Pa Raghavan's Blog, page 10

March 31, 2017

பொலிக! பொலிக! 78

அது நள்ளிரவுப் பொழுது. மடத்தில் ராமானுஜரோடு தங்கியிருந்த சீடர்கள் அத்தனை பேரும் உறங்கியிருந்தார்கள். அவர் மட்டும்தான் விழித்திருந்தது. ஆனால் விழித்திருப்பது தெரியாமல் படுத்து, கண்மூடியே இருந்தார். மனத்துக்குள் ஓடிக்கொண்டிருந்த ஒரு பாசுரத்தின் ஒரு வரி, பிள்ளானுக்கு எப்படித் தெரிந்தது?


‘பிள்ளான், உள்ளே வா!’


அறைக்குள் வந்தவன் பணிவுடன் கைகூப்பி நிற்க, ‘எப்படிச் சொன்னாய்? எனக்கு உள்ளே ஓடுகிற பாசுரம் உனக்கெப்படித் தெரிந்தது?’


‘தெரியவில்லை சுவாமி. இந்தப் பொழுதில் உங்கள் மனத்தில் இதுதான் ஓடிக்கொண்டிருக்கவேண்டும் என்று தற்செயலாகத் தோன்றியது. நான் சொன்னது சரியா?’


‘மிகவும் சரி. மாலிருஞ்சோலையில் கள்ளழகரைச் சேவித்துவிட்டுக் கிளம்பியதில் இருந்து அதே நினைவு. திருநகரிக்கு வந்து நம்மாழ்வாரை தியானிக்கத் தொடங்கிவிட்ட பிறகும் உள்ளுக்குள் இன்னும் திருமாலிருஞ்சோலைப் பாசுரம்தான் உருண்டுகொண்டிருக்கிறது.’


பிள்ளான் புன்னகை செய்தான். ‘எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது சுவாமி. எப்படியோ உங்கள் மனம் உணர்ந்தவனாக இருக்கிறேன்.’


ராமானுஜர் அவனைப் பாசத்துடன் நோக்கினார். பெரிய திருமலை நம்பியின் மகன். இனி உங்கள் சொத்து இவன் என்று சொல்லி நம்பி ஒப்படைத்த கணத்தில் இருந்து உடையவருடன் கூடவே இருப்பவன். யார் யாரிடமெல்லாம் தாம் படிக்கச் சென்றோமோ அவர்களுடைய வாரிசுகளெல்லாம் தம்மிடம் பயில வந்ததில் ராமானுஜருக்கு மிகுந்த மன நிறைவை அளித்தது. பெரிய நம்பியின் மகளும் மகனும் முதலில் வந்தார்கள். திருக்கோட்டியூர் நம்பி தமது மகனான தெற்காழ்வானை அனுப்பிவைத்தார். திருமாலையாண்டானின் மகன் பிறகு வந்தான். அரையருக்கு வாரிசு இல்லை. அவர் தமது தம்பியை அனுப்பிவைத்தார். பெரிய திருமலை நம்பி பிள்ளானைத் தந்தார். ஒரு ஞானத் தலைமுறையை உருவாக்கும் மிகப்பெரிய பொறுப்பு தன்னைச் சேர்ந்திருப்பதை ராமானுஜர் விழிப்போடு அறிந்தார். பொறுப்பும் பொறுமையுமாக அவர்களுக்கெல்லாம் தாம் கற்ற அனைத்தையும் போதித்துக்கொண்டிருந்தார்.


‘அது எங்கள் கொடுப்பினை சுவாமி. உங்கள் நிழலில் வசிப்பது ஒரு பாதுகாப்புணர்வைத் தருகிறது. இது எனக்கு வேறெங்கும் கிட்டியதில்லை’ என்றான் பிள்ளான்.


‘பிள்ளான், நீ கவனமாகக் கற்கிறாய். தெளிவாகப் புரிந்துகொள்கிறாய். புரிந்ததைத் துல்லியமாக எடுத்துச் சொல்லவும் அறிந்தவனாக இருக்கிறாய்.  முதலியாண்டான், கூரத்தாழ்வானுக்குப் பிறகு மொழியில் ஆளுமை கொண்டவனாகவும் இருக்கிறாய். ஒன்று செய்கிறாயா?’


‘உத்தரவிடுங்கள் சுவாமி!’


‘நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு ஓர் உரை செய்ய வேண்டும் என்பது எனது ஆசாரியர் ஆளவந்தாரின் இறுதி விருப்பங்களுள் ஒன்று. இன்றுவரை அதற்குப் பொருத்தமான நபர் என்று ஒருவர் என் மனத்தில் தோன்றாமலே இருந்தது. இப்போது உன்னைப் பார்க்கும்போது நீ ஏன் அப்பொறுப்பை ஏற்றுச் செய்யக்கூடாது என்று தோன்றுகிறது.’


‘சுவாமி!’ பரவசத்தில் சட்டென்று விழுந்து வணங்கினான் பிள்ளான்.


‘இல்லை. நான் முடிவு செய்துவிட்டேன். நீதான் சரி. வேதசாரமான நம்மாழ்வாரின் வரிகளுக்குக் காலம் கடந்து நிற்கக்கூடிய ஓர் உரை அவசியம். உன் வாழ்நாள் பணியாக ஏற்று அதை நிறைவேற்று.’


‘உத்தரவு சுவாமி! இது அடியேன் செய்த பாக்கியம்.’


‘உன்னை நான் இனி திருக்குருகைப் பிரான் பிள்ளான் என்றே அழைப்பேன். உலகமும் அவ்வண்ணமே அழைக்கட்டும்!’


‘இப்படியொரு கௌரவமா! அடியேன் இதற்குப் பாத்திரமானவன்தானா?’


‘சந்தேகமில்லை பிள்ளான். குருகூர் சடகோபன் பொன்னடி நிழலில் வசிப்பவர்கள் நாம். நம் அனைவருக்கும் அவரது அருளும் ஆசியும் என்றும் உண்டு.’


மறுநாள் காலை சீடர்களுக்கு விவரம் தெரிந்தது. பிள்ளானைக் கட்டியணைத்துக் கொண்டாடினார்கள்.


‘வாருங்கள். ஆற்றுக்குக் குளிக்கப் போவோம். குளித்துவிட்டுக் கோயிலுக்குக் கிளம்பினால் சரியாக இருக்கும்’ என்றார் ராமானுஜர்.


சீடர்கள் புடைசூழ அவர் தாமிரவருணியை நோக்கி நடந்துகொண்டிருந்தபோது ஒரு சலவைத் தொழிலாளி எதிரே வந்தான். ராமானுஜரைச் சற்றே குழப்பமும் சந்தேகமும் கலந்த பார்வையில் பார்த்துக்கொண்டே இருந்தவன், சட்டென்று ஒரு கணத்தில் அடையாளம் கண்டுகொண்டு அருகே ஓடி வந்து, ‘சாமி, நீங்க உடையவர் தானே?’


‘ஆமப்பா!’


‘ஐயா கும்புடறேனுங்க. உங்கள பத்தி நெறைய கேள்விப்பட்டிருக்கேன். இப்பிடி எங்கூருக்கே வந்து தரிசனம் குடுப்பிங்கன்னு நினைக்கலிங்கய்யா. ஒரு நிமிசம் இருங்க…’ என்று பரபரத்தவன் எங்கோ பார்த்துக் குரல் கொடுத்தான். ‘டேய் சடகோபா! வகுளாபரணா! காரிமாறா! ஓடியாங்கடா… உடையவர் சாமி வந்திருக்காருடா நம்மூருக்கு!’


ராமானுஜர் வியந்து போனார். என்ன நடந்துகொண்டிருக்கிறது இங்கே? இந்த சலவைத் தொழிலாளி யாரை இப்படி அழைக்கிறான்? சடகோபன். வகுளாபரணன். காரிமாறன். எல்லாமே நம்மாழ்வாரின் பெயர்கள். ஒருவரையே இப்படி மூன்று பேர்களில் அழைக்கிறானா அல்லது மூன்றும் வேறு வேறு நபர்களின் பெயர்களா?


‘ஐயா எம்புள்ளைங்கதாங்க.. அந்தா வரானுக பாருங்க!’


அவன் கைகாட்டிய திசையில் மூன்று சிறுவர்கள் ஓடி வந்துகொண்டிருந்தார்கள்.


‘டேய், சாமிய கும்புட்டுக்கங்கடா.. பெரிய மகான் இவரு. இப்ப புரியாது உங்களுக்கு. அப்பால இவரு யாரு, எப்படிப்பட்டவருன்னு சொல்லித்தாரேன்.’ என்றதும் மூன்று சிறுவர்களும் உடையவரின் பாதம் பணிந்து எழுந்து வணங்கினார்கள்.


‘அப்பனே, இவர்கள் மூவரும் உன் மகன்களா?’


‘ஆமா சாமி!’


‘மூன்று பேருக்கும் நம்மாழ்வாரின் திருநாமங்களையே வைத்திருக்கிறாயே அப்பா! நீ அவரை வாசித்திருக்கிறாயா?’


‘நாம படிக்காத தற்குறிங்க! ஆனா இந்தூருக் காத்துல திருவாய்மொழி கலந்திருக்குது பாத்திங்களா? அது மூச்சுக்காத்தா உள்ள போயிடுதே! அதான்.’


பிரமித்துவிட்டார் ராமானுஜர்.


வெகுநேரம் அவருக்குப் பேச்சே எழவில்லை. பிறகு நிதானத்துக்கு வந்ததும் பிள்ளானிடம் சொன்னார். ‘புரிகிறதா பிள்ளான்? நம்மாழ்வாரும் அவரது திருவாய்மொழியும் மூச்சுக் காற்றேபோல் உலகம் முழுதும் உள்ளோர் உள்ளத்தில் சென்று நிறைய வேண்டும். நீ எழுதப் போகிற உரை அதற்கு உதவவேண்டும்.’


ஆழ்வார் திருநகரியில் நம்மாழ்வாரின் சன்னிதிக்குச் சென்று வெகுநேரம் உடையவர் கண்மூடி நின்றிருந்தார். அது புறப்பட்ட இடம். ஊற்றின் மையக் கண். காலமும் இடமும் கணப் பொழுது தடம் புரண்டு ஜாலம் காட்டுகிற பேரற்புதம். ராமானுஜரின் மனத்தில் மகாலஷ்மியுடன் இணைந்த விஷ்ணுவின் தோற்றம் ஒரு கணம் வந்து நின்றது. சட்டென்று அது மாறி, மகாலஷ்மித் தாயார் தனியே வந்து நின்றாள். அவள் இருந்த இடத்தில் நம்மாழ்வார் நின்றார். பிறகு நாதமுனி வந்தார். உய்யக்கொண்டார், மணக்கால் நம்பி, ஆளவந்தார், பெரிய நம்பி என்று வரிசையாக ஆசாரியர்கள் அத்தனை பேரும் நினைவில் வந்து உதித்து நின்றார்கள்.


பணிவில் அவர் மனம் குவிந்தது. தன்னை நம்மாழ்வாரின் பாதங்களாக பாவித்துக் கனிந்தார்.


(தொடரும்)


Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 31, 2017 09:30

March 30, 2017

பொலிக! பொலிக! 77

சேரன் மடம் பக்தர் கூட்டத்தில் நிரம்பிப் பிதுங்கிக்கொண்டிருந்தது. செய்தி பரவியதில் இருந்தே எங்கெங்கிருந்தோ வைணவர்கள் உடையவரைப் பார்க்கக் கிளம்பி வர ஆரம்பித்தார்கள். சீடர்களுக்கு நிற்க நேரமின்றி இருந்தது. ராமானுஜரைப் பார்க்க வருகிறவர்களை ஒழுங்கு படுத்தி அமர வைப்பதே பெரிய வேலையாக இருந்தது. ஒருபுறம் கூரத்தாழ்வானும் முதலியாண்டானும் எதிரெதிரே அமர்ந்து, எழுதிய ஓலைச் சுவடிகளைப் படித்துப் பார்த்து ஒழுங்கு செய்துகொண்டிருக்க, மறுபுறம் ராமானுஜர் வந்தவர்களோடு உரையாடிக்கொண்டிருந்தார். 


பிரம்ம சூத்திரமும் அதன் முக்கியத்துவமும். சங்கரர் தமது பிரம்ம சூத்திர உரையில் என்ன சொல்லியிருக்கிறார்? இந்நூல் எவ்விதத்தில் அதனின்று வேறுபடுகிறது? போதாயணரின் உரை. அதைப் பெற்றுவர காஷ்மீரம் சென்ற கதை. கூரத்தாழ்வானின் காந்த சித்தம் செய்த பேருதவி.


பேசி மாளவில்லை. பெரிய நம்பி வந்திருந்தார். அரையர் வந்திருந்தார். இன்னும் யார் யாரோ வந்துகொண்டிருந்தார்கள்.


‘சுவாமி, பிரம்ம சூத்திர உரை எழுதியது போதாது. வைணவ தரிசனத்தை பாரதம் முழுதும் தாங்கள்தாம் ஏந்திச் சென்று பரப்பவேண்டும். இங்கிருந்தபடி பெரிய அளவில் எதையும் சாதிக்க இயலாது!’


