Jeyamohan's Blog, page 701

October 10, 2022

இலட்சுமண பிள்ளையும் எமர்சனும்

தமிழிசை அறிஞர் இலட்சுமண பிள்ளை பற்றி எம்.வேதசகாயகுமார் 2002ல் நான் நடத்திய சொல்புதிது இதழில் மிக நீண்ட கட்டுரை ஒன்றை எழுதினார். மறைந்த பேரறிஞர் ஒருவரைப் பற்றி எழுதப்பட்ட அக்கட்டுரைக்கு முன்னரும் பின்னரும் அதைப்போல ஒரு கட்டுரை எழுதப்பட்டதில்லை.

இலட்சுமண பிள்ளையின் வாழ்க்கையில் ஆர்வமூட்டும் ஒன்று உண்டு. அவர் தத்துவம் பயின்றவர், எமர்சனின் பக்தர். தன் இல்லத்துக்கு எமர்சன் வில்லா என பெயரிட்டவர். எமர்சனின் பெயரால் ஒரு ராகம் உருவாக்கியவர்

டி.இலட்சுமண பிள்ளை டி.இலட்சுமண பிள்ளை டி.இலட்சுமண பிள்ளை – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 10, 2022 11:33

வசைகள், கடிதம்

பொன்னியின் செல்வன், விடைகளின் தனிமை.

திருமா, கடிதம்

அன்புள்ள  ஆசிரியர்  ஜெயமோகன் அவர்களுக்கு ,

இன்றய கட்டுரையில் நீங்கள் குறிப்பிட்டது போல்  சிலர்  தங்கள் சுய லாபத்திற்காக  யூடுபியில்  பதிவு செய்யும் காணொளிகளை  பார்த்தால் ஒரு வகையில் கோபமும் எரிச்சலும்  வருகிறது.

நீங்களும்  கமல் ஹாசனும் அறம்  தொகுதி  ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டதை பற்றி பேசிய காணொளியை தேடும் பொது ஒரு காணொளியை பார்க்க நேர்ந்தது. வெண்முரசு, விஷ்ணுபுரம் நாவலின்  ஒரு வரி கூட வாசிக்காமல் அதைப் பற்றி மிகவும் கொச்சையாக விளக்கி இருந்தார். என்னால் 5 நிமிடத்திற்கு மேல் கேட்க முடியவில்லை ஆனால் அதற்கு ஆயிரக்கணக்கான வியூஸ் (பெரியாரின் படங்களுடன் சில காணொளிகள் அவர் youtube channel இல் வெளியிட்டு இருந்தார்). பணத்திற்காகவோ, ஆணவத்திற்காகவோ இவ்வாறு  பதிவிடுவது பாவச்செயலே.

உங்கள் காணொளி  மற்றும் பதிவுகளை பார்த்த  பிறகே சதாசிவ பண்டாரத்தார் மற்றும் நீலகண்ட சாஸ்திரி அவர்களின் புத்தகங்களை படித்தேன். சோழர்களின் வரலாறை புரிந்து கொள்ள முடிந்தது. வெறும் சில கல்வெட்டுகளைக் கொண்டு சோழர்களின் வரலாற்றை அவர்கள் எழுதியது  பெரும் சாதனை. ஆனால் இதை முழுதும் படிக்காமல் உங்கள் காணொளியின்  சில பகுதிகளை பார்த்து உங்களை பற்றி அவதூறு செய்பவர்கள் நிச்சயமாக குரு  நிந்தனை  செய்பவர்களே.

உங்களை இதைப்போன்ற  காணொளிகளோ, கட்டுரைகளோ பாதிக்காது  எனினும் என்  ஆதங்கத்தால் இதை  எழுதுகிறேன். நீண்ட நாட்களாக இதைப்பற்றி எழுத வேண்டும் என்று நினைத்து  தயக்கத்தால்  எழுதவில்லை.

அன்புடன்
அருண்

***

அன்புள்ள அருண்,

என்னை இவை பாதிக்காது. நான் கல்பற்றா நாராயணன் சொன்னதுபோல நரகத்தில் இருந்து வந்தவன். என்னை காலத்தின் குழந்தை என நினைப்பவன். எழுத்தாளன் வாழ்வது அவன் செத்தபிறகுதான். தான் எழுதியவற்றின் தரம் என்ன என உள்ளூர அறியாத நல்ல எழுத்தாளன் இருக்க மாட்டான். ஏனென்றால் அவன் தன்னை கடந்து சென்று அவற்றை எழுதியிருப்பான். அந்தக் கணங்களால்தான் அவன் தன்னை மதிப்பிடுவான். எனக்கு இங்கு இன்றுள்ளவர்களின் எந்தச் சொல்லும் ஒரு பொருட்டல்ல. அவ்வாறு கடந்துசெல்வதனால்தான் செயல்பட்டுக்கொண்டே இருக்கிறேன்.

ஆனால் இந்த வசைகளும் பழிகளும் என் பொருட்டு பிறர்மேல் வரும்போது சலிப்பும் வருத்தமும் அடைகிறேன்.

ஜெ

அன்புள்ள ஜெ

நான் பொன்னியின் செல்வன் படத்தை ஒட்டி சிலர் வெளியிடும் காணொளிகளை பார்க்கிறேன். அறிவியக்கத்தில் எந்த இடமும் இல்லாதவர்கள் அவர்கள். ஒரு நல்ல நூலை வாழ்நாளில் எப்போதாவது படித்திருப்பார்களா என்று தெரியவில்லை. அவர்களின் பேச்சும் மொழிநடையும் அவ்வளவு முச்சந்தித்தனமானவை. முக்கியமாக அவர்களுக்கு நீங்கள் யார், என்ன எழுதியிருக்கிறீர்கள் என எதுவுமே தெரியாது. அதையும் அவர்களே வெளிக்காட்டிக்கொள்வார்கள். ஆனால் அவர்கள் இலக்கியம், வரலாறு, தத்துவம் எதிலும் உங்களுக்கு அடிப்படையே தெரியாது என பேசுகிறார்கள். உங்களுக்கு ஆலோசனை சொல்கிறார்கள். அறிவுரைகளை வழங்குகிறார்கள்.

அந்த அபத்தங்களை பார்க்கையில் என்னைப்போன்ற ஒருவருக்கே சலிப்பும் கோபமும் வருகிறது. நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்கள்? அதைவிட அந்த அபத்தங்களை பார்த்துவிட்டு ஜெயமோகனுக்கு ஒன்றும் தெரியாது, ஜெயமோகன் டவுசர் அவுந்துபோச்சு என்றெல்லாம் கும்மாளியிடும் அரைவேக்காடுகளை ஒவ்வொரு நாளும் பார்க்கமுடிகிறது. அவர்களுக்கும் எழுத்து ,வாசிப்பு எதைப்பற்றியும் எதுவும் தெரியாது. ஒரு விக்கிப்பீடியா பதிவளவில்கூட உங்களை தெரிந்துவைத்திருக்க மாட்டார்கள். தமிழகத்தில் கொஞ்சம் வாசிக்கும் பழக்கத்துடன் இருப்பதே ஒரு பெரிய சித்திரவதையாக தெரிகிறது.

சிவக்குமார் ராமசாமி

அன்புள்ள சிவகுமார்,

நான் பலமுறை சொன்னதுதான். பொன்னியின் செல்வனின் விளம்பரச் செலவு முப்பது கோடி. அந்த விளம்பரத்தில் ஒரு பகுதியை தன்மேல் திருப்பிக்கொள்ளும் முயற்சிகள் என்பதற்கு அப்பால் இவற்றுக்கு எந்த மதிப்பும் இல்லை. இன்னும் பத்துநாளில் வேறு களம்நாடிச் செல்வார்கள். இந்த குபீர் வரலாற்றறிஞர்கள், திடீர் இலக்கிய ஆய்வாளர்கள் எல்லாரும் பொன்னியின்செல்வன், சோழர் வரலாறு எல்லாவற்றையுமே மறந்துவிடுவார்கள். இவர்களை ஒன்றும் செய்யமுடியாது. 

இவர்களை நான் எதிர்கொள்ளும் முறை ஒன்றே. கவனிப்பதே இல்லை. என் வேலையில் முழுக்கவே ஆழ்ந்திருப்பேன். இந்த நாட்களில் நீங்கள் நினைக்கவே முடியாத அளவுக்குப் பணியாற்றிக்கொண்டிருக்கிறேன். அதுதான் ஒரே வழி.

இந்தவகை கூச்சல்களும் ஒருவகையில் நல்லதே. அவற்றை கவனிப்பவர்களில் ஒரு சிறுபகுதியினர் என்னைப்பற்றி கேள்விப்பட்டு, என் இணையப்பக்கத்துக்கு வருவார்கள். நான் எழுதியிருக்கும் கட்டுரைகளை, கதைகளை வாசிப்பார்கள். அறிவியக்கம் என்பது எவ்வளவு பிரம்மாண்டமானது என உணர்வார்கள். அவர்கள் என் வாசகர்களாவார்கள். இதுவரை இங்கே வந்தவர்களில் ஏறத்தாழ மூன்றிலொரு பங்கினர் இப்படி வந்தவர்கள்தான்

ஜெ 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 10, 2022 11:32

பின் தொடரும் நிழலின் குரல் – சித்தார்த்

பின் தொடரும் நிழலின் குரல் – வாங்க 

எந்த ஒரு அமைப்பிலும், சமூகம், மதம், அரசியல் என எங்கு எடுத்துக் கொண்டாலும், அது வளர்ந்தபிறகு, மனிதாபிமானம் விலக்கிய பார்வை ஒன்று அதில் குடிகொண்டு விடுகிறது. அப்போது, உலகை மாற்றி அமைக்கும் ஓர் கனவோடு அவ்வமைப்பில் சேர்ந்த உறுப்பினன் ஒருவனது நிலை என்ன? அவனுக்கும் அந்த அமைப்பிற்குமான உறவுகள் எத்தகையவை? அவனது மனசாட்சிக்கு எந்த அளவிற்கு மதிப்பிருக்கும் அவ்வமைப்பில்? இவை குறித்தே பேசுகிறது ஜெயமோகனின் “பின் தொடரும் நிழலின் குரல்”.

விஷ்ணுபுரத்திற்கு பிறகு வந்த ஜெயமோகனது இரண்டாவது பெரிய நாவல் இது. கதை பொதுவுடைமை கட்சியை பற்றியது.நாகர்கோயில் தொழிற்சங்க உறுப்பினர் அருணாசலம். இவ்வாண்டு தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப் படலாம். இவருக்கும் அதில் மகிழ்ச்சியே. அந்நேரத்தில் தான் அவருக்கு ஒரு சிறு ஆவணம் கிடைக்கிறது. 1950ல் எழுதப்பட்ட ஒரு கவிதை தொகுப்பு. எழுதியது யாரோ ஒரு வீரபத்ரன் பிள்ளை. அச்சிறு புத்தகத்தை அவனை ஈர்த்த விஷயம் அதற்கு முன்னுரை எழுதியது ஈ.எம்.எஸ் (கேரள கம்யூனிஸ்ட் தலைவர்) என்பது. இந்த வீரபத்ரன் பிள்ளையை பற்றி ஆராய முற்படும்போது ஏற்படும் அனுபவங்களே நாவலாய் விரிகின்றன.

