Pa Raghavan's Blog, page 29

July 21, 2015

கொயந்த பாட்டு

நான் வசிக்கும் பேட்டையில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் அவ்வப்போது ஏதேனும் ஒரு தலைப்புக் கொடுத்து, பிள்ளைகளைக் கவிதை எழுதி வரச் சொல்லிவிடுகிறார்கள். கவிதையெல்லாம் என்ன நாலாம் வாய்ப்பாடா எல்லோரும் உட்கார்ந்து எழுதிவிட? இது ஒருவித வன்கொடுமை என்பதை ஆசிரியப் பெருந்தகைகளுக்கு யாரெடுத்துச் சொல்வது?


நானெடுத்துச் சொல்லலாமென்றால் நேரமில்லை. எனவே ஆசிரியர்களைப் பழிவாங்க, பகுதிவாழ் பிள்ளைகளுக்கு நானே எழுதிக் கொடுக்கத் தொடங்கியிருக்கிறேன். ஆங்கிலத்தில் கேட்டால் ஆங்கிலம். தமிழில் கேட்டால் தமிழ். விரைவில் இந்த வன்முறைச் சேவையை ஹிந்தி மற்றும் சமஸ்கிருதத்திலும் தொடங்க உத்தேசித்திருக்கிறேன். சாம்பிளுக்கு இரண்டு இங்கே.


ஆறாங்கிளாஸ் கொயந்த இலெவல்:



Water is the Wealth

The World is getting hotter

We always search for water

Each should preserve a magic bottle

To avoid the third world battle.


We invest in the gold

We harvest in the field

But the real wealth is Rain

Preserve it for the gain


Sea is always mighty

The water is almighty

Use with respect, keep it perfect

Make the life is beauty.


O


எட்டாங்கிளாஸ் கொயந்த இலெவல்:


பச்சைக் கிளியே பசும்புல்லே


பாயும் நதியே பெருங்கடலே


இச்சை கூட்டும் பூவினமே


ஈடில்லாத கானகமே


வட்டப்பொட்டே வெண்ணிலவே


வானம் நிறைத்த கருமுகிலே


கொட்டும் மழையே குளிர்தருவே


கோடி விண்மீன் கூட்டங்களே


கல்லே மண்ணே கனிவகையே


காவல் அரணே பெரும்புவியே


எல்லா உயிர்க்கும் சூரியனே


ஏற்றம் மிகுந்த எழிலவனே


கண்ணில் தெரியும் காட்சிகளே


கடவுள் படைப்பின் மாட்சிகளே


மண்ணில் சொர்க்கம் இவையெல்லாம்


மனிதன் ரசிக்க வைத்தானே.


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 21, 2015 23:20

June 7, 2015

கிறுக்கெழுத்தாளன்

சும்மா ஒரு கிறுக்கு. இன்றெல்லாம் பைத்தான், ஜாவா ஸ்க்ரிப்ட் மற்றும் ஸ்விஃப்ட் அடிப்படைப் பாடங்களைப் படித்து (அல்ல, புரட்டி)க் கொண்டிருந்தேன்.


புரிவது போலிருக்கிறது; ஆனால் புரிவதில்லை. பழகினால் வந்துவிடும் என்று தோன்றுகிறது; ஆனால் ஒன்றிரண்டு கமாண்டுகள் கூட படித்த பத்து நிமிஷங்களில் நினைவில் இருப்பதில்லை.


இதெல்லாம் ஆதியிலிருந்தே கற்றிருக்க வேண்டுமோ என்னமோ.


அகராதித் துணையின்றி கம்பர் முதல் நம்மாழ்வார் வரை வாசித்துப் புரிந்துகொள்ளவும் புரிந்ததை எடுத்துச் சொல்லவும் முடிகிறதே என்று எண்ணி சமாதானப்படுத்திக்கொண்டேன்.


பாண்டத்தைச் செய்பவன் குயவனென்றால், குயவனைச் செய்வது பாண்டம்தான்.


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 07, 2015 11:01

June 2, 2015

முட்டை இறக்குமதி

யாளி முட்டை சிறுகதைத் தொகுப்பு FreeTamilEbooks.comல் வெளியாகியுள்ளது. இங்கே தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.


