Jeyamohan's Blog, page 899

October 14, 2021

ஆணவத்தின் தேவை

பெருஞ்செயல் ஆற்றுவது பெருஞ்செயல் – தடைகள்

அன்புள்ள ஜெ,

மனிதனின் மனம் ஏன் இத்தனை ஆணவமாக இருக்கிறது என்று தெரியவில்லை. சிறிது காலமாக ஒவ்வொரு நிகழ்விலும் எனை நோக்கி கொண்டிருக்கிறேன். இயல்பாகவே தயக்கமும், தாழ்வுணர்ச்சியும் கொண்டவன் நான். ஆனால், அந்த தயக்கத்திலும், தாழ்வுணர்ச்சியுலும் கூட ஆணவமே மேலோங்கி உள்ளது என்று நினைக்கிறேன்.

உதாரணமாக, உங்களை சந்திக்க வேண்டும் என்று பல நாட்களாக நினைத்து கொண்டிருப்பேன். ஆனால், உங்கள் முன் எனது தயக்கத்தை தாண்டி வருவது இயலாத ஒன்றாகவே இருக்கும். அதற்கான காரணங்களாக மனம் பலவற்றை என் முன் கொட்டும். உங்களை சந்திக்கும் அளவிற்கு எனக்கு நுண்ணுணர்வு போதாது, வாசிப்பில் அந்த அளவிற்கு மேன்மை கிடையாது என்பது போன்ற பல வெளிப்படையான காரணங்கள். ஆனால், உள்ளார்ந்த காரணங்கள் நான் என்னுள் ஆத்மார்த்தமாக உடைபடுவதற்கு தயாராக இல்லை என்பதே. அது ஒரு அப்பட்டமான ஆணவச் செயல்பாடு என்று புரிகிறது. என்னை அல்லது நான் என்னுள் உறுதி படுத்தி வைத்திருக்கும் சில வெற்று சிந்தனைகளை கலைக்காமல் பார்த்து கொள்கிறேன் என்று தெரிகிறது.

இதன் தொடர்ச்சியாக நான் சாமானியனின் இயல்பான ஒரு எல்லைக்குள் (zone) சென்று விடுகிறேன். அதன் இருப்பிட பகுதி ஆணவம் மட்டுமே ஆட்சி செய்யும் ஒரு கோட்டை. அங்கிருந்து யாரை வேண்டுமானாலும் குறை சொல்லி திட்டிக்கொண்டே இருக்கலாம். அதற்கு ஒரு கூட்டமும் நமக்கு சேர்ந்து விடும். ஆனால் அங்கே ஒரு சிறிய அளவில் கூட இருக்க முடியவில்லை என்னால். மறுபடியும் முதலில் இருந்து ஒரு சுற்று. சேற்றிலும் கால் ஆற்றிலும் கால். ஒரு ஊசலாட்டம். இதற்கு முன்பு நான் உங்களுக்கு எழுதிய கடிதங்களும் அவ்வாறான ஒன்றே.

இங்கே என் கேள்வியை இவ்வாறாக தொகுத்து கொள்ள முயல்கிறேன். ஆணவம் சிறிது கூட நன்றே என்று பெருஞ்செயலுக்கான தடைகளை பற்றிய கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தீர்கள். ஒரு சாதாரண மனிதனிடம் எந்த அளவிலான ஆணவம் நம்மை பாதுகாத்து கொள்ளும், எது போன்ற ஆணவம் நம்மை படுகுழியில் சென்று விழவைக்கும்.

பேரன்புடன்,

நரேந்திரன்

***

அன்புள்ள நரேந்திரன்,

இத்தகைய விவாதங்களில் சொற்களை கலைச்சொற்களாக கருதவேண்டும். ஆணவம் என்பதை நான் தத்துவ விவாதங்களில் பயன்படுத்தப்படும் ஆணவமலம் என்னும் பொருளில் கையாள்கிறேன்.

அதை நான் என்னும் உணர்வு, தன்னை இங்கே நிலைநாட்டவேண்டும் என்னும் விழைவு, பெருகவேண்டும் என்னும் விசை என வரையறை செய்யலாம். உயிரின் முதல்விசை அது. அது ஆன்மிக தளத்தில் அது எதிர்விசை. உலகியலில் இயக்கவிசை. அந்த ஆற்றலே செயல்படத் தூண்டுகிறது. வெற்றியை விழையச்செய்கிறது.

அச்சொல்லால் நான் உத்தேசிப்பது பிறரை கீழிறக்கிநோக்கும் ‘திமிர்’ரை அல்ல. தன்னை மிகைப்படுத்திக் கொள்வதையும் அல்ல. தாழ்வுணர்ச்சியை மறுநிகர் செய்ய உருவாக்கிக்கொள்ளும் தன்வீக்கத்தையும் அல்ல.

எல்லாச் சூழலிலும் சிலரே செயலாற்றி வெல்வார்கள். பெரும்பாலானவர்கள் ஆற்றலின்மையும் சோம்பலும் கொண்டவர்கள். அதை தங்களுக்கே நியாயப்படுத்திக்கொள்ளும் சொற்களைச் சேர்த்து வைத்திருப்பவர்கள். அவர்களுக்கு செயலூக்கம் கொண்டவர்களே முதன்மை எதிரிகள். அவர்களை நிராகரிக்காமல் தேக்கநிலை கொண்டவர்களால் வாழமுடியாது.

ஒரு சிற்றூரில் நீங்கள் வசித்திருந்தால் தெரியும். அந்த ஊரில் எவர் செயலூக்கம் கொண்டவரோ, எவர் ஆற்றல்கொண்டவரோ, அவரையே அனைவரும் எதிர்ப்பார்கள், ஏளனமும் செய்வார்கள். அவர் அவர்களுக்கு நன்மையை மட்டுமே செய்திருந்தாலும்கூட. ஏனென்றால் அவ்வாறு எதிர்க்காவிட்டால் அவர்கள் தங்கள் தேக்கநிலையை தாங்களே ஒப்புக்கொள்ள, தங்களைத் தாங்களே வெறுக்க வேண்டியிருக்கும்.

இன்றைய சூழல் அந்தச் சிற்றூராக உலக இணையவெளியை ஆக்கிவிட்டிருக்கிறது. ஒருவன் எத்தனை அடக்கமாக இருந்தாலும் சரி, எத்தனை தூரம் பிறருடன் ஒத்துப்போனாலும் சரி, செயலூக்கம் கொண்டவன் என்றால் அவன் பரவலாக ஏளனம் செய்யப்படுவான். எதிர்க்கப்படுவான், பழிசுமத்தவும் படுவான்.

இச்சூழலில் செயலாற்றுபவர் தன்மேலும், தன் செயல்மேலும் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருக்கவேண்டும். இல்லாவிட்டால் மிக எளிதில் அவர் உளச்சோர்வடைவார். தனிமையை உணர்வார். ஆகவேதான் ஆணவம் இன்றியமையாதது என்று சொல்கிறேன். தன்னைப் பற்றி நிமிர்வுடன் எண்ணிக்கொள்வது, தன்னை பழிக்கும் தேக்கநிலைக் கூட்டத்தின் முன் தன்னை முன்வைப்பது செயல்படுபவருக்குத் தேவையாகிறது. இல்லையேல் செயல் என ஏதும் எஞ்சாது.

ஒற்றை வரியில் சொல்வதென்றால் நான் என எண்ணிக்கொள்கையில் ஒருவனுக்கு வரும் நிறைவும் இனிமையுமே ஆணவம் என்பது. அதுவே உலகியலில் நம்மை நிலைநிறுத்தும் வேர். வேர்கள் அறுபட்டதென்றால் பறக்கவேண்டும். அதுவரை வேர் தேவை.

ஜெ

செய்தொழில் பழித்தல்

செயல், தடைகள்

செயல் எனும் விடுதலை

பெருஞ்செயல் – தடைகள்

நாம் ஏன் அழகை உருவாக்க முடிவதில்லை?

நேர்த்தியும் அழகும்-நேற்றும் இன்றும்

பெருஞ்செயல் ஆற்றுவது

பெருஞ்செயல் ஆற்றுவது

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 14, 2021 11:35

அறமென்ப – கடிதங்கள்

அறமென்ப…  [சிறுகதை]

அன்புள்ள ஜெ

இத்தனை நாட்களுக்குப் பிறகும் தொந்தரவு செய்துகொண்டே இருப்பது அறமென்ப என்னும் சிறுகதைதான். மற்றச் சிறுகதைகளை விட இதில் என்ன சிக்கல் என்று பார்த்தேன். ஆழமான தத்துவச்சிக்கல் இல்லை. அழகியல் உச்சமும் இல்லை. ஆனால் ஒரு முக்கியமான கேள்வி உள்ளது. பொது அறம் என்ற ஒன்றை நம்பித்தான் நாம் வாழ்கிறோம். அதற்கு மதிப்பில்லாமலானால் எதைநம்பி வாழ்வோம் என்னும் பதைபதைப்பை அக்கதை உருவாக்குகிறது

ராம்குமார் மகாதேவன்

***

அறமென்ப -சிறுகதை நாம் இதுவரை கதைகளில் படித்து வந்த , நமது பொதுபுத்தியில் ஆழப்பதிந்து விட்ட பார்வையை மறுபரிசீலனை செய்கிறது. ஒரு எழுத்தாளன்  தனக்கு போதிக்கப்பட்டதையல்ல ,தான் கண்ட நிதர்சனங்களையும் பதிவிடுவதே தார்மீக கடமை என்பதை உணர்த்திவிட்டீர்கள்.பாதிக்கப்பட்டவரின் சார்பாக பேசுபவர் ” எங்க மனசாட்சி வேற கஷ்டபடுறவன் மனசாட்சி வேற” என்பது அருமை. இதில் என்னை வெகுவாக கவர்ந்தது செல்வாவின் மனைவி தான். நடைமுறை யதார்த்தத்தை மனைவியை விட யார் அறிந்து விடக்கூடும்? பலரும் செல்வாவை போல அந்த சமயத்தில் செயின்ட் போலவே நினைப்பர். இந்த வீடடங்கு காலத்தில் உங்கள் கதைகளே என் அகம் முழுவதையும் நிரப்பி உள்ளது.