கதையில் மூன்று முக்கிய கதாபாத்திரங்கள், இன்றைய தொழிற்சங்கவாதியான அருணாசலம், 1950களில் வாழ்ந்த பொதுவுடைமைவாதியான வீரபத்ரன் பிள்ளை மற்றும் ரஷ்ய புரட்சியின் முக்கிய அங்கமாய் செயல்பட்ட நிகோலாய் புகாரின். இடத்தாலும் காலத்தாலும் அகலப்பட்டு இருந்த இந்த மூவரையும் இணைக்கும் புள்ளி, அவர்களுக்கும் பொதுவுடைமை கட்சிக்குமான கருத்துவேறுபாடும், அதை அக்கட்சி எதிர்கொண்ட முறையும் தான்.

அரசியல், பொதுவுடைமை சித்தாந்தம், ரஷ்ய புரட்சி போன்ற “பெரிய” விஷயங்களை ஒதுக்கிவிட்டு பார்த்தாலும் கூட இது ஒரு மிக சுவாரஸ்யமான படைப்பு தான். இது ஒரே நேரத்தில் நாவலாகவும், பல சிறுகதைகளின், கடிதங்களின், கவிதைகளின், நாடகங்களின் தொகுப்பாகவும் இருக்கின்றது. இந்த புதுமையான கூறல் முறை நாவலை உலக தரத்திற்கு உயர்த்துகிறது.

இது படிக்க எளிதான நாவல் அல்ல தான். ஆனால் சற்றே முயற்சி செய்து படிக்க ஆரம்பித்தீர்கள் எனில் இது தரும் உணர்வு அலாதியானது. நான் படித்த மிக சிறந்த நாவல்களில் இதுவும் ஒன்று.

 

இந்நாவலிலிருந்து இரு கவிதைகள்

இரு பறவைகள்

வல்லூறு ஆற்றல் மிகுந்த பறவை

காற்றின் படிக்கட்டுகள்

அதன் கண்களுக்கு மட்டுமே தெரியும்

பூமி ஒரு கசங்கிய போர்வை அதற்கு.

சிட்டுக்குருவி சின்னஞ்சிறியது

கிளைகளின்மீது எம்பித் தாவுகிறது

வானம் அதற்கு தொலைதூரத்து ஒளிக்கடல்

இரு பறவைகள்

இரண்டிலிருந்தும் வானம்

சமதூரத்தில் இருக்கிறது

*

தேவன் மொழி

பொருளின்றிச் சிதறும் இச்சொற்களால்

எவருக்கான மொழியை உருவாக்குகிறோம் நாம்?

மீட்பரே நீர் இதைக்கேட்க வரப்போவதில்லை

இந்த மொழி உமக்குப் புரிவதில்லை

ஏனெனில்

இதில் எம் பாவங்களை அறிக்கையிட முடியாது.

இது சாத்தானின் மொழியும் அல்ல

நமது துயரங்களின் ஒலி அவனுக்கு ஒரு பொருட்டேயல்ல

அறிவாளிகளின் தருக்கத்திற்கும்

கவிஞர்களின் கண்ணீருக்கும்

அப்பால் இருக்கிறது எங்கள் மொழி

ஆண்டவரே

பனிவெளியில் மட்கும் மரக்கிளைகள்போல

சிதைந்த கரங்களை விரித்துப் பரவி உம்மை அழைக்கிறோம்

இங்கு வந்து உறைபனியின் மொழியை அறிக.

எமது பாவங்களை மன்னித்தருள்க.

பிறகு உமது பாவங்களை நாங்கள் மன்னிக்கிறோம்.

நன்றி

http://angumingum.wordpress.com/2006/01/01/pinthodarum/

வரலாற்றின் மனசாட்சியை தீண்டும் குரல் ( ஜெயமோகன் எழுதிய ‘பின்தொடரும் நிழலின் குரல் ‘ நாவல் விமர்சனம்)

பின் தொடரும் நிழலின் குரல் : தருமம் மறுபடி வெல்லும்!:MSV.முத்து 

மறுபிரசுரம். முதல் பிரசுரம் – Sep 27, 2008

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 10, 2022 11:31

வாசிப்புப் பயிற்சி முகாம், கடிதம்

ஆசிரியருக்கு,

இப்படி ஒரு பயிற்சி தேவை என்பது வாசகர்களின் கோரிக்கை. இது சாத்தியம் என்பது போகன் சங்கரின் நெல்லை புத்தக விழா உரை காட்டியது.

கடந்த அக் 1,2 தேதிகளில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் ஒருங்கிணைத்த 50 பேர் கொண்ட வாசிப்பு பயிற்சி முகாம் திட்டமிட்ட படி ஈரோடு மலை கிராமத்தில் நிகழ்ந்தது. எம் கோபால கிருஷ்ணன், மோகனரங்கன், போகன் சங்கர் மற்றும் அனீஷ் கிருஷ்ணன் நாயர் ஆகியோர் இதை நடத்தினார்கள். இந்த முகாமுக்கு கீழ்க்காணும் இலக்குகள் இருந்தன.

வாசகர் சந்திக்கும் சவால்கள் :

1. எப்படி கவனத்துடன் படிப்பது
2. எவ்வாறு குறிப்புகள் எடுப்பது
3. எவ்வாறு நினைவில் கொள்வது
4. எவ்வாறு பிற புத்தகங்கள், சங்கதிகள் உடன் தொடர்பு படுத்துவது
5. எவ்வாறு ஒரு சிந்தனையாக ஆக்கிக் கொள்வது.

வாசகர் அறிய விரும்பும் புனைவு கருவிகள் :

1. படிமம்
2. உருவகம்
3. குறியீடு
4. வாசகர் இடைவெளி
5. மறை பிரதி
6. ஊடு பிரதி
7. மறு ஆக்கம்
8. பகடி
போன்றவை

வாசகர் அறிய விரும்பும் புனைவு வகை :

1. யதார்த்தம், இயல்புவதம்
2. அதி புனைவு
3. மீ புனைவு
4. மாய யதார்த்தம்
5. அபுணவு தன்மை கொண்ட புனைவு
போன்றவை

வாசகர் அறிய விரும்பும் கோட்பாடுகள் :

1. முற்போக்கு
2. தலித்தியம்
3. பெண்ணியம்
4. நவீனத்துவம்
5. பின் நவீனத்துவம்
போன்றவை

நவீன இலக்கியத்தின் இயல்புகள் :

1. முடிவு என்ன
2. நீதி என்ன
3. பெரிய தரிசனம் மட்டுமே கதை அல்ல
4. பொருள் மயக்கம்
போன்றவை

வாசகரின் சஞ்சலங்கள் :

1. பிரதியின் போதாமை
2. நமது போதாமை
3. கூட்டு வாசிப்பின் அனுகூலம், பின்னடைவு

இரண்டு நாள் பாடத்திட்டத்தை கீழே கொடுத்துள்ளேன். பங்கேற்பார் இதை படித்துவிட்டு வர வேண்டும் என்பது நிபந்தனை.

https://readingworkshopblog.blogspot....

இந்த நிகழ்ச்சி நிரல் படி முகாம் நடைபெற்றது :

Day 1:

1. 10:30 – 11.15 am : Tools/kinds of Reading – Rajagopalan

2. 12 to 1 pm : Short Stories Reading M. Gopalakrishnan

3. 4 to 5 pm : Poetry reading, essay reading Mohanarangan/Bogan

4. 7 to 8 pm : Critical Reading – Aneesh Nair
…..
Day 2:

5. 9:30- 10:30 am : Critical Reading – Aneesh Nair

6. 10.30 – 11.30 am : Classic and Modern Literature Rajagopalan

7. 12.00 – 1.30 pm: Q & A, – Full Panel
…..

ஆக ஒரு விரிவான திட்டமிடலுடன், முன் தயாரிப்புடன் வாசிப்பு பயிற்சி முகாம் நிகழ்ந்தது.

இவ்வுலக மகிழ்ச்சிகளில் தலையாயது அறிதலின் மகிழ்ச்சி தான். இந்த நிகழ்வில் பங்கேற்றோர் இதை குறைவின்றி பெற்றனர். ஒவ்வொரு அமர்விலும் வாசகர்களின் ஈடுபாடு தெரிந்தது, வண்டி நின்ற பின்னும் சக்கரம் நில்லாமல் அமர்வு முடிந்த பின்னும் சிறு குழுக்களாக ஆங்காங்கே இரவு பகல் பாராமல் உரையாடிக் கொண்டும் விவாதித்துக் கொண்டும் இருந்தனர். ஒரு முகாமின் வெற்றி அங்கேயே முடிவாகி விடுகிறது. கிட்டத்தட்ட இரண்டு நாட்களிலும் யாரும் ஓய்வே கொள்ளவில்லை. இது போன்ற தீவிரம் மிக்க பொழுதுகள் நமக்கு அரிதாகவே வாய்க்கும் என பிற்காலத்தில் தான் நாம் உணர்வோம்.

அமர்வு நடத்திய ஆசிரியர்கள் தேவையானவற்றை அளிக்க போதுமானதை கைக்கொண்டு இருந்தனர். முகாமில் ஆச்சர்யம் ஊட்டும் வகுப்பு என்பது அனீஷ் கிருஷ்ணன் நாயர் எடுத்தது. இரண்டு அமர்வுகளிலும் தேர்வுகள் நடத்தினார், கண் முன்னே தேற்றியும் காட்டினார். மனிதனுக்கு மொழி சார் நுண்உணர்வு இயல்பில் உள்ளது சற்று முயன்றால் பிற மொழியை கூட புரிந்து கொள்ள முடியும் என்பது ஒரு மொழிக் கோட்பாடு. தமிழ், ஆங்கில எழுத்துக்களில் எழுதப்பட்ட சம்ஸ்கிருதம், ஸ்பானிஷ் மற்றும் லத்தீனில் உள்ள பத்திகளை எங்களையே வாசிக்க செய்துவிட்டார். தூரத்தில் அறியாத நபர் அருகில் சென்று நண்பர் எனக் கண்டதும் வரும் நட்புணர்வு போன்றது இவ்வனுபவம்.

பேருந்தில் மகளிர் என்கிற சொல்லில் மேற்புள்ளி இல்லை என்கிறான் ஒரு கல்லூரி மாணவன். இன்னொருவன் அப் பெண் இன்று பொட்டு வைக்கவில்ல என்கிறான், இவன் கவிதை வாசிப்புக்குள் வர சாத்தியம் உண்டு. மற்றொருவன் அவள் ஒரு கைம்பெண் அதனால் தான் வெள்ளை எழுத்துக்களில் எழுதியுள்ளார்கள் என்கிறான் இவன் கவிதை வாசகன். குறைவானதைக் கொண்டு தொலைவானதை கற்பனை செய்வது கவிதை வாசிப்புக்கு முக்கியம் என துவங்கிய மோகனரங்கனின் கவிதை அறிமுக வகுப்பு ஒரு ரசனை பரிசு.

