Pa Raghavan's Blog, page 25

March 31, 2016

பொன்னான வாக்கு – 20

முன்னொரு காலத்தில் ஓட்டு என்பது மூன்று வகைப்படும். நல்ல ஓட்டு, கள்ள ஓட்டு, செல்லாத ஓட்டு. இன்றைக்கு இது நான்கு வகையாக மாறியிருக்கிறது. நல்ல ஓட்டு, கள்ள ஓட்டு, இல்லாத ஓட்டு, போட விரும்பாத ஓட்டு.


வாக்குச் சீட்டில் சின்னம் பார்த்து முத்திரையிட்டுக்கொண்டிருந்த காலத்தில் செல்லாத ஓட்டுப் பிரச்னை நிறைய இருந்தது. இரக்க சுபாவம் மிக்க அப்பாவி மகாஜனங்கள் ஒன்றுக்கு இரண்டு மூன்று இடங்களில் கும்மாங்குத்து குத்திவிடுவார்கள். அது கடைசியில் யாருக்கும் இல்லாது போய்விடும்.


மின்னணு இயந்திரம் புழக்கத்துக்கு வந்துவிட்ட பிறகு அந்தப் பிரச்னை இல்லை. ஒரு சின்னத்துக்கு எதிரே ஒரு பட்டன். ஒரே அமுக்கு. தீர்ந்தது விஷயம். ஓட்டு செல்லாது போக வாய்ப்பே இல்லை. ஆனால் அது இல்லாது போகும்போது கள்ள ஓட்டாக மாறிவிடுகிறது.


இல்லாது போவதென்பது வாக்காளர் பட்டியல் குளறுபடிகளால் நேர்வது. இது பழைய செல்லாத ஓட்டுகளைக் காட்டிலும் இம்முறை அதிகம் இருக்கும் போல் தெரிகிறது. எம்பெருமான் தான் காப்பாற்ற வேண்டும்.


இருந்தும் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்றால் அதையும் பதிவு செய்வதே போட விரும்பாத ஓட்டு – நோட்டா. இது பெரும்பாலும் அறிவுஜீவி இனத்தாருக்கானது. சாதாரண மக்கள், அடி மனத்தில் அரைக்கால் வீசமாவது பொறுப்புணர்வு உள்ளவர்கள் யாரும் இதைச் செய்ய விரும்பமாட்டார்கள்.


இந்தப் பீடிகை என்னத்துக்கு என்பீர்களானால் விஷயமிருக்கிறது.


கடைக்குப் போய் கால்கிலோ கத்திரிக்காய் வாங்கி வரச் சொல்லி உங்கள் இல்லத்தின் உள்ளாட்சித் துறை அமைச்சர் உங்களை அனுப்பி வைக்கிறார் என்று வையுங்கள். உடனே உங்களுக்கு ஒரு பதற்றம் பற்றிக்கொள்ளுமா, இல்லையா? எனக்கெல்லாம் ஜுரமே வந்துவிடும்.


ஐயே இதென்ன பழைய கத்திரிக்கா? புதுசா ஃப்ரெஷ்ஷா பாத்து வாங்கத் தெரியாதா? என்று வீட்டுக்கு வந்ததும் முதல் அம்பு வந்து விழும். எல்லாம் புதுசுதான்; இப்பத்தான் லாரில வந்து இறங்கிச்சி என்று சூடம் அணைத்து சத்தியம் செய்தால் அடுத்த அம்பு சொய்யாவென்று உடனே வரும்.


ஒரு காரியம் ஒழுங்கா பண்ணத் துப்பில்லை. பத்து காய்ல ஆறு காய் சொத்தை.


அதெல்லாம் ஒண்ணும் சொத்தை இல்லை. காய் வாகே அப்படித்தான். நானே கடைக்காரண்ட்ட கேட்டேன் என்று அந்த அம்பையும் சமாளித்தால், மூச்சு விடுவதற்குள் மூன்றாவது.


அவந்தான் கால் கிலோ இருவது ரூபான்னு சொன்னான்னா மண்டைய மண்டைய ஆட்டிட்டு அப்படியே வாங்கிட்டு வந்துடுவிங்களா? நேத்து சாயங்காலம் கூட நான் விலை கேட்டேன். பன்னெண்டு ரூபாதான். எனக்குன்னு வந்து வாய்ச்சிங்களே. ஒரு காரியத்துக்குத் துப்பில்ல.


ஆக, ஒரு கத்தரிக்காய் வாங்குவதென்றால் அது புதிதா என்று பார்க்க வேண்டும். சுருக்கங்கள் இல்லாமல் இருக்கிறதா, சொத்தையில்லாமல் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும். சரியான விலைதானா என்று தெரிந்திருக்க வேண்டும். மேற்படி அனைத்து சங்கதிகளிலும் கோட்டை விட்ட கோயிஞ்சாமி என்றால், வீட்டில் உதைபடாமல் தப்பிக்கும் கலையையாவது அறிந்திருக்க வேண்டும்.


கேவலம் கால் கிலோ கத்திரிக்காய்க்கு இத்தனை மெனக்கெடும்போது, ஐந்து வருடங்களுக்கு நம்மை ஆள ஒருத்தருக்கு அதிகாரம் கொடுக்கிற விஷயத்தில் எத்தனை கேள்விகளை நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்!


ஒரு கட்சி நமக்குப் பிடிக்கலாம். அல்லது ஒரு வேட்பாளர் நல்லவராக, உத்தமோத்தமராக இருக்கலாம். விதியின் சதியாக அவர் நாம் விரும்பாத ஒரு கட்சியின் சார்பில் நிற்பவராக இருந்துவிட்டால்?


அட கட்சி சார்பே இல்லையப்பா. ஏதோ ஆர்வக் கோளாறு சுயேச்சை. ஆனால் மனுஷன் படித்திருக்கிறான். ஊருக்கு நல்லது செய்ய நினைக்கிறான். நம்மோடு சேர்த்து அவனுக்கு நாலே முக்கால் ஓட்டுதான் விழும். போட்டால் வேஸ்ட். ஆனால் போடலாம் என்று தோன்றுகிறதே? என்ன செய்யலாம்?


இந்த இடத்தில்தான் கத்திரிக்காயை நாம் நினைவுகூர வேண்டியிருக்கிறது. அப்பழுக்கே சொல்ல முடியாத அற்புத குண்டு கத்திரிக்காய்களாகப் பார்த்துப் பொறுக்கி, மலிவு விலையில் வாங்கிச் சென்று வீட்டில் கொடுத்துப் பாருங்கள்! இதற்கும் ஓர் அம்பு நிச்சயம் உண்டு.


‘கொஞ்சமாச்சும் ப்ரசன்ஸ் ஆஃப் மைண்ட் இருக்கா உங்களுக்கு? நேத்துதானே கத்திரிக்கா பொறியல் நம்ம வீட்ல? இன்னிக்கும் அதையே வாங்கிட்டு வந்து நிக்கறிங்களே, கடைல வேற எதுவுமே உங்க கண்ணுல படலியா?’