அன்புள்ள,

செல்வா

பட்டுக்கோட்டை.

திசையெட்டும்தமிழ்

***

அன்புள்ள ஜெ

அறமென்ப கதையை மீண்டுமொருமுறை வாசித்தேன். நடுவே ஒன்று நடந்தது. அந்தக்கதையை தெரிந்தவருக்கு நடந்தது என்ற வகையில் ஒரு நண்பர்வட்டத்தில் சொன்னேன். நாலைந்து மணிநேரம் கொந்தளிப்பான உரையாடல்கள் நடந்தன. பலர் அதற்கிணையான அனுபவங்கள் தனக்கு நடந்ததாகச் சொன்னார்கள். அப்படி அவர்கள் நடந்துகொண்டதில் என்ன பிழை என ஒருசிலர் வாதிட்டனர்.

அந்த கொந்தளிப்பிலிருந்து ஒரு விஷயத்தை அறிந்துகொண்டேன். அதில் எவரும் அந்த வகையான ஏமாற்றத்தின் விளைவாக தங்கள் அறநிலைபாட்டை மேலும் உறுதிப்படுத்திக் கொண்டதாகச் சொல்லவிலை. அறமே கிடையாது என்ற முடிவையே வந்தடைந்தனர். அந்நிலையில்தான் கதையின் இறுதியில் கதாநாயகன் அடையும் விடுதலையும் உறுதிப்பாடும் முக்கியமானது என்று தோன்றியது.

அறமென்ப, வழக்கறிஞர்கள் – கடிதம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 14, 2021 11:33

அனிதா அக்னிஹோத்ரி, கடிதம்

அன்புள்ள ஜெ,

உங்கள் தளத்தில் வெளிவந்த வங்க எழுத்தாளர் அனிதா அக்னிஹோத்ரி அவர்களின் சிறுகதைகளின் மொழியாக்கங்களை வாசித்தேன். மொழியாக்கத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் அனைத்திலும் அடிநாதமாக உள்ளது ஆசிரியரின் அறவுணர்வு. அதிகாரமற்ற எளிய மனிதர்களின் உணர்வுகளோடு ஆசிரியர் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார். அதே நேரத்தில் அதிகாரத்தை செலுத்தும் நிலைனாட்டும் இடத்தில் இருக்கும் மனிதர்களின் நிலையை, அவர்களின் இயலாமைகளை தத்தளிப்புகளை போலித்தனக்களை எல்லாம் அதே நுண்ணுணர்வோடு காட்சிப்படுத்துகிறார். இதுவரை கண்டிராத கதைக்களம். ஆசிரியர் ஆட்சிப்பணியில் இருக்கும் தகவல் இக்கதைகளை புரிந்துகொள்வதில் இன்னொரு பரிணாமத்தை அளித்தது.

அதே நேரம் இந்தத்தகவலும் இக்கதைகளும் இணைந்து ஆசிரியரை பற்றிய ஸ்டீரியோடைப்பான குறுகிய சித்திரம் ஒன்றை அளித்துவிடலாகாது என்ற எண்ணம் இவரது ‘பதினேழு’ கதைத்தொகுப்பை வாசித்தபோது தோன்றியது. இந்தத்தொகுப்பிலும் பெரும்பாலான கதைகளுக்கு அடினாதமாக விளங்குவது ஆசிரியரின் அறவுணர்வு தான். ஆனால் மாறுபட்ட கதைகளங்கள், வெவ்வேறு கதைசொல்லல் முறைகள், வேரெங்கும் காணாத கலாபூர்வமான படைப்புத்திகள் என்று இத்தொகுப்பின் சில கதைகள் இதுவரை வந்த மொழியாக்கங்களை விடவும் என் வாசிப்பில் சிறந்தவையாக விளங்கின. அவற்றைபற்றி எழுதுவதினால் ஆசிரியரின் எழுத்தை பற்றிய இன்னும் முழுமையான சித்திரம் கிடைக்கும், மேலும் பயனுள்ள உரையாடல்களுக்கு வழிவகுக்கும் என்று நம்புகிறேன்.

என்னுடைய தற்போதைய தனிப்பட்ட ரசனையில் ஒரு சிறுகதையின் உச்சபட்ச சாத்தியம் என்பது,  மானுட வாழ்வின் அறியமுடியாமைகளை, மாயங்களை, மர்மங்களை குறிப்புணர்த்துவது ஆகும். வாழ்க்கைத் துண்டுகளை, நிகழ்வுகளை, போதாமைகளை, சீற்றங்களை, மனப்பதிவுகளை சொல்லவும் சிறுகதை வடிவம் பயன்படுத்தப்பட்டுள்ளது. என்றாலும் அடிப்படையில் ‘கதை’ (tale) என்ற வடிவத்தில் பாதாளம்திறக்கும் தெய்விகக்கணம் ஒன்று நிகழ்கிறது. இதுவே கதை வடிவின் பிரத்யேகமான அம்சம். இந்த அம்சம் நிகழும் சிறுகதைகளை சிறந்த கதைகளாக கொள்கிறேன். இந்த அளவுகோலின் படி, ‘பதினேழு’ தொகுப்பில் ‘எரிகல் ஏரி’ தவிர சிறந்தவை என்று சொல்லத்தக்க இரண்டு கதைகளின் சுருக்கத்தை அளித்திருக்கிறேன் (முழுதும் மொழிபெயர்க்க நேரமில்லாத காரணத்தால்).

‘மயில்’ என்ற கதையில் மிகக்கொடிய குற்றம் ஒன்றைப் புரிந்ததற்க்காக சிறையிடப்பட்ட ஓர் இளைஞன் சிறைவாசம் முடிந்து சீர்திருத்தத்திற்க்காக ஒரு பூஞ்சோலைக்கு கொண்டுவரப்படுகிறான். காதுகேளாதோர் வாய்பேசமுடியாதோர் நடத்தும் சீர்திருத்த நிறுவனம் அது. அவன் அங்கு வந்ததும் எங்கிருந்தோ மயில் ஒன்று குரோதத்துடன் அவன் முகத்தை கொத்த பறந்து வருகிறது. அதை விரட்டிவிடும் பணியாளர் அவன் அங்கு செய்யவிருக்கும் சீர்திருத்தப்பணியை சொல்கிறார்.

கால் இழந்து நடக்கமுடியாத ஒரு பெண்ணை தள்ளுநாற்காலியில் கொண்டுவருகிறார்கள். அவளுடைய முகத்தில் ஒரு பாகம் – ஒரு கண், நாசித்துளை, கன்னம், காது, வாய் – எல்லாம் வெந்துபோய் வடிவம் தெரியாதவகையில் மாமிசத்துண்டுகளாக பிசைந்து காணப்படுகின்றன. சீர்திருத்த காலம் முழுவதும் இவன் அந்த பெண்ணுக்கு எல்லா பணிவிடைகளும் செய்யவேண்டும் என்று தீர்மானிக்கப்படுகிறது.

அவன் உடைந்து போகிறான். அவன் மனமுருகி காதலித்து பின் தொடர்ந்த பெண் தான் அவள். காதலை ஏற்க மறுத்ததால் கோபத்தில் ரயிலில் அவளை பிடித்து முகத்தில் ஆசிட் ஊற்றிவிடுகிறான். வேதனையில் தள்ளாடி ஓடும்ரயிலிலிருந்து விழுந்ததில் அவளுக்கு ஒரு கால் பறிபோகிறது.

அவர்கள் இருவரும் அந்தச் சோலையில் தனிமையில் ஒரு வீட்டில் கிட்டத்தட்ட கணவன் மனைவியைப்போல வாழ்கின்றனர். அவன் அவளுக்கு எல்லா பணிவிடைகளும் செய்கிறான். சோறூற்றுகிறான், ஆடை மாற்றுகிறான், குளிப்பாட்டி விடுகிறான். வெந்து கரிந்து போன அவளது உடல் அவனுக்கு குமட்டலை அளிக்கிறது. இரவுகளில் அவள் அவன் உடலை நாடுகிறாள். அவள் அவனை வெறுக்கிறாள், பழிவாங்கத்தான் இப்படிச் செய்கிறாள் என்று நினைக்கிறான். அவள் இதெல்லாம் வேடிக்கை என்பது போல உருகுலைந்த வாய் ஓரமாக சிரிக்கிறாள். ஆனால் நாளடைவில் எல்லாம் இயல்பாக ஆகிறது. வெளியே போகும்போதெல்லாம் அந்த மயில் அவனை கொத்த ஆங்காரத்துடன் ஒவ்வொரு முறையும் பறந்து வருகிறது. அவன் அதை விரட்டுகிறான்.

அவளுடன் வாழும் நாட்களில் நான் ஏன் அப்படி செய்தேன் என்று அவன் நொந்துக்கொள்ளத் தொடங்குகிறான். அவ்வளவு மனமுருகி வழிபட்டு காதலித்த பெண்; அந்த காதல் உதித்த அதே உள்ளத்தில் அவள் வாழ்க்கையை அழிக்கும் வெறியும் உதித்தது எப்படி என்று எண்ணுகிறான். காதலித்து அடையமுடியாதவளின் முகத்தை குலைக்க எப்படி தனக்குத் தோன்றியது என்ற மர்மத்துக்கு அவனிடம் விடையில்லை.

