Pa Raghavan's Blog, page 31

December 1, 2014

முன்னுரை மாதிரி

இந்தக் கட்டுரைகள் என்னை எழுதிக்கொண்டிருந்தபோது நான் கொஞ்சம் பிசியான காலக்கட்டத்தில் (கட்டத்தில் அப்போது ஆறு புள்ளிகளும் ஒன்பது கோடுகளும் இருந்தன) வாழ்ந்துகொண்டிருந்தேன். பள்ளி கிளம்பும் அவசரத்தில் குழந்தை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அம்மாவானவர் பின்னால் நின்றுகொண்டு “உம்! தலைய நிமித்து. நேரா பாரு! குனியாதடி சனியனே!” என்று அன்பாக எச்சரித்தபடி தலை பின்னிவிடுவது மாதிரிதான் இவை என்னை எழுதி எழுதவைத்தன.


ஒரு நாளைக்குக் குறைந்தது மூவாயிரத்தி ஐந்நூறு சொற்கள் எழுதியாக வேண்டிய துறையில் இருப்பவனுக்கு மோட்சம் தருபவை இந்த முன்னூற்று சொச்சம் சொற்களே. இது முள்ளை முள்ளால் எடுப்பது அல்ல. உண்ணும் விரதத்தை எலுமிச்சை ஜூஸ் கொடுத்துத் தொடங்கி வைப்பது மாதிரி.


ஒரு காலத்தில் பத்திரிகைகள் கேட்டாலொழிய என் கைக்கு எழுத வராமல் இருந்தது. பின்னொரு காலத்தில் வாரப் பத்திரிகைகள் அலுப்பூட்டத் தொடங்கியபோது அவற்றுக்கு எழுதுவதையும் வாசிப்பதையும் அறவே குறைத்தேன். இப்போதெல்லாம் ஏனோ கேட்டால்கூட எழுதத் தோன்றுவதில்லை. எனக்கே எனக்கான இணையத் தளத்தில் என்னிஷ்டத்துக்குக் கிறுக்கிக் கொள்வதில் ஒரு திருப்தி.


இதிலும் ஒரு காலத்தில் எத்தனை பேர் படிக்கிறார்கள், யார் யார் மறுமொழி தருகிறார்கள் என்று பார்ப்பேன். ஹிட் கவுண்ட், அலெக்ஸா ரேட்டிங் என்று ஆயிரத்தெட்டு அநாவசியங்களைவேறு சேர்த்து வைத்திருந்தேன். அதுவும் வேறொரு காலத்தில் விருப்பப் பட்டியலில் இருந்து உதிர்ந்து போனது. யார் படித்தால் என்ன? படிக்காது போனால் என்ன? எழுதத் தோன்றியது; எழுதினேன், படிக்கத் தோன்றினால் நானே படித்தும் கொள்வேன் என்றாகிப் போனேன்.


ஆனால் ஒன்று புரிந்தது. எந்த ஆரவாரமும் இன்றி சொந்த சந்தோஷத்துக்காக என்னவாவது எழுதிக் கிழித்துக்கொண்டிருந்தாலும் நமக்கென சில பிரத்தியேக வாசக ஜீவராசிகள் எப்படியோ வந்து சேர்ந்துவிடத்தான் செய்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் நமது வாழ்வின் ஒரு சில அத்தியாயங்களை வாழ்ந்தவர்களாகவோ அல்லது அவர்கள் வாழ நினைத்து இயலாது போன வாழ்வை வேடிக்கை பார்க்க வந்தவர்களாகவோ இருப்பார்கள்.


எல்லா எழுத்தும் தான் பிறக்கும்போதே தன் வாசகனையும் சேர்த்தே பிறப்பித்துக்கொள்கிறது.


O


இவை கதைகளா கட்டுரைகளா கட்டுக் கதைகளா என்று எனக்குத் தெரியாது. இவை நான் எழுதியவை. என்ன தோன்றுகிறதோ அவற்றை சென்சாரே செய்யாமல் அப்படியே இறக்கி வைத்தவை. சிரிக்கச் சிரிக்க எழுதுகிறீர்கள் என்றார்கள். சிரிப்பாய்ச் சிரிக்காத வரை சரி என்பதைத் தாண்டி என்னிடம் சொல்ல வேறில்லை.


இந்த சமூகத்துக்கு உபயோகமாக, என்னவாவது கருத்து சொல்லுவதாக, ஒரு சிந்தனை மரபை அடியொற்றியதாக, தத்துவத் தூதுவளை ரசம் பிழிந்து வைப்பதாக இவற்றில் ஒரு வரியும் உங்களுக்கு அகப்படாது என்பதே நான் ஒரு மனித நேயம் மிக்க எழுத்தாளன் என்பதை உங்களுக்குப் புரியவைக்கும்.


நவீன பேரிலக்கியப் புண்ணாக்கு வியாபாரங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. பல்லாண்டுக் காலமாக உடம்புக்கு காதி கிராஃப்டின் அபரஞ்சி சோப்பு போட்டுக் குளிக்கிறேன். மனத்துக்கு இது.


தீர்ந்தது விஷயம்.