முன்னுரை வாசிக்க இங்கே செல்லலாம்.


பிற இலவச மின் நூல்கள்: புதையல் தீவு | ரெண்டு | ஐஸ் க்ரீம் பூதம் | குற்றியலுலகம் | புக்கு


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 02, 2015 23:58

May 31, 2015

யாளி முட்டை

இதுவரை சுமார் 100 சிறுகதைகள் எழுதியிருப்பேன் என்று நினைக்கிறேன். தொகுப்பாக வந்தவை போக மிச்சமுள்ளவற்றில் என்வசம் இருப்பவை இவ்வளவுதான்.


குமுதத்தில் சில நல்ல கதைகளை எழுதியிருக்கிறேன். ஆனால் அவற்றுக்கெல்லாம் பிரதி இல்லை. ஆரம்பக் காலத்தில் பிரசுரமாகும் அனைத்தையும் கத்தரித்து வைத்து பைண்ட் செய்து அழகு பார்க்கும் வழக்கமெல்லாம் இருந்தது. போகப் போக அதெல்லாம் தன்னால் நின்றுவிட்டது. பிறகு கையெழுத்துப் பிரதிகளை பத்திரப்படுத்தப் பார்த்தேன். அதுவும் முடியாமல் போனது. கணினியில் எழுதத் தொடங்கியபிறகு அனைத்தும் சாசுவதமாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டேன். ஆனால் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எதற்காகவாவது format செய்யவேண்டி நேர்ந்து அதிலும் பல அழிந்து போனது. Backup எடுத்து வைக்கும் வழக்கம் என்றுமே இருந்ததில்லை. ஜிமெயில் காலத்துக்குப் பிறகுதான் எழுதியவை இல்லாது போகவாய்ப்பில்லை என்றானது. அக்காலம் வந்தபோது நான் சிறுகதைகள் எழுதுவது குறைந்து போனது.


எதிலும் ஒழுங்கில்லாத ஒரு ஜென்மம் உண்டென்றால் அது நாந்தான். என் ஒழுங்கீனங்களே எனது அடையாளமாகிப் போனது எம்பெருமான் சித்தம். பெரிய இழப்பு ஒன்றுமில்லை. சந்தோஷங்களுக்கும் குறைச்சலில்லை.


இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் எதுவும் எந்த அச்சுத் தொகுப்பிலும் இல்லை. கல்கி, அமுதசுரபி, குங்குமம் போன்ற பத்திரிகைகளில் இவை வெளிவந்தன. சில கதைகள் எனது இணையத் தளத்தில் மட்டுமே பிரசுரமானவை. பிரசுரம் சார்ந்த சந்தோஷங்களும் மயக்கங்களும் உதிர்ந்துபோனபிறகு எழுதுவது என்பது சுகமானதாகவே இருக்கிறது. இலக்கிய ரப்பர் ஸ்டாம்புகளுக்காகவோ, விருது கிளுகிளுப்புகளுக்காகவோ எழுதாமல் முற்றிலும் என் சொந்த சந்தோஷத்துக்காக மட்டுமே எழுதிய கதைகள் இவை.


உங்களுக்குப் பிடித்தால் சந்தோஷம். பிடிக்காது போனாலும் பிரச்னையில்லை.


ஆனால் ஒன்று சொல்லவேண்டும். தமிழில், குறிப்பாக என்னுடைய தலைமுறையில் என்னைக் காட்டிலும் வெகு சிறப்பாக எழுதக்கூடிய எத்தனையோபேர் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் கிட்டாத சில அபூர்வ நல்வாய்ப்புகள் எனக்குக் கிடைத்தன. மகத்தான பல எழுத்தாளர்களுடன் நேரில் பேசிப் பழக முடிந்திருக்கிறது. கடிதத் தொடர்பு சாத்தியமாகியிருக்கிறது. உட்கார்ந்து அரட்டையடிக்க முடிந்திருக்கிறது. அவர்களிடமிருந்து நிறைய கற்றிருக்கிறேன். எழுத்துக்கு அப்பாலும். இதெல்லாம் என் தகுதிக்கு மீறியவை. இதில் எனக்குச் சந்தேகமே இல்லை.


