Jeyamohan's Blog, page 895

October 22, 2021

நினைவுகளின் நிறைவு

அருண்மொழி தன் நினைவுகள் தொடரை முடித்துவிட்டாள். மொத்தம் 25 கட்டுரைகள். அவற்றில் இசை பற்றிய மூன்று கட்டுரைகளை தவிர்த்தால் 22 கட்டுரைகளும் ஒரு நாவல் போல ஒன்றிலிருந்து ஒன்றாக கிளைத்து அழகிய அமைதியான நிறைவை வந்தடைந்துள்ளன.

தமிழில் எழுதப்பட்ட நினைவுகளில் இவை மிக முக்கியமானவை என நினைக்கிறேன். முக்கியமானவர்களின் தன்வரலாறுகளுக்குச் சமானமாக வேறொரு வகையில் முக்கியமானவை சாமானியர்களாக தங்களை உணர்பவர்களின் தன்வெளிப்பாடுகள். ஏனென்றால் அவை கலப்படமற்ற காலப்பதிவுகள். அதிலும் தமிழ்ச்சூழலில் பெண்களின் வாழ்க்கைப்பதிவுகள் மிகமிக முக்கியமானவை.

அருண்மொழியின் முன்னோடி எழுத்தாளர்கள் அசோகமித்திரன், தி.ஜானகிராமன் மற்றும் அ.முத்துலிங்கம். ஆகவே அடங்கிய தொனியிலேயே இக்கட்டுரைகள் பேசுகின்றன. மிகமெல்லிய நகைச்சுவை ஓடிக்கொண்டிருக்கிறது. உணர்ச்சிமிக்க தருணங்களையும் மிகமெல்லிய கோட்டோவியமாகவே தீட்டியிருக்கிறாள். பெரும்பாலும் எல்லா கட்டுரைகளிலும் சிறுகதைக்குரிய வடிவஅமைவு உள்ளது. படிமங்கள் வழியாக மறைமுகமாகவே மையம் உணர்த்தப்படுகிறது.

உண்மையிலேயே எனக்கு முப்பதாண்டுகளாக மிக அணுக்கமாகத் தெரிந்த ஆளுமை என்றால் அருண்மொழி நங்கைதான். அவளுடைய நுண்ணிய நகைச்சுவைத்திறன், விரிவான வாசிப்பு, கற்பனை எல்லாமே தெரியும் என்றாலும் இந்த படைப்புத்திறன் வியப்புக்குரியதாகவே உள்ளது. படைப்புத்திறன் வெளிப்படும் வரை அதை ஊகிக்கவே முடிவதில்லை.

இந்தக் கட்டுரையிலேயே அந்த நுட்பம் தன்னிச்சையாக வந்தமைந்துள்ளது. ஊரைவிட்டு வெளியேறும்போது இறுதியாக விடைபெறுவது ஊருடன் ஒட்டாமல் வெளியே நின்றிருக்கும் சிவன்கோயிலிடமும் பண்டாரத்திடமும் என்பது ஒருவகையில் முரண்பாடு. இன்னொருவகையில் இயல்பானது. ஊர் என்னும்போது நாம் முதலில் நினைவுகூர்வது அவற்றையெல்லாம்தான். ஏனென்றால் அவைதான் ஊரின் சாராம்சம்

இனிமேல் நாவல் எழுதவேண்டும் என்று நினைக்கிறாள். நாவலை விரைவில் அவள் தொடங்கவேண்டும் என விரும்புகிறேன்.

ஊருக்கு வெளியே- அருண்மொழி நங்கை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 22, 2021 11:34

தியானமும் உள்ளமும்- கடிதம்

அய்யா,

நான் காலேஜ் படிக்கும் போது நான் தனியாக வெட்ட வெளியில் அமர்ந்து தியானம் பண்ணினேன். அதில் நிறைய பரவச நிலைகளையும் அதீத வலி தரும், பிரளய  நிலைகளையும் தரும் நேரங்களையும் கடந்தேன்.

இந்த நிகழ்விற்கு பிறகு எனக்கு சித்த பிரமை நிலை இருந்தது. இப்போது வரை என் உள்உணர்வுகளுக்குள்  பல தடுமாற்றங்கள், பல வித சிக்கல்களுடன் வாழ்கை வாழ்கிறேன்…. உங்களுக்கு இதை பற்றி ஆராய விருப்பம் இருந்தால் ஒத்துழைப்பு தர விரும்புகிறேன்…

வி

***

அன்புள்ள வினோத்,

நான் முன்னரும் இத்தளத்தில் எழுதியிருக்கிறேன். உளப்பிரச்சினைகள், உணர்வுக்கொந்தளிப்புகள் இருக்கும்போது தியானம் செய்யக்கூடாது. அது ஆபத்தானது. தியானம் அவற்றை பலமடங்காகப் பெருக்கிவிடும்.

தியானம் என்பது கூர்தல். எதை கூர்வது என்பது அதில் முக்கியம். ஐயமும் அச்சமும் குழப்பஙகளும் சோர்வுகளும் கொண்டவர்கள் தியானத்தில் அவற்றையே கூர்வார்கள்.

ஆகவேதான் முறையான தியானப்பயிற்சி அளிக்கும் அமைப்புகளில் தத்துவார்த்தமான ஆழ்ந்த பயிற்சிக்குப் பின்னரே தியானத்தை கற்பிக்கிறார்கள். தன் உணர்வுச்சிக்கல்களை அறிந்து அவற்றை சமப்படுத்த கற்றவர்களே மேற்கொண்டு தியானம் செய்ய முடியும்.

ஆகவே நீங்கள் தியானப் பயிற்சி எதையும் செய்யலாகாது. தியானம் வலுவான உள்ளம் கொண்டவர்களுக்குரியது. உங்களுக்குரியது செயல். அது உடலால் செய்யப்படும் தொழிலாக இருந்தால் நல்லது. சீராக நாள் முழுக்க செய்யப்படும் செயலாக அது இருக்கவேண்டும். அவ்வாறு செய்யும் தொழிலின் சீரான ஒழுங்கு உங்களுக்குள்ளும் அமைவதைக் காண்பீர்கள்.

ஜெ

யோகமும் பித்தும்

யோகமும் மோசடியும்

தியானம்

சாகசம் எனும் தியானம்

ஆன்மீகம், சோதிடம், தியானம்

கடவுளை நேரில் காணுதல்

யோகம், ஒரு கடிதம்

ஆன்மீகம், போலி ஆன்மீகம்,மதம்

ஆன்மீகம்,போலி ஆன்மீகம் – 1

ஆன்மீகம், போலி ஆன்மீகம் – 2

ஆன்மீகம் போலி ஆன்மீகம் 3

ஆன்மீகம், போலி ஆன்மீகம் 4

ஆன்மீகம், போலி ஆன்மீகம் 5

ஆன்மீகம், போலி ஆன்மீகம்- முடிவாக.

ஆன்மீகம் தேவையா?

விடுதல்

டவுள்நம்பிக்கை உண்டா?

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 22, 2021 11:33

உலோகம், ஒரு கடிதம்

உலோகம் வாங்க

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

உலோகம் நாவலை நீண்ட நாட்களாக வாசிக்க எண்ணி, மனம் ஒன்றாமல் வாசிக்கவில்லை. அதற்கான காரணம் அது ஒரு ‘Thriller –Genre’ நாவல் என்று அறிந்தமையால் தான். என்னால் genre வைத்து வெறும் வாசிப்பின்பத்திற்காக எழுதப்பட்ட படைப்புகளை அணுக முடியாது. ஒரு படைப்பு வாழ்வின் சாராமான கேள்விகளையோ அல்லது அறிய முடியாத மனித ஆழங்களையோ சொன்னால் மட்டுமே எனக்கு திருப்தியாக இருக்கும். எனினும் ஆப்கானிஸ்தான் பற்றிய செய்திகள் என்னை உலோகம் நாவலுக்கு அழைத்துச் சென்றது.

நாவலின் கதையோட்டம் நகரும் தோரும் கூர்மையாகி கொண்டே சென்று, இறுதியில் ஒரு புள்ளியில்மோதுகிறது. சார்லஸும் கதை நகர நகர சுருங்கி கூர்மையாகி கொண்டே சென்று இறுதியில் மோதும் அப்புள்ளி பொன்னம்பலத்தாரை கொள்ளும் இடம். அது கதையின் தொடக்கத்திலேயே சொல்லப்பட்டிருப்பினும் அங்கே சார்லஸ் எப்படி சென்று சேர்கிறான் என்பதையே ஈழ இயக்கங்கள் மற்றும் ரா போன்றஇந்திய அரசாங்க இயக்கங்களின் செயல்பாடுகளின் பின்னணியில் வைத்து விறுவிறுப்பான நடையில் சாகசங்கள் கலந்து எழுதியிருக்கிறீர்கள். ஆனால் கதை மேலெழுந்து வேறு ஒரு தளத்துக்கு சென்றது முடிவில் அவன், அவரது தலையை உதைக்கும் இடத்தில் தான். அது அவன் சுருங்கி, மோதி பின் வெடித்து சிதறும் இடம். அங்கு அவன் எப்படி வந்து சேர்ந்தான்? எது அவனை வெடிக்க வைத்தது? அதுவே நாவலின் மையம்.

நாவல் மனித மனங்களின் புரிந்து கொள்ள முடியாத ஆழங்களை, உயிர் வாழ்தலுக்கான மனிதர்களின்இச்சையை ஆராய்ந்து அதனை உலோகம் (துப்பாக்கி) என்ற படிமத்துடன் இணைத்து நம்பிக்கை, கொள்கை பிடிப்புகள் எப்படி ஒரு மனிதனை உணர்ச்சிகளற்ற உலோகமாக (துப்பாக்கி) மாற்றி வெடிக்க வைக்கிறது. சார்லஸ் துப்பாக்கி என்றால் அவனை வெடிக்க வைக்கும் விசை நம்பிக்கை மற்றும் கொள்கை பிடிப்பே என்று உணர்த்தி நின்று விடாமல் அங்கிருந்து மேலெழுந்து மனிதர்களை (துப்பாக்கிகளை) இயக்கும் விசை அனைவருக்கும் மேலாக இருக்கும் ஒரு ஆற்றல் . நாம் அதன் கைகளில் இருக்கும்  பொம்மை துப்பாக்கிளே என்று வாழ்வின் புரிந்து கொள்ள முடியாத இயக்கத்தை தொட்டுக் காட்டுகிறது. இந்த அம்சமே உங்கள்படைப்புகளை அன்றி வேறு படைப்புகளை நோக்கி என்னை செல்ல விடாமல் தடுத்து நிறுத்துகிறது.

சார்லஸ் கதை நகர நகர அகத்தில் சுருங்கி கொண்டே செல்கிறான். ஆனால் விரிவதற்கான அத்தனை சாத்தியக் கூறுகளையும் தன் அகத்தே கொண்டவன் அவன். கவிதை, இலக்கியம், காதல் என கலையுள்ளம் கொண்டவனாக இருப்பினும் அவனை விரிய விடாமல் தடுத்து சுருங்கச் செய்வது இயக்கத்தின் மீது அவனுக்குஇருக்கும் பற்றுறுதியே ஆகும். அவன் மலர்வதற்கான தருணங்கள் வாய்க்கும் போதெல்லாம் அவனுள் தங்கியிருக்கும் உலோகம் (குண்டு) அவன் நினைவில் எழுந்து கீழே இழுத்து செல்கிறது. அவன் பொன்னம்பலத்தாரின் மகளுடன் ஏற்படும் உறவின் மூலம் இதிலிருந்து மேலெழுந்து விடலாம் என்று எண்ணுகிறான். ஆனால் அவளும் அவனுக்கு அந்த உலோகத்தையே (குண்டை) தொட்டுக் காட்டுகிறாள். இயற்கையால் வழங்கப்பட்ட அடிப்படை உணர்ச்சிகளான உயிர் வாழ்தலுக்கான இச்சையும், தன் குழ்ந்தையை வளர்க்கும் பொறுப்பையன்றி வேறொன்றும் அறியாத பேதை, அதற்காக அனைவரையும் பயன்படுத்தி அங்கிருந்து தப்ப விழையும் ஒருத்தி என்று உணர்கிறான். அங்கிருந்தே அவன் முழு இருளுக்குள் சென்று சேர்கிறான்.

இந்த நாவலில் வரும் அனைத்து மனிதர்களும் உயிர் வாழும் அடிப்படை இச்சையன்றி மேலான விழைவுகளுக்காக விதிக்கப் பட்டவர்கள் அல்ல. சார்லஸ் மட்டுமே அதனை கடந்த விழைவுகளுக்கான சாத்தியகூறுகளை உடையவன். ஒரு வகையில் அனைவருக்கும் மேலான ஒருவன். அதன் விளையாட்டில் அவனும் தோற்றுப் போகிறான்.

இந்த நாவலின் மையம் என்பது உலகளாவிய ஒன்று. கதை நடக்கும் களம் மட்டுமே இயக்கத்தை சேர்ந்த மனிதர்கள் மற்றும் இந்திய அரசியல். இந்த கதையை வேறு எந்த  இயக்க மற்றும் வேறு நாடுகளின்அரசியல் பின்னணியில் வைத்து எழுதியிருந்தாலும் நாவல் உணர்த்தும் சாராம்சம் அப்படியே ஒத்துப் போகும். இந்த நாவல் எதன் பொருட்டு என்னை படிக்க ஈர்த்ததோ (ஆஃப்கானிஸ்தான் பிரச்சனை) அதற்கானஅடிப்படையை எனக்கு உணர்த்திவிட்டது. அரசியல் காரணங்கள் வெவ்வேறாக இருக்கலாம் ஆனால் மனிதர்களின் அடிப்படை மனநிலை உலகம் முழுவதும் ஒன்று தான். அது குறித்தே நாவல் பேசுகிறது.

