Pa Raghavan's Blog, page 26

March 10, 2016

பொன்னான வாக்கு – 05

 


சாமி படத்தில் கோட்டா சீனிவாசராவ் ஒரு வசனம் சொல்லுவார். ‘அவன் பேசும்போது காது ஆடிச்சி, பாத்தியாவே? அவன் நம்ம சாதிக்காரப் பயதாவே.’


இந்த ஒருவரியை ரொம்ப நாள் சிந்தித்துக்கொண்டே இருந்தேன். யானைக்குக் காது ஆடும். தேடினால் வேறு ஒன்றிரண்டு மிருகங்கள் தேறலாம். யாராவது நரம்புக் கோளாறு உள்ளவர்களுக்குக் காது கொஞ்சம்போல் ஆடலாம். ஆனால் ஒரு குறிப்பிட்ட சாதிக்காரர்கள் அத்தனை பேருக்கும் எப்படிக் காது ஆடும்? கொல்லங்குடி கருப்பாயிக்குக்கூட பாம்படம்தான் ஆடும். என்றைக்காவது ஹரியைப் பார்க்க நேர்ந்தால் இதை விசாரிக்க வேண்டும்.


தாய்த்திரு நாட்டில் அழிக்கவே முடியாத சங்கதிகள் இரண்டு இருக்கின்றன. முதலாவது கரப்பான்பூச்சி. அடுத்தது ஜாதி அரசியல். மேலுக்கு ஆயிரம் பேசினாலும் பேரல் பேரலாக பேகான் ஸ்ப்ரே அடித்தாலும் ஏற்றுக்கொள்ளவும் சகித்துக்கொள்ளவும் அடிப்படையில் நாம் பழகியிருக்கிறோம். சாதிக்காரன் ஒருத்தன் நிற்கும்போது இன்னொருத்தனுக்கு என் ஓட்டு கிடையாது என்பதை பகிரங்கமாகவே சொல்லக்கூடிய சமூகம் இது. வாழ்க. சாதி இரண்டாயிரமொழிய வேறில்லை.


கொஞ்சம் படித்த, பேண்ட் சட்டை போட்டு ஒரு உத்தியோகத்துக்குப் போய் நாலு காசு சம்பாதிக்கும் தலைமுறைக்கு இந்த எண்ணம் சற்று மட்டுப்பட்டிருக்குமோ என்னமோ. அடித்தட்டு மகாஜனங்கள் பெரும்பாலும் அப்படியேதான் இருக்கிறார்கள். மாற்றம் முன்னேற்றம் என்று யார் என்ன சொன்னாலும் மாறாத சாதி ஓட்டுகள் சார்ந்த கணக்கீடுகள் யாருக்கும் இல்லாதிருப்பதில்லை.


சமீபத்தில் ஒரு புதிய ஓட்டாளியிடம் (ஓட்டாண்டியல்ல) சிறிது நேரம் பேச்சுக் கொடுத்துக்கொண்டிருந்தேன். அந்தப் பெண் ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்திலிருந்து உத்தியோக நிமித்தம் சென்னைக்கு இடம் பெயர்ந்து வந்த குடும்பத்தைச் சேர்ந்தவள். அவளைப் போன்ற பல நூறு குடும்பங்கள் அதே பிராந்தியத்திலிருந்து வீட்டு வேலை செய்யவும் இதர சிறு உத்தியோக சாத்தியங்களை எதிர்பார்த்தும் இடம் பெயர்ந்தவர்கள்.


எலக்‌ஷன் வரப் போகிறதே, யாருக்கு ஓட்டுப் போடப் போகிறாய்? என்று சும்மா ஒரு ஊதுபத்தி கொளுத்தி வைத்தேன். அவள் சற்றும் யோசிக்கவில்லை. ‘விசயகாந்துக்குப் போடப் போறேண்ணா’ என்றாள் தடாலென்று.


எனக்குத் தூக்கிவாரிப் போட்டுவிட்டது. அவளது சாதிக்காரர்கள் எனக்கு நினைவு தெரிந்த நாளாக ங்கொப்புறான ஒரு குறிப்பிட்ட கட்சியைத் தவிர இன்னொரு கட்சிக்கு வாக்களித்ததில்லை. அது சில தென் மாவட்டங்களில் பலம் பொருந்திய கட்சி என்பதும் சாதி ஓட்டுகள் சிதறாது என்பதும்தான் கூட்டணி பேரங்களின்போது பெரிதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். ஆனால் இந்தப் பெண் என்ன இப்படிச் சொல்கிறாள்? சரி, சற்று மேலும் கொளுத்தலாம்.


‘ஏம்மா, விசயகாந்து உங்க சாதி இல்லியே?’


‘ஆமாண்ணா. ஆனா அவரு நல்லவரு.’


‘அப்பிடியா? ஆரு சொன்னாங்க?’


‘தோணிச்சி.’


‘ஒனக்கு விசயகாந்து படமெல்லாம் புடிக்குமோ?’


‘ஐயே அவருக்கு நடிக்கவே வராது. ஆனா அவரு வெள்ளந்தியா இருக்காரு.’


‘ஆனா எப்பவும் ரொம்ப டைட்டாவே இருப்பாருன்னு சொல்றாங்களேம்மா?’


‘போங்கண்ணா. யாரு இப்பங் குடிக்கல? என் ஊட்டுக்காரர் கூடத்தான் குடிக்காரு.’


இதற்குமேல் பேச ஏதுமில்லை என்று தோன்றிவிட்டது. ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு அந்தப் பெண்ணே சொன்னாள், ‘எங்கத்த வளக்கமா போடுற கட்சிக்குத்தான் போடணுன்னு சொன்னாங்க.. ஆனா நான் கேக்கமாட்டேன். எப்பிடியும் அவங்கல்லாம் சிஎம்மாவ முடியாதுண்ணா.’


என்றால், விஜயகாந்தால் முடியுமா?


‘சும்மாருங்கண்ணா.. எனக்கு வேல இருக்குது. சொம்மா அவிங்க ரெண்டு பேரே மாத்தி மாத்தி வர்றாங்க.. இந்த தடவ இவரு வரட்டும்.’


ஒரு மாதிரிக்காகத்தான் இதைக் குறிப்பிட்டேன். இத்தகைய வாக்காளர்களின் சதவீதம் மிகக் குறைவே. ஆனால் சாதி ஓட்டுகளும் இவ்வாறாகப் பிரியும் சாத்தியங்கள் இருப்பதை நாம் யோசித்துப் பார்க்கலாம்.


என்ன கணக்குப் போட்டாலும் ஆட்சி என்பது திமுக-அதிமுகவுக்கு இடையிலான போட்டி மட்டும்தான். கூட்டணிகள் மாறும். வியூகங்கள் மாறும். இருக்கைகளின் எண்ணிக்கை மாறும். ஆனால் மூன்றாவதாக ஒன்று தமிழகத்தில் வரவேண்டுமென்றால் அது டொனால்ட் ட்ரம்ப் வந்தால்தான் முடியும். புதிய ஆம்பள மூஞ்சி கஷ்டமா? சரி, லியனார்டோ டிகாப்ரியோவை மநகூவுக்கு அழைத்து வந்துவிடலாம். அல்லது டி வில்லியர்ஸைத் தூக்கி தமிழ்நாடு காங்கிரசில் போடு!


இரண்டுக்குப் பிறகு எப்போதும் வேண்டாம் என்பது தமிழனின் தாரக மந்திரம். அரசியல் மட்டும் விதிவிலக்கா என்ன?


 


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 10, 2016 21:21

March 9, 2016

பொன்னான வாக்கு – 04

 


எனக்கு ஒரு சுயேச்சை நண்பர் இருக்கிறார். அதாவது, எந்தத் தேர்தல் வந்தாலும் பிராந்தியத்தில் முதலில் மனுத் தாக்கல் செய்பவர் அவராகத்தான் இருப்பார். நித்ய சுயேச்சை.


தேர்தலில்தான் அவர் சுயேச்சையாக நிற்பாரே தவிர அடிப்படையில் அவர் ஒரு கட்சிக்காரர். அவர் அனுதாபியாக உள்ள அந்தக் கட்சி அவருக்கு சீட்டுக் கொடுப்பதென்றால் அது அன்புமணி முதல்வராகி, சரத்குமார் பிரதமரான பிறகுதான் நடக்கும். ஆனால் நண்பரோ எனக்கு நினைவு தெரிந்த நாளாக அரசியல் வேள்வி செய்துகொண்டிருப்பவர். அவர் சார்ந்த கட்சியே அவர் மனுத்தாக்கல் செய்துவிட்டாரா என்று விசாரித்துக்கொண்டுதான் கட்சி சார்பில் வேட்பாளரை முன்னிறுத்தும். பதில் மரியாதையாக, இவர் மனுத்தாக்கல் செய்த கையோடு கட்சி நிறுத்தும் வேட்பாளருக்கு வேலை பார்க்கத் தொடங்கிவிடுவார்.