இலக்கியத்தைப் பொறுத்தவரை நான் ஒரு நேர்மையான வாசகன் மட்டுமே. சிறந்த இலக்கியமென்று எதையும் படைத்தவனல்லன். அது சாத்தியமும் இல்லை. மாதம் பிறந்தால் தேவைக்கேற்ற வருமானமும், மூன்று வேளை நல்ல சாப்பாடும், படுத்த வினாடி வருகிற உறக்கமும், பிரச்னையற்ற சூழலும், சுக சௌகரியங்களும் அனுபவிக்கக் கிடைக்கும் வாழ்விலிருந்து இலக்கியம் பிறக்காது.


அதற்குச் செருப்படி படவேண்டும். வலி மிகுந்த வாழ்விலிருந்தே பேரிலக்கியங்கள் பிறக்கின்றன. ஒரு தாஸ்தயேவ்ஸ்கி பட்ட பாடுகளை இன்னொருத்தன் படுவானா. ஒரு ஷோபா சக்தி காட்டும் உலகை இன்னொருத்தன் காட்டிவிட முடியுமா. அசலான இலக்கியமென்றால் அது. நான் அந்த ரகமல்ல. வேறெந்த ரகமும் அல்ல.


என் கதைகள், என் சந்தோஷம். தீர்ந்தது விஷயம்


[விரைவில் வெளிவரவுள்ள யாளி முட்டை சிறுகதைத் தொகுப்புக்கு எழுதிய முன்னுரை].


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
1 like ·   •  1 comment  •  flag
Share on Twitter
Published on May 31, 2015 10:00

May 23, 2015

இருவர் மற்றும் ஒருவர்

என்னிரு ஐபேட்களையும் என் மனைவியும் மகளும் ஆளுக்கொன்றாக எடுத்துக்கொண்டுவிட்டபடியால் எனக்கென ஒரு படிப்பான் [eReader] வாங்க நினைத்தேன். கிண்டில் வாங்கலாமா என்று நேற்று நண்பர் [FreeTamileBooks.com] ஶ்ரீநிவாசனிடம் கேட்டதன் காரணம் அதன் ஆறு இஞ்ச் பிடிஎஃப், மோபி வடிவம் போன்ற inbuilt சிக்கல்களால்தான்.


ஶ்ரீநிவாசனுக்கு நான் மின்னஞ்சல் அனுப்பி, பதில் வந்தபோதுதான் அவர் இங்கிலாந்தில் இருப்பது தெரிந்தது. அடுத்த பிப்ரவரியில்தான் சென்னை வருவதாக இருக்கிறார். அதனாலென்ன? நீங்கள் ஒரு கிண்டிலைக் கண்ணால் பார்த்து, கையால் தொட்டு, கொஞ்சம் போல் குடைந்து பார்த்துவிட்டு அதன்பிறகு வாங்குவதே சரி என்று சொன்னார்.


சொன்னதோடு விடவில்லை. நேற்றே இங்குள்ள அவரது நண்பர் அன்வரை அழைத்து என்னைத் தொடர்புகொள்ளச் சொல்லியிருக்கிறார். அன்வரும் Freetamilebooks.com உறுப்பினர்களுள் ஒருவர்.


இன்று மாலை வழி விசாரித்துக்கொண்டு அன்வர் என் வீட்டுக்கு வந்திருந்தார். அவரது கையடக்க கிண்டிலுடன். எதற்கு? வெறுமனே நான் பார்ப்பதற்கு. வாங்கலாமா வேண்டாமா என முடிவு செய்வதற்கு.


அன்வர் ராயப்பேட்டையில் இருப்பவர். கிண்டிக்கு வந்து எனக்கு போன் செய்தார். நான் கோடம்பாக்கத்தில் இருந்தாலும் குரோம்பேட்டையில் இருந்தாலும் இரு இடங்களையும் அடைய சரியான மையப்புள்ளி என நினைத்து அங்கு வந்து அழைத்திருக்கிறார்.


எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. சுட்டெரிக்கும் வெயில் நாளில் எத்தனை தூரப் பயணம்! வாழ்வில் யாருக்காவது எப்போதாவது நான் இப்படி தன்னியல்பாகச் சென்று உதவி செய்திருக்கிறேனா என்று யோசித்துப் பார்த்தேன். நினைவில்லை. எனக்குக் கண்ணீர் வந்துவிட்டது. கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டேன்.


இத்தனைக்கும் அன்வரை எனக்குத் தெரியாது. பார்த்த ஞாபகம் கூட இல்லை. அவர் ஓரிருமுறை என்னைப் பார்த்திருப்பதாகவும் ஒருமுறை கிழக்கு மொட்டை மாடிக் கூட்டத்தில் என்னோடு சண்டை போட்டிருப்பதாகவும் சொன்னார். நினைவில்லை. அதெல்லாம் ஒரு பெரிய விஷயமேகூட இல்லை. வலிய வந்து உதவ நினைக்கும் இத்தகு மனம் எத்தனை பேருக்கு வாய்க்கும்? சொல்லப் போனால் ஶ்ரீநிவாசனையேகூட எனக்குத் தெரியாது. நேரில் சந்தித்ததோ, போனில் பேசியதோ கிடையாது. அவர் GNU ஆள் என்று தெரியும். FTEbooks குழுவில் ஒருவர் என்று தெரியும். நேற்றுத் தான் பேசினேன்.


வாழ்வில் இரண்டாவது முறையாக இப்படியொரு அனுபவம் இன்று. முதலனுபவத்தைத் தந்தவர் ஶ்ரீகாந்த் மீனாட்சி. இதே மாதிரிதான். விண்டோஸைத் தலைமுழுகிவிட்டு Macக்கு மாறலாம் என்று எண்ணத் தொடங்கிய ஆரம்ப நாள்களில் என்னைத் தேடி வந்து தன் மேக்கைக் கொடுத்து குடைந்து பார்க்கச் சொன்னார்.


இன்று நான் மேக்தான் உபயோகிக்கிறேன். ஒவ்வொரு முறை திறக்கும்போதும், இதன் பூரண சுகத்தை அனுபவிக்கும்போதும் ஶ்ரீகாந்தையும் கோகுலையும் எண்ணாதிருப்பதில்லை.


ஆனால் sorry அன்வர்! என்றுமே நான் கிண்டில் உபயோகிக்கமாட்டேன் என்று நினைக்கிறேன். என் சௌகரியத்துக்கு ஐபேட்தான் சரி என்று தீர்மானமாகத் தோன்றுகிறது.


Decided to buy one more iPad. ஆனால் அந்தப் புதிய ஐபேடுக்கு என் பெயரைக் கொடுக்கமாட்டேன். கண்டிப்பாக உங்கள் பெயர்தான்.


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 23, 2015 11:24

April 23, 2015

புக்கு

உலக புத்தக தினத்தை முன்னிட்டு அது முடிந்த பிற்பாடு இந்த இலவச மின் நூல் வெளியிடப்படுகிறது. புத்தகங்களை வாசிக்க வைக்க ஒரே வழி அவற்றை சிறியதாகவும் இலவசமாகவும் வழங்குவதுதான் என்கிற கிறிஸ்தவ மிஷனரிகளின் ஆதி உத்தியை எண்ணிப் பார்க்கிறேன். கிறிஸ்தவம் பரவியது போல் புத்தகம் பரவினால் சந்தோஷம் .


புத்தகத்தை டவுன்லோட் செய்ய இங்கே செல்லவும்.


 


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 23, 2015 22:45

February 8, 2015

NTFS-3G பிரச்னை

இரண்டாண்டுகளுக்கு முன்னால் விண்டோஸைத் தலைமுழுகிவிட்டு ஆப்பிள் கணினிக்கு மாறியபோது எனக்குப் பெரிய பிரச்னையாக இருந்த ஒரே விஷயம், என் பாகவதர் காலத்து ஹார்ட் டிரைவ்களை எப்படி இதன் சின்னவீடாக செட்டப் செய்வது என்பதுதான்.


