Pa Raghavan's Blog, page 28

August 12, 2015

வக்ரகால அதிசயம்

 


thumb_IMG_4951_1024


கிமு 323ஆம் வருஷம் ஜூன் மாதம் பத்தோ பதினொன்றோ தேதியன்று கிரேக்கமாதேசத்தில் அலெக்சாண்டர் காலமானபோது இயேசுநாதர் பிறந்திருக்கவில்லை. ஆனால் ஆசியாக் கண்டத்தில் பல்லவபுர நகராட்சிக்கு உட்பட்ட பிராந்தியமான குரோம்பேட்டை தன் பெயரை மறைத்துக்கொண்டு அப்போதும் புவியில் இருக்கத்தான் செய்தது.


அலெக்சாண்டர் காலமான காலத்தில் குரோம்பேட்டை என்பது ஒரு பெரிய வனம். ராமர் இலங்கைக்குப் போகிற வழியில் இந்த வனத்தில் ஓரிரு தினங்கள் தங்கி சிரம பரிகாரம் செய்துகொண்டதற்குக் வால்மீகி ராமாயணத்தில் இல்லாவிடினும் குரோம்பேட்டை பிஜேபியினரிடம் சரித்திர ஆதாரங்கள் உண்டு. எனவே அலெக்சாண்டருக்கு முற்பட்ட ராமர் காலம்தொட்டு கல்யாண் சிங்குக்கு முற்பட்ட பிஜேபி காலம் வரை குரோம்பேட்டையானது ஒரு வனமாகவே இருந்து வந்திருப்பது தெள்ளத் தெளிவாகிறது.


பிறகு ராஜிவ் காந்தி காலமான காலத்தில் அது தன் முகத்தை மாற்றிக்கொண்டு காங்கிரீட் வனமாக புதுப்பொலிவு பெற்றது. அசோக சக்கரவர்த்தியின் வழித்தோன்றல்கள் குரோம்பேட்டை வழியே செல்லும் சாலைக்கு ஜிஎஸ்டி சாலை என்று பேரிட்டு தாரெல்லாம் போட்டார்கள். (ஆனால் சாலையின் இருபுறமும் மரங்கள் நட மறந்துவிட்டார்கள்) முற்றிலும் செம்மண் சாலைகளாலான குரோம்பேட்டையின் நெற்றியில் கட்டப்பட்ட கறுப்பு ரிப்பன் மாதிரி அந்தத் தார்ச்சாலை சிறந்து விளங்கியது.


அத்தார்ச்சாலை தந்த கிளுகிளுப்பில் பேட்டையில் ஏகப்பட்ட கல்வி நிறுவனங்களும் தொழிற்கேந்திரங்களும் உற்பத்தியாயின. மக்கள் சாரிசாரியாகச் சென்னை உள்ளிட்ட அயல் தேசங்களிலிருந்து இடம் பெயர ஆரம்பித்தார்கள். சதுர அடி 340 ரூபாய்க்கு விற்ற நிலமானது இன்றைக்கு எட்டாயிரம் ரூபாய்க்கு மேலே ஏறி நிற்கிறது. ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் பேட்டையின் நிரந்தரப் பிரச்னையாகச் சாலைகளே இன்றுவரை இருந்து வருவது ஒரு பெரும் சரித்திரச் சோகம்.


மேலே கண்ட ஜிஎஸ்டி சாலை நீங்கலாக பேட்டைக்குள் நீங்கள் எங்கு சென்றாலும் ஒழுங்கான சாலை ஒன்றைக் காண இயலாது. ஒன்று, குண்டும் குழியுமாக இருக்கும். அல்லது குழியும் குழியுமாக இருக்கும். இன்னொரு அல்லது, குண்டும் குண்டுமாக இருக்கும். மழை நாள்களில் மட்டுமல்ல; வெயில் நாள்களில்கூட சமயத்தில் சாலைகளும் சாக்கடைகளும் ஒன்று சேர்ந்துவிடும். அப்போதெல்லாம் நடைதாரிகள், வாகனதாரிகள்பாடு ஒரே கிளுகிளுப்புத்தான். கிழடு கட்டைகள்கூட சாலையில் குத்தாட்டம் போட்டுக்கொண்டேதான் போவார்கள்.


நரசிம்ம வர்மப் பல்லவருக்கு இருபத்தியேழாந்தலைமுறைப் பங்காளியான அடைக்கலப் பல்லவ வர்மர் காலம் தொட்டுப் பல்லவபுர நகராட்சிக்கு இது தொடர்பாகப் பல்வேறு சாரார் பல்வேறு விதப் புகார் மனுக்களைக் கொடுத்திருந்தாலும் பேட்டைச் சாலைகள் சீரான சரித்திரமில்லை. தேர்தல் காலங்களில்கூட சாலைப் பிரச்னை நீங்கலான வாக்குறுதிகள் மட்டுமே வழங்கப்படும். பன்றி ஒழிப்பு, தெருநாயொழிப்பு, தெருவிளக்கு ஒழிப்பு, குடிநீர் இணைப்பு ஒழிப்பு போன்ற அத்தகு வாக்குறுதிகள் காலக்கிரமத்தில் நிறைவேற்றி வைக்கவும்படுமேயொழிய பேட்டையானது சாலைச்சாபம் கொண்டதாகவே இருந்து வந்திருக்கிறது.


இது சனி வக்ரகாலம். தேசத்தில் ஏகப்பட்ட துர்மரணங்களும் வியாதிப் பிடுங்கல்களும் வியாபார நஷ்டங்களும் நிகழ்ந்தவண்ணம் இருக்கின்றன. யாரைக் கேட்டாலும் ஒரே புலம்பல்பாட்டு. ஒன்றும் சரியில்லை என்று ஒவ்வொரு சாராரும் சொல்லிக்கொண்டிருக்கும் வேளையிலே குரோம்பேட்டையில் மட்டும் இன்று ஓர் அற்புதம் நிகழ்ந்துள்ளது.


