Pa Raghavan's Blog, page 14
March 3, 2017
பொலிக! பொலிக! 50
மாறனேர் நம்பியின் குடிசையில் இருந்து வெளியே வந்த பெரிய நம்பி, தன் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார். பொதுவாக அந்நேரத்தில் அந்தப் பகுதியில் ஆள் நடமாட்டம் இருக்காது. அது அவர் மட்டும் உலவும் நேரமாகவே பலகாலமாக இருந்து வந்தது. ஆனால் இன்று தனக்கு முன்னால் சற்றுத் தொலைவில் யாரோ போய்க்கொண்டிருப்பது போலத் தெரிகிறதே? யாராக இருக்கும்?
இருட்டில் சரியாகத் தெரியவில்லை. பெரிய நம்பி சற்று நடைவேகம் கூட்டி, முன்னால் சென்றவரை எட்டிவிடப் பார்த்தார். அந்த உருவமோ நெருங்க முடியாத வேகத்தில் நடந்துகொண்டிருந்தது. குரல் கொடுத்துப் பார்க்கலாமா என்று யோசித்தவர், ஒரு கணம் தயங்கினார். மரங்கள் அடர்ந்த அந்தப் பாதையில் சிறு குரல் கூடப் பறவைகளின் உறக்கத்தைக் கலைக்கும். அவற்றுக்குப் பதற்றம் அளிக்கும். எனவே வேண்டாம் என்று நினைத்தார். ஆனால் எப்படியாவது அந்த நபர் யாரென்று அறிந்துவிட அவர் மனம் விரும்பியது. தன் வயதை மறந்த வேகத்தில் நடக்க ஆரம்பித்தார்.
ஒரு திருப்பத்தில் மரங்களின் அடர்த்தி சற்றுக் குறைந்து, நிலவின் கீற்றுகள் மண்ணைத் தொட ஆரம்பித்திருந்தன. அந்த உருவம் அவ்விடத்தைக் கடந்தபோது பெரிய நம்பி பார்த்துவிட்டார். அட எம்பெருமானே! நிலவின் வெளிச்சத்தில் நான் காண்பது சூரியனையே அல்லவா! இவர் எப்போது இங்கே வந்தார்? என்னைப் பின் தொடர்ந்திருப்பாரா? நான் மாறனேர் நம்பியின் இல்லத்துக்கு வந்து சென்றதை கவனித்திருப்பாரா?
பெரிய நம்பிக்கு ஒன்றும் புரியவில்லை. இந்த ஒரு காரணம் இல்லாவிட்டால் ராமானுஜர் இங்கு இந்நேரத்தில் வரவேண்டிய அவசியமில்லை என்று மட்டும் தோன்றியது. ஆக, திட்டமிட்டுத்தான் தன்னைத் தொடர்ந்து வந்திருக்கிறார். அழைத்துச் செல்கிறேன் என்று சொல்லி நாளைக் கடத்தியது பொறுக்காமல் இன்று தானே கிளம்பியிருக்கிறார்.
சரி போ, கேட்டால் பார்த்துக்கொள்ளலாம் என்று எண்ணிக்கொண்டு சும்மா இருந்துவிட்டார். அன்று கிளம்பும்போது மாறனேர் நம்பி சொன்னது திரும்பத் திரும்ப அவர் நினைவை வருடிக்கொண்டே இருந்தது.
‘பெரிய நம்பிகளே, நான் வெகுநாள் இனி உயிர் வாழமாட்டேன். வியாதி என்னை முக்கால் வாசி தின்று முடித்துவிட்டது. மீதியை நானே வழித்து அதற்குப் போட்டுவிடப் போகிறேன். ஆனால் ஒன்று. நான் இறந்தால் எனக்கான இறுதிச் சடங்குகளை ஓர் அந்தணன்தான் செய்ய வேண்டும்.’
‘புரிகிறது சுவாமி. மாசு பட்ட சமூகத்துக்கு சாதி அமைப்பின் அபத்தங்களைப் புரியவைத்துவிட்டுப் போய்ச்சேர நினைக்கிறீர்கள். எம்பெருமான் சித்தம் அதுவானால், நிச்சயம் நடக்கும்’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பியிருந்தார். ராமானுஜர் நின்று கவனித்திருப்பாரா? இது அவர் காதில் விழுந்திருக்குமா? குழப்பமாக இருந்தது.
இரண்டொரு தினங்களில் அது நடந்துவிட்டது.
அன்றைக்கு இரவு வழக்கம்போல் பெரிய நம்பி மாறனேர் நம்பிக்கு உணவு எடுத்துச் சென்றபோது அவர் எழுந்திருக்கவில்லை. அமர்ந்து உண்ணவும் முடியாமல் தவித்துக்கொண்டிருந்தவர், எழுந்து விண்ணேகிப் போயிருந்தார். நிறைவாழ்வுதான். வாழ்ந்த காலம் முழுவதும் குரு பக்தியிலும் அரங்கன் நினைவிலுமே கழித்த மகான். அவர் ஒரு மகான் என்பதே அரங்க நகரில் பெரும்பாலானோருக்குத் தெரியாது என்பதைப் பெரிய நம்பி எண்ணிப் பார்த்தார். ‘மாறனேர் நம்பியா? அவர் அரிஜன குலத்தவர் அல்லவா?’ என்பார்கள். நலம் தரும் சொல்லைக் கண்டுகொண்ட மனிதரின் குலம் மட்டும்தான் உலகுக்குத் தெரியும்.
நல்லது. ஊரைத் திருத்துவது பிறகு. முதலில் பெரியவரின் இறுதிச் சடங்குகளை நடத்தியாக வேண்டும்.
‘நம்பிகளே, நான் இறந்தால் என் இறுதிச் சடங்குகளை ஓர் அந்தணன்தான் செய்ய வேண்டும்.’ மீண்டும் மீண்டும் காதுகளில் ஒலித்த குரலை ஒரு கணம் தியானத்தில் நிறுத்தினார். இது ஒரு தருணம். சாதி அமைப்பின் கோரப் பிடியில் சிக்கிச் சின்னாபின்னமாகிக்கொண்டிருக்கிற சமூகம் அதிர்ந்து அலறவிருக்கிற தருணம். என்ன வேண்டுமானாலும் நிகழலாம். எத்தனை பெரிய கலவரமும் சாத்தியமே. ஆனால் என்ன நடந்தாலும் மாறனேர் நம்பி இறுதியாகச் சொன்னது மட்டும் நடக்காமல் போய்விடக் கூடாது.
பெரிய நம்பி ஒரு முடிவுக்கு வந்தார். இன்னொருத்தரை எதற்குத் தேடவேண்டும்? இதோ, நான் இருக்கிறேன். என் தந்தைக்குச் செய்ததைக் காட்டிலும் மாறனேர் நம்பிக்குச் செய்வதில் உள்ள புனிதத்தன்மை புரிந்தவன். இதைக் காட்டிலும் பெரும் புண்ணியம் வேறில்லை. இதைக் காட்டிலும் மகத்தான திருப்பணி இன்னொன்று இருக்க முடியாது. ஆளவந்தாரின் சீடர்களுக்குள் பிரிவினை கிடையாது. பேதங்கள் கிடையாது. சாதி உள்ளிட்ட எவ்வித ஏற்றத்தாழ்வுகளும் கிடையாது. அத்தனை பேரும் எம்பெருமானின் பாததூளிகளாகப் புரண்டெழுந்தவர்கள். ஒரு வைணவனுக்கு அடையாளம் அதுதான். வாழ்வின் அர்த்தமும் அதுவேதான்.
அவர் யாரையும் எதிர்பார்க்கவில்லை. யாருக்கும் சொல்லவும் இல்லை. தனது தள்ளாமையை நகர்த்தி வைத்துவிட்டுக் காரியங்களில் வேகமாக இறங்க ஆரம்பித்தார். பிரம்ம மேத சம்ஸ்காரம். இறந்த அந்தணருக்கு, இன்னொரு அந்தணர் மட்டுமே செய்கிற வழக்கமுள்ள இறுதிச் சடங்கு. இதோ இதை நீங்கள் தாழ்ந்தவர் என ஒதுக்கிவைத்த மாறனேர் நம்பிக்கு நான் செய்கிறேன். ஆனதைப் பார்த்துக்கொள்ளுங்கள்.
பரபரவென இறுதிச் சடங்குகள் நடந்துகொண்டிருந்தன. முதலில் அந்தப் பிராந்தியத்தில் வசித்து வந்த அரிஜன மக்கள் அதைக் கண்டார்கள். வியப்பில் வாய் பிளந்து சற்று நேரம் நின்றுவிட்டு ஓடோடிச் சென்று காண்போரிடமெல்லாம் சொல்லத் தொடங்கினார்கள்.
‘சேதி தெரியுமா? மாறனேர் நம்பிக்கு பெரிய நம்பி சடங்கு செய்கிறார்!’
‘உண்மையாகவா? இதென்ன அக்கிரமம்! பெரிய நம்பி பிராமணர் அல்லவா? ஒரு கீழ்ச்சாதிக் கிழவருக்கு இவரெப்படி இறுதிச் சடங்கு செய்ய முடியும்?’
‘நடக்கிறதப்பா. போய்ப் பார் அங்கே!’
தீயின் நாவேபோல் திருவரங்கமெங்கும் பரவித் தீண்டியது அந்தச் செய்தி. கொதித்துப் போனார்கள் அந்தணர்கள்.
‘ஓய் பெரிய நம்பி! இப்படி ஒரு கேடுகெட்ட காரியத்தை நீர் செய்வீர் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இனி அக்ரஹாரத்துப் பக்கம் தப்பித்தவறியும் வந்துவிடாதீர்!’
‘அந்தணருக்கு உரியதைப் பஞ்சமருக்குச் செய்வதுதான் உமது ஆசாரமோ? இது உமக்கல்ல; உமது ஆசாரியர் ஆளவந்தாருக்கே அவமானம்.’
என்னென்னவோ பேச்சுகள். எத்தனை எத்தனையோ சாபங்கள். பெரிய நம்பி எதற்கும் பதிலே சொல்லவில்லை.
சிறு குறையும் வைக்காமல் காரியத்தை முடிப்பதிலேயே அவரது கவனம் இருந்தது. அது முடிந்தநேரம் விவகாரம் அவர் எதிர்பார்த்தபடியே முற்றி வெடித்திருந்தது.
(தொடரும்)
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
March 2, 2017
பொலிக! பொலிக! 49
கண்ணை மூடித் திறப்பதற்குள் காலம் உருண்டுவிடுகிறது. ராமானுஜருக்கு மாறனேர் நம்பியை இன்னும் சந்திக்காதிருப்பதன் ஏக்கம் வாட்டியெடுத்தது. பெரிய நம்பி அப்படிப்பட்டவர் அல்லர். ஒன்று சொன்னால் உடனே செய்பவர். அதுவும் தன் விஷயத்தில் தாமதமோ அலட்சியமோ அவரால் நினைத்துப் பார்க்க முடியாதது. ஆனாலும் இதோ அதோ என்கிறாரே தவிர ஏன் இன்னும் தன்னை அழைத்துச் செல்லவில்லை?
இடையில் பலமுறை இருவரும் சந்தித்துப் பேசியபோதெல்லாம் ராமானுஜர் நினைவுபடுத்தத் தவறவில்லை.
‘சுவாமி, அடியேனுக்குப் பரம பாகவதரான மாறனேர் நம்பியை தரிசிக்கும் பாக்கியம் இன்னும் கிடைத்தபாடில்லை. நீங்கள் ஏற்பாடு செய்வதாகச் சொன்னீர்கள்.’
‘அட, ஆமாம். மறந்தேவிட்டேன். விரைவில் ஒருநாள் சென்று வருவோம் உடையவரே.’
ஆனால் காலம் ஒன்றுதான் விரைவில் நகர்ந்துகொண்டிருந்ததே தவிர காரியம் கைகூடியபாடில்லை. காரணம் என்னவாக இருக்கும்? ராமானுஜருக்குப் புரியவில்லை. ஆனால் ஒவ்வொரு சந்திப்பின்போதும் பெரிய நம்பி மாறனேர் நம்பியைப் பற்றிப் பேசாதிருந்ததில்லை. ஆக, அடிக்கடி போகிறார். அநேகமாக தினமும். ஒருநாள் கூடவா நம் நினைவு வராது போகும்?
இல்லை. இதற்கு வேறு ஏதோ காரணம். என்னவாக இருந்தாலும் அதைத் தெரிந்துகொண்டு தீர்க்காமல் விடுவதில்லை என்று ராமானுஜர் முடிவு செய்தார். அன்றைக்குப் பெரிய நம்பியைப் பின் தொடர்வதெனத் தீர்மானித்தார்.
இருட்டி ஒரு நாழிகை கழிந்த பிறகு பெரிய நம்பி தன் வீட்டில் இருந்து புறப்பட்டார். ஒரு கையில் தூக்குச் சட்டி. அதில் உணவு. மறு கையில் மருந்துப் பெட்டி. வீட்டை விட்டு வெளியே வந்த பெரிய நம்பி, சாலையின் இரு புறமும் திரும்பி ஒரு பார்வை பார்த்தார். நடமாட்டம் இல்லை. விறுவிறுவென நடக்க ஆரம்பித்தார்.