இப்படியே ஒரு வருடம் போகிறது. குளிர்க்காலம் முடிந்து கோடைக்காலம் கடந்து மழைக்காலம் வருகிறது. அவர்கள் இருவருக்குள்ளும் ஓர் ஒத்திசைவு உருவாகிறது. பருவமழை மேகமாக திரண்டு மடை உடைய காத்திருக்கும் ஒரு நாள் சோலையில் அவர்களுக்கு முன்னால் அந்த மயில் வந்து இறங்குகிறது. கொத்த வருவதாக எண்ணி அவன் அதை விரட்டப்போக அவள் தடுக்கிறாள். மயில் மெல்ல அடியெடுத்துவைத்து, அவளை வணங்குவதுபோல் தலைதாழ்த்துகிறது. மிகுந்த அக்கரையுடன், தன் இதயத்தையே கோதிவளர்த்து வெளிநீட்டி வைப்பதுபோல் தோகை விரித்து சிலிர்க்கிறது.  அழகால் கவரப்பட்டு தன் கடைசி துளி வரை அதற்கு அளிக்க நினைத்த ஆண் மயில், மர்மக்கண் ஒளிரும் தோகையை விரித்து, தன்னை மறந்து தன்னந்தனியாக ஆடுகிறது. அக்காட்சி இருவருக்கும் கண்ணீரை வரவழைக்கிறது.

-இந்தக்கதையில் ஒரு விதத்தில் ஆண்மை என்றால் என்ன என்று கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. மயில் மழையில் ஆடும் காட்சி இந்தக்கதை எழுப்பும் வினாக்களுக்கு மிஸ்டிகலான பதிலளிக்கிறது. விவாதங்கள் மூலம் இக்கதை சார்ந்த புரிதல்கள் மேலும் வளரலாம்.

‘புகைப்படம்’ என்ற கதை வங்க பிண்ணணி கொண்ட எழுத்தாளர்கள் அதிகமும் எழுதும் வெளிநாட்டு வாழ் வளர்ந்த பிள்ளைகளின் முதிர்ந்த பெற்றோரின் கதை என்ற களத்தை கொண்டது. ஆனால் அந்தப்பாணிக்கதைகள் பெரும்பாலானவற்றில் இல்லாத படைப்பாற்றல் கொண்ட கதை இது.

வாழ்க்கை முழுவதும் போராடி கஷ்டப்பட்டு பிள்ளைகளை வளர்த்த தாய் வெளிநாட்டிலும் அவர்களுக்கும் பேரக்குழந்தைகளுக்கும் சகல பணிவிடைகளை செய்யும் ஆயாவைப்போல வாழ்கிறாள். அவளுக்கென்று நேரம், பொழுதுபோக்கு, நட்பு, அந்தரங்கம் என்று ஏதும் இல்லை. இதுவரை சம்பிரதாயமான கதையில் ஆசிரியர் எதிர்பாரா உத்தி ஒன்றை நுழைக்கிறார்: அவர்கள் அண்டை வீட்டில் வாழும் நீல் என்ற அமெரிக்கர் நிலவில் முதன்முதலாக கால்வைத்த நீல் ஆர்ம்ஸ்ட்ராங்.

எதேச்சையான சந்திப்புகளில் முதியவரான நீலுக்கும் அந்த பாட்டிக்கும் ஒரு விதமான வழிபோக்கு நட்பு உருவாகிறது. அவன் புன்னகையில் நிலவொளி குடிகொண்டிருப்பதாக அவளுக்குத் தோன்றுகிறது. தான் ஒரு நல்ல பாட்டியாக குடும்பத்துடன் இருக்கவேண்டும் என்ற குற்றவுணர்வு அவளுக்கு இருக்கிறது. பட்டும் படமலும் பதில் பேசுகிறாள். அதையும் மீறி அவர்களுக்குள் நட்பு முதிர்கிறது. வாழ்க்கைகதைகளை பரிமாறிக்கொள்கிறார்கள். நீல் அவளை ஞாயிற்றுக்கிழமையன்று பக்கத்து ஊரில் ஒரு நல்ல உணவகத்தில் மதிய உணவு சாப்பிட அழைக்கிறார். அவள் ஒப்புக்கொள்கிறாள். வீட்டில் கேலி, கிண்டல். இந்த வயசில் இப்படியா என்று. அவர்கள் வெளியே போக திட்டமிட்டிருந்த நாள் அன்று பேரக்குழந்தைக்கு உடம்பு சரியில்லாமல் போகிறது. இருந்து பார்த்துக்கொள், இப்போ நீ வெளிய போகலன்னா என்ன என்று பிள்ளைகள் சொல்கிறார்கள். தான் வரவில்லை என்று நீலுக்கு தொலைபேசியில் சொல்கிறாள்.

தன் நிலையை நினைத்துக்கொள்ளும் போது நீல் அவளுக்கு பரிசாகக் கொடுத்த புகைப்படம் நினைவுக்கு வருகிறது. பெட்டிக்குள் பட்டுப்புடவைகளுக்கு அடியில் பத்திரமாக வைத்திருந்த படத்தை எடுத்துப்பார்க்கிறாள். நிலவிலிருந்து எடுக்கப்பட்ட பூமியின் படம். வெட்டவெளியில் நீல நிற அறைவட்டம். நான் சோர்வடையும்போதெல்லாம் இந்தப்படத்தை பார்ப்பேன், இதுதான் நாம், இவ்வளவுதான் நம் துயரங்களும் தோல்விகளும் என்று தோன்றும், உனக்கும் இது உதவட்டும் என்று அதை கொடுக்கும்போது நீல் சொன்னது அவள் நினைவுக்கு வருகிறது. இன்னும் பல ஞாயிற்றுக்கிழமைகள் வரும், நான் காத்திருக்கிறேன் நீல் என்று நினைத்துக்கொள்கிறாள் அந்த மூதாட்டி.

-அமெரிக்காவுக்கு செல்லும் கீழை நாட்டு பெற்றொர்களின் நிலையை பற்றி ஜும்பா லகிரி முதல் யியுன் லீ வரை பலர் அங்கிலத்தில் எழுதியிருக்கிறார்கள். ஆனால் இந்தக்கதையில் வரும் ஆழமும் கனவும் இதே களத்தில் எழுதப்பட்ட, இதைவிட புகழ்பெற்ற கதைகளில் நிகழவில்லை என்று சொல்லவேண்டியிருக்கிறது. நீல் ஆர்ம்ஸ்ட்ராங் ஓர் அமெரிக்க நாயகன். வீரன். ஆனால் இந்தக்கதையில் அவன் ஒரு கந்தர்வனாக, நீலனாக வருகிறான். அமெரிக்கர்களுக்கு நீல் ஒரு சாதாரண பெயர். நமக்கு அவன் பெயர் நீலமாகவே ஒலிக்கும். அந்தப்பெயரும் அப்புகைபடமும் கதையில் கற்பனைத்திரனுடன் ஒத்திசைவுடன் இணைத்திருக்கிறார் ஆசிரியர். ஓர் இந்தியமொழிக்கதையில் தான் இதன் மேலதிகப் பொருள் துலங்கும்.

நன்றி,

சுசித்ரா

விஷ்ணுபுரம்விழா சிறப்பு விருந்தினர் அனிதா அக்னிஹோத்ரி

நிழல் யுத்தம்-அனிதா அக்னிஹோத்ரி

சிதைவு -அனி தா அக்னிஹோத்ரி

‘தகவல் அறியும் உரிமை அல்லது ஏப்ரல் 7’ – சிறுகதை – அனிதா அக்னிஹோத்ரி

‘நினைவுகள்’ சிறுகதை – அனிதா அக்னிஹோத்ரி

எரிகல் ஏரி – அனிதா அக்னிஹோத்ரி

நிலவொளியில் – அனிதா அக்னிஹோத்ரி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 14, 2021 11:31

நகைச்சுவை -கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

Iam nobody are you nobody too? என்கிற வரி நினைவு வந்தது. Are you not thinking what iam not thinking படித்தவுடன். Iam nobody..  மேற்கோளை நீங்கள் நவீனத்துவத்துக்குப்பின் கவிதை தேவதேவனை முன்வைத்து புத்தகத்தில் இவ்வரி ஒரு பியானோ ஒலி போல அனுபவிப்பதாக எழுதியிருந்தீர்கள். அந்த வரி எனக்கும் மிகவும் பிடித்திருந்தது. நானும் அந்த கவிதையைப் புரிந்துகொள்ளும் மனநிலையில் இருந்தேன்.

”எப்ப பாத்தாலும் இதை கடிச்சுக்கோ, அதை கடிக்காதே. இதப்பாத்து குரை அதைப்பாத்து குரைக்காதே. இதை தின்னு, அதை தின்னாதே. என்னோட இருத்தலே வெறும் தெரிவுகளா ஆயிட்டுது, சே” இதை நான் நினைத்து இதே போல நொந்துகொண்டுள்ளேன் மானசீகமாக உங்களுடன்தான்.

”எப்பவாச்சும் எல்லாத்தையும் கடாசிட்டு அக்கடான்னு கன்சூமரிசத்திலே குதிச்சிடணும்னு தோணுறதுண்டா” நான் இவ்வாறு பலமுறை இவ்வாறான எண்ணங்களை கொண்டதுண்டு.

கடைசியா கெளம்பிப் போறவர் ஞானஒளிய அணைச்சுட்டு போகவும் இதுவும் ஞானத்தோட உயரம் ஜாஸ்தி ஆகிறப்ப ஆக்ஸிஜன் மாஸ்க் அதுவா விழுந்திரும் இங்கநான் யோகம் தியானம் செய்யும்பொழுது பெரும்பாலும் காலை இப்படிதான் ஆகிறது. ”வாழ்க்கை நெடுஞ்சாலையிலே அவசரமா போறப்ப அப்பப்ப கொஞ்சம் நின்னு வழியிலே பூத்திருக்கிற அழகான ரோஜாக்களையும் தின்னுடணும்” வேறு வழியேயில்லை.

