Pa Raghavan's Blog, page 31

November 19, 2014

செத்தான்யா!

வழக்கமாக என்னைப் பார்க்க வரும் நண்பர், நண்பரொருவர் இன்று மாலை மிகுந்த ஆவேசமுடன் வந்தார். அவர் வந்த நேரம் நான் முந்தானை முடிச்சு சீரியல் பார்த்துக்கொண்டிருந்தேன். பிரேமாவின் சதித் திட்டங்கள் ஆயிரம் எபிசோடுகளைத் தாண்டியும் தொடர்ந்துகொண்டிருக்கும் அற்புதத்தை விவரிக்க வார்த்தைகளே கிடையாது.


‘வாங்க. இன்னிக்கி அமர்க்களமான எபிசோட். உக்காருங்க’ என்றேன்.


‘சீ! என்ன மனுஷன் நீ. ருத்ரய்யா செத்துப் போயிட்டார். இப்படி சீரியல் பாத்துட்டிருக்கியே, வெக்கமா இல்ல ஒனக்கு?’ என்றார்.


எனக்கு அவரது தர்மாவேசத்தின் காரணம் புரிவதற்கும் அவர் ருத்ரய்யாவைக் குறித்துச் சிலபல சொல்லாடல்கள் நிகழ்த்தித் தன் துயரத்தைத் தணித்துக்கொள்ளவும்தான் வந்திருக்கிறார் என்பது புரிவதற்கும் சில வினாடிகள் ஆயின.


நல்லவேளையாக Ad break போட்டான். நான் வால்யூமை ம்யூட் செய்துவிட்டு அவர் பக்கம் திரும்பினேன். ‘காப்பி சாப்பிடறிங்களா சார்?’ என்று கேட்டேன்.


‘எனக்கு விஷயம் கேள்விப்பட்டதுலேருந்து சோறு தண்ணி இறங்கலய்யா. எப்பேர்ப்பட்ட கலைஞன். சே. ஒரு படம் போதும்யா. பின்னி பெடலெடுத்துட்டான்’ என்று சுவரின் இரண்டு பக்கங்கள் சேரும் கார்னரைப் பார்த்தபடி உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார்.


‘அவர் இன்னொரு படம் எடுத்திருக்கார் சார். கிராமத்து அத்தியாயம். பாத்திருக்கிங்களா?’


நண்பரொருவர் இப்படி திடுக்கிடுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ‘ஓ.. கிராமத்து அத்தியாயம்… கேள்விப்பட்டிருக்கேன். அவரோடதா அது? அப்ப அதுவும் நல்லாத்தான் இருக்கும்.’ என்று சொல்லி சில வினாடிகள் அமைதியாக இருந்தார். மீண்டும், ‘ஆனாலும் அவள் அப்படித்தான் மாதிரி ஒரு படம் தமிழ்ல வரவேயில்லய்யா.. டைட்டில் கார்டுலேருந்தே டைரக்டோரியல் டச் காட்டுவாரு.’


ருத்ரய்யா டைட்டில் கார்டில் என்ன டச் காட்டினார் என்று நான் யோசிக்க ஆரம்பித்தேன். கருப்பு வெள்ளை கார்டு. பின்னணியில் ஷூட்டிங் ஸ்பாட் குரல்கள் ஆங்காங்கே தூவப்பட்ட நினைவு. கமலஹாசன் குரல் கொஞ்சம் பெரிதாகக் கேட்கும். இது ரஷ்தான்; மெயின் பிக்சர் இல்லை என்று ஏதோ சொல்லுவார்.


‘அதான்யா! அதத்தான்யா சொல்றேன்! தன்னோட எண்ட் ரிய எப்படி எஸ்டாப்ளிஷ் பண்ணிட்டான் பாத்தியா? உலகத்தரத்துல ஒரு படத்த குடுக்கறவன் தன் படத்த ரஷ்னு சொல்றான்னா என்ன ஒரு தன்னடக்கம் பாரு!’


நான் யோசிக்கத் தொடங்கினேன். ஏனெனில், இந்த இடத்தில் ஏதாவது பேசினால் அவர் அதற்கு ஒரு கவுண்ட்டர் கொடுக்க ஆரம்பிப்பார். Ad break முடிவடையும் நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது.


‘மாற்று சினிமாவ முன்னெடுத்தவங்கள்ள இந்தாளு பெரிய முன்னோடிய்யா. வண்ணநிலவன எல்லாம் வேற யாரு சினிமாவுக்கு இழுத்துட்டு வருவாங்க?’


‘கே. ராஜேஷ்வர கண்டெடுத்தவரும் அவர்தான் சார்! எதோ ஒரு படத்துல யாரோ ஒருத்தி புடவைய இழுத்து விட்டுக்கிட்டு தொடைய காட்டிக்கிட்டு மசாலா அரைக்கற மாதிரி ஒரு ஷாட் வெச்சிருப்பாரு.. சிங்கிள் ஷாட்டு சார்! அவ ஏன் இட்லிக்கு அரைக்காம மசாலா அரைக்கறான்னு மட்டும் யோசிச்சிட்டா போதும். டோட்டல் கதையே கன்வே ஆயிரும். பெரிய கலைஞன். சே.’ என்றேன் அவரைப் போலவே.


நண்பரொருவர் திடுக்கிட்டுப் பார்த்தார். நான் சொன்னதன் சாராம்சம் ரொம்ப மெதுவாக அவருக்குள் இறங்கிக்கொண்டிருக்க வேண்டும். பிடிக்கவில்லையோ என்னமோ.


‘ருத்ரய்யாட்ட அதெல்லாம் கிடையாது. க்ளியரா அந்தாளு ஒரு கலைஞன்.’


‘அந்தப் படத்துல கூட ஒருத்திய குத்தாட்டம் போட வெச்சி கமல் ஷூட் பண்ணுவாரு இல்ல?’ – இது நான்.


நண்பரொருவருக்கு சுரீரென்று கோபம் வந்துவிட்டது. நாற்காலியை உதைத்துத் தள்ளிவிட்டு எழுந்தார். ‘என்ன பேசற நீ? நீ படத்த பாத்தியா இல்லியா? ஒனக்கு புரிஞ்சிதா இல்லியா? தமிழ்ல பெண்கள் பெருமைப்பட்டுக்கற மாதிரி எடுக்கப்பட்ட ஒரே படம் அதுதான்! அதப் போயி அசிங்கமா விமர்சனம் பண்ணிக்கிட்டு. சுத்த நான்சென்சா இருக்கியே?’


எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. சாரி சார் என்று அவசரமாகச் சொன்னேன். Ad break முடிந்து சீரியல் தொடங்கிவிட்டதை கவனித்தேன். ஆனால் இன்று பார்க்க முடியாது. மனம் கனக்க தொலைக்காட்சியை ஆஃப் செய்துவிட்டு என் லேப்டாப்பை எடுத்து வந்து விரித்தேன்.


‘என்ன பண்ற?’ என்றார் நண்பரொருவர்.


‘ருத்ரய்யாவ ஞாபகப்படுத்திட்டிங்க. யூட்யூப்ல அந்தப் படம் ஃபுல்லா இருக்கு. ஒரு தடவ பாத்துரலாம்னு…’


நண்பரொருவர் சுவாரசியமாகிவிட்டார். ‘முழுப்படமும் நெட்ல பாப்பியா? துட்டு பழுத்துராது?’


‘சேச்சே. ப்ராட்பேண்ட் கனெக்‌ஷன் இருக்கு சார். முப்பது ஜிபி லிமிட்டு. ருத்ரய்யாவுக்காகக் கொஞ்சம் போனா தப்பில்ல.’


அவர் தனது நாற்காலியை என் நாற்காலிக்கு நெருக்கமாக இழுத்துப் போட்டுக்கொண்டு அமர்ந்து ஒரு குழந்தையின் ஆர்வத்துடன், ‘அப்படின்னா கத்தி படம் இருந்தா போடேன். வீட்ல என் சன் பாத்துட்டிருந்தான்.. பிக்சர் குவாலிடி நல்லால்ல. நெட்ல ஹெச்டி வர்ஷன் வந்திருக்கும்ல?’


Copyright © 2008-2011 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 19, 2014 06:07

November 17, 2014

நாசமாய்ப் போகும் கலை

புத்தக வெளியீட்டு விழா வைக்காவிட்டால் எழுத்தாளனே இல்லை என்றார் நண்பரொருவர் என்னும் நண்பர் ஒருவர்.


தூக்கிவாரிப் போட்டது எனக்கு. என் பேர் தாங்கிய ஐம்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் சந்து பொந்துகளில் உலவிக்கொண்டிருக்கின்றன ஐயா! என்று சொல்லிப் பார்த்தேன்.