கண்ணெட்டாத தொலைவில் ஒதுங்கி நின்று இதனைக் கவனித்துக்கொண்டிருந்த ராமானுஜர், சத்தமின்றித் தாமும் பெரிய நம்பியைப் பின் தொடர ஆரம்பித்தார். விசித்திரம்தான். இப்பேர்ப்பட்ட மகான், ஞானாசிரியர் யாருக்கு பயந்து, எதற்காக இப்படி இருட்டிய நேரத்தில் பதுங்கிப் பதுங்கி வெளியே போகிறார்?
பெரிய நம்பி கிளம்பிய கணத்தில் இருந்து நிற்கவேயில்லை. மூச்சிறைக்க நடந்துகொண்டே இருந்தார். ஊருக்கு வெளியே சேரிப் பகுதியை அடைந்தபோது ஒரு கணம் நின்று சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டார். அங்கும் நடமாட்டமில்லை. அனைத்து வீடுகளிலும் விளக்கு அணைக்கப்பட்டிருந்தது. மேலும் காலை எட்டிப் போட்டு வேகமாக நடக்க ஆரம்பித்தார்.
ராமானுஜரும் விடாமல் பின் தொடர்ந்தார். இன்றைக்கு ஏதோ நடக்கப் போகிறது. மறக்க முடியாத பேரனுபவம் ஒன்று வாய்க்கத்தான் போகிறது என்பது அவருக்குப் புரிந்துவிட்டது. ஊரார் உறங்கினும் தானுறங்கா உத்தமராக இந்தப் பெரிய நம்பி என்னவோ செய்துகொண்டிருக்கிறார். சர்வ நிச்சயமாக அது ஊருக்கு நல்லதாகத்தான் இருக்கும். ஆனால் அதை இப்படி ஒளித்துச் செய்ய என்ன அவசியம்? புரியவில்லை.
குடிசை ஒன்றை அடைந்ததும் பெரிய நம்பி வேகம் தணிந்தார். சத்தமின்றி நெருங்கி, கதவைத் திறந்தார்.
உள்ளே மாறனேர் நம்பி படுத்திருந்தார். ஆஹா என்று சிலிர்த்துப் போனது ராமானுஜருக்கு.
‘சுவாமி, மெல்ல எழுந்திருங்கள். அடியேன் பெரிய நம்பி வந்திருக்கிறேன்.’ குரல் தெளிவாகக் கேட்டது. ராமானுஜர் வியப்பும் திகைப்புமாக அக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தார்.
மாறனேர் நம்பியால் எழுந்து உட்காரக் கூட முடியவில்லை. தள்ளாமையும் நோய்மையும் அவரை அடித்துச் சாய்த்திருந்தன. பெரிய நம்பியே அவரைக் கைத்தாங்கலாக எழுப்பி உட்கார வைத்தார். பிறகு ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்து வந்து வைத்து, ஒரு மெல்லிய துணியை அதில் நனைத்துப் பிழிந்து அவரது மேனி முழுதும் துடைத்துவிட்டார். எடுத்து வந்திருந்த மருந்துப் பெட்டியைத் திறந்து களிம்பெடுத்து அவரது காயங்களில் பூசினார். வெளியே வந்து கைகளைக் கழுவிக்கொண்டு மீண்டும் உள்ளே சென்று மாறனேர் நம்பிக்கு உணவளிக்க ஆரம்பித்தார்.
‘உடையவருக்குத் தங்களை தரிசிக்க வேண்டுமாம். விடாமல் கேட்டுக்கொண்டே இருக்கிறார் சுவாமி. ஆனால் எனக்கு இந்தப் பொல்லா உலகை நினைத்தால்தான் கவலையாக இருக்கிறது.’
மாறனேர் நம்பி புன்னகை செய்தார்.
‘எம்பெருமான் உலகைப் படைத்தான். எம்பெருமானாரோ வைணவ உலகில் எத்தனை எத்தனையோ மக்களைக் கொண்டு சேர்த்துக்கொண்டே இருக்கிறார். அவரது பிரசங்கம், அவரது சுபாவம், அவரது சிநேகபாவம் இதெல்லாம் ஆயிரமாயிரம் பேரை எங்கெங்கிருந்தோ கொண்டு வந்து இங்கு தள்ளுகிறது. சுத்த ஆத்மா அவர். அவரது பணிக்கு எந்த ஓர் இடையூறும் வந்துவிடக் கூடாதே என்றுதான் எனக்குக் கவலையாக இருக்கிறது.’
‘புரிகிறது.’
‘ஒவ்வொரு முறை என்னைச் சந்திக்கிற போதும் தங்களைப் பற்றி விசாரிக்கிறார். இன்னும் தங்களைக் காண முடியாத ஏக்கத்தைத் தெரியப்படுத்துகிறார். அவருக்கு நான் எப்படிப் புரியவைப்பேன், என்ன சொல்லித் தெரியப்படுத்துவேன் என்றே புரியவில்லை சுவாமி.’
‘புரியவைப்பதும் தெளியவைப்பதும் உடையவருக்கு அவசியமில்லை பெரிய நம்பிகளே. நமது ஜனங்களுக்குத்தான் இதெல்லாம் அவசியம். அந்தணன் என்றும் பஞ்சமன் என்றும் இனம் பிரித்து வைத்தே பழகிவிட்டார்கள். நமது ஆசாரியர் ஆளவந்தார் என்னைக் கீழ்க்குலத்தவன் என்று நினைத்திருந்தால் என்னை அண்டவிட்டிருப்பாரா? எத்தனை ஞானத்தை நம் தலைகளில் இறக்கிவைத்தார்! மழை கொடுக்குமோ அதெல்லாம்? நிலம் தருமோ அந்தளவு? புவியளவு பரந்த மனம் படைத்த மகானிடம் நாம் பாடம் கற்றிருக்கிறோம். ஜனங்களுக்கு அப்படிப்பட்ட ஆசிரியர்கள் கிடைக்காது போய்விட்டார்கள்.’
‘உடையவர் அப்படியொரு ஆசாரியர்தாம் சுவாமி. நம்மாலும் நமது தலைமுறையாலும் மாற்ற முடியாத சமூகத்தை உடையவர் மாற்றுவார். அற்புதங்கள் அவர்மூலம் நிகழ வாய்ப்புகள் அதிகம். ஏனெனில் அவர் ஒரு சக்தி. அவர் ஒரு விசை. படைக்கப்பட்டபோதே செலுத்தப்பட்ட வேகத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறவர்.
‘சந்தோஷம் சுவாமி. அவர் செயல்படட்டும். என்னைச் சந்திப்பதில் என்ன இருக்கிறது? என் ஆசீர்வாதம் என்றும் அவருக்கு உண்டு என்பதை மட்டும் தெரியப்படுத்திவிடுங்கள்.’
பேசியபடி அவர் உண்டு முடித்தார். பெரிய நம்பி அவருக்கு வாய் துடைத்துவிட்டு, பருக நீர் கொடுத்தார். சிறிது ஆசுவாசமடைந்த பிறகு அவரைப் படுக்கவைத்துவிட்டு, ‘நாளை வருகிறேன் சுவாமி’ என்று விடைபெற்றுக்கொண்டு கிளம்புவதை ராமானுஜர் பார்த்தார்.
சட்டென்று அவருக்கு முன்னதாகக் கிளம்பி விறுவிறுவென்று நடக்கத் தொடங்கினார்.
(தொடரும்)
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
March 1, 2017
பொலிக! பொலிக! 48
இதைக் காட்டிலும் ஒரு பெருங்கருணை இருந்துவிட முடியுமா என்று ராமானுஜர் திகைத்துத் திகைத்துத் தணிந்துகொண்டிருந்தார். ஆளவந்தாரின் ஐந்து பெரும் சீடர்களிடம் பாடம் கேட்கக் கிடைத்த வாய்ப்பு பற்றிய திகைப்பு. யாருக்கு இதெல்லாம் வாய்க்கும்? தன்னைத் தேர்ந்தெடுத்த பெருந்திருவின் உலகளந்த சித்தமே அவரது தியானப் பொருளாயிற்று.
பெரிய பெருமானே! என்னைக் காட்டிலும் ஞானிகள் நிறைந்த மண் இது. என்னைக் காட்டிலும் பக்தி செய்வதில் சிறந்த பலர் உதித்து மலர்ந்த உலகம் இது. தவமும் ஒழுக்கமும் தவறாத பற்பல ரிஷிகள் இருந்து சென்றிருக்கிறார்கள். ஆனால் இந்தக் கருணைப் பெருவெள்ளத்தில் எத்தனை பேர் முக்குளித்திருப்பார்கள்? எனக்கு இது சாத்தியமானதென்றால் நான் அப்படி என்ன செய்துவிட்டேன்?
இடையறாத சிந்திப்பில் அவருக்குக் கிட்டிய விடை ஒன்றே. சரணாகதி. பக்தி சிறப்பானதுதான். பரமனை அடைய எளிய வழியும் கூட. ஆனால் ஜீவ சொரூபத்துக்கு பக்தியைக் காட்டிலும் சரணாகதியே எளிது; பொருத்தமானது. ஒரு பக்தனுக்கான தகுதிகளைப் பெறுவதைக் காட்டிலும் நீயே சரணம் என்று அடிபணிந்துவிடுவது சுலபம். அது கண்ணை மூடிக்கொண்டு கிணற்றில் குதிப்பதல்ல. என்ன ஆனாலும் தாய் நம்மை விழவிடமாட்டாள் என்று நம்பி இடுப்பில் இருந்து எம்பிக் குதிக்க முனைகிற குழந்தையின் அசாத்திய நம்பிக்கை நிகர்த்தது. அந்தச் சரணாகதி மனநிலைதான் பெறற்கரிய செல்வங்களை ராமானுஜருக்குப் பெற்றுத் தந்திருந்தது.
அன்றைக்குப் பங்குனி உத்திரம். திருவரங்கன் தமது நாச்சியாருடன் ஒரே சிம்மாசனத்தில் எழுந்தருளியிருந்தபோது சன்னிதியில் கரம் கூப்பி நின்றிருந்தவர் உள்ளத்தில் இருந்து மழையேபோல் பொழியத் தொடங்கியது நன்றி உணர்ச்சி. தத்துவங்களில் ஆகச் சிறந்ததும் மேலானதும் எளிமையானதும் சரணாகதியே. பிடித்தாரைப் பிடித்து நிற்கும் வழி அது. சரணாகதிக்கு எம்பெருமான்கூடத் தேவையில்லை. அவன் பாதங்கள் போதும். அதன்மீது வைக்கிற முழு நம்பிக்கை அனைத்தையும் கொண்டு சேர்க்கவல்லது என்பதே முக்கியம்.
உள்ளுக்குள் அலையடித்த உணர்வை அப்படியே சுலோகங்களாகப் பொழிந்துகொண்டிருந்தார் ராமானுஜர். கத்ய த்ரயம், சரணாகதி கத்யம், வைகுந்த கத்யம் என்று அடுத்தடுத்து அவர் இயற்றிய நூல்கள் அனைத்தும் அதையேதான் பேசின. பற்றுக பற்றற்றான் தாள்.
‘மிகச் சிறப்பு. மிக மிகச் சிறப்பு எம்பெருமானாரே! இந்தச் சரணாகதியை ஆசாரியரின் திருப்பாதங்களில் வைத்தவர் ஒருவர் உண்டு. தெரியுமா உமக்கு?’ என்று கேட்டார் பெரிய நம்பி.
‘எம்பெருமான் மீது வைத்தாலென்ன? ஆசாரியன் மீது வைத்தாலென்ன? இரண்டும் ஒன்றுதான். அதுசரி, யார் அவர்? எனக்கு அவரைக் காணவேண்டுமே?’ ஆர்வத்துடன் கேட்டார் உடையவர்.
‘நீங்கள் அறிந்தவர்தாம். மாறனேர் நம்பி’
‘ஆஹா!’ என்று கரம் கூப்பினார் ராமானுஜர்.
‘நம்மாழ்வாரையே பரம புருஷனாகக் கொண்ட மதுரகவியை நிகர்த்தவர் அவர். ஆளவந்தாருக்கு மிகவும் உவப்பான சீடர்.’
‘கேள்விப்பட்டிருக்கிறேன் சுவாமி. ஆளவந்தார் பரமபதம் அடைந்தபோது திருவரங்கம் வந்திருந்த அன்று அவரைக் கண்டேன். ஆனால் நெருங்கிப் பழக வாய்க்கவில்லை. ஞானத்தில் நம்மாழ்வாரை நிகர்த்தவர் என்பதால்தான் அவரை மாறன் நேர் நம்பி என்று அழைக்கிறார்களாமே?’
‘அப்படியும் உண்டு. மாறன் ஏரி என்னும் ஊரைச் சேர்ந்தவர் என்பதாலும் அப்படிச் சொல்லுவார்கள்.’
மாறனேர் நம்பி அரிஜன குலத்தில் பிறந்தவர். ஊருக்கு வெளியே அரிஜன மக்கள் வசித்து வந்த சேரிக்கும் அப்பால் ஒரு பொட்டல் வெளியில் சிறு குடிசை அமைத்துத் தனியே வசித்துக்கொண்டிருந்தார். வயதாகிவிட்டபடியால் வெளியே நடமாட்டம் முடியாதிருந்தது. தவிரவும் நோய்மை. ஆசாரியப் பிரசாதமாகத் தமது குரு ஆளவந்தாரிடமிருந்து விரும்பிக் கேட்டுப் பெற்ற புற்றுநோய். அதன் வலியும் தீவிரமும் மாறனேர் நம்பியை அசையவிடாமல் அடித்துவிட்டிருந்தது. ஆளவந்தார் திருவடிகளையே எண்ணிக்கொண்டு தம் நாட்களை நகர்த்திக்கொண்டிருந்தார்.
