Pa Raghavan's Blog, page 18
January 22, 2017
பொலிக! பொலிக! 10
அவருக்கு இந்த உலகம் என்பது திருப்பதி மலையடிவாரத்தில் தொடங்கி, ஏழாவது மலை உச்சியில் உள்ள வேங்கடேசப் பெருமாளின் சன்னிதியில் முடிகிற பரப்பளவு கொண்டது. அவரது உலகத்தில் ஒருவர் மட்டுமே வசித்துக்கொண்டிருந்தார். வேங்கடம் என்னும் அம்மலையின் பதியான எம்பெருமான். பெருமாளுக்கு தினசரி தீர்த்த கைங்கர்யம் செய்துகொண்டிருந்த அவரைப் பிராந்தியத்தில் பெரிய திருமலை நம்பி என்று அழைத்தார்கள்.
திருவரங்கத்தில் வைணவ நெறி தழைக்கச் செய்துகொண்டிருந்த ஆளவந்தாரிடம் சீடராக இருந்தவர் அவர். ஆளவந்தார்தான் ஒருநாள் கேட்டார். ‘வேங்கடமலைப் பெருமானுக்குக் கைங்கர்யம் செய்ய பொறுப்பாக யாராவது அங்கு இருக்கவேண்டியுள்ளதப்பா. நமது மடத்தில் இருந்து யார் போகத் தயார்?’
சீடர்கள் எதிரே அமர்ந்திருந்தார்கள். குரு சொன்னால் எதுவும் செய்யச் சித்தமாயிருந்த சீடர்கள். திருக்கோட்டியூர் நம்பி அவர்களுள் ஒருவர். திருமாலையாண்டான் இன்னொருவர். திருவரங்கப் பெருமாளரையர் மற்றவர். பெரிய நம்பி. மாறனேர் நம்பி. இன்னும் எத்தனையோ பேர். எப்போதும் குருவின் சொல் வெளிப்பட்டு முடிவதற்குள், ‘நான் தயார்’ என்று எழுந்து நிற்கும் அவர்கள் அன்றைக்கு அவர் கேட்டு முடித்து நெடுநேரம் ஆன பிறகும் யோசித்தபடியே இருந்தார்கள்.
காரணம், சிறிது அச்சம். அவர்கள் திருப்பதி மலையைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தார்கள். ஆளரவமற்ற அபாயகரமான பிராந்தியம். ஏழு மலைகளுள் எது ஒன்றிலும் பாதை கிடையாது. ஏறிச் செல்வதும் இறங்கி வருவதும் எளிய விஷயங்களல்ல. மலைமீது கோயில் கொண்டிருந்த எம்பெருமானுக்குக் காவலாக நூற்றுக்கணக்கான மிருகங்கள் மலையில் சுற்றிக்கொண்டிருக்கின்றன. பசித்த மிருகங்கள். பெரும்பாலும் அவை மனிதர்களை அங்கு நடமாடக் கண்டதில்லை. காண நேர்ந்தால் சும்மா விட்டுவைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது. ஒரு ஆத்திர சகாயத்துக்கு நாலு பேர் உடன் இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.
‘என்ன யோசிக்கிறீர்கள்?’ என்றார் ஆளவந்தார்.
யாரும் பதில் சொல்லாதிருந்த அச்சமயத்தில் ஒரு குரல் மட்டும் ஓங்கி ஒலித்தது. ‘இன்றே கிளம்புவதா அல்லது நாளை கிளம்ப உத்தரவாகுமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன் சுவாமி!’
அவர்தாம் ஶ்ரீசைல பூர்ணர் என்று அழைக்கப்பட்ட பெரிய திருமலை நம்பி.
ஆளவந்தார் புன்னகை செய்தார். அவரிடம் ராமாயணத்தின் உட்பொருள் பயில வந்தவர் அவர். தீயின் செஞ்சுடரைப் போன்ற புத்திக் கூர்மை. புல்லின் மேல் படர்ந்த பனியின் உள்ளே ஊடுருவி, பிரபஞ்சத்தையே தரிசிக்கத் தெரிந்த பெரும் தெளிவு. ஆளவந்தாரின் பிரிய மாணாக்கர்.
அன்றைக்குத் திருவரங்கத்தை விட்டுக் கிளம்பி திருமலைக்குச் சென்று சேர்ந்தவர்தான். அதன்பிறகு அவர் இறங்கி வந்தது தமது தமக்கைக்குக் குழந்தை பிறந்திருக்கிறது என்று கேள்விப்பட்டபோதுதான். திருப்பெரும்புதூரில் இருந்து மைத்துனர் ஆசூரி கேசவ சோமயாஜி தகவல் அனுப்பியிருந்தார்.
‘உமக்கு மருமகன் பிறந்திருக்கிறான். வந்து பார்த்து, பெயர் வைத்து ஆசீர்வதித்துச் செல்லவும்.’
திருமலை நம்பிக்கு அதுவரை தனக்கு இரு தங்கைகள் இருக்கிற விஷயமேகூட நினைவில்லை. நாளும் பொழுதும் நாரணன் சேவையிலேயே கழிந்துகொண்டிருந்தது அவருக்கு. சட்டென்று மருமகன் பிறந்திருக்கிற செய்தி கிடைத்ததும் மகிழ்ச்சியில் தலைகால் புரியவில்லை. உடனே ஜாதகத்தைக் கணித்துப் பார்த்தார். அது பிங்கள வருஷம் (கிபி 1017). சித்திரை மாதம் பன்னிரண்டாம் தேதி வளர்பிறை பஞ்சமி திதிகூடிய வியாழக்கிழமை. திருவாதிரை நட்சத்திரத்தில் மருமகன் மதியம் பன்னிரண்டு மணிக்கு ஜனித்திருக்கிறான்.
ஆ, ராகுவின் நட்சத்திரத்தில் அல்லவா பிறந்திருக்கிறான்? இவ்வுலகில் மாபெரும் மகான்கள், ஞானஸ்தர்கள் அத்தனை பேரும் இதுவரை ராகு அல்லது கேதுவின் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். தவிரவும் கடக லக்னம். அது தலைமைப் பதவிக்கான நுழைவாயில். லக்னாதிபதி சந்திரன் விரயஸ்தானத்தில் இருக்கிறான். ஆக, ஆலயப் பணிகளில் நாட்டம் கொண்டவன். ஐந்தாம் இடத்தில் கேது உட்கார்ந்திருக்கிறான். சந்தேகமேயில்லை. ஒன்று சாம்ராஜ்ஜியம் அல்லது சன்னியாசம்தான்!
பெரிய திருமலை நம்பி அன்றே கிளம்பி திருப்பெரும்புதூருக்கு விரைந்தார். தமக்கையின் மகனை அள்ளி ஏந்தி உச்சிமோந்து சீராட்டினார். அவரது உள்ளுணர்வு அவருக்கு அனைத்தையும் சொன்னது. அது ஆதிசேஷன் அம்சம். வாராது வந்த மாமணி. குழந்தைக்கு இளையாழ்வான் என்று அவர்தான் பெயரிட்டது.
‘காந்திமதி! உன் மகன் உலகை ஆளப் போகிறவன். அறத்தின் காவலனாக நின்று தழைக்கப் போகிறவன். இது அவதாரம். நீ ஆசீர்வதிக்கப்பட்டவள்.’
காந்திமதியும் கேசவ சோமயாஜியும் நெக்குருகிப் போனார்கள். பெரிய திருமலை நம்பியின் தாள் பணிந்து மகிழ்ந்தார்கள்.
அன்றைக்கு ராமானுஜருக்குப் பெயர் வைத்துவிட்டுப் போன பெரிய திருமலை நம்பி மீண்டும் மலையை விட்டு இறங்கி வந்தது, ஏழு வருடங்கள் கழித்து அடுத்த தங்கைக்கும் பிள்ளை பிறந்தபோதுதான். அவள் காந்திமதிக்கு இளையவள். பெரிய பிராட்டி என்று பேர். அவள் பிள்ளைக்கு நம்பி, கோவிந்தன் என்று பெயர் வைத்தார்.
‘இவன் இளையாழ்வானுக்குப் பிந்தி பிறந்தவன் மட்டுமல்ல தங்கையே. அவனுக்கு நிழலே போல் எப்போதும் உடனிருக்கப் போகிறவனும்கூட. அவனால் தழைக்கப் போகிற அறங்களுக்கு இவன் காவலனாக இருக்கப் போகிறான்.’ என்று சொல்லிவிட்டுப் போனார்.
அதைத்தான் ராமானுஜர் நினைத்துப் பார்த்துக்கொண்டிருந்தார். அதனால் வந்ததுதான் அந்தப் புன்னகை. அதனாலேயேதான் அவர் கோவிந்தனை மீட்டுக் கொண்டு வரும் பொறுப்பைப் பெரிய திருமலை நம்பியிடம் விட்டுவிடலாம் என்று நினைத்தார்.
விவரம் தெரியாத ஒருவன் என்றால் யார் வேண்டுமானாலும் பேசி, மனத்தை மாற்றிவிட முடியும். கோவிந்தன் அப்படியல்ல. வேத வேதாந்தங்கள் பயின்றவன். பெரிய ஞானஸ்தன். ஒரு தரிசனம் போல் அவனுக்கு ஏதோ நேர்ந்திருக்கிறது. கங்கையில் கிடைத்த சிவலிங்கம்… ஒரு பெரும் பரவச நிலையில் காளஹஸ்தியில் சிவஸ்மரணையில் லயித்துப் போனவன்.
‘எனக்கு அவன் வேண்டும் முதலியாண்டான்! வைணவ தரிசனம் வையம் முழுதும் பரவவேண்டுமென்றால் அதற்கு வைராக்கிய சீலர்களின் தோள் வேண்டும். கோவிந்தனை மீட்டு வர நான் பெரிய திருமலை நம்பியைத்தான் நம்பியாகவேண்டும்’ என்றார் ராமானுஜர்.
பேசிக்கொண்டிருந்தபோது மடத்தின் வாயிலில் யாரோ வருவது தெரிந்தது. யாரது என்றார் ராமானுஜர்.
உள்ளே நுழைந்தவர் ஒரு வயதான பெண்மணி. யாதவப் பிரகாசரின் தாயார்.
(தொடரும்)
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
January 21, 2017
பொலிக! பொலிக! 09
கங்கைக் கரைக்கு யாத்திரை செல்லலாம் வா என்று யாதவப் பிரகாசர் கூப்பிட்டிருந்தார். ஆனால் ராமானுஜருக்கு வாய்த்தது கிணற்றங்கரை யாத்திரை. அது குருவின் அழைப்பு. இது பேரருளாளனின் உத்தரவு. அது வாழ்விலே ஒருமுறை. இது வாழும் கணமெல்லாம். எத்தனை பேருக்குக் கிடைக்கும்? அவன் பேரருளாளன்தான். ஆனால் தனக்கு வாய்த்த அருள் பெரிதினும் பெரிதல்லவா? இன்னொருத்தர் எண்ணிப் பார்க்க இயலாததல்லவா?
திருக்கச்சி நம்பியை மானசீகமாக வணங்கிவிட்டு மறுநாள் காலை முதலே ராமானுஜர் தமது கைங்கர்யத்தை ஆரம்பித்துவிட்டார். விடிகிற நேரம் குளித்து, திருமண் தரித்து சாலைக் கிணற்றுக்குச் சென்றுவிட வேண்டியது. ஒரு குடம் நீர். அதில்தான் திருமஞ்சனம் நடக்கும். தாயாருக்கு உகந்த நீர். இரண்டு முறை தன் கைகளால் அள்ளி ஏந்தி வந்ததை வாங்கிப் பருகிய பெருந்தேவித் தாயார். மூன்றாம் முறை நீர் எடுத்துச் சென்றபோதுதான் இருவருமே மறைந்து நின்று மாயம் காட்டினார்கள்.
நல்லது. நீரின்றி எதுவுமில்லை. எல்லாம் தொடங்குவது நீரில்தான். நிறைவடைவதும் அதிலேயேதான். ராமானுஜரின் மிக நீண்ட யாத்திரை அங்கே தொடங்கியது.
