Jeyamohan's Blog, page 1015

March 25, 2021

நிறைவிலி, அறமென்ப- கடிதங்கள்

அறமென்ப…  [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

அறமென்ப கதையைப் பற்றி நண்பர்களிடம் பேசியபோது பெரும்பாலானவர்களுக்கு இதற்குச் சமானமான ஓர் அனுபவம் இருப்பதைக் காணமுடிந்தது. பெரும்பாலும் அவர்கள் எளியவர்கள், ஏழைகள் என நினைக்கும் மனிதர்கள் பணம் பறிப்பதில் தீவிரமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்திருப்பார்கள். ஏன் அதிர்ச்சி அடையவேண்டும், தேர்தலில் வாக்கு சேகரிக்க வருபவர்களிடம் வெளிப்படையாக பணம் கேட்கும் மக்கள்தானே என்று நான் பதில் சொல்வேன். அகப்பட்டவனை மாட்டிவிட்டு மிரட்டுவது, பணம் பறிப்பது இங்கே சாதாரணம். போலீஸும் பலசமயம் உடந்தை. சிலசமயம் தலையிட மாட்டார்கள். எனக்கே ஓர் அனுபவம் உண்டு. நமக்கு வழக்கு போலீஸ் ஸ்டேஷன் என்றெல்லாம் சொல்லும்போது வரும் பயம்தான் இங்கே மிரட்டலுக்கு அடிப்படையாக அமைகிறது.

ஆனால் இந்தக்கதையில் செல்வா அடைந்தது என்ன? அவன் தன்னை உணரும் ஒரு கணம் என நினைக்கிறேன். தன்னைப்பற்றி உயர்வாக நினைக்கும் ஒரு எண்ணத்தில் இருந்து விடுதலை அடைகிறான். தன் இயல்புப்படி இருக்கலாம் என நினைக்கிறான். நாம் ஓர் உதவியைச் செய்கிறோம், அதைப்பெற்றவர் கண்ணீர் மல்கி நன்றியுடன் இருக்கவேண்டும் என்று நினைக்கும் சிறுமை உடனே வந்துவிடுகிறது. அவரவருக்கு அவரவர் நியாயங்கள் என்ற நினைப்பை அடைந்து தன்னை தெய்வத்தின் இடத்தில் வைத்த நிலையில் இருந்து அவன் விடுதலை அடைகிறான். அந்த விடுதலை அடையும் கணம் விளக்கப்படாமல் கதையில் உள்ளது. அதுதான் கதையே

கதை பற்றிப் பேசும்போது பெரும்பாலானவர்கள் பல ஆண்டுகளுக்கு பிறகும் அவர்களுக்கு நடந்ததையும் அவர்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தையும் சீற்றத்துடன் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அந்தச் சீற்றம் ஏமாற்றம் எல்லாவற்றிலிருந்தும் செல்வா விடுதலைபெறுகிறான்

 

ஆர்.அருண்

 

 

அன்புநிறை ஜெ,

அறமென்ப… – இக்கதையின் தலைப்பில் உள்ள மூன்று புள்ளிகளோடு சேர்த்தே இக்கதையை புரிந்து கொள்ள வேண்டும் எனத் தோன்றியது. ‘அறமெனப்படுவது யாதெனின்…’, ‘அறத்தாறிது…’, ‘அறம் என்பது…’, என்பது போன்ற அறம் குறித்துப் பேசும் தங்களது பல கட்டுரைகளின் தலைப்பில் வரும் முற்றுப் பெறாத புள்ளிகள் அவை.

மிக நேரடியான கதையாக, உரையாடல்கள் வழியாக நகரும் கதையாக இதை அமைத்திருப்பதே, இதன் பேசுபொருளாகிய அறம் அப்படி எளிமையாக, முற்றாக வகுத்துவிட முடியாத ஒன்றாக இருக்கிறது என்பதை சொல்லத்தான் எனத் தோன்றுகிறது.

இக்கதையில் முதல் வாசிப்பில் உருவாவது பதற்றம், செல்வாவின் பார்வைத் தரப்பில் வாசிப்பவர் அடையும் பதற்றம். “நான் நல்லதுதானே செய்தேன், எனக்கேன் இப்படி?” என்ற கேள்வியோடு அவனுடைய அதே பதைபதைப்போடுதான் வாசிக்க நேர்கிறது. ஆனால் அந்தக் கதையின் நோக்கம் அந்தச் சிடுக்கிலிருந்து அவன் எப்படி வெளியே வந்தான் என்பதல்ல, அதற்கு மட்டும் எழுதப்படவில்லை இக்கதை என்பதை அந்த முடிவுறாத தொடர்புள்ளிகள் நினைவுறுத்துகின்றன.

இது பல தரப்புகளின்  அறமுரண்பாடுகளுக்கு இடையே ஆடும் துலாக்கோலின் ஊடாட்டமே இக்கதை. இதில் வரும் வக்கீல்கள், காவலர்கள், விபத்தில் அடிபட்டவர் குடும்பம்  அனைவரும் அவரவருக்கான தரப்பின் நியாயங்களையே பேசுகிறார்கள். அதில் உண்மையும் இருக்கிறது. செல்வா ஒரு உயிரைக் காக்கும் பொருட்டு செய்த உதவி அனைத்திலும் மேலான அறம், என்றாலும் அவரவர் தரப்பு அற வாதங்கள் அறத்தின் துலாமுள்ளை நடுங்கச் செய்து கொண்டுதானிருக்கும். அந்த முள் நிலைகொள்ளும் தருணம் வருவதே அவனுள் எழும் புன்னகை. அந்தக் கிழவிக்கு அவன் மீண்டும் உதவ முற்படுவதே அதை அவன் தனக்கே உறுதி செய்து கொள்ளும் கணம்.

மிக்க அன்புடன்,

சுபா

நிறைவிலி [சிறுகதை]

வணக்கம் ஜெ,

பணி நிமித்தமாக அல்லது வேறு சந்தர்ப்பங்களில் சிங்களவர் யாரையேனும் சந்தித்து உரையாடுவதுண்டு. அவர்களில் பலர் எனது சிங்கள அறிவை கிலாகித்துவிட்டு “நாங்கள் தமிழரை தாழ்வாக நினைப்பதில்லை. அவர்களை நண்பர்களாகவே எண்ணுகிறோம்” என்று கூறுவதுண்டு. எப்போதும் எனது பதில் “நானும் அப்படித்தான். சிங்களவரை தாழ்வாக நினைப்பதில்லை” . அவர்கள் முகம் சுண்டிவிடும்.

இந்தக்கதை அவ்வாறான ஒவ்வாமையை அளித்தது. கார்ப்பரேட் “வெற்றிகளை” பீற்றிக்கொள்ளும் ராம் “சாப்பாட்டிற்காக வந்திருக்கிறாய் என்று நினைத்துக் கொள்வார்கள்” என்றும் வேறு பல கூற்றுக்கள் மூலமாகவும் தன்னைத்தான் கேவலப்படுத்துகிறார். பகா அவரிடம் ஆளுமைப் பயிற்சிக்கு வரவில்லை. அவளது சாதுரியமான பேச்சினையும், பெருந்தன்மையையும் பொறுமையையும் ராம் பழகிக்கொள்ளலாம் :)

ராகா

 

அன்புள்ள ஜெ

நிறைவிலி கதையின் மையம் என்பது பகாவின் இயல்புதான் என நினைக்கிறேன். ராமின் இயல்பு ஒரு தோரணையுடன் இருக்கிறது. அத்தகையவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். தங்களுக்கு தேவையானவர்கள் தேவையான தகுதியுடன் இருக்கவேண்டும், அவ்வளவுதான். அவரையும் புன்னகையுடன் எடுத்துக்கொள்கிறாள். அவள் ஜெயிப்பவள்.

செந்தில்குமார்

25 எச்சம் [சிறுகதை] 24 நிறைவிலி [சிறுகதை] 23 திரை [சிறுகதை] 22.சிற்றெறும்பு [ சிறுகதை] 21 அறமென்ப…  [சிறுகதை] 20 நகை [சிறுகதை] 19.எரிசிதை [சிறுகதை] 18 இருளில் [சிறுகதை] 17 இரு நோயாளிகள் [சிறுகதை] 16 மலைபூத்தபோது [சிறுகதை] 15 கேளி [சிறுகதை] 14 விசை [சிறுகதை] 13. இழை [சிறுகதை] 12. ஆமென்பது[ சிறுகதை] 11.விருந்து [சிறுகதை] 10.ஏழாம்கடல் [சிறுகதை] 9. தீற்றல் [சிறுகதை] 8. படையல் [சிறுகதை] 7.கூர் [சிறுகதை] 6. யட்சன் [சிறுகதை] 5. கந்தர்வன் [சிறுகதை] 4.குமிழிகள் [சிறுகதை] 3.வலம் இடம் [சிறுகதை] 2.கொதி[ சிறுகதை] 1.எண்ணும்பொழுது [சிறுகதை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 25, 2021 11:34

கொரோனா

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.. இன்றைய பதிவில் ” கொரோனா வார்டில் தனிமையில் எழுதத்தொடங்கி..” என்று பார்த்து துணுக்குற்றேன். Virus வந்ததினால் தனிமை தேவையாய் இருந்ததா இல்லை வேறு காரணங்களா என தெரியவில்லை.. அறிந்தவர்களுக்கும் virus வந்திருக்கிறது என்றறியும் போது சிறு அதிர்ச்சி வருகிறது.. என்னதான் virus பெரிய விஷயம் இல்லை என்று மனம் எண்ணியிருந்தாலும்.. சிகிழ்ச்சை முழுதும் முடிந்து நார்மல் ஆகி விட்டீர்கள் என நம்புகிறேன்..

சகல ஆரோக்கியமும், நலங்களும் எப்போதும் அமைய கடவுளை வேண்டுகிறேன்..

அன்புடன்

வெண்ணி

அன்புள்ள வெண்ணி,

2021 ஜனவரியில் எனக்கு கொரோனா வந்தது. மாதேஸ்வரன் மலை உட்பட பல இடங்கள் சென்றேன். ரயில் பயணம் செய்தேன். எங்கிருந்து என தெரியவில்லை. ஆனால் நண்பர்கள் எவருக்கும் பாதிப்பில்லை. கொஞ்சம் உடல் வெப்பம் கூடியதுமே வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு சோதனை செய்தேன். கொரோனா தாக்குதல் என்றதுமே நேரடியாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்ந்தேன். பதினொரு நாள் அங்கிருந்தேன். எனக்கு அரசு மருத்துவமனைகள் மேல் நம்பிக்கை உண்டு.

அரசுத்தரப்பில் இருந்து அழைத்து கண்காணித்தனர். 25 நாட்கள் வரை அந்தக் கண்காணிப்பு இருந்தது. என் வீட்டுக்கு வந்து மற்றவர்களுக்கும் சோதனை நடத்தினர். எவருக்கும் தொற்று இல்லை.

அரசு மருத்துவமனையில் மிகச்சிறந்த கவனிப்பு. அவர்கள் எவருக்கும் நான் எழுத்தாளன் என்று, சினிமாக்காரன் என்றோகூட, தெரியாது. அனைவருக்குமான கவனிப்புதான். அங்கிருந்த செவிலியர், தூய்மைப்பணியாளர்களின் இயல்பான உழைப்பும் நேர்த்தியும் இந்தியா மீது பெரும் நம்பிக்கை கொள்ளச் செய்பவை.

