Jeyamohan's Blog, page 779

May 16, 2022

மறைமலையடிகள், ஒரு தொடக்கம்

மறைமலை அடிகள் போன்ற ஆளுமைகளின் தீயூழ் அவர்கள் பாடநூல்களில் இடம்பெறுவதுதான். மொத்தச் சிந்தனை உலகமே பாடநூல் பாடநூலுக்கு அப்பால் என இரண்டாகப் பிரிந்துவிடுகிறது. பாடநூல் மிக எளிமையான ஒரு சித்திரத்தை அளிக்கிறது. அதையொட்டி நாம் அந்த ஆளுமையை வரையறை செய்துகொள்கிறோம். மேலே வாசிப்பதே இல்லை.

மறைமலையடிகள் மிகக்கூர்ந்து வாசிக்கவேண்டிய ஆளுமை. இன்று தமிழக அரசியலில் அழுத்தமாக வேரூன்றியிருக்கும் தமிழியம் என்னும் இயக்கத்தின் தொடக்கப்புள்ளிகளில் ஒருவர். அவரை அறியாமல் இன்றைய அரசியலை, பண்பாட்டுச் செயல்பாடுகளை புரிந்துகொள்ள முடியாது. அவருடைய எல்லா பக்கங்களையும் சுருக்கமாகச் சொல்லும் பதிவு இது.

மறைமலையடிகள்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 16, 2022 11:33

தமிழ் விக்கி, அதிகாரம்

அன்புள்ள ஜெ

தமிழ் விக்கி ஓர் அதிகாரச் செயல்பாடு, அதன் நோக்கம் ஆதிக்கம் என்றெல்லாம் இங்கே பேசப்படுகிறது. (ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பேச்சு எழுந்து வந்துகொண்டே இருக்கிறது) உங்கள் கவனத்துக்கு கொண்டுவந்தேன்.

ஆர். ரமேஷ்

அன்புள்ள ரமேஷ்

சரி, ஆதிக்கம் இல்லாத, அதிகாரம் இல்லாத ஏதாவது ஓர் அறிவுச்செயல்பாட்டைச் சொல்லுங்கள்.

அறிவுச்செயல்பாடு என்பதே ஒரு கருத்தின், ஒரு தரப்பின் ஆதிக்கத்தை உருவாக்குவதற்காகவே. அதன்பொருட்டே நீங்கள் எழுதுகிறீர்கள், பேசுகிறீர்கள். யார் எங்கே எதைப்பேசினாலும்.

ஆனால் இது அரசியல் அதிகாரம் அல்ல. சமூக அதிகாரம் அல்ல. பொருளியல் அதிகாரம் அல்ல. அது அறிவதிகாரம் மட்டுமே.

அறிவுக்களத்தில் ஒவ்வொரு கருத்தும் வளரத் துடிக்கிறது. தன்னை நிறுவவும் பிறிதை வெல்லவும் முயல்கிறது. உயிர்க்களத்தில் ஒவ்வொரு உயிரும் அதையே செய்கிறது.

இவ்வாறு எல்லா கருத்தும் முயல்கையில் ஒட்டுமொத்தமாக ஒரு சமன்பாடு உருவாகிறது. அதுவே அந்த கருத்துப்பரப்பின் கட்டமைப்பாக ஆகிறது.  இதுவே எப்போதும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

தமிழ் விக்கி புதுமைப்பித்தன் மற்றும் க.நா.சுவின் வழிவந்த தமிழ்ச்சிற்றிதழ் சார்ந்த நவீன இலக்கியத்தின் தரப்பு. எஸ்.வையாபுரிப்பிள்ளையின் ஆய்வுமரபின் தரப்பு. அது நூறாண்டுகளாக இங்கே உள்ள ஒன்று. பல தலைமுறைகளாக வளர்வது.

அந்த மதிப்பீடுகளின் அடிப்படையிலேயே இக்கலைக்களஞ்சியம் அமைகிறது. உலகிலுள்ள எல்லா கலைக்களஞ்சியங்களும் வெவ்வேறு அறிவியக்கங்களின் வெளிப்பாடுகளே. அறிவுத்தரப்பு இல்லாத கலைக்களஞ்சியம் என ஒன்று இருக்க முடியாது.

ஒரு கலைக்களஞ்சியத்தில் பூமியில் வாழும் எல்லா மனிதர்களும் இடம்பெற முடியாது. எவர் இடம்பெறவேண்டும் என்பதிலேயே மதிப்பீடும் தரப்பிரிவினையும் வந்து விடுகின்றன. அதில் எவர் மேல் என தீர்மானிப்பதில் மதிப்பீடு உள்ளது. க.நா.சுவின் இடம் வெங்கட் சாமிநாதனுக்கு இருக்க முடியாது. மறைமலையடிகளின் இடம் ச.பாலசுந்தரத்துக்கு இல்லை. அந்த அளவிலேயே பதிவின் அமைப்பு தீர்மானமாகிறது.

ஒரு கலைக்களஞ்சியத்தில் ஒருவர் ஏன் இடம்பெறுகிறார் என்பதன் காரணம் அப்பதிவில் இருக்கும். ஒருவரை எப்படி புரிந்துகொள்வது, அவருடைய இடம் என்ன என்பது கலைக்களஞ்சியத்தில் இருக்கும். எல்லாரும் அவர்கள் விரும்பியபடி சமமாக இடம்பெற கலைக்களஞ்சியம் என்பது லிங்கடின் தளம் அல்ல. நம்மில் பலர் கலைக்களஞ்சியங்களையே பார்த்தவர்கள் அல்ல.

ஆனால் அதற்கு மாற்றாக உள்ள எந்த தரப்பையும் அது மறைக்கவில்லை. எதையும் திரிக்கவில்லை. எதையும் அழிக்க முயலவில்லை. அவற்றை ஏற்று, விவாதிக்கிறது. தன் மதிப்பீட்டை முன்வைக்கிறது. மறுப்புகள் அறிவார்ந்தவை என்றால் அவற்றை பதிவுசெய்கிறது.

மாறாக சென்ற சில நாட்களாக எவ்வளவு எதிர்ப்பு, எவ்வளவு காழ்ப்பு வெளிப்படுகிறதென்று பாருங்கள். இதை அழிக்கவேண்டும் என முயல்கிறார்கள்; பதினெட்டு முறைக்கு மேல் ஹேக்கிங் முயற்சிகள் நடைபெற்றுவிட்டன. வெளிப்படையாகவே இக்குரல் அழியவேண்டும் என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் தங்கள் களங்களில் சிற்றிதழ் சார் இலக்கிய மரபின் குரல்களை ஒடுக்குபவர்கள். படைப்பாளிகளை மறைப்பவர்கள். அவர்களை எதிர்க்காமல் சிற்றிதழ் சார் தரப்பு தனக்கென ஒரு தளத்தை உருவாக்கினால் அதை அழிக்கவேண்டும் என்கிறார்கள். நிகழ்ச்சிகளை சதிசெய்து தடை செய்கிறார்கள். அப்பட்டமாக அவதூறு கிளப்புகிறார்கள்.

எது ஃபாசிசம்? எது அதிகார வெறி? எது உண்மையான அறிவுச்செயல்பாடு? மனசாட்சி இருந்தால் யோசியுங்கள்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 16, 2022 11:33

இயற்கை, ஒரு தொகுப்பு

தன்னறம் வெளியீடாக வந்துள்ள சிறு நூல் இயற்கையை அறிதல். நேச்சர் என்னும் எமர்சனின் உரையின் மொழியாக்கம். அதன் சில வரிகள், ஒரு வாசகரின் தொகுப்பாக

இயற்கையை அறிதல்- எமர்சன் பற்றி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 16, 2022 11:31

திங்கள் மாலை

அன்புள்ள ஜெ,

அநேகமாக ஒரு மனிதன் இசையமைத்துக் கிடைக்கப்பெறும் பாடல்களில் மிகப்பழையதாக இருக்கலாம் இந்தப்பாடல். கரும்பு (1973) என்ற ராமுகாரியட்டின் வெளிவராத தமிழ்ப்படத்திற்காக சலில் சௌத்ரி இசையில் ஜேசுதாஸ், சுசிலா – டூயட் அல்ல, தனித்தனியாக – பாடியது. பாடலாசிரியர் இளங்கோவடிகள். ஷாஜியின் இசைக்கட்டுரைகளில் சலில்தா பற்றிய கட்டுரையை ஒன்றில் இந்தப் பாடலைக் குறிப்பிட்டிருந்தார். ‘திங்கள் மாலை வெண்குடையான்’ என்ற சிலப்பதிகாரத்தில் வரும் கானல்வரிப் பாடல். ‘கூகுளே’ஸ்வரனின் தயவில் இன்றும் கேட்கக் கிடைக்கிறது. முதல் அடியைக் கேட்டவுடனேயே பாடல் நினைவுக்கு வந்து விட்டது. புணர்தலுக்கும், புல்லுதலுக்கும் எந்த அர்த்தமும் தெரியாத காலத்தில், இலங்கை வானொலியில் கேட்டது நினைவுக்கு வர பாடலோடு சேர்ந்தே பாடினேன்.  சமீபகாலத்தில் இத்தனைமுறை எந்தப்பாட்டையும் கேட்ட நினைவில்லை. பெரும் சோகத்திற்குக் கட்டியம் கூறுவதுபோல அமைந்துள்ள ஜேசுதாஸின் குரல் பாடலைப் பலமுறை கேட்கவைத்து விட்டது.

ஜேசுதாஸ் பாடியது

‘இணைமெட்டை (obligato) திறமையாகப் பயன்படுத்துவது சலில்தாவின் முக்கியமான உத்தி. மைய மெட்டுக்கு எதிரான அந்த மெட்டு பல திசைகளில் பிரிந்து வளர்ந்து பாடலை ஒரு பின்னலாக மாற்றிவிடும்’  என்கிறார் ஷாஜி. ஒரு சரணம் விட்டு ஒரு சரணம் இருவேறு மெட்டுக்கள் பின்னிப்பின்னிச் செல்வதை இந்தப்பாட்டிலேயே காணலாம். நவவீனத்துவ இசையில் ஒலிக்கும் இந்தத் தமிழ்ச் செவ்வியல் பாடலின் ஆக்கத்தில் இளங்கோவடிகள் மட்டுமே தமிழர். பாடியவர்கள் ஜேசுதாஸ் – மலையாளம், சுசிலா – தெலுங்கு, இசையமைப்பாளர்  சலில் சௌத்ரி – வங்காளி. டி.எம்.எஸ் சின் ‘சின்னச் சின்ன மூக்குத்தியாம்’, ஜேசுதாசே பாடிய ‘அருள் வடிவே’ (எம்மதத்துக்குமான பக்திப் பாடல் இது), கமல் பாடிய ‘பன்னீர் புஷ்பங்களே…’ என்று பல பாடல்கள் நினைவுக்கு வந்தன.

சுசிலா பாடியது

திங்கள் மாலை வெண்குடையான்
சென்னி செங்கோல் அது ஓச்சி
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி !
புலவாய் வாழி காவேரி !

கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாதொழிதல் கயற்கண்ணாய் !
மங்கை மாதர் பெருங்கற்பென்று
அறிந்தேன் வாழி காவேரி !

மன்னும் மாலை வெண்குடையான்
வளையாச் செங்கோல் அது ஓச்சி
கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி !
புலவாய் வாழி காவேரி !

கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
புலவாதொழிதல் கயற்கண்ணாய் !
மன்னும் மாதர் பெருங்கற்பென்று
அறிந்தேன் வாழி காவேரி !

உழவர் ஓதை மதகோதை
உடை நீர் ஓதை தண்பதம் கொள்
விழவர் ஓதை திறந்தார்ப்ப
நடந்தாய் வாழி காவேரி !
நடந்தாய் வாழி காவேரி !

விழவர் ஓதை திறந்தார்ப்ப
நடந்ததெல்லாம் வாய்காவா
மழவர் ஓதை வளவன் தன்
வளனே வாழி காவேரி !

