Pa Raghavan's Blog, page 23
May 4, 2016
பொன்னான வாக்கு – 39
கடந்த ரெண்டு மூணு தினங்களாக தினமலர் வெளியிட்டு வரும் கருத்துக் கணிப்பு முடிவுகளைப் பார்த்து யார் கிளுகிளுப்பு அடைகிறார்கள், யாருக்கு வெயிற்கால டயரியா சங்கடம் உற்பத்தியாகியிருக்கிறது என்பது ஒரு புறம் இருக்கட்டும். இந்த முடிவுகளின் ஓர் அம்சம் உண்மையிலேயே மிகுந்த வியப்பையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. தமிழகத்தின் ஆகச்சிறந்த மூன்றாவது அணியாக ‘நோட்டா’ உருவெடுத்துவிடுமோ என்பதுதான் அது.
என்னதான் ஊது ஊதென்று ஊதினாலும் விஜயகாந்த் அணியோ, மேங்கோ ஃப்ரூட்டி மகானுபாவரோ செல்ஃப் எடுக்காத வண்டிகளாகத்தான் நிற்கிறார்கள். சீமான் குரூப்பெல்லாம் வடக்கு கிழக்கு மாகாணத் தேர்தலுக்குத்தான் பிரசாரம் பண்ணிக்கொண்டிருக்கிறார்களோ என்றே தோன்றிவிட்டது. கிட்டத்தட்ட பாமக அளவுக்கு மதிக்கத்தக்க ஒரு கட்சியாக பாரதிய ஜனதா உருவாகியிருப்பதும் தெரிகிறது. ஆனால் இந்த அத்தனை ‘மற்றும் பலரை’க் காட்டிலும் நோட்டா வாக்குகள் பல தொகுதிகளில் அதிகமாகவே இருப்பதைக் காணும்போது மக்கள் மிகவும் நொந்துபோயிருப்பதை உணர முடிகிறது.
நோட்டா வாக்குகளின் சதவீதத்தைப் பெரிதாக எண்ணி அஞ்சவேண்டாம் என்று விற்பன்னர்கள் ஆங்காங்கே சொல்லிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறேன். இன்னும் யாருக்கு வாக்களிப்பதென முடிவு செய்யாதவர்களும் நோட்டாவைத் தேர்ந்தெடுத்திருக்கலாம் என்பது அவர்கள் கட்சி. யாருக்கு வாக்கு என முடிவு செய்யாதவர்கள் என்று யாரேனும் உண்டா என்ன? இருக்கலாம். அவர்கள் ஒரு சதவீதத்துக்கும் குறைவானவர்களாகவே இருப்பார்கள் என்று தோன்றுகிறது.
இது ஒன்றும் தமிழக சரித்திரத்தில் நடைபெறுகிற முதல் தேர்தல் அல்ல. குழப்பங்களும் அறச்சீற்ற மோதல்களும் முட்டி மோதும் அளவுக்குப் பிராந்தியத்தில் பெரிதாக ஏதும் நிகழ்ந்துவிடவில்லை. அதே ஜெயலலிதாதான். அதே கருணாநிதிதான். அதே அரை நூற்றாண்டுக் கால அவஸ்தைகள்தாம். ஊழலில் வளர்ச்சி, அதிகார துஷ்பிரயோகங்களில் வளர்ச்சி, இலவசங்களில் வளர்ச்சி, கண்துடைப்பு வைபவங்களில் வளர்ச்சி.
சிலபல உத்தம நடவடிக்கைகள் இரு தரப்பு ஆட்சிக்காலங்களிலும் நடைபெறாதிருந்ததில்லை. ஆனால், பெரிய திடுக்கிடும் திருப்பங்கள் இல்லாத ஆட்சிகளைத்தான் இதுகாறும் பார்த்து வந்திருக்கிறோம் என்பதை எண்ணிப் பார்க்கலாம். அப்படி இருக்கும்போது யாருக்கு வாக்களிப்பது என்று முடிவு செய்ய முடியாமல் தத்தளிப்போர் சதவீதம் எப்படி அதிகரிக்கும்?
மாற்றத்தை உத்தேசிக்கும்போது அது நிகழலாம். ஆனால் மாற்றத்துக்காக முன்வைக்கப்பட்ட கூட்டணி ஆதித்யா சானலைவிட சிறந்த பல நகைச்சுவைக் காட்சிகளை அரங்கேற்றிக்கொண்டிருக்கும்போது தெரியாத தேவதை – தெரிந்த பிசாசு ஃபார்முலா அல்லவா முன்னுக்கு வரும்?
யாருக்கும் வாக்களிக்க இஷ்டமில்லை என்று சொல்வது ஒருவித தப்பித்தல் மனோபாவம். இதில் கோபம், அலட்சியம், வெறுப்பு, பழிவாங்கல், விரோதம் ஆகியவை போதிய அளவு கலந்திருக்கும். அவரவர் நியாயங்கள் என்பது இருக்கவே செய்யும். ஆனால் அனைத்து நியாயங்களுமே பொது தருமமாகிவிடாதல்லவா?
இது ஆபத்தானது. இதைக் காட்டிலும் பேராபத்து, ‘என் ஒரு வாக்கால் என்ன பெரிதாக நிகழ்ந்துவிடும்’ என்கிற எண்ணம். இருநூறு பேர் இப்படி நினைத்துவிட்டால் ஒரு வார்டு வாக்குகள் வீண் என்று அர்த்தம். லட்சம் பேர் நினைத்துவிட்டால் ஒரு பிராந்திய வாக்குகள் வீண் என்று அர்த்தம். அட, தொகுதிக்குப் பத்தாயிரம் பேர் நோட்டாவைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். இரண்டு லட்சத்தி முப்பத்தி நாலாயிரம் ஓட்டுகள் வீண். இது அநேகமாக நாலு வெற்றி வேட்பாளர்களின் மொத்த வாக்குகளாக இருக்கலாம்!
நமது ஜனநாயகத்தின் மிகப்பெரிய சௌகரியம், யாரும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், எந்த முடிவும் எடுக்கலாம் என்பது. இது லீவு என்கேஷ்மெண்ட் மாதிரியான ஒரு ஏற்பாடு. தேவைப்பட்டால் லீவு போட்டுக்கொள்ளலாம். அவசியப்படவில்லை என்றால் வருஷக்கடைசியில் அதையே சம்பளமாக்கிக்கொள்ளவும் செய்யலாம். பயனருக்கே முழுப்பயன் என்னும் சித்தாந்தம். இதை துஷ்பிரயோகம் செய்யலாமா?
ஒரு கல்யாணம் நடக்கிறது. ஜாதகம் பார்த்து, பொருத்தம் பார்த்து, இரு தரப்புக் குடும்பங்களையும் குறித்துத் தீர விசாரித்து, பையனையும் பெண்ணையும் தனியே பேசிக்கொள்ள அனுமதித்து, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளச் செய்து, அதன்பின் பத்திரிகை அடித்து மாங்கல்யம் தந்துனானே சொல்லி, தாலி கட்டிக் கல்யாணம்.
மயக்கமெல்லாம் தீர்ந்த பிற்பாடு, என் பெண்டாட்டிக்கு வத்தக் குழம்பு வைக்கத் தெரியவில்லை என்று சொல்லி பையன் டைவர்ஸ் கேட்டால்? என் புருஷன் ராத்திரி படுத்தால் விடுகிற குறட்டைச் சத்தம் சகிக்கவில்லை என்று புகார் சொல்லி, அந்தப் பெண் விட்டுவிடுதலையாக நினைத்தால்?
மேற்படி இரு காரணங்களுமே நியாயமில்லை என்று சொல்லிவிட முடியுமா! குறட்டை போலொரு இம்சை இல்லை. வத்தக்குழம்பு இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா! நியாயம்தான். ஆனால் அதற்கு டைவர்ஸ் தீர்வாகுமா?
புருஷனாகப்பட்டவன், தன் பெண்டாட்டிக்கு மீனாட்சியம்மாளின் சமைத்துப் பார் புத்தகத்தைப் பிறந்த நாளுக்குப் பரிசளிக்கலாம். அல்லது அவனே வத்தக்குழம்பு செய்யக் கற்றுக்கொண்டு மனைவிக்கும் சமைத்துப் போட்டு அசத்தலாம். பெண் தெய்வமானது, காதுகளில் பஞ்சடைத்துக்கொண்டு படுக்கலாம். அல்லது குறட்டையின் ஆரோகண, அவரோகண சுரங்களை ஆராய்ச்சி செய்து பிஎச்டி வாங்கலாம்.
நமது ஜனநாயகத்தின் சௌகரியங்கள் எப்படிப்பட்டவை என்பதை, பக்கத்து ஊர் பாகிஸ்தான் அரசியல் நிகழ்வுகளோடு அவ்வப்போது ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்வது நமக்கு இருக்கிற எளிய வழி. அங்கும் ஜனநாயகம்தான். ஆனால் அடிக்கடி டவுசர் அவிழும் ஜனநாயகம். நோட்டாவைத் தேர்ந்தெடுப்பதென்பது, தனி மனித சுதந்தரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் நமது அரசியல் அமைப்பை கேலி செய்வதாகும்.
உள்ளதில் ஒன்று; உருப்படியான ஒன்று என்பதே நமக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது. சுதந்தரம் என்பது வேலிகளற்று இருப்பதல்ல. வசதிக்கேற்ப வேலிகளை நகர்த்திக் கட்டிக்கொள்வது.
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
May 3, 2016
பொன்னான வாக்கு – 38
1987ம் வருஷம் நான் படித்துக்கொண்டிருந்த கல்லூரியில் மாணவர் மன்றத்துக்குத் தேர்தல் நடத்தினார்கள். கனத்த கலாட்டா. சரவெடி அட்டூழியங்கள். பாட்டில் வீச்சுகள். பிட் நோட்டீஸ் மழை. அடிதடி. கட்சிக்காரர்களின் மறைமுக ஊக்குவிப்புகள். பிரின்சிபாலின் எச்சரிக்கை முழக்கங்கள்.
அந்தத் தேர்தலில் ராமமூர்த்தி என்றொரு பையன் செயலாளர் பதவிக்கோ, துணைத்தலைவர் பதவிக்கோ நின்றான். அவன் ஓர் உத்தம புத்திரன். பொதுவில் வகுப்புகளுக்கு வருவதை அவ்வளவாக விரும்பாதவன். மரத்தடிகளில் அவன் தனக்கான வகுப்புகளைத் தானே நடத்திக்கொள்வதுதான் எப்போதும் நடப்பது. என்னத்தையாவது இழுத்துவிட்டு எப்போதும் மப்பாகவே திரிந்துகொண்டிருப்பான். தவிரவும் சில்லறை கலாட்டாக்கள், அடிதடிகள், கசமுசா விவகாரங்கள் எனப்பலவாறு அவன் தனது ஆளுமையைக் கட்டி எழுப்பிக்கொண்டிருந்த காலம். எதிர்காலத்தில் ஒரு சிறந்த அரசியல்வாதியாக அவன் வரக்கூடும் என்று அன்று பலர் கணித்தார்கள்.
