Jeyamohan's Blog, page 2290
September 4, 2011
மண்ணாப்பேடி
பேரன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
உங்கள் வாசகன் சண்முகநாதன் எழுதிக்கொள்வது….
நான் கடந்த வாரம் நாகர்கோயில் வந்திருந்தேன்.நண்பர்களோடு மூன்று நாள் விடுமுறைக்காக …. நாகர்கோயில் மற்றும் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று வந்தோம்.. உங்கள் கதைகளில் வரும் அனைத்து ஊர்களையும் மற்றும் நீங்கள் வாழ்ந்து வளர்ந்த ஊர்களையும் பார்க்க மிகவும் இனிமையாக உணர்ந்தேன்.. குறிப்பாக "படுகை" யில் வரும் பேச்சிப்பாறை (படுகையில் வரும் "கான்வென்ட் குழந்தை காட்டில் வழி தெரியாமல் நிற்பதுபோல் குரோட்டன்ஸ் வளர்க்கப்பட்டிருந்தது" என்ற உவமை என்னை மிகவும் கவர்ந்த ஒன்று) மற்றும் நீங்கள் வேலை பார்த்ததாக சொன்ன தக்கலை. ஏனோ உங்கள் பகுதியான ராஜலக்ஷ்மி நகர், பார்வதிபுரம் வரை வந்து திரும்பி வந்து விட்டேன்… எனக்கு என்னமோ திரும்பி விடவேண்டும் என்றே தோன்றியது. ஊட்டி முகாமில் (2010) உங்களை நேரில் சந்தித்திருக்கிறேன்.. ஏனோ வீட்டிற்க்கு வருவதற்கு ஒரு கூச்சம்.
நிறைய காரணங்களுக்காக எழுத விழைந்து இப்போதுதான் எழுத முடிந்தது. உங்களின் எல்லா நாவல்களையும் ஏறத்தாழ படித்திருக்கிறேன் சில பெரிய நாவல்களை தவிர.. நான் எப்போதும் உங்களின் நாவல்களின் ரசிகன்.. அதில் வரும் தத்துவங்களும், உணர்ச்சிகளும் எனக்கு மிகுந்த எழுச்சியைத் தந்திருக்கிறது.. உங்களைப் பற்றி நான் எனது நண்பர்களிடம் பேசாத நாட்களை இல்லை எனலாம்.. குறிப்பாகத் தன்னறம் பற்றிய கட்டுரை. அப்புறம் உங்களின் அறம் வரிசைக் கதைகள்.. உங்களின் அந்தத் தொகுப்பு வருவதற்காகக் காத்திருப்பவர்களில் நானும் ஒருவன். நானும் ஒரு வரலாற்றுப் பிரியன்.
இப்போது எழுதுவது, நாங்கள் பத்மநாபபுரம் சென்றிருந்த போது அங்குள்ள கல்வெட்டுகளைப் பார்க்க நேர்ந்தது… அதில் "மன்னாப்பேடி " என்ற முறையை ஒழிப்பது பற்றியான ஒரு உறுதி மொழி செதுக்கப்பட்டிருந்தது … அப்படி என்றால் என்ன என்று கொஞ்சம் விளக்க முடியுமா.?
அப்புறம் யானை டாக்டர் 50 புத்தகம் நேற்று எனக்குக் கிடைத்தது. அதற்கு உங்களுக்கும், அரங்கன் அண்ணாவுக்கும் மிகவும் நன்றி.. எல்லோரிடமும் விநியோகித்து வருகிறேன்… உங்களிடம் சொல்ல மறந்துவிட்டேன் என் வீட்டின் பெயர் கூட "அறம்" தான். எழுத்தில் எதுவும் பிழை இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி,
சண்முகநாதன்,
தேவகோட்டை.

உமையம்மை ராணி -மரவெட்டு ஓவியம்
அன்புள்ள சண்முகநாதன்
வீட்டுக்கு வந்திருக்கலாம், நிறையவே பேசியிருக்கலாம்
மண்ணாப்பேடி-புலைப்பேடி முறை பற்றி ரப்பர் நாவலிலேயே ஓர் அத்தியாயம் வரும்.
அது இப்பகுதியில் இருந்த ஓர் ஆசாரம். வருடத்தில் குறிப்பிட்ட சில நாட்கள் [அதிகமும் ஆடி மாதம்] மண்ணாப்பேடி-புலைப்பேடி நாட்களாக கோயிலில் கிராமசபை கூடி அறிவித்துப் பறையறிவித்து விடுவார்கள். அந்த நாட்களில் தாழ்ந்தநிலைச் சாதியைச்சேர்ந்த ஒருவர் [வண்ணர், புலையர்] ஒரு நாயர்,நம்பூதிரி, வேளாளர் சாதிப்பெண் மீது ஒரு சிறிய கல்லையோ குச்சியையோ எறிந்து தொட்டுவிட்டு 'தொட்டேன் பூஹோய்' என மும்முறை கூவி அழைக்கவேண்டும். அந்த நாளில் அதைச்செய்வது குற்றம் அல்ல.

நம்பூதிரிகள்
அந்தப்பெண் அதன்பின் தன் சாதியில் சேர்ந்துகொள்ளமுடியாது. அந்தப்பெண்ணை அந்தக் கல்லெறிந்தவனுடன் அனுப்பிவிடுவார்கள். அவள் அச்சாதியில் சேர்ந்து அவனுடைய மனைவியாக வாழ்வாள். அவளுக்கு அவள் குடும்பத்தினர் 'படியடைத்து பிண்டம் வைப்பார்கள்' [ இறுதிச்சடங்குகள் செய்து வீட்டுமுன் கதவை மூடிக்கொண்டு விடுவார்கள்] அத்துடன் அவளை மறந்து விடுவார்கள்– இது சாஸ்திரம். பேடி என்றால் அச்சம் என்று பொருள்.
இது உயர்சாதிப் பெண்களை அச்சுறுத்திக் கட்டுக்குள் கொண்டுவர உயர்சாதி ஆண்கள் செய்த சதி என ஒரு தரப்பு நெடுநாட்களாக இருந்தது. எல்லாவற்றையும் ஒடுக்குமுறை நோக்கிலேயே அணுகும் மார்க்ஸிய ஆய்வுமுறையின் அடிப்படைச் சிக்கல் இது.
ஆனால் ஆவணங்களையும் ஆசாரங்களையும் விரிவாக ஆராய்ந்த அறிஞர்கள் அப்படி அல்ல என இன்று நினைக்கிறார்கள். அது ஒரு புராதன பழங்குடிச் சடங்கு. சாதிமுறைக்குள் வந்துசேர்ந்து நீடித்தது. இவ்வாறு பிறசாதியிடம் சென்று சேரும் பெண்கள் அனேகமாக விரும்பித்தான் சென்றிருக்கிறார்கள். ஏனென்றால் இந்த அறிவிக்கப்பட்ட நாட்களில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாமலிருந்தால் இந்தச்சடங்கே நடக்காது. அன்றெல்லாம் பெண்கள் வீட்டுப் பின்கட்டைவிட்டு வெளியே வருவது மிகமிக அபூர்வமும் கூட. உயர்சாதிவீட்டருகே பிற ஆண்கள் நெருங்கவும் முடியாது. இது சாதிமுறையைக் கறாராகக் கடைப்பிடிக்கும்பொருட்டு அச்சாதிமுறைக்குள் அனுமதிக்கப்பட்ட ஒரு நெகிழ்வு, அவ்வளவுதான்.
மறுமணம் தடைசெய்யப்பட்ட நம்பூதிரி சாதிகளிலேயே இது அதிகம். நம்பூதிரிகளில் மூத்த நம்பூதிரிக்கு மட்டுமே நம்பூதிரி சாதியில் மணம்புரிய அனுமதி உண்டு. பிற நம்பூதிரிகள் நாயர் சாதியில் சம்பந்த உறவுதான் கொள்ளவேண்டும். ஆகவே நம்பூதிரிப்பெண்களில் பத்தில் இருவருக்கே மணமாக வாய்ப்பு. பிறர் வாழ்நாள் முழுக்கக் கன்னிகளாக இருந்தாகவேண்டும். அந்தப்பெண்களுக்கு இது அவள் மாட்டிக்கொண்டிருக்கும் ஆயுள்தண்டனையில் இருந்து தப்புவதற்கு சமூகமே அளிக்கும் வாய்ப்பு.
