Pa Raghavan's Blog, page 24

April 14, 2016

பொன்னான வாக்கு – 29

1996ம் வருஷம். பொதுத்தேர்தல் களேபரத்தில் வடக்கத்தி மாநிலங்கள் அல்லோலகல்லோலப்பட்டுக்கொண்டிருந்தன. ஒரு நாலைந்து மாநிலங்களில் சுற்றுப் பயணம் செய்து தேர்தல் குறித்து எழுதுவதற்காகப் போயிருந்தேன். டெல்லியிலிருந்து பிகார். அங்கிருந்து மேற்கு வங்காளம். அப்படியே அசாம். திரும்பும்போது உத்தர பிரதேசம். அப்போது யு.என்.ஐ. செய்தி நிறுவனத்தின் துணைத் தலைவராக இருந்த கணபதி, லக்னோ வந்திருந்தார். ‘நாளைக்கு ஹரோரா தொகுதில மாயாவதி பிரசாரம் பண்ண வராங்க. ஒரு நாள் கூடவே சுத்தலாம் வரீங்களா?’ என்று கேட்டார். அன்றே புறப்பட்டோம்.


மறுநாள் காலை மாயாவதியோடு விடிந்தது. ஒரு ஓட்டை ஜீப்பில்தான் அவர் வந்தார். பிரதான சாலைகளில் ஜீப்பில் நின்றபடியே பேசினார். சட்டென்று முடிவு செய்து ஏதேனுமொரு குறுக்குச் சந்தில் இறங்கி நடக்க ஆரம்பித்துவிடுவார். என்னவொரு வேகம். மாயாவதியின் நடை வேகத்துக்கு என்னைப் போன்ற ஒரு அகண்ட சரீரி ஈடுகொடுக்கவே முடியாது என்பது புரிந்தது. இங்கே நாலு வீடுகள், அங்கே நாலு கடைகள், மரத்தடியில் சாய் குடித்தபடி கொஞ்சம் நலன் விசாரிப்புகள், மறக்காமல் ஓட்டுப் போடச் சொல்லிப் புன்னகையோடு ஒரு வேண்டுதல்.


மீண்டும் ஜீப்பில் ஏறி இரண்டு சாலைகள். திரும்பவும் ஒரு சிறு நடைப் பயணம். அன்றைய ஒரு நாள் பிரசாரத்தில் அவர் சுமார் நூறு பேருடன் தனிப்பட்ட முறையில் பேசினார் என்பதைக் கவனித்தேன். எப்படியும் நடை மட்டும் ஏழெட்டு கிலோ மீட்டர்கள் இருக்கும். அதிரடியெல்லாம் அசெம்ப்ளியில்தான். மக்களிடம் பேசும்போது பாசத்துக்குரிய பெஹன்ஜி ஆகிவிடுவார். வீட்ல இன்னிக்கி என்ன சமையல் என்று உரிமையோடு விசாரித்து, ஓரிரு இடங்களில் தண்ணீர் கேட்டு வாங்கிக் குடித்து, ஒரு வீட்டு வாசலில் கால் நீட்டி உட்கார்ந்தே விட்டார். ‘தைலம் இருக்கா?’ என்று கேட்டு வாங்கி காலில் தேய்த்துக்கொண்டு, ‘செம வலி’ என்றபடியே துப்பட்டாவால் முகத்தைத் துடைத்தபடி எழுந்து அடுத்த வீட்டுக்குப் போனார். எனக்கும்தான் கூட நடந்து கால் வலித்தது. ஆனால் யாரிடம் போய்த் தைலம் கேட்பது?


நேற்றைக்கு ஜெயலலிதாவின் தேர்தல் சுற்றுப் பயணத் திட்டத்தைப் படித்துக்கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நினைவுக்கு வந்துவிட்டது. ஹெலிகாப்டர் பயணங்கள். ஆங்காங்கே ஹெலிபேட் ஏற்பாடுகள். குளுகுளு மேடை வசதிகள். கூட்ட நெரிசலோ, வெயில் மயக்கமோ. கூட்டத்துக்கு வந்தவர்களில் யாராவது இறந்தால் இரங்கலெல்லாம் இரண்டாம் பட்சம். தேர்தலுக்குப் பிறகு இழப்பீட்டுத் தொகை என்ற அறிவிப்பு ஹெலிகாப்டர் ஜன்னல் வழியே விசிறியடிக்கப்படும்.


கடந்த ஐந்தாண்டுகளில் ஒரு முறையாவது ஜெயலலிதா மக்களை நேரில் சந்தித்திருக்கிறாரா என்று யோசித்துப் பார்க்கிறேன். ஒரு பத்திரிகை பேட்டி கிடையாது. தொலைக்காட்சிப் பேட்டி கிடையாது. பத்திரிகையாளர் சந்திப்பு கிடையாது. பொதுக்கூட்டம் கிடையாது. வானொலிப் பேச்சு கிடையாது. வெறும் அறிக்கைகள். அவர் புஷ்பக விமானத்திலேயே வேண்டுமானாலும் பிரசாரக் கூட்டங்களுக்குப் போகட்டும். கொண்டையுள்ள சீமாட்டிகள் அள்ளி முடிவதில் என்ன பிரச்னை? ஆனால் மக்களைவிட்டுப் பல காதம் விலகி கார்ப்பரேட் கர்மயோகி போலப் பேசுவதைக் கொஞ்சம் மாற்றிப் பார்க்கலாம்.


உடுமலை சம்பவம் நடந்தபோது முதல்வர் என்ன சொல்லப் போகிறார் என்று மாநிலமே எதிர்பார்த்து ஒரு வாரம் வரைக்கும் காத்திருந்ததை மறக்க முடியாது. நாதியற்ற சமூகத்தின் நலனுக்காக உழைக்கும் ஒப்பற்ற தலைவருக்கும் சாதி ஓட்டுக் கணக்குகள்தாம் அப்போது முக்கியமாக இருந்தன.


மாதாமாதம் மளிகை சாமான் வாங்குவது போலப் பக்கங்கள் நிரம்பி, புது பாஸ்போர்ட் புத்தகம் வாங்கித் தள்ளிக் கொண்டிருக்கும் உலகம் சுற்றும் வாலிபனே சென்னை பெருமழைக் காலத்தில் ஒரு ரவுண்டு வந்து பார்த்துவிட்டுப் போனார். ஒரு மாநில முதல்வர் வீதி இறங்கி வந்திருக்க வேண்டாமா?


இதயங்களை வெல்ல இலவச அறிவிப்புகள் போதும் என்ற முடிவுக்கு அவர் வந்துவிட்டாரோ என்று தோன்றுகிறது. குண்டாகத் தேர்தல் அறிக்கை வெளியிட்டு, நூற்றுக்கணக்கில் வாக்குறுதிகளை வழங்கி, ஒரு சிலவற்றை நிறைவேற்றினாலே ஒப்பற்ற தலைவராகிவிட முடிகிற காலம். உங்களை விட்டால் எனக்கு யார் இருக்கிறார்கள் என்று ஜெயலலிதா கேட்கலாம். அது, இதுவே என் கடைசித் தேர்தல் என்று கருணாநிதி சொல்வதற்கு நிகரானது.


நமது தலைவர்கள் சொற்களால் சீரியல் பல்பு போடுவதை விடுத்து ஆன்மாவைத் தொடும்படியாக ஒரு அகல் விளக்கு ஏற்றப் பார்க்கலாம். இந்த மாநிலம் இவர்களுக்கு எவ்வளவோ செய்திருக்கிறது. இந்த முறையாவது எங்களுக்கு நீங்கள் திருப்பிச் செய்யுங்கள் என்று வாக்காளர்கள் கேட்டுப் பார்க்கலாம்.


அழுத பிள்ளைக்குத்தான் ஆவின் பாலாவது கிடைக்கும்.


0


நன்றி: தினமலர் 15/04/16


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 14, 2016 18:54

April 13, 2016

பொன்னான வாக்கு – 28

இந்த வாரம் முழுக்க அதிமுகவை மட்டுமே அலசிக் காயப்போடவேண்டும் என்று நினைத்துக்கொண்டுதான் ஆரம்பித்தேன். அது இப்படி மூன்றாம் நாளே தடைபட்டு நிற்க நான் காரணமல்ல. இந்த வாரமே தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்ட திமுகதான் காரணம்.


கலைஞர் ஜோராக கட்டிங், ஷேவிங்கெல்லாம் பண்ணிக்கொண்டு வந்து ஃப்ரெஷ்ஷாக அறிக்கையை வாசித்தபோது எல்லாமே ரொம்பப் பிரமாதமாகத் தோன்றியது. என்னதான் புராதனமான மாநில சுயாட்சி, ஈழத் தமிழர் நல்வாழ்வு, கச்சத்தீவை மீட்போம், மேலவை அமைப்போம், லோக் ஆயுக்தா கொண்டு வருவோம் பஜனை கீதங்கள் இருந்தாலும் பல உருப்படியான உருப்படிகள் இருப்பதாகவே பட்டது. ஆனால் கொஞ்சம் நிதானமாக உட்கார்ந்து படித்துப் பார்த்தால் பல விஷயங்கள் இடிப்பதுபோலத் தோன்றியது.


இந்தத் தேர்தல் அறிக்கையில் இலவச அறிவிப்புகள் கிடையாது என்பது திமுகவின் முக்கிய நிலைபாடாக நிறுவப்பட்டிருக்கிறது. கலைஞர் வாஷிங் மெஷின் தரப்போகிறார், வீட்டுக்கொரு ஏர் கண்டிஷனர் தரப் போகிறார் என்றெல்லாம் நாட்டு மக்கள் ஆளாளுக்குப் பீதி கிளப்பி விட்டுக்கொண்டிருந்தார்கள். நல்லவேளை அதெல்லாம் இல்லை. ஆனால் இந்த இலவச அறிவிப்புகளுக்கு பதிலாகச் சொல்லப் பட்டிருக்கும் சலுகை அறிவிப்புகள் மிகவும் நெருடுகின்றன.


