Pa Raghavan's Blog, page 7
April 17, 2017
பொலிக! பொலிக! 95
தொண்டனூர் ஆலயத்தில், நரசிம்மர் சன்னிதியில் அவர்கள் கூடியிருந்தார்கள். பன்னிரண்டாயிரம் சமணர்கள் ஒரு புறம். ராமானுஜரும் அவரது சீடர்களும் ஒருபுறம். வேடிக்கை பார்க்க வந்த மக்கள் ஒரு புறம். மன்னன் விஷ்ணுவர்த்தனும் அவனது பரிவாரங்களும் ஒரு புறம்.
‘பன்னிரண்டாயிரம் பேரும் கேள்வி கேட்கப் போகிறீர்களா?’ சந்தேகத்துடன் கேட்டான் விஷ்ணுவர்த்தன்.
‘கண்டிப்பாக. எங்கள் அத்தனை பேர் வினாக்களுக்கும் இவர் விடை சொல்லியாக வேண்டும்’ என்றார்கள் சமணர்கள்.
‘சொல்கிறேன். நமக்கிடையே ஒரு திரை மட்டும் போட அனுமதியுங்கள்’ என்றார் ராமானுஜர்.
திரையின் ஒரு புறம் ராமானுஜர் இருக்க, மறுபுறம் அத்தனை பேரும் கேள்விகளுடன் தயாராக இருந்தார்கள்.
‘யார் முதல் வினாவைக் கேட்கப் போவது, அடுத்தது யார் என்று வரிசை ஏதும் வைத்திருக்கிறீர்களா?’
‘அதெல்லாம் கிடையாது. அனைவரும் கேட்போம். ஒரே சமயத்தில் கேட்போம். ஆனால் அனைத்தும் வேறு வேறு வினா. அத்தனை பேருக்கும் இவர் பதில் சொல்லியாக வேண்டும். அது எங்களுக்குத் திருப்தியாக இருக்க வேண்டும்.’
இது எப்படி சாத்தியம் என்று மன்னனுக்குப் புரியவில்லை. மக்களுக்கும் புரியவில்லை. சமணர்களுடன் அவர்கள் பேசிப் பார்த்தார்கள். ‘உங்கள் வினாக்களை எழுதிக் கொடுத்துவிடலாமே? ஒவ்வொன்றாக அவர் பதில் சொல்ல வசதியாக இருக்குமல்லவா? பன்னிரண்டாயிரம் கேள்விகளை நினைவில் வைத்து பதில் சொல்லுவது எப்படி சாத்தியம்?’
‘அவருக்குத்தான் சரஸ்வதி தேவியே அருள் புரிந்து ஹயக்ரீவர் விக்ரகம் பரிசளித்திருக்கிறாளாமே? அதெல்லாம் அவரால் முடியும். வாதத்தைத் தொடங்கலாமா?’
சரி என்றார் உடையவர்.
திரையிட்ட மறைப்பில் பத்மாசனமிட்டு அமர்ந்தார். கண்களை மூடினார். ஓம் நமோ நாராயணாய.
காற்றும் கனலும் கலந்தாற்போல் ஒரு பேரொளி அங்கு தோன்றியது. பஞ்சபூதங்கள் அதனுள் ஒடுங்கின. தேவர்களும் சப்தரிஷிகளும் ஒடுங்கினார்கள். அதுவரை யாரும் கேட்டறியாத ஒரு பிரம்மாண்ட சீற்றத்தின் ஒலி, சுருதியைப்போல் வெளியெங்கும் பரவி நிறையத் தொடங்கியது. அபூர்வமாக, அந்த ஒலிக்கு மணம் இருந்தது. அதைச் செவிகள் உணர்ந்தன. அது துளசியின் மணத்தை ஒத்திருந்தது. அது அசைந்தது. அசையாமலும் இருந்தது. தோன்றிய பேரொளியின் நடு நெற்றியில் இருந்து அந்த ஒலி வந்துகொண்டிருப்பதை உணர முடிந்தது. சட்டென்று அந்த ஒளிப் பிரளயம் ஒரு பெரும் நாகமாக உருக்கொண்டது. பிரம்மாண்டமான அதன் சிரம் சரசரசரவென இரு புறமும் பெருகி சஹஸ்ரமானது. அந்த ஆயிரம் தலைகளுக்குள் இருந்தும் ஒரே சமயத்தில் நாக்குகள் வெளியே நீண்டன.
‘ம், ஆரம்பியுங்கள்!’ சீற்றத்தின் ஒலி சொற்களாக உருக்கொண்டன.
நாராயணா! நாராயணா! என்று உடையவரின் சீடர்கள் சடாரென எழுந்து நின்று கரம் கூப்பினார்கள். கணப் பொழுதில் அவர்களுக்குப் புரிந்துவிட்டது. சப்த ரிஷிகளுள் ஒருவரான காஸ்யபர், அதிதியுடன் சேர்ந்து இந்திரனையும் அக்னியையும் பெற்றார். திதியுடன் சேர்ந்து அசுரர்களில் ஒரு பிரிவினரான தைத்தியர்களைப் பெற்றார். வினதாவுக்கு கருடனைப் பெற்றார். முனியுடன் இணைந்து அரம்பையரைப் பெற்றார். கத்ருவுடன் சேர்ந்து சேஷனைப் பெற்றார்.
ஆயிரம் தலைகளும் அகண்டு திரண்ட பெரும் தேகமும் கூர் விழிகளும் த்வய சித்தமுமாகப் பாற்கடலில் பரமனின் பீடமாகக் கிடக்கிற ஆதிசேஷன். ராமாவதாரத்தில் அவர் லட்சுமணனாக வந்து நின்றார். கிருஷ்ணாவதாரத்தில் பலராமனாகப் பிறப்பெடுத்தார். கலியின் தொடக்கத்தில் நம்மாழ்வாராகப் பெருமான் பிறப்பெடுக்க முடிவு செய்தபோது புளியமரமாக முன் தோன்றி, அவர் தங்க நிழல் அமைத்தார். ‘பொலிக! பொலிக!’ என்று நம்மாழ்வார் வாயால் அடுத்த அவதாரத்துக்கான சூசகம் வெளிப்பட்டபோது, ‘இதோ புறப்பட்டுவிட்டேன்’ என்று ராமானுஜராக வந்துதித்தார்.
‘ஆஹா! எப்பேர்ப்பட்ட தருணம்! உடையவர் இந்த சமணர் சபையில் தமது அவதார ரகசியத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அவர்களுக்கு இது புரியாது. அவர்களால் உணர முடியாது. திரைக்கு அப்பால் என்ன நிகழ்ந்தது என்பதைக் கூட அவர்கள் அறியமாட்டார்கள். எழுந்து நிறைந்த பேரொளியைக் காண முடியாமல் கணப் பொழுது கண்ணை மூடிக்கொண்டவர்கள். ஆதிசேஷனின் மூச்சுக்காற்றின் சீற்றத்தில் மணந்த துளசியின் வாசம் உணர்ந்திருப்பார்களா! சந்தேகம்தான்.’ முதலியாண்டான் பரவசத்துடன் சொல்லிக்கொண்டிருந்தார்.
மறுபுறம் சமணர்கள் பன்னீராயிரம் பேரின் வினாக்களுக்கு உடையவர் தமது ஆதி அவதார வடிவில் ஆயிரம் நாக்குகளால் தங்கு தடையற்று பதில் சொல்லிக்கொண்டிருந்தார். என்ன நடக்கிறது என்றே மன்னனுக்குப் புரியவில்லை. ஒரு திரை. அதற்கு அப்பால் ராமானுஜர் இருக்கிறார். ஒரே ஒருவர்தான் அங்கே இருப்பது. அதில் சந்தேகமில்லை. வெளிப்பட்டு வருவதும் ஒரு குரல்தான். ஆனால் அதெப்படி ஒரே சமயத்தில் ஆயிரம் பதில்கள் வருகின்றன? மொத்தம் பன்னிரண்டு முறை ஆதிசேஷன் திருவாய் மலர்ந்தார். பன்னிரண்டாயிரம் வினாக்களுக்கான பதில்கள். முடிந்தது.
திகைத்துப் போனார்கள் சமணர்கள். ‘உடையவரே, நாங்கள் தோற்றோம். கேட்கும் தகுதி எங்களுக்கு இல்லை. உம்மைச் சரணடைவது ஒன்றே மிச்சமிருக்கும் பணி. எழுந்து வெளியே வாருங்கள்!’ என்று கரம் கூப்பி நின்றார்கள்.
சில வினாடிகள் பெரும் நிசப்தம். திரைக்கு அப்பால் எழுந்தருளியிருந்த ஆதிசேஷன் உடையவராக மாறினார். திரை அசைந்தது. அதை விலக்கி ராமானுஜர் வெளியே வந்தார். தாள் பணிந்த பன்னிரண்டாயிரம் சமணர்களும் வைணவத்தை ஏற்றார்கள். ராமானுஜர் அவர்களுக்கு பஞ்சசம்ஸ்காரங்களைச் செய்துவைத்தார். அன்று ஹொய்சள மண்ணில் சமணம் இல்லாது போயிற்று.
தொண்டனூரிலேயே அவர் சிறிது காலம் தஙக்வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டார்கள்.
‘அதற்கென்ன? இந்த நரசிம்மப் பெருமாள் கோயிலே அற்புதமாக இருக்கிறது. இங்கேயே தங்குவோம்!’ என்றார் ராமானுஜர். ஒரே நாளில் பல்லாயிரக்கணக்கான சீடர்கள் சேர்ந்துவிட, அவர்கள் அனைவருக்கும் திருமண் காப்பு சேர்க்க என்ன செய்வது என்று அவருக்குக் குழப்பமாக இருந்தது. அது பெருமானின் பாதாரவிந்தம். அதை நெற்றியில் ஏந்தியிருப்பதே வைணவருக்கு அழகு என்பார் ராமானுஜர்.
ஹொய்சள தேசத்தில் திருமண் அணிபவர்கள் யாருமில்லை என்பதால் இப்போது ராமானுஜருக்கு அது ஒரு பெரும் பிரச்னையாகிவிட்டது. இத்தனை பேருக்கும் திருமண் வேண்டும். அதுவும் தினமும் வேண்டும். என்ன செய்யலாம்?
உபவாசம் இருந்து பிரார்த்தனை செய்தார்.
அன்றிரவு அவருக்கு ஒரு கனவு வந்தது. கனவில் பெருமான் தோன்றினான். ‘உடையவரே, கவலைப்படாதீர்கள். நேரே கிளம்பி யதுகிரிக்குச் செல்லுங்கள். அங்கே வேதபுஷ்கரணி என்றொரு குளம் உண்டு. அதன் வடமேற்கு மூலையில் நீங்கள் தேடுவது கிடைக்கும்!’
தேடியது மட்டுமல்ல; தேடாத ஒன்றும் சேர்த்துக் கிடைக்கப்போகிறது என்பது அப்போது அவருக்குத் தெரியாது.
(தொடரும்)
Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
April 16, 2017
பொலிக! பொலிக! 94
பிட்டி தேவனுக்கு அது ஒரு தீராத கவலை. நாடாளும் மன்னனாக இருந்தென்ன? யோசிக்காமல் செலவு செய்ய வல்லமை கொண்டிருந்தென்ன? ஒரு வார்த்தை உத்தரவிட்டால் போதும். ஓடி வந்து சேவகம் செய்ய நூறு நூறு பேர் இருந்தென்ன? பலகாலமாகப் பலவித முயற்சிகள் செய்து பார்த்தும் அவரது மகளுக்கு இருந்த மனநோய் தீரவில்லை. திடீர் திடீரென்று ஓலக் கூக்குரலிடுவாள். தலைவிரி கோலமாக வீதியில் இறங்கி ஓடுவாள். பேய் பிடித்த மாதிரி ஆவேசம் வந்து ஆடித் தீர்ப்பாள்.
கர்ம வினை என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்கள் சோதிடர்கள். சமண குருமார்கள் தங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டார்கள். கொடுத்த மூலிகை மருந்துகளும் பச்சிலை வைத்தியங்களும் ஆத்ம திருப்திக்காக மட்டுமே என்றாகிப் போனது. மன்னன் மகளின் மனநிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.
சட்டென்று ராமானுஜரின் பெயரைத் தொண்டனூர் நம்பி சொன்னபோது மன்னன் ஒரு கணம் யோசித்தான். ‘வைணவரா?’ என்று கேட்டான்.
