Pa Raghavan's Blog, page 5
September 6, 2019
Pen to Publish 2019 – போட்டி அறிவிப்பு
நண்பர்களுக்கு வணக்கம்.
Amazon Pen to Publish திட்டத்துக்கு இது மூன்றாவது வருடம். எழுத்தாளர்கள், எழுதுபவர்கள், எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்கள் அனைவரையும் இதில் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறேன். ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் என மூன்று மொழிகளில் நடத்தப்படும் இப்போட்டியில் இம்முறை தமிழுக்கான தேர்வுக் குழுவில் நானும் நண்பர் சரவண கார்த்திகேயனும் இருக்கிறோம். தேர்வு செய்வதெல்லாம் பிற்பாடு நடப்பது. இப்போட்டியில் கலந்துகொள்ள விரும்புவோருக்கு உதவுவதே எங்கள் முதல் நோக்கம்.
கிண்டில் குறித்து – கிண்டில் டைரக்ட் பப்ளிஷிங் குறித்து – பென் டு பப்ளிஷ் போட்டி குறித்து உங்களுக்கு எம்மாதிரியான சந்தேகம் / குழப்பம் இருந்தாலும் எங்களைக் கேட்கலாம். இருபத்து இரண்டு அதிகாரபூர்வ மொழிகள் கொண்ட தேசத்தில் இரண்டு மொழி எழுத்தாளர்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு என்றால், அதில் ஒன்றாகத் தமிழ் இடம் பெற்றிருப்பதை எண்ணிப் பாருங்கள். மகிழ்ச்சி அடையும் தருணம்தான். அதே சமயம் பொறுப்புணர்வுடன் எழுத வேண்டியதும் அவசியம்.
ஏனென்றால்,
1. உலகளாவிய கவனம்
2. பல லட்சக்கணக்கில் பரிசுத் தொகை
3. உங்கள் படைப்பு Amazon Prime மூலம் படமாக்கப்படும் வாய்ப்பு
என்று மூன்று மிக முக்கியமான சாத்தியங்கள் இதில் உள்ளன. தமிழ் அடையாளத்துடன் சர்வதேசப் படைப்புகளின் முன்னால் நீங்கள் உங்கள் படைப்பை நிறுத்தப் போகிறீர்கள். அதிலும் வெற்றி கண்டு ஆண்டின் சிறந்த எழுத்தாளராக வாகை சூடுவது எத்தனை சிறப்பு! எவ்வளவு பெரிய கௌரவம்!
இது இம்முறை நிகழவேண்டும். தமிழ் எழுத்தாளர்கள் அத்தனை பேரும் ஆர்வமுடன் இப்போட்டியில் கலந்துகொள்ள வேண்டும் என்பது எங்கள் விருப்பம்.
என்ன எழுதலாம்?
* நாவல் எழுதலாம்
* சிறுகதைத் தொகுப்பு அனுப்பலாம்
* கட்டுரைத் தொகுப்பாகவும் இருக்கலாம்
* கவிதையானாலும் பிரச்னை இல்லை
பத்தாயிரம் சொற்களுக்கு மேலே போகும் படைப்புகள் ஒரு பிரிவு. அதற்குள் நிறைவடையும் படைப்புகள் இன்னொரு பிரிவு. இரண்டிலும் பரிசுகள் உண்டு. விவரங்கள் யாவும் இக்குறிப்பின் அடியில் தரப்பட்டிருக்கும் சரவண கார்த்திகேயனின் இணையத்தளச் சுட்டியில் உள்ளன.
எழுத்தாளர்கள் தமது புத்தகங்களை மின்வெளியில் தாமே பதிப்பித்துக்கொள்ள வழி செய்யும் KDP என்னும் கிண்டில் டைரக்ட் பப்ளிஷிங்கின் எல்லைகளை இன்னும் விரிவாக்கும் முயற்சி இது. தொடக்க நிலையில் உள்ள இக்களத்தில் இப்போது நல்லதும் அல்லதுமாக ஏராளமான புத்தகங்கள் வருகின்றன. வாசகர்கள் அதிகம் வாசிக்கும் புத்தகங்களின் அடிப்படையிலேயே டாப் 10 போன்ற பட்டியல்கள் தயார் செய்யப்படுகின்றன.
இந்த Pen to Publish போட்டி மூலம் நல்லது / அல்லது என்ற பாகுபாடே இல்லாமல் நல்லதை மட்டும் எழுத்தாளர்கள் மொத்தமாக முன்னிறுத்தினால் வாசகர்கள் தேர்ந்தெடுப்பதும் நல்லனவாக மட்டுமே அமைந்துவிடும் அல்லவா?
எந்த ஒரு படைப்புக்கும் உயிரளிப்பது உண்மை. உண்மையின் ஆன்மாவைத் தொடாமல் எதையும் எழுதாதீர்கள்.
எளிய வாசகர்களை மனத்தில் கொள்ளுங்கள். அவர்கள்தாம் அதிகம் பேர். மங்கி வரும் வாசிப்பு வழக்கத்தை இன்னும் தக்க வைத்து, தழைக்க வைக்கும் பெரும் பணி ஆற்றி வருபவர்கள். லட்சக்கணக்கான வாசகர் சமூகத்தின் முன்னால் உங்கள் படைப்பு பரிசீலனைக்கு வைக்கப்படுகிறது என்பதை மறவாதீர்கள்.
நீங்கள் மறக்காதிருக்க வேண்டிய இன்னொன்று – பெரும்பான்மை வாசகர்கள் காத்திரமான படைப்புகளை இன்று நாடிச் செல்லத் தொடங்கியிருக்கிறார்கள் என்பது. கிரைம் கதைகள், காதல் கதைகள், குடும்பக் கதைகள் வாசிப்போர் எண்ணிக்கை அதிகம்தான். ஆனால் அவர்கள் விரும்புவதைக் காட்டிலும் சிறந்த ஒன்றைத் தருகிறபோது யாரும் வேண்டாம் என்று சொல்லமாட்டார்கள்.
எனவே மயக்கங்களோ, குழப்பங்களோ வேண்டாம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் தரமானதொரு படைப்பை எழுதுவதுதான். எழுதி முடித்தபின் கிண்டில் டைரக்ட் பப்ளிஷிங் மூலம் அதனை நேரடியாக வெளியிடுங்கள். kindle unlimited (select) ஆப்ஷனைத் தேர்ந்தெடுங்கள். குறிச்சொற்கள் இடும் இடத்தில் முதல் கட்டத்தில் Pen to publish – 2019 என்று மறக்காமல் குறிப்பிடுங்கள். போட்டிக்கு உங்கள் படைப்பு தகுதி பெற்று விடுகிறது.
வாசகர்கள் தேர்ந்தெடுத்துத் தரும் சிறந்த படைப்புகளில் இருந்து பரிசுக்குரிய படைப்புகளை நானும் சிஎஸ்கேவும் தேர்ந்தெடுப்போம். அதற்குப் பிறகு திருவிழாதான்.
ஒரு விஷயம். எழுத்துத் துறையில் இதுவரை வழங்கப்பட்டு வருகிற பரிசுத் தொகைகளைக் காட்டிலும் இது மிக மிக அதிகம். ஆகச் சிறந்த ஒரு படைப்புக்கே அப்பரிசு போய்ச் சேரவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுக்கவிருக்கிறோம்.
வேண்டியது உங்கள் ஒத்துழைப்பு.
முதலில் இக்குறிப்பை உங்கள் பக்கங்களில் ஷேர் செய்துவிட்டு வாருங்கள். உங்கள் எழுத்தாள நண்பர்கள் அனைவருக்கும் இப்போட்டி குறித்துத் தெரியப்படுத்துங்கள். கலந்துகொள்ள ஊக்குவியுங்கள்.