(புலவாய் – சண்டையிட மாட்டாய், புல்லுதல் – கட்டியணைத்தல், ஒத்துப்போதல், புல்லார் – எதற்கும் ஒத்துவராதவர்)

புகழ் மாலை சூடிய திங்களைப் போல,புகழ்பெற்ற வெண்கொற்றக் குடையை உடையவன் சோழ மன்னன்.அவன்,தன் செங்கோலினைச் செலுத்திக் கங்கை நதியிடம் சென்று கூடினாலும்,நீ அவனை வெறுக்கமாட்டாய்,ஆகையால், காவேரியே நீ வாழ்க!

கயலாகிய கண்ணை உடையவளே!கங்கை என்னும் பெண்ணுடன் உன் கணவன்(சோழன்) சேர்ந்தாலும் நீ அவனை வெறுக்காமல் இருக்கக் காரணம்,உன் போன்ற மாந்தரின் பெருமைமிக்க உயர் கற்புநெறி என்பதை நான் அறிந்து கொண்டேன்.காவேரியே நீ வாழ்க!

பெருமை பொருந்திய புகழ்மாலையினை அணிந்த,வெண்கொற்றக் குடையை உடையவன் உன் கணவன்(சோழ மன்னன்).அவன் தனது வளையாத செங்கோலினைச் செலுத்திக் குமரியையும் கூடினான்.அதனாலும் நீ அவனை வெறுக்க மாட்டாய்.ஆதலினால்,காவேரியே நீ வாழ்க!

கயலாகிய கண்ணை உடையவளே!கன்னியாகிய குமரியுடன் சோழன் அவ்வாறு சேர்ந்தாலும்,நீ அவனை வேறுக்காதிருத்தல்,மாந்தரின் பெருமை வாய்ந்த கற்புநெறியால் தான் என்பதை நான் அறிந்தேன்.காவேரியே நீ வாழ்க!

ஆற்றினில் புதுப்புனல் கண்ட உழவர் மகிழ்ந்து ஆர்க்கும் ஓசையும்,மதகுதனில் நீர் நிறைந்து வடிகின்ற ஓசையும்,வரப்புக்களை உடைத்துப் பாய்கின்ற நீரின் ஓசையும்,புதுப்புனல் விழாக் கொண்டாடும் மக்களின் மகிழ்ச்சி ஆரவாரமும் மிகுதியாக இருபக்கமும் ஆர்ப்பரிக்க,நடந்து செல்லும் காவிரியே நீ வாழ்க!

நீ அவ்வாறு சிறந்து நடக்க,காவல் புரியும் வீரமறவர்களின் போர்முழக்கத்தை உடைய சோழனது ஆட்சி பயனே காரணம்.இதை நீ அறிவாயாக…காவேரியே,நீ வாழ்க!

‘ஆம்பளைகன்னா அப்பிடி இப்பிடித்தான் இருப்பாங்க, நாமதான் சரிக்கட்டிக் கொண்டுபோகணும்’ என்று அந்தக் காலத்துக் கண்ணகிகள் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். அப்பிடிப்பட்ட ஆம்பளப் பயகளில் ஒருவனான கோவலன் மாதவியைப் பார்த்துப் பாடியது. ‘ சோழன் கங்கையோட சேந்தாலும், குமரியாத்தோட சேந்தாலும் காவிரி ‘கம்’ முனு கெடக்காளா, இல்லையா? அவல்ல புள்ள. பொண்ணுன்னா அந்த மாதிரி இருக்கணும்’ என்று மேற்கண்ட பாடல் மூலம் குறிப்புணர்த்த, இதிலிருந்து பிணக்கு ஆரம்பிக்கிறது. கோவலன் கண்ணகியிடம் திரும்புகிறான். இருவரும் மதுரைக்குச் செல்கிறார்கள்.பின்பு நடந்தது அனைவரும் அறிந்ததே

ஒரு பின்னொட்டு – திருச்சி தாயுமானவசுவாமி கோயிலில் இருந்து உச்சிப்பிள்ளையார் கோயில் செல்லும் வழியில் உள்ள குடைவரைக்கோயிலான ‘இலளிதாங்குர பல்லவேஸ்வர கிருகம்’ என்ற முதலாம் மகேந்திரவர்மர்(கி.பி. 615-630) எழுப்பிய குடைவரையில் காவிரி தனக்குரியவள் (இளங்கோவடிகளின் பாதிப்பு?) என்று கவிநயத்துடன் குறிப்பிட்டுள்ளார் மகேந்திரவர்ம பல்லவர். சிவன் கங்காதரராக கங்கையைத் தலையில் தாங்கும் காட்சி இங்கு சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. அருகிலேயே பதிப்பித்துள்ள கல்வெட்டில் காணப்படும் மகேந்திரவர்ம பல்லவரின் வடமொழிப் பாடலின் பொருள் பின்வருமாறு.

“நதி விரும்பியான சிவபெருமான், கண்ணுக்குக் குளுமையூட்டும்நீர்ப்பரப்பும், தோட்டங்களை மாலையாக அணிந்த நிலையும், நேசிப்பிற்குரிய பண்புகளையும் பெற்ற காவிரியால் கவரப்பட்டு காதல் கொண்டுவிடுவாரோ என்று அஞ்சித் தன தந்தையின் குடும்பத்தை நீங்கி இம்மலையில் நிரந்தரமாகத் தங்க வந்துள்ள மலைமகள், காவிரியைப் பல்லவ அரசரின் அன்பிற்குரியவளாக அறிவிக்கிறார்.” இப்படியாக மன்னராட்சியில் ஆரம்பித்த காவிரிச் சண்டை நிலவுடைமைச் சமூகம் தொடர்ந்து மக்களாட்சியிலும் தொடர்ந்து ஆயிரத்தைந்நூறு வருடங்களாக நடந்தேறி வருகின்றது.  இப்படிக் காலம் காலமாக வேறெந்த ஆற்றுக்காகவாவது சண்டையிட்டு வந்திருக்கிறார்களா?

அன்புடன்,

கிருஷ்ணன் சங்கரன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 16, 2022 11:30

May 15, 2022

கலைச்சொற்களும் அனுபவமும்

ஆழம் நிறைவது

ஆழம் கடிதம்

அன்புள்ள ஜெ

ஜாக்ரத், ஸ்வப்னம் & துரியம் எனும் நிலைகளைப் பற்றி பலமுறை வாசித்தும் யோசித்தும் கூட அதன் உள்ளுறை பிடிபடாமல்  இருந்தது. நமக்குள் நிகழும் உணர்ச்சி நிலைகளையும் சில பொழுதுகளில் மட்டுமே எட்டிப் பார்த்து வந்து வந்து செல்லும் ஒருவித நிறைவையும் எப்படி புரிந்து கொள்வது என்ற கேள்வி இருந்தது. உங்கள் அனுபவ வார்த்தைகள் தன்னைப் புரிந்து கொள்ள, உற்று நோக்க, ஒரு பார்வையைத் தருகின்றன.

நன்றி.

அன்புடன்
அமுதா

***

அன்புள்ள அமுதா,

இத்தகைய கலைச்சொற்கள் ஓர் உரையாடலில் வந்ததுமே வறட்டுத் தத்துவ வாதம் என்றும், தேய்வழக்கு என்றும் நிராகரிப்பு மனநிலையை அடைபவர்கள் உண்டு. அதற்குக் காரணம் இக்கலைச்சொற்கள் கவனமே இல்லாமல் சூழலில் பயன்படுத்தப்படுவதுதான். இன்னொரு பக்கம் சிந்தனை என்பது ‘புதியதாக’ இருந்தால்தான் மதிப்பு என்னும் முதிராமனநிலை. பழையசிந்தனைக்கு புதிய சொற்கள் கையாண்டால் அது புதிய சிந்தனை என்னும் மனமயக்கு. ஜே.கிருஷ்ணமூர்த்தி இவர்களுக்காகத்தான் கலைச்சொற்களே இல்லாமல் பேசினார்.

ஆனால் ஜே.கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் தத்துவவிவாதம் புரியவில்லை. சத்சங்கம், உபன்யாசம் போன்றவை தத்துவ வகுப்புகள் அல்ல. தத்துவ வகுப்புகளில் கல்வியும் விவாதமும் நிகழும் முறையே வேறு. அங்கே தத்துவம் எளிமைப்படுத்தப்படுவதில்லை. செறிவாக, தீவிரமாக முன்வைக்கப்படுகிறது. ஏனென்றால் சத்சங்கம், உபன்யாசம் போன்றவை அனைவருக்குமானவை. தத்துவ வகுப்பு ஆர்வம், கவனம், பயிற்சி ஆகியவை கொண்ட மணவர்களுக்கானது.

தத்துவத்தில் கலைச்சொற்கள் மிக முக்கியமானவை. மிக அகவயமானவற்றையும் மிகப் பொதுவானவற்றையும் மிகநுட்பமானவற்றையும் அடையாளம் கண்டு, வகுத்து அவற்றுக்குரிய சொற்களையும் உருவாக்கியிருக்கும். அதன்பின் அச்சொற்களை மட்டுமே பயன்படுத்துவார்கள். அப்படி ஏராளமான கலைச்சொற்களை கையாண்டு பேசிக்கொண்டே செல்வார்கள். புதியதாகக் கேட்கும்போது அவர்கள் மிக வறண்ட, சம்பந்தமே அற்ற எவற்றையோ பேசிக்கொண்டிருப்பதாகத் தோன்றும்.

தத்துவக்கல்வியில் ஒரு தனித்தன்மை உண்டு. அது நேரடியாக வாழ்க்கையை சம்பந்தப்படுத்திக் கொள்ளாது. சம்பந்தப்படுத்திக்கொண்டால் தத்துவத்தை அதனால் விவாதிக்க முடியாமலாகும். ஏனென்றால் அது பேசும் விஷயங்கள் மிகநுட்பமானவை அல்லது மிகமிக மானுடப்பொதுவானவை. அவற்றை வாழ்க்கையுடன் சம்பந்தப்படுத்தி விரித்தால் விரிந்துகொண்டே செல்லும். அதன்பின் தத்துவம் பேச நேரமிருக்காது. தத்துவம் சாராம்சத்தில் நின்று மட்டுமே பேச விரும்பும். ஆகவே எப்போதுமே வாழ்க்கையில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டு, கருத்துக்கள் தர்க்கங்கள் ஆகியவற்றைச் சார்ந்து மட்டுமே பேசும்.

ஆனால் தத்துவ மாணவன் அந்த கருத்துக்களையும் தர்க்கங்களையும் வாழ்க்கை என விரித்துக்கொள்ள வேண்டும். எல்லா கலைச்சொற்களையும் அனுபவங்களுடன் இணைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் அவற்றை அவன் தனியாக தனக்குள்தான் செய்யவேண்டும். தத்துவ வகுப்பில் செய்யக்கூடாது. அங்கே விவாதத்தில் அவை நுழையவே கூடாது. தானே தனக்கென விரித்துக்கொள்ளும் இந்தக் கல்விக்குத்தான் ஸ்வாய்த்யாயம் என்று பெயர்.

ஜாக்ரத், ஸ்வப்னம், சுஷுப்தி, துரியம் என்னும் இந்நிலைகள் (சிலபோது ஜாக்ரத், ஸ்வப்ன-சுஷுப்தி, துரியம் என மூன்று நிலைகள்) எல்லா தியான மரபுகளிலும் சகட்டுமேனிக்கு பயன்படுத்தப்படுகின்றன. துரியாதீதம், துரியாதீதாதீதம் என்றெல்லாம் கூட போட்டுத்தாக்குகிறார்கள்.(துரியாதீதம் என்றால் நேரடியாகவே பிரம்ம நிலை. அதற்கு அப்பால் என்ன என்று தெரியவில்லை)

இக்கலைச் சொற்களை நம் அனுபவம் சார்ந்து அகவயப்படுத்திக் கொள்ளவேண்டும். பிரக்ஞை நிலை, கனவுநிலை, ஆழ்நிலை, முழுநிலை என மொழியாக்கம் செய்யலாம்.  Conscious, subconscious,  unconscious, collective conscious என மேலைநாட்டு உளவியல் கருத்துநிலைகளுடன் இணைத்துப் புரிந்துகொள்ளலாம்.ஆனால் இவை எல்லாமே நாம் நம்மை புரிந்துகொள்பவை. கலைச்சொற்கள் ஒரு நீண்ட தத்துவ விவாதத்தின் பயனாக விளைந்தவை. அவற்றை மாற்றீடு செய்துகொள்ளக்கூடாது.

