Jeyamohan's Blog, page 1020

March 17, 2021

விசை,கேளி – கடிதங்கள்

கேளி [சிறுகதை]

ஜெ,

கேளி கதையில் அந்த மேளம் ஆட்டம் நிகழவிருக்கிறது என்ற அழைப்பு. திருவிழா முடிந்துவிட்டது. ஆனால் ஒரு சின்ன முனகலில் இருந்து இன்னொரு திருவிழா தொடங்குகிறது. அதற்கான கேளிகொட்டு ஆரம்பிக்கிறது

எல்லா கலையனுபவமும் அப்படித்தானே?

ராஜன் குமாரசாமி

 

அன்புள்ள ஆசானுக்கு

முன்பெல்லாம்  ‘கேளி’  போன்ற எதுவுமே நிகழாத கதைகளை எதிர்கொண்டால்  அப்படியே சத்தமில்லாமல் கடந்து சென்று விடுவேன்.  அல்லது ஆணவம் சீண்டப்பட்டதன் எரிச்சலுடன் “சரிதான்… தீவிர இலக்கியம் போல இருக்கிறது  ஒன்றும் புரியவில்லை” என்று உள்ளுக்குள் கிண்டல் அடிப்பேன். இப்போது நம் வாசகர் குழுமத்தில் நடக்கும் விவாதங்கள் கூட்டு  வாசிப்பை சாத்தியமாக்கி  என்னுடைய வாசிக்கும்  பழக்கத்தை  ஒரு மாதிரி வாசிப்பு  பயிற்சியாக  தரம் உயர்த்தி  தந்துள்ளது (“..என நினைக்கிறேன்” என்று  எச்சரிக்கையாக ஒரு பிற்சேர்க்கையையும்  இட்டுக் கொள்கிறேன்)

பெரிதாக ‘ஒன்றும் நிகழாத’ கதைகள் வாசகனுக்கு விடும் சவால் அளவுக்கே அவன் பங்களிப்புக்கும் இடம் தந்து அந்த கதையிலிருந்து தனக்கே தனக்கான ஒரு பிரதியை/கதையை  உருவாக்கிக்கொள்ளும் சுதந்திரத்தையும் அளிக்கின்றன என்ற assumption உடன் கதையை வாசித்தேன் .  ‘கேளி ‘வாழ்க்கையின் சாரமான ஒன்றை துல்லியமாக சித்தரித்து வாசகனை கதை சொல்லியின் அகத்தில் இறக்கி வைத்து விட்டு பொருள் கொள்ளும் சுதந்திரத்தை முற்றாகவே அவனுக்கு அளித்துவிடுகிறது. முழு  கதையும் கவித்துவம் கொண்ட  ஒரு படிமமாக என்னுள் நிகழ்ந்தது

திருவிழா முடிந்துவிட்டது. நண்பர்கள் முந்தைய தினமே கிளம்பிவிட்டார்கள் ஆனால் “அவனால் கிளம்ப முடியவில்லை. கிளம்பியபின் அங்கே மேலும் தித்திப்பாக ஏதோ நடக்கக்கூடும். முக்கியமான எதையாவது அவன் தவறவிட்டுவிடக்கூடும்”.  நாற்பது வயதை கடந்து வாழ்வின் மறுகரை கண்ணுக்கு தென்பட துவங்கிய நிலையில் அதைப்பற்றிய பிரக்ஞை இருப்பவர்களுக்கு இந்த கதையில் திருவிழா எதற்கு ஈடாக வைக்கப்பட்டுள்ளது என்று சட்டென்று புலப்படும்.  அல்லது எனக்கு அப்படி புலப்பட்டது.

போன வருடம் எங்கள் குடும்பத்தில் என் தலைமுறையின் முதல் இயற்க்கை மரணம் நிகழ்ந்தது. (மாரடைப்பை இந்தியாவில் இப்போதெல்லாம் இயற்கை மரணம் என்று தானே வகைப்படுத்துகிறோம்). பெரியம்மாவின் மகன். கோடை விடுமுறைகளில் முழு நாட்களையும் ஒன்றாக கிரிக்கெட் விளையாடி கழித்திருக்கிறோம். ஆமாம் என்னுடைய நண்பர்களும் கிளம்பி செல்ல துவங்கி விட்டார்கள்.  என் வருடாந்திர மருத்துவ பரிசோதனையில் ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறைவு என்று கண்டுபிடித்தார்கள்.  கூடவே இதை ரத்த புற்று நோய்  உடன் சம்பந்தப்படுத்தி குழப்பிக்கொண்டு இணையத்தில் தேடவேண்டாம் அதெல்லாம் இன்னொரு பரிசோதனைக்கு அப்புறம் வைத்துக்கொள்ளலாம்  என்று சொல்லி கிட்டத்தட்ட என் திருவிழாவின் முடிவை கண்ணில் காட்டினார்கள்.

“திருவிழா முடிந்துவிட்டதோ. அது வெறும் மாயை மட்டும்தானோ என்ற பதற்றம் வந்து நெஞ்சை அடைக்கும். உடனே கணக்கிட்டு அது எத்தனையாவது நாள் திருவிழா என்று உணர்ந்ததும் உள்ளம் இனிப்படையத் தொடங்கும்.”

இரண்டாவது பரிசோதனை நல்ல செய்தியை சொன்னதும் அப்படித்தான் உணர்ந்தேன். நீங்கள் உங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய ஒரு சாதனையை ஆற்றி முடித்திருக்கிறீர்கள். வெண்முரசு தான் உங்கள் திருவிழாவின் கேளியா? அலெக்ஸ். வேதசகாயகுமார் என நண்பர்களை சமீபமாக இழந்திருக்கிறீர்கள். அது தான் உங்களை இந்த மாதிரி திருவிழா முடிந்து நண்பர்கள் கிளம்பி செல்வதை பற்றி கதையை எழுத வைக்கிறதா? அல்லது நான் அப்படி எல்லாம் கற்பனை செய்து கொள்கிறேனா?

இப்படி மரணத்தை எல்லாவற்றிலும் காண்பது ஒருவகை எதிர்மறை சோர்வு மனநிலை என பலரும் கருதலாம் ஆனால் மரணம் முன்வரும் போது தானே பலருக்கும் வாழ்க்கை இனிக்க துவங்குகிறது. மரணம் திடீரென்று முன்னே வருவதில்லை அது எப்போதும் முன்னேயே இருக்கிறது நாம் தான் அதை தவற விட்டுவிடுகிறோம். அதன் மூலம் வாழ்க்கையின் இனிமையையும் தவற விடுகிறோம்.

‘இருத்தலின் வாதை’  என்கிற ஒரு பிரயோகத்தை நீங்கள் நவீனத்துவ இலக்கியம் என்று வகைப்படுத்தும் படைப்புகளில் அடிக்கடி  தட்டுப்படும்(Woody Allen : The food at this restaurant is terrible. and such small portions. just like life. which is full of misery and too short ). இருத்தல் பெரும் ஆனந்தம் அல்லவா?  புற்று நோயா என தீர்மானிக்கும் பரிசோதனைக்கு முந்திய நாள் ஒரு பவுர்ணமி. அவ்வளவு அழகான நிலவையும் இரவையும் என் வாழ்வில் கண்டதே இல்லை. அன்று உண்ட ஒவ்வொரு கவளம் உணவும் அமுதென சுவைத்தது. எல்லாமே  இனிமையாக இருந்தது.

“….சோம்பல்முறிக்கையில்தான் உடலில் அத்தனை இனிமை இருப்பதை உணரமுடிகிறது. உடலினுள் ஆழங்களில் ஆங்காங்கே சிறுசிறு இனிப்புகள் ஒளித்துவைக்கப்பட்டிருப்பதுபோல தோன்றுகிறது…”

இப்படி ஒரு கதை எழுதி வாழ்வை இனிக்க வைத்ததற்கு நன்றி ஆசானே

 

அன்புடன்

ஷங்கர் பிரதாப் 

அன்புள்ள ஷங்கர் பிரதாப்,

கேளி என்ற சொல்லுக்கு கொண்டாட்டம் என்றும் வாழ்க்கை என்றும் பொருள் உண்டு

ஜெ

விசை [சிறுகதை]

அன்புள்ள ஜெ

விசை கதை சென்ற தலைமுறையின் பல அன்னையரை நினைவில் எழுப்பியது. கதைகளில் அவர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். நீங்கள் எழுதிய கண்ணீரைப் பின் தொடர்தல் என்ற நூலில்கூட இந்திய நாவல்களே அன்னையரின் கண்ணீரை எழுதியவை என்று சொன்னீர்கள். உழைத்து உழைத்து குழந்தைகளை ஆளாக்கிய எத்தனை அன்னையர். ஆடுமாடு மேய்த்து, சாணி பொறுக்கி, வீட்டுவேலைசெய்து, கல்லுடைத்து, செங்கல் சுமந்து வாழ்ந்தவர்கள். அவர்கள் அத்தனைபேருக்குள்ளும் இருக்கும் விசை இந்தக்கதையில் ஓலைக்காரியிடம் வெளிப்படுவது

சிவக்குமார் எம்

 

ஆசிரியருக்கு வணக்கம்.

தினமும் எட்டு முதல் பத்துமணிநேரம் கடும் பணிக்குப்பின்னர் தூங்கி எழுந்து அதிகாலை கதைகளை வாசிப்பது ஓருவகை ரிலாக்ஸ் என்று நினைத்திருந்தேன்.சில நேரம் தானாய் பேசிக்கொள்வதும்.சில வரிகளை படிக்கையில் சப்தமாக தனியறையில் சிரிப்பதும் சிலவரிகளில் கடந்து செல்ல முடியாமல் தொண்டை வலிக்க கண்நிறைந்து வாசிப்பதை நிறுத்திவிட்டு தண்ணீர் குடித்து.முகம் கழுவி பின்னர் தொடர்வேன்.படிப்பது கதைன்னாலும் அது உள்ள என்னமெல்லாமோ செய்கிறது .

ஆனாலும் சனிக்கிழமை அதிகாலை இரண்டு மணிக்கு வாசித்த ஓலைக்காரி இன்று செவ்வாய்கிழமை வரை அவ்வப்போது எண்ணமாய் வந்து செல்கிறார்.வாழ்வின் பதின்பருவ நினைவுகளை தட்டி எழுப்பியமையால் முப்பது ஆண்டுகளுக்கு பின் சென்று மீண்டும் அந்த வாழ்வை சிலகணங்கள் வாழ்ந்துவந்தேன்.

என் கிராமம் மணவாளக்குறிச்சியை சுற்றிலும் உள்ள கிராம பகுதிகளில் தென்னத்தோப்புகளே அதிகம்.அப்போது நிறைய வீடுகளும் இருந்தன. ஓலையில்.மேற்கூரை மட்டும் அல்லது முழு வீடும் ஓலையால் ஆனவை.செத்தபெர என சொல்வதுண்டு. வீட்டை சுற்றி சுவர்களும் அந்த ஓலையால் ஆனவை.என் வீட்டு தண்ணீர் தொட்டிக்கு உம்மா இரு ஓலைகளை முடைந்து இணைத்து  மூடி வைத்திருப்பார். எங்கள் வீட்டு ஆட்டுப் பெரை ஓலையால் இருந்தது. கல்யாண வீடுகள் மற்றும் அனைத்து விசேஷங்களுக்கும் பந்தல் அமைப்பது ஓலையால்.அந்த பந்தல்களுக்குள் வெப்பம் இருக்காது.இப்போது அமைக்கப்படுகிற சாமியான எனப்படும் துணி பந்தல்களுக்கு கீழே அமர்ந்து மதிய உணவு உண்டால் சட்டை நனைந்திருக்கும்.

விசை கதையில் வருவதுபோல் அன்று பலருக்கு அரிசியும்.உப்பும் ஓலை முடைந்தால் தான்.என்னுடன் பள்ளியில் படித்த பெண்கள் ஓலைமுடைய செல்வதை பார்த்திருக்கிறேன்.அவர்கள் ஓலை முடிந்தால்தான் கஞ்சி குடிக்க முடியும்.வாப்பா சொல்வார் “பத்து வயசுலேயே வாப்பாக்ககூட கயறு முறுக்க போவேன் ராத்திரி திரும்பி வந்தா ஒரு வேளை சூடு கஞ்சி”என.

தென்னைநாரில் கயிறு முறுக்கும் தொழில் பெரிய வாழ்வாதாரம்.1800 களில் இங்கிருந்து கப்பல் மூலம் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியான கயிறுகளில் ஒட்டியிருந்த மண்ணை கண்டு தேடி வந்த ஜெர்மானியர் மூலம் தான் கண்டுபிடிக்கப்பட்டது யுரேனியமும் தோரியமும் வேறு தாதுக்களும் இந்த கடற்கரை மண்ணில் இருக்கிறது என.(இந்திய அபூர்வ மணல் ஆலை.INDIAN RARE EARTHS LTD)

ஓலையை முடைய எடுத்தபின் தென்னை மட்டை, கிலாஞ்சி, சூட்டு, கொதும்பு எல்லாம் அடுப்பெரிக்க.தென்னை தந்ததில் எதுவும் வீணல்ல.வீட்டுக்கு மாசம் தோறும் மட்டைகாரர் வருவார், அடுபெரிக்க மட்டையும் அடுப்பை முதலில் பத்த வைக்க சூட்டும் கொண்டு தருவார்.

ஓலைக்காரிக்கு கணவன் இறந்ததும் ஐம்புலன்களும் அடங்கிவிட்டது.

“தீ தின்னி… தீ தின்னிக்கெளவி…” என்று மேரி சொல்வாள். “அப்டியே வெந்து போவும் உள்ள”

“அவளுக்குள்ள எல்லாம் எப்பமோ வெந்து அடங்கியாச்சு பிள்ளே” என்றாள் வேலைக்காரி குருசம்மை.

ஆனால் விசை மட்டும் குறையவேயில்லை  ஓலைகாரியின் இறுதி நாள் வரை.

“இந்த மட்டுக்கு வலிச்சு முடையுதாளே. இதேமாதிரி பனம்பாயோ பெட்டியோ முடைஞ்சா நல்லா பைசா நிக்கும்லா?” என்று ஒருமுறை அனந்தன் நாடார் சொன்னார். அவன் அம்மையிடம் அதை சொன்னான். அம்மை அதை செவியில் வாங்கவேயில்லை. பிறகு அவனே கண்டுகொண்டான். அம்மைக்கு எந்த தொழில்தேர்ச்சியும் இல்லை. அவளுக்கு கையில் கவனமும் இல்லை. அவளிடமிருந்தது ஒரு விசை மட்டும்தான்.

ஓலைக்காரி முற்றடங்கியதால் வேறு எந்த சுகமும் தேவைப்படவில்லை. உடலை மறைக்க அழுக்கான ஒரு வேட்டியில் இரு துண்டுகள். உயிர் வாழ நான்கைந்து கவளம் உணவு.இரவுறங்க தரையில் விரிக்கவும்.போர்த்தவும் பழைய சாக்குகள்.கையில் விசை இருப்பதுவரை ஒரே வேலை ஓலை முடைதல்.விசை முடிந்ததும் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தாள்.

விசை மட்டுமே நித்திரையடைந்தது .ஓலைக்காரி நேசையனில் வாழ்கிறாள் .

“ஓலைய எதுக்கு கொண்டு போறிய?” என்றார் எதிரில் சைக்கிளில் வந்த தங்கையா நாடார்.

”கெடக்கட்டு டீக்கனாரே. நான் ஓலைக்காரிக்க மகன்லா?”என்றான் நேசையன்.

ஓலைக்காரி எப்போதுமிருப்பாள்.முற்றடங்குதலை மிக எளியமையாக சொல்லப்பட்ட கதை.

ஷாகுல் ஹமீது .

 

அன்புள்ள ஷாகுல்

சில கதைகள் அரிய நிகழ்வுகளால் ஆனவை, சில கதைகள் மிகமிகச் சாதாரணமான நிகழ்வுகளாலானவை. விசையின் கதைத்தலைவி போன்ற பெண்மணிகளை மிகச்சாதாரணமாக  இளம் வயதில் கண்டிருக்கிறேன். இந்தக்கதை அத்தனை ஓலைக்காரிகளுக்கும், கயிறுபிரிப்பவர்களுக்கும் ஆகத்தான்

ஜெ

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 17, 2021 11:34

இரு நோயாளிகள், விசை – கடிதங்கள்

இரு நோயாளிகள் [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

இரு நோயாளிகள் கதையை முற்றிலும் இன்னொருவகையான கதையாக வாசித்தேன். இந்த வரிசையில் இந்தப்பாணியில் கதையே இல்லை. உண்மையான மனிதர்கள், உண்மையான வரலாறு, சாராம்சம் கற்பனையானது. ஆனால் அது உண்மையிலிருந்து திரட்டி எடுக்கப்பட்ட வரலாறு. ஆச்சரியமான கதை

சங்ஙம்புழ கிருஷ்ணபிள்ளை, புதுமைப்பித்தன் இருவருமே 13 நாட்கள் இடைவெளியில் காசநோயால் இறந்தார்கள் என்பது ஓர் ஆச்சரியம்தான். கி.ராஜநாராயணன் ஏறத்தாழ அதேகாலத்தில் ஆசாரிப்பள்ளம் டிபி ஆஸ்பத்திரியில் இருந்திருக்கிறார். அன்றைய எழுத்தாளர்கள் பலர் டிபி வந்து இறந்தார்கள்

அந்த நோயை இரு கோணங்களில் ஆராய்கிறது கதை. இரு நோயாளிகளுக்கும் நோய் அளித்தது சமூகம். ஒருவர் முத்தமிட்டுப் பெற்றுக்கொண்டார். ஒருவர் உமிழப்பட்டு பெற்றுக்கொண்டார். ஒருவர் ரொமாண்டிக். ஒருவர் மாடர்னிஸ்ட்

ஆனால் புதுமைப்பித்தன் எதற்காகச் சிரித்தார்? அதுதான் கதையே

மாதவன்

வணக்கத்திற்கும் அன்பிற்கும் உரிய ஜெயமோகன்,

இரு நோயாளிகள் தலைப்பே வெகு அற்புதம். ஒருவன் உலகத்தை அதன் சுகத்தை பெண்ணாய் போதையாய் அள்ளி அள்ளிப் பருகி அல்பாயுசில் போகிறான். இன்னொருவன் உலகத்தின் மீதும் தன் மீதும் வெறுப்பை உமிழ்ந்து உமிழ்ந்து மெலிந்து நொந்து எரிந்து அவனும் அரைகுறை வயதில்தான் போகிறான்.

//இந்த உலகத்திலுள்ள அத்தனைபேரும் அவர் முகத்தில் காறித்துப்பினார்கள். அதனால் காசநோய் வந்தது என்று//

//இந்த உலகத்திலுள்ள அத்தனைபேரையும் முத்தமிட்டதனால் காசநோய் வந்தது என்று சொன்னாரே?//

இருவர் சொன்ன வாசகங்களையும் இணைத்து ஒருவன் சட்டென்று ஞானத்தின் கீற்றை அள்ளிக் கொள்கிறான்.

//நாம் சிலவேளைகளில் மிகப்பெரிய ஒன்றை பார்த்துவிடுகிறோம்.//

அந்த இருவரையும் இளமையில் காணும் பேறு பெற்றவனோ அவர்களிடமிருந்து எதையுமே பெறாமல் செக்கு மாட்டு வாழ்க்கை வாழ்ந்து நிற்கிறான். இனிய இசையை ஒளிபரப்பும் வானொலிப் பெட்டி போல. வானொலிப் பெட்டியை கேட்ட மற்றவனோ

அதைக் கொண்டு தனக்கான மையப் பாதையையும் வகுத்துக் கொள்கிறான்.

//ஏதோ ஒரு கொக்கி கிடைக்கும். மனிதன் எவரானாலும் முற்றிலும் காலியானவர் அல்ல//

வாழ்நாள் முழுவதுக்குமான ஒரு தங்க கொக்கி கிடைத்தது அந்த வீடியோ கிராபருக்கு மட்டுமல்ல எங்களுக்கும் தான்.

அந்த மலையாள கவிஞனுக்கு கற்பனாவாதம்  கவிதைக்கான பொருள் அல்ல, வாழ்க்கையேதான். அவன் வாழ்ந்ததே கற்பனைகளுக்குள் தான்.

இந்த தமிழ் இலக்கியவாதிக்கு வாழ்க்கையில் கிடைத்ததெல்லாம் துன்பமும் வேதனையும் தான். துன்பத்திலிருந்து விடுபட முடியாமலேயே மாண்டு போனான் இவன்.