விக்கிரமாதித்தன் எழுதிய “பொருள்வயின் பிரிவு” கவிதையை முன்வைத்து இந்த நவீன கவிதையில் ஒரு ஆண் அடையும் உணர்வாக இப்போது வெளிப்பட்டது நம் சங்கப் பாடல்களில் பெண்ணின் குரலாக மட்டுமே ஒலிக்கும் என ராஜகோபாலன் சுட்டிக் காட்டிய போது அரங்கு ஒரு இணைப்பு கிட்டிய மகிழ்ச்சிக்கு சென்றது.

வகுப்புகளில் ஆசிரியர்கள் குறிப்பிட்ட புத்தகங்கள் சுமார் 50 இருக்கும் இது ஒரு புது வாசகனுக்கு பெரும் அறிமுகம். இவ்வளவு கற்பித்தும் இவ்வளவு கற்றும் மேலும் மேலும் எனவும் போதாது போதாது எனவும் பேராசை கொள்ளப்பட்டு விடை கொடுக்கப்பட்டனர் வாசகர்கள். இது அணையாதாகுக.

கிருஷ்ணன்,
ஈரோடு.

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 10, 2022 11:30

October 9, 2022

தத்துவ அறிமுக வகுப்புகள், அறிவிப்பு

வரும் அக்டோபர் 14 ,15 16 (வெள்ளி ,சனி, ஞாயிறு) நாட்களில் நடத்தவிருக்கும் தத்துவ அறிமுக வகுப்புகளுக்கான அறிவிப்பு சென்ற சனியன்று வெளியாகியது. காலை 730க்குள் தேவையான எண்ணிக்கையில் வருகையாளர் பதிவு செய்துகொண்டமையால் பதிவு நீக்கப்பட்டது.

ஆனால் இதுவரை விஷ்ணுபுரம் வகுப்புகளில் நிகழாத விஷயம் பதிவுசெய்தவர்களில் பலர் பணம்கட்டாமல், செய்தியும் தெரிவிக்காமல் இருந்துவிட்டமை. இச்செயல் இத்தகைய நிகழ்ச்சிகளைச் சீர்குலைப்பது. பதிவுசெய்துவிட்டு, முடிந்தால் செல்லலாம் என நினைக்கிறார்கள். இது ஆர்வமுடன் வர எண்ணுபவர்களின் வாய்ப்பை அழிக்கிறது. ஒருங்கிணைக்கும் எங்களுக்கு பொருளியல் இழப்பை உருவாக்குகிறது.

அவ்வாறு பணம்கட்டாதவர்களின் பட்டியலில் இருப்பவர்களுக்கு செய்தி அனுப்பப்பட்டுவிட்டது. அவர்கள் இனி விஷ்ணுபுரம் முகாம்களில் கலந்துகொள்ளவேண்டியதில்லை. தனிப்பட்ட முறையில் என்னுடன் தொடர்பும் கொள்ளவேண்டியதில்லை. நான் என் வாழ்நாளில் தாங்கள் செய்யும் செயல்களுக்கு முழுப்பொறுப்பு எடுப்பவர்களுடன் மட்டுமே தொடர்பு கொள்ள விரும்புகிறேன். மற்றவர்கள் என் செயல்களுக்கு பெரும் தடைகள். என் கனவுகளும் இலக்குகளும் மிகப்பெரியவை.

இந்த அறிவிப்பில் புதிய சிலரை சேர்த்துக் கொள்வதாகச் சொல்லியிருந்தேன். மீண்டும் இடங்கள் நிறைந்துவிட்டன.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 09, 2022 19:08

பொன்னிப்பெருக்கு

அன்புள்ள ஜெ,

முன்பெல்லாம் எல்லாவற்றுக்கும் ‘ஊர் என்ன பேசும்’ என்கிற பிரக்ஞையுடனே பலரும் திரிந்ததைப் போல, நாட்டில் என்ன நடந்தாலும் சமூக வலைதளப் புரட்சியாளர்கள் என்ன பேசுவார்கள் என்கிற பிரக்ஞையோடு அணுகும் மனநிலை எனக்குள் உருவாகி விட்டது. என் பயமெல்லாம் அவர்கள் பேசுவது பற்றியல்ல. அவர்கள் இப்படித்தான் பேசுவார்கள் என்று நான் யூகித்திருப்பதை உடைத்து அதற்கு மாற்றாக நியாயமாகப் பேசி என்னை ஏமாற்றி விடுவார்களோ என்கிற பயம்தான் எனக்கு. இந்த விசயத்தில் அவர்களைப் பாராட்டியே ஆக வேண்டும். ஏனென்றால் அவர்கள் என்னை ஒரு போதும் ஏமாற்றியதில்லை. பொன்னியின் செல்வன் வெளியாகும் முன்பே இது குறித்து என்னவெல்லாம் பேசப்படும் என்பது குறித்து நான் யூகித்திருந்ததை சிலர் அப்படியே பேசியிருந்ததைக் கண்டு நெகிழ்ந்து போனேன்.

பொதுவாகவே சமூக வலைதளச் சூழலில் இயங்குகிறவர்கள் தங்களைப் பல்துறை மேதாவிகளாக நினைத்துக் கொண்டு, எது சார்ந்தும் தன்னால் பேசவும், விமர்சிக்கவும் முடியும் என்றெண்ணிக் கொண்டிருக்கின்றனர். நீங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல குடவாயில் பாலசுப்ரமணியத்துக்கே வரலாற்றுப் பாடம் நடத்துகிறவர்கள் இவர்கள். ஒவ்வொரு இயக்குநர் சார்ந்தும் தான் வைத்திருக்கிற கருத்து நிலையின் அடிப்படையில் உருவாக்கிக் கொண்டுள்ள முன் முடிவோடுதான் படத்தையே பார்க்க ஆரம்பிக்கிறார்கள். உறுமீன் வரும் வரையில் வாடியிருக்கும் கொக்காய், தொக்காக ஏதாவது பிழை, முரண் சிக்காதா என்றே படத்தைப் பார்க்க ஆரம்பிக்கிறார்கள். இவர்களது மேம்போக்கான கருத்தியலில் முரண்படுகிற ஒரு அம்சம் சிக்கி விட்டாலே போதும் அதை எடுத்துப் போட்டு அடி வெளுக்க ஆரம்பித்து விடுவார்கள். இதனைத் தொடர்ச்சியாகப் பார்த்து ஒரு வித சலிப்புக்கு ஆளாகிய நான் நாளடைவில் இதற்கு அவர்கள் இப்படித்தான் பேசுவார்கள் என்கிற யூக விளையாட்டைத் தொடங்கினேன். நான் யூகித்திருப்பவற்றை எவரேனும் எழுதி விட்டார்கள் என்றால் எனக்கு ஒரு புள்ளி என்கிற கணக்கில் இந்த விளையாட்டு நன்றாகவே போய்க்கொண்டிருக்கிறது.

இலக்கியம், திரைப்படம் என்கிற இருவேறான கலை வடிவங்களுக்கு கதை மட்டுமே பொது அம்சமாக இருக்கிறது. தமிழில் அதிகம் பேரால் வாசிக்கப்பட்ட ஒரு சரித்திர நாவலைப் படமாக்குவதில் பெரும் சவால் உள்ளது. பாகுபலி ராஜமவுலியின் கதை. சரித்திர, தொன்மக் கதைகளின் தாக்கத்தின் வழியே அக்கதையை ராஜமௌலி எழுதினார். அக்கதாப்பாத்திரங்களை வடித்தார். அத்திரைப்படத்தின் வாயிலாகத்தான் அமரேந்திர பாகுபலியும், பல்வாள் தேவனும் பார்வையாளருக்கு அறிமுகமாகிறார்கள்.

பொன்னியின் செல்வனைப் பொறுத்தவரை 70 ஆண்டுகளாக பல கோடிப்பேரால் வாசிக்கப்பட்ட நாவல் அது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதாப்ப்பாத்திரத்தின் சித்திரம் மனதில் உருவாகியிருக்கும். அதனை வைத்துக்கொண்டு குந்தவையாக திரிஷாவை கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை என்று படம் வருவதற்கு முன்பே நடிகர்கள் தேர்வு குறித்த விமர்சனங்கள் எழுந்தன. டீசர் வெளியான போதும், ட்ரெயிலர் வெளியான போதும் இங்கு எழுந்த சலசலப்புகள் எல்லாம் நிறுவியது ஒன்றே ஒன்றைத்தான். மணிரத்னம் இயக்கும் திரைப்படத்தை ஏற்றுக்கொள்ளவியலாத மனநிலை. இவர்களுக்கு மணிரத்னத்தின் மீதான வெறுப்பு ஒரு பகுதி என்றால் திரைக்கதையிலும், வசனத்திலும் நீங்கள் இடம்பெற்றிருப்பது இன்னொரு பகுதி.

படம் வெளியான அன்று நண்பர்களுடன் பார்த்தேன். தமிழ்சினிமாவின் நெடுங்காலக் கனவொன்று ஈடேறிய நாளாக அது இருந்தது. இந்தக் கனவுத் திட்டத்தில் தாங்களும், கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் மற்றும் நண்பரும் ஆய்வாளருமான ஜெயக்குமார் பரத்வாஜ் ஆகியோர் அங்கம் வகித்திருப்பதில் மேலும் உவகை கொண்டேன்.

பெரும்பாலும் வந்த நேர்மறையான விமர்சனங்களைப் பார்த்து மகிழ்ந்தாலும், என் விளையாட்டுக்கு வேலை இல்லையோ என்று நினைக்கத் தோன்றியது. ‘ஜெயமோகனையும், குமரவேலையும் தவிர்த்திருந்தால் படம் நன்றாக வந்திருக்கும்’ ‘பொன்னியின் செல்வன் பரிதாபமான வரலாற்றுப் படமாக உருவாகியிருக்கிறது’ என்பது சில பதிவுகள் கண்ணில்பட்டதும்தான் நிம்மதியடைந்தேன். எனக்கு ஒவ்வொரு புள்ளிகளாக கிடைத்தபடி இருக்கின்றன. கல்கியையே தவிர்த்திருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும் என்று ஏதேனும் பதிவு கண்ணில் படுமா என்கிற ஆவலுடன் காத்திருக்கிறேன். அப்படியொரு பதிவு இடப்படுமாயின் 5 புள்ளிகளை எடுத்துக் கொள்வேன்.