ம்ஹும். அதெல்லாம் கணக்கிலேயே சேராது என்று அடித்துச் சொல்லிவிட்டார்.


‘ஒரு புத்தகம் வருகிறதென்றால் மூன்று மாதங்களுக்கு முன்னால் அதைப் பற்றிப் பேசத் தொடங்கிவிடவேண்டும். முடிந்தால் நாலைந்து திசைகளில் இருந்து ஏழெட்டுப் பேரை நியமித்து திட்டியோ கண்டனம் செய்தோ நக்கலடித்தோ எழுத வைக்கலாம். பதில் கணைகளைத் தொடுப்பதற்கு ஒரு தொண்டர் படை தயாராயிருக்க வேண்டும். அவர்கள் கண்மூடித்தனமாக புத்தகத்தை ஆதரிக்கும் போர்வையில் உன்னை ஆதரித்துப் பேசவேண்டும்…’


‘யோவ் நான் என்ன கட்சியா நடத்துகிறேன்?’


‘அதெல்லாம் அப்படித்தான். இதோ எழுதுகிறேன்.. முடிக்கப் போகிறேன்.. மூணேகால் வரி மிச்சம்.. அடடா, மூட் போய்விட்டது என்று அவ்வப்போது அப்டேட் தரவேண்டும்.’


‘பிறகு?’


‘டோராபோரா மலைத் தொடரில் ஒரு சைக்கிள் பயணம் மேற்கொண்டுவிட்டு வந்து போன மூடைத் திரும்பப் பிடிக்கிறேன் என்று சொல்லிவிட்டு பத்து நாள் இணையப் பக்கம் வராமல் இருக்கவேண்டும்..’


‘ஆப்கனிஸ்தானுக்கெல்லாம் இப்போது போக சாத்தியப்படாதே.’


‘உன்னை யார் அங்கே போகச் சொன்னார்கள். மொட்டை மாடிக்குப் போய் குவாட்டர் அடித்துவிட்டுக் குப்புறக் கிட, போதும்.’


நண்பரொருவருக்கு என்னவோ ஆகிவிட்டது என்று தோன்றியது. அவருக்கு ஒரு கமர்ஷியல் போராளியின் கல்யாண குணங்களை எடுத்துச் சொல்லி விளக்கத் தொடங்கினேன். விழாக்கள் வீண் செலவு. சமோசா காப்பி சாப்பிடத்தான் கூட்டம் வருமே தவிர ஒரு பயல் அங்கே புத்தகம் வாங்கமாட்டான்.


‘நீ ஒரு முட்டாள்!’ என்று ஆவேசமாக எழுந்து குற்றம் சாட்டினார் நண்பரொருவர். என்னடா இப்படி உண்மை பேசுகிறாரே என்று கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தாலும் சமாளித்துக்கொண்டு, ‘எப்படிச் சொல்கிறீர்கள்?’ என்று இரு கட்சிக்கும் பொதுவில் கேட்டு வைத்தேன்.


‘விழா வைப்பது புத்தகம் விற்க என்று யார் சொன்னது?’


இப்போது மீண்டும் எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. இப்படி ஒரே நாளில் பலமுறை தூக்கிவாரிப் போட்டால் எலும்பெல்லாம் கழண்டுவிடும். எனவே இனிமேல் தூக்கிவாரிப் போடாமல் பார்த்துக்கொள்ளத் தீர்மானித்தேன்.


‘வேறு எதற்கு விழா வைப்பது?’


‘அப்போதுதான் நீ பிரபலமாவாய்’


இங்கே நான் யோசிக்கத் தொடங்கினேன். நான் ரெகுலராகப் போகும் மாவா கடை சேட்டு மற்றவர்களுக்கு அரைப்பது போல எனக்கு அரைப்பதில்லை. ரெண்டு சிட்டிகை குங்குமப்பூ, ஜாதிக்காய் எசன்ஸ் சேர்த்து எனக்குத் தனியே அரைத்துத் தருவான். ரைட்டர் சார் என்று அன்போடு கூப்பிடுவான்.


நான் வழக்கமாக பெட் ரோல் போடும் பங்க்கின் முதலாளி என் வாசகர். ஓடி வந்து கையைப் பிடித்துக் குலுக்குபவர். எனவே அவரது கடைப் பையன்கள் என் வண்டிக்கு பெட் ரோல் போடும்போது ஏமாற்றுவதில்லை.


என் மகள் படிக்கும் பள்ளிக்கூடத்தின் அலுவலகப் பணியில் இருக்கும் ஒரு பெண்மணியும் என் வாசகர்தான். எதற்காகவாவது நான் போகவேண்டி வந்தால், யாருக்கும் காத்திராமல் காரியத்தை முடித்துக்கொண்டு வந்துவிட முடியும்.


அட, வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் பெட்டிக்கடைக்காரன் என் வாசகனில்லை என்றாலும் நானொரு எழுத்தாளன் என்று அறிந்தவனாயிருக்கிறானே. ஒரு அவசரத்துக்கு அப்புறம் தருகிறேன் என்று சொல்லிவிட்டு என்னவேண்டுமானாலும் வாங்கிச் செல்ல முடிவதைக் காட்டிலும் வேறென்னதான் பிரபலத்தின் கல்யாண குணம்?


‘முட்டாள், முட்டாள், சர்வ முட்டாள்! உலகம் உன் பேட்டையோடு முடிந்துவிடுவதில்லை. பிரபலம் என்றால் மாநிலம் முழுதும் தெரிவது. முடிந்தால் நாடு முழுவதும் தெரிவது.’ என்றார் நண்பரொருவர்.


அதற்கு நான் நயந்தாராவாகப் பிறந்திருக்க வேண்டும். நான் எதற்கு நாடு முழுதும் தெரியவேண்டும்? என் புத்தகம் போய்ச் சேர்ந்தால் போதாதா?


ஒரு கணம் என்னை ஒரு சேற்றுப்புழுவைப் போல் பார்த்தார். ‘இதோ பார்! கவர்னர் மாளிகை விழா மண்டபம் வாடகைக்குக் கிடைக்கிறதா என்று கேள். ஒரு ஸ்பான்சர் பிடித்து வாடகைப் பணத்தைக் கட்டிவிடு. கமலஹாசனெல்லாம் வேண்டாம். அமிதாப் பச்சனைக் கூப்பிட்டு புத்தகத்தை வெளியிடச் சொல்லு. முதல் பிரதியைப் போனால் போகிறது; அவரது மருமவப் பொண்ணையே வாங்கிக் கொள்ளச் சொல்லிவிடலாம்.’


‘இதென்ன அக்கிரமம்? கவர்னர் மாளிகையில் விழா ஏற்பாடு செய்துவிட்டு ரோசய்யாவைக் கூப்பிடாதிருப்பது தவறல்லவா? அவர் நல்லி செட்டியார் போல விழாக்களுக்காகவே அவதரித்தவர் அல்லவா?’


‘கலர் கெட்டுவிடும். நான் சொல்வதை மட்டும் கேள். வாழ்த்திப் பேச நாலு பேர் வேண்டும். லோக்கல் சினிமா உலகத்தில் இருந்து ஒருத்தர். கேரள சினிமாவிலிருந்து ஒருத்தர்…’


இங்கே நான் இடைமறித்தேன். ‘ஒய் நாட் ஷகிலா?’


நண்பரொருவர் ஒரு கணம் யோசித்துவிட்டு, ‘நாட் எ பேட் ஐடியா. ரேஷ்மாவைக் கூட முயற்சி செய்யலாம். இதெல்லாம் பின்னவீன உத்தியில் சேரும்’ என்றார்.


எனக்குத் தூக்….


வேண்டாம், வலிக்கும். மேலே சொல்லுங்கள் என்றேன்.


‘யாராவது போலிஸ் உயரதிகாரிக்கு மேடையில் இடம் கொடுப்பது நல்லது. மண்டபத்துக்கு வெளியே விளக்கு வைத்த ஜீப்பும் காரும் நின்றால் ஒரு கெத்து.’


அடேங்கப்பா.


‘முக்கியமான விஷயம், டிவி சேனல் கவரேஜ். முடியாவிட்டால் யூட்யூப் லைவ் கவரேஜ்.’


எல்லாமே இரண்டு மணிநேர விழாவுக்கா? முடிந்து வீட்டுக்குப் போய்ப் படுத்தால் பொழுது விடிந்துவிடுமே ஐயா! என்றேன் பரிதாபமாக.


