Pa Raghavan's Blog, page 19

January 19, 2017

பொலிக! பொலிக! 07

பாதையற்ற கானகத்தில் எந்தப் பக்கம் போவது என்று ராமானுஜருக்குப் புரியவில்லை. பகலென்றால் திசை தெரியும். கவிந்த இரவுக்குக் கடவுளைத் தவிர வேறு துணையில்லை. ஆனது ஆகட்டும் என்று அவர் புறப்பட்டார். கால் போன போக்கில் நடந்துகொண்டே இருந்தார்.


கோவிந்தன் சொன்ன தகவலும் அவனுக்கு இருந்த பதற்றமும் வேகமும் திரும்பத் திரும்ப அவரது நினைவில் மோதிக்கொண்டே இருந்தன. கொலைத் திட்டம். இவன் இருக்கவே கூடாது என்று நினைக்குமளவுக்கு அப்படி என்ன செய்தேன்? எத்தனை யோசித்தும் புரியவில்லை.


மீண்டும் வகுப்புக்கு வா என்று வீட்டுக்கு வந்து அழைத்தவர்கள்தாம் காசிக்கு அழைத்துச் சென்று கங்கையில் அழுத்திக் கொல்லத் திட்டம் தீட்டியிருக்கிறார்கள். குருவுக்குத் தெரியாமலா இது நடக்கும்?


‘அண்ணா, என்னை மன்னியுங்கள். திட்டத்தை வகுத்துக் கொடுத்ததே குருவாகத்தான் இருப்பார் என்பது என் சந்தேகம்.’


வழி நெடுக யாதவர் அந்தச் சிலபேரைத் தனியே அழைத்துப் பேசியது. தற்செயலாகத் தான் குறுக்கிட்ட போதெல்லாம் பேச்சை நிறுத்தியது. பயணம் முழுதும் கூடியவரை தன்னையும் ராமானுஜரையும் அதிகம் பேசிக்கொள்ள முடியாதபடிக்குப் பிரித்து வைத்தது. யோசிக்க யோசிக்க கோவிந்தனுக்கு இன்னும் பல காரணங்கள் அகப்பட்டன.


‘இனி என் முகத்திலேயே விழிக்காதே என்று துரத்தியடித்த குரு, நீங்கள் திரும்பி வந்தபோது ஒன்றுமே நடவாததுபோல எப்படிக் கட்டித் தழுவி வரவேற்றார் என்று யோசித்துப் பாருங்கள் அண்ணா. எனக்கு அதுவே திருதராஷ்டிரத் தழுவலாகத்தான் இப்போது படுகிறது.’


ராமானுஜருக்குத் துக்கம் ததும்பியது. வேதத்தில் கரை கண்ட ஞானவித்து. வயதான மனிதர். தன் இருப்பு அத்தனை அச்சத்தைத் தந்திருக்குமா அவருக்கு? அழித்துவிடும் அளவுக்கா?


‘இது நீங்கள் யார் என்று உங்களுக்கே தெரியப்படுத்த நிகழ்ந்த சம்பவமாக இருக்கட்டும். நீங்கள் இருந்தாக வேண்டும் அண்ணா. போய்விடுங்கள். ஓடிவிடுங்கள்.’


திரும்பத் திரும்பச் செவியில் மோதிய கோவிந்தனின் குரல்.


ராமானுஜர் நடந்துகொண்டே இருந்தார். அன்றிரவு முழுதும் நடந்து, மறுநாளும் நடந்து, வானம் இருட்டும் முன் கண் இருட்டிக் கீழே விழுந்தார்.


எத்தனை நேர உறக்கமோ. யாரோ எழுப்புவது போலிருந்தது. விழித்தபோது எதிரே ஒரு வேடர் தம்பதி நின்றிருந்தார்கள்.


‘வெளியூரா?’


‘ஆம் ஐயா. இந்தக் காட்டில் எனக்கு வழி தெரியவில்லை. நான் தெற்கே போகவேண்டியவன்.’


‘நாங்கள் சத்யவிரத க்ஷேத்திரத்துக்குத்தான் போய்க்கொண்டிருக்கிறோம். பேச்சுத் துணைக்கு ஆச்சு. புறப்படுங்கள்’ என்றான் வேடன்.


சத்ய விரத க்ஷேத்திரம். ராமானுஜருக்கு சிலிர்த்துவிட்டது. காஞ்சிக்கு அதுதான் பெயர். எங்கிருந்தோ வந்தான். நானொரு வேடன் என்றான். இங்கிவனை நான் பெற எப்போதோ தவம் புரிந்திருக்கத்தான் வேண்டும்.


உற்சாகமாக அவர்களுடன் ராமானுஜர் புறப்பட்டுவிட்டார்.


மறுநாள் இரவு வரை அவர்கள் பேசிக்கொண்டே நடந்தார்கள். அப்போதும் கானக எல்லை வந்தபாடில்லை. அதே விந்தியம். அதே முரட்டுக் காடு. அதே பாதையற்ற பயணம். போய்ச்சேர எத்தனை மாதங்கள் ஆகப் போகிறதோ தெரியவில்லை.


அன்றிரவு அவர்கள் மூவருக்குமே பயங்கரப் பசி. ஆனால் உண்ண ஒன்றுமில்லை. பருக நீருமற்ற வறண்ட பகுதியாக இருந்தது அது. சகித்துக்கொண்டு இரவைக் கழிக்கப் படுத்தார்கள். விடிவதற்குச் சற்று நேரம் முன்பாக அந்த வேடுவனின் மனைவியின் முனகல் கேட்டது. தாகம். தாங்க முடியாத தாகம். தண்ணீர் வேண்டும்.


‘கொஞ்சம் பொறுத்துக்கொள். பொழுது விடிந்துவிடட்டும். இங்கிருந்து சிறிது தூரத்தில் ஒரு கிணறு இருக்கிறது. அதன் நீர் அமிர்தத்தினும் மேலானதென்று கேள்விப்பட்டிருக்கிறேன்’ என்று வேடுவன் ஆற்றுப்படுத்திக்கொண்டிருந்தது ராமானுஜரின் காதில் விழுந்தது.


சட்டென்று அவர் உதறிக்கொண்டு எழுந்தார். ‘ஐயா நீங்கள் எனக்கு உதவி செய்தவர்கள். உங்கள் மனைவியின் தாகத்தைத் தணிக்கும் புண்ணியமாவது எனக்குக் கிடைக்கட்டும். இருட்டானாலும் பரவாயில்லை. நீங்கள் திசை சொல்லுங்கள். நான் அந்தக் கிணற்றைத் தேடிச் சென்று நீர் எடுத்து வருகிறேன்’ என்றார்.


வேடுவன் புன்னகை செய்தான். குத்துமதிப்பாகக் கை காட்டி வழி சொன்னான்.


ராமானுஜர் நடக்க ஆரம்பித்தார். இந்த அடர் கானகத்தில் யார் கிணறு வெட்டியிருப்பார்கள்? அதுவும் அமிர்தத்தினும் மேலான நீர் உள்ள கிணறாமே?


அரை மணி தேடி அந்தக் கிணற்றைக் கண்டுபிடித்தார். ஆனால் நீர் எடுத்து வர கைவசம் ஒன்றுமில்லை. ஆனது ஆகட்டும் என்று கிணற்றில் இறங்கி, தன்னிரு கைகளில் நீரை அள்ளி ஏந்திக்கொண்டு அலுங்காமல் மேலேறி வந்தார். வந்த வழியே திரும்பிச் சென்று அந்த வேட்டுவப் பெண்ணின் வாயில் நீரை விட்டார்.


‘இவ்வளவுதான் முடிந்ததா?’ என்றாள் அந்தப் பெண்.


‘பிரச்னை இல்லையம்மா! நான் மீண்டும் சென்று நீர் ஏந்தி வருகிறேன்.’


இரண்டாவது முறையும் அரை மணி நடந்து நீர் எடுத்து வந்தார் ராமானுஜர்.


‘ம்ஹும். தாகம் தணியவில்லை. எனக்கு இன்னும் வேண்டும்.’


மூன்றாவது முறை ராமானுஜர் அந்தக் கிணற்றுக்குச் சென்று நீர் எடுத்து வந்து பார்த்தபோது அந்த வேடர் தம்பதி அங்கே இல்லை.


இருட்டில் நடந்துகொண்டே இருந்த களைப்பு. பசி மயக்கம். அப்படியெங்கே கண் காணாமல் போயிருப்பார்கள் என்கிற குழப்பம் தந்த கிறுகிறுப்பு. ராமானுஜர் அப்படியே கண்சொருகிச் சரிந்தார்.


விழித்தபோது விடிந்திருந்தது. வழிகாட்ட உடன் வந்த வேடுவத் தம்பதி பாதி வழியில் பரிதவிக்க விட்டுக் காணாமல் போனது பற்றிக் கவலைப்பட்டுக்கொண்டிருக்க நேரமில்லை. ராமானுஜர் மீண்டும் அந்தக் கிணற்றடியை நோக்கி நடந்தார்.


இப்போது அங்கே நாலைந்து பெண்கள் இருந்தார்கள். தண்ணீர் எடுக்க வந்த உள்ளூர்க்காரர்கள்.


‘அம்மா, இது எந்த இடம்?’


‘நீங்கள் எங்கே செல்லவேண்டும்?’


‘நான் தெற்கே காஞ்சிக்குப் போகவேண்டும் தாயே. வழி தெரியாத விந்தியமலை காட்டுப்பாதையில் சிக்கிக்கொண்டுவிட்டேன்.’


அந்தப் பெண்கள் அவரை வினோதமாகப் பார்த்தார்கள்.


‘சொல்லுங்கள் அம்மா. இது எந்த ஊர்? எந்த இடம்? இங்கிருந்து நான் எப்படிப் போகவேண்டும்?’


‘என்னப்பா நீ அசடாயிருக்கிறாயே. காஞ்சிக்கே வந்து சேர்ந்துவிட்டு, காஞ்சிக்கு வழி கேட்கிறவனுக்கு என்ன பதில் சொல்ல முடியும்?’ என்று கேட்டார்கள்.


(தொடரும்)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 19, 2017 08:30

January 18, 2017

ஜல்லிக்கட்டு

இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்குப் பிறகு தமிழ் இளைஞர்கள் இப்படி உணர்வுபூர்வமாகத் திரண்டெழுந்த சம்பவம் வேறு நிகழ்ந்ததில்லை. எனக்கென்னவோ, ஜல்லிக்கட்டு விவகாரம் என்பது இளைய தலைமுறையின் பல்வேறு அதிருப்திகளின் அடையாளப் பிரதிபலிப்பாகத்தான் தோன்றுகிறது. முல்லைப் பெரியாறு, காவிரி விவகாரங்கள் தொடங்கி நேற்றைய / இன்றைய தாள் பணமற்ற பொருளாதார மண்டையிடிகள் வரை துவண்டு கிடந்த சமூகத்துக்கு ஒரு வெளிப்பாட்டுத் தருணம் தேவைப்பட்டது. அது ஜல்லிக்கட்டானது.


நமது பண்பாட்டு அடையாளங்களை அழிக்க நினைக்கிற எதையும் எதிர்ப்பது நியாயமானதே. எதிர்ப்பை இப்படியான அறவழியில் காண்பிப்பது நமது தலைமுறையின் மன முதிர்ச்சியைக் காட்டுகிறது. அரசியல்வாதிகள் தொடங்கி அத்தனை தரப்பினரும் இளைய சமூகத்திடம் பயில வேண்டிய பாடம் இது. இது அனைத்துத் தளங்களிலும் தொடரவும் பரவவும் வேண்டும்.


பீட்டா போன்ற அமைப்புகளின் உள்நோக்கங்களும் ரகசிய செயல்திட்டங்களும் இன்று ஊருக்கே தெரியும். நமது மண்ணின் மீதும் மக்களின்மீதும் மதிப்புக் கொண்ட அரசாங்கமெனில் இத்தகு ஆதிக்கக் கூலிப்படைகளை அடியோடு களைந்தெறிவதில் இரண்டாம் யோசனை இருக்கக்கூடாது. பிராணி நலன் என்பது ஒரு பாவனை. மாடுகளை மகாலட்சுமியாகத் தொழத் தெரிந்த சமூகம் இது. நமக்கு என்.ஜி.ஓக்கள் பாடம் எடுக்கவேண்டிய அவசியமில்லை.