ஆம். நியூ காலனி 13வது குறுக்குத் தெருவுக்குத் தார்ச்சாலை போட்டுவிட்டார்கள். பல்லவர்களின் பெருமையைப் பறையறைந்து சாற்றும் தருணம் வந்தேவிட்டது. இது எப்படி சாத்தியம்! இது எப்படி சாத்தியம்! என்று பிராந்தியம் முழுதும் இன்று வீதியில்கூடி வியந்துகொண்டிருக்கிறது. பேட்டையின் பூர்வகுடி மக்கள் பலவாறு கணக்குப் போட்டுப் பார்த்து, இச்சம்பவமானது சரியாகப் பதிமூன்று வருடங்களுக்குப் பிறகு நிகழ்ந்திருப்பதாக அறுதியிட்டுச் சொல்கிறார்கள். இருபதுக்கும் மேற்பட்ட இலட்சங்களின் செலவு மதிப்பீட்டில் இச்சாலை உருவாகியிருப்பதாகப் பல்லவபுர நகராட்சிச் சிப்பாய்கள் சொல்கிறார்கள்.


இதனாலெல்லாம் 12வது, 11வது, 10வது தொடங்கி 1வது வரையிலும் பிறகு 13வது, 14வது தொடங்கி 16வது வரையிலுமான குறுக்கு நெடுக்குத் தெருக்களிலும் நாளை அல்லது நாளை மறுநாளுக்குள் சாலை போடப்பட்டுவிடும் என்று சொல்லிவிட முடியாது. 13 என்பது ஒரு ராசியில்லாத எண் என்கிற மாயையை உடைக்கும்பொருட்டு நகராட்சி நிர்வாகம் இந்நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது என்றே இதனைக் கொள்ளவேண்டும்.


இக்காரணம் உங்களுக்கு உவப்பானதாக இல்லாவிடின், இச்சாலையில்தான் இதனை எழுதிக்கொண்டிருக்கும் உத்தமோத்தமன் குடியிருக்கிறான் என்பதை முன்னிட்டேனும் பல்லவர்களைப் பாராட்டக் கடமைப்பட்டுவிடுகிறீர்கள்.


 


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 12, 2015 08:55

August 7, 2015

முதலாம் சின்னதுரை

சிவசங்கரிக்கு எழுதத் தொடங்கிய இரண்டாம் மாதம், என் வீட்டில் வைத்து முதலாம் சின்னதுரைக்குக் கதை சொல்லிக்கொண்டிருந்தேன். அவர்தான் அப்போது அதற்கு வசனம் எழுதிக்கொண்டிருந்தார். படு பயங்கர உணர்ச்சிமயமான கட்டம். சித்தர், பாலாம்பிகாவுக்கு மந்திரோபதேசம் செய்துகொண்டிருக்கும்போது என்ன பேசுவார் என்று கண்ணை மூடிக்கொண்டு மனத்தில் தோன்றிய வரிகளை உணர்ச்சிமயமாகச் சொல்லிக்கொண்டே வரும்போது இந்த வரி தடுக்கியது.


வாழ்வு அநித்யம்; மரணமே சத்தியம்.


‘பாலாம்பிகா சிறுமியல்லவா? அவளிடம் சித்தர் ஏன் மரணத்தைப் பற்றிப் பேசவேண்டும்?’ என்று சின்னதுரை கேட்டார்.


அது நான் பின்னால் வைத்திருந்த சித்தருக்கான கதைக்கு லீட். அவரை ஒரு சூப்பர் ஹீரோவாக்கி இறுதியில் அவரும் இறந்துதான் போவார் என்பதை முதலிலேயே பாலாம்பிகாவுக்குக் குறிப்பால் உணர்த்துவதற்காக அந்த வரி என்று பதில் சொன்னேன்.


சித்தர் இறந்துவிடுவாரா என்று சின்னதுரை அதிர்ச்சியுடன் கேட்டார். சொல்லிக்கொண்டிருந்த அம்மாதத்துக்கான கதையை நிறுத்திவிட்டு அடுத்த நூறு எபிசோடுக்கு நான் யோசித்து வைத்திருந்த முழு டிராக்கையும் ஒரே மூச்சில் அவரிடம் சொல்லி முடித்தேன்.


சின்னதுரை மிகவும் உணர்ச்சிவசப்பட்டு எழுந்து நின்றுவிட்டார். அவர் கண்கள் கலங்கியிருந்தன. ரெகுலர் ஆன்மிக மசாலாதான். ரொம்பப் பிரமாதமாகவெல்லாம் நான் எதையும் சொல்லிவிடவில்லை என்பது எனக்கே தெரியும். ஆனாலும் நண்பர் ஏன் கண்கலங்கிவிட்டார்?


‘என்னால் நம்பமுடியவில்லை சார். எனக்குத் தெரிந்து யாருமே இத்தனை எபிசோட்களுக்கு முன்னால் யோசித்துவைப்பதில்லை. இது ஒரு அசுர சாதனை’ என்று சொன்னார்.


நான் புன்னகை செய்தேன். எப்போதும் எல்லோரிடமும் எனது பணியைப் பற்றிச் சொல்லும் அதே உதாரணத்தை அவரிடமும் சொன்னேன். சராசரி மனிதன் மணிக்கு பத்து கிலோ மீட்டர் வேகத்தில் ஓடுவான். அவனையே நாய் துரத்தினால் நாற்பது கிலோ மீட்டர் வேகத்தில் ஓடுவான். என்னை எப்போதும் நாய் துரத்திக்கொண்டே இருக்கிறது.


அன்றைக்குக் கதை பேசி முடித்துவிட்டுக் கிளம்பும்போது சின்னதுரை ஏதோ சொல்லத் தயங்குவதுபோலத் தெரிந்தது. இழுத்து நிறுத்தி விசாரித்தேன். திரும்பவும் முதல் வரியில்தான் வந்து நின்றார். பாலாம்பிகா சிறுமி. மரணத்தைப் பற்றி அவளிடம் பேசவேண்டியது அவசியம்தானா?