சில பகிர. மற்ற அனைத்துமே மிக ஆழமானவையாக இருந்தது. நீங்கள் நடராஜகுரு நித்யாவின் விவாவத்தின்பொழுது சிரிக்கவேயில்லையே என்று கேட்டதைக் கூறுவீர்கள். இது நன்றாக உள்ளது. நானும் நகைச்சுவை தொடர்வேன்.

இன்று வந்த அமுதினியின் கவிதை அருமை. அமுதைப் பருகியவள். நானும் பருகுவேன்.

சுபஸ்ரீ

***

அன்புள்ள சுபஸ்ரீ

நகைச்சுவைக் கட்டுரைகள் ஒரு மாதகாலத்தை உற்சாகமாக வைத்திருந்தன. நாம் நம்பும் அனைத்தையும் தலைகீழாக்கியும் பரிசோதிக்க நகைச்சுவை ஒரு நல்ல வழி. குரங்கிடம் எதை கிண்ணத்தில் கொடுத்தாலும் தலைகீழாக கவிழ்த்தும் ஆராயும், அதைப்போல.

ஜெ

***

அன்புள்ள ஜெ,

வணக்கம்!

இந்த நாட்கள் எல்லாம் உங்களின் மெல்லிய நகைச்சுவைப் பதிவுகளினால்தான் இனிமை கொள்கின்றன. கார்ட்டூன் வாசகங்களின் மொழிபெயர்ப்பில் பலசமயங்களில் மூலத்தை விடவும் நகைச்சுவை அதிகமாக இருக்கின்றன. [வைபை கடவுச்சொல்லாக ஏதாவது வாங்கவும் அல்லது கிளம்பிச்செல்லவும் என்பதை தின்னுட்டு கிளம்பிப்போடா என்றது ஓர் எடுத்துக்காட்டு] வாசிப்பு வேகத்தில் JERKS என்னும் சொல்லை ஜீசஸ் என மொழிபெயர்த்தது இன்னொரு உச்சம் (பின்னர் திருத்தி விட்டாலும்).

ஜெ, முன்னர் ஒரு பேட்டியில் நீங்கள் குறிப்பிட்ட தழுவிய மகாதேவர் ஆலயத்தை மையமாகக் கொண்ட பகடி நாவலை எழுதுவதற்கு இதைவிட வேறு நல்ல சந்தர்ப்பம் கிடையாது என நினைக்கிறேன். இந்த காலத்தில் நாவல் வெளியாவதற்கு ஏதாவது வாய்ப்பு உள்ளதா?

அன்புடனும் வணக்கத்துடனும்

செந்தில்நாதன்

***

அன்புள்ள செந்தில்நாதன்

எழுதவேண்டும். அதற்காக ஒரு மொழிநடையை தேடிக்கொண்டிருக்கிறேன். சிலகோணங்களில் எழுதிப்பார்த்தேன். சரியாக அமையவில்லை. பார்ப்போம்

ஜெ

31நேரா நிர்வாகம்

30 நிர்வாகம்

29இலக்கியம்!!!

28 ஏர்போர்ட்!

27விற்பனை!

26 விளம்பரம்

25 ’சயன்டிஸ்ட்!’

24தொழில்நுட்பம்

23’மரபணு’

22மெய்ஞானம் டாட் காம்

21 மனைவி!

20 ஊதிப்பெருக்கவைத்தல்

19ஊழ்

18“சயன்ஸ்!”

17கல்வி

16பழம் கிழம்

15“ஓவியமாத்தான் இருக்கு!”

14கடவேல்

13மோனா

12ஞானமே இது பொய்யடா!

11ஆப்’ 10பகடை பன்னிரண்டு 9சிரிக்கும் ஏசு 8டேனியல் லாபெல் 7ஸாரி டாக்டர்! 6ஆடல் 5கம்யூட்டர் யுகத்துக் கடவுள் 4 மனம் 3குருவும் குறும்பும் 2இடுக்கண் வருங்கால்… 1ஆன்மிகமும் சிரிப்பும்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 14, 2021 11:31

சிந்தாமணி,கடிதம்

சீவகசிந்தாமணி, உரையாடல்

அன்பு நண்பர் ஜெயமோகனுக்கு,

வணக்கம், நலம்தானே?

சீவக சிந்தாமணி குறித்த உரை கேட்டேன். பல புதிய வாசல்களைத் திறந்து வைக்கும் மிகச் சிறப்பான உரை. நான் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் சீவக சிந்தாமணியில் காந்தருவதத்தை பற்றிய ஓர் உரை நிகழ்த்தி உள்ளேன். இன்னும் அக்காப்பியத்தை முழுமையாகப் படித்ததில்லை. அவ்வப்போது பகுதி பகுதியாகத்தான் படித்துள்ன்.

சிந்தாமணிச்செல்வர் என்று பெயர் பெற்ற நூற்கடல் தி.வே.கோபாலையர் அவர்களின் சிந்தாமணி பற்றிய சொற்பொழிவை ஒரு முறை மயிலாடுதுறையில் கேட்டிருக்கிறேன். முதலில் எனக்குள் எழுந்த முக்கியமான ஓர் ஐயத்தைக் கேட்டுவிடுகிறேன். “நிஜ வாழ்வில் இருப்பதைத்தான் காவியம் பிரதிபலிக்கிறது. அன்றைய பண்பாட்டைக் காட்டும் ஆவணமாகச் சீவக சிந்தாமணியைக் கருதலாம்” என்று உரைத்தீர்கள்.

பதுமுகன் மணந்து உறவும் கொண்ட பெண்ணைச் சீவகன் மணந்தது அக்காலச் சூழலில் தீய ஒழுக்கமாகக் கருதப்படவில்லை என்று கூறினீர்கள். பரத்தையர் பிரிவு சங்ககாலத்தில் இருந்தது. ஆனால் ஒருவர் மணந்து உறவும் கொண்ட ஒரு பெண்ணை வேறொருவர் மணந்ததாகச் சங்கப்பாடல்களில் இல்லை என்றெண்ணுகிறேன். சிந்தாமணி எழுந்த காலக்கட்டத்தில் தோன்றிய இலக்கியங்களில் ஏதேனும் இதுபற்றிக் காட்டப்பட்டிருக்கிறதா? இதுபோன்ற மகளிர் மறுமணம் அன்றைய  பண்பாட்டில் வழக்கத்தில் இருந்ததா என்பதுதான் எனக்கு ஐயமாகும்.

தங்களின் உரைக்குத் தாங்கள் தொடுத்த முன்னுரை மிகவும் சிறப்பாக இருந்தது. சிலம்பையும் சிந்தாமணியையும் ஒப்பிட்டு சிலம்பில் நாடகத்தன்மை உண்டு அது சாமானிய மக்களின் அறத்தைப் பேசியுள்ளது என்று சொன்னது முழுக்க முழுக்க உண்மை. அதேபோல மணிமேகலை சிலம்பு அளவுக்கு மக்களை ஈர்க்காததற்கு அது நேரடியாகத் தத்துவம் பேசியதுதான் காரணமாகும் சிந்தாமணி அமங்கலமாகக் கருதும் சுடுகாட்டில் தொடங்குவது பற்றிய தங்களின் கருத்து முக்கியமானதாகும். நவீனப்பார்வையைக் காட்டுவதாகும். அதுதான் நாட்டார் மரபைக் காட்டுகிறது என்னும் பார்வை புதியது. ஏனெனில் நாட்டார் மரபுக்குச் சுடுகாடு அன்னியமானதன்று என்று எடுத்துக் காட்டினீர்கள்.

சீவகனின் பயணம் ஓர் ஆத்மாவின் பயணம் என்பதும் தங்கள் கூற்றுகளில் முக்கியமான ஒன்று. பல இலக்கியங்கள் இராமாயணம் மகாபாரதம் மற்றும் சங்க இலக்கியங்கள் கூடப் போர்க்களக்காட்சிகளைக் காட்டுகின்றன. ஆனால் எதிலுமே போர் முடிந்தபின் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்தது பற்றிப் பேசவே இல்லை; சீவக சிந்தாமணி மட்டுமே அதுபற்றி எழுதியுள்ளது என்பது புதிய செய்தியாகும். தாங்கள் அதை எடுத்துக் காட்டிச் சமணர்கள் மருத்துவ சேவையை முக்கியமானதாகக் கருதினார்கள் என்று காரணமும் உரைத்தது சிறப்பான ஒன்று

.“செய்க பொருளை யாரும் செருவாரைச் செருவிக்கும்” என்பதற்குத் தகுந்த திருக்குறளை எடுத்துக் காட்டியது குறிப்பிடத்தக்க ஒன்று. அதேபோலக் கடலடி அமுது என்பதற்கு உப்பு என்னும் பொருளைக் கூறியதும், கருமணி அழுத்திய என்பதற்குக் கருமணிகள் கோர்த்த தாலி என்னும் பொருள் கொள்ளலும் சிறப்பானவை.

இறுதியில் சீவகசிந்தாமணி என்பது சமணத் துறவிகளுக்காக எழுதப்பட்டது அன்று. அது சமண இல்லறத்தாருக்காக எழுதப்பட்டது என்னும் கூற்று தங்களின் உரைக்கு மகுடம் போன்று அமைந்துவிட்டது. நவீன இலக்கிய வாசகர்கள் சீவக சிந்தாமணியை எவ்வாறு அணுக வேண்டும் என்பதைத் தங்கள் உரை மிகத் தெளிவாக விளக்கியுள்ளது.