முழு விவரமும் இங்கே உள்ளது. நிதானமாகப் படித்துப் புரிந்துகொள்ளுங்கள்: http://www.writercsk.com/2019/09/pen-...…
தொடர்ந்து பேசுவோம்.
#Amazon #PentoPublish #kdp #amazonkindleindia
Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
May 17, 2019
புத்தகங்களின் எதிர்காலம்
பத்ரியின் இந்தக் குறிப்பைப் படித்தது முதல் திரும்பத் திரும்ப இதே சிந்தனையாக இருக்கிறது. அவர் சொல்லியிருப்பது சரி. ரயில், பஸ் பயணங்களில் யாரும் புத்தகம் படிப்பதில்லை இந்நாள்களில். கிண்டில் கருவி என்பது தமிழ்ச் சூழலில் இன்னும் மிகச் சிறுபான்மையினருடைய ஆடம்பரமாகவே கருதப்படுகிறது. கிண்டில் கருவியையாவது காசு கொடுத்து வாங்க வேண்டும். கிண்டில் அளிக்கும் இலவச ஆப்களில் கருவியில் உள்ள சகல வசதிகளுடனும் உங்கள் மொபைல் அல்லது டேபில் படிக்க முடியும். டெஸ்க்டாப்பில் படிக்கலாம். லேப்டாப்பில் படிக்கலாம். எல்லாக் கதவுகளும் படிப்பதற்குத் திறந்தேதான் இருக்கின்றன. இருந்தாலும் ஏன் யாரும் படிக்க விரும்புவதில்லை? இது கால மாற்றத்தில் நிகழும் தேக்கம் என்று எடுத்துக்கொள்ளப்பட வேண்டியதா?
ஆனால் பிற மொழிகளில் நிலைமை இத்தனை மோசமில்லை என்றே தெரிகிறது. ஆங்கிலம், ஃப்ரெஞ்சு, ஜெர்மன், ஜப்பானிய மொழிகளில் கிண்டில் மின் நூல்களின் வளர்ச்சி கணிசமாக அதிகரித்திருப்பதாகக் கேள்விப்படுகிறேன். இந்தியாவிலும் அந்த உயரங்களைச் சுட்டிக்காட்டுவதன் பொருட்டுத்தான் அமேசான் போட்டிகள் வைக்கிறது. லட்சக்கணக்கான பரிசுகள் தருகிறது. வாங்கிப் படிப்போருக்கு வசதியாக அன்லிமிடெட் போன்ற வாய்ப்புகளைத் தருகிறது. அமேசானின் திடீர் டீல்கள், இன்றைய தள்ளுபடி, இவ்வாரத் தள்ளுபடி, இம்மாதத் தள்ளுபடி என்று வாசகர்களுக்கும் நிறையத்தான் கிடைக்கிறது.
இருந்தாலும் புத்தகங்கள் விற்பதில்லை. யாரும் படிப்பதில்லை. ஃபேஸ்புக், வாட்சப், யுட்யூப் போதும்.
அவலமும் அபாயமும் மிகுந்த இப்பிரச்னை எங்கிருந்து உருவாக ஆரம்பித்தது என்று யோசித்துப் பார்க்கலாம். ‘எம்பிள்ளைய நான் இங்கிலீஷ் மீடியத்துல போட்டிருக்கென்‘ என்று என்றோ ஒரு தகப்பன் பெருமையுடன் சொன்ன அந்த எல்கேஜி மாணவன் இன்று பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு மேற்படிப்பு சார்ந்த ஆராய்ச்சிகளில் இருக்கிறான். நிறையப் படிக்கிறான். எல்லாம் ஆங்கிலப் புத்தகங்கள். நாவல்கள். புதிர் நூல்கள். கிண்டிலும் கையுமாகவே அலைகிறான்.
எண்ணிப் பார்த்தால் குறைந்தது பதினெட்டு வருடப் படிப்புக் காலம். இதனை முற்றிலும் ஆங்கில வழியில் அவன் கடந்திருக்கிறான். இனியும் அவ்வழியே அவனுக்கு வசதியானது. எளிதானது. அவன் அப்படித்தான் போவான். ‘என்னடா சாப்பிடற?’ என்று கேட்டால், ‘ரெண்டு இட்லி போதும்மா‘ என்று நல்ல தமிழில் நிச்சயம் பதில் சொல்வான். ஆனால் அவனால் தமிழ் நூல் ஒன்று இட்லியைவிட ருசியாக இருந்தாலும் பொருந்திப் படிக்க முடியாது. இவ்வளவு எழுதுகிற என்னாலேயே, தேவைக்காக அல்லாமல் வெறும் ஆர்வத்துக்காக ஒரு ஆங்கில நூலை முழுமையாகப் படிக்க முடிந்ததில்லை. நான் படித்த ஆங்கில நூல்கள் அனைத்துமே என் தொழில் சார்ந்த ஆய்வுகளுக்காகவும் தேவைகளுக்காகவும் படித்தவை மட்டுமே. ஓரான் பாமுக்கையும் மார்க்குவேஸையும் முரகாமியையும் தமிழில் படிக்கும் சாத்தியங்கள் வந்துவிட்டபடியால் அவர்களைப் பங்காளிகளாக்கி வைத்துக்கொள்வதுதான் வசதி.
பிரச்னை பள்ளி வளாகத்தில் தொடங்குகிறது. ஆங்கில வழிப் படிப்பில் உள்ளோருக்கு ஒப்புக்கு ஒரு பாடம் தமிழ் இருக்கும். தமிழ் அல்லது இந்தி என்ற வாய்ப்பு இருக்கும். இதனாலெல்லாம் தமிழ் பின்னால் போய்விடுகிறது. பள்ளி முடித்த புத்துணர்ச்சியுடன் வாசிப்புலகுக்கு வருகிற மாணவன், அதுவரை வாசித்ததெல்லாம் வேறு. ஆங்கில ஜாங்கிரி இலக்கியங்கள். சுவாரசிய மாயதந்திரக் கதைகள். கடவுள் பாதி மனிதன் பாதி ஃபேண்டஸிக் காவியங்கள். அவனிடம் பொன்னியின் செல்வனைக் கொடுத்தால்கூடப் பத்து பக்கங்களுக்குமேல் படிக்க முடிவதில்லை. காரணம், வாசிப்பு வேகம் தமிழில் அவர்களுக்கு அறவே இல்லை. நீங்கள் கவனித்துப் பாருங்கள். இவ்வருடம் 10வது, 12வது முடித்து வெளியே வரும் எந்த ஒரு பையனும் பெண்ணும் தமிழ்ப் புத்தகங்களை விரும்பி வாசிக்ககூடியவர்களாக இருக்க மாட்டார்கள். தவறி ஒன்றிரண்டு பேர் இருந்தால் அவர்கள் அரசுப் பள்ளி மாணவர்களாக இருப்பார்கள்.
இவர்கள்தாம் எதிர்கால வாசகர்கள் என்னும்போது தமிழில் கதைகளையும் கட்டுரை நூல்களையும் அச்சிட்டு வைத்துக்கொண்டிருப்பது அபத்தம் என்று தோன்றுவதில் வியப்பில்லை.
கிண்டில் ஒரு மாற்றா?