பா. ராகவன்

டிசம்பர் 1, 2014


[வெளிவரவிருக்கும் இங்க்கி பிங்க்கி பாங்க்கி கட்டுரைத் தொகுப்புக்கான முன்னுரையாக எழுதியது.]


 


Copyright © 2008-2011 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 01, 2014 22:51

November 29, 2014

அட்டைப்படங்கள்

விலை விவரங்கள் பிறகு. மதி நிலையம் வெளியீடு

விலை விவரங்கள் பிறகு. மதி நிலையம் வெளியீடு


எதிர்வரும் சென்னை புத்தகக் கண்காட்சியில் எனது ஐந்து புத்தகங்கள் வெளிவருவது பற்றி முன்பே குறிப்பிட்டிருந்தேன். இங்கே அந்த அட்டைப்படங்கள். இவை தவிரவும் ஒன்றிரண்டு நூல்களின் மறுபதிப்புகளும் வெளிவரக்கூடும் என்று நினைக்கிறேன். உறுதியானதும் தெரிவிக்கிறேன்.


Copyright © 2008-2011 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 29, 2014 20:40

இங்க்கி பிங்க்கி பொம்மை

inki pinki panki


Copyright © 2008-2011 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 29, 2014 01:20

சந்து

சொல்ல சொல்லக் கேட்காமல், இந்தப் புத்தகத்துக்கும் நானேதான் அட்டைப்படம் வரைவேன் என்று வான்கா அழிச்சாட்டியம் பண்ணிவிட்டார். வேறு வழியில்லை.

santhuveli


Copyright © 2008-2011 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 29, 2014 01:17

அழகிய அட்டைப்படம்

ஒரு வழியாகக் கால் கிலோ காதல் நூலாகிறது. இந்த உலகத்தர காதல் காவியத்துக்குப் பொருத்தமான அட்டைப்படம் தேடி வெகுகாலம் அலைந்தபடியால்தான் இந்தத் தாமதம். இப்போது அகப்பட்டுவிட்டது.


kaalkilo


 


Copyright © 2008-2011 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 29, 2014 00:43

புதிய ஒப்பனை

நெடுங்காலமாகப் பதிப்பில் இல்லாதிருந்த அலை உறங்கும் கடல், புவியிலோரிடம் இரண்டும் இப்போது மீள் பிரசுரம் காண்கின்றன. ஜனவரி புத்தகக் காட்சியில் மதி நிலையம் இவற்றை வெளியிடுகிறது. அலை உறங்கும் கடல் அட்டைப்படமாக நீங்கள் காண்பது ஒரு புகைப்படமே. என் நண்பர் (இவர் நண்பரொருவர் அல்ல.) எஸ்.ஆர். சரவணன் எடுத்தது. சிலபல போட்டோஷாப் கைங்கர்யங்களுக்குப் பிறகு இந்த ஸ்திதியை இது அடைந்துள்ளது. புவியிலோரிடத்துக்கு அட்டைப்படம் வரைந்தவர் வின்செண்ட் வான்கா ;-)


puviil oridam alai urangum kadal


 


Copyright © 2008-2011 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 29, 2014 00:36

November 25, 2014

இங்க்கி பிங்க்கி பாங்க்கி

திட்டமிட்டபடி என் சிறுகதைகளின் முழுத் தொகுப்பை இந்த ஆண்டு கொண்டுவர முடியவில்லை. அது எதிர்பார்க்கும் கடும் ஊழியத்தைக் கொடுக்கத் தற்சமயம் என்னால் இயலவில்லை என்பதே காரணம். அடுத்த வருடம் பார்க்கலாம், ஆண்டவன் சித்தம்.


எதிர்வரும் ஜனவரி சென்னை புத்தகக் கண்காட்சி சமயம் கீழ்க்கண்ட என் நூல்கள் வெளியாகின்றன.


1) சந்து வெளி நாகரிகம் – ட்விட்டர் குறுவரிகள் தொகுப்பு


2) இங்க்கி பிங்க்கி பாங்க்கி – கட்டுரைத் தொகுப்பு


3) கால் கிலோ காதல் அரை கிலோ கனவு – நீள்கதை


4) புவியிலோரிடம் (நாவல் – மறுபதிப்பு)


5) அலை உறங்கும் கடல் (நாவல் – மறுபதிப்பு)


இதுவே ஜாஸ்தி என்று தோன்றுகிறது. விழா ஏதும் வைக்கப் போவதில்லை என்பதால் யாரும் கலவரமடையத் தேவையில்லை.


மேற்கண்ட நூல்கள் அனைத்தையும் மதி நிலையம் வெளியிடுகிறது. தொடர்புக்கு : mathinilayambook@gmail.com அல்லது arpee71@gmail.com .


Copyright © 2008-2011 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 25, 2014 21:37

November 19, 2014

செத்தான்யா!

வழக்கமாக என்னைப் பார்க்க வரும் நண்பர், நண்பரொருவர் இன்று மாலை மிகுந்த ஆவேசமுடன் வந்தார். அவர் வந்த நேரம் நான் முந்தானை முடிச்சு சீரியல் பார்த்துக்கொண்டிருந்தேன். பிரேமாவின் சதித் திட்டங்கள் ஆயிரம் எபிசோடுகளைத் தாண்டியும் தொடர்ந்துகொண்டிருக்கும் அற்புதத்தை விவரிக்க வார்த்தைகளே கிடையாது.