நாவல் படித்து முடித்தவுடன், எனக்கு கன்னிநிலம் நாவலின் கதாநாயகன் நெல்லையப்பனுடன் சார்லஸை ஒப்பிட்டு பார்க்கத் தோண்றியது. நெல்லையப்பன் தன்னுள் எழுந்த பிரேமையால் அதிகாரம், நாடு, எல்லை என அனைத்தையும் கடந்து, உதறி, விரிந்து மேலெழுந்து மனிதனின் உச்ச விழுமியமான ‘ No man’s land’ க்கு செல்கிறான். சார்லஸோ சுருங்கிச் சுருங்கி இருளின் ஆழத்திற்குள் சென்று சேர்கிறான். ஒரு காதலோ, கவிதையோ அவனை காப்பாற்றியிருக்கும். ஆனால் அவன் அதற்காக விதிக்கப்படவில்லை. நெல்லையப்பன் ஷீராய் லில்லி போல மலர்வதும், சார்லஸ் உலோகமாவதும் நம் கையிலா உள்ளது?

நாம் அனைவரும் துப்பாக்கிகளே, அதனை அழுத்தும் ஆற்றல் அனைத்திற்கும் மேலான அதுவே.

பணிவன்புடன்,

வேலாயுதம் பெரியசாமி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 22, 2021 11:31

October 21, 2021

குமரித்துறைவி, விஷ்ணுபுரம் பதிப்பகத்தின் முதல்நூல்

தொடர்புக்கு :vishnupurampublishing@gmail.com

விஷ்ணுபுரம் பதிப்பகம் என்ற பெயரில் ஒரு பதிப்பகம் தொடங்கி நூல்களை வெளியிடுவது என்பது முதன்மையாக கோவை செந்தில்குமாரின் திட்டம். அவர் அதை சில ஆண்டுகளாகச் சொல்லிக் கொண்டிருந்தார். என் அனைத்து நூல்களும் ஓரிடத்தில் கிடைக்கவைப்பதே முதன்மை நோக்கம். ஒரே இணையதளத்தில் அனைத்தும் கிடைக்குமென்றால் அது வாசகர்களுக்கு உதவியாக இருக்கும். மேலும் நம் நண்பர்களின் நூல்களையும் காலப்போக்கில் கொண்டுவர வேண்டும். அவர்களுக்கான விழாக்கள், நிகழ்வுகள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.

ஆனால் நிர்வாகம் சார்ந்த, வணிகம் சார்ந்த எதிலும் ஈடுபடுவதற்கு எனக்கு மனமில்லை. ஆகவே நான் தவிர்த்து வந்தேன். அதன்பின் நண்பர்களின் கூட்டமைப்பே அதைச் செய்யலாமென முடிவெடுக்கப்பட்டது. தொடக்கமாக என் நூற்று முப்பது கதைகளும் தனித்தனி தொகுதிகளாக மின்னூல்களாக வெளியாயின. அவை அளித்த நிதிப்பின்னணியுடன் இப்போது அச்சுநூல்களாக வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. முதல் நூல் குமரித்துறைவி.

குமரித்துறைவி மங்கலம் மட்டுமே கொண்ட நூல். அழகும் நிறைவும் கூடியது. அவ்வகையில் இன்னொரு நவீனநாவல் தமிழில் இல்லை என நினைக்கிறேன். அத்தனை தொலைவு செல்ல வெண்முரசு போன்ற ஒன்றை ஏறிக்கடக்கவேண்டும். பலர் அதை திருமணப் பரிசுகளாக, மங்கலப்பரிசுகளாக அளிக்கவிரும்புவதாகச் சொல்லியிருக்கிறார்கள்.

சென்ற 3 அக்டோபர் 2021 அன்று கோவையில் நிகழ்ந்த கவிதைவிவாத அரங்கில் எளிமையாக முதல்நூல் வெளியிடப்பட்டது. என் அன்புக்குரிய நண்பர் யுவன் சந்திரசேகர் வெளியிட போகன் பெற்றுக்கொண்டார். ஊட்டியில் குரு நித்யாவின் சமாதியில் நூலை வைத்து வாழ்த்துக்களைப் பெற்றுக்கொண்டோம்.

ஜெயமோகன் மின்நூல்கள் வாங்க குமரித்துறைவி அச்சுநூல் வாங்க  வான் நெசவு அச்சுநூல் வாங்க விஷ்ணுபுரம் பதிப்பக நூல்கள் குமரித்துறைவி வான் நெசவு இரு கலைஞர்கள் பொலிவதும் கலைவதும் தங்கப்புத்தகம் “ஆனையில்லா” முதுநாவல் ஐந்து நெருப்பு மலைபூத்தபோது தேவி எழுகதிர் அந்த முகில் இந்த முகில் உடையாள் கதாநாயகி ஆயிரம் ஊற்றுகள் பத்துலட்சம் காலடிகள் ஞானி குகை சாதி – ஓர் உரையாடல் வணிக இலக்கியம் வாசிப்பின் வழிகள் இலக்கியத்தின் நுழைவாயிலில் ஒருபாலுறவு இன்றைய காந்தி சங்கச்சித்திரங்கள் ஈராறுகால் கொண்டெழும் புரவி நத்தையின் பாதை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 21, 2021 11:36

அஜ்மீர் பயணம்- 5

ஆனசாகரம்

அக்டோபர் 14 ஆம் தேதி அஜ்மீரைச் சுற்றிப்பார்க்க ஒதுக்கியிருந்தோம். அன்று முழுக்க அலைச்சலின் நாள். நாம் விரும்புவதைச் செய்ய அலையும்போதுதான் மகிழ்ச்சியாக இருக்கிறோம். அதன் களைப்பைப்போல இனியது வேறில்லை. நண்பர் கே.பி.வினோத் அடிக்கடிச் சொல்வார் “பயணங்களில் நம் நாட்கள் எப்படி இழுபட்டு நீண்டுவிடுகின்றன… ஒரு நாள் ஒருவாரம் போல ஆகிவிடுகிறது!” என்று. அந்நாள் ஒரு வாரம் அளவுக்குப் பெரியதுதான்.

காவலர்கள் வண்டியுடன் காலை ஒன்பது மணிக்கு வந்தார்கள். அஜ்மீரின் நகரப்பகுதிக்குள் சென்றோம். காசி போலவே பழமையை கடந்து புதியவாழ்க்கை எழுந்துகொண்டிருக்கும் நகரம். அஜ்மீரின் செல்வம் சலவைக்கல் வணிகத்தால் உருவாவது. நகரில் இருநூறு முந்நூறு ஆண்டு பழமையான கட்டிடங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றை ஒட்டி புதிய கான்கிரீட் கட்டிடங்கள். பழைய கட்டிடங்களில் பிளந்து எடுக்கப்பட்ட கற்பலகைகள் நிறைய பயன்படுத்தப்பட்டிருந்தன. சன்னல்களுக்கு மேலே நீட்சிகள் எல்லாம் கற்பலகைகள்தான். செந்நிறக் கற்பாளங்களால் ஆனவை பெரும்பாலான கட்டிடங்கள்.

புஷ்கர் ஏரி

அஜ்மீருக்குள் மூன்று ஏரிகள் உள்ளன. நகர்நடுவே ஆனசாகர் என்னும் ஒரு பெரிய ஏரி உள்ளது. இவையெல்லாம் மன்னர்களின் காலத்தில் மழைநீரைச் சேமிப்பதற்காக உருவாக்கப்பட்டவை. அஜ்மீரின் மூன்றுபக்கமும் மலைகள்தான். அஜ்மீர்தான் அப்பகுதியிலேயே தாழ்வான இடம். ஆகவே பெய்யும் மழை முழுக்க ஓடைகளாக அங்கே வருகிறது. அந்த ஏரிகள் அந்த மழைநீரை சேர்த்து வைத்திருக்கின்றன. நிலம் பாறையாலானது என்பதனால் நீர் வற்றுவதில்லை. அந்த ஏரிகளை நம்பியே அந்நகர் இயங்குகிறது.

அங்கே முன்னரே இயற்கையான ஏரி இருந்திருக்கலாம், நகரமே அதன் கரையில் என உருவாகியிருக்கலாம். இன்றுள்ள ஏரிகள் மன்னர்களால் விரிவாக்கப்பட்டும், தோண்டப்பட்டு உறுதியான கரைகள் அமைக்கப்பட்டு பேணப்பட்டவை. நீர்க்களஞ்சியங்கள் என்று சொல்லலாம். நீர் அறுவடை என்பது ஆண்டில் வெறும் இருபது நாட்களுக்குள்தான். அதுவும் ஜூன் முதல் செப்டெம்பர் வரை எப்போது வேண்டுமென்றாலும்.

பிரம்மா கோயில் புஷ்கர்

நகரின் மையத்தில் இருந்த ஆனசாகர் ஏரி பதிமூன்று கிலோமீட்டர் சுற்றளவு கொண்டது. அஜ்மீர் பகுதியை 1150 வாக்கில் ஆட்சி செய்த ஆர்னோராஜா என்னும் மன்னரால் அகழப்பட்டது. அவர் பெயரால் அழைக்கப்படுகிறது. அவர் சகமான வம்சத்தைச் சேர்ந்தவர். அப்பெயர் சுருங்கி இப்போது சௌகான் என வழங்குகிறது. அவர்களின் தலைநகர் சபதலக்‌ஷா நாட்டை ஆண்டவர்கள். ஏழு மலைகளின் நாடு. அதன் தலைநகர் அமைந்திருந்த இடம் ஷகம்பபுரி என்னும் நகர்.

ஷகம்பபுரி நகரம் ஷகம்பாரி என்னும் மாபெரும் உப்பு ஏரியின் கரையில் அமைந்திருக்கிறது. ஆண்டுதோறும் நீர் இறங்கி வற்றி இயற்கையாகவே உப்பு விளையும் அந்த ஏரி ஒரு பெரிய செல்வக்குவை. ஒரு காலத்தில் அங்கிருந்தே உப்பு வட இந்தியா முழுக்கச் சென்றது. ஏரியை கட்டுப்பாட்டில் வைத்திருந்த சௌகான்கள் ஆற்றல் மிக்க அரசர்களாக இருந்தார்கள். இன்று அந்த ஏரி சாம்பார் ஏரி என அழைக்கப்படுகிறது. உப்புக்கே சாம்பார் என்னும் பெயர் புழங்கியது. உப்பு போட்ட பருப்புக்குழம்பு சாம்பார் டால் எனப்பட்டது. இன்று அது தமிழகத்தில் சாம்பார் எனப்படுகிறது.

ஆர்னோராஜா மிகப்பெரிய ஆட்சியாளர்களாக இருந்திருக்கிறார். இங்குள்ள பிற ஆட்சியாளர்களை வென்று கப்பம் கொண்டிருக்கிறார். ஆப்கானிஸ்தானின் கஸ்னாவிட் வம்சத்து இஸ்லாமிய ஆட்சியாளர்களை வென்றிருக்கிறார். பின்னாளில் அவர் தன் மகனாலேயே கொல்லப்பட்டார். அவருடைய மகன் ஜக்கதேவரை அவருடைய தம்பி விக்ரகராஜா கொலை செய்து ஆட்சியைக் கைப்பற்றினார்.

அந்தக் கொடிவழியில் வந்த மூன்றாவது பிருத்விராஜ் சௌகான்தான் இந்தியாவெங்கும் ராணி சம்யுக்தையின் கதை வழியாக புகழ்பெற்றவர். முகமது கோரியால் தோற்கடித்துக் கொல்லப்பட்டவர். ராஜபுதன மன்னர்களின் வீழ்ச்சிக்கு முதன்மைக் காரணம் அவர்களின் தொடர்ச்சியான பூசல்கள். அவர்கள் ஒருவரோடொருவர் போரிட்டனர். அண்ணனும் தம்பியும், தந்தையும் மைந்தனும் போரிட்டனர்.

புஷ்கர்

ஆனசாகர் ஏரி நீர் நிறைந்து நீலமாக விரிந்திருந்தது. செப்டெம்பர் வரை ஓரளவு மழைபெய்திருந்தது. ஏரியின் கரைகள் ஷாஜகான் மன்னரால் கட்டப்பட்டவை. அன்றுமுதல் தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டவை. அமர்வதற்கான இருக்கைகள், நடைபாதைகள் என நகரின் மையமான பொழுதுபோக்கிடமாக உள்ளது ஏரிக்கரை.

ஆனால் சென்ற நாற்பதாண்டுகளில் நகர் விரிவாக்கம் செய்யப்பட்டபோது நகரின் மொத்தச் சாக்கடையும் ஏரியில் திறந்து விடப்படுகிறது. நீர் சாக்கடைத் தேக்கமாக ஆகிவிட்டிருக்கிறது. மொத்த நீரையும் வெளியேற்றி, தூர்வாரி, சாக்கடைகள் நகரிலிருந்து ஏரிக்குள் வராமல் செய்தாலொழிய ஏரியை காப்பாற்ற முடியாது. நகரின் இதயம் அந்த ஏரி, அது மலினமாகிவிட்டிருக்கிறது.