‘எத்தனைக் கொடுமை தெரியுமா? மாறனேர் நம்பிக்கு நிகராக இன்னொரு பாகவதனைச் சொல்லவே முடியாது. அப்படியொரு உத்தமப் பிறவி. இந்த உலகில் அவர் அறிந்ததெல்லாம் இரு ஜோடிப் பாதங்கள் மட்டுமே. ஒன்று அரங்கனுடையது. இன்னொன்று ஆளவந்தாருடையது. ஞான, கர்ம, பக்தி யோகங்களால் எட்ட முடியாத மிக உயரிய நிலையைப் பாதாரவிந்தங்களைச் சரணடைந்து எட்டிப் பிடித்தவர் அவர். அவரைப் போய் இம்மக்கள் தீண்டத்தகாதவர் என்று சொல்லுகிறார்கள். அவரைத் தீண்டும் தகுதி அற்றவர்கள் அல்லவா இவர்கள்?’
‘உண்மைதான் சுவாமி. நமது மக்கள் சாதியெனும் அழுக்குப் போர்வையைப் போர்த்திக்கொண்டு உலவுகிறார்கள். அது போர்வைதான். கழட்டித் தூர எறிந்துவிடுவது எளிது. ஆனால் காலகாலமாகக் கழட்ட மனம் வராமல் போர்வையையே தோலாக்கிக்கொண்டிருக்கிறார்கள். இம்மாதிரி எத்தனை மாறனேர் நம்பிகளை இவ்வுலகம் இன்னும் ஒதுக்கிவைத்திருக்கிறதோ தெரியவில்லை. அத்தனையும் மகா பாவம். திருமாலின் அடியார் அனைவரும் ஒரே சாதியல்லவா? அல்லது சாதியற்றவர்கள் அல்லவா? பேதம், பெருவிஷம்.’
‘சரியாகச் சொன்னீர் உடையவரே. இறைப்பணி என்பது முதலில் இவர்களைத் திருத்துவதுதான்.’
‘எம்பெருமான் அருளுடன் அதையும் செய்வோம் சுவாமி. அதுசரி, எனக்கு மாறனேர் நம்பியைச் சந்திக்க வேண்டுமே? என்னை அவரிடத்துக்கு அழைத்துச் செல்கிறீர்களா?’
பெரிய நம்பி ஒரு கணம் தயங்கினார். ஆகட்டும் அதற்கென்ன என்று மட்டும் சொல்லிவிட்டு விடை பெற்றுப் போனார்.
அழைத்துச் செல்வதில் அவருக்கு எந்தப் பிரச்னையும் இல்லைதான். ஆனால் ஜீயரை ஓர் அரிசன குடிசைக்கு அழைத்துச் சென்றால் ஊர் சும்மா இருக்குமா என்கிற கவலை. அவரேகூட யாருக்கும் தெரியாமல் ரகசியமாகத்தான் நம்பியின் வீட்டுக்குப் போய்வந்துகொண்டிருந்தார். ஊரடங்கிய நேரத்தில் மாறனேர் நம்பிக்கு உணவு சமைத்து எடுத்துக்கொண்டு, மருந்து வகை, மாற்றுத் துணி உள்ளிட்ட தேவைகளுடன் புறப்படுவார். யாருக்கும் தெரியாமல் அவரது குடிசையை அடைந்து, கதவை மூடிவிடுவார்.
பிறகு மாறநேர் நம்பியை எழுப்பி அழைத்துச் சென்று தானே குளிப்பாட்டுவார். மென்மையாக ஒற்றிவிட்டு, புண்பட்ட இடங்களில் மருந்துகளைத் தடவுவார். பிறகு அமரவைத்துத் தன் கையால் ஊட்டிவிடுவார். சாப்பிட்டு ஆனதும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு தன் வீடு திரும்பிவிடுவார்.
இதை எப்படி ராமானுஜரிடம் சொல்லுவது? எப்படி அவரை நம்பியின் இருப்பிடத்துக்கு அழைத்துச் செல்வது? பொல்லாக் குடியினம் வசிக்கிற பூமி. ஆசாரத்தின் பெயரால் அறம் அழிக்கிற கூட்டத்துக்கு ஆசாரிய ஸ்தானத்தில் இருப்பவரின் அருமை புரியாதே?
அவருக்கு ஒரே கவலையாகிவிட்டது.
(தொடரும்)
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
February 28, 2017
பொலிக! பொலிக! 47
அரையருக்கு மிகவும் சுவாரசியமாகிவிட்டது. ‘சொல்லும், சொல்லும்! ராமன் நினைத்தால் இருந்த இடத்தில் இருந்தபடிக்கே சீதையை மீட்டிருக்க முடியும்தான். ஆனால் ஏன் செய்யவில்லை?’ ஆர்வம் தாளமாட்டாமல் கேட்டார்.
‘சுவாமி, இலங்கைக்குப் போவதற்கு முன்னால் ராமேஸ்வரத்துக் கடற்கரையில் இருந்தபடி ராமன் கடலரசனைக் கூப்பிட்டான் அல்லவா?’
‘ஆமாம். கடலைத் தாண்ட அனுமதி கேட்பதற்காக.’
‘அவன் வரத் தாமதமானதில் கோபமாகி வில்லை எடுத்து நாணேற்றிவிட்டான் அல்லவா?’
‘அதுவும் உண்மைதான். ராமன் அழைத்துத் தாமதம் செய்யலாமோ?’
‘ஆனால் நாண் ஏற்றிய கணத்தில் கடலரசன் ஓடி வந்துவிட்டான். தாமதத்துக்கு மன்னிப்புக் கேட்டு ராமனின் கோபத்தைக் கரைத்தான் அல்லவா?’
‘ஆமாம், அதற்கென்ன?’
‘அப்போது என்ன நடந்ததென்று யோசித்துப் பாருங்கள். ஏற்றிய அம்பை இறக்க முடியாது என்று சொல்லி, அதே கடலரசனின் எதிரியான யாரோ ஒரு அரக்கனை நோக்கி அந்த அம்பைச் செலுத்தி அவனை அழித்தானா இல்லையா? அதுவும் வடக்கே எங்கோ மூவாயிரம் காத தூரத்தில் இருந்த அரக்கன் அவன்.’
‘நீர் சொல்வது உண்மைதான் உடையவரே. கவி வால்மீகி அப்படித்தான் எழுதியிருக்கிறார்.’
‘இப்போது சொல்லுங்கள். ஒரே ஒரு அம்பை வைத்து மூவாயிரம் காத தூரத்தில் உள்ள ஓர் அரக்கனை அழிக்கத் தெரிந்தவனுக்கு, வெறும் நூறு யோசனை தூரத்தில் இருந்த ராவணனை ஓர் அம்பால் வீழ்த்தத் தெரியாதா? எதற்கு வேலை மெனக்கெட்டுக் கடல் தாண்டிப் போகவேண்டும்?’
‘அதானே.. நான் இதை யோசித்ததே இல்லை உடையவரே!’
‘ராமன் கடல் தாண்ட ஒரே காரணம் விபீஷண சரணாகதிதான். வைஷ்ணவத்தின் ஆதார சூத்திரமே பிரபத்தி என்கிற சரணாகதி அல்லவா? விபீஷணனின் சரணாகதியை அங்கீகரித்துக் காட்டுவதன்மூலம் உயிர்கள் அனைத்துக்கும் மௌனமாகத் தனது மனத்தைப் புரியவைத்துவிடத் தான் ராமன் இலங்கைக்குப் போனான்.’
‘அருமை, அருமை ராமானுஜரே! எப்பேர்ப்பட்ட விளக்கம்! இதைத்தானே கிருஷ்ணாவதாரத்திலும் கீதையில் அறுதியிட்டுச் சொன்னான்! பிரமாதம். ஒருநாள் உமது காலட்சேபத்தை முழுமையாகக் கேட்க வேண்டும்.’
ராமானுஜர் புன்னகை செய்தார். அவர் காலட்சேபம் செய்ய அங்கு சென்றிருக்கவில்லை. அரையரிடம் இருந்த பெரும் புதையல் ஒன்றைப் பெறுவதற்காகவே போயிருந்தார். திருமாலையாண்டான் குறிப்பிட்டதும் பெரிய நம்பி குறிப்பிட்டதும் அதனைத்தான். சரமோபாய நிஷ்டை என்கிற ஆசாரிய நிஷ்டை.
என்றைக்கு அது எனக்குக் கிட்டும்? எப்போது காலம் கனியும் எம்பெருமானே?
மனத்துக்குள் ஏங்கியபடியே அவர் ஆசாரியருக்கு மஞ்சள் காப்பு இட்டுக்கொண்டிருந்தபோது சட்டென்று அரையரின் முகம் சுருங்குவதைக் கண்டார். பதறிப் போனார். ஏதோ சரியில்லை.
‘மன்னியுங்கள் சுவாமி. ஒரே ஒரு நிமிடம் பொறுங்கள்.’ என்று சொல்லிவிட்டு இட்ட மஞ்சள் காப்பைத் துடைத்து எடுத்துவிட்டு மீண்டும் புதிதாக, சரியான பதத்தில் மஞ்சள் காப்பு தயாரித்து அவருக்குப் பூசிவிட ஆரம்பித்தார்.
அரையர் வியப்படைந்தார். மஞ்சள் காப்பின் சேர்மானத்தில் ஏதோ சரியில்லை. மேனியில் சிறு உறுத்தல். தன்னையறியாமல் அவர் முகம் சுளித்தது அவருக்கே தெரிந்திருக்கவில்லை. இந்த ராமானுஜர் அதை எப்படிக் கவனித்தார்?
‘சுவாமி, தங்களுக்குச் சேவை செய்யக் கிட்டிய வாய்ப்பு என் பூர்வஜென்மப் பலன். அதில் நான் பிழை புரியலாமா? இனி இப்படி நேராது. வாருங்கள், நீராடலாம்.’
அழைத்துச் சென்று அமர வைத்து வாசனை திரவியங்கள் சேர்த்த இதமான சுடு நீரில் அவரைக் குளிப்பாட்டினார். கோயிலில் மணிக்கணக்கில் பாடி, சோர்ந்து திரும்பியிருந்த அரையருக்கு அந்த நீராடல் மிகுந்த பரவசத்தை அளித்தது. அப்படியே கண்மூடி அதை ரசித்துக்கொண்டிருந்தார்.
குளித்து முடித்து அவர் வந்து அமர்ந்ததும் சுண்டக் காய்ச்சிய பசும்பாலைக் கொடுத்துக் குடிக்கச் சொன்னார்.
‘எம்பெருமானாரே, உம்மைப் போலொரு சீடனை நான் கண்டதில்லை. இந்த குரு பக்திக்கு, இந்த செய் நேர்த்திக்கு, இந்த அக்கறைக்கு, அன்புக்கு நான் ஏதாவது பதிலுக்குத் தங்களுக்குத் தந்தே தீரவேண்டும். என்னிடமுள்ள எல்லா செல்வத்தையும் அள்ளிச் செல்லுங்கள்.’ என்று உணர்ச்சிவசப்பட்டுச் சொன்னார் அரையர்.
‘நன்றி சுவாமி. அனைத்து செல்வங்களிலும் மேலானதும் சிறப்பானதும் பெருமைக்குரியதுமான ஆசாரிய நிஷ்டையைத் தங்களிடமிருந்து பெற விரும்புகிறேன். தங்களைத் தவிர அதை போதிக்க வேறொருவர் இல்லை என்று திருமாலையாண்டானும் பெரிய நம்பியும் சொன்னார்கள். எனக்கு அந்தப் பேறை அளிப்பீர்களா?’
பரவசத்தில் அப்படியே உடையவரை வாரி அணைத்துக்கொண்டார் அரையர்.
‘உம்மைப் போலொரு சிஷ்யருக்குத்தான் அதைச் சொல்லவேண்டும். குருவே பிரம்மம் என்பதைப் புரிந்துகொள்ள சீடன் சரியானவனாக இருப்பது அவசியம். தந்தேன், ஏந்திக்கொள்ளும்!’ என்று சொல்லி ஆரம்பித்தார்.
‘உடையவரே! அவ்வப்போதைய தேர்வுகளுக்கான பாடங்களை ஓர் ஆசிரியரால் சரியாகச் சொல்லித்தந்துவிட முடியும். தேர்ச்சி பெற்று மாணவன் அடுத்த வகுப்புக்குச் சென்றால் அங்கே வேறொரு ஆசிரியர் இருப்பார். அவர் அந்த நிலைக்கான தேர்வுகளுக்கு மாணவனைத் தயார் செய்து அனுப்புவார். மீண்டும் அடுத்த வகுப்பு. இப்படியே ஒவ்வொரு வகுப்பிலும் ஒவ்வொரு ஆசிரியர் வருவார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வித்தையைச் சொல்லிக் கொடுப்பார். அவரது எல்லை அதுதான். ஆனால் குருவானவர் வேறு. அவர் முழு வாழ்வுக்குமான பாதையை அமைத்துக் கொடுப்பவர். தேர்வுகள் அல்ல அவரது நோக்கம். ஒரு பயிற்சியாளனைப் போல் மரணம் வரை மனத்துக்குள் உடன் வருபவர். இறுதிவரை வழி காட்டுபவர். சென்றடைய வேண்டிய இலக்கைச் சுட்டுபவர். இறுதியில் மாணவன் சென்று சேரும் இடம் பரமாத்மாவின் இடமாக இருக்கும். அங்கே தகிக்கும் பேரொளிப் பெருவெள்ளமாயிருக்கும் எம்பெருமானிடத்திலும் அவன் தன் குருவையே காண்பான். படுத்துக் கிடக்கிற பரமனேதான் எழுந்து நடமாடும் குருவாகவும் இருக்கிறான். இதுதான் சூட்சுமம். பிரம்ம ஞானமென்பது இதனை அறிவதில் தொடங்குவதுதான்.’
