Pa Raghavan's Blog, page 30

December 25, 2014

இந்த வருடம் என்ன செய்தேன்?

கடந்த பத்தாண்டுகளில் இந்த வருடம்தான் மிக அதிகமாகப் படித்தேன் என்று நினைக்கிறேன். எப்படியும் நூறு புத்தகங்களுக்குக் குறையாது. தினசரி படுக்கப் போகுமுன் கண்டிப்பாக ஐம்பது பக்கங்கள் என்று கணக்கு வைத்துக்கொண்டேன். அதே மாதிரி சந்தியா காலங்களில் தலா இருபத்தி ஐந்து பக்கங்கள். திருக்குறளுக்கான பரிமேலழகர் உரையை முழுதாக வாசித்து முடித்தேன். ஆனால் அவ்வப்போது எடுத்து வைத்த குறிப்புகளில் ஒன்றைக்கூடப் புரட்டிப் பார்க்க நேரம் கிட்டவில்லை. இந்த வருடம் சினிமா தொடர்பாக நிறைய புத்தகங்கள் படிக்க நேர்ந்தது. ஆனால் பெரிதாக எதுவும் மனத்தில் நிற்கவில்லை. வாசித்ததில், தமது தந்தையாரைக் குறித்து ஏவிஎம் குமரன் எழுதிய புத்தகம் மகத்தான ஏமாற்றமளித்ததைச் சொல்லவேண்டும். இதைக் காட்டிலும் ஏவிஎம்மே எழுதிய (அவர் சொல்லி, பால்யூ எழுதிய) தன் வரலாறு அருமையாக இருக்கும். மணிரத்னத்தின் சினிமா படிக்க ஆரம்பித்துப் பாதியில் நின்றுவிட்டது. முடிக்க முடியுமா என்று தெரியவில்லை. மகாத்மா காந்தி நூல்களின் முழுத்தொகுப்பு வாங்கியிருக்கிறேன். ஜனவரி முதல் அதுதான். அடுத்த வருடம் முழுவதற்கும்.


O


சென்ற வருடம் மானாவாரியாக ஏகப்பட்ட சீரியல்கள் செய்துகொண்டிருந்தேன். இவ்வருடம் அவற்றைக் கணிசமாகக் குறைத்தேன். அப்படியும் நேரம் போதாத அவஸ்தை தொடரவே செய்கிறது. ஆறு சீரியல்களுக்கு எழுதிக் கொண்டிருந்த அதே நேரத்தில் இப்போது இரண்டு, மூன்று எழுதவே நாக்கு தள்ளுகிறது. கடந்த மே முதல் இன்றுவரை ஐந்து அழைப்புகளை மரியாதையுடன் வேண்டாமென்று நிராகரித்திருக்கிறேன். இதனால்தான் கொஞ்சமாவது படிக்க முடிந்திருக்கிறது என்பதை விழிப்புடன் கவனிக்கிறேன்.


ajanthaஇந்த வருடப் படுதோல்வி என்றால் செல்லக்கிளி. கிளி ஏன் பாதியில் செத்தது என்று இன்றுவரை புரியவில்லை. சீரியல் நன்றாகவும் ரேட்டிங் ஒழுங்காகவும் இருந்தும் ஏனோ நூறு எபிசோட்களில் முடித்துவிடச் சொல்லிவிட்டார்கள். அத்தனை அதிகாலை ஸ்லாட்டிலும் நிறையப் பேரை நிமிர்ந்து உட்காரச் செய்த இயக்குநர் செந்தில்குமாரின் தொடர்பும் நட்பும்தான் அதன் ஒரே மகிழ்ச்சி.


இந்த வருடம் புதிதாக ஒப்புக்கொண்டு, இன்றுவரை சிறப்பாகப் போய்க்கொண்டிருப்பது கல்யாணப் பரிசு. பகல் நேரத் தொடர்களில் அது முதலிடத்தை பிடித்திருப்பது டிசம்பரின் மகிழ்ச்சி.


இரண்டு வருடங்களைக் கடக்கும் வாணி ராணியில் அதே உற்சாகத்துடன் எழுதிக்கொண்டிருக்கிறேன். பூரண சுதந்தரமென்பது இங்கு கிடைப்பதுதான். இதை எழுதிக்கொண்டிருக்கும் நேரம், அஜந்தா டிவி அவார்ட்ஸின் இந்த வருட சிறந்த வசனகர்த்தா விருது வாணி ராணிக்காக எனக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் செய்தி வந்திருக்கிறது. வாணி ராணி வசனத்துக்குக் கிடைக்கும் இரண்டாவது விருது இது.


