Pa Raghavan's Blog, page 8

April 10, 2017

பொலிக! பொலிக! 88

அவன் விக்கிரம சோழனுக்கு மகனாகப் பிறந்தவன். தனது பாட்டனான குலோத்துங்க சோழனின் பெயரையே அவனும் ஏந்தியிருந்தபடியால் ஓர் அடையாளத்துக்காக இரண்டாம் குலோத்துங்கன் என்று அழைக்கப்பட்டான். ராஜேந்திர சோழனுக்குப் பிறகு ராஜாதி ராஜ சோழன், அவனுக்குப் பின் இரண்டாம் ராஜேந்திரன், வீர ராஜேந்திரன், அதி ராஜேந்திரன், குலோத்துங்கன், விக்கிரம சோழன் என்று தடதடவென ஆட்சிகள் மாறிக்கொண்டே வந்த காலக்கட்டத்தில் மக்களுக்கு சோழர்கள் மீதிருந்த நம்பிக்கை குறைய ஆரம்பித்திருந்தது.


அந்தச் சமயத்தில் விக்கிரம சோழனுக்குப் பிறகு மன்னனான இரண்டாம் குலோத்துங்கன், தனது உடனடி மூதாதையர்களைக் காட்டிலும் ஓரளவு நல்ல நிர்வாகி என்று பெயர் பெற்றிருந்தான். அவனது காலத்தில் சோழ தேசத்தில் போர்கள் கிடையாது. தந்தை விட்டுச் சென்ற பேரரசின் எல்லைகளைக் காத்து வந்தால் போதும் என்று நினைத்தான். யுத்தங்களில் ஆர்வம் கொண்டிருந்த சோழர் பரம்பரையில் அவன் மட்டும்தான் அந்த விருப்பமே இல்லாதிருந்தவன்.


மாறாக, மதம் அவனது பெரும் பலவீனமாக இருந்தது. சைவ மதம். அதைத் தவிர இன்னொன்று தனது அதிகாரத்துக்கு உட்பட்ட பிராந்தியங்களில் தழைக்கக்கூடாது என்று நினைத்தான் குலோத்துங்கன்.


‘நாலூரான், எப்போதும் என் மனம் தில்லையைச் சுற்றிச் சுற்றியே வருகிறது. எப்பேர்ப்பட்ட ஆலயம் அது! அதன் பிரம்மாண்டத்தையும் பேரழகையும் இன்னும் பெருகச் செய்ய என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள்!’


நாலூரான் வைணவர்தாம். ஆனாலும் அவருக்கு அமைச்சர் பதவி முக்கியம். அதிகாரம் அதனினும் முக்கியம். எனவே கூசாமல் பதில் சொன்னார், ‘மன்னா, தில்லை நடராசர் ஆலய வளாகத்திலேயே கோவிந்தராஜருக்கு சன்னிதி ஒன்று இருக்கிறது. உண்மையில் சொல்லப் போனால் அந்தச் சன்னிதி அங்கொரு இடைஞ்சல்தான். தில்லையம்பலத்தான் திருக்கோயிலில் கோவிந்தன் எதற்கு?’


அப்படித் தூக்கிக் கடலில் எறியப்பட்டவர்தாம் கோவிந்தராஜப் பெருமாள். அவரைத்தான் ராமானுஜர் திருமலை அடிவாரத்துக்கு எடுத்துச் சென்று கோயில்கொள்ளச் செய்தார்.


குலோத்துங்கனுக்கு இந்த விவரம் தெரியவந்தபோது கோபம் வந்தது. நான் மன்னன். அது தெய்வமல்ல; கல்லென்று முடிவு செய்து தூக்கிக் கடலில் போடுகிறேன். நீ யார் அதைக் கடவுள்தான் என்று நிறுவுவதற்கு?


ராமானுஜர் பிரம்ம சூத்திரத்துக்கு வைணவ சித்தாந்த அடிப்படையில் ஓர் உரை எழுதியதும் பாரதமெங்கும் சுற்றி வந்து பல சைவ பண்டிதர்களை வாதில் வென்றதும் காஷ்மீரத்து மன்னனையே வைணவனாக்கி வைத்துவிட்டு வந்ததும் அவனுக்கு மிகுந்த ஆவேசத்தை அளித்தன.


‘அமைச்சரே, இந்த ராமானுஜர் உண்மையிலேயே அத்தனை பெரிய ஆளா?’ என்று நாலூரானிடம் கேட்டான்.


‘எத்தனை பெரிய ஆளானால் என்ன மன்னா? பெரிய கடவுள் சிவன் தான் என்று ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும்?’


‘யார், ராமானுஜரா? ஏற்பாரா?’


‘யாரானாலும் ஏற்கத்தான் வேண்டும். உண்மை அனைவருக்கும் பொதுவானதல்லவா?’


மன்னனை மகிழ்விக்கப் பேசுகிற வார்த்தைகள். தன் இருப்பின் உறுதித் தன்மையை நிரந்தரப்படுத்திக்கொள்கிற முயற்சி.  நாலூரான் எப்படி அப்படி மாறிப் போனாரென்று திருவரங்கத்தில் பேசாத வாயில்லை. அரங்கனின் அடியாராக அவர்களுக்கு ஒரு காலத்தில் அறிமுகமான மனிதர். எப்படி மன்னனின் அடிமையாகிப் போனார்?


‘நல்லது அமைச்சரே. என்ன செய்யலாம் சொல்லுங்கள். சிவனே பெரியவன் என்று ராமானுஜர் ஏற்கவேண்டும். தேவை ஒரு நல்ல உபாயம்.’


குலோத்துங்கன் ஏற்கெனவே இந்தக் காரியத்தை வேறு பலரிடம் செய்துகொண்டிருந்தான். ‘சிவனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை’ என்று ஒவ்வொரு வைணவத் தலைவரிடமும் எழுதிக் கையெழுத்து வாங்குகிற வெறி அவனுக்கு இருந்தது. அதையே ராமானுஜரிடமும் செய்யலாம் என்று நாலூரான் சொன்னார்.


‘அருமை. கூப்பிடுங்கள் நமது தூதர்களை!’


ஓலை தயாரானது. தூதுவர்கள் வந்தார்கள். நாலூரான் அதை அவர்களிடம் கொடுத்து, ‘நேரே திருவரங்கம் செல்லுங்கள். சேரன் மடத்தில் ராமானுஜர் இருப்பார். மன்னர் உத்தரவு என்று சொல்லி இந்த ஓலையைக் கொடுங்கள். படித்துவிட்டு அவர் ஒரு ஓலை எழுதித் தருவார். அதை வாங்கிக்கொண்டு வந்து மன்னனிடம் சேருங்கள்.’


மறுநாள் அதிகாலை சோழனின் தூதுவர்கள் திருவரங்கத்தை வந்தடைந்தார்கள். உடையவர் அப்போது குளிப்பதற்காக ஆற்றங்கரைக்குச் சென்றிருந்தார். முதலியாண்டானும் வில்லிதாசரும் உடன் சென்றிருக்க, மடத்தில் கூரத்தாழ்வான் இருந்தார். ராமானுஜரின் பூர்வாசிரம சகோதரியின் மகனான நடாதூர் ஆழ்வான் இருந்தார். வேறு சில சீடர்கள் இருந்தார்கள்.


உறங்கி எழச் சற்றுத் தாமதமாகிவிட்ட குற்ற உணர்ச்சியுடன் நடாதூர் ஆழ்வான் அப்போதுதான் மடத்தை விட்டுக் கிளம்பி ஆற்றங்கரையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தார்.


இதென்ன வினோதமாக இந்தக் காலை நேரத்தில் மன்னனின் ஆட்கள் குதிரையில் வருகிறார்கள்? எங்கோ எச்சரிக்கை மணி அடித்தது. எனவே நைச்சியமாகப் பேச்சுக் கொடுக்கப் பார்த்தார் நடாதூர் ஆழ்வான்.


‘ஏதேது, திருவரங்கத்துக்கு நல்ல காலம் வந்துவிட்டது போலிருக்கிறதே? மன்னரேவா தங்களை இங்கு அனுப்பிவைத்திருக்கிறார்?’


‘ஆம். நாங்கள் ராமானுஜரைத் தேடி வந்திருக்கிறோம். எங்கே அந்த சேரன் மடம்?’


நடாதூர் ஆழ்வாருக்குப் புரிந்துவிட்டது. இது விபரீதம். விடிகிற நேரத்தில் வந்து நிற்கிற விபரீதம். இவர்கள் கண்ணில் உடையவர் பட்டுவிட்டால் பெரும் பிரச்னை. என்ன செய்யலாம், என்ன செய்யலாம் என்று உள்ளுக்குள் பதறியபடி யோசித்து, சட்டென்று ஒரு வழி கண்டார்.


‘சேரன் மடம்தானே? வாரும்.’ என்று சொல்லிவிட்டு அழைத்துக்கொண்டு மடத்துக்கு வந்தார். ‘ஒரு நிமிடம் இங்கே இருங்கள். உடையவர் உள்ளேதான் இருக்கிறார். எழுந்துவிட்டாரா என்று பார்க்கிறேன்’ என்று உள்ளே போனார்.


‘கூரேசரே.. அபாயம் வந்துவிட்டது.!’


கணப் பொழுதில் மடத்தில் இருந்த அத்தனை பேருக்கும் விஷயம் புரிந்துவிட்டது. வெளியே காத்திருப்பவர்கள் ராமானுஜரைக் காணாமல் திரும்ப வழியில்லை. அவர் நிச்சயமாக மன்னனின் ஆணையை ஏற்கப் போவதில்லை என்னும் பட்சத்தில் கைது செய்து இழுத்துச் செல்வதே அடுத்தக் கட்டமாக இருக்கும். என்ன செய்யலாம்?


கூரேசர் சற்றும் யோசிக்கவில்லை. ‘பேச அவகாசமில்லை. நானே ராமானுஜரென்று சொல்லிக்கொண்டு அவர்களோடு போகிறேன். உடையவர் திரும்பி வந்தால் உடனே அவரை ஊரை விட்டு வெளியேறிவிடச் சொல்லுங்கள். சீடர்களில் சிலர் அவரோடு போகட்டும். காவி ஆடை வேண்டாம். அது காட்டிக் கொடுத்துவிடும். வெண்ணுடை அணிந்து அவர் கிளம்பட்டும்.’


படபடவென்று கூரேசர் உத்தரவிட்டுக்கொண்டிருந்தபோது, மடத்தின் பின்புற வாயிலில் பெரிய நம்பியின் குரல் கேட்டது.


(தொடரும்)


Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  1 comment  •  flag
Share on Twitter
Published on April 10, 2017 09:30

April 9, 2017

பொலிக! பொலிக! 87

ஒரு மேகத்தைப் போல் நின்று நிதானமாக நகர்ந்துகொண்டிருந்தது காவிரி. கரையோர மரங்கள் காற்றை நெம்பித் தள்ளும் விதமாக ஆடிக்கொண்டிருக்க, அண்ணாந்து பார்த்துவிட்டு, ’இன்றைக்கு மழை வரும் போலிருக்கிறதே!’ என்றார் பெரிய நம்பி.


‘நாங்கள் கிளம்பும்போது திருமலையில் நல்ல மழை. ஒரு பெரிய காரியம் சிறப்பாக நடந்தேறியதால் அதை அனுபவித்துக்கொண்டு நனைந்தபடியே கிளம்பிவிட்டோம்.’ என்றார் ராமானுஜர்.


‘ஒன்றல்ல, இரண்டு என்று சொல்லுங்கள் சுவாமி. திருமலையப்பனின் அடையாளச் சிக்கல் தீர்ந்தது என்றீர்களே, அது அளிக்கும் நிம்மதி மகத்தானதாக உள்ளது. உண்மையில் சொல்லுவதென்றால் எனது நூறாவது பிறந்த நாளில் இதைக் காட்டிலும் ஒரு நற்செய்தி கிடைத்திருக்க முடியாது. என்னைப் பாரும். நூறு வயது போலவா தெரிகிறது? பத்திருபது வருடங்கள் உதிர்ந்துவிட்டதைப் போல இருக்கிறது!’ குழந்தை போலச் சிரித்தார் நம்பி.


காலை அவரது இல்லத்தில் எளிமையாக நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்டுவிட்டு, கோயிலுக்குப் போய் சன்னிதியில் நெடுநேரம் கண்மூடி நின்றிருந்தார் ராமானுஜர்.


‘உடையவரே, நூறாண்டுகள் வாழ்வது ஒரு சாதனையல்ல. வாழ்வு நாள் முடியும் காலத்தில் மனக்கவலைகள் மிகுவதுதான் வேதனையளிக்கிறது. சோழன் நம்மைச் சும்மா விட்டுவைக்க மாட்டான் போலிருக்கிறது’ என்று சொல்லியிருந்தார் பெரிய நம்பி.


திருமலையில் இருந்து அவர் அரங்க நகர் திரும்பிய கணத்தில் இருந்து பலபேர் சுற்றிச் சுற்றி இதைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார்கள். குலோத்துங்கனின் வைணவ விரோத நடவடிக்கைகள். கோயில் மானியங்களை ரத்து செய்கிற நடவடிக்கை. உற்சவங்களைத் தடுக்கிற மனப்போக்கு. வைணவர்களைத் தேடித்தேடி அவமானப்படுத்துவதில் அவன் அடையும் ஆனந்தம்.


‘அரசுப் பணியில் வைணவர்களுக்கு இடமில்லை என்கிறார்கள் சுவாமி! சிவனே பெரிய கடவுள் என்று ஏற்போருக்கு மட்டுமே மன்னன் சபையில் இடம்.’