நாயர் சாதியிலும் இது சாதாரணமாக நிகழ்ந்துள்ளது. தாழ்ந்தநிலைச் சாதியினர் போருக்குப் போவதில்லை, ஆகவே ஆண்கள் அதிகம். போர்ச்சாதியான நாயர்களில் ஆண்கள் மிகமிகக் குறைவு. ஆகவே ஆண் துணை கிடைக்காத பெண்களுக்கு இது ஒரு வாய்ப்பு. ஒரு பெண் கன்னியாக இருந்து இறந்தால் அவள் யட்சியாக ஆகி ஆண்களின் குருதியைக் குடிப்பாள் என்ற நம்பிக்கை இருந்தமையால் பல காரணங்களால் ஆண் கிடைக்காத பெண்களை குடும்பத்தினரே அப்படி அனுப்பியிருக்கிறார்கள். அதிகமும் அழகற்ற, ஊனமுற்ற பெண்கள் மற்றும் ஜாதகக் குறை கொண்ட பெண்களை.
கணிசமான தருணங்களில் இப்படி மண்ணாப்பேடி புலைப்பேடி வழியாக தாழ்ந்தநிலைச் சாதிக்குச் சென்ற பெண்ணுக்கு அவள் குடும்பம் நிலங்களும் காடுகளும் அளித்திருக்கிறது. பல தாழ்ந்தநிலைச் சாதியைச் சேர்ந்த நிலப்பிரபுக்கள் இப்படி உருவானவர்களே. அவர்களிடையே நீடித்த உறவும் இருந்திருக்கிறது. இதெல்லாம் இன்று ஆவணங்கள் வழியாக நிரூபிக்கப்பட்டுள்ளன.
பின்னர் இந்த முறை மிகவும் பழங்குடித்தன்மை கொண்டதாகக் கருதப்பட்டது. நாயர் நம்பூதிரிச்சாதிகளில் கடுமையாக எதிர்ப்புகள் உருவாகி வந்தன. ஆகவே இது உமையம்மை ராணி காலகட்டத்தில் 1680 ல் அரசால் தடைசெய்யப்பட்டது
என் ஆசானும் அண்டைவீட்டினருமாக இருந்த மறைந்த திரிவிக்ரமன் தம்பி அவர்கள் மண்ணாப்பேடி -பறைப்பேடி என்ற நூலை வெளியிட்டிருக்கிறார். முழுமையான தொல்சான்றுகள் கொண்ட நூல் அது.
ஜெ
கடிதங்கள்
காலை வணக்கம் சார். சிறிது கால இடைவெளிக்குப் பின் மீண்டும் வாழ்விலே ஒரு முறை புத்தகத்தை எடுத்து வாசித்தேன். யோகி ராம் சுரத்குமாரைப் பற்றி "முடிவின்மையிலிருந்து ஒரு பறவை" என்ற அந்தக் கட்டுரை மிக நெருக்கமான வாசிப்பு அனுபவத்தை தந்தது.
அன்புடன்
தேவராஜ் விட்டலன்
http://devarajvittalan.blogspot.com
நன்றி தேவராஜ். அந்தக் கட்டுரையை எழுதி நெடுநாளாகிறது. நானும் நண்பர்களும் நடத்திய சொல்புதிது மூன்றாமிதழில் வெளிவந்தது. இன்று யோசிக்கும் போது அப்படி ஒரு இலக்கிய சிற்றிதழில் அந்தக்கட்டுரை வெளிவந்தது ஒரு புரட்சி என்று படுகிறது. தமிழ்நாட்டில் யோகியைப்போல முக்கியமான மனிதர்கள் வாழ்ந்தும்கூட நம் அறிவுச்சூழல் அவர்களை எதிர்கொள்ளாமலேயே கடந்து சென்றுகொண்டிருந்தது.
அதற்கு முன்னரே வெளிவந்த நித்ய சைதன்ய யதியின் பேட்டி ஓரு தொடக்கம். அக்காலகட்டத்தில் அந்த பேட்டியைக் கண்டு உருவான அதிர்ச்சி நினைவுக்கு வருகிறது. இனிமே இதழ்கூட விபூதி குடுப்பீங்களா என்றார்கள் சிலர். ஆக்ரோஷமான கட்டுரைகள்கூட சில எழுதப்பட்டன.
இன்று நிலைமை வெகுவாக மாறிவிட்டிருக்கிறது. இன்று ஆன்மீகம் என்ற சொல் கெட்டவார்த்தையாக இல்லை. அதற்கு அப்பேட்டிகள் வழிவகுத்தன
ஜெ
வணக்கம்,
தங்களுடைய இன்றைய காந்தி நூலை சமீபத்தில் வாசித்தேன். மிக மிக அருமையான நூல். நண்பர் ஒருவருடன் இந்நூலை பற்றி விவாதம் செய்த போது, தங்களுடைய இணையத்தில் கூடுதல் ஆன கருத்துக்கள், தகவல்கள் உள்ளதாக கூறினார். இணையத்தில் உங்களுடைய காந்தி பற்றிய கட்டுரைகளை வாசித்து கொண்டிருக்கிறேன். கீழ்க்கண்ட வரிகளை, காந்தியும் சாதியும் பதிவில் வாசித்தேன், "செல்வத்துக்கான கழுத்தறுக்கும் போட்டியே வாழ்க்கையாக ஆகிவிடும். அதன்மூலம் நெறிகள் இல்லாமலாகி மானுட உறவுகள் சீரழியும் என்றார் காந்தி". எவ்வளவு தீர்க்கதரிசனமான சிந்தனை. தங்களுடைய பதிவுகள் பலரையும் சென்றடைய வேண்டும் என விரும்புகிறேன், பிரார்த்திக்கிறேன்.
முரளி
பெங்களூர்
அன்புள்ள முரளி,
காந்தியை இன்றைய சூழலில் மறுகண்டடைவு செய்ய என் நூல் உதவியிருக்கிறதென்பதில் மகிழ்ச்சி. சென்ற ஈரோடு கண்காட்சியில் மிக அதிகமாக விற்ற நூல் அது என்றார்கள். அது உருவாக்கும் செல்வாக்கையும் கண்டுகொண்டிருக்கிறேன். அந்நூலின் இலக்கு நிறைவேறி வருவதில் மகிழ்ச்சி.
ஜெ
மதிப்பிற்குரிய ஜெயமோகன்,
தங்கள் அவதாரம் சிறுகதை படித்தேன். வழக்கம் போல அருமை. அவதாரம் என்றவுடன் ராமாவதாரம் தான் எனக்கு நினைவுக்கு வந்தது. பிறகு தங்கள் எழுத்துக்களில் ராம பிரானைக் குறித்துத் தேடித் பார்த்தேன். ஸ்ரீராமன் குறித்தும் ராமாயணம் குறித்தும் தங்கள் எண்ணங்களைத் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன். கண்ணனைப் பற்றியும், பாரதத்தைப் பற்றியும் நிறைய எழுதி இருக்கிறீர்கள். பகவத் கீதை உரையும் படித்தேன் . இந்திய கலாசாரத்தில் ராமாயணம் முக்கியமானது என்று நினைக்கிறேன். இது குறித்துத் தங்கள் எண்ணங்களை நேரம் கிடைக்கும் போது எழுதவும்.