‘வாங்க. இன்னிக்கி அமர்க்களமான எபிசோட். உக்காருங்க’ என்றேன்.


‘சீ! என்ன மனுஷன் நீ. ருத்ரய்யா செத்துப் போயிட்டார். இப்படி சீரியல் பாத்துட்டிருக்கியே, வெக்கமா இல்ல ஒனக்கு?’ என்றார்.


எனக்கு அவரது தர்மாவேசத்தின் காரணம் புரிவதற்கும் அவர் ருத்ரய்யாவைக் குறித்துச் சிலபல சொல்லாடல்கள் நிகழ்த்தித் தன் துயரத்தைத் தணித்துக்கொள்ளவும்தான் வந்திருக்கிறார் என்பது புரிவதற்கும் சில வினாடிகள் ஆயின.


நல்லவேளையாக Ad break போட்டான். நான் வால்யூமை ம்யூட் செய்துவிட்டு அவர் பக்கம் திரும்பினேன். ‘காப்பி சாப்பிடறிங்களா சார்?’ என்று கேட்டேன்.


‘எனக்கு விஷயம் கேள்விப்பட்டதுலேருந்து சோறு தண்ணி இறங்கலய்யா. எப்பேர்ப்பட்ட கலைஞன். சே. ஒரு படம் போதும்யா. பின்னி பெடலெடுத்துட்டான்’ என்று சுவரின் இரண்டு பக்கங்கள் சேரும் கார்னரைப் பார்த்தபடி உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார்.


‘அவர் இன்னொரு படம் எடுத்திருக்கார் சார். கிராமத்து அத்தியாயம். பாத்திருக்கிங்களா?’


நண்பரொருவர் இப்படி திடுக்கிடுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ‘ஓ.. கிராமத்து அத்தியாயம்… கேள்விப்பட்டிருக்கேன். அவரோடதா அது? அப்ப அதுவும் நல்லாத்தான் இருக்கும்.’ என்று சொல்லி சில வினாடிகள் அமைதியாக இருந்தார். மீண்டும், ‘ஆனாலும் அவள் அப்படித்தான் மாதிரி ஒரு படம் தமிழ்ல வரவேயில்லய்யா.. டைட்டில் கார்டுலேருந்தே டைரக்டோரியல் டச் காட்டுவாரு.’


ருத்ரய்யா டைட்டில் கார்டில் என்ன டச் காட்டினார் என்று நான் யோசிக்க ஆரம்பித்தேன். கருப்பு வெள்ளை கார்டு. பின்னணியில் ஷூட்டிங் ஸ்பாட் குரல்கள் ஆங்காங்கே தூவப்பட்ட நினைவு. கமலஹாசன் குரல் கொஞ்சம் பெரிதாகக் கேட்கும். இது ரஷ்தான்; மெயின் பிக்சர் இல்லை என்று ஏதோ சொல்லுவார்.


‘அதான்யா! அதத்தான்யா சொல்றேன்! தன்னோட எண்ட் ரிய எப்படி எஸ்டாப்ளிஷ் பண்ணிட்டான் பாத்தியா? உலகத்தரத்துல ஒரு படத்த குடுக்கறவன் தன் படத்த ரஷ்னு சொல்றான்னா என்ன ஒரு தன்னடக்கம் பாரு!’


நான் யோசிக்கத் தொடங்கினேன். ஏனெனில், இந்த இடத்தில் ஏதாவது பேசினால் அவர் அதற்கு ஒரு கவுண்ட்டர் கொடுக்க ஆரம்பிப்பார். Ad break முடிவடையும் நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது.


‘மாற்று சினிமாவ முன்னெடுத்தவங்கள்ள இந்தாளு பெரிய முன்னோடிய்யா. வண்ணநிலவன எல்லாம் வேற யாரு சினிமாவுக்கு இழுத்துட்டு வருவாங்க?’


‘கே. ராஜேஷ்வர கண்டெடுத்தவரும் அவர்தான் சார்! எதோ ஒரு படத்துல யாரோ ஒருத்தி புடவைய இழுத்து விட்டுக்கிட்டு தொடைய காட்டிக்கிட்டு மசாலா அரைக்கற மாதிரி ஒரு ஷாட் வெச்சிருப்பாரு.. சிங்கிள் ஷாட்டு சார்! அவ ஏன் இட்லிக்கு அரைக்காம மசாலா அரைக்கறான்னு மட்டும் யோசிச்சிட்டா போதும். டோட்டல் கதையே கன்வே ஆயிரும். பெரிய கலைஞன். சே.’ என்றேன் அவரைப் போலவே.


நண்பரொருவர் திடுக்கிட்டுப் பார்த்தார். நான் சொன்னதன் சாராம்சம் ரொம்ப மெதுவாக அவருக்குள் இறங்கிக்கொண்டிருக்க வேண்டும். பிடிக்கவில்லையோ என்னமோ.


‘ருத்ரய்யாட்ட அதெல்லாம் கிடையாது. க்ளியரா அந்தாளு ஒரு கலைஞன்.’