ஒருவனுக்கு சாராயத்தோடு கூட பெண்கள் தீராப் போதை. எல்லா பெண்ணும் பேரழகியாக தெரிந்த கற்பனாவாதக் காதலன். எல்லா பெண்களையும் கவர்ந்து அடையும் கந்தர்வனாகவும் திகழ்ந்தவன். அதனாலேயே இளமையில் மாண்டு போனவன். மற்றவனோ ஏகபத்தினி விரதன், ஒழுக்கவாதி என காட்டிக்கொள்ள முயன்றவன், அதில் சற்று தோற்றுப்போனவனும் கூட. ரெண்டு பேரும் செத்துத்தான் போனார்கள். அதீத கொண்டாட்டமும் தவறு எதன் பொருட்டேனும் கடைபிடிக்கப்படும் அதீத சுய வதையும் தவறு. சமநிலையோடு நடக்க தெரிந்தவனே வாழத் தெரிந்தவன்.

ஒரு எழுத்தாளனாக மிகவும் சூட்சுமமாக புதுமைப்பித்தனைப் பற்றி தொட்டுச்செல்கின்ற கதையில் புலையர்கள் குறித்து நீங்கள் பேசுவது சிந்திக்க வேண்டிய ஒன்று… அதுவும் துன்பக்கேணி பொன்னகரம் போன்ற கதைகள் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டு இருக்கின்ற காலகட்டத்தில்….

//முன்பு புலையர்கள் நாடாண்ட ஒரு குறுநிலம். அங்கே ஒரு கோட்டை இருந்ததாக தொன்மம் உண்டு.//

வாழ்ந்தவன் விழுவதும் விழுந்தவன் எழுவதும் காலச்சக்கரத்தின் முடிவிலா விளையாட்டு. அன்று விழுந்த புலையச் சமுதாயம் என்றுதான் எழுந்துவருமோ முழுமையாய்…. சக்கரம் சுற்றி மேலே வரும்வரை காத்திருக்க வேண்டியதுதான்… ஜெயமோகன் ஆகிய நீங்களும் “நூறு நாற்காலிகள்’ போல இன்னும் நூறு நூறு கதைகளை எழுத வேண்டியிருக்கும்.

நான் ஐந்தாம் வகுப்பு படிக்கின்ற பொழுது எங்கள் பள்ளியில் அப்பாதுரை என்ற ஒரு ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த ஆசிரியர் எனக்கு இருந்தார். எங்கள் கிராமத்தைச் சேர்ந்த சேரியிலிருந்து மிகவும் கஷ்டப்பட்டு படித்து அரசு வேலையில் அமர்ந்த முதல் தலைமுறை பட்டதாரி. போற்றி நினைவு கூறத்தக்க ஒரு ஆசிரியப் பெருந்தகை. அவருக்குப் பின்பாக அவரின் வழிகாட்டுதலில் அந்த சேரியே படிப்புக்கு மிக முக்கியத்துவம் தந்து, பொருளாதார உயர்வில், வாழ்வு முறையில், மலர்ந்து உயர்ந்து நிற்கிறது இன்று. அவர்கள் விடியலை நோக்கி இன்னும் போக வேண்டிய தூரம் மிக அதிகம் எனினும்கூட விடிவெள்ளி தெரியத் துவங்கி விட்டது. இன்னும் பல அப்பாதுரைகள் வரவேண்டும் நிலைமைச் சீராக. வருவார்கள், வந்துதான் தீர வேண்டும்.

சங்ஙம்புழ கிருஷ்ண பிள்ளை பற்றியும் புதுமைப்பித்தனை பற்றியும் கட்டுரைகளாக நிறையவே எழுதி இருக்கிறீர்கள் எனினும் கூட கதை பாத்திரங்களாக அவர்கள் வரும்பொழுது அவர்கள் வெளிப்படுகின்ற அழகே அழகு. அடுத்த தலைமுறை எழுத்தாளர்கள் உங்களை கதைமாந்தராக்கி வெளிப்படுத்தப் போகும் கதைகளை எண்ணிப் பார்த்து புன்முறுவல் பூத்துக்கொண்டேன். நீங்கள் வாழும் பொழுதே யாராவது எழுதினால் இன்னும் வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் இருக்கும் அல்லவா. பார்ப்போம் யார் செய்கிறார்கள் முதலில் என்று.

அந்தக்கால கேரள மற்றும் மலபார் உணவு வகைகளை குறித்து நீங்கள் எத்தனை எழுதினாலும் அலுப்பதே இல்லை எங்களுக்கு. கற்பனையிலாவது சாப்பிடக் கொடுத்து வைத்திருக்கிறதே இந்தத் துரித உணவு கலாச்சார காலத்தில்.

திருவனந்தபுரத்தின் வரலாறும், இடங்களின் வரலாறும் நிலக்காட்சி வர்ணனைகளும் சேர்ந்து உங்கள் எழுதுகோல் (தட்டச்சுப் பலகை!) எங்களை 1948 க்கு கொண்டு சென்றுவிட்டது.

நிறைவான கதை. காலையில் வந்த பொன்னிற சூரியனை கண்டுகொண்டே இந்தக்கதையைப் படித்தேன். இந்தக் கதையும் ஒரு பொற்கதிரே. உன்னதப் படுத்தும் உவகை தரும் நம்மை தொட்டு பொன்னாக்கும் எதுவும் பொற்கதிர் தானே…

 

மிக்க அன்பும் நன்றியும்

ஆனந்த் சுவாமி

திருவண்ணாமலை

விசை [சிறுகதை]

அன்புள்ள ஜெ

விசை ஓர் ஆழமான கதை. இதேபோன்ற பல கதைகளை எழுதிக்கொண்டே இருக்கிறீர்கள். ஆழமான சிறிய குளம் போன்ற பெண்கள். தங்கள் மனசை வெளியே காட்டாமலேயே செத்துப்போனவர்கள். ஒரு சொல்லோ செயலோ அவர்களிடமிருந்து நம் நினைவில் நின்றிருக்கிறது.

அந்த அம்மாள் வாயை இறுக்கியபடி முழு விசையுடன் இழுத்து இழுத்து ஓலை நெய்யும் காட்சி கண்ணில் நிற்கிறது

குமரி மாவட்டத்தில் சிதையை தேங்காய் மட்டையில்தான் செய்வார்கள். ஆகவே தீ கனலாகவே இருக்கும். கொப்பளித்து பறக்காது. ஆகவே சிதையில் வைத்த பாய் துணி எல்லாம் அப்படியே கரிவடிவாக இருப்பதை கண்டிருக்கிறேன்

இந்த கரி ஓலை கிழவியின் கையில் இருந்த விசைதான்

ஆர். எஸ். கண்ணன்

 

அன்புள்ள ஜெ

என் அத்தை ஒருவர் தன் கணவர் இறந்த போது விட்ட கண்ணீர் விட்டு மயங்கி விழுந்த நிலையை நினைத்துப் பார்க்கிறேன். அவர் உயிரோடு இருந்தபோது பல சண்டைகள் வாக்குவாதங்கள் ஏன் அடிதடி கூட நடந்தது உண்டு. பல மாதங்கள் பேச்சு வார்த்தை இல்லாமல் இருந்தது உண்டு. என் மாமா இறந்த அந்த நாளில் அந்த கண்ணீர் எந்த அளவுக்கு உண்மை என திகைத்தது உண்டு.

உங்கள் விசை கதை படிக்கும் போது இதெல்லாம் நினைவுக்கு வந்தது.இந்தக் கதைக்குரிய புகைப்படமே ஒரு கவிதை போல் இருக்கிறது. சரியான தேர்வு. நேசையன் ஓலையைப் பொறுக்குவதில் ஆரம்பிக்கும் கதை “நான் ஓலைக் காரியின் மகனல்லவா” என்பதோடு முடிகிறது. இடைப்பட்ட பயணத்தில் ஓலைக்காரியின் கதை சொல்லப்படுகிறது. தென்னையோலையை கதை முழுவதும் தரிசிக்கிறோம். அதுவும் ஒரு பாத்திரமாக மிளிர்கிறது.

எலிசாம்மாள் என்ற ஓலைக்காரியின் சொந்த வாழ்க்கை பற்றி குறைவான வரிகளே காண்கிறோம். ஏன் கிழவி இப்படி ஆனாள்? எந்த விசை அவளுள் இருந்தது. எதற்காக ஓலை முடைந்து கொண்டே இருந்தாள். அவள் இளமையில் அடிமை வேலை செய்தவள்.  பல துன்பங்களுக்கு ஆளானவள். நேசையனின் அப்பன் அவளை அடிமைத் தளையிலிருந்து விடுவிக்கிறான். நிச்சயமாய் காதல் கொண்டுதான் பணத்தைக் கொடுத்து விடுவித்திருப்பான். எலிசாம்மாள் கணவனுடன் மனம் நிறைந்து மகிழ்ந்து  வாழ்ந்திருக்க வேண்டும். அவள் வாழ்வில் அவன் ஏற்றி வைத்த ஒளியில் திளைத்த அவள் அவன் திடீரென இறந்தவுடன் இருளில் மூழ்கி விட்டாள். கடைசிவரை அவள் அதிலிருந்து வெளி வரவே இல்லை. பெற்ற மகனை வளர்க்க வேறு வழியின்றி நடைப்பிணமாக வாழ்கிறாள். தாய்மைதான் அவளை வாழ வைக்கிறது. அதுதான் ஒரு விசையாகச் செயல்பட வைக்கிறது.

அவள் உதடுகளில் சொல்லாமல் தேங்கிய வார்த்தை என்னவாக இருக்கும் என்று யோசித்தால் வாழ்வு முழுவதும் சொல்லாமல் சேர்ந்த சொற்கள் அவள் உதடுகளில் தேங்கி கடுமையான தோற்றத்தை கொடுத்திருக்கலாம் . நேசய்யன் மீது அவளுக்கு எந்த புகாரும் இருப்பது போல் தெரியவில்லை. அவள் இறந்த காலத்தில் உறைந்து போயிருந்தாள் போல. எனக்கு தனியாகி தன்னுள் உறைந்த  “சிவை’யின் நினைவு வந்தது. “இறைவன்” கதையின் “இசக்கியம்மாள்” நினைவில் வந்தாள். கணவர் மேல் உள்ள கோபத்தை விடாமல் வீட்டை சுத்தம் செய்து  கொண்டேயிருந்த கதா பாத்திரம்  நினைவில் வந்தது. கதையின் பெயர் நினைவில் எழவில்லை.  பல பெண்கள் தங்கள் துயரங்களை ஏதேனும் விசை கொண்டு செயலில்தான் காட்டுவார்களோ என்னவோ.

எலிசாம்மாள் இளம் வயதினள். மூன்று வயதுதான்  குழந்தைக்கு. என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. என் கணவர் என்னை விட்டு அமெரிக்கா சென்ற பின்  அவர் திரும்பி என்னை அழைப்பது வரை கிட்டத்தட்ட நடைப்பிணமாக வாழ்ந்தது நினைவிருக்கிறது. என் எடை குறைந்து பாதி ஆளானேன். இதெல்லாம் கதையில்தான் வரும் என்றெண்ணியிருந்த நான் என் வாழ்வில் கணவரைப் பிரிந்துவேறொரு அனுபவத்திற்கு ஆளானேன். எங்காவது அங்கொன்றும் இங்கொன்றுமாக இப்படி வாழ்பவர்கள் இல்லாமல் இல்லை. நான் பார்த்த வரையில் கணவர் இறந்த பின்னர் கொஞ்ச நாள் துக்கம் கொண்டு அதன் பின்  வாழ்க்கையை சுதந்திரமாக அனுபவிப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அதற்கு எதிர்மறையாக மனைவியை இழந்த கணவர்  அப்படியே ஸ்தம்பித்து அமைதியில் ஆழ்ந்து வாழ்பவர்கள் எத்தனையோ பேர். அனுபவித்த ஆழமான அன்பை இழந்தவுடன் ஓலைக்காரி வேறொருத்தியாக உறைந்தாள் என்றுதான் படுகிறது.

இருபது ஆண்டுகளுக்கு முன் மறைந்த தாயை ஓலையைப்  பொறுக்கிச் சேர்ப்பதின் மூலம் தாயையே ஓலையில் காண்கிறான் நேசையன். அந்த ஓலை தந்தை இருந்த காலத்திலேயே உப்பும் புளியானது. தந்தை இறந்த பின்னர் சோறும் தேங்காய் துவையலானது. ஓலைக்காரி இறந்த பின்னரும் கறிச்சோறும், ஏழைப்பிள்ளைகளின் படிப்புக்கு உதவும் பணமாகியது. விசை கொண்டு அவள் செய்த வேலை வீணாகவில்லை. இத்தனை விஷயங்களை ஒருசேர நினைவுறுத்தும் ஓலையை நேசையன் நேசித்தததில் பிழையென்ன!

இப்படிக்கு உங்கள் தீவிர தீவிர வாசகி

இஷ்ரஜ்

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 17, 2021 11:33

விருந்து,படையல் – கடிதங்கள்

விருந்து [சிறுகதை]

அன்புள்ள ஜெ

விருந்து ஓர் அழகான கதை. அழகான துயரம் கொண்ட கதை. அதில் ஆசாரி புறவுலகத்தை வரைகிறான். அத்தனை காட்சிகளையும் ஒன்றாக வரைகிறான். வெளியே ஏதும் தனித்தனியாக இல்லை, அனைத்தும் ஒன்றாகக் கலந்தே உள்ளன என்று அவன் சொல்கிறான். அதுதான் அவனுடைய தரிசனம். அவன் விருந்துவைப்பதுகூட அதற்காகத்தான்.

சுவாரசியமான ஒரு விஷயம். நானும் ஆசாரிதான். என் அப்பா மாமா எல்லாருமே வெற்றிலைக்கு அடிமைகள். வாயில் ஏதாவது குதப்பிக்கொண்டே இருக்கவேண்டும். ஆனால் இது ஆசாரிவேலை செய்யும்காலம் வரைக்கும்தான். இன்றைக்கு எவரும் ஆசாரிவேலை செய்வதில்லை. ஆகவே குதப்பும் பழக்கமும் இல்லை

 

சபரி

 

அன்புநிறை ஜெ,

விருந்து கதை முதலில் வாசித்ததும் ஒரு புரிந்து கொள்ள முடியாத, உட்செரிக்க இயலாத ஒன்று ஏதோ எஞ்சியது. அதுவே பின்னர் கதையை ஒருவிதமாகத் திறந்து கொள்ளவும் உதவியது.

கதையில் நான்கு தலைகள் உருள்கின்றன. அம்மிணி, நாயர் திவாகர குறுப், ஆசாரி, ஆட்டுக்கிடா.

ஆசாரி நாயரிடம் வேலை செய்தவன் (குடிகிடப்பு ஊழியன்). அவன் அவரை வெட்டுவதற்காக அணுகும்போது கூட அவர் சாதாரணமாகவே அமர்ந்திருக்கிறார். பதற்றமோ முன்னால் சண்டை சச்சரவுக்கான தொனியோ அவர் பேச்சில் இல்லை. அமர்ந்தபடி ‘என்னடா’ என்கிறார்.  அவர் ஆசாரி மனைவி அம்மிணிக்கு தொந்தரவு தந்திருக்கலாம், உயிரை மாய்த்துக் கொள்ளும்படியான தொந்தரவு. அம்மிணி ஆசாரியின் காதலியா மனைவியா மறைஉறவா என்பதை விளக்கவில்லை எனினும் “எனக்க வீடுவரை போகணும்னு நினைச்சேன்… அம்மிணிக்க குழிமாடம் இருக்குத எடம் வரை”

என்பதால் அவன் வீட்டில் குழிமாடம் கொண்டவள் ஆதலால் மனைவி எனக் கொள்ளலாம். மேலும் அக்கொலை குறித்து பிள்ளை கேட்கும் போது, அவன் உடனடியாகக் குறிப்பிடுவது மகாபாரதக் கந்தர்வனைத்தான், (சைரந்திரிக்காக கீசக வதம்)

மேலும் அவன் பாடும் நளசரித கதகளி பாடலும், சுவரெங்கும் அவன் விரிக்கும் உத்யானமும் (சாம்யம் அகன்னொரு உத்யானம்) அவர்களது இன்ப வாழ்வின் நினைவால் இருக்கலாம். வயிறு நிறைந்தவர்கள் போடும் வெற்றிலையை அவன் மனம் மயங்கி சுவைப்பது அவனது நிறைவையே காட்டுவதாகத் தோன்றுகிறது. அவனுக்கு விருந்து தேவையல்ல வெற்றிலையே போதும்.

அடுத்தாக ஆட்டை தன் கையால் நான்கு நாட்கள் ஊட்டி வளர்த்து அவன் கண்ணெதிரே அறுத்துப் பார்ப்பது எதனால், என்ன பெயரிட்டான் என்ற கேள்வி.

அவன் நாயர் மீது வைத்திருந்த நம்பிக்கை, அதை அவர் அறுத்தது முதல் வினை (அம்மிணி சாவு).  அவரை அவன் தலையறுத்து அதை நிகர் செய்கிறான். அந்தக் கொலை முடித்து காவலர்கள் வரும் வரை அவன் காத்து இருக்கிறான். அவன் செய்ததில் தவறென்ற எண்ணமும் இல்லை, தண்டனைக்குத் தப்பும் எண்ணமுமில்லை. எனில் முடிந்துவிட்ட கணக்குக்குப் பிறகு இவன் தலை போகப் போகிறது.

எனவே மீண்டும் ஒரு தலையை வெட்டி இம்முறை அனைவருக்கும் விருந்து வைக்கிறான். அவன் அந்த ஆட்டிற்கு நாயர் பெயர் வைக்கலாமோ? ஊரே அவன் கொண்ட தலைக்கு வாழ்த்துவதை ஒருமுறை கேட்க எண்ணியிருக்கலாம்.

ஆடு அவனே என எண்ணியதாகக் கொண்டால், அவன் வைத்த நம்பிக்கையை நாயர் அழித்ததை,  மீண்டும் நிகழ்த்திப் பார்த்துக் கொள்கிறான். அவன் தலை நாளை உருளப் போவதன் முன் ஒத்திகையையும். எனில் அவன் பெயரை இட்டிருக்கலாம்.

இறுதியாக எதை செரித்துக் கொள்வதற்காக அவ்வளவு வெற்றிலை எனும் கேள்வி வருகிறது. கதைசொல்லியின் தாத்தா தாணப்பன் பிள்ளை வாழ்நாள் முழுவதும் இட்ட வெற்றிலை ஆசாரியின் சாவுக்கு மௌன சாட்சியாக நின்றதற்காக. எனில் ஆசாரி இட்டுக் கொண்டே இருந்த வெற்றிலை எது செரிமானம் ஆவதற்காக? அவன் கொண்ட அவ்வளவு பெரிய விருந்து எதுவாக இருக்கும் என்னுமிடத்தில் சைரந்திரியும் தமயந்தியும் மீண்டும் சிரிக்கிறார்கள். நம்பிக்கையை அறுத்தது அம்மிணி என்றும் கொள்ளலாம் – அவளும் அவனை ஏமாற்றி நாயரோடு உறவு கொண்டிருந்ததாக ஒரு சாத்தியதையில். அவன் வரைந்த உத்யானத்தில் ஆண்களே இல்லை. எனவே அவன் கையால் கொல்லப்படாத அம்மிணியின் பெயராகவும் இருக்கலாம். அவன் உண்ணாத விருந்து. ஆயிரமாயிரம் வெற்றிலைகளுக்கும் செரிக்காத விருந்து.

பெயரிடப்படாத ஒன்றை ஆழ்மனம் செரிக்க இயலாது. எனவே அவன் அகம் கொண்ட உணர்வுக்கு பெயர் இடுவது அவனுக்குத் தேவையாகிறது.

இது வருவிருந்து அல்ல, எதிர்நோக்கி காத்திருக்க, செல்விருந்து, சென்றவனுக்கு மட்டுமே தெரியும் விருந்து.

மிக்க அன்புடன்,

சுபா

படையல் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

படையல், விருந்து இரு கதைகளையும் தொடர்ச்சியாக எழுதினீர்களா? இல்லை என்றால் அந்தக்கதையில் இருந்து எஞ்சியது இங்கே முளைத்ததா?