என் மாக்குப் புத்தகக் காற்று ஏற்கும் நவீன அடைசல் டப்பாக்களைப் புதிதாக வாங்குவது எனக்குப் பிரச்னை இல்லை. ஆனால் என் பழைய டப்பாக்களுக்குள் இருப்பதை கணினிக்குள் கடத்துவது எப்படி? அனைத்தையும் மாக்குப் புத்தகத்தில் சேகரித்து வைக்கவும் முடியாது. இடம் காணாது.


குறிப்பாக ஒரு டப்பா முழுதும் பல நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் உள்ளன. இன்னொரு டப்பாவில் அவற்றிலிருந்து நான் தனியே எடுத்து சேகரித்த முக்கியமான படங்கள் மட்டும் இருந்தன. இவற்றை மட்டுமாவது காப்பாற்ற முடிந்தால் தேவலை என்று தோன்றியது.


ஆனால் ஆப்பிளோ பழைய டப்பாக்களை உள்ளே சேர்க்க மாட்டேனென்றது. எத்தனை முயற்சி செய்தாலும் எரர். NTFS எரர். சில டப்பாக்களுக்கு NTFS 3G எரர். என்னை மாக்குக்கு மாற்றிய கோகுலே ஒருநாள் முயற்சி செய்து பார்த்தார். அவரது அலுவலக விற்பன்னர்கள் ஒரு சிலரும் அம்முயற்சியில் அப்போது பங்கேற்றனர். என்னென்னவோ டவுன்லோடு செய்து ரன் செய்து பார்த்தும் ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை. வெறுத்துப் போய் விட்டுவிட்டேன்.


1பிறகு படம் பார்ப்பதற்கென்று தனியே ஒரு Mitsun வாங்கி என் பிரத்தியேக தியேட்டரை கணினிக்கு அருகிலேயே அமைத்துக்கொண்டுவிட்டேன். ஆனாலும் ஓர் உறுத்தல் இருந்துகொண்டே இருந்தது. என்னவாவது செய்யவேண்டும். ஏதாவது ஒரு வழி கிடைக்காமல் போகாது.


நேரம் கிடைக்கும்போதெல்லாம் இணையத்தில் NTFS 3G குறித்து ஏராளமாகப் படித்தேன். ஒரு வரியும் புரியவில்லை என்பது வேறு விஷயம். ஆனால் பிரச்னை எனக்கு மட்டுமல்ல, மேவரிக்ஸ் காலம் தொட்டு மாக்குப் புத்தக உபயோகிப்பாளர்கள் அத்தனை பேருமே இந்த பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்று பல ஃபோரங்களில் கண்ட புலம்பல்கள் மூலம் அறிந்தேன்.


ஆப்பரேடிங் சிஸ்டம் அப்கிரேடு ஆகும்போது பழைய தாத்தாக்களைத் தூக்கி உடைப்பில் போட்டுவிடுகிறது. இது எட்டர்னல் பிரச்னை. என்னவாவது செய்துதான் தீரவேண்டும். ஆனால், என்ன செய்யலாம்?


ஆப்பிள் ஃபோரங்களில் பலபேர் அவ்வப்போது சிபாரிசு செய்த NTFS பேக்கேஜ்களைத் தரவிறக்கி இன்ஸ்டால் செய்து ஓடவிட்டுப் பார்த்தேன். பேக்கேஜெல்லாம் இறங்கிவிடுகிறது. ஆனால் டப்பாதான் செட்டு சேர மறுத்தது. குறைந்தது எட்டு முறை படுதோல்வி கண்டிருப்பேன். இன்ஸ்டால் செய்த பேக்கேஜ்களை எப்படி அன் இன்ஸ்டால் செய்வது என்றே தெரியாதபடிக்கு என் அப்ளிகேஷன் ஃபோல்டரில் ஒரே NTFS கோப்புகளாக இருந்தன. பல வர்ஷன்கள்.


ஒருவழியாக இப்போது இதற்கொரு தீர்வு பிடித்துவிட்டேன். இன்று என் மாக்குப் புத்தகக் காற்று என் பாகவதர் காலத்து பஃபல்லோ டப்பாவைத் திருமணம் செய்துகொண்டது. சாந்தி முகூர்த்தமும் சிறப்பாக நடந்தேறிவிட்டது.