சாவித்ரி கோயில்

இந்தியாவில் பெங்களூர், ஹைதராபாத் போன்று மைய நகரங்களில் எல்லாம் அரசர்கள் வெட்டிய ஏரிகள் உள்ளன. நகரமே அவற்றை நம்பி இயங்குகிறது. நவீன ஜனநாயக ஆட்சி அவற்றை சாக்கடைத் தேக்கங்களாக ஆக்கிக்கொண்டிருக்கிறது. அதைப்பற்றிய அக்கறை அதனால் பாதிக்கப்படும் மக்களிடையேகூட இல்லை. நான் வாழும் நாகர்கோயிலிலேயே பேச்சிப்பாறையில் இருந்து தூயநீர் பெருகிவரும் கால்வாய்களில் அரசே நகரின் அத்தனை சாக்கடைகளையும் கொண்டுவந்து சேர்த்துக் கொண்டிருக்கிறது.

அஜ்மீரில் இருந்து பன்னிரண்டு கிமீ தொலைவில் உள்ள புஷ்கர் என்னும் நகரம் செய்திகளில் தோன்றுவது அங்கே ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் முழுநிலவுநாளில் நிகழும் மாபெரும் ஒட்டகச்சந்தைக்காக. குதிரைச்சந்தையும்கூட. உலகின் மாபெரும் விலங்குச்சந்தை என அது அழைக்கப்படுகிறது. அதைக்காண ஐம்பதாயிரம் சுற்றுலாப்பயணிகள் வெளிநாடுகளில் இருந்து வருகிறார்கள்.

சாவித்ரி கோயில்

புஷ்கர் என்றால் நீர்த்தேக்கம் என்று பொருள். இங்குள்ள இயற்கையான பெரிய ஏரி இந்துக்கள் சீக்கியர்கள் இருசாராருக்கும் நீத்தார்கடன்கள் செய்விப்பதற்குரிய புனிதத்தலமாக கருதப்படுகிறது. ஏரியில் ஏராளமான படித்துறைகள் உள்ளன. ஒரு படித்துறை குரு கோவிந்த் சிங்குக்காக சீக்கியர்கள் கட்டிய கோவிந்த் சிங் படித்துறை.

நாங்கள் சென்றபோது புஷ்கரில் கூட்டமே இல்லை. கடைகளில் சிலர் ஆங்காங்கே அமர்ந்திருந்தார்கள். ஏரியில் ஒருசிலர் நீத்தார்கடன்கள் செய்துகொண்டிருந்தனர். பாசிபடிந்த நீர் தூய்மையானதாக இல்லை. அங்கும் சாக்கடைகள் ஏரியில் கலக்கின்றன. நீரில் இறங்கி ஓரிரு சொட்டுகள் தலையில் விட்டுக்கொண்டோம்.

புஷ்கர் மிகத்தொன்மையான தலம். மகாபாரதத்தில் புஷ்கரம் என இது குறிப்பிடப்படுகிறது என்கிறார்கள். கிபி ஒன்றாம் நூற்றாண்டு முதலே புஷ்கர் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. அங்கே மொகஞ்சதாரோ காலகட்டத்து பானையோடுகளும் செங்கல்கட்டமைப்புகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அசோகருக்கு முந்தைய பிராமி எழுத்துருவில் அமைந்த தொல்பொருட்களும் கண்டடையப்பட்டன. புஷ்கர் அருங்காட்சியகத்தில் அவை உள்ளன. எங்கள் ஒருநாள் பயணத்தில் அவற்றைச் சென்று பார்க்க நேரமில்லை.

முகமது கோரி புஷ்கரைச் சூறையாடினார். இங்கிருந்த எண்ணூறு ஆலயங்கள் அவரால் அழிக்கப்பட்டன எனப்படுகிறது. அதன் பின் பலமுறை புஷ்கரில் இருந்த ஆலயங்கள் இஸ்லாமிய ஆட்சியாளர்களால் தகர்க்கப்பட்டன. ஔரங்கசேப் புஷ்கரின் எல்லா ஆலயங்களையும் இடிக்க ஆணையிட்டார்.  பதினெட்டாம் நூற்றாண்டுமுதல் மீண்டும் கட்டப்பட்ட சலவைக்கல் ஆலயங்களே இன்று இங்குள்ளன.

அவற்றில் முதன்மையான ஆலயம் பிரம்மா – காயத்ரி கோயில். மையத்தெய்வம் காயத்ரி தேவியுடன் அமர்ந்த பிரம்மா. உலகிலுள்ள ஒரே பிரம்மா கோயில் இது என்று சொல்லப்படுகிறது. காயத்ரி சந்தம் பிரம்மாவின் மனைவியாக இங்கே கருதப்படுகிறது. பிரம்மனுக்கு அருகிலேயெ தேவி அமர்ந்திருக்கிறாள். பதினான்காம் நூற்றாண்டில் கட்டப்பட்டு இடிக்கப்பட்ட ஆலயத்தின் அடித்தளம் மீது நூறாண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ஆலயம் இது. கட்டிடக்கலைநுட்பம் என ஏதுமில்லை.

மையமாக இருக்கும் பிரம்மாவின் சிலையும் சிற்பமுறைமைப்படி அமைந்தது அல்ல. சலவைக்கல்லில் செதுக்கப்பட்ட நான்கு முகங்கள் கொண்ட வடிவம் ஊழ்க அமர்வில் உள்ளது. ஆதிசங்கரர் இங்கே பிரம்மாவை பதிட்டை செய்தார் என்பது தொன்மம். நான்கு கைகளில் விழிமணிமாலை, ஏடு, குசப்புல், கமண்டலம் ஏந்தியுள்ளது. இடப்பக்கம் காயத்ரிதேவியும் வலப்பக்கம் சரஸ்வதிதேவியும் அமர்ந்திருக்கிறார்கள்.

ஆனசாகரம், சாவித்ரி மலைமேல் இருந்து

சலவைக்கல் ஆலயம் காலைவெயிலிலேயே வெம்மைகொள்ள ஆரம்பித்திருந்தது. அங்கே வருவதற்கு உகந்த காலம் அல்ல. உகந்த பொழுதும் அல்ல. பிறிதொருமுறை அங்கே வந்து அந்த புனிதநகரை பார்க்கவேண்டும் என நினைத்துக்கொண்டேன். அப்போது அங்கே மீண்டும் விழாக்கோலம் உருவாகியிருக்கவேண்டும். புஷ்கரின் சிறப்பே ஒட்டகங்கள், சுற்றிலுமிருக்கும் அரைப்பாலை நிலம், மொட்டைக்குன்றுகள் ஆகியவைதான். அதற்கென வந்து ஒட்டகவண்டிகளில் அல்லது ஒட்டகங்களில் ஏறி பாலைநிலத்தைச் சுற்றி வருவதுதான் அங்கே நாம் அடையவேண்டிய அனுபவம்.

புஷ்கர் முழுக்க ஒட்டகவண்டிகளும் ஒட்டகங்களும் சென்றுகொண்டிருந்தன. யானைக்கு அடுத்தபடியாக பேருருவம் கொண்ட விலங்குகள். ஆனால் மிக அரிதாகவே எவரையாவது தாக்குகின்றன. அமைதி தவழும் முகம். உலகையே மேலிருந்து பார்ப்பதனால் விழிகள் தழைந்து ஒரு களைத்த கருணைப்பாவனை அவற்றில் கூடியிருக்கிறது.

புஷ்கர் நகரைச் சுற்றி பல சிறு குன்றுகள் உள்ளன. பெரும்பாலானவை செங்குத்தானவை. அனைத்திலும் உச்சியில் சிறிய ஆலயங்கள் உள்ளன. பல ஆலயங்கள் சென்ற நூறாண்டுகளில் எடுத்துக் கட்டப்பட்டவை. அவற்றில் ரத்னகிரி என்னும் குன்றின்மேல் உள்ள சாவித்ரி ஆலயம் உயரமானது. அங்கே செல்ல ரோப்கார் வசதி உள்ளது. படிகளில் ஏறியும் செல்லலாம். சர்ப்பம் போல படிக்கட்டு சுழன்று சுழன்று மேலேறியது. அந்தக் கோடையில், வெயில் வந்தபின் ஏறுவது இயலாது.

ரோப் கார் வசதியானது. அந்த நிலத்தை முழுமையாகப் பார்க்க வசதியானது. அதில் ஏறி அமர்ந்து மெல்ல மிதந்து மேலே சென்றோம். நடுவே கொஞ்சநேரம் நிறுத்தி வானிலேயே வைத்திருந்தனர். போதிய பயணிகள் இல்லை என்பதனால். அங்கிருந்து சுற்றிலுமிருக்கும் பாலைநிலத்தை பார்க்கமுடிந்தது. பச்சைப்பசேலென்றுதான் தெரிந்தது. ஆனால் நம்மூர் உடைமுள் போன்ற ஒரு முள்மரம், அது கோடையில் இன்னும் பசுமைகொள்வது. நடுவே சிவந்த மண்புழுக்களைப்போல சாலைகள் ஓடின.

சாவித்ரி ஆலயம் சமீபத்தில் கட்டப்பட்டது. பணி முடியவுமில்லை. சிமிண்டாலும் சலவைக்கல்லாலும் ஆனது. வட இந்தியாவின் சமீபகால இந்து கோயில்கள் எந்த ரசனையும் இல்லாமல், எந்த சிற்பநூல் முறைமையும் இல்லாமல் காமாசோமாவென கட்டப்படுகின்றன. இதுவும் அத்தகைய ஆலயம்தான்.

இந்த ஆலயத்தின் தொன்மமும் ஆர்வமூட்டக்கூடியது. சாவித்ரி தேவி பிரம்மாவின் இன்னொரு மனைவி. சவிதா என்றால் சூரியன். சாவித்ரி சூரியனின் மகள். பிரம்மமுகூர்த்தம் கடந்து வரும் இளங்காலைப் பொழுதே சாவித்ரி எனப்படுகிறது. பொன்னிறப்பொழுது அது. சவிதாவை துதிக்கும் வேத மந்திரம் காயத்ரி சந்தத்தில் அமைந்துள்ளது. அது சாவித்ரி மந்திரம் எனப்படுகிறது.  இங்குள்ள தொன்மப்படி பிரம்மா காயத்ரியை தன் அருகே வைத்துவிட்டதனால் சாவித்ரி ஊடல்கொண்டு இப்படி தனியாக மலைமேல் அமர்ந்திருக்கிறாள்.

இந்த ஆலயம் இரண்டாயிரமாண்டுகளாக இருக்கிறது. இடிபாடுகளில் இருந்து நூறாண்டுக்கு முன் மீட்டுக் கட்டப்பட்டது. காயத்ரியுடன் சாவித்ரி ஊடல்கொண்ட இந்தக் கதைக்கு மெய்யியல் சார்ந்த உட்பொருள் என்ன? படைப்பிறைவனின் மனைவியர் பொற்காலைதேவியும் அவளைப் பாடும் இசையின் தேவியும். அவர்களிருவரும் முரண்பட்டு படைப்பிறைவனுடன் ஊடல் கொள்கிறார்கள். விந்தைதான்.

மேலே சென்று சாவித்ரி தேவியை வணங்கிவிட்டு அங்கிருந்த சிமிண்ட் மண்டபத்தில் நின்றபடி கீழே பார்த்தோம். தொலைவில் அஜ்மீர் தெரிந்தது. ஆனசாகர் ஏரி ஒரு வட்டக்கண்ணாடி போல நடுவே ஒளிவிட்டது. சுற்றிலும் முள்மரங்கள் மண்டிய பாறைக்குன்றுகள். அவற்றில் கோடையில் வெந்து உடைந்த பாறைகள் அமைந்திருந்தன. தொடுவானம் கண்கூசும்படித் தெரியும் அகன்ற வெளி.

அங்கே கருமந்திகள் உலவிக்கொண்டிருந்தன. பொதுவாக கருமந்திகள் தொந்தரவு தராதவை. இன்றைய நவீன இளைஞர்களின் மோஸ்தரின் தலைமுடி வைத்திருந்தன. நீளமான வாலை நீட்டி அவை அமர்ந்திருக்க அதை மிதிக்காமல் கடந்து செல்வதுதான் கடினமான பணி.

மலைக்குமேலே நின்று அந்நிலத்தை பார்த்தபோது ஐநூறாண்டுகளுக்கு முன் அது எப்படி இருந்திருக்கும் என்ற எண்ணம் வந்தது. கிரானைட்டும் மார்பிளும் பயன்பாட்டுக்கு வராத காலத்தில் அது முழுக்கமுழுக்க வெற்றுநிலம் மட்டுமே. கொள்ள எதுவுமே இல்லை. ஆனால் அந்நிலத்துக்காக போர் நிகழ்ந்திருக்கிறது. குருதி பலநூறாண்டுகள் சிந்தப்பட்டிருக்கிறது.

ஜாவர்சந்த் மக்கானி

இப்பகுதியின் படைப்பாளி என்றால் ஜாவர்சந்த் மக்கானிதான். அவருடைய ’சோரட் உனது பெருகும் வெள்ளம்’ என்னும் நாவல் தமிழாக்கம் செய்யப்பட்டு வந்துள்ளது. குஜராத்தின் கட்ச் முதல் ராஜஸ்தானின் தெற்குப்பகுதி வரை விரிந்துகிடக்கும் வெற்றுநிலத்தின் கதாசிரியர் அவர்.