அன்புடன்
ஸ்ரீகாந்த்.
http://www.sangatham.com/
அன்புள்ள ஸ்ரீகாந்த்
கிருஷ்ணனின் ஆளுமையில் உள்ள கலவை எனக்குப் பிடித்திருக்கிறது. தத்துவ ஞானி , குழந்தை, மன்னன், காதலன். நான் கீதை வழியாகவே கிருஷ்ணனை அணுகுகிறேன். அதன் விரிவாக்கமே மகாபாரதம். ராமன் மேல் அந்த ஈர்ப்பு உருவாகவில்லை
ஜெ
ஜெ,
தங்களின் காந்தியின் பிள்ளைகள் கட்டுரை படித்தேன். அப்பாவுடன் ஒரு நெருக்கம் அல்லது நேரடித் தொடர்பு (அம்மா மூலம் அணுகாமல் நேரடியாக அணுகுவது ) இல்லாத அநேகருக்கு இந்த சிக்கல் உண்டு.நான் கல்லூரிப் படிப்பை முடிக்கும் வரை என் அப்பாவிடம் நேரடியாக எதையும் கேட்க மாட்டேன்.ஒரே வீட்டில் இருந்தும் பெரிய இடைவெளி இருந்தது. ஒரு விபத்தில் காலில் அடிபட்டு மூன்று மாதம் என் தந்தை மருத்துவமனையில் இருந்தார்.அப்பொழுதான் ஒரு நாள் இரவு நீண்ட நேரம் மனம் விட்டுப் பேசினோம் அதன் பிறகு அவர் ஒரு நல்ல நண்பர் ஆகிவிட்டார்.அனேக விசயங்களில் வேறு பட்டாலும் அந்தப் பழைய வெறுப்போ,கோபம் இல்லை. "tom hanks " நடித்த 'Road to Perdition ' படத்தில் – இரு குழந்தைகளுக்கு அப்பாவாக வரும் கதாபாத்திரம் michael sulliven .தன்னிடம் கடுமையாகவும் தம்பியிடம் அன்பாகவும் நடந்து கொள்ளுவதாக மூத்த பையன் சொல்லும் குற்றச் சாட்டிற்கு அவர் சொல்லும் டயலாக் "Because you are more like me ". உங்கள் கட்டுரை படித்ததும் இந்த வசனமும் ஞாபகம் வந்தது.
ஜெகன்னாதன் மனோகரன்
அன்புள்ள ஜெகன்னாதன்,
தந்தையைப் புரிந்துகொள்வது மிகவும் சிரமம். அதற்குக் காரணம் தூரமல்ல அண்மை.
நான் எழுதிய ஒரு கதை [விரித்தகரங்களில்] அதில் கிருஷ்ணன் அர்ஜுனனிடம் சொல்லும் வரி 'தந்தைக்கும் மகனுக்குமான உறவென்பது வானத்துக்கும் பூமிக்குமான உறவுபோல, அவ்வளவு சேய்மை, அவ்வளவு அண்மை'
ஜெ
September 3, 2011
தூக்கு -கடிதங்கள்
ஜெ ,
மூன்று நபர்களின் தூக்கை நியாயப்படுத்தும் மனிதர்கள் ஏன் நம் நாட்டில் நடக்கும் ' விவசாயிகளின் உயிர்பலியை ' கண்டுகொள்ளவில்லை . ஒரு வருடம் நடந்தால் 'உயிர்பலிக்கு' சம்பந்தப் பட்டவர்களை மன்னிக்கலாம் ஆனால் வருடா வருடம் நமது நாட்டின் விவசாயிகள் வேறு வழி இல்லாமல் எலிக்கறியை சாப்பிட்டு , தற்கொலை செய்துகொள்கிறார்கள் . இதற்கு சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர் கொள்ளை லாபம் அள்ளித்தரும் 'விளையாட்டில் ' அதிக கவனம் செலுத்துகிறார் ….வருடா வருடம் நடக்கும் விவசாயிகளின் தற்கொலையில் சம்பந்தப்பட்ட வேடிக்கை பார்த்த அனைவரும் கொலையாளிகள் தானே !!
இந்த மூன்று பெயர் என்றால் ஒரு நியாயம் , பண வல்லமை படைத்தவர்கள் என்றால் இன்னொரு நியாயமா !!! அண்ணா ஹாசரே போராட்டம் மூலம் இந்த மாதிரியான 'கொடுமையான உயிர்பலிகள் ' குறைந்தால் எனக்கு நிம்மதி தரும் .
உதயசூரியன்
அன்புள்ள ஜெயமோகன்,
நீங்கள் இந்த விசயத்தை முடித்துக் கொண்ட பிறகும் இதை எழுதுகிறேன்.மூவரின் தூக்கு தொடர்பாக நீங்கள் எழுதிய பதிவிற்கு உங்களைக் குறை கூறி வந்த மடல்கள் என் மனதை மிகவும் புண்ணாக்கியதால் இதை எழுதுகிறேன்.கடந்த இரண்டு ஆண்டுகளாக உங்களின் ஒரு பதிவைக் கூட விடாமல் படித்துவருகிறேன்.உங்களுக்கு இந்தப் பதிவு தொடர்பாக வந்த பெரும்பாலான மடல்கள் உங்களை ஒரு நீதிபதியாக நினைத்து எழுதப்பட்டது என்றே நான் நினைக்கிறேன்.
ஆனால் நான் என்றும் உங்களை ஒரு எழுத்தாளனாகவே பார்க்கிறேன்.எனவே நீங்கள் அடிக்கடி கூறுவதைப்போன்று ஒரு எழுத்தாளன் சொந்த வாழ்க்கை அனுபவம் சார்ந்தே பேச முனையவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.தூக்குக் கயிறையும் அதன் வலியையும் நீங்கள் நன்றாக அறிவீர்கள்.நீங்கள் எழுதிய அந்தப் பதிவு என்னை இந்தப் பிரச்சனையைத் தாண்டி உங்கள் சொந்த வாழ்க்கையை நோக்கி மீண்டும் ஒருமுறை பார்க்கவைத்தது."தோன்றாத்துணை" பதிவைப் படித்துவிட்டு மனம் ஒடிந்து போய்க் கிடந்த தருணத்தை இப்பொழுது நினைவு கூர்கிறேன். ஒரு சாதாரண மனிதனாக அந்த மூவரின் தூக்கு ரத்து செய்யப்படவேண்டும் என்றே சொல்வேன்.
கோ ஜெயன்
நாகர்கோயில்
அன்பு ஜெயமோஹன்,
வணக்கம். தூக்கு தண்டனை பற்றிய தங்களின் பதிவைக் கண்டேன். ஒரு இளம் பெண் தனது உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில் தற்போது இது அரசியல் ரீதியாகவே அணுகப் பட்டு வருகிறது. ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு முன் சான்றோர் அமைப்பு என்ற இயக்கத்தில் அமரரான சுந்தரராமசாமியும் தூக்கு தண்டனையை எதிர்த்து வந்தார். சமூகமே சேர்ந்து ஒருவரைக் கொல்வது என்பது கண்டிப்பாக ஏற்க முடியாததே. பெரியவர் ஜெயகாந்தனும் இதே சிந்தனை கொண்டவரே.
ஆனால் நமது சிந்தனையாளர் தமது அரசியல் பின்னணியைத் தாண்டி தண்டனை சட்டத்தின் எல்லா அம்சங்களையும் விவாதித்து எவை எவை எந்த எந்த காரணத்தினால் ஏற்புடையவை ஆகா என்று அடையாளம் காண வேண்டும். பாலியல் ரீதியான குற்றங்கள், தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள், திட்டமிட்ட வன்முறைக் குற்றங்கள் இவற்றிலிருந்து சமூகம் காக்கப்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. சிறைச் சாலைகள் ஒருவர் மேம்பட்ட ஆரோக்கியமான மனநிலையுடன் வெளிவருவதற்கான எந்த ஏற்பாடும் இன்றி இருப்பது மட்டுமல்ல பல கைதிகள் இன்னும் மோசமான மன வக்கிரங்களுடன் வெளிவருவது கண்கூடு. தேர்ந்தெடுத்து தமது மனித நேய நிலைப்பாட்டை வெளிப்படுத்த மட்டுமே தூக்கு தண்டனை பற்றிய அரசியல் நடவடிக்கைகள் பயன்படுகின்றன.
பலவேறு காரணங்களினால் குறிப்பாக சமூகத்தின் குரூரத்தினாலும் நிராகரிப்பாலும் தற்கொலைக்குத் தள்ளப் படுவோர் பற்றியோ அல்லது குறைந்த பட்ச சுகாதார மற்றும் கௌரவ சாத்தியமற்ற நிலையில் வாழும் நலிந்தோர் – தலித்துகள் நிலையும், குழந்தைத் தொழிலாளிகளை உறிஞ்சி நாம் வாழ்வதும் தூக்கு தண்டனைக்கு நிகரான கொடூரங்களே. கருத்துச் சுதந்திரமே கேள்வியாயிருக்கும் நம் சூழலில் வெளிவரும் கருத்துக்களில் சுதந்திரமான- சமூகத்தின் அனைத்துத் தரப்பையும் உள்ளடக்கிய- சிந்தனை இல்லை. உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டே அரசியல் முகவரியைத் தக்க வைத்துக் கொள்வோர் தமிழ்ச் சூழலின் மையமாகி வருவது சோகம்.