வளவ. துரையன்

*

அன்புள்ள வளவதுரையன்

சீவக சிந்தாமணியின் காலகட்டத்தில் அந்நூலில் வரும் நண்பன் திருமணம் செய்யும் காட்சி இயல்பாக இருந்தது என நான் சொல்லவில்லை. அது அரிதான ஒரு காட்சி என்றே சொல்கிறேன். ஆனால் பின்னாளில் நாம் காணும் உடல்சார்ந்த கற்பொழுக்கம் சங்ககாலம் முதல் இல்லை என்பதை சீவகசிந்தாமணி காட்டுகிறது என்றே நினைக்கிறேன். அன்றிருந்த சாதிசார்ந்த ஒழுக்கத்தையும் அதை சமணம் இயல்பாக ஏற்றுக்கொண்டிருந்ததையும் காட்டுகிறது. சீவகசிந்தாமணியையே ஓர் உதாரணமாக கொள்ளலாம் என்றே சொல்கிறேன்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 14, 2021 11:31

October 13, 2021

தத்துவம் இன்று…

ஆசிரியருக்கு வணக்கம்,

இலக்கியவாதிகள் வாசிப்பு, படைப்பு ஆகிய தளங்களில் செயல்படுகிறார்கள். ஆன்மீகவாதிகள் சொற்பொழிவுகள் மற்றும் தினசரி பயிற்சி வகுப்புகளை நடத்துகிறார்கள். வரலாற்று ஆய்வாளர்கள் கூட தொடர்ந்து தங்களது களங்களில் ஆய்வுகளை மேற்கொள்கிறார்கள்.

இந்த தத்துவவாதிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? இன்றைய காலகட்டத்தில் அவர்களின் தேவை ‌இருக்கிறதா? இருப்பின் எத்தகையானது?

ஷோப்பனோவர்

இன்று ஒரு இளைஞர் தத்துவம் பயில விரும்பினால், அவருக்கு நீங்கள் என்ன அறிவுரைகளை கூறுவீர்கள்?இந்தியாவில் தத்துவம் பயில்வதற்கான சிறந்த வழிமுறை எது? (குருகுலம் vs பல்கலைக்கழகம்)இவ்வளவு வாசித்து எழுதிய பிறகும், தங்களை ஏன் தத்துவ துறையின் மாணவனாக மட்டுமே கருதி கொள்கிறீர்கள்?

இந்த கேள்விகள் அனைத்தும் தேவிபிரசாத் சட்டோபாத்யாயா-வின் “இந்திய தத்துவம் ஓர் அறிமுகம்” நூலை வாசிக்கையில் தோன்றிவை, தவறு இருப்பின் மன்னிக்கவும்.

நன்றி

நவீன் சங்கு

டாக்கிங்ஸ்

அன்புள்ள நவீன் சங்கு,

சாதாரணமாக நீங்கள் கேட்டிருந்தாலும்கூட இது ஒரு முக்கியமான கேள்வி. தத்துவம் என்று பொதுவாகச் சொல்லப்படும் ஒருவகை சிந்தனைமுறை இன்று என்னவாக இருக்கிறது என்பதை இக்கேள்விக்கு விடையாக யோசிக்கலாம்.

முதல் கேள்வி, தத்துவம் என்றால் என்ன? வாழ்க்கை, இயற்கை, பிரபஞ்சம் ஆகியவற்றைப் பற்றிய அடிப்படை வினாக்களும் விடைகளும் அவற்றை பற்றிய விவாதங்களும் தத்துவம் என அழைக்கப்பட்டன. நெடுங்காலம் தத்துவமே ஒரே மெய்காண்முறையாக இருந்தது.

ஃபூக்கோ

இன்று நாம் கணிதம், அறிவியல், பொருளியல், அரசியல், அழகியல் என வெவ்வேறு தளங்களில் விவாதிக்கும் அனைத்தும் தொல்காலத்தில் தத்துவத்தின் பேசுபொருட்களாகவே இருந்தன.

அத்துடன், தத்துவமும் மதமும் பிரிக்கமுடியாதபடி ஒன்றாக இருந்தன. தத்துவம், [Philosophy] இறையியல்  [Theology], அறவியல் [Ethics], மெய்யியல் [Spritiualism] மறைஞானம் [Mysiticism] என்றெல்லாம் நாம் இன்று பிரித்துக் கொள்கிறோம். கிரேக்க தத்துவம் என்பது கிரேக்கமதத்தின் பகுதியாகவே இருந்தது.பதினேழாம் நூற்றாண்டுவரைக்கும் கூட தத்துவவாதிகள் அறிவியலாளர்களாகவும் மதத்தலைவர்களாகவும் இருந்தனர்.

தெரிதா

பின்னர் தத்துவம் மதத்தில் இருந்து பிரிந்தது. கீழைநாடுகளைப் பொறுத்தவரை மதத்தின் பகுதியாகவே தத்துவம் இன்றும் உள்ளது. தத்துவம், இறையியல், மெய்யியல் என்னும் பிரிவினை இந்து,பௌத்த,சமண மதங்களில் இப்போதும்கூட இயல்வதல்ல.

‘தூய’ தத்துவம் என்பது ஐரோப்பிய வரலாற்றிலேயே இரண்டு நூற்றாண்டுகள்தான் இருந்திருக்கிறது என்று தோன்றுகிறது. பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில்தான் மதம்,அறிவியல் ஆகிவற்றிலிருந்து தங்களைப் பிரித்துக்கொண்டு தத்துவத்தை மட்டுமே கையாண்ட தத்துவ ஞானிகள் தோன்றினர். உதாரணம், ஷோப்பனோவர்.

சர்த்ர்

நேற்று தத்துவம் எடுத்துப் பேசிய அனைத்தும் வெவ்வேறு அறிவுத்துறைகளாக மாறி, மிகமிக விரிவாக இன்று பேசப்படுகின்றன. ஒவ்வொரு துறைக்கான கலைச்சொற்களும், தனித்த தர்க்கமுறைகளும், அவற்றுக்கான அறிவுத்தொகையும் உருவாகிவிட்டது. இன்று ஒருவர் ஒன்றுக்குமேற்பட்ட அறிவுத்துறைகளில் முதன்மைக் கல்வி பெறுவது மிகமிகக் கடினம், அனேகமாக இயல்வதே அல்ல.

பிளேட்டோ பேசிய இலட்சிய அரசு என்பது இன்று அரசியல்கோட்பாடாக பேசப்படும். அரிஸ்டாட்டில் பேசிய உயிர்களின் பகுப்புமுறை நவீன உயிரியலிலும் தாவரவியலிலும் பேசப்படும். நூறாண்டுகளுக்கு முன்புவரை தத்துவத்தால் மட்டுமே கையாளப்பட்ட  ‘அறிதல் என்றால் என்ன?’,  ‘உண்மை என்றால் என்ன?’ போன்ற வினாக்கள் இன்று நரம்பியலால் விவாதிக்கப்படுகின்றன. உளவியல் இன்று பேசிக்கொண்டிருப்பவை எல்லாமே நேற்று தத்துவத்தில் விவாதிக்கப்பட்ட பிரச்சினைகள்தான்.

ஹாக்கிங்ஸ்

அப்படியானால் தத்துவத்தின் வரையறை இன்று என்னவாக உள்ளது? இன்று தத்துவத்தை இப்படி வகுத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு அறிவுத்துறைகளிலும் உள்ள அடிப்படையான கொள்கைகள், அவற்றின் தர்க்கங்களின் ஒட்டுமொத்தத் தொகுப்பை இன்று தத்துவம் என்று கொள்ளலாம்.

அவ்வகையில் பார்த்தால் இன்று வெவ்வேறு அறிவுத்துறைகள் சார்ந்து அடிப்படையான வினாக்களை எழுப்பி விவாதிப்பவர்கள் அனைவரையுமே தத்துவவாதிகள் என்று கொள்ளலாம்.  இப்படி வரையறை செய்யலாம். ஓர் அறிவுத்துறையின்  உள்விவாதங்களில் ஈடுபடுபவர்கள், அதில் கண்டடைதல்களை நிகழ்த்துபவர்கள் துறைசார் அறிஞர்கள். அதன்வழியாக வாழ்க்கை, பிரபஞ்சம் பற்றிய அடிப்படை வினாக்களை எழுப்பி கண்டடைதல்களை பொதுவாக முன்வைப்பவர்கள், விவாதிப்பவர்கள் தத்துவவாதிகள்.

ரஸல்

அவ்வண்ணம் ஏராளமான அறிஞர்கள் இன்று தத்துவவாதிகளாகவே செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களை நாம் துறைசார் அறிஞர்களாகவே எண்ணுகிறோம். அதுதான் சிக்கல். ஜாரேட் டையமண்ட் நிலவியல்- சமூகவியல் அறிஞர் மட்டுமல்ல. அவர் தத்துவவாதியும்கூடத்தான். ழாக் தெரிதா மொழியியலாளர் மட்டுமல்ல, தத்துவவாதியும் கூடத்தான்.

எண்ணிப்பாருங்கள், நம் சிந்தனையை பாதித்த எத்தனை பெயர்கள் நினைவில் எழுகின்றன என்று. மிஷேல் ஃபூக்கோ [சமூகவியல்] நாம் சாம்ஸ்கி [மொழியியல்] ரிச்சர்ட் டாக்கின்ஸ் [உயிரியல்] ரிச்சர்ட் ஃபெய்ன்மான் [இயற்பியல்] ஆலிவர் சாக்ஸ் [நரம்பியல்] விலயன்னூர் ராமச்சந்திரன் [பழக்கவியல்], யுவால் நோவா ஹராரி [சமூகவியல்]. இவர்கள் அனைவருமே நேற்றுவரை தத்துவம் கையாண்ட அடிப்படைகளை விவாதிப்பவர்கள். உதாரணமாக, ஸ்டீவன் ஹாக்கிங்ஸின் காலத்தின் சுருக்கமான வரலாறு இயற்பியலுக்குள் வரும் நூல். ஆனால் தத்துவத்தின் வினாக்களை மட்டும்தானே அது கையாள்கிறது?