என்ன செய்தேன் என்று சொல்லுகிறேன்.


NTFS 3Gயை ஒரு மாக்கு எழுதவேண்டுமானால் அதற்கு MacFuse உறுதுணை அவசியம். இதிலேயே உங்கள் சிப் இண்டல்லாக இருந்தால் ஒரு ரகம், மற்றதாக இருந்தால் வேறு ரகம். என்னுடையது இண்டல்.


எனவே இங்கிருந்து அதனை எடுத்தேன். திறமூலம்தான். இதுவே காசுக்கும் கிடைக்கிறது. நமக்கெதற்கு அதெல்லாம்?


ஆச்சா? முதலில் Fuseஐப் போட்டுவிட்டேன். பிறகு NTFS 3Gஐ இங்கிருந்து இறக்கினேன்.


இந்த இரண்டையும் இன்ஸ்டால் செய்து ஓடவிட்ட பிறகு அதுவே ஒருமுறை ரீஸ்டார்ட் கேட்கும். கேட்டால் கொடுத்துவிடுங்கள்.


இதன் பிறகு காலாவதியான பழைய ஹார்ட் டிரைவ்களை மேக்கில் சொருகினாலும் ஒரு அச்சுறுத்தல் உண்டு. அது கீழ்க்கண்டவாறு தெரியும் மெசேஜ்.


Screen Shot 2015-02-08 at 9.36.23 pm


ntfs3gntfs3gntfs3gகண்டுகொள்ளாதீர்கள். மெசேஜ் மட்டும் விட்டகுறை தொட்ட குறையாக வருமே தவிர உங்கள் ஹார்ட் டிரைவை மேக் அதற்குள் படித்து, எழுதி முடித்திருக்கும்! என்ன ஒரே பிரச்னை, உங்கள் டிரைவுக்கு ஒரு பேர் கொடுத்திருந்தீர்கள் என்றால் அந்தப் பெயர் வராது. பதிலாக பெயரில்லா டப்பா என்று பக்கவாட்டில் காட்டும்.


Screen Shot 2015-02-08 at 9.39.01 pm


பெயரில் என்ன இருக்கிறது? நமக்குக் காரியம் ஆனால் சரி.


நண்பர்களே, எனக்குத் தொழில்நுட்பக் கட்டுரைகளை எப்படி எழுதுவதென்று தெரியாது. நான் எழுதிய இந்தக் குறிப்பு சர்வ நாராசமானது என்று உங்களுக்குத் தோன்றுமானால் மன்னியுங்கள். ஆனால் என்னளவில் இது ஒரு மகத்தான கண்டடைவு. NTFS 3G பிரச்னை தீர முதலில் MacFuse இன்ஸ்டால் செய்யவேண்டும் என்பதை இதிலிருந்து அறிந்துகொண்டேன். டப்பாக்களைப் பயன்படுத்துவதற்காகவென்றே விண்டோஸ் மடினியொன்றை இடுப்பில் முடிந்துகொண்டு போகும் அவஸ்தையில் இருந்து இன்றுமுதல் விடுதலை பெற்றேன்.


நான் பெற்ற இன்பம் இதர மாக்குப் புத்தகக் காற்றாளர்களுக்கும் (புரோ ஆசாமிகளுக்கு இது உதவுமா என்று தெரியாது.) கிடைப்பதற்காக இங்கு எழுதி வைக்கிறேன். யாராவது இதன் அபத்தங்களைச் சரி செய்து சுத்தமான தொழில் மொழியில் எழுதி, பொதுவில் போட்டு வைத்தால் அதுவும் ஒரு சமூக சேவையென்றே கருதப்படும்.