மறுபுறம் விந்திய மலைக்காட்டில் யாதவர் தவியாய்த் தவித்துக்கொண்டிருந்தார். ‘எங்கே ராமானுஜன்? எங்கே போனான்? எப்படித் தவறவிட்டோம்?’
‘பதறாதீர்கள் குருவே. நாம் கங்கைக்கு அழைத்துச் சென்று செய்ய நினைத்ததை இங்கே காட்டு மிருகம் ஏதாவது செய்திருக்கும்.’ என்றார்கள் சீடர்கள்.
யாதவப் பிரகாசர் கோவிந்தனைத் தனியே அழைத்தார். ‘கோவிந்தா, நீ சொல். எங்கே உன் அண்ணன்? உன்னிடம் சொல்லாமல் அவன் எங்கும் போயிருக்க முடியாது.’
‘என் கவலையும் அதுதான் ஐயா. விடிந்தது முதல் இக்காடு முழுவதும் அவரைத் தேடித் திரிந்துவிட்டு வருகிறேன். எங்குமே அவர் கண்ணில் படவில்லை. எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது. என் பெரியம்மாவுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்?’
கண்ணீரும் கவலையுமாக கோவிந்தன் பேசியது யாதவருக்கு மேலும் கவலையளித்தது. கோவிந்தன் அதை முன்னதாகத் தீர்மானித்திருந்தான். ஆத்ம சுத்தியுடன் நடந்ததை மறைத்துவிடுவது. தன் மூலம்தான் அண்ணன் தப்பித்தார் என்பது தெரிந்தால் தன்னை பலி கொடுத்துவிடுவார்கள். உதட்டில் வேதமும் உள்ளத்தில் குரோதமுமாக என்ன பிழைப்பு இது!
‘சரி , நாம் போகலாம்’ என்றார் யாதவப் பிரகாசர். வழி முழுதும் கோவிந்தனுக்கு அவர் ஆறுதல் சொல்லிக்கொண்டே வந்தார். உள் மனத்தில் ஓர் உறுத்தல் இருந்தது. ராமானுஜரைக் கொல்ல நினைத்துத்தான் அவர் அந்த யாத்திரைத் திட்டத்தையே வகுத்தார். ஆனால் பாதி வழியிலேயே தான் நினைத்தது நடந்துவிட்டது. கொன்ற பாவம் தன்னைச் சேராதுதான். ஆனால் மனச்சாட்சி எப்படிக் கொல்லாதிருக்கும்? வெளியிலும் காட்டிக்கொள்ள முடியாது. கோவிந்தன் இருக்கிறபோது மற்ற மாணவர்களிடம் மனம் விட்டுப் பேசவும் முடியாது. வெப்பம் கவிந்த யோசனைகளுக்குத் தன்னைத் தின்னக்கொடுத்தவராக வாரணாசியை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
இரு வாரப் பயணத்துக்குப் பிறகு அவர்கள் காசியை அடைந்தார்கள்.
‘என் அன்புக்குரிய மாணவர்களே, நமது ராமானுஜன் இன்று நம்மோடு இல்லை. அவனுக்கும் நல்ல கதி கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக்கொண்டு கங்கையில் நீராடுங்கள்.’
அவர்கள் வேத மந்திரங்களை முழங்கிக்கொண்டு கங்கையில் இறங்கினார்கள். கோவிந்தனும் இறங்கினான். அவர்கள் மும்முறை மூழ்கி எழுந்தார்கள். கோவிந்தனும் மூழ்கி எழுந்தான். அவர்கள் கரை ஏறியபோது கோவிந்தன் மட்டும் ஏறவில்லை.
அங்கே சாலைக் கிணற்றில் இருந்து மூன்றாவது முறையாக வேடுவப் பெண்ணுக்கு நீர் ஏந்திக்கொண்டு ராமானுஜர் வந்தபோது பேரருளாளனின் லீலாவினோதம் அரங்கேறிய மாதிரி இங்கே கங்கையில் மூன்றாவது முறை மூழ்கி எழுந்த கோவிந்தனின் கரங்களில் ஒரு சிவலிங்கம் வந்து சேர்ந்திருந்தது!
‘ஆஹா! ஆஹா!’ என்று பரவசப்பட்டுப் போனார் யாதவப் பிரகாசர். ‘இது எல்லோருக்கும் வாய்க்காது கோவிந்தா. லட்சம் பேர் தினமும் கங்கையில் குளித்தெழுகிறார்கள். அவர்களில் எத்தனை பேரின் கரங்களில் சிவபெருமான் வந்து சேர்ந்திருக்கிறார்? ஒருவருக்கும் இல்லை. நான் உள்பட. உன்னை அவன் தேர்ந்தெடுத்திருக்கிறான். உன் பிறப்பு அர்த்தமுள்ளது. இனி நீ உள்ளங்கைக் கொணர்ந்த நாயனார் என்று அழைக்கப்படுவாய்!’
அவரது பரவசம் ஒரு வகையில் உண்மையானதுதான். மறுபுறம் ராமானுஜனின் தம்பியை ஒரு பூரணமான, நிரந்தரமான சிவபக்தனாக்கிவிடக் கிடைத்த சந்தர்ப்பத்தைத் தவறவிடக்கூடாது என்ற எண்ணமும் அவருக்கு இருந்தது. பரபரவென்று கணக்குப் போட்டார். ஊருக்குப் போனதும் அத்தனை பேரும் ராமானுஜனைப் பற்றித்தான் விசாரிக்கப் போகிறார்கள். விந்திய மலைக்காட்டில் அவன் மிருகத்தின் பசிக்கு இரையான கதையைச் சொல்லவேண்டும். ஐயோ என்று ஊரும் உறவும் கதறுகிற நேரம், கோவிந்தனுக்கு சிவபெருமான் அளித்த மாபெரும் அங்கீகாரத்தை எடுத்துச் சொல்லி சமாதானப்படுத்த வேண்டும். சர்வேஸ்வரனேதான் வழி காட்டியிருக்கிறான். இத்தனைக் காலம் வேதம் சொன்னதன் பலன் என்று எண்ணிக்கொண்டார்.
கோவிந்தனும் மிகுந்த பரவச நிலையில்தான் இருந்தான். விவரிக்க முடியாத பேரானந்த நிலை. அன்றிரவு அவனுக்குக் கனவில் ஒரு குரல் கேட்டது. ‘கோவிந்தா, காளஹஸ்திக்கு வா.’ அதே குரல் காளஹஸ்தியில் இருந்த கோயில் குருக்களுக்கும் உத்தரவாக ஒலித்தது. ‘என் பக்தன் என்னை ஏந்தி வருகிறான். அவனை இந்த ஊர் ஏந்திக் கொள்ளட்டும்.’
யாதவரின் குழு காஞ்சிக்குத் திரும்பியபோது கோவிந்தன் மட்டும் காளஹஸ்தியிலேயே தங்கிவிட்டான். தன் உள்ளங்கையில் கொண்டுவந்த லிங்கத்தை அங்கே பிரதிஷ்டை செய்து அங்கேயே அமர்ந்துவிட்டான். இனி இதுவே என் இடம். இனி சிவனே என் சுவாசம்.
நடந்ததையெல்லாம் ராமானுஜர் எண்ணிப் பார்த்தார்.
‘நான் எப்படி கோவிந்தனை மறப்பேன்? எப்படி அவனை இனியும் இங்கே வரவழைக்காமல் இருப்பேன்? நான் பரப்ப விரும்புகிற வைணவ சித்தாந்தத்தின் வேர்தாங்கிகளுள் ஒருவனாக அவன் இருந்தாக வேண்டும். பேரருளாளனின் பிள்ளை வேறொரு கைங்கர்யம் செய்துகொண்டிருக்கலாகாது.’
முதலியாண்டானுக்குப் புரிந்தது. கூரத்தாழ்வானுக்குப் புரிந்தது. நடாதூராழ்வான் என்று ராமானுஜரால் அழைக்கப்பட்ட வரத தேசிகனுக்குப் புரிந்தது. மூன்று சீடர்களுக்கும் குருவின் மனம் புரிந்த மறுகணம் முதலியாண்டான் சட்டென்று கேட்டான். ‘எப்படி வரவழைப்பீர்?’
ராமானுஜர் உடனே பதில் சொல்லவில்லை. கண்மூடி அமைதியாக இருந்தார். பெயர் வைத்தவரைத் தவிர உயர் வழியைச் சுட்டிக்காட்ட யாரால் முடியும் என்று அவருக்குத் தோன்றியது.
(தொடரும்)
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
January 20, 2017
பொலிக! பொலிக! 08
அற்புதங்கள் எப்போதேனும் நிகழ்கின்றன. அதற்கான நியாயங்களும் காரணங்களும் இறைவனால் தீர்மானிக்கப்படுகின்றன. ஒளியும் நீரும் படைக்கப்பட்டது ஓர் அற்புதமென்று எண்ண முடியுமானால் ஒளிந்திருந்து ஆடும் ஆட்டங்களின் உள்ருசியை உணர்வது சிரமமாக இராது.
ராமானுஜர் ஒரு கணம் சிந்தித்துப் பார்த்தார். தனக்கு நேர்ந்த அற்புத அனுபவத்துக்கு யாருக்கு நன்றி சொல்லுவது? ஒரே இரவில் விந்திய மலைச் சாரலில் இருந்து காஞ்சிமாநகரத்துக்கு வந்து சேர்வதென்பது கற்பனையிலும் நடக்காத காரியம். ஆனால் நடந்திருக்கிறது. அந்த வேடுவ தம்பதிக்கு நன்றி சொல்வதா? வேடுவர் வடிவில் காஞ்சிப் பேரருளாளனும் பெருந்தேவித் தாயாருமே தனக்கு வழித்துணையாக வர வழி செய்தது எது? யாதவர் மட்டும் காசி யாத்திரைக்கு அழைத்திராவிட்டால் இப்படியொரு அனுபவம் வாய்த்திருக்குமா? அவருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டுமா? களைப்பு கொடுத்த அயற்சியில் அந்த இரவு தூங்கிக்கொண்டுதான் இருந்திருக்கிறேன். தனக்காக விழித்திருந்து காப்பாற்றிய கோவிந்தன் இல்லாது போனால் இது நடந்திருக்குமா? அவனுக்கு இல்லாத களைப்பா? அவனும் கால் கடுக்க நடந்தவன் தான். உண்மையில் நன்றிக்குரியவன் அவந்தானா?
‘தேவரீர் இன்னும் என் வினாவுக்கு விடை சொல்லவில்லை’ என்று மெல்ல நினைவூட்டினான் தாசரதி.
நினைவு மீண்ட ராமானுஜர் மீண்டும் புன்னகை செய்தார். துறவுக் கோலம் பூண்டிருந்த தருணம். தாசரதி என்கிற முதலியாண்டானையும், கூரத்தாழ்வானையும் முதலிரு சீடர்களாக ஏற்று அமர்ந்திருந்த நேரம். துறவு கொண்ட கணத்தில் யாரை நினைத்தீர்கள் என்று முதலியாண்டான் கேட்கிறான். என்ன பதில் சொல்வது? காளஹஸ்தியில் தங்கிவிட்ட கோவிந்தனை மீட்டுக் கொண்டு வந்து பக்கத்தில் இருத்திக்கொண்டாலொழிய எந்த பதிலும் பூரணமடையாது. அது தம்பி உறவு கொடுத்த பாசமல்ல. தடம் மாறிச் சென்றவனை மீட்டாக வேண்டுமென்கிற கடமையுணர்ச்சி கொடுத்த பரிதவிப்பு.
உண்மையில் அது கடமைதானா? விந்தியக் காடுகளில் தடம் மாறிச் சென்ற தன்னை வேடுவர் தம்பதி காஞ்சிக்குக் கொண்டு வந்து சேர்த்ததது அவருக்கு நினைவுக்கு வந்தது. கடமையின்மீது சற்று அன்பைத் தெளித்தால் அது கருணையாகிவிடுகிறது. என்றால், தன்மீது மட்டும் அப்படியொரு கருணைப் பெருமழையைப் பொழிய என்ன காரணம்?