ராமானுஜர் கண்மூடி, கைகூப்பிக் கேட்டுக்கொண்டிருந்தார். எப்பேர்ப்பட்ட உண்மை! இறுதி வரை உடன் வருகிற குரு. தன் விஷயத்தில் தமது இறப்புக்குப் பிறகு உடன் வரத் தொடங்கிய ஆளவந்தாரை அவர் எண்ணிப் பார்த்தார். பெரிய நம்பி வடிவத்தில் வந்து த்வயம் அளித்தது அவர்தான். திருக்கோட்டியூருக்குத் தன்னை வரவழைத்து சரமப் பொருள் சொல்லித்தந்தவரும் அவர்தான். திருமாலையாண்டான் ரூபத்தில் திருவாய்மொழிப் பாடம் சொல்லிக் கொடுத்ததும் அவரேதான். இதோ இப்போது ஆசாரிய நிஷ்டையை விளக்குகிற ஆசாரியரும் அவரன்றி வேறு யார்?
குருவே சரணம் என்று அரையரின் தாள் பணிந்தார் ராமானுஜர்.
(தொடரும்)
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
February 27, 2017
பொலிக! பொலிக! 46
பெரிய நம்பியைப் பார்க்கப் போயிருந்தார் ராமானுஜர்.
திருவாய்மொழிப் பாடம் முடிவடைந்திருந்தது. அடுத்த யோசனையாக திருமாலையாண்டான் சொல்லிவிட்டுப் போனதைச் செயல்படுத்திவிட வேண்டியதுதான். அதற்குமுன் நம்பிகளிடம் ஒரு வார்த்தை சொல்லிவிடலாம் என்று நினைத்துத்தான் அவர் வீட்டுக்குப் போயிருந்தார்.
‘வாரும் ராமானுஜரே! திருவாய்மொழி வகுப்பு நிறைவடைந்துவிட்டதெனக் கேள்விப்பட்டேன்.’
‘ஆம் சுவாமி. எப்பேர்ப்பட்ட ஞான சமுத்திரத்திடம் பாடம் கேட்டிருக்கிறேன்! நான் புண்ணியம் செய்தவன்.’
‘அதற்குள் திருப்தியடைந்துவிடாதீர்கள். இன்னும் ஒன்று மிச்சம் இருக்கிறது உமக்கு.’
ராமானுஜர் சற்றே வியப்புடன் பார்க்க, ‘அடுத்தபடியாக நீர் அரையரைச் சென்று பாரும். மற்ற யாரிடமும் இல்லாத ஓர் அர்த்த விசேஷம் அவரிடம் உண்டு. சரம உபாய நிஷ்டை என்கிற ஆசாரிய நிஷ்டை!’
‘ஆம் சுவாமி. இதையேதான் திருமாலையாண்டானும் சொன்னார்.’
‘சொன்னாரா? அதுதான்! எதைக் கற்றுவிட்டால் மற்றதெல்லாம் ஒன்றுமில்லையோ அதை நீர் கற்றே தீரவேண்டும்.’ என்றவர் ஆசாரிய நிஷ்டையின் முக்கியத்துவத்தைப் பற்றி ராமானுஜருக்கு எடுத்துரைக்க ஆரம்பித்தார்.
‘சாமானியர்களால் பரம புருஷனை நேரில் பார்க்க முடியாது. அவன் பக்தி செய்யலாம். கர்ம, ஞான யோகங்களில் சாதகம் செய்யலாம். இன்னுமுள்ள எத்தனையோ விதமான உபாயங்களைக் கடைப்பிடித்துப் பார்க்கலாம். ஆனால் பகவான் தரிசனம் அத்தனை சுலபமா? ஆனால், பகவானைக் காணவேண்டுமென்கிற தாபம் இல்லாதிருக்காதல்லவா? அதற்கான எளிய உபாயம் இது. ஆசாரியரே நடமாடும் பரம புருஷன்.’
ராமானுஜர் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தார்.
‘உறங்கும் பெருமான் தானே உலவும் பெருமானாய் வந்தான் என்பார்கள். உலவும் பெருமான் என்றால் அது ஆசாரியரைக் குறிக்கும். தேவு மற்றறியேன் என்று மதுரகவி யாரைச் சொன்னார் என்று சிந்தித்துப் பாரும். அவரது ஆசாரியர் நம்மாழ்வாரைத்தான் அவர் அப்படிச் சொன்னார்.’
‘புரிகிறது சுவாமி.’
‘அதனால்தான் சொல்கிறேன். ஆசாரிய நிஷ்டையைப் பூரணமாகக் கற்கவேண்டியது மிக அவசியம். அதை அரையர் சுவாமியிடம்தான் நீர் பயின்றாக வேண்டும். அதைச் சொல்லித்தர அவரைக் காட்டிலும் வேறு சரியான நபர் இல்லை.’
அன்று இரவு ராமானுஜர் அரையரின் இல்லத்துக்குச் சென்றார். அரையர் அப்போது கோயிலில் இருந்து வந்திருக்கவில்லை. கையோடு எடுத்துச் சென்றிருந்த பாலை சுண்டக் காய்ச்சினார். பனங்கற்கண்டு, பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ என்று பசும்பாலுக்குக் குணம் சேர்க்கக்கூடிய பொருள்களைச் சேர்த்தார். அரையர் வீடு திரும்பியதும், ‘அடியேன்’ என்று அவர் பாதம் பணிந்து, தயாராக வைத்திருந்த காய்ச்சிய பாலை எடுத்து நீட்டினார்.’
‘வாரும் உடையவரே, என்ன இந்நேரத்தில் இங்கே?’
‘பாலை அருந்துங்கள் சுவாமி. பாடிக் களைத்து வந்திருக்கிறீர்கள். முதலில் சிரம பரிகாரம் செய்துகொள்ளுங்கள்’
அரையர் சாய்ந்து அமர்ந்து பாலைப் பருக ஆரம்பித்தார். ராமானுஜர் அவர் காலருகே அமர்ந்து அவரது பாதங்களை எடுத்துத் தம் மடிமீது வைத்து மெல்லப் பிடித்துவிடத் தொடங்கினார்.
அரையர் சேவை என்பது ஆனந்தத்தின் உச்சம். சன்னிதியில் அவர் பாடத் தொடங்கினால் காற்றும் வீசுவதை நிறுத்திவிட்டு நின்று கவனிக்கும். பக்திப் பரவசத்தில் பாடிக்கொண்டே அவர் மெல்ல ஆடவும் ஆரம்பிப்பார். தன்னை மறந்து, உலகை மறந்து, இரவு பகல் மறந்து, இடம் மறந்து, இருப்பு மறந்து இறைவனோடு இரண்டறக் கலக்கிற பரவசப் பேரனுபவம் அது. பிரேம பக்திதான். ஆனால் அந்தப் பிரேமை நிகரற்றது. ஆண்டாளுக்கும் பக்த மீராவுக்கும் ராதைக்கும் சாத்தியமான பக்தி. அந்தப் பரவசப் பெருவெள்ளம் தாங்க முடியாமல் பாய்ந்து வந்து பரமனே கட்டியணைத்துக் கடாட்சிக்கிற உச்சக்கட்ட பக்தி.
ராமானுஜருக்கு அரையரைத் தெரியும். காஞ்சியிலேயே அவர் பார்த்திருந்தார். பேரருளாளனையே தன் வசப்படுத்திய பெரியவர். ஆளவந்தாரின் மகனுக்கு பக்தி செய்யச் சொல்லித்தரவும் வேண்டுமா?
காலம் மறந்து பாடியும் ஆடியும் களைத்து வந்திருந்த அரையருக்கு அந்த சூடான பசும்பாலும் இதமான கால் பிடித்து விடலும் பரம சுகமாக இருந்தன.
‘அருமை உடையவரே. உமக்கு ஆளவந்தார் அருளிய ஸ்தோத்திர ரத்தினம் தெரியுமோ?’
‘இல்லை சுவாமி. தாங்கள் சொல்லித் தந்தால் பயில ஆர்வமாயிருக்கிறேன்.’
அன்றைக்கு அவருக்கு ஸ்தோத்திர ரத்தினம் கிடைத்தது. இன்னொரு நாள் ‘சதுச்லோகி’ என்கிற இன்னொரு வைர வைடூரியம் கிடைத்தது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொற்கிழி. ஒவ்வொரு முத்துக்குவியல்.
ராமானுஜர் தினமும் அரையர் வீட்டுக்குப் போய்விடுவார். அரையர் குளிப்பதற்குத் தயாராவதற்கு முன்னால் அவர் குளிப்பாட்டத் தயாராகிவிடுவார். அரையருக்கு மஞ்சள் காப்பிட்டுக் குளிப்பதென்றால் இஷ்டம். இதை அறிந்த ராமானுஜர் தினசரி தானே அவருக்கு மஞ்சள் காப்பு தயாரிக்கத் தொடங்கினார். அருமையான கஸ்தூரி மஞ்சள் தூளில் பலவித வாசனைத் திரவியங்களைச் சேர்த்து கெட்டியாகக் கரைத்து அவரது மேனியெங்கும் மென்மையாகப் பூசிவிடுவார். மஞ்சள் காயும் நேரம் அரையர் கீழ்க்குரலில் மென்மையாக ஏதாவது பாசுரம் பாடிக்கொண்டே இருப்பார். சட்டென்று நிறுத்தி, ‘இதற்குப் பொருள் தெரியுமோ?’ என்று ஆரம்பித்தால் அன்றைய பொழுதுக்கு ஒரு ரத்தினம் கிடைத்துவிடும்.
ஒருநாள் இருநாள் அல்ல. ஆறு மாதங்களாக ராமானுஜர் இதனைச் செய்துகொண்டிருந்தார்.
அரையருக்குப் பழகிவிட்டது. ‘இன்றைக்கு உடையவர் இன்னும் வரவில்லையோ?’ என்று வீட்டுக்குள் நுழையும்போதே கவலைப்பட ஆரம்பித்துவிடுவார்.
‘மன்னித்துக்கொள்ளுங்கள் சுவாமி. மடத்தில் இன்று ஏகப்பட்ட அதிதிகள். காலட்சேபம் முடியத் தாமதமாகிவிட்டது.’
‘அப்படியா? அதனால் பரவாயில்லை. இன்றைக்கு என்ன காலட்சேபம் நடந்தது?’
‘சுவாமி, ராமாயணம் நடந்துகொண்டிருக்கிறது. விபீஷண சரணகதிக் கட்டம் வந்திருக்கிறது.’
‘அடடா.. அருமையான இடமாயிற்றே. எங்கே, இன்றைக்கு என்ன சொன்னீர் என்று சொல்லும்?’
ராமானுஜருக்குக் கூச்சமாகிவிட்டது. ஆளவந்தாரின் திருமகன். தவிரவும் அவரது பிரதான சீடர். அவருக்கு நாம் ராமாயண உபன்யாசம் செய்வதா?
‘அட பரவாயில்லை சுவாமி. ஏதாவது ஒரு விஷயத்தைச் சொல்லும், நாமும் கேட்போம்.’
மிகுந்த தயக்கத்துக்குப் பிறகு ராமானுஜர் ஆரம்பித்தார்.
‘சுவாமி, ராமன் எப்பேர்ப்பட்ட பராக்கிரமசாலி. அவன் நினைத்தால் ராமேஸ்வரத்தில் இருந்தபடியே ராவணனை அழித்துவிட முடியாதா? எதற்காக அவன் வேலை மெனக்கெட்டு இலங்கைக்குப் போகவேண்டும்?’
‘நல்ல கதையாக இருக்கிறதே. சீதாதேவியை சிறை மீட்கவேண்டாமா?’
‘ஏன் ராமன் நினைத்தால் இருந்த இடத்தில் இருந்தபடியே சீதையை மீட்டிருக்க முடியாதா?’
‘அதெப்படி முடியும்?’
‘முடிந்திருக்கும் சுவாமி. நடந்ததைச் சற்று யோசித்துப் பாருங்கள்!’ என்று பொடி வைத்தார்.
(தொடரும்)
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
February 26, 2017
பொலிக! பொலிக! 45
திருமாலையாண்டான் நெடுநேரம் வைத்த கண் வாங்காமல் ராமானுஜரையே பார்த்துக்கொண்டிருந்தார். அவருக்குப் பேசத் தோன்றவில்லை. உலகில் உதிக்கும் ஒவ்வொரு உயிரும் இன்னொன்றின்மீது தன்னையறியாமல் உறவும் தொடர்பும் கொண்டுவிடுகின்றன. அது கண்ணுக்குத் தெரியாத நூலிழையில் கட்டப்படுகிற பந்தம். பெற்றவர்கள், உடன் பிறந்தவர்கள், தெரிந்தவர்கள், அக்கம்பக்கத்தார் வரை புத்தியில் நிலைக்கிறது உறவு. பிறவற்றை எண்ணிப் பார்ப்பதில்லை பெரும்பாலும். உலகை வீடாகவும் பரம புருஷனைக் குடும்பத் தலைவனாகவும் எண்ண முடிந்துவிட்டால் புழு பூச்சிகளில் தொடங்கி சகலமானவற்றுடனும் நமக்குள்ள உறவு புரிந்துவிடுகிறது. அது வசுதேவ குடும்பம். வையமெங்கும் உறவுகள்.