O


நவம்பர் வரை ஒரு படம் கூடப் பார்க்க முடியவில்லை. சென்ற மாதம் மூச்சைப் பிடித்துக்கொண்டு ஒரு மாத கல்யாணப் பரிசுக்கான காட்சிகளை ஒரே மூச்சில் எழுதி அனுப்பிவிட முடிந்ததால் சேர்ந்தாற்போல் ஒரு ஏழெட்டு நாள் ஓய்வு கிடைத்தது. அந்த நேரத்தில் சில படங்கள் பார்த்தேன். பார்த்ததில் பிடித்தது திருடன் போலிஸ். அடுத்தபடியாக அப்புச்சி கிராமம். எப்படியும் முகமூடி பார்த்துவிடுவேன். நான் போவதற்குள் அது போய்விடாதிருக்க வேண்டும்.


O


வருடம் முழுதும் ஒரு வெளியூர்ப் பயணம் கூட இல்லை என்பது மிகுந்த வருத்தம் தருகிறது. சென்ற முழு வருடப் பரீட்சை முடிந்ததும் எங்காவது போகலாமா என்று மகள் கேட்டாள். பதில்கூடச் சொல்ல முடியாமல் ரொம்ப வெட்கப்பட்டேன். அடுத்த வருடம் இம்மாதிரி இருக்கக்கூடாது என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன்.


O


roomபல்லாண்டுகாலக் கனவு இந்த வருடம் நனவானது. புண்ணிய க்ஷேத்திரமாம் குரோம்பேட்டையில் சொந்தமாக ஒரு ஃப்ளாட் வாங்கிக் குடிபோனேன். என் உத்தியோகத்துக்குக் கோடம்பாக்கம்தான் சரி என்றாலும் வம்படியாக இங்கே வந்து உட்கார்ந்துகொண்டு வேலை பார்த்துக்கொண்டிருக்கிறேன். வாரத்தில் ஓரிரு தினங்களாவது வீட்டில் தங்கமுடியாமல் போகிறது. இருப்பினும் என் விருப்பத்துக்கேற்ற வசதிகளுடன் அமைத்துக்கொண்ட இந்த எழுதும் அறை என்னளவில் ஒரு சாதனை.


O


அடித்துப் பிடித்து ஜனவரிக்கு மூன்று புதிய புத்தகங்களைக் கொண்டுவந்துவிடுகிறேன். சந்து வெளி நாகரிகம், இங்க்கி பிங்க்கி பாங்க்கி, கால் கிலோ காதல் அரை கிலோ கனவு. தவிரவும் இரு மறு பதிப்புகள் வருகின்றன. அடுத்த வருடம் ஒரு நாவல் எழுதும் திட்டம் இருக்கிறது. எந்த ப்ரொட்யூசர் என்னை ஏரோப்ளேன் ஏற்றி இஸ்தான்புல்லுக்கு அனுப்பிவைக்கப் போகிறார் என்றுதான் தெரியவில்லை.


O


உடலுழைப்போ, உடற்பயிற்சியோ சுத்தமாக இல்லை. முதல்முதலாக அது குறித்த மெல்லிய கவலை வந்திருக்கிறது. ஆனால் என்ன செய்வதென்றுதான் புரியவில்லை. குரோம்பேட்டைக்கு வந்தால் வீட்டுக்குப் பக்கத்தில் நீச்சல் குளம் இருக்கிறது. உடனடியாக ஓடிப் போய் குதித்து ஒரே மாதத்தில் தமன்னா போலாகிவிடலாம் என்று நினைத்துக்கொண்டதில் ஒன்றும் குறைச்சலில்லை. ஆனால் ஒருநாள்கூடப் போக முடியவில்லை என்பதுதான் யதார்த்தம். அடுத்த வருடம் ராக்கூத்தடிப்பதைத் தவிர்க்க நினைத்திருக்கிறேன். மதியத் தூக்கத்தைத் தவிர்த்து அப்போதும் எழுதி, ராத்திரி ஒழுங்காகப் பத்து மணிக்குப் படுத்துவிட்டால் காலை ஆறு மணிக்கு எழுந்து நீச்சலுக்குப் போக முடியும். முயற்சி செய்து பார்க்கவேண்டும்.


O


கே. பாலசந்தர், கைலாசம், விகடன் பாலசுப்பிரமணியன், கூத்தபிரான். இந்த நால்வரும் வெவ்வேறு விதங்களில் வெவ்வேறு காலக்கட்டங்களில் என்னை மிகவும் பாதித்த ஆளுமைகள். இவர்கள் நால்வரும் இந்த ஆண்டு காலமானது என்னளவில் பெரிய துக்கம். விகடன் பாலசுப்பிரமணியன் அவர்களுடன் எனக்கு நேரடிப் பழக்கம் இருந்ததில்லை. ஆனால் அவரது ஆசிரியத்துவத்தின் நேர்த்தி கண்டு பல சமயம் பிரமித்திருக்கிறேன். என் விகடன் நண்பர்கள் அவரைப் பற்றிச் சொன்ன பல கதைகளைக் கேட்டு மானசீகத்தில் அவரைப் பலமுறை வணங்கியிருக்கிறேன். பத்திரிகைத் துறையில் ஒரு பெரும் நல்ல தலைமுறையை உருவாக்கியவர். அவர் கை வைத்துத் துலக்கிய எந்தப் பாத்திரமும் ஜொலிக்காது போகவில்லை என்பதை விழிப்புணர்வுடன் கவனிக்கிறேன்.