‘அந்தப் படத்துல கூட ஒருத்திய குத்தாட்டம் போட வெச்சி கமல் ஷூட் பண்ணுவாரு இல்ல?’ – இது நான்.


நண்பரொருவருக்கு சுரீரென்று கோபம் வந்துவிட்டது. நாற்காலியை உதைத்துத் தள்ளிவிட்டு எழுந்தார். ‘என்ன பேசற நீ? நீ படத்த பாத்தியா இல்லியா? ஒனக்கு புரிஞ்சிதா இல்லியா? தமிழ்ல பெண்கள் பெருமைப்பட்டுக்கற மாதிரி எடுக்கப்பட்ட ஒரே படம் அதுதான்! அதப் போயி அசிங்கமா விமர்சனம் பண்ணிக்கிட்டு. சுத்த நான்சென்சா இருக்கியே?’


எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. சாரி சார் என்று அவசரமாகச் சொன்னேன். Ad break முடிந்து சீரியல் தொடங்கிவிட்டதை கவனித்தேன். ஆனால் இன்று பார்க்க முடியாது. மனம் கனக்க தொலைக்காட்சியை ஆஃப் செய்துவிட்டு என் லேப்டாப்பை எடுத்து வந்து விரித்தேன்.


‘என்ன பண்ற?’ என்றார் நண்பரொருவர்.


‘ருத்ரய்யாவ ஞாபகப்படுத்திட்டிங்க. யூட்யூப்ல அந்தப் படம் ஃபுல்லா இருக்கு. ஒரு தடவ பாத்துரலாம்னு…’


நண்பரொருவர் சுவாரசியமாகிவிட்டார். ‘முழுப்படமும் நெட்ல பாப்பியா? துட்டு பழுத்துராது?’


‘சேச்சே. ப்ராட்பேண்ட் கனெக்‌ஷன் இருக்கு சார். முப்பது ஜிபி லிமிட்டு. ருத்ரய்யாவுக்காகக் கொஞ்சம் போனா தப்பில்ல.’


அவர் தனது நாற்காலியை என் நாற்காலிக்கு நெருக்கமாக இழுத்துப் போட்டுக்கொண்டு அமர்ந்து ஒரு குழந்தையின் ஆர்வத்துடன், ‘அப்படின்னா கத்தி படம் இருந்தா போடேன். வீட்ல என் சன் பாத்துட்டிருந்தான்.. பிக்சர் குவாலிடி நல்லால்ல. நெட்ல ஹெச்டி வர்ஷன் வந்திருக்கும்ல?’


Copyright © 2008-2011 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 19, 2014 06:07

November 17, 2014

நாசமாய்ப் போகும் கலை

புத்தக வெளியீட்டு விழா வைக்காவிட்டால் எழுத்தாளனே இல்லை என்றார் நண்பரொருவர் என்னும் நண்பர் ஒருவர்.


தூக்கிவாரிப் போட்டது எனக்கு. என் பேர் தாங்கிய ஐம்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் சந்து பொந்துகளில் உலவிக்கொண்டிருக்கின்றன ஐயா! என்று சொல்லிப் பார்த்தேன்.


ம்ஹும். அதெல்லாம் கணக்கிலேயே சேராது என்று அடித்துச் சொல்லிவிட்டார்.


‘ஒரு புத்தகம் வருகிறதென்றால் மூன்று மாதங்களுக்கு முன்னால் அதைப் பற்றிப் பேசத் தொடங்கிவிடவேண்டும். முடிந்தால் நாலைந்து திசைகளில் இருந்து ஏழெட்டுப் பேரை நியமித்து திட்டியோ கண்டனம் செய்தோ நக்கலடித்தோ எழுத வைக்கலாம். பதில் கணைகளைத் தொடுப்பதற்கு ஒரு தொண்டர் படை தயாராயிருக்க வேண்டும். அவர்கள் கண்மூடித்தனமாக புத்தகத்தை ஆதரிக்கும் போர்வையில் உன்னை ஆதரித்துப் பேசவேண்டும்…’


‘யோவ் நான் என்ன கட்சியா நடத்துகிறேன்?’


‘அதெல்லாம் அப்படித்தான். இதோ எழுதுகிறேன்.. முடிக்கப் போகிறேன்.. மூணேகால் வரி மிச்சம்.. அடடா, மூட் போய்விட்டது என்று அவ்வப்போது அப்டேட் தரவேண்டும்.’


‘பிறகு?’


‘டோராபோரா மலைத் தொடரில் ஒரு சைக்கிள் பயணம் மேற்கொண்டுவிட்டு வந்து போன மூடைத் திரும்பப் பிடிக்கிறேன் என்று சொல்லிவிட்டு பத்து நாள் இணையப் பக்கம் வராமல் இருக்கவேண்டும்..’


‘ஆப்கனிஸ்தானுக்கெல்லாம் இப்போது போக சாத்தியப்படாதே.’


‘உன்னை யார் அங்கே போகச் சொன்னார்கள். மொட்டை மாடிக்குப் போய் குவாட்டர் அடித்துவிட்டுக் குப்புறக் கிட, போதும்.’