அவரால் அப்போதும் நம்ப முடியவில்லை. அந்தக் கிணற்றுக்கு சாலைக் கிணறு என்று பேர். காஞ்சியில் இருந்து நாலு கல் தொலைவு (ஏழு கிலோ மீட்டர்). செவிலிமேடு என்று அந்த இடத்தைக் குறிப்பிடுவார்கள்.
‘அதோ பாருங்கள். வரதர் கோயில் விமானம் தெரிகிறதா?’ அந்தப் பெண்கள் சுட்டிக்காட்டியபோதுதான் ராமானுஜருக்கு நடந்தது புரிந்தது. ஓரிரவில் ஒரு ஒளியாண்டையே கடந்தாற்போன்ற அனுபவம். யாரிடம் சொல்ல முடியும்? யாருக்குப் புரியும்?
‘எனக்குப் புரிகிறது மகனே!’ என்றார் காந்திமதி.
வீட்டுக்கு வந்து நடந்ததை விவரித்தபோது ராமானுஜரின் தாயார் தாங்கமுடியாத பரவசப் பெருவெள்ளத்தில் திக்குமுக்காடிப் போனார். தஞ்சம்மாவுக்குக் கணவர் வீடு திரும்பியதே பெரிய விஷயமாக இருந்தது. அதுவும் ஒரு கொலை முயற்சியில் இருந்து தப்பித்து வந்து சேர்ந்திருக்கிற மனிதர்.
‘வேண்டாம். இனி அந்த குருகுலத்துக்கு தயவுசெய்து போகாதீர்கள்! கற்றது போதும். இனி எனக்குக் கணவராக மட்டும் இருங்கள்!’
ராமானுஜர் புன்னகை செய்தார்.
கற்பதற்கு அளவேது? போதுமென்ற நிறுத்தற்குறி ஏது?
‘ஆனால் அந்த இடம் வேண்டாம் என்றுதான் எனக்கும் தோன்றுகிறது மகனே. நீ உடனே கோயிலுக்குச் சென்று திருக்கச்சி நம்பியைப் பார். அவர் உனக்கு வழி காட்டுவார்’ என்றார் காந்திமதி.
ஆ! திருக்கச்சி நம்பி, அருளாளனின் அன்பரல்லவா? அவரோடு உரையாடக்கூடிய வல்லமை கொண்ட மகான் அல்லவா? தாயார் சொல்வது சரி. அவர்தான் இனி தன்னை வழி நடத்த வேண்டும்.
அன்றே, அப்போதே கிளம்பினார் ராமானுஜர்.
வரதர் கோயிலில் அதே ஆலவட்ட கைங்கர்யம் செய்துகொண்டிருந்த திருக்கச்சி நம்பியை நெருங்கி சாஷ்டாங்கமாக விழுந்து சேவித்தார்.
‘ஐயா, என்னைச் சீடனாக ஏற்றுக்கொள்ளுங்கள். எனக்கு வழி காட்டுங்கள். வேறு போக்கிடம் ஏதும் எனக்கு இனி இல்லை.’
‘எழுந்திருங்கள் இளையாழ்வாரே! நீங்கள் யாதவருடன் காசிக்குச் சென்றிருப்பதாக அல்லவா சொன்னார்கள்?’
ஒரு கணம் யோசித்த ராமானுஜர் திடமாக நடந்ததை மாற்றிச் சொன்னார். ‘ஆம் ஐயா. ஆனால் வழி தவறிவிட்டேன். எனவே பாதியில் திரும்பும்படியாகிவிட்டது.’
கொலை நோக்கம் கொண்டவரென்றாலும் குருவாகிவிட்டவர். அவர் பெற்றிருக்கிற பெயருக்குக் களங்கம் சேர்ப்பானேன்? பொய்மையும் வாய்மை இடத்து.
திருக்கச்சி நம்பி நீண்ட நேரம் யோசித்தார்.
‘தேவரீர் எனக்குக் கருணை காட்டமாட்டீர்களா? பேரருளாளனின் நிழலில் வாழ்பவர் நீங்கள். உமது நிழலில் நான் இளைப்பாறக்கூடாதா? எனக்கு அதற்கு இடமில்லையா? அத்தனைக் கீழ்மகனா நான்?’
பதில் இல்லை.
‘சரி போகட்டும். அருளாளனுக்குச் செய்யும் கைங்கர்யமாகவேனும் எனக்கு எதையாவது ஒதுக்கிக் கொடுங்களேன்?’
‘கேட்டுச் சொல்கிறேன், நாளை வாரும்’ என்று சொல்லிவிட்டார் திருக்கச்சி நம்பி.
அன்றிரவு நடை சாத்தும் நேரத்துக்கு முன்பாக ஆலவட்ட கைங்கர்யத்தை முடித்துவிட்டு அவர் அருளாளனிடம் பேச்சுக் கொடுத்தார்.
‘ராமானுஜர் இன்று என்னைச் சந்தித்தார். என்னை குருபீடம் ஏற்கச் சொல்கிறார். உமக்குக் கைங்கர்யம் செய்யவும் பிரியப்படுகிறார். நான் என்ன பதில் சொல்வது?’
பேசும் தெய்வம் வாய் திறந்தது.
‘அவரைச் சிலகாலம் சாலைக் கிணற்றில் இருந்து திருமஞ்சனத்துக்கும் (அபிஷேகம்) திருவாராதனத்துக்கும் (சமையல்) தினசரி நீர் எடுத்து வரச் சொல்லும். தாயாருக்கு உகந்த தீர்த்தம் அது. அவருக்கேற்ற ஆசாரியர் விரைவில் வந்து சேர்வார்.’
மறுநாள் காலை விடியும் நேரமே திருக்கச்சி நம்பியின் இருப்பிடத்துக்குச் சென்றுவிட்டார் ராமானுஜர்.
‘அடியேன், பேரருளாளனின் உத்தரவென்ன என்று தெரிந்து செல்ல வந்தேன்.’
‘தாயாருக்கு உகந்த சாலைக் கிணற்றிலிருந்து உம்மை தினசரி திருவாராதனத்துக்கும் திருமஞ்சனத்துக்கும் ஒரு குடம் நீர் எடுத்து வரச் சொல்லி உத்தரவாகியிருக்கிறது.’
சாலைக் கிணறு. தாயாருக்கு உகந்த தீர்த்தம்.
அந்தக் கணத்தில்தான் ராமானுஜருக்கு அது விளங்கியது. வந்த வேடுவர் தம்பதி வேறு யாருமில்லை. பேரருளாளனும் பெருந்தேவித் தாயாருமேதான். எம்பெருமானே! இந்த அற்பன்மீதா இத்தனைக் கருணை!
தன்னை மறந்து அவர் கைகூப்பி நின்றார். அவரது கண்களில் இருந்து கரகரவென நீர் சுரந்தபடியே இருந்தது.
(தொடரும்)
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
January 19, 2017
பொலிக! பொலிக! 07
பாதையற்ற கானகத்தில் எந்தப் பக்கம் போவது என்று ராமானுஜருக்குப் புரியவில்லை. பகலென்றால் திசை தெரியும். கவிந்த இரவுக்குக் கடவுளைத் தவிர வேறு துணையில்லை. ஆனது ஆகட்டும் என்று அவர் புறப்பட்டார். கால் போன போக்கில் நடந்துகொண்டே இருந்தார்.
கோவிந்தன் சொன்ன தகவலும் அவனுக்கு இருந்த பதற்றமும் வேகமும் திரும்பத் திரும்ப அவரது நினைவில் மோதிக்கொண்டே இருந்தன. கொலைத் திட்டம். இவன் இருக்கவே கூடாது என்று நினைக்குமளவுக்கு அப்படி என்ன செய்தேன்? எத்தனை யோசித்தும் புரியவில்லை.
மீண்டும் வகுப்புக்கு வா என்று வீட்டுக்கு வந்து அழைத்தவர்கள்தாம் காசிக்கு அழைத்துச் சென்று கங்கையில் அழுத்திக் கொல்லத் திட்டம் தீட்டியிருக்கிறார்கள். குருவுக்குத் தெரியாமலா இது நடக்கும்?
‘அண்ணா, என்னை மன்னியுங்கள். திட்டத்தை வகுத்துக் கொடுத்ததே குருவாகத்தான் இருப்பார் என்பது என் சந்தேகம்.’
வழி நெடுக யாதவர் அந்தச் சிலபேரைத் தனியே அழைத்துப் பேசியது. தற்செயலாகத் தான் குறுக்கிட்ட போதெல்லாம் பேச்சை நிறுத்தியது. பயணம் முழுதும் கூடியவரை தன்னையும் ராமானுஜரையும் அதிகம் பேசிக்கொள்ள முடியாதபடிக்குப் பிரித்து வைத்தது. யோசிக்க யோசிக்க கோவிந்தனுக்கு இன்னும் பல காரணங்கள் அகப்பட்டன.
‘இனி என் முகத்திலேயே விழிக்காதே என்று துரத்தியடித்த குரு, நீங்கள் திரும்பி வந்தபோது ஒன்றுமே நடவாததுபோல எப்படிக் கட்டித் தழுவி வரவேற்றார் என்று யோசித்துப் பாருங்கள் அண்ணா. எனக்கு அதுவே திருதராஷ்டிரத் தழுவலாகத்தான் இப்போது படுகிறது.’
ராமானுஜருக்குத் துக்கம் ததும்பியது. வேதத்தில் கரை கண்ட ஞானவித்து. வயதான மனிதர். தன் இருப்பு அத்தனை அச்சத்தைத் தந்திருக்குமா அவருக்கு? அழித்துவிடும் அளவுக்கா?
‘இது நீங்கள் யார் என்று உங்களுக்கே தெரியப்படுத்த நிகழ்ந்த சம்பவமாக இருக்கட்டும். நீங்கள் இருந்தாக வேண்டும் அண்ணா. போய்விடுங்கள். ஓடிவிடுங்கள்.’
திரும்பத் திரும்பச் செவியில் மோதிய கோவிந்தனின் குரல்.
ராமானுஜர் நடந்துகொண்டே இருந்தார். அன்றிரவு முழுதும் நடந்து, மறுநாளும் நடந்து, வானம் இருட்டும் முன் கண் இருட்டிக் கீழே விழுந்தார்.
எத்தனை நேர உறக்கமோ. யாரோ எழுப்புவது போலிருந்தது. விழித்தபோது எதிரே ஒரு வேடர் தம்பதி நின்றிருந்தார்கள்.
‘வெளியூரா?’
‘ஆம் ஐயா. இந்தக் காட்டில் எனக்கு வழி தெரியவில்லை. நான் தெற்கே போகவேண்டியவன்.’
‘நாங்கள் சத்யவிரத க்ஷேத்திரத்துக்குத்தான் போய்க்கொண்டிருக்கிறோம். பேச்சுத் துணைக்கு ஆச்சு. புறப்படுங்கள்’ என்றான் வேடன்.
சத்ய விரத க்ஷேத்திரம். ராமானுஜருக்கு சிலிர்த்துவிட்டது. காஞ்சிக்கு அதுதான் பெயர். எங்கிருந்தோ வந்தான். நானொரு வேடன் என்றான். இங்கிவனை நான் பெற எப்போதோ தவம் புரிந்திருக்கத்தான் வேண்டும்.
உற்சாகமாக அவர்களுடன் ராமானுஜர் புறப்பட்டுவிட்டார்.
மறுநாள் இரவு வரை அவர்கள் பேசிக்கொண்டே நடந்தார்கள். அப்போதும் கானக எல்லை வந்தபாடில்லை. அதே விந்தியம். அதே முரட்டுக் காடு. அதே பாதையற்ற பயணம். போய்ச்சேர எத்தனை மாதங்கள் ஆகப் போகிறதோ தெரியவில்லை.
அன்றிரவு அவர்கள் மூவருக்குமே பயங்கரப் பசி. ஆனால் உண்ண ஒன்றுமில்லை. பருக நீருமற்ற வறண்ட பகுதியாக இருந்தது அது. சகித்துக்கொண்டு இரவைக் கழிக்கப் படுத்தார்கள். விடிவதற்குச் சற்று நேரம் முன்பாக அந்த வேடுவனின் மனைவியின் முனகல் கேட்டது. தாகம். தாங்க முடியாத தாகம். தண்ணீர் வேண்டும்.