இது என்ன மாதிரி மனநிலை என்று பல சமயம் யோசித்திருக்கிறேன். இன்றுவரை புரிந்ததில்லை. பொதுத் தேர்தல்தான் என்றில்லை. உள்ளாட்சித் தேர்தல்களிலும் அவர் சுயேச்சையாக நிற்பார். போனால் போகிறது என்று கட்சி சார்பிலும் ஓரிரு முறை நிறுத்தப்பட்டிருக்கிறார். மனிதர் ஸ்திதப்ரக்ஞர். கட்சி சார்பில் நின்றால் கிளுகிளுப்படைவதோ, சுயேச்சையாக நின்றால் சோர்ந்து போவதோ இல்லை. அவருக்குத் தேர்தல்கள் ஒரு பெரிய அவுட்லெட். வாம்மா மின்னல் வேகத்தில் சுழன்று சுழன்று வேலை செய்வார். அவர் வயதுக்கு அவரது எனர்ஜி இன்னொருத்தருக்கு வராது!


முன்பெல்லாம் அவரை மிகவும் சீண்டுவேன். ‘ஏன் சார்? உங்க குடும்பத்துல, இந்த வார்டைப் பொறுத்தவரைக்கும் மொத்தம் — ஓட்டு இருக்கில்ல? ஆனா உங்களுக்கு —தானே விழுந்திருக்கு? யாரந்த ப்ரூட்டஸ்னு கண்டுபிடிச்சிங்களா?’


மனிதர் அசரவே மாட்டார். ‘அட இத கண்டுபிடிக்க வேற செய்யணுமாக்கும். எல்லாம் என் சம்சாரம்தான்’ என்று சர்வ அலட்சியமாகச் சொல்லிவிட்டுப் போய்விடுவார். ஆனால் அவர் வீட்டுக்குப் போனால் அவரது மனைவி மிகவும் மரியாதையாகத்தான் நடந்துகொள்வார். எலி மருந்து கலக்காமல் காப்பிகூடத் தருவார். நண்பர் முன்பொரு காலத்தில் ஏதோ தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வி.ஆர்.எஸ்ஸில் வந்து பொதுச்சேவையில் இறங்கியவர். கொஞ்சம் போல் சம்பாதித்திருப்பார் என்று நினைக்கிறேன். அதனால் வீட்டில் இன்னும் புரட்சி பூக்கவில்லை. மற்றபடி அவர் ஒரு ‘நேர்ந்துவிட்ட ஆடு’ என்பதில் அவரது வீட்டாருக்கு இரண்டாம் கருத்து கிடையாது.


ஒருமுறை நண்பரின் கட்சி சார்ந்த அதிகாரபூர்வ வேட்பாளரிடம், ‘இதை உங்கள் கட்சி எப்படி அனுமதிக்கிறது? கட்சி வேட்பாளராக நீங்கள் களத்தில் இருக்கும்போது உங்கள் கட்சிக்காரர் ஒருவர் சுயேச்சையாக நிற்பது தர்மமாகாது அல்லவா?’ என்று கேட்டேன். அவர் சிரித்தார். ‘ஆமால்ல? ஆனா பரால்ல விடுங்க. ரெண்டு ஓட்டு அவருக்குப் போனாலும் அவர் ஓட்டு நமக்கு வந்துரும்’ என்று சர்வ அலட்சியமாகச் சொல்லிவிட்டார்.


ஓ! மனிதர் தம் மனைவி மீது போட்ட பழி அபாண்டம்தானா? சரிதான்.


பின்னொரு சமயம், நண்பரைத் தற்செயலாக பஸ் ஸ்டாண்டில் சந்தித்தேன். ‘எதாச்சும் செஞ்சிக்கிட்டே இருக்கணும் சார். இல்லன்னா பொண்டாட்டி பாத்திரம் கழுவ சொல்லிடுறா. யு சீ, நான் வி.ஆர்.எஸ். வாங்கினது என் சம்சாரத்துக்குப் பிடிக்கல. மாமனாருக்கும் புடிக்கல. வீட்ல சும்மாவே கெடக்குறேன்னு ஒரே டார்ச்சர். எலக்சன வெச்சி மூணு மாசம் தப்பிச்சிருவன்ல?’


நான்காவது மாதத்தை அவர் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை போலிருக்கிறது.


‘அப்படி இல்லிங்க.. இந்த ஒய்ஃபுங்க சைக்காலஜியே தனி. நம்மாண்ட காச்சு மூச்சுனு கத்துவாங்களே தவிர, நம்ம தல மறைஞ்சதும் நம்மள பத்தி பெருமையா பேசிக்க ஆரம்பிச்சிருவாங்க.. ஒரு நாள் இல்ல ஒரு நாள் என் ஊட்டுக்காரர் தமிழ்நாட்டு சி.எம்மாவே வந்துருவாரு பாருன்னு ஒரு தடவ பக்கத்து வீட்டு அம்மாவாண்ட சொல்லிச்சாம். அந்தம்மா அத அவங்க வீட்டுக்காரராண்ட சொல்ல, அவரு வீதி பூரா பத்த வெக்க, ஒன் வீக்ல நம்மள தெரியாத ஏரியாக்காரங்களே இல்லாம பூட்டானுக.’


அவர் விவரித்த தருணம் எனக்கு நன்றாக நினைவில் இருந்தது. அந்த வாரத்தில் ஒருநாள்தான் யாரோ சில அடையாளம் தெரியாத நபர்கள் அவரைத் தாக்கிவிட்டுத் தலைமறைவானார்கள். பேப்பரிலெல்லாம் செய்தி வந்தது. ‘பரதேசி, போட்டோ போட உட்டுட்டான் பாருங்க சார்!’ என்று வருத்தப்பட்டார். அடுத்து வந்த உள்ளாட்சித் தேர்தலில் கட்சியே அவரை ஒரு வேட்பாளராக நிறுத்தியது. அவர் கவுன்சிலரும் ஆனார்.


வாழ்த்தச் சென்றபோது மறக்காமல் சொன்னார், ‘என்ன ஜெயிச்சி என்ன… இந்தத் தடவையும் என் சம்சாரம் எனக்கு ஓட்டுப் போடல சார்.’


0


(நன்றி: தினமலர் 10/03/16)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 09, 2016 20:39

March 8, 2016

பொன்னான வாக்கு – 03

 


இந்த யாஞ்யவல்கியர் ஆரியரா? திராவிடரா? ஒரு காலத்தில் இவர் சாரு நிவேதிதாவின் இலக்கிய பார்ட்னராக இருந்தவர். ஆனால் அதனாலேயே திராவிடர் என்று ரப்பர் ஸ்டாம்ப் குத்திவிட முடியாது. மூன்றாம் நூற்றாண்டு குப்தர்கள் காலத்தில் இவரது ஸ்மிருதி (இரானியல்ல.) ரொம்பப் பிரபலமாக இருந்திருக்கிறது. ஸ்மிருதி என்றால் தருமம். மனு தருமம் மாதிரி இது ஒரு தருமம். கிட்டத்தட்ட ஆயிரத்தி நூறு சுலோகங்கள். பெரும்பாலும் மனு ஸ்மிருதியை அடியொற்றித்தான் எழுதப்பட்டது என்று படித்தறிந்த பண்டிதர்கள் சொல்லுவார்கள். மனுகூட திராவிடராக இருந்திருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன்.


விஷயம் என்னவென்றால் யாஞ்யவல்கியர் ஸ்மிருதியில் பிரியாணியைப் பற்றிய ஒரு குறிப்பு இருக்கிறது. இன்று திராவிடக் கட்சிகள் தமது தொண்டர்களுக்குக் கிளுகிளுப்பூட்ட பொட்டலம் பொட்டலமாக சப்ளை செய்கிறார்களே, அதே பிரியாணி. மட்டன் மற்றும் சிக்கன் பிரியாணி. பரம ஆரியரான யாஞ்யவல்கியர் ஓர் உணவுப் பொருளைக் குறிப்பிடுகிறார் என்றால் அது கைபர் போலன் வழியே வந்த சரக்காகத்தான் இருக்க வேண்டும். இந்த வாதத்துக்கு வலுச் சேர்க்க நமக்குக் கிடைக்கும் ஆதாரமாகப்பட்டது, கி.மு. இரண்டாம் நூற்றாண்டுப் பாரசீகத்தில் பிரியாணி கண்டுபிடிக்கப்பட்டது என்னும் குறிப்பு.


பாரசீகமென்றால் இரான். அது முஸ்லிம் நாடல்லவா; இசுலாமியர்கள் நமது நோன்புக் கஞ்சி பார்ட்னர்கள் அல்லவா என்று ஆரம்பித்துவிட முடியாது. கி.மு. என்றால் இயேசுநாதருக்கு முன்பு என்று பொருள். அப்போது இஸ்லாமே கிடையாது. இரானில் ஜொராஸ்டிர மதம் இருந்திருக்கிறது. இதர சிறு தெய்வ வழிபாடுகள் நிறையவே நடைபெற்றிருக்கின்றன. எப்படிப் பார்த்தாலும் அது ஆரிய மண். பிரியாணி ஓர் ஆரிய உணவு. கோழிக்கோட்டுக்கு வியாபாரம் செய்ய வந்த மத்தியக் கிழக்கு வர்த்தகர்கள் மூலம் அது தென்னிந்தியாவுக்கு வந்து சேர்ந்தது. இன்னொரு ரூட், இந்தியாவுக்கு வந்த முகலாய மன்னர்கள் வழியாக.


