Pa Raghavan's Blog, page 7

April 22, 2017

பொலிக! பொலிக! 100

செய்தி திருநாராயணபுரத்துக்கு வந்து சேர்ந்தபோது, ராமானுஜரின் மடத்துக்கு விஷ்ணுவர்த்தனும் அவனது மகள் வகுளாவும் வந்திருந்தார்கள். ஹொய்சள தேசம் அதுகாறும் கண்டிராத வகையில் எம்பெருமான் ஶ்ரீமன் நாராயணனுக்கு ஐந்து பெரும் கோயில்கள் கட்டும் திருப்பணியில் ஈடுபட்டிருந்தான் விஷ்ணுவர்த்தன். வகுளாதான் வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்துகொண்டிருந்தாள். தொண்டனூரில் ஒரு கோயில். அது நம்பி நாராயணம். தலக்காட்டில் ஒரு கோயில். கீர்த்தி நாராயணம். மேல்கோட்டையில் செல்வ நாராயணம். வேளாபுரி என்கிற பேலூரில் விஜய நாராயணம். கதக்கில் வீர நாராயணம். 


‘எத்தனை எத்தனைக் கோயில்கள் எழுப்புகிறோமோ, அத்தனையும் மக்களுக்கு நல்லது விஷ்ணுவர்த்தா. பிரபஞ்சமெங்கும் பரவி உதிர்ந்து கிடக்கும் மூலாதார சக்தியின் துகள்களை ஒருங்கிணைத்து பிரதிஷ்டை செய்கிறோம். அது ஞான ரூபமாக உருக்கொண்டு  கர்ப்பகிரகத்தில் பிரவகிக்கத் தொடங்குகிறது. சந்நிதியில் நிற்கிற கணம்தோறும் நாம் மூலாதார சக்தியுடன் நேரடியாகத் தொடர்புகொள்கிறோம். பக்தி நம் சிந்தையைப் பரமாத்மாவிடம் கடத்திச் செல்கிறது. உடல் விடுத்து, உள்ளம் விடுத்து, ஆன்மாவை நெருங்க வழி செய்கிறது. உன் ஆன்மாவைப் பரமாத்மாவின் பாதாரவிந்தங்களில் கொண்டு சேர்க்க முடிந்துவிட்டால் போதும். மோட்சம் நிச்சயம். நீ செய்வது நல்ல காரியம். இந்தப் பஞ்ச நாராயண க்ஷேத்திரங்களும் காலம் உள்ள வரை உன் பேர் சொல்லும்.’ என்றார் ராமானுஜர்.


‘சுவாமி, இது நான் செய்யும் காரியமல்ல. தங்கள் பெருங்கனவைக் கல்லாக ஏந்திச் சுமந்து செல்லும் பாக்கியம் மட்டுமே எனக்கு வாய்த்திருக்கிறது. என்றென்றும் தாங்கள் என் பக்கத்தில் இருந்து வழி காட்டிக்கொண்டே இருக்க வேண்டும்!’


ராமானுஜர் சிரித்தார். ‘என்றென்றுமா! என்றும் உள்ளவன் பரமன் ஒருவன் மட்டுமே.’


‘அவனை நெருங்க நீங்கள் அவசியம் சுவாமி.’


‘மனிதப் பிறவி முடிவுக்கு உட்பட்டது மன்னா. ஆனால் ஆசாரிய சம்பந்தம்தான்  பரமபத வாயிலை அடைய வழி செய்யும் என்பது உண்மை. ஆளவந்தார் சுவாமிகளும் பெரிய நம்பியும், திருக்கோட்டியூர் நம்பியும், திருமாலையாண்டான் சுவாமியும், அரையரும், பெரிய திருமலை நம்பியும் இல்லாது போயிருந்தால் நானில்லை. திருக்கச்சி நம்பிகள் இல்லாவிட்டால் மேற்சொன்ன யாருமே எனக்கில்லை. இது ஒரு தொடர்ச்சி. என்றும் இருப்பது. என்றும் இருக்க வேண்டியதும் கூட. எக்காலத்திலும் நமது ஜனங்கள் ஆசாரிய அனுக்கிரகம் இன்றிப் போய்விடக்கூடாதே என்றுதான் எழுபத்தி நான்கு சிம்மாசனாதிபதிகளைக் கண்டெடுத்து நியமித்தேன். சற்றும் தன்னலமற்ற, ஞானப் பெருஞ்சுடர்களான  அவர்கள், தேசமெங்கும் பரவி வைணவம் வளர்ப்பார்கள். நான் உனக்குச் செய்தவற்றை அவர்கள் நாட்டுக்குச் செய்வார்கள்.’


‘புரிகிறது சுவாமி.’


‘இந்த குரு பரம்பரை மிக முக்கியமானது விஷ்ணுவர்த்தா! எவனொருவன் தன் ஆசாரியரைக் கண்டடைந்து, அவரிடம் பஞ்ச சம்ஸ்காரங்களைப் பெற்று பாகவத உத்தமனாக வாழ்கிறானோ அவனே எம்பெருமானுக்கு உகந்தவன் ஆகிறான். ஆசாரிய சம்பந்தம் இல்லாமல் அவனை நெருங்குவது அத்தனை எளிதல்ல.’


‘உண்மை சுவாமி. அவ்விதத்தில் நானும் என் மகள் வகுளாவும் புண்ணியம் செய்தவர்கள். என்ன காரணத்தாலோ என் மனைவி இந்த வழிக்கு வர மறுக்கிறாள்.’


உடையவர் புன்னகை செய்தார். ‘அறிவைப் புகட்ட முடியும் விஷ்ணுவர்த்தா. ஆனால் ஞானத்தையல்ல. ஞானம் என்பது தன்னால் திரண்டு வரவேண்டியது. ஒரு தரிசனத்தில் சித்திப்பது. ஆசாரிய சம்பந்தம் தேடிச் செல்வதே ஞானத்தேடலின் தொடக்கம். உன் மனைவியைப் பற்றி வருந்தாதே. முதலில் இந்தத் திருக்கோயில் பணிகளைச் சிறப்பாகச் செய்து முடிக்கிற வழியைப் பார்.’


அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோதுதான் அத்தகவல் வந்தது. குலோத்துங்கன் இறந்துவிட்டான்.


அடடே என்று துள்ளியெழுந்தார்கள் ராமானுஜரின் சீடர்கள்.


‘வேண்டாம். ஒரு மரணத்தை யாரும் கொண்டாடாதீர்கள். வெறுப்பு அல்ல; வெறுத்தவர்களையும் அரவணைப்பதே வைணவம்’ என்றார் ராமானுஜர்.


‘சுவாமி, சிறியாண்டான் கூரேசரைத் தேடி மாலிருஞ்சோலைக்குப் போயிருக்கிறாரே, அவர்கள் இருவருக்கும் நிச்சயம் இத்தகவல் எட்டியிருக்கும். இனி திருவரங்கம் திரும்ப நமக்குத் தடையிருக்காது என்றே நினைக்கிறேன்’ என்றார் முதலியாண்டான்.


ராமானுஜர் எதுவும் பேசவில்லை. சிறிது நேரம் அமைதியாக யோசித்தார். நேற்று நடந்த மாதிரி இருக்கிறது. திடீரென்று ஒரு காலைப் பொழுதில் எல்லாமே கலைந்துவிட்டாற்போன்ற காட்சி மங்கலாக நினைவுக்கு வந்தது. கூரேசரும் பெரிய நம்பியும் சோழன் சபைக்குச் சென்ற பிறகு என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ளவே எத்தனை வருடங்களாகிவிட்டன! காலமும் தூரமும் பிரித்துப் போட முயற்சி செய்தாலும் நினைவுச் சரத்தில் இடைவெளி இல்லாமல்தான் இருக்கிறது.


ஒரு திருப்தி இருந்தது அவருக்கு. துக்கத்தில் துவண்டு அமர்ந்துவிடவில்லை. செய்ய வேண்டிய எந்தப் பணியையும் தள்ளிப் போடவில்லை. எத்தனை தேசங்கள், எத்தனை ஆயிரம் மக்கள், எவ்வளவு பண்டிதர்கள், எப்பேர்ப்பட்ட மன்னர்களைச் சந்தித்தாகிவிட்டது! உக்கிரமும் வன்மமும் வெறுப்பும் மேலோங்க வாதுக்கு வந்த விற்பன்னர்கள். எம்பெருமான் அருளால் எல்லோரையும் வெல்ல முடிந்திருக்கிறது. குலப்பெருமையல்ல; குறைவற்ற பக்தியே பெரிது என்று மானிட சமூகத்துக்குப் புரியவைக்க முடிந்திருக்கிறது. சாதியை முன்வைத்து மேலோர், தாழ்ந்தோர் என்று பேசுவதன் அறமின்மையை உணர்த்த முடிந்திருக்கிறது. ஒரு திருக்கச்சி நம்பியைக் காட்டிலும் மேலோர் உண்டா! மாறநேர் நம்பியினும் புண்ணியாத்மா இருந்துவிட முடியுமா! பிறப்பால் வைணவனாக இருந்தாலும், கூரேசரின் சீடனாகவே இருந்தாலும் சோழனின் அமைச்சன் நாலூரான் நடந்துகொண்ட விதத்தை எப்படி மதிப்பிடுவது?


இன்னொன்றும் இருக்கிறது. செல்வம். செழிப்பு கொடுக்கிற அகம்பாவம். ராமானுஜருக்கு இன்னொரு சம்பவம் நினைவுக்கு வந்தது. பல வருடங்களுக்கு முன்னர் திருவரங்கத்தில் இருந்து காஞ்சிக்குப் புறப்பட்டுப் போனபோது வரதாழ்வான் வீட்டில் தங்கிய சம்பவம். உண்மையில் யக்ஞேசன் என்னும் தமது சீடன் ஒருவனின் இல்லத்தில்தான் அவர் தங்க நினைத்திருந்தார். அவனது பணத்திமிர் அங்கு செல்ல விடாமல் தடுத்துவிட்டது. பின்னர் அதே யக்ஞேசன் கதறிக்கொண்டு வந்து காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டதை எண்ணிப் பார்த்தார். உன் பணம் உனக்கு என்ன கொடுக்கும்? ஆசாரிய சம்பந்தம் இருந்தும் அறிவில் தெளிவில்லாமல் என்ன பயன்? ஆசாரியரே விட்டு விலகிச் செல்வதுதான் நிகர லாபமாக இருக்கும்.


‘எம்பெருமானே! மனித குலத்தைப் பீடித்திருக்கும் குலச் செருக்கு, செல்வச் செருக்கு முற்றிலும் நீங்கக் கருணை புரி. அகந்தையற்று இருப்பதே வைணவம், கைங்கர்யமே வைணவன் இலக்கணம் என்பதை வாழும்வரை நான் சொல்லிக்கொண்டே இருக்க வழி செய்!’ என்று மானசீகமாகப் பிரார்த்தனை செய்தார்.


(தொடரும்)


Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 22, 2017 09:30

April 21, 2017

பொலிக! பொலிக! 99

பிரம்மனின் முதல் நான்கு படைப்புகளுள் ஒருவரான சனத்குமாரர் பூமிக்கு வந்தபோது கால் பதித்த இடம் அது. கிருத யுகத்தில் அந்த மலையடிவாரத்தில் அவர் நாராயணனைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டதால் அம்மலைக்கு அன்று நாராயணாத்ரி என்று பெயர். திரேதா யுகத்தில் நான்கு வேதபுருஷர்களையும் நான்கு சீடர்களாக வரித்துக்கொண்டு அங்கே வந்து வாசம் செய்தார் தத்தாத்ரேயர். மாபெரும் யோகி. அவர் அமர்ந்த இடத்தின் அருகிருந்த நீர்நிலை என்பதாலேயே அது வேத புஷ்கரணி என்று அழைக்கப்படலாயிற்று. மலையும் வேதாத்ரி என அப்போது வழங்கப்பட்டது. துவாபர யுகத்தில் மாடு மேய்த்துக்கொண்டு கண்ணனே அங்கு வந்தான். சனத்குமாரர் பிரதிஷ்டை செய்த நாராயண மூர்த்தியை அவனே வணங்கி ஆராதித்துவிட்டுப் போனான். யாதவ குலக்கொழுந்தின் வருகை அந்த மலையை யாதவாத்ரி ஆக்கியது. ஏதோ ஒரு மலையடிவாரம், எப்படியோ அங்கு திருமண் கிடைக்கிறது என்று கிளம்பி வரவில்லை. அனைத்தும் பெருமானால் திட்டமிடப்படுகிறது. நாம் யார்? சொன்னதைச் செய்யும் வேலையாள் என்பதைத் தவிர?