‘உண்மைதான். ஆனால் திருவரங்கத்தைவிட்டு எத்தனைக் காலம் ஆசாரியரால் வெளியே சுற்ற இயலும் என்று தெரியவில்லையே?’


‘போதாயணரின் உரையைப் பெற்றுவர காஷ்மீரம் வரை சென்று திரும்பியவர் அவர். அந்தப் பயணத்தின் நோக்கம் இன்று நிறைவேறியிருக்கிறது. அன்று அருளிய கலைமகளுக்கு நன்றி சொல்லவேனும் மீண்டுமொருமுறை காஷ்மீரம் வரை போய்த்தான் ஆகவேண்டும்.’


அவரவர் மனத்தில் பட்டதைச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.


ராமானுஜர் மனத்தில் ஒரு திட்டம் இருந்தது. வைணவ தரிசனத்தைப் பரப்புவது என்கிற பெரும்பணியை திவ்யதேச யாத்திரையாக அமைத்துக்கொண்டு புறப்பட்டால் சரியாக இருக்கும் என்று அவர் நினைத்தார். முதலில் சோழநாட்டுத் திருப்பதிகள். பிறகு பாண்டிய நாட்டுத் திருப்பதிகள். அப்படியே மலைநாடு என்னும் கேரளம். ஆந்திரம். கர்நாடகம். அப்படியே காஷ்மீரம்வரை போய்த் திரும்பலாம். ஆனால் அனைவரும் சொல்வதுபோல எத்தனைக் காலம் ஆகும் என்றுதான் சரியாகத் தெரியவில்லை.


‘குறைந்தது ஆறேழு வருடங்கள் பிடிக்கலாம் சுவாமி.’ என்றார் எம்பார்.


அரங்கன் சன்னிதிக்குச் சென்று கண்மூடி நின்றார் ராமானுஜர். காரியம் மிகவும் பெரிது. பயணம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதைவிட, திருவரங்கக் கோயில் பணிகள் தடையின்றி நடைபெறுவதும் அவசியம்.


‘யாரைப் பொறுப்பாக விட்டுச் செல்ல நினைத்திருக்கிறீர்கள்?’ என்று கூரத்தாழ்வான் கேட்டார்.


‘முதலியாண்டானைத் தவிர வேறு யார் பொருந்துவார்? எம்பார் அவருக்கு உடன் இருந்து உதவிகள் செய்துகொண்டிருக்கட்டும்.’


பரபரவெனக் காரியங்கள் நடந்தேறின. ஒரு நல்ல நாளில் உடையவர் தமது சீடர்களோடு பாரத யாத்திரை புறப்பட்டார். காவிரிக் கரையில் சீடர்களோடு பக்தர்களும் ஆசாரியர்களும் கூடி நின்று வழியனுப்பக் காத்திருந்தார்கள்.


‘முதலியாண்டான்..’


‘சுவாமி, கவலையின்றிச் சென்று வாருங்கள். அரங்கன் திருக்கோயில் பணிகள் எந்தத் தடையுமின்றி நடக்கும்.’


பெரிய நம்பியிடம் சொல்லிக்கொண்டார். அரையரிடம் சொல்லிக்கொண்டார். அனைவரிடமும் விடைபெற்று யாத்திரை புறப்பட்டார்.


திருவரங்கத்தில் கிளம்பிய குழு நேரே குடந்தை நகருக்கு வந்து சேர்ந்தது. அங்கே ஆராவமுதன். ஆழ்வார் பாசுரங்களால் நாவினிக்கப் பாடி மகிழ்ந்து வரிசையாக ஒவ்வொரு சோழநாட்டுத் திருப்பதியாகச் சேவித்துக்கொண்டே போனார். ஒவ்வொரு ஊரிலும் கொத்துக் கொத்தாக அவருக்குச் சீடர்கள் சேர ஆரம்பித்தார்கள். பத்திருபது பேருடன் புறப்பட்ட யாத்திரைக் குழு, சோழநாட்டைக் கடந்து பாண்டிய நாட்டுத் திருப்பதிகளைத் தொடும்போது பெருங்கூட்டமாகியிருந்தது.


திருமாலிருஞ்சோலை கள்ளழகர் சன்னிதிக்கு உடையவர் வந்து சேர்ந்தபோது, கிடாம்பி ஆச்சானைப் பார்த்து ‘ஏதேனும் ஒரு சுலோகம் சொல்லும் ஆச்சானே!’ என்றார்.


சட்டென்று கிடாம்பி ஆச்சான் சொல்லத் தொடங்கியது ஆளவந்தார் அருளிய ஒரு சுலோகம். ‘பல்லாயிரம் குற்றங்கள் புரிந்து பாவக்கடலில் விழுந்து கிடக்கிற அகதி நான். எம்பெருமானே, உன்னைத் தவிர இப்பாவிக்கு அடைக்கலம் தர யாருமில்லை. உன் கருணைக் குடையை விரித்துக்காட்டு’ என்ற பொருளில் வருகிற சமஸ்கிருத சுலோகம் அது.


அவர் பக்தியுடன் கைகூப்பி அதைச் சொல்லிக்கொண்டிருந்தபோது சன்னிதியில் இருந்த அர்ச்சகர், ‘நிறுத்தும்!’ என்று குரல் கொடுத்தார்.


கூட்டம் திடுக்கிட்டுப் போனது. சொன்னது அர்ச்சகர்தாம். ஆனால் வந்தது அர்ச்சகரின் குரல் இல்லை. இது வேறு. யாரும் கேட்டிராதது. அபூர்வமான குரல். ஒரு அசரீரியின் தன்மை அதில் இருந்தது.


‘ஓய் கிடாம்பி ஆச்சானே! அகதி என்றும் பாவி என்றும் எதற்காக இப்படிச் சொல்லிக்கொள்கிறீர்? எம்பெருமானார் அருகே இருப்பவர்கள் யாரும் அகதியுமல்ல; பாவியுமல்ல.’


வெலவெலத்துப் போனது கூட்டம். அவர்களுக்குப் புரிந்துவிட்டது. கோயில் அர்ச்சகர் வாய்வழியே குரல் கொடுத்தது கள்ளழகரேதான். பரவசத்தில் கரம் கூப்பிக் கண்ணீர் மல்க அப்படியே சிலையாகி நின்றார்கள். வாழ்வின் ஆகப்பெரிய சாதனை, ஒரு சரியான குருவைக் கண்டடைவது. அது முயற்சியால் கூடுவதல்ல. அதிர்ஷ்டத்தால் நேர்வதல்ல. அது ஒரு தரிசனம். தவத்தின் இறுதி விளைவு. இதற்குமேல் ஒன்றுமில்லை; எடுத்துப் போ என்று எம்பெருமான் அள்ளிக் கொடுத்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போகிற தருணம்.


‘எம்பெருமானாரே!’ என்று அத்தனை பேரும் உடையவர் தாள் பணிந்தார்கள்.


திருமாலிருஞ்சோலையில் இருந்து கிளம்பி திருப்புல்லாணிக்குச் சென்று சேவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு ஆழ்வார் திருநகரிக்கு வந்து சேர்ந்தார் ராமானுஜர். நம்மாழ்வாரின் அவதாரத் தலம். பொலிக பொலிக என்று உடையவரின் பிறப்பை என்றோ முன்னறிவித்த மூதாதை.


ராமானுஜருக்கு அம்மண்ணில் கால் வைத்தபோதே சிலிர்த்தது. தெய்வத் தமிழ் என்பது திருவாய்மொழியைத் தவிர வேறில்லை என்பதில் அவருக்கு மறு கருத்தே கிடையாது. வேதம் தமிழ் செய்த மாறனின் திருவாய்மொழிக்கு ஒரு சிறந்த உரை படைக்க வேண்டுமென்ற ஆளவந்தாரின் மூன்றாவது நிறைவேறாக் கனவை அவர் எண்ணிப் பார்த்தார்.


மறுநாள் கோயிலுக்குச் செல்லலாம் என்று முடிவு செய்து அன்று இரவெல்லாம் உள்ளூரில் ஒரு மடத்தில் தங்கி இதைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தார். உறக்கம் வரவில்லை. மனத்தில் திருவாய்மொழியின் வரிகள் தன்னிச்சையாகப் பொங்கி வந்து நிறைத்துக்கொண்டிருந்தன.


அறைக்கதவு லேசாக மூடியிருந்தது. வெளியே ஏதோ காரியமாக வேகமாக நடந்துபோன சீடன் பிள்ளான் சட்டென ஒரு கணம் நின்றான். முகத்தில் ஒரு முறுவல். கதவைத் திறந்து, ‘என்ன சுவாமி, உள்ளே ஓடிக்கொண்டிருப்பது திருமாலிருஞ்சோலைமலை என்றேன் என்ன – பாசுரம்தானே?’ என்று கேட்டான்.


திடுக்கிட்டுப் போனார் ராமானுஜர்.


(தொடரும்)


Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 30, 2017 09:30

March 29, 2017

பொலிக! பொலிக! 76

அது பெருமான் அமுது செய்யும் நேரம். திருவரங்கப் பெருமானுக்கு இரவு நேர உணவு, அரவணை. அரங்கனுக்கு மட்டுமல்ல. அவனைத் தாங்கிக் கிடக்கும் ஆதிசேஷனுக்கும் அதுவே அமுது. வேகவைத்த பச்சரிசியைக் கெட்டியான வெல்லப்பாகில் சேர்த்துக் கிளறிக்கொண்டே இருக்கும்போது நெய்யைச் சேர்த்துக்கொண்டே இருப்பார்கள். சமைப்பது மண் பாண்டத்தில்தான் என்பதால் கொட்டக் கொட்ட நெய்யை அது உறிஞ்சிக்கொண்டே இருக்கும். ஒரு குறிப்பிட்ட பதத்தில் சட்டென்று இறக்கி வைத்து ஏலம், பச்சைக் கற்பூரம் சேர்த்துக் கிளறினால் அது அரவணை. இதற்குக் குங்குமப்பூ, நாட்டுச் சர்க்கரை சேர்த்த பசும்பால் துணை. இந்த இரண்டும் தினமும் உண்டு. எனவே அன்றும் இருந்தது.


கோயில் மணிச் சத்தம் கேட்டதும் ஆண்டாளுக்கு அரங்கன் இரவு உணவுக்குத் தயாராகிவிட்டது புரிந்தது. விறுவிறுவென்று உள்ளே வந்தாள். பூஜையில் இருக்கும் அரங்கனின் முன்னால் நின்று ஒரு பார்வை.


‘இது உனக்கே நியாயமா? உன் பக்தர் இங்கே காலை முதல் ஒரு பருக்கை சோறும் இல்லாமல் உழைத்துக்கொண்டிருக்கிறார். நீ மட்டும் வேளை தவறாமல் சாப்பிட்டுக்கொண்டிருந்தால் என்ன அர்த்தம்? அன்னசாலை நிறுவி தினமும் ஆயிரம் பேருக்கு உணவிட்டுக்கொண்டிருந்தவர் அவர். பசியோடு இப்படி நாளெல்லாம் உட்கார்ந்து எழுதிக்கொண்டிருக்கிறாரே, அவர் இன்னும் உண்ணவில்லையே என்று ஒருக் கணம் எண்ணிப் பார்த்திருப்பாயா? என்ன பெருமாள் நீ?’


அது நெருக்கத்தால் வந்த கோபம். ஊரை விட்டுத் திருவரங்கம் வந்த பிறகு அரங்கனைத் தவிர வேறு உறவு கிடையாது அவளுக்கு. கொஞ்ச வேண்டுமானாலும் அவன்தான்; திட்ட வேண்டுமானாலும் அவன்தான். ஆண்டாளுக்குத் தன் பசி பொருட்டல்ல. கணவர் உண்ணாதிருப்பதுதான் உறுத்திக்கொண்டிருந்தது. ஒரு வார்த்தை கேட்டுவிடலாம். ‘பசிக்கவில்லையா?’


என்றால், இன்று உஞ்சவிருத்திக்குச் செல்லவில்லையே என்று அர்த்தம். நீ உணவு கொண்டு வராததால் நானும் உண்ணாதிருக்கிறேன் என்று அர்த்தம். அந்த நினைவு வந்துவிட்டால் அப்புறம் வேலை கெட்டுவிடும். குற்ற உணர்ச்சி கூடிவிடும். கேவலம் தன் பசியா பெரிது? பணி புரிந்துகொண்டிருப்பவர் பசியோடிருப்பது மட்டும்தான் ஆண்டாளுக்குக் கவலை. அதுதான் கோபமானது.


கோயில் சன்னிதியில் அரங்கனுக்கு அமுது செய்விக்க அரவணையும் பாலும் கொண்டு வந்து வைத்தார்கள். உத்தம நம்பி அதற்குப் பொறுப்பாளி. சன்னிதிக்குள் அவர் நுழைந்ததுமே அரங்கன் குரல் கொடுத்தான். ‘உத்தம நம்பி! நமக்கு அமுது செய்விப்பது இருக்கட்டும். அங்கே ஆழ்வான் பட்டினி கிடக்கிறான். அவன் மனைவி என்னைப் பிடித்துத் திட்டிக்கொண்டிருக்கிறாள். முதலில் அவனுக்குப் பிரசாதத்தை எடுத்துச் செல்லும்!’