‘அப்படியா? நாலூரான் கங்கை கொண்ட சோழபுரத்தில்தானே இருக்கிறார்? சோழனின் அமைச்சர் வைணவரே அல்லவா?’ என்று கேட்டார் ராமானுஜர்.


‘கெட்டது கதை. நாலூரான் விவகாரம் தெரியாதா உமக்கு? அவர் வைணவர் என்றாலும் மன்னன் வழியே தன்வழி என்று மாறிப் பலகாலமாகிறது.’


‘உடையவருக்கு அதெல்லாம் எப்படித் தெரியும்? அவர் திருவரங்கத்தை விட்டுக் கிளம்பி ஆறு வருடங்களாகின்றன. நாலூரான் கெட்டதெல்லாம் இப்போதுதானே?’


ராமானுஜர் அமைதியாக யோசித்தார். முதலியாண்டான், கூரத்தாழ்வான் உள்ளிட்ட சில சீடர்களுடன் அன்று மாலை ஆற்றங்கரைக்கு உலவச் சென்றபோது தற்செயலாகப் பெரிய நம்பி அங்கு ஓரிடத்தில் அமர்ந்திருப்பது கண்டு அருகே சென்று வணங்கினார்.


‘சுவாமி, தள்ளாத வயதில் தாங்கள் இத்தனை தூரம் நடந்து வரவேண்டுமா?’


‘வீட்டில் இருக்கப் பிடிக்கவில்லை உடையவரே. மனம் முழுதும் சோழனின் நடவடிக்கைகளைப் பற்றிய கசப்பே நிரம்பியிருக்கிறது. கங்கை பாவம் கரைக்கும் என்றால் காவிரி துக்கமாவது கரைக்காதா?’


‘சுவாமி, தங்களுக்குத் தெரியாததல்ல. வைணவம் அனாதியானது. இது ஒருவர் தோற்றுவித்த சமயமல்ல. என்றும் உள்ளது. எத்தனை இடர் வந்தாலும் வென்று மீள்வது. இங்கே ஒரு யக்ஞேசர் போல பரதக் கண்டம் முழுதும் இந்தப் பயணத்தில் எத்தனை யக்ஞேசர்களைக் கண்டேன் தெரியுமா? வாதத்தின் பெயரால் நிகழ்ந்த விதண்டாவாதங்களை வைணவமே வென்று வாகை சூடியது. காரணம், இது பெருமானுக்கு உகந்த வழி. பெருவழி என்பது இதுவே அல்லவா? எத்தனையோ மன்னர்கள், எவ்வளவோ ஆட்சி மாற்றங்கள். நிரந்தரமற்ற உலகில் வைணவ தருமம் ஒன்றே நிரந்தரமாக நிலைத்திருக்கும் என்பது தங்களுக்குத் தெரியாதா!’


‘உண்மைதான் ராமானுஜரே. ஆனால் சோழன் கண்மண் தெரியாமல் ஆடுகிறான். பலப்பல சிறு கோயில்கள் இந்தச் சில வருடங்களில் இழுத்துப் பூட்டப்பட்டுவிட்டன. மன்னனுக்குப் பிடிக்கவில்லை என்பதால் அறப்பணி செய்வோரும் வைணவத் தலங்களைக் கண்டும் காணாமலும் போக ஆரம்பித்துவிட்டார்கள். விளக்கேற்றவும் வழியின்றி பல ஆலயங்கள் இருண்டு கிடக்கின்றன.’


பெரியவர் வருத்தம் தோய்ந்த குரலில் சொல்லிக்கொண்டிருந்தார்.


‘புரிகிறது சுவாமி. இதில் நாம் செய்யக்கூடியது என்னவென்றுதான் தெரியவில்லை. உயிர் உள்ள வரை நாம் இத்தருமத்தைவிட்டு விலகப் போவதில்லை. திட சித்தம் கொண்ட யாரும் மன்னனுக்கு அஞ்சி மறுவழி தேடப் போவதுமில்லை. மழையோ வெயிலோ அடித்து ஓயத்தானே வேண்டும்? நாம் அது ஓயும்வரை அமைதி காப்பது தவிர வேறு வழியில்லை.’ என்றார் ராமானுஜர்.


சிறு தூறல் விழத் தொடங்கியிருந்தது.


‘கூரேசரே, பெரியவரை பத்திரமாக வீட்டில் கொண்டு விட்டுவிட்டு வாரும்!’ என்று சொல்லிவிட்டு ராமானுஜர் புறப்பட்டார்.


‘ஒரு நிமிடம் சுவாமி. என் ஆத்ம திருப்திக்கு நான் ஒரு காரியம் செய்யலாமென்றிருக்கிறேன்!’ என்றார் பெரிய நம்பி.


‘சொல்லுங்கள்.’


‘நாளைக் காலை த்வய மந்திரத்தைச் சொல்லிக்கொண்டே கோயிலை நான் வலம் வரப் போகிறேன். நடக்கச் சற்று சிரமமாகத்தான் இருக்கிறது. ஆனால் வேறு வழி தெரியவில்லை. நமக்கெல்லாம் நலம் தரும் சொல் என்றால் அது ஒன்றுதானே. அது காக்கட்டும்.’


ராமானுஜர் புன்னகை செய்தார். ‘தங்கள் சித்தம் சுவாமி.’


‘அகந்தையற்ற சுத்த ஆத்மாவான இந்தக் கூரேசரை எனக்கு உதவியாக அனுப்பிவையுங்கள். பிடித்துக்கொள்ள ஒருத்தர் தேவைப்படுகிறார் இப்போதெல்லாம்.’


மறுநாள் காலை பெரிய நம்பி, கூரேசரின் கையைப் பிடித்துக்கொண்டு த்வய மந்திரத்தை உச்சரித்தவண்ணம் திருவரங்கம் பெரிய கோயிலைச் சுற்றி வரத் தொடங்கினார். அது ஒரு காப்பு. மந்திரக் காப்பு. கெட்ட நோக்கத்தோடு யாரும் நெருங்க முடியாமல் தடுத்து நிறுத்துகிற காப்பு. உச்சரிப்பவரின் பரிசுத்தம், மந்திரத்துக்கு மேலும் வீரியம் கொடுக்கும். வெறும் உச்சாடனமல்ல. அது தியானம். தன்னை ஆகுதி ஆக்கி, மந்திரத்தில் நிகழ்த்துகிற வேள்வி.


‘இது போதும் முதலியாண்டான். பெரிய நம்பியைக் காட்டிலும் ஒரு புனிதர் திருவரங்கத்தில் இன்றில்லை. அவர் செய்கிற த்வயக் காப்பு இம்மண்ணை சோழனிடம் இருந்து காக்கும்.’ என்று சொன்னார் ராமானுஜர்.


சிறிது காலம் அப்படித்தான் இருந்தது. சோழ தேசம் முழுதும் வைணவர்களைத் தேடித்தேடிச் சித்ரவதை செய்துகொண்டிருந்த குலோத்துங்கன், திருவரங்கத்தின் பக்கம் திரும்பாமலேதான் இருந்தான்.


சட்டென்று ஒருநாள் அதுவும் நடந்தது. ‘என்ன பெரிய ராமானுஜர்? என்ன பெரிய ஶ்ரீபாஷ்யம்? சிவனே பெரிய கடவுள் என்று அவரையும் சொல்ல வைக்கிறேன் பார்!’


நச்சு உமிழ் சர்ப்பமாகச் சீறி எழுந்தது அவனது அகந்தை.


(தொடரும்)


Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 09, 2017 09:30

April 8, 2017

பொலிக! பொலிக! 86

‘உண்மையாகவா?’ நம்பமுடியாமல் கேட்டான் மன்னன் கட்டிதேவ யாதவன்.


‘ஆம் மன்னா. எங்களாலேயே நம்ப முடியவில்லை. இரவு சன்னிதிக்குள் சிவச் சின்னங்களையும் விஷ்ணுவின் சின்னங்களையும் பெருமான் திருவடிகளில் வைத்துவிட்டுக் கதவைப் பூட்டிக்கொண்டு வந்தது நாங்கள்தாம். கோயிலுக்குள் ஒரு ஈ, கொசுகூட இல்லை என்பதை உறுதி செய்த பிறகே கதவைப் பூட்டினோம். விடிய விடிய நாங்களும் ராமானுஜரும் கோயில் வாசலிலேயேதான் அமர்ந்திருந்தோம். உள்ளே சென்று பார்த்தால் பெருமான் கரங்களில் சக்கரமும் சங்கும் காட்சியளிக்கின்றன. இனி இதில் வாதத்துக்கு இடமில்லை. அது மகாவிஷ்ணுதான். திருமலை ஒரு வைணவத் தலம்தான்.’


சொல்லிவிட்டு வணங்கி விடைபெற்றுப் போனார்கள் சைவர்கள்.


மன்னன் உடனே தனது பரிவாரங்களுடன் கிளம்பினான். பல்லக்குத் தூக்கிகள் மன்னனைச் சுமந்துகொண்டு பாதையற்ற மலைப் பாதையில் ஓட்டமாக ஓடினார்கள். அதற்குமுன் மன்னர் மலைக்கு வந்துகொண்டிருக்கிறார் என்ற விவரத்தை மேலே உள்ள ராமானுஜரிடம் தெரிவிக்க நாலைந்து வீரர்கள் விரைந்துகொண்டிருந்தார்கள்.


மறுநாள் மதிய நேரம் கட்டிதேவ யாதவன் திருமலை வந்தடைந்தான். நேரே ராமானுஜரைச் சந்தித்து கைகூப்பி வணங்கினான்.


‘இதற்காகத்தான் சுவாமி தங்களை இந்த விஷயத்தில் தலையிடச் சொன்னேன். ஆண்டாண்டுக் காலமாக இருந்து வந்த பெரும் குழப்பம் இன்று நீங்கிவிட்டது. திருமலையப்பனுக்கு இனி பூஜைகள் தடைபடாது. உற்சவங்கள் தடைபடாது. என் பெரிய கவலை விட்டது! உங்களுக்கு நான் எப்படி நன்றி சொல்வேன்?’


ராமானுஜர் புன்னகை செய்தார்.


‘உங்களிடம் எனக்கு இன்னொரு கோரிக்கை இருக்கிறது சுவாமி.’


‘சொல் மன்னனே.’


‘நீங்கள் உடனே ஊருக்குக் கிளம்பிவிடாதீர்கள். இங்கேயே சிறிது காலம் இருந்து கோயில் நடைமுறைகளை ஒழுங்கு செய்து கொடுத்தால் நல்லது என்று படுகிறது. இனி எக்காலத்திலும் இங்கு சமயச் சண்டைகள் வரக்கூடாது. அதேபோல் வழிபாட்டு முறையில் நெறிகள் வகுக்கப்பட வேண்டும். எக்காலத்துக்கும் அதுவே நிரந்தரமாகவும் இருக்க வேண்டும்.’


ராமானுஜர் அதைச் செய்தார். திருமலையிலேயே சிலகாலம் தங்கியிருந்து வைகானச ஆகம முறைப்படி கோயில் இயங்க வழி செய்து கொடுத்தார். ஆனந்த நிலைய விமானம் அமைத்தது, வாரம் தோறும் வெள்ளிக்கிழமை திருமஞ்சனம் என்று ஏற்பாடு செய்தது, வியாழன் மட்டும் பூ அலங்காரத் தோற்றம் என்று நியமித்தது, நாச்சியார் திருமொழி பாடுகிற வழக்கம் ஏற்படுத்தியது, பெருமானுக்கு பூஜை தொடங்குமுன் வராக சுவாமிக்கு முதல் பூஜை என்னும் புராதனமான வழக்கத்தை மீளக் கொண்டுவந்தது, இன்னும் எத்தனையோ. பெருமாளின் நெற்றியில் பட்டையாகச் சுடர்விடும் பச்சைக் கற்பூரத் திருமண்ணை அறிமுகப்படுத்தியதும் அவரேதான்.


கட்டிதேவ யாதவன் நெஞ்சம் குளிர்ந்து போனான். ‘சுவாமி! தாங்கள் என் வேண்டுகோளை ஏற்றுத் திருமலையில் தங்கியது நாங்கள் செய்த புண்ணியம். பதிலுக்கு நான் தங்களுக்கு என்ன கைம்மாறு செய்ய முடியும் என்று தெரியவில்லை.’


ராமானுஜர் புன்னகை செய்தார். ‘அவசியம் கைம்மாறு செய்யத்தான் வேண்டுமா?’


‘செய்ய முடிந்தால் மகிழ்வேன் சுவாமி.’


‘அப்படியானால் தில்லை கோவிந்தராஜனைத் திருமலை அடிவாரத்தில் கோயில் கொள்ள வழி செய்வாயா ராஜனே?’


கட்டிதேவனுக்குப் புரியவில்லை. தில்லைக்கும் திருமலைக்கும் என்ன தொடர்பு? ‘நான் செய்யக்கூடிய எதுவானாலும் தயங்காமல் செய்வேன் சுவாமி. ஆனால் எனக்குத் தாங்கள் சொல்வது புரியவில்லை. தயவுசெய்து விளக்க வேண்டுகிறேன்.’