‘ஆம் சுவாமி. திருவரங்கம் பெரிய கோயில் நிர்வாகமே அவரிடம்தான் உள்ளது. பிரம்ம சூத்திரத்துக்கு அவர் எழுதிய உரையைக் காஷ்மீரத்தில் உள்ள சாரதா பீடத்தின் தெய்வமே ஏற்று அங்கீகரித்திருக்கிறது. அரங்கனின் தலைமகன். ஆதிசேஷன் அம்சம்!’ என்றார் நம்பி.
மன்னனுக்கு அதெல்லாம் காதில் விழவில்லை. என்ன கெட்டுவிட்டது? யாரோ முன்பின் தெரியாத ஒரு துறவி வந்திருக்கிறார். அவரால் தன் மகளைக் குணப்படுத்த முடியும் என்று இந்த நபர் சொல்கிறார். முயற்சி செய்து பார்ப்பதில் என்ன பிழை?
‘சரி, வரச் சொல்லுங்கள்’ என்று உத்தரவு கொடுத்தான் பிட்டி தேவன்.
விஷயம் ராமானுஜருக்குப் போய்ச் சேருமுன் அங்கிருந்த சமணர்களுக்குப் போய்ச் சேர்ந்துவிட்டது.
‘ஐயோ நாம் மோசம் போய்க்கொண்டிருக்கிறோம். ராமானுஜர் மன்னன் மகளை குணப்படுத்திவிட்டால் அந்த முட்டாள் ராஜன் வைணவனாகிவிடுவான். ஏற்கெனவே மிதிளாபுரியில் சமணத் துறவிகள் மதம் மாறி மக்களைக் குழப்பியிருக்கிறார்கள். இப்போது மன்னனும் மாறிவிட்டால் இங்கே சமணம் என்ற ஒன்று இருந்த சுவடே இல்லாமல் அழிந்துவிடும்!’
‘ஆனால் நாம் செய்யக்கூடியது என்ன? மன்னன் முடிவு செய்துவிட்டான். நாளை ராமானுஜர் அரண்மனைக்குச் செல்வது உறுதியாகிவிட்டது. இதற்குமேல் என்ன நடந்தாலும் எதிர்கொண்டுதான் தீரவேண்டும்.’
அவர்களுடைய பிரச்னை, அவர்கள் யாரும் அரண்மனைக்குள் சென்று மன்னனைச் சந்திக்க மாட்டார்கள் என்பது. மிக வினோதமான ஒரு காரணம் வைத்திருந்தார்கள். டெல்லி சுல்தானுடன் நடந்த ஒரு யுத்தத்தில் பிட்டி தேவனின் விரல் ஒன்று துண்டாகிப் போனது. ஓர் அங்கஹீனன் மன்னனாக இருப்பது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அதனாலேயே அரண்மனைக்குப் போகாதிருந்தார்கள். இப்போது ராமானுஜர் உள்ளே நுழைந்து தங்களது வேர்களை அசைத்துவிட்டால்?
பயமாக இருந்தது. ஆனால் உடனடியாக எதுவும் செய்ய முடியும் என்றும் தோன்றவில்லை.
‘பார்ப்போம். நாம் அச்சப்படுவதுபோல் ஏதும் நடக்காமலே போகலாம். அப்படி அசம்பாவிதமாகிவிட்டால் இருக்கவே இருக்கிறது வாதப் போர்’ என்றார் துறவிகளில் மூத்தவர்.
அவர்கள் காத்திருந்தார்கள்.
மறுநாள் உடையவர் தமது சீடர்கள் முதலியாண்டான், பிள்ளான், கிடாம்பி ஆச்சான், வில்லிதாசர், நடாதூர் ஆழ்வான் ஆகியோரை அழைத்துக்கொண்டு மன்னனின் சபைக்குச் சென்றார். தொண்டனூர் நம்பி அவர்களை மன்னனுக்கு அறிமுகம் செய்து வைத்தபிறகு சித்தம் கலங்கிய இளவரசியை மன்னன் அழைத்து வந்தான்.
ராமானுஜருக்கு ஒரு கணம் காஞ்சியில் இதேபோன்றதொரு சம்பவம் பல்லாண்டுகளுக்கு முன் நடந்தது நினைவுக்கு வந்தது. யாதவப் பிரகாசரின் மாணவனாக மன்னனின் சபைக்குச் சென்ற தருணம். அங்கும் பேய் பிடித்த இளவரசி. அங்கு காத்த பரம்பொருள்தான் இங்கும் காக்க வேண்டும்.
கண்மூடிப் பிரார்த்தனை செய்தார். அந்தப் பெண்ணுக்குப் துளசி தீர்த்தம் கொடுத்து ஆசீர்வதித்தார். கணப் பொழுது மயங்கி விழுந்த இளவரசி, எழுந்தபோது குணம் மாறியிருந்தாள். தன் முன் நின்றிருந்த ராமானுஜரை நோக்கிக் கைகூப்பினாள். சட்டென்று காலில் விழுந்து எழுந்தாள்.
பார்த்துக்கொண்டிருந்த மன்னனுக்கும் அவனது மனைவிக்கும் நம்பமுடியாத வியப்பு. ‘மகளே..’ என்று பாசம் பீறிட்டுப் பாய்ந்து சென்று அணைத்துக்கொண்டு கண்ணீர் உகுத்தான்.
‘உடையவரே, தொண்டனூர் நம்பி சொன்னபோது நான் நம்பவில்லை. ஆனால் உண்மையிலேயே நீர் மகத்தான துறவி. தெய்வ சக்தி பொருந்திய தாங்கள் என்னை நல்வழிப் படுத்தி அருளவேண்டும்’ என்று பணிந்து கரம் கூப்பினான்.
சமணத் துறவிகள் எதற்கு பயந்தார்களோ அது அப்போது நடந்தது. உடையவர் மன்னன் பிட்டி தேவனுக்கு வைணவத்தின் சிறப்புகளை எடுத்துச் சொன்னார். ‘இவ்வுலக வாழ்வின் சந்தோஷங்களுக்கும், இறந்தபின் மோட்சம் அடையவும் உள்ள ஒரே திறவுகோல் இதுதான். கண்ணை மூடிக்கொண்டு காலில் விழுந்துவிடு மன்னா. எம்பெருமான் என்றும் உன் பக்கம் இருப்பான்.’
‘அப்படியே சுவாமி!’ என்றான் பிட்டிதேவன். அக்கணமே அவன் உடையவரின் சீடனாகிப் போனான்.
‘இனி நீ விஷ்ணுவர்த்தன் என்று அழைக்கப்படுவாய்!’ என்று ஆசீர்வதித்தார் ராமானுஜர்.
செய்தி பரவிய மறுகணமே பன்னிரண்டாயிரம் சமணர்கள் அரண்மனையை நோக்கித் திரண்டு வந்தார்கள்.
‘இதை ஒப்புக்கொள்ள முடியாது. உணர்ச்சி மேலிட்டு ஒரு மன்னன் மதம் மாறுவது மக்களைக் குழப்பும். தவறாகச் செலுத்திச் செல்லும். உண்மையில் வைணவமே உயர்ந்தது என்றால் உடையவர் அதை எங்களுடன் வாதம் செய்து நிரூபிக்கட்டும்!’ என்று ஆவேசக் கூக்குரலிட்டார்கள்.
‘வாயை மூடுங்கள்!’ என்று சீறினான் பிட்டி தேவன்.
‘மன்னா, அமைதியாக இருங்கள். வாதம் நல்லதுதானே. ஒரு விதத்தில் அவர்கள் சொல்வதுமே சரிதான். கண்மூடித்தனமாக ஏன் ஒன்றை ஏற்கவேண்டும்? வைணவம் காலக் கணக்கற்றது. இயல்பாக இருப்பது. காற்றைப் போன்றது. நீரைப் போன்றது. வான்வெளி போன்றது. இதனோடு வாதிட்டு சமணம் வெல்லும் என்று அவர்கள் கருதினால், அந்த நம்பிக்கைக்கு மதிப்புத் தருவோம். ஆனால் வாதத்தின் இறுதியில் உண்மையில் எது சிறந்தது என்று அவர்களுக்கும் புரியுமல்லவா? எங்கள் ஆசாரியர் வாதப்போருக்கு மறுப்பு சொல்வதே இல்லை!’ என்றார் முதலியாண்டான்.
‘நல்லது. நாங்கள் பன்னிரண்டாயிரம் பேர் வாதம் புரிய வந்துள்ளோம். உங்கள் தரப்பில் எத்தனை பேர் உட்காருவீர்கள்?’
‘இதென்ன அபத்தம்? நீங்கள் எத்தனை பேர் வேண்டுமானாலும் வாருங்கள். உடையவர் மட்டுமே உங்களுக்கு பதில் சொல்வார்!’ என்றார் வில்லிதாசர்.
‘ஒரே சமயத்தில் அத்தனை பேர் கேள்விகளுக்கும் ஒருவரே எப்படி பதில் சொல்ல முடியும்?’
ராமானுஜர் புன்னகை செய்தார்.
(தொடரும்)
Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
April 15, 2017
பொலிக! பொலிக! 93
ஹொய்சளர்களின் ஆட்சி அப்போது நடந்துகொண்டிருந்தது. கர்நாடகத்தின் பெரும்பகுதி அவர்களிடம்தான் இருந்தது. மைசூரைச் சுற்றிய பகுதிகளை ஆண்டுகொண்டிருந்த பிட்டி தேவன் சமண மதத்தைச் சேர்ந்தவன். அன்றைக்கு அந்தப் பிராந்தியத்தில் வீர சைவமும் சமணமும்தான் பிரதானமான மதங்கள்.
பிறந்தக் கணம் முதல் கழுத்தில் லிங்கத்தை அணியும் லிங்காயத மதம் என்னும் வீர சைவம், சைவத்தின் தீவிரப் பிரிவுகளுள் ஒன்று. தாந்திரீகத்தை உள்ளடக்கியது. தாந்திரீகம், அதர்வ வேதத்தில் இருந்து கிளைத்து வருவது. பக்தி இயக்கம் இதனை ஆதரிப்பதில்லை. ராஜராஜ சோழன் தென்னகமெங்கும் புகழ் பெற்ற மன்னனாக ஆட்சி புரிந்த காலத்தில் தனது சைவப் பணிகளில் ஒன்றாகத் தாந்திரீகத்தை வளரவிடாமல் செய்வதை மேற்கொண்டான். தாந்திரீகப் பாடசாலைகளைத் தமிழ் மண்ணில் இருக்க விடாமல் செய்தான். தமிழகம் ஏற்காத தாந்திரீகத்தைக் கர்நாடகம் ஏற்றது. வீர சைவர்களின் ரகசிய அடையாளமாக அது மாறியது. அவர்களுக்கு சிவம் என்பது சகல உயிர்களுக்குள்ளும் இருப்பது. தனியே கோயிலில் உள்ளதல்ல. சதாசாரம், சிவாசாரம், விருத்தியாசாரம், கணாசாரம் என்று அவர்களுக்கென்று பிரத்தியேகமான ஒழுக்க நெறிகள் உண்டு. எட்டு வகைக் காப்புகள், ஆறு வகைப் பயிற்சிகள் என்று அவர்களது வாழ்க்கை முறை அலாதியானது.
மறுபுறம் ஜைனம், ஆருகதம், நிகண்டம், அநேகாந்தவாதம், சியாத்வாதம் என்று பல பெயர்களில் அழைக்கப்பட்ட சமணமும் கர்நாடகத்தில் தழைத்துக்கொண்டிருந்தது. சமணம் என்ற சொல்லுக்குத் துறவு என்று பொருள். துறவறத்தை வற்புறுத்திச் சொல்லுகிற மதம் அது. வீடு பேறு அடைய துறவேற்பதே ஒரே வழி என்பார்கள். ஆனால் இறை மறுப்பு என்பதே சமணத்தின் அடிப்படை. கடுமையான ஒழுக்கக் கட்டுப்பாடுகளையும் தியாகத்தையும் வற்புறுத்துகிற மதம் அது. காலவரையறைக்கு அப்பாற்பட்டது. ரிக் வேதத்தில் குறிப்பிடப்படுகிற ரிஷப தேவரையே சமணர்கள் தமது முதல் தீர்த்தங்கரர் என்று சொல்லுவார்கள். இருபத்தி நான்காவது தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் காலத்தில்தான் சமணம் ஒரு மதம் என்கிற அடையாளத்தையும் உரிய சீர்திருத்தங்களையும் பெற்றது.
ராமானுஜர் தமது சீடர்களுடன் பிட்டி தேவனின் எல்லைக்கு உட்பட்ட பிராந்தியத்தில் அடியெடுத்து வைத்தபோது இந்த இரு மதத்தாரும் அவரைக் கடுமையாக எதிர்த்தார்கள். அவர்களுக்கு உடையவரைத் தெரிந்திருந்தது. காஷ்மீரம் வரை சென்று வைணவம் பரப்பிய பெரியவர். மதத் தலைவர்களை வாதில் வென்று மன்னர்களை வைணவத்தின் பக்கம் திருப்பியவர். இவர் எதற்கு இங்கே வந்திருக்கிறார்? இதைக் கண்டிப்பாக அனுமதிக்க முடியாது.