நண்பரொருவருக்கு என்னவோ ஆகிவிட்டது என்று தோன்றியது. அவருக்கு ஒரு கமர்ஷியல் போராளியின் கல்யாண குணங்களை எடுத்துச் சொல்லி விளக்கத் தொடங்கினேன். விழாக்கள் வீண் செலவு. சமோசா காப்பி சாப்பிடத்தான் கூட்டம் வருமே தவிர ஒரு பயல் அங்கே புத்தகம் வாங்கமாட்டான்.


‘நீ ஒரு முட்டாள்!’ என்று ஆவேசமாக எழுந்து குற்றம் சாட்டினார் நண்பரொருவர். என்னடா இப்படி உண்மை பேசுகிறாரே என்று கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தாலும் சமாளித்துக்கொண்டு, ‘எப்படிச் சொல்கிறீர்கள்?’ என்று இரு கட்சிக்கும் பொதுவில் கேட்டு வைத்தேன்.


‘விழா வைப்பது புத்தகம் விற்க என்று யார் சொன்னது?’


இப்போது மீண்டும் எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. இப்படி ஒரே நாளில் பலமுறை தூக்கிவாரிப் போட்டால் எலும்பெல்லாம் கழண்டுவிடும். எனவே இனிமேல் தூக்கிவாரிப் போடாமல் பார்த்துக்கொள்ளத் தீர்மானித்தேன்.


‘வேறு எதற்கு விழா வைப்பது?’


‘அப்போதுதான் நீ பிரபலமாவாய்’


இங்கே நான் யோசிக்கத் தொடங்கினேன். நான் ரெகுலராகப் போகும் மாவா கடை சேட்டு மற்றவர்களுக்கு அரைப்பது போல எனக்கு அரைப்பதில்லை. ரெண்டு சிட்டிகை குங்குமப்பூ, ஜாதிக்காய் எசன்ஸ் சேர்த்து எனக்குத் தனியே அரைத்துத் தருவான். ரைட்டர் சார் என்று அன்போடு கூப்பிடுவான்.


நான் வழக்கமாக பெட் ரோல் போடும் பங்க்கின் முதலாளி என் வாசகர். ஓடி வந்து கையைப் பிடித்துக் குலுக்குபவர். எனவே அவரது கடைப் பையன்கள் என் வண்டிக்கு பெட் ரோல் போடும்போது ஏமாற்றுவதில்லை.


என் மகள் படிக்கும் பள்ளிக்கூடத்தின் அலுவலகப் பணியில் இருக்கும் ஒரு பெண்மணியும் என் வாசகர்தான். எதற்காகவாவது நான் போகவேண்டி வந்தால், யாருக்கும் காத்திராமல் காரியத்தை முடித்துக்கொண்டு வந்துவிட முடியும்.


அட, வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் பெட்டிக்கடைக்காரன் என் வாசகனில்லை என்றாலும் நானொரு எழுத்தாளன் என்று அறிந்தவனாயிருக்கிறானே. ஒரு அவசரத்துக்கு அப்புறம் தருகிறேன் என்று சொல்லிவிட்டு என்னவேண்டுமானாலும் வாங்கிச் செல்ல முடிவதைக் காட்டிலும் வேறென்னதான் பிரபலத்தின் கல்யாண குணம்?


‘முட்டாள், முட்டாள், சர்வ முட்டாள்! உலகம் உன் பேட்டையோடு முடிந்துவிடுவதில்லை. பிரபலம் என்றால் மாநிலம் முழுதும் தெரிவது. முடிந்தால் நாடு முழுவதும் தெரிவது.’ என்றார் நண்பரொருவர்.


அதற்கு நான் நயந்தாராவாகப் பிறந்திருக்க வேண்டும். நான் எதற்கு நாடு முழுதும் தெரியவேண்டும்? என் புத்தகம் போய்ச் சேர்ந்தால் போதாதா?


ஒரு கணம் என்னை ஒரு சேற்றுப்புழுவைப் போல் பார்த்தார். ‘இதோ பார்! கவர்னர் மாளிகை விழா மண்டபம் வாடகைக்குக் கிடைக்கிறதா என்று கேள். ஒரு ஸ்பான்சர் பிடித்து வாடகைப் பணத்தைக் கட்டிவிடு. கமலஹாசனெல்லாம் வேண்டாம். அமிதாப் பச்சனைக் கூப்பிட்டு புத்தகத்தை வெளியிடச் சொல்லு. முதல் பிரதியைப் போனால் போகிறது; அவரது மருமவப் பொண்ணையே வாங்கிக் கொள்ளச் சொல்லிவிடலாம்.’


‘இதென்ன அக்கிரமம்? கவர்னர் மாளிகையில் விழா ஏற்பாடு செய்துவிட்டு ரோசய்யாவைக் கூப்பிடாதிருப்பது தவறல்லவா? அவர் நல்லி செட்டியார் போல விழாக்களுக்காகவே அவதரித்தவர் அல்லவா?’


‘கலர் கெட்டுவிடும். நான் சொல்வதை மட்டும் கேள். வாழ்த்திப் பேச நாலு பேர் வேண்டும். லோக்கல் சினிமா உலகத்தில் இருந்து ஒருத்தர். கேரள சினிமாவிலிருந்து ஒருத்தர்…’


இங்கே நான் இடைமறித்தேன். ‘ஒய் நாட் ஷகிலா?’