அது நிற்க. எப்படி தி.மு.கவுக்கும் அ.தி.மு.கவுக்கும் பெரிய வித்தியாசமில்லையோ அதே மாதிரி பிரியாணிக்கும் புலாவுக்கும் பெரிய வித்தியாசங்கள் கிடையாது. செய்முறை உள்பட முற்காலத்தில் இரண்டும் அண்ணன் தம்பி போலத்தான் இருந்திருக்கின்றன. சங்ககாலப் பாண்டிய மன்னர்களின் படைவீரர்களுக்கு இது அண்டா அண்டாவாகச் சமைத்துப் போடப்பட்டிருக்கிறது. சங்க இலக்கியங்களில் ஊன் சோறு என்று இது குறிப்பிடப்பட்டிருக்கிறது. அரிசி. நெய். ஜீரா. கவிச்சு. பருப்பு. அப்புறம் இருக்கவே இருக்கிறது வாசனாதி வகையறாக்கள். பாண்டிய மன்னர்கள் இந்த ஊன் சோறு உண்டிருக்கிறார்களா தெரியவில்லை. ஆனால் படைவீரர்களுக்குக் கட்டாயம் உண்டு. உழைப்பாளிகளை உற்சாகப்படுத்துவதற்கு. அவர்கள் மேலும் உழைக்கத் தெம்பு தருவதற்கு.


பாண்டியன் திராவிடன் தான். அதில் சந்தேகமில்லை. ஆனால் படைவீரர்களுக்கு ஆரிய உணவே சிறந்தது என்று எண்ணியிருக்கிறான். சங்கம் வளர்த்த பாண்டியன் வழியில் வந்தோரும் அதையே பின்பற்றி இன்றுவரை பிரியாணியை ஒரு தொண்டருணவாகப் பாதுகாத்து வருகிறார்கள் என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டு வைத்துவிடலாம். (தேநீரைத் தொண்டர் பானமாக முன்வைத்தவர்கள் காலாவதியான சோவியத் கம்யூனிஸ்டுகள்.)


இத்தனை விஸ்தாரமாக என்னத்துக்கு இந்த பிரியாணி மகாத்மியம் என்று கேட்பீர்களானால், சங்கதி இருக்கிறது. தேர்தல் வந்தால் ஆரிய அணிகளுடன் கூட்டணி என்பது இப்போதெல்லாம் அங்கீகரிக்கப்பட்ட திராவிட ஒழுக்கமாகிவிட்டது. டெல்லியில் ஒரு காலையல்ல; கால் கட்டை விரலையாவது ஊன்றிக்கொள்ளவேண்டியது அவசியம். ஆரியமாவது ஒன்றாவது? எம்பெருமானார் ஶ்ரீ ராமானுஜரின் திவ்ய சரிதத்தை பக்திச் சுவை நனி சொட்டச் சொட்ட திரைக்காவியமாக்கும் திராணி ஒரு திராவிடப் பெருந்தலைவரைத் தவிர வேறு யாருக்கு உள்ளது? என்ன இருந்தாலும் அது ஆரிய பிரியாணி போட்ட திராவிட விரல். தரப் பழுதுக்கு வாய்ப்பே இல்லை.


ஆனால் பிரியாணி சூடு. ஆரியர்கள் கெட்டவர்கள் என்பது போல. இந்தத் தேர்தலோ கொளுத்தும் வெயில் காலத்தில் வந்து தொலைக்கிறது. வேகாத வெயிலில் நாளெல்லாம் பொழுதெல்லாம் உழைக்கும் உத்தமத் தொண்டர்கள் பிரியாணியை மட்டும் சாப்பிட்டுவிட்டு வேலை பார்ப்பது உடம்பைக் கெடுக்கும். உடனே குளிர்ச்சிக்கு அம்மா திராவிட டாஸ்மாக் பீர் என்று சொல்லிவிடக் கூடாது. பீரும் ஆரியக் கண்டுபிடிப்புதான். இருந்தாலும் மோரை முயற்சி செய்யலாம். இள நீரை முயற்சி செய்யலாம். அட ஒரு பானைத் தண்ணீர் தராத குளிர்ச்சியை வேறு எது தந்துவிடும்?


மட்பாண்டங்கள் சிந்து வெளி நாகரிக காலத்தைச் சேர்ந்தவை. அதுதான் சுத்தமான திராவிட நாகரிகம்.


0


(நன்றி: தினமலர் – 09/03/16)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 08, 2016 20:46

March 6, 2016

பொன்னான வாக்கு – 02

ஒன்றரை வருஷத்துக்கு முன்னால் கோடம்பாக்கத்திலிருந்து வீடு மாற்றிக்கொண்டு வேறொரு பிராந்தியத்துக்குக் குடி வந்தேன். வந்ததிலிருந்து எனக்கு இருந்த ஒரே பெரும் பிரச்னை முகவரிச் சான்று. இந்த அரசாங்க ஆபீசுகளில் தன் விவர மாறுதல்களைச் செய்வது என்பது கோடி குட்டிக்கரணங்களை ஒரே மூச்சில் போடுவதைக் காட்டிலும் கஷ்டமானது. நாம் ஒரு விவரத்தை மாற்றப் போனால் அதற்கு அவர்கள் நாலு அடையாள அட்டைகளை எடுத்து வரச் சொல்லிக் கேட்பார்கள். நாலும் நாலு முகவரிகளில் இருக்கும். இல்லாவிட்டால் அப்பா பெயர் இருக்கவேண்டிய இடத்தில் தாத்தா பெயர் இருக்கும். நம் பெயருக்கு பதில் நயந்தாரா பெயர் கூட இருக்கும். அனைத்திலும் உச்சமாக நமது போட்டோவைப் பார்த்து நாமே சந்தேகப்படும்படியாக அதில் அச்சிடப்பட்டிருக்கும். அதிகாரியாகப்பட்டவர் வெகு சுலபமாக நிராகரித்து அனுப்பிவிடுவார்.


இதெல்லாம் நிறைய பார்த்து அனுபவித்திருக்கிறேன் என்கிறபடியால், இந்தமுறை முகவரி மாற்ற யாகத்தை எந்த அசுரனும் குறுக்கே புகுந்து கெடுத்துவிடாதபடி கவனமாகச் செய்துவிட முடிவு செய்தேன்.


ஆச்சா? சில மாதங்களுக்கு முன்னர் தேர்தல் கமிஷன் தொண்டையைச் செருமிக்கொண்டு ஓர் அறிவிப்பை வெளியிட்டது. வாக்காளர் அடையாள அட்டைத் திருத்தங்கள். பெயரை மாற்ற வேண்டுமா? முகவரி மாற்ற வேண்டுமா? பிறந்த தேதியைத் திருத்தவேண்டுமா? எதையும் செய்யலாம். சுலபமாக. வருகிறது சிறப்பு முகாம். விரைவில் திருத்துங்கள். நீங்களும் திருந்துங்கள். வோட்டுப் போடத் தயாராகுங்கள். ததாஸ்து.


எனவே நான் தயாரானேன். ஏற்கெனவே நமக்கு சொப்பன சுந்தர முகவெட்டு. அரசு அடையாளாஸ்பதங்களில் அது எந்நாளும் திருஷ்டி படாமல் பதிவானதில்லை. எனவே இம்முறை ஒரு சிறு குறையும் வந்துவிடாதபடிக்கு என்னவாவது செய்யவேண்டும் என்று முடிவு செய்து மிகச் சிறப்பாக எடுக்கப்பட்ட ஒரு பேரழகுப் புகைப்படத்தை (என்னுடையதுதான்) முதலில் எடுத்து வைத்தேன். பிறகு விண்ணப்பப் படிவத்தில் (ஆல் கேப்ஸ்) பெயர், தந்தை பெயர், புதிய முகவரி உள்ளிட்ட விவரங்களைக் கரம் சிரம் புறம் நடுங்கக் கொட்டை எழுத்தில் எழுதினேன். தேவையான சகாயச் சான்றுகளை மறக்காமல் இணைத்தேன். நல்ல நாள் பார்த்து பூஜையில் வைத்து சிறப்புப் பிரார்த்தனையெல்லாம் செய்து எடுத்துச் சென்று சிறப்பு முகாம் அதிகாரிகளிடம் கொடுத்துவிட்டு வந்தாயிற்று.


மூன்று மாதத்துக்குள் அழகிய பிளாஸ்டிக் அட்டை உங்கள் வீடு தேடி வரும் சார் என்று பணிவோடு சொன்னார்கள். இது ஏதடா தேசம் திருந்தித் தொலைத்துவிட்டதோ என்று அப்போதே சந்தேகம்தான். இருப்பினும் சர்வீசுக்கே விடப்படாத அரசு இயந்திரத்தின்மீது எனக்கிருந்த அபார நம்பிக்கை, ரொம்ப எதிர்பார்க்காதே என்று அவ்வப்போது எச்சரித்துக்கொண்டிருந்தது.