இங்கே திகழ்ந்த அரசுகள் வீழ்ச்சி அடைந்து பிரிட்டிஷ் ஆட்சி உருவானபோது பழைய அரசின் படைவீரர்கள் கொள்ளையர்களாக மாறினார்கள். அதற்கு முன்னரேகூட இந்த முள்நிலத்தில் கொள்ளை என்பது ஒரு மையத்தொழிலாகவே இருந்துள்ளது. கொள்ளையர் ஆட்சியாளர்களாவதும் ஆட்சியாளர் கொள்ளையர்களாவதும் மிக இயல்பான ஒரு நிகழ்வு இங்கே. குஜ்ஜார், மீனா போன்ற சில தொல்குடிகள் மரபாகவே கொள்ளைத்தொழிலும் செய்பவர்கள்.

[image error]ஸ்லீமான்

பரம்பரைக் கொள்ளையரும் புதுக்கொள்ளையரும் இணைந்து பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் பிண்டாரிகள், தக்கர்கள் என்னும் மாபெரும் கொள்ளையர்க் கூட்டங்களாக உருவெடுத்தனர். தக் என்னும் சொல்லே அதில் இருந்து வந்ததுதான். இவர்களில் முஸ்லீம்கள், ஷத்ரியர்கள், பழங்குடிகள் ஆகிய எல்லா சமூகக்குழுவினரும் உண்டு. இஸ்லாமியர் உட்ப இவர்கள் அனைவருமே காளியை வழிபட்டு பலிகொடுத்தபின் கொள்ளைக்குச் செல்பவர்கள். காளிவழிபாடு இவர்களின் குற்றவுணர்ச்சியை இல்லாமலாக்கியது. ஆகவே ஈவிரக்கமில்லாத கொலைகாரர்களாக ஆனார்கள்.

உடைமைகளை திருடியபின் பறிகொடுத்தவர்களை ஒருவர் கூட விடாமல் முழுமையாகவே கொன்றுவிடுவார்கள். உடல்களை புதைக்க பல இடங்களை வைத்திருந்தார்கள். பழைய ராஜஸ்தானின் பெரும்பாலான நிலம் எவருக்கும் உரியதல்லாத வெற்றுப்பரப்பு. ஆகவே பலகாலம் இவர்களின் இருப்பே கண்டறியப்படவில்லை. இவர்கள் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் வட இந்தியாவில் கிட்டத்தட்ட ஒருலட்சம் பேர் இருந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இவர்களால் பதினைந்து லட்சம்பேருக்கு மேல் கொல்லப்பட்டிருக்கலாம்.

[image error]தக்கர்கள்

கட்சும் ராஜஸ்தானும் தென்னிலத்தில் இருந்தும் மேற்கில் இருந்தும் டெல்லிக்கும் பிற கிழக்கு நிலத்திற்கும் செல்வதற்கான வழிகளால் ஆனவை என்பதனால் இவர்கள் செழித்தனர். பல ஜமீன்தார்களும் குறுநில மன்னர்களும் இவர்களை ஆதரித்தனர்.

இவர்களின் கொலைமுறைகள் வேறுபட்டவை. இவர்கள் பயணிகள் மற்றும் வணிகர்குழுக்களை வேவுபார்த்தபின் சாமியார்கள், சூஃபி பயணிகள், குறவர்கூட்டங்கள் என்னும் பாவனையில் அவர்களுடன் சேர்ந்துகொள்வார்கள். பாலைவனத்தில் வழிகாட்டிகள் தேவை என்பதனால் அவர்கள் இவர்களை நம்புவார்கள். அவர்களை வழிதவறசெய்து தேவையான இடங்களுக்கு கொண்டு செல்வார்கள். அங்கே மேலும் பலர் காத்திருப்பார்கள்.

இவர்கள் இனிமையாக சுவாரசியமாக பேசுபவர்கள். பலமொழிகள் தெரிந்தவர்கள். பேச்சு சென்று கொண்டிருக்கையிலேயே சட்டென்று தாக்குவார்கள். சரசரவென ஆண் பெண் அனைவரையும் கொல்வார்கள். அதன்பின்னரே கொள்ளை. பலசமயம் நூறுபேரை கொன்று ஒரு துண்டு தங்கமோ வெள்ளியோ பணமோ கிடைக்காமலாவதும் உண்டு. அதைப்பற்றிக் கவலைப்பட மாட்டார்கள்.

இவர்களில் இஸ்லாமியர் தங்கள் தலையில் கட்டும் துவாலையால் கொல்லப்படுபவரின் கழுத்தை பின்னாலிருந்து இறுக்குவார்கள். முன்னால் நின்று பேசிக்கொண்டிருப்பவர் அவர் காலை பிடித்து முன்னால் இழுப்பார். இந்துக்கள் பட்டுநூலை பயன்படுத்துவார்கள். ஒரு நிமிடத்தில் கொலை நிகழ்ந்துவிடும். குருதி சிந்தப்படுவதில்லை. உடல் புதைக்கப்படும்.  ஆகவே தடையங்களே இருக்காது.

புஷ்கர்

வில்லியம் ஸ்லீமான் என்னும் பிரிட்டிஷ் படைத்தலைவர் தற்செயலாக நாடெங்கும் நிகழும் வழிப்பறிக் கொள்ளைகள் இப்படிப்பட்ட ஒரு ‘கல்ட்’ டால் செய்யப்படுபவை என்பதை கண்டறிந்தார் அதை அவர் அன்றைய கவர்னர் ஜெனரல் வில்லியம் பெண்டிங் பிரபுவின் கவனத்திற்கு கொண்டு சென்றார். இப்படி இரு ’கல்ட்’கள் இருக்கின்றன என நம்பவைக்க அவர் பெரிதும் போராட வேண்டியிருந்தது.

தக்கர்க‌ள் பதினான்காம் நூற்றாண்டு முதலே ஒரு வகை கண்காணா அமைப்பாக, ஒருவகை மதமாக இருந்து வந்தனர். கொலை கொள்ளை மதம் எனலாம். காளி அதன் தெய்வம். பிரிட்டிஷ் ஆட்சியில் உள்ளூர் படைகள் கலைக்கப்பட்டபோது தக்கர்களின் எண்ணிக்கை பற்பல மடங்காகப் பெருகியது. வில்லியம் ஸ்லீமான் தக்கர்களிலும் பண்டாரிகளிலும் ஒற்றர்களை ஊடுருவ விட்டார்.

இவர்கள் தங்களால் கொல்லப்படும் பயணிகளிடம் இருக்கும் கைக்குழந்தைகளை எடுத்து வளர்ப்பது வழக்கம். அக்குழந்தைகளும் கொலைகாரக் கொள்ளையர்களாக மாறும். அவர்களில் சிலருக்கு மங்கலாக தங்கள் பெற்றோரின் நினைவுகள் எஞ்சியிருந்தன. அவர்கள் இயக்கத்தை வெள்ளையர்களுக்கு காட்டிக்கொடுத்தனர். வில்லியம் ஸ்லீமான் பத்தாண்டுகள் போரிட்டு தக்கர்களை வேரோடு அழித்தார். வட இந்தியாவில் குற்றங்களை கட்டுப்படுத்தினார்.

தக்கர்களைப் பற்றி தமிழிலும் நல்ல நூல்கள் வெளிவந்துள்ளன. இரா.வரதராஜன் எழுதிய தக்கர்கொள்ளையர்கள் [கிழக்கு] ஒரு நல்ல நூல். ஆனால் இன்றும்கூட ராஜஸ்தானில் கொள்ளைக்குழுக்கள் உள்ளன. பவாரியா என்னும் கொள்ளைக்குழு தமிழகத்தில் நிகழ்த்திய தொடர்கொள்ளைகள் புகழ்பெற்றவை. அவர்களை கைதுசெய்யச் சென்ற தமிழகத்துக் காவலர் கொல்லப்பட்ட நிகழ்வினூடாக அவர்கள் இங்கே பேசப்பட்டனர். இன்றும் அவர்கள் ஒருங்கிணைந்த கொள்ளையர் வலைப்பின்னலாக தேசம் முழுக்கச் செயல்படுகின்றனர். தீரன் அதிகாரம் ஒன்று என்னும் சினிமா அவர்களை சித்தரிக்கிறது.

மீனா, குஜ்ஜார் போன்ற சாதிகள் மிகப்பெரியவை. அவை முன்பு கொள்ளையில் ஈடுபட்டிருந்தன. அவர்களை பிரிட்டிஷார் குற்றபரம்பரையாக முத்திரையிட்டுக் கண்காணித்தனர். விடுதலைக்குப்பின் அந்த முத்திரை நீக்கப்பட்டது. அச்சமூகங்கள் இன்று முன்னேறிய சமூகங்கள் ஆகிவிட்டன. எங்கள் வண்டி ஓட்டுநராகிய காவலரேகூட ஒரு மீனாதான்.

சோரட் உனது பெருகும் வெள்ளம் இந்த குற்றம்சார் குடிகளைப் பற்றிய நாவல். அஜ்மீரின் வறண்ட மலைகளைப் பார்த்தபடி சென்றுகொண்டிருந்தபோது வெவ்வேறு கற்பனைகள் வந்து அறைந்து என்னை அதிரச்செய்து கொண்டிருந்தன. நான் இந்நிலத்தை நேரில் பார்த்து அறிந்ததைவிட ஜாவர்சந்த் மக்கானி வழியாக அறிந்தது மிகுதி. எழுதப்பட்ட நிலமே வாழும் நிலம். காயத்ரியும் சாவித்ரியும் சூழ பிரம்மன் அமர்ந்திருப்பது அதைக் குறிக்கிறதா?

[மேலும்]

நீர்க்கூடல் நகர் 2

தக்கர் கொள்ளையர்கள்- வரதராஜன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 21, 2021 11:35

குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்-5

உனது காதலின் நெருப்பில்
என் இதயம் தழலாகி வெடிக்கிறது இப்போது..
அமைதியும் மௌனமும்  கலைந்து
நான் நொறுங்குகிறேன் இப்போது!

எனது ஒவ்வொரு ரத்த நாளமும்
உனது கரங்களால் காயமானது:
விந்தையானதா அதற்காக
நான் அழுவது இப்போது?

எனது இதயம் துன்பத்தின் வாள் தரும்
வலியை உணர்கிறது
இத்துயர் பொறுப்பதன்றி
என்செய்வேன் இப்போது?

இதய நகரம் அழிந்து போனது
காதலின் அரசன் கைப்பற்றியபோது ..
வீதியெங்கும் அவனது செல்வங்களை
காண்கிறேன் இப்போது!

நகரம் ஏன் அழிந்தது என்று சொல்ல
அனைவரும் விழைகிறார்கள்
அது அழியவே இல்லை – இதுவே உண்மை
அது செழித்திருக்கிறது இப்போது!

எனது சுயநலத்தின் வழிகள்
எனை சிறையிட்டிருந்தன;
எங்கிருந்தோ வந்த கரம்
விலங்குகளை அவிழ்க்கிறது இப்போது.

தெய்வீக விருந்தின் மதுக்கதவை
மதுகொணர்பவன் திறந்தான்..
நூறாயிரம் கோப்பைகள்
நான் பெறுகிறேன் இப்போது

மதுகொணர்பவனின் அழகிய முகம்
திரை விலகியபோது
எனது இருப்பின் அடித்தளம்
நடுங்குகிறது இப்போது!

தூய மதுவின் எண்ணற்ற கோப்பைகள்
மொய்ன் அருந்தினான்
இன்னும் தேவையென தேடல்
தொடரும் இப்போது!

 

நான் உன்னைத் தேடுகிறேன், ஆனால்
நீ விலகி ஓடுகிறாய்
என்னிடம் இருந்து:

நான் உன்னைக் காண்கிறேன், ஆனால்
முகம் திருப்புகிறாய்
என்னிடம் இருந்து!

ஆறு திசைகளுக்கு அப்பால் நான்
எனை எங்கும் தேடுகிறாய் நீ:
எவ்வளவு காலம் தப்பி ஓடுவாய்
என்னிடம் இருந்து?

ஓ அறியாமை கொண்டவனே, நீ
என்னோடு இருக்கவே நாடுகிறாய்
நன்றாகக் கேள், நான் உன்னை விலக்குவதே இல்லை
என்னிடம் இருந்து.

நான் சமுத்திரம் நீ அதில் எழுந்த முகில்
கவலை கொள்ளாதே
உன் கண்ணீரில் பசுமை மலரும் – அது வருவது
என்னிடம் இருந்து

நான் கேட்டேன், எவ்வளவு காலம்
திரைக்குப் பின்னால் இருப்பாய்..
இதுவே தருணம் ஒளியாதே
என்னிடம்  இருந்து?

விடை: திரையில் இருப்பது நான் அல்ல
உனது இருப்பே திரை ஆனது
நீ இருக்கும் வரை ஆயிரம் திரைகள் மறைக்கிறது
என்னிடம் இருந்து

சில பெயர்களை சொல்லி
கடவுளுடன் இருக்க முடியுமா?
உனது பொய்யான இருப்பே விலக்குகிறது
என்னிடம் இருந்து!

மொய்ன் ஆடியில் நீ கண்டதென்ன?
என்னை ஏன் கேட்கிறாய்? நீ அறிவாய்
நீ எதை மறைத்தாய் என
என்னிடம் இருந்து!

அப்படி ஒரு நெருப்பு என்னில் பற்றியது
உடலும் ஆன்மாவும்
எரிந்து போனது..

இதயத்தின் பெருமூச்சில்
நாவும் வாயும் தழலென
எரிந்து போனது!

நரகத்தின் எரியை விட
பிரிவின் எரி சூடானது
காணும் உடல், காணாத இதயம், ஆன்மா துன்பத்தில்
எரிந்து போனது!

