Jeyamohan's Blog, page 1002

April 16, 2021

பனிமனிதன், கடிதம்

அன்புள்ள ஜெமோ,

புத்தாண்டு வாழ்த்துக்கள். உங்கள் ஈரட்டி வாசத்தின் இனிமைத் தூறலில் எங்களையும் நனைத்துக் கொண்டிருக்கிறீர்கள். இங்கே விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமெரிக்க கிளையில் பல புது பறவைகள் வந்த வண்ணம் இருக்கின்றன. ஒரு விதமான ஸ்லீப்பர் செல்ஸ் போல், அருகில் இருந்தும் அறியாது இருந்தவர்களை ஒன்று சேர்க்கின்ற நிகழ்வுகள் இனிதே தொடங்கி வைத்திருக்கிறது இந்த புது வருடம்.

உங்களுக்கு நிச்சயம் தெரிந்து இருக்கும் – இங்கே இருக்கும் பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்கு புத்தக வாசிப்பையும், வாசிப்பை ஒட்டிய விவாதங்களும், வாசித்ததை தொகுத்து வெளிப்படுத்தும் பயிற்சியை முதல் வகுப்பில் இருந்தே தொடங்கி விடுகிறார்கள். இயல்பாகவே புத்தக வாசிப்பை அவர்களின்  பிடித்த செயல்களின் ஒரு  பகுதியாய் மாறிருப்பதை வெளிப்படையாக காண முடிகிறது.

இங்கே படித்தாலும் தமிழ் மொழியிலும் நன்கு அறிமுகம் வேண்டும்  என்றும் அதே சமயத்தில்  எளிமையாகவும், பொறுமையாகவும், அழுத்தம் ஏதும் இல்லாமல் இருக்க வேண்டும் என்ற அதீத கவனத்துடன்  மூன்றாம் வகுப்பு படிக்கும் என் மகளுக்கு வீட்டிலேயே தமிழ் எழுதவும் வாசிக்கவும் பயிற்சி கொடுக்க தொடங்கினேன்.  முதலில் ஒரு பக்க கதைகளில்  தொடங்கி, ஓரளவு தேறிவிட்டாள் என்று அறிந்ததும் தினமும் இரவில் கதை நேரமாய் – உங்கள் “பனிமனிதன்” நூலை எடுத்து சேர்ந்து வாசித்து வந்தோம்.

ஒரு நாளைக்கு ஒரு அத்தியாயம் என்ற வீதத்தில் 44 நாட்களில் முடிக்க திட்டமிட்டோம். கதையை நான் படித்து விளக்கி சொல்ல, ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியில் வரும் தனித்தகவல் பகுதியை அவள் படிக்க வேண்டும் என்பது விதி. எதிர்பார்த்தப்படி பனிமனிதன் நிறைவில் தமிழில் அவள் வாசிக்கும் வேகம் முன்னேற்றம் அடைந்ததை  காண முடிந்தது. அது மட்டும் இல்லாமல் அதில்  வரும் புதிய வார்த்தைகளைக் குறிப்பெடுத்து அதை தனியே எழுதவும், அதை பயன்படுத்தி பிற வாக்கியங்களை எப்படி அமைப்பது என்பதையும் தொடர்ந்து செய்தோம்.

பனிமனிதர்களின் இருப்பிடம் பற்றி அரசாங்கத்திற்கு பாண்டியன் சொல்லப் போவதாய் வரும் பகுதிக்கு முன்பே, அவள் “அப்பா, அந்த பாண்டியன் இவங்கள பத்தி யார்கிட்டயேயும் சொல்லக்கூடாது, சொன்னா அவங்களுக்கு ரொம்ப problems வந்துரும். தேவையில்லாம அவங்கள நம் people trouble செய்வாங்க” என்றும் சொல்லிக்கொண்டிருந்தாள். இறுதிப் பகுதியை படிக்கையில், டாக்டரின்  நீண்ட பேச்சு அவளை வெகுவாக அசைத்து விட்டதை அவள் கண்களில் தெரிந்தது.

அந்த பேச்சின் நீட்சியாய் டேவிட் அட்டன்போராவின்  “A life on our planet ” ஆவணப்படத்தை பார்த்தோம். இயற்கையின் அழகை, பன்முகத்தன்மையை அதை வெறிப்பிடித்து வேட்டையாடும் மனித இனத்தின் பேராசை பசி, இயற்கையை மீட்க நாம் செய்யக்கூடிய சில செயல்கள் என்று தொன்னூறு நிமிடங்களில் பதிவு செய்திருந்தார்கள்.

இந்த முயற்சியில் பல நன்மைகள் தெளிவாக தெரிந்திருந்தாலும் சமீபத்தில் ஒரு நாள் இரவு நடையின் போது, “அப்பா, அந்த பனிமனிதன் நாவல்ல பார்த்தீங்கன்னா, அதில வர பாண்டியன் தான் நம்ம thoughts / நமக்குள்ள வர கேள்விகள் , டாக்டர் தான் நம் தேடி கண்டுபிடிக்கிற answers, கிம் தான் நம்மள டிரைவ் பண்ணற spirituality, நடுவில வர பனிப்புயல், வைரம், கடல், நெருப்பு, முதலை எல்லாம் தான் obstacles. அதை எல்லாம் கடந்து போனா நாமளும் பனிமனிதன் மாதிரி Joyfulஆ இருக்கலாம். நம்மோளோட original stateக்கு  ” என்று அவள் சொன்ன போது அசந்து விட்டேன்.

ஒரு புத்தகத்தின் முன்பு எந்த முன்முடிபுகளும் இல்லாது அதில் முழுமையாய் இயைந்து வாசிக்க வேண்டும் என்று நீங்கள் அடிக்கடி சொல்வது எனக்கு நினைவுக்கு வந்தது. எத்தனை முறை வாசித்து இருந்தாலும், இன்னும் ஒரு கோணம் இருக்கவே கூடும்  அனைத்தும் உரைத்தும் எஞ்சியிருக்கும் சொல் போல. மீண்டும் பனிமனிதன் புத்தகத்தை அவளே தனியாக வாசிக்க தொடங்கி இருக்கிறாள்.

மிக சிறந்த புத்தகங்கள் நம் கற்பனைகளையும் சிந்தனைகளையும் விரித்து வானில் பறக்க கற்றுக்கொடுக்கின்றன. பிள்ளைகள் இன்னும் சுலபமாக அதை செய்கிறார்கள் என்று தோன்றுகிறது. மகிழ்ச்சி ஜெ!

வெங்கடேஷ் பிரசாத்

அன்புள்ள விபி

உங்கள் மகள் வயதில் அஜிதன் இருக்கும்போது அவனுக்காக சொல்லப்பட்டது பனிமனிதன். பின்னர் அதை எழுதினேன்.

அந்த வயதில் நாமும் குழந்தைகளின் உலகுக்குள் செல்கிறோம். அவர்களாகவே ஆகிறோம். அதற்கு பனிமனிதன் போன்றநூல்கள் உதவுகின்றன

உங்கள் மகளுக்கு மட்டுமல்ல உங்களுக்கும் அது ஒரு கல்விதான்

ஜெ

பனிமனிதன் வாங்க

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 16, 2021 11:31

முகில்- கடிதங்கள்-5

அன்புள்ள ஜெ

அந்த முகில் இந்த முகில் நான் நீண்ட காலத்திற்குப் பிறகு மிகுந்த மனநெகிழ்ச்சியுடன் வாசித்த நாவல். ’ஒரு மகத்தான காதல்கதை என்பது முற்றிலும் புதிய சூழலில் எழுதப்பட்ட வழக்கமான கதை’ என்று சொல் சொல் உண்டு. காதல்கதையில் கதை எப்போதுமே ஒன்றுதான். ஆணும்பெண்ணும் சந்தித்துக்கொண்டு ஒருவரை ஒருவர் அறிந்துகொள்ளும் ஆச்சரியமான தற்செயல். அவர்கள் பிரிவதில் இருக்கும் inevitability. அவை இரண்டுமே விதிதான். ஆகவே நல்ல காதல்கதை என்பது எப்போதும் விதியின் கதைதான்.

அத்துடன் காதல்கதைக்கு ஓர் அளவும் வேண்டும் என நினைக்கிறேன். நல்ல காதல்கதைகள் எல்லாமே சுருக்கமானவை. காதலே ஒரு சின்ன காலகட்டத்துக்கு உரிய உணர்ச்சிகரமான அலைதான். அந்த அலையின் தீவிரத்தை நீர்த்துப்போகாமல் சொல்ல உணர்ச்சிகரனான நடை வேண்டும். ஆங்கிலத்தில் அந்த வகையான உணர்ச்சிகரமான நடை டி.எச்.லாரன்ஸ், நபக்கோவ் போன்ற சிலருக்குத்தான் அமைந்தது.

இந்த அடர்த்தியான சிறிய கதைக்குள் மனித மனதின் உணர்ச்சிக்கொந்தளிப்புகளும் தன்னைத்தானே வதைத்துக்கொள்வதிலுள்ள சூட்சுமங்களும் நிறைந்திருக்கின்றன. அனைத்தைக்காட்டிலும் முக்கியமானது இது விதியின் கதை

எஸ்.ஸ்ரீனிவாஸ்

***

அன்புள்ள ஜெ,

அந்த முகில் இந்த முகில் நாவலின் வழியாக நான் பார்த்தது ஒரு பெரிய rewinding. உயர்ந்த அர்த்தங்கள், ஞான சிந்தனைகள் வழியாகவே செல்லும் வெண்முரசு போன்ற ஒன்றை எழுதிவிட்டு இந்த எளிமையான இளமைக்கொண்டாட்டத்தில் திளைக்கிறீர்கள். ஆனால் இந்நாவல் இளைஞனால் சொல்லப்படுவது அல்ல. கதைசொல்லிக்கு வயதாகிவிட்டது. என்னைப்போன்ற வயோதிகர்கள் என்று அவரே சொல்கிறார். இது Remembrance Of Things Past வகையான கதைதான்.

நினைவுகூரும்போதுதான் காதல் அத்தனை வலிமிக்கதாக ஆகிறது. நிகழ்ச்சிகளில் ஓர் ஒழுங்கும் குறியீட்டு அர்த்தமும் வருவது அவற்றை நீண்டகாலம் கழித்து நினைவுகூரும்போதுதான். உதாரணமாக இந்தக்கதையின் பிரதானமான Allegori என்பது இடிந்து மறைந்த ஹம்பியில் இருந்து ஒரு சாஸ்வதமான கனவை உருவாக்கிக்கொள்ளும் முயற்சிதான். அந்த இணைப்பு ராமராவின் மனசிலே சாத்தியமாவது அவர் அதை கிட்டத்தட்ட அரைநூற்றாண்டுக்குப்பிறகு நினைத்துப்பார்ப்பதனால்தான். காலம் எல்லாவற்றையும் அழுத்திச்சுருக்கி ஓர் அர்த்தத்தையும் அளித்துவிடுகிறது.

ஆர்.ராகவன்

***

வணக்கத்திற்கும் பேரன்பிற்கும் உரிய ஜெயமோகன்,

இந்தக்கதை என்னை மிகவும் தொந்தரவு செய்கிறது. இதன் மீதான சிந்தனைகளில் இருந்து மீள முடியவில்லை. இதுவரை நான் வாசித்த புனைவு களிலேயே என்னை மிகவும் பாதித்துள்ளது கொண்டிருக்கின்ற ஒரு உணர்வுநிலை உச்சங்களின் கதையாகவே இதைக் காண்கிறேன். இதை வெறும் ஒரு புனைவு என அத்தனை எளிதில் ஒதுக்கிவிட்டு இதிலிருந்து வெளியே வர முடியவில்லை. வெளியே வந்துவிட முடியும் என்ற நினைப்பிலேயே இதைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கின்றேன்.

ஒரே ஒரு காதல், அந்த ஒரே ஒரு பெண்ணுடனான வாழ்நாள் முழுமைக்குமான முற்றாக நிறைவுபெற்ற உறவு என்பது கோடியில் ஒரு ஆணுக்கு கிடைக்கின்ற வரம். இயற்கையின் படைப்பின் படி இது ஆணின் இயல்பை மீறிய ஒன்று. அந்த ஆண் ஆசீர்வதிக்கப்பட்டவன்.அவ்வளவுதான் அதற்கு மேல் அந்த தெய்வீக காதலை குறித்து வேறு என்ன சொல்ல முடியும். ஆனால் இந்த ராமாராவ் ஸ்ரீபாலா காதலில் நீங்கள் எத்தனை சொல்லிச்சொல்லி சென்றாலும் சொல்லாமல் சொல்லிப் போனவை அளவுகடந்து கிடக்கிறது. அவைகளை எல்லாம் எண்ணி எண்ணி மனம் அடங்க மறுக்கிறது. வாசித்து முடிந்த பின்னும் அளவிலா சிந்தனைகளையும், விரிந்த புரிதல்களையும், உள்ளக் கொதிப்பையும், அதனூடாக அறிதலின் உவகையையும், அடுத்தவர் துயரையும் தன் துயர் அனுபவமாக முடிவிலி வரை அளித்து உடன் அழைத்து செல்வது தானே ஒரு நல்ல படைப்பின் இலக்கணம். இந்தப் படைப்பு அனைத்து இலக்கணங்களையும் கொண்டுள்ளதோடு அதையும் மீறிய வேறு இன்னதென்று வரையறுத்துவிட முடியாத வேறு எதை எதையோயும் கொண்டிருக்கிறது. அதனாலேயே இதை விட்டு வெளியே வருவது இத்தனை கடினமாக இருக்கிறது.

ஒரு ஆண் ஒரு பெண்ணை விரும்பி அவளும் அவனை விரும்பி அவளை அவனுக்கு அளிக்க தயாராக இருந்தபோதும், ஏதோ ஒரு காரணத்தினால் அப்படி ஒரு உடலுறவு அவர்களுக்கிடையே நிகழவில்லை எனில், அந்தப் பெண்ணின் மீதான அந்த ஆணின் காதல் அமரத்துவம் பெற்று விடுகிறது. அவன் வாழ்நாளில் அந்தப் பெண்ணின் மீதான காதலிலிருந்து பித்திலிருந்து சாகும்வரை அவனுக்கு விடுதலையே இல்லை.

ஒரு ஆண் ஒரு பெண்ணோடு கூடி விட்ட உடனேயே அவளுடனான அவனது உறவில் ஏதோ ஒரு மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டு விடுகிறது. அவன் மிக விரும்பி ஆனால் கூடாமல் விட்டுவிட்ட அத்தனை பெண்களும் அவனுக்கு முடிவிலி வரையிலான எண்ணிறந்த காதல் உறவுகளுக்கான வாசல்களையும் வாய்ப்புகளையும் கற்பனையிலும் கனவிலும் திறந்து வைத்திருப்பதே இதற்கான உளவியல் காரணம்.