திரு கூத்தபிரானை பன்னிரண்டு வயதில் முதல் முதலில் சந்தித்தேன். வானொலி அண்ணாவாக, ரேடியோ ஸ்டேஷனில் எனக்கு முதல் முதலில் வாய்ப்புக் கொடுத்தவர். மிகப் பல வருடங்களுக்குப் பிறகு சமீபத்தில் மைலாப்பூர் ஆர்ட்ஸின் விருதளிப்பு நிகழ்ச்சியில் அவரை மீண்டும் சந்தித்தபோது கையைப் பிடித்துக்கொண்டு வெகுநேரம் பேசினார். என் பல வசனங்களை அவர் நினைவுகூர்ந்து மனப்பாடமாகச் சொன்னது உண்மையில் பிரமிப்பாக இருந்தது. உங்களிடமிருந்துதான் தொடங்கினேன் என்று நான் சொன்னபோது ஒரு குழந்தை போலவே சந்தோஷப்பட்டார். நல்ல ஆத்மா.


கே. பாலசந்தர். இப்போது எழுதினால் உடைந்துவிடுவேன். என்றாவது ஒருநாள் தனியே எழுதுகிறேன். அவரும் சரி, கைலாசமும் சரி. தனித்தனியே எனக்கு நிறைய செய்திருக்கிறார்கள். இருவருமே இன்றில்லை என்பதை ஜீரணிக்க மிகுந்த சிரமமாக உள்ளது.


O


பல வருடங்களுக்குப் பிறகு இந்த வருடம்தான் ஓய்வுக்காக மிகவும் ஏங்கினேன். ஆனால் ஒருநாளும் அது கிடைக்கவில்லை. வழக்கத்தைக் காட்டிலும் அதிக சோர்வை உணர்கிறேன். 2015ல் எப்படியாவது தினசரி ஆறு மணிநேரமாவது ஒழுங்காகத் தூங்கிவிடவேண்டும் என்பது வீர சபதம்.


O


நண்பர்கள் அனைவருக்கும் முன் தேதியிட்ட புத்தாண்டு – பொங்கல் நல்வாழ்த்துகள். புத்தகக் கண்காட்சியில் சந்திப்போம்.


Copyright © 2008-2011 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 25, 2014 11:56

December 18, 2014

யாருடைய எலிகள் நாம்?

தமிழகத்தில் ஒரு பத்திரிகையாளனாகக் குப்பை கொட்டுவது போன்றதொரு அவலம் வேறில்லை. விதி விலக்குகளை விட்டுவிடலாம். பெரும்பாலான பத்திரிகையாளர்களுக்குப் பெரும் பிரச்னை, சம்பளமல்ல. அவர்களது சுய சிந்தனை காயடிக்கப்படுவதுதான். நிறுவனத்தின் குரலைத் தன் குரலாக்கிக் கொள்வது தவிர அவர்களுக்கு வேறு வழியிருக்காது. நிறுவனத்தின் குரல் பி. சுசீலா குரல்போல மாறினால் இதழாளன் குரலும் சுசீலா குரலாக மாறும். நிறுவனம் பெங்களூர் ரமணியம்மா மாதிரி பாடினால் அவனும் அங்ஙனமே பாடவேண்டும். அவர்கள் பி.எஸ். வீரப்பா மாதிரி சிரித்தால் இவர்கள் எம்.என். நம்பியார் மாதிரி கூட மாற்றிச் சிரிக்க முடியாது.


மிகவும் அடித்தட்டு தொடங்கி வெகு மேல்மட்டம் வரை இந்தப் போக்கு வேரோடி, புரையோடிவிட்டபடியால்தான் தமிழில் பத்தி எழுத்து என்பது வெகு சமீப காலம் வரை பெரிதாக அங்கீகரிக்கப்படாதிருந்தது. இணையம் – குறிப்பாக சமூக வலைத்தலங்களின் தாக்கம் அதிகரித்து, வாசகன் பத்திரிகையை மட்டுமே செய்திக்கும் சிந்தனைக்கும் நம்பியிருக்க வேண்டிய நிலைமை மாறத் தொடங்கியபோதுதான் பத்திரிகைகள் தம்மை மாற்றிக்கொள்ளவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டன.