பிரதமருடனான தமிழக முதல்வரின் இன்றைய பேச்சுவார்த்தை ஒட்டுமொத்தத் தமிழர்களுக்கும் மகிழ்ச்சியளிக்கத்தக்கதாக இருக்கவேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன். இந்த அறப் போராட்டத்தில் வெற்றி காணப்போகிற மாணவர்கள், இதே மன உறுதி, செயல்வேகத்தைத் தமது படிப்பிலும் காண்பித்து அடுத்தத் தலைமுறைக்கு ஆதர்சமாக விளங்க வாழ்த்துகிறேன்.


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 18, 2017 20:58

பொலிக! பொலிக! 06

‘இதோ பார், உனக்குத் தெரியாதது இல்லை. நமது குருவுக்கு வயதாகிவிட்டது. அவரால் மாற்றுக் கருத்துகளோடு மல்லுக்கட்ட முடியாது. அதே சமயம், நீ கோபித்துக்கொண்டு வகுப்புக்கு வராதிருந்தால் நஷ்டம் உனக்குத்தான். இவரளவுக்கு வேதமறிந்தவர்கள் இங்கு வேறு யாருமில்லை என்பதை எண்ணிப் பார்.’


ராமானுஜர் யோசித்தார். அவர்கள் சொல்வது சரிதான். ஆனால் கசப்பின் திரையை இடையே படரவிட்டுக்கொண்டு கல்வியை எப்படித் தொடரமுடியும்?


‘அட என்னப்பா நீ! உன்னைக் கோபித்துக்கொண்டதில் அவருக்கே மிகுந்த வருத்தம். வெளியே காட்டிக்கொள்ள அகங்காரம் தடுக்கிறது. ஆனால் நீ பாடசாலைக்கு வருவதை நிறுத்தியபிறகு மனிதர் தவியாய்த் தவிக்கிறார். எப்போது வேண்டுமானாலும் அழுதுவிடுவார் போலிருக்கிறது.’


ஐயோ என்று பதறி எழுந்தார் ராமானுஜர். தன்னால் ஏற்க இயலாத கருத்துகளைச் சொல்லித்தருகிறவர்தான். என்றாலும், அவர் குரு. அவரது நம்பிக்கைகள் அவருக்கு. அல்லது அவரை நம்புகிறவர்களுக்கு. தன்னால் அவரை முற்றிலும் ஏற்க முடியாதுபோனாலும், முற்றிலும் நிராகரிக்கவும் முடியாது என்று ராமானுஜர் நினைத்தார். குரு என்பவர் தெய்வத்துக்கு மேலே.


‘அதைத்தான் சொல்கிறோம். அவர் சொல்வதைச் சொல்லட்டும். நீ ஏற்பதை ஏற்றுக்கொள். ஏற்க முடியாதவற்றுக்கு இருக்கவே இருக்கிறது உன் சுயபுத்தி. அது கொடுக்கிற அர்த்தங்கள். கிளம்பு முதலில்.’ என்றார்கள்.


ராமானுஜர் மீண்டும் வகுப்புக்குப் போனபோது யாதவப் பிரகாசர் அவரைக் கட்டித்தழுவி வரவேற்றார். ‘நீ இல்லாமல் இந்த வகுப்பே நிறைவாக இல்லை’ என்று சொன்னார்.


ராமானுஜரைப் பொறுத்தவரை அது பகையல்ல. அபிப்பிராய பேதம் மட்டுமே. குருவுடன் வாதம் செய்து வீழ்த்துவதில் அவருக்குச் சற்றும் விருப்பம் இருக்கவில்லை. அதை ஒரு துரதிருஷ்டமாகவே அவர் கருதினார். எனவே மீண்டும் குரு தன்னை அரவணைக்க முன்வந்தபோது அவருக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது.


மீண்டும் வகுப்புகள் தொடங்கின. சிலநாள் எந்தப் பிரச்னையும் இல்லாமல் அமைதியாகவே போனது. யாதவர் மெதுவாக ஆரம்பித்தார்.


‘நாம் காசிக்கு யாத்திரை போனால் என்ன?’


ஓ, போகலாமே என்றார்கள் மாணவர்கள். பாவம் கரைக்கிற காசி. முனிவர்கள் வாழ்கிற காசி. முக்தியளிக்கிற காசி.


‘ராமானுஜா! நீ அவசியம் வரவேண்டும். இந்த யாத்திரை சிறப்படைவதே உன்னிடத்தில்தான் உள்ளது.’


‘தங்கள் சித்தம்’ என்றார் ராமானுஜர்.


வீட்டுக்குப் போய் அம்மாவிடம் சொன்னார். மனைவி தஞ்சம்மாவிடம் சொன்னார். குருகுலத்தில் அனைவரும் காசி யாத்திரை போக முடிவாகியிருக்கிறது.


‘காசி யாத்திரையா? அது வெகுநாள் பிடிக்குமே?’ என்றாள் தஞ்சம்மா.


‘ஆம் தஞ்சம்மா. ஆனால் இது ஓர் அனுபவம். எல்லோருக்கும் எளிதில் கிடைத்துவிடாத அனுபவம். நான் தனியாகப் போகப் போவதில்லை. என் குருநாதரும் உடன் படிக்கும் மாணவர்களும் எப்போதும் பக்கத்தில் இருப்பார்கள். என்னைப் பற்றிக் கவலை வேண்டாம்.’


அவள் தன்னைப் பற்றித்தான் கவலைப்பட்டுக்கொண்டிருந்தாள் என்பதை அப்போது ராமானுஜர் எண்ணிப் பார்க்கவில்லை. அவரது சிந்தனை முற்றிலும் யாத்திரையில் இருந்தது. அது தரப்போகிற பரவசப் பேரனுபவத்தில் இருந்தது.


‘கோவிந்தன் வருகிறானோ?’ என்றார் தாயார் காந்திமதி. ராமானுஜர் பயின்ற அதே பாடசாலையில்தான் அவரது தமக்கை மகன் கோவிந்தனும் படித்துக்கொண்டிருந்தான். அவன் பக்கத்தில் இருந்தால் ராமானுஜனை பத்திரமாகப் பார்த்துக்கொள்வான். பொறுப்பறிந்தவன் என்பது தவிர அண்ணன் மீது அவனுக்கு அளவற்ற பாசமும் உண்டு.


‘அத்தனை பேரும் கிளம்புகிறோம் அம்மா. இது குருவின் விருப்பம். முடியாது என்று சொல்ல நாங்கள் யார்?’


கிளம்பிவிட்டார்கள்.


வேத மந்திரங்களைச் சொல்லிக்கொண்டே நடக்கத் தொடங்கினார்கள். அதிகாலை சூரிய உதயத்துக்கு முன் கிளம்பி உச்சி வேளை வரை நடைப் பயணம். அதன்பிறகு உணவும் ஓய்வும். மீண்டும் மாலை கிளம்பி இருட்டும் வரை நடப்பது. எங்காவது சத்திரங்களில் படுத்துத் தூங்கி, மீண்டும் காலை நடை. ஆங்காங்கே குரு வகுப்பு எடுப்பார். அந்தந்தப் பிராந்தியங்களில் வசிக்கும் மக்களோடு உரையாடுவார்கள். எதிர்ப்படும் கோயில்களில் வழிபாடு.


நாள்கள் வாரங்களாகி மாதங்களைத் தொட்டபோது அவர்கள் விந்திய மலைப் பிராந்தியத்தை அடைந்திருந்தார்கள். மத்தியப் பிரதேசத்து நிலப்பகுதி. இந்தியாவை வட, தென் பிராந்தியங்களாகப் பிரிக்கிற மலைத்தொடர். நடந்துபோகிறவர்களுக்கு அதுதான் பாதை. விந்திய மலையைத் தொட்டு அதன் வழியாகவே உத்தர பிரதேசத்தில் கங்கை பாயும் வாரணாசியை அடைகிற வழி.


இருட்டிய பொழுதில் அவர்கள் மலைக்காட்டில் ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து படுக்க ஒதுங்கினார்கள். நடந்த களைப்பில் ராமானுஜர் படுத்தவுடன் உறங்கிவிட்டார். ஆனால் கோவிந்தன் உறங்கவில்லை. அவனுக்குச் சில குழப்பங்களும் சந்தேகங்களும் இருந்தன. வழி முழுதும் மாணவர்கள் தமக்குள் ரகசியம் பேசியபடியே வந்ததை அவன் கவனித்திருந்தான். அவன் கவனிப்பது தெரிந்தால் சட்டென்று அவர்கள் பேச்சை நிறுத்திவிடுவார்கள். அதேபோல, யாதவருக்கு நெருக்கமான சில மாணவர்கள் அவருடன் தனியே சில சமயம் உரையாடிக்கொண்டிருந்ததை அவன் கவனித்தான். வேதபாடம் தொடர்பான உரையாடலாக இருக்குமோ என்று அவன் பக்கத்தில் போனால் அடுத்தக்கணம் அவர்கள் எழுந்து போய்விடுவார்கள்.


ஒரு சிலருடன் மட்டும் குரு தனியே பேசவேண்டிய அவசியமென்ன? தான் நெருங்கும்போதெல்லாம் பேச்சு துண்டிக்கப்படுவதன் காரணம் என்ன?


அவனது குழப்பத்தின் அடிப்படை அதுதான். அதனாலேயே இரவு நெடுநேரம் தூங்காமல் வெறுமனே கண்மூடிப் படுத்திருப்பதை வழக்கமாக்கிக்கொண்டான். மனிதர்களின் உறக்கத்தை மாய இறப்பாகவே கருதிவிடுகிற சக மனிதர்கள். தன்னிலை மறந்து ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள இரவுப் பொழுதுகளையே அவர்கள் பெரிதும் நம்புகிறார்கள்.


கோவிந்தன் நினைத்தது பிழையல்ல. அன்று அது நடந்தது.


‘நாம் எப்போது கங்கைக் கரையை அடைவோம்?’


‘இன்னும் இருபது நாள்கள் ஆகலாம் என்று குருநாதர் சொன்னார்.’


‘அதற்குமேல் தாங்காது. சென்றடைந்த மறுநாளே ராமானுஜன் கதையை முடித்துவிடவேண்டும்.’


கோவிந்தனுக்குத் தூக்கிவாரிப் போட்டுவிட்டது. அவர்கள் உறங்கும்வரை காத்திருந்தான். பிறகு பாய்ந்து சென்று ராமானுஜரைத் தட்டி எழுப்பினான்.


‘அண்ணா, நீங்கள் ஒரு கணம்கூட இனி இங்கே இருக்கக்கூடாது. உங்களைக் கொல்ல சதி நடக்கிறது. ஓடிவிடுங்கள்’


‘ஐயோ, நீ?’ என்றார் ராமானுஜர்.


‘நீங்கள் காணாமல் போனது பற்றிக் கதைகட்டிவிடவாவது நான் இங்கே இருந்தாக வேண்டும். என்னை நான் பார்த்துக்கொள்வேன். நீங்கள் உடனே கிளம்புங்கள்.’


இறைவன் சித்தம் என்று ராமானுஜருக்குத் தோன்றியது.


(தொடரும்)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 18, 2017 06:30

January 17, 2017

பொலிக! பொலிக! 05

ஜடாயுவுக்கு ராமர் இறுதிச் சடங்கு செய்து மோட்சம் கொடுத்த தலம் அது. திருப்புட்குழி என்று பேர். விஜயராகவப் பெருமாளின் பேரழகைச் சொல்லி முடியாது. வலது தொடையில் ஜடாயுவையும் இடது தொடையில் மரகதவல்லித் தாயாரையும் ஏந்தியிருக்கும் எம்பெருமான். பாடசாலை முடிந்தபிறகு தினமும் கோயிலுக்குப் போய் சேவித்துவிட்டு வரலாம் என்கிற எண்ணமே ராமானுஜருக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தது.


ஆனால் திருப்புட்குழி யாதவப் பிரகாசர் விஜயராகவப் பெருமாளைச் சேவிக்கிற வழக்கம் கொண்டவரல்லர். அவர் அத்வைதி. சிவனைத் தவிர அவருக்கு வேறு தெய்வமில்லை.