அறியப்படாத உண்மைகளும் திறக்கப்படாத ரகசியங்களும் மனிதனை தூங்க விடுவதே இல்லை. யுகம் யுகம் என, ஜென்ம ஜென்மாந்திரங்களாய், தலைமுறை தலைமுறையாய், அறியப்படாத அவைகளுக்கான தேடுதல் முடிவதே இல்லை. ஒருவகையில் பார்த்தால் காமத்தின் தேடுதலே கடவுளின் தேடுதலுக்கான அச்சாரம்.

இயற்கையின் படைப்பே விசித்திரமானது தான். சரி ஆண் பெண் இரண்டில் ஒன்றுக்காவது கொஞ்சமாவது வாழ்க்கை அனுபவ அறிவு இருந்தால் தானே வாழ்க்கைச் சக்கரம் உருண்டு உலகம் பிழைத்துக் கிடக்கும். இயற்கை கருணையோடு பிழைத்துப் போங்கள் என்று காதல் வயப்பட்ட ஆண் பெண் இருவரில் யாரோ ஒருவருக்கு இந்த அறிவை அளிக்கிறது போலும்.

“அழுவேன்… இதற்காக இல்லை. வேறு பலவற்றுக்காக அழவேண்டியிருக்கும். அப்படி துக்கமாக இருக்கும்போது இதை நினைத்து அழுவேன். இதற்காக அழுதால் ஒரு நிம்மதி வரும்” அவள் புன்னகை செய்து “எதையாவது நினைத்து அழவேண்டுமே. இதை நினைத்து அழுதால் அழுது முடித்தபின் நிம்மதியாக இருக்கும்… மகிழ்ச்சியாகக்கூட இருக்கும்.”

பெண்களின் மிகப் பெரிய பலமே இப்படி அழுது வெளியே வந்துவிடுவது தான். இயற்கை அளித்து இருக்கின்ற தன்னைத் தக்கவைத்துக் கொள்ளும் தன்னைச் சார்ந்தவர்களை பாதுகாத்துக் கொள்ளும் உணர்வே பெண்களுக்கான வரம். அவர்கள் முன் அறியும் நுண்ணுணர்வு திறன் எப்போதும் அவர்களுக்கு துணை வருகிறது.

குறைந்தபட்சம் பெண்களால் வாழ்க்கையை அதன் குரூரங்களை விதிர்க்க வைக்கும் நிதர்சனங்களை ஏற்றுக் கடக்க முடிகிறது. காரிருளிலும் ஒரு சிறு ஒளியை காணுகின்ற கண்கள் பெண்கள் அனைவருக்குமான வரம்தான்.

காதலால், உறவின் பிரிவுகளால், ஏமாற்றங்களால், ஊழின் வலிய கரங்களால், தற்செயல்களால் உடைந்து சிதிலமாகி போன எத்தனையோ ஜீவன்களை மீட்டு வெளியே எடுக்கின்ற ஆலோசனையை, இலவச சேவையை அளித்துக் கொண்டிருப்பவன் என்கின்ற வகையில் பல உண்மைகளை நான் அறிவேன். காதலால் உடைந்துபோன, ஒட்டுமொத்த வாழ்க்கையையே இழந்து போன அவர்களுக்காக இரங்குவதையும் பரிதாபப் படுவதையும் தவிர வேறு என்ன செய்ய முடியும் நம்மால்.

ஆண்கள் பாதிக்கப்படுகின்ற அளவிற்கு பெண்கள் காதலினால் பாதிக்கப்படுவதில்லை என்கின்ற ஒரு குற்றச்சாட்டு எப்பொழுதும் ஆண்களின் மனதில்ஓடிக் கொண்டே இருப்பதை நான் நன்கு அறிவேன். பல ஆண்கள் காதலில் தோற்று திருமணமே செய்துகொள்ளாமல் அவள் மீதான காதலில் உருகி காத்திருக்கின்ற போது, பெண்கள் வேறு திருமணம் செய்துகொண்டு வாழ்வில் தம்மை பொருத்திக்கொண்டு காதலை மறந்து விடுகிறார்கள் என்று பொதுவாக ஆண்கள் நினைக்கிறார்கள்.

நம் சமூக அமைப்பு பெண்களை குடும்ப பந்தத்தில், குழந்தைகளைப் பெற்று வளர்ப்பதில் தளையிட்டு வைத்திருக்கிறது. ஆணைப் போன்ற அளவு சுதந்திரம் தனித்து வாழ்தலில் அவர்களுக்கு

அந்த அளவிற்கு இல்லை என்பதே இதன் உண்மை. இதன் காரணமாகவே பெண்கள் விரைவில் மீண்டுவிடுகிறார்கள் அல்லது மீண்டே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

ஒன்றை மிக நிச்சயமாக நான் எனது  அனுபவத்தில் இருந்து சொல்வேன் பெண்களின் மன ஆழத்தில் எங்கோ ஒரு இடத்தில் அந்தக் காதலன் அவனும் ஒரு குழந்தையாக தனக்கான ஒரு இடத்தை எப்பொழுதும் பிடித்து வைத்துக் கொண்டேதான் இருக்கிறான்.

பெண்கள் காதலை காதலனை மறப்பதோ அல்லது அகத்தில் இருந்து முற்றாக நீக்கி விடுவதோ இல்லை. நானறிந்தவரை அவர்கள் தங்கள் உள்ளத்தை மேலும் மேலும் என விரித்து எல்லாவற்றையும் அவற்றிற்கான ஏதோ ஒரு இடத்தில் பொருத்தி வைத்து விடுகிறார்கள்.

காதலனை கைக்குழந்தையாக்கி தன்னை தாயாக உயர்த்திக் கொள்வது அவர்களின் இயல்பிலேயே ஊறி ஊறி கனிந்திருக்கிறது. அதனால்தான் மெய்யியலில் சொல்வார்கள் பெண்களின் இந்த தாய்மை இயல்பினாலேயே மெய்மை தேடல் பாதையை நோக்கி எளிதில் வர முடிவதில்லை அப்படி மீறி வந்து விட்டார்கள் என்றால் அவர்கள் மெய்மையை அடைகின்ற வேகத்தை ஆண்களால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது என்று.

கர்ணனை திரௌபதி மறந்துவிட்டார் என்று நம்மால் கூறி விட முடியுமா என்ன???? அல்லது அந்த மூன்று பெண்களில் எவராலாவது பூரிசிரவஸை தான் மறக்க முடிந்ததா! இவ்வளவு ஏன் அம்பைக்கு பீஷ்மரின் மீதான காதல் எள் அளவாவது என்றாவது குறைந்ததா?

இந்தக் கதையைப் பொறுத்தவரை ஸ்ரீ பாலாவின் பெருங்கருணை ராமா ராவுக்கான கொடை. இந்தக் கொடையை ஸ்ரீ பாலா ஒருமுறை அல்ல இருமுறை அளித்திருக்கிறார். முதற் பிரிவின் பொழுதும் 27 ஆண்டுகளுக்குப் பிறகான இரண்டாம் பிரிவின் பொழுதும். அதுவும் தன்னைத்தானே அந்த விபச்சார நரகச் சிறையில் அடைத்துக் கொண்டு. ஸ்ரீ பாலா நினைத்திருந்தால் ராவுடன் தன் வாழ்க்கையை நிச்சயமாக அமைத்துக் கொண்டு இருக்க முடியும். அவசரப்பட்டு எச்சிலை தலையில் கட்டிக்கொண்டு விட்டோம் என்று அவன் என்றைக்குமே நினைக்கக்கூடாது என்று அவன் நல்லபடி வாழ வேண்டும் என்பதற்காக அவனையே விட்டுக்கொடுத்த, அவன் வாழ்வில் வாராது வந்த வரமாதா அல்லவா அவள். பெற்றுக் கொள்பவர்களுக்கு தான் பெற்றுக் கொள்கிறோம்

என்ற உணர்வே வராமல் அளிக்க தெரிந்தவர்கள் எத்தனை பெரியவர்கள். ராமாராவிற்கு அவனுக்குத் தெரியாமலேயே ஒரு மிகப்பெரிய வாழ்க்கை வரத்தை அளித்து வானளவு உயர்ந்து நிற்கிறாள் ஸ்ரீ பாலா.

மோட்டூரி ராமாராவியினால் மட்டுமல்ல எந்த ஆணினாலும் பெண்களை முற்றிலுமாக ஒரு பொழுதும் புரிந்து கொள்ளவே முடியாது. அத்தனைக் காதல் அவள் மீது இருந்த போதும் அவன் கடைசி வரை அவளைப் புரிந்து கொள்ளவே இல்லை. ஆண்களுக்கு ஒரு பொழுதும் இது புரியப்போவதில்லை என்கின்ற இந்த உண்மையை முற்றிலுமாக ஏற்றுக்கொண்டு விடுவதே இங்கே நாம் செய்யக்கூடியது.

இன்னொன்றையும் நினைத்துப் பார்த்தேன்.

இப்பொழுது இந்த 2021இல் ராமாராவிற்கு வயது 91. காதல் கொண்டதும் இழந்ததும் 20 வயதில். அவளை மீண்டும் கண்டும் இழந்தது 47 வயதில். ஸ்ரீ பாலாவை இரண்டாவது முறையாக சந்தித்து வந்துவிட்டு 44 ஆண்டுகள் கடந்துவிட்டது. இன்னமும் கூட அவளை மறக்க முடியாமல் தான் திணறிக் கொண்டிருக்கிறான். மீளமீள கனவுகளில் அவளோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றான். அந்தத் திரைப்படத்தை பார்த்து பார்த்து கருப்பு வெள்ளை காட்சிகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றான். இது என்ன வாழ்க்கை ஜெயமோகன் சார், இதற்கு அவளை மணந்து கொண்டு அவன் அவமானப்பட்டு கஷ்டப்பட்டு கொஞ்ச நாள் அவளோடு வாழ்ந்து செத்து இருந்திருந்தால் கூட அந்த வாழ்க்கை மிக நன்றாகவும் மனம் நிறைந்ததாகவும் இருந்திருக்கும் அல்லவா.

உரிய விலை கொடுக்காமல் உன்னதமான எதையும் நம்மால் அடையவே முடியாது என்பது இந்த மனிதர்களுக்கு ஏனோ தெரியவே மாட்டேன் என்கிறது. அதைவிடவும் கொடுமை, எது உன்னதமானது என்பதை அறியாமல் இருப்பது அல்லவா. அருளப்பட்டு இருப்பவைகளின் உன்னதங்களை அறியாமல் இழந்து விட்டு இழந்து விட்டு நினைந்து நினைந்து ஏங்கி ஏங்கி அழுகிறோம். இதுதானே இங்கு மீண்டும் மீண்டும் பலர் வாழ்க்கையில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

தன்னை முற்றாக அளிப்பது அல்லவா காதல். அப்படி அளிக்க முடியாத போது அங்கு எங்கே வாழ்கிறது காதல். அந்தோ பரிதாபம் அவனும் தன்னை முற்றாக தான் அளித்தான் ஆனால் அளித்த விதம் தான் தவறு.

“பறக்காதபோது பறவையல்ல” எத்தனை பெரிய தத்துவம். சிறகே முளைக்காமல் போய் பறக்கவில்லை என்றால் ஏற்றுக் கொள்ளலாம். சிறகு அறுந்து போயோ அல்லது உடைந்து போயோ பறக்கவில்லை என்றாலும் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் வலிமையான சிறகு இருந்தும் விரிந்த வானில் உயர உயர பறக்க இயலும் என்றான போதும் பறக்காத இவர்களை எந்தக் கணக்கில் வைப்பது. அப்படி ஒரு தன்னிருக்கம். அறியாமை நிறைந்த ஆணவ மயக்கம். சமூகக் கட்டமைப்பின் அதன் வரட்டு கௌரவங்களின் மீதான பயம். மற்றவர்கள் தன்னைப்பற்றி என்ன நினைப்பார்களோ என்ற அசட்டு அச்சம்.பித்துப்பிடித்து அலைந்து வாழ்வை  வீனடிப்பார்களே தவிர தங்கள் சிறைகளை உடைத்து வெளியே வர மாட்டார்கள். பறக்க முடிந்தும் பறக்காத பறவைகள்.

எத்தனை பெரிய அனுபவ ஆப்த வாக்கியம் இது. “செய்யவேண்டியதை செய்யாவிட்டால் அது ஒரு பள்ளமாகிவிடுகிறது. அது இறந்தகாலத்தில் இருக்கிறது, நிகழ்காலத்தை வைத்து அதை நிரப்பவே முடியாது”  இந்த உண்மை மட்டும் புரிந்து விட்டால் எவர்தான் தம் வாழ்வின் உன்னத கணங்களை அசட்டையாக இழக்கத் துணிவர். இது புரியாமல் எத்தனையோ ஆயிரக்கணக்கானபேர்கள் நிகழ்காலத்தை கொண்டு இறந்தகால அடியிலிப் பள்ளங்களை அடைக்க விடாது முயன்று கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் விழித்துக்கொண்டால் இனியாவது செய்ய வேண்டியவைகளை காலாகாலத்தில் செய்து முடித்து அடைக்கவே முடியாத பள்ளங்களை மேலும்மேலுமென தோண்டாமலாவது இருக்கலாம்.

மிகச் சிறந்த கதைகள் ஒருவரை தூங்க விடாது என கேள்விப்பட்டிருக்கிறேன். இப்பொழுது தான் அதை அனுபவித்து தவித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு கருப்பு வெள்ளை சினிமா என்னும் திரையைக் கொண்டு நிழல்களாலும் முகில்களாலும் ஆன மிகப்பெரிய கனவுக் காதல் வாழ்க்கை சித்திரத்தை இலக்கிய வானில் கட்டி எழுப்பியிருக்கிறீர்கள். வாசிப்பில் எழும் உச்ச உணர்ச்சிகள் என்னும் முழு நிலவு ஒளி அலைகளால், அந்த காதல் சித்திரம் இருண்டும் ஒளிர்ந்தும் முடிவிலா மாயங்களை, மகிழ்வு என்றும் துயர் என்றும் மாறிமாறி சித்தத்தில் எழுப்பிக் கொண்டே இருக்கிறது.

இப்படி மனிதர்களின் மனங்களை மயக்கிக் கட்டிப்போடும், உணர்வுகளை உச்சத்தில் தள்ளிக் கொல்லும் உங்களை என்ன செய்தால் தகும் என்று தெரியவில்லை. ஒரே நேரத்தில் ஒரு இலக்கியவாதியை திட்டித் தீர்க்கவும் உவந்து புகழ்ந்து போற்றவும் தோன்றுகின்ற என் நினைப்பை இந்தப் பித்து நிலையை எந்தக் கணக்கில் வைப்பேன் நான்?