‘கொஞ்சம் பொறுத்துக்கொள். பொழுது விடிந்துவிடட்டும். இங்கிருந்து சிறிது தூரத்தில் ஒரு கிணறு இருக்கிறது. அதன் நீர் அமிர்தத்தினும் மேலானதென்று கேள்விப்பட்டிருக்கிறேன்’ என்று வேடுவன் ஆற்றுப்படுத்திக்கொண்டிருந்தது ராமானுஜரின் காதில் விழுந்தது.
சட்டென்று அவர் உதறிக்கொண்டு எழுந்தார். ‘ஐயா நீங்கள் எனக்கு உதவி செய்தவர்கள். உங்கள் மனைவியின் தாகத்தைத் தணிக்கும் புண்ணியமாவது எனக்குக் கிடைக்கட்டும். இருட்டானாலும் பரவாயில்லை. நீங்கள் திசை சொல்லுங்கள். நான் அந்தக் கிணற்றைத் தேடிச் சென்று நீர் எடுத்து வருகிறேன்’ என்றார்.
வேடுவன் புன்னகை செய்தான். குத்துமதிப்பாகக் கை காட்டி வழி சொன்னான்.
ராமானுஜர் நடக்க ஆரம்பித்தார். இந்த அடர் கானகத்தில் யார் கிணறு வெட்டியிருப்பார்கள்? அதுவும் அமிர்தத்தினும் மேலான நீர் உள்ள கிணறாமே?
அரை மணி தேடி அந்தக் கிணற்றைக் கண்டுபிடித்தார். ஆனால் நீர் எடுத்து வர கைவசம் ஒன்றுமில்லை. ஆனது ஆகட்டும் என்று கிணற்றில் இறங்கி, தன்னிரு கைகளில் நீரை அள்ளி ஏந்திக்கொண்டு அலுங்காமல் மேலேறி வந்தார். வந்த வழியே திரும்பிச் சென்று அந்த வேட்டுவப் பெண்ணின் வாயில் நீரை விட்டார்.
‘இவ்வளவுதான் முடிந்ததா?’ என்றாள் அந்தப் பெண்.
‘பிரச்னை இல்லையம்மா! நான் மீண்டும் சென்று நீர் ஏந்தி வருகிறேன்.’
இரண்டாவது முறையும் அரை மணி நடந்து நீர் எடுத்து வந்தார் ராமானுஜர்.
‘ம்ஹும். தாகம் தணியவில்லை. எனக்கு இன்னும் வேண்டும்.’
மூன்றாவது முறை ராமானுஜர் அந்தக் கிணற்றுக்குச் சென்று நீர் எடுத்து வந்து பார்த்தபோது அந்த வேடர் தம்பதி அங்கே இல்லை.
இருட்டில் நடந்துகொண்டே இருந்த களைப்பு. பசி மயக்கம். அப்படியெங்கே கண் காணாமல் போயிருப்பார்கள் என்கிற குழப்பம் தந்த கிறுகிறுப்பு. ராமானுஜர் அப்படியே கண்சொருகிச் சரிந்தார்.
விழித்தபோது விடிந்திருந்தது. வழிகாட்ட உடன் வந்த வேடுவத் தம்பதி பாதி வழியில் பரிதவிக்க விட்டுக் காணாமல் போனது பற்றிக் கவலைப்பட்டுக்கொண்டிருக்க நேரமில்லை. ராமானுஜர் மீண்டும் அந்தக் கிணற்றடியை நோக்கி நடந்தார்.
இப்போது அங்கே நாலைந்து பெண்கள் இருந்தார்கள். தண்ணீர் எடுக்க வந்த உள்ளூர்க்காரர்கள்.
‘அம்மா, இது எந்த இடம்?’
‘நீங்கள் எங்கே செல்லவேண்டும்?’
‘நான் தெற்கே காஞ்சிக்குப் போகவேண்டும் தாயே. வழி தெரியாத விந்தியமலை காட்டுப்பாதையில் சிக்கிக்கொண்டுவிட்டேன்.’
அந்தப் பெண்கள் அவரை வினோதமாகப் பார்த்தார்கள்.
‘சொல்லுங்கள் அம்மா. இது எந்த ஊர்? எந்த இடம்? இங்கிருந்து நான் எப்படிப் போகவேண்டும்?’
‘என்னப்பா நீ அசடாயிருக்கிறாயே. காஞ்சிக்கே வந்து சேர்ந்துவிட்டு, காஞ்சிக்கு வழி கேட்கிறவனுக்கு என்ன பதில் சொல்ல முடியும்?’ என்று கேட்டார்கள்.
(தொடரும்)
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
January 18, 2017
ஜல்லிக்கட்டு
இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்குப் பிறகு தமிழ் இளைஞர்கள் இப்படி உணர்வுபூர்வமாகத் திரண்டெழுந்த சம்பவம் வேறு நிகழ்ந்ததில்லை. எனக்கென்னவோ, ஜல்லிக்கட்டு விவகாரம் என்பது இளைய தலைமுறையின் பல்வேறு அதிருப்திகளின் அடையாளப் பிரதிபலிப்பாகத்தான் தோன்றுகிறது. முல்லைப் பெரியாறு, காவிரி விவகாரங்கள் தொடங்கி நேற்றைய / இன்றைய தாள் பணமற்ற பொருளாதார மண்டையிடிகள் வரை துவண்டு கிடந்த சமூகத்துக்கு ஒரு வெளிப்பாட்டுத் தருணம் தேவைப்பட்டது. அது ஜல்லிக்கட்டானது.
நமது பண்பாட்டு அடையாளங்களை அழிக்க நினைக்கிற எதையும் எதிர்ப்பது நியாயமானதே. எதிர்ப்பை இப்படியான அறவழியில் காண்பிப்பது நமது தலைமுறையின் மன முதிர்ச்சியைக் காட்டுகிறது. அரசியல்வாதிகள் தொடங்கி அத்தனை தரப்பினரும் இளைய சமூகத்திடம் பயில வேண்டிய பாடம் இது. இது அனைத்துத் தளங்களிலும் தொடரவும் பரவவும் வேண்டும்.
பீட்டா போன்ற அமைப்புகளின் உள்நோக்கங்களும் ரகசிய செயல்திட்டங்களும் இன்று ஊருக்கே தெரியும். நமது மண்ணின் மீதும் மக்களின்மீதும் மதிப்புக் கொண்ட அரசாங்கமெனில் இத்தகு ஆதிக்கக் கூலிப்படைகளை அடியோடு களைந்தெறிவதில் இரண்டாம் யோசனை இருக்கக்கூடாது. பிராணி நலன் என்பது ஒரு பாவனை. மாடுகளை மகாலட்சுமியாகத் தொழத் தெரிந்த சமூகம் இது. நமக்கு என்.ஜி.ஓக்கள் பாடம் எடுக்கவேண்டிய அவசியமில்லை.
பிரதமருடனான தமிழக முதல்வரின் இன்றைய பேச்சுவார்த்தை ஒட்டுமொத்தத் தமிழர்களுக்கும் மகிழ்ச்சியளிக்கத்தக்கதாக இருக்கவேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன். இந்த அறப் போராட்டத்தில் வெற்றி காணப்போகிற மாணவர்கள், இதே மன உறுதி, செயல்வேகத்தைத் தமது படிப்பிலும் காண்பித்து அடுத்தத் தலைமுறைக்கு ஆதர்சமாக விளங்க வாழ்த்துகிறேன்.
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
பொலிக! பொலிக! 06
‘இதோ பார், உனக்குத் தெரியாதது இல்லை. நமது குருவுக்கு வயதாகிவிட்டது. அவரால் மாற்றுக் கருத்துகளோடு மல்லுக்கட்ட முடியாது. அதே சமயம், நீ கோபித்துக்கொண்டு வகுப்புக்கு வராதிருந்தால் நஷ்டம் உனக்குத்தான். இவரளவுக்கு வேதமறிந்தவர்கள் இங்கு வேறு யாருமில்லை என்பதை எண்ணிப் பார்.’
ராமானுஜர் யோசித்தார். அவர்கள் சொல்வது சரிதான். ஆனால் கசப்பின் திரையை இடையே படரவிட்டுக்கொண்டு கல்வியை எப்படித் தொடரமுடியும்?
‘அட என்னப்பா நீ! உன்னைக் கோபித்துக்கொண்டதில் அவருக்கே மிகுந்த வருத்தம். வெளியே காட்டிக்கொள்ள அகங்காரம் தடுக்கிறது. ஆனால் நீ பாடசாலைக்கு வருவதை நிறுத்தியபிறகு மனிதர் தவியாய்த் தவிக்கிறார். எப்போது வேண்டுமானாலும் அழுதுவிடுவார் போலிருக்கிறது.’
ஐயோ என்று பதறி எழுந்தார் ராமானுஜர். தன்னால் ஏற்க இயலாத கருத்துகளைச் சொல்லித்தருகிறவர்தான். என்றாலும், அவர் குரு. அவரது நம்பிக்கைகள் அவருக்கு. அல்லது அவரை நம்புகிறவர்களுக்கு. தன்னால் அவரை முற்றிலும் ஏற்க முடியாதுபோனாலும், முற்றிலும் நிராகரிக்கவும் முடியாது என்று ராமானுஜர் நினைத்தார். குரு என்பவர் தெய்வத்துக்கு மேலே.
‘அதைத்தான் சொல்கிறோம். அவர் சொல்வதைச் சொல்லட்டும். நீ ஏற்பதை ஏற்றுக்கொள். ஏற்க முடியாதவற்றுக்கு இருக்கவே இருக்கிறது உன் சுயபுத்தி. அது கொடுக்கிற அர்த்தங்கள். கிளம்பு முதலில்.’ என்றார்கள்.
ராமானுஜர் மீண்டும் வகுப்புக்குப் போனபோது யாதவப் பிரகாசர் அவரைக் கட்டித்தழுவி வரவேற்றார். ‘நீ இல்லாமல் இந்த வகுப்பே நிறைவாக இல்லை’ என்று சொன்னார்.
ராமானுஜரைப் பொறுத்தவரை அது பகையல்ல. அபிப்பிராய பேதம் மட்டுமே. குருவுடன் வாதம் செய்து வீழ்த்துவதில் அவருக்குச் சற்றும் விருப்பம் இருக்கவில்லை. அதை ஒரு துரதிருஷ்டமாகவே அவர் கருதினார். எனவே மீண்டும் குரு தன்னை அரவணைக்க முன்வந்தபோது அவருக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது.
மீண்டும் வகுப்புகள் தொடங்கின. சிலநாள் எந்தப் பிரச்னையும் இல்லாமல் அமைதியாகவே போனது. யாதவர் மெதுவாக ஆரம்பித்தார்.
‘நாம் காசிக்கு யாத்திரை போனால் என்ன?’
ஓ, போகலாமே என்றார்கள் மாணவர்கள். பாவம் கரைக்கிற காசி. முனிவர்கள் வாழ்கிற காசி. முக்தியளிக்கிற காசி.
‘ராமானுஜா! நீ அவசியம் வரவேண்டும். இந்த யாத்திரை சிறப்படைவதே உன்னிடத்தில்தான் உள்ளது.’
‘தங்கள் சித்தம்’ என்றார் ராமானுஜர்.
வீட்டுக்குப் போய் அம்மாவிடம் சொன்னார். மனைவி தஞ்சம்மாவிடம் சொன்னார். குருகுலத்தில் அனைவரும் காசி யாத்திரை போக முடிவாகியிருக்கிறது.
‘காசி யாத்திரையா? அது வெகுநாள் பிடிக்குமே?’ என்றாள் தஞ்சம்மா.
‘ஆம் தஞ்சம்மா. ஆனால் இது ஓர் அனுபவம். எல்லோருக்கும் எளிதில் கிடைத்துவிடாத அனுபவம். நான் தனியாகப் போகப் போவதில்லை. என் குருநாதரும் உடன் படிக்கும் மாணவர்களும் எப்போதும் பக்கத்தில் இருப்பார்கள். என்னைப் பற்றிக் கவலை வேண்டாம்.’