குறிப்பாக, மிகச்சிறந்த உணவு. அந்த சாம்பாரை இன்னமும் நினைவில் வைத்திருக்கிறேன். எங்கோ வீட்டில் செய்யச்சொல்லி கொண்டு வந்திருப்பார்கள். பால், முட்டை, சுண்டல் எல்லாமே அளிக்கப்பட்டன. எனக்கு சுவை மணம் இல்லாமலாகவில்லை. ஆகவே உற்சாகமாகச் சாப்பிட்டேன்.

அங்கிருந்தபோது கதைகளை எழுதினேன். அங்கிருந்து எழுத்தை நீட்டித்துக்கொண்டேன்.நண்பர்கள் லக்ஷ்மி மணிவண்ணன், ஜி.எஸ்.எஸ்.தயாளன், போகன் சங்கர், அனிஷ்கிருஷ்ணன் நாயர் ஆகியோர் வந்து பார்த்தனர்- உள்ளே அனுமதி இல்லை. பணம் ஏதும் செலவாகவில்லை. உணவு உட்பட எல்லாமே இலவசம்.

அதிகமாக எவருக்கும் சொல்லவில்லை. தேவையற்ற பீதி வேண்டாமே என்றுதான். மேலும் இச்சூழலில் எதிர்மறையாக ஏதும் எழுதக்கூடாது என்பதையும் ஒரு நெறியாக வைத்திருந்தேன். பின்னர் எழுதலாமென நினைத்தேன்.

நாஞ்சில்நாடனுக்கும் அப்போது கொரோனா தாக்குதல் வந்தது. அவரிடம் பேசினேன். “எழுதி விடாதீங்க. செத்துத்தொலையட்டும்னு கையெழுத்து இயக்கம் ஆரம்பிச்சிருவானுக” என்றார். அந்த வாய்ப்பை அளிக்கவேண்டாம் என நினைத்தேன். இப்போது மீண்டு வந்துவிட்டேன். இது புரட்சிக்குப் பின்னடைவுதானே?

உடல்நலச்சிக்கல்கள் என ஏதும் இல்லை. இப்போது பல பயணங்கள், பேருரைகள், மலையேறறங்கள், திரைப்படப்பணிகள். நன்றாகவே இருக்கிறேன்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 25, 2021 11:34

இருளில், எரிசிதை – கடிதங்கள்

எரிசிதை [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

எரிசிதை ஒரு நாவல். மனசில் அப்படித்தான் பதிகிறது. அன்றைய முழு வாழ்க்கைச் சித்திரமும் அதிலுள்ளது. அதை எப்படி புரிந்துகொள்வது? எரிசிதை என்பது உண்மையில் என்ன? சின்ன முத்தம்மாள் அமர்ந்திருக்கும் அந்த பிரசவகாலகட்டம்தானே? அவளை எரித்து அழிக்கும் சிதைத்தீ என்பது அவள் வயிற்றிலுள்ள குழந்தை.

அல்லது சின்ன முத்தம்மாளின் வஞ்சம் என்றும் சொல்லலாம். அதுதான் அவளை எரிக்கிறது. மங்கம்மாளை பழிவாங்கவேண்டும் என நினைக்கிறாள். அவள் மகன் பிறந்து 17 ஆண்டுகளில் மங்கம்மாளை சிறையிலடைத்து பட்டினிபோட்டு கொல்லப்போகிறான். அது வரலாறு. அதைத்தான் இப்போதே சின்ன முத்தம்மாள் வஞ்சினமாக உரைக்கிறாள்

ஸ்ரீனிவாஸ்

சு.வெங்கடேசனின் ‘காவல் கோட்டத்தில்’, முத்தம்மா உடன்கட்டை ஏறப்போவதைப் பற்றிய குறிப்பு இல்லை. அதில், முத்தம்மா உடன்கட்டை ஏறுவதை மங்கம்மா ராணி தடுத்துவிடுறாள் (உடன் ஏறினால்தானே உடன்கட்டை).  கர்ப்பிணியான முத்தம்மாவிற்கு பணிவிடைசெய்து அவள் காலடியிலேயே காத்திருக்கிறாள். முத்தம்மா தன் காதல் கணவனின் எண்ணங்களால் அலைக்கழிக்கப்பட்டு நடைபிணமாக வாழ்கிறாள். இறுதியில், பன்னீர் குடித்து ஜன்னிகண்டு இறக்கிறாள்.

கா.கோ. கிட்டத்தட்ட 1000 பக்க நாவல், அதில் முத்தம்மா கதை ஒரு பக்கத்தில் அடங்கிவிடுகிறது. ஜெ அதைப் புனைவின் சாத்தியக் கூறுகளால்  வளர்த்தெடுக்கிறார். மங்கம்மா, நாடாள வாரிசு வேண்டி, கர்ப்பிணியான முத்தம்மாவின் உடன்கட்டை ஏறுதலை ஒத்தி வைத்திருக்கிறாள். பிள்ளை பெற்றதும் முத்தம்மா உடன்கட்டை ஏறவேண்டும். கணவனை இழந்து, பிறக்கப்போகும் குழந்தையையும், கூடவே மரணத்தையும் எதிர்நோக்கி, கிட்டத்தட்ட சிறைபடுத்தப்பட்டு, எல்லா வழிகளும் அடைபட்ட நிலையில், விரக்தியில் காத்திருகிறாள்.

முத்தம்மா தனிமைச்சிறையில் சரியாக அன்ன ஆகாரம் கொள்ளாமல்  மெலிந்து கிடக்கிறாள். அவளுக்குத் தோழி நாகலட்சுமி மட்டுமே வெளியுலகத்துடனான தொடர்பு. நாகலட்சுமி மங்கம்மாவின் உளவாளியும்கூட. மங்கம்மா, முத்தம்மாவின் ஒவ்வொரு அசைவையும், தோழியின் மூலம் அறிந்துகொள்கிறாள். அவள் இந்தக் கதையில் ஒரு பாத்திரமாக  தோன்றாவிடினும் இதன் ஒவ்வொரு நிகழ்விலும் கூட இருந்து பார்த்துக்கொண்டே இருக்கிறாள். இந்நிலையில், ஒரு தாசியின் முலமாக முத்தாம்மாவிற்கு அந்தத் தீர்வு அவள் முன்னால் வைக்கப்படுகிறது.

அதை அவளிடம் கொண்டுவரும் நாகலட்சுமி, “ஒருவழியும் இல்லாம நீங்க தீப்பாயக்கூடாது. ஒரு வழி இருக்கணும். முடிவை நீங்களே எடுக்கணும்…” என்கிறாள். அதாவது, தானே தன் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை அவளுக்கு வழங்கப்படுகிறது. முத்தம்மாவிற்குத் தெரியும், இது மங்கம்மாவின் ஏற்பாடு என்று. எனினும் இது பாளையக்காரர்களின் சதியாக இருக்குமோ என்று கேட்டுவைக்கிறாள். அவள் அப்போதே முடிவெடுத்துவிட்டாள். தனது விதியை அந்தக் கிழ ராணி தீர்மானிக்கக்கூடாது. ஆச்சர்யமாக, அம்முடிவு, முத்தம்மாவின் மன ஊசலாட்டத்தை நிறுத்தி, அவள் முகத்தில் மங்கம்மா விரும்பிய அந்த மந்தகாசத்தையும் தோற்றுவிக்கிறது.

மிகச் சிறந்த கதைகள் எளிமையாகவே இருக்கின்றன. அவற்றின் பாத்திரங்களிலும் ஒரு எளிமை திகழ்கிறது. அப்பாத்திரங்களில் ஆசிரியரின் வெளிப்பாடு மிகையின்றி இயல்பாக அமைகிறது. அது வாசிப்பவரின் மனதிற்கு எழுத்தை  இணக்கமாக்கி, வாசிப்பை ஒரு உற்சாகச்செயலாக ஆக்குகிறது. மேலும், இதில் பெரிய மெனக்கீடு இன்றி ஒரு படைப்புக் கட்டமைப்பு (க்ரியேடிவ் ப்ளாட்) உருவாகி வருகிறது. கதையின் உச்சம் (ஒரு திறப்பாகவோ, தரிசனமாகவோ அல்லது நாடகீயத் தருணமாகவோ இருக்கலாம்) எந்தவித முன்னறிவிப்புமின்றி  நிகழவேண்டும். ஒரு கதையின் எளிமை அதன் உச்சத்தைத் உயர்த்திப் பிடிப்பதாக இருந்தால் அது சுவையான வாசிப்பனுபவத்தைத் தருகிறது. எரிசிதை அந்த வகைமையில் அமைந்ததாக உணர்கிறேன்.

பார்த்தா குரு

 

இருளில் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

இருளில் கதையை வாசிக்கையில் அந்த உச்சகட்ட அனுபவம் போல ஒன்று இல்லை என்றாலும் பெரும்பாலானவர்களுக்கு அந்த வகையான ஒரு மிஸ்டிக் அனுபவம் நடந்திருக்கும் என்று தோன்றுகிறது. அதாவது வாழ்க்கை முழுக்க மறுபடி தேடினாலும் மீண்டும் நடக்க முடியாத ஒரு நிகழ்ச்சி. அதை தேடுவதிலிருந்து நாம் மீளவே முடியாது. அது நம்மை முழுக்கவே மாற்றிவிடும்

1982 பக்கமாக நடந்த சம்பவம். நானும் ஒரு நண்பரும் காரில் செல்கிறோம். இடம் கர்நாடகத்தில் பெல்காம். மிக ஒதுக்குபுறமான சாலை. இருபக்கமும் வயல்கள். நல்ல இருட்டில் செல்கிறோம். நள்ளிரவு கடந்திருக்கும். திடீரென்று ஓர் இளம்பெண் அலறிக்கொண்டே சாலையை கடந்து குறுக்காக ஓடினாள். டிரைவர் வண்டியை நிறுத்தவில்லை. நிறுத்து நிறுத்து என்று கத்தினோம். அவன் நிறுத்தாமல் நெடுந்தூரம் வந்துவிட்டான். அதன்பின் அவனை சத்தம்போட்டோம். அவன் திரும்பிப்போகவும் மறுத்துவிட்டான். அப்படியே வந்துவிட்டோம். போலீஸில் சொல்லவில்லை. எங்களுக்கு தெரியாத ஊர்

அதன் பின் அந்த ஊர் செய்தித்தாள்களில் தேடினேன். ஆனால் பொதுவான எடிஷன்களில் செய்தி ஒன்றும் இல்லை. அவள் என்ன ஆனாள்? உயிருடன் இருக்கிறாளா? இன்றைக்குவரை அந்தக் காட்சி மறையவில்லை. அவள் கொல்லப்பட்டிருந்தாலோ கற்பழிக்கப்பட்டிருந்தாலோ நாங்கள் பழிபாவத்தில் பங்காளிகள். இல்லை அது புருசன் பெஞ்சாதி சண்டை அந்தமாதிரி ஏதோ என்றால் ஒன்றுமில்லை. அந்தப்புதிரை இன்றுவரை கடக்கமுடியவில்லை. காலம்போகப்போக அது பெரிதாகி இன்று கனவில் எல்லாம் வர ஆரம்பித்துவிட்டது. என் வாழ்க்கையின் பார்வையையே சிதைத்துவிட்டது.