வீர சைவர்களும் சமணர்களும் நண்பர்கள் அல்லர். ஆனால் உடையவரை எதிர்க்கும் விஷயத்தில் இருவரும் ஒரே நோக்கத்தோடு தனித்தனியே ஈடுபட்டார்கள்.
மிதிளாபுரி என்ற பகுதிக்கு ராமானுஜர் முதல் முதலில் வந்து சேர்ந்தபோது ஊரே திரண்டு எதிர்த்தது.
‘என்ன செய்யலாம் சுவாமி? இங்கே இருக்க முடியாது போலிருக்கிறதே!’ என்று கவலைப்பட்டார்கள் சீடர்கள்.
ராமானுஜர் கண்மூடி அமைதியாகச் சில வினாடிகள் யோசித்தார். பிறகு முதலியாண்டானைப் பார்த்து, ‘நீர் ஸ்நானம் செய்துவிட்டீரா?’ என்று கேட்டார்.
‘இல்லையே? இனிதான் எல்லோருமே நீராட வேண்டும்.’
‘அப்படியானால் ஒன்று செய்யும். நீர் முதலில் கிளம்பிப் போய் இந்த ஊரில் இருக்கிற குளத்தில் குளித்துவிட்டு வாரும்.’
ராமானுஜர் எதற்கு அப்படிச் சொல்கிறார் என்று யாருக்கும் புரியவில்லை. அது விடிகாலைப் பொழுது. வெளிச்சம் வந்திராத நேரம். முதலியாண்டான் ஏன் எதற்கு என்று கேள்வி ஏதும் கேட்டுக்கொண்டிருக்காமல் உடனே கிளம்பினார். நேரே ஊரின் மத்தியில் உள்ள குளத்துக்குச் சென்றார். குளக்கரையில் யாரும் இல்லை. நல்ல குளிர் இருந்தது. இருளில் குளத்தின் நீர் அலையடிப்பது மங்கலாகத் தெரிந்தது. அவர் ஆடைகளைக் களைந்து ஓர் ஓரமாக வைத்துவிட்டுக் குளத்தில் இறங்கினார்.
நீரில் அவர் பாதம் பட்ட மறுகணமே ஒரு குரல் ஓடி வந்தது. ‘சுவாமி! உம்மைக் கால் அலம்பிக்கொண்டு வந்தால் போதும் என்று ஆசாரியர் சொல்லச் சொன்னார்.’
பின்னாலேயே விரைந்து வந்து தகவல் சொன்ன சீடருக்கே உடையவர் ஏன் தாம் முன்னர் சொன்னதை மாற்றிச் சொன்னார் என்று புரியவில்லை. முதலியாண்டான் கால்களை மட்டும் கழுவிக்கொண்டு கரை ஏறிவிட்டார்.
சில மணி நேரத்தில் அவர்கள் எதிர்பாராத சம்பவங்கள் நடக்க ஆரம்பித்தன. அந்த ஊரில் இருந்த வீர சைவர்களும் சமணர்களும் ராமானுஜர் இருக்கும் இடத்தைத் தேடி வர ஆரம்பித்தார்கள்.
‘சுவாமி! தங்கள் அருமை புரியாமல் வாய்க்கு வந்தபடி பேசிவிட்டோம். நீங்கள் பெரிய மகான். தங்கள் சித்தாந்தம் மதிப்பு வாய்ந்தது. எங்களுக்கும் அதை விளக்கிச் சொல்லி அருள வேண்டும்!’
ராமானுஜர் புன்னகை செய்தார். அன்று அந்த அற்புதம் நிகழ்ந்தது. மிதிளாபுரியின் அத்தனை வீர சைவர்களும் சமணர்களும் உடையவரிடம் ஶ்ரீவைஷ்ணவ சித்தாந்தப் பாடம் கேட்டார்கள். இதுவல்லவோ முக்தி நெறி! இதுவல்லவோ கதி மோட்சம் தரவல்லது! என்று பரவசப்பட்டு வைணவத்தைத் தழுவி, பரம பாகவதர்களாகிப் போனார்கள்.
‘சுவாமி, தயவுசெய்து சொல்லுங்கள். என்ன நடந்தது இங்கே? நாம் ஊர் எல்லையை நெருங்கும் முன்னரே விரட்டியடிக்கப் பார்த்தவர்கள் எப்படி இப்படி மனம் மாறினார்கள்?’ சீடர்கள் ஆர்வம் தாங்கமாட்டாமல் கேட்டார்கள்.
‘நான் எதுவுமே செய்யவில்லையப்பா! செய்ததெல்லாம் முதலியாண்டானின் பாதம் பட்ட நீர்தான்!’ என்றார் ராமானுஜர்.
திட சித்தமும் ஆழ்ந்த பக்தியும் தெளிந்த ஞானமும் பரந்த மனமும் கொண்ட முதலியாண்டானின் பாதம் பட்ட நீரில் அவர்கள் அன்று காலை குளித்தெழுந்தபோது அவர்கள் சித்தம் மாறியிருக்கிறது என்பது அவர்களுக்குப் புரிந்தது.
‘நம்பவே முடியவில்லை சுவாமி! இது அற்புதம்தான். சந்தேகமே இல்லை!’
‘நிச்சயமாக இல்லை. இது சாதாரணம். பாகவத உத்தமர்களை பகவான் கைவிடுவதேயில்லை’ என்றார் ராமானுஜர்.
மிதிளாபுரிக்கு அருகே தொண்டனூர் என்ற ஊரில் உடையவரின் பக்தர் ஒருவர் இருந்தார். அவர்மூலம் இந்த விவரம் மன்னன் பிட்டி தேவனுக்குத் தெரியவந்தது.
‘அத்தனை பெரிய மகானா? அவரது சீடரின் பாதம் பட்ட நீருக்கே இந்த சக்தி என்றால் அவரது பார்வை இங்கு பட்டால்?’
‘அழைத்துப் பேசுங்கள் மன்னா. தங்கள் மனத்தை வாட்டும் எந்தக் குறையையும் அவரால் போக்க முடியும்!’ என்றார் தொண்டனூர் நம்பி.
மன்னனுக்கு உடனே தன் மகளின் நினைவுதான் வந்தது. மனநிலை பிறழ்ந்து இருந்த மகள்.
(தொடரும்)
Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
ருசியியல் 18
இந்த எடைக்குறைப்பு என்பது ஓர் அகண்ட பரிபூரணானந்த லாகிரி. கொஞ்சம் ருசித்துவிட்டால் மனுஷனை ஒரு வழி பண்ணாமல் ஓயாது. நானெல்லாம் பிறந்தது முதலே அடை, வடை வகையறாக்களுடன் இடைவெளியின்றி உறவாடிய ஜந்து. நடுவே இடை என்ற ஒன்றும் எடை என்ற மற்றொன்றும் இருப்பது பற்றியெல்லாம் எண்ணிக்கூடப் பார்த்ததில்லை. விரோதிக்ருதுவில் ஆரம்பித்து ஹேவிளம்பி முந்தைய வருஷம் வரைக்கும் அங்ஙனமே இருந்துவிட்டு, சட்டென்று ஒரு நாள் பார்த்து, எடையைக் குறைப்போம் என்று இறங்கினால் இப்படித்தான் ஏடாகூடங்களை எதிர்கொள்ள நேரிடும்.
கார்ப் ஷாக் என்கிற தடாலடி ஒரு நாள் உணவு மாற்ற உற்சவத்தைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தேன். முழு நாள் உண்ணாவிரதம், மாவுச் சத்து மிக்க ஒரு முழு விருந்து, அதன்பின் மீண்டும் ஒரு முழுநாள் உண்ணாவிரதம் என்பது என் திட்டம். சரியாக இதனைச் செய்து முடித்தபின் அடுத்த நாள் காலை எடை பார்த்தால் கண்டிப்பாக இரண்டில் இருந்து மூன்று கிலோ வரை குறைந்திருக்கும் என்று வல்லுநர்கள் சொல்லியிருந்தார்கள்.
ஆனால், நான் எடை பார்த்தபோது தொள்ளாயிரம் கிராம் ஏறியிருந்தேன். குலை நடுங்கிவிட்டது. இதென்ன அக்கிரமம்! இந்த இயலின் ஆராய்ச்சியாளர்கள் இந்த கார்ப் ஷாக்கின்மூலம் எடைக் குறைப்பு நிச்சயம் நடக்கும் என்று சொல்லியிருப்பது உண்மையென்றால் எனக்கு எப்படி ஒரு கிலோ ஏறும்? எந்தக் கேடுகெட்ட சைத்தான் எனக்குள்ளே சென்று உட்கார்ந்துகொண்டு இப்படியொரு போட்டி அதிமுக நடத்த ஆரம்பித்திருக்கிறான்? புரியவில்லை.
இதில் உச்சக்கட்ட வயிற்றெரிச்சல் ஒன்று உண்டு. என் நண்பர் ஈரோடு செந்தில்குமாரைப் பற்றி ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன் அல்லவா? தமிழகத்தில் அவரை விஞ்சிய கனபாடிகள் ஒருவர் இந்நாளில் இருக்க முடியாது. நமக்கெல்லாம் 192 என்றால் நோட்டுப் புத்தகம்தான் நினைவுக்கு வரும். அவர் எடையில் அந்த எண்ணை எட்டிப் பிடித்தவர். அவருக்கும் என்னைப் போல் ஒருநாள் இந்த எடைச் சனியனைக் குறைத்தால் தேவலை என்று தோன்றி, கொழுப்புணவுக்கு மாறி சர்வ அநாயாசமாக ஐம்பது கிலோ குறைத்தவர். அதோடு மனிதர் திருப்தியடைந்தாரா என்றால் இல்லை.
தனது ஸ்தூல சரீரத்துக்கு அந்த கார்ப் ஷாக் உற்சவத்தை அடிக்கடி கொடுத்துப் பார்க்க ஆரம்பித்தார். சென்றவாரம் நான் விளக்கு வாங்கிய அதே சமயம் செந்திலும் அந்தப் பரீட்சையில் இறங்கினார். ஆனால் அவர் என்னைக் காட்டிலும் பலமடங்கு வீரியம் மிக்க விரத பயங்கரவாதி. என்னால் இருபத்தி நான்கு மணி நேரம் உண்ணாமல் இருக்க முடியும். அதன்பின் ஒரு பிரேக் எடுத்து சாப்பிட்டுவிடுவேன். செந்தில் முப்பத்திரண்டு மணி நேரம், நாற்பத்தியெட்டு மணி நேரமெல்லாம் தொடர் உண்ணாவிரதம் இருக்கக்கூடியவர். சரியாகச் சொல்லுவதென்றால் உண்ணுவதில் உள்ள அதே தீவிரம் அவருக்கு உண்ணாதிருப்பதிலும் உண்டு.
அப்பேர்ப்பட்ட மகானுபாவர் இம்முறை எழுபத்தி இரண்டு மணி நேர உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தார். முனிபுங்கவர் மாதிரி ஓரிடத்தில் அக்கடாவென்று உட்கார்ந்து கண்ணை மூடித் தவம் செய்வதென்றால் இப்படி உண்ணாதிருப்பது பெரிய பாதிப்பைத் தராது. அக்காலத்து முனிவர்களெல்லாமே இம்மாதிரி கொழுப்புணவு உண்டு, உடம்பைப் பசிக்காத நிலைக்குப் பழக்கிக்கொண்டுதான் தவத்தில் உட்காருவார்கள்.
நவீன உலகில் புருஷ லட்சணமாக உத்தியோகம் என்று என்னவாவது ஒன்றைச் செய்து தீர்க்க வேண்டியிருக்கிறதே? என் நண்பர், அதையும் செய்தபடிக்குத்தான் விரதமும் இருப்பார்.
இம்முறை அவர் தொடர்ந்து மூன்று தினங்களுக்கு எதுவும் சாப்பிடுவதில்லை என்று முடிவு செய்து அறிவித்தபோது முதலில் என்னால் அதை நம்ப முடியவில்லை. விரதம் என்றால் ஜீரோ கலோரி என்று அர்த்தம். போனால் போகிறதென்று ஒரு நாளைக்கு இரண்டு வேளை பால் சேர்க்காத, சர்க்கரை போடாத கடும் காப்பி வேண்டுமானால் அருந்திக்கொள்ளலாம். நூறு மில்லிக்கு ஒரு கலோரிதான் அதில் சேரும். அது நாலு முறை சுச்சூ போனால் சரியாகிவிடும்.