ஓரளவுக்கு ஆம் என்று சொல்வேன். கிண்டிலை நான் தொலைக்காட்சித் தொடர்களுடன் ஒப்பிட விரும்புகிறேன். இந்தத் தலைமுறைக்கு முந்தைய, அதற்கும் முந்தைய தலைமுறைகளைச் சேர்ந்த, பத்தாம் வகுப்பு வரை ஒழுங்காகத் தமிழ் படித்த, வீட்டில் வாங்கும் கல்கி குமுதம் விகடன்களை விடாமல் படித்த பெண்கள் கிண்டிலில் வாசிக்க விரும்புகிறார்கள். அது பெண்களால் பெண்களுக்கும் ஆண்களால் பெண் பெயரில் பெண்களுக்கும் எழுதப்படும் குடும்ப / காதல் / குற்றக் கதைகள். அரை மணி நேரத்தில் படித்து முடித்துவிட்டு உடனே மறந்துவிடலாம். அடுத்ததை எடுத்துவிடலாம். மாதம் 165 ரூபாய் சந்தா கட்டினால் போதும். பத்துப் பத்தாக எத்தனைப் புத்தகங்களையும் எடுத்துப் படிக்கலாம். அன்லிமிடெட் சாத்தியங்கள். கடந்த சில மாதங்களாக இந்த இயலை மிகத் தீவிரமாக கவனித்து வருபவன் என்ற முறையில் சொல்கிறேன். பிரபல எழுத்தாளர்கள் நம்பவே முடியாத அளவுக்கு இங்கே புதிய பிரபலங்கள் பலர் உதித்திருக்கிறார்கள். அன்லிமிடெடில் வெளியிட்டு ஐந்து நாள் இலவசம் கொடுத்து ஐம்பதாயிரம் ஒரு லட்சம் தொடு எண்ணிக்கை பெற்று சம்பாதிக்கும் எழுத்தாளர்கள். அவர்களுக்கு அங்கே தனியொரு வாசகர் கூட்டம் சேர்கிறது. இக்கதையின் முடிவு என்னவாக இருக்கும் என்று யூகித்து வையுங்கள். அடுத்த சனிக்கிழமை வெளியாகும் இதன் இரண்டாம் பாகத்தில் முடிவு தெரியும் என்று புத்தகப் பக்கத்தில் எழுதி விளம்பரம் வைக்கிறார்கள். பத்திரிகைகள் தொடர் அத்தியாயங்களை வெளியிட்டு இறுதியில் அது ஒரு நாவல் புத்தகமாக அச்சாகும் முன்பெல்லாம். இப்போது ஒரு நாவலை வெளியிட்டு, இரண்டாம் பாகத்தை அடுத்த அத்தியாயமாகச் சுட்டிக்காட்டுகிறார்கள் இந்தப் புதிய அலை எழுத்தாளர்கள்.
இவற்றை யார் படிக்கிறார்கள்?
மிக நிச்சயமாக 28 வயதுக்கு மேற்பட்ட பெண்கள். மாத நாவல்களை வாங்கிப் படித்துக்கொண்டிருந்தவர்கள். இப்போது மொபைல் போனிலேயே அதைப் படித்துவிட முடிகிற மகிழ்ச்சியைக் கொண்டாடுபவர்கள். இதே வயது ஆண்களும் இருக்கிறார்கள். ஆனால் ஒப்பீட்டளவில் எண்ணிக்கை குறைவு. அவர்கள் அன்லிமிடெட் சந்தாவையும் தவிர்த்துப் படிக்க வழி தேடி ஏடகம் போன்ற இடங்களில் அடைந்துவிடுகிறார்கள். மட்டரகமான பிடிஎஃப், பக்கம்தோறும் வாட்டர் மார்க் இருந்தாலும் ஒரு புத்தகம் ஓசியில் கிடைக்கிறது என்றால் விடத் தோன்றுமா. ஆனால் டவுன்லோட் செய்து வைக்கும் இந்தத் திருட்டு பிடிஎஃப்களை அவர்களில் எத்தனைப் பேர் முழுதாகப் படிக்கிறார்கள் என்று தெரியாது.
கடந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் ஒரு விஷயம் கவனித்தேன். புத்தகம் வாங்கிச் சென்றவர்களுள் பெரும்பாலானவர்கள் 50க்கு மேற்பட்ட வயதினர். என் மதிப்புக்குரிய எழுத்தாளர் நண்பர் ஒருவர் (70+ வயது) உடல் நலம் சரியில்லாத போதும் வண்டி வைத்துக்கொண்டு வந்து அள்ளிப் போட்டுக்கொண்டு போனதைக் கண்டேன். அவர்களுக்குக் கிண்டில் தெரியாது; புரியாது. வாசிப்பு என்றால் அச்சுப் புத்தகம்தான்.
ஆனால் இனி வரும் தலைமுறை அச்சு நூல்களை அவ்வளவாக விரும்பாது என்றே தோன்றுகிறது. தவிர, வாசக விருப்பம் என்பதும் கணிசமாக மாறிவிட்டிருக்கிறது. நீண்ட படைப்புகளைப் பலர் இப்போது விரும்புவதில்லை. எடுத்தால் உடனே முடித்துவிடக்கூடியதாக இருக்க வேண்டியது முக்கியம். அவர்களுக்கு முன்னுரை முகவுரைகள்கூட வேண்டாம். முதல் வரியில் கதை. நாற்பத்து ஐந்து பக்கத்தில் முற்றும். அவ்வளவுதான்.
இரண்டாயிரமாண்டுத் தொடக்கத்தில் தமிழில் புனைவு அல்லாத அரசியல், சமூகம், வரலாறு, அறிவியல், தொழில்நுட்பம், முதலீடு உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த அபுனை நூல்கள் நிறைய வெளிவர ஒரு விதத்தில் நான் காரணமாக இருந்தேன். அந்தப் புத்தகங்கள் அப்போது நன்றாக விற்கவும் செய்தன. இன்றுவரை அவற்றின் மறுபதிப்புகள் செல்லுபடியாகிக்கொண்டிருப்பதையும் அறிவேன்.
ஆனால் என்ன விசித்திரம் என்றால் அச்சு நூல்களாகப் பெருவெற்றி கண்ட இத்தகைய பல புத்தகங்கள் மின்நூல் வடிவில் விற்பதே இல்லை. அபுனை நூல் வாசிக்க கிண்டில் ஒரு சரியான கருவியில்லை என்று ஏன் தோன்றுகிறது? இது புரியவில்லை. நான் எனது கிண்டிலில் பெரும்பாலும் புனைவல்லாத புத்தகங்களைத்தான் வைத்திருக்கிறேன்; வாசிக்கிறேன். எனக்கு இதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் என்னை வைத்து எடை போட முடியாது; கூடாது. பொதுப் பார்வையில் எளிய கதைகளை வாசிக்க கிண்டில் உதவும் என்ற எண்ணம் பலருக்கு உண்டாகியிருக்கிறது. அதற்குச் சேவை செய்யும் கரங்கள் பல புதிதாக முளைத்திருக்கின்றன. ஒளிவுகளற்ற அமேசானின் தளத்தில் இந்த வியாபாரத்துக்கான சாத்தியங்கள் எளிதாக உள்ளன. எனவே அங்கு எளிய குடும்ப நாவல்கள் நிறைய விலை போகின்றன. இலக்கியம் என்னும் சிறுபான்மை வரையறைக்குள் வருபவையும் அன்லிமிடெடில் போனால் சில புதிய வாசகர்களைப் பெறுகின்றன. ஆசிரியருக்குச் சிறிது பணமும் வருகிறது. (அன்லிமிடெடில் போனால் அங்கிருந்து நேரே டெலிகிராம் திருட்டு பிடிஎஃப் சேனல்களுக்குப் போய்விடும் என்பதைச் சொல்ல வேண்டாமல்லவா? அதற்கும் இடம் கொடுத்துத்தான் இதனை முயற்சி செய்ய வேண்டும்.)
எப்படி யோசித்தாலும் பதிப்புத் தொழில் நிலைபெற வாசகர் தேவை. பள்ளி நாள்களில் இருந்து தாய்மொழி முக்கியம் என்று சொல்லிக் கொடுத்து வளர்க்கக்கூடிய ஆசிரியர்கள் தேவை. தமிழ்ப் புத்தகங்களைக் காசு கொடுத்து வாங்கிக் கொடுத்துப் படிக்க வைக்கும் பெற்றோர் தேவை. இந்த மூன்றும் சரியாக இருந்தால்தான் எதிர்காலத்தில் இப்போதுள்ள சிறுபான்மை வாசகர்களாவது எண்ணிக்கைக் குறையாதிருப்பார்கள். என் கவலை இதுவெல்லாம்கூட அல்ல.
