Pa Raghavan's Blog, page 9
April 8, 2017
ருசியியல் 17
வேள்வி நடக்கிறபோது அசுரர்கள் அக்கிரமம் செய்து அதைக் கலைப்பார்கள் என்று கதை கேட்டிருக்கிறீர்களா? அப்படியொரு அசுரத்தனமான தாக்குதலுக்கு சமீபத்தில் இலக்காகிப் போனேன்.
அதற்குமுன்னால் அப்படியென்ன பெரிய வேள்வி இங்கே நடந்து வாழ்ந்தது என்பீரானால், இத்தொடரின் முதல் சில அத்தியாயங்களை மீண்டுமொருமுறை படித்துவிடவும். எனது எடைக்குறைப்பு நடவடிக்கைகளைப் பற்றிப் போதிய அளவுக்குச் சொல்லியிருக்கிறேன். மாவுச் சத்து குறைவான, கொழுப்பு அதிகமான உணவு வகைகளை உண்ணுவதன்மூலம் பிதுரார்ஜித சொத்தாக தேகத்தில் சேர்த்துவைத்த கெட்ட சரக்கையெல்லாம் அழித்தொழிக்கிற திருப்பணி.
இந்தக் குறை மாவு நிறைக் கொழுப்பு உணவு முறையில் இறங்கிய நாளாக நான் வழக்கமாக உண்ணும் சாப்பாட்டுப் பக்கம் ஒருநாளும் திரும்பியதில்லை. அதாவது, சாதம் கிடையாது. சாம்பார், ரசம் வகையறாக்கள் கிடையாது. அப்பள இன்பம் இல்லை. அதிரச, தேன்குழல், அக்கார அடிசில் இல்லை. தானியமும் இனிப்பும் எந்த ரூபத்திலும் உள்ளே போகாத உணவு முறை இது. பால், தயிர், பன்னீர், வெண்ணெய், நெய், பாலாடைக்கட்டியென பிருந்தாவனத்துக் கிருஷ்ண பரமாத்மாவின் சமகால எடிஷனாக ஒரு வாழ்க்கை. அவ்வப்போது பாதாம். எப்போதாவது பிஸ்தா. அளவின்றிக் காய்கறிகள். அதிகமாகக் கீரை இனம்.
இப்படிச் சாப்பிட ஆரம்பித்து ஒரு ஆறு மாத காலத்தில் இருபத்தி மூன்று கிலோ எடையைக் குறைத்திருந்தேன். எந்த குண்டோதரன் கண்ணைப் போட்டுத் தொலைத்தானோ தெரியவில்லை, திடீரென ஒரு கெட்ட நாளில் எடைக்குறைப்பானது நின்று போனது.
நானும் என்னென்னவோ செய்து பார்த்தேன். விரதங்கள், காலை நடை என்று வழக்கத்தில் இல்லாதவற்றையெல்லாம்கூட. ம்ஹும். பத்து காசுக்குப் பயனில்லை. நின்ற எடை நின்றதுதான். என்ன செய்யலாம் என்று யோசித்து, கொஞ்சம் உடல் அறிவியலைப் படித்துப் பார்த்தேன். பிறந்தது முதல் மாவுச் சத்து உணவை மட்டுமே உண்டு வருகிறவர்கள் நாம். சட்டென்று உடலுக்கு ஓர் அதிர்ச்சி கொடுத்து, மாவுப் பொருள்களைக் கணிசமாகக் குறைத்து, கொழுப்பில் உடலியந்திரத்தை இயக்க ஆரம்பித்தபோது எடை குறைந்தது. இதற்கு ஆன அவகாசத்தில் உடம்பானது கொழுப்புணவுக்குப் பழகிப் போய்விட்டிருக்கிறது.
எதுவுமே பழகிவிட்டால் ஒரு அசமஞ்சத்தனம் வரத்தானே செய்யும்? சம்சார சாகரம் சத்தம் போட்டால் கண்டுகொள்கிறோமா? மேலதிகாரி முகத்தில் விட்டெறிந்தால் பொருட்படுத்துகிறோமா? ஆனால் மதுக்கடைகள் மூடப்படுகிற சேதி வந்தால் அதிர்ச்சியடைந்துவிடுகிறோம். ஏனென்றால், அதெல்லாம் நடக்காது என்று நம்பிக்கொண்டிருக்கிறோம். நடக்க வாய்ப்பில்லாதவை நடக்கிறபோதுதான் அதிர்ச்சி என்ற ஒன்று தொக்கி நிற்கும்.
நிற்க. விஷயத்துக்கு வருகிறேன். நின்றுபோன எடைக்குறைப்பை மீண்டும் தொடங்குவதற்கு, உடம்புக்கு ஓர் அதிர்ச்சி கொடுத்தால் தப்பில்லை என்றார்கள் சில அற்புத விற்பன்னர்கள். அதாவது, எந்த மாவுச் சத்து மிக்க உணவை விலக்கி, கொழுப்பின்மூலம் எடையைக் குறைத்தேனோ, அதே மாவுச் சத்து உணவை மீண்டும் ஒருநாள் தடாலடியாக உண்பது. கொழுப்புக்குப் பழகிய உடலானது, இந்த திடீர் அதிர்ச்சியைத் தாங்காமல் கொஞ்சம் நிலை தடுமாறும். இன்சுலின் சுரப்பு மட்டுப்படும். ரத்த சர்க்கரை அளவு ஏறும். பழைய கெட்டத்தனங்கள் அனைத்தும் மீண்டும் தலையெடுக்கும்.
வா ராஜா வா என்று காத்திருந்து அனைத்தையும் உலவவிட்டு, தடாலென்று மீண்டும் அடுத்த நாள் கொழுப்புக்கு மாறும்போது உடலுக்கு அதிர்ச்சியின் உச்சம் சித்திக்கும். எனவே மீண்டும் எடைக்குறைப்பு நிகழ ஆரம்பிக்கும் என்பது இந்த இயலின் அடிப்படை சித்தாந்தம்.
செய்து பார்க்கலாம் என்று தோன்றியது. தோதாக வீட்டில் ஒரு விசேஷம் வந்தது.
எப்பேர்ப்பட்ட அபார விருந்திலும் சிந்தை குலையாதிருந்த தவ சிரேஷ்டன் அன்று தொந்திக் குறைப்பு அல்லது கரைப்பு நடவடிக்கைகளின் ஓரங்கமாகப் பண்டிகைச் சமையலை ஒரு கை பார்க்க முடிவு செய்தான்.
அன்றைய என் மெனுவில் மோர்க்குழம்பு இருந்தது. பருப்புப் போட்ட தக்காளி ரசம் இருந்தது. உளுந்து வடையும் அரிசிப் பாயசமும் இருந்தன. வாழைக்காய், பீன்ஸ் போன்ற நான் தொடக்கூடாத காய்கறிகள் இருந்தன. அனைத்துக்கும் மேலாக அப்பம் இருந்தது. வாழைப்பழ அப்பம். மெத்து மெத்தென்று அசப்பில் ஹன்சிகா மோத்வானியின் கன்னம் போலவே இருக்கும். அழுத்தி ஒரு கடி கடிடித்து ஆர அமர மெல்லத் தொடங்கினால் அடி நாக்கில் இருந்து நுனி வயிறு வரை ருசித்துக்கொண்டே இருக்கும். ஒரு காலத்தில் வெண்ணெய் தோய்த்து உண்ணும் அப்பத்துக்காகவே நான் கோகுலாஷ்டமியை மிகவும் விரும்புவேன். கிண்ணம் நிறைய வெண்ணெய் வைத்துக்கொண்டு, பத்துப் பன்னிரண்டு அப்பங்களைப் பொறுக்க தின்று தீர்ப்பது ஒரு சுகம். ஏப்பம் வரை இனித்துக்கொண்டிருக்கிற அற்புதம் வேறெந்தப் பலகாரத்துக்கும் கிடையாது.
ஆனால் எனது மேற்படி விஷப் பரீட்சை தினத்தில் நான் அப்பத்துக்கு வெண்ணெய் தொட்டுக்கொள்ளவில்லை. நெய் சேர்க்கவில்லை. கொழுப்புணவின் குலக் கொழுந்துகளான அவற்றை முற்றிலும் விலக்கி, எதெல்லாம் எனது உணவு முறைக்கு நேர் எதிரியோ அவற்றை மட்டுமே உண்ணுவதென்று முடிவு செய்திருந்தேன்.
முன்னதாக இந்தப் பரீட்சார்த்தக் கலவர காண்டத்துக்குத் தயாராகும் விதமாக இருபத்தி நான்கு மணிநேர உண்ணாவிரதம் இருந்தேன். தண்ணீரைத் தவிர வயிற்றுக்கு வேறெதையும் காட்டாமல் காயப் போடுதல் இங்கே அவசியமாகிறது. அது ஒரு பிரச்னை இல்லை என்று வையுங்கள். கொழுப்புணவு உண்பவனுக்குப் பசி இருக்காது. விரதமெல்லாம் மிகச் சுலபமாகக் கைகூடிவிடும். சற்றும் சோர்வின்றி நாற்பத்தியெட்டு மணி நேரம், எழுபத்தி இரண்டு மணி நேரம் விரதமிருப்பவர்கள் எல்லாம் உண்டு. நான் இருந்தது வெறும் இருபத்தி நான்கு மணி நேர விரதம்தான்.
அந்த விரதத்தை முடித்துவிட்டு மேற்படி கார்போஹைடிரேட் விருந்துக்குத் தயாரானேன். முற்றிலும் மாவு. முற்றிலும் எண்ணெய். முற்றிலும் இனிப்பு வகைகள். எப்படியும் ஓர் அணுகுண்டு வெடித்த மாதிரி உடம்புக்குள் ஒரு பெரும் புரட்சி நடந்தே தீரும் என்று தோன்றியது. என்னவாவது நடந்து மீண்டும் எடை குறைய ஆரம்பித்தால் போதும் எம்பெருமானே என்று வேண்டிக்கொண்டு ஒரு கட்டு கட்ட ஆரம்பித்தேன். வடைகளையும் அப்பங்களையும் தாராளமாக உண்டேன். வாழைக்காயானது எனது பிராண சிநேகிதன். பல மாதங்களாக அதை நினைத்துக்கூடப் பாராதிருந்தேன். அன்றைக்கு காணாதது கண்டாற்போல் அள்ளி அள்ளி உண்டேன்.
எப்படியும் ஒரு மூவாயிரம் கலோரிக்கு உண்டிருப்பேன் என்று நினைக்கிறேன். மூச்சு முட்டி, போதும் என்று தோன்றியபோதுதான் நிறுத்தினேன். தண்ணீர் குடிக்கக்கூட இடமின்றி, தள்ளாடிச் சென்று அப்படியே படுத்துத் தூங்கியும் போனேன்.
ஆக, பரீட்சை எழுதியாகிவிட்டது. இனி இது பலன் தர வேண்டும்.
இந்தப் பரிசோதனையின் இறுதிக் கட்டம்தான் முக்கியமானது. இருபத்தி நான்கு மணி நேர முழு உண்ணாவிரதத்துக்குப் பிறகு மாவுச் சத்து மிக்க ஒரு விருந்தை உண்பதோடு இது முடிவதில்லை. அந்த விருந்துக்குப் பிறகு, தொடர்ச்சியாக இன்னொரு இருபத்தி நாலு மணி நேர உண்ணாவிரதம் தேவை. கொழுப்புணவில் இருக்கும்போது உண்ணாவிரதம் சுலபம். ஆனால் அரிசிச் சோறுக்கு அது ஆகாது. பசி வயிற்றை எரித்துவிடும்.
அப்படி எரிப்பதில்தான் காரிய சித்தி என்றார்கள் உத்தமோத்தமர்கள். என்ன கெட்டுப் போய்விடும்? சரி என்று அதையும் வெற்றிகரமாக நிறைவேற்றி முடித்தேன்.
அதன்பிறகு நடந்த கலவரத்தை அடுத்த வாரம் சொல்கிறேன்.
Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
April 7, 2017
பொலிக! பொலிக! 85
அது மடை திறந்த தருணமல்ல. மலை திரண்ட தருணம். திருமலையில் இருந்த அத்தனை பேரும் கோயில் வாசலில் வந்து கூடியிருந்தார்கள். செய்தி கேள்விப்பட்டு ஏழு மலைகளிலும் வசிக்கும் ஆதிவாசிகளும் அங்கு வந்து சேர்ந்திருந்தார்கள். இத்தனைக் காலமாகத் தீராதிருந்த ஒரு பெரும் பிரச்னை இன்று முடிவுக்கு வந்துவிடும் என்று ராமானுஜர் சொல்லியிருக்கிறாராமே? அப்படி என்ன முடிவு கிடைத்துவிடப் போகிறது?
அனைவரும் காத்திருந்தார்கள். இருட்டுகிற நேரத்தில் உடையவர் தமது சீடர்களுடன் கோயில் வாசலுக்கு வந்து சேர்ந்தார்.
‘வாரும் ராமானுஜரே. ஏதோ பிரமாதமான யோசனை இருக்கிறதென்று சொன்னீரே? அது என்ன?’
சிவாசாரியார்கள் கேட்டார்கள்.