அதென்ன சொல்லி வைத்த மாதிரி அத்தனை பேரும் விவசாயக் கடன்களை ரத்து செய்வதில் அத்தனை ஆர்வம் காட்டுகிறார்கள்? அப்புறம் அதற்குக் கடன் என்று எதற்குப் பேர் கொடுப்பானேன்? ஒரு வறட்சிக் காலம் அல்லது பெருமழைக் காலத்தில் கடன் தள்ளுபடி என்றால் சரி. டீஃபால்ட்டாக விவசாயிகளின் ஓட்டு வேண்டுமென்றால் கடன் தள்ளுபடி என்பது எந்த ஊர் நியாயமென்று தெரியவில்லை.


அதே மாதிரிதான் இலவச மின்சார அறிவிப்புகள். உண்மையிலேயே மின்மிகை மாநிலம்தான் என்றால் மின்சாரக் கட்டணம் இப்படி உச்சாணிக்கொம்பில் போய் உட்கார்ந்திருக்காது. ஒரு பக்கம் மின்வாரியம் நாக்கு தள்ளிக்கொண்டிருக்க, மறுபக்கம் இலவச மின்சார அறிவிப்புகள். மாறாக மின் உற்பத்திப் பெருக்கத்துக்கு, சீரான வினியோகத்துக்கு உருப்படியாக என்ன செய்யலாம் என்று யோசித்திருக்கலாம். சும்மா போகிற போக்கில் ‘போர்க்கால அடிப்படையில் மின் உற்பத்திப் பெருக்க நடவடிக்கைகள்’ என்று சொல்லிவைப்பதில் என்ன பயன்?


பால் விலைக் குறைப்பு. அதுவும் ஏழு ரூபாய். இதனால் ஆவினுக்கு எத்தனை ஆயிரம் கோடி நிதிச்சுமை ஏற்படும் என்று சரியாகத் தெரியவில்லை. என்னவாக இருந்தாலும் அவர்கள் அதைக் கொள்முதல் விலையில்தான் காட்டுவார்கள். ஆவினுக்கு விற்றால் விலை கம்மி என்ற நிலை உருவானால் உற்பத்தியாளர்கள் கூசாமல் மொத்தமாகத் தூக்கித் தனியாருக்கு ஊற்றிவிட்டுப் போவதைத் தவிர வேறு வழியே இல்லாது போகும். இந்தச் சூழ்நிலையில், ‘கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்யும் பால் முழுவதையும் ஆவின் நிறுவனமே கொள்முதல் செய்ய ஆவன செய்யப்படும்’ என்றால் அது என்ன ஆவன? புரியவில்லை.


இந்தத் தேர்தல் அறிக்கையிலேயே மிகுந்த அபாயகரமான சங்கதியாக எனக்குத் தோன்றியது, அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் மூன்று லட்சம் இடங்களை நிரப்புவது என்பது. இருக்கிற ஊழியர்களை வைத்துக்கொண்டு அரசு என்ன சாதித்துக்கொண்டிருக்கிறது என்பது ஒரு புறமிருக்க, இந்த மூன்று லட்சம் காலியிடங்கள் ஏன் இதுநாள் வரை நிரப்பப்படவில்லை என்ற கேள்வியும் எழுகிறது. ஒரு பக்கம் இந்த மூன்று லட்ச அறிவிப்பு என்றால் மறுபக்கம் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு மாதாந்தர உதவித் தொகை அறிவிப்பு. மூன்று லட்சம் இடங்கள் நிரப்பப்படும் வரை மாதாந்தர உதவியா? அல்லது மூன்று லட்சத்தி ஒன்றாவது நபரிலிருந்து மாதாந்தர உதவியா? ஒழியட்டும், இந்த மூன்று லட்சம் புதிய பதவியாளர்களுக்கு சம்பளம் என்ன? அந்தத் தொகையை எங்கிருந்து ‘உற்பத்தி செய்ய’ப் போகிறார்கள்? டாஸ்மாக்கை வேறு மூடிவிடப் போகிறார்கள். ஈஸ்வரோ ரக்ஷது.


மாணவர்களுக்கு இலவச லேப்டாப் அல்லது டேப்லட். பத்தாத குறைக்கு இலவச த்ரீ ஜி, ஃபோர் ஜி சேவைகள். என்னத்துக்கு? பைரேட் பேவிலிருந்தும் தமிழ் ராக்கர்களிடமிருந்தும் தரமான புதிய படங்களைத் தரவிறக்கிப் பார்த்து ரசிக்கவா? ஒரு பேச்சுக்குக் கேட்கிறேன். பத்து ஜிபி டேட்டாவின் விலை என்ன? எத்தனை லட்சம் மாணவர்களுக்கு இதனை எத்தனை காலத்துக்கு இலவசமாகக் கொடுக்கப் போகிறார்கள்? இந்தக் காசைத் தூக்கி அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்குப் போட்டாலாவது உபயோகம். அட எத்தனை பள்ளிகளில் கழிப்பிடங்கள் ஒழுங்காக இருக்கின்றன? வகுப்பறைகள், மேசை நாற்காலிகள், ஆய்வுக்கூடங்களைச் செப்பனிட என்ன திட்டம் கைவசம் உள்ளது?


திமுகவின் தேர்தல் அறிக்கையில் ரசிக்கத்தக்க அம்சமாக எனக்குத் தோன்றியது, தற்போதைய ஜெயலலிதா அரசாங்கம் கொண்டுவந்த சில நல்ல திட்டங்களை இழுத்து மூடி மங்களம் பாடாதிருப்பதே. மற்றபடி இன்னொரு அறிக்கை என்பதைத் தாண்டி சிலாகிக்கத் தோன்றவில்லை.


0


நன்றி: தினமலர் 14/04/16


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 13, 2016 16:54

April 12, 2016

பொன்னான வாக்கு – 27

இந்த மது விலக்கு மாதிரி ஒரு பேஜார் பிடித்த சமாசாரம் வேறு கிடையாது. விலக்கினால் வருமானம் படுக்கும். இருப்பது ஓட்டு அரசியலை பாதிக்கும்.


போன பொதுத்தேர்தல் வரையிலுமேகூட இந்த விவகாரம் இத்தனை பிரமாதமாகப் பேசப்பட்டதில்லை. என்றைக்கோ ராஜாஜி கொண்டுவந்தார்; கருணாநிதி மங்களம் பாடினார் என்று ஒரு கதை சொல்லுவார்களே தவிர, சமகாலத் தலைமுறைக்கு மதுவிலக்கு என்றால் என்னவென்று தெரிந்திருக்க நியாயமில்லை.


முன்னொரு காலத்தில் கள்ளுக்கடைகள் இருந்தன. Arakk Shop அல்லது Araak Shop என்று கட்டாய ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோடாவது ஆங்கிலத்தில் போர்டு வைத்து சாராயக்கடைகள் இருந்தன. அது ஏழைகளின் தாகத்துக்கு. நிதி மிகுந்து பொற்குவை தரவல்லவர்களுக்கு ஒயின் ஷாப்புகளும் பார்களும் இருந்தன.


மது விற்பனையை இனி அரசே செய்யும் என்று ஜெயலலிதா அறிவித்து டாஸ்மாக் கடைகள் வீதிக்கொன்றாக முளைத்த சமயத்தில் சாராயக் கடைகள் ஒழிக்கப்பட்டன. கள் இறக்கும் தொழில் தடை செய்யப்பட்டது. ‘தேசநலன் கருதி’ தமிழகத்தின் இரு பிரதானக் கட்சிகளைச் சார்ந்தவர்களே இந்தக் கடைகளுக்கு மது வகைகளை உற்பத்தி செய்து அளித்து வந்தார்கள்.


தமிழகத்தில் கள்ளச் சாராய இறப்புகளின் எண்ணிக்கை குறைந்தது என்பது தவிர டாஸ்மாக்கின் வரவு குடிகாரர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியிருப்பதை மறுக்க இயலாது. ஒரு ரகசிய அல்லது மறைமுகச் செயல்பாடாக மட்டுமே அதற்கு முன் இருந்து வந்த குடிப் பழக்கம், டாஸ்மாக்கின் வரவுக்குப் பின் வீர சுதந்தரமடைந்தது. வீர சுதந்தரம் வேண்டி நின்றார் பின்னர் வேறெதும் கொள்வாரோ? கண்டிப்பாக மாட்டார்.


இது ஜெயலலிதாவுக்குத் தெரியாதா? இல்லை கருணாநிதிக்குத்தான் தெரியாதா? அவர் என்னடாவென்றால் படிப்படியாக மது விலக்கு என்கிறார். இவர் என்னடாவென்றால் முதலில் டாஸ்மாக்கை இழுத்து மூடிவிட்டு, பிறகு மது விலக்கை அமல்படுத்தப் புதிய சட்டம் என்கிறார். இந்தப் பத்தியில் நான் முன்பே எழுதியிருந்தது போல, டாஸ்மாக் மூடு விழா என்பது நயந்தாரா அல்லது ஹன்சிகா ஒயின்ஸ் திறப்பு விழாதான். ஆட்சிக்கு வந்ததும் அதைச் செய்துவிட்டு அஞ்சாவது வருஷக் கடைசியில் மது விலக்கு கொண்டு வரலாம் என்று நினைத்தால் அதன்பேர் போங்காட்டம்.


