Pa Raghavan's Blog, page 6

April 17, 2019

பின் கதைச் சுருக்கம்

இந்தப் புத்தகத்தை நான் எழுதி இருபது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டன. ஆனால் இன்றுவரை இதை என்னவாக வகைப்படுத்துவது என்று எனக்குத் தெரியவில்லை. சில கதைகளைப் பற்றிய கட்டுரைகள் என்று சொல்வது அநியாயமாக இருக்கும். ஒரு காலக்கட்டத்தில் நான் விரும்பி வாசித்துக்கொண்டிருந்த புத்தகங்களைப் பற்றி, வாசித்து முடித்த உடனேயே சில வரிகள் எழுதும் வழக்கம் இருந்தது. அதைச் சற்று விரித்து எழுதலாம் என்று யோசனை சொன்னவர் கல்கி ஆசிரியர் சீதா ரவி. அதுதான் இது.


நான் இதைத்தான் படிப்பேன், இதையெல்லாம் தொடமாட்டேன் என்ற கொள்கை ஏதும் இல்லாதவன். கையில் கிடைப்பதைப் படிக்க ஆரம்பிப்பேன். முழுக்க முடிக்கிறேனா இல்லையா என்பது குறிப்பிட்ட புத்தகம் என்னை எவ்வளவு ஈர்க்கிறது என்பதில் உள்ளது. நான்கு பக்கங்கள் வரை விமரிசனமின்றிப் படித்துவிடுவேன். என்னை மறந்து ஐந்தாவது பக்கத்துக்குப் போய்விட்டேன் என்றால் முடித்துவிடுவேன். அந்தப் பக்கத்தைக் கடக்காதிருந்தேன் என்றால் எந்நாளும் அப்புத்தகத்தை நான் படித்து முடிக்க மாட்டேன் என்று பொருள். இலக்கியத்தில் என் சொந்த ரசனை ஒன்றே எனது அளவுகோல். அடுத்தவர் அபிப்பிராயங்களைக் கருத்தில் கொள்ளுவதே கிடையாது. இது சரியா தவறா என்பதல்ல. எனக்கு இப்படி இருப்பதுதான் சௌகரியமாக இருக்கிறது.


பின் கதைச் சுருக்கம், கல்கியில் தொடராக வெளிவந்தபோதே ஏராளமான வாசகர்களின் பாராட்டுகளைப் பெற்றது. பிறகு புத்தகமானபோதும் நல்ல வரவேற்பு இருந்தது. தமிழ்ச் சூழலில் ஒரு புத்தகம் பத்திருபது வருடங்கள் தாக்குப் பிடித்துப் பதிப்பில் இருப்பது பெரிய காரியம். ஏதோ ஒரு கட்டத்தில் பின் கதைச் சுருக்கமும் பதிப்பின்றிப் போய்விட்டது. இதற்கும் ஒரு நிரந்தரத்துவம் அளிக்கலாம் என்ற எண்ணத்தில்தான் மின்நூல் ஆக்கியிருக்கிறேன்.


இது நான் வாசித்து பிரமித்த சில புத்தகங்களையும் ஆசிரியர்களையும் பற்றிய எனது மனப்பதிவுகள் மட்டுமே. விமரிசனமோ, மதிப்புரையோ, கருத்துரையோ அல்ல. இலக்கியத்துக்கு நான் ஏதாவது நல்லது செய்வதென்றால் அது விமரிசனம் எழுதாதிருப்பதுதான் என்று எண்ணியிருக்கிறேன். இறுதிவரை அதைக் காப்பேன் என்றுதான் நினைக்கிறேன்.


அச்சில் தேடி இது கிடைக்கவில்லை என்று தொடர்ந்து எனக்கு மின்னஞ்சல்கள் எழுதி வந்த வாசக அன்பர்களுக்கு, இனி இது நிரந்தரமாக மின்வெளியில் இருக்கும்.


 


Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 17, 2019 10:00

March 27, 2019

இளைப்பது சுலபம் – மின்நூல் வெளியீடு

குங்குமத்தில் நான் எழுதிய இந்தத் தொடர், கிழக்கு பதிப்பகத்தில் நூலாக வெளிவந்தது. இப்போது அமேசான் கிண்டிலில் மின்நூலாகவும் வெளியாகியுள்ளது.


2016 ஜூன் மாதம் தொடங்கி இன்றுவரை எனது சௌக்கியத்துக்கு சகாயம் செய்துகொண்டிருப்பது பேலியோ. பேலியோ குழுவில் கற்றது, அப்பால், படித்து அறிந்தது அனைத்தையும் இந்நூலில் விவரித்திருக்கிறேன். பழைய என்னைப் போன்ற பூதாகாரமான ஆகிருதியாளர்கள், தற்போதைய என்னைப் போன்ற கவர்ச்சிகரமான ஆளுமையாக உருமாற நினைத்தால் இந்தப் புத்தகம் உதவும்.


நூலைப் பெற இங்கு செல்லவும்:


இந்நூலுக்கு நண்பர் கோகுல் குமரன் அருமையானதொரு முன்னுரை எழுதியிருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த நன்றி.


Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 27, 2019 22:14

March 23, 2019

புதிய கிண்டில் பதிப்புகள்

என்னுடைய நாவல்கள் அனைத்தும் இப்போது புதிய முகப்பு / மலிவு விலையில் கிண்டிலில் கிடைக்கின்றன. யதி, பூனைக்கதை நீங்கலாக மற்ற அனைத்தும் ரூ. 100க்கும் குறைந்த விலையில் இருக்க வேண்டும் என்று விரும்பினேன்; அப்படியே செய்திருக்கிறேன். வாங்குவோர் எண்ணிக்கை அதிகமானால் விலை இன்னமும் குறையும். அச்சுப் புத்தகங்களின் விலையேற்றம் வாசகர் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைத்துவரும் இக்காலத்தில் செலவு குறைந்த மின்நூல் வாசிப்பின் பக்கம் வாசக கவனத்தை ஈர்க்கவே இம்முயற்சி.


பின்வரும் சுட்டிகளில் நாவல்களை நீங்கள் பெறலாம்.


யதி


அலை உறங்கும் கடல்


புவியிலோரிடம்


தூணிலும் இருப்பான்


கால் கிலோ காதல் அரை கிலோ கனவு


பூனைக்கதை


அலகிலா விளையாட்டு


மெல்லினம்


கொசு


ரெண்டு


Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 23, 2019 10:47

March 17, 2019

யதி: இருபது பார்வைகள்


நண்பர்களுக்கு வணக்கம்.


யதி வெளியானபோது அதற்கு மதிப்புரை எழுதிய இருபது வாசகர்களின் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு மின்நூலாக வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தேன். விலையற்ற மின்நூலாக வெளியிட வழியுண்டா என்று போராடிப் பார்த்ததிலேயே நாள்கள் ஓடிவிட்டன. இன்றுவரை அதற்கான வாய்ப்பு டைரக்ட் பப்ளிஷிங் முறையில் வெளியிடுவதில் இல்லை. இப்படி வெளியிடுவதைத் தவிர எழுத்தாளர்களுக்கு இங்கு வேறு வழியும் இல்லை, குறைந்தபட்சம் இப்போதைக்கு.


எனவே யதி: இருபது பார்வைகள் மின்நூலை kdp-இன் குறைந்தபட்ச கட்டாய விலையான ரூ. 49 நிர்ணயித்து வெளியிட முடிவு செய்தேன்.


இன்று பின் இரவு அல்லது நாளை இம்மின்நூல் வெளியாகும். வெளியாகும்போதே ஐந்து நாள்களுக்கு இலவசமாகக் கிடைக்கும்படிச் செய்திருக்கிறேன். அதன்பின் 49 ரூபாய் காட்டும். அதற்குள் தரவிறக்கம் செய்துகொள்ளவும்.