கென் வில்பர்

‘தூயதத்துவம்’ என ஒன்று இன்று செயல்படுகிறதா? அது என்றுமிருக்கும். வெவ்வேறு துறைசார் அறிதல்களை தொகுத்து அடிப்படைக் கேள்விகளுக்கான விடைதேடுவதில் அது ஈடுபட்டிருக்கும்.ஆனால் அப்படி ஒரு பொதுவான தத்துவஞானி இன்று உருவாவது மிகமிகக் கடினம். ஏனென்றால் அத்தனை துறைஞானங்களையும் ஒன்றெனத் தொகுக்கும் பொது அளவுகோல், பொதுத்தருக்கம் என ஏதும் இல்லை.

அப்படி ஒரு பொதுஅளவுகோல், பொதுத்தர்க்கத்தை உருவாக்கவேண்டிய கட்டாயம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலேயே உருவாகிவிட்டது. ஏ.என்.வைட்ஹெட், பர்ட்ரண்ட் ரஸ்ஸல், விட்கென்ஸ்டீன் என பலர் அதற்காக முயன்றனர். அந்த அடிப்படைக்கட்டமைப்பாக கணிதம் இருக்கலாம் என்னும் எண்ணம் இருந்தது. ஏனென்றால் கணிதமே தூய தர்க்கம். பின்னர் அந்த அடிப்படை கட்டமைப்பு மொழி என கொள்ளப்பட்டது, ஏனென்றால் எந்த கருத்தும் அறுதியாக மொழிதான்.  ஆனால் அவ்வாறு ஒருங்கிணைக்க முடியவில்லை. ஒருங்கிணைந்த தத்துவத்திற்கான தேடலில் கடைசிப்பெயராக கென் வில்பரைக் குறிப்பிடுகிறார்கள்.

Slavoj Žižek

இன்று நாம் தேடினால் முக்கியமான பல தத்துவவாதிகளை கல்வித்துறையினர் சுட்டிக்காட்டுகிறார்கள். உதாரணமாக சிசெக் [Slavoj Žižek] எல்லா பட்டியலிலும் இருக்கும் பெயர். உளவியலின் அடித்தளத்துடன் பண்பாட்டு விமர்சனங்களை முன்வைக்கும் சிசெக் சீண்டும் கருத்துக்களை கூறி விவாதங்களை உருவாக்குவதன் வழியாக பரவலாக அறியப்பட்டிருக்கிறார். ஜூடித் பட்லர், ஜான் மெக்டொவெல் போன்ற ஒரு பத்து பெயர்களை பொதுவாக வாசிப்பவர்கள் பட்டியலிடலாம்.

சென்ற நூற்றாண்டில் உலகமெங்கும் அறியப்பட்ட தத்துவஞானிகள் சிலர் இருந்தனர். இரு உதாரணங்கள் சொல்லவேண்டுமென்றால் பர்ட்ரண்ட் ரஸ்ஸல், ஜீன் பால் சார்த்ர் ஆகிய இருவரையும் குறிப்பிடலாம். இன்று அப்படி உலகம் கேட்கும்படிப் பேசும் தத்துவஞானிகள் என எவருமில்லை.

ஃபெய்ன்மான்

இன்று தத்துவஞானியின் இடம் என ஒன்று உள்ளதா? ஆம், மிக வலுவாக. தத்துவத்தின் இரு கடமைகள் அறிதலும் வழிகாட்டுதலும். மெய்மையை அறிந்து வகுத்து அளிக்க முயல்கிறது அது. முழுமுதல் மெய்மை என ஒன்று இல்லாமலே இருந்தாலும்கூட அந்தந்த காலகட்டத்திற்குரிய மெய்மையை அது அளித்தாகவேண்டும். ஒவ்வொரு காலகட்டத்திற்குரிய அறவியலை தத்துவமே அளிக்கமுடியும்.

என் நோக்கில் தத்துவம் என ஒன்று செயல்படவேண்டும் என்றால் அது அறவியலின் பொருட்டுதான். ஆனால் சென்ற நூற்றாண்டில் புறவயத்தர்க்கவாதிகள் [லாஜிக்கல் பாஸிட்டிவிஸ்டுகள்] தத்துவத்தில் என்றும் இணைந்திருந்த இலட்சியவாதத்தை, மீபொருண்மையை  அடித்து நொறுக்கிவிட்டனர். உலகசிந்தனையில் நிகழ்ந்த பேரழிவு அது, கிட்டத்தட்ட நாகசாகி ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சுக்கு நிகரானது என நான் நினைக்கிறேன். அதன் விளைவுகளில் இருந்து இன்னமும்கூட தத்துவம் கரையேறவில்லை.

இங்கே ஒன்று சொல்லத் தோன்றுகிறது. இலட்சியவாதம் இல்லாத தத்துவம் வெறும் அறிவிப்பயிற்சியாகவே எஞ்சும். ஏதேனும் ஒருவகையில் மீபொருண்மை [மெடஃபிஸிக்ஸ்] இல்லாத தத்துவத்தால் இலட்சியவாதத்தை அடைய முடியாது. மீபொருண்மை என்பது இயற்கையில், வாழ்க்கையில் ஓர் ஒழுங்கை அல்லது இலக்கை அல்லது செய்தியை கண்டடைய முற்படுவதும் வெளிப்படுத்துவதுமாகும். அதற்கு கற்பனையை, உள்ளுணர்வை துணைகொள்வது அது. மீபொருண்மை வெறும் கற்பனை என நிராகரிக்கப்படுகையில் இயற்கையும் வாழ்க்கையும் வெற்றுப்பரப்பாக ஆகிவிடுகின்றன.

சாம்ஸ்கி

புறவயத்தர்க்க்கவாதிகளாலும் பின்னர் அறிவியல்வாதிகளாலும் தாக்கப்பட்டு பின்னடைவுகொண்ட தத்துவம் தன் ’கனவை’ இழந்ததும் அது நடைமுறைத் தர்க்கங்களின் தொகுப்பாகியது. வெறும் பயன்பாட்டுச் சிந்தனையாக ஆகியது. இன்று அதற்கு நெறிவகுக்கும், வழிகாட்டும் தகுதி ஏதும் இல்லை.

தத்துவவாதி என சிசெக் அமர்ந்து பேசும் பல உரையாடல்களை கண்டேன். சில கட்டுரைகளை வாசித்தேன். வெறும் உடைப்பு, சீண்டல். ஆக்கப்பெறுவதென ஏதுமில்லை. ஆகவே அவர் கவனம்பெறுகிறார் என்பதற்கு அப்பால் உலகுக்கு அவர் எதையும் சொல்வதில்லை.

உலகம் வழிகாட்டும் தகைமை கொண்ட, சிந்தனை என்பதற்கு அப்பால் கனவும் கனிவும் கொண்ட தத்துவஞானிகளுக்காகக் காத்திருக்கிறது.

ஜெ

***

பிகு. கல்வித்துறை சார்ந்து தத்துவத்தில் முதுகலை வரை கற்க பல பல்கலைகழகங்களில் வாய்ப்புள்ளது. அஞ்சல்வழிக் கல்வியும் உண்டு. நான்  பார்த்தவரை பாடத்திட்டங்கள் முழுமையானவை.

பொதுவாசகனாக தத்துவம் பயிலவேண்டுமென்றால் ஆங்கிலத்தில் மிக எளிமையான அறிமுகம் முதல் பல நிலைகளிலாக நூல்கள் உள்ளன. தமிழிலேயே மேலைத்தத்துவம் கற்கவும் அறிமுக நூல்கள் உள்ளன.

இந்திய தத்துவம் என்பது ஆன்மிக- மதமரபுகளைச் சார்ந்ததே. அவற்றைக் கற்பிக்கும் வெவ்வேறு அமைப்புகள் உள்ளன. அவை மரபார்ந்தவை. ஆகவே பக்தி, ஆசாரம் ஆகியவற்றுடன் இணைத்தே தத்துவத்தை முன்வைக்கின்றன. அனைத்து தத்துவங்களையும் பயில்வதற்கான நவீன அமைப்பு என ஏதுமில்லை. இங்கே அதற்கான மாணவர்கள் உண்டா எனவும் தெரியவில்லை.

ஒரு சிறுநினைவு. ஒர் இளைஞர் தத்துவம் பற்றி ஒரு கேள்வி கேட்டிருந்தார். நான் பதில் சொல்லியிருந்தேன். இணைப்புகளும் அளித்திருந்தேன். அவர் இன்னொரு கேள்வி அனுப்பியிருந்தார். நான் முந்தைய பதிலையும், இணைப்புகளையும் சுட்டிக்காட்டினேன். அவர் சொன்னார். “அது ரொம்ப நீளமா இருந்திச்சு. நெறைய லிங்க்ஸ் இருந்திச்சு. அதனாலே படிக்கலை”

இந்த மனநிலை தத்துவக் கல்விக்கு முற்றிலும் எதிரானது. தத்துவக்கல்வி என்பது தொடர்ச்சியான விரிவான வாசிப்பின் விளைவாக உருவாவது. மாபெரும் வாசகனே தத்துவத்தை தொட்டுப்பார்க்கவே முடியும்.

கீழைத் தத்துவம்- எளிதாக தத்துவம் பயில தத்துவம் மேற்கும் கிழக்கும் இந்திய தத்துவம் கீழை மேலை நாடுகளின் மெய்ப்பொருளியல் வரலாறு : தொகுதி 2 அத்வைத தத்துவம்- டாக்டர் ராதாகிருஷ்ணன் பின்நவீனத்துவம் -விளையாட்டுக்கையேடு தத்துவத்தைக் கண்காணித்தல் இலக்கியத்தையும் தத்துவத்தையும் இணைப்பது பற்றி சோஃபியின் உலகம்- கிறிஸ்டி புறவயத்தர்க்கவாதமும் மெய்மையும் விவாதங்களின் எல்லை… குரு நித்யா எழுதிய கடிதம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 13, 2021 11:36

யானை முந்திவிட்டது

இன்று உலகத்தின் சனத்தொகையில் பாதிக்கு மேல் செல்பேசி சொந்தக்காரர்களாக இருக்கிறார்கள். இன்னும் பத்து வருடத்தில் உலக சனத்தொகையில் 90 விழுக்காடு மக்கள் செல்பேசி வைத்திருந்தாலும் ஆச்சரியப்பட முடியாது. ஆனால் இன்னும் கூடிய ஆச்சரியம் என்னவென்றால் பாவனையாளர்கள் அதை எதற்கெதற்கெல்லாம் பாவிக்கிறார்கள் என்பதுதான்.