நான் சில வினாடிகள் யோசித்துவிட்டுச் சொன்னேன். ‘சித்தரின் வயதுக்கும் அனுபவத்துக்கும் எய்திய ஞானத்துக்கும், மரணத்தை சத்தியமென்று நம்புகிறார். அதையே அவர் போதிக்கவும் செய்கிறார். பாலாம்பிகாவின் வயதும் துடிப்பும், வாழும்போது செய்யும் நற்செயல் மரணத்தைக் காட்டிலும் பெரும் சத்தியமாக உருப்பெறும் என்பதை அவருக்கு சாகும் தருவாயில் தரிசனமாகக் காட்டிக்கொடுக்கும்; கவலைப்படாதீர்கள்’ என்று சொல்லி அனுப்பிவைத்தேன்.


உண்மையில் சிவசங்கரியை அப்படித்தான் எழுதி முடித்தேன். முடிக்கும்போது சின்னதுரை அதில் இல்லை. வசீகரன் தான் இறுதி எபிசோட்களுக்கு வசனம் எழுதினார். ஆனாலும் அந்த உச்சக்கட்ட காட்சியைச் சொல்லும்போது என்னால் சின்னதுரையை நினைக்காதிருக்க முடியவில்லை.


இன்று சின்னதுரை இறந்துவிட்டார் என்று ஃபேஸ்புக்கில் ஒருவரிக் குறிப்பொன்றைக் கண்டேன். தூக்கிவாரிப் போட்டுவிட்டது. கனவுகளும் லட்சியங்களும் உணவின்முன் உதிர்ந்து ஓய்ந்துவிட்டன என்பதையே ஒவ்வொரு சந்திப்பின்போதும் அவரது கண்கள் எனக்குச் சொல்லும். இருப்பினும் ஏதாவது ஒரு அற்புதம் நிகழும் சாத்தியத்தை வாழ்க்கை எல்லாக் கணங்களிலும் ஒளித்துவைத்தே இருக்கிறது என்றுதான் ஒவ்வொரு முறையும் நான் அவரிடம் சொல்லியிருக்கிறேன்.


அவர் அதற்கு பதில் சொன்ன நினைவில்லை. சும்மா சிரித்துவிட்டுப் போய்விடுவார். இப்போது அந்தச் சிரிப்பு மட்டும்தான் என் கண்ணில் நிற்கிறது.


நண்பருக்கு அஞ்சலி.


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 07, 2015 06:16

August 1, 2015

வாசிக்க பலகுபவனின் கேள்வி

வணக்கம்.


எனது பெயர்….. பொறியில் படித்துள்ளேன், வயது 27. என்னுடைய தாத்தா மூலம் வாசிக்க ஆரம்பித்தேன். பணியில் சேர்ந்த பிண்பு புத்தகங்களின் வாசிப்பு அதிகமாகியது. பொண்ணியின் செல்வன், மோகமுள் நாவல்களை வாசித்தபின்பு ஆர்வம் அதிகரித்தது. இரண்டு ஆண்டுகளாக சென்னை மற்றும் ஈரோடு புத்தக கண்காட்சியில் சில புத்தகங்களை வாங்கி வாசித்தேன். ஈரோட்டில் தற்போது நடந்துகொண்டிருக்கும் புத்தக கண்காட்சிக்கு போகும் எண்ணத்தில் இணையத்தில் நாவல்களை தேடியபோது சுமார் 30 நாவல்களை எதை தேர்ந்தெடுப்பது என்ற குலப்பத்திலேயே பட்டியலிட்டேன். இருதியில் அதன் மொத்த விலை என் மாத வருமாணத்தில் 1/3 ஆக உள்ளது. 30 புத்தகத்தையும் வாங்கமுடியாவிட்டாலும் முடிந்த சில புத்தகத்தை வாங்கத்தான் போகிறேன்.


இரவு வெகுநேரம் இந்த தொகையை பற்றி எண்ணியபோது, வாங்கி ஆர்வத்தோடு வாசித்த நாவல்கள் எல்லாம் அலமாரியில் நிரம்பி இருக்கின்றன. ஒரு சிலவற்றை தவிற மற்றவை மீண்டும் வாசிக்கப்படவில்லை – நேரமில்லை, வேலைப்பலு என பல காரணங்கள். எனவே இணையத்தில் பதிவிரக்க முடியுமா என தேடியதில் சில நாவல்களை படித்துக்கொண்டிருக்கிறேன்.


எனது கேள்வி இவ்வளவு தொகை முதலிட்டு வாங்கும் புத்தகங்கள் ஒரு வாசிப்புக்பின் இப்படிதான் அனைத்து வீடுகளிலும் அலமாரியை அலங்கரிக்கின்றனவா????


தங்களுடைய வாசிப்பு அனுபவத்தின் மூலமாக எனது ஐயத்தை தீர்க்கவும்….


குறிப்பு: நூலகம் ஒரு தீர்வுதான். அங்கு குறிப்பிட்ட நூல்களே கிடைக்கின்றது….


தங்களுடைய பதிலை எதிர் நோக்கும் வாசகன் …..


O


பொதுவாக கமர்ஷியல் போராளிகளுக்கு இம்மாதிரி மின்னஞ்சல்கள் வருவதில்லை. அட்ரஸ் தவறி இம்முறை எனக்கு இப்படி ஒரு கடிதம். நண்பர் வருத்தப்படக்கூடாது என்பதால் அவர் பேரை மட்டும் நீக்கியிருக்கிறேன். கடிதத்தில் உள்ள பிழைகளை நீக்காததன் காரணத்தைச் சொல்லவேண்டியதில்லை. [தலைப்பும் அவர் மின்னஞ்சல் சப்ஜெக்ட் ஃபீல்டில் எழுதியிருந்ததுதான்]


இனி பதில்.


நண்பருக்கு,


இந்த சம்பளப் பிரச்னை பெரும் பிரச்னைதான். அரிசி பருப்பு புளி மிளகாய் சோப்பு சீப்பு ஜட்டி நிரோத் ஜாலிம் லோஷனெல்லாம் வாங்கியது போகப் புத்தகம் வாங்கப் பெரும்பாலும் பணம் கையில் இருப்பதில்லை என்பதை அவசியம் ஒப்புக்கொள்கிறேன். என்ன செய்வது? அவ்வப்போது படிக்கும் அரிப்பெடுத்துவிடுகிறது. இது ஒரு வியாதி. சொஸ்தம்பெறச் சில உபாயங்கள் சொல்கிறேன்.