ஆனால் என்ன ஆச்சரியம்? சொல்லி வைத்த மாதிரி மூன்று மாதங்களுக்குள்ளாகவே வாக்காளர் அடையாள அட்டை வந்துவிட்டது. அழகிய பிளாஸ்டிக் அட்டை. உடையாது, அழியாது, மாறாது! அட நிர்வாகம் இத்தனை சீராகிவிட்டதா! பிரமித்துப் போனேன். காரணம் அதில் அச்சாகியிருந்த என் புகைப்படம் என்னைவிட அழகாக இருந்ததுதான். தவிரவும் என் பெயர் சரியாக இருந்தது. என் தந்தை பெயரும் மிகச் சரியாக இருந்தது. முகவரியைப் பாருங்கள் என்றாள் மனைவி. ஆர்வமும் படபடப்புமாகப் படித்துக்கொண்டே வந்தேன்.


முதல் வரி சரி. அடுத்த வரி சரி. மூன்றாவது வரியில் முத்திரை பதித்துவிட்டார்கள். ஐயய்யோ தெரு பெயர் தப்பு, டோர் நம்பர் தப்பு என்று அலறினேன். பரவாயில்லை; உங்கள் பெயர் சரியாக இருக்கிறதல்லவா? அது போதும் சார். திருத்தப்படிவம் வாங்கி சரியான முகவரியை எழுதிக் கொடுத்துவிடுங்கள்; மூன்றே மாதத்தில் வந்துவிடும் என்றார்கள் அதே அற்புத அதிகாரிகள். அட்டை மூன்று மாதத்தில் வந்துவிடும், ஆனால் தேர்தல் இப்போதே வந்துவிட்டதே என்றால் பதில் கிடையாது.


எனக்காவது முகவரி. எத்தனை பேருக்குப் பெயர்க் குழப்பங்கள்! இவர்களெல்லாம் இந்த அழகிய பிளாஸ்டிக் அட்டைகளுடன்தான் வோட்டுப் போடப் போகிறார்கள். ஐந்து கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் என்று நேற்று புள்ளிவிவரம் கொடுத்திருந்தார்கள். அதில் எத்தனை ஆயிரம் அல்லது லட்சம் பேரை அடையாளம் சரியில்லை என்று திருப்பி அனுப்பப் போகிறார்களோ.


மேற்படி திருத்தத் திருப்பணியை எனது பேட்டையில் மேற்கொண்டது பள்ளிக்கூட ஆசிரியப் பெருமக்கள் என்பதுதான் துயரத்தின் உச்சம் அல்லது எச்சம்.


(நன்றி: தினமலர் 07/03/16)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 06, 2016 20:48

March 5, 2016

பொன்னான வாக்கு 01

திங்கள்கிழமை என்றால் ஏழரை ஒன்பது ராகு காலம். வாக்குச் சாவடிகளை ஏழு மணிக்கே திறந்துவிட்டால் உத்தமம். கேலண்டர்க்காரன் அன்றைக்கு என்னமோ சூன்ய திதி என்றுவேறு போட்டிருக்கிறான். சிம்மத்துக்கோ ரிஷபத்துக்கோ சந்திராஷ்டமம் இல்லை என்றாலும் தேர்தல் ஆணையர் ஶ்ரீரங்கம் பஞ்சாங்கத்தை ஒரு பார்வை பார்த்துவிட்டுத் தேதி அறிவித்திருக்கலாமோ? ஈஸ்வரோ ரக்ஷது.


இனிமேல் அதிகாரபூர்வமாக அரசாங்கமே கொடுக்கும் கிரைண்டர் மிக்சி வகையறாக்களுக்கு வழியில்லை. சகல பெரிய சிறிய நடுவாந்திர புதிய பழைய திராவிட ஆரிய இந்திக்கார தெலுங்குக்கார மறத்தமிழ மன்னாதி மன்னர்கள் அநியாயபூர்வமாகக் கொடுப்பதுதான். திண்டிவனம் பக்கத்து கிராமங்களில் எல்லாம் இப்போதே வீடு வீடாக ஒரு கவுளி வெற்றிலை எடுத்துப் போய் நீட்டி சத்தியம் வாங்கத் தொடங்கிவிட்டதாகக் கேள்வி. சாதி மாற்றி வோட்டுப் போடாதே. மவனே, கைகால் இழுத்துக்கொண்டு, உதடுகோணி, கயிற்றுக் கட்டிலில் காலம் பூரா கிடக்க நேரிடும்.


சத்தியசந்தர்களை நாம் ஒன்றும் சொல்லுவதற்கில்லை. தேர்தல் என்றால் என்ன தேறும் என்று எதிர்பார்க்கும் டிபிகல் தமிழனுக்கு ஒரு டிப்ஸ் கொடுத்து இந்தத் திருவிழாவை மங்களகரமாகத் தொடங்கி வைக்கலாமா?


சரித்திரத்தை ஓர் அரிசி மூட்டையாக எண்ணிப் புரட்டிப் பார்த்தோமானால், தேர்தலையொட்டி மகா ஜனங்களுக்குக் கட்சிகள் கொடுக்கும் கடைசி நேரக் கிளுகிளுப்புகளுக்கு ஒரு பெரிய இடமுண்டு. உன்னைக்கொண்டு என்னில் வைத்தேன், என்னையும் உன்னில் இட்டேன் என்றார் பெரியாழ்வார். அதெல்லாம் ஆன்மிகம். பன்னுக்குள் மூக்குத்தி வைத்தேன், பிரியாணி பார்சலுக்குள் நோட்டை வைத்தேன் என்று திராவிடம் அதைத் திருத்தி எழுதிப் பலகாலமாயிற்று.


கடந்த பொதுத் தேர்தல் சமயம் சென்னையில் வீடு வீடாக வந்து கலர்க்கலர் பிளாஸ்டிக் குடங்களைக் கொடுத்துவிட்டுப் போனார்கள். எந்தக் கட்சி என்பதெல்லாம் அநாவசியம். தமிழ் நெஞ்சங்களின் தாகம் தணிக்க விரும்பும் ஏதோ ஒரு கட்சி. ஆஹா அவனென்ன குடம் கொடுப்பது என்று இன்னொரு தரப்பு உள்ளங்கை உயர பித்தளைக் குத்து விளக்கு கொடுத்தது. எதுவும் குடத்திலிட்ட விளக்கல்ல. குன்றிலிட்ட நெருப்புதான். எல்லோருக்கும் தெரியும், எல்லாமே தெரியும்.


எச்சில் தொட்டு எண்ணி எண்ணிப் பட்டுவாடா செய்யப்பட்ட நோட்டுகளால் டிவி சானல்கள் நாறின. இவனென்ன டிவிக்காரனுக்குச் சொல்லிவிட்டுத்தான் பணப்பட்டுவாடாவிலேயே இறங்குவானா என்று அப்போது என் நண்பர் ஒருவர் கேட்டார். கட்சிக்கொரு சேனலிருப்பதை நினைவூட்டி வாயடைத்து வைத்தேன். எல்லாம் நடப்பதுதான். எப்போதும் உள்ளதுதான்.


ஆனால் போரடித்திருக்காது பொது மகா ஜனங்களுக்கு? ஒரு மாறுதலுக்கு இம்முறை அவர்கள் கொடுப்பதை வாங்காமல் தமக்கு வேண்டியதைக் கேட்டுப் பெற மக்கள் முடிவு செய்தால் எப்படி இருக்கும்?


உதாரணத்துக்கு, வோட்டுக்கு இத்தனை என்று என்னவாவது கொடுக்க வருபவரிடம், ‘ஐயா, எனக்குக் காசு வேண்டாம். என் ஏரியாவில் எட்டு எம்பிபிஎஸ் வேகம் என்று சொல்லி இந்த ஏர்டெல்க்காரன் நாலு கூடக் கொடுக்காமல் அழிச்சாட்டியம் பண்ணுகிறான். உமக்குத் திராணியிருந்தால் குறைந்தது ஒரு பதினாறு எம்பிபிஎஸ் வேக இணைய இணைப்பை வாங்கிக் கொடுத்துவிட்டுப் போங்கள்; நான் சாவடிக்கு வந்து நல்ல வோட்டோடு சேர்த்து நாலு கள்ள வோட்டும் போட்டுவிட்டுப் போகிறேன்’ என்று சொல்லிப் பார்க்கலாம்.