‘யோசனை என்றுதான் சொன்னேன். பிரமாதமான யோசனை என்பது உங்கள் மனம் ஏற்ற வடிவம். எப்படியானாலும் அது நல்லதே. இதோ பாருங்கள், நீங்கள் சைவர்களாக இருக்கலாம். நாங்கள் வைணவர்களாக இருக்கலாம். அதோ அமர்ந்திருக்கும் ஆதிகுடி மக்கள் சக்தி வழிபாட்டை விரும்புவோராக இருக்கலாம். எது எப்படியானாலும் நாம் அனைவரும் நமக்கு மேலான ஒரு சக்தியை நம்புகிறவர்கள். உண்டா இல்லையா?’
‘ஆம். அதிலென்ன சந்தேகம்?’
‘இந்தக் கோயிலுக்குள் இருக்கிற தெய்வம் சிவனா விஷ்ணுவா என்று நாம் சண்டையிட்டுக்கொண்டிருக்க வேண்டாம். அவனே ஒரு தீர்ப்பு சொல்லட்டும்.’
‘அதைத்தான் ஐயா கேட்கிறோம். தெய்வம் எப்படிப் பேசும்?’
‘எப்படியோ பேசிவிட்டுப் போகட்டும். நமக்கென்ன அதைப் பற்றி? தேவை இருந்தால் கண்டிப்பாகப் பேசும். காஞ்சியில் எனது ஆசாரியர் ஒருவர் இருக்கிறார். அவருடன் பேரருளாளன் தினமும்தான் பேசிக்கொண்டிருக்கிறான். எப்படிப் பேசுகிறான், ஏன் பேசுகிறான் என்று நமக்குப் புரியாது. நம் அறிவுக்கு எட்டாத எதுவும் உண்மையில்லை என்று சொல்லுவது அறிவீனமல்லவா?’
‘ஏற்கிறோம் ராமானுஜரே. நீங்கள் என்ன சொன்னாலும் எங்களுக்குச் சம்மதம். தெய்வம் தன்னை யாராக வெளிப்படுத்திக்கொள்கிறதோ, அதை ஒட்டியே கோயில் நிர்வாகத்தைக் கொடுத்து விடுவோம்.’
‘மெத்த சரி. உங்கள் சிவனுக்கு உரிய சின்னங்களான மான், மழுவை எடுத்து வாருங்கள்.’ என்று அவர்களிடம் சொல்லிவிட்டுத் தனது சீடர்களை நோக்கி, ‘நீங்கள் சென்று சங்கு சக்கர சின்னம் ஒன்றை எடுத்து வாருங்கள்.’ என்று உத்தரவிட்டார்.
சின்னங்கள் வந்தன.
‘உடையவரே, இவற்றை வைத்து என்ன செய்யப் போகிறீர்கள்?’
‘நான் எதையும் செய்யப் போவதில்லை சுவாமி. இதோ சிவனுக்குரிய மான், மழு. அதோ விஷ்ணுவின் சங்கு சக்கரம். இரண்டையும் நீங்களே எடுத்துச் சென்று சன்னிதியில் பெருமான் பாதங்களில் வைத்துவிட்டு வாருங்கள். இரவு கதவைப் பூட்டிவிடுவோம். காலை சென்று உள்ளே பார்ப்போம்.’
‘பார்த்தால்?’
‘எந்தச் சின்னத்தை அவன் ஏற்கிறானோ அதை வைத்து அவன் யார் என்று தெரிந்துகொள்வோம்.’
‘புரியவில்லையே சுவாமி! பெருமான் என்ன செய்வான் என்று எதிர்பார்க்கிறீர்கள்?’
ராமானுஜர் ஒரு கணம் அமைதியாக இருந்தார். பிறகு சொன்னார். ‘இது வைணவத்தலம்தான் என்பது எங்கள் அசைக்க முடியாத நம்பிக்கை. அதே நம்பிக்கைதான் இது சைவத்தலம் என்பதில் உங்களுக்கும் உள்ளது. நமது நம்பிக்கைகளுக்கு அப்பால் உள்ளதன் பெயர்தான் உண்மை. உண்மையை உலகுக்கு உணர்த்துவது அவன் பணியல்லவா? அதை அவன் சரியாகச் செய்தால்தானே அவன் தெய்வம்? அவன் செய்வான். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது. உங்களுக்கும் அதே நம்பிக்கை இருக்குமானால் நான் சொன்னபடி செய்யுங்கள்!’ என்றார் ராமானுஜர்.
சிறிது நேரம் அனைவரும் ராமானுஜர் சொன்னதை விவாதித்தார்கள். விளைவு என்னவாக இருக்கும் என்று யாருக்கும் புரியாத சூழலில், அந்த யோசனையை வேண்டாம் என்று ஒதுக்கவோ, சரிதான் என்று ஏற்கவோ யாருக்கும் முழு மனமில்லை. இருந்தாலும், இந்த விதத்திலேனும் ஒரு சரியான விடை கிடைத்துவிட்டால் நல்லதுதானே என்று நினைத்தார்கள். உடையவர் சொன்னபடி சிவச் சின்னங்களையும் விஷ்ணுவின் சின்னங்களையும் ஏந்திச் சென்று பெருமானின் பாதங்களில் வைத்தார்கள்.
‘காலை கதவு திறக்கிறோம். உன்னை அப்போது நீ அடையாளம் காட்டு!’ என்று வேண்டிக்கொண்டு நடை சாத்திவிட்டு வெளியே வந்தார்கள். வரிசையாகக் கோயிலின் அனைத்துக் கதவுகளும் இழுத்துப் பூட்டப்பட்டன. பிரதான வாயிலுக்கு வெளியே வந்ததும் அந்தக் கதவும் இழுத்துப் பூட்டப்பட்டது.
ராமானுஜரும் சீடர்களும் கதவருகே ஒருபுறம் அமர்ந்தார்கள். எதிர்ப்புறம் சிவாசாரியர்களும் பிற சைவர்களும் அமர்ந்தார்கள். ஆதிகுடி மக்கள் ஆர்வம் தாங்கமாட்டாதவர்களாக இருபுறமும் பரவி அமர்ந்தார்கள்.
‘ஐயா, இறைவன் தன்னை நிரூபிப்பானா? இது நம்பமுடியாத விஷயமாக உள்ளதே?’
‘நிரூபணம் என்பது அற்பர்களான நாம் நினைத்துக்கொள்வதுதான். அவன் தன் இயல்பை, தன் சொரூபத்தைக் காட்டுவான் என்பதுதான் உண்மை. அதற்கான அவசியம் இருப்பதாக அவன் நினைத்தால் கண்டிப்பாக அவன் அதைச் செய்வான். வேண்டியது நம்பிக்கை மட்டுமே! அனைவரும் கண்மூடி அவனை வேண்டுங்கள்!’
சொல்லிவிட்டு உடையவர் கண்களை மூடி தியானத்தில் ஆழ்ந்தார். ‘பெருமானே! இது உன் கோயில். ஆழ்வார்கள் பாடிய அற்புதத் தலம். காலகாலமாக இருந்து வரும் இந்நம்பிக்கை உண்மையானால் நாளைக் காலை அதை நீ இந்த சிவாசாரியார்களுக்கு எடுத்துச் சொல்லு. என்னால் கேட்கத்தான் முடியும். செய்ய வேண்டியது நீதான். நீ மட்டும்தான்.’
இரவெல்லாம் அவர்கள் விழித்திருந்தார்கள். எல்லா இரவுகளையும்போல் அந்த இரவும் விடிந்தது. விழித்திருந்த அத்தனை பேரும் எழுந்து நின்றார்கள். ராமானுஜரும் எழுந்தார்.
‘உள்ளே செல்லலாமா சுவாமி?’
‘ஆம். நேரமாகிவிட்டது. கதவைத் திறவுங்கள்.’
கோயில் கதவு திறக்கப்பட்டது. சைவர்களும் வைணவர்களும் சக்தி வழிபாட்டில் நம்பிக்கை கொண்ட ஆதிகுடிகளும் கோயிலுக்குள் நுழைந்தார்கள். அனைவர் முகத்திலும் பதற்றம். நடையில் பரபரப்பு.
‘உடையவரே, இப்போதும் கேட்கிறோம் என்று தவறாக எண்ணாதீர்கள். பெருமான் ஒருவேளை நமக்கு இன்று எதையும் உணர்த்தவில்லை என்றால்?’
ராமானுஜர் புன்னகை செய்தார். ‘அதையும் பார்த்துவிடுவோமே!’
சன்னிதி திறக்கப்பட்டது. அர்ச்சகர் ஒருவர் உள்ளே சென்று திருவிளக்கை ஏற்றினார். ஒரு புறம் ஹரஹர மகாதேவா என்ற கோஷம். மறுபுறம் நாராயணா என்னும் நாமம். அனைவர் கரங்களும் மேலெழுந்து குவிந்திருந்தன. ராமானுஜர் மட்டும் கண்மூடியே நின்றிருந்தார்.
‘அர்ச்சகரே, கற்பூரம் காட்டுங்கள்!’ யாரோ கத்தினார்கள்.
அர்ச்சகர் கற்பூரத்தை ஏற்றி பெருமானை நோக்கி நீட்ட, வெளிச்சத்தில் அது பளிச்சென்று தெரிந்தது.
பெருமான் சங்கும் சக்கரமும் ஏந்தியிருந்தான்! மானும் மழுவும் வைத்த இடத்திலேயே இருந்தன.
(தொடரும்)
Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
April 6, 2017
பொலிக! பொலிக! 84
வந்திருப்பது எளிய சிக்கல் அல்ல. சிக்கலுக்கு உள்ளாகியிருப்பது சராசரி மக்களும் அல்ல. இது மக்களால் எம்பெருமானுக்கு நேர்ந்திருக்கிற சிக்கல். அடையாளச் சிக்கல். அறிவின்மீது படிந்த பூஞ்சையால் விளைவது. ஆத்திர அரசியல்களால் முன்னெடுக்கப்படுவது. ஒரு மன்னன் கடிதம் எழுதுகிறான். என்னால் இச்சிக்கலைத் தீர்க்க முடியவில்லை; நீங்கள் பார்த்து ஏதாவது செய்யுங்கள் என்று கெஞ்சுகிறான். என்றால் என்ன அர்த்தம்?
மதம் கூர்மையானது. உணர்வுகளின் அடியாழங்களில் நேரே சென்று தைக்கக்கூடியது. மதம் சார்ந்த நம்பிக்கைகளும் அவ்வாறே. இது ஒரு பவுத்தத்தோடோ, சமணத்தோடோ மோதுவதல்ல. ஹிந்து மதத்துக்குள்ளேயே இரு பிரிவினரின் அசைக்க முடியாத நம்பிக்கைகளை முன்வைத்து அலச வேண்டிய விவகாரம்.
‘சுவாமி, பரம்பொருளான ஶ்ரீமன் நாராயணனே அல்லவா திருமலையில் எழுந்தருளியிருக்கிறான்? எதற்காக இவர்கள் இப்படி மாற்றிப் பேசுகிறார்கள்? ஆழ்வார்கள் பாடியிருப்பது ஒன்றே போதாதா?’ என்றார்கள் சீடர்கள்.
‘பேசிப் பார்ப்போமே?’ என்று சொல்லிவிட்டு ராமானுஜர் திருமலைக்குப் புறப்பட்டார்.
கோயில் பிரச்னையைப் பேசுவதற்காக ராமானுஜர் வருகிறார் என்று தெரிந்ததுமே மலை மீதிருந்த சிவாசாரியார்கள் பரபரப்பானார்கள். சைவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு ராமானுஜரை எதிர்த்து நிற்க முடிவு செய்து கூடினார்கள். அவர்களுக்கு ராமானுஜரைத் தெரியும். அவரது பராக்கிரமங்கள் தெரியும். தேசமெங்கும் அவர் வாதில் வீழ்த்திய பண்டிதர்களைப் பற்றிய கதைகளை அவர்கள் கேட்டிருந்தார்கள். அனைத்துக்கும் மேலாக கோவிந்தன்!
காளஹஸ்தி சிவாலயத்துடன் சேர்த்தே எண்ணப்பட்ட மாபெரும் சிவபக்தர். எத்தனை ஆண்டுகள்! எத்தனை ஆண்டுகள் அங்கே சிவஸ்மரணையில் தவம் கிடந்திருப்பார்! அது வெறும் பக்தியல்ல. கண்மூடித்தனமான பக்தியல்ல. கோவிந்தன் மெத்தப் படித்தவர். பெரிய ஞானஸ்தர். தன் இருப்பும் இடமும் தீர்மானத்தின் நித்தியமும் உணர்ந்தவர். அப்பேர்ப்பட்ட மகா யோகியே மனம் மாறி வைணவத்தைத் தழுவக் காரணமாயிருந்தவர் வருகிறார் என்றால் இது சிறிய விஷயமல்ல.
கோவிந்தன் திருமலையில் கைங்கர்யம் செய்துகொண்டிருந்த போதெல்லாம் அவரை அந்த சிவாசாரியர்களுக்கு நன்கு தெரியும். சைவத்தை விடுத்து அவர் வைணவம் ஏற்ற அனுபவத்தை எத்தனையோ முறை அவர் சொல்லியே கேட்டிருக்கிறார்கள். இன்று உடையவருடன் அவரும் வருகிறார். பிரம்ம சூத்திர உரை எழுதி முடித்த கையோடு பாரதமெங்கும் நடந்தே சென்று வைணவ தருமத்தை நிலைநாட்டித் திரும்பி வருகிற அணி. காஷ்மீரம் வரை சென்று வென்ற மகாபுருஷர் தலைமையில் வருகிற அணி. எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்?