நண்பரொருவர் ஒரு கணம் யோசித்துவிட்டு, ‘நாட் எ பேட் ஐடியா. ரேஷ்மாவைக் கூட முயற்சி செய்யலாம். இதெல்லாம் பின்னவீன உத்தியில் சேரும்’ என்றார்.


எனக்குத் தூக்….


வேண்டாம், வலிக்கும். மேலே சொல்லுங்கள் என்றேன்.


‘யாராவது போலிஸ் உயரதிகாரிக்கு மேடையில் இடம் கொடுப்பது நல்லது. மண்டபத்துக்கு வெளியே விளக்கு வைத்த ஜீப்பும் காரும் நின்றால் ஒரு கெத்து.’


அடேங்கப்பா.


‘முக்கியமான விஷயம், டிவி சேனல் கவரேஜ். முடியாவிட்டால் யூட்யூப் லைவ் கவரேஜ்.’


எல்லாமே இரண்டு மணிநேர விழாவுக்கா? முடிந்து வீட்டுக்குப் போய்ப் படுத்தால் பொழுது விடிந்துவிடுமே ஐயா! என்றேன் பரிதாபமாக.


நண்பரொருவர் சிரித்தார். ‘அதுதான்! அதுதான்! அன்று விடியும் பொழுதில் நீ வீட்டை விட்டு வெளியே வந்தால் பார்க்கிறவர்கள் பார்வை எப்படி இருக்கும் என்று யோசித்துப்பார்!’


யோசித்துப் பார்த்தேன். மாவா சேட் என்னைப் பார்ப்பதே இல்லை. பரபரவென்று வேலையை முடித்து என்னைச் சீக்கிரம் அனுப்பிவைக்கும் தீவிரம்தான் அவனுக்கு. பெட் ரோல் பங்க் ஊழியரும் என்னைப் பார்ப்பதில்லை. டேங்க்கைத்தான் பார்ப்பார்.


‘நீ ஒரு வடிகட்டிய முட்டாள். பஸ்ஸில், ரயிலில் போகும்போது.. பொது இடங்களில் நடக்கும்போது…’


நான் பஸ், ரயிலில் போவதில்லை. கட்டணக் கழிப்பிடம் தவிர வேறு பொது இடங்களுக்கும் செல்வதில்லை. எழுதுவதற்கே நேரம் சரியாக இருக்கிறதே என்றேன்.


‘சே.. ஒரு கறிகாய் வாங்கப் போகமாட்டாயா? ஒரு சலூனுக்கு? சூப்பர் மார்க்கெட்டுக்கு?’


‘சொன்னேனே. பெட்டிக்கடைக்காரப் பிள்ளைக்கு ஏற்கெனவே நான் ஒரு எழுத்தாளன் என்று தெரியும். சலூன் முனியசாமி பலகாலமாக என்னிடம் சினிமா சான்ஸ் கேட்டுக்கொண்டிருப்பவன். சூப்பர் மார்க்கெட்டெல்லாம் என் மனைவி டிபார்ட்மெண்ட்.’


‘நீ நாசமாய்ப் போ’ என்று நாற்காலியை உதைத்துத் தள்ளிவிட்டு நண்பரொருவர் எழுந்துவிட்டார்.


அதைத்தானே இத்தனை காலமாகச் செய்துகொண்டிருக்கிறேன்?


Copyright © 2008-2011 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 17, 2014 21:58

November 16, 2014

நக்கிப் பார்த்த கதை

நான் சாப்பிட்டுக்கொண்டிருந்த மேசையின் எதிர் இரு நாற்காலிகளுக்கு அந்த ஜோடி வந்து அமர்ந்தது. சர்வரானவன் பணிவுடன் நெருங்கி என்ன சாப்பிடுகிறீர்கள் என்று கேட்டான். (நான் தமிழர் உணவான தோசை சாப்பிட்டுக்கொண்டிருந்தேன்.) ஜோடியில் ஆணாக இருந்தவன் ஏதோ சொல்ல வாயெடுக்க, ‘நீ இரு மஹேஷ், நான் சொல்றேன்’ என்று அவனைத் தடுத்துவிட்டு பெண்ணாக இருந்தவள் சொல்லத் தொடங்கினாள்.


பனீர் புலாவ் ஒரு ப்ளேட். ஜீரா ரைஸ் ஒரு ப்ளேட். கோபி மஞ்சூரியன் அப்பறம் கடாய் பனீர். ஏய் ஒனக்கு வேற என்ன வேணும்?


அவன் தன் பங்குக்கு சில வினாடிகள் யோசித்துவிட்டு பட்டர் நான் ஒண்ணு என்றான். குறிப்பெடுத்த சர்வர் நாலடி போனதும் ஸ்ட்ராபெரி ஐஸ் க்ரீம் என்று ஒரு சத்தம்.


நான் தோசையை ஒரு விள்ளல் வாயில் போட்டுக்கொண்டேன். அந்தப் பெண் தன் நாற்காலியை அந்த மஹேஷுக்கு இன்னும் நெருக்கமாக இழுத்துப் போட்டுக்கொண்டு அவனது சாப்பிடும் கையை இழுத்து வளைத்து கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள். விட்டால் பில்லுக்குப் பணம் கொடுக்காமல் ஓடிவிடுவானோ என்னமோ.


