிராமங்களில் ஊருக்குள் அரசியலை நுழையவிடாமல் வைத்திருக்கிறார்கள். அண்ணா ஹசாரே அங்கே சர்வாதிகாரத்தை உருவாக்கவில்லை, மாறாகப் பழைய கிராம பஞ்சாயத்து முறையை கொண்டுவந்தார்.
அவர் உருவாக்கிய பஞ்சாயத்து அமைப்புகள் முழுமையான ஜனநாயக முறைப்படித்தான் செயல்பட்டன. தலைவர் தேர்தல் மட்டுமல்ல எல்லா தீர்மானங்களும் எல்லாரும் வாக்களித்தே எடுக்கப்பட்டன– தலித்துக்கள் வாக்களிக்கும் அமைப்பு கொண்ட ஒரே மகாராஷ்டிர கிராம அமைப்பும் அதுதான்.
அண்ணாவின் வழிமுறைகள் முன்னுதாரணங்களா? தேசிய அளவில் கொண்டுசெல்லப்படமுடிபவையா? நானும் ராமச்சந்திர குகாவுடன் சேர்ந்து ஐயப்படுகிறேன். காந்திய கிராமசுயராஜ்யமே எனக்கு ஐயத்துக்கிடமானதே. அண்ணா அதை நம்புகிறார். கொண்டுவர முயல்கிறார். நான் நவீனக் கல்வியும் நவீன உலகத்தொடர்பும் நவீனத்தொழில்நுட்பமும் கொண்ட ஒரு ஒட்டுமொத்த சமூகத்தையே சிறந்ததாக நினைப்பேன். கிராமசமூகத்தை மூடப்பட்டுவிட்ட ஒன்றாகவே நினைக்கிறேன்.
ஆகவே நானும் அண்ணா ஹசாரேவின் கிராமசுயராஜ்ய கனவை விமர்சிப்பேன். ஆனால் அவரை சாதிவெறியன் என்றும் சர்வாதிகாரி என்றும் சொல்லும் போக்கு இலட்சியக்கனவுகளை அவமதிக்கும் மனச்சிறுமையை வெளிப்படுத்துவது என்றே நினைக்கிறேன்.
அவதூறுகள் சொல்லாமல் இவர்களால் அண்ணா ஹசாரே பற்றி ஒரு விமர்சனம் கூட முன்வைக்கமுடியவில்லை என்பதே அவர் எப்படிப்பட்டவர் என்பதற்குச் சான்று.
இலங்கையில் இருந்து ஒரு கடிதம்
அன்பும் மதிப்புமிகு ஜெயமோகனுக்கு,
உங்களின் யானை டாக்டர் படித்தேன். மனசு மத்தாளமானது.உங்களைக்காண வந்த எஸ்.எல்.எம்.ஹனீபா மூலம் கிட்டியது.

ஒட்டமாவடி அறாபத்
ஊமைச்செந்நாய்க்கு நிகரான படைப்பு.இன்றைய தமிழ்ச் சூழலில் ஜெயமோகன் என்கின்ற உங்களால் மட்டும்தான் இவ்வாறு எழுத முடியும். இது முகஸ்துதியோ புகழ்ச்சியோ அல்ல,சத்தியம்.உங்களைக்கண்டு வந்த எஸ்.எல்.எம்.என்னிடம் ஜெயமோகன் என்கின்ற புத்தனைக்கண்டு வந்தேன் என்றார்.புத்தனின் மறு பெயர் ஈரம்.யானை டாக்டரின் ஒவ்வொரு பத்தியிலும் அந்த ஈரம் சொட்டுகிறது.
இலங்கையில் 6200 யானைகள் வாழ்ந்தாலும் எங்கள் காடு 2200 யானைகளுக்கே போதுமானது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சொல்லி வருகிறார்கள்.
புலிகளுடனான சண்டைமுடிவுக்கு வந்த வேளை, யானைகளுடனான சண்டை ஆரம்பம்.எங்கள் வாழ்விடங்களிலிருந்து 2 கிலோ மீற்றர் தூரத்தில் யானைகளின் குடியிருப்பு. எங்களுர் மக்களுக்கு யானைகளுடன் தீராப்பகை.ஒவ்வொரு வருடமும் யானைகள் பலரின் உயிரைப் பறித்து விடும். இந்தச்சூழலில் யானை டாக்டர் கதை எங்களை எவ்வாறு பாதித்திருக்கும் என நான் சொல்லத்தேவையில்லை.