அவர்கள் கூடிக் கூடிப் பேசினார்கள். புராண, சரித்திர, சமகால உதாரணங்களும் சம்பவங்கள் சுட்டும் ஆதாரங்களுமாகத் தங்கள் தரப்புக்கு நியாயம் சேர்க்க என்னென்னவோ சேகரித்து வைத்தார்கள்.
‘என்ன ஆனாலும் சரி, யார் சொன்னாலும் சரி. நாம் கோயிலை விட்டுக் கொடுக்கக்கூடாது. திருமலையில் உள்ளது சிவாலயம்தான். இங்குள்ள பெருமான் பரமசிவனேதான்.’ அவர்கள் தீர்மானமாக இருந்தார்கள்.
ராமானுஜர் தமது குழுவினருடன் மலைக்கு வந்து சேர்ந்தபோது அவர்கள் வாதத்துக்குத் தயாராக நின்றார்கள்.
‘வாரும் ராமானுஜரே! கோயிலை அபகரிக்க வந்தீரா?’
‘அபசாரம். இது எம்பெருமான் ஶ்ரீமன் நாராயணனின் வாசஸ்தலம். ஆழ்வார் பழியாய்க் கிடந்து பவளவாய் கண்ட இடம். என்ன வார்த்தை சொல்லிவிட்டீர்கள்!’
‘அதானே பார்த்தோம். உமது எம்பெருமான் இங்கே இல்லை சுவாமி. இக்குன்றில் இருப்பது குமரனின் தகப்பன். மருந்துக்கும் இங்கே வைணவ ஆலயச் சின்னம் என்று ஏதும் கிடையாது. தாழ்சடையும் நீள்முடியும் கொண்ட பெருமானைப் பாரும். வில்வார்ச்சனை நடக்கிற விதம் பாரும். கோயில் மதில் சுவரில் உள்ள சிங்கத்தைப் பாரும். அது சக்தி ரூபம். அனைத்தையும் ஒதுக்கிவிட்டுப் பெருமானுக்கு ஒரு திருமண் இட்டு முகத்தை மறைத்துவிட்டால் கதை முடிந்துவிடுமா?’
ராமானுஜர் நிதானமாக அவர்களிடம் தம் வாதங்களை எடுத்து வைத்தார். காலம் நிர்ணயிக்க முடியாத கோயில். பரிபாடல் புலவர்களில் இருந்து முதலாழ்வார்கள் வரை பாடியதைக் கொண்டே இது ஒரு புராதனமான வைணவ ஆலயம் என்பதைக் கண்டுகொள்ள வேண்டும். ஒன்றல்ல, இரண்டல்ல. பத்து ஆழ்வார்கள் ஒரு சிவன் கோயிலை மங்களாசாசனம் செய்திருப்பார்களா? தவிரவும் சடையும் முடியும் சிவனுக்கு மட்டுமே உரியது என்பதெல்லாம் சிறுபிள்ளைத்தனமான வாதம்.
ஒவ்வொன்றாக எடுத்துச் சொன்னார். ஒவ்வொன்றுக்கும் விளக்கம் சொன்னார். எதிர்வாதங்களுக்கு நிதானமாக பதில் சொன்னார். இங்கே பொறுமைதான் அவசியம்.
‘சிவ பக்தர்களே, நான்காம் நூற்றாண்டுப் பல்லவர்களும் ஐந்திலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரை இங்கு ஆண்ட சோழ யாதவர்களும் இதனை ஒரு சிவாலயமாகக் கருதி வழிபட்டதில்லை. சரித்திரத்தில் அப்படி ஒரு குறிப்பு கூட இல்லை. இது விஷ்ணுவின் ஆலயம் என்று அறிந்துதான் அவர்கள் வழிபட்டிருக்கிறார்கள், கைங்கர்யங்கள் செய்திருக்கிறார்கள். திடீரென்று ஏன் இப்படி முரண்டு பிடிக்கிறீர்கள்?’
‘பல்லவர்களும் சோழர்களும் இதை விஷ்ணு ஆலயமாகத்தான் கருதினார்கள் என்பதை உம்மிடம் சொன்னார்களா? கோயிலுக்குச் செய்த கைங்கர்யங்களைக் கல்வெட்டில் பதித்தவர்கள் எங்காவது இது ஒரு வைணவத்தலம்தான் என்று சொல்லி வைத்திருக்கிறார்களா என்று எடுத்துக் காட்டும் பார்ப்போம்!’
வாதம் வாரக் கணக்கில் நீண்டுகொண்டே போனது. அவர்களுக்குத் தெரியும், அது ஒரு வைணவ ஆலயம்தான் என்று. ஆனால் விட்டுக் கொடுக்க யாரும் விரும்பவில்லை. உள்ளே இருக்கும் தெய்வத்தை சிவனென்று நம்பி அவர்கள் பூஜை செய்துகொண்டிருந்தார்கள். பிரச்னை வந்தபோது அதுவும் நின்றுபோனது. மன்னன் தலையிட்டும் தீராத பிரச்னை.
‘இது தீர்க்க முடியாதது ஓய். நீர் கிளம்பி ஊர் போய்ச் சேரும். இது சிவாலயம்தான். நடந்தால் சிவபூஜைதான் நடக்கும். இல்லாவிட்டால் பெருமானுக்குப் பூஜையே கிடையாது!’ தீர்மானமாகச் சொல்லிவிட்டார்கள்.
ராமானுஜர் யோசித்தார். கண்மூடிச் சில நிமிடங்கள் அமைதியாக இருந்தார். பிறகு, ‘சரி. ஒன்று செய்வோமா? இது சிவாலயமா, விஷ்ணுவின் ஆலயமா என்று நாம் முடிவு செய்ய வேண்டாம். உள்ளே இருக்கிற பெருமானே தான் யாரென்பதை நிரூபித்துக்கொள்ளட்டும்.’
திடுக்கிட்டது கூட்டம். ‘அதெப்படி சாத்தியம்? பெருமான் வாய் திறந்து பேசவா செய்வான்?’
‘பேசுகிறானோ, உணர்த்துகிறானோ. பொறுப்பை அவனிடமே விட்டுவிடுவோம். கிடைக்கிற பதில் போதுமா உங்களுக்கு?’
‘அவன் தன்னைத்தானே வெளிப்படுத்திக்கொள்வான் என்றால் அதை நாங்கள் ஏன் மறுக்கப் போகிறோம்? பெருமானே சொல்லிவிட்டால் மறுபேச்சு கிடையாது.’
‘அப்படியானால் இன்றிரவு இப்பிரச்னைக்கு ஒரு முடிவு தெரிந்துவிடும்!’ என்றார் ராமானுஜர்.
(தொடரும்)
Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
April 5, 2017
பொலிக! பொலிக! 83
‘என்ன பிரச்னை?’ என்றார் ராமானுஜர்.
சுற்றியிருந்தவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். பிரச்னை என்னவென்பது அவர்களுக்குத் தெரியும். ஆனால் எங்கிருந்து தொடங்குவது என்பதில் சிக்கல் இருந்தது.
காலக் கணக்கு கண்டறியப்பட முடியாத காலம் தொடங்கி இருந்து வருகிற கோயில். தொண்டைமான் என்ற பல்லவ குலத்து மன்னன் ஐந்தாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் வேங்கடவனுக்குக் கைங்கர்யங்கள் செய்திருப்பதில் ஆரம்பித்து வரலாறு விரியத் தொடங்குகிறது. ஐந்தாம் நூற்றாண்டு முழுதுமே பல்லவர்கள் திருமலையப்பனின் சேவையில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார்கள். பிறகு சோழர்கள் வந்தார்கள். அடுத்த ஐந்நூறு ஆண்டுகளில் ஆட்சிகளும் மன்னர்களும் மாறினாலும் கோயில் கைங்கர்யங்களில் எந்தக் குறைவும் வைத்ததில்லை. ராஜேந்திர சோழன் காலத்தில் கோயிலில் இருபத்தி நான்கு விளக்குகள் தடையின்றி எரிய எண்ணெய் தர ஒப்புக்கொண்ட வணிகர்கள் தம் வார்த்தை தவறியதற்காக இழுத்து வைத்து பெரிய விசாரணையே நடத்தியிருக்கிறான். அவர்களது உரிமையை ரத்து செய்து தண்டித்திருக்கிறான்.அப்புறம் வந்தவர்கள் காலத்திலும் கோயில் காரியங்களில் குறையேதும் ஏற்பட்டதில்லை.
சட்டென்று ஒருநாள் எங்கோ ஒரு கல் உதிர்ந்து எல்லாம் கலையத் தொடங்கியதுதான் ஏனென்று யாருக்கும் புரியவில்லை. பெருமானுக்குப் பூஜைகள் நின்றுபோயின. உற்சவங்கள் இல்லாமல் போயின. தினமும் செய்யப்படுகிற நித்தியப்படியே காணாமல் போனது.
‘ஆச்சரியமாக இருக்கிறதே?’ என்றார் ராமானுஜர்.
வந்திருந்த தூதுவர்கள், மன்னன் கட்டிதேவ யாதவன் கொடுத்தனுப்பியிருந்த ஓலையை அவரிடம் கொடுத்தார்கள். அவர் அதைப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தார். பிரச்னை மெல்ல மெல்லப் புரியத் தொடங்கியது.
ஆகம முறைப்படி நடைபெற்றுக்கொண்ட கோயில் நடைமுறைகளைச் சரியாகக் கடைப்பிடிக்காத சில அர்ச்சகர்களால் வந்த சிக்கல் அது. மன்னன் கூப்பிட்டு அவர்களைக் கண்டிக்கப் போக, கோபித்துக்கொண்டு கோயிலை விட்டுப் போனார்கள்.
பூஜைகள் நின்றன. திருவாராதனம் நின்றது. பெருமானுக்கு அமுது செய்விக்க ஆளற்ற சூழ்நிலை உண்டானது. யாரும் வராத கோயில் படிப்படியாகத் திருமலையில் இருந்த சில சிவாசாரியார்கள் வசம் போனது. அவர்கள் தமது வழக்கப்படி கோயிலில் பூஜைகள் செய்யத் தொடங்கியபோது வைணவர்கள் கொதித்துப் போனார்கள்.
‘அதெப்படி ஒரு வைணவ ஆலயத்தில் சிவாசாரியர்கள் பூஜை செய்யலாம்?’
‘சரியப்பா. வைணவ அர்ச்சகர்கள் விட்டுச் சென்ற தலம்தானே இது? பூஜையே இல்லாமல் கதவு சாத்தப்பட்டிருப்பதைவிட இது பரவாயில்லை அல்லவா?’
‘அதெல்லாம் முடியாது. திருமலையப்பனை ஒரு சைவக்கடவுளாக்குவதை நாங்கள் ஒருக்காலும் அனுமதிக்க மாட்டோம்.’
எதிர்ப்புகளும் மறுப்புகளும் வலுக்கத் தொடங்கின. சண்டை பெரிதானது. கோயில் யாருடையது என்ற வினா, உள்ளே இருக்கும் மூர்த்தி யார் என்பதில் போய் நின்றது.
‘வேங்கடவனின் தாழ் சடையும் நீள்முடியும் வேறு எந்த வைணவக் கோயில் அர்ச்சாமூர்த்திக்கும் இல்லை. அவை சிவச் சின்னங்கள் அல்லவா? வேங்கடவன் வேறு யாருமல்ல; சிவபெருமானே’ என்றது ஒரு தரப்பு.
‘யார் சொன்னது? சைவரும் அல்லாத, வைணவரும் அல்லாத சமணரான இளங்கோவடிகள், பெருமான் கையில் சங்கு சக்கரம் ஏந்தியிருப்பதை வருணித்திருக்கிறார். பகை அணங்கு ஆழியும் பால்வெண் சங்கமும் தகைபெறு தாமரைக் கையின் ஏந்தி என்ற வரியைச் சிந்தித்துப் பாருங்கள். எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னர் இளங்கோவடிகளுக்குத் தெரிந்திருக்கிறது. இது உங்கள் கண்ணுக்கு ஏன் தெரியவில்லை? எந்தக் கோயிலில் சிவபெருமானுக்கு சங்கு சக்கரம் இருக்கிறது?’
‘சமணர் சொல்வதையெல்லாம் ஏற்க முடியாது. கோயிலில் வில்வ அர்ச்சனை உண்டா இல்லையா? அதைச் சொல்லுங்கள் முதலில். சிவனுக்குத்தான் வில்வத்தில் அர்ச்சனை செய்வது வழக்கம். எந்த விஷ்ணு கோயிலில் வில்வார்ச்சனை நடக்கிறது? இது சிவன் கோயில்தான்!’
‘அட எம்பெருமானே! ஆதித்யவர்ணே தபஸோதி ஜாதோ வனஸ்பதிஸ்தவ வ்ருக்ஷோத பில்வ: என்று ஶ்ரீசூக்தம் சொல்கிறதே. வில்வம் மகாலஷ்மிக்கு உரியது சுவாமி! மகாலஷ்மி தனியாகவா இருக்கிறாள்? அவள் விஷ்ணுவின் மார்பில் உறைபவள். வில்வ அர்ச்சனை இங்குதான் வெகு பொருத்தம்.’
‘வேத காலத்தில் சைவ வைணவப் பிரிவுகள் ஏதும் கிடையாது. கோயில் நடைமுறை என்று உருவானதன்பின் சிவாலயங்களில் மட்டும்தான் வில்வார்ச்சனை நடக்கும். நாம் அதைத்தான் அனுசரிக்க வேண்டும்.’