Annaikku kaalaila aaru mani irukkum. Kozhi kokkarakoooonnu koovuhi. En pondaatti thalai niraiya malliya poo veccikkittu vandhu ennai usuppuna.
என்று தொடங்கி ஒரு முழுநீள கிண்டில் புத்தகம் அன்லிமிடெடில் வந்துவிடும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று தோன்றிக்கொண்டே இருக்கிறது. அப்போது அதை ஆடியோவில் கேட்கும் வசதி சேரும். அதைக் கேட்கத் தொடங்குவோம். மீண்டும் பாட்டி கதை சொன்ன காலத்துக்குப் போய்ச் சேருவோம்.
Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
May 3, 2019
வெட்டி முறித்த காதை
பொதுவாக வெயிற்காலங்களில் என்னால் சரியாக எழுத முடியாமல் போகும். நான் ஒன்றும் நாளெல்லாம் வீதியில் திரிகிற உத்தியோகஸ்தன் இல்லைதான். ஆனாலும் வெக்கை நினைவில் நிறைந்துவிடுகிறபோது வெளியைக் காட்டிலும் இம்சிக்கும். இம்முறை வழக்கத்தைவிடக் கோடைக்காலம் கொடூரமாக இருக்கும் என்று இன்று மனத்தில் பட்டது. சகிக்க முடியாத சூடு. பத்து நிமிடம் வெளியே போய் வந்ததற்கே காது எரிந்தது. பாதங்கள் எரிந்தன. உச்சந்தலையில் குமுட்டி அடுப்பு ஏற்றி வைத்த மாதிரி இருந்தது. என்ன பயங்கரம்!
எழுத்து வேகம் கணிசமாக மட்டுப்பட்டிருக்கிறது. மூச்சைப் பிடித்துக்கொண்டு சீரியல் வேலைகளை எப்படியோ முடித்துவிடுகிறேன். மற்றதை எப்படிச் சரி செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை. ஆனால் வெட்டியாக இல்லை. வரிசையாக என்னுடைய புத்தகங்களை அமேசான் கிண்டிலில் ஏற்றும் பணி ஒருபுறம் நடந்துகொண்டிருக்கிறது. என்கோடிங் கன்வர்ஷன் குஸ்திகள் தீவிரமடைந்துள்ளன. இடையே ரிலாக்ஸ் செய்ய ஃபோட்டோஸ்கேபில் அட்டைகள் வடிவமைக்கிறேன். தரத்தில் சமரசமில்லாத, வடிவ நேர்த்தி பிசகாத, கூடியவரை பிழைகளற்ற மின்நூல்களைத் தரவேண்டும் என்ற எண்ணமே இதனை விடாமல் செய்ய வைக்கிறது. (இதனால்தான் திருப்தி தராத அட்டைப்படங்களைத் திரும்பத் திரும்ப மாற்றிக்கொண்டிருக்கிறேன்.)
மறுபுறம் செல்வமுரளி உதவியுடன் எனது இணையத் தளத்தை நிறைய சுத்தம் செய்தேன். குறிப்பாகப் புத்தகப் பகுதியை ஒழுங்கு செய்ய முடிந்ததில் மிகுந்த மகிழ்ச்சி. இனி எனது ரைட்டர்பாரா தளத்திலேயே நீங்கள் புத்தகங்களைப் பார்வையிட்டு அங்கிருந்தே நேரடியாக அமேசானில் மின்நூல்களை வாங்கலாம். ப்ரிண்ட் வர்ஷன் இருக்குமானால் அதையும் சேர்த்து வாங்கலாம். [பாதி நூல்களை மின்னூல்களாக்கிவிட்டேன். இன்னும் சிறிது மிச்சம் உள்ளது. அவையும் விரைவில் கிண்டிலில் வந்துவிடும்]
தளத்தின் புத்தகப் பகுதியை ஒழுங்கு செய்ய நினைத்து, மொத்தத் தளத்திலும் கைவைத்து சீர்திருத்தும்படியானது. எந்த விஷயத்திலும் எளிதில் திருப்தியுறாத என்னை சகித்துக்கொண்டு பொறுமையாக இந்தப் பணியைச் செய்துகொடுத்த செல்வமுரளிக்கு என் மனமார்ந்த நன்றி. இவரது யூனியம்மா ஃபாண்ட்களைத்தான் மின்நூல்களின் அட்டைப்படங்களில் தலைப்பு வைக்கப் பயன்படுத்துகிறேன். எங்கோ கிருஷ்ணகிரி பக்கத்தில் குக்கிராமத்தில் உட்கார்ந்துகொண்டு இணையக் கட்டுமானப் பணியின் சகல சந்து பொந்துகளிலும் புகுந்து எழும் இந்த இளைஞரை மிகவும் விரும்புகிறேன். இவரை எனக்கு அடையாளம் காட்டிய என் நண்பர் மாயவரத்தான் ரமேஷ்குமாருக்கு நியாயமாக நன்றி சொல்ல வேண்டும். ஆனால் அவர் கோபிப்பார்; வேண்டாம்.
நண்பர்களிடம் நான் வேண்டுவது ஒன்றுதான். எனது இணையத் தளத்துக்கு ஒரு பத்து நிமிடம் நேரம் ஒதுக்கி, கம்ப்யூட்டர் / லேப்டாப், மொபைல்/ டேப் / மேக்புக் என சாத்தியமுள்ள அனைத்துக் கருவிகள் வழியாகவும் ஆராய்ந்து பாருங்கள். இன்னும் என்னெல்லாம் செய்யலாம் என்று உங்களுக்குத் தோன்றுகிறதோ, அவற்றைச் சொல்லுங்கள்.(writerpara@gmail.com)
இந்தத் தளத்தின் புத்தகப் பகுதி ஒரு நூலகம் போல இருக்கவேண்டும் என்று நினைத்தேன். இங்கிருந்தபடியே அமேசானில் நீங்கள் புத்தகத்தை அச்சுப் பதிப்பாகவும் மின்நூலாகவும் வாங்க ஒரே க்ளிக் வசதிக்கு விருப்பப்பட்டேன். அது இப்போது சாத்தியமாகியிருக்கிறது.
இந்த சீசனுக்கான தள ஆப்பரேஷன் பணிகளை இதோடு நிறுத்திக்கொள்கிறேன். முதலில் கல்கியில் எழுதிக்கொண்டிருக்கும் புல்புல்தாராவை முடித்துவிட்டு Fake Idஐ முடிப்பதில் மும்முரமாக வேண்டும். ஆண்டிறுதிக்குள் இன்னொரு நாவலும் யோசித்துக்கொண்டிருக்கிறேன். (தலைப்பு: ‘அல்லா அழைக்கிறார்; அன்ரிசர்வ்டில் வாருங்கள்.’) யாராவது ஸ்பான்சர் செய்து என்னை மங்கோலியாவுக்கோ சைபீரியாவுக்கோ அனுப்பிவைத்தால் நடக்கும்.
மற்றபடி நான் சௌக்கியம்.
Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
April 17, 2019
பின் கதைச் சுருக்கம்
இந்தப் புத்தகத்தை நான் எழுதி இருபது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டன. ஆனால் இன்றுவரை இதை என்னவாக வகைப்படுத்துவது என்று எனக்குத் தெரியவில்லை. சில கதைகளைப் பற்றிய கட்டுரைகள் என்று சொல்வது அநியாயமாக இருக்கும். ஒரு காலக்கட்டத்தில் நான் விரும்பி வாசித்துக்கொண்டிருந்த புத்தகங்களைப் பற்றி, வாசித்து முடித்த உடனேயே சில வரிகள் எழுதும் வழக்கம் இருந்தது. அதைச் சற்று விரித்து எழுதலாம் என்று யோசனை சொன்னவர் கல்கி ஆசிரியர் சீதா ரவி. அதுதான் இது.