நரகத்தின் நெருப்பு
பாவியின் தோலைத்தான் எரிக்கும்:
பிரிவுத்தீயில் எனது எலும்பின் மஜ்ஜைகள் கூட
எரிந்து போனது!

முதலில் இரு உலகின் இன்பங்களை
இதயம் ஆசைப்பட்டது
காதல் வந்ததும் இரு உலகங்களும்
எரிந்து போனது!

இப்போது இருப்பது
அவனுக்கான அன்பும் ஏக்கமும்தான்
அவனைக் கண்டதும் மண்ணும் விண்ணும் தரும் இன்பமும்
எரிந்து போனது!

உலகில் சொர்கத்தின் சந்தை
மதிப்பு மிக்கது என எண்ணினேன்..
கடவுளின் அன்பின் சந்தையில் நுழைந்ததும் அவை
எரிந்து போனது!

பயனற்ற ஆசைகளின் பாலைவெளியில்
எனது தாகம் காதலனைக் காண்பது:
தாகத்தின் ஆசை தீவிரமானது, எனது ஆன்மா
எரிந்து போனது!

எரிந்து போவதன் முதல் அடையாளம்
சுய நினைவு தவறுவது
எனது பெயரை அகற்றினேன் என் அடையாளம்
எரிந்து போனது!

ஆன்மாவின் ஆடியில்
காதலனின் உருவை பார்த்தபோது
அக்காட்சியின் மகிமையில் எனது இருண்ட இருப்பு
எரிந்து போனது!

எனக்கும் காதலனுக்கும் இடையில்
நூற்றுக்கணக்கான திரைகள் இருந்தன
எனது பெருமூச்சின் ஒற்றைப் பொறியில் அத்தனையும்
எரிந்து போனது!

மொய்ன் பார்க்காத போது,
காதலனின் அழகு சொல்லப்படுவதில்லை:
பார்த்து விட்டாலோ அவனது கவிதையின் ஆற்றலும்
எரிந்து போனது!

நீ உண்மையை அறிய விரும்பினால்
உன்னைத் தாண்டிச் செல்க
நீ மட்டுமே என்றறிக
உன்னிடம் உண்மையை மறைப்பது

உன் இதயத்தின் பசியை
சொர்க்கம் தீர்ப்பதில்லை
இதயம் விடுதலை அடைய
அது காதலனை நாடுகிறது

ஆன்மா அவனது உலகில் இருந்து
மண்ணுக்கு வந்தது
அதன் இல்லமாகிய
இறுதி இலக்குக்கே அது மீள்கிறது

காதலின் பறவை, புனித வெளிகளின்
எல்லையற்ற கூடுகளில் இருந்து விடுபட்டது
கதைகளின் ஜிராக்* போல
இதயம் அதை வலையிட்டு பிடிக்கிறது

இரு உலகங்களின் பொக்கிஷங்களும்
அரசனின் செல்வத்தின் முன் ஒன்றுமில்லை
அது அன்பின் செல்வம்
ஒருவருடைய இதயத்துள் இருக்கிறது

மொய்ன் இதயம் துன்பத்தில் இருந்து விடுபட
இதயத்திடம் சொல்க
காதலில் இதயம் துயருறும் போது
துயரிலிருந்து இதயம் மீள்கிறது

* – பாடும் பறவை

மொழியாக்கம் சுபஸ்ரீ

குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்-4 குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்-3 குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள் -2 குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 21, 2021 11:34

நிலம் பூத்து மலர்ந்த நாள் – வாசிப்பனுபவம் 

நிலம் பூத்து மலர்ந்த நாள் – கடலூர் சீனு

முதல் வாசிப்பில் கொற்றவையின் சொல்வள சாயலையும், விஷ்ணுபுரத்தின் வடிவ சாயலையும் இன் நாவல் கொண்டிருப்பது போல் தோன்றினாலும், முதல் மீள் வாசிப்பிலேயே என்னுள் ஆழ ஊன்றிய நூலிது. என்னளவில் கொற்றவையோ, விஷ்ணுபுரமோ என்னிடம் பெரும் தவத்தை கோரிய நூல்கள் ஆகும்.

பெரும்பாணன், கொலும்பன் – நெல்லக்கிளி, மயிலன், சித்திரை, உலகன், சீரை, சந்தன் என உள்ளுணர்வால் நகர்த்தப்படும் பாணர் குலம். பரணர், கபிலர், ஔவை என ஒரு அறிவு குலம். கதையை ஆட்டிவைக்கும் மூவேந்தர்கள் மற்றும் முக்கிய மூகுறுநில மன்னர்கள்(நன்னன், பாரி, அதியமான்) என ஒரு ஆற்றல் குலம், இவ்வாறு கனகச்சிதமான கதை மாந்தர்களும் கொண்டுள்ளது.  மகீரனின்  செயல் இவர்கள் அனைவரின் ஊழையும் இணைக்கும் சரடாக இறுகிறது.  இந்நூல் வாசிப்பனுபவம் இரண்டாயிரம் வருடத்திற்கு முன் வாழ்ந்த நம் மூதோர் காலங்களில் அவர்களுடன் கைகோர்த்து சுற்றி திரிந்த நிறைவை கொடுகின்றது, சங்ககால நம் மனிதர்களை சரியாக கதையில் இணைத்து, இதில் வரும் ஒவ்வொரு பாத்திரமும் தன்னளவில் உயர்த்த சிந்தனையாளர்களாகவும் நுண்ணறிவு கொண்டவர்களாகவும், ஒருவர் மீது ஒருவர் அன்புநிறைந்தவர்களாகவும் படைக்கப்பட்டுள்ளதே இதன் சிறப்பம்சம். இதை முழு நாவலிலும் இவர்களின் உரையாடலில் வழியே காணமுடிகிறது. அதற்காக மனோஜ் குரூர் அவர்களுக்கு நன்றி. செம்மையான மொழி மாற்றத்தால், படிக்கும் போது மனம் குதூகலிக்கும். மிக அழகிய மொழி வடிவத்தோடு படைத்த ஜெயஸ்ரீ அவர்களுக்கு நன்றி.

வறுமையின் மீதுள்ள வெறுப்பின் காரணமாக மயிலன் தன் வீட்டை விட்டு வெளியேறுகிறான். சிறிது காலத்திற்கு பின், அதே வறுமையை அகற்றும் பொருட்டு பொருள்தேடி வேள்பாரியை சந்திக்க செல்கிறது அவனது குடும்பம். இவ்விரண்டும் இணை கதைகளாக மயிலன் மற்றும் கொலும்பன் பார்வையில் நகர்கிறது. மூவேந்தர்களின் சூழ்ச்சிக்கு மகீரனும்  மயிலனும் பகடையாகின்றனர். நன்னன் மற்றும் வேள்பாரியை வெல்லும் பொருட்டு மகீரனின் சதியில், மயிலன் தன்னை அறியாமலே தன் குடும்பத்தை சிக்கவைகிறான், அதனால் தன் தந்தையின் இறப்புக்கு காரணம் ஆகிறான். இதற்கிடையே சித்திரையின் பார்வையிலும் கதை நகர்கிறது. கபிலரும்,  ஔவையும் கூட இந்த சூதின் பகடைகளே. இன் நாவலில் சீரையை தவிர பிற அனைவரையும் ஊழே நகர்த்தி செல்கிறது. சீரையின் உலகமே வேறு, அவள் முற்றிலும் பிரம்மத்தால் ஆட்கொள்ளப்படுகிறாள்.

தன் நுண்ணறிவால் ஊழை கவனமாக கையாளும் பரணரின் சொல் என்னக்கானதாகவே கருதினேன், அது அனைவருக்குமான சொல்லும் கூட. அறம் பிழைத்தோர் அதன் கூற்றாக ஆகும் தருணத்தை வெவ்வேறு தளங்களில் சீரையே நிகழ்த்துகிறாள். இக்கதை மாந்தர்களின் கால சுழற்சியை மூன்றாக பிரிக்கலாம். ஊழை நுண்ணறிவால் கவனமாக கையாள்பவர்கள், அறபிழை தவிர்ப்பவர். பரணர், ஔவை இதற்கு சான்று. ஊழில் உழல்பவர்கள், அறிவில் சிறந்தவர்கள், ஆனால் அறபிழை அறியாதவர். நன்னன், மயிலன் இதற்கு சான்று. ஊழில் உழல்பவர்கள், அறிவில் சிறந்தவர்கள், அறபிழை அஞ்சுபவர். பிற அனைவரும் இதற்கு சான்று.

அறப்பிழை தவிர்ப்பவர் 

பரணர் பல தருணங்களில் பாணர் குலத்துக்கு உறுதுணையாக இருக்கிறார். உம்பர்காடில் சந்திக்கும் போதும் அவரே வேள்பாரியை தேடிச்செல்ல சொல்கிறார், அங்கு சென்றபின் தன் நண்பர் கபிலரை சந்திக்க சொல்கிறார், அவர் பாரியை சந்திக்க ஏற்பாடு செய்வார் என்கிறார். தனது தீர்க்க தரிசனத்தால் பாணர் குலம் செல்லும் இந்த பொருள் ஈட்டும் வேட்கை பயணம் நிறைவேறாது என்பதையும் அறிகிறார். மயிலனை வேறொரு இடத்தில் சந்திப்பீர்கள் என்றும் சொல்லுகிறார். இவர்கள் முதன் முதலில் சந்திக்கும் போது பரணர் இயற்றிய சங்க பாடல் ஒன்று வரும், என் உள்ளம் உருகிய இடம் இது! சற்று எளிமையாகிய வரிகளில்,

உடல் வெளுத்து இளமை குன்றி,
புதுவுடல் வலிக்க பிள்ளையும் பெற்று,
உடல் மெலிந்து வெளுப்புமாகி,
எழிலிமைகளில் கண்ணீர் பெருக, நோய்யுற்று,
குரங்கின் மதிபோல் அறிவு பிழற,
மயங்கினேனே – அன்பு தோழி!

வேறொரு சந்தர்ப்பத்தில் மறவர் இனத்திடம் இருந்து மயிலனை பரணரே மீட்க்கிறார், அவனுக்கு அனைத்தையும் கற்றுத்தருகிறார். இருப்பினும் பரணரிடமே அவனுக்கு அரசியல் முரண் ஏற்படுகிறது. ஒரு தருணத்தில் பரணரின் கூற்று இவ்வாறு வரும் “தெரியாமல் செய்த ஒரு குற்றத்திற்காக ஏதுமறியாத ஒரு பெண் குழந்தையை கொல்வதா? ஓலைசுவடிகளில் சொல்லியிருப்பதற்கப்பால் சிலதெல்லாம் இருக்கிறது“. அதற்கு மனுநீதி சோழனின் உதாரணம் காட்டி, “குற்றம் செய்தவர்கள் அனைவரையும் ஒன்றாகவே கருதுவான் என்பதே நன்னனின் பெருமை. அது அப்படியே நிலைநிற்க வேண்டும்” என்பதை எதிர் கூற்றாக வைக்கப்படுகிறது. சிறுமி கொள்ளப்படும் செயலுக்கு நன்னனுடன் மயிலன் துணை நிற்க்கிறான். அன்றே பரணர் அந்நாட்டை விட்டு வெளியேறுகிறார். இந்த சிறுமி உம்பர் காட்டில் இறை ஆகிறாள், தொன்மமாக நீள்கிறாள், பின்னர் சீரையின் வடிவிலும் எழுகிறாள். இங்கு, அறபிழை தவிற்பவராக பரணர் மன்னனை எதிர்த்து நிர்கிறார்.

நன்னன் சேர மன்னனால் வீழ்த்த படுகிறான், மயிலன் அலைகழிக்கப்படுகிறான் பின் தன் குலத்துடன் சேர்கிறான். தான் செய்த கொடுமைகளுக்கு தன் குடும்பம் கருணையினால் பதிலடி கொடுக்கிறது, தன்னில் உள்ள குற்றஉணர்வால் மயிலன் தன்னையே குறுகி நிர்கிறான். அனைவரும் நாடு திரும்ப நடக்கின்றர், உம்பர் காட்டில் பரணரை மீண்டும் சந்திக்கநேர்கிறது, மயிலன் வேகமாக பரணர் கால்களில் விழுகிறான், ஆனால் உன்னை மன்னிக்க வேண்டியது நானல்ல என்கிறார் பரணர். பின்னர் பரணர் தனது பொருளனைத்தையும் பாணர்களுக்கு கொடுக்கிறார். மேலும், அரசர்களுக்கு புகழுரை வேண்டிய காலம்வரை புலவர்களுக்கு துன்பமில்லை என்று சொல்லி பரணர் நடந்து மறைகிறார். இங்கு, பயன் தவிர்க்கும் குன்றா வளமிக்கவராக பரணர் காட்சியாகிறார். தனது சொலே பொருளாக மாறும் ஒருவருக்கு எப்பொருளும் பொருளற்றதாகவே தோன்றியிருக்கும்.