‘இது விதண்டாவாதம். பத்து ஆழ்வார்கள் திருமலையப்பனைப் பாடியிருக்கிறார்கள். அவர்கள் பொய்யா சொல்லுவார்கள்?’
‘ஆழ்வார் பொய் சொல்லமாட்டார் என்றால், பொன் திகழும் மேனி பிரிசடையம் புண்ணியனும் என்ற பொய்கையார் வரிக்கு என்ன அர்த்தம்? திருமாலை சிவனாக அல்லவா அவர் போற்றித் துதித்திருக்கிறார்?’
‘சுத்தம். நீ படைத்த சிவனின் உருவம் உனக்கும் பொருந்துகிறதே என்று ஆழ்வார் அதில் வியப்புத் தெரிவிக்கிறார் ஐயா!’
வாதங்கள் இவ்வாறு ஒரு பக்கம் சூடு பிடித்துக்கொண்டிருக்க, மறுபுறம் அது சிவனுமல்ல; விஷ்ணுவும் அல்ல; மலைக் காவல் தெய்வமான காளிதான் என்று ஒரு தரப்பினர் கொடி பிடித்தார்கள். புராதனமான கோபுரமொன்று திருமலை செல்லும் வழியில் இருப்பதைச் சுட்டிக்காட்டி, ‘அதைக் காளி கோபுரம் என்றுதானே காலம் காலமாக அழைத்து வருகிறோம்? விஷ்ணு கோயில் உள்ள தலத்தில் காளி கோபுரம் எப்படி வரும்?’ என்று அவர்கள் கேட்டார்கள்.
‘ஐயா அது காளி கோபுரமல்ல. காலி கோபுரம். காலி என்றால் காற்று.’ என்று எதிர்த்தரப்பு பதில் சொல்லிக்கொண்டிருந்தது.
மன்னனின் ஓலை இந்த விவகாரத்தை விளக்கமாக எடுத்துச் சொல்ல, ராமானுஜர் பொறுமையாக அதைப் படித்து முடித்தார். அமைதியாக யோசிக்க ஆரம்பித்தார். ஏற்கெனவே அவர் வேறொரு தீவிரமான யோசனையில் இருந்தார். சிதம்பரத்தில் கோயில் கொண்டு இருந்த கோவிந்தராஜப் பெருமாள் விக்கிரகத்தை சோழ மன்னன் குலோத்துங்கன் தூக்கிக் கடலில் எறிந்திருக்க, பக்தர்கள் அதை உடையவரிடம் எடுத்து வந்து சேர்த்திருந்தார்கள். ‘தில்லையில் கோவிந்தன் மீண்டும் குடிகொள்ள ஏதாவது செய்யுங்கள்’ என்று கேட்டிருந்தார்கள். இது அவர் பாரத யாத்திரை புறப்படுவதற்கு முன்னரே நடைபெற்ற சம்பவம்.
சிதம்பரத்தில் மீண்டும் எப்படி கோவிந்தராஜர் விக்கிரகத்தைக் கொண்டு வைப்பது என்று எண்ணிக்கொண்டிருந்தவர் மனத்தில் சட்டென்று திருமலை அடிவாரத்தில் தான் கண்ட புராதனமான வைணவ ஆலயம் ஒன்று நினைவுக்கு வந்தது. பல்லாண்டுக் காலமாகக் கேட்பாரற்றுக் காட்டுக்குள் இருந்த கோயில். சிதம்பரம் கோவிந்தராஜனைத் திருமலை அடிவாரத்துக்குக் கொண்டு வந்தால் என்ன?
மன்னன் கட்டியத் தேவனிடம் பேசி அதற்கு முயற்சி எடுக்கலாம் என்று எண்ணிக்கொண்டிருந்தபோதுதான் திருமலையிலேயே பெரும் சிக்கல் என்பது தெரியவந்தது.
(தொடரும்)
Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
April 4, 2017
பொலிக! பொலிக! 82
விஷயம் அரண்மனையை எட்டியபோது மன்னன் பதறிப் போனான்.
‘என்ன சொல்கிறீர்கள்? நமது பண்டிதர்களா? நடுத்தெருவில் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு ஓடுகிறார்களா? அவர்களுக்கென்ன பைத்தியம் பிடித்துவிட்டதா?’
‘ஒன்றுமே புரியவில்லை மன்னா. வெறுமனே கிழித்துக்கொண்டு ஓடினாலும் பரவாயில்லை. ஆனால் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்கிறார்கள். கழுத்தை நெரிக்கிறார்கள். குப்புறத் தள்ளி ஏறி மிதி மிதியென்று மிதிக்கிறார்கள்.’
‘முட்டாள் காவலர்களே, அவர்களை இழுத்து வந்து கட்டிப் போடவேண்டியதுதானே? அதை விட்டுவிட்டு இங்கே வந்து கதை சொல்லிக்கொண்டிருப்பதில் என்ன பயன்?’
‘இல்லை மன்னா. இத்தனைக் காலம் அவர்கள் தங்கள் மரியாதைக்குரிய புலவர் பெருமக்களாகவும் ஞானாசிரியர்களாகவும் வித்வான்களாகவும் இருந்தவர்கள். அவர்களை அடித்து இழுத்து வருவதென்பது…’
மன்னன் யோசித்தான். ஒரு பண்டிதருக்குப் பைத்தியம் பிடிப்பது என்றால் சரி. மொத்தப் பேருக்கும் எப்படி ஒரே சமயத்தில் அப்படியாகும்? இந்த வினா அவன் மனத்தில் எழுந்த கணமே அமைச்சரை அழைத்தான். ‘ஏதோ தவறு நடந்திருக்கிறது. அத்தவறு யார் பக்கம், என்ன பிரச்னை என்று முதலில் பாருங்கள்!’
விசாரித்து வந்த மந்திரி உண்மையைச் சொன்னார். ராமானுஜருக்கு எதிராக துர்தேவதைகளை ஏவிவிட்ட பண்டிதர்களை அந்தத் தேவதைகளே தாக்கத் தொடங்கியிருக்கிற விஷயம்.
‘ஈஸ்வரா..!’ என்று நெஞ்சில் கைவைத்த மன்னன் உடனே, ‘உடையவரின் சீடர்கள் யாரையாவது அழையுங்கள். அந்தக் கூரத்தாழ்வான் இருக்கிறாரா பாருங்கள்!’ என்றான்.
கூரத்தாழ்வான் சபைக்கு வந்தபோது மன்னன் நடந்ததை அவரிடம் முழுதாக விவரித்தான். ‘ஆழ்வானே, காஷ்மீரத்துப் பண்டிதர்கள் அறியாமல் இப்படியொரு காரியம் செய்துவிட்டார்கள். ராமானுஜர் அவர்களை மன்னித்துக் காப்பாற்ற வேண்டும்.’
‘புரிகிறது மன்னா. நான் என் ஆசாரியரிடம் இதைத் தெரிவித்துவிடுகிறேன். இன்னும் சிறிது நேரத்தில் உமது பண்டிதர்கள் பழையபடி மாறித் தெளிந்துவிடுவார்கள்.’
‘மிக்க நன்றி சுவாமி. உடையவரிடம் நான் இன்னும் ஒன்றே ஒன்று கேட்கவேண்டும்.’
‘சொல்லுங்கள்.’
‘பண்டிதர்கள் அனுப்பிய துர்தேவதைகள் எப்படி திரும்பி வந்து அவர்களையே தாக்கும்? ராமானுஜர் அவற்றைத் திருப்பி அனுப்பினாரா அல்லது தாமாகத் திரும்பினவா என்பது எனக்குத் தெரியவேண்டும்.’
கூரத்தாழ்வான் புன்னகை செய்தார். ‘மன்னா, உடையவருக்கு இத்தகைய சக்திகளுடன் பரிச்சயமில்லை. இவற்றால் கிடைக்கும் சிறு லாபங்களை அவர் கடுகளவும் மதிக்கிறவரில்லை. சொல்லப் போனால் சிறு தெய்வ வழிபாடுகள் மூலம் கிடைக்கும் சிறு சக்திகளைப் பொருட்படுத்தாமல் கடந்துபோவதே மோட்சத்தின் வாயில் திறக்க உதவும். உடையவர் அவற்றை வழிபட்டதும் இல்லை, அவை அவரது வழிக்கு வந்ததுமில்லை.’
‘பிறகு எப்படி அவை எய்தவர்களை நோக்கித் திரும்பி வரும்?’
கூரத்தாழ்வான் கணப் பொழுது கண்மூடி தியானித்தார். பிறகு சொன்னார். ‘மன்னா, பிழைபட்ட வாழ்க்கை, அறமற்ற செய்கை, பழி கொண்ட பேச்சு, ஒழுக்கமில்லாத நடவடிக்கைகள், பக்தியற்ற நெஞ்சம், பண்பறுக்கும் வஞ்சம் எங்குள்ளனவோ, அங்குதான் தீய சக்திகள் குடியேறும்; சீரழிக்கும். இவை எதுவுமற்ற புனிதர்களை நோக்கி அவை ஏவப்படும்போது அவர்களின் தவ வாழ்வின் தகிப்பு அச்சக்திகளை எதிர்த்துத் தாக்கும். அப்படித் தாக்குதலுக்கு உள்ளாகும் துர்தேவதைகள் எதிர்த்து நிற்க முடியாமல் திரும்பும். எய்யப்பட்டது எதுவானாலும் ஓர் இலக்கு வேண்டுமல்லவா? அனுப்பிய இலக்கு தனக்கானதல்ல என்று தெரிந்தால் அவை உடனே எய்த இடத்தை நோக்கித்தான் திரும்பும்.’ என்று சொன்னார்.
திகைத்துவிட்டார் மன்னர். ‘கூரத்தாழ்வானே, என் தேசத்துப் பண்டிதர்களை நீங்களும் உடையவரும் தயவுசெய்து மன்னிக்கவேண்டும். அவர்களை எப்படியாவது காப்பாற்றிக் கொடுங்கள்!’
‘என்னால் இயலாது மன்னா. நீங்கள் என் ஆசாரியரைத்தான் அணுக வேண்டும்!’
ராமானுஜர் தங்கியிருந்த மடத்துக்கு மன்னன் ஓடிவந்தான்.
‘என்ன ஆயிற்று ராஜனே?’
‘காஷ்மீர மண்ணின் சிறப்பே இங்கிருந்த ஞானபண்டிதர்கள்தாம். அவர்கள் புத்தி கெட்டுப் போய்த் தங்களுக்குக் கெடுதல் செய்ய நினைத்ததன் பலன், இன்று பைத்தியம் பிடித்து விதியின் வசத்தில் வீதியில் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அருள்கூர்ந்து அவர்களைக் காப்பாற்றித் தரவேண்டும் சுவாமி!’
பணிவோடு அவன் கரம் கூப்ப, நடந்ததைக் கூரத்தாழ்வான் விவரித்துச் சொன்னார்.
உடையவர் கண்மூடி அமைதியாக யோசித்தார்.
‘சுவாமி, காப்பாற்றலாம் என்று ஒரு சொல் உம்மிடமிருந்து வரவேண்டும். என்ன செய்ய வேண்டுமென்பதை நான் பார்த்துக்கொள்வேன்!’
ராமானுஜர் தலையசைத்தார். சட்டென்று கூரத்தாழ்வான் ஓடிச் சென்று ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்து வந்தார். அதை ராமானுஜரின் காலடியில் வைத்தார். ‘இதில் தங்கள் பாதங்களை ஒரு முறை வைத்து எடுங்கள் சுவாமி.’
ராமானுஜர் அப்படியே செய்தார். அந்தத் தண்ணீர்ப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு கிளம்பிய கூரத்தாழ்வான், ‘மன்னா, வீரர்களை அனுப்பிப் பண்டிதர்களை பிடித்து அழைத்து வரச் சொல்லுங்கள்!’ என்று சொன்னார்.
ஒரு மணி நேரத்தில் அத்தனைப் பண்டிதர்களும் அரண்மனைக்கு கட்டி இழுத்து வரப்பட்டார்கள்.
அவர்கள் இருந்த கோலத்தைக் கண்டு சபை மிரண்டு போனது. கிழிந்த ஆடைகள். தலைவிரி கோலம். ஒருவரையொருவர் அடித்துப் புரட்டியெடுத்த ரத்த காயங்கள். உடலெங்கும் மண் புழுதி. நாராசமான பேச்சு. பேய்பிடித்த தன்மை.
‘கூரத்தாழ்வாரே, இவர்கள் சரியாகிவிடுவார்களா?’ மன்னன் சந்தேகத்துடன் கேட்டான்.
கூரத்தாழ்வான் பதில் சொல்லவில்லை. ராமானுஜரின் பாதம் பட்ட தீர்த்தப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அவர்கள் அருகே வந்தார். தண்ணீரை அள்ளி அவர்கள் தலைமீது தெளித்தார்.
மறுகணம் மூர்ச்சித்து விழுந்த பண்டிதர்கள் சில வினாடிகளில் உறங்கி விழிப்பது போல எழுந்தார்கள்.
‘ஆ! மன்னர் சபைக்கு நாம் எப்போது வந்தோம்?’ ஒருவரையொருவர் கேட்டுக்கொண்டார்கள்.