ஒரு வகையில் சமஸ் அதிர்ஷ்டசாலி. அவர் இதழியல் துறையில் தீவிரமாகச் செயல்படத் தொடங்கிய நேரத்தில் நிர்ப்பந்தங்களின் கோரப்பிடி சற்றுத் தளரத் தொடங்கியிருந்தது. சமஸ் போன்ற ஒரு சுய சிந்தனையாளருக்கு இந்த சௌகரியம் அவசியம். ஏனெனில் ஒரு செய்தியை ஜோடனையற்று அவர் காட்சிப் படுத்துவதோடு நிற்பதில்லை. அதன் மீதான தனது விமரிசனத்தை அழுத்தமாக முன்வைத்து முடிப்பதுதான் ஒரு சமூகப் பொறுப்பாளியாகத் தனது கடமையைச் சரியாகச் செய்ததற்குச் சான்று என்று கருதுபவர்.


இந்தப் புத்தகத்தில் உள்ள கட்டுரைகளைக் காட்டிலும் சமஸ் ஒவ்வொரு பிரச்னையின் மீதான தனது கண்ணோட்டத்தை அழுத்தமாகப் பதிவு செய்திருப்பதையே நான் மிகவும் ரசிக்கிறேன். ஆங்காங்கே கொஞ்சம் இடப்பக்க வாசனை அடிப்பது எனக்குத் தனிப்பட்ட முறையில் கொஞ்சம் தும்மல் வரவைப்பது என் பிரச்னை. ஆனால் தான் நம்பும் ஒன்றை சொற்சமரசமின்றி கூர்மை குன்றாமல் முன்வைப்பதில் சமஸ் பின்வாங்குவதே இல்லை. அவருக்கு வசதியாகத் தளங்கள் அமைந்தது அவரது அதிர்ஷ்டம். I repeat, அதிர்ஷ்டம்.


பக்க அளவிலும் கொஞ்சம் கனமான புத்தகம்தான். தினமணி முதல் தி ஹிந்து வரையிலான காலக்கட்டத்தில் அவ்வப்போது சமஸ் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. பத்திரிகை செய்திக் கட்டுரைகளுக்கு ஆயுசு அதிகம் கிடையாது என்னும் மூட நம்பிக்கையைத் தகர்க்கும் கட்டுரைகள். உதாரணமாக, கலைஞர் காலத்தில் கட்டப்பட்டு ஜெயலலிதாவால் கிட்டத்தட்ட காலி பண்ணப்பட்ட கோட்டூர்புரம் நூலகத்தைப் பற்றிய ஒரு கட்டுரையைச் சொல்வேன். எழுத்தில் செருப்பால் அடிப்பது என்றால் இதுதான். இத்தனை துணிவாக, வெளிப்படையாக, உண்மையின், சத்திய ஆவேசத்தின் தகிப்புடன் ஒரு வெகுஜன இதழில் இந்தக் கட்டுரை வெளிவந்திருக்கிறது. நியாயமாக நம் சமூகம் என்ன செய்திருக்க வேண்டும்? அல்லது ஜெயலலிதா என்ன செய்திருக்க வேண்டும்?


அரசு செய்யத் தவறியதை மக்களும் தட்டிக் கேட்பதில்லை. தட்டிக் கேட்டாலும் அரசு காதில் போட்டுக்கொள்வதில்லை என்பதுதான் எத்தனை சௌகரியமான பழைய ஏற்பாடு? இத்தனை காலம் கழித்து இந்தக் கட்டுரையை மீண்டும் வாசிக்கும்போது அன்று ஏற்பட்ட அதே பதைப்பு இப்போதும் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. நூலகம் இன்றும் இருக்கிறதென்றாலும் அது கட்டப்பட்டதன் நோக்கம் அழித்துப் புதைக்கப்பட்டுவிட்டதை எண்ணி வருந்தாதிருக்க முடிவதில்லை.


சமஸின் எழுத்தில் நம்மை வசீகரிக்கும் இன்னொரு முக்கியமான விஷயம், அவரது வரலாற்றுத் தெளிவு. சரியான தரவுகளின்றி அவர் எதையும் எழுதுவதில்லை. 2012 அசாம் கலவரங்கள் குறித்து எழுதும்போது (நமக்கு ஏன் உறுத்தவில்லை?) சுதந்தர இந்தியாவின் ஆகப்பெரிய கலவரங்கள் அனைத்தையும் ஒரு பார்வையில் சுட்டிக்காட்டிவிடுகிறார். இந்தக் கலவரதாரிகள் யாரும் எக்காலத்திலும் தண்டிக்கப்படாததைச் சொல்லி, இனப்படுகொலைகளின் நடுவே நமது சுதந்தரத்தைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம் என்று முடிக்கிறார்.