நிற்க. அந்தத் தேர்தலில் ராமமூர்த்தி கண்டிப்பாக ஜெயித்துவிடக்கூடாது என்பதில் பேராசிரியர்கள் உறுதியாக இருந்தார்கள். ‘வெறும் பொறுக்கி’ என்று ஒரு பேராசிரியர் சொன்னார். ‘இவனெல்லாம் எலக்ஷன்ல ஜெயிச்சா காலேஜ் சத்தியமா உருப்படாது’ என்று இன்னொருவர் எண்டார்ஸ் செய்தார். தேர்தல் பிரியர்களான மாணவர்கள் கேன்வாஸ் செய்தது ஒருபுறமிருக்க, ராமமூர்த்திக்கு எதிரான பேராசிரியர்களின் ரகசியப் பிரசாரங்கள் படு பயங்கரமாக இருந்தன.
ஒருநாள் பாத்ரூமில் என் பக்கத்தில் வந்து நின்று சிறுநீர் கழிக்கத் தொடங்கிய ஒரு பேராசிரியர், சுவரைப் பார்த்தபடியே கேட்டார். ‘அவன் ஒனக்கு ஃப்ரெண்ட் இல்ல?’
‘எவன் சார்?’
‘அதான் அந்த ராமமூர்த்தி.’
‘எனக்கு எல்லாருமே ஃப்ரெண்டுதான் சார்.’
‘ஆனா அவன் சரியில்ல. ப்ரின்சிபால் அவன காலேஜவிட்டே தூக்கற மூட்ல இருக்காரு.’
‘ஓ.’
‘அவனுக்கெல்லாம் ஓட்டுப் போட்டு உன் தரத்த நீயே கெடுத்துக்காத.’
என் தரமா! என்ன பெரிய ஐ.எஸ்.ஐ. தரம் வாழ்கிறது? எனக்கு அப்போது சில பேப்பர்களில் அரியர்ஸ் இருந்தது. ராமமூர்த்திக்குச் சற்று நிறையவே உண்டென்றாலும் அவனளவில் அதெல்லாம் ஒரு பிரச்னையே கிடையாது. அவனுக்கு அப்போதே சில லோக்கல் அரசியல்வாதிகளைத் தெரியும். அந்தத் தேர்தலில் அவன் நிற்பதற்கே அவர்கள்தாம் செலவு செய்துகொண்டிருந்தார்கள். நமக்கு அந்த சாமர்த்தியமெல்லாமும் கிடையாது. இருப்பினும் பேராசிரியர் அந்தச் சிறு – நீர் இடைவெளியில் அவனுக்கு ஏன் ஓட்டுப் போடக்கூடாது என்று ஏழெட்டு வரிகளில் விளக்கிச் சொல்லிவிட்டுத்தான் போனார்.
சோதனைச் சாலை வகுப்புகளில், பணிமனைப் பயிற்சி நேரங்களில், வேலையே இல்லாமல் ஸ்டாஃப் ரூமில் பல் குத்திக்கொண்டிருக்கும் சமயங்களில், போகிற வருகிற வழிகளில் – எந்தச் சந்தர்ப்பத்தையும் அந்தப் பேராசிரியர்கள் இழக்க விரும்பவில்லை. அத்தனை பேராசிரியர்களும் அத்தனை மாணவர்களிடமும் தவறாமல் சொன்னார்கள். ராமமூர்த்தி ஜெயித்துவிடக் கூடாது.
ஆனால் அந்தத் தேர்தலில் ராமமூர்த்தி ஜெயித்தான். எதிர்த்து நின்ற மாணவனுக்கு பத்திருபது ஓட்டுகள்தாம் விழுந்திருக்கும். ராமமூர்த்தி சரித்திரம் காணாத பெருவெற்றி கண்டான். நாசமா போங்க என்று பிரின்சிபாலே சொல்லிவிட்டுப் போனார். சரி சார் என்று சொல்லிவிட்டு மாணவர்கள் வகுப்புக்குப் போனார்கள்.
இப்போது எண்ணிப் பார்க்கிறேன். ராமமூர்த்தி ஜெயித்ததற்கு என்ன காரணம் இருக்கும்? மாணவர்களுக்குப் பிடித்தவனாக அவன் இருந்ததில்லை. பேராசிரியர்களுக்குப் பிடிக்காது. பிரின்சிபாலுக்கும் பிடிக்காது. நடவடிக்கைகளில் சுத்தம் கிடையாது. ஒழுக்கம் அறவே கிடையாது. படிப்பு பரம பூஜ்ஜியம். வெறும் பொறுக்கி. அச்சமா, அருவருப்பா என்று சொல்ல முடியாத என்னமோ ஒரு உணர்ச்சி அவன்மீது அனைவருக்குமே இருந்தது. இருப்பினும் அவனை நேரில் பார்க்கும்போது எல்லோருமே புன்னகை செய்வார்கள். நரி இடமாகவோ வலமாகவோ போனால் போதும். நடுவில் நடந்து வரும் நாம் தப்பிப்பதே முக்கியம். தவிரவும் தேர்தலில் நிற்பதற்கும் வெல்வதற்கும் அவசியமான கல்யாண குணங்கள் இவைதான் போலிருக்கிறது.
இதுதான் துயரம். இதுவே இன்று வரையிலும் இங்கு யதார்த்தமாகவும் இருக்கிறது. கல்லூரித் தேர்தலெல்லாம் ஒன்றுமேயில்லை. சட்டமன்றத் தேர்தலுக்கு வாக்களிக்கச் செல்லும்போதும் மக்களின் இந்த மனோபாவம் ஊர்ப்பொதுவாக உள்ளதைக் காண முடிகிறது. கட்சி என்கிறோம். கொள்கை என்கிறோம். முழக்கங்களில் மயங்குகிறோம். வேட்பாளரின் தரம் பார்த்து வாக்களிக்கும் வழக்கம் நம்மிடையே இல்லாதது ஒரு குறையே. அவசியமான நேரத்தில் சிந்திக்க மறுத்து விடுவதன் மோசமான விளைவு.
நான் வாக்காளனாக இருந்தால், நன்னடத்தை பொருந்திய வேட்பாளரை மட்டுமே தேர்ந்தெடுப்பேன் என்று மகாத்மா காந்தி எழுதினார் (யங் இந்தியா, ஜூன் 9 , 1920). கட்சி, சாதி, பின்னணி, முன்னணி எதுவும் முக்கியமில்லை. மாற்று சிந்தனையே கிடையாது. குழப்பங்களும் இல்லை. ஒரே தகுதி, நன்னடத்தை. முடிந்தது கதை.
கருத்துக் கணிப்புகள், கட்சி சார்ந்த மனச்சாய்வுகள், இலவச மயக்கங்கள் அனைத்தையும் தூரத் தள்ளி வைத்துவிட்டு உங்கள் தொகுதியில் நிற்கும் வேட்பாளர்களைச் சீர்தூக்கிப் பாருங்கள். குற்றப் பின்னணி இருந்தால் முதல் பந்திலேயே போல்ட் என்று சொல்லுங்கள். தகுதிக்கு மீறி சொத்து இருக்கிறதா? நிர்த்தாட்சண்யமாக நிராகரியுங்கள். ஜாதி, மதம் என்னவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆள் யோக்கியனா? அதை மட்டும் பார்ப்பதே நமக்கு நல்லது. கருணாநிதியோ ஜெயலலிதாவோ ஜெயித்தால் உங்கள் தெருவோர சாக்கடைப் பிரச்னையை வந்து தீர்த்து வைக்கப் போவதில்லை. உங்கள் தொகுதி வேட்பாளர் ஓடி வந்து உதவுவாரா என்று மட்டும் பாருங்கள்.
தேர்தலுக்கு எண்ணி பன்னிரண்டு நாள்தான் இருக்கிறது. பொறுப்பு உணர்ந்து நடந்துகொள்ள வேண்டிய நேரம் இதுவே. இப்போது கோட்டைவிட்டால் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு எள்ளுதான்.
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
May 2, 2016
பொன்னான வாக்கு – 37
இன்றைக்குப் படு பயங்கர சீரியசான ஒரு சமாசாரத்தைப் பற்றி எழுதப் போகிறேன். யாராவது தப்பித்தவறி சிரித்து வைக்காதீர்கள். இது சிரிக்கிற சங்கதியல்ல. உன்னதமான ஆன்மிக மேட்டர்.
நீங்கள் தியானம் செய்திருக்கிறீர்களா? தவம்? இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. என்னவாவது ஒரு சமாசாரத்தை மனத்தில் நிலைநிறுத்தி, அதைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருப்பதற்குப் பேர்தான் தியானம். உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன். கடந்த இரண்டு நாள்களாக எனக்கு சகிக்க முடியாத வேலை நெருக்கடி. வீட்டுக்கே போக முடியவில்லை. வேகாத வெயிலில் பிசாசு மாதிரி அலைச்சல் ஒரு பக்கம். உட்கார்ந்து எழுதவேண்டிய கொடூரக் குடைச்சல் இன்னொரு பக்கம். உள்துறை அமைச்சருக்கு ஒரு போன் செய்து பேசக்கூட முடியாமல் புருஷ லட்சணம் காத்துக்கொண்டிருந்தேன். சரியான சாப்பாடு இல்லை. ஓட்டலில் கொறிப்பதெல்லாம் நெஞ்சைக் கரிக்கிறபடியால் வெளியே சாப்பிடுவதை நினைத்தாலே மரண பயம் வந்துவிடுகிறது. காயப்போடு காயத்தை.
எப்படியோ சமாளித்து ஒன்றரை நாள் தாக்குப் பிடித்துவிட்டேன். நேற்று மதியம் தொடங்கி வீட்டு ஞாபகம் வந்துவிட்டது. ஆ, மனைவி கையால் ஒரு நல்ல சாப்பாடு! எனக்குப் பிடித்த ஐட்டங்களின் அணிவகுப்பு. உடம்பை வருத்தாத ஒப்பற்ற உணவு. சாப்பிட்டுவிட்டு ஜில்லென்று ஏசியைப் போட்டுக்கொண்டு பிரமாதமாக ஒரு தூக்கம்!
இந்த நினைப்பு வந்தபிறகு வேலை கெட ஆரம்பித்தது. செய்த அனைத்தையும் சுத்தபத்தமாக சொதப்பத் தொடங்கினேன். மனமெங்கும் தர உணவு. கமகமவென நாசியில் நர்த்தனமாடும் வெங்காய சாம்பார் வாசனை. கண்ணில் நீர் சொட்ட, நாக்கு சப்புக்கொட்டி, இழுத்து இழுத்து உறிஞ்ச ஒரு பூண்டு ரசம். பொன்னிற வறுவலாக ஒரு உருளைக்கிழங்கு. சாஸ்திரத்துக்கு ஒரு கீரை. சகாயத்துக்குச் சில அப்பளங்கள். கட்டித் தயிர். ஆவக்காய் ஊறுகாய்.
எளிய விருப்பங்கள்தாம். ஆனாலும் மனத்தில் இது ஏறி உட்கார்ந்துவிட்ட பிறகு வேலை ஓடவில்லை. எப்படா வீட்டுக்குப் போவோம் என்பதைத் தாண்டி சிந்தனைச் சிற்பியால் வேறெதையும் செதுக்க முடியவில்லை. அப்படி அலைந்து திரிந்து வீடு போய்ச் சேர்ந்த பிற்பாடு உப்புக் குறைச்சலாக ஒரு துவையலும் சுமாருக்குப் பத்து பர்சண்ட் கம்மியாக ஒரு ரசமும் மட்டும் இருக்குமானால் அது மனைவியின் பிழையல்ல. தியானத்தின் பிழையே. இன்னும் உக்கிரமாக உணவை நினைத்திருக்கவேண்டும்.