ஆட்சிக்கு யார் வந்தாலும் அப்படித்தான். கல்யாண குணங்கள் மாறப்போவதில்லை. ஆனால் கத்தரிக்காய் வாங்கப் போகிற பிரகஸ்பதி, அது சொத்தையாக இல்லாதிருக்கிறதா என்று மட்டும் பார்க்கலாமல்லவா?


என்ன கட்சியோ, என்ன ஜாதியோ இருந்துவிட்டுப் போகட்டும். வேட்பாளர் சரியானவரா? குற்றப்பின்னணி இல்லாதவரா? கொஞ்சமாவது படித்திருக்கிறாரா? ஊருக்கு உபகாரியா?இவ்வளவு பார்த்தால் போதும்.


மாநிலம் பயனுறுவதைப் பற்றி மற்றவர்கள் யோசிக்கட்டும். நமது பேட்டை உருப்பட என்ன வழி என்று முதலில் பார்ப்போம்.


0


(நன்றி: தினமலர் 01/04/16)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 31, 2016 20:34

பொன்னான வாக்கு – 19

என் மிகச் சிறு வயதில் கண்ட ஒரு காட்சி இப்போதும் நினைவில் இருக்கிறது. ஒரு மாட்டு வண்டி. அதற்கு கலர் பேப்பர் ஒட்டி, பலூனெல்லாம் கட்டி சைடில் சாத்துக்குடி பழங்களை வரிசையாகத் தொங்கவிட்டு அலங்காரம் செய்திருப்பார்கள். வண்டிக்குப் பின்னால் ஒரு தட்டி, முன்னால் ஒரு தட்டி. ஃப்ளோரசண்ட் நிறங்களில் வேட்பாளர் பெயரையும் சின்னத்தையும் கொட்டையாக வரைந்திருப்பார்கள். வண்டியில் நாலு பேர் உட்கார இடம் இருந்தாலும் யாரும் உட்காரமாட்டார்கள். உள்ளே பிட் நோட்டீஸ் கட்டுகள் மட்டும்தான் இருக்கும். அப்புறம் மைக் செட். கொண்டையில் கட்டிய கூம்பு ஸ்பீக்கரில் வண்டிக்குப் பின்னால் நடந்துவரும் தொண்டரின் குரல் கமறும். வாக்காளப் பெருமக்களே, மறந்துவிடாதீர்கள்! மறந்தும் இருந்து விடாதீர்கள்!


அடக்கடவுளே, இதற்கு என்ன அர்த்தம்? தப்பித்தவறி மறந்துவிட்டால் உடனே மண்டையைப் போட்டுவிடச் சொல்கிறார்களா?


வீடுதோறும் வண்டி நிற்கும். கைகூப்பிய வேட்பாளர் படியேறி வந்து வாக்குக் கேட்பார். உரிமையுடன் வீட்டுப் பெண்களிடம் தண்ணீரோ மோரோ வாங்கிக் குடித்துவிட்டு அடுத்த வீட்டுக்குப் போய் கைகூப்புவார். ஊர்வலம் வீதியைக் கடந்து சென்ற பிறகு சாலையெங்கும் பிட் நோட்டீசுகள் காற்றில் உருண்டு மறந்துவிடாதீர்கள்! மறந்தும் இருந்து விடாதீர்கள்! என்று மௌனமாக அலறும்.


முப்பத்தைந்து நாற்பது வருட இடைவெளியில் மாற்றமும் முன்னேற்றமும் ஜோராக கனபரிமாணம் பெறத்தான் செய்திருக்கிறது. இன்னொருத்தர் உடன் வந்து அறிமுகம் செய்யவோ, பிரசாரக் குரல் கொடுக்கவோ இன்று அவசியமில்லை. வெள்ளக்கிணறு பத்ரகாளியம்மன் கோயிலில் சாமி கும்பிட்டு, பிரசாரத்தை ஆரம்பித்துவிட்டேன் என்று பாஜகவின் வானதி சீனிவாசன் ஃபேஸ்புக்கில் ஒரு ஸ்டேடஸ் போடுகிறார். உடனே எத்தனை ஆசீர்வாதங்கள், எவ்வளவு வாழ்த்துகள், உற்சாகக் கூக்குரல் கமெண்ட்டுகள்! போகிற வழியில் ஶ்ரீஶ்ரீ ரவிசங்கரைச் சந்தித்து (இவருக்கு மட்டும் ஏன் எப்போதும் திருதிரு?) ஆசி பெற்ற விவரமும் ஸ்டேடஸாகிவிடுகிறது.


விஜயகாந்த் கூட்டணியில் இருப்பதால் மநகூவினர் ஹெல்மெட் அணிந்து செல்வது நல்லது என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் ஒரு ஸ்டேடஸ் போடுகிறார். தமது தடாலடித் திருவாய்மொழிகளால் எப்போதும் டைம்லைனை சுறுசுறுப்பாக வைத்திருப்பதில் கவனமாக இருக்கிறார்.


அந்தப் பக்கம் வைகோ என்னடாவென்றால் அந்த பாலிமர் டிவி வெளிநடப்பு விவகாரத்தின் பின்னணி விவரங்களை ஒரு ஆடியோ போஸ்டாக சமூகத்தின் முன் வைக்கிறார். ஊர் ஊராகப் போய்ச் சொல்லிக்கொண்டிருப்பதைக் காட்டிலும் ஓர் ஒலித்தகவல் போதும். கடும் வேலை நெருக்கடிகளுக்கு நடுவே பெரிய மனசு பண்ணி பேட்டிக்கு நேரம் ஒதுக்கிக் கொடுத்ததையும் நிருபராகப்பட்டவர் திட்டமிட்டு வெறுப்பேற்றும் கேள்விகளால் சீண்டியதையும் எடுத்துச் சொல்லி, நானோ கள்வன்? நானே நல்லவன் என்கிறார்.


பேரியக்க காங்கிரசின் புதுப் புதல்வி குஷ்புவின் பக்கத்துக்குப் போய்ப் பாருங்கள். அழகழகாக எத்தனை எத்தனை செல்ஃபிகள்! குஷ்புவின் முகம்தான் அவரது செய்தி. அவரைக் கிண்டல் செய்து பரப்பப்படும் நகைப் பழிகைகளையும் (Memesக்கு இத்தமிழ்ச் சொல்லை உருவாக்கித் தந்த கவிஞர் மகுடேசுவரனுக்கு நன்றி.) அவரது பக்கத்திலிருந்தே பெற முடிவதன்மூலம் அம்மணியின் ஜனநாயக சிந்தனை எத்தனை உயர்வானது என்பதை உணர முடியும்.


கலைஞர் இல்லாத சமூக வலைத்தளமா? ஒரு சீட்டுக் கட்சிகளுடன் ஒப்பந்தம் செய்துகொண்ட விவரங்களை சலிக்காமல் அப்டேட் செய்துகொண்டே இருக்கிறார். போகிற போக்கில் கலைஞர் ஒப்பந்தம் செய்யும் ஒரு சீட்டுக் கட்சிகளின் எண்ணிக்கை 234ஐயே தாண்டிவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது. இதில் முக்கியமான சங்கதி என்னவெனில், கலைஞரின் அப்டேட்டுகள் மூலம்தான் தமிழ்நாட்டில் இப்படியாப்பட்ட கட்சிகளும் இருக்கின்றன என்கிற விவரமே தெரியவருகிறது.