மிக்க அன்புடன்

ஆனந்த் சுவாமி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 16, 2021 11:31

April 15, 2021

சித்திரைப் புத்தாண்டு

சென்ற தமிழ்ப் புத்தாண்டு வீடடங்கலில். கொன்றையின் எழிலைக்கொண்டு அந்நாளை கடந்தேன். இந்த தமிழ்ப்புத்தாண்டு நண்பர்கள் புடைசூழ மதுரையில்.  இவ்வாறு திட்டமிடவில்லை. இயல்பாக இது அமைந்தது.

நித்யசைதன்ய யதியின் இரு நூல்களையும் நாராயணகுருவின் அறிவு என்னும் சிறுநூலையும் வெளியிடுவதற்கு ஓர் அரங்கம் கூட்டப்படவேண்டும் என்று ’கருப்பட்டி கடலைமிட்டாய்’ ஸ்டாலின் சொல்லிக்கொண்டிருந்தார். சென்னை, கோவை என பல ஊர்கள் திட்டமிடப்பட்டு கடைசியில் மதுரை. மதுரை குக்கூ – தன்னறம் நண்பர்களின் மையம். அவர்களுக்கும் ஒரு கூடுகை தேவைப்பட்டது

13 ஆம் தேதி நானும் புகைப்பட நிபுணர் , கவிஞர் ஆனந்த் குமாரும், எழுத்தாளர் நண்பர் சுசீல்குமாரும் என் காரில் மதுரைக்குச்ச் சென்றோம். கிளம்பும்போது ஒருமணி. தோவாளையில் மதிய உணவு. கோடைகாலமானாலும் குமரியில் இப்போது மழை நிறைந்திருக்கிறது. மதுரை வரைக்கும்கூட முகில்களின் நிரை இருந்தது வானில்.

மாலை ஐந்தரை மணிக்கு நார்த் கேட் ஓட்டலுக்குச் சென்றுவிட்டோம். அடிக்கடி தங்கும் விடுதி அது. நன்றாகவே பழகி விட்டது. வழக்கமான விடுதிகளைப் போலன்றி நிறைய இடவசதி கொண்டது. பெரிய அறைகள்.

ஈரோடு நண்பர்கள் காலையிலேயே கிளம்பி திண்டுக்கல் செல்லும் வழியில் கள்ளி மந்தயத்திற்கு அருகில் உள்ள கீரனூரில் இருக்கும் கொண்டறங்கி மலையின்மேல் ஏறி அங்கிருக்கும் சுனை மல்லீஸ்வரர் கோயிலைப் பார்த்தபின்னர் வந்தனர். மாலையில் நார்த் கேட் ஓட்டலில் ‘ஜமா’ கூடிவிட்டது. வழக்கம்போல பெரும்பாலும் சிரிப்பும் கொஞ்சம் இலக்கியமும் தத்துவமுமாக உரையாடிக்கொண்டோம்.

இரவு பதினொரு மணிவரை நண்பர்கள் வந்துகொண்டே இருந்தனர். பலரும் குக்கூ நண்பர்கள் என்பதனால் செயலாற்றுதல், இலட்சியவாதத்தின் சமகாலப்பொருத்தம் ஆகியவை சார்ந்தே பெரும்பாலான பேச்சுக்கள் இருந்தன. மதுரை நண்பர் இளங்கோவன் முத்தையா வந்திருந்தார்.

மறுநாள் காலை ஆறுமணிக்கு சேர்ந்து நடந்து டீ குடிக்கப்போனோம். எல்லா வெளியூர் நிகழ்ச்சிகளிலும் இந்த காலையில் டீ குடிக்கச் செல்லும் நடை ஓர் இனிய அனுபவமாக நீடிக்கிறது. காலையில் மேலும் நண்பர்கள் வந்தனர். ஒன்பதரை மணிவரை விடுதியில் பேசிக்கொண்டிருந்துவிட்டு காந்திமியூசியம் அரங்கிற்குச் சென்றேன்

காந்தி மியூசியம் அரங்கில் இதற்குமுன் வே.அலெக்ஸ் ஒருங்கிணைத்த ஒரு நிகழ்ச்சிக்காக சென்றிருக்கிறேன். அது வேறு அரங்கு. இந்த அரங்கம் அழகானது. செம்மண்நிறமான கற்களை அடுக்கி கட்டப்பட்டது. கற்களால் தளம் அமைக்கப்பட்டது.  ‘நேர்த்தியான பண்படாத்தன்மை’ என ஓர் அழகியல் உண்டு. கைத்திறன் வெளிப்படையாகத் தெரிவது இந்தப் பாணி. தொன்மையை நினைவுறுத்துவதனால் மேலும் அழகு கொண்டது

நீண்ட இடைவேளைக்குப் பின் யூமா வாசுகியைப் பார்த்தேன். முன்பு சந்தித்ததை விட உற்சாகமாக இருப்பதைக் கண்டேன். சென்னையில் அவர் எப்போதுமே ஒரு வழிதவறிய பதற்றத்துடன் இருக்கிறார். இப்போது ஊரில் இருப்பதனால் அந்த மலர்ச்சி வந்திருக்கலாம்.

அங்கே நித்யா எழுதிய 3 நூல்கள் வெளியிடப்பட்டன. சுவரெங்கும் நித்யாவின் சட்டமிடப்பட்ட படங்கள். இருநூறுக்கும் மேற்பட்ட இளைஞர்கள். பெரும்பாலானவர்கள் மக்கள் நடுவே பல்வேறு வகையில் செயல்படுபவர்கள். அவர்கள் அனைவருமே குக்கூ சிவராஜ் அவர்களிடமிருந்து தூண்டுதல் பெற்றவர்கள்.  வாசிப்பு அவர்களுக்கு அறிவாணவ நிறைவோ பொழுதுபோக்கோ அல்ல. செயலுக்கான வழிகாட்டி. செயலின் ஒரு பகுதி. அத்தகையவர்கள் நடுவேதான் நித்யா சென்றடையவேண்டும். வாழ்நாளெல்லாம் அவர் செயலாற்றியது அதற்காகவே.

நித்யா சமாதியாகி இருபத்திரண்டு ஆண்டுகள் ஆகின்றன. அங்கே இருந்தவர்களில் அவரை நேரில் சந்தித்தவர்கள் நானும் யூமா வாசுகியும் மட்டுமே. மற்றவர்களுக்கு அவர் அவருடைய தரிசனங்களாக மட்டுமே அறிமுகம். அவருடைய சொற்கள் அத்தனை காலம் கழித்து தமிழில் ஆழமாக வேரூன்றியிருக்கின்றன. அதற்கு ஒரு சிறுபங்களிப்பை நான் ஆற்றியிருக்கிறேன்.

அதை திட்டமிட்டுச் செய்யவில்லை. தொடர்ந்து சென் சொற்களில் அவர் திகழ்வதனால் அது நிகழுமாறாயிற்று. அக்கணம் அங்கே கூடியிருந்தவர்கள் அளித்த நிறைவென்பது ஒருவகை வாழ்நாள் முழுமையுணர்வுதான்.

முற்றிலும் இளைஞர்கள் சூழ்ந்த அந்த அவையில் நின்றபடி நித்யாவைப் பற்றி எண்ணிக்கொண்டபோது இன்றைய காலகட்டத்துக்காக அவரை எப்படி தொகுத்துக் கொள்வது என்னும் எண்ணம் வந்தது. அவர் முற்றிலும் நவீன மனிதர். நவீன உளவியல் அவருடைய களம். ஐரோப்பிய தத்துவம், ஐரோப்பிய இலக்கியம், ஐரோப்பிய இசை ஆகியவற்றில் தேர்ச்சி கொண்டவர்.

ஆனால் இந்தியாவின் தொன்மையான மெய்யியலை, கலையை, இலக்கியத்தை அறிந்தவர். அவற்றில் வேரூன்றியவர். அவர் இயற்றிக்கொண்டிருந்தது ஓர் உரையாடலை. கிழக்கும் மேற்கும் ஆக்கபூர்வமாகச் சந்திக்கும் ஒரு புள்ளியை கண்டடைவதே இந்நூற்றாண்டின் சிந்தனையின் சவால் என அவர் எண்ணினார். அவருடைய ஆசிரியர்  நடராஜ குரு அதற்காக உருவாக்கிய அமைப்புதான் ஈஸ்ட்வெஸ்ட் யூனிவர்ஸ் என்னும் அமைப்பு.  நித்யா அதை முன்னெடுத்தார்.

ஆனால் விமர்சனம் நித்யாவின் வழி அல்ல. மறுப்பேகூட தேவையில்லை என்பது அவர் எண்ணம். உச்சங்கள், கனிவுகள் மட்டுமே கருத்தில்கொள்ளப்பட்டு நிகழ்த்தப்படும் ஒரு இணைவுத்தொகுப்பு- சமன்வயம்- தான் அவருடைய வழி.

நித்யா இந்தியாவின் அடித்தளச் சாதி ஒன்றிலிருந்து எழுந்தவர். துறவி என அந்த அடையாளங்களை கடந்தவர். இந்தியாவின் சமூக உச்சநிலைகளில் திகழ்ந்த அத்தனை மெய்ஞானங்களையும் நோக்கி எழுந்தது அவருடைய அறிவியக்கம்.

நித்யா நாராயணகுருவையும் காந்தியையும் கண்டவர்.  செயலூக்கம் கொண்ட இலட்சியவாதம் ஒன்றை முன்வைத்தவர். ஆனால் எப்போதும் நடைமுறைநோக்கு கொண்டிருந்தார். வெறும் கனவுப்பயணங்களை அவர் எப்போதுமே நிராகரித்துவந்தார். அவற்றை எப்போதுமே உளப்பகுப்பாளனின் மொழியிலேயே அணுகினார்.

அவருடைய சொற்களில் சொல்வதென்றால் இலட்சியவாதம் வாழ்வின் ஓர் உச்சநிலை அல்ல. அந்நிலையில் அது வெற்றுக்கனவுதான். இலட்சியவாதம் வாழ்வின் அன்றாடமாக இருந்தால் மட்டுமே அதனால் பயனுள்ளது. நாளும் செயல்படுத்தப்படாத இலட்சியவாதம் ஒரு பாவனை மட்டுமே

யூமா வாசுகி நானும் அவரும் நித்யா குருகுலத்திற்குச் சென்ற முதல்நாளைப் பற்றிச் சொன்னார். யூமா ஊட்டியின் குளிர் உண்மையில் என்ன என்று உணர்ந்து கண்ணீர் மல்கிய நாள் அது. அன்று அவர் முதலில் கையில் எடுத்த நித்யாவின் நூல் குழந்தைகளுக்காக அவர் எழுதியது. இருபத்தொரு ஆண்டுகளுக்குப் பின் அதை அவர் மொழியாக்கம் செய்திருக்கிறார்.

நான் நித்யாவின் சொற்களில் இருந்து தொடங்கி ஒர் உரையாற்றினேன். நம் சமூக வாழ்க்கையின் ஒவ்வொரு தளத்திலும் பெரும் பங்களிப்பை வழங்கியிருக்கும், வழங்கிக்கொண்டிருக்கும் மனிதர்கள் நிறைந்த அவை என்னை மேலும் எளியவனாகவே உணரச்செய்தது. என் சொற்கள் என்றுமுள ஆசிரியரின் சொற்கள், நான் ஊடகம் மட்டுமே என்று உணர்ந்தேன்.

இந்த அரங்கு வழக்கமான இலக்கியக்கூட்டங்கள் போல அல்ல. இங்கிருப்பவர்களின் வாசிப்பு மிகத்தீவிரமானது. அவர்கள் நூல்களை எடுத்துக்கொள்ளும் விதமும் வேறொருவகையானது. சமீபகாலங்களில் இத்தனை நூல்களில் நான் கையெழுத்திட்டு அளித்ததில்லை.

ஏராளமானவர்களில் தன்னறம் மிகுந்த செல்வாக்கைச் செலுத்தியிருக்கிறது. தன்னறம் என்னும் நூலைவிடவும் அச்சொல் வல்லமை மிக்கது என்று நினைக்கிறேன். சரியாக அமைந்துவிடும் ஒரு சொல் எல்லா அர்த்தங்களையும் தன்னுள்கொண்டு தான் வளர ஆரம்பித்துவிடுகிறது. அதை மந்திரம்போலச் சொல்லிச் சொல்லியே நாம் அனைத்தையும் பெற்றுவிடமுடியும்

இவ்விழாவிற்கு வந்திருந்த இளம் ஆளுமைகள் பலருக்கு அவர்களின் பங்களிப்பைச் சொல்லிக்காட்டி நித்யாவின் படங்களையும் சிவகுருநாதனின் நூற்பு அமைப்பின் கைத்தறி ஆடைகளையும் பரிசாக அளித்துக்கொண்டே இருந்தார்கள்.  ஒவ்வொருவரும் ஒரு வகையான சாதனையாளர், ஓர் ஆளுமை. என்றும் களப்பணியாளர்கள்மேல் வழிபாட்டுணர்வுகொண்ட எனக்கு ஒரு பெருந்திகைப்பையே அவர்கள் அளித்தனர்

சிவராஜ் அவர்கள் அனைவரையும் அடையாளம் கண்டுகொண்டு, அடையாளப்படுத்தி முன்னிலைப்படுத்தினார். அவருடைய இயல்பே பிறரை முன்னிலைப் படுத்துவதுதான். சிவராஜின் ஆளுமையில் இருந்து தூண்டுதல் கொண்டவர்கள் பலர். அங்கிருப்போருக்கு அந்த அங்கீகாரம் பெரிய விஷயம் அல்ல. ஆனால் அவர்கள் தங்களை ஒரு திரள் என, ஓர் அமைப்பு என உணர அது உதவுகிறது

சிவகுரு புத்தாண்டுக்கான கைநூற்பு ஆடைகளைக் கொண்டுவந்து தந்தார். சென்ற சில ஆண்டுகளாகவே அவருடைய ஆடைகளைத்தான் புத்தாண்டில் அணிந்துகொண்டிருக்கிறேன். சட்டென்று என்னை மிகமிக கௌரவமானவனாக, தூயவனாக உணரவைக்கின்றன அந்த ஆடைகள்.

 

தன்னறம் நூல்வெளி

http://www.nurpu.in fb: nurpuhandlooms
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 15, 2021 11:36

சித்திரை- பதிவுகள்

அன்புள்ள ஆசிரியருக்கு ….

சிவராஜ் அண்ணா Fb பதிவு

கல்லெழும் விதை

கிழக்கில் சூரியன் உதிக்கத் துவங்கும் முதல்நாளான சித்திரை 1ல், நமக்கு மனவலு தருகிற ஓர் ஆசிரியமனதின் நல்லிருப்பில் நண்பர்கள்சூழ நிகழ்வமைய வேண்டுமென நாங்கள் விரும்பினோம். நோயச்சகால மறுஅலை துவங்கியிருப்பதால், இந்நிகழ்வு உறுதிவர நிகழ்வதற்கான சாத்தியவாய்ப்புகளின் நிச்சயத்தன்மை இல்லாமலேயே இருந்தது.