ராமானுஜர் திருநாராயணபுரத்தின் பூர்வ கதையைச் சொல்லிக்கொண்டிருந்தார். துக்கமும் ஆனந்தமும் ஒருசேரத் தாக்கியிருந்த நிலையில், பேசச் சொல்லின்றிக் கேட்டுக்கொண்டிருந்தார் டெல்லி சுல்தான்.


‘சுல்தானே, உன் மகள் உன்னைவிட்டுப் பிரிந்த துக்கம் சிறிது காலம் இருக்கத்தான் செய்யும். ஆனால் இந்த உலகில் யாருக்குமே கிடைக்காத புருஷோத்தமன் அவளுக்குக் கணவனாகக் கிடைத்திருக்கிறான். நீ பரமாத்மாவுக்கு மாமனாராகியிருப்பவன். அதை எண்ணிப் பார்!’ என்றார் ராமானுஜர்.


‘புரிகிறது ஐயா. அவளது தெய்வீகக் காதலை நான் அறிவேன். ஆனால் குழந்தைதானே, வளர்ந்தால் சரியாகிவிடுவாள் என்று நினைத்தேன். அவளது காதல் பெருமான் உள்ளம்வரை சென்று தைத்திருக்கிறது என்பது பெருமையாகவும் நம்பமுடியாததாகவும் இருக்கிறது.’


‘இது நம்பமுடியாததல்ல மன்னா. எங்கள் ஊரிலும் ஒருத்தி இருந்தாள். கோதை என்று பெயர். பரிசுத்தமான அவளது பிரேம பக்தியே அவளை நாராயணனின் நெஞ்சக்கமலத்தில் கொண்டு சேர்த்தது.’


‘அப்படியா!’ என்றான் சுல்தான்.


‘இன்னொன்று தெரியுமா உங்களுக்கு? அந்தக் கோதை எங்கள் உடையவரின் தங்கை!’ என்றார் முதலியாண்டான். திடுக்கிட்டு உடையவரைப் பார்த்த சுல்தான் கண்ணில் மாளாத வியப்பு.


‘ஆச்சரியப்படாதீர்கள் சுல்தானே. தங்கைதான். ஆனால் இவருக்கு ஐந்நூறு வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தவள்.’


‘புரியவில்லையே ஐயா?’


‘சொல்கிறேன். வில்லிபுத்தூரில் பிறந்து அரங்கப் பெருமான் மீது மாளாத காதல் கொண்ட ஆண்டாள் அரங்கனோடு இரண்டறக் கலந்து போனவள். அவளுக்கு ஒரு ஆசை இருந்தது. பெருமானுக்கு நூறு அண்டாக்கள் நிறைய அமுது செய்து சமர்ப்பிக்கும் ஆசை. சிறுமியால் அன்று அதெல்லாம் எப்படி முடியும்? அந்த ஆசை நிறைவேறும் முன்னரே அவள் அரங்கனோடு இணைந்துவிட்டாள். சில வருடங்களுக்கு முன்னர் எங்கள் உடையவர் திருமாலிருஞ்சோலைக்க யாத்திரை சென்றபோது கோதையின் கனவை நிறைவேற்றி வைத்தார். நூறு தடாய் நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன் என்று அவள் பாடியதைச் செய்து முடித்தவர் இவர்!’


‘அப்படியா?’


‘அதோடு முடியவில்லை. தன் விருப்பத்தை ஒரு தமையன் ஸ்தானத்தில் இருந்து நிறைவேற்றிய உடையவர், வில்லிபுத்தூரில் தனது சந்நிதிக்கு வந்தபோது, கருவறைக்குள் இருந்து எழுந்து வந்து அண்ணா என்று அவள் அழைத்ததை நாங்கள் அத்தனை பேரும் கண்ணாரக் கண்டோம் மன்னா!’


கரம் குவித்துக் கண்ணீர் உகுத்தான் சுல்தான். ஊர் திரும்பும் முன்னர் திருநாராயணபுரத்துப் பெருமாளுக்குப் பொன்னும் மணியும் அள்ளிக் கொடுத்துவிட்டுப் போனான். ‘என் மருமகன் கோயில் கொண்டிருக்கும் தலம் இது. என்றும் இந்நகரம் திருவிழாக்கோலம் கொண்டிருக்க வேண்டும்!’


அப்படித்தான் இருந்தது நகரம். எப்போதும் உற்சவம். எப்போதும் பெருமகிழ்ச்சி. எங்கு நோக்கினும் வேதபாராயணம். பாரதம் முழுவதிலும் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து குவிய ஆரம்பித்தார்கள். நடந்த சம்பவங்கள் எட்டாத இடமில்லை என்றாயிற்று.


இப்போது திருவரங்கத்தில் இருந்தவர்களுக்கும் தகவல் எட்டி, உடையவர் மேல்கோட்டையில் இருக்கிற விவரம் தெரிந்துபோனது. உடனே கிளம்பி வந்து அவரைச் சந்தித்தவர்களிடம் ராமானுஜர் ஊர் நிலவரம் விசாரித்தார்.


‘எப்படி இருக்கிறது அரங்கமாநகர்? என் கூரேசர் எப்படி இருக்கிறார்?’


‘சுவாமி, மனத்தை திடப்படுத்திக்கொள்ளுங்கள். நடக்கக்கூடாததெல்லாம் நடந்துவிட்டது அங்கே.’


‘என்ன சொல்கிறீர்கள்?’


‘ஆம் சுவாமி. சோழன் கொடுமை பொறுக்காமல் கூரேசர் தமது கண்களைத் தாமே பறித்துக்கொண்டார். சோழன் பெரிய நம்பியின் கண்களைப் பிடுங்கி எறிந்துவிட்டான். வலி பொறுக்காத அம்முதியவர் கங்கை கொண்ட சோழபுரத்துக்கு அருகே காட்டில் உள்ள திருமேனியார் கோயிலில் தன் உயிரை விட்டார்.’


‘பெருமானே! மகாபூரணரான பெரிய நம்பி பரமபதம் அடைந்துவிட்டாரா!’ மூர்ச்சையாகிப் போனார் ராமானுஜர். அவரைத் தெளிய வைத்து, ஆசுவாசப்படுத்தி நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொன்னார்கள்.


சோழனின் சபையில் இருந்து ஒரு பணிப்பெண்ணின் உதவியுடன் அத்துழாய் அவர்கள் இருவரையும் அழைத்துச் சென்றது. திருமேனியார் கோயிலைத்தாண்டி பெரிய நம்பியால் பயணம் செய்ய முடியாமல் போனது. அங்கேயே கூரத்தாழ்வான் மடியில் தலை வைத்துக் கண்மூடியது.


பேச்சற்றுப் போனார்கள் ராமானுஜரும் சீடர்களும்.


‘அது மட்டுமல்ல சுவாமி. தங்களது ஆசாரியர்களான திருக்கோட்டியூர் நம்பி, திருமாலையாண்டான், திருக்கச்சி நம்பி, அரையர் போன்றோரும் எம்பெருமான் திருவடி சேர்ந்துவிட்டார்கள். இதையெல்லாம் தங்களுக்கு எப்படித் தெரிவிப்பது என்று தெரியாமல் ஆண்டுக்கணக்காகத் தவித்துக்கொண்டிருந்தோம். தங்கள் இருப்பிடம் எங்களுக்கு இப்போதுதான் தெரியவந்தது.’


உடையவர் ஒன்றும் பேசவில்லை. மகாத்மாக்களான தமது ஆசாரியர்களுக்குத் தாம் செய்ய வேண்டிய கிரியைகளைச் செய்து முடித்தார். ‘துயரங்களில் துவள்வது வைணவன் லட்சணமல்ல. வாழ்ந்த காலத்தில் மகத்தான பணிகளை நிறைவேற்றியவர்கள் அவர்கள். எம்பெருமான் அவர்களைத் தன் பக்கத்தில் இருத்திக்கொள்ள விரும்பியதில் வியப்பென்ன?’


‘ஆனால் கூரேசர் என்ன ஆனார்? அதைச் சொல்லவில்லையே?’ என்று பதைப்புடன் கேட்டார் முதலியாண்டான்.


‘அவர் இப்போது திருவரங்கத்தில் இல்லை சுவாமி. உடையவர் இல்லாத இடத்தில் எனக்கு வேலையில்லை என்று சொல்லிவிட்டு, திருமாலிருஞ்சோலைக்குக் குடிபோய்விட்டார்.’


ராமானுஜர் உடனே தமது சீடர்களுள் ஒருவரான சிறியாண்டானை அழைத்தார். ‘உடனே மாலிருஞ்சோலைக்குக் கிளம்புங்கள். கூரேசர் எப்படி இருக்கிறார் என்று நேரில் சென்று பார்த்து வந்து தகவல் சொல்லுங்கள். நான் அவரைச் சந்தித்தாக வேண்டும்.’


சிறியாண்டான், மாலிருஞ்சோலையை அடைந்த நேரம், சோழ மன்னன் குலோத்துங்கன் இறந்துவிட்ட செய்தி அங்கு வந்து சேர்ந்தது.


(தொடரும்)


Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 21, 2017 09:30

April 20, 2017

பொலிக! பொலிக! 98

ஊர் திரண்டுவிட்டது. மன்னன் விஷ்ணுவர்த்தன் தனது முழுப் பரிவாரங்களுடன் முன்னால் வந்து நின்றான். இங்கே உடையவர். அங்கே அவர் நியமித்த சிம்மாசனாதிபதிகள். தவிரவும் கோயில் கைங்கர்யத்துக்கெனப் பிரத்தியேகமாக அவர் அமர்த்தியிருந்த ஐம்பத்தி இரண்டு பேர் கொண்ட நிர்வாகக் குழு. சீடர்களும் பக்தர்களும் முண்டியடித்தார்கள்.


ராமானுஜர் அமைதியாகப் பேச ஆரம்பித்தார். ‘மனிதர்களில் வேற்றுமை பார்ப்பதே மகாபாவம். இதில் பக்தர்களுக்குள் பிரிவினை ஏது? மண் கண்ட உயிர்கள் அனைத்தும் பரமாத்மாவின் படைப்பு. இவன் மேல் அவன் கீழ் என்பது வாழும் விதத்தால் மட்டுமே வருவது. செல்லப் பிள்ளையின் அருளாட்சி நடைபெறவிருக்கிற இத்தலத்தில் எந்நாளும் சாதிப் பிரிவினை வரக்கூடாது. கோயில் அனைவருக்கும் சொந்தம். அனைவருக்கும் கோயிலுக்குச் செல்ல உரிமை உண்டு. கைங்கர்யங்களில் பங்குண்டு!’