அவள் தன்னைப் பற்றித்தான் கவலைப்பட்டுக்கொண்டிருந்தாள் என்பதை அப்போது ராமானுஜர் எண்ணிப் பார்க்கவில்லை. அவரது சிந்தனை முற்றிலும் யாத்திரையில் இருந்தது. அது தரப்போகிற பரவசப் பேரனுபவத்தில் இருந்தது.
‘கோவிந்தன் வருகிறானோ?’ என்றார் தாயார் காந்திமதி. ராமானுஜர் பயின்ற அதே பாடசாலையில்தான் அவரது தமக்கை மகன் கோவிந்தனும் படித்துக்கொண்டிருந்தான். அவன் பக்கத்தில் இருந்தால் ராமானுஜனை பத்திரமாகப் பார்த்துக்கொள்வான். பொறுப்பறிந்தவன் என்பது தவிர அண்ணன் மீது அவனுக்கு அளவற்ற பாசமும் உண்டு.
‘அத்தனை பேரும் கிளம்புகிறோம் அம்மா. இது குருவின் விருப்பம். முடியாது என்று சொல்ல நாங்கள் யார்?’
கிளம்பிவிட்டார்கள்.
வேத மந்திரங்களைச் சொல்லிக்கொண்டே நடக்கத் தொடங்கினார்கள். அதிகாலை சூரிய உதயத்துக்கு முன் கிளம்பி உச்சி வேளை வரை நடைப் பயணம். அதன்பிறகு உணவும் ஓய்வும். மீண்டும் மாலை கிளம்பி இருட்டும் வரை நடப்பது. எங்காவது சத்திரங்களில் படுத்துத் தூங்கி, மீண்டும் காலை நடை. ஆங்காங்கே குரு வகுப்பு எடுப்பார். அந்தந்தப் பிராந்தியங்களில் வசிக்கும் மக்களோடு உரையாடுவார்கள். எதிர்ப்படும் கோயில்களில் வழிபாடு.
நாள்கள் வாரங்களாகி மாதங்களைத் தொட்டபோது அவர்கள் விந்திய மலைப் பிராந்தியத்தை அடைந்திருந்தார்கள். மத்தியப் பிரதேசத்து நிலப்பகுதி. இந்தியாவை வட, தென் பிராந்தியங்களாகப் பிரிக்கிற மலைத்தொடர். நடந்துபோகிறவர்களுக்கு அதுதான் பாதை. விந்திய மலையைத் தொட்டு அதன் வழியாகவே உத்தர பிரதேசத்தில் கங்கை பாயும் வாரணாசியை அடைகிற வழி.
இருட்டிய பொழுதில் அவர்கள் மலைக்காட்டில் ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து படுக்க ஒதுங்கினார்கள். நடந்த களைப்பில் ராமானுஜர் படுத்தவுடன் உறங்கிவிட்டார். ஆனால் கோவிந்தன் உறங்கவில்லை. அவனுக்குச் சில குழப்பங்களும் சந்தேகங்களும் இருந்தன. வழி முழுதும் மாணவர்கள் தமக்குள் ரகசியம் பேசியபடியே வந்ததை அவன் கவனித்திருந்தான். அவன் கவனிப்பது தெரிந்தால் சட்டென்று அவர்கள் பேச்சை நிறுத்திவிடுவார்கள். அதேபோல, யாதவருக்கு நெருக்கமான சில மாணவர்கள் அவருடன் தனியே சில சமயம் உரையாடிக்கொண்டிருந்ததை அவன் கவனித்தான். வேதபாடம் தொடர்பான உரையாடலாக இருக்குமோ என்று அவன் பக்கத்தில் போனால் அடுத்தக்கணம் அவர்கள் எழுந்து போய்விடுவார்கள்.
ஒரு சிலருடன் மட்டும் குரு தனியே பேசவேண்டிய அவசியமென்ன? தான் நெருங்கும்போதெல்லாம் பேச்சு துண்டிக்கப்படுவதன் காரணம் என்ன?
அவனது குழப்பத்தின் அடிப்படை அதுதான். அதனாலேயே இரவு நெடுநேரம் தூங்காமல் வெறுமனே கண்மூடிப் படுத்திருப்பதை வழக்கமாக்கிக்கொண்டான். மனிதர்களின் உறக்கத்தை மாய இறப்பாகவே கருதிவிடுகிற சக மனிதர்கள். தன்னிலை மறந்து ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள இரவுப் பொழுதுகளையே அவர்கள் பெரிதும் நம்புகிறார்கள்.
கோவிந்தன் நினைத்தது பிழையல்ல. அன்று அது நடந்தது.
‘நாம் எப்போது கங்கைக் கரையை அடைவோம்?’
‘இன்னும் இருபது நாள்கள் ஆகலாம் என்று குருநாதர் சொன்னார்.’
‘அதற்குமேல் தாங்காது. சென்றடைந்த மறுநாளே ராமானுஜன் கதையை முடித்துவிடவேண்டும்.’
கோவிந்தனுக்குத் தூக்கிவாரிப் போட்டுவிட்டது. அவர்கள் உறங்கும்வரை காத்திருந்தான். பிறகு பாய்ந்து சென்று ராமானுஜரைத் தட்டி எழுப்பினான்.
‘அண்ணா, நீங்கள் ஒரு கணம்கூட இனி இங்கே இருக்கக்கூடாது. உங்களைக் கொல்ல சதி நடக்கிறது. ஓடிவிடுங்கள்’
‘ஐயோ, நீ?’ என்றார் ராமானுஜர்.
‘நீங்கள் காணாமல் போனது பற்றிக் கதைகட்டிவிடவாவது நான் இங்கே இருந்தாக வேண்டும். என்னை நான் பார்த்துக்கொள்வேன். நீங்கள் உடனே கிளம்புங்கள்.’
இறைவன் சித்தம் என்று ராமானுஜருக்குத் தோன்றியது.
(தொடரும்)
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
January 17, 2017
பொலிக! பொலிக! 05
ஜடாயுவுக்கு ராமர் இறுதிச் சடங்கு செய்து மோட்சம் கொடுத்த தலம் அது. திருப்புட்குழி என்று பேர். விஜயராகவப் பெருமாளின் பேரழகைச் சொல்லி முடியாது. வலது தொடையில் ஜடாயுவையும் இடது தொடையில் மரகதவல்லித் தாயாரையும் ஏந்தியிருக்கும் எம்பெருமான். பாடசாலை முடிந்தபிறகு தினமும் கோயிலுக்குப் போய் சேவித்துவிட்டு வரலாம் என்கிற எண்ணமே ராமானுஜருக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தது.
ஆனால் திருப்புட்குழி யாதவப் பிரகாசர் விஜயராகவப் பெருமாளைச் சேவிக்கிற வழக்கம் கொண்டவரல்லர். அவர் அத்வைதி. சிவனைத் தவிர அவருக்கு வேறு தெய்வமில்லை.
ஊர்க்காரர்களுக்கு அவரைத் தெரியும். பெரிய ஞானஸ்தன். வேதம் படித்த விற்பன்னர். பிராந்தியத்தில் அவரளவு வேதத்தில் கரை கண்டவர்கள் யாரும் கிடையாது. பயம் அளிக்கிற மரியாதை என்பது ஒரு விலகல்தன்மையை உடன் அழைத்து வரும். யாதவர் விலகியிருந்தார். கனிவில் இருந்து. சிநேகங்களில் இருந்து. சக மனித உறவுகளில் இருந்து.
நினைவு தெரிந்த தினம் முதல் தனது தந்தை கேசவ சோமயாஜியிடமே பாடம் படித்து வந்த ராமானுஜரை அவரேதான் யாதவப் பிரகாசரிடம் கொண்டுவந்து விட்டுப் போனது.
‘சுவாமி, வேதங்களில் நான் கற்ற மிகச் சொற்பப் பாடங்களை இவனுக்குச் சொல்லிக்கொடுத்திருக்கிறேன். ஆனால் அகக்கண் திறந்துவிடும் அளவுக்கல்ல. அதை நீங்கள்தான் செய்ய முடியும்.’
இளையாழ்வாரை நிமிர்ந்து பார்த்தார் யாதவப் பிரகாசர். தகிக்கும் வெய்யோனின் கன்னத்தில் துளி கிள்ளி எடுத்து வந்து வைத்தாற்போன்ற அவரது கண்களின் சுடர் அவரது வேறெந்த மாணவர்களிடமும் இல்லாதது. தவிரவும் அந்தச் சுடரின்மீது கவிந்துநின்ற விலை மதிப்பற்ற சாந்தம். ஞானத்தின் பூரணத்தை அடைந்தவர்களுக்கு மட்டுமே சாத்தியமான அபூர்வம். இந்தப் பையனுக்கு எப்படி இது? அவருக்குப் புரியவில்லை.
‘உமது மகனுக்கு விவாகம் ஆகிவிட்டதா?’
‘ஆம் சுவாமி. சமீபத்தில்தான்.’
‘சொந்த ஊர் காஞ்சிதானா?’
‘இல்லை. திருப்பெரும்புதூர். பிள்ளை வரம் கேட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாளை வேண்டி, யாகம் செய்து பிறந்தவன் இவன். பிறப்பின் பொருள் படிப்பில் அல்லவா உள்ளது? அதனால்தான் தங்களைத் தேடி வந்திருக்கிறேன்.’
‘நல்லது. விட்டுச் செல்லுங்கள்.’
அது தமிழகத்தில் சோழர்களின் கொடி பறந்துகொண்டிருந்த காலம். மாமன்னன் ராஜேந்திர சோழனும் அவனது மகன் இளவரசர் ராஜாதிராஜ சோழனும் மாநிலத்தின் இண்டு இடுக்கு விடாமல் தமது அதிகாரத்தை நிலைநிறுத்தி ஆட்சி புரிந்துகொண்டிருந்த சமயம். தஞ்சைக்கு அருகே கங்கைகொண்ட சோழபுரம் தலைநகரமாக இருந்தது. வடக்கே ஆந்திரம் வரை நீண்டிருந்தது நாட்டின் எல்லை. மைசூர் முதல் ஈழம் வரை வென்றெடுத்த பிராந்தியங்கள் யாவும் குறுநிலங்களாக அறியப்பட்டன. நிலத்துக்கொரு பிரதிநிதி. நீடித்த நல்லாட்சி. ஆனால் சைவம் தவிர இன்னொரு மதத்துக்குப் பெரிய இடம் கிடையாது. கோயிலற்ற ஊரில்லை, சிவனற்ற கோயிலில்லை.
யாதவப் பிரகாசர் போன்ற மகாபண்டிதர்களுக்கு மிகப்பெரிய செல்வாக்கு இருந்தது. அரசு மானியங்கள் இருந்தன. மாலை மரியாதைகள் இருந்தன. வீதியில் தமது சீடர் குழாத்துடன் நடந்து போனால் மக்கள் தாள் பணிந்து ஒதுங்கி நிற்பார்கள். அது கல்விக்கான மரியாதை. ஞானத்துக்கான மரியாதை.
ஆசூரி கேசவ சோமயாஜிக்குத் தனது மகன் ஒரு சரியான குருகுலத்தில் சேர்ந்துவிட்ட திருப்தி. திருமணத்தை முடித்துவிட்டார். காலக்கிரமத்தில் வேதப்பாடங்களையும் நல்லபடியாகக் கற்றுத் தேறிவிடுவான். இதற்குமேல் என்ன? தள்ளாத உடலத்தைத் தள்ளிக்கொண்டு போக சிரமமாக இருக்கிறது. நான் விடைபெற்றுக்கொள்கிறேன் என்று ஒருநாள் அமரராகிப் போனார்.