படையல் கதையும் விருந்துதான். படையலில் பலிகொள்கிறார்கள் துறவிகள். இதில் பலியளிக்கிறான் சாமானியன். ரெண்டுமே ரத்தப்பலி

குமரவேல்

அன்பு ஜெ

உங்கள் புனைவுகளின் போது தான் நான் நுண் தருணங்களை அடைகிறேன். வேறு எங்கு சென்றாலும் அங்கு அந்த நுண் தருணத்தை காணவியலாது மேலும் மேலும் உங்களருகிலேயே வந்து நாய் போல் பார்த்துக் கிடக்கிறேன். நெருப்பை ஊதி அவர்கள் பற்ற வைக்கும்போது ”அவை தயங்கியபடி பற்றிக் கொண்டன” என்கிறீர்கள். ”சாம்பிராணிவச்ச  பஞ்சு… சமைஞ்சபுள்ள  சிரிக்கிறாப்பிலே பத்திக்கிடும்.” என்கிறீர்கள்.

திடீரென எல்லாம் ஒரே  இருட்டுதான்… அம்மையிருட்டுக்கு  ஆயிரம்  குட்டி  இருட்டு” என்கிறீர்கள். அதே நேரம் சிவனைப் பாடும்போது ”இருட்டுக்கு இருட்டான ஒளியே அல்லவோ?” என்கிறீர்கள். பிச்சைக்காரர்களைப் பற்றிச் சொல்லும்போது ”எப்பவுமே இருந்திட்டிருக்கானுக பிச்சைக்காரனுக” எனவும் ”பிச்சைக்காரன் சோறும் பேய் திங்குத பொணமும்னு கணக்கு.” என்கிறீர்கள். பின்னும் ”சாவுபயம் வந்தா செத்தாத்தான் அது தீரும்” என்கிறீர்கள்.

கவிதைத் தருணங்களையும், தத்துவார்த்தங்களையும் போகிற போக்கில் தெளித்துவிட்டுச் செல்கிறீர்கள். எந்த உங்களின் சொல்லையும் கவனக் குறைவோடு கடந்தால் அந்த சுவை குறைந்து விடுமோ என்று ஐயமுறுவதனாலேயே ஒவ்வொரு கதையயும் மீண்டும் மீண்டும் படித்து ஏதும் விட்டுவிடாதபடிக்கு மீள்வாசிப்பு செய்ய வேண்டியுள்ளது.

சிவனடியார் கைக் கொள்ள வேண்டுமென நினைத்து சிதம்பரம் போவதை ஏற்கனவே அடைந்துவிட்டவராக எறும்பு பவாவைப் பார்த்தேன். ”கேள்விக்குமேல் கேள்வியா இருந்ததெல்லாம் போயாச்சு. எல்லா கேள்விக்குமான ஒற்றைப் பதிலா ஒண்ணு வந்து சேந்தாச்சு. இனி சொல்லடங்கணும். இடம் அமையணும்”.

கேள்விகளெல்லாம் அடங்கியவராக, யாவற்றிற்கும் ”பிஸ்மில்லாஹிர்  ரஹ்மானிர்  ரஹீம்” என்ற ஒற்றைப் பதிலைக் கண்டவராக, சொல்லடங்கி, இடம் அமைந்து தனக்கான கூட்டை உருவாக்கி சுருங்கிக் கொண்டிருப்பவராக பாவா எனக்கு தென்பட்டார். முதன்முதலில் இந்த வரிகளை சிவனடியார் சொன்ன போது யாவற்றிற்கும் எப்படி ஒற்றை பதில் இருக்க முடியும் என்று நினைத்தேன்.

ஆனால் கதையின் இறுதியில், நிசப்தத்தின் விளிம்பில் கனன்று கொண்டிருந்த தீ நெரிபடும் ஓசைக்குப் பின்னரான அந்த ”பிஸ்மில்லாஹிர்  ரஹ்மானிர்  ரஹீம்” என்ற சொல்லில் தான் அந்த திறப்பை அடைந்தேன். பின்னும் ”அண்ணாமலையிலே எரியுறதுதான் சிதம்பரத்திலே ஆகாசமாட்டு இருக்குது. எல்லாம் ஒண்ணுதான்” என்ற வரிகளில் நான் பரிபூரணமாக சரணடைந்துவிட்டேன்.

சொல்லென இனி எதுவும் சொல்லித் தான் இக்கதையை நான் புரிந்து கொண்டதை உங்களுக்குச் சொல்ல வேண்டுமா என்ன? உண்மையில் அந்த இரத்தப் படையலை நீங்கள் தான் வாசகர்கள் எங்களுக்குப் படைத்திருக்கிறீர்கள்.

திறப்பான கதை ஜெ. நன்றி.

அன்புடன்

இரம்யா.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 17, 2021 11:32

கூர், தீற்றல் – கடிதங்கள்

தீற்றல் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

வெவ்வேறு கதைகளைப் பற்றி வெவ்வேறு வகைகளில் கடிதங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இன்றைய சூழலில் சிறுகதை பற்றி இவ்வளவு பெரிய விவாதமும் வேறெங்கும் நடைபெறவில்லை என்றுதான் நினைக்கிறேன். இளம் படைப்பாளிகளின் கதைகளுக்குக் கூட இதேபோன்று ஆழமான விவாதங்கள் இங்கே நடைபெறுகின்றன.

தீற்றல் கதையில் மௌனி கதையிலிருந்து ஒரு தொடர் கண்ணியாக கதை சொல்லப்படுவது அழகாக உள்ளது. கதைசொல்லுபவர் சரோஜாதேவி படத்தைப் பார்க்கிறார். மலையாளப்பாட்டை நினைவுகூர்கிறார். அதைப்பற்றிப் பேசுகிறார். ஆனால் அப்போதுகூட அவர் அந்த நிகழ்வைச் சொல்ல முயலவில்லை. அதை மௌனிகதை சொல்லி அதைப்பற்றிப் பேசுபவர்போலச் சொல்கிறார். அது அவ்வளவு அந்தரங்கமான விஷயம் அது.

அது அப்படியே மறைந்துவிட்டது. மௌனி சாவு என எழுதுகிறார். இது சாவைவிட ஆழமானது. முழுமையான வெறுமை என்கிறார். அந்த வெறுமையிலிருந்துகொண்டு அதைச் சொல்கிறார்

தங்கவேல் கோவிந்தராஜ்

 

அன்புள்ள ஜெ

தீற்றல். மிக அழகான கதை.

ஆம் அது எற்றும்  மிஞ்சி இருக்கும். மிஞ்சிய கொஞ்சம் உள்ளிருந்து எப்பொழுதாவது எட்டி பார்க்கும். தாத்தாவான பின்னும் கூட கதைசொல்லியிடமும் அது மிஞ்சி இருக்கிறது.

இதையெல்லாம் படிக்கும் பொழுது பெண்களுக்கு துறவும், ஆன்மீக அலைகழிப்பும் தேவையா என்று கூட எனக்கு தோன்றுகிறது. நான் இதுவரை பெண்கள் ஆன்மீகத்தில் இருந்ததில்லை என்று சொல்லவில்லை. ஆனால் இதுவரை இது ஆண்களின் உலகம், ஆண்களின் பார்வை வழியாக உருவானது. இது ஆண்களின் தத்துவமும் ஆன்மீகமும். கீதை உரைக்கபட்டது அர்ஜூனனிடம். அது ராதை என்றால் கிருஷ்ணன் என்ன சொல்லியிருப்பான்.

என் வரையில் இக்கதை படித்த மனநிலையை சொல்வதென்றால். மாயை ஆண்களுக்கு துயரம் பெண்களுக்கு அது எங்கோ ஒருவித்தில் கொண்டாட்டம் பேரின்பம்.

ஞானத்தில் கிருஷ்ணனால் எந்த உயரத்துக்கும் செல்லமுடியும். ராதை காதலின் வழி அவள் சென்ற இடத்தை உயரத்தை கிருஷ்ணனால் அடைய முடியுமா என்று எனக்கு தெரியவில்லை. பெண்கள் அவர்களின் கண்வழி தங்களுக்கான ஆன்மீகம் ஒன்றை உறுவாக்கிக்கொள்ள வேண்டும், அதை தேடி வகுத்து தொகுத்து கொள்ள வேண்டும். இன்றையதிலிருந்து அது சற்று மாறுபட்டதாகவே இருக்கும் என்றே எனக்கு எண்ண தோன்றுகிறது.

வெண்முரசில் நீலம் தான் அதிகம் வாசிக்கபட்டது என்றும், ஒரு அலையென அதை வாசிக்க பெண்வாசகர்கள் வந்து சென்றார்கள் என்று செல்லியிருந்தீர்கள். அது நமக்கு உணர்த்துவது எதை.

நீலம் வெண்முரசில் ஒரு தீற்றல்.

நன்றி

பிரதீப் கென்னடி

கூர் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

கூர் மீண்டும் அசௌகரியமூட்டும் ஒரு கதை. அதை எப்படி எதிர்கொள்வதென்பது கொஞ்சம் சிக்கல்தான். முந்தைய நூறுகதைகளில் ஏழாவது  என ஒரு கதை இருந்தது. அந்த நூறுகதைகளில் பேசப்படாமலேயே போன கதை அது. அந்தக்கதையை ஞாபகப்படுத்தும் கதை.

அந்த சின்னப்பையன்கள் சமூகத்தால் தூக்கிவீசப்படுகிறார்கள். அவர்கள் தங்களை கிருமிகளாக ஆக்கிக்கொண்டு சமூகத்தைச் சூறையாடுகிறார்கள். அவர்களை ஒன்றும் செய்ய முடியாது. ஏனென்றால் அவர்கள் நம் குழந்தைகள்தான்.

நான் சந்தைகளிலும் தெருக்களிலும் இதேபோன்ற குழந்தைகளைப் பார்க்கும்போது இவர்கள் நேர்மையான வாழ்க்கைக்கு வந்தால் அதைப்போல அதிசயம் வேறில்லை என்று நினைத்துக்கொள்வேன்

அவன் அன்பான கொஞ்சல்மொழி கேட்டதுமே கொலைவெறி அடைகிறான். அதை இன்னொருவகையில் கடல் கதையிலும் சொல்லியிருந்தீர்கள்

 

தேவராஜ்

 

அன்பு ஜெ

“சாத்தானை வைச்சுதான் கர்த்தர் பழிவாங்குவாரு” இந்த வரிகளைக் கொண்டே ஞானப்பன், அவனைக் கொலை செய்யச் சொன்னவன் மற்றும் ஆரிஸ் ஆகிய மூவருள்ளும் பயணித்தேன். சிறு வயதில் சாத்தான் என்பதை அகோரமான மிருகத்தைப் போலேயே கற்பனை செய்து கொண்டதுண்டு. இப்போதெல்லாம் அதை ஒரு மன நிலையாகவே பார்க்கிறேன். ஒவ்வொருவருள்ளும் அது இருக்கிறது. அது வெளிப்படும் நேரமும் அளவும் அதனால் ஏற்படும் சேதாரத்தைப் பொறுத்தே அதன் கோரத்தன்மை வெளிப்படுகிறது. ஞானப்பன் சாத்தானாக வெளிப்படும் எந்தத் தருணத்திலும் கொலை செய்யப்படவில்லை. ஆனால் பேரனைக் கொஞ்சும் ஒரு சாமானிய மன நிலையில் இருக்கும் போது தான் ஆரிஸுக்கு அவனை குத்த வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கிறது.

ஒருவரைக் கொலை செய்ய வேண்டும் என்ற மன நிலையே சாத்தான் மன நிலை. ஒருவனை வெட்டி வகுந்திருவேன் எனும்போதோ, பயமுறுத்திப் பேசும்போதோ, போட்டுத்தள்ள வேண்டுமெனும்போதோ, வவுந்திருவேன்னு மிரட்டியபோதோ ஆரிஸ் ஞானப்பனைக் கொலை செய்யவில்லை. மாறாக பேரனைக் கொஞ்சும்போதே அவனை ஒரே குத்தில் சங்கில் இறக்க வேண்டும் என்ற வெறி வந்திருக்கிறது. அந்த மன நிலையே சாத்தானின் உச்சம். இது போன்ற உச்ச மன நிலையால் தான் ஞானப்பன் போன்ற சாத்தனை உயிரறுக்க முடியும். ஒவ்வொரு சாத்தான் மன நிலையும் ஒவ்வொரு சூழல் பின்புலத்திலிருந்து வருகிறது. ஆரிஸுக்கான அந்த சூழல் மன நிலையைப் புரிந்து கொள்ள முடிகிறது. எனினும் அந்த எதிர்மறை அலையைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மனம் ஆரிஸுக்காகவும், பிற சிறுவர்களுக்காவும் கனக்கிறது.

நீங்கள் குறளினிது உரையில் சொன்ன இந்த குறள் நினைவிற்கு வந்தது.

”நாள்என ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்

வாளது உணர்வார்ப் பெறின்”

ஞானப்பனின் உயிர்ஈரும் அந்த வாளின் கூர்-ஐ, அந்த நொடியை ஆரிஸின் கண்கள் வழி பார்த்துக் கொண்டிருந்தேன்.

அன்புடன்

இரம்யா.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 17, 2021 11:31

March 16, 2021

இருளில் [சிறுகதை]

தேசிய நெடுஞ்சாலையின் நடுவே, அரளிச்செடிகள் பூத்து நின்றிருந்த பகுப்பான் மீது நின்று கைகாட்டிய இளைஞனைக் கண்டதும் லாரி வேகம் குறைந்தது. நான் எரிச்சலுடன் “என்ன பாய், இடமே இல்லை….” என்றேன்.

“கொஞ்சம் நெருக்கினால் உட்கார்ந்துக்கலாம் சாப். குளிருக்கும் இதமா இருக்கும்”என்று டிரைவர் அப்துல் சொன்னார்.

”நான் வேணும்னா இன்னொரு டிக்கெட் பணத்தை தந்திடறேன்” என்றேன்.

“பணத்துக்காக இல்லை சாப்” என்று அப்துல் சொன்னான் “நடுரோடு, நடுராத்திரி… ஒரு ஆளை அப்டி விட்டிடக்கூடாது. பைசா இல்லேன்னாலும் பரவாயில்லை…”

திருடனாக இருக்கப்போகிறான் என்று சொல்ல நான் நினைத்ததும் லாரி அவன் அருகே நின்றது. இந்தியில் “எங்கே?”என்று அப்துல் கேட்டார்.

“இந்தவழியேதான்… வண்டி இந்தூர்தானே போகிறது?” என்று அவன் மழலை இந்தியில் சொன்னான்.

”இந்தூருக்குள் நுழையாது…”

“என்னை நெடுஞ்சாலையில் இறக்கிவிட்டாலும் ஒன்றுமில்லை”

“சரி ஏறிக்கொள்”

க்ளீனர் பையன் இறங்கி வழிவிட அவன் கம்பியைப் பிடித்து ஏறி என்னருகே அமர்ந்தான். க்ளீனர் பாதி பின்பக்கத்தை இருக்கையின் விளிம்பில் வைத்து தொற்றி அமரத்தான் இடமிருந்தது.

குட்டிக்குட்டி நிலாக்கள் போல விளக்குகள் தலைக்கு மிக உயரத்தில் ஒளிவிட நிலாவெளிச்சம் போல மெல்லிய பளபளப்பு கொண்டிருந்தது சாலை. எதிரே வந்த லாரிகளின் முகப்புவிளக்குகளின் வெளிச்சம் பகுப்பானில் நின்ற அரளிச்செடிகளின் நிழலை எங்கள் லாரிமேல் எடுத்து பதியச்செய்து இழுத்துச் சுழற்றி சுழற்றி சென்றுகொண்டிருந்தது.அப்துல்லின் முகம் அதில் ஒளிகொண்டு ஒளிகொண்டு அணைந்தது. அவர் முகத்திலிருந்த கட்டைத்தாடியின் மயிர்கள் ஒளித்துருவல்களாக தெரிந்து தெரிந்து அணைந்தன.

நேரான சாலை. வளையத்தின் மீது கையை லேசாக வைத்து அக்ஸிலேட்டர் மீது மெல்ல மிதித்தபடி அப்துல் ஒரு காலை தூக்கி இருக்கைமேல் மடித்து வைத்துக்கொண்டார். நான் காலடியில் இருந்த என் தோல்பையை எடுத்து மடிமேல் வைத்துக்கொண்டு காலை நீட்டி முதுகை நிமிர்த்தினேன்.

ஒரு வளைவில் பின்னால் வந்த லாரியின் வெளிச்சத்தில் எங்கள் லாரியின் நிழல் எங்கள் முன்னால் தெரிந்த மரக்கூட்டங்களின் இலைச்செறிவின்மே விழுந்து வளைந்து சென்றது.

“இந்த ரோடெல்லாம் இப்டி ஓங்குதாங்கா போட்டப் பின்னாலே ஓட்டுறது கஷ்டமாப்போச்சு சாப்”என்றார் அப்துல் “ அப்டியே கொண்டு அடிக்குது. போனவாட்டி வாறப்ப ஓங்கோல் வழியா சவாரி. அப்டியே தூங்கிட்டேன். ஒரு அரமணி நேரம் நல்ல தூக்கத்திலேயே வண்டி போய்ட்டிருக்கு. அப்றம் முழிச்சிக்கிட்டேன். முழிச்சிக்கிடவேண்டிய நேரத்திலே சரியா முழிச்சுக்கிட்டேன். அங்க அப்டியே போயிருந்தா நேரா போயி பள்ளத்திலே தலைகுப்புற விழுந்திருப்பேன். ஓவர்லோடு வேற…”

”அதெப்டி சரியா முழிப்பு வருது?”

“சாப், ஒவ்வொரு தொழிலுக்கும் அல்லாஹ் ஒரு ஜின்னை படைச்சிருக்காரு. ஸ்டீரிங்குக்கு ஒரு ஜின்னு உண்டு… அதான் என்னைய காப்பாத்திச்சு”

“சும்மா…”

“என்ன சும்மா? எப்டியும் இருவத்தஞ்சு வாட்டி அப்டி ஆயிருக்கு. அந்த ஜின்னு இருக்கு”

“இப்ப நம்ம கூட இருக்கா?”

”என் கையிலே இருக்கு… ஸ்டீரிங் புடிச்சு பழகினை கையை அது பாத்திட்டிருக்கு… “

நான் புன்னகைத்தேன்.

“சிரிப்பில்லை சாப்… நம்ம உஸ்தாத் பெரிய டிரைவர்… இப்ப ஓட்டுறதில்லை. சாயல்குடி ஜாபர் அலின்னு சொன்னா பலபேருக்கு தெரியும். அவர் சொன்னது இது”

“அப்ப ஏன் ஆக்ஸிடெண்ட் நடக்குது?”

“ஜின்னு காப்பாத்தும், ஜின்னு நம்மளை கைவிடுறதும் உண்டு… அதெல்லாம் நம்ம கையிலே இல்லை. அல்லாவோட ஆணை”

நான் மீண்டும் புன்னகைத்தேன்.

“மத்தவனுக்கு தமிழ் தெரியாதுன்னு நினைக்கிறேன்… அப்டியே பேச்சுக் குடுக்கிறது. பொழுதுபோகும்ல? தூங்காம ஓட்டலாம். எப்டியும் நாலுநாலரை மணிநேரம் ஆயிடும் வெளிச்சம் வாறதுக்கு”

“நீங்கதானே ஏத்தினீங்க.. நீங்க பேச்சுகுடுங்க…”என்றேன் “எங்கிட்ட பேச்சுக் குடுத்தீங்க. பெரிசா சுவாரசியம் இல்லேன்னு அவனை ஏத்திக்கிட்டீங்க”

”அதெல்லாம் ஒண்ணுமில்லை சாப்” என்றார் அப்துல் “தம்பி, உனக்கு தமிழ் தெரியுமா?”

”தெரியாது, நான் தெலுங்கு பேசுபவன்”

”இந்தி ?”

“இந்தி கொஞ்சம் பேசுவேன்”

”இந்திக்காரர்களுக்கே இந்தி கொஞ்சம் கொஞ்சம்தான் தெரியும்” என்றார் அப்துல் வெடித்துச் சிரித்தபடி. “ஏன்னா அந்த பாசையே கொஞ்சம்தான் இருக்கு”

அவன் புன்னகைத்தான். அவன் வாய்விட்டுச் சிரிக்கவில்லை என்பதை நான் கண்டேன். மனதுக்குள் கைவிரல்களை இறுகப்பற்றிக் கொண்டிருப்பவர்கள் உண்டு. அவர்கள் சிரிப்பதில் தெரிந்துவிடும். அவர்கள் பேசவும் மாட்டார்கள்.

“இவன் பேசக்கூடிய ஆள் இல்லை பாய்” என்றேன்.

“தூங்காமலிருந்தால்போதும்” என்றார் அப்துல். “உன் பெயர் என்ன தம்பி?”

“தருண்… தருண் ரெட்டி”

“ரெட்டியா? அது சரி…”என்றார் அப்துல். அவருக்கு இப்போது நெருக்கம் கொஞ்சம் கூடியதுபோல தோன்றியது “எங்கே போகிறாய் தம்பி? இந்தூரில் யார் இருக்கிறார்கள்?”