நாங்கள் தீண்டத்தகாதவர்கள் என்று சொல்லி ஒதுங்கி நிற்கப் பார்த்த கிராமத்து மக்கள் மெய் சிலிர்த்து நின்றார்கள். ‘ஐயா நீங்கள் யார்? இப்படிக் கடலளவு பரந்த மனம் இவ்வுலகில் வேறு யாருக்கு உண்டு? காலகாலமாகத் தீண்டத்தகாதவர் என்று சொல்லியே ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் நாங்கள். பிறர் சொன்ன வார்த்தைகள் காதில் நுழைந்து, புத்தியில் ஏறி அமர்ந்து அங்கேயே படிந்து தலைமுறை தலைமுறையாக எங்களை நாங்களே தாழ்த்திக் கருதப் பழகிப் போனோமே! அது தவறென்று இப்போதல்லவா புரிகிறது!’


‘மனத்தில் பக்தி. நடவடிக்கைகளில் ஒழுக்கம். நெஞ்சில் நேர்மை, உண்மை. துயரில் அவதிப்படும் யாரைக் கண்டாலும் ஓடோடிச் சென்று உதவுகிற சுபாவம். இவ்வளவுதான் வேண்டியது. இவை இருந்தால் நீ ஒரு வைணவன். வைணவனுக்கு இடமில்லை என்று எந்தப் பெருமான் சொல்லுவான்? வாருங்கள் கோயிலுக்கு!’


சொல்லிவிட்டு கம்பீரமாக அவர் முன்னால் நடக்க, அவர் பின்னால் திருக்குலத்தார் அத்தனை பேரும் வரிசையாக வணங்கியபடியே உள்ளே போனார்கள். உடையவரின் பரிவாரங்கள் அவர்களுக்குப் பின்னால் சென்றார்கள். அவர்களுக்கும் பின்னால் அரசன் போனான்.


அதற்குமுன் எக்காலத்திலும் எந்த தேசத்திலும் நடவாத அதிசயம் அன்று திருநாராயணபுரத்தில் நடந்தது. யாரைத் தீண்டத்தகாதவர் என்று ஒதுக்கி வைத்திருந்தார்களோ, அவர்கள் முதல் முதலில் ஆலயப் பிரவேசம் செய்தார்கள். வானம் இடிந்து விழவில்லை. வையம் புரண்டு கவிழவில்லை. காற்று வீசுவது நிற்கவில்லை. ஒளி மங்கிப் போகவில்லை. ஆலயக் கதவுகள் அகன்று திறந்தன. ‘வாரீர் என் பரம பக்தர்களே!’ என்று திருநாராயணன் அவர்களை ஏந்திக்கொண்டான்.


‘சுவாமி! இன்று புத்தி தெளிந்தோம். இனி பிரிவினை பேசமாட்டோம். பாகவத இலக்கணம் புரியவைத்த தாங்கள் இத்தலத்திலேயே தங்கியிருந்து என்றென்றும் எங்களைக் காக்க வேண்டும்!’ என்று கரம் குவித்தான் விஷ்ணுவர்த்தன்.


சட்டென்று ஒரு குரல் கலைத்தது. ‘பாகவத இலக்கணம் புரிந்தது இருக்கட்டும். என் மணாளனைக் கொள்ளையடித்துக் கொண்டு வந்து இங்கு வைத்தது எந்த விதத்தில் பாகவத தருமம்?’


சபை அதிர்ந்தது. அங்கே ஒரு பெண் நின்றிருந்தாள். பெண்ணல்ல, சிறுமி. முக்காடிட்டு முகம் மறைத்த முஸ்லிம் சிறுமி. அவள் பின்னால் டெல்லி சுல்தானின் வீரர்கள் சிலர் வேல் தாங்கி நின்றிருந்தார்கள்.


‘என்ன பிரச்னை குழந்தாய்?’ என்றார் ராமானுஜர்.


‘நீங்கள் எடுத்து வந்த விக்கிரகம் என்னுடையது. நான் இல்லாத சமயத்தில் என் தந்தையை ஏமாற்றிக் கவர்ந்து வந்துவிட்டீர்கள். என்னால் அவனை விட்டுப் பிரிய முடியாது ஐயா. தயவுசெய்து கொடுத்துவிடுங்கள்!’ என்று கண்ணீருடன் பேசினாள் அந்தச் சிறுமி.


சுல்தானின் வீரர்கள் விவரம் சொன்னார்கள். அவள் சுல்தானின் ஒரே மகள். அரண்மனையில் உள்ள அத்தனை விக்கிரகங்களுள் அந்தக் குறிப்பிட்ட விக்கிரகம்தான் அவளைக் கவர்ந்தது. நாளும் பொழுதும் அதை வைத்துக்கொண்டு அதனோடே பேசிக்கொண்டிருப்பாள். தான் உண்ணும்போது அதற்கும் உணவு ஊட்டுவாள். உறங்கும்போது அருகே கிடத்திக்கொள்வாள். தான் குளிக்குமுன் அதற்கு அபிஷேகம் செய்வாள். ஆடை அலங்காரங்கள் செய்து அழகு பார்ப்பாள். அவளுக்கு அது சிலையல்ல. விக்கிரகமல்ல. உயிரும் உணர்வும் உள்ள ஒரு மனிதன். உள்ளம் கவர்ந்த கள்வன்.


ராமானுஜர் வியந்து போனார். ‘சிறுமியே, இது இந்தக் கோயிலின் உற்சவ மூர்த்தி. யுத்தத்துக்கு வந்தபோது உன் தந்தையோ அவரது முன்னோர் யாரோ இங்கிருந்து இந்த விக்கிரகத்தைக் கவர்ந்து சென்றிருக்கிறார்கள். நீ புரிந்துகொள்ள வேண்டும்.’


‘எனக்கு அதெல்லாம் தெரியாது. இவன் என் காதலன். என்னை மணந்துகொள்வதாகச் சொல்லியிருக்கிறான். இவன் இருக்கும் இடத்தில்தான் நான் இருப்பேன். என்னோடு இவனை அனுப்பிவைக்க உங்களுக்கு விருப்பமில்லாவிட்டால், இங்கேயே நானும் இருந்துவிடுவேன்!’ என்றாள் தீர்மானமாக.


கூட்டம் குழம்பிப் போனது. இப்படியொரு சிக்கல் வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. டெல்லி சுல்தானின் மகள் விக்கிரகத்தைத் தர மறுக்கிறாள். ஏதோ ஒரு நல்ல மனநிலையில் கொடுத்தனுப்பிவிட்ட சுல்தான், இப்போது மகளையே அனுப்பி, திருப்பிக் கேட்டிருக்கிறான். மாட்டேன் என்று சொன்னால் கவர்ந்து செல்ல அவனுக்கு கணப் பொழுது போதும். முடியாது என்று மறுத்தால் யுத்தம் வரும். என்ன செய்வது?


உடையவர் யோசித்தார். ‘சிறுமியே, உன் தந்தை உள்பட அரண்மனையில் அனைவருக்கும் என்ன நடந்ததென்று தெரியும். நான் இந்த விக்கிரகத்தைக் கேட்டது உண்மை. ஆனால் என் செல்லப் பிள்ளையான இவன், தானே தவழ்ந்து வந்துதான் என்னிடம் சேர்ந்துகொண்டான். அப்படியானால் அவன் விருப்பம் என்னவென்று புரியவில்லையா?’


‘ஓஹோ. அவனே வந்து உங்கள் மடிமீது ஏறிக்கொண்டான். அவ்வளவுதானே? இதோ நானே அவனிடம் செல்கிறேன். என்னை இறக்கிவிட்டுவிடுவானா? அதையும் பார்க்கிறேன்!’ என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று சன்னிதியை நோக்கி விரைந்தாள்.


சில வினாடிகள்தாம். என்ன நடக்கிறது என்பது முழுதும் புத்தியில் தெளிவாகும் முன்னர், சன்னிதிக்குள் நுழைந்த சிறுமி, செல்லப் பிள்ளையை இறுகக் கட்டிக்கொண்டாள். ‘டேய், நீ என் சொந்தம். இவர்கள் யார் நம்மைப் பிரிப்பதற்கு? எடுத்துச் சொல்லு உன் ராமானுஜருக்கு!’ என்று ஆவேசமாகக் கூறியபடியே விக்கிரகத்தின்மீது தன் பிடியை இறுக்கினாள்.


அடுத்த வினாடி அவள் விக்கிரகத்துக்குள் ஒடுங்கிக் கரைந்து காணாமல் போனாள்!


உடையவர் கரம் கூப்பினார். ‘இது அவன் சித்தம். சொன்னேனல்லவா? பக்தி நெஞ்சுக்கு பேதமில்லை. சுல்தான் மகளானால் என்ன? அவள் நம் பெருமானின் நாயகி. இனி பீபி நாச்சியாராக அவளும் இங்கு கோயில் கொள்ளுவாள்!’


(தொடரும்)


Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 20, 2017 19:29

April 19, 2017

பொலிக! பொலிக! 97

‘ஆம். நீங்கள் சொல்லுவது சரி. இந்தப் பகுதியில் ஒரு பெரும் படையெடுப்பு நிகழ்ந்தது. வருடங்கள் ஆகிவிட்டாலும் அதன் வடுக்கள் மறையவேயில்லை. திருநாராயணப் பெருமாளின் உற்சவ மூர்த்தி மட்டுமல்ல. பிராந்தியத்தில் உள்ள பல கோயில்களில் இருந்தும் விக்கிரகங்களை டெல்லீசன் கவர்ந்து சென்றுவிட்டான்!’ என்று வருத்தத்துடன் பேசினான் விஷ்ணுவர்த்தன்.


உடையவர் புன்னகை செய்தார். ‘அப்பனே, முகமதிய மன்னனை டெல்லியின் ஈசனாக்கிக் குறிப்பிட்ட உன் சுபாவத்தை ரசிக்கிறேன். ஆனால் உற்சவர் விக்கிரகம் இல்லாமல் நாம் விழாக்களை நடத்த முடியாது. பெருமாள் கோயில் என்றால் வீதி வலம் மிக முக்கியம். நான் டெல்லிக்குப் புறப்படுகிறேன்’ என்றார் ராமானுஜர்.


மன்னன் தன் வீரர்கள் சிலரைத் துணைக்கு அனுப்பிவைத்தான். உடையவரின் சீடர்கள் ஒட்டுமொத்தமாகத் திரண்டு கிளம்பினார்கள். ஒருபுறம் தனக்குப் பிறகும் வைணவ தருமம் தழைக்கவென்று உடையவர் உருவாக்கி நியமித்து வைத்திருந்த எழுபத்தி நான்கு சிம்மாசனாதிபதிகள். மறுபுறம் ஹொய்சள தேசத்தில் அவருக்குச் சேர்ந்திருந்த ஆயிரக்கணக்கான புதிய பக்தர்கள். அத்தனை பேரும் உடன் புறப்பட்டு மாபெரும் ஊர்வலமாக அவர்கள் டெல்லிக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.


டெல்லி சுல்தான் திகைத்துப் போனான். இத்தனை பேரா! ஒரு படையே போலல்லவா திரண்டு வந்திருக்கிறார்கள்? அத்தனையும் ஒரு சிலைக்காகவா!


‘மன்னா, பெருமானின் விக்கிரகம் தங்கள் அரண்மனையில் ஓர் அலங்காரப் பொருளாக இருக்கக்கூடும். ஆனால் அவர் எங்கள் கோயிலில் குடிகொள்ள வேண்டிய பெருந்தெய்வம். தயவுசெய்து அதைக் கொடுத்து உதவுங்கள்!’


சுல்தானுக்கு ராமானுஜரைப் பற்றித் தெரிந்திருந்தது. காஷ்மீரத்துப் பண்டிதர்களும் மன்னனும் அந்தப் பிராந்தியங்களில் அவரைப் பற்றி ஏராளமாகப் பேசியிருந்தது அவன் காதிலும் விழுந்திருந்தது. கேவலம் ஒரு சிலைக்காக இத்தனை பேர் திரண்டு வந்திருக்கிறார்களே என்று அவனுக்கு வியப்பாக இருந்தது. சின்ன விஷயம்தானே? சரி பரவாயில்லை என்று நினைத்தான்.