நான் சொன்னேன், இது உதவாது. விரத இலக்கணங்களை ஒழுங்காகக் கடைப்பிடித்தும் எனக்கு இந்த அதிர்ச்சி வைத்தியம் ஒத்துவரவில்லை. நாமெல்லாம் பிறவி கார்போஹைடிரேட் அலர்ஜியாளர்கள். ஒருவேளை அரிசிச் சோறு உண்டால்கூட ஒரு கிலோ ஏற்றிக்காட்டுகிற உடம்பை ஓரளவுக்குமேல் தேர்வு எலியாகப் பயன்படுத்தக்கூடாது.
அவர் கேட்கிற ஜாதியில்லை. திட்டப்படி எழுபத்திரண்டு மணி நேர விரதத்தை நடத்தி முடித்தார். விரதம் முடித்தபோது அவர் சாப்பிட்டவை இவை: ஐந்து முட்டைகள், கால் கிலோ தந்தூரி சிக்கன், கால் கிலோ பார்பெக்யூ சிக்கன், கால் கிலோ க்ரில்டு சிக்கன், ஒரு ப்ளேட் பன்னீர் ஃப்ரை, பத்தாத குறைக்கு ஒரு எலுமிச்சை ஜூஸ்.
என்னடா ஒரே காட்டான் கோஷ்டியாக இருக்கிறதே என்று தோன்றுகிறதா? நண்பர் ஒரு காலத்தில் ஜீவகாருண்யவாதியாக இருந்தவர்தான். எடைக்குறைப்பில் தீவிரம் ஏற்பட்டதும் கன்வர்ட் ஆகிப் போனவர். அதை விடுங்கள். திட்டம் பலன் கொடுத்ததா? அதான் முக்கியம்.
விரதத்துக்குப் பிறகு மேற்படி அசாத்திய விருந்தையும் உண்டு முடித்து, மறுநாள் காலை எடை பார்த்திருக்கிறார். எடை மெஷின் சுமார் ஆறு கிலோ குறைத்துக் காட்டியிருக்கிறது!
ரொம்ப யோசித்த பிறகு எனக்கு இதற்கு பதில் கிடைத்தது. உடம்பு வாகு என்று சொல்லுவார்கள். என்னதான் பிறந்தது முதல் உண்டு களித்த உணவினம் என்றாலும் எனது தேகமானது கார்ப் சென்சிடிவ் தேகம். காணாதது கண்ட மாதிரி ஒருநாள் உண்டு தீர்த்தாலும் கறுப்புப் பணம் சேர்த்துப் பதுக்கும் பரம அயோக்கியனைப் போல் உடம்புக்குள் ஒரு லாக்கர் திறந்து பதுக்க ஆரம்பித்துவிடுகிறது. இந்தத் தொல்லையில் இருந்து விடுபடத்தான், சேமிக்கவே தெரியாத கொழுப்புணவுக்கு மாறினேன். அதற்கொரு அதிர்ச்சி, அப்புறம் ஒரு முயற்சி என்று போங்காட்டம் ஆடினால் ஒரு கிலோ என்ன, ஒரு குவிண்டாலேகூட ஏறத்தான் செய்யும்.
செத்தாலும் இனி விஷப் பரீட்சைகள் கூடாது என்று அப்போது முடிவு செய்தேன். ஒரு நாளைக்கு மூன்று வேளை முழு உணவும் முப்பது வேளை நொறுக்குணவும் தின்றுகொண்டிருந்தவன் நான். மேற்கு மாம்பலம் வெங்கடேஸ்வரா போளி ஸ்டாலுக்கு சாக்குப் பை எடுத்துச் சென்று கிலோ கணக்கில் இனிப்பு மற்றும் கார வகையறாக்களைக் கொள்முதல் செய்து வந்து வைத்துக்கொண்டு, ராத்திரி பத்து மணிக்கு ஆரம்பிப்பேன். இரண்டு அல்லது மூன்று மணி வரை எனக்கு எழுதும் வேலை இருக்கும். எழுதிக்கொண்டே சாப்பிடுவேனா அல்லது சாப்பிட்டுக்கொண்டே எழுதுவேனா என்று சொல்லத் தெரியவில்லை. ஆனால் என்னைப் போல் விடிய விடிய உண்டு தீர்த்தவன் இன்னொருத்தன் இருக்க முடியாது.
அதிலிருந்து மெல்ல மெல்ல மாறத் தொடங்கி இன்று ஒரு நாளைக்கு ஒருவேளை மட்டுமே உணவு என்னும் நிலைக்கு வந்து சேர்ந்திருக்கிறேன். கடந்த ஒரு மாதமாகவே இப்படித்தான். மதியம் ஒரு மணிக்கு சாப்பிட்டால் அதோடு மறுநாள் மதியம் ஒரு மணிதான். நடுவே இரண்டு கறுப்புக் காப்பி மட்டும் உண்டு. எடைக்குறைப்பு வெறி குறைந்துவிட்டது இப்போது. ஆனால் உடம்பு சிறகு போலாகி வருவதை உணர்கிறேன். பசி இல்லை. சோர்வில்லை. எவ்வித உபாதைகளும் இல்லை. நோயற்று வாழ இதுதான் ஒரே வழி.
அதெப்படி ஒருவேளை மட்டும் உண்டு வாழமுடியும்?
முடியும். பார்த்துவிடலாம்.
(ருசிக்கலாம்)
Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
April 14, 2017
பொலிக! பொலிக! 92
அந்த வேடர் குடியிருப்பு ஒரு பள்ளத்தாக்கில் இருந்தது. நான்கு புறமும் சூழ்ந்திருந்த மலையின் மடி தெரியாமல் மரங்கள் அடர்ந்திருந்தன. தொலைவில் தெரிந்த சிறு விளக்கொளியைக் கண்டுதான் உடையவரின் சீடர்கள் அந்த இடம் நோக்கி வந்தார்கள்.
‘யார் நீங்கள்?’
குடிசைக்கு வெளியே படுத்திருந்த வேடர்கள் எழுந்து வந்து கேட்டார்கள்.
‘ஐயா நாங்கள் திருவரங்கத்தில் இருந்து வருகிறோம். இருட்டுவதற்குள் இக்காட்டைக் கடந்துவிட நினைத்தோம். ஆனால் முடியவில்லை. இரவு தங்க இடம் தேடிக்கொண்டிருக்கிறோம்.’
‘திருவரங்கமா? அங்கே உடையவர் நலமாக இருக்கிறாரா?’
அதே கேள்வி. திருவரங்கத்து பக்தர்களை வழியில் சந்தித்த வேடர்கள் கேட்டதும் அதுதான். அந்த பக்தர்களைப் போலவே ராமானுஜரின் சீடர்களும் வியப்பாகிப் போய், ‘உங்களுக்கு உடையவரை எப்படித் தெரியும்?’ என்று பதில் கேள்வி கேட்டார்கள்.
அதே பதில். அதே நல்லான் சக்கரவர்த்தி. அதே இறைவன் சித்தம். ராமானுஜர் அந்தப் பகுதிக்கு வந்திருக்கிறார் என்று தெரிந்ததும் குடியிருப்பில் இருந்த வேடர்கள் பரபரப்பாகிவிட்டார்கள். ‘ஐயோ, உண்ணவும் உறங்கவும் இடமின்றி உடையவர் காட்டில் தனித்திருக்கிறாரா! இதோ வருகிறோம்!’ என்று பாய்ந்து உள்ளே சென்று தத்தம் வீட்டில் இருந்த பழங்களையும் பிற உணவு வகைகளையும் எடுத்துக்கொண்டு அவர்களோடு புறப்பட்டார்கள்.
அவர்கள் உடையவர் இருக்குமிடம் நோக்கிப் போனபிறகே திருவரங்கத்து பக்தர்கள் தாம் சந்தித்த வேடர்களோடு அந்த வேடுவர் குடியிருப்புக்கு வந்து சேர்ந்தார்கள். பசி தீர உண்டு முடித்ததும் வேடர்கள் அவர்களை அங்கேயே உறங்கச் சொன்னார்கள். ‘இல்லை ஐயா. உறங்கிப் பொழுதைக் கழிக்க எங்களுக்கு விருப்பமில்லை. நாங்கள் உடையவரை எப்படியாவது தேடிக் கண்டுபிடித்தாக வேண்டும். காடானாலும் இரவானாலும் பொருட்டல்ல.’
‘நல்லது. நாங்களும் தேடுகிறோம். நீங்கள் வடக்கு நோக்கித்தானே தேடிப் போகிறீர்கள்? எங்களுக்கு அவர் கிடைத்தால் கண்டிப்பாக உங்களுக்குத் தகவல் கொண்டு வந்து சேர்ப்போம்’ என்று சொல்லி அனுப்பி வைத்தார்கள்.
மறுபுறம் உடையவரைச் சந்தித்த அதே வேடர் இனத்தின் வேறு சிலர், அவருக்கு உணவளித்து, நடந்ததையெல்லாம் கேட்டுத் தெரிந்துகொண்டு வருத்தப்பட்டார்கள்.
‘சுவாமி, தங்கள் அருமை அந்தச் சோழனுக்குத் தெரியவில்லையே. சோழன் எங்கள் குருநாதர் நல்லான் சக்கரவர்த்தியை ஒரு முறையாவது சந்தித்திருக்க வேண்டும். கண்டிப்பாக அவன் மனம் திருந்தியிருப்பான்!’
‘அப்பனே, இந்தக் கொடுங்கானகத்தில் நல்லான் நாலு நற்பயிர்களை விதைத்துச் சென்றிருக்கிறார். நாடெங்கும் அவர் நடும் ஜீவத்தருக்கள் காலகாலத்துக்கும் செழித்திருக்கும். ஒரு சோழன் சரியில்லாதது ஒரு பொருட்டல்ல. மக்கள் தெளிந்துவிட்டால் போதும்’ என்றார் ராமானுஜர்.
அவர்கள் அங்கேயே உடையவரும் சீடர்களும் தங்க கூடாரம் அமைத்துக் கொடுத்தார்கள். இரவெல்லாம் உறங்காமல் விழித்திருந்து காவல் காத்தார்கள். விடிந்ததும் அவர்கள் குளிப்பதற்கும் நித்ய கர்ம அனுஷ்டானங்களைச் செய்வதற்கும் வழி செய்து கொடுத்தார்கள்.
‘வேடர்களே, எனக்கு நீங்கள் ஓர் உதவி செய்ய வேண்டும்!’ என்றார் ராமானுஜர்.
‘உத்தரவிடுங்கள் சுவாமி.’
‘உங்களில் ஒருவர் திருவரங்கம் சென்று நாம் நலமாக இருப்பதை அங்குள்ளவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். அதே போல் எங்களுடன் உங்களில் சிலர் இந்த நீலகிரி மலையைக் கடக்கும்வரை துணைக்கு வரவேண்டும்.’
இரண்டும் நடந்தது. வேடுவர்களுள் ஒருவன் உடையவரின் சீடருடன் திருவரங்கம் நோக்கிச் செல்ல, உடையவரும் பிற சீடர்களும் நாலைந்து வேடுவர்களின் துணையுடன் அன்றே தம் பயணத்தைத் தொடர ஆரம்பித்தார்கள். மற்றவர்கள் தம் குடியிருப்புக்குத் திரும்பி வந்தபோதுதான் திருவரங்கத்தில் இருந்தே சில பக்தர்கள் உடையவரைத் தேடி அங்கே வந்த விவரம் அவர்களுக்குத் தெரிந்தது.
‘அடக்கடவுளே! ஒரே இரவில் இரு தரப்பினரும் இந்தப் பகுதிக்கு வந்தும் ஒருவரையொருவர் சந்திக்க முடியாமல் போய்விட்டதே’ என்று மிகவும் வருத்தப்பட்டார்கள்.
ராமானுஜர் தம் குழுவினருடன் இரண்டு நாள்கள் ஓய்வின்றிப் பயணம் செய்து கர்நாடகத்தின் எல்லையைத் தொட்டார். கொள்ளைக்கலம் என்னும் இடத்தை அவர்கள் வந்தடைந்தபோது ஒரு மூதாட்டி எதிர்ப்பட்டார்.
‘அதோ பாருங்கள்! வருவது யார் தெரிகிறதா?’
உடையவர் சுட்டிக்காட்டிய திசையில் சீடர்கள் பார்த்தார்கள். ‘சுவாமி, அது நம் கொங்குப் பிராட்டியார் அல்லவா?’