ஆனால்,



இம்மின்நூல் என்றும் கிண்டில் அன்லிமிடெடில் இருக்கும். அன்லிமிடெட் சந்தாதாரர்களுக்கு இலவசமாகப் படிக்கக் கிடைக்கும்.
கிண்டில் மேட்ச் புக் ஆப்ஷன் தேர்ந்தெடுத்திருக்கிறேன். நீங்கள் அமேசான் வழியே அச்சுப் புத்தகம் வாங்கினால் இம்மின்னூலை இலவசமாகத் தரவிறக்கம் செய்துகொள்ள இயலும்.
Lending Option உள்ளது. நீங்கள் தரவிறக்கம் செய்து படித்தபின் உங்கள் நண்பர்களுக்கு 14 நாள்களுக்கு இதனை இலவசமாகத் தரலாம். (அதென்ன பதினான்கு நாள் என்று கேட்காதீர்கள். எனக்குத் தெரியாது.)

ஒரு நாவல் வெளியானதும் இத்தனைப் பேர் அக்கறையுடன் வாசித்து மதிப்புரை எழுதியது தமிழில் அநேகமாக இது முதல்முறை என்று நினைக்கிறேன். யதி பரவலான வாசக கவனம் பெற இம்மதிப்புரைகள் மிகவும் உதவி செய்தன. எழுதிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. எழுத்தாளனே நிறுவனமாகவும் செயல்பட வேண்டிய காலக்கட்டத்தில் இத்தகைய வாசக ஆதரவு ஒன்றே தொடர்ந்து செயல்பட மானசீக பலம் அளிக்கிறது.


உங்கள் அனைவருக்கும் மீண்டும் என் மனமார்ந்த நன்றி.


Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 17, 2019 07:56

March 5, 2019

புதிய முகம் கொள்ளும் தொலைக்காட்சித் தொடர்கள்

தொலைக்காட்சி நெடுந்தொடர் கட்டுமானத்தில் சமீபகாலமாக நிகழ்ந்துவரும் மாற்றங்களைக் கூர்ந்து கவனிக்கிறேன். அந்தத் துறையில் இருப்பவன் என்பதால் அல்ல. எழுதுபவனாக நான் இங்கு வேறு ஆள். அது என் வருமானம் சார்ந்தது. ஆனால் என்றைக்கும் ஒரு ரசிகனாக மட்டுமே சீரியல்களையும் சினிமாக்களையும் தனிப்பட்ட முறையில் அணுக விரும்புவேன். தொழிலுக்கு அப்பால் நான் எழுத்தில் செய்ய விரும்பும் பணிகளுக்கு இடையூறு இருக்கக்கூடாது என்றுதான் திரைக்கதைப் பக்கம் நான் போவதில்லை. வசன எழுத்து கூடுதல் உடலுழைப்பைக் கோருவது என்றாலும் இதுதான் எனக்கு சௌகரியமாக உள்ளது. நேரம் முற்றிலும் என் வசமாக இருப்பது முக்கியக் காரணம். ஒப்பீட்டளவில் இதில் விவாதங்களுக்கும் சந்திப்புகளுக்கும் குறைவான நேரமே தரவேண்டியிருக்கும் என்பது இன்னொரு காரணம். திரைக்கதைக்குள் புகுந்துவிட்டால் நாவல் எழுத இயலாது என்பது அனைத்திலும் முக்கியக் காரணம்.


ஆனால் சமீப காலமாக செம்பருத்தி, நேற்றுத் தொடங்கிய சத்யா, சிறிது காலமாக வந்துகொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற நெடுந்தொடர்களில் திரைக்கதை அமைப்பின் நுணுக்கமான மாற்றங்கள் என்னைக் கவர்கின்றன. பரபரப்பாகக் காட்சிகளை நகர்த்தும் அவசரம் இப்போது யாரிடமும் இல்லை. எளிய, matter of fact காட்சிகளைக் கூட நிறுத்தி நிதானமாகச் சொல்லும் வழக்கம் உருவாகியிருக்கிறது.


சத்யா என்ற துடிப்பான இளம் பெண்ணின் பாத்திரப் படைப்பை இன்று அறிமுகம் செய்தார்கள். படித்தவள். லோன் பாக்கிக்காக வண்டிகளை மடக்கிப் பிடித்து எடுத்துச் செல்பவள், விளையாட்டுத்தனம் மிக்கவள், நிறைய ஆண் நண்பர்கள், பிராந்தியவாசிகள் அத்தனை பேருக்கும் விருப்பமான பெண், வீட்டில் அக்காவின்மீது பாசம் கொண்டவள், அவளது விருப்பத்துக்கு விரோதமான திருமண ஏற்பாட்டை சாமர்த்தியமாகத் தடுத்து நிறுத்துபவள், பாட்டி மீது பேரன்பு கொண்டவள், தடாலடிப் பேர்வழி, ஆனாலும் அம்மாவுக்கு பயப்படுபவள் அல்லது அப்படி நடிப்பவள் – இவை அனைத்தும் இன்றைய இருபது நிமிடங்களில் தெளிவாக்கப்பட்டுவிட்டன. பின்னணியில் அவளது நடுத்தரக் குடும்பம், எம்மாதிரியான சுற்றுச் சூழலில் வசிக்கிறாள் என்பதும் பதிவு செய்யப்பட்டுவிட்டன. கதாநாயகன் வந்துவிட்டான். மோதலில் தொடங்கப் போகிறது என்பது தெரிந்துவிட்டது. அனைத்துமே ஒரு மெல்லிய நகைச்சுவை இழையில் கோக்கப்பட்டிருந்தது.


புராதன முறையில் மேற்சொன்ன விஷயங்கள் அனைத்தும் வசனங்களில் நகருவதே தொலைக்காட்சித் தொடர்களின் வழக்கம். ஆனால் காட்சி ரூபமாக இவை ஒரு எபிசோடுக்குள் அடைக்கப்பட்டிருப்பதும், அது அலுப்பூட்டாத விதத்தில் படமாக்கப்பட்டிருப்பதும் பிடித்திருந்தது.


இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸில் ஒரு புருஷன் பெண்டாட்டிக்கு இடையிலான ஊடலைத் தீர்த்து வைப்பதற்காக வீட்டில் அவர்களைத் தனியே இருக்கவிட்டு, அவனது சகோதரர்களும் அவரவர் மனைவியும் கோயிலுக்குச் சென்று படுத்துக்கொள்கிறார்கள். கோயிலுக்குப் போன இடத்தில் ஒரு ஜோடி பிணக்கு கொண்டு உறங்காதிருக்கிறது. வீட்டில் அவர்கள் தனியே விட்டுவந்த ஜோடி சேருகிறதா, இங்கெ புதிய பிணக்கில் சிக்கிய ஜோடி மேலும் விலகவிருக்கிறதா என்ற கேள்வியுடன் நகர்ந்திருக்கிறது.


நாடகங்கள்தாம். ஆனால் வாழ்வுடன் நெருங்கச் செய்யும் முயற்சிகள் தொடர்களில் ஆரம்பமாகியிருக்கின்றன என்பது மகிழ்ச்சியளிக்கிறது.


ஒப்பீட்டளவில் நான் இதுநாள் வரை பார்த்து வந்த செம்பருத்தி முற்று முழுதான நாடகப் பாணி திரைக்கதை அமைப்பில் நகர்வதுதான். பார்த்த கண் நகராத விதத்தில் ஒரு கதாநாயகி அவர்களுக்குச் சிக்கியது மட்டுமே அதன் மிகப்பெரும் பலம். அநேகமாக இது பழைய பாணி நெடுந்தொடர்களின் கடைசிக் கண்ணியாக இருக்கக்கூடும்.