அன்பு
சத்யானந்தன்.
சித்பவானந்தர்-ஒருகடிதம்
சுவாமி சித்பவானந்தர் சுமார் 20 இளைஞர்களைத் தன் திருப்பராய்த்துறை தபோவனத்தில் பேளூர் மடத்தின் அனுமதி பெறாமல் வைத்துத் தன் முறையில் பயிற்சி அளித்து வாந்தார். அவர்களுக்கு ஒரு ராமகிருஷ்ண ஜெயந்தி அன்று சன்யாசம் அளிக்க வேண்டும் தலைமைப்பீடத்திற்கு எழுதினார்.தலைமைப்பீடம் ஒரு அகில உலக நிறுவனமானதால் அவர்களுக்குசில வழி முறைகள் உண்டு. அதன்படி அவருடைய மாணவர்களைத் தங்கள் வசம் வைத்திருந்து அங்குள்ள பயிற்சிகளையும் அளித்துப் பின்னர் சன்யாசம் அளிப்பதாகத் தலைமை கூறியது.சுவாமி சித்பவனந்தர் தானே அவர்களுக்கு சன்யாசத்தை அளித்துவிட்டார். இது தலைமைப் பீடத்ததினை மீறிச் செயல் பட்டதாகக் கொள்ளப்பட்டது.ஒவ்வொரு சன்யாசியும் அவ்வாறு சன்யாசம் அளிக்க ஆரம்பித்துவிட்டால் இயக்கம் என்ற அமைப்பு வலுவிழக்கும் என்று தலைமை கருதியது.அதனைத் தலைமை சித்பவானந்தருக்குக் கூறியபோது அவர் கோபித்துக்கொண்டு வெளியேறினார். சுவாமி சித்பவானந்தருக்கும், அன்று இயக்கத்தின் தலைவராக இருந்த சுவாமி வீரேஸ்வரானந்தருக்கும் நடந்த கடிதப்போக்குவரத்து சுவாமி சித்பவானந்தரால் அச்சிட்டு வெளியிடப்பட்டது. இன்றும் தபோவனத்தில் கேட்டால் கிடைக்கலாம்.
(சித்பவானந்தரால் உருவாக்கப்பட்ட சன்யாசிகள் அனைவரும் துண்டுதுண்டாகச் சிதறிப்போய்த் தனிப்பட்ட சன்யாசிகள் ஆகிவிட்டார்கள்.தபோவனத்திற்கும் கரூர்ஆசிரமத்திற்கும் பெரிய வழக்கு நடந்தது.இப்படி ஆகக் கூடாது என்பதுவே தலைமையின் கட்டுப்பாடுகளுக்குக் காரணம்)
இதில் சித்பவானந்தரை வெளியேற்ற பிராமணர்கள் செய்தது என்ன என்று திரு ஜெயமோஹன் சற்று சிந்தித்து விளக்க வேண்டும்.'
Dear sir, I have copy pasted my poster to your knowledgeable self about the detailed reply in your site today.This letter was exchanged between me and my friend .Both of us read your site daily and exchange views. if you have any writings of Swami Chithbavananda telling Brahmin domination was the cause for his quitting/ousting from RK Mutt, please provide the reference to me.
As for as I know the following statement of mine was the cause of his parting company wih the RK Mutt.
With regards,
K.Mhuramakrishnan.
அன்புள்ள ராமகிருஷ்ணன்,
உங்கள் கடிதம்
ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். எண்பதுகளில் சிலநாட்கள் நான் சித்பவானந்தா ஆசிரமத்தில் இருந்திருக்கிறேன். அவரது சில சத்சங்கங்களில் கலந்துகொண்டிருக்கிறேன். சித்பவனாந்தரைப்போன்ற ஒருவர் சாதி சார்ந்த விஷயங்களைப் பதிவுசெய்வார் என்று நான் நினைக்கவில்லை. அமைப்பின் உட்பூசல்களை அவர் பெரிதாக எண்ணுவார் என்றும் நினைக்கவில்லை. தன் அமைப்பில் சாதிக்காழ்ப்பு உள்ளே நுழையாதபடியே அவர் கடைசிவரைவைத்திருந்தார். எவ்வகை சாதிக்காழ்ப்பும்- மேல் நோக்கியோ கீழ் நோக்கியோ.
சித்பவானந்தர் ராமகிருஷ்ணரின் நேரடிச்சீடர்.சுவாமி சிவானந்தரால் தீட்சை கொடுக்கப்பட்டவர். 1930-40 வரை ஊட்டி ராமகிருஷ்ணமடம் தலைவராக இருந்தார். சிவானந்தர் இருந்தபோதே சித்பவானந்தருக்கு நெருக்கடிகள் இருந்தன. சிவானந்தர் 1934இல் சமாதியானதும் நெருக்கடிகள் முற்றின. இரு வருடங்கள்கூட சித்பவானந்தர் மடத்தில் நீடிக்கமுடியவில்லை. 1936 இறுதியில் மடத்தைவிட்டு நடைமுறையில் விலகினார்.
தன் மடத்துக்குச் சொந்தமான கடைசிப்பணத்தையும் எண்ணிக் கணக்கிட்டுக் கடிதமெழுதி ஒப்படைத்ததாகவும் 'ரயில்செலவுக்கு மட்டும் பணம் எடுத்துக்கொள்கிறேன், நான் திருட்டுரயிலில் பயணம்செய்தால் அது மடத்துக்கு இழுக்கு' என்று அக்கடிதத்தில் சொல்லியிருந்ததாகவும் அவர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். கைலாசத்துக்குப் பயணமானபோதே அவர் மடத்திலிருந்து விலகிவிட்டார். ஊட்டி மடம் சித்பவானந்தரின் குடும்பச்சொத்தால் அமைக்கப்பட்டது என்பதும் கவனிக்கத்தக்கது
அவருக்கு நெருக்கடி அளிக்கப்பட்டமைக்குக் காரணமாக அமைந்த நிகழ்வுகள் பலவும்பல நூல்களில் சிதறிக்கிடக்கின்றன. எவரேனும் உண்மையான ஆய்வை மேற்கொண்டு எழுதினால்தான் உண்டு. ஒன்று, அவர் ஊட்டி மடத்தின் தலைவராக இருந்தபோது தி.சு.அவினாசிலிங்கம் ஏற்பாட்டில் காந்தி அங்கே வருகைபுரிந்தார். அப்போது அவர் ஆலயப்பிரவேச இயக்கத்தை நடத்திக்கொண்டிருந்தார். காந்தியின் வருகையால் சென்னைவாழ் பிராமணப்புரவலர்கள் அதிருப்திகொண்டு சித்பவானந்தர்மேல் கல்கத்தாவுக்கு நிறையப் புகார்கள் அளித்தனர். மடத்தின் கல்விப்பணிகள் பல நின்றுவிடும் என அச்சுறுத்தினர்.
அதைவிட 1926ல் நாராயணகுரு ஊட்டி ராமகிருஷ்ண மடத்துக்கு சென்றதும் அங்கே அவருக்குப் பிறதுறவிகள் பாதபூஜைசெய்ததும் சென்னை பிராமணப் புரலவலர்களிடையே கசப்பை உருவாக்கியது. அவர்களும் சித்பவானந்தர்மேல் புகார்களைத் தொடர்ந்து தெரிவித்துவந்தனர். இச்செய்திகளை நித்ய சைதன்ய யதி சொல்லியிருக்கிறார்.