1. நூலகங்களில் ஜட்டிக்குள் சொருகிப் புத்தகங்களைத் திருடி வந்துவிடலாம்.


2. நண்பரிடம் இரவல் வாங்கி வந்த கையோடு போன் போட்டு வழியிலேயே தவறிவிட்டதாக ஒரு திடீர்ப் பதற்றம் காட்டி, மன்னிப்பும் கேட்டு, மேற்படி புத்தகத்தைச் சொந்தமாக்கிக்கொண்டுவிடலாம்.


3. அமரர் கோயிஞ்சாமி நினைவு நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரைப் போட்டி. முதல் பரிசு பத்தாயிரம், இரண்டாம் பரிசு ஐயாயிரம். நான்கு மூன்றாம் பரிசுகள் தலா இரண்டாயிரம் என்று ஃபேஸ்புக்கில் விளம்பரம் போட்டால் ஒவ்வொரு ஆசிரியரும் தலா இரண்டு பிரதிகள் அனுப்பிவிடுவார்கள். வந்த புத்தகங்களைக் கொண்டு வீட்டு அலமாரியை நிரப்பிவிட்டு பரிசுத் தொகை உரியவர்களுக்கு அனுப்பப்பட்டுவிட்டதாக ஒரு ஸ்டேடஸ் போட்டுவிட்டால் போதும். யாரும் போய் என்கொயரி செய்யப் போவதில்லை.


4. சில பதிப்பகங்கள் விமரிசனம் எழுத இலவசப் பிரதி அனுப்பத் தொடங்கியிருக்கிறார்கள். வேண்டிய புத்தகங்களைக் குறிப்பிட்டு வாங்கிக்கொண்டு விடலாம். அவர்கள் செலவிலேயே அனுப்புவார்கள். இஷ்டமிருந்தால் விமரிசனமாக நாலு வரி. இல்லாவிட்டால் இழுத்து மூடிக்கொண்டு வாசிப்பு இன்பம் அனுபவிக்கலாம்.


5. இணையத்தில் ஏராளமான இலவச பிடிஎஃப் சேவைத் தளங்கள் உள்ளன. அவற்றில் உறுப்பினராகி உலக இலக்கியம் முதல் உள்ளூர் இலக்கியம் வரை டவுன்லோடு செய்துகொள்ளலாம். அலமாரி இடப் பிரச்னையும் இதனால் தீரும்.


இம்மாதிரி கைவசம் இன்னும் ஏழெட்டு யோசனைகள் உள்ளன. ஆனால் நீங்கள் என் சொந்த அனுபவத்தின் அடிப்படையில் பதில் கேட்டிருக்கிறீர்கள். என் அனுபவம் உங்களுக்கு வேண்டாம். ஏனெனில் நான் ஓர் உருப்படாத தண்டக் கருமாந்திரம். புஸ்தகம் வாங்கிய காசையெல்லாம் சேர்த்திருந்தால் இந்நேரம் குரோம்பேட்டையில் பாதியை விலைக்கு வாங்கியிருப்பேன். நீங்கள் சொல்வதுபோல, ஆசைப்பட்டு வாங்கிய பல நூல்கள் இரண்டாம் வாசிப்புக்குக் கூட லாயக்கில்லாமல்தான் இருக்கின்றன. இன்னும் பல நூல்கள் முதல் வாசிப்பையே பாதியில் முறித்துவிடும். ஆனாலும் புத்தகமல்லவா? தூக்கிக் கடாச மனசு வராமல் அலமாரியைத்தான் நிரப்பவேண்டியதாகிவிடுகிறது.


ஆனால் ஒன்றைக் கவனித்திருக்கிறேன். நான் வேண்டாமென்று ஒதுக்கிய பல நூல்களைப் பிறர் விரும்பியிருக்கிறார்கள். நான் தொடக்கூட விரும்பாத பல புத்தகங்களை ஆர்வமுடன் எடுத்துச் சென்று படித்து சிலாகித்திருக்கிறார்கள். நானே இதுவரை இரண்டு முறை எனக்கு வேண்டாத புத்தகங்களை மொத்தமாகத் தனியே எடுத்து வைத்து, நண்பர்களை அழைத்து விரும்பியதை எடுத்துக்கொள்ளச் சொல்லியிருக்கிறேன்.


செலவுதான், நஷ்டம்தான். என்ன செய்ய? அம்மா மெஸ் மாதிரி அம்மா டாஸ்மாக், அம்மா புத்தக அங்காடிகள் திறக்கப்படுவதுதான் இதற்கு ஒரே தீர்வு. “வருமாணத்தில்” 1/3 ஆக உள்ள செலவு இதனால் 1/4 அல்லது 1/5 ஆகவாவது குறையுமல்லவா? உங்களுக்காக இது சீக்கிரம் நடக்க எல்லாம் வல்ல எம்பெருமானைப் பிரார்த்திக்கிறேன்.


இவண்,

இவன்.


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 01, 2015 11:00

July 21, 2015

கொயந்த பாட்டு

நான் வசிக்கும் பேட்டையில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் அவ்வப்போது ஏதேனும் ஒரு தலைப்புக் கொடுத்து, பிள்ளைகளைக் கவிதை எழுதி வரச் சொல்லிவிடுகிறார்கள். கவிதையெல்லாம் என்ன நாலாம் வாய்ப்பாடா எல்லோரும் உட்கார்ந்து எழுதிவிட? இது ஒருவித வன்கொடுமை என்பதை ஆசிரியப் பெருந்தகைகளுக்கு யாரெடுத்துச் சொல்வது?