இலங்கையில் எழுத்தாளர்கள் என்று கோலம் போடுபவர்களின் அடியேனும் ஒருவன். மூன்று சிறு கதைத்தொகுதிகளைக் கொண்டு வந்திருக்கின்றேன்.அதில் அடையாளம் பதிப்பகம் " உடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவி " என்ற தொகுதியைக் கொண்டு வந்திருக்கின்றது. அந்தத் தொகுதியிலிருந்து இரண்டு கதைகளை உங்களுக்கு அனுப்புமாறு எஸ்.எல்.எம் வேண்டிக்கொண்டார்.உங்கள் பார்வைக்கு அனுப்புகின்றேன்.
உங்களைக்காண இன்ஷா அல்லாஹ் பார்வதிபுரம் வருவேன்.
அன்புடன்
அறபாத்- இலஙகை
அன்புள்ள அறபாத்
நான் ஆபிதீனின் பக்கங்களில் உங்கள் கதைகளையும் கடிதங்களையும் ஏற்கனவே வாசித்திருக்கிறேன். தொகுப்பு வாசித்ததில்லை. அடையாளம் சாதிக் நல்ல நண்பர்தான். பெரும்பாலான நூல்களை அனுப்பித் தருவார். இந்நூலையும் அனுப்பச் சொல்கிறேன்.
உங்கள் கதைகளில் உள்ள சாதாரண மனிதனின் வாழ்வுக்கான ஏக்கத்தை மிகுந்த நெருக்கத்துடன் உணர்ந்தேன். குறிப்பாக ரெயில்வே ஸ்டேஷன் கதையில் சரசரவென வந்துமறையும் முகங்கள். காலம் ஒரு ரயில் போல ஜன்னல்முழுக்க முகங்களுடன் ஓவென அலறி இரும்புப்பேரொலியுடன் கடந்து மறைந்ததைக் காட்டிய கதை அது.
ஒரு எழுத்தாளன் அவன் கைக்குள் சிக்கக்கூடிய ஒரு வாழ்க்கைக்குள் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் காட்ட முயலவேண்டும் என நான் நினைக்கிறேன். வாழ்க்கையின் அளவும் அகலமும் அல்ல அது எதைச்சுட்டி நிற்கிறது என்பதே நல்லகதைகளை அடையாளப்படுத்துகிறது.
வீடு போர்த்திய இருள் கதையும் என்னைத் தனிப்பட்டமுறையில் பாதித்தது. காலம் இதழில் நான் அக்கதையை வாசித்திருக்கிறேன். கிட்டத்தட்ட அதே தளத்தில் ஒருகதை 'அம்மன் மரம்'எழுதியிருக்கிறேன்.
நாம் சந்திக்கும்போது சிறுகதை பற்றி இன்னும் நிறையப் பேசமுடியுமென நினைக்கிறேன். தொடர்ந்து உங்கள் படைப்புகளை வாசிக்கவேண்டும்
எழுதுகிறேன்
ஜெ
அன்புமிகு ஜெயமோகன்
உங்கள் கடிதம் என்னை உற்சாகப்படுத்தியது.ஒரு கட்டத்தில் வாழ்க்கை வெறுத்துப்போய்விடுகிறது. எழுதி என்ன செய்ய என்று மனம் அலுத்துக்கொள்ளும்.உங்களைப்போன்ற சிகரங்களின் எழுத்துக்கள் அதை மீண்டும் புத்துயிரூட்டும். நெரிசல்மிகு வாழ்க்கையில் வாசிப்பும் எழுத்தும்தான் புனித ஜிஹாத் என்பேன்.நான் அந்தப் புனித யுத்தத்தைத்தான் கடந்த மூன்று ஆண்டுகளாக நடாத்திக்கொண்டிருக்கின்றேன்.