“யாருமில்லை. நாலைந்து வருடங்களுக்கு முன்பு நான் ஒருமுறை இந்தூர் போயிருக்கிறேன்”

“எதற்கு?”

”இதே போல சும்மாதான்… அங்கே ஒருநாள் இருந்தேன். அங்கிருந்து கிளம்பிவிட்டேன்”

“இன்றைக்கும் அதேபோல கிளம்பிவிடுவாயா?”

”ஆமாம்”

“அங்கிருந்து?”

“அங்கிருந்து இன்னொரு ஊர்… அதேமாதிரி”

“சரிதான், நாடோடி…” என்றார் அப்துல் “கையிலே நமக்குத்தர பணம் இருக்கிறதா. இல்லை இலவசப் பயணம்தானா?”

”இல்லை, தேவையான பணம் இருக்கிறது. நான் தொழில் செய்கிறேன்…”

“என்ன தொழில்?”

”கொஞ்சம் பணமிருக்கிறது, அதை பங்குச்சந்தையில் புரட்டிக்கொண்டிருக்கிறேன். எனக்குத் தேவையான லாபம் வந்துவிடும்”

எனக்கே அவன்மேல் ஆர்வம் வந்துவிட்டது. ”இப்படியே சுற்றிக்கொண்டிருக்கிறாயா?” என்றேன்

“ஆமாம்”

“ஏதாவது ஆராய்ச்சி செய்கிறாயா?”

“அதெல்லாம் இல்லை”

”சரித்திர இடங்களைப் பார்ப்பது , அதேமாதிரி…”

“அப்படியெல்லாம் இல்லை”

“வேறென்ன? இந்தமாதிரி அலைந்து இந்தியா முழுக்க சுற்றுவது இல்லையா? ஃபேஸ்புக்கில் எழுதுவது… இன்ஸ்டாகிராமில் ஃபோட்டோ…”

“அப்படியும் இல்லை… நான் சுற்ற ஆரம்பித்து ஏழு வருடமாகிறது. நான் தேசியநெடுஞ்சாலைகளில் மட்டும்தான் பயணம் செய்கிறேன்”

”ஊர்களுக்குள் போவதில்லையா?”

“பெரும்பாலும் போவதில்லை… தேசிய நெடுஞ்சாலைதான்”

“ஏன்?”

“எனக்கு தேசியநெடுஞ்சாலைகள் பிடித்திருக்கிறது. இது திறந்தவெளி மாதிரி இருக்கிறது. எந்த ஊருக்குள் போனாலும் மூடிய அறைக்குள் இருப்பதுபோல மூச்சுத்திணறுகிறது”

“ஆச்சரியம்தான்”என்றேன்

“எனக்கும் அப்படித்தான்”என்றார் அப்துல் “எனக்கும் அகலமான சாலைகளில் வாழ்வதுதான் பிடிக்கிறது. சாலையோரம் ஏதாவது உணவகத்தின் அருகே வண்டியை நிறுத்திவிட்டு தூங்கினால்தான் ஆழமான தூக்கம் வரும்… டிரைவர் ஆனபிறகு இந்த இருபத்தேழு வருடங்களில் நான் ஊருக்குள் வீட்டுக்குள் தூங்கிய நாட்கள் மிகக்குறைவு”

“ஆமாம்… நெடுஞ்சாலை இரண்டுபக்கமும் திறந்திருக்கிறது. இரண்டுபக்கமும் முடிவில்லாமல் போய்க்கொண்டே இருக்க இடமிருக்கிறது…. ஊர்கள் அடைபட்டவை. எனக்கு ஊருக்குள் போனால் சிதல்புற்றுக்குள் போனதுபோல இருக்கிறது” என்றான் தருண். அவன் தெலுங்கு எனக்கு தெளிவாகவே புரிந்தது. நான் நெல்லூரில் ஒரு ஏஜென்ஸி எடுத்திருந்தேன், ஆறு வருடம் முன்பு.

“நீ திருமணம் செய்துகொள்ளவில்லையா? குடும்பம்?” என்றேன்

‘இல்லை, எனக்கு அம்மா மட்டும்தான் இருந்தார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்கள்… இப்போது யாரும் இல்லை”

“எனக்கும் யாரும் இல்லை” என்றார் அப்துல் “இப்போதைக்கு இந்த கிளீனர் மட்டும்தான் சொந்தம்… டேய் நசீர், டேய் ஹிமாறே”

நசீர் அமர்ந்துகொண்டு தலையை தொங்கவிட்டு ஆடிக்கொண்டிருந்தான். வசைபாடப்பட்டால்தான் அவனுக்கு நன்றாகத் தூக்கம் வரும்போல.

”பார்த்தாயா? அவனால் நின்றுகொண்டும் நடந்துகொண்டும்கூட தூங்க முடியும்… பெரிய கில்லாடி” என்றார் அப்துல்.

”உங்களுக்கு மனைவி இல்லையா டிரைவர் சாப்?”என்றான் தருண்.

“இருந்தாள்… ஒரு குழந்தையும் இருந்தது. ஒரு காய்ச்சல் வந்தது, இரண்டுபேருக்குமே” அப்துல்  அதை சாதாரணமாகத்தான் சொன்னார். ஆனால் சட்டென்று அந்த சிறிய இடத்திற்குள் காற்று இறுகிவிட்டது.

அவன் என்னை பார்த்தான். நான் பேசாமலிருந்தேன். அப்துல் ஒரு பீடி பற்றவைத்துக்கொண்டார். வளையத்தை விட்டுவிட்டு இரு கைகளாலும் பீடியை பொத்தி கனல் காட்டி இழுத்தார். புகையை மூக்குவழியாக விட்டார்.

“நீங்கள் மறுமணம் செய்துகொள்ளலாமே” என்றான் தருண் ‘உங்கள் மதத்தில் அதெல்லாம் எளிய விஷயம்தானே?”

“உண்மையைச் சொன்னால் நான் அதற்கு தீவிரமாக முயற்சி செய்தேன்… எப்படியாவது திருமணம் செய்துகொண்டு பிள்ளைகுட்டியாக வாழவேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் பெண்ணை தேடி கண்டுபிடித்து நேரில் பார்ப்பது வரைத்தான். நேரில் பார்த்ததும் ஒருமாதிரி ஆகிவிடும்”

“ஒருமாதிரி என்றால்?”என்று தருண் கேட்டான்.

“அதை என்ன சொல்வது? இதோபார் பசியோடு சாப்பிடப்போகிறாய். சோறுக்கு பதில் அங்கே மண் இருந்தால் என்ன ஆகும்? அதேபோல… ஒரு ஜின் சாபம் போட்டு நீ கையால் தொட்டதுமே சோறு மண்ணாக ஆகிவிட்டால் என்ன செய்வாய்? சாப்பிடுவாயா?”

“ஏன்?”என்று தருண் கேட்டான்.

“எல்லாம் அந்த பழிகாரியால்தான்… ஜீனத், என் மனைவி. அவளும் அவள் மூஞ்சியும்…. அவள் என் மனதிலிருந்து குறையவே இல்லை”

“எத்தனை ஆண்டுகளாகிறது?”என்றேன்

”அது ஆகிறது, நீண்டகாலம். இந்த ஜூனில் இருபத்தொரு ஆண்டு ஆகும்… அழகாக எல்லாம் இருக்க மாட்டாள். என்னைவிட கறுப்பு. அவளை நான் ஒன்றும் பெரிதாக நேசிக்கவில்லை. அந்தக்காலத்தில் நல்ல அடியெல்லாம் கொடுத்திருக்கிறேன். அவள் செத்தபோதுகூட நான் பெரிதாக  ஒன்றும் நிலைகுலைந்து போகவில்லை. கொஞ்சம் அழுதேன். நாலைந்து நாளில் சரியாகிவிட்டேன். எப்படியாவது அந்த துக்கத்திலிருந்து வெளியே வந்துவிடவேண்டும் என்று முடிவும் செய்தேன். இப்போதுகூட துக்கமெல்லாம் இல்லை. அல்லா மேலே ஆணை, துக்கமே இல்லை. ஆனால் இன்னொரு பெண்ணை பார்த்தால் சீச்சீ என்று ஆகிவிடும். அதெப்படி இவளுடன் போய் என்று தோன்றிவிடும். சும்மா கற்பனை செய்து பார்த்தாலே, சொன்னேனே, வாய்நிறைய மண்ணை அள்ளிபோட்டுக்கொண்டதுபோல ஆகிவிடும். துப்பி துப்பி வாயைக்கழுவி… அந்தக் கனவே பலமுறை வந்திருக்கிறது”

“வித்தியாசமான ஆள்தான் நீங்கள்” என்றேன் “இப்படியெல்லாம் இருக்கும் என்று தெரியும்… ஆனால் அதெல்லாம் ஒரு நாலைந்து ஆண்டுகளுக்கு”

“எல்லாரும் என்னிடம் சொல்லிப்பார்த்தார்கள்… கேலிகூட செய்வார்கள், எனக்கு விபத்தில் இடுப்பில் அடிபட்டுவிட்டது என்று பேச்சு உண்டு. எனக்கே ஆற்றாமையாக இருக்கும்… என்ன இது ,ஒருத்தி செத்தால் நான் ஏன் பைத்தியக்காரன் மாதிரி இப்படி இருக்கவேண்டும் என்று நினைப்பேன். ஆனால் எல்லாம் இன்னொரு பெண்ணை நெருங்குவதுவரைத்தான். என்னால் முடியாது”

நான் “என்னால் இதை நம்ப முடியவில்லை”என்றேன். “உங்களுக்கு வேறேதோ பிரச்சினை இருக்கும்”

”ஏன்?”என்று தருண் கேட்டான்

”ஆண்கள் அப்படி இருக்கமாட்டார்கள்”

“எப்படி?”

“பெண் இல்லாமல்… ஒரு பெண் இருக்கும்போதே ஆண்கள் மற்ற பெண்களை பார்த்துக்கொண்டுதான் இருப்பார்கள்”என்றேன்

“நானும் எல்லா பெண்களையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்”என்றார் அப்துல். “சினிமாகூட அதற்காகத்தான் பார்க்கிறேன். ஆனால் என்னால் இன்னொரு பெண்ணை நெருங்க முடியவில்லை… ”

“அது வேறு ஏதோ பிரச்சினை… நீங்கள் ஒரு சைக்கியாட்ரிஸ்டைப் பார்க்கவேண்டும்”

“யார் அது?”

”மனதுக்கு மருந்து கொடுப்பவர்”

”நான் மௌல்வி சாகிபிடம் பேசினேன். மூன்று மௌல்விகளிடம் பேசியிருக்கிறேன்”

”அவர்கள் என்ன சொன்னார்கள்?”

”என்னை ஒரு ஜின் தடுக்கிறது என்றார்கள். எனக்காக துவா செய்தார்கள்”

நான் சிரித்தேன்.

தருண் சட்டென்று சற்று உரத்த குரலில் “சிரிக்காதீர்கள்… உங்களுக்கு புரியாதது எல்லாம் சிரிக்கவேண்டிய விஷயம் அல்ல”என்றான்.

“என்ன?” என்றேன்.

”அவருடைய நிலைமை உங்களுக்கு புரியவில்லை”

“உனக்குப் புரிகிறதா?”

“எனக்கும் முழுக்கப் புரியவில்லை. ஆனால் கொஞ்சம் என்னால் புரிந்துகொள்ள முடியும். ஏனென்றால் எனக்கும் அதேநிலைதான்”

நான் அவனை வியப்புடன் பார்த்தேன்.

“நானும் அவரைப்போலத்தான்” என்று அவன் தலைகுனிந்து தணிந்த குரலில் சொன்னான்.

“உன் மனைவியா?”

“இல்லை”

“காதலியா?”

“இல்லை” என்றான். “அவள் யார் என்றே எனக்கு தெரியாது…சாப் ஒரு பீடி கொடுங்கள்”

அவர்கள் இருவரும் பீடி பற்றவைத்துக்கொண்டார்கள். இரு தீக்கொள்ளிகள் சீறிக்கொண்டே இருந்தன. இந்த எதிர்க்காற்றில் பீடி மிகவிரைவாகக் கரைந்துவிடும்.

அவர்கள் இழுப்பதை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். அவன் பேசுவான் என எதிர்பார்த்தேன். அவன் பேசவில்லை. நானே ஆரம்பித்தேன்.

”அந்த பெண் யார்?”

நான் கேட்டபோது அவன் சற்று துணுக்குற்றதுபோல தோன்றியது. அவன் பீடிக்கு பழகியவன் அல்ல. புகை அவனை கமறச்செய்தது. அவன் கையில் இருந்து தீப்புள்ளி சிவந்து சிவந்து சீறியது.

அவன் “ம்ம்” என்றான். பிறகு தொண்டையை கனைத்துக்கொண்டு “சொன்னேனே, யார் என்றே தெரியாது”என்றான்.

“அப்படியென்றால்?”

”அன்றைக்கு நான் ஒரு முதலீட்டு நிறுவனத்தில் ஊழியனாக இருந்தேன். ஊர் ஊராக செல்லவேண்டும். பெரும்பாலும் பைக்கிலேயே போவேன்.பைக் மேல் எனக்கு அப்படி ஒரு மோகம். எனக்கு பிடித்தமான ஒரு ராயல் என்ஃபீல்ட் வைத்திருந்தேன்.ராயல் என்ஃபீல்ட் கிளப்பிலும் நான் உறுப்பினர். பெரும்பாலும் சாலையோர மோட்டல்களில் தங்குவேன். சாலையோர தாபாக்களில் சாப்பிடுவேன். என்னை ஒரு கௌபாய் போல கற்பனைசெய்துகொள்வேன்”

“குடி?”

‘இல்லை, இப்போதும் குடிப்பதில்லை” என்றான். பிறகு “ஏழு வருடம் முன்பு நடந்தது…சரியாகச் சொன்னால் இரண்டாயிரத்திப் பதிமூன்று நவம்பர் எட்டாம்தேதி. நான் பைக்கிலேயே ஹைதராபாதிலிருந்து போபால் போய்க்கொண்டிருந்தேன். நாக்பூர் வழியாக. நாக்பூருக்குள் நுழையவில்லை. நெடுஞ்சாலையிலேயே ஒரு மோட்டலில் தங்கினேன். அப்போது ரிலையன்ஸ் பெட்ரோல்பங்குகள் தொடங்கிக்கொண்டிருந்த காலம். பல பெட்ரோல் பங்குகளை நவீன மோட்டல் போல கட்டினார்கள். கீழே உணவகம், மேலே அறைகள். வசதியான ஏஸி அறைகள் உண்டு. கீழே லாரிகளை நிறுத்துவதற்கு இடம். வாடகைக்கு டோர்மெட்ரி உண்டு. கயிற்றுக் கட்டில்களை திறந்தவெளியில் போட்டு படுத்துக்கொள்வதாக இருந்தால் வாடகை கிடையாது. முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் இருந்ததனால் அன்றெல்லாம் காரில் போகும் குடும்பங்கள் கூட அங்கே அறைகளில் தங்கிவிட்டுச் செல்வது வழக்கமாக இருந்தது”

”ஆமாம், நாங்கள் நீலப்புள்ளிகள் என்று சொல்வோம். நீலநிறமாக இருக்கும் அதெல்லாம். மிக வசதியான இடங்கள். ஆனால் ரிலையன்ஸ் பெட்ரோலிய விற்பனை நஷ்டம் என்று அப்படியே அந்தத் திட்டத்தை கைவிட்டு விட்டார்கள். பெரும்பாலான பெட்ரோல் பங்குகள் அப்படியே பாழடைந்து கபர்ஸ்தான் போலக் கிடக்கின்றன”என்றார் அப்துல்.

நீலம் அல்ல, இண்டிகோ நிறம் என்று தருண் சொன்னான். நாக்பூருக்கு வெளியே தேசிய நெடுஞ்சாலையில் அப்படி ஒரு நல்ல மோட்டல். நான் அங்கே போகும்போது ஏழுமணி இருக்கும். முழுநாளும் வெயிலில் வந்ததனால் களைத்துவிட்டேன். நான் இரவில் பொதுவாக பைக் பயணம் செய்வதில்லை. ஆகவே அந்த மோட்டலைக் கண்டதுமே நிறுத்திவிட்டேன். அங்கே பைக் பாதுகாப்பாக இருக்கும். ஏஸி இல்லாத சிறிய அறை இருநூறு ரூபாய்தான் வாடகை. ஓர் அறையை வாடகைக்கு எடுத்துக்கொண்டேன். கீழே டோர்மெட்ரியும் கட்டில்களும் இருக்குமிடத்தில் மட்டும்தான் சந்தடி இருந்தது. அறையில் குளிக்க முடிந்தது. கீழே போய் சப்பாத்தியும் டாலும் சாப்பிட்டுவிட்டு மேலே வந்து படுத்துக்கொண்டேன்.

அப்போதுதான் ரிலையன்ஸ் பெட்ரோல் பங்குகள் வந்திருந்தன. ஆகவே அவர்களின் மோட்டல்கள் அந்த அளவுக்கு மக்களுக்குப் பழகவில்லை. அவ்வளவு வசதிகள் இருந்தாலும்கூட லாரிகள் கொஞ்சமாகத்தான் வந்தன. லாரிக்காரர்கள் பழகிப்போன இடங்களை விட்டு வரவிரும்பவில்லை. பாதுகாப்பு பற்றி சந்தேகமும் அவர்களுக்கு இருந்தது. அதோடு வழக்கமான இடங்களில் கள்ளச்சாராயம், விபச்சாரிகள் என பல கவர்ச்சிகள் அவர்களுக்கு இருந்தன. மோட்டல் முன் இரண்டு கார்கள் நின்றன… ஆனால் மேலே பெரும்பாலும் அறைகள் காலியாகத்தான் இருந்தன.

நான் தூங்கிவிட்டேன். இரவில் மேலும் கார்கள் வந்து யாரோ ஏஸி அறைகளில் தங்குவது அரைகுறை உணர்வில் தெரிந்தது. சட்டென்று மின்சாரம் போய்விட்டது. அப்போதெல்லாம் வடக்கே மின்சாரம் அடிக்கடி போகும். கீழே மோட்டாரைப் போட்டார்கள். ஆனால் கீழே அவசியமான விளக்குகள் மட்டும்தான் எரிந்தன.மேலே அறைகளில் வெளிச்சமில்லை. என் அறையில் நல்ல இருட்டு. என் அறை கடைசியில் இருந்தது. பின்பக்கம் கடலைச் செடி விரிந்த வயல்வெளிதான். அது அமாவாசையை ஒட்டிய நாள். ஆகவே வெளியே நல்ல இருட்டு. வெளிவிளக்குகளின் வெளிச்சமும் எட்டவில்லை

நல்ல புழுக்கம். நான் கதவையும் ஜன்னலையும் திறந்து வைத்தேன். கையால் துழாவி தண்ணீர் எடுத்து குடித்துவிட்டு மீண்டும் தூங்கிவிட்டேன். எவ்வளவு நேரம் தூங்கினேன் என்று தெரியாது. அரைத்தூக்கத்தில் திளைத்துக்கொண்டிருந்தபோது என் அருகே ஒரு பெண் படுத்திருப்பதை உணர்ந்தேன். திடுக்கிட்டு எழுவதற்குள் அவள் என்மேல் தன் உடலை வைத்து கைகளாலும் கால்களாலும் அழுத்திப்பிடித்து என் வாயை தன் வாயால் கவ்விக்கொண்டாள்.

நான் நன்றாக விழித்துக்கொண்டு திமிறினேன். அவள் நல்ல வலுவான பெண். என்னைவிட கொஞ்சம் பெரியவள். குண்டுப்பெண் அல்ல, ஆனால் நல்ல ஓங்குதாங்கானவள். அவளை என்னால் பார்க்க முடியவில்லை. நல்ல இருட்டு. அவள் ஏற்கனவே ஜன்னல்களையும் கதவுகளையும் நன்றாக மூடியிருந்தாள். அவளுடைய உடலின் ஒரு நிழல்தோற்றம் தெரிந்தது. அதுகூட தெளிவாக இல்லை. ஒரு கண்மயக்கமாகக்கூட இருக்கலாம்.

பெண்ணின் மணம், பெண்ணின் தொடுகை. அதைவிட பெண்ணின் நோக்கம். என் உடல் உயிர்கொண்டது.