எல்லாவகையிலும் நெருக்கடிகள் சூழ்ந்துவரினும், ஏதோவொருவகையில் உள்ளுணர்வு மட்டும் ‘நம்பு, நடக்கும்’ என்கிற சிற்றொளியைக் கடைசிவரை சுமந்துகொண்டே இருந்தது. நம்மைமீறிய ஆற்றலிடம் நம் அச்சங்களை ஒப்படைத்து நிகழ்வினை நிகழ்த்திடத் துணிந்து சிறுகச்சிறுக அமைந்திட குறுவாய்ப்புகளை சேகரித்தோம்.

நிகழ்விடத்திற்காக நிறைய அலைதலுக்குப்பின் இறுதியில் மதுரை காந்தி அருங்காட்சியகத்தின் ‘கல்லரங்கு’ தேர்வானது. மூன்று நாட்களுக்கு முன்பே, வெவ்வேறு ஊர்களிலுள்ள நண்பர்கள் ஒவ்வொருவராக வந்து அந்த நிகழ்விடத்தை மெல்லமெல்லத் தூய்மைப்படுத்தி நிகழ்வுக்குத் தக்கவாறு சீரமைத்தார்கள். நல்லுழைப்பு வழங்கிய நட்புக்கரங்களின் விளைவாக நிகழ்வின் வடிவமைப்பு எண்ணியவாறு திரண்டெழுந்து வந்தது.

ஐதராபாத், பெங்களூர், சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தோழமைகள் இந்நிகழ்வுக்காக நாளொதுக்கி பயணித்து வந்திருந்தனர். கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் என பயணத்தின் மெனக்கெடலைத் தாண்டி பலரும் இந்நிகழ்வுக்காகப் புறப்பட்டுவந்தது தன்னறத்திற்கு நிகழ்ந்த நல்லூழ் என்றே கருதுகிறோம்.

ஆசிரியர்கள் ஜெயமோகன், யூமா வாசுகி மற்றும் காந்தியமனிதர் தேவதாஸ் காந்தி ஆகிய மூவரின் முன்னிருப்பில் ‘கல்லெழும் விதை’ நிகழ்வு நன்முறையில் நிகழ்ந்தேறியது. எம்.கோபாலகிருஷ்ணன் தமிழில் மொழிபடுத்திய நாராயணகுருவின் ‘அறிவு’ புத்தகத்தை, எழுத்தாளர் ஜெயமோகன் வெளியிட, தமிழ் படைப்புச்சூழலில் தற்காலத்திய அறிவுச்செயல்பாடென உருவாகிவரும் மென்புத்தக/ மின்னனுநூல் உருவாக்கம் சார்ந்து இயங்கும் ஸ்ரீனிவாசன் கோபாலன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

யூமா அவர்கள் மொழிபெயர்த்த நித்ய சைதன்ய யதியின் ‘சின்னச் சின்ன ஞானங்கள்’ புத்தகத்தை, மதுரைப்பகுதியில் குழந்தைகள் மற்றும் இளையோர்களின் கல்விநலன் சார்ந்து இயங்கிவரும் சீடு அமைப்பைச் சேர்ந்த கார்த்திக் அண்ணனும் அவருடைய துணைவியும், தர்மபுரி பகுதியில் குழந்தைகளுக்காகத் தீவிரமாகச் செயலாற்றிவரும் கீதா அவர்களும் பெற்றுக்கொண்டனர்.

நித்ய சைதன்ய யதியின் ‘தத்துவத்தின் கனிதல்’ புத்தகத்தின் வெளியீட்டுப் பிரதியை, நூற்பு சிவகுருநாதனும் துவம் பொன்மணியும் ஆசிரியர் ஜெயமோகன் கரங்களால் பெற்றடைந்தனர்.

மூன்று நூல்களின் வெளியீடு  குரு நித்ய சைதன்ய யதியின் ஆளுமையிருப்பை கணத்திற்குக் கணம் மனத்திற்குள் நிறைத்தது. யதியை முதன்முதலாக தான் சந்தித்த தருணத்தையும், அந்நற்சூழலில் ஜெயமோகன் அவர்கள் சொன்ன சொற்கள் அளித்த ஒளியும் தன்னை எவ்வாறு வாழ்வெழச் செய்தது என யூமா பகிர்ந்தபொழுது, நிகழ்விலிருந்த எல்லோர் அகமும் ஈரங்கசிந்து நிறைந்திருந்தது. உலகறியா குழந்தையின் கள்ளமின்மையச் சுமந்திருக்கும் யூமாவின் படைப்புமனதை நன்றியோடு நாங்கள் பற்றிக்கொள்கிறோம்.

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்நிகழ்வின் மணிமகுடமென நின்றொலித்தது ஜெயமோகன் அவர்களின் உரைதான். இவ்வுரை தன்மீட்சியின் நீட்சியுரை என்றே எங்கள் எல்லோர் உள்ளத்திலும் உள்ளொலித்தது. இருண்மைக்குள் இழுத்துப்போகும் வாழ்வுச்சூழலிலிருந்து, எப்படி நம்மை நாமே மீட்டெடுத்து, உயரிய லட்சியவாத நோக்கங்களுக்குள் தத்துவ ரீதியாகவும் சிந்தனை ரீதியாகவும் நம்முடைய செயல்திசையை ஆற்றுப்படுத்திக் கொள்வது என்பதாக அவருடைய நல்லுரை அமைந்தது. சொல்பிடித்து மீள்கையடையும் அனைவருக்கும் நேற்றைய உரை என்பது குன்றாத உளவூக்கத்தை நிச்சயம் தந்திருக்கும்.

ஜெயமோகன் அவர்கள் பேசிய உரை, ஒருகட்டத்தில் அங்கிருக்கும் மனச்செவிகளுக்குள் அலையலையாக சென்றடைவதையும், அர்த்தநுனி தீண்டிவிடும் கணத்தில் அங்கிருப்பவர்கள் எழுப்பிய கைதட்டலும், முகச்சிரிப்பும், கண்ணீர் விழிகளும், அவ்வப்பொழுது எழுந்த உரத்தகுரல்களும் என பாவனைகள் தோற்கிற பேருண்மையை எங்கள் கண்முன் நிறுத்திக்காட்டியது.

யூமா வாசுகி அவர்களுடைய இருப்பென்பது புத்தசிலைக்கு முன்பாக நின்றிருக்கும் ஒரு மனநிலையை நமக்களிக்கக் கூடியது. நன்றிநவிழ்தலால் தன் வாழ்வை நிரப்பிக்கொள்ளும் யூமா அவர்களை, நாம் பின்பற்றி ஏற்கவேண்டிய படைப்பாசானாக இளையோரிடத்தில் முன்னிறுத்துவதை காலச்செயல் என்றே தன்னறம் கருதுகிறது.

நிகழ்வின் முதற்துவக்கத்தில், ஊர்க்கிணறு புனரமைப்பு இயக்கத்தின் மூலமாகத் தூர்வாரி மீட்டெடுக்கப்பட்ட எல்லா கிணறுகளின் தண்ணீரும் கொண்டுவரப்பட்டு, நித்ய சைதன்ய யதிக்கு எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் கரங்களால் நீர்ப்படையலாக படைக்கப்பட்டது.

மேலும், தன்மீட்சி வாசிப்பனுபவங்களை பகிர்ந்துகொண்ட வாசகத் தோழமைகளில் தேர்வுசெய்யப்பட்டவர்கள் இந்நிகழ்வுக்கு வந்திருந்ததும், அவர்களுக்கான கெளரவிப்பு ஜெயமோகன் அவர்களின் கரங்களால் நிகழ்ந்ததும் தன்மீட்சி புத்தகத்தை இன்னுமின்னும் உயிர்த்தன்மை உடையதாக மாற்றிவிட்டது.

கல்லெழும் விதை பற்றிய நிகழ்வுக்குறிப்பு எழுத முயலுகையில், ஒன்றடுத்து ஒன்றென நிகழ்வுக்கு வந்திருந்த மனிதமுகங்களும், அங்கு நிகழ்ந்த அனுபவங்களுமென ஏதேதோ நினைவுகள் மனதுக்குள் ததும்பிப் பாய்கிறது. நிகழ்வின் ஒட்டுமொத்த சாரம்சத்தையும் ஒற்றைப்பதிவில் வெளிப்படுத்திவிட இயலாது என்பதை நன்கறிகிறோம்.

எல்லோருக்குள்ளும் ஒரு நல்லதிர்வுக் கதை எனத் தங்கிவிட்டது இந்தக் கல்லெழும் விதை நிகழ்வு. ஒவ்வொன்றாக, அது உரிய காலத்தில் எண்ணத்திலிருந்து முளைத்தெழும். நிகழ்வுபற்றிய முழுப்பதிவை இன்னும் சிலநாட்களில் எழுதுகிறோம். தற்போதைக்கு நிகழ்வின் ஆசித்தருணங்களை ஒளிப்படங்களாக உங்களோடு பகிர்வதில் நன்றிகொள்கிறது தன்னறம்.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 15, 2021 11:35

சீன மக்களும் சீனமும்- விவேக் ராஜ்

வணக்கம் ஜெ

நூலகத்தில் ஒரு பழைய நூல் கண்ணில் பட்டது. அது லின் யூடாங் (Lin Yutang) எழுதிய My country and my people என்ற நூலின் தமிழாக்கம்- சீன மக்களும் சீனமும்.  இது சீன சமூகத்தைப் பற்றிய ஒரு சமூக நூல். ஆட்சியாளர்களின் வரிசையைவிட இப்படிப்பட்ட நூல்களே ஒரு சமுதாயத்தைப் பற்றி அறிய உதவுகின்றன. இது முப்பதுகளில் எழுதப்பெற்று நாற்பதுகளில் தமிழ் மொழியாக்கம் செய்யப்பட்டது. ‘புதுமைப் பதிப்பகம் லிமிட்டெட், காரைக்குடி’ என்ற பதிப்பகம் இதை வெளியிட்டுள்ளது. இது இப்போது இருக்கும் புதுமைப் பதிப்பகமா என்பது தெரியவில்லை.

ஒரு சமூகத்தைப் பற்றி நாம் எவ்வாறு புரிந்துகொள்கிறோம் ? எதன் அடிப்படையில் அச்சமூகத்தின் பண்பாட்டுப் போக்கை மதிப்பிடுகிறோம் ? குறிப்பாக ஒரு பண்பாட்டுச் சூழலைச் சார்ந்த ஒருவர் முற்றிலும் வேறொரு பண்பாட்டுச் சூழலை அறிய முற்படும்போது அவருடைய பார்வை முறை, அளவுகோல் என்னவாக இருக்கும் ? ஒரு சமூகத்தை அதனளவில் அப்படியே அறிந்து அதை பிறர்க்கு சொல்லும் தகுதியுடையவர் யார் யார் ? இந்த விளக்கத்திலிருந்தே ஆசிரியர் நூலைத் துவங்குகிறார். இந்தியா, சீனா போன்ற கீழைச் சமூகங்களைக் கவனிக்கும் மேலைக் கண்களில் அருவருப்பையும், கழிவிரக்கத்தையுமே பெரும்பாலும் காண்கிறோம். முற்றிலும் மாறுபட்ட  சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் ஒரு சமூகத்தை அறிய முயலும்போது முன்முடிவுகள், விருப்பு வெறுப்புகள், கொள்கைகள் ஆகியவற்றை கடந்து உணர்வுப்பூர்வமாக அறிய முயலவேண்டும் என்கிறார். மேலும் நவீன பொருளாதார சூழல், ஜனநாயகம் போன்ற விஷயங்களை மனதிற்கொண்டு ஒரு பெரும் பண்பாட்டுச் சூழலை அறிய முற்படுவது தவறான   முடிவுகளுக்கு இட்டுச் செல்லும் என்கிறார்.

மேலை நாட்டினரிடம் சீனம் பற்றிய எண்ணங்கள் எவ்விதம் உருவாகின்றன ? சீனாவில் பல ஆண்டுகள் தங்கி மூன்று மைல் சுற்றளவுக்கு மேல் பயணம் செய்யாத மேலை நாட்டுக் குமாஸ்தா, மதப்பிரச்சாரகர்கள், கப்பல் பயணம் செய்துவந்த மாலுமிகள், அந்நிய அரசாங்கத்தின் காரியதரிசி, ஒரு வியாபாரி, இவர்கள் தான் சீனாவைப் பற்றி மேலைச் சமூகத்தினரிடம் புத்தகம் எழுதுகிறார்கள்.  வெறும் சமூகத்தின் புறத்தோற்றத்தையோ, நடையுடை பாவனையையோ வைத்து ஒரு சமூகத்தை மதிப்பிட முடியாது. மனிதப் பண்புகளை ஆராய வேண்டும். இந்நூலில் அவர் சீன சமூகத்தை விளக்க முற்படும் விதம் அவர்களின் நடத்தைகளும், மனஅமைப்பும் பற்றியது. இந்தப்போக்கு அங்கு எம்மாதிரியான மதங்களை, சமூக நிறுவனங்களை உருவாக்கியது என்பதே இதன் சிறப்பான விஷயம். இதில் அவர் விவரிக்கும் பல விஷயங்கள் இந்தியாவுக்கும் பொருந்தும். கிழக்கின் தன்மை அது.

அவ்வப்போது நிகழ்ந்த மங்கோலியப் படையெடுப்பு தவிர்த்து சீனத்தில் தொலை தேசங்களின் ஆக்கிரமிப்பு என்பது பெருமளவில் நிகழவில்லை. மங்கோலிய இனக்கலப்பு காரணமாக வட மற்றும் தென் சீனத்திற்கு சிற்சில உடல் சார்ந்த, கலாச்சாரம் சார்ந்த வேறுபாடுகளும் உள்ளன. குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை வடக்கிலிருந்து நிகழ்ந்த படையெடுப்பு காரணமாக புதிய ரத்தக் கலப்பும், புதுவகைப் பண்பாடும் தோன்றியிருக்கின்றன.

சீனர்களின் நடத்தைகளை பற்றிச் சொல்லுமிடத்து, கனிவு, பொறுமை, அசிரத்தை, கிழக்குறும்பு, அமைதி விருப்பம், திருப்தி போன்ற விஷயங்களை அவர்களின் இயல்புகளாகச் சொல்கிறார். நாம் வாழும் இவ்வுலகுக்குப் புறம்பான எவ்விஷயத்திலும் சீனர்களுக்குப் பற்றில்லை. அதனால் மத சம்பந்தமான எவ்வித ஜால வித்தைகளிலும் அவர்கள் மாட்டிக்கொள்ளவில்லை. அதனால் அவர்கள் நாட்டம் முழுவதும் நடத்தை உயர்விலேயே பதிந்துவிட்டது. மிதமிஞ்சிய நிதானப்போக்கு அவர்களை கட்டற்ற மனப்போக்கிலிருந்தும், கற்பனை மன மயக்கங்களிலிருந்தும் தடுத்துவிடுகிறது. இளம் பருவத்து சீற்றங்களையும், உலகையே சீர்திருத்தப் புறப்படும் நவீன விழுமியங்களையம் எள்ளி நகையாடுபவர்கள் சீனர்கள். தனிநபர் சுதந்திரத்துக்கு போதுமான அமைப்பு பலம் இல்லாத போது எதிலும் அசிரத்தை உண்டாகிவிடுகிறது.