ராமானுஜர் சொல்லத் தொடங்கினார். குளறுபடியாகிக்கொண்டிருக்கிற சோழர் சாம்ராஜ்ஜியத்தின் இறுதிக் காலம் நடந்துகொண்டிருக்கிறது. ஆட்சியில் காட்டவேண்டிய அக்கறையை மத துவேஷத்தில் காட்டிக்கொண்டிருக்கிறான் குலோத்துங்கன். சைவம் தழைக்க வேண்டுமென்று எண்ணுவது தவறில்லை. அதற்காக வைணவ ஆலயங்களை எதற்கு முடக்க வேண்டும்? ஆனால் அவன் அதைத்தான் செய்கிறான். அதுவும் ஆத்மசுத்தியுடன். தில்லை கோவிந்தராஜப் பெருமாள் அநாதியானவர். ஒரு விதத்தில் திருமலை வேங்கடவனுக்கு அண்ணா முறை. இங்கே வேங்கடவன் சிக்கல்கள் நீங்கி சௌக்கியமாக இருக்கிறான். அவனது அண்ணாவுக்கோ அமர்ந்து அருளாட்சி புரிய ஒரு கோயில் இல்லை.


‘ஐயோ!’ என்று நெஞ்சில் கைவைத்தான் கட்டித்தேவன்.


‘மன்னா! திருமலை அடிவாரத்தில் காட்டுக்கு நடுவே இருக்கு விஷ்ணு கோயில் கேட்பாரற்றுக் கிடக்கிறது. அந்தக் கோயிலை உன்னால் புனருத்தாரணம் செய்ய முடியுமா? நான் கோவிந்தராஜரை அங்கே எழுந்தருளச் செய்கிறேன். வேங்கடவனின் அண்ணாவுக்குத் திருமலை அடிவாரத்திலேயே நாம் இருக்க ஓர் இடம் உருவாக்குவோம். கோயிலைச் சுற்றி ஒரு நகர் நிர்மாணிப்போம். சோழன் ஒதுக்கிய தெய்வத்தை நீ கொண்டாடத் தயாரென்றால் காலகாலத்துக்கும் உன் பெயர் நிலைத்திருக்கும்!’


‘உத்தரவிடுங்கள் சுவாமி. இதைவிடப் பெருமகிழ்ச்சி தரக்கூடிய விஷயம் எனக்கு வேறில்லை. எப்போது கோவிந்தராஜர் இங்கே வருவார் என்று மட்டும் சொல்லுங்கள். அதற்குள் நான் நகரத்தை எப்படி நிர்மாணிக்கிறேன் என்று பாருங்கள்!’


கண்மூடித் திறக்கும் நேரத்தில் உத்தரவுகள் பறந்தன. திருமலை அடிவாரத்தில் இருந்த பெரும் கானகம் திருத்தி அமைக்கப்பட்டது. பாழடைந்து, கேட்பாரற்றுக் கிடந்த பார்த்தசாரதி பெருமாள் கோயிலின் இடிபாடுகள் சரி செய்யப்பட்டன. எங்கெங்கிருந்தோ ஆட்கள் வேலைக்கு வந்தார்கள். கற்களும் மண்ணும் மலையெனக் கொண்டு குவிக்கப்பட்டன. இரவு பகல் பாராமல் பணி நடந்தது. தீரத் தீர மன்னன் பொன்னும் மணியும் அள்ளிக் கொட்டிக்கொண்டிருந்தான்.


கோவிந்தராஜ பெருமாள் கோயிலுக்கான அடிப்படை வடிவத்தைத் தீர்மானித்து அளித்தது உடையவர்தான். மேலிருந்து பார்த்தால் ஒரு கிருஷ்ணப் பருந்தின் தோற்றத்தில் இருக்கிற கோயில்.


‘பக்தர்கள் எப்போது கோயிலுக்கு வந்தாலும் பிரசாதம் இல்லாமல் இருக்கக்கூடாது’ என்றார் ராமானுஜர். ‘இங்கே திருப்தியாகப் பிரசாதம் சாப்பிட்டுவிட்டுப் பசியின்றி மலையேறட்டும்.’


‘உத்தரவு சுவாமி. தங்கள் விருப்பம் என்றும் தொடரும்.’ என்றான் கட்டித்தேவன்.


நல்ல நாள் பார்த்து கோவிந்தராஜ பெருமாளைத் திருமலை அடிவாரத்துக்கு எழுந்தருளச் செய்தார் உடையவர். கோலாகல உற்சவம். ஆரவாரமான குடமுழுக்கு. ‘எம்பெருமானே! என்றென்றும் இங்கிருந்து ஏழுலகையும் காத்து நில்!’ மனம் குவிந்து வேண்டினார்.


மன்னனுக்குப் பெருமகிழ்ச்சி. மக்களுக்குத் திகட்டாத பேரானந்தம். ‘ராமானுஜரே, நீங்கள் இங்கேயே இருந்துவிட மாட்டீர்களா?’ ஏங்கிப் போய்க் கேட்டார்கள்.


‘அது சிரமம். நமது பணி திருவரங்கத்தில் உள்ளது. அரங்கன் திருப்பணிக்குக் காலமும் அரசும் சாதகமாக இல்லாத சூழலில் நான் இத்தனை ஆண்டுகள் வெளியேறிக் கிடந்ததே தவறு.’


விடைபெற்றுக் கிளம்பினார். திருவரங்கம் வந்து சேர்ந்தபோது நிலவரம் அவர் எதிர்பார்த்ததைக் காட்டிலும் சற்றுக் கலவரமாகித்தான் இருந்தது.


(தொடரும்)


Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 08, 2017 09:30

ருசியியல் 17

வேள்வி நடக்கிறபோது அசுரர்கள் அக்கிரமம் செய்து அதைக் கலைப்பார்கள் என்று கதை கேட்டிருக்கிறீர்களா? அப்படியொரு அசுரத்தனமான தாக்குதலுக்கு சமீபத்தில் இலக்காகிப் போனேன்.


அதற்குமுன்னால் அப்படியென்ன பெரிய வேள்வி இங்கே நடந்து வாழ்ந்தது என்பீரானால், இத்தொடரின் முதல் சில அத்தியாயங்களை மீண்டுமொருமுறை படித்துவிடவும். எனது எடைக்குறைப்பு நடவடிக்கைகளைப் பற்றிப் போதிய அளவுக்குச் சொல்லியிருக்கிறேன். மாவுச் சத்து குறைவான, கொழுப்பு அதிகமான உணவு வகைகளை உண்ணுவதன்மூலம் பிதுரார்ஜித சொத்தாக தேகத்தில் சேர்த்துவைத்த கெட்ட சரக்கையெல்லாம் அழித்தொழிக்கிற திருப்பணி.


இந்தக் குறை மாவு நிறைக் கொழுப்பு உணவு முறையில் இறங்கிய நாளாக நான் வழக்கமாக உண்ணும் சாப்பாட்டுப் பக்கம் ஒருநாளும் திரும்பியதில்லை. அதாவது, சாதம் கிடையாது. சாம்பார், ரசம் வகையறாக்கள் கிடையாது. அப்பள இன்பம் இல்லை. அதிரச, தேன்குழல், அக்கார அடிசில் இல்லை. தானியமும் இனிப்பும் எந்த ரூபத்திலும் உள்ளே போகாத உணவு முறை இது. பால், தயிர், பன்னீர், வெண்ணெய், நெய், பாலாடைக்கட்டியென பிருந்தாவனத்துக் கிருஷ்ண பரமாத்மாவின் சமகால எடிஷனாக ஒரு வாழ்க்கை. அவ்வப்போது பாதாம். எப்போதாவது பிஸ்தா. அளவின்றிக் காய்கறிகள். அதிகமாகக் கீரை இனம்.


இப்படிச் சாப்பிட ஆரம்பித்து ஒரு ஆறு மாத காலத்தில் இருபத்தி மூன்று கிலோ எடையைக் குறைத்திருந்தேன். எந்த குண்டோதரன் கண்ணைப் போட்டுத் தொலைத்தானோ தெரியவில்லை, திடீரென ஒரு கெட்ட நாளில் எடைக்குறைப்பானது நின்று போனது.


நானும் என்னென்னவோ செய்து பார்த்தேன். விரதங்கள், காலை நடை என்று வழக்கத்தில் இல்லாதவற்றையெல்லாம்கூட. ம்ஹும். பத்து காசுக்குப் பயனில்லை. நின்ற எடை நின்றதுதான். என்ன செய்யலாம் என்று யோசித்து, கொஞ்சம் உடல் அறிவியலைப் படித்துப் பார்த்தேன். பிறந்தது முதல் மாவுச் சத்து உணவை மட்டுமே உண்டு வருகிறவர்கள் நாம். சட்டென்று உடலுக்கு ஓர் அதிர்ச்சி கொடுத்து, மாவுப் பொருள்களைக் கணிசமாகக் குறைத்து, கொழுப்பில் உடலியந்திரத்தை இயக்க ஆரம்பித்தபோது எடை குறைந்தது. இதற்கு ஆன அவகாசத்தில் உடம்பானது கொழுப்புணவுக்குப் பழகிப் போய்விட்டிருக்கிறது.


எதுவுமே பழகிவிட்டால் ஒரு அசமஞ்சத்தனம் வரத்தானே செய்யும்? சம்சார சாகரம் சத்தம் போட்டால் கண்டுகொள்கிறோமா? மேலதிகாரி முகத்தில் விட்டெறிந்தால் பொருட்படுத்துகிறோமா? ஆனால் மதுக்கடைகள் மூடப்படுகிற சேதி வந்தால் அதிர்ச்சியடைந்துவிடுகிறோம். ஏனென்றால், அதெல்லாம் நடக்காது என்று நம்பிக்கொண்டிருக்கிறோம். நடக்க வாய்ப்பில்லாதவை நடக்கிறபோதுதான் அதிர்ச்சி என்ற ஒன்று தொக்கி நிற்கும்.


நிற்க. விஷயத்துக்கு வருகிறேன். நின்றுபோன எடைக்குறைப்பை மீண்டும் தொடங்குவதற்கு, உடம்புக்கு ஓர் அதிர்ச்சி கொடுத்தால் தப்பில்லை என்றார்கள் சில அற்புத விற்பன்னர்கள். அதாவது, எந்த மாவுச் சத்து மிக்க உணவை விலக்கி, கொழுப்பின்மூலம் எடையைக் குறைத்தேனோ, அதே மாவுச் சத்து உணவை மீண்டும் ஒருநாள் தடாலடியாக உண்பது. கொழுப்புக்குப் பழகிய உடலானது, இந்த திடீர் அதிர்ச்சியைத் தாங்காமல் கொஞ்சம் நிலை தடுமாறும். இன்சுலின் சுரப்பு மட்டுப்படும். ரத்த சர்க்கரை அளவு ஏறும். பழைய கெட்டத்தனங்கள் அனைத்தும் மீண்டும் தலையெடுக்கும்.


வா ராஜா வா என்று காத்திருந்து அனைத்தையும் உலவவிட்டு, தடாலென்று மீண்டும் அடுத்த நாள் கொழுப்புக்கு மாறும்போது உடலுக்கு அதிர்ச்சியின் உச்சம் சித்திக்கும். எனவே மீண்டும் எடைக்குறைப்பு நிகழ ஆரம்பிக்கும் என்பது இந்த இயலின் அடிப்படை சித்தாந்தம்.


செய்து பார்க்கலாம் என்று தோன்றியது. தோதாக வீட்டில் ஒரு விசேஷம் வந்தது.


எப்பேர்ப்பட்ட அபார விருந்திலும் சிந்தை குலையாதிருந்த தவ சிரேஷ்டன் அன்று தொந்திக் குறைப்பு அல்லது கரைப்பு நடவடிக்கைகளின் ஓரங்கமாகப் பண்டிகைச் சமையலை ஒரு கை பார்க்க முடிவு செய்தான்.


அன்றைய என் மெனுவில் மோர்க்குழம்பு இருந்தது. பருப்புப் போட்ட தக்காளி ரசம் இருந்தது. உளுந்து வடையும் அரிசிப் பாயசமும் இருந்தன. வாழைக்காய், பீன்ஸ் போன்ற நான் தொடக்கூடாத காய்கறிகள் இருந்தன. அனைத்துக்கும் மேலாக அப்பம் இருந்தது. வாழைப்பழ அப்பம். மெத்து மெத்தென்று அசப்பில் ஹன்சிகா மோத்வானியின் கன்னம் போலவே இருக்கும். அழுத்தி ஒரு கடி கடிடித்து ஆர அமர மெல்லத் தொடங்கினால் அடி நாக்கில் இருந்து நுனி வயிறு வரை ருசித்துக்கொண்டே இருக்கும். ஒரு காலத்தில் வெண்ணெய் தோய்த்து உண்ணும் அப்பத்துக்காகவே நான் கோகுலாஷ்டமியை மிகவும் விரும்புவேன். கிண்ணம் நிறைய வெண்ணெய் வைத்துக்கொண்டு, பத்துப் பன்னிரண்டு அப்பங்களைப் பொறுக்க தின்று தீர்ப்பது ஒரு சுகம். ஏப்பம் வரை இனித்துக்கொண்டிருக்கிற அற்புதம் வேறெந்தப் பலகாரத்துக்கும் கிடையாது.


ஆனால் எனது மேற்படி விஷப் பரீட்சை தினத்தில் நான் அப்பத்துக்கு வெண்ணெய் தொட்டுக்கொள்ளவில்லை. நெய் சேர்க்கவில்லை. கொழுப்புணவின் குலக் கொழுந்துகளான அவற்றை முற்றிலும் விலக்கி, எதெல்லாம் எனது உணவு முறைக்கு நேர் எதிரியோ அவற்றை மட்டுமே உண்ணுவதென்று முடிவு செய்திருந்தேன்.