கி.ச.திலீபன்

அன்புள்ள திலீபன்,

பொன்னியின் செல்வன் வெளியான நாளன்று நான் என் செல்பேசியை அணைத்தே வைத்திருந்தேன். காலை பத்துமணிக்கு படம் மாபெரும் வெற்றி என்பதை மட்டுமல்ல தோராயமாக எவ்வளவு வசூலாகும் என்றும் சொல்லிவிட்டார்கள். (எல்லா தொழிலுக்கும் அதற்கான கணக்குகள் உண்டு. வெளியே டிராக்கர்கள் என இருக்கும் அப்பாவிகளுக்கு இந்த உலகமே தெரியாது.) அதன்பின் தெரிந்துகொள்வதற்கு ஒன்றும் இல்லை. பகல் முழுக்க தமிழ் விக்கி பணிகள்தான். விளாத்திக்குளம் சுவாமிகள், தி.த.கனகசுந்தரம் பிள்ளை என பல பதிவுகள்.

என்ன காரணம் என்றால் தமிழ் சினிமாவின் உதவி இயக்குநர்கள், இயக்குநர் கனவுகொண்டவர்களின் அழைப்புகளை தவிர்ப்பதுதான். அவர்கள் அனைவருக்கும் எதிர்கால மணி ரத்னம் என நினைப்பு. ஒருவர் அழைப்பை தவறுதலாக எடுத்துவிட்டேன். பிஆர்ஓ என சேமித்திருந்தமையால் நடந்த குளறுபடி.

அவர்கள் அனைவருமே ஒன்றையேதான் சொல்வார்கள். எந்த சினிமாவுக்கும். அவர் “நல்ல படம் சார். ஆனா செகண்ட் ஹாஃபிலே கொஞ்சம் lag அடிக்குது. கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம்” என்றார். அதேதான்.

நான் கொஞ்சம் உற்சாக மனநிலையில் இருந்தேன். நடைப்பயிற்சியும் செய்துகொண்டிருந்தமையால் நேரம் இருந்தது.  “சரி தம்பி, எந்தெந்த சீன் லாக், எதை தூக்கலாம், சொல்லுங்க” என்றேன்

அவர் ஒரு காட்சி சொன்னார். “அதை தூக்கினா இந்த விஷயம் எப்டி கம்யூனிகேட் ஆகும்? ஆதித்த கரிகாலன் கதையே புரியாம ஆயிடுமே?”

“ஆமா சார்” என்றார். யோசித்து “இந்த சீனை தூக்கலாம்” என இன்னொன்றைச் சொன்னார்

“என்ன சொல்றீங்க? அதானே இன்னொரு காட்சிக்கு லீட்?”

“ஆமா” என்றபின் இன்னொன்றைச் சொன்னார். அதுவும் அப்படித்தான் என்றேன். அடுத்த காட்சியை சொன்னபோது அவரே உடனே “அத தூக்கினா அங்க இடிக்கும்” என்றார்.

“சொல்லுங்க…” என்றேன்

“தோணலை சார்” என்றார்

“நீங்க சொன்ன நாலு சீனை தூக்கினாலும் கூட மொத்தமா மூணு நிமிஷம் கூட சேவ் ஆகாது” என்றேன்

“ஆமா சார்…”

“மூணுநிமிஷம் லேக் குறைக்கலாம், இல்ல?”

அவர் ஒன்றும் சொல்லவில்லை.

“ஒண்ணு பண்ணுங்க…ஒரு அஞ்சு சீன் கண்டுபிடிச்சு சொல்லுங்க…ஒருநாள் எடுத்துக்குங்க. உங்கள அடுத்த மணி ரத்னம் படத்திலே அசிஸ்டெண்டா நானே சேத்துவிடுறேன்…ரெண்டு வருஷத்திலே நீங்களே சொந்தமா படம் பண்ணிடலாம்…ஒரு சான்ஸ் தர்ரேன்”

அவர் பலவீனமாக “சரி சார்” என்றார்

ஒரு குரூர மகிழ்ச்சியுடன் மறுநாள் நானே அழைத்தேன். “என்ன தம்பி கண்டுபிடிச்சாச்சா?”

“இல்ல சார்…”

“என்ன நீங்க? உங்க பேரக்கூட மணி கிட்ட சொல்லிட்டேனே”

“சார்!” என அலறிவிட்டார். “அய்யய்யோ சார்!”

இந்த நிலையில்தான் இங்கே எல்லா விமர்சகர்களும் இருக்கிறார்கள். எனக்கு இங்குள்ள சாமானிய சினிமா ரசிகர்கள்மேல் நம்பிக்கை இருக்கிறது. தொழில்முறை சினிமா விமர்சகர்கள், உலகசினிமா ஆர்வலர்கள் , அரசியல் வன்மர்கள், சாதிக்காழ்ப்பர்கள் எல்லாருமே எளிமையான, அப்பாவியான மனிதர்கள் மட்டுமே. ஏதோ தங்களை முன்வைக்க முயல்கிறார்கள். அவ்வளவுதான்.

ஆனால் இவர்கள் திரும்பத் திரும்ப சிலவற்றைச் சொல்லிச் சொல்லி சாமானிய ரசிகர்களில் ஒரு சாராரை சினிமா பார்க்க முடியாதவர்களாக ஆக்கிவிடுகிறார்கள். சில சொற்களை கேட்டாலே கசப்பாக இருக்கிறது. ஒன்று கூஸ்பம்ப் (Goosebumps). இன்னொன்று லாக் (Lag). ஒரு நல்ல படத்தை வாழ்நாளில் உண்மையிலேயே ரசித்துப் பார்த்த எவரும் இந்தச் சொற்களைச் சொல்லமாட்டார்கள்.

ஒருவர் பொன்னியின் செல்வனில் கூஸ்பம்ப் மொமெண்ட் இல்லை என்றார். அவரிடம் அவருக்கு பிடித்த கூஸ்பம்ப் மொமெண்ட் என்ன என்று சொல்லுங்கள் என்றேன். பாகுபலியில் பனைமரத்தை வளைத்து கல்லை வீசுவார்களாம். அது கூஸ்பம்பாம்.

”தம்பி பனைமரம் பார்த்திருக்கியா? அது காத்திலே வளைஞ்சதா கேள்வியாவது பட்டிருக்கியா? ” என்றேன்.

”வளையாதா சார்?” என்றார்.

“ஆமா, ஆனா இருபது டன் கல்லை தூக்குறவன் வளைச்சா வளையுமோ என்னமோ” என்றேன்

(“வணங்கான்” என்பது பனைமரத்தின் பெயர்களில் ஒன்று).

இன்னொன்று ’லாக்’ . எந்த சினிமா என்றாலும் ”செகண்ட் ஹாஃப் லாக். அஞ்சுநிமிசம் கத்திரி போட்டிருக்கலாம்” என்று சொன்னால் சினிமா விமர்சகர் ஆகிவிடுகிறார். சினிமாவில் நுண்ணிய உணர்ச்சிகளையோ, வாழ்க்கைச் சிக்கல்களையோ, உளக்குழப்பங்களையோ, காட்சிப்பிரம்மாண்டத்தையோ காட்டவேண்டுமென்றால் காட்சிகள் கொஞ்சம் மெல்லவே செல்லும். சினிமாவின் அடிப்படை இலக்கணம் அது. லாக் என்ற சொல்லை சொல்லிச் சொல்லி கம்யூட்டர் கேம் தவிர எதையுமே பார்க்கமுடியாதவர்களாக நம் சினிமாரசிகர்களை ஆக்குகிறார்கள் விமர்சகர்கள்.

ஒரு திரைப்படம் பார்க்கும்போது குறைந்தபட்சம் அது என்ன வகைமை (Genre)  என புரிந்துகொள்வது ரசனையின் அடிப்படை விதி. (இலக்கியத்திலும் அப்படியே) பொன்னியின் செல்வன் பார்த்துவிட்டு அதை பாகுபலி அல்லது டிரான்ஸ்பார்மர்ஸுடன் ஒப்பிடுவது அபத்தம். அதை கேம் ஆஃப் த்ரோன்ஸ் அல்லது தோர் படத்துடன் ஒப்பிடுவது மேலும் அபத்தம். அதை அகிரா குரசேவாவின் ரான் போன்ற படங்களுடன் ஒப்பிடுவது அபத்தத்தின் உச்சம்.

கொஞ்சம் சினிமா தெரிந்த ரசிகர்கூட அதை கிளியோபாட்ரா , டிராய் அல்லது எலிசபெத் போன்ற படங்களுடன் ஒப்பிடுவார். அந்த அளவுகோலில் அது எங்கு தேறுகிறது என்று பார்ப்பார். அந்த அடிப்படையை விளக்கக்கூட இங்கே ஒரு மலையாள திரைவிமர்சகரின் கட்டுரையைத்தான் முன்னுதாரணமாகச் சுட்டிக்காட்டவேண்டியுள்ளது. (ஒரு விமர்சகனுக்காகக் காத்திருத்தல் )

ஒரு படத்தின் வகைமைதான் அதன் அழகியலை தீர்மானிக்கிறது. ஒரு மிகைக்கற்பனை படம் அதீத காட்சிப்படிமங்களை உருவாக்கலாம். பாகுபலி போல செயற்கையான நிலப்பரப்புகளை உருவாக்கலாம். காட்டெருதை கட்டி தேரோட்டலாம். அதேபோல ஒரு சாகசப்படம் செயற்கையான நெருக்கடி நிலைகளையும் அதன் விளைவான உச்சகட்டங்களையும் உருவாக்கலாம். கேம் ஆப் த்ரோன் தொடரில் டிராகன் வரலாம்.

ஒரு வரலாற்றுப்படம் அவ்வாறு உருவாக்கினால் அதன் வரலாற்றுத்தன்மை இல்லாமலாகும். அதைப் பார்ப்பவர் அறியாமலேயே வரலாற்றுக் கற்பனையில் இருந்து விலகிச்சென்றுவிடுவார். ஒரு சாகசப்படம் மிகவேகமாகவே செல்லவேண்டும். ஆனால் உலகில் இன்றுவரை எடுக்கப்பட்ட எல்லா வரலாற்றுப் படங்களும் மிதமான ஓட்டம் கொண்டவையே. வரலாற்றின் பரப்பை அவை ரசிகர்களின் முன் நிறுவியாகவேண்டும். இன்று இல்லாமலாகிவிட்ட நிலக்காட்சியை கண்முன் காட்டவேண்டும். அன்றைய வாழ்க்கைமுறையை காட்டவேண்டும். உண்மையில் பொன்னியின் செல்வன் வேகமான சினிமா. நான் இன்னும் மெல்லச்செல்லும் ஒரு கதையோட்டமே வரலாற்று சினிமாவுக்கு தேவை என்று சொல்வேன்.

ஓர் உதாரணத்துக்கு கிளியோபாட்ரா படத்தையே பார்க்கலாம். மிகமிகமிக மெல்லச் செல்லும் படம் அது. பல காட்சிகளில் காமிரா முக்கால்தாங்கி மேல் அசைவில்லாமல் அமர்ந்திருக்கும். காட்சிச் சட்டகம் மாறுவதே அரிதாகத்தான். ஆனால் மிகப்பிரம்மாண்டமான சினிமா. அந்த பிரம்மாண்டம் நினைவில் பதிந்து கனவுபோல நீடிப்பதே அந்த நிதானமான திரைமொழியால்தான்.