ஒரு விஷயம். ஒரு நெடுந்தொடர் ஒருபோதும் சினிமாவைப் போல இருக்க இயலாது. நடைமுறைச் சிக்கல்கள் இதில் அதிகம். ஆனால் சினிமாவுக்கும் நாடகத்துக்கும் இடைப்பட்ட ஒரு வெளி இருப்பதை இன்று வரத் தொடங்கியிருக்கும் தொடர்கள் சுட்டுகின்றன. நெடுந்தொடர்கள் சார்ந்த கிண்டல் கேலிகளும் வெறுப்பு கலந்த விமரிசனங்களும் இனி மெல்ல மெல்ல இல்லாது போகும் என்று தோன்றியது.


இம்மாற்றங்களின் பின்னணியில் அயராது உழைக்கும் புதிய தலைமுறையினரை மனமார வரவேற்கிறேன். மகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறேன்.


Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 05, 2019 10:03

February 28, 2019

யுத்தம் ஏன் உதவாது?

நேற்று நான் எழுதிய ஒரு குறிப்பு உண்டாக்கியிருக்கும் அதிர்வுகளையும் சலனங்களையும் மாற்று / எதிர் கருத்துகளையும் இன்று முழுமையாக வாசித்தேன். அரவிந்தன் நீலகண்டன் அன்ஃபிரண்ட் செய்துவிட்டுப் போய்விட்டார். என்னை விடுங்கள்; நான் வெளியாள். என் கவலையெல்லாம் இப்படிக் கருத்து வேறுபாடு வரும்போது அவர் மனைவி என்ன பாடு படவேண்டியிருக்கும் என்பதே. பொதுவில் சமூகம் சகிப்புத்தன்மையை இழந்து வருகிறது. அதைவிட அபாயம், தேசியம் என்னும் கருத்தாக்கத்துக்கு ஹிந்துத்துவவாதிகள் கொள்ளும் விளக்கம் திகைப்பூட்டுகிறது.


சிறிதும் சந்தேகமின்றி நானொரு தேசியவாதி. எனக்கு என் தேசத்தைப் பிடிக்கும். இதன் அமைப்பின் அத்தனைக் குறை நிறைகளுடன் சேர்த்தே நான் என் தேசத்தை நேசிக்கிறேன். பிரிவினைப் பேச்சு – எந்த வடிவில் வருமானாலும் அதனை எதிர்க்கிறேன். பிரிவினையைத் தூண்டும் எந்த அரை டிக்கெட் அரசியல்வாதிகளின் மீதும் எனக்குச் சிறிதும் மதிப்பில்லை. ஆனால் எனது தேசிய நேசம் என்பது ஒருபோதும் தீவிர ஹிந்துத்துவர்களின் நேசத்துடன் பொருந்திப் போவதில்லை.


யுத்தம் குறித்து. பாகிஸ்தான் ஒரு தீவிரவாத ஊக்குவிப்பு தேசம் என்பதில் சந்தேகமில்லை. எங்கெல்லாம் அடிப்படைவாதம் மேலோங்கி வளர்கிறதோ அங்கெல்லாம் தீவிரவாதம் தலையெடுக்கவே செய்யும். மத அடிப்படைவாதம் சென்று சேரும் இடம் தீவிரவாதம் மட்டுமே. தீவிரவாதம் ஒழிக்கப்பட வேண்டியது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் எல்லை தாண்டும் தீவிரவாதத்தை சம்பந்தப்பட்ட இரு தேசங்களின் அரசுகள்தான் பேசி சரி செய்ய இயலும். பாகிஸ்தானைப் பொறுத்தவரை அரசு / தீவிரவாத இயக்கங்கள் / உளவுத்துறை என்பது ஒருங்கிணைந்து செயல்படும் ஓர் அமைப்பு. அத்தேசத்தைக் குறித்து ஓரளவு ஊன்றிப் படித்தவன், தொடர்ந்து கவனித்து வருபவன் என்ற முறையில் சொல்கிறேன். நவாஸோ, பேனசிரோ, முஷாரஃபோ, இன்றைய இம்ரானோ இவர்களுக்கு முந்தைய காலத்துத் தலைவர்களோ ராணுவ அதிகாரிகளோ – தொடக்கம் முதலே இந்த ஏற்பாட்டுக்கு மிகவும் பழகிவிட்டவர்கள். உள்நாட்டு / உள்கட்டுமான வளர்ச்சி என்பதை விஸ்தரிக்க முடியாத சூழ்நிலையில், பெரும்பாலும் கடனில் வாழுகிற ஒரு தேசம் மக்களின் கோபத்தை அரசிடம் இருந்து விலக்கி வேறு பக்கம் திருப்ப 1948 முதல் அவர்கள் காஷ்மீரை ஒரு எட்டாக்கனியாக முன்வைத்து ஏசு வந்தே விடுவார் என்கிற பிரசாரத்தைப் போல, காஷ்மீர் நமக்குத்தான் என்று கூறி வந்திருக்கிறார்கள். இனி வரும் தலைமுறை இதனை மாற்றிப் பேசும் என்று எதிர்பார்க்க இயலாது.


இன்னொன்று, மத்தியக் கிழக்கின் அனைத்து மத அடிப்படைவாத / தீவிரவாத இயக்கங்களுடனும் பாகிஸ்தானில் இருந்து இயங்கும் இயக்கங்கள் தொடர்புள்ளவை. இந்த இயக்கங்கள் அனைத்தும் பாக். உளவுத்துறையின் அரவணைப்பில் வளர்பவை. உளவுத்துறையே அங்கு உண்மையான ஆட்சியாளர்கள். முன்சொன்ன தலைவர்கள் அனைவரும் உளவுத்துறை அவ்வப்போது தேர்ந்தெடுத்து ஷோ கேஸில் வைத்த முகங்கள் மட்டுமே.


மதத்தை முன்னிறுத்தி ஆளும்போது இம்மாதிரியான இடர்பாடுகளைத் தவிர்க்கவே இயலாது. ஒரு முஸ்லிம் தேசமாக பகிரங்கமாக அறிவித்துக்கொண்டு செயல்படும்போது அடிப்படைவாதிகளை அரவணைத்தே போயாகவேண்டும். இது விதி. மாற்ற இயலாதது.


காஷ்மீரில் பாக். தீவிரவாத இயக்கம் ஊடுருவியதும் வெடிபொருள்களைப் பயன்படுத்தி இந்திய ஜவான்களைக் கொன்றதும், பதிலுக்கு இந்திய வீரர்கள் பாக். தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதும் நடந்திருக்க வேண்டாத சம்பவங்கள்தாம். ஆனால் நடந்துவிட்டது. ஒரு போரைத் தொடங்கி, பாகிஸ்தானை முற்றிலுமாக அழித்து நாசமாக்கிவிடுவதன் மூலம் இந்தப் பிரச்னையை இனி நிரந்தரமாகத் தீர்த்துவிட முடியும் என்று நம்புவதைத்தான் நான் மறுக்கிறேன். இதே போன்றதொரு தீவிரவாதத் தாக்குதலைத்தான் 9/11 அன்று அல் காயிதா அமெரிக்காவில் மேற்கொண்டது. பதிலுக்கு அமெரிக்கா ஆப்கன் மீது படையெடுத்தது. பெரும்பாலான உலக நாடுகள் தீவிரவாதத்துக்கு எதிரான அமெரிக்க யுத்தத்தில் அதன் பக்கம் நின்றன. கடும் யுத்தம். தாலிபன்கள் அழிக்கப்பட்டார்கள். ஒசாமா செத்துப் போனார். அல் காயிதாவின் ஆட்டம் குறைந்தது. நல்ல விஷயம்தான். ஆனால் இன்றுவரை ஆப்கன் மீண்டு எழவில்லை. ஆப்கனில் வசிக்கும் அத்தனைப் பேருமே அல் காயிதாக்காரர்களும் தாலிபன்காரர்களும்தானா? தாலிபன்களால் அனுபவித்த துயரங்களைக் காட்டிலும் அம்மக்கள் இன்றுவரை அதிகமாகவே அனுபவித்து வருகிறார்கள். ஒரு போரின் விளைவு, தோற்கும் தேசத்தை சர்வநாசமாக்கிவிடுவதை சரித்திரம்தோறும் பார்த்து வந்திருக்கிறோம். இயக்கங்களும் அரசாங்கங்களும் மேற்கொள்ளும் கோர நடவடிக்கைகளுக்கு அப்பாவி மக்களின் வாழ்வை பலி கொடுப்பது எப்படி நியாயமாகும்?