முன்னதாக இந்தப் பரீட்சார்த்தக் கலவர காண்டத்துக்குத் தயாராகும் விதமாக இருபத்தி நான்கு மணிநேர உண்ணாவிரதம் இருந்தேன். தண்ணீரைத் தவிர வயிற்றுக்கு வேறெதையும் காட்டாமல் காயப் போடுதல் இங்கே அவசியமாகிறது. அது ஒரு பிரச்னை இல்லை என்று வையுங்கள். கொழுப்புணவு உண்பவனுக்குப் பசி இருக்காது. விரதமெல்லாம் மிகச் சுலபமாகக் கைகூடிவிடும். சற்றும் சோர்வின்றி நாற்பத்தியெட்டு மணி நேரம், எழுபத்தி இரண்டு மணி நேரம் விரதமிருப்பவர்கள் எல்லாம் உண்டு. நான் இருந்தது வெறும் இருபத்தி நான்கு மணி நேர விரதம்தான்.


அந்த விரதத்தை முடித்துவிட்டு மேற்படி கார்போஹைடிரேட் விருந்துக்குத் தயாரானேன். முற்றிலும் மாவு. முற்றிலும் எண்ணெய். முற்றிலும் இனிப்பு வகைகள். எப்படியும் ஓர் அணுகுண்டு வெடித்த மாதிரி உடம்புக்குள் ஒரு பெரும் புரட்சி நடந்தே தீரும் என்று தோன்றியது. என்னவாவது நடந்து மீண்டும் எடை குறைய ஆரம்பித்தால் போதும் எம்பெருமானே என்று வேண்டிக்கொண்டு ஒரு கட்டு கட்ட ஆரம்பித்தேன். வடைகளையும் அப்பங்களையும் தாராளமாக உண்டேன். வாழைக்காயானது எனது பிராண சிநேகிதன். பல மாதங்களாக அதை நினைத்துக்கூடப் பாராதிருந்தேன். அன்றைக்கு காணாதது கண்டாற்போல் அள்ளி அள்ளி உண்டேன்.


எப்படியும் ஒரு மூவாயிரம் கலோரிக்கு உண்டிருப்பேன் என்று நினைக்கிறேன். மூச்சு முட்டி, போதும் என்று தோன்றியபோதுதான் நிறுத்தினேன். தண்ணீர் குடிக்கக்கூட இடமின்றி, தள்ளாடிச் சென்று அப்படியே படுத்துத் தூங்கியும் போனேன்.


ஆக, பரீட்சை எழுதியாகிவிட்டது. இனி இது பலன் தர வேண்டும்.


இந்தப் பரிசோதனையின் இறுதிக் கட்டம்தான் முக்கியமானது. இருபத்தி நான்கு மணி நேர முழு உண்ணாவிரதத்துக்குப் பிறகு மாவுச் சத்து மிக்க ஒரு விருந்தை உண்பதோடு இது முடிவதில்லை. அந்த விருந்துக்குப் பிறகு, தொடர்ச்சியாக இன்னொரு இருபத்தி நாலு மணி நேர உண்ணாவிரதம் தேவை. கொழுப்புணவில் இருக்கும்போது உண்ணாவிரதம் சுலபம். ஆனால் அரிசிச் சோறுக்கு அது ஆகாது. பசி வயிற்றை எரித்துவிடும்.


அப்படி எரிப்பதில்தான் காரிய சித்தி என்றார்கள் உத்தமோத்தமர்கள். என்ன கெட்டுப் போய்விடும்? சரி என்று அதையும் வெற்றிகரமாக நிறைவேற்றி முடித்தேன்.


அதன்பிறகு நடந்த கலவரத்தை அடுத்த வாரம் சொல்கிறேன்.


Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 08, 2017 07:52

April 7, 2017

பொலிக! பொலிக! 85

அது மடை திறந்த தருணமல்ல. மலை திரண்ட தருணம். திருமலையில் இருந்த அத்தனை பேரும் கோயில் வாசலில் வந்து கூடியிருந்தார்கள். செய்தி கேள்விப்பட்டு ஏழு மலைகளிலும் வசிக்கும் ஆதிவாசிகளும் அங்கு வந்து சேர்ந்திருந்தார்கள். இத்தனைக் காலமாகத் தீராதிருந்த ஒரு பெரும் பிரச்னை இன்று முடிவுக்கு வந்துவிடும் என்று ராமானுஜர் சொல்லியிருக்கிறாராமே? அப்படி என்ன முடிவு கிடைத்துவிடப் போகிறது?


அனைவரும் காத்திருந்தார்கள். இருட்டுகிற நேரத்தில் உடையவர் தமது சீடர்களுடன் கோயில் வாசலுக்கு வந்து சேர்ந்தார்.


‘வாரும் ராமானுஜரே. ஏதோ பிரமாதமான யோசனை இருக்கிறதென்று சொன்னீரே? அது என்ன?’


சிவாசாரியார்கள் கேட்டார்கள்.


‘யோசனை என்றுதான் சொன்னேன். பிரமாதமான யோசனை என்பது உங்கள் மனம் ஏற்ற வடிவம். எப்படியானாலும் அது நல்லதே. இதோ பாருங்கள், நீங்கள் சைவர்களாக இருக்கலாம். நாங்கள் வைணவர்களாக இருக்கலாம். அதோ அமர்ந்திருக்கும் ஆதிகுடி மக்கள் சக்தி வழிபாட்டை விரும்புவோராக இருக்கலாம். எது எப்படியானாலும் நாம் அனைவரும் நமக்கு மேலான ஒரு சக்தியை நம்புகிறவர்கள். உண்டா இல்லையா?’


‘ஆம். அதிலென்ன சந்தேகம்?’


‘இந்தக் கோயிலுக்குள் இருக்கிற தெய்வம் சிவனா விஷ்ணுவா என்று நாம் சண்டையிட்டுக்கொண்டிருக்க வேண்டாம். அவனே ஒரு தீர்ப்பு சொல்லட்டும்.’


‘அதைத்தான் ஐயா கேட்கிறோம். தெய்வம் எப்படிப் பேசும்?’


‘எப்படியோ பேசிவிட்டுப் போகட்டும். நமக்கென்ன அதைப் பற்றி? தேவை இருந்தால் கண்டிப்பாகப் பேசும். காஞ்சியில் எனது ஆசாரியர் ஒருவர் இருக்கிறார். அவருடன் பேரருளாளன் தினமும்தான் பேசிக்கொண்டிருக்கிறான். எப்படிப் பேசுகிறான், ஏன் பேசுகிறான் என்று நமக்குப் புரியாது. நம் அறிவுக்கு எட்டாத எதுவும் உண்மையில்லை என்று சொல்லுவது அறிவீனமல்லவா?’


‘ஏற்கிறோம் ராமானுஜரே. நீங்கள் என்ன சொன்னாலும் எங்களுக்குச் சம்மதம். தெய்வம் தன்னை யாராக வெளிப்படுத்திக்கொள்கிறதோ, அதை ஒட்டியே கோயில் நிர்வாகத்தைக் கொடுத்து விடுவோம்.’


‘மெத்த சரி. உங்கள் சிவனுக்கு உரிய சின்னங்களான மான், மழுவை எடுத்து வாருங்கள்.’ என்று அவர்களிடம் சொல்லிவிட்டுத் தனது சீடர்களை நோக்கி, ‘நீங்கள் சென்று சங்கு சக்கர சின்னம் ஒன்றை எடுத்து வாருங்கள்.’ என்று உத்தரவிட்டார்.


சின்னங்கள் வந்தன.


‘உடையவரே, இவற்றை வைத்து என்ன செய்யப் போகிறீர்கள்?’


‘நான் எதையும் செய்யப் போவதில்லை சுவாமி. இதோ சிவனுக்குரிய மான், மழு. அதோ விஷ்ணுவின் சங்கு சக்கரம். இரண்டையும் நீங்களே எடுத்துச் சென்று சன்னிதியில் பெருமான் பாதங்களில் வைத்துவிட்டு வாருங்கள். இரவு கதவைப் பூட்டிவிடுவோம். காலை சென்று உள்ளே பார்ப்போம்.’


‘பார்த்தால்?’


‘எந்தச் சின்னத்தை அவன் ஏற்கிறானோ அதை வைத்து அவன் யார் என்று தெரிந்துகொள்வோம்.’


‘புரியவில்லையே சுவாமி! பெருமான் என்ன செய்வான் என்று எதிர்பார்க்கிறீர்கள்?’


ராமானுஜர் ஒரு கணம் அமைதியாக இருந்தார். பிறகு சொன்னார். ‘இது வைணவத்தலம்தான் என்பது எங்கள் அசைக்க முடியாத நம்பிக்கை. அதே நம்பிக்கைதான் இது சைவத்தலம் என்பதில் உங்களுக்கும் உள்ளது. நமது நம்பிக்கைகளுக்கு அப்பால் உள்ளதன் பெயர்தான் உண்மை. உண்மையை உலகுக்கு உணர்த்துவது அவன் பணியல்லவா? அதை அவன் சரியாகச் செய்தால்தானே அவன் தெய்வம்? அவன் செய்வான். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது. உங்களுக்கும் அதே நம்பிக்கை இருக்குமானால் நான் சொன்னபடி செய்யுங்கள்!’ என்றார் ராமானுஜர்.


சிறிது நேரம் அனைவரும் ராமானுஜர் சொன்னதை விவாதித்தார்கள். விளைவு என்னவாக இருக்கும் என்று யாருக்கும் புரியாத சூழலில், அந்த யோசனையை வேண்டாம் என்று ஒதுக்கவோ, சரிதான் என்று ஏற்கவோ யாருக்கும் முழு மனமில்லை. இருந்தாலும், இந்த விதத்திலேனும் ஒரு சரியான விடை கிடைத்துவிட்டால் நல்லதுதானே என்று நினைத்தார்கள். உடையவர் சொன்னபடி சிவச் சின்னங்களையும் விஷ்ணுவின் சின்னங்களையும் ஏந்திச் சென்று பெருமானின் பாதங்களில் வைத்தார்கள்.


‘காலை கதவு திறக்கிறோம். உன்னை அப்போது நீ அடையாளம் காட்டு!’ என்று வேண்டிக்கொண்டு நடை சாத்திவிட்டு வெளியே வந்தார்கள். வரிசையாகக் கோயிலின் அனைத்துக் கதவுகளும் இழுத்துப் பூட்டப்பட்டன. பிரதான வாயிலுக்கு வெளியே வந்ததும் அந்தக் கதவும் இழுத்துப் பூட்டப்பட்டது.


ராமானுஜரும் சீடர்களும் கதவருகே ஒருபுறம் அமர்ந்தார்கள். எதிர்ப்புறம் சிவாசாரியர்களும் பிற சைவர்களும் அமர்ந்தார்கள். ஆதிகுடி மக்கள் ஆர்வம் தாங்கமாட்டாதவர்களாக இருபுறமும் பரவி அமர்ந்தார்கள்.


‘ஐயா, இறைவன் தன்னை நிரூபிப்பானா? இது நம்பமுடியாத விஷயமாக உள்ளதே?’


‘நிரூபணம் என்பது அற்பர்களான நாம் நினைத்துக்கொள்வதுதான். அவன் தன் இயல்பை, தன் சொரூபத்தைக் காட்டுவான் என்பதுதான் உண்மை. அதற்கான அவசியம் இருப்பதாக அவன் நினைத்தால் கண்டிப்பாக அவன் அதைச் செய்வான். வேண்டியது நம்பிக்கை மட்டுமே! அனைவரும் கண்மூடி அவனை வேண்டுங்கள்!’


சொல்லிவிட்டு உடையவர் கண்களை மூடி தியானத்தில் ஆழ்ந்தார். ‘பெருமானே! இது உன் கோயில். ஆழ்வார்கள் பாடிய அற்புதத் தலம். காலகாலமாக இருந்து வரும் இந்நம்பிக்கை உண்மையானால் நாளைக் காலை அதை நீ இந்த சிவாசாரியார்களுக்கு எடுத்துச் சொல்லு. என்னால் கேட்கத்தான் முடியும். செய்ய வேண்டியது நீதான். நீ மட்டும்தான்.’


இரவெல்லாம் அவர்கள் விழித்திருந்தார்கள். எல்லா இரவுகளையும்போல் அந்த இரவும் விடிந்தது. விழித்திருந்த அத்தனை பேரும் எழுந்து நின்றார்கள். ராமானுஜரும் எழுந்தார்.


‘உள்ளே செல்லலாமா சுவாமி?’


‘ஆம். நேரமாகிவிட்டது. கதவைத் திறவுங்கள்.’


கோயில் கதவு திறக்கப்பட்டது. சைவர்களும் வைணவர்களும் சக்தி வழிபாட்டில் நம்பிக்கை கொண்ட ஆதிகுடிகளும் கோயிலுக்குள் நுழைந்தார்கள். அனைவர் முகத்திலும் பதற்றம். நடையில் பரபரப்பு.


‘உடையவரே, இப்போதும் கேட்கிறோம் என்று தவறாக எண்ணாதீர்கள். பெருமான் ஒருவேளை நமக்கு இன்று எதையும் உணர்த்தவில்லை என்றால்?’


ராமானுஜர் புன்னகை செய்தார். ‘அதையும் பார்த்துவிடுவோமே!’


சன்னிதி திறக்கப்பட்டது. அர்ச்சகர் ஒருவர் உள்ளே சென்று திருவிளக்கை ஏற்றினார். ஒரு புறம் ஹரஹர மகாதேவா என்ற கோஷம். மறுபுறம் நாராயணா என்னும் நாமம். அனைவர் கரங்களும் மேலெழுந்து குவிந்திருந்தன. ராமானுஜர் மட்டும் கண்மூடியே நின்றிருந்தார்.


‘அர்ச்சகரே, கற்பூரம் காட்டுங்கள்!’ யாரோ கத்தினார்கள்.