இன்னொன்றும் உண்டு, கொஞ்சமேனும் தொழில்நுட்பப் புரிதலும் சினிமா விமர்சகனுக்கு தேவை. ஒருவர் ’பாகுபலியின் அரண்மனைகள் பிரம்மாண்டமானவை, அவை ஏன் பொன்னியின்செல்வனில் இல்லை?’ என்று எனக்கு எழுதினார். பாகுபலியின் அரண்மனையின் அமைப்பு பழைய எகிப்திய அரண்மனைகளை மாதிரியாகக்க் கொண்டு முழுக்கவே கணிப்பொறியில் உருவாக்கப்பட்டது. பொன்னியின் செல்வனில் உள்ள அரண்மனைகள் உண்மையில் இருப்பவை, தேவையான இடங்கள் மட்டும் வரைகலையால் வெட்டி உருமாற்றப்பட்டு, கூடுதல் கட்டுமானங்கள் சேர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டவை. பாகுபலியின் அரண்மனையின் சுவர்ப்பரப்புகளை (Texture) பார்க்கும் சிறுவர்கள்கூட அது வெறும் கணிப்பொறி வரைகலை என சொல்லிவிடுவார்கள்.

இன்னொருவர் கேம் ஆப் த்ரோன்ஸுடன் ஒப்பிட்டு கேட்டார். இன்னொருவர் விஜய்டிவியின் மகாபாரதம் தொடருடன் ஒப்பிட்டார். தொலைக்காட்சித் தொடருக்கான அரங்க அமைப்பு அல்ல பெரியதிரைக்கு உரியது. குறிப்பாக பொன்னியின்செல்வன் ஐமாக்ஸ் போன்ற மாபெருந்திரைக்குரிய படம். சிறியதிரைக்கு பிளேட்ஸ் எனப்படும் செயற்கையாக உருவாக்கப்பட்டக் காட்சிப்பரப்புகளை பின்ன்னுக்குப்பின்னால் அமைத்து பிரம்மாண்டத்தை காட்டிவிடலாம். மேலும் தொலைக்காட்சித்திரை ஒரு காட்சியிலுள்ள வெவ்வேறு பரப்புகளின் வெளிச்சவேறுபாடுகளை காட்டிக்கொடுக்காது. சின்னத்திரையின் காட்சிகளை பெரிய திரையில் போட்டால் எல்லாமே வெளிப்படையாக ஆகிவிடும். பெரிய திரையின் தொழில்நுட்பமே முற்றிலும் வேறு.

சரி, இவற்றையெல்லாம் எல்லா பார்வையாளர்களும் தெரிந்திருக்கவேண்டுமா? வேண்டாம். எளிமையான பார்வையுடன், ஆர்வத்துடன் திரையரங்குக்குச் சென்று கண்ணையும் உள்ளத்தையும் கொடுத்தாலே போதும். கருத்து தெரிவிக்கலாமா? தாராளமாக தெரிவிக்கலாம். ஒருவர் தனக்கு படம் பிடித்திருக்கிறது, பிடிக்கவில்லை என்று சொல்ல எல்லா உரிமையும் கொண்டவர். அது அபிப்பிராயம். ஆனால் விமர்சனம் சொல்லவேண்டுமென்றால் கொஞ்சமேனும் சினிமாவும் பண்பாடும் வரலாறும் தெரிந்திருக்கவேண்டும். அந்த சினிமாவுக்கு கொஞ்சமேனும் கவனம் அளிக்கவேண்டும். அதாவது மணி ரத்னத்துக்கு ஆலோசனை சொல்லவேண்டுமென்றால் நமக்கும் கொஞ்சம் சினிமா தெரிந்திருக்கவேண்டும். (ஆனால் இலக்கியமே தெரியாமல் தாராளமாகவே எனக்கு இலக்கிய ஆலோசனை சொல்லலாம். நான் நகைச்சுவையை விரும்புபவன்)

நமது படங்களில் உள்ள நுட்பங்கள், ஆழங்கள் விமர்சகர்களால் பொதுவாகக் கவனிக்கப்படுவதில்லை.  உதாரணமாக, நான் பொன்னியின் செல்வன் சினிமாவில் எந்த விமர்சகராவது அதிலுள்ள நகைகளின் வடிவமைப்பில் இருந்த மிகப்பெரிய கற்பனை, உழைப்பு பற்றி ஒரு வரி சொல்கிறார்களா என்று பார்த்தேன். அது தனியாகவே ஒரு பெரிய படைப்புச் செயல்பாடு. கடம்பூர் மாளிகைக்கும், பழையாறை மாளிகைக்கும் இடையே உள்ள வேறுபாட்டை எவராவது சுட்டிக்காட்டுகிறார்களா என்று பார்த்தேன். மிகச்சுருக்கமாக பிரிவின் உணர்ச்சிநிலைகளைச் சொல்லும் சில வசனங்கள் அதிலுள்ளன. அதை ஒருவராவது சொல்கிறார்களா என்று பார்த்தேன். எவருமே சொல்லவில்லை. பொத்தாம்பொதுவாக கலை இயக்கம் பரவாயில்லை. வசனங்கள் சில இடங்களில் கூர்மை— இப்படித்தான் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

ரவிவர்மனின் ஒளிப்பதிவு பல இடங்களில்  கிளாஸிக் ஓவியத்தன்மையை கொண்டிருந்தது. அதற்காக ஒளியை அமைத்திருந்தார். பளிச் என ஒளியமைப்பு செய்தால் திரைப்பரப்பில் உருவங்கள் எழுந்து தெரியும். ஒருவகை மங்கல்தன்மை திரைப்பரப்பை ஓவியத்திரையின் texture கொண்டதாக ஆக்கும். உருவங்கள் திரைப்பரப்பில் தைலவண்ண, நீர்வண்ண பிம்பங்கள் போல கரைந்து பரவியிருப்பதாகத் தோன்றும். அது ஓர் ஒளிப்பதிவுச் சாதனை. இந்திய சினிமாவில் அரிதாகவே அடையப்பட்டுள்ளது. ஆனால் அதை ‘ஒளிப்பதிவு சுமார், தெளிவாக இல்லை’ என சில விமர்சகர்கள் எழுதினர். இதுதான் இங்குள்ள விமர்சகர்களின் பொது ரசனை. அரிதாக மேலெழுந்த மிக நல்ல விமர்சனங்களும் இருந்தன.

(இங்கே  மிகக்கொஞ்சம்பேர் அவர்களுக்கு உகந்த அரசியல்கருத்து சினிமாவில் சொல்லப்பட்டால் ரசிப்பார்கள். அவர்களுக்கு சினிமாகூட முக்கியமல்ல. அதில் வெளிப்படையாகச் சொல்லப்பட்ட அரசியலே முக்கியம். சினிமா என்பது ஒருவகை அரசியல் மேடைப்பேச்சு என நினைக்கிறார்கள்)

இது மணி ரத்னத்தின் வாழ்நாள் முயற்சி. இருபதாண்டுகளாவது இப்படம் இரண்டு தலைமுறையினரால் பார்க்கப்படவேண்டும் என அவர் விரும்பினார். ஒருபோதும் அடுத்த தலைமுறை பார்த்து சிரிப்பதாக ஆகிவிடக்கூடாது. ஆகவே அனேகமாக செயற்கையான வரைகலைக் காட்சிகள் இல்லை. மனிதக் கண்ணால் பார்க்கத்தக்க காட்சிகளே படத்திலும் உள்ளன. பீரங்கிக்குண்டின் கூடவே காமிராவும் பறக்கும் காட்சிகள் இல்லை.

மிக விரிவான காட்சிகளை காட்டும் டிரோன் ஷாட்கள் இப்படத்தில் மிகக்குறைவு. சிலர் அவ்வாறு காட்டினால் காட்சிகளில் பிரம்மாண்டம் தெரியும், அது மணி ரத்னத்திற்கு தெரியாது என வகுப்பெடுத்திருந்தனர். அது மிக மிக எளிய உத்தி. டிரோன் ஷாட் வைத்தால் அந்த திரைப்பரப்பு முழுக்க நிறையும்படி காட்சிகளை வெட்டிஒட்டினால்போதும். அதைச்செய்ய மணி ரத்னம் தேவையில்லை. ஆனால் அந்த ஷாட் பார்வையாளன் ‘எங்கோ’ இருந்து படத்தை பார்ப்பதாக உணரச்செய்யும். பொன்னியின் செல்வன் கதைமாந்தர் வழியாக செல்லும்படம். இத்தகைய படங்களில் பார்வையாளர் காட்சிக்கு அணுக்கமாக, நிகழ்வுக்கு உள்ளே இருக்கவேண்டும். ஆகவேதான் வானில் இருந்து எடுக்கப்படும் டிரோன் ஷாட்கள் முதிர்ச்சியான சினிமாக்களில் தவிர்க்கப்படுகின்றன.

மேலும் ஒரு சினிமா பிரம்மாண்டமான போர்க்களத்தை காட்டியபின் வரலாற்றின் அன்றாட நிகழ்வுகளுக்குச் செல்ல முடியாது. ஒரு சினிமா தன் Scale என்று முதலிலேயே ரசிகனிடம் சொல்லவேண்டும். அந்த எல்லையை பேணவேண்டும். பிரம்மாண்டத்தில் இருந்து அரண்மனை உள்ளறைகளுக்குள் சென்றால் அது ஒரு அழகியல்பிசிறு. அரண்மனைகளுக்குள் செயற்கையாக பிரம்மாண்ட காட்சிகளை அமைத்து, விரிந்த காட்சிச்சட்டகத்தை உருவாக்கினால் அது அழகியல் பிழை. ஆகவேதான் போர்க்களம் அளவோடு காட்டப்பட்டுள்ளது.  ‘உங்களைவிட மணி ரத்னம் கொஞ்சம் சினிமா தெரிந்தவர், நம்புங்கள்’ என ஒருவருக்குச் சொன்னேன்.

செயற்கையான கதைச்சந்தர்ப்பங்கள் இதில் இல்லை.  உண்மையான உணர்ச்சிகள் போதும், மிகைநாடகங்கள் வேண்டாம் என்று இயக்குநர் எண்ணினார். மனிதனால் சாத்தியமான சாகசங்கள் போதும், எவரும் வானில் பறக்கவேண்டாம் என நினைத்தார். உண்மையை உருவாக்க மட்டுமே வரைகலை போதும், செயற்கையான வரைகலைக் காட்சிகள் வேண்டாம் என்றார்.

இத்தகைய படத்தில் நகைச்சுவை கூட மிதமாக, ஒரு புன்னகைக்கு மேல் செல்லாததாகவே இருக்கவேண்டும். ஜெயராம் நடிப்பில் படப்பிடிப்பிலும் ஒலிச்சேர்ப்பிலும் பலரும் சிரித்த சில காட்சிகள் கூடுதலாகச் சிரிப்பூட்டக்கூடாது என்பதனாலேயே பின்னர் நீக்கப்பட்டன. கற்பனை செய்து பாருங்கள், ஒரு வரலாற்றுப்படத்தில் வெடிச்சிரிப்பு எப்படி பொருத்தமற்றதாக இருக்கும் என உங்களுக்கே தெரியும்.