நண்பரொருவர் சிரித்தார். ‘அதுதான்! அதுதான்! அன்று விடியும் பொழுதில் நீ வீட்டை விட்டு வெளியே வந்தால் பார்க்கிறவர்கள் பார்வை எப்படி இருக்கும் என்று யோசித்துப்பார்!’


யோசித்துப் பார்த்தேன். மாவா சேட் என்னைப் பார்ப்பதே இல்லை. பரபரவென்று வேலையை முடித்து என்னைச் சீக்கிரம் அனுப்பிவைக்கும் தீவிரம்தான் அவனுக்கு. பெட் ரோல் பங்க் ஊழியரும் என்னைப் பார்ப்பதில்லை. டேங்க்கைத்தான் பார்ப்பார்.


‘நீ ஒரு வடிகட்டிய முட்டாள். பஸ்ஸில், ரயிலில் போகும்போது.. பொது இடங்களில் நடக்கும்போது…’


நான் பஸ், ரயிலில் போவதில்லை. கட்டணக் கழிப்பிடம் தவிர வேறு பொது இடங்களுக்கும் செல்வதில்லை. எழுதுவதற்கே நேரம் சரியாக இருக்கிறதே என்றேன்.


‘சே.. ஒரு கறிகாய் வாங்கப் போகமாட்டாயா? ஒரு சலூனுக்கு? சூப்பர் மார்க்கெட்டுக்கு?’


‘சொன்னேனே. பெட்டிக்கடைக்காரப் பிள்ளைக்கு ஏற்கெனவே நான் ஒரு எழுத்தாளன் என்று தெரியும். சலூன் முனியசாமி பலகாலமாக என்னிடம் சினிமா சான்ஸ் கேட்டுக்கொண்டிருப்பவன். சூப்பர் மார்க்கெட்டெல்லாம் என் மனைவி டிபார்ட்மெண்ட்.’


‘நீ நாசமாய்ப் போ’ என்று நாற்காலியை உதைத்துத் தள்ளிவிட்டு நண்பரொருவர் எழுந்துவிட்டார்.


அதைத்தானே இத்தனை காலமாகச் செய்துகொண்டிருக்கிறேன்?


Copyright © 2008-2011 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 17, 2014 21:58

November 16, 2014

நக்கிப் பார்த்த கதை

நான் சாப்பிட்டுக்கொண்டிருந்த மேசையின் எதிர் இரு நாற்காலிகளுக்கு அந்த ஜோடி வந்து அமர்ந்தது. சர்வரானவன் பணிவுடன் நெருங்கி என்ன சாப்பிடுகிறீர்கள் என்று கேட்டான். (நான் தமிழர் உணவான தோசை சாப்பிட்டுக்கொண்டிருந்தேன்.) ஜோடியில் ஆணாக இருந்தவன் ஏதோ சொல்ல வாயெடுக்க, ‘நீ இரு மஹேஷ், நான் சொல்றேன்’ என்று அவனைத் தடுத்துவிட்டு பெண்ணாக இருந்தவள் சொல்லத் தொடங்கினாள்.


பனீர் புலாவ் ஒரு ப்ளேட். ஜீரா ரைஸ் ஒரு ப்ளேட். கோபி மஞ்சூரியன் அப்பறம் கடாய் பனீர். ஏய் ஒனக்கு வேற என்ன வேணும்?


அவன் தன் பங்குக்கு சில வினாடிகள் யோசித்துவிட்டு பட்டர் நான் ஒண்ணு என்றான். குறிப்பெடுத்த சர்வர் நாலடி போனதும் ஸ்ட்ராபெரி ஐஸ் க்ரீம் என்று ஒரு சத்தம்.


நான் தோசையை ஒரு விள்ளல் வாயில் போட்டுக்கொண்டேன். அந்தப் பெண் தன் நாற்காலியை அந்த மஹேஷுக்கு இன்னும் நெருக்கமாக இழுத்துப் போட்டுக்கொண்டு அவனது சாப்பிடும் கையை இழுத்து வளைத்து கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள். விட்டால் பில்லுக்குப் பணம் கொடுக்காமல் ஓடிவிடுவானோ என்னமோ.


நீயே சொல்லு மஹேஷ். டாட் பண்றது நியாயமே இல்ல. இவர யாரு என் காலேஜுக்கு வந்து வெயிட் பண்ண சொன்னது? அட்லீஸ்ட் நான் வரப் போறேன்னு எனக்கு ஒரு போனாவது பண்ணியிருக்கணுமா வேணாமா? அப்பறம் நான் ஒன்னவர் நின்னேன், ஒன்ன காணம், எங்க சுத்தப் போனேன்னு ஒரு கேள்வி. செம கடுப்பு தெரியுமா.


லீவ் இட் ஐ ஸே. அப்பால்லாம் அப்படித்தான்.


உங்கப்பா அப்படியா?


நாம அப்பாங்கள பத்திப் பேசுறதுக்கா வந்தோம்?


சீ என்று அவன் கன்னத்தில் செல்லமாக ஒரு இடி இடித்தாள். நான் இன்னொரு தோசை சொல்லலாமா அல்லது பூரிக்குத் தாவிவிடலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தபோது சர்வரானவன் என் எதிரணியினர் ஆணையிட்ட பலகாரங்களை எடுத்து வந்து பரப்பி வைத்தான்.


சின்னச் சின்ன வாணலிகளில் எண்ணெய் மினுங்கத் ததும்பி வழியும் குருமா ரகங்கள். ஆ, ஜீரா சாதம். இது இனிப்பாயிருக்குமா அல்லது வெறும் நெய் சாதமா என்று எனக்குப் பலகாலமாக சந்தேகம் உண்டு. கேட்டுவிடலாமா என்று யோசித்தேன்.


அதற்குள் அவள் கிண்ணங்களில் இருந்த இருவேறு விதமான சாப்பாட்டைத் தட்டுக்குத் தள்ளி, இரு தட்டுகளிலும் சைட் டிஷ்களை எடுத்து ஊற்றினாள். அவன் ஒரு வாய் எடுத்து சாப்பிட்டான்.


சீ, பேட் பாய் என்று அவள் சொன்னாள். உடனே அவன் ஏன் பேட் பாய் ஆனான் என்பதை அவனுக்குப் புரியவைக்கும் விதமாக ஸ்பூனால் கொஞ்சம் சோற்றை எடுத்து அவன் வாயில் ஊட்டினாள். அவன் பதிலுக்கு சிரித்தபடி அவள் கன்னத்தை வலிக்காமல் ஒரு கிள்ளு கிள்ளி எடுத்து சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிட்டான்.


பொறுக்கவில்லை போலிருக்கிறது. அவன் கையில் இருந்த ஸ்பூனை அவள் வாங்கி வைத்தாள். கவனமாக இப்போதும் அவனிரு கைகளை எடுத்துத் தன் கைகளுக்குள் பதுக்கிக்கொண்டு, ஷாப்பிங் போணும்டா. ரொம்ப வேலையிருக்கு. இன்னர்ஸ் வாங்கணும். செப்பல் வாங்கணும். காஸ்மெடிக்ஸ் ஐட்டம்ஸ் கொஞ்சம் வாங்கணும். லாஸ்ட் சண்டே போலாம்னு நெனச்சேன். ம்ருதுளா வரேன்னு சொல்லி லாஸ்ட் மினிட்ல கவுத்துட்டா.


அவனுக்குக் கோபம் வந்துவிட்டது. நீ ஏன் அவள கூப்ட்ட. எனக்கு போன் பண்ணியிருக்கலாம் இல்ல? சீ இல்லப்பா. நீ ப்ராஜக்ட் இருக்குன்னு சொன்னதால ஒன்ன டிஸ்டர்ப் பண்ணவேணான்னு நெனச்சேன்.


பேச்சு வாயின் செயல். அவள் ஒரு கையை விடாமல் பிடித்துக்கொண்டு மறு கையால் நிறுத்தாமல் அவன் தலைமுடி, காது, கன்னம், தோள்பட்டை என்று எங்கெங்கோ இருக்கும் பாக்டீரியா, அமீபா, வைரஸ்களைத் தட்டிவிட்டுக்கொண்டே இருந்தாள்.


குட்டி கொஞ்சம் ஷோக்காகத்தான் இருந்தாள். யார் பெத்த பெண்ணோ. இருபது, இருபத்திரண்டு வயதுதான் இருக்கும். அந்தப் பையன் என்னை மாதிரி கருப்புதான் என்றாலும் ஏதோ ஒரு வசீகரம் இருந்த மாதிரி தெரிந்தது. ஒருவேளை என் கண்ணில் பழுதாகவும் இருக்கலாம். அவன் யார் பெத்த பிள்ளையோ. ஏய் வாட்ஸ் திஸ்? என்று அப்போதுதான் பார்ப்பது போல அவள் காதில் தொங்கிக்கொண்டிருந்த என்னமோ ஒரு வளையத்தைத் தொட்டுப் பார்த்தான்.