நானெடுத்துச் சொல்லலாமென்றால் நேரமில்லை. எனவே ஆசிரியர்களைப் பழிவாங்க, பகுதிவாழ் பிள்ளைகளுக்கு நானே எழுதிக் கொடுக்கத் தொடங்கியிருக்கிறேன். ஆங்கிலத்தில் கேட்டால் ஆங்கிலம். தமிழில் கேட்டால் தமிழ். விரைவில் இந்த வன்முறைச் சேவையை ஹிந்தி மற்றும் சமஸ்கிருதத்திலும் தொடங்க உத்தேசித்திருக்கிறேன். சாம்பிளுக்கு இரண்டு இங்கே.


ஆறாங்கிளாஸ் கொயந்த இலெவல்:



Water is the Wealth

The World is getting hotter

We always search for water

Each should preserve a magic bottle

To avoid the third world battle.


We invest in the gold

We harvest in the field

But the real wealth is Rain

Preserve it for the gain


Sea is always mighty

The water is almighty

Use with respect, keep it perfect

Make the life is beauty.


O


எட்டாங்கிளாஸ் கொயந்த இலெவல்:


பச்சைக் கிளியே பசும்புல்லே


பாயும் நதியே பெருங்கடலே


இச்சை கூட்டும் பூவினமே


ஈடில்லாத கானகமே


வட்டப்பொட்டே வெண்ணிலவே


வானம் நிறைத்த கருமுகிலே


கொட்டும் மழையே குளிர்தருவே


கோடி விண்மீன் கூட்டங்களே


கல்லே மண்ணே கனிவகையே


காவல் அரணே பெரும்புவியே


எல்லா உயிர்க்கும் சூரியனே


ஏற்றம் மிகுந்த எழிலவனே


கண்ணில் தெரியும் காட்சிகளே


கடவுள் படைப்பின் மாட்சிகளே


மண்ணில் சொர்க்கம் இவையெல்லாம்


மனிதன் ரசிக்க வைத்தானே.


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 21, 2015 23:20

June 7, 2015

கிறுக்கெழுத்தாளன்

சும்மா ஒரு கிறுக்கு. இன்றெல்லாம் பைத்தான், ஜாவா ஸ்க்ரிப்ட் மற்றும் ஸ்விஃப்ட் அடிப்படைப் பாடங்களைப் படித்து (அல்ல, புரட்டி)க் கொண்டிருந்தேன்.


புரிவது போலிருக்கிறது; ஆனால் புரிவதில்லை. பழகினால் வந்துவிடும் என்று தோன்றுகிறது; ஆனால் ஒன்றிரண்டு கமாண்டுகள் கூட படித்த பத்து நிமிஷங்களில் நினைவில் இருப்பதில்லை.


இதெல்லாம் ஆதியிலிருந்தே கற்றிருக்க வேண்டுமோ என்னமோ.


அகராதித் துணையின்றி கம்பர் முதல் நம்மாழ்வார் வரை வாசித்துப் புரிந்துகொள்ளவும் புரிந்ததை எடுத்துச் சொல்லவும் முடிகிறதே என்று எண்ணி சமாதானப்படுத்திக்கொண்டேன்.


பாண்டத்தைச் செய்பவன் குயவனென்றால், குயவனைச் செய்வது பாண்டம்தான்.


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 07, 2015 11:01

June 2, 2015

முட்டை இறக்குமதி

யாளி முட்டை சிறுகதைத் தொகுப்பு FreeTamilEbooks.comல் வெளியாகியுள்ளது. இங்கே தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.


முன்னுரை வாசிக்க இங்கே செல்லலாம்.


பிற இலவச மின் நூல்கள்: புதையல் தீவு | ரெண்டு | ஐஸ் க்ரீம் பூதம் | குற்றியலுலகம் | புக்கு


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 02, 2015 23:58

May 31, 2015

யாளி முட்டை

இதுவரை சுமார் 100 சிறுகதைகள் எழுதியிருப்பேன் என்று நினைக்கிறேன். தொகுப்பாக வந்தவை போக மிச்சமுள்ளவற்றில் என்வசம் இருப்பவை இவ்வளவுதான்.


குமுதத்தில் சில நல்ல கதைகளை எழுதியிருக்கிறேன். ஆனால் அவற்றுக்கெல்லாம் பிரதி இல்லை. ஆரம்பக் காலத்தில் பிரசுரமாகும் அனைத்தையும் கத்தரித்து வைத்து பைண்ட் செய்து அழகு பார்க்கும் வழக்கமெல்லாம் இருந்தது. போகப் போக அதெல்லாம் தன்னால் நின்றுவிட்டது. பிறகு கையெழுத்துப் பிரதிகளை பத்திரப்படுத்தப் பார்த்தேன். அதுவும் முடியாமல் போனது. கணினியில் எழுதத் தொடங்கியபிறகு அனைத்தும் சாசுவதமாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டேன். ஆனால் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எதற்காகவாவது format செய்யவேண்டி நேர்ந்து அதிலும் பல அழிந்து போனது. Backup எடுத்து வைக்கும் வழக்கம் என்றுமே இருந்ததில்லை. ஜிமெயில் காலத்துக்குப் பிறகுதான் எழுதியவை இல்லாது போகவாய்ப்பில்லை என்றானது. அக்காலம் வந்தபோது நான் சிறுகதைகள் எழுதுவது குறைந்து போனது.


எதிலும் ஒழுங்கில்லாத ஒரு ஜென்மம் உண்டென்றால் அது நாந்தான். என் ஒழுங்கீனங்களே எனது அடையாளமாகிப் போனது எம்பெருமான் சித்தம். பெரிய இழப்பு ஒன்றுமில்லை. சந்தோஷங்களுக்கும் குறைச்சலில்லை.


இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் எதுவும் எந்த அச்சுத் தொகுப்பிலும் இல்லை. கல்கி, அமுதசுரபி, குங்குமம் போன்ற பத்திரிகைகளில் இவை வெளிவந்தன. சில கதைகள் எனது இணையத் தளத்தில் மட்டுமே பிரசுரமானவை. பிரசுரம் சார்ந்த சந்தோஷங்களும் மயக்கங்களும் உதிர்ந்துபோனபிறகு எழுதுவது என்பது சுகமானதாகவே இருக்கிறது. இலக்கிய ரப்பர் ஸ்டாம்புகளுக்காகவோ, விருது கிளுகிளுப்புகளுக்காகவோ எழுதாமல் முற்றிலும் என் சொந்த சந்தோஷத்துக்காக மட்டுமே எழுதிய கதைகள் இவை.