நான் இதைத்தான் படிப்பேன், இதையெல்லாம் தொடமாட்டேன் என்ற கொள்கை ஏதும் இல்லாதவன். கையில் கிடைப்பதைப் படிக்க ஆரம்பிப்பேன். முழுக்க முடிக்கிறேனா இல்லையா என்பது குறிப்பிட்ட புத்தகம் என்னை எவ்வளவு ஈர்க்கிறது என்பதில் உள்ளது. நான்கு பக்கங்கள் வரை விமரிசனமின்றிப் படித்துவிடுவேன். என்னை மறந்து ஐந்தாவது பக்கத்துக்குப் போய்விட்டேன் என்றால் முடித்துவிடுவேன். அந்தப் பக்கத்தைக் கடக்காதிருந்தேன் என்றால் எந்நாளும் அப்புத்தகத்தை நான் படித்து முடிக்க மாட்டேன் என்று பொருள். இலக்கியத்தில் என் சொந்த ரசனை ஒன்றே எனது அளவுகோல். அடுத்தவர் அபிப்பிராயங்களைக் கருத்தில் கொள்ளுவதே கிடையாது. இது சரியா தவறா என்பதல்ல. எனக்கு இப்படி இருப்பதுதான் சௌகரியமாக இருக்கிறது.
பின் கதைச் சுருக்கம், கல்கியில் தொடராக வெளிவந்தபோதே ஏராளமான வாசகர்களின் பாராட்டுகளைப் பெற்றது. பிறகு புத்தகமானபோதும் நல்ல வரவேற்பு இருந்தது. தமிழ்ச் சூழலில் ஒரு புத்தகம் பத்திருபது வருடங்கள் தாக்குப் பிடித்துப் பதிப்பில் இருப்பது பெரிய காரியம். ஏதோ ஒரு கட்டத்தில் பின் கதைச் சுருக்கமும் பதிப்பின்றிப் போய்விட்டது. இதற்கும் ஒரு நிரந்தரத்துவம் அளிக்கலாம் என்ற எண்ணத்தில்தான் மின்நூல் ஆக்கியிருக்கிறேன்.
இது நான் வாசித்து பிரமித்த சில புத்தகங்களையும் ஆசிரியர்களையும் பற்றிய எனது மனப்பதிவுகள் மட்டுமே. விமரிசனமோ, மதிப்புரையோ, கருத்துரையோ அல்ல. இலக்கியத்துக்கு நான் ஏதாவது நல்லது செய்வதென்றால் அது விமரிசனம் எழுதாதிருப்பதுதான் என்று எண்ணியிருக்கிறேன். இறுதிவரை அதைக் காப்பேன் என்றுதான் நினைக்கிறேன்.
அச்சில் தேடி இது கிடைக்கவில்லை என்று தொடர்ந்து எனக்கு மின்னஞ்சல்கள் எழுதி வந்த வாசக அன்பர்களுக்கு, இனி இது நிரந்தரமாக மின்வெளியில் இருக்கும்.
Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
March 27, 2019
இளைப்பது சுலபம் – மின்நூல் வெளியீடு
குங்குமத்தில் நான் எழுதிய இந்தத் தொடர், கிழக்கு பதிப்பகத்தில் நூலாக வெளிவந்தது. இப்போது அமேசான் கிண்டிலில் மின்நூலாகவும் வெளியாகியுள்ளது.
2016 ஜூன் மாதம் தொடங்கி இன்றுவரை எனது சௌக்கியத்துக்கு சகாயம் செய்துகொண்டிருப்பது பேலியோ. பேலியோ குழுவில் கற்றது, அப்பால், படித்து அறிந்தது அனைத்தையும் இந்நூலில் விவரித்திருக்கிறேன். பழைய என்னைப் போன்ற பூதாகாரமான ஆகிருதியாளர்கள், தற்போதைய என்னைப் போன்ற கவர்ச்சிகரமான ஆளுமையாக உருமாற நினைத்தால் இந்தப் புத்தகம் உதவும்.
இந்நூலுக்கு நண்பர் கோகுல் குமரன் அருமையானதொரு முன்னுரை எழுதியிருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த நன்றி.
Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
March 23, 2019
புதிய கிண்டில் பதிப்புகள்
என்னுடைய நாவல்கள் அனைத்தும் இப்போது புதிய முகப்பு / மலிவு விலையில் கிண்டிலில் கிடைக்கின்றன. யதி, பூனைக்கதை நீங்கலாக மற்ற அனைத்தும் ரூ. 100க்கும் குறைந்த விலையில் இருக்க வேண்டும் என்று விரும்பினேன்; அப்படியே செய்திருக்கிறேன். வாங்குவோர் எண்ணிக்கை அதிகமானால் விலை இன்னமும் குறையும். அச்சுப் புத்தகங்களின் விலையேற்றம் வாசகர் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைத்துவரும் இக்காலத்தில் செலவு குறைந்த மின்நூல் வாசிப்பின் பக்கம் வாசக கவனத்தை ஈர்க்கவே இம்முயற்சி.
பின்வரும் சுட்டிகளில் நாவல்களை நீங்கள் பெறலாம்.
யதி
அலை உறங்கும் கடல்
புவியிலோரிடம்
தூணிலும் இருப்பான்
கால் கிலோ காதல் அரை கிலோ கனவு
பூனைக்கதை
அலகிலா விளையாட்டு
மெல்லினம்
கொசு
ரெண்டு
Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
March 17, 2019
யதி: இருபது பார்வைகள்
நண்பர்களுக்கு வணக்கம்.
யதி வெளியானபோது அதற்கு மதிப்புரை எழுதிய இருபது வாசகர்களின் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு மின்நூலாக வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தேன். விலையற்ற மின்நூலாக வெளியிட வழியுண்டா என்று போராடிப் பார்த்ததிலேயே நாள்கள் ஓடிவிட்டன. இன்றுவரை அதற்கான வாய்ப்பு டைரக்ட் பப்ளிஷிங் முறையில் வெளியிடுவதில் இல்லை. இப்படி வெளியிடுவதைத் தவிர எழுத்தாளர்களுக்கு இங்கு வேறு வழியும் இல்லை, குறைந்தபட்சம் இப்போதைக்கு.
எனவே யதி: இருபது பார்வைகள் மின்நூலை kdp-இன் குறைந்தபட்ச கட்டாய விலையான ரூ. 49 நிர்ணயித்து வெளியிட முடிவு செய்தேன்.
இன்று பின் இரவு அல்லது நாளை இம்மின்நூல் வெளியாகும். வெளியாகும்போதே ஐந்து நாள்களுக்கு இலவசமாகக் கிடைக்கும்படிச் செய்திருக்கிறேன். அதன்பின் 49 ரூபாய் காட்டும். அதற்குள் தரவிறக்கம் செய்துகொள்ளவும்.
ஆனால்,
இம்மின்நூல் என்றும் கிண்டில் அன்லிமிடெடில் இருக்கும். அன்லிமிடெட் சந்தாதாரர்களுக்கு இலவசமாகப் படிக்கக் கிடைக்கும்.
கிண்டில் மேட்ச் புக் ஆப்ஷன் தேர்ந்தெடுத்திருக்கிறேன். நீங்கள் அமேசான் வழியே அச்சுப் புத்தகம் வாங்கினால் இம்மின்னூலை இலவசமாகத் தரவிறக்கம் செய்துகொள்ள இயலும்.
