Pa Raghavan's Blog, page 10

March 26, 2017

பொலிக! பொலிக! 73

‘ஒன்று கவனித்தீரா? உடையவரின் சிறப்புக்கு அவரது சீடர்கள் ஒவ்வொருவரும் தம்மால் இயன்ற கிரீடங்களைச் சேர்த்துக்கொண்டே போகிறார்கள். இவர் உயர்வு, அவர் மட்டம் என்று ஒருத்தரைக்கூடத் தரம் பிரிக்க முடியாதபடி அத்தனை பேருமே எப்பேர்ப்பட்ட ஞானஸ்தர்களாக விளங்குகிறார்கள் பாரும்!’


பெரிய நம்பியிடம் அரையர் சொல்லிக்கொண்டிருந்தார்.


‘உண்மைதான் அரையரே. முதலியாண்டான் ஆகட்டும், கூரத்தாழ்வான் ஆகட்டும், அருளாளப் பெருமான் எம்பெருமானாராகட்டும், எம்பாராகட்டும் – ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் ஜொலிக்கிறார்கள். உடையவரைத் தவிர வேறு நினைவே இன்றி எப்போதும் அவரது சொற்களை மட்டுமே கேட்டுக்கொண்டிருப்பதால் இப்படியாகிறது என்று நினைக்கிறேன்.’


‘ராமானுஜரும் சொல்லித் தருவதில் சளைப்பதேயில்லை. மடத்துக்குச் சென்றால் இருபத்தி நாலு மணி நேரமும் ஏதாவது ஒரு வகுப்பு நடந்துகொண்டேதான் இருக்கிறது.’


‘அவரது நேரத்தை சீடர்களும் பக்தர்களும் முழுதாக உண்டுகொண்டிருக்கிறார்கள். என் கவலையெல்லாம் அவர் எப்போது பிரம்ம சூத்திரத்துக்கு உரை எழுதப் போகிறார் என்பதுதான்!’


சொல்லிவிட்டு ஏக்கத்துடன் எங்கோ வெறித்துப் பார்த்தார் பெரிய நம்பி. ஆளவந்தாரின் மூன்று நிறைவேறாத ஆசைகள் ராமானுஜருக்காக இன்னமும் காத்திருப்பதை அவர் நினைக்காத நாளே இல்லை. சந்திக்கும்போதெல்லாம் அதைக் குறித்து நினைவுபடுத்த அவர் தவறுவதும் இல்லை.


‘சுவாமி, எனக்கும் அதே யோசனைதான். ஆனால் பிரம்ம சூத்திர உரைக்கு அடிப்படை நூலாக நமக்குத் தேவைப்படுவது போதாயன விருத்தி (விருத்தி என்றால் உரை). இங்கே அந்நூலோ, பிரதியோ கிடையாது. வடக்கே எங்கோ ஒரு பிரதி இருப்பதாகச் சொல்லுகிறார்கள். தேடிச் செல்லுவது பெரிதல்ல. ஆனால் கிடைக்க வேண்டுமே?’ என்பார் உடையவர்.


பெரிய நம்பிக்கும் அது தெரியும். ஆளவந்தாரின் ஆசையே அதுதான். பிரம்ம சூத்திரத்துக்கு போதாயன மகரிஷியின் உரையை அடியொற்றி ஓர் எளிமையான உரை செய்ய வேண்டும். அவர்தான் வியாசரின் மனத்தை முற்றிலுமாகப் புரிந்துகொண்டு உரை எழுதியவர் என்பது ஆளவந்தாரின் கருத்து. இறப்பதற்குமுன் பல சமயம் தமது சீடர்களிடம் அது பற்றி அவர் பேசியிருக்கிறார்.


‘திரமிடர் என்றொருவர் எழுதியிருக்கிறார். குஹதேவர் என்ற ரிஷி எழுதியிருக்கிறார். டங்கர் என்று மற்றொருவர் பாஷ்யம் (உரை) செய்திருக்கிறார். நமக்குத் தெரிந்து இவ்வளவு. தெரியாமல் இன்னும் சிலர் இருக்கலாம். ஆனால் எத்தனை உரைகள் இருந்தாலும் போதாயனரின் உரையே சிறப்பு. அதனை அடியொற்றி ஓர் எளிய உரை செய்யப்பட வேண்டும்!’


கிமு நான்காம் நூற்றாண்டில் வசித்த (எட்டாம் நூற்றாண்டு என்றும் சொல்வார்கள்) போதாயணர் அடிப்படையில் ஒரு கணித வல்லுநர். யாக குண்டங்கள், யாக மேடைகள் அமைப்பதில் கடைப்பிடிக்க வேண்டிய அளவுகள் சார்ந்து முதல் முதலில் ஆய்வு செய்தவர். செங்கோண முக்கோணத்தின் பக்க அளவுகளை வர்க்க – வர்க்க மூலமின்றிக் கண்டறியும் முறையைக் கண்டுபிடித்தவர். சூத்திரங்களின் சக்கரவர்த்தி. சூத்திரம் என்பது சுருங்கச் சொல்லுவது. வேதங்களின் இறுதிப் பகுதியில் வருகிற உபநிடதங்களின் சாரமே பிரம்ம சூத்திரம். இதை வேதாந்த சூத்திரம் என்றும் சொல்லுவதுண்டு. உபநிடதங்களின் உள்நுழைந்து புரிந்துகொள்ள பிரம்ம சூத்திரமே சரியான வாயில். பிரம்ம சூத்திரத்தை சரியாக விளங்கிக்கொள்ளத்தான் போதாயனரின் உரை.


போதாயணரின் உரை அடிப்படையில்தான் பிரம்ம சூத்திரத்துக்கு உரை எழுத வேண்டும் என்று ஆளவந்தார் கருதியதற்கு அடிப்படைக் காரணம், போதாயன விருத்தி, விசிஷ்டாத்வைத அடிப்படையில் அமைந்தது என்பது. ஜீவனுக்கும் பரமனுக்குமான உறவைப் பேசுவதல்லவா அடிப்படைத் தத்துவம்? அதை விளக்கும் நூலும் சரியான விதத்தில் அமைய வேண்டுமென்பது அவரது கவலை.


ராமானுஜரும் பெரிய நம்பியும் இதைப் பற்றிப் பல சமயம் பேசியிருக்கிறார்கள். அரையர் பேசிவிட்டுப் போன பிறகும் பெரிய நம்பி ஒரு சமயம் உடையவரைச் சந்தித்து இதைக் குறித்துப் பேசினார்.


‘ஒரு தகவல் கிடைத்திருக்கிறது சுவாமி. காஷ்மீரத்தில் உள்ள சாரதா பீடத்தில் போதாயன விருத்தி இருப்பதாகத் தெரிகிறது. இங்கிருந்து அங்குள்ளவர்களைத் தொடர்பு கொள்வதென்பது சாத்தியமில்லாத காரியம். நேரில் போனால் ஒருவேளை அதைக் காண முடியலாம்’ என்றார் ராமானுஜர்.


‘காஷ்மீரமா! அடேயப்பா, அது வெகு தொலைவில் உள்ள இடமாயிற்றே.’


‘ஆம். பல்லாயிரக்கணக்கான காதங்கள் என்கிறார்கள். ஆனால் நமக்கு போதாயன விருத்தி வேண்டுமென்றால் அங்கே போய்த்தான் தீரவேண்டும்.’


‘யாரையாவது அனுப்பிப் பார்க்கலாமா சுவாமி?’


‘அது சரியாக வராது நம்பிகளே. நானே நேரில் போகலாமென்று இருக்கிறேன்.’


முடிவெடுக்கிறவரைதான் யோசனை. தீர்மானம் வந்துவிட்டால் அடுத்தக் கணம் செயல்தான். ராமானுஜரின் இந்தக் குணம் பெரிய நம்பிக்கு நன்றாகத் தெரியும். எனவே, ‘எப்போது?’ என்று கேட்டார்.


‘இதோ புறப்பட வேண்டியதுதான். கூரத்தாழ்வானைத் துணைக்கு அழைத்துக்கொள்கிறேன். உதவிக்கு ஒரு சில சீடர்கள் போதும். நீங்கள் உத்தரவளித்தால் நாளையே கிளம்பிவிடுவேன்!’ என்று சொன்னார்.


ராமானுஜர் புறப்பட்ட செய்தி அவரைக் காட்டிலும் வேகமாக தேசமெங்கும் பரவியது. பயணத்தைவிட அதன் நோக்கம் பலருக்குக் கவலையளித்தது. ஏற்கெனவே அத்வைதத்துக்கு எதிரான சித்தாந்தம் ஒன்றை முன்வைத்துப் பரப்பிக்கொண்டிருக்கிற சன்னியாசி. இப்போது பிரம்ம சூத்திரத்துக்கும் விசிஷ்டாத்வைதம் சார்ந்து ஓர் உரை எழுதிவிட்டால் அத்வைத சித்தாந்தத்துக்கு அது பெரிய அச்சுறுத்தலாகிவிடுமோ?


‘முடியாது. சாரதா பீடத்தில் போதாயண விருத்தி இருப்பது உண்மையென்றால் அது ராமானுஜர் கரங்களுக்குக் கிடைக்கக்கூடாது!’ என்று ஆங்காங்கே பல அத்வைத சித்தாந்திகள் கூடிப் பேசினார்கள். ஆனால் சாரதா பீடத்தை எப்படித் தொடர்பு கொள்வதென்று யாருக்கும் தெரியவில்லை. ஆதி சங்கரர் அங்கொரு பீடம் அமைத்த விவரம் தெரியும். அத்வைத சித்தாந்தத்தைப் பரப்புகிற திருப்பணியில் அவர்கள் முனைப்புடன் இருக்கிற விவரம் தெரியும். அங்கே போதாயண விருத்தி இருப்பதும் அது விசிடாத்வைத ரீதியில் எழுதப்பட்ட விளக்கம் என்பதும் அப்போதுதான் அவர்களுக்குத் தெரிந்தது.


எப்படித் தடுப்பது?


அவர்கள் யோசித்துக்கொண்டிருந்தபோது ராமானுஜர் காஷ்மீரத்துக்குப் போய்ச் சேர்ந்தார். கிட்டத்தட்ட நூறு நாள் பயணம். நடுவில் அவர் எங்கும் தங்கவில்லை. சற்றும் நேர விரயம் இல்லை. ஒரே நோக்கம். ஒரே சித்தம். வழியில் கூரத்தாழ்வானிடம் ஒரே ஒரு விஷயம் சொல்லியிருந்தார்.


‘போதாயணரின் உரை நம் கைக்குக் கிடைக்கிறதோ இல்லையோ. காண முடிந்த கணத்தில் ஒருமுறை வாசித்தேனும் பார்த்துவிட வேண்டும்!’


அது எத்தனை அவசியமான கட்டளை என்பது காஷ்மீரத்துக்குப் போய்ச் சேர்ந்ததும் கூரத்தாழ்வானுக்குப் புரிந்தது.


(தொடரும்)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 26, 2017 09:30

March 25, 2017

ருசியியல் – 15

தமிழனுக்குத் தமிழாசிரியர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட உணவுப் பொருள், ஊறுகாய்.வினைத்தொகைக்கு இதைத் தவிர இன்னொரு உதாரணம் சொல்லக்கூடிய ஆசிரியர் யாராவது தென்பட்டால் விழுந்து சேவித்துவிடுவேன். நான் ஆறாங்கிளாஸோ, ஏழாங்கிளாஸோ படித்துக்கொண்டிருந்தபோது இதே வினைத்தொகைக்கு ஓர் உதாரணம் சொல்லவேண்டிய சூழ்நிலை வந்தபோது சுடுகாடு என்று சொன்னேன். உத்தமோத்தமரான அந்தத் தமிழாசிரியர் அன்று முதல் என்னை ஓர் அகோரி மாதிரி பார்க்கத் தொடங்கினார். இதெல்லாம் செய்வினை செயப்பாட்டு வினையல்ல. கர்ம வினை.


கிடக்கட்டும். உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? ஈரேழு பதினான்கு உலகுக்கும் ஊறுகாயை அறிமுகப்படுத்தியது இந்தியாதான். மத்தியக் கிழக்கு மக்கள் பேரிச்சம்பழத்தில் ஊறுகாய் போட்டு அது ரொட்டிக்குச் சேராமல் அவஸ்தைப்பட்டுக்கொண்டிருந்தபோது, ஐரோப்பிய தேசத்து காரப் பிரியர்கள் வெள்ளரிக்காயில் ஊறுகாய் போட்டுப் பரிட்சை பண்ணிப் பார்த்துக்கொண்டிருந்தபோது, ஆப்பிள் பழத்தில், அன்னாசிப் பழத்தில், வாழைக்காயில் எல்லாம் ஊறுகாய் போட சீனர்களும் மங்கோலியர்களும் முயற்சி பண்ணிக்கொண்டிருந்தபோது, இந்தியர்கள்தாம் ஊறுகாய்க்கு உகந்த காய்களைக் கண்டறிந்து பேரல் பேரலாக ஸ்டாக் வைத்து சாப்பிட்டவர்கள். மா, நெல்லி, எலுமிச்சையெல்லாம் ஊறுகாய்க்கென்றே அவதரித்த காய்கள் என்பது இந்தியர்களைத் தவிர மற்றவர்களுக்குப் பலகாலம் வரை தெரியாது. சரியாகச் சொல்லுவதென்றால் இயேசுநாதருக்கு ஆயிரத்தி எழுநூறு வருடம் மூத்தது இந்திய ஊறுகாய். மற்ற தேசத்தவர்களுக்கு இயேசு பிறந்து எழுநூறு எண்ணூறு ஆண்டுகளூக்குப் பிறகும் வெள்ளரிக்காய் ஊறுகாய் மட்டும்தான் தெரியும். நம்மாள்கள்தான் சிந்து வெளி நாகரிக காலத்தில் இருந்தே வினைத்தொகை ருசி கண்டவர்களாக இருந்திருக்கிறார்கள்.