சீனர்களின் விநோத இயல்பு ‘கிழக்குறும்பு’. இந்தக் கிழவன் யார் ? இவன் வாழ்க்கையில் பட்டுப் பழகிப்போனவன்; லோகாயதவாதி, அலட்சியக்காரன், முற்போக்கில் நம்பிக்கையில்லாதவன். கிழக்குறும்பின் தன்மை என்பது ‘கனிவு’தான். இவன் கனிந்தவன். அதனால் இவனிடம் கொந்தளிப்பு இல்லை. மேலும், இத்தன்மை இலட்சியப் போக்கைத் தடுத்துவிடுகிறது; மனித முயற்சியின் வீண்தன்மையை நகைக்கிறது. மனித முயற்சியை, உண்டு, உறங்கி, களிக்கும் உடல் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு நிறுத்திக் கொள்கிறது. வரலாற்றுக்கு பொருளாதார வியாக்கியானம் செய்வது சீனர்களின் தேசிய உணர்வாகவே இருந்துவருகிறது. இக்கிழக்குறும்பு முதிர்ந்த பண்பாட்டுக்கே உரியது. மேற்கின் இள தேசங்கள் இப்போக்கை மதிக்காது. கிறிஸ்தவர்கள் போதனை செய்வதுபோல சும்மா செத்துப்போவதற்காக சீனர்கள் வாழவில்லை. மேற்கைப் போல இன்பம் பயக்கும் கனவுலகை நாடியும் அவர்கள் வாழவில்லை. இவ்வுலகின் சாதாரண வாழ்வை ஒருமாதிரி ஒழுங்குசெய்துகொண்டு வாழவேண்டும் என்பதே சீனர்களின் விழைவு. மேற்கின் குணங்களாகிய பெருமிதம், பொதுவாழ்வில் பற்றுதல், போர்வீரன் போன்ற துணிச்சல், சீர்திருத்த விழைவு, போன்றவை சீனர்களிடம் கிடையாது. மேலும் எதிலும் எளிதில் திருப்தியடைந்து விடுபவர்களாகவே சீனர்கள் உள்ளனர்.

சமயம்– இப்போக்குகளின் உருவாக்கமே சீனாவின் முதன்மையான இரு சமயங்களான கான்ஃபூஸியமும் (Confucius), தாவோயிஸமும் (Tao) ஆகும். அவை இத்தன்மைகளை மேலும் மெருகேற்றிவிடுகின்றன. இவையிரண்டையும் மத நிறுவனம் என்றோ, மதநம்பிக்கை என்றோ கொள்ள முடியாது. சீனத்தன்மையின், அதன் இயல்பின் ஒரு திரண்ட கருத்தியல் வடிவமேயாகும்.

சீனர்களின் வாழ்க்கை இலட்சியம் என்பது எளிய குடும்ப வாழ்வை அனுபவிப்பதும், ஒன்றுபட்ட சமூகத் தொடர்பை ஏற்படுத்திக்கொள்வதுமே ஆகும். இதன் சரியான வெளிப்பாடே கான்ஃபூஸியம். வாழ்க்கை நியதிகளையும் ஒழுங்குமுறைகளையும் அது வகுத்துரைக்கிறது. இது ‘கான்ஃபூஸியப் பொது அறிவு’ எனப்படுகிறது. கான்ஃபூஸியஸ் உலகில் உள்ளதையே நம்பும் இயல்புடையவர். ஆனால் இத்தகைய கான்ஃபூஸிய யதார்த்தவாத, மனிதப்போக்கு சீனத்திற்கு போதுமானதாக இல்லை. அது மனிதனுடைய இயற்கை உணர்வுகளைத் திருப்திப்படுத்தவில்லை. எனவே தாவோவிற்கும், பௌத்தத்திற்குமான தேவை எழுந்தது.

தாவோ கொள்கையின் மூலநூல் ‘தாவோ தே ஜிங்’ (tao te ching). இதை எழுதியவர் லாவோ ட்ஸு (Lao Tzu). இதற்குப் பொருள் ‘கிழவர்’ (Old Master) என்பது. கிழக்குறும்பின் ‘சும்மா இருப்பதன்’ வெளிப்பாடாகவே இம்மரபு உள்ளது. எதிலும் குறும்புத்தன அலட்சியம், சகலத்திலும் அவநம்பிக்கை, மனித முயற்சிகளை நகைப்பது போன்றவைகள்தான் இதன் கூறுகள். கான்ஃபூஸியக் கொள்கை நியாயப்போக்கு, ஒழுங்குமுறை, கச்சிதம் ஆகியவற்றை உடையது. ஆனால் மனிதனின் அந்தரங்க ஆசைகளை அதனால் ஈடுசெய்ய முடியவில்லை. கான்ஃபூஸியம், வாழ்வில் எல்லாம் நடக்கும், நடத்திக்கொள்ள முடியும் என்ற நோக்குடையது. தாவோயிஸம், வாழ்வில் ஒன்றும் நடவாது என்ற நோக்குடையது. கான்ஃபூஸியவாதி காரியவாதி; தாவோவாதி ஒரு மாயாவாதி. கான்ஃபூஸியம் ஒரு வலியுறுத்தல்; தாவோ ஒரு மறுப்பு. இவ்விரு போக்குகளும் இரு துருவங்களாக இருந்து  சீன சமூகத்தை சமநிலையில் வைத்திருப்பதாகக் கூறுகிறார். வாழ்க்கையில் ஒன்றும் சாதிக்க முடியாது என்ற கொள்கையைப் பொறுத்தவரை பௌத்தம் என்பது சற்று மெருகேறிய தாவோயிஸம்தான். பௌத்தம் சீனர்களின் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட ஒன்று. அதில் தர்க்கரீதியான வழிவகை உள்ளது. மாயாவாதம் உள்ளது. அறிவைப்பற்றிய சித்திரம் உள்ளது. மேலும், சீனர்களின் கற்பனைத் திறனுக்கு பௌத்தம் ஒரு முக்கியக் காரணம் என்கிறார்.

அறிவியலும் தர்க்கமும் இல்லாமை (Lack of Science and Logic)– கிரேக்கர்களின் மனம் விஷயங்களை பிரித்து ஆராயும் (analytical) இயல்புடையது. அவர்கள் நவீன அறிவியலுக்கு அடித்தளமிட்டார்கள். அளவை நூலிலும் வான சாஸ்திரத்திலும் எகிப்தியர்கள் சிறந்து விளங்கினார். இந்துக்கள் தங்களுக்கே உரிய இலக்கணங்களை உருவாக்கினர். ஆனால் சீனர்களின் கணிதமும், வான சாஸ்திரமும் வெளியே இருந்து வந்தவை என்கிறார். சீனர்களின் மனதில் தர்க்கம் (Logic) இல்லை. சாமானிய ஒழுக்க நடத்தைகள் பற்றிச் சொல்வதில்தான் அவர்கள் மனம் அமைவு காண்கிறது. சீனத்தில் சாஸ்திர மொழி இல்லாத தன்மையே நிலவியது. பின்பு சிங் (Ch’ing) பரம்பரையில்தான் ஒன்றோடொன்று ஒப்பிட்டுப் பார்க்கும் முறை (comparative method) ஏற்பட்டது. இயற்கை அறிவும் நுண்ணுணர்வும் கொண்டு பளிச்சென்று வீசும் உண்மைகளையே சீனர்கள் விரும்பினர். மேலை நாடுகளைப் போன்று ”ஐஸ்க்ரீமை கூர்ந்து ஆய்வு செய்து, இறுதியில் அதிலுள்ள சர்க்கரையின் முக்கிய நோக்கம், அந்த ஐஸ்க்ரீமை இனிக்கும்படிச் செய்வது என்று அறிவிக்கும் அறிவியல் ஆய்வு (!) என்னும் கெட்டிக்காரத்தனத்தை சீனர்களிடம் காண முடியாது” என்கிறார்.

உண்மையை நிரூபித்துக் காட்ட முடியாது; அதை உணரத்தான் முடியும். உள்ளுணர்வின் மூலம் உண்மையை அறியலாம் என்பது சீனர்களின் நம்பிக்கை. எனவே அங்கு தர்க்கம் வளர்ச்சியடையவில்லை. அதைவிட சிறந்ததாக அவர்கள் பொது அறிவை (Common Sense) நம்புகிறார்கள். சுவாங்த்சே (chuang tse) என்பவர் சிலுவூன் (Ch’iwulun) என்ற தமது நூலில் ‘அறிவு’ என்பது ஒவ்வொருவரின் எண்ணத்தைப் பொறுத்ததே (subjectivity of knowledge) என்கிறார்:

”நம்மிருவருக்கும்‌ இடையே சபதம்‌ நடக்கிறது. நீ என்னை ஜெயித்‌துவிட்டதாக எண்ணிக்கொள்ளுகிறாய்‌;  நீ அறிவில்‌ உயர்ந்தவனென்று ஏற்றுக்கொள்ள நான்‌ தயாரில்லை. அப்படியானால்‌, வாஸ்தவத்தில்‌ நீ எண்ணுவதுதான்‌ சரி, நான்‌ எண்ணுவது தவறா ? உன்னை ஜெயித்துவிட்டதாக நான்‌ எண்ணிக்கொள்ளுகிறேன்‌; நீ அதை ஒப்புக்கொள்ளத்‌ தயாராயில்லை. அப்படியானால்‌, வாஸ்தவத்தில்‌ நான்‌ எண்ணுவதுதான்‌ சரி, நீ எண்ணுவது தவறா ? அப்படியில்லை யென்‌றால்‌, ஒருவேளை நாம்‌ இருவரும்‌ எண்ணியது சரியா ? அல்லது இருவர்‌ எண்ணியதும்‌ தவறா ? இந்த விஷயம்‌ நம்மிருவருக்கும்‌ தெரியாது. எனவே, நமது அறிவு இருளால்‌ சூழப்பட்டிருக்கிறது. பிறகு நம்‌ இருவரில்‌ யார்‌ உண்மையை நிலைநிறுத்தப்‌ போகிறோம்‌ ? நீ சொல்‌வதைச்‌ சரி என்று ஏற்றுக்கொள்ளுகிற ஒரு மனிதன்‌ அந்த உண்‌மையை நிலைநிறுத்தும்படி நாம்‌ அனுமதிப்‌போமேயானால்‌, நீ சொல்லுவதை ஏற்கெனவே அவன்‌ ஒப்புக்கொள்ளுகிறான்‌. எனவே, அவன் உண்மையை எப்படி, நிலைநிறுத்த முடியும்‌ ? நான்‌ சொல்லுவது சரி என்று ஏற்றுக்கொள்ளுகிற ஒரு மனிதனை அதை நிலைநிறுத்தும்படி நாம்‌ அனுமதிப்போமேயானால்‌, அவன்‌ ஏற்கெனவே நான்‌ சொல்வதை ஒப்புக்கொள்ளுகிறான்‌. அவன்‌ எப்படி உண்மையை நிலைநிறுத்த முடியும்‌ ? நாம்‌ இருவர்‌ சொல்லுவதையும்‌ ஏற்றுக்கொள்ளாத ஒருவனை உண்மையை நிலைநிறுத்தும்படி நாம்‌ அனுமதிப்போமேயானால்‌, ஏற்‌கெனவே அவன்‌ நாம்‌ இருவர்‌ சொல்லுவதையும்‌ ஒப்புக்கொள்ளவில்லை. அவன் எப்படி உண்மையை நிலைநிறுத்த முடியும்‌ ? நாம்‌ இருவர்‌ சொல்வதும்‌ சரி என்று ஒப்புக்கொள்ளுகிற ஒருவனை உண்மையை நிலைநிறுத்தும்படி விட்டுவிடுவோமேயானால்‌ அவன்‌ ஏற்கெனவே நாம்‌ இருவர்‌ சொல்லுவதையும்‌ சரியென்று ஒப்புக்கொள்ளுகிறான். அவன்‌ எப்படி உண்மையை நிலைநிறுத்த முடியும ? எனவே, நீயும்‌ நானும் இதர ஜனங்களும்‌ உண்மை இதுதான்‌ என்று தெரிந்துகொள்ள முடியாது. அப்படியிருக்கும் போது, உண்மையைச்‌ சொல்ல இன்னொரு‌ ஆசாமி வருவார்‌ என்று நாம்‌ எப்படிக்‌ காத்திருக்க முடியும்‌ ?”

சமூக மனப்போக்கு இல்லாமை (absence of social mind), குடும்ப அமைப்பு, சமூக வகுப்புகள், கிராமமுறை– சீனர்கள் குடும்ப மனப்பான்மை உள்ளவர்கள்; சமூக மனப்பான்மை உள்ளவர்களல்லர். இங்கு குடும்ப அமைப்பே தேச அமைப்பாக மாறிப்போகிறது. தேசக்குடும்பம் (State family) என்ற சொல்லையே கையாளுகிறார்கள். சமூக விழாக்களும் அங்கு உண்டு. சீனர்களின் விளையாட்டுகள் கூட தனிநபர் விளையாட்டுகளாகத்தான் உள்ளன. கோஷ்டி சேர்ந்து விளையாடும் பழக்கம் அங்கு இல்லை. சமூக சீர்திருத்தமோ, பொதுவாழ்வுச் சீர்திருத்தமோ கோமாளித்தனமானதாகவே அங்கு கருதப்படுகிறது. சீன சமுதாயத்தின் ஆணிவேர் குடும்ப அமைப்புதான். அதிலிருந்து வளர்ந்து வந்த கிராம அமைப்புதான் சீனர்களின் சமூக அமைப்பாகும். மதம் செய்ய வேண்டிய வேலையைக் கிட்டத்தட்ட குடும்ப அமைப்பு செய்கிறது. இந்தக் குடும்ப அமைப்புக்கு அடிப்படையாக இருப்பது கான்ஃபூஸியத் தத்துவமே. அதே சமயம் குடும்ப முறையில் உள்ள சீர்கேடும் ஊழலும் அங்கும் உண்டு.