நீ பாக்கல இல்ல? ரொம்ப நாளா இத காணம்னு தேடிட்டிருந்தேன் தெரியுமா. எப்படி தொலைஞ்சிதுன்னே தெரியல. லாஸ்ட் இயர் வெக்கேஷனுக்கு ஆக்ரா போயிருந்தப்ப கிடைச்சிது. நல்லாருக்கில்ல?


அவன் ஏதோ சொன்னான். அவளை மேலும் நெருங்கி அந்தக் காது வளையத்தின் ஊடாக காதுக்குள்ளேயே சொன்னபடியால் எனக்குக் கேட்கவில்லை. நான் டேபிளைப் பார்த்தேன். அவர்கள் இன்னும் சாப்பிடவே ஆரம்பித்திருக்கவில்லை.


சீ இல்ல மஹேஷ். காட் ப்ராமிஸா இல்ல தெரியுமா.


காதுக்குள் வேறென்னவோவும் சொல்லியிருக்க வேண்டும். அவள் மிகவும் அழகாக சிணுங்கத் தெரிந்தவளாயிருந்தாள். அவன் அவளது சிணுங்கலை அதிகரித்துப் பார்க்க ஆசைப்பட்டு மேலும் நெருங்கி, மேலும் குனிந்து கிட்டத்தட்ட அவள் மடியில் படுக்கிற உத்தேசத்துடன் என்னவோ செய்துகொண்டிருந்தபோது சர்வர் அந்த பாழாய்ப் போன ஐஸ் க்ரீமையும் எடுத்து வந்து தொலைத்தான்.


வெச்சிருங்க. ஏய் ஐஸ் க்ரீம் சாப்பிடறியா?


எழவு இதிலென்ன இத்தனை கண்ணகட்டல், பரவசப் பீறிடல்! எனக்கு பற்றிக்கொண்டு வந்தது.


அவள் ஐஸ் கப்பைக் கையில் ஏந்திக்கொண்டாள். ஒரு ஸ்பூன் எடுத்து சாப்பிட்டுப் பார்த்தாள். பரவாயில்லை. கசக்கவில்லை. இந்தா மஹேஷ் என்று அவனுக்கு ஒரு வாய் ஊட்டினாள். எனக்கோ கிளுகிளுவென்று பற்றிக்கொண்டு வந்தது. பல்லைக் கடித்து அடக்கிக்கொண்டேன். இரண்டாவது ஸ்பூனை அவள் எடுத்தபோது அவன் லபக்கென்று அதைப் பிடுங்கி அவளுக்கு ஊட்டிவிட்டான். சீய்ய்.


இதன் பிறகு நடந்ததுதான் உச்சம். ஒழுங்காக ஊட்டிவிட்டுக்கொண்டு சாப்பிட்டுத் தொலைக்க வேண்டியதுதானே? மஹேஷானவன் சற்றும் எதிர்பாராத ஒரு கணத்தில், அவள் ஊட்டிவிடுவது போல எடுத்துச் சென்று ஐஸ்க்ரீமை அவன் மூக்கில் தேய்த்துவிட்டாள். பதிலுக்கு அவனும் அவள் மூக்கில் ஒரு சொட்டு ஐஸ் க்ரீமைத் தடவி கணக்குத் தீர்க்க, பெண்குலம் என்ன அத்தனை லேசுப்பட்டதா? ஒன்ன….. என்று போலிக் கோபமுடன் அப்படியே அவன் பின்னந்தலையைப் பிடித்து ஒரு இழு இழுத்தாள். நெற்றி முட்டிக்கொள்ள, அவன் மூக்கில் இருந்த ஐஸ் க்ரீமை தவளை போல் சரேலென நாக்கு நீட்டி ஒரே நக்கு.


தமிழன் தோசைத் தட்டைத் தள்ளி வைத்தான். ஒரு முடிவுடன் எழுந்து நின்று, ஸ்டாப் இட் என்றான்.


இருவரும் என்னை ஒரு வேற்று கிரக ஜந்து திடீரென எங்கிருந்து முளைத்தது என்பது போலவும், அப்போதுதான் என்னை முதல் முறை பார்ப்பது போலவும் பார்த்தார்கள்.


‘இதோ பாருங்கள், நீங்கள் செய்வது நியாயமே இல்லை. ஒரு பனீர் புலாவ் 120 ரூபாய். ஜீரா ரைஸ் 125 ரூபாய். கடாய் பனீரும் கோபி மஞ்சூரியனும் தலா 90 ரூபாய். பத்தாத குறைக்கு பட்டர் நான் வேறு. எல்லாம் ஆறி அவலாகிப் போய்விட்டது. இதற்குமேல் இவற்றை நாய்கூடத் தின்னாது. கேவலம் பத்து ரூபா கப் ஐஸுக்குக் கொடுக்கிற மரியாதையை இவற்றுக்குக் கொடுக்க விருப்பமில்லை என்றால் என்ன எழவுக்கு இதையெல்லாம் ஆர்டர் செய்தீர்கள்? இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்குப் பணத்தின் அருமையே தெரியவில்லை. சே.’


ஆவேசம் கொப்பளிக்கத் திட்டிவிட்டு வெளியே வந்த பிறகுதான் நான் சாப்பிட்ட தோசைக்கு பில் வராதது நினைவுக்கு வந்தது.


Copyright © 2008-2011 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 16, 2014 11:16

November 15, 2014

கால வழு

படுத்து ஒரு ஜாமம் கழிந்தும் வியாசருக்கு உறக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு பார்த்தார். மேல் துண்டை இழுத்து முகத்தைச் சுற்றி மூடிக்கொண்டு தூங்கப் பார்த்தார். ஒரு பத்து நிமிடம் எழுந்து உட்கார்ந்து தியானம் செய்தால் ஒருவேளை தூக்கம் வருமோ என்று அதையும் முயற்சி செய்தார். ரொம்ப ஃப்ரெஷ்ஷாகிவிட்டது போலத் தோன்றியது.


அவருக்கு ரொம்ப பயமாகிவிட்டது. இப்படியே விட்டால் வாழ்நாளில் உறக்கம் என்பதே இல்லாமல் போய்விடக் கூடும். ஏதாவது செய்தே ஆகவேண்டும். சரேலென்று எழுந்தார். வேகவேகமாக நதி தீரத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.


சரியான இருட்டு. பாதை தெரியாத அளவுக்கு இருட்டு. ஆனாலும் பழகிய பாதங்களுக்கு இருளும் ஒளியும் ஒன்றுதான். கால் கரெக்டாகத்தான் செயல்படுகிறது. மனம்தான் பேஜார் பண்ணுகிறது.


‘மாப்ள.. இப்படியே விட்டன்னா நாளைக்கு வியாசன்னு ஒருத்தன் இருந்தான்னு சொன்னாக்கூட யாரும் நம்பமாட்டாங்க.. உன் தரிசனம், கற்பனை, கவித்துவம், புண்ணாக்கு எல்லாத்தையும் காலாவதியாயிருச்சின்னு சொல்லி கடாசிருவாங்க.. முழிச்சிக்கடா’ என்று சக முனித் தோழர் சொன்னது நினைவில் நிழலாடியது.


பதற்றம் அதிகரிப்பது போலிருந்தது. கேஸ் போட்டுப் பார்க்கலாமா என்று யோசித்தார். ஆனால் காலம் கடந்த பிரதிகளுக்கான காப்பிரைட் சட்டங்கள் தெளிவாக இருக்கின்றன. தவிரவும் தமிழ்நாட்டில் எந்தக் கதாசிரியனும் கேஸ் போட்டு ஜெயிக்க முடியாது. நாலு நாளைக்கு ஃபேஸ்புக்கில் வேணுமானால் பிரபலமாக இருக்கலாம். சே. இத்தனை யுகங்களுக்குப் பிறகு இப்படியொரு பிராணாவஸ்தை நேருமென்று அவர் நினைத்துப் பார்க்கவில்லை.


இத்தனை புகழும் பிராபல்யமும் தான் எழுதிய காலத்தில் தனக்கு வந்திருக்க வேண்டியது. எல்லாவற்றையும் சேர்த்து வைத்து யாருக்கோ சொத்தெழுதிக் கொடுத்துவிட்ட மாதிரியல்லவா இருக்கிறது? இதை அனுமதிக்க முடியாது. சும்மா ஒரு வணக்கம் போட்டுவிட்டு அனைத்தையும் லவட்டிக்கொண்டுவிட்டான். என்னவாவது செய்துதான் தீரவேண்டும்.