தவம் வேறு. அது தியானத்துக்கு நேர் எதிர் கோஷ்டி. தியானம் அதிமுக என்றால் தவம் திமுக.
ஒன்றைக் குறித்து இடைவிடாமல் சிந்தித்துக்கொண்டிருப்பது தியானம் என்றால், எதைப் பற்றியும் லவலேசமும் அலட்டிக்கொள்ளாதிருப்பதே தவம். தவம் என்பது செயல் அல்ல. அது ஒரு நிலை. அமைதி நிலை. பேரமைதி நிலை. இருபத்தி நாலு மணி நேரமும் என்னத்தையாவது யோசித்துக்கொண்டே இருக்கும் நமது மூளையானது பொதுவாக 15 முதல் 40Hz பீட்டா அலைவரிசையில் இயங்கும் என்கிறது அறிவியல். இதைப் படிப்படியாகக் குறைத்து 9-14 ஆல்பா அலைவரிசைக்கு இறக்கி வந்து நிறுத்துவதற்குப் பேர்தான் தவம். அதாவது, தந்தூரி அடுப்பு மாதிரி எப்பவும் சுடச்சுட இயங்கிக் கொண்டிருக்கும் மூளையை மெல்ல மெல்லக் குளிர்வித்து அமைதிப் படுத்தி, ஃப்ரிட்ஜில் வைத்த பால் பாக்கெட் போலாக்குவது.
இதனை இன்னும் கீழே இறக்குவது பெரும்பாடு. இந்த பூமி இருக்கிறதே பூமி! அதற்கும் நமது இதயத் துடிப்பு மாதிரி ஒரு துடிப்பு உண்டு. 7-11Hz என்பது பூமியின் அதிர்வு எண். நமது மூளை மற்றும் இதய அதிர்வெண்ணை புவியின் அதிர்வெண்ணுக்குச் சமமாகக் கொண்டுவர முடிந்துவிட்டால் தீர்ந்தது விஷயம். அதற்கப்புறம் அமைதிதான். பேரமைதிதான். உள்ளூர ஜல்சாதான்.
அந்நாளைய சூப்பர் ஸ்டார் முனிவர்களெல்லாம் மலைப்பகுதிகளில் சஞ்சாரம் செய்து இதற்காகத்தான் மெனக்கெட்டார்கள். எதற்காக மலைக்குப் போய்த் தவம் என்றால் பிராந்திய அதிர்வு என்பது அங்கு ஒரே சீராக இருக்கும். டைவர்ஷன் கிடையாது. திடுக்கிடும் திருப்பங்களுக்கு வாய்ப்பில்லை. சூனிய தவம், குண்டலினி தவம், கிரியா யோகம், விபாசனா யோகம், ராஜ யோகம் என்று சகாயமாகப் புழக்கத்தில் உள்ள பலவித தவ உத்திகளில் எதையாவது ஒன்றைப் பயிற்சி செய்து பலம் பெறுவார்கள்.
இப்போது புரிகிறதா ஜெயலலிதா எதற்காகக் கொடநாட்டில் எஸ்டேட் வாங்கினார் என்று? மலை வாசஸ்தலம். பேரமைதிப் பிராந்தியம். அவ்வப்போது அங்கே போவதால்தான் அவரால் தவம் புரிய முடிகிறது. இது புரியாத ஸ்டாலின் என்னடாவென்றால், அந்தப் பிராந்தியத்து மக்களுக்கே ஜெயலலிதா ஒன்றையும் செய்யவில்லை என்று குற்றப்பாட்டு படிக்கிறார். ஜெயலலிதாவின் நோக்கம் தவம் அல்லவா? மக்களுக்கு சேவை செய்ய மண்வெட்டி எடுத்துக்கொண்டா அவர் அங்கே போகிறார்?
மக்களால் நான். மக்களுக்காக நான். மக்களுக்காகவே அர்ப்பணிக்கப்பட்டது தான் என் தவ வாழ்வு என்கிற அவரது சமீபகால முத்தாய்ப்பு முழக்கத்தைக் கேட்கும்போதெல்லாம் சிலிர்த்துவிடுகிறது. எல்லா அரசியல்வாதிகளும் ஆபீசுக்கு லீவு போட்டுவிட்டு இப்படி எங்காவது மலைப்பக்கம் போய் தவமிருக்க ஆரம்பித்துவிட்டால் நாடு எத்தனை சுபீட்சமாகும்?
கருணாநிதிக்கு இந்தத் தவத்தின் அருமை தெரியவில்லை. அதனால்தான் அவர் தண்டத்துக்கு யோகா செய்துகொண்டிருக்கிறார். முதல் நாள் கூட்டத்தில் எனக்கு ஓய்வு கொடுங்கள் என்று பேசிவிட்டு மறுநாள் 103 வயது வரைக்கும் உங்களுக்காக உழைக்கப் போகிறேன் என்று பீதி கிளப்புகிறார்.
ஒன்றும் சரியில்லை. ஆகவே நாமும் தவம் செய்ய ஆரம்பித்துவிடுவோம். மலையேறித்தான் செய்ய வேண்டுமென்பதில்லை. மனம் மாறியும் செய்யலாம்.
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
April 29, 2016
பொன்னான வாக்கு – 36
ஒரு ஊரில் ஒரு ஆயா ஒரு டாஸ்மாக் வாசலில் வடை சுட்டுக்கொண்டிருந்தாள். குடிகாரர்கள் இருக்கும்வரை வடை விற்பனைக்கு என்ன பிரச்னை? அவ்வப்போது கடன் சொல்லிவிட்டு வடை தின்னும் ஒரு சில கபோதிகளோடு மல்லுக்கட்ட வேண்டியிருப்பது ஒன்றுதான் பாடு. ஆனால் பொது வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம்.
ஒரு நாள் ஒரு காகம் அங்கு பறந்து வந்தது. தட்டு நிறைய ஆயா சுட்டு வைத்த மசால் வடைகள். கமகமவென்று வாசனை வேறு. காகத்துக்குப் பொறுக்கவில்லை. தடாலென்று பாய்ந்து இரண்டு வடைகளைக் கொத்திக்கொண்டு பறந்துவிட்டது.
வடாதிபதி ஆயாவுக்கு நெஞ்சு கொள்ளாத துக்கம். நானே கணக்குப் பண்ணி ஒரு நாளைக்கு இத்தனை என்று எண்ணி எண்ணி வடை சுட்டுக்கொண்டிருக்கிறேன். இந்த சனியன் பிடித்த காகம் எப்பப்பார் இப்படி அழிச்சாட்டியம் செய்தால் என் பிழைப்பு என்ன ஆவது? ஒன்று இந்த காகத்தை ஊரை விட்டு விரட்டுங்கள். அல்லது என் மசால்வடைகளுக்கு இஸட் பிரிவு பாதுகாப்புக் கொடுங்கள் என்று உள்ளூர் போலிஸ் ஸ்டேஷனுக்குப் போய் ஒரு கம்ப்ளைண்ட் கொடுத்தாள்.
இன்ஸ்பெக்டராகப்பட்ட நரி, சரி புலம்பாதே நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு ஜீப்பை எடுத்துக்கொண்டு கிளம்பியது. திருட்டுக் காகம் அமர்ந்திருந்த மரத்தடிக்கு வந்து,’ஏய், என்ன செய்துகொண்டிருக்கிறாய்?’
‘நானா? பார்த்தால் தெரியவில்லை? வடை சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன்.’
‘ஏது உனக்கு வடை?’
‘ஆயா கடையில் வாங்கினேன். ஒரு வடை இரண்டு ரூபாய்.’
‘பொய் சொன்னால் கொன்றுவிடுவேன். நீ திருடியிருக்கிறாய். மரியாதையாக ஒப்புக்கொள்.’
காகம் சில வினாடிகள் தவித்தது. நரி மேலும் மிரட்டவே, வேறு வழியின்றி ஆமாம் திருடினேன் என்று ஒப்புக்கொண்டது.
‘ஆ, அப்படி வா வழிக்கு. மரியாதையாக நீ திருடிய வடையைக் கொடுத்துவிடு. இல்லாவிட்டால் வாழ்நாளில் நீ இனி வடையே சாப்பிட முடியாதபடி உன் வாயைத் தைத்துவிடுவேன்!’
‘ஐயோ அப்படியெல்லாம் செய்யாதீர்கள் இன்ஸ்பெக்டர். தெரியாமல் செய்துவிட்டேன். இதோ, நான் திருடிய வடை. கால் வாசி கடித்துத் தின்றுவிட்டேன். மிச்சம் இவ்வளவுதான்’ என்று கீழே போட்டது.
கீழே விழுந்த வடையை நரி கேட்ச் பிடித்தது. அப்பா, என்ன வாசனை. காசு கொடுத்து வாங்கிச் சாப்பிட்டால் கண்டிப்பாக இந்த மணம் இராது. திருட்டு வடையின் மணமே தனி.
சரி, இனி ஒழுங்காக இரு என்று காகத்தை எச்சரித்துவிட்டு முக்கால் வடையோடு நரி நடையைக் கட்டியது. நரி போன பிறகு காகம் தான் எடுத்து வந்திருந்த இரண்டாவது வடையை எடுத்து வெளியே வைத்தது. ஒரு சிரிப்பு சிரித்தது.
உலகின் முதல் பதுக்கல் சம்பவம் அப்போது நிகழ்ந்தது.
இரண்டாம் உலகப்போர் சமயத்தில் இந்த வடையானது பிற உணவுப் பொருள்களாயின. பேஸ்ட், பிரஷ், சோப்பு சீப்பு தொடங்கி அத்தனை அத்தியாவசியப் பொருள்களும் வியாபாரிகளால் பதுக்கப்பட்டன. அதிக விலைக்கு விற்கப்பட்டன. எம்.ஆர்.பி ரேட்டுக்கு இன்கம்டாக்ஸ் கட்டிவிட்டு மேல் பணத்தை மூட்டை கட்டிப் பரணில் போட்டார்கள். கறுப்புப் பணம் அங்கே சேர ஆரம்பித்தது.
இன்றைக்குச் சென்னையில் இத்தனை கோடி, கோவையில் இத்தனை கோடி, கரூரில் இவ்வளவு, கண்ணம்மாபேட்டையில் இவ்வளவு என்று தேர்தல் கமிஷன் பறிமுதல் செய்யும் பணம் அத்தனையும் கறுப்பு. ஏதோ தேர்தல் காலம், ஓட்டு வேண்டும், கொஞ்சம்போல ஜனங்களுக்கும் கொடுக்கலாம் என்று பதுக்கியதில் கொஞ்சத்தை வெளியே எடுக்கிறார்கள். அந்தக் கொஞ்சத்திலும் கொஞ்சம்தான் இப்படி மானாவாரி மகசூல் ஆகிறது. ஒரு கணம் யோசித்துப் பாருங்கள். தமிழ்நாட்டில் உள்ள முழு கறுப்புப் பணமும் இப்படி வெளியே வந்தால் எப்படி இருக்கும்! அட அது எத்தனை கோடிகள் இருக்கும்? இந்தியா முழுதும் உள்ள கறுப்புப் பணத்தைத் திரட்டி மூட்டை கட்டினால்?