நவீன உலகில் கலவரங்கள் தொடங்கி புரட்சிகள் வரை அனைத்தும் அரசியல்வாதிகளால் தீர்மானிக்கப்பட்டு அரசியல்வாதிகளால் நடத்தப்பட்டு அரசியல்வாதிகளாலேயே கைகழுவப்பட்டுவிடுபவை. மக்கள் இதில் பகடைக்காய்களாக மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறார்கள். இதனால்தான் அரசியல் தளத்தில் நிகழும் எதற்கும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்போ அல்லது கடும் கண்டனமோ எழுவதில்லை. நரி இடமாய்ப் போனாலென்ன; வலமாய்ப் போனாலென்ன; மேலே விழுந்து பிடுங்காது போனால் சரியென்னும் மனோபாவம் உருவாகிவிட்டது. அசாமிய இந்தியனுக்காகத் தமிழக இந்தியன் பெரிய கவலை கொள்ளாததற்கும் தமிழக இந்தியனுக்காக ஒரு பீகாரி இந்தியனோ ஒடிய இந்தியனோ அக்கறையுடன் குரல் கொடுக்காததற்கும் இதுவன்றி வேறு காரணமில்லை. எப்போதாவது பாகிஸ்தான் வடக்கே ஊடுருவத் தொடங்கினால் மட்டும் இந்திய ஒருமைப்பாடு சாகாதிருப்பதை உணர முடிகிறதே தவிர மற்ற தருணங்களில் அதற்குப் பெரிய வேலை கொடுக்காமல் பார்த்துக்கொள்வதில் அரசியல்வாதிகள் விற்பன்னர்களாகவே இருக்கிறார்கள்.


எல்லாம் பிரிட்டிஷ்காரர்கள் கற்றுக் கொடுத்த பிரித்து வைத்தாளும் உத்திதான். யாரையும் குறை சொல்லிப் பயனில்லை. குறைந்தபட்சம் நமது காலத்தில் என்ன நிகழ்கிறது என்னும் தெளிவாவது தேவைப்படுகிறது. சமஸின் நூல் அதைத்தான் செய்கிறது.


அரசியல், சமூகத் தளங்களில் நிகழும் முக்கியமான எந்த சம்பவத்தையும் சமஸ் விட்டுவைப்பதில்லை. நடப்பதைக் கூர்மையாகக் கவனிக்கிறார். செய்தியை முலாமின்றி முன்வைத்துவிட்டு அதன்மீது தனது கூரிய விமரிசனங்களால் கையெழுத்திடுகிறார். எல்லாம் எல்லாருக்கும் உவப்பானதாக இருக்கவேண்டுமென்பதில்லை. ஆனால் என்றாவது ஒரு சமயம் எல்லோரும் நினைவுகூரத்தான் வேண்டும்.


அதற்கு இத்தகைய சமகால வரலாற்று நூல்களன்றி வேறு உதவிக் கருவியில்லை. சமஸின் கருத்துகளை நீங்கள் வெறுக்கலாம், விமரிசிக்கலாம், விவாதித்துக் குப்பை என்று அள்ளிக் கொட்டலாம் அல்லது கொண்டாடவும் செய்யலாம்.


ஆனால் நிச்சயமாக நிராகரித்துவிட்டுப் போகமுடியாது. நடப்புக் காலக்கட்டத்தில் தமிழில் ஆக முக்கியமானதொரு பத்திரிகையாளராக சமஸைத்தான் எனக்கு சொல்லத் தோன்றுகிறது.


யாருடைய எலிகள் நாம்? | சமஸ் | துளி வெளியீடு | தொடர்புக்கு: thuliveliyeedu@gmail.com, samasbooks@gmail.com | பேசி: 9444204501


Copyright © 2008-2011 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 18, 2014 21:09

December 2, 2014

தமிழன் ஏன் புத்தகம் வாங்குவதில்லை?

புத்தகக் கண்காட்சி நெருங்கும் நேரத்தில் எழுத்தாளர்களை எப்போதும் ஒரு பதற்றம் தொற்றிக்கொண்டு விடுகிறது. எழுதுவது குறித்த பதற்றம் இல்லை அது. எத்தனை கிலோ அல்லது கிலோபைட் வேண்டும்? இந்தா சாப்டு என்று அள்ளிப் போட அவர்களால் முடியும். பிரச்னை வாசகர்கள் சார்ந்தது.