ஸ்டாலின் ஒரு பக்கம், அன்புமணி ஒரு பக்கம் யுத்த முஸ்தீபுகளுடன் பிரசார ஸ்டேடஸ் போட்டுக்கொண்டிருக்கும்போது, ஜிகே வாசன் அப்புராணியாகப் பரம்பிக்குளம் அணையைப் பாதுகாக்கும் உரிமையைத் தமிழகத்திடமிருந்து பறிக்க நினைக்கும் கேரள அரசைக் கண்டித்துக்கொண்டிருக்கிறார். அடுத்த அஞ்சு வருஷத்துக்குத் தென்னந்தோப்பில் ரெஸ்ட் எடுக்கலாம் என்று எண்ணியிருப்பார் போலிருக்கிறது.


சந்தேகமில்லாமல் இந்தத் தேர்தலின் போக்கையும் முடிவுகளையும் சமூக வலைத்தளங்கள் தீர்மானிக்கப் போகின்றன. தலைவர்களின் நேரடிப் பிரசாரம் ஒரு புறமிருக்க, தொண்டர்கள் மற்றும் விசுவாசிகள், அவிசுவாசிகளின் பரப்புரைகள் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்குமென்று தோன்றுகிறது. திமுக அனுதாபிகள் ஓயாமல் மநகூ-விஜயகாந்த் அணியினரைத் தாக்கிக்கொண்டிருக்கிறார்கள். நாம் தமிழர் விசுவாசிகள் பாமகவின் தேர்தல் அறிக்கையே சீமானிடமிருந்து சுட்டது என்று பீதியைக் கிளப்புகிறார்கள். அன்புமணி நாலாப்பு படிக்கும்போதே நான் முதல்வரானால் கட்டுரை எழுதிவிட்டாரல்லவா! ஒரே குழப்ப இம்சை.


இந்த ஆட்டத்தில் சேராத ஒரே கட்சி அதிமுக. சமூகமாவது? வலைத்தளமாவது? மே 16க்குள்ளாவது அவர்கள் நேர்காணல் யக்ஞத்தை முதலில் முடித்தாக வேண்டும்.


0


(நன்றி: தினமலர் 31/03/16)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 31, 2016 07:41

March 29, 2016

பொன்னான வாக்கு – 18

கோடிக்கணக்கான பணம் என்றால் அது எப்படி இருக்கும்? எத்தனை சூட்கேசுகளில் நிரம்பும்? சராசரித் தமிழனின் தணியாத தாகங்களைப் பட்டியல் போட்டால் அதில் முதல் இரண்டு மூன்று இடங்களுக்குள் இது நிச்சயமாக வரும். சினிமாக்களில் காட்டப்படும் பணக்கட்டுகளெல்லாம் திருவல்லிக்கேணி வெப் ஆஃப்செட் ப்ரஸ்களில் அடித்தவை என்பது தரை டிக்கெட்வாசிகள் வரை தெரிந்துவிட்ட நிலையில் நிஜ கோடிகளைக் காணும் தாகமானது பல்லாண்டு காலமாகத் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.


அதுவும் அந்த ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி விவகாரம் வெளியே வந்த பிறகு சிண்டைப் பிய்த்துக்கொள்ளாத குறை. ம்ஹும். செய்தித் தாள்களில் நம்பருக்குமேல் எதையும் போடுவதில்லை. அட ஒரு பத்திருபது சூட்கேசுகளையாவது போட்டோ பிடித்துப் போடுங்களப்பா என்றால் மாட்டார்கள்!


விமான நிலையக் கடத்தல் பிரகஸ்பதிகளிடம் கைப்பற்றிய தங்க வைர வைடூரிய டாலர் வகையறாக்களைக் காட்சிப் படுத்தும்போதுகூட பலகோடி ரூபாயின் முப்பரிமாணம் தெரிவதில்லை. நெற்றியில் பட்டையடித்த பஸ் ஸ்டாண்டு சிட்டுக்குருவி லேகிய டாக்டர் தமது சூரண பாட்டில்களுடன் போஸ் கொடுப்பது போல யாராவது போட்டோவுக்குத் தலைகுனிந்து நிற்பார்கள். அட ஒரு தகவல் அறியும் உரிமை மனு எழுதிப் போட்டால் ஒரு ஆயிரம் கோடி ரூபாயை அள்ளி எடுத்துக் காட்டித் தொலைப்பார்களா என்றால் அதுவும் கிடையாதாம்.


என்ன ஒரு இம்சை ஜனநாயகம்!


ஒரு பக்கம் தேர்தல் கமிஷன் கைப்பற்றும் கோடிகளைப் பற்றிய செய்திகள். மறுபக்கம் மங்காத்தா கூட்டணி பேர அக்கப்போர்கள். இவர் இத்தனை கோடி வாங்கினார், அவரை அத்தனை கோடிக்கு விலை பேசினர் என்ற குற்றச்சாட்டுத் திருவிழா கனஜோராக ஆரம்பமாகியிருக்கிறது. மார்ச் மாசமே இத்தனை சூடு என்றால் மே மாசம் வெளியே வரவே முடியாது போலிருக்கிறது.


ஒரு செய்தி படித்தேன். செய்தி என்று சொல்வதா? வதந்தி என்று ஒதுக்கிவிடவும் தோன்றவில்லை. இல்லாமலா தேர்தல் கமிஷனுக்கே புகார் போயிருக்கும்? சிறுதாவூருக்குப் போன கண்டெய்னர் லாரிகள். மேற்படி கிராமத்தில் உள்ள ஓர் இனிய இல்லத்தில் இருக்கக்கூடிய ரகசியச் சுரங்க அறைகள். லாரிகளில் போனது என்ன?


ஒரு பத்திரிகை இவ்விவரத்துக்கு இன்னும் கொஞ்சம் மேக்கப் போட்டு எழுதியிருந்தது. பங்களாவை நோக்கிப் போன கண்டெய்னரை நட்ட நடு ராத்திரி நேரத்தில் யாரோ சில ஊர் மக்கள் நிறுத்தி டிரைவரிடம் விசாரித்ததாகவும், லாரியில் நிலக்கரி எடுத்துப் போவதாக அவர் சொன்னதாகவும் குறிப்பிட்டிருந்தார்கள். இதையெல்லாம் பத்திரிகை ஆபீசுக்கு போன் பண்ணிச் சொல்லிவிட்டுத்தான் ஸ்டியரிங்கே பிடிப்பார்களோ என்று நினைக்கும்படியாகிவிடுகிறது.


ஒன்றும் கேட்கப்படாது. ஏ, மனிதனே! ஒன்றல்ல பத்து கண்டெய்னர் லாரிகள். போடு அடுத்த குண்டு.