இதற்கெல்லாம் அப்பால்தான் இங்கிருந்து வெளிநாட்டு வங்கிகளுக்குக் கடத்தப்பட்டுப் பதுக்கப்பட்டிருக்கு தொகை.
இந்திய கறுப்புப் பணத்தின் மொத்த மதிப்பு அதிசுமார் மூன்று ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இருக்கும் என்று ஒரு குத்து மதிப்புக் கணக்கு இருக்கிறது. பதுக்கிய பரதேசிகள் மண்டையைப் போட்டால் அத்தனையும் எள்ளு. மீட்பு நடவடிக்கை அப்படி இப்படி என்று அவ்வப்போது செய்தி வருமே தவிர மீட்கப்பட்டதாக எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறோமா?
ஏதோ இந்த முறை இங்கே தேர்தல் கமிஷன் கொஞ்சம் தீவிரமாகச் செயல்படுவது போலத் தெரிகிறது. தமிழகமெங்கும் கிராமப்புறங்களில் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களைத் திரட்டி சிறு சிறு குழுக்களாக அமைத்து பதுக்கல் மற்றும் ரகசிய வினியோகங்கள் நடைபெறுவதைக் கண்காணிக்க ஏற்பாடு செய்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். அதையெல்லாமும் மீறி நமது மகானுபாவர்கள் மூக்குத்திப் பூ மேலே காற்று உக்காந்து பேசுதம்மா என்று பாடத்தான் செய்வார்கள்.
ஆனால் இளைஞர்களைக் கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்துவது என்பது ஒரு சிறந்த நடவடிக்கை. இதெல்லாம் வெற்றி கண்டு, அடுத்தத் தலைமுறையாவது சற்று அலர்ட் ஆனால்தான் அதிகாரதாரிகள் அடக்கிவாசிப்பார்கள்.
ஏதோ ஓரிடத்தில் நடைபெற்ற அதிமுக தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்கு வந்திருந்த சில பெண்களை ஒரு சானல் பேட்டியெடுத்து ஒளிபரப்பிக்கொண்டிருந்தது. ‘சாப்பாடு குடுத்தாங்க. தண்ணி பாக்கெட் குடுத்தாங்க. தொப்பி குடுத்தாங்க. நூறு ரூவா பணம் குடுத்தாங்க. அம்மா அழகா இருக்காங்க’ என்று வெட்கப்பட்டுக்கொண்டே பேசினார்கள்.
மாற்றம், இரு முனைகளிலும் நிகழவேண்டிய சங்கதி.
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
April 27, 2016
பொன்னான வாக்கு – 35
ரெண்டு நாளாக மனசே சரியில்லை. துக்கம் தொண்டையை அடைக்கிறது. விதியைப் பார்த்தீர்களா? எத்தனைக் கொடூரமும் கயவாளித்தனமும் அதற்கு இருந்தால், நாளும் பொழுதும் மக்களுக்காகப் பாடுபடும் தலைவர்களை இப்படிப் போட்டு வாட்டி வறுக்கும்? பிரத்தியேகமான சங்கதி எதுவுமே ஒரு மனுஷனுக்கு இருக்கக்கூடாது என்றால் என்ன அர்த்தம்? அட அள்ளிக்கொடுக்க வேண்டாம். சின்னச் சின்ன சலுகைகள்? அதுவுமா தப்பு? சுக சௌகரியங்களில் சலுகை. வருமானக் கால்வாய்களில் சலுகை. வாங்கிப் போடும் இனங்களில் சலுகை. வங்கிக் கடன் சலுகை.
எது முடிகிறது? ஒரு தலைவராகப்பட்டவர் தனக்கென ஒரு குச்சி ஐஸ் வாங்கிச் சாப்பிடக் கூட நூறு முகங்களைப் பார்க்கவேண்டியிருக்கிறது. யார் என்ன நினைத்துக்கொள்வார்களோ என்கிற கவலை. எந்தப் பரதேசி எப்படி எழுதித் தொலைப்பானோ என்கிற கவலை. எதிர்க்கட்சிக்காரர்கள் எந்த இடத்தில் சட்டையைப் பிடிப்பார்களோ என்கிற கவலை.
நமது முதல்வரை எடுத்துக்கொள்ளுங்கள். ஆவணப்படி அவர் கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி. எத்தனை பாடுபட்டு ஹைதராபாத்தில் ஒரு திராட்சைத் தோட்டமும் கொடநாட்டில் ஒரு எஸ்டேட்டும் சிறுதாவூர் போன்ற குக்கிராமங்களில் குறுவிவசாயமும் செய்து வளர்ந்திருக்கிறார்! அவர்மீதுதான் இந்தச் சமூகம் சொத்துக் குவிப்பு வழக்கு போடுகிறது. ஆட்சி அதிகாரத்தைப் பிடுங்குகிறது. படாதபாடு பட்டு அவர் மீண்டு வந்து அடுத்தடுத்த தேர்தல்களைச் சந்திக்கத் தயாரானால் மீண்டும் சொத்தென்ன, சுகமென்ன என்ற கேள்வி.
ஒரு நேர்மையான விவசாயி அல்லும் பகலும் அயராது பாடுபட்டால் நாற்பத்தியொரு கோடியே அறுபத்தி மூன்று லட்சத்து ஐம்பத்தையாயிரம் மதிப்பில் அசையும் சொத்துகளையும், எழுபத்திரண்டு கோடியே ஒன்பது லட்சத்து எண்பத்தி மூவாயிரம் ரூபாய்க்கு அசையா சொத்துகளையும் சம்பாதித்துச் சேர்க்க முடியும் என்பதை இந்த மண்ணுக்கு நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.
இதனைப் பாராட்ட வேண்டாமா? கொண்டாட வேண்டாமா? தவிரவும் அவருக்கென யார் இருக்கிறார்கள்? எல்லாம் தமிழ் மக்களுக்கான அவரது உழைப்பு. இத்தனை இருந்தும் அவருக்கு என்ன பயன்? இரண்டு கோடி ரூபாய்க்கு மேலான வங்கிக்கடன் கத்தி அவர் கழுத்துக்கு நேரே தொங்கிக்கொண்டிருக்கிறது. கழுத்தை நகர்த்தி வைத்துக்கொண்டு உட்காரக்கூட நேரமின்றி அவர் பிரசாரப் புயலாக மாநிலமெங்கும் சுற்றி வந்துகொண்டிருக்கிறார்.
எண்ணிப் பாருங்கள்! இரண்டு கோடிக் கடன்! யாரால் முடியும்? ஒரு மகானுபாவர் ஒன்பதாயிரம் கோடிக்குக் கடன் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு இங்கிலாந்துக்கே போய்ச் சேர்ந்துவிட்டார். அவரைக் கூப்பிட்டு விசாரிக்கவோ தண்டிக்கவோ வக்கற்ற சமூகம்தான், ஒரு குறு விவசாயியின் இரண்டு கோடிக் கடன் குறித்த விவரங்களை வேட்பாளர் மனுவோடு சேர்த்து எழுதி வாங்கி ஊரெல்லாம் தண்டோரா போட்டு அறிவித்துக்கொண்டிருக்கிறது.
இதையெல்லாம் கேள்விப்படுகிறபோது துக்கம் முட்டாமல் பின்னே மாடா முட்டும்?
ஜெயலலிதாவை விடுங்கள். அவராவது, நடப்பு ஆட்சியாளர். தமிழர்களின் தனிப்பெரும் தலைவர் கருணாநிதி ஆட்சியைப் பார்த்துப் பல வருடங்களாகிவிட்டன. ஜெயலலிதாவாவது விவசாயியாக இருப்பவர். ஆனால் இவரோ வெறும் சமூக சேவகர்! தொண்ணூற்றி இரண்டு வயதில் தேங்காய் சேவை, லெமன் சேவை அல்ல; சமூக சேவையை மட்டுமே சாப்பிட்டு வாழ்பவர். ஒரு சமூக சேவகருக்கு என்ன பெரிய வருமானம் இருந்துவிட முடியும்? இந்த சமூகம் எந்த சேவகருக்கு அள்ளிக் கொடுத்திருக்கிறது? அட, அள்ளிக் கொடுக்க வேண்டாம். கிள்ளிக்கொடுக்கக்கூட ஆயிரத்தெட்டு சிங்கநாதம் பண்ணுவதல்லவா சமூக அ-நீதி?
கலைஞருக்கு அசையா சொத்துகளே கிடையாது. 1956ம் வருஷம் புதையல் என்ற படத்துக்குக் கதை வசனம் எழுதி சம்பாதித்த பணத்தில் வாங்கிய கோபாலபுரம் வீட்டையும் ஏழை மக்களுக்கு மருத்துவமனை கட்டுவதற்காக எழுதிக் கொடுத்துவிட்டார். தனக்கென ஒரு வீடில்லா இம்மனிதரின் பெயரில் நிலம் நீச்சு என்னவாவது உண்டாவென்றால் அதுவும் கிடையாது. வீட்டுக்கும் சரி, கட்சிக்கும் சரி. அசையும் சொத்தென்றால் அது அவர் மட்டும்தான். அதற்கே பதிமூன்று கோடி ரூபாய் மதிப்பீடு போட்டிருக்கிறார்கள். இதெல்லாம் அக்கிரமம் அல்லவா?
தயாளு அம்மாள் வெறும் பத்தாயிரம் ரூபாய் ரொக்கம் வைத்திருக்கிறார். ராசாத்தி அம்மாளோவெனில் ஐம்பத்தி ஆறாயிரம் ரூபாய் ரொக்கம் வைத்திருக்கிறார். ஒரு சராசரி மத்தியதர வர்க்கத் தமிழன் எப்படி இருப்பானோ அப்படி இருக்கிறது இந்தக் குடும்பம். சமூக சேவை தவிர இன்னொன்று அறியாத கலைஞருக்குத் துணைவி வழியில் பதினொரு கோடி ரூபாய்க்கு மேல் கடன் சுமை மட்டும் இருக்கிறது. இதைக்கூடவா தள்ளுபடி செய்யாது இச்சமூகம்? வெட்கம்.
டாக்டர் அன்புமணிக்குக் கூட அசையும் சொத்துகளோ, அசையாச் சொத்துகளோ கிடையாது. ஒழுங்காக நாடி பார்த்து, நாக்கை நீட்டச்சொல்லிப் பார்த்து, ஒரு இஞ்செக்ஷன் போட்டா சரியாயிடும் என்று அவர் அக்கடாவென்று தொழில் நடத்திச் செழித்திருக்கலாம். எங்கே விடுகிறது இந்த சமூக அக்கறை?
ஏதோ முப்பாட்டன் முருகன் அருளால் சீமானுக்கு மட்டும் ஒரு ஃபாரின் கார் இருக்கிறது. ஒடாத படங்கள்தாம் என்றாலும் அவரும் படமெடுத்த பாம்பல்லவா? இதுகூட இல்லாவிட்டால் எப்படி?
இப்போதெல்லாம் தேர்தல் காலமென்றால், நமது தலைவர்களின் இந்த அந்தரங்கப் பொருளாதாரப் புள்ளி விவரங்கள் அம்பலத்துக்கு வருகிற வைபவம் சேர்ந்துகொண்டுவிடுகிறது. சற்று பேஜார்தான். நம்மாலானது, ‘ஒன்றுமே இல்லாத’ இந்த உத்தமோத்தமர்களுக்காகச் சற்று இரக்கப்படுவோம். பிறகு புன்னகையோடு கடந்து போய்விடலாம்.