‘பண்டிதர்களே, எத்தனை பெரிய பாவம் செய்துவிட்டீர்கள் நீங்கள். பரம பாகவத உத்தமரான ராமானுஜரை அழிக்க எண்ணி நீங்கள் செலுத்திய கெட்ட தேவதைகள் தங்களைத் திருப்பித் தாக்கியதைக் கூட நீங்கள் உணரவில்லை. உங்களது பைத்தியக்காரப் பேயாட்டத்தை இன்று ஊரே பார்த்துக் கைகொட்டிச் சிரித்துவிட்டது!’
அவர்கள் வெட்கத்தில் தலைகுனிந்தார்கள். உடையவரிடம் சென்று மன்னிப்புக் கேட்டார்கள்.
‘நாங்கள் தோற்றோம் சுவாமி. இது இனி வைணவ மண். தங்கள் வழியே எங்கள் வழியும்.’ தாள் பணிந்து நின்றார்கள்.
சரஸ்வதி தேவி பரிசாக அளித்த ஹயக்ரீவர் விக்ரகத்துடன் ராமானுஜர் காஷ்மீரத்தில் இருந்து புறப்பட்டார். வழியெங்கும் திவ்யதேசங்களை சேவித்துக்கொண்டு அவர் திருமலைக்கு அருகே வந்து சேர்ந்தபோது அங்கே ஒரு பிரச்னை காத்திருந்தது.
(தொடரும்)
Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
April 3, 2017
பொலிக! பொலிக! 81
அது வடுக நம்பிதான். எப்போதும் ராமானுஜர் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து முன் நிற்கிற அதே நம்பி.
ஒரு நியாயம் வேண்டாமா? திருவனந்தபுரத்தில் இருந்து ராமானுஜரைத் தூக்கி வந்து திருவட்டாறில் போட்டாகிவிட்டது. அவரது சீடர்கள் தேடிக்கொண்டு வந்து சேரும்வரை இங்கே அவருக்கு யார் துணை?
எம்பெருமான் தானே அப்பொறுப்பை ஏற்க முடிவு செய்தான். உடையவருக்குப் பிரிய சிஷ்யரான வடுக நம்பியின் தோற்றத்தில் அவர்முன் வந்து நின்றான்.
‘வடுகா, ஸ்நானம் ஆயிற்றா?’
‘ஓ, இப்போதுதான் முடித்தேன்.’ என்று எதிரே வந்து அமர்ந்து முகத்தை நீட்டினார் வடுக நம்பி. தினமும் ராமானுஜர்தான் அவருக்குத் திருமண் இட்டுவிடுவது. அன்றைக்கும் குளித்து விட்டுத் திருமண் இட்டுக்கொண்டு, வடுக நம்பிக்கும் இட்டுவிட்டார். ராமானுஜரின் ஈரத் துணிகளை ஆற்றுக்கு எடுத்துச் சென்று துவைத்துக் கொண்டு வந்து ஒரு பாறை மீது உலர்த்தினார் வடுக நம்பி.
‘அனந்தபத்மநாபனுக்கு கோயில் நடைமுறைகளை மாற்றுவதில் விருப்பமில்லை போலிருக்கிறது. என்னை இங்கே கொண்டு வந்து சேர்த்துவிட்டான் பார்!’
‘பரவாயில்லை சுவாமி. திருவனந்தபுரத்தை விட்டுவிடுவோம். திருவட்டாறு ஆதிகேசவன் உமக்காகக் காத்திருக்கிறான், வாருங்கள்’
உடையவர் கோயிலுக்குச் சென்றார். கண் குளிர தரிசித்து, மனம் குளிர சேவித்து மகிழ்ந்தார்.
அன்றைக்குத் திருவனந்தபுரத்திலும் பொழுது விடியத்தான் செய்தது. உடையவரைக் காணாமல் குழப்பமான சீடர்கள் நகரெங்கும் தேடினார்கள். எங்கு தேடியும் அவர் இல்லை என்று தெரிந்ததும் பதற்றமானார்கள். அப்படி எங்கே போயிருப்பார் என்று ஊர் ஊராகத் தேடிக்கொண்டே அவர்கள் திருவட்டாறுக்கு வந்து சேர்ந்தபோது வடுக நம்பிதான் அவரை முதலில் பார்த்தது.
‘ஆசாரியர் அதோ அங்கே இருக்கிறார் பாருங்கள்!’ – சுட்டிக்காட்டிய திசையில் ராமானுஜர் கோயிலை விட்டு வெளியே வந்துகொண்டிருந்தார்.
‘சுவாமி!’ என்று குரல் கொடுத்தபடி வடுக நம்பி ஓடிவர, திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார் ராமானுஜர். ஒரு கணம்தான். சட்டென்று தன்னருகே வந்துகொண்டிருந்த வடுக நம்பியை அவர் திரும்பித் தேட, அங்கே வடுகன் உருவில் இருந்த பெருமான் இல்லை.
அவருக்குப் புரிந்துவிட்டது. ‘எம்பெருமானே, இதென்ன லீலை! சீடனாகத் தரையில் அமர்ந்து உபதேசம் கேட்டது போதாதா உனக்கு? வடுகனாக வேடமேற்று என் காஷாயத்தையெல்லாம் துவைத்து உலர்த்த வேண்டுமா? இந்த அற்பனுக்குச் சேவகம் செய்து எதை உணர்த்த நினைக்கிறாய்?’
உணர வேண்டியவர்களுக்கு அது உணர்த்தப்பட்டிருந்தது!
சேர, சோழ, பாண்டிய தேசத்துக் கோயில்கள் அனைத்தையும் சேவித்து முடித்து உடையவர் குழு வடக்கு நோக்கிப் பயணமானது. கோகுலம், துவாரகை, குருட்சேத்திரம், அயோத்தி என்று சேவித்துக்கொண்டே சென்று காஷ்மீரத்தை அடைந்தார் ராமானுஜர்.
மீண்டும் காஷ்மீரம். மீண்டும் அதே மன்னன். மீண்டும் அதே பண்டிதர்கள்.
ஆனால் இம்முறை சரஸ்வதி தேவி தொடக்கத்திலேயே ராமானுஜரைத் தூக்கித் தலைமேல் வைத்துக்கொண்டாள். பண்டிதர் நிறைந்த சபையில் அவரது பிரம்ம சூத்திர உரை அரங்கேறியபோது அந்த அற்புதம் நிகழ்ந்தது.
அத்தனை பேரும் பார்த்துக்கொண்டிருக்கும்போதே பீடத்தின் மீதிருந்த சரஸ்வதி தேவியின் சிலை மெல்ல அசைந்தது. அம்மா என்று அலறிப் புடைத்துக்கொண்டு அத்வைத பண்டிதர்கள் பாய்ந்து எழுந்தபோது, அவள் பீடத்தை விட்டு இறங்கி வந்து உடையவர் எதிரே நின்று ஆசீர்வதித்தாள்.
‘ராமானுஜரே! உரை என்றால் இதுதான். விளக்கமென்றால் இதுதான். இது வெறும் பாஷ்யமல்ல; ஶ்ரீபாஷ்யம்!’
ராமானுஜர் கைகூப்பி நின்றார். தேவி தான் வணங்கும் ஹயக்ரீவரின் விக்ரகத்தை ராமானுஜருக்குப் பரிசாக அளித்தாள்.
காஷ்மீரத்து மன்னனுக்குத் தாங்க முடியாத சந்தோஷம். ‘அற்புதம் ராமானுஜரே. அன்று நீங்கள் இங்கு வந்து போதாயண விருத்தியை வாங்கிச் சென்றது முதல் அதே நினைவாகவே இருந்தேன். இன்று உரை எழுதி முடித்துத் திரும்பி வந்து, கலையரசியின் அங்கீகாரத்தையும் பெற்றுவிட்டீர்கள். உங்களுக்கு நிகர் யாருமில்லை!’
‘மன்னா, நிகரற்றதென்பது எம்பெருமானின் கருணை ஒன்றுதான். நமது பணிகள் அனைத்தும் மணல் துளியினும் சிறிது. இதில் பெருமைப்பட்டுக்கொள்ள எதுவுமே இல்லை. பிரம்ம சூத்திரத்துக்கு போதாயணரின் உரையை அடியொற்றி ஓர் உரை செய்ய வேண்டுமென்பது எனது ஆசாரியரின் கனவு. இன்று அதை எம்பெருமான் நிறைவேற்றியிருக்கிறான். நான் வெறும் கருவி.’
‘உமது தன்னடக்கம் இப்படிப் பேசவைக்கிறது. ஆனால் காலகாலமாக இப்பீடத்தில் எத்தனை எத்தனையோ மகா பண்டிதர்கள் வந்து வணங்கியிருக்கிறார்கள். எவ்வளவோ நூல்கள் இயற்றி வெளியிடப்பட்டிருக்கின்றன. அனைத்தையும் பிற பண்டிதர்கள்தாம் போற்றவும் தூற்றவும் செய்திருக்கிறார்களே தவிர, தேவி வாய் திறந்ததில்லை. அப்படியொரு அதிசயம் முதல் முறையாக இன்று நடந்தேறியிருக்கிறது. நீர் பெரியவர். அனைவரிலும் பெரியவர்!’
மன்னனின் பரவசமும் உடனடியாக அவன் வைணவத்தை ஏற்று ராமானுஜரின் சீடனானதும் காஷ்மீரத்துப் பண்டிதர்களுக்குப் பிடிக்காமல் போனது.
‘இந்த மனிதர் அபாயகரமானவர். இவரை விட்டுவைப்பது சரியல்ல.’
‘உண்மை. காலகாலமாக நம்மக்கள் கடைப்பிடித்து வரும் அத்வைத சித்தாந்தத்தை ஒரு பிரம்ம ராட்சசனைப் போல் எடுத்து விழுங்கிவிடுவார் போலிருக்கிறது.’
‘மன்னன் வைணவனாகிவிட்டான். மட ஜனங்கள் என்ன ஏது என்று யோசிக்காமல் அப்படியே அவனைப் பின்பற்றத் தொடங்கிவிட்டார்கள் பாருங்கள்! இப்படியே விட்டால் தேசம் முழுதும் வைணவத்தை ஆராதிக்கத் தொடங்கிவிடும். அதன்பின் அத்வைதிகள் தேசப்பிரஷ்டம் செய்யப்பட்டாலும் வியப்பில்லை.’
அவர்கள் கூடிக் கூடிப் பேசினார்கள். இறுதியில் ராமானுஜரைக் கொல்ல சில துர்தேவதைகளை ஏவலாம் என்று முடிவு செய்தார்கள். மந்திரவாதிகளைப் பிடித்து விஷயத்தைச் சொல்லி, காதும் காதும் வைத்தாற்போல் காரியத்தை முடிக்கச் சொல்லிக் கேட்டுக்கொண்டார்கள்.
ஏவல், பில்லி, சூனிய வல்லுநர்கள் ஒன்றுகூடி பண்டிதர்களின் வேண்டுகோளை நிறைவேற்ற முனைந்தார்கள். ஏற்பாடுகள் ரகசியமாக நடைபெற்றன. அக்னி வளர்த்து, மந்திரங்கள் உச்சரித்து, அவர்கள் ஏவிவிட்ட துர்தேவதைகள் ராமானுஜரைத் தேடிச் சென்றன.
இதோ இதோ இதோ நடந்துவிடப் போகிறது, ராமானுஜர் மண்ணோடு மண்ணாகிவிடப் போகிறார் என்று காத்திருந்த பண்டிதர்கள் அப்படி ஏதும் நடக்காததைக் கண்டு குழம்பிப் போனார்கள்.
‘ஏன், என்ன பிரச்னை? ஏவிய சக்திகள் என்ன ஆயின?’
மந்திரவாதிகளை அவர்கள் விசாரித்த கணத்தில், அனுப்பிய துர்தேவதைகள் பிசாசு வேகத்தில் திரும்பி வந்து அவர்களைக் கவ்வின. ஒரு கணம்தான். தமக்கு என்ன நடக்கிறது என்பதே புரியாமல் அவர்கள் சித்தம் கலங்கி ஆடைகளைக் கிழித்துக்கொண்டு வீதியில் இறங்கி தலைதெரிக்க ஓட ஆரம்பித்தார்கள்.
(தொடரும்)
Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
April 2, 2017
பொலிக! பொலிக! 80
கேட்பது எம்பெருமான் என்று தெரிந்தும் ‘கேட்கும் விதத்தில் கேள்’ என்று ஒருத்தர் சொல்வாரோ?
சீடர்களுக்கு அது தாங்க முடியாத வியப்பு. ‘அதிலொன்றும் தவறில்லை. சிஷ்யபாவம் சரியாகக் கூடாவிட்டால் வித்தை எப்படி சேரும்?’ என்றார் அமுதனார். திருவரங்கம் கோயிலில் வேலை பார்த்துக்கொண்டிருந்தவர் அவர். ராமானுஜர் கோயில் நிர்வாகத்தில் சீர்திருத்தங்கள் செய்ய ஆரம்பித்தபோது அதைக் கடுமையாக எதிர்த்தவர். புரிதலில் பிரச்னை. பிறகு உடையவரைப் புரிந்துகொண்டபோது தன்னையே அவரிடம் ஒப்படைத்துச் சரண் புகுந்தவர்.
‘என்ன சொல்கிறீர் அமுதனாரே! குறுங்குடி நம்பி கேட்ட விதம் சரியில்லை என்றுதான் நீரும் கருதுகிறீரா?’
‘அதிலென்ன சந்தேகம்? நமது வடுக நம்பியைக் கேளும். அவ்வளவு ஏன், உடையவரே திருக்கோட்டியூர் நம்பியிடம் பயிலப் போனபோது என்ன நடந்ததென்று யோசித்துப் பாருங்கள்!’