அதை உணர்ந்த பின் அவள் என் வாயை கையால் பொத்திக்கொண்டு என் காதில் சொன்னாள். “நான் உன்னை பார்க்கவில்லை. இருட்டிலேயே வந்தேன். ஓநாய் போல மோப்பம் பிடித்துத்தான் வந்தேன். நான் உன்னை பார்க்க மாட்டேன். என்னை நீயும் பார்க்கக் கூடாது. இது மட்டும்தான். இதற்காக மட்டும்தான் வந்தேன். சத்தம்போடக்கூடாது, சரியா?”

ஆழமான இனிய குரல். மிகப்பெரிய ஒரு இசைக்கருவியை மிகத்தாழ்ந்த சுருதியில் வாசிப்பதுபோல அப்படி ஒரு விசித்திரமான இனிமை அது.

நான் தலையசைத்தபின் அவள் கையை எடுத்தாள். “முதலாவதா?”என்றாள்.

“ஆமாம்”என்றேன்.

”உன் நிழலுருவத்தைப் பார்த்தேன். நீ மிகவும் இளைஞன் என்று தெரிந்தது”

”நீ யார்?” என்றேன்.

”அதை நீ கேட்கக்கூடாது.நானும் கேட்கமாட்டேன். நாம் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவே கூடாது. ஒருவரை ஒருவர் விசாரிக்கவோ தெரிந்துகொள்ளவோ கூடாது…சரியா?”.

”சரி” என்றேன்.

‘சத்தியம் செய்து கொடு”

“சத்தியம்” என்று அவள் கையை தொட்டு அழுத்தினென்.

அந்நேரமெல்லாம் அவள் என்னை முத்தமிட்டுக்கொண்டும் தழுவிக்கொண்டும் இருந்தாள். என்னை முழுக்கவே அவளுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தாள். உன்னை கொல்லட்டுமா என்று கேட்டால் கொல் என்று சொல்லியிருப்பேன்

தருணை இடைமறித்து நான் கேட்டேன் “அதெப்படி? அதெப்படி ஒரு பெண்… யாரென்றே தெரியாத ஒரு பெண்… பார்க்கக்கூட இல்லை”

அப்துல் “அது அப்படித்தான்… நீ சொல் தம்பி” என்றார்.

“இவர் நம்பவில்லை”என்றான் தருண்.

“நான் நம்புகிறேன், நீ சொல்”என்றார் அப்துல்.

“அவள் நோயாளியாக இருக்கலாம். குரூபியாக இருக்கலாம்”என்றேன்

“நீ வாயைமூடு” என்றார் அப்துல் “சொல் தம்பி, பிறகு?”

தருண் சொன்னான். அவள் முழுக்க முழுக்க என்னை அவளுடைய உடலின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாள். என் மனதையும் அவள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாள். அவள் உடலை அப்படி தெளிவாக உணர்ந்ததனால்தான் அவள் மோகினிப்பேய் அல்ல, பெண்தான் என்று நான் நம்புகிறேன்.

அவளிடம் “உன்னுடன் வந்தவர் யார்?”என்றேன்

“என் கணவன்… குடிகாரன். அவனால் வண்டி ஓட்ட முடியவில்லை. போதை தள்ளியது. அங்கே தூங்கிக்கொண்டிருக்கிறான்”

ஒரு கட்டத்தில் அவளிடமிருந்த வெறியை  முழுமையாகவே எனக்கு கடத்திவிட்டாள். அது எனக்கு முதல் அனுபவம். ஆனால் நெடுங்காலமாக தெரிந்ததுபோல இருந்தது. மூர்க்கமான தீவிரமான முழுமையான அனுபவம்.

என் அருகே அவள் மூச்சுவாங்கியபடி படுத்திருந்தாள். நான் அவள் மார்புகளை வருடியபடி “நீ ஏன் இதைச் செய்கிறாய்?”என்று கேட்டேன்.

“கேள்விகள் ஏதும் கேட்கக்கூடாது…. நாம் இனிமே சந்திக்கவே போவதில்லை. முகத்தைக்கூட பார்க்கப் போவதில்லை” என்றாள்.

”சரி”என்றேன்.

“இது ஒரு கனவு, இந்த கனவை ஞாபகம் வைத்திருப்ப்போம்”

“ம்”என்றேன். பிறகு “ஏன் இப்படி?”என்றேன்.

“உன்னால் கேள்விகள் கேட்காமல் இருக்க முடியவில்லை… எந்தக் கேள்வியும் கேட்காதே. இது கனவு. கனவுக்கு எந்த தர்க்கமும் கேள்வியும் இல்லை. கனவில் நடந்ததற்கு யாரிடமும் நாம் கணக்கு சொல்லவேண்டியதில்லை. கனவுக்கு பழி பாவம் ஒன்றும் இல்லை”

“ஆமாம்”என்றேன்.

“கனவு அல்ல என்றால்தான் இது பாவம்… கனவு என்றால் பாவமே இல்லை”

“ஆமாம்” என்றேன்.

அவள் எழுந்து தவழ்ந்து சென்று ஆடைகளை போட்டுக்கொண்டாள். அவளுடைய அசைவின் ஓசைகள் கேட்டன. உடைகளின் சரசரப்பு. உடலின் உறுப்புகள் உரசிக்கொள்வதும் ஓசையிடும் என்று அப்போதுதான் கேட்டேன். மிகமென்மையான, ரகசியமான ஓசை அது.

அவள் உடைகளை அணிந்துவிட்டு “நான் கதவை திறந்து வெளியே செல்வேன். நீ கதவை மூடிக்கொள்ளவேண்டும். கண்களை மூடி படுத்திருக்கவேண்டும். விடியும் வரை கதவை திறக்கக்கூடாது. என் அறை எது என்றோ என் கார் எண் எது என்றோ விசாரிக்கக்கூடாது”என்றாள்.

“இல்லை”என்றேன்.

”இது நீ செய்த சத்தியம், சரியா?” என்றாள்.

”ஆமாம்” என்றேன்.

அவள் பெருமூச்சுவிட்டாள். “உன் ஒரு கேள்விக்கு பதில் சொல்கிறேன். ஒருவர் பிறவி எடுத்துவிட்டால் ஒருமுறை, ஒரு கனவிலாவது, மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் இல்லையா?”

நான் ஒன்றும் சொல்லவில்லை. அவள் வெளியே போனாள். கதவு திறந்து மூடும் ஓசை மிக மெலிதாகக் கேட்டது. காலடியோசை அதைவிட மெலிதாகக் கேட்டது.அவள் வந்ததும் நிகழ்ந்ததும் வெறும் கனவுதானா என்ற நிலை ஒருசில கணங்களுக்குள் உருவாகிவிட்டது,

நான் எதையுமே நினைக்கவில்லை. என் மனம் வெறுமையாக இருந்தது. நான் அந்த அனுபவத்திலிருந்து வெளியே வரவே இல்லை. அது உண்மையாகவே கனவா என்று என் மனம் மயங்கியது. என் உடலிலும் பெரும் களைப்பு. அப்படியே தூங்கிவிட்டேன்.  அரைமணி நேரம் தூங்கியிருக்கலாம். பிறகு மெல்லிய விழிப்பு. சட்டென்று உள்ளம் திடுக்கிட்டது. நெஞ்சில் ஓர் உதை விழுந்ததுபோலிருந்தது. இதயம் படபடவென்று துடிக்க ஆரம்பித்தது.

ஓடிப்போய் கதவைத்திறந்து அவள் போன அறையை அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது. ஆனால் என்னால் அசையமுடியவில்லை. என் உள்ளம் எந்த அளவுக்கு வேகம் கொண்டிருந்ததோ அந்த அளவுக்கு என் கைகால்கள் செத்தவை போல கிடந்தன. எதற்குக் கட்டுப்பட்டு அப்படிக் கிடந்தேன் என்று தெரியவில்லை.

பிறகு யோசித்தபோது தோன்றியது, அந்த அனுபவம் கொஞ்சம்கூட எதிர்பாராதது, கற்பனைகூட செய்யாதது.நாம் எல்லா அனுபவங்களையும் கொஞ்சம் கொஞ்சம் முன்னரே கற்பனைசெய்திருப்போம். அதனால்தான் அவை நிகழும்போது இயல்பாக எதிர்வினையாற்றுகிறோம். வாழ்க்கை ஒன்றுதான், ஆனால் அதன் ஆயிரக்கணக்கான சாத்தியங்களை நமது பகற்கனவில் கண்டிருப்போம். மனிதன் வாழ்வதே பகற்கனவில்தான். வாழ்க்கையின் ஒரு சிறுபகுதிதான் வெளியே வாழும்வாழ்க்கை.

ஆனால் என் பகற்கனவில்கூட நான் எண்ணாத ஒன்று அங்கே நிகழ்ந்தது. ஆகவே என் சிந்தனையும் உள்ளமும் அப்படியே உறைந்துபோய்விட்டன. ஆனால் எண்ணம் என்று சொல்லமுடியாத உதிரிச்சொற்கள் பெருகித் தாவிக் கொப்பளித்தன. அந்த விசை உள்ளத்தை களைப்படையச் செய்தது.சொன்னால் நம்ப மாட்டீர்கள், நான் அப்படியே மீண்டும் தூங்கிவிட்டேன்.

அப்துல் “அது அப்படித்தான், மனம் கொள்ளாமல் ஏதாவது வந்தால் உடனே நல்ல தூக்கம் வரும்”என்றார்.

தருண் “ஏன் என்றே தெரியவில்லை” என்றான். மீண்டும் சொல்ல ஆரம்பித்தான்.

நான் அப்படியே தூங்கி விழித்தபோது அறைக்குள் வெயில் வெள்ளையாக கோடு மாதிரி கிடந்தது. கழற்றி கொடியில் போட்டிருந்த என் ஜீன்ஸிலிருந்த பெல்டின் கொக்கி மின்னிக்கொண்டிருந்தது.

எழுந்து அமர்ந்து கொஞ்சநேரம் கழித்துத்தான் என்ன நடந்தது என்பது என் தலைக்குள் விடிந்தது. உடனே திடுக்கிட்டு எழுந்து நின்றேன். என்ன ஏது என்று புரியவில்லை. என் நெஞ்சு படபடத்தது. கைகால்கள் உதறிக்கொண்டன.

ஜீன்ஸை அணிந்து சட்டையைப்போட்டுக்கொண்டு பையை எடுத்துக்கொண்டு நேராக கீழே வந்து பைக்கை எடுத்துக்கொண்டு நூறு கிலோமீட்டர் வேகத்தில் ஓட்டினேன். எழுபது கிலோமீட்டர் கடந்தபிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாக நிதானமானேன்.வண்டியை ஒரு தாபாவில் நிறுத்தி சாப்பிட்டேன். என் தன்னினைவு திரும்பியது. ஒவ்வொன்றாக யோசித்தேன். அதை யாரிடமும் சொன்னால் நம்ப மாட்டார்கள். ஒரு அசட்டுத்தனமான பகல்கனவு போல இருந்தது.

உண்மையில் எனக்கே அது நடந்ததா என்று சந்தேகம் ஒருகணம் வந்தது. ஆனால் அவள் உடலின் தொடுகை, மூச்சின் வாசனை, குரலின் கிசுகிசுப்பு, அப்போது உதடுகள் என் செவிகளை தொட்டுத்தொட்டுச் சென்றது, மூச்சுக்காற்றில் என் பிடரி மயிர் அசைந்தது எல்லாமே ஞாபகமிருந்தது. அப்போது, அரைக்கணம் முன் நடந்ததுபோல.

ஏன் ஓடிவந்தேன் என்று என்னையே சலித்துக்கொண்டேன்.திரும்பி அங்கே போனால் என்ன? பலமுறை மனதால் திரும்ப எழுபது கிலோமீட்டர் ஓட்டிச்சென்று அவளைப் பார்த்தேன். ஆனால் என்னால் அதைச் செய்ய முடியும் என்று தோன்றவில்லை. மேலும் அவள் அங்கே இல்லை என்று நன்றாக தெரிந்திருந்தது. காலையில் மோட்டலின் பார்க்கிங் பகுதியில் எந்தக் காரும் இல்லை.

நான் எனக்குள் பேசிப்பேசி என்னை நிதானமாக ஆக்கிக்கொண்டேன். சரி, இது ஓர் அரிய நிகழ்வு. ஒரு அந்தரங்கமான கனவு. இதை எனக்குள்ளேயே வைத்துக்கொள்ளலாம். இது எனக்கு ஒரு திருட்டுப்பொருள் கிடைத்ததுபோல. திருட்டு அல்ல. ஏனென்றால் கனவுக்கு பழியும் பாவமும் இல்லை.

அன்று போபால் செல்லும்போது என் மனம் இனித்துக்கொண்டிருந்தது. நான் உரக்க பாடிக்கொண்டே பைக்கை ஓட்டினேன். வெறிகொண்டவன்போலச் சிரித்துக்கொண்டே இருந்தேன்.

பத்துப்பதினைந்துநாள் நான் இருந்த நிலை இன்று நினைத்தாலும் ஏக்கமாக இருக்கிறது. நான் குடிப்பதில்லை, ஆனால் அப்போது குடித்தேன். வேலையை முடித்துவிட்டு வெறுமே பைக்கில் நெடுஞ்சாலையில் ஓட்டினேன். என்னால் வேகத்தை குறைக்கமுடியவில்லை. நூறு நூற்றியிருபது நூற்றி ஐம்பது என்று ஓட்டினேன். தன்னந்தனியாக நின்று கைகளை விரித்து கூச்சலிட்டேன். எவரிடமோ என்னென்னமோ சொன்னேன். சாலையோரமாகச் செல்லும் ஒருவர் அருகே வண்டியை நிறுத்தி எதையாவது சொல்வேன். கிறுக்குத்தனமாக. அவர் திகைக்கும்போது பைக்கை எடுத்துக்கொண்டு சென்றுவிடுவேன். என்னென்ன செய்தேன் என்றே நினைவில்லை. ஒருமுறை ஒரு சிறிய பாலத்திலிருந்து கீழே குதித்தேன். முழங்காலில் நல்ல அடி.

பிறகு மெல்ல பித்து தணிந்தது. ஏக்கம் வந்து நிறைய ஆரம்பித்தது. எதற்கான ஏக்கம், என்ன வேண்டும் என்றெல்லாம் தெரியவில்லை. மிகமிக அரிய ஒன்றை இழந்து விட்டது போலிருந்தது. திரும்ப வரவே வராது என்ற நினைப்பே பதைபதைக்கச் செய்தது. தனியாக அமர்ந்து அழவேண்டும் என்று தோன்றியது.ஆனால் அழவும் முடியாது. மனம் அவ்வளவு கனமாக இருக்கும். தொண்டையில் அழுகை கரகரக்கும். ஆனால் அழுகை வராது.

எனக்கு என்ன ஆயிற்று என்று நானே தர்க்கபூர்வமாக அலசிக்கொண்டேன். ஒன்றுமில்லை, ஓர் அரிய அனுபவம். அதை அப்படியே கடந்துவிடவேண்டியதுதான். இந்த ஏக்கத்திற்கு இடமே இல்லை. வாழ்க்கையில் எவ்வளவோ அனுபவங்கள் இப்படித்தான், திரும்ப நிகழ்வதே இல்லை. உண்மையில் வாழ்க்கையில் எல்லா அனுபவங்களும் இப்படித்தான்.

ஆனால் இந்த தர்க்கமெல்லாம் ஒருபக்கம் ஓடிக்கொண்டிருக்கும், மறுபக்கம் மனம் கனத்து கல்போல இருக்கும். அந்த அனுபவத்தை என்னால் எந்த வகையிலும் கடந்துசெல்ல முடியவில்லை. நாள் செல்லச்செல்ல எல்லா அனுபவங்களும் சிறியதாகி பின்னகர்ந்து விடுகின்றன. அனுபவங்கள்மேல் அனுபவங்கள் வந்து விழுந்துகொண்டே இருக்கின்றன. ஆனால் இந்த அனுபவம் பெருகியபடியே இருந்தது. இதனருகே வேறெந்த அனுபவமும் நிலைகொள்ள முடியவில்லை.

அடுத்த மூன்றுமாதம் நான் தவித்து அலைந்தேன். அந்த மூன்றுமாதங்களில் மட்டும் இருபது முப்பது முறை நான் அந்த மோட்டலுக்குச் சென்றிருப்பேன். வெவ்வேறு நேரங்களில் சென்றேன். எதிர்பாராமல் சென்றால் அவள் அங்கே இருப்பாள் என்பதுபோல. அந்த அறையில் தங்கினால் ஓர் இரவில் அவள் முன்புபோல வந்து தழுவுவாள் என்று நினைத்துக்கொண்டேன். எனக்கே நன்றாகத் தெரிந்திருந்தது, மறுபடி அவளைச் சந்திக்கவே முடியாது என்று. அந்த அனுபவம் அப்படியே காலத்தில் பின்னால் சென்றுவிட்டது என்று.

மூன்றுமாதங்களில் தாடிவளர்ந்து, தலைமுடி வளர்ந்து, உடைகள் தொளதொளவென்றாகி, எங்கு பார்த்தாலும் எவரும் கிறுக்கன் என்று சொல்லும்படி ஆகிவிட்டேன். அம்மா ஓங்கோலில் இருந்தாள். அவளுக்கு ஒன்றும் தெரியாது. நான் என் வேலையை விட்டுவிட்டேன். சேமிப்பைக் கொண்டு கொஞ்சநாள் வாழ்ந்தேன். ஒரு கட்டத்தில் தங்கியிருந்த இடத்தை காலிசெய்துவிட்டேன். பைக்கில் ஒரு பையில் என் உடைமைகள் எல்லாம் இருந்தன. அதன்பிறகு நான் நெடுஞ்சாலைகளிலேயே வாழ ஆரம்பித்தேன்.

நெடுஞ்சாலைக்கு அப்படி ஒரு ஈர்ப்பு இருக்கிறது. அது மனிதனை பைத்தியமாக ஆக்கிவிடும். என்னைப்போல முழுக்க முழுக்க நெடுஞ்சாலையிலேயே வாழும் பலநூறு

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 16, 2021 11:35

இமையம்- சாகித்ய அக்காதமி- கடிதம், பதில்

இமையத்திற்குச் சாகித்ய அக்காதமி

அன்புள்ள ஜெ

இமையம் அவர்களுக்கு சாகித்ய அக்காதமி விருது அளிக்கப்பட்ட செய்தி மகிழ்வை அளிக்கிறது. அவருடைய கதைகளை தொடர்ந்து வாசிப்பவன் நான். 1997ல் என நினைக்கிறேன், காலச்சுவடு இதழில் சுந்தர ராமசாமி அவருடைய கோவேறு கழுதைகள் என்னும் நாவல் பற்றி நீண்ட கட்டுரை ஒன்று எழுதியிருந்தார். அந்நாவலை கிட்டத்தட்ட தலைமேல் வைத்துக் கொண்டாடி எழுதப்பட்ட கட்டுரை அது. அதற்கு அவரே ஒரு பாராட்டுக்கூட்டமும் மதுரையில் ஏற்பாடு செய்திருந்தார்.

அன்று அது உங்கள் எழுத்துக்களுக்கு எதிரான கட்டுரை என்று ஒரு கிசுகிசு சிற்றிதழ்ச்சூழலில் இருந்தது. அப்படி நான் நினைக்கவில்லை. ஆனால் சுந்தர ராமசாமிக்கு அன்று நீங்கள் கோணங்கி முதலியோர் உருவாக்கிக்கொண்டிருந்த ஃபாண்டஸி எழுத்துக்கள் மேல் கடுமையான ஒவ்வாமை இருந்தது. இமையத்தின் நாச்சுரலிச எழுத்து வந்ததும் அதை அழுத்தமாக முன்வைத்து உங்களை மறுத்தார் என்றுதான் நினைக்கிறேன்.

அக்கட்டுரை வழியாக இமையத்தின் கோவேறுகழுதைகள் புகழ்பெற்றது. அத்துடன் அந்நாவலை க்ரியா பதிப்பகம் மிக நேர்த்தியாக வெளியிட்டிருந்தது. தமிழ் நூல்களை பொதுவாக கண்டுகொள்ளாத தி ஹிந்து போன்ற நாளிதழ்களின் இலக்கியப் பக்கங்கள் அந்நாவலின் பிரசுரகர்த்தர் க்ரியா ஆனதனால் விரிவான மதிப்புரைகள் வெளியிட்டன. அந்நாவலை ஆங்கிலம் வழியாக உலகவாசிப்புக்கு கொண்டுசெல்லவும் க்ரியா பெரிய முயற்சி எடுத்துக்கொண்டது.