விழிப்புநிலையில் நாம் நம்மை உணர்கிறோம். நம்மை வகுத்தும் தொகுத்தும் வைத்துள்ளோம். நம் விருப்பங்கள், பயங்கள், எதிர்ப்பார்ப்புகள், திட்டங்கள், துக்கங்கள் ஆகியவை நிறைந்த தளம் அது. கனவுநிலை என்பது விழிப்புநிலை மயங்கிய எல்லா தருணங்களும்தான். தூக்கத்தில் வரும் கனவுகள், கலைகள் அளிக்கும் உளம் மயங்கியநிலை, இயற்கை அளிக்கும் பரவசத்தில் தன்னிலை மறந்து நாம் இருக்கும் நிலை. அதுதான் ஸ்வப்னம். அனைத்து கலைகளும் நிகழும் இடம்.

ஆனால் அதிலிருந்து உடனே திரும்ப ஜாக்ரத்துக்கு விழுந்துவிடுவோம். மீன் காற்றிலெழுந்து துள்ளி மீண்டும் நீர்ப்பரப்பில் விழுவதுபோல. அந்த கனவுநிலையில் ஆழ்ந்து செல்லும் நிலை சுஷுப்தி. அந்த ஆழ்நிலை கலைகளின் உச்சத்தில் நிகழும். யோகத்தில் நிகழும். அரிதாக சில உச்சகட்ட வாழ்வனுபவங்களிலும் அமையும்.

இந்த மூன்று அடுக்குகளை பார்த்தால் ஜாக்ரத் என்பது முழுமையான தன்னுணர்வு நிலை. ஸ்வப்னம் பாதி தன்னுணர்வு அழிந்த நிலை. சுஷுப்தி முற்றிலும் தானற்ற நிலை. துரியம் என்பது அதற்கு அடுத்த நிலை. நாம் நம் தன்னிலையை இழந்து இங்குள்ள எல்லா உயிர்களின் ஒட்டுமொத்த தன்னிலையின் ஒரு பகுதியாக இயல்பாகத் திகழும் நிலை.

இம்மூன்று நிலைகளும் எல்லா மனிதர்களுக்கும் சற்றேனும் அனுபவம் ஆகியிருக்குமென வேதாந்தம் சொல்லும். ஆகவே எந்த மனிதரும் கொள்கையளவில் இதை உடனே புரிந்துகொள்ள முடியும்

ஆகவே தத்துவக் கல்வியில் செய்யவேண்டியது இது. ஒருபக்கம் தத்துவத்தை வெறும் கொள்கைகளாக, கருத்துக்களாக, தர்க்கங்களாக அறிந்துகொண்டே செல்வது. இன்னொரு பக்கம் அகத்தே அதை விரித்து சொந்த அனுபவமாக, அகநிலையாக ஆக்கிக் கொண்டே இருப்பது.

ஒரு நூலில் அகேகானந்த பாரதி மேலை தத்துவத்திற்கும் கீழைத்தத்துவத்திற்குமான வேறுபாட்டை இப்படிச் சொல்கிறார். கீழைத் தத்துவம் என்பது வெறும் தத்துவமல்ல. அது தத்துவ – உளவியல் -ஆன்மிகப் பயிற்சி.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 15, 2022 11:35

ச. பாலசுந்தரம், இக்காலகட்டத்தின் பவணந்தி

அறிவியக்கத்தின் முதன்மைச் சிக்கல்களில் ஒன்று நாம் எந்த வட்டத்தில் புழங்குகிறோமோ அந்த வட்டத்தை மட்டுமே அறிந்திருப்பது. அதை தவிர்க்கவும் கூடாது, ஏனென்றால் அதன் வழியாகவே நாம் நம் அறிவுப்பங்களிப்புக்கான களத்தை ஆழமாக அறிகிறோம். அதன் உள்நெறிகளை கற்றுக்கொள்கிறோம். எல்லாவற்றையும் ஆழ அறிவதென்பது இயல்வதல்ல.ஆனால், நம் வட்டத்திற்க்கு அப்பாலுள்ள அடிப்படைகளை நாம் அறிந்திருக்கவேண்டும். நம் எல்லைக்குட்பட்டு.

நவீன இலக்கியச் சூழலில் புழங்கும் என்னைப் போன்றவர்களுக்கு மரபிலக்கியம், இலக்கணம் சார்ந்து செயல்படும் அறிஞர்கள் மிகமிக தொலைவில் இருப்பவர்கள். நான் முயன்று ஓரளவு அவர்களை அறிந்து வைத்திருப்பவன். பெரும்பாலான நவீன இலக்கிய எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் அவர்கள் எவரென்றே தெரிந்திருக்காது. அத்தகைய சூழலில்தான் நல்ல கலைக்களஞ்சியங்கள் பங்களிப்பாற்றுகின்றன. அவை ஒன்று தொட்டு ஒன்றென இணைப்புகள் வழியாக வட்டத்துக்கு வெளியே நம்மை அழைத்துச் செல்கின்றன

ச.பாலசுந்தரம் தமிழ் இலக்கியவாதிகள் அறிந்திருக்கவேண்டிய ஒருவர். இலக்கண அறிஞர். அவருடைய தென்னூல் மரபுசார் கூறுமுறை கொண்ட இலக்கண நூல்- ஆனால் சிறுகதை, புதுக்கவிதை அனைத்துக்கும் இலக்கணம் உரைப்பது

ச.பாலசுந்தரம் ச.பாலசுந்தரம் – தமிழ் விக்கி ச.பாலசுந்தரம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 15, 2022 11:34

மீட்பின் நம்பிக்கை

அன்பு ஜெ சார்.

திருப்பூர் உரை கேட்க வருகிறேன். என் சொந்த ஊருக்கு நீங்கள் வருவது மிக மகிழ்ச்சியான செய்தி. நல்வரவாகட்டும்.

பின்தொடரும் நிழலின் குரலில்  ‘மறக்கப்பட்ட குணவதியை’ ரணில் குணசிங்கெ சந்தித்துப் பேசும் பகுதி படித்துக் கொண்டிருக்கிறேன்.

சைபீரியாவில் முப்பது வருடங்கள் அன்னா அனுபவித்த, பார்த்த கொடுமைகளைப் படிக்கும் போது உள்ளம் பெரும்துயர் கொள்கிறது.

சமீப காலமாகவே இங்கு வலதுசாரிகள் பெறும் தொடர் தேர்தல் வெற்றிகளும், அதன் மூலம் குவியும் அதிகாரங்களும், அதிகாரம் தரும் மூர்க்கத்தனமான வெறிப்பேச்சுகளும் பெரும் அச்சத்தையும் உளச்சோர்வையும் அளிக்கின்றன.

நாட்டிற்கு நல்லது செய்யப் போகிறேன் என்று கிளம்பிய கொள்கைவெறித் தலைவர்களெல்லோருமே நேர்மாறாக மனிதகுல விரோதிகளாகவே நடந்திருக்கிறார்கள். ஜார் மன்னனோ, ஹிட்லர் முசோலினியோ, ஸ்டாலினோ, மாசேதுங்கோ, கோத்தபயாவோ, புதின் ஜெலன்ஸ்கியோ, கதை அதேதானே? இந்தப் பூசாரிகளின் பலிபீடத்தில் கொத்துக் கொத்தாய் மடியும் பலியாடுகளாய் அப்பாவி மக்கள்; முதியோர், பச்சிளம் பாலகர்கள் உட்பட.

உரசும் அதிகாரங்களுக்கிடையில் உட்புகுந்து சாந்தியும் சமாதானமும் ஏற்படப் பாடுபடும் தலைவர்கள் ஏன் இல்லை? ஆயுதக்குவிப்பை டீக்கடைபெஞ்ச் மனிதர்கள் கூட வியந்தோதுகிறார்கள். ஆயுதங்கள் அமைதி கொணருமாம். குழாயடிப் பெண்கள் கூடக் கேட்கிறார்கள், அவன் அடித்தால் நாம் வாங்கிக் கொண்டு சும்மா இருக்கணுமா? திருப்பி அடிக்க வேணாமா?

அடியும் திருப்பி அடித்தலும் தப்பி வெளிவர முடியாத ஒரு விஷச்சுழல் என்று சொல்வதற்கு இங்கு யார் இருக்கிறார்கள்.

மதக்கலவரம் தீயாய்ப்பற்றி எரிந்து கொண்டிருந்த நவகாளியில், கண்ணாடித் துண்டுகளும் மனிதக்கழிவுகளும் வீசப்பட்டிருத்தத சகதிகளில் வெறுங்காலோடு நடந்து சென்று சமாதானம் பேசிய அந்தக் கிழவரைக் கண்ணீர் மல்க நினைத்துப் பார்க்கிறேன். அவர் ஏன் துரோகியாகவும் அவரைச்சுட்டவன் தியாகியாகவும் இன்று பார்க்கப் படுகிறார்கள்? இந்தக் கோணல் பார்வையை நேர் செய்ய ஏதாவது வழி உண்டா? நடக்குமா?

எல்லா அதீதங்களையும் இயற்கை அல்லது இறைசக்தி தட்டிக் கொட்டி சமன் செய்து விடும் என்ற ஒரே நம்பிக்கைதான் ஆறுதல் தருகிறது.புகாரின் குற்றமற்றவர் என்று தீர்ப்பு வந்த போது அன்னா சொன்னாளே, ” நீதி ஒருபோதும் தோற்காது. ஏனெனில் நீதி என்பது நம் மீட்பர் கூறியசொல் ” என்று.

உங்கள் அனுபவம், ஆராய்ச்சி, அறிவுமுதிர்ச்சி மற்றும் நேர்மை மேல் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பவன் என்ற முறையில் இந்த நிலை பற்றிய தங்கள் பார்வையை அறிய ஆவலாக இருக்கிறேன். அது பொதுவெளியோ அல்லது எனக்குத் தனிப்பட்ட பதில் மெயிலாகவோ வந்தாலும் சரி.

அன்புடன்

ரகுநாதன்.

***

அன்புள்ள ரகுநாதன்

பின்தொடரும் நிழலின் குரலின் மையச்செய்தியே அதுதான். மானுடரிடம் என்னதான் அதிகார வெறி, பிரிவினை நோக்கு இருந்தாலும் ஒட்டுமொத்தமாக மானுடத்தின் விழைவு என்பது தங்கிவாழ, மகிழ்வுடன் வாழ அது கொண்டிருக்கும் விருப்பமே. அதற்கு உதவும் கொள்கைகளும் அமைப்புகளுமே நீடிக்கும். மானுடத்தின் கூட்டான சக்தியில், அதன் உள்ளுறையும் ஆற்றலில் நம்பிக்கை கொள்ளவேண்டியதுதான். பஞ்சங்கள், போர்கள் கடந்து இங்கு வந்து சேர்ந்துள்ள மானுடம் இனியும் முன்னகரும்

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 15, 2022 11:31

தமிழ் விக்கி- நிதி

அன்புள்ள ஜெ

என்னுடன் விவாதிப்பவர்கள் அனைவரும் திரும்பத்திரும்பச் சொல்வது தமிழ் விக்கிக்கு நிதி எங்கிருந்து வருகிறது என்றுதான். நீங்கள் அமெரிக்காவில் நிதி திரட்டுகிறீர்கள் என்று சிலர் சொன்னார்கள். சிலர் ஏதோ கட்சிப்பணம் வருகிறது என்கிறார்கள். உங்களிடமிருந்து ஒரு வார்த்தை கேட்க விரும்புகிறேன்

எஸ்.விவேக்

***

அன்புள்ள விவேக்,

தமிழ்நாட்டில் இரண்டு ‘மாடல்கள்’ உண்டு. பல லட்சம் ரூபாய் நிதி வாங்கி  ஆய்வுகளைச் செய்பவர்கள் பலருண்டு. தமிழ் என்றும் பெருமைகொள்ளும் அடிப்படை ஆய்வுகளைச் செய்த அ.கா.பெருமாள் பெரும்பாலும் எல்லா ஆய்வுகளையும் ஆசிரியர்ப்பணி புரிந்து அடைந்த சம்பளத்தில் சொந்தச்செலவில்தான் செய்திருக்கிறார். அச்சிடப்பட்ட நூல்களுக்காகக்கூட அவருக்கு பெரிய பணம் ஏதும் கிடைத்திருக்காது.