ஏகலைவன் கூட எட்டி நின்று வித்தை கற்றவன். ஆனால் ஆளவந்தார் பரமபதம் அடைந்த தருணத்தில்தானே ராமானுஜர் திருவரங்கத்துக்கே வந்தார்? ஆனால் சட்டென்று ஒரு வார்த்தை சொல்லிவிட்டார். ‘நான் அவருக்கு ஏகலைவன்.’
என்ன கற்றிருப்பார்? எப்படிக் கற்றிருப்பார்? வேதப் பிரவாக நுட்பங்களை மனம் கடத்துமா? திருவாய்மொழியை, சொல்லிக் கொடுத்தாலே அதில் பூரண ஞானம் எய்துவது சிரமம். இவர் அள்ளிக்கொண்டிருக்கிறாரே அவரிடம்? எப்படி நிகழ்ந்திருக்கும்?
பிரமிப்பில் வாயடைத்து நின்றார் திருமாலையாண்டான்.
‘சுவாமி, அடியேன் காஞ்சியில் இருந்தபோது திருக்கச்சி நம்பிகளை தினசரி சந்திப்பேன். துயரமோ, மகிழ்ச்சியோ எனக்குள் நிகழ்கிற அனைத்தையும் அவரது திருவடிகளில்தான் அவ்வப்போது சேர்த்து வைப்பேன். துறவு கொள்வது என்ற வைராக்கியம் பிறந்தபோது, மறுகணமே அவரைத் தேடித்தான் ஓடினேன். எனக்குச் சில வினாக்கள் அப்போது இருந்தன. அதைக்காட்டிலும் பாரமாக வீட்டில் என் பார்யாள் இருந்தாள்…’
ராமானுஜர் தன்னை மறந்து நடந்த சம்பவத்தை விவரித்துக்கொண்டிருந்தார். திருமாலையாண்டான் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார்.
‘அவள் ஆசார்ய அபசாரம் செய்துவிட்டாள் சுவாமி. என்னால் தாங்க முடியவில்லை அதை. விட்டுவிடுவோம் என்ற தீர்மானம் வந்தபோது என் மனத்தில் இருந்த ஆறு வினாக்களுக்கு விடை வேண்டியிருந்தது. திருக்கச்சி நம்பிகள்தாம் அவற்றைப் பேரருளாளனிடம் எடுத்துச் சொல்லி என் குழப்பத்தை நீக்கும் பதில்களைப் பெற்றுத் தந்தார்.’
‘அப்படியா? இது எனக்குத் தெரியாதே. பெரிய நம்பிகூட சொல்லவில்லை.’
‘நான் தெரிவித்ததில்லை சுவாமி. இத்தனைக்கும் என் மனத்தில் இருந்த வினாக்களை நான் திருக்கச்சி நம்பியிடம் சொல்லவில்லை. எனக்கு இருக்கும் சந்தேகங்களுக்குப் பேரருளாளனிடம் பதில் பெற்றுத் தாருங்கள் என்றுதான் சொன்னேன்.’
‘பிரமாதம்! கேட்காத கேள்விக்குக் கிடைத்த பதில்கள். அப்படித்தானே?’
‘ஆனால் நினைத்த கேள்விகள். மனத்தை உறுத்திக்கொண்டிருந்த கேள்விகள்.’
‘நல்லது. அருளாளன் என்ன சொல்லி அனுப்பினான் நம்பியிடம்?’
‘நானே பரம்பொருள் என்பது முதல் பதில். ஜீவன் வேறு, பரமாத்மா வேறு என்பது இரண்டாவது வினாவுக்கான பதில். அவனைச் சரணடைவதே முக்திக்கு மார்க்கம் என்பது மூன்றாவது. பகவானைச் சரணடைந்தவர்கள் அந்திமக் காலத்தில் அவனை நினைக்கவேண்டிய தேவையில்லை என்பது நான்காவது. அவர்கள் சரீரத்தை விடுத்துக் கிளம்புகிறபோது மோட்சம் நிச்சயம் என்பது ஐந்தாவது…’
உணர்ச்சி மேலிட்ட ராமானுஜரின் கண்களில் இருந்து கரகரவென நீர் வழிந்துகொண்டிருந்தது.
‘எம்பெருமான் திருவருள் உமக்கு என்றும் உண்டு உடையவரே. அந்த ஆறாவது வினாவுக்கான விடையும் கிடைத்துவிட்டதா?’
‘ஆம் சுவாமி. யாதவப் பிரகாசரிடம் மாணாக்கனாக இருந்து வந்தேன். என்ன காரணத்தாலோ என்னால் அவரோடு ஒத்துப் போக முடியவில்லை. மாயாவாதத்தை என் மனம் ஏற்க மறுத்தது. திருக்கச்சி நம்பியைச் சரணடைந்தபோது, நான் உனக்கு குருவல்ல என்று சொல்லிவிட்டார். அப்படியானால் யார்தாம் என்னை ஆட்கொள்வார் என்று அறிந்துகொள்ள விரும்பினேன். அதற்கான பதிலைத்தான் பேரருளாளன் சொன்னான்.’
‘என்ன பதில்? தயவுசெய்து சொல்லுங்கள்.’
‘பெரிய நம்பியை குருவாகக் கொள்ளச் சொல்லி அப்போதுதான் எனக்கு உத்தரவானது.’
வியப்பில் வாய் பிளந்து நின்றார் திருமாலையாண்டான்.
‘இப்போது புரிகிறது எனக்கு. நீர் ஆளவந்தாருக்கு ஏகலைவனான சூட்சுமம் இதுதானா? சரிதான். அது பேரருளாளன் சித்தம் சுவாமி! பெரிய நம்பி சம்மந்தம் வாய்த்துவிட்டதென்றால் ஆளவந்தார் சம்மந்தமும் சேர்ந்து வாய்த்ததாகத்தான் அர்த்தம்.’
‘இது என் பிறவிப் பயன் சுவாமி! ஆளவந்தாருக்கு நான் ஏகலைவன் என்றாலும் அவரது அத்யந்த சீடர்களான நான்கு பேரிடம் நான் பாடம் கேட்டுவிட்டேன். அறியா வயதில் பெரிய திருமலை நம்பிகள். அதன்பின் பெரிய நம்பி. அவர் மூலம் திருக்கோட்டியூர் நம்பி. இன்று தாங்கள். ஒரு குரு கிடைக்காமல் ஏங்கிக்கொண்டிருந்தவனுக்குத் தகுதி மிக்க நான்கு பேர் வாய்த்தது அவனருள் அன்றி வேறில்லை.’
‘நான்கல்ல ராமானுஜரே! ஐந்தென்று திருத்திக்கொள்ளுங்கள்.’
‘அதென்ன?’
‘ஆம். நீங்கள் ஐந்தாவதாகச் சென்று பயிலவேண்டியவர் ஒருத்தர் இருக்கிறார். அவர் திருவரங்கப் பெருமாள் அரையர். ஆசாரியரான ஆளவந்தாரின் திருமகன். நாங்கள் ஐந்து பேரும் ஆளவந்தாரிடம் ஒன்றாகப் பாடம் கேட்டோம். குருவானவர் எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிறப்புக் கல்வியை ஆசீர்வதித்தார்.’
‘ஆஹா! அத்தனையும் என்னை வந்து சேரும்படி அரங்கன் விதித்திருக்கிறானா? இது எப்பேர்ப்பட்ட பாக்கியம்!’
‘இதைத்தான் திருக்கோட்டியூர் நம்பி என்னிடம் வேறு விதமாகச் சொன்னார். இளவரசனுக்கு கிரீடம் சூடும் வயது வருகிறவரை மன்னனானவன் தமது மந்திரிகளிடம் பொறுப்பைக் கொடுத்து, இளவரசனைப் பதவியேற்கத் தயார் செய்யும்படிச் சொல்லிவிட்டுக் காலமாவது போல, உம்மைத் தயாரிக்கச் சொல்லி மௌனமாக எங்களுக்கு உத்தரவு கொடுத்துவிட்டு ஆளவந்தார் கண்மூடிவிட்டார்!’
நெகிழ்ந்து போய் அவர் பாதம் பணிந்தார் ராமானுஜர்.
‘எழுந்திரும் ராமானுஜரே. திருவரங்கப் பெருமாள் அரையரிடம் ஆசார்ய நிஷ்டை என்னும் பொக்கிஷம் ஒன்று உள்ளது. அத்தனை எளிதாக அவர் அதை யாருக்கும் சொல்லித்தந்துவிட மாட்டார். அவர் மனத்துக்கு உகந்தாற்போல நீங்கள் அவருக்குப் பணிவிடைகள் செய்து அன்புக்குப் பாத்திரமானால்தான் உமக்கு அது கிடைக்கும்.’
‘இனி எனக்கு இதைக்காட்டிலும் வேறு பணியில்லை சுவாமி. இன்றே அரையர் பெருமான் இல்லத்துக்குச் செல்கிறேன்!’
‘இன்னொரு விஷயம். திருக்கோட்டியூர் நம்பி தமது குமாரனையும் குமாரத்தியையும் தங்களிடம் மாணாக்கர்களாகச் சேர்த்துவிட்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டேன்.’
‘ஆம் சுவாமி. ஞான சூரியனின் பிள்ளைகள் மட்டும் வேறெப்படி இருப்பார்கள்? எதைச் சொன்னாலும் உடனே பற்றிக்கொண்டுவிடுகிறார்கள்.’
‘நல்லது உடையவரே. என் மகனையும் உம்மிடமே அனுப்பி வைக்கிறேன். அவனுக்கும் நீரே ஆசாரியராக இருந்து அனுக்கிரகிக்க வேணும்.’
கரம் கூப்பி ஏற்றுக்கொண்டார் ராமானுஜர்.
(தொடரும்)
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
February 25, 2017
ருசியியல் – 11
பனீர் என்பது ஒரு சத்வ குண சரக்காகும். ஆனால் தமிழ் நாட்டில் இது படுகிற பாடு சொல்லி முடியாது. குழம்பில் போடப்படுகிற பெங்களூர் கத்திரிக்காயைவிடக் கேவலப்படுத்தப்படுகிற வஸ்து ஒன்று உண்டென்றால் அது பனீர்தான்.
சமீப காலமாகத் தொலைக்காட்சிகளில் ‘இவளுக்கு பனீர் சமையல்னா ரொம்ப பிடிக்கும்’ என்று ஆரம்பித்து ஒரு விளம்பரம் வருகிறது. பத்தே நிமிடத்தில் பனீர் சமையல் என்று இன்னொரு விளம்பரம். ஆனால் விளம்பரத்தில் இவர்கள் காட்டுகிற காட்சியெல்லாம் சபைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட வரிகளைப் போலத்தான் பனீரை முன்னிறுத்துகின்றன.
உண்மையில் பனீர் ஒரு சிறந்த உணவுப் பொருள். நான் அரிசிக்கு மாற்றாகக் கடந்த பல மாதங்களாக அதைத்தான் சாப்பிடுகிறேன். ஒரு வேளை உணவுக்கு இருநூறு கிராம் பனீர் போதும். இதில் சுமார் நாற்பது கிராம் கொழுப்பு, முப்பத்தி ஐந்து கிராம் புரதம் கிடைத்துவிடும். சராசரி மனிதனுக்கு ஒரு நாளைக்குத் தேவையான கலோரிகளில் நாலில் ஒரு பங்கு சேதாரமின்றி வந்து சேர்ந்துவிடும். அதைவிட விசேடம் என்னவென்றால், பனீரில் கார்போஹைடிரேட் கிடையாது. நான் சொன்ன இருநூறு கிராமில் மொத்தமே இரண்டு கிராம் மாவுச் சத்துதான் தேறும். எனவே இதில் தேக ஹானி கிடையாது.
ஐயோ கொழுப்பைத் தின்று ஜீவ சமாதி அடைவதற்கா என்று அலறாதீர். பனீரில் உள்ளது நல்ல கொழுப்பு. இது உயிரை எடுக்காது. மாறாக காயகல்பம் சாப்பிட்ட கந்தர்வ குமாரனைப் போல் தேக சம்பத்தை ஜொலிஜொலிக்கப் பண்ணிவிடும். என்ன ஒன்று, ஒருவேளைக்குப் பனீர், மறுவேளைக்குப் பலான சாப்பாடு என்று கலந்தடிப்பது தகாது. தேக இயந்திரமானது ஒன்று கொழுப்பில் இயங்கவேண்டும். அல்லது கார்போஹைடிரேடில் இயங்க வேண்டும். இரண்டையும் கலப்பது பெட்ரோல், டீசல் இரண்டையும் சேர்த்தடித்து வண்டியோட்ட முயற்சி செய்வது போலாகும். புரியும்படிச் சொல்லுவதென்றால், பனீர் பட்டர் மசாலா நல்லது. அதையே சப்பாத்திக்கோ, புல்காவுக்கோ தொட்டுக்கொண்டு சாப்பிடுவது கெட்டது.