சீனத்தில் நிலையான வர்க்க வேற்றுமைகள் (established classes) இருந்ததில்லை. தேர்வில் தேறிவிட்டால் யாவரும் சமூக அந்தஸ்தை அடையலாம். தாங்  (T’ang) அரச பரம்பரையினர் தேர்வு முறையை ஆட்சியில் ஏற்படுத்தினர். இங்கு கனவான்கள் வகுப்பு உள்ளது. ஆனாலும் அது நிரந்தரமானது அல்ல. இங்கு பலவித குடும்பங்களே உண்டு. அதிஷ்டம் விட்ட வழியில் இவர்கள் மேலும் கீழுமாய் உருண்டோடிக்கொண்டேயிருப்பார்கள். அங்கு நிரந்தரமான வர்க்கப் பிரச்சனைகள் இல்லை; சாதிகளில்லை; ஐரோப்பியப் பிரபுத்துவம் இல்லை. பல்வேறு வகுப்பினர்களான படிப்பாளிகள், விவசாயிகள், தொழிலாளர்கள், வர்த்தகர்கள் ஆகியோரிடையே கூட்டுறவு உள்ளது. வகுப்பு எதிர்ப்பு இல்லை. சமூக மனப்போக்கு இல்லாத நிலையில் சீனாவில் பொது காரியங்கள், அதற்கான முயற்சிகள் அனைத்தும் கிராம முறையிலேயே நடைபெறுகின்றன. இதன் காரணமாக ஒருவித கூட்டுறவு/ பொதுவுடைமை ஆட்சி ஏற்படுகிறது. சீனாவின் உண்மையான சர்க்கார் என்பது இந்த கிராம முறையின் சர்க்கார்தான்.

மேற்சொன்ன விஷயங்களிலிருந்து இன்றைய நவீன சீனா பல வகைகளில் மாறியிருக்கலாம். அதற்கு நவீன பொருளாதார, தொழில்நுட்ப போட்டிச் சூழல் காரணமாக இருக்கலாம். ஆனால் ஒரு பெரும் பண்பாடு என்ற முறையில் இந்தியத்தனமும் சீனத்தனமும் தவிர்க்கவியலா ஒரு சமநிலைச் சக்தியாகத் திகழும்.

விவேக் ராஜ் 

https://archive.org/details/20210303_20210303_0559/mode/2up

https://archive.org/search.php?query=creator%3A%22Lin+YuTang%22

https://en.wikipedia.org/wiki/Lin_Yutang

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 15, 2021 11:34

அசோகமித்திரன் – கடிதங்கள்

நான் உங்களின் எழுத்துகள் மூலம் மூத்த எழுத்தாளர் அமரர் அசோகமித்திரனை அறிந்தேன் வியந்தேன்.

அவரது தனிப்பட்ட அறத்தையும், எழுத்தின் மீது கொண்ட எதிர்பார்ப்புகள் இல்லாத காதலும் என்னை அவர்மேல் அளவுக்கு அதிகமான மதிப்பும் மரியாதையும் உருவாக்கியது.

என் மகனுக்கு அவர் பெயரை வைத்தேன். தினமும் என் மகனை அவர் பெயரில் அழைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்!!!

ஒரு கேள்வி:

அசோகமித்திரன் என்ற பெயருக்கு பொருள் என்ன? அவர் எதனால் அந்த பெயரை சூட்டிக்கொண்டார்?

இப்படிக்கு,
தமிழ்ச்செல்வன் கோவை

***

அன்புள்ள தமிழ்ச்செல்வன்,

ஆச்சரியம்தான். அசோகமித்திரன் என்று எவரும் குழந்தைகளுக்குப் பெயரிட்டதில்லை

அசோகமித்திரன் எழுதிய குறிப்பின்படி அவர் இளமையில் ஒரு நாடகத்தில் நடித்தார். அக்கதாபாத்திரத்தின்பெயர் அசோகமித்திரன். அது ஒரு சின்ன கதாபாத்திரம். ஒரு துணைவன். கதைநாயகனோ தனித்தன்மைகொண்டவனோ அல்ல, வெறும் தோழன்.

தனக்கு அக்கதாபாத்திரத்தின் இயல்பும் பெயரும் பிடித்திருந்தமையால் அப்பெயரை சூட்டிக்கொண்டதாக அசோகமித்திரன் சொல்லியிருந்தார்

ஜெ

***

அன்புள்ள ஜெ

நான் உங்கள் வழியாகவே அசோகமித்திரனை அறிமுகம் செய்துகொண்டேன். ஆரம்பத்தில் அவர் கதைகளை படித்தபோது வெறும் நிகழ்ச்சிகளைச் சொல்கிறாரே என்று தோன்றியது. பிறகுதான் உங்கள் கட்டுரைகள் வழியாக அவருடைய கதைகளை எப்படி வாசிப்பதென்று புரிந்துகொண்டேன். அது எனக்கு அவரை மிக நெருக்கமாக ஆக்கியது

எனக்கு அவர் என் அப்பா போல. அப்பா ஒரு சின்ன அலுவலகத்தில் டெஸ்பாட்ச் கிளார்க் ஆக இருந்து ரிட்டயர் ஆனார். அதிர்ந்து பேசமாட்டார். தனியான மனிதர். ஆனால் நல்ல நகைச்சுவை உணர்வும் கனிவும் உண்டு. அவர் ஒதுங்கியிருந்து உலகைப் பார்த்தவர். அந்தப்பார்வையை அசோகமித்திரனில் கண்டேன்

ராஜேந்திரன்

***

அன்புள்ள ராஜேந்திரன்

சாமானியனின் பார்வை என ஒன்று உண்டு. உயர்ந்தவை என எதையும் ஏற்கவும் தாழ்ந்தவை என முற்றாக ஒதுக்கவும் தயங்கும் ஒரு பார்வை அது. மானுட வாழ்க்கையை அனுதாபத்துடன் அணுகுவது. அதுதான் அசோகமித்திரன்

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 15, 2021 11:33

முகில்- கடிதங்கள்-4

Pair Clouds Mood Sky Flying Birds Blue Swallows

அன்புள்ள ஜெ

நீங்கள் சொன்னதுபோலவே அந்த முகில் இந்த முகில் என்னுடைய ரசனையுலகு சார்ந்த கதை அல்ல. இந்த வகையான ரொமாண்டிக் கதைகளை ஒரு வகை தப்பித்தலாகவே பார்ப்பவன் நான். ஆனால் அந்த முகில் இந்த முகில் வெறும் ஒரு கற்பனாவாதக் கதை அல்ல. யதார்த்தமாகச் சொன்னால் ஒருவன் ஒரு பெண்ணைப் பார்த்துக் காதல்கொள்கிறான். பிரியநேர்கிறது. நினைத்துக்கொண்டே இருக்கிறான். அந்த நினைவிலிருந்து மீள முடியவில்லை. அவ்வளவுதான் கதை. ரொமாண்டிக்காகச் சொன்னால் அவனுடைய பரவசம் அவஸ்தை இரண்டும்தான் கதை.

ஆனால் இதை இலக்கியமாக ஆக்குவது இரண்டு விஷயங்கள். கதையில் உள்ள சிக்கலான செறிவான படிமங்களும் கலாச்சாரக் குறிப்புகளும். அந்தக்காலச் சினிமா பற்றிய ஏராளமான கலாச்சாரக் குறிப்புகள். ஆனால் அவையெல்லாம் செய்திகளாக இல்லாமல் படிமங்களாக உள்ளன. உதாரணமாக பட்டப்பகல்தான் நிலவொளியாக ஆகியிருக்கிறது. அந்த ஃபில்டர். அதுதான் காதல். அந்தப் படிமம் போல கறுப்புவெள்ளையில் தொடங்கி குறியீடுகள் குவிந்துகிடக்கின்றன. மேகம் என்று அவளைச் சொல்லும்போது அவள் தலைமுடி சொல்லப்படுகிறது. ஆனால் நேரடியாக உவமை சொல்லப்படவே இல்லை.

அத்துடன் கதைமுழுக்க பரவி கூர்ந்து வரிவரியாக வாசிக்கவைக்கும் மனசு பற்றிய அப்செர்வேஷன்கள். மனம் எப்படி தனக்குத்தானே வேஷம் போடுகிறது, எப்படி தன்னையும் துன்புறச்செய்து பிறரையும் துன்புறுத்தி அந்த வலியைச் சுவைத்து மகிழ்கிறது என்பதுபோன்ற பலநூறு இடங்கள். கதையை மட்டும் வேகமாக வாசித்துச் செல்பவர்கள் அதை இழந்துவிடுவார்கள். அவர்கள் இந்நாவலுக்கான வாசகர்களே கிடையாது.

ஒவ்வொரு இடத்திலும் கொஞ்சம் நெருங்கியதும் அவன் ஏன் தேள் மாதிரி விஷக்கொடுக்கால் கொட்டுகிறான்? அந்த மனநிலை எப்படி அவனில் உருவாகிறது? அவன் அவளை இழந்தபின் அந்த கொடுக்கால் தன்னைத்தானே கொட்டிக்கொண்டு கிறுக்கன் ஆகிவிடுகிறான்

 

ஆர்.பாஸ்கர்.

 

அன்புள்ள ஆசிரியருக்கு,

முகில் குறுநாவல் ஒரு கனவு. 40’களில் சென்று வாழ்ந்து வந்து விட்ட உணர்வு. முழுக் கதையையும் கறுப்பு-வெள்ளையிலேயே பார்க்க முடிந்தது. அந்த அனுபவத்தில் எழுதிய இரு கவிதை.

கனவுகளில் பூத்த பூக்களின் வாசம்.

கறுப்பு வெள்ளைப் பூக்கள் மட்டுமே

பூத்து நிறைந்த கனவொன்றில் மழையிரவில்

வண்ணங்களை வடிகட்டிய இமைகளுக்குப் பின்னால்

மௌனப் படம் போல் காட்சிகள்

மின்னல்களும் மேகங்களும் கொட்டி முழக்கின

வெண்மழை நிலாப் பொழிவில் மண் நனைந்தது

அல்லி பூத்த குளத்தின் மேல் ஆயிரம் நீர்ச் சிலந்திகள்

துண்டு நிலாக்கள் படிந்த ஈரம்

மெல்லிய பனிப்புகை சாம்பல் படலம்

கூதல் காற்றில் அடர்ந்த குளிர்

நடுங்கும் இதழ்களில் வழியும் பூமணம்

முள் நுனிகளில் சொட்டும் துளிகள்

ஓடை ஒதுங்கும் வேர்களின் மேலே

இலைகள் விரித்த நிழல்வெளிப் பந்தல்

இலைகள் தாங்கும் கிளைகளின் ஊடே

முகில் வழிப் பெருகும் மழை நதி வெள்ளம்

இரவின் அமைதிக்குள் இருளும் ஒளியும்

கனவின் உலகுக்குள் குளிரும் பனியும்

மூடிய கண்களுக்குள் விழித்திருக்கும் உள்ளம்

உடலுக்கு வெளியே ஆழ்ந்த உறக்கம்.

நன்றிகள்,
இரா.வசந்த குமார்

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

படித்து முடித்தவுடன் என்ன செய்வதென்றே தெரியவில்லை.இரண்டு மூன்று பேர்களை அழைத்து பேச வேண்டுமென்று தோன்றியது.எடை கனக்கும்  மனமாய் ஆகிப்போனது…இந்தக் குறுநாவல் குறித்து பல்வேறு நண்பர்கள் எழுதக்கூடும்.விரித்து விளக்கமாக பல்வேறு தன்மைகள் பற்றி .ஆனால் எனக்கு சொல்ல ஒன்றே ஒன்றுதான் உள்ளது…

உண்மையாலுமே அவர்கள் இருவரும் இப்படித்தான் பேசியிருப்பார்கள் என்று மனம் நூறு சதவீதம் நம்புகிறது.அவ்வளவு சுடர்ந்த உணர்வுப் பூர்வமான உரையாடல்கள். ஆ மப்பு பாடலை நான் இணையத்தில் தேடிக் கிடைக்காமல் இருந்த அடுத்த நாளில் அதன் இணைப்பை வழங்கியிருந்தீர்கள்

இந்த நேரத்தில் உங்கள் கைகளை இறுக பற்றிக் கொள்ள தோன்றுகிறது …
நாளை மதுரை நிகழ்வில் உங்களை சந்திப்பேன்.இந்த பரவச நினைவுகளை தந்ததற்கு …. நன்றியும் பிரியமும்

குமார் ஷண்முகம்
கோவை

 

அன்புள்ள ஜெ

அந்த முகில் இந்த முகில் கதை முழுக்க வரும் ஆழமான வரிகள் தன்னுடைய மனதை தானே கூர்ந்து கவனிக்கும் ஒருவர் கண்டடைவது. உங்கள் கதைகளை கதைநாயகனின் கதாபாத்திரம் அப்படிப்பட்டது, அவனுக்கு கலையிலக்கிய ஆர்வம் உண்டு என்றவகையில் அமைப்பதனால் அந்த விஷயம் ஆழமாக இருந்தாலும் இயல்பாகத் தெரிகிறது.

இரண்டு இடங்கள் உடனடியாகச் சொல்லத் தோன்றுகிறது. முகத்தில் வெயில் விழுவதைப் பற்றிய இடம். முகத்தில் ஒளிவிழுந்தால் உடனே ஏன் மனம் மலர்கிறது? நான் அதை வாசித்ததுமே அட ஆமா இல்ல என்று நினைத்துக்கொண்டேன்

செய்யவேண்டியதை செய்யாவிட்டால் அது ஒரு பள்ளமாகிவிடுகிறது. அது இறந்தகாலத்தில் இருக்கிறது, நிகழ்காலத்தை வைத்து அதை நிரப்பவே முடியாது—இந்த வரி இந்நாவலின் மகுடம்.

இந்தவரிகள் வழியாகத்தான் இந்நாவல் நினைவில் நிற்கப்போகிறது

 

எம். ஜெயக்குமார்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 15, 2021 11:32

April 14, 2021

அறிவியலுக்கு அப்பாலுள்ள அறிதல்கள் தேவையா?.

யாக்கவ் பெரெல்மான்

அன்புநிறை ஜெ,

சங்கஇலக்கியம் மற்றும் பண்டைய இந்திய இலக்கியங்களில் வண்ணத்துப்பூச்சியின் இடம் காலியாக இருக்கிறது என்ற பார்வைக்கு காரணம் ‘குறைபட்ட வாசிப்பு’ என்பது மறுக்க முடியாத பதில். ‘வண்டு-இசை இங்கே பட்டாம்பூச்சியின் இடத்தை நிரப்புகிறது’, என்ற தெளிவை தந்தமைக்கு நன்றி. இது என்னில் ஒரு தொடக்கம் செய்தது. அது குறித்து விரிவாக மற்றொரு தருணத்தில் எழுதுகிறேன்.தொல்தமிழ் இலக்கியத்தில் பட்டாம்பூச்சி ஏன் இல்லை?