ஆர். ஆர்

 

அன்புள்ள ஜெ

இருளில். வலம் இடம் போன்ற கதை உலகம். பொவதுவாக நினைப்பது போல் வாழ்க்கையின் மறுபக்கம் அல்லது உண்மை வேறு எங்கோ இல்லை அது நம் அருகாமையில் உள்ளது. மரபுகள் உருவாக்கிய பாதைகள் வழியாக தன்னை அதற்காக தயாரித்து கொண்டு  உண்மை காணப்படும் அதே சமையம்  மறுபுறம் சிலரை உண்மை வந்து கண்டுவிடுகிறது.

அப்துல் அவர்கள் சொல்வது போல் நாம் வாழ்க்கையை நமக்கே ஆன சிறுசிறு தீப்பெட்டிகளாக ஆக்கிகொள்கிறோம். நமக்கு சமீபத்தில் உள்ள அந்த ஓங்குதாங்கான உண்மையை எதிர்கொள்ளும்போது நம் தீப்பெட்டி அதை தாங்குவதில்லை. அந்த மறுபக்கத்தை பிரம்மாண்டத்தை ஒரு கேப்சூல் வடிவ அனுபவமாக எதிர்கொள்ளும் போது மனம் பித்தாகிவிடுகிறது. அதை புரிந்துகொள்ள கருவிகள் இல்லை என்பதனால் பிரமை பிடித்துவிடுகிறது. சென்று சேரும் இடத்திற்கான  சாலைகள் குண்டும் குழியும் இல்லாமல் சாலையே முழுமையாக வந்து நிலைகுலைய செய்துவிடுகிறது.

அடர் இருளில் வாகனத்தில் தூங்கியபடி நீண்டுஉயர்ந்த மலைதொடரை  ஏறி,  பகலில் இறங்கும்போது மலையை பார்க்கும் அனுபவத்தை இதன் எளிய வடிவம் என்று சொல்லலாம்.

அப்துல் அவர்கள் ஓங்கு தாங்கான அந்த சாலையில் இருபத்தைந்து முறைக்கு மேல் தூங்கி சரியான சமையத்தில் எழுந்து உயிர் பிழைத்திருக்கிறார். அத்தனை முறை அந்த பிரம்மாண்டத்தின் முழுமையில் மயங்கி அழிந்து போகாமல் அந்த ஜின் அவரை மீட்டு இருக்கிறது, அது மீட்காமலும் போக அந்த ஜின்னுக்கு ஆணை உண்டு என்பது அவருக்கு தெரியும். அப்படி விளக்குகள் பொருத்தப்பட்ட இருபுறம் பெருவெளி நீண்ட அந்த  பிரமாண்டமான நெடுஞ்சாலையில் வாகனம் ஓட்டி செல்வது எப்படி இருக்கும். பிரமாண்டத்தின் மிது நாம் வண்டி ஓட்டுகிறோமா அல்லது அது நம்மை ஓட்டுகிறதா என்று அதிர்வான எண்ணங்களுக்கு இட்டு செல்லும். அப்துல் வழிவழியாக அந்த முழுமையை பார்க்க பழகியபடி இருக்கிறார். அதன் மகிமையையும் மயக்கத்தையும் ஓரளவு அறிந்தவர் அவர். அவருக்கு ஆசான்களும் உண்டு. ஆனால் தருண் அந்த முழுமையை  ஒரு மின்னல் வெட்டில் காண்கிறான். அதை  முற்றிலும் எதிர்பாராது மிக அருகே கண்டுவிட்டான். அப்துல் நீலம் என்றால் தருண் கரு நீலம் என்கிறான். தருணை  ஜீன் காப்பாற்ற வேண்டும். ஆனால் அவனிடம் எந்த ஸ்டீயரிங்கும் இல்லை. அதை தெய்வத்திடமே விட்டுவிட்டார் அப்துல்.

நன்றி

பிரதீப் கென்னடி

25 எச்சம் [சிறுகதை] 24 நிறைவிலி [சிறுகதை] 23 திரை [சிறுகதை] 22.சிற்றெறும்பு [ சிறுகதை] 21 அறமென்ப…  [சிறுகதை] 20 நகை [சிறுகதை] 19.எரிசிதை [சிறுகதை] 18 இருளில் [சிறுகதை] 17 இரு நோயாளிகள் [சிறுகதை] 16 மலைபூத்தபோது [சிறுகதை] 15 கேளி [சிறுகதை] 14 விசை [சிறுகதை] 13. இழை [சிறுகதை] 12. ஆமென்பது[ சிறுகதை] 11.விருந்து [சிறுகதை] 10.ஏழாம்கடல் [சிறுகதை] 9. தீற்றல் [சிறுகதை] 8. படையல் [சிறுகதை] 7.கூர் [சிறுகதை] 6. யட்சன் [சிறுகதை] 5. கந்தர்வன் [சிறுகதை] 4.குமிழிகள் [சிறுகதை] 3.வலம் இடம் [சிறுகதை] 2.கொதி[ சிறுகதை] 1.எண்ணும்பொழுது [சிறுகதை]
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 25, 2021 11:33

March 24, 2021

சிறுகதையின் திருப்பம்

ஓ.ஹென்றி சிறுகதையின் வழிகள் சிறுகதை ஒரு சமையல்குறிப்பு

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,

புத்தாண்டு வாழ்த்துக்களுடன் மின்னஞ்சலில் மீண்டும் சந்திக்கிறேன். கன்பெராவில் 2009 இல் சந்தித்ததை முன்னைய எனது மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்தேன். இப்போது ஒரு கேள்வி எழுந்தது – சிறு கதைகள் பற்றியது. சிறுகதையின் இறுதித் திருப்பம் என்பது எனக்கு இன்னும் நன்கு புலப்படாததாகவேயுள்ளது. இந்த இறுதி திருப்பம் என்ற வரைவிலக்கணம் யாரால், எப்போது, ஏன் வரையறுக்கப்பட்டது ?

யதார்த்தமாக நிகழ்ந்த நிகழ்வொன்றை சிறுகதையாய் எழுதினால் இந்த இறுதித் திருப்பமும் யதார்த்தமாய் அமைந்து விடுவதும், ஆனால் வலிந்து இறுதித் திருப்பமொன்றுக்கு இழுத்துச் செல்வது பல வேளைகளிலும் நாடகத் தன்மைக்கு இடட்டு செல்வதாயும் படுகிறது.

சிறுகதைகள் ஒரு முரண் ஒன்றை சுற்றிப் பின்னப்படுவது வழக்கம். இதிலும் திருப்பங்கள் இல்லாது முடியும் கதைகளையும் படித்திருக்கிறேன்.

அன்புடன்

யோகன் – கன்பெரா

***

எட்கார் அல்லன் போ

அன்புள்ள யோகன்,

படத்தில் முகத்தை கண்டபின்னர்தான் மெல்லிய நினைவு. பத்தாண்டுகள் கடந்துவிட்டிருக்கின்றன.

சிறுகதை என்றல்ல, எந்த இலக்கியவடிவத்திற்கு மாறா இலக்கணம் என்று ஒன்று இல்லை, இருந்தால் அதை படைப்பியக்கம் மீறிச்செல்லும். ஆனால் அது உருவாகி வந்த வரலாறு ஒன்று உண்டு. அது ஆற்றும் பணி என ஒன்று உண்டு. அவற்றினூடாக அதன் வடிவம் திரண்டு வந்திருக்கிறது. இன்றை அடைந்திருக்கிறது. வளர்ச்சியடைந்து மாறி நாளை நோக்கிச் செல்கிறது.

கதை என்பது என்றும் இருந்தது. சிறியகதைகள். தேவதைக்கதைகள், நீதிக்கதைகள், உதாரணக்கதைகள், அனுபவக்கதைகள். ஈசாப் குட்டிக்கதைகள், பஞ்சதந்திரக்கதைகள் என பலவகையான உதாரணங்கள். அந்தச் சிறியகதைகளில் நன்கு பழக்கம் கொண்ட வாசகன் அவற்றின் முடிவை ஊகித்துவிடுவான். ஆசிரியனின் நோக்கத்தையும் அறிந்துவிடுவான். ஆகவே கதைமுடிவில் அவன் பெரிதாக உளநகர்வு அடைவதில்லை

செக்கோவ்

அந்நிலையில் அவன் எதிர்பாராத ஒரு திருப்பத்தை அளிக்கையில் அவன் அகம் தூண்டப்படுகிறது. அவன் வியப்பும் திகைப்பும் அடைகிறான். இவ்வாறு எதிர்பாராத திருப்பம் கொண்ட கதையையே சிறுகதை என சிறுகதை முன்னோடிகள் உருவாக்கினர். முதன்மையானவர்கள் எட்கார் ஆல்லன் போ, ஓ.ஹென்றி போன்றவர்கள்.

இந்த வடிவத்தை மேலும் கூர்மையாக, வாழ்க்கையின் மெய்யான சிக்கல்களை பேச பயன்படுத்தலாமென கண்டடைந்த சிறுகதை முன்னோடிகள் இருவர். மாப்பஸான், செக்காவ். அவர்கள் வாழ்க்கையின் முரண்பாடுகளைச் சொல்ல மிகச்சிறந்த வடிவம் இது என உணர்ந்தனர். நாம் ஒன்றை நினைப்போம், அது அல்ல வாழ்க்கையின் உண்மை என மீறிச்செல்ல சிறுகதை சிறந்த வடிவம் என அவர்கள் காட்டினர்.

மாப்பஸான்

அதன்பின் நவீன இலக்கியம் பெருவளர்ச்சி கண்டது. சொல்வது அல்ல உணர்த்துவதே இலக்கியம் என்ற புரிதல் உருவாகியது. அதற்குச் சிறுகதை வடிவம் உகந்தது என கண்டடையப்பட்டது. ஒரு வாழ்க்கைச்சூழலை, ஒரு சந்தர்ப்பத்தைச் சொல்லி வாசகன் மேலும் சென்று தானே கற்பனைசெய்ய வைக்க அது வசதியானது.  ‘சொல்லாமல் உணர்த்தும் கதை’ என சிறுகதை வரையறை செய்யப்பட்டது.

சிறுகதையின்   ‘மெய்யான கதை’ இருப்பது அதன் முடிவுக்குப் பின்னர்தான். முடிவிலிருந்து மேலே செல்வதே நல்ல சிறுகதை. முடிவிலிருந்து மேலே செல்ல வாசகனுக்கு உந்துதல் வரவேண்டுமென்றால் முடிவு கூர்மையாக இருக்கவேண்டும். வாசகனை தூக்கி தன் கற்பனையின் உலகில் வீசிவிடும் ஆற்றல் அதற்கு இருக்கவேண்டும். அவ்வாறுதான் சிறுகதையின் முடிவு முக்கியமானதாக ஆகியது

அந்த முடிவு திருப்பமாக இருந்தாகவேண்டும் என்பதில்லை. திருப்பம் இருக்கலாம் [ஜெயகாந்தனின் அக்கினிபிரவேசம்] முத்தாய்ப்பு இருக்கலாம் [சுந்தர ராமசாமியின் ஜன்னல்] கவித்துவமான ஓர் உச்சமாக இருக்கலாம் [வண்ணதாசனின் நிலை] உருவகத்தன்மையாக இருக்கலாம் [அசோகமித்திரனின் புலிக்கலைஞன்] ஆனால் முடிவு வலுவானதாக இருக்கவேண்டும். இதுவே இன்றைய பொது இலக்கணம்

ஆனால் எதிர்பாராத முடிவு என்பது இன்னமும் கூட முக்கியமானதே. அது சிறுகதையின் ‘செவ்வியல் வடிவம்’ அது அளிக்கும் விசையை வேறுமுடிவுகள் அளிப்பதில்லை. செயற்கையாக இல்லாமல் உண்மையான வாழ்க்கைநுட்பம் ஒன்றைநோக்கி அந்த முடிவு திரும்பிக்கொள்ளும் என்றால் அது சிறந்த சிறுகதைதான். அசோகமித்திரனின் பல மகத்தான கதைகள் இறுதித்திருப்பம் கொண்டவைதான்.