ஊர்க்காரர்களுக்கு அவரைத் தெரியும். பெரிய ஞானஸ்தன். வேதம் படித்த விற்பன்னர். பிராந்தியத்தில் அவரளவு வேதத்தில் கரை கண்டவர்கள் யாரும் கிடையாது. பயம் அளிக்கிற மரியாதை என்பது ஒரு விலகல்தன்மையை உடன் அழைத்து வரும். யாதவர் விலகியிருந்தார். கனிவில் இருந்து. சிநேகங்களில் இருந்து. சக மனித உறவுகளில் இருந்து.


நினைவு தெரிந்த தினம் முதல் தனது தந்தை கேசவ சோமயாஜியிடமே பாடம் படித்து வந்த ராமானுஜரை அவரேதான் யாதவப் பிரகாசரிடம் கொண்டுவந்து விட்டுப் போனது.


‘சுவாமி, வேதங்களில் நான் கற்ற மிகச் சொற்பப் பாடங்களை இவனுக்குச் சொல்லிக்கொடுத்திருக்கிறேன். ஆனால் அகக்கண் திறந்துவிடும் அளவுக்கல்ல. அதை நீங்கள்தான் செய்ய முடியும்.’


இளையாழ்வாரை நிமிர்ந்து பார்த்தார் யாதவப் பிரகாசர். தகிக்கும் வெய்யோனின் கன்னத்தில் துளி கிள்ளி எடுத்து வந்து வைத்தாற்போன்ற அவரது கண்களின் சுடர் அவரது வேறெந்த மாணவர்களிடமும் இல்லாதது. தவிரவும் அந்தச் சுடரின்மீது கவிந்துநின்ற விலை மதிப்பற்ற சாந்தம். ஞானத்தின் பூரணத்தை அடைந்தவர்களுக்கு மட்டுமே சாத்தியமான அபூர்வம். இந்தப் பையனுக்கு எப்படி இது? அவருக்குப் புரியவில்லை.


‘உமது மகனுக்கு விவாகம் ஆகிவிட்டதா?’


‘ஆம் சுவாமி. சமீபத்தில்தான்.’


‘சொந்த ஊர் காஞ்சிதானா?’


‘இல்லை. திருப்பெரும்புதூர். பிள்ளை வரம் கேட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாளை வேண்டி, யாகம் செய்து பிறந்தவன் இவன். பிறப்பின் பொருள் படிப்பில் அல்லவா உள்ளது? அதனால்தான் தங்களைத் தேடி வந்திருக்கிறேன்.’


‘நல்லது. விட்டுச் செல்லுங்கள்.’


அது தமிழகத்தில் சோழர்களின் கொடி பறந்துகொண்டிருந்த காலம். மாமன்னன் ராஜேந்திர சோழனும் அவனது மகன் இளவரசர் ராஜாதிராஜ சோழனும் மாநிலத்தின் இண்டு இடுக்கு விடாமல் தமது அதிகாரத்தை நிலைநிறுத்தி ஆட்சி புரிந்துகொண்டிருந்த சமயம். தஞ்சைக்கு அருகே கங்கைகொண்ட சோழபுரம் தலைநகரமாக இருந்தது. வடக்கே ஆந்திரம் வரை நீண்டிருந்தது நாட்டின் எல்லை. மைசூர் முதல் ஈழம் வரை வென்றெடுத்த பிராந்தியங்கள் யாவும் குறுநிலங்களாக அறியப்பட்டன. நிலத்துக்கொரு பிரதிநிதி. நீடித்த நல்லாட்சி. ஆனால் சைவம் தவிர இன்னொரு மதத்துக்குப் பெரிய இடம் கிடையாது. கோயிலற்ற ஊரில்லை, சிவனற்ற கோயிலில்லை.


யாதவப் பிரகாசர் போன்ற மகாபண்டிதர்களுக்கு மிகப்பெரிய செல்வாக்கு இருந்தது. அரசு மானியங்கள் இருந்தன. மாலை மரியாதைகள் இருந்தன. வீதியில் தமது சீடர் குழாத்துடன் நடந்து போனால் மக்கள் தாள் பணிந்து ஒதுங்கி நிற்பார்கள். அது கல்விக்கான மரியாதை. ஞானத்துக்கான மரியாதை.


ஆசூரி கேசவ சோமயாஜிக்குத் தனது மகன் ஒரு சரியான குருகுலத்தில் சேர்ந்துவிட்ட திருப்தி. திருமணத்தை முடித்துவிட்டார். காலக்கிரமத்தில் வேதப்பாடங்களையும் நல்லபடியாகக் கற்றுத் தேறிவிடுவான். இதற்குமேல் என்ன? தள்ளாத உடலத்தைத் தள்ளிக்கொண்டு போக சிரமமாக இருக்கிறது. நான் விடைபெற்றுக்கொள்கிறேன் என்று ஒருநாள் அமரராகிப் போனார்.


கடைசிவரை அவருக்குத் தெரியாது. பாடசாலைக்குப் போக ஆரம்பித்த சிறிது காலத்திலேயே ராமானுஜருக்கும் யாதவருக்கும் முட்டிக்கொண்ட சங்கதி. வியாதியின் படுக்கையில் கிடந்தவர் காதுகளுக்கு ராமானுஜர் இதை எடுத்துச் செல்லவில்லை. மனத்துக்குள் ஓர் இறுக்கம் இருந்தது. குருவுக்கும் தனக்கும் சரிப்பட்டு வராமல் போய்க்கொண்டிருக்கிற வருத்தம். பாடசாலையில் மற்ற மாணவர்கள் அப்படியில்லை. சொல்லிக்கொடுப்பதை அப்படியே ஏந்திக்கொண்டுவிடுகிறவர்களாக அவர்கள் இருந்தார்கள். தனக்கு மட்டும் ஏன் வினாக்கள் எழுகின்றன? தனக்கு மட்டும் ஏன் வேறு பொருள் தோன்றுகிறது? மனத்தில் உதிப்பதைச் சொல்லாமலும் இருக்க முடிவதில்லை. ஆசிரியர் போதிக்கிற எதுவும் எளிய விஷயங்களல்ல. வேதத்தின் ஒவ்வொரு பதமும் ஒரு தீக்கங்கைத் தன்னகத்தே ஏந்தியிருப்பது. உரித்தெடுத்து உள்வாங்குவது எளிதல்ல.


அது பிரம்மம் உணரச் செய்கிற பாதை. பிழைபடுவது தவறல்லவா?


தந்தையின் மறைவுக்குப் பிறகு சிறிதுகாலம் ராமானுஜர் பாடசாலைக்குப் போகாமல் இருந்தார். போய் என்ன செய்வது? தினமும் விவாதம், தினமும் தர்க்கம். ஆசிரியரின் மனக்கசப்புக்கு இலக்காவது. பிழைபட்ட பொருள்களை அவர் தீவிரம் குறையாமல் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருக்கிறாரே என்கிற ஏக்கம்.


‘ஆனால் அவன் வகுப்புக்கு வராததை நாம் நிம்மதி என்று எடுத்துக்கொண்டு விடமுடியாது குருவே. பயல் வெளியே போய் அத்வைத துவேஷம் வளர்ப்பான். வேதங்களுக்கு நீங்கள் எடுத்துச் சொல்லும் அரும்பொருளையெல்லாம் நிராகரித்து, தன் இஷ்டத்துக்கு வேறு அர்த்தம் சொல்லுவான். அதையும் தலையாட்டி ஏற்க ஒரு கூட்டம் தயாராக இருக்கும்.’


யாதவரின் சீடர்கள் ஓய்வுப் பொழுதில் ஓதி விட்டார்கள். யாதவருக்கே அந்தக் கவலை இருந்தது. தனது கருத்துகளை மறுத்துச் சொல்லும் ராமானுஜருடன் ஒருநாளும் அவரல் எதிர்வாதம் புரியமுடிந்ததில்லை. வாயை மூடு என்று அடக்கிவிடத்தான் முடிகிறது. இயலாமைக்குப் பிறந்த வெற்றுக் கோபம்.


அந்த அடக்குமுறை பிடிக்காதபடியால் மாணவன் விலகிப் போயிருக்கிறான். அப்படியே விட்டுவிடவும் முடியவில்லையே?


அவருக்குத் தெளிவாகத் தெரிந்தது. இவன் சாதாரணமான மாணவன் அல்ல. பிராந்தியத்தில் தனது புகழை அழித்துத் தனியொரு தேஜஸுடன் தனியொரு ஞான சமஸ்தானம் நிறுவும் வல்லமை கொண்டவன். அத்வைத சித்தாந்தத்தின் அடிப்படைகளையே அசைத்து ஆட்டம் காணச் செய்துவிடக்கூடியவன்.


‘அவன் எதற்கு இருக்கவேண்டும்?’ என்றார்கள் அவரது அருமைச் சீடர்கள்.


யாதவப் பிரகாசர் யோசித்தார். மிகத் தீவிரமாக.


‘சரி, அவனை சமாதானப்படுத்தி திரும்ப அழைத்து வாருங்கள். நாம் அவனையும் அழைத்துக்கொண்டு காசிக்கு யாத்திரை செல்வோம்.’


‘ஐயா காசிக்கு எதற்கு இப்போது?’


அவர் சில வினாடிகள் கண்மூடி அமைதியாக இருந்தார். கொலையுள்ளம் என்றாலும் குரு முகமல்லவா? எப்படிப் புரியவைப்பது? மிகக் கவனமாகச் சொற்களைத் தேர்ந்தெடுத்து வெளியிட்டார்.


‘கங்கை பாவங்களைக் கரைக்கவல்லது. மூழ்கி இறந்தோருக்கு மோட்சம் தரவல்லது.’


(தொடரும்)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 17, 2017 08:30

January 16, 2017

பொலிக! பொலிக! 04

‘நான் உங்களை இனி மாமா என்று அழைக்க முடியாதல்லவா? பேரருளாளனே உங்களை யதிராஜன் (துறவிகளின் அரசர்) என்று சொல்லிவிட்டான்!’


தாசரதி தயங்கித் தயங்கித்தான் பேசினான். ராமானுஜர் புன்னகை செய்தார். வாய் திறந்து அவர் சொல்லவில்லை. துறந்தேன், துறந்தேன், துறந்தேன் என்று மும்முறை சொல்லி மூழ்கி எழுந்தபோது ‘முதலியாண்டானைத் தவிர’ என்று அவர்தம் மனத்துக்குள் சொல்லிக்கொண்டதை நினைத்துப் பார்த்தார். வைணவத்தை வாழ்க்கையாக ஏற்றதில் அவன் ராமானுஜருக்கு முன்னோடி. தமக்கையின் மகன். சிறு வயதில் இருந்தே ராமானுஜரின் நிழலாகத் தொடர்ந்து வருகிறவன். அவரது ஞானத்தின் ஜீவப் பிரவாகம் பெருக்கெடுக்கும்போதெல்லாம் முந்தி வந்து முக்குளித்தவன்.


‘முதலியாண்டான்! உறவென்பது நமக்கு இனி அவன் ஒருவனோடு மட்டுமே. ஆனால் அவன் உலகம் உண்ட பெருவாயனாக இருக்கும்போது உறவில்லை என்று யாரைச் சொல்ல முடியும்?’


தாசரதியிடம் மேலும் சில வினாக்கள் இருந்தன. அவற்றுள் முதன்மையானது, துறவு ஏற்ற மறுகணம் அவர் யாரை நினைத்தார் என்பது. தன்னையா? தன்னைக் காட்டிலும் உயர்ந்த பாகவதோத்தமரான கூரத்தாழ்வானையா? அல்லது தமது இன்னொரு தமக்கையின் மகனான வரத தேசிகனையா?


மூவருமே ராமானுஜர் துறவு கொண்டதும் முதல் முதலில் வந்து சீடர்களானவர்கள். அவரது உயிர் மூச்சேபோல் உடனிருப்பவர்கள். இரவும் பகலும் அவர்களுக்கு யதிராஜரைத் தவிர வேறு நினைவே கிடையாது. அவருக்குச் சேவை செய்வதைக் காட்டிலும் வேறு திருப்பணி கிடையாது. ராமானுஜர் துறவுக் கோலம் கொள்வதற்கு முன்பிருந்தே அப்படித்தான். அது ஞானத்தின் காந்த வடிவம். ஈர்க்கும் வல்லமை இயல்பிலேயே உண்டு.


‘தயவுசெய்து சொல்லுங்கள். ஒருவேளை வேறு யாரையாவது நினைத்தீர்களோ?’