நீயே சொல்லு மஹேஷ். டாட் பண்றது நியாயமே இல்ல. இவர யாரு என் காலேஜுக்கு வந்து வெயிட் பண்ண சொன்னது? அட்லீஸ்ட் நான் வரப் போறேன்னு எனக்கு ஒரு போனாவது பண்ணியிருக்கணுமா வேணாமா? அப்பறம் நான் ஒன்னவர் நின்னேன், ஒன்ன காணம், எங்க சுத்தப் போனேன்னு ஒரு கேள்வி. செம கடுப்பு தெரியுமா.


லீவ் இட் ஐ ஸே. அப்பால்லாம் அப்படித்தான்.


உங்கப்பா அப்படியா?


நாம அப்பாங்கள பத்திப் பேசுறதுக்கா வந்தோம்?


சீ என்று அவன் கன்னத்தில் செல்லமாக ஒரு இடி இடித்தாள். நான் இன்னொரு தோசை சொல்லலாமா அல்லது பூரிக்குத் தாவிவிடலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தபோது சர்வரானவன் என் எதிரணியினர் ஆணையிட்ட பலகாரங்களை எடுத்து வந்து பரப்பி வைத்தான்.


சின்னச் சின்ன வாணலிகளில் எண்ணெய் மினுங்கத் ததும்பி வழியும் குருமா ரகங்கள். ஆ, ஜீரா சாதம். இது இனிப்பாயிருக்குமா அல்லது வெறும் நெய் சாதமா என்று எனக்குப் பலகாலமாக சந்தேகம் உண்டு. கேட்டுவிடலாமா என்று யோசித்தேன்.


அதற்குள் அவள் கிண்ணங்களில் இருந்த இருவேறு விதமான சாப்பாட்டைத் தட்டுக்குத் தள்ளி, இரு தட்டுகளிலும் சைட் டிஷ்களை எடுத்து ஊற்றினாள். அவன் ஒரு வாய் எடுத்து சாப்பிட்டான்.


சீ, பேட் பாய் என்று அவள் சொன்னாள். உடனே அவன் ஏன் பேட் பாய் ஆனான் என்பதை அவனுக்குப் புரியவைக்கும் விதமாக ஸ்பூனால் கொஞ்சம் சோற்றை எடுத்து அவன் வாயில் ஊட்டினாள். அவன் பதிலுக்கு சிரித்தபடி அவள் கன்னத்தை வலிக்காமல் ஒரு கிள்ளு கிள்ளி எடுத்து சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிட்டான்.


பொறுக்கவில்லை போலிருக்கிறது. அவன் கையில் இருந்த ஸ்பூனை அவள் வாங்கி வைத்தாள். கவனமாக இப்போதும் அவனிரு கைகளை எடுத்துத் தன் கைகளுக்குள் பதுக்கிக்கொண்டு, ஷாப்பிங் போணும்டா. ரொம்ப வேலையிருக்கு. இன்னர்ஸ் வாங்கணும். செப்பல் வாங்கணும். காஸ்மெடிக்ஸ் ஐட்டம்ஸ் கொஞ்சம் வாங்கணும். லாஸ்ட் சண்டே போலாம்னு நெனச்சேன். ம்ருதுளா வரேன்னு சொல்லி லாஸ்ட் மினிட்ல கவுத்துட்டா.


அவனுக்குக் கோபம் வந்துவிட்டது. நீ ஏன் அவள கூப்ட்ட. எனக்கு போன் பண்ணியிருக்கலாம் இல்ல? சீ இல்லப்பா. நீ ப்ராஜக்ட் இருக்குன்னு சொன்னதால ஒன்ன டிஸ்டர்ப் பண்ணவேணான்னு நெனச்சேன்.


பேச்சு வாயின் செயல். அவள் ஒரு கையை விடாமல் பிடித்துக்கொண்டு மறு கையால் நிறுத்தாமல் அவன் தலைமுடி, காது, கன்னம், தோள்பட்டை என்று எங்கெங்கோ இருக்கும் பாக்டீரியா, அமீபா, வைரஸ்களைத் தட்டிவிட்டுக்கொண்டே இருந்தாள்.


குட்டி கொஞ்சம் ஷோக்காகத்தான் இருந்தாள். யார் பெத்த பெண்ணோ. இருபது, இருபத்திரண்டு வயதுதான் இருக்கும். அந்தப் பையன் என்னை மாதிரி கருப்புதான் என்றாலும் ஏதோ ஒரு வசீகரம் இருந்த மாதிரி தெரிந்தது. ஒருவேளை என் கண்ணில் பழுதாகவும் இருக்கலாம். அவன் யார் பெத்த பிள்ளையோ. ஏய் வாட்ஸ் திஸ்? என்று அப்போதுதான் பார்ப்பது போல அவள் காதில் தொங்கிக்கொண்டிருந்த என்னமோ ஒரு வளையத்தைத் தொட்டுப் பார்த்தான்.