இப்படிச் சொல்கிறேன். யதார்த்தமான ஒன்றை எழுதலாம், ஆனால் அது சிறுகதை அல்ல, கதைதான். அதில் நாம் கண்டடையும் ஒன்று, வாசகனுக்கு நம்மால் உணர்த்தப்படும் ஒன்று, இறுதிமுடிச்சாக எழும் என்றால் அது நல்ல சிறுகதை

ஜெ

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 24, 2021 11:35

பிழைப்பொறுக்கிகள் – கடிதம்

பிழைசுட்டுபவர்கள் அறமென்ப…  [சிறுகதை]

திரு. முருகவேளின் முகநூல் பதிவை கதிர் முருகன் அனுப்பி இருந்தார். 20 ஆண்டுகளாக சுமார் 50 க்கு மேல் இதுபோன்ற விபத்து வழக்குகளை ( குற்றவியல், இழப்பீடு) நடத்தியவன் என்பதால் இக்கருத்தை வெளியிடுகிறேன். கதிருக்கு அனுப்பிய பதில் இது.

திரு. முருகவேள் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளம் வழக்கறிஞர்களையும், ஏழை தொழிலாளிகளையும் ஜெயமோகன் இழிவு செய்வதாக “அறமென்ப” சிறுகதையை வாசித்து எழுதியுள்ளார்.

இந்த அறமென்ப  கதையில் அவருக்கு என்ன பிரச்சினை?

விபத்து வழக்குகளில் பெரும்பாலும் பாதிக்கப் பட்டவர்களுக்கு வக்கீல் கட்டணம் தர பணம் இருக்காது. அலைந்து காயச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், போலீஸ் ஸ்டேஷன் ஆவணங்கள் ஆகியவற்றை வாங்கத் தெரியாது. இது தவிர நீதிமன்றக் கட்டணம் வேறு. பழைய பெரும் வக்கீல்கள் இதை எல்லாம் செய்ய மாட்டார்கள். ஆவணங்களை நாமே வாங்கிக் கொண்டு வந்து கொடுத்து பணமும் கொடுத்தால் வழக்கு நடத்துவார்கள்.

இதனால் எண்ணற்ற விபத்து வழக்குகளில் நஷ்ட ஈடு கிடைக்கமலேயே அந்தக் குடும்பங்கள் நடுத்தெருவில் நின்றன.

இளம் வக்கீல்கள் இந்தப் பொறுப்பைப் தாங்கள் ஏற்றுக் கொண்டனர். வழக்குப் போடுவதற்கான அனைத்து விவரங்களையும், ஆவணங்களையும் தாங்களே திரட்டினர். செலவுகளையும் தாங்களே செய்தனர். தங்கள் கட்டணத்தை வழக்கு முடிவில் தாங்கள் பெற்றுத் தரும் நட்ட ஈட்டுத் தொகையில் இருந்து எடுத்துக் கொண்டனர்”

பதில்: இக்கதைக்கு தொடர்பானது அல்ல, ஆனாலும் இது முற்றிலும் தவறு.  முதலில் இழப்பீடு வழக்கில் நீதிமன்ற கட்டணம் மிக மிக குறைவு, அதிலும் விலக்கு மனு செய்து ரூ. 300 க்குள் கட்டணம் செலுத்த அனுமதி பெற்று விடுவோம். ’நிலை பெற்ற மேல்சாதி வழக்கறிஞர்’ உட்பட அனைத்து வக்கீல்களுக்கும் இழப்பீடு வழக்கு என்பது பெரும் வருவாய் தரக் கூடியது, ஆகவே இவ்வகை வழக்கிற்கு தமது அதிகபட்ச உதவியை அனைத்து வகை வழக்கறிஞரும் எப்போதும் செய்து வந்தனர். ஒரு மோட்டார் வாகன விபத்து வழக்கு தாக்கல் செய்யவே படாமல் இருந்தது என்பது அரிதினும் அரிது, ஆயிரத்தில் ஒன்று, வக்கீல்கள் விட மாட்டார்கள்.

ஆவணங்களை சேகரித்தல் என்பதும் பெரிய விஷயம் அல்ல, தொடர்புடைய குற்ற வழக்கில் போலீசார் நீதிமன்றத்தில் ஆவணங்களை தாக்கல் செய்வார்கள், நகல் பெறலாம், அதை இழப்பீட்டு வழக்கில் தாக்கல் செய்யலாம். இது இயலாத பெரும் பணி அல்ல, நிலை பெற்ற மேல் சாதி வழக்கறிஞர் உட்பட எல்லா வழக்கறிஞர்களும் என்றும் தாமாக செய்வதுதான். ஆகவே பெரும் வழக்கறிஞர்கள் கட்சிக்காரர்களை அலைகழித்தனர் என கூற இயலாது.

ஆனால் திரு. முருகவேள் கவனிக்க தவறியது என்பது இது போன்ற வழக்கில் முக்கிய அம்சமாக உள்ளது காயம்பட்டவருக்கு அல்லது இறந்து போனவருக்கு வழக்கு போடும் முன்பே முன்பணம் தருவது. ஒரு லட்சம் வரை முன் பணம் தரும் வழக்கறிஞர்கள் உள்ளனர். ஆகவே இதை தர வசதி படைத்த அதாவது ஆண்டுக்கு சுமார் 20 லட்சம் முதலீடு செய்யும் அளவுக்கு பணம் படைத்த தன்மானத்தை இழக்க தயாரான கேஸ் பிடிக்கும் வக்கீல்கள்தான் இத்துறையில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இதில் நிலை பெற்ற அனைத்து சாதி வழக்கறிஞர்களும் அடக்கம். வழக்கு முடிந்தபின் அந்த வழக்கறிஞர் மிகை வட்டியுடன் முன்பணத்தை திரும்ப பெறுவார். ஏழை இளம் வக்கீல்களால் இங்கு போட்டியிட இயலாது. இவ்வாறு முன் பணம் கொடுத்து கேஸ் பிடிப்பது தொழில் ஒழுங்குக்கு எதிரானதும் கூட.

சரி ஜெயமோகன் கதையில் என்ன பிரச்சினை?

“ஒருவர் மீது விபத்து ஏற்படுத்தியதாக வழக்கு போட்டால் அவர் நஷ்ட ஈடு தர வேண்டியதில்லை. அவர் வாகனத்தை இன்சூர் செய்திருந்தால்  இன்சூரன்ஸ் கொடுக்கும். எனவே கார்காரரிடம் பதினைந்து லட்சம் கேட்பதற்கு வாய்ப்பே இல்லை.  இன்சுரன்ஸ் போடும் போதே ஃபுல் இன்சூரன்ஸ், தேர்ட் பார்ட்டி இன்சூரன்ஸ் என்று சொல்லித்தான் போடுகிறார்கள். எனவே தனது வண்டியில் அடிபட்டவருக்கு இன்சூரன்ஸ் கமபெனி நஷ்ட ஈடு கொடுக்கும் என்பது கார்க்காரருக்குத் தெரியாமல் இருக்காது.

உங்கள் மீது வழக்கு போட்டுக் கொள்கிறோம். இன்சூரன்ஸ் கம்பெனியிடம்  பணம் கிளைம் செய்து கொள்கிறோம் என்று வேண்டுமானால் சொல்லி இருப்பார்கள். அதற்குக் கூட வாய்ப்பு மிக மிகக் குறைவுதான்”

பதில் : இது இக்கதையில் வக்கீல் நண்பர் மூலம் பேசப்பட்டுவிட்டது. முருகவேள் அந்த பகுதியை படிக்கவில்லை. இக்கதையில் அவர் வக்கீல் நண்பரை சந்திக்கும் முன்பு காவல் நிலையத்தில் உள்ள வக்கீல்களால் தவறாக அச்சுறுத்தபடுவதாக தான் உள்ளது.

உயிரைக் காப்பாற்றியவர் மீது வழக்கு போடுவது அதீத கற்பனை.

பதில் : ஆம், இன்று இந்த சூழல் இல்லை. ஆனால் முன்பு அரிதாக இருந்தது, நான் அவ்வாறு ஒரு வழக்கை நடத்தி உள்ளேன்.

இக்கதையில் வரும் ஏழையான காயம்பட்டவரின் பேராசை என்பது குரூரமானது, எவ்வித பொய்யையும் நீதி மன்றத்தில் சொல்ல தயாரான இது போன்றவர்களை நான் நேரில் பார்த்துள்ளேன். வேண்டுமானால் வசதி படைத்தவர்கள் இன்னும் பேராசைகாரர்கள் எனக் கூறலாம், இவர்களையும் நான் நேரில் பார்த்துள்ளேன்.

இந்த கதையில் வருவது போன்ற அசுர வக்கீல்கள் இன்றும் உண்டு, அவர்கள் கட்சிக்காரரை மருத்துவமனையில் சென்று நேரில் பார்ப்பது தாஜா செய்வது, முன்பணம் கொடுப்பது, காவல் நிலையம் சென்று வழக்கை வளைப்பது போன்றவை சாதாரணம். இந்த வக்கீல்கள் எவரும் வசதி அற்றவரோ அப்பாவியோ நேர்மையாளர்களோ அல்ல.

……

நான் கருதும் பிழைகள் :

WhatsApp பார்ப்பதாக இக்கதையில் உள்ளது. ஆகவே கதை காலத்தை 2015 இக்கு பின் என கூறலாம்.

இக்காலத்தில் தனியார் மருத்துவமனைகள் முந்திக்கொண்டு விபத்து நோயாளிகளை வலைவீசி பிடிக்கின்றன. காவல்துறை இது போன்று பொய் வழக்கு போடுவோம் என அச்சுறுத்துவது இல்லை. 2 லட்சத்தில் இவ்வழக்கை வழக்கில்லாமல் முடித்துவிடலாம் என வக்கீல் நண்பர் கூறுவது அதீதம், அதிகபட்சம் சுமார் 25000 செலவாகலாம்.

ஜெயமோகன் எனது சிறுகதைகளை எதிர்மறையாக விமர்சித்தார், ஆகவே நானும் பதிலடி கொடுக்கிறேன் என எழுதப்பட்டது திரு. முருகவேளின் முகநூல் பதிவு.

கிருஷ்ணன்,

ஈரோடு.

 

அன்புள்ள கிருஷ்ணன்,

நீங்கள் சொல்வது சட்டம் மற்றும் நடைமுறை. அத்துறையில் இருக்கிறீர்கள். முருகவேளுக்கு சட்டமும் தெரியாது நீதிமன்றமும் தெரியாது நடைமுறையும் தெரியாது. இலக்கியம் அறிமுகமே இல்லை. கேஸ் நடைமுறையெல்லாம் இப்படித்தான் இருக்கும்போல என நம்பி கற்பனை செய்து எழுதியிருக்கிறார்.