‘சரியாகச் சொன்னீர். அரையரிடம் பாடம் கேட்கப் போனபோது அவருக்கு மஞ்சள் காப்பு இட்டுக் குளிப்பாட்டி விடுகிற வேலைவரை செய்திருக்கிறார். இதை அவரே என்னிடம் சொல்லியும் இருக்கிறார்!’ என்றார் கிடாம்பி ஆச்சான்.
அர்ச்சகர் உருவில் பெருமான் சிரித்தான். ‘ராமானுஜரே! உமது சீடர்கள் சொல்லுவதே சரி. இதோ வந்தேன் பாரும்!’ என்று சட்டென்று தமது பீடத்தில் இருந்து இறங்கி கீழே வந்து அமர்ந்தான். அர்ச்சகர் மூலமாகவே உடையவருக்கு எங்கிருந்தோ ஒரு பீடம் தருவிக்கப்பட்டு அதில் அமர வைத்தான். பவ்யமாகக் கைகட்டி வாய் பொத்தி, ‘இப்போது சொல்லும் சுவாமி! எப்படி உம்மால் இம்மக்களைத் திருத்திப் பணிகொள்ள முடிகிறது?’
ராமானுஜர் ஒரு கணம் கண்ணை மூடினார். ஆளவந்தாரை மனத்துக்குள் வணங்கினார். தமக்கு போதித்த ஐம்பெரும் ஆசாரிய புருஷர்களை நினைத்துக்கொண்டார். மெல்ல, பெருமானை நெருங்கி அவன் காதுகளில் த்வய மந்திரத்தை ஓதினார்.
‘நம்பீ, கேள்! உலகத்தாரைக் காப்பாற்றவோ, கரையேற்றவோ என் முயற்சி ஒன்றுமில்லை. அதைச் சாதித்துத் தருவது எம்பெருமான் திருவடியும் திருநாமமும்தான். இதைச் செய்து கொடு என்று கேட்பதற்கு எனக்கு அவன் இருக்கிறான். பக்தியுடன் ஈடுபடும் எக்காரியமும் வெற்றி பெறாமல் போகாது.’
ஆஹா ஆஹா என்று பரவசத்தில் திக்குமுக்காடி நின்றது கூட்டம். எப்பேர்ப்பட்ட தருணம்! யாருக்கு வாய்க்கும் இதெல்லாம்? பரமனுக்குப் பாடம் சொல்லும் ஆசாரியரிடம் நாமும் பயில்கிறோம் என்பது எப்பேர்ப்பட்ட நல்லூழ்! எம்பெருமானே, எமது ஆசாரியரின் பெருமையை நாங்கள் இன்னும் தெளிவாக உணர்வதற்காகவா இப்படியொரு பேரழகு நாடகத்தை நிகழ்த்திக் காட்டுகிறாய்?
அத்தனை பேர் மனத்திலும் அதே வினா.
‘இல்லையப்பா! இப்படியொரு ஆசாரியனுக்காக நான் காத்திருந்த கதை உங்களுக்குத் தெரியாது. உடையவரே இன்று நாம் உம்முடைய சீடனானோம்!’ பணிவுடன் கரம் கூப்பினான் திருக்குறுங்குடி நம்பி.
ராமானுஜர் திருக்குறுங்குடி நம்பிக்கு ‘ஶ்ரீவைஷ்ணவ நம்பி’ என்ற திருநாமம் தந்தார். திருக்குறுங்குடியில் ராமானுஜ மடம் நிறுவ உடனடியாக ஏற்பாடு செய்யப்பட்டது.
‘புறப்படுகிறேன் நம்பி. இங்கிருந்து திருவண் பரிசாரகம். திருவாழி மார்பனைச் சேவித்துவிட்டு நேரே திருவட்டாறு. அப்படியே திருவனந்தபுரம் அனந்தபத்மநாபன். எடுத்த பணி மிகப் பெரிது. இடரின்றி நிறைவேற எப்போதும் நீ பார்த்துக்கொள்ள வேண்டியது.’
சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார்.
ஒவ்வொரு திவ்யதேசமாகச் சேவித்துக்கொண்டே திருவனந்தபுரம் போய்ச் சேர்ந்தபோது ராமானுஜருக்கு அங்கே இரண்டு சிக்கல்கள் இருந்தன. கோயிலுக்குச் சென்று சேவிக்கக்கூட விடாமல் வாதத்துக்கு அழைத்துக்கொண்டே இருந்த பண்டிதர் படை ஒரு பக்கம். அனந்த பத்மநாப சுவாமி கோயிலில் கடைப்பிடிக்கப்பட்ட திருவாராதன முறையை மாற்றி அமைக்கலாம் என்று அவர் நினைத்ததை நிறைவேற்ற முடியாமல் தடுத்த திருவனந்தபுரத்து அர்ச்சகர் சமூகம் மறுபக்கம்.
உடையவரால் வாதத்துக்கு வந்தவர்களை எளிதில் வெல்ல முடிந்தது. வைணவத்தின் விரிந்த பெரும் பரப்பில் அத்தனை பேரையும் அள்ளி எடுத்து அமர வைக்க முடிந்தது. ஆனால் கோயில் நடைமுறைகளில் அவர் செய்ய விரும்பிய மாற்றங்களை மட்டும் செய்ய முடியவில்லை.
‘பத்மநாபா! ராமானுஜர் என்னென்னவோ சொல்கிறார். இதெல்லாம் நமது சம்பிரதாயத்துக்கு ஒவ்வாதவையாக இருக்கின்றன. பக்தியும் சிரத்தையுமே பிரதானம் என்றால் வழிபாட்டு முறை எப்படி இருந்தால் இவருக்கு என்ன? அருள்கூர்ந்து அவரை விட்டுவிடச் சொல்லு. இந்தக் கோயில் எப்போதும் உள்ள வழக்கப்படியே இயங்கட்டும்!’
அர்ச்சகர்களும் உள்ளூர் பக்தர்களும் அனந்த பத்மநாபனிடமே முறையிட்டார்கள். அனந்தன் அவர்கள் கட்சியில் இருந்தான். ‘ஓய் உடையவரே, உமக்கு இன்னும் ஆயிரம் தலங்கள் காத்திருக்கின்றன. திருவனந்தபுரத்தை விட்டுவிடுங்கள். பாவம் ஜனங்கள் அழுகிறார்கள்!’ என்று சொல்லிப் பார்த்தான். ம்ஹும். அவரா கேட்கிறவர்? திருவரங்கத்தில் வராத எதிர்ப்பா? வைகானச ஆகமத்தில் இருந்த நடைமுறைகளைப் பாஞ்சராத்ர ஆகம முறைப்படி மாற்றப் போய்த்தான் அவரைக் கொலை செய்யத் துணியும் அளவுக்கு அங்கே எதிரிகள் முளைத்தார்கள்.
இத்தனைக்கும் உடையவர் முன்னிறுத்திய பாஞ்சராத்ர ஆகமம் என்பது அவர் காலத்தில், அவரால் தோற்றுவிக்கப்பட்டதல்ல. ஆளவந்தாரே உவந்த ஆகம முறை அது.
‘ஆனால் காஷ்மீரத்து வைணவர்கள் மூலம்தான் இந்த ஆகம முறை பரவலானது என்று சொல்லுகிறார்களே சுவாமி?’
உடையவர் சிரித்தார். ‘காஷ்மீரத்து வைணவர்களா? நல்ல கதையாக இருக்கிறதே. செங்கட் காரி கருங்கண் வெள்ளை பொன்கட் பச்சை பைங்கண் மாஅல் – என்று பாஞ்சராத்ர ஆகமம் சுட்டும் நான்கு வியூக மூர்த்திகளைப் பரிபாடல் போற்றுகிறதே. அப்படியென்றால் சங்க இலக்கிய காலத்திலேயே காஷ்மீரத்து வைணவர்கள் இங்கே வந்துவிட்டார்களா என்ன?’
அதற்குமேல் என்ன பேச முடியும்?
ஆனால் என்ன சொன்னாலும் திருவனந்தபுரத்துக்காரர்கள் ஏற்க மறுத்துவிட்டார்கள். பள்ளிகொண்ட பத்மநாபனுக்குத் தூக்கம் கெட்டது. என்ன செய்யலாம் என்று யோசித்தான். அன்றைக்கு இரவு ராமானுஜர் உறங்கத் தொடங்கியதும் அப்படியே தூக்கிக் கொண்டு போய் திருவட்டாறில் போட்டுவிட்டான்.
காலை விடிகிற நேரம் ராமானுஜர் கண் விழித்ததும் வழக்கம்போல், ‘வடுகா…’ என்று அழைத்தார். வடுக நம்பி உள்ளிட்ட அத்தனை சீடர்களும் அப்போது திருவனந்தபுரத்தில்தான் இருந்தார்கள். இரவு என்ன நடந்தது என்பது எப்படி ராமானுஜருக்குத் தெரியாதோ, அதே மாதிரி அவர்களுக்கும் தெரியாது.
ராமானுஜர் இரண்டாம் முறை அழைத்தார். ‘வடுகா…’
‘சுவாமி, இதோ வந்தேன்!’ என்று ஒரு குரல் கேட்டது. அவர் திரும்பிப் பார்த்தார்.
(தொடரும்)
Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
April 1, 2017
ருசியியல் – 16
வட கிழக்கு மிளகாய் ரகங்களின் கவித்துவக் காரம் பற்றியும், எனது மராட்டியக் கவி நண்பருடன் மிஷ்டி தோய்க்கு மிளகாய் ஊறுகாய் தொட்டுச் சாப்பிட முடிவு செய்தது பற்றியும் சென்ற கட்டுரையில் சொல்ல ஆரம்பித்தேன் அல்லவா? அதை முடித்துவிடுவோம்.
சிவப்பு நாகா அல்லது பேய் நாகா என்று அழைக்கப்படுகிற நாகா ஜொலாகியா இனத்தில் அதைப் போலவே கொலைக்காரம் கொண்ட வேறு சில உப மிளகாய்கள் உண்டு. அந்த வங்காள நாடக சிரோன்மணி எங்களுக்குக் கொடுத்தனுப்பிய மிஜோரத்து ஊறுகாயானது அப்படியான மிளகாயில் போடப்பட்டது. அசப்பில் உறை ரத்தம் போலவே இருந்தது. மிளகாயும் மசாலாவும் சுமார் ஆறு மாதங்களாக ஊறிக்கொண்டிருப்பதாக நண்பர் சொல்லியிருந்தார். அது ஊற ஊறக் காரம் ஏறுகிற ரகம். வழக்கமாக நாம் ஊறுகாய் போடப் பயன்படுத்துகிற நல்லெண்ணெய் அதில் கிடையாது. பதிலாக, அடி நாக்கில் சற்றுக் கசப்பை ஏற்றிக்கொடுக்கிற கடுகு எண்ணெய்.
பொதுவாகவே காரத்தின் இடுப்பில் படிந்த கசப்பு, ஒரு நடன சுந்தரியின் நளினம் கொண்டது. தனியாக அதை உணர முடியாது. கண்ணீரின் உப்பைப் போன்றது அது. சாப்பிட்டு ஆனதும் காரம் அடங்கி, வியர்த்துக் கொட்டி, கொஞ்சம் கொஞ்சமாக நிதான நிலைக்கு வந்து சேரும்போது அடித் தொண்டையில் மிக மெலிதாகக் கசக்கும். நன்றாக இருக்கும்.
சில ரக மிளகாய்களுக்கு இயல்பிலேயே இந்த இடுப்பில் படிந்த கசப்புச் சுவை உண்டு. காரத்தின் வீரியத்தில் அது சட்டென்று தெரியாதே தவிர அதையும் இனம் கண்டு ஆராய்ந்து வைத்திருக்கிற பிரகஸ்பதிகள் இருக்கிறார்கள். மோரிச் என்று ஒரு மிளகாய் இருக்கிறது. இது பங்களாதேஷில் அதிகம் விளையும். பூட் ஜொலாகியா மிளகாய் இனத்தைச் சேர்ந்தது. இந்த மோரிச்சில் மேற்படி கசப்பு சற்று அதிகமாகவே உண்டு. கிழக்கு வங்காளத்துக் கிங்கரர்கள் இந்த மிளகாயைக் கூட்டு, பொரியல் செய்து சாப்பிடுவார்கள். அது வீரம் விளைந்த மண்ணோ இல்லையோ, காரம் விளைந்த மண். கிட்டத்தட்ட மரணத்தின் வாசல் கதவு வரை இழுத்துச் சென்று காட்டிவிட்டு வரக்கூடிய காரம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதை விரும்பிச் சமைத்து உண்கிறவர்களின் மனநிலையை ஆராய்ந்து பார்த்தால் என்னவாவது ஞானம் சித்திக்கலாம்.
இருக்கட்டும். நாம் மிஜோரத்து மிளகாய் ஊறுகாய்க்கு வருவோம். அது நாகா ஜொலாகியா அல்ல என்று நண்பர் சொல்லியிருந்தார். அந்த இனத்தைச் சேர்ந்த வேறு ஏதோ ஒரு மிளகாய். அவர் சொன்ன பெயர் இப்போது மறந்துவிட்டது. ஆனால் அதை ருசி பார்த்த அனுபவம் இந்த ஜென்மத்துக்கு மறக்காது.