உங்களுக்குப் பிடித்தால் சந்தோஷம். பிடிக்காது போனாலும் பிரச்னையில்லை.


ஆனால் ஒன்று சொல்லவேண்டும். தமிழில், குறிப்பாக என்னுடைய தலைமுறையில் என்னைக் காட்டிலும் வெகு சிறப்பாக எழுதக்கூடிய எத்தனையோபேர் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் கிட்டாத சில அபூர்வ நல்வாய்ப்புகள் எனக்குக் கிடைத்தன. மகத்தான பல எழுத்தாளர்களுடன் நேரில் பேசிப் பழக முடிந்திருக்கிறது. கடிதத் தொடர்பு சாத்தியமாகியிருக்கிறது. உட்கார்ந்து அரட்டையடிக்க முடிந்திருக்கிறது. அவர்களிடமிருந்து நிறைய கற்றிருக்கிறேன். எழுத்துக்கு அப்பாலும். இதெல்லாம் என் தகுதிக்கு மீறியவை. இதில் எனக்குச் சந்தேகமே இல்லை.


இலக்கியத்தைப் பொறுத்தவரை நான் ஒரு நேர்மையான வாசகன் மட்டுமே. சிறந்த இலக்கியமென்று எதையும் படைத்தவனல்லன். அது சாத்தியமும் இல்லை. மாதம் பிறந்தால் தேவைக்கேற்ற வருமானமும், மூன்று வேளை நல்ல சாப்பாடும், படுத்த வினாடி வருகிற உறக்கமும், பிரச்னையற்ற சூழலும், சுக சௌகரியங்களும் அனுபவிக்கக் கிடைக்கும் வாழ்விலிருந்து இலக்கியம் பிறக்காது.


அதற்குச் செருப்படி படவேண்டும். வலி மிகுந்த வாழ்விலிருந்தே பேரிலக்கியங்கள் பிறக்கின்றன. ஒரு தாஸ்தயேவ்ஸ்கி பட்ட பாடுகளை இன்னொருத்தன் படுவானா. ஒரு ஷோபா சக்தி காட்டும் உலகை இன்னொருத்தன் காட்டிவிட முடியுமா. அசலான இலக்கியமென்றால் அது. நான் அந்த ரகமல்ல. வேறெந்த ரகமும் அல்ல.


என் கதைகள், என் சந்தோஷம். தீர்ந்தது விஷயம்


[விரைவில் வெளிவரவுள்ள யாளி முட்டை சிறுகதைத் தொகுப்புக்கு எழுதிய முன்னுரை].


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
1 like ·   •  1 comment  •  flag
Share on Twitter
Published on May 31, 2015 10:00

May 23, 2015

இருவர் மற்றும் ஒருவர்

என்னிரு ஐபேட்களையும் என் மனைவியும் மகளும் ஆளுக்கொன்றாக எடுத்துக்கொண்டுவிட்டபடியால் எனக்கென ஒரு படிப்பான் [eReader] வாங்க நினைத்தேன். கிண்டில் வாங்கலாமா என்று நேற்று நண்பர் [FreeTamileBooks.com] ஶ்ரீநிவாசனிடம் கேட்டதன் காரணம் அதன் ஆறு இஞ்ச் பிடிஎஃப், மோபி வடிவம் போன்ற inbuilt சிக்கல்களால்தான்.


ஶ்ரீநிவாசனுக்கு நான் மின்னஞ்சல் அனுப்பி, பதில் வந்தபோதுதான் அவர் இங்கிலாந்தில் இருப்பது தெரிந்தது. அடுத்த பிப்ரவரியில்தான் சென்னை வருவதாக இருக்கிறார். அதனாலென்ன? நீங்கள் ஒரு கிண்டிலைக் கண்ணால் பார்த்து, கையால் தொட்டு, கொஞ்சம் போல் குடைந்து பார்த்துவிட்டு அதன்பிறகு வாங்குவதே சரி என்று சொன்னார்.


சொன்னதோடு விடவில்லை. நேற்றே இங்குள்ள அவரது நண்பர் அன்வரை அழைத்து என்னைத் தொடர்புகொள்ளச் சொல்லியிருக்கிறார். அன்வரும் Freetamilebooks.com உறுப்பினர்களுள் ஒருவர்.


இன்று மாலை வழி விசாரித்துக்கொண்டு அன்வர் என் வீட்டுக்கு வந்திருந்தார். அவரது கையடக்க கிண்டிலுடன். எதற்கு? வெறுமனே நான் பார்ப்பதற்கு. வாங்கலாமா வேண்டாமா என முடிவு செய்வதற்கு.


அன்வர் ராயப்பேட்டையில் இருப்பவர். கிண்டிக்கு வந்து எனக்கு போன் செய்தார். நான் கோடம்பாக்கத்தில் இருந்தாலும் குரோம்பேட்டையில் இருந்தாலும் இரு இடங்களையும் அடைய சரியான மையப்புள்ளி என நினைத்து அங்கு வந்து அழைத்திருக்கிறார்.


எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. சுட்டெரிக்கும் வெயில் நாளில் எத்தனை தூரப் பயணம்! வாழ்வில் யாருக்காவது எப்போதாவது நான் இப்படி தன்னியல்பாகச் சென்று உதவி செய்திருக்கிறேனா என்று யோசித்துப் பார்த்தேன். நினைவில்லை. எனக்குக் கண்ணீர் வந்துவிட்டது. கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டேன்.