1936ல் ராமகிருஷ்ண பரமஹம்சரின் நூற்றாண்டுவிழாவை ஒட்டி சித்பவானந்தர் சீடர்களுக்கு தீட்சை அளிக்கப் பரிந்துரைத்ததுதான் பிரச்சினையாக்கப்பட்டு அவர்மேல் புகார்கள் அளிக்கப்பட்டன. அதுவே கடைசி நெருக்கடி. இது நான் அறிந்தது
ஊட்டி மடத்திலிருந்து முற்றிலும் விலகியபின் சித்பவானந்தர் தன் சொந்த ஊரிலும் கோவையிலுமாகத் தங்கியிருந்திருக்கிறார். 1940ல் ஒரு திருவிழாவுக்காக திருப்பராய்த்துறைக்குச் சென்றபோது அங்கே உள்ள பிரமுகர்கள் சிலருடன் உறவு ஏற்பட்டது. தாயுமானவர்கோயிலில் திருவாசக உரை நிகழ்த்தியும் கீதை உரைகள் நிகழ்த்தியும் திருச்சியில் இருந்தார். திரு ராமநாதன் செட்டியார், கானாடுகாத்தான் திரு.அருணாச்சலம் செட்டியார் ஆகியோரின் உதவியால் 1942இல் தனியாக, திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவனம் அமைத்தார். இதுதான் நான் அறிந்த வரலாறு.
நானறிந்தவரை, ராமகிருஷ்ண மடத்தில் அந்த மடத்தின் தலைவரே தீட்சை அளிப்பது வழக்கம். இப்போதும் அப்படியே. அதற்கான அனுமதியை மட்டுமே மேலிடத்தில் கோருவார்கள். அந்த அனுமதி அளிக்கப்படுவதும் சாதாரணமான நிகழ்வே. அதையே சித்பவானந்தர் செய்திருக்கிறார். அது பிரச்சினையாக்கப்பட்டது, அவருக்கு அதற்கான தகுதி இல்லை என்ற பேச்சு கிளம்பியது. அவர் உடனே அதற்காக 'கோபித்துக் கொண்டு' கிளம்பவில்லை. அவர் அத்தகைய ஒரு சில்லறை மனிதரும் அல்ல. அவர் வெளியேறியாக வேண்டிய சூழல் பலகாலமாகவே இருந்தது.
மேலும் ராமகிருஷ்ண மடத்தின் வரலாற்றில் நூற்றுக்கணக்கான பேர் பிரிந்து சென்றிருக்கிறார்கள். பலநூறு பிளவுகள் நிகழ்ந்துள்ளன. தமிழக ராமகிருஷ்ண மடம் மயிலையில் தேங்கி நின்றது. அதன் தேக்கநிலை அங்கிருந்த பிராமண ஆதிக்கம் மீண்டும் உடைக்கப்பட்டபின்னரே ஓரளவேனும் நீங்கியது. இதுவே வரலாறு. ஆனால் சித்பவானந்தரின் ராமகிருஷ்ண தபோவனம் என்ற இயக்கம் இவர் சொல்வதுபோலச் சிதறிச்செல்லவில்லை. தொடர்ச்சியாக வளர்ச்சியும் விரிவும் பெற்றுத் தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கும் பெரும்பங்களிப்பாற்றியது. சென்னை தவிர்த்த தமிழகத்தைப்பொறுத்தவரை இன்றும் ராமகிருஷ்ண-விவேகானந்த இயக்கம் என்பது சித்பவானந்தரின் நிறுவனம் மட்டுமே.
மயிலை ராமகிருஷ்ண மடம் அந்நாட்களில் சென்னை பிராமணசமூகத்தைப் புரவலர் வட்டமாகக் கொண்டிருந்தது. அதை நித்ய சைதன்ய யதியும் அவரது சுயசரிதையில் பதிவுசெய்கிறார். டாக்டர் ராதாகிருஷ்ணனை எதிர்த்து, கீதை ஒரு மதநூல் அல்ல தத்துவநூலே என எழுதியமைக்காக, அந்த பிராமணப்புரவலர்வட்டத்தால் அவர் வெளியேற்றப்பட்டதை விவரிக்கிறார். நான் அவரை எடுத்த பேட்டியிலேயே அதைக் குறிப்பிட்டிருக்கிறார். ஆகவே இயல்பாக ஒரு சித்திரம் முழுமையடைந்து வருகிறது.
இந்த அமைப்புகளுடன் ஓரளவு தொடர்புள்ளவர்கள் அனைவருமே சாதாரணமாக அறிந்த விஷயங்கள்தான் இவை. ஆனால் புறவயமாக நிரூபிக்கவேண்டுமென்றால் மேலதிக தகவல்களை அவற்றுக்குள் உள்ளவர்களிடம் சென்று , கடிதங்களைக் கண்டு, ஆராய்ச்சி செய்து எழுதினால்தான் உண்டு. நான் சொல்லியிருக்கும் தகவல்கள் சம்பந்தப்பட்ட பலர் நேரில் சொன்னவை, நான் இந்து இயக்கங்களில் பணியாற்றிய காலகட்டங்களில் கேட்டு அறிந்தவை.
ஜெ
September 2, 2011
அறிவியலுக்கென்ன குறை?
இந்திய அறிவியல் எங்கே என்ற கட்டுரையை வாசித்துவிட்டுப் பலரும் கருத்து சொன்னார்கள். அதில் நண்பர் வேணு அவர்கள் இந்த கடிதத்தொடர்பை அனுப்பியிருந்தார்கள்.
இதில் ஓர் அறிவியலாளரை நாம் காண்கிறோம். மக்கள் தொலைக்காட்சி எவ்வளவு பயனுள்ளது என்பதையும். இதற்குமேல் நமக்கு என்ன தேவை?
கண்களில் நீர் தளும்ப இதை எழுதுகிறேன்
ஜெ
நண்பர்களே,
விஞ்ஞானி க.பொன்முடி அவர்கள் தமிழ்நாட்டின் சமகால விஞ்ஞானிகளுள் முக்கியமானவர் என்பதை அவரே என்னைத்தொடர்பு கொண்ட மின்னஞ்சல் மற்றும் காணொளி இணைப்புகள் வழி அறிந்து பெருமிதம் கொள்கிறேன். அவரே முன்வந்து என்போன்ற சிறுவனை முறையாகத் தொடர்புகொண்டது அவரின் எளிமைக்கும் பரந்த மனதுக்கும் ஒரு எடுத்துக்காட்டு.
ஜெயமோகன் அமெரிக்க விஜயத்தின்போது திண்ணை இதழில் வெளியான அறிவிப்பிலிருந்து என் மின்னஞ்சல் முகவரி கிடைத்த விபரத்தையும் அண்மையில் மின்னஞ்சல்வழி அவரே கூறியுள்ளது அவர் ஜெயமோகனின் வாசகர் என்பதற்குச் சான்றாகும்.அவர் போன்ற ஒரு அறிஞரை நம் குழுமத்தில் இணைய அழைப்பதில் மகிழ்கிறேன்.அறிவியல் சம்பந்தமான தங்களின் ஐயங்களை அன்னாரிடம் நண்பர்கள் தயங்காது கேட்கலாம்.
அவரின் வலைப்பூ, காணொளிகள், முகவரி, தொலைபேசி எண்கள் மற்றும் என் உரையாடல் கீழே.
வேணு
ஆசிரியருக்கு வணக்கம்,
பூமிக்கு அடியில் இருக்கும் பாறைத் தட்டுகள் உயர்வதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்பதைக் கண்டு பிடித்து இருக்கிறேன்.பாறைத் தட்டுகள் உயர்ந்ததற்கு ஆதாரம் கிராண்ட் கன்யன் பள்ளத் தாக்கு.என் கண்டு பிடிப்பு குறித்து புகைப் பட ஆதாரங்களுடன் தங்களுக்குத் தெரிவிக்கும் பொருட்டுப் பின் வரும் இணைப்புகளை சமர்ப்பிக்கின்றேன்.
காணொளிகளின் தொகுப்பு: http://www.youtube.com/user/ponmudi1
பகுதி 1
www.youtube.com/watch?v=Qi9JE86efdU
பகுதி 2
www.youtube.com/watch?v=K3DIHsjzlpk
படவிளக்கம்.1
உலக அதிசயங்களில் ஒன்றான கிராண்ட் கன்யன் பள்ளத்தாக்கானது கொலராடோ நதியால் அரிக்கப் பட்டதால் உருவானது என்று கருதப் படுகிறது.ஆறால் அரிக்கப் பட்டிருந்தால் பள்ளத்தாக்கானது ஒரே போக்கில் அமைந்து இருக்க வேண்டும். ஆனால் படத்தில் கிராண்ட் கன்யன் பள்ளத்தாக்கானது பல்வேறு திசை நோக்கிப் பிளவு பட்டு இருக்கிறது. இவ்வாறு பூமி பல்வேறு திசையில் பிளவு பட்டதற்கு பூமிக்கு அடியில் இருந்த பாறைத் தட்டுகள் மேல் நோக்கி உயரந்ததே காரணம்.