தனது மானசீகத்தில் என்றோ குருவாக வரித்துவிட்ட ஆளவந்தாரையேகூட ராமானுஜர் எண்ணியிருக்கலாம். எப்பேர்ப்பட்ட தருணம்! எத்தனை பேருக்கு இதெல்லாம் வாய்க்கும்!


‘ஆனால் சொல்லிவிடுங்கள். நீங்கள் யாரை நினைத்தீர்கள்?’


மீண்டும் புன்னகை. அர்த்தம் பொதிந்த பேரமைதி. சொல்லலாமா? முதலியாண்டான் கேட்கிறான். என்னிடம் இருக்கிற பதில் அவனை எவ்விதமாக பாதிக்கும்? அவர் கண்மூடி, தன் நினைவில் மூழ்கத் தொடங்கினார்.


கண்ணுக்குள் மிதந்து வந்தது கோவிந்தனின் உருவம். கோவிந்த பட்டராகக் காளஹஸ்தியில் சிவஸ்மரணையில் கிடக்கிற பூர்வாசிரமத்துத் தம்பி. சித்தி மகன். ஒரு கணம் ராமானுஜருக்கு சிலிர்த்துவிட்டது. கோவிந்தன் இல்லாவிட்டால் அவர் கிடையாது. பதினெட்டு வயதிலேயே கங்கையில் போயிருக்கக்கூடும்.


‘ராமானுஜா, எழுந்திரு. உடனே என்னோடு வா. இவர்கள் உன்னைக் கொல்லத் திட்டம் தீட்டியிருக்கிறார்கள்.’


அசரீரிபோல் உட்செவியில் மீண்டும் ஒலிக்கிற அதே குரல்.


கோவிந்தனைக் கடைசியாகப் பார்த்தது அன்றைக்குத்தான். குருவும் சீடர்களுமாகப் புனித யாத்திரை போய்க்கொண்டிருந்த தினங்களில் ஒரு நள்ளிரவுப் பொழுது. தன்னை எழுப்பி, தப்பிக்கவைத்து அனுப்பிவிட்டுத் திரும்பிச் சென்ற கோவிந்தன். அதன்பிறகு அவன் திரும்பவேயில்லை. ஒரு செய்தி மட்டும் வந்தது.


‘ராமானுஜா! உன் சித்தி மகன் கங்கையில் குளிக்கிறபோது அவனுக்கு ஒரு சிவலிங்கம் கிடைத்ததாம். திரும்பி வருகிற வழியில் அவன் காளஹஸ்தியில் பெருமானைச் சேவித்து, அங்கேயே கைங்கர்யம் செய்யத் தீர்மானித்து இருந்துவிட்டான்’


இது எப்படி, எப்படி என்று ராமானுஜருக்கு ஆறவேயில்லை. தன்னினும் உயர்ந்த வைணவசீலராக கோவிந்தன் வரக்கூடுமென்று அவர் நினைத்திருந்தார். சட்டென்று எங்கோ தடம் மாறிவிட்டது.


எத்தனை முறை பேசியிருப்பேன்! எத்தனை விவாதித்திருப்போம்! அத்வைதமும் அதன் ஏற்கவியலாத எல்லைப்பாடுகளும்.


யாதவப் பிரகாசரிடம் ராமானுஜர் பாடம் படிக்கச் சென்றபோது கோவிந்தனும் அதே பள்ளியில் வந்து சேர்ந்தவன்தான். காஞ்சியில் யாதவரைக் காட்டிலும் சித்தாந்தங்களில் கரைகண்டவர் யாருமில்லை என்று ஊரே சொல்லிக்கொண்டிருந்தது. என்னவோ, ராமானுஜருக்கு மட்டும் ஆசாரியருடன் ஆரம்பத்தில் இருந்தே ஒத்துப் போகவில்லை. கோவிந்தனுக்கு அது தெளிவாகப் புரிந்தது. இவன் வேறு. இவன் சிந்தனை வேறு. இவனது வார்ப்பு வேறு. ஒரு சுயம்புவை ஆராய்ந்து அறிவது கடினம்.


அன்றைக்கு சாந்தோக்ய உபநிடதப் பாடம் நடந்துகொண்டிருந்தது. யாதவப் பிரகாசர் வரி வரியாகச் சொல்லி பொருள் விளக்கிக்கொண்டிருந்தார். கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்த ராமானுஜருக்குச் சட்டென்று ஓரிடத்தில் ஆசிரியர் விளக்கிய பொருள் திடுக்கிட வைத்துவிட்டது.


கப்யாஸம் புண்டரீகம் ஏவ மக்ஷிணி.


‘கப்யாஸம் என்றால் குரங்கின் பின்புறம்’ என்றார் யாதவப் பிரகாசர். அவர் படித்தது அதுதான். பிழை அவர்மீதல்ல. வழி வழியாகச் சொல்லித்தரப்பட்ட அர்த்தம்.


‘ஆனால் குருவே, இது அனர்த்தமாக அல்லவா உள்ளது? கப்யாஸம் என்பதை கபி ஆஸம் என்று ஏன் பிரிக்கிறீர்கள்? அதை கம் – பிபதி – இதி – ஆஸ: என்று பிரித்துப் பாருங்கள். இது சுடர்மிகு சூரிய மண்டலத்தில் உறையும் பரம்பொருளின் நயனங்களுக்கு உவமை சொல்லும் விதமாகப் புதுப்பிறப்பு எடுக்கும். கதிரவனைக் கண்டு தாமரை மலர்வது போல விரிந்தவை பரமனின் கண்கள் என்கிறது அந்தப் பதம்.’


யாதவர் திடுக்கிட்டுப் போனார். ‘இங்கே நான் குருவா? நீ குருவா?’ என்று கேட்டார்.


மீண்டும் வேறொரு நாள். இப்போது தைத்திரிய உபநிடதம்.


‘சத்யம் ஞானம் அனந்தம் பிரம்ம’ என்றார் யாதவர். சத்தியம், ஞானம் உள்ளிட்ட அனைத்தும் பிரம்மத்தை மட்டுமே பொருளாகக் கொண்டவை என்பது அவரது விளக்கம்.


‘இல்லை ஐயா. அவை பிரம்மத்தின் பொருளாக இருக்க இயலாது. அவை பிரம்மத்தின் பல்வேறு குணங்கள்.’


‘எப்படிச் சொல்கிறாய்?’


‘ஒரு பூ வெள்ளை வெளேரென்று இருக்கலாம். கமகமவென்று மணப்பதாக இருக்கலாம். பார்த்தாலே பரவசமூட்டும் பேரழகு உடையதாக இருக்கலாம். ஆனால் மணம் மட்டும் பூவல்ல. நிறம் மட்டும் பூவல்ல. அழகு பூவல்ல. பன்மைத்தன்மை பூவின் இயல்பு. ஆனால் பூ ஒன்றுதான். அதே மாதிரிதான் இதுவும். சத்யம், ஞானமெல்லாம் பிரம்மத்தின் பண்புகள். ஆனால் பிரம்மம் ஒன்றுதான். அதுதான் மூலம். அதுதான் எல்லாம்.’


அன்றைக்கே யாதவப் பிரகாசருக்கு ராமானுஜரைப் பிடிக்காமல் போய்விட்டது. ஒன்று இவன் இருக்கவேண்டும். அல்லது நான் இருக்கவேண்டும்.


‘ஐயோ எங்களுக்கு நீங்கள் வேண்டும் குருவே. நாம் அவனைக் களைந்துவிடலாம்’ என்றார்கள் மாணவர்கள்.


அதுதான் சரி என்று யாதவர் முடிவெடுத்த சமயத்தில் ராமானுஜரின் தந்தை இறந்துபோனார்.


(தொடரும்)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 16, 2017 08:32

January 14, 2017

பொலிக! பொலிக! 03

ராமானுஜருக்கு, திருக்கச்சி நம்பியிடம் சீடனாகச் சேரவேண்டும் என்பது விருப்பம். கடவுளோடு பேசுகிற நம்பி. கைங்கர்யமே வாழ்க்கையாக இருக்கிற நம்பி. அவர் சாப்பிட வந்தபோதுதான் தஞ்சம்மா அபசாரம் செய்துவிட்டாள். ஆனாலும் அவர் பெரியவர். சிறுமைகளால் சலனப்படுகிற மனிதரல்லர். தவிரவும் அவருக்கு ராமானுஜரைப் பற்றித் தெரியும். அவரது பண்பு தெரியும். பக்தி தெரியும். பணிவு தெரியும். தவறாக எடுக்க மாட்டார்.


ராமானுஜர் அவர் தாள்பணிந்து விருப்பத்தைச் சொன்னார். ‘சுவாமி, என்னைத் தாங்கள் சீடனாக ஏற்கவேண்டும். எனக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்துவைக்க வேண்டும்.’


அவர் யோசித்தார். ‘நாளை வாருங்கள். பேரருளாளனிடம் கேட்டுச் சொல்கிறேன்’


ஆனால் கடவுள் சித்தம் வேறாக இருந்தது. ‘உம்மை திருவரங்கம் பெரிய நம்பியிடம் போகச் சொல்லி அருளாளன் உத்தரவு கொடுத்திருக்கிறான்’ என்றார் திருக்கச்சி நம்பி.


‘பெரிய நம்பியா! வைணவ குலத்தின் ஒப்பற்ற பெருந்தலைவர் ஆளவந்தாரின் சீடரா?’


‘ஆம். அவரேதான்.’


மறுவினாடியே புறப்பட்டுவிட்டார் ராமானுஜர். வீட்டுக்குப் போகவில்லை. மனைவியிடம் சொல்லவில்லை. மாற்றுத் துணிகூட எடுத்துக்கொள்ளவில்லை. தனது குரு யாரென்று தெரிந்துவிட்ட பிறகு மற்ற அனைத்தும் அர்த்தமற்றது.


காஞ்சியில் கிளம்பி அன்று மாலைக்குள் அவர் மதுராந்தகம் வரை நடந்துவிட்டார்.


அது தேடிப் போன தெய்வம் குறுக்கே வந்த தருணம். எதிரே வருவது யார்? பெரிய நம்பியா? அவரேதானா? கடவுளே!


‘இதை என்னால் நம்பமுடியவில்லை சுவாமி. என்னைத் தேடியா நீங்கள் இங்கு வந்துகொண்டிருந்தீர்கள்?’


‘ஆம். எதையும் நாம் தீர்மானிப்பதில்லை. அரங்கன் சித்தம். ஆசார்ய சித்தம்.’


ராமானுஜர் ஒரு கணம் கண்மூடி நின்றார். அவருக்கு அனைத்தும் புரிந்தது. வைணவ உலகின் நிகரற்ற பெரும் ஆசார்யராக விளங்கிய ஆளவந்தார் காலமாகிவிட்டார். அடுத்து ஆள வருவார் யார் என்று வைணவ உலகமே எதிர்பார்த்து நின்ற வேளை. இதோ, அரங்க நகருக்கு வா என்று பெரிய நம்பி வந்து நிற்கிறார்!


‘என்னை உங்கள் சீடனாக ஏற்றுக்கொண்டு எனக்கு நீங்கள் பஞ்ச சம்ஸ்காரங்களைச் செய்துவைக்க வேண்டும். இது பேரருளாளன் சித்தம் என்று திருக்கச்சி நம்பி சொன்னார்.’


‘அதற்கென்ன? இப்போதே காஞ்சிக்குப் போவோம். அருளாளன் சன்னிதியில் நடக்கட்டும்.’


‘இல்லை சுவாமி. அந்தத் தாமதத்தைக் கூட என்னால் பொறுக்க இயலாது. இன்றே, இங்கே, இப்போதே.’


பெரிய நம்பி புன்னகை செய்தார். மதுராந்தகம் ஏரி காத்த ராமர் சன்னிதியில் அது நடந்தது.


ராமானுஜரின் மனம் பக்திப் பரவசத்தில் விம்மிக்கொண்டிருந்தது. இந்தத் தருணத்துக்காக எத்தனைக் காலம் அவர் ஏங்கிக்கொண்டிருந்தேன்! எத்தனைப் பாடுகள், எவ்வளவு இடர்கள்! எண்ணிப் பார்த்தாலே கண்கள் நிறைந்துவிடும்.