பிகு: ஹார்ட் டிரைவ்களை – சேகரிப்பான்களை விண்டோஸ் கணினியில் சொருகிப் பயன்படுத்தும்போது சரியாக அன் – மௌண்ட் செய்யாமல் அப்படியே ஒயரைப் பிடுங்கும் வழக்கம் நம்மில் பலருக்குண்டு. அப்படி திடீர்ப் பிடுங்கல்களுக்கு ஆட்படும் டப்பாக்களை மாக்குப் புத்தகம் ஏற்பதில்லை. அனைத்திலும் ஒரு ஒழுக்கம் வேண்டும் என்று கேட்கிறது. என்னதான் NTFS 3G இன்ஸ்டால் செய்து ரன் செய்து பாதையை ஒழுங்கு படுத்தினாலும் ஒரு முறை விண்டோஸ் கணியில் உன் டப்பாவைச் சொருகி ஒழுங்காக அன் – மௌண்ட் பண்ணிவிட்டு வா என்று உத்தரவிடுகிறது. கவனமாக அதனையும் ஒருமுறை செய்துவிடுங்கள்!


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 08, 2015 08:13

February 2, 2015

என் இனிய தோழியே

ராஜ் டிவியில் நாள்தோறும் இரவு 9.30க்கு (திங்கள் முதல் வெள்ளி வரை) ஒளிபரப்பாகும் என் இனிய தோழியே தொடருக்குத் திரைக்கதை எழுத ஒப்புக்கொண்டிருக்கிறேன். இந்த வருடத்தில் எனக்கு முதல் புதிய தொடர் இது.  சென்ற வருடம் கிளி பாதியில் உயிரை விட்டது குறித்து வருத்தப்பட்டிருந்தேன். செல்லக்கிளியை இயக்கிய  செந்தில்குமார்தான் இந்தத் தொடரை இயக்குகிறார். செந்திலுடன் மீண்டும் இணைவது மகிழ்ச்சியாக இருக்கிறது.


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 02, 2015 10:01

January 20, 2015

மின் நூலாக ரெண்டு

11_Fotor 2


குங்குமம் வார இதழில் தொடராக வெளி வந்த இக்கதையை இப்போது FreeTamileBooks.com மூலம் இலவச மின் நூலாக வெளியிடுகிறேன்.


கதை படிக்க நன்றாக இருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. இந்த மின் நூலை நானே என் சொந்த முயற்சியில் உருவாக்கியிருக்கிறேன் என்பதுதான் இப்போதைக்கு என்னைக் கிறுகிறுக்க வைக்கும் சங்கதி.


ஐபுக் எடிட்டர், கேலிபர், ப்ரெஸ்புக் என்று தொடங்கி சமூகத்தில் புழக்கத்தில் உள்ள அனைத்து விதமான மின் நூல் தயாரிப்பு மென்பொருள்களையும் பரீட்சித்துப் பார்த்துவிட்டு இறுதியில் சிஜிலில் இக்கதைக்கு மோட்சம் அளித்தேன்.


சிஜில் பயன்படுத்தச் சொல்லி என்னைத் தூண்டிய நண்பர் பேயோனுக்கு நன்றி. அதில் டெவலப்மெண்ட்டே இல்லை; தொடாதே என்று அச்சுறுத்தி, இறுதியில் புத்தகம் நன்றாக வந்திருப்பதாகச் சொன்ன அப்புவுக்கு ஒரு குட்டு.


இந்நாவலை வாசித்து மகிழும் அல்லது இகழும் வேளையில் மின் நூல் தயாரிப்பினைக் குறித்தும் ஓரிரு வரிகள் எனக்கு எழுதுவீர்களானால் சந்தோஷம். மேம்பாட்டு ஆலோசனைகள் தருவீர்களானால் மானசீகமாக சேவிப்பேன்.


இனி இது உங்களுக்கு.


நாவலை டவுன்லோட் செய்ய FreeTamileBooks


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 20, 2015 11:35

January 16, 2015

ஜானகிராமன் மறுபிறப்பு

இந்த வருஷம் புத்தகக் கண்காட்சி ரொம்பத் திருப்தி. நாலைந்து நாள் போய்வர முடிந்தது என்பதைத் தாண்டி, என் நீண்ட நாள் ஆதங்கம் ஒரு முடிவுக்கு வந்தது.