உறுதிபூண்டபின் அவருக்கு இருப்புக் கொள்ளவில்லை. மறுநாளே ரயிலேறிவிட்டார்.


வருகிற வழியில்தான் என்ன செய்யலாம் என்று தெளிவான ஒரு முடிவுக்கு அவரால் வரமுடிந்தது. கொஞ்சம் குரூரம்தான். ஆனால் வேறு வழியில்லை. இதெல்லாம் டார்த்தீனிய வகையறா. விட்டுவைத்தால் காடாகி அழித்துவிடும். இந்த நாடும் நாட்டு மக்களும் நம்மை ஒரு வில்லனாகவே பார்த்தாலும் பரவாயில்லை. இதை மட்டும் சும்மா விடக்கூடாது. படைப்பாளிக்கு அவன் முக்கியமல்ல. படைப்புதான் முக்கியம்.


சென்னை செண்ட்ரலில் ரயில் பெரும் சத்தமுடன் நுழைந்தது. வியாசர் தனது ஜோல்னாப் பையை இறுக்கிப் பிடித்துக்கொண்டு இறங்கினார். எந்தப் பக்கம் போவது என்று ஒரே குழப்பமாக இருந்தது. ரயில் வே ஸ்டேஷனே ஒரு ஊர் மாதிரி இருந்தது. சில வினாடிகள் திருதிருவென்று விழித்தார். பிறகு குத்து மதிப்பாக முடிவு செய்து, இறங்கிய இடத்திலிருந்து இடப்பக்கமாக நடக்க ஆரம்பித்தார்.


பத்தடி கூட நடந்திருக்க மாட்டார். யாரோ தபதபவென்று அவரை நோக்கி ஓடி வருவது போலத் தோன்ற, திரும்பிப் பார்த்தார். தோன்றியது பிழையில்லை. ஒருத்தரில்லை. நாலைந்து பேர். பாய்ந்து வந்து அவரைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, ‘நீங்கள்தானே வியாசர்?’ என்றார் நாலைந்தில் ஒருவர்.


வியாசர் திகைத்துவிட்டார். உடம்பெல்லாம் சிலிர்ப்பது போலிருந்தது. அது படைப்பாளிக்கே உரிய எளிய உணர்ச்சிவசப்படல். உடனே அவரது கண்ணில் கனிவும் பேரன்பும் பெருக ஆமென்று மெல்லத் தலையசைத்தார்.


‘உங்களத்தான் சார் தேடிட்டிருந்தோம். எங்க நல்லநேரம் நீங்களே வந்துட்டிங்க.’


‘நீங்க…’ என்று சீரியல் அப்பா மாதிரி செண்டன்ஸை முடிக்காமல் வியாசர் இழுக்க,


‘நாங்க விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்துலேருந்து வரோம் சார். இந்த வருஷ அவார்டு உங்களுக்குத்தான்!’ என்றபடி கையைப் பிடித்துக் குலுக்கினார் நாலைந்தில் இன்னொருவர்.


வியாசருக்கு ஒரு கணம் மூச்சடைத்தது. நிதானத்துக்கு வர மிகவும் சிரமப்பட்டார். பிறகு தன்னைத் தொகுத்துக்கொண்டு, ‘விழா கோயமுத்தூர்லதான?’ என்று கேட்டார்.


Copyright © 2008-2011 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 15, 2014 10:26

November 11, 2014

காகிதப் படகில் சாகசப் பயணம்

கருணாகரனை முதல்முதலில் பார்த்தபோது இந்த ஆசாமி கொஞ்சம் முசுடு என்று தோன்றியது. ஹலோ என்றால் ஹலோ என்பார். ஏதாவது கேட்டால் எத்தனை சொற்களில் கேட்கிறோமோ, அதில் சரி பாதி சொற்களில் பதில் சொல்வார். குமுதம் அலுவலகத்தில் என் கேபினுக்குப் பக்கத்து கேபினில் அவர் இருந்தார். ஒரு நாளில் நூறு முறையாவது நான் அந்தக் கண்ணாடிச் சுவரைத் திரும்பிப் பார்ப்பேன். ஒருமுறையும் அவர் நிமிர்ந்தோ, திரும்பியோ பார்த்ததில்லை. எப்போதும் டேபிளுக்கு மட்டுமே தலைகாட்டி என்னத்தையாவது எழுதிக்கொண்டோ, எடிட் செய்துகொண்டோ இருப்பார்.


கருணாவுக்கு பக்கத்து சீட்டில் இருந்த சிவகுமார் (என்கிற வாசுதேவ்) அவருக்கு முற்றிலும் நேரெதிர். கண்ணாடி அறைக்குள் இருந்து அவர் குரல் கொடுத்தால் குமுதம் ஆபீஸ் தாண்டி பக்கத்து அபிராமி தியேட்டர் வரைக்கும் கேட்கும். இருபத்தி நாலு மணிநேரமும் ஜோக்கடித்துக்கொண்டு, யாரையாவது கிண்டல் செய்துகொண்டு, எல்லோரையும் சிரிக்க வைத்துக்கொண்டே இருப்பவர். அவருக்கு அத்தனை நெருக்கத்தில் இருந்தும் கருணாகரன் மட்டும் ஏன் இப்படி இருக்கிறார்? குறைந்தபட்சம் சிவகுமார் அடிக்கும் ஜோக்குகளுக்குக் கூட சிரிக்க மாட்டார். முட்டைக் கண்ணாடிக்குள்ளிருந்து ஒரு முறைப்பு.


என்னால் அப்போது புரிந்துகொள்ளவே முடியாததாக இது இருந்தது. பிறகும் புரிந்ததில்லை. இத்தனை வருடங்கள் கழித்து கருணாகரனின் பத்திரிகை அனுபவங்கள் அடங்கிய ‘காகிதப் படகில் சாகசப் பயணம்’ நூலை இன்று வாசித்தபோது அதற்கான காரணத்தைக் கண்டேன். கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. வருத்தமாகவும். கருணா எனக்கு நண்பராகி நெருக்கமாகப் பேசிப் பழகத் தொடங்கிவிட்ட பிறகும் தனது சொந்தக் கஷ்டங்களை ஒருபோதும் சொன்னதில்லை. வலிகளைக் காட்டிக்கொண்டதில்லை. அது அவரது சுபாவம்.


என் சமகாலப் பத்திரிகையாளர்கள் பலரைக் கண்டு நான் வியந்திருக்கிறேன். பிரமித்திருக்கிறேன். மனமாரப் பாராட்டியிருக்கிறேன். ஆனால் யாரைக் கண்டும் பொறாமை கொண்டதில்லை. பத்திரிகை வாழ்வில் நான் ரகசியப் பொறாமை கொண்ட ஒரே திறமைசாலி கருணா. பணியில் அவரது வேகமும் தீவிரமும் உள்ளார்ந்த அர்ப்பணிப்பும் ஈடுபாடும் யாரையும் வெட்கமுற வைக்கும். நாங்கள் குமுதத்தில் ஒன்றாகப் பணியாற்றிய காலங்களில் கருணாகரன் இஷ்யு என்றால் அதற்குத் தனியொரு வாசனை இருக்கும். அவரைப் போன்ற ஒரு தேர்ந்த மசாலா விற்பன்னரை நான் இதுகாறும் சந்தித்ததில்லை. ஒரு வாரப் பத்திரிகைக்கு என்ன தேவை என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால் எது எத்தனை சதவீதம் என்கிற சூட்சுமமே இங்கு முக்கியம். கருணா அதில் மன்னன்.


இந்தப் புத்தகத்தில் அவர் குறிப்பிட்டிருக்கும் ரஜினி, கமல் தொடர்பான சம்பவங்களை அருகிருந்து பார்த்தவன் நான். இந்த வரிசையில் இன்னொரு செம ஜாலி விஷயத்தை எழுதுவார் என்று எதிர்பார்த்து மிகவும் ஏமாந்தேன். என்றைக்காவது இம்மாதிரி நான் ஒரு புத்தகம் எழுத நேர்ந்தால் அவசியம் அதைக் குறிப்பிடுவேன் (அது ஒரு பிரபல பெண் எழுத்தாளர் சம்மந்தப்பட்ட விஷயம்!)