இந்தக் கதை இப்போது எதற்கு என்பீர்களானால் ஒரு சங்கதி இருக்கிறது. எனக்கு ரொம்ப நாளாக ‘நாகா ஜொலாகியா’வில் போட்ட ஊறுகாயை ருசி பார்க்க வேண்டுமென்று ஓர் இச்சை.


இந்த நாகா ஜொலாகியா என்பது அஸ்ஸாமுக்கு அந்தப் பக்கம் மட்டும் விளைகிற ஒரு மிளகாய் ரகம். 2007ம் ஆண்டு வரை உலகின் அதி பயங்கரக் கார மிளகாய் என்று அறியப்பட்டது இதுவே. (இப்போது ட்ரினிடாடில் விளைகிற ஏதோ ஒரு ரகம் இந்த இடத்தைப் பிடித்திருக்கிறது)


மேற்படி நாகா ஜொலாகியாவை சும்மா நாக்கோரம் வைத்துப் பார்த்தாலே நாலு நாளைக்கு கார்க் கழண்டுவிடும் என்பார்கள். ஆனால் மேகாலயா, நாகாலாந்து பகுதிகளில் வசிக்கும் ஆதிகுடி மக்கள் இந்த மிளகாயில் ஊறுகாய் போட்டு பத்திரப்படுத்தி வைத்து சாதம் பிசைந்து சாப்பிடுவார்கள். கற்பனை செய்ய முடியாத உச்சக்கட்ட காரத்தில் அவர்களுக்கு போதை மாதிரியோ, ஞானம் மாதிரியோ என்னமோ ஒன்று அவசியம் கிடைக்கத்தான் வேண்டும். அது என்னவென்று தெரிந்துகொள்ளாவிட்டால் எப்படி?


நான் அஸ்ஸாமுக்குப் போனபோது அந்த அதிர்ஷ்டம் எனக்கு வாய்க்கவில்லை. இன்னொரு முறை அந்தப் பக்கம் போகிற வாய்ப்பும் கிடைக்கவில்லை. ஆனால் கொல்கத்தாவுக்கு ஒரு முறை போனபோது மேற்படி நாகா ஜொலாகியாவின் ஒண்ணு விட்ட சித்தப்பா பையன் முறை வரக்கூடிய வேறொரு மிளகாயாலான ஊறுகாயை ருசி பார்க்க வாய்த்தது.


உண்மையில் கொல்கத்தாவில் நான் உண்ண விரும்பியது ரசகுல்லா உள்ளிட்ட வண்ணமயமான வங்காளி இனிப்புகளைத்தான். மிஷ்டி தோய் என்ற இனிப்புத் தயிர் அங்கே ரொம்பப் பிரபலம். ராத்திரி வேளைகளில் வீதியோரங்களில்கூடக் கிடைக்கும். சிறிய மண் குடுவைகளில் பனங்கற்கண்டு, ஏலம் மணக்கத் தோய்த்து வைக்கப்பட்ட கெட்டித் தயிர். ஒரு நாலைந்து சிறு பானைத் தயிர் குடித்து முடித்த பிறகு என்னுடன் வந்திருந்த நண்பர் (அவர் ஒரு மராட்டியக் கவிஞர்) சட்டென்று கேட்டார், ‘இந்த இனிப்புத் தயிருக்குக் காரசாரமாக மிளகாய் ஊறுகாய் தொட்டுச் சாப்பிட்டால் எப்படி இருக்கும்?’


அசப்பில் கேனத்தனமான யோசனையாகத் தெரிந்தாலும் இம்மாதிரி கிறுக்குத்தனங்களில்தான் தரிசனம் மாதிரி என்னவாவது ஒன்று சித்தித்துத் தொலைக்கும்.


‘ஆனால் கண்டிப்பாக பாக்கெட் ஊறுகாய் கூடாது!’ என்று சொன்னேன்.


‘வா என்னோடு’ என்று என்னை உள்ளூர் இலக்கியப் பிரகஸ்பதி ஒருத்தரின் வீட்டுக்கு அழைத்துப் போனார்.


நான் தமிழன். நண்பரோ சிங்க மராட்டியர். நாங்கள் பார்க்கப் போன இலக்கியவாதியாகப்பட்டவர் ஒரு வங்காள நாடகாசிரியர். தெரியாத்தனமாக எங்களுக்கு அங்கே ஒரு விருது கொடுக்கக் கூப்பிட்டிருந்தார்கள். விருதுதான் கொடுத்துவிட்டார்களே என்று, மூச்சு விட்டுக்கொண்டிருக்கிற சமயமெல்லாம் இலக்கிய விசாரம் மட்டுமேவா செய்துகொண்டிருக்க முடியும்? நமக்குப் பேரிலக்கியமானது நாக்கில் பிறந்து நெஞ்சில் நிறைவது. எழுதுவதெல்லாம் அதன் விளைவான சிற்றிலக்கியம் மட்டுமே.


எனது மராட்டிய நண்பரும் இந்த விஷயத்தில் என்னை மாதிரியான ஆசாமியாகவே இருந்தது எனக்கு வசதியாகப் போய்விட்டது. மேற்படி வங்கத்து நாடகாசிரியரின் வீட்டைத் தேடிக் கண்டுபிடித்து நாங்கள் கதவைத் தட்டியபோது மணி ராத்திரி ஒன்பது இருக்கும்.


‘வாருங்கள்’ என்றார் வங்கத் தங்கம்.


‘உட்கார்ந்து பேச அவகாசமில்லை நண்பரே. படு பயங்கரக் காரத்தில் ஒரு மிளகாய் ஊறுகாய் வேண்டும். என்ன பிராண்ட் சரியாக இருக்கும்?’ என்றார் மராட்டியக் கவிஞர்.


ஏற இறங்கப் பார்த்த நாடகாசிரியர், ‘பிராண்டெல்லாம் சரிப்படாது. ஒரு நிமிடம் இருங்கள்’ என்று சொல்லிவிட்டு உள்ளே போனார். வீட்டுக்கு வந்திருக்கும் விருந்தாளிகளுக்கு என்ன கொடுப்பது என்று அவரது தர்ம பத்தினி சிந்தனை வயப்பட்டிருக்க வேண்டும்.


‘அவர்களுக்குக் கொஞ்சம் ஊறுகாய் வேண்டும்’ என்றார் சிநேகித சிரோன்மணி.


குடிகாரப் பாவிகள் என்று அந்தப் பெண் தெய்வம் நினைத்திருக்கக்கூடும். என்ன செய்ய? ஆசை வெட்கம் மட்டுமல்ல; நளின, நாகரிக, நானாவித நாசூக்கு வகையறாக்களையும் சேர்த்து அறியாது.


கொஞ்சம் முறைத்துவிட்டு அந்தப் பெண் உள்ளே போனபோது நான் வங்காள நண்பரிடம் விளக்கம் சொன்னேன். இது சாராய சகாயத்துக்கல்ல. மிஷ்டி தோய்க்குத் துணையாகுமா என்று பரீட்சை செய்து பார்ப்பதற்காக.


அவரும் நம்பிய மாதிரி தெரியவில்லை. மராட்டியக் கவிஞனுக்கும் அது புரிந்திருக்க வேண்டும். ‘நண்பரே, இன்றிரவு நீங்களும் எங்களுடன் மிஷ்டி தோய் சாப்பிட வரவேண்டும். ஓரிரவில் ஓரண்டா அளவுக்குத் தயிர் குடித்து கின்னஸ் சாதனை செய்ய முடிவு செய்திருக்கிறோம்!’


அவர் மறுத்துவிட்டார். ஆனால் அன்றைய எங்கள் இரவை வண்ணமயமாக்குவதற்கு அவசியமென நாங்கள் கருதிய மிளகாய் ஊறுகாய் கிடைத்துவிட்டது. ‘இது மிஜோரம் ஸ்பெஷல் ஊறுகாய். ரொம்பக் காரம். அளவோடு சாப்பிடுங்கள்!’


அவரது மாமியார் வீடு மிஜோரத்தில் இருந்ததோ என்னமோ. கபோதிகள் போயும் போயும் ராத்திரி வேளையில் வந்து ஊறுகாய் கேட்டு நிற்கிறார்களே என்ற வினோதக் கடுப்பில் ஒரு பாலிதீன் கவர் நிறைய ஊறுகாய் அடைத்துக் கொடுத்து அனுப்பிவைத்தனர் அந்த சதிபதியினர்.


ஊறுகாய் வந்துவிட்டது. அடுத்தது என்ன? அந்த இனிப்புத் தயிர்தான்.


நாங்கள் இருவரும் பலபேரிடம் விசாரித்து அலைந்து எஸ்பிளனேடிலேயே தலை சிறந்த மிஷ்டி தோய் கடை எது என்று தெரிந்துகொண்டு அங்கு சென்றோம். அரை ஜாண் உயரப் பானைகளுக்குள் அடைபட்ட தயிர். மேலே கோவணத்தில் பாதியளவு கொண்ட துணியால் இறுக்கிக் கட்டியிருந்தது.


‘எத்தனை பானைகள் வாங்கலாம்?’ என்றார் நண்பர்.


எனக்கு நாலு அவருக்கு நாலு என்று கணக்கிட்டு, கொசுறாக இரண்டு சேர்த்துப் பத்துப் பானை தயிர் வாங்கிக்கொண்டு அறைக்குத் திரும்பினோம்.


உண்மையில் அந்த இரவை என்னால் மறக்கவே முடியாது. உச்ச இனிப்பும் உச்சக் காரமும் இணைவது ஓர் உன்மத்த நிலை என்பதை அன்று அறிந்தேன். விரிவாக அடுத்த வாரம் எழுதுகிறேன்.


(ருசிக்கலாம்)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 25, 2017 09:31

பொலிக! பொலிக! 72

கோவிந்தனுக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. அவர் அதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. உடையவரோடு அவரும் பிற சீடர்களும் திருவரங்கம் வந்து சேர்ந்தபோது அவரது அம்மா தனது மருமகளை அழைத்துக்கொண்டு திருவரங்கத்துக்கு வந்து வீடு பார்த்துக் குடியேறியிருந்தாள்.


‘எதற்காக நீங்கள் இங்கே வந்தீர்கள்?’ என்று கோவிந்தன் கேட்டார். 


‘நல்ல கதையாக இருக்கிறதே. இன்னும் எத்தனை நாளைக்கு நீ உன் மனைவியைத் தனியே விட்டுவிட்டு குருகுலவாசம் செய்துகொண்டிருப்பாய்? திருமணம் என்று ஒன்று நடந்துவிட்டது. இல்லற தருமம் என்று ஒன்று இருக்கிறது. நேற்று வரைக்கும் தாய்மாமன் வீடு, இன்றைக்கு உடையவர் மடம். நாளைக்கு என்ன செய்வாய் என்று யாருக்குத் தெரியும்? எனக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை. ஒழுங்காக உன் மனைவியோடு குடும்பம் நடத்துகிற வழியைப் பார்’ என்றாள் அம்மா.


கோவிந்தன் யோசித்தார். ஒரு முடிவுக்கு வந்து, ‘சரி அம்மா. கொஞ்சம் பொறுங்கள். இப்போதுதான் இங்கே வந்திருக்கிறேன். சில நாள் போகட்டும்’ என்று சொல்லிவிட்டு அப்போதைக்குத் தப்பித்துப் போனார்.


சில நாள்கள் பொறுத்திருந்துவிட்டு அம்மா மீண்டும் அந்தப் பேச்சைத் தொடங்கியபோது, ‘ஓ, அதற்கென்ன? இருளும் தனிமையும் இருக்கும்போது அவள் வரட்டும்’ என்று சொல்லிவிட்டு மடத்துக்குப் போய்விட்டார்.


கோவிந்தனின் தாயாருக்கு மகிழ்ச்சியானது. மகன் ஒப்புக்கொண்டுவிட்டான். இனி நல்ல நாள் பார்க்க வேண்டியதுதான். உடனே பஞ்சாங்கத்தை எடுத்து வைத்துக்கொண்டு ஆராய ஆரம்பித்துவிட்டாள்.