‘சுவாமி, என் இல்லத்தில் தங்கி நீங்கள் எனக்குச் சிலகாலம் பாடம் சொல்லித்தர வேண்டும்.’


‘அதற்கென்ன? செய்துவிடலாமே?’ என்றார் ஆசாரியர். தமது பத்தினியுடன் ராமானுஜரின் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.


வீட்டில் திருவாய்மொழிப் பாடம் ஆரம்பமானது. வரி வரியாகச் சொல்லி, பொருள் விளக்கி ஆசார்யர் போதித்துக்கொண்டிருந்த நாள்கள். இனிதாகவே இறுதிவரை சென்றிருக்க வேண்டும். விதி யாரை விட்டது?


அன்றைக்குத் தஞ்சம்மாவும் குரு பத்தினி விஜயாவும் ஒன்றாகக் கிணற்றில் நீர் எடுத்துக்கொண்டிருந்தார்கள். குரு பத்தினியின் குடத்தில் இருந்து சில சொட்டு நீர்த் துளிகள் தஞ்சம்மாவின் குடத்துக்குள் விழுந்து வைத்ததில் ஆரம்பித்தது பிரச்னை.


‘என்ன நீங்கள் இப்படி இருக்கிறீர்கள்? ஆசாரம் தெரியாதா உங்களுக்கு? என் குடத்தில் உங்கள் குடத்து நீர்த்துளிகள் விழுந்துவிட்டன பாருங்கள்! ஜாதி வித்தியாசம் பாராமல் யார் யாரையோ வீட்டுக்கு அழைத்து வந்து உட்கார வைத்தால் இப்படித்தான் அபத்தமாகும்’ வெடித்துக் குமுறிவிட்டாள் தஞ்சம்மா.


அழுக்கு முதல் பாவம் வரை அனைத்தையும் கரைக்கிற நீர். அது நிறமற்றது. மணமற்றது. அனாதியானது. அள்ளி எடுக்கும்போது மட்டும் எனது, உனது. என்ன விசித்திரம்!


‘நாம் இதற்குமேலும் இங்கே இருக்கத்தான் வேண்டுமா?’ விஜயா தமது கணவரிடம் கேட்டபோது பெரிய நம்பி யோசித்தார். சம்பவம் நடந்தபோது ராமானுஜர் வீட்டில் இல்லை. நடந்திருப்பது குரு அபசாரம். சர்வ நிச்சயமாக ராமானுஜரால் இதனைத் தாங்கிக்கொள்ள முடியாது.


‘நாம் கிளம்பிச் சென்றுவிட்டால் தஞ்சம்மா இந்தச் சம்பவத்தை அவரிடம் சொல்லாமலே இருந்துவிடுவாள். அவர்களுக்குள் பிரச்னை வராது’ என்றார் அவரது மனைவி.


‘ஆம். நீ சொல்வது சரி.’


கிளம்பிவிட்டார்கள்.


வீட்டுக்கு ராமானுஜர் வந்தபோது குருவும் இல்லை, குரு பத்தினியும் இல்லை.


‘தஞ்சம்மா, நம்பிகள் எங்கே சென்றுவிட்டார்?’


அவளுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. சொற்கள் கைவிட்ட தருணம். ஒரு மாதிரி தன்னை திடப்படுத்திக்கொண்டு, ‘நாம் என்ன ஜாதி, அவர்கள் என்ன ஜாதி? கொஞ்சமாவது பொறுப்பு வேண்டாமா? கிணற்றிலிருந்து நீர் இறைக்கக்கூடத் தெரியவில்லை உங்கள் குரு பத்தினிக்கு.’


நடந்த சம்பவம் அவளது விவரிப்பில் மீண்டும் நிகழ்ந்தது. நொறுங்கிப் போனார் ராமானுஜர்.


‘உன்னைத் திருத்திவிட முடியும் என்று நினைத்தேன். ஆனால் ஜாதி வெறி உன் ரத்தத்தில் ஊறிவிட்டது தஞ்சம்மா. தேடி வந்த ஞானக்கடலைத் திருப்பி அனுப்பியிருக்கிறாய். இந்தப் பாவத்தில் என் பங்கைக் களைய நான் எத்தனை பிறப்பு எடுத்துப் பிராயச்சித்தம் செய்தாலும் போதாது.’


அந்த விரக்திதான் அவரைத் துறவு நோக்கித் திருப்பியது. அந்தக் கோபம்தான் அவரை வீட்டைவிட்டு வெளியே போகவைத்தது. அந்த இயலாமை தந்த அவமான உணர்வுதான் அவரை வீறுகொண்ட இரும்பு மனிதராக்கியது.


விறுவிறுவென்று நடக்க ஆரம்பித்தார். பேரருளாளப் பெருமாள் சன்னிதியில் திருக்கச்சி நம்பி கைங்கர்யத்தில் இருந்தார். இழுத்து நிறுத்தி, தடாலென்று காலில் விழுந்தார்.


‘சுவாமி, எனக்கு சன்னியாச ஆசிரமத்தை வழங்கி அருளுங்கள்.’


அது நடந்தேவிட்டது.


அத்தி வரதர் உறங்கும் அனந்த புஷ்கரணியில் அவர் குளித்தெழுந்தார். தூய காவியுடை தரித்து முக்கோல் பிடித்தார். துறந்தேன், துறந்தேன், துறந்தேன் என்று மூன்று முறை சொல்லி முற்றிலும் வேறொருவராக மாறிப் போனார்.


(தொடரும்)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 14, 2017 08:30

ருசியியல் – 07

எனது ஸ்தூல சரீரத்தின் சுற்றளவைச் சற்றுக் குறைக்கலாம் என்று முடிவு செய்து அரிசிசார் உணவினங்களில் இருந்து கொழுப்புசார் ருசியினத்துக்கு மாறியதைச் சொன்னேன் அல்லவா? அப்போது எனக்கு அறிமுகமாகி நண்பரானவர், சவடன் பாலசுந்தரன். எனக்கு நிகரான கனபாடிகளாக இருந்தவர். நடந்து செல்கிற சமூகத்தின் ஊடாக உருண்டு செல்கிற உத்தமோத்தமர் குலம். ஏதோ ஒரு கட்டத்தில் விழித்தெழுந்து, கொழுப்பெடுத்தால் கொடியிடை அடையலாம் என்பதைத் தெரிந்துகொண்டு கட்சி மாறியவர். எண்ணி ஆறு மாதங்களில் சுமார் முப்பத்தி ஐந்து கிலோ எடையைக் குறைத்த பெரும் சாதனையாளர்.


அவர்தான் எனக்கு அட்சதையைப் போட்டு முதல் முதலில் விரதத்துக்குப் பிடித்துத் தள்ளினார். ‘வயித்த மடிச்சிக் காயப் போடுங்க சார்.’


நமக்குத் துணி மடிக்கக்கூட வராது. இதில் வயிற்றை எங்கே மடிப்பது? அப்புறம் காயப் போடுவது?


‘பண்ணிப் பாருங்க சார். ஒடம்பு சும்மா காத்து மாதிரி லேசாயிடும். அப்ப முன்னவிட நல்லா சாப்டுவிங்க.’


ஆ! இதைச் சொன்னாரே, இது நல்ல விஷயம். இயல்பில் நான் அதிகம் உண்பவனல்ல. ஆனால் அரை வாய் சாப்பிட்டாலும் அது அரச போஜனமாக இருந்தாக வேண்டும். நான் வளர வழியுண்டோ இல்லையோ, நா வளர நாலு பக்கமும் வாசல் திறந்து வைத்தவன்.


ஒரு சமயம் திம்மம் என்ற ஊருக்குப் போயிருந்தேன். ஊர் சின்னதுதான். ஆனால் சரியான மலைக்காடு. ஒரு கடைகண்ணி கண்ணில் படவில்லை. நான் போன முகூர்த்தத்தில் மாநிலம் தழுவிய கடையடைப்பு வேறு நடந்துகொண்டிருந்தபடியால், சுத்தம். ஒரு மாதிரி மதியம் மூன்று மணி வரை வெறும் தண்ணீர் குடித்து சமாளித்துக்கொண்டிருந்தேன். அதற்குமேல் தாங்கவில்லை. இனி பொறுப்பதில்லை தம்பீ, என்னத்தையாவது கொண்டு வா என்று ஓர் ஆதிவாசி குடிசை வாசலில் உட்கார்ந்துவிட்டேன்.


அங்கிருந்த ஒரு சபரிக் கிழவி அன்று என் பசியைத் தீர்த்தாள். பாதி பழுத்த வாழைப்பழத்தை வேகவைத்துச் சாப்பிட்டிருக்கிறீர்களா? அன்று எனக்குக் கிடைத்தது அதுதான். இனிப்பின் சாயலோடு இட்லியின் மிருதுத்தன்மை சேர்ந்த உணவு.


இதற்குத் தொட்டுக்கொள்ள என்னவாவது கிடைத்தால் சிறப்பாக இருக்குமே?


ஆனால் கிழவி பார்த்த பார்வை சரியில்லை. இதற்கெல்லாமா ஒரு ஜென்மம் தொட்டுக்கொள்ளக் கேட்கும்? வேண்டுமானால் சர்க்கரை தருகிறேன் என்றாள். ம்ஹும். அது சரிப்படாது. உப்புமாவுக்கு சர்க்கரை கேட்கிறவர்களையே தேசப்பிரஷ்டம் செய்ய வேண்டுமென்று நினைப்பவன் நான். இதில் வேகவைத்த வாழைப்பழத்துக்குச் சர்க்கரையாவது? அபசாரம்.


வேறென்ன இருக்கிறது என்று கேட்டேன். முதல் நாள் வைத்த ரசத்தைத் தவிர ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டாள்.


ஒரு கணம் யோசித்தேன். வாழைப்பழத்துக்கு ரசம்! ஒரு முயற்சி செய்து பார்த்தால்தான் என்ன? அசட்டுத்தனத்துக்கு ஓர் அழகுண்டு. அதைத் திருட்டுத்தனமாக ரசிக்கவும் முடியும்.


அம்மா, கோபித்துக்கொள்ளாமல் அந்த ரசத்தை எடுத்து வருவீர்களானால் கோடி புண்ணியம் உமக்குண்டு.


அவர் பார்த்த பார்வைதான் கொஞ்சம் நாராசமாக இருந்தது. ஆனால் அந்த ரசம் பிரமாதம். நிறையப் பூண்டு இடித்துப் போட்ட காரசாரமான தூதுவளை ரசம். மறு கொதிப்பில் அதன் ருசி மேலும் கூடியிருக்க வேண்டும்.


நான் அந்த வேகவைத்த பழங்களை ரசத்தில் பிய்த்துப் போட்டேன். இரண்டு நிமிடம் ஊறவிட்டு ரசம் சோறு போலவே அள்ளி அள்ளி உண்டேன். வாழ்நாளில் அப்படியொரு ருசி மகா சமுத்திரத்தில் அதன்பின் முக்குளித்தெழ வாய்க்கவில்லை.


இப்போது யோசித்துப் பார்த்தால், அந்த அபார ருசியை எனக்கு அன்றைய முழுப்பட்டினிதான் அதில் அளித்திருக்க வேண்டும் என்று படுகிறது. ஒரு முழு இருபத்தி நான்கு மணி நேரத்தை நீரால் மட்டுமே வயிற்றை நிரப்பி, இருபத்தி ஐந்தாவது மணிநேரம் வழக்கமாகச் சாப்பிடுவதைச் சாப்பிட்டுப் பாருங்கள்! வழக்கத்தைவிடப் பல மடங்கு ருசிக்கும்.


நம்மூரில் ஒரு பழக்கம். என்னத்தையாவது நல்ல விஷயத்தைச் சொல்லிவைக்க நினைத்தால் உடனே அதை பக்தி பார்சலில் சுற்றிக் கொடுத்துவிடுவார்கள். திங்களானது சிவனுக்குரியது. செவ்வாய் முருகனுக்கு உகந்த தினம். வியாழன் என்றால் குரு. வெள்ளிக்கிழமைக்குத் திருமதி மகாவிஷ்ணு. சனியென்றால் திருமலையப்பன். மற்ற தினங்களில் மேற்படி தெய்வங்கள் சிறு விடுப்பு விண்ணப்பம் அனுப்பிவிடுவார்களா என்றெல்லாம் கேட்கப்படாது. சஷ்டி விரதம். சபரிமலை விரதம். ஏகாதசி விரதம். கிருத்திகை விரதம். எது மிச்சம்? எத்தனையோ இருக்கிறது. இஷ்டத்துக்கு ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டியதுதான்.