ஆனால் தெரிந்தது ஒன்று உண்டு, அது உங்களுக்குத் தெரியாது. அரசியல். அதிலும் முகநூல் வம்பரசியல். இங்கே ‘ஏழைப்பங்காளன்’ ‘முற்போக்கு’ ‘கலகன்’ ‘புரட்சியாளன்’ என பல வேடங்கள் உண்டு. இந்த கூட்டத்தை இலக்காக்கி ஓர் அரசியலை எழுதுகிறார், அவ்வளவுதான். அவர்களுக்கு உண்மை முக்கியமில்லை. தாங்கள் அணியும் வேடத்துக்குரிய கூச்சல்களே முக்கியம்.

நீங்கள் சட்டம், தர்க்கம் ஆகியவற்றை முன்வைக்கிறீர்கள். அது அவருக்கு ஒரு பொருட்டே அல்ல. நீங்கள் ‘உயர்குடி’ வக்கீல் அவர் ‘ஏழைப்பங்காளி’ என ஒரு வேடம்போட்டு ஒரு ஆட்டம் ஆடி அப்படியே கடந்து செல்வார். இதைப் பொருட்படுத்தியிருக்கவேண்டியதில்லை.

*

கதையில் நீங்கள் பிழை எனச் சுட்டியிருப்பது பற்றி. இந்த நிகழ்வே 2014ல் மெய்யாக நிகழ்ந்து ஒருவரால் எனக்குச் சொல்லப்பட்டது. அன்று எண்பதாயிரத்தில் முடிந்தது.

வழக்குப் பதிவானால் இன்ஷ்யூரன்ஸ் பிரீமியம் தொகை  எவ்வளவு ஏறும் என்பதை ஒரு பத்தாண்டு கணக்கில் போட்டு பார்த்தால் இது பெரிதல்ல. சொல்லப்போனால் சின்ன ரிப்பேர்களையே இப்போது எவரும் இன்ஷ்யூரன்ஸில் கிளெயிம் செய்வதில்லை. தன் வண்டிமேல் இன்னொரு வண்டி முட்டியிருந்தால் மட்டுமே கிளெயிம் செய்கிறார்கள்.

*

இந்த ’இழிவுபடுத்தல்’ குற்றச்சாட்டு இன்று எல்லா கதைகள் மேலும் வைக்கப்படுகிறது. இந்தக் கூட்டம் உருவாக்கும் கெடுபிடிகளுக்கு உள்ளே நின்று எழுதாத அத்தனைபேர் மேலும் இந்த தாக்குதல் கூட்டாகத் தொடுக்கப்படுகிறது. சென்ற சில மாதங்களில் மட்டும் என்னுடைய பத்து கதைகளைப்பற்றி இழிவுபடுத்துகிறார் என முகநூலர்கள் எழுதியிருக்கிறார்கள். அவர்களே எனக்கு நகலெடுத்து அனுப்பியிருக்கிறார்கள்.

எல்லா காலத்திலும் இலக்கியம் இவர்களுக்கு மேலே, இவர்களை பொருட்டெனக் கருதாமல், கடந்து செல்கிறது.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 24, 2021 11:34

விருதுகள், அடையாளங்கள்

அன்புள்ள ஜெ

நேரடியாகவே இதை எழுதிவிடலாம் என நினைக்கிறேன். முகநூலில் நான் வாசித்த இந்தப்பதிவே இதை எழுதக் காரணம்

முகநூல் பதிவு

பாசிச பாஜக அரசு தனது அசுர பலத்தை அனைத்துத் துறைகளிலும் மூக்கை நுழைத்து செயல்படுத்துகிறது என்று சொன்ன எந்த திராவிட இலக்கிய ஆர்வலரும் , மனமுவந்து சாகித்ய அகாடமி விருதை இமையம் மற்றும் பூமணி அவர்களுக்குக் கொடுத்த போது , பாஜகவின் ஆட்சியில் இலக்கியத்தில் பாரபட்சம் காட்டப்படவில்லை என்றோ, திரைத்துறைக்காக வெற்றி மாறனின் படம், விஜய் சேதுபதிக்கு , தனுஷுக்கு தேசிய விருதுகள் அறிவிக்கப்படுகிற போதும் மனமுவந்து பாராட்டுகிற மனமில்லை. நீ என்ன வேணா நடுநிலையோடு செயல்பட்டுக்கோ, நாங்க பாஜகவிற்கு எதிராக ஒரு அஜெண்டா வச்சிருக்கோம், அதுபடி தான் மனச்சாட்சி இல்லாமல் செயல்படுவோம்னு திராவிட ஆதரவாளர்கள் இலக்கியவாதிகள் போர்வையில் செயல்படுவது அப்பட்டம். இந்த கும்பல்கள் பத்திரிக்கையாளர்களாக , இலக்கியவாதிகளாக , சினிமா நடிகர்களாக ,இயக்குனர்களாக கல்வித் துறை அதிகாரிகள் என தன் கால்களை தமிழகத்தின் அனைத்துத் துறைகளிலும் விரித்து வைத்துக் கொண்டு பாரபட்சமாக செயல்பட்டுக் கொண்டே மோடியை வெட்கமே இல்லாமல் விமர்சித்துத் திரிகிறார்கள். வெற்றி மாறனோ, விஜய் சேதுபதியோ, இமையமோ விருது வேண்டாம்னு சொல்ல மாட்டார்கள்… ஆனால் இந்த நாடகம் தெரியாமல் தன்னை இந்துத்துவாதி, ஆளைப் பிடித்து விருதை வாங்கிக் கொண்டோம்னு சொல்லிருவார்கள்னு முட்டாள்த்தனமாக ஜெயமோகன் பத்ம ஸ்ரீ விருது வேண்டாம்னு வீராப்பு விட்டது தான் மிச்சம்.

லக்ஷ்மணப் பெருமாள்

*
இன்று இமையம் சாகித்ய அக்காதமி வாங்கும்போது அவரைச் சார்ந்த திமுக காரர்கள் அத்தனைபேரும் ‘ஆகா திராவிட எழுத்தாளருக்கு சாகித்ய அக்காதமி’ என்று கூச்சலிட்டு குதூகலிக்கிறார்கள். இவர்களே சில ஆண்டுகளுக்கு முன் சாகித்ய அக்காதமியை திருப்பி அளிக்காத இலக்கிய எழுத்தாளர்களை வசைபாடி இழிவு செய்தார்கள்.

இந்தக்கும்பலை ஒரு பொருட்டாக எடுத்துக்கொண்டு நீங்கள் சாகித்ய அக்காதமியை ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்பதும் பத்மஸ்ரீ விருதை மறுத்ததும் அசட்டுத்தனம் என்றுதான் நினைக்கிறேன். இதை அப்போதே பலமுறை எழுதிவிட்டேன். அந்த விருதால் உங்களுக்கு கிடைக்கும் அங்கீகாரங்கள் பல உண்டு. நீங்கள் அயல்மொழிகளுக்குச் செல்லும் வாய்ப்புகளைக்கூட அதன் மூலம் அடைந்திருக்கலாம்

ஆர். பாஸ்கர்

அன்புள்ள பாஸ்கர்,

சில முடிவுகளை நாம் முற்றிலும் புறவயமாக எடுக்க முடியாது. அகவயமான ஒரு தெளிவால் , ஒரு கணத்தில் அம்முடிவை எடுப்போம். ஆனால் பின்னர் மெல்லமெல்ல அதற்கான அறிவார்ந்த விளக்கங்களையும் தர்க்கங்களையும் நாம் கண்டடைவோம். இதெல்லாம் அத்தகையதே. இந்த பதிலை என்னை அறியாத ஒருவரிடம் சொல்லமுடியாது. நீங்கள் ஓரளவு என்னை அறிந்தவர் என்பதனால் இதை எழுதுகிறேன்.

நான் வெண்முரசு எழுதும்போது, குறிப்பாக நீலம் வழியாக, அடைந்த நகர்வு ஒன்று உண்டு. அதை மேலும் மேலும் தெளிவாக இன்று உணர்ந்து கொண்டிருக்கிறேன். என் 21 வயதுமுதல் அகவயமான தேடல்கள் கொண்டவனாகவே இருந்திருக்கிறேன். பல ஆசிரியர்கள், பல வழிமுறைகள், பல பாதைகள், பல திசையழிதல்கள், பல தோல்விகள்.

நான் அடைந்ததை நானே அறியவே 25 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. மற்றவர்களுக்கு எளிதான பாதையாக இருக்கலாம். நான் எழுத்தாளன், அந்த அகங்காரம் கொண்டவன், காமகுரோத மோகங்களில் ஆழ்ந்தவன். ஆகவே எனக்கு மிகக்கடினமான பாதையாக இருந்திருக்கிறது என நினைக்கிறேன். 25 ஆண்டுகள், கால்நூற்றாண்டு!  நித்ய சைதன்ய யதியைப் பொறுத்தவரை நான் அவருக்கு ஒரு மாபெரும் வீணடிப்புதான்.

ஒரு மெல்லிய நகர்வுதான். படிப்படியாக நடந்தது. நடப்பதே நடந்ததன் பின்னர்தான் அறிய முடிந்தது. ஆனால் அதன்பின் நான் என்னை வேறொருவராக உணரத் தொடங்கினேன். அதிலொன்று ஓர் உயர்வெண்ணமும் ஒரு வகையான துளியுணர்வும் ஒருங்கே வரும் ஒரு நிலை.

அதை இப்படி விளக்குகிறேன். ஒருபக்கம் ’நாமார்க்கும் குடியல்லோம்’ என்னும் நிலை. இனி உலகியலின்பொருட்டு எவர் முன்னிலும் ஒரு படி குறைவென நிற்க என்னால் முடியாது. கூடாது என்றோ மாட்டேன் என்றோ அல்ல, இயலாது என்று சொல்கிறேன். என் தலைக்குமேல் அரசோ மதமோ ஏதும் இருக்கமுடியாது. எந்த அடையாளத்தையும் அறுதியாக நான் ஏற்றுக்கொள்ள முடியாது.

அத்தகைய நிலையை எங்கோ அகத்தில் உணர்பவர்கள் அதற்கான அடையாளங்களை வெளியே சூடிக்கொள்கிறார்கள். அது ஒரு அறிவிப்பு. அத்தகைய அறிவிப்புகள் தேவையா என நான் எண்ணியதுண்டு. எழுத்தாளனுக்கு அவை தேவையில்லை என்றே உணர்கிறேன். ஆனால் அவை இன்றி இங்கே வாழ்வதும் கடினம். அகத்தே பெண்ணாக மாறியவன் உடனே பெண்களுக்குரிய உடைக்கு மாறுவதுபோலத்தான் இதுவும் என்று கொள்ளுங்கள்.

1991ல் இந்திய ஜனாதிபதியிடமிருந்து சம்ஸ்கிருதி சம்மான் விருதைப் பெற்றதை பெரும் கௌரவமாக நினைத்தவன்தான் நான். இப்போது அப்படி ஒரு மேடையில் சென்று வணங்கி அத்தகைய ஒன்றை பெறமுடியாது. ஒரு வரிசையில் நிற்பதே முடியாது. அந்நினைப்பே ஒவ்வாமையை உருவாக்குகிறது. இது அந்த விருது, அந்த அமைப்பு மீதான விலக்கமோ அவமதிப்போ அல்ல. என்னை நான் உணரும்விதம் வேறு, அவ்வளவுதான். அதை இதற்கு மேல் விளக்க முடியாது.