‘இங்கே ஏராளமான சிலைகள் இருக்கின்றன. அவை என் மகளுக்கு விளையாட்டுப் பொருள்கள். உங்களுடைய சிலை எதுவென்று தேடி எடுத்துக்கொள்ளுங்கள்!’ என்றான் சுல்தான்.


திறந்துவிடப்பட்ட மாபெரும் மண்டபத்தில் நூற்றுக்கணக்கான விக்கிரகங்களும் சிலைகளும் மலையெனக் குவிந்திருப்பதை ராமானுஜர் பார்த்தார்.


‘அதோ, நமது உற்சவர்!’ உடன் வந்திருந்த ஹொய்சள தேசத்து மூத்த குடி ஒருவர் அடையாளம் காட்ட, உடையவர் அந்த விக்கிரகத்தை எடுக்கப் போனார்.


‘பெரியவரே, ஒரு நிமிடம். நீங்கள் விரும்பும் சிலை அதுதான் என்பதை நான் எப்படி அறிவது?’


‘எப்படி அறிய விரும்புகிறாயோ, அப்படியே அறியலாம்.’ என்றார் ராமானுஜர்.


‘சரி, உங்கள் பெருமாளை நீங்கள் கூப்பிடுங்கள். அவராக வந்து உம்மிடம் சேருகிறாரா பார்க்கிறேன்!’


சற்றும் தயங்காமல், ‘சரி, அப்படியே!’ என்றார் ராமானுஜர். கண்மூடி, கணப் பொழுது தியானித்தார். கண்ணைத் திறந்து, ‘என் செல்லப் பிள்ளையே, வா என்னிடம்!’ என்று கூப்பிட்டார்.


அந்த அதிசயம் அப்போது நிகழ்ந்தது. அரங்கில் நிறைந்திருந்த நூற்றுக்கணக்கான விக்கிரகங்களுள், திருநாராயணபுரத்து உற்சவர் விக்கிரகம் அப்படியே ஒரு சிறு குழந்தையாக உருவெடுத்துத் தவழ்ந்து வந்தது. மன்னன் திகைத்துப் போனான். அமைச்சர்கள் வெலவெலத்துப் போனார்கள். உடையவரின் சீடர்களும் பக்தர்களும் பரவசத்தில் திக்குமுக்காடி நின்றார்கள்.


தவழ்ந்து வந்த குழந்தை உடையவரின் மடியில் ஏறிய மறுகணமே பழையபடி விக்கிரகமாகிப் போனது. மன்னன் பேச்சுமூச்சில்லாது போனான். ‘இதற்குமேல் நான் சொல்ல ஒன்றுமில்லை ஐயா. நீங்கள் விக்கிரகத்துடன் புறப்படலாம்!’ என்று வணங்கி வழிவிட்டான்.


வந்த காரியம் சரியாக நடந்தேறிய மகிழ்ச்சியுடன் ராமானுஜர் புறப்பட்டார். திரும்பிய வழியில் அடர்ந்த காடொன்றில் ஓரிரவு தங்கும்படி ஆனது.


‘சுவாமி, இங்கு தங்குவது நமக்குப் பாதுகாப்பல்ல. கள்வர் பயம் மிகுந்த பிராந்தியம் இது.’ வீரன் ஒருவன் எச்சரித்தான்.


‘கள்வர் வந்தால் வரட்டுமே. எடுத்துச் செல்ல நம்மிடம் என்ன இருக்கிறது?’


‘அப்படி இல்லை சுவாமி. உற்சவ மூர்த்தி சேதாரமின்றி ஊர் சென்றடைய வேண்டுமே.’


‘அவனை நாம் காப்பாற்றுவதா! நல்ல நகைச்சுவை. நம்மைச் சேர்த்து அவன் காப்பான். கவலையின்றி நிம்மதியாக உறங்குங்கள்!’ என்றார் உடையவர்.


ஆனால் அன்றிரவு அவர்களால் அப்படி நிம்மதியாக உறங்க முடியவில்லை. சொல்லி வைத்த மாதிரி ஒரு பெரும் கள்வர் கூட்டம் ஆயுதங்களுடன் அவர்கள் தங்கியிருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தது.


‘யாரும் தப்பிக்க நினைக்காதீர்கள். கையில் உள்ள அனைத்தையும் ஒப்படைக்காவிட்டால் ஒரு உயிரும் தங்காது!’ கர்ஜித்த குரலில் கலங்கிப் போன பக்தர்கள் அபயம் கேட்டு அலற ஆரம்பித்தார்கள். கோபமடைந்த கள்வர்கள் அவர்களைக் கண்மண் தெரியாமல் தாக்க ஆரம்பிக்க, அலறல் சத்தம் மேலும் அதிகரித்தது.


‘எம்பெருமானே, இதென்ன சோதனை!’ என்று ராமானுஜர் திகைத்து நின்றபோது சத்தம் கேட்டு அந்த இடத்துக்குச் சிறிது தொலைவில் குடியிருந்த மக்கள் தீப்பந்தங்களுடனும் சிறு ஆயுதங்களுடனும் ஓடி வந்தார்கள். யாரோ வழிப்போக்கர்களைச் சூறையாட நினைக்கிற கள்வர்கள். இன்று அவர்களை ஒரு வழி பண்ணாமல் விடுவதில்லை என்று வெறி கொண்டு தாக்க ஆரம்பித்தார்கள்.


சில மணி நேரம் இரு தரப்புக்கும் பலத்த சண்டை ஏற்பட்டது. இறுதியில் கிராமத்து மக்கள் கள்வர்களை அடித்துத் துரத்தி, ராமானுஜரையும் பக்தர்களையும் பத்திரமாகக் காப்பாற்றி அழைத்துப் போனார்கள்.


‘ஐயா, நீங்கள் எங்கே செல்ல வேண்டும்?’


‘ஹொய்சள தேசம். மேல்கோட்டை நகரம்.’


‘நல்லது. நாங்கள் உங்களுக்குத் துணைக்கு வருகிறோம்!’ என்று சொல்லி திருநாராயணபுரம் வரை உடன் நடந்து வந்தார்கள். வழி முழுதும் அவர்களுக்கு உடையவரைப் பற்றியும் திருநாராயணபுரத்தில் எழுந்துள்ள ஆலயத்தைப் பற்றியும், டெல்லிக்குச் சென்று உற்சவ மூர்த்தியைப் பெற்று வந்தது பற்றியும் உடையவரின் சீடர்கள் சொல்லிக்கொண்டே வந்தார்கள்.


ஊர் வந்து சேர்ந்ததும், ‘நல்லது ஐயா. நாங்கள் கிளம்புகிறோம்’ என்றார்கள் அந்த மக்கள்.


‘இத்தனை தூரம் வந்துவிட்டு கோயிலுக்கு வராமல் போவதா? அதெல்லாம் முடியாது!’ என்றார் ராமானுஜர்.


‘அதெப்படி ஐயா முடியும்? நாங்கள் தீண்டத்தகாதவர்கள். கோயிலுக்குள் நுழைந்தால் பாவமல்லவா!’


துடித்துப் போனார் ராமானுஜர். ‘யார் சொன்னது? பரம பாகவதர்களைக் காப்பாற்றிக் கரை சேர்த்த நீங்களும் பாகவத உத்தமர்கள். எம்பெருமான் திருமுன் உமக்கில்லாத இடம் வேறு யாருக்கு உண்டு? வாருங்கள் என்னோடு!’


அதுவரை சரித்திரம் காணாத அச்சம்பவம் அன்று நடந்தேறியது.


(தொடரும்)


Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 19, 2017 09:30

ஒரு விளக்கம்

ட்விட்டரில் நண்பர் அலெக்ஸ் பாண்டியன் ஒரு வினாவை எழுப்பியிருந்தார். ராமானுஜரின் காலம் கிபி 1017 – 1137. டெல்லியில் சுல்தான்கள் ஆட்சிக்கு வந்தது, 1192ல். அப்படி இருக்க, 1101-1104 காலக்கட்டத்தில் ராமானுஜர் எந்த டெல்லி சுல்தானைச் சந்தித்திருக்க முடியும்? [ சுட்டி இங்கே]


ராமானுஜர் டெல்லி சென்ற சம்பவத்தை விவரிக்கும்போது எனக்கும் இச்சந்தேகம் வந்தது.


ராமானுஜர் டெல்லிக்குச் சென்றதாகச் சொல்லப்படும் 1101-1104 காலக்கட்டத்தில் டெல்லியை ஆண்டது விஜய பாலா என்கிற மன்னன். சரித்திரம் பொதுவாக ஒப்புக்கொண்ட தகவல் இது. 1105ல் மகி பாலா என்கிற மன்னன் பட்டத்துக்கு வருகிறான்.  இடைப்பட்ட காலத்தில் (இது மிகச் சிறியதாகவே இருக்கவேண்டும்) யாராவது முகம்மதிய மன்னன் வந்து போயிருக்கலாம். அல்லது வந்தவன் மதமாற்றம் கண்டிருக்கலாம். ஒருவேளை வடக்கே ராமானுஜர் வேறெங்காவதும் சென்றிருக்கக்கூடும். டெல்லி என்ற பொதுவான அடையாளம் யாராலேனும் முன்மொழியப்பட்டு அதுவே பின்பற்றப்பட்டிருக்கலாம். கடைசிச் சாத்தியம், மேற்படி விஜய பாலாவின் காலத்திலேயே சுற்றுவட்டாரத்தில் யாராவது தளபதி அல்லது குறுநில மன்னன் முஸ்லிமாக இருந்திருக்கலாம். சரித்திரப்படி அந்தக் காலக்கட்டத்தில் அங்கே சுல்தானியர் ஆட்சி இல்லை.


ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றில் ஆண்டுத் தெளிவு பல இடங்களில் சரியாக இல்லை. சரித்திர ரீதியில் அவரது வாழ்க்கை வரலாறை எழுதுவதென்றால் இச்சரிதம் முற்றிலும் வேறொரு விதமாகத்தான் இருக்கும். சிதம்பரம் கோவிந்தராஜரை அவர் திருப்பதியில் பிரதிஷ்டை செய்து கோயில் அமைத்த காலக்கட்டம் தொடர்பாகவே இருவேறு தகவல்கள் உலவுகின்றன. ஶ்ரீபாஷ்யம் செய்து முடித்த பின்பு மேற்கொண்ட திக்விஜயத்தின் இறுதியில் அச்சம்பவம் நடந்ததென்றும், மேல்கோட்டையில் இருந்து அவர் திருவரங்கம் திரும்பிய பின்பு மீண்டும் திருமலைக்கு ஒரு யாத்திரை மேற்கொண்டு இதனை நடத்தி வைத்தார் என்றும் இரு விதமாகக் குறிப்பிடப்படுகின்றன.


இதைப் போலவே திருவரங்கத்தில் இருந்து இடம் பெயர்ந்து அவர் திருவெள்ளறையில் இரண்டு ஆண்டுகள் தங்கியிருக்கிறார் என்பதற்கும் தகுந்த ஆதாரங்கள் இல்லை. கோயிலொழுகில் குறிப்பிடப்படுகிற இச்சம்பவம் வேறெந்த வரலாற்றாசிரியராலும் சொல்லப்படவில்லை.


கோயிலொழுகு, பிரபன்னாமிர்தம் தொடங்கி, இன்று நமக்குக் கிடைக்கும் ராமானுஜர் சரித்திரம் அடங்கிய பிரதிகள் அனைத்தும் இந்தக் காலக் கணக்கைப் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை என்பதால் ஆண்டுத்தெளிவு சாத்தியமில்லாமல் இருக்கிறது. பின்னாளில் வந்த வாழ்க்கை வரலாற்றாசிரியர்கள் அனைவருக்குமே இப்பிரதிகள்தாம் மூல நூல்களாக இருந்திருக்கின்றன. எனவே அவர்களும் அதனை அடியொற்றியே அவரது வரலாறை எழுதினார்கள்.