சுமதி என்ற இயற்பெயர் கொண்ட அந்தப் பெண்மணி ராமானுஜரின் பரம பக்தை. திருவரங்கத்துக்கு வந்து மடத்தின் அருகே தங்கியிருந்து அவரிடம் உபதேசம் பெற்றுத் திரும்பியவர். ராமானுஜர் பாசத்துடன் அவரைக் கொங்குப் பிராட்டி என்று அழைப்பார்.
எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு இன்று மீண்டும் அந்தப் பிராட்டியைச் சந்திக்க நேர்ந்ததில் ராமானுஜருக்கு மிகுந்த மகிழ்ச்சி உண்டானது. ஆனால் வெள்ளை உடையில் இருந்த ராமானுஜரை அந்தப் பெண்மணிக்கு அடையாளம் தெரியவில்லை.
‘ஐயா நீங்களெல்லாம் எங்கிருந்து வருகிறீர்கள்?’
‘திருவரங்கத்தில் இருந்து வருகிறோம் தாயே.’
‘அப்படியா? அங்கு நிகழ்ந்த சம்பவங்களைக் கேட்டதில் இருந்து எனக்கு இருப்புக் கொள்ளவில்லை. எம்பெருமானார் எப்படி இருக்கிறார் என்ற தகவலே தெரியவில்லையாமே?’
சீடர்கள் புன்னகை செய்தார்கள். ‘தாயே, எம்பெருமானார் இந்தக் கூட்டத்தில் இருக்கிறாரா பாருங்கள்!’
திடுக்கிட்ட பெண்மணி, ‘என்ன சொல்கிறீர்கள்?’
‘எங்கள் முகங்களைப் பாருங்கள் தாயே. உங்களுக்கு அடையாளம் தெரியவில்லையா?’
‘இல்லை. எனக்கு அவர் முகத்தைக் காட்டிலும் பாதங்களே பரிச்சயம். இருங்கள்!’ என்றவர், வரிசையாக ஒவ்வொருவர் பாதங்களையும் பார்த்துக்கொண்டே வந்து ராமானுஜரின் பாதங்களைக் கண்டதும் பரவசமாகிப் போனார்.
‘இதோ என் ஆசாரியர்!’ என்று அப்படியே காலில் விழுந்துக் கதறத் தொடங்கினார். சீடர்கள் வியந்து போனார்கள்.
‘இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. கொங்குப் பிராட்டி திருவரங்கத்தில் இருந்து விடைபெற்றுக் கிளம்பும்போது உடையவரின் பாதுகளைகளைக் கேட்டு வாங்கிச் சென்றார். அவருக்கு ஆசாரியரின் பாதங்களும் பாதுகைகளுமே உலகம்’ என்றார் முதலியாண்டான்.
‘சுவாமி, வீதியிலேயே நின்று பேசிக்கொண்டிருக்க வேண்டாம். அடியாளின் வீட்டுக்குத் தாங்கள் எழுந்தருள வேண்டும்!’
உடையவரும் சீடர்களும் ஒரு சில நாள்கள் அந்தப் பெண்மணியின் வீட்டில் தங்கியிருந்தார்கள். அவரது கணவருக்கு த்வயம் உபதேசித்து, கொங்கிலாச்சான் என்ற பெயரிட்டு வைணவ தரிசனத்தில் இணைத்தார் ராமானுஜர். அதுவரை சோழனுக்கு அஞ்சி, சீடர்களின் வற்புறுத்தலுக்குப் பணிந்து அவர் அணிந்திருந்த வெண்ணுடைகளை அங்கே களைந்து மீண்டும் காவி ஏந்தினார். கொங்குப் பிராட்டியிடம் விடைபெற்றுப் பயணத்தைத் தொடர்ந்தார்.
மைசூருக்கு மேற்கே சிறிது தொலைவில் இருந்த மிதிளாபுரியைச் சென்றடையும்வரை அவர்கள் வேறு எங்கும் தங்கவில்லை.
(தொடரும்)
Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
April 13, 2017
பொலிக! பொலிக! 91
ராமானுஜர் திருவரங்கத்தில் இல்லை என்ற விஷயம் தீயைப் போல் பரவிவிட்டது. ஐயோ என்ன ஆயிற்று என்று ஒருவரையொருவர் கேட்டுக்கொண்டிருக்கும்போதே கூரத்தாழ்வானுக்கும் பெரிய நம்பிக்கும் கண் போன தகவல் வந்து சேர்ந்தது. ஆடிப் போனார்கள். மடத்தில் இருந்த சீடர்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேளாமல், அரங்க நகர்வாசிகள் சிலபேர் உடையவரைத் தேடிக் கிளம்பினார்கள்.
‘சோழன் சும்மா இருக்கமாட்டான். எப்படியும் வீரர்களை அனுப்பி ராமானுஜரைத் தேடிப் பிடிக்கச் சொல்லியிருப்பான். அப்படி அவர் வீரர்களிடம் மாட்டிக்கொண்டால் நமக்கு அதுதான் இந்த ஜென்மத்தில் நிகழும் பேரிழப்பாக இருக்கும். ஒருக்காலும் அதை அனுமதிக்க முடியாது!’ என்று சொல்லிவிட்டு நாலாபுறமும் தேடிக்கொண்டு கிளம்பினார்கள்.
ராமானுஜர் அப்போது சோழ நாட்டின் எல்லை தாண்டி நீலகிரி மலைப்பக்கம் போய்க்கொண்டிருந்தார். கால் சோரும்போது ஓய்வு. வயிறு கேட்கிறபோது உணவு. கண் சொருகும்போது உறக்கம். இடைவிடாத பிரபந்தப் பாராயணத்துடன் உடையவர் குழு வடக்கு நோக்கி நடந்துகொண்டிருந்தது. கூரத்தாழ்வானுக்கு என்ன நேர்ந்தது என்பது மட்டும் தெரிந்தால் போதும். பயணத்தை அமைதியாகவே தொடர முடியும். ஆனால் அத்தகவல் எங்கிருந்து, எப்படி வரும்? அதுதான் தெரியவில்லை.
‘பிரம்ம சூத்திர உரை எழுத ஆரம்பிக்கும் முன் நீங்கள் அரங்கனை விட்டு நகர்ந்ததேயில்லை. கொஞ்சநாள் திருவெள்ளறைக்குப் போய்த் தங்கினீர்கள். முடிந்ததா? திரும்ப வந்துவிட்டீர்கள். ஆனால் எழுதி முடித்ததில் இருந்து ஓய்வே இல்லாமல் சுற்றிக்கொண்டிருக்கிறீர்களே சுவாமி?’ என்றார் முதலியாண்டான்.
‘என்ன செய்ய? எம்பெருமான் சித்தம் அதுதான் என்றால் ஏற்கத்தான் வேண்டும்.’
‘ஆனால் இது ஓய்வெடுக்க வேண்டிய வயதல்லவா? இப்படிக் காடு மேடு பாராமல் திரியவேண்டியுள்ளதே சுவாமி! குற்ற உணர்ச்சி எங்களைத்தான் கொல்கிறது.’
ராமானுஜர் ஒரு கணம் கண்மூடி யோசித்துப் பார்த்தார். நூறு வயதில் பெரிய நம்பியிடம் உள்ள உற்சாகம் யாருக்கு வரும்? தன்னைவிடச் சில வயதுகள் மூத்த கூரத்தாழ்வான் ஒரு வாலிபனைப் போல் வளையவந்துகொண்டிருக்கிறார். இதோ, தனக்காகப் பரிவு கொள்ளும் முதலியாண்டான் மட்டுமென்ன வயதில் இளைத்தவரா? தமது முதல் தலைமுறை சீடர்கள் அனைவருமே எழுபதைத் தொட்டுத் தாண்டியவர்கள்தாம் என்பதை ராமானுஜர் எண்ணிப் பார்த்தார். புன்னகை வந்தது.
‘என் எண்பது அப்படியொன்றும் ஓய்வு கொள்ளும் வயதல்ல தாசரதி! தவிர, திருமால் அடியார்களுக்கு ஓய்வு என்று ஒன்றேது? ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும். நம்மாழ்வார் நமக்கிட்ட கட்டளை அல்லவா இது?’
‘அதெல்லாம் சரி. இன்றைக்கு இதற்குமேல் தங்களால் நடக்க முடியாது. தயவுசெய்து எங்காவது தங்குவோம் சுவாமி. தாங்கள் சிறிது நேரம் இங்கேயே இருந்தால் நாங்கள் சென்று உண்பதற்கும் உறங்குவதற்கும் அருகே ஏதாவது வசதி இருக்கிறதா என்று பார்த்து வருகிறோம்!’
சீடர்கள் விடாப்பிடியாக அவரை ஓரிடத்தில் அமரச் செய்துவிட்டுப் புறப்பட்டார்கள்.
அது பாலமலை அடிவாரம். சுற்றிலும் அடர்ந்த வனாந்திரம். மரம் அசைந்தாலும் நிலவு தென்படாத பேரிருட்டு. மிருகங்களின் கூக்குரல் மட்டுமே வெளியை நிறைத்திருந்தது. ஒரு மரத்தடியில் ராமானுஜர் உட்கார, துணைக்கு நாலைந்துபேர் மட்டும் அவரோடு தங்கினார்கள். மற்றவர்கள் ஆளுக்கொரு பக்கம் கிளம்பிப் போனார்கள்.
மறுபுறம் உடையவரைத் தேடிக் கிளம்பிய திருவரங்கம் அடியார்களில் சிலர் நீலகிரிச் சாரல் பகுதிக்கும் வந்திருந்தார்கள். அவர்கள் அதே பாலமலை அடிவாரத்துக்கு வந்து சேர்ந்தபோது சில வேடர்களை எதிர்கொண்டார்கள்.
‘யார் நீங்கள்?’ பாதுகாப்புக்கு வில்லையும் அம்பையும் எடுத்து வைத்துக்கொண்டு அவர்கள் எச்சரிக்கையுடன் கேட்க, ‘நாங்கள் திருவரங்கத்தில் இருந்து வருகிறோம். காட்டில் வழி தெரியவில்லை. மேலே எப்படிச் செல்வதென்று புரியாமல் தவித்துக்கொண்டிருக்கிறோம்!’ என்று பதில் சொன்னார்கள்.
‘திருவரங்கத்தில் இருந்தா? உண்மையாகவா? அப்படியென்றால் அங்கே உடையவர் எப்படி இருக்கிறார்?’
வேடர்களில் ஒருவன் கேட்டபோது அரங்கநகர்வாசிகளுக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை.
‘ஆஹா, உங்களுக்கு உடையவரைத் தெரியுமா! எங்களால் நம்பவே முடியவில்லை ஐயா. இந்தப் பக்கம் அவர் வந்ததே இல்லையே? அவரது சீடர்களும் கூட…’
அவர்கள் பேசி முடிப்பதற்குள் பதில் வந்தது. ‘யார் சொன்னது? உடையவரின் சீடர் நல்லான் சக்கரவர்த்தி எங்களுக்கு ஆசான். அவர் உடையவரைப் பற்றி நிறையச் சொல்லியிருக்கிறார் எங்களுக்கு.’
திகைத்துவிட்டார்கள் அரங்கநகர்வாசிகள். இது எம்பெருமான் சித்தமன்றி வேறல்ல. நல்லான் சக்கரவர்த்தி. ஆம். அவரை மறந்தே போனோமே? எப்பேர்ப்பட்ட பாகவத உத்தமர்! உடையவரின் வழியில் சாதி பார்க்காமல், இனம் பார்க்காமல் மனித குலம் மொத்தத்தையும் சமமாகக் கருதுகிற உத்தமர்.
ஒரு சமயம் ஆற்றில் பிணமொன்று மிதந்து வந்தது. நெற்றியில் திருமண் இருந்தது. அவ்வளவுதான். நல்லான் சக்கரவர்த்தி, அந்தப் பிணத்தைக் கரை சேர்த்து, முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்ய ஆரம்பித்துவிட்டார்.
‘இதென்ன அக்கிரமம். அது பிராமணப் பிணம் இல்லை. பார்த்தாலே தெரிகிறதே. அதற்குப் போய் வைதிக முறைப்படி இறுதிக் காரியம் செய்வது அபசாரமல்லவா? ஓய் திருமலை சக்கரவர்த்தி! உம்மை நாங்கள் விலக்கிவைக்கிறோம்!’
அக்ரஹாரத்து மக்கள் கூடி நின்று குற்றம் சாட்டினார்கள்.
சட்டென்று அசரீரி ஒலித்தது. ‘உமக்கு அவர் பொல்லான் என்றால் இருந்துவிட்டுப் போகட்டும். நமக்கு அவர் என்றும் நல்லான்.’