திடுக்கிட்டுப் போனார் உத்தம நம்பி. என்ன நடக்கிறது இங்கே?


‘கேள்வியெல்லாம் அப்புறம். முதலில் பிரசாதம் ஆழ்வான் வீட்டுக்குப் போகட்டும். அவன் சாப்பிட்ட பிறகு இங்கே வந்தால் போதும்.’


உத்தம நம்பி அரவணை பிரசாதத்தை எடுத்துக்கொண்டு கூரத்தாழ்வான் வீட்டுக்குப் போய்க் கதவைத் தட்டினார்.


‘யார்?’


‘கூரேசரே, உத்தம நம்பி வந்திருக்கிறேன். கதவைத் திறவுங்கள்.’


இந்நேரத்தில் இவர் எதற்கு இங்கே வரவேண்டும் என்ற யோசனையுடன் கூரத்தாழ்வான் கதவைத் திறக்க, கோயில் பிரசாதங்களுடன் நம்பி நிற்பது கண்டு குழப்பமானார்.


‘என்ன விஷயம் நம்பி?’


‘ஒன்றும் சொல்வதற்கில்லை. இந்தாரும் பிரசாதம். முதலில் சாப்பிடுங்கள். பிறகு பேசுவோம்’ என்று சொல்லிவிட்டுப் போனார்.


கூரேசருக்கு ஒன்றும் புரியவில்லை. ’எனக்கு மிகவும் வியப்பாக இருக்கிறது ஆண்டாள். காலை முதல் நான் உணவின் நினைவே இன்றிக் கிடந்திருக்கிறேன். என்னால் பாவம், நீயும் எதையுமே சாப்பிடவில்லை. சொல்லி வைத்த மாதிரி அரங்கன் பிரசாதம் வருகிறது பாரேன்!’


ஒரு கணம் அமைதியாக இருந்த ஆண்டாள், நடந்ததைச் சொல்லிவிட்டாள். ‘தவறாக நினைக்காதீர்கள். நீங்கள் சாப்பிடாமல் வேலை செய்துகொண்டிருந்தீர்கள். எனக்கு அது பொறுக்கவில்லை. அரங்கனுக்கு அமுது செய்விக்கும் நேரம் நெருங்குவதை உணர்த்தும் மணிச்சத்தம் கேட்டதும் கொஞ்சம் முறையிட்டு, கடிந்துகொண்டுவிட்டேன்!’


திடுக்கிட்டுப் போனார் கூரத்தாழ்வான். ‘நீ செய்த வேலைதானா!’


‘இல்லை சுவாமி. இது அவன் செய்த வேலை.’


‘சரி, நீ முதலில் சாப்பிடு!’ என்று அன்போடு பிரசாதத்தை எடுத்து அவளுக்குக் கொடுத்தார்.


அன்று உண்ட அரவணைப் பிரசாதமே ஆண்டாளின் வயிற்றில் கருவாக உருக்கொண்டது.


ராமானுஜருக்கு இது தெரியும். கூரத்தாழ்வானே சொல்லியிருந்தார். அதனால்தான் ஆண்டாளுக்கு எப்போது குழந்தை பிறக்கும் என்று அவர் எதிர்பார்த்துக் காத்திருந்தார். அரங்கனின் ஆசியாக வந்து உதிக்கவிருக்கிற குழந்தை. கூரத்தாழ்வானின் வித்து. ஞான சூரியனாக இல்லாமல் வேறெப்படி இருந்துவிடும்?


பத்து மாதங்கள் பிறந்து கடந்தபோது செய்தி வந்தது. ஆண்டாளுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.


பூரித்துப் போனார் ராமானுஜர். ‘நான் குழந்தையைப் பார்க்க வேண்டுமே!’ என்று முதலியாண்டானிடம் அவர் சொல்லிக்கொண்டிருந்தபோதே எம்பார் மடத்துக்குள் நுழைந்தார். ‘சுவாமி, இதோ ஆழ்வானின் பிள்ளை!’


எங்கே எங்கே என்று ஆவலுடன் கையில் ஏந்திய ராமானுஜரின் முகம் சட்டென்று வியப்பில் ஆழ்ந்தது.


‘என்ன இது, குழந்தையின் மீது த்வயம் மணக்கிறதே!’


சுற்றியிருந்த யாருக்கும் எதுவும் புரியவில்லை. எம்பார் புன்னகை செய்தார். ‘ஆம் சுவாமி! குழந்தைக்குக் காப்பாக இருக்கட்டுமே என்று வருகிற வழியில் அதன் காதில் த்வய மந்திரத்தைச் சொல்லிக்கொண்டே வந்தேன்.’


‘பிரமாதம்! நான் செய்ய நினைத்த காரியத்தை நீர் செய்து முடித்தே வீட்டீர். இவன் அரங்கனின் அருளோடு பிறந்தவன். விஷ்ணு புராணம் இயற்றிய பராசரரின் பெயரை ஏந்த எல்லாத் தகுதிகளோடும் உதித்தவன். இவனுக்குப் பராசர பட்டர் என்று பெயரிடுகிறேன்!’


பரவசமாகிப் போனார்கள் உடையவரின் சீடர்கள். எப்பேர்ப்பட்ட தருணம்! ஆளவந்தாரின் நிறைவேறாத மூன்று ஆசைகளில் அதுவும் ஒன்று. தகுதி வாய்ந்த ஒருவருக்கு வியாச பராசர ரிஷிகளின் பெயர்களை இடுவது. ஆனால் பெயரிட்டதன் மூலமே ராமானுஜர் அந்தக் குழந்தையின் பிற்காலத் தகுதியைத் தெரியப்படுத்திவிட்டாரே.


‘தசரதன் புத்ரகாமேஷ்டி யாகம் செய்து பிரசாதம் பெற்றுத்தான் கோசலை ராமனைப் பெற்றாள். அதன்பின் ஆண்டாள் மட்டுமல்லவா இப்படி அரவணைப் பிரசாதம் உண்டு பிள்ளை பெற்றிருக்கிறாள்? ராமன் எப்படியோ அப்படித்தான் இந்தப் பிள்ளை!’ தீர்மானமாகச் சொன்னார் ராமானுஜர்.


பிறகும் கூரத்தாழ்வானுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அதற்கு வேதவியாச பட்டர் என்று பெயரிட்டார்.


பிரம்ம சூத்திர உரை எழுதும் பணியும் அப்போது நிறைவுற்றிருந்தது.


(தொடரும்)


Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 29, 2017 09:30

March 28, 2017

பொலிக! பொலிக! 75

‘போதாயன விருத்தியின் சுருக்கப் பிரதி கிடைக்காது போனால் என்ன? நமக்குக் கூரத்தாழ்வான் கிடைத்திருக்கிறார்! பிரம்ம சூத்திரத்துக்கு உரை எழுதும் பணியை இனி தொடங்கிவிடுவோம்!’ என்றார் ராமானுஜர்.


திருவரங்கம் திரும்பி, நடந்ததை அனைவருக்கும் விவரித்தபோது அத்தனை பேரும் வியந்து போனார்கள்.


‘ஆழ்வான்! உமது கூர்நோக்கும் கவனமும் ஆசாரிய பக்தியும் நிகரற்றது. இந்தப் பணி சிறப்பாக நடந்தேற நீர் உடையவருக்குப் பக்கபலமாக இரும்!’ என்றார் முதலியாண்டான்.


வேதங்களின் மிக முக்கியப் பகுதி, வேதாந்தம் எனப்படுகிற உபநிடதங்கள். பிரம்ம சூத்திரம், உபநிடதங்களுக்கான திறவுகோல். பிரம்ம சூத்திரத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ள போதாயணரின் உரையே சரியான வழி என்பது ஆளவந்தார் கருத்து. போதாயணரின் உரையை அடியொற்றியே ராமானுஜர் தமது ஶ்ரீபாஷ்யத்தை எழுதத் தொடங்கினார். அவர் சொல்லச் சொல்ல எழுத்தில் வடிக்கிற வேலையைல் கூரத்தாழ்வான் செய்ய ஆரம்பித்தார்.


‘ஆழ்வான், நான் சொல்லிக்கொண்டே போவேன். நீர் எழுதிக்கொண்டே வாரும். ஏதேனும் ஓர் இடத்தில் நான் சொல்லுகிற பொருள் ஏற்கவில்லையென்றால் சட்டென்று நிறுத்திவிடும்.’ என்று சொல்லிவிட்டு ஆரம்பித்தார் ராமானுஜர்.


விறுவிறுவென்று உரை வளர்ந்துகொண்டிருந்தது. ஒருநாள். ஓரிடம். ராமானுஜர் சொல்லிக்கொண்டே இருக்க, ஆழ்வான் எழுதாமல் வெறுமனே அமர்ந்திருந்தார்.


‘என்ன ஆயிற்று ஆழ்வான்?’


பதில் இல்லை.


‘சொல்லும், என்ன பிரச்னை?’


மீண்டும் பதில் இல்லை.


‘சரி, நான் சொல்வதை எழுத உமக்கு விருப்பமில்லை போலத் தெரிகிறது. நீரே எழுதிக்கொள்ளும்’ என்று சொல்லிவிட்டு எழுந்து போய்விட்டார் ராமானுஜர்.


விஷயம் பரவி சீடர்கள் பதற்றமானார்கள். ‘உடையவருக்குக் கோபம் வந்துவிட்டதா? அதுவும் கூரத்தாழ்வானிடமா? நம்பவே முடியவில்லையே?’ என்று கூடிக்கூடிப் பேசிக்கொண்டார்கள்.


‘இது சிறிய விஷயம். சொல்லுகிற பொருளில் உடன்பாடில்லையென்றால் எழுதுவதை நிறுத்திவிட்டுச் சும்மா இரும் என்று ஆசாரியர் என்னிடம் சொன்னார். உரை எழுதும் சிந்தனையில் இருக்கும்போது முன் சொன்னதை மறந்திருப்பார். நாளைக்குத் தெரிந்துவிடும் பாருங்கள்’ என்று சொல்லி கூரத்தாழ்வான் அவர்களை அமைதிப்படுத்தினார்.


அன்றிரவு ராமானுஜர் நடந்ததை எண்ணிப் பார்த்துக்கொண்டிருந்தார். வழக்கத்தில் இல்லாத வினோதம் அது. சட்டென்று தனக்கு ஏன் கோபம் வந்துவிட்டது? ஆழ்வானைப் போய்க் கடிந்துகொண்டுவிட்டேனே?


சொல்லிக்கொண்டு வந்த வரியின் பொருளைச் சிந்தித்துப் பார்த்தார். பகவத் சேஷ பூத: இது ஜீவாத்மாவின் சொரூபத்தை விளக்குகிற இடம். ஜீவன், பகவானின் அடிமை என்பதே இதன் பொருள். ஜீவாத்மாவின் அடிப்படை லட்சணமே அதுதான். ஆனால் உரை விளக்கம் சொல்லிக்கொண்டு வந்தபோது ஜீவனின் அறிவை முன்னிலைப்படுத்தி உடையவர் விளக்கியிருந்தார். ஜீவனே பகவானின் அடிமை என்னும்போது அறிவென்று தனியே ஒன்று ஏது? அதுவும் பகவானுக்குள் ஒடுங்குவதே அல்லவா?


அடடா, இது தவறான விளக்கமல்லவா? இதனால்தான் கூரத்தாழ்வான் எழுதாமல் நிறுத்திவிட்டார் போலிருக்கிறது.


மறுநாள் ராமானுஜர் கூரத்தாழ்வானை அழைத்தார். ‘ஆழ்வான், நான் சொன்ன பொருள் தவறு. இதோ மாற்றிக்கொள்ளும்’ என்று சரியான பொருளை மீண்டும் சொல்ல, கூரத்தாழ்வான் மீண்டும் எழுத ஆரம்பித்தார்.


இந்த விஷயம் திருவரங்கம் முழுதும் பரவிவிட்டது. ‘உடையவரின் சீடர்கள் எப்பேர்ப்பட்ட ஞானச்சுரங்கங்களாக இருக்கிறார்கள்! உடையவர் உரைக்கே திருத்தம் கேட்கிற அளவுக்குக் கூரத்தாழ்வானின் கல்வி பெரிது!’ என்று ஊரார் பேசியபோது கூரத்தாழ்வான் அதைப் பணிவுடன் மறுத்தார். ‘இந்தக் கல்வியும் அவர் அளித்ததுதான் சுவாமி!’


ஒருபுறம் ராமானுஜருடன் அமர்ந்து ஶ்ரீபாஷ்யப் பணி. மறுபுறம் வீட்டில் தனியே ராமாயணம் வாசித்துக்கொண்டிருந்தார் கூரத்தாழ்வான். வாசிப்பது என்றால் வேகமாக ஓட்டுவதல்ல. வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் புரிந்து உள்வாங்குவது. பிறகு அதைத் தாம் உள்வாங்கிய விதத்தில் எழுதி வைப்பது.