யானை முந்திவிட்டது
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 13, 2021 11:34

காத்தருள்க என் மகவை- கடிதங்கள்

அன்பு நிறை ஜெ

கண்களில் நீர் கோட்காமல் இந்த கடித்ததை என்னால் எழுத முடியவில்லை. எண்ணற்ற பொழுதுகளில் எழுத்தால் உடைந்தெழுந்துருக்கிறேன்.இயல்பற்று அடிக்கடி கண்களில் நீர்சிக்கும் எண்ணற்ற பொழுகளை உங்கள் எழுத்துஅளித்துள்ளது.

தொடக்கம் முதலே என் கண் உங்களை விட்டு அகலவில்லை.சைந்தவி பாடிமுடித்த அந்த நொடிப்பொழுதில் கண்ணாடியை அகற்றி விரல்களால்கண்துடைத்தீர்கள் .உணர்ச்சிபெருநிலையில் நீலம் மலர்ந்த பொழுதில் இருந்த உளகொந்தளிப்புக்கு உங்கள் மனம் சென்றுவந்திருக்கும் .

இன்று இங்கு பங்கெடுத்து இந்த மாபெரும் கலைபடைப்பின் முன்பு அதன் பக்தனாக ஆகாமல் அதை அறிதற்கியலாது என்றுணர்ந்தேன்.தன்னை உடைத்து வார்க்காதவனுக்கு ஆன்மீகம் இல்லை , ஒரு நுண் தத்துவத்தை, ஒருகலைஅழகை உணரும்  உணர்கொம்பு என்பது எந்த உடலுறுப்பை விடவும் மகத்தானது. மிகமிகஅபூர்வமானது. பிற கோடானுகோடிகளை விட மேலான இடத்தில் ஒருவனை நிறுத்துவது. அவன்தன்னை ஆக்கிய வல்லமைக்கு என்றென்றும் நன்றிகூறவேண்டியது.

நன்றி

ரகுபதி கத்தார்.

அன்புள்ள ஜெ

கண்ணானாய் காண்பதும் ஆனாய் என்னும் வரி வண்டு ரீங்கரிப்பதுபோல சுழன்றுகொண்டே இருக்கிறது. நீலம் வாசித்த நாட்கள் கனவுபோல சென்றுவிட்டன. நான் என் மனைவியிடம் சொல்வதுண்டு, அது ஒரு ஹனிமூன் காலகட்டம் என்று. திரும்பி வராத கனவு. கொண்டாட்டம், பரவசம். பிறகு அந்த அனுபவம் வருமா என்று தெரியவில்லை. ஆனால் கையில் எடுக்க பயமாக இருக்கிறது. எடுத்தால் மீண்டும் அந்தப் பித்துநிலைக்கே சென்றுவிடுவோம் என்று தோன்றுகிறது. அந்த ஹனிமூன் மயக்கம், பித்து எல்லாம் மீண்டும் ஒரே கணத்தில் வந்து ஒட்டிக்கொண்டுவிட்டது. இனி கொஞ்சநாள் இதே மனநிலைதான். வரமா சாபமா என்றே தெரியவில்லை. மண்டை முழுக்க கிறுக்கு நிறைந்திருக்கிறது.

என். ராகவேந்திரன்

அன்புள்ள ஜெ,

நீலம் என் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனை. நான் படிப்பு படிப்பு என்றே வாழ்க்கையை விட்டவன். அதன் பிறகு வேலை. வேலையிலேயே மூழ்கி வெற்றியும் அடைந்தேன். வெண்முரசு கொஞ்சம் கொஞ்சமாக வாசித்துக்கொண்டிருந்தேன். கொரோனா காலத்தில் நீலம் வாசித்தேன். ஒருமாதம் எங்கே இருக்கிறேன் என்றே தெரியவில்லை. இன்னொரு கட்டுரையில் சொல்வீர்களே கிருஷ்ண மதுரம் என்று அந்த உன்மத்தநிலையை அடைந்தேன்

கிருஷ்ணபக்தி அல்ல இது.இங்கே மனிதன் அடைவதற்கு எவ்வளவு பேரின்பங்கள் உள்ளன என்று காட்டும் ஒரு நிலை. புலன் இன்பங்களும் கனவுகளும். அழகு அழகு அழகு என்று மனசு பினாத்துமே அந்த நிலை. அதை அடைந்தேன். அதன்பிறகு வாழ்க்கையே மாறிவிட்டது. இனி சலிப்பு கிடையாது. எவர்மேலும் புகார் கிடையாது. எனக்கு இந்த உலகவாழ்க்கை எதையுமே தரவேண்டியதில்லை. ஒரு சூரிய உதயமே போதும்.

நான் அதன்பிறகு பெரிதும் சிறிதுமாக பல பயணங்களை மேற்கொண்டேன். பல பரவசங்கள். ஒருநாள் ஒரு நீலநிற வண்டு என் வீட்டில் பால்கனி பூச்செடியில் இருந்தது. பளிச்சிடும் நீலம். எங்களூரில் ஆனந்தாப்ளூ என்பார்கள். நீலத்தழல்மணி என்று நெஞ்சு அப்படியே பொங்கிவிட்டது. நீலம் போல பேரழகு பிறிதில்லை என நினைத்தேன்.

இன்றைக்கு நீலம் இசைக்கோலம் கேட்டேன். கேட்டுக்கேட்டு பைத்தியமாக அமர்ந்திருக்கிறேன். மாயையிடம் தன் குழந்தையைக் காக்கும்படி கோருகிறாள் யசோதை.

இரண்டென்று எழுந்த மயக்கே
இங்கு இன்று இவ்வண்ணமென்று அமைந்த சழக்கே
இனியென்று ஏதென்று எதற்கென்று எழுந்த துயரே
யானென்று எனதென்று எழுந்த பெருக்கே
தனியென்று சூழென்று அலைக்கும் கணக்கே
மெய்யென்று பொய்யென்று அழைக்கும் திசையே
வாழ்வென்று சாவென்று காட்டும் பசப்பே
காத்தருள்க என் மகவை!
கதிரை காத்தமைவது இருளின் பொறுப்பென்று உணர்க!

முதலாவிண் 16

இருளின் பொறுப்பு ஒளியை பேணிக்கொள்வது. மெய்மையை பேணிக்கொள்வது மாயையின் பொறுப்பு. அந்த வரியில் வெண்முரசு முடியும்போது உருவான அந்த மனக்கொந்தளிப்பும் அதன் பிறகு உருவான அமைதியும் இன்னமும் நீடிக்கிறது

ராஜன் சோமசுந்தரத்துக்கு நன்றி

ஆர்.என்.சுந்தர்ராஜன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 13, 2021 11:34

வெற்றி – கடிதம்

வெற்றி -முடிவாக

வணக்கம் ஜெ

வெற்றி சிறுகதை வாசித்தேன். கதை வாசிக்கும் உணர்வே இன்றி மடமடவென சென்றுவிட்டது. ரங்கப்பர், நமச்சிவாயம், லதா இவர்களில் யார் வென்றது? ஒரு வகையில் பார்த்தல் மூவரும்தான் என்று தோன்றுகிறது. யார் எதை வெற்றியாகக் கொண்டிருக்கிறார்கள் என்பதை பொருத்தது அது.

ரங்கப்பர் ஒரு ஜமீன்தார். தன பணத்தால் பல பெண்களை வென்றிருப்பதாக சொல்கிறார். ஆனால் அவரை பணவெறிபிடித்த பெண்பித்தன் என்ற கோணத்தில் இருந்து சற்று வேறுபடுத்திக்காட்டுவது ‘என் பணமும், ஆணவமும் எந்தப் பெண்ணிடமாவது தோற்காதா’ என்று அவர் உள்ளூர ஏங்கியதுதான். ‘உறவுகொண்டபின் உப்பரிகையில் நின்று அழுதிருக்கிறேன். எந்த நம்பிக்கையில் வாழ்வது என்று தெரியாமல்…’ என்று அவர் கூறுவது அவரின் இரட்டைத் தன்மையைக் காட்டுகிறது. பெண்களின் ஸ்திரமற்ற தன்மை அவருக்கு ஏமாற்றத்தையும், அதேவேளை அத்தன்மையை அவர் தனக்குச் சாதகமாகவும் பயன்படுத்தியிருக்கிறார்.

நமச்சிவாயம் ஒரு சாதாரண ஏஜெண்ட். பிறரைப்போல பணமும், அதிகாரமும், வசதியும் கொண்ட வாழ்வில் வேட்கை உடையவர். க்ளெப்பில் உறுப்பினராக இருந்தது உட்பட அவரின் வாழ்வின் நோக்கம் முழுதும் வசதிவாய்ப்புகளை நோக்கியே இருந்தது. தன் மனைவி அவரிடம் பணிந்துவிடக்கூடாது என்பதைவிட அந்த ஐந்து லட்சம் தரும் வாழ்க்கையே பெருங்கனவாக இருந்தது.