என் நோக்கம், ராமானுஜரின் வாழ்வையும் பணிகளையும் பற்றி அவரைச் சற்றும் அறியாத ஒரு பெரும் சமூகத்துக்கு எளிமையாக அறிமுகப்படுத்துவது மட்டுமே. முழுமையான வரலாற்று நோக்கில் இன்னொரு நூல் எழுதுவதற்கான அனைத்து சாத்தியங்களும் இந்த இயலில் இருக்கின்றன.


Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 19, 2017 07:39

April 18, 2017

பொலிக! பொலிக! 96

யாதவாசலம் என்று அந்தக் குன்றுக்குப் பெயர். யதுகிரி என்றும் சொல்லுவார்கள். சட்டென்று அங்கே கிளம்பிப் போகவேண்டும் என்று ராமானுஜர் சொன்னபோது மன்னன் விஷ்ணுவர்த்தனுக்கு ஒன்றும் புரியவில்லை.


‘அது பெரும் காடாயிற்றே. இங்கிருந்து சென்றடையவே பல நாள் பிடிக்குமே சுவாமி?’


‘அதனால் பரவாயில்லை மன்னா. வைணவர்கள் திருமண் காப்பின்றி இருக்கக்கூடாது. பரமாத்மாவான ஶ்ரீமன் நாராயணனின் பாதங்களைக் குறிப்பது அது. மண்ணிலேயே பரிசுத்தமானது. என்றோ ஒருநாள் இவ்வுடல் மண்ணோடு மண்ணாகும்போது நாம் நெற்றியில் தரிக்கும் திருமண் காப்பு நம்மைப் பரமனின் அடியார்களென்று நிலமகளுக்கு எடுத்துச் சொல்லும். அவன் பாதம் பற்றிய நம்மைப் பரமபத வாயிலுக்கு இட்டுச் செல்லும்.’


‘சரி, அப்படியானால் நானும் தங்களுடன் வருகிறேன்’ என்றான் விஷ்ணுவர்த்தன்.


மன்னனே கிளம்புகிறான் என்பதால் வீரர்கள் முன்னால் சென்று பாதை அமைத்துக்கொண்டே போனார்கள். ஒரு வாரப் பயணத்தின் இறுதியில் யதுகிரியை அடைந்தார்கள். அன்று பகுதான்ய வருடத்தின் தைமாதப் பிறப்பு. வேத புஷ்கரணியின் கரைக்கு வந்து நின்ற ராமானுஜர் கைகூப்பி வணங்கினார். கனவில் பெருமான் குறிப்பிட்ட இடத்தை உற்று நோக்கினார். ‘ஆ, அதோ பாருங்கள்! மேலே கருடன் பறக்கிறது!’ என்றான் ஒரு வீரன். ராமானுஜர் நிமிர்ந்து பார்த்தார். அவருக்கு அனைத்தும் புரிந்தது.


அது புள்ளரையன் கோயில். எம்பெருமான் உத்தரவின் பேரில் ஸ்வேதத்வீபத்தில் இருந்து கருடன் எடுத்து வந்து சேர்த்த பரிசுத்தமான மண்.


‘புரியவில்லையே சுவாமி! ஸ்வேதத்வீபம் என்றால்?’


 


‘எம்பெருமான் பிரம்ம வித்யையை அறியத் தவம் இருந்த தீவு அது. பாற்கடலுக்கு வடக்கே வெகு தொலைவில் உள்ள இடம்.’


‘யாருமற்ற தீவா?’


‘கண்டவர் நம்மில் யாரும் இல்லை. ஆனால் வேதங்களில் அந்தத் தீவைப் பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தெய்வ நிலை அடைந்த பல மெய்ஞானிகள் அங்கு உண்டு. அவர்களுக்கு உணர்ச்சி கிடையாது. பசி தாகம் கிடையாது. உறக்கமோ விழிப்போ கிடையாது. பாவமற்ற பரிசுத்தமான ஆத்மாக்களான அவர்களின் தேகங்களில் இருந்து தெய்வீக மணம் வீசும். நான்கு கரங்களும் அறுபது பற்களும் கொண்டவர்கள் அவர்கள்.’


‘கேட்கும்போதே சிலிர்க்கிறதே. அந்தத் தீவில் இருந்து எடுத்து வரப்பட்ட மண்ணா இது?’


‘ஆம். கருடாழ்வார் எடுத்து வந்து சேமித்து வைத்திருக்கிறார்.’ என்றவர், சட்டென்று தமது திரிதண்டத்தால் அந்த இடத்தைத் தொட்டு சிறிதாகக் குத்தினார். வறண்டு, இறுகிக் கிடந்த அந்த இடத்தின் மேற்புறம் மறுகணம் நெகிழ்ந்து கொடுத்தது. வீரர்கள் உடனே அங்கு குவிந்து கரங்களால் தோண்ட ஆரம்பித்தார்கள்.


தோண்டத்தோண்ட மண்ணின் தோற்றம் மாறிக்கொண்டே வந்தது. அதன் பழுப்பு மெல்ல மெல்ல உதிர்ந்து வெண்மை நிறம் காட்டத் தொடங்கியதும் வீரர்கள் உற்சாகமாகி மேலும் வேகமாகத் தோண்டினார்கள். சரேலென்று ஒரு கட்டத்தில் மண்ணின் நிறம் முழு வெண்மையாக இருப்பதைக் கண்டார்கள்.


‘இதோ திருமண்! இதுதான் திருமண்! இந்த உலகில் இதனைக் காட்டிலும் தெய்வீகமான மண் வேறில்லை. இந்த இடத்தில் இது யுகம் யுகமாக இருந்து வருகிறது. இனி எத்தனை ஆயிரம், எத்தனை லட்சம் வைணவர்கள் வந்தாலும் அவர்களின் நெற்றியை அலங்கரிக்க இம்மண் வற்றாது தோன்றியபடியே இருக்கும்!’ என்று உணர்ச்சிவசப்பட்டுச் சொன்னார் ராமானுஜர்.


விஷ்ணுவர்த்தனின் வீரர்கள் அங்கே சேகரித்த திருமண்ணை கவனமாகக் கூடைகளில் எடுத்துக்கொண்டார்கள். மறுநாள், அடுத்த நாள், அதற்கடுத்த நாள் என்று திருமண் சேகரிக்கும் பணி தொடர்ந்துகொண்டே இருந்தது.


ஒருநாள் காலை குளித்து, பூஜை முடித்து, திருமண் சேகரிக்க அந்த இடத்துக்கு வரும்போது ஓரிடத்தில் புற்று ஒன்று இருப்பதை உடையவர் கண்டார். அதனைச் சுற்றி துளசி வளர்ந்திருந்தது. ஒரு கணம்தான். அவர் மனத்தில் ஏதோ பட்டது. புற்றும் துளசியும். கையெட்டும் தூரத்தில் திருமண் வேறு தோண்டத்தோண்டக் கிடைத்துக்கொண்டே இருக்கிறது. அப்படியானால்?


‘மன்னா நில்!’ என்றவர், தமது திரிதண்டத்தால் அந்தப் புற்றைத் தொட்டுக் காட்டினார்.


‘சுவாமி? இது வெறும் புற்று.’


‘ஆனால் எனக்கென்னவோ உள்ளே இருப்பது ஆதிசேஷனாகத் தோன்றவில்லை. அவன்மீது சயனிப்பவனே இங்கு இருக்கிறான் என்கிறேன். பார்த்துவிடலாமா?’


யாருக்கும் எதுவும் புரியவில்லை. அடுத்தடுத்து நிகழும் அதிசயங்கள் அளித்த பரவசத்தில் இருந்தார்கள். உடையவர் சொன்னால் செய்துவிட வேண்டியதுதான். உத்தரவிடுங்கள் சுவாமி.


அந்தப் புற்றை அகழ்ந்தபோது அந்த அதிசயம் நிகழ்ந்தது.


யதுகிரி நாயகன் அந்த இடத்தில் மண்ணுக்கடியில் மோனத்தவம் இருந்துகொண்டிருந்தான். ‘ஆஹா! ஆஹா!’ என்று தலைக்குமேல் கரம் கூப்பிக் கூத்தாடினான் விஷ்ணுவர்த்தன். வீரர்கள் திகைத்துப் போய் கைகட்டி நின்றார்கள்.


‘விஷ்ணுவர்த்தா! நீ புண்ணியம் செய்தவன். உனக்கு முன் எத்தனையோ மன்னர்கள் இங்கு ஆண்டிருக்கிறார்கள். ஆனால் உன் காலத்தில்தான் எம்பெருமான் தன்னை இங்கே வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறான். இனி நீ என்ன செய்யப் போகிறாய்?’


கிறுகிறுத்துப் போயிருந்த மன்னன் உடனே தன் வீரர்களை அழைத்தான். தலைநகருக்குச் செய்தி அனுப்பி மேலும் ஆயிரமாயிரம் வீரர்களையும் தொழிலாளர்களையும் அங்கு வரச் சொல்லி உத்தரவிட்டான்.


‘சுவாமி, இந்த நாள் என் வாழ்வின் பொன்னாள். இந்த இடத்தில் நான் இப்பெருமானுக்குக் கோயில் எடுப்பேன். என்றென்றும் உற்சவங்கள் தங்குதடையின்றி நடைபெற வழி செய்வேன். எதை எப்படிச் செய்ய வேண்டும் என்று மட்டும் நீங்கள் பக்கத்தில் இருந்து சொல்லிக் கொடுங்கள்!’ என்றான் மன்னன்.


உடையவர் மூன்று நாள்களுக்குப் பெருமானைத் தன்னுடனேயே வைத்துக்கொண்டார். பாலால் திருமஞ்சனம் செய்து, தியானித்தார். மறுபுறம் காட்டைத் திருத்தும் பணிகள் ஆரம்பித்து வேகமெடுத்தன. கண்ணெதிரே ஒரு குன்றம் சார்ந்த நகரம் உருவானது. மக்கள் தேடித்தேடி வந்தார்கள். கோயில் எழுந்தது. உடையவர் தாம் கண்டெடுத்த பெருமானை அங்கு கொண்டு பிரதிஷ்டை செய்தார். ஆலயக் குடமுழுக்கும் ஆகம கைங்கர்யங்களும் செம்மையாக நடந்தேறின.


‘உடையவரே, இந்நகருக்கு ஒரு பெயர் சூட்டுங்கள்’ என்று கேட்டுக்கொண்டான் விஷ்ணுவர்த்தன்.


‘நாராயணன் வந்துதித்த தலமல்லவா? திருநாராயணபுரம் என்பதே இந்நகரின் பெயராக இருக்கட்டும்’ என்றார் ராமானுஜர்.


மூலவர் கிடைத்துவிட்டார். ஒரு பிரம்மோற்சவம் நடத்தலாம் என்றால் உற்சவர் விக்கிரகம் வேண்டுமே?


உடையவர் மனத்தில் ஒரு சொல்லாக உற்சவர் உதித்தார்.


‘நான் ராமப்ரியன். டெல்லி சுல்தான் அரண்மனையில் இப்போது இருக்கிறேன்.’


(தொடரும்)


Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 18, 2017 09:30

April 17, 2017

அவனேதானாயிடுக

பிரபன்னாமிர்தம் என்னும் குரு பரம்பரை நூலை வாசித்துக்கொண்டிருந்தபோது ஒரு விஷயம் தோன்றியது.


‘நானே கடவுள்’ என்று சொல்லிக்கொள்கிற யாரையும் மக்கள் நம்புவதில்லை.  பெருமானையே நேருக்கு நேர் சந்தித்துவிட நேர்ந்தாலும் அவநம்பிக்கைதான் முதலில் எழும். ஒருவேளை ஆர்.எஸ். மனோகர் குழுவில் உறுப்பினராக இருந்திருப்பாரோ என்று எண்ணத் தோன்றும்.