கோவிந்தன் திருவரங்கத்துக்கு வந்து சேர்ந்து எம்பாராகி, அவரோடு பேசிப் பழகத் தொடங்கியபிறகு கூரத்தாழ்வானுக்கு ராமாயணம் வாசிப்பதில் கட்டுக்கடங்காத பேராவல் எழுந்தது. உடையவரோடு செலவிட்ட நேரம் போக மிச்சப் பொழுதுகளையெல்லாம் வால்மீகியுடனேயே கழிக்கத் தொடங்கினார்.  வீட்டில் ஆண்டாள் எப்போதும் தனியே இருந்தாள். அவளைக் கவனிக்கக்கூட கூரேசனுக்கு நினைவின்றிப் போய்விடும். ராமானுஜரே அடிக்கடி நினைவுபடுத்தி வீட்டுக்கு அனுப்பிவைப்பார்.


‘கூரேசரே, ஆண்டாள் நலமாக இருக்கிறாள் அல்லவா? அவளை பத்திரமாகப் பார்த்துக்கொள்கிறீர் அல்லவா?’


ஆழ்வான் வெறுமனே தலையாட்டுவார். ஒன்றும் சொல்லமாட்டார். என்ன சொல்வது? ஆண்டாளைப் பக்குவமாகக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று அவருக்கும் ஆசைதான். ஆனால் மனம் ராமாயணத்திலும் உடையவர் சொல்லும் உரையிலும் அல்லவா மூழ்கிக் கிடக்கிறது?


‘சுவாமி, கூரேசரைக் கேட்காதீர்கள். அவர் மழுப்பிவிடுவார். இந்த மனிதர் அவளைப் பொருட்படுத்துவதேயில்லை’ என்று மற்ற சீடர்கள் அன்பும் கோபமும் கலந்த ஆதங்கத்தை முன்வைப்பார்கள்.


‘ஆண்டாள் கர்ப்பவதியானால் அடுத்தக் கணம் எனக்குச் சொல்லுங்கள்!’ என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தார் ராமானுஜர். அவர் ஒரு தீர்மானம் செய்திருந்தார். வெளியே சொல்லவில்லை. இது ஆளவந்தாரின் நிறைவேறாத ஆசைகள் நிறைவேறத் தொடங்கியிருக்கும் தருணம். பரம பாகவதனான கூரத்தாழ்வானின் வாரிசும் அதனை நிறைவேற்றும் பணியில் ஈடுபடும் என்று அவர் திடமாக நம்பினார். காரணம், ஒரு சம்பவம்.


பெரும் பணக்காரராக இருந்த கூரத்தாழ்வான் அனைத்தையும் தானம் செய்துவிட்டு உடையவரே கதி என்று வந்த நாளாகப் பிட்சை எடுத்துத்தான் வாழ்ந்துகொண்டிருந்தார். அன்றன்றைய தேவைக்கு மட்டுமே பிட்சை. மறுநாளுக்கு என்று ஒரு அரிசியைக் கூடச் சேர்த்து வைக்கிற வழக்கமில்லை. ஒருநாள் இருநாளல்ல. ஆண்டுக்கணக்காக. ஆண்டாளுக்கு அதில் பிரச்னை ஏதும் இருக்கவில்லை. அவள் கூரத்தாழ்வானைக் காட்டிலும் இந்த விஷயத்தில் தீவிரமாக இருந்தவள்.


ஆனால் ஶ்ரீபாஷ்ய உரை எழுதுவதில் ராமானுஜருக்கு உதவி செய்ய ஆரம்பித்து, அதே காலக்கட்டத்தில் ராமாயண வாசிப்பிலும் கூரத்தாழ்வான் ஈடுபட்டிருந்தபோது ஒருநாள் பிட்சைக்குப் போக மறந்துவிட்டார். விடிந்ததில் இருந்து வேலையில் மும்முரமாக இருந்தவரைத் தொந்தரவு செய்ய வேண்டாமென்று ஆண்டாளும் சும்மா இருந்தாள். மதியப் பொழுதாயிற்று. மாலை ஆயிற்று. இருட்டவும் தொடங்கிவிட்டது. ஆழ்வான் எழுந்திருக்கவேயில்லை. உலக கவனமே இன்றி வேலையில் மூழ்கியிருந்தார்.


பணியிருந்தால் பசியிருக்காதா? ஆண்டாளுக்குக் கவலையாகிவிட்டது. என்ன செய்வதென்று புரியவில்லை.


‘ஆண்டாள், இன்று உன் வீட்டில் இருந்து சமைக்கிற வாசனையே வரவில்லையே? என்ன சாப்பிட்டாய்?’ அக்கம்பக்கத்தில் கேட்டார்கள். என்ன சொல்லுவதென்று அவளுக்குத் தெரியவில்லை.


‘ஐயோ, கூரேசர் இன்று பிட்சைக்குச் செல்லவேயில்லையா? அப்படியென்றால் நீயும் பட்டினிதானா?’


சட்டென்று கோயில் மணிச்சத்தம் கேட்டது. அது அரங்கன் அமுது செய்யும் நேரம்.


(தொடரும்)


Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 28, 2017 09:30

March 27, 2017

உண்ணாதிருத்தல்

தினசரி மூன்று வேளை உணவு என்பதை மறந்து ஆறு மாதங்களாகின்றன. இப்போதெல்லாம் மதியமும் இரவும் மட்டுமே சாப்பாடு. மதியம் பனீருடன் ஏதேனும் ஒரு காய்கறிப் பொரியல். இரவு எழுபது பாதாம். அதாவது, பதினாறு மணி நேரம் உண்ணாதிருந்துவிட்டு, மீதி எட்டு மணி நேரத்தில் இரு உணவுகளை உட்கொள்கிறேன்.


சட்டென்று ஒருநாள் ஏகாதசி விரதம் இருக்கலாம் என்று தோன்றி, மாதம் இருநாள் இருபத்தி நான்கு மணி நேர விரதம் இருக்க ஆரம்பித்தேன். கொழுப்பு உணவு முறையில் பசி இருக்காது என்பது ஒரு வசதி. ஓரிரு மாதங்கள் பிரச்னை ஏதுமின்றி முழு நாள் உண்ணாதிருக்க முடிந்ததால், அதையே சற்று நீட்டித்து வாரம் ஒருமுறை என்று ஆக்கினேன். உணவின் மீதான இச்சையும், ருசி பற்றிய நினைவும் மறந்து வேலையில் ஆழ்வது வசதியாக இருக்கிறது. களைப்போ, சோர்வோ இருந்தால் இது சாத்தியமில்லை என்பதை நான் அறிவேன். அப்படியேதும் இதுவரை இல்லை என்பதால் விரதத்தை உற்சாகமாகவே கடைப்பிடிக்க முடிகிறது.


இதைச் செய்யும்போதுதான் அந்நாளில் ரிஷிகளும் யோகிகளும் எப்படி மாதக்கணக்கில் உண்ணாதிருந்து தவம் இயற்றியிருப்பார்கள் என்பது புரிகிறது.


உடலின் இயல்பான தேவை என்பது ஒன்று. மூன்று வேளை உணவு என்பது இயல்பாகிவிடுவது மற்றொன்று. உண்மையில் நாம் அத்தனை உண்ண அவசியமே இல்லை. செயல்படுவதற்குத் தேவையான அளவு உண்ணுவது என்னும் வழக்கத்தைக் கொண்டுவிட்டால் வியாதிகளில் இருந்து விடுதலை பெற்றுவிடலாம்.


விரதம் இருக்கத் தொடங்கியபிறகு நான் முன்னெப்போதையும்விடப் புத்துணர்ச்சியாக இருக்கிறேன். முன்பைவிட நெடுநேரம் கண்விழிக்க முடிகிறது. சலிப்பின்றிப் பல மணி நேரங்கள் தொடர்ந்து எழுத முடிகிறது. அனைத்தையும்விட புத்தி கூர்மைப்படுவதை உணர முடிகிறது. படிக்கிறவற்றை உள்வாங்குவது சுலபமாக உள்ளது. நினைவாற்றலும் சற்றுக் கூடியிருப்பதாகத் தோன்றுகிறது (இது மட்டும் பிரமையாக இருக்கலாம்).


உண்மையில் எடைக் குறைப்பை மட்டுமே நோக்கமாகக் கொண்டு ஆரம்பித்த வழக்கம் இது. எடைக்குறைப்பு நின்றாலும் இது தொடரும் என்றே நினைக்கிறேன்.


மூன்று நாள்களுக்கு முன்னர் இவ்வாரத்துக்கான விரத தினம் வந்தது. அன்று முழுநாள் உண்ணாதிருந்துவிட்டு இருபத்தி நான்கு மணி நேரங்களுக்குப் பிறகு உணவு உட்கொண்டேன். என்னமோ தோன்றியது. அன்றும் விரதத்தைத் தொடர்ந்தால் என்ன? எனவே, இரண்டாம் நாளும் விரதம். மறுபடி ஒரு இருபத்தி நான்கு மணி நேரம் உண்ணாமல் இருந்து மீண்டும் ஓர் உணவு.


தொடர்ச்சியாக மூன்று தினங்களில் மொத்தமாக மூன்று வேளை மட்டுமே உட்கொண்டு பார்த்தும் சோர்வு என்ற ஒன்று வரவேயில்லை. இது எனக்கு மிகுந்த வியப்பை அளிக்கிறது. நான் ஒரு நாளைக்கு மூன்றல்ல; நான்கு அல்லது ஐந்து வேளை உண்ட காலங்கள் உண்டு. எண்ணெயில் பொரித்த பலகாரங்கள், இனிப்பு வகைகள், ஐஸ் க்ரீம், ஜூஸ் வகைகள் என்று என்னென்னவோ சாப்பிடுவேன். என் நாவின் அளவுகோலைத் தாண்டி வேறெதையும் பொருட்படுத்தியதே இல்லை.


இன்று எனக்கு என் நாக்கு அடிமையாக இருக்கிறது. பிறந்ததில் இருந்து விரும்பி உண்ட எதையும் சர்வ சாதாரணமாக விலக்கி வைக்க முடிகிறது. எப்பேர்ப்பட்ட உணவகத்துக்குச் சென்றாலும் எனக்குச் சரியான உணவைத் தாண்டி ருசிக்கென்று இன்னொன்றைக் கேட்பதில்லை. மனிதன் பழக்கத்தின் அடிமை. தேவையற்றதை நிராகரிப்பதும் ஒரு பழக்கமே.


உண்மையில் விரதம் பழக்கமான பிறகு உடல் மற்றும் மன ரீதியில் நான் அனுபவிக்கும் மாற்றங்கள் மிகுந்த உற்சாகத்தைத் தருகின்றன. இருபத்தி நான்கு மணி நேரம் சாப்பிடாதிருப்பது என்பது இயலாத காரியமல்ல. அந்த இருபத்தி நான்கு மணி நேரங்களில் உடல் இயந்திரத்துக்கு ஓய்வு கிடைக்கிறது. செயல்பாட்டுக்குத் தேவையான சக்தியை ஏற்கெனவே சேமித்து வைத்திருக்கும் கொழுப்பை எரிப்பதன்மூலம் அது எடுத்துக்கொள்கிறது. வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்வது போல உள்ளுக்குள் ஒரு சுத்திகரிப்பு நிகழ்கிறது. அதன்பின் உண்டு, உறங்கி எழுந்து வேலையைப் பார்க்க ஆரம்பித்தால் ராட்சச பலம் வந்தது போல் இருக்கிறது.


இதன் இன்னொரு லாபம், விரதம் முடித்து உணவு உட்கொள்ளும்போது உணவு மேலும் ருசிக்கும். நிறுத்தி நிதானமாக உண்ணும் பொழுதே ஒரு தியானமாகும். உண்டு முடித்ததும் வருகிற நிறைவு அபாரமாக இருக்கிறது.


நான் உடலுழைப்பு இல்லாதவன். எனக்கு இத்தகைய உணவு முறை அல்லது உணவற்ற முறைதான் சரி என்று தோன்றுகிறது. இது புத்தியில் படிந்து, செயலாக உருப்பெற நாற்பத்தைந்து வருடங்களாகியிருக்கின்றன.


இன்னும் ஒரு மணி நேரத்தில் இன்றைய விரதம் நிறைவடையப் போகிறது. அதன்பின் அரை மணி நேரம் நிறுத்தி நிதானமாகச் சாப்பிட்டுவிட்டு ஒரு தூக்கம் போட்டு எழுந்தால் விடியும்வரை வேலை செய்யலாம். உலகம் உறங்கும் நேரத்தில் எப்போதும் நான் விழித்திருக்கிறேன். விழித்திருப்பது என்பது எனக்கு விழிப்புடன் இருப்பது.


இது உறங்கும்போதும் சாத்தியமானால் ஞானியாகிவிடலாம்.


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 27, 2017 23:56

வாழ்வதென்பது…

கொஞ்சகாலமாக நான் வீட்டைவிட்டு அதிகம் வெளியே போவதில்லை. பணி நிமித்தம் மாதம் ஒருசில தினங்கள் வெளியே போனால் அதிகம். மற்றபடி வீட்டில் என் அறையை விட்டு வெளியே வருவதே இல்லை. கூட்டங்கள், விழாக்கள், சினிமா, கடற்கரை, நண்பர்கள் சந்திப்பு எதுவும் கிடையாது.