முன்னெல்லாம் கார்ப்பரேஷன்காரர்கள் நாய் பிடிக்கும் திருவிழா ஒன்று நடத்துவார்கள். இப்போது அதெல்லாம் என்னவாயிற்று என்று தெரியவில்லை. நாட்டில் நாய்த்தொல்லை அதிகரித்துவிட்டது. வீதிக்கு நாற்பது நாய்கள் அநாமத்தாக சுத்திக்கொண்டிருக்கின்றன. தெருவில் இறங்கி நடமாட முடிவதில்லை. நாயகனே! நீ வோட்டுக்கு பக்கெட் தரவேண்டாம்; வந்ததற்கு நாலு நாய்களைப் பிடித்துப் போய் ப்ளூ க்ராசில் விட்டுச் செல் என்று சொல்லலாம்.


வோட்டுப் போட நீ லாரியெடுத்து வந்து அழைத்துச் செல்லவேண்டாம். பதிலுக்கு, அனுப்புவதைத் தண்ணி லாரியாக அனுப்பி வை; நாலு நாளைக்கு ஏரியாவில் குடிநீர்ப் பிரச்னை இல்லாதிருக்கும் என்று கேட்கலாம். சாக்கடை அடைப்பு முதல் சாலை உடைப்பு வரை நமக்குப் பிரச்னைகளா இல்லை?


இதெல்லாம் தப்பு; கூடவே கூடாது என்று பொத்தாம்பொதுவாகக் கருத்துச் சொல்லி நாலு காசுக்குப் பயனில்லை. ஆனால், ஐம்பதாண்டு காலத்துக்கும் மேலாக வாங்கிப் பழகிவிட்ட கரங்கள் இந்தத் தேர்தலை மாற்றத்துக்கொரு தொடக்கமாக வைத்துப் பார்க்கலாம். குனிந்து சலாமிட்டு வாங்கிப் போவதில் என்ன இருக்கிறது? நிமிர்ந்து உத்தரவிடும் கட்டளைத் தம்பிரான்களாகிப் பார்க்கலாம்!


(நன்றி: தினமலர் 06/03/16)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 05, 2016 20:18

January 28, 2016

உறவே பயம்

பலகாலமாக எனக்கு உறவுக்காரர்களாக இருப்போரில் சிலர் கூடி வாட்சப்பில் ஒரு குழு ஆரம்பித்தார்கள். உறவுக்காரர்களிலேயே உத்தமனான ஒரு அயோக்கியன் என்னை அந்தக் குழுவில் சேர்த்துவிட்டான். இன்னொரு பரம அயோக்கியன் என் மனைவியையும் அதே குழுவில் சேர்த்துத் தொலைத்தான்.


மேற்படி வாட்சப் குழுவானது ஆரம்பத்தில் மிகவும் போரடித்தது. கூடி கும்மியடிக்கும் அத்தனை பிரகஸ்பதிகளும் தம்மை எம்பெருமானார் ராமானுஜரின் செகண்ட் எடிஷன் என்று காட்டிக்கொள்வதற்கு ரொம்ப மெனக்கெட்டு, படு பயங்கர பக்தி மேட்டர்களாகப் போட்டுத் தள்ளிக்கொண்டிருந்தார்கள். ஆனால் ஏதோ ஒரு நல்ல நேரத்தில் குழுவில் இருந்த இளைய தலைமுறைப் பெண்கள் சற்றே சுவாரசியம் சேர்க்கத் தொடங்கினார்கள்.


ரசமான ஃபார்வர்ட் மெசேஜ்கள், ஆடியோ க்ளிப்பிங்குகள், நகைச்சுவைத் துணுக்குகள், டிபி மூலம் கோடிங் செய்யப்பட்ட ரகசியத் தகவல்கள் என்று குழு சுவாரசியமடையத் தொடங்கியது.


எனவே இதனை மேலும் ரசமாக்கலாமே? இன்னொரு நல்ல நாளில் குழு உறுப்பினரான ஆதிகாலத்து உறவுக்காரன் ஒருத்தன் ஓர் அறிவிப்பை வெளியிட்டான். நமது குடும்பத்தின் இளைய தலைமுறைக் குழந்தைகளைக் கொண்டு ஒரு நிகழ்ச்சி நடத்தினால் என்ன?


மேற்படி நிகழ்ச்சியானது குடியரசு தினத்தன்று நடத்தப்படலாம் என்று முடிவானது. குடும்பத்தின் மூன்று மற்றும் நான்காம் தலைமுறைக் குழந்தைகள் ஒன்றிணைந்து பாரதி பாடல்களைப் பாடுவது. இந்நிகழ்ச்சியைக் குடும்பத்தின் அதிமூத்த உறுப்பினரின் முன்னிலையில் நிகழ்த்துவது. என்ன பிரமாதமான யோசனை!


சம்மந்தப்பட்ட பழங்காலத்து உறவுக்காரன் ஒரு பள்ளிக்கூடத்தின் தாளாளராக உள்ளவன். எனவே தனது பள்ளியின் குடியரசு தின விழாவோடு இதைச் சேர்த்து ரொம்ப அழகாக வடிவமைத்துக் கொடுத்தான்.


ஆயிற்று. திட்டம் தயார். எடுத்து நடத்த ஆட்கள் தயார். பாடுவதற்குக் குழந்தைகளும் தயார். பயிற்சி ஆரம்பிக்க வேண்டுமே?


வாரம் ஒருவர் வீட்டில் ஒரு மாலை வேளை அனைவரும் ஒன்றுகூடி பாடல் பயிற்சி அளிப்பது என்று முடிவானது. மூன்று மணிநேரப் பயிற்சி. பயிற்சிக்குப் பின் சுவையான உணவு.


பயிற்சியும் உணவும் ருசித்ததைவிட, பன்னெடுங்காலமாகத் தொடர்பு எல்லைக்கு வெளியே மட்டுமே வாழ்ந்துகொண்டிருந்த பெரும்பாலான உறவுக்காரர்கள் ஒருவரோடு ஒருவர் நெருங்குவதற்கு இந்தச் சந்தர்ப்பம் பேருதவி செய்தது. வெட்கத்தை விட்டுச் சொல்கிறேன். எனக்கு என் அப்பா – அம்மா இரு தரப்பு உறவுக்காரர்களின் மூன்றாம் நான்காம் தலைமுறைக் குழந்தைகளின் பெயர்கள்கூட அநேகமாகத் தெரியாதிருந்தது. அவரவர் உத்தியோகம், சொந்தக் கவலைகள், பிரத்தியேகப் பாடுகள் அவரவருக்கு. இதில் கூடியிருந்து குளிர்ந்தேலோரெம்பாவாய் பாட ஏது நேரம்?


அப்படியொரு நேரத்தை உருவாக்க இந்த வாட்சப் குழு உதவி செய்ததை மறக்க முடியாது.


நிற்க. விஷயம் அதுவல்ல. இந்தக் குழு இயங்கத் தொடங்கியபிறகுதான் குடும்பங்களுக்குள் பன்னெடுங்காலமாக நிகழ்ந்துகொண்டிருக்கும் உள்நாட்டு அரசியல் யுத்தங்கள், சி.ஐ.ஏ. ரக ரகசியத் தாக்குதல்கள் போன்றவையும் தெரியத் தொடங்கின.


ஆனால் அதெல்லாம் நமக்கெதற்கு? நாம் புதிய தலைமுறை. நமக்குள் எந்த சண்டை சச்சரவுகளும் கிடையாது. துடைத்துப்போட்டுவிட்டு அடுத்தத் தலைமுறைக்கு உறவைக் கடத்திச் செல்வோம்.


இது விஷயத்தில் எங்கள் குடும்பத்துக்கு மருமகள்களாக வந்து சேர்ந்த – என் மனைவி உள்ளிட்ட அனைத்துப் பெண்களின் தீவிரம் உண்மையிலேயே பிரமிப்பளித்தது. வாழவந்த வரலட்சுமிகள் ஒன்று சேர்ந்து குழுவுக்குள் குழுவாக இன்னொரு மகளிரணியையும் உருவாக்குமளவுக்கு உறவு படு தீவிரமாக வளரத் தொடங்கியது.


ஆச்சா? நிகழ்ச்சியில் என் மகளும் பாடுவதென்று முடிவானது. எனவே பயிற்சிக்கு அவளை அழைத்துக்கொண்டு என் மனைவியும் போய்வரத் தொடங்கினாள். ஒரு வாரம் என் வீட்டிலேயே அந்தப் பயிற்சி நிகழ்ச்சியை நடத்தினேன். வரலாறு காணாத விதமாக அன்று என் வீடு உறவுக்காரர்களால் நிரம்பி வழிந்தது. என் மனைவி அத்தனை சந்தோஷப்பட்டாள். சந்தேகமில்லை. உறவு சுகம்தான்.


குடியரசு தினத்துக்கு முந்தைய தினம் இறுதிப் பயிற்சி ஏற்பாடானது. அது அந்த உறவுக்காரத் தாளாளர் வீட்டிலேயே நடந்தது. அன்றைக்கு திருவல்லிக்கேணி பெருமாள் ஈக்காடுதாங்கல் வழியே சைதாப்பேட்டை வரை ஒரு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். எனவே பிராந்தியத்தில் வசிக்கும் பிற உறவுக்காரர்கள் சிலரும் [இவர்கள் குழுவில் இல்லாத உறவுக்காரர்கள்] பெருமாள் சேவிக்க அந்தப் பக்கம் வந்திருந்தார்கள்.