இது ஒரு பக்கம் இருக்க, ஜெயலலிதா சொல்லியிருக்கும் ‘படிப்படியாக மது விலக்கு’த் திட்டம் எந்தளவுக்கு வேலைக்கு ஆகும் என்று தெரியவில்லை. மாதம் ஒரு மாவட்டமாக மது விலக்கு அமல்படுத்தப்படும் என்று சொன்னால் சரி. பார்கள் முதலில் மூடப்படும், எலைட் ஷாப்புகள் அப்புறம், அதன்பின் அழுக்கு டாஸ்மாக் கடைகள் என்று மூன்று மாதங்களுக்கு ஒரு ஸ்டெப் என்றாலும் சரி. மாறாக, கடைகளின் வேலை நேரம் படிப்படியாகக் குறைக்கப்படும், பிறகு கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்பது ஐந்தாண்டல்ல; ஐம்பதாண்டுச் செயல்திட்டம் மாதிரி தெரிகிறது.


இதனை எழுதிக்கொண்டிருக்கும் நேரத்தில் என் நண்பரும், விசுவாசக் குடிமகனுமான ஒரு பிரகஸ்பதி தற்செயலாக போனில் அழைத்தார். பேச்சுவாக்கில் படிப்படியாக மது விலக்கு என்பதைப் பற்றி அவரிடம் நான் சொல்லப் போக, ‘அது ஏற்கெனவே ஆரம்பிச்சிருச்சே சார்’ என்றார்.


எனக்குத் தூக்கிவாரிப் போட்டுவிட்டது. நியூஸ் பேப்பர்காரர்களும் காட்சி ஊடக மகாராஜாக்களும் சதி செய்து அரசின் ஒரு அசகாயத் திட்டத்தைத் திட்டமிட்டு மறைத்துவிட்டார்களா என்ன?


‘அட போங்க சார். உங்களுக்கு விவரமே பத்தாது. படிப்படியா மது விலக்குன்னா என்ன தெரியுமா? லாஸ்ட் ஆறு மாசமா எந்த கடையிலயும் குவார்ட்டரே கிடையாது. ஹாஃப் இருக்கு, ஃபுல் இருக்கு; வேணுன்னா வாங்கிக்க, இல்லன்னா நடையக் கட்டுன்றான்’ என்றார் அந்த நண்பர்.


ஓ! குவார்ட்டருக்கு மட்டும் தடை என்பதுதான் படிப்படிப்படியின் முதல் படியா?


‘இப்ப நெலவரம் இன்னும் மோசம் சார். நெறைய கடைங்கள்ள ஹாஃப் கூட கிடைக்கமாட்டேங்குது. ஃபுல்லு மட்டும்தான் இருக்குதுன்றான் பேமானி. அதுவும் எம்.ஆர்.பிக்குமேல இவனுக்கு இருவது ரூவா தண்டம்வேற அழணும். குடுக்க மாட்டேன்னா சரக்கு கிடையாதுன்றான் சார். பாண்டிச்சேரில ஐநூறு ரூவாய்க்கு விக்கற சரக்க இவன் எழுநூத்தம்பதுக்குக் கூசாம விக்கறான் சார். பத்தாத குறைக்கு இருவது ரூவா கமிசன்வேற.’ நண்பர் மிகவும் வருத்தப்பட்டு ஒரு பாட்டம் புலம்பித் தீர்த்து போனை வைத்துவிட்டார்.


குவார்ட்டர் குவார்ட்டராகவும், ஹாஃப் ஹாஃபாகவும் சரக்கு விற்று சம்பாதிப்பது போதவில்லை போலிருக்கிறது. வாங்கினால் ஃபுல். இல்லையேல் செல். எப்பேர்ப்பட்ட கொள்கை!


விரும்பியோ விரும்பாமலோ இந்தத் தேர்தலின் முடிவுகளை மது விலக்கு அறிவிப்புகளே தீர்மானிக்கும் என்று கட்சிகள் நம்பத் தொடங்கியிருப்பது ஒரு விதத்தில் நல்லதே. செய்து காட்டுவார்களா என்பது ஒரு புறமிருக்க, இது தமிழகத்தில் மீண்டும் கள்ளச் சாராய நீரோட்டம் அல்லது தேரோட்டத்துக்கு இடம் தந்துவிடாதிருக்க வேண்டும் என்பதே அனைத்திலும் இன்றியமையாதது.


0


நன்றி: தினமலர் 13/04/16


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 12, 2016 17:12

April 10, 2016

பொன்னான வாக்கு – 26

குப்புசாமி குப்புசாமி என்று ஒரு பிரகஸ்பதி இருந்தார். அவருக்கு செஞ்சுலச்சுமி என்றொரு புத்திரி. இந்த செஞ்சுலச்சுமி ஒரு அதிரூப அழகு சுந்தரி. பிராந்தியத்தில் அவளைப் பார்த்து வழியாத வயசுப் பையன்களே கிடையாது. ஆனால் செஞ்சுலச்சுமி யாருக்காவது மசிவாளா என்றால் மாட்டாள்! நூற்றுக் கணக்கான காதல் கடுதாசிகள், ஆயிரக்கணக்கான குறுந்தகவல் கும்மியடிப்புகள், கணக்கு வழக்கே இல்லாத நேரடி அப்ளிகேஷன்கள்.


ம்ஹும். செஞ்சுலச்சுமிக்கு எந்தப் பயலையும் பிடிக்கவில்லை. ஏனென்றால் செஞ்சுலச்சுமி வெறும் அழகி மட்டுமல்ல. கொஞ்சம் வெல்லம் போட்ட அழகி. அதாவது அவள் படித்தவள். தவிரவும் நிறைய சொத்துபத்து. தன் தரத்துக்கும் தகுதிக்கும் ஏற்ற மாப்பிள்ளையாகப்பட்டவன் தன்னைப் போல் பேரழகனாக, தன்னைப் போல் பெரும் படிப்பாளியாக, தன்னைப் போலவே சுக சௌகரியக் குறைச்சலில்லாதவனாக இருக்கவேண்டும் என்று அவள் ஆசைப்பட்டாள்.


யார் தப்பு சொல்ல முடியும்? சரி உனக்கு நானே ஒரு பிரமாதமான மாப்பிள்ளை பார்க்கிறேன் என்று குப்புசாமி தந்தைக்கான கடமையைச் செவ்வனே ஆற்றிவிடும் பொருட்டு, வரிந்துகட்டிக்கொண்டு கிளம்பினார்.


முதல் மாப்பிள்ளையாகப்பட்டவன், ஒரு சுப முகூர்த்த நாளில் பெண் பார்க்க வந்தான். செஞ்சுலச்சுமி அவனைத் தனியே அழைத்துச் சென்று சிறிது நேரம் பேசிவிட்டு, அப்பாவிடம் வந்து பையன் தேறமாட்டான் என்று சொல்லிவிட்டாள். ‘ஏம்மா?’ என்று அவர் பதற, ‘இவன் படிச்சவந்தான். ஆனா அப்பப்ப நிறைய அரியர் வெச்சி கம்ப்ளீட் பண்ணியிருக்காம்ப்பா. வேஸ்ட்’


சரி ஒழியட்டும் என்று குப்புசாமி அடுத்த மாப்பிள்ளையைத் தேடிப் பிடித்தார். அரியர் வைக்காமல் படித்து, பாஸ் செய்த மாப்பிள்ளை. இவனுக்கும் செஞ்சுலச்சுமி காப்பி கொடுத்து தனியே கூட்டிப் போய் சில கேள்விகள் கேட்டாள். திரும்பி வந்து சொன்னாள், ‘ம்ஹும். இவனும் தேறமாட்டான். வெறும் பார்டர் பாஸ் கேஸ். நான் எதிர்பாக்கறது ஒரு டிஸ்டிங்ஷன் மாப்பிள்ளை.’


மூன்றாமவன் வந்தான். படிப்பெல்லாம் சரிதான், ஆனால் மூக்கு முள்ளம்பன்றி மூக்கு மாதிரி இருக்கிறது என்றாள். அடுத்தவனுக்கு ஆதார் கார்டே இல்லை என்று ரிஜக்ட் செய்தாள். ஐந்தாவது ஆசாமியின் அப்பா அம்மா சரியில்லை என்றாள். ஆறாவதாக வந்தவன் சரியான பட்டிக்காடு. அடுத்தவன் ரசனை கெட்டவன். அதற்கடுத்தவன் ஊதாரி. தத்தி, தண்டச்சோறு, உருப்படாதவன், உதவாக்கரை என்று அவள் ஒவ்வொருமுறை நிராகரிக்கவும் ஒரு காரணம் எப்படியோ கிடைத்துக்கொண்டே இருந்தது.


குப்புசாமி யோசித்தார். ஒரு முடிவோடு கிளம்பி ஒருவாரம் வெளியூருக்குப் போனார். இந்த முறை தப்பு நடக்காது; இந்தப் பையனைப் பார், உனக்குக் கண்டிப்பாகப் பிடிக்கும் என்று புதியதொரு பிரகஸ்பதியை அழைத்து வந்து எதிரில் நிறுத்தினார்.


வழக்கம்போல் உத்தம புத்திரி அவனையும் தனியறைக்கு அழைத்துச் சென்று வினாக்கணை தொடுக்க ஆரம்பித்தாள். பத்து நிமிடம். அரை மணி. ஒரு மணி. அறைக்கதவு திறந்து செஞ்சுலச்சுமி வெளீயே வந்தபோது வழக்கமே இல்லாத வழக்கமாக அவள் முகத்தில் வெட்கம் மாதிரி என்னமோ ஒன்று ஒட்டிக்கொண்டிருந்ததைக் குப்புசாமி கண்டார்.