இவரை இழுத்து வர ஐந்நூறு கோடி பேரம். அவரை இழுத்துப் போக ஆயிரத்தி ஐந்நூறு கோடி பேரம். நீ இதைச் சொல்கிறாயா? இந்தா ஒரு வக்கீல் நோட்டீஸ். பதிலுக்கு இந்தா ஒரு புகார்ப் பட்டியல். தொலைக்காட்சி நேர்காணல்கள். வெளிநடப்பு வைபவங்கள். வீர உரைகள். ஆனால் கோடிகளாலான கேடிகளின் உலகை இன்னும் யாரும் முழுதாக ஒரு டியூப் லைட் போட்டு அடையாளம் காட்டவில்லை என்பதுதான் உண்மை. தமிழனுக்குப் பல்லாயிரம் கோடியைப் பார்த்துப் பரவசப்படும் ப்ராப்தம் இன்னும் வாய்க்கவில்லை. போதும் ஒரு குவார்ட்டரும் கோழி பிரியாணியும்.


மாநிலத்தில் வங்கிகளெல்லாம் இருக்கிறதா, வேலை செய்கிறதா என்றே குழப்பம் வந்துவிடுகிறது. இத்தனை ஆயிரம் கோடிகளெல்லாம் வெளியே இருந்தால் ஏடிஎம்களில் எப்படி அஞ்சு பத்தாவது இருக்கும்? என் பேட்டையில் உள்ள ஒரு ஏடிஎம்மில் எப்போது போனாலும் ரிப்பேர் என்று போர்டு மாட்டி வைத்திருப்பான் பரதேசி. சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்?


இந்தப் பண உற்சவம் கன ஜோராக நடந்துகொண்டிருக்கும் சூழ்நிலையில் மாநிலத்தில் தினமும் குறைந்தது ஆயிரத்து இருநூறு கோடி ரூபாய்க்கான வியாபாரம் முடங்கிவிடுவதாக ஒரு தகவல் வந்திருக்கிறது. சிறு வியாபாரிகள் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே போக முடிவதில்லை. அட சந்தையில் ஒருஜோடி மாடு பிடிப்பதென்றால் என்ன செலவு? எடுத்துக்கொண்டு சந்தைக்குக் கிளம்பினாலே பறக்கும் படை வந்து பறிமுதல் செய்துவிடுகிறது. இந்தப் பணத்துக்கு என்ன கணக்கு? ஐயா ஏடிஎம்மில் எடுத்தேன் என்றால் எங்கே ரசீது? எந்த ஏடிஎம்மில் பணம் எடுத்ததற்கான ரசீது ஒழுங்காக வருகிறது?


நடைமுறை நரக அவஸ்தைகள். விடுங்கள்;


இந்தக் கோடிக் கரையில் மீன் பிடிக்கும் தேர்தல் கமிஷன் கட்சிக்காரர்களிடம் பறிமுதல் செய்யும் பணமூட்டைகளை ஒருமுறையாவது பகிரங்கமாக மக்கள் முன் வைக்கவேண்டும். அத்தனை பணத்தைப் பார்த்த கணத்திலாவது ஒரு ஞானம் சித்திக்காதா? நவீன கால போதி மரமென்பது பணங்காய்ச்சி மரமாகத்தான் இருக்கவேண்டும்.


(பா ராகவன் – தொடர்புக்கு: writerpara@gmail.com)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 29, 2016 20:03

March 28, 2016

பொன்னான வாக்கு – 17

பீதியைக் கிளப்புவதில் நம் மக்களை அடித்துக்கொள்ள ஆள் கிடையாது. கடந்த இரண்டு மூன்று தினங்களாக சமூக வலைத்தளங்களில் அவிழ்த்துவிட்ட நகரத்து மாடு போல் ஒரு புகைப்படம் இஷ்டத்துக்குச் சுற்றி வந்துகொண்டிருக்கிறது. கனிமொழியுடன் நடிகை ஷகிலா இணைந்திருக்கும் புகைப்படம். ஷகிலா திமுகவில் சேர்ந்துவிட்டார் என்பது படக்குறிப்பு.


என்னதான் தமிழகத்தில் ஷகிலாவுக்கு இன்னும் கோயில் கட்டப்படவில்லை என்றாலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் உள்ள கோஷ்டிகளைக் காட்டிலும் அதிக ரசிகர்கள் அவருக்கு உண்டு. ஆனாலும் அம்மணி அண்டை மாநிலத்து வாக்காளராயிற்றே; இவர் எப்படி இங்கே வந்து திமுகவில் சேருவார் என்று கொஞ்சம் குழப்பமாக இருந்தது. ஆனால் புகைப்படம் பொய் சொல்லுமா? கறுப்பு சிவப்பு பார்டர் வைத்த சேலை அணிந்த ஷகிலா. அருகே புன்னகையுடன் கனிமொழி. ‘திமுகவுக்காகப் பிரசாரம் செய்வேன்; இவ்வாறு அவர் கூறினார்’ என்று டிபிகல் பத்திரிகைத்தனமான மொழியில் எழுதப்பட்ட குறிப்பில் கொஞ்சம் அசந்துவிட்டேன்.


தவிரவும் சாத்தியமில்லாததென்று ஒன்று உண்டா? அரசியலில் எதுவும் நடக்கும். இனி எண்ட ஸ்டேட் தமிழ்நாடு. எண்ட முதல்வர் கலைஞர். எண்ட நாஷ்டா பொங்கல் வடை என்று முன்னோர் உரைத்தவண்ணம் முழுதும் மாறிவிட்டிருக்க மாட்டார் என்பது என்ன நிச்சயம்? எதற்கும் இருக்கட்டும் என்று திமுகவில் உயர்மட்டத் தொடர்பில் உள்ள நண்பர் ஒருவருக்கு போன் செய்து விசாரித்தபோது அது வெறும் வதந்திதான் என்று சொன்னார். படம் எப்போதோ எதற்கோ எடுக்கப்பட்டது. இப்போது “உபயோகப்படுத்தப்பட்டு” வருகிறது.


பொய்த் தகவல்தான். ஆனாலும் திமுகவில் ஷகிலா என்கிற பரப்புரையின் பின்னால் உள்ள திட்டமிட்ட கள்ளச் சிரிப்புக் கபடநாடகம் படு பயங்கரமானது. குஷ்பு விட்டுச் சென்ற பேரிடத்தை (பேரிடரையல்ல) இனி இவர் நிரப்புவார் என்றொருவர் காவியத்துக்குப் பாயிரம் பாட ஆரம்பித்தார். தொடர்ந்து இந்த வதந்தி எப்படியெல்லாம் புதுப்பூச்சு எடுக்கும் என்பதையோ, என்னென்ன மாதிரி இடக்கரடக்கல்களுக்கு இடமளிக்கும் என்பதையோ விவரிக்கத் தேவையில்லை.