வேறென்ன பிறகு விவசாயம் செய்து நம்மாலும் நூறு கோடிக்குமேல் சம்பாதிக்கவா முடியும்?
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
April 26, 2016
பொன்னான வாக்கு – 34
என்னவொரு அனல்; எப்பேர்ப்பட்ட தகிப்பு! ஒரு ஜெயலலிதாவால் உருவாக்க முடியாத பரபரப்பை, ஒரு கருணாநிதியால் ஏற்படுத்த முடியாத திடுக்கிடும் திருப்பத்தை, கடலைமிட்டாய் க்ஷேத்ரமாம் கோயில்பட்டியில் இருந்து வைகோ சாதித்திருக்கிறார்.
தேவர் சிலைக்கு வைகோ மாலை அணிவிக்கப் போன அந்த வீடியோவைப் பார்த்தேன். சூடும் ருசிகரமும் உணர்ச்சிமயமும் தாண்டவமாடிய கண்கொள்ளாக் காட்சி. கருப்பு சால்வையும் பச்சைத் தலைப்பாகையுமாக எழுந்து நின்று மைக்கைப் பிடித்து ஒரு வீர முழக்கம் செய்தார் பாருங்கள், சிலிர்த்துவிட்டது. கலவரவாதிகளை நோக்கி, ‘உன்னால் ஆனதைப் பார்த்துக்கொள்’ என்று சொல்லிவிட்டு, பரபரவென்று இறங்கி வந்த வைகோ, தேவர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டுத் திரும்பவும் வேனுக்கு வந்து வீர உரை ஆற்றிய காட்சி எந்த ஒரு திரைப்பட ஹீரோ அறிமுகக் காட்சியைக் காட்டிலும் சிறப்பானது.
ஆனால் இந்த வீரத்தைக் கண்டு வியந்திருக்க அவரால் அதிக அவகாசம் தரமுடிவதில்லை. வேட்பு மனு தாக்கல் செய்யப் புறப்பட்டு ஊர்வலம் கிளம்பும்போது கலவரமாகிவிடுகிறது. தன் பொருட்டு சாதி மோதல்கள் ஏற்படாதிருப்பதற்காக வேட்பு மனுவைத் தாக்கல் செய்யவில்லை என்று சொல்லிவிடுகிறார். வசூல் ராஜாவில் கமலஹாசனுக்கு பதிலாக கிரேசி மோகன் பரீட்சை எழுதுவது போல இங்கே வைகோவுக்கு பதிலாக யாரோ ஒருவர்.
காரணங்களும் விளைவுகளும் ஒருபுறம் இருக்கட்டும். மெல்ல அலசிப் பிழிந்துகொள்ளலாம். ஆனால் இந்த பாவப்பட்ட மக்கள் நலக்கூட்டணிக்கு ஏன் இப்படியெல்லாம் சோதனை வரவேண்டும்? அறிவுஜீவிகளும் இடது சாரிகளும் எதை ஆதரித்தாலும் அது உருப்படாது போகத்தான் வேண்டும் என்பது எந்த சாத்தானின் சாபமோ தெரியவில்லை.
ஒரு வேகத்தில் விஜயகாந்தை அழைத்து வந்து தலைவர் நாற்காலியைக் கொடுத்துவிட்டார்கள். ஆனால் கூட்டணியில் இருக்கிற தலைவர்களில் இப்போது திருமாவளவனைத் தவிர யாருமே தேர்தலில் போட்டியிடவில்லை என்பதைப் பார்க்கும்போது இவர்களெல்லாம் விஜயகாந்தின் புரட்சி அரசியலுக்கு பயந்துதான் பின்னங்கால் பிடறியில்பட எகிறிக் குதித்து ஓடுகிறார்களோ என்று சந்தேகமாக இருக்கிறது. கட்டக்கடைசியில் ஒட்டிக்கொண்ட வாசன், முதலிலேயே தாம் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று சொல்லிவிட்டதும், முதல் முதலில் கூட்டணிக்குக் கொடி பிடித்த வைகோ கட்டக்கடைசியில் நழுவிய மீனாகியிருப்பதும் மட்டும்தான் வித்தியாசம்.
பாவம் அண்ணியார். நான் இனி அண்ணி இல்லை; அம்மா என்று விருப்ப இடம் சுட்டிப் பொருள் விளக்கியெல்லாம் பார்த்தார். ம்ஹும். கடலை மிட்டாய் வடிவில் வைகோ கொடுத்திருப்பது கடுக்காய் மட்டுமே.
தமது இந்த முடிவுக்கு திமுகதான் காரணம் என்று வைகோ சொல்லியிருக்கிறார். தேவர் – நாயக்கர் சாதி மோதல்களை உருவாக்கத் திட்டமிட்டிருப்பதாகக் குற்றம் சாட்டியிருக்கிறார். எனக்குத் தெரிந்து இந்த இரு சாதிகளுக்கும் இதற்குமுன் மோதலெல்லாம் நடந்ததில்லை. அதற்கான சமூக, அரசியல் சூழ்நிலை சரித்திரத்தில் ஒருபோதும் ஏற்பட்டதில்லை.தேவர் சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்றபோது கெட்ட கோஷம் எழுப்பியவர்களை மனத்தில் வைத்து அவர் இப்படிச் சொல்லியிருப்பாரோ என்னமோ. அவர் வேட்பு மனு தாக்கல் செய்யப் போனபோது எதிர்ப்புக் கோஷமிட்டு வழி மறித்தவர்கள் அத்தனை பேரும் தார்மீக அடிப்படையிலாவது அதிமுகவை ஆதரிக்கிற சாதி அமைப்புக்காரர்கள்தாம் என்று தெரிகிறது.
அட அப்படியே பத்திருபது பேர் எதிர்க்கட்டுமே? அது திமுகவினராகவேதான் இருந்துவிட்டுப் போகட்டுமே? யாராவது எதிர்த்தால் உடனே பின்வாங்கிவிடுவதா புறநாநூற்றுப் புலியின் வீரம்? சாதிக்கலவரம் வரும் என்று வைகோ சொல்வதெல்லாம் சற்று மிகையாகவே தெரிகிறது. அதுதான் காரணம் என்பது உண்மையானால் அவர் தொகுதி மாற்றிக்கொண்டிருக்கலாம். அட, அவர் கொளத்தூரில் களமிறங்க யார் தடுக்கிறார்கள்? அல்லது திருவாரூரில்? பேச்சளவில் அவர் சொல்லிக்கொண்டிருக்கும் ஜெயலலிதா எதிர்ப்பு அரசியலை செயலளவில் நிரூபிக்க ஆர்கே நகரிலேயேகூடப் போட்டியிட முடியும். வசந்திப் பாட்டியைத் தூக்கிக் கோயில்பட்டியில் போடுவதா கஷ்டம்?
வேட்பாளர்களைக் கட்டக்கடைசி வினாடி வரை மாற்றிக்கொண்டிருப்பதுதான் இந்தத் தேர்தலில் ஃபேஷன் என்றாகிவிட்ட சூழ்நிலையில் இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா?
மக்கள் நலக்கூட்டணி என்ற ஒன்று தொடங்கப்பட்டு, அது தேர்தலாட்டம் ஆட ஆரம்பித்தபோதே இது விளங்காது என்று இந்தப் பத்தியில் எழுதினேன். அதற்கு நாயே பேயே என்று நாலாயிரம் கடுதாசிகள். அடிப்படையில் நோக்கத் தெளிவு இல்லாமல், வழிமுறைத் தெளிவு இல்லாமல், திட சித்தம் இல்லாமல் ஒரு காரியத்தில் இறங்கினால் இப்படித்தான். தமது இந்த அபாரமான புரட்சிகர விலகல் நடவடிக்கையின்மூலம் வைகோ தனக்குப் பதவி ஆசை பெரிதல்ல என்று காட்டிக்கொண்டிருக்கிறாரா, அல்லது இந்தக் கூட்டணி ஆசாமிகளிடம் மிச்சம் மீதி இருக்கும் பதவி இச்சையை அழுத்தித் துடைத்து ஆட்டத்தை முடித்து வைத்திருக்கிறாரா என்பதுதான் எஞ்சியுள்ள ஒரே கேள்வி.
தமிழக பாஜகவுக்கு பலம் சேர்க்க பவர் ஸ்டார் சீனிவாசன் அக்கட்சியில் சேர்ந்திருப்பதைக் காட்டிலும் நகைப்புக்கிடமாகியிருக்கிறது வைகோவின் மேற்படி கைங்கர்யம்.
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
April 25, 2016
பொன்னான வாக்கு – 33
ஸ்டாலினின் தேர்தல் பிரசாரப் பேச்சொன்றைத் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்தேன். திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லப்படாத ஒரு வாக்குறுதியை அவர் மக்களுக்கு அளித்துக்கொண்டிருந்தார்.
‘திமுக வேட்பாளரை நீங்கள் வெற்றி பெற வையுங்கள். சட்டசபை நடக்கும் தினங்கள் தவிர மற்ற அனைத்து நாள்களிலும் அவர் தொகுதியிலேயே இருப்பார். உங்கள் பிரச்னைகளுக்குச் செவி கொடுப்பார். உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பார். ஜெயித்த கையோடு தொகுதியை மறந்துவிடும் அரசியல்வாதி என்னும் பேச்சுக்கே இனி இடமில்லை.’
திமுகவோ, அதிமுகவோ. நடைமுறையில் நமது அரசியல்வாதிகளுக்கு இது எவ்வளவு தூரம் சாத்தியம் என்று தெரியவில்லை. ஏனெனில், அரங்கேறிக்கொண்டிருக்கும் பிரசாரக் காண்டத்தில் ஆங்காங்கே நிகழும் சில சம்பவங்கள் ஒரு மகத்தான மக்கள் புரட்சி நடந்துவிடுமோ என்ற அல்ப ஆசையைக் கிளப்பும்படியாக இருக்கின்றன. நாமும் எத்தனை காலத்துக்குத்தான் புரட்சியை ரிடையர் ஆன கம்யூனிஸ்டுகள் மற்றும் சீமான் பிராண்ட் இன்ஸ்டண்ட் காப்பி அரசியல்வாதிகளின் உரைகளில் மட்டும் பார்த்துக்கொண்டிருப்போம்? ஒரு மாறுதலுக்கு நேரிலும் பார்த்தால்தான் என்ன? குறைந்தபட்சம் அது என்ன கலர் என்றாவது தெரிந்துகொண்டுவிட வேண்டும்.
நடப்பு ஆட்சியில் அமைச்சராக இருக்கிற ஒருவர் ஓரிடத்துக்குப் பிரசாரத்துக்குப் போகிறார். அவர் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர். பேசிக்கொண்டிருக்கும்போது பொதுஜனம் ஒருவர் கேட்கிறார். ‘நீங்கள் வந்த பாதையை கவனித்தீர்களா? சாலை எத்தனை மோசம் என்று பார்த்தீர்களா? நெடுஞ்சாலைத்துறை அமைச்சரான நீங்கள் இந்த ஐந்தாண்டுகளில் எங்களுக்கு என்ன செய்தீர்கள்? எந்த முகத்தை வைத்துக்கொண்டு இங்கு ஓட்டுக் கேட்க வந்தீர்கள்?’