கடைசிவரை அவருக்குத் தெரியாது. பாடசாலைக்குப் போக ஆரம்பித்த சிறிது காலத்திலேயே ராமானுஜருக்கும் யாதவருக்கும் முட்டிக்கொண்ட சங்கதி. வியாதியின் படுக்கையில் கிடந்தவர் காதுகளுக்கு ராமானுஜர் இதை எடுத்துச் செல்லவில்லை. மனத்துக்குள் ஓர் இறுக்கம் இருந்தது. குருவுக்கும் தனக்கும் சரிப்பட்டு வராமல் போய்க்கொண்டிருக்கிற வருத்தம். பாடசாலையில் மற்ற மாணவர்கள் அப்படியில்லை. சொல்லிக்கொடுப்பதை அப்படியே ஏந்திக்கொண்டுவிடுகிறவர்களாக அவர்கள் இருந்தார்கள். தனக்கு மட்டும் ஏன் வினாக்கள் எழுகின்றன? தனக்கு மட்டும் ஏன் வேறு பொருள் தோன்றுகிறது? மனத்தில் உதிப்பதைச் சொல்லாமலும் இருக்க முடிவதில்லை. ஆசிரியர் போதிக்கிற எதுவும் எளிய விஷயங்களல்ல. வேதத்தின் ஒவ்வொரு பதமும் ஒரு தீக்கங்கைத் தன்னகத்தே ஏந்தியிருப்பது. உரித்தெடுத்து உள்வாங்குவது எளிதல்ல.
அது பிரம்மம் உணரச் செய்கிற பாதை. பிழைபடுவது தவறல்லவா?
தந்தையின் மறைவுக்குப் பிறகு சிறிதுகாலம் ராமானுஜர் பாடசாலைக்குப் போகாமல் இருந்தார். போய் என்ன செய்வது? தினமும் விவாதம், தினமும் தர்க்கம். ஆசிரியரின் மனக்கசப்புக்கு இலக்காவது. பிழைபட்ட பொருள்களை அவர் தீவிரம் குறையாமல் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருக்கிறாரே என்கிற ஏக்கம்.
‘ஆனால் அவன் வகுப்புக்கு வராததை நாம் நிம்மதி என்று எடுத்துக்கொண்டு விடமுடியாது குருவே. பயல் வெளியே போய் அத்வைத துவேஷம் வளர்ப்பான். வேதங்களுக்கு நீங்கள் எடுத்துச் சொல்லும் அரும்பொருளையெல்லாம் நிராகரித்து, தன் இஷ்டத்துக்கு வேறு அர்த்தம் சொல்லுவான். அதையும் தலையாட்டி ஏற்க ஒரு கூட்டம் தயாராக இருக்கும்.’
யாதவரின் சீடர்கள் ஓய்வுப் பொழுதில் ஓதி விட்டார்கள். யாதவருக்கே அந்தக் கவலை இருந்தது. தனது கருத்துகளை மறுத்துச் சொல்லும் ராமானுஜருடன் ஒருநாளும் அவரல் எதிர்வாதம் புரியமுடிந்ததில்லை. வாயை மூடு என்று அடக்கிவிடத்தான் முடிகிறது. இயலாமைக்குப் பிறந்த வெற்றுக் கோபம்.
அந்த அடக்குமுறை பிடிக்காதபடியால் மாணவன் விலகிப் போயிருக்கிறான். அப்படியே விட்டுவிடவும் முடியவில்லையே?
அவருக்குத் தெளிவாகத் தெரிந்தது. இவன் சாதாரணமான மாணவன் அல்ல. பிராந்தியத்தில் தனது புகழை அழித்துத் தனியொரு தேஜஸுடன் தனியொரு ஞான சமஸ்தானம் நிறுவும் வல்லமை கொண்டவன். அத்வைத சித்தாந்தத்தின் அடிப்படைகளையே அசைத்து ஆட்டம் காணச் செய்துவிடக்கூடியவன்.
‘அவன் எதற்கு இருக்கவேண்டும்?’ என்றார்கள் அவரது அருமைச் சீடர்கள்.
யாதவப் பிரகாசர் யோசித்தார். மிகத் தீவிரமாக.
‘சரி, அவனை சமாதானப்படுத்தி திரும்ப அழைத்து வாருங்கள். நாம் அவனையும் அழைத்துக்கொண்டு காசிக்கு யாத்திரை செல்வோம்.’
‘ஐயா காசிக்கு எதற்கு இப்போது?’
அவர் சில வினாடிகள் கண்மூடி அமைதியாக இருந்தார். கொலையுள்ளம் என்றாலும் குரு முகமல்லவா? எப்படிப் புரியவைப்பது? மிகக் கவனமாகச் சொற்களைத் தேர்ந்தெடுத்து வெளியிட்டார்.
‘கங்கை பாவங்களைக் கரைக்கவல்லது. மூழ்கி இறந்தோருக்கு மோட்சம் தரவல்லது.’
(தொடரும்)
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
January 16, 2017
பொலிக! பொலிக! 04
‘நான் உங்களை இனி மாமா என்று அழைக்க முடியாதல்லவா? பேரருளாளனே உங்களை யதிராஜன் (துறவிகளின் அரசர்) என்று சொல்லிவிட்டான்!’
தாசரதி தயங்கித் தயங்கித்தான் பேசினான். ராமானுஜர் புன்னகை செய்தார். வாய் திறந்து அவர் சொல்லவில்லை. துறந்தேன், துறந்தேன், துறந்தேன் என்று மும்முறை சொல்லி மூழ்கி எழுந்தபோது ‘முதலியாண்டானைத் தவிர’ என்று அவர்தம் மனத்துக்குள் சொல்லிக்கொண்டதை நினைத்துப் பார்த்தார். வைணவத்தை வாழ்க்கையாக ஏற்றதில் அவன் ராமானுஜருக்கு முன்னோடி. தமக்கையின் மகன். சிறு வயதில் இருந்தே ராமானுஜரின் நிழலாகத் தொடர்ந்து வருகிறவன். அவரது ஞானத்தின் ஜீவப் பிரவாகம் பெருக்கெடுக்கும்போதெல்லாம் முந்தி வந்து முக்குளித்தவன்.
‘முதலியாண்டான்! உறவென்பது நமக்கு இனி அவன் ஒருவனோடு மட்டுமே. ஆனால் அவன் உலகம் உண்ட பெருவாயனாக இருக்கும்போது உறவில்லை என்று யாரைச் சொல்ல முடியும்?’
தாசரதியிடம் மேலும் சில வினாக்கள் இருந்தன. அவற்றுள் முதன்மையானது, துறவு ஏற்ற மறுகணம் அவர் யாரை நினைத்தார் என்பது. தன்னையா? தன்னைக் காட்டிலும் உயர்ந்த பாகவதோத்தமரான கூரத்தாழ்வானையா? அல்லது தமது இன்னொரு தமக்கையின் மகனான வரத தேசிகனையா?
மூவருமே ராமானுஜர் துறவு கொண்டதும் முதல் முதலில் வந்து சீடர்களானவர்கள். அவரது உயிர் மூச்சேபோல் உடனிருப்பவர்கள். இரவும் பகலும் அவர்களுக்கு யதிராஜரைத் தவிர வேறு நினைவே கிடையாது. அவருக்குச் சேவை செய்வதைக் காட்டிலும் வேறு திருப்பணி கிடையாது. ராமானுஜர் துறவுக் கோலம் கொள்வதற்கு முன்பிருந்தே அப்படித்தான். அது ஞானத்தின் காந்த வடிவம். ஈர்க்கும் வல்லமை இயல்பிலேயே உண்டு.
‘தயவுசெய்து சொல்லுங்கள். ஒருவேளை வேறு யாரையாவது நினைத்தீர்களோ?’
தனது மானசீகத்தில் என்றோ குருவாக வரித்துவிட்ட ஆளவந்தாரையேகூட ராமானுஜர் எண்ணியிருக்கலாம். எப்பேர்ப்பட்ட தருணம்! எத்தனை பேருக்கு இதெல்லாம் வாய்க்கும்!
‘ஆனால் சொல்லிவிடுங்கள். நீங்கள் யாரை நினைத்தீர்கள்?’
மீண்டும் புன்னகை. அர்த்தம் பொதிந்த பேரமைதி. சொல்லலாமா? முதலியாண்டான் கேட்கிறான். என்னிடம் இருக்கிற பதில் அவனை எவ்விதமாக பாதிக்கும்? அவர் கண்மூடி, தன் நினைவில் மூழ்கத் தொடங்கினார்.
கண்ணுக்குள் மிதந்து வந்தது கோவிந்தனின் உருவம். கோவிந்த பட்டராகக் காளஹஸ்தியில் சிவஸ்மரணையில் கிடக்கிற பூர்வாசிரமத்துத் தம்பி. சித்தி மகன். ஒரு கணம் ராமானுஜருக்கு சிலிர்த்துவிட்டது. கோவிந்தன் இல்லாவிட்டால் அவர் கிடையாது. பதினெட்டு வயதிலேயே கங்கையில் போயிருக்கக்கூடும்.
‘ராமானுஜா, எழுந்திரு. உடனே என்னோடு வா. இவர்கள் உன்னைக் கொல்லத் திட்டம் தீட்டியிருக்கிறார்கள்.’
அசரீரிபோல் உட்செவியில் மீண்டும் ஒலிக்கிற அதே குரல்.
கோவிந்தனைக் கடைசியாகப் பார்த்தது அன்றைக்குத்தான். குருவும் சீடர்களுமாகப் புனித யாத்திரை போய்க்கொண்டிருந்த தினங்களில் ஒரு நள்ளிரவுப் பொழுது. தன்னை எழுப்பி, தப்பிக்கவைத்து அனுப்பிவிட்டுத் திரும்பிச் சென்ற கோவிந்தன். அதன்பிறகு அவன் திரும்பவேயில்லை. ஒரு செய்தி மட்டும் வந்தது.
‘ராமானுஜா! உன் சித்தி மகன் கங்கையில் குளிக்கிறபோது அவனுக்கு ஒரு சிவலிங்கம் கிடைத்ததாம். திரும்பி வருகிற வழியில் அவன் காளஹஸ்தியில் பெருமானைச் சேவித்து, அங்கேயே கைங்கர்யம் செய்யத் தீர்மானித்து இருந்துவிட்டான்’
இது எப்படி, எப்படி என்று ராமானுஜருக்கு ஆறவேயில்லை. தன்னினும் உயர்ந்த வைணவசீலராக கோவிந்தன் வரக்கூடுமென்று அவர் நினைத்திருந்தார். சட்டென்று எங்கோ தடம் மாறிவிட்டது.
எத்தனை முறை பேசியிருப்பேன்! எத்தனை விவாதித்திருப்போம்! அத்வைதமும் அதன் ஏற்கவியலாத எல்லைப்பாடுகளும்.
யாதவப் பிரகாசரிடம் ராமானுஜர் பாடம் படிக்கச் சென்றபோது கோவிந்தனும் அதே பள்ளியில் வந்து சேர்ந்தவன்தான். காஞ்சியில் யாதவரைக் காட்டிலும் சித்தாந்தங்களில் கரைகண்டவர் யாருமில்லை என்று ஊரே சொல்லிக்கொண்டிருந்தது. என்னவோ, ராமானுஜருக்கு மட்டும் ஆசாரியருடன் ஆரம்பத்தில் இருந்தே ஒத்துப் போகவில்லை. கோவிந்தனுக்கு அது தெளிவாகப் புரிந்தது. இவன் வேறு. இவன் சிந்தனை வேறு. இவனது வார்ப்பு வேறு. ஒரு சுயம்புவை ஆராய்ந்து அறிவது கடினம்.
அன்றைக்கு சாந்தோக்ய உபநிடதப் பாடம் நடந்துகொண்டிருந்தது. யாதவப் பிரகாசர் வரி வரியாகச் சொல்லி பொருள் விளக்கிக்கொண்டிருந்தார். கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்த ராமானுஜருக்குச் சட்டென்று ஓரிடத்தில் ஆசிரியர் விளக்கிய பொருள் திடுக்கிட வைத்துவிட்டது.
கப்யாஸம் புண்டரீகம் ஏவ மக்ஷிணி.
‘கப்யாஸம் என்றால் குரங்கின் பின்புறம்’ என்றார் யாதவப் பிரகாசர். அவர் படித்தது அதுதான். பிழை அவர்மீதல்ல. வழி வழியாகச் சொல்லித்தரப்பட்ட அர்த்தம்.