ஆனால் அவள் பார்த்த நல்ல நாள்களிலெல்லாம் கோவிந்தனைப் பிடிக்க முடியாமல் போனது. இருட்டிய போதெல்லாம் அவர் யாருடனாவது சத்விஷயங்கள் பேசிக்கொண்டிருப்பார். எப்போது உறங்குகிறார் என்றே வீட்டில் அவரது அம்மாவுக்கும் மனைவிக்கும் தெரியாது. தனித்திருக்கும் பொழுதுகள் பெரும்பாலும் பகலாக இருந்தது.


என்ன செய்யலாம், என்ன செய்யலாம் என்று பல நாள் அவள் யோசித்துக்கொண்டே இருந்தாள். மகனிடம் பலவிதமாகப் பேசிப் பார்த்தும் பயனில்லாமல் இருந்தது. வேறு வழியின்றி ஒருநாள் ராமானுஜரிடம் போய் நின்றாள்.


‘நீங்கள் தருமம் அறிந்தவர். கோவிந்தன் செய்வது முறையா?’


‘சரி தாயே. நான் பேசுகிறேன்’ என்று மட்டும் சொல்லிவிட்டு கோவிந்தனை அழைத்தார் உடையவர்.


‘சுவாமி..’


‘உமது மனைவி காத்திருக்கிறாள். ஒரு நல்ல நாள் பார்த்து அவளிடம் போய்ச் சேரும். இது நமது உத்தரவு.’


அதற்குமேல் என்ன பேசுவது? கோவிந்தன் அமைதியாகத் திரும்பிவிட்டார்.


பரபரவென்று வேலை நடந்தது. கோவிந்தனின் தாயார் உடனடியாக ஒரு நாள் பார்த்தார். இருளும் தனிமையுமான பொழுது. தனது மருமகளை அழைத்து அறிவுரைகள் சொல்லி, அலங்காரம் செய்து அறைக்குள் அனுப்பி வைத்தாள்.


‘உட்கார்’ என்றார் கோவிந்தன்.


அவள் அமர்ந்ததும், ‘நீ திருப்பாவை வாசித்திருக்கிறாயா?’


‘இல்லை சுவாமி.’


‘நமது உடையவருக்குத் திருப்பாவை ஜீயர் என்று இங்கே பெயர். அதன் ஒவ்வொரு சொல்லிலும் அவர் தோய்ந்தவர். ஆண்டாளின் மிகக் கனிந்த பக்தியே காதலாக உருப்பெறுகிறது.’


‘ஓ. எப்படியாவது கற்கிறேன்.’


‘கற்றால் போதாது பெண்ணே. அந்த பக்தியைப் பயில வேண்டும். இவ்வுலகில் நாம் பக்தி செய்யவும் நேசம் கொள்ளவும் சீராட்டவும் தாலாட்டவும் தகுதியான ஒரே ஒருவன், எம்பெருமான் மட்டும்தான். பரமனிடம் கொள்ளும் பக்திதான் ஒட்டுமொத்த மனித குலத்தின் மீதான நேசமாக விரிவு கொள்ளும்.’


அவளுக்குச் சங்கடமாக இருந்தது. என்ன பதில் சொல்லுவதென்று தெரியவில்லை. சரி பேசி ஓயட்டும் என்று காத்திருந்தாள்.


கோவிந்தன் நிறுத்தவில்லை. ஆண்டாளில் ஆரம்பித்து அத்தனை ஆழ்வார்களைப் பற்றியும் பேசினார். திருமலையில் நம்பியிடம் தான் பயின்ற பாடங்களை விரிவாகச் சொன்னார். ராமாயணம். ஆ, அது எத்தனை பெரிய மகாசமுத்திரம்!


‘தத்துவங்கள் அனைத்தும் ஒன்றுகூடும் இடம் ஒன்று உண்டென்றால் அது ராமசரிதம்தான். ஒருநாள் உனக்கு ராமாயணம் சொல்ல ஆரம்பிக்கிறேன். கேட்கிறாயா?’


வேறு வழியின்றி அவள் தலையாட்டினாள்.


‘திருமலை நம்பி ராமாயணத்தில் கரை கண்டவர். ஆளவந்தாரிடம் பயின்றவர்களிலேயே அவர் மட்டும்தான் ராமாயண விற்பன்னர். அதை சரியான விதத்தில் உள்வாங்குவது பெரிய காரியம். அது வெறும் கதையல்ல பெண்ணே. மனித குலத்துக்கே அருமருந்தான தத்துவப் பெரும் திரட்டு.’


அவளுக்கு உறக்கம் வந்துவிட்டது. ‘நான் படுத்துக்கொள்ளட்டுமா?’ என்று கேட்டாள்.


‘ஒ, தாராளமாக. தூக்கம் வரும்போது தூங்கிவிடுவதுதான் நல்லது. நீ படு’ என்றார் கோவிந்தன்.


மறுநாள் விடிந்ததும் கோவிந்தனின் அம்மா, தனது மருமகளை அழைத்து ஆர்வமுடன் கேட்டாள், ‘நேற்று என்ன நடந்தது?’


‘அவர் எனக்கு ராமாயணம் சொல்ல ஆரம்பிக்கவிருப்பதாகச் சொன்னார்.’


‘என்னது? ராமாயணமா? விடிய விடிய நீ கேட்ட ராமாயணம் அதுதானா!’


அவள் பதிலேதும் சொல்லவில்லை. அமைதியாக நகர்ந்து போய்விட்டாள். கோவிந்தனின் அம்மாவுக்குக் கடும் கோபம் வந்துவிட்டது. இவன் சரிப்பட மாட்டான்.


மீண்டும் ராமானுஜரிடம் போய் நின்றாள்.


ராமானுஜர் கோவிந்தனை அழைத்து விசாரித்தார். ‘நேற்றிரவு என்ன நடந்தது?’


‘சுவாமி, நீர் சொன்னதை நிறைவேற்றவேண்டுமென்றால் எனக்கு இருளும் தனிமையும் தேவை. அது எனக்கு அமையவில்லை.’


‘என்ன சொல்கிறீர் கோவிந்தப் பெருமானே? இரவு தனியாக நீங்களும் உமது பத்தினியும் மட்டும்தானே அறைக்குள் இருந்தீர்கள்?’


‘யார் சொன்னது? எங்குமுள்ள எம்பெருமான் அங்கும் இருந்தான். அவன் இருந்ததால் இருள் என்ற ஒன்று இல்லாமல் போய்விட்டது. அவன் இருக்கும்போது நான் எப்படி உங்கள் கட்டளையை நிறைவேற்ற முடியும்?’


பேச்சற்றுப் போனாள் கோவிந்தனின் தாய். ராமானுஜருக்கு கோவிந்தனின் மனம் புரிந்துவிட்டது. கொஞ்சம் அவகாசம் எடுத்து, அந்தப் பெண்மணியிடம் விரிவாகப் பேசினார். கோவிந்தனின் மனைவியையும் அழைத்துப் பேசினார். ‘அம்மா! உன் கணவர் வேறு விதமான மன நிலையில் உள்ளார். இல்லற தருமத்தைக் காப்பது அவருக்கு சிரமம். நீதான் புரிந்துகொள்ள வேண்டும்.’


கஷ்டமாக இருந்தாலும் அவளுக்குப் புரிந்தது. துக்கமாக இருந்தாலும் ஏற்றுத்தான் தீரவேண்டும்.


ஒருநாள் அது நடந்தது. உடையவர் கோவிந்தனுக்குத் திரிதண்டமும் காஷாயமும் அளித்து சன்னியாச ஆசிரமத்துக்கு வாயில் திறந்து வைத்தார்.


‘உமக்கு என் பெயரையே தருகிறோம். இனி நீரும் எம்பெருமானார் என்றே அழைக்கப்படுவீர்!’ என்றார் உடையவர்.


‘அது தகாது சுவாமி. தங்கள் உயரம் எங்கே, நான் எங்கே? நான் தங்கள் பாதம் தாங்கியாகவே இருக்க விரும்புகிறேன். தங்கள் பெயரைச் சுமக்குமளவுக்கு எனக்குத் தகுதியில்லை.’


‘சரி. பெயரைச் சற்று சுருக்கலாம். ஆனால் மாற்ற இயலாது. நீர் இனி எம்பார் என அழைக்கப்படுவீர்!’ என்றார் ராமானுஜர்.


(தொடரும்)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 25, 2017 09:30

தஞ்சை பயணம்

மூன்று நாள் தஞ்சை பயணம் முடித்து சென்னை வந்து சேர்ந்தேன்.


பக்திப் பயணமாகத் தீர்மானித்துக் கிளம்பவில்லை என்றாலும் இந்த முறை தஞ்சைப் பயணத்தில் மூன்று திவ்ய தேசங்கள் சேவிக்க முடிந்ததில் மகிழ்ச்சி. கும்பகோணத்தில் ஒப்பிலியப்பன். வெண்ணாற்றங்கரையோரம் உள்ள தஞ்சை மாமணிக் கோயில் (இது த்ரீ இன் ஒன் திவ்யதேசம். நீலமேகப் பெருமாள், மணிக்குன்றப் பெருமாள், நரசிம்மப் பெருமாள் எனத் தனித்தனிக் கோயில்கள். மூன்றும் சேர்த்து ஒரே திவ்யதேசமாகக் கருதப்படுகிறது. நம்மாழ்வார், பூதத்தாழ்வார், திருமங்கையாழ்வார் பாடியிருக்கிறார்கள்). மூன்றாவது, கண்டியூர் ஹரசாப விமோசனப் பெருமாள் கோயில்.


ஒப்பிலியப்பனை விடுங்கள். அவர் சூப்பர் ஸ்டார். எத்தனையோ முறை சேவித்திருக்கிறேன். தஞ்சாவூரில் உள்ள மற்ற நான்கு கோயில்களுக்கும் நான் சென்றது இதுவே முதல்முறை. தஞ்சை மாமணிக் கோயில்களில் உள்ள மூன்று பெருமாளுமே பிரம்மாண்டமான ஆகிருதி. அந்த மணிக்குன்றப் பெருமாளின் அழகு கண்ணிலேயே நிற்கிறது.


இந்தக் கோயில்களை தஞ்சை அரண்மனை தேவஸ்தான நிர்வாகம் கொஞ்சம் சிரத்தை எடுத்துப் பராமரித்தால் நன்றாக இருக்கும். நல்ல மக்கள் நெரிசல் மிக்க சாலையை ஒட்டித்தான் மூன்று கோயில்களுமே உள்ளன. ஆனால் உள்ளே எட்டிப்பார்ப்போர் அதிகமில்லை. நரசிம்மர் கோயில் சாலையை ஒட்டியே இருந்தாலும் கோயில் அதுதான் என்று கண்டுபிடிப்பதே சிரமம்.


ஆனால் மகிழ்ச்சிக்குரிய விஷயம், இந்த மூன்று கோயில்களுக்குமான ஒரே பட்டாச்சாரியார் சமர்த்தராக இருப்பது. ஸ்பஷ்டமாக அர்ச்சனை செய்கிறார். தெளிவாகத் தலவரலாறு சொல்கிறார். கணப்பொழுதில் பைக்கில் தாவி ஏறி மூன்று கோயில்களுக்கும் மாறி மாறிப் பறக்கிறார்.


தாராசுரத்தில் சந்தித்த ஒரு குருக்களும் (பிரசன்ன கணபதி என்று பேர்) இதே மாதிரி படு துடிப்பான மனிதராக உள்ளார். கோயிலெங்கும் கொட்டிக்கிடக்கும் அத்தனை சிற்பங்களையும் நுணுக்கமாக அணுகி விளக்குகிறார். புராணக் கதை சொல்லுவது பெரிய விஷயமல்ல. இரண்டாம் ராஜராஜன் காலத்து அரசியல் ஓரளவு தெரிந்து, செதுக்கப்பட்ட சிற்பங்களின் புராணக் கதைகளை அதனுடன் பொருத்தி விவரிக்கிற பாங்கு பெரிது.


இந்தக் கோடை விடுமுறையில் என் மகளைப் பொன்னியின் செல்வன் படிக்க வைக்கப் போகிறேன். அதற்கு முன்னோட்டமாகத்தான் இந்தத் தஞ்சைப் பயணம். கொஞ்சம் அடிப்படை சரித்திரம் சொல்லி, ஆரம்பித்து வைத்தால் வாசிப்பில் ருசி கூடும். படித்து முடித்தபிறகு மீண்டும் ஒருமுறை அழைத்துச் செல்வதாகச் சொல்லியிருக்கிறேன்.


அப்போது, ‘தஞ்சை வேண்டாம்; இலங்கை போகலாம்’ என்பாளேயானால் அதுவே இப்பயணத்தின் வெற்றி.


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 25, 2017 09:22

March 24, 2017

பொலிக! பொலிக! 71

பெரிய திருமலை நம்பிக்குப் புரிந்தது. தம்பி என்பதனால் அல்ல. வைணவம் பரப்பும் திருப்பணியில் வைராக்கியம் மிக்கவர்களின் பங்களிப்பு அவசியம். அது பெரிய காரியம். ஒரு கோவிந்தனல்ல; ஓராயிரம் கோவிந்தன்கள் இருந்தாலும் போதாத காரியம். எனவே அவர் சற்றும் யோசிக்காமல், ‘இதோ தந்தேன்!’ என்று சொல்லி, கோவிந்தனை அழைத்தார்.