என்னுடைய கதைகள் பற்றிய தங்கள் மதிப்பீடு மிகுந்த மன எழுச்சியைத்தருகிறது.என்னைப்போன்றவர்களின் படைப்புக்களை நீங்கள் வாசிப்பதற்கு அவகாசம் கிடைக்காது என்பது என் எண்ணமாக இருந்தது,
நேற்று என் தோட்டத்தில் இருந்த போது மாமரத்திலிருந்து நழுவி என் கையில் விழுந்த புழு ஒரு கைக்குழந்தையாகத் தவழ்ந்தது. என்ன ஒரு உயிர்ப்பான வார்த்தைகள். உங்களின் யானை டாக்டரைப்படித்த பின் நான் இப்படித்தான் புழுக்களைப் பார்க்க ஆரம்பித்துள்ளேன். இன்னும் அந்தக்காட்டிலிருந்து மீளவும் என் கிராமத்திற்கு வரமுடியவில்லை.
இலங்கையில் தற்போது புழுக்கத்தில் இருக்கும் 1000 ரூபா நோட்டில் யானையுடன் ஒரு பாகனும் இருப்பார்கள். அது எங்கள் ஊருக்குப்பக்கத்திலுள்ள கிராமத்து முஸ்லிம் ஒருவரால் தலதா மாளிகைக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட யானை. பாகன் தலையில் குல்லாய் போட்டிருப்பார் .கிடைத்தால் பாருங்கள் புரியும்.
நூற்றாண்டுகள் கடந்தாலும் மஹிந்த அரசு அந்த வரலாற்றைப்பேணி வருவதற்கு காரணம் அது அவர்களின் பவுத்த மதத்தின் அடையாளம் என்பதால்.
அன்புடன்
அறபாத்.
அன்புள்ள அறபாத்
உங்கள் மனநிலை எனக்குப்புரிகிறது.
எழுத்தாளனுக்குச் சோர்வு புறச்சூழல்களினால் ஏற்படும். ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குமேல் அது நீடித்தால் அது அவனுடைய பிழை. நீண்டகாலத்துக்கு நீடித்தால் அவனுடைய குற்றம்.
எழுத்துத்திறன் என்பது ஒரு இயற்கைக் கொடை. அல்லா உங்களுக்கு அதை ஒரு காரணத்துக்காகவே அருளியிருப்பான். அந்த நோக்கத்தை நிறைவேற்றும் பொறுப்பு உங்களுக்கு உள்ளது. அதற்கான விளக்கத்தை அல்லாவிடம் கோர உரிமை கிடையாது.
ஆக, முடிந்தவரை தீவிரத்துடன் ,உத்வேகத்துடன் எழுதிக்கொண்டிருப்பதே முக்கியமானது. அத்துடன் நம் கடமை முடிகிறது. எழுதுங்கள்.
ஜெ
August 29, 2011
மூவருக்கு தூக்கு தள்ளிவைப்பு
பேரறிவாளன் உட்பட மூவருக்கான தூக்கு தண்டனையை உயர்நீதிமன்றம் இரண்டு மாதத்துக்கு ஒத்திப்போடத் தீர்ப்பளித்துள்ளது. நேற்று திருவனந்தபுரத்தின் மூத்த வழக்கறிஞர் ஒருவரிடம் பேசும்போது கிட்டத்தட்ட இதுவே நிகழும் என்று சொன்னார் -மூன்று மாதம் ஒத்திப்போடக்கூடும் என்று. காரணம், இந்த சிக்கலான வினாக்களுக்கு உடனடியாக விசாரணையை முடிக்கமுடியாது. ஆகவே கால அவகாசம் அளிக்கப்படும்.
வழக்கு ஒத்திப்போடப்படும் என்றால் அனேகமாக மீண்டும் சிலமுறை ஒத்திப்போடப்படும் என்றும், கடைசியில் தூக்கு ரத்தாக பெரும்பாலும் வாய்ப்புள்ளது என்று அவர் சொன்னார். ஏனென்றால் பொதுவாக இந்திய நீதிமன்றங்கள் தூக்குக்கு எதிரான மனநிலையுடன் உள்ளன. தூக்கு ரத்துசெய்வதற்கான முகாந்திரங்கள் எதையுமே அவை நிராகரிப்பதில்லை. ஆகவே நம்பிக்கை கொள்வதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.
போராடியவர்களுக்கு வாழ்த்துக்கள். நல்லது நிகழவேண்டுமென ஆசைப்படலாம்
http://www.maalaimalar.com/2011/08/30103505/murugan-santhan-perarivalan-pu.html
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