‘ஆனால் குருவே, இது அனர்த்தமாக அல்லவா உள்ளது? கப்யாஸம் என்பதை கபி ஆஸம் என்று ஏன் பிரிக்கிறீர்கள்? அதை கம் – பிபதி – இதி – ஆஸ: என்று பிரித்துப் பாருங்கள். இது சுடர்மிகு சூரிய மண்டலத்தில் உறையும் பரம்பொருளின் நயனங்களுக்கு உவமை சொல்லும் விதமாகப் புதுப்பிறப்பு எடுக்கும். கதிரவனைக் கண்டு தாமரை மலர்வது போல விரிந்தவை பரமனின் கண்கள் என்கிறது அந்தப் பதம்.’
யாதவர் திடுக்கிட்டுப் போனார். ‘இங்கே நான் குருவா? நீ குருவா?’ என்று கேட்டார்.
மீண்டும் வேறொரு நாள். இப்போது தைத்திரிய உபநிடதம்.
‘சத்யம் ஞானம் அனந்தம் பிரம்ம’ என்றார் யாதவர். சத்தியம், ஞானம் உள்ளிட்ட அனைத்தும் பிரம்மத்தை மட்டுமே பொருளாகக் கொண்டவை என்பது அவரது விளக்கம்.
‘இல்லை ஐயா. அவை பிரம்மத்தின் பொருளாக இருக்க இயலாது. அவை பிரம்மத்தின் பல்வேறு குணங்கள்.’
‘எப்படிச் சொல்கிறாய்?’
‘ஒரு பூ வெள்ளை வெளேரென்று இருக்கலாம். கமகமவென்று மணப்பதாக இருக்கலாம். பார்த்தாலே பரவசமூட்டும் பேரழகு உடையதாக இருக்கலாம். ஆனால் மணம் மட்டும் பூவல்ல. நிறம் மட்டும் பூவல்ல. அழகு பூவல்ல. பன்மைத்தன்மை பூவின் இயல்பு. ஆனால் பூ ஒன்றுதான். அதே மாதிரிதான் இதுவும். சத்யம், ஞானமெல்லாம் பிரம்மத்தின் பண்புகள். ஆனால் பிரம்மம் ஒன்றுதான். அதுதான் மூலம். அதுதான் எல்லாம்.’
அன்றைக்கே யாதவப் பிரகாசருக்கு ராமானுஜரைப் பிடிக்காமல் போய்விட்டது. ஒன்று இவன் இருக்கவேண்டும். அல்லது நான் இருக்கவேண்டும்.
‘ஐயோ எங்களுக்கு நீங்கள் வேண்டும் குருவே. நாம் அவனைக் களைந்துவிடலாம்’ என்றார்கள் மாணவர்கள்.
அதுதான் சரி என்று யாதவர் முடிவெடுத்த சமயத்தில் ராமானுஜரின் தந்தை இறந்துபோனார்.
(தொடரும்)
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
January 14, 2017
பொலிக! பொலிக! 03
ராமானுஜருக்கு, திருக்கச்சி நம்பியிடம் சீடனாகச் சேரவேண்டும் என்பது விருப்பம். கடவுளோடு பேசுகிற நம்பி. கைங்கர்யமே வாழ்க்கையாக இருக்கிற நம்பி. அவர் சாப்பிட வந்தபோதுதான் தஞ்சம்மா அபசாரம் செய்துவிட்டாள். ஆனாலும் அவர் பெரியவர். சிறுமைகளால் சலனப்படுகிற மனிதரல்லர். தவிரவும் அவருக்கு ராமானுஜரைப் பற்றித் தெரியும். அவரது பண்பு தெரியும். பக்தி தெரியும். பணிவு தெரியும். தவறாக எடுக்க மாட்டார்.
ராமானுஜர் அவர் தாள்பணிந்து விருப்பத்தைச் சொன்னார். ‘சுவாமி, என்னைத் தாங்கள் சீடனாக ஏற்கவேண்டும். எனக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்துவைக்க வேண்டும்.’
அவர் யோசித்தார். ‘நாளை வாருங்கள். பேரருளாளனிடம் கேட்டுச் சொல்கிறேன்’
ஆனால் கடவுள் சித்தம் வேறாக இருந்தது. ‘உம்மை திருவரங்கம் பெரிய நம்பியிடம் போகச் சொல்லி அருளாளன் உத்தரவு கொடுத்திருக்கிறான்’ என்றார் திருக்கச்சி நம்பி.
‘பெரிய நம்பியா! வைணவ குலத்தின் ஒப்பற்ற பெருந்தலைவர் ஆளவந்தாரின் சீடரா?’
‘ஆம். அவரேதான்.’
மறுவினாடியே புறப்பட்டுவிட்டார் ராமானுஜர். வீட்டுக்குப் போகவில்லை. மனைவியிடம் சொல்லவில்லை. மாற்றுத் துணிகூட எடுத்துக்கொள்ளவில்லை. தனது குரு யாரென்று தெரிந்துவிட்ட பிறகு மற்ற அனைத்தும் அர்த்தமற்றது.
காஞ்சியில் கிளம்பி அன்று மாலைக்குள் அவர் மதுராந்தகம் வரை நடந்துவிட்டார்.
அது தேடிப் போன தெய்வம் குறுக்கே வந்த தருணம். எதிரே வருவது யார்? பெரிய நம்பியா? அவரேதானா? கடவுளே!
‘இதை என்னால் நம்பமுடியவில்லை சுவாமி. என்னைத் தேடியா நீங்கள் இங்கு வந்துகொண்டிருந்தீர்கள்?’
‘ஆம். எதையும் நாம் தீர்மானிப்பதில்லை. அரங்கன் சித்தம். ஆசார்ய சித்தம்.’
ராமானுஜர் ஒரு கணம் கண்மூடி நின்றார். அவருக்கு அனைத்தும் புரிந்தது. வைணவ உலகின் நிகரற்ற பெரும் ஆசார்யராக விளங்கிய ஆளவந்தார் காலமாகிவிட்டார். அடுத்து ஆள வருவார் யார் என்று வைணவ உலகமே எதிர்பார்த்து நின்ற வேளை. இதோ, அரங்க நகருக்கு வா என்று பெரிய நம்பி வந்து நிற்கிறார்!
‘என்னை உங்கள் சீடனாக ஏற்றுக்கொண்டு எனக்கு நீங்கள் பஞ்ச சம்ஸ்காரங்களைச் செய்துவைக்க வேண்டும். இது பேரருளாளன் சித்தம் என்று திருக்கச்சி நம்பி சொன்னார்.’
‘அதற்கென்ன? இப்போதே காஞ்சிக்குப் போவோம். அருளாளன் சன்னிதியில் நடக்கட்டும்.’
‘இல்லை சுவாமி. அந்தத் தாமதத்தைக் கூட என்னால் பொறுக்க இயலாது. இன்றே, இங்கே, இப்போதே.’
பெரிய நம்பி புன்னகை செய்தார். மதுராந்தகம் ஏரி காத்த ராமர் சன்னிதியில் அது நடந்தது.
ராமானுஜரின் மனம் பக்திப் பரவசத்தில் விம்மிக்கொண்டிருந்தது. இந்தத் தருணத்துக்காக எத்தனைக் காலம் அவர் ஏங்கிக்கொண்டிருந்தேன்! எத்தனைப் பாடுகள், எவ்வளவு இடர்கள்! எண்ணிப் பார்த்தாலே கண்கள் நிறைந்துவிடும்.
‘சுவாமி, என் இல்லத்தில் தங்கி நீங்கள் எனக்குச் சிலகாலம் பாடம் சொல்லித்தர வேண்டும்.’
‘அதற்கென்ன? செய்துவிடலாமே?’ என்றார் ஆசாரியர். தமது பத்தினியுடன் ராமானுஜரின் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.
வீட்டில் திருவாய்மொழிப் பாடம் ஆரம்பமானது. வரி வரியாகச் சொல்லி, பொருள் விளக்கி ஆசார்யர் போதித்துக்கொண்டிருந்த நாள்கள். இனிதாகவே இறுதிவரை சென்றிருக்க வேண்டும். விதி யாரை விட்டது?
அன்றைக்குத் தஞ்சம்மாவும் குரு பத்தினி விஜயாவும் ஒன்றாகக் கிணற்றில் நீர் எடுத்துக்கொண்டிருந்தார்கள். குரு பத்தினியின் குடத்தில் இருந்து சில சொட்டு நீர்த் துளிகள் தஞ்சம்மாவின் குடத்துக்குள் விழுந்து வைத்ததில் ஆரம்பித்தது பிரச்னை.
‘என்ன நீங்கள் இப்படி இருக்கிறீர்கள்? ஆசாரம் தெரியாதா உங்களுக்கு? என் குடத்தில் உங்கள் குடத்து நீர்த்துளிகள் விழுந்துவிட்டன பாருங்கள்! ஜாதி வித்தியாசம் பாராமல் யார் யாரையோ வீட்டுக்கு அழைத்து வந்து உட்கார வைத்தால் இப்படித்தான் அபத்தமாகும்’ வெடித்துக் குமுறிவிட்டாள் தஞ்சம்மா.
அழுக்கு முதல் பாவம் வரை அனைத்தையும் கரைக்கிற நீர். அது நிறமற்றது. மணமற்றது. அனாதியானது. அள்ளி எடுக்கும்போது மட்டும் எனது, உனது. என்ன விசித்திரம்!
‘நாம் இதற்குமேலும் இங்கே இருக்கத்தான் வேண்டுமா?’ விஜயா தமது கணவரிடம் கேட்டபோது பெரிய நம்பி யோசித்தார். சம்பவம் நடந்தபோது ராமானுஜர் வீட்டில் இல்லை. நடந்திருப்பது குரு அபசாரம். சர்வ நிச்சயமாக ராமானுஜரால் இதனைத் தாங்கிக்கொள்ள முடியாது.
‘நாம் கிளம்பிச் சென்றுவிட்டால் தஞ்சம்மா இந்தச் சம்பவத்தை அவரிடம் சொல்லாமலே இருந்துவிடுவாள். அவர்களுக்குள் பிரச்னை வராது’ என்றார் அவரது மனைவி.
‘ஆம். நீ சொல்வது சரி.’
கிளம்பிவிட்டார்கள்.
வீட்டுக்கு ராமானுஜர் வந்தபோது குருவும் இல்லை, குரு பத்தினியும் இல்லை.
‘தஞ்சம்மா, நம்பிகள் எங்கே சென்றுவிட்டார்?’
அவளுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. சொற்கள் கைவிட்ட தருணம். ஒரு மாதிரி தன்னை திடப்படுத்திக்கொண்டு, ‘நாம் என்ன ஜாதி, அவர்கள் என்ன ஜாதி? கொஞ்சமாவது பொறுப்பு வேண்டாமா? கிணற்றிலிருந்து நீர் இறைக்கக்கூடத் தெரியவில்லை உங்கள் குரு பத்தினிக்கு.’
நடந்த சம்பவம் அவளது விவரிப்பில் மீண்டும் நிகழ்ந்தது. நொறுங்கிப் போனார் ராமானுஜர்.
‘உன்னைத் திருத்திவிட முடியும் என்று நினைத்தேன். ஆனால் ஜாதி வெறி உன் ரத்தத்தில் ஊறிவிட்டது தஞ்சம்மா. தேடி வந்த ஞானக்கடலைத் திருப்பி அனுப்பியிருக்கிறாய். இந்தப் பாவத்தில் என் பங்கைக் களைய நான் எத்தனை பிறப்பு எடுத்துப் பிராயச்சித்தம் செய்தாலும் போதாது.’
அந்த விரக்திதான் அவரைத் துறவு நோக்கித் திருப்பியது. அந்தக் கோபம்தான் அவரை வீட்டைவிட்டு வெளியே போகவைத்தது. அந்த இயலாமை தந்த அவமான உணர்வுதான் அவரை வீறுகொண்ட இரும்பு மனிதராக்கியது.