நான் ஏகாதசியைத் தேர்ந்தெடுத்துக்கொண்டேன். சும்மா ஒரு இதுக்குத்தான். உண்மையில் எனது ஏகாதசி விரதம் எம்பெருமானுக்கே அத்தனை சரியாகப் புரியாது என்று நினைக்கிறேன்.


விளக்குகிறேன்.


பொதுவாக ஏகாதசி விரதம் என்பதை நமது மகாஜனம் அணுகும் விதம் வேறு விதமானது. ‘ஒரு பொழுது’ என்பதற்கு உண்மையான அர்த்தம், ஒரு வேளை மட்டும் சாப்பிடுவது என்பது. ஆனால், ஒருவேளை மட்டும் சாப்பாடு, மற்ற வேளை வளைத்துக்கட்டி டிபன் என்று ஆல்டர் செய்யப்பட்டுவிட்டது அது. சிலர் காலை உணவை மட்டும் தவிர்த்துவிட்டு மதியம் சாப்பிடுவார்கள். இரவுக்கு இரண்டு பழங்கள், பால்.


இதுவா விரதம்? இதில் அக்கிரமம் என்னவென்றால், ஏகாதசியன்று கொலைப்பட்டினி கிடந்த மாதிரி மறுநாள் காலை சேர்த்து வைத்து கபளீகரம் விடுவார்கள். சும்மா சொல்லிக்கொள்ளவேண்டியது. நானும் விரதம் இருந்தேன்.


இந்த மரபான அக்கிரமத்தை ஒரு வழி பண்ணிவிடுவது என்று முடிவு செய்தேன். எனவே என்னுடைய ஏகாதசி விரதத்தை இவ்வாறாக வகுத்துக்கொண்டேன்:


ஏகாதசிக்கு முதல் நாள் ராத்திரி திருப்தியாகச் சாப்பிட்டுவிடுவது. அதற்குப் பிறகு எதுவும் கிடையாது. தாகமெடுத்தாலும் தண்ணீர், பசித்தாலும் தண்ணீர். ஒன்றுமே தெரியாவிட்டாலும் ஒரு மணி நேரத்துக்கு ஒரு தம்ளர் தண்ணீர்.


பொதுவாக ஏகாதசிக்கு விரதமிருப்பவர்கள் மறுநாள் காலைதான் விரதம் முடிப்பார்கள். நமக்கு அதெல்லாம் இல்லை. நான் விரதம் முடிக்கும் நேரம்தான் எனக்கு ஏகாதசியும் முடியும். எனவே அன்றிரவே. என் கணக்கு சரியாக இருபத்தி நாலு மணிநேரம். முடிந்தது கதை.


ஒரு இருநூறு கிராம் பனீர். இன்னொரு இருநூறு கிராமுக்கு நெய்யில் சமைத்த என்னவாவது ஒரு காய்கறி. இட்டமுடன் தொட்டுக்கொள்ள இதமான வெண்ணெய். சௌகரியமிருந்தால் சாலட் அல்லது சூப். போதவில்லையா? இருபத்தி ஐந்து கிராமுக்கு ஒரு சீஸ் க்யூப். அப்புறம் ஒரு கப் தயிர்.


எனது ஏகாதசி விரதமானது ஏகாதசி தினத்தன்றே இரவு சுமார் பத்து மணிக்குப் பூரணமடையும். அந்த முழுக் கொழுப்புணவுக்குப் பிறகு துவாதசிக் கொண்டாட்டமெல்லாம் கிடையாது. மறுநாள் காலை வெறும் தண்ணீர்.


இதனை என் ஈரோட்டு நண்பர் ஒருவரிடம் சொன்னபோது, ‘அட என்னய்யா நீர், விரதம் முடிக்கத் தெரியாதவராக இருக்கிறீரே. நான் அனுப்புகிறேன் பாரும், எனது விரத முடிப்பு மெனுவை’ என்று ஒன்றை அனுப்பிவைத்தார்.


மிரண்டு போனேன். நாவுக்குச் சேவகம் செய்வதில் நானெல்லாம் அவரிடம் மடிப்பிச்சை ஏந்தவேண்டும். அந்த மகானுபாவரைப் பற்றி அடுத்த வாரம் சொல்கிறேன்.


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 14, 2017 03:28

January 13, 2017

பொலிக! பொலிக! 02

சரி, துறந்துவிடலாம் என்று ராமானுஜர் முடிவு செய்தார்.


ஊரே அதிர்ந்து நிற்கப் போகிறது. உறவு ஜனம் மொத்தமும் பழிக்கப் போகிறது. தஞ்சம்மா பிழிந்து பிழிந்து அழுவாள். அவளது பெற்றோர் வாய்விட்டுக் கதறுவார்கள். வயிறெரிந்து சபிப்பார்கள். அக்னி சாட்சியாக மணந்த ஒரு பெண்ணை மனப்பூர்வமாக விட்டு விலகிச் செல்வது எப்பேர்ப்பட்ட பாவம் என்று சாஸ்திர உதாரணங்களுடன் கூடிக் கூடிப் பேசிக்கொள்வார்கள். எல்லாம் நடக்கும். எதையும் தவிர்க்க முடியாது.


‘ஆனால் நான் இதனைச் செய்தே தீரவேண்டும் தாசரதி! இது நான் எனக்கே இட்டுக்கொண்டிருக்கும் கட்டளை. அர்த்தமற்ற இல்லற வாழ்வில் எனது தினங்களை வீணடித்துக்கொண்டிருப்பது பெரும் பிழை. தஞ்சம்மாவுக்கு வாழ்க்கை புரியவில்லை. மனிதர்களைப் புரியவில்லை. மனிதர் வாழ்வை மலரச் செய்வதற்காகவே பிறந்திருக்கும் மகான்களை இனம்காணத் தெரியவில்லை. அவள் ஜாதி பார்க்கிறாள். குலத்தில் உயர்ந்தவனா, குடியில் உயர்ந்தவனா என்று யோசிக்கிறாள். என்னால் தாங்க முடியவில்லை.’


அவர் குமுறிக்கொண்டிருந்தார். தாசரதிக்குப் புரிந்தது. கூரத்தாழ்வானுக்குப் புரிந்தது. ஏனெனில் அவர்கள் வைணவம் புரிந்தவர்கள். ராமானுஜரின் நிழலைப் போல் உடன் செல்பவர்கள். வருணங்களை அவர் பொருட்படுத்துவதில்லை. வாழ்க்கைத் தரம் பார்ப்பதில்லை. நீ ஒரு பாகவதனா? உன்னைச் சேவித்து, உனக்குத் தொண்டாற்றுவதே என் முதற்பணி என்று முடிவு செய்து வாழ்ந்துகொண்டிருப்பவர்.


தஞ்சம்மாவின் பிரச்னை வேறு. பக்தராக இருந்தாலும் அவர் பிராமணரா என்று பார்க்கிறவள் அவள். பிழை அவள்மீதல்ல. வளர்ப்பு அப்படி. சூழல் அப்படி. காலம் அப்படி. குல வழக்கம் அப்படி.


அன்றைக்கு அது நடந்தது.


‘ஐயா, இன்று என் வீட்டுக்கு நீங்கள் சாப்பிட வரவேண்டும்.’


காஞ்சிப் பேரருளாளப் பெருமாள் சன்னிதியில் விசிறி வீசும் கைங்கர்யம் செய்துகொண்டிருந்த திருக்கச்சி நம்பியிடம் ராமானுஜர் கேட்டார். அவர் மனத்தில் சில திட்டங்கள் இருந்தன. பிறப்பால் வைசியரான திருக்கச்சி நம்பி, தமது பக்தியால் பரமனுக்கு மிக நெருக்கத்தில் இருந்தவர். காஞ்சி அருளாளனுடன் தனியே மானசீகத்தில் உரையாடக்கூடியவர். அவர் பேசுவது பெரிதல்ல. அவன் பதில் சொல்லுவான். அதுதான் பெரிது. இது ஊருக்கே தெரிந்த விஷயம். எத்தனையோ பேர் அவரிடம் வந்து ‘பெருமாளிடம் கேட்டுச் சொல்லுங்கள்’ என்று தமது சொந்தப் பிரச்னைகளைச் சொல்லி, தீர்வு கேட்டுப் போவார்கள்.


திருக்கச்சி நம்பியை குருவாகப் பெற்று, அவரிடம் பஞ்ச சம்ஸ்காரம் செய்துகொள்ள வேண்டும் என்று ராமானுஜர் விரும்பினார். பஞ்ச சம்ஸ்காரம் என்றால் ஐந்து அங்கங்கள் கொண்ட ஒரு சடங்கு. அதனைச் செய்துகொண்டால்தான் வைணவ நெறிக்கு உட்பட்டு வாழத் தொடங்குவதாக அர்த்தம்.


வலது தோளில் சக்கரமும் இடது தோளில் சங்கும் தரிப்பது முதலாவது. நெற்றி, வயிறு, மார்பு, கழுத்து, இரு தோள்கள், பின் கழுத்து, பின் இடுப்புப் பகுதிகளில் பெருமாளின் திருநாமங்களைச் சொல்லி, திருமண் தரிப்பது அடுத்தது. மூன்றாவது, பிறந்தபோது வைத்த பெயரை விடுத்து, தாஸ்ய நாமம் பெறுவது. அடுத்தது மந்திரோபதேசம். இறுதியாக, திரு ஆராதனம் என்று சொல்லப்படுகிற யாக சம்ஸ்காரம்.


எளிய சடங்குகள்தாம். ஆனால் குருமுகமாக இவற்றை ஏற்றுக் கடைப்பிடிப்பதே மரபு.


‘என்னை ஆட்கொள்வீர்களா? எனக்குப் பஞ்ச சம்ஸ்காரம் செய்து வைப்பீர்களா?’ என்று அவரிடம் கேட்கவேண்டும். அதற்காகத்தான் ராமானுஜர் திருக்கச்சி நம்பியை வீட்டுக்கு அழைத்தார்.


‘அதற்கென்ன, வருகிறேன்’ என்றார் திருக்கச்சி நம்பி.


ராமானுஜர் பரபரப்பானார். ஆசார்யர் வருகிறார். அமுது தயாராகட்டும் என்று மனைவியிடம் சொல்லிவிட்டு இலை பறித்து வர தோட்டத்துக்குப் போனார். அவர் போய்த் திரும்பும் நேரத்துக்குள் நம்பி அவரது வீட்டுக்கு வந்துவிட்டதுதான் விதி.


‘வாருங்கள்’ என்றாள் தஞ்சம்மா.


‘ராமானுஜன் என்னை அழைத்திருந்தார்.’


‘தெரியும், உட்காருங்கள்.’


‘அவர் வீட்டில் இல்லையா?’


‘இப்போது வந்துவிடுவார். காத்திருக்கலாமா அல்லது…’


‘எனக்குக் கோயிலில் வேலை இருக்கிறது. அதிகம் தாமதிக்க முடியாது.’


எனவே அவர் சாப்பிட அமர்ந்தார். எனவே தஞ்சம்மா பரிமாறினாள். சில நிமிடங்களில் உண்டு முடித்துவிட்டு அவர் கிளம்பிவிட்டார்.


‘நல்லது. அவர் வந்தால் சொல்லிவிடுங்கள்.’


போய்விட்டார்.


தஞ்சம்மா அவர் அமர்ந்து உண்ட இடத்தில் சாணமிட்டு எச்சில் பிரட்டினாள். அவருக்காகச் சமைத்த பாத்திரங்களைக் கிணற்றடிக்கு எடுத்துச் சென்று கழுவிக் கவிழ்த்து வைத்தாள். தலைக்குக் குளித்து வீட்டுக்குள் வந்து மீண்டும் தமக்காகச் சமைக்கத் தொடங்கினாள்.


அதிர்ந்து போனார் ராமானுஜர். எப்பேர்ப்பட்ட பாவம் இது! அவர் மகானல்லவா! குருவல்லவா! அவர் அமர்ந்த இடத்தைத் துடைத்து, அவருக்காகச் சமைத்ததில் மீதம் வைக்காமல் கழுவிக் கவிழ்த்து, தலைக்குக் குளித்து..