நமது பிறப்பு அப்படி.


ஒன்றும் பிழையில்லை என்று வையுங்கள். அறிவும் மெய்யறிவும் எதிரெதிர் திசையில் பயணம் செய்வது இக்காலத்தின் இலக்கணமே. இது எம்பெருமானுக்கு மட்டும் தெரியாதா என்ன?


தெரியாமல்தான் இருந்திருக்கிறது என்பது ஒரு கதையில் தெரியவந்தது.


ராமானுஜர் திருக்குறுங்குடிக்குப் போயிருந்தபோது, குறுங்குடி நம்பி ஒரு சமாசாரம் கேட்கிறான். ‘சுவாமி, உம்மை ஒன்று கேட்க வேண்டும். நானும் எத்தனையோ காலமாக எவ்வளவோ நல்ல விஷயங்களைச் சொல்லிக்கொண்டுதான் வருகிறேன். ராமாவதாரத்தில் வாழ்ந்தே காட்டினேன். ஒரு பயல் புரிந்துகொள்ளவில்லை. கிருஷ்ணாவதாரத்தில் நட்டநடு யுத்தக் களத்தில் நிறுத்திவைத்துப் பாடம் எடுத்தேன். யாரும் மதிக்கவில்லை. ஒவ்வொரு அவதாரத்திலும் என்னவாவது சொல்லிக்கொடுத்து திருத்திப் பணி கொள்ள முடியாதா என்று பார்த்துக்கொண்டேதான் இருக்கிறேன். யாரும் மதிக்கவே மாட்டேனென்கிறார்கள். நீங்கள் மட்டும் எப்படி ஜனங்களை இழுத்து வைத்துக்கொண்டு சாதித்துவிடுகிறீர்கள்? நீங்கள் என்ன சொன்னாலும் கேட்கிறார்களே! நான் கூப்பிட்டு என் பக்கம் திரும்பாதவர்களெல்லாம், நீங்கள் சுட்டிக்காட்டிய பிறகு இந்தப் பக்கம் வருவதன் மாயம் என்ன?’


‘நல்ல கேள்விதான். ஆனால் உபதேசமாக அல்லவா கேட்கிறீர்? எனவே கேட்கும் விதத்தில் கேளும்’ என்றார் ராமானுஜர்.


உடனே பெருமான் அவருக்கு ஒரு பீடம் தருவித்து அமர வைத்து, தன் பீடத்தில் இருந்து இறங்கி வந்து பவ்யமாக, சிஷ்ய பாவத்தில் கேட்க ஆரம்பித்தபோது ராமானுஜர் அந்த ரகசியத்தைச் சொன்னார்.


‘எனக்கு உமது திருநாமம் இருக்கிறது. அதை தியானம் செய்துகொண்டு, பக்தியுடன் போதிக்கிறேன். அதனால் நான் சொல்லுவதை மக்கள் கேட்கிறார்கள். உமக்கு அப்படி என்ன இருக்கிறது? நீரே பரமாத்மா என்பதை இனி நாங்கள் சுட்டிக்காட்டி, செய்யவேண்டியதைச் செய்துகொள்கிறோம். வந்து சேருவோரை நீர் அரவணைத்து அருளாசி வழங்குங்கள்; அது போதும்!’ என்றிருக்கிறார்.


பகவானைவிட பகவான் திருநாமத்துக்கு சக்தி அதிகம் என்பதல்ல இதன் செய்தி. பகவானே ஆனாலும் நான் தான் கடவுள் என்று சொல்லிக்கொள்வதைவிட, இவந்தான் கடவுள் என்று இன்னொரு பொருத்தமான நபர் சுட்டிக்காட்டுவதே பலனளிக்கும் என்பதே செய்தி.


Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 17, 2017 21:50

பொலிக! பொலிக! 95

தொண்டனூர் ஆலயத்தில், நரசிம்மர் சன்னிதியில் அவர்கள் கூடியிருந்தார்கள். பன்னிரண்டாயிரம் சமணர்கள் ஒரு புறம். ராமானுஜரும் அவரது சீடர்களும் ஒருபுறம். வேடிக்கை பார்க்க வந்த மக்கள் ஒரு புறம். மன்னன் விஷ்ணுவர்த்தனும் அவனது பரிவாரங்களும் ஒரு புறம்.


‘பன்னிரண்டாயிரம் பேரும் கேள்வி கேட்கப் போகிறீர்களா?’ சந்தேகத்துடன் கேட்டான் விஷ்ணுவர்த்தன்.


‘கண்டிப்பாக. எங்கள் அத்தனை பேர் வினாக்களுக்கும் இவர் விடை சொல்லியாக வேண்டும்’ என்றார்கள் சமணர்கள்.


‘சொல்கிறேன். நமக்கிடையே ஒரு திரை மட்டும் போட அனுமதியுங்கள்’ என்றார் ராமானுஜர். 


திரையின் ஒரு புறம் ராமானுஜர் இருக்க, மறுபுறம் அத்தனை பேரும் கேள்விகளுடன் தயாராக இருந்தார்கள்.


‘யார் முதல் வினாவைக் கேட்கப் போவது, அடுத்தது யார் என்று வரிசை ஏதும் வைத்திருக்கிறீர்களா?’


‘அதெல்லாம் கிடையாது. அனைவரும் கேட்போம். ஒரே சமயத்தில் கேட்போம். ஆனால் அனைத்தும் வேறு வேறு வினா. அத்தனை பேருக்கும் இவர் பதில் சொல்லியாக வேண்டும். அது எங்களுக்குத் திருப்தியாக இருக்க வேண்டும்.’


இது எப்படி சாத்தியம் என்று மன்னனுக்குப் புரியவில்லை. மக்களுக்கும் புரியவில்லை.  சமணர்களுடன் அவர்கள் பேசிப் பார்த்தார்கள். ‘உங்கள் வினாக்களை எழுதிக் கொடுத்துவிடலாமே? ஒவ்வொன்றாக அவர் பதில் சொல்ல வசதியாக இருக்குமல்லவா? பன்னிரண்டாயிரம் கேள்விகளை நினைவில் வைத்து பதில் சொல்லுவது எப்படி சாத்தியம்?’


‘அவருக்குத்தான் சரஸ்வதி தேவியே அருள் புரிந்து ஹயக்ரீவர் விக்ரகம் பரிசளித்திருக்கிறாளாமே? அதெல்லாம் அவரால் முடியும். வாதத்தைத் தொடங்கலாமா?’


சரி என்றார் உடையவர்.


திரையிட்ட மறைப்பில் பத்மாசனமிட்டு அமர்ந்தார். கண்களை மூடினார். ஓம் நமோ நாராயணாய.


காற்றும் கனலும் கலந்தாற்போல் ஒரு பேரொளி அங்கு தோன்றியது. பஞ்சபூதங்கள் அதனுள் ஒடுங்கின. தேவர்களும் சப்தரிஷிகளும் ஒடுங்கினார்கள். அதுவரை யாரும் கேட்டறியாத ஒரு பிரம்மாண்ட சீற்றத்தின் ஒலி, சுருதியைப்போல் வெளியெங்கும் பரவி நிறையத் தொடங்கியது. அபூர்வமாக, அந்த ஒலிக்கு மணம் இருந்தது. அதைச் செவிகள் உணர்ந்தன. அது துளசியின் மணத்தை ஒத்திருந்தது. அது அசைந்தது. அசையாமலும் இருந்தது. தோன்றிய பேரொளியின் நடு நெற்றியில் இருந்து அந்த ஒலி வந்துகொண்டிருப்பதை உணர முடிந்தது. சட்டென்று அந்த ஒளிப் பிரளயம் ஒரு பெரும் நாகமாக உருக்கொண்டது. பிரம்மாண்டமான அதன் சிரம் சரசரசரவென இரு புறமும் பெருகி சஹஸ்ரமானது. அந்த ஆயிரம் தலைகளுக்குள் இருந்தும் ஒரே சமயத்தில் நாக்குகள் வெளியே நீண்டன.


‘ம், ஆரம்பியுங்கள்!’ சீற்றத்தின் ஒலி சொற்களாக உருக்கொண்டன.


நாராயணா! நாராயணா! என்று உடையவரின் சீடர்கள் சடாரென எழுந்து நின்று  கரம் கூப்பினார்கள். கணப் பொழுதில் அவர்களுக்குப் புரிந்துவிட்டது.  சப்த ரிஷிகளுள் ஒருவரான காஸ்யபர், அதிதியுடன் சேர்ந்து இந்திரனையும் அக்னியையும் பெற்றார். திதியுடன் சேர்ந்து அசுரர்களில் ஒரு பிரிவினரான தைத்தியர்களைப் பெற்றார். வினதாவுக்கு கருடனைப் பெற்றார். முனியுடன் இணைந்து அரம்பையரைப் பெற்றார். கத்ருவுடன் சேர்ந்து சேஷனைப் பெற்றார்.


ஆயிரம் தலைகளும் அகண்டு திரண்ட பெரும் தேகமும் கூர் விழிகளும் த்வய சித்தமுமாகப் பாற்கடலில் பரமனின் பீடமாகக் கிடக்கிற ஆதிசேஷன். ராமாவதாரத்தில் அவர் லட்சுமணனாக வந்து நின்றார். கிருஷ்ணாவதாரத்தில் பலராமனாகப் பிறப்பெடுத்தார். கலியின் தொடக்கத்தில் நம்மாழ்வாராகப் பெருமான் பிறப்பெடுக்க முடிவு செய்தபோது புளியமரமாக முன் தோன்றி, அவர் தங்க நிழல் அமைத்தார். ‘பொலிக! பொலிக!’ என்று நம்மாழ்வார் வாயால் அடுத்த அவதாரத்துக்கான சூசகம் வெளிப்பட்டபோது, ‘இதோ புறப்பட்டுவிட்டேன்’ என்று ராமானுஜராக வந்துதித்தார்.


‘ஆஹா! எப்பேர்ப்பட்ட தருணம்! உடையவர் இந்த சமணர் சபையில் தமது அவதார ரகசியத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அவர்களுக்கு இது புரியாது. அவர்களால் உணர முடியாது. திரைக்கு அப்பால் என்ன நிகழ்ந்தது என்பதைக் கூட அவர்கள் அறியமாட்டார்கள். எழுந்து நிறைந்த பேரொளியைக் காண முடியாமல் கணப் பொழுது கண்ணை மூடிக்கொண்டவர்கள். ஆதிசேஷனின் மூச்சுக்காற்றின் சீற்றத்தில் மணந்த துளசியின் வாசம் உணர்ந்திருப்பார்களா! சந்தேகம்தான்.’ முதலியாண்டான் பரவசத்துடன் சொல்லிக்கொண்டிருந்தார்.


மறுபுறம் சமணர்கள் பன்னீராயிரம் பேரின் வினாக்களுக்கு உடையவர் தமது ஆதி அவதார வடிவில் ஆயிரம் நாக்குகளால் தங்கு தடையற்று பதில் சொல்லிக்கொண்டிருந்தார். என்ன நடக்கிறது என்றே மன்னனுக்குப் புரியவில்லை. ஒரு திரை. அதற்கு அப்பால் ராமானுஜர் இருக்கிறார். ஒரே ஒருவர்தான் அங்கே இருப்பது. அதில் சந்தேகமில்லை. வெளிப்பட்டு வருவதும் ஒரு குரல்தான். ஆனால் அதெப்படி ஒரே சமயத்தில் ஆயிரம் பதில்கள் வருகின்றன? மொத்தம் பன்னிரண்டு முறை ஆதிசேஷன் திருவாய் மலர்ந்தார். பன்னிரண்டாயிரம் வினாக்களுக்கான பதில்கள். முடிந்தது.