விறுவிறுவென்று நடக்க ஆரம்பித்தார். பேரருளாளப் பெருமாள் சன்னிதியில் திருக்கச்சி நம்பி கைங்கர்யத்தில் இருந்தார். இழுத்து நிறுத்தி, தடாலென்று காலில் விழுந்தார்.
‘சுவாமி, எனக்கு சன்னியாச ஆசிரமத்தை வழங்கி அருளுங்கள்.’
அது நடந்தேவிட்டது.
அத்தி வரதர் உறங்கும் அனந்த புஷ்கரணியில் அவர் குளித்தெழுந்தார். தூய காவியுடை தரித்து முக்கோல் பிடித்தார். துறந்தேன், துறந்தேன், துறந்தேன் என்று மூன்று முறை சொல்லி முற்றிலும் வேறொருவராக மாறிப் போனார்.
(தொடரும்)
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
ருசியியல் – 07
எனது ஸ்தூல சரீரத்தின் சுற்றளவைச் சற்றுக் குறைக்கலாம் என்று முடிவு செய்து அரிசிசார் உணவினங்களில் இருந்து கொழுப்புசார் ருசியினத்துக்கு மாறியதைச் சொன்னேன் அல்லவா? அப்போது எனக்கு அறிமுகமாகி நண்பரானவர், சவடன் பாலசுந்தரன். எனக்கு நிகரான கனபாடிகளாக இருந்தவர். நடந்து செல்கிற சமூகத்தின் ஊடாக உருண்டு செல்கிற உத்தமோத்தமர் குலம். ஏதோ ஒரு கட்டத்தில் விழித்தெழுந்து, கொழுப்பெடுத்தால் கொடியிடை அடையலாம் என்பதைத் தெரிந்துகொண்டு கட்சி மாறியவர். எண்ணி ஆறு மாதங்களில் சுமார் முப்பத்தி ஐந்து கிலோ எடையைக் குறைத்த பெரும் சாதனையாளர்.
அவர்தான் எனக்கு அட்சதையைப் போட்டு முதல் முதலில் விரதத்துக்குப் பிடித்துத் தள்ளினார். ‘வயித்த மடிச்சிக் காயப் போடுங்க சார்.’
நமக்குத் துணி மடிக்கக்கூட வராது. இதில் வயிற்றை எங்கே மடிப்பது? அப்புறம் காயப் போடுவது?
‘பண்ணிப் பாருங்க சார். ஒடம்பு சும்மா காத்து மாதிரி லேசாயிடும். அப்ப முன்னவிட நல்லா சாப்டுவிங்க.’
ஆ! இதைச் சொன்னாரே, இது நல்ல விஷயம். இயல்பில் நான் அதிகம் உண்பவனல்ல. ஆனால் அரை வாய் சாப்பிட்டாலும் அது அரச போஜனமாக இருந்தாக வேண்டும். நான் வளர வழியுண்டோ இல்லையோ, நா வளர நாலு பக்கமும் வாசல் திறந்து வைத்தவன்.
ஒரு சமயம் திம்மம் என்ற ஊருக்குப் போயிருந்தேன். ஊர் சின்னதுதான். ஆனால் சரியான மலைக்காடு. ஒரு கடைகண்ணி கண்ணில் படவில்லை. நான் போன முகூர்த்தத்தில் மாநிலம் தழுவிய கடையடைப்பு வேறு நடந்துகொண்டிருந்தபடியால், சுத்தம். ஒரு மாதிரி மதியம் மூன்று மணி வரை வெறும் தண்ணீர் குடித்து சமாளித்துக்கொண்டிருந்தேன். அதற்குமேல் தாங்கவில்லை. இனி பொறுப்பதில்லை தம்பீ, என்னத்தையாவது கொண்டு வா என்று ஓர் ஆதிவாசி குடிசை வாசலில் உட்கார்ந்துவிட்டேன்.
அங்கிருந்த ஒரு சபரிக் கிழவி அன்று என் பசியைத் தீர்த்தாள். பாதி பழுத்த வாழைப்பழத்தை வேகவைத்துச் சாப்பிட்டிருக்கிறீர்களா? அன்று எனக்குக் கிடைத்தது அதுதான். இனிப்பின் சாயலோடு இட்லியின் மிருதுத்தன்மை சேர்ந்த உணவு.
இதற்குத் தொட்டுக்கொள்ள என்னவாவது கிடைத்தால் சிறப்பாக இருக்குமே?
ஆனால் கிழவி பார்த்த பார்வை சரியில்லை. இதற்கெல்லாமா ஒரு ஜென்மம் தொட்டுக்கொள்ளக் கேட்கும்? வேண்டுமானால் சர்க்கரை தருகிறேன் என்றாள். ம்ஹும். அது சரிப்படாது. உப்புமாவுக்கு சர்க்கரை கேட்கிறவர்களையே தேசப்பிரஷ்டம் செய்ய வேண்டுமென்று நினைப்பவன் நான். இதில் வேகவைத்த வாழைப்பழத்துக்குச் சர்க்கரையாவது? அபசாரம்.
வேறென்ன இருக்கிறது என்று கேட்டேன். முதல் நாள் வைத்த ரசத்தைத் தவிர ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டாள்.
ஒரு கணம் யோசித்தேன். வாழைப்பழத்துக்கு ரசம்! ஒரு முயற்சி செய்து பார்த்தால்தான் என்ன? அசட்டுத்தனத்துக்கு ஓர் அழகுண்டு. அதைத் திருட்டுத்தனமாக ரசிக்கவும் முடியும்.
அம்மா, கோபித்துக்கொள்ளாமல் அந்த ரசத்தை எடுத்து வருவீர்களானால் கோடி புண்ணியம் உமக்குண்டு.
அவர் பார்த்த பார்வைதான் கொஞ்சம் நாராசமாக இருந்தது. ஆனால் அந்த ரசம் பிரமாதம். நிறையப் பூண்டு இடித்துப் போட்ட காரசாரமான தூதுவளை ரசம். மறு கொதிப்பில் அதன் ருசி மேலும் கூடியிருக்க வேண்டும்.
நான் அந்த வேகவைத்த பழங்களை ரசத்தில் பிய்த்துப் போட்டேன். இரண்டு நிமிடம் ஊறவிட்டு ரசம் சோறு போலவே அள்ளி அள்ளி உண்டேன். வாழ்நாளில் அப்படியொரு ருசி மகா சமுத்திரத்தில் அதன்பின் முக்குளித்தெழ வாய்க்கவில்லை.
இப்போது யோசித்துப் பார்த்தால், அந்த அபார ருசியை எனக்கு அன்றைய முழுப்பட்டினிதான் அதில் அளித்திருக்க வேண்டும் என்று படுகிறது. ஒரு முழு இருபத்தி நான்கு மணி நேரத்தை நீரால் மட்டுமே வயிற்றை நிரப்பி, இருபத்தி ஐந்தாவது மணிநேரம் வழக்கமாகச் சாப்பிடுவதைச் சாப்பிட்டுப் பாருங்கள்! வழக்கத்தைவிடப் பல மடங்கு ருசிக்கும்.
நம்மூரில் ஒரு பழக்கம். என்னத்தையாவது நல்ல விஷயத்தைச் சொல்லிவைக்க நினைத்தால் உடனே அதை பக்தி பார்சலில் சுற்றிக் கொடுத்துவிடுவார்கள். திங்களானது சிவனுக்குரியது. செவ்வாய் முருகனுக்கு உகந்த தினம். வியாழன் என்றால் குரு. வெள்ளிக்கிழமைக்குத் திருமதி மகாவிஷ்ணு. சனியென்றால் திருமலையப்பன். மற்ற தினங்களில் மேற்படி தெய்வங்கள் சிறு விடுப்பு விண்ணப்பம் அனுப்பிவிடுவார்களா என்றெல்லாம் கேட்கப்படாது. சஷ்டி விரதம். சபரிமலை விரதம். ஏகாதசி விரதம். கிருத்திகை விரதம். எது மிச்சம்? எத்தனையோ இருக்கிறது. இஷ்டத்துக்கு ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டியதுதான்.
நான் ஏகாதசியைத் தேர்ந்தெடுத்துக்கொண்டேன். சும்மா ஒரு இதுக்குத்தான். உண்மையில் எனது ஏகாதசி விரதம் எம்பெருமானுக்கே அத்தனை சரியாகப் புரியாது என்று நினைக்கிறேன்.
விளக்குகிறேன்.
பொதுவாக ஏகாதசி விரதம் என்பதை நமது மகாஜனம் அணுகும் விதம் வேறு விதமானது. ‘ஒரு பொழுது’ என்பதற்கு உண்மையான அர்த்தம், ஒரு வேளை மட்டும் சாப்பிடுவது என்பது. ஆனால், ஒருவேளை மட்டும் சாப்பாடு, மற்ற வேளை வளைத்துக்கட்டி டிபன் என்று ஆல்டர் செய்யப்பட்டுவிட்டது அது. சிலர் காலை உணவை மட்டும் தவிர்த்துவிட்டு மதியம் சாப்பிடுவார்கள். இரவுக்கு இரண்டு பழங்கள், பால்.
இதுவா விரதம்? இதில் அக்கிரமம் என்னவென்றால், ஏகாதசியன்று கொலைப்பட்டினி கிடந்த மாதிரி மறுநாள் காலை சேர்த்து வைத்து கபளீகரம் விடுவார்கள். சும்மா சொல்லிக்கொள்ளவேண்டியது. நானும் விரதம் இருந்தேன்.
இந்த மரபான அக்கிரமத்தை ஒரு வழி பண்ணிவிடுவது என்று முடிவு செய்தேன். எனவே என்னுடைய ஏகாதசி விரதத்தை இவ்வாறாக வகுத்துக்கொண்டேன்:
ஏகாதசிக்கு முதல் நாள் ராத்திரி திருப்தியாகச் சாப்பிட்டுவிடுவது. அதற்குப் பிறகு எதுவும் கிடையாது. தாகமெடுத்தாலும் தண்ணீர், பசித்தாலும் தண்ணீர். ஒன்றுமே தெரியாவிட்டாலும் ஒரு மணி நேரத்துக்கு ஒரு தம்ளர் தண்ணீர்.
பொதுவாக ஏகாதசிக்கு விரதமிருப்பவர்கள் மறுநாள் காலைதான் விரதம் முடிப்பார்கள். நமக்கு அதெல்லாம் இல்லை. நான் விரதம் முடிக்கும் நேரம்தான் எனக்கு ஏகாதசியும் முடியும். எனவே அன்றிரவே. என் கணக்கு சரியாக இருபத்தி நாலு மணிநேரம். முடிந்தது கதை.
ஒரு இருநூறு கிராம் பனீர். இன்னொரு இருநூறு கிராமுக்கு நெய்யில் சமைத்த என்னவாவது ஒரு காய்கறி. இட்டமுடன் தொட்டுக்கொள்ள இதமான வெண்ணெய். சௌகரியமிருந்தால் சாலட் அல்லது சூப். போதவில்லையா? இருபத்தி ஐந்து கிராமுக்கு ஒரு சீஸ் க்யூப். அப்புறம் ஒரு கப் தயிர்.
எனது ஏகாதசி விரதமானது ஏகாதசி தினத்தன்றே இரவு சுமார் பத்து மணிக்குப் பூரணமடையும். அந்த முழுக் கொழுப்புணவுக்குப் பிறகு துவாதசிக் கொண்டாட்டமெல்லாம் கிடையாது. மறுநாள் காலை வெறும் தண்ணீர்.
இதனை என் ஈரோட்டு நண்பர் ஒருவரிடம் சொன்னபோது, ‘அட என்னய்யா நீர், விரதம் முடிக்கத் தெரியாதவராக இருக்கிறீரே. நான் அனுப்புகிறேன் பாரும், எனது விரத முடிப்பு மெனுவை’ என்று ஒன்றை அனுப்பிவைத்தார்.
மிரண்டு போனேன். நாவுக்குச் சேவகம் செய்வதில் நானெல்லாம் அவரிடம் மடிப்பிச்சை ஏந்தவேண்டும். அந்த மகானுபாவரைப் பற்றி அடுத்த வாரம் சொல்கிறேன்.
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)