அடேங்கப்பா. என்ன தைரியம்! எப்பேர்ப்பட்ட கேள்வி! ஆனால் அமைச்சர் பெருமான் வேகாத வெயிலில் திட்டமிட்டபடி பிரசாரத்தை முடிப்பது முக்கியமா, ஓட்டுப்போட்ட உத்தமோத்தமரின் கேள்விக்கு பதில் சொல்லிப் பொழுது போக்கிக்கொண்டிருப்பது முக்கியமா? அட, சாலை போடுவதெல்லாம் ஒரு முக்கியப் பணியா? சுத்த அறிவுகெட்டத்தனமாக இப்படிக் கேள்வி கேட்டால் அமைச்சருக்குக் கோபம் வராமல் வேறென்ன செய்யும்? ‘உனக்கெல்லாம் ரோடு ஒரு கேடா? அடுத்த முறையும் நாங்களேதான் ஜெயிக்கப் போகிறோம். அப்போது உன்னைத் தொலைத்துக்கட்டிவிடுவேன் பார்’ என்று அன்பாக நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்.
நல்ல அமைச்சர். எனவே வார்த்தையோடு வன்முறைக்குத் தடைபோட்டுவிட்டார். அவரென்ன மைனாரிடி திமுகவின் மகத்தான வாரிசு மெட்ரோ ரயிலில் ஒரு கண்மணியின் கன்னத்தைப் பதம் பார்த்தது போலவா செய்தார்? கொஞ்ச நாள் முன்னால் தனக்குத்தானே என்னவாவது செய்துகொள்கிற உத்தேசத்துடன் நமக்கு நாமே உலா சென்றபோதும், எங்கோ யாரோ ஒரு ஆட்டோ டிரைவரை அவர் தாக்கியிருக்கிறார். அமைச்சர் அப்படியெல்லாமா செய்துவிட்டார்? அல்லது கேப்டன் விஜயகாந்தைப் போல டூப் போடாமல் ஸ்டண்ட் காட்சிகளைத்தான் அரங்கேற்றினாரா?
வெறும் வார்த்தை. தொலைத்துக்கட்டிவிடுவேன். விஜயகாந்த் ‘தூக்கி அடிச்சிருவேன்’ என்று சொன்னால் மட்டும் சிரித்துவிட்டு, அமைச்சர் தொலைத்துக்கட்டிவிடுவதாகச் சொன்னதும் சீறி எழுவது அறமல்ல. இதற்கும் சிரிக்கத்தான் வேண்டும். ஏனெனில் சிரிப்பாய்ச் சிரிப்பதுதான் தமிழர் கலாசாரம்.
நிற்க. மக்கள் சேவையில் இருக்கிறவர்களுக்குக் கோபம் ஒரு பேஜார். சட்டசபையிலேயே கேள்வி கேட்டால் எழுதி வைத்துப் படிக்காமல் பதில் சொல்ல முடியாதவர்களுக்குப் பொதுவெளிக் கேள்விகள் அதர்மசங்கடம்தான். தவிரவும் ஓட்டு முக்கியம். கூழைக் கும்பிடுகளும் குமிழ் சிரிப்புச் சமாளிப்புகளும் அதனினும் முக்கியம். இதற்காகவேனும் பிரசாரத்துக்குக் கிளம்பும் முன்னர் வீட்டில் சிறிது நேரம் தியானம் பழகிவிட்டுப் போகலாம்.
ஒரு கேள்வி கேட்கிறேன். அமைச்சரோ, அரசரோ. வாழ்நாளில் ஒருமுறையாவது அவரவர் மனைவி தொடுக்கும் வினாக்கணைகளுக்குக் கோபப்பட்டிருப்பாரா? பொன்னும் மணியுமாகக் கொண்டு இழைத்தாலும், ‘ஒன்ன கட்டிக்கிட்டு என்ன சுகத்தக் கண்டேன்?’ என்ற கேள்வியை எதிர்கொள்ளாதிருப்பாரா? ‘வீட்டுக்கு உருப்படியா ஒரு வேல செய்யக்காணம்; இவரு ஊருக்கு உழைச்சிக் கிழிக்கறாரு’ என்ற குத்தீட்டிக் குத்தலை எதிர்கொள்ளாதிருப்பாரா?
அப்போதெல்லாம் தொலைத்துக்கட்டிவிடுவேன் என்றோ, தூக்கி அடிச்சிருவேன் என்றோ சொல்லத் தோன்றுவதில்லை அல்லவா? அதுதான் ஞான கர்ம சன்னியாச யோகம் என்பது. வேட்பாளர்களும் பிரசார பீரங்கிகளும் பகவத்கீதை பாராயணம் செய்வது நல்லது. பிரபத்தி என்கிற சரணாகதியைக் காட்டிலும் மேலான தத்துவமொன்று இல்லை. ஏன் சாலை போடவில்லை என்கிறார்களா? ஐயா மன்னித்துவிடுங்கள், நாளைக்குப் போட்டுவிடுகிறேன் என்று சொல்லுங்கள். ஏன் பவர்கட் என்கிறார்களா? ஐயா, பொறுத்துக்கொள்ளுங்கள், நான் உங்களுக்கு விசிறி எடுத்து வந்து விசிறுகிறேன் என்று சொல்லுங்கள். ஏன் விலைவாசி உயர்வு என்று சட்டையைப் பிடிக்கிறார்களா? அப்படியே கையைப் பிடித்து அழைத்துச் சென்று மார்க்கெட்டில் நல்லதாகப் பார்த்து நாலு கிலோ மீன் வாங்கிக் கொடுத்து அனுப்புங்கள்.
இதெல்லாம் ஓட்டு விழுவதற்காக அல்ல. உதை விழாதிருப்பதற்காக.
தமிழகத்தின் பல்வேறு தொகுதிகளில் இம்மாதிரி அமைச்சர்கள் மற்றும் பழைய எம்.எல்.ஏக்களின் சட்டைபிடிக் கேள்விக்கணைகள் சரமாரியாக வருவதாகக் கேள்விப்படுகிறேன். ஒரு விதத்தில் இது நல்லதே. ஐந்து வருடங்களுக்கு ஒருமுறைதான் நம்மவர்கள் ஜனங்களைக் குறித்து யோசிக்கவே செய்கிறார்கள் என்னும்போது அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்வது தவறல்ல.
நிறையக் கேளுங்கள். ஆனால் கோபத்தைத் தூண்டுவதை நோக்கமாகக் கொள்ளாமல், ஒரு வினாடியாவது உள்ளம் வருந்தி யோசிக்கும் விதமாகக் கேளுங்கள். அடுத்தமுறை பிராந்தியத்துக்குள் காலெடுத்து வைக்கும்முன், உள்ளே நுழைய நமக்குத் தகுதியிருக்கிறதா என்று எண்ணிப் பார்க்கும்படியாகக் கேளுங்கள்.
சொன்னேனே, சொல் முக்கியம். கொல்லும் சொல்லால் பயனில்லை. வெல்லும் சொல்லைத் தேர்ந்தெடுப்பதில்தான் வெற்றி இருக்கிறது.
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
April 24, 2016
பொன்னான வாக்கு – 32
சில பேருக்குச் சில ராசி உண்டு.
என் தம்பி பத்தாவதோ ப்ளஸ் ஒன்னோ படிக்கும்போது ஒரு சட்டை போட்டிருப்பான். வெளிர் நீல நிறத்தில் அழுத்தமான நீலமும் சிவப்பும் அடுத்தடுத்து வரும்படியான கோடுகள் போட்ட ஒரு சட்டை. ஏதோ ஒரு பரீட்சைக்கு அந்தச் சட்டையைப் போட்டுக்கொண்டு போய் நல்ல மார்க் எடுத்துத் தேர்வாகிவிட்டதை நினைவுகூர்ந்து, அந்தச் சட்டையை ஸ்விஸ் பேங்கில் கொண்டு போய் வைக்காத குறையாகத் தேர்வுகளுக்கென்று மட்டும் பத்திரப்படுத்தி வைத்தான். அவன் ப்ளஸ் டூ முடித்து, மூன்று வருட கல்லூரிப் படிப்பை முடித்து, அதன்பின் சில வருடங்கள் சிஏ படித்து, அதையும் முடிக்கும்வரை அந்தச் சட்டை அவனிடம் அப்படியே இருந்தது. அத்தனை தேர்வுகளுக்கும் அதைத்தான் அணிந்து செல்வான். தோய்த்தால் ராசி போய்விடும் என்று தோய்த்ததுகூட இல்லை என்று நினைக்கிறேன். ஒரு கிருமி பாம் போல அந்தச் சட்டை எங்கள் வீட்டில் வெகுகாலம் அனைவரையும் அச்சமூட்டிக்கொண்டிருந்தது.
எனக்கும் இப்படிப்பட்ட ஒரு ராசி இருந்தது. சிறு வயதில் நான் டிவியில் கிரிக்கெட் பார்க்க உட்கார்ந்தால் அன்றைய மேட்சில் கண்டிப்பாக இந்தியா தோற்கும். தேச நலன் கருதி இதனாலேயே கிரிக்கெட் பார்ப்பதை விட்டேன். அதன்பிறகுதான் இந்தியா அதிக மேட்ச்களில் தோற்க ஆரம்பித்தது என்பது ஒரு வரலாற்றுப் பிழையே ஆனாலும், இங்கு சொல்லிவைப்பது நல்லது. ஏனெனில் எனது மேற்படி ராசி வேறு பல சந்துபொந்துகளிலும் சமயம் பார்த்துக் காலை வாரிவிடுவதைத் தற்செயலாக இப்போது கவனித்தேன்.
ஒரு நாலு நாள் நான் இந்தப் பத்தி எழுதவில்லை. அதனாலேயே என்னவாவது அதிசயம் நிகழ்ந்து, தமிழக அரசியலில் தடாலடித் திருப்பங்களோ, திடுக்கிடும் மாற்றங்களோ ஏற்பட்டுவிடும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். தேர்தல் சமயம் வேறு. ஜெயலலிதா பிரசாரத்துக்குப் போகிற இடத்திலெல்லாம் யாராவது சூனியம் வைத்துவிடுகிறார்கள். உடனே யாராவது பலியாகிவிடுகிறார்கள். திடீர் வாட்சப் செய்தியாளர்கள் அடுத்த பலி இங்கே அல்லது அங்கே என்று ஆரூடமெல்லாம் சொல்லத் தொடங்கிவிட்டதில் சற்றுக் கலவரமானது உண்மையே. நல்லவேளை திருச்சி தப்பித்தது.
ஆனால் சொன்னேனல்லவா, என் ராசி சில வரலாற்றுப் பிழைகளை உருவாக்குமென்று? அதுதான் நிகழ்ந்திருக்கிறது. அதிமுகவுக்காகத் தேர்தல் பிரசாரம் செய்யத் தயார் என்று ஜெயலலிதாவை நேரில் போய்ப் பார்த்துத் தம் விருப்பத்தைச் சொல்லிவிட்டு வந்திருக்கிறார், மதுரை ஆதீனம் அருணகிரி தேசிகர். பொதுக்கூட்ட பலிகளைக் காட்டிலும் பேஜார் தரத்தக்கதாக உள்ளது இது.