‘கோவிந்தப் பெருமானே, இனி நீர் உடையவரின் சொத்து. அவரோடு கிளம்பிச் சென்று, அவர் சொல்வதைச் செய்துகொண்டிருப்பதே உமது பணி!’ என்று சொன்னார்.


நம்பி சொல்லி கோவிந்தன் எதையும் தட்டியதில்லை. எனவே இதையும் தட்டாமல் ஏற்றுக்கொண்டு ராமானுஜருடன் புறப்பட்டுவிட்டார். 


வழி முழுதும் இருவரும் பேசிக்கொண்டே வந்தார்கள். காளஹஸ்தியில் தாம் தங்கியிருந்த காலம் முதல் பெரிய திருமலை நம்பியிடம் சேர்ந்து பயின்ற தினங்கள் வரை ஒன்று விடாமல் கோவிந்தன் ராமானுஜருக்குச் சொல்லிக்கொண்டே வந்தார்.


‘சுவாமி, எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. தாங்கள் சன்னியாச ஆசிரமம் ஏற்று, திருவரங்கத்துக்குச் சென்றபிறகு எத்தனையோ பலர் தங்களை அண்டி சீடர்களாகித் தங்களுடனே சேர்ந்திருக்கிறார்கள். நீங்கள் ஒருவார்த்தை சொல்லியிருந்தால் நான் என்றோ திருவரங்கம் வந்திருப்பேனே? எதற்காக இத்தனை ஆண்டுக்காலம் என்னை இங்கே இருக்க விட்டீர்?’ என்றார் கோவிந்தன்.


ராமானுஜர் சில வினாடிகள் அமைதியாக இருந்தார். பிறகு, ‘கோவிந்தரே, சிறு வயதிலேயே நீர் என்னினும் பக்குவம் பெற்றிருந்தீர். நீர் பாடம் பயில நம்பியின் இடமே சரியான ஆசாரிய பீடம் என்று கருதினேன். தவிர, நான் உறவறுத்தவன். சன்னியாச ஆசிரமம் பூண்டவன். என் இடத்தில் உம்மை வரவழைத்துக்கொண்டால் அது உமது இல்லற தருமத்துக்கு இடையூறாக செய்யலாம். எதுவும் தானாக அமைய வேண்டுமல்லவா?’


கோவிந்தனுக்குப் புரிந்தது. ஆனால் ஒன்றும் சொல்லவில்லை. இடைப்பட்ட காலத்தில் அவரது தனி வாழ்க்கை என்னவாக இருந்தது என்று அவர் உடையவரிடம் சொல்லியிருக்கவில்லை. கோவிந்தனுக்குத் திருமணம் ஆகியிருந்தது. ஆனால் மனைவி அவளது பெற்றோருடன்தான் இருந்தாள். வயது வரும் வரை அதுதான் முறை என்று கோவிந்தனின் தாயாரும் பொறுத்திருந்தார். ஆனால் அவள் குடும்ப வாழ்வுக்கு ஆயத்தமானபோதும் கோவிந்தனுக்கு அதில் பற்றற்று இருந்தது. எப்போதும் இறை சிந்தனை. எப்போதும் கைங்கர்யம். பெரிய திருமலை நம்பியைவிட்டு கணப் பொழுதும் அகலாதிருந்து, அவருக்குச் சேவையாற்றிக்கொண்டிருப்பது. இவற்றைத் தவிர கோவிந்தனுக்கு வேறெதிலுமே நாட்டமற்றிருந்தது. ‘அண்ணா, என் சுபாவத்துக்குப் பொருத்தமற்ற ஒரு ஆசிரமத்தை நான் எப்படி ஏற்பேன்?’ என்று கேட்டுவிடத்தான் துடித்தார். ஆனால் இப்போது உடையவர் அண்ணன் உறவில் இல்லை. அவர் ஆசாரிய ஸ்தானத்தில் இருக்கிறவர். தவிர அனைத்தையும் விண்டுரைத்துக்கொண்டு இருப்பதில் என்ன இருக்கிறது? காலமும் கடவுளும் கட்டளையிட்டு வழிநடத்திக்கொண்டிருக்கிறார்கள். அதற்குக் கட்டுப்பட்டுப் போய்க்கொண்டிருந்தால் போதுமானது என்று அவருக்குத் தோன்றியது.


திருவரங்கம் திரும்பும் வழியில் இருந்த அனைத்து திவ்ய தேசங்களையும் ராமானுஜர் சேவித்துக்கொண்டே வந்தார். சோளிங்கபுரம் வந்து சேர்ந்தபோது அவர் மனத்தில் என்னவோ ஒன்று நெருடியது. கோவிந்தனை உற்றுப் பார்த்தார். முகம் வாடியிருந்தது. எதையோ நினைத்து அவர் கவலைப்பட்டுக்கொண்டும் ஏங்கிக்கொண்டும் இருப்பதாகத் தோன்றியது.


‘கோவிந்தப் பெருமானே, என்ன யோசனை?’


‘ஒன்றுமில்லை சுவாமி. பெரியவரைத்தான் நினைத்துக்கொண்டிருந்தேன். அவரும் என்னைத்தான் நினைத்துக்கொண்டிருப்பார். இருந்த காலத்தில் ஒரு நாள்கூட அவரை விட்டு நான் பிரியவேயில்லை. தாய்மாமனாக இருந்து குருவானவர். வாழ்வில் நான் பெற்ற நல்லதற்கெல்லாம் காரணமாக இருந்தார். சட்டென்று விட்டுவிட்டுப் புறப்பட்டுவிட்டோமே என்று…’


‘சரி, ஒன்று செய்யும். நீர் சென்று பெரிய திருமலை நம்பியுடன் இன்னும் சில காலம் இருந்துவிட்டு வாரும்!’


திடுக்கிட்டுப் போனார் கோவிந்தன்.


‘இது நமது நியமனம். இன்றே கிளம்பிவிடுங்கள்’ என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார் ராமானுஜர்.


இதுவும் எம்பெருமான் சித்தம் என்று கருதிய கோவிந்தன், உடையவர் அனுப்பிய இரண்டு பேர் துணையுடன் மீண்டும் திருமலைக்குப் போய்ச் சேர்ந்தார். ராமானுஜரும் அவரது சீடர்களும் காஞ்சிக்கு வந்து சேர்ந்தார்கள். அங்கே மீண்டும் திருக்கச்சி நம்பியைச் சந்தித்து அவரோடு சிறிது காலம் தங்கி, பேரருளாளனை சேவித்துக்கொண்டிருந்தார் ராமானுஜர்.


திருமலைக்குச் சென்ற கோவிந்தன், நம்பியின் வீட்டை அடைந்தபோது, ‘யாரது?’ என்றார் பெரியவர்.


‘குரல் தெரியவில்லையா? நமது கோவிந்தன் தான் வந்திருக்கிறான்!’ என்றார் அவரது மனைவி.


‘கோவிந்தனா? அவனை யார் இங்கு வரச் சொன்னது? அப்படியே கிளம்பச் சொல்லு.’


திடுக்கிட்டுப் போனார் அவர். வெளியே நின்றிருந்த கோவிந்தனுக்கும் இது கேட்டது.


‘என்ன இப்படிச் சொல்கிறீர்கள்? எத்தனையோ தொலைவு பயணம் செய்து வந்திருக்கிறான். ஒரு வாய் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பச் சொன்னால்கூட நியாயம். அதை விட்டுவிட்டு…’


‘விற்ற பசுவுக்குப் புல் இடுவார்களா? அவன் போய்ச் சேர்ந்த இடம்தான் இனி அவனுக்குக் கதி. இதைச் சொல்லி வாசலோடு அனுப்பிவிடு’ என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார்.


கொடுத்ததைத் திரும்பப் பெறுவது வைணவ தருமமல்ல. பாடங்களின் இடையே எத்தனையோ முறை நம்பி இதனைச் சொல்லியிருக்கிறார். இதோ மீண்டுமொரு முறை அனுபவமாக மலர்கிற பாடம். கோவிந்தனுக்குப் புரிந்தது. அங்கிருந்தே கைகூப்பி வணங்கிவிட்டு மீண்டும் ராமானுஜரைத் தேடிக் கிளம்பிவிட்டார்.


வேகவேகமாகப் பயணம் செய்து அவர் காஞ்சிக்கு வந்து சேர்ந்தபோது ராமானுஜர் அங்கே கிளம்பத் தயாராக இருந்தார்.


‘என்ன ஆயிற்று கோவிந்தரே? ஏன் வந்துவிட்டீர்?’


கோவிந்தன் நடந்ததைச் சொன்னார். கண்மூடி யோசித்த ராமானுஜர், ‘அப்படியானால் சரி. திருவரங்கம் வந்துவிடுங்கள்’ என்று அழைத்துக்கொண்டு புறப்பட்டார்.


‘பற்றும் பாசமும் என்றும் துக்கமே. அன்று கேட்டீர்களே, ஏன் உம்மை என் பக்கத்தில் வைத்துக்கொள்ளவில்லை என்று..’


‘புரிகிறது சுவாமி.’


‘உமக்குப் பெரிய திருமலை நம்பியின் மீதுள்ளது மரியாதை கலந்த பாசம். அவர் உம்மீது வைத்திருப்பதோ அன்பு கலந்த நேசம். அந்த நேசம்தான் வீட்டுக்குள்கூட விடாமல் விரட்டியடிக்கவும் செய்தது. இந்த அனைத்தையும் எம்பெருமானின் பாதாரவிந்தங்களில் கொண்டு சேர்ப்பதுதான் நாம் உய்ய ஒரே வழி.’


இந்தச் சொற்கள் கோவிந்தனின் வைராக்கியத்தை மேலும் பட்டை தீட்டியது. அவர் இன்னும் கூர்மையடைந்தார். கண்ணாடியைக் கழுவித் துடைத்து மாட்டுவது போல மனத்தை நிர்மலமாக்கி எம்பெருமான் திருவடிகளில் சமர்ப்பித்தார்.


சொல்லிவைத்த மாதிரி அவருக்கு வேறொரு சிக்கல் உடனே வந்து சேர்ந்தது.


(தொடரும்)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 24, 2017 09:30

March 23, 2017

பொலிக! பொலிக! 70

பூத்துப் பரந்திருந்தது நந்தவனம். பசுமைக்கு இடப்பட்ட வண்ணமயமான கிரீடங்களாகக் காண்கின்ற இடமெல்லாம் பூக்கள். அது மலையின் மகிழ்ச்சி. அனந்தனின் பக்தியின் விளைவு.


‘சுவாமி, இந்த நந்தவனத்துக்குத் தங்கள் பெயரைத்தான் இட்டிருக்கிறேன். பக்கத்திலேயே சிறியதாக ஏரியொன்றையும் வெட்டியிருக்கிறேன். எனக்கு நீர் ஆதாரம் என்றால் இந்த வனத்துக்கு நீரே ஆதாரமல்லவா?’


ராமானுஜர் புன்னகை செய்தார். ‘அனந்தாழ்வான், உன்னை வளர்த்ததை நினைத்துப் பெருமை கொள்கிறேன். உன் மனம் போலவே மலர்ந்திருக்கிறது இந்த நந்தவனம். பெருமானுக்குப் புஷ்ப கைங்கர்யம் தவறாது நடக்க இது என்றென்றும் மலர்ந்து கிடக்கட்டும்!’ என்று ஆசீர்வதித்தார். 


அன்று மதியம் உண்டு முடித்து, சிறிது ஓய்வெடுத்த பின்பு, ‘கிளம்பலாமா’ என்றார் ராமானுஜர்.


‘அடடா, திவ்யதேசத்துக்கு வந்தால் மூன்று நாள்களாவது அங்கு தங்கியாக வேண்டும் என்பது சாஸ்திரம். இன்றே கிளம்பக்கூடாது ராமானுஜரே!’ திருமலை நம்பி தடுத்தார்.


‘தங்க வேண்டும்தான். ஆனாலும் வானவர்களும் முனி சிரேஷ்டர்களும் வந்து உலவுகிற இடம் இது. கால் வைக்கிற கணமெல்லாம் உறுத்துகிறதே.’


‘இருக்கட்டும் உடையவரே. ஆதிசேஷனின் அம்சமான தாங்கள் எந்த வானவருக்கும் கீழானவரல்லர்.’


‘அபசாரம். திருமலையில் உள்ள அனைவரிலும் சிறியவன் என்று நீங்கள் உங்களைச் சொல்லிக்கொண்டீர்கள். அப்படியென்றால் உங்கள் மாணவனாகிய நான் யார்?’


‘அதெல்லாம் முடியாது. நீங்கள் இன்றே புறப்படுவது நடக்காது. மூன்று நாள்களாவது இருந்துவிட்டுத்தான் போகவேண்டும்!’ என்று தீர்மானமாகச் சொன்னார் பெரிய திருமலை நம்பி.


வேறு வழியின்றி ராமானுஜர் மூன்று தினங்கள் திருமலையில் தங்கினார்.