படம் http://www.uptake.com/blog/wp-content/uploads/2009/08/img_0055.jpg
படம் http://skywalker.cochise.edu/wellerr/students/soil-ph/project_files/image005.jpg
பட விளக்கம்.2
கிராண்ட் கன்யன் பள்ளத்தாக்கில் பாறைத் தட்டுகள் வெவ்வேறு உயரத்தில் அமைந்து இருக்கிறது.
பாறைத் தட்டுகள் கீழிருந்து மேல் நோக்கி உயர்ந்து இருந்தால்தான் இவ்வாறு பாறைத் தட்டுகள் வெவ்வேறு உயரத்தில் இருக்க முடியும்.
படம் http://www.sedonagrandcanyontourcompany.com/images/grand_canyon_cover.jpg
பட விளக்கம்.3
பொதுவாக இரண்டு நிலப் பகுதிகள் மோதுவதால் நடுவில் நிலம் உயர்ந்து மலைகள் உருவாகின்றன என்று கருதப் படுகிறது.ஆனால் இந்தப் படத்தில் நிலம் பிளவு பட்டு இருக்கும் இடத்தில பாறைத் தட்டுகளால் ஆன ஒரு மலை உருவாகி இருக்கிறது.எனவே பாறைத் தட்டுகள் மேல் நோக்கி உயருவதால்தான் மலைகள் உருவாகின்றன என்பது புகைப் படம் மூலம் நிரூபணமாகிறது.
படம் http://www.planetside.co.uk/terragen/tgd/images/deep_canyon_v04.jpg
அன்புடன்,
விஞ்ஞானி.க.பொன்முடி
1 , அப்பு தெரு ,நுங்கம் பக்கம்,
சென்னை.600 034,
பேச : 98400 32928
மதிப்பிற்குரிய விஞ்ஞானி பொன்முடி அவர்களுக்கு,
தங்கள் கண்டுபிடிப்பை எண்ணி வியக்கிறேன். தாங்களின் தற்போதைய பெயர், ஊர் எது என்றறிய ஆவல். இது போன்ற பல அரிய கண்டுபிடிப்புகளை தாங்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்பதே என்னைப்போன்ற சாமான்ய மனிதர்களின் அவா.
வாழ்த்துக்களுடன்,
வேணு
மதிப்பிற்குரிய திரு வேணு தயாநிதி அவர்களுக்கு முதலில் எனது பணிவான வணக்கம்.
தங்களின் பதில் கடிதத்திற்கு நன்றி,
பாராட்டுக்கும் நன்றி,
என் கண்டு பிடிப்பு மிகவும் தற்செயலான எதிர்பாராத ஒன்று.எங்கோ எப்பொழுதோ படித்த ஒரு வரி நினைவுக்கு வருகிறது."ஒரு உண்மையைக் கண்டு பிடித்து விட்டேன் என்று கூறாதே…என் வழியில் ஒரு உண்மை வந்தது என்று கூறு".( மன்னிக்கவும் கூறிய அறிஞர் யார் தெரியவில்லை).
நான் தற்பொழுது சென்னையில் வசிக்கின்றேன். தற்பொழுது சுனாமி நில அதிர்ச்சி எரிமலை குறித்து ஒரு புத்தகம் எழுதும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன்.
மற்றபடி கிரகங்கள் நீள் வட்டப் பாதையில் சூரியனை சுற்றுவதற்கு சூரியனின் முன் நோக்கிய பயணமே காரணம் என்பதுடன் சூரியன் போன்ற நட்சத்திரங்கள்தான் எரிந்து முடிந்த பிறகு வாயுப் பொருட்களை இழந்த பிறகு சுருங்கி கிரகங்களாக உருவாகின்றன என்பதும் என் கண்டு பிடிப்பு.
இது குறித்து பல விண்ணியல் ஆதாரங்களுடன் நான் எழுதிய புத்தகத்தை விகடன் பிரசுரத்தார் வெளியிட்டு இருகின்றனர்.பெயர் "பூமிப் பந்தின் புதிர்கள்"அத்துடன் கடல் மட்டம் உயர்வதற்கு கடலுக்கு அடியில் இருக்கும் சுடு நீர் ஊற்றுகளே காரணம் என்பதும் என் கண்டு பிடிப்பு இது குறித்து நான் எழுதிய "பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது" என்ற புத்தகத்தை நியூ செஞ்சுரி ஹவுஸ் வெளியிட்டு இருகின்றனர்.
தங்களின் கடிதம் உண்மையில் உற்சாகத்தை ஊட்டுகிறது.
கூகுளில் என் பெயரை உள்ளிட்டால் என் கட்டுரைகளை படிக்கலாம்.
என்றும் அன்புடன் விஞ்ஞானி.க.பொன்முடி
pls visit : The origin of continents and planet-Contents
ஐயன்மீர்,
தங்கள் பதில் மடல் கண்டு இறும்பூது எய்தினேன். அறிவியலை முறையாகப் பாடமாகப் பயின்று ராப்பகலாக உழைத்து முயன்றுவரும் விஞ்ஞானிகள் மத்தியில் பிரபஞ்சத்தின் சகல காரண காரியங்களையும் மதி நுட்பத்தினால் கண்டறிந்து தெளிந்து உண்மைகளை இவ்வுலகுக்கு வெளிப்படுத்தும் தங்களைப்போன்ற விஞ்ஞானிகளை என்னென்பது. நிற்க. தங்களிடம் நான் கேட்க விரும்புவது ஒரே ஒரு உதவி மட்டுமே. இந்த மின்னஞ்சல் முகவரி பற்றித் தங்களுக்கு எவ்விதம் தெரியவந்தது? அல்லது நண்பர்கள் யாராவது தெரியப்படுத்தினார்களா…
அந்த நல்லவரின் முகவரி/ அஞ்சலை மட்டும் தயவு செய்து தர இயலுமா?
மிக்க நன்றி!
அன்பன்,
வேணு
வணக்கம் அய்யா,
சுனாமி குறித்த உண்மையை உலகிற்குத் தெரியப் படுத்த உலகெங்கும் உள்ள சான்றோர்கள் அறிஞர்கள் பெருமக்கள் ஆகியோரின் மினஞ்சல்களை இணையத்தில் தேடிய பொழுது தங்களின் மினஞ்சல் முகவரி கிடைத்தது.
இணைய தள முகவரி http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=80908064&format=print&edition_id=20090806
முக்கியமாக அந்தக் காலத்தைப் போல் அல்லாமல் தற்பொழுது இணைய தளத்தில் மிகவும் எளிதாகக் கிடைக்கும் பல ஆராய்சிக் கட்டுரைகள் மற்றும் தகவல்கள் என் ஆய்விற்கு மிகப் பெரிய அளவில் உதவின என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன் விஞ்ஞானி க.பொன்முடி.
முற்றிற்று
அறிதல்-அறிதலுக்கு அப்பால்
அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,
தங்களுடைய கட்டுரைகளை நான் தொடர்ந்து வாசித்து வருகிறேன். தங்களுடைய பணி தமிழில் ஒரு முக்கியமான இடத்தை வகிக்கிறது. உங்களுடைய ஒரு கருத்துடன் நான் மாறுபாடுகிறேன். இந்திய மதங்களில் தத்துவமே அதி கடைசி எல்லையாக அல்லது தத்துவமே அதனுடைய இறுதி லட்சியமாக முன்வைக்கப்படுகிறதாகத் தாங்கள் எழுதுவது (அல்லது நான் அப்படிப் புரிந்துகொள்கிறேனா என்று தெரியவில்லை) மிகவும் முரணாகத் தெரிகிறது.