க்ரியா அந்நாவலை ஒரு பதிப்பகமாக நின்று மட்டும் முன்வைக்கவில்லை. க்ரியா ராமகிருஷ்ணனுக்கும் அவர் நண்பர் மதுரை சிவராமனுக்கும் புதியவகை எழுத்துக்கள் மேல் ஒவ்வாமை இருந்தது. குறிப்பாக அன்றைக்கு தலித் இலக்கியம் பற்றிய பேச்சுக்கள் எழுந்தன. நிறப்பிரிகை என்ற சிற்றிதழைச் சார்ந்து அந்த கருத்துக்கள் குவியம் கொண்டிருந்தன.

நிறப்பிரிகைக் குழுவினர் தலித் எழுத்து என்பது யதார்த்தவாதத்தை மறுக்கவேண்டும் என்றும், ஃபாண்டஸி போன்ற வடிவங்களை எழுதவேண்டும் என்றும், நான்லீனியர் எழுத்தும் கலக எழுத்தும்தான் தலித் எழுத்தாக இருக்கமுடியும் என்றும் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.அவற்றை முதன்மையாகச் சொல்லிக்கொண்டிருந்தவர் க்ரியா ராமகிருஷ்ணனின் நண்பரான ராஜ் கௌதமன்.

ஆகவே க்ரியா குழு இமையம் எழுத்துக்களை ஒரு ’ரியல் லிட்டரேச்சர்’ என்றவகையில் கடுமையாக பிரமோட் செய்தது. அதேபோன்ற வேறு கதைகளையும் வெளியிட்டனர். ஆனால் அவர்கள் வெளியிட்ட ’புகழ்’ போன்ற எழுத்தாளர்கள் கவனம் பெற முடியவில்லை. ஏனென்றால் சுந்தர ராமசாமி புகழ் எழுதியதை கண்டுகொள்ளவில்லை. சுந்தர ராமசாமியால்தான் இமையம் பெரும் கவனம் பெற்றார். சுந்தர ராமசாமி எல்லா மேடைகளிலும் இமையம் பற்றிச் சொல்லியிருக்கிறார்.

க்ரியா – சுந்தர ராமசாமி குழு நினைத்ததுபோலவே இமையம்தான் அன்றைக்கு உருவாகி வந்த தலித் எழுத்துக்களின் முன்னோடியாக இருந்தார். அவரைப்போலத்தான் சொ.தர்மன் போன்றவர்களும் தொடர்ச்சியாக எழுதினர். தலித் இலக்கியம் யதார்த்தவாத இலக்கியமாகவே உருவாகியது. நிறப்பிரிகையின் கருத்துக்களை எவரும் பொருட்படுத்தவில்லை. க்ரியா, சுந்தர ராமசாமி ஆகியோர் தலித்என்ற வார்த்தையையே பயன்படுத்தவில்லை. அதைப்போலவே இமையம் உட்பட தலித் எழுத்தாளர்கள் தலித் அடையாளத்தையே விரும்பாதவர்களாகவும் ஆனார்கள். படைப்பிலக்கியத்தில் சுந்தர ராமசாமி – க்ரியா அடைந்த வெற்றி இது

இதற்குக் காரணம் இமையத்தின் அரசியல் அல்ல. அவருடைய ஒரிஜினாலிட்டிதான். அவருடைய படைப்புக்களிலுள்ள க்ரியேட்டிவிட்டிதான். அதை அடையாளம் காண க்ரியா – சுந்தர ராமசாமியால் முடிந்தது. அதை அவர்கள் முன்வைத்தனர். ஆகவே சிற்றிதழ்ச்சூழலில் அவர் ஏற்கப்பட்டார். வெற்றுக் கோட்பாடுகளை பேசிக்கொண்டிருந்த நிற்ப்பிரிகை அணிக்கு கலை இலக்கியம் என்பதெல்லாம் என்னவென்றே தெரியாது, க்ரியேட்டிவிட்டியை அடையாளம் காணவும் தெரியாது.

இமையம் அன்றெல்லாம் தன்னை திராவிட இயக்க எழுத்தாளர் என்று சொல்லிக்கொண்டதில்லை. அவர் எந்த அடையாளத்தையும் விரும்பவில்லை. அப்போதே அவர் தி.மு.கதான். கனிமொழிக்கும் காலச்சுவடுக்கும் முட்டிக்கொண்டபோதுதான் இமையம் திராவிட இயக்க அடையாளத்தை வெளிப்படையாகச் சூடிக்கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.இன்றைக்கு தன் இலக்கியத்துக்கு நன்றி சொல்பவர் க்ரியா, சுந்தர ராமசாமி பெயரையே சொல்வதில்லை.

இமையம் கோவேறு கழுதைகள் முதல் தொடர்ச்சியாக எழுதிவந்த நீண்ட கால்நூற்றாண்டில் எந்த திராவிட இயக்க இதழும் அவரை பொருட்படுத்தியதில்லை. எந்த திராவிட இயக்க மேடையிலும் பெரிதாக அவர் கௌரவிக்கப்பட்டதில்லை. மு.கருணாநிதி போன்றவர்களுக்கு அவர் பெயர் தெரிந்திருந்தாலே ஆச்சரியம்தான். அவர் க்ரியா – சுந்தர ராமசாமி அணியின் இலக்கிய அழகியலின் முகமாகவே வாசிக்கப்பட்டார்.

திராவிட இயக்க இலக்கியம் பற்றி இன்றைக்குப் பேசுபவர்கள் அன்றைக்குச் சுட்டிக்காட்டிய எழுத்தாளர்கள் எவரும் பொருட்படுத்தத் தக்கவர்கள் அல்ல. அவர்கள் எவரும் எந்த பாதிப்பையும் உருவாக்கவுமில்லை. அவர்கள் அனைவருமே ஒரு ஐந்தாண்டுகள் முன்புவரைக்கும்கூட இமையத்தை ‘கோடாலிக்காம்பு’ என்று திட்டிக்கொண்டிருந்தார்கள்.

இமையம் தலித் – திராவிட அறிவுஜீவிகளால் சுந்தர ராமசாமியின் கொம்பு என்றுதான் வசைபாடப்பட்டார். தமிழ்ச்சூழலில் நெடுங்காலம் பிராமணர் தரப்பினர் இங்கே  தலித் இலக்கியம் உருவாகாமல் தடுக்கும்பொருட்டு கையிலெடுத்த கருவி என்று இமையம் குற்றம்சாட்டப்பட்டார்.ஆனால் அவர் அதை பொருட்படுத்தவில்லை.

அன்றும் இன்றும் இமையம் அவருடைய கூர்மையான சமூகப்பார்வை, அழகியல் அணுகுமுறை ஆகியவற்றுக்காக சிற்றிதழ்த் தரப்பாலேயே கொண்டாடப்படுகிறார். எந்த அரசியல் தரப்பாலும் அவர் முன்வைக்கப்படவில்லை. நீங்களேகூட இருபத்தைந்தாண்டுகளாக அவரைப்பற்றி தொடர்ச்சியாக எழுதிவருகிறீர்கள்.

இனி ஒரு சாகித்ய அக்காதமி விருது ‘திராவிட இயக்க’ எழுத்தாளர் என்று சொல்லிக்கொள்பவர்களுக்குக் கிடைக்குமென்றால் அது மனுஷ்யபுத்திரன், சல்மா இருவருக்கும்தான். இருவருமே சுந்தர ராமசாமி முகாமிலிருந்து வந்தவர்கள். சுந்தர ராமசாமியே இதையெல்லாம் எதிர்பார்த்திருக்க மாட்டார்.

இமையத்தின் இலக்கியத்தின் அழகு என்பது அவருடைய அரசியலில் இல்லை. அவர் சமூகத்தைச் சித்தரிக்கிறார் என்பதுகூட மேலோட்டமானதுதான். அவர் மனிதர்களின் உணர்ச்சிகளை மிகையில்லாமல் உண்மையாக எழுதிக்காட்டுகிறார். கோவேறு கழுதைகளில் ஆரோக்கியத்தின் ஒப்பாரிபோன்ற தன்னிலைப் புலம்பல்களில்தான் அவருடைய உச்சகட்ட க்ரியேட்டிவிட்டி உள்ளது. ஆறுமுகம் நாவலில் ஆறுமுகத்தின் அம்மா தன் விதவைத் துயரை தனக்குத்தானே பேசியபடியே ஒரு நீண்ட பாதையில் செல்லும் இடத்தில்தான் அவர் பெரிய கலைஞர் என்று தெரிகிறது.

இமையம் தன்னை திராவிட எழுத்தாளர் என்று இன்று சொல்லிக்கொள்கிறார். அது அவருடைய அரசியல். ஆனால் அந்தவகையான ஒரு மொட்டை அரசியல் வாசிப்பு உருவானால் அவருடைய படைப்புக்கள் இலக்கியவாசிப்பை இழந்துவிடும். அவர் மனிதமனதைச் சொல்லத்தெரிந்த கலைஞர். அதைச் சொல்லவிரும்புகிறேன்.

ஆர். சங்கரநாராயணன்   

அன்புள்ள சங்கர நாராயணன்,

இமையம் எழுதவருவதற்கு முன்னரே அவருடைய அழகியல் தமிழில் நிலைபெற்றுவிட்டிருந்தது. பூமணி அதன் முன்னோடி. முள்முனையால் கீறப்படும் இயல்புவாதம் என அதைச் சொல்லலாம். பூமணியின் பிறகு, வெக்கை ஆகிய நாவல்களும் ரீதி என்னும் தொகுதியும் அன்று சிற்றிதழ்ச்சூழலில் மிகப்புகழ்பெற்றவை. க்ரியா தொடங்கியதுமே பூமணியின் ரீதி என்னும் கதைத் தொகுதியை வெளியிட்டது. பிறகு, வெக்கை ஆகிய நாவல்களை மிகப்பெரிய அளவில் வரவேற்று முன்வைத்தவர் சுந்தர ராமசாமி மற்றும் வெங்கட் சாமிநாதன்.

சுந்தர ராமசாமி- வெங்கட் சாமிநாதன் கொண்டிருந்த யதார்த்தவாத – இயல்புவாத அழகியல் பார்வையில் சரியாகப் பொருந்துபவர் என்பதனால்தான் இமையம் அவர்களால் முன்வைக்கப்பட்டார். அவர்கள் காத்திருந்த அடுத்த தலைமுறைக் கலைப்படைப்பாளி அவர். அவர்கள் அன்றிருந்த எந்த குழுவுக்கும் எதிராக அவரை முன்வைக்கவில்லை. அவர்கள் பூமணியை கொண்டாட ஆரம்பித்தது அதற்கும் இருபதாண்டுகளுக்கு முன்பு. ஆகவே அவர்களுடையது ஓர் அரசியல்நோக்கம் கொண்ட இலக்கியச் செயல்பாடு என நான் நினைக்கவில்லை. அவர்களின் கலைக்கோட்பாடு அது.இமையம் அதன் முகம்.

ஆனால் சுந்தர ராமசாமிக்கும் ஒரு தலைமுறை முன்னதாகவே தமிழ்  இலக்கியச் சூழலில் யதார்த்தவாதம்- இயல்புவாதம் ஆகியவற்றுக்கான குரல் வலுவாக எழுந்துவிட்டிருந்தது.க.நா.சு. அக்குரலை தொடர்ச்சியாக முன்வைத்துக்கொண்டே இருந்தார். இயல்புவாதத்தில் பூமணிக்கும் முன்னோடி என தமிழில் எவரைச் சொல்லமுடியும்? ஐயமில்லாமல் ஆர்.ஷண்முகசுந்தரத்தைத்தான். தமிழின் முதன்மைப் படைப்பாளிகளில் ஒருவராக ஆர்.ஷண்முகசுந்தரத்தை க.நா.சு சொல்லிக்கொண்டே இருந்தார். ஆர்.ஷண்முகசுந்தரத்தின் நாகம்மாள், சட்டி சுட்டது ஆகிய இரு படைப்புக்களையும் முன்னுதாரணங்களாக முன்வைத்தார்.இன்று நாம் ஆர்.ஷண்முகசுந்தரம்- பூமணி – இமையம் என ஒரு கோட்ட்டை இழுத்துவிடமுடியும்.

என் தலைமுறையில் நாங்கள் யதார்த்தவாத அழகியலைக் கடக்க முயன்றபோது க.நா.சு முதல் அறுபது ஆண்டுகளாக தொடர்ச்சியாக முன்வைத்து நிறுவப்பட்ட ஓர் இலக்கிய இயக்கத்தையே மறுத்தோம். அதற்காக விரிவாக எழுதினோம். ஆனால் அரசியல்நோக்குடன் செயற்கையாக முன்வைக்கப்பட்ட ‘கலக’ எழுத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவரவருக்கான தேடல்கள் இருந்தன.

எங்கள் எழுத்துவகைக்கு நேர் மாறானவர் இமையம். அவர் க்ரியா- சுந்தர ராமசாமியால் வலுவாக முன்வைக்கப்பட்டபோது நாங்கள் அவரை நிராகரிக்கவில்லை. இமையம், சொ.தருமன் போன்றவர்களின் இயல்புவாத அழகியலை அங்கீகரித்து, அவர்களின் கலைச்சாதனைகளை தொடர்ச்சியாக அடையாளம் காட்டி வாழ்த்தி, கூடவே அது எங்கள் வழி அல்ல என்று தெளிவுறுத்திக்கொண்டும் இருந்தோம்.

இமையம் மீது மேலும் கூர்வாசிப்பு அடுத்த தலைமுறை வாசகர்களில் உருவாக வாழ்த்துகிறேன்.

ஜெ

இமையத்தின் செல்லாத பணம்- உஷாதீபன் வல்லினம் இமையம் சிறப்பிதழ் எட்டு நாவல்கள் இமையத்தின் ‘பெத்தவன்’ – உஷாதீபன் இமையத்திற்கு இயல் விருது – 2018 க்ரியாவின் மொழிக்கொள்கை,இலக்கண ஆதிக்கம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 16, 2021 11:34

இழை, மலை பூத்தபோது- கடிதங்கள்

இழை [சிறுகதை]

இழை மிக அற்புதமாக வந்திருக்க வேண்டிய கதை. ஆனால் கதையின் தலைப்பும் படமும் கதையின் முடிவை முன்கூட்டியே தெரிவித்து வாசிப்பின்பத்தை சிதைத்து விட்டது .

ரமேஷ்

அன்புள்ள ரமேஷ்

இழை கதையின் கட்டமைப்பு துப்பறியும் பாணியிலானது. ஆனால் அது மர்மத்தை கண்டுபிடிப்பதை இலக்காகக் கொண்ட கதை அல்ல. அந்த தலைமுடியைப் பற்றி கதைக்குள் ஒன்றுமே சொல்லாமல் கடைசியில் சொல்லியிருந்தால் மர்மம் நின்றிருக்கும் என்று தெரியாமல் அது எழுதப்படவுமில்லை. அந்த கதையின் நோக்கமே வெவ்வேறு இடங்களை ஓர் இழையால் இணைப்பதுதான். இழை என கவித்துவக் குறியீடொன்றை உருவாக்குவதுதான்

ஜெ

அன்புநிறை ஜெ,

இழை என்ற கதை ஒரு வழக்கமான குற்றப் புலனாய்வுக் கதையாக எனக்குப் படவில்லை. பெயரில் துவங்கி, இதன் ஓவியம், காரை கூந்தலில் இழுக்கும் வித்தை,

ராப்புன்ஸா நாடகம் என அனைத்து குறிப்புகளும்  கதையின் போக்கில் தொடக்கத்திலேயே ஆயுதம் கூந்தலாக இருக்கலாம் என்ற எண்ணத்துக்கு நகர்த்திச் சென்று விடுகிறது.  கொலையை கதைசொல்லி பார்க்கும் முதல் பார்வையிலேயே “கருஞ்சிவப்பான ஒரு தலைமுடி இழை ஒட்டியிருப்பதாகவே தோன்றியது” என்ற வரியிலேயே அது அடிமனதில் தோன்றிவிடுகிறது. அதன் பின்னர் அது ஏன் என்பதற்கான இழைகளை நெய்வதொன்றே பிற அனைத்து விவரங்களும். எனவே இது கொலையை நடத்தியது யார் என்ற மர்மத்தை நோக்கிய கதை மட்டுமாக எனக்குத் தோன்றவில்லை.

“நாடகம் போல ஒன்று நடக்கும். அது பார்வையாளர்களை ஈர்த்து அவர்கள் செய்யும் ஏற்பாடுகளை கவனிக்கமுடியாமல் ஆக்கிவிடும்.” என்ற சர்க்கஸ் குறித்த வரி போல இக்கதையின் அத்தனை மேலொழுக்குகளுக்கு அடியில் வேறொன்று  மீண்டும் சொல்லப்படுகிறது. கதையின் மைய இழை, அநீதி இழைப்பவர்கள் தங்கள் மரண இச்சை போல தாங்கள் அழிக்கப்படுவதற்கான ஏதுவையும் அவர்களே காட்டிக் கொடுக்கும் இயல்பை, அந்த ஜான் கதாபாத்திரமே அவளது முடியின் பலத்தை காட்டிக் கொடுத்து விடுவது ஒரு நல்ல உச்சமாகப் பட்டது.

உண்மையில் அவள் கூந்தலைப் பற்றி அவளையே ஏறச் செய்பவன் ஜான். முதலில் சமநிலை இழந்து தரையில் விழுந்து சமையல் பணியில் இருப்பவளை அவளது கூந்தலை முதலாக்கி முன் நகர்த்துகிறான். பின் அதில் மோகித்து அலைகிறான். அதனாலேயே அவளை முடியைக் கட்டி வைத்துத் துன்புறுத்தவும் செய்கிறான். கூந்தலின் வலு என்ன என்று அவள் கழுத்தை நெரிப்பதன் மூலம் அவளுக்கு உணர்த்தி மீண்டும் அவள் கூந்தல் வழியாகவே அவள் மீட்புக்கு வழியாகிறான். அவளது  துன்பத்தையும் மீட்சியையும் கூந்தல் இழை இணைக்கிறது.  கூந்தல் எனும் படிமம் வெகு தூரம் செல்லக்கூடியது.

இதே போன்ற சர்க்கஸ் பின்னணி கொண்ட வேட்டு கதையும் நினைவில் வந்தது. அதில் மகிஷனைத் துண்டமிடும் மகிஷாசுரமர்த்தினி. இதில் கூந்தல் விரித்த கேசினி என எண்ணிக்கொண்டேன்.

மிக்க அன்புடன்,

சுபா

Seamless tropical pattern with tigers and bunch of hibiscus flowers and leaves மலைபூத்தபோது [சிறுகதை]

அன்புள்ள ஜெ

இந்த வரிசைக் கதைகளில் கொஞ்சம்கூட இணையாத முற்றிலும் புதிய கதை மலை பூத்தபோது. மலையின் பூ என்பவை புலி சிறுத்தை என்பது அழகான கற்பனை. பழங்குடித்தன்மையின் பண்படாத அழகும், அதை மொழியில் அடர்த்தியாகச் சொல்லியிருக்கும் விதத்தில் ஒரு கிளாசிசமும் உள்ள கதை.

அந்த மலையன் ஊருக்குள் வரும் பயணத்தின் ஒவ்வொரு வர்ணனையிலும் உள்ள கவித்துவம். ஊரின் பொன் நெல். மலைப்பொன் புலி. புலியும் நெல்லும் எப்படி ஒன்றோடொன்று இணைந்துள்ளன என்று அறிய தெய்வங்களை அறியவேண்டும். ஆனால் இங்கே மக்களுக்கு தெய்வங்களை தெரியாது. அவர்கள் தங்கள் புறவாசல்களையும் மூடிவிட்டார்கள்.

மலை முனிந்தால் மானுடர் என்ன செய்வார் என்ற வரியை வாசித்ததும் ஆழமான ஒரு அகநெகிழ்வு ஏற்பட்டது

சுகுமார்

 

 

வணக்கத்திற்கும் பேரன்பிற்குமுரிய ஜெயமோகன்,

மரபுக் கவிதையை கடந்து புதுக்கவிதையை கடந்து புதியதோர் உரைநடைக் கவிதை யுகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். நாளை உரைநடைக் கவிதையின் முன்னோடிகளில் ஒருவராக நீங்கள் அறியப் படக்கூடும்.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக கவிதையால் கதை சொல்லிய மரபு நமது. ஒரு நூறு ஆண்டுகளாகத் தான் உரைநடையால் கதை சொல்லத் தொடங்கினோம். இன்று இப்புது யுகத்தில் கதையால் கவிதையை சொல்லத் துவங்கி இருக்கிறோம். நேற்றும் இன்றும் வந்த கதைகளில் கவிதையின் ஒளிக்கீற்று மின்னல் என தெரிக்கிறது. இந்தக் கதையின் தலைப்பு கூட மலை பூத்து மலர்ந்த போது என்று அதுவே ஒரு கவிதையாய்…

“மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்

காடும் உடையது அரண்” என்று வாழ்ந்த நாம் இன்று எல்லாவற்றையும் இழந்து சீரழிவின் பாதையில்….