Lending Option உள்ளது. நீங்கள் தரவிறக்கம் செய்து படித்தபின் உங்கள் நண்பர்களுக்கு 14 நாள்களுக்கு இதனை இலவசமாகத் தரலாம். (அதென்ன பதினான்கு நாள் என்று கேட்காதீர்கள். எனக்குத் தெரியாது.)
ஒரு நாவல் வெளியானதும் இத்தனைப் பேர் அக்கறையுடன் வாசித்து மதிப்புரை எழுதியது தமிழில் அநேகமாக இது முதல்முறை என்று நினைக்கிறேன். யதி பரவலான வாசக கவனம் பெற இம்மதிப்புரைகள் மிகவும் உதவி செய்தன. எழுதிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. எழுத்தாளனே நிறுவனமாகவும் செயல்பட வேண்டிய காலக்கட்டத்தில் இத்தகைய வாசக ஆதரவு ஒன்றே தொடர்ந்து செயல்பட மானசீக பலம் அளிக்கிறது.
உங்கள் அனைவருக்கும் மீண்டும் என் மனமார்ந்த நன்றி.
Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
March 5, 2019
புதிய முகம் கொள்ளும் தொலைக்காட்சித் தொடர்கள்
தொலைக்காட்சி நெடுந்தொடர் கட்டுமானத்தில் சமீபகாலமாக நிகழ்ந்துவரும் மாற்றங்களைக் கூர்ந்து கவனிக்கிறேன். அந்தத் துறையில் இருப்பவன் என்பதால் அல்ல. எழுதுபவனாக நான் இங்கு வேறு ஆள். அது என் வருமானம் சார்ந்தது. ஆனால் என்றைக்கும் ஒரு ரசிகனாக மட்டுமே சீரியல்களையும் சினிமாக்களையும் தனிப்பட்ட முறையில் அணுக விரும்புவேன். தொழிலுக்கு அப்பால் நான் எழுத்தில் செய்ய விரும்பும் பணிகளுக்கு இடையூறு இருக்கக்கூடாது என்றுதான் திரைக்கதைப் பக்கம் நான் போவதில்லை. வசன எழுத்து கூடுதல் உடலுழைப்பைக் கோருவது என்றாலும் இதுதான் எனக்கு சௌகரியமாக உள்ளது. நேரம் முற்றிலும் என் வசமாக இருப்பது முக்கியக் காரணம். ஒப்பீட்டளவில் இதில் விவாதங்களுக்கும் சந்திப்புகளுக்கும் குறைவான நேரமே தரவேண்டியிருக்கும் என்பது இன்னொரு காரணம். திரைக்கதைக்குள் புகுந்துவிட்டால் நாவல் எழுத இயலாது என்பது அனைத்திலும் முக்கியக் காரணம்.
ஆனால் சமீப காலமாக செம்பருத்தி, நேற்றுத் தொடங்கிய சத்யா, சிறிது காலமாக வந்துகொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற நெடுந்தொடர்களில் திரைக்கதை அமைப்பின் நுணுக்கமான மாற்றங்கள் என்னைக் கவர்கின்றன. பரபரப்பாகக் காட்சிகளை நகர்த்தும் அவசரம் இப்போது யாரிடமும் இல்லை. எளிய, matter of fact காட்சிகளைக் கூட நிறுத்தி நிதானமாகச் சொல்லும் வழக்கம் உருவாகியிருக்கிறது.
சத்யா என்ற துடிப்பான இளம் பெண்ணின் பாத்திரப் படைப்பை இன்று அறிமுகம் செய்தார்கள். படித்தவள். லோன் பாக்கிக்காக வண்டிகளை மடக்கிப் பிடித்து எடுத்துச் செல்பவள், விளையாட்டுத்தனம் மிக்கவள், நிறைய ஆண் நண்பர்கள், பிராந்தியவாசிகள் அத்தனை பேருக்கும் விருப்பமான பெண், வீட்டில் அக்காவின்மீது பாசம் கொண்டவள், அவளது விருப்பத்துக்கு விரோதமான திருமண ஏற்பாட்டை சாமர்த்தியமாகத் தடுத்து நிறுத்துபவள், பாட்டி மீது பேரன்பு கொண்டவள், தடாலடிப் பேர்வழி, ஆனாலும் அம்மாவுக்கு பயப்படுபவள் அல்லது அப்படி நடிப்பவள் – இவை அனைத்தும் இன்றைய இருபது நிமிடங்களில் தெளிவாக்கப்பட்டுவிட்டன. பின்னணியில் அவளது நடுத்தரக் குடும்பம், எம்மாதிரியான சுற்றுச் சூழலில் வசிக்கிறாள் என்பதும் பதிவு செய்யப்பட்டுவிட்டன. கதாநாயகன் வந்துவிட்டான். மோதலில் தொடங்கப் போகிறது என்பது தெரிந்துவிட்டது. அனைத்துமே ஒரு மெல்லிய நகைச்சுவை இழையில் கோக்கப்பட்டிருந்தது.
புராதன முறையில் மேற்சொன்ன விஷயங்கள் அனைத்தும் வசனங்களில் நகருவதே தொலைக்காட்சித் தொடர்களின் வழக்கம். ஆனால் காட்சி ரூபமாக இவை ஒரு எபிசோடுக்குள் அடைக்கப்பட்டிருப்பதும், அது அலுப்பூட்டாத விதத்தில் படமாக்கப்பட்டிருப்பதும் பிடித்திருந்தது.
இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸில் ஒரு புருஷன் பெண்டாட்டிக்கு இடையிலான ஊடலைத் தீர்த்து வைப்பதற்காக வீட்டில் அவர்களைத் தனியே இருக்கவிட்டு, அவனது சகோதரர்களும் அவரவர் மனைவியும் கோயிலுக்குச் சென்று படுத்துக்கொள்கிறார்கள். கோயிலுக்குப் போன இடத்தில் ஒரு ஜோடி பிணக்கு கொண்டு உறங்காதிருக்கிறது. வீட்டில் அவர்கள் தனியே விட்டுவந்த ஜோடி சேருகிறதா, இங்கெ புதிய பிணக்கில் சிக்கிய ஜோடி மேலும் விலகவிருக்கிறதா என்ற கேள்வியுடன் நகர்ந்திருக்கிறது.
நாடகங்கள்தாம். ஆனால் வாழ்வுடன் நெருங்கச் செய்யும் முயற்சிகள் தொடர்களில் ஆரம்பமாகியிருக்கின்றன என்பது மகிழ்ச்சியளிக்கிறது.
ஒப்பீட்டளவில் நான் இதுநாள் வரை பார்த்து வந்த செம்பருத்தி முற்று முழுதான நாடகப் பாணி திரைக்கதை அமைப்பில் நகர்வதுதான். பார்த்த கண் நகராத விதத்தில் ஒரு கதாநாயகி அவர்களுக்குச் சிக்கியது மட்டுமே அதன் மிகப்பெரும் பலம். அநேகமாக இது பழைய பாணி நெடுந்தொடர்களின் கடைசிக் கண்ணியாக இருக்கக்கூடும்.
ஒரு விஷயம். ஒரு நெடுந்தொடர் ஒருபோதும் சினிமாவைப் போல இருக்க இயலாது. நடைமுறைச் சிக்கல்கள் இதில் அதிகம். ஆனால் சினிமாவுக்கும் நாடகத்துக்கும் இடைப்பட்ட ஒரு வெளி இருப்பதை இன்று வரத் தொடங்கியிருக்கும் தொடர்கள் சுட்டுகின்றன. நெடுந்தொடர்கள் சார்ந்த கிண்டல் கேலிகளும் வெறுப்பு கலந்த விமரிசனங்களும் இனி மெல்ல மெல்ல இல்லாது போகும் என்று தோன்றியது.
இம்மாற்றங்களின் பின்னணியில் அயராது உழைக்கும் புதிய தலைமுறையினரை மனமார வரவேற்கிறேன். மகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறேன்.
Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
February 28, 2019
யுத்தம் ஏன் உதவாது?
நேற்று நான் எழுதிய ஒரு குறிப்பு உண்டாக்கியிருக்கும் அதிர்வுகளையும் சலனங்களையும் மாற்று / எதிர் கருத்துகளையும் இன்று முழுமையாக வாசித்தேன். அரவிந்தன் நீலகண்டன் அன்ஃபிரண்ட் செய்துவிட்டுப் போய்விட்டார். என்னை விடுங்கள்; நான் வெளியாள். என் கவலையெல்லாம் இப்படிக் கருத்து வேறுபாடு வரும்போது அவர் மனைவி என்ன பாடு படவேண்டியிருக்கும் என்பதே. பொதுவில் சமூகம் சகிப்புத்தன்மையை இழந்து வருகிறது. அதைவிட அபாயம், தேசியம் என்னும் கருத்தாக்கத்துக்கு ஹிந்துத்துவவாதிகள் கொள்ளும் விளக்கம் திகைப்பூட்டுகிறது.
சிறிதும் சந்தேகமின்றி நானொரு தேசியவாதி. எனக்கு என் தேசத்தைப் பிடிக்கும். இதன் அமைப்பின் அத்தனைக் குறை நிறைகளுடன் சேர்த்தே நான் என் தேசத்தை நேசிக்கிறேன். பிரிவினைப் பேச்சு – எந்த வடிவில் வருமானாலும் அதனை எதிர்க்கிறேன். பிரிவினையைத் தூண்டும் எந்த அரை டிக்கெட் அரசியல்வாதிகளின் மீதும் எனக்குச் சிறிதும் மதிப்பில்லை. ஆனால் எனது தேசிய நேசம் என்பது ஒருபோதும் தீவிர ஹிந்துத்துவர்களின் நேசத்துடன் பொருந்திப் போவதில்லை.
யுத்தம் குறித்து. பாகிஸ்தான் ஒரு தீவிரவாத ஊக்குவிப்பு தேசம் என்பதில் சந்தேகமில்லை. எங்கெல்லாம் அடிப்படைவாதம் மேலோங்கி வளர்கிறதோ அங்கெல்லாம் தீவிரவாதம் தலையெடுக்கவே செய்யும். மத அடிப்படைவாதம் சென்று சேரும் இடம் தீவிரவாதம் மட்டுமே. தீவிரவாதம் ஒழிக்கப்பட வேண்டியது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் எல்லை தாண்டும் தீவிரவாதத்தை சம்பந்தப்பட்ட இரு தேசங்களின் அரசுகள்தான் பேசி சரி செய்ய இயலும். பாகிஸ்தானைப் பொறுத்தவரை அரசு / தீவிரவாத இயக்கங்கள் / உளவுத்துறை என்பது ஒருங்கிணைந்து செயல்படும் ஓர் அமைப்பு. அத்தேசத்தைக் குறித்து ஓரளவு ஊன்றிப் படித்தவன், தொடர்ந்து கவனித்து வருபவன் என்ற முறையில் சொல்கிறேன். நவாஸோ, பேனசிரோ, முஷாரஃபோ, இன்றைய இம்ரானோ இவர்களுக்கு முந்தைய காலத்துத் தலைவர்களோ ராணுவ அதிகாரிகளோ – தொடக்கம் முதலே இந்த ஏற்பாட்டுக்கு மிகவும் பழகிவிட்டவர்கள். உள்நாட்டு / உள்கட்டுமான வளர்ச்சி என்பதை விஸ்தரிக்க முடியாத சூழ்நிலையில், பெரும்பாலும் கடனில் வாழுகிற ஒரு தேசம் மக்களின் கோபத்தை அரசிடம் இருந்து விலக்கி வேறு பக்கம் திருப்ப 1948 முதல் அவர்கள் காஷ்மீரை ஒரு எட்டாக்கனியாக முன்வைத்து ஏசு வந்தே விடுவார் என்கிற பிரசாரத்தைப் போல, காஷ்மீர் நமக்குத்தான் என்று கூறி வந்திருக்கிறார்கள். இனி வரும் தலைமுறை இதனை மாற்றிப் பேசும் என்று எதிர்பார்க்க இயலாது.
இன்னொன்று, மத்தியக் கிழக்கின் அனைத்து மத அடிப்படைவாத / தீவிரவாத இயக்கங்களுடனும் பாகிஸ்தானில் இருந்து இயங்கும் இயக்கங்கள் தொடர்புள்ளவை. இந்த இயக்கங்கள் அனைத்தும் பாக். உளவுத்துறையின் அரவணைப்பில் வளர்பவை. உளவுத்துறையே அங்கு உண்மையான ஆட்சியாளர்கள். முன்சொன்ன தலைவர்கள் அனைவரும் உளவுத்துறை அவ்வப்போது தேர்ந்தெடுத்து ஷோ கேஸில் வைத்த முகங்கள் மட்டுமே.
மதத்தை முன்னிறுத்தி ஆளும்போது இம்மாதிரியான இடர்பாடுகளைத் தவிர்க்கவே இயலாது. ஒரு முஸ்லிம் தேசமாக பகிரங்கமாக அறிவித்துக்கொண்டு செயல்படும்போது அடிப்படைவாதிகளை அரவணைத்தே போயாகவேண்டும். இது விதி. மாற்ற இயலாதது.
காஷ்மீரில் பாக். தீவிரவாத இயக்கம் ஊடுருவியதும் வெடிபொருள்களைப் பயன்படுத்தி இந்திய ஜவான்களைக் கொன்றதும், பதிலுக்கு இந்திய வீரர்கள் பாக். தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதும் நடந்திருக்க வேண்டாத சம்பவங்கள்தாம். ஆனால் நடந்துவிட்டது. ஒரு போரைத் தொடங்கி, பாகிஸ்தானை முற்றிலுமாக அழித்து நாசமாக்கிவிடுவதன் மூலம் இந்தப் பிரச்னையை இனி நிரந்தரமாகத் தீர்த்துவிட முடியும் என்று நம்புவதைத்தான் நான் மறுக்கிறேன். இதே போன்றதொரு தீவிரவாதத் தாக்குதலைத்தான் 9/11 அன்று அல் காயிதா அமெரிக்காவில் மேற்கொண்டது. பதிலுக்கு அமெரிக்கா ஆப்கன் மீது படையெடுத்தது. பெரும்பாலான உலக நாடுகள் தீவிரவாதத்துக்கு எதிரான அமெரிக்க யுத்தத்தில் அதன் பக்கம் நின்றன. கடும் யுத்தம். தாலிபன்கள் அழிக்கப்பட்டார்கள். ஒசாமா செத்துப் போனார். அல் காயிதாவின் ஆட்டம் குறைந்தது. நல்ல விஷயம்தான். ஆனால் இன்றுவரை ஆப்கன் மீண்டு எழவில்லை. ஆப்கனில் வசிக்கும் அத்தனைப் பேருமே அல் காயிதாக்காரர்களும் தாலிபன்காரர்களும்தானா? தாலிபன்களால் அனுபவித்த துயரங்களைக் காட்டிலும் அம்மக்கள் இன்றுவரை அதிகமாகவே அனுபவித்து வருகிறார்கள். ஒரு போரின் விளைவு, தோற்கும் தேசத்தை சர்வநாசமாக்கிவிடுவதை சரித்திரம்தோறும் பார்த்து வந்திருக்கிறோம். இயக்கங்களும் அரசாங்கங்களும் மேற்கொள்ளும் கோர நடவடிக்கைகளுக்கு அப்பாவி மக்களின் வாழ்வை பலி கொடுப்பது எப்படி நியாயமாகும்?