ஆ, நடிகைகள்! அரசியலில் இவர்கள் பங்குதான் எத்தனை மகோன்னதமானது! வைஜெயந்தி மாலா பாட்டி காலத்திலிருந்து சமூகம் காணாததில்லைதான். ஆனாலும் ஒவ்வொரு முறை யாராவது ஒரு நடிகை அரசியலில் இறங்கும்போதும் அல்லது குதிக்கும்போதும் அது ஒரு முக்கியச் செய்தி ஆகிவிடுகிறது. தொழிலதிபர்கள் அரசியலுக்கு வருவதில்லையா? சாமியார்கள் அரசியல் பண்ணுவதில்லையா? ரிடையர்டு அரசு ஊழியர்கள் களமிறங்குவதில்லையா? விளையாட்டு வீரர்கள் வருவதில்லையா? நேற்றுக்கூட ஒருத்தர் வந்தாரே. ஆ, ஶ்ரீசாந்த்! என்ன கவனமாக கிரிக்கெட்டிலும் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவராகப் பார்த்துத் தேர்ந்தெடுத்துக் களமிறக்கியிருக்கிறார்கள்!


ஆனாலும் நடிகைகளின் பெயர்கள் அடிபடும்போதெல்லாம் எப்படியோ ஒரு கவன ஈர்ப்பு கூடிவிடுகிறது. புடைவைக்கு மேலே அங்கவஸ்திரத்தைத் தொங்கவிட்டுக்கொண்டு அரசியல் மேடைகளில் அம்மா இங்கே வாவா சொல்லும் தேசிய நீரோட்ட நடிகைகள். புடைவை பார்டரிலேயே கட்சிக்கறை காட்டும் மாநில நீரோட்ட நடிகைகள். டப்பிங் இல்லாத அந்த மகரக் குரல்கள் கொஞ்சம் பேஜார்தான் என்றாலும் கூட்டத்தைக் கட்டிப்போடும் விற்பன்னர்கள் இவர்களே என்பதில் நமது கட்சித் தலைவர்களுக்கு மாற்றுக்கருத்தே கிடையாது.


இந்த நடிகையர் வரப்பிரசாத விஷயத்தில் மற்ற யாரையும்விட காங்கிரஸ் அதிர்ஷ்டம் செய்த கட்சி. சீசனுக்கு ஒருத்தராவது காங்கிரசில் சேர்ந்து கலர்ஃபுல்லாக்கிவிடுகிறார்கள். என்ன இருந்தாலும் நூற்றாண்டுப் பாரம்பரியம். நடிகைகளைச் சுண்டி இழுக்கும் விஷயத்தில் மட்டும் காங்கிரசின் தேசிய, மாநிலத் தலைவர்களை அடித்துக்கொள்ளவே முடியாது.


திமுகவில் குஷ்பு திமுகவில் இருந்தவரை, அதற்கு முன்னும் பின்னும் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவில் அவரைக் குறித்த பேச்சு இருந்தது. அவர் ஒரு குட்டி அதிகார மையமாகிக்கொண்டிருப்பதாகவே சொன்னார்கள். திமுகவில் அன்னிய முதலீடா? வாய்ப்பே இல்லை. திராவிடம் அதற்கெல்லாம் இடம் கொடுக்காது. அன்னிய முதலீடெல்லாம் காங்கிரசில்தான் சாத்தியம். எனவே காலக்கிரமத்தில் அவர் அங்கே போய்ச் சேர்ந்தார். நாளது தேதி வரை சௌக்கியமாகவே இருக்கிறார். இந்தத் தேர்தலில் விளையாட வருகிறாரோ இல்லையோ. எப்படியும் ஒரு மாநிலங்களவை எம்பி பதவி உறுதி.


அதிமுகவிலும் சமகால நடிகைகள் உண்டு. ஆனால் அமைச்சர்களே வெளியே தெரியாத கட்சியில் அவர்கள் என்ன பெரிதாகச் செய்துவிட முடியும்?


எனக்குத் தெரிந்து சினிமாவிலிருந்து அரசியலுக்குப் போய் அதிரடியாகக் களமாடிக்கொண்டிருக்கும் ஒரே நபர், ஜெயலலிதாவுக்குப் பிறகு ரோஜாதான். எத்தனை போராட்டங்கள், சிறைவாசங்கள், புரட்சிப் பொதுக்கூட்டங்கள்! விட்டேனா பார் என்று சுழன்று சுழன்று ரவுண்டு கட்டிக்கொண்டிருக்கிறார்.


அன்று திருப்பதியை விட்டது, இன்று ரோஜாவை விட்டது இரண்டுமே தமிழனின் துரதிருஷ்டம்தான். இந்தத் தேர்தல் சீசனுக்கு மட்டுமாவது யாராவது அவரை இங்கே இரவல் வாங்கி வரலாம். அட, ஒரு சீட் கட்சிகள் லிஸ்டில் கூட இங்கே ஒய்யெஸ்ஸார் காங்கிரஸ் இல்லை பாருங்கள்! பெரும் துக்கம்தான்; சந்தேகமில்லை.


0


(நன்றி: தினமலர் 29/03/16)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 28, 2016 23:26

March 27, 2016

பொன்னான வாக்கு – 16

கல்யாணமென்றால் பத்திரிகை அடித்தாக வேண்டும். கருமாதி என்றாலும் ஒரு கார்டு அச்சடித்தே தீரவேண்டும். பிறந்த நாளுக்கு ஃப்ளக்ஸ் பேனர், மஞ்சள் நீராட்டு விழாவுக்கு போஸ்டர் – அட, யாராவது கருங்குழியிலிருந்து கலிபோர்னியாவுக்குக் கிளம்பிப் போனால்கூட பேப்பரில் ஒரு விளம்பரம் கட்டாயமாகியிருக்கும் “பண்பாட்டு”ச் சூழலில் தேர்தலுக்கு ஓர் அறிக்கை என்பதென்ன கொலைக் குத்தமா? போடு, ஆளுக்கொரு அறிக்கை.


ஆனால் இந்த தேர்தல் அறிக்கைகளை எத்தனை பேர் பொருந்திப் படிக்கிறார்கள் என்று தெரியவில்லை. அப்புசாமி சீதாப்பாட்டி கதைகளை விஞ்சுமளவுக்கு இந்த அறிக்கைகளில் சுவாரசியமும் நகைச்சுவையும் கொட்டிக்கிடக்கும். தமிழ் சமூகத்துக்கு இந்த ரகசியத்தை யாரும் இதுவரை சரிவர எடுத்துச் சொல்லாத காரணத்தால் அறிக்கைகள் அநாதைக் குழந்தைகள் போலாகிவிடுகின்றன. எழுதியவர்களே ஆட்சிக்கு வந்தாலும் அதைக் கண்டுகொள்வதில்லை என்பது ஒரு புறமிருக்க, நமக்காகத்தானே வேலை மெனக்கெட்டு மண்டபத்தில் ஆள் பிடித்து எழுதிப் பிரசுரிக்கிறார்கள்? ஒரு மரியாதைக்குப் புரட்டிப் பார்க்க வேண்டாமா?


இந்தத் தேர்தலுக்கு கேப்டன் விஜயகாந்தின் வாக்குறுதிகளை வாசித்தீர்களா? பெட்ரோல் லிட்டருக்கு நாற்பத்தைந்து ரூபாய்க்குக் கொடுப்பேன் என்கிறார். டீசல் என்றால் முப்பத்தைந்து. மக்களின் முதல்வரல்ல; ரசிகர்களின் முதல்வராகப் போகிற கேப்டனுக்கு பெட்ரோலை பாமாயில் ரேஞ்சுக்குக் கீழே இறக்கிவிடும் உத்வேகம் இருப்பதைப் பாராட்டித்தான் தீரவேண்டும். ஆனால் துரதுருஷ்டவசமாக பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்யும் அதிகாரம் மாநில முதலமைச்சருக்கு இங்கு இல்லையே?