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரைகூட

“இவையெல்லாம் இங்கே எப்போதுமிருக்கும். இப்படியே இருக்கும். இங்கே பிறந்து இறப்பவர்களும், வந்து செல்வனவும், முளைத்து மறைவனவும் கூட அந்த அழியாமையில் எஞ்சியிருக்கும்” என்ற நம்பிக்கையில்தான் வாழ்ந்து கொண்டிருந்தோம்.

இன்று இந்த அறிவியல் யுகத்தில் அழிவின் பாதையில் அதிவேகமாக கண்மூடி பயணித்துக் கொண்டிருக்கிறோம்

“மழையில் முளைத்த புதுப்பூசணியின் கொடி போல புதர்களையும் பாறைகளையும் ஊடுருவிச்சென்றுகொண்டிருக்கும் இந்த ஒற்றையடிப்பாதையில்” எங்கு சென்று கொண்டிருக்கிறோம் என்பதே தெரியாமல்நடந்துகொண்டிருக்கிறோம்.

எத்தனை நம்பிக்கையோடு இருந்தார்கள் நமது முன்னோர் “இந்தப் பாதை மிகமிக தொன்மையானது. இந்தப்பாதையில் நடக்கும் என் கால்களிலிருக்கும் வழியுணர்வும் மிகமிகத் தொன்மையானது” என்று. நாமோ எத்தனை விரைவாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு அந்தப் பாதைகளை வளர்ச்சியின் பெயரால் சிதைத்து விட்டு இன்று வழி தெரியாது முட்டி நிற்கிறோம்.

எத்தனை உயரப் பறந்தாலும் பறவையின் நிழல் மண்ணில் தான்.

“அவற்றின் நிழலும் அவையும் இரு சரிந்த கோடுகளாக வந்து சந்தித்துக்கொள்ள அவை இறங்குகின்றன. நிழல் விலகிச்செல்ல வானிலெழுகின்றன” விண்ணில் பறக்கலாம் உயர உயர போகலாம் ஆனாலும் என்ன வயிற்றுப் பசி தீர்க்க வந்து மண்ணில் இறங்கி தானே ஆக வேண்டும்.

“இலைப்புயல் போல வந்திறங்கும் கிளிக்கூட்டங்கள்” இன்னும் எத்தனை காலத்திற்கு காண வாய்க்குமோ நமக்கு. சிட்டுக் குருவிகளைப் போல அவற்றையும் இழந்துவிடுவோமோ என்ற பயமும் நிறைய இருக்கு.

“வயல்களுக்குமேல் கிளிக்கூட்டங்கள் காற்றில்பறக்கும் பச்சை சால்வை போல நெளிந்து அலைக்கழிந்தன” அன்று. இன்று கார்பன் டை ஆக்சைடும் கார்பன் மோனாக்சைடும் நமது வயல்களுக்கு மேல் கம்பளிப் போர்வையாய் அலை கழிகின்றன. அமில மழையால் அடிக்கடி கீழே இறங்கியும் வருகின்றன.

“அங்கே அவர்களின் கிணறுகளில் காட்டின் நீர்தான் ஊறுகிறது” என்று மலையனுக்கு புரிந்த இயற்கை சூத்திரம்

“விசும்பின் துளிவீழின் அல்லாற் மற்றாங்கே

பசும்புல் தலைகாண்பு அரிது”என்று பாடம் படித்த நாடனுக்கு புரியாமல் போனது விந்தைதான்.

விதையை வயலாக்கி வயலை விதையாக்கி சுழற்றிக்கொண்டே இருக்கிறார்கள். அதை மட்டும் செய்தாலாவது ஆசுவாசப் படலாம் ஆனால்  நஞ்சை யூரியாவாக்கி, யூரியாவை உணவாக்கி ஒட்டுமொத்த இயற்கையையும் விஷமாக்கி கொண்டிருக்கிறார்கள்.

பூத்தால்  மலை பொன்னென்றாகிறது. பூத்தால் மண்ணும் பொன்னே என்றாகிறது. மலை பூப்பதனாலேயே மண்ணும் பூக்கிறது. மலை பூக்க மறுத்தால் மண்ணும் பூக்க மறந்து போகும்.

“மலையாளும் தெய்வங்களே காத்தருள்க! மலைமேல் பூத்த பொன்னே காத்தருள்க! இங்கு மானுடருக்கு பசியாற்றும் இப்பொன்னை காத்தருள்க” என்று இறைஞ்சி நிற்பதைத் தவிரஇயன்றவரை அதற்காக முயன்று உழைப்பதை தவிர நாம் என்னதான் செய்துவிடமுடியும்.

“செயற்கை அறிந்த கடைத்தும் உலகத்து

இயற்கை அறிந்து செயல்” என்று சாதாரணன் முதல் உயர் அதிகாரி வரை எல்லோருக்கும் தெரிந்திருந்தும். மலையன்,

“இந்தவயல்களின் மேல் வண்டிகள் ஓடிய பெரிய சக்கரத்தடங்கள் சுழன்று சுழன்று தெரிகின்றன. சிறிய படிக்கட்டுகள் போல அவற்றில் வெட்டுமடிப்புகள் உள்ளன. அவை அறுத்து அள்ளிச்செல்லும் இயந்திர யானைகள். அவை நின்ற இடங்களிலெல்லாம் கசக்கப்பட்டு புழுதியென்றே ஆன கூளம் குவிந்திருக்கிறது” என்று வருந்தி சொன்னதைத் தானே தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம்

மலையனை மேலும் “வெறுங்கையுடன் வந்திருக்கிறேன் போனவர்களே, அங்கே தாழ்ந்த நிலம் ஒரு மணிநெல்லைக்கூட அளிக்கவில்லை” என்று கதர விட்டுக் கொண்டிருக்கிறோம். அவன் கதறிக் கதறிக் கடைசியில் தனக்கான மணி அரிசியை மலைமீது விளைவிக்க துவங்கினால் மண்ணில் மழை எப்படி பெய்யும். ஏற்கனவே தேயிலையும் காப்பியும் ரப்பரும் பாதி மழைக்காடுகளை மொட்டையடித்து விட்டது. இனியும் சுதாரித்துக் கொள்ள தயங்கினாள் மீதி மலைக் காடுகளும் அழிந்துபோகும்.

பொன்னென மலை முழுதும் பூத்துக் கிடக்கும் மலர்கள் தீயென மாறினால் என்னவாகும் நம் நிலைமை.

“நாடா கொன்றோ காடா கொன்றோ

அவலா கொன்றோ மிசையா கொன்றோ

எவ்வழி நல்லவர்: ஆடவர்

அவ்வழி நல்லை வாழிய நிலனே   ”  என்று நல்லவராக இருந்த நாம் அல்லவர்கள் ஆகிவிட்டோம். மலையனை,

“காடு கொடுத்த நிலத்திலுள்ளோர் கையள்ளி தரவில்லை. வெறுங்கை கொண்டு வழியெல்லாம் நடந்து வந்தேன்” என்று புலம்பித் தவிக்க வைத்துள்ளோம். நிலத்தை மலையைக் காட்டை வாழ்த்த வணங்க காக்க மறந்து விட்டோம்.

“அல்லல் அருள் ஆள்வார்க்கு இல்லை; வளிவழங்கும்

மல்லல்மா ஞாலம் கரி” என்று நமக்குத் தெரியாமலா இருக்கிறது.

அடிபட்டு விழுந்து பதுங்கும் சிறுநாய்க்குட்டியின் முனகல் என இயற்கை அழுவது  ஏனோ நமக்குத் தெரிய மறுக்கிறது.

“பிழையெல்லாம் பொறுக்கவேண்டும். பெற்றவரென்றே கனியவேண்டும். மாரியும் மலையும் முனிந்தால் மானுடர் என்ன செய்வார்?” என்றும் “பொன்னுக்கு மண்ணுடன் ஏதுபகை உடையோரே? மூன்றுபொன்னும் முனிந்துவிட்டால் மிச்சம் ஏதுமுண்டோ?” என்றும் எப்பொழுதுதான் உணர்ந்து கதறி அழப்போகிறோமோ?

அப்படிக் கதறி அழுதால், நம் செயல்களை எல்லாம் இனிவரும் காலத்திலாவது உணர்ந்து மாற்றிக்கொண்டால், காடுகளையும் மலைகளையும் இயற்கையையும் போற்றி காக்கத் துவங்கினால்

“ஊருணி நீர்நிறைந்தற்றே உலக அவாம் பேரறி வாளன் திரு” என்று அருளாமலா போய்விடும் இயற்கை நமக்கு.

தலைமேல் கைகளைத் தூக்கி உங்களைப்போல்  “ஆமாம், அதுதான், ஆகட்டும், தெய்வங்களே!” என்று தெய்வங்களிடம் இறைஞ்சுகிறோம் நாங்களும்.

உங்கள் மனம்பூத்தபோது, கதையே கவிதையாய் மட்டுமல்ல, அறிவை மறைக்கும் இருளைப் போக்கும் ஒளியாயும் வந்த கதைக்கவிதை இந்த மலைபூத்தபோது.

நன்றியுடனும் மிக்க அன்புடனும்

ஆனந்த் சுவாமி

திருவண்ணாமலை

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 16, 2021 11:33

கேளி,விசை – கடிதங்கள்

 

கேளி [சிறுகதை]

அன்புள்ள ஜெ

நாம் திருவிழாக்களில் அடையும் உணர்வுகளை சொல்லிச் சொல்லி தீர்க்கவே முடியாது. எத்தனை உணர்வுகள். தொட்டதுமே நினைவுகள் பற்றிக்கொள்கின்றன. ஆனால் ஒன்று திருவிழாவில் அப்படி திளைக்கவேண்டும் என்றால் அதற்கு ஒரு வயது இருக்கவேண்டும்.

அந்த கணம் அற்புதமாக வந்திருக்கிறது. அப்படியே மறைந்து மறைந்து ஆழத்துக்குப் போன இசையும் விழாவும் ஒரு சின்ன முனகலில் பற்றிக்கொண்டு எழுந்துவிடும் அந்த கணம்தான் வாழ்க்கையின் அற்புதம்

 

செல்வக்குமார்.

 

இனிய ஜெயம்

மகாசிவராத்திரி அன்று தில்லையம்பதியில் இருந்தேன். அன்றைய இரவை வாழ்நாள் அனுபவம் என்றே சொல்லுவேன்.

கொரானா காரணமாக இறுதி நேரத்தில் இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு இருந்தது. பல ஊரில் இருந்து வந்த கலைஞர்களில் பலர் வந்த நிலைக்கு  கூத்தபிரானை வணங்கி விட்டு செல்ல, மிக சிலர் கோவில் வளாகத்துக்கு உள்ளேயே அமர்ந்து சில நிமிடங்கள் தாம் கொண்ட கலை வழியே ஆடல் வல்லானை அர்ச்சித்து மீண்டனர்.

ஆம்பிலிபயர் இன்றி கேட்கும், திறன் கூடிய வயலின் இசையுடன் கூடிய மனிதக் குரலுக்கு எவ்வளவு வசீகரம் என்று அங்கே பாடி இசைத்த திருவாசகம் வழியே அறிந்தேன்.  திருவாரூர் பக்தவச்சலம் என்ற மிருதங்க கலைஞர். கோவிலுக்குள் நுழைந்தார் சன்னதி நோக்கி கும்பிட்டார். பிரகார மையத்தில் வரையப்பட்டிருந்த வண்ணக் கோலத்தின் மத்தியில் அமர்ந்தார். அவரது மாணவர் அனைத்தையும் ஒருங்கு செய்ய, ஒரு மணிநேரம் இருவரும் தனியாவர்த்தனமாக மிருதங்க இசையில் ஆலயத்தை மிதக்க விட்டனர்.

இசை முடிந்ததும் சென்று அறிமுகம் செய்து கொண்டேன். மாணவர் பெயர் அரவிந்த், கேரளம். அப்பா ஃபேக்ட் மோகனன் கதகளி ஆட்டக்காரர். இவர் பத்து வயதிலேயே மிருதங்கம் தான் தன்னுடைய இசைப் பாதை என்று தெரிந்து இதற்குள் வந்து விட்டார். இந்த ஆசிரியர் வசம் 7 வருடமாக இருக்கிறார். மொத்த உடல் மொழியிலும் குரு பக்தி. முதல் கணம் என் கேவல மனம் இது உண்மையா என்றே வினவியது. சில நிமிடங்களில் அந்த வினாவுக்காக வருந்தினேன்.  அவர்களை காரேற்றி அனுப்பும் வரை உடன் இருந்தேன். ஒன்று கவனித்தேன் ஒரு கணம் கூட அறாமல் அரவிந்த் உள்ளே மிருதங்க ஜதிக்கட்டு ஓடிக்கொண்டே இருக்கிறது. அவரது விரல்கள் தொடைகள், சுவர், மேஜை என தோயும் இடங்களில் எல்லாம் இசை கூட்டிக்கொண்டு இருந்தது.  அவருக்கு மட்டும் இந்த புற உலகம், அவர் விறல் சென்று தொடும் இடம் எல்லாம் மத்தள தோல் சருமம் என்று தன்னை உருமாற்றி முன் வைக்கிறது.  எனில் மிருதங்கம் கொண்ட இரு பக்கங்கள் எத்தனை சிறிய இடம்.

திரும்பி வருகையில் ஒரு இளம் பெண். பூரண அலங்கார நடன உடையில் இருந்தாள். கூட்டம் அலை மோதிக் கொண்டிருக்கும் சன்னதி வாசல் முன் நின்று வணங்கி விட்டு, பொன்னம்பலனுக்குக்கு தனது நடன அஞ்சலியை துவங்கி விட்டாள். பாடல் இல்லை. நாட்டுவாங்கம் இல்லை. ஜதி இல்லை. மொபைலில் கூட பின்னணி பாடல் இல்லை. மௌன நடனம். அவளும் நடராஜனும் மட்டும்.  இடையே வேறு எதுவும் அவளுக்கு நினைவிலேயே இல்லை போலும்.  ஒரு சில அபிநயம் வழியாகவே கண்டு கொண்டு விட்டேன். அற்ப சுகம்தனை நினைத்தோம். அரன் திருவடி தனை மறந்தோம்… திருநாளை போவார்.  சற்றே விலகி நில்லும் பிள்ளாய் என்று சிவன் அருள் மொழி உரைப்பதை அவன் குரலை  துல்லிய நடன பாவம் வழியே கண்டேன்.

இசை குறித்த என் கோழிமுட்டை உலகத்தின் அறிவு அனைத்தும் கலைத்து அடுக்கப்பட்ட இரவு அது. இளையராஜா அவர்கள் மிக முன்பு எழுதிய முக்கியமான அனுபவ கட்டுரை ஒன்று உண்டு. ஒரு குறிப்பிட்ட தருணத்தில் “தான்” எனும் நிலை உருகி, மொத்த புற உலகும் நாத வெளியாகி நின்ற கணத்தை, அதை உணர்ந்த தருணத்தை எழுதி இருப்பார். கிட்டத்தட்ட விஷ்ணுபுற திருவடி நிலையேதான்.

இத்தகு நிலைகளின் சாராம்சம் குறித்த அழகிய கதை கேளி. மொத்தமாக ‘அமைதியாகி’ நின்றிருக்கும் புற உலகம். அவனது அகத்தின் இசை அவனை விட்டு வெளியேறி, புறத்தை தொட்டு மொத்த புறமே அதன் அத்தனை அசைவும் மௌனம் உதிர்த்து, கேளி கொட்டென ஆகும் கணம். வெண் முரசின் குழலிசைக்கு பின்னரும் இப்படி ஒரு தனித்துவம் மிக்க அழகிய கதை ஒன்று சாத்தியம் என்பதை நம்ப இயல வில்லை. ஒவ்வொரு காலையும் கலையில் கண் விழிக்கும் அற்புத  சூழல் மீண்டும். பிரமாதம் ஜெ. :)

கடலூர் சீனு

விசை [சிறுகதை]

அன்புள்ள ஜெ

’விசை கதை ஒரே வரியில் தீயாலும் சுடமுடியாத நெஞ்சின் விசை’. அந்த அன்னையின் மனதுக்குள் ஓடிய தீ தான் கைகளில் அத்தனை விசையாக இழுபட்டது. எவரிடமும் பகிரப்படாத ஆவேசம் அது. மகனை வாழவைத்தது. பலநூறு குழந்தைகளை வாழவைக்கிறது. தீயோ காலமோ அதை அத்தனை எளிதாக தொட்டுவிடாது

பத்மகுமார்

 

அன்புள்ள ஜெ.,

அன்றைக்கெல்லாம் சென்னைத் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளின் இடையே மெல்லிசைப் பாடல்களை ஒளிபரப்புவார்கள். பாலமுரளிகிருஷ்ணாவின் ‘எந்தன் தாயை எண்ணிடும் போது இதயம் விம்மிடுதே..’ அடிக்கடி ஒளிபரப்பப்படும் பாடல். அன்னையின் நினைவு தரும் பூரிப்பினால் இதயம் விம்மிடுதலின் உண்மையான அர்த்தத்தினை, அந்த விம்மிடுதே என்ற வார்த்தையை பாலமுரளியின் கார்வையில் கேட்டபோது நான் உணர்ந்தேன். “கெடக்கட்டு டீக்கனாரே, நான் ஓலைக்காரிக்க மகன்லா?” என்ற நேசையனின் பூரிப்பு அதற்குச் சற்றும் குறைந்ததல்ல.

இப்போதும் கூட நான் இருக்கும் சென்னை நங்கநல்லூரில் பழுத்து உதிர்ந்த தென்னை மட்டைகளைச் சேகரித்து தெருவோரத்தில்  வயதானவர்கள் துடைப்பத்துக்காக ஓலை கீறிக்கொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன். ‘உதிராத மட்டைகள்’ என்று நினைத்துக்கொள்வேன். நேசையனின் அம்மைக்கு தென்னை ஓலையைப் பலகையாய் முடையும் விசை கூடியது எப்படி? அடிமையாய் இருந்து மீட்கப்பட்டவள், கணவனை இழந்து குழந்தையோடு நிர்கதியாய் நின்றவள் தனக்குத் தெரிந்த ஒரே வேலையான ஓலை முடைவதை கரை தெரியாத வாழ்க்கைக்கடலைக் கடக்கும் தோணியாகவே நினைத்திருப்பாள். இது போல முகம் இறுகி , அகம் தொலைத்த, தலைவன் இல்லாக்குடும்பத்தை தூக்கிநிறுத்திய, எத்தனை அன்னையர் குடும்பம் தோறும். நெகிழ்ச்சியான கதை.

அன்புடன்,

கிருஷ்ணன் சங்கரன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 16, 2021 11:32

எண்ணும்பொழுது, குமிழிகள்- கடிதங்கள்

குமிழிகள் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

குமிழிகள் கதை ஒவ்வாமையை உருவாக்குகிறது. இந்தவகையான கதைகளில் உள்ள அதீதக் கற்பனை பலவகையான நம்பிக்கையிழப்புகளை உருவாக்குகிறது. மனிதன் என்னதான் சூழ்ச்சி செய்தாலும் அவனால் அவனுடைய அடிப்படை ரசனை, பயாலஜிக்கல் தேவைகள் ஆகியவற்றைக் கடந்துசெல்ல முடியாது.

இந்த கதையில் வரும் இருவருமே இயல்பானவர்கள் அல்ல. உயர்குடிகள். அவர்கள் இருவருமே தங்கள் பெயர்களை ஏற்கனவே மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே மூக்கை அவள் மாற்றிக்கொண்டிருக்கிறாள். அவர்களுக்கு அவர்களின் திராவிட அடையாளம் தாழ்வுணர்ச்சியை அளிக்கிறது. இது மைக்கேல்ஜாக்ஸன் காம்ப்ளெக்சே ஒழிய மனிதர்கள் அனைவருக்கும் உள்ள அடிப்படைப் பிரச்சினை இல்லை

குமார் அருணாச்சலம்

அன்புள்ள ஜெ..