எனக்கு கொஞ்சம் பயம் இருந்தது. படம் வெளியான உடனே அது தீர்ந்துவிட்டது. வழக்கமான ’கூஸ்பம்ப்’ ரசிகர்கள் வந்து அவர்களுக்கு இந்தப்படத்தில் நிறைவில்லை என்றார்கள். அவர்கள் அப்படிச் சொல்வார்கள் என முன்னரே எதிர்பார்த்திருந்தோம். இருபது சதவீதம் பேர் வந்து பார்த்து விலகிய பின்னரே இதற்கான ரசிகர்கள் வருவார்கள் என நினைத்தோம். ஆனால் இங்கே ஐந்து சதவீதம்பேர்கூட கூஸ்பம்பர்கள் இல்லை என தெரியவந்தது இனிய அதிர்ச்சி. கூஸ்பம்பர்கள் எல்லாருமே ஏதாவது விமர்சனம் எழுதுகிறார்கள். ஆகவே அவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.

இன்று பத்தே நாளில் செயற்கையான எதிர்விமர்சனங்கள் அகன்று ஒற்றைக்கருத்து உருவாகிவிட்டது. இன்று குடும்பத்துடன் நாகர்கோயிலில் பொன்னியின் செல்வன் பார்க்கலாம் என முனைந்தேன். எங்கும் டிக்கெட் இல்லை. இத்தனைக்கும் திரையரங்குகளில் பொன்னியின் செல்வன் மட்டும்தான் படம். நாளையும் டிக்கெட் இல்லை. நாளைக் கழித்தே பார்க்கவேண்டும். ஆனால் ஏமாற்றமாக இல்லை.

*

இப்போது இப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றபின் இதைப்பற்றிப் பேசுவது உகந்தது. எவரும் சப்பைக்கட்டு கட்டுவதாகச் சொல்லிவிட முடியாது. எவரையும் புண்படுத்த இதைச் சொல்லவில்லை. இதெல்லாம் சில அடிப்படைகள். சினிமா பார்ப்பதனாலேயே சினிமா தெரியும் என நம்பிக்கொண்டிருப்பவர்களுக்கு இதை எவரேனும் சொல்லவேண்டியிருக்கிறது.

படம் வெளிவந்து பத்துநாட்களில் எல்லா கசப்புகளையும் கடந்து, இந்திய சினிமாவரலாற்றின் மாபெரும் நிகழ்வாக ஆகிவிட்டிருக்கிறது. இனி உங்கள் குரல்களால் ஆவதொன்றுமில்லை. ஆகவே இன்னொரு முறை நிதானமாக, காழ்ப்புகளும் கசப்புகளும் தன்முனைப்பும் இல்லாமல் அதை பார்க்கும்படி  கோருகிறேன். அனைவருக்கும் நான் சொல்ல ஒன்றே உள்ளது . உங்கள் கண்முன் தமிழில் காலம்கடந்தும் பார்க்கப்படும் ஒரு திரைப்படம் நிகழ்ந்திருக்கிறது. ஒரு வரலாறு இது. அதில் மனமுவந்து பங்கெடுங்கள். அது ஒரு வாழ்நாள் அனுபவம்

இது கலைப்படம் அல்ல. பொதுரசனைக்குரிய படம். கல்கியின் நாவலும் அத்தகையது. அந்த வகைமையில் இது ஒரு கிளாஸிக். ஏற்கனவே எல்லாம் தெரியும் என்னும் பாவனையை கொஞ்சம் கழற்றிவிட்டு பார்த்தீர்கள் என்றால் இது ஒரு கற்றல் அனுபவமும்கூட. சில்லறை அகந்தையால் இவ்வாய்ப்பைத் தவறவிடுவீர்கள் என்றால் இழப்பு உங்களுக்கே. படத்தை ஒரு சிறுவனுக்குரிய விரிந்த கண்களுடன், எளிய உற்சாகத்துடன் பார்க்க இயலாமல் உங்கள் அர்த்தமற்ற அகந்தை  உங்களை தடுக்கிறதென்றால் நீங்கள் எதை இழந்திருக்கிறீர்கள் என பாருங்கள்.

அகன்ற திரையில் இன்னும் மூன்றுமாதம் கடந்தபின் இந்தப்படத்தை பார்க்கவே முடியாமலாகலாம். முடிந்தவரை சிலமுறை பார்த்துவிடுங்கள். சில்லறை சாதியவம்புகள், அரசியல் வம்புகளுக்குச் செவிகொண்டுத்து இதைத் தவறவிட்டால் ஒருவேளை நீங்கள் பின்னர் வருந்தக்கூடும்.

சினிமாவைப் பயில்பவர்களுக்கு இந்தப்படம் போல் ஓர் அரிய வாய்ப்பு இந்திய சினிமாவில் பிறிதொன்றில்லை. ஒரு காட்சி எப்படி கட்டமைக்கப்பட்டிருக்கிறது, ஏன் காமிரா ஒரு குறிப்பிட்ட கோணத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது, ஏன் காமிரா சில இடங்களில் அலைபாய்கிறது என்றெல்லாம் பார்ப்பதென்பது ஒரு பெரிய திரைக்கல்வி. காமிராவின் நகர்வுக்கு இயக்குநருக்கு திட்டவட்டமான நோக்கம் இருப்பது மணி ரத்னம் போன்ற மிகச்சில இயக்குநர்களின் படங்களிலேயே உள்ளது. தமிழின் முதன்மை இயக்குநர்கள் கூட காட்சி காட்சியாக இப்படத்தை பயின்றுகொண்டிருக்கிறார்கள். எவரோ ஒன்றும் தெரியாமல் சொல்வதைக் கேட்டு உங்கள் அசட்டுத்தனத்தால் இதை தவறவிடாதீர்கள்.

இந்த சினிமாவை எடுப்பதற்கு மணி ரத்னம் காட்டிய படைப்பூக்கம் இந்திய சினிமாவில் மிக அரிதானது. அதைவிட அவருடைய தற்கட்டுப்பாடு மிக மிக அரிதானது. இந்தியா என்னும் பிரம்மாண்டமான தேசியக் கட்டுமானம் பலநூறு உள்முரண்பாடுகள் கொண்டது. குறிப்பாக வடக்கு -தெற்கு என்னும் வேறுபாடு. வடக்கே உள்ளவர்களுக்கு தெற்கின்மேல் ஒரு மனவிலக்கம், உதாசீனம் உள்ளது. தெற்கைப்பற்றி அவர்க்ளுக்கு ஒன்றுமே தெரியாது. அது ஒரு யதார்த்தம். அதை எவரும் கண்ணைமூடிக்கொண்டு கடக்கமுடியாது.

ஒரு படம் இந்தியா முழுக்க சென்று மாபெரும் வெற்றி அடையவேண்டும் என்றால் அதற்கு மிக எளிய வழி அதை எந்த கலாச்சார அடையாளமும் அற்ற வெறும் கேளிக்கைப்படமாக எடுப்பதுதான். 2.0 அத்தகையது. விக்ரம், கேஜிஎஃப் உட்பட எல்லா Pan Indian சினிமாக்களும் தனிப்பட்ட கலாச்சார அடையாளம் அற்றவை. பெரும்பாலான ஹாலிவுட் சினிமாக்களைப்போல. பாகுபலி கூட வட்டாரக் கலாச்சார அடையாளங்கள் இல்லாத அந்தரத்தில் நிற்கும் குழந்தைக்கதைதான். அதிலுள்ள அரண்மனைகள், கோட்டைகள் எல்லாமே எந்த கலாச்சாரத்தன்மையும் அற்றவை. அனிமேஷனால் உருவாக்கப்பட்டவை.

ஆனால் பொன்னியின் செல்வன் தெளிவான தமிழடையாளம் கொண்டது. அந்த தமிழடையாளம் எங்கும் மழுப்பப்படவில்லை. ஆடைகளில், அரண்மனைக் கட்டமைப்புகளில், ஆசாரமுறைமைகளில் எங்கும் அந்த தமிழ்த் தனித்தன்மை திட்டவட்டமாக கடைப்பிடிக்கப்பட்டது. அது வட இந்தியாவில் சினிமாவை அன்னியப்படுத்தும் எனத் தெரிந்தும் அங்குள்ளவர்களுக்காக ஒரு சமரசமும் செய்யப்படவில்லை. எந்தக் கேளிக்கையம்சமும் சேர்க்கப்படவில்லை.

’ரத்தம் ரணம் ரௌத்ரம்’ தெளிவான தெலுங்கு அடையாளம் கொண்டது. ஆனால் அது வடநாட்டு ரசிகர்களுக்காகச் செய்துகொண்ட மாபெரும் சமரசம் என்பது இறுதிக்காட்சிகளில் தெலுங்குப் பண்பாட்டு நாயகர்களை தெருக்கூத்துபோல ராமன், அனுமன் வேடம் போடச்செய்ததுதான். உடனடியாக படம் ஓடலாம், ஆனால் நீண்டகால அளவில் அது அந்த வரலாற்றுநாயகர்களை கேலிச்சித்திரங்களாகவே ஆக்கும்.

அத்தகைய எந்த கீழிறங்கலும் இன்றி மணி ரத்னம் இந்தப்படத்தை எடுத்திருக்கிறார். அதற்கு தன் கலைமேல் ஒரு நம்பிக்கை, ஒருவகை தெனாவெட்டு தேவை. (ஆனால் இங்குள்ள விமர்சகர்கள் பலர் அந்த சமரசமில்லாத நிலையையே மணி ரத்னத்தின் குறைபாடாகச் சுட்டிக்காட்டிய பரிதாபத்தையும் கண்டேன். ‘வடக்கே ஓடாது’ என்னும் அபத்தமான ஆரூடங்கள், ஆலோசனைகள்…)

எண்ணியபடியே ஒரு சிறுசாராரால் ஆந்திரத்திலும் வடநாட்டிலும் இப்படம் உதாசீனம் செய்யப்பட்டாலும்கூட பெருவாரியான மக்கள் ஏற்பைப் பெற்று வெற்றிபெற்றுக் கொண்டிருக்கிறது. முதலில் சற்று புரியாமலிருந்த பகுதிகள்கூட பத்து நாட்களுக்குப்பின் தெளிவடைந்து திரையரங்குக்கு ரசிகர்களை மீண்டும் வரச்செய்துள்ளன.

இது மணி ரத்னத்தின் வெற்றி. அவருடைய படம். அதில் திரைக்கதையாளனாக, வசன எழுத்தாளனாக, தரவுகள் அளிப்பவனாக ஒரு பங்கை ஆற்றியிருக்கிறேன். நிறைவான அனுபவம் அது.