‘என்னம்மா ஆச்சு? மாப்ள ஓகேவா?’


‘பிடிச்சிருக்குப்பா. இவர் கரெக்டா இருப்பார்னு தோணுது’


‘நம்பவே முடியல குப்புசாமி. எல்லா பையன்கள்கிட்டயும் எதோ ஒரு குறைய கண்டுபிடிச்ச உம்பொண்ணு எப்படி இவன மட்டும் செலக்ட் பண்ணா?’ என்று குப்புசாமியின் நண்பர் ஆச்சரியப்பட்டுக் கேட்டார்.


‘சிம்பிள். இவனுக்கு ஆல்ரெடி ஒரு கல்யாணமாகி டைவர்ஸ் ஆன அனுபவம் இருக்கு’ என்றார் குப்புசாமி.


நடக்கிற கூத்துகளையெல்லாம் பார்த்தால், செஞ்சுலச்சுமி மாப்பிள்ளை பிடித்த கதை மாதிரிதான் தெரிகிறது, ஜெயலலிதா வேட்பாளர்களை மாற்றுகிற சங்கதியும். நாளது தேதி வரை அறிவிக்கப்பட்ட அதிமுக வேட்பாளர்களில் பத்திருபது பேர் மாற்றப்பட்டிருப்பார்களா? ஆனால் மிச்சமிருக்கும் அத்தனை பேருக்கும் அடி வயிற்றில் பயப்பிராந்தி பிடித்திருக்கும்.


எனக்கென்னமோ கூடிய சீக்கிரம் 234 தொகுதிகளிலும் ஜெயலலிதாவே நிற்கிறார் என்று கொட்டையெழுத்துத் தலைப்புச் செய்தி வந்துவிடும் என்று தோன்றுகிறது. எம்பெருமான் தான் காப்பாற்ற வேண்டும்.


ஆனால் ஒன்று புரிகிறது. யாருக்கும் தராதரம் பார்த்து சீட் கொடுக்கப்படுவதில்லை. தேர்ந்தெடுக்கும் இடத்தில் இருக்கிறவர்களுக்குத் தங்களுடைய ஆட்களையே அறிமுகம் இருப்பதில்லை. அந்த நேர்காணல் ஜமாபந்தியில் வேறு அப்படி என்னத்தைத்தான் கேட்டுத் தொலைக்கிறார்கள்? ஜாதி, சொத்து கணக்கெடுப்போடு சரியா?


இந்த நிமிஷம் உங்களுக்கு எந்த அதிமுக வேட்பாளரைப் பிடிக்கவில்லையென்றாலும் ஒரு கடுதாசி போட்டால் போதும். மறுகணமே மாற்று வேட்பாளர். என்ன ஒரு உயர்தர ஜனநாயகம்! இந்த ஜனநாயக உணர்ச்சியெல்லாமும் தேர்தல் நேரத்தில்தான் பீறிட ஆரம்பிக்கிறது. ஒரு சௌகரியத்துக்கு ஜனநாயக உணர்ச்சி என்கிறோம். உண்மையில் இதன் பெயர் பய உணர்ச்சி. கொஞ்சம் விரிவாகவே அலசவேண்டிய சங்கதி இது. செய்வோம்.


ஆனால், அவசரப்பட்டு அதற்குள் யாரும் ஆர்.கே.நகர் தொகுதிக்கு மாற்று வேட்பாளர் கேட்டு விடாதிருக்கவேண்டும்.


0


நன்றி: தினமலர் 11/04/16


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 10, 2016 20:59

April 8, 2016

பொன்னான வாக்கு – 25

பேச்சு ஒரு பேஜார் பிடித்த கலை. எப்போது மாலை சூடும், எப்போது காலை வாரும் என்று சொல்லவே முடியாது. உட்கார்ந்து எழுத ஆரம்பித்தால் ஓராயிரம் பக்கங்கள் வரைகூடத் தங்கு தடையில்லாமல் எழுதிவிட முடியும். ஆனால் ஒரு சொற்பொழிவின் முதல் வரி சொதப்பினால் முழுப் பேச்சும் நாராசம்.


பள்ளி நாள்களில் சுந்தரமூர்த்தி என்று எனக்கு நண்பனொருவன் இருந்தான். இன்றைய கழகப் பேச்சாளர்களெல்லாம் அவன் தரத்துக்குக் கிட்டேகூட வரமுடியாது. ஒரு வணக்கம் போட்டு ஆரம்பித்தால் கருங்கல் ஜல்லி லோடு கவிழ்த்துவிட்ட மாதிரி தடதடதடதடவெனக் கொட்டித் தீர்த்துவிடுவான். உட்கார்ந்து எழுதி உருப்போடுவானா, இல்லை மண்டபத்தில் யாரையாவது பிடித்து எழுதி வாங்கித் தின்று ஜெரிப்பானா, உண்மையிலேயே அவனது சிந்தனைக் கொதிநீர் ஊற்றில் அத்தனை வீரியம் இருந்ததா தெரியாது. ஆனால் பயல் ஒரு பின்னியெடுத்தல் ஸ்பெஷலிஸ்ட்.


அப்பேர்ப்பட்ட பேச்சாளன் ஒரு சமயம் வேறொரு பள்ளியில் நடைபெற்ற பேச்சுப் போட்டிக்குப் போயிருந்தபோது ஓர் அசம்பாவிதம் நிகழ்ந்தது. ஆதிசிவன் பெற்ற தமிழ், அகத்தியன் வளர்த்த தமிழ், தொல்காப்பியன் மனதில் தொட்டில் கட்டி ஆடிய தமிழ், சங்கப் பலகையிலே தவழ்ந்த தமிழ், காவியச் சோலையிலே உலவிய தமிழ் என்று தமிழ்த் தாயின் அருமை பெருமைகளை அடுக்கிக்கொண்டே போனபோது சட்டென்று ஒரு கணம் கரண்ட் போனது மாதிரி நின்றுவிட்டான். என்ன ஆச்சு என்ன ஆச்சு என்று அழைத்துச் சென்றிருந்த பெருமாள் வாத்தியார் தொலைவில் நின்று பதறிக்கொண்டிருந்தார். ஒரு இன்ஸ்டண்ட் அபிநய சரஸ்வதியாகி அவர் என்னென்னவோ சமிக்ஞைகள் செய்து காட்டியும் சுந்தர மூர்த்தி எக்ஸ்பிரஸ் கிளம்பியபாடில்லை.


நடுவர்கள் அரை நிமிடம் பொறுத்துப் பார்த்துவிட்டு, ‘தம்பி நீ போய் ஒக்காந்துக்கப்பா’ என்று சொல்லிவிட்டார்கள். என்னடா ஆச்சு என்னடா ஆச்சு என்று அதன்பிறகு எத்தனையோ பேர் எத்தனையோ முறை கேட்டும் அவனிடமிருந்து வந்த ஒரே பதில், ‘தெரியலடா.’


பாதியில் இங்ஙனம் ஃப்யூஸ் பிடுங்கப்பட்டால்கூடப் பிரச்னையில்லை. வோல்ட்டேஜ் ஃப்ளக்சுவேஷன் வந்து அதி பிரகாச நிலையை அடைவதுதான் அபாயகரம். என்ன பேசுகிறோம் என்பதே தெரியாமல் உளறிக் கொட்டிக் கிளறி மூடினால் எல்லாம் போச்சு.


ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. மகாமக அசம்பாவிதம் நடந்து பல வருஷங்களுக்குப் பிறகு திமுகவின் வெற்றிகொண்டான் அந்தச் சம்பவத்தை நினைவுகூர்ந்து ஜெயலலிதாவை விமரிசித்துக்கொண்டிருக்கிறார். குளிப்பதற்கு போஸ்டர் ஒட்டிய ஒரே கட்சி அதிமுக என்று சொன்னார். அதோடு விட்டிருக்கலாம். தறிகெட்டுப் பறக்கும் சொற்குதிரைக்குப் பாதியில் கடிவாளம் போடும் வழக்கமெல்லாம் அவருக்குக் கிடையாது. புரட்சித் தலைவி குளிக்க வருகிறார், அனைவரும் வாரீர்! ஆதரவு தாரீர்! என்று இல்லாத போஸ்டர் வாசகத்தைத் தன் சொல்லில் தோரணம் கட்டிக் காட்டப்போக, மேடை நாகரிகம் அந்த மேடையிலேயே விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டது.


இதைக் காட்டிலும் கேவலமாகப் பேசப்பட்டதில்லையா என்று நீங்கள் கேட்கலாம். பேசுவது யார் என்பது முக்கியம். யாரைப் பற்றிப் பேசுகிறோமென்பது அதனினும் முக்கியம்.


வெற்றி கொண்டானாவது வெறும் பேச்சாளர். ஆனால் வைகோ அப்படியா? அவரது அசகாய சொற்பொழிவுத் திறன் தான் அவருடைய அரசியல் கோலியாட்டத்துக்கே முதலீடு. அதிகாலை ஒரு தம்ளர் புறநாநூற்றுக் கூழ் கரைத்துக் குடித்துவிட்டுப் புறப்பட்டாரென்றால் பத்து மணிக்கு ஒரு பெர்னாட்ஷா ஜூஸ், பன்னிரண்டுக்கு ஒரு மாக்யவல்லி புலாவ், மூன்று மணிக்கு முசோலினி சூப், ஆறு மணிக்கு சாக்ரடீஸ் சாலட், டின்னருக்கு தெய்வப் புலவர் என்று ஒரு ஃபுல் ரவுண்டு கட்டாமல் ஓயமாட்டார்.