எண்ணெய்ப் பொருளாதாரத்தின் ஏகபோகச் சக்கரவர்த்தியாகும் வெறி ஒன்றே அமெரிக்காவை இராக் மீது படையெடுக்க வைத்தது. கொடுங்கோலாட்சி புரிந்த சதாம் செத்தார். ஆனால் அமெரிக்கா முன்வைத்த தீவிரவாத ஒழிப்பு என்னும் பிரகடனம் நிறைவேற்றப்பட்டதா? இங்கே ஒரு அல் காயிதாவை அடக்கினால் அங்கே ஒரு ஐ.எஸ் உருவாகிவிடுகிறது. இன்றுவரை சிரியாவில் யுத்தச் சத்தம் ஓய்ந்தபாடில்லை. மக்களின் அன்றாட வாழ்வு, கல்வி, வேலைவாய்ப்புகள், பொருளாதாரம் அனைத்தும் சின்னாபின்னமாகிவிடுகின்றன. யுத்தங்கள் அமைதியை உண்டாக்குவதில்லை. அகதிகளை மட்டும்தான் உண்டாக்குகின்றன.


ஒரு பேச்சுக்கு இந்தியா, பாகிஸ்தான்மீது போர் தொடுக்கிறது என்று வைத்துக்கொண்டால் கண்டிப்பாக அந்த யுத்தத்தில் இந்தியா வெல்லும். இதில் சந்தேகமில்லை. ஆனால் நிச்சயமாகத் தீவிரவாதத்தை அது அடியோடு வேரறுக்கும் என்று சொல்ல இயலாது. வேறு வடிவில் இன்னும் உக்கிரமாக அதை வளர்க்கத்தான் யுத்தம் உதவும். ஏனெனில் எழுபதாண்டுக் காலமாக எதிரி தேசமாகச் சொல்லிச் சொல்லி உருவேற்றப்பட்ட மக்கள் யுத்தத்தின் காரணத்தையும் விளைவையும் அலசி ஆராய்ந்து தமது தவறுகளை உணர்ந்து மாற்றிக்கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பது மூடத்தனம். பாலஸ்தீன் சிக்கலைப் போலவே காஷ்மீர் சிக்கலையும் இக்காலம் உடனடியாகத் தீர்த்து வைக்க வாய்ப்பில்லை. ஏனெனில், தேசம் என்பது அரசியல்வாதிகள் மட்டுமல்ல. ஆனால் துரதிருஷ்டவசமாக அரசியல்வாதிகளே முடிவெடுக்கும் இடத்தில் இருக்கிறார்கள்.


நிரந்தரமாகத் தீர்க்க இயலாத சிக்கல்களைத் தாற்காலிக அமைதிப் பேச்சுகளின்மூலம் தீர்ப்பது அல்லது உக்கிரத்தைத் தணிப்பது என்பதே பக்குவப்பட்ட தலைவர்கள் செய்யக்கூடிய செயலாகும். மாட்டிக்கொண்ட அபிநந்தனை விடுவித்து அனுப்பிவைப்பதன் மூலம் இம்ரான் கான் ஒன்றும் உடனடி உலக உத்தமர் ஆகிவிடப் போவதில்லை. ஆனால் இப்போதைக்கு நாங்கள் யுத்தத்தில் ஆர்வம் செலுத்தத் தயாரில்லை என்ற மறைமுக அறிவிப்பு அதில் உள்ளது. ஒருவேளை இன்னும் பலமான யுத்தத்துக்கான ஆயத்தங்களுக்கு அவர்களுக்கு அவகாசம் தேவைப்படலாம். அதற்காகவும் இதனைச் செய்யலாம். ஜெனிவா ஒப்பந்தம் எல்லாம் சும்மா. அபிநந்தன் பிடிபட்ட விடியோவை வெளியிடாமல் இருந்திருந்தால் அங்கேயே கதையை முடித்துப் புதைத்துவிட்டிருப்பார்கள். அப்படி ஒருவர் சிக்கவேயில்லை என்றும் சொல்லிவிட இயலும். ஆனாலும் இம்ரான் அதனைச் செய்யவில்லை.


நிரந்தர அமைதிக்கான வாய்ப்பு உடனடியாகக் கூடாத பட்சத்தில் இத்தகு தாற்காலிக நன்னடவடிக்கைகள் மூலம்தான் அனைத்தையும் கடந்தாக வேண்டும். ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். பாகிஸ்தான் இன்னும் எத்தனை நூறாண்டுகள் கடந்தாலும் மாறாது, வளராது, இப்படியேதான் என்றும் இருக்கும். இந்திய ஆட்சியாளர்கள் உண்மையிலேயே அதன் ஆட்டத்தையும் கொட்டத்தையும் அடக்கிவைக்க விரும்பினால் நட்பு நாடுகளின் துணையுடன் வலுவான பொருளாதாரத் தடைகளைத் திணித்து நாலாபுறங்களில் இருந்தும் நெருக்கடி தந்துதான் அடக்கப் பார்க்க வேண்டும். பாகிஸ்தான் விஷயத்தில் பலனளிக்கக்கூடியது ராஜதந்திர அரசியல் மட்டுமே. ஃபேஸ்புக் யுத்த கோஷங்கள் எல்லாம் பத்து காசுக்குப் பெறாது.


Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 28, 2019 11:29

February 10, 2019

கிண்டிலில் யதி

கிண்டில் பதிப்புகள் திருட்டுக்கு உட்படாது என்று சொல்லப்பட்டது. அது இல்லை என்று சில தொழில்நுட்பத் திருடர்கள் நிரூபித்ததைச் சமீபத்தில் கண்டறிந்தேன். கணி யுகத்தில் சாத்தியமில்லாதது ஒன்றுமில்லை என்பதை அறிவேன். இருப்பினும் உயிரைக் கொடுத்து எழுதிய ஒரு பிரதியை சர்வ சுலபமாகக் கள்வர்கள் கொண்டு செல்ல எடுத்து வெளியே வைக்க விருப்பமில்லை. என்னால் முடிந்த மிக எளிய சில பாதுகாப்பு ஏற்பாடுகளை மட்டும் செய்து முடித்துவிட்டு யதியை வெளியிடலாம் என்று நினைத்தேன். அதனால்தான் இத்தாமதம்.


இதையும் மீறி யதியின் கிண்டில் பதிப்பு திருடப்படலாம், திருடு போகவே செய்யும். வழக்கத்தைக் காட்டிலும் சிறிது தாமதமாகலாம்; அவ்வளவுதான்.