‘வேறென்ன செய்வார்கள்? அவர் வைசியரல்லவா?’ என்றாள் தஞ்சம்மா.


நொறுங்கிப் போனார்.


‘தவறு தஞ்சம்மா! குலத்தில் என்ன இருக்கிறது? பிறப்பால் ஒருவருக்கு எந்த ஏற்றமும் கிடையாது. எப்படி வாழ்கிறார்கள் என்று பார். வாழ்க்கையை எத்தனை அர்த்தமுள்ளதாக்குகிறார்கள் என்று பார். அவர் பேரருளாளனுக்கு நெருங்கியவர். நாம் அவருக்கு நெருக்கமாகவாவது இருக்க வேண்டாமா?’


அவள் மரபுக்கு நெருக்கமாக இருக்க மட்டுமே விரும்பினாள். சொல்லிக்கொடுத்த ஆசார ஒழுக்கங்களுக்கு மட்டுமே விசுவாசமாக இருக்க எண்ணினாள்.


மீண்டும் ஒரு சம்பவம். இம்முறை ஓர் ஏழைத் தொழிலாளி.


‘பசிக்கிறது என்கிறான். வீட்டில் என்ன இருக்கிறது?’ என்று உள்ளே வந்து கேட்டார் ராமானுஜர்.


‘உங்களுக்கு இதே வேலையாகப் போய்விட்டது. இங்கே கொடுப்பதற்கு ஒன்றும் இல்லை. இனி சமைத்தால்தான் உண்டு.’


‘பழைய சாதம் இருக்கிறதா பார். அதுகூடப் போதும். பாவம், பசியில் கண்ணடைத்து நிற்கிறான்.’


‘பழைய சாதமா? அதுவும் இல்லை’ என்று சொல்லிவிட்டு தஞ்சம்மா போய்விட்டாள்.


ராமானுஜருக்கு சந்தேகம். எதற்கும் தேடிப் பார்ப்போம் என்று சமையல் கட்டுக்குச் சென்று இருந்தவற்றைத் திறந்து பார்த்தார். நிறையவே இருந்தது.


ஆக, பொய் சொல்லியிருக்கிறாள்! கடவுளே, பசிக்கு மருந்திடுவது அனைத்திலும் உயர்ந்த தருமம் அல்லவா! அதைக்கூடவா இவள் செய்யமாட்டாள்?


அப்போதே அவர் மனம் வெறுத்துப் போனார். உச்சமாக இன்னொரு சம்பவம் அடுத்தபடி நடந்தேறியது. அன்று முடிவு செய்ததுதான்.


சரி, துறந்துவிடலாம்.


(தொடரும்)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 13, 2017 08:30

January 12, 2017

பொலிக! பொலிக! 01

 


விடியும் நேரம் அவர் சாரங்கபாணி கோயிலை நோக்கி விரைந்துகொண்டிருந்தார். குடந்தைத் திருநகரில் கோயில் கொண்ட பெருமாள். மல்லாண்ட திண்தோள் மணிவண்ணன் மல்லாக்கப் படுத்த கோலத்தில் காட்சியளிக்கிற தலம் அது. எத்தனை தொன்மையானது! எத்தனை ஆழ்வாரால் பாடப்பெற்ற தலம்!


காட்டுமன்னார்கோயிலில் இருந்து குடந்தைக்கு வருகிற வழியிலெல்லாம் அவருக்கு வேறு நினைவே இல்லை. சார்ங்கமெனும் வில்லாண்ட பெருமானை தரிசிக்கப் போகிறோம் என்கிற நினைவே அவருக்குப் சகலத்தையும் மறக்கச் செய்துவிட்டது. அவரால் பசி, தூக்கம் போன்ற உணர்வுகளை மட்டுமல்ல; ஐம்புலன்களை மட்டுமல்ல; அதற்கும் மேலே சிந்தனைக் குதிரையையும் அடக்கி ஓரிடத்தில் நிறுத்தி வைக்க முடியும். தேவைப்பட்டால் அதை இல்லாமலேயே அடித்து வீழ்த்தவும் முடியும். அவர் ஒரு யோகி. மிகப் பெரிய யோகி. எட்டு அங்கங்கள் கொண்ட யோகக்கலையை முற்றிலும் பயின்றவர். அனைத்தினும் மேலாக பக்தி யோகத்தில் தன்னைக் கரைத்தவர்.


பட்டு விரித்துக் காட்டும் சேலை வியாபாரியின் லாகவத்தில் இயற்கை விரித்திருந்த அகண்ட பெரும் காவிரிக் கரையோரம் அவர் நடந்து கொண்டிருந்தபோது குடந்தையின் அழகு அவர் கண்ணில் படவில்லை. சலசலத்து ஓடும் நதியின் கரையெங்கும் விரிந்த வயல்வெளிகளும் அவற்றுக்கு அரண் போலச் சூழ்ந்து நின்ற தென்னையும் வாழையும் யாரையும் ஒரு கணம் நின்று நோக்கச் செய்யும். அவர் நிற்கவில்லை. பெருமானே! பெருமானே! என்று பரிதவித்து விரைந்துகொண்டிருந்தார்.


கோயிலை நெருங்கியபோது அவரது நடை மேலும் வேகம் கொண்டது. பாய்ந்து சென்று பெருமானைத் தூக்கி விழுங்கிவிடும் வேகம். அது கண்ணின் பசி. எண்ணமெங்கும் வியாபித்திருப்பவனை ஏந்தியெடுத்து நெஞ்சுக்குள் சீராடும் பேரழகுப் பசி. அவருக்கு வாயாரக் கொஞ்ச வேண்டும். நெக்குருகிப் பாடவேண்டும். பக்திப் பரவசத்தில் தன்னைக் கற்பூரமாக்கிக் கரைத்துக் காணாமல் செய்துவிட வேண்டும்.


ஆனால் மொழி தோற்கடித்துவிடுகிறது. பெருமானே! பெருமானே! என்று கதறுவதைத் தவிர வேறெதுவும் செய்ய முடிவதில்லை. ஆழ்வார்கள் பாடியிருக்கிறார்களாமே? அது மொத்தம் நாலாயிரமாமே? ஒவ்வொரு வரியிலும் உயிரைச் சேமித்து வைத்திருக்கிறார்களாமே? எல்லாம் சொல்லக் கேள்வி. ஒன்றும் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. என்ன பிறப்போ, என்ன வாழ்க்கையோ.


எண்ணியபடி அவர் சன்னிதிக்குள் நுழைந்தபோது பொளேரெனப் பிடறியில் யாரோ அடித்தாற்போல அப்படியே திகைத்து நின்றுவிட்டார். உள்ளே யாரோ பாடிக்கொண்டிருந்தார்கள்.


ஆரா அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே

நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே…


ஆரா அமுதம்! ஐயோ, இந்த பெறற்கரிய பெருங்கருணையாளனை வேறெப்படி வருணிப்பது? இதைவிடப் பொருத்தமான ஒரு முதல்சொல் இருந்துவிட முடியுமா!


அப்படியே கண்மூடி நின்றார். அவர்கள் பாடிக்கொண்டே இருந்தார்கள். பத்துப் பாசுரங்கள். பாடி முடித்து, தீர்த்தப் பிரசாதம் வாங்கிக்கொண்டு வெளியே வந்தவர்களை அவர் நெருங்கினார்.


‘ஐயா இது என்ன? குருகூர்ச் சடகோபன் சொன்ன ஓராயிரத்தில் பத்து என்று முடித்தீர்களே, மிச்சம் தொள்ளாயிரத்தித் தொண்ணூறு பாசுரங்களும் உங்களுக்குத் தெரியுமா?’


‘இது நம்மாழ்வாரின் திருவாய்மொழி. மொத்தம் ஆயிரத்துக்கும் சற்று மேலே என்கிறார்கள். எங்களுக்கு இந்தப் பத்துதான் தெரியும்.’


‘என்றால், அனைத்தும் யாருக்குத் தெரியும்?’


‘தெரியவில்லை ஐயா!’


அவர் கண்களிலிருந்து கரகரவென நீர் வழிந்தது. அர்த்த ரூபமான ஆயிரம் பாடல்களில் வெறும் பத்து! அதுகூடத் தனக்கு இத்தனைக் காலம் தெரிந்திருக்கவில்லை. என்ன பிறப்பு இது!


அவர்களுக்கு அந்த யோகியின் மனம் புரிந்துபோனது. பக்தியின் மிகக் கனிந்த பேரானந்த நிலையில் இருப்பவர். பாசுரத்தின் அழகில் எப்படித் தன்னைக் கரைத்துக்கொண்டுவிட்டார்!


‘ஐயா, கவலைப்படாதீர்கள். நாதமுனி என்றொரு மகான் இந்த மண்ணில் பிறப்பார் என்றும், அவர்மூலம் ஆழ்வார்களின் அத்தனை பாசுரப் பாற்கடல்களும் இப்பூவுலகில் மீண்டும் பாயும் என்றும் எங்கள் முன்னோர்கள் எங்களுக்குச் சொல்லியிருக்கிறார்கள். அக்காலம் வரும்வரை நாம் பொறுத்திருப்போம்! அது கிடைக்கும்போது அள்ளிப் பருகுவோம்’


அவர் திகைத்துவிட்டார். நாதமுனி! நானா…. நானே தானா?! என்னைத்தான் சொல்கிறார்களா! எனக்கா அந்தக் கொடுப்பினை! இவர்கள் சொல்வது நிஜமா?


அவரால் நம்பமுடியவில்லை. அடுத்தக் கணம் அவர் காவிரிக் கரையை விடுத்து, தாமிரவருணி பாயும் கரையை நோக்கிப் பாய்ந்துவிட்டார். நம்மாழ்வார் அவதரித்த குருகூர்.


‘ஐயனே, ஒரு பாசுரம் என்னை இங்கு இழுத்து வந்தது. காலத்தின் காற்றுப் பைகளில் பொதிந்திருக்கும் உமது பாசுரங்கள் முழுவதையும் புகட்டி அருள மாட்டீரா?’


நம்மாழ்வார் பிறந்தது முதலே பேசாத ஞானி. பிற்பாடு அவரைத் தேடி மதுரகவி ஆழ்வார் குருகூருக்கு வந்தபோது எண்ணி நாலு வார்த்தை பேசியவர். ஆனால், நான்கு வேதங்களின் பொருளையும் தமது நான்கு நூல்களின் சாரமாக்கித் தந்தவர். ஆண்டாண்டு காலமாக மோனத்தவமிருந்து ஆனிப் பொன்னேபோல் வந்து நின்ற நாதமுனியிடம் மானசீகத்தில் அவர் திருவாய் மலர்ந்தார்.


‘எழுதிக்கொள் நாதமுனி! நான் புனைந்தவையோடுகூட பன்னிரு ஆழ்வார்களின் அத்தனைப் பாசுரங்களும் உன்மூலம் உலகை அடையவேண்டும் என்பதே உன் பிறப்பின் சாரம்.’


நெக்குருகிப் போன நாதமுனி, பரபரவென அவர் சொல்லச் சொல்ல எழுதத் தொடங்கினார். திருவாய்மொழியில் தொடங்கியது அது.


பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்

நலியும் நரகமும் நைந்த நமனுக்கிங் கியாதொன்று மில்லை

கலியும் கெடும்கண்டு கொள்மின் கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்

மலியப் புகுந்திசை பாடி யாடி யுழிதரக் கண்டோம்.


சொல்லிக்கொண்டே வந்தபோது நாதமுனியின் கையில் ஒரு சிலை வந்து அமர்ந்தது.


‘என்ன பார்க்கிறாய்? இது உன் காலத்துக்கு முன் பிறந்த ஒருவரின் சிலையல்ல. உன் காலத்தைச் சேர்ந்தவரின் சிலையுமல்ல. உனக்கு இரு நூற்றாண்டுகளுக்குப் பிறகு வரவிருக்கிற ஒருவரின் சிலை. உன்மூலம் உயிர் பெறவிருக்கும் இப்பாசுரங்களை உலகெல்லாம் ஒலிக்கச் செய்யப் போகிறவரின் சிலை.’


ராமானுஜரின் பெயர் அங்கு பேசப்படவில்லை. ஆனால் கலியின் வலிவைத் தகர்க்கப் போகிற பெரும் சக்தியாகப் பின்னாளில் அவர் உதிக்கவிருப்பதற்குக் கட்டியம் கூறியது சம்பவம் அது.