கருணாவின் பலம் அவரது பிசாசு வேக மொழி. இந்தப் புத்தகத்தை வாசிக்க உங்களுக்கு ஒரு மணி நேரத்துக்குமேல் ஆகிறதென்றால் நீங்கள் தமிழில் வீக் என்று பொருள். கருணா மட்டும் ஒரு ரிஸ்க் எடுத்து பத்திரிகை வேலையைத் துறந்து முழுநேர எழுத்துக்கு வந்திருந்தால் இந்நேரம் அவர் இருந்திருக்கும் இடமே வேறு. மொழியை அவர் கையாளும் லாகவத்தை நான் எப்போதும் ரசிப்பேன்.


இந்தப் புத்தகத்தின் ஓர் அத்தியாயம் – அவரது மகளுக்கு இருந்த மருத்துவக் குறைபாடு பற்றியது – படித்தால் உங்களுக்கு நான் சொல்லுவது புரியும். முழுப் புத்தகத்துக்கும் அவர் தேர்ந்தெடுத்த மொழியை இந்த ஓர் அத்தியாயத்து மொழி வாரிச் சுருட்டித் தூர அடித்துவிடுகிறது.


எழுத்தில் கண் கலங்க வைப்பது பெரிய விஷயமல்ல. அது ஒரு தொழில்நுட்பம் மட்டுமே. ஆனால் தான் கதறியழுத தருணங்களை அழுகையின் தடத்தை மட்டும் தொட்டுக்காட்டி ரிப்போர்ட் செய்வது ஒரு சாகசம். இது உங்களை அழவைக்காது. ஆனால் செயல்படாமல் அடித்துவிடும். இதனை இராம திரு. சம்மந்தத்திடம் பயின்ற பாடம் மூலம் கருணா கற்றிருக்கலாம். அல்லது பெண்ணை ஏன் தேவதையாக்குகிறாய் என்று மாலன் கேட்டதில் இருந்து பெற்றிருக்கலாம். புதிய எழுத்தாளர்களுக்கு இந்த அத்தியாயம் நிச்சயமாக ஒரு பாடம்.


பத்திரிகைத் துறையை விரும்பக்கூடிய, ஒரு பத்திரிகையாளனின் அவஸ்தைகளைப் புரிந்துகொள்ளக்கூடிய, பத்திரிகையாளராக ஆகவேண்டும் என்று நினைக்கக்கூடியவர்களுக்கு இந்தப் புத்தகத்தில் சில நல்ல பாடங்கள் உள்ளன. கருணா இன்னும் விரிவாகவே எழுதியிருக்கலாம். ஆனால் இந்தப் புத்தகம் தன்னளவில் ஒரு முழுமையைக் கொண்டிருக்கிறது. இதழியலைப் பொறுத்தவரை தொடரும் என்பதுதான் முழுமையின் நிறைவுச் சொல்.


காகிதப் படகில் சாகசப் பயணம் | பெ. கருணாகரன் | குன்றம் பதிப்பகம், 73/31, பிருந்தாவனம் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை 600033 | தொபே: 9940010830


Copyright © 2008-2011 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 11, 2014 22:13

November 6, 2014

DND

சார் எங்க இருக்கிங்க? அர்ஜெண்ட்டா உங்கள பாக்கணும்.


ஒரு தொலைபேசி உரையாடலின் முதல் வரி இப்படியாகத் தொடங்கினால் எதிர்முனையாளர் ஏதேனும் ஒரு செய்தித் தொலைக்காட்சியில் இருந்து அழைக்கிறார் என்று பொருள்.


இன்னிக்கு செவன் தர்ட்டி நியூஸுக்கு ஒரு பைட் வேணும் சார் என்பது இரண்டாவது வரி.


எந்தத் தாலிபனாவது எங்காவது துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பான். இல்லாவிட்டால் இராக்கில் எவனாவது மசூதியிலோ பாலத்திலோ தூதரகத்திலோ குண்டு வைத்திருப்பான். இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் ஆரம்பித்திருக்கும். ஏதோ ஒன்று. என்னவானாலும் அஞ்சு நிமிஷ பைட்.


விவகாரம் சற்றுப் பெரிது (என்றால் பலி எண்ணிக்கை 15க்குமேல் என்று பொருள்) என்றால் உடனே ஒரு விவாதம். நாலைந்து கருத்து கந்தசாமிகளுடன் கலந்துரையாட வருவீர்.


எப்போது? இப்பவே சார். அல்லது மதியம் மூன்று மணிக்கு. ஆறு மணிக்கு ஏர்ல போகணும் சார்.


முன்பெல்லாம் இத்தகு பைட் சேவைகளை நட்புக்காகச் செய்து வந்தேன். ஒரு கட்டத்தில் இது என் அன்றாடப் பணிகளை மிகவும் கெடுக்கத் தொடங்கியது. கேமராவுக்கு உட்கார நேரமில்லை என்றாலும் பரவாயில்லை; போனில் கருத்து சொல்லுங்கள்; பதிவு செய்து புகைப்படத்துடன் போட்டுவிடுவோம் என்றார்கள்.


இது ஏதடா வம்பாப் போச்சே என்று தப்பிக்க ஒரு வழி கண்டுபிடித்தேன். பைட் கேட்கும் அனைவரிடமும் டீஃபால்ட்டாக பத்ரி, மருதன், சொக்கன் போன்ற சிலரின் எண்களை (அவரவர் சப்ஜெக்டுக்கேற்ப) கொடுத்துவிடுவேன். நான் ஊரில் இல்லை என்றோ, வேலை அதிகம் என்றோ சொல்லி போனை வைத்துவிடுவேன். அவர்கள் என் நண்பர்களை அழைத்தார்களா, இவர்கள் போய்ப் பேசினார்களா என்றெல்லாம் கவலைப்பட்டதேயில்லை. இதற்குக் கூட உதவாவிட்டால் அப்புறமென்ன நண்பர்கள்!


முதலில் என் பிரச்னை நேரம் சார்ந்ததாயிருந்தது. ஐந்து நிமிட பைட்டுக்கு நான் குறைந்தது ஒரு மணி நேரமாவது முன் தயாரிப்பு செய்ய வேண்டியது அவசியம். அத்தனை நேரம் கூடுதலாகக் கிட்டுமானால் இன்பமாகத் தூங்கிக் கழிக்கவே விரும்புவேன். இதனை நேரடியாகவே பலரிடம் சொல்லிப் பார்த்துவிட்டேன். யாரும் கேட்கத் தயாராயில்லை. பட்டனை அழுத்தினால் கருத்து கொட்டிவிடும் என்று நினைக்கிறார்கள் போல. நான் அதற்கு லாயக்கில்லை.


இரண்டாவது காரணம், இந்த ‘பைட்’டர்களுக்கு சம்மந்தப்பட்ட பிரச்னை அல்லது செய்தி குறித்த அடிப்படைத் தகவலறிவுகூட இருக்காது. செய்தி நிறுவனம் தரும் ஒருவரிக் குறிப்பைப் பார்த்துவிட்டு உடனே ஒரு மேட்டர் பண்ணக் கிளம்பிவிடுகிறார்கள். ஒரே ஒரு கேள்வி கேட்பார்கள். அது தொடக்கம். அதை வைத்துக்கொண்டு முழு பிரச்னையையும் விளக்கி, தீர்வையும் சொல்லிவிட வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.


டிவி என்று சொன்னால் மாட்டேன் என்று யாரும் சொல்லமாட்டார்கள் என்ற மனப்பான்மை இதில் மிகத் தீவிரமாக இயங்குவதையும் பார்க்கிறேன். பிசியா இருக்கேன் சார் என்றால் ஹாஃபனவர் கழிச்சி வரட்டுமா சார் என்று உடனே கேட்பார்கள்.


என்றைக்கு அந்த முடிவெடுத்தேன் என்று நினைவில்லை. இப்போதெல்லாம் யார் போன் செய்து ‘பைட்’ கேட்டாலும் முடியாது என்று கூசாமல் சொல்லிவிடுகிறேன். என்ன நினைத்துக்கொண்டாலும் கவலையில்லை.


பேசுவது என் தொழிலல்ல. கருத்து சொல்வது எனக்குக் கடமையும் அல்ல. எழுதுவது ஒன்றே என் சுதர்மம். நானாக எங்காவது பேசினால் அது என் சொந்த விருப்பம் சார்ந்ததாக மட்டுமே இருக்கும்.