திகைத்துப் போனார்கள் சமணர்கள். ‘உடையவரே, நாங்கள் தோற்றோம். கேட்கும் தகுதி எங்களுக்கு இல்லை. உம்மைச் சரணடைவது ஒன்றே மிச்சமிருக்கும் பணி. எழுந்து வெளியே வாருங்கள்!’ என்று கரம் கூப்பி நின்றார்கள்.


சில வினாடிகள் பெரும் நிசப்தம். திரைக்கு அப்பால் எழுந்தருளியிருந்த ஆதிசேஷன் உடையவராக மாறினார். திரை அசைந்தது. அதை விலக்கி ராமானுஜர் வெளியே வந்தார். தாள் பணிந்த பன்னிரண்டாயிரம் சமணர்களும் வைணவத்தை ஏற்றார்கள். ராமானுஜர் அவர்களுக்கு பஞ்சசம்ஸ்காரங்களைச் செய்துவைத்தார். அன்று ஹொய்சள மண்ணில் சமணம் இல்லாது போயிற்று.


தொண்டனூரிலேயே அவர் சிறிது காலம் தஙக்வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டார்கள்.


‘அதற்கென்ன? இந்த நரசிம்மப் பெருமாள் கோயிலே அற்புதமாக இருக்கிறது. இங்கேயே தங்குவோம்!’ என்றார் ராமானுஜர். ஒரே நாளில் பல்லாயிரக்கணக்கான சீடர்கள் சேர்ந்துவிட, அவர்கள் அனைவருக்கும் திருமண் காப்பு சேர்க்க என்ன செய்வது என்று அவருக்குக் குழப்பமாக இருந்தது. அது பெருமானின் பாதாரவிந்தம். அதை நெற்றியில் ஏந்தியிருப்பதே வைணவருக்கு அழகு என்பார் ராமானுஜர்.


ஹொய்சள தேசத்தில் திருமண் அணிபவர்கள் யாருமில்லை என்பதால் இப்போது ராமானுஜருக்கு அது ஒரு பெரும் பிரச்னையாகிவிட்டது. இத்தனை பேருக்கும் திருமண் வேண்டும். அதுவும் தினமும் வேண்டும். என்ன செய்யலாம்?


உபவாசம் இருந்து பிரார்த்தனை செய்தார்.


அன்றிரவு அவருக்கு ஒரு கனவு வந்தது. கனவில் பெருமான் தோன்றினான். ‘உடையவரே, கவலைப்படாதீர்கள். நேரே கிளம்பி யதுகிரிக்குச் செல்லுங்கள். அங்கே வேதபுஷ்கரணி என்றொரு குளம் உண்டு. அதன் வடமேற்கு மூலையில் நீங்கள் தேடுவது கிடைக்கும்!’


தேடியது மட்டுமல்ல; தேடாத ஒன்றும் சேர்த்துக் கிடைக்கப்போகிறது என்பது அப்போது அவருக்குத் தெரியாது.


(தொடரும்)


Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 17, 2017 09:30

April 16, 2017

பொலிக! பொலிக! 94

பிட்டி தேவனுக்கு அது ஒரு தீராத கவலை. நாடாளும் மன்னனாக இருந்தென்ன? யோசிக்காமல் செலவு செய்ய வல்லமை கொண்டிருந்தென்ன? ஒரு வார்த்தை உத்தரவிட்டால் போதும். ஓடி வந்து சேவகம் செய்ய நூறு நூறு பேர் இருந்தென்ன? பலகாலமாகப் பலவித முயற்சிகள் செய்து பார்த்தும் அவரது மகளுக்கு இருந்த மனநோய் தீரவில்லை. திடீர் திடீரென்று ஓலக் கூக்குரலிடுவாள். தலைவிரி கோலமாக வீதியில் இறங்கி ஓடுவாள். பேய் பிடித்த மாதிரி ஆவேசம் வந்து ஆடித் தீர்ப்பாள்.


கர்ம வினை என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்கள் சோதிடர்கள். சமண குருமார்கள் தங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டார்கள். கொடுத்த மூலிகை மருந்துகளும் பச்சிலை வைத்தியங்களும் ஆத்ம திருப்திக்காக மட்டுமே என்றாகிப் போனது. மன்னன் மகளின் மனநிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.


சட்டென்று ராமானுஜரின் பெயரைத் தொண்டனூர் நம்பி சொன்னபோது மன்னன் ஒரு கணம் யோசித்தான். ‘வைணவரா?’ என்று கேட்டான்.


‘ஆம் சுவாமி. திருவரங்கம் பெரிய கோயில் நிர்வாகமே அவரிடம்தான் உள்ளது. பிரம்ம சூத்திரத்துக்கு அவர் எழுதிய உரையைக் காஷ்மீரத்தில் உள்ள சாரதா பீடத்தின் தெய்வமே ஏற்று அங்கீகரித்திருக்கிறது. அரங்கனின் தலைமகன். ஆதிசேஷன் அம்சம்!’ என்றார் நம்பி.


மன்னனுக்கு அதெல்லாம் காதில் விழவில்லை. என்ன கெட்டுவிட்டது? யாரோ முன்பின் தெரியாத ஒரு துறவி வந்திருக்கிறார். அவரால் தன் மகளைக் குணப்படுத்த முடியும் என்று இந்த நபர் சொல்கிறார். முயற்சி செய்து பார்ப்பதில் என்ன பிழை?


‘சரி, வரச் சொல்லுங்கள்’ என்று உத்தரவு கொடுத்தான் பிட்டி தேவன்.


விஷயம் ராமானுஜருக்குப் போய்ச் சேருமுன் அங்கிருந்த சமணர்களுக்குப் போய்ச் சேர்ந்துவிட்டது.


‘ஐயோ நாம் மோசம் போய்க்கொண்டிருக்கிறோம். ராமானுஜர் மன்னன் மகளை குணப்படுத்திவிட்டால் அந்த முட்டாள் ராஜன் வைணவனாகிவிடுவான். ஏற்கெனவே மிதிளாபுரியில் சமணத் துறவிகள் மதம் மாறி மக்களைக் குழப்பியிருக்கிறார்கள். இப்போது மன்னனும் மாறிவிட்டால் இங்கே சமணம் என்ற ஒன்று இருந்த சுவடே இல்லாமல் அழிந்துவிடும்!’


‘ஆனால் நாம் செய்யக்கூடியது என்ன? மன்னன் முடிவு செய்துவிட்டான். நாளை ராமானுஜர் அரண்மனைக்குச் செல்வது உறுதியாகிவிட்டது. இதற்குமேல் என்ன நடந்தாலும் எதிர்கொண்டுதான் தீரவேண்டும்.’


அவர்களுடைய பிரச்னை, அவர்கள் யாரும் அரண்மனைக்குள் சென்று மன்னனைச் சந்திக்க மாட்டார்கள் என்பது. மிக வினோதமான ஒரு காரணம் வைத்திருந்தார்கள். டெல்லி சுல்தானுடன் நடந்த ஒரு யுத்தத்தில் பிட்டி தேவனின் விரல் ஒன்று துண்டாகிப் போனது. ஓர் அங்கஹீனன் மன்னனாக இருப்பது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அதனாலேயே அரண்மனைக்குப் போகாதிருந்தார்கள். இப்போது ராமானுஜர் உள்ளே நுழைந்து தங்களது வேர்களை அசைத்துவிட்டால்?


பயமாக இருந்தது. ஆனால் உடனடியாக எதுவும் செய்ய முடியும் என்றும் தோன்றவில்லை.


‘பார்ப்போம். நாம் அச்சப்படுவதுபோல் ஏதும் நடக்காமலே போகலாம். அப்படி அசம்பாவிதமாகிவிட்டால் இருக்கவே இருக்கிறது வாதப் போர்’ என்றார் துறவிகளில் மூத்தவர்.


அவர்கள் காத்திருந்தார்கள்.


மறுநாள் உடையவர் தமது சீடர்கள் முதலியாண்டான், பிள்ளான், கிடாம்பி ஆச்சான், வில்லிதாசர், நடாதூர் ஆழ்வான் ஆகியோரை அழைத்துக்கொண்டு மன்னனின் சபைக்குச் சென்றார். தொண்டனூர் நம்பி அவர்களை மன்னனுக்கு அறிமுகம் செய்து வைத்தபிறகு சித்தம் கலங்கிய இளவரசியை மன்னன் அழைத்து வந்தான்.


ராமானுஜருக்கு ஒரு கணம் காஞ்சியில் இதேபோன்றதொரு சம்பவம் பல்லாண்டுகளுக்கு முன் நடந்தது நினைவுக்கு வந்தது. யாதவப் பிரகாசரின் மாணவனாக மன்னனின் சபைக்குச் சென்ற தருணம். அங்கும் பேய் பிடித்த இளவரசி. அங்கு காத்த பரம்பொருள்தான் இங்கும் காக்க வேண்டும்.


கண்மூடிப் பிரார்த்தனை செய்தார். அந்தப் பெண்ணுக்குப் துளசி தீர்த்தம் கொடுத்து ஆசீர்வதித்தார். கணப் பொழுது மயங்கி விழுந்த இளவரசி, எழுந்தபோது குணம் மாறியிருந்தாள். தன் முன் நின்றிருந்த ராமானுஜரை நோக்கிக் கைகூப்பினாள். சட்டென்று காலில் விழுந்து எழுந்தாள்.


பார்த்துக்கொண்டிருந்த மன்னனுக்கும் அவனது மனைவிக்கும் நம்பமுடியாத வியப்பு. ‘மகளே..’ என்று பாசம் பீறிட்டுப் பாய்ந்து சென்று அணைத்துக்கொண்டு கண்ணீர் உகுத்தான்.


‘உடையவரே, தொண்டனூர் நம்பி சொன்னபோது நான் நம்பவில்லை. ஆனால் உண்மையிலேயே நீர் மகத்தான துறவி. தெய்வ சக்தி பொருந்திய தாங்கள் என்னை நல்வழிப் படுத்தி அருளவேண்டும்’ என்று பணிந்து கரம் கூப்பினான்.


சமணத் துறவிகள் எதற்கு பயந்தார்களோ அது அப்போது நடந்தது. உடையவர் மன்னன் பிட்டி தேவனுக்கு வைணவத்தின் சிறப்புகளை எடுத்துச் சொன்னார். ‘இவ்வுலக வாழ்வின் சந்தோஷங்களுக்கும், இறந்தபின் மோட்சம் அடையவும் உள்ள ஒரே திறவுகோல் இதுதான். கண்ணை மூடிக்கொண்டு காலில் விழுந்துவிடு மன்னா. எம்பெருமான் என்றும் உன் பக்கம் இருப்பான்.’


‘அப்படியே சுவாமி!’ என்றான் பிட்டிதேவன். அக்கணமே அவன் உடையவரின் சீடனாகிப் போனான்.


‘இனி நீ விஷ்ணுவர்த்தன் என்று அழைக்கப்படுவாய்!’ என்று ஆசீர்வதித்தார் ராமானுஜர்.


செய்தி பரவிய மறுகணமே பன்னிரண்டாயிரம் சமணர்கள் அரண்மனையை நோக்கித் திரண்டு வந்தார்கள்.


‘இதை ஒப்புக்கொள்ள முடியாது. உணர்ச்சி மேலிட்டு ஒரு மன்னன் மதம் மாறுவது மக்களைக் குழப்பும். தவறாகச் செலுத்திச் செல்லும். உண்மையில் வைணவமே உயர்ந்தது என்றால் உடையவர் அதை எங்களுடன் வாதம் செய்து நிரூபிக்கட்டும்!’ என்று ஆவேசக் கூக்குரலிட்டார்கள்.


‘வாயை மூடுங்கள்!’ என்று சீறினான் பிட்டி தேவன்.