விடிந்ததும் காலைக் கடன்களுக்குப் பிறகு அறைக்கு வந்து உட்கார்ந்தால், ஒன்பது மணிக்குக் குளிப்பதற்கு எழுவேன். அதன்பின் மதியம் ஒன்றரை மணிக்கு உணவுக்கு எழுந்து செல்வேன். உண்ட பிறகு பத்து நிமிடங்கள் போனில் ஃபேஸ்புக், ட்விட்டரில் மேய்ந்துவிட்டுப் படுக்கப் போய்விடுவேன். மாலை எழுந்து முகம் கழுவிக்கொண்டு மீண்டும் அறைக்குள் வந்தால் இரவு உணவுக்கு ஒரு பத்து நிமிடங்கள். அந்தச் சமயத்தில் மட்டும் டிவி பார்ப்பேன். பெரும்பாலும் ஆதித்யா மற்றும் சிரிப்பொலி சானல்கள். சாப்பிட்டு முடித்தபிறகு மீண்டும் என் அறைக்குள் நுழைந்துவிட்டால் நள்ளிரவு ஒன்றரை இரண்டு வரை அங்கேதான்.


கடந்த டிசம்பரில் அடித்த புயல் சமயத்தில் நடைப்பயிற்சி நின்றது. இன்றுவரை மீண்டும் அதை ஆரம்பிக்க முடியவில்லை. எப்போதும் படிக்கவும் எழுதவும் என்னவாவது இருந்துகொண்டே இருக்கிறது. அதைத் தவிர வேறெதைச் செய்தாலும் நேரம் வீண் என்று தோன்றிவிடுகிறது.


தப்பித்தவறி நான் எங்காவது வெளியே கிளம்பினால் என் மனைவியும் மகளும் அதை ஒரு திருவிழாவைப் போலக் கொண்டாட ஆரம்பித்துவிடுகிறார்கள். ‘ஐ! நிஜமாவே இன்னிக்கு வெளிய போறியா? சூப்பர்ப்பா!’ என்கிறாள் மகள்.


‘நம்பாதடி. கடைசி நேரத்துல ப்ரோக்ராம் கேன்சல்னு சொல்லிடுவான் பாரு!’


எனக்கே இது வியப்பாகத்தான் இருக்கிறது. நான் இப்படி இருந்தவனல்ல. காலை கிளம்பினால் இரவு பத்து மணிக்கு முன்னால் வீடு திரும்பியதே கிடையாது. எனது நேரத்தை யார் யாரோ உண்டுகொண்டிருந்தார்கள் அப்போது. உத்தியோகம் கொஞ்சம் உண்டது. நண்பர்கள் கொஞ்சம் உண்டார்கள். சினிமா தின்றது. அரட்டை தின்றது. ஒன்றுமே இல்லாமல் வெட்டியாகப் பூங்காக்களில் படுத்துக் கிடந்துவிட்டு எழுந்து வந்ததும் உண்டு.


இன்று அதெல்லாமே பழங்கதையாகிவிட்டது. என் படிப்பறை தவிர இந்த உலகில் வேறெந்த இடமும் எனக்கு உகந்ததல்ல என்று தோன்றுகிறது. பகல் இரவு தெரியாமல், நேரம் பார்க்காமல், வெளியே நடக்கிற எதற்கும் காது கொடுக்காமல் என் இஷ்டத்துக்குப் படித்துக்கொண்டிருக்கிறேன். ஒரு நாளில் நாலைந்து மணி நேரங்களை ராமானுஜர் இப்போது எடுத்துக்கொள்கிறார். இன்னொரு ஐந்து மணி நேரம் வாணி ராணிக்கு. மற்ற நேரம் முழுதும் என்னுடையதாக இருக்கிறது.


ஒரு சமயத்தில் குறைந்தது மூன்று புத்தகங்களைப் படிக்க ஆரம்பிக்கிறேன். ஒவ்வொன்றிலும் கொஞ்சம் பக்கங்கள் ஒரு நாளைக்கு. படித்ததை உடனடியாகக் குறிப்பெடுத்து வைத்துவிடுகிறேன். தோன்றும்போது எழுதுகிறேன். பல வருடங்களுக்குப் பிறகு ஒரு நாவலுக்கான எண்ணமும் ஆவலும் எழுந்திருக்கின்றன. அதற்காகவும் தனியே நிறையப் படிக்கிறேன். நதிகளைப் பற்றி, மாந்திரிகம், பில்லி சூனியம் பற்றி, சித்தர் இலக்கியம், பச்சிலைகள் சம்மந்தமாக, வேதங்களில் கர்ம காண்டப் பகுதிகளாக.


சமயத்தில் என் அறையே ஒரு பெயரற்ற புராதன முனிவரின் குகைபோல எனக்குத் தோன்றும். சன்னல்களை அடைத்து, ஏசியை ஓடவிட்டு, ஒரு சாம்பிராணி வத்தியையும் ஏற்றி வைத்துவிட்டால் முடிந்தது.


எப்போதாவது என்னைக் காணவரும் நண்பர்கள், உறவினர்கள் நான் இப்படி வீட்டுக்குள் அடைந்துகிடப்பதைக் கண்டு வியப்படைகிறார்கள். உலகத்தை மூடிய கதவுகளுக்குள்ளும் கொண்டுவர முடியும் என்பதை யாரும் யோசிப்பதில்லை. செய்திக்கும் மற்றதுக்கும் இணையம் இருக்கிறது. விரிச்சுவல் நட்புகள் போதுமானதாக உள்ளது. ஒரு வேலைக்கும் அடுத்த வேலைக்கும் இடைப்பட்ட பொழுதில் நாலு வரி ட்விட்டரில் எதையாவது எழுதிப் போடுவதே பொழுதுபோக்காக இருக்கிறது.


இப்படியும் கொஞ்சநாள் வாழ்ந்துதான் பார்ப்போமே என்று ஆரம்பித்தது. பழகிவிட்டது.


எழுதுவதற்கும் படிப்பதற்குமாக ஒரு ஸ்டுடியோ அமைக்கவேண்டும் என்பது என் பல்லாண்டு காலக் கனவு. முற்றிலும் இன்னும் நிறைவேறவில்லை என்றாலும் ஓரளவு என் விருப்பப்படியே என் படிப்பறையை அமைத்துக்கொண்டிருக்கிறேன். இந்த அமைதியும் புத்தகங்களின் வாசனையும் மெல்லிய இசையும் தருகிற மனக் குவிப்பை வெளியுலகம் எனக்குத் தருவதில்லை.


இன்னும் நான் உள்வாங்கக் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான புத்தகங்களும் பல்லாயிரக் கணக்கான இசைக் கோவைகளும் இங்கிருந்து என்னை எழாதே என்கின்றன. வெளியே அப்படி என்ன நிகழ்ந்துவிடுகிறது? எல்லாம் ஒருநாள் உயிரிச் செய்திகள்.


நான் எதையும் இழக்கவில்லை என்று நினைத்துக்கொள்கிறேன்.


நண்பர் ஒருவர் சுமார் ஆயிரம் புத்தகங்களை நேற்று இரண்டு பென் டிரைவ்களில் ஏற்றி அனுப்பி வைத்திருந்தார். அத்தனையும் இருபதாம் நூற்றாண்டின் முதல் முப்பது வருடங்களுக்கு முன்னர் வெளியான புராதனமான புத்தகங்கள். மருத்துவம், சமையல், சித்து, மாந்திரிகம், ஞானம், யோகம் தொடர்பான நூல்கள். எதுவுமே இன்று அச்சில் இல்லாதவை. பிடிஎஃப் வடிவத்திலேயே அரித்த பூச்சிகளின் வாசனையை நுகரவைக்கிற நூல்கள்.


என்று படித்து முடிக்கப் போகிறேன்? தெரியவில்லை. ஆனால் படித்துக்கொண்டிருக்கிற வரைக்கும் இருப்பேன் என்பது மட்டும் புரிகிறது.


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 27, 2017 12:56

பொலிக! பொலிக! 74

காஷ்மீரத்தில் இருந்தது போதாயண உரையின் முழு வடிவமல்ல. இரண்டு லட்சம் படிகள் (படி என்பது எழுத்தைக் குறிக்கும் பழைய அளவு) கொண்ட உரையின் சுருக்கப்பட்ட வடிவம் மட்டுமே. அந்தச் சுருக்கம் இருபத்தி ஐயாயிரம் படிகள் கொண்டது. எப்போது வந்து சேர்ந்தது என்பதே தெரியாமல் பலப்பல காலமாக காஷ்மீரத்தில் காப்பாற்றப்பட்டு வந்த ஓலைச்சுவடி அது. சரஸ்வதி பீடத்தில் இருந்த அந்தச் சுவடிக்கட்டை காஷ்மீரத்து மன்னன் கண்ணேபோல் காத்து வந்தான். அங்கே அதை எடுத்துப் படிக்கிறவர்களோ, சிந்திக்கிறவர்களோ, அதன் முக்கியத்துவம் உணர்ந்தவர்களோ யாரும் இருக்கவில்லை. புராதனமான ஓர் ஓலைச்சுவடிக்கு அளிக்கவேண்டிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டதே தவிர, அதில் மூழ்க யாருமில்லை.


காஷ்மீரத்தை அடைந்த ராமானுஜர் மன்னரைச் சந்தித்துத் தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டார்.


‘அடியேன் ராமானுஜன். தென் திருவரங்கத்தில் இருந்து வருகிறேன்.’


மன்னனால் நம்ப முடியவில்லை. ஓர் ஓலைச்சுவடிக்காக அத்தனை தூரத்தில் இருந்து ஒருவர் வருவாரா! அவனால் எண்ணிப் பார்க்கக்கூட முடியவில்லை.


‘அது அவசியம் மன்னா. பிரம்ம சூத்திரத்துக்கு போதாயன விருத்தியை அடியொற்றி உரை எழுத வேண்டுமென்பது எங்கள் ஆசாரியர் ஆளவந்தாரின் விருப்பம். ஆசாரியர் உத்தரவை நிறைவேற்ற என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இந்தப் பயணம் ஒரு பொருட்டா?’


மன்னருக்கு ராமானுஜரைப் பிடித்துப் போனது. சில மணி நேரம் அவரோடு உரையாடியதில் அவரது ஞானத்தின் ஆழ அகலங்கள் புலப்பட்டு, என்ன கேட்டாலும் செய்யலாம் என்கிற முடிவுக்கு வந்திருந்தான்.


‘ஆனால் மன்னா, போதாயன விருத்தியை இவருக்குக் கொடுத்தனுப்புவது அத்தனை சுலபமல்ல. அது புனிதப் பிரதி. காலகாலமாக நமது சாரதா பீடத்தில் இருந்து வருவது. அன்னையின் உத்தரவின்றி அதை இன்னொருவரிடம் ஒப்படைக்க இயலாது’ என்றார்கள் அங்கிருந்த பண்டிதர்கள்.


ராமானுஜர் யோசித்தார். ‘ஒப்படைப்பதெல்லாம் பிறகு. ஒரு முறை வாசிக்கவேனும் எனக்கு அனுமதி தரவேண்டும்’ என்று சொன்னார்.


‘அதில் பிரச்னை இல்லை ராமானுஜரே. இந்தச் சபையிலேயே நீங்கள் அதனை வாசிக்கலாம்’ என்றான் மன்னன்.


மறுநாள் காஷ்மீரத்து மன்னனின் சபையில் அங்கிருந்த அத்தனை அத்வைத பண்டிதர்களும் சூழ்ந்திருக்க, போதாயன விருத்தியின் சுருக்கம் எடுத்து வரப்பட்டது.


‘ஆழ்வான்! நீர் அதை வாங்கிப் படியும்!’ என்று கூரத்தாழ்வானைப் பார்த்துச் சொன்னார் ராமானுஜர்.


கைபடாமல் காலகாலமாக சரஸ்வதி தேவியின் சன்னிதானத்தில் தவமிருந்த ஓலைச்சுவடியை நடுங்கும் கைகளில் கூரத்தாழ்வான் வாங்கினார். கண்ணில் ஒற்றிக்கொண்டு படிக்க ஆரம்பித்தார்.


ராமானுஜர் கேட்டார். மன்னர் கேட்டார். சபை முழுதும் கேட்டது.


பண்டிதர்களுக்கு உடனே புரிந்துபோனது. போதாயண விருத்தியை ராமானுஜர் பெற்றுச் சென்றால் சர்வ நிச்சயமாக அதற்கு விசிஷ்டாத்வைத அடிப்படையில் ஓர் உரை எழுதிவிடுவார். காலகாலமாக இருந்து வரும் சங்கர பாஷ்யத்துக்கு அது ஒரு போட்டியாகப் பேசப்படும். எது சிறந்தது என்ற பேச்சு வரும். ஒப்பீடுகள் எழும். எதற்கு இந்தச் சிக்கல் எல்லாம்? சாரதா பீடம் என்பது சங்கரர் உருவாக்கியது. அங்கே பாதுகாக்கப்படும் பிரதி ராமானுஜரின் கைகளுக்குப் போய்ச் சேருதல் தகாது.


எதைத் தடுக்க வேண்டும் என்று காஷ்மீரத்துக்கு வெளியே இருந்த அத்வைத பண்டிதர்கள் தவித்துக்கொண்டிருந்தார்களோ, அதையேதான் காஷ்மீரத்துப் பண்டிதர்களும் நினைத்தார்கள். எனவே மன்னரிடம் தங்கள் ஆட்சேபணையைத் தெரிவித்தார்கள்.