திருமலை சக்கரவர்த்தி அன்று நல்லான் சக்கரவர்த்தி ஆகிப் போனார். கோயில் கோயிலாகச் சுற்றிக்கொண்டிருந்த பக்தர்கள் மத்தியில் அவர் சேரிப் பகுதிகளாகத் தேடித் தேடித் திரிபவராக இருந்தார். நன்மை செய்யும் நாராயணன் நாமத்தைப் பரப்புவதே வாழ்வின் ஒரே இலக்காகக் கொண்டு வாழ்ந்த பெரியவர்.
‘இது பெருமான் சித்தம். நீங்கள் நல்லான் சக்கரவர்த்தியின் சீடர்களா?’
‘ஆம் ஐயா. பெரியவர்தான் எங்களுக்குப் பெருமாளைக் காட்டிக் கொடுத்தார். பெருமாளினும் பெரியவர் உடையவர் என்று உணர்த்தியவரும் அவர்தாம். அதைவிடுங்கள். உடையவர் எப்படி இருக்கிறார்?’
திருவரங்கத்து பக்தர்களின் கண்கள் கசிந்தன. நெஞ்சை அடைத்த துக்கத்தை விழுங்கி நடந்த சம்பவங்களை அந்த வேடர்களுக்கு விளக்கினார்கள். ஐயோ என்று துடித்துப் போன வேடர்கள், ‘கவலையை விடுங்கள். இந்தக் கணம் முதல் உங்களுடன் சேர்ந்து நாங்களும் உடையவரைத் தேடுகிறோம். அவரைக் கண்டுபிடிக்காமல் மறுவேலை இல்லை.’ என்று சொல்லி அவர்களை அழைத்துக்கொண்டு தங்கள் கிராமத்துக்குத் திரும்பினார்கள்.
அங்கே உடையவரின் சீடர்களும் வந்திருந்தார்கள்.
(தொடரும்)
Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
கையெழுத்து
குமுதத்துக்கு சாரு நிவேதிதா எழுதிய கடிதம் ஒன்றை அவரது தளத்தில் கண்டேன். அந்தக் குறிப்பிட்ட விவகாரம் குறித்த என் கருத்தை அவரிடம் தனியே சொல்லிவிட்டபடியால் அது இங்கே அநாவசியம். ஆனால் அந்தக் கடிதத்தில் கண்ட அவரது கையெழுத்தைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும்.
சாருவின் கையெழுத்து எனக்கு மிகவும் பிடிக்கும். அழகு என்பதைக் காட்டிலும் அதில் ஒரு நளினம் உண்டு. லை, னை போன்றவற்றுக்கு விடாப்பிடியாகப் பழைய கொக்கி வளைவையே போடுவார். அது கொடுக்கிற அழகு பிந்தைய சீர்திருத்தத் தமிழில் கண்டிப்பாகக் கிடையாது. அதேபோல, மெய்யெழுத்துகளின் மீது அவர் வைக்கிற புள்ளி மிக அழுத்தமாக இருக்கும். எழுதிய சொல்லை, வேண்டாம் என்று தோன்றி அழிக்க நினைத்தால், மீண்டும் படித்துப் பார்க்கும்போது என்ன எழுதி அடித்தோம் என்பதை அறிந்துகொள்ள இடம் வைத்தே அடிப்பார்.
தொண்ணூறுகளில் நான் கல்கியில் பணியாற்றிய காலத்திலேயே இவற்றையெல்லாம் கவனித்து ரசித்திருக்கிறேன். இன்றுவரை அவர் கையெழுத்து மாறவேயில்லை.
ஜெயமோகன் கைப்பட எனக்குச் சில கடிதங்கள் எழுதியிருக்கிறார். இன்றல்ல. பல வருடங்களுக்கு முன்பு.
அவரது கையெழுத்தில் ஒரு சீற்றம் இருக்கும். ஒவ்வொரு எழுத்தும் அடுத்த எழுத்தின்மீது ஆக்ரோஷமாகப் பாயும். அடித்தல் திருத்தல் அறவே இருக்காது. எப்போதாவது ஞாபகம் வந்தால்தான் பேரா பிரிப்பார். மற்றபடி அது மடை திறந்த வெள்ளம்தான்.
சுந்தர ராமசாமி, லாசரா, திகசி போன்றவர்களின் கையெழுத்தைக் கொண்டே அவர்கள் எத்தனை நிதானமானவர்கள் என்பதை உணர முடியும். லாசரா ஒரு போஸ்ட் கார்டில் குறைந்தது இருபது வரிகள் எழுதுவார். ஆனால் ஒவ்வொரு எழுத்தும் அத்தனை தெளிவாக இருக்கும். அவரது கையெழுத்து அவரது மொழியின் தொனியைப் பிரதிபலிக்கிற மாதிரியே தோன்றும்.
அசோகமித்திரனின் எழுத்தில் மட்டுமல்ல; அவரது கையெழுத்திலும் எனக்கு ஜாக்கிரதை உணர்வு தெரியும். கொஞ்சம் நடுங்கி இருக்கும். அவரது ஒற்றைக்கொம்புகள் மிகவும் ஒடுங்கி, உயர்ந்திருக்கும். முற்றுப்புள்ளிகளை ஓர் இடைவெளி விட்டு வைப்பார். தமிழ் எழுத்தாளர்களில் செமி கோலனை மிகப் பொருத்தமாகப் பயன்படுத்தியவர் எனக்குத் தெரிந்து அவர் மட்டும்தான். ; ல், கீழே உள்ள கமா பகுதியைக் கொஞ்சம் அழுத்தமாகப் போடுவார்.
நான் கவனித்த வரையில் கையெழுத்தில் ராணுவ ஒழுக்கம் காப்பவர் பிரபஞ்சன். பொடிப்பொடியாகத்தான் எழுதுவார். ஆனால் எந்த எழுத்தும் அடுத்த எழுத்தைத் தொடாது. ஒரு சொல்லுக்கும் அடுத்த சொல்லுக்குமான இடைவெளி சீராக இருக்கும். பிரபஞ்சனின் மெய்யெழுத்துப் புள்ளிகளும், சாருவின் புள்ளிகளைப் போலவே அழுத்தமாக இருக்கும்.
ஒரு காலத்தில் என் கையெழுத்தும் அழகாகவே இருக்கும். ஆனால் கணினியில் எழுத ஆரம்பித்த பிறகு அதன் உருவம் சிதைந்துவிட்டது. ஒரு கட்டத்தில் செக் புத்தகத்தில் கையெழுத்துப் போடுவது தவிர வேறெதற்குமே பேனாவை எடுப்பதில்லை என்றாகிவிட்டது. இன்று சாருவின் கடிதத்தைக் கண்டதும் திரும்பவும் கையால் எழுதிப் பார்க்கலாமா என்று ஆசை வந்திருக்கிறது. நெருங்கிய நண்பர்கள் பத்து பேரைக் குலுக்கிப் போட்டு யார் வருகிறார்களோ அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதுவது என்று முடிவு செய்திருக்கிறேன்.
Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
April 12, 2017
நான்கு சந்துகளுக்கு அப்பால்
பொதுவாக நான் புத்தகங்களைப் பற்றி அதிகம் எழுதுவதில்லை. அறிமுகமாக நாலு வரி எழுதினால் அதிகம். அதற்குமேல் சொல்ல என்னிடம் எப்போதும் ஏதும் இருப்பதில்லை. காரணம், வாசிப்பது என்பது என் பிரத்தியேக சந்தோஷம். என் அனுபவம் மற்றவர்களுக்கும் நேரும் என்று சொல்லுவதற்கில்லை. ஆஹாவென மக்கள் வியந்து பாராட்டிய பல புத்தகங்களை நாலு பக்கம் கூட வாசிக்க முடியாமல் கடாசியிருக்கிறேன். அதேபோல, எனக்கு மிகவும் பிடித்த பலவற்றை உலகம் நிராகரித்திருக்கிறது. இதனாலேயே நான் விமரிசனங்களையும் மதிப்புரைகளையும் பொருட்படுத்துவதில்லை; நானும் செய்வதில்லை. என் தாயும் என் மனைவியும் என் குழந்தையும் எனக்கு எப்படியோ அப்படித்தான் என் படிப்பு சார்ந்த அனுபவங்களும். அடுத்தவருக்கு அது அநாவசியம். இவ்விஷயத்தில் என் சுயலாபம் ஒன்றே என் குறிக்கோள்.
சமீபத்தில் நான் மிகவும் மதிக்கும் சிலர் சாரு நிவேதிதாவின் எக்சைல் நாவலைப் பற்றிப் போகிற போக்கில் சொன்ன சில கருத்துகள் அதைப் படிக்கத் தூண்டின. ஒரு விஷயம் சொல்லிவிடுகிறேன். அந்தச் சிலரில் ஒருவர்கூட அதை நன்றாக இருப்பதாகச் சொல்லவில்லை. ‘அவர் எப்போதும் எழுதுவதைத்தான் இதிலும் எழுதியிருக்கிறார். பாதிக்குமேல் அவர் வலைத்தளத்திலேயே வந்திருக்கிறது’ என்று ஒருவர் சொன்னார். ‘சாருவின் உலகில் நாலைந்து சந்துகளுக்குமேல் கிடையாது. அதில் ஒன்று பிரான்ஸ் சந்து. இன்னொன்று நாகூர் சந்து. மூன்றாவது டெல்லிச் சந்து. நாலாவது பெட் ரூம் அல்லது பாத்ரூம்’ என்றார் இன்னொருவர். வேறொருவர் சொன்னதுதான் இன்னும் விசேடம். ‘அவர் தன்னைப் பற்றித்தான் எழுதுகிறார். ஆனால் எதுவுமே உண்மை என்று தோன்றுவதில்லை.’
பன்னெடுங்காலத்துக்கு முன்னர் லாசரா எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் ஒரு வரி: ‘ஆமாம், என்னிடம் சொல்ல ஒரே ஒரு கதைதான் இருக்கிறது. என்ன அதனால்? அதையே இன்னும் நான் சொல்லி முடிக்கவில்லையே?’
இதனாலெல்லாம்தான் நான் எக்சைலைப் படித்துவிட முடிவு செய்தேன். உண்மையில் நான் சமகால நாவல்களை வாசிப்பதை நிறுத்திச் சில வருடங்களாகின்றன. சென்ற வருடம் பஷீரை முழுவதுமாகப் படித்துவிட்டு, இனி வேறு எதையும் தொடக்கூடக் கூடாது என்று எண்ணியிருந்தேன். என்னமோ தோன்றி, எடுத்துவிட்டேன்.
346 பக்கங்கள்வரைதான் படித்திருக்கிறேன். முழுக்க முடிப்பேனா என்றால் தெரியாது. நாளையே முடிக்கலாம். நாற்பது வருஷங்களும் ஆகலாம். முடிக்காமலும் போகலாம். எனக்கு அதெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை. ஆனால் படித்தவரை எனக்குத் தோன்றிய சிலவற்றைச் சொல்லலாம் என்று தோன்றியது.
ஜீரோ டிகிரிக்குப் பிறகு வந்த சாருவின் எந்த ஒரு நாவலிலும் காணக்கிடைக்காத அம்சம் இதில் இருக்கிறது. அது அராஜகத்துக்கும் அப்பாவித்தனத்துக்கும் இடையே ஒளிந்திருக்கும் ஒருவித கவித்துவ திருடன் போலிஸ் ஆட்டம். (உதா: ‘நான் எந்தத் தவறும் செய்யவில்லை. இதுவரை நான் செய்த தவறுகள் எல்லாமே என்மீது பலவந்தமாகத் திணிக்கப்பட்டவை.’)இது நாவலெங்கும் விரவிக் கிடக்கிறது. அதே போல, அபிப்பிராயங்களின் கூர்முனைத் தாக்குதல், அதிர்ச்சி மதிப்புடன் நின்றுவிடாமல் மேலே கடந்து சென்று சிந்திக்கச் செய்கிற விதம். (உதா:’ஒரு நபரை குருநாதராக வரித்துவிட்டால் அதற்குப் பெயர் அடிமைத்தனம்தானே?’)
இந்தச் சிந்தனை, சாருவுக்கு நேரெதிர் திசையில்கூட நமது பயணத்தை வகுத்துக் கொடுக்கலாம். அது பிரச்னையில்லை. சிந்திக்க வைக்கிறதா இல்லையா என்பதுதான் வினா.