தமிழ்ச் சிற்றிதழ்ச் சூழலில் பெரிய பணிகள் எல்லாமே மிகக்குறைவான தொகையில், பெரும்பாலும் சொந்தச் செலவில்தான் நடைபெற்றுள்ளன. முக்கியமான செயல்களுக்கு தொகை ஒரு பொருட்டே அல்ல. பலர் ஒத்திசைந்து செயல்படுவதொன்றே முதன்மையானது.

தமிழ் விக்கி இதுவரை மொத்தம் ஒரு லட்சம் ரூபாய் செலவுக்குள்தான் வெளிவந்துள்ளது. இணைய இடம் (டொமைன்) வாங்கிய செலவு மட்டும். அதுவும் ஒரே ஒரு நண்பரின் கொடை. விஷ்ணுபுரம் அமைப்பின் உறுப்பினர், நீண்டநாள் நண்பர். நான் சிறிது செலவிட்டிருக்கிறேன். எஞ்சிய எல்லா பணியும் நண்பர்களின் உழைப்புப் பகிர்வுதான்.

ஒருவேளை வருங்காலத்தில் இன்னும் சில லட்சங்கள் தேவைப்படலாம். நான் ஆண்டுக்கு பல லட்சம் ரூபாய் அறக்கொடைகள் செய்யும் சினிமா எழுத்தாளன். எங்கும் எவரிடமும் எதையும் கேட்கவேண்டிய நிலையில் நான் இல்லை.

ஆனால் ஊர்கூடித் தேரிழுக்கவேண்டும் என்னும் எண்ணத்தில் விஷ்ணுபுரம் நண்பர்களின் பங்களிப்பை எதிர்பார்க்கிறேன். ஆனால் இப்போதல்ல, செலவு வரும்போது.

எங்கள் அமைப்புக்கு இதுவரை எந்த நிறுவனத்தின் நிதியையும் பெற்றுக்கொண்டதில்லை. எங்கள் பெருங்கூட்டமைப்பின் நண்பர்கள் அளிக்கும் நிதிக்கொடையாலேயே இது இன்றுவரை நடைபெற்று வருகிறது. எங்கள் செயல்பாடுகளை பத்துமடங்கு பணமில்லாமல் இன்னொரு அமைப்பு செய்ய முடியாது.

ஜெ

பேரன்பிற்குரிய ஜெயமோகன்

 இலக்கியம் பண்பாட்டுகென்றே ஒரு தரமான தகவல் களஞ்சியம் “தமிழ் விக்கி” என்பதே ஆகப்பெரிய கனவு. மிகப்பெரிய மனங்களில் தான் அது எழுக முடியும்.தற்பொழுது மிக வலுவான அஸ்திவாரத்தை உருவாக்கிவிட்டீர்கள். அது வளர்ந்து சென்று தொடும் உச்ச்சத்தையும் ஏற்கனவே உள்ளுணர்ந்தே இருப்பீர்கள்.தங்களுக்கும் தமிழ் விக்கியில் செயலூக்கத்துடன் பணியாற்றி கொண்டிருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.பதிவில் தமிழ் விக்கிக்கு வரக்கூடிய நன்கொடையை வரவேற்றிருக்கிறீர்கள். ஆனால் முழு தெளிவாக இல்லை. நம் விஷ்ணுபுர வங்கிக்கணக்குக்கே அனுப்பலாமா? அல்லது தமிழ் விக்கிக்கென்றே தனியாக ஏதும் வங்கி கணக்கு உள்ளதா?தங்கள் பேச்சு முழுதும் தமிழ் விக்கியை சுற்றியே வருவதாக அமெரிக்க நண்பர்களின் செய்திகளின் மூலம் அறிகிறோம். தங்கள் நினைத்தது மாதிரியே அனைத்தும் இனிதே நிறைவடைய இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.இப்படிக்குசதீஷ்குமார் கொரியா***அன்புள்ள சதீஷ்,இப்போது சிறிய அளவிலேயே செய்துகொண்டிருக்கிறோம். தனி நபர்களின் கூட்டு முயற்சிதான். டொமெய்ன் பதிவுசெய்வதற்கு மட்டுமே செலவாகியது. மேலும் திட்டங்கள் விரிவடையும்போது சொல்கிறோம்ஜெ
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 15, 2022 11:31

“அகத்திறப்பின் வாசல்” – துரை. அறிவழகன்

“உண்மையே எழுத்தாளனின் தேடல்”

எனும் நித்ய சைதன்ய யதியின் வார்த்தையை தன் அகத்தில் நிறுத்திக்கொண்டு,  நம் சமகாலத்தின் பேராளுமை ஜெயமோகன் அவர்களால் எழுதப்பட்ட நூல் “எழுதுக”.

வாழ்வாசான் நிலையில் இருந்து தங்களை வழிநடத்தும் ஆசிரிய மனதுக்கு நன்றிக்கடன் முயற்சியாக “தன்னறம்” நூல்வெளியால் அழகியல் செறிவுடன் வடிவமைக்கப்பட்டுள்ள நூல் இது.

படைப்பூக்க உணர்வுக்கு எதிரான தடைகளை கடந்து முன்னகரும் வாழ்வுப் பாதைக்கான திறப்பு இந்த நூலில் உள்ள ஜெயமோகன் அவர்களின் உரையாடல்கள்.

“எந்தப் புத்தகங்கள் உங்களை வழமைக்கு அதிகமாகச் சிந்திக்கத் தூண்டும்கிறதோ அவைகளே உங்கள் மீட்சிக்கு அதியுன்னதமாக உதவும். தன்னுள் ஆழ்ந்த ஒரு மாபெரும் சிந்தனையாளன்   இடமிருந்து நற்படைப்பென வருகிற நூலானது,  எளிமையும் உண்மையும் நிரம்பிய எண்ணங்களை உள்ளடக்கியிருக்கும். தத்தளிப்புகளின் முடிவிலி அலைகளிலிருந்து நம்மை ஒளிநோக்கி கரைசேர்க்கும் ஒரு மரக்கலம் அது” என்பது ‘தியோடர் பார்க்கர்’ அவர்களின் மொழி. ஜெயமோகன் அவர்களின் “எழுதுக” நூலினை இளம் படைப்பாளிகளுக்கு நற்படைப்பென வந்துள்ள மரக்கலம் என்றே சொல்ல வேண்டும்.

ஒவ்வொரு உரையாடல் பதிவுகளுக்கும் முன்னர் ஒரு அழகியல் ஒளிப்படம் இந்த நூலில் இடம் பெற்றுள்ளது. உரையாடலின் அழகியல் மற்றும் கருத்தியல் சாரத்தை உள்ளடக்கிய வகையில் அமைந்துள்ளன இந்த ஒளிப்படங்கள். மொழிவாசிப்புக்கு முன்பாகவே பரவசத்தை கொடுத்துவிடுகின்றன இவைகள்.

அறுவடைக்கும் மறுவிதைப்புக்கும் இடையில் மண் மலரும் காலம் என்று ஒன்றுண்டு. இயற்கை வேளாண்மையில் அறிவுத்திறனுடன் விளங்கிய நம் முன்னோர்கள் அறிவார்கள் அக்காலம் குறித்து.

ஓரியூர் வழித்தடத்தில் அமைந்துள்ளது எனது தந்தையின் ஆதி கிராமம் ‘பண்ணவயல்’. பனங்கூந்தல் வண்டி உருட்டி விளையாடும் பொடிக் குருவி போன்ற சிறுமிகளையும்,  பொக்கைச் சிரிப்பும் பஞ்சு தலையும் கிளறிய வயக்காடு மாதிரி சுருக்கம் விழுந்த கிழவிமார்களையும் இந்த நாளிலும் பார்த்து வருகிறேன் அந்த நிலத்தில்  நான். நெஞ்சுக்கூட்டில் பழைய நினைவுகளை உள்ளடக்கியபடி நாழி ஓடுகளால் வேயப்பட்ட வீட்டில் சாய்ந்து உட்கார்ந்து இருக்கிறார் காயாம்புத் தாத்தா. அவருக்கு அருகில் இப்பொழுதும் நிலை குழையாமல் நின்றிருக்கின்றன நாங்கில்  மரக் கலப்பைகள்.  புளியங்குளம், செவலை,  குட்டை,  காரி என்று மாடுகள் நின்றிருந்த தொழுவம் வெக்கை குடித்து நிற்கிறது. மாடுகளின் கொம்புகளுக்கு இருந்த அதிசய சக்தி அறிந்திருந்த மூதாதையர் குரலோடு காற்றில் அசைகின்றன பனை மரச்சிரைகள்.  சூரியனின் கதிர்வீச்சை உள்வாங்கி அதனை பல்வேறு சக்திகளாக மாற்றி தன் பாதக் குளம்புகள் வழியாக மண்ணுக்குள் செலுத்தும் ஆற்றல் கொண்டவை மாடுகளின் கொம்புகள். அத்தகைய அபூர்வ சக்தி அளித்து வாசிப்பு மனதை மலரச் செய்யும் நூலாக உருக்கொண்டுள்ளது ஜெயமோகன் அவர்களின் “எழுதுக”.

“எழுது,  அதுவே அதன் ரகசியம்” எனும் சுந்தர ராமசாமி அவர்களின் சொல்லை வேர் நிலமாகக் கொண்டு கிளைபரப்பி நிற்கிறது இந்த நூலில் உள்ள கருத்துலகம்.

“இலக்கியத்தைப் பொறுத்தவரை சிறந்த கதைத்திறன் வெளிப்படாத,  அதேசமயம் நேர்மையாகவும், நேர்த்தியாகவும் எழுதப்பட்ட வாழ்க்கைச் சித்திரங்களுக்கும் அவற்றுக்கான மதிப்பு என்றும் உண்டு” என்று ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார் ஜெயமோகன். தொடக்கநிலை எழுத்தாளர்களுக்கு  ஊக்கம் கொடுப்பவையாக  அமைந்துள்ளது இந்த வார்த்தைகள். தயக்கம்,  தடைகளைக் கடந்து ஒரு இளம் படைப்பாளி  முன்நகர நம்பிக்கை அளிக்கும் ஊன்றுகோல்  ஜெயமோகனின் இக்கருத்து.

எதிர்காலம்,  சுய அடையாளம், அகவயத் தேடல் என பல்வகை பரிமாணக் கதிர்களை வாசிப்பு மனங்களுக்குள் பாய்ச்சுகிறது இந்த நூல்.

இலக்கியம்,  எழுத்து,  வாசிப்பு என்ற எல்லைகளைத் தாண்டி வாழ்வியலின் சகல திசைகளையும் பேசுகிறது இந்த நூல்.  செயல் மூலம் அகச்சோர்வை கடத்தல் எனும் திசைவழியை தன் வாழ்வியல் அனுபவத்தை முன் வைத்து தெளிவுபடுத்துகிறார் ஜெயமோகன்.