அப்பேர்ப்பட்ட நாவும் தடம் புரளும் காலமாக இது அமைந்திருக்கிறது. கருணாநிதியின் சாதியைக் குறிப்பிட்டுத் தாக்கிய சில மணி நேரங்களில் தாங்கொணாத் துயரத்தை வெளிப்படுத்தி, தாயுள்ளத்தோடு மன்னிக்கச் சொல்லிக் கேட்டு விட்டார். நல்லது. வைகோவுக்காவது மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று தோன்றியிருக்கிறது. எதிர்வரும் நாள்களில் இன்னும் யார் யார் வாயில் யார் யாரெல்லாம் எப்படியெப்படியெல்லாம் விழுந்து புரளப் போகிறார்களோ என்று நினைத்தால் பெரும் பீதியாக இருக்கிறது.


நேற்று முன் தினம் வைகோவின் பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்த மறுகணமே திமுகவினர் அவரை ரவுண்டு கட்ட ஆரம்பித்துவிட்டார்கள். அவரது மன்னிப்பு கோரும் படலம் அரங்கேறிய பிறகும் அது ஓய்ந்தபாடில்லை. ஒரு ஆபாசம், ஒரு கோடி ஆபாசக் காட்சிகளுக்கு வழி வகுத்துவிடுகிறது. தேர்தல் முடிவதற்குள் இன்னும் எத்தனை மேடைகள், எவ்வளவு பொதுக்கூட்டங்கள்! எப்படியும் வைகோ கைமா செய்யப்பட்டுவிடுவது உறுதி.


கஷ்டம்தான். சங்கடம்தான். ஆனால் துரதுருஷ்டவசமாக, இது கடந்து போகாது.


0


(நன்றி: தினமலர் 08/04/16)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 08, 2016 09:58

April 6, 2016

பொன்னான வாக்கு – 24

கீர்த்தனாரம்பத்திலே விஜயகாந்த் கேப்டனானபோது, அவர் சட்டைப் பையில் சொருகிய கர்ச்சிப் மாதிரி வெளியே தெரிந்த இன்னொரு பெயர் ராமு வசந்தன் என்பது. இந்த ராமு வசந்தன் ஒரு விஜயகாந்த் ரசிகர். ரசிகர் மன்றத் தலைவர். விஜயகாந்துக்கு பிஆர்ஓ மாதிரி வேலை பார்த்தவர். எப்போதும் உடன் இருப்பவர். விஜயகாந்துக்காக வெளியான சினிமா பத்திரிகைகளின் பெரும்பாலான பக்கங்களில் அவரைப் பார்த்திருக்கிறேன். தகவல் உதவி அல்லது நன்றி அல்லது புகைப்பட உதவி அல்லது கட்டுரையாக்கம் என்று என்னவாவது ஒரு பெயரில் ராமு வசந்தன் இருப்பார். விஜயகாந்த் என்றாலே இந்தப் பக்கம் ராவுத்தர் அந்தப் பக்கம் ராமு வசந்தன் என்பதுதான் வரல் ஆறு.


பிறகு விஜயகாந்த் அரசியலுக்கு வந்தார். ராவுத்தர் விடை பெற்றுக்கொள்ள, பிரேமலதா அம்மையாரின் பெயர் அப்போது சேர்ந்து ஒலிக்க ஆரம்பித்தது. அப்போதும் ராமு வசந்தன் இருந்தார். ஆனால் கொஞ்ச நாள்தான். திடீரென்று சுதிஷ் என்றார்கள். பிரேமலதா அம்மையார், நல்லதொரு நாளிலே பிரேமலதா அண்ணியாராக மறுஅறிவிக்கப்பட்டார். விஜயகாந்தின் மூளை இதயம் நுரையீரல் கல்லீரல் போன்ற பேருறுப்புகள் அனைத்துமே அண்ணியார்தான் என்று சொன்னார்கள். நல்ல விஷயந்தானே? மாதொரு பாகம் மகத்தான போதம். மச்சானும் சேர்ந்தால் மறுக்க யாருளர்?


ஆனால் அன்று தொடங்கி விஜயகாந்த் கட்சியில் அண்ணியார், சுதிஷ் தவிர மூன்றாவதாக இன்னொரு பெயரை நான் கேள்விப்பட்டதில்லை. நேற்று வரைக்குமேகூட. தடாலென்று சந்திரகுமார் என்கிறார்கள். இன்னும் பத்துப் பேரைத் தூக்கிப் போடுகிறார்கள். இவர்களெல்லாம் அதிருப்தியாளர்கள் என்கிறார்கள். திமுகவுடன் கூட்டணி இல்லாததால் கட்சித் தலைமைக்கு எதிராகக் கொடி பிடித்தார்கள் என்கிறார்கள். இங்கே கேப்டன் கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக அவர்களைப் பதவி நீக்கம் செய்கிறார். அங்கே கலைஞர்தான் தேமுதிகவை உடைக்க சதி செய்தார் என்கிறார்கள்.


வெயில் காலத்தில் என்னத்துக்காக இப்படியெல்லாம் மண்டையிடி கொடுக்கிறார்களோ தெரியவில்லை. அட தெரியாமல்தான் கேட்கிறேன், சம்மட்டி வைத்து உடைக்கிற அளவுக்கா தேமுதிக ஸ்டிராங்?


சென்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி கண்டு இருபத்தி ஒன்பது இடங்களை விஜயகாந்த் கட்சி ஜெயித்திருந்தது. நல்ல, கௌரவமான வெற்றிதான். மாபெரும் சபையில் மகத்தான இரண்டாமிடம். எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து. ஏராள ஜபர்தஸ்து. ஆனாலும் அப்போது எட்டு எம்.எல்.ஏக்கள் டைவ் அடித்து அதிமுகவுக்குப் போனது என்னத்துக்காக? எனில், பலமான கட்சியின் கண்ணுக்குத் தெரியாத பலவீனம்தான் என்ன?


திமுகவோ அதிமுகவோ ஆரம்பிக்கப்பட்டபோது அந்தக் கட்சிகளுக்கு இருந்த நியாயமான காரணங்களை இங்கே நினைவுகூரவேண்டியது அவசியமாகிறது. தேர்தல் அரசியல் அவசியம் என்று அண்ணா நினைத்ததால் திமுக. ஊழல் அரசியல் அநாவசியம் என்று எம்.ஜி.ஆர். நினைத்ததால் அதிமுக. மாறாக, எனக்கு முதலமைச்சர் ஆகும் ஆசை என்று கட்சி ஆரம்பித்தவர் விஜயகாந்த். கேப்டன் விசுவாசிகள் மட்டும் வேறெப்படி சிந்திப்பார்கள்? லாபமுள்ள இடத்தில் லாலி பாடுவதில் தப்பில்லை. இந்தக் கொள்கை, கோட்பாட்டுக் கசுமாலங்களெல்லாம் யாருக்கு வேண்டும்? பதவியே லட்சியம். பணமாவது நிச்சயம்.


அப்புறம் அந்த உடைப்பு அரசியல். திமுகவுக்கு அதெல்லாம் புதுசா? அதிமுகவுக்குமேகூடப் புதிதில்லைதான். மகான் கவுண்டமணி சொன்னதுபோல அரசியலில் அதெல்லாம் சாதாரணமப்பா.


இங்கு நாம் கவனிக்க வேண்டிய சங்கதி என்னவெனில், தேமுதிக உடைந்ததால் தேமுதிகவுக்கு எந்த லாபமோ நஷ்டமோ இல்லை என்பதுதான். இந்த ஒன்றிரண்டு தினங்களைக் கடந்துவிட்டால் சமூகம் அதனை சட்டை செய்யப் போவதில்லை. ஆனால் கொள்கைக் குன்றுகளான மநகூவின் வைகோவும் திருமாவும் கம்யூ வகையறாக்களும் கொஞ்சநஞ்சம் மிச்சமிருந்த மானம் மரியாதையையும் மொத்தமாக இழக்கப் போகிறார்கள்.


அரசியலில் இந்தக் கொள்கை மாதிரி ஒரு கெட்ட வார்த்தை வேறு கிடையாது. வைத்திருப்பவனையே பதம் பார்க்கும் கெட்ட சரக்கு அது. அதைப் போய் முன்னால் வைத்து கேப்டனுடன் ஒரு கூட்டணி அமைத்த பிரகஸ்பதிகள் பாடுதான் படு பேஜாராகப் போகிறது. ஏற்கெனவே அவர் ஒரு வினோத ரச மஞ்சரி. தமிழ்நாட்டு அரசியலும் தெரியாமல், அதில் திராவிட ஸ்டைல் அப்ரோச்சும் பயிலாமல் தமது சினிமா பிரபலம் ஒன்றை மட்டும் மூலதானமாக்கி முன்னால் வந்தவர். அவரது தடாலடி ஸ்டேட்மெண்டுகளுக்கும் லைவ் ஸ்டண்ட் நடவடிக்கைகளுக்கும் தத்துவார்த்த விளக்கம் கொடுத்தே மநகூவினருக்கு நாக்கு தள்ளியிருக்கும். இப்போது உழக்கில் ஒரு கிழக்கு மேற்கு.


பரம உத்தமம். இந்தத் தேர்தலுக்குப் பிறகு கேப்டன் கூட்டில் இருக்கிற நாலு பேரும் இன்னொரு தென்னந்தோப்பு ஆகப் போவது உறுதியாகியிருக்கிறது. மற்றபடி திமுகவின் உடைப்பு அரசியலும் அதிமுகவின் இழுப்பு அரசியலும் என்றுமுள தென்றலென எண்ணிக்கொண்டு மக்கள்தம் வேலையைப் பார்க்கப் போய்விடுவார்கள்.