கேப்டனுக்கு இது தெரியாதா என்றெல்லாம் கேட்கப்படாது. அவர் முதல்வரானால் பெட் ரோலியத் துறையையே மாநில அதிகார வரம்புக்கு மாற்றிவிடுவாராயிருக்கும். ஆனானப்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் கண்ணிலேயே விரல் விட்டு ஆட்டியவர். இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா?


கேப்டன் இப்படி பெட்ரோலியப் புரட்சிக்குத் தயாராகிற நேரத்தில் அந்தப் பக்கம் புரட்சித் தமிழர் சீமான் என்னடாவென்றால் மாநில அரசு இனி ஒரு வங்கி நடத்தும் என்கிறார். தமிழீழ வங்கி மயக்கம் இன்னும் அவருக்குத் தீர்ந்தபாடில்லை. அந்த வங்கி திவாலாகி, புலிகளே இல்லாமல் போய், புரட்சியெல்லாம் காலாவதியாகிவிட்ட பிறகும் விடுவேனா பார் என்கிறார்.


சந்தன வீரப்பனுக்கு ‘வனக்காவலர்’ என்றொரு பட்டம் கொடுத்து, அவனை ‘ஐயா வீரப்பனார்’ ஆக்கி, மணி மண்டபம் கட்டுவேன் என்கிறார். திம்மம், ஆசனூர் பகுதி வாக்காளர்களை மொத்தமாக அள்ளி எடுத்து பாக்கெட்டில் போட்டுக்கொள்ளும் முயற்சிதான் இது என்கிற பட்சத்தில் ஆட்டோ சங்கர் பெயரில் ஓர் அறக்கட்டளை அமைக்கவாவது சீமான் நடவடிக்கை எடுக்கலாம். சென்னை நகரத்து பாட்ஷாக்களில் பாதி பேராவது வாக்களிக்கமாட்டார்கள்?


கேப்டனின் இன்னொரு அசகாயத் திட்டத்தைச் சொல்ல மறந்துவிட்டேனே? நல்லி, போத்தீஸ் போன்ற துணிக்கடைகளுக்கு வெளி மாநிலங்களிலும் வெளி நாடுகளிலும் விற்பனை செய்யும் உரிமம் வழங்கப்படும் என்று தேமுதிகவின் தேர்தல் அறிக்கையில் ஒரு வரி பார்த்தேன். முதலில் ஒன்றும் புரியவில்லை. திடீரென்று நல்லி போத்தீஸுக்கு என்னடா புது வாழ்வு என்று குழம்பிவிட்டேன்.


பயங்கரமாக யோசித்துப் பார்த்ததில் ஒருவாறாக இதற்கு அர்த்தம் புரிந்தது. கேப்டன் அரசு அமைத்தால் கைத்தறித் தொழில் செழிக்கும். கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்புகள் பெருகும். அவர்கள் உற்பத்தி செய்வார்கள். ஆனால் கேப்டன் தான் விலை நிர்ணயம் செய்வார். அவர் சொல்லுகிற விலைக்கு துணிமணியைத் தலையில் தூக்கிக்கொண்டு வெளிநாடுகளுக்குப் போய் விற்பனை செய்யும் உரிமம் நல்லி, போத்தீஸுக்குக் கிடைக்கும்.


எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள்!


இந்த சிந்தனைச் சிற்பிகளோடு ஒப்பிட்டால் பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை சந்தேகமில்லாமல் உயர்தரம். கல்வி, சுகாதாரம், கிராமப்புற மேம்பாடு, நீர்வள மேலாண்மை என்று ஒவ்வொரு அம்சத்தையும் உற்றுநோக்கி, நடைமுறை சாத்தியங்களையும் ஆலோசித்தே வாக்குறுதிகளை அளித்திருக்கிறார் அன்புமணி. ஆனால் என்ன ஒரு துரதிருஷ்டம், தமிழ்நாட்டு மக்கள் அத்தனை பேரும் அவர் சார்ந்த சாதிக்கு கன்வர்ட் ஆனால்தான் அன்புமணி முதல்வராக முடியும்.


பொதுவாக, தேர்தல் பணிகளை அனைவருக்கும் முன்னால் தொடங்கிவிடும் அதிமுக இம்முறை எதையுமே இன்னும் தொடங்காமல் நேர்காணல் நடத்திக்கொண்டிருக்கிறது. டிவி, மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி, லேப்டாப் எல்லாம் கொடுத்தாகிவிட்டது. ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏசி வகையறாக்கள் இன்னும் பாக்கியிருக்கிறது. அதிமுக அறிக்கையில் அவற்றை எதிர்பார்க்கலாம்.


எனக்குத் தெரிந்து இத்தனை வருஷத்தில் நடைமுறை சாத்தியங்களை மட்டுமே கருத்தில் கொண்டு தேர்தல் அறிக்கை வெளியிடுவது திமுகதான். அபத்தங்கள் இருக்காது. சிரிக்க வாய்ப்புத் தரமாட்டார்கள். நிறைவேற்றுவார்களா, இல்லையா என்பது வேறு விஷயம். இந்த இரு பெரும் கட்சிகளின் அறிக்கைகளுக்காகக் காத்திருக்கிறேன். வந்ததும் இன்னொரு ரவுண்டு சுற்றி வரலாம்!


0


(நன்றி: தினமலர் 28/03/16)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 27, 2016 21:05

March 24, 2016

பொன்னான வாக்கு – 15

ஒரு வழியாகப் பழம் நழுவிவிட்டது. பால் என்ன பெரிய பால்? பால் வண்டியிலேயே விழுந்திருக்கிறது. என்ன ஒரு பரபரப்பு! எப்பேர்ப்பட்ட உற்சாகம்! எத்தனை ஏகாந்தச் சிரிப்புகள், எகத்தாள இளிப்புகள்! இப்படியெல்லாம் கிளுகிளுப்பூட்டக்கூடிய காட்சிகள் இல்லாமல் அப்புறம் என்ன மண்ணாங்கட்டிக்கு ஒரு தேர்தல்? வாழ்க கேப்டன்.


பொதுவாக இந்த ரக ஆச்சி மசாலா கூட்டணிகளின் கல்யாண குணங்கள் தேர்தல் தேதிக்குக் கொஞ்சம் முன்னால்தான் வெளிப்பட ஆரம்பிக்கும். யார் வேலை செய்கிறார்கள்? யார் பஜனை பண்ணுகிறார்கள்? கூட்டணியின் இதர கட்சித் தொண்டர்களுக்கு என்னென்ன ரகசிய உத்தரவுகள் போயிருக்கின்றன? வேலை செய்; ஆனால் ஓலையை மாற்றிப் போடு என்று சொல்லப்பட்டிருக்கிறதா?