நாவல் என்பதற்கான சநாதன வடிவ ஒழுங்கு இதில் கிடையாது. அப்படி ஒன்று இருந்தால் இது செத்துவிடும். இந்த ஒழுங்கு மீறலின் சாத்தியங்களைக் கனவில் கண்டெடுத்து, மரணத்துக்குப் பிந்தைய பேயலைச்சலின் இடையிடையே தூவிச் செல்வது போன்றதொரு மாயத்தோற்றத்தை உருவாக்க நினைக்கிறார் சாரு. அதை முன் ஜென்மத்தில் இருந்தபடிக்கு தூர தரிசனம் செய்து பார்க்கிற வேட்கையே இதன் வடிவமாக உருக்கொண்டிருக்கிறது.
பார்ட்டிகள், குடி மேளா, சமையல் குறிப்புகள், சாமியார்கள், சித்தர்கள், பெண்கள், படுக்கை, பரோட்டா, யோகா, நாகூர் இட்லி, தியானம் என்று ஒன்றுக்கொன்று தொடர்பற்ற பற்பல சங்கதிகள் அனைத்துடனும் ஆத்மார்த்தமாகத் தொடர்புகொள்ள விழையும் ஒரு ஜீவனின் வாழ்வனுபவம் இது. நிறைவேறாத ஒரு பெருங்கனவை யதார்த்த வாழ்வில் தேடிப் பெற முடியாத இயலாமை சார்ந்த வெறுப்பின் உச்சத்தில், தரிசனம்போல என்னவாவது சித்திக்காதா என்கிற எதிர்பார்ப்பு.
இது பிடிக்கவில்லை என்பவர்களின் பிரச்னை அநேகமாக ஒன்றுதான். இந்நாவலின் மையப்புள்ளி அவர்களுக்கு வசப்படவில்லை. எனக்கென்னவோ அது இந்நாவலின் முதல் அத்தியாயத்தின் கடைசி வரிகளிலேயே கிடைத்துவிட்டது.
கதை, கலை, வடிவம், ஒழுங்கு, உண்மை, தரிசனம் என்று என்னென்னவோ சொல்கிறோம். என்னைக் கேட்டால் அனைத்தையுமே உதறித் தள்ளிவிட்டு இதனோடு ஒரு ஓட்டம் ஓடிப் பார்க்கலாம். எனிமா கொடுத்து மனத்தை சுத்திகரித்துக் கொட்டுகிற மாபெரும் முயற்சியாக இது எனக்குப் பட்டது. எங்குமே குழப்பமோ, சலிப்போ தராத மொழி ஒரு தக்கையை ஏந்திச் செல்லும் நதிநீர் போல் நம்மை எடுத்துக்கொண்டு பயணம் செய்கிறது. எங்குமே அது கவிழ்த்துவிடுவதில்லை. அதனாலேயே நாவலை வாசிப்பது ஒரு பண்டிகை கொண்டாடும் உற்சாகத்தை அளிக்கிறது.
தேகம், ராசலீலா போன்ற சாருவின் முந்தைய நாவல்கள் எதுவும் எனக்குப் பிடிக்கவில்லை. ஜீரோ டிகிரியை விரும்பிப் படித்தேன். அதற்குப் பிறகு எக்சைல்தான் கவர்ந்திருக்கிறது.
அடுத்த ஓரிரு வாரங்கள் எனக்கு வேலை அதிகம். இதை முடிக்க முடியுமா என்று தெரியவில்லை. இதே மாதிரி பாதி முடித்துக் காத்திருக்கும் புத்தகங்கள் நாலைந்து வரிசையில் உள்ளன. இப்படிப் பாதி மிச்சம் வைக்கிற புத்தகங்களுள் எது என்னை எடு, எடு என்று இம்சிக்கிறது என்று விழிப்புடன் கவனிப்பது எனக்கு ஒரு விளையாட்டு.
பார்க்கலாம். முடித்தபின்னர் ட்விட்டரில் என் இறுதி அபிப்பிராயத்தைச் சொல்லுகிறேன். அதற்குமுன் நீங்கள் எக்சைலை வாசித்துவிட முடிந்தால் நாம் இன்னும் வசதியாகப் பேசலாம்.
பிகு1: எக்ஸைல் என்றுதான் நான் குறிப்பிட்டிருக்க வேண்டும். ஷிஃப்ட் எஸ் அடிக்க சோம்பேறித்தனப்பட்டு எக்சைல் என்றே தொடர்ந்து குறிப்பிட்டிருக்கிறேன். மன்னிக்கவும்.
பிகு2: இந்நாவல் வெளிவரும் முன் இதற்கு முன்பதிவு செய்து காத்திருந்த என் நண்பர் கவிராஜனை ட்விட்டரில் வாரு வாரென்று வாரியிருக்கிறேன். அது இப்போது நினைவுக்கு வருகிறது. கவிராஜன் என்னை மன்னிக்க வேண்டும். காத்திருந்து வாசிக்க வேண்டிய நாவல்தான் இது.
Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
பொலிக! பொலிக! 90
இது அவமானம். சபை நடுவே ஒரு மன்னன் தனது பிரஜையால் தோற்கடிக்கப்படுவதை நாடாளும் அகந்தை கொண்ட யாரும் ஏற்கமாட்டார்கள். குலோத்துங்கன் திரும்பத் திரும்பக் கேட்டான். உண்மையா? இது உடையவர் இல்லையா?
‘ஆம் மன்னா. இவர் கூரத்தாழ்வான். நான் இவரிடமே சிறிது காலம் பாடம் கேட்டிருக்கிறேன்’ என்றார் நாலூரான்.
‘முட்டாள் வீரர்களே, ராமானுஜரைத் தப்பிக்க விட்டு, யாரோ ஒருவரை இழுத்து வந்திருக்கிறீர்களே, உங்களை என்ன செய்கிறேன் பார்!’ என்று சீறியெழுந்தான் குலோத்துங்கன்.
‘மன்னா, ஒரு நிமிடம். கூரத்தாழ்வான் நீங்கள் நினைப்பதுபோல யாரோ ஒருவரல்லர். சிவனுக்கு விஞ்சிய தெய்வம் வேறில்லை என்று ஒப்புக்கொண்டு ராமானுஜர் கையெழுத்திட்டால் என்ன மதிப்போ, அதே மதிப்பு இவர் ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டாலும் உண்டு’ என்றார் நாலூரான்.
குலோத்துங்கன் ஒரு கணம் வியப்பாகிப் போனான். ‘ஓ, இவர் அத்தனை பெரியவரா!’
‘ஆம் மன்னா. முதலியாண்டானும் கூரத்தாழ்வானும்தான் ராமானுஜரின் இரு கண்களும் கரங்களுமாக விளங்குபவர்கள். ராமானுஜர் ஶ்ரீபாஷ்யம் எழுதப் பக்கபலமாக இருந்து உதவியவரே இவர்தான். உமது வீரர்களை அனுப்பி ராமானுஜரைத் தேடச் சொல்லுங்கள். அதற்கு முன்னால் கூரேசர் இதை ஒப்புக்கொண்டு கையெழுத்துப் போடுவதும் நடக்கட்டும். ராமானுஜர் கிடைக்காமலே போனால்கூட கூரேசர் ஒப்புக்கொண்டால் விஷயம் முடிந்தது!’ என்றார் நாலூரான்.
கூரத்தாழ்வான் நாலூரானை அமைதியாக ஒரு பார்வை பார்த்தார். தன்னிடம் பயில வந்த மாணவன்தான். சிறிது காலம் கற்ற கல்வியைக் கொண்டுதான் மன்னனின் சபையில் அமைச்சராக முடிந்திருக்கிறது. ஆனால் அக்கல்விக்கு இது எப்பேர்ப்பட்ட இழுக்கு! பொன்னும் பணமும் வசதியான வாழ்வும் பதவியும் பகட்டும் ஒரு மனிதனின் குணம் மாற்றி இழுத்துச் செல்லுமானால் கற்ற கல்விக்குப் பொருள்தான் ஏது? நல்லவேளை உடையவர் இந்தச் சபைக்கு வரவில்லை என்று அவருக்கு நிம்மதியாக இருந்தது.
‘என்ன யோசனை கூரேசரே? நாலூரான் சொன்னது கேட்டதா? சிவனுக்கு விஞ்சியது ஒன்றுமில்லை என்று எழுதிக் கையெழுத்திடும்!’ எக்காளமாக ஆர்ப்பரித்தான் மன்னன்.
ஓலையும் எழுத்தாணியும் கொண்டுவரப்பட்டது. கூரேசரிடம் அதை நீட்டியபோது அவர் அமைதியாகச் சொன்னார், ‘மன்னா! ஒரு வரியில் முடிவு காணக்கூடியதல்ல இது. உங்களுடைய பண்டிதர்களைக் கூப்பிடுங்கள். அவர்கள் சிவனே பெரிய கடவுள் என்பதை நிறுவட்டும். அது இல்லை என்பதை வேத, புராண, இதிகாச சாட்சிகளுடன் நான் மறுக்கிறேன். இரு தரப்பில் யார் வெல்கிறார்கள் என்று பாருங்கள். அதை ஏற்பதுதான் சரி. பொத்தாம்பொதுவாக ஒன்றை முடிவு செய்வது மன்னனுக்கு அழகல்ல.’
கோபம் உச்சிக்கு ஏறியது குலோத்துங்கனுக்கு. ‘நிறுத்துங்கள் கூரேசரே. இது அரச கட்டளை. உம்முடன் வாதிட இங்கு யாரும் தயாரில்லை. ராஜகட்டளையை நிறைவேற்றுவது உமது கடமை.’
‘முடியாதென்றால்?’
‘உமது கதை முடியும்.’
கூரேசர் புன்னகை செய்தார். அந்த ஓலையை வாங்கினார். விறுவிறுவென்று ஏதோ எழுதிக் கொடுத்தார்.
படித்துப் பார்த்த நாலூரான் திடுக்கிட்டுப் போய், ‘மன்னா, இது பித்தலாட்டம். இவர் மொழி ஆட்டம் ஆடுகிறார். உங்களை மோசம் செய்யப் பார்க்கிறார்!’ என்று அலறினார்.
‘சிவாத் பரதரம் நாஸ்தி’ என்று எழுதிக் கையெழுத்துப் போடவேண்டும் என்பதே மன்னனின் நிபந்தனை. என்றால், சிவனுக்கு மேல் ஒன்றுமில்லை என்று பொருள். கூரேசர் அந்தச் சொற்றொடரின் இறுதியில் ஒரு கேள்விக்குறியைச் சேர்த்துவிட்டு அதன் கீழே, ‘த்ரோணம் அஸ்தி தத: பரம்’ என்று எழுதிக் கையெழுத்திட்டிருந்தார்.
சிவம் என்ற சொல்லுக்குக் ‘குருணி’ என்று ஒரு பொருள் உண்டு. குருணி என்றால் மரக்கால். அது ஓர் அளவு. த்ரோணம் என்பது குருணியைக் காட்டிலும் பெரிய அளவு. இந்த த்ரோணத்துக்கு தும்பைப் பூ என்று இன்னொரு பொருளும் உண்டு. ஆக, சிவனைக் காட்டிலும் தும்பைப் பூ பெரிது என்று எழுதியிருந்தார் கூரேசர்.
துடித்துப் போனான் குலோத்துங்கன். ‘இந்த அகம்பாவம் பிடித்த வைணவன் கண்ணைப் பிடுங்குங்கள்!’ என்று கத்தினான்.
‘சிரமப்படாதீர்கள் மன்னா. உம்மைப் போன்ற ஒரு வைணவ விரோதியைக் கண்ட இந்தக் கண்கள் எனக்கு எதற்கு என்றுதான் நானே நினைத்துக்கொண்டிருந்தேன். இதோ என் கண்கள் இனி எனக்கில்லை’ என்று சொல்லி, தன் விரல் நகங்களால் கண்களைக் குத்திப் பெயர்த்தார்.
வாயடைத்துப் போனது சபை. ‘ஐயோ என்ன காரியம் செய்கிறீர்!’ என்று பெரிய நம்பி அலறினார்.
‘கண்ணே போன்ற கருமாணிக்கம் நெஞ்சில் நிற்கிறான் நம்பிகளே. இந்தப் புறச் சின்னங்கள் எனக்கு எதற்கு? போகட்டும் இவை. ஒழியட்டும் இந்த மன்னனின் ஆணவத்தோடு சேர்த்து.’ என்றபடியே தன் கண்களைக் குத்திக் கிழித்துக் கருமணிகளை வெளியே எடுத்து வீசினார் கூரேசர். ரத்தம் பெருகத் தொடங்கியது. ஓ, ஓ என்று சபை ஆர்ப்பரித்தது. ‘எங்கே, யாரவர், நான் அவரைப் பார்க்கவேண்டும்!’ என்று அத்தனை பேரும் முண்டியடித்து முன்னால் வந்தார்கள்.