‘மன்னா, அமைதியாக இருங்கள். வாதம் நல்லதுதானே. ஒரு விதத்தில் அவர்கள் சொல்வதுமே சரிதான். கண்மூடித்தனமாக ஏன் ஒன்றை ஏற்கவேண்டும்? வைணவம் காலக் கணக்கற்றது. இயல்பாக இருப்பது. காற்றைப் போன்றது. நீரைப் போன்றது. வான்வெளி போன்றது. இதனோடு வாதிட்டு சமணம் வெல்லும் என்று அவர்கள் கருதினால், அந்த நம்பிக்கைக்கு மதிப்புத் தருவோம். ஆனால் வாதத்தின் இறுதியில் உண்மையில் எது சிறந்தது என்று அவர்களுக்கும் புரியுமல்லவா? எங்கள் ஆசாரியர் வாதப்போருக்கு மறுப்பு சொல்வதே இல்லை!’ என்றார் முதலியாண்டான்.


‘நல்லது. நாங்கள் பன்னிரண்டாயிரம் பேர் வாதம் புரிய வந்துள்ளோம். உங்கள் தரப்பில் எத்தனை பேர் உட்காருவீர்கள்?’


‘இதென்ன அபத்தம்? நீங்கள் எத்தனை பேர் வேண்டுமானாலும் வாருங்கள். உடையவர் மட்டுமே உங்களுக்கு பதில் சொல்வார்!’ என்றார் வில்லிதாசர்.


‘ஒரே சமயத்தில் அத்தனை பேர் கேள்விகளுக்கும் ஒருவரே எப்படி பதில் சொல்ல முடியும்?’


ராமானுஜர் புன்னகை செய்தார்.


(தொடரும்)


Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 16, 2017 09:30

April 15, 2017

பொலிக! பொலிக! 93

ஹொய்சளர்களின் ஆட்சி அப்போது நடந்துகொண்டிருந்தது. கர்நாடகத்தின் பெரும்பகுதி அவர்களிடம்தான் இருந்தது. மைசூரைச் சுற்றிய பகுதிகளை ஆண்டுகொண்டிருந்த பிட்டி தேவன் சமண மதத்தைச் சேர்ந்தவன். அன்றைக்கு அந்தப் பிராந்தியத்தில் வீர சைவமும் சமணமும்தான் பிரதானமான மதங்கள்.


பிறந்தக் கணம் முதல் கழுத்தில் லிங்கத்தை அணியும் லிங்காயத மதம் என்னும் வீர சைவம், சைவத்தின் தீவிரப் பிரிவுகளுள் ஒன்று. தாந்திரீகத்தை உள்ளடக்கியது. தாந்திரீகம், அதர்வ வேதத்தில் இருந்து கிளைத்து வருவது. பக்தி இயக்கம் இதனை ஆதரிப்பதில்லை. ராஜராஜ சோழன் தென்னகமெங்கும் புகழ் பெற்ற மன்னனாக ஆட்சி புரிந்த காலத்தில் தனது சைவப் பணிகளில் ஒன்றாகத் தாந்திரீகத்தை வளரவிடாமல் செய்வதை மேற்கொண்டான். தாந்திரீகப் பாடசாலைகளைத் தமிழ் மண்ணில் இருக்க விடாமல் செய்தான். தமிழகம் ஏற்காத தாந்திரீகத்தைக் கர்நாடகம் ஏற்றது. வீர சைவர்களின் ரகசிய அடையாளமாக அது மாறியது. அவர்களுக்கு சிவம் என்பது சகல உயிர்களுக்குள்ளும் இருப்பது. தனியே கோயிலில் உள்ளதல்ல. சதாசாரம், சிவாசாரம், விருத்தியாசாரம், கணாசாரம் என்று அவர்களுக்கென்று பிரத்தியேகமான ஒழுக்க நெறிகள் உண்டு. எட்டு வகைக் காப்புகள், ஆறு வகைப் பயிற்சிகள் என்று அவர்களது வாழ்க்கை முறை அலாதியானது.


மறுபுறம் ஜைனம், ஆருகதம், நிகண்டம், அநேகாந்தவாதம், சியாத்வாதம் என்று பல பெயர்களில் அழைக்கப்பட்ட சமணமும் கர்நாடகத்தில் தழைத்துக்கொண்டிருந்தது. சமணம் என்ற சொல்லுக்குத் துறவு என்று பொருள். துறவறத்தை வற்புறுத்திச் சொல்லுகிற மதம் அது. வீடு பேறு அடைய துறவேற்பதே ஒரே வழி என்பார்கள். ஆனால் இறை மறுப்பு என்பதே சமணத்தின் அடிப்படை. கடுமையான ஒழுக்கக் கட்டுப்பாடுகளையும் தியாகத்தையும் வற்புறுத்துகிற மதம் அது. காலவரையறைக்கு அப்பாற்பட்டது. ரிக் வேதத்தில் குறிப்பிடப்படுகிற ரிஷப தேவரையே சமணர்கள் தமது முதல் தீர்த்தங்கரர் என்று சொல்லுவார்கள். இருபத்தி நான்காவது தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் காலத்தில்தான் சமணம் ஒரு மதம் என்கிற அடையாளத்தையும் உரிய சீர்திருத்தங்களையும் பெற்றது.


ராமானுஜர் தமது சீடர்களுடன் பிட்டி தேவனின் எல்லைக்கு உட்பட்ட பிராந்தியத்தில் அடியெடுத்து வைத்தபோது இந்த இரு மதத்தாரும் அவரைக் கடுமையாக எதிர்த்தார்கள். அவர்களுக்கு உடையவரைத் தெரிந்திருந்தது. காஷ்மீரம் வரை சென்று வைணவம் பரப்பிய பெரியவர். மதத் தலைவர்களை வாதில் வென்று மன்னர்களை வைணவத்தின் பக்கம் திருப்பியவர். இவர் எதற்கு இங்கே வந்திருக்கிறார்? இதைக் கண்டிப்பாக அனுமதிக்க முடியாது.


வீர சைவர்களும் சமணர்களும் நண்பர்கள் அல்லர். ஆனால் உடையவரை எதிர்க்கும் விஷயத்தில் இருவரும் ஒரே நோக்கத்தோடு தனித்தனியே ஈடுபட்டார்கள்.


மிதிளாபுரி என்ற பகுதிக்கு ராமானுஜர் முதல் முதலில் வந்து சேர்ந்தபோது ஊரே திரண்டு எதிர்த்தது.


‘என்ன செய்யலாம் சுவாமி? இங்கே இருக்க முடியாது போலிருக்கிறதே!’ என்று கவலைப்பட்டார்கள் சீடர்கள்.


ராமானுஜர் கண்மூடி அமைதியாகச் சில வினாடிகள் யோசித்தார். பிறகு முதலியாண்டானைப் பார்த்து, ‘நீர் ஸ்நானம் செய்துவிட்டீரா?’ என்று கேட்டார்.


‘இல்லையே? இனிதான் எல்லோருமே நீராட வேண்டும்.’


‘அப்படியானால் ஒன்று செய்யும். நீர் முதலில் கிளம்பிப் போய் இந்த ஊரில் இருக்கிற குளத்தில் குளித்துவிட்டு வாரும்.’


ராமானுஜர் எதற்கு அப்படிச் சொல்கிறார் என்று யாருக்கும் புரியவில்லை. அது விடிகாலைப் பொழுது. வெளிச்சம் வந்திராத நேரம். முதலியாண்டான் ஏன் எதற்கு என்று கேள்வி ஏதும் கேட்டுக்கொண்டிருக்காமல் உடனே கிளம்பினார். நேரே ஊரின் மத்தியில் உள்ள குளத்துக்குச் சென்றார். குளக்கரையில் யாரும் இல்லை. நல்ல குளிர் இருந்தது. இருளில் குளத்தின் நீர் அலையடிப்பது மங்கலாகத் தெரிந்தது. அவர் ஆடைகளைக் களைந்து ஓர் ஓரமாக வைத்துவிட்டுக் குளத்தில் இறங்கினார்.


நீரில் அவர் பாதம் பட்ட மறுகணமே ஒரு குரல் ஓடி வந்தது. ‘சுவாமி! உம்மைக் கால் அலம்பிக்கொண்டு வந்தால் போதும் என்று ஆசாரியர் சொல்லச் சொன்னார்.’


பின்னாலேயே விரைந்து வந்து தகவல் சொன்ன சீடருக்கே உடையவர் ஏன் தாம் முன்னர் சொன்னதை மாற்றிச் சொன்னார் என்று புரியவில்லை. முதலியாண்டான் கால்களை மட்டும் கழுவிக்கொண்டு கரை ஏறிவிட்டார்.


சில மணி நேரத்தில் அவர்கள் எதிர்பாராத சம்பவங்கள் நடக்க ஆரம்பித்தன. அந்த ஊரில் இருந்த வீர சைவர்களும் சமணர்களும் ராமானுஜர் இருக்கும் இடத்தைத் தேடி வர ஆரம்பித்தார்கள்.


‘சுவாமி! தங்கள் அருமை புரியாமல் வாய்க்கு வந்தபடி பேசிவிட்டோம். நீங்கள் பெரிய மகான். தங்கள் சித்தாந்தம் மதிப்பு வாய்ந்தது. எங்களுக்கும் அதை விளக்கிச் சொல்லி அருள வேண்டும்!’


ராமானுஜர் புன்னகை செய்தார். அன்று அந்த அற்புதம் நிகழ்ந்தது. மிதிளாபுரியின் அத்தனை வீர சைவர்களும் சமணர்களும் உடையவரிடம் ஶ்ரீவைஷ்ணவ சித்தாந்தப் பாடம் கேட்டார்கள். இதுவல்லவோ முக்தி நெறி! இதுவல்லவோ கதி மோட்சம் தரவல்லது! என்று பரவசப்பட்டு வைணவத்தைத் தழுவி, பரம பாகவதர்களாகிப் போனார்கள்.


‘சுவாமி, தயவுசெய்து சொல்லுங்கள். என்ன நடந்தது இங்கே? நாம் ஊர் எல்லையை நெருங்கும் முன்னரே விரட்டியடிக்கப் பார்த்தவர்கள் எப்படி இப்படி மனம் மாறினார்கள்?’ சீடர்கள் ஆர்வம் தாங்கமாட்டாமல் கேட்டார்கள்.


‘நான் எதுவுமே செய்யவில்லையப்பா! செய்ததெல்லாம் முதலியாண்டானின் பாதம் பட்ட நீர்தான்!’ என்றார் ராமானுஜர்.


திட சித்தமும் ஆழ்ந்த பக்தியும் தெளிந்த ஞானமும் பரந்த மனமும் கொண்ட முதலியாண்டானின் பாதம் பட்ட நீரில் அவர்கள் அன்று காலை குளித்தெழுந்தபோது அவர்கள் சித்தம் மாறியிருக்கிறது என்பது அவர்களுக்குப் புரிந்தது.


‘நம்பவே முடியவில்லை சுவாமி! இது அற்புதம்தான். சந்தேகமே இல்லை!’


‘நிச்சயமாக இல்லை. இது சாதாரணம். பாகவத உத்தமர்களை பகவான் கைவிடுவதேயில்லை’ என்றார் ராமானுஜர்.


மிதிளாபுரிக்கு அருகே தொண்டனூர் என்ற ஊரில் உடையவரின் பக்தர் ஒருவர் இருந்தார். அவர்மூலம் இந்த விவரம் மன்னன் பிட்டி தேவனுக்குத் தெரியவந்தது.


‘அத்தனை பெரிய மகானா? அவரது சீடரின் பாதம் பட்ட நீருக்கே இந்த சக்தி என்றால் அவரது பார்வை இங்கு பட்டால்?’


‘அழைத்துப் பேசுங்கள் மன்னா. தங்கள் மனத்தை வாட்டும் எந்தக் குறையையும் அவரால் போக்க முடியும்!’ என்றார் தொண்டனூர் நம்பி.


மன்னனுக்கு உடனே தன் மகளின் நினைவுதான் வந்தது. மனநிலை பிறழ்ந்து இருந்த மகள்.


(தொடரும்)


Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 15, 2017 09:30