சகட்டு மேனிக்கு சந்தேகாஸ்பதங்கள். இந்தக் கட்டத்தையெல்லாம் தாண்டி ஆட்சி அமைக்குமளவுக்கு போனால் அப்போது வேறு ரகக் குடுமிப்பிடிகள். சரித்திரம் பார்க்காத கூட்டணிகளா?


ஆனால் எந்தக் கூட்டணியும் இப்படி தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னரே ஆதித்யா, சிரிப்பொலி சானல்களைப் புறமுதுகிடச் செய்யுமளவுக்கு இறங்கி அடித்ததில்லை.


மக்கள் நலக் கூட்டணி அமைந்தபோது அதை ஒரு மாற்று அரசியல் சக்தியாக முன்வைத்தார்கள். யார் முன்வைத்தார்கள்? மநகூ முதலாளிகள் முன்வைத்தார்கள். கொள்கைக் குன்றுகளின் கூட்டமைப்பு. விடுதலைப் புலிகள், ஈழம் தொடர்பாக எதையும் காமன் மினிமம் ப்ரோக்ராமில் சேர்க்காத வரைக்கும் கம்யூனிஸ்டுகள் மதிமுகவுடன் முஸ்தபா முஸ்தபா பாடுவதில் பிரச்னை இல்லை. சாதித் திமிர் படுகொலைகளைத் திருமா எத்தனை தீவிரமாகக் கண்டித்தாலும் ஒரு சில தொகுதிகளிலாவது சாதி ஓட்டுகளுக்கு நாக்கைச் சப்புக்கொட்டும் மதிமுக கண்டுகொள்ளாது. கம்யூனிஸ்டுகளைப் பொறுத்தவரை சீட்டு வாங்குவது ஒன்றுதான் கொள்கை. அது எந்தக் கூட்டணி என்பது குறித்து அவர்கள் அலட்டிக்கொள்ள மாட்டார்கள். நாளது தேதி வரைக்கும் பாஜகவோடு கூட்டணி வைத்ததில்லை. நாளைக்கு அதுவும் நடந்தால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.


இத்தனை உட்கசமுசாக்கள் இருந்தாலும் திமுக – அதிமுகவுக்கு மாற்று என்று தம்மை முன்னிறுத்துவதில் இந்தக் கூட்டணிக்காரர்களுக்குப் பெரிய பிரச்னை இருக்கவில்லை. வைகோ பெரிய பார்லிமெண்டேரியன். கம்யூனிஸ்டுகள் படித்தவர்கள். பக்குவப்பட்டவர்கள். தவிரவும் சொந்த லாபம் கருதாதவர்கள். திருமாவோ எனில், தலித்துகளின் கனவு நாயகன். ஆனால், இந்தப் படிப்பு, அனுபவம், அறிவுத் திறனெல்லாம் போற்றிப் பாடடி பெண்ணே, கேப்டன் காலடி மண்ணே என்று கும்மி அடிக்கத்தான் உதவி செய்யும் என்றால் அது எப்பேர்ப்பட்ட மாற்று அரசியல்!


கேப்டன் வருகிறார் என்றதும் மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரையே விசிறிக் கடாசிவிட்டு கேப்டன் விஜயகாந்த் அணி என்று ஆத்ம சுத்தியோடு அறிவித்தார் வைகோ. நடப்பது நடிகர் சங்கத் தேர்தல்தான் என்று நினைத்துவிட்டார் போலிருக்கிறது. என் கவலையெல்லாம் ஒன்றுதான். முன்னர் ஜெயலலிதாவை ஜோன் ஆஃப் ஆர்க்காக வருணித்தவர், மறந்துபோய் கேப்டனை மாவீரன் நெப்போலியனென்று வருணித்துவிடாதிருக்க வேண்டும்.


நல்லது. இனி அது கேப்டன் அணி. எனக்கு நூத்தி இருவத்தி நாலு. உனக்கு நூத்திப் பத்து. உன் நூத்திப் பத்துக்குள் நீ பங்கு போட்டுக்கொள், என் நூத்தி இருவத்தி நாலை நான் பார்த்துக்கொள்கிறேன். ஜெயித்தால் நான் முதல்வர் என்பதில் மட்டும் ஒத்துப் போய்விடுவோம்; ஒரு பிழையுமில்லை.


தமிழக அறிவுஜீவிகளின் தணியாத தாகத்தைத் தணிக்கும் விதத்தில் ஒருவேளை இக்கூட்டணி ஜெயித்துத் தொலைத்தால் என்ன நடக்கும் என்று எண்ணிப் பார்க்கவே படு பயங்கரமாக இருக்கிறது. மெஷின் கன் எடுத்துக்கொண்டு விஜயகாந்த் கச்சத்தீவுக்குப் போவாரா? அங்கிருந்து வைகோ அவரை அப்படியே கள்ள போட்டில் ஏற்றி ஈழத்துக்குத் தூக்கிச் செல்வாரா? இங்கே முத்தரசனும் மற்றவர்களும் கேப்டனின் அதிரடிகளைத் தொட்டுக்கொண்டு விழுங்கித் தொலைக்க சித்தாந்தத் துவையல் அரைத்துக்கொண்டிருப்பார்களா? ஆண்டவன் தான் காப்பாற்றவேண்டும்.


இந்தக் கூட்டணி, தமிழ்நாட்டு மக்களுக்கு மிக நேரடியாகச் சில பாடங்களைச் சொல்லிக் கொடுக்கிறது. பதவி ஆசை, அதிகார வெறி இவையெல்லாம் எப்பேர்ப்பட்ட பழுத்த அரசியல்வாதியையும் இடக்கையால் உண்ணச் செய்யும் என்பது அதில் தலையாயது. தலைவர்களை விடுங்கள். காலகாலமாகக் கட்சிக்கு விசுவாசமாக இருக்கும் தொண்டர்களையும் அனுதாபிகளையும் எண்ணிப் பார்க்கலாம். ஒரு மானமுள்ள கம்யூனிஸ்ட் எப்படி வீதி வீதியாகப் போய் விஜயகாந்துக்கு ஓட்டுக் கேட்பான் என்று ஃபேஸ்புக்கில் நேற்று ஓர் இடதுசாரி கதறியிருந்தார்.


ராஜதந்திரம் என்றும் சாதுர்யம் என்றும் இத்தகைய நகர்வுகளைச் சம்மந்தப்பட்ட தலைவர்கள் வருணித்தாலும், இது ஓர் அப்பட்டமான கேவல அரசியல் என்பதில் சந்தேகமில்லை.


(நன்றி: தினமலர் – 25/03/16)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 24, 2016 20:06

March 23, 2016

பொன்னான வாக்கு – 14

தினமும் வீட்டில் இருந்து என் அலுவலகத்தைச் சென்றடைய ஒன்றே கால் மணி நேரம் ஆகும். பதினைந்து கிலோ மீட்டர் தொலைவு என்பது மட்டும் காரணமல்ல. அந்த நாராசப் போக்குவரத்தில் எனது இரு சக்கர வாகனத்தை நடத்தித்தான் செல்ல முடியும். ஓட்டிச் செல்வது கஷ்டம். அசப்பில் பிள்ளையார் மூஞ்சூறில் போவதுபோலத்தான் போய்க்கொண்டிருப்பேன். ஏழெட்டு அடிக்கு ஒருதரம் போக்குவரத்துக் கூழில் வண்டியை நிறுத்தவேண்டி வந்துவிடும். காலால் உந்தி உந்தியே நாலைந்து கிலோ மீட்டர்களைக் கடந்த அனுபவம் எனக்குண்டு.