இந்தியாவில் கிபி முதல் நூற்றாண்டில் இருந்தே பனீர் உணவு இருந்திருக்கிறது. ஆயுர்வேத மருத்துவத் துறையின் ஆதி நூலாகக் கருதப்படும் சரக சம்ஹிதையில் கொதிக்கும் பாலில் எலுமிச்சை நிகர்த்த புளிப்புப் பண்டம் சேர்த்துக் கொழுப்பைப் பிரித்தெடுத்துத் தயாரிக்கப்படுகிற வஸ்துவைப் பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. குஷான மன்னர் கனிஷ்கரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவருக்கும் அவர் காலத்திய வடக்கத்தி மாகாணவாசிகளுக்கும் பனீர் ஒரு முக்கிய உணவாக இருந்திருக்கிறது.
சிலபேர் ரிக் வேத காலத்திலேயே பனீர் உண்டு என்பார்கள். எனக்கென்னமோ அதெல்லாம் உலகின் முதற்குரங்கு தமிழ்க்குரங்கு என்பது போலத்தான் தோன்றுகிறது. தொன்மம் மட்டுமே சிறப்பல்ல. இன்றும் தழைக்கிறதா? தீர்ந்தது விஷயம்.
அது நிற்க.
நான் பனீரை முக்கிய உணவாக்கிக்கொண்ட சிறிது காலத்திலேயே அதில் சமைக்கவும் கற்றுக்கொண்டேன். பனீரை சாதம் போல் உண்ணலாம். உப்புமா செய்யலாம். பொங்கல் செய்யலாம். டிக்கா போன்ற தந்தூரி வகையறாக்களை முயற்சி செய்யலாம். ஒன்றுமே இல்லாவிட்டாலும் வெறுமனே நறுக்கிப் போட்டு ரெண்டு பிடி வெங்காயம் தக்காளி சேர்த்து வெண்ணெயில் வதக்கி எடுத்தால் தேவாமிர்தமாக இருக்கும்.
எத்தனையோ நற்சாத்தியங்கள் இதில் உள்ளதென்றாலும் நமது உணவகங்களில் இந்தப் பனீரை என்ன பாடு படுத்தி எடுக்கிறார்கள் என்று லேசில் விளக்கிவிட முடியாது. பெரும்பாலும் வீட்டில் சாப்பிட முடியாத தினங்களில் இந்தக் கிங்கரர்களிடம் மாட்டிக்கொண்டு விடுவேன். அவர்களைப் பொறுத்தவரை, ஒரு வடக்கத்தி உணவை என்னென்னக் கருமாந்திரங்களைச் சேர்த்து சமைத்தாலும் நமது மக்கள் ஏற்றுக்கொண்டுவிடுவார்கள் என்பதே சித்தாந்தம்.
கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் ஒரு வடக்கத்தி துரித உணவகம் இருக்கிறது. பிராந்தியத்தில் மிகவும் பிரசித்தம். இங்கே பனீரைப் பலவிதங்களில் சமைத்து அல்லது போஸ்ட் மார்ட்டம் செய்து தருவார்கள். எதையும் இரண்டு வாய்க்கு மேல் உண்ண முடியாது. ஒன்று, நூறு கிராம் பனீரில் நூறு கிலோ மிளகாயைக் கொண்டு கொட்டுவார்கள். அல்லது பனீரை வதக்குவதற்குமுன் சமுத்திரத் தண்ணீரில் அலசி எடுத்துவிடுவார்கள். கேட்டால், அதுதான் வடக்கத்தி ஸ்டைல். பாலக் பனீர் என்னுமொரு பேரதிசயப் பண்டத்தை இவர்கள் சமைத்துத் தருகிற விதத்தைப் பற்றி இன்னொரு பண்டார மும்மணிக்கோவைதான் எழுதவேண்டும். சைவ நெறி காப்போரைப் பண்டாரம் என்பார்கள். மேற்படியாளர்கள் சைவ நரி மேய்ப்பர்கள்.
இன்னொரு பிரசித்தி பெற்ற உணவகம், பனீர் உப்புமாவை கேப்பைக் களி ருசியில் தயாரித்து வழங்க வல்லது. இந்த உணவகத்துக்கு ஊரெல்லாம் கிளைகள்வேறு. ஸ்தல மகிமைக்கு ஏற்றவாறு ஒவ்வொரு கிளையிலும் ஒவ்வொரு விதமான களி ருசியைக் கொண்டு வருவார்கள். சென்னை, பாளையங்கோட்டை, வேலூர் வகையறா ருசி. கேட்டால், ‘வேணான்னா சொல்லுங்க, ரவா ரோஸ்ட் கொண்டாரேன்’ என்பார் சேவக சிகாமணி.
சாப்பிடுவது எப்படி ஒரு கலையோ, அதே போலத்தான் சமைப்பதும். பனீரில் நான் அதன் மிருதுத்தன்மையாக இருக்கிறேன் என்று கீதையில் எம்பெருமான் சொல்லியிருப்பதும் அதனால்தான். துரதிருஷ்டவசமாக எடிட்டர்கள் அந்த வரியைக் கபளீகரம் செய்துவிட்டார்கள். மேற்படி மிருதுத்தன்மைக்கு அலங்காரம் செய்வது மட்டும்தான் சமைப்பவர்களின் வேலையே தவிர, திட்டமிட்டுப் படுகொலை முயற்சி செய்தாலொழியப் பனீரைக் கெடுக்க முடியாது.
எனக்குத் தெரிந்து சென்னையில் பனீரைக் கலையுணர்வுடன் கையாளத் தெரிந்த சமையல் விற்பன்னர்கள், திநகர் ஜி.என். செட்டி சாலையில் உள்ள சங்கீதாவில் உள்ளார்கள். கொஞ்சம் யோசித்தால் கத்திப்பாரா மேம்பாலத்துக்குக் கீழே உள்ள அபூர்வாவையும் சொல்லலாம்.
இந்த அபூர்வாவில் உத்தியோகம் பார்க்கிற அத்தனை நாரீமணிகளும் அஸ்ஸாமுக்குக் கிழக்கில் இருந்து மொத்த கொள்முதலாக வந்து சேர்ந்தவர்கள் என்று நினைக்கிறேன். மூக்கையும் முழியையும் பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது. ஒரு பனீர் டிக்காவை எப்படி அலங்கரிப்பது என்று நன்கு அறிந்த தேவதைகள். ஒற்றை வெங்காயத்தை மெல்லிய பூமாலை போல் சுருள் சுருளாக அரிந்து டிக்காவுக்கு சாற்றிக் கொண்டு வந்து வைப்பார்கள். தக்காளியானது மாலையில் சொருகிய வண்ண மலரேபோலப் பிணைந்து கிடக்கும். கொத்துமல்லிச் சட்னிக்கு மேலே தேங்காய்ப்பூ தூவி வைக்கிற பெருங்கலையுள்ளம் வாய்த்தவர்கள். உணவின் ருசியானது, பரிமாறப்படும் விதத்திலும் உள்ளது என்பதை இவர்கள் அறிவார்கள்.
ஒரு சமயம் இந்தச் சப்பை மூக்கு தேவதைகளைப் போல நாமும் வெங்காயத்தை அரிந்து பார்த்தால் என்ன என்று ஓர் ஆசை வந்தது. மனைவி அருகே இல்லாததொரு சுதினத்தில் என் பிரத்தியேகக் கத்தி கபடாக்களை எடுத்து வைத்துக்கொண்டு உட்கார்ந்தேன். ஒரு பெரிய வெங்காயத்தை எடுத்து, லாகவமாக அதில் கத்தியைச் சொருகி, கணக்கு வாத்தியார் காதைத் திருகுகிற மாதிரி அப்படியே அதைத் திருகிப் பார்த்தேன். முதல் சுற்று சரியாக வந்துவிட்டது. இரண்டாம் சுற்றில் கத்தி நகர்ந்து விட்டது.
நறுக்கியவரை தூரப் போட்டுவிட்டு மீண்டும் அதே முயற்சி. இம்முறை கத்தியைச் சொருகிய விதமே தப்பு. காயமே இது பொய்யடா என்று காறித் துப்பிவிட்டது வெங்காயம். அதையும் கழித்துவிட்டு மீண்டுமொரு முயற்சி. சுமார் அரை மணிநேரம் அந்த ஒரு வெங்காயத்துடன் துவந்த யுத்தம் நடத்திவிட்டு, இறுதியில் அற்புதமாகத் தோற்றுப் போனேன்.
நறுக்கத் தெரியாதவனுக்கு வறுக்கத் தெரியும். அன்றைக்கு நான் சமைத்த பனீர் புர்ஜி சரித்திரத்தில் இடம்பெறக்கூடிய தகுதி வாய்ந்தது. தனியொரு காவியமாக அடுத்த வாரம் எழுதுகிறேன்.
(தொடரும்)
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
பொலிக! பொலிக! 44
சேரன் மடத்துக்குத் திருமாலையாண்டான் வந்திருந்தார். ஆளவந்தாரின் ஐம்பெரும் சீடர்களுள் ஒருவர். திருக்கோட்டியூர் நம்பி சொல்லி, ராமானுஜருக்குத் திருவாய்மொழி வகுப்பெடுக்க ஒப்புக்கொண்ட பெரியவர்.
ராமானுஜருக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. திருக்கோட்டியூர் நம்பியின் ஆசியும் அணுக்கமும் கிடைத்ததே ஒரு வரமென்றால் அவர்மூலம் ஆளவந்தாரின் மற்றொரு சீடரிடம் பாடம் கேட்கக் கிடைத்த வாய்ப்பை அவர் கிடைத்தற்கரிய பெரும் வாய்ப்பாகவே கருதினார்.
‘உம்மைப் பற்றி நம்பி ரொம்பப் பிரமாதமாக நிறைய சொன்னார். நாம் பாடத்தை ஆரம்பிக்கலாமா?’
‘காத்திருக்கிறேன் சுவாமி!’
திருவாய்மொழிப் பாடம் தொடங்கியது.
ராமானுஜர் தம்மை மிகத் தெளிவாக இருவேறு நபர்களாக்கிக் கொண்டிருந்தார். தாம் குருவாக இருந்து தமது சீடர்களுக்குச் சொல்லிக்கொடுக்கிறபோது அவர் பேசிப் பழகும் விதம் வேறு. அதில் அன்பும் கம்பீரமும் கலந்திருக்கும். இதுவே, அவர் மாணாக்கராகி, ஆசிரியரின் தாள் பணிந்து பயிலும் நேரங்களில் அவரது வடிவம் வேறாகியிருக்கும். பணிவுக்கும் பக்திக்கும் மட்டுமே அங்கு இடம் உண்டு. மனத்தின் வாயிலை விரியத் திறந்து வைத்து ஆசிரியரின் ஞானத்தின் பூரணத்தை அப்படியே ஏந்தி எடுக்கப் பார்ப்பார்.
அது உபநிஷத நிலை. உபநிஷத் என்றால் பிரம்ம வித்யை. முழுமையின் மூலப் பொருளை அடைவது. உப என்ற சொல்லுக்கு குருவின் அருகில் செல்லுதல் என்று பொருள். நி என்றால் எந்தச் சந்தேகமும் இன்றி அறிவை அடைதல். ஷத் என்ற மூன்றாவது சொல்லுக்கு நாசம் செய்தல் என்று பொருள்.
இதென்ன பயங்கரம்? குருவின் அருகே சென்று சந்தேகமின்றி அறிவை அடைந்து எதை நாசம் செய்வது?
அது துயரங்களின் நாசம்.
ஒரு குருவிடம் எவ்வளவோ கற்க முடியும். ஆனால் சற்றும் சந்தேகமின்றி எதைக் கற்றால் துயரங்களை நாசமடையச் செய்ய முடியுமோ அதைக் கற்பதைத்தான் உபநிஷத் என்பார்கள். பிரம்ம வித்யை என்பது அதுதான்.
உபநிஷத் என்பது ஒரு பிரதியல்ல. அது ஒரு நிலை. பெரிய நம்பியிடம் பாடம் கேட்டபோது அப்படித்தான். திருக்கோட்டியூர் நம்பியிடம் கேட்டபோதும் அப்படித்தான். சொல்லித்தருபவர் கற்பகத் தரு. ஏந்திக்கொள்பவரின் தரம் சரியாக இருந்தால் போதுமானது. ராமானுஜர் நிகரற்ற பாண்டம். கொட்டக்கொட்டக் கொள்ளளவு விரிந்துக்கொண்டே செல்லும் பேரற்புதம்.
திருமாலையாண்டானுக்கு அது பெரும் மகிழ்ச்சியளித்தது. ஒரு சரியான மாணவரைத்தான் திருக்கோட்டியூர் நம்பி தமக்கு அளித்திருக்கிறார் என்கிற திருப்தி. அவரும் உற்சாகமாகத் திருவாய்மொழிப் பாசுரங்களைச் சொல்லி விளக்கம் அளித்துக்கொண்டிருந்தார்.
ஆனால் அந்த மகிழ்ச்சி அவருக்கு வெகுநாள் நீடிக்கவில்லை. சட்டென்று ஒருநாள் பாடம் நின்றது.
அன்றைக்குத் திருமாலையாண்டான், திருவாய்மொழியின் இரண்டாவது பத்தில், ‘அறியாக் காலத்துள்ளே’ என்று தொடங்கும் பாசுரத்தை ஆரம்பித்தார்.
“அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து
அறியாமா மாயத்து அடியேனை வைத்தாயால்
அறியாமைக் குறள் ஆய், நிலம் மாவலி மூவடி என்று
அறியாமை வஞ்சித்தாய், எனது ஆவியுள் கலந்தே”
என்பது பாசுரம்.