அறப்பிழை அறியாதவர்

நன்னன் முதலில் சேர படையை வெற்றிகொண்டாலும், பின் சேரனிடம் தோற்கிறான். நன்னனின் அறபிழை பற்றிய செய்தி பாணர் குலத்திடம் பரணர் கூறுவதாக நாவலின் முதலிலேயே வரும். நன்னன் ஒரு மாந்தோப்பு வளர்கிறான், அதன் கனிகளை பாதுகாக்க காவல் இடப்படுகிறது, இத்தோப்பில் எதை கவரும் ஒருவருக்கு மரண தண்டனை கொடுக்கப்படும் என்ற விதி இயற்றப்படுகிறது. அரச விதியினை அறியாத சிறுமி மாப்பழத்தை கவரவே, அரச நீயதியின்படி அச்சிறுமியை கொன்றுவிட நன்னன் ஆணை இடுகிறான். அதை தடுக்க பரணர் பெரிதுமுயன்றும், நன்னன் தன் முடிவை மாற்றவில்லை. அரச நீதியின் பொருட்டு, சிறுமியிடத்து உள்ள கனிவினை கண்டுகொள்ளாமல், அறியாது செய்த தவறு  என்றும் சிந்திக்காமல் சிறுமியை கொள்வதன்முலம், இயற்கை நீதிக்கு பங்கம் விளைவித்து அறபிழை அறியாதவனாகிறான் நன்னன். அச்சிறுமி அக்காட்டில் இறைவியாகிறாள். இவ்விறவியை பற்றி பரணர் இவ்வாறு கூறுகிறார், “இன்னும் பல சந்தர்ப்பங்களில் இவள் மீண்டும் மீண்டும் பிறப்பாள். அரச நீதியும் இறைவனின் நீதியும் அவளை மீண்டும் மீண்டும் அலைக்கழிக்கும். கனிவு மட்டுமல்ல, பகையும் வற்றாதவள் இவள். இனிவரும் காலம்தோறும் கனிவையும் பகையையும் இந்த உலக மக்கள்மீது பொழிவாள் இவள்.”

அதே போல் நாவலின் முடிவில் சீரையை தேடி இந்த காட்டில் உள்ள இறைவி கோவிலுக்கே வருகிறார்கள் பாணர் குலம், அப்போது மயிலன் ஓர் இடிதாக்கி கோவிலின் முற்றத்தில் விழுகிறான், சீரையின் உருக்கொண்டு காட்டில் உள்ள இறைவி மயிலனை துரத்துகிறாள், மயிலனின் ஒடுங்கலாக இவ்வாறு வரும், “செய்து வைத்த பாவங்களில் இருந்தெல்லாம் எனக்கு விடுதலையே கிடையாது. மண்ணிடிந்து  போய்விட்டதென்று எண்ணியதெல்லாம் எந்த நேரமும் உயிர்பெற்றுத் திரும்பக் கொத்தும்.” இவ்வாறு அறபிழை அறியாதவர்களாக நன்னன் மற்றும் மயிலன் இருக்கிறார்கள்.

அறப்பிழை அஞ்சுபவர்

வேள்பாரியை புகழ் பாடி பொருள் ஈட்டிய கபிலர், பாரியின் இறப்பிற்குப்பின் ஏற்படும் குழப்ப சூழலிலிருந்திய பாணர் குடும்பத்தை பறம்புமலை யிலிறுந்து வெளியேற உதவுகிறார். பின்னர் சேரனிடம் சேர்ந்து புகழ் பாடுவதை வழக்கமாகிக்கொல்கிறார். ஒரு கட்டத்தில் பாணர் குலம் சேரனை சந்திக்க வரும் போது கபிலரே அவர்களுக்கு தடையாக இருக்கிறார். இதை அறிந்த மயிலன் கபிலரிடம் சினம் கொல்கிறான். பாரியை கொன்றது மயிலனே ஆனாலும் கபிலரிடம் ஏற்படும் வாக்குவாதத்தில் பாரியை நீங்கள் என்னக்குமுன்பே அகத்தில் கொன்றுவிட்டீர் என்கிறான். புரியாமல் கபிலர் நானா என வினவவே, மயிலன் இவ்வாறு கூறுகிறான் “படையுடன் வந்தால் தோற்கடிக்க முடியாது. பாணராகவோ இரவலராகவோ வந்து இரந்தால்தான் நாட்டை அடையலாம் என்று பாடல்வழியாக நீங்களே அவர்களுக்கு தெரிவித்தீர்கள். நீங்கள் சொன்னதுபோலவே எங்களை போன்ற பகடைகளை நகர்த்தி அதை செய்து முடித்தார்கள். தன் உயிரைவிட மேலாக உங்களிடம் அன்பு காட்டிய பாரிக்கு நீங்கள் செய்தது, எந்தப் பொருளையும் உங்களிடம் நிலைத்திருக்காமல் ஆக்கும்“. இன் நிகழ்விற்குப்பின் பாரியைப் பற்றிய பாடல்களைப் பாடியபடி கபிலர் உண்ணா நோன்பிருந்து வடக்கிருந்து உயிர் விடுகிறார்.

இப்படி இந்நாவலின் வரும் பிற அனைவரும் அவர்களின் பொருள் தேடும் வேட்கை வெற்றியடையவில்லை என்றாலும், அறபிழைக்கு அஞ்சுபவர்களே. அவர்கள் தன் நுண்ணுணர்வால் சரியாக சூழலை கையாள்பவர்கள், அவர்களை பெரும்பாணனும் கொலுபனும் வழிநடத்துகிறார்கள்.

இந்நாவலில் சற்று நிறுத்தி யோசிக்க வைத்த தருணங்கள் பல. அவற்றுள் சில அனுபவங்களும், கேள்விகளுமாக இங்கே.

வறுமையிலும் தங்கள் மனிதர்களை காட்டிலும் பிற உயிகளிடத்து இவர்கள் காட்டும் அன்பை சுட்டும் இடம் இது. கொலும்பன் வழக்கம்போல் கையில் ஒன்றும்மில்லாமல் மாலையில் வரும்போது நெல்லக்கிளி இவ்வாறு சொல்லுகிறாள், “இந்த நாய்குட்டிகளையாவது நினைத்துப் பார்த்தீர்களா? சீரையும் ஒன்றும் சாப்பிடவில்லை” என்றாள். இவ்வரி என்னை பலவருடங்கள் முன் வாசித்த “ஓநாய் குல சின்னம்” எனும் நாவலில் வரும் வரிகளை நினைவுபடுத்தியது. மேச்சல் நில பகுதிகளில் “ஆக சிறு உயிரான புல்லே  மிகப்பெரிய உயிர்” என்று ஒரு வரி வரும், இந்த வரி வாழ்க்கையை பார்க்கும் பார்வையை மாற்றியது. ஓர் அறிவு உயிர் முற்றிலும் அழிக்கப்பட்டால் பிற அறிவுள்ள அனைத்து உயிரும் படிப்படியாக அழியும் அல்லவா? எனவே ஓர் அறிவு முதல் ஐந்தறிவு உயிர் வரை உள்ள ஒவ்வொரு உயிரும் காக்கப்படவேண்டும் அல்லவா? இயற்கையில் உயிர்கள் உணவிற்காக மட்டுமே இயற்கையால் கொள்ளப்படவேண்டும், தவிர ஒருவரின் வசதிக்காக கொள்ளப்படுகிறது என்றால் அது ஒரு ஒழுங்கை குலைக்கும் செயல்தானே? இங்கு பிற உயிர்களின் மீது பாணர் குடும்பம் காட்டு அன்பு மகத்தானது.

மேலும் கொலும்பன் சீரைக்கு சொல்லும் தருணம், “வானத்திற்கு நிறமில்லை மகளே. அது எப்போதும் கண்களோடு விளையாடுகிறது. அதுபோலவே இந்த உலகமுமென்று சிலர் சொல்கின்றனர்“. இவ்வரிகள் “யதி” நூலை நினைவூட்டியது “அறிவுக்கு தெரிவதாக நாம் காணும் விஷயம் நாம் நம்பும் படித்தான் அங்கே இருக்கிறதா என்று சொல்லிவிடமுடியாது” என்றவரிகளை.

பாணர் குலம் மாந்தர்கள் அனைவறையுமே ஒரே குடும்பமாக என்னும் காட்சி இது, நெல்லக்கிளி சந்தனை பார்த்து சொல்லுவாள், “எங்களுடைய வேதனையை தனியாக சுமந்தவன் நீ. நான் பெற்றது அவனையென்றாலும், நீ உடனிருக்கும்போது அவனும் வேண்டுமென்று விரும்பியிருக்கக்கூடாது“. இப்படி ஒவ்வொருவரும் பேரன்புடனே வாழ்கின்றனர்.

இதை முடிக்கும் தருவாயிலும் நான் இந்நாவலை பற்றி ஒன்றும் சொல்லிவிடவில்லை என்றே தோன்றுகிறது. அது முப்பதாயிரம் சொற்களை முப்பது சொற்களால் சொல்லிவிட நினைப்பதற்கு சமம். ஒவ்வொரு பக்கத்திலும் நான் அறிய ஏதோ ஒன்று உள்ள நூல், அல்லது இனிமை ததும்பும் சொற்களின் அழகிற்காகவே மீண்டும் மீண்டும் படிக்க தூண்டும் நூலிது. நான் சிறுவதில் ஒரு நாட்டை ஆள்வது அரசியல் தலைவர்களே என்றென்னியிருந்தேன். இளம்வயதில், பெரும் முதலாளிகளும் வியாபாரிகளும்தான் நாட்டை ஆள்வதாக அறிந்தேன், ஆனால் இன்று என்நாடாகிலும் அதை ஆள்வது அன்நாட்டில் உள்ள அறிவார்த்தவர்களே என்பதை இப்புத்தக வழியாக என்னால் கண்டடைய முடிந்தது. தனியொருவராக அல்ல, அவர்களின் திரளே இதை செய்கிறது. தாங்கள் இந்நாவலை கொண்டாடியதற்கு மிக்க நன்றி.

பேரன்புடன்,

கார்மேகம் 

பெங்களூர்

நிலம் பூத்து மலர்ந்த நாள் வாங்க

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 21, 2021 11:33

லீலையும் நற்றுணையும்- கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

தங்களின் புனைவு களியாட்ட சிறுகதைகளை இப்பொழுது படித்துக்கொண்டிருக்கிறேன். நூறு கதைகளில் மனம் விரும்பும் கதையை படிக்கிறேன். சில கதைகள் என் கேள்விகளுக்கு விடையாய் அமைகிறது. சிலது இருக்கும் தெளிவை இன்னும் கூர்மையாக்குகிறது. கதைகளை படித்தபின் கடிதங்களையும் படிக்கிறேன். கதைகள் அவர்களுக்குள் விரிந்திருக்கும் கோணங்கள் எனக்கு மேலும் கதையின் ஆழம் தொட உதவுகிறது.

[லீலை] பற்றி என் எண்ணங்கள் :

பெண் ஆடும் விளையாட்டு. தன் தந்திரம் மூலம் பல அவதாரங்களாய் அவள் வாழ்வில் அவளாடும் ஆட்டம். அனைத்து அவதாரங்களும் அதன் லீலையை கச்சிதமாய் ஆடுகிறது. எல்லா அவதாரங்களுக்கும் பொதுவான கதை நான்  ஒரு அபலை. ஒரு சோகக் கதை மூலம் பெண்ணால் எளிதாக ஏமாற்றமுடிகிறது. சமூகமும் அதைதான் எதிர்பார்ப்பது போலுள்ளது. உரப்பன் கணேசன் தன்னை அவளின் ஆபத்பாந்தவனாய் கற்பனை செய்து கொள்கிறான். பெண்ணின் கஷ்டங்களை துடைக்க துடிக்கும் ஆண். பெண்ணை அபலையென நினைக்கும் சராசரி ஆண். அவள் எல்லாரையும் ஏமாற்றிவிட்டு இவனிடம் சொல்லிக்கொள்ளாமல் செல்லும்போது இவனால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.அவள் சொல்லாமல் போன ஏமாற்றத்தின் சுமையோடு வாழ்கிறான். மீண்டும் பேருந்தில் சந்தித்து இன்னொரு சோகக் கதையை கேட்கும்போது வெறுமையின் அழுத்தம் கூடுகிறது. ஆழ்மனம் இவள் உன்னையும் ஏமாற்றுகிறாளோவென பூடகமாய் எச்சரிக்கிறது. அத்தனை தெளிவாய் புரிந்துகொள்ள முடியாததனால் வெறுமை கூடுகிறது. அவள் பேருந்தைவிட்டு இறங்கும் போது வரும் அந்த ஒயர்கூடை அம்மாவிடம் அவள் பேசும் உரையாடலை கேட்கிறான். அந்த நொடி ஒரு தரிசன நொடி. இவள் எடுத்த பாத்திரத்தை சிறப்பாய் ஆடும் நல்ல ஆட்டக்காரியென உணர்கிறான். அவளின் ஆட்டம் அவனுக்குள் சிரிப்பாய் மலர்கிறது. சராசரி உரப்பன் கணேசன் மறைந்தான்.