‘சுவாமி, நான் இங்கே வந்ததன் நோக்கம் அனந்தாழ்வானின் நந்தவனத்தைக் கண்டுசெல்வதும் திருவேங்கடமுடையானைச் சேவித்துச் செல்வதும் மட்டுமல்ல.’


‘பிறகு?’


‘நமது ஆசாரியர் ஆளவந்தாரிடம் இருந்து ராமாயணத்தை முற்று முழுதாகக் கற்றுத் தேர்ந்தவர் தாங்கள். தங்களிடம் ராமாயணப் பாடம் கேட்கவேண்டுமென்பது என் விருப்பம்.’


பெரிய திருமலை நம்பி புன்னகை செய்தார்.


‘பெரிய நம்பியிடம் பாடம் கேட்டேன். திருக்கோட்டியூர் நம்பியிடம் கேட்டேன். திருவரங்கப் பெருமாள் அரையரிடம் பயின்றேன். திருமாலிருஞ்சோலைக்குப் பெருமை சேர்க்கும் திருமாலை ஆண்டானிடம் திருவாய்மொழி அறிந்தேன். ஆளவந்தாரின் ஐம்பெரும் சீடர்களுள் ஒருவரான தங்களிடம் ராமாயணமும்  பயின்றுவிட்டால் பிறவிப் பயனடைவேன்.’


சிறு வயதில் ராமானுஜருக்குச் சில பாசுரங்களும் சுலோகங்களும் கற்றுத் தந்தது பெரிய திருமலை நம்பிக்கு நினைவு வந்தது. எத்தனை வருடங்கள் கழித்துக் காலம் மீண்டும் ஒன்றிணைத்திருக்கிறது! இன்று ராமானுஜர் அன்று கண்ட இளையாழ்வான் அல்ல. துறவிகளின் அரசரெனப் போற்றப்படுகிறவர். வைணவ தரிசனத்தை வழிநடத்த இவரே சரியென ஆளவந்தார் தேடிப் பிடித்து அடையாளம் காட்டிப் போனது, சீடர்களான தங்களில் ஒருவரையல்ல. ராமானுஜரைத்தான். அது எத்தனை சரி என்று காலம் நிரூபித்துக்கொண்டிருக்கிறது. நூறு நூறாக, ஆயிரம் ஆயிரமாக, ஊர் ஊராக, கிராம நகரங்களாக மக்கள் அவரை அண்டித் தாள் பணிந்துகொண்டிருக்கிறார்கள். மன்னர்கள் வரிசையில் வந்து வணங்கி ஏற்கிறார்கள். அவர்கள் தத்துவம் முற்றிலும் புரிந்து வருகிறவர்கள் அல்லர். இம்மனிதர் சத்தியமன்றி இன்னொன்றைப் பேசமாட்டார் என்ற நம்பிக்கையில் வருவது. இது அனைவருக்கும் சாத்தியமல்ல. வேறு யாருக்குமே சாத்தியமல்ல. அவர் ஒரு சக்தி. ஒரு பெரும் விசை. இது நிகழவேண்டும் என்று இருக்கிறது. அதனால் நிகழ்கிறது.


பெரிய திருமலை நம்பி அன்போடு ராமானுஜரின் கரங்களைப் பிடித்துக்கொண்டார். ‘ராமாயணம்தானே? தொடங்கிவிடலாம்!’


மூன்று நாள்களுக்குப் பிறகு மலையடிவாரத்தில் இருந்த பெரிய திருமலை நம்பியின் இல்லத்துக்கு அவர்கள் வந்து சேர்ந்தார்கள்.


‘கோவிந்தப் பெருமானே!’ நம்பி உள்ளே பார்த்துக் குரல் கொடுத்தார்.


‘சுவாமி!’ என்று ஓடி வந்த கோவிந்தன், உடையவரைக் கண்டதும் ஒரு கணம் திகைத்து நின்றுவிட்டார்.


ராமானுஜர் புன்னகையுடன் நெருங்கி, ‘எப்படி இருக்கிறீர் கோவிந்தப் பெருமானே?’


‘ஐயோ அபசாரம்! தாங்கள் என்னை இப்படி மரியாதையாக அழைப்பது அடுக்காது.’


‘வயது முதல் ஞானம் வரை அனைத்திலும் நம் அனைவரைக் காட்டிலும் உயர்ந்தவரான நம்பிகளே தங்களை அப்படி அழைக்கிறபோது நான் மட்டும் வேறெப்படி அழைப்பேன்?’ என்றார் ராமானுஜர்.


விந்திய மலைக்காட்டில் கடைசியாகக் கண்ட கோவிந்தன். அண்ணா அண்ணா என்று என்றும் எப்போதும் பின்னால் வந்தவன். சட்டென்று ஒருநாள் காணாமல் போய்விட்டான். ஆனால் ராமானுஜர் அவனை என்றைக்குமே நினைக்காதிருந்ததில்லை. காளஹஸ்தியில் அவனைச் சந்தித்து மனம் மாற்றி அழைத்துவர அவர் பெரிய திருமலை நம்பியைத் தேர்ந்தெடுத்ததன் காரணம், அருகே இருக்கிறார் என்பது அல்ல. சிலரால்தான் சில காரியங்கள் முடியும். கல்லைத் தகர்ப்பதினும் கடினம், சில வைராக்கியங்களை வெல்வது. திருமலை நம்பிக்கு அது எளிது. அதனால்தான் கோவிந்தனைத் தடுத்தாட்கொள்ள அவரை அனுப்பிவைத்தார். மருமகனுக்குத் தெரியாதா தாய்மாமன் சுபாவம்?


‘சுவாமி, கோவிந்தப் பெருமான் தற்போது எப்படி இருக்கிறார்?’ தனியே இருக்கும்போது உடையவர் கேட்டார்.


‘என்னத்தைச் சொல்ல? அவர் ஒரு வைராக்ய சிகாமணி. உலகப்பற்று என்பது அறவே இல்லாத ஜீவன். சிவஸ்மரணையில் இருந்து விடுபட்டு எம்பெருமானின் திருவடித் தாமரைகளைப் பற்றிக்கொண்டது மட்டும்தான் ஒரே மாற்றம். மற்றபடி அவரது அலாதியான சுபாவத்தில் எந்த மாற்றமும் இல்லை.


‘நல்ல விஷயம்தானே?’


‘நாமெல்லாம் வைணவம் இன்னதென்று அறிந்து ஏற்றவர்கள். அவர் இயல்பிலேயே அதுவாக இருக்கிறவர். அது தெரியுமோ உமக்கு?’


‘அப்படியா!’


‘ஒருநாள் பாம்பு ஒன்றைப் பிடித்து வைத்துக்கொண்டு அதன் வாயில் கையைவிட்டு என்னவோ செய்துகொண்டிருந்தார். பதறிப் போய் விசாரித்தால் பாம்பின் வாயில் முள் தைத்திருக்கிறது. அதை எடுத்துக்கொண்டிருக்கிறேன் என்கிறார். விளைவை எண்ணாமல் துயர் துடைத்தல் அல்லவா வைணவ தர்மத்தின் உச்சம்? அவர் அங்கேதான் வாசம் செய்துகொண்டிருக்கிறார்’ என்றார் பெரிய திருமலை நம்பி.


ராமானுஜர் புன்னகை செய்தார்.


ஒரு நல்ல நாள் பார்த்து பெரிய திருமலை நம்பி ராமானுஜருக்கு ராமாயணம் சொல்ல ஆரம்பித்தார். கணப் பொழுதில் ஒரு முழு வருடம் ஓடி மறைந்த தருணத்தில் காலட்சேபம் முடிந்திருக்க, கிளம்பலாம் என்று ராமானுஜருக்குத் தோன்றியது.


‘ஆம். கிளம்பத்தான் வேண்டும். உம்மை நிரந்தரமாக இங்கே பிடித்து வைக்கவா முடியும்? ஆனால் உமக்கு என் அன்பின் பரிசாகக் கொடுத்தனுப்ப என்னிடம் எதுவுமே இல்லையே?’ வருத்தத்தோடு சொன்னார் நம்பி.


ராமானுஜர் ஒரு கணம் யோசித்தார். ‘கோவிந்தனைக் கொடுத்துவிடுங்களேன்!’


(தொடரும்)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 23, 2017 09:30

March 22, 2017

பொலிக! பொலிக! 69

ராமானுஜர் திருப்பதிக்கு வருவதற்கு முன்னமே அந்தப் பகுதி மக்களுக்கு அவரது பெயர் பரிச்சயமாக இருந்தது. திருவரங்கத்தில் அவர் செய்துகொண்டிருந்த சமயப் புரட்சி குறித்து திருப்பதி வட்டாரத்தை ஆண்டுகொண்டிருந்த மன்னன் விட்டல தேவன் அறிந்திருந்தான். உடையவர் திருமலைக்கு வரவிருக்கிறார் என்கிற தகவல் பெரிய திருமலை நம்பி மூலம் தெரிய வந்ததுமே மன்னன் அவரை வரவேற்க எல்லா ஏற்பாடுகளும் செய்து வைத்திருந்தான்.


திருப்பதியில் அவர் கால் வைத்ததுமே மன்னனும் மக்களும் அவரைச் சூழ்ந்துகொண்டுவிட்டார்கள். திருமலைக்குச் செல்வது பற்றி யோசிக்கக்கூட அவகாசமின்றி உடையவர் அவர்களுடன் நாளும் பொழுதும் பேசிக்கொண்டே இருந்தார். பக்தியின் மிகக் கனிந்த நிலையில் இருக்கிற ஒருவர். பரமாத்ம சிந்தனை தவிர இன்னொன்று இல்லாதவர். பார்க்கிற அனைவரையும் சமமாக பாவிக்கிற மனிதர். அரசனும் குடிமக்களும் அவருக்கு ஒன்றே. மன்னனுக்குத் தனி ஆசனம் கிடையாது. உட்கார். சத்விஷயம் கேட்க வந்தாயா? கேள். அவர்களும் கேட்பார்கள். சந்தேகம் கேட்கிறாயா? தாராளமாகக் கேள். ஒரு மனிதன் ஒவ்வொரு விஷயத்திலும் அடைகிற தெளிவானது ஊருக்கு நல்லது செய்யும். அனைத்திலும் தெளிவுறும்போது கண்ணுக்குப் புலப்படாத அமைதிப் பேருலகில் அவன் வசிக்கத் தொடங்குகிறான். அங்கே பகவானுக்கும் பக்தனுக்கும் மட்டுமே இடம்.


இப்படி ஒவ்வொருவரும் அடைகிற அமைதியும் தெளிவுமே ஒரு திருக்கூட்டத்தை சாத்தியமாக்குகிறது. ஊருக்கொரு திருக்கூட்டம். உலகெல்லாம் திருக்கூட்டம். பார்க்குமிடமெல்லாம் பாகவதப் பெருமக்களே நிறைந்திருந்தால் பேதங்கள் இல்லாது போகும். குலமோ செல்வமோ வேறெதுவோ அங்கே அடிபட்டுப் போகும். பக்தன், தனக்கும் பகவானுக்கும் நடுவே உள்ள இடைவெளியை அப்போதுதான் கடக்க முடியும். அவனை நெருங்க அது ஒன்றே வழி. பேதமற்ற பெருவழி.


ராமானுஜரின் சொற்பொழிவுகள் திருப்பதி மக்களைக் கட்டிப் போட்டன. விட்டல தேவன் தன்னை மறந்தான். ஆட்சி அதிகாரங்களை மறந்தான். அகங்காரம் விட்டொழித்தான். ‘உடையவரே, எனக்கு உங்கள் திருவடி சம்பந்தம் அளியுங்கள்’ என்று தாள் பணிந்தான். முப்பது பெரும் வயல்வெளிகள் நிறைந்த இளமண்டியம் என்னும் ஊரையே அவருக்கு எழுதிக் கொடுத்தான்.


‘மன்னா, நிலத்தை வைத்துக்கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன்? அன்பே தகளியாய், ஆர்வமே நெய்யாய், இன்புருகு சிந்தை இடுதிரியாய் நம்பி ஞானத் திருவிளக்கேற்றுவதல்லவா நமது பணி? இந்தக் கிராமத்தை பாகவத உத்தமர்களுக்கு அளியுங்கள். பேதமின்றி அவர்கள் சேர்ந்து வாழட்டும். எந்நேரமும் பிரபந்தம் ஒலிக்கும் திருநகராக அம்மண் விளங்கட்டும்’ என்றார் உடையவர்.


கீழ்த்திருப்பதிக்கு வந்து இதையெல்லாம் கேள்விப்பட்டு அறிந்த அனந்தாழ்வான், மன்னனால்தான் உடையவர் மலையேறி வர மறுக்கிறாரோ என்று சந்தேகப்பட்டான்.


‘இல்லை அனந்தா! இம்மலையை சேஷாசலம் என்பார்கள். ஆதிசேஷன்மீது பாதம் படுவது அபசாரம்.’