நான் பல வருடங்களாக பரவலாக கேட்கும், பார்க்கும் தலைப்பாக “இந்திய கலாச்சாரமும் அதன் அறிவியலும்” தொடர்ந்து வருகிறது. நாம் தினம் செய்யும் சடங்குகளில், வீட்டு பராமரிப்பு முறைகளில் அறிவியலைக் கொண்டு விளக்கினால் எண்ணற்ற பயன்கள் இருப்பதாய் உணரலாம் போன்ற பேச்சுக்கள் நுரைத்து பெருகுகின்றன. நம்மவர்கள் பொது அறிவையும், அறிவியலையும் குழப்புவதை அனுதினமும் காண்கிறேன்.

அறிவியல் உண்மை இருக்கலாம் என்பதை நான் மறுக்கவில்லை ஆனால் ஏன் அனைத்திற்கும் ஆதாரம் தேடி அலையவேண்டும். மனம்-உடல் நெசவை ஒவ்வொரு செயலிலும் தர்க்கபூர்வமாக விளக்கும் அவசியம்தான் என்ன? ஒருபுறம் மேலை அறிவின் மேட்டிமைவாதத்திலிருந்து பாதுகாக்க இம்முயற்சிகள் நடைபெறுவதாக வைத்துக்கொள்வோம், ஆயினும் செயலின் தருணத்தில் தரவுகளை மட்டும் மனதில் வைத்திருப்பதால் வரும் ‘அனுபவித்தல்’ இழப்பை பற்றியே நான் அஞ்சுகிறேன். மேலேழும் பந்து கீழே விழுவது எறிவிசை, புவியீர்ப்பு விசை, எறிகோணம் ஆகியவற்றால் நிகழ்கிறது, இதில் ஆச்சரிய படுவதற்கு ஒன்றும் இல்லை. இப்படியே சென்றால் நான் விளையாட, பரவசம் கொள்ள முடியாமல் போய்விடுமே.

“என்னுடைய விருப்பம் அந்த பந்து மேலேசெல்ல வேண்டும் என்பது, இப்பூமியின் விருப்பம் அது கீழே வந்திறங்க வேண்டும் என்பது. நம்மைவிட பூமி பெரியதாகையால் அதன் விருப்பமும் பெரியது. அதனால் அதன் எண்ணமே கடைசியில் வெல்லும்”, இவ்வாறு நான் சிறு குழந்தைக்கு பதில் சொல்கிறேன். அறிவியல் காரணங்களை தாண்டி இம்மாதிரியான பதில்களே நிறைவை தருகின்றன. ‘ஏனென்றால் இது எண்ணில் எழும் பதில்’, என்ற ஆணவமாக இருக்கலாம். தத்துவங்களும் கதைகளும் ஒவ்வொரு நிகழ்வையும் பொருள்களையும் மனவெழுச்சியுடன் காணவைக்கிறது. அடிப்படை அறிவியல் அறிவை கொண்டு பல தருணங்களில் சிக்கலை தீர்த்துள்ளேன். இருந்தும் மனம் கொண்டாட ‘கற்பனையில்’ உள்ள எண்ணற்ற வாய்ப்புகள் அறிவியலில் இல்லை என்பதையே நம்பத் தலைப்படுகிறேன்.

இவர்கள் கூறும் மொண்ணையான காரணங்கள் மக்கள் அன்றாடத்தை சலிப்புநிறைந்ததாக மாற்றுவதையே காண்கிறேன். சற்று முயன்றால் அறிவியலை பயின்று விடலாம். கற்பனையை மேன்படுத்த செய்யவேண்டியதென்ன என்றே நான் சிந்திக்கிறேன். சடங்குகளில், பராமரிப்புகளில் கற்பனை வந்து சந்திக்கும் புள்ளி எங்குள்ளது? நிகழ்வுகளில் கற்பனையை விரிக்க, மாற்ற முடிந்த என்னால் இங்கே வரலாறு மற்றும் குறியீட்டு காரணங்களையே மனதில் பிரப்பிக்க இயல்கிறது. கோயில்கள், சிற்பங்கள், ஆகம முறைகளில் திகழும் குறியீட்டை இங்கு நான் வினவவில்லை.
நன்றி

ஆனந்த் குரு

அன்புள்ள ஆனந்த்,

சுவாரசியமான சிந்தனை. மானுடகுலத்திற்கு முழுக்க ஒரேவகையான சிந்தனைதான் இருக்கவேண்டுமா, ஏன் வேறுபார்வையில் சிந்திக்கக்கூடாது என்பது முக்கியமான கேள்விதான்.

முதலில் அறிவியல் உருவாக்கி அளிக்கும் தர்க்கப்பார்வையில் அழகியல் ஆன்மிகம் ஆகியவற்றை விளக்கும் அசட்டுத்தனத்தை முற்றாக நிறுத்திவிடவேண்டும். இவை வேறுவகையான அறிதலும் வெளிப்பாடும் கொண்டவை, வேறுவகையான உலகப்பார்வைகள் என்று புரிந்துகொள்ளவேண்டும்.

அறிவியல் இன்று உலகளாவிய ஒற்றைப் பார்வையை உருவாக்குகிறது. உலகையே சரசாரிப்படுத்துகிறது. இப்படி மானுடவரலாற்றில் என்றுமே இருந்ததில்லை. முன்பு ஒவ்வொரு பண்பாட்டுக்கும் உரிய பார்வைகள் இருந்தன. இன்று அந்த தனித்தன்மை இலக்கியம் – ஆன்மிகத்தில் மட்டுமே எஞ்சியிருக்கிறது.

இதில் இன்னொரு சிக்கல் உண்டு. நாம் சராசரிக்கு மாற்றான, இன்னொரு பார்வையை குழந்தைக்கு அளிப்பதன் வழியாக அதை சராசரிக்குக் கீழாக அமைத்துவிடக்கூடாது. நாம் அளிக்கும் கற்பனைகளோ, வேறுபட்ட தர்க்கங்களோ பொதுவான அறிதலை அக்குழந்தைக்கு இயலாததாக ஆக்கிவிடலாகாது.

இன்று அறிவியல் உருவாக்கி அளிக்கும் பார்வை மூன்று அடிப்படைகள் கொண்டது. புறவயப்பார்வை, பொதுநிரூபணத்தன்மை, பயன்பாட்டுநோக்கு. அந்த கோணத்தில் ஒவ்வொன்றையும் அறிமுகம் செய்து விளக்கியபின் அதற்கு மேலதிகமாக நீங்கள் கூறுவதுபோல தத்துவ – அழகியல் – ஆன்மிக நோக்கை அளிக்கமுடியுமென்றால் அது நன்று.

ஏனென்றால் அறிவியலே நம் புறவுலகை, சமூகத்தை உருவாக்கியிருக்கிறது. அதை முற்றாக அறியாமல்போகும் ஒருவர் புறவுலகை அறியமுடியாமல்,  சமூகத்துடன் உரையாடமுடியாமல் ஆகிவிடக்கூடும். அது ஒரு ஊனமாக ஆகிவிடக்கூடும்.

அறிவியலை முற்றுமுடிவானதாக சொல்லவேண்டியதில்லை. அறிவியல்கொள்கைகளை finite  ஆக கருதவேண்டியதில்லை. அதற்கப்பால் யோசிக்கலாம். ஆனால் நவீன அறிவியலில் அதற்கும் இடமுண்டு. அறிவியல் அளிக்கும் அந்த இடத்தை பயன்படுத்திக்கொண்டுதான் அறிவியல்புனைகதைகள் பேசுகின்றன.

அறிவியலை சலிப்பூட்டும் தர்க்கமாக, தகவல்களாக நாம் அளிக்கவேண்டியதில்லை. அதையே கற்பனைக்கு இடம்கொடுக்கும் புதிர்களாக மாற்றிக்கொள்ள முடியும். அறிவியலின் கொள்கைகளை பிரபஞ்ச விந்தைகளாகவே அறிமுகம் செய்யமுடியும். பத்தாம் வகுப்பு இயற்பியல் பாடபுத்தகம் சலிப்பூட்டுவது. யா பெரெல்மானின் பொழுதுபோக்கு பௌதிகம் என்ற நூல் ஒரு கொண்டாட்டமான கல்வியை முன்வைக்கிறது

ஒர் அடிப்படை அறிதலாக அறிவியலை அளித்துவிட்டு மேலதிக அறிதல்முறைகளை நாம் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யலாம். கற்பனையும் உள்ளுணர்வும் அதற்குரிய வழிகள். புதியநோக்குகள் உருவாக அது வழிவகுக்கலாம்

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 14, 2021 11:36

ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்– எதிர்வினை

ஒரு நாவல், நாற்பதாண்டுகள், நான்கு வாசிப்புகள்-3 ஒரு நாவல், நாற்பதாண்டுகள், நான்கு வாசிப்புகள்-2 ஒரு நாவல், நாற்பதாண்டுகள், நான்கு வாசிப்புகள்.

ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்’என்னும் நாவல் ஒரு உதாரண புருசனை, நீட்ஷேயின் அதிமனிதனை (சூப்பர்ஹ்யூமன்) நம் சமூகச் சூழலில்  நிகழ்த்திக்காட்ட முற்பட்டது போல் இருக்கிறது. அவனொரு தாய் தந்தை இல்லாத அனாதை. மணம் செய்துகொள்ளாமல் இணைந்து வாழ நேரும் ஒரு தம்பதியினர் அவனைக் கண்டெடுத்து, ஹென்றி என நாமகரணம் சூட்டிவளர்க்கிறார்கள்.

பப்பா இந்து, சைவர், மம்மா கிருத்துவர். பப்பா மனைவியைப் பறிகொடுத்தவர், மம்மாவின் இறந்துபோன கணவரின் நண்பர். ஹென்றியை அவர்கள் தமது அன்பால், நல்லறங்களால், உன்னத குணங்களால் எந்தத் தீமையும் அண்டாமல் வளர்க்கிறார்கள். பப்பா அவனை முன்னால் வைத்துக்கொண்டே தினமும்  குடிக்கிறார். அவர்களிடையே ஒளிவுமறைவு இல்லை. அவன் விருப்பப்படி பள்ளிக்கு செல்லவேண்டாம் என்றும் முடிவாகிறது.

பப்பாவும் மம்மாவும் கடந்துவந்த பாதை, அவர்களுக்கு ஒன்றைப் உணர்த்தி இருக்கலாம். மனிதர்களாகிய நாம் மிக எளியவர்கள், எதிர்காலத்தில்  நடக்கவிருக்கும் எதன்மேலும் நமக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. வாழ்க்கையில் நாம் போடும் திட்டங்களுக்கு எந்த உத்திரவாதமும் இல்லை. எனவே, அவனை எந்தவித சமூக நிர்பந்தங்களும் இன்றி வளர்க்கிறார்கள்.

இப்படிப்பட்ட சூழலில், வளர்ந்து வாலிபனாய் நிற்கும் ஹென்றி, அவர்களது இறப்புக்குப்பின், தன் வாழ்வைத் தனியாய், எதிர்கொள்ளத் தயாராகுகையில் கதை தொடங்குகிறது. சாகும் முன்னர், பப்பா தன் பூர்வீகத்தைப் பற்றி சொல்கிறார். அத்தோடு, அங்கே உள்ள வீட்டையும் நிலபுலங்களை அவன் பெயருக்கு எழுதிவைக்கிறார். அங்கு செல்லும் ஹென்றியை, அந்தப் பின்தங்கிய கிராமமும் மக்களும் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதுதான் கதை.

நீட்ஷே-வின் அதிமனிதன், நிகாஸ் கஸன்ட்ஸாகிஸ்-ன் ஸோர்பா, ஹெர்மன் ஹெஸ்ஸெ-வின் சித்தார்த்தன் போன்ற பாத்திரங்கள் இந்திய 70களில் மிகவும் பிரசித்தமாக இருந்திருக்கக் கூடும். இவர்கள், அன்றாட உலகியல் சாராமல், இவ்வுலகத்தை, இவ்வுலக வாழ்வைத் தம் போக்கில் அணுகும் மனிதர்கள்.   மண்ணில் சொர்க்கம் கண்டவர்கள். மனிதர்களை, விலங்குகளை, பாகுபாடின்றி நேசிப்பவர்கள், நம்புபவர்கள்.  அப்படி நம்புவதால் நேரக்கூடிய சாதகபாதகங்களைப் பற்றிக் கவலைப்படாதவர்கள். இவர்களால் யாரையும் எதையும் வெறுக்கமுடியாது. ஒரு விதத்தில், குழந்தையைப் போன்றவர்கள்.

ஏசு தன் சீடர்களுக்கு உரைப்பதாக ஒரு வசனம் வரும், “நாம் குழந்தைகளைப் போல மாறினால் மட்டுமே நமக்கு தேவனது ராஜ்ஜியத்தில் இடம் உண்டு”. ஜெயகாந்தனின் ஹென்றி அப்படிப்பட்டவன். அக்கம்மாள் அவனைப் பார்த்தவுடன் காலண்டரில் இருக்கும் ஏசுவைப் போல் உள்ளதாகக் கூறுகிறாள். அவன் நமக்கு அறிமுகம் ஆகும்பொழுது, ஒரு ஆளரவமற்ற மலைப்பாதையில் தனியாக சுமையுடன் நடந்து செல்கிறான். அவ்வழியே வரும் லாரியைக் கூட அவன் தன் தேவைக்காக அல்லாமல், ஒரு சுவாரஸ்யத்துடனேயே திரும்பிப்  பார்த்து கையசைக்கிறான். அவர்கள் ஏறிக்கொள்ளச் சொல்ல, அவர்களுடன் பயணிக்கிறான்.

தான் யார் என்ற கேள்விக்கு “for those who meet me on the way, I am a stranger. I am a stranger even to myself, when I am alone” என்றும் விளக்கம் அளிக்கிறான். அந்தப் பதிலில் அவன் எங்கோ கற்று அடைந்த  அறிவைவிட அவன் தன்னுள் உணர்ந்த உண்மையை உரைப்பதாகவே தெரிகிறது. அனைத்தையும் குழந்தையின் ஆர்வத்துடன் பார்க்கிறான், பேசுகிறான். அவனுடைய குழந்தைத்தனமும் குதூகலமும் உடனே மற்றவர்களிடம் ஒட்டிக்கொள்கிறது.

ஹென்றியை அணுகி அறிபவர்கள் மெல்ல உணர்கிறார்கள், அவன் எந்தச் சட்டகத்திலும் அமைவதில்லை. அவன் கிருத்துவனில்லை, இந்துவுமில்லை. ஆத்திகனில்லை, நாத்திகனுமில்லை. மற்றவர்களின் ஆச்சாரங்களில் ஈடுபடுவதில் அவனுக்குத் தயக்கங்கள் இல்லை. மூன்று நாட்களுக்கு முன் தன் பப்பா அவனை அனாதையாக விட்டுப்போன பின்னும் அந்த இழப்பின் சுவடே அவனிடம் இல்லை.