அன்புள்ள,

மோகன் நடராஜ்

***

அன்புள்ள அண்ணன் ஜெயமோகன் அவர்களுக்கு,

அன்புடன் சொல்ல நினைப்பது.‌ முதலில் நான் குறைந்த நேரத்திலேயே வாசிப்பில் வாழ்கிறேன். நான் வாசித்தவரை‌ உரைநடையில் நாஞ்சில் நாடன் அவர்களை பெரிதும் மனம் பற்றிக்கொண்டுவிட்டது.நாஞ்சில் நாடன் அவர்களின்  நடை  எனக்கு எப்போதுமே உவகை தருகிறது. என்றுமே ஆசானாய் அவர் என் மனதில்… கவிதையில் நித்தம் வியப்பாய் வண்ணதாசன் அவர்களை ‌பார்க்கிறேன். இன்று அவரின் முகநூல்  பதிவில் ஒரு கவிதையில் வாசித்த ‘இருபதன்’ என்ற சொல் பற்றி தேடுதல் மேற்கொள்ளும்போது  ‘நற்றுணை’ பற்றிய  ஒரு சகோதரியின் (ஜெயந்தி அவர்கள்) கடிதம் கண்ணுற்றேன். படித்துக்கொண்டிருந்த போதே நற்றுணை படிக்க ஆவலுற்று தொடர்ந்தேன். தொடரத் தொடர் கேசினியை உள்வாங்கிய அம்மிணி தங்கச்சியாய் மனம்… கதையோட்டம் ஒவ்வொரு சொல்லிலும் உயிர்ப்பாய்… உள்வாங்கி சேகரம் செய்தால் யாவர்க்கும் கேசினி துணை நிற்பாள் என நம்புகிறேன்.  தெய்வம் தெளிமின்! தெளிந்தோர் பேணுமின்! நிறைவாய் உறங்கச் செல்லலாம் கேசினி நம்மை காப்பாள் என…உங்களை ‘ Daredevil’ என‌ சொல்ல மனம் விழைகிறது…

வணக்கத்துடனும் கட்டுக்கடங்காத அன்புடனும்

ம.பார்த்திபன்,

காரைக்கால்.

நள்ளென்ற யாமம் .

குமரித்துறைவி வான் நெசவு இரு கலைஞர்கள் பொலிவதும் கலைவதும் தங்கப்புத்தகம் “ஆனையில்லா” முதுநாவல் ஐந்து நெருப்பு மலைபூத்தபோது தேவி எழுகதிர் அந்த முகில் இந்த முகில் உடையாள் கதாநாயகி ஆயிரம் ஊற்றுகள் பத்துலட்சம் காலடிகள் ஞானி குகை சாதி – ஓர் உரையாடல் வணிக இலக்கியம் வாசிப்பின் வழிகள் இலக்கியத்தின் நுழைவாயிலில் ஒருபாலுறவு இன்றைய காந்தி சங்கச்சித்திரங்கள் ஈராறுகால் கொண்டெழும் புரவி நத்தையின் பாதை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 21, 2021 11:31

October 20, 2021

அஜ்மீர் பயணம்- 4

ஷாகுல் தொழுகைக்குச் சென்றுவிட்டார். அக்பரி மசூதியில் பல்லாயிரம்பேர் தொழுகைக்காக வரிசையாக அமர்ந்திருப்பதைக் கண்டேன். அங்கே அமர்ந்து அங்கு சட்டென்று உருவான அமைதியை கவனித்துக்கொண்டிருந்தேன். சற்று நேரத்தில் ஷாகுல் திரும்பி வந்தார்.

டீ வந்தது. மிகச்சிறிய டம்ப்ளர்களில். அங்கே அவுன்ஸ் கிளாஸ் அளவில் டீ குடிப்பதே வழமை. ஷாகுலின் வழமை ஒவ்வொரு இடத்திலும் மிகச்சரியாக தவறான கேள்வியை மிகக் கள்ளமில்லாமல் கேட்டுவிடுவது. நண்பர்களுக்கு முந்தைய நகைச்சுவைகள் நினைவிருக்கலாம். கேட்டே விட்டார். “இவ்ளவு சின்ன டம்ப்ளர்லேதான் டீ குடிப்பீங்களா? நாங்கள்லாம் நெறைய குடிப்போம்”

காதிம் இளவரசன் மென்னகையுடன் “இங்கே நாங்கள் விருந்தினருடன் நிறைய டீ குடிக்கவேண்டும். இது ஒரு மரியாதை” என்றார். “அப்ப எங்களுக்கு பெரிய டம்ளர் சொல்லியிருக்கலாமே” என்று ஷாகுல் கேட்பார் என நான் திகிலடைந்தேன். கேட்கவில்லை. எழுந்து செல்லும்போது “இப்படியா கேட்பது? அவர்களின் உபசரிப்பை குறைசொல்வது போல ஒலிக்கிறதே?” என்று ஷாகுலிடம் கேட்டேன், “எப்படி?” என்று மேலும் ஆர்வமாகக் கேட்டார்.

தர்காவில் அக்பர் அளித்த மாபெரும் கலம் ஒன்று உள்ளது. கலம் அல்ல ஒரு பெரிய உலோக அறை என சொல்லவேண்டும்.  ஐம்பதுபேர் உள்ளே வசதியாக அமரலாம். அடுப்போடு பதிக்கப்பட்டது. வெவ்வேறு உலோகக்கலவைகள் இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட கலம் அது. அதன் அடியில் தீ எரிந்து உள்ளே உணவு கொதிக்கும்போது விளிம்பு குளுமையாகவே இருக்கும்.

காதிம் எங்களை அந்த கலத்தை காண்பதற்கு அழைத்துச் சென்றார். மேலேறி அதைப்பார்த்தோம். உள்ளே அரிசி, பலவகை பருப்புகள், நெய், வெல்லம் மற்றும் கேசரி வண்ணம் போட்டு ஒருவகை பாயசத்தைச் செய்துகொண்டிருந்தனர். “இது சுத்த சைவம். ஏனென்றால் இங்கே வரும் இந்துக்கள் எல்லாரும் சைவர்கள்” என்று காதிம் சொன்னார். “அக்பர் காலத்தில் இருந்து இது வழங்கப்படுகிறது. இங்கே வருபவர்களுக்கெல்லாம் உணவு வழங்குவது அன்றுமுதல் நிகழ்கிறது. சைவ உணவுதான்”

எதிர்ப்பக்கம் இன்னொரு மாபெரும் கலம். அதில் காணிக்கைகளை கொட்டுகிறார்கள். நோட்டுகள் மலைமலையென விழுந்தன. துணிப்பைகளில், பொட்டலங்களில் நோட்டுக்கட்டுகள். முன்பெல்லாம் அரிசிதான் போட்டுக் கொண்டிருந்தார்கள். கோதுமையும் பிற தானியங்களும் கொண்டுவந்து போடுவதும் உண்டு. அந்தக் கலம் நிறைந்து இந்தப்பக்கம் அன்னமாக மாறி உணவாகிக்கொண்டே இருக்கும். பஞ்சகாலத்தில் அதை நம்பியே வாழ்ந்திருக்கிறார்கள்.

இப்போதும் வேண்டுதலுக்காக அரிசி கொண்டு வந்து போடுகிறார்கள். ஆனால் இன்று முக்கியமாக போடப்படுவது பணம்தான். லட்சக்கணக்கான ரூபாய் அன்றாடம் வசூலாகிறது. இந்த அன்னதானம் வழியாகவே மொய்னுதீன் ஷிஷ்டி அவர்களுக்கு ஏழைகளின் காவலன் என்னும் பெயர் உருவானது. நாங்களும் காணிக்கை போட்டோம். அவை அங்கே உணவளிப்பதற்கான காணிக்கைகள். நாங்கள் பாயசத்தை பெரிய உறை ஒன்றில் வாங்கிக்கொண்டோம்.

தர்கா அவ்வேளையில் ஒரு மாபெரும் கடைவீதி போலிருந்தது. ஒரு திருவிழா களம் போலிருந்தது. பிரார்த்தனையில் அத்தனை அமைதியாக இருந்த அனைவரும் மகிழ்ச்சிக்கூச்சலிட்டுக்கொண்டிருந்தனர். குழந்தைகளை கட்டுப்படுத்த அன்னையர் கூச்சலிட்டுக்கொண்டே இருந்தனர். இந்தியாவின் எல்லா மொழிகளிலும் அன்னையர் ஒரே போலத்தான் குழந்தைகளை அதட்டுகிறார்கள். இந்தியாவில் எல்லா மொழிகளிலும் குழந்தைகள் ஒரே போலத்தான் அதை பொருட்படுத்தாமல் இருக்கிறார்கள்.

கோவிட் காரணமாக தர்கா இரவு பத்து மணிக்கு மூடப்படும். ஆனால் காதிம்கள் உள்ளே இருப்பார்கள். முன்பெல்லாம் அது மூடப்படுவதே இல்லை. நாங்கள் விடைபெற்று வணங்கி நன்றி சொன்னோம். பிரேமாராமும் காவலர்களும் எங்களை எங்கள் விடுதிக்கு கொண்டுவந்து விட்டார்கள். விடுதியறையில் அமர்ந்து பாயசத்தைச் சாப்பிட்டோம். நெய் மணம் கொண்ட இனிய பிரசாதம். ஆனால் பருப்புகள் முந்திரி நெய் என மிகமிக கலோரி கொண்டது. அதைச் சாப்பிட்டால் நான் ஐந்து கிலோமீட்டர் ஓடவேண்டும். மாறாக படுத்து உடனடியாக ஆழ்ந்து தூங்கினேன்.

காலைத் தொழுகைக்கு மீண்டும் தர்காவுக்குச் செல்லவேண்டும் என்று ஷாகுல் சொல்லியிருந்தார். நான் எழுந்தபோது அவர் ஏற்கனவே தயாராகியிருந்தார். சரசரவென பல்தேய்த்து குளிர்நீரை தலையில் கவிழ்த்து உடைமாற்றி சித்தமானேன். அஜ்மீரில் குளிர்காலம் தொடங்கவில்லை. நவம்பரில் தொடங்கி பிப்ரவரியில் உச்சமடையும். பிப்ரவரியில் குளிர் இரண்டு டிகிரி வரை இறங்கும் என்றா காதிம் முந்தையநாள் பேசும்போது.

”இங்கே எப்படி சமாளிப்பீர்கள்?” என்று கேட்டேன். “சாத்ராதான்” என்று புன்னகைத்தார். அங்கே மாபெரும் கம்பளங்களைக்கொண்டு ஒட்டுமொத்தமாக போர்த்திக்கொள்வது வழக்கம். அது அரேபியாவிலிருந்து வந்த பழக்கம் என நினைக்கிறேன். கோடையில் 51 டிகிரி வரை வெயில் செல்லும். அப்போதும் வெளியே தலைகாட்ட முடியாது. ஆனால் ராஜஸ்தானிகளுக்கு அதெல்லாம் பெரிய விஷயம் அல்ல.

விடியற்காலை நான்கரை மணிக்கு தெரு நிறைந்து வண்ணப்பெருக்காக மக்கள் சென்றுகொண்டிருந்தார்கள்.இரவெல்லாம் அந்த முழக்கம் கேட்டுக்கொண்டே இருந்தது. ஒரு சில கல்யாண ஊர்வலங்கள் நள்ளிரவில் நடந்தன. இசை, வெளிச்சம், நடனம். மேலிருந்து ஒரு நடனத்தை வீடியோ எடுத்தேன். சரியாக வரவில்லை.கோவிட் எச்சரிக்கையெல்லாம் தெருவில் இல்லை. அங்கே இரவே கிடையாது. எனக்கு விடுதியில் தூங்கும்போதே சாலையோரம் கிடந்து உறங்கும் உணர்வே இருந்தது. நெரிசல் வழியாக முட்டி மோதி தர்கா நோக்கிச் சென்றோம்.

தெருவில் கவாலி பாடல்களைப் பாடும் குழுக்கள் பாடிக்கொண்டிருந்தன. தர்காவாசலில் முட்டிமோதும் கூட்டம். உள்ளே மக்கள் நெரித்தனர். ஷாகுல் என்னிடம் “இங்கே அமர்ந்துகொள்ளுங்கள், நான் தொழுகை முடித்து வருகிறேன்” என்றேன். இஸ்லாமியர் தொழுகைக்குச் செல்ல மற்றவங்கள் ஆங்காங்கே தியானத்தில் அமர்ந்திருந்தார்கள். பெண்கள் தனியாக சில கொட்டகைகளில் தொழுகை செய்தார்கள்.

கண்மூடி அமர்ந்திருந்தேன். தலைக்குள் உணர்ந்தது ஒரு தண்மையை. நீரில் கிடக்கும் பாறைபோல மூளை ஆகிவிட்டிருந்தது. நேரம் உணராமல் அமர்ந்திருந்தேன். அங்கே அமைதி நிறைந்தபோது தலைக்குமேல் இருந்த மரத்தில் செறிந்திருந்த பறவைகளின் ஓசைகள் எழுந்தன. அவை துயிலுணர்ந்து ஒளிக்காக சிறகுகளை ஒருக்க ஆரம்பித்திருந்தன.

நெடுநாட்களுக்கு முன்பும் அங்கே எங்கோ அப்படி அமர்ந்திருந்தேன். அப்போது ஓர் இஸ்லாமியப்பெரியவர் வந்து என் தலையில் கைவைத்து இந்தியில் ஏதோ சொன்னார். சப்னா என்னும் சொல் நினைவில் இருக்கிறது. கனவு. என் கனவுகள் நிறைவேறும் என்று சொல்லியிருக்கலாம். இன்று “ஆம், அனைத்தும் நிறைவேறியிருக்கின்றன குவாஜா. இனி நான் கேட்காத எதையாவது நீங்களே கண்டறிந்து தந்தால்தான் உண்டு” என்றுதான் சொல்லவேண்டும்.

ஷாகுல் வந்தார். மீண்டும் தர்கா மையத்திற்குச் சென்றோம். அங்கே ஒரு கவாலி பாடகர் குழு மையமாக அமர்ந்து பாடிக்கொண்டிருந்தது. ”கிருபாகரோ மகராஜு மொய்னுதீன்!” அதே பாடலை முன்பும் அங்கே கேட்டிருக்கிறேன். அவ்வப்போது அதை யூடியூபில் கேட்டதுண்டு. அருள்புரிக பேரரசரே, மொய்னுதீன்!