குட்டிப் பானைகளில் மிஷ்டி தோய் வாங்கிக்கொண்டு ஊறுகாய் சகிதம் நானும் என் மராட்டிய நண்பரும் தங்கியிருந்த விடுதி அறைக்கு வந்து சேர்ந்தோம். உட்கார்ந்ததுமே ஒரு தட்டை எடுத்து வைத்து ஊறுகாய் கவரை அவிழ்த்துக் கொட்டினார் நண்பர்.
அடேய், இது தொட்டுக்கொள்ள மட்டுமே. அதற்கெதற்கு இவ்வளவு?
எப்படியும் ஒரு பத்திருபது பேர் தொட்டுக்கொண்டு சாப்பிடும் அளவுக்கு அதில் ஊறுகாய் இருந்தது. ஆனால் மராட்டிய சிங்கமோ தன் ஒருவனுக்கே அது போதாமல் போய்விடுமோ என்று அச்சப்படுவதாகத் தெரிந்தது. எனக்குப் பிரச்னை இல்லை. இயல்பிலேயே எனக்குக் காரம் ஒவ்வாது. சற்றே காரமான வத்தக் குழம்பு சாதம் சாப்பிட்டாலே கதறிக் கண்ணீர் விட்டுவிடுவேன்.
ஆனால் ருசி பார்க்கிற விஷயம் என்று வந்துவிட்டால் எனக்குக் கண்ணீர் ஒரு பொருட்டல்ல. அந்த மிஜோரத்து மிளகாய், மிஷ்டி தோயுடன் எப்படிச் சேரும் என்று அறியும் ஆவல் கட்டுக்கடங்காமல் இருந்தது. என்னைவிட என் நண்பருக்கு.
அவர்தான் ஆரம்பித்தது. முதலில் சுண்டு விரலால் கொஞ்சம் ஊறுகாயை வழித்தெடுத்து நாக்கில் தடவி சப்புக் கொட்டினார். அதன்மீது ஒரு ஸ்பூன் மிஷ்டி தோயைவிட்டு சேர்த்து மீண்டும் சப்புக் கொட்டினார். ஸ்ர்ர்ர்க்க்க்ஸ்ர்ர்ஸ்க்ற்ற்ற்க் என்று வினோதமாக ஒரு சத்தம் எழுப்பினார்.
‘என்ன?’
‘பிரமாதம். சாப்பிடு!’ நண்பர் கொடுத்த உற்சாகத்தில் நான் கொஞ்சம் ஊறுகாயை வழித்தேன். நாக்கருகே கொண்டு சென்றபோது கணப் பொழுது தயங்கினேன். சரித்திரப் புகழ் வாய்ந்த வடகிழக்குக் காரம். உள்ளுக்குள் ஒரு சிறு எச்சரிக்கை மணி அடித்தது. எதற்கும் இருக்கட்டும் என்று முதலில் அந்த இனிப்புத் தயிரை ஒரு ஸ்பூன் எடுத்து வாயில் விட்டேன். அதன்மீது ஊறுகாயைச் சேர்த்து, சற்றே பதம் பார்த்தேன்.
பரவாயில்லையே, அப்படியொன்றும் கொல்லும் காரமில்லையே என்று எண்ணி, அடுத்த முறை முதலில் ஊறுகாயை நாக்கில் தடவிக்கொண்டு அதன்மீது தயிரை விட்டேன். சப்புக்கொட்டி நன்றாக உண்டேன். இப்போதும் ருசிக்கத்தான் செய்தது.
‘அடேய் கவிஞா, நீ சொன்னது சரி. இனிப்புக்குச் சரியான துணை காரம்தான். இந்த வினோதக் கலவை அருமையாக இருக்கிறது!’ என்று மனமாரப் பாராட்டினேன். பரபரவென்று இருவரும் ஒரு குப்பித் தயிரை ஊறுகாய் சேர்த்து காலி செய்து முடித்தோம்.
இரண்டாவது தயிர்ப் பானையை எடுத்து வைத்தபோதுதான் விபரீதம் விளைந்தது. கவிஞனாகப்பட்டவன் இன்னொரு யோசனை சொன்னான். ஒரு ஸ்பூன் ஊறுகாயை அப்படியே எடுத்து அந்தக் குட்டிப் பானைத் தயிரில் கலந்துவிட வேண்டியது. பிறகு தயிரை ஸ்பூனால் எடுத்து உண்ணலாம்.
விதி யாரை விட்டது? ஒரு ஸ்பூன் என்றவன் சற்று தாராளமாகவே எடுத்துத் தயிரில் கொட்டிக் கலந்தான். அந்தக் கடும் சிவப்பும் தயிரின் பிரமாதமான மென்மையும் மணமும் சேர்ந்து நூதனமான ஒரு கிரக்கத்தைக் கொடுக்க, என்னை மறந்து அந்தப் பானையை அப்படியே வாயில் கவிழ்த்துக்கொண்டேன்.
அரை வினாடி. ஒரு வினாடி. ஒரு சில வினாடிகள்.
என் நாக்கு, கன்னத்தின் உட்பகுதிகள், தொண்டை, உணவுக் குழாயெங்கும் காரம் பரவி தீப்பிடிக்கத் தொடங்கியது. இனிப்புத் தயிர் எங்கே போனதென்றே தெரியவில்லை. தயிரின் இனிப்பைக் கொன்று காரம் அங்கு கோலோச்சத் தொடங்கிவிட்டது. ஆ, இது காரம் என்று உணர்வதற்கு முன்னால் அது காதுகள் வரை பாய்ந்து எரிய ஆரம்பித்தது. தாங்க முடியாமல் அலறத் தொடங்கினேன்.
கவிஞன் பயந்துவிட்டான். ஓடிச் சென்று எங்கிருந்தோ பாட்டில் பாட்டிலாக ஐஸ் வாட்டர் எடுத்து வந்து ஊற்றினான். நான் மிச்சமிருந்த எட்டு பானைத் தயிரையும் குடித்து, அதற்குமேல் சில குடங்கள் தண்ணீரையும் குடித்து, நாலு வாழைப்பழம் சாப்பிட்டு என்னென்னவோ செய்தும் அடங்கவில்லை. உடம்பெல்லாம் உதறி, வியர்த்துக் கொட்டி, இதயத் துடிப்பு எகிறிவிட்டது.
சுண்ணாம்புக் காளவாய்க்குள் உடலின் உள்ளுறுப்புகளைத் தோய்த்தெடுத்த மாதிரியே உணர்ந்துகொண்டிருந்தேன். ஜென்மத்துக்கும் மறக்காத காரம் அது.
முதலில் ருசித்த ஒரு சொட்டு ஊறுகாய்க்குப் பிறகு அதைச் சாப்பிடவே வழியற்றுப் போய்விட்ட அந்த மராட்டிய நண்பனிடம் மறுநாள் மன்னிப்புக் கேட்டேன். ‘உனக்கு ஒரு பானை தயிராவது நான் மிச்சம் வைத்திருக்கலாம்.’
‘அதனால் பரவாயில்லை. நேற்று நீ ஆடிய ஊழித்தாண்டவத்தைப் பற்றி ஒரு கவிதை எழுதியிருக்கிறேன். புரியாவிட்டாலும் பரவாயில்லை. படிக்கிறேன், கேள்!’
சிங்க மராட்டிய மொழி எனக்குத் தெரியாது. அவன் கவிதை நன்றாகத்தான் இருந்திருக்க வேண்டும். சொல்லாட்சியில் காரத்துக்கு நிகரான முரட்டுத்தனமும் தெரிந்தது. ஆனால் அந்தக் கடுகெண்ணெய் வாசனைதான் இல்லை.
Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
பொலிக! பொலிக! 79
‘சுவாமி, தாங்கள் சற்று நேரம் உறங்கினால் நல்லது. காலை விடியும் முன் நாம் புறப்பட்டால்தான் திருக்குறுங்குடி சென்று சேர வசதியாக இருக்கும்’ என்றார் வடுக நம்பி.
நம்மாழ்வாரின் அவதாரத் தலத்தில் இருந்து புறப்பட்டு திருக்கோளூர் சென்று, அங்கிருந்து சிரிவரமங்கை தெய்வநாயகனைத் தரிசித்துவிட்டு அடுத்த திவ்யதேசத்துக்குக் கிளம்பத் தயாராகியிருந்தார் ராமானுஜர். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான அனுபவங்கள். எத்தனைப் பேர் வாதம் புரிய வருகிறார்கள்! வைணவம் என்பது வெறும் தத்துவமல்ல. அது ஒரு வாழ்க்கை நெறி. இதைப் பண்டிதர்களுடன் வாதாடி விளங்க வைப்பதே உடையவருக்குப் பெரிய வேலையாக இருந்தது. அவர் போகுமிடமெல்லாம் பண்டிதர்கள் வாதத்துக்கு வந்துவிடுவார்கள். வாதம் என்று தொடங்கினால் நாள் கணக்கில் நீண்டுவிடும். பொறுமையாக, நிதானமாக, ஒவ்வொன்றாக எடுத்து விளக்கி வாதிட வந்தவர்களை வசப்படுத்தி வைணவத்தை ஏற்கச் செய்யும்வரை ராமானுஜர் விடமாட்டார்.
‘நமது பணி இதுவே அல்லவா? உலகெல்லாம் வைணவம் தழைக்கிற காலம் என்று வரும் என்று தெரியாது. ஆனால் உயிர் இருக்கிறவரை அதற்காக உழைப்பதற்காகத்தான் எம்பெருமான் என்னைப் படைத்திருக்கிறான்’ என்பார்.
‘பெருமான் நினைத்தால் கணப் பொழுதில் அதைச் சாதித்துவிட முடியாதா?’ என்றார் வடுக நம்பி.
ராமானுஜர் புன்னகை செய்தார். ‘வடுகா! தானே அனைத்தையும் செய்துவிடுவதென்றால் அவன் நம்மையெல்லாம் எதற்குப் படைத்து உலவவிட வேண்டும்? நமது இருப்பின் நியாயத்தை நாம் நிலைநாட்ட வேண்டாமா? உண்பதும் உறங்குவதும் சந்ததி விருத்தியும் மற்றதும் அனைவருக்கும் பொது. படைக்கப்பட்ட அத்தனை உயிரினங்களும் இதைத்தான் செய்கின்றன. ஒரு மனிதப் பிறப்பாக நாம் என்ன செய்கிறோம் அதற்கு மேலே? அதுவல்லவா முக்கியம்?’
‘நீங்கள் அதைச் செய்யுங்கள் சுவாமி. எனக்கு உங்களை கவனித்துக்கொண்டால் போதும்!’ என்றார் வடுக நம்பி.
உடையவர்களின் சீடர்களில் அவர் ஒரு தனிப் பிறவி. தனது ஆசாரியரைத் தவிர அவருக்கு தெய்வம் என்று தனியே ஒன்றில்லை. பொழுது விடியும்போது அவரது பணி தொடங்கும். ராமானுஜர் உறங்கும்வரை நிழல் மாதிரி உடன் இருப்பார். ராமானுஜருக்கு நூற்றுக்கணக்கான சீடர்கள் இருந்தாலும் கூப்பிட்ட குரலுக்கு இதோ என்று உடனே வந்து நிற்பவர் அவர்தாம். மற்ற சீடர்கள் கோயிலுக்குப் போவார்கள். திருவரங்கம் தவிர மற்ற திவ்ய தேசங்களுக்குச் செல்ல வாய்ப்புக் கிடைத்தால் தவறாமல் போவார்கள். நாலாயிரம் சேவிப்பார்கள். கோயில் திருப்பணி ஏதேனும் இருந்தால் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வார்கள். ஆனால் வடுக நம்பிக்கு ராமானுஜரைக் கவனித்துக்கொள்வது தவிர வேறு திருப்பணி ஏதும் கிடையாது.
‘வடுகா, நாளை நாம் திருவெள்ளறை புறப்படுகிறோம். திருவாராதனப் பெருமாளை எடுத்து வைத்துக்கொள்’ என்று ஒரு சமயம் ராமானுஜர் சொன்னார்.
‘உத்தரவு சுவாமி.’
சொல்லிவிட்டு ராமானுஜரின் பூஜைக்குரிய பெருமாளை எடுத்து ஒரு பையில் வைத்துக்கொண்டவர், அதனோடுகூட அவரது கட்டைச் செருப்பையும் சேர்த்து எடுத்து வைத்தார்.
ஊர் போய்ச் சேர்ந்த ராமானுஜர், குளித்து முடித்து பூஜைக்கு அமர்ந்து, ‘வடுகா, திருவாராதனப் பெருமாளை எடு’ என்றபோது அவரது செருப்புகளை வெளியே எடுத்து வைத்துவிட்டு அதன்பின் பெருமாளை வெளியே எடுத்தார் வடுக நம்பி.
திடுக்கிட்டுவிட்டார் உடையவர். ‘ஐயோ இதென்ன அபசாரம்! திருவாராதனப் பெருமாளுடன் எனது செருப்புகளை ஏன் சேர்த்து வைத்தாய்?’
‘நல்ல கதையாக இருக்கிறதே? உங்களுக்கு உங்கள் பெருமாள் என்றால் எனக்கு என் பெருமாள்!’
ராமானுஜருக்கு அது நினைவுக்கு வந்தது. முகத்தில் முறுவல் பூத்தது.
‘சுவாமி, தங்களை உறங்கச் சொன்னேன்.’