‘பொருள் சொல்கிறேன் கேளும். அறியாப் பருவத்தில் என்னை அன்பாக உன் பக்கத்தில் வைத்திருந்தாய். பிறகு புத்தி தெளியும்போது சம்சார சாகரத்தில் தள்ளி வஞ்சித்துவிட்டாயே என்று வருத்தப்படுகிறார் ஆழ்வார்.’
ராமானுஜர் திடுக்கிட்டுப் பார்த்தார். ஒரு கணம் அவர் மனத்துக்குள் யாதவப் பிரகாசர் வந்து போனார்.
‘சொன்னது விளங்கிற்றா உடையவரே?’
‘மன்னிக்கவேண்டும் சுவாமி. பொருள் சற்றுப் பிழையாக உள்ளது போலப் படுகிறது.’
‘பிழையா? இதிலா?’
‘ஆம் சுவாமி. இந்தப் பாசுரத்துக்கு முன்னாலும் பின்னாலும் வருகிற பாசுரங்கள் அனைத்தும் எம்பெருமானின் பெருங்கருணையைப் போற்றிப் புகழ்வது போல வருகின்றன. சட்டென்று இந்த ஒரு பாசுரத்தில் எப்படி ஆழ்வார் குறை சொல்லுவார்?’
‘புரியவில்லையே?’
‘சம்சார சாகரத்தில் அவன் தள்ளினான் என்று எடுத்துக்கொள்ள முடியாது சுவாமி. நான் அறியாமையில் பிழைபுரிந்துவிட்டேன்; அப்போதும் நீ வந்து என்னை ஆட்கொண்டாய் என்பதாகத்தான் இருக்க வேண்டும்.’
திருமாலையாண்டான் எழுந்துவிட்டார்.
‘ஓஹோ, உமக்குத் தோன்றும் நூதன விளக்கமெல்லாம் நமக்குச் சரிப்பட்டு வராது, புரிகிறதா? என் குரு ஆளவந்தார் எனக்கு என்ன விளக்கம் சொன்னாரோ அது மட்டும்தான் எனக்குச் சரி. வருகிறேன்.’ என்று சொல்லிவிட்டுப் போயேவிட்டார்.
ராமானுஜருக்கு மிகவும் வருத்தமாகப் போய்விட்டது. ஆனால் கோபித்துக்கொண்டு போய்விட்டவரை என்ன செய்ய முடியும்?
விஷயம் திருக்கோட்டியூர் நம்பிக்கு எட்டியது. யோசித்தார். சட்டென்று புறப்பட்டு திருவரங்கத்துக்கு வந்து சேர்ந்தார்.
‘என்ன பிரச்னை சுவாமி? ராமானுஜருக்கு நீங்கள் திருவாய்மொழிப் பாடம் சொல்லித்தருவதில்லையா?’
‘ஆம். அவர் பாசுரங்களுக்கு வழக்கில் இல்லாத அர்த்தங்களைச் சொல்லுகிறார். எனக்கு அது உவப்பாக இல்லை. நமது ஆசாரியர் ஆளவந்தாருக்கு மேல் ஒருத்தர் வியாக்கியானம் தர முடியுமோ?’
‘அப்படியா? நீங்கள் என்ன சொன்னீர்கள், அதற்கு ராமானுஜர் என்ன புதிய வியாக்கியானம் சொன்னார் என்று சொல்லுங்கள்?’
திருமாலையாண்டான் சொன்னார். அமைதியாகக் கேட்ட திருக்கோட்டியூர் நம்பி புன்னகை செய்தார்.
‘ஆண்டான் சுவாமிகளே! ராமானுஜர் சொன்ன இந்த விளக்கத்தை நமது ஆசாரியர் ஆளவந்தார் சொல்ல நானே கேட்டிருக்கிறேன்!’
திடுக்கிட்டுப் போனார் திருமாலையாண்டான். அப்படியா, அப்படியா என்று திரும்பத் திரும்பக் கேட்டார்.
‘எம்பெருமானார் சாதாரணத் துறவியல்ல சுவாமி. ஜகத்குருவான கிருஷ்ண பரமாத்மா, சாந்திபீனி முனிவரிடம் பாடம் கேட்டது போலத்தான் ராமானுஜர் உம்மிடம் பாடம் கேட்பது. புரிகிறதா?’
ஒரு கணம்தான். கண் மூடித் திறந்த திருமாலையாண்டானுக்கு அது புரிந்துவிட்டது.
‘நம்மிடம் அவர் பயிலவேண்டும் என்பது நியமிக்கப்பட்டது. அதனால் இது நிகழ்கிறது. வாரும். மீண்டும் வகுப்பைத் தொடங்கியாகவேண்டும்.’
திருக்கோட்டியூர் நம்பியே அவரை ராமானுஜரிடம் அழைத்துச் சென்றார்.
மீண்டும் பாடங்கள் ஆரம்பமாயின. மீண்டும் அர்த்த பேதங்கள் தலையெடுக்க ஆரம்பித்தன. ஆனால் இம்முறை ஆண்டான் கோபித்துக்கொள்ளவில்லை.
‘ராமானுஜரே, உம்மை ஒன்று கேட்கிறேன். பாசுரங்களுக்கு நீர் சொல்லும் சில விளக்கங்கள், எனக்குப் புதிதாக உள்ளன. உமக்கு இவை எங்கிருந்து கிடைத்தன?’
‘சுவாமி, ஆளவந்தார் சுவாமிகள் இப்பாசுரங்களுக்கு எவ்வாறு வியாக்கியானம் செய்திருப்பார் என்று எண்ணிப் பார்ப்பேன். அப்போது என் மனத்தில் உதிப்பதைத்தான் உடனே சொல்லிவிடுகிறேன்.’
வியந்துபோனார் திருமாலையாண்டான்.
‘உண்மையாகவா? ஆனால், நீங்கள் ஆளவந்தாருடன் ஒருமுறை கூடப் பேசியது கிடையாது.’
‘ஆம் சுவாமி. ஆனால் என் மானசீகத்தில் நான் அவருக்கு ஏகலைவன்.’
(தொடரும்)
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
February 24, 2017
பொலிக! பொலிக! 43
‘உட்கார் வில்லி. இன்றைக்கு நாம் சிறிய திருமடலைச் சற்று சிந்திக்கலாம்’ என்றார் ராமானுஜர்.
அது அவன் மடத்துப் பணிகளை முடித்துவிட்டு வீடு கிளம்பும் நேரம். ஆனால் உடையவர் சொல்லிவிட்ட பிறகு மறு பேச்சு ஏது? அவன் உட்கார்ந்துவிட்டான்.
ராமானுஜர் அவனுக்குத் திருமங்கையாழ்வார் வாழ்க்கையில் இருந்து ஆரம்பித்தார். மன்னனாக இருந்து கள்வனாக மாறி, பெருமானால் களவாடப்பட்டவரின் கதை. பக்திதான் எத்தனை அற்புதங்களை நிகழ்த்திவிடுகிறது!
மறுபுறம் ராமானுஜர் அனுப்பிய இரண்டு பேரும் வில்லியின் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்திருந்தார்கள். வீடென்றா சொல்ல முடியும்? சிறு குடிசை. அவனது சொத்தாக அங்கு இருந்தது பொன்னாச்சியும் அவளது நகைகளும்தான்.
அந்த நகைகளைத்தான் எடுத்து வரச் சொல்லியிருந்தார் ராமானுஜர்.
சீடர்கள் வில்லியின் வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது வேலைகளை முடித்துவிட்டுப் பொன்னாச்சி படுத்திருந்தாள். ஆனால் உறங்கியிருக்கவில்லை. வெளியே யாரோ வந்திருக்கும் சத்தம் கேட்டு, எழுந்திருக்கலாமா என்று அவள் எண்ணி முடிப்பதற்குள் பேச்சுக்குரல் அவளைத் தடுத்தது.
‘சத்தம் போடாதே. பொன்னாச்சி தூங்கிவிட்டாளா என்று உறுதிப்படுத்திக்கொண்டுதான் உள்ளே நுழைய வேண்டும்.’
அட, இது கேட்ட குரலாக இருக்கிறதே என்று அவளுக்குச் சட்டென்று வியப்பாகிவிட்டது. கண நேர யோசனையில் யாருடைய குரல் என்றும் தெரிந்துவிட்டது. அவர் உடையவரின் சீடர் அல்லவா! நான் உறங்கும்வரை வெளியே நிற்பதென்றால் அவருக்குக் கால்கள் துவள ஆரம்பித்துவிடுமே? அதற்காகவேனும் சீக்கிரம் உறங்கிவிடலாம் என்று முடிவு செய்து கண்ணை மூடிக்கொண்டு உறங்க முயற்சி செய்தாள். ஆனால் அது வருவேனா என்றது.
சிறிது நேரம் கழித்து அவர்கள் இருவரும் கதவை மெல்லத் திறந்துகொண்டு வீட்டுக்குள் நுழைந்தார்கள். உறங்கும் பெண்ணைப் பார்த்தார்கள். மெல்ல நெருங்கி அவள் அணிந்திருந்த நகைகளைக் கழட்டத் தொடங்கினார்கள்.
‘விழித்துக்கொண்டு விட்டால்?’
‘உஷ். சத்தம் போடாதே. திருமடத்தின் செலவுகளுக்காகத்தான் நாம் இதனைச் செய்கிறோம். நமக்காக அல்ல.’
அவர்கள் காற்றுக்கு மட்டும் கேட்கிற குரலில் தமக்குள் பேசிக்கொண்டு காரியத்தில் முனைப்பாக இருந்தார்கள். ஒரு கால் சலங்கை. ஒரு கை வளையல்கள். ஒரு காதின் லோலாக்கு. ஒரு பக்க மூக்குத்தி. நெற்றிச் சுட்டி. கழட்ட முடிந்தவரை கழுத்தணிகள்.
‘ஒட்டியாணத்தைக் கழட்ட வரவில்லை’ என்றான் ஒருவன்.
‘அடடா. அதுதான் கனமான ஆபரணம். கிடைத்தால் நல்ல விலை போகுமே?’
என்ன செய்யலாம் என்று அவர்கள் யோசித்துக்கொண்டிருந்தபோது உறக்கத்தில் புரண்டு படுக்கிறவளைப் போலப் பொன்னாச்சி எதிர்ப்புறம் திரும்பிப் படுத்தாள்.
ஒரு கணம்தான். வெலவெலத்துவிட்டது அவர்களுக்கு. கிடைத்தவரை போதும் என்று ஓடியே போனார்கள்.
மடத்துக்கு அவர்கள் திரும்பிவிட்டதை உறுதி செய்துகொண்டு, ‘நீ கிளம்பு வில்லி. மிகவும் தாமதமாகிவிட்டது இன்று’ என்று அவனை அனுப்பிவைத்தார் ராமானுஜர்.
அவன் தலை மறைந்ததும் சீடர்கள் நெருங்கினார்கள். ‘சுவாமி, நீங்கள் சொன்னவாறு..’
‘இருக்கட்டும். வில்லி வீட்டுக்குப் போகிறான். அவன் பின்னாலேயே நீங்களும் சென்று அங்கே அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கேட்டு வாருங்கள்.’
மீண்டும் வில்லியின் வீடு. கன்னம் வைத்த இடத்தில் இப்போது காது வைக்கிற தருணம்.
‘என்ன இது வினோதக் கோலம்? உன் ஒரு பக்க நகைகள் மட்டும்தான் இருக்கின்றன. மறு பக்க ஆபரணங்கள் என்னவாயின?’ வில்லி உள்ளே நுழைந்ததும் பொன்னாச்சியிடம் கேட்டான்.
‘அதை ஏன் கேட்கிறீர்கள்? மடத்துச் செலவுக்குப் பணப்பற்றாக்குறை போலிருக்கிறது. சீடர்கள் இருவர் நகைகளைத் திருடிச் செல்ல வந்தார்கள். எனக்கு எதற்கு நகைகள்? நல்ல காரியத்துக்குச் செலவானால் சந்தோஷம்தானே? அதான், அவர்கள் கழட்டிச் செல்கிற வரைக்கும் தூங்குவது போலவே பாசாங்கு செய்துகொண்டிருந்தேன்.’
‘நல்ல காரியம் செய்தாய். ஆனால் செய்ய நினைத்தது முழுமையடையவில்லை போலிருக்கிறதே.’
‘நான் என்ன செய்வேன் சுவாமி? அவர்கள் ஒரு பக்க நகைகளைக் கழட்டி முடித்ததும், அவர்களுக்கு வசதியாக இருக்கட்டுமே என்று மறுபுறம் திரும்பிப் படுத்தேன். அவர்களோ, நான் விழித்துக்கொண்டுவிட்டதாக எண்ணி அப்படியே விட்டுவிட்டுப் போய்விட்டார்கள்.’
வில்லி ஒரு கணம் அமைதியாக யோசித்தான். ‘தவறு செய்துவிட்டாய் தேவி. நகைகளை எடுத்துச் செல்ல வந்தவர்களுக்கு வழிமுறை தெரியாதா? அவர்களுக்கு உதவுவதாக நீ ஏன் நினைக்கவேண்டும்? அப்படியே அசையாமல் கிடந்திருக்கலாம்.’
வெளியே நின்று கேட்டுக்கொண்டிருந்த சீடர்களுக்குப் பேச்செழவில்லை. யாரோ எதிலோ ஓங்கி அடித்தாற்போலிருந்தது. அநேகமாக அது அகந்தையின்மீது விழுந்த அடியாக இருக்கவேண்டும்.
மடத்துக்குத் திரும்பி நடந்ததை ராமானுஜரிடம் அவர்கள் விளக்கியபோது உடையவர் சிரித்தார்.