‘இது உங்களுக்கு முன்னமே தெரியாதா சுவாமி? என்னை மட்டும் எதற்காக அனுப்பினீர்கள்? அங்கு எதற்கு ஒரு பெருமாள்? எதற்காக அவனுக்கொரு நந்தவனம்? தவிர, நீங்கள் இன்று திருமலைக்கு வர மறுத்துத் திரும்பிச் சென்று விட்டால் நாளை உடையவரே கால் வைக்க மறுத்த இடத்துக்கு நாங்கள் எப்படிச் செல்வது என்று பக்தர்களும் வராதிருந்துவிடுவார்கள் அல்லவா?’


விட்டல தேவனும் மற்றவர்களும் அவர் மலைக்குச் செல்வதில் தவறில்லை என்று திரும்பத் திரும்பச் சொன்னார்கள். ராமானுஜர் யோசித்தார்.  பிறகு ஒரு முடிவுடன் சொன்னார், ‘சரி வருகிறேன். ஆழ்வார்கள் கால் வைக்கத் தயங்கிய மலையில் கண்டிப்பாக என் கால்களும் படாது.’


அது நிகழ்ந்தது. ஏழு மலைகளையும் அவர் தவழ்ந்தே ஏறிக் கடந்தார். உடன் வந்த சீடர்களுக்கும் பக்தர்களுக்கும் என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை. இப்படி ஒரு பக்தி, இப்படியொரு பணிவு, இப்படியொரு தீர்மானம் சாத்தியமாகுமா? ‘இவர் மனிதப் பிறவியே இல்லை. நிச்சயமாக ஓர் அவதாரம்தான்’ என்றான் விட்டல தேவன்.


‘அதிலென்ன சந்தேகம் மன்னா? உடையவர் ஆதிசேஷனின் அம்சம். தன்மீது தானே தவழ்ந்து செல்கிறார் இப்போது!’


இதற்குள் உடையவர் மலைக்கு வந்துகொண்டிருக்கிறார் என்ற விவரத்தை அனந்தாழ்வான் சில வேடர்கள் மூலம் மலைமீதிருந்த பெரிய திருமலை நம்பிக்குச் சொல்லி அனுப்பியிருந்தான். அவரை எதிர்கொண்டு அழைப்பதற்காகத் திருவேங்கடமுடையானின் தீர்த்தப் பிரசாதங்களை எடுத்துக்கொண்டு நம்பி தமது சிஷ்யர்களுடன் மலையை விட்டு இறங்கத் தொடங்கினார். தவழ்ந்து சென்றுகொண்டிருந்த ராமானுஜர் காலி கோபுரத்தை (காலி என்றால் காற்று) நெருங்குவதற்குள், திருமலை நம்பியின் பரிவாரம் ஆறு மலைகளைக் கடந்து இறங்கி வந்துவிட்டிருந்தது.


காலி கோபுர வாசலில் பெரிய திருமலை நம்பியைக் கண்ட உடையவர் திகைத்துப் போனார். சட்டென்று அவர் கண்கள் நிறைந்தன.


‘சுவாமி, என்னை வரவேற்கத் தாங்கள் வரவேண்டுமா? அதுவும் இத்தள்ளாத வயதில்? யாராவது சிறியவர்களை அனுப்பினால் போதாதா?’


திருமலை நம்பி பரவசத்துடன் ராமானுஜரை நெருங்கினார். ‘உடையவரே! யாராவது சிறியவரை அனுப்பியிருக்கலாம்தான். ஆனால் மலைமீது நாலாபுறமும் தேடிப் பார்த்துவிட்டேன். என்னைக் காட்டிலும் சிறியவன் அங்கு யாருமே இல்லை!’ என்று சொன்னார்.


வாயடைத்துவிட்டது கூட்டம்.


‘ஆ, எப்பேர்ப்பட்ட பணிவு! ஆளவந்தாரின் சீடர்கள் அத்தனை பேருமே இப்படித்தானா!’ என்று வியந்தார்கள் ராமானுஜரின் சீடர்கள்.


ஒருவருக்கொருவர் நலம் விசாரித்து, திருவரங்கத்தில் நிகழ்ந்த சம்பவங்களைப் பேசிக்கொண்டு அவர்கள் திருமலை மீதேறி வந்து சேர்ந்தார்கள். குளத்தில் நீராடி, வராகப் பெருமாளைச் சேவித்துவிட்டு, திருமலையப்பனின் ஆலயத்துக்குள் நுழைந்தார் உடையவர். சட்டென்று அவர் மனத்தில் தோன்றியது நம்மாழ்வாரின் ஒரு வரிதான். ‘புகல் ஒன்றில்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே!’


சன்னிதியில் நின்றபோது பரவசத்தில் அவர் கண்கள் நிறைந்து சொரிந்தன. கிடந்தவனாகத் திருவரங்கத்தில் ஆண்டுக்கணக்கில் கண்டவனை,  நின்றவனாகக் காணக்கிடைக்கிற தருணம். எந்தக் கணமும் ‘இதோ வந்தேன்’ என்று ஓரடி முன்னால் எடுத்து வைத்துக் கைநீட்டி ஏந்திக்கொள்வானோ என்று ஏங்கச் செய்கிற எம்பெருமான். வைத்த கண் வாங்காமல் விழுங்கிக்கொண்டிருந்தார் ராமானுஜர். கருணை தவிர மற்றொன்று அறியா விழிகள். அபயமன்றி இன்னொன்று வழங்காத கரங்கள். துயரம் அனைத்தையும் தூளாக்கிப் புதைக்கிற பாதங்கள்.


‘எம்மானே! ஏறி வருகிற யாவருக்கும் என்றென்றும் ஏற்றம் கொடு!’ என்று மனமுருக வேண்டிக்கொண்டார்.


‘போகலாமா?’ என்றான் அனந்தாழ்வான்.


‘எங்கே?’


‘சுவாமி, நந்தவனம் தங்களுக்காகக் காத்திருக்கிறது!’


புறப்பட்டார்கள்.


(தொடரும்)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 22, 2017 09:30

March 21, 2017

பொலிக! பொலிக! 68

இன்று எப்படியும் உடையவர் கீழ்த்திருப்பதிக்கு வந்து சேர்ந்துவிடுவார் என்று கோவிந்தன் சொல்லியிருந்தார். அனந்தாழ்வானுக்கு ஒரே பரபரப்பாகிவிட்டது. சற்றும் உறக்கமின்றி இரவைக் கழித்துவிட்டு அதிகாலை எழுந்து குளிக்கப் போனான்.


இருளும் பனியும் கவிந்த திருமலை. நரம்புகளை அசைத்துப் பார்க்கிற குளிர். உறக்கம் தொலைந்தாலே குளிர் பாதி குறைந்துவிடுகிறதுதான். ஆனாலும் நினைவை அது ஆக்கிரமித்துவிட்டால் வெயிலடிக்கிற போதும் குளிர்வது போலவேதான் இருக்கும். குளிரை வெல்லத் திருமங்கையாழ்வார்தான் சரி. தடதடக்கும் சந்தங்களில் எத்தனை அற்புதமான பாசுரங்கள்!


அனந்தாழ்வான் குளிக்கப் போகிறபோதெல்லாம் திருமங்கை ஆழ்வாரின் பாசுரங்களைத்தான் சொல்லிக்கொண்டு போவான். உச்சரித்தபடியே ஏரியில் பாய்ந்தால் முதல் கணம் குளிர் நம்மை விழுங்கும். மறுகணம் நாம் அதை விழுங்கிவிடலாம்.


குளித்தெழுந்து அவன் கரைக்கு வந்தபோது விடியத் தொடங்கியிருந்தது. ஈரத் துண்டால் துடைத்தான். காலைத் துடைத்தபோது அந்தத் தழும்பைச் சற்று உற்றுப் பார்த்தான். பாம்பு கடித்து வந்த தழும்பு. அனந்தனுக்குச் சட்டென்று சிரிப்பு வந்துவிட்டது.


நந்தவன வேலை வேகமாக நடந்துகொண்டிருந்தபோது ஒரு நாள் அவனைப் பாம்பு தீண்டியது. கணப் பொழுது வலி. நீரில் குதிக்கிற போது முதல் கணம் தாக்குகிற குளிர்ச்சியின் வீரியம் போன்றதொரு வலி. ஆனால் கணப் பொழுதுதான். கடித்த பாம்பைத் தூக்கி ஓரமாக விட்டுவிட்டு மண்வெட்டியுடன் மீண்டும் வேலையில் ஆழ்ந்துவிட்டான். ரத்தம் சொட்டிக்கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் பாம்பு கடித்ததையும் வலி என்ற ஒன்று இருப்பதையும் அவன் முழுதாக மறந்து போனான். மண்ணும் மண்வெட்டியும் மட்டுமே புத்தியில் நின்றது. இங்கே ஒரு சோலை மலரப் போகிறது. வண்ணமயமான மலர்கள் பூத்துக் குலுங்கப் போகின்றன. ஒவ்வொரு மலரும் திருவேங்கடமுடையானின் திருமுடியை, தோள்களை, பாதங்களை அலங்கரிக்கப் போகின்றன. எங்கிருந்து வருகின்றன இம்மலர்கள் என்று கேட்போரிடமெல்லாம் ராமானுஜ நந்தவனத்தைப் பற்றிச் சொல்லப் போகிறார்கள். திருமலையில் எம்பெருமானுக்குப் பிறகு உடையவரின் பெயர் எப்போதும் மணக்க மணக்க நிலைத்திருக்கும்.


எண்ணம் ஒரு தியானமாகி செயலின் வேகம் கூடியது. அவன் பாம்பு கடித்ததை முற்றிலும் மறந்து வேலை செய்துகொண்டிருந்தபோது பெரிய திருமலை நம்பியும் கோவிந்தனும் அந்தப் பக்கம் வந்தார்கள்.


‘வரவேண்டும் சுவாமி! அப்படி உட்காருங்கள்’ என்றான் அனந்தன்.

அவன் கண்கள் சுருங்கியிருப்பதை நம்பி பார்த்தார். என்னவோ தவறென்று பட, சட்டென்று அவன் நாடி பிடித்துப் பார்த்தார். அதற்குள் கோவிந்தன் அவன் காலில் வழியும் ரத்தத்தைக் கண்டு பதறி, ‘சுவாமி, இங்கே பாருங்கள்!’


‘அட, ஆமாம்! ரத்தம் வருகிறதே!’


‘அனந்தா என்ன இது? பாம்பு தீண்டியிருக்கிறது. அதுகூடத் தெரியாமலா நீ வேலை செய்துகொண்டிருக்கிறாய்?’


‘பாம்பு தீண்டியது தெரியும் சுவாமி. அதற்காக வேலையை எதற்கு நிறுத்துவானேன்?’


‘அறிவிருக்கிறதா உனக்கு? பாம்பு கடித்தால் உடனே மருந்திட வேண்டும். இல்லாவிட்டால் உயிர் போய்விடும்!’


அனந்தன் சிரித்தான். ‘உயிர்தானே? சந்தோஷமாகப் போகட்டுமே சுவாமி! இன்றே இறந்தால் சொர்க்கத்தில் உள்ள விரஜா நதிக்கரையோரம் நந்தவனம் அமைப்பேன். இன்னும் சிலநாள் இருந்தால் இங்கே நானே வெட்டிய ஏரிக்கரையோரம் ஏகாந்தமாக எம்பெருமானைத் துதித்துக்கொண்டிருப்பேன். எங்கு போனாலும் என் பணி அதுதானே?’


திகைத்துவிட்டார்கள் இருவரும்.


‘இது தவறு அனந்தா. நீ வா. உடனே உனக்கு பச்சிலை வைத்துக் கட்டவேண்டும்!’


‘இல்லை சுவாமி. அது வெறும் நேர விரயம். எனக்கு வேலை எக்கச்சக்கமாக இருக்கிறது. இந்த மலையே ஆதிசேஷனின் ரூபம்தான். ஏறி வந்தவனை வாரி விழுங்கிவிடுவானா அவன்? அதுவுமில்லாமல் அதே ஆதிசேஷனின் அம்சமான உடையவரின் மாணவன் நான். என் குரு என்னை எப்படி தண்டிப்பார்?’


கடைசிவரை அவன் பாம்புக் கடிக்கு மருந்திடவே இல்லை. அவனது நம்பிக்கை அன்று அவன் உயிரைக் காத்தது.


நடந்ததை நினைத்துப் பார்த்த அனந்தன், இதை உடையவர் வந்ததும் சொல்லவேண்டும் என்று எண்ணிக்கொண்டு வீட்டை நோக்கி விரைந்தான்.


ஆனால் அன்றைக்கு அவர் திருமலைக்கு வரவில்லை. மறுநாளும் வரவில்லை. அடுத்த நாளும். என்ன ஆயிற்று ராமானுஜருக்கு? இங்குதானே வந்துகொண்டிருக்கிறார் என்றார்கள்? இந்நேரம் மலையேறி வந்திருக்கலாமே? எங்கே சுணங்கிவிட்டார்கள்?


அனந்தனுக்கு ஒன்றும் புரியவில்லை. பெரிய திருமலை நம்பியிடம் சென்று தன் கவலையைச் சொல்லிக் காரணம் கேட்டான்.