ஆதீனவாதிக்கு அரசியல் ஆர்வம் இருக்கக்கூடாதா என்றெல்லாம் கேட்டுவிடாதீர்! அவர் அதை ஒளித்ததே இல்லை. ஞானசம்மந்தரின் வழித்தோன்றல் அவ்வப்போதாவது கொஞ்சம் ஆன்மிகவாதியாகவும் இருந்துவிட்டால் பிரச்னையில்லை என்பதுதான் விஷயம். ஆயிரத்தைந்நூறு வருஷ பாரம்பரியம் மிக்க ஒரு மடத்தின் பீடாதிபதியானவர், ரத்தத்தின் ரத்தங்களின் பிரியாணி, பேட்டா கூட்டங்களில் வரிந்துகட்டிக்கொண்டு வசைமாறி பொழியப் போகிறார் என்பதை எண்ணிப் பார்க்கச் சங்கடமாக இருக்காதா?
ஏழாம் நூற்றாண்டில் திருஞான சம்மந்தரால் நிறுவப்பட்ட மதுரை ஆதீன மடம், தமிழகத்தில் சைவமும் தமிழும் செழிக்க எத்தனையோ செய்திருக்கிறது. காண்டெம்ப்ரரி கரஸ்பாண்டண்ட் சுவாமிகளோ, தமிழகம் செழிக்க இரட்டை இலைக்கு வாக்களிப்பீர் என்கிறார். விட்டால் ஒரு கோலி சோடா உடைத்துக் குடித்துவிட்டு, ஒற்றைக்கையில் மைக் பிடித்து, ஏ கருணாநிதியே என்று என்றைக்கு வேண்டுமானாலும் ஆரம்பித்துவிடுவார் போலிருக்கிறது.
செய்தியில் இருப்பதுதான் நோக்கம் என்றால் அதற்கு சுவாமிகள் வேகாத வெயிலில் களமிறங்கி வாக்குச் சேகரிக்கவேண்டிய அவசியமே இல்லை. நித்யானந்தாவோடு அவர் இணைந்து கலக்கிய திடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்த சமகாலக் காவியம் ஒன்று போதும், அவரது அருமை பெருமைகளை எடுத்துச் சொல்ல.
என் கேள்வி அதுவல்ல. ஒரிஜினல் நயம் திராவிட நாத்திகப் பெருந்தகைகளின் வாரிசுகள் நூற்றெட்டுப் போற்றி சொல்லி பிரசாரம் தொடங்கினால் சந்தோஷப்படும் சமூகம், போலி ஆத்திகப் போர்வையாளர்களின் களப்பணியாரங்களையும் அதே ஆர்வத்துடன் அள்ளிச் சாப்பிடுமா?
ஒரு காலத்தில் மடங்கள், மடாதிபதிகள் மீதிருந்த மட்டுமரியாதையெல்லாம் மக்களுக்கு இன்று அப்படியே இருக்கிறதா என்று தெரியவில்லை. காசுள்ள கனவான்களுக்கு கார்ப்பரேட் சாமியார்களின் ஸ்டைலிஷ் யோகா வகுப்புகள் போதும். காசற்றவர்களுக்குக் கடவுளே போதும். ஆயிரத்தைந்நூறு வருடப் பாரம்பரியம் கொண்ட மடாலயத்தின் அருமை பெருமைகளையே காப்பாற்ற இயலாத மடதாரி, வெறும் நாற்பத்தி நாலு வருஷ சரித்திரம் கொண்ட கட்சிக்குப் பிரசாரம் செய்து என்ன சாதித்துக்கொடுத்துவிடுவார் என்று ஜெயலலிதா எதிர்பார்க்கிறார்?
ஆதீனதாரி அருணகிரி தேசிகரோடு ஒப்பிட்டால், நவரசத் தென்றல் நமீதாவின் வரவு அதிமுகவுக்குச் சற்றும் சந்தேகமின்றிப் புது ரத்தம் பாய்ச்சக்கூடியது. ரத்தத்தின் ரத்தங்களெல்லாம் இனி மச்சான்களாகிவிடுவார்கள். மேடையில் வீசும் மெல்லிய (சரி, கனத்த) பூங்காற்று வெகு நிச்சயமாக இந்தக் கோடை வெயிலுக்குச் சரியான தீர்வு. இது மயக்க யோகம் அல்லது மரண யோகத்தையும் ஒருவேளை தடுத்தாலும் தடுக்கும்.
ஆனால் ஒன்று. ஜெயலலிதாவின் “எனது தலைமையிலான அதிமுக அரசு” அடுத்த முறையும் அமைந்து, அருமை ஆதீனருக்கு ஒரு மாநிலங்களவை எம்பி பதவியாவது கிடைத்தாலொழிய அவர் அடங்கமாட்டார் என்று நினைக்கிறேன். நமீதாவோடு இணைந்து அவர் பிரசார ‘குத்துக் கலை நிகழ்ச்சி’ நடத்திவிடுவதற்குள் திருஞான சம்மந்தர்தான் அவரைத் தடுத்தாட்கொள்ள வேண்டும்.
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
April 18, 2016
பொன்னான வாக்கு – 31
நண்பர் ஒருவருக்கு பாரதிய ஜனதாவில் சீட்டுக் கொடுத்தார்கள். அவர் அந்தப் பக்கம் பச்சையாரஞ்சுத் துண்டு போட்டு போட்டோவுக்கு நிற்பதற்கு முன்னால் இந்தப் பக்கம் அவர் பேரில் ஒரு வாட்சப் குழுமம் ஆரம்பிக்கப்பட்டது. எப்படியாவது அவரைத் தேர்தலில் வெற்றி பெற வைத்துவிடுவதற்கு சஹிருதயர்கள் என்ன செய்யவேண்டும்? ஆலோசனைகளை அள்ளி வீச ஒரு தளம். தொழில்நுட்பம் சட்டை பாக்கெட்டுக்கு வந்துவிட்ட பிறகு கருத்துப் பரிமாற்றங்களை நெஞ்சிலிருந்து நெஞ்சுக்கு நேரடியாகக் கடத்துவதில் சிக்கலேதுமில்லை.
ஆனால் நடந்ததுதான் நாராசம். குழுமம் ஆரம்பித்து நாலைந்து தினங்கள் ஆகிவிட்டன. இன்னும் நண்பருக்கு வாழ்த்துச் செய்திகளை மட்டுமே அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு வாழ்த்து. போட்டியிடுவதற்கு வாழ்த்து. வெற்றி பெற வாழ்த்து. பிறரைத் தோற்கடிக்கச் செய்யப் போவதற்கு வாழ்த்து. போட்டியிட முன்வந்தமைக்கே வாழ்த்து. வாட்சப் குழுமம் அமைத்தமைக்கு வாழ்த்து. பிரசாரம் தொடங்கவிருப்பதற்கு வாழ்த்து.
ஏவுகணைத் தாக்குதல்போல் வினாடிக்கொரு வாழ்த்துச் செய்தியாக அனுப்பி கதிகலங்கச் செய்துகொண்டிருக்கிறார்கள் சகோதர ஜிக்கள். இந்த வாழ்த்து அமில மழை பொறுக்காமல் சில கனபாடிகள் இணைந்த சூட்டிலேயே நைசாக நழுவியும் போனார்கள். நண்பரின்மீதுள்ள பாசத்தில் மிச்சமிருப்போர் மட்டும் ம்யூட் செய்துவிட்டு அமைதியாக இருக்கிறார்கள். எப்போதாவது போனால் போகிறதென்று அன்ம்யூட் செய்தால் அப்போதும் ஆயிரக்கணக்கில் வந்து விழுகிறது வாழ்த்துச் செய்திகள். நண்பர் நூறாண்டு காலம் மக்கள் சேவை செய்து சௌக்கியமாக வாழ்வேண்டியவர்தாம். அதில் சந்தேகமில்லை. ஆனால் வாழ்த்துச் செய்தியிலேயே வடை சுட்டுக் காலம் தள்ளி விட முடியுமா?
தமிழகத்தில் பாரதிய ஜனதா என்ன நிலைமையில் உள்ளது என்பதற்கு இந்த வாட்சப் குழுமம் ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக எனக்குப் பட்டது. எண்ணி ஒரு மாதத்தில் தேர்தல். இந்த அறிவிப்பே மிகவும் தாமதமாக வந்திருப்பது. இருக்கிற தினங்களில் உருப்படியாக என்னென்ன செய்யலாம் என்று ஆளுக்கு ஒரு யோசனைகூடவா தோன்றாது? நெருங்கிய உள்வட்டத்திலேயே இதுதான் நிலைமை என்றால் வெளியே என்ன வாழும்?
கட்சி எது, கூட்டணி என்ன, இந்தத் தேர்தலுக்குக் குறைந்தபட்ச செயல்திட்டம் என்ன என்பதையெல்லாம் தாண்டி, ஒரு வேட்பாளர் ஒரு தொகுதியில் வெல்லவேண்டுமானால் அதற்கு அடிப்படைத் தகுதி, தொகுதியில் உள்ள அத்தனை பேருக்கும் அவரது முகம் பரிச்சயமாகியிருக்க வேண்டும் என்பது. வீடு தோறும் வணக்கம் வைத்துவிட்டு வருவதும் வீதி அடைத்து கட்டவுட் வைப்பதும் வேறு எதற்காக?
சரி கட்டவுட்டுக்கு வழியில்லை. போஸ்டருக்கு வழியில்லை. கணக்கு வாத்தியார் தேர்தல் கமிஷனர் கோபித்துக்கொள்ளுவார். அதனாலென்ன? களத்தில் செய்ய எத்தனையோ இருக்கிறது.
அடிப்படையில் ஒன்றைக் கவனிக்கவேண்டும். ஐம்பதாண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் போராடி வருவதும் முப்பதாண்டுகளுக்கு மேலாக பாரதிய ஜனதா போராடி வருவதும் ஒரே ஒரு விஷயத்துக்காகத்தான். மறத்தமிழனுக்கு இவையெல்லாம் இன்றளவும் வடக்கத்தி இயக்கங்களே. இந்தப் பிம்பத்தை உடைப்பதுதான் சவால். சுற்றிச் சுற்றி திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து, அவர்களது பிரசார உத்திகளைத் தமதாக்கிக்கொண்டு தமிழ்நாடு காங்கிரஸ் இன்று ஓரளவுக்குத் தமிழகக் கட்சி போன்ற தொலைதூரச் சாயலைப் பெற்றிருப்பதை மறுக்க இயலாது. குமரி அனந்தன் போன்றோரின் நடைப் பயணங்கள் அல்ல; இளங்கோவன் வகையறாக்களின் தடாலடி ஸ்டேட்மெண்டுகளுக்கே இதில் முக்கிய இடம் என்பதையும் மறுக்க முடியாது.
தேசியக் கட்சிகளின் பொதுவான கொள்கைகள் பிராந்திய எல்லைகளைக் கடக்கும்போது சந்திக்க நேரும் இயல்பான விட்டுக்கொடுத்தல்களுக்கு இடமிருக்க வேண்டும். தொட்டதற்கெல்லாம் பெரிய ஜிக்களிடம் பர்மிஷன் கேட்டுக்கொண்டுதான் இங்கே அரிசிக்கே உலை வைப்பேன் என்பது போன்ற அபத்தம் வேறில்லை. தவிரவும் மாநிலத்தில் அறுபத்தி மூவர் மாதிரி நாலஞ்சு வரிசைக்குத் தலைவர்களே உட்கார்ந்திருந்தால், வாக்காளர்களை விடுங்கள்; தொண்டர்கள் யாருக்கு தண்டன் சமர்ப்பிப்பார்கள்?