அர்ச்சகர் கற்பூரத்தை ஏற்றி பெருமானை நோக்கி நீட்ட, வெளிச்சத்தில் அது பளிச்சென்று தெரிந்தது.


பெருமான் சங்கும் சக்கரமும் ஏந்தியிருந்தான்! மானும் மழுவும் வைத்த இடத்திலேயே இருந்தன.


(தொடரும்)


Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 07, 2017 09:30

April 6, 2017

பொலிக! பொலிக! 84

வந்திருப்பது எளிய சிக்கல் அல்ல. சிக்கலுக்கு உள்ளாகியிருப்பது சராசரி மக்களும் அல்ல. இது மக்களால் எம்பெருமானுக்கு நேர்ந்திருக்கிற சிக்கல். அடையாளச் சிக்கல். அறிவின்மீது படிந்த பூஞ்சையால் விளைவது. ஆத்திர அரசியல்களால் முன்னெடுக்கப்படுவது. ஒரு மன்னன் கடிதம் எழுதுகிறான். என்னால் இச்சிக்கலைத் தீர்க்க முடியவில்லை; நீங்கள் பார்த்து ஏதாவது செய்யுங்கள் என்று கெஞ்சுகிறான். என்றால் என்ன அர்த்தம்?


மதம் கூர்மையானது. உணர்வுகளின் அடியாழங்களில் நேரே சென்று தைக்கக்கூடியது. மதம் சார்ந்த நம்பிக்கைகளும் அவ்வாறே. இது ஒரு பவுத்தத்தோடோ, சமணத்தோடோ மோதுவதல்ல. ஹிந்து மதத்துக்குள்ளேயே இரு பிரிவினரின் அசைக்க முடியாத நம்பிக்கைகளை முன்வைத்து அலச வேண்டிய விவகாரம்.


‘சுவாமி, பரம்பொருளான ஶ்ரீமன் நாராயணனே அல்லவா திருமலையில் எழுந்தருளியிருக்கிறான்? எதற்காக இவர்கள் இப்படி மாற்றிப் பேசுகிறார்கள்? ஆழ்வார்கள் பாடியிருப்பது ஒன்றே போதாதா?’ என்றார்கள் சீடர்கள்.


‘பேசிப் பார்ப்போமே?’ என்று சொல்லிவிட்டு ராமானுஜர் திருமலைக்குப் புறப்பட்டார்.


கோயில் பிரச்னையைப் பேசுவதற்காக ராமானுஜர் வருகிறார் என்று தெரிந்ததுமே மலை மீதிருந்த சிவாசாரியார்கள் பரபரப்பானார்கள். சைவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு ராமானுஜரை எதிர்த்து நிற்க முடிவு செய்து கூடினார்கள். அவர்களுக்கு ராமானுஜரைத் தெரியும். அவரது பராக்கிரமங்கள் தெரியும். தேசமெங்கும் அவர் வாதில் வீழ்த்திய பண்டிதர்களைப் பற்றிய கதைகளை அவர்கள் கேட்டிருந்தார்கள். அனைத்துக்கும் மேலாக கோவிந்தன்!


காளஹஸ்தி சிவாலயத்துடன் சேர்த்தே எண்ணப்பட்ட மாபெரும் சிவபக்தர். எத்தனை ஆண்டுகள்! எத்தனை ஆண்டுகள் அங்கே சிவஸ்மரணையில் தவம் கிடந்திருப்பார்! அது வெறும் பக்தியல்ல. கண்மூடித்தனமான பக்தியல்ல. கோவிந்தன் மெத்தப் படித்தவர். பெரிய ஞானஸ்தர். தன் இருப்பும் இடமும் தீர்மானத்தின் நித்தியமும் உணர்ந்தவர். அப்பேர்ப்பட்ட மகா யோகியே மனம் மாறி வைணவத்தைத் தழுவக் காரணமாயிருந்தவர் வருகிறார் என்றால் இது சிறிய விஷயமல்ல.


கோவிந்தன் திருமலையில் கைங்கர்யம் செய்துகொண்டிருந்த போதெல்லாம் அவரை அந்த சிவாசாரியர்களுக்கு நன்கு தெரியும். சைவத்தை விடுத்து அவர் வைணவம் ஏற்ற அனுபவத்தை எத்தனையோ முறை அவர் சொல்லியே கேட்டிருக்கிறார்கள். இன்று உடையவருடன் அவரும் வருகிறார். பிரம்ம சூத்திர உரை எழுதி முடித்த கையோடு பாரதமெங்கும் நடந்தே சென்று வைணவ தருமத்தை நிலைநாட்டித் திரும்பி வருகிற அணி. காஷ்மீரம் வரை சென்று வென்ற மகாபுருஷர் தலைமையில் வருகிற அணி. எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்?


அவர்கள் கூடிக் கூடிப் பேசினார்கள். புராண, சரித்திர, சமகால உதாரணங்களும் சம்பவங்கள் சுட்டும் ஆதாரங்களுமாகத் தங்கள் தரப்புக்கு நியாயம் சேர்க்க என்னென்னவோ சேகரித்து வைத்தார்கள்.


‘என்ன ஆனாலும் சரி, யார் சொன்னாலும் சரி. நாம் கோயிலை விட்டுக் கொடுக்கக்கூடாது. திருமலையில் உள்ளது சிவாலயம்தான். இங்குள்ள பெருமான் பரமசிவனேதான்.’ அவர்கள் தீர்மானமாக இருந்தார்கள்.


ராமானுஜர் தமது குழுவினருடன் மலைக்கு வந்து சேர்ந்தபோது அவர்கள் வாதத்துக்குத் தயாராக நின்றார்கள்.


‘வாரும் ராமானுஜரே! கோயிலை அபகரிக்க வந்தீரா?’


‘அபசாரம். இது எம்பெருமான் ஶ்ரீமன் நாராயணனின் வாசஸ்தலம். ஆழ்வார் பழியாய்க் கிடந்து பவளவாய் கண்ட இடம். என்ன வார்த்தை சொல்லிவிட்டீர்கள்!’


‘அதானே பார்த்தோம். உமது எம்பெருமான் இங்கே இல்லை சுவாமி. இக்குன்றில் இருப்பது குமரனின் தகப்பன். மருந்துக்கும் இங்கே வைணவ ஆலயச் சின்னம் என்று ஏதும் கிடையாது. தாழ்சடையும் நீள்முடியும் கொண்ட பெருமானைப் பாரும். வில்வார்ச்சனை நடக்கிற விதம் பாரும். கோயில் மதில் சுவரில் உள்ள சிங்கத்தைப் பாரும். அது சக்தி ரூபம். அனைத்தையும் ஒதுக்கிவிட்டுப் பெருமானுக்கு ஒரு திருமண் இட்டு முகத்தை மறைத்துவிட்டால் கதை முடிந்துவிடுமா?’


ராமானுஜர் நிதானமாக அவர்களிடம் தம் வாதங்களை எடுத்து வைத்தார். காலம் நிர்ணயிக்க முடியாத கோயில். பரிபாடல் புலவர்களில் இருந்து முதலாழ்வார்கள் வரை பாடியதைக் கொண்டே இது ஒரு புராதனமான வைணவ ஆலயம் என்பதைக் கண்டுகொள்ள வேண்டும். ஒன்றல்ல, இரண்டல்ல. பத்து ஆழ்வார்கள் ஒரு சிவன் கோயிலை மங்களாசாசனம் செய்திருப்பார்களா? தவிரவும் சடையும் முடியும் சிவனுக்கு மட்டுமே உரியது என்பதெல்லாம் சிறுபிள்ளைத்தனமான வாதம்.


ஒவ்வொன்றாக எடுத்துச் சொன்னார். ஒவ்வொன்றுக்கும் விளக்கம் சொன்னார். எதிர்வாதங்களுக்கு நிதானமாக பதில் சொன்னார். இங்கே பொறுமைதான் அவசியம்.


‘சிவ பக்தர்களே, நான்காம் நூற்றாண்டுப் பல்லவர்களும் ஐந்திலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரை இங்கு ஆண்ட சோழ யாதவர்களும் இதனை ஒரு சிவாலயமாகக் கருதி வழிபட்டதில்லை. சரித்திரத்தில் அப்படி ஒரு குறிப்பு கூட இல்லை. இது விஷ்ணுவின் ஆலயம் என்று அறிந்துதான் அவர்கள் வழிபட்டிருக்கிறார்கள், கைங்கர்யங்கள் செய்திருக்கிறார்கள். திடீரென்று ஏன் இப்படி முரண்டு பிடிக்கிறீர்கள்?’


‘பல்லவர்களும் சோழர்களும் இதை விஷ்ணு ஆலயமாகத்தான் கருதினார்கள் என்பதை உம்மிடம் சொன்னார்களா? கோயிலுக்குச் செய்த கைங்கர்யங்களைக் கல்வெட்டில் பதித்தவர்கள் எங்காவது இது ஒரு வைணவத்தலம்தான் என்று சொல்லி வைத்திருக்கிறார்களா என்று எடுத்துக் காட்டும் பார்ப்போம்!’


வாதம் வாரக் கணக்கில் நீண்டுகொண்டே போனது. அவர்களுக்குத் தெரியும், அது ஒரு வைணவ ஆலயம்தான் என்று. ஆனால் விட்டுக் கொடுக்க யாரும் விரும்பவில்லை. உள்ளே இருக்கும் தெய்வத்தை சிவனென்று நம்பி அவர்கள் பூஜை செய்துகொண்டிருந்தார்கள். பிரச்னை வந்தபோது அதுவும் நின்றுபோனது. மன்னன் தலையிட்டும் தீராத பிரச்னை.


‘இது தீர்க்க முடியாதது ஓய். நீர் கிளம்பி ஊர் போய்ச் சேரும். இது சிவாலயம்தான். நடந்தால் சிவபூஜைதான் நடக்கும். இல்லாவிட்டால் பெருமானுக்குப் பூஜையே கிடையாது!’ தீர்மானமாகச் சொல்லிவிட்டார்கள்.


ராமானுஜர் யோசித்தார். கண்மூடிச் சில நிமிடங்கள் அமைதியாக இருந்தார். பிறகு, ‘சரி. ஒன்று செய்வோமா? இது சிவாலயமா, விஷ்ணுவின் ஆலயமா என்று நாம் முடிவு செய்ய வேண்டாம். உள்ளே இருக்கிற பெருமானே தான் யாரென்பதை நிரூபித்துக்கொள்ளட்டும்.’


திடுக்கிட்டது கூட்டம். ‘அதெப்படி சாத்தியம்? பெருமான் வாய் திறந்து பேசவா செய்வான்?’


‘பேசுகிறானோ, உணர்த்துகிறானோ. பொறுப்பை அவனிடமே விட்டுவிடுவோம். கிடைக்கிற பதில் போதுமா உங்களுக்கு?’


‘அவன் தன்னைத்தானே வெளிப்படுத்திக்கொள்வான் என்றால் அதை நாங்கள் ஏன் மறுக்கப் போகிறோம்? பெருமானே சொல்லிவிட்டால் மறுபேச்சு கிடையாது.’


‘அப்படியானால் இன்றிரவு இப்பிரச்னைக்கு ஒரு முடிவு தெரிந்துவிடும்!’ என்றார் ராமானுஜர்.


(தொடரும்)


Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 06, 2017 09:30

April 5, 2017

பொலிக! பொலிக! 83

‘என்ன பிரச்னை?’ என்றார் ராமானுஜர்.


சுற்றியிருந்தவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். பிரச்னை என்னவென்பது அவர்களுக்குத் தெரியும். ஆனால் எங்கிருந்து தொடங்குவது என்பதில் சிக்கல் இருந்தது.


காலக் கணக்கு கண்டறியப்பட முடியாத காலம் தொடங்கி இருந்து வருகிற கோயில். தொண்டைமான் என்ற பல்லவ குலத்து மன்னன் ஐந்தாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் வேங்கடவனுக்குக் கைங்கர்யங்கள் செய்திருப்பதில் ஆரம்பித்து வரலாறு விரியத் தொடங்குகிறது. ஐந்தாம் நூற்றாண்டு முழுதுமே பல்லவர்கள் திருமலையப்பனின் சேவையில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார்கள். பிறகு சோழர்கள் வந்தார்கள். அடுத்த ஐந்நூறு ஆண்டுகளில் ஆட்சிகளும் மன்னர்களும் மாறினாலும் கோயில் கைங்கர்யங்களில் எந்தக் குறைவும் வைத்ததில்லை. ராஜேந்திர சோழன் காலத்தில் கோயிலில் இருபத்தி நான்கு விளக்குகள் தடையின்றி எரிய எண்ணெய் தர ஒப்புக்கொண்ட வணிகர்கள் தம் வார்த்தை தவறியதற்காக இழுத்து வைத்து பெரிய விசாரணையே நடத்தியிருக்கிறான். அவர்களது உரிமையை ரத்து செய்து தண்டித்திருக்கிறான்.அப்புறம் வந்தவர்கள் காலத்திலும் கோயில் காரியங்களில் குறையேதும் ஏற்பட்டதில்லை.


சட்டென்று ஒருநாள் எங்கோ ஒரு கல் உதிர்ந்து எல்லாம் கலையத் தொடங்கியதுதான் ஏனென்று யாருக்கும் புரியவில்லை. பெருமானுக்குப் பூஜைகள் நின்றுபோயின. உற்சவங்கள் இல்லாமல் போயின. தினமும் செய்யப்படுகிற நித்தியப்படியே காணாமல் போனது.


‘ஆச்சரியமாக இருக்கிறதே?’ என்றார் ராமானுஜர்.