‘இவர் ஒருமுறை கேட்டுவிட்டார் அல்லவா? இது போதும் மன்னா. சுவடியைக் கொடுத்தனுப்புவதெல்லாம் முடியாத காரியம்.’


ராமானுஜருக்குப் புரிந்தது. இது வாதம் செய்யும் இடமல்ல. வந்த காரியம் நல்லபடியாக நடந்தேறவேண்டும். அதற்கு மன்னனின் சகாயம் முக்கியம். என்ன செய்யலாம் என்று யோசித்தார்.


‘மன்னா, நான் இங்கே கிளம்பி வந்ததே தெய்வசித்தம்தான். இது நிகழவேண்டும் என்று பரம்பொருள் விரும்பும்போது கூடாதென்று தடுப்பது முறையா?’


‘இது தெய்வ சித்தம் என்பதை நான் எப்படி அறிவது? ஒன்று செய்யுங்கள். இப்போது உங்கள் சீடர் வாசித்ததன் சாரத்தை நீங்கள் உள்வாங்கியபடி எழுதிக் கொடுங்கள். சரஸ்வதி தேவி அதை ஒப்புக்கொள்கிறாளா பார்ப்போம்!’ என்றான்.


‘ஓ, அது செய்யலாமே!’ என்று அப்போதே கிளம்பிச் சென்று எழுத உட்கார்ந்தார். விறுவிறுவென்று எழுத ஆரம்பித்தார்.


மறுநாள் மீண்டும் சபை கூடியபோது போதாயன விருத்தியைத் தாம் உள்வாங்கிய விதத்தில் எழுதிக் கொண்டு வந்திருந்த ராமானுஜர், அந்தச் சுவடிகளை மன்னனிடம் அளித்தார்.


‘பண்டிதர்களே, இந்தச் சுவடியை சரஸ்வதி தேவியின் பாதங்களில் கொண்டு வையுங்கள். சன்னிதியை இழுத்து மூடுங்கள். நாளைக் காலை திறந்து பார்ப்போம். தேவி ஏற்றாலும் நிராகரித்தாலும் ஏதேனும் ஒரு விதத்தில் நமக்குத் தெரியப்படுத்துவாள்’ என்று சொன்னான்.


மன்னன் சொன்னபடி அரசவைக் காவலர்கள் முன்னிலையில் ராமானுஜர் எழுதிக் கொடுத்த ஓலைச் சுவடிகள் சரஸ்வதி பீடத்தில் வைக்கப்பட்டு, சன்னிதி சாத்தப்பட்டது. மறுநாள் திறந்து பார்த்தபோது, தேவியின் பாதங்களில் வைக்கப்பட்ட சுவடிகள் அவளது சிரசின்மீது இருந்தது!


திகைத்துப் போனான் மன்னன். ‘இவர் மகா பண்டிதர். சரஸ்வதி தேவியே அங்கீகரித்துவிட்ட பிறகு நாம் சொல்ல ஒன்றுமில்லை’ என்று அறிவித்துவிட்டு போதாயண உரைச் சுருக்கத்தை ராமானுஜரிடம் ஒப்படைத்தான்.


உடையவரும் கூரத்தாழ்வானும் பிற சீடர்களும் மகிழ்ச்சியோடு அங்கிருந்து திருவரங்கம் கிளம்பினார்கள்.


ஆனால் காஷ்மீரத்துப் பண்டிதர்களுக்கு மன்னனின் செயல் பிடிக்கவில்லை. ‘இது தகாது. ராமானுஜர் பிரம்ம சூத்திரத்துக்கு உரை எழுத போதாயண விருத்தி உதவக்கூடாது! அத்வைதபரமான உரையைத் தவிர இன்னொரு தத்துவம் சார்ந்த விளக்கம் வரவே கூடாது!’ என்று முடிவு செய்தார்கள். அன்றிரவே ஆள்களை அனுப்பி ராமானுஜர் தங்கியிருந்த இடத்தில் இருந்து ஓலைச் சுவடிகளைத் திருடிக்கொண்டு போனார்கள்.


மறுநாள் கண் விழித்துப் பார்த்த உடையவர், ஓலைச்சுவடிகள் திருடு போயிருப்பது கண்டு அதிர்ந்து போனார்.


‘ஐயோ, இத்தனைப் பாடு பட்டு வாங்கி வந்த சுவடிகள் களவு போய்விட்டனவே! ஒரே ஒருமுறை கேட்டதை வைத்து எப்படி நான் உரை எழுதுவேன்!’ என்று திகைத்து நின்றார்.


சீடர்கள் குழப்பமும் கலக்கமுமாக அவரையே பார்த்துக்கொண்டிருக்க, கூரத்தாழ்வான் பணிவான குரலில் சொன்னார், ‘சுவாமி, கவலைப் படாதீர்கள். வாசித்த உரை எனக்கு மனப்பாடமாகிவிட்டது!’


‘என்ன சொல்கிறீர் ஆழ்வானே?! முழுதும் மனப்பாடமா!’


‘ஆம் சுவாமி. அத்திறமையும் தங்கள் அருளால்தான்!’


அப்படியே கட்டிப்பிடித்து ஆனந்தக் கண்ணீர் சிந்தினார் ராமானுஜர்.


(தொடரும்)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 27, 2017 09:30

March 26, 2017

பொலிக! பொலிக! 73

‘ஒன்று கவனித்தீரா? உடையவரின் சிறப்புக்கு அவரது சீடர்கள் ஒவ்வொருவரும் தம்மால் இயன்ற கிரீடங்களைச் சேர்த்துக்கொண்டே போகிறார்கள். இவர் உயர்வு, அவர் மட்டம் என்று ஒருத்தரைக்கூடத் தரம் பிரிக்க முடியாதபடி அத்தனை பேருமே எப்பேர்ப்பட்ட ஞானஸ்தர்களாக விளங்குகிறார்கள் பாரும்!’


பெரிய நம்பியிடம் அரையர் சொல்லிக்கொண்டிருந்தார்.


‘உண்மைதான் அரையரே. முதலியாண்டான் ஆகட்டும், கூரத்தாழ்வான் ஆகட்டும், அருளாளப் பெருமான் எம்பெருமானாராகட்டும், எம்பாராகட்டும் – ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் ஜொலிக்கிறார்கள். உடையவரைத் தவிர வேறு நினைவே இன்றி எப்போதும் அவரது சொற்களை மட்டுமே கேட்டுக்கொண்டிருப்பதால் இப்படியாகிறது என்று நினைக்கிறேன்.’


‘ராமானுஜரும் சொல்லித் தருவதில் சளைப்பதேயில்லை. மடத்துக்குச் சென்றால் இருபத்தி நாலு மணி நேரமும் ஏதாவது ஒரு வகுப்பு நடந்துகொண்டேதான் இருக்கிறது.’


‘அவரது நேரத்தை சீடர்களும் பக்தர்களும் முழுதாக உண்டுகொண்டிருக்கிறார்கள். என் கவலையெல்லாம் அவர் எப்போது பிரம்ம சூத்திரத்துக்கு உரை எழுதப் போகிறார் என்பதுதான்!’


சொல்லிவிட்டு ஏக்கத்துடன் எங்கோ வெறித்துப் பார்த்தார் பெரிய நம்பி. ஆளவந்தாரின் மூன்று நிறைவேறாத ஆசைகள் ராமானுஜருக்காக இன்னமும் காத்திருப்பதை அவர் நினைக்காத நாளே இல்லை. சந்திக்கும்போதெல்லாம் அதைக் குறித்து நினைவுபடுத்த அவர் தவறுவதும் இல்லை.


‘சுவாமி, எனக்கும் அதே யோசனைதான். ஆனால் பிரம்ம சூத்திர உரைக்கு அடிப்படை நூலாக நமக்குத் தேவைப்படுவது போதாயன விருத்தி (விருத்தி என்றால் உரை). இங்கே அந்நூலோ, பிரதியோ கிடையாது. வடக்கே எங்கோ ஒரு பிரதி இருப்பதாகச் சொல்லுகிறார்கள். தேடிச் செல்லுவது பெரிதல்ல. ஆனால் கிடைக்க வேண்டுமே?’ என்பார் உடையவர்.


பெரிய நம்பிக்கும் அது தெரியும். ஆளவந்தாரின் ஆசையே அதுதான். பிரம்ம சூத்திரத்துக்கு போதாயன மகரிஷியின் உரையை அடியொற்றி ஓர் எளிமையான உரை செய்ய வேண்டும். அவர்தான் வியாசரின் மனத்தை முற்றிலுமாகப் புரிந்துகொண்டு உரை எழுதியவர் என்பது ஆளவந்தாரின் கருத்து. இறப்பதற்குமுன் பல சமயம் தமது சீடர்களிடம் அது பற்றி அவர் பேசியிருக்கிறார்.


‘திரமிடர் என்றொருவர் எழுதியிருக்கிறார். குஹதேவர் என்ற ரிஷி எழுதியிருக்கிறார். டங்கர் என்று மற்றொருவர் பாஷ்யம் (உரை) செய்திருக்கிறார். நமக்குத் தெரிந்து இவ்வளவு. தெரியாமல் இன்னும் சிலர் இருக்கலாம். ஆனால் எத்தனை உரைகள் இருந்தாலும் போதாயனரின் உரையே சிறப்பு. அதனை அடியொற்றி ஓர் எளிய உரை செய்யப்பட வேண்டும்!’


கிமு நான்காம் நூற்றாண்டில் வசித்த (எட்டாம் நூற்றாண்டு என்றும் சொல்வார்கள்) போதாயணர் அடிப்படையில் ஒரு கணித வல்லுநர். யாக குண்டங்கள், யாக மேடைகள் அமைப்பதில் கடைப்பிடிக்க வேண்டிய அளவுகள் சார்ந்து முதல் முதலில் ஆய்வு செய்தவர். செங்கோண முக்கோணத்தின் பக்க அளவுகளை வர்க்க – வர்க்க மூலமின்றிக் கண்டறியும் முறையைக் கண்டுபிடித்தவர். சூத்திரங்களின் சக்கரவர்த்தி. சூத்திரம் என்பது சுருங்கச் சொல்லுவது. வேதங்களின் இறுதிப் பகுதியில் வருகிற உபநிடதங்களின் சாரமே பிரம்ம சூத்திரம். இதை வேதாந்த சூத்திரம் என்றும் சொல்லுவதுண்டு. உபநிடதங்களின் உள்நுழைந்து புரிந்துகொள்ள பிரம்ம சூத்திரமே சரியான வாயில். பிரம்ம சூத்திரத்தை சரியாக விளங்கிக்கொள்ளத்தான் போதாயனரின் உரை.


போதாயணரின் உரை அடிப்படையில்தான் பிரம்ம சூத்திரத்துக்கு உரை எழுத வேண்டும் என்று ஆளவந்தார் கருதியதற்கு அடிப்படைக் காரணம், போதாயன விருத்தி, விசிஷ்டாத்வைத அடிப்படையில் அமைந்தது என்பது. ஜீவனுக்கும் பரமனுக்குமான உறவைப் பேசுவதல்லவா அடிப்படைத் தத்துவம்? அதை விளக்கும் நூலும் சரியான விதத்தில் அமைய வேண்டுமென்பது அவரது கவலை.


ராமானுஜரும் பெரிய நம்பியும் இதைப் பற்றிப் பல சமயம் பேசியிருக்கிறார்கள். அரையர் பேசிவிட்டுப் போன பிறகும் பெரிய நம்பி ஒரு சமயம் உடையவரைச் சந்தித்து இதைக் குறித்துப் பேசினார்.


‘ஒரு தகவல் கிடைத்திருக்கிறது சுவாமி. காஷ்மீரத்தில் உள்ள சாரதா பீடத்தில் போதாயன விருத்தி இருப்பதாகத் தெரிகிறது. இங்கிருந்து அங்குள்ளவர்களைத் தொடர்பு கொள்வதென்பது சாத்தியமில்லாத காரியம். நேரில் போனால் ஒருவேளை அதைக் காண முடியலாம்’ என்றார் ராமானுஜர்.


‘காஷ்மீரமா! அடேயப்பா, அது வெகு தொலைவில் உள்ள இடமாயிற்றே.’


‘ஆம். பல்லாயிரக்கணக்கான காதங்கள் என்கிறார்கள். ஆனால் நமக்கு போதாயன விருத்தி வேண்டுமென்றால் அங்கே போய்த்தான் தீரவேண்டும்.’


‘யாரையாவது அனுப்பிப் பார்க்கலாமா சுவாமி?’


‘அது சரியாக வராது நம்பிகளே. நானே நேரில் போகலாமென்று இருக்கிறேன்.’


முடிவெடுக்கிறவரைதான் யோசனை. தீர்மானம் வந்துவிட்டால் அடுத்தக் கணம் செயல்தான். ராமானுஜரின் இந்தக் குணம் பெரிய நம்பிக்கு நன்றாகத் தெரியும். எனவே, ‘எப்போது?’ என்று கேட்டார்.