குமிழி கதை சற்று பிசகினால் பெண்ணுரிமை பிரதியாக  அல்லது பெண்ணடிமையை வலியுறுத்தும்பிரதியாக வாசிக்கப்படும் அபாயம் உள்ளது

ஆனால் இரண்டு எக்ஸ்ட்ரீம்களையும் தவிர்த்துவிட்டு சவரக்கத்தி முனையில் நடைபயில்கிறது கதை.இது ஆண் vs பெண் கதை அல்ல  .வரலாற்றுப்போக்கு vs அதை எதிர்கொள்ளும் நடைமுறை ஞானம்

பெண் என்றால் ஆணின் இச்சையை தீர்ப்பதற்காக பிறந்தவள் என்ற நிலை ,   செக்ஸ் என்பது நடைபெற ஆண் மற்றும் பெண் என்பது மட்டுமே போதும் ,  தனிநபர் ரசனைகள் விருப்பங்கள் தேவையில்லை என்ற நிலையைக்கடந்து வெகு தூரம் பயணித்து விட்டோம் என நினைக்கிறோம்  ஆனால் துவங்கிய இடத்திலேயே இன்னும் நிற்கிறோம்.இரண்டுமே உண்மைதான் என்பதுதான் இதிலிருக்கும் சுவாரஸ்யம்.

இருபரும் எதிர்பாலரின் உடலைப் பார்த்து காமுறுவதுதான்  இயற்கை (!!!) டிசைன் ( ?). ஆனால் ஆடை , அணிகலன்கள் ,  படிப்பு, அந்தஸ்து என  பல விஷயங்கள் குறுக்கே வந்து விட்டன.

ஒரு கற்பனையான சூழல்  ஆடைகள் அணிவது சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டு  நிர்வாணமாக நடமாடுவது இயல்பாகிவிட்டது இயல்பாகிவிட்டால் ,  ஆண் பெண் உறவு சமன்பாடே மாறிவிடும் அல்லவா ? சாமான்யர்களின் உடல் ,  உடல்சார்ந்த உழைப்பாளர்கள் உடல் அதிகமாக விரும்பப்படும் ,  பணக்கார வீட்டு வாரிசுகளும் , உயர் அந்தஸ்தில் வாழ்வோரும் தமது சொங்கியான உடலால் இழிவாகப்பார்க்கப்படும்  .

ஆக , தற்போது நாம் காதல் என்று சொல்வது பரஸ்பர வெளித்தோற்ற செயற்கைப் பூச்சுகளையே.நாம் காதலிப்பது ஒருவரது புரொஜக்ஷன்களையே.அறிவியல் வளர்ச்சி என்பது உடலை நம் இஷ்டப்படி மாற்றிக்கொள்ள வழி செய்வதுபோல நமது அறிவையும் மனதையும்கூட மாற்றிக்கொள்ள வழி செய்யும்

உதாரணமாக , எனக்கு பல வருட ஓட்டுனர் அனுபவம் உண்டு ,தமிழக சாலைகள் அனைத்தும் அத்துபடி என்பதற்கு சில ஆண்டுகள் முன்பிருந்த கெத்து இன்றில்லை. கூகிள் மேப் உதவியுடன் இன்று யாரும் எங்கும் சுலபமாக கார் ஓட்டலாம்.இதன் அடுத்த கட்டமாக கூகிள் போன்ற app களை உடலிலேயே பொதித்து வைக்க முயல்கிறார்கள்.குழந்தைகள் காணாமல் போதல் , கடத்தல் , குற்றவாளிகள் தலைமறைவு போன்றவை நிகழ முடியாது.  யாரையும் எளிதாக டிராக் செய்ய முடியும்.

எளிய அரசியல் , செயற்கையான போராளி பாவனை , அரசியல் தொடர்புகளால் ஊடக வாய்ப்பு என வாழும் ஒரு இணைய மொண்ணை , ஒரே கணத்தில் வெண்முரசு விவாதங்கள் அனைத்தையும் , நுனிப்புல் மேயந்து விட முடியும்.கடலுார் சீனு , காளிபிரசாத் , சுரேஷ்பாபு , ஜா ராஜகோபனுக்கு நிகராக ,  ஒரு மண்டூகம் கூட சுவையான உரையாடலை நிகழ்த்திவிட முடியும்

app களை உடலில் பொருத்துவது , உடலை செயற்கை கருவிகளால் செம்மையாக்குவது போன்றவை இனி optional  அல்ல  . தனிமனித தேர்வு அல்ல  சட்டப்பூர்வமாகவே அவற்றை செய்தாக வேண்டிய சூழல் வந்து விடும்

உடலழகால் இம்ப்ரஸ் ஆவது , அறிவால் இம்ப்ரஸ் ஆவது ஆகியவையெல்லாம் மெல்ல அர்த்தமற்றவை ஆவதை கதையின் ஒரு பகுதி காட்டுகிறது.அதை உலகம் எப்படி எதிர்கொள்ளும் என்ற யதார்த்தத்தை கதையின் அடுத்த பகுதி காட்டுகிறது

ஜெயகாந்தன் கதை ஒன்றில் கதை நாயகி , எம்ஜிஆரின் போஸ்டரை கிழித்து வந்து அதன்மீது படுத்துக்கொள்வாள்.ஆண் பெண் உரையாடல்  சாத்தியமற்றுப்போகும்போது மனம் அதற்கான  மாற்றுகளை கண்டடைகிறது

போஸ்டரில் படுப்பதுபோன்ற rawஆன முறைகள் வேண்டியதில்லை.  படித்தவர்களுக்கு பணக்காரர்களுக்கு என சோபிஸ்டிக்காக ,  கலைப்பூச்சுடன் பல்வேறு வழிகள் உருவாகி வருகின்றன.   இன்று ஆட்டோமொபைல் ,  டெக்ஸ்டைல் போன்றவற்றைவிட மிக அதிகமாக பயனர்கள் புழங்கும் தொழில்துறை அதுதான்

குமிழி கதையின் பிரதான பாத்திரங்கள் இரண்டுமே பிரமாண்ட வளர்ச்சியின் சமூக மாற்றத்தின் victimsதான்.  அது அவர்களுக்கே தெரியாது.உலக வளர்ச்சியும் அதற்காக உலகம் தரும் விலையும் என்றென்றும் தொடர்பவை  , தடுக்க முடியாதவை

ஒட்டுமொத்த மானுட வளர்ச்சியை அதனால் விளையும் ஆண்பெண் உறவு மாற்றத்தை ஒரு சிறிய குமிழில் அடக்கி வாசகன் முன் வைக்கிறது கதை

அன்புடன்

பிச்சைக்காரன்

எண்ணும்பொழுது [சிறுகதை]

அன்புள்ள ஜெ

எண்ணும்பொழுது, குமிழிகள் இரண்டு கதைகளுமே ஒரு ரகசியப்புள்ளியில் சந்திக்கின்றன. கதையின் கட்டமைப்பு ஒன்றுபோல் உள்ளது. ஆனால் கதை பேசுவது இரண்டு வேறு வேறு விஷயங்களை. எண்ணும்பொழுது கதையின் விஷயம் ஆண்பெண்ணுக்கு இடையே உள்ள நம்பிக்கை என்ன என்பது. குமிழிகள் கதை ஆணும்பெண்ணும் ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கத்தான் வேண்டுமா என்று யோசிக்கிறது

ரவீந்திரன்

 

அன்புள்ள ஜெ

எண்ணும்பொழுது. முதலில் இக்கதை மட்டும் வாசிக்காமல் விட்டிருந்தேன். இப்பொழுது விருந்து கதைக்கு பின் இக்கதையை வாசித்தேன்.

எண்ணும்பொழுது கதையிலிருந்து ஏழாம்கடல் கதை வரை ஒரு பயணம் நிகழ்ந்துள்ளதாக தெரிகிறது. எண்ண எண்ண குறைவதில் துவங்கியது நூறுகதைகள், இது எண்ண எண்ண பெருகுவதில் துவங்கியுள்ளது. ஒரு இந்து செல்ல நேரும் கிருஸ்துவ ஏழாம் கடலை பற்றியது இக்கதை.

பாம்பு கிருஸ்துவத்தில் சாத்தானின் உருவகம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். கிரேக்கத்தின் ஹெர்குலிஸ் தன் கையில் அடக்கியிருப்பது அந்த சாத்தானை தான். கடலுங்கரை கன்னி பாம்பாக சொல்லபடுகிறாள் தீயை போல் ஆழகானவள். போம்பாளரை வசப்படுத்த சாத்தானாகிய குறையுள்ளவனின் உதவியை நாடுகிறாள்.

கதையில் போம்பாளர்  பார்ப்பது நிஜமான தெக்குதிருவீட்டு கன்னியை அல்ல, அவளின் அடி பிம்பத்தையே காண்கிறார். அவள் என்று தான் அவளில் எதை காண்கிறாரோ அதுதான் போம்பாளரின் தெக்குதிருவிட்டு கன்னி. ஏன்னென்றால் அகத்தை யாரும் முழுவதும் திறந்து காட்டாமல் ஒரு போதும் ஒருவரை முழுமையாக பார்த்து விட முடியாது, அப்படி காட்டினால் அதை முழுவதும் நாம் நம்புவோம் என்பதுமில்லை.

ஏன் அவர்கள் எண்ண துவங்கினார்கள். ஏன் என்றால் அவர்கள் எண்ணுவதற்காக தங்க மோதிரம், முல்லை செடி என்னும் சாத்தியங்களை கையிலேயே வைத்திருந்தார்கள்.

கதையில் உள்ள தலைவானி குழி சொல்வது இதைதான். ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில்  அல்லது மானுட உறவுகளுக்கு மத்தியில் குழியை வைத்து கொண்டு பயணப்பட்டால் நாம் பள்ளத்தில் விழ தான் நேரும். அது நம் அகத்தில் எண்ணி எண்ணி நாம் உருவாக்கி கொண்ட குழி. எண்ண கூடாது, மூர்க்கமாக பற்றி அணைத்துக்கொள்ள வேண்டும்.

போம்பாளரும் திருவீட்டு கன்னியும் நரகத்துக்கு செல்விலலை. இருவரும் சாத்தானின் வலையில் சிக்கவில்லை. அவர்கள் துரோகத்திற்கு அஞ்சி உயிர் நீர்த்து சொர்க்கம் செல்கிறார்கள். ஆனால் வேறு வேறு சொர்க்கம், அங்கும் பிரிந்து தான் இருக்க வேண்டும். அதற்கு காரணம்  அவர்கள் எண்ணியது மட்டும் தான்.

இக்கதையில் இந்துகள் கிருஸ்துவ தொன்மமான ஏழாம் கடலுக்குள் செல்ல நேர்கிறது. அப்படி என்றால் அங்கு செல்வதற்கான சாத்தியம் அனைவருக்கும் உண்டா. அது மானுட இயல்பா. அந்த ஏழாம் கடலை கடக்க தான் இவர்கள் வேறு தென்மங்களை நம்பிக்கைகளை உருவாக்கி கொண்டார்களை.

ராமைய்யா சொட்டும் நீராக வந்து தூக்கத்தை கெடுப்பது என கதையின் மொத்த இறுதியும் எண்ணி பார்ப்பதற்கான சந்தேகிப்பதற்கான சாத்தியங்களை கொண்டுள்ளது. எண்ணுவதும் எண்ணாததும் வாசகர்களிடம் விடப்பட்டு விட்ட ஒன்று.

நன்றி

பிரதீப் கென்னடி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 16, 2021 11:32

படையல்,தீற்றல் -கடிதங்கள்

படையல் [சிறுகதை]

அன்புநிறை ஜெ,

இந்தக் கதையின் மூலவராய் எறும்பு பாவா அமர்ந்திருக்க,  சம்பவங்கள், மனிதர்கள் அவர் முன்னிலைக்கு வந்து படையலாகின்றன. எனவே அவரது பார்வையில்,
‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்’ என்று பாவா விடையளிக்கும் கேள்விகளை மட்டும் கோர்த்து வாசிக்கலாம்.

ஏன் பாவா இப்ப ராத்திரியில்லா?” என்று கேட்கிறார் ஆனைப்பிள்ளை சாமி. ஆமென்பது போல ‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்’ என்கிறார் பாவா. அது கதையிலே வருவது போல மழையிருட்டு மட்டுமல்லாது கோல்கொண்ட மன்னவன் குடிகெட்டு போனதால் வரும் இருள்.

அடுத்தது ஆனைப்பிள்ளை சாமியின் பாடலுக்கு ஒரு முறை ஆமோதிக்கிறார். அப்பாடல் – இருட்டுக்கு இருட்டான ஒளி, மருட்டுக்கு மருந்தான நோய், கருத்துக்கு கருத்தான கருமை, கருணைக்கும்-கரவுக்கும் காரணம், சொல்லிச் சொல்லிக் கண்ட சொல் – சொல்லாமல் விட்டுவிட்ட சித்தம், எண்ணிச் சேர்த்த எண்ணம் – எண்ணாத வெளியான ஏகாம்பரம்.  இருமைகளுக்கு இடையே ஆடும் ஊசலை இடையில் தாங்கும் வெளி. அதற்கு ஓர் துதி.

புகைமேலே மலக்குகளும் ஜின்னுகளும் ஹூறிகளும் உண்டு என்பதற்கு ஒரு வாழ்த்து. நன்மை-தீமை எனும் இருமைகளை கணக்கிடும் மலக்குகள், நன்மை – தீமை இரண்டையும் செய்யும் ஜின்கள் என அந்த வரிக்கு ஒரு வாழ்த்து.

ரத்தம்தோய்ந்த அரிசியை சமைக்கலாமா என முதல் முறை கேட்கும்போதே “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்” என்கிறார் எறும்பு பாவா. அவருக்கு விடை தெரியும்.

அதன் பிறகு அந்தக் காவலர்கள் பேரைக் கேட்டு, நவாபை விடப் பெரியவரோ எனறெல்லாம் அடித்து வருத்தும் போதும், ரத்தம் சிந்தும் போதும், அவருக்கு எல்லாம் ஒன்றுதான் எனும்போதும் அவர் வாயில் வரும் இதே நாமம். இருக்கேரா செத்துட்டீரா என்று அடித்தவன் கேட்கவும் அதே பதில்.ஆனைப்பிள்ளைச் சாமி
பாடலாமா என்பதற்கு ஆமோதிப்பாய் ஒருமுறை.

அங்கு சித்ம்பரத்துக்கு செல்லும் சிவனடியார் சிவாயநம என்று வணங்க அதன் எதிரொலியாய் ஒருமுறை. அவர் ஒருவனை வெட்டிக்கொன்றார் எனும் செய்திக்கு ஒருமுறை.

“அண்ணாமலையிலே எரியுறதுதான் சிதம்பரத்திலே ஆகாசமாட்டு இருக்குது. எல்லாம் ஒண்ணுதான், என்ன சொல்லுறீரு” என்றதற்கு விறகில் நெரிபடும் தீயும் பாவாவும் ஆமென்கிறார்கள். வந்தவாசியில் வெட்டப்பட்டதும், அண்ணாமலையில் அரியப்பட்டதும், காளஹஸ்தியில் சிந்தியதும், பாவா தலையில் அடிபட்டு தெறித்ததும் எல்லாம் ஒன்றுதான்.

அனைத்தும் ஒரே ரத்தம். குலதெய்வம் கோவிலில் பலிரத்தம் கலந்த படையலை விண்நோக்கி எரிவார்கள்.  ரத்தம் கலந்த படையலை தெய்வங்களுக்குப் படைக்கலாம் எனில் அவர்களும் உண்ணலாம். உண்ணும் முடிவை எடுக்கிறார்கள். அதற்கும் சொல்கிறார் – “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்”

இறுதியாய் அமைவதற்கு சென்று கொண்டிருக்கும் சிவனடியார் சொல்கிறார்:
“கேள்விக்குமேல் கேள்வியா இருந்ததெல்லாம் போயாச்சு. எல்லா கேள்விக்குமான ஒற்றைப் பதிலா ஒண்ணு வந்து சேந்தாச்சு. இனி சொல்லடங்கணும். இடம் அமையணும்”

எல்லாக் கேள்விக்கும் ஒற்றைப் பதில் வருவது வரைதானே பேச்சு. அங்கு சென்று ஏற்கனவே அமைந்துவிட்டவர் பாவா. சென்று கொண்டிருப்பவர்கள் சிலர். சாட்சியாக சிலர். ஏதும் அறியாமல் சிலர். அனைத்துமே படையல்தான்.

இடையில் நவாப்புகளும், மராட்டியர்களும், பாளையக்காரரும், கும்பினிக்காரரும் ஆடும் ஆட்டங்களும், இடையே பதறும் மக்கள்பூச்சிகளும், அத்தனை வரலாறு ஒருபுறமும் காய்ச்சிய கஞ்சியை சலனமின்றி வருத்திய வழிப்போக்கருக்குத் தந்துவிட்டு குறவள்ளி மீது பாடல் பாடி பசியை விரட்டும் ஆண்டிகள் கூட்டமும் ஒருங்கே என்றுமிருக்கும் மண். முருகனை ராவுத்தன் எனப்பாடிய அருணகிரியாரும் திருவண்ணாமலையோடு வந்துவிட்டார்.  அருமையான படையல்.

 

மிக்க அன்புடன்,

சுபா

 

அன்புள்ள ஜெ

எறும்பு பாவா போன்ற ஒரு கதாபாத்திரம் தமிழ்ப்புனைகதையுலகில் எழுதப்படுவது மிக அபூர்வமானது. அதை எழுத நம் நவீன இலக்கியத்தால் பெரும்பாலும் முடிவதில்லை.ஏனென்றால் நவீன இலக்கியத்திலுள்ள தத்துவப்பார்வை அவ்வளவு வறுமையானது. மனிதனின் காமம் வன்முறை ஆகியவற்றைப்பற்றிய ஒரு மேலோட்டமான பார்வை மட்டுமே நவீன இலக்கியத்திலே இருக்கிறது. சரித்திரம், மதம், ஆன்மிகம் போன்றவற்றை அது தவிர்த்துவிடுவது என்பது அக்கறை இல்லாமல் அல்ல. அவற்றை ஆராயும் தத்துவ உபகரணங்கள் நவீன இலக்கியத்தில் இல்லை. அவற்றில்கூட ஏற்கனவே அவர்கள் சமகாலத்தில் எழுதிய காமம் வன்முறை ஆகியவற்றைத்தான் அவர்கள் எழுதுவார்கள். அதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன. ஜெயகாந்தன் எழுதியிருக்கிறார். அதற்கு முன் ந.பிச்சமூர்த்தி எழுதியிருக்கிறார்.

ஆனால் இங்கே எறும்பு பாவாக்கள் எல்லா பக்கமும் இருந்துகொண்டே இருக்கிறார்கள். நம் கண்ணுக்குத்தட்டுப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறார்கள். அவர்களை எழுதாதவரை நாம் இலக்கியமே எழுதவில்லை என்றுதான் பொருள்.

என், மகாராஜன்

தீற்றல் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

சிறுகதையின் கிளாசிக் வடிவத்தில் அமைந்த கந்தர்வன் கதைக்குப்பின்னால் தீற்றல் கதையை வாசிப்பது ஒரு விந்தையான அனுபவமாகவே இருந்தது. அது கதையே அல்ல. ஒரு உரையாடல், அதில் சில குறிப்புகள். ஒரு புறவயமான அன்றாட அனுபவம். ஒரு கதையின் நினைவு. ஒரு பழைய நினைவு. அவ்வளவுதான். கதையே முடிந்துவிட்டது. ஆனால் இந்த மூன்று அடுக்குகள் வழியாக ஒரு விரைவான தீற்றல். வாழ்க்கையின் ஒரு அழியாத தருணம்

எஸ்.முரளிதரன்

 

அன்புள்ள ஜெ

தீற்றல் கதையின் சில விஷயங்கள் அற்புதமானவை. இதெல்லாம் உங்களுக்கு எவராவது சொல்கிறார்களா என்ன? நிறைய கடிதங்கள் வருகின்றன. அதிலிருந்து தெரிந்துகொண்டீர்கள் என நினைக்கிறேன்.

இருபதாண்டுகளுக்கு முன்பு இதேபோல ஒரு மீனாட்சி கல்யாணம். நான் அன்றுதான் அன்று நான் காதல்கொண்டிருந்த பெண்ணிடம் பேசினேன். நாலைந்து வார்த்தைகள்தான். அவள் உடை நன்றாக இருக்கிறது என்று சொன்னேன். மூக்கைச் சுளித்து பழிப்புகாட்டி சிரித்துக்கொண்டு போனாள்.

நான் பைத்தியம்போல கோயிலில் நின்றிருந்தேன். ஆள்கூட்டம் வடிந்துகொண்டிருந்தபோது திடீரென்று நாதஸ்வரமும் தவிலும் கேட்டது. மீனாட்சி சப்பரத்தில் வந்தாள். அன்றைக்கு அப்படியே மெய்சிலிர்த்து அழுதுவிட்டேன்

அந்த நாளை அப்படியே இந்தக்கதையில் திரும்ப அனுபவித்தேன்.

 

எம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 16, 2021 11:31

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.