பயிற்சியின் நடுவே ஒரு பிரேக் விட்டுவிட்டு, கோயிலுக்குப் போய்வரலாம் என்று குழு உறவுக்காரர்கள் கிளம்பினார்கள். போனது, சேவித்தது, திரும்பியது – மொத்தமாக அரை மணி இருக்குமா?


மறுநாள் என் அம்மாவைப் பார்க்க ஓர் உறவினர் வந்திருந்தார். ‘நேத்து பெருமாள் சேவிக்கப் போயிருந்தேன் மாமி. அங்க பாத்தா உங்க மூத்த மாட்டுப் பொண்ணு அவ பொண்ணோட வந்திருக்கா. என்னடான்னு பாத்தா அவா, —- இவாளோட சேந்து எதோ கும்மியடிச்சிண்டிருக்கா. இதெல்லாம் நன்னாவா இருக்கு? எனக்குப் பாக்கவே பிடிக்கல. அப்படியே பத்திண்டு வந்துடுத்து. இதெல்லாம் உங்களுக்குத் தெரிஞ்சி நடக்கறதா, தெரியாம நடக்கறதான்னே தெரியல. அவாள்ளாம் என்னிக்காவது உங்கள மதிச்சிருக்காளா? உங்காத்துக்கு வந்திருக்காளா? இருக்கியா செத்தியான்னு கேட்டிருக்காளா… உங்களுக்கே வேண்டாத சொந்தமெல்லாம் உங்க மூத்த மாட்டுப் பொண்ணுக்கு எதுக்குங்கறேன்?’


ஆ! பாலிடிக்ஸ்! அடுத்த சில மணி நேரம் தீவிரமாக யோசித்துப் பழைய தருணங்களை நினைவில் கொண்டுவரப் பார்த்தேன். யாருக்கும் யாருக்கும் எப்போது என்ன சண்டை வந்திருக்கிறது? என் அம்மா யார் கட்சியில் அப்போது இருந்தாள்? எதிர்க்கட்சியில் யார் யார்? எந்தெந்தத் தருணங்களில் உறவுக் கூட்டணிகள் மாறியிருக்கின்றன? அவற்றின் நோக்கமும் பின்புலமும் எத்தகையது? கடைசியாக யார் யார் என் அம்மாவைப் பார்க்க வீட்டுக்கு வந்தார்கள்? வந்தபோது பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்ததா? அப்போது என் மனைவி என்ன செய்துகொண்டிருந்தாள்? அவளுக்கும் என் அம்மாவுக்கும் அன்றைய தினத்து உறவுநிலை எப்படி இருந்தது?


அபத்தமே என்றாலும் ஃபேமிலி பாலிடிக்ஸை யோசித்தால் சுவாரசியமாகத்தான் இருக்கிறது. ஆனால் மேற்படி குழுவில் இல்லாத உறவுக்காரர் வந்து கொளுத்திப் போட்டுச் சென்றதை

அம்மா நேரடியாக என்னிடம் சொல்லவில்லை. ஆனால் தெரியப்படுத்த நினைத்ததை வேறு ரூட்டில் தெரியப்படுத்திவிட்டாள். நான் ஒன்றும் சொல்லவில்லை. மேற்படி குழு விரோத உறவுக்காரருக்கு ஒரு ரிசர்வ் தொகுதி ஒதுக்கியாவது குழுவில் சேர்த்துவிட வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்.


என்னவானாலும் எதிர்க்கட்சிக்காரர் என்றொருவர் இருந்தால் சபை இன்னும் களைகட்டுமல்லவா?


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 28, 2016 07:29

January 25, 2016

சிங்கிள் டீ

ராயப்பேட்டை ஒய்யெம்சியே மைதானத்தில் நடைபெறும் புத்தகக் காட்சிக்கு இரண்டு நாள் சென்றேன். முதல் நாள் சுமார் ஒரு மணிநேரம். இரண்டாம் முறை சென்றபோது சுமார் மூன்று மணி நேரம்.


இந்தக் குறுகிய கால அவகாசத்தில் அங்கு சந்திக்க நேர்ந்த பெரும்பாலான எழுத்தாள நண்பர்கள் [நவீன இலக்கியம் சார்ந்தோர் அல்லர்] மிகுந்த கவலையுடன் பேசிய விஷயம் ராயல்டி. மழைச் சாக்கில் இவ்வாண்டு யாருக்குமே ராயல்டி இருக்க வாய்ப்பில்லை என்கிற முடிவுக்கு அநேகமாக எல்லோருமே வந்துவிட்ட மாதிரி தெரிந்தது. இந்தக் கண்காட்சியே பதிப்பாளர்களின் வெள்ள நிவாரணம்தான் என்று ஒருவர் சொன்னார். [ஆனால் சில விற்பனையாளர்கள் புத்தக விற்பனை எப்போதும்போலத்தான் உள்ளது என்றார்கள். கவனிக்கவும்: விற்பனையாளர்கள்தாம். பதிப்பாளர்கள் அல்லர்.]


எனக்கு இது புரியவில்லை. புதிய புத்தகங்கள்தாம் அதிகம் வரவில்லையே தவிர ஸ்டாக்கில் உள்ளவை இருக்கத்தான் செய்கின்றன; விற்கத்தான் செய்கின்றன. ஒரு சிலர் உண்மையிலேயே நட்டமடைந்திருப்பார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் கண்காட்சி ஜோரைப் பார்த்தால் யாரும் யாருக்குமே ராயல்டி தரமுடியாத அளவுக்கெல்லாம் நிலைமை கவலைக்கிடம் என்று தோன்றவில்லை.


மழையே இல்லாத காலத்திலும் ராயல்டி வராமை / தாமதங்கள் இருக்கத்தான் செய்தது. மழை ஒரு கூடுதல் சாக்கு மட்டுமே. பல்வேறு காரணங்களால் பல எழுத்தாளர்கள் தாம் தொடர்பில் உள்ள பதிப்பகங்களில் இருந்து புத்தகங்களை இடம் மாற்றிக் கொடுத்திருப்பதைச் சுட்டிக்காட்டி ஒரு நண்பர் கேட்டார், ‘ராயல்டியைவிட வேறு பெரிய காரணம் என்னவாயிருக்க முடியும்?’


கணிசமான ராயல்டி பாக்கிகள் எனக்கும் உண்டு என்றாலும் அதை மட்டுமே ஒரு காரணமாக என்னால் கருத இயலவில்லை.


அப்படியானால் கடந்த சில வருடங்களாக உங்களுடைய புதிய புத்தகங்கள் ஏன் வரவில்லை என்றார். இதற்குப் பல காரணங்கள். எனது தொலைக்காட்சித் தொடர் பணிகள் புத்தக எழுத்துக்குப் பெரும்பாலும் இடமளிப்பதில்லை. கொஞ்ச நேரம் கிடைத்தால் படிக்கத்தான் மனம் அலைகிறதே தவிர எழுத அல்ல. இன்னொன்று, ஒரு கட்டாயம் இல்லாது போனால் என்னால் பெரிய பணிகளைப் பொதுவாகச் செய்ய முடிவதில்லை. பத்திரிகைத் தொடர்கள் வேண்டாம் என்று முடிவு செய்த பிறகு அத்தகு கட்டாயம் எனக்கு இல்லாது போனதை நினைவுகூர்கிறேன். ஜெயமோகன் தனது தளத்தில் எழுதுவதையே ஒரு கட்டாயமாக வைத்துக்கொண்டிருக்கிறார். பிசாசுகளுக்கு இது சாத்தியம். பரம சோம்பேறிகளுக்கல்ல.


இத்தனை காரணங்கள் இருப்பினும் எழுதுவோரை உறிஞ்சிப் பிழைக்கும் பதிப்பு நிறுவனங்கள் மொத்த வருமானத்தில் வெறும் பத்து சதத்தை அவர்களுக்கு அளிப்பதில் ஏன் இத்தனை சுணக்கம் காட்டவேண்டும் என்ற வினா எழாதிருப்பதில்லை. மனச்சோர்வு அளிக்கும் அளவுக்கு இது எனக்குப் பெரிய விஷயமல்ல. ஆனாலும் உறுத்தலாக இது எப்போதும் உள்ளது.


கூடிய விரைவில் பல எழுத்தாளர்கள் சொந்தப் பதிப்பு நிறுவனம் அல்லது சொந்த மின் நூல் தயாரிப்பு என்று இறங்கக்கூடும் என்று தோன்றியது. என் நூல்கள் அனைத்தையும் நானே மின் நூல்களாகத் தயாரித்திருப்பதைச் சொல்லி, விரைவில் அவை விற்பனைக்கு வரும் என்றபோது, ‘ஒருநாள் வந்தா அந்த டெக்னிக்க சொல்லிக் குடுப்பிங்களா சார்?’ என்று ஒரு நண்பர் கேட்டார்.


பரவாயில்லை. இன்னொரு பிசினஸுக்கும் கதவு திறக்கும் போலுள்ளது.