‘இதோ புறப்பட வேண்டியதுதான். கூரத்தாழ்வானைத் துணைக்கு அழைத்துக்கொள்கிறேன். உதவிக்கு ஒரு சில சீடர்கள் போதும். நீங்கள் உத்தரவளித்தால் நாளையே கிளம்பிவிடுவேன்!’ என்று சொன்னார்.


ராமானுஜர் புறப்பட்ட செய்தி அவரைக் காட்டிலும் வேகமாக தேசமெங்கும் பரவியது. பயணத்தைவிட அதன் நோக்கம் பலருக்குக் கவலையளித்தது. ஏற்கெனவே அத்வைதத்துக்கு எதிரான சித்தாந்தம் ஒன்றை முன்வைத்துப் பரப்பிக்கொண்டிருக்கிற சன்னியாசி. இப்போது பிரம்ம சூத்திரத்துக்கும் விசிஷ்டாத்வைதம் சார்ந்து ஓர் உரை எழுதிவிட்டால் அத்வைத சித்தாந்தத்துக்கு அது பெரிய அச்சுறுத்தலாகிவிடுமோ?


‘முடியாது. சாரதா பீடத்தில் போதாயண விருத்தி இருப்பது உண்மையென்றால் அது ராமானுஜர் கரங்களுக்குக் கிடைக்கக்கூடாது!’ என்று ஆங்காங்கே பல அத்வைத சித்தாந்திகள் கூடிப் பேசினார்கள். ஆனால் சாரதா பீடத்தை எப்படித் தொடர்பு கொள்வதென்று யாருக்கும் தெரியவில்லை. ஆதி சங்கரர் அங்கொரு பீடம் அமைத்த விவரம் தெரியும். அத்வைத சித்தாந்தத்தைப் பரப்புகிற திருப்பணியில் அவர்கள் முனைப்புடன் இருக்கிற விவரம் தெரியும். அங்கே போதாயண விருத்தி இருப்பதும் அது விசிடாத்வைத ரீதியில் எழுதப்பட்ட விளக்கம் என்பதும் அப்போதுதான் அவர்களுக்குத் தெரிந்தது.


எப்படித் தடுப்பது?


அவர்கள் யோசித்துக்கொண்டிருந்தபோது ராமானுஜர் காஷ்மீரத்துக்குப் போய்ச் சேர்ந்தார். கிட்டத்தட்ட நூறு நாள் பயணம். நடுவில் அவர் எங்கும் தங்கவில்லை. சற்றும் நேர விரயம் இல்லை. ஒரே நோக்கம். ஒரே சித்தம். வழியில் கூரத்தாழ்வானிடம் ஒரே ஒரு விஷயம் சொல்லியிருந்தார்.


‘போதாயணரின் உரை நம் கைக்குக் கிடைக்கிறதோ இல்லையோ. காண முடிந்த கணத்தில் ஒருமுறை வாசித்தேனும் பார்த்துவிட வேண்டும்!’


அது எத்தனை அவசியமான கட்டளை என்பது காஷ்மீரத்துக்குப் போய்ச் சேர்ந்ததும் கூரத்தாழ்வானுக்குப் புரிந்தது.


(தொடரும்)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 26, 2017 09:30

March 25, 2017

ருசியியல் – 15

தமிழனுக்குத் தமிழாசிரியர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட உணவுப் பொருள், ஊறுகாய்.வினைத்தொகைக்கு இதைத் தவிர இன்னொரு உதாரணம் சொல்லக்கூடிய ஆசிரியர் யாராவது தென்பட்டால் விழுந்து சேவித்துவிடுவேன். நான் ஆறாங்கிளாஸோ, ஏழாங்கிளாஸோ படித்துக்கொண்டிருந்தபோது இதே வினைத்தொகைக்கு ஓர் உதாரணம் சொல்லவேண்டிய சூழ்நிலை வந்தபோது சுடுகாடு என்று சொன்னேன். உத்தமோத்தமரான அந்தத் தமிழாசிரியர் அன்று முதல் என்னை ஓர் அகோரி மாதிரி பார்க்கத் தொடங்கினார். இதெல்லாம் செய்வினை செயப்பாட்டு வினையல்ல. கர்ம வினை.


கிடக்கட்டும். உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? ஈரேழு பதினான்கு உலகுக்கும் ஊறுகாயை அறிமுகப்படுத்தியது இந்தியாதான். மத்தியக் கிழக்கு மக்கள் பேரிச்சம்பழத்தில் ஊறுகாய் போட்டு அது ரொட்டிக்குச் சேராமல் அவஸ்தைப்பட்டுக்கொண்டிருந்தபோது, ஐரோப்பிய தேசத்து காரப் பிரியர்கள் வெள்ளரிக்காயில் ஊறுகாய் போட்டுப் பரிட்சை பண்ணிப் பார்த்துக்கொண்டிருந்தபோது, ஆப்பிள் பழத்தில், அன்னாசிப் பழத்தில், வாழைக்காயில் எல்லாம் ஊறுகாய் போட சீனர்களும் மங்கோலியர்களும் முயற்சி பண்ணிக்கொண்டிருந்தபோது, இந்தியர்கள்தாம் ஊறுகாய்க்கு உகந்த காய்களைக் கண்டறிந்து பேரல் பேரலாக ஸ்டாக் வைத்து சாப்பிட்டவர்கள். மா, நெல்லி, எலுமிச்சையெல்லாம் ஊறுகாய்க்கென்றே அவதரித்த காய்கள் என்பது இந்தியர்களைத் தவிர மற்றவர்களுக்குப் பலகாலம் வரை தெரியாது. சரியாகச் சொல்லுவதென்றால் இயேசுநாதருக்கு ஆயிரத்தி எழுநூறு வருடம் மூத்தது இந்திய ஊறுகாய். மற்ற தேசத்தவர்களுக்கு இயேசு பிறந்து எழுநூறு எண்ணூறு ஆண்டுகளூக்குப் பிறகும் வெள்ளரிக்காய் ஊறுகாய் மட்டும்தான் தெரியும். நம்மாள்கள்தான் சிந்து வெளி நாகரிக காலத்தில் இருந்தே வினைத்தொகை ருசி கண்டவர்களாக இருந்திருக்கிறார்கள்.


இந்தக் கதை இப்போது எதற்கு என்பீர்களானால் ஒரு சங்கதி இருக்கிறது. எனக்கு ரொம்ப நாளாக ‘நாகா ஜொலாகியா’வில் போட்ட ஊறுகாயை ருசி பார்க்க வேண்டுமென்று ஓர் இச்சை.


இந்த நாகா ஜொலாகியா என்பது அஸ்ஸாமுக்கு அந்தப் பக்கம் மட்டும் விளைகிற ஒரு மிளகாய் ரகம். 2007ம் ஆண்டு வரை உலகின் அதி பயங்கரக் கார மிளகாய் என்று அறியப்பட்டது இதுவே. (இப்போது ட்ரினிடாடில் விளைகிற ஏதோ ஒரு ரகம் இந்த இடத்தைப் பிடித்திருக்கிறது)


மேற்படி நாகா ஜொலாகியாவை சும்மா நாக்கோரம் வைத்துப் பார்த்தாலே நாலு நாளைக்கு கார்க் கழண்டுவிடும் என்பார்கள். ஆனால் மேகாலயா, நாகாலாந்து பகுதிகளில் வசிக்கும் ஆதிகுடி மக்கள் இந்த மிளகாயில் ஊறுகாய் போட்டு பத்திரப்படுத்தி வைத்து சாதம் பிசைந்து சாப்பிடுவார்கள். கற்பனை செய்ய முடியாத உச்சக்கட்ட காரத்தில் அவர்களுக்கு போதை மாதிரியோ, ஞானம் மாதிரியோ என்னமோ ஒன்று அவசியம் கிடைக்கத்தான் வேண்டும். அது என்னவென்று தெரிந்துகொள்ளாவிட்டால் எப்படி?


நான் அஸ்ஸாமுக்குப் போனபோது அந்த அதிர்ஷ்டம் எனக்கு வாய்க்கவில்லை. இன்னொரு முறை அந்தப் பக்கம் போகிற வாய்ப்பும் கிடைக்கவில்லை. ஆனால் கொல்கத்தாவுக்கு ஒரு முறை போனபோது மேற்படி நாகா ஜொலாகியாவின் ஒண்ணு விட்ட சித்தப்பா பையன் முறை வரக்கூடிய வேறொரு மிளகாயாலான ஊறுகாயை ருசி பார்க்க வாய்த்தது.


உண்மையில் கொல்கத்தாவில் நான் உண்ண விரும்பியது ரசகுல்லா உள்ளிட்ட வண்ணமயமான வங்காளி இனிப்புகளைத்தான். மிஷ்டி தோய் என்ற இனிப்புத் தயிர் அங்கே ரொம்பப் பிரபலம். ராத்திரி வேளைகளில் வீதியோரங்களில்கூடக் கிடைக்கும். சிறிய மண் குடுவைகளில் பனங்கற்கண்டு, ஏலம் மணக்கத் தோய்த்து வைக்கப்பட்ட கெட்டித் தயிர். ஒரு நாலைந்து சிறு பானைத் தயிர் குடித்து முடித்த பிறகு என்னுடன் வந்திருந்த நண்பர் (அவர் ஒரு மராட்டியக் கவிஞர்) சட்டென்று கேட்டார், ‘இந்த இனிப்புத் தயிருக்குக் காரசாரமாக மிளகாய் ஊறுகாய் தொட்டுச் சாப்பிட்டால் எப்படி இருக்கும்?’


அசப்பில் கேனத்தனமான யோசனையாகத் தெரிந்தாலும் இம்மாதிரி கிறுக்குத்தனங்களில்தான் தரிசனம் மாதிரி என்னவாவது ஒன்று சித்தித்துத் தொலைக்கும்.


‘ஆனால் கண்டிப்பாக பாக்கெட் ஊறுகாய் கூடாது!’ என்று சொன்னேன்.


‘வா என்னோடு’ என்று என்னை உள்ளூர் இலக்கியப் பிரகஸ்பதி ஒருத்தரின் வீட்டுக்கு அழைத்துப் போனார்.


நான் தமிழன். நண்பரோ சிங்க மராட்டியர். நாங்கள் பார்க்கப் போன இலக்கியவாதியாகப்பட்டவர் ஒரு வங்காள நாடகாசிரியர். தெரியாத்தனமாக எங்களுக்கு அங்கே ஒரு விருது கொடுக்கக் கூப்பிட்டிருந்தார்கள். விருதுதான் கொடுத்துவிட்டார்களே என்று, மூச்சு விட்டுக்கொண்டிருக்கிற சமயமெல்லாம் இலக்கிய விசாரம் மட்டுமேவா செய்துகொண்டிருக்க முடியும்? நமக்குப் பேரிலக்கியமானது நாக்கில் பிறந்து நெஞ்சில் நிறைவது. எழுதுவதெல்லாம் அதன் விளைவான சிற்றிலக்கியம் மட்டுமே.


எனது மராட்டிய நண்பரும் இந்த விஷயத்தில் என்னை மாதிரியான ஆசாமியாகவே இருந்தது எனக்கு வசதியாகப் போய்விட்டது. மேற்படி வங்கத்து நாடகாசிரியரின் வீட்டைத் தேடிக் கண்டுபிடித்து நாங்கள் கதவைத் தட்டியபோது மணி ராத்திரி ஒன்பது இருக்கும்.


‘வாருங்கள்’ என்றார் வங்கத் தங்கம்.


‘உட்கார்ந்து பேச அவகாசமில்லை நண்பரே. படு பயங்கரக் காரத்தில் ஒரு மிளகாய் ஊறுகாய் வேண்டும். என்ன பிராண்ட் சரியாக இருக்கும்?’ என்றார் மராட்டியக் கவிஞர்.


ஏற இறங்கப் பார்த்த நாடகாசிரியர், ‘பிராண்டெல்லாம் சரிப்படாது. ஒரு நிமிடம் இருங்கள்’ என்று சொல்லிவிட்டு உள்ளே போனார். வீட்டுக்கு வந்திருக்கும் விருந்தாளிகளுக்கு என்ன கொடுப்பது என்று அவரது தர்ம பத்தினி சிந்தனை வயப்பட்டிருக்க வேண்டும்.


‘அவர்களுக்குக் கொஞ்சம் ஊறுகாய் வேண்டும்’ என்றார் சிநேகித சிரோன்மணி.


குடிகாரப் பாவிகள் என்று அந்தப் பெண் தெய்வம் நினைத்திருக்கக்கூடும். என்ன செய்ய? ஆசை வெட்கம் மட்டுமல்ல; நளின, நாகரிக, நானாவித நாசூக்கு வகையறாக்களையும் சேர்த்து அறியாது.


கொஞ்சம் முறைத்துவிட்டு அந்தப் பெண் உள்ளே போனபோது நான் வங்காள நண்பரிடம் விளக்கம் சொன்னேன். இது சாராய சகாயத்துக்கல்ல. மிஷ்டி தோய்க்குத் துணையாகுமா என்று பரீட்சை செய்து பார்ப்பதற்காக.