திருடி அல்ல; வாங்கிப் படிக்க விரும்பும் வாசகர்களை நோக்கியே ஒவ்வோர் எழுத்தாளனும் பேசுகிறான். அவன் வாங்குவதில் சிரமம் இருக்கக்கூடாது அல்லது குறைந்த பட்ச சிரமம் மட்டுமே இருக்கலாம் என்றே எண்ணுகிறான். அறிமுக விலையாக ரூ. 250ஐ வைப்பதற்காக நான் 35 சதவீத ராயல்டியை இழக்கிறேன். பிறகு இதன் விலை 299 ஆகும்போதும் அதே இழப்பு எனக்குத் தொடரும். கிண்டில் வழங்கும் அதிகபட்ச ராயல்டியான 70 சதவீதத்தை நான் முழுவதுமாகப் பெற வேண்டுமானால் இப்பதிப்பின் விலையை இன்னும் கணிசமாக ஏற்றவேண்டியிருக்கும். அன்லிமிடெடில் கொண்டு போகவேண்டி வரும். அப்படிச் செய்ய வேண்டாம் என்று நினைக்கிறேன். யதியின் கிண்டில் பதிப்பு எப்போதும் ரூ. 299 ஆகவே இருக்கும். [முதல் சில தினங்களுக்கு மட்டும் ரூ. 250] இப்போதைக்கு அன்லிமிடெடில் இது கிடைக்காது.


அமேசான் இந்தியாவில் யதி மின்நூலை வாங்க இங்கே செல்லவும்.


Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 10, 2019 09:56

January 22, 2019

மொஸார்ட் – கடவுள் இசைத்த குழந்தை


Prodigy என்ற பதின் பருவ வயதினருக்கான நூலாக்க முயற்சிகளில் ஈடுபட்டிருந்தபோது எழுதிய புத்தகம் இது. உலக இசை மேதைகள் ஒவ்வொருவரைக் குறித்தும் தனித்தனியே ஒரு சிறு நூலாவது கொண்டு வரவேண்டும் என்று விரும்பினேன். அளவில் சிறிதாக, அதிகம் குழப்பாத, புரிதல் பிரச்னைகள் எழாத வண்ணம் அந்நூல் அமைய வேண்டும் என்பது எண்ணம். ஒரு புத்தகத்தில் ஒரு மேதையின் இசையை உணரச் செய்வது சிரமம். ஆனால் குறிப்பிட்ட இசை மேதையின் வாழ்வு எவ்விதமான சுருதியில் இயங்கியது என்பதைத் தொட்டுக்காட்டி, அதன் மூலம் அவரது படைப்புகளின் ஆதார தொனியைச் சுட்டுவதே இதன் நோக்கம்.


மொஸார்ட், தனது இளமைப் பருவம் முழுவதும் வருமானமின்றித் தவித்தவர். எட்டயபுர மன்னருக்கு பாரதி சீட்டுக்கவி எழுதியது போல மொஸார்ட் தனது மகாராஜாவுக்கு எழுதிய ராஜினாமா கடிதம் மிகவும் பிரபலம். ஆனால் அவரது ராஜினாமாவை நிராகரித்துவிட்டு, ‘டிஸ்மிஸ்’ நோட்டீஸ் அனுப்பினார் அந்த மன்னர். கலைஞர்கள் வாழும் காலத்தில் அவமதிக்கப்படுவது உலகெங்கும் காலந்தோறும் உள்ள வழக்கமே அல்லவா? அவரது மேதைமை கண்டு மயங்கி நெருங்கிக் காதலிக்கத் தொடங்கியவளே அவரது ஏழைமை கண்டு விட்டு விலகி ஓடியிருக்கிறாள். ஓயாத நோய்த் தொல்லை, தீராத ஏமாற்றங்கள், நிற்காத பெரும் அலைச்சல். வாழ்நாள் முழுதும் இப்படியே இருந்துவிட்டுப் போய்விட்ட கலைஞனின் இசை, இன்று ஓர் அடையாளச் சின்னம். மொஸார்ட்டைத் தொட்டுப் பேசாமல் இசை இல்லை.


காலத்தால் அழியாத உன்னதமான இசைக்கோலங்களை விட்டுச் சென்றவரின் வாழ்வை சுருக்கமாக விவரிக்கிறது இந்நூல்.


கீழ்க்கண்ட நாடுகளில் வசிக்கும் வாசக நண்பர்கள் உரிய சுட்டிகளைப் பின் தொடர்ந்து சென்று வாங்கி வாசிக்கலாம். அன்லிமிடெட் சந்தாதாரர் என்றால் இலவசமாகப் படிக்கலாம்.


அமேசான் இந்தியாவில் வாங்க


அமேசான் அமெரிக்காவில்:


அமேசான் யுகே:


அமேசான் ஆஸ்திரேலியா:


இவை தவிர டென்மார்க், ஃப்ரான்ஸ், ஜப்பான், பிரேசில், கனடா, மெக்சிகோ, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட கோபால் பல்பொடி செல்லக்கூடிய அத்தனை தேசங்களின் அமேசான் பதிப்பிலும் அந்தந்த ஊர் நாணயத்தில் கிடைக்கும்.


விலை ரூ. 50.


Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 22, 2019 11:59

January 15, 2019

ஒரு நாள் கழிவது எப்படி?

யார் கிளப்பிவிட்டது என்று தெரியவில்லை. பார்க்கிறவர்களுள் பெரும்பான்மையானோர், ‘எப்படி உங்களால் இவ்வளவு எழுத முடிகிறது?’ என்று தவறாமல் கேட்கிறார்கள் இப்போதெல்லாம். சென்ற ஆண்டு விருட்சத்தில் ஒரு பேட்டிக்காக அழகியசிங்கர் இதனைக் கேட்கப் போக, ஒவ்வொரு பேட்டியிலும் [கடைசியாக வந்த ஆதன் மீடியா பேட்டி வரை] இக்கேள்வி தவறாமல் இடம்பெற்றுவிடுகிறது.


அப்படியா? ஜெயமோகன் எழுதுவதில் பத்தில் ஒரு பங்குகூட நான் எழுதுவதில்லை. இருந்திருந்து வாழ்நாளில் முதல் முறையாக ஆயிரம் பக்கத்தில் ஒரு நாவல் எழுதியிருக்கிறேன். [ நான் ஃபிக்‌ஷன் ஆயிரங்கள்,

கணக்கில் வராது] இது ஒரு பாவமா? அவர் மூன்று மாதங்களுக்கு ஒரு ஆயிரம் பக்க ரிலீஸ் செய்கிறார். அவரை ஏன் யாரும் கேட்பதில்லை என்று தெரியவில்லை.


இன்றைக்குக் கண்காட்சியில் போகன் சங்கரை சந்தித்தேன். இதையே அவர் வேறு வடிவில் கேட்டார். ‘எப்படி நேரத்தை வகுத்துக்கொள்கிறீர்கள்?’


நான் ஒன்றும் அவ்வளவு ஒழுக்கமாக நேர வரையறை செய்து எழுதுபவனெல்லாம் இல்லை. சரியாகச் சொல்வதென்றால் நெருக்கடி நேரம் வரை அனைத்தையும் தள்ளிப் போட்டுவிட்டு, இறுதிக் கணங்களில் அடித்துத் தள்ளுகிற வழக்கம் கொண்டவன் நான். என் மனைவி பலமுறை கண்டித்தும் இந்தப் பழக்கத்தைத் திருத்திக்கொள்ள முடியவில்லை.