தொடர்புடைய பதிவு


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 25, 2016 05:12

January 24, 2016

விருது மறுப்பு

ஜெயமோகன் பத்ம விருதை மறுத்திருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. சுற்றுச்சூழலைப் போல் தமிழ்ச்சூழல் எத்தனை மாசுபட்டிருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. இவ்விருதைப் பெற அனைத்துத் தகுதிகளும் உள்ளவர் அவர். ஆயினும் காழ்ப்புக் கசடுகளை மனத்தில் கொண்டு இதனை மறுத்திருக்கிறார்.


படைப்பு சார்ந்தும் படைப்புக்கு அப்பாலும் அவர்மீது யாருக்கும் என்னவிதமான விமரிசனமும் இருக்கலாம். எனக்கே நிறைய உண்டு. ஆனால் ஒரு தொடர் செயல்பாட்டாளராகக் கலை, கலாசார தளத்தில் அவரது பங்களிப்பு நிராகரிக்க முடியாதது. சினிமாவோடு ஓய்ந்திருக்கக்கூடிய இத்தலைமுறையின் ஒரு பகுதியை படைப்பிலக்கியத்தின் பக்கம் திருப்பியது அவரது முக்கியமான சாதனை. எழுதுவது மட்டுமல்லாமல் வாசிப்பும் ஒரு இலக்கிய சாதகமே என்பதை இடைவிடாது அவர் வெளிப்படுத்தி வந்திருக்கிறார். அவர்மூலமாகவே நவீன இலக்கியத்தின் இதர கிளைகளுக்கு நகர்ந்த பலபேரை நானறிவேன்.


இந்த விருது மறுப்புக்கான காரணத்தை ஜெயமோகன் விரிவாகக் குறிப்பிட்டிருப்பதை வாசித்தேன். வருத்தம்தான். காழ்ப்புகளும் பொறாமையும் அவதூறுகளும் தமிழ்ச் சூழலுக்கு மட்டுமே உரிய கல்யாணகுணம் என்று நான் நம்பவில்லை. இங்கு சற்று அதிகமாக இருக்கிறதோ என்னவோ. எப்படியானாலும் ஜெயமோகன் அவற்றைப் புறந்தள்ளியிருக்கவேண்டும் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.


ஏனெனில் தகுதிமிக்க ஒருவருக்கு வழங்கப்படும் விருது அவரை மட்டுமே சார்ந்ததல்ல. அவர் புழங்கும் மண்ணுக்கும் சேர்த்தே அளிக்கப்படுவதுதான். ஜெயமோகன் போன்றவர்கள் இம்மாதிரியான நியாயமான அங்கீகாரங்களை மறுத்துக்கொண்டிருக்கும்வரை வி.ஜி. சந்தோஷம் போன்றவர்கள் குத்தாட்டம் போட்டுக்கொண்டுதான் இருப்பார்கள்.


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 24, 2016 09:22

January 9, 2016

திறமையில் வாடிய கலைஞன்

மணிக்கொடி ரைட்டர்ஸ மொத்தமா ஒரு தடவ படிச்சிரு. அசோகமித்திரன மனப்பாடம் பண்ணு. சுந்தர ராமசாமிய படிச்சிண்டே இரு. அடுத்த ஜெனரேஷன்ல நாஞ்சில்நாடன் முக்கியம். லவ் பண்ற ஐடியா இருந்தா மட்டும் வண்ணதாசன படி. தோப்பில் மீரான்னு ஒருத்தர் எழுதறாரு. முடிஞ்சா படிச்சிப் பாரு. லேங்குவேஜ் கொஞ்சம் டஃப். ஆனா செம மண்டை அது. நமக்குத் தெரியாத வேற ஒரு லைஃப போர்ட்ரெய்ட் பண்றாரு. மாமல்லன் ஒரு காலத்துல என் ஃப்ரெண்டுதான். செமையா எழுதுவான். ஆனா திமிர் புடிச்சவன். படி, ஆனா படிச்சேன்னு என்கிட்ட சொல்லாத.


நவீன தமிழ்ப் புனைவுலகு பற்றிய அறிமுகம் இப்படியாக எனக்கு சிவகுமார் மூலமாகவே முதலில் கிடைத்தது. வருடம் 1989. நான் படிக்கத் தொடங்கியது, எழுதத் தொடங்கியது எல்லாம் இதன் பிறகுதான்.


தமிழில் பெரும்பாலும் கண்டுகொள்ளப்படாத நல்ல எழுத்தாளர்களுள் ஒருவராக சிவகுமாரைச் சொல்ல நேர்வது துரதிருஷ்டம். அவரது அப்பாவும் இரண்டு ரிக்‌ஷாக்காரர்களும், நாயகன் ஆகிய இரு தொகுப்புகளும் மிக முக்கியமானவை. யாருடைய சாயலும் இல்லாத தனித்துவமான மொழி அவருடையது. கதைப் போக்கில் மிக முக்கியமான கட்டம் அல்லது திருப்பம் வரும்போது மட்டும் அவரது வெளிப்பாட்டு முறையில் சற்றே அசோகமித்திரன் வருவார். இதைச் சுட்டிக்காட்டினால், ‘போடாங்கோ.. அப்பன் சாயல் புள்ளைக்கு இல்லன்னாத்தாண்டா தப்பு’ என்பார். அவருடைய நாவல் வேடந்தாங்கல் என்னை ஒரு காலத்தில் புரட்டிப் போட்டிருக்கிறது. என் கதை இவருக்கு எப்படித் தெரியும் என்று வியந்தேன். உண்மையில் அது மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த அத்தனை மக்குப் பையன்களுடையதுமான கதை.


சிவகுமார் பெரிய அளவில் எழுத்தில் சாதித்திருக்க வேண்டியவர். சினிமா அவரைச் சாப்பிட்டது. கமல் கூப்பிட்டார் என்று தேவர் மகனில் வேலை பார்க்கப் போய் சில லட்சங்கள் செலவழித்து சொந்தப் படம் (பாப்கார்ன் கனவுகள்) எடுப்பதுவரை ஒரு பேயாட்டம் ஆடிப் பார்த்து பலவற்றை இழந்தவர் – வங்கி வேலை உள்பட. கடைசி வரை அவரது சினிமாக் கனவுகள் நனவாகவில்லை. அவ்வப்போது சந்திக்க நேர்ந்தால் ஏதாவது ஒரு திட்டத்தை விவரிப்பார். திட்டம் கைவசமில்லாதபோது என்னவாவது ஒரு போராட்டம் நடத்தும் யோசனையைச் சொல்லுவார். தூர்தர்ஷன் முன் உண்ணாவிரதம், மத்திய அமைச்சருடன் கடித யுத்தம் என்று தொடங்கி என்னென்னவோ செய்திருக்கிறார். ஒருமுறை எதற்கோ தீக்குளிப்புப் போராட்டம் நடத்தப் போகிறேன் என்று சொல்லப் போக, கண்டபடி திட்டி, சத்தம் போட்டுவிட்டேன். அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு, ‘என்ன இப்ப? வேணான்றியா? சரி, சாகும்வரை உண்ணாவிரதம்? அது ஈசிதான?’ என்றார்.


அவரே ஓரிடத்தில் சொல்லியிருப்பதுபோல, அவர் வறுமையில் அல்ல; திறமையில் வாடிய எழுத்தாளர். சாதிக்காம சாகமாட்டாண்டா இந்த சிவகுமார் என்று ஒவ்வொரு சந்திப்பின் இறுதியிலும் சொல்லிவிட்டுப் போவார். இன்று அவர் இல்லை. அவரது சாதனைகளை சினிமா அல்ல; அவரது சிறுகதைத் தொகுப்புகளும் வேடந்தாங்கல் நாவலும் சொல்லும்.


(10/01/2016 – இன்று தி ஹிந்துவில் வெளியான குறிப்பு)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 09, 2016 19:35

அஞ்சலி: ம.வே. சிவகுமார்

ம.வே. சிவகுமாரைப் பற்றி இன்று மூன்று கட்டுரைகள் எழுதினேன். ஒன்று இது. இன்னொன்று நாளைக் காலை. மூன்றாவது நாளை மாலை அல்லது அடுத்த நாள்.


ஒன்று.