அவரும் நம்பிய மாதிரி தெரியவில்லை. மராட்டியக் கவிஞனுக்கும் அது புரிந்திருக்க வேண்டும். ‘நண்பரே, இன்றிரவு நீங்களும் எங்களுடன் மிஷ்டி தோய் சாப்பிட வரவேண்டும். ஓரிரவில் ஓரண்டா அளவுக்குத் தயிர் குடித்து கின்னஸ் சாதனை செய்ய முடிவு செய்திருக்கிறோம்!’


அவர் மறுத்துவிட்டார். ஆனால் அன்றைய எங்கள் இரவை வண்ணமயமாக்குவதற்கு அவசியமென நாங்கள் கருதிய மிளகாய் ஊறுகாய் கிடைத்துவிட்டது. ‘இது மிஜோரம் ஸ்பெஷல் ஊறுகாய். ரொம்பக் காரம். அளவோடு சாப்பிடுங்கள்!’


அவரது மாமியார் வீடு மிஜோரத்தில் இருந்ததோ என்னமோ. கபோதிகள் போயும் போயும் ராத்திரி வேளையில் வந்து ஊறுகாய் கேட்டு நிற்கிறார்களே என்ற வினோதக் கடுப்பில் ஒரு பாலிதீன் கவர் நிறைய ஊறுகாய் அடைத்துக் கொடுத்து அனுப்பிவைத்தனர் அந்த சதிபதியினர்.


ஊறுகாய் வந்துவிட்டது. அடுத்தது என்ன? அந்த இனிப்புத் தயிர்தான்.


நாங்கள் இருவரும் பலபேரிடம் விசாரித்து அலைந்து எஸ்பிளனேடிலேயே தலை சிறந்த மிஷ்டி தோய் கடை எது என்று தெரிந்துகொண்டு அங்கு சென்றோம். அரை ஜாண் உயரப் பானைகளுக்குள் அடைபட்ட தயிர். மேலே கோவணத்தில் பாதியளவு கொண்ட துணியால் இறுக்கிக் கட்டியிருந்தது.


‘எத்தனை பானைகள் வாங்கலாம்?’ என்றார் நண்பர்.


எனக்கு நாலு அவருக்கு நாலு என்று கணக்கிட்டு, கொசுறாக இரண்டு சேர்த்துப் பத்துப் பானை தயிர் வாங்கிக்கொண்டு அறைக்குத் திரும்பினோம்.


உண்மையில் அந்த இரவை என்னால் மறக்கவே முடியாது. உச்ச இனிப்பும் உச்சக் காரமும் இணைவது ஓர் உன்மத்த நிலை என்பதை அன்று அறிந்தேன். விரிவாக அடுத்த வாரம் எழுதுகிறேன்.


(ருசிக்கலாம்)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 25, 2017 09:31

பொலிக! பொலிக! 72

கோவிந்தனுக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. அவர் அதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. உடையவரோடு அவரும் பிற சீடர்களும் திருவரங்கம் வந்து சேர்ந்தபோது அவரது அம்மா தனது மருமகளை அழைத்துக்கொண்டு திருவரங்கத்துக்கு வந்து வீடு பார்த்துக் குடியேறியிருந்தாள்.


‘எதற்காக நீங்கள் இங்கே வந்தீர்கள்?’ என்று கோவிந்தன் கேட்டார். 


‘நல்ல கதையாக இருக்கிறதே. இன்னும் எத்தனை நாளைக்கு நீ உன் மனைவியைத் தனியே விட்டுவிட்டு குருகுலவாசம் செய்துகொண்டிருப்பாய்? திருமணம் என்று ஒன்று நடந்துவிட்டது. இல்லற தருமம் என்று ஒன்று இருக்கிறது. நேற்று வரைக்கும் தாய்மாமன் வீடு, இன்றைக்கு உடையவர் மடம். நாளைக்கு என்ன செய்வாய் என்று யாருக்குத் தெரியும்? எனக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை. ஒழுங்காக உன் மனைவியோடு குடும்பம் நடத்துகிற வழியைப் பார்’ என்றாள் அம்மா.


கோவிந்தன் யோசித்தார். ஒரு முடிவுக்கு வந்து, ‘சரி அம்மா. கொஞ்சம் பொறுங்கள். இப்போதுதான் இங்கே வந்திருக்கிறேன். சில நாள் போகட்டும்’ என்று சொல்லிவிட்டு அப்போதைக்குத் தப்பித்துப் போனார்.


சில நாள்கள் பொறுத்திருந்துவிட்டு அம்மா மீண்டும் அந்தப் பேச்சைத் தொடங்கியபோது, ‘ஓ, அதற்கென்ன? இருளும் தனிமையும் இருக்கும்போது அவள் வரட்டும்’ என்று சொல்லிவிட்டு மடத்துக்குப் போய்விட்டார்.


கோவிந்தனின் தாயாருக்கு மகிழ்ச்சியானது. மகன் ஒப்புக்கொண்டுவிட்டான். இனி நல்ல நாள் பார்க்க வேண்டியதுதான். உடனே பஞ்சாங்கத்தை எடுத்து வைத்துக்கொண்டு ஆராய ஆரம்பித்துவிட்டாள்.


ஆனால் அவள் பார்த்த நல்ல நாள்களிலெல்லாம் கோவிந்தனைப் பிடிக்க முடியாமல் போனது. இருட்டிய போதெல்லாம் அவர் யாருடனாவது சத்விஷயங்கள் பேசிக்கொண்டிருப்பார். எப்போது உறங்குகிறார் என்றே வீட்டில் அவரது அம்மாவுக்கும் மனைவிக்கும் தெரியாது. தனித்திருக்கும் பொழுதுகள் பெரும்பாலும் பகலாக இருந்தது.


என்ன செய்யலாம், என்ன செய்யலாம் என்று பல நாள் அவள் யோசித்துக்கொண்டே இருந்தாள். மகனிடம் பலவிதமாகப் பேசிப் பார்த்தும் பயனில்லாமல் இருந்தது. வேறு வழியின்றி ஒருநாள் ராமானுஜரிடம் போய் நின்றாள்.


‘நீங்கள் தருமம் அறிந்தவர். கோவிந்தன் செய்வது முறையா?’


‘சரி தாயே. நான் பேசுகிறேன்’ என்று மட்டும் சொல்லிவிட்டு கோவிந்தனை அழைத்தார் உடையவர்.


‘சுவாமி..’


‘உமது மனைவி காத்திருக்கிறாள். ஒரு நல்ல நாள் பார்த்து அவளிடம் போய்ச் சேரும். இது நமது உத்தரவு.’


அதற்குமேல் என்ன பேசுவது? கோவிந்தன் அமைதியாகத் திரும்பிவிட்டார்.


பரபரவென்று வேலை நடந்தது. கோவிந்தனின் தாயார் உடனடியாக ஒரு நாள் பார்த்தார். இருளும் தனிமையுமான பொழுது. தனது மருமகளை அழைத்து அறிவுரைகள் சொல்லி, அலங்காரம் செய்து அறைக்குள் அனுப்பி வைத்தாள்.


‘உட்கார்’ என்றார் கோவிந்தன்.


அவள் அமர்ந்ததும், ‘நீ திருப்பாவை வாசித்திருக்கிறாயா?’


‘இல்லை சுவாமி.’


‘நமது உடையவருக்குத் திருப்பாவை ஜீயர் என்று இங்கே பெயர். அதன் ஒவ்வொரு சொல்லிலும் அவர் தோய்ந்தவர். ஆண்டாளின் மிகக் கனிந்த பக்தியே காதலாக உருப்பெறுகிறது.’


‘ஓ. எப்படியாவது கற்கிறேன்.’


‘கற்றால் போதாது பெண்ணே. அந்த பக்தியைப் பயில வேண்டும். இவ்வுலகில் நாம் பக்தி செய்யவும் நேசம் கொள்ளவும் சீராட்டவும் தாலாட்டவும் தகுதியான ஒரே ஒருவன், எம்பெருமான் மட்டும்தான். பரமனிடம் கொள்ளும் பக்திதான் ஒட்டுமொத்த மனித குலத்தின் மீதான நேசமாக விரிவு கொள்ளும்.’


அவளுக்குச் சங்கடமாக இருந்தது. என்ன பதில் சொல்லுவதென்று தெரியவில்லை. சரி பேசி ஓயட்டும் என்று காத்திருந்தாள்.


கோவிந்தன் நிறுத்தவில்லை. ஆண்டாளில் ஆரம்பித்து அத்தனை ஆழ்வார்களைப் பற்றியும் பேசினார். திருமலையில் நம்பியிடம் தான் பயின்ற பாடங்களை விரிவாகச் சொன்னார். ராமாயணம். ஆ, அது எத்தனை பெரிய மகாசமுத்திரம்!


‘தத்துவங்கள் அனைத்தும் ஒன்றுகூடும் இடம் ஒன்று உண்டென்றால் அது ராமசரிதம்தான். ஒருநாள் உனக்கு ராமாயணம் சொல்ல ஆரம்பிக்கிறேன். கேட்கிறாயா?’


வேறு வழியின்றி அவள் தலையாட்டினாள்.


‘திருமலை நம்பி ராமாயணத்தில் கரை கண்டவர். ஆளவந்தாரிடம் பயின்றவர்களிலேயே அவர் மட்டும்தான் ராமாயண விற்பன்னர். அதை சரியான விதத்தில் உள்வாங்குவது பெரிய காரியம். அது வெறும் கதையல்ல பெண்ணே. மனித குலத்துக்கே அருமருந்தான தத்துவப் பெரும் திரட்டு.’


அவளுக்கு உறக்கம் வந்துவிட்டது. ‘நான் படுத்துக்கொள்ளட்டுமா?’ என்று கேட்டாள்.


‘ஒ, தாராளமாக. தூக்கம் வரும்போது தூங்கிவிடுவதுதான் நல்லது. நீ படு’ என்றார் கோவிந்தன்.


மறுநாள் விடிந்ததும் கோவிந்தனின் அம்மா, தனது மருமகளை அழைத்து ஆர்வமுடன் கேட்டாள், ‘நேற்று என்ன நடந்தது?’


‘அவர் எனக்கு ராமாயணம் சொல்ல ஆரம்பிக்கவிருப்பதாகச் சொன்னார்.’


‘என்னது? ராமாயணமா? விடிய விடிய நீ கேட்ட ராமாயணம் அதுதானா!’


அவள் பதிலேதும் சொல்லவில்லை. அமைதியாக நகர்ந்து போய்விட்டாள். கோவிந்தனின் அம்மாவுக்குக் கடும் கோபம் வந்துவிட்டது. இவன் சரிப்பட மாட்டான்.


மீண்டும் ராமானுஜரிடம் போய் நின்றாள்.


ராமானுஜர் கோவிந்தனை அழைத்து விசாரித்தார். ‘நேற்றிரவு என்ன நடந்தது?’


‘சுவாமி, நீர் சொன்னதை நிறைவேற்றவேண்டுமென்றால் எனக்கு இருளும் தனிமையும் தேவை. அது எனக்கு அமையவில்லை.’


‘என்ன சொல்கிறீர் கோவிந்தப் பெருமானே? இரவு தனியாக நீங்களும் உமது பத்தினியும் மட்டும்தானே அறைக்குள் இருந்தீர்கள்?’


‘யார் சொன்னது? எங்குமுள்ள எம்பெருமான் அங்கும் இருந்தான். அவன் இருந்ததால் இருள் என்ற ஒன்று இல்லாமல் போய்விட்டது. அவன் இருக்கும்போது நான் எப்படி உங்கள் கட்டளையை நிறைவேற்ற முடியும்?’


பேச்சற்றுப் போனாள் கோவிந்தனின் தாய். ராமானுஜருக்கு கோவிந்தனின் மனம் புரிந்துவிட்டது. கொஞ்சம் அவகாசம் எடுத்து, அந்தப் பெண்மணியிடம் விரிவாகப் பேசினார். கோவிந்தனின் மனைவியையும் அழைத்துப் பேசினார். ‘அம்மா! உன் கணவர் வேறு விதமான மன நிலையில் உள்ளார். இல்லற தருமத்தைக் காப்பது அவருக்கு சிரமம். நீதான் புரிந்துகொள்ள வேண்டும்.’


கஷ்டமாக இருந்தாலும் அவளுக்குப் புரிந்தது. துக்கமாக இருந்தாலும் ஏற்றுத்தான் தீரவேண்டும்.


ஒருநாள் அது நடந்தது. உடையவர் கோவிந்தனுக்குத் திரிதண்டமும் காஷாயமும் அளித்து சன்னியாச ஆசிரமத்துக்கு வாயில் திறந்து வைத்தார்.


‘உமக்கு என் பெயரையே தருகிறோம். இனி நீரும் எம்பெருமானார் என்றே அழைக்கப்படுவீர்!’ என்றார் உடையவர்.


‘அது தகாது சுவாமி. தங்கள் உயரம் எங்கே, நான் எங்கே? நான் தங்கள் பாதம் தாங்கியாகவே இருக்க விரும்புகிறேன். தங்கள் பெயரைச் சுமக்குமளவுக்கு எனக்குத் தகுதியில்லை.’


‘சரி. பெயரைச் சற்று சுருக்கலாம். ஆனால் மாற்ற இயலாது. நீர் இனி எம்பார் என அழைக்கப்படுவீர்!’ என்றார் ராமானுஜர்.


(தொடரும்)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 25, 2017 09:30