அதிமுக என்றால் ஒரு ஜெயலலிதா. திமுக என்றால் ஒரு கலைஞர். பாமக என்றால் ஒரு அன்புமணி. அட மதிமுகவில் இருப்பதே ஒரே ஒருவர்தான் என்றாலும் அந்த ஒருவரை ஊருக்கே தெரியுமே? ஆனால் தேசியக் கட்சிகளில் உறுப்பினராகும்போதே தலைவராகும் எண்ணத்தோடுதான் எல்லோரும் போய்ச் சேருவார்கள் போலிருக்கிறது. மேலிடமும் சுழற்சி முறையில் பிராந்தியத் தலைவர்களை நியமித்து ஆடு வளர்ப்பது போல் கட்சி வளர்க்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.
தமிழகத்தில் பாரதிய ஜனதா என்ற கட்சிக்கு முதலில் வேண்டியது ஒரு முகம். வசீகர முகம். சுயமாக சிந்திக்கத் தெரிந்த, சிறப்பாகப் பேசத் தெரிந்த, மக்களோடு நெருங்கிப் பழகத் தெரிந்த, மக்களுக்காக உழைக்கத் திராணியுள்ள ஓர் ஒற்றைத் தலைமை. சந்தேகத்துக்கு இடமின்றி அனைவரும் ஏற்கக்கூடிய தலைமை. அது அமைந்துவிட்டால் மற்ற எதுவும் பெரிய பிரச்னையாக இராது.
ஏனெனில் வேட்பாளர்களின் முகமும் தரமும் பார்த்து ஓட்டுப் போடும் வழக்கம் துரதிருஷ்டவசமாகத் தமிழ்நாட்டில் இல்லை. தலைமை உவப்பானதாக இருக்கவேண்டும் என்பதுதான் ஒரே சட்டதிட்டம். தமிழ்நாட்டு மக்கள் இந்த விஷயத்தில் மாறமாட்டார்கள். தேசியக் கட்சிகள்தாம் தம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்.
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
April 17, 2016
பொன்னான வாக்கு – 30
ஜெயலலிதாவின் வேட்பாளர் மாற்ற வைபவத்தை நக்கலடித்ததற்குக் கைமேல் பலன். இந்த வேகாத வெயில் காலத்தில் திமுகவினர் வேட்பாளர் மாற்றம் கோரி கல்யாண் ஜுவல்லர்ஸையே விஞ்சுமளவுக்குப் புரட்சிப் போராட்டங்களில் இறங்கிவிட்டார்கள். சரித்திரம் இதற்கு முன் இத்தனை உன்னதமான உட்கட்சி ஜனநாயகப் போராட்டங்களைக் கண்டிருக்கிறதா என்று தெரியவில்லை. எப்படியானாலும் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசித் தினம் வரை திருப்திக்கும் அதிருப்திக்குமான துவந்த யுத்தம் தொடரத்தான் செய்யும்.
யாரைத் தேர்ந்தெடுப்பது என்பது எந்த ஒரு தேர்தலிலும் முதன்மை வினாவாக இருப்பது. இந்தத் தேர்தல் காட்டும் வித்தியாசம் என்னவென்றால், இந்த வினா வாக்காளர்களிடமிருந்து கட்சிக்காரர்களுக்கு இடம் பெயர்ந்திருப்பதுதான். திமுக அறிவித்த வேட்பாளர் பட்டியலில் பல பழைய அமைச்சர்களின் வாரிசுகள் இடம் பெற்றிருப்பதை முதலில் சுட்டிக்காட்டினார்கள். இதென்ன ப்ரைவேட் லிமிடெட் கம்பெனியின் பங்குகள் போன்ற சங்கதியா? ஒரு குறிப்பிட்ட உள்வட்டத்துக்குள்தான் அதிகார வாய்ப்பு சுற்றி வருமா?
புரட்சியின் முதல் குரல் அங்கே கேட்டது. வாரிசுகள் என்பதால் மட்டும் அவர்களது சேவை உதாசீனப்படுத்தப்படலாமா? தந்தை வழியில் அவர்களும் கட்சிக்கு உழைத்தவர்களே. தவிரவும் சீனியாரிடி,அதிகார மைய நேரடித் தொடர்பு இன்னபிற பிளகின்கள் இருக்கவே இருக்கின்றன. அட, தன் மகனை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கக்கூட விரும்பாத ஒரு உத்தமத் தலைவர், தாம் முதல்வராக இருந்த காலத்தில் அமைச்சர்களாக இருந்தவர்களின் வாரிசுகளைக் கரையேற்றவா மெனக்கெடுவார்?
வாதப் பிடிவாதங்களும் பிரதிவாத பயங்கரங்களும்.
கேள்விப்படவும் வாசித்து நமுட்டுச் சிரிப்பு சிரித்துக்கொள்ளவும் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் தமிழகத்தின் இரண்டு பிரதானக் கட்சிகளுக்குள்ளும் உள்ளுக்குள் இவ்வளவு ரத்தக்களறி இருக்கிறதென்பது ஓட்டுப் போடுகிற மகாஜனங்களுக்கு நிச்சயம் அதிர்ச்சியளிக்கவே செய்யும்.
விஜயகாந்துக்கு அரசியல் தெரியாது. வைகோவுக்கு கலிங்கப்பட்டியிலேயே வாக்காளர்கள் கிடையாது. திருமாவுக்கு தலித் ஓட்டுகள் மட்டும்தான்; அதிலும் ஒரு சாரார் அவர் பக்கம் இல்லை. கம்யூனிஸ்டுகளுக்கு வேட்பாளர்கள் கிடைப்பதே கஷ்டம். காங்கிரசுக்குத் தொண்டர்களே கிடையாது. பாஜகவுக்கு முகமே கிடையாது. அன்புமணிக்கு ஒரு சாதி ஓட்டு மட்டும்தான்…
இன்னும் அடுக்கலாம். ஆனால் முதன்மைக் கட்சிகளின் உளுத்துப்போன சுயரூபத்தைப் பார்க்கும்போது, இதெல்லாமே ஒன்றுமில்லையோ என்று தோன்றிவிடுகிறது.
செயல்படாத ஆட்சி என்றால் எப்படி இருக்கும் என்பதைக் கடந்த ஐந்தாண்டுக் காலத்தில் மாநிலம் திவ்யமாக தரிசித்திருக்கிறது. இலவச ஜிகினா அலங்காரங்களுக்குப் பின்னால் கிழிந்து தொங்கியது திரைச்சீலைகள் மட்டுமல்ல. அவற்றை விவரித்துக்கொண்டிருப்பதில் அர்த்தமும் இல்லை. ஒரு பெரும் மாற்றத்தை உத்தேசித்துத் தேர்தலை அணுகும் இயக்கங்கள் சொந்த லாப சுக சௌகரிய கிளுகிளுப்புகளில் கிறங்கிக் கிடக்க இதுவா தருணம்?
ஆட்சியமைக்கும் தகுதி இருந்தாலும், வாய்ப்பற்ற கட்சிகளிலும் கூட்டணிகளிலும் இத்தகு அதிகார யுத்தம் இல்லை என்பதைக் கவனியுங்கள். கிளம்பிவிட்ட மநகூ எக்ஸ்பிரசின் கட்டக்கடைசிக் கம்பார்ட்மெண்டில் ஓடி வந்து ஏறிக்கொண்ட வாசன் கட்சிக்குக் கூட வள்ளலாக அள்ளிக்கொடுக்க வழியிருக்கிறது அவர்களுக்கு. சாவகாசமாக அடுத்த வாரம் ஒரு நாலு கட்சி போய் நின்றால்கூட தலைக்கு நாலு எண்ணிப் போடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. அவர்களது பிரச்னையெல்லாம் வேட்பாளரைத் தேடிப்பிடிப்பது மட்டுமே.
இது எப்பேர்ப்பட்ட அவல நாடகம்! இந்த லட்சணத்தில் மாற்றத்தைக் குறித்து சிந்திப்பதில் என்ன பிரயோசனம்?
திமுக வேட்பாளர் அறிவிப்பின் விளைவாக உருவாகியிருக்கும் பூசல், சர்வ நிச்சயமாக ஆளுங்கட்சிக்குத்தான் சாதகம். ஆட்சியை மாற்றிப் பார்க்கலாமா என்று யோசிக்கத் தொடங்கியிருக்கும் சாமானியர்கள் இந்தப் பதவி வெறி புண்ணியசீலர்களின் நடவடிக்கைகளைக் கண்டு தலை தெரிக்க ஓடிவிடுவது நிச்சயம். எனக்குத் தெரிந்த ஒரு டீக்கடைக்காரர் நேற்று சொன்னார். ‘யார் வந்தாலும் சாப்பிடத்தான் போறாங்க. இந்தம்மா நாலஞ்சு பொருள நமக்குக் குடுத்துட்டாச்சும் சாப்பிடுது.’
அவர் குறிப்பிட்டது இலவசங்களை. விரும்பினாலும் விரும்பாது போனாலும் இன்று நம்மை ஆள்வது இலவசங்கள்தாம். இதன்மீதான அருவருப்புணர்வே மரத்துப் போகுமளவுக்கு நாம் மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறோம் என்பதை விழிப்புணர்வுடன் எண்ணிப் பார்க்கவேண்டிய நேரம் இது.
மூன்றாவது அணியில் இருக்கும் தலைவர்களில் விஜயகாந்தை சாய்ஸில் விட்டுவிடுவோம். ஆயிரம் விமரிசனங்கள் இருப்பினும் வைகோவும் திருமாவும் கட்டாயம் பொருட்படுத்தத் தகுந்தவர்கள். சூழ்நிலைக் கைதிகளாக அவர்கள் விஜயகாந்தின் தலைமையை ஏற்றிருப்பதைக் கூடப் பொறுக்கலாம். ஆனால் ஒருத்தர் கண்ணுக்கு விஜயகாந்த் அம்பேத்கராகத் தெரிவதும் இன்னொருத்தர் கண்ணுக்கு மூப்பனாராகத் தெரிவதும் வேறொருத்தர் கண்ணுக்கு காந்தியாகவும் கோட்சேவாகவும் தெரிவதும் பீதி கிளப்புவதாக அல்லவா உள்ளது? இவர்களுக்கே விஜயகாந்த், விஜயகாந்தாகத் தெரியவில்லை என்றால் இந்தக் கூட்டணி எப்படி மக்கள் கண்ணுக்குத் தெரியும்?
திமுகவின் உட்கட்சிப் பூசல் கவலைக்கு இடமளிக்கிறதென்றால் மூன்றாவது அணியின் ஒய்யாரக் கொண்டை சிரிப்பதற்கு மட்டுமே இடமளித்துக்கொண்டிருக்கிறது. மாற்றம் முன்னேற்றம் என்று ஒருவர் கதறிக்கொண்டிருக்கிறார். மாற்றம் ஏமாற்றமாகிவிடாதிருக்க, விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது.
0
நன்றி: தினமலர் 18/04/16
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)