வந்திருந்த தூதுவர்கள், மன்னன் கட்டிதேவ யாதவன் கொடுத்தனுப்பியிருந்த ஓலையை அவரிடம் கொடுத்தார்கள். அவர் அதைப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தார். பிரச்னை மெல்ல மெல்லப் புரியத் தொடங்கியது.


ஆகம முறைப்படி நடைபெற்றுக்கொண்ட கோயில் நடைமுறைகளைச் சரியாகக் கடைப்பிடிக்காத சில அர்ச்சகர்களால் வந்த சிக்கல் அது. மன்னன் கூப்பிட்டு அவர்களைக் கண்டிக்கப் போக, கோபித்துக்கொண்டு கோயிலை விட்டுப் போனார்கள்.


பூஜைகள் நின்றன. திருவாராதனம் நின்றது. பெருமானுக்கு அமுது செய்விக்க ஆளற்ற சூழ்நிலை உண்டானது. யாரும் வராத கோயில் படிப்படியாகத் திருமலையில் இருந்த சில சிவாசாரியார்கள் வசம் போனது. அவர்கள் தமது வழக்கப்படி கோயிலில் பூஜைகள் செய்யத் தொடங்கியபோது வைணவர்கள் கொதித்துப் போனார்கள்.


‘அதெப்படி ஒரு வைணவ ஆலயத்தில் சிவாசாரியர்கள் பூஜை செய்யலாம்?’


‘சரியப்பா. வைணவ அர்ச்சகர்கள் விட்டுச் சென்ற தலம்தானே இது? பூஜையே இல்லாமல் கதவு சாத்தப்பட்டிருப்பதைவிட இது பரவாயில்லை அல்லவா?’


‘அதெல்லாம் முடியாது. திருமலையப்பனை ஒரு சைவக்கடவுளாக்குவதை நாங்கள் ஒருக்காலும் அனுமதிக்க மாட்டோம்.’


எதிர்ப்புகளும் மறுப்புகளும் வலுக்கத் தொடங்கின. சண்டை பெரிதானது. கோயில் யாருடையது என்ற வினா, உள்ளே இருக்கும் மூர்த்தி யார் என்பதில் போய் நின்றது.


‘வேங்கடவனின் தாழ் சடையும் நீள்முடியும் வேறு எந்த வைணவக் கோயில் அர்ச்சாமூர்த்திக்கும் இல்லை. அவை சிவச் சின்னங்கள் அல்லவா? வேங்கடவன் வேறு யாருமல்ல; சிவபெருமானே’ என்றது ஒரு தரப்பு.


‘யார் சொன்னது? சைவரும் அல்லாத, வைணவரும் அல்லாத சமணரான இளங்கோவடிகள், பெருமான் கையில் சங்கு சக்கரம் ஏந்தியிருப்பதை வருணித்திருக்கிறார். பகை அணங்கு ஆழியும் பால்வெண் சங்கமும் தகைபெறு தாமரைக் கையின் ஏந்தி என்ற வரியைச் சிந்தித்துப் பாருங்கள். எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னர் இளங்கோவடிகளுக்குத் தெரிந்திருக்கிறது. இது உங்கள் கண்ணுக்கு ஏன் தெரியவில்லை? எந்தக் கோயிலில் சிவபெருமானுக்கு சங்கு சக்கரம் இருக்கிறது?’


‘சமணர் சொல்வதையெல்லாம் ஏற்க முடியாது. கோயிலில் வில்வ அர்ச்சனை உண்டா இல்லையா? அதைச் சொல்லுங்கள் முதலில். சிவனுக்குத்தான் வில்வத்தில் அர்ச்சனை செய்வது வழக்கம். எந்த விஷ்ணு கோயிலில் வில்வார்ச்சனை நடக்கிறது? இது சிவன் கோயில்தான்!’


‘அட எம்பெருமானே! ஆதித்யவர்ணே தபஸோதி ஜாதோ வனஸ்பதிஸ்தவ வ்ருக்ஷோத பில்வ: என்று ஶ்ரீசூக்தம் சொல்கிறதே. வில்வம் மகாலஷ்மிக்கு உரியது சுவாமி! மகாலஷ்மி தனியாகவா இருக்கிறாள்? அவள் விஷ்ணுவின் மார்பில் உறைபவள். வில்வ அர்ச்சனை இங்குதான் வெகு பொருத்தம்.’


‘வேத காலத்தில் சைவ வைணவப் பிரிவுகள் ஏதும் கிடையாது. கோயில் நடைமுறை என்று உருவானதன்பின் சிவாலயங்களில் மட்டும்தான் வில்வார்ச்சனை நடக்கும். நாம் அதைத்தான் அனுசரிக்க வேண்டும்.’


‘இது விதண்டாவாதம். பத்து ஆழ்வார்கள் திருமலையப்பனைப் பாடியிருக்கிறார்கள். அவர்கள் பொய்யா சொல்லுவார்கள்?’


‘ஆழ்வார் பொய் சொல்லமாட்டார் என்றால், பொன் திகழும் மேனி பிரிசடையம் புண்ணியனும் என்ற பொய்கையார் வரிக்கு என்ன அர்த்தம்? திருமாலை சிவனாக அல்லவா அவர் போற்றித் துதித்திருக்கிறார்?’


‘சுத்தம். நீ படைத்த சிவனின் உருவம் உனக்கும் பொருந்துகிறதே என்று ஆழ்வார் அதில் வியப்புத் தெரிவிக்கிறார் ஐயா!’


வாதங்கள் இவ்வாறு ஒரு பக்கம் சூடு பிடித்துக்கொண்டிருக்க, மறுபுறம் அது சிவனுமல்ல; விஷ்ணுவும் அல்ல; மலைக் காவல் தெய்வமான காளிதான் என்று ஒரு தரப்பினர் கொடி பிடித்தார்கள். புராதனமான கோபுரமொன்று திருமலை செல்லும் வழியில் இருப்பதைச் சுட்டிக்காட்டி, ‘அதைக் காளி கோபுரம் என்றுதானே காலம் காலமாக அழைத்து வருகிறோம்? விஷ்ணு கோயில் உள்ள தலத்தில் காளி கோபுரம் எப்படி வரும்?’ என்று அவர்கள் கேட்டார்கள்.


‘ஐயா அது காளி கோபுரமல்ல. காலி கோபுரம். காலி என்றால் காற்று.’ என்று எதிர்த்தரப்பு பதில் சொல்லிக்கொண்டிருந்தது.


மன்னனின் ஓலை இந்த விவகாரத்தை விளக்கமாக எடுத்துச் சொல்ல, ராமானுஜர் பொறுமையாக அதைப் படித்து முடித்தார். அமைதியாக யோசிக்க ஆரம்பித்தார். ஏற்கெனவே அவர் வேறொரு தீவிரமான யோசனையில் இருந்தார். சிதம்பரத்தில் கோயில் கொண்டு இருந்த கோவிந்தராஜப் பெருமாள் விக்கிரகத்தை சோழ மன்னன் குலோத்துங்கன் தூக்கிக் கடலில் எறிந்திருக்க, பக்தர்கள் அதை உடையவரிடம் எடுத்து வந்து சேர்த்திருந்தார்கள். ‘தில்லையில் கோவிந்தன் மீண்டும் குடிகொள்ள ஏதாவது செய்யுங்கள்’ என்று கேட்டிருந்தார்கள். இது அவர் பாரத யாத்திரை புறப்படுவதற்கு முன்னரே நடைபெற்ற சம்பவம்.


சிதம்பரத்தில் மீண்டும் எப்படி கோவிந்தராஜர் விக்கிரகத்தைக் கொண்டு வைப்பது என்று எண்ணிக்கொண்டிருந்தவர் மனத்தில் சட்டென்று திருமலை அடிவாரத்தில் தான் கண்ட புராதனமான வைணவ ஆலயம் ஒன்று நினைவுக்கு வந்தது. பல்லாண்டுக் காலமாகக் கேட்பாரற்றுக் காட்டுக்குள் இருந்த கோயில். சிதம்பரம் கோவிந்தராஜனைத் திருமலை அடிவாரத்துக்குக் கொண்டு வந்தால் என்ன?


மன்னன் கட்டியத் தேவனிடம் பேசி அதற்கு முயற்சி எடுக்கலாம் என்று எண்ணிக்கொண்டிருந்தபோதுதான் திருமலையிலேயே பெரும் சிக்கல் என்பது தெரியவந்தது.


(தொடரும்)


Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 05, 2017 09:30

April 4, 2017

பொலிக! பொலிக! 82

விஷயம் அரண்மனையை எட்டியபோது மன்னன் பதறிப் போனான்.


‘என்ன சொல்கிறீர்கள்? நமது பண்டிதர்களா? நடுத்தெருவில் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு ஓடுகிறார்களா? அவர்களுக்கென்ன பைத்தியம் பிடித்துவிட்டதா?’


‘ஒன்றுமே புரியவில்லை மன்னா. வெறுமனே கிழித்துக்கொண்டு ஓடினாலும் பரவாயில்லை. ஆனால் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்கிறார்கள். கழுத்தை நெரிக்கிறார்கள். குப்புறத் தள்ளி ஏறி மிதி மிதியென்று மிதிக்கிறார்கள்.’


‘முட்டாள் காவலர்களே, அவர்களை இழுத்து வந்து கட்டிப் போடவேண்டியதுதானே? அதை விட்டுவிட்டு இங்கே வந்து கதை சொல்லிக்கொண்டிருப்பதில் என்ன பயன்?’


‘இல்லை மன்னா. இத்தனைக் காலம் அவர்கள் தங்கள் மரியாதைக்குரிய புலவர் பெருமக்களாகவும் ஞானாசிரியர்களாகவும் வித்வான்களாகவும் இருந்தவர்கள். அவர்களை அடித்து இழுத்து வருவதென்பது…’


மன்னன் யோசித்தான். ஒரு பண்டிதருக்குப் பைத்தியம் பிடிப்பது என்றால் சரி. மொத்தப் பேருக்கும் எப்படி ஒரே சமயத்தில் அப்படியாகும்? இந்த வினா அவன் மனத்தில் எழுந்த கணமே அமைச்சரை அழைத்தான். ‘ஏதோ தவறு நடந்திருக்கிறது. அத்தவறு யார் பக்கம், என்ன பிரச்னை என்று முதலில் பாருங்கள்!’


விசாரித்து வந்த மந்திரி உண்மையைச் சொன்னார். ராமானுஜருக்கு எதிராக துர்தேவதைகளை ஏவிவிட்ட பண்டிதர்களை அந்தத் தேவதைகளே தாக்கத் தொடங்கியிருக்கிற விஷயம்.


‘ஈஸ்வரா..!’ என்று நெஞ்சில் கைவைத்த மன்னன் உடனே, ‘உடையவரின் சீடர்கள் யாரையாவது அழையுங்கள். அந்தக் கூரத்தாழ்வான் இருக்கிறாரா பாருங்கள்!’ என்றான்.


கூரத்தாழ்வான் சபைக்கு வந்தபோது மன்னன் நடந்ததை அவரிடம் முழுதாக விவரித்தான். ‘ஆழ்வானே, காஷ்மீரத்துப் பண்டிதர்கள் அறியாமல் இப்படியொரு காரியம் செய்துவிட்டார்கள். ராமானுஜர் அவர்களை மன்னித்துக் காப்பாற்ற வேண்டும்.’


‘புரிகிறது மன்னா. நான் என் ஆசாரியரிடம் இதைத் தெரிவித்துவிடுகிறேன்.  இன்னும் சிறிது நேரத்தில் உமது பண்டிதர்கள் பழையபடி மாறித் தெளிந்துவிடுவார்கள்.’


‘மிக்க நன்றி சுவாமி. உடையவரிடம் நான் இன்னும் ஒன்றே ஒன்று கேட்கவேண்டும்.’


‘சொல்லுங்கள்.’


‘பண்டிதர்கள் அனுப்பிய துர்தேவதைகள் எப்படி திரும்பி வந்து அவர்களையே தாக்கும்? ராமானுஜர் அவற்றைத் திருப்பி அனுப்பினாரா அல்லது தாமாகத் திரும்பினவா என்பது எனக்குத் தெரியவேண்டும்.’


கூரத்தாழ்வான் புன்னகை செய்தார். ‘மன்னா, உடையவருக்கு இத்தகைய சக்திகளுடன் பரிச்சயமில்லை. இவற்றால் கிடைக்கும் சிறு லாபங்களை அவர் கடுகளவும் மதிக்கிறவரில்லை. சொல்லப் போனால் சிறு தெய்வ வழிபாடுகள் மூலம் கிடைக்கும் சிறு சக்திகளைப் பொருட்படுத்தாமல் கடந்துபோவதே மோட்சத்தின் வாயில் திறக்க உதவும். உடையவர் அவற்றை வழிபட்டதும் இல்லை, அவை அவரது வழிக்கு வந்ததுமில்லை.’


‘பிறகு எப்படி அவை எய்தவர்களை நோக்கித் திரும்பி வரும்?’


கூரத்தாழ்வான் கணப் பொழுது கண்மூடி தியானித்தார். பிறகு சொன்னார். ‘மன்னா, பிழைபட்ட வாழ்க்கை, அறமற்ற செய்கை, பழி கொண்ட பேச்சு, ஒழுக்கமில்லாத நடவடிக்கைகள், பக்தியற்ற நெஞ்சம், பண்பறுக்கும் வஞ்சம் எங்குள்ளனவோ, அங்குதான் தீய சக்திகள் குடியேறும்; சீரழிக்கும். இவை எதுவுமற்ற புனிதர்களை நோக்கி அவை ஏவப்படும்போது அவர்களின் தவ வாழ்வின் தகிப்பு அச்சக்திகளை எதிர்த்துத் தாக்கும். அப்படித் தாக்குதலுக்கு உள்ளாகும் துர்தேவதைகள் எதிர்த்து நிற்க முடியாமல் திரும்பும். எய்யப்பட்டது எதுவானாலும் ஓர் இலக்கு வேண்டுமல்லவா? அனுப்பிய இலக்கு தனக்கானதல்ல என்று தெரிந்தால் அவை உடனே எய்த இடத்தை நோக்கித்தான் திரும்பும்.’ என்று சொன்னார்.