ஒரு விருதை பெற்றுக்கொள்வேனா? தெரியவில்லை. ஆனால் மேலே நின்று அளிக்கப்படும் ஒன்றை கீழே நின்று ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஆகவே அரசுசார் அமைப்புகளுடன் இயைந்துபோகவே முடியாது. அதனால் இழப்புகள் என்றால் அதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல.

அதேசமயம் இது ஆணவமும் அல்ல. நான் இங்கே செய்வன எதையும் நான் பொருட்டாக நினைக்கவில்லை. இவை வெறும் குமிழிகள். நான் வெறும் குமிழி. எனக்குரியதை ஆற்றி கடந்துசெல்வேன். எனக்குரியதை ஆற்றுவதன் நிறைவுக்கு அப்பால் இவற்றில் பொருளென ஏதுமில்லை. இருந்தால் அது நான் முழுதறியக்கூடிய பொருளும் அல்ல. ஆகவே அது என் ஆர்வமும் அல்ல.

பத்மஸ்ரீயை அல்ல, நான் பஞ்சாயத்தில் பிறப்புச்சான்றிதழ் பெற்றாலே அதற்கு எனக்குத் தகுதியில்லை என்று சொல்லும் பெருங்கூட்டம் உண்டு. அவர்களுக்குப் புன்னகையன்றி ஏதும் எதிர்வினை இல்லை.

இமையம் சாகித்ய அக்காதமி பெறுவதில் மகிழ்ச்சி. நாளை ஒருவேளை அரசியலின் பொருட்டு அவர் துறக்கவும் கூடும். அதுவும் இயல்பே. அதில் முரண்பாடு ஏதுமில்லை. அதெல்லாம் அவர்களின் சொந்தத் தெரிவுகள். இங்கே பொதுவாக இன்றுவரை இத்தகைய விருதுகள் கல்வித்துறையாலும், இலக்கியவாதிகளாலுமே அளிக்கப்படுகின்றன. அரசியல்தலையீடு இருப்பதாகத் தெரியவில்லை.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 24, 2021 11:34

திரை, நிறைவிலி- கடிதங்கள்

திரை [சிறுகதை]

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்

திரை வாசித்ததும் எப்போதும் தோன்றும் ஓருணர்வுதான் மீண்டும் தோன்றியது. உங்களை நீங்களே முறியடித்துக்கொள்ளுகிறீர்கள். ஒரு கதை உச்சமென்றால் மறுநாள் அதைக்காட்டிலும் உச்சம்தொடும் பிறிதொன்றை எழுதிவிடுகிறீர்கள். இப்போதெல்லாம் அக்கதை சொல்லுவதை, கதைக்களத்தை, கதை மாந்தர்களை பின்னர் மீள் வாசிப்பில் கவனிக்கிறேன், முதலில் நீங்கள் கதை சொல்லும் உத்தியை, மொழி வளத்தை, உரையாடல் கட்டமைப்புக்களை அதிகம் கவனித்து பிரமிக்கின்றேன். தனிமனிதனொருவனின் எழுத்துக்கான எல்லையை, அதிகபட்ச சாத்தியங்களை எல்லாம் சர்வ சாதாரணமாக எப்போதோ கடந்து சென்று விட்டிருக்கிறீர்கள் உங்களை வசைபாடுபவர்கள் எல்லாம் இக்கதைகள் அளிக்கும் பேரனுபவங்களை தவறவிடுகிறார்களே என்று திரை வாசிக்கையில் ஆதங்கமாக இருந்தது.

நேற்று மாலை கொஞ்சம் தாமதமாக வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். பொள்ளாச்சி பிரதான சாலையில் இருந்து எங்கள் கிராமத்துக்கு பிரியும் கிளை சாலையின் துவக்கத்தில், ஒரு  ATM  அறையின் முன்னால் அதன் காவலாளி கைகளை கட்டிக்கொண்டு சாலையை வெறித்துப் பார்த்துக் கொண்டு நாற்காலியில் அமர்ந்திருந்தார்.  இறங்கி போய் அவருக்கு உங்களின் ஏதாவது ஒரு கதையை சொல்லலாம் என ஒரு கணம் தோன்றியது. அவர் அக்கதைக்குள் ஆழ்ந்து, அதை தொட்டு, தொடர்ந்து எங்கேனும் மானசீகமாக பயணிக்கலாம், அவரது சொந்த வாழ்வில் எதையாவது அவர் கதையுடன் தொடர்புபடுத்தி கொள்ளலாம், அதில் அவர் துயர்களை கவலைகளை, சலிப்புக்களை, பாரங்களை மறக்கலாம், அவர் வாழ்க்கையே புதிதாகலாம் என்றெல்லாம் தோன்றியது.

வாழ்க்கையை நிறைக்கும் கதைகள் உங்களுடையது. ’’தொடர் சிறுகதைகள்’’ என முன்பு வேறு யாரும் எழுதியிருக்கவில்லை என்று நினைக்கிறேன்.

திரை சொல்லப்பட்ட விதம் அபாரம்

ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பில் ஒரு சிறு தகவலாக கண்ணில் பட்ட செங்கல்லை குர்ஆன் என பட்டுத் துணியால் மூடி பொய் சத்தியம் செய்து ஏமாற்றிய சதிச் செயலை இப்படி தொட்டுத்தொட்டு விரித்து பெரும் சித்திரமாக தீட்டியிருக்கிறீர்கள். சிக்கலான பல பாதைகளில் கதை பயணிக்கிறது எனினும் எங்கும் பிழையின்றி குழப்பமின்றி மிகச்சரியாக சுவாரஸ்யமாக சொல்லப்பட்டிருப்பது டன் ஒவ்வொரு வரியையும் உணர்வெழுச்சியுடன் வாசிக்க வைக்கிறது.

இலைநரம்பமைப்பினை மாணவர்களுக்கு விளக்குகையில் வெளிப்படையாக தெரியும் ஒற்றை நடுநரம்பும் அதன் துணைநரம்புகள் சிலதுமாக இலை முதல் பார்வைக்கு சாதாரணமாகவே தெரியும் ஆனால் அதை நுண்ணோக்கினாலே அதிலிருந்து பிரியும் veinlets எனப்படும் எண்ணற்ற நுண்கிளைகள் அந்த இலை எங்கும் விரவி விளிம்பு வரை வலைப்பின்னலாக அமைந்திருப்பது தெரியும். எங்கும் ஒரு சிறு தடங்கலோ, சிக்கலோ, ஒன்றையொன்று வெட்டிக்கொள்ளுவதோ,  ஒன்றின் பாதையில் ஒன்று குறுக்கிடுவதோ இல்லை. ஆனால் எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்பில் இருந்து இலைப்பரப்பு முழுவதற்குமான உணவையும் நீரையும் தடையின்றி அளித்துக் கொண்டே இருக்கும். அவற்றின் துவக்கம் எங்கோ வெகுதூரத்தில் நீர்க்கரைசலில் முங்கி இருக்கும் வேர் நுனியில் இருக்கும்.  அங்கிருந்து  ஒரு நீர்த்துளிகளாலான ஒரு சரடு அறுபடாமல் தொடருவதைப்போல இந்த கதை சொல்லலும் இருந்தது.

இக்கதைகளுக்கெல்லாம் நன்றி என்று மட்டும் தான் சொல்ல வேண்டி இருப்பது இப்போதெல்லாம் நிறைவின்மையை அளிக்கிறது

நன்றி

அன்புடன்

லோகமாதேவி

 

அன்புள்ள ஜெ

திரை கதையின் தொடக்கம் தாயுமானவரின் அந்த ஒற்றை வரி என நினைக்கிறேன். மூன்று தெய்வங்களாகவும், நிர்குணப்பிரம்மமாகவும், ஞானமாகவும் எல்லாம் நின்றிருப்பதே மாயை என்கிறார். அதெல்லாம் திரை. அதற்கும் அப்பால் இருப்பதே உண்மை. அந்த திரையில் வாழ்வதுதான் உலகியல் வாழ்க்கை

அவரை காட்டு அந்தச் சித்திரத்தில் ஒருகணம் அவர் மீனாட்சியின் பிரேமைக்காக கண்கலங்கும் இடம் அற்புதமானது. அடுத்த கணமே அவர் திரையை கிழித்துக்கொண்டாலும் அந்த திரை பொன்னாலானது. அழகானது.

ஜெ.ராம்குமார்

நிறைவிலி [சிறுகதை]

இக்கதை சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களை நோக்கிப் பேசுகிறது, அவர்கள் மேல் பரிதாபம் கொண்டல்ல, அக்கறையோடு. அவர்கள் தற்போது தாம் வந்து சேர்ந்துள்ள தூரத்தை எண்ணிப் பெருமைப்பட எதுவுமில்லை என்றும், அவர்களிடையே தமது சாதனைகள் குறித்த ஒருவித நிறைவின்மை அவசியம் என்கிறது. இந்த 30-40 ஆண்டுகால சிறு பயணத்திலேயே நிறைவடைந்துவிட்டால், அவர்கள் அடையக்கூடிய உயரங்களின் சாத்தியங்கள் இல்லாமல் போகக்கூடும். இவ்வகையில், நிச்சயம் இதை தலித் இலக்கிய வரிசையில் வைக்கமுடியும். மிக எளிமையான (minimalistic), அதே சமயம், மிக வலிமையான தன்னம்பிக்கை  ஊட்டக்கூடிய கதை.

ராம் நிச்சயமாக ஒரு சிறந்த ஆசிரியர் . அவர் பகாவிடம் காணப்படும் தன்னம்பிக்கையின் எல்லைகளை அறிந்துகொண்டு அதை மேலும் விஸ்தரிக்கிறார் . ராம் முதலில் பகாவிடம் உள்ள தன்னம்பிக்கையை உடைக்கிறார். அதனாலேயே அவள் தன் பெருமையைப் பேசவேண்டியிருக்கிறது. அத்தகைய பெருமை, பலமற்ற அடிமானத்தில் கட்டப்பட்டுள்ளது என்பதை உணர்த்துகிறார்.  அவள் பெருமைப்படும் அப்படத்தைத் தான் மதிக்கவில்லை, அதை அவள் தன் படுக்கை அறையில் மாட்டிவைத்துக் கொண்டால் உபயோகமாக இருக்கும் என்றதும், பகா புண்படுகிறாள். பின்னர், அவளை மீளுருவாக்கம் செய்கிறார்.

பகா, அவர்கள் அமரும் இடத்தை மாற்றுவதற்கான காரணம், அப்பறவைகள் அவளது  துரதிர்ஷ்டமான பால்யகாலத்தை நினைவு படுத்தியதாலா? அல்லது அப்படத்தை உபயோகப்படுத்தும் தேவை வரக்கூடும் என அவள் கணித்ததாலா? அல்லது அதை உபயோகப்படுத்தும் வாய்ப்பை அவள் வலிய உருவாக்கிக் கொள்கிறாளா? உண்மையில் அப்படத்தில் உள்ளது அவள்தானா? அவள் முதலில் உள்ளே வந்து அமர்ந்ததும் சுற்றிப்பார்க்கிறாள்.  பின், இடம் மாறுகையில், தன் வாடிக்கையாளர் (Client) அமர்வதற்கு முன்னர் தான் அமர்கிறாள். இந்தக் கோணத்தில் பார்த்தால் கதை முற்றிலும் வேறாகத் தெரிகிறது.