தாம்பரத்தில் இருந்த சிவகுமார் வீட்டு மாடியில் தனியே ஒரே ஓர் அறை உண்டு. பத்துக்குப் பத்தோ பத்துக்குப் பன்னிரண்டோ. சிறிய அறைதான். அந்த அறையில் இரண்டு புத்தக அலமாரிகளும் ஒற்றைக் கட்டிலொன்றும் கொடகொடவென்று ஓடும் மின்விசிறி ஒன்றும் இருக்கும். அவரது டேபிள் நிறைய எழுதிய தாள்களை மட்டுமே பார்த்த நினைவு. உதிர்ந்த வேப்பம்பழங்கள்போல் குண்டு குண்டான கையெழுத்து அவருக்கு. நாலு வரி எழுதுவார். ஏதாவது தப்பு வந்துவிட்டால் அந்தத் தாளை அப்படியே எடுத்துக் கீழே போட்டுவிட்டு இன்னொரு தாளில் முதலில் இருந்து ஆரம்பிப்பார். அதிலும் பிழையாகிவிட்டால் – ஒரே ஒரு வரியானாலும் தாளைக் கீழே போட்டுவிடுவார். அடுத்ததை எடுப்பார். அறை முழுதும் பேப்பர் பறந்துகொண்டே இருக்கும். எங்கு கைவைத்தாலும் சிகரெட் சாம்பல். ஓயாமல் புகைப்பார். புகைத்தபடியே எழுதுவார். எழுதிக்கொண்டே பேசுவார். அப்போதெல்லாம் அடிக்கடி அவர் வீட்டுக்குப் போவேன்.


‘டேய், இந்தத் தொகுப்பு படிச்சிருக்கியா?’


அவர் எடுத்துக் காட்டியது அசோகமித்திரனின் காலமும் ஐந்து குழந்தைகளும்.


இல்லை என்றேன். ‘படிச்சிரு. எழுதினா இந்தாள மாதிரி எழுதணும். இல்லன்னா செத்துரணும்.’ என்றார்.


சிவகுமாருக்கு அசோகமித்திரன் வழிபடு தெய்வம். ஆனால் கவனமாக அதை வெளிக்காட்டிக்கொள்ளாதிருக்க முயற்சி எடுப்பார். ஆதவனைப் பற்றிப் பேசுவார். சுப்ரமணிய ராஜுவைப் பற்றிப் பேசுவார். மாமல்லனைப் பற்றி நிறையவே பேசுவார். ‘நான் ஜெயகாந்தன் ஸ்கூல்ல படிச்சிட்டு அசோகமித்ரன் யூனிவர்சிட்டிக்குப் போனவன். என்கிட்ட பேசுறப்ப ஜாக்கிரதையா பேசணும்’ என்பார்.


இதெல்லாம் நட்பின் தொடக்க காலத்தில். ஒரு கட்டத்தில் நாங்கள் ஒருவரையொருவர் மிக நன்றாக அறிந்துகொண்ட பிறகு என்னிடம் அவருக்கு ரகசியம் என்பது இல்லாது போய்விட்டது. ‘ஒரே ஒரு அவுட்ஸ்டாண்டிங் ஸ்டோரி எழுதிட்டா போதும்டா. அதத்தான் டிரை பண்ணிட்டிருக்கேன். சனியன், நாப்பது கதை எழுதினப்பறமும் அது வரமாட்டேங்குது. மாமல்லன் எழுதிட்டான். ஜெயமோகன் எழுதிட்டான். ராமகிருஷ்ணன் மட்டும் ரிடையர் ஆறவரைக்கும் எழுதமாட்டான். அத நெனச்சா திருப்திப்பட்டுக்க முடியும்? ஆனா இந்தக் கெழவன் எழுதறதெல்லாமே அவுட்ஸ்டாண்டிங்கா இருந்து தொலையுது பாரு. தெய்வானுக்ரஹம்னா இதாண்டா’என்றார் ஒரு நாள்.


அவரது வேடந்தாங்கலின் தரத்தில் நூறில் ஒரு பங்குகூட பாப்கார்ன் கனவுகள் இல்லை என்று சொன்னேன். வெகுநேரம் அமைதியாக யோசித்தபடி அமர்ந்திருந்தார். சட்டென்று கண் கலங்கிவிட்டார். ‘ஆமால்ல? சுய அனுபவம்தான்.. பட் கலையா உருமாறல. கண்டெண்ட் வீக்காயிருச்சி. என்ன ரீசன் தெரியுமா? கொஞ்சம் கமர்ஷியலா இறங்கினா நாலு பேர் எழுதக் கூப்புடுவானோன்னு டிரை பண்ணேன். விடு கழுதை. அடுத்ததுல சரி பண்ணிடுறேன்.’


தேங்காய் என்றொரு சிறுகதை எழுதியிருந்தார். ரொம்பப் பிரமாதமான கதை. படித்த வேகத்தில் பஸ் பிடித்து லஸ் கார்னரில் இறங்கி அவரது வங்கிக்குப் போய் கவுண்டரில் கையை நீட்டினேன். ‘கையக் குடுய்யா. எழுத்துன்னா இது. பின்னிட்டிங்க’ என்றேன். உண்மையில் அது வேலை அதிகம் இருக்கும் காலை நேரம். வரிசையில் பத்திருபது பேர் நின்றிருந்தார்கள். காசு மட்டுமே நீளும் கவுண்ட்டர் துவாரத்தில் எதிர்பாரா விதமாகக் கையை நீட்டிக் கையைப் பிடித்துக் குலுக்கியதில் சிவகுமாருக்கு சூழ்நிலை மறந்துபோனது. பரவசமாகி அப்படியே எழுந்து வெளியே வந்தார். வா என்று என்னை அருகிலுள்ள டீக்கடைக்கு அழைத்துப் போய் நிறுத்தி, ‘ஒரே ஒரு டீ எனக்கு மட்டும். இவன் இப்ப டீ குடிக்கமாட்டான்’ என்று சொல்லி தனக்கு மட்டும் டீ கேட்டு வாங்கிக் குடித்தபடி பேசத் தொடங்கினார். ‘நல்லாருந்திச்சில்ல? ப்ரூவ் பண்ணிட்டன்ல? நான் சாகல இல்ல? சிவு சாவமாட்டாண்டா. அவன் சாதிக்கப் பொறந்தவண்டா.. பாப்கார்ன் கனவுகள் பத்தி நீ சொன்னது இத எழுதி முடிக்கற வரைக்கும் அப்படியே மனசுல இருந்தது. தூங்கவிடலடா. சினிமால கான்சண்டிரேட் பண்ண ஆரம்பிச்சதும் கொஞ்சம் சறுக்கிட்டேன். ஆனா ரெண்டுலயும் நான் வாழ்வேண்டா.. பண்ணிக் காட்றேன் பாரு.’


கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் தன்னை மறந்து பேசிக்கொண்டிருந்தவர் திடீரென நினைவுக்கு வந்தவராக, ‘சனியம்புடிச்சவனே.. மார்னிங் டயத்துல வந்து வேலய கெடுத்துட்ட பாரு. கவுண்டர்ல கலவரமாயிருக்கும். நான் போறேன்’ என்று ஓடியே போனார்.


கமலஹாசன் கூப்பிட்டு தேவர் மகனுக்காக அவர் லாங் லீவில் போகவிருப்பதை என்னிடம்தான் முதலில் சொன்னார். எனக்குச் சற்று பயமாக இருந்தது. வேண்டாம் என்று சொன்னால் திட்டுவார். அது அவர் எதிர்பார்த்துக் காத்திருந்த தருணம். தவிரவும் கமல். ஜாக்கிரதை என்று சொல்லி அனுப்பினேன். படப்பிடிப்பில் ஒரு காட்சியில் தேர் எரியவேண்டிய கட்டம். தீயில் சிக்கிய ஒரு நாகஸ்வரம் அவரைப் பதறவைத்திருக்கிறது. அன்று ஷூட்டிங் முடிந்த இரவில் அன்றைய அனுபவத்தை வைத்து ஒரு சிறுகதை எழுதவிருப்பதாகச் சொன்னார். ‘என்னய்யா திரும்பவும் சிறுகதை அப்படி இப்படின்னு பேச ஆரம்பிச்சிட்டிங்க? திருந்திட்டிங்களா?’ என்றேன் சிரித்தபடி. சிவகுமார் அன்று சரியாகப் பேசவில்லை. படப்பிடிப்பெல்லாம் முடிந்து, படம் வெளியாகி உதவி இயக்குநராக மட்டும் அவர் பெயர் டைட்டில் கார்டில் வந்த தினத்துக்கு மறுநாள் பேசினார். நிறைய விஷயங்கள் சொன்னார். எதுவும் புதிதல்ல; எதுவும் அதற்குமுன் நடக்காததும் அல்ல. ‘டேய், நான் சொன்னது எதுவும் பொய்யோ மிகையோ இல்லடா. என் எழுத்து சத்தியம்’ என்றார். அவருக்குப் பொய்யெல்லாம் வராது என்று நானறிவேன். ஆறுதல் சொல்லிவிட்டு, இனிமே ஒழுங்கா ஆபீசுக்குப் போங்க என்று சொல்லிச் சென்றேன்.


அதை அவர் அன்று செய்திருக்கலாம். சொந்தப்படம், குத்துவிளக்கேற்ற கமல் அப்படி இப்படியென்று பெரிதாக அகலக்கால் வைத்தார். அந்த பூஜைக்கு வாங்கிய கடன்தான் அவரை வி.ஆர்.எஸ். கொடுக்கவைத்தது. இன்றுவரை அவரது கனவுகளும் லட்சியங்களும் நிறைவேறாதிருந்ததே அவர் உயிரைப் பறித்திருக்கிறது.


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 09, 2016 09:27