இளம் தலைமுறைகளுக்கான இந்த நூலில் உள்ள ஜெயமோகனின் உரையாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஒளித்தெறிப்புகள். அலைஅலையாக அடுக்கப்பட்ட ஒளித்தெறிப்புகளால் நெய்யப்பட்ட மந்திரக் கம்பளம் “எழுதுக” எனும் நூல்.

“காலில் முள் குத்தினால் இன்னொரு முள்ளைக் கொண்டு அதை எடுக்கிறோம். இரண்டையும் வீசிவிட்டு முன்னால் செல்கிறோம். அறியாமை முள்ளை அறிவால் எடுத்தபின் அதையும் வீசிவிட வேண்டும்” என்ற ராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்களின் மொழியை அடியோட்டமாகக் கொண்ட “கல்வியழிதல்” எனும் உரையாடலே இந்த நூலின் உச்சம்.

“ஒரு நல்ல நூலின் முன்,  அறிஞனின் முன் நம் கல்வியை கொஞ்சமேனும் அழித்துக் கொள்ளாவிட்டால் நாம் எதுவும் கற்கப்போவதில்லை”.

விசால மனதுடன்,  முன்முடிவுகள் இன்றி “எழுதுக” நூலுக்குள் நுழையும் வாசகன் நிறைவுடன் வெளியேறுவான் என உறுதிபடச் சொல்லலாம்.

துரை. அறிவழகன்,

காரைக்குடி.

05-05-2022.

*

நூல் : “எழுதுக”

ஆசிரியர் : ஜெயமோகன்

வெளியீடு : தன்னறம் நூல்வெளி, குக்கூ காட்டுப்பள்ளி

அலைபேசி : 9843870059

www. thannaram.in

*

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 15, 2022 11:31

May 14, 2022

பெரும்பணியில் இருத்தல்

ரம்யா

அன்பு ஆசிரியருக்கு,

தமிழ் விக்கி தொடக்க விழாவிற்குப் பிறகு இப்பொழுது தான் ஒரு சம நிலையை வந்தடைந்திருக்கிறேன். விழா அன்று காலையிலிருந்தே சிறு பதட்டமிருந்தது. அன்று முழுவதும் பெரியசாமித்தூரனையும், எஸ் வையாபுரிப்பிள்ளையும், இன்னுமின்னும் பல தமிழறிஞர்களையும் நினைத்துக் கொண்டிருந்தேன். தூரன் அந்த நாளையே என்னில் ஆக்கிரமித்திருந்தார்.  தான் வாழ்ந்த காலத்தில் எந்தவித பாராட்டையும் மரியாதையும் பெறாதவர். நாற்பத்தியைந்து வயதிற்குப் பிறகு  தொடர் வாத நோயால், பிற தமிழறிஞர்களின் கண்டனங்களால் மனம் சோர்ந்து உடல் தளர்ந்து ஓரிரு வருடங்களிலேயே இறந்து போன அரசன் சண்முகனார் நினைவிற்கு வந்தார். மனோன்மணீயம் பெ. சுந்தம்பிள்ளை திருவிதாங்கூர் சமஸ்தான ஆட்சியில் காங்கிரசில் இருந்த காரணத்திற்காகவே அவரின் புத்தகங்கள், விவேகானந்தர், உ.வே.சா எழுதிய கடிதங்களையெல்லாம் எடுத்துக் கொண்டு போனதாக அ.கா. பெருமாள் ஐயா எழுதியிருந்தும், நினைவை முட்டியது. தான் வாழ்ந்த காலத்தில் கண்டுகொள்ளப்படாத எல். சாமிக்கண்ணுப்பிள்ளை நினைவிற்கு வந்தார்.

A theatre of Encyclopedia எனும் தலைப்பில் ஆண்டி சுப்ரமணியம் சேகரித்த 60000 உட்தலைப்புகள் கொண்ட நூல் கையெழுத்துப் பிரதி என்று வாசித்த போது மீண்டும் சென்று ஆறுக்கு பக்கத்திலுள்ள சுழியன்களை எண்ணிப்பார்த்தேன். ஆம்! அறுபதாயிரம் உட்தலைப்புகள் தான். அதுவும் கைப்பிரதி. ஆனால் அந்த கையெழுத்துப் பிரதியை சென்னைப் பல்கலைக்கழகம் தவறவிட்டது என்ற வரிகள் மிகுந்த வருத்தத்தை அளித்தது. ஆனால் அதை ஆண்டி சுப்ரமணியத்திடம் சொன்னபோது ”இன்னும் இருபதாண்டு முயற்சி செய்தால் மீண்டும் தொகுத்து விடலாம் என்றார்” என்ற வார்த்தைகளில் ஊக்கம் நிரம்பி அடுத்த வரிக்குச் சென்ற போது கண்ணீர் துளிர்த்து நின்றது. “அப்படிச் சொன்னபோது அவருக்கு வயது 80”.

அதற்கு மேல் என்னால் அன்று பதிவுகள் ஏதும் போட முடியவில்லை. வீட்டில் யாரிடமாவது சொல்ல வேண்டுமென்று தோன்றியது. ஏற்கனவே இலக்கியம் சார்ந்த எதுவுமே உதவாச்செயல் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களிடம் இதைச் சொல்லி கண்ணீர் மல்கினால் மேலும் பைத்தியம் என்று சொல்லி தலையில் அடித்துக் கொள்ள வாய்ப்புண்டு. இரவின் அந்த நிசப்தத்தில் மொட்டை மாடிக்குச் சென்று வேகமாக நடந்து கொண்டிருந்தேன். தளர்ந்து போய் அமர்ந்து அப்படியே சரிந்து வானத்தைப் பார்த்துக் கொண்டு படுத்துக் கொண்டே ஆண்டியின் அந்த சொற்களை ஓட்டிக் கொண்டிருந்தேன். மீண்டும் கண்ணீர் பெருகியது. அப்படியான வார்த்தைகளை உதிர்த்தபோது அவர் முகத்தில் தெரிந்த ஊக்கம், முகபாவனைகள், தொலைத்துவிட்டதைச் சொன்னபோது கண நேரமாவது அவர் அடைந்திருக்கக்கூடிய திடுக்கிடல் என கற்பனைக்குள் சென்றேன். ஆம்! ஜெ.. நீங்கள் சொல்வது போல “நான்” என்பது ஒரு பொருட்டே இல்லை. ”சின்னதும் பெரியதுமான குமிழி! எறும்பு” என பிதற்றிக் கொண்டிருந்தேன்.

ஒரு கணக்கில் யாவரும் எஞ்சப்போது ஒரு விக்கி பக்கமாகத்தான். சிறியதும் பெரியதுமான பக்கங்கள். ஆனால் யாரைப் போன்ற பக்கங்கள்? தூரனைப் போலவா? எஸ். வையாபுரிப்பிள்ளையைப் போலவா? ஆண்டி சுப்ரமணியைப் போலவா? ஓரிரு புத்தகங்கள் எழுதிய ஏதோ ஒருவரைப் போலவா? ஒரு தீர்க்கமான புறநானூற்றுச் செய்யுளை மட்டும் எழுதிச் சென்ற புலவனைப் போலவா? இல்லை பக்கங்களே அல்லாத பிறந்திறந்து செல்லும் எளிய மானுட வாழ்க்கையா? என நாம் தான் முடிவு செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். விருதுகளோ, பேரோ, புகழோ, கவனிப்போ கூட இன்றி மொழிக்காகவும், இலக்கியத்துக்காகவும் பணி செய்து மாண்ட அறிஞர்கள். நல்ல தனிவாழ்க்கை அமைந்த தமிழறிஞர்களும் இருந்திருக்கிறார்கள். அதைக் கொண்டு அவர்கள் நிறைய செய்திருக்கிறார்கள் தான். அப்படியல்லாது சரிவர இல்லாத குடும்பச் சூழல், குடும்ப வாழ்க்கை, உறவுச்சிக்கல் கொண்டவர்கள், நெருங்கிய உறவுகளை இழந்தவர்கள், வாரிசுகள் இல்லாதவர்கள் என பல தரப்பட்ட அறிஞர்கள். ஆனால் எல்லோருக்கும் உள்ள ஒற்றுமை ”செயல்” என்ற ஒன்று மட்டுமே.

இணைய வசதி, எளிதாக தொடர்பு கொள்ளும் வசதி ஏதுமில்லாத காலகட்டத்தில் இவர்கள் செய்த பணி அளப்பரியது என்று கண்டேன். நான் செய்வதெல்லாம் அதில்  துளி கூட இல்லை. இன்னுமின்னும் செய்து கொண்டே இருக்க வேண்டுமென்று அன்று தோன்றியது ஜெ. சோர்வுறும்போதெல்லாம் நான் நினைத்துக் கொள்வது ஆண்டியின் இந்த வார்த்தைகளையும், தூரனின் முகத்தையும் தான்.

கடந்து வந்த மூன்றரை மாதங்களை இன்று ஓட்டிப் பார்க்கிறேன் ஜெ. முதலில் இந்த செயலை ஆரம்பிக்கும் போது உந்து சக்தியாக இருந்தது உங்களின் வார்த்தைகள் தான். விஷ்ணுபுர விழா முடிந்த பின்னான உரையாடலில் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது இந்தப் பணியைப் பற்றி முன் வைத்தீர்கள். இதைப் பற்றி பதினைந்து வருடங்களுக்கு மேலாக சிந்தித்துக் கொண்டிருப்பதாகச் சொன்னீர்கள். மதுசூதன் உங்களிடம் அது சாத்தியமாகுவதிலுள்ள சிக்கலாக உங்களிடம் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார். முதலில் இதற்கான செலவுத்தொகை பற்றி கேட்டபோது மிக இலகுவாக எப்படி குறைந்த செலவில் செய்யலாம் என்பதைச் சொன்னீர்கள். அதன் பின் கடல் போன்ற கலைக் களஞ்சியப்பணியை எப்படி முடிக்க முடியும்னு நினைக்கிறீங்க என்று கேட்ட போது, “முடிச்சிடலாம். பதிவுகளுக்காக நண்பர்களின் உதவி இருந்தால் மூன்று வருடங்களில் முடித்துவிடலாம். இல்லைனாலும் தனி ஒருவனாக பத்து வருடத்தில் முடித்து விடுவேன்” என்றீர்கள். அறை முழுவதும் நிசப்தமாய் இருந்தது. அந்தச் சொல்லின் இறுதியில் என் கைகளில் மயிற் கூச்செறிந்திருந்தது. நண்பர்களிடம் பின்னர் பேசிய போது தங்களுக்கும் அவ்வாறு இருந்ததாகச் சொன்னார்கள்.

அந்த வார்த்தைகளுக்குப் பிறகு ”திரும்புதலில்லை” என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். ஆரம்பம் சிரமமாகத்தானிருந்தது. ஒரு நாளைக்கு ஒரு பதிவாவது போட்டு விட வேண்டுமென்று முதலில் தோன்றியது. ஒரு வேலைக்குள்ளேயே கூட மிகவும் கூர்ந்து பதிவுகளைப் போடுவது மட்டுமே செய்தால் மேலும் திறனை அதிகரிக்கலாம் என்பதை நீங்கள் நண்பர்களிடம் விவாதித்தது வைத்து புரிந்து கொண்டேன். மற்ற பொறுப்புகளிலிருந்து விடுவித்து பதிவுகள் போட ஆரம்பித்தேன். அதன் பின்னும் ஒவ்வொரு அடியும் உங்களைப் பார்த்துப் பார்த்து அந்த முறையை நகல் செய்தேன். சிறுகுழந்தைகள் அப்படித்தான் தாய் தந்தையரைப் பார்த்து நகல் செய்து கற்றுக் கொள்கின்றன. அதே சமயம் என் பதிவில் நீங்கள் செய்யும் திருத்தங்கள் வழி கற்றுக் கொண்டே இருந்தேன்.