பார்த்தா குரு

அன்புள்ள ஜெ

நிறைவிலி கதையை நான் ராமின் கோணத்தில்தான் வாசித்தேன். அது ராமின் ஒரு மனமாற்றம் அல்லது ஒரு கண்டுபிடிப்பு. ஆரம்பத்தில் தான் நியமிக்கும் ஒருவரின் உண்மையான எல்லை என்ன என்று கண்டுபிடிக்க முயல்கிறான். அந்த எல்லையின் முடிவின்மை என்று கண்டுபிடித்ததும் அவன் சரண் அடைந்துவிடுகிறான்

ராஜ்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 24, 2021 11:33

எரிசிதை,சிற்றெறும்பு- கடிதங்கள்

எரிசிதை [சிறுகதை] எரிசிதை கதையை படித்ததும் எனக்கு எழுந்த எண்ணம் பெண்ணுக்கு வேறு வழி என்ன இருக்கிறது என்பதுதான். நேராக சிதையில் போய் இறங்கிவிடுவதுதான் வழி. வரலாற்றிலும் அப்படித்தான். வேறு வழி உண்டா என்றால் உண்டு. ஆனால் அந்த வழி ஒரு கற்பனைதான். உடல்சார்ந்தே அவள் அம்மாவாகத்தான் இருக்கிறாள். வயிற்றில் வளரும் குழந்தையை கொன்றுவிட்டு அவள் உயிர்வாழ்ந்தால் நிம்மதியாக வாழமுடியுமா? அந்த வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் இருக்க முடியும்?இரண்டாவதாகச் சுற்றம். அவளுடைய உறவினர்களே அவளை எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? அவளை மதிப்பார்களா? அவள் வாழவிடுவார்களா? இல்லை. அன்றுமில்லை , இன்றும் இல்லை. அவளை அந்தக்குழந்தையே வந்து சிதையில் ஏற்றுகிறது. அவளை மட்டுமல்லாமல் எல்லா பெண்களையும் அப்படித்தான் கருப்பையே சிதையில் ஏற்றுகிறதுஅவள் காத்திருப்பது பயமூட்டும் காட்சி. சிதையின் தீயைத்தான் துளியாக தன் அகல்விளக்கிலே அவள் வைத்திருக்கிறாள்எம்அன்புள்ள ஜெஎரிசிதை. நமக்கு ஒரு வழி மட்டுமே இருக்கும் பொழுது அதை தினிக்கபட்டதாக நினைத்து நம் மனம் அதை ஏற்பதில்லை. பல வழிகளுக்கான வாய்ப்பு வரும் பொழுது கற்பனையால் அனைத்தையும் வாழ்ந்து பார்த்து நம் இயல்புக்கு ஒத்த ஆத்மார்த்தமான வழியை தேர்ந்தெடுத்து கொள்கிறோம்.சின்ன முத்தம்மாள் சிதையேறும் வழியை தேர்ந்தெடுத்து தம் மகனின் மூலம் பெரிய மகாராணி மங்கம்மாளை  வெல்ல முயல்கிறாள்.தாசியான நாகலட்சுமியை எந்த வழிகளும் வாய்க்காத அடிமை என்று நினைப்போம். ஆனால் அப்படி இல்லை அரண்மனையில் வாழ்பவர்கள் தான் அடிமை இவள் எங்காவது  கிளம்பி செல்லும் சுதந்திரம் கொண்டவள் என்று கதையையின் இறுதியை வாசிக்கலாம் என்று தோன்றுகிறது.நன்றிபிரதீப் கென்னடி சிற்றெறும்பு [ சிறுகதை]

அன்புள்ள ஜெ

வெவ்வேறு கதைச்சூழல்களில் வெவ்வேறு மனிதர்களைச் சந்திப்பதுதான் இந்தக் கதைகள் அளிக்கும் இன்பமாக இருக்கிறது. இந்த மனிதர்கள் எல்லாம் இருந்தார்கள். சரித்திரம் இவர்கள் வழியாகவும் நடந்தது. ஆனால் இவர்கள் சரித்திரத்திலே இல்லை. எறும்புகள். ஆனால் எறும்புகளும் சரித்திரம்தான்.சிற்றெறும்பு யானையின் காதில் புகுந்தால் என்ன ஆகும்? அந்தச் சிற்றெறும்பு அதைச் செய்யப்போகிறது. அந்த துரைச்சானி ஏன் அந்த சீற்றம் அடைந்தாள்? அதற்கு அடியில் ஈர்ப்பு இருக்கிறது. இல்லாவிட்டால் அவனை மறுபடியும் உள்ளே விட்டிருக்க மாட்டாள். ஆனால் அந்த ஈர்ப்பு ஏன்? அது அந்த துரையின் மீதான பழிவாங்குதலா?அந்த துரையின் வீட்டில் இன்னொருவனின் மனைவி அடிமையாக வந்து அமர்ந்திருக்கிறாள். இவன் துரையின் மனைவியிடம் அடிமையை ஊடுருவ விடுகிறான். வரலாறு இப்படித்தான் கொடுத்தும் பெற்றும் நகர்ந்திருக்கிறது. துரை ஒரு எறும்பை நசுக்குகிறான். ஓர் எறும்பு திரும்ப கடிக்கிறதுஆர். ராஜேஷ்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்

’’சிற்றெறும்பு’’  இதுவரை வந்திருக்கும் இரண்டாம் தொடர் சிறுகதைகளில் மிக ஆனந்தமாக வாசித்த கதை.  அந்த தாம்பரம் காட்டோர துரையின் பண்ணை வீட்டை தூரத்திலிருந்தும், பின்னர் முகப்பில், பின் அறைக்குள் என விவரித்ததில் நானே அந்த சிவப்பு தரையோடு போட்ட அறையில் உடகர்ந்து கண்ணாடி மூடிய அலமாராவை துரை வரும்வரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். அங்கேயே அழைத்துச்சென்று விட்டீர்கள்.

சமையலறையில் கரண்டியும் கையுமாக கதையை வாசித்தேன்,  கடைசிப்பத்தியை  வாசிக்கையில் முகம் மலர்ந்து நிறைவுடன் அலைபேசியை அணைத்து வைத்தேன். இதைப்போலவே நடந்த ஒன்றும் உடனே நினைவுக்கு வந்தது. என் நெருங்கின தோழி ராஜியின் கணவர் ஊட்டியில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் மேலாளராக இருந்தார். அப்போது என் PhD ஆய்வுகள் மேட்டுப்பாளையம் வனக்கல்லூரியில் தானென்பதால்  எப்படியும்  வார இறுதியில்  அவர்களின் ஊட்டி வீட்டில் சென்று தங்கிக்கொள்ளுவேன்.  அவர் மாலை வீடுதிரும்பி சொல்லும் ஹோட்டல் கதைகளை நானும் ராஜியும் வாய்பிளந்து  கேட்போம்  ஊட்டிக்கு ‌ஷூட்டிங்கிற்கு வந்து அந்த ஹோட்டலில் தங்கியிருக்கும் நடிகர், நடிகைகள் கதைகள் தான் பெரும்பாலும்.

 ஒரு நாள் ஒரு பிரபல நடிகையின் அறைக்கதவுக்கு வெளியே பழரசம் கொண்டு வந்த பணி்யாளர் அழைப்புமணியை அடிக்கும் முன்னால் தட்டில் கொண்டு வந்த கண்ணாடி தம்ளரில் இருந்த பழரசத்தை ஒருமுறை சப்பிக் குடித்துவிட்டு விளிம்பை துடைத்து உள்ளே கொண்டு போனதை அவர், ராஜியின் கணவர் ராஜேஷ் பார்த்து விட்டார். மிக பாவப்பட்ட குடும்பத்தை சேர்ந்த அப்போதுதான் வேலையில் சேர்ந்திருந்த அந்த இளைஞனை மாலை வீட்டுக்கு வரச்சொல்லியனுப்பியபோது, அவன் அது யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்னும் நம்பிக்கையில் மிகச்சாதாரணமாக வந்திருக்கிறான். விஷயத்தை சொல்லி கேட்டதும் இன்றைய கதையில் வந்ததைப்போலவே வெகுநேரம் என்ன என்னவொ மறுத்துச் சொல்லிகொண்டிருந்துவிட்டு பிறகு உண்மையை சொல்லி இருக்கிறான்.

அந்த நடிகை முந்தினநாள் காலை காபிகொண்டு போயிருக்கையில் தனது குதிகால் செருப்பின் பின்பக்க ஸ்ட்ராப்பை இவனை மாட்டிவிட சொல்லியிருக்கிறார் இவன் கொஞ்சம் தயங்கியதும் அவருக்கு கோபம் வந்து கன்னாபின்னவென்று ஏசியதால், இவன் மண்டியிட்டு அதை மாட்டித்தந்திருக்கிறான். அதன்பொருட்டே தனது எச்சில் பழரசத்தை அந்த பெண் அருந்தட்டுமென்று செய்ததாக  சொல்லி ஒப்புக்கொண்டிருக்கிறான்.  ராஜேஷ் அவனை தண்டிக்கவில்லை இனிமேற்கொண்டு இப்படி செய்ய கூடாது, அவரவருக்கான தொழில் தர்மத்தை மீறக்கூடாதென்று எச்சரித்து அனுப்பியிருக்கிறார்.

 எங்களிடம் இதை சொல்லுகையில் ’’அவன் செஞ்சது தப்புன்னா , அந்தம்மா பன்ணினது அதைவிட பெரிய தப்பாச்சே! அவனுக்கும் இருக்கும் தானே’’ என்றார்

உண்மையில் இந்த சம்பவத்தை நான் அடிக்கடி நினைத்துக் கொள்ளுவதுண்டு இன்றும் நினைத்துக்கொண்டேன். பெரிதாக செய்யா முடியாவிட்டாலும் சின்னக்கடியாவது கடிக்கமுடியும் தானே!

அன்புடன்

லோகமாதேவி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 24, 2021 11:31

அறமென்ப, எச்சம்- கடிதங்கள்

 அறமென்ப…  [சிறுகதை]

அன்புள்ள ஜெ

அறமென்ப கதையை வாசித்துக்கொண்டிருந்தோம். நானும் என் நண்பர்களும் ஒரு சின்ன விஷயம் பற்றி பேச நேர்ந்தது. ஏனென்றால் அதை ஏற்கனவே நாங்கள் பேசியிருந்தோம். அதாவது பெரிய டாப் விளக்குகள் உள்ள இடங்களில் மக்கள் ஏன் மரநிழல்களிலேயே நிற்கிறார்கள்? பலமுறை இதைப் பார்த்துக்கொண்டிருந்தோம்.