இந்திய மதங்களின் சாரமே தத்துவத்தின் எல்லையை எப்படி மீறுவது என்பதே. வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டதே பிரமம் என்பதே இந்து சிந்தனையின் உச்சம். மகாபாரதத்தில் தருமத்தின் மறுஉருவாகச் சித்தரிக்கபடும் விதுரர் தன்னுடைய கடைசி காலத்தில் வார்த்தைகள் அற்ற மௌனத்தில் மறைந்துவிடுவதாகக் குறிக்கப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ணனும் "ரகசியங்களுள் நான் மௌனம்" என்று சொல்லுகிறார். தத்துவம் வார்த்தைகளின் விளையாட்டு, சத்தியத்தைத் தேடுபவர்கள் அந்த விளையாட்டில் ஈடுபடுவதில்லை. ரமணர் அவர்களும் "கற்றதெல்லாம் ஒருநாள் மறக்க வேண்டிவரும்" என்று சொல்லி இருக்கிறார். தத்துவம் மிக முக்கியமானதுதான், ஆனால் கீழை மரபில் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட சூனியத்தில் அல்லது பிரமத்தில் அல்லது பக்தியில் கரைந்து ஒன்றுவதே ஒரே லட்சியம்.
தத்துவத்திற்கு ஒரு முக்கியமான பணி இருக்கிறது, அது தத்துவ விசாரணை செய்பவனை மேலான ஒன்றின் மேல் நாட்டம்கொள்ள வைப்பதே. வார்த்தைகளில் இருந்து விடுபட்டு சூனியத்தை நோக்கிச் செல்வதே… எப்படி பக்தி பக்தனை பகவானுடன் ஒன்றச் செய்வதோ அது மாதிரி… நம்முடைய மரபின் உயிரே அதில்தான் இருப்பதாக நான் கருதுகிறேன். நாம் மேலைச் சிந்தனை முறையில் நம்முடைய மதத்தைப் புரிந்துகொள்ள நினைத்தால் அது ஒரு கேலிக்கூத்தாக முடியும், நாம் காலமாற்றத்தைப் பேசுகிறோம், பேசுவதால் காலமற்றத்தை உணர்ந்துகொள்ள முடியும் என்பதால் அல்ல, அதை நோக்கி சில பேராவது செல்வார்கள் என்பதற்காக மட்டுமே. மேற்கத்திய சிந்தனைக் காலத்திலேயே உழன்று கொண்டிருப்பது, அது அதனுடைய வரமும் சாபமும் ஆகும். அவர்கள் புத்தரையே வெறும் தத்துவவாதியாக முன்னிலைபடுத்தியவர்கள். புகழ்பெற்ற தத்துவமேதை ரஸ்ஸலே புத்தரையும் சாக்கரடீசும் நிகரானவர்கள் என்றே எழுதுகிறார். சாக்கரடீஸ் ஒரு தத்துவவாதி அவர் லாஜிக்கைத் தாண்டிச் செல்வதே இல்லை, ஆனால் புத்தரோ தர்க்கத்தைத் தாண்டிச் செல்கிறார். அந்தத் தாண்டிச் செல்லும் கோட்டை எல்லா மேற்கத்திய சிந்தனையும் நிராகரிக்கும் அல்லது தவறாக விளக்கம் அளிக்கும்.
ஆகவே தாங்கள் நம்முடைய தத்துவத்தின் உயிரான "தர்க்கத்தைத் தாண்டிச் செல்லத் தூண்டும் லட்சியத்தையும்" கொஞ்சம் எழுத வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். இந்தக் கடிதத்தில் எதாவது பொருட்பிழை இருந்தால் என்னை மன்னிக்கவும்.
தங்களுடைய நெடுநாள் வாசகன்
க.வேல்முருகன்
அன்புள்ள வேல்முருகன்,
இந்திய ஞானமரபைத் தத்துவம் என்று சொல்லமுடியுமா என்பது எப்போதும் விவாதிக்கப்பட்டுவரும் ஒரு கேள்வி. நானே இதை எழுதியிருக்கிறேன். மேலைதத்துவம் என்பது தர்க்கம் மூலம் விடைகாணமுடியும் என்ற நம்பிக்கையை சாரமாகக் கொண்டது. அதன் வேர்ச்சொல்லே Philo Sophia என்று விரிவது. அறிவுத்தேவதைமேல் கொண்ட பிரியம் எனப் பொருள்.
இந்த சரியான அர்த்ததில் இந்திய சிந்தனைமரபில் நியாய தரிசனம் ஒன்றை மட்டுமே தத்துவம் என்று சொல்லமுடியும். பிற அனைத்துமே முக்தி அல்லது மோட்சம் என்பதை மட்டுமே இலக்காகக் கொண்டவை. முக்தி என்பது பல்வேறு பொருட்களில் அவற்றால் பேசப்படுகிறது. பொதுவாகத் துயர்களில் இருந்து விடுதலை. துயர் உருவாவது மனமயக்கத்தால், அறியாமையால். ஆகவே அறிவே முக்தி என ஜடவாத சிந்தனைகள் வாதிடுகின்றன. அதற்காகவே அவை பேசுகின்றன
அறிவு அல்ல அவற்றின் இலக்கு. அறிவைக் கையாண்டு விடுதலை பெறுவதுதான். ஆகவே அறிவை நடைமுறைப்படுத்துவது பற்றியும் அறிந்ததை உணர்வது பற்றியும் அவை பேசுகின்றன. ஒன்றை அறிவதற்கும் அந்த அறிவை உணர்ந்து வாழ்ந்து அதுவேயாக ஆவதற்கும் இடையேயான வேறுபாடு பெரிது என எல்லா சிந்தனைகளும் அறிந்திருந்தன. அறிதல் என்பது முதல்படியே என்றும் அதை மிதித்து ஏறி மேலே செல்லவேண்டியிருக்கிறது என்றும் அவை சொல்கின்றன.
அத்வைத மரபுப்படி அறிதல்-அறிபடுபொருள்-அறிபவன் மூன்றுமே ஒன்றேயாகும் ஒரு நிலையே முக்தி. அத்வைத நூல்களின் அனைத்துத் தர்க்கங்களும் அந்த மையம்நோக்கி நம் அறிவைக் கொண்டு செல்லும் முயற்சிகளே.
ஆகவே இந்திய ஞானமரபை இந்தியதத்துவம் என்று சொல்லமுடியாது. நான் அச்சொல்லை மிகக் கவனமாகவே கையாள்கிறேன். தத்துவம் என்னும்போது நான் ஞானமரபு அறிவைச் சந்திக்கும் புள்ளிகளை மட்டுமே குறிக்கிறேன். ஞானமரபு என்பது உள்ளுணர்வைச் சந்திக்கும் தளங்களும் கடந்துசெல்லும் தளங்களும் அடங்கிய ஒன்று. எல்லா தரிசனங்களிலும் தத்துவமும் மெய்ஞானமும் உள்ளன. தத்துவம் அதன் கால்,மெய்ஞானம் அதன் சிரம். கால்தான் நிலத்தைத் தொடுகிறது. தலை காலை இயக்குகிறது.
இந்திய ஞானிகள் அனைவருமே அறிவின் எல்லைகளைப்பற்றிப் பேசியிருக்கிறார்கள். 'அறியாமை ஒரு முள், அதை எடுப்பதற்கான முள் அறிவு. முள்ளை எடுத்தபின் இருமுட்களையும் வீசிவிட்டு மேலே செல்லவேண்டும்'என்ற ராமகிருஷ்ண பரமஹம்சரின் வரியே மிக அழகானது.
ஆனால் இதைத் தத்துவநிராகரிப்பு எனக் கொள்ளவேண்டியதில்லை. தத்துவமாக மட்டுமே பார்ப்பது எப்படி முழுமையற்றதோ அப்படியே தத்துவமே இல்லாமல் தூய உள்ளுணர்வு எனக் கற்பனைசெய்துகொண்டு எதையும் கற்காமலிருப்பதும் முழுமையற்றது. எந்த ஞானியும் அதைப் பரிந்துரைத்ததிலை. இயல்பான சோம்பல் மற்றும் தகுதியின்மை காரணமாகக் கல்வியைத் தவிர்ப்பதற்காக நம்மில் பலர் இப்படித் தத்துவ எதிர்ப்பை ஒரு நிலைப்பாடாக மேற்கொள்வதுண்டு. தாங்கள் தத்துவமற்ற உள்ளுணர்வு வெளிக்கு- சுயம்புவாகச் சென்றுவிட்டதாகப் பாவனையும் செய்வார்கள். அது சாத்தியமல்ல.