அரசியல் அநாதைகள் இவ்வாறாகவும் உருவாக்கப்படுகிறார்கள் என்பதும் வரல் ஆறுதான்.


0


நன்றி: தினமலர் 07/04/16


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 06, 2016 20:29

April 5, 2016

பொன்னான வாக்கு – 23

கிருஷ்ண பட்சத்துக்கு ஒன்று, சுக்ல பட்சத்துக்கு ஒன்று என்று இப்போதெல்லாம் கோடம்பாக்கத்தில்கூட முற்றிலும் புது முகங்களைப் போட்டுப் படமெடுக்க ஆள் வந்துவிட்ட நிலையில் அதிமுகவின் வேட்பாளர் பட்டியலில் உள்ள புது முகங்களின் எண்ணிக்கை எனக்குப் பெரிய அதிர்ச்சியளிக்கவில்லை. ஐந்து முழு வருஷங்கள் அமைச்சராக இருந்தவர்களிலேயே முக்கால்வாசிப் பேர் இன்னும் புது முகங்களாகத்தான் காட்சியளிக்கிறார்கள். எங்கே, தில் இருந்தால் அறம் செய விரும்பு ஸ்பீடில் அதிமுக அமைச்சர்கள் பெயர்களை ஒப்பியுங்கள் பார்க்கலாம்?


வேட்பாளர் பட்டியலில் தற்போதைய அமைச்சர்கள் பலபேர் இல்லை. யார் யார் இல்லாது போனதற்கு என்னென்ன காரணம் என்று இனிமேல் ஆய்வுக்கட்டுரைகள் வரத் தொடங்கும். பன்னீரும் நத்தமும் பட்டியலில் இருப்பதைக் கவனியுங்கள். கட்சி விரோதச் செயல்பாடுகள், ஒழுங்கு நடவடிக்கை என்று கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற களேபரங்களையெல்லாம் கபளீகரம் செய்யும் விதமான பெயர் சேர்ப்பு வைபவம். தெரியுமாலே? இதாம்லெ ராசதந்திரம். மீண்டும் கோட்டா சீனிவாசராவ் குரல்தான் காதில் ஒலிக்கிறது.


நல்லது. இருநூற்று முப்பத்தி நாலு தொகுதிகளிலும் இரட்டை இலைச் சின்னம். தொட்டுக்கொள்ள ஏழு ஒரு நபர் கட்சிகள். இந்தப் பக்கம் தோப்புகளை அம்மா தனி மரமாக்கி அழகு பார்க்க, அந்தப் பக்கம் காங்கிரசுக்கு நாற்பத்தியொரு சீட்டுகளை அள்ளிக்கொடுத்து அதிர்ச்சி வைத்தியம் அளித்திருக்கிறார் கலைஞர்!


இந்த வயதில் அவருக்கு என்னத்துக்கு இப்படியொரு வில்லத்தனம்? நாற்பத்தியொரு வேட்பாளர்கள்! பாவம் காங்கிரஸ். ஆட்களுக்கு எங்கே போவார்கள்? இதெல்லாம் படு பயங்கரவாதமன்றி வேறல்ல.


மிச்சமிருக்கும் ஒரு சில உதிரிகளுக்கு என்ன தொகுதி என்பது மட்டும் தெளிவாகிவிட்டால் போதும். களம் காணக் கட்சிகள் தயார்.


அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியான கணத்தில் இருந்து திமுக பிரசாரப் புலிகள் வரிந்துகட்டிக்கொண்டு ரவுண்டு கட்டத் தொடங்கிவிட்டார்கள். என் ஆச்சரியம் என்னவென்றால் நேற்றைக்கு வரை மநகூ – கேப்டன் கோஷ்டியை சொல்லி சொல்லி வாரிக்கொண்டிருந்தவர்கள் – அதிமுக என்றொரு கட்சியே இல்லாத மாதிரியான பாவனையில் இருந்தவர்கள், சொய்யாவென்று ஒரே நாளில் தங்கள் இலக்கை மாற்றிக்கொண்டுவிடுகிற அளவுக்கு அப்படி என்ன கிருமி பாம் வைத்துவிட்டார் ஜெயலலிதா?


என்னைக் கேட்டால் ஒன்றுமேயில்லை. வழக்கமான வியூகங்கள். பழக்கமான காய் நகர்த்தல்கள். ஊழல் அமைச்சர்களுக்கு இடமில்லை என்று சொல்லாமல் சொல்லுவதன்மூலம் பைசா செலவில்லாமல் ஒரு சுய பரிசுத்த ஆவிக் குளியல். புதியவர்களுக்கு இடம் என்பதன்மூலம் இதர இலவு காப்பாளர்களுக்கு ஒரு சிறு நம்பிக்கை வெளிச்சம். ரிசர்வேஷன் அகெய்ன்ஸ்ட் கேன்சலேஷன் சித்தாந்தப்படி என்றைக்கு வேண்டுமானாலும் தனக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் என்ற சப்புக்கொட்டலுடன் தேர்தல் திருப்பணி ஆற்றப் போகலாம்.


மற்றபடி அதே சாதி ஓட்டுக் கணக்குகள், செலவு செய்யும் சக்திமான் தேர்வுகள்.


இதுவரை அலை என்ற ஒன்று எந்தக் கட்சிக்கு சாதகமாகவும் பாதகமாகவும் பெரிதாக அடிக்க ஆரம்பிக்கவில்லை. இந்த முறை அப்படியொன்று இருக்கும் சாத்தியங்களும் தெரியவில்லை. திமுகவைத் திட்டுவதற்கு எதிர் கோஷ்டிகளுக்குப் புதிய சங்கதிகள் ஏதுமில்லை என்பதைப் போலவே, ஜெயலலிதாவைத் திட்டுவதற்கும் எதிர்த்தரப்பு வக்கீல்களுக்கு டாஸ்மாக் தவிர வேறு பிரமாதமான விஷயம் அகப்பட்டபாடில்லை.


ஒன்று எனக்குப் புரியவில்லை. டாஸ்மாக்கைக் கலைத்துவிட்டுப் பழையபடியே தனியார் வசம் மது விற்பனை உரிமங்களைக் கொடுத்தால் மட்டும் என்னவாகும்? சுவாரசியமற்ற அழுக்கு டாஸ்மாக் போர்டுகளுக்கு பதில் பழைய குஷ்பு ஒயின்ஸ், நக்மா ஒயின்ஸ் மாதிரி இன்றைய டிரெண்டுக்கு ஏற்ற நயந்தாரா ஒயின்ஸ், ஸ்ருதி ஹாசன் ஒயின்ஸ் போர்டுகள் வைக்கப்படும். கொஞ்சம் லட்சணமாக ஆயில் பெயிண்டிங் எல்லாம் செய்து அலங்கார விளக்குகள் வைத்து அழகு படுத்துவார்கள். மற்றபடி அதே பாலாறு தேனாறுதான்.


ஆட்சியமைக்கும் சாத்தியங்கள் உள்ள இரண்டு பிரதானக் கட்சிகளும் மது விலக்கு பற்றி வாய் திறப்பதில்லை என்பதைக் கவனியுங்கள். கலைஞராவது எப்போதாவது போகிற போக்கில் அதைக் குறிப்பிட்டுப் பேசக்கூடிய சாத்தியங்கள் உண்டு. ஆனால் ஜெயலலிதா மூச்சுக்கூட விடமாட்டார். அது அரசுக்கு வருமானம். அரசு அமைத்து அனுபவமில்லாத புதிய பெருச்சாளிகள் மட்டுமே மது விலக்கை முன்வைத்துப் பிரசாரம் செய்வார்கள். அதெப்படி? பிகாரில் நிதிஷ் குமார் சாதிக்கவில்லையா என்று கேட்கப்படாது. திராவிட தர்பாருக்கு சாராயக் கடைகளே சர்வாலங்காரம்.


இதோ பிரசாரங்கள் வேகமெடுத்துவிடும். காதுகளைத் தீட்டிக்கொள்ளுங்கள். வெற்றி தோல்விகளை அவர்கள் பார்த்துக்கொள்ளட்டும். இந்தத் தேர்தலின் பிரதானப் பிரச்னைகளாக முன்வைக்கப்படுகிற சங்கதிகளை நாம் கவனிப்போம். புதிதாக நாலைந்து தேறினால்கூடப் போதும். நமது வாக்கின் மதிப்பு நமக்குப் புரிய ஆரம்பித்துவிடும்.


0


(பா. ராகவன் – தொடர்புக்கு: writerpara@gmail.com)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 05, 2016 19:25

April 4, 2016

பொன்னான வாக்கு – 22

நான் குடியிருக்கும் வீதியில் மொத்தம் 23 நாய்கள் வசிக்கின்றன. ராத்திரி ஒரு ஏழு மணிக்குப் பிறகு வெளியே கால் அல்லது வீல் எடுத்து வைக்க முடியாது. இருட்டில் மூலைக்கு மூலை ஒன்று உறும ஆரம்பிக்கும். ரொம்ப பயங்கரமாக, ரொம்ப நாராசமாக இருக்கும். இருட்டிய பிறகு வீடு திரும்புவதென்றால் பெரும்பாலும் நான் பக்கத்து வீதி வழியாகத்தான் வருவேன். அங்குதான் நாய்கள் எண்ணிக்கை குறைவு. அந்த வீதியின் வழியே வண்டியை ஓட்டிக்கொண்டு வந்து, என் வீதியின் நாயடர்த்தி குறைந்த இடப்புற நுழைவை அடைந்ததும் கண்ணை மூடிக்கொண்டு நூறு கிமீ வேகத்தில் வாகனத்தைச் செலுத்தி வீட்டுக்குள் பாய்ந்துவிடுவேன்.