ஜெ

கணவர்: சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்குல்ல? பிரகாஷ் ராஜின் பிள்ளைகள் யாரெல்லாம்?

மகள்: விக்ரம், திரிஷா, ஜெயம் ரவி

கணவர் : பொன்னியின் செல்வனின் இன்னொரு பெயர் என்ன?

மனைவி : அருண்மொழி வர்மன்

கணவர்: அந்த ரெண்டு கேரக்டரும் செய்பவர் ஒருவர். அவர்தான் ஜெயம்ரவி…சரியா? இனி என்ன சந்தேகம் என்றாலும் படம் முடிந்தபின் சொல்லித்தருகிறேன்

பிறகு

மகள்: யார் அது சோழனும் பாண்டியனும்?

மனைவி: செத்துப்போன கிழவர் ஐஸ்வரியா ராய்க்கு என்ன உறவு?

மகள் : கப்பலில் யார் அது கடைசியிலே பட்டாசு வெடித்தது?

மனைவி :ஆத்யத்தே கரிகாலனின் (முதல்கரிகாலன்) சித்தப்பா பையனா இல்லை மச்சானா மதுராந்தகன்?

பிறகு

வரும் பெண்: பொன்னியின் செல்வனின் கிராஷ் கோர்ஸ் நடக்கும் இடம் இதுதானா?

கணவர்: ஆமா ஜாயின் பண்ண வந்தீங்களா?

பெண்: ஆமா சேர்ந்துக்கலாமா?

கணவர் : ஆமாம், நல்ல டஃபாக்கும். கவனமா இருக்கணும் கிளாஸிலே…

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 09, 2022 11:35

ரகுவம்சம்

[image error] காப்பியங்கள் தமிழில் கலேவலா தமிழ் விக்கி உதயணன் தமிழ் விக்கி   உலகுடையபெருமாள் கதை 

காளிதாசனின் காவியத்தின் மொழியாக்கத்தை நவீன வாசகனும் வாசிக்கலாம். ஏனென்றால் அவர் படிமங்கள் வழியாகவே கவிதையை உருவாக்குகிறார். படிமம் எவ்வளவு மொழியாக்கக் குறைவு இருப்பினும் நம்மிடம் பேசும்.

உதாரணம்: இந்துமதியுடன் கீழே விழுந்த அஜன் எரிந்தபடியே எண்ணைத்துளி உதிர்வது போலிருந்தான் (அவர்கள் பிரிக்கமுடியாதவர்கள் என்பது ஒரு பொருள். உறவில் அஜன் இந்துமதியை உண்பவனாக இருந்தான் என்பது நுண்பொருள்)

ரகுவம்சம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 09, 2022 11:34

குறள், தொகுப்பு

அன்புள்ள ஜெ,இன்று வெளியாகிய கீதை தொகுப்பு கடிதத்தை வாசித்தேன். அதில் திருக்குறளுக்கு செய்யலாம் என்று கூறியிருந்தீர்கள்.என்னுடைய bookmarks இல் உள்ள உங்களது அனைத்து திருக்குறள் பற்றிய கட்டுரைகளும், திருக்குறள் பற்றி குறிப்பிடும் சில கட்டுரைகள் கீழே உள்ளன. திரு[அண்ணாமலை)விற்கு பகிரலாம். இந்திய சிந்தனை மரபில் குறள் இந்திய சிந்தனை மரபில் கீதை (இந்திய சிந்தனை மரபில் குறள் – 1)இந்திய சிந்தனை மரபில் குறள் – 2இந்திய சிந்தனை மரபில் குறள் – 3இந்திய சிந்தனை மரபில் குறள் – 4இந்திய சிந்தனை மரபில் குறள் – 5குறளும் கிறித்தவமும்புராணமயமாதல்கீதை ஒரு வினாதிருக்குறள் கற்கும் முறைமனப்பாடம்குறளினிது  – திருக்குறள் உரைகள் காணொளியாக குறள் – கவிதையும், நீதியும்எரிமருள் வேங்கைகுறள்;இருகடிதங்கள்நவீன இலக்கியம் ஏன் புரிவதில்லை?குறளறம்குரு என்னும் உறவுகுறள்- கடிதம்நூல்கள் – கடிதங்கள்துறவுயாதெனின் யாதெனின்…நீர்க்கூடல்நகர் – 5 (வேண்டுதல் வேண்டாமை இலான் என்கிறார் வள்ளுவர்)குரு என்னும் உறவுபற்றற்றான் பற்றுமெய்யுணர்தல்நாள் எனவிருந்தோம்பல்நயத்தக்கோர்
நமது விருந்தோம்பல்..கல்வி / அறிவு கழாக்கால்படைப்பாளிகளின் மேற்கோள்கள்மனத்திட்பம்உளத்திட்பம் என்பது…பணிவுஅயன் ரான்ட்,மேலும் கடிதங்கள்ஒழுக்கம்பெண் ,ஒழுக்கம், பண்பாடு:இரு கேள்விகள்பார்ப்பான் பிறப்பொழுக்கம்பார்ப்பான், பார்ப்பவன்- ஒரு திரிபுவள்ளுவரும் சாதியும்- ஓர் உரையாடல்சமணம்பார்ப்பான் பிறப்பொழுக்கம்பார்ப்பான், பார்ப்பவன்- ஒரு திரிபுபற்றற்றான் பற்றுகழாக்கால்செயல் / புகழ்புகழ்- ஒரு கேள்விவணங்குதல்நகைச்சுவைஎங்கும் குறள்காமம்விஷ்ணுபுரம், கொற்றவை…கடிதங்கள்உறவுகள்உறவுகளின் பொருள்சிறுகதைபெருவலி[ சிறுகதை] -1பெருவலி[ சிறுகதை] -2, (ஊழிற் பெருவலி யாவுள)அன்புடன்ராஜேஷ்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 09, 2022 11:31

இயற்கை, ஒரு கடிதம்

இயற்கையை அறிதல், வாங்க

அன்பின் ஜெ,

நலம்தானே?

பல வருடங்களுக்குப் பின் சென்ற வாரத்தில் “இயற்கையை அறிதல்” இரண்டாம் முறை படித்தேன். முதல் வாசிப்பில் தவறவிட்ட அர்த்தங்களை சுட்டல்களை இம்முறை அடையாளம் காண முடிந்தது மிகுந்த சந்தோஷம் அளித்தது.

இம்முறை படித்தபோது இவ்வழகிய சிறு நூல் பழைய நினைவுகள் பலவற்றைக் கிளறியது. ஏதேதோ எண்ணங்கள். திறப்புகள். அறிதல்கள். ஒரு பத்தி படித்துவிட்டு பின் ஓடும் மனத்தை சிறிது நேரம் கழித்து உணர்ந்து பிடித்து இழுத்துவர வேண்டியிருந்தது. எழுத்தோ, சினிமாவோ, இசையோ… எனக்கு அது என்ன தந்தது, என் உள்ளுக்குள் எதைக் கிளறியது, எனக்குள் எது ஒத்ததிர்ந்தது என்று சொல்லத்தான் ஆசையாய் இருக்கிறது. அதை பதிவு செய்தால் போதும் என்று தோன்றுகிறது. மற்றபடி கோட்பாடுகளையும், இஸங்களையும் அறிந்துகொள்வதில் மிகுந்த தயக்கம் இருக்கிறது.

இம்முறை நூலோடு கைபிடித்துக்கொண்டு பொருள்புரிந்து கவனம் பிசகாமல் பயணிக்க முடிந்தது.

அந்த முழுமையை, நிலவை எத்தனையோ விரல்கள் சுட்டிக் காட்டுகின்றன. ஏன் ஐந்திலிருந்து (பூதங்கள்) ஐந்து வழியாக (பொறிகள்) செல்லும் (புலன்கள்) எல்லாமே ஏதோ ஒருவகையில் அதை நினைவூட்டத்தான் செய்கின்றன. புரிந்தாலும், புரியாவிட்டாலும், அறிந்தாலும், அறியாவிட்டாலும் சுற்றிலும் அப்பூரணத்தின் அருள்மழை பொழிந்து கொண்டேதான் இருக்கிறது. அதனுள்தான் நாம் நிகழ்கிறோம். மீனின் கேள்வி ஒன்று ஞாபகம் வருகிறது. “இந்த நீர், நீர் என்கிறார்களே, அது எங்கிருக்கிறது?”.

இரவு. வானில் முழு நிலவு. சலனமில்லா குளத்து நீரில் அதன் பிம்பம். நாம் குளத்து நிலவைப் பார்த்து “ஆஹா…நிலவு” என்கிறோம். ஒரு விரல் மேலே சுட்டி “சத்” அங்கிருக்கிறது அங்கே பார் என்கிறது. ஓஷோ சொல்கிறார், “விரலைப் புடிச்சி தொங்காதே; விரலுக்கு நன்றி சொல்லிவிட்டு அது சுட்டுவதை மேலே பார்/போ” என்கிறார். முழுமையின் பிரதிபலிப்புகள் அனைத்தும் முற்றிலும் அதன் கருணையன்றி வேறென்ன?. புலன்களின் உணவெல்லாம் அதன் ஆசிகளல்லவா?. விருந்தின் சுவை அறிவதற்கான “ஒரு சோறு” பதங்கள்/விள்ளல்கள்.

“ஒளிரும் ஒளியே!ஒளிரும் ஒளிக்கிடமே! எண்ணில்  ஒன்றுமில்லா வெளியே! வெளிமுதல் பூதங்களாகி விரிந்த அம்மே! அளியேன் அறிவளவிற்கு அளவானது அதிசயமே!”. ஆம், நாம் அறியும்/உணரும் அளவிற்கு அது சுருங்கி தன்னை வெளிக்காட்டிக் கொள்வது அது நம் மேல் கொண்ட அன்பினால். தயையினால். இல்லையென்றால் அதன் விராடத்தை நம்மால் தாங்கமுடியுமா?. விஸ்வரூபத்தின் முன் நடுங்கிய மனம் நினைவுக்கு வருகிறது. நாம் தயாராகும் முன்பு அது நமக்கு முழுமையாய் காட்சி தருவது நம்மை சிதைக்கும் என்றறியும் கணம் ஒரு திறப்பின் கணம். அதுவரை அவ்வன்பின் துளித்துளி பிரசாதங்களில் பரவசமடையவே கொடுத்துவைத்திருக்கிறது நமக்கு.