திகைத்துவிட்டார் மன்னர். ‘கூரத்தாழ்வானே, என் தேசத்துப் பண்டிதர்களை நீங்களும் உடையவரும் தயவுசெய்து மன்னிக்கவேண்டும். அவர்களை எப்படியாவது காப்பாற்றிக் கொடுங்கள்!’


‘என்னால் இயலாது மன்னா. நீங்கள் என் ஆசாரியரைத்தான் அணுக வேண்டும்!’


ராமானுஜர் தங்கியிருந்த மடத்துக்கு மன்னன் ஓடிவந்தான்.


‘என்ன ஆயிற்று ராஜனே?’


‘காஷ்மீர மண்ணின் சிறப்பே இங்கிருந்த ஞானபண்டிதர்கள்தாம். அவர்கள் புத்தி கெட்டுப் போய்த் தங்களுக்குக் கெடுதல் செய்ய நினைத்ததன் பலன், இன்று பைத்தியம் பிடித்து விதியின் வசத்தில் வீதியில் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அருள்கூர்ந்து அவர்களைக் காப்பாற்றித் தரவேண்டும் சுவாமி!’


பணிவோடு அவன் கரம் கூப்ப, நடந்ததைக் கூரத்தாழ்வான் விவரித்துச் சொன்னார்.


உடையவர் கண்மூடி அமைதியாக யோசித்தார்.


‘சுவாமி, காப்பாற்றலாம் என்று ஒரு சொல் உம்மிடமிருந்து வரவேண்டும். என்ன செய்ய வேண்டுமென்பதை நான் பார்த்துக்கொள்வேன்!’


ராமானுஜர் தலையசைத்தார். சட்டென்று கூரத்தாழ்வான் ஓடிச் சென்று ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்து வந்தார். அதை ராமானுஜரின் காலடியில் வைத்தார். ‘இதில் தங்கள் பாதங்களை ஒரு முறை வைத்து எடுங்கள் சுவாமி.’


ராமானுஜர் அப்படியே செய்தார். அந்தத் தண்ணீர்ப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு கிளம்பிய கூரத்தாழ்வான், ‘மன்னா, வீரர்களை அனுப்பிப் பண்டிதர்களை பிடித்து அழைத்து வரச் சொல்லுங்கள்!’ என்று சொன்னார்.


ஒரு மணி நேரத்தில் அத்தனைப் பண்டிதர்களும் அரண்மனைக்கு கட்டி இழுத்து வரப்பட்டார்கள்.


அவர்கள் இருந்த கோலத்தைக் கண்டு சபை மிரண்டு போனது. கிழிந்த ஆடைகள். தலைவிரி கோலம். ஒருவரையொருவர் அடித்துப் புரட்டியெடுத்த ரத்த காயங்கள். உடலெங்கும் மண் புழுதி. நாராசமான பேச்சு. பேய்பிடித்த தன்மை.


‘கூரத்தாழ்வாரே, இவர்கள் சரியாகிவிடுவார்களா?’ மன்னன் சந்தேகத்துடன் கேட்டான்.


கூரத்தாழ்வான் பதில் சொல்லவில்லை. ராமானுஜரின் பாதம் பட்ட தீர்த்தப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அவர்கள் அருகே வந்தார். தண்ணீரை அள்ளி அவர்கள் தலைமீது தெளித்தார்.


மறுகணம் மூர்ச்சித்து விழுந்த பண்டிதர்கள் சில வினாடிகளில் உறங்கி விழிப்பது போல எழுந்தார்கள்.


‘ஆ! மன்னர் சபைக்கு நாம் எப்போது வந்தோம்?’ ஒருவரையொருவர் கேட்டுக்கொண்டார்கள்.


‘பண்டிதர்களே, எத்தனை பெரிய பாவம் செய்துவிட்டீர்கள் நீங்கள். பரம பாகவத உத்தமரான ராமானுஜரை அழிக்க எண்ணி நீங்கள் செலுத்திய கெட்ட தேவதைகள் தங்களைத் திருப்பித் தாக்கியதைக் கூட நீங்கள் உணரவில்லை. உங்களது பைத்தியக்காரப் பேயாட்டத்தை இன்று ஊரே பார்த்துக் கைகொட்டிச் சிரித்துவிட்டது!’


அவர்கள் வெட்கத்தில் தலைகுனிந்தார்கள். உடையவரிடம் சென்று மன்னிப்புக் கேட்டார்கள்.


‘நாங்கள் தோற்றோம் சுவாமி. இது இனி வைணவ மண். தங்கள் வழியே எங்கள் வழியும்.’ தாள் பணிந்து நின்றார்கள்.


சரஸ்வதி தேவி பரிசாக அளித்த ஹயக்ரீவர் விக்ரகத்துடன் ராமானுஜர் காஷ்மீரத்தில் இருந்து புறப்பட்டார். வழியெங்கும் திவ்யதேசங்களை சேவித்துக்கொண்டு அவர் திருமலைக்கு அருகே வந்து சேர்ந்தபோது அங்கே ஒரு பிரச்னை காத்திருந்தது.


(தொடரும்)


Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 04, 2017 09:30

April 3, 2017

பொலிக! பொலிக! 81

அது வடுக நம்பிதான். எப்போதும் ராமானுஜர் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து முன் நிற்கிற அதே நம்பி.


ஒரு நியாயம் வேண்டாமா? திருவனந்தபுரத்தில் இருந்து ராமானுஜரைத் தூக்கி வந்து திருவட்டாறில் போட்டாகிவிட்டது. அவரது சீடர்கள் தேடிக்கொண்டு வந்து சேரும்வரை இங்கே அவருக்கு யார் துணை?


எம்பெருமான் தானே அப்பொறுப்பை ஏற்க முடிவு செய்தான். உடையவருக்குப் பிரிய சிஷ்யரான வடுக நம்பியின் தோற்றத்தில் அவர்முன் வந்து நின்றான்.


‘வடுகா, ஸ்நானம் ஆயிற்றா?’


‘ஓ, இப்போதுதான் முடித்தேன்.’ என்று எதிரே வந்து அமர்ந்து முகத்தை நீட்டினார் வடுக நம்பி. தினமும் ராமானுஜர்தான் அவருக்குத் திருமண் இட்டுவிடுவது. அன்றைக்கும் குளித்து விட்டுத் திருமண் இட்டுக்கொண்டு, வடுக நம்பிக்கும் இட்டுவிட்டார். ராமானுஜரின் ஈரத் துணிகளை ஆற்றுக்கு எடுத்துச் சென்று துவைத்துக் கொண்டு வந்து ஒரு பாறை மீது உலர்த்தினார் வடுக நம்பி.


‘அனந்தபத்மநாபனுக்கு கோயில் நடைமுறைகளை மாற்றுவதில் விருப்பமில்லை போலிருக்கிறது. என்னை இங்கே கொண்டு வந்து சேர்த்துவிட்டான் பார்!’


‘பரவாயில்லை சுவாமி. திருவனந்தபுரத்தை விட்டுவிடுவோம். திருவட்டாறு ஆதிகேசவன் உமக்காகக் காத்திருக்கிறான், வாருங்கள்’


உடையவர் கோயிலுக்குச் சென்றார். கண் குளிர தரிசித்து, மனம் குளிர சேவித்து மகிழ்ந்தார்.


அன்றைக்குத் திருவனந்தபுரத்திலும் பொழுது விடியத்தான் செய்தது. உடையவரைக் காணாமல் குழப்பமான சீடர்கள் நகரெங்கும் தேடினார்கள். எங்கு தேடியும் அவர் இல்லை என்று தெரிந்ததும் பதற்றமானார்கள். அப்படி எங்கே போயிருப்பார் என்று ஊர் ஊராகத் தேடிக்கொண்டே அவர்கள் திருவட்டாறுக்கு வந்து சேர்ந்தபோது வடுக நம்பிதான் அவரை முதலில் பார்த்தது.


‘ஆசாரியர் அதோ அங்கே இருக்கிறார் பாருங்கள்!’ – சுட்டிக்காட்டிய திசையில் ராமானுஜர் கோயிலை விட்டு வெளியே வந்துகொண்டிருந்தார்.


‘சுவாமி!’ என்று குரல் கொடுத்தபடி வடுக நம்பி ஓடிவர, திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார் ராமானுஜர். ஒரு கணம்தான். சட்டென்று தன்னருகே வந்துகொண்டிருந்த வடுக நம்பியை அவர் திரும்பித் தேட, அங்கே வடுகன் உருவில் இருந்த பெருமான் இல்லை.


அவருக்குப் புரிந்துவிட்டது. ‘எம்பெருமானே, இதென்ன லீலை! சீடனாகத் தரையில் அமர்ந்து உபதேசம் கேட்டது போதாதா உனக்கு? வடுகனாக வேடமேற்று என் காஷாயத்தையெல்லாம் துவைத்து உலர்த்த வேண்டுமா? இந்த அற்பனுக்குச் சேவகம் செய்து எதை உணர்த்த நினைக்கிறாய்?’


உணர வேண்டியவர்களுக்கு அது உணர்த்தப்பட்டிருந்தது!


சேர, சோழ, பாண்டிய தேசத்துக் கோயில்கள் அனைத்தையும் சேவித்து முடித்து உடையவர் குழு வடக்கு நோக்கிப் பயணமானது. கோகுலம், துவாரகை, குருட்சேத்திரம், அயோத்தி என்று சேவித்துக்கொண்டே சென்று காஷ்மீரத்தை அடைந்தார் ராமானுஜர்.


மீண்டும் காஷ்மீரம். மீண்டும் அதே மன்னன். மீண்டும் அதே பண்டிதர்கள்.


ஆனால் இம்முறை சரஸ்வதி தேவி தொடக்கத்திலேயே ராமானுஜரைத் தூக்கித் தலைமேல் வைத்துக்கொண்டாள். பண்டிதர் நிறைந்த சபையில் அவரது பிரம்ம சூத்திர உரை அரங்கேறியபோது அந்த அற்புதம் நிகழ்ந்தது.


அத்தனை பேரும் பார்த்துக்கொண்டிருக்கும்போதே பீடத்தின் மீதிருந்த சரஸ்வதி தேவியின் சிலை மெல்ல அசைந்தது. அம்மா என்று அலறிப் புடைத்துக்கொண்டு அத்வைத பண்டிதர்கள் பாய்ந்து எழுந்தபோது, அவள் பீடத்தை விட்டு இறங்கி வந்து உடையவர் எதிரே நின்று ஆசீர்வதித்தாள்.


‘ராமானுஜரே! உரை என்றால் இதுதான். விளக்கமென்றால் இதுதான். இது வெறும் பாஷ்யமல்ல; ஶ்ரீபாஷ்யம்!’


ராமானுஜர் கைகூப்பி நின்றார். தேவி தான் வணங்கும் ஹயக்ரீவரின் விக்ரகத்தை ராமானுஜருக்குப் பரிசாக அளித்தாள்.


காஷ்மீரத்து மன்னனுக்குத் தாங்க முடியாத சந்தோஷம். ‘அற்புதம் ராமானுஜரே. அன்று நீங்கள் இங்கு வந்து போதாயண விருத்தியை வாங்கிச் சென்றது முதல் அதே நினைவாகவே இருந்தேன். இன்று உரை எழுதி முடித்துத் திரும்பி வந்து, கலையரசியின் அங்கீகாரத்தையும் பெற்றுவிட்டீர்கள். உங்களுக்கு நிகர் யாருமில்லை!’


‘மன்னா, நிகரற்றதென்பது எம்பெருமானின் கருணை ஒன்றுதான். நமது பணிகள் அனைத்தும் மணல் துளியினும் சிறிது. இதில் பெருமைப்பட்டுக்கொள்ள எதுவுமே இல்லை. பிரம்ம சூத்திரத்துக்கு போதாயணரின் உரையை அடியொற்றி ஓர் உரை செய்ய வேண்டுமென்பது எனது ஆசாரியரின் கனவு. இன்று அதை எம்பெருமான் நிறைவேற்றியிருக்கிறான். நான் வெறும் கருவி.’


‘உமது தன்னடக்கம் இப்படிப் பேசவைக்கிறது. ஆனால் காலகாலமாக இப்பீடத்தில் எத்தனை எத்தனையோ மகா பண்டிதர்கள் வந்து வணங்கியிருக்கிறார்கள். எவ்வளவோ நூல்கள் இயற்றி வெளியிடப்பட்டிருக்கின்றன. அனைத்தையும் பிற பண்டிதர்கள்தாம் போற்றவும் தூற்றவும் செய்திருக்கிறார்களே தவிர, தேவி வாய் திறந்ததில்லை. அப்படியொரு அதிசயம் முதல் முறையாக இன்று நடந்தேறியிருக்கிறது. நீர் பெரியவர். அனைவரிலும் பெரியவர்!’


மன்னனின் பரவசமும் உடனடியாக அவன் வைணவத்தை ஏற்று ராமானுஜரின் சீடனானதும் காஷ்மீரத்துப் பண்டிதர்களுக்குப் பிடிக்காமல் போனது.