‘இப்போது சொல்லுங்கள். வில்லிதாசனைக் காட்டிலும் பரம பாகவதன் ஒருவன் இருக்க முடியுமா? அவனது மனைவி எப்பேர்ப்பட்ட மனம் கொண்டவள் என்று பார்த்தீர்கள் அல்லவா?’
‘நீங்கள் சொல்லுவது சரிதான் சுவாமி.’
‘அன்று உங்கள் வேட்டியில் அரை முழம் கிழிந்திருந்ததைக் கண்டு எத்தனை கலவரம் செய்தீர்கள்? கேவலம் அரை முழம் துணியைத் திருடிச் சென்று ஒருவன் என்ன சாதிக்க முடியும்?’
அவர்கள் தலைகுனிந்தார்கள்.
‘ஆனால் பொன்னாச்சி அணிந்திருந்த விலைமதிப்பற்ற நகைகளை நீங்கள் திருடி வந்திருக்கிறீர்கள். அவளோ, ஒரு பக்க நகைகள் போதாமல் போய்விடுமோ என்று மறு பக்க நகைகளைக் கழட்டிக்கொள்ள வசதியாகப் புரண்டு படுத்தாள் என்று நீங்களே சொன்னீர்கள். வைணவ மனம் என்றால் இதுதான். வைணவ மதமென்பதும் இதுதான்.’
‘ஆம் சுவாமி. நீங்கள் சொல்லுவது சரிதான்.’
‘வில்லி அந்தண குலத்தில் பிறந்தவனில்லைதான். ஆசார அனுஷ்டானங்கள் பழகாதவன்தான். ஆனால் நீங்கள் திருடிச் செல்ல வசதி செய்து கொடுத்த தன் மனைவியைக்கூடக் கண்டித்திருக்கிறான். அதற்கு அவன் சொன்ன காரணத்தை யோசித்துப் பாருங்கள்! குலமா அவனுக்கு அந்தக் குணத்தைக் கொடுத்தது? பிறப்பால் யாரும் வைணவராவதில்லை. அது வாழும் விதத்தில் உள்ளது. அவன் மகாத்மா. நீராடிக் கரையேறும்போது அவன் கரத்தைப் பிடித்துக்கொள்ளாமல் வேறு யார் கரத்தை நான் பற்றுவேன்?’
வில்லிக்கு அரங்கன் கண்ணைத் திறந்து காட்டி எதைப் புரியவைத்தானோ, அதையேதான் உடையவர் தமது சீடர்களுக்கும் புரியவைத்தார். ஆனால், கண்ணைத் திறந்து காட்டி அல்ல. வில்லியின் மனத்தைத் திறந்து காட்டி.
(தொடரும்)
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
February 23, 2017
பொலிக! பொலிக! 42
கனவே போலத்தான் எல்லாம் கண்மூடித் திறப்பதற்குள் நடந்துவிட்டது. சேரன் மடத்தில் ராமானுஜரோடு இருந்த சீடர்களுக்கு மட்டுமல்ல. திருவரங்கத்து மக்களுக்கே அது நம்ப முடியாத வியப்புத்தான். மல்லன் வில்லியா, உறங்காவில்லி தாசனாகிப் போனான்? அரங்கன் சேவையில் தன்னை முழுதாக அர்ப்பணித்துக்கொண்டு விட்டானாமே? பசி தூக்கம் பாராமல் எப்பொழுதும் எம்பெருமான் சிந்தனையிலேயே இருக்கிறானாமே? உடையவருக்குப் பார்த்துப் பார்த்து சேவை செய்கிறானாமே? அவன் மனைவியும் வைணவத்தை ஏற்று திருப்பணிகளில் தன்னை இணைத்துக்கொண்டுவிட்டாளாமே?
அத்தனை வாய்களும் அவனைப் பற்றியே பேசின. நெஞ்சு நிமிர்த்தி, நிலம் அதிர நடந்த வில்லி, மண்ணுக்கு வலித்துவிடாதபடிக்கு பூவடி எடுத்து வைத்து உடையவரின் பின்னால் சென்ற காட்சியைக் கண்ட கண்கள் இமைக்க மறந்து கிடந்தன. அவனது தோரணை மாறிப் போனது. பேச்சு மாறிப் போனது. வாழ்வெனும் மாபெரும் மல்யுத்தக் களத்தில் வெல்ல அரங்கனின் பாதங்களும் ஆசாரியரின் வழிகாட்டுதலுமே அவசியம் என்பது அவனுக்குப் புரிந்துவிட்டது. எனவே தனது பழைய வாழ்க்கையை பாம்பெனத் தோலுரித்துப் போட்டான். பணிவும் சேவையும் அவனது அடையாளங்களாகிப் போயின.
‘தெரியுமா உனக்கு? அவன் மாறிப் போனது பெரிதல்ல. அவனது மருமகன்கள் இரண்டு பேரையும் உடையவரிடம் கொண்டு வந்து சேர்த்திருக்கிறானாம்.’
‘யார், வண்ட வில்லி, செண்ட வில்லி என்பார்களே.. உறையூர் மன்னன் அகளங்கனின் படையில் முன் வரிசையில் நிற்பார்களே, அவர்களா?’
‘அவர்களேதான். பயல்கள் இருவரும் திருமடமே கதியென்று கிடக்கிறார்களாம். உடையவர் அவர்களுக்கும் பஞ்ச சம்ஸ்காரம் செய்துவைத்து, வண்டலங்கார தாசர், செண்டலங்கார தாசர் என்று வாஞ்சையோடு அழைக்கிறாராம்.’
‘அடக்கடவுளே, அப்படியென்றால் இந்த மூன்று வில்லாதிவில்லர்களும் அகளங்கன் படையில் இப்போது இல்லையாமா?’
‘வில்லிதாசர் நிச்சயம் இல்லை. அது தெரியும். ஆனால் அவரது மருமகன்கள் இருவரும் இன்னும் அகளங்கனிடம்தான் சம்பளம் வாங்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலும் திருவரங்கத்தில்தான் இருக்கிறார்கள்.’
என்னென்னவோ பேசினார்கள். பேசிக்கொண்டே இருந்தார்கள். ஒரு மூர்க்கனும் முரடனும் பெண்டாட்டிதாசனுமாக இருந்த ஒருவன் சட்டென்று ஒருநாள் தானும் மாறி, தன்னைச் சார்ந்தவர்களையும் மாற்றிய விந்தை அவர்களுக்குப் புரியவில்லை. அதைவிட வியப்பு, வில்லியின்மீது ராமானுஜர் கொண்டிருந்த பேரன்பு.
தினமும் காவிரிக்குக் குளிக்கப் போகிறபோது உடையவர், முதலியாண்டானின் கையைப் பிடித்துக்கொண்டுதான் நடந்து போவார். போகிற வழியெங்கும் பிரபந்த விளக்கங்கள். தத்துவ விவாதங்கள். சீடர்கள் அந்தச் சந்தர்ப்பத்தைத் தவறவிடவே மாட்டார்கள். மடத்தில் இருந்து புறப்படுவது முதல், குளித்துக் கரை ஏறுவது வரை மூச்சுவிடாமல் அவர்கள் ராமானுஜரை ஏதாவது கேட்டுக்கொண்டே இருப்பார்கள்.
குளித்து, கரை ஏறிய மறுகணம் ராமானுஜர் வில்லியின் கையைப் பிடித்துக்கொண்டுவிடுவார். நடந்தவாக்கில் அவனுக்குப் பிரபந்தம் சொல்லித்தருவார். பாடலும் பொருளும். பொருளும் அதற்கு அப்பால் உள்ள உண்மைகளும். உண்மையைப் போன்றே பேரெழில் கொண்ட கவி மனத்தின் விரிவும் ஆழங்களும்.
‘வில்லி, பாசுரங்களை பக்தியுடன் மனப்பாடம் செய்வது நல்லதுதான். அதே சமயம் அவற்றின் கவித்துவ அழகை ரசிக்கத் தவறக்கூடாது. ஆழ்வார்கள் மாபெரும் கவிஞர்கள். நிகரே சொல்ல முடியாத ரசனையுள்ளம் கொண்டவர்கள். நீ அவர்களை அப்படியே மனப்பாடம் செய்வதைக் காட்டிலும் மனத்துக்குள் அவர்களாகவே மாறி அனுபவிக்கப் பார். இன்னும் புதிய தரிசனங்கள் உனக்கு வாய்க்கும்.’
மடத்துக்கு வந்து சேருகிறவரை அவர் வில்லியின் கையை விடமாட்டார். திருவரங்கத்து மக்களுக்கு இது தினசரிக் காட்சியாகிப் போனது. சனாதனவாதிகளுக்கு இதுவே விமரிசனப் பொருளுமானது.
‘உடையவரின் நடவடிக்கை ரொம்பப் பிரமாதம். குளிக்கப் போகிறபோது சுத்தப் பிராமணரான முதலியாண்டான் கையைப் பிடித்துக்கொண்டு போவாராம். நீராடிய பிறகு வில்லியின் கையா? அமோகம். எப்பேர்ப்பட்ட புரட்சி இது! திருமடத்தில் ஆசாரம் செழித்து வளர்கிறது.’
வம்பு விரும்பாத வாய் ஏது? விஷயம் ராமானுஜரின் காதுகளை எட்டியது. சொன்னது சீடர்கள்தாம்.
‘சுவாமி, வில்லிதாசர் அப்படி என்ன ஒசத்தி? அதுவும் முதலியாண்டானைவிட?’
ராமானுஜர் அப்போது பதில் சொல்லவில்லை. அமைதியாக நகர்ந்துவிட்டார். அன்றிரவு அவர் வில்லியை அழைத்தார்.
‘வில்லி, ஒரு காரியம் செய்கிறாயா? நமது சீடர்கள் அத்தனை பேரும் அயர்ந்து உறங்குகிறார்கள். வெளியே முற்றத்தில் அவர்களது மாற்று வேட்டிகள் காய்ந்துகொண்டிருக்கின்றன. போய் அத்தனை துணிகளிலும் அரை முழம் கிழித்துக்கொண்டு வாயேன்.’
ஏன் என்று அவன் கேட்கவில்லை. இதோ என்று அப்போதே முற்றத்தை நோக்கிப் போனான். உடையவர் சொன்ன மாதிரி அங்கே காற்றில் ஆடிக்கொண்டிருந்த அத்தனை வேட்டிகளிலும் அரை முழம் கிழித்துக்கொண்டு வந்து நீட்டினான்.
மறுநாள் விடிந்தபோது மடத்தில் ஒரே கலாட்டாவாகிப் போனது. முற்றத்தில் காய்ந்துகொண்டிருந்த வேட்டிகளை யார் கிழித்தது?
‘சுவாமி, நான் உண்மையைச் சொல்லிவிடவா? கிழித்தது நானே அல்லவா?’
ராமானுஜர் வில்லியை அமைதியாக இருக்கச் சொன்னார். சீடர்களை அழைத்து ஏதோ சொல்லி சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தார். பிறகொரு நாள் அவர்களில் இரண்டு பேரைக் கூப்பிட்டு, ‘மடத்தில் நிதி வசதி அத்தனை சரியாக இல்லை. ஏதாவது ஏற்பாடு செய்தாக வேண்டுமே?’ என்றார்.
‘சுவாமி, சிவாலயங்களுக்கு மன்னர்கள் அள்ளிக் கொடுக்கிறார்கள். சைவ மடங்கள் செழிக்கின்றன. வைணவத் தலங்களுக்கோ, வைணவ மடங்களுக்கோ ஆதரிப்பார் அதிகமில்லை. நாம் ஜனங்களிடம்தான் கையேந்த வேண்டும்.’
‘ஜனங்களிடமா! அது எனக்குச் சரியாகப் படவில்லை. ஒன்று செய்யுங்கள். நமது வில்லிதாசரின் மனைவி பொன்னாச்சி ஏகப்பட்ட நகை வைத்திருக்கிறாள். அவற்றை விற்றாலே நல்ல தொகை சேரும். அவர்களும் நமது மடத்தைச் சேர்ந்தவர்கள்தானே?’
‘ஆனால் எப்படிக் கேட்பது சுவாமி? அது சரியாக இருக்காதே.’
‘அரங்கனின் கருணை வில்லியின்மீது கேட்டா விழுந்தது? எப்போது அவன் நம்மைச் சேர்ந்தவனாகிவிட்டானோ, அவனது உடைமைகளும் நமது திருமடத்தைச் சேர்ந்தவையே. நீங்கள் அவள் தூங்குகிறபோது வீட்டுக்குள் நுழைந்து நகைகளைக் கழட்டிவந்துவிடுங்கள்.’
அவர்கள் பயந்துவிட்டார்கள். ‘ஐயோ வில்லிக்குத் தெரிந்தால் கொன்றுவிடுவானே? இன்றைக்கு அவன் அரங்கன் சேவையில் இருந்தாலும் அடிப்படையில் அவன் முரடனல்லவா? மல்யுத்த வீரனல்லவா?’
‘அதைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள். நாளைக்கு இரவு நீங்கள் வில்லி வீட்டுக்குப் போகும்போது அவனை நான் இங்கே இருக்க வைத்துவிடுகிறேன். இந்த விஷயம் வேறு யாருக்கும் தெரியவேண்டாம்.’
‘சரி சுவாமி. அப்படியே.’ என்றார்கள்.
மறுநாள் இரவு அது நடந்தது.
(தொடரும்)
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)