இந்தத் தமிழ் வாசகர்கள் ஏன் புத்தகம் வாங்குவதில்லை? உலகமெங்கும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கோடித் தமிழர்கள் இருக்கிறார்கள். பரதேசி, இதில் பத்து விழுக்காட்டினர் கூட ஏன் புத்தகம் வாங்கிப் படிப்பதில்லை? தார்மிகக் கோபம், அறச் சீற்றம், சுய ஆதங்கம் உள்ளிட்ட சகலமான கெட்ட சமாசாரங்களும் புவிக்கடியில் பொங்கும் சரஸ்வதி நதியென மனத்துக்குள் பொங்கிப் பீறிடும் தருணம்.


சமீபத்தில் ஃபேஸ்புக்கில் நண்பர் ஒருவர் (இவர் நண்பரொருவர் அல்லர்) தென் கொரியாவின் புத்தகச் சந்தை குறித்து ஒரு குறிப்பை எழுதியிருந்தார். எத்தனையோ மில்லியன் டாலர்களுக்குப் புத்தகங்கள் அங்கே விற்கின்றவாம். வருடம் தோறும் எழுத்தாளப் பணக்காரர்களை உருவாக்கித் தூக்கித் தூக்கிப் போட்டுக்கொண்டிருக்கிறதாம் அந்தக் குட்டி தேசம்.


கஷ்டம்தான். தங்கத் தமிழ் எழுத்தாளர்கள் சிந்திக்க வேண்டிய விஷயம்தான். அதற்காக நாம் கொரிய மொழி கற்றுக்கொண்டு அங்கு போயா குப்பை கொட்ட முடியும்? சுத்த நான்சென்ஸ்.


ஏதோ என்னால் முடிந்தது, தமிழன் ஏன் புத்தகம் வாங்குவதில்லை என்பதற்கான காரணங்களைத் துப்பறிய ஓர் உரத்த சிந்தனை மேற்கொண்டேன். அவை பின்வருமாறு :-


1) தமிழனுக்கு எப்போதும் டயமிருக்காது

2) தமிழன் கனமான பொருட்களைத் தூக்க விரும்புவதில்லை

3) தமிழன் பிறவி பிடிஎஃப் பிரியன்

4) இலவச வேட்டி, இலவச சேலை, இலவச டிவி, இலவச அரிசி, இலவச மின்சாரம் என அனுபவித்துப் பழகிய தமிழனுக்கு இந்த சமூகம் இலவசப் புத்தகங்களைத் தருவதில்லை

5) தமிழன் ஆங்கிலப் புத்தகங்களை மட்டுமே படிப்பான்

6) தமிழனின் பெண்டாட்டி பெரும்பாலும் படிக்க விடுவதில்லை

7) தமிழனின் சம்பளம் கம்மி.

8) தமிழ்ப் புத்தகங்களில் ப்ரூஃப் மிஸ்டேக்குகள் அதிகம்

9) தமிழ் எழுத்தாளர்கள் தங்களைத் தமிழனைவிடப் பெரிய பருப்பு என எண்ணிக்கொள்கிறார்கள்

10) தமிழனுக்கு டிவி சீரியல் இருக்கிறது

11) தமிழனுக்குத் திருட்டு சிடி இருக்கிறது

12) படுத்துக்கொண்டு படித்தால் வீட்டில் திட்டுகிறார்கள்

13) தமிழன் போகும் கடைகளில் தமிழ்ப் புத்தகங்கள் இருப்பதில்லை

14) தமிழன் விரும்பும் எழுத்தாளரின் புத்தகம் இம்முறை வெளியாகவில்லை

15) தமிழனின் மனைவி லெண்டிங் லைப்ரரி கார்டு வைத்திருக்கிறாள்

16) தமிழன் நண்பர்களிடம் வாங்கிப் படிப்பதையே விரும்புவான்

17) தமிழனுக்குத் தமிழ் பேசத்தான் தெரியும். dont know to read in டாமில்

18) தமிழன் கத புக்ஸ்தான் படிப்பான். ஆனால் மாத நாவல்களின் வரத்து குறைந்துவிட்டது

19) தமிழன் ரிடையர்மெண்ட்டுக்கு அப்புறம் புத்தகம் வாங்க நினைத்திருக்கிறான். இப்போது மகள் திருமணத்துக்குக் காசு சேர்க்கிறான்

20) எல்லா தமிழனும் எழுத்தாளனே. ஒரு எழுத்தாளன் இன்னொரு எழுத்தாளனின் புத்தகத்தை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்.


Copyright © 2008-2011 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 02, 2014 05:52

December 1, 2014

முன்னுரை மாதிரி

இந்தக் கட்டுரைகள் என்னை எழுதிக்கொண்டிருந்தபோது நான் கொஞ்சம் பிசியான காலக்கட்டத்தில் (கட்டத்தில் அப்போது ஆறு புள்ளிகளும் ஒன்பது கோடுகளும் இருந்தன) வாழ்ந்துகொண்டிருந்தேன். பள்ளி கிளம்பும் அவசரத்தில் குழந்தை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அம்மாவானவர் பின்னால் நின்றுகொண்டு “உம்! தலைய நிமித்து. நேரா பாரு! குனியாதடி சனியனே!” என்று அன்பாக எச்சரித்தபடி தலை பின்னிவிடுவது மாதிரிதான் இவை என்னை எழுதி எழுதவைத்தன.