எனது ஒவ்வொரு நாளும் காலை பத்து மணிக்குத் தொடங்குகிறது. எழுதலாம் என்று வந்து அமர்ந்ததும் ‘ரூம விடறிங்களா? பெருக்கிடலாம்’ என்ற குரல் வரும். கொட்டுகிற குப்பையையெல்லாம் பெருக்கித்தள்ளத்தானே வேண்டும்? எனவே பெருக்கித் துடைக்கப் பதினைந்து நிமிடங்கள் இடம் தருவேன். அந்நிமிடங்களில் ஒரு ஃபேஸ்புக் ஸ்டேடஸ். ஒன்றிரண்டு டிக்டொக் விடியோக்கள். பிறகு எழுத வந்து அமர்ந்தால் ஒன்று – ஒன்றரை வரை கலைச்சேவை சரியாக இருக்கும். ஒரு காட்சிக்கும் அடுத்தக் காட்சிக்கும் இடையே ஐந்து நிமிட இடைவெளி எடுத்துக்கொண்டு சிறிது நேரம் ஃபேஸ்புக், ட்விட்டர் பார்ப்பேன். ஏதாவது தோன்றினால் அதில் எழுதுவேன். காலைப் பொழுதுக்குள் ஒரு சீரியலுக்கான மறுநாள் பணிகளை முடித்துவிட வேண்டும் என்பது கணக்கு. பொதுவாக ஒருநாள் படப்பிடிப்பு என்பது 6 முதல் 8 காட்சிகள் கொண்டதாக இருக்கும். இரண்டு யூனிட் ஷூட்டிங் என்றால் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகும். அந்நாள்களில் ஃபேஸ்புக் கிடையாது. ஆனால் என்ன ஆனாலும் இரண்டு மணிக்குள் முடித்துவிட்டு சாப்பிட்டுப் படுத்துவிடுவது வழக்கம். எனது ஒழுங்கான தூக்கம் என்பது மதியம் தூங்கும் இரண்டு மூன்று மணி நேரங்கள் மட்டுமே.


மாலை ஐந்து மணிக்குத் தூங்கி எழுந்து சிறிது நேரம் மப்பு கட்டிவிட்டு ஆறு மணிக்கு மீண்டும் எழுத உட்கார்ந்தால் அடுத்த சீரியல். இது பதினொன்று, பதினொன்றரை வரை நீளும். காலை மிச்சம் வைத்த ஏதேனும் இருந்தாலும் இதில் சேரும். இடையே ஷெட்யூல் மாற்றுவார்கள். திட்டத்தில் இல்லாத சிலவற்றைச் சேர்த்து எழுத வேண்டி வரும்.


இந்நேரத்தில் இரு காட்சிகளுக்கு இடையிலான ஐந்து நிமிட இடைவேளை என்பது பத்து நிமிடங்களாகும். அந்த ஒவ்வொரு பத்து நிமிடத்திலும் குறைந்தது பத்துப் பக்கங்கள் படிப்பேன். முன்பெல்லாம் அச்சு நூல்கள். இப்போது கிண்டில். இதுதான் வசதியாக இருக்கிறது. ஒரே சமயத்தில் ஏழெட்டுப் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்து ஓரிரு மாதங்களில் முழுக்க முடித்துவிடுவது என் வழக்கம். சில புத்தகங்கள் வேகமாகப் படிக்க விடாது. பாதியில் நிறுத்திவிட்டுப் பல மாதங்களுக்குப் பின் மீண்டும் எடுத்துப் படிப்பதுண்டு. அப்போது ரசிக்கும்படியாகச் சில அமைந்துவிடும். Trial of Tilak, இஸ்தான்புல், ஏகே செட்டியார் படைப்புகள் எல்லாம் அப்படிப் படித்தவைதான்.


இரவு பதினொன்றரைக்குத் தொழில்சார் எழுத்துப் பணிகள் முடிவடைந்ததும் நானாக எழுத ஒன்றுமில்லையென்றால் அரை மணி நேரம் ஏதாவது படிப்பேன். படுத்துவிடுவேன். என் இஷ்டத்துக்கு எழுதும் வேலை ஏதேனும் இருந்தால் அந்தப் பணி அப்போது நடக்கும். சென்ற ஆண்டு தினமணி இணையத்தளத்தில் எழுதிய யதி முழுவதையும் இப்படி நள்ளிரவு பன்னிரண்டுக்குத் தொடங்கி ஒன்றரை இரண்டு வரை மட்டுமே எழுதி முடித்தேன். எழுதியதைத் திரும்பப் படித்துத் திருத்தம் செய்யும் வழக்கம் இல்லை. ஆனால் எழுதும் முன்பு மனத்துக்குள் முழுதாக ஒருமுறை சொல்லிப் பார்த்துவிடுவேன். முன்பெல்லாம் இரண்டு சுவர்கள் இணையும் முக்கில் திரும்பி அமர்ந்து சுவரைப் பார்த்துச் சொல்லுவேன். என் மனைவி மிகவும் பயந்தபடியால் அந்தப் பழக்கத்தைக் கஷ்டப்பட்டு மாற்றிக்கொண்டிருக்கிறேன்.


பூனைக்கதை எழுதும்போது இந்த வழக்கங்கள் முற்றிலும் மாறின. அது ஒரே மூச்சில், ஒன்றரை மாதத்தில் எழுதி முடிக்கப்பட்ட நாவல். அப்போது மதிய உறக்கத்தைக் குறைத்துக்கொண்டு அத்தனை சீரியல் பணிகளையும் [அப்போது மூன்று] பகல் பொழுதுக்குள்ளேயே முடித்துவிடுவேன். மதிய உறக்கத்துக்குப் பின்பு மாலை எழுந்ததும் பூனைதான். அதிகாலை மூன்று அல்லது மூன்றரை வரை எழுதினேன். இடையே பத்திரிகைத் தொடர் ஏதேனும் வந்தால் டெட்லைன் கேட்டுக்கொண்டு அதற்கு அரை மணி முன்னதாக எழுதுவது வழக்கம். இப்போது கல்கியில் புல்புல்தாரா வந்துகொண்டிருக்கிறது. அவர்கள் திங்கள் கிழமை காலை ஃபாரம் அச்சுக்கு அனுப்புவார்கள். ஞாயிறு மாலை ஜெயராஜுக்கு போன் செய்து படக்குறிப்பு சொல்லிவிட்டு இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் படுக்கப் போகும்முன் எழுதி அனுப்பிவிட்டுப் படுப்பேன்.


யோசித்துப் பார்த்தால் இத்தனை நாள்களில் என்னிடம் ஒரே ஒரு ஒழுக்கம் மட்டுமே ஒட்டிக்கொண்டிருக்கிறது. படப்பிடிப்பில் இயக்குநர் காத்திருக்கும்படித் தாமதம் செய்ததில்லை. பத்திரிகை ஆசிரியர்கள் பதறுமளவுக்கு இறுதிக் கெடுவைக் கடந்ததில்லை. என்ன ஆனாலும் மறுநாளுக்குரியதை முடித்துவிட்டே படுப்பேன். அதற்கு வசதியாக, முதல் நாள் காலை நடை செல்லும்போது அன்று எழுத வேண்டிய அனைத்தையும் யோசித்து வைத்துவிடுவது வழக்கம். சில நாள் காலை நடையின்போது காட்சிகளை வாய்விட்டுச் சொல்லி ரெக்கார்ட் செய்துவிடுவதும் உண்டு. அது அந்தந்தக் காட்சியின் தன்மையைப் பொறுத்தது.