ரத்தம் சொட்டச் சொட்ட, வலி பொறுக்கமாட்டாமல், நிலை தடுமாறிக் கூரேசர் மயங்கி விழ, ‘யாரங்கே அந்த இன்னொரு கிழவரின் கண்ணைப் பிடுங்குங்கள்!’ என்றான் குலோத்துங்கன்.
‘நல்ல காரியம் மன்னா. அவரும் லேசுப்பட்ட ஆளில்லை. ராமானுஜருக்கே அவர்தான் குரு!’ என்றார் நாலூரான்.
எங்கே பெரிய நம்பியும் தமது கண்களைத் தாமே பிடுங்கி எறிந்துவிடப் போகிறாரோ என்கிற அச்சத்தில் மன்னனின் வீரர்கள் வேலோடு அவர்மீது பாய்ந்தார்கள். கணப் பொழுதில் அவர் கண்களில் வேலைச் சொருகி, அகழ்ந்து எறிந்தார்கள்.
‘அப்பா…’ என்று அலறிக்கொண்டு அத்துழாய் ஓடி வந்தாள். செய்வதறியாமல் திகைத்துப் போனது சபை. சிவனோ விஷ்ணுவோ யாரோ ஒருவர் பெரியவர்களாக இருந்துவிட்டுப் போகட்டும். மன்னன் சற்று மனிதத்தன்மை உள்ளவனாக இருக்க வேண்டாமா?
ஆனால் கேட்க முடியாது. பெரிய நம்பிக்குக் கண்தான் போனது. இதைத் தட்டிக் கேட்டுவிட்டால், யாரானாலும் உயிர் போய்விடும். ஆகவே, மதமெனும் உக்கிரப் பேய் பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கிற மன்னனைத் தட்டிக்கேட்க யாருமில்லை. இது விதி. இன்று சபையில் பெருகிய இரு மகான்களின் உதிரம் சோழ வம்சத்தை சும்மா விடப் போவதில்லை என்பது மட்டும் நிச்சயம்.
மனத்துக்குள் எண்ணிக்கொண்டு அத்தனை பேரும் அவசரமாகக் கலைந்து போனார்கள்.
(தொடரும்)
Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
April 11, 2017
பொலிக! பொலிக! 89
‘சுவாமி, தாங்களா! இந்த நேரத்திலா நீங்கள் இங்கு வரவேண்டும்? வேண்டாம் சுவாமி, திரும்பிச் சென்றுவிடுங்கள்!’ பதறினார் கூரேசர்.
பெரிய நம்பிக்குப் புரிந்தது. வெளியே காத்திருக்கும் தூதுவர்கள் வெகுநேரம் பொறுத்திருக்க மாட்டார்கள். சில நிமிடங்களுக்குள் என்னவாவது நடந்தாக வேண்டும். அந்தச் சில நிமிடங்களில் ராமானுஜர் திரும்பி வந்துவிட்டாலும் பிரச்னை. நிதானமாக யோசிக்க இது நேரமில்லை. அவர் ஒரு முடிவுடன் சொன்னார், ‘கூரேசரே, மன்னன் சபைக்கு நீங்கள் தனியே செல்லவேண்டாம். உடன் நான் வருகிறேன். எனக்குத் துணையாக அத்துழாய் வரட்டும். நாம் கிளம்பிப் போனதும் உடையவரை பத்திரமாக இங்கிருந்து அழைத்துக்கொண்டு வெளியேற வேண்டியது சீடர்களின் பொறுப்பு.’
‘ஐயோ நீங்களா! வேண்டாம் சுவாமி.’
‘பேச நேரமில்லை. உம்மைத் தனியே அனுப்ப என்னால் முடியாது. சீக்கிரம் ஆகவேண்டியதைப் பாருங்கள்’ என்றார் பெரிய நம்பி.
ஒரு நூறு வயதுக் கிழவரின் தீவிரமும் தெளிவும் அங்கிருந்த அத்தனை பேரையும் வாயடைக்கச் செய்துவிட்டது. ராமானுஜர் காப்பாற்றப்பட வேண்டும் என்பதைத் தவிர அவர்கள் யாருக்கும் வேறு எந்த நோக்கமும் இல்லை. அதே சமயம் மன்னன் சபையில் கூரேசருக்கு உதவியாக யாராவது இருந்தாக வேண்டும் என்பதும் நியாயம்தான். அப்பொறுப்பு என்னைச் சேரும் என்றார் பெரிய நம்பி.
இதற்குமேல் ஒன்றுமில்லை. இறைவன் விட்ட வழி.
சட்டென்று கூரேசர், ராமானுஜரின் காவி உடையை எடுத்து அணிந்துகொண்டார். திரிதண்டத்தை எடுத்துக்கொண்டார். நெற்றியில் சாற்றிய திருமண்ணும் என்றும் சுடரும் ஞானப் பொலிவுமாக அவர் வெளிப்பட்டபோது அத்தனை பேரும் தம்மை மறந்து கரம் குவித்தார்கள்.
‘இதோ பாருங்கள், உடையவர் குளித்துவிட்டு வந்ததும் சுருக்கமாக விஷயத்தைச் சொல்லி உடனே கிளம்பிவிடச் சொல்லுங்கள். சோழ நாட்டைவிட்டே அவர் வெளியேறிவிட வேண்டும் என்று நானும் பெரிய நம்பியும் சொன்னோம் என்று சொல்லுங்கள்!’
நடாதூர் ஆழ்வான் முன்னால் செல்ல, கூரேசரும் பெரிய நம்பியும் மற்ற சீடர்கள் புடை சூழ மடத்தின் முன் வாசலுக்கு வந்தார்கள்.
காத்திருந்த மன்னனின் தூதுவர்கள்ன்னனி, கூரேசரை ஏற இறங்கப் பார்த்தார்கள். ‘நீர்தான் ராமானுஜரா?’
‘ஆம். என்ன விஷயம்?’
‘இதோ மன்னரின் ஓலை. எங்கே உமது பதில்?’ என்று நீட்ட, கூரேசர் அதை வாங்கிப் படித்துப் பார்த்தார். புன்னகை செய்தார்.
‘நல்லது தூதுவனே. உமது மன்னனை நான் நேரில் சந்தித்துப் பேசிக்கொள்கிறேன். கிளம்புவோமா?’
கிளம்பிவிட்டார்கள். சீடர்களுக்கு ஒரு புறம் நிம்மதி. மறுபுறம் பெரும் கவலை. தூதுவர்கள் ராமானுஜரை நேரில் சந்தித்ததில்லை என்பது நிச்சயமாகிவிட்டது. மன்னனின் சபையில் அது ராமானுஜரல்ல; கூரேசர் என்று வெளிப்படும் வரை பிரச்னை இல்லை. ஆனால் அப்படித் தெரியவருகிற நேரம் மன்னனின் கோபம் கூரேசரை என்ன செய்யுமோ என்றும் கவலையாக இருந்தது.
‘விடுங்கள். பெரிய நம்பிதான் உடன் செல்கிறாரே. அவர் பார்த்துக்கொள்வார்.’ என்று ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
தூதுவர்களுடன் கூரேசரும் பெரிய நம்பியும் அத்துழாயுடன் கிளம்பிச் சென்ற சில நிமிடங்களில் உடையவர் குளித்துவிட்டு மடத்துக்குத் திரும்பி வந்தார்.
‘சுவாமி, என்னென்னவோ நடந்துவிட்டது. தாங்கள் உடனே திருவரங்கத்தைவிட்டு வெளியேற வேண்டிய நேரம் இது.’
திகைத்துவிட்டார் ராமானுஜர்.
‘ஏன், என்ன ஆயிற்று?’
விவரம் சொல்லப்பட்டது. சீடர்களின் கண்ணீரும் பதற்றமும் அவருக்கு மேலும் கவலையளித்தன.
‘என்ன அபசாரம் இது? எனக்காக கூரேசர் ஏன் அங்கு செல்ல வேண்டும்? நானே போயிருப்பேனே? மன்னனை நானே நேரில் சந்தித்துப் பேசியிருப்பேனே?’
‘இல்லை சுவாமி. குலோத்துங்கன் ஒரு முடிவோடுதான் தங்களுக்கு ஓலை அனுப்பியிருந்தான். சிவனுக்கு மிஞ்சி வேறு தெய்வமில்லை என்று எழுதிக் கையெழுத்துப் போடச் சொல்லிக் கேட்டிருக்கிறான். தாங்கள் எப்படி அதைச் செய்வீர்கள்?’
‘கூரேசரும் பெரிய நம்பியும்கூடத்தான் செய்ய மாட்டார்கள்.’
அவர்கள் ஒரு கணம் தயங்கினார்கள். பின், ‘தெரியும் சுவாமி. ஆனால் தங்களைவிட நீங்கள் பத்திரமாகவும் உயிருடனும் இருக்க வேண்டியது அவசியம் என்று கூரேசர் சொல்லச் சொன்னார். பெரிய நம்பியும் அதையேதான் சொன்னார்.’
ராமானுஜர் அதிர்ந்து போய் நின்றார். கரகரவென்று அவர் கண்களில் இருந்து நீர் சொரிந்தது.
‘நான் ஒருவன் உயிர்த்திருக்க, பரம பாகவதர்களான இரு ஞானிகள் தம் வாழ்வைப் பணயம் வைப்பதா? இது அடுக்கவே அடுக்காது.’
‘இல்லை சுவாமி. வைணவ தருமம் தழைக்கத் தாங்கள் இருந்தாக வேண்டும். இத்தனைக் காலம் எத்தனையோ தடைகளைத் தாண்டி நமது தருமத்தை நாம் பரப்ப முடிந்திருக்கிறதென்றால், அதற்கு ஒரே காரணம் தங்கள் இருப்பும் செயல்பாடுகளும்தான். தங்களுக்கு ஏதேனும் ஒன்று ஆகிவிட்டால், மற்றவர்களை அடியோடு சைவத்துக்கு மாற்றிவிட மன்னனுக்குக் கணப் பொழுது போதும்.’
‘என் உயிர் அத்தனை மேலானது இல்லையப்பா. என்னைக் காக்கத் தன்னையே கொடுக்கலாம் என்று நினைத்த கூரேசரே மனிதரில் புனிதர்.’
‘அவர் விருப்பத்தை நிறைவேற்றுங்கள் சுவாமி. அவரை எம்பெருமான் காப்பான்.’
வேறு வழியின்றி ராமானுஜர் தமது காவி உடையின்மீது வெள்ளை வேட்டி போர்த்திக்கொண்டு பாரம் சுமந்த இதயத்தோடு கிளம்பினார். முதலியாண்டான் உள்ளிட்ட சீடர்கள் உடன் புறப்பட்டார்கள். ஒரு சிலரை ராமானுஜர் மடத்திலேயே இருக்கச் சொன்னார். ‘கூரேசருக்கு ஒன்றும் நேரக்கூடாது. நீங்கள் இங்கே இருங்கள். கூரேசர் திரும்பி வந்ததும் எனக்குத் தகவல் வரவேண்டும்.’
‘ஆகட்டும் சுவாமி, நீங்கள் சீக்கிரம் புறப்படுங்கள்.’
அன்று அது நடந்தது. அரங்கனை விட்டு, அரங்கமாநகரை விட்டு, தன் பிரியத்துக்குரிய கூரேசரை விட்டு, ஆசாரியர் பெரிய நம்பியை விட்டு, அனைத்தையும் விட்டு ராமானுஜர் வெளியேறினார். காவிரியைக் கடந்து வடதிசை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரையத் தொடங்கியது அத்திருக்கூட்டம்.
‘அழிவுக்காலம் வந்தால் மன்னர்களுக்கு இப்படித்தான் விபரீத எண்ணம் ஏற்படும். சோழன் நிச்சயம் இதற்கு அனுபவிப்பான்!’ சபித்துக்கொண்டே வந்தார்கள் சீடர்கள்.
‘வேண்டாம் பிள்ளைகளே. அனைவரும் கூரேசரின் நலனுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள். பெரிய நம்பியும் கூரேசரும் வைணவ தரிசனம் செழிக்க எம்பெருமான் அளித்த பெருங்கொடை. அவர்களுக்கு ஒன்றும் ஆகக்கூடாது என்று வேண்டுங்கள்.’ கண்ணீருடன் கேட்டுக்கொண்டார் ராமானுஜர்.
ஆனால் விதி வேறாக இருந்தது. குலோத்துங்கன் சபைக்கு கூரேசரும் பெரிய நம்பியும் வந்து நின்றபோது நாலூரான் குதித்தெழுந்து அலறினார்.
‘மன்னா, மோசம் போனோம். இவர் உடையவரல்லர்!’
(தொடரும்)
Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)