(தொடரும்)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 12, 2017 08:45

January 9, 2017

ருசியியல் – 06

இன்றைக்குச் சற்றேறக்குறைய இருபது இருபத்தியிரண்டு வருஷங்களுக்கு முன்னால் ஒருமுறை உத்தியோக நிமித்தம் கௌஹாத்திக்குப் போகவேண்டியிருந்தது. அது ஒரு பொதுத்தேர்தல் சமயம். பத்திரிகையாள லட்சணத்துடன் நாலைந்து வடக்கத்தி மாகாணங்களில் சுற்றிவிட்டு, அப்படியே மேற்கு வங்கம் போய், அங்கிருந்து கௌஹாத்தி.


நமக்கு வேலையெல்லாம் பிரமாதமில்லை. எங்கு போனாலும் போஜனம்தான் பிராணாவஸ்தை உண்டாக்கும். யோசித்துப் பார்த்தால் பெரும்பாலான வெளியூர்ப் பிரயாணங்களின்போது நான் ஞானப்பழம் தேடியலைந்த முருகப்பெருமானாகத்தான் இருந்திருக்கிறேன். ஞானப்பழம் கிட்டாத பிராந்தியங்களிலும் வாழைப்பழம் கிட்டிவிடும் என்பதே நமக்குள்ள ஆசுவாசம்.


ஒரு தாவர ஜந்துவின் சிக்கல்கள் அனந்தம். லட்டு நிகர்த்த புவியில் வசிக்கும் மனுஷகுமாரன்களில் அறுதிப் பெரும்பான்மையினர் மாமிச பட்சிணிகள் என்பதே காரணம். என்ன செய்ய? மைனாரிடி மகானுபாவர்களுக்கு எப்போதும் சிக்கல்; எல்லா விஷயத்திலும் சிக்கல். இதனாலேயே எங்கு போவதென்றாலும் முதற்காரியமாக அங்குள்ள சைவ உணவகங்களைப் பற்றித்தான் விசாரிப்பேன். கைவசம் நாலைந்து போஜனாலயங்களின் பெயர்களையாவது முகவரியோடு கேட்டு எழுதி எடுத்துக்கொள்ளாமல் இந்தத் தேர் எங்கும் கிளம்பாது.


ஆனால் அஸ்ஸாமுக்குப் போனபோது அதற்கு சாத்தியமில்லாமல் போய்விட்டது. அங்கே எனக்குத் தெரிந்தவர்களும் கிடையாது; என்னை அறிந்தவர்களும் கிடையாது. எம்பெருமான் ஒருத்தனைத் தவிர. சரி, அவன் நம்மை அளித்துக்காப்பான் என்று கிளம்பிவிட்டேன். அந்தப் பிரகஸ்பதியோ, அந்நேரம் பார்த்து மழைக்கால விடுமுறையில் போய்விட, என்பாடு பேஜாராகிப் போனது.


போய்ச் சேர்ந்த முதல் நாள் ஒரு சைவ உணவகத்தைத் தேடி சுமார் நாலு மணி நேரம் அலைந்தேன். அதுவும் அடித்துக் கவிழ்த்த பெருமழையில். ஒவ்வொரு இடத்திலும் உள்ளே போய்த்தான் விசாரிக்க வேண்டியிருந்தது. உத்தமோத்தமர்கள் ஒருத்தராவது பெயர்ப் பலகையை ஆங்கிலத்தில் எழுதியிருக்க வேண்டுமே? ம்ஹும். எல்லா போர்டுகளும் குப்புறத் தொங்கும் வவ்வால் எழுத்துக்களாலேயே அலங்கரிக்கப்பட்டிருந்தன.


அன்று நான் கண்ட அஸ்ஸாமியர்கள் மொழி விஷயத்தில் சமரசமே விரும்பாதவர்கள். எழுத்தானாலும் பேச்சானாலும் மண்ணின் மொழி மட்டும்தான். மருந்துக்கும் இங்கிலீஷ் கிடையாது. மறந்துபோய்க் கூட ஹிந்தி கிடையாது. எனக்குத் தமிழைத் தாண்டி மேற்படி இரு மொழிகளில் ஒன்றைச் சுமாராகப் பேச வரும். இன்னொன்றை எழுத்துக்கூட்டிப் படிக்க வரும். என்ன பிரயோஜனம்? அஸ்ஸாமி தெரியாதவனுக்கு அங்கே அன்னப் பிராப்தி கிடையாது என்றது ஊழ்.


அன்றைக்கெல்லாம் ரொம்ப சிரமப்பட்டுவிட்டேன். அசட்டுத் தித்திப்பும் அரைப் புளிப்பும் சேர்ந்த கொழுக்கட்டை மாதிரியான ஒரு நொறுக்குத் தீனி கௌஹாத்தி ரயில் நிலையத்தில் அகப்பட்டது. அப்புறம் இரண்டு நேந்திரம்பழங்களைச் சேர்த்து ஒட்டிய அளவில் காயா பழமா என்று தெரியாத ஸ்திதியில் ஏதோ ரக வாழை. தப்பித்தவறிக்கூட ருசித்துவிடலாகாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு விளைந்திருக்க வேண்டும். இந்த இரண்டையும் ஒரு பைநிறைய வாங்கி வைத்துக்கொண்டு நாளெல்லாம் தின்றுகொண்டிருந்தேன். கொட்டும் மழையில் இடையிடையே புருஷலட்சண காரியத்தையும் பார்த்தபடிக்கு அன்றைய பொழுதை ஒருவாறு நிறைவுசெய்த நேரம், உள்ளூர் பத்திரிகை நிருபர் ஒருவரின் சகாயத்தால் ஒரு சைவ உணவகத்துக்கு வழி சித்தித்தது.


யார் பெத்த பிள்ளையோ. தென் தமிழ்க்கோடியில் இருந்து வந்திருந்த ஜீவாத்மாவை ஒருவேளையாவது ஒழுங்காகச் சாப்பிட வைத்து அழகு பார்க்க நினைத்து அவரே என்னை அழைத்துப் போனார். போகிற வழியெல்லாம் அஸ்ஸாமிய உணவு வகைகளின் அருமை பெருமைகளைச் சொல்லிக்கொண்டு வந்தார்.


அங்கே அரிசிதான் பிரதானம். நம்மைப் போலத்தான். ஆனால் முழுத்தாவர உணவு விரும்பிகள் அநேகமாகக் கிடையாது. எல்லா உணவகங்களிலும் மீன் உண்டு. கறி உண்டு. வெஜிடேரியன் உணவகம் என்று சொல்லப்பட்ட இடங்களிலும்கூட முட்டை அவசியம் உண்டு.


எம்பெருமானே என்று என் அந்தராத்மா அலறியது.


பிரச்னையில்லை; உங்களுக்கு சுத்த சைவ வகையறாக்களை நான் வாங்கித் தருகிறேன் என்று அவர் உத்தரவாதமளித்தார்.


உணவகமானது, நான் தங்கியிருந்த இடத்திலிருந்து முப்பது நிமிட தூரத்தில் வந்து சேர்ந்தது. உள்ளே சென்று அமர்ந்ததும் நண்பர் நானாவித ஐட்டங்களை எனக்காக ஆர்டர் செய்தார். மொஹுரா பித்தா (Mohura Pitha) என்கிற பூரண கொழுக்கட்டை பாணியிலான ஒன்று. ஆனால் அதில் வெல்லப் பூரணம் இல்லை. சர்க்கரையும் தேங்காயும் சேர்ந்த பூரணம். சாக்கோர் கர் (Xakor Khar). இது வாழைக்காயைச் சீவி, வெயிலில் காயப்போட்டு, கருவாடாக்கி பிறகு அதனோடு பாலக் கீரையைச் சேர்த்து வதக்கிச் செய்யப்படுகிற பொரியல். முற்றிலும் கடுகு எண்ணெயால் சமைக்கப்படுவது. அப்புறம் லப்ரா (Labra) என்றொரு பதார்த்தம். கிடைக்கிற அத்தனை காய்கறிகளையும் ஒன்றாக மிக்சியில் போட்டு அரைத்து திருவாதிரைக் களிபோல் கிளறி, உப்பு – சர்க்கரை இரண்டையும் சம அளவுக்குப் போட்டுச் சமைக்கிறார்கள். கடைசியாக சாதத்தில் பிசைந்து சாப்பிட குழம்புக்கும் கூட்டுக்கும் இடைப்பட்ட ரகத்தில் பை ருஜுங் (Sbai Rujung) என்ற திடதிரவாதி வஸ்து.


ஆணையிட்ட ஐட்டங்கள் மேசைக்கு வந்து சேர்ந்தன. என் கண்கள் நன்றி அல்லது காரத்தில் கலங்கிவிட்டன. இரண்டு நாள்கள் நான் கௌஹாத்தியில் சுற்றத் திட்டமிட்டிருந்தேன். எங்கே அன்றிரவே டெல்லி சலோ என்று கிளம்பிவிட நேருமோ என்ற அச்சம் தீர்ந்தது. நண்பர் என்னைச் சாப்பிட வைத்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.


விதி அங்குதான் சிரித்தது. என்னால் நான்கு கவளங்களுக்குமேல் சாப்பிடவே முடியவில்லை. வயிறு கல்போல் இருந்தது. காலை முதல் சாப்பிட்டுத் தீர்த்த ராட்சத வாழைப் பழங்களும் அந்தக் கொழுக்கட்டை அல்லது மூசுண்டை ரக நொறுக்குத் தீனியும் அந்த இரவு உணவை உள்ளே இறங்கவிடுவேனா என்றன. நண்பரோ என்னை ஒரு பீம்பாயாக எண்ணி மேலும் மேலுமென சொல்லிக்கொண்டே இருந்தார். நான் போதும் போதுமென அலறிக்கொண்டே இருந்தேன்.


‘என்ன நீங்கள் இப்படிக் கொறிக்கிறீர்கள்? தலைநகரின் ஆகச் சிறந்த ஓட்டல் இது. இந்த ருசியை நீங்கள் வேறு எங்குமே பெற முடியாது. திரும்ப நீங்கள் எப்போது அஸ்ஸாம் வருவது, எப்போது இம்மண்ணின் பாரம்பரிய உணவினங்களை ருசிப்பது?’


எனக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. பசிக்குமோ என்ற பயத்திலேயே அன்றைக்குப் பத்துப் பன்னிரண்டு வாழைப்பழங்களைக் கபளீகரம் செய்திருந்ததைப் பற்றிப் பிரஸ்தாபிக்க நாணமாக இருந்தது. நாளெல்லாம் தேடிக் கிடைத்த நல்லுணவு. ஆனால் நமக்கு வாய்த்தது நாலு வாய் மட்டும்தானா?


மூச்சைப் பிடித்துக்கொண்டு நண்பருக்காக மேலும் கொஞ்சம் உண்டேன். உணவானது நாபிக்கமலத்தில் இருந்து மேலெழுந்து, தொண்டைக்குப் பக்கத்தில் வந்துவிட்டாற்போலிருந்தது. தலை சுற்றியது. போதும் என்று எழுந்துவிட்டேன். அவருக்கு மிகப்பெரிய ஏமாற்றம். எனக்கு அந்தச் சாப்பாடு பிடிக்கவில்லை என்று நினைத்துவிட்டார். உண்மையில் அது ஒரு சிறந்த விருந்துதான். பசி பயத்தில் நான் நாளெல்லாம் தின்றிருந்த பழங்கள் அதன் ருசியை மறைத்துவிட்டிருந்தன.


என்னளவில் அது பெரிய இழப்புதான். சந்தேகமே இல்லை. மறுநாள் என்னால் அந்த உணவகத்துக்குப் போக முடியவில்லை. மீண்டும் பழங்கள் உண்டு பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பும்படியாகிவிட்டது.


அச்சம்பவத்துக்கு மிகப்பல வருஷங்களுக்குப் பிறகுதான் ஒரு விருந்தை எப்படி எதிர்கொள்வது என்ற கலையைப் பயின்றேன். விருந்து ருசிப்பதற்கு விரதமென்ற ஊக்க மருந்து ஊசி அவசியம் என்பதும் அப்போதுதான் புரிந்தது.


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 09, 2017 08:42