பெரியசாமித்தூரன், எஸ். வையாபுரிப்பிள்ளை, ஆண்டி சுப்ரமணியம் என நான் உருவாக்கியவை யாவும் மிகவும் அடிப்படையான பக்கங்கள். அவை எவ்வாறு இன்றைக்கு இருக்கும் செறிவான பக்கங்களாக மாற்றமடைந்தது என்பதை பார்த்துக் கொண்டிருந்தேன். உங்கள் இணைய, புத்தகத் தேடல்கள், ஆளுமைகளின் வாரிசுகளைத் தொடர்பு கொண்டு சேகரித்தல், மேலும் உசாத்துணைகள், இணைப்புகள், புகைப்படங்களுக்கான மெனக்கெடல் என மிக நீண்ட பக்கமாக வந்தபோதும், வேறேதோ ஒருவருடைய பதிவில் இங்குள்ளவர்களுக்கான தகவல் இருக்கும் போது அதை உடனடியாக நீங்கள் சேர்ப்பதும் என யாவும் ஏதோ பின்னல் விளையாட்டு போல இருந்தது. நீங்கள் மிகப்பெரிய வலை ஒன்றை பின்னிக் கொண்டிருப்பதாக கற்பனை செய்து கொண்டேன். இது தவிர இந்த முப்பதாண்டு காலமாக நீங்கள் சேகரித்த, கேட்ட, கற்றுக் கொண்ட, வாசித்த, விவாதித்த அனைத்தையும் இங்கே நீங்கள் தொகுத்துக் கொண்டிருப்பதாகப் பட்டது.

நான் அந்த வலையின் அருகில் நின்று பின்னும் லாகவத்தை கற்றுக் கொண்டிருந்தேன். சி. வை. தாமோதரம்பிள்ளை பதிவு போடும்போது, அவரின் பத்து குழந்தைகளில் இரண்டு பேர் மட்டுமே எஞ்சியிருந்ததாகவும். அதில் ஒருவரான அழகுசுந்தரத்தை மதம் மாறியதற்காக வெளியே துரத்திவிட்டார் என்ற தகவலும் வாசித்தேன். அப்போதே அந்த இன்னொரு மகன் யாரென்று தேடினேன். கண்டடைய முடியவில்லை. பின்னர் நீண்ட நாட்கள் கழித்து ஈழத்துப் புலவர் வரிசையில் அமிர்தலிங்கம்பிள்ளை பதிவுக்காக அவரைப் பற்றி துழாவிக் கொண்டிருந்தபோது அவர் தான் சி. வை. தாமோதரம்பிள்ளையின் இரண்டாவது மகன் என்று தெரிந்த போது மகிழ்ச்சியடைந்தேன். உடனே போய் சி.வை.தா -வின் பதிவில் அமிர்தலிங்கம்பிள்ளையை இணைத்துக் கொண்டேன். அன்றைய நாள் அப்பா பிள்ளையை சேர்த்து வைத்தோமே என்று நிம்மதியாகத் தூங்கினேன். ஆம் வலைப்பின்னல் தான்.

கூழங்கைத் தம்பிரான் பற்றிய பதிவிற்காக தேடிக் கொண்டிருந்த போது அவருக்கு எப்படி அந்தப் பெயர் வந்தது என்ற செய்தி சுவாரசியமாக இருந்தது. உடனே அவருக்கு மீம் போட்டு, புனைவுக்கதை திரித்து நண்பர்களிடம் காட்டிக் கொண்டிருந்தேன். சைவப் புலவர்களுக்கு, அவர்கள் செய்த அதிசயங்கள் என்ற பெயரில் உள்ள தொன்மங்கள் புனைவை மிஞ்சுபவை. கிட்டத்தட்ட ரோமன் கத்தோலிக்கச் சபையில் “புனிதர்” என்ற பட்டம் கொடுக்க காட்டப்படும் ஒரு குருவின் அதிசயத்திற்கு இணை என்று நினைத்தேன். ஒரு புலவனாவதற்குத் தகுதியாக அவன் அதிசயங்கள் செய்தலும், தெய்வமாதலும், சிலையாதலுமென நிகழ்ந்திருக்கும் ஒரு காலகட்டமிருந்திருக்கிறது. அன்று நான் எங்கள் ஊரின் ஆண்டாளையும், பெரியாழ்வாரையும் கூட நினைத்தேன். நீங்கள் மதாரின் கவிதை வெளியீட்டுவிழாவின் போது சொன்ன வரிகள் நினைவிற்கு வந்தது. உண்மையில் மக்கள் கவிஞனை தெய்வத்தன்மையுடையவனாகவும் அவனிலிருந்து எழும் கவிதையை தெய்வச் சொல்லாகவுமே கருதியிருக்கிறார்கள்.

ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள் வரிசை மற்றும் ஈழ எழுத்தாளர்கள் பற்றிய பதிவுக்காக தேடும் போது ஒன்று கண்டேன் ஜெ. அருமையான ஆவணப்படுத்தல்கள் செய்திருக்கிறார்கள். நம்மை விடவும் சிரத்தையாக. புத்தகங்களாகத் தொகுத்திருக்கிறார்கள். அதுவும் பெரும்பாலும் இணையத்திலேயே தரவிரக்கம் செய்து கொள்ளும் வசதியை அளித்திருக்கிறார்கள்.  நல்ல தளங்களில் முடிந்தவரையில் எழுத்தாளர்களைத் தொகுத்திருக்கிறார்கள். ஒருவரைப்பற்றிய செய்தியையே பல புத்தகங்களில், தளங்களில் துணுக்குகளாக இருந்தது. யாவற்றையும் கோர்க்கும்போது முழுமையாக இருந்தது. புலம் பெயர்ந்த மற்றும்  ஈழத்து இலக்கியவாதிகளும், வாசகர்களும் இதில் மேலும் பங்களிப்பு செய்யலாம் எனுமளவுக்கும் அடிப்படைப் பக்கங்களை தமிழ் விக்கியில் உருவாக்கியிருக்கிறோம் ஜெ. மலேய தமிழர்கள் பற்றி ம. நவீனின் பதிவுகள் முக்கியமானவை. தமிழ் விக்கி பதிவுக்காக மேலும் ஐம்பது பேர் கொண்ட குழுவோடு வீரியமாக மலேசியாவில் வேலைகளை ஆரம்பித்திருக்கிறார் என்ற செய்தி மகிழ்வாக இருந்தது. லண்டனிலும் கூட குழுவாக செயல்படலாமென்று முடிவெடுத்திருப்பதாக மது சொன்னார். புலம்பெயர்ந்த தமிழறிஞர்கள் பதிவுகள் இதன் மூலம் தமிழ் விக்கியில் மேலும் செறிவாக தொகுக்கப்படும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

ஈழத்து அறிஞர்களும், தமிழ் நாட்டு அறிஞர்களும் எவ்வளவு இயைந்து இலக்கியப் பணிகளைச் செய்திருக்கிறார்கள் என்று தகவல்களுக்காக தேடும் பணியில் கண்டடைந்தபோது வியப்பாயிருந்தது. சி.வை.தா சென்னையில் வந்து ஆற்றிய பணி குறிப்பிடத்தக்கது. கலைக்களஞ்சியம், அகராதிகள் என பல வேலைகள் இணைந்து செய்திருக்கிறார்கள். இந்த சமயத்தில் “யாழ்ப்பாண பொது நூலக எரிப்பு” சம்பவம் அவ்வபோது மனதில் வந்து போகும். பல ஈழத்து அறிஞர்களும் மனம் வெதும்பும் சம்பவமது. தொகுக்கப்பட்டதே இவ்வளவு எனில் அந்த நூலகத்தில் மறைந்து போனவை இன்னும் எவ்வளவு செல்வங்களோ என்று ஈழ அறிஞர்களை எழுதும் போதெல்லாம் நினைவிற்கு வரும்.

தமிழகத்தில் “தமிழ் இணையக் கழகம்” மிகச் சிறப்பான வேலைகளைச் செய்திருக்கிறது. தகவலாற்றுப்படை, புராஜெக்ட் மதுரை, tamil.vu போன்றவை முக்கியமான முன்னெடுப்புகள். உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் அவர்கள் பொறுப்பிலிருந்த்போது பல நல்ல முன்னெடுப்புகளைச் செய்தார். கல்வித்துறை சார்ந்த இந்த தொகுத்தல் பணி முக்கியமானது. ஆனால் அவையெல்லாம் செறிவான தகவலாக மாற தமிழ்விக்கி பயன்படும்.

சமண, பெளத்த தளங்களைப் பற்றிய பதிவு போடும்போது அதற்காகவே பெரும்பயணம் செய்து படங்களை சேகரித்த ”பத்மாராஜ்” (http://www.ahimsaiyatrai.com/p/about-...) என்ற பெண்மணியைக் கண்டேன். தமிழகத்தின் மூலை முடுக்குகளில் உள்ள சமணத்தலங்களிலெல்லாம் பயணம் செய்திருக்கிறார்கள். அந்த பதிவின் போது தான் கழுகுமலை, வெட்டுவான் கோவில், வீரிருப்பு புத்த ஆலயமென எங்கள் ஊருக்கு அருகிலுள்ள சமண பெளத்த ஆலயங்களுக்கு ஸ்ரீநி மாமா, சுதா மாமியுடன் பயணம் சென்றேன். பதிவுகள் உயிர் பெற்று துலங்கி வந்தது போல இருந்தது. நான் சென்ற இடங்களில் நாங்கள் எடுத்த புகைப்படமும், நான் பார்த்த மனப்பதிவையுமே பதிவு செய்தேன். இலக்கிய நண்பர்கள் யாவரும் கட்டிடக்கலை சார்ந்து கோயில், சமண, பெளத்த தலங்கள் செல்கிறார்கள். அவர்களெல்லாம் புகைப்படமும், கோவில்/இடங்கள் சார்ந்த தகவலும் சேகரித்து எழுதலாம் அல்லது இங்கு எழுதுபவர்களுக்குப் பகிரலாம். குறைந்தபட்சம் தங்களுக்கு அருகிலுள்ள தலங்களைப் பார்வையிட்டு தகவல் சேகரிக்கலாம்.

அப்படியாக தான் சென்ற நாஞ்சில் நாட்டுக் கோவில்களைப் பற்றி நண்பர் அருள் அவர்கள் எழுதிய பதிவு முக்கியமானது. நான் மிகவும் விரும்பிப் படித்த பதிவுகள் அவை. அந்தத் தகவல்களோ அவதானிப்போ வேறு எங்கும் இல்லாதது. அதைத் தொகுத்தால் அருள் ஒரு அருமையான புத்தகத்தைப் போட்டு விடலாம்.

அதே போல நண்பரும் கலைஞருமான ஜெயராமின் கலைஞர்களைப் பற்றிய பதிவும் முக்கியமானது. அவர் இதற்காக தன் வார இறுதி நாட்களை பல கலைஞர்களை தமிழ்விக்கி பதிவுகளுக்காக திட்டமிட்டு சந்திக்கிறார். இதற்காக புத்தகச் சேகரிப்பு, புகைப்படச் சேகரிப்பு, வாசிப்பு என முழுமையான பதிவுகள் போடுகிறார். இதுவரை அப்படியான பத்து பொக்கிஷமான பதிவுகள் போட்டுள்ளார். எப்போதாவது எண்ணிக்கையைப் பற்றி அவர் கவலைப்படும்போது “இன்னும் இரண்டு வருடங்கள் கூட ஆகட்டும். உங்களால் அனைத்து ஓவியம்  சார்ந்த முக்கியமானவர்களை பதிவிட முடிந்தாலே போதும்” என்று சொன்னேன். ஜெயராமிற்கு இந்த தகவல் சேகரிப்பது மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகச் சொன்னார். அவரின் ”கலைஞர் ஆனந்தகுமாரசுவாமி” பற்றிய பதிவு வந்தபோது அதன் முக்கியத்துவத்தை உணர்ந்தேன். அந்தப் பதிவை நிறைவு செய்த அன்று “இந்த ஆனந்த்குமாரசுவாமிக்கு தனிவாழ்க்கை இன்னும் நிலையா அமைந்திருந்தா இன்னும் நிறைய செய்திருக்கலாம்” என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார். இலக்கிய வாசகனும் தானே அதனாலேயே இவர்கள் பதிவுகளை உயிரோட்டமுள்ள வாழ்க்கையாகவும் பார்க்கிறார்கள். அவர்களுக்காக மகிழ்கிறார்கள், வருத்தப்படுகிறார்கள், பெருமையடைகிறார்கள்.