‘இந்த மனிதர் அபாயகரமானவர். இவரை விட்டுவைப்பது சரியல்ல.’


‘உண்மை. காலகாலமாக நம்மக்கள் கடைப்பிடித்து வரும் அத்வைத சித்தாந்தத்தை ஒரு பிரம்ம ராட்சசனைப் போல் எடுத்து விழுங்கிவிடுவார் போலிருக்கிறது.’


‘மன்னன் வைணவனாகிவிட்டான். மட ஜனங்கள் என்ன ஏது என்று யோசிக்காமல் அப்படியே அவனைப் பின்பற்றத் தொடங்கிவிட்டார்கள் பாருங்கள்! இப்படியே விட்டால் தேசம் முழுதும் வைணவத்தை ஆராதிக்கத் தொடங்கிவிடும். அதன்பின் அத்வைதிகள் தேசப்பிரஷ்டம் செய்யப்பட்டாலும் வியப்பில்லை.’


அவர்கள் கூடிக் கூடிப் பேசினார்கள். இறுதியில் ராமானுஜரைக் கொல்ல சில துர்தேவதைகளை ஏவலாம் என்று முடிவு செய்தார்கள். மந்திரவாதிகளைப் பிடித்து விஷயத்தைச் சொல்லி, காதும் காதும் வைத்தாற்போல் காரியத்தை முடிக்கச் சொல்லிக் கேட்டுக்கொண்டார்கள்.


ஏவல், பில்லி, சூனிய வல்லுநர்கள் ஒன்றுகூடி பண்டிதர்களின் வேண்டுகோளை நிறைவேற்ற முனைந்தார்கள். ஏற்பாடுகள் ரகசியமாக நடைபெற்றன. அக்னி வளர்த்து, மந்திரங்கள் உச்சரித்து, அவர்கள் ஏவிவிட்ட துர்தேவதைகள் ராமானுஜரைத் தேடிச் சென்றன.


இதோ இதோ இதோ நடந்துவிடப் போகிறது, ராமானுஜர் மண்ணோடு மண்ணாகிவிடப் போகிறார் என்று காத்திருந்த பண்டிதர்கள் அப்படி ஏதும் நடக்காததைக் கண்டு குழம்பிப் போனார்கள்.


‘ஏன், என்ன பிரச்னை? ஏவிய சக்திகள் என்ன ஆயின?’


மந்திரவாதிகளை அவர்கள் விசாரித்த கணத்தில், அனுப்பிய துர்தேவதைகள் பிசாசு வேகத்தில் திரும்பி வந்து அவர்களைக் கவ்வின. ஒரு கணம்தான். தமக்கு என்ன நடக்கிறது என்பதே புரியாமல் அவர்கள் சித்தம் கலங்கி ஆடைகளைக் கிழித்துக்கொண்டு வீதியில் இறங்கி தலைதெரிக்க ஓட ஆரம்பித்தார்கள்.


(தொடரும்)


Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 03, 2017 09:30

April 2, 2017

பொலிக! பொலிக! 80

கேட்பது எம்பெருமான் என்று தெரிந்தும் ‘கேட்கும் விதத்தில் கேள்’ என்று ஒருத்தர் சொல்வாரோ?


சீடர்களுக்கு அது தாங்க முடியாத வியப்பு. ‘அதிலொன்றும் தவறில்லை. சிஷ்யபாவம் சரியாகக் கூடாவிட்டால் வித்தை எப்படி சேரும்?’ என்றார் அமுதனார். திருவரங்கம் கோயிலில் வேலை பார்த்துக்கொண்டிருந்தவர் அவர். ராமானுஜர் கோயில் நிர்வாகத்தில் சீர்திருத்தங்கள் செய்ய ஆரம்பித்தபோது அதைக் கடுமையாக எதிர்த்தவர். புரிதலில் பிரச்னை. பிறகு உடையவரைப் புரிந்துகொண்டபோது தன்னையே அவரிடம் ஒப்படைத்துச் சரண் புகுந்தவர்.


‘என்ன சொல்கிறீர் அமுதனாரே! குறுங்குடி நம்பி கேட்ட விதம் சரியில்லை என்றுதான் நீரும் கருதுகிறீரா?’


‘அதிலென்ன சந்தேகம்? நமது வடுக நம்பியைக் கேளும். அவ்வளவு ஏன், உடையவரே திருக்கோட்டியூர் நம்பியிடம் பயிலப் போனபோது என்ன நடந்ததென்று யோசித்துப் பாருங்கள்!’


‘சரியாகச் சொன்னீர். அரையரிடம் பாடம் கேட்கப் போனபோது அவருக்கு மஞ்சள் காப்பு இட்டுக் குளிப்பாட்டி விடுகிற வேலைவரை செய்திருக்கிறார். இதை அவரே என்னிடம் சொல்லியும் இருக்கிறார்!’ என்றார் கிடாம்பி ஆச்சான்.


அர்ச்சகர் உருவில் பெருமான் சிரித்தான். ‘ராமானுஜரே! உமது சீடர்கள் சொல்லுவதே சரி. இதோ வந்தேன் பாரும்!’ என்று சட்டென்று தமது பீடத்தில் இருந்து இறங்கி கீழே வந்து அமர்ந்தான். அர்ச்சகர் மூலமாகவே உடையவருக்கு எங்கிருந்தோ ஒரு பீடம் தருவிக்கப்பட்டு அதில் அமர வைத்தான். பவ்யமாகக் கைகட்டி வாய் பொத்தி, ‘இப்போது சொல்லும் சுவாமி! எப்படி உம்மால் இம்மக்களைத் திருத்திப் பணிகொள்ள முடிகிறது?’


ராமானுஜர் ஒரு கணம் கண்ணை மூடினார். ஆளவந்தாரை மனத்துக்குள் வணங்கினார். தமக்கு போதித்த ஐம்பெரும் ஆசாரிய புருஷர்களை நினைத்துக்கொண்டார். மெல்ல, பெருமானை நெருங்கி அவன் காதுகளில் த்வய மந்திரத்தை ஓதினார்.


‘நம்பீ, கேள்! உலகத்தாரைக் காப்பாற்றவோ, கரையேற்றவோ என் முயற்சி ஒன்றுமில்லை. அதைச் சாதித்துத் தருவது எம்பெருமான் திருவடியும் திருநாமமும்தான். இதைச் செய்து கொடு என்று கேட்பதற்கு எனக்கு அவன் இருக்கிறான். பக்தியுடன் ஈடுபடும் எக்காரியமும் வெற்றி பெறாமல் போகாது.’


ஆஹா ஆஹா என்று பரவசத்தில் திக்குமுக்காடி நின்றது கூட்டம். எப்பேர்ப்பட்ட தருணம்! யாருக்கு வாய்க்கும் இதெல்லாம்? பரமனுக்குப் பாடம் சொல்லும் ஆசாரியரிடம் நாமும் பயில்கிறோம் என்பது எப்பேர்ப்பட்ட நல்லூழ்! எம்பெருமானே, எமது ஆசாரியரின் பெருமையை நாங்கள் இன்னும் தெளிவாக உணர்வதற்காகவா இப்படியொரு பேரழகு நாடகத்தை நிகழ்த்திக் காட்டுகிறாய்?


அத்தனை பேர் மனத்திலும் அதே வினா.


‘இல்லையப்பா! இப்படியொரு ஆசாரியனுக்காக நான் காத்திருந்த கதை உங்களுக்குத் தெரியாது. உடையவரே இன்று நாம் உம்முடைய சீடனானோம்!’ பணிவுடன் கரம் கூப்பினான் திருக்குறுங்குடி நம்பி.


ராமானுஜர் திருக்குறுங்குடி நம்பிக்கு ‘ஶ்ரீவைஷ்ணவ நம்பி’ என்ற திருநாமம் தந்தார்.  திருக்குறுங்குடியில் ராமானுஜ மடம் நிறுவ உடனடியாக ஏற்பாடு செய்யப்பட்டது.


‘புறப்படுகிறேன் நம்பி. இங்கிருந்து திருவண் பரிசாரகம். திருவாழி மார்பனைச் சேவித்துவிட்டு நேரே திருவட்டாறு. அப்படியே திருவனந்தபுரம் அனந்தபத்மநாபன். எடுத்த பணி மிகப் பெரிது. இடரின்றி நிறைவேற எப்போதும் நீ பார்த்துக்கொள்ள வேண்டியது.’


சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார்.


ஒவ்வொரு திவ்யதேசமாகச் சேவித்துக்கொண்டே திருவனந்தபுரம் போய்ச் சேர்ந்தபோது ராமானுஜருக்கு அங்கே இரண்டு சிக்கல்கள் இருந்தன. கோயிலுக்குச் சென்று சேவிக்கக்கூட விடாமல் வாதத்துக்கு அழைத்துக்கொண்டே இருந்த பண்டிதர் படை ஒரு பக்கம். அனந்த பத்மநாப சுவாமி கோயிலில் கடைப்பிடிக்கப்பட்ட திருவாராதன முறையை மாற்றி அமைக்கலாம் என்று அவர் நினைத்ததை நிறைவேற்ற முடியாமல் தடுத்த திருவனந்தபுரத்து அர்ச்சகர் சமூகம் மறுபக்கம்.


உடையவரால் வாதத்துக்கு வந்தவர்களை எளிதில் வெல்ல முடிந்தது. வைணவத்தின் விரிந்த பெரும் பரப்பில் அத்தனை பேரையும் அள்ளி எடுத்து அமர வைக்க முடிந்தது. ஆனால் கோயில் நடைமுறைகளில் அவர் செய்ய விரும்பிய மாற்றங்களை மட்டும் செய்ய முடியவில்லை.


‘பத்மநாபா! ராமானுஜர் என்னென்னவோ சொல்கிறார். இதெல்லாம் நமது சம்பிரதாயத்துக்கு ஒவ்வாதவையாக இருக்கின்றன. பக்தியும் சிரத்தையுமே பிரதானம் என்றால் வழிபாட்டு முறை எப்படி இருந்தால் இவருக்கு என்ன? அருள்கூர்ந்து அவரை விட்டுவிடச் சொல்லு. இந்தக் கோயில் எப்போதும் உள்ள வழக்கப்படியே இயங்கட்டும்!’


அர்ச்சகர்களும் உள்ளூர் பக்தர்களும் அனந்த பத்மநாபனிடமே முறையிட்டார்கள். அனந்தன் அவர்கள் கட்சியில் இருந்தான். ‘ஓய் உடையவரே, உமக்கு இன்னும் ஆயிரம் தலங்கள் காத்திருக்கின்றன. திருவனந்தபுரத்தை விட்டுவிடுங்கள். பாவம் ஜனங்கள் அழுகிறார்கள்!’ என்று சொல்லிப் பார்த்தான். ம்ஹும். அவரா கேட்கிறவர்? திருவரங்கத்தில் வராத எதிர்ப்பா? வைகானச ஆகமத்தில் இருந்த நடைமுறைகளைப் பாஞ்சராத்ர ஆகம முறைப்படி மாற்றப் போய்த்தான் அவரைக் கொலை செய்யத் துணியும் அளவுக்கு அங்கே எதிரிகள் முளைத்தார்கள்.


இத்தனைக்கும் உடையவர் முன்னிறுத்திய பாஞ்சராத்ர ஆகமம் என்பது அவர் காலத்தில், அவரால் தோற்றுவிக்கப்பட்டதல்ல. ஆளவந்தாரே உவந்த ஆகம முறை அது.


‘ஆனால் காஷ்மீரத்து வைணவர்கள் மூலம்தான் இந்த ஆகம முறை பரவலானது என்று சொல்லுகிறார்களே சுவாமி?’


உடையவர் சிரித்தார். ‘காஷ்மீரத்து வைணவர்களா? நல்ல கதையாக இருக்கிறதே. செங்கட் காரி கருங்கண் வெள்ளை பொன்கட் பச்சை பைங்கண் மாஅல் – என்று பாஞ்சராத்ர ஆகமம் சுட்டும் நான்கு வியூக மூர்த்திகளைப் பரிபாடல் போற்றுகிறதே. அப்படியென்றால் சங்க இலக்கிய காலத்திலேயே காஷ்மீரத்து வைணவர்கள் இங்கே வந்துவிட்டார்களா என்ன?’


அதற்குமேல் என்ன பேச முடியும்?


ஆனால் என்ன சொன்னாலும் திருவனந்தபுரத்துக்காரர்கள் ஏற்க மறுத்துவிட்டார்கள். பள்ளிகொண்ட பத்மநாபனுக்குத் தூக்கம் கெட்டது. என்ன செய்யலாம் என்று யோசித்தான். அன்றைக்கு இரவு ராமானுஜர் உறங்கத் தொடங்கியதும் அப்படியே தூக்கிக் கொண்டு போய் திருவட்டாறில் போட்டுவிட்டான்.


காலை விடிகிற நேரம் ராமானுஜர் கண் விழித்ததும் வழக்கம்போல், ‘வடுகா…’ என்று அழைத்தார். வடுக நம்பி உள்ளிட்ட அத்தனை சீடர்களும் அப்போது திருவனந்தபுரத்தில்தான் இருந்தார்கள். இரவு என்ன நடந்தது என்பது எப்படி ராமானுஜருக்குத் தெரியாதோ, அதே மாதிரி அவர்களுக்கும் தெரியாது.


ராமானுஜர் இரண்டாம் முறை அழைத்தார். ‘வடுகா…’


‘சுவாமி, இதோ வந்தேன்!’ என்று ஒரு குரல் கேட்டது. அவர் திரும்பிப் பார்த்தார்.


(தொடரும்)


Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 02, 2017 09:30