‘சரியப்பா. நீயும் போய்ப் படுத்துக்கொள்’
மறுநாள் காலை உடையவரும் சீடர்களும் சிரிவரமங்கையில் இருந்து புறப்பட்டுத் திருக்குறுங்குடி போய்ச் சேர்ந்தார்கள். உடையவரை வரவேற்க ஊரே திரண்டுவிட்டது. சன்னிதிக்குள் நுழைய முடியாத அளவுக்கு மக்கள் முண்டியடித்தார்கள். வடுக நம்பி முன்னால் வந்து அனைவரையும் நகர்ந்து நிற்கச் சொல்லி ராமானுஜர் சன்னிதிக்குள் செல்ல வழியமைத்துக் கொடுத்தார்.
நம்மாழ்வாராக அவதரித்த நம்பி. நம்பாடுவான் என்னும் மலைவாசி பக்தனுக்கு தரிசனம் தருவதற்காகத் தனது கொடி மரத்தைச் சற்று நகர்த்தி வைத்துக்கொண்ட நம்பி. நின்ற, நடந்த, இருந்த, கிடந்த, அமர்ந்த கோலங்களில் காட்சியளிக்கிற நம்பி. எப்பேர்ப்பட்டவருக்கும் பார்த்த கணத்தில் மோட்சமளிக்கிற நம்பி. எனக்கு மோட்சம் வேண்டும் என்று திருமங்கையாழ்வார் திருவரங்கப் பெருமானிடம் கேட்டபோது, ‘அதற்கு நான் பொறுப்பாளியல்ல ஆழ்வாரே! நீர் திருக்குறுங்குடிக்குச் செல்லும். நம்பியிடம்தான் மோட்சத்தின் வாசல் சாவி இருக்கிறது’ என்று சொல்லியிருக்கிறான்.
வராக அவதாரம் எடுத்து இரண்யாட்சனைக் கொன்றபிறகு மகாவிஷ்ணு தனது பயங்கரமான வராக ரூபத்தைக் குறுக்கிக்கொண்டு வந்து அமர்ந்த மண் அது. அதனாலேயே அது குறுங்குடி ஆனது. நம்மாழ்வாரும் பெரியாழ்வாரும் திருமழிசை ஆழ்வாரும் திருமங்கையாழ்வாரும் பாடிய திருத்தலம்.
ராமானுஜர் பக்திப் பரவசத்துடன் கைகூப்பிக் கண்மூடி நின்றார். ‘கரண்ட மாடு பொய்கையுள் கரும்பனைப் பெரும்பழம் புரண்டுவீழ வாளைபாய் குறுங்குடி நெடுந்தகாய், திரண்ட தோள் இரணியன் சினங்கொள் ஆகம் ஒன்றையும் இரண்டுகூறு செய்துகந்த சிங்கமென்பது உன்னையே’
மனத்துக்குள் திருமழிசை ஆழ்வாரின் வரிகள் ஓடிக்கொண்டிருந்தன. ஏகாந்தம். முழு நிசப்தம். எம்பெருமானே, என்னை ஆட்கொள்ள வருவீர்.
சட்டென்று அர்ச்சகரின் குரல் அனைவரையும் கலைத்தது.
‘ஓய் உடையவரே, நானும் எத்தனையோ அவதாரங்கள் எடுத்துப் பார்த்துவிட்டேன். எவ்வளவோ நல்லது சொல்லிப் பார்த்துவிட்டேன். இந்த மனிதர்களைத் திருத்திப் பணிகொள்வது சிரம சாத்தியமாகவே இருக்கிறது. உமக்கு எப்படி இது எளிதாகக் கைவருகிறது? ஆயிரம் ஆயிரமாக ஜனங்களைத் திரட்டி நல்வழிப் படுத்திக்கொண்டிருக்கிறீரே, அந்த சூட்சுமத்தை எனக்கு சொல்லித்தாரும்!’
திடுக்கிட்டுப் பார்த்தார்கள் சீடர்கள். கோயில் அர்ச்சகரின் வழியாகப் பேசுவது குறுங்குடி நம்பியேதானா?!
‘அட ஆமாமப்பா, நானேதான். உமது ஆசாரியரின் உத்தியை எனக்குக் கற்றுத்தரச் சொல்லுங்கள்!’
ஒளிவில்லை, மறைவில்லை. அர்ச்சகர்தான் பேசிக்கொண்டிருந்தார். ஆனால் கேட்டது அவர் குரலல்ல. அது தெய்வத்தின் குரல். உடையவர் புன்னகை செய்தார்.
‘என்ன சிரிப்பு? சொல்லுமய்யா!’
‘அதற்கென்ன, சொல்லித்தரலாமே? ஆனால் நீர் கேட்கும்படி கேட்டால் நாம் சொல்லித்தருகிறபடி சொல்லித்தருவோம்!’
இந்த பதிலை, குறுங்குடி நம்பியல்ல; உடையவரின் சீடர்களே எதிர்பார்க்கவில்லை. என்ன நடந்துகொண்டிருக்கிறது இங்கே?
(தொடரும்)
Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
March 31, 2017
அசோகமித்திரன் – மூன்று குறிப்புகள்
அசோகமித்திரனைப் பற்றிய முதல் அறிமுகம் எனக்கு ம.வே. சிவகுமார் மூலம் கிடைத்தது. ‘ஒரு வருஷம் டைம் ஃப்ரேம் வெச்சிக்கடா. வேற யாரையும் படிக்காத. அசோகமித்திரன மட்டும் முழுக்கப் படி. சீக்கிரம் முடிச்சிட்டன்னா, ரெண்டாந்தடவ படி. அவரப் படிச்சி முடிச்சிட்டு அதுக்கப்பறம் எழுதலாமான்னு யோசிக்க ஆரம்பி’ என்று சிவகுமார் சொன்னார்.
உண்மையில் அசோகமித்திரனை முழுக்கப் படிக்கும் ஒருவருக்கு எழுதலாம் என்ற எண்ணம் இருந்தால் அது சற்று வடியும். அவரளவு எளிமை, அவரளவு உண்மைக்கு நேர்மை, அவரளவு சூசகம், அவரளவு செய்நேர்த்தி மிக அபூர்வம்.
கணையாழியில் என் முதல் கதை வெளியானபோது, அதை அவர் படித்துப் பார்க்கவேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டேன். ஒரு பிரதியுடன் அவர் வீட்டுக்குச் சென்று அறிமுகப்படுத்திக்கொண்டு கதையைக் கொடுத்தேன். ஒரு நிமிடம் என்னை உற்றுப் பார்த்தார். சிரித்த மாதிரி இருந்தது. ஆனால் சிரித்தாரா என்று சரியாகத் தெரியவில்லை. ஒன்றும் பேசாமல் கதையைப் படிக்க ஆரம்பித்தார்.
அது இரண்டு பக்கக் கதைதான். படித்து முடிக்க இரண்டு நிமிடங்கள் போதும். ஆனால் அவர் ஐந்து நிமிடங்களுக்குமேல் அதைப் படித்துக்கொண்டிருந்தார். முடித்ததும் நிமிர்ந்தார். இப்போது பளிச்சென்று சிரித்தார்.
‘நல்லாருக்கா சார்?’
‘நிறைய எழுதிண்டே இரு’ என்று சொல்லி, புத்தகத்தை என் கையில் திருப்பிக் கொடுத்தார். அவரது ஆசியும் கதை குறித்த விமரிசனமும் அந்த ஒரு வரிக்குள் முடிந்துவிட்டன.
பின்பொரு சமயம் அவரது ஒற்றன் நாவலில் வருகிற ஒரு கதாபாத்திரத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். அந்தப் பாத்திரம் ஒரு நாவலாசிரியன். அயோவா நகரத்தில் ஒரு சர்வதேச எழுத்தாளர் சந்திப்புக்கு வந்துவிட்டு, அறைக்கதவை மூடிக்கொண்டு நாவல் எழுதுகிற பாத்திரம். அயோவாவில் இருந்த காலம் முழுதும் அவன் அறையைவிட்டு வெளியே வரவே மாட்டான். தனது நாவலுக்காகப் பிரமாதமாக ஸ்கெட்ச் எல்லாம் போட்டு, ஒரு சார்ட் வரைந்து ஒட்டி வைத்திருப்பான். எந்த அத்தியாயத்தில் என்ன நடக்கிறது, யார் யார் வருகிறார்கள், என்ன பேசுகிறார்கள், எங்கே ஆரம்பித்து எங்கே முடிகிறது என்பது வரை அந்த சார்ட்டில் இருக்கும்.
அப்படியொரு சார்ட் தன்னால் தயாரிக்க முடியாதது பற்றி அசோகமித்திரன் வருத்தப்படுவார்.
அந்த அத்தியாயத்தின் இறுதியில் அந்த நாவலாசிரியன் தனது நாவலை எழுதியும் முடிப்பான்.
நான் அசோகமித்திரனிடம் கேட்டேன், ‘அது உண்மையா சார்? அப்படி ஒரு மனிதன் நாவலை சார்ட்டுக்குள் அடைத்தானா? சார்ட்டில் குறித்தவற்றை நாவலுக்குள் கொண்டு வந்தானா? அது நடந்த சம்பவம்தானா?’
‘ஆமாமா. அவன் அப்படித்தான் எழுதினான் அன்னிக்கு. அது ஒரு வார் நாவல். என்ன ஒண்ணு, அது சரியா அமையல.’
மீண்டும் ஒரே வரி. அனுதாபமும் விமரிசனமும் ஒருங்கே தெரிகிற வரி.
எழுத ஆரம்பித்த புதிதில் இரண்டு பேர் எனக்கு இங்கே பேருதவி புரிந்திருக்கிறார்கள். ஒருவர் அசோகமித்திரன். இன்னொருவர் இந்திரா பார்த்தசாரதி. மிகவும் சுமாராக எழுதக்கூடிய ஒரு சிறுவனாகத்தான் நான் இந்த இரு பெரியவர்களுக்கும் அறிமுகமானேன். ஆனால் பெருந்தன்மையுடன் இந்த இரண்டு பேருமே என்னை அன்று அரவணைத்தார்கள். உன்னோடெல்லாம் உட்கார்ந்து பேசினால் நேரம் வீண் என்று என்றுமே அவர்கள் கருதியதில்லை.
குருமார்கள் சொல்லித்தருவதில்லை. தம்மிடமிருந்து எடுத்துக்கொள்ள அனுமதிக்கிறார்கள். எனக்கு அசோகமித்திரனும் இந்திரா பார்த்தசாரதியும் அப்படியொரு வாய்ப்பை அன்று வழங்கினார்கள்.
தமது கட்டுரைகள் அனைத்தும் ஒழுங்காகத் தொகுக்கப்பட்டு, நேர்த்தியான நூலாக வரவேண்டும் என்று அசோகமித்திரன் விரும்பினார். கிழக்கு பதிப்பகம் ஆரம்பித்த புதிதில் அந்தப் பணியை நாங்கள் ஏற்றுக்கொண்டு அவர் விரும்பியபடி ‘இண்டக்ஸ்’ உடன் கூடிய அவரது கட்டுரைத் தொகுப்புகள் இரு பாகங்களைக் கொண்டுவந்தோம். இண்டக்ஸ் உண்டாக்கும் பணியைச் செய்தவர் பத்ரி. சுமார் இரண்டாயிரம் பக்கங்கள் அளவுள்ள வால்யூமுக்கு இண்டக்ஸ் தயாரிப்பது என்பது பைத்தியம் பிடிக்க வைக்கிற வேலை. ஆனால் அசோகமித்திரன் அதை மிகவும் விரும்பினார். அம்மாதிரியான ஒரு நூலுக்கு அது அவசியம் என்று கருதினார். அவர் எண்ணியபடியே அத்தொகுப்புகள் வெளிவந்தன.
பிழை திருத்தி, எடிட் செய்யும்போது மொத்தமாக வாசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. எந்த ஒரு தமிழ் எழுத்தாளரும் எக்காலத்திலும் ஆணவம் கொள்ளவே முடியாமல் கதவை இழுத்து மூடச் செய்கிற ஒரு வேலையை அவர் செய்திருப்பது புரிந்தது. தன் வாழ்நாளெல்லாம் தேடித் தேடிப் படித்தறிந்த எத்தனையோ மகத்தான விஷயங்களைப் பற்றி உள்ளார்ந்த அக்கறையுடன் அவர் அந்தக் கட்டுரைகளில் விவரித்திருந்தார். கலை, இலக்கியம், சினிமா மட்டுமல்ல. வாழ்வை ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கும் அல்லது தொட்டுச் செல்லும் அனைத்தைக் குறித்தும் அவர் ஒருவரியாவது எழுதியிருப்பது புரிந்தது.
அசோகமித்திரன் எழுத்தைப் பற்றி ஒரு சொல்லில் என்னால் குறிப்பிட முடியும். பரிவு.
இது ஒட்டுமொத்த மனித குலத்தின் மீதான பரிவாக உள்ளதாலேயே அவர் எக்காலத்துக்குமான, எல்லா தலைமுறைக்குமான கலைஞனாகிப் போகிறார்.
(மார்ச் 31 அன்று விருட்சம் அழகியசிங்கர் நடத்திய அசோகமித்திரன் நினைவஞ்சலிக் கூட்டத்தில் வாசிப்பதற்காக எழுதியது. துரதிருஷ்டவசமாகக் கூட்டத்துக்கு என்னால் செல்ல முடியவில்லை. இக்கட்டுரையைக் கூட்டத்தில் என் நண்பர் பத்ரி வாசித்தார்.)
Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)


