Pa Raghavan's Blog, page 6

January 22, 2019

மொஸார்ட் – கடவுள் இசைத்த குழந்தை


Prodigy என்ற பதின் பருவ வயதினருக்கான நூலாக்க முயற்சிகளில் ஈடுபட்டிருந்தபோது எழுதிய புத்தகம் இது. உலக இசை மேதைகள் ஒவ்வொருவரைக் குறித்தும் தனித்தனியே ஒரு சிறு நூலாவது கொண்டு வரவேண்டும் என்று விரும்பினேன். அளவில் சிறிதாக, அதிகம் குழப்பாத, புரிதல் பிரச்னைகள் எழாத வண்ணம் அந்நூல் அமைய வேண்டும் என்பது எண்ணம். ஒரு புத்தகத்தில் ஒரு மேதையின் இசையை உணரச் செய்வது சிரமம். ஆனால் குறிப்பிட்ட இசை மேதையின் வாழ்வு எவ்விதமான சுருதியில் இயங்கியது என்பதைத் தொட்டுக்காட்டி, அதன் மூலம் அவரது படைப்புகளின் ஆதார தொனியைச் சுட்டுவதே இதன் நோக்கம்.


மொஸார்ட், தனது இளமைப் பருவம் முழுவதும் வருமானமின்றித் தவித்தவர். எட்டயபுர மன்னருக்கு பாரதி சீட்டுக்கவி எழுதியது போல மொஸார்ட் தனது மகாராஜாவுக்கு எழுதிய ராஜினாமா கடிதம் மிகவும் பிரபலம். ஆனால் அவரது ராஜினாமாவை நிராகரித்துவிட்டு, ‘டிஸ்மிஸ்’ நோட்டீஸ் அனுப்பினார் அந்த மன்னர். கலைஞர்கள் வாழும் காலத்தில் அவமதிக்கப்படுவது உலகெங்கும் காலந்தோறும் உள்ள வழக்கமே அல்லவா? அவரது மேதைமை கண்டு மயங்கி நெருங்கிக் காதலிக்கத் தொடங்கியவளே அவரது ஏழைமை கண்டு விட்டு விலகி ஓடியிருக்கிறாள். ஓயாத நோய்த் தொல்லை, தீராத ஏமாற்றங்கள், நிற்காத பெரும் அலைச்சல். வாழ்நாள் முழுதும் இப்படியே இருந்துவிட்டுப் போய்விட்ட கலைஞனின் இசை, இன்று ஓர் அடையாளச் சின்னம். மொஸார்ட்டைத் தொட்டுப் பேசாமல் இசை இல்லை.


காலத்தால் அழியாத உன்னதமான இசைக்கோலங்களை விட்டுச் சென்றவரின் வாழ்வை சுருக்கமாக விவரிக்கிறது இந்நூல்.


கீழ்க்கண்ட நாடுகளில் வசிக்கும் வாசக நண்பர்கள் உரிய சுட்டிகளைப் பின் தொடர்ந்து சென்று வாங்கி வாசிக்கலாம். அன்லிமிடெட் சந்தாதாரர் என்றால் இலவசமாகப் படிக்கலாம்.


அமேசான் இந்தியாவில் வாங்க


அமேசான் அமெரிக்காவில்:


அமேசான் யுகே:


அமேசான் ஆஸ்திரேலியா:


இவை தவிர டென்மார்க், ஃப்ரான்ஸ், ஜப்பான், பிரேசில், கனடா, மெக்சிகோ, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட கோபால் பல்பொடி செல்லக்கூடிய அத்தனை தேசங்களின் அமேசான் பதிப்பிலும் அந்தந்த ஊர் நாணயத்தில் கிடைக்கும்.


விலை ரூ. 50.


Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 22, 2019 11:59

January 15, 2019

ஒரு நாள் கழிவது எப்படி?

யார் கிளப்பிவிட்டது என்று தெரியவில்லை. பார்க்கிறவர்களுள் பெரும்பான்மையானோர், ‘எப்படி உங்களால் இவ்வளவு எழுத முடிகிறது?’ என்று தவறாமல் கேட்கிறார்கள் இப்போதெல்லாம். சென்ற ஆண்டு விருட்சத்தில் ஒரு பேட்டிக்காக அழகியசிங்கர் இதனைக் கேட்கப் போக, ஒவ்வொரு பேட்டியிலும் [கடைசியாக வந்த ஆதன் மீடியா பேட்டி வரை] இக்கேள்வி தவறாமல் இடம்பெற்றுவிடுகிறது.


அப்படியா? ஜெயமோகன் எழுதுவதில் பத்தில் ஒரு பங்குகூட நான் எழுதுவதில்லை. இருந்திருந்து வாழ்நாளில் முதல் முறையாக ஆயிரம் பக்கத்தில் ஒரு நாவல் எழுதியிருக்கிறேன். [ நான் ஃபிக்‌ஷன் ஆயிரங்கள்,

கணக்கில் வராது] இது ஒரு பாவமா? அவர் மூன்று மாதங்களுக்கு ஒரு ஆயிரம் பக்க ரிலீஸ் செய்கிறார். அவரை ஏன் யாரும் கேட்பதில்லை என்று தெரியவில்லை.


இன்றைக்குக் கண்காட்சியில் போகன் சங்கரை சந்தித்தேன். இதையே அவர் வேறு வடிவில் கேட்டார். ‘எப்படி நேரத்தை வகுத்துக்கொள்கிறீர்கள்?’


நான் ஒன்றும் அவ்வளவு ஒழுக்கமாக நேர வரையறை செய்து எழுதுபவனெல்லாம் இல்லை. சரியாகச் சொல்வதென்றால் நெருக்கடி நேரம் வரை அனைத்தையும் தள்ளிப் போட்டுவிட்டு, இறுதிக் கணங்களில் அடித்துத் தள்ளுகிற வழக்கம் கொண்டவன் நான். என் மனைவி பலமுறை கண்டித்தும் இந்தப் பழக்கத்தைத் திருத்திக்கொள்ள முடியவில்லை.


எனது ஒவ்வொரு நாளும் காலை பத்து மணிக்குத் தொடங்குகிறது. எழுதலாம் என்று வந்து அமர்ந்ததும் ‘ரூம விடறிங்களா? பெருக்கிடலாம்’ என்ற குரல் வரும். கொட்டுகிற குப்பையையெல்லாம் பெருக்கித்தள்ளத்தானே வேண்டும்? எனவே பெருக்கித் துடைக்கப் பதினைந்து நிமிடங்கள் இடம் தருவேன். அந்நிமிடங்களில் ஒரு ஃபேஸ்புக் ஸ்டேடஸ். ஒன்றிரண்டு டிக்டொக் விடியோக்கள். பிறகு எழுத வந்து அமர்ந்தால் ஒன்று – ஒன்றரை வரை கலைச்சேவை சரியாக இருக்கும். ஒரு காட்சிக்கும் அடுத்தக் காட்சிக்கும் இடையே ஐந்து நிமிட இடைவெளி எடுத்துக்கொண்டு சிறிது நேரம் ஃபேஸ்புக், ட்விட்டர் பார்ப்பேன். ஏதாவது தோன்றினால் அதில் எழுதுவேன். காலைப் பொழுதுக்குள் ஒரு சீரியலுக்கான மறுநாள் பணிகளை முடித்துவிட வேண்டும் என்பது கணக்கு. பொதுவாக ஒருநாள் படப்பிடிப்பு என்பது 6 முதல் 8 காட்சிகள் கொண்டதாக இருக்கும். இரண்டு யூனிட் ஷூட்டிங் என்றால் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகும். அந்நாள்களில் ஃபேஸ்புக் கிடையாது. ஆனால் என்ன ஆனாலும் இரண்டு மணிக்குள் முடித்துவிட்டு சாப்பிட்டுப் படுத்துவிடுவது வழக்கம். எனது ஒழுங்கான தூக்கம் என்பது மதியம் தூங்கும் இரண்டு மூன்று மணி நேரங்கள் மட்டுமே.


மாலை ஐந்து மணிக்குத் தூங்கி எழுந்து சிறிது நேரம் மப்பு கட்டிவிட்டு ஆறு மணிக்கு மீண்டும் எழுத உட்கார்ந்தால் அடுத்த சீரியல். இது பதினொன்று, பதினொன்றரை வரை நீளும். காலை மிச்சம் வைத்த ஏதேனும் இருந்தாலும் இதில் சேரும். இடையே ஷெட்யூல் மாற்றுவார்கள். திட்டத்தில் இல்லாத சிலவற்றைச் சேர்த்து எழுத வேண்டி வரும்.


இந்நேரத்தில் இரு காட்சிகளுக்கு இடையிலான ஐந்து நிமிட இடைவேளை என்பது பத்து நிமிடங்களாகும். அந்த ஒவ்வொரு பத்து நிமிடத்திலும் குறைந்தது பத்துப் பக்கங்கள் படிப்பேன். முன்பெல்லாம் அச்சு நூல்கள். இப்போது கிண்டில். இதுதான் வசதியாக இருக்கிறது. ஒரே சமயத்தில் ஏழெட்டுப் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்து ஓரிரு மாதங்களில் முழுக்க முடித்துவிடுவது என் வழக்கம். சில புத்தகங்கள் வேகமாகப் படிக்க விடாது. பாதியில் நிறுத்திவிட்டுப் பல மாதங்களுக்குப் பின் மீண்டும் எடுத்துப் படிப்பதுண்டு. அப்போது ரசிக்கும்படியாகச் சில அமைந்துவிடும். Trial of Tilak, இஸ்தான்புல், ஏகே செட்டியார் படைப்புகள் எல்லாம் அப்படிப் படித்தவைதான்.


இரவு பதினொன்றரைக்குத் தொழில்சார் எழுத்துப் பணிகள் முடிவடைந்ததும் நானாக எழுத ஒன்றுமில்லையென்றால் அரை மணி நேரம் ஏதாவது படிப்பேன். படுத்துவிடுவேன். என் இஷ்டத்துக்கு எழுதும் வேலை ஏதேனும் இருந்தால் அந்தப் பணி அப்போது நடக்கும். சென்ற ஆண்டு தினமணி இணையத்தளத்தில் எழுதிய யதி முழுவதையும் இப்படி நள்ளிரவு பன்னிரண்டுக்குத் தொடங்கி ஒன்றரை இரண்டு வரை மட்டுமே எழுதி முடித்தேன். எழுதியதைத் திரும்பப் படித்துத் திருத்தம் செய்யும் வழக்கம் இல்லை. ஆனால் எழுதும் முன்பு மனத்துக்குள் முழுதாக ஒருமுறை சொல்லிப் பார்த்துவிடுவேன். முன்பெல்லாம் இரண்டு சுவர்கள் இணையும் முக்கில் திரும்பி அமர்ந்து சுவரைப் பார்த்துச் சொல்லுவேன். என் மனைவி மிகவும் பயந்தபடியால் அந்தப் பழக்கத்தைக் கஷ்டப்பட்டு மாற்றிக்கொண்டிருக்கிறேன்.


பூனைக்கதை எழுதும்போது இந்த வழக்கங்கள் முற்றிலும் மாறின. அது ஒரே மூச்சில், ஒன்றரை மாதத்தில் எழுதி முடிக்கப்பட்ட நாவல். அப்போது மதிய உறக்கத்தைக் குறைத்துக்கொண்டு அத்தனை சீரியல் பணிகளையும் [அப்போது மூன்று] பகல் பொழுதுக்குள்ளேயே முடித்துவிடுவேன். மதிய உறக்கத்துக்குப் பின்பு மாலை எழுந்ததும் பூனைதான். அதிகாலை மூன்று அல்லது மூன்றரை வரை எழுதினேன். இடையே பத்திரிகைத் தொடர் ஏதேனும் வந்தால் டெட்லைன் கேட்டுக்கொண்டு அதற்கு அரை மணி முன்னதாக எழுதுவது வழக்கம். இப்போது கல்கியில் புல்புல்தாரா வந்துகொண்டிருக்கிறது. அவர்கள் திங்கள் கிழமை காலை ஃபாரம் அச்சுக்கு அனுப்புவார்கள். ஞாயிறு மாலை ஜெயராஜுக்கு போன் செய்து படக்குறிப்பு சொல்லிவிட்டு இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் படுக்கப் போகும்முன் எழுதி அனுப்பிவிட்டுப் படுப்பேன்.


யோசித்துப் பார்த்தால் இத்தனை நாள்களில் என்னிடம் ஒரே ஒரு ஒழுக்கம் மட்டுமே ஒட்டிக்கொண்டிருக்கிறது. படப்பிடிப்பில் இயக்குநர் காத்திருக்கும்படித் தாமதம் செய்ததில்லை. பத்திரிகை ஆசிரியர்கள் பதறுமளவுக்கு இறுதிக் கெடுவைக் கடந்ததில்லை. என்ன ஆனாலும் மறுநாளுக்குரியதை முடித்துவிட்டே படுப்பேன். அதற்கு வசதியாக, முதல் நாள் காலை நடை செல்லும்போது அன்று எழுத வேண்டிய அனைத்தையும் யோசித்து வைத்துவிடுவது வழக்கம். சில நாள் காலை நடையின்போது காட்சிகளை வாய்விட்டுச் சொல்லி ரெக்கார்ட் செய்துவிடுவதும் உண்டு. அது அந்தந்தக் காட்சியின் தன்மையைப் பொறுத்தது.


முழு நேர எழுத்தின் ஒரே பிரச்னை, இதில் ஓய்வுநாள் என்ற ஒன்று கிடையாது. ஊரெல்லாம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடிக்கொண்டிருக்கும். போராளியானவன் வழக்கம் போல் எழுந்து வாக்கிங் போய்விட்டு, குளித்து முழுகி பூஜை முடித்து சிரத்தையாக எழுத உட்கார்ந்துவிடவேண்டியிருக்கும். போதாக் குறைக்கு வாரம் இருமுறையேனும் ‘டிஸ்கஷன்’ அல்லது ‘மீட்டிங்’ என்ற சடங்கு இருக்கும். மாதம் இருமுறை சானலுக்குப் போகவேண்டியிருக்கும். இந்நாள்களில் மேற்படி எந்தத் திட்டமும் உதவாது. நாள் முழுதும் இடம் பெயர்ந்து சென்று கலைச்சேவை செய்துவிட்டு, கரும்புச் சக்கைபோலத் திரும்பி வந்து மறுநாளுக்கு எழுத வேண்டியிருக்கும். அப்போது என் எளிய பொழுதுபோக்கான ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கமெல்லாம் எட்டிப் பார்க்க மாட்டேன். டிக்டொக் கண்டிப்பாகக் கிடையாது.


இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை பொதுவாகப் படப்பிடிப்புகள் இருக்காது. எனவே இரண்டாவது சனிக்கிழமை பெரும்பாலும் எனக்கு விடுமுறையாக இருக்கும். [ உத்தமர்கள் சிலர் சில நேரம் இந்நாள்களிலும் டிஸ்கஷன் வைப்பார்கள்.] பார்க்க எண்ணியிருக்கும் படங்கள் ஏதேனும் அந்தச் சமயம் வெளியானால் போவேன். டிவி பார்ப்பேன். சற்றுக் கூடுதலாக சமூக வலைத்தளங்களை மேய்வேன். ஏதாவது சிறுகதை யோசனை இருந்தால் எழுதிப் பார்ப்பேன். உலக அதிசயமாக என்னவாவது வீட்டு வேலைகள் இருந்தாலும் செய்வதுண்டு. ஒரு ஓய்வுநாள் வருமானால் தூங்கமாட்டோமா என்ற எண்ணமே முக்கியமாக எழும். ஆனாலும் எப்படியோ படுக்கப் பன்னிரண்டு மணி ஆகிவிடும்.


செய்தித் தாள்களைக் கழிப்பறையில் மட்டுமே படிக்கிறேன். ஒவ்வொரு நாளும் காலை ஏழு அல்லது எட்டு பேப்பர்களை வேகமாகப் படிப்பது என் வழக்கம். தினமணி, தந்தி, இந்து தமிழ் திசை, டைம்ஸ் ஆஃப் இந்தியா, கார்டியன், நமது எம்.ஜி.ஆர்., நமது அம்மா, முரசொலி, தீக்கதிர், ஏசியன் ஏஜ். வரி விடாமல் படிப்பது தமிழ் இந்து மட்டும். [இத்தனை பேப்பர் வாங்குகிறேனா என்றெல்லாம் கேட்கக்கூடாது. இணையம் எதற்கு பிறகு?]

குடும்பத்துக்காக நேரம் ஒதுக்க வேண்டும்; நிறைய வெளியூர்ப் பயணங்கள் செல்ல வேண்டும் என்றெல்லாம் ஆசை இருக்கிறது. இதெல்லாம் சீரியல்களில் இருந்து வெளி வந்த பின்புதான் முடியும் என்று தெரியும். சீரியல்களுக்கு எழுதத் தொடங்குவதற்கு முன்பு இதையெல்லாம் செய்தேனா என்று யோசித்துப் பார்க்கிறேன். இல்லை என்றுதான் தோன்றுகிறது. படிப்பது, எழுதுவது தவிர வேறெதிலும் மனம் பொருந்துவதில்லை. இந்த ஜென்மம் இதற்குமேல் இதிலிருந்து மாறுமா என்றும் தெரியவில்லை.


Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 15, 2019 08:40

April 22, 2017

ருசியியல் 19

ம்ஹும், இவன் சரிப்பட மாட்டான். நாக்குக்குச் சேவகம் பண்ணிக்கொண்டிருந்த பிரகஸ்பதி தேக சௌக்கியத்துக்கு உண்ணாவிரதம் இருப்பதைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டானே என்று நினைப்பீர்களானால் சற்று அவசரப்படுகிறீர்கள் என்று அர்த்தம். வேகம் குறைய ஆரம்பித்த கணிப்பொறியை ஃபார்மட் செய்து வேகம் கூட்டுவது போல, செயற்பாட்டு வீரியம் மட்டுப்பட்ட இல்லத்தரசி, அம்மா வீட்டுக்குப் போய்த் தங்கி சார்ஜ் ஏற்றி வருவது போல, காய்ந்த கண்டலேறில் கடல் மாதிரி பக்கத்து மாநிலத்து நதி பெருக்கெடுத்தாற்போல, ஒரு விரதமானது நமது ருசி நரம்புகளை எத்தனை உத்வேகத்துடன் தூண்டிவிடும் என்பதை லேசில் சொல்லிவிட முடியாது.


உடனே ஞாபகத்துக்கு வருகிற ஒரு சம்பவத்தைச் சொல்லிவிட்டு விஷயத்துக்கு வருகிறேன். சமீபத்தில் ஒரு நாள் நான் விரதம் முடிக்கிற நேரம் வீட்டைவிட்டு வெளியே இருக்கும்படி ஆனது. வீடு ஒரு சௌகரியம். இஷ்டப்பட்ட மாதிரி என்ன வேண்டுமானாலும் செய்து சாப்பிடலாம். உண்ணுவதில் அளவு காக்க வேண்டிய அவசியம் கிடையாது. தவிர நமது மெனுவை முன்கூட்டித் தீர்மானித்து, அதற்கான அலங்கார விசேஷங்களை நாமே பார்த்துப் பார்த்துச் செய்து புசிக்கலாம். ஓட்டலுக்குப் போனால், பிரகஸ்பதி என்ன வைத்திருக்கிறானோ அதுதான். அது என்ன லட்சணத்தில் உள்ளதோ, அதுவேதான். இதனாலேயே பெரும்பாலும் என் உணவு வேளை என்பதை வீட்டில் உள்ளது போலப் பார்த்துக்கொள்வேன்.


அன்றைக்கு விதியானது என்னை வெளியே கொண்டு போய்ப் போட்டது. சரி பரவாயில்லை; ஓட்டல்காரர்களும் ஜீவராசிகள்தானே; பேசி சரி செய்துகொள்ளலாம் என்று நினைத்து ஓர் உணவகத்துக்குச் சென்று உட்கார்ந்தேன். சப்ளையர் சிகாமணி வந்தார்.


‘சகோதரா, நான் சற்று வேறு விதமாகச் சாப்பிடுகிற வழக்கம் கொண்டவன். மிரளாமல் சொல்லுவதை முழுக்க உள்வாங்கிக்கொள். உன் ஓட்டலில் இன்றைக்கு என்ன காய்கறி, கூட்டு வகையறா?’ என்று ஆரம்பித்தேன்.


அவன் முட்டை கோஸும் முருங்கைக்காய் கூட்டும் என்று சொன்னான்.


‘நல்லது. பனீர் புர்ஜி அல்லது பனீர் டிக்கா இருக்கிறதா?’


‘புர்ஜி இல்லை. டிக்கா உண்டு’ என்றான்.


‘நான் தனியாகக் காசு கொடுத்துவிடுகிறேன். எனக்கு ஒரு ஐம்பது கிராம் வெண்ணெய் வேண்டும். கிடைக்குமா?’


மேலும் கீழும் ஒரு பார்வை பார்த்தான். நான்மறைகளுள் ஒன்று கழண்டவன் என்று எண்ணியிருக்கக்கூடும். கிடைக்கும் என்று சொன்னான்.


‘அப்படியானால் ஒன்று செய். ஒரு பெரிய கப் நிறைய முட்டை கோஸ். இன்னொரு பெரிய கப்பில் முருங்கைக் கூட்டு. ஒரு கப் வெண்ணெய். ஒரு பனீர் டிக்கா. இவற்றோரு ஒரு கப் தயிர். இதை முதலில் கொண்டு வா’ என்று ஆணையிட்டேன்.


‘சாப்பாடு?’ அவன் சந்தேகம் அவனுக்கு.


இதுதானப்பா சாப்பாடு என்று சொல்லி அனுப்பிவிட்டுக் காத்திருந்தேன். சற்று நேரத்தில் முட்டை கோஸை முதலில் எடுத்து வந்து வைத்தான். அளவெல்லாம் போதுமானதுதான். ஆனால் அந்தத் தாவர உணவானது தனது தன் மென் பச்சை நிறத்தை முற்றிலும் இழந்து, மஞ்சள் பூசிக் குளித்துவிட்டு செங்கல் சுவரில் முதுகைக் கொண்டுபோய்த் தேய்த்த நிறத்தில் இருந்தது.


இந்த முட்டை கோஸ் ஒரு வினோதமான காய். குக்கரிலோ, மைக்ரோ வேவ் அடுப்பிலோ அதை வேகவைத்துவிட்டால் தீர்ந்தது. நிறம் செத்துவிடும். என்னளவில் ஓர் உணவின் ருசி என்பது அதன் சரியான நிறத்துக்குச் சமபங்கு தருவது. உண்மையிலேயே, நிறமிழந்த காய்கறிக்கு ருசி மட்டு. மேலுக்கு நீங்கள் என்ன மசாலா போட்டு அலங்காரம் செய்தாலும் அது விளக்குமாத்துக் கட்டைக்குப் பட்டுக் குஞ்சலம் கட்டிய மாதிரிதான்.


இதை என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தபோது, உத்தமன் அந்த முருங்கைக் கூட்டைக் கொண்டுவந்து வைத்தான். அநியாயத்துக்கு அதன் மேற்புறம் சூழ்ந்த பெருங்கடலாக ஓர் எண்ணெய்ப் படலம். வடக்கத்திய சப்ஜி வகையறாக்களை எண்ணெயால் அலங்கரித்து எடுத்து வந்து வைப்பார்களே, அந்த மாதிரி. எனக்கு உயிரே போய்விடும் போலாகிவிட்டது. ஏனென்றால் மூன்று அல்லது நான்கு பிறப்புகளுக்குத் தேவையான எண்ணெய் வகையறாக்களை உறிஞ்சிக் குடித்து முடித்துவிட்டு, இனி எண்ணெய் என்பதே வாழ்வில் இல்லை என்று முடிவு செய்து ஒன்பது மாதங்கள் ஆகின்றன.


ஆனாலும் என்ன செய்ய? அங்கு வாய்த்தது அதுதான்.


அடுத்தபடியாக பனீர் டிக்கா வந்தது. இந்த பனீர் டிக்காவில் சேர்மானமாகிற தயிரின் அளவு, தன்மை பற்றியெல்லாம் ஏற்கெனவே இங்கு சொல்லியிருக்கிறேன். மேற்படி உணவக மடைப்பள்ளி வஸ்தாதுக்கு பனீர் டிக்கா என்பது பனீரில் செய்யப்படுகிற பஜ்ஜி என்று யாரோ சொல்லியிருக்க வேண்டும். எனவே பனீரை வேகவைத்து, மிளகாய்ப்பொடி சேர்த்த தயிரில் நன்றாக நாலு புரட்டு புரட்டிக் கொடுத்தனுப்பிவிட்டார்.


மொத்தத்தில் அன்றெனக்கு வாய்த்தது பரம பயங்கரமான பகலுணவு. இருபத்தி நான்கு மணி நேர விரதத்தை அப்படியே நாற்பத்தியெட்டு மணி நேரமாக நீட்டிவிடலாமா என்று நினைக்க வைத்துவிட்டது. ஆனால் நான் கலைஞனல்லவா? கண்ணராவிக் கசுமாலங்களுக்குக் கவித்துவப் பேரெழில் கொடுப்பது எப்படி என்று யோசிக்க ஆரம்பித்தேன்.


‘தம்பி, உங்கள் ஓட்டலில் சீஸ் இருக்குமா?’


‘இன்னாது?’


‘சீஸப்பா! பாலாடைக்கட்டி. துண்டுகளாகவோ கூழாகவோ அல்லாமல் ஸ்லைஸாக வரும். சாண்ட்விச்சில் உபயோகிப்பார்கள்.’


போய் விசாரித்துவிட்டு இருக்கிறது என்றான். ‘அப்படியானால் அதில் ஒரு ஏழெட்டு ஸ்லைஸ்கள் வேண்டும்’ என்று வம்படியாகக் கேட்டு வாங்கினேன். வண்ணமிழந்த முட்டை கோஸைப் பிடிப்பிடியாக அள்ளி ஒவ்வொரு ஸ்லைஸுக்குள்ளும் வைத்து, பூரணக் கொழுக்கட்டை போலப் பிடித்தேன். சூப்புக்கு வைத்திருந்த மிளகுத் தூளை மேலுக்குக் கொஞ்சம் தூவி சாப்பிட்டுப் பார்த்தபோது பிரமாதமாக இருந்தது.


அதேபோல, அந்த எண்ணெய் முருங்கைக் கூட்டை ஒரு தட்டில் சுத்தமாக வடித்துக் கொட்டிவிட்டு ஐம்பது கிராம் வெண்ணெயை அதன் தலையில் கொட்டி நன்றாகக் கலந்து உண்டு பார்த்தபோது இன்னொரு கப் கேட்கலாம் என்று தோன்றியது.


அந்தப் பனீர் டிக்காவைத்தான் பரதேசி கிட்டத்தட்ட வன்புணர்ச்சி செய்திருந்தான். சகிக்க முடியாத காரம் மற்றும் வாயில் வைக்கவே முடியாத அளவுக்கு உப்பு. ஒரு கணம் என்ன செய்யலாம் என்று யோசித்தேன். அதன்மீது படிந்திருந்த தயிர்ப்படலத்தை மொத்தமாக வழித்துத் துடைத்தெறிந்துவிட்டு ஒரு அவகேடா ஜூஸ் வாங்கி (பட்டர் ஃப்ரூட் என்பர்) அதில் தோய்த்து உண்ண ஆரம்பித்தேன். எனக்கே சற்றுக் கேனத்தனமாகத்தான் இருந்தது. ஆனால் ஒரு நீண்ட விரதத்துக்குப் பிந்தைய அந்த உணவு கண்டிப்பாக எனக்கு ருசித்தாக வேண்டும். திருப்தி என்பது பசியடங்குவதில் வருவதல்ல. ருசி அடங்குவதில் மட்டுமே கிடைப்பது.


இதற்குள் ஓட்டலுக்குள் ஏதோ ஒரு வினோத ஜந்து நுழைந்துவிட்டது என்ற தகவல் பரவி பலபேர் நான் சாப்பிடும் சௌந்தர்யத்தை நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்கள். இவனுக்கு என்னவிதமாக பில் போடுவது என்று ஓட்டல் நிர்வாகம் கூடி ஆலோசிக்கத் தொடங்கியது. நான் யாரையும் நிமிர்ந்து பார்ப்பதைத் தவிர்த்துவிட்டு, பரபரவென்று அனைத்தையும் உண்டு முடித்தேன். விரதம் முடித்ததல்ல என் மகிழ்ச்சி. மிக மோசமான ஓர் உணவை எளிய பிரயத்தனங்கள் மூலம் ருசி மிக்கதாக மாற்ற முடிந்ததே சாதனை.


இந்தப் பின்னணியை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். இப்போது முழு இருபத்தி நாலு மணி நேரம் உண்ணாதிருப்பது எப்படி என்று பார்த்துவிடலாம்.


Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 22, 2017 09:30

பொலிக! பொலிக! 100

செய்தி திருநாராயணபுரத்துக்கு வந்து சேர்ந்தபோது, ராமானுஜரின் மடத்துக்கு விஷ்ணுவர்த்தனும் அவனது மகள் வகுளாவும் வந்திருந்தார்கள். ஹொய்சள தேசம் அதுகாறும் கண்டிராத வகையில் எம்பெருமான் ஶ்ரீமன் நாராயணனுக்கு ஐந்து பெரும் கோயில்கள் கட்டும் திருப்பணியில் ஈடுபட்டிருந்தான் விஷ்ணுவர்த்தன். வகுளாதான் வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்துகொண்டிருந்தாள். தொண்டனூரில் ஒரு கோயில். அது நம்பி நாராயணம். தலக்காட்டில் ஒரு கோயில். கீர்த்தி நாராயணம். மேல்கோட்டையில் செல்வ நாராயணம். வேளாபுரி என்கிற பேலூரில் விஜய நாராயணம். கதக்கில் வீர நாராயணம். 


‘எத்தனை எத்தனைக் கோயில்கள் எழுப்புகிறோமோ, அத்தனையும் மக்களுக்கு நல்லது விஷ்ணுவர்த்தா. பிரபஞ்சமெங்கும் பரவி உதிர்ந்து கிடக்கும் மூலாதார சக்தியின் துகள்களை ஒருங்கிணைத்து பிரதிஷ்டை செய்கிறோம். அது ஞான ரூபமாக உருக்கொண்டு  கர்ப்பகிரகத்தில் பிரவகிக்கத் தொடங்குகிறது. சந்நிதியில் நிற்கிற கணம்தோறும் நாம் மூலாதார சக்தியுடன் நேரடியாகத் தொடர்புகொள்கிறோம். பக்தி நம் சிந்தையைப் பரமாத்மாவிடம் கடத்திச் செல்கிறது. உடல் விடுத்து, உள்ளம் விடுத்து, ஆன்மாவை நெருங்க வழி செய்கிறது. உன் ஆன்மாவைப் பரமாத்மாவின் பாதாரவிந்தங்களில் கொண்டு சேர்க்க முடிந்துவிட்டால் போதும். மோட்சம் நிச்சயம். நீ செய்வது நல்ல காரியம். இந்தப் பஞ்ச நாராயண க்ஷேத்திரங்களும் காலம் உள்ள வரை உன் பேர் சொல்லும்.’ என்றார் ராமானுஜர்.


‘சுவாமி, இது நான் செய்யும் காரியமல்ல. தங்கள் பெருங்கனவைக் கல்லாக ஏந்திச் சுமந்து செல்லும் பாக்கியம் மட்டுமே எனக்கு வாய்த்திருக்கிறது. என்றென்றும் தாங்கள் என் பக்கத்தில் இருந்து வழி காட்டிக்கொண்டே இருக்க வேண்டும்!’


ராமானுஜர் சிரித்தார். ‘என்றென்றுமா! என்றும் உள்ளவன் பரமன் ஒருவன் மட்டுமே.’


‘அவனை நெருங்க நீங்கள் அவசியம் சுவாமி.’


‘மனிதப் பிறவி முடிவுக்கு உட்பட்டது மன்னா. ஆனால் ஆசாரிய சம்பந்தம்தான்  பரமபத வாயிலை அடைய வழி செய்யும் என்பது உண்மை. ஆளவந்தார் சுவாமிகளும் பெரிய நம்பியும், திருக்கோட்டியூர் நம்பியும், திருமாலையாண்டான் சுவாமியும், அரையரும், பெரிய திருமலை நம்பியும் இல்லாது போயிருந்தால் நானில்லை. திருக்கச்சி நம்பிகள் இல்லாவிட்டால் மேற்சொன்ன யாருமே எனக்கில்லை. இது ஒரு தொடர்ச்சி. என்றும் இருப்பது. என்றும் இருக்க வேண்டியதும் கூட. எக்காலத்திலும் நமது ஜனங்கள் ஆசாரிய அனுக்கிரகம் இன்றிப் போய்விடக்கூடாதே என்றுதான் எழுபத்தி நான்கு சிம்மாசனாதிபதிகளைக் கண்டெடுத்து நியமித்தேன். சற்றும் தன்னலமற்ற, ஞானப் பெருஞ்சுடர்களான  அவர்கள், தேசமெங்கும் பரவி வைணவம் வளர்ப்பார்கள். நான் உனக்குச் செய்தவற்றை அவர்கள் நாட்டுக்குச் செய்வார்கள்.’


‘புரிகிறது சுவாமி.’


‘இந்த குரு பரம்பரை மிக முக்கியமானது விஷ்ணுவர்த்தா! எவனொருவன் தன் ஆசாரியரைக் கண்டடைந்து, அவரிடம் பஞ்ச சம்ஸ்காரங்களைப் பெற்று பாகவத உத்தமனாக வாழ்கிறானோ அவனே எம்பெருமானுக்கு உகந்தவன் ஆகிறான். ஆசாரிய சம்பந்தம் இல்லாமல் அவனை நெருங்குவது அத்தனை எளிதல்ல.’


‘உண்மை சுவாமி. அவ்விதத்தில் நானும் என் மகள் வகுளாவும் புண்ணியம் செய்தவர்கள். என்ன காரணத்தாலோ என் மனைவி இந்த வழிக்கு வர மறுக்கிறாள்.’


உடையவர் புன்னகை செய்தார். ‘அறிவைப் புகட்ட முடியும் விஷ்ணுவர்த்தா. ஆனால் ஞானத்தையல்ல. ஞானம் என்பது தன்னால் திரண்டு வரவேண்டியது. ஒரு தரிசனத்தில் சித்திப்பது. ஆசாரிய சம்பந்தம் தேடிச் செல்வதே ஞானத்தேடலின் தொடக்கம். உன் மனைவியைப் பற்றி வருந்தாதே. முதலில் இந்தத் திருக்கோயில் பணிகளைச் சிறப்பாகச் செய்து முடிக்கிற வழியைப் பார்.’


அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோதுதான் அத்தகவல் வந்தது. குலோத்துங்கன் இறந்துவிட்டான்.


அடடே என்று துள்ளியெழுந்தார்கள் ராமானுஜரின் சீடர்கள்.


‘வேண்டாம். ஒரு மரணத்தை யாரும் கொண்டாடாதீர்கள். வெறுப்பு அல்ல; வெறுத்தவர்களையும் அரவணைப்பதே வைணவம்’ என்றார் ராமானுஜர்.


‘சுவாமி, சிறியாண்டான் கூரேசரைத் தேடி மாலிருஞ்சோலைக்குப் போயிருக்கிறாரே, அவர்கள் இருவருக்கும் நிச்சயம் இத்தகவல் எட்டியிருக்கும். இனி திருவரங்கம் திரும்ப நமக்குத் தடையிருக்காது என்றே நினைக்கிறேன்’ என்றார் முதலியாண்டான்.


ராமானுஜர் எதுவும் பேசவில்லை. சிறிது நேரம் அமைதியாக யோசித்தார். நேற்று நடந்த மாதிரி இருக்கிறது. திடீரென்று ஒரு காலைப் பொழுதில் எல்லாமே கலைந்துவிட்டாற்போன்ற காட்சி மங்கலாக நினைவுக்கு வந்தது. கூரேசரும் பெரிய நம்பியும் சோழன் சபைக்குச் சென்ற பிறகு என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ளவே எத்தனை வருடங்களாகிவிட்டன! காலமும் தூரமும் பிரித்துப் போட முயற்சி செய்தாலும் நினைவுச் சரத்தில் இடைவெளி இல்லாமல்தான் இருக்கிறது.


ஒரு திருப்தி இருந்தது அவருக்கு. துக்கத்தில் துவண்டு அமர்ந்துவிடவில்லை. செய்ய வேண்டிய எந்தப் பணியையும் தள்ளிப் போடவில்லை. எத்தனை தேசங்கள், எத்தனை ஆயிரம் மக்கள், எவ்வளவு பண்டிதர்கள், எப்பேர்ப்பட்ட மன்னர்களைச் சந்தித்தாகிவிட்டது! உக்கிரமும் வன்மமும் வெறுப்பும் மேலோங்க வாதுக்கு வந்த விற்பன்னர்கள். எம்பெருமான் அருளால் எல்லோரையும் வெல்ல முடிந்திருக்கிறது. குலப்பெருமையல்ல; குறைவற்ற பக்தியே பெரிது என்று மானிட சமூகத்துக்குப் புரியவைக்க முடிந்திருக்கிறது. சாதியை முன்வைத்து மேலோர், தாழ்ந்தோர் என்று பேசுவதன் அறமின்மையை உணர்த்த முடிந்திருக்கிறது. ஒரு திருக்கச்சி நம்பியைக் காட்டிலும் மேலோர் உண்டா! மாறநேர் நம்பியினும் புண்ணியாத்மா இருந்துவிட முடியுமா! பிறப்பால் வைணவனாக இருந்தாலும், கூரேசரின் சீடனாகவே இருந்தாலும் சோழனின் அமைச்சன் நாலூரான் நடந்துகொண்ட விதத்தை எப்படி மதிப்பிடுவது?


இன்னொன்றும் இருக்கிறது. செல்வம். செழிப்பு கொடுக்கிற அகம்பாவம். ராமானுஜருக்கு இன்னொரு சம்பவம் நினைவுக்கு வந்தது. பல வருடங்களுக்கு முன்னர் திருவரங்கத்தில் இருந்து காஞ்சிக்குப் புறப்பட்டுப் போனபோது வரதாழ்வான் வீட்டில் தங்கிய சம்பவம். உண்மையில் யக்ஞேசன் என்னும் தமது சீடன் ஒருவனின் இல்லத்தில்தான் அவர் தங்க நினைத்திருந்தார். அவனது பணத்திமிர் அங்கு செல்ல விடாமல் தடுத்துவிட்டது. பின்னர் அதே யக்ஞேசன் கதறிக்கொண்டு வந்து காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டதை எண்ணிப் பார்த்தார். உன் பணம் உனக்கு என்ன கொடுக்கும்? ஆசாரிய சம்பந்தம் இருந்தும் அறிவில் தெளிவில்லாமல் என்ன பயன்? ஆசாரியரே விட்டு விலகிச் செல்வதுதான் நிகர லாபமாக இருக்கும்.


‘எம்பெருமானே! மனித குலத்தைப் பீடித்திருக்கும் குலச் செருக்கு, செல்வச் செருக்கு முற்றிலும் நீங்கக் கருணை புரி. அகந்தையற்று இருப்பதே வைணவம், கைங்கர்யமே வைணவன் இலக்கணம் என்பதை வாழும்வரை நான் சொல்லிக்கொண்டே இருக்க வழி செய்!’ என்று மானசீகமாகப் பிரார்த்தனை செய்தார்.


(தொடரும்)


Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 22, 2017 09:30

April 21, 2017

பொலிக! பொலிக! 99

பிரம்மனின் முதல் நான்கு படைப்புகளுள் ஒருவரான சனத்குமாரர் பூமிக்கு வந்தபோது கால் பதித்த இடம் அது. கிருத யுகத்தில் அந்த மலையடிவாரத்தில் அவர் நாராயணனைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டதால் அம்மலைக்கு அன்று நாராயணாத்ரி என்று பெயர். திரேதா யுகத்தில் நான்கு வேதபுருஷர்களையும் நான்கு சீடர்களாக வரித்துக்கொண்டு அங்கே வந்து வாசம் செய்தார் தத்தாத்ரேயர். மாபெரும் யோகி. அவர் அமர்ந்த இடத்தின் அருகிருந்த நீர்நிலை என்பதாலேயே அது வேத புஷ்கரணி என்று அழைக்கப்படலாயிற்று. மலையும் வேதாத்ரி என அப்போது வழங்கப்பட்டது. துவாபர யுகத்தில் மாடு மேய்த்துக்கொண்டு கண்ணனே அங்கு வந்தான். சனத்குமாரர் பிரதிஷ்டை செய்த நாராயண மூர்த்தியை அவனே வணங்கி ஆராதித்துவிட்டுப் போனான். யாதவ குலக்கொழுந்தின் வருகை அந்த மலையை யாதவாத்ரி ஆக்கியது. ஏதோ ஒரு மலையடிவாரம், எப்படியோ அங்கு திருமண் கிடைக்கிறது என்று கிளம்பி வரவில்லை. அனைத்தும் பெருமானால் திட்டமிடப்படுகிறது. நாம் யார்? சொன்னதைச் செய்யும் வேலையாள் என்பதைத் தவிர?


ராமானுஜர் திருநாராயணபுரத்தின் பூர்வ கதையைச் சொல்லிக்கொண்டிருந்தார். துக்கமும் ஆனந்தமும் ஒருசேரத் தாக்கியிருந்த நிலையில், பேசச் சொல்லின்றிக் கேட்டுக்கொண்டிருந்தார் டெல்லி சுல்தான்.


‘சுல்தானே, உன் மகள் உன்னைவிட்டுப் பிரிந்த துக்கம் சிறிது காலம் இருக்கத்தான் செய்யும். ஆனால் இந்த உலகில் யாருக்குமே கிடைக்காத புருஷோத்தமன் அவளுக்குக் கணவனாகக் கிடைத்திருக்கிறான். நீ பரமாத்மாவுக்கு மாமனாராகியிருப்பவன். அதை எண்ணிப் பார்!’ என்றார் ராமானுஜர்.


‘புரிகிறது ஐயா. அவளது தெய்வீகக் காதலை நான் அறிவேன். ஆனால் குழந்தைதானே, வளர்ந்தால் சரியாகிவிடுவாள் என்று நினைத்தேன். அவளது காதல் பெருமான் உள்ளம்வரை சென்று தைத்திருக்கிறது என்பது பெருமையாகவும் நம்பமுடியாததாகவும் இருக்கிறது.’


‘இது நம்பமுடியாததல்ல மன்னா. எங்கள் ஊரிலும் ஒருத்தி இருந்தாள். கோதை என்று பெயர். பரிசுத்தமான அவளது பிரேம பக்தியே அவளை நாராயணனின் நெஞ்சக்கமலத்தில் கொண்டு சேர்த்தது.’


‘அப்படியா!’ என்றான் சுல்தான்.


‘இன்னொன்று தெரியுமா உங்களுக்கு? அந்தக் கோதை எங்கள் உடையவரின் தங்கை!’ என்றார் முதலியாண்டான். திடுக்கிட்டு உடையவரைப் பார்த்த சுல்தான் கண்ணில் மாளாத வியப்பு.


‘ஆச்சரியப்படாதீர்கள் சுல்தானே. தங்கைதான். ஆனால் இவருக்கு ஐந்நூறு வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தவள்.’


‘புரியவில்லையே ஐயா?’


‘சொல்கிறேன். வில்லிபுத்தூரில் பிறந்து அரங்கப் பெருமான் மீது மாளாத காதல் கொண்ட ஆண்டாள் அரங்கனோடு இரண்டறக் கலந்து போனவள். அவளுக்கு ஒரு ஆசை இருந்தது. பெருமானுக்கு நூறு அண்டாக்கள் நிறைய அமுது செய்து சமர்ப்பிக்கும் ஆசை. சிறுமியால் அன்று அதெல்லாம் எப்படி முடியும்? அந்த ஆசை நிறைவேறும் முன்னரே அவள் அரங்கனோடு இணைந்துவிட்டாள். சில வருடங்களுக்கு முன்னர் எங்கள் உடையவர் திருமாலிருஞ்சோலைக்க யாத்திரை சென்றபோது கோதையின் கனவை நிறைவேற்றி வைத்தார். நூறு தடாய் நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன் என்று அவள் பாடியதைச் செய்து முடித்தவர் இவர்!’


‘அப்படியா?’


‘அதோடு முடியவில்லை. தன் விருப்பத்தை ஒரு தமையன் ஸ்தானத்தில் இருந்து நிறைவேற்றிய உடையவர், வில்லிபுத்தூரில் தனது சந்நிதிக்கு வந்தபோது, கருவறைக்குள் இருந்து எழுந்து வந்து அண்ணா என்று அவள் அழைத்ததை நாங்கள் அத்தனை பேரும் கண்ணாரக் கண்டோம் மன்னா!’


கரம் குவித்துக் கண்ணீர் உகுத்தான் சுல்தான். ஊர் திரும்பும் முன்னர் திருநாராயணபுரத்துப் பெருமாளுக்குப் பொன்னும் மணியும் அள்ளிக் கொடுத்துவிட்டுப் போனான். ‘என் மருமகன் கோயில் கொண்டிருக்கும் தலம் இது. என்றும் இந்நகரம் திருவிழாக்கோலம் கொண்டிருக்க வேண்டும்!’


அப்படித்தான் இருந்தது நகரம். எப்போதும் உற்சவம். எப்போதும் பெருமகிழ்ச்சி. எங்கு நோக்கினும் வேதபாராயணம். பாரதம் முழுவதிலும் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து குவிய ஆரம்பித்தார்கள். நடந்த சம்பவங்கள் எட்டாத இடமில்லை என்றாயிற்று.


இப்போது திருவரங்கத்தில் இருந்தவர்களுக்கும் தகவல் எட்டி, உடையவர் மேல்கோட்டையில் இருக்கிற விவரம் தெரிந்துபோனது. உடனே கிளம்பி வந்து அவரைச் சந்தித்தவர்களிடம் ராமானுஜர் ஊர் நிலவரம் விசாரித்தார்.


‘எப்படி இருக்கிறது அரங்கமாநகர்? என் கூரேசர் எப்படி இருக்கிறார்?’


‘சுவாமி, மனத்தை திடப்படுத்திக்கொள்ளுங்கள். நடக்கக்கூடாததெல்லாம் நடந்துவிட்டது அங்கே.’


‘என்ன சொல்கிறீர்கள்?’


‘ஆம் சுவாமி. சோழன் கொடுமை பொறுக்காமல் கூரேசர் தமது கண்களைத் தாமே பறித்துக்கொண்டார். சோழன் பெரிய நம்பியின் கண்களைப் பிடுங்கி எறிந்துவிட்டான். வலி பொறுக்காத அம்முதியவர் கங்கை கொண்ட சோழபுரத்துக்கு அருகே காட்டில் உள்ள திருமேனியார் கோயிலில் தன் உயிரை விட்டார்.’


‘பெருமானே! மகாபூரணரான பெரிய நம்பி பரமபதம் அடைந்துவிட்டாரா!’ மூர்ச்சையாகிப் போனார் ராமானுஜர். அவரைத் தெளிய வைத்து, ஆசுவாசப்படுத்தி நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொன்னார்கள்.


சோழனின் சபையில் இருந்து ஒரு பணிப்பெண்ணின் உதவியுடன் அத்துழாய் அவர்கள் இருவரையும் அழைத்துச் சென்றது. திருமேனியார் கோயிலைத்தாண்டி பெரிய நம்பியால் பயணம் செய்ய முடியாமல் போனது. அங்கேயே கூரத்தாழ்வான் மடியில் தலை வைத்துக் கண்மூடியது.


பேச்சற்றுப் போனார்கள் ராமானுஜரும் சீடர்களும்.


‘அது மட்டுமல்ல சுவாமி. தங்களது ஆசாரியர்களான திருக்கோட்டியூர் நம்பி, திருமாலையாண்டான், திருக்கச்சி நம்பி, அரையர் போன்றோரும் எம்பெருமான் திருவடி சேர்ந்துவிட்டார்கள். இதையெல்லாம் தங்களுக்கு எப்படித் தெரிவிப்பது என்று தெரியாமல் ஆண்டுக்கணக்காகத் தவித்துக்கொண்டிருந்தோம். தங்கள் இருப்பிடம் எங்களுக்கு இப்போதுதான் தெரியவந்தது.’


உடையவர் ஒன்றும் பேசவில்லை. மகாத்மாக்களான தமது ஆசாரியர்களுக்குத் தாம் செய்ய வேண்டிய கிரியைகளைச் செய்து முடித்தார். ‘துயரங்களில் துவள்வது வைணவன் லட்சணமல்ல. வாழ்ந்த காலத்தில் மகத்தான பணிகளை நிறைவேற்றியவர்கள் அவர்கள். எம்பெருமான் அவர்களைத் தன் பக்கத்தில் இருத்திக்கொள்ள விரும்பியதில் வியப்பென்ன?’


‘ஆனால் கூரேசர் என்ன ஆனார்? அதைச் சொல்லவில்லையே?’ என்று பதைப்புடன் கேட்டார் முதலியாண்டான்.


‘அவர் இப்போது திருவரங்கத்தில் இல்லை சுவாமி. உடையவர் இல்லாத இடத்தில் எனக்கு வேலையில்லை என்று சொல்லிவிட்டு, திருமாலிருஞ்சோலைக்குக் குடிபோய்விட்டார்.’


ராமானுஜர் உடனே தமது சீடர்களுள் ஒருவரான சிறியாண்டானை அழைத்தார். ‘உடனே மாலிருஞ்சோலைக்குக் கிளம்புங்கள். கூரேசர் எப்படி இருக்கிறார் என்று நேரில் சென்று பார்த்து வந்து தகவல் சொல்லுங்கள். நான் அவரைச் சந்தித்தாக வேண்டும்.’


சிறியாண்டான், மாலிருஞ்சோலையை அடைந்த நேரம், சோழ மன்னன் குலோத்துங்கன் இறந்துவிட்ட செய்தி அங்கு வந்து சேர்ந்தது.


(தொடரும்)


Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 21, 2017 09:30

April 20, 2017

பொலிக! பொலிக! 98

ஊர் திரண்டுவிட்டது. மன்னன் விஷ்ணுவர்த்தன் தனது முழுப் பரிவாரங்களுடன் முன்னால் வந்து நின்றான். இங்கே உடையவர். அங்கே அவர் நியமித்த சிம்மாசனாதிபதிகள். தவிரவும் கோயில் கைங்கர்யத்துக்கெனப் பிரத்தியேகமாக அவர் அமர்த்தியிருந்த ஐம்பத்தி இரண்டு பேர் கொண்ட நிர்வாகக் குழு. சீடர்களும் பக்தர்களும் முண்டியடித்தார்கள்.


ராமானுஜர் அமைதியாகப் பேச ஆரம்பித்தார். ‘மனிதர்களில் வேற்றுமை பார்ப்பதே மகாபாவம். இதில் பக்தர்களுக்குள் பிரிவினை ஏது? மண் கண்ட உயிர்கள் அனைத்தும் பரமாத்மாவின் படைப்பு. இவன் மேல் அவன் கீழ் என்பது வாழும் விதத்தால் மட்டுமே வருவது. செல்லப் பிள்ளையின் அருளாட்சி நடைபெறவிருக்கிற இத்தலத்தில் எந்நாளும் சாதிப் பிரிவினை வரக்கூடாது. கோயில் அனைவருக்கும் சொந்தம். அனைவருக்கும் கோயிலுக்குச் செல்ல உரிமை உண்டு. கைங்கர்யங்களில் பங்குண்டு!’


நாங்கள் தீண்டத்தகாதவர்கள் என்று சொல்லி ஒதுங்கி நிற்கப் பார்த்த கிராமத்து மக்கள் மெய் சிலிர்த்து நின்றார்கள். ‘ஐயா நீங்கள் யார்? இப்படிக் கடலளவு பரந்த மனம் இவ்வுலகில் வேறு யாருக்கு உண்டு? காலகாலமாகத் தீண்டத்தகாதவர் என்று சொல்லியே ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் நாங்கள். பிறர் சொன்ன வார்த்தைகள் காதில் நுழைந்து, புத்தியில் ஏறி அமர்ந்து அங்கேயே படிந்து தலைமுறை தலைமுறையாக எங்களை நாங்களே தாழ்த்திக் கருதப் பழகிப் போனோமே! அது தவறென்று இப்போதல்லவா புரிகிறது!’


‘மனத்தில் பக்தி. நடவடிக்கைகளில் ஒழுக்கம். நெஞ்சில் நேர்மை, உண்மை. துயரில் அவதிப்படும் யாரைக் கண்டாலும் ஓடோடிச் சென்று உதவுகிற சுபாவம். இவ்வளவுதான் வேண்டியது. இவை இருந்தால் நீ ஒரு வைணவன். வைணவனுக்கு இடமில்லை என்று எந்தப் பெருமான் சொல்லுவான்? வாருங்கள் கோயிலுக்கு!’


சொல்லிவிட்டு கம்பீரமாக அவர் முன்னால் நடக்க, அவர் பின்னால் திருக்குலத்தார் அத்தனை பேரும் வரிசையாக வணங்கியபடியே உள்ளே போனார்கள். உடையவரின் பரிவாரங்கள் அவர்களுக்குப் பின்னால் சென்றார்கள். அவர்களுக்கும் பின்னால் அரசன் போனான்.


அதற்குமுன் எக்காலத்திலும் எந்த தேசத்திலும் நடவாத அதிசயம் அன்று திருநாராயணபுரத்தில் நடந்தது. யாரைத் தீண்டத்தகாதவர் என்று ஒதுக்கி வைத்திருந்தார்களோ, அவர்கள் முதல் முதலில் ஆலயப் பிரவேசம் செய்தார்கள். வானம் இடிந்து விழவில்லை. வையம் புரண்டு கவிழவில்லை. காற்று வீசுவது நிற்கவில்லை. ஒளி மங்கிப் போகவில்லை. ஆலயக் கதவுகள் அகன்று திறந்தன. ‘வாரீர் என் பரம பக்தர்களே!’ என்று திருநாராயணன் அவர்களை ஏந்திக்கொண்டான்.


‘சுவாமி! இன்று புத்தி தெளிந்தோம். இனி பிரிவினை பேசமாட்டோம். பாகவத இலக்கணம் புரியவைத்த தாங்கள் இத்தலத்திலேயே தங்கியிருந்து என்றென்றும் எங்களைக் காக்க வேண்டும்!’ என்று கரம் குவித்தான் விஷ்ணுவர்த்தன்.


சட்டென்று ஒரு குரல் கலைத்தது. ‘பாகவத இலக்கணம் புரிந்தது இருக்கட்டும். என் மணாளனைக் கொள்ளையடித்துக் கொண்டு வந்து இங்கு வைத்தது எந்த விதத்தில் பாகவத தருமம்?’


சபை அதிர்ந்தது. அங்கே ஒரு பெண் நின்றிருந்தாள். பெண்ணல்ல, சிறுமி. முக்காடிட்டு முகம் மறைத்த முஸ்லிம் சிறுமி. அவள் பின்னால் டெல்லி சுல்தானின் வீரர்கள் சிலர் வேல் தாங்கி நின்றிருந்தார்கள்.


‘என்ன பிரச்னை குழந்தாய்?’ என்றார் ராமானுஜர்.


‘நீங்கள் எடுத்து வந்த விக்கிரகம் என்னுடையது. நான் இல்லாத சமயத்தில் என் தந்தையை ஏமாற்றிக் கவர்ந்து வந்துவிட்டீர்கள். என்னால் அவனை விட்டுப் பிரிய முடியாது ஐயா. தயவுசெய்து கொடுத்துவிடுங்கள்!’ என்று கண்ணீருடன் பேசினாள் அந்தச் சிறுமி.


சுல்தானின் வீரர்கள் விவரம் சொன்னார்கள். அவள் சுல்தானின் ஒரே மகள். அரண்மனையில் உள்ள அத்தனை விக்கிரகங்களுள் அந்தக் குறிப்பிட்ட விக்கிரகம்தான் அவளைக் கவர்ந்தது. நாளும் பொழுதும் அதை வைத்துக்கொண்டு அதனோடே பேசிக்கொண்டிருப்பாள். தான் உண்ணும்போது அதற்கும் உணவு ஊட்டுவாள். உறங்கும்போது அருகே கிடத்திக்கொள்வாள். தான் குளிக்குமுன் அதற்கு அபிஷேகம் செய்வாள். ஆடை அலங்காரங்கள் செய்து அழகு பார்ப்பாள். அவளுக்கு அது சிலையல்ல. விக்கிரகமல்ல. உயிரும் உணர்வும் உள்ள ஒரு மனிதன். உள்ளம் கவர்ந்த கள்வன்.


ராமானுஜர் வியந்து போனார். ‘சிறுமியே, இது இந்தக் கோயிலின் உற்சவ மூர்த்தி. யுத்தத்துக்கு வந்தபோது உன் தந்தையோ அவரது முன்னோர் யாரோ இங்கிருந்து இந்த விக்கிரகத்தைக் கவர்ந்து சென்றிருக்கிறார்கள். நீ புரிந்துகொள்ள வேண்டும்.’


‘எனக்கு அதெல்லாம் தெரியாது. இவன் என் காதலன். என்னை மணந்துகொள்வதாகச் சொல்லியிருக்கிறான். இவன் இருக்கும் இடத்தில்தான் நான் இருப்பேன். என்னோடு இவனை அனுப்பிவைக்க உங்களுக்கு விருப்பமில்லாவிட்டால், இங்கேயே நானும் இருந்துவிடுவேன்!’ என்றாள் தீர்மானமாக.


கூட்டம் குழம்பிப் போனது. இப்படியொரு சிக்கல் வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. டெல்லி சுல்தானின் மகள் விக்கிரகத்தைத் தர மறுக்கிறாள். ஏதோ ஒரு நல்ல மனநிலையில் கொடுத்தனுப்பிவிட்ட சுல்தான், இப்போது மகளையே அனுப்பி, திருப்பிக் கேட்டிருக்கிறான். மாட்டேன் என்று சொன்னால் கவர்ந்து செல்ல அவனுக்கு கணப் பொழுது போதும். முடியாது என்று மறுத்தால் யுத்தம் வரும். என்ன செய்வது?


உடையவர் யோசித்தார். ‘சிறுமியே, உன் தந்தை உள்பட அரண்மனையில் அனைவருக்கும் என்ன நடந்ததென்று தெரியும். நான் இந்த விக்கிரகத்தைக் கேட்டது உண்மை. ஆனால் என் செல்லப் பிள்ளையான இவன், தானே தவழ்ந்து வந்துதான் என்னிடம் சேர்ந்துகொண்டான். அப்படியானால் அவன் விருப்பம் என்னவென்று புரியவில்லையா?’


‘ஓஹோ. அவனே வந்து உங்கள் மடிமீது ஏறிக்கொண்டான். அவ்வளவுதானே? இதோ நானே அவனிடம் செல்கிறேன். என்னை இறக்கிவிட்டுவிடுவானா? அதையும் பார்க்கிறேன்!’ என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று சன்னிதியை நோக்கி விரைந்தாள்.


சில வினாடிகள்தாம். என்ன நடக்கிறது என்பது முழுதும் புத்தியில் தெளிவாகும் முன்னர், சன்னிதிக்குள் நுழைந்த சிறுமி, செல்லப் பிள்ளையை இறுகக் கட்டிக்கொண்டாள். ‘டேய், நீ என் சொந்தம். இவர்கள் யார் நம்மைப் பிரிப்பதற்கு? எடுத்துச் சொல்லு உன் ராமானுஜருக்கு!’ என்று ஆவேசமாகக் கூறியபடியே விக்கிரகத்தின்மீது தன் பிடியை இறுக்கினாள்.


அடுத்த வினாடி அவள் விக்கிரகத்துக்குள் ஒடுங்கிக் கரைந்து காணாமல் போனாள்!


உடையவர் கரம் கூப்பினார். ‘இது அவன் சித்தம். சொன்னேனல்லவா? பக்தி நெஞ்சுக்கு பேதமில்லை. சுல்தான் மகளானால் என்ன? அவள் நம் பெருமானின் நாயகி. இனி பீபி நாச்சியாராக அவளும் இங்கு கோயில் கொள்ளுவாள்!’


(தொடரும்)


Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 20, 2017 19:29

April 19, 2017

பொலிக! பொலிக! 97

‘ஆம். நீங்கள் சொல்லுவது சரி. இந்தப் பகுதியில் ஒரு பெரும் படையெடுப்பு நிகழ்ந்தது. வருடங்கள் ஆகிவிட்டாலும் அதன் வடுக்கள் மறையவேயில்லை. திருநாராயணப் பெருமாளின் உற்சவ மூர்த்தி மட்டுமல்ல. பிராந்தியத்தில் உள்ள பல கோயில்களில் இருந்தும் விக்கிரகங்களை டெல்லீசன் கவர்ந்து சென்றுவிட்டான்!’ என்று வருத்தத்துடன் பேசினான் விஷ்ணுவர்த்தன்.


உடையவர் புன்னகை செய்தார். ‘அப்பனே, முகமதிய மன்னனை டெல்லியின் ஈசனாக்கிக் குறிப்பிட்ட உன் சுபாவத்தை ரசிக்கிறேன். ஆனால் உற்சவர் விக்கிரகம் இல்லாமல் நாம் விழாக்களை நடத்த முடியாது. பெருமாள் கோயில் என்றால் வீதி வலம் மிக முக்கியம். நான் டெல்லிக்குப் புறப்படுகிறேன்’ என்றார் ராமானுஜர்.


மன்னன் தன் வீரர்கள் சிலரைத் துணைக்கு அனுப்பிவைத்தான். உடையவரின் சீடர்கள் ஒட்டுமொத்தமாகத் திரண்டு கிளம்பினார்கள். ஒருபுறம் தனக்குப் பிறகும் வைணவ தருமம் தழைக்கவென்று உடையவர் உருவாக்கி நியமித்து வைத்திருந்த எழுபத்தி நான்கு சிம்மாசனாதிபதிகள். மறுபுறம் ஹொய்சள தேசத்தில் அவருக்குச் சேர்ந்திருந்த ஆயிரக்கணக்கான புதிய பக்தர்கள். அத்தனை பேரும் உடன் புறப்பட்டு மாபெரும் ஊர்வலமாக அவர்கள் டெல்லிக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.


டெல்லி சுல்தான் திகைத்துப் போனான். இத்தனை பேரா! ஒரு படையே போலல்லவா திரண்டு வந்திருக்கிறார்கள்? அத்தனையும் ஒரு சிலைக்காகவா!


‘மன்னா, பெருமானின் விக்கிரகம் தங்கள் அரண்மனையில் ஓர் அலங்காரப் பொருளாக இருக்கக்கூடும். ஆனால் அவர் எங்கள் கோயிலில் குடிகொள்ள வேண்டிய பெருந்தெய்வம். தயவுசெய்து அதைக் கொடுத்து உதவுங்கள்!’


சுல்தானுக்கு ராமானுஜரைப் பற்றித் தெரிந்திருந்தது. காஷ்மீரத்துப் பண்டிதர்களும் மன்னனும் அந்தப் பிராந்தியங்களில் அவரைப் பற்றி ஏராளமாகப் பேசியிருந்தது அவன் காதிலும் விழுந்திருந்தது. கேவலம் ஒரு சிலைக்காக இத்தனை பேர் திரண்டு வந்திருக்கிறார்களே என்று அவனுக்கு வியப்பாக இருந்தது. சின்ன விஷயம்தானே? சரி பரவாயில்லை என்று நினைத்தான்.


‘இங்கே ஏராளமான சிலைகள் இருக்கின்றன. அவை என் மகளுக்கு விளையாட்டுப் பொருள்கள். உங்களுடைய சிலை எதுவென்று தேடி எடுத்துக்கொள்ளுங்கள்!’ என்றான் சுல்தான்.


திறந்துவிடப்பட்ட மாபெரும் மண்டபத்தில் நூற்றுக்கணக்கான விக்கிரகங்களும் சிலைகளும் மலையெனக் குவிந்திருப்பதை ராமானுஜர் பார்த்தார்.


‘அதோ, நமது உற்சவர்!’ உடன் வந்திருந்த ஹொய்சள தேசத்து மூத்த குடி ஒருவர் அடையாளம் காட்ட, உடையவர் அந்த விக்கிரகத்தை எடுக்கப் போனார்.


‘பெரியவரே, ஒரு நிமிடம். நீங்கள் விரும்பும் சிலை அதுதான் என்பதை நான் எப்படி அறிவது?’


‘எப்படி அறிய விரும்புகிறாயோ, அப்படியே அறியலாம்.’ என்றார் ராமானுஜர்.


‘சரி, உங்கள் பெருமாளை நீங்கள் கூப்பிடுங்கள். அவராக வந்து உம்மிடம் சேருகிறாரா பார்க்கிறேன்!’


சற்றும் தயங்காமல், ‘சரி, அப்படியே!’ என்றார் ராமானுஜர். கண்மூடி, கணப் பொழுது தியானித்தார். கண்ணைத் திறந்து, ‘என் செல்லப் பிள்ளையே, வா என்னிடம்!’ என்று கூப்பிட்டார்.


அந்த அதிசயம் அப்போது நிகழ்ந்தது. அரங்கில் நிறைந்திருந்த நூற்றுக்கணக்கான விக்கிரகங்களுள், திருநாராயணபுரத்து உற்சவர் விக்கிரகம் அப்படியே ஒரு சிறு குழந்தையாக உருவெடுத்துத் தவழ்ந்து வந்தது. மன்னன் திகைத்துப் போனான். அமைச்சர்கள் வெலவெலத்துப் போனார்கள். உடையவரின் சீடர்களும் பக்தர்களும் பரவசத்தில் திக்குமுக்காடி நின்றார்கள்.


தவழ்ந்து வந்த குழந்தை உடையவரின் மடியில் ஏறிய மறுகணமே பழையபடி விக்கிரகமாகிப் போனது. மன்னன் பேச்சுமூச்சில்லாது போனான். ‘இதற்குமேல் நான் சொல்ல ஒன்றுமில்லை ஐயா. நீங்கள் விக்கிரகத்துடன் புறப்படலாம்!’ என்று வணங்கி வழிவிட்டான்.


வந்த காரியம் சரியாக நடந்தேறிய மகிழ்ச்சியுடன் ராமானுஜர் புறப்பட்டார். திரும்பிய வழியில் அடர்ந்த காடொன்றில் ஓரிரவு தங்கும்படி ஆனது.


‘சுவாமி, இங்கு தங்குவது நமக்குப் பாதுகாப்பல்ல. கள்வர் பயம் மிகுந்த பிராந்தியம் இது.’ வீரன் ஒருவன் எச்சரித்தான்.


‘கள்வர் வந்தால் வரட்டுமே. எடுத்துச் செல்ல நம்மிடம் என்ன இருக்கிறது?’


‘அப்படி இல்லை சுவாமி. உற்சவ மூர்த்தி சேதாரமின்றி ஊர் சென்றடைய வேண்டுமே.’


‘அவனை நாம் காப்பாற்றுவதா! நல்ல நகைச்சுவை. நம்மைச் சேர்த்து அவன் காப்பான். கவலையின்றி நிம்மதியாக உறங்குங்கள்!’ என்றார் உடையவர்.


ஆனால் அன்றிரவு அவர்களால் அப்படி நிம்மதியாக உறங்க முடியவில்லை. சொல்லி வைத்த மாதிரி ஒரு பெரும் கள்வர் கூட்டம் ஆயுதங்களுடன் அவர்கள் தங்கியிருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தது.


‘யாரும் தப்பிக்க நினைக்காதீர்கள். கையில் உள்ள அனைத்தையும் ஒப்படைக்காவிட்டால் ஒரு உயிரும் தங்காது!’ கர்ஜித்த குரலில் கலங்கிப் போன பக்தர்கள் அபயம் கேட்டு அலற ஆரம்பித்தார்கள். கோபமடைந்த கள்வர்கள் அவர்களைக் கண்மண் தெரியாமல் தாக்க ஆரம்பிக்க, அலறல் சத்தம் மேலும் அதிகரித்தது.


‘எம்பெருமானே, இதென்ன சோதனை!’ என்று ராமானுஜர் திகைத்து நின்றபோது சத்தம் கேட்டு அந்த இடத்துக்குச் சிறிது தொலைவில் குடியிருந்த மக்கள் தீப்பந்தங்களுடனும் சிறு ஆயுதங்களுடனும் ஓடி வந்தார்கள். யாரோ வழிப்போக்கர்களைச் சூறையாட நினைக்கிற கள்வர்கள். இன்று அவர்களை ஒரு வழி பண்ணாமல் விடுவதில்லை என்று வெறி கொண்டு தாக்க ஆரம்பித்தார்கள்.


சில மணி நேரம் இரு தரப்புக்கும் பலத்த சண்டை ஏற்பட்டது. இறுதியில் கிராமத்து மக்கள் கள்வர்களை அடித்துத் துரத்தி, ராமானுஜரையும் பக்தர்களையும் பத்திரமாகக் காப்பாற்றி அழைத்துப் போனார்கள்.


‘ஐயா, நீங்கள் எங்கே செல்ல வேண்டும்?’


‘ஹொய்சள தேசம். மேல்கோட்டை நகரம்.’


‘நல்லது. நாங்கள் உங்களுக்குத் துணைக்கு வருகிறோம்!’ என்று சொல்லி திருநாராயணபுரம் வரை உடன் நடந்து வந்தார்கள். வழி முழுதும் அவர்களுக்கு உடையவரைப் பற்றியும் திருநாராயணபுரத்தில் எழுந்துள்ள ஆலயத்தைப் பற்றியும், டெல்லிக்குச் சென்று உற்சவ மூர்த்தியைப் பெற்று வந்தது பற்றியும் உடையவரின் சீடர்கள் சொல்லிக்கொண்டே வந்தார்கள்.


ஊர் வந்து சேர்ந்ததும், ‘நல்லது ஐயா. நாங்கள் கிளம்புகிறோம்’ என்றார்கள் அந்த மக்கள்.


‘இத்தனை தூரம் வந்துவிட்டு கோயிலுக்கு வராமல் போவதா? அதெல்லாம் முடியாது!’ என்றார் ராமானுஜர்.


‘அதெப்படி ஐயா முடியும்? நாங்கள் தீண்டத்தகாதவர்கள். கோயிலுக்குள் நுழைந்தால் பாவமல்லவா!’


துடித்துப் போனார் ராமானுஜர். ‘யார் சொன்னது? பரம பாகவதர்களைக் காப்பாற்றிக் கரை சேர்த்த நீங்களும் பாகவத உத்தமர்கள். எம்பெருமான் திருமுன் உமக்கில்லாத இடம் வேறு யாருக்கு உண்டு? வாருங்கள் என்னோடு!’


அதுவரை சரித்திரம் காணாத அச்சம்பவம் அன்று நடந்தேறியது.


(தொடரும்)


Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 19, 2017 09:30

ஒரு விளக்கம்

ட்விட்டரில் நண்பர் அலெக்ஸ் பாண்டியன் ஒரு வினாவை எழுப்பியிருந்தார். ராமானுஜரின் காலம் கிபி 1017 – 1137. டெல்லியில் சுல்தான்கள் ஆட்சிக்கு வந்தது, 1192ல். அப்படி இருக்க, 1101-1104 காலக்கட்டத்தில் ராமானுஜர் எந்த டெல்லி சுல்தானைச் சந்தித்திருக்க முடியும்? [ சுட்டி இங்கே]


ராமானுஜர் டெல்லி சென்ற சம்பவத்தை விவரிக்கும்போது எனக்கும் இச்சந்தேகம் வந்தது.


ராமானுஜர் டெல்லிக்குச் சென்றதாகச் சொல்லப்படும் 1101-1104 காலக்கட்டத்தில் டெல்லியை ஆண்டது விஜய பாலா என்கிற மன்னன். சரித்திரம் பொதுவாக ஒப்புக்கொண்ட தகவல் இது. 1105ல் மகி பாலா என்கிற மன்னன் பட்டத்துக்கு வருகிறான்.  இடைப்பட்ட காலத்தில் (இது மிகச் சிறியதாகவே இருக்கவேண்டும்) யாராவது முகம்மதிய மன்னன் வந்து போயிருக்கலாம். அல்லது வந்தவன் மதமாற்றம் கண்டிருக்கலாம். ஒருவேளை வடக்கே ராமானுஜர் வேறெங்காவதும் சென்றிருக்கக்கூடும். டெல்லி என்ற பொதுவான அடையாளம் யாராலேனும் முன்மொழியப்பட்டு அதுவே பின்பற்றப்பட்டிருக்கலாம். கடைசிச் சாத்தியம், மேற்படி விஜய பாலாவின் காலத்திலேயே சுற்றுவட்டாரத்தில் யாராவது தளபதி அல்லது குறுநில மன்னன் முஸ்லிமாக இருந்திருக்கலாம். சரித்திரப்படி அந்தக் காலக்கட்டத்தில் அங்கே சுல்தானியர் ஆட்சி இல்லை.


ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றில் ஆண்டுத் தெளிவு பல இடங்களில் சரியாக இல்லை. சரித்திர ரீதியில் அவரது வாழ்க்கை வரலாறை எழுதுவதென்றால் இச்சரிதம் முற்றிலும் வேறொரு விதமாகத்தான் இருக்கும். சிதம்பரம் கோவிந்தராஜரை அவர் திருப்பதியில் பிரதிஷ்டை செய்து கோயில் அமைத்த காலக்கட்டம் தொடர்பாகவே இருவேறு தகவல்கள் உலவுகின்றன. ஶ்ரீபாஷ்யம் செய்து முடித்த பின்பு மேற்கொண்ட திக்விஜயத்தின் இறுதியில் அச்சம்பவம் நடந்ததென்றும், மேல்கோட்டையில் இருந்து அவர் திருவரங்கம் திரும்பிய பின்பு மீண்டும் திருமலைக்கு ஒரு யாத்திரை மேற்கொண்டு இதனை நடத்தி வைத்தார் என்றும் இரு விதமாகக் குறிப்பிடப்படுகின்றன.


இதைப் போலவே திருவரங்கத்தில் இருந்து இடம் பெயர்ந்து அவர் திருவெள்ளறையில் இரண்டு ஆண்டுகள் தங்கியிருக்கிறார் என்பதற்கும் தகுந்த ஆதாரங்கள் இல்லை. கோயிலொழுகில் குறிப்பிடப்படுகிற இச்சம்பவம் வேறெந்த வரலாற்றாசிரியராலும் சொல்லப்படவில்லை.


கோயிலொழுகு, பிரபன்னாமிர்தம் தொடங்கி, இன்று நமக்குக் கிடைக்கும் ராமானுஜர் சரித்திரம் அடங்கிய பிரதிகள் அனைத்தும் இந்தக் காலக் கணக்கைப் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை என்பதால் ஆண்டுத்தெளிவு சாத்தியமில்லாமல் இருக்கிறது. பின்னாளில் வந்த வாழ்க்கை வரலாற்றாசிரியர்கள் அனைவருக்குமே இப்பிரதிகள்தாம் மூல நூல்களாக இருந்திருக்கின்றன. எனவே அவர்களும் அதனை அடியொற்றியே அவரது வரலாறை எழுதினார்கள்.


என் நோக்கம், ராமானுஜரின் வாழ்வையும் பணிகளையும் பற்றி அவரைச் சற்றும் அறியாத ஒரு பெரும் சமூகத்துக்கு எளிமையாக அறிமுகப்படுத்துவது மட்டுமே. முழுமையான வரலாற்று நோக்கில் இன்னொரு நூல் எழுதுவதற்கான அனைத்து சாத்தியங்களும் இந்த இயலில் இருக்கின்றன.


Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 19, 2017 07:39

April 18, 2017

பொலிக! பொலிக! 96

யாதவாசலம் என்று அந்தக் குன்றுக்குப் பெயர். யதுகிரி என்றும் சொல்லுவார்கள். சட்டென்று அங்கே கிளம்பிப் போகவேண்டும் என்று ராமானுஜர் சொன்னபோது மன்னன் விஷ்ணுவர்த்தனுக்கு ஒன்றும் புரியவில்லை.


‘அது பெரும் காடாயிற்றே. இங்கிருந்து சென்றடையவே பல நாள் பிடிக்குமே சுவாமி?’


‘அதனால் பரவாயில்லை மன்னா. வைணவர்கள் திருமண் காப்பின்றி இருக்கக்கூடாது. பரமாத்மாவான ஶ்ரீமன் நாராயணனின் பாதங்களைக் குறிப்பது அது. மண்ணிலேயே பரிசுத்தமானது. என்றோ ஒருநாள் இவ்வுடல் மண்ணோடு மண்ணாகும்போது நாம் நெற்றியில் தரிக்கும் திருமண் காப்பு நம்மைப் பரமனின் அடியார்களென்று நிலமகளுக்கு எடுத்துச் சொல்லும். அவன் பாதம் பற்றிய நம்மைப் பரமபத வாயிலுக்கு இட்டுச் செல்லும்.’


‘சரி, அப்படியானால் நானும் தங்களுடன் வருகிறேன்’ என்றான் விஷ்ணுவர்த்தன்.


மன்னனே கிளம்புகிறான் என்பதால் வீரர்கள் முன்னால் சென்று பாதை அமைத்துக்கொண்டே போனார்கள். ஒரு வாரப் பயணத்தின் இறுதியில் யதுகிரியை அடைந்தார்கள். அன்று பகுதான்ய வருடத்தின் தைமாதப் பிறப்பு. வேத புஷ்கரணியின் கரைக்கு வந்து நின்ற ராமானுஜர் கைகூப்பி வணங்கினார். கனவில் பெருமான் குறிப்பிட்ட இடத்தை உற்று நோக்கினார். ‘ஆ, அதோ பாருங்கள்! மேலே கருடன் பறக்கிறது!’ என்றான் ஒரு வீரன். ராமானுஜர் நிமிர்ந்து பார்த்தார். அவருக்கு அனைத்தும் புரிந்தது.


அது புள்ளரையன் கோயில். எம்பெருமான் உத்தரவின் பேரில் ஸ்வேதத்வீபத்தில் இருந்து கருடன் எடுத்து வந்து சேர்த்த பரிசுத்தமான மண்.


‘புரியவில்லையே சுவாமி! ஸ்வேதத்வீபம் என்றால்?’


 


‘எம்பெருமான் பிரம்ம வித்யையை அறியத் தவம் இருந்த தீவு அது. பாற்கடலுக்கு வடக்கே வெகு தொலைவில் உள்ள இடம்.’


‘யாருமற்ற தீவா?’


‘கண்டவர் நம்மில் யாரும் இல்லை. ஆனால் வேதங்களில் அந்தத் தீவைப் பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தெய்வ நிலை அடைந்த பல மெய்ஞானிகள் அங்கு உண்டு. அவர்களுக்கு உணர்ச்சி கிடையாது. பசி தாகம் கிடையாது. உறக்கமோ விழிப்போ கிடையாது. பாவமற்ற பரிசுத்தமான ஆத்மாக்களான அவர்களின் தேகங்களில் இருந்து தெய்வீக மணம் வீசும். நான்கு கரங்களும் அறுபது பற்களும் கொண்டவர்கள் அவர்கள்.’


‘கேட்கும்போதே சிலிர்க்கிறதே. அந்தத் தீவில் இருந்து எடுத்து வரப்பட்ட மண்ணா இது?’


‘ஆம். கருடாழ்வார் எடுத்து வந்து சேமித்து வைத்திருக்கிறார்.’ என்றவர், சட்டென்று தமது திரிதண்டத்தால் அந்த இடத்தைத் தொட்டு சிறிதாகக் குத்தினார். வறண்டு, இறுகிக் கிடந்த அந்த இடத்தின் மேற்புறம் மறுகணம் நெகிழ்ந்து கொடுத்தது. வீரர்கள் உடனே அங்கு குவிந்து கரங்களால் தோண்ட ஆரம்பித்தார்கள்.


தோண்டத்தோண்ட மண்ணின் தோற்றம் மாறிக்கொண்டே வந்தது. அதன் பழுப்பு மெல்ல மெல்ல உதிர்ந்து வெண்மை நிறம் காட்டத் தொடங்கியதும் வீரர்கள் உற்சாகமாகி மேலும் வேகமாகத் தோண்டினார்கள். சரேலென்று ஒரு கட்டத்தில் மண்ணின் நிறம் முழு வெண்மையாக இருப்பதைக் கண்டார்கள்.


‘இதோ திருமண்! இதுதான் திருமண்! இந்த உலகில் இதனைக் காட்டிலும் தெய்வீகமான மண் வேறில்லை. இந்த இடத்தில் இது யுகம் யுகமாக இருந்து வருகிறது. இனி எத்தனை ஆயிரம், எத்தனை லட்சம் வைணவர்கள் வந்தாலும் அவர்களின் நெற்றியை அலங்கரிக்க இம்மண் வற்றாது தோன்றியபடியே இருக்கும்!’ என்று உணர்ச்சிவசப்பட்டுச் சொன்னார் ராமானுஜர்.


விஷ்ணுவர்த்தனின் வீரர்கள் அங்கே சேகரித்த திருமண்ணை கவனமாகக் கூடைகளில் எடுத்துக்கொண்டார்கள். மறுநாள், அடுத்த நாள், அதற்கடுத்த நாள் என்று திருமண் சேகரிக்கும் பணி தொடர்ந்துகொண்டே இருந்தது.


ஒருநாள் காலை குளித்து, பூஜை முடித்து, திருமண் சேகரிக்க அந்த இடத்துக்கு வரும்போது ஓரிடத்தில் புற்று ஒன்று இருப்பதை உடையவர் கண்டார். அதனைச் சுற்றி துளசி வளர்ந்திருந்தது. ஒரு கணம்தான். அவர் மனத்தில் ஏதோ பட்டது. புற்றும் துளசியும். கையெட்டும் தூரத்தில் திருமண் வேறு தோண்டத்தோண்டக் கிடைத்துக்கொண்டே இருக்கிறது. அப்படியானால்?


‘மன்னா நில்!’ என்றவர், தமது திரிதண்டத்தால் அந்தப் புற்றைத் தொட்டுக் காட்டினார்.


‘சுவாமி? இது வெறும் புற்று.’


‘ஆனால் எனக்கென்னவோ உள்ளே இருப்பது ஆதிசேஷனாகத் தோன்றவில்லை. அவன்மீது சயனிப்பவனே இங்கு இருக்கிறான் என்கிறேன். பார்த்துவிடலாமா?’


யாருக்கும் எதுவும் புரியவில்லை. அடுத்தடுத்து நிகழும் அதிசயங்கள் அளித்த பரவசத்தில் இருந்தார்கள். உடையவர் சொன்னால் செய்துவிட வேண்டியதுதான். உத்தரவிடுங்கள் சுவாமி.


அந்தப் புற்றை அகழ்ந்தபோது அந்த அதிசயம் நிகழ்ந்தது.


யதுகிரி நாயகன் அந்த இடத்தில் மண்ணுக்கடியில் மோனத்தவம் இருந்துகொண்டிருந்தான். ‘ஆஹா! ஆஹா!’ என்று தலைக்குமேல் கரம் கூப்பிக் கூத்தாடினான் விஷ்ணுவர்த்தன். வீரர்கள் திகைத்துப் போய் கைகட்டி நின்றார்கள்.


‘விஷ்ணுவர்த்தா! நீ புண்ணியம் செய்தவன். உனக்கு முன் எத்தனையோ மன்னர்கள் இங்கு ஆண்டிருக்கிறார்கள். ஆனால் உன் காலத்தில்தான் எம்பெருமான் தன்னை இங்கே வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறான். இனி நீ என்ன செய்யப் போகிறாய்?’


கிறுகிறுத்துப் போயிருந்த மன்னன் உடனே தன் வீரர்களை அழைத்தான். தலைநகருக்குச் செய்தி அனுப்பி மேலும் ஆயிரமாயிரம் வீரர்களையும் தொழிலாளர்களையும் அங்கு வரச் சொல்லி உத்தரவிட்டான்.


‘சுவாமி, இந்த நாள் என் வாழ்வின் பொன்னாள். இந்த இடத்தில் நான் இப்பெருமானுக்குக் கோயில் எடுப்பேன். என்றென்றும் உற்சவங்கள் தங்குதடையின்றி நடைபெற வழி செய்வேன். எதை எப்படிச் செய்ய வேண்டும் என்று மட்டும் நீங்கள் பக்கத்தில் இருந்து சொல்லிக் கொடுங்கள்!’ என்றான் மன்னன்.


உடையவர் மூன்று நாள்களுக்குப் பெருமானைத் தன்னுடனேயே வைத்துக்கொண்டார். பாலால் திருமஞ்சனம் செய்து, தியானித்தார். மறுபுறம் காட்டைத் திருத்தும் பணிகள் ஆரம்பித்து வேகமெடுத்தன. கண்ணெதிரே ஒரு குன்றம் சார்ந்த நகரம் உருவானது. மக்கள் தேடித்தேடி வந்தார்கள். கோயில் எழுந்தது. உடையவர் தாம் கண்டெடுத்த பெருமானை அங்கு கொண்டு பிரதிஷ்டை செய்தார். ஆலயக் குடமுழுக்கும் ஆகம கைங்கர்யங்களும் செம்மையாக நடந்தேறின.


‘உடையவரே, இந்நகருக்கு ஒரு பெயர் சூட்டுங்கள்’ என்று கேட்டுக்கொண்டான் விஷ்ணுவர்த்தன்.


‘நாராயணன் வந்துதித்த தலமல்லவா? திருநாராயணபுரம் என்பதே இந்நகரின் பெயராக இருக்கட்டும்’ என்றார் ராமானுஜர்.


மூலவர் கிடைத்துவிட்டார். ஒரு பிரம்மோற்சவம் நடத்தலாம் என்றால் உற்சவர் விக்கிரகம் வேண்டுமே?


உடையவர் மனத்தில் ஒரு சொல்லாக உற்சவர் உதித்தார்.


‘நான் ராமப்ரியன். டெல்லி சுல்தான் அரண்மனையில் இப்போது இருக்கிறேன்.’


(தொடரும்)


Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 18, 2017 09:30

April 17, 2017

அவனேதானாயிடுக

பிரபன்னாமிர்தம் என்னும் குரு பரம்பரை நூலை வாசித்துக்கொண்டிருந்தபோது ஒரு விஷயம் தோன்றியது.


‘நானே கடவுள்’ என்று சொல்லிக்கொள்கிற யாரையும் மக்கள் நம்புவதில்லை.  பெருமானையே நேருக்கு நேர் சந்தித்துவிட நேர்ந்தாலும் அவநம்பிக்கைதான் முதலில் எழும். ஒருவேளை ஆர்.எஸ். மனோகர் குழுவில் உறுப்பினராக இருந்திருப்பாரோ என்று எண்ணத் தோன்றும்.


நமது பிறப்பு அப்படி.


ஒன்றும் பிழையில்லை என்று வையுங்கள். அறிவும் மெய்யறிவும் எதிரெதிர் திசையில் பயணம் செய்வது இக்காலத்தின் இலக்கணமே. இது எம்பெருமானுக்கு மட்டும் தெரியாதா என்ன?


தெரியாமல்தான் இருந்திருக்கிறது என்பது ஒரு கதையில் தெரியவந்தது.


ராமானுஜர் திருக்குறுங்குடிக்குப் போயிருந்தபோது, குறுங்குடி நம்பி ஒரு சமாசாரம் கேட்கிறான். ‘சுவாமி, உம்மை ஒன்று கேட்க வேண்டும். நானும் எத்தனையோ காலமாக எவ்வளவோ நல்ல விஷயங்களைச் சொல்லிக்கொண்டுதான் வருகிறேன். ராமாவதாரத்தில் வாழ்ந்தே காட்டினேன். ஒரு பயல் புரிந்துகொள்ளவில்லை. கிருஷ்ணாவதாரத்தில் நட்டநடு யுத்தக் களத்தில் நிறுத்திவைத்துப் பாடம் எடுத்தேன். யாரும் மதிக்கவில்லை. ஒவ்வொரு அவதாரத்திலும் என்னவாவது சொல்லிக்கொடுத்து திருத்திப் பணி கொள்ள முடியாதா என்று பார்த்துக்கொண்டேதான் இருக்கிறேன். யாரும் மதிக்கவே மாட்டேனென்கிறார்கள். நீங்கள் மட்டும் எப்படி ஜனங்களை இழுத்து வைத்துக்கொண்டு சாதித்துவிடுகிறீர்கள்? நீங்கள் என்ன சொன்னாலும் கேட்கிறார்களே! நான் கூப்பிட்டு என் பக்கம் திரும்பாதவர்களெல்லாம், நீங்கள் சுட்டிக்காட்டிய பிறகு இந்தப் பக்கம் வருவதன் மாயம் என்ன?’


‘நல்ல கேள்விதான். ஆனால் உபதேசமாக அல்லவா கேட்கிறீர்? எனவே கேட்கும் விதத்தில் கேளும்’ என்றார் ராமானுஜர்.


உடனே பெருமான் அவருக்கு ஒரு பீடம் தருவித்து அமர வைத்து, தன் பீடத்தில் இருந்து இறங்கி வந்து பவ்யமாக, சிஷ்ய பாவத்தில் கேட்க ஆரம்பித்தபோது ராமானுஜர் அந்த ரகசியத்தைச் சொன்னார்.


‘எனக்கு உமது திருநாமம் இருக்கிறது. அதை தியானம் செய்துகொண்டு, பக்தியுடன் போதிக்கிறேன். அதனால் நான் சொல்லுவதை மக்கள் கேட்கிறார்கள். உமக்கு அப்படி என்ன இருக்கிறது? நீரே பரமாத்மா என்பதை இனி நாங்கள் சுட்டிக்காட்டி, செய்யவேண்டியதைச் செய்துகொள்கிறோம். வந்து சேருவோரை நீர் அரவணைத்து அருளாசி வழங்குங்கள்; அது போதும்!’ என்றிருக்கிறார்.


பகவானைவிட பகவான் திருநாமத்துக்கு சக்தி அதிகம் என்பதல்ல இதன் செய்தி. பகவானே ஆனாலும் நான் தான் கடவுள் என்று சொல்லிக்கொள்வதைவிட, இவந்தான் கடவுள் என்று இன்னொரு பொருத்தமான நபர் சுட்டிக்காட்டுவதே பலனளிக்கும் என்பதே செய்தி.


Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 17, 2017 21:50