நீ பாக்கல இல்ல? ரொம்ப நாளா இத காணம்னு தேடிட்டிருந்தேன் தெரியுமா. எப்படி தொலைஞ்சிதுன்னே தெரியல. லாஸ்ட் இயர் வெக்கேஷனுக்கு ஆக்ரா போயிருந்தப்ப கிடைச்சிது. நல்லாருக்கில்ல?


அவன் ஏதோ சொன்னான். அவளை மேலும் நெருங்கி அந்தக் காது வளையத்தின் ஊடாக காதுக்குள்ளேயே சொன்னபடியால் எனக்குக் கேட்கவில்லை. நான் டேபிளைப் பார்த்தேன். அவர்கள் இன்னும் சாப்பிடவே ஆரம்பித்திருக்கவில்லை.


சீ இல்ல மஹேஷ். காட் ப்ராமிஸா இல்ல தெரியுமா.


காதுக்குள் வேறென்னவோவும் சொல்லியிருக்க வேண்டும். அவள் மிகவும் அழகாக சிணுங்கத் தெரிந்தவளாயிருந்தாள். அவன் அவளது சிணுங்கலை அதிகரித்துப் பார்க்க ஆசைப்பட்டு மேலும் நெருங்கி, மேலும் குனிந்து கிட்டத்தட்ட அவள் மடியில் படுக்கிற உத்தேசத்துடன் என்னவோ செய்துகொண்டிருந்தபோது சர்வர் அந்த பாழாய்ப் போன ஐஸ் க்ரீமையும் எடுத்து வந்து தொலைத்தான்.


வெச்சிருங்க. ஏய் ஐஸ் க்ரீம் சாப்பிடறியா?


எழவு இதிலென்ன இத்தனை கண்ணகட்டல், பரவசப் பீறிடல்! எனக்கு பற்றிக்கொண்டு வந்தது.


அவள் ஐஸ் கப்பைக் கையில் ஏந்திக்கொண்டாள். ஒரு ஸ்பூன் எடுத்து சாப்பிட்டுப் பார்த்தாள். பரவாயில்லை. கசக்கவில்லை. இந்தா மஹேஷ் என்று அவனுக்கு ஒரு வாய் ஊட்டினாள். எனக்கோ கிளுகிளுவென்று பற்றிக்கொண்டு வந்தது. பல்லைக் கடித்து அடக்கிக்கொண்டேன். இரண்டாவது ஸ்பூனை அவள் எடுத்தபோது அவன் லபக்கென்று அதைப் பிடுங்கி அவளுக்கு ஊட்டிவிட்டான். சீய்ய்.


இதன் பிறகு நடந்ததுதான் உச்சம். ஒழுங்காக ஊட்டிவிட்டுக்கொண்டு சாப்பிட்டுத் தொலைக்க வேண்டியதுதானே? மஹேஷானவன் சற்றும் எதிர்பாராத ஒரு கணத்தில், அவள் ஊட்டிவிடுவது போல எடுத்துச் சென்று ஐஸ்க்ரீமை அவன் மூக்கில் தேய்த்துவிட்டாள். பதிலுக்கு அவனும் அவள் மூக்கில் ஒரு சொட்டு ஐஸ் க்ரீமைத் தடவி கணக்குத் தீர்க்க, பெண்குலம் என்ன அத்தனை லேசுப்பட்டதா? ஒன்ன….. என்று போலிக் கோபமுடன் அப்படியே அவன் பின்னந்தலையைப் பிடித்து ஒரு இழு இழுத்தாள். நெற்றி முட்டிக்கொள்ள, அவன் மூக்கில் இருந்த ஐஸ் க்ரீமை தவளை போல் சரேலென நாக்கு நீட்டி ஒரே நக்கு.


தமிழன் தோசைத் தட்டைத் தள்ளி வைத்தான். ஒரு முடிவுடன் எழுந்து நின்று, ஸ்டாப் இட் என்றான்.


இருவரும் என்னை ஒரு வேற்று கிரக ஜந்து திடீரென எங்கிருந்து முளைத்தது என்பது போலவும், அப்போதுதான் என்னை முதல் முறை பார்ப்பது போலவும் பார்த்தார்கள்.


‘இதோ பாருங்கள், நீங்கள் செய்வது நியாயமே இல்லை. ஒரு பனீர் புலாவ் 120 ரூபாய். ஜீரா ரைஸ் 125 ரூபாய். கடாய் பனீரும் கோபி மஞ்சூரியனும் தலா 90 ரூபாய். பத்தாத குறைக்கு பட்டர் நான் வேறு. எல்லாம் ஆறி அவலாகிப் போய்விட்டது. இதற்குமேல் இவற்றை நாய்கூடத் தின்னாது. கேவலம் பத்து ரூபா கப் ஐஸுக்குக் கொடுக்கிற மரியாதையை இவற்றுக்குக் கொடுக்க விருப்பமில்லை என்றால் என்ன எழவுக்கு இதையெல்லாம் ஆர்டர் செய்தீர்கள்? இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்குப் பணத்தின் அருமையே தெரியவில்லை. சே.’


ஆவேசம் கொப்பளிக்கத் திட்டிவிட்டு வெளியே வந்த பிறகுதான் நான் சாப்பிட்ட தோசைக்கு பில் வராதது நினைவுக்கு வந்தது.


Copyright © 2008-2011 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 16, 2014 11:16