இத்தனைக்கும் அன்வரை எனக்குத் தெரியாது. பார்த்த ஞாபகம் கூட இல்லை. அவர் ஓரிருமுறை என்னைப் பார்த்திருப்பதாகவும் ஒருமுறை கிழக்கு மொட்டை மாடிக் கூட்டத்தில் என்னோடு சண்டை போட்டிருப்பதாகவும் சொன்னார். நினைவில்லை. அதெல்லாம் ஒரு பெரிய விஷயமேகூட இல்லை. வலிய வந்து உதவ நினைக்கும் இத்தகு மனம் எத்தனை பேருக்கு வாய்க்கும்? சொல்லப் போனால் ஶ்ரீநிவாசனையேகூட எனக்குத் தெரியாது. நேரில் சந்தித்ததோ, போனில் பேசியதோ கிடையாது. அவர் GNU ஆள் என்று தெரியும். FTEbooks குழுவில் ஒருவர் என்று தெரியும். நேற்றுத் தான் பேசினேன்.


வாழ்வில் இரண்டாவது முறையாக இப்படியொரு அனுபவம் இன்று. முதலனுபவத்தைத் தந்தவர் ஶ்ரீகாந்த் மீனாட்சி. இதே மாதிரிதான். விண்டோஸைத் தலைமுழுகிவிட்டு Macக்கு மாறலாம் என்று எண்ணத் தொடங்கிய ஆரம்ப நாள்களில் என்னைத் தேடி வந்து தன் மேக்கைக் கொடுத்து குடைந்து பார்க்கச் சொன்னார்.


இன்று நான் மேக்தான் உபயோகிக்கிறேன். ஒவ்வொரு முறை திறக்கும்போதும், இதன் பூரண சுகத்தை அனுபவிக்கும்போதும் ஶ்ரீகாந்தையும் கோகுலையும் எண்ணாதிருப்பதில்லை.


ஆனால் sorry அன்வர்! என்றுமே நான் கிண்டில் உபயோகிக்கமாட்டேன் என்று நினைக்கிறேன். என் சௌகரியத்துக்கு ஐபேட்தான் சரி என்று தீர்மானமாகத் தோன்றுகிறது.


Decided to buy one more iPad. ஆனால் அந்தப் புதிய ஐபேடுக்கு என் பெயரைக் கொடுக்கமாட்டேன். கண்டிப்பாக உங்கள் பெயர்தான்.


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 23, 2015 11:24

April 23, 2015

புக்கு

உலக புத்தக தினத்தை முன்னிட்டு அது முடிந்த பிற்பாடு இந்த இலவச மின் நூல் வெளியிடப்படுகிறது. புத்தகங்களை வாசிக்க வைக்க ஒரே வழி அவற்றை சிறியதாகவும் இலவசமாகவும் வழங்குவதுதான் என்கிற கிறிஸ்தவ மிஷனரிகளின் ஆதி உத்தியை எண்ணிப் பார்க்கிறேன். கிறிஸ்தவம் பரவியது போல் புத்தகம் பரவினால் சந்தோஷம் .


புத்தகத்தை டவுன்லோட் செய்ய இங்கே செல்லவும்.


 


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 23, 2015 22:45

February 8, 2015

NTFS-3G பிரச்னை

இரண்டாண்டுகளுக்கு முன்னால் விண்டோஸைத் தலைமுழுகிவிட்டு ஆப்பிள் கணினிக்கு மாறியபோது எனக்குப் பெரிய பிரச்னையாக இருந்த ஒரே விஷயம், என் பாகவதர் காலத்து ஹார்ட் டிரைவ்களை எப்படி இதன் சின்னவீடாக செட்டப் செய்வது என்பதுதான்.


என் மாக்குப் புத்தகக் காற்று ஏற்கும் நவீன அடைசல் டப்பாக்களைப் புதிதாக வாங்குவது எனக்குப் பிரச்னை இல்லை. ஆனால் என் பழைய டப்பாக்களுக்குள் இருப்பதை கணினிக்குள் கடத்துவது எப்படி? அனைத்தையும் மாக்குப் புத்தகத்தில் சேகரித்து வைக்கவும் முடியாது. இடம் காணாது.


குறிப்பாக ஒரு டப்பா முழுதும் பல நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் உள்ளன. இன்னொரு டப்பாவில் அவற்றிலிருந்து நான் தனியே எடுத்து சேகரித்த முக்கியமான படங்கள் மட்டும் இருந்தன. இவற்றை மட்டுமாவது காப்பாற்ற முடிந்தால் தேவலை என்று தோன்றியது.


ஆனால் ஆப்பிளோ பழைய டப்பாக்களை உள்ளே சேர்க்க மாட்டேனென்றது. எத்தனை முயற்சி செய்தாலும் எரர். NTFS எரர். சில டப்பாக்களுக்கு NTFS 3G எரர். என்னை மாக்குக்கு மாற்றிய கோகுலே ஒருநாள் முயற்சி செய்து பார்த்தார். அவரது அலுவலக விற்பன்னர்கள் ஒரு சிலரும் அம்முயற்சியில் அப்போது பங்கேற்றனர். என்னென்னவோ டவுன்லோடு செய்து ரன் செய்து பார்த்தும் ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை. வெறுத்துப் போய் விட்டுவிட்டேன்.


1பிறகு படம் பார்ப்பதற்கென்று தனியே ஒரு Mitsun வாங்கி என் பிரத்தியேக தியேட்டரை கணினிக்கு அருகிலேயே அமைத்துக்கொண்டுவிட்டேன். ஆனாலும் ஓர் உறுத்தல் இருந்துகொண்டே இருந்தது. என்னவாவது செய்யவேண்டும். ஏதாவது ஒரு வழி கிடைக்காமல் போகாது.


நேரம் கிடைக்கும்போதெல்லாம் இணையத்தில் NTFS 3G குறித்து ஏராளமாகப் படித்தேன். ஒரு வரியும் புரியவில்லை என்பது வேறு விஷயம். ஆனால் பிரச்னை எனக்கு மட்டுமல்ல, மேவரிக்ஸ் காலம் தொட்டு மாக்குப் புத்தக உபயோகிப்பாளர்கள் அத்தனை பேருமே இந்த பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்று பல ஃபோரங்களில் கண்ட புலம்பல்கள் மூலம் அறிந்தேன்.


ஆப்பரேடிங் சிஸ்டம் அப்கிரேடு ஆகும்போது பழைய தாத்தாக்களைத் தூக்கி உடைப்பில் போட்டுவிடுகிறது. இது எட்டர்னல் பிரச்னை. என்னவாவது செய்துதான் தீரவேண்டும். ஆனால், என்ன செய்யலாம்?