அது ஒரு தீராத சொந்த சோகம். அதை விடுங்கள். சொன்னேனே, பக்கத்து வீதி? அங்கே பதினொரு நாய்கள்தான் உண்டென்றாலும், ஒரு கட்சி ஆபீசும் உண்டு. என்ன கட்சி என்று கேட்காதீர்கள். அதெல்லாம் சொல்வதற்கில்லை. ஏதோ அதுவாவது அங்கே இருப்பதால்தான் நாய்கள் நடமாட்டம் குறைவாக உள்ளது; நானும் போய்வர வசதியாக இருக்கிறது.


விஷயம் என்னவென்றால், மேற்படி கட்சியின் பெயரை நான் அந்த வீதியில் முதல் முதலில் காலெடுத்து வைப்பதற்கு முன்னால் கேள்விப்பட்டதே கிடையாது. இப்போது தினசரி கட்சி போர்டைப் பார்ப்பதால் எனக்கு அது பிரபலக் கட்சியாகிவிட்டது. தமிழ்நாட்டு அரசியலில் என்றைக்கு இந்தக் கட்சி ஒரு புயலாகக் களமிறங்கி ஆட்சியைப் பிடிக்கும் என்று ரொம்ப காலமாக எதிர்பார்த்துக்கொண்டே இருக்கிறேன். அந்தப் பெயரை கூகுளில் போட்டு விவரம் தேடிப் பார்த்ததில் தேர்தல் அரசியலுக்குத் தேவையான அனைத்துக் கல்யாண குணங்களும் உள்ள கட்சியாகத்தான் இருக்கிறது. கட்சி நிறுவனர் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள், கைது நடவடிக்கைகள் எல்லாம் கனஜோராக நடந்திருக்கிறது. அடுத்தபடியாகக் களமிறங்குவதுதானே? அதெல்லாம் இறங்கிவிடலாம்.


இந்த மாதிரி மொத்தம் நூற்று எண்பத்தைந்து காராபூந்திக் கட்சிகள் இருக்கின்றன. ஒரு பெயர். ஒரு லெட்டர் பேட். பதிவு செய்துகொள்ளக் கோரி ஒரு மனு. PAN கேட்கிற இடங்களிலெல்லாம் Applied for என்று போட்டு நழுவும் பிரகஸ்பதிகளுக்கு இது புரியும். தேர்தல் கமிஷன் அங்கீகாரத்துக்காகக் காத்திருக்கும் கட்சிகள். அங்கீகாரம் கிடைத்துவிட்டால் உடனே ஆட்சி அமைத்துவிடலாம்.


உங்களுக்கு அன்பு உதயம் கட்சி தெரியுமா? அப்பாம்மா மக்கள் கழகத்தைத் தெரியுமா? பாரதிய திராவிட மக்கள் கட்சி? பெயரிலேயே என்னவொரு அரசியல் சாணக்கியம் பாருங்கள். திமுக, அதிமுக, தேமுதிக வகையறாக்களுடனும் கூட்டணி வைப்பேன், பாஜக கூப்பிட்டாலும் குட்டிக்கரணம் அடித்து ஓடிப் போய் நிற்பேன் என்று சொல்லாமல் சொல்லும் இந்த சாமர்த்தியம் யாருக்கு வரும்?


எழுச்சித் தமிழர்கள் முன்னேற்றக் கழகம், அனைத்து மக்கள் புரட்சிக் கட்சி, திராவிட மக்கள் விடுதலைக் கட்சி – இதெல்லாம் ஒரு நாள் இல்லை ஒரு நாள் செபாஸ்டியன் சீமான் கண்ணில் விரலைவிட்டு ஆட்டத்தான் போகின்றன.


இந்த ரகக் குட்டிக் கட்சிகள் சாதாரண காலங்களில் இருக்குமிடம் தெரிவதில்லை. தேர்தல் நேரத்தில் மட்டும் பிட் நோட்டீஸ் வீசத் தொடங்குவார்கள். லோக்கலாக என்னவாவது ஒரு கட்சியுடன் பிரசார உடன்படிக்கை செய்துகொண்டுவிடுவார்கள் போலிருக்கிறது. பிராந்தியத்தின் அசகாயப் பிரச்னை ஒன்றை எடுத்து முன்னால் வைத்து பூதாகார அலங்காரங்கள் செய்து, ‘இதைத் தீர்த்து வைப்பவர்களுக்கே ஓட்டு’ என்று வீர முழக்கமிடுவார்கள்.


அவ்வப்போது எனக்கு அப்படிப்பட்ட பிட் நோட்டீஸ் மின்னஞ்சல்கள் வரும். சமீபத்தில் வாசித்த ஒரு சுவாரசியமான மின்னஞ்சல் அம்பத்தூரில் இருந்து வந்தது. அம்பத்தூரைச் சென்னை மாநகராட்சியுடன் இணைத்தது மாபெரும் வரலாற்றுப் பிழை. அம்பத்தூரின் வளங்களைத் தமிழக அரசு கொள்ளையடித்து சென்னை மாநகராட்சிக்குத் தாரை வார்க்கிறது. இந்த அபாயம் தடுக்கப்படவில்லையென்றால் தமிழ்நாட்டையே கடல் கொண்டுவிடும்.


அவர்கள் கேட்பது அம்பத்தூர் மாநகராட்சியா, மாவட்டமா என்றே எனக்கு சரியாகப் புரியவில்லை. ஏதாவது ஒன்றைக் கொடுங்கள்; அல்லது எல்லாமே கிடைத்தால் சந்தோஷம் என்னும் மனநிலையோ என்னமோ. எப்படியும் இரண்டும் கிடைக்கப் போவதில்லை என்ற தெளிவு இருந்தாலொழிய இது சாத்தியமில்லை.


இதில் என்னைக் கவர்ந்த அம்சம், மேற்படி பிட் நோட்டீசில் கையெழுத்திட்டிருக்கும் கட்சிகளின் எண்ணிக்கை. சமதா கட்சி, மக்கள் கம்யூனிஸ்டு கட்சி, தேசிய மனித உரிமைக் கட்சி, அம்பேத்கர் ஜனசக்தி, சிங்காரவேலர் முன்னேற்றக் கழகம் – இதையெல்லாம் எந்தக் காலத்திலாவது கேள்விப்பட்டிருக்கிறோமா?


ரொம்ப ஆசையாக இருக்கிறது. பேசாமல் நானும் ஒரு கட்சி தொடங்கினால் என்ன? பார்புகழும் பாரா முன்னேற்றக் கழகம். ஆழ்ந்து யோசித்தால் நுணுக்கமாக நிறைய அர்த்தங்களைத் தரும் பெயர்.


முதலில் என் மனைவியாவது உறுப்பினராகச் சேர்வாளா என்று கேட்டுப் பார்க்கிறேன்.


0


(நன்றி: தினமலர் 05/03/16)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 04, 2016 22:06

கமர்ஷியல் போராளியின் கஷ்ட காலக் குறிப்புகள் (1)

ரசிகர்கள் புத்திசாலிகள், வாசகர்கள் விவரமானவர்கள், நாம் எழுதுவதைப் பற்றிக்கொண்டு மேலேறிச் செல்லும் வல்லமை கொண்டவர்கள் என்றெல்லாம் என் சக எழுத்தாளர்கள் அவ்வப்போது தமது ரசிகக் கண்மணிகளைச் சிலாகிக்கும்போது எனக்குச் சற்றுப் பொறாமையாக இருக்கும்.


ஜெயமோகன் தினமும் வெளியிடும் வாசகர் கடிதங்களைப் பாருங்கள். அவர் சொல்வதில் பிழையே இல்லை. பலபேர் ஜெயமோகனையே விஞ்சுமளவுக்கு ஞானமரபு எக்ஸ்பர்ட்டுகளாக இருக்கிறார்கள். அந்தர்வியாபியாக ஜெயமோகனே அத்தனை பேர் மனத்திலும் போய் உட்கார்ந்துகொண்டுவிடுவாரோ என்னமோ. 


ஹும். நமக்கும் வாய்க்கிறார்களே. தமிழக பாஜகவைப் பற்றி நேற்று நான் தினமலரில் எழுதிய கட்டுரைக்கு இப்படி ஓர் எதிர்வினை வந்திருக்கிறது. மொழியைப் பார்த்தால் படித்த பிரகஸ்பதி போலத்தான் தெரிகிறார். ஆனால் எளிய நகைச்சுவை – மிக எளிய அங்கதத்தைக் கூடப் புரிந்துகொள்ளத் தவறிவிடுகிறார். மெஜாரிடி மாந்தர்கள் இவ்வண்ணமே இருக்கிறார்கள். இதனால்தான் தினமும் வருகிற கடிதங்களைப் பிரசுரிக்கத் தயக்கமாக இருக்கிறது.