ஒரு நாளைக்குக் குறைந்தது மூவாயிரத்தி ஐந்நூறு சொற்கள் எழுதியாக வேண்டிய துறையில் இருப்பவனுக்கு மோட்சம் தருபவை இந்த முன்னூற்று சொச்சம் சொற்களே. இது முள்ளை முள்ளால் எடுப்பது அல்ல. உண்ணும் விரதத்தை எலுமிச்சை ஜூஸ் கொடுத்துத் தொடங்கி வைப்பது மாதிரி.


ஒரு காலத்தில் பத்திரிகைகள் கேட்டாலொழிய என் கைக்கு எழுத வராமல் இருந்தது. பின்னொரு காலத்தில் வாரப் பத்திரிகைகள் அலுப்பூட்டத் தொடங்கியபோது அவற்றுக்கு எழுதுவதையும் வாசிப்பதையும் அறவே குறைத்தேன். இப்போதெல்லாம் ஏனோ கேட்டால்கூட எழுதத் தோன்றுவதில்லை. எனக்கே எனக்கான இணையத் தளத்தில் என்னிஷ்டத்துக்குக் கிறுக்கிக் கொள்வதில் ஒரு திருப்தி.


இதிலும் ஒரு காலத்தில் எத்தனை பேர் படிக்கிறார்கள், யார் யார் மறுமொழி தருகிறார்கள் என்று பார்ப்பேன். ஹிட் கவுண்ட், அலெக்ஸா ரேட்டிங் என்று ஆயிரத்தெட்டு அநாவசியங்களைவேறு சேர்த்து வைத்திருந்தேன். அதுவும் வேறொரு காலத்தில் விருப்பப் பட்டியலில் இருந்து உதிர்ந்து போனது. யார் படித்தால் என்ன? படிக்காது போனால் என்ன? எழுதத் தோன்றியது; எழுதினேன், படிக்கத் தோன்றினால் நானே படித்தும் கொள்வேன் என்றாகிப் போனேன்.


ஆனால் ஒன்று புரிந்தது. எந்த ஆரவாரமும் இன்றி சொந்த சந்தோஷத்துக்காக என்னவாவது எழுதிக் கிழித்துக்கொண்டிருந்தாலும் நமக்கென சில பிரத்தியேக வாசக ஜீவராசிகள் எப்படியோ வந்து சேர்ந்துவிடத்தான் செய்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் நமது வாழ்வின் ஒரு சில அத்தியாயங்களை வாழ்ந்தவர்களாகவோ அல்லது அவர்கள் வாழ நினைத்து இயலாது போன வாழ்வை வேடிக்கை பார்க்க வந்தவர்களாகவோ இருப்பார்கள்.


எல்லா எழுத்தும் தான் பிறக்கும்போதே தன் வாசகனையும் சேர்த்தே பிறப்பித்துக்கொள்கிறது.


O


இவை கதைகளா கட்டுரைகளா கட்டுக் கதைகளா என்று எனக்குத் தெரியாது. இவை நான் எழுதியவை. என்ன தோன்றுகிறதோ அவற்றை சென்சாரே செய்யாமல் அப்படியே இறக்கி வைத்தவை. சிரிக்கச் சிரிக்க எழுதுகிறீர்கள் என்றார்கள். சிரிப்பாய்ச் சிரிக்காத வரை சரி என்பதைத் தாண்டி என்னிடம் சொல்ல வேறில்லை.


இந்த சமூகத்துக்கு உபயோகமாக, என்னவாவது கருத்து சொல்லுவதாக, ஒரு சிந்தனை மரபை அடியொற்றியதாக, தத்துவத் தூதுவளை ரசம் பிழிந்து வைப்பதாக இவற்றில் ஒரு வரியும் உங்களுக்கு அகப்படாது என்பதே நான் ஒரு மனித நேயம் மிக்க எழுத்தாளன் என்பதை உங்களுக்குப் புரியவைக்கும்.


நவீன பேரிலக்கியப் புண்ணாக்கு வியாபாரங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. பல்லாண்டுக் காலமாக உடம்புக்கு காதி கிராஃப்டின் அபரஞ்சி சோப்பு போட்டுக் குளிக்கிறேன். மனத்துக்கு இது.


தீர்ந்தது விஷயம்.