ஒன்றைச் சொல்லி முடித்துவிடுகிறேன். வெகு சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தில் இருந்து ஒரு நண்பர் அழைத்தார். புதிதாகத் தொடங்கவிருக்கும் சமையல் நிகழ்ச்சியில் ஒரு பகுதியாகப் பல்வேறு விதமான உணவுப் பொருள்களின் வரலாறு குறித்துப் பேசக் கேட்டார். ஏற்கெனவே நான் எழுதியது, புதிய தலைமுறை டிவியில் டாக்குமெண்டரியாகவும் செய்ததுதான். இருப்பினும் நான் முன்னர் எழுதியவை தவிர மிச்சமுள்ள உணவுகளைப் பற்றி ஒவ்வொரு நாளும் சில நிமிடங்களாகச் செய்யலாம் என்றார்.


யோசிக்கிறேன் என்று சொல்லியிருந்தேன். நண்பர் விடாமல் சில நாள்கள் அழைத்துப் பேசிக்கொண்டே இருந்தார். இறுதியில் ஒரு நாள் நேரில் அழைத்து, பதினைந்து நிமிட நிகழ்ச்சிக்கு நான் படித்துத் தயாரிப்பது என்றால் என்ன, அதை எழுதுகிற பணி எத்தகையது, எடுத்துக்கொண்டு வந்து ஸ்டுடியோவில் அதை நானே ப்ரசண்ட் செய்கிற திருப்பணி எம்மாதிரியானது ஆகியவற்றை விலாவாரியாக விளக்கி இதற்கு ஒவ்வொரு எபிசோடுக்கும் எவ்வளவு தருவார்கள் என்று கேட்டுச் சொல்லுங்கள் என்று சொல்லி அனுப்பி வைத்தேன்.


இதென்ன பிரமாதம், எங்கள் ப்ரொட்யூசருடன் ஒரு மீட்டிங் அரேஞ்ச் பண்ணுகிறேன், வந்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டுப் போனவர்தான். ஆளைக் காணோம்.


அடடே இது நல்ல உத்தியாக உள்ளதே என்று எண்ணிக்கொண்டேன். இனி இதேபோல் பைட்டுக்கு அழைப்போரிடமும் ஒரு டாரிஃப் கொடுத்துவிடலாம் என்றிருக்கிறேன். அல் காயிதா சம்மந்தமென்றால் அஞ்சாயிரம். ஐ.எஸ்.ஐ.எஸ். என்றால் ஏழாயிரம். அமெரிக்கா என்றால் பத்தாயிரம். ஏதாவது புதிய இயக்கப் புறப்பாடு என்றால் கொஞ்சம் டிஸ்கவுண்ட்டும் கொடுக்கலாம், தப்பில்லை.


Copyright © 2008-2011 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 06, 2014 00:29

October 21, 2014

சாந்தி முகூர்த்தம்

சில தினங்களுக்கு முன்பு ஆப்பிள் வெளியிட்ட புதிய இயங்குதளமான Yosemiteக்கும் நேற்றிரவு வெளியான iOS 8.1க்கும் என் பிரதியில் நல்லபடியாக சாந்தி முகூர்த்தம் நடத்தி வைத்தேன்.


ஓர் இயங்குத் தளம் இத்தனை வியப்பளிக்குமா, வசீகரிக்குமா என்று இன்னமும் நம்ப முடியவில்லை. இதற்குமேல் தொழில்நுட்பத்தில் என்ன இருந்துவிடப் போகிறது என்று சென்றமுறை தோன்றியது போலவேதான் இப்போதும் தோன்றியது.


இப்போது என் கருவிகளின் செயல்பாட்டு வேகம் அதிகரித்திருக்கிறது. ஒரு வினாடியில் wifi, மூன்று அல்லது நான்கு வினாடிகளில் hotspot தொடர்பு பெற முடிகிறது. கைப்பேசிக்கு வரும் smsகளை என் மாக்குப் புத்தகக் காற்றில் வேலை செய்துகொண்டிருக்கும்போது, அந்தத் திரையிலேயே பெற்று பதிலனுப்ப முடிகிறது. பேசியை வேறு அறையில் வைத்துவிட்டாலும் வேலை கெடாமல் மா.பு.காவிலிருந்தே அழைப்புகளை ஏற்று பதில் சொல்ல முடிகிறது. Notesல் கிறுக்கி அங்கிருந்தே சமூக வலைத்தளங்களுக்கு எதையும் அனுப்பலாம். பிறகு தேடித் தொகுக்கும் பணி இனியில்லை.


இந்தக் குறிப்பை Notesல்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன். இங்கிருந்தே ஃபேஸ்புக்குக்கும் ட்விட்டருக்கும் எனது writerpara.com வலைத்தளத்துக்கும் தூக்கிப் போடுகிறேன். வந்து சேர்கிற வேகத்தைப் பாருங்கள்!

TUE 21 OCT 1:31 PM IST


Copyright © 2008-2011 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 21, 2014 01:04

October 3, 2014

புதிய பதிப்பு

IMG_3028


 


மேற்கண்ட எனது சில புத்தகங்கள் மதி நிலையம் வாயிலாகத் தற்போது மறு பிரசுரம் கண்டுள்ளன. இவ்வருட இறுதிக்குள் இன்னும் சில புத்தகங்கள் இவ்வாறாக வரும் என்று நினைக்கிறேன். பிரதி வேண்டுவோர் mathinilayambook@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.


ஆன்லைனில் வாங்கும் வசதி உண்டா என்று சம்பிரதாயமாக ஒரு கேள்வி உடனே வருவது இந்நாள்களில் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. என்.எச்.எம், டிஸ்கவரி போன்ற புத்தக விற்பனைத் தளங்களில் முயற்சி செய்யலாம். மதி நிலையம் தனது நேரடி இணைய விற்பனையைத் தொடங்குவதற்குள் தமிழர்கள் செவ்வாயில் சிலபல ஏக்கர்கள் வளைத்துப் போட்டிருப்பார்கள்.


என்ன புத்தகம், யார் பதிப்பாளரென்றாலும் என்னிடம் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருகிறேன் என்று ஹரன் பிரசன்னா லவுட் ஸ்பீக்கர் வைத்து கூவிக்கொண்டிருக்கிறார். அவரைப் பிடித்தால் காரியம் நடக்கும். haranprasanna@gmail.com இது அவரது மின்னஞ்சல்.


Copyright © 2008-2011 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 03, 2014 07:58

October 1, 2014

தொகுப்புக்கு உதவி தேவை

ஜனவரி சென்னை புத்தகக் கண்காட்சியில் என்னுடைய சிறுகதைகளின் தொகுப்பொன்றைக் கொண்டுவரலாம் என்று நினைத்தேன். நான் சிறுகதை எழுதி நாளாகிவிட்டது. ஆனால் இப்போதும் அவ்வப்போது யாராவது பழைய கதைகளைக் குறிப்பிட்டோ, புத்தகம் கேட்டோ எழுதுகிறார்கள். இன்று ஒளிப்பாம்புகள் எங்கே கிடைக்கும் என்று ஒரு நண்பர் மின்னஞ்சலில் கேட்டிருந்தார்.


மொத்தமாக இதுவரை எழுதியவற்றைத் தொகுத்து ஒரே புத்தகமாக்கலாம் என்று தோன்றியது. ஆனால் பல கதைகள் என் கைவசம் இல்லை. குறிப்பாக குமுதத்தில், ஜங்ஷனில், குமுதம் காலத்துக்குப் பிறகு பிற பத்திரிகைகளில் எழுதியவற்றை சேகரிக்காது இருந்துவிட்டேன்.


காந்தி சிலைக் கதைகள் வரை இருக்கிறது. அதன்பின் எழுதிய பல கதைகளை எங்கே போய்த் தேடுவது என்று தெரியவில்லை. பேப்பரில் எழுதிய காலம்.


நண்பர்கள் யாரிடமாவது அவர்களது சேகரத்தில் எனது சிறுகதைகள் ஏதேனும் (புத்தகமாக வந்தவை போக மற்றவை) இருக்குமானால் அனுப்பி உதவ வேண்டுகிறேன். இந்த உதவி செய்வோருக்கு நூல் வரும்போது அன்பின் அடையாளமாக ஒரு பிரதி அனுப்பப் பதிப்பாளர் தயாராக இருக்கிறார்.


இதனுடன் கூட தற்சமயம் பதிப்பில் இல்லாத புவியிலோரிடம், அலை உறங்கும் கடல், மெல்லினம் ஆகிய நாவல்களும் ஜனவரியில் மறு பிரசுரம் காண்கின்றன என்ற தகவல் ஒருவேளை ஒரு சிலருக்கு மகிழ்ச்சியும் வேறு சிலபலருக்குக் கலவரமும் தரலாம்.