முழு நேர எழுத்தின் ஒரே பிரச்னை, இதில் ஓய்வுநாள் என்ற ஒன்று கிடையாது. ஊரெல்லாம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடிக்கொண்டிருக்கும். போராளியானவன் வழக்கம் போல் எழுந்து வாக்கிங் போய்விட்டு, குளித்து முழுகி பூஜை முடித்து சிரத்தையாக எழுத உட்கார்ந்துவிடவேண்டியிருக்கும். போதாக் குறைக்கு வாரம் இருமுறையேனும் ‘டிஸ்கஷன்’ அல்லது ‘மீட்டிங்’ என்ற சடங்கு இருக்கும். மாதம் இருமுறை சானலுக்குப் போகவேண்டியிருக்கும். இந்நாள்களில் மேற்படி எந்தத் திட்டமும் உதவாது. நாள் முழுதும் இடம் பெயர்ந்து சென்று கலைச்சேவை செய்துவிட்டு, கரும்புச் சக்கைபோலத் திரும்பி வந்து மறுநாளுக்கு எழுத வேண்டியிருக்கும். அப்போது என் எளிய பொழுதுபோக்கான ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கமெல்லாம் எட்டிப் பார்க்க மாட்டேன். டிக்டொக் கண்டிப்பாகக் கிடையாது.


இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை பொதுவாகப் படப்பிடிப்புகள் இருக்காது. எனவே இரண்டாவது சனிக்கிழமை பெரும்பாலும் எனக்கு விடுமுறையாக இருக்கும். [ உத்தமர்கள் சிலர் சில நேரம் இந்நாள்களிலும் டிஸ்கஷன் வைப்பார்கள்.] பார்க்க எண்ணியிருக்கும் படங்கள் ஏதேனும் அந்தச் சமயம் வெளியானால் போவேன். டிவி பார்ப்பேன். சற்றுக் கூடுதலாக சமூக வலைத்தளங்களை மேய்வேன். ஏதாவது சிறுகதை யோசனை இருந்தால் எழுதிப் பார்ப்பேன். உலக அதிசயமாக என்னவாவது வீட்டு வேலைகள் இருந்தாலும் செய்வதுண்டு. ஒரு ஓய்வுநாள் வருமானால் தூங்கமாட்டோமா என்ற எண்ணமே முக்கியமாக எழும். ஆனாலும் எப்படியோ படுக்கப் பன்னிரண்டு மணி ஆகிவிடும்.


செய்தித் தாள்களைக் கழிப்பறையில் மட்டுமே படிக்கிறேன். ஒவ்வொரு நாளும் காலை ஏழு அல்லது எட்டு பேப்பர்களை வேகமாகப் படிப்பது என் வழக்கம். தினமணி, தந்தி, இந்து தமிழ் திசை, டைம்ஸ் ஆஃப் இந்தியா, கார்டியன், நமது எம்.ஜி.ஆர்., நமது அம்மா, முரசொலி, தீக்கதிர், ஏசியன் ஏஜ். வரி விடாமல் படிப்பது தமிழ் இந்து மட்டும். [இத்தனை பேப்பர் வாங்குகிறேனா என்றெல்லாம் கேட்கக்கூடாது. இணையம் எதற்கு பிறகு?]

குடும்பத்துக்காக நேரம் ஒதுக்க வேண்டும்; நிறைய வெளியூர்ப் பயணங்கள் செல்ல வேண்டும் என்றெல்லாம் ஆசை இருக்கிறது. இதெல்லாம் சீரியல்களில் இருந்து வெளி வந்த பின்புதான் முடியும் என்று தெரியும். சீரியல்களுக்கு எழுதத் தொடங்குவதற்கு முன்பு இதையெல்லாம் செய்தேனா என்று யோசித்துப் பார்க்கிறேன். இல்லை என்றுதான் தோன்றுகிறது. படிப்பது, எழுதுவது தவிர வேறெதிலும் மனம் பொருந்துவதில்லை. இந்த ஜென்மம் இதற்குமேல் இதிலிருந்து மாறுமா என்றும் தெரியவில்லை.


Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 15, 2019 08:40

April 22, 2017

ருசியியல் 19

ம்ஹும், இவன் சரிப்பட மாட்டான். நாக்குக்குச் சேவகம் பண்ணிக்கொண்டிருந்த பிரகஸ்பதி தேக சௌக்கியத்துக்கு உண்ணாவிரதம் இருப்பதைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டானே என்று நினைப்பீர்களானால் சற்று அவசரப்படுகிறீர்கள் என்று அர்த்தம். வேகம் குறைய ஆரம்பித்த கணிப்பொறியை ஃபார்மட் செய்து வேகம் கூட்டுவது போல, செயற்பாட்டு வீரியம் மட்டுப்பட்ட இல்லத்தரசி, அம்மா வீட்டுக்குப் போய்த் தங்கி சார்ஜ் ஏற்றி வருவது போல, காய்ந்த கண்டலேறில் கடல் மாதிரி பக்கத்து மாநிலத்து நதி பெருக்கெடுத்தாற்போல, ஒரு விரதமானது நமது ருசி நரம்புகளை எத்தனை உத்வேகத்துடன் தூண்டிவிடும் என்பதை லேசில் சொல்லிவிட முடியாது.


உடனே ஞாபகத்துக்கு வருகிற ஒரு சம்பவத்தைச் சொல்லிவிட்டு விஷயத்துக்கு வருகிறேன். சமீபத்தில் ஒரு நாள் நான் விரதம் முடிக்கிற நேரம் வீட்டைவிட்டு வெளியே இருக்கும்படி ஆனது. வீடு ஒரு சௌகரியம். இஷ்டப்பட்ட மாதிரி என்ன வேண்டுமானாலும் செய்து சாப்பிடலாம். உண்ணுவதில் அளவு காக்க வேண்டிய அவசியம் கிடையாது. தவிர நமது மெனுவை முன்கூட்டித் தீர்மானித்து, அதற்கான அலங்கார விசேஷங்களை நாமே பார்த்துப் பார்த்துச் செய்து புசிக்கலாம். ஓட்டலுக்குப் போனால், பிரகஸ்பதி என்ன வைத்திருக்கிறானோ அதுதான். அது என்ன லட்சணத்தில் உள்ளதோ, அதுவேதான். இதனாலேயே பெரும்பாலும் என் உணவு வேளை என்பதை வீட்டில் உள்ளது போலப் பார்த்துக்கொள்வேன்.


அன்றைக்கு விதியானது என்னை வெளியே கொண்டு போய்ப் போட்டது. சரி பரவாயில்லை; ஓட்டல்காரர்களும் ஜீவராசிகள்தானே; பேசி சரி செய்துகொள்ளலாம் என்று நினைத்து ஓர் உணவகத்துக்குச் சென்று உட்கார்ந்தேன். சப்ளையர் சிகாமணி வந்தார்.


‘சகோதரா, நான் சற்று வேறு விதமாகச் சாப்பிடுகிற வழக்கம் கொண்டவன். மிரளாமல் சொல்லுவதை முழுக்க உள்வாங்கிக்கொள். உன் ஓட்டலில் இன்றைக்கு என்ன காய்கறி, கூட்டு வகையறா?’ என்று ஆரம்பித்தேன்.


அவன் முட்டை கோஸும் முருங்கைக்காய் கூட்டும் என்று சொன்னான்.


‘நல்லது. பனீர் புர்ஜி அல்லது பனீர் டிக்கா இருக்கிறதா?’


‘புர்ஜி இல்லை. டிக்கா உண்டு’ என்றான்.


‘நான் தனியாகக் காசு கொடுத்துவிடுகிறேன். எனக்கு ஒரு ஐம்பது கிராம் வெண்ணெய் வேண்டும். கிடைக்குமா?’


மேலும் கீழும் ஒரு பார்வை பார்த்தான். நான்மறைகளுள் ஒன்று கழண்டவன் என்று எண்ணியிருக்கக்கூடும். கிடைக்கும் என்று சொன்னான்.


‘அப்படியானால் ஒன்று செய். ஒரு பெரிய கப் நிறைய முட்டை கோஸ். இன்னொரு பெரிய கப்பில் முருங்கைக் கூட்டு. ஒரு கப் வெண்ணெய். ஒரு பனீர் டிக்கா. இவற்றோரு ஒரு கப் தயிர். இதை முதலில் கொண்டு வா’ என்று ஆணையிட்டேன்.