நமச்சிவாயத்திற்கும் லதாவிற்கும் உள்ள உறவு அவ்வளவு ஆழமானதாக இல்லை. வேலைக்குச் சென்று மதியம் வீடு வந்து, உண்டு உறங்கி, மீண்டும் க்ளப்புக்குச் சென்று குடித்துவிட்டு நள்ளிரவு வீடு வந்து உறங்கிவிடுகிறார். தான் தன் மனைவியிடம் அதிகம் பேசுவதேயில்லை போன்ற வரிகள் அவர்களுக்கு இடையில் காதல், பரிவு, அன்பு யாவும் இல்லை என்பதையே காட்டுகிறது. வசதியற்ற குடும்பம், மூன்று பிள்ளைகள், அதில் ஒருவனுக்கு தீராத வியாதி, இதற்கிடையில் காதலும், அன்புமற்ற மணவாழ்க்கை. இப்படிப்பட்ட சூழலில் லதா அன்புக்கும், ஆதரவுக்கும் ஏங்கியிருப்பதில் ஆச்சர்யமில்லை.

சனிக்கிழமை மாலை அவள் ரங்கப்பருடன் சென்றுவிடுகிறாள். ஞாயிறு காலை இருவரும் மருத்துவமனையில் இருக்கிறார்கள். அன்று இரவு அவள் ரங்கப்பருடன் இருந்திருக்கிறாள். ஆனால் அந்த இரவில் என்ன நடந்தது என்று சொல்லப்படவில்லை. அப்படி சொல்லாமல் விட்டுவிட்டதுதான் கதையின் சுவாரஸ்யத்திற்குக் காரணம். இரண்டில் ஏதோவொன்று நடந்திருக்க வேண்டும். அவளை மனதளவில் வென்றதுகூட ரங்கப்பருக்கு வெற்றிபோலத்தான். இறுதியில் என்னை வென்றதற்கு ரங்கப்பர் கொடுத்த பரிசு என்று அவள் சொன்னது அவளின் மனதை வென்றது என்ற அர்த்தத்தில்கூட இருக்கலாம். ஆனால் வாழ்வின் இறுதியில் அதை நமச்சிவாயத்திடம் அவள் சொல்லக் காரணம்? அவள் முழுமையாக ஏதும் சொல்லிவிடவில்லை. வாழ்நாள் முழுக்க அன்பும், அரவணைப்பும் இல்லாத வாழ்க்கையைக் கொடுத்ததற்காக நமச்சிவாயத்தின் முகத்தில் அறைந்தாற்போல இருப்பதற்காக சொன்னாளோ ?

க்ளப்பில் ரங்கப்பர் தான் தோற்றுவிட்டதாக ஒப்புக்கொண்டார். அவர் அவ்வாறு தான் தோற்றதாகச் சொன்னதில் அவருக்குப் பெரிய இழப்போ, பழியோ இல்லை. யாரும் அவரை, ‘இந்த ஜமீன்தார் யாரோ ஒரு பெண்ணை மடக்கிக்காட்டுவதாக பந்தயம் கட்டி தோற்றுவிட்டார்’ என்று தூற்றப்போவதுமில்லை. அவர் உள்ளூர விரும்பியபடி அவரின் பணபலம் லதாவிடம் தோற்றுவிட்டதை எண்ணி மகிழ்ந்திருக்கவும் வேண்டும். ஆனால் வெற்றி பெற்றதாகச் சொல்லியிருந்தால், அதன் பின் நமச்சிவாயத்தின் நிலை?

லதா தன் குழந்தையைக் காப்பாற்றிவிட்டாள். தன் மோசமான கணவனையும் எதோ ஒருவிதத்தில் பழிவாங்கிவிட்டாள். இதில் நமச்சிவாயமும் வென்றார் என்று சொல்லக் காரணம் அவர் வெற்றி எனக்கருதியது வசதியான ஜமீன்தார் வாழ்க்கையைத் தான். அது அவருக்கு கிடைத்துவிட்டது.

நமச்சிவாயம் லதாவை மருத்துவமனையில் பார்த்தபோது அவளுக்கு ஒரே நாளில் பத்து பதினைந்து வயது கூடிவிட்டது போல தோன்றியது அவரின் பிரமையா? இக்கதையை வாசித்து முடிக்கும்போது வரும் எல்லா ஊகங்களுக்கும் காரணம், அன்று இரவு ரங்கப்பருக்கும், லதாவிற்கும் என்னநடந்தது என்று சொல்லாமல் இருந்ததுதான். கடைசியில் ரங்கப்பர் தன்னை வென்றுவிட்டதாகச் சொன்னது உடலாலா? மனத்தாலா? மனத்தால் லதா வெல்லப்பட்டாள் என்பது வெளிப்படை.

இதுபோக இக்கதையில் முக்கியமான ஒன்று, பெண்கள் அருவமான எதையும் ஆசைப்படுவதில்லை, அதனால்தான் அவர்களில் துறவிகளோ, ஞானிகளோ இல்லை, அவர்கள் வாழ்க்கை முழுக்கவும் பொருட்களுடன் கட்டப்பட்டுள்ளது, என்பது. இதுகுறித்து நான் பல முறை எண்ணியிருக்கிறேன். இன்றைய சூழலில் பெண்கள் நிர்வாகத்தில், தொழில்துறையில், விளையாட்டில் தங்களை நிறுவிக் கொண்டிருக்கலாம். ஆனால் இந்தியாவில் இத்தனையாண்டு காலத்தில் ஆன்மிகத்திலும், தத்துவத்திலும் பெண்களின் இடம் என்ன என்பது கேள்விக்குரிய ஒன்று. இதற்கும் சமூக சூழலையே காரணமாகவும் காட்டலாம்.

நான் இக்கதையை இன்று காலை படித்து முடித்துவிட்டு, தினமணி நாளிதழலைப் பார்த்தபோது அதில் வந்த ஒரு கட்டுரை இவ்விஷயத்தோடு தொடர்புடையதாக இருந்தது. புத்தர் வீட்டைத் துறந்து சென்றதுபோல யசோதரையும் சென்றிருந்தால் நிலைமை எப்படியிருந்திருக்கும்? அவள் துறவு மேற்கொண்டு, ஞானம் பெற்றிருந்தால் இச்சமூகம் எந்த அளவிற்கு ஏற்றிருக்கும் என்பது கேள்வியே.

நன்றி

விவேக்.

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 13, 2021 11:31

கம்பராமாயணம் வாசிக்க…

கம்பன் சிலை தேரழுந்தூர் கம்பன் மொழி கம்பன் எழுதாதவை கம்பன் நிகழாத களங்கள் கம்பன் கண்ட மயில்

அன்புள்ள ஜெ

நண்பர்கள் இணைந்து கம்பராமாயணம் வாசிக்க தொடங்கியுள்ளோம். நேற்று இருமணிநேரம் ஒதுக்கி கூட்டுவாசிப்பை மேற்கொண்டோம். சில இடங்களில் பொருள் விளக்க பகுதிகளில் பாடலில் பயின்று வரும் அணியை குறிப்பிட்டிருந்தார்கள். உங்களுக்கு தெரியும், இங்கு இலக்கியம் வாசிக்க வருபவர்கள் பெரும்பான்மையினர் தற்செயலாக அப்போக்கில் நுழைந்தவர்கள். பள்ளியில் மதிப்பெண்ணுக்காக மட்டுமே படித்த இலக்கண பகுதிகள் நினைவில் இருப்பதும் இல்லை.

இந்நிலையில் முறையாக நம்முடைய இலக்கண அமைப்புகளை பயிலாத இலக்கிய வாசகன் கம்பராமாயணம் போன்ற இலக்கண பொருந்திய மரபான காவியங்களை வாசிக்கையில் எவற்றை இழக்க கூடும்? அல்லது அப்படி கற்க அவசியமெல்லாம் இல்லையா?. இன்னொன்று அப்படி அவன் இலக்கண முறையை கற்க வேண்டும் எனில் எங்கெல்லாம் கவனமாக இருக்க வேண்டும்?. ஏனெனில் நம் சூழலில் இப்படி கற்கையில் வெறும் மொழிப்புலமையாளனாக மட்டுமே மாறிவிடும் நிலையும் உள்ளதல்லவா

அன்புடன்

சக்திவேல்

***

அன்புள்ள சக்திவேல்,

கம்பராமாயணத்தை பயில இன்று தேவையாக இருப்பது முதலில் கவிதைச்சுவை உணரும் பயிற்சி மட்டுமே. நவீனக்கவிதையின் வழியாக அதை அடைந்தவர்கள் மிக எளிதாக கம்பராமாயண அழகியலுக்குள் செல்லமுடியும். அதன்பின் சொற்சுவையும், அணிகளின் அழகும் பயிலப்பயில தானாகவே அமையும்.

எந்தக்கவிதையும் வாசகனிடம் விரியவேண்டும். அனுபவமாகவும் அறிதலாகவும். அதற்கு தேவை கற்பனை, வாழ்க்கையனுபவங்களுடன் கவிதையைத் தொடுத்துக்கொள்ளும் உளப்பாங்கு. அது நவீன இலக்கிய வாசகனிடம் நவீன அழகியல் வழியாக உருவாகி வரக்கூடியதுதான்.

நேர்மாறாக, மரபார்ந்த முறையில் இலக்கணம் பற்று கம்பராமாயணத்துக்குள் நுழைபவர்கள் மிகமிகச் சம்பிரதாயமான ஒரு வாசிப்புக்குள் செல்கிறார்கள். அவர்களால் கம்பராமாயணத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்று ‘பொருள்கொள்ள’ மட்டுமே முடிகிறது அவர்களால் எவ்வகையிலும் கவிதையை விரித்துக்கொள்ள முடிவதில்லை. நவீன வாசகனுக்கு அவ்வாசிப்பு போல சலிப்பூட்டுவது வேறில்லை.

இன்று கம்பராமாயணத்தை வாசிக்க அறிஞனின் துணை தேவையில்லை. நல்ல அகராதிகளும் கலைக்களஞ்சியங்களும் உள்ளன. ஆகவே நீங்கள் வாசிக்கும் கூட்டுவாசிப்பு முறையே உகந்தது. வாழ்த்துக்கள்

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 13, 2021 11:31

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.