‘தெரியவில்லையே அப்பா! ராமானுஜரின் பரிவாரங்கள் கீழ்த் திருப்பதிக்கு வந்து சேர்ந்துவிட்டதாகப் போன வாரமே சொன்னார்கள். ஒன்று செய். நீ ஒரு நடை கீழே இறங்கிச் சென்றே பார்த்துவிட்டு வாயேன்?’


அவனுக்கும் அது சரியென்று பட்டது. மனைவியிடம் சொல்லிவிட்டு மலையை விட்டு இறங்க ஆரம்பித்தான்.


பாதைகளற்ற ஆரண்யம். ஒன்று இரண்டு மூன்று என்று வரிசையாக ஏழு மலைகளைக் கடப்பது எளிதல்ல. ஒரு கணம் வழி பிசகிப் போனாலும் புறப்பட்ட இடத்துக்கோ, போய்ச்சேரவேண்டிய இடத்துக்கோ சேர முடியாமல் போகும். மாதக் கணக்கில் எத்தனையோ பேர் அப்படி வழி தெரியாமல் தவித்துத் திரும்பிய கதைகள் நிறையவே உண்டு.


அனந்தன் திருமலைக்கு வந்து சேர்ந்தது முதல் ஒருமுறைகூடக் கீழே இறங்கிச் சென்றதில்லை. ஒரு நந்தவனம் அமைத்து, பெருமாளுக்குப் புஷ்ப கைங்கர்யம் செய்துகொண்டிரு என்று ராமானுஜர் சொன்ன வார்த்தையைத் தாண்டி வேறெதையும் செய்யவில்லை. எனவே, இறங்குவது அவனுக்குச் சிரமமாக இருந்தது. உத்தேசமாக வழியை ஊகித்தே செல்ல வேண்டியிருந்தது.


ஒருவாறாக அவன் கீழே வந்து சேர நான்கு தினங்கள் பிடித்தன. ராமானுஜரும் அவரது பரிவாரங்களும் எங்கே தங்கியிருக்கிறார்கள் என்று கேட்டு விசாரித்துக்கொண்டு ஓடினான். உடையவர் இருக்குமிடத்தை அடைந்தபோதுதான் அவனுக்கு நிம்மதிப் பெருமூச்சு வந்தது.


‘சுவாமி…!’


ராமானுஜர் புன்னகை செய்தார். ‘வா, அனந்தாழ்வான்! நலமாக இருக்கிறாயா?’


நெடுஞ்சாண்கிடையாக அவர் பாதங்களில் விழுந்து பணிந்து எழுந்த அனந்தனின் கண்களில் இருந்து கரகரவென நீர் வழிந்தது.


‘சுவாமி, தங்களைப் பார்த்து எத்தனைக் காலமாகிவிட்டது! இவ்வளவு தூரம் வந்துவிட்டு மலைக்கு வராமல் இங்கேயே தங்கிவிட்டீர்களே!’


ராமானுஜர் ஒரு கணம் யோசித்தார். பிறகு சொன்னார். ‘வரலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் இம்மலை ஆதிசேஷன் அம்சம். அதனாலேயே திருப்பதிக்கு வந்த பத்து ஆழ்வார்களும் மலை ஏறாமல் தவிர்த்துவிட்டார்கள். ஆழ்வார்களே கால் வைக்கத் தயங்கிய மலையின்மீது அற்பன் நான் எப்படி வைப்பேன்?’


திகைத்துப் போய் நின்றான் அனந்தாழ்வான்.


(தொடரும்)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 21, 2017 09:30

March 20, 2017

ராயல்டி விவகாரம்

ராயல்டி என்பது என்னவென்றே புரியாமல் இளையராஜா விவகாரத்தில் பலபேர் பொங்குவதைக் காண்கிறேன். பாமர ரசிகனுக்கு இந்த காப்பிரைட், ராயல்டியெல்லாம் சம்பந்தமில்லாதவைதான். ஆனால் கருத்துச் சொல்ல வரும்போது மட்டும் எப்படியோ ஒரு சம்பந்தம் நேர்ந்துவிடுவது கருவின் குற்றமல்ல. காலத்தின் குற்றம்.


நான் சில புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். சுமார் அறுபது வரும். அவற்றில் சுமார் இருபது சதவீதப் புத்தகங்கள் எழுதப்பட்ட காலம் முதல் இன்றுவரை ஆண்டுதோறும் சில ஆயிரம் பிரதிகள் விற்பவை. இன்னொரு பத்து சதவீதப் புத்தகங்கள் எப்படியாவது ஆயிரம் பிரதிகளைத் தொட்டுவிடும். மற்றவை வருடத்துக்குத் தோராயமாக ஐந்நூறு பிரதிகள் போகும். நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள் மட்டும் எழுதப்பட்ட காலம் தொடங்கி இன்றுவரை மொத்தமாக ஆயிரம் விற்றிருக்கலாம்.


எழுதுபவனுக்கு இந்தப் புத்தகங்களின் மொத்த விற்பனையில் பத்து சதவீதம் ராயல்டி என்பது கணக்கு. [சில பதிப்பாளர்கள் 7.5 சதம்தான் தருவார்கள்] இந்த ராயல்டி தொகை ஒவ்வொரு ஆண்டு இறுதிக் கணக்கு முடிப்புக்குப் பிறகு ஏதாவது ஒரு சுபயோக சுப தினத்தில் தரப்படும் என்று சொல்லப்படும். சில சமயம் வரலாம், பல சமயம் தள்ளிப் போகலாம். பலபேருக்கு வராமலேகூடப் போவதுண்டு. நேர்மையான பதிப்பாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாகவேனும் கொடுத்துவிடுவார்கள். அவர்களின் எண்ணிக்கை பத்து சதவீதம் கூடக் கிடையாது.


விஷயம் அதுவல்ல. இப்போது நீங்கள் என் புத்தகம் ஒன்றைக் காசு கொடுத்து வாங்குகிறீர்கள். என்றால் அந்தக் குறிப்பிட்ட பிரதி உங்களுக்குச் சொந்தம். நான் காசு கொடுத்து வாங்கியதை நான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்று நினைத்து நீங்கள் அதை ஆயிரம் பிரதிகள் அச்சிட்டு விற்க ஆரம்பித்தால் அது சரியா?


அதன் பெயர் மீறல். எழுத்தாளன் வழக்குத் தொடர முடியும். ஏனெனில் அவன் அச்சிட்டு விற்கும் உரிமையை ஒரு பதிப்பாளரிடம் கொடுத்திருப்பான். அதற்கான ராயல்டி அவனுக்கு வந்துகொண்டிருக்கும்.


உடனே இணைய சமூகம் என்ன கேட்கும்? நீ ரொம்ப யோக்கியமா? நீ பத்து புத்தகங்களைப் பார்த்துத்தானே எழுதினாய்? இணையத்தைப் பயன்படுத்தித்தானே எழுதினாய்? உன்னுடையது என்ன ஒரிஜினலா? அடிப்படையே ஒரிஜினலாக இல்லாத ஒன்றை யார் என்ன செய்தால் உனக்கென்ன? இலவச பிடிஎஃப் வினியோகித்தால் என்ன தவறு?


இது பதில் தேவையற்ற, வெறும் அக்கப்போருக்கான வினா. கதையற்ற ஓர் எழுத்து யார் எழுதினாலும் அடிப்படை ஒன்றாகவே இருக்கும். சரித்திர, சமகால நடப்புகளைச் சொல்லும்போது பலரும் ஒரே விஷயத்தைச் சொல்லுவது இயல்பானது. அதன்மீதான நமது பார்வை என்ன என்பதில்தான் வித்தியாசம் தெரியும்.


இதே அடிப்படையில்தான் இசையும் அதற்கான ராயல்டியும் பொருந்தும்.


திரை இசை என்பது இசையமைப்பாளர், கவிஞர், பாடகர் என்ற மூவரின் பணி ஒருங்கிணைப்பில் உருவாகிறது. இந்த மூவருக்கும் சம்பளம் கொடுக்கிற தயாரிப்பாளரிடம் இசையமைப்பாளர் எம்மாதிரியான ஒப்பந்தம் போடுகிறார் என்பது ஒன்று. முன்னாள்களில் இசை உள்பட அனைத்துக்குமான உரிமை தயாரிப்பாளரிடம்தான் இருக்கும். இன்று அப்படியல்ல. நடிகர்களே ஏரியாவாரியாக உரிமை கேட்டுப் பெறுகிற காலம் இது. இசை உரிமை இசையமைப்பாளரிடம்தான் இருக்கும். வரிகளின் உரிமை கவிஞருக்கே சொந்தம். குரல் உரிமை,அதைக் கொடுத்தவருக்கு.


இளையராஜா என்ன கேட்கிறார்? என் இசையமைப்பில் வெளியான பாடலை நீ தனி மேடைகளில் பாடி சம்பாதிக்கிறபோது இசை உரிமைக்கான ராயல்டி தொகையை எனக்குக் கொடுப்பதுதான் முறை என்று சொல்லுகிறார். இதைக் கவிஞர்களும் கேட்கலாம். பிழையில்லை. என்னைக் கேட்டால், பாடகரானவர் தன்னை முன்னிறுத்தி மேடைக்கச்சேரி செய்யும்போது தயாரிப்பாளர்களிடமும் குறிப்பிட்ட பாடல்களைப் பயன்படுத்த அனுமதி கோரவேண்டும் என்பேன்.


இளையராஜா கேட்கும் ராயல்டி என்பது லட்சங்களில் அல்ல. சொத்தை எழுதி வைக்கச் சொல்லவில்லை அவர். பயன்பாட்டுக்கான மரியாதைத் தொகை மட்டுமே. பண்பலை வானொலிகள், தொலைக்காட்சியின் இசை சானல்களுக்கும் இது பொருந்தும்.


இளையராஜா மட்டுமின்றி, இன்று இசையமைப்பாளர்களாக இருக்கும் அத்தனை பேருமே இந்த வழக்கத்தை வைத்திருக்கிறார்கள். இவர் தாமதமாக விழித்துக்கொண்டவர் என்பது மட்டும்தான் பிரச்னையே தவிர, கேட்டதில் பிழையே இல்லை.


எழுத்தோ இசையோ ஓவியமோ வேறெதுவோ. எந்த ஒரு கலைஞனுக்கும், அவன் பங்களிப்புக்கான ஒழுங்கான ஊதியம் வழங்கப்பட வேண்டுமென்ற அடிப்படை அறம் நமது சமூகத்தில் அறவே இல்லாது போய்விட்டதுதான் பிரச்னை.காப்பிரைட், ராயல்டி சம்மந்தமான அடிப்படை அறிவு இல்லை என்பது அடுத்தப் பிரச்னை.


பாரதியாரின் பாடல்களுக்கான உரிமை ஏவி மெய்யப்ப செட்டியாரிடம் இருந்தது. தேசிய கவியின் பாடல்கள் இப்படி ஒரு குறிப்பிட்ட நிறுவன முதலாளியிடம் இருப்பது சரியல்ல; அது மக்களுக்குப் பொதுவாக வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டபோது செட்டியார் அதை ஏற்றுக்கொண்டு நாட்டுடைமை ஆக்கினார் [இதைப் பற்றிய முழுமையான விவரங்களை இங்கே காணலாம்.]. பாரதி வாழ்ந்த காலத்தில் அவருக்கு யார் ராயல்டி கொடுத்தார்கள்? ஒருவேளை அவர் எழுத்தின்மூலம் சம்பாதித்திருந்தால் உரிமை செட்டியார் வசம் வந்திருக்க வாய்ப்பில்லாது போயிருக்கலாம். அவரது குடும்பத்தாரிடமே இருந்திருக்கும். அவர்களுக்குக் கொஞ்சம் பயன்பட்டிருக்கும். அதில்லாத சூழலில் பாரதியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அவரது படைப்புகள் பொதுவுடைமை ஆகவேண்டியதன் அவசியம் கருதி, நல்ல நோக்கமுள்ள ஒரு தனி நபர் விட்டுக் கொடுத்தபடியால்தான் இன்று ஆளாளுக்கு பாரதியை உரிமை கொண்டாட முடிகிறது.


இளையராஜா பாரதிக்குச் சமமான கலைஞர்தாம். அதனாலேயே பாரதியைப் போலவே ஏழைமையில் வாடிச் சாகவேண்டும் என்று சொல்ல நாம் யார்?


இவ்வளவு சொல்கிறேனே, நானே இவ்விஷயத்தில் சில தவறுகள் செய்திருக்கிறேன். பல வருடங்களுக்கு முன்னர் கிழக்கில் நான் பணியாற்றிக்கொண்டிருந்தபோது இரு பெரும் தவறுகள் செய்தேன். சும்மா இணையத்தில் கிடக்கிறதே என்று ரமணீதரன் கந்தையாவின் டிஜிட்டல் ஓவியம் ஒன்றையும் நந்தா கந்தசாமி என்ற ஓவியரின் ஓவியம் ஒன்றையும் சம்பந்தப்பட்டவர்களின் அனுமதி கோரிப் பெறாமல் புத்தகங்களுக்கு அட்டையாகப் பயன்படுத்திவிட்டேன் [என் புத்தகங்களுக்கு அல்ல. வேறு இருவருடைய நூல்களுக்கு].