பா. ராகவன்

டிசம்பர் 1, 2014


[வெளிவரவிருக்கும் இங்க்கி பிங்க்கி பாங்க்கி கட்டுரைத் தொகுப்புக்கான முன்னுரையாக எழுதியது.]


 


Copyright © 2008-2011 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 01, 2014 22:51

November 29, 2014

அட்டைப்படங்கள்

விலை விவரங்கள் பிறகு. மதி நிலையம் வெளியீடு

விலை விவரங்கள் பிறகு. மதி நிலையம் வெளியீடு


எதிர்வரும் சென்னை புத்தகக் கண்காட்சியில் எனது ஐந்து புத்தகங்கள் வெளிவருவது பற்றி முன்பே குறிப்பிட்டிருந்தேன். இங்கே அந்த அட்டைப்படங்கள். இவை தவிரவும் ஒன்றிரண்டு நூல்களின் மறுபதிப்புகளும் வெளிவரக்கூடும் என்று நினைக்கிறேன். உறுதியானதும் தெரிவிக்கிறேன்.


Copyright © 2008-2011 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 29, 2014 20:40

இங்க்கி பிங்க்கி பொம்மை

inki pinki panki


Copyright © 2008-2011 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 29, 2014 01:20

சந்து

சொல்ல சொல்லக் கேட்காமல், இந்தப் புத்தகத்துக்கும் நானேதான் அட்டைப்படம் வரைவேன் என்று வான்கா அழிச்சாட்டியம் பண்ணிவிட்டார். வேறு வழியில்லை.

santhuveli


Copyright © 2008-2011 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 29, 2014 01:17

அழகிய அட்டைப்படம்

ஒரு வழியாகக் கால் கிலோ காதல் நூலாகிறது. இந்த உலகத்தர காதல் காவியத்துக்குப் பொருத்தமான அட்டைப்படம் தேடி வெகுகாலம் அலைந்தபடியால்தான் இந்தத் தாமதம். இப்போது அகப்பட்டுவிட்டது.


kaalkilo


 


Copyright © 2008-2011 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 29, 2014 00:43

புதிய ஒப்பனை

நெடுங்காலமாகப் பதிப்பில் இல்லாதிருந்த அலை உறங்கும் கடல், புவியிலோரிடம் இரண்டும் இப்போது மீள் பிரசுரம் காண்கின்றன. ஜனவரி புத்தகக் காட்சியில் மதி நிலையம் இவற்றை வெளியிடுகிறது. அலை உறங்கும் கடல் அட்டைப்படமாக நீங்கள் காண்பது ஒரு புகைப்படமே. என் நண்பர் (இவர் நண்பரொருவர் அல்ல.) எஸ்.ஆர். சரவணன் எடுத்தது. சிலபல போட்டோஷாப் கைங்கர்யங்களுக்குப் பிறகு இந்த ஸ்திதியை இது அடைந்துள்ளது. புவியிலோரிடத்துக்கு அட்டைப்படம் வரைந்தவர் வின்செண்ட் வான்கா ;-)


puviil oridam alai urangum kadal


 


Copyright © 2008-2011 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 29, 2014 00:36

November 25, 2014

இங்க்கி பிங்க்கி பாங்க்கி

திட்டமிட்டபடி என் சிறுகதைகளின் முழுத் தொகுப்பை இந்த ஆண்டு கொண்டுவர முடியவில்லை. அது எதிர்பார்க்கும் கடும் ஊழியத்தைக் கொடுக்கத் தற்சமயம் என்னால் இயலவில்லை என்பதே காரணம். அடுத்த வருடம் பார்க்கலாம், ஆண்டவன் சித்தம்.


எதிர்வரும் ஜனவரி சென்னை புத்தகக் கண்காட்சி சமயம் கீழ்க்கண்ட என் நூல்கள் வெளியாகின்றன.


1) சந்து வெளி நாகரிகம் – ட்விட்டர் குறுவரிகள் தொகுப்பு


2) இங்க்கி பிங்க்கி பாங்க்கி – கட்டுரைத் தொகுப்பு


3) கால் கிலோ காதல் அரை கிலோ கனவு – நீள்கதை


4) புவியிலோரிடம் (நாவல் – மறுபதிப்பு)


5) அலை உறங்கும் கடல் (நாவல் – மறுபதிப்பு)


இதுவே ஜாஸ்தி என்று தோன்றுகிறது. விழா ஏதும் வைக்கப் போவதில்லை என்பதால் யாரும் கலவரமடையத் தேவையில்லை.


மேற்கண்ட நூல்கள் அனைத்தையும் மதி நிலையம் வெளியிடுகிறது. தொடர்புக்கு : mathinilayambook@gmail.com அல்லது arpee71@gmail.com .


Copyright © 2008-2011 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 25, 2014 21:37