இந்த தினசரிக் கொடும்பயணக் களைப்பைப் போக்க எனக்கு நானே உருவாக்கிக்கொண்ட வழி, பாதையெங்கும் இரு புறமும் சுவர்களில் எழுதப்பட்டிருக்கும் கொட்டையெழுத்துக் காவியங்களின் மொழிப் பிழையை ரசிப்பது.


என் ரூட்டில் மொத்தம் பதினாறு அம்மா விளம்பரங்கள் இருக்கும். நான்கு சுவர்களில் வைகோ. இரண்டு கலைஞர். மூன்று திருமா. கண்டோன்மெண்டார் என்று யாரோ ஒருத்தர் பெயர் தாங்கிய விளம்பரச் சுவர் ஒன்று உண்டு. அவர் யார், எந்தக் கட்சி என்று இன்னும் கண்ணில் பட்டதில்லை.


இந்த விளம்பரச் சுவர்களுக்கு ஆயுள் சந்தா செலுத்தியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். பிரதி மாதம் முதல் வாரத்தில், எழுதிய விளம்பரத்தை வெள்ளையடித்து அழித்து, மீண்டும் புதிதாக எழுதுவார்கள். கவித்துவ வரிகளில் ஒரு சில மாறுதல்கள் இருக்கும். போன மாதம் வரை காவிரித் தாயாக இருந்தவர் (ஆனால் த் இருக்காது.) இம்மாதம் காவிய நாயகியாக மாறிவிடுவார். பசி தீர்க்கும் பாசத்தாய் (இங்கும் த் கிடையாது) பத்து நாள் அவகாசத்தில் துயர் துடைத்த தேவதையாகிவிடுவார்.


கலைஞர் விளம்பரங்களில் இந்த அதிரடி மாறுதல்கள் அதிகம் கண்ணில் படாது. ஈவெரா அண்ணா கலைஞர் ஸ்டாலின் படங்களை அழுத்தமாக வரைந்து, சமய சந்தர்ப்பத்துக்கேற்ப கலைஞர் அழைக்கிறார் அல்லது தளபதி அழைக்கிறார் என்று மட்டும்தான் மாற்றுவார்கள். ஆனால் இவண் என்று போட்டு அடியில் இருபது இருபத்தைந்து பெயர்களைச் சேர்ப்பார்கள். இந்தப் பெயர்களில் அவ்வப்போது மாற்றம் இருக்கும். பெயர் வரிசையிலும் மாறுதல்கள் இருக்கும். அதன் பின்னால் இருக்கக்கூடிய நுண் அரசியலை யோசித்தபடி வண்டி ஓட்டினால் கொஞ்சம் பொழுது போகும்.


இந்த விளம்பரப் புரட்சியில், புரட்சி விளம்பரங்களாகப் போட்டுத் தள்ளுபவர்கள் திருமாவளவன் ஆட்கள்தாம். அலைகடல், ஆர்ப்பரிப்பு (இதிலும் ப் இருக்காது), எழுச்சி, விதி செய்வோம் என்றெல்லாம் மிரட்டுவதில் இவர்களை விஞ்ச ஆள் கிடையாது. தொல் என்பதை மட்டும் ஒரு சுவரில் எழுதிவிட்டு, தைரியமாக திருமாவளவனை அடுத்த சுவருக்குக் கொண்டுபோய்விடுவார்கள். இந்தப் பிரம்மாண்டம் அக்கால டி. ராஜேந்தர் செட்டுகளை நினைவுபடுத்தும். பெரும்பாலும் திருமா விளம்பரங்களுக்குப் பக்கத்து கம்பார்ட்மெண்ட்டில் மூர்த்தியார் என்பவரது விளம்பரம் இருக்கும். இவர் அவ்வையார், பாரதியார் வழியில் வந்தவரோ என்று ரொம்ப நாள் ஒரு சந்தேகம் இருந்தது. சேச்சே, இருக்காது என்று எனக்கு நானே சொல்லிக்கொள்வேன். வைகோவின் சுவர் விளம்பரங்களில் அவர் பெயர் மட்டுமே கண்ணுக்குத் தெரியும். என்ன நிகழ்ச்சி அல்லது அறிவிப்பு என்பதைத் தேடித்தான் படிக்க முடியும்.


இவ்வாறாக என் பயணக் களைப்பை இச்சுவர் விளம்பரங்கள் ஓரளவு போக்கிக் கொண்டிருந்தன. இனி அதற்கு வழியில்லை. நேற்று வண்டியில் போகும்போது சாலையின் இருபுறமும் வெளேரென்று இருந்தது. திடீரென்று சாலையே விதவையாகிவிட்டாற்போலத் தோன்றியது. ஒரு விளம்பரம் மிச்சமில்லை. அனைத்தையும் அழித்துவிட்டார்கள். ஆங்காங்கே மின்சாரக் கம்பங்களைக் கூட மிச்சம் வைக்காமல் கட்டியிருந்த தட்டிகளைக் காணோம். அம்மா உணவக போர்டுகளில் படங்கள் இல்லை. பேருந்து நிழற்குடைகளுக்கு விபூதிப் பட்டை அடித்த மாதிரி எழுதப்பட்டிருக்கும் உபயதார எம்பிக்களும் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை.


இந்தத் தேர்தல் கமிஷனுக்குத்தான் எத்தனை வானளாவிய அதிகாரங்கள் இருக்கின்றன! விதி செய்யும் தலைவர்களையெல்லாம் விதிமுறைக்கு அடங்கி நடக்க வைப்பதெல்லாம் லேசுப்பட்ட காரியமா? நூறடிக்கு ஒரு வாகனம் பார்க்கிறேன். தேர்தல் பணி என்று பின்புறம் எழுதி ஒட்டிய வாகனங்கள். சந்தேகத்துக்கு இடம் தரும் வேகத்தில் செல்லும் வாகனங்களை சப்ஜாடாக நிறுத்தி ஆராய்கிறார்கள். ஏதாவது சந்து பொந்தில் என்னவாவது ஒரு கட்சி விளம்பரம் சின்னதாக ஒளிந்துகொண்டிருந்தால்கூட விடுவதில்லை. கைவசம் சுண்ணாம்பு பக்கெட்டோடு பத்திருபது பேரை அழைத்து வந்துவிடுவார்களோ? தெரியவில்லை. ஆனால் வேலை ஜரூராக நடப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.


விளம்பர அழிப்பெல்லாம் பிரமாதமில்லை. இன்று அழித்தால் நாளை எழுதிவிடலாம். நாளை என்றால் தேர்தலுக்குப் பிறகு. ஆனால், வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் வைபவத்தை மட்டