Pa Raghavan's Blog, page 3

June 26, 2025

அப்பா பக்கம்

Pa Raghavan

நேற்று, திரை உலக நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது தற்செயலாக ராமச்சந்திர குஹாவின் இந்திய வரலாறு – காந்திக்குப் பிறகு நூலின் மொழிபெயர்ப்பு குறித்துப் பேச்சு வந்தது. அந்நூலின் இரண்டு பாகங்களையும் மொழிபெயர்த்தவர் என் தந்தைதான் என்று நான் சொன்னபோது அவர் சிறிது திகைத்தார். அவரைக் குறித்து மேலும் சில விவரங்கள் கேட்டறிந்த பிறகு, ‘நீங்கள் அவரைக் குறித்து எழுதியிருக்கிறீர்களா?’ என்று கேட்டார்.

அப்பாவைப் பற்றி நான் இரண்டு கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். (பார்த்தசாரதிகளின் கதை | ஒரே ஒரு அறிவுரை.) மற்றபடி தேவைப்படும் இடங்களில் துண்டுத் துண்டாகச் சில தகவல்கள் சேர்த்திருப்பேன். சில கதைகளில் அவர் கதாபாத்திரமாக வருவார். அவ்வளவுதான். (மிருது நாவலில் வருகிற அப்பாவில் சுமார் அறுபது சதவீதம் அவர்தான்.)

அவருக்கொரு இணையப்பக்கம் ஆரம்பிக்கலாம் என்று முன்னர் நினைத்து அதற்காக முயற்சி செய்தேன். சில தொழில்நுட்பக் காரணங்களால் அது கெட்டது. அப்படியே விடுபட்டுவிட்டது. நேற்று நண்பர் நினைவூட்டியதால், பழைய இணையப் பக்கத்தில் இருந்த கட்டுரையைச் சீர்திருத்தி, அவரது புத்தகங்களின் பட்டியலைச் சேர்த்து (முழுமையானதல்ல), இந்தத் தளத்திலேயே அவருக்கொரு பக்கம் உருவாக்கினேன். அது இங்கே உள்ளது:

வாழ்க்கைக் குறிப்பு
புத்தகப் பட்டியல்

இந்தத் தளத்தின் side bar இல் இனி இது எப்போதும் இருக்கும்.

அவருடைய புத்தகங்கள் அனைத்தையும் தேடித் தொகுத்து, செம்மையாக எடிட் செய்து ஒரே இடமாகப் பதிப்பிக்க வேண்டும் என்று அடிக்கடித் தோன்றும். வேலை நெருக்கடிகளால் அது தள்ளிக்கொண்டே போகிறது.

தனது வாழ்நாளில் பல பதிப்பாளர்களால் காலம்தோறும் கலாபூர்வமாக ஏமாற்றப்பட்டவர் அவர். ஓர் எழுத்தாளராக ராயல்டி என்ற ஒன்றை அவர் ஒழுங்காகப் பார்த்தது கிழக்கு பதிப்பகத்தில் மட்டும்தான். இன்றுவரை அங்கே அவரது புத்தகங்கள் விற்றுக்கொண்டிருக்கின்றன. அம்மாவுக்கு ராயல்டியும் வருகிறது.

ஜூலை 17, 2017 அன்று அவர் காலமானார். அடுத்த ஆண்டு ஜூலைக்குள் எப்படியாவது அவரது புத்தகங்களுக்குக் கிண்டில் பதிப்புகளையேனும் கொண்டு வந்துவிட வேண்டுமென்று நினைத்துக்கொண்டிருக்கிறேன்.

அவராவது அவனாவது ஒத்துழைக்க வேண்டும்.

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 26, 2025 18:30

June 25, 2025

யதி – பிரியதர்சினி கோபால்

Pa Raghavan

வாழ்க்கையைப்பற்றிய, உறவுகளைப்பற்றிய ஒரு குழப்ப நிலையில் நான் இருக்கும் போது ஓரிரு வருடமாக என் கையில் இருந்தும் இந்த புத்தகத்தை இப்போது ஏன் வாசிக்க வேண்டும்?

அது தான் விதி.

கதை இதுதான். திருவிடந்தை நித்யபெருமாள் கோவிலுக்கு அருகில் வசிக்கிறது ஒரு பிராமணக் குடும்பம். அம்மா அப்பா, அம்மாவின் தம்பி கேசவன் மற்றும் 4 மகன்கள். விஜய், வினய், வினோத்,விமல். அன்பான குடும்பம்தான். ஆனால் சொல்லிவைத்தார்ப்போல் 4 பேருமே ஒவ்வொரு காலக்கட்டத்தில் வீட்டைவிட்டு ஓடிப்போய் சாமியார்கள் ஆகிவிடுவார்கள். ஒவ்வொரு மகன்களாக அவர்கள் இழந்துகொண்டே இருப்பார்கள். பின்பு தனது அம்மாவின் இறப்புக்கு 4 பேரும் ஊருக்கு திரும்ப வருகிறார்கள். அவளுடைய இறுதி யாத்திரைக்கு இருந்துவிட்டு அவர்களுடைய துறவரத்தின் இறுதி கடமையாக, உறவின் கடைசி நூலிலிருந்து தங்களை விடுவித்துக்கொண்டு கிளம்பிவிகிறார்கள். இவ்வளவு தான் கதை.

ரொம்ப சுலபமா முடிச்சிட்டேன்ல்ல. ஆனா அத்தனை சுலபம் இல்லை இந்த கதையோடு நாம் போகும் பயணம். Non linear வகையில் எழுத்தப்பட்ட நாவல் இது. கடைசி மகனான விமல் கர்னாடக மாநிலத்தில் உள்ள மடிகேரியில் ஆசிரமம் நடத்தி வருகிறான். துறவியான பின்னரும் கேசவன் மாமாவோடு தொடர்பில் அவ்வப்போது இருந்து வருவதால் அம்மாவின் மோசமான உடல்னிலைபற்றி அவர் அனுப்பிய தந்தி கிடைக்கிறது. இவன் ஒருவனாவது தாய் இறக்கும் தருவாயில் அருகில் இருக்கட்டுமே என்பது அவரது எண்ணம். அது விமல் கைக்கு சேரும்போது அவன் மத்தியப்பிரதேசத்தில் இருக்க, பின்பு 10 நாட்கள் பின்பே அவன் சென்னைக்கு ரயில் ஏறுகிறான். சொல்லப்போனால் தகவல் தெரிந்து கிளம்பியவன் இவன் ஒருவன் தான். சரி அப்போ மற்றவர்கள்?

அப்படி தொடங்கியது புத்தகம். அப்பப்பா எத்தனை எத்தனை ரகசியங்கள். ஒவ்வொரு முடிச்சும் அவிழும் தருணங்கள் அனைத்தையும் ரெண்டு ரெண்டு முறை வாசித்தேன். துறவு என்பது என்ன? உறவு என்பது என்ன? விஜய் ஏன் இறுதி வரையிலும் ஒரு கேள்விக்குறியாகவே இருந்தான்? வினயால் எப்படி தப்பிக்க முடிந்தது? ஏற்கனவே ரெண்டு பிள்ளைகளை இழந்த பெற்றோர் எப்படி தன்னுடைய இழப்பையும் தாங்குவார்கள் என்று யோசித்த விமல் கூட சென்றானே ஏன்? மூவரும் ஏமாற்றிய பல நாட்களுக்கு பின் கழுத்தருப்பது போன்ற நிலையில் ஓடினானே வினோத்? கற்பனை தான் என்னால் அவனை மன்னிக்கவே முடியவில்லை. நான் மன்னித்தாலும், சித்ரா அவனை மன்னிப்பாளா, பத்மா மாமியின் கண்ணீர் அவனை மன்னிக்குமா? இல்லை அந்த நித்யக் கல்யாண பெருமாள் தான் மன்னிப்பாரா?

இதைவிட பெரிய தண்டனையை பெருமாளுக்கு பத்மா மாமியைத்தவிர வேறு யாரால் கொடுக்க முடியும். அது நடந்திருந்தால்.. அப்பா நினைத்துப்பார்க்க முடியவில்லை. என்னால் அதை வெறும் கதையாகவும் கடக்க முடியவில்லை.

இது புத்தக விமர்சனமாக இல்லாமல் இருக்கலாம். இந்த புத்தகம் வாசித்த பின்னான எனது உள்ள வெளிப்பாடாகக் கொள்ள முடியும். சித்ரா, கேசவன் மாமா, சொரிமுத்து,பத்மா மாமி, விமலின் குருஜி, அந்த பாகிஸ்தானிய பெண் என எல்லா துணை கதாப்பாத்திரமும் அத்தனை கனமாகப் படைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொருக்கும் தனித்தனியான நியாயம் செய்யப்பட்டிருக்கிறது. அதற்காக எழுத்து சுதந்திரம் தான் 1300+ பக்கங்கள்.

கொஞ்சமும் சுவாரசியம் குறையாமல் நம்மை இழுத்துச் செல்லக்கூடிய நடை, அடையார் கோஆப்டெக்ஸ், திருவிடந்தை, கோவளம் தர்கா, நித்யகல்யாண பெருமாள், ஸ்ரீரங்கம் மடப்பள்ளி என எந்த இடத்தை பார்த்தாலும் இனி இந்த குடும்பம் மட்டுமே நினைவில் வரும்.

பல இடங்களை சுட்டிக்காட்ட விரும்பினேன். அது சுவாரசியத்தைக் குறைக்கலாம். பல வாழ்வியல் தத்துவங்களை, உறவுகளின் காரண காரியங்களை, மனிதனின் நிஜமான அடிப்படைத் தேவைகளை, எதை நோக்கி அவன் ஓடுகிறான் என்பதை குறிப்பிட்டுக்கொண்டே செல்கிறார் ஆசிரியர். அவருடைய எழுத்து எனக்கு பிடிக்கும் என்றாலும் என்னுடைய மனதில் அவருக்கான பீடம் யதி மூலம் இன்னும் 4 படிகள் உயர்ந்துள்ளது என்பதை மறுக்க முடியாது.

குறிப்பு:

வாசிப்பை நேசிப்போம் ஃபேஸ்புக் குழுவில் என்னுடைய புத்தகங்களுக்கு இதுவரை வெளியான மதிப்புரைகளை raindrop.io மூலம் தொகுத்துப் பார்த்தேன். அவற்றில் சிலவற்றை இங்கே பிரசுரிக்கலாம் என்று தோன்றியதால், முதலில் இது. வாசிப்பை நேசிப்போம் குழுவுக்கும் மதிப்புரை எழுதியவர்களுக்கும் நன்றி. – பாரா

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 25, 2025 21:48

June 24, 2025

உஸ்தாத்

Pa Raghavan

முத்த மழை பாடலுக்குள் வருகிற திருகுதாளங்களைக குடையத் தொடங்கி, எப்படியோ எந்த நேர்க் காரணமும் இன்றி குஜாரி தோடிக்கு வந்து நின்றேன். யூ ட்யூபுக்கென்ன. எதைக் கேட்டாலும் அள்ளிக் கொட்டுகிறது. அப்படிக் கொட்டியதில் தொட்டெடுத்த ஒரு குஜாரி தோடி, பக்கவாட்டில் சுபபந்துவராளி போலத் தோற்றமளித்ததில் சிறிது குழப்பமாகி வித்வானும் நண்பருமான ஈரோடு நாகராஜனிடம் விசாரித்தபோது இரண்டுக்கும் இடையில் உள்ள வித்தியாசங்களைப் பாடிக்காட்டி விளக்கினார்.

அதுவல்ல பெரிது. அவர் கொடுத்த ஓர் உதாரண லிங்க்கில் பிஸ்மில்லா கான் இருந்தார். எப்படி மைசூர்பா, பக்லவா போன்றவற்றை ஒரு துண்டோடு நிறுத்த முடியாதோ அப்படித்தான் உஸ்தாத்.

அன்றெல்லாம் அவர் என் வேலையைக் கெடுத்தார். முத்தமழை எக்கேடு கெடட்டும். எனக்கு உஸ்தாத் போதும். கேட்டுக்கொண்டே இருந்தேன். இந்தக் கலைஞன் எப்பேர்ப்பட்ட சாகசங்களைச் செய்திருக்கிறான் என்று திகைத்துத் திகைத்துத் தணிந்தபடி அவரைப் பற்றி எங்கெங்கோ தேடி, எதையெதையோ படித்துக்கொண்டிருந்தேன்.

வாரத்துக்கு ஏழு நாள்கள். எனவே எனக்கு ஏழு செட் டிரெஸ் போதும் என்று வாழ்நாள் முழுவதும் ஏழு செட் உடைகளுடனே வாழ்ந்தவர். இரண்டு ரொட்டி, ஒரு தம்ளர் பால்தான் அவரது அதிகபட்ச உணவு. ஆடம்பர கார், பெரும் பங்களா, ஆள் அம்பு ஜபர்தஸ்துகள் ஏதும் கிடையாது. சைக்கிள் ரிக்‌ஷா பயணம்தான் பெரும்பாலும்.

“பணத்தைச் செலவு செய்வது எப்படி என்றே தெரியாத மனிதர் நீங்கள். எதற்காக ஒரு கச்சேரிக்கு ஐந்து லட்ச ரூபாய் வாங்குகிறீர்கள்?” என்று நுஸ்ரத் ஃபதே அலிகான், பிஸ்மில்லா கானை ஒரு முறை கேட்டார்.

“என்ன செய்வது? என் வீட்டுக்குள் ஒரு குட்டி இந்தியாவே குடியிருக்கிறது. எல்லோரும் சாப்பிடவேண்டாமா?” என்று சிரித்துக்கொண்டே பதில் சொன்னார்.

உஸ்தாத் பிஸ்மில்லா கான் காலமானபோது இந்தியர்கள் அளவுக்கே ஆப்கனிஸ்தான், இராக், இரான், ஒன்றிரண்டு மேற்கு ஆப்பிரிக்க நாடுகள், பாகிஸ்தான் போன்ற பகுதிகளில் வசிக்கும் இசை ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சிக்கும் வருத்தத்துக்கும் உள்ளானார்கள். இந்திய இசை என்றாலே அங்கெல்லாம் கான் சாஹிபின் ஷெனாய்தான். அவர் இருந்த காலத்தில், அவரளவு சர்வதேசப் புகழ் பெற்ற இந்திய இசைக் கலைஞர்களை இரண்டு கை விரல்களுக்குள் அடக்கிவிடலாம்.

சோக ரசத்துக்காகவே உருவாக்கப்பட்ட வாத்தியம் என்று நினைக்கும் அளவுக்கு அழுதுவடியும் இயல்புள்ள ஷெனாயை சோப்புப் போட்டு குளிப்பாட்டி, சரிகை வேட்டி கட்டி, அதன் தலைக்கு ஒரு கிரீடமும் சூட்டி உச்சாணிக் கிளையில் கொண்டுபோய் உட்காரவைத்தவர் பிஸ்மில்லா கான். ஒரு முழம் பூ சைஸுக்குத்தான் அந்தக் கருவி இருக்கும். பூனையின் முனகல் போல் ஒலி கிளம்பும். ஆனால் கான் சாஹிப் உதட்டில் உட்கார்ந்துவிட்டால் சமயத்தில் புல்லாங்குழல் போலவும் நாகஸ்வரம் மாதிரியும் சாக்ஸபோனாகவும்கூட அவதாரம் எடுத்துவிடும்.

இந்திய சாஸ்திரிய சங்கீதத்துக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உருவானதற்கு பிஸ்மில்லா கான் செய்த பங்களிப்பு மிக அதிகம். இந்தியாவின் முதல் சுதந்தர தினத்தன்றும் முதல் குடியரசு தினத்தன்றும் அவர் ஷெனாய் வாசித்தார் என்பதோ, இன்றுவரை ஒவ்வொரு சுதந்தர தின அணிவகுப்பு நடைபெறும்போதும் தூர்தர்ஷன் அவரது இசையைத்தான் பின்னணியில் ஒலிக்கவிடுகிறது என்பதோ பெரிய விஷயமில்லை. இந்தியாவின் மத நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டின் சின்னங்களாக உலகம் பார்க்கும் ஒரு சில விஷயங்களுள் கான் சாஹிபும் ஒருவர் என்பது முக்கியமானது.

பிஸ்மில்லா கான் ஒரு ஷியா முஸ்லிம். கடைசிவரை ஒழுங்காக ஐந்து வேளை தொழுதுகொண்டிருந்தவர். அதே ஆத்மசுத்தியுடன் காசி விசுவநாதர் ஆலயத்துக்கும் போய் வழிபட்டு வருவார். இஷ்டதெய்வம் யார் என்று கேட்டால் தயங்காமல் சரஸ்வதி என்று சொல்லுவார். மார்ச் 21, 1916ம் ஆண்டு பீகார் மாநிலத்தில் பிறந்த பிஸ்மில்லா கான் தமது நான்கு வயதில் காசிக்குப் போய் தாய் மாமனிடம் ஷெனாய் கற்றுக்கொள்ள ஆரம்பித்ததிலிருந்து காசிவாசி ஆகிவிட்டார். பாரத் ரத்னா, பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ என்று இருக்கும் அத்தனை தேசிய விருதுகளையும் பெற்று, உலகம் முழுக்கக் கச்சேரிகள் செய்து, மூன்று பல்கலைக் கழகங்களின் டாக்டர் பட்டங்களையும் பெற்றபிறகு பிஸ்மில்லா கானிடம் ஒரு சமயம் ‘உங்கள் வாழ்வில் மறக்கமுடியாத கச்சேரி எது?’என்று கேட்டபோது அவர் சொன்ன பதில்: ‘கச்சேரியா? கங்கைக் கரையில் உட்கார்ந்து மணிக்கணக்கில் வாசித்துப் பழகிய நாள்கள்தாம் என்னால் மறக்கமுடியாதவை. எத்தனை மீனவச் சிறுவர்களும் ஏழைப் பெண்மணிகளும் கூலித் தொழிலாளிகளும் மெய் மறந்து கேட்டு ரசித்திருக்கிறார்கள் தெரியுமா? நான் ஒரு கலைஞன் என்று முதல் முதலில் எனக்கு உணர்த்தியவர்களே அவர்கள்தாம்.’

இதைத்தான் பிறகு கே. பாலச்சந்தர் சிந்து பைரவியில் ஜேகேபியின் கதாபாத்திரத்துக்கு முகமாக வைத்தார்.

பலபேருக்குத் தெரியாத விஷயம், பிஸ்மில்லா கான் ஒரு திரைப்படத்தில் நடித்திருக்கிறார் என்பது. சத்யஜித் ரே இயக்கிய ஜல் சாஹர் பாருங்கள். பின்னால் இயக்குநர் கௌதம் கோஷ், அவரது வாழ்க்கையையே அடிப்படையாக வைத்து ‘Sange Meel Se Mulaqat’ எடுத்தபோது ‘ம்ஹும். ராய் படம் மாதிரி இல்லை’ என்று கமெண்ட் அடித்தார்.

தனது இசையின் உருக்கத்தின் மூலம் கேட்பவர்கள் அத்தனை பேர் கண்களிலும் கண்ணீர் வரவழைத்த பிஸ்மில்லா கான் கண்ணிலும் ஒரு சமயம் நீர் வந்தது. அந்தப் பாவம் ஆந்திர அரசைச் சேரும். கான் சாஹிபின் வாழ்வில் நடந்த ஒரே கசப்பான சம்பவம் அது.

2002 ஜனவரியில் ஆந்திர பிரதேசத்தில் ‘Festival of Andra Pradesh’ என்று அரசு ஆதரவுடன் ஒரு திருவிழா கொண்டாடினார்கள். பல பெரிய கலைஞர்கள் பங்குகொண்ட இந்த விழாவில் பிஸ்மில்லா கான் வந்து ஷெனாய் வாசிக்க வேண்டும் என்று விரும்பியது, நிகழ்ச்சியை நடத்திய லலித் கலா வேதிகா என்கிற அமைப்பு. ஆனால் அவரது சம்பளமான ஐந்து லட்சம் தரமுடியாது என்றும் மூன்று லட்சம்தான் தருவோம் என்றும் சொன்னார்கள்.

ஆந்திர பிரதேச அரசே ஆர்வமுடன் அழைக்கிறதே என்று கான் சாஹிப் ஒப்புக்கொண்டு விழாவுக்கு வந்தார். வந்து இறங்கியவரை கெஸ்ட் ஹவுஸ் வாசலில் இரண்டு மணிநேரம் காக்கவைத்துவிட்டு, ரூம் கொடுக்க முடியாது என்று அழிச்சாட்டியம் செய்து திருப்பி அனுப்பியதோடு மட்டுமல்லாமல், நிகழ்ச்சியும் கேன்சல் என்று சொல்லிவிட்டார்கள்.

‘எண்பத்தாறு வயதில் எனக்கு இது தேவையில்லைதான்’ என்று கண்ணீர் மல்கச் சொன்னார் பிஸ்மில்லா கான்.

உலகின் எந்த மூலையில் யார் கூப்பிட்டாலும் மறுக்காமல் போய் வாசித்துவந்த பிஸ்மில்லா கான், அந்தச் சம்பவத்துக்குப் பிறகு ஆந்திராவுக்கு மட்டும் போகவே இல்லை.

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 24, 2025 09:10

June 19, 2025

வீட்டுச் சிறை

Pa Raghavan

அர்ஜெண்டைனாவின் முன்னாள் அதிபர் ஒருவரை வீட்டுச் சிறையில் வைத்திருக்கிறார்கள். இது செய்தி. வீட்டுச் சிறையில் எதற்கெல்லாம் அனுமதி உண்டு? எதற்கெல்லாம் இல்லை? இது அடுத்த வாரம் மெட்ராஸ் பேப்பரில் சரண்யா எழுதவிருக்கும் கட்டுரை. அவர் எதையாவது எழுதிவிட்டுப் போகட்டும். இந்தக் கட்டுரையை எழுதியதற்கு மறுநாளில் இருந்து இக்கணம் வரை நான் வீட்டுச் சிறையில்தான் இருக்கிறேன். இப்படிச் சொல்வது வினோதமாகத் தெரியலாம். உண்மை சில சமயங்களில் அப்படியும் தெரியும்.

எழுதுவதற்கு இடைஞ்சலான எது ஒன்றையும் இனி செய்வதில்லை என்று அன்றைக்கு முடிவெடுத்தேன். டிவிக்கு எழுதலாம், சினிமாவுக்குப் போகலாம் என்றெல்லாம் நினைக்கவேயில்லை. எழுதலாம். அவ்வளவுதான். என் மனைவியிடம் மட்டும் சொன்னேன். அவள் மறுப்புச் சொல்லவில்லை. வேறு யாரிடமும் சொல்லவோ கருத்துக் கேட்கவோ அவசியமில்லை என்று நினைத்தேன். எனக்கு மிக நன்றாகத் தெரியும், யாரிடம் சொன்னாலும் முடிந்தவரை அச்சுறுத்துவார்கள். எழுத்து சோறு போடுமா என்ற அதே புராதனமான தேய்ந்த கீதத்தை இசைப்பார்கள்.

அடிப்படையில் எனக்கு ஒரு குணம் உண்டு. சாத்தியமே இல்லாததைக் கூட முயன்று பார்த்துவிட்டுச் சொல்லலாம் என்று நினைப்பேன். முடியாது, வேண்டாம், பிரச்னை வரும், அடிபடும் என்று கருமை பூசிச் சிந்திப்போரிடம் இருந்து விலகி நிற்கவே விரும்புவேன். எனவே, யாருக்கும் சொல்லவில்லை. ஆகஸ்ட் 29, 2011 காலை முதல் வீட்டில் இருக்கத் தொடங்கினேன்.

உலகில் எத்தனையோ முழு நேர எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் வீட்டில் இல்லாமல் வீதியிலா கிடக்கிறார்கள் என்று தோன்றலாம். வீட்டில் இருத்தல் என்று நான் குறிப்பிடுவது வேலை பார்க்கவென்று வெளியே போகாதிருப்பதை அல்ல. எதற்காகவும் வீட்டை விட்டு வெளியே செல்லாதிருப்பது. வீட்டிலேயேகூட என் அறையை விட்டுப் பெரும்பாலும் வெளியே வராதிருப்பது.

புரியவில்லை அல்லவா? சிறிது விளக்கினால் புரிந்துவிடும்.

முன்னொரு காலத்தில் நான் வீடு தங்காதவனாக இருந்தேன். குஜராத், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களுக்குச் சென்றதில்லை. மற்றபடி இந்தியாவின் பிற அனைத்து மாநிலங்களிலும் இண்டு இடுக்கு விடாமல் சுற்றியிருக்கிறேன். வேறு வேறு காலக்கட்டங்கள். வேறு வேறு காரணங்கள். காரணமேகூட இல்லாமல் சில இடங்களுக்கு அடிக்கடி சென்று சும்மா உட்கார்ந்துவிட்டு வருவேன். அப்போதெல்லாம் உணவோ, தங்குமிடமோ ஒரு பொருட்டே கிடையாது. என்னால் எங்கும் இருக்க முடியும், எத்தகைய சூழ்நிலையையும் சமாளித்துக்கொள்ள முடியும்.

அப்படி அலைந்து திரிந்தவன், வேலைக்காகக்கூட வீட்டை விட்டு வெளியே செல்வதில்லை என்று முடிவெடுத்தால் வேறெப்படி இருப்பான்?

2004 ஆம் ஆண்டிலிருந்தே தொலைக்காட்சித் தொடர்களுக்கு எழுதிக்கொண்டிருந்தேன் என்றாலும் 2012 ஆம் ஆண்டில் இருந்து 2019 வரையிலான எட்டாண்டுக் காலம் முழு மூச்சாக அந்தப் பணியில் ஈடுபட்டிருந்தேன். ஒரே சமயத்தில் ஐந்து-ஆறு தொடர்களுக்குக் கூட வசனம் எழுதியிருக்கிறேன். ஒருபோதும் இரண்டு தொடர்களுக்குக் குறைவாக எழுதியதே இல்லை. பேய் பிடித்தாற்போல எழுதிக் குவித்த அந்நாள்களில் ஒரு நாள்கூடப் படப்பிடிப்புத் தளங்களுக்கு நேரில் சென்றதில்லை. ஸ்பாட்டுக்கு வந்து எழுத விரும்புவோர் என்னைக் கூப்பிடாதீர்கள் என்றே சொல்லி வைத்திருந்தேன்.

என்னால் மறக்கவே முடியாத தருணம் ஒன்று உண்டு. முதல் முதலில் ராடனுக்கு என்னை எழுதக் கூப்பிட்டபோது, ‘இங்கே உங்கள் நிபந்தனை செல்லுபடி ஆகாது. மேடம் (திருமதி ராதிகா சரத்குமார்) நீங்கள் ஸ்பாட்டில் இருக்க வேண்டுமென்று நிச்சயமாக விரும்புவார். ரைட்டர் அருகே இல்லாமல் அவரது படப்பிடிப்புகள் நடக்கவே நடக்காது’ என்று சொன்னார்கள்.

அப்படியா என்று கேட்டுக்கொண்டேன். எங்கள் முதல் சந்திப்பு ஏற்பாடானபோது அவரிடம் கேட்டேன், ‘என்னை எதற்காக அழைத்திருக்கிறீர்கள்?’

‘நீங்கள் நன்றாக எழுதுகிறீர்கள். மொழி புதிதாக இருக்கிறது’ என்று சொன்னார்.

‘எது நல்ல எழுத்து என்று கண்டறிய முடிந்தவர்கள் வலுக்கட்டாயமாக அதை மாற்ற விரும்பமாட்டார்கள் அல்லவா?’

‘நிச்சயமாக.’

‘எனக்கு என் இடத்தில் இருந்து எழுதுவதுதான் வசதி. பரிச்சயமில்லாத வேறெந்த இடத்திலும் எழுத வராது.’

‘அதனால் பரவாயில்லை.’

‘ஆனால் நீங்கள் ரைட்டர் நிச்சயமாக ஸ்பாட்டில் இருக்க வேண்டும் என்று சொல்வீர்கள் என்றார்கள்.’

‘ஸ்பாட்டில் திருத்தங்கள் தேவைப்படும். அதற்காகச் சொல்வது.’

‘என் எழுத்தில் திருத்தம் தேவைப்படாது.’

‘அப்படியானால் நான் ஏன் அழைக்கப் போகிறேன்?’

ஏழு வருடங்கள் இடைவெளியின்றி அவருக்கு எழுதினேன். ஒரே ஒரு நாள்கூட அவர் ஸ்பாட்டுக்கு அழைத்ததில்லை. அந்தத் தரத்தில் நானும் எழுதியதில்லை.

மிகத் தீவிரமாகத் தொலைக்காட்சித் தொடர்களுக்கு எழுதிக்கொண்டிருந்தபோதுதான் பூனைக்கதை எழுதினேன். யதி எழுதினேன். இறவான் எழுதினேன். இதெல்லாம் சாத்தியமானதற்கு நான் ஒரு காரணம் என்றால் வீடு அதனினும் பெரிய காரணம்.

மிகப்பல வருடங்களுக்கு முன்பு அஸ்ஸாமில் உள்ள காமாக்யா கோயில் அருகே நான் சந்தித்த சாது ஒருவர், ஒரு சூட்சுமத்தைச் சொல்லிக் கொடுத்தார். கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மனம் அலைபாயும் தருணங்களில் உடலை ஓரிடத்தில் போட்டுவிட வேண்டும் என்பது அவர் சொன்னதன் சாரம். புத்தி அலைந்து திரியலாம், அல்லது உடல் அலைந்து திரியலாம். இரண்டும் ஒன்றாக அலையும்போது விளைவு தரமாக இராது. புத்தியை அலையவிட்டுப் பேருண்மையை எட்டிப் பிடிப்பதற்காகவே சாதுக்கள் ஆண்டுக்கொரு முறை அப்படி ஓரிடமாகச் சென்று உடலைக் கிடத்திக்கொள்வார்கள். பெரும்பாலும் ஆற்றங்கரைகளில், ஏரிக் கரைகளில் அவர்கள் தங்குவார்கள். தவம் புரிய அந்தச் சூழலே வசதி என்பது காரணம்.

எனக்கு, என் பணி என்று நான் எடுத்துக்கொண்ட எழுத்தைத் தவிர வேறு எதன்மீதும் அக்கறை கிடையாது. அக்கறை இல்லாத எது ஒன்றிலும் நேர்த்தி இராது. தேர்ச்சி கூடாது. இது திருமணமான புதிதிலேயே என் மனைவிக்குப் புரிந்துவிட்டதால் வீட்டுப் பொறுப்பை அவள் எடுத்துக்கொண்டாள். அதனால் என்னால் நிம்மதியாக எழுதவும் படிக்கவும் முடிந்தது. சலிப்பு உண்டாகும்போது திட்டுவாள். எதிலும் ஒழுங்கில்லாததைச் சுட்டிக்காட்டுவாள். பொறுப்பின்மையை விமரிசிப்பாள். எல்லாமே உண்மையான குற்றச்சாட்டுகள் என்பதால் வாக்குவாதம் செய்ய மாட்டேன். அமைதியாக இருப்பேன். பேசாமலேயே இருப்பதைச் சுட்டிக்காட்டி மேலும் திட்டுவாள். அதையும் கேட்டுக்கொள்வேன்.

ஏனெனில், நான் தேர்ந்தெடுத்துக்கொண்ட இந்த வாழ்க்கை முறையில் கோபம், விரோதம், வாதம்-விவாதம், துக்கம், கண்ணீர் போன்றவற்றுக்கு இடம் கிடையாது. அவை உள்ளே வந்தால் வேலை கெட்டுவிடும். எந்தப் பணிக்காக வீட்டுச் சிறையை விரும்பி ஏற்றுக்கொண்டேனோ, அதைக் கெடுத்துக்கொண்டு என்ன சாதிக்க முடியும்?

சாதுக்களுக்கு ஆண்டுக்கு நான்கு மாதம் போதும். சாமானியனுக்கு ஆண்டு முழுவதுமே அது தேவை. சொன்னேனே, நீர்நிலை நாடித் தவமிருக்கச் செல்வார்கள் என்று?

சிறை என்ற சொல்லுக்கு நீர்நிலை என்றொரு பொருள் உண்டு. என் வீடு, என் நீர்நிலை.

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 19, 2025 17:30

June 16, 2025

கொசகொச

Pa Raghavan

இரண்டு நாள்களுக்கு முன்னர் என் மனைவி, எங்கள் இருவருக்கும் அறிமுகமான ஒருவரது வாட்சப் ஸ்டேடஸைப் பார்க்கச் சொல்லிக் காட்டினாள். அந்நபர் தம் மனைவியின் பிறந்த நாளுக்கு (ஒருவேளை திருமண நாளா? அதற்குள் மறந்துவிட்டது.) வாழ்த்துத் தெரிவித்து, புகைப்படத்துடன் வெளியிட்டிருந்தார்.

இது ஒரு சாதாரண நடப்பு, பொருட்படுத்த ஒன்றுமில்லை என்று உலகம் கடந்துவிடும். என் விஷயம் அப்படி அல்ல. ஓரிரு வருடங்களுக்கு முன்பு ஃபேஸ்புக்கில் ஒரு நண்பர் தமது மொபைல் போன் முகப்பின் ஸ்கிரீன் ஷாட்டை வெளியிட்டிருந்தார். பற்பல செயலிகள் அணிவகுப்பின் பின்னால் அவரது மனைவியின் புகைப்படம் இருந்தது. இதையும் என் மனைவிதான் எனக்குச் சுட்டிக்காட்டினாள். இன்னும் தீவிரமாகச் சிந்தித்துப் பார்த்தால் இத்தகைய தருணங்கள் மேலும் சில கிடைக்கும்.

முன்னொரு காலத்தில் நல்ல புருஷன்கள் தமது மனைவியின் புகைப்படத்தை டிரங்குப் பெட்டியில் வைத்துப் பாதுகாத்தார்கள். பிறகு மணி பர்ஸில் வைத்துக்கொண்டு சுற்றினார்கள். இப்போது மொபைல் போன், வாட்சப் ஸ்டேடஸ். எக்காலத்திலும் நான் இவை எதையும் செய்திராத பெரும்பாவி என்பது மட்டுமல்ல; மனைவியின் பிறந்த நாள், எங்கள் திருமண நாள் போன்றவற்றுக்கு போட்டோ போட்டுப் பொதுவெளியில் அன்பையோ வாழ்த்தையோ மகிழ்ச்சியையோ தெரிவித்ததில்லை. தெரிவிப்பதில் ஒன்றும் பிழையில்லை. தெரிவிக்காதிருப்பதில் பெருமையோ சிறுமையோ இல்லை. இந்தச் செயலி இயங்குவதற்கு எழுதி embed செய்யப்பட்ட short code இவ்வாறாக இருக்கிறது; அவ்வளவுதான்.

வாழ்த்தைக்கூட விட்டுவிடலாம். மொபைல், லேப்டாப், டெஸ்க்டாப், டேப்லட் ஹோம் ஸ்கிரீன்களில் full screenக்குப் படம் போட்டு நிரப்புவது என்பது என் மன அமைப்புக்கு எக்காலத்திலும் ஏற்புடையதாக இருந்ததில்லை.

ஆனால் நானறிந்த பலபேர் இந்த ஹோம் ஸ்கிரீன் படங்களை அடிக்கடி மாற்றி மாற்றி வேறு போடுகிறார்கள். என் மகளின் லேப்டாப் மற்றும் மொபைலில் போதிய இடைவெளியில் மாறுகிற வால் பேப்பர்கள் என்னதென்று என்னால் இன்றுவரை சரியாகக் கண்டுபிடிக்க முடிந்ததில்லை. பார்க்கவே கொசகொசவென்று இருக்கும். போதாக்குறைக்கு அதன்மீது நூறு கொசு அடித்துப் போட்டாற்போலக் குட்டி குட்டியாக ஃபோல்டர்கள், செயலிகள். சுட்டிக்காட்டினால் நீ பூமர் என்று சொல்லிவிடுவாள். அதனால் சொல்வதில்லை.

என் நண்பர் ஒருவர் தனது மணக்கோலப் படத்தை லேப்டாப் வால் பேப்பராக வைத்திருக்கிறார். பல வருடங்களுக்கு முன்பு முதல் முறை இதனைக் கண்டபோது நான் அடைந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை. வேறொரு நண்பர் ஒவ்வொரு முறை திறக்கும்போதும் மாறிக்கொண்டே இருக்கும்படியாக ஏதோ செட் பண்ணியிருக்கிறார். கேட்டால் லைவ் வால் பேப்பர் என்று சொன்னார்.

கொடுமை என்னவென்றால், மொபைலைவிட லேப்டாப் வால் பேப்பர்களில் ஊரில் உள்ள அத்தனை வண்ணங்களையும் தாளித்துக் கொட்டிவிடுகிறார்கள். போதாக்குறைக்குப் பிரபலமான கட்டடங்கள், நீர் வீழ்ச்சி, செவ்வாய் கிரகம், கடலடி உலகம் என்று என்னென்னவோ வருகிறது.

படமே ஒரு கொசகொசா. அதன்மீது ஃபைல்களையும் போல்டர்களையும் போட்டு வைத்தால் சட்டென்று எப்படி அடையாளம் தெரியும்? தவிர இந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டே இருந்தால் கண் வலிக்காதா?

நான் பயன்படுத்தும் ஆப்பிள் கருவிகளிலும் பல வித வண்ணங்களில் ஏராளமான வால் பேப்பர்கள் இருக்கின்றன. நினைவு தெரிந்து என்றுமே நான் அவற்றைப் பயன்படுத்தியதில்லை. புதிதாக ஒரு லேப்டாப் வாங்கினால் முன்பெல்லாம் முதல் வேலையாகத் திரை வண்ணத்தை #376191க்கு மாற்றுவேன். இப்போது சில காலமாக உள்ளம் உருகாதபோதும் கண்களில் நீர் வழிவதால் நீலம் உள்பட அனைத்து வண்ணங்களையும் தவிர்த்துவிட்டு, உறை பிரித்ததுமே டெஸ்க்டாப் நிறத்தை க்ரே ஸ்கேலுக்கு மாற்றி வைத்துவிடுகிறேன். கணினி, போன், ஐபேட் அனைத்தையும் டார்க் மோடில் வைத்துக்கொண்டு, குறைந்த திரை ஒளியில் வேலை பார்ப்பதே வசதியாக இருக்கிறது.

இதில் இன்னொரு சௌகரியம், என்ன குப்பை போட்டாலும் பளிச்சென்று தெரியும். மற்றபடி லேப்டாப்பைத் திறந்ததும் ஒரு கும்பிடு போட்டுவிட்டு வேலை தொடங்க வசதியாகச் சிறிய அளவில் ஒரு கோரக்கர் படம். வேறு அலங்காரங்கள் கிடையாது. இதைச் சொன்னால், பூமர் என்பார்கள்.

பள்ளி நாள்களில் நோட்டுப் புத்தகங்களுக்கு காக்கி நிற அட்டை போட்டு மேலே லேபிள் ஒட்டும்போதுகூட பொம்மை போட்ட லேபிள்களைப் பயன்படுத்தியதில்லை என்பது நினைவுக்கு வருகிறது. என் தந்தை தலைமை ஆசிரியர் என்பதால் ஒவ்வோர் ஆண்டும் நோட்ஸ் தயாரிப்பு நிறுவனங்களிலிருந்து அனைத்து வகுப்புகளின் அனைத்துப் பாடப் புத்தகங்களுக்குமான நோட்ஸுக்கும் சாம்பிள் பிரதிகளை அனுப்புவார்கள். அவற்றுள் கங்கா கைடு என்றொரு நிறுவனம், அனுப்புகிற மாதிரிப் பிரதிகளுடன் ஒன்றிரண்டு செட் லேபில்களையும் சேர்த்து அனுப்பும். வெளிர் நீலத் தாளில் சிவப்பு நிறத்தில் மூன்று கோடுகள் மட்டும் போட்டிருக்கும். பின்புறம் பசை தடவி ஒட்டிப் பெயரை எழுதினால் முடிந்தது.

எளிமை என்கிறேன். நேரடித்தன்மை என்கிறேன். உறுத்தாமை என்கிறேன். மண்டைக்குள் சுழலும் செயலி ஒன்றைத் தவிர மற்ற அனைத்திலும் இவற்றையெல்லாம் கொண்டுவந்துவிட முடிகிறது. கட்டற்றுச் சீறிப் பாய்ந்து குப்பை சேர்க்கும் புத்தியை இப்படிச் சுத்திகரித்து வைத்துக்கொள்ள முடிந்துவிட்டால் டெஸ்க்டாப் எப்படி இருந்தாலும் பொருட்படுத்த மாட்டேனோ என்னவோ.

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 16, 2025 04:49

June 13, 2025

மை வைத்த சூனியம்

Pa Raghavan

தமிழ்ச் சூழலில் மைபோட்டு சூனியம் வைப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டிருக்கிறது. கேட்டால், இதெல்லாம் வழமைதானே என்கிறார்கள்.

எனக்குள்ள சொற்ப இலக்கண அறிவின்படி, பண்புத் தொகைப் பயன்பாட்டில் ‘மை’ சேரும். வெண்மை, பசுமை போல. நன்மை, தீமை போல. பழையது-பழைமை. ஏழை வாழ்க்கை – ஏழைமை. 

ஏழைமை ஆற்றவும் பட்டோம் இனி என்றும் பொய்கைக்கு வாரோம் என்று ஆண்டாள் எழுதியிருக்கிறாள். 

ஆனால் நம்மக்கள் ஏழைமையில் ஏழரை சேர்த்து ஏழமை என்று எழுதுவார்கள். பழைமையைப் பழமை என்பார்கள். வழக்கத்துக்கு மாறான வழமையை மட்டும் வக்கணையாகக் கொண்டு சொருகிவிடுவார்கள்.

வழக்கம்தான் வழமை என்றால் பழக்கம் பழமையாகிவிடுமா? அப்படியானால் முதுமை என்பதைக் கிழமை என்று சொல்லிவிடுவார்களா? 

வழக்கம் என்பது பயன்பாட்டில் உள்ள சொல். இதனை வழப்பம் என்றும் சொல்லலாம். இரண்டுமே சரியான சொற்கள். ஆனால் இந்த வழமைக் கொடுங்கோன்மைதான் வையத்தைப் பிடித்து ஆட்டு ஆட்டென்று ஆட்டிக்கொண்டிருக்கிறது.

நேற்று ஒரு தீவிரமான வழமைக் கொலையைக் கண்டு கடுப்பாகி இது குறித்துச் சிறிது படித்தேன். சண்முகம் பிள்ளை அகராதி முதல் என் கைவசம் உள்ள எந்தப் பழம்பிரதியிலும்  வழமை என்ற சொல்லைக் கண்ட நினைவில்லை. இலங்கைத் தமிழ் நாளிதழ்களின் ஆன்லைன் பதிப்பில் இதனை அதிகமாகப் பார்க்க முடிகிறது. அப்படியானாலும் அதை வட்டாரப் பயன்பாடாகத்தான் கொள்ள வேண்டுமே தவிர பொதுப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர முடியாது. 

ஹரிகிருஷ்ணன், மகுடேசுவரன் போன்ற தூய தமிழ் வல்லுநர்கள் ‘வழமை’ ஓர் அபத்தம் என்றே சொல்கிறார்கள். மகுடு என்ன எழுதினாலும் மாய்ந்து மாய்ந்து படிக்கும் சமூகம், அவர் ஓரிடத்திலாவது இந்தச் சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறாரா என்று பார்க்கலாம்.

விடுங்கள். இதெல்லாம் வெட்டிப் பேச்சு. நான் என் வேலையைப் பார்க்கப் போகிறேன். நீங்கள் உங்கள்  வழமைப்படி வாழுங்கள்.

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 13, 2025 06:56

June 12, 2025

ஒரு ஊரில் ஒரு சிறுவன்

Pa Raghavan

கோவூருக்குச் சென்றிருந்தேன்.

குறிப்பிட்ட காரணம் ஒன்றுமில்லை. அந்த ஊர்க் கோயிலுக்குச் சென்று வரலாம் என்று தோன்றியது. கடந்த புதன் கிழமை காலை மெட்ராஸ் பேப்பர் வெளியானதும் மனைவியுடன் புறப்பட்டேன்.

நான் வசிக்கும் இடத்தில் இருந்து கோவூர் தொலைவில்லை. திருநீர்மலை – குன்றத்தூர் – கோவூர் என்று நேர் வழி. போக வர அதிகபட்சம் இருபத்தைந்து கிலோ மீட்டர். 1985லிருந்து குரோம்பேட்டையில் வசிப்பவனுக்கு இந்த எண்ணம் வர இத்தனைக் காலம் ஆகியிருக்கிறது. இடையில் எழுதிய ஒன்றிரண்டு கதைகளில் கோவூர் வந்திருக்கிறது. ஒரு சில கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கிறேன். சாத்தானின் கடவுளில் ஓர் அத்தியாயம் முழுவதுமே கோவூரில்தான் நடக்கும். அந்த ஊரில்தான் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது வகுப்புகள்வரை படித்தேன். பிறகு கேளம்பாக்கத்துக்குச் சென்றுவிட்டோம்.

நினைவில் நிற்கும் இடம் என்ற அளவில் கேளம்பாக்கம் அளவுக்குக் கோவூர் கிடையாது. ஆனால் மிகச் சிறு வயதில் மனத்தில் பதிந்த காட்சிகள் அப்படியேதான் இருக்கின்றன. இன்றைக்கு எனக்கு ஐம்பத்து நான்கு வயது. ஆறு முதல் எட்டு வயது வரை கோவூரில் இருந்திருக்கிறேன் எனக் கொண்டால், அந்தக் கோவூரின் நிறம் பச்சை. ஊரைச் சுற்றி வயல் வெளி இருக்கும். ஊருக்குள் எங்கு பார்த்தாலும் மரங்கள் அடர்ந்திருக்கும். கோவூரின் அடையாளமான சுந்தரேசுவரர் கோயில் இருக்கும் வீதியின் இரு புறமும் அடர்த்தியாக அசோக மரங்கள் நிறைந்து கவிந்திருக்கும். அந்தச் சிறிய கோபுரமும் அணி வகுத்த அசோக மரங்களும் பிராந்தியத்தில் வேறெங்குமே காண முடியாத அதிசயம் என்று அப்போது தோன்றும். நான் நினைப்பது சரி என்று நிரூபிப்பது போல, ஆண்டு முழுவதும் ஏதாவது ஒரு திரைப்படப் படப்பிடிப்பு அந்த இடத்தில் நடந்துகொண்டே இருக்கும்.

நாங்கள் அப்போது சந்நிதித் தெருவிலேயே, கோயிலுக்கு மிக அருகில் இருந்த ஒரு வீட்டில்தான் குடியிருந்தோம். எங்கள் வீட்டின் வாசலில் இருந்து, சாலை உள்ள தொலைவுக்கு இடையே சிறிது வெற்றிடம் இருக்கும். படப்பிடிப்பு இடைவேளைகளில் யாராவது ஏழெட்டுப் பேர் அங்கே ஒயர் வேய்ந்த அலுமினிய நாற்காலிகளை இழுத்து வந்து போட்டு அமர்வார்கள். உடனே அவர்கள் முதுகுக்குப் பின்னால் இன்னும் யாராவது சிலர் ஒரு மின்விசிறியைக் கொண்டு வந்து வைத்துவிட்டுப் போவார்கள்.

கந்தன் கருணை என்ற படத்தின் சில காட்சிகளை அங்கே எடுத்தார்கள். ஶ்ரீதேவியைக் குழந்தை நட்சத்திரமாகப் பார்த்திருக்கிறேன். பசி என்ற படத்தின் படப்பிடிப்பு அங்கே நடந்தபோது கௌபாய் தொப்பி அணிந்த அதன் இயக்குநர் நாளெல்லாம் இங்குமங்கும் ஓடிக்கொண்டே இருந்த காட்சியும், அமர்ந்து உண்ண நேரமின்றி, வீதியில் நடந்த வாக்கில் நாலு கவளம் அள்ளிப் போட்டுக்கொண்டு விரைந்த காட்சியும் நினைவில் இருக்கின்றன.

இன்னொரு படம், விஜயகுமார் நடித்தது. பெயர் மறந்துவிட்டது. அந்தப் படத்தில் விஜயகுமார் ஒரு கல்லூரிப் பேராசிரியர். மாணவர்களுக்காக நிர்வாகத்திடம் சண்டையிட்டு உரிமைகளையோ, வேறெதையோ மீட்டுத் தருவார் என்று நினைவு. ஒரு காட்சியில் அவர் தனக்குப் பின்னால் அணி வகுக்கும் மாணவர்களை இருபுறமும் கைகளை நீட்டித் தடுத்து நிறுத்தியபடியே எதிரே உள்ள நடிகரிடம் பேச வேண்டும். ரெடி என்ற குரல் வந்தபோது விஜயகுமார் பாதி சிகரெட் புகைத்துக்கொண்டிருந்தார். அதனோடே எழுந்து ஷாட்டுக்கு வந்து நின்று சிகரெட் புகையும் கையையே இறக்கை போல விரித்துக்கொண்டு நின்று வசனம் பேசியதைக் கண்டு ஊரே இரண்டொரு நாள்களுக்கு அங்கலாய்த்துக்கொண்டிருந்தது நினைவிருக்கிறது. இத்தனைக்கும் அந்தக் காட்சி முடிந்ததும் யூனிட்டைச் சேர்ந்தவர்கள், ‘அது வெறும் மானிட்டர்தான். படத்தில் வராது’ என்று சொன்னார்கள். அதெல்லாம் யாருக்குப் பொருட்டு?

‘வாத்தியான் இப்பிடி இருந்தா வெளங்கிரும்’ என்று சொல்லிவிட்டுப் போனார்கள். அந்தப் படம் ஓடியதாக நினைவில்லை.

கோவூர் அரசுப் பள்ளியில் என் அப்பா தலைமை ஆசிரியராக இருந்தார். அவரது முயற்சியின்பேரில் அன்றைக்கு ஊருக்கு ஒரு குடிநீர்க் குழாய் வந்தது. அந்த நாள் எனக்கு நினைவிருக்கிறது. குடிநீர்க் குழாய்த் திறப்பு விழா நாள். யாரோ ஒரு அமைச்சர் வந்து திறந்து வைத்த போட்டோ நெடுங்காலம் எங்கள் வீட்டில் இருந்தது. அந்தக் குழாய், கோவூர் இசைதாசன் என்ற கவிஞர் வீட்டு வாசலில் அமைக்கப்பட்டது.

அன்றைக்கு மிஞ்சிப் போனால் கோவூரின் மக்கள் தொகை சில நூறாக இருக்கக்கூடும். எங்கெங்கும் எருமை மாடுகளும் பசு மாடுகளும்தான் நிறைந்திருக்கும். அவ்வளவு குறைவான மக்களுக்கு அவ்வளவு அதிகமான கால்நடைகள் எதற்கு என்று நிச்சயமாகத் தோன்றும்.

கோவூர் நினைவுகளில் என்னால் மறக்கவே முடியாத ஒன்றுண்டு. யாரோ ஒரு மாந்திரிகன், வீடு வீடாகப் பிச்சை எடுத்து வருவான். பலமுறை அவனைப் பார்த்திருக்கிறேன். பல்வேறு இடங்களில் பார்த்திருக்கிறேன். சந்நிதித் தெருவுக்கும் வருவான் என்றாலும் பெரும்பாலும் அங்கே அவன் எந்த வீட்டுக் கதவையும் தட்டிய நினைவில்லை.

நாங்கள் வசித்த வீடு இருந்த இடம். இப்போதிருப்பது வேறு வீடு.

முதல் முறையாக அந்தச் சம்பவம் நடந்த இடம் எங்கள் வீடாக இருந்தது. வீட்டில் அப்போது அப்பா இல்லை. அம்மாவிடம் அவன் ஒரு பத்து ரூபாய் நோட்டைக் கொண்டு வரச் சொன்னான். முன்னதாக அவன் செய்து காட்டிய வித்தைகளில் திகைத்துவிட்டிருந்த என் அம்மா, அவன் சொன்னபடி பத்து ரூபாய்த் தாளைக் கொண்டு வந்து கொடுத்தாள். அவன் அதை உள்ளங்கையில் மடித்து வைத்து விரித்துக் காட்டினான். அந்தப் பணம் தானே மெல்ல நகர்ந்து அவனது முழங்கையில் ஏறித் தோள்பட்டை வரை சென்று பிறகு காணாமலாகிவிட்டது. புறப்படுவதற்கு முன்னால், மறைத்து வைத்த பணத்தை அவன் எடுத்துக் கொடுத்துவிட்டுத் தான் தருவதற்குத் தயாராக இருந்த ஒரு ரூபாய் நாணயத்தைப் பெற்றுச் செல்வான் என்று அம்மா எதிர்பார்த்திருக்க வேண்டும். அது மட்டும் நடக்கவில்லை. அன்றைக்குப் பத்து ரூபாய் என்பது எங்களுக்குப் பெரும்பணம். அந்த நஷ்டத்தை அம்மா நெடுநாள் சொல்லிச் சொல்லிப் புலம்பிக்கொண்டிருந்தது நினைவிருக்கிறது.

47-48 வருடங்களுக்குப் பிறகு கோவூருக்குச் சென்றபோது துண்டுத் துண்டாக இந்தக் காட்சிகள்தாம் நினைவில் வந்தன. அன்றைய கோவூர் இன்று இருக்காது என்று தெரியும். ஆனால் மண்ணடி-சவுக்கார்பேட்டை போல அக்கிராமம் உருமாறியிருக்கும் என்று நினைக்கவில்லை. ஊரில் அந்தக் கோயிலடி தவிர வேறெங்கும் மருந்துக்கும் மரம் இல்லை. கோயில் வாசல் அசோக மரங்களும்கூட விரல் விட்டு எண்ணும்படியாகவே இருந்தன. ஆனாலும் அவை இருந்தன. எனக்கு அதுவே மகிழ்ச்சியாக இருந்தது.

கோவூர் சுந்தரேசுவரர் கோயில் என்பது சிறியதொரு ஆலயம்தான். என்னதான் புதன் பரிகார ஸ்தலம் என்று இப்போது புதிய பிராண்டிங் இருந்தாலும் நான் சென்றிருந்தபோது பெரிய கூட்டம் இல்லை. கோயிலுக்குச் சென்றுவிட்டு, சந்நிதித் தெருவில் நாங்கள் வசித்த வீடு இருந்த இடத்துக்குச் சென்றேன். கண்டுபிடிப்பதில் சிரமம் ஏதும் இருக்கவில்லை. இருந்தது வேறு வீடுதான் என்றாலும் இடம் எனக்குத் தெரிந்ததுதானே? அந்த வீட்டை அடுத்த வீதியில் நான்காவதாக எனக்குப் பாடம் சொல்லித் தந்த டீச்சரின் வீடு இருக்கும். அவர் பெயர் மறந்துவிட்டது. அங்கே போய்ச் சில விநாடிகள் நின்றேன். உள்ளே போய் விசாரிக்கலாம் என்ற ஆசை எழுந்து, வேண்டாம் என்று உடனே தோன்றிவிட்டது. இருப்பாரென்றால் குறைந்தது தொண்ணூறு வயதாகியிருக்கும். நானெல்லாம் நினைவில் இருக்க வாய்ப்பே இல்லை. அவர் காலம் முடிந்துவிட்டது என்று யாராவது சொன்னால் அதுவும் சங்கடமாக இருக்கும். எதற்கு? என் நினைவில் அழிவற்றவர்கள் என்றும் அப்படியே இருக்கட்டும் என்று எண்ணிக்கொண்டு இசைதாசன் வீட்டருகே சென்று நின்றேன்.

ஒரு காலத்தில் பிராந்தியத்தில் அவர் அறியப்பட்ட கவிஞர். பள்ளிக்கூட விழாக்கள், பால்வாடி திறப்பு விழாக்கள், கோயில் திருவிழாக்களில் பேசுவார். அன்றாடம் பேப்பர் படித்துவிட்டு என் அப்பாவுடன் உலக விஷயங்களை விவாதிப்பார். வெள்ளைச் சட்டையின் மீது சிவப்புத் துண்டு போட்டிருப்பார். கம்யூனிஸ்டாக இருந்திருக்கலாம். அந்த வயதில் எனக்கு அதெல்லாம் தெரியாது.

இன்னும் இருக்கும் குடிநீர்க் குழாய்

நான் சென்ற நேரம் அந்த வீடு மூடியிருந்தது. சிறிது நேரம் நின்று அதையே பார்த்துக்கொண்டிருந்தேன். பார்வை தழைந்து தரைக்கு வந்தபோது திகைத்துப் போனேன். கோவூர் ஆயிரம் மாறியிருக்கலாம். ஆனால் அந்தக் குடிநீர்க் குழாய் அங்கே இன்னும் இருந்தது. என் தந்தையின் முயற்சியால் ஊருக்கு வந்த குழாய். அதைக் கண்டதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். நெருங்கித் தொட்டுப் பார்த்தேன். அப்பாவைத் தொடுவது போலவே இருந்தது.

வீடு திரும்பிய பிறகு, கோவூரில் எடுத்த புகைப்படங்களை நண்பர் குப்புசாமிக்கு அனுப்பினேன். அதற்கொரு காரணம் இருந்தது.

சாத்தானின் கடவுளை நான் மெட்ராஸ் பேப்பரில் எழுதிக்கொண்டிருந்தபோது அத்தியாயங்களுக்குத் தேவைப்பட்ட படங்களைச் செய்யறிவில் உருவாக்கி அளித்தவர் அவர். அந்தத் தொடரில் கோவூர் அத்தியாயம் வந்தபோது அவரிடம் அந்த சந்நிதித் தெருவையும் அசோக மரங்கள் அணி வகுத்திருக்கும் காட்சியையும் கோயிலின் முகப்பில் உள்ள சிறிய கோபுரத்தையும் அதன் எதிரே படப்பிடிப்பு நடக்கும் சூழலையும் போனில் விவரித்தேன். பிறகு அத்தியாயத்தையும் படித்துவிட்டு அவர் ஒரு படத்தை உருவாக்கி அனுப்பிவைத்தார். குப்புசாமி ஏஐயில் உருவாக்கிய படத்தையும் நேற்று நான் நேரில் கண்ட கோவூர் சந்நிதித் தெருவின் படத்தையும் மேலே முகப்பில் பார்க்கலாம்.

ஒரு விதத்தில் எனக்கு மகிழ்ச்சி. புகைப்படமும் செய்யறிவு தந்த புனைபடமும் தொண்ணூற்று ஒன்பது சதம் ஒத்துப் போவதல்ல. நாற்பத்தேழு வருடங்களுக்குப் பிறகும் அந்த ஊரின் தோற்றம் என் மனத்தில் உருக்குலையாமல் நிலைத்திருப்பது சார்ந்த மகிழ்ச்சி அது. நான் சரியாக உள்வாங்கியிருக்கிறேன். சரியாக வெளிப்படுத்தியிருக்கிறேன்.

போதும்.

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 12, 2025 10:42

June 10, 2025

தின்றுத் தீராத ருசி

Pa Raghavan

நஃபெ என்றுதான் நியாயமாக அதனைச் சொல்ல வேண்டும். Knafeh என்பது ஸ்பெல்லிங். சிரியா அல்லது பலஸ்தீன் அல்லது எகிப்தில் இது தோன்றியிருக்கலாம் என்பது குத்துமதிப்பான ஊகம்.

இந்தக் கோயில், மசூதி, பாதி இடிந்த சுவர் வகையறாக்களுக்கெல்லாம் இரண்டாயிரம், மூவாயிரம், நாலாயிரம், ஐயாயிரம் வருட வரலாற்றை எப்படியோ தோண்டி எடுத்துவிடுகிறார்கள். எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்திருக்கக்கூடிய வாசுகி பாம்புக்குக் கால் தடமும் மூழ்கிப் போன மகாபாரதக் கிருஷ்ணனின் துவாரகைக்குக் கடல் தடமும் எளிதில் அகப்பட்டுவிடுகிறது. மத்தியக் கிழக்கிலேயேகூட கில்காமெஷ் போன்ற ஆதிப் புராதன காவியங்கள் இன்றும் தொன்மத்தின் வாசனையை ஊதுபத்திப் புகை போலப் பரப்பிக்கொண்டிருக்கின்றன. ஆனால் உணவு என்று வரும்போது மட்டும் ஒரு பத்தாம் நூற்றாண்டுச் சரக்குக்குக் கூடத் தோன்றிய இடத்தில் குழப்பம்.

வேறு வழியில்லை. பசி ருசி அறியாது. ருசி, தடம் அறியாது.

நஃபெ என்கிற குனாஃபா. சிரியா அல்லது பலஸ்தீன் அல்லது எகிப்து. எல்லைகளற்ற காலமென்றால்கூடச் சரி. இது வெறும் பத்தாம் நூற்றாண்டு. இங்கே ஆதித்திய சோழனின் மகன் முதலாம் பராந்தக சோழன், பாண்டியர்களை வென்று அவர்களை இலங்கைக்குத் துரத்தியடித்த காலம். சீனாவில் முதல் முதலில் நாணயங்கள் தாளில் அச்சடிக்கப்பட்ட காலம். பாரசீகத்துப் பார்சிகள் இந்தியாவுக்குக் குடியேறிய காலம். ஆப்பிரிக்காவிலும் ஐரோப்பாவிலும் அடிமை வியாபாரம் கொடிகட்டிப் பறந்த காலம். துருக்கியை ஆண்ட கலீஃபாக்கள் அந்த நூதனமான இனிப்பைத் தங்கள் காலை உணவாக ஆக்கிக்கொண்டு இனிதே ஆட்சி புரிய ஆரம்பித்தார்கள்.

நான்காயிரம் வருடங்களுக்கு முன்பு சீனத்தை ஆண்ட ஹான் வம்சத்து மன்னர்கள் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நூடுல்ஸ்தான் நஃபெ என்கிற குனாஃபாவின் அடிப்படை. அதே ஆட்டா அல்லது அரிசி மாவுதான் மூலப் பொருள். நூடுல்ஸின் அதே தயாரிப்பு முறை. முட்டை சேர்த்தது, சேர்க்காதது என்னும் இரண்டு ஜாதிகள் இதில் பின்னால் உருவாக்கப்பட்டன. மூல மாவை எடுத்து வைத்துக்கொண்டு, சாஸ்திரத்துக்குக் கொஞ்சம் தண்ணீர் தெளித்துவிட்டுக் கை கையாக வெண்ணெய் அள்ளிப் போட்டு பிசைவதே குனாஃபா உருவாக்கத்தின் முதல் படி. சப்பாத்திக்கு மாவு பிசைவது போலத்தான்.

ஆனால் தென்னிந்தியர்கள் மாவு பிசைவதற்கும் வலது மேலாக்கைத் தலை வரை இழுத்துவிட்ட வட இந்தியப் பெண்மணிகள் மாவு பிசைவதற்கும் வித்தியாசம் உண்டு. நாம் மாவு பிசைவதற்கு விரல்களைக் கணிசமாகப் பயன்படுத்துவோம். அவர்கள் சுக்கிர மேட்டால் அழுத்திப் பிசைவார்கள். போதாக்குறைக்கு ஜாகிர் உசேன் தபலாவில் நூதன சத்தங்கள் எழுப்புவதற்கு எப்படி உள்ளங்கைகளின் கீழ்ப்பகுதியை வைத்து அழுத்தித் தேய்ப்பாரோ, அப்படி அழுத்தம் கொடுத்து மாவுக்கு மசாஜ் செய்வார்கள்.

குனாஃபாவுக்கான மாவும் இத்தகைய மசாஜைக் கோரும். அப்படித் தேய்த்துத் தேய்த்துப் பதப்படுத்தும்போது சற்றே உருக்கிய, சற்றே உப்புப் போட்ட வெண்ணெயைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக்கொள்வார்கள். பலஸ்தீனிய நபுல்ஸி சீஸை அதன் மேலே கொட்டிக் கலந்து சிறிது ஊற வைப்பது மரபு. இந்த ஓர் ஆதாரத்தைக் கொண்டு குனாஃபாவின் பிறப்பிடம் பலஸ்தீன் என்ற முடிவுக்குக் கிட்டத்தட்ட வரலாம்.

ஏனென்றால் குனாஃபா தோன்றி, ஆகக் குறைந்தபட்சம் ஏழெட்டு நூற்றாண்டுகள் வரை வேறொரு சீஸைக் கொண்டு அது தயாரிக்கப்பட்டதற்கு ஆதாரங்கள் இல்லை. எகிப்து, பலஸ்தீன், சிரியா, லெபனான், துருக்கி. இந்தப் பிராந்தியங்களில்தான் அது மிகவும் பிரபலமாக இருந்திருக்கிறது. வரைபடத்தை எடுத்து வைத்துக்கொண்டு பார்த்தீர்கள என்றால், அரையடி ஸ்கேலால் ஒரு நேர்க்கோடு போட்டுவிடலாம். பிறகு உலகம் சுற்றத் தொடங்கியபோதுதான் எல்லா விதமான பாலாடைக் கட்டிகளும் இதன் தயாரிப்பில் சொருகப்பட்டிருக்கின்றன.

ஆயிரம் சொன்னாலும் மூலத்தின் ருசி மற்றதில் இருக்காது அல்லவா? ஆனால், பலஸ்தீனிய நபுல்ஸிக்கு நாம் எங்கே போவது? இங்கே கிடைக்கிற சீஸைக் கொண்டுதான் நமக்கு குனாஃபா தயாரிக்கிறார்கள். உண்மையில் குனாஃபாவின் சர்வதேசப் புகழுக்கு அடிப்படைக் காரணம் அந்த பலஸ்தீனிய சீஸ் மட்டுமே. அதன் ருசி விவரிப்புக்கு அப்பாற்பட்டது என்பார்கள். நபுல்ஸியில் இனிப்பு – உப்பு இரண்டு ரகங்களும் உண்டு. குனாஃபாவுக்குப் பயன்படுத்துவது இனிப்பு சீஸ். உருக்கியது. மிதமான சூட்டில் அதைப் பிசைந்து வைத்திருக்கும் மூல மாவின் மீது கொட்டிக் குளிப்பாட்டி மூடி வைப்பார்கள். மாவு நன்கு தளதளவென்று தயாரானதும் நூடூல்ஸ் செய்யும் முறைப்படி செய்து எடுத்துக்கொண்டுவிடுவது. பிறகு பிஸ்தா பருப்புகளை நெய்யில் வறுத்து நொறுக்கி, இட்லிப் பொடி தரத்துக்குக் கொண்டு வந்து அதன்மீது கொட்டி நிரப்ப வேண்டியது. இதுதான் அடித்தளம். இதனை பான் பீடா சுருட்டுவது போலச் சுருட்டி நீள நீளமாக டிரேவில் அடுக்கிவிடுவார்கள்.

குனாஃபாவுக்குப் பயன்படுத்தப்படுவது சர்க்கரைப் பாகு. ஆனால் குலோப் ஜாமூனுக்குச் சேர்க்கிற அளவுக்குப் பாகில் சர்க்கரை இராது. அளவு குறைந்த சர்க்கரை. இனிப்பது போல இருக்க வேண்டும். ஆனால் தொண்டையில் இறங்கும்போது மாயமாகிவிட வேண்டும். இன்னும் கொஞ்சம் இனிக்காதா என்று ஏங்கச் செய்யும் விதமான இனிப்பு. குனாஃபாவுக்குக் கரைக்கும் சர்க்கரைப் பாகில் சிறிது பன்னீர் சேர்ப்பார்கள். சில வகை குனாஃபாக்களுக்கு ஆரஞ்சு சிரப் சேர்ப்பதும் உண்டு. கொதிக்கக் கொதிக்க இந்தச் சர்க்கரைப் பாகை மேற்படி பிஸ்தா-நூடூல்ஸ் பீடா படலத்தின்மீது கொட்டி, முழுச் சர்க்கரைக் கரைசலும் இரண்டல்ல; ஒன்றென்று அத்வைதம் போல உள்ளே இறங்கி மறையும் நேரத்தில் அடுப்பிலிருந்து இறக்கி, அதன் தலையில் ஒரு படி நெய்யைக் கொட்டினால் முடிந்தது சோலி. கொட்டிய நெய்யின்மீது அலங்காரத்துக்கு மீண்டும் அந்த பிஸ்தாப் பொடியைத் தூவுவது அரபிக் கலைஞர்களின் அழகுணர்ச்சிக்குச் சான்று.

வெறும் குனாஃபா ஒரு நல்ல உணவு. மிதமான இனிப்பும் வலுவான சீஸ் ருசியும் மணமும் மேலோங்கியிருக்கும். இரண்டு துண்டு (துண்டின் அளவு அவரவர் கொள்ளளவு சார்ந்தது) குனாஃபாவைத் தின்று ஒரு டீ குடித்தால் ஒருவேளை உணவு முடிந்துவிடும். முதல் உலகப் போரின் முடிவில் துருக்கி விழுந்து, ஒட்டாமான் சாம்ராஜ்ஜியம் சிதறுகிற காலம் வரை அந்தப் பக்கத்து சுல்தான்கள் காலை பல் விளக்கிவிட்டுப் பெரும்பாலும் இதைத்தான் முதல் உணவாக உட்கொண்டிருக்கிறார்கள்.

அந்த முதல் பத்து நூற்றாண்டுக் காலம் ஆகக் கூடியவரை மன்னர்கள், பிரபுக்கள், பெரும் பணக்காரர்களின் சொகுசு டிஷ்ஷாக இருந்த குனாஃபா, அதன் பிறகு மெல்ல மெல்லக் கடைகளுக்கு வர ஆரம்பித்திருக்கிறது. இது மன்னர் உணவு அந்தஸ்திலிருந்து மக்கள் உணவாக மறுமலர்ச்சி பெற்ற காலக்கட்டத்தில் நபுல்ஸி சீஸுக்கு பதில் நயமான பிற சீஸ்கள் உள்ளே நுழைந்தன. மத்தியக் கிழக்கிலும் ஏராளமான அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன.

உலகத்துக்கு ஓர் உலகத்தரமான தின்பண்டத்தை, அதன் மூலப் பொருள்களுள் ஒன்றான சீஸைக் கொடுத்துவிட்டு பலஸ்தீனியர்கள் அன்றாட உணவுக்கு அவதிப்படத் தொடங்கிய அவலமெல்லாம் பிற்கால சரித்திரம்.

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 10, 2025 18:30

June 8, 2025

Yathi – A review: Jinapriya AjithaDoss

Pa Raghavan

This is a book which I avoided for a while because it states as story of sages…and I thought it would be a sad story and confusing a lot…

Oh man…you dont expect a revenge thriller with a prelude of philosophies.

A typical family is described with normal desires of parents. When starting to read about the confusions of the sons, we probably assume the teenage confusions due to hormonal changes. As we progress, the knots are put tight that we start looking of evidences of ancestral karma or blessing of God to the family to move towards moksha

When the elder one talks abt Rishi under water, calling of animals etc we expect the Siddhar or a story of a Nayanmar types. Then suddenly he vanishes, it does bring heaviness but not scariness. Then comes the 2nd, who bring the scariness. And the way he puts a fakes a shield over his carnal desires as if he is looking the body as flesh and blood, we think he may be a cannibal or a nara mamisam thinnum sadhu…but suddenly turns him to virtuous boy…and when we expect him to fulfill his parent’s desires, alas he is gone. We are told in the beginning the last boy would be 3rd to disappear. But when he decides that, thinking of his affection to his mom will be his shortcoming, there brings the heaviness. And he happens to be the corporate samiyar you see . The fourth is the third son…left to go on till the marriage day and boom…he is gone…

All these just take you on the flow, the twist comes in the last parts, which will make you feel so unsettled. It is a shock.

The description of Madikere, Kuttralam, the description of the underwater pond (hallucination scene), the usage of drugs, the way we look for signs to reinforce our beliefs are all so so well written
Right from Yogis (Guru of Vimal), to Siddhars to Tantric Yogas, Adharvana practices, Make beliefs, Drug usages, Hallucinations, to Corporate Gurus are all brought in so naturally into the flow
The scene setting in ECR , thiruvidandhai, kelambakkam is so well done.

The uncle character is the most pitiest among all. Next is the dad, though he is the reason (reason for what will be spoiler alert), because he never knows at all that he is the victim to the fruit of his misdeeds.

There are sentences sprinkled all the over the novel for our deep thoughts:


முடிந்ததைச் செய்வதுதான் யோகம். முடிந்ததையும் செய்யாதிருப்பதுதான் யோகத்தின் எதிர்நிலை.
அறிமுகமற்ற முகங்களின் நடுவேதான் தனிமையின் உச்சத்தைக் கண்டுணர முடியும். கூட்டத்தில் கரைவது காற்றில் கரைவதினும் பேரனுபவம்.


*


ஒரு போதையாகிவிடும் அளவுக்குத் தனிமை பழகிவிடுவதும் ஆபத்தே அல்லவா?


The scary part comes in last parts. The actual plot. The plot leaves the reader so unsettled. I had to read thrice the last 500 pages to understand the way the knots are unknotted. There is absolutely no remorse of the whole happening from any of the characters. Rather a contentment that the characters have inspite of the happenings- which is what makes it so scary.

The meaning and goal of Yoga or Penance could be anything. Penance is not renouncing outwardly, it is a mindset. What we choose matters.

Lighter note, whoever gets into adultery or affairs, be careful, you never know how you or who, may have to repay for the misdeeds; And when you see any man in rags or dogs looking at you on streets, better to think twice than feeling disgusted, never know who that soul is ;if there are signs from nature but reinforced by human, double confirm if they are real or not.

One of the must reads. Makes us get into some deep thinking.

Netflix should do a series with this.

O

2022 ஆம் ஆண்டு இந்த மதிப்புரை எழுதப்பட்டிருக்கிறது. ஃபேஸ்புக் மெமரியில் இருந்து கண்டெடுத்தேன்.

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 08, 2025 22:18

June 6, 2025

அன்பில் ஊறிய தோஷம்

Pa Raghavan

இந்தக் கேள்விகளும் பதில்களும் 2021 ஆம் ஆண்டு Binge Tamil செயலித்தளத்தில் பிறந்தவை. கபடவேடதாரி அங்கே தொடராக வெளியாகிக்கொண்டிருந்தபோது வாசகர்கள் கேட்டவையும் அதற்கு நான் அளித்த பதில்களும். சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட கேள்விகள் அப்போது கேட்கப்பட்டன. பெரும்பாலும் பதில் சொல்லியிருந்தேன். அவற்றில் சிறந்த ஆறு கேள்வி பதில்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அவை இவை. இன்று படிக்கும் யாருக்காவது பிடிக்கலாம் என்பதால் இங்கே போட்டு வைக்கிறேன்.

கோபி சரபோஜி

எழுதிய பல நூறு பக்கங்களை டெலிட் செய்ய நேரும்போது ஏன் அப்படிச் செய்ய நேர்ந்தது என எப்பொழுதாவது நினைத்ததுண்டா? திருப்தி இல்லை; அதனால் டெலிட் தவிர வேறு வழியிருக்கவில்லை என்றாலும், பல நேரங்களில் அப்படிச் செய்ய நேர்கையில் என்ன நினைத்துக்கொள்வீர்கள்?

எப்போதும் ஏராளமாக டெலிட் செய்ய வேண்டியிருக்காது. சில சமயம் அப்படி ஆகிவிடும். என்னிடம் ஒரு பிரச்னை உண்டு. எழுதிக்கொண்டிருக்கும்போது பாதியில் நிறுத்தினால் விட்ட இடத்தில் இருந்து இரண்டு மூன்று நாள் இடைவெளிக்குப் பிறகு திரும்பத் தொடங்கத் தெரியாது. மிகவும் தடுமாறிவிடுவேன். மீண்டும் முதலிலிருந்து ஆரம்பிப்பேன். இதனாலேயே தொடர்ந்து எழுதி முடிக்கும் மனநிலை, சூழல், உடல் நிலை அமையும்போது மட்டுமே பெரிய பணிகளைத் தொடுவேன். அப்படியும் எழுதியதில் திருப்தி வராமல் டெலீட் செய்யத் தோன்றினால் அது பற்றி யோசிக்கவோ வருந்தவோ மாட்டேன். திரும்பத் திரும்ப அழித்துவிட்டு எழுதுவது எனக்குப் பிடிக்கும். யதியின் இறுதியில் வரும் மயானக் காட்சியை மட்டும் சுமார் அறுபது விதமாக எழுதிப் பார்த்திருக்கிறேன். இறவானில், ஹராரி சிம்பொனியை அரங்கேற்றும் கனவுக் காட்சிக்கு என்னிடம் 17 வர்ஷன்கள் இருந்தன. அனைத்திலிருந்தும் சில வரிகளை எடுத்துத் தொகுத்துத்தான் அந்த அத்தியாயத்தை இறுதி செய்தேன்.

அனுராதா பிரசன்னாஎழுத்துதான் வாழ்வு என்றாலும் ஏதோ ஒரு நொடியில் அந்தந்த வயதுக்கான, வருடங்களுக்கான விஷயங்களை miss பண்ணியதாக நினைத்ததுண்டா?

இந்தக் கேள்விக்கு நெடு நேரம் மிகவும் நேர்மையாக யோசித்துப் பார்த்தேன். இல்லை என்கிற பதில்தான் உறுதியாகத் தோன்றுகிறது. கல்லூரி நாள்களில் செய்த அத்துமீறல்களைக் கூட ஆர்வத்துடன் செய்த நினைவில்லை. நான் ஒரு மக்குப் பையன் என்கிற தாழ்வுணர்ச்சிதான் என்னைப் பொறுக்கித்தனங்களை நோக்கித் தள்ளுகிறது என்பதை உணர்ந்தேதான் அவற்றைச் செய்தேன். அதனால்தான் கணப் பொழுதில் அனைத்தையும் உதறிவிட்டு ஆன்மிகத்துக்குள் ஒளிந்துகொள்ள இடம் தேடி ஓட முடிந்தது. அதில் எனக்கு அறியக் கிடைத்த அனைத்துமே என் தகுதிக்கு அப்பாற்பட்டவை என்று இப்போதுவரை தோன்றுகிறது. அதனால்தான் அடங்கி ஒடுங்க முடிந்தது. நான் மூச்சுவிட்டுக்கொண்டிருக்க எழுத்துதான் வழி என்று அங்கே உத்தரவாகிவிட்ட பிறகு மறு சிந்தனையே இல்லை. எழுத ஆரம்பித்த மிகத் தொடக்க காலத்திலேயே அசோகமித்திரனை சந்தித்துவிட்டேன் என்பதால் இது அகங்காரம் கொள்ள இடமே இல்லாத பாதை என்ற தெளிவு உண்டானது. என்ன ஒன்று; இன்னும் சிறிது முன்னால் தொடங்கியிருக்கலாம். இன்னும் நிறைய படித்திருக்கலாம். காலத்தை மிகவும் வீணடித்திருக்கிறேன். அந்த ஒரு வருத்தம் தவிர வேறு குறையே இல்லை.

அபிநயா ஶ்ரீகாந்த்யதி, இறவான், கபடவேடதாரி மூன்று படைப்புகளிலும் முக்கியக் கதாபாத்திரங்கள் அறிவும் ஞானச் செருக்கும் கொண்டவர்களாக அமைந்தது திட்டமிட்டதா? தற்செயலா?

திட்டமிட்டு இதையெல்லாம் செய்ய முடியாது. எல்லாம் அமைவதுதான். எப்படியோ எல்லா கதாபாத்திரங்களிலும் பகுதியளவு நான் இருந்துவிடுகிறேன் அல்லவா! அதைத் தவிர்க்க முடியாது. நான் என்னவாக இல்லையோ அதைச் சில பாத்திரங்களின் மீது ஏற்றிப் பார்க்க மனம் விரும்புகிறது என்று நினைக்கிறேன்.

ஜினோவிஎளிதில் திருப்தியடையச் செய்யும் தொலைக்காட்சித் தொடருக்கான எழுத்தை மேற்கொள்ளும் அதே நாளில் ரசனை மிகு இலக்கியப் புதினங்களையும் கால அட்டவணைக் கிரமத்தில் எழுதுவதாக ஒருமுறை பதிவிட்டிருந்தீர்கள். முதலாமதன் அயற்சியோ மந்தமோ, இரண்டாவதை பாதிக்காமல் எப்படித் தற்காத்துக்கொள்கிறீர்கள்?

தொலைக்காட்சித் தொடர்களுக்கு எழுதுவது என் ஜீவனோபாயம். அங்கே நான் எழுத்தாளனல்ல. தொழிலாளி மட்டுமே. தவிர, காதல் கொண்டு மனத்தைப் பறிகொடுக்கும் அளவுக்கு இந்தத் தொழில் பேரழகியல்ல. தொடர்களுக்கான கதை உருவாக்கங்களில் நான் பங்குபெறுவதில்லை. கதை அல்லது திரைக்கதை எழுதுவதுமில்லை. தரப்படும் காட்சிகளை வசன வடிவத்தில் மாற்றித் தருகிறேன். அவ்வளவுதான். எனது மொழி வங்கியின் ஒரு சதவீதம்கூட இதற்குப் பயன்படுவதில்லை. மொத்தமே முன்னூறு சொற்களுக்குள் தொடர் வசனங்களை அடைத்துவிட முடியும் என்று நினைக்கிறேன். கடுமையான வேலை நெருக்கடி நாள்களில் உடல் சோர்வு இருக்குமே தவிர இது மனத்தளவில் எந்த பாதிப்பும் தராது. கொலைக் காட்சி, மரணக் காட்சி, திருமணக் காட்சி, முதலிரவுக் காட்சி, குடும்பம் பிரியும் காட்சி, சேரும் காட்சி என்று எதை எழுதினாலும் உணர்ச்சிவசப்பட வாய்ப்பே இருக்காது. ஏனெனில் அனைத்தையும் குறைந்தது ஐந்நூறு முறை ஏற்கெனவே எழுதியிருப்பேன். அதே முன்னூறு சொற்களுக்குள் அவை அடங்கியிருக்கும். எனவே, வேலை முடிந்ததும் என் விருப்பமான செயல்பாடுகளில் ஈடுபட இது ஒரு தடையாகவே இராது. ஒரு நான்கு பக்கம் அசோகமித்திரனையோ, ராமசாமியையோ, பஷீரையோ படித்துவிட்டு எழுத ஆரம்பித்துவிட்டால் நான் வேறு ஆள்.

அன்பின் ஷிஜோஇறவான் நாவல்ல, பேருண்மைகள் சிறுவர்களுக்கு எப்போதும் தரிசனமாக அகப்படுகின்றன. பெரியவர்களால் தரிசனங்களின் மயிர்க்கூச்செரியச் செய்யும் பிரகாசத்தைத் தாங்க முடிவதில்லைன்னு சொல்லியிருக்கிங்க. அப்படி உங்களால் தாங்க முடியாத பிரகாசம் என்ன?

இந்த அன்பு, பேரன்பு, நிபந்தனையற்ற அன்பு, கட்டுக்கடங்காத பாசம், உயிரனைய உறவு எல்லாமே அழகிய மீபுனைவுகள் என்பதை உணர்ந்தறிந்ததைச் சொல்வேன். நம்மை நாமேகூட நூறு சதம் விரும்ப முடியாது என்பதுதான் உண்மை. திரும்பத் திரும்ப இது எனக்கு நிரூபிக்கப்பட்ட தருணங்களை என்னால் சரியாக எதிர்கொள்ள முடிந்ததில்லை. பல பெரிய தோல்விகளை, அவமானங்களைச் சந்தித்திருக்கிறேன். வேறொருவர் என்றால் எழுந்திருக்கக்கூட முடியாத அளவுக்கு மகத்தான தோல்விகள். ஆனால் அப்போதெல்லாம் அநாயாசமாக எழுந்து வந்திருக்கிறேன். அதே சமயம் யுக யுகாந்திரமாகத் தொடரப் போவதென நினைக்கும் உறவுகள் கணப் பொழுதில் முறிந்து போய்விடுகின்றன. எல்லாமே அன்பில் ஊறிய தோஷம்தான்.

ஜெயச்சந்திர ஹஷ்மிஎழுத்தைப் பொறுத்தவரையில் ஒரு எழுத்தாளனுக்குக் கிடைக்கக்கூடிய ஆகப் பெரிய விடுதலை எது? ஆகப் பெரும் சிறை எது?

எனக்கு இதற்குப் பொதுவான பதில் சொல்லத் தெரியவில்லை. என்னை மட்டும் முன்வைத்துச் சொல்லவா? எழுதுவதை ஒரு சுத்திகரிப்பு நடவடிக்கையாகவே நான் பார்க்கிறேன். என் கசடுகளை என்னால் முற்றிலுமாகப் பெருக்கித் தள்ள முடியுமோ முடியாதோ. என் கசடுகள் என்னென்ன என்று அறிவதற்கு எழுத்து எனக்கு உதவுகிறது. என் குறைகளை நான் பூரணமாக அறிந்தவன் என்பது எவ்வளவு பெரிய விடுதலை தெரியுமா? இதை விவரிக்கவே முடியாது. அவ்வளவு ஆசுவாசம் தரும். ஆனால் என்ன பிரச்னை என்றால், அந்த ஆசுவாசம் குற்ற உணர்வு என்னும் ஒரு பை-ப்ராடக்டுடன் வரும். எந்தக் குற்ற உணர்வில் இருந்து தப்பிப்பதற்காக ஆன்மிகத்தைத் தேடி ஓடினேனோ, எந்த ஆன்மிகம் என்னைப் பொருந்தாதவன் என்று இந்தப் பக்கம் திருப்பிவிட்டதோ, இந்த எழுத்தும் அந்தக் குற்ற உணர்வை அதன் மினுமினுப்பு குலையாமல் அப்படியேதான் பராமரிக்கிறது. இதைக் காட்டிலும் ஒரு சிறைப்படுதல் இருக்க முடியுமா? ஒரே ஒரு வித்தியாசம், காரணம் புரியாத துக்கம் என்று எனக்கு இன்று ஏதுமில்லை. என் அனைத்துத் துயரங்களுக்கும் எனக்குக் காரணம் தெரியும். அது, எழுதுவதன் மூலம் நான் கண்டறிந்ததே.

அனைத்துக் கேள்விகளையும் பதில்களுடன் படிக்க இங்கே செல்க.

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 06, 2025 18:36