இந்த ஜானகிராமன் புஸ்தகங்களுக்கு ஏன் ஒரு விமோசனமே கிடைக்கமாட்டேனென்கிறது என்று ரொம்ப காலமாக எண்ணிக்கொண்டிருந்தேன். பெரிய சௌந்தரிய உபாசகர். அவரது கதையெல்லாம் கண்கூசச் செய்யும் பேரெழில் கொண்டவை. யார் என்ன சொன்னால் எனக்கென்ன? எழுத்தின் பிரம்மாண்டப் பேரழகு என்பதை நான் ஜானகிராமனிடமும் ராமாமிருதத்திடமும்தான் இதுவரை கண்டிருக்கிறேன். எடுத்து வைத்துக்கொண்டு படிக்க உட்கார்ந்தால் சோறு தண்ணி வேண்டியிருக்காது.


ஆனால் துரதிருஷ்டம் அவரது புஸ்தகங்கள் எப்போதும் பார்க்கக் கண்றாவியாகவே இருக்கும். எத்தனையோ பதிப்புகள் வந்திருக்கின்றன. எல்லாமும்தான். ஆனால் எப்போதும் தோற்றத்தில் மட்டும் மாற்றமிருக்காது. ஒரே ரக சாணித்தாள். ஒரே மாதிரி சவக்களை சொட்டும் அட்டை. பார்க்கச் சகிக்காத எழுத்துரு. அம்மா வந்தாளில் பாடசாலை மோரைப் பற்றி இந்து சொல்லுவாளே, ‘கழுநித் தொட்டியைக் கலக்கின மாதிரி’ என்று? எல்லாம் அந்த ரகந்தான். ஒரு பதிப்புக்கான அடிப்படை நியாயங்களைக் கூடச் சேர்க்காத தயாரிப்பாகவே அவை இதுவரை இருந்துவந்திருக்கின்றன.


நல்ல வேளையாக இன்று நல்லது நடந்திருக்கிறது. ஜானகிராமன் இன்று புதிதாய்ப் பிறந்துவிட்டார். எனக்குப் பரம சந்தோஷம். காலச்சுவடு அவரது அனைத்துச் சிறுகதைகளையும் தொகுத்துச் செம்பதிப்பாகக் கொண்டுவந்திருக்கிறது. சுகுமாரனைக் கொண்டாட வேண்டும். எப்பேர்ப்பட்ட உழைப்பு. பார்த்துப் பார்த்துச் செய்திருக்கிறார். கிரமப்படி, பிரசுரமான அவரது அனைத்துக் கதைகளுடன் கூட புத்தகங்கள் எதிலும் சேராத கதைகளையும் தேடிப் பிடித்திருக்கிறார்.


ஓர் எழுத்தாளனை இப்படித்தான் கௌரவிக்கவேண்டும் என்று எடுத்துக் காட்டுவது மாதிரியான தயாரிப்பு. காலச்சுவடுக்கும் கண்ணனுக்கும் சுகுமாரனுக்கும் என் தீராத அன்பு. திக்குமுக்காடிக்கொண்டிருக்கிறேன்.


ஜானகிராமனின் மோகமுள், அம்மா வந்தாள், செம்பருத்தி போன்ற நாவல்களும் காலச்சுவடில் இப்போது நல்ல பதிப்பாக வந்துவிட்டன. மொத்தமாக எடுத்துக்கொண்டு போய்விடலாம் என்று கை துடிக்கத்தான் செய்தது. கஷ்டப்பட்டு அடக்கிகொள்ள நேர்ந்ததற்கு இந்த வருஷம் கண்காட்சிக்கென போட்ட பட்ஜெட் எகிறி மும்மடங்காகிவிட்டது தவிர வேறு காரணமில்லை.


என்ன கெட்டுவிட்டது? மாதமொன்றாக மெதுவாக இனி வாங்கிவிடலாம்.


புதிய பதிப்புகள் அனைத்தையும் வாங்கிவிடும்போது பழைய பிரதிகளைக் கொடுத்து உதவுங்கள் என்று யாரும் கேட்காதீர்கள். கொடுக்கமாட்டேன். எரித்தால் அபசாரம். நான் அவற்றைப் புதைத்துவிடப் போகிறேன்.


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 16, 2015 20:36