பாடகர்களுக்கு பத்து இருபது ரூபாய்களாக போட்டார்கள். அது ஒரு குறையாக எனக்குப் படவே நான் நூறு ரூபாய் போட்டேன். ஆனால் மிகச்சீக்கிரத்திலேயே பத்துரூபாய்களாகவே பல ஆயிரம் வந்து விழுந்துவிட்டது. அவர்கள் அதை பணத்துக்காக பாடவுமில்லை. வசூலான தொகையை அங்கேயே காணிக்கையாக அளிப்பது வழக்கம். நாடெங்கிலும் இருந்து கவாலி பாடகர்கள் அவ்வாறு அங்கே பாடுவதற்காக வந்துகொண்டிருக்கிறார்கள்.

முன்பொருமுறை ஓர் உரையில் நித்ய சைதன்ய யதி சொன்னார்.இந்தியாவில் இசைவிரும்பிகள் சென்று வணங்கியாகவேண்டிய நான்கு இடங்கள். ஒன்று சைதன்ய மகாப்பிரபுவின் சமாதிஅமைந்துள்ள பிருந்தாவனம் [அவர் மறைந்தது புரியில். ஆனால் சமாதி விருந்தாவனத்தில் என்பது தொன்மம்]. இரண்டு, புரந்தரதாசர் நிறைவடைந்த பண்டரிபுரம் [அவர் பழைய விஜயநகரத்தில் மறைந்தார். ஆனால் பண்டரிபூரில் சமாதியானார் என்பது தொன்மம்] மூன்று, தியாகராஜரின் சமாதி அமைந்துள்ள திருவையாறு. நான்கு, அஜ்மீர்.

கவாலி இசையை கேட்பது ஒரு தனிப்பட்ட அனுபவம். அது முழுக்கமுழுக்க இசையனுபவம் என்று சொல்லமுடியாது. இசையனுபவம் இரண்டு வகை. கணக்குவழக்குகளுடன் கச்சிதமான ஒரு வடிவத்தை அந்தரத்தில் உருவாக்குவது ஒருவகை. கர்நாடக இசை என்பது பெரும்பாலும் இதுதான். ஒருவர் ராகம் என்னும் களத்திற்குள் மெல்ல மெல்ல விரிந்து நிறைந்து வழிவது இன்னொரு வகை. இந்துஸ்தானி இசை அப்படிப்பட்டது.

கவாலி இசை பெரும்பாலும் ஒருவகை சேர்ந்திசை. ஒருவரின் உச்சத்தை இன்னொருவர் தன்னுடைய எழுமுனையாக கொண்டு மேலும் செல்கிறார்.  கேட்கும்போது ஒரு பேராறு மலையிறங்குவதைக் காண்பதுபோலிருக்கிறது. கிளைகள் மைய ஆற்றில் இருந்து பிரிந்துசெல்கின்றன. மீண்டும் வந்து இணைகின்றன. எங்கிருந்தோ புதிய ஆறு ஒன்று பொங்கி வந்து தழுவிக்கொள்கிறது. அருவிகள், கொந்தளிப்புகள், சிற்றலை நெளியும் ஆழம். மெல்லமெல்ல விசையழிந்து கடலை அடைந்து அமைகின்றது.

கவாலி இசை ஒருவகையில் தியானத்தில் அமரும் உள்ளத்தின் கட்டமைப்பு கொண்டது. சட்டென்று ஒரு பெருங்குலைவு. அதற்குள் ஓடும் ஒரு வகையான ஒழுங்கு. அவ்வொழுங்கை தொட்டு தொட்டுச் சென்றால் கலைவுகள் அனைத்தையும் இணைத்துக்கொள்ள முடியும். ஒரு பெரிய வெடிப்புச் சிதறல்கள் இணைந்து ஓர் அழகிய கோலமென ஆவதுபோல. அஜ்மீரில் அத்தனை மக்கள் முழக்கத்தின் நடுவிலும் கவாலி ஒலித்துக்கொண்டே இருந்தது.

காலைவிடியத் தொடங்கியது. வண்ணங்கள் துலங்கி வந்தன. அதுவரை இருந்த விசை ஒன்று மெல்ல தளர்வதுபோலிருந்தது. தர்காவின் பொன்சூடிய வெண்மகுடம் துலங்கி வந்தது. அங்கே நின்று படங்கள் எடுத்துக்கொண்டோம். காலையின் ஒளி படங்களுக்கு பொருத்தமானதாக இருந்தது. ரோஜாமலர்களின் வாசனை. ரோஜாவின் வாசனை மல்லிகைப்பூ போல உரத்தது அல்ல. அது ஒரு ரகசியம். பாலைவனத்தின் மலர் அது. நெடுநேரம் செவியோடு சொல்லப்படவேண்டிய மொழி கொண்டது.

அக்பரி மசூதி முன் அதிகாலையிலேயே பாயசம் அளிக்க ஆரம்பித்து விட்டிருந்தார்கள். அதற்கு பெரிய வரிசையாக நின்றிருந்தனர். பாயசம் ‘unlimited’. ஆனாலும் சிலர் பெரிய அண்டாக்களையே கையில் வைத்திருந்தது ஆச்சரியமாக இருந்தது. ஷாகுலின் அம்மாவே அஜ்மீர் செல்வதைப் பற்றிச் சொன்னபோது “வாளி கொண்டுபோ. பாயசம் தருவார்கள்” என்று சொன்னதாகச் சொன்னார்.

அஜ்மீர் தர்காவின் நினைவாக என்னுள் இருந்த காட்சி மாபெரும் வண்ணத் திரைச்சீலைகளும் கொடிகளும்தான். பச்சை சிவப்பு வண்ணங்களில். திரைச்சீலைகளை இழுத்து கூரைபோல வளைத்துக் கட்டியிருந்தார்கள். அவை பெரிய பசுவின் அடிவயிறென குழைந்து குவிந்து தொங்கின. அவை அங்கே வெப்பம் இறங்காமலும் குளிர் பொழியாமலும் காக்கின்றன. ராஜஸ்தானின் வண்ணக் கொப்பளிப்பை துணிகளில்தான் காணமுடியும். இயற்கை தவிர்ப்பதை மனிதன் உருவாக்கிக்கொள்வது அது.

அங்கே இருந்த பிற சமாதிகளை சென்று பார்த்தோம். ஒரு குளம் வேலிகட்டி மறைக்கப்பட்டிருந்தது. அது அஜ்மீரின் மிகப்பழைய குளம். சிஷ்டி அவர்கள் நீராடியது. அங்கே எட்டிப்பார்த்து வணங்கிக் கொண்டிருந்தனர். பெரிய படிக்கட்டின்மேல் இன்னொரு தொன்மையான கட்டிடம். எங்கும் பழமையும் புதுமையும் கலந்திருக்கின்றன.

காலையில் தான் அஜ்மீர் தர்காவைச் சுற்றி மலை சூழ்ந்திருப்பதைக் காணமுடிந்தது. மலையை அப்படியே கட்டிடங்களாக ஆக்கியிருக்கிறார்கள். ஆகவே கட்டிடங்களைச் செங்கற்களாகக் கொண்டு கட்டப்பட்ட ஒரு பெரும் சுவர் என்ற எண்ணம் ஏற்பட்டது.

அங்கே சுற்றிச்சுற்றி வந்தோம். மீண்டும் விடுதிக்கு வந்து அந்தச் சாலையில் ஒரு காலைநடை சென்றோம். ஓர் உணவகத்தில் ஷாகுலின் தட்டுசுற்று வேட்டியைக் கண்டு “இட்லி இருக்கிறது” என்று அழைத்தனர். நல்ல உறுதியான இட்லி. அதைச் சாப்பிட்டுவிட்டு அறைக்கு வந்தோம். எட்டரை மணிக்கு எங்களை அஜ்மீரைப் பார்க்க அழைத்துச் செல்வதாக காவலர்கள் சொல்லியிருந்தனர். அவர்களுக்காக காத்திருந்தோம்.

[மேலும்]

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 20, 2021 11:35

குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்-4

என் விழிகள்
எதைப் பார்த்தாலும்
அது நீயே – என்பதை
நான் காண்கிறேன்

அனைத்திலும்
உனைக்காண்பதையே
நான் விழைகிறேன் என
நான் காண்கிறேன்.

உனைக் காணவே இவ்விழிகள்
உன்முகம் என்னிடம் வாராதென்றால் –
ஏதுமில்லை எனக்கென
நான் காண்கிறேன்

கண்டேன் மதுகொணர்பவனின் அழகு
எங்கும் ஒளிர்வதை
கோப்பையில் மதுவில் எங்கெங்கும்
நான் காண்கிறேன்

விழிகளின் புரிதலுக்கு அப்பால் உள்ள
உனது வெளிப்பாட்டை
இதயம் கண்டுகொள்வதை
நான் காண்கிறேன்!

உனக்காகத் திறக்கும் இதயத்தின்
ஆயிரம் கதவுகளில்
எல்லா வாயிலிலும் நீ எனக்காகக் காத்திருப்பதை
நான் காண்கிறேன்.

முதலில் உனைக் காண்பதற்கே
வாழ வேண்டுமென நினைத்தேன்
இன்று உனைக் காண்பதற்கே மரணம் என்று
நான் காண்கிறேன்!

உனக்கான மொய்னின் இன்றைய ஏக்கத்தில்
இறுதி நாளுக்கான பொறுமை இல்லை  –
உனைச் சேர என
நான் காண்கிறேன்!

‘நானே மெய்’ என
நான் சுயவிருப்பத்தில் சொல்லவில்லை
எவ்விதம் சொல்லாமல் இருப்பது அன்பே,
நீ அதை சொல்லுமாறு ஆணையிடும்போது?

முன்னர் நீ சொன்ன யாதொரு ரகசியத்தையும்
வெளியே சொல்லாதே என்றாய்!
இப்போது ஏன் என்றறியேன்
அனைத்தையும் சொல்லுமாறு ஆணையிடுகிறாய்!

தெய்வீக ரகசியங்கள்
கனிந்தவர்களுக்கும் சொல்ல முடியாதவை
சந்தை வெளியில் வெளியிடுமாறு
நீ..என் அன்பே ஆணையிடுகிறாய்!

மன்சூரின் செய்திகளை
இனி மறைக்க என்னால் இயலாது
தூக்குக்கயிற்றின் சுருக்கைக் காட்டி
அவன் ஆணையிடும்போது!

நான் கேட்டேன்.. என்னிடம் ரகசியம் உள்ளது
சொல்லும்படி யாரும் இல்லை?
விடை: சொல்க கதவுகளிடமும் சுவர்களிடமும்
என்று ஆணையிடுகிறாய்!

தெய்வீக அன்பின் தீ அணைந்தது
எனது ஆன்மாவின் மரத்தில் இருந்து
மோசஸிடம் கூறப்பட்ட ரகசியங்கள் என்னிடம் கூறப்பட்டன
நான் சொல்லுமாறு ஆணையிடுகிறாய்.

குழலிசைப்பவன் என
என்னில் உன் மூச்சை நிறைக்கிறாய்
இதை யாரிடமும் சொல்லமாட்டேன்
நீயோ சொல்லுமாறு ஆணையிடுகிறாய்!

காலைக் காற்றே, மொய்னின் செய்தி
யாதென்று யாரேனும் கேட்டால்
உனக்கும் கடவுளுக்கும் இடைவெளி என்பது தொலைந்து போனது
என்று சொல்லுமாறு ஆணையிடுகிறாய்!

வழியைத் திற, இதயம் மேலான வெளிகளுக்கு
பறந்தெழத் துடிக்கிறது
திரையை விலக்கு, ஆன்மா தன்னை
வெளிப்படுத்த விழைகிறது!

நித்தியத்தின் மாளிகையில் இருந்து
இதயம் இறங்கி வந்தது
அங்கே மீண்டு பறந்தெழ
இதயம் துடிக்கிறது.

இந்த இதயம் சூனியத்தில் இருந்து
முடிவின்மைக்கு பயணித்தது..
இச்சிறு பறவை அங்கா*வுடன்
இணைய சிறகுவிரிக்கிறது!

நானாக செல்லாவிட்டால்
அவன் என்னை இழுத்துக்கொள்வான்
அவனுக்கும் எனக்குமான உறவு
அவ்விதம் இருக்கிறது!

சில முறை எனை இழுக்கிறான்,
சில முறை விரட்டுகிறான்
ஆ.. காதலன் காதலியிடம் சரசமாடும் விதம்
அவ்விதம் இருக்கிறது!

நூறு திரைகளுக்கு அப்பால் தெரிகிறது அம்முகம்..
அது மகிழ்ச்சியின் நாளாக இருக்கும்
திரையின்றி முகம்
காணும் நாள் வருகிறது!

அவன் இடங்களுக்கு அப்பாற்பட்டவன்
கடவுள் ஆணையாக
என் இதயத்தில் அவனுக்கு இரவும் பகலும்
இடம் இருக்கிறது!

முடிவில் காதலனின் முகத்தை
காண முடியும்
இதயத்தின் ஆடி
துருவின்றி இருக்கிறது!

ஓ மொய்ன்.. நிலவின் அழகு
கதிரென சுடர்கிறது
கண்கள் இருப்பவனால்
காண முடிகிறது.

தமிழாக்கம் சுபஸ்ரீ

 

குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்-3 குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள் -2 குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 20, 2021 11:34

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.