அறியாமை என்ற முள் பிறப்பிலேயே வருவது. அதை ஆணவமலம் என்றது மரபு. ஆகவே அதை எடுக்க அறிவு இன்றியமையாதது. அந்த முள்ளைக் காலில் வைத்துக்கொண்டு வெகுதூரம் செல்லமுடியாது. நம் உள்ளுணர்வு வலுவான தர்க்கத்தால் மூடப்பட்டுள்ளது. அந்த ஓட்டை உடைத்து மட்டுமே உள்ளுணர்வைத் தீண்டமுடியும். ஆகவே தீவிரமான அறிவுத்தளம் இல்லாத இலக்கியமோ ஆன்மீகமோ சாத்தியமல்ல. அப்படி ஒன்றை முன்வைத்தால் அது வெற்று பாவனையாகவே இருக்கும்.
ஆகவேதான் மெய்மையின் வாசலை அத்தனை நுண்ணியதாக உருவகித்த நம் மரபு,இத்தனை சிந்தனைகளையும் தர்க்கங்களையும் உருவாக்கியது. அவை வீண் மயிர்பிளப்புகள் அல்ல. அவற்றையே இறுதியாகக் கொள்வதே பிழை. அது அறியாமையின் இன்னொரு முகம் மட்டுமே.
நீங்கள் சொன்னது போலத் 'தர்க்கத்தைத் தாண்டிச் செல்லத் தூண்டும் லட்சியத்தை'ப் பற்றி எளிதாக நேரடியாக எழுதிவிடமுடியாது. என் ஊடகம் இலக்கியம். அதில் விரிவாகவே எழுதியிருக்கிறேன்.விஷ்ணுபுரம் நாவலே அறிதல்-அறிதலுக்கு அப்பால் என நகரும் ஆக்கம்தான்.
ஜெ
சேலத்தில் இன்றுமாலை
3-09-2011 அன்று சேலத்தில் தலித் ஆய்வுமையம் சார்பில் நடத்தப்படும் நான்கு தலித் நூல்களின் ஆய்வு அரங்கில் நான் பேசுகிறேன்
இடம்: இலக்குமி அரங்கம், சாமுண்டி சூப்பர் மார்க்கெட் வளாகம், நான்குரோடு சேலம்-9
நாள் 03-09-2011
நேரம் மாலை 5.30
கஞ்சாக்குடும்பம், சாக்தம்- கடிதம்
அன்பின் ஜெயமோகன்
இது போதை வஸ்து பாவிப்பதால் மனிதர்கள் மட்டும் சமூகத்தில் இருந்து வழுக்கி விழுவதில்லை அவர்களது நாய்களுக்கும ஏற்படும் துன்பத்தை விவரிக்கும் சிறிய அனுபவப் பகிர்வு.
போதை வஸ்துக்களுக்கெதிரான உங்கள் எழுத்துகளுக்கு எனது வாழ்த்துகள்
http://noelnadesan.wordpress.com/2011/08/04
கஞ்சாக் குடும்பம் – அனுபவப் பகிர்வு
நடேசன்
அன்புள்ள எழுத்தாளருக்கு!
வணக்கம்! நலமா?
நவீன வேளாண்மை அறிவியல் சிந்தனைகள், லாபம் வருவதற்கான அதிக மகசூல் வழிமுறைகளுடன் நின்றுவிடுகிறது. அவை ஏற்படுத்தும் புற, அக மாறுதல்கள் குறித்து நுழைவதே இல்லை. பாரம்பரிய விவசாயிகள் அறிந்துள்ள வழிமுறைகள்,அவற்றின் பின்புலம் அறிந்த வேளாண் அறிஞர்கள் இயல்பாக விவசாயிகளுடன் உரையாடுகிறார்கள். அவர்கள் பரிந்துரைப்பதை விவசாயிகள் உடனே செயல் படுத்துகிறார்கள். என் பேராசிரியர் முதலில் ஒரு பாரம்பரிய விவசாயி,கல்வித் தகுதியில் அவர் விஞ்ஞானி பிறகு . அவர் வழிகளை நானும் பின்பற்றுகிறேன்!
நன்றி வணக்கம்!
Dhandapani
அன்புள்ள ஜெ,
இந்த இணையதளத்தைப் பற்றி உங்கள் கருத்து, பல தத்துவ முறைகளைப் பற்றிய எழுத்து தொகுப்பு , சாங்கிய தத்துவத்தைப் பற்றியும் உள்ளது , இத முறையான துவக்க உரையா என்று தெரிய வேண்டும். உங்கள் புரிதலில் இருந்து இதனை எப்படி அணுகுவது என்ற ஒரு தத்துவ தொடக்க மாணவனாக அறிய வேண்டி .
http://www.ignca.nic.in/ps_04013.htm
Lachin என்கிற லக்ஷ்மி நரசிம்மன்
அன்புள்ள லச்சின்
அந்த இணைப்பைப் பார்த்தேன், அறிமுகக் கட்டுரைகள் என்றவகையில் முக்கியமானவை.
பொதுவாகத் தத்துவம் சார்ந்த விஷயங்களில் விவாதம் முக்கியமானது. குருவிடம் நண்பர்களிடம். நாம் வாசித்தது சரியா என நாமே அறிய அது உதவும்.
ஜெ
அண்ணா ஹசாரே நூல்
இந்த இணையதளத்தில் அண்ணா ஹசாரே பற்றி வந்த கட்டுரைகளின் தொகுப்பு கிழக்கு வெளியீடாக நூலுருக்கொண்டுள்ளது.
September 1, 2011
ஆல்காட் பற்றி உரை….
3-09-2011 அன்று சேலத்தில் தலித் ஆய்வுமையம் சார்பில் நடத்தப்படும் நான்கு தலித் நூல்களின் ஆய்வு அரங்கில் நான் பேசுகிறேன்
மதுரையைச்சேர்ந்த தலித் ஆய்வு-பதிப்பு நிறுவனமான எழுத்து நூறாண்டுகளுக்கும் மேலாக வெளியே தெரியாமலிருந்த முக்கியமான தலித் நூல்களை மறுபதிப்பு செய்து வெளியிட்டு வருகிறது.
அந்த அமைப்பு வெளியிட்டுள்ள நான்கு நூல்கள் மீதான விமர்சனக்கூட்டம் சேலத்தில் நிகழவுள்ளது. நூல்கள்
1. பெருந்தலைவர் எம்.சி.ராஜா சிந்தனைகள்
2. தலித் மக்களும் கல்வியும் – ஹென்றிஸ்டீல் ஆல்காட்
3. தலித் விடுதலையும் திராவிட இயக்கமும் [மறைக்கப்பட்ட உண்மைகளும் கறைபடிந்த அத்தியாயங்களும்.] தி.பொ.கமலநாதன்
4 பஞ்சமி நில உரிமை
இவற்றில் ஆல்காட் பற்றி நான் பேசுவதாக உள்ளேன்
இடம்: இலக்குமி அரங்கம், சாமுண்டி சூப்பர் மார்க்கெட் வளாகம், நான்குரோடு சேலம்-9
நாள் 03-09-2011
நேரம் மாலை 5.30
பங்கேற்போர்
1. பேராசிரியர் மார்க்ஸ் [புதுவை பல்கலை கழகம்]
2.பேராசிரியர் ஸ்டாலின் ராஜாங்கம்
3. ஜெயமோகன்
4 முனைவர் ஜெரோம் சாம்ராஜ்
ஒருங்கிணைப்பு
ஸ்பீடோ இயக்கம்
94877 01037 , 9080314744
எழுத்து
சிரோன் குடில், ஜோஸ்புரம் முதல் தெரு
பசுமலை
மதுரை 4
eluthualex@yahoo.com
பழைய கட்டுரைகள்
எம்.சி.ராஜா-வரலாற்றில் மறைந்த தலைவர்
திராவிட இயக்கத்தை நிராகரிப்பது ஏன்?
அயோத்திதாசர் என்னும் முதல் சிந்தனையாளர்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