பல காரணங்கள் யோசித்தோம். முதல் விஷயம் பழக்கம். அனிச்சையாக அதைச் செய்கிறார்கள். இரண்டாவது காரணம், மக்கள் எப்போதுமே ஒதுக்குபுறமாகவே நிற்கிறார்கள். வெட்டவெளியில் நிற்பதில்லை. அதை நான் அறமென்ப கதையில் வாசித்து சுட்டிக்காட்டினேன். கார்கள் மக்கள் எல்லாம் மரநிழல்களிலேயெ நிற்பார்கள். ஏற்கனவே கார்களும் மக்களும் நிற்கும் இடத்திலேயே இரவிலும் நிற்பார்கள். இதை ஒரு ரயில்வே ஸ்டேஷனைப்பற்றி எழுதியபோது அசோகமித்திரனும் எழுதியிருக்கிறார்.அந்த விஷயம் கதையில் யோசிக்காமல் பதிவாகியிருக்கிறது. அதுதான் கலைஞனின் கண் என்று சொன்னேன்.

என்ன ஆச்சரியமென்றால் ஒரு நாள் கழித்து முகநூலில் யாரோ ஒரு மடச்சாம்பிராணி ‘ராத்திரி காரை ஏன் மரநிழலில் நிறுத்தவேண்டும்? வெயில் இல்லையே’ என ஆராய்ந்து கண்டுபிடித்து எழுதியிருந்ததை நண்பர் கொண்டுவந்து காட்டினார். எது கூர்மையான கவனிப்பால் பதிவானதோ அதுவெ இந்த அசடுக்கு தப்பாக தெரிகிறது. உங்களை திருத்தி நல்வழிகாட்டவும் முயல்கிறது.

எனக்கு உங்கள் தோரணைமேல் கொஞ்சம் ஒவ்வாமை உண்டு. அதை எழுதியும் இருக்கிறேன். ஆனால் இந்தமாதிரி மடையர்கள் நடுவே புழங்க ஒரு திமிர் வேண்டும். அந்த திமிரைத்தான் பிழை கண்டுபிடிப்பவர்கள் பற்றிய குறிப்பில் பார்த்தேன். அது நல்லதுதான். நன்றி

 

கே. ஜெயபாஸ்கரன்

எந்த ஒரு செயல் மீதும் தர்க்கத்தை அள்ளி நிரப்பி சரி என்று காட்டிவிட முடியும்தான். இங்கு பாதக செயல் என்று நாம் அலங்காய்க்கிற எந்த செயலுக்கும் அதை செய்வதற்கு தேவையான சரியாக காரணத்தை தொகுத்துகொண்டு    இறுக பற்றி இருப்பார் அதை இயற்றுகிறவர்.

 

இப்படி பல திசையில் அவரவர் அவரவர்களுக்காக சொல்ல கூடிய அறத்தை ‘அறமென்ப’ முன்வைப்பதாக புரிந்து கொள்கிறேன். இங்கு எது அறம் என்ற கேள்வி வாசகர்களுக்கு விடப்படுவதாக எடுத்துக்கொள்கிறேன். இனி நீ என்ன செய்வாய் என்ற கேள்வி எழுந்தால் “ரோட்டில் சாக கிடக்கும் ஒருவரை பார்த்தால், தூக்கி கொண்டு மருத்துவமனையில் சேர்த்துவிட்டு காவல் நிலையம் சென்று ஒரு கம்ப்லைன்ட் கொடுத்து விடுவேன் ” என்று தான் சொல்வேன்.

அத்தருணத்தில் செல்வா அனைத்து பதட்டத்தையும் மறந்து சடால்னு ஒரு நிம்மதி ஒரு சந்தோசத்தை உணர்கிறான். ஏன் என்று கேட்டுக்கொண்டால், எனக்கு இரண்டு காரணம் தென்படுகிறது.

அனைவரிடமும் இருக்கும் நியாயத்தை புரிந்து கொள்கிறான். “ஆம் இது இப்படி தானே இருக்க முடியும். கொஞ்சம் ஒவெறா recognition எதிர் பார்த்துட்டோம் போல” என்று…பீட்டர் பார்வையில் சொல்லப்பட்ட இன்னொன்று.

மற்ற அனைவரின் கீழ்மையையும் பார்த்து தன்னை உயர்வாக மதிப்பிட்டு கொண்டு தன்னை செய்ன்ட் மாதிரி பீல் பண்ணி கொள்வது. பீட்டர் இதை எந்த உணர்ச்சியுமற்று மிக சாதாரணமாக சொல்வதை பார்த்தால் வக்கீல் தொழிலில் செல்வா மாதிரி வந்துகொண்டே இருக்கும் கேஷ்களை நிறய பார்த்திருப்பான் போல. அவன் அறிந்திருக்கிறான் “செல்வா முன்வைக்கும் ஜென் பீல்லாம் சும்மா என்றும், அவன் பிற பலவிசயங்களில் உருவாக்கும் தர்க்கம் (அறெமென்ப..) என்ன என்று கூடவே வாழும் அவன் மனைவி அறிந்திருப்பாள் என்றும்”.

நான் பீட்டருடன் உடன்படுகிறேன்

பாண்டியன் சதீஷ்குமார்

எச்சம் [சிறுகதை]

வணக்கத்திற்கும் பேரன்பிற்கும் உரிய ஜெயமோகன்,

நிறைவிலி மற்றும் எச்சம் இரு கதைகளையும் இணைத்துப் பார்த்து உங்களின் தற்போதைய மனநிலையை ஊகித்துக் கொண்டேன்.

நிறைவிலி கப்பரையைப் பார்த்தபோதே நினைத்தேன் ஏதோ ஒன்று பெரியதாக வரப்போகிறது என்று. வாழ்நாள் முழுக்க தினம் ஒரு பத்து பக்கம் எழுதக்கூடிய ஏதோ ஒன்றை கையில் எடுக்கப் போகிறாரோ?

தமிழக மற்றும் இந்திய மாற்று வரலாறு, இந்து பௌத்த சமண முரணியக்கம், இன்றைய நவீன மெய்யியல், நாளைக்கான மானுடப் பேரறம் என இன்னும் தொடப்படாத எத்தனையோ உள்ளன தமிழில். உங்களுக்கே உரித்தான ஒரு மாபெரும் புனைவுக் காவியப் பெரும் பரப்பைக் கூட இவற்றை உள்ளடக்கி உங்களால் படைக்க முடியும்.

வெண்முரசினும் மீப்பெரியது ஏதேனும் வந்தால் அந்தக் கப்பரைக்கு நன்றி! பாத்திரங்கள் இரண்டு வகை ஒன்று எவ்வளவு போட்டாலும் எப்போதும் நிறைவதே இல்லை மற்றொன்று எவ்வளவு எடுத்தாலும் குறைவதே இல்லை. இலக்கிய வாசகர்கள் எல்லோரும் முதல் வகை பாத்திரம். ஜெயமோகன் இரண்டாவது வகை பாத்திரம். தமிழின் நல்ஊழ்.

ரெஸ்ட்டுன்னா மிச்சம். நம்ம பாஷையில மிச்சம்னா எச்சம். எண்பது வயசு பாட்டாவே ரெஸ்ட் வேண்டாம்னு முடிவு பண்ணிவிட்டார்.

எங்கள் ஜெயமோகன் பாட்டா மிச்சம் சொச்சம் வைக்காம தமிழில் உச்சம் நோக்கி சிறிதும் எச்சம் விடாமல் எழுதிக் குவிக்க முடிவு செய்துவிட்டார் என நெஞ்சம் மகிழ்ந்தேன். எச்சம் மிச்சம் எதுவானால் என்ன நமக்கு அதுவே உசித உச்சம். என்நாளும் படித்து பகிர்ந்து கொண்டாட்டம்.

நீங்கள் இருக்கும் வரை எவ்வளவு முடியுமோ அவ்வளவு எழுதிக் குவித்து விட்டுப் போகவேண்டும் என்பதே எங்கள் அனைவரின் பேரவா. உங்களைப் போன்ற ஒரு எழுத்து பேரசுரன் தமிழின் வரம்.

மழை பெய்யும் பொழுது ஏரிகளிலும் குளங்களிலும் ஆறுகளிலும் அணைகளிலும் நிறைத்து வைத்துக் கொள்வோமே அதுபோல உங்கள் அமுத எழுத்துக்களை நிறைத்துக் கொள்வோம்.

மிக்க அன்புடன்

ஆனந்த் சுவாமி

 

அன்புள்ள ஜெ

எச்சம் மிக ‘ஈஸியாக’ எழுதப்பட்ட அருமையான கதை. உழைப்பில் இன்பம் கண்ட பாட்டா ஒரு கர்மயோகி. அவருக்கு ஓய்வு என்பது சாவுதான். ரெஸ்ட் வேறு கட்டையை சாய்த்தல் வேறு என பாட்டா உணர்ந்திருக்கிறார். ரெஸ்ட் என்பது எஞ்சுவதுதான். மிச்சம்தான். அதை அவர் ஓடி முடிந்தபிறகுதான் உணரமுடியும். உற்சாகமான உரையாடல் வழியாகவே செல்லும் கதை. அதில் பாட்டாவின் குணச்சித்திரமே துலங்கி வருகிறது. பல இடங்களில் வெடித்துச் சிரித்தேன். குறிப்பாக ஏசுவும் முருகனும் அமரக்கூடாது என்னும் பாட்டாவின் ஆன்மிகப்புரிதல்

ராஜசேகர்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 24, 2021 11:31

March 23, 2021

இருபத்தைந்து கதைகள்

சென்ற ஆண்டின் நூறு கதைகளின் நினைவாக பத்து கதைகள் என திட்டமிட்டேன். 25 கதைகள் என நின்றிருக்கிறது அந்த ஓட்டம். எழுதித் தீர்ந்து அல்ல, இரண்டு கதைகள் இரண்டு இதழ்களுக்காக எழுதவேண்டியிருக்கிறது. மூன்று சினிமாக்கள் வேறு. கூடவே பயணத்திட்டங்கள்.

நான் ஏற்கனவே சொன்னதுபோல இக்கதைகளை என் கதைச்சுவாரசியத்திற்காகவே எழுதினேன். இன்னொருவரின் புனைவை விட என் புனைவுகள் எனக்கு நிறைவளிக்கின்றன. கொரோனா வார்டில் தனிமையில் எழுதத்தொடங்கி இப்போது நிறைவு கொண்டிருக்கிறது இந்த இனிய சுழற்பாதைப் பயணம்.

மீண்டும் ஒருமுறை பார்ப்போம்.

 

24 நிறைவிலி [சிறுகதை] 23 திரை [சிறுகதை] 22.சிற்றெறும்பு [ சிறுகதை] 21 அறமென்ப…  [சிறுகதை] 20 நகை [சிறுகதை] 19.எரிசிதை [சிறுகதை] 18 இருளில் [சிறுகதை] 17 இரு நோயாளிகள் [சிறுகதை] 16 மலைபூத்தபோது [சிறுகதை] 15 கேளி [சிறுகதை] 14 விசை [சிறுகதை] 13. இழை [சிறுகதை] 12. ஆமென்பது[ சிறுகதை] 11.விருந்து [சிறுகதை] 10.ஏழாம்கடல் [சிறுகதை] 9. தீற்றல் [சிறுகதை] 8. படையல் [சிறுகதை] 7.கூர் [சிறுகதை] 6. யட்சன் [சிறுகதை] 5. கந்தர்வன் [சிறுகதை] 4.குமிழிகள் [சிறுகதை] 3.வலம் இடம் [சிறுகதை] 2.கொதி[ சிறுகதை] 1.எண்ணும்பொழுது [சிறுகதை]
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 23, 2021 11:37

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.