இது கமர்ஷியல் போராளிகளுக்குக் கஷ்டமான காலம். இனி கடிதம்:


0


Dear sir,


Please refer to your article in Dinamalar today. Are you a political commentator or a biased writer/mouth piece of the corrupt Dravidian parties? If your knowledge is limited to state politics pl do not comment on national parties like this indecently and particularly about a very popular PM who is appreciated world wise. Do you know the appeal of Modiji in states other than TN? Of course even in TN he is very popular than Vajpayee or Advani. Do you know that unless he was projected as PM candidate BJP would have gone into oblivion under any other leader? The peculiar problem with India is the politicians have made us immune to corruption and made us to accept it as a way of life which is a very sad state of affairs making us a part of that corruption by accepting the freebies doled out by them. They earn 1000 and give you 1 rupee in people are happy and stay in the limelight by saying we are secular which no longer works now. Our so called intellectuals and the elite also want only a corrupt govt to be at centre so that they can get whatever they want. Now every body is dreaded to see Modi running a corrupt free govt and exposing the wrong deeds of previous govts.


My kind advice to you is please refrain from writing indecent comments about the PM. He is not a remote controlled or appointed PM he is elected by the people of this country. Of course I agree that the BJP is not a well established party in TN and its office bearers are useless for which Modi may not be directly responsible. For that he does not deserve these comments. Dont think that you can write something in Dinamalar without being commented.


With kind regards


SM.Krishnan


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 04, 2016 12:26

April 3, 2016

பொன்னான வாக்கு – 21

இது அதிமுக தொகுதி; இது திமுக தொகுதி; இது பாட்டாளி மக்கள் கட்சியின் தொகுதி, இங்கே விடுதலைச் சிறுத்தைகள் ஜெயிக்கும்; என்று ஒவ்வொரு கட்சியும் அடித்துப் பேச இருநூற்று முப்பத்தி நாலில் ஒண்ணே ஒண்ணாவது கைவசம் இருக்கும். அட தமிழ்நாட்டில் காங்கிரஸ்கூட அந்த மாதிரி ஒன்றைச் சொல்லிக்கொள்ள ஒரு ஶ்ரீபெரும்புதூரை வைத்திருக்கிறது. சட்டமன்றமா, நாடாளுமன்றமா என்பதை விடுங்கள். சென்னைக்கு மிக அருகே காளஹஸ்திக்குப் பக்கத்தில் கோவண சைஸில் ஒரு நிலம் இருந்தால்தான் மக்களுக்கே மரியாதை என்றாகிவிட்ட சூழ்நிலையில் கட்சிகளுக்கு ஒரு தொகுதியாவது வேண்டாமா?


தமிழ்நாட்டில் பாரதிய ஜனதாவுக்கு அப்படி ஏதாவது இருக்கிறதா? சும்மா ஒருதரம், ரெண்டு தரம் ஜெயித்ததையெல்லாம் வைத்துக்கொண்டு பேசப்படாது. ஒரு முப்பது முப்பத்தைந்து வருட காலமாக அரசியல் பண்ணிக்கொண்டிருக்கும் இயக்கத்தின் கொண்டைக்கு ஒரு சிறகாவது உத்தரவாதமாகியிருக்க வேண்டாமா?


நேற்றும் முந்தாநாளும் இங்கே நான் லீவில் போயிருந்த நேரத்தில் ஹரன் பிரசன்னா ‘ஒண்ணு’ என்று போட்டு ஒரு திகில் கட்டுரைத் தொடரையே ஆரம்பித்திருக்கிறார். பத்தாத குறைக்கு மோடியின் அருமை பெருமைகளை எடுத்துச் சொல்லி அரவிந்தன் நீலகண்டன் ஒரு பக்கம் ஸபஸ பிடித்திருக்கிறார். ஆள் ஏமாந்தால் இந்த மோடிதாஸ் மஸ்தான்கள் தமிழ்நாட்டில் மூலைக்கு மூலை இந்துத்துவ ரசகுல்லா கவுண்ட்டர்கள் திறக்கவேண்டிய அவசியத்தை வலியுறுத்தி ஒரு கரப் போராட்டமே (அறப் போராட்டமல்ல) ஆரம்பித்துவிடுவார்கள்.


ஆனால் யார் சொன்னால் என்ன? தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா காலை அல்ல; கால் சுண்டு விரலையாவது ஊன்றிக்கொள்வதற்குத் தேவையான உள் கட்டுமானத்தையோ உள்குத்து வெட்டுமானத்தையோ இன்னும் செய்துகொள்ளவில்லை என்பதுதான் யதார்த்தப் பதார்த்தம்.


நான் கேட்கிறேன், ஒரு வெற்றிகொண்டானைப் போலவோ, வண்ணை ஸ்டெல்லாவைப் போலவோ, மல்லை சத்யாவைப் போலவோ பாரதிய ஜனதாவில் ஒரு நாவன்மை நாயகருண்டா? ஏய் தட்சிணாமூர்த்தியே என்று கூப்பிட்டு அறம்பாட அங்கே யாருக்காவது வக்கிருக்கிறதா? மக்கள் ஏற்கிறார்களா, காறித் துப்புகிறார்களா என்பது முக்கியமல்ல. சாலையோரம் பத்தடி உயரத்தில் ப வைக் கவிழ்த்துப் போட்டாற்போலக் கம்பு நட்டு அதில் டான்ஸ் ஆடியபடியே நடந்து காட்டும் திராணியல்லவா கும்பல் சேர்க்கும்? ஏசி ஹால் பரதக் கச்சேரிகளுக்கு என்ன பெரிய கூட்டம் வரும்?


செய்தியில் இருப்பது என்பது ஒரு கலை. மக்கள் மனம் என்னும் சொந்த வீட்டுக்குப் போவதற்கு முன்னால் செய்தி மடத்தில் டேரா போட்டேதான் தீரவேண்டும். திருச்சிக்குப் போகிற வழியில் மாமண்டூரில் இறங்கி டீ சாப்பிட்டுவிட்டு எதிர் சைட் பஸ் பிடித்து சென்னைக்கே திரும்பும் சரத்குமாரால் முடிவதுகூட பாஜகவில் உள்ளவர்களால் இங்கே முடிவதில்லை.


பத்தாத குறைக்கு அந்த ஜீ கலாசாரம். அஜித் நடித்தே ஓடாத பட டைட்டிலைத் தமது அடையாளமாக வைத்துக்கொண்டு இந்தக் கட்சி இங்கே என்ன சாதிக்கப் போகிறது? மோடிஜி, தமிழிசை சௌந்தர்ராஜன்ஜியெல்லாம் தமிழன் மனத்தில் தனியொரு இடம் பிடிக்கவேண்டுமென்றால் முதலில் அவர்கள் அந்த ஜியை விட்டொழிக்க வேண்டும். முடியாதென்றால் ஆனியன் பஜ்ஜி, உருளைக்கிழங்கு பஜ்ஜிக்காவது மாறவேண்டும்.


இரண்டு நாள் முன்பு இந்தப் பக்கத்திலேயே எழுதியிருந்தேன். கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு வேலையை ஆரம்பித்துவிட்டேன் என்று வானதி சீனிவாசன் போட்ட ஸ்டேடஸ் பற்றி. நினைவிருக்கிறதல்லவா? அப்படியா ஒரு பிரசாரத்தை ஆரம்பிப்பார்கள்? கலைஞரைப் பாருங்கள். அவர் ரெடியா என்று அப்புறம் கேட்டுக்கொள்ளலாம். முதலில் அவரது வண்டி ரெடி. ஆஜானுபாகுவான தேர்தல் பிரசார வாகனம். உள்ளே உள்ள அசகாய வசதிகள். தள்ளாத வயதில் தளராமல் பிரசாரம் செய்ய ஏதுவாக அதில் செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகள். வண்டி சரியாக இருக்கிறதா என்று பார்க்க ஒரு வெள்ளோட்டம். ஸ்டாலினுக்குத் தனி வண்டி. அதில் அமர்ந்து அவர் கொடுக்கும் அழகு போஸ்கள்.


நாளொரு போட்டோ போட்டு என்ன பிரமாதமான பில்டப் செய்கிறார்கள்? இந்தத் திராவிடக் கலையைப் பயிலாமல் பாரதிய ஜனதா எப்படி இங்கே குப்பை கொட்ட முடியும்?


அனைத்திலும் முக்கியமானதொன்று உண்டு. இங்கே ஜெயலலிதாதான் எல்லாம் என்றாலும் புரட்சித் தலைவர் நாமமும் சேர்ந்தேதான் வாழும். களப்பணியாரப் புலியாக ஸ்டாலின் இருந்தாலும் கலைஞர் சீட்டுக்கு மாற்றுக் கிடையாது. அட, ஆத்தா சத்தியமாக அன்புமணிதான் முதல்வர் என்று சொல்லும் பாமககூட மருத்துவர் இராமதாசுவைக் கழட்டிவிட்டா வேலை பார்க்கிறது?


ஆனால் பாஜகவில் அடல் பிஹாரி வாஜ்பாயி, லால் கிஷன் அத்வானியெல்லாம் எங்கே ஒழிந்துபோனார்கள்? கஷ்டப்பட்டு அந்த வடக்கத்திப் பெயர்களையெல்லாம் தமிழன் நினைவில் ஏற்றிக்கொண்ட நேரத்தில் எக்ஸ்பயரி ஆன மருந்துக் குப்பிகளைத் தூக்கிக் கடாசுவதுபோல விசிறிவிட்டு, ஜவ்டேகர், பக்கோடா காதர் என்று புதிய பல்லுடைப்புப் பெயர்களைக் கொண்டுவந்து கொட்டினால் என்ன அர்த்தம்?


தமிழக பாஜக என்பது ஹிந்துஸ்தான் லீவருக்கு இங்கே ஒரு பிராஞ்ச் என்பதுபோல் இருக்கும்வரை ரொம்பக்க்க்க்க்க்க்க்க்க்க் கஷ்டம்.


(நன்றி: தினமலர் 04/04/16)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 03, 2016 18:47