மார்கழிகளின் வைகறைகள் எதையோ எனக்கு அளிக்கின்றன என்ற நிறைவு எல்லா வருடங்களிலும் எனக்கு வருவதுண்டு. தொண்ணூறுகளின் இறுதி வருடங்களில் ஒரு மார்கழி. அப்போது ஓசூரின் காரப்பள்ளி அருகே செந்தில் நகரில் குடியிருந்தோம். செந்தில் நகர் அப்போதுதான் உருவாகத் தொடங்கியிருந்த குடியிருப்பு. தள்ளித் தள்ளி மொத்தமே பத்து/பனிரெண்டு வீடுகள்தானிருக்கும். முகப்பில் சாலையோரமாகவே ஒரு விநாயகர் கோவில். காரப்பள்ளியிலிருந்து விஜயராகவன் தினமும் பூஜை செய்வதற்கு வந்துகொண்டிருந்தார். மார்கழிகளின் அதிகாலை பூஜைகள் விஸ்தாரமாய் இருக்கும். வைகுண்ட ஏகாதசி தினத்தின் வைகறை. என்றுமில்லாத வழக்கமாய் ஆரத்தியின் போது விஜயராகவன் உள்ளே கூப்பிட்டார். நான் தயங்கி அணிந்திருந்த வேஷ்டி தடுக்கிவிடாமல் படிதாண்டி கரு நுழைந்தேன். அலங்காரத்தில் அது.  தொங்கிக் கொண்டிருந்த அகல்களில் சுடர்கள். “சிற்றஞ்சிறுகாலே…” பாடிக்கொண்டே ஆரத்தி தட்டில் விபூதியின் மேலிருந்த சூடக்கட்டியை எடுத்து அகலின் சுடரில் பற்றவைத்து தட்டிலிட்டு என்னிடம் தந்தார் விஜயராகவன். மூன்று முறை ஆரத்தி சுற்றி முடித்து அந்த முகத்தின் முன் காட்டியபோது தழலில் ஒளிர்ந்த முகம் சட்டென்ற ஒரு ஆழ்ந்த துக்கத்தை தொண்டையில் உருவாக்கியது. என்னவென்று தெரியாமல் கண்கள் நிறைந்தது.

பூஜை முடித்து பிரசாதம் வாங்கிக்கொண்டு ஒவ்வொருவராய் கிளம்பிச் சென்றனர். விஜயராகவனும் சைக்கிளில் வயர் கூடையை மாட்டிக்கொண்டு கிளம்பிப் போனார். நான் கோவில் படிக்கட்டுகளின் ஓரத் திண்டில் உட்கார்ந்திருந்தேன். எதிரில் ராமநாதன் சார் உட்கார்ந்திருந்தார். ராமநாதன் சார், செந்தில் நகருக்கும் ஒன்னல்வாடிக்கும் நடுவிலிருந்த “சுவா எக்ஸ்ப்ளோசிவ்”-வில் வேலை செய்பவர். மேலாளர். என் அப்பா வயது. அவரிடம்தான் சில மாதங்களுக்கு முன்பு காயத்ரி மந்திர உபதேசம் வாங்கியிருந்தேன். தேடலின் கேள்விகளோடு அவரிடம் சென்று அடிக்கடி பேசிக் கொண்டிருப்பதுண்டு.

மார்கழியின் காலைக் காற்றில் மெல்லிய குளிரிருந்தது. ராமநாதன் சாரிடம் கோவிலுக்குள் கைகாட்டி “இது என்ன? யார் இது?” என்று கேட்கத் தோன்றியது. கேட்க நினைக்கும்போதே உள்ளுக்குள் அவர் என்ன பதில் சொல்வார் என்றும் தோன்றியது. “அதே கேள்வி உன்னைப் பார்த்தும் கேட்டுக்கலாமே? எழுத்தோ, காட்சியோ, கல்லோ, மரமோ, மனுஷனோ, மலையோ…எதுவோ… முன்னாடி இருக்கிறதா முக்கியம்? அதைப் பார்க்கும்போது உனக்குள்ள என்ன நடக்குன்றதுதானே முக்கியம்?

இப்படி பலசமயம் ஆனதுண்டு. 2001 அல்லது 2002 என்று நினைக்கிறேன். ஒரு யோகா பயிற்சி வகுப்பில் திறந்த வெளி குடிலில் நாற்பது/ஐம்பது பேரில் ஒருவனாய் கீழே உட்கார்ந்திருந்தேன். எல்லோருக்கும் சிறிய நோட்டுப்புத்தகமும் பேனாவும் தரப்பட்டது. பாடமெடுத்த காவியணிந்த அண்ணா “எல்லாவற்றையும் தரவல்ல குரு உங்கள் முன்னிருந்தால், நீங்கள் அவரிடம் என்னென்ன கேட்பீர்கள்? பத்து நிமிடங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். எழுதுங்கள்” என்றார். “உனக்கு என்ன வேணும்?” என்னைக் கேட்டேன். திடுக்கென்றது. கைகள் ஓடவில்லை. அப்போதும் யோசிக்க யோசிக்க துக்கம் போன்ற ஒன்று மேலெழுந்தது. பத்து நிமிடங்கள் அமைதி. நேரம் ஆனபின் ஒவ்வொருவராய் எழுந்து வாசிக்கச் சொன்னார் அண்ணா. மூன்றாவது வரிசையில் மத்தியில் அமர்ந்திருந்த இளைஞனின் முறை வந்தபோது அவன் எழக்கூட இல்லை. தலைகுனிந்து கேவிக்கேவி அழுதான்.

பணியிடப் பண்ணைகளில் பல நேரங்களில் ஆஸ்டெர் பூக்களின் மத்தியில் அமைதியான் உச்சிவெயில் நேரத்திலோ, அந்தி துவங்கும் நேரத்தில் அலுவலகத்தின் பால்கனியிலோ மனம் இளகி கரைவதுண்டு. கிஷோரி அமோன்கரின் தும்ரி குரல் கேட்டு அம்முவிற்கு ஏன் அழுகை வருகிறது?. ஜஸ்ராஜ் கச்சேரியில் நண்பன் மிஸ்ரா ஏன் கண்களில் நீர்வழிய உட்கார்ந்திருந்தான்?. ஒரு மலைப் பயணத்தின்போது “எந்தரோ மஹானுபாவுலு” கேட்டு எதனிடமோ தாழ்பணிந்து வணங்கி கேவி அழவேண்டும்போல் எனக்கு ஏன் தோன்றியது? கலைகளும், இலக்கியமும், அழகும், இயற்கையும் ஏதோ ஒன்றை எனக்குள் சுட்டுகிறதே அது என்ன?.

“இயற்கையை அறிதல்” ஒரு அடர்த்தியான செறிவான சுட்டு ஜெ. ஒரு “நில்…கவனி…அறி”. மொழிபெயர்ப்பிற்கு மிக்க நன்றி. ஆங்கிலத்தில் வாசித்திருந்தால் இந்த அளவிற்கு உள்வாங்கியிருப்பேனா என்பது சந்தேகமே.

பூரணம் சுட்டும் விரல்களில் ஒன்றுதான் “இயற்கை”யோ?. மிகவும் அண்மையான விரல் என்று அதை சொல்லலாமா?. அதுவேதான் பூரணமோ என்ற மயக்கம் தரும் விரல் இல்லையா?. “இயற்கை” என்பதுதான் எத்தனை பிரம்மாண்டமான, ஆழமான சொல்!

வெங்கி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 09, 2022 11:31

பைபிள் கதைகள்

பேரன்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,தங்கள் எழுத்துக்கள் இந்து மரபை புரிந்துகொள்ள எந்தளவு உதவிகரமாக இருந்ததோ, அதேயளவு கிருஸ்துவத்தையும், இயேசு கிருஸ்துவையும் நெருங்கி உணர உதவியுள்ளன.சிலுவையின் பெயரால் புத்தகமும், ஓலைச்சிலுவை, கொதி போன்ற கதைகளும் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானவை. குறிப்பாக, பின்தொடரும் நிழலின் குரல் நாவலில் வரும் “உயிர்தெழுதல்” கதையை எத்தனைமுறை முயன்றாலும், கண்கலங்காமல் படிக்க முடிந்ததில்லை. அதில் இடம்பெற்ற இயேசுவின் கருணைமிகு வார்த்தைகளும், அவர் மீது குழந்தைகள் மாறிமாறி பொழியும் அன்பும், நடைபெறும் உரையாடல்களும் மனதை நெகிழ செய்பவை. (வாய்ப்பிருந்தால் அந்த கதையை மட்டும் ஒரு சிறிய புத்தகமாக போடலாம். குமரித்துறைவி  எப்படி மங்கலம் மட்டும் கொண்ட ஒன்றோ, அதேபோல் “உயிர்தெழுதல்” பூரண அன்பையும், கருணையையும் மட்டுமே கருவாக கொண்டது.)சில நாட்களுக்கு முன்னால் திடீரென ஓர் எண்ணம் எழுந்தது. பாரபாஸ் போல பைபிளில் வரும் ஒரு சிறிய சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, தாங்கள் புனைவு ஏதும் எழுதியுள்ளீர்களா என்று.தங்கள் தளத்தில் தேடியதில் எதுவும் கிடைக்கவில்லை. எனவே, இது தொடர்பாக தங்களிடமே கேட்டு, கடிதம் ஒன்றை எழுதலாம் என இருந்தேன். ஆனால், தள்ளிப்போட்டு தள்ளிப்போட்டு, கடைசியில் அந்த எண்ணம் கைவிடப்படும் நிலையை எட்டியிருந்தது.இந்நிலையில், இன்று ஒரு கடிதத்திற்கான பதிலில் போகிறப்போக்கில் ‘வெறும்முள்’ என்ற சிறுகதை பற்றி தாங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். அப்படி என்னதான் உள்ளது என்ற ஆர்வத்தில் அந்த கதையை படித்தேன். ஆச்சரியம். ஏசுவின் வாழ்க்கையின் ஒரு சிறு பகுதியையொட்டி எழுதப்பட்ட கதை அது. இதுபோன்ற ஒரு கதையை எழுதியுள்ளீர்களா என்று கேட்டுத்தான், தங்களுக்கு கடிதம் எழுத எண்ணியிருந்தேன்.இந்த தற்செயல் நிகழ்வை தங்களிடம் பகிர்ந்துகொள்ளலாம் என்று தோன்றியது. ஆகவே, இக்கடிதம்.கடைசியாக ஒன்று. ‘வெறும்முள்’ கதை அத்தனை நன்றாக இருந்தது. இயேசுவின் வாழ்க்கையை மையமாககொண்ட மேலும் பல சிறுகதைகளை தாங்கள் எழுத வேண்டும் என உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன். நாவல் ஒன்றையே எழுதுவீர்கள் என்றால், அது எங்கள் பாக்கியம். பாரபாஸ் போன்று தமிழில் இருந்து ஏதேனும் நாவல்கள் எழுதப்பட்டுள்ளனவா?. இருந்தால் கூறவும்.நன்றி,ஆனந்த குமார் தங்கவேல்.அன்புள்ள ஆனந்த்பைபிள் பின்னணியில் தமிழில் நாவல் என ஏதும் எழுதப்படவில்லை. தமிழில் பைபிளைக் கதைப்புலமாக வைத்து என்னைத் தவிர எவரும் கதைகள் எழுதியிருப்பதாகவும் தெரியவில்லை. என் பைபிள் கதைகளை ஒரு நூலாக ஆக்கலாமென்னும் எண்ணம் உள்ளது.ஜெ
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 09, 2022 11:31

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.