‘சாப்பாடு?’ அவன் சந்தேகம் அவனுக்கு.


இதுதானப்பா சாப்பாடு என்று சொல்லி அனுப்பிவிட்டுக் காத்திருந்தேன். சற்று நேரத்தில் முட்டை கோஸை முதலில் எடுத்து வந்து வைத்தான். அளவெல்லாம் போதுமானதுதான். ஆனால் அந்தத் தாவர உணவானது தனது தன் மென் பச்சை நிறத்தை முற்றிலும் இழந்து, மஞ்சள் பூசிக் குளித்துவிட்டு செங்கல் சுவரில் முதுகைக் கொண்டுபோய்த் தேய்த்த நிறத்தில் இருந்தது.


இந்த முட்டை கோஸ் ஒரு வினோதமான காய். குக்கரிலோ, மைக்ரோ வேவ் அடுப்பிலோ அதை வேகவைத்துவிட்டால் தீர்ந்தது. நிறம் செத்துவிடும். என்னளவில் ஓர் உணவின் ருசி என்பது அதன் சரியான நிறத்துக்குச் சமபங்கு தருவது. உண்மையிலேயே, நிறமிழந்த காய்கறிக்கு ருசி மட்டு. மேலுக்கு நீங்கள் என்ன மசாலா போட்டு அலங்காரம் செய்தாலும் அது விளக்குமாத்துக் கட்டைக்குப் பட்டுக் குஞ்சலம் கட்டிய மாதிரிதான்.


இதை என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தபோது, உத்தமன் அந்த முருங்கைக் கூட்டைக் கொண்டுவந்து வைத்தான். அநியாயத்துக்கு அதன் மேற்புறம் சூழ்ந்த பெருங்கடலாக ஓர் எண்ணெய்ப் படலம். வடக்கத்திய சப்ஜி வகையறாக்களை எண்ணெயால் அலங்கரித்து எடுத்து வந்து வைப்பார்களே, அந்த மாதிரி. எனக்கு உயிரே போய்விடும் போலாகிவிட்டது. ஏனென்றால் மூன்று அல்லது நான்கு பிறப்புகளுக்குத் தேவையான எண்ணெய் வகையறாக்களை உறிஞ்சிக் குடித்து முடித்துவிட்டு, இனி எண்ணெய் என்பதே வாழ்வில் இல்லை என்று முடிவு செய்து ஒன்பது மாதங்கள் ஆகின்றன.


ஆனாலும் என்ன செய்ய? அங்கு வாய்த்தது அதுதான்.


அடுத்தபடியாக பனீர் டிக்கா வந்தது. இந்த பனீர் டிக்காவில் சேர்மானமாகிற தயிரின் அளவு, தன்மை பற்றியெல்லாம் ஏற்கெனவே இங்கு சொல்லியிருக்கிறேன். மேற்படி உணவக மடைப்பள்ளி வஸ்தாதுக்கு பனீர் டிக்கா என்பது பனீரில் செய்யப்படுகிற பஜ்ஜி என்று யாரோ சொல்லியிருக்க வேண்டும். எனவே பனீரை வேகவைத்து, மிளகாய்ப்பொடி சேர்த்த தயிரில் நன்றாக நாலு புரட்டு புரட்டிக் கொடுத்தனுப்பிவிட்டார்.


மொத்தத்தில் அன்றெனக்கு வாய்த்தது பரம பயங்கரமான பகலுணவு. இருபத்தி நான்கு மணி நேர விரதத்தை அப்படியே நாற்பத்தியெட்டு மணி நேரமாக நீட்டிவிடலாமா என்று நினைக்க வைத்துவிட்டது. ஆனால் நான் கலைஞனல்லவா? கண்ணராவிக் கசுமாலங்களுக்குக் கவித்துவப் பேரெழில் கொடுப்பது எப்படி என்று யோசிக்க ஆரம்பித்தேன்.


‘தம்பி, உங்கள் ஓட்டலில் சீஸ் இருக்குமா?’


‘இன்னாது?’


‘சீஸப்பா! பாலாடைக்கட்டி. துண்டுகளாகவோ கூழாகவோ அல்லாமல் ஸ்லைஸாக வரும். சாண்ட்விச்சில் உபயோகிப்பார்கள்.’


போய் விசாரித்துவிட்டு இருக்கிறது என்றான். ‘அப்படியானால் அதில் ஒரு ஏழெட்டு ஸ்லைஸ்கள் வேண்டும்’ என்று வம்படியாகக் கேட்டு வாங்கினேன். வண்ணமிழந்த முட்டை கோஸைப் பிடிப்பிடியாக அள்ளி ஒவ்வொரு ஸ்லைஸுக்குள்ளும் வைத்து, பூரணக் கொழுக்கட்டை போலப் பிடித்தேன். சூப்புக்கு வைத்திருந்த மிளகுத் தூளை மேலுக்குக் கொஞ்சம் தூவி சாப்பிட்டுப் பார்த்தபோது பிரமாதமாக இருந்தது.


அதேபோல, அந்த எண்ணெய் முருங்கைக் கூட்டை ஒரு தட்டில் சுத்தமாக வடித்துக் கொட்டிவிட்டு ஐம்பது கிராம் வெண்ணெயை அதன் தலையில் கொட்டி நன்றாகக் கலந்து உண்டு பார்த்தபோது இன்னொரு கப் கேட்கலாம் என்று தோன்றியது.


அந்தப் பனீர் டிக்காவைத்தான் பரதேசி கிட்டத்தட்ட வன்புணர்ச்சி செய்திருந்தான். சகிக்க முடியாத காரம் மற்றும் வாயில் வைக்கவே முடியாத அளவுக்கு உப்பு. ஒரு கணம் என்ன செய்யலாம் என்று யோசித்தேன். அதன்மீது படிந்திருந்த தயிர்ப்படலத்தை மொத்தமாக வழித்துத் துடைத்தெறிந்துவிட்டு ஒரு அவகேடா ஜூஸ் வாங்கி (பட்டர் ஃப்ரூட் என்பர்) அதில் தோய்த்து உண்ண ஆரம்பித்தேன். எனக்கே சற்றுக் கேனத்தனமாகத்தான் இருந்தது. ஆனால் ஒரு நீண்ட விரதத்துக்குப் பிந்தைய அந்த உணவு கண்டிப்பாக எனக்கு ருசித்தாக வேண்டும். திருப்தி என்பது பசியடங்குவதில் வருவதல்ல. ருசி அடங்குவதில் மட்டுமே கிடைப்பது.


இதற்குள் ஓட்டலுக்குள் ஏதோ ஒரு வினோத ஜந்து நுழைந்துவிட்டது என்ற தகவல் பரவி பலபேர் நான் சாப்பிடும் சௌந்தர்யத்தை நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்கள். இவனுக்கு என்னவிதமாக பில் போடுவது என்று ஓட்டல் நிர்வாகம் கூடி ஆலோசிக்கத் தொடங்கியது. நான் யாரையும் நிமிர்ந்து பார்ப்பதைத் தவிர்த்துவிட்டு, பரபரவென்று அனைத்தையும் உண்டு முடித்தேன். விரதம் முடித்ததல்ல என் மகிழ்ச்சி. மிக மோசமான ஓர் உணவை எளிய பிரயத்தனங்கள் மூலம் ருசி மிக்கதாக மாற்ற முடிந்ததே சாதனை.


இந்தப் பின்னணியை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். இப்போது முழு இருபத்தி நாலு மணி நேரம் உண்ணாதிருப்பது எப்படி என்று பார்த்துவிடலாம்.


Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 22, 2017 09:30