அதற்காக அவன் துறவியோ ஞானியோ இல்லை. தன் பப்பாவின்மேல் உள்ள பிரியத்தாலேயே அவர் வாழ்ந்த வீட்டைத் தேடி வருகிறான். தன் பப்பா தினமும் குடித்தபோதும் அவனிடம் குடிப்பழக்கம் இல்லை. ஆயினும், தேவராஜன் குடிக்க அழைக்கும்பொது,  ஏற்றுக்கொள்கிறான், தேவராஜனுக்காக, அவன் மகிழ்ச்சிக்காக.

பாரதி படத்தில் ஒரு காட்சி வரும். அவர் யாரிடமோ கோவித்துக்கொண்டு எங்கோ செல்ல ரயிலடியில் நிற்கும்போது ஒருவர் வந்து அன்று நடைபெற இருக்கும் ஒரு கூட்டத்தைப் பற்றி அறிவிப்பார். பாரதி உடனே உற்சாகமடைந்து தன் பயணத்தை மறந்துவிட்டு நண்பருடன் செல்வார். ஹென்றியும் அதுபோலதான். இலகுவாக இருக்கிறான். எங்கும் எதிலும் அவனுக்கு தயக்கமில்லை. மற்றவர்கள்முன் உடைகளைந்து நிற்பதற்குக்கூட.

இந்தக் கதையில் வரும் அனைவருக்கும் பின்னணியில் ஒரு சோகம், இழப்பு உள்ளது. மண்ணாங்கட்டி முதல் துரைக்கண்ணு வரை. பெரும்பாலும் கணவன்/மனைவி, தாய்/தந்தை இறப்பு அல்லது பிரிவு என. நல்லவேளை, யாருக்கும் குணப்படுத்த முடியாத பணக்கார நோய்கள் இல்லை. அவர்கள் தங்கள் மேன்மையான குணங்களால் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாய் இருந்து, நம்பிக்கையூட்டிக்கொண்டு தத்தமது வாழ்க்கைச் சூழல்களை எதிர்கொள்கிறார்கள்.

இப்படி இவர்கள் அனைவரும் சொல்லிவைத்தாற்போல் நல்லவர்களாக இல்லாமல் இருந்தால் (இப்போதுள்ள சூழலில் அதற்குத்தான் வாய்ப்பு அதிகம் என்று உறுதியாக சொல்ல நினைத்து, அது என்னுடைய போதாமையோ என்ற ஐயத்தில், அடைப்புக்குறிக்குள் இட்டிருக்கிறேன்) அவன் அதை எவ்விதம் எதிர்கொண்டிருப்பான் என்ற கேள்வியும் எழுகிறது. கண்டிப்பாக ஹென்றி போன்றவர்களுக்கு அந்த தத்துவச் சிக்கல் இருக்காது.

இந்த நாவலில் ஒரு விசயம் உங்களுக்கு உறுத்தக்கூடும். கிருஷ்ணராஜபுரத்து மனிதர்கள் அனைவரது சாதியும் வெளிப்படையாகக் தெரிவிக்கப்படுகிறது. அவர்களது குணநலன்களும். காவல் நிலையத்தில் ஏற்பட்ட அவமானத்தால், மணியக்காரக் கவுண்டர் தற்கொலை செய்துகொள்கிறார்.

துரைக்கண்ணு பிள்ளை முரடனாக இருந்தாலும் பாசத்தில் பரதனை மிஞ்சிவிடுகிறார். தேவராஜ நாயக்கர், புத்திசாலியாக முற்போக்குச் சிந்தனைகளுடன், தயாள குணத்துடன் திகழ்கிறார். நடராஜ ஐயர் தன் பேரின் பிற்பாதியைத் துறக்கிறார். கிராமணி வேலு முதலியார், வயிற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும், பஞ்சாயத்தில் தன் ஊர்க்காரனுக்குப் பரிந்து பேசுகிறார். பின்னர், நியாயத்தை ஏற்றுக்கொள்கிறார்.

இப்படி, கிருஷ்ணராஜபுரம் ஒரு உடோபியா போல் தோற்றமளிக்கிறது. ஆனால், சின்னான், தையநாயகி, மண்ணாங்கட்டி பொன்றவர்களது சாதி தெரியவில்லை. அவர்களது உலகமும். அவர்களது குடும்பம், வாழ்வியல் பிரச்சனைகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. அவர்கள் எப்போதும் தமக்கு இடப்பட்ட ஏதாவது ஒரு வேலையைச் செய்துகொண்டே இருக்கிறார்கள். பைத்தியத்தை குளிப்பாட்டுவதிலிருந்து, முகம் கழுவ தண்ணீர் எடுத்து வைப்பதுவரை. ‘பரியாரி’ பழனி கூட ஒழுக்கம் மீறி நடந்து அந்தக் குற்றவுணர்ச்சியில் தற்கொலையும் செய்துகொள்கிறான்.

டீக்கடையில் தனித்தனி டம்ளர்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஹென்றி அதைப் பெரிதும் பொருட்படுத்துவதில்லை. இதையெல்லாம் சரிசெய்யும் நோக்கமோ லட்சியமோ ஹென்றிக்கு இல்லை. அவன் ஒன்றும் சூப்பர்மேன் அல்லவே. எனினும், அவனுக்கு மணியக்காரக் கவுண்டரும் மண்ணாங்கட்டியும் ஒன்றுதான்.  இருவரையும் அவன் சமமாகவே பார்க்கிறான், மரியாதையுடன் நடத்துகிறான். அவன் உலகில் எதுவும் எற்கத்தக்கதே. ஏனெனில், அவன் பார்வையில், அனைத்திற்கும் ஒரு காரணம் அர்த்தம் உள்ளது.  நாம் தான் அவற்றைத் தவறாகப் புரிந்துகொள்கிறோம் அல்லது புரியாமல் இருக்கிறோம். அவன் உலகில் அனைத்தும் நல்லதே, அனைவரும் நல்லவரே.

ஜேகே-வின் ஒரு கருத்து நினைவுக்கு வருகிறது.  “ஹிந்து சமூகத்தில் ஏற்பட்ட குறைகளை அதன் வளர்ச்சியின் மூலமாகவே தவிர்ப்பதற்கான வாய்ப்பு நமக்குத் தடுக்கப்பட்டது. அந்நிய ஆட்சி முறைகளும், இங்கு புகுத்தப்பட்ட ஐரோப்பிய பொருளாதார வாழ்க்கை முறைகளும் நம்மை மேலும் அலைக்கழித்துச் சீர்குலைத்தன”

ஸோர்பா-வும், சித்தார்த்தனும், சாண்டியாகோ-வும் தமது இருப்பிடத்தைவிட்டு வெளியுலகைத் தேடிச் செல்கிறார்கள். இந்த கதையில் வரும் நிர்வாணப் பெண் கூட அப்படித்தான். தன் விடுதலையைத் தேடி அனைத்தையும் விட்டுச் செல்ல அவளுக்கு தயக்கம் ஒன்றும் இல்லை. ஆனால் ஹென்றியோ தன் இருப்பிடம் தேடிச் செல்கிறான். தன் மக்களைத் தேடிச் செல்கிறான். தன் பெயரையும் ஹென்றிப் பிள்ளை என்று சாதியையும் அவர்கள் சேர்க்கும்போது, மறுப்பின்றி ஏற்றுக்கொள்கிறான்.

அவனால் அப்படித்தான் இருக்கமுடியும். ஏனெனில் அவன் அதையும் அவர்களுக்காகவே ஏற்றுக்கொள்கிறான். அந்தப் பேரால் அவனுக்குப் பெருமையும் இல்லை இழிவும் இல்லை. ஸோர்பாவும் மற்றவர்களும் தம் விடுதலையை புறத்தில் தேடுகிறார்கள். ஹென்றி தன் அகத்துக்குள் தேடுகிறான். அவ்விதத்தில் அவர்களிலிருந்து வேறுபடுகிறான்.

ஆயினும், சிலசமயங்களில் ஹென்றி ஒருவித தன்னுணர்வோடு இருப்பதாகத் தோன்றுகிறது. அது அவனது பாத்திரப் படைப்பில் ஒரு குறையோ எனவும் தோன்றுகிறது. பெண் நிர்வாணமாகக் குளிப்பதைப் பார்க்கிறாயே, அது தவறில்லையா என்ற கேள்விக்கு, இதற்கு முன் சாலையில் தான் ஒரு குரங்கை அவ்வண்ணம் பார்த்தபோது இந்தக் கேள்வி உங்களுக்கு ஏன் எழவில்லை என்று திருப்பிக் கேட்கிறான். அதேப்போல, தனக்கு மின்விளக்கின் தேவை இல்லை, லாந்தர் விளக்கே போதும் என்கிறான். அவனுக்கு ஏழைகள் சாப்பிடும் கூழ் பிடித்த உணவாக இருக்கிறது. இதனால், ஹென்றிக்குத், தான்-பிறர் என்னும் வேறுபாடு, தான் தனித்தவன், அவர்களிடமிருந்து வேறுபட்டவன் என்ற எண்ணம் இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. நீட்ஷே-யின் அதிமனிதன் அப்படி உணரமாட்டான் என்றும் தோன்றுகிறது.

இந்த நாவலை முடித்த பின்னும், அந்த வீடு இல்லையென்றால், கிருஷ்ணராஜபுரத்து மக்கள் அவனை ஏற்றுக்கொள்ளவில்லையெனில் ஹென்றி உலகை எப்படி எதிர்கொண்டிருப்பான், அவன் உலகம் எப்படி இருந்திருக்கும் என்ற கேள்வி மீண்டும் மீண்டும் எழுகிறது. நிச்சயமாக அந்தக் கிழங்கு விற்பவளும் அந்த சேரி மக்களும் அவனை ஏற்றுக்கொண்டிருப்பார்கள். பின்னர், ஏசு கிறுஸ்துவுக்கு நேர்ந்தது அவனுக்கும் நேர்ந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

 

பார்த்தா குரு

ஜெயகாந்தன் வாசிப்புகள்- கடிதங்கள்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 14, 2021 11:34

மரபு -கடிதங்கள்

அன்பு ஜெயமோகன்,

“மரபை விரும்புவதும், வெறுப்பதும்” உரையை செவிமடுத்த கையோடு எழுதுகிறேன். மரபு சார்ந்த விவரங்களையும், விழுமியங்களையும் விளக்கியுரைத்த விதமும், தமிழிலும் பிறமொழிகளிலும் தோன்றிய ஆக்கங்களை ஒப்புநோக்கிய விதமும், தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் வெளியுலகிலும் செல்லுபடியாகும் விழுமியங்களை எடுத்துரைத்த விதமும் வியக்கத்தக்கவை.

அதேவேளை படைப்புகளை வடிகட்டி வாசித்தும், பார்த்தும், கேட்டும் புரிந்துகொண்ட பிறகு உணர்வும் மொழியுமே உள்ளத்துள் எஞ்சுகின்றன. பரிவட்ட நச்சுயிரியை தனிமையில் எதிர்கொள்ள நேர்ந்துள்ள  இக்காலகட்டத்தில் மேன்மேலும் உணர்வும் மொழியுமே உள்ளத்துள் மீந்து மிகுந்து வருகின்றன. எடுத்துக்காட்டாக உங்கள் உரையில் இடம்பெறும் எண்ணிறந்த விவரங்கள் அந்த உணர்வுக்கும் மொழிக்கும் இடம்விட்டு ஒதுங்கி விடுகின்றன. தேர், தொன்மம், ஆழ்மனப்படிமம், பண்பாடு, விழுமியம் போன்ற சொற்கள் நிலையூன்றி விடுகின்றன. அவற்றோடு சேர்ந்து அவற்றை எடுத்தாண்ட எழுத்தாளரை அல்லது பேச்சாளரைப் பற்றிய நல்லெண்ணம் நிலைத்துவிடுகிறது.

“நீ இந்த நூலை வாசித்தாயா? அந்த உரையைக் கேட்டாயா?” எனறு வினவும் நண்பர், நண்பியரிடம் “ஓம், சிறந்த நூல், சிறந்த உரை. மேலும் எவ்வளவோ தமிழையும் ஆங்கிலத்தையும் படித்து மகிழ்ந்தேன்” என்றுதான் சொல்லி வருகிறேன். உங்கள் உரைகளை செவிமடுக்குந் தோறும் ஐ. நா.வின் முதலாவது தலைமைச் செயலாளரின் கூற்று திரும்பத் திரும்ப நினைவுக்கு வருகிறது:

ஒருவர் அறிவிலும், உணர்விலும், ஒழுக்கத்திலும் முதிர்ச்சி அடையும் வண்ணம் அவருக்குக் கற்பிக்கத்தக்க ஒழுக்காற்றுக் கோவையில் முதலாவது கட்டளை, சொல்லுக்கு மதிப்புக்கொடு என்பதே. சமூகத்தில் அல்லது மனித குலத்தில் ஏதாவது வளர்ச்சி ஏற்படவேண்டும் என்றால், சொல்லுக்கு மதிப்புக் கொடுப்பது – அதனைக் கண்ணும் கருத்துமாய், களங்கமற்ற மெய்ப்பற்றுடன் கையாள்வது – இன்றியமையாத ஒன்றாகும் (Dag Hammarskjold).

மணி வேலுப்பிள்ளை

அன்புள்ள ஜெ

மரபை விரும்புவதும் வெறுப்பதும் எப்படி ஒரு சீண்டக்கூடிய தலைப்பு. உண்மையில் அந்தத் தலைப்புதான் என்னை அப்பேச்சை கேட்கவைத்தது. இன்று இரண்டரை மணிநேரம் விரிவான தயாரிப்புடன் ஓர் உரை என்பது சாதாரணமான விஷயம் அல்ல. அதுவும் செய்திகளாகச் சொல்லாமல் சிந்திக்கவேண்டிய அடிப்படைகளைப் பேசுவது மிக அபூர்வம். மதம் சார்ந்து பேசுபவர்கள்கூட இருக்கலாம். இலக்கிய அழகியல் சார்ந்து பேசுபவர்கள் அரிதினும் அரிது.

இந்த கட்டண உரையை நேரில் கேட்காமலாகிவிட்டதே என வருத்தம். வந்திருக்கமுடியும். ஏதோ சின்ன விஷயத்தால் தவறவிட்டுவிட்டேன். நேரில் இன்னும் ஆழமான அனுபவமாக இருந்திருக்கும். நாம் இணையத்தில் கொஞ்சம் கவனச்சிதறல் அடைகிறோம். நேரில் அத்தனைபேர் முன்னிலையில் உங்கள் முகத்தைப்பார்த்து இதைக் கேட்கும்போது அது கூர்மையான கவனத்தை அளிப்பதாக இருந்திருக்கும்

கட்டண உரை நல்ல கான்செப்ட். நான் நன்றாகத் தயாரித்துக்கொண்டு வந்துதான் பேசுவேன் என்ற உறுதியை அது வாசகர்களுக்கு அளிக்கிறது. அந்த உறுதிப்பாடு இருந்தால் வாசகனும் கூர்ந்து கவனிப்பான்

சரவணன் குமாரசாமி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 14, 2021 11:34

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.