சுபா அக்கா இசையில் ஆர்வம் உடையவர்கள். இசைக் கலைஞர்கள், வாத்திய இசைக்கலைஞர்கள் பற்றிய அவரின் பதிவுகள் முக்கியமானவை. மேலும் ஜி.எஸ்.எஸ்.வி நவீனின் பதிவுகள் யாவும் நாட்டுப்புறக்கலைகள், நாட்டுப்புறவியல் சார்ந்தவை. தன்னுடைய ஆக்கங்களில் பெரும்பாலும் நாட்டுப் புறக்கலைகளை, கடவுளர்களை முன் வைப்பவரான நவீனுக்கு இந்த தமிழ் விக்கியில் அது சார்ந்த பதிவுகள் போடுவது மேலும் உதவியாக இருந்தது என்றார். இதற்காக என்றில்லாமல் அ.கா. பெருமாள் ஐயாவுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து கொண்டிருப்பதும் விக்கி வேலைகளுக்கு மிகவும் உதவியாக இருந்தது. தென்மண்டலம் சார்ந்த கூத்துக் கலைஞர்களை நாம் நேரில் சந்தித்து பதிவுகள் போட வேண்டுமெனவும், அழிந்து வரும் கலைகள், கலைஞர்களைப் பற்றி நாம் நேரில் சென்று தகவல் திரட்ட வேண்டும் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார். முதலில் மணல்வீடு அமைப்பு சார்ந்த கலைஞர்களில் ஆரம்பித்து அப்படியே தென்பக்கமுள்ள அனைத்து கலைஞர்கள், கலைகள் பற்றிய பதிவு போட்டு அங்கிருந்து தொட்டு தமிழகம் முழுவதுமுள்ள நாட்டுப்புறக் கலைஞர்களையும் தொகுக்கலாம் என்றார். நேரில் செல்லலாம் என்றார். இல்லையானாலும் இணையம், செல்பேசி, வாட்ஸாப், இமெயில் வாயிலாகவே ஒரு பதிவுக்கான அனைத்தையும் வாங்கிவிட முடிகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கோவில்பட்டி சார்ந்த கலை ஆர்வலர்கள் ஜி.எஸ்.எஸ்.வி நவீனைத் தொடர்பு கொல்ளலாம்.

சமீபத்தில் குக்கூ சென்ற போது இதே வேலையை இந்தியா முழுவதும் சென்று தகவலாக சேகரித்துக் கொண்டிருந்த ராகுலைச் சந்தித்தேன். உடனே நவீனிடம் அவரை அறிமுகப்படுத்தி தமிழ் விக்கிக்காக அவரையும் உடன் சேர்த்துக் கொள்ளலாம் என்று சொல்லி மகிழ்ச்சியடைந்தேன்.

குக்கூ -ல் தென் மண்டல் தாவரங்களைப் பற்றிய தகவல் சேகரிக்கும் அன்பு -வைப் பார்த்த போதும், பின்னாளில் நாங்கள் இதையும் பதிவேற்றுவோம். நீங்களும் தமிழ் விக்கில பதிவு போடுங்க என்று சொன்னேன்.

உண்மையில் விரிவான பணி ஜெ. என் வாழ்நாள் முழுவதும் செய்து கொண்டே இருக்கப்போகும் பணி ஒன்றை எனக்கு காணித்திருக்கிறீர்கள். தகவல் திரட்டு என்பது முடிவிலியின் பாதை. நிறைவடையாத பாதை. செயலற்ற நாட்களிலும், தேங்கிக் கிடக்கும் நாட்களிலும், சோர்ந்து போகும் நாட்களிலும் கூட ஆக்கத்தின் ஒரு கூராய் எப்போதும் என் கண் முன் நிற்கப்போகும் ஒன்று. தமிழ்விக்கி புனைவுத்தன்மையைக் குறைக்கும், பிற இலக்கிய ஆக்கங்களுக்கான நேரத்தை குறைக்கும் என அக்கறையுள்ள நண்பர்கள் சொன்னார்கள். மிகச் சிலரே இது முக்கியமானது என ஊக்குவித்தார்கள். என் வரையில் இவை தகவல் தளம் மட்டுமல்ல. ஒரு உயிரோட்டமுள்ள வாழ்வு இதில் உள்ளது. அதன் உசாத்துணை கொண்டு மேலும் மேலும் சென்று சென்று தேடி அடைவது புனைவின் பாதை தான். புனைவுக்கான அத்தனை கருக்களும், களங்களும் இங்கு உள்ளன. வாழ்நாளெல்லாம் எழுதிக் கொண்டே இருக்கலாமென தோன்றுமளவு புனைவின் பாதை உள்ளது. இந்த நான்கு மாதங்களில் தான் என் மூன்று கதைகளும், கட்டுரைகளும் வெளிவந்தன. வாசிப்பின் வேகம் கூடியிருக்கிறது. தமிழ் விக்கி செயலூக்கம் தான் அளித்திருக்கிறது ஜெ.

நேற்று தம்பி வீரா இதை அனுப்பியிருந்தான். “Which is more important?” Asked Big panda, “The journey or destination?”…  “The company” said tiny dragon என்ற வரிகள். இந்த நான்கு மாதங்களைத் திரும்பிப் பார்த்தால் ஒவ்வொரு நாளுமென அப்படியான நல்ல பயணிகளுடன் தான் பயணித்திருக்கிறேன். முதன்மையாக நீங்கள். சொல்லாக, குரலாக, திருத்தங்களாக, பதிவுகளாக, அறிவுறுத்தலாக, கண்டிப்புகளாக, தகவல்களாக, அறிதலாக, மகிழ்வாக என விர்ச்சுவலாக உடனிருந்திருக்கிறீர்கள். இந்த உடனிருப்பை நான் பெரும் பேராகக் கருதுகிறேன் ஜெ. தகவல்கள் கோர்த்துக் கோர்த்து இன்று பின்னப்பட்ட பிரம்மாண்டமான வலையின் முனையில் நின்று கொண்டிருப்பது போன்ற பிரமை. நித்தமும் பதிவுகள் போடுவதைத் தாண்டி நீங்கள் போடும் பதிவுகளை உடனேயே வாசிப்பது கற்றலாக இருந்தது எனக்கு.

தமிழ் விக்கி திறப்பு விழா நெருங்க நெருங்க அலைக்கழிதல் அதிகமானது. மே 3, அன்று தெற்கு நோக்கி அலுவலகம் சென்று கொண்டிருந்தபோதெ இறங்கி வடப்பக்கமாக பேருந்து ஏறினேன். எங்காவது செல்ல வேண்டுமெனத் தோன்றியது. மதுரையில் உட்கார்ந்து கொண்டு யோசித்துப் பின் நீண்ட நாட்களாகவே செல்ல வேண்டுமென நினைத்த குக்கூ காட்டுப் பள்ளி சென்றேன். இரவு பத்து மணிக்கு ஸ்டாலின் அண்ணாவும் கெளதமி அக்காவும் என்னை அழைக்க பேருந்து நிலையம் வந்தனர். காட்டுப்பள்ளிக்கு உள் நுழையும் போதே அது என்னை அணைத்து யாவும் சரியாகிவிடும் என்று சொன்னது போல இருந்தது. நள்ளிரவு வரை பேசிக்கொண்டிருந்தோம். சிவராஜ் அண்ணா அங்கில்லை. ஆனால் எல்லோரிலும் அவர் இருந்தார். பூவன்னா, கெளதமி அண்ணி, ஸ்டாலின் அண்ணா என எல்லோரிலும் அவரையே பார்த்தேன். எல்லோரும் உறங்கிய பிறகும் கூட ஸ்டாலின் அண்ணாவிடம் பேசிக் கொண்டிருந்தேன். உங்களை, உங்கள் வரிகளை, செயல்களை, அது அவர்களில் செலுத்தும் ஆக்கத்தை, சிவராஜ் அண்ணாவின் செயல் தீவிரத்தை, அவரின் பயணத்தை, சிக்கல்களை, அதைக் கடந்து வந்த விதத்தையெல்லாம் கூறி ”எல்லாம் சரியாகிவிடும்” என்றார். ”உண்மையில் குக்கூ காட்டுப்பள்ளிக்கு வர ஒரு அழைப்பு தேவைப்படுகிறது. இங்கு நிறைந்திருங்கள். உங்களுக்கான விடைகள் கிடைக்கும்” என்று சொல்லிவிட்டு யாமத்தின் முடிவில் உறங்கச் சென்றார்.

அங்கு என் அருகே கறுகறுப்பான குழந்தை போன்ற முகப்பாவனை கொண்ட தன் கப்பலுக்குப் போன எஜமானருக்காக காத்திருக்கும் பெரிய ஜோர்டன் எனும் நாய் படுத்தவாறு என்னை நோக்கிக் கொண்டிருந்தான். அவனை தடவிக் கொடுத்துக் கொண்டே அமர்ந்திருந்தேன். அவன் நெகிழ்ந்திருந்தான். மஞ்சரியின் துணிகளை அணிந்திருந்தேன். அவள் என் அருகில் இருப்பது போல இருந்தது. எத்தனை ஊக்கமாக செயல் செயல் என திகழ்ந்து கொண்டிருப்பவள் அவள். காலையில் அருகிலுள்ள புளியனூர் சென்று அவள் புனரமைத்துக் கொண்டிருக்கும் கிணறைப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். பின்னும் இந்த ஐந்தாறு மாதங்களில் என் முன் நின்ற சலனங்கள், அலைக்கழிதல்கள், தடைகள், தவறுகள் என யாவற்றையும் அசைபோட்டிருந்தேன்.

சீனு சொன்னது நினைவிற்கு வந்தது. “துன்பம்லாம் ஒன்னா கடந்து போனத நினைச்சு வரும். இல்ல வரப்போற காலத்த நினைச்சு பயந்து வரும். கடந்தது எல்லாமே நல்லதுனு நம்பனும். அது எப்படிப்பட்ட தவறாக இருந்தாலும். எதிர்காலம் பத்தி யோசிக்க நாம யாரு? நம்ம கைல இருக்கது இந்த நிகழ் மட்டும் தான்” என்ற வரிகள். பின்னும் ஆனந்த் எப்போதும் சொல்லும் ”மொமண்ட்ல வாழு.. அந்த நொடியை, கடந்ததையோ வரப்போறதையோ நினைச்சு மிஸ் பண்ணிடாத” என்ற வரிகள். அப்படியே உறங்கிப்போனேன்.