எண்ணெய்ப் பொருளாதாரத்தின் ஏகபோகச் சக்கரவர்த்தியாகும் வெறி ஒன்றே அமெரிக்காவை இராக் மீது படையெடுக்க வைத்தது. கொடுங்கோலாட்சி புரிந்த சதாம் செத்தார். ஆனால் அமெரிக்கா முன்வைத்த தீவிரவாத ஒழிப்பு என்னும் பிரகடனம் நிறைவேற்றப்பட்டதா? இங்கே ஒரு அல் காயிதாவை அடக்கினால் அங்கே ஒரு ஐ.எஸ் உருவாகிவிடுகிறது. இன்றுவரை சிரியாவில் யுத்தச் சத்தம் ஓய்ந்தபாடில்லை. மக்களின் அன்றாட வாழ்வு, கல்வி, வேலைவாய்ப்புகள், பொருளாதாரம் அனைத்தும் சின்னாபின்னமாகிவிடுகின்றன. யுத்தங்கள் அமைதியை உண்டாக்குவதில்லை. அகதிகளை மட்டும்தான் உண்டாக்குகின்றன.
ஒரு பேச்சுக்கு இந்தியா, பாகிஸ்தான்மீது போர் தொடுக்கிறது என்று வைத்துக்கொண்டால் கண்டிப்பாக அந்த யுத்தத்தில் இந்தியா வெல்லும். இதில் சந்தேகமில்லை. ஆனால் நிச்சயமாகத் தீவிரவாதத்தை அது அடியோடு வேரறுக்கும் என்று சொல்ல இயலாது. வேறு வடிவில் இன்னும் உக்கிரமாக அதை வளர்க்கத்தான் யுத்தம் உதவும். ஏனெனில் எழுபதாண்டுக் காலமாக எதிரி தேசமாகச் சொல்லிச் சொல்லி உருவேற்றப்பட்ட மக்கள் யுத்தத்தின் காரணத்தையும் விளைவையும் அலசி ஆராய்ந்து தமது தவறுகளை உணர்ந்து மாற்றிக்கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பது மூடத்தனம். பாலஸ்தீன் சிக்கலைப் போலவே காஷ்மீர் சிக்கலையும் இக்காலம் உடனடியாகத் தீர்த்து வைக்க வாய்ப்பில்லை. ஏனெனில், தேசம் என்பது அரசியல்வாதிகள் மட்டுமல்ல. ஆனால் துரதிருஷ்டவசமாக அரசியல்வாதிகளே முடிவெடுக்கும் இடத்தில் இருக்கிறார்கள்.
நிரந்தரமாகத் தீர்க்க இயலாத சிக்கல்களைத் தாற்காலிக அமைதிப் பேச்சுகளின்மூலம் தீர்ப்பது அல்லது உக்கிரத்தைத் தணிப்பது என்பதே பக்குவப்பட்ட தலைவர்கள் செய்யக்கூடிய செயலாகும். மாட்டிக்கொண்ட அபிநந்தனை விடுவித்து அனுப்பிவைப்பதன் மூலம் இம்ரான் கான் ஒன்றும் உடனடி உலக உத்தமர் ஆகிவிடப் போவதில்லை. ஆனால் இப்போதைக்கு நாங்கள் யுத்தத்தில் ஆர்வம் செலுத்தத் தயாரில்லை என்ற மறைமுக அறிவிப்பு அதில் உள்ளது. ஒருவேளை இன்னும் பலமான யுத்தத்துக்கான ஆயத்தங்களுக்கு அவர்களுக்கு அவகாசம் தேவைப்படலாம். அதற்காகவும் இதனைச் செய்யலாம். ஜெனிவா ஒப்பந்தம் எல்லாம் சும்மா. அபிநந்தன் பிடிபட்ட விடியோவை வெளியிடாமல் இருந்திருந்தால் அங்கேயே கதையை முடித்துப் புதைத்துவிட்டிருப்பார்கள். அப்படி ஒருவர் சிக்கவேயில்லை என்றும் சொல்லிவிட இயலும். ஆனாலும் இம்ரான் அதனைச் செய்யவில்லை.
நிரந்தர அமைதிக்கான வாய்ப்பு உடனடியாகக் கூடாத பட்சத்தில் இத்தகு தாற்காலிக நன்னடவடிக்கைகள் மூலம்தான் அனைத்தையும் கடந்தாக வேண்டும். ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். பாகிஸ்தான் இன்னும் எத்தனை நூறாண்டுகள் கடந்தாலும் மாறாது, வளராது, இப்படியேதான் என்றும் இருக்கும். இந்திய ஆட்சியாளர்கள் உண்மையிலேயே அதன் ஆட்டத்தையும் கொட்டத்தையும் அடக்கிவைக்க விரும்பினால் நட்பு நாடுகளின் துணையுடன் வலுவான பொருளாதாரத் தடைகளைத் திணித்து நாலாபுறங்களில் இருந்தும் நெருக்கடி தந்துதான் அடக்கப் பார்க்க வேண்டும். பாகிஸ்தான் விஷயத்தில் பலனளிக்கக்கூடியது ராஜதந்திர அரசியல் மட்டுமே. ஃபேஸ்புக் யுத்த கோஷங்கள் எல்லாம் பத்து காசுக்குப் பெறாது.
Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
February 10, 2019
கிண்டிலில் யதி
கிண்டில் பதிப்புகள் திருட்டுக்கு உட்படாது என்று சொல்லப்பட்டது. அது இல்லை என்று சில தொழில்நுட்பத் திருடர்கள் நிரூபித்ததைச் சமீபத்தில் கண்டறிந்தேன். கணி யுகத்தில் சாத்தியமில்லாதது ஒன்றுமில்லை என்பதை அறிவேன். இருப்பினும் உயிரைக் கொடுத்து எழுதிய ஒரு பிரதியை சர்வ சுலபமாகக் கள்வர்கள் கொண்டு செல்ல எடுத்து வெளியே வைக்க விருப்பமில்லை. என்னால் முடிந்த மிக எளிய சில பாதுகாப்பு ஏற்பாடுகளை மட்டும் செய்து முடித்துவிட்டு யதியை வெளியிடலாம் என்று நினைத்தேன். அதனால்தான் இத்தாமதம்.
இதையும் மீறி யதியின் கிண்டில் பதிப்பு திருடப்படலாம், திருடு போகவே செய்யும். வழக்கத்தைக் காட்டிலும் சிறிது தாமதமாகலாம்; அவ்வளவுதான்.
திருடி அல்ல; வாங்கிப் படிக்க விரும்பும் வாசகர்களை நோக்கியே ஒவ்வோர் எழுத்தாளனும் பேசுகிறான். அவன் வாங்குவதில் சிரமம் இருக்கக்கூடாது அல்லது குறைந்த பட்ச சிரமம் மட்டுமே இருக்கலாம் என்றே எண்ணுகிறான். அறிமுக விலையாக ரூ. 250ஐ வைப்பதற்காக நான் 35 சதவீத ராயல்டியை இழக்கிறேன். பிறகு இதன் விலை 299 ஆகும்போதும் அதே இழப்பு எனக்குத் தொடரும். கிண்டில் வழங்கும் அதிகபட்ச ராயல்டியான 70 சதவீதத்தை நான் முழுவதுமாகப் பெற வேண்டுமானால் இப்பதிப்பின் விலையை இன்னும் கணிசமாக ஏற்றவேண்டியிருக்கும். அன்லிமிடெடில் கொண்டு போகவேண்டி வரும். அப்படிச் செய்ய வேண்டாம் என்று நினைக்கிறேன். யதியின் கிண்டில் பதிப்பு எப்போதும் ரூ. 299 ஆகவே இருக்கும். [முதல் சில தினங்களுக்கு மட்டும் ரூ. 250] இப்போதைக்கு அன்லிமிடெடில் இது கிடைக்காது.
அமேசான் இந்தியாவில் யதி மின்நூலை வாங்க இங்கே செல்லவும்.
Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)