Copyright © 2008-2011 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 01, 2014 10:56

காலமும் காந்தியும் கதைகளும்

[காந்தி சிலைக் கதைகள் தொகுப்புக்கு நான் முன்னர் எழுதிய முன்னுரையை இன்று காந்தி டுடே இணையத் தளத்தில் கண்டெடுத்தேன். பிழை திருத்தம் மட்டும் செய்து இங்கு மறு பிரசுரம் செய்கிறேன். சுநீல் கிருஷ்ணனுக்கு நன்றி.]


காந்தியை எனக்குப் பிடிக்கும். அவரை விமரிசிப்பதும், பிடிக்காது என்று சொல்லுவதும் ஒரு நாகரிகம் ஆகியிருக்கும் காலத்தில் இந்த ஒரு வரி கருத்து இலேசான புன்னகை வரவழைக்கலாம். உண்மையில், அத்தகையவர்களைப் பார்க்கும் போது பரிதாபமே ஏற்படுகிறது. என்னளவில் காந்தி என்றால் வழுக்கைத் தலையும் பொக்கை சிரிப்பும் கொண்டு புகைப்படங்களில் சிரிக்கும் கிழவர் அல்லர். அவர் எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கும் சுமார் பதினாறாயிரம் பக்கங்கள்.


சென்னை காந்தி மண்டபத்திலுள்ள சிறு நூலகக் கட்டடத்தினுள்ளே இருக்கிற புத்தகங்களின் மூலம்தான் காந்தி எனக்கு முறைப்படி அறிமுகமானார். முன்பெல்லாம் எழுதுவதற்காக அங்கே போவேன். எழுதாமல் அமர்ந்து படிப்பேன்.


பிரமாதமான மொழிநடை என்று சொல்ல முடியாது. கட்டுரைகளில் கோவை கூட ஆங்காங்கே உதைக்கும். உட்கார்ந்து மெனக்கெட்டு எடிட் செய்தால் மெருகு கூடும் என்று பல இடங்களில் தோன்றும். சில கட்டுரைகள் ரீரைட் செய்ய வேண்டும் என்றே தோன்றச் செய்யும். ஒருவேளை அதெல்லாம் மொழிபெயர்ப்பாளரின் கைங்கர்யமாகக்கூட இருக்கலாம்.


ஆனால் தன்னைத்தானே விதைத்துக்கொண்டு, தானே முளைவிட்டு, முட்டி மோதி மேலெழுந்து வந்து காற்றில் அலையும் ஒரு காட்டுக் கொடி போலத்தான் அவரது சிந்தனைகள் எனக்கு தோற்றமளித்தன . வேரிலிருந்து உச்சாணிக் கொண்டையில் துளிர்த்திருக்கும் கட்டக் கடைசி இலை வரை மருத்துவ குணம் கொண்ட மூலிகைக் கொடி அது.


ஒரு மனிதன் வாழ்நாள் முழுவதும் மானுட குலத்தின் நலனுக்காகவே சிந்தித்து இருக்கிறான் என்பது எப்பேர்பட்ட விஷயம்! ஏன் நம்மால் அதை, அதன் முழுப் பரினாமத்துடன் உணர முடியாமல் போய்விட்டது?


காந்தி ஓர் அரசியல்வாதி இல்லை. நிச்சயம் இல்லை. ஆனால் அவரை விடாப்பிடியாக அப்படியே பார்க்கப் பழகிவிட்ட மக்களுக்கு வேறு எந்த விதத்திலும் சிந்தித்துப் பார்க்க முடியமாலாகிவிட்டது. இது சந்தேகமில்லாமல் துரதிருஷ்டம் தான். அவர் ஒரு பரிபூரணமான சுய சிந்தனையாளர். பூமிக்கு மேலே, ஆகாயத்துக்குக் கீழே இருக்கிற அத்தனை விஷயங்கள் பற்றியும் ஆற அமர உட்கார்ந்து யோசித்திருக்கிறார். தான் யோசித்ததை, கண்டடைந்ததை , துளியும் குறை மிகையின்றி எழுத்திலும் பேச்சிலுமாகப் பதிவு செய்து இருக்கிறார். அவர் எழுதியவை பேசியவை அனைத்தையும் இன்னொரு வேதமாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. குறைந்தபட்சம் பொருட்படுத்திப் படித்துக் கூடப் பார்க்காமல் அவரை விமரிசிப்பவர்களை எண்ணித்தான் பரிதாபப்படுகிறேன்.


அவரது கிராம ராஜ்ஜியம் , சுதேசி பொருளாதாரம் போன்ற பிரயோகங்கள் இன்றைக்குத் தேர்தல் உபகரணங்களாகியிருக்கின்றன .தேவைக்கேற்பப் பயன்படுத்தப்பட்டபின் , ஆணுறை மாதிரி வீசி எறியப்படுகின்றன . உண்மையில் ஓரெல்லை வரை நடைமுறை சாத்தியம் உள்ள யோசனைகளையே அவர் தொடர்ந்து முன்வைத்து வந்து இருக்கிறார். முன் தீர்மானங்கள் ஏதுமின்றி காந்தியை அணுகிப் படித்தால் இது புரியும்.


இந்தக் கதைகளைப் பற்றிச் சொல்ல வந்தேன். கதாநாயகராகவும், துணைப் பாத்திரமாகவும் வெறும் சாட்சியாகவும் வழிப்போக்கராகவும் இன்னபிறவாகவும் இவற்றில் காந்தி வருகிறார். இந்த எல்லா கதைகளின் களனும் சென்னை மெரீனா கடற்கரையிலுள்ள காந்தி சிலையைச் சுற்றிய பகுதியாக அமைந்து இருப்பது தற்செயல் அல்ல. நிலவைக் காட்டி சோறூட்டுவது போல சிலையைக் காட்டி கதை சொல்ல விரும்பியதன் வெளிப்பாடு.


இந்தியாவைப் பொறுத்தவரை காந்தி ஒரு பொதுச் சொத்து. யார் வேண்டுமானாலும் சேதப்படுத்தலாம் என்றாகிவிட்டது. ஒரு மாறுதலுக்கு காந்தி ஜெயந்தி அல்லாத நாளில் கூட அவர் சிலையின் மீது படிந்து கிடக்கிற எச்சங்களைத் துடைத்து சுத்தப்படுத்தலாம் என்று நினைத்தேன், அதனால் இவற்றை எழுதினேன்.


பிரசாரம் என் நோக்கமில்லை . எனக்கு அது முடியவும் முடியாது. ஆனால் நமது வாழ்க்கைக்கு சம்பந்தமில்லாத எது ஒன்று பற்றியும் அவர் சிந்தித்ததில்லை, பேசியதில்லை என்பதை இந்தக் கதைகள் எழுதிய பொழுது தன்னால் வந்து விழுந்த பொருத்தங்கள் எனக்கு நிரூபித்தன. அதாவது, கதைகளைத் தீர்மானித்துவிட்டு நான் காந்தியப் பொருத்தம் தேடவில்லை. மாறாக, எழுதப்படும் எந்த ஒரு வாழ்க்கைச் சம்பவத்திலும் காற்றைப் போல அவரது சிந்தனைகள் மறைபொருளாகக் கலந்திருக்கக் கண்டேன்.


காலத்தால் கொள்ளை கொண்டு போகமுடியாத மிகச் சில அபூர்வமான சிந்தனையாளர்களுள் ஒருவர் அவர்.


இரு வருடங்களுக்கு முன்பு காந்தி சிலைக் கதைகள் எனும் பொதுத் தலைப்பில் இக்கதைகள் குமுதம் ஜங்ஷன் இதழில் வெளியாயின. வெளியான காலத்தில் கடிதங்கள் மூலம் இதனைப் பாராட்டி வரவேற்ற வாசகர்களை நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன். பல நண்பர்கள் அப்போதே இவற்றைத் தொகுத்து நூலாகக் கொண்டுவர வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்கள். இப்பொழுதுதான் அது சாத்தியமாகி இருக்கிறது.


எப்போதும் விமரிசகர்களுக்காக அல்லாமல் , எனக்காகவும் வாசகர்களுக்காகவும் மட்டுமே எழுதுபவன் நான். இதுகாறும் நான் எழுதிய சிறுகதைகளுள் எனக்கு மிகவும் திருப்தி தந்த கதைகள் இவை. அந்தத் திருப்தி வாசிப்பவர்களுக்கும் கிடைக்க வேண்டுமென்பது என் அவா.


[இக்கதைத் தொகுப்பின் மறுபதிப்பு டிசம்பர் 2014ல் மதி நிலையம் வெளியீடாக வரவிருக்கிறது.]


காந்தி சிலைக் கதைகள் – சுநீல் கிருஷ்ணன் மதிப்புரையை இங்கே காணலாம்.


Copyright © 2008-2011 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 01, 2014 06:47