அதிகாலை உறங்கி எழுந்து அருகிலுள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சத்துமாவுக் கஞ்சி கொடுக்கப் போனோம். சிறுவர்களின் குதூகலம் மனதை நிறைத்தது. திரும்பி வந்து ஜவ்வாது மலையைப் பார்த்தவாறு தனியாக இருந்த பம்பு செட்டில் கொட்டிக் கொண்டே இருந்த நீரில் தலையைக் கொடுத்தவாறு பல மணி நேரமாக வெறுமே உட்கார்ந்திருந்தேன். பின் முத்து அண்ணன் என்னை அழைத்து கால்களுக்கு ரிஃப்லெக்ஸாலஜி மசாஜ் செய்தார். கால்களின் ஒவ்வொரு அழுத்தப் புள்ளிகளையும் அழுத்திக் கொண்டே அதோடு தொடர்புடைய ஒவ்வொரு உடலுறுப்பும் எப்படியிருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருந்தார். மனத்தின் ஆழத்திலுள்ள கவலைகளை சொல்லச் சொன்னார். சொல்லக் கூடியவைகளையெல்லாம் அவரிடம் சொல்லி முடித்த பின் ”உடல் மிகவும் ஆரோக்கியமா இருக்கு. ஒவ்வொரு உறுப்பும் சரியா இருக்கு. மனம் சரியாகிடும். உடலும் மனமும் தொடர்புடையது. அதையும் பாத்துக்கங்க” என்று சொன்னார். ”இந்த ’டோம்’ அமைந்த கட்டிடம் பல இடங்களிலிருந்தும், பலரும் தங்களுக்கு விருப்பமான இடங்களிலுள்ள மண், பிடித்த மனிதர், நாய்க்குட்டியின் அஸ்தி என பலவற்றையும் குழைத்துக் கட்டப்பட்டது. அங்கு அமர்ந்து உங்கள் வேண்டுதலை விட்டுச் செல்லுங்கள்” என்றார். பின் அண்ணன் ஓயாமல் பலருக்கும் மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்தார். அந்த டோமில் உட்கார்ந்திருந்தேன். வேண்டுதல்கள் என்றில்லை எப்போதும் எனக்கு. ஆனால் இம்முறை தமிழ் விக்கி சரியாக எத்தடையுமின்றி வெளிவர வேண்டுமென்று அங்கு சொல்லிக் கொண்டேன். அங்கு அமர்ந்து அந்த இடத்தை உணர்ந்து கொண்டிருந்தேன். முத்து அண்ணனிடம் பேசிய போதே அந்த இடத்தின் நிறைவை அடைந்துவிட்டேன். கிளம்பலாம் என்று மனம் சொல்லியது.

மாலை அனைவரிடமும் விடைபெற்று ஸ்டாலின் அண்ணா மற்றும் கெளதமி அண்ணியுடன் கிளம்பி திருவண்ணாமலை கோவில் சென்றேன். அண்ணாமலையானும் உண்ணாமுலையம்மாளும் அருள் பாலிக்க சித்திரை வசந்தோத்ஸவம் விழா நடந்து கொண்டிருந்தது. பொம்மலாட்ட பாணியில் சப்பரத் தேரிலுள்ள அவர்களுக்கு அழகான பெண் பொம்மையை பூப்போட செய்து கொண்டிருந்தார்கள். கண்குளிர தரிசித்துவிட்டு மூலவரான அண்ணாமலையை மனம் பொங்க கண்டு வெளிவந்தோம். உள் நுழையும்போது கோபுரத்தின் வலப்பக்கமிருந்த ”பிறையன்”  பொன்னிறமாக வானில் ஜொலித்துக் கொண்டிருந்தான். ஸ்டாலின் அண்ணாவிடம் பிறையனைக் காட்டியபோதே பிரமிப்பாய் நின்று பார்க்க ஆரம்பித்துவிட்டார். எப்போதும் குழந்தை போல துள்ளிக் கொண்டிருக்கும் கெளதமி அண்ணி மேலும் குழந்தையாகிப் போனார்கள். அண்ணாவிடம் ”கன்னியாகுமரி பகவதிய தரிசிச்சதிலயிருந்து இருந்து இது மாதிரி பிறை நிலாக்கள் பகவதியோட மூக்குத்தி மாதிரி கற்பனை செஞ்சிக்க ஆரம்பிச்சேன்ண்ணா.. பின்ன அந்த பிறையிலிருந்து அந்த கருமேகத்துல சிவனின் தலைல அது இருக்கா மாதிரி கற்பனை செஞ்சு மனசால வரைஞ்சு பாப்பேன்” என்றேன். அவர் “இனிமே இந்த மாதிரி பிறையப் பாக்கும் போதெல்லாம் இந்த தரிசனம் எனக்கும் கிடைக்கும் ரம்யா” என்றார்.

கோவிலிலிருந்து இரவு உணவுக்காக குக்கூவின் ஆரம்ப நாட்களிலிருந்தே உடனிருந்த சங்கர் அண்ணா வீட்டுக்குச் சென்றோம். குக்கூ நண்பர்கள் எப்போது இந்தப்பக்கம் வந்தாலும் இங்கு உணவருந்தாமல் செல்வதில்லை என்றார் அண்ணா. சிவராஜ் அண்ணா என்னைப் பற்றி அவரிடம் சொல்லியிருப்பதாகவும் சொன்னார். சங்கர் அண்ணா உங்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார் ஜெ. முப்பது வருடங்களுக்கு முன் நீங்கள் திருமணமான புதிதில் திருப்பூருக்கு உங்களைச் சந்திக்க வந்ததாகவும், அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்ததால் மாலை வந்து சந்திப்பதாக வீட்டில் தங்கச் சொல்லி விட்டுச் சென்றீர்கள் எனவும் சொன்னார். தங்களை நம்பி தங்கச் சொல்லி உணவளித்த அருணாம்மா பற்றியும் சொல்லிக் கொண்டிருந்தார். ”அடுத்தமுறை வரும்போது சமணத்தலங்களுக்கு போலாம் தங்கறாப்ல வாங்க” என்றார். தமிழ் விக்கியில் தொண்டை மண்டல சமணத்தலங்கள் பற்றி போட்ட பதிவுகள் ஞாபகம் வந்தது. அவரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். ”இங்க இருக்கவங்களுக்கே தெரியாது. பரவால்ல அதெல்லாம் தொகுத்து போடறீங்களா” என ஆச்சரியப்பட்டார். அவரின் மனைவி அன்னபூரணி(சோறு போடுபவர்கள் யாருக்கும் இந்தப்பேர் தான்) கைகளில் உணவருந்திவிட்டு கிளம்பும்போது தலை நிறைய எனக்கு பூ வைத்துவிட்டு, குங்குமம் அளித்து, ஒரு பச்சைப்பட்டும் அளித்தார்கள். பச்சைப்பட்டு என கைகளில் கிடைத்தது என்னைவிட கெளதமி அக்காவிற்கு ஆனந்தத்தை அளித்திருந்தது.

வரும் வழியில் ஆட்டோக்காரர் திடீரென பிரேக் போட்டு நிறுத்தி திக்கு முக்காடச் செய்தார். ஸ்டாலின் அண்ணா அவருக்கு நன்றி சொல்லிக் கொண்டே கீழிறங்கிச் சென்று நடு ரோட்டில் சட்னியாகிவிடும் பயமேயில்லாமல் ஆயாசமாக நடந்து கொண்டிருந்த ஆமையை மடைமாற்றி ஓடைப்பக்கம் போய் விட்டு வந்தார். ஒரு நாளை நிறைச்சா நீ ஒட்டுமொத்தமா நிறைச்சு திக்கு முக்காட வைச்சிடற என்று நான் யாரிடமோ அந்த இரவில் சொல்லிக் கொண்டேன். பேருந்து வரும் வரை காத்திருந்து என்னை வழியனுப்பி வைத்தார்கள். அனேகமாக நடுஇரவுக்கு மேல் தான் அவர்கள் காட்டுப்பள்ளிக்குச் சென்றிருக்க வேண்டும்.

ஆறாம் தேதி வீடு வந்து சேர்ந்தேன். விட்டுச் சென்ற அனைத்துப் பிரச்சனைகளும் அப்படியே இருந்தது. இலக்கியமும், அது சார்ந்த பணிகளுமெனக்கு எத்தனை முக்கியம் என்று சொல்லி புரிய வைக்க முடியும் என்று தோன்றியது. பிற பிரச்சனைகள் யாவும் பிரச்சனையே அல்ல என்று தோன்றியது. மனதை வாட்டிக் கொண்டு, உணர்வு ரீதியாக தொந்தரவு செய்து கொண்டிருந்த நிகழ்வுகள் யாவும் ஆவியாகிவிட்டது. என்னை நிறைவடையச் செய்வது எது, எந்த மனிதர்கள் என்பதை நான் கண்டு கொண்டேன். அவர்களால் மட்டுமே சூழ்ந்திருக்க விரும்புகிறேன்.

விக்கி தொடக்க விழாவிற்கு ஏற்பட்ட சிக்கல் நல்லது என்று நினைத்தேன். இப்போதெல்லாம் நீங்கள் அதை எப்படி எதிர்கொள்வீர்கள் என்பதைக் கூட நான் அறிந்திருந்தால் பெரும்பாலும் கவலை இல்லை எனக்கு. விழா முடிந்த அன்று நீங்கள் அனைவரும் சீக்கிரம் கலைந்து சென்றால் போய் விக்கிப்பதிவு  போடலாம் என்று நினைத்துக் கொண்டிருப்பீர்கள் என்று நினைத்துப் பார்த்து சிரித்திருந்தேன்.

விழா நிறைவுற்றபின் நித்தமும் உடன் ஒவ்வொரு நாளும் பதிவுகள் போடும் சுபா அக்கா, நவீன், மலேசியா நவீன் ஆகியோருடன் பேசி ஊக்கப்படுத்தி, ஒருவருக்கொருவர் தட்டிக் கொண்டோம். இந்தப்பயணம் முழுவதும் ஒவ்வொரு நாளும் தொழில் நுட்பரீதியாக உடனிருந்த மதுசூதன், சந்தோஷ், திருமலை, மகேந்திர ராஜன், அருள் ராஜ், விஜய பாரதி ஆகியோரின் பணி அளப்பறியது. ரிவ்யூ டீமில் தீ போல செயல்பட்டுக் கொண்டிருந்த ஜாஜா, மனோ, ஜெயஸ்ரீ, லோகமாதேவி டீச்சர், தாமரைக்கண்ணன் ஆகியோரிடமும் மகிழ்வைப் பகிர்ந்து கொண்டோம்.

ஆங்கில மொழிபெயர்ப்பை ஆளேயில்லாத போது கூட மனம் தளராமல் நகர்த்திச் சென்ற சைதன்யா மிகவும் குறிப்பிட வேண்டியவர். இருநூறு ஆங்கிலப்பதிவில் ஏறக்குறைய அறுபது சைதன்யா செய்திருப்பார். மொழிபெயர்ப்பில் சிக்கல் வரும்போது அவரிடமும் சுசித்ராவிடமும் பேசியிருக்கிறேன். பலதரப்பட்ட இடங்கள், புத்தகங்களிலிருந்து தகவல் திரட்டுவதால் மொழி நடையில் ஒரு டைனமிக் தன்மை அமைந்துவிடுகிறது. பெரும்பாலும் அது சரிசெய்யப்பட்டாலும் மொழிபெயர்ப்பாளர்கள் சொல்லும் போது தான் அதன் முக்கியத்துவம் புரிகிறது. ஓரிரு முறைக்குப் பின் மிகவும் அத்தியாவசியமல்லாத வரிகளைப் போடுவதை நிறுத்தியே விட்டேன். சிடுக்கில்லாத மொழிப் பிரயோகம், தெளிவான வரிகள் மட்டுமே மொழிபெயர்க்க இவர்களுக்கு ஏதுவாகிறது. இப்போதெல்லாம் யாருடைய பதிவைப்பார்த்தாலும் அப்படியான வரிகளை பிழைதிருத்தம் செய்து விடுவதுண்டு. தமிழ்ப்பதிவு போடுபவர்கள் ஒரு ஓரமாக மொழிபெயர்ப்பாளர்களையும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். சுசித்ரா, ப்ரியம்வதா, ஜகதீஷ் ஆகியோரின் பதிவுகளைத் தாண்டியும் ரிவ்யூவிற்காக அவர்கள் அதிக மெனக்கெடல்களும் நேரத்தையும் செலவளித்து முறையான பதிவுகளாக ஆக்கினார்கள். ஆங்கிலப்பதிவுகளில் நிதி அதியமான், திருப்பூர் ஆனந்த், வென்னிமலை, பாலாஜி ராஜீ, ஜெயஸ்ரீ, முத்து காளிமுத்து ஆகியோரின் பங்கும் குறிப்பிடத்தக்கது.

துவளும்போது தேற்றும் தோளாக மீனா அக்கா எனக்கு அமைந்திருந்தார்கள். புத்தகங்கள் தேடு

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 14, 2022 11:34

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.