இது பெரிய பிரச்னையாகி இணைய சமூகம் என்னை நார்நாராகக் கிழித்துத் தோரணம் கட்டித் தொங்கவிட்டு அழகு பார்த்தது. எனக்கு அதில் அவமானத்தைக் காட்டிலும் குற்ற உணர்ச்சியே பெரிதாக இருந்தது. பலமாத காலம் நிம்மதியின்றி, உறக்கமின்றி, மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தேன்.


சத்தியமாகத் திமிரினால் செய்ததல்ல; செய்வது பிழை என்றே உணராமல் செய்த காரியங்கள் அவை. ஆனாலும் பிழை, பிழைதான் அல்லவா? சம்பந்தப்பட்ட கலைஞர்களிடம் மன்னிப்புக் கோரி, உரிய தொகையை நிறுவனம் அளித்துவிட்டது என்றாலும் காப்புரிமை தொடர்பான அடிப்படைகளை அறிவதற்கு அந்தப் பேரிழப்பும் வலியும் விலையாக வேண்டியிருந்தது. அச்சம்பவங்களுக்குப் பிறகு கனவிலும் நான் அப்படியொரு காரியம் செய்ய முனைந்ததில்லை. என்னுடைய புத்தகங்களுக்கு ஆதாரங்களாகப் பயன்படுத்தும் பிற புத்தகங்களை மட்டுமல்ல; பத்திரிகைச் செய்திக் குறிப்புகள், இணையத்தளத் தகவல்கள் வரை எங்கிருந்து எதற்காக எடுக்கிறேன் என்பதை ஒவ்வொரு புத்தகத்திலும் தவறாமல் தந்துவிடுகிற வழக்கம் அதன்பிறகே வந்தது. மிகவும் அவசியம் என்று நான் கருதிய சில ஆவணங்களைக் காசு கொடுத்தும் வாங்கியிருக்கிறேன்.


கலைஞர்களைக் கொண்டாடாவிட்டாலும் தவறில்லை. ஆனால் துரோகம் இழைக்கக்கூடாது. இலவச எம்பி3 டவுன்லோடுகள், இலவச திருட்டு வீடியோ டவுன்லோடுகள், இலவச பிடிஎஃப் டவுன்லோடுகள் என்பவையெல்லாம் இணைய உலகில் சாதாரணம். இது ஒருவித உழைப்புச் சுரண்டல் என்பது சராசரி ரசிகனுக்கு உறைக்க நாளாகலாம். சக கலைஞர்களுக்குக் கூடாதல்லவா?


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 20, 2017 23:06

பொலிக! பொலிக! 67

பொழுது விடிகிற நேரம் அவர்கள் காஞ்சிபுரத்தின் எல்லைக்கு வந்து சேர்ந்தார்கள். அதே சாலைக் கிணறு. அதே நீர் இரைக்கும் பெண்கள். அங்கிருந்து தென்பட்ட அதே கோபுரம்.


ராமானுஜர் கைகூப்பி வணங்கினார். விவரிப்பில் அடங்காத பெரும் பரவசமொன்று மனத்தை நிறைத்து நின்று சுழன்றது. பேரருளாளா, உன்னை விட்டு நகர்ந்துபோய் எத்தனைக் காலமாகிவிட்டது! நீ தூக்கிக் கொண்டு வந்து போட்ட இதே சாலைக் கிணற்றங்கரைக்கு இன்று நானே மீண்டும் வந்து நிற்கிறேன். அன்று நான் ஒன்றுமறியாச் சிறுவன். இன்று உன்னைத் தவிர ஒன்றுமில்லை என்று உணர்ந்த மனிதன். நீ என்னை மீட்டுக் கொண்டுவந்ததே திருவரங்கத்துக்கு அனுப்பிவைக்கத்தான் என்று எண்ணிக்கொள்கிறேன். உன்னை விட்டுச் சென்றதாக நினைப்பதைக் காட்டிலும் இது சற்று ஆறுதல் தருகிறது.


‘சுவாமி, ஏன் அப்படியே நின்றுவிட்டீர்கள்?’ அருகில் இருந்த அருளாளப்பெருமான் எம்பெருமானார் கேட்டார்.


‘ம்? ஒன்றுமில்லை. உம்மையும் என்னையும் இணைத்தவன் இருக்கிற இடத்துக்கு வந்துவிட்டோம் பாருங்கள்! இவன் இல்லாவிட்டால் நானும் இல்லை, நீங்களும் இல்லை என்பதை நினைத்துப் பார்த்தேன். வாரும், நல்லது செய்தவனுக்கு நன்றி சொல்லப் போவோம்.’


காலைக் கடன்கள் முடித்துவிட்டு அங்கேயே குளித்தெழுந்து திருமண் தரித்து உடையவரும் சீடர்களும் கோயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள்.


‘உடையவரே, உங்களை எங்களுக்கு அளித்த மண் இது. அந்த விதத்தில் திருவரங்கத்தின் மண்ணைக் காட்டிலும் இதுவே எங்களுக்குப் புனிதமானது’ என்றான் கிடாம்பி ஆச்சான்.


‘நான் பெரியவனல்ல ஆச்சான்! நம் அனைவரைக் காட்டிலும் மிகப் பெரியவர் ஒருவர் இந்த ஊரில் இருக்கிறார். நீங்களெல்லாம் அவரை தரிசிக்க வேண்டும்.’


‘அருளாளப் பெருமானைத்தான் தரிசிக்கப் போகிறோமே சுவாமி!’


‘நான் சொல்லுவது அவனைக் காட்டிலும் பெரியவர்.’


திகைத்துவிட்டார்கள் சீடர்கள். பரிவாரம் கோயிலை நெருங்கிக்கொண்டிருந்தது. சட்டென்று ராமானுஜர் ஒரு மடத்தின் வாசலில் நின்றார். ‘ஒரு நிமிடம் காத்திருங்கள்’ என்று சொல்லிவிட்டு, படியேறி உள்ளே போனார்.


‘சுவாமி..’


காற்றுக்கு வலிக்காமல் மெல்லிய குரலில் அழைத்தார். உள்ளே ஒரு மூலையில் சுருண்டு படுத்திருந்த உருவம் விழித்தது. ‘யாரது?’


‘அடியேன் ராமானுஜன்.’


வாரிச் சுருட்டிக்கொண்டு அவர் எழுந்த கணத்தில் தடாலென்று அவர் தாள் பணிந்தார் ராமானுஜர்.


‘ஆஹா, தாங்களா! வரவேண்டும், வரவேண்டும் உடையவரே. உம்மை நினைக்காத நாளே கிடையாது எனக்கு. எப்படி இருக்கிறீர்கள்? தனியாகவா வந்தீர்கள்? என்னைக் காணவா இத்தனை தூரம்?’


‘சுவாமி, நீங்கள் இல்லாமல் நான் ஏது? திக்குத் தெரியாமல் தத்தளித்துக்கொண்டிருந்தவனைச் சரியான பாதையில் செலுத்தி அருளியவர் தாங்களே அல்லவா?’


‘அடடா, என்ன இப்படிச் சொல்லுகிறீர்கள்? உமக்கு வழிகாட்டியவன் அருளாளனே அல்லவா?’


‘உம்மூலமாக அணுகியதால்தானே அந்த வழி எனக்குத் திறந்தது? அதை விடுங்கள். திருவரங்கத்தில் இருந்து திருப்பதி போய்க்கொண்டிருக்கிறோம். தங்களை தரிசிக்காமல் காஞ்சியை எப்படிக் கடப்பேன்? வெளியே நமது மாணாக்கர்கள் காத்திருக்கிறார்கள். தாங்கள் அனுமதி கொடுத்தால்…’


அவர் உற்சாகமாகிப் போனார். ‘இதோ நானே வருகிறேன்!’ என்று ஓரடி எடுத்து வைத்தார். முதுமை அவரது செயல்வேகத்தைச் சற்று முடக்கியிருந்தது. ராமானுஜர் அவர் தோளில் கை வைத்துப் பிடித்துக்கொண்டார். மடத்தை விட்டு இருவரும் வெளியே வர, சீடர்கள் கைகூப்பி வணங்கினார்கள்.


‘பிள்ளைகளே, இவர்தான் நான் சொன்ன திருக்கச்சி நம்பி. இவரின்றி நானில்லை. இவரின்றி அந்தப் பேரருளாளனே இல்லை. ஒரு பாகவதன் எப்படி இருக்க வேண்டும் என்பதை நான் இவரிடம் பயின்றேன். சிறந்த பக்தன் எப்படி இருப்பான் என்பதை இவர்மூலம் அருளாளன் உலகுக்குக் காட்டிக்கொண்டிருக்கிறான். நானறிந்து இவரினும் பெரியவர் இவ்வுலகில் இல்லை’ என்றவர், சட்டென்று திருக்கச்சி நம்பியிடம் திரும்பி, ‘சுவாமி! இவர்கள் அத்தனை பேரும் அரங்கன் சேவையில் தங்களை ஐக்கியப்படுத்திக்கொண்டவர்கள். இவர்களுக்கு சாதி கிடையாது. பேதம் கிடையாது. பொருள்களின்மீது பற்று கிடையாது. தமக்காக வாழ்வோர் யாரும் இவர்களில் கிடையாது. சரீரம் இருக்கிறவரை சமூகத்துக்காக உழைக்கிற சீலர்கள். உங்கள் ஆசி இவர்களை இன்னும் உயர்த்தும்’ என்றார்.


திருக்கச்சி நம்பி கண்ணீர் மல்கக் கரம் கூப்பிப் பேரருளாளனை வணங்கினார். அவன் கருணையின்றி இந்த அதிசயம் ஏது?


‘ராமானுஜரே, அவன் மிகச் சரியாகக் கணக்கிட்டுத்தான் உம்மைத் தேர்ந்தெடுத்துத் திருவரங்கத்துக்கு அனுப்பியிருக்கிறான். வைணவ தருமம் தழைக்க வையம் முழுதும் பிரதிநிதிகளை உருவாக்கி அமர்த்திவரும் உமது திருப்பணிக்கு என்றும் என் ஆசி உண்டு. வாருங்கள், நாம் அவனைச் சென்று முதலில் சேவித்து வருவோம்’ என்று அழைத்துக்கொண்டு கோயிலுக்குப் புறப்பட்டார்.


உடையவரின் சீடர்களுக்குத் திருக்கச்சி நம்பியைச் சந்தித்தது பெரிய பரவசத்தை அளித்தது. இவரா, இவரா என்று வியந்து வியந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். சக மனிதர்களுடன் பேசுவது போல இறைவனுடன் பேசுகிற மகான். எத்தனை பேருக்கு அது வாய்க்கும்?


‘அதுவும் ஒருமுறை இருமுறை அல்ல பிள்ளைகளே. தினசரி கோயில் நடை சாத்துவதற்கு முன்னால் நம்பியிடம் பேசாமல் அருளாளனுக்குப் பொழுது முடியாது. நாம் பக்தர்களாக இருப்போம். பரம பாகவதர்களாக இருக்க முயற்சி செய்வோம். ஆயுள் முழுதும் அவனுக்கு அடிமை செய்து வாழப் பார்ப்போம். ஆனால் ஆண்டவனுக்கு நண்பராக இருப்பது யாரால் முடியும்? திருக்கச்சி நம்பியால் மட்டுமே அது முடியும்’ என்றார் ராமானுஜர்.


சன்னிதியில் அன்று அர்ச்சனை பிரமாதமாக நடந்தது. ராமானுஜரும் சீடர்களும் பிரபந்தம் பாடினார்கள். தீர்த்தப் பிரசாதங்கள் வாங்கிக்கொண்டு அவர்கள் வெளியே வந்தபோது ராமானுஜர் திருக்கச்சி நம்பிக்கு அருளாளப் பெருமான் எம்பெருமானாரை அறிமுகப்படுத்தினார்.


‘சுவாமி, இவர் வைணவ தரிசனத்துக்குக் கிடைத்த இன்னொரு யாதவப் பிரகாசர்!’


திருக்கச்சி நம்பி அவரை அன்போடு பார்த்தார். ‘உம்மைப் பற்றி அருளாளன் சொன்னான். இரண்டு நூல்கள் எழுதியிருக்கிறீராமே?’


திகைத்துவிட்டது திருக்கூட்டம்.


‘சுவாமி, நீண்ட காலமாகத் தங்களைக் காணாமல் ஏங்கிக்கிடந்தேன். இன்று அந்த ஏக்கம் தீர்ந்தது. திருப்பதி சென்று திரும்பும்போதும் தங்களை வந்து தரிசித்துப் போவேன். இப்போது எனக்குத் தாங்கள் விடைகொடுக்க வேண்டும்’ என்றார் உடையவர்.


‘நல்லது ராமானுஜரே. நீங்கள் அரங்கநகரில் இருந்தாலும் திருமலைக்குச் சென்றாலும் அருளாளன் உம்மோடு எப்போதும் இருப்பான். சென்று வாருங்கள்!’ என்று ஆசீர்வதித்து அனுப்பிவைத்தார்.


(தொடரும்)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 20, 2017 09:30