ஆப்பிள் ஃபோரங்களில் பலபேர் அவ்வப்போது சிபாரிசு செய்த NTFS பேக்கேஜ்களைத் தரவிறக்கி இன்ஸ்டால் செய்து ஓடவிட்டுப் பார்த்தேன். பேக்கேஜெல்லாம் இறங்கிவிடுகிறது. ஆனால் டப்பாதான் செட்டு சேர மறுத்தது. குறைந்தது எட்டு முறை படுதோல்வி கண்டிருப்பேன். இன்ஸ்டால் செய்த பேக்கேஜ்களை எப்படி அன் இன்ஸ்டால் செய்வது என்றே தெரியாதபடிக்கு என் அப்ளிகேஷன் ஃபோல்டரில் ஒரே NTFS கோப்புகளாக இருந்தன. பல வர்ஷன்கள்.


ஒருவழியாக இப்போது இதற்கொரு தீர்வு பிடித்துவிட்டேன். இன்று என் மாக்குப் புத்தகக் காற்று என் பாகவதர் காலத்து பஃபல்லோ டப்பாவைத் திருமணம் செய்துகொண்டது. சாந்தி முகூர்த்தமும் சிறப்பாக நடந்தேறிவிட்டது.


என்ன செய்தேன் என்று சொல்லுகிறேன்.


NTFS 3Gயை ஒரு மாக்கு எழுதவேண்டுமானால் அதற்கு MacFuse உறுதுணை அவசியம். இதிலேயே உங்கள் சிப் இண்டல்லாக இருந்தால் ஒரு ரகம், மற்றதாக இருந்தால் வேறு ரகம். என்னுடையது இண்டல்.


எனவே இங்கிருந்து அதனை எடுத்தேன். திறமூலம்தான். இதுவே காசுக்கும் கிடைக்கிறது. நமக்கெதற்கு அதெல்லாம்?


ஆச்சா? முதலில் Fuseஐப் போட்டுவிட்டேன். பிறகு NTFS 3Gஐ இங்கிருந்து இறக்கினேன்.


இந்த இரண்டையும் இன்ஸ்டால் செய்து ஓடவிட்ட பிறகு அதுவே ஒருமுறை ரீஸ்டார்ட் கேட்கும். கேட்டால் கொடுத்துவிடுங்கள்.


இதன் பிறகு காலாவதியான பழைய ஹார்ட் டிரைவ்களை மேக்கில் சொருகினாலும் ஒரு அச்சுறுத்தல் உண்டு. அது கீழ்க்கண்டவாறு தெரியும் மெசேஜ்.


Screen Shot 2015-02-08 at 9.36.23 pm


ntfs3gntfs3gntfs3gகண்டுகொள்ளாதீர்கள். மெசேஜ் மட்டும் விட்டகுறை தொட்ட குறையாக வருமே தவிர உங்கள் ஹார்ட் டிரைவை மேக் அதற்குள் படித்து, எழுதி முடித்திருக்கும்! என்ன ஒரே பிரச்னை, உங்கள் டிரைவுக்கு ஒரு பேர் கொடுத்திருந்தீர்கள் என்றால் அந்தப் பெயர் வராது. பதிலாக பெயரில்லா டப்பா என்று பக்கவாட்டில் காட்டும்.


Screen Shot 2015-02-08 at 9.39.01 pm


பெயரில் என்ன இருக்கிறது? நமக்குக் காரியம் ஆனால் சரி.


நண்பர்களே, எனக்குத் தொழில்நுட்பக் கட்டுரைகளை எப்படி எழுதுவதென்று தெரியாது. நான் எழுதிய இந்தக் குறிப்பு சர்வ நாராசமானது என்று உங்களுக்குத் தோன்றுமானால் மன்னியுங்கள். ஆனால் என்னளவில் இது ஒரு மகத்தான கண்டடைவு. NTFS 3G பிரச்னை தீர முதலில் MacFuse இன்ஸ்டால் செய்யவேண்டும் என்பதை இதிலிருந்து அறிந்துகொண்டேன். டப்பாக்களைப் பயன்படுத்துவதற்காகவென்றே விண்டோஸ் மடினியொன்றை இடுப்பில் முடிந்துகொண்டு போகும் அவஸ்தையில் இருந்து இன்றுமுதல் விடுதலை பெற்றேன்.


நான் பெற்ற இன்பம் இதர மாக்குப் புத்தகக் காற்றாளர்களுக்கும் (புரோ ஆசாமிகளுக்கு இது உதவுமா என்று தெரியாது.) கிடைப்பதற்காக இங்கு எழுதி வைக்கிறேன். யாராவது இதன் அபத்தங்களைச் சரி செய்து சுத்தமான தொழில் மொழியில் எழுதி, பொதுவில் போட்டு வைத்தால் அதுவும் ஒரு சமூக சேவையென்றே கருதப்படும்.


பிகு: ஹார்ட் டிரைவ்களை – சேகரிப்பான்களை விண்டோஸ் கணினியில் சொருகிப் பயன்படுத்தும்போது சரியாக அன் – மௌண்ட் செய்யாமல் அப்படியே ஒயரைப் பிடுங்கும் வழக்கம் நம்மில் பலருக்குண்டு. அப்படி திடீர்ப் பிடுங்கல்களுக்கு ஆட்படும் டப்பாக்களை மாக்குப் புத்தகம் ஏற்பதில்லை. அனைத்திலும் ஒரு ஒழுக்கம் வேண்டும் என்று கேட்கிறது. என்னதான் NTFS 3G இன்ஸ்டால் செய்து ரன் செய்து பாதையை ஒழுங்கு படுத்தினாலும் ஒரு முறை விண்டோஸ் கணியில் உன் டப்பாவைச் சொருகி ஒழுங்காக அன் – மௌண்ட் பண்ணிவிட்டு வா என்று உத்தரவிடுகிறது. கவனமாக அதனையும் ஒருமுறை செய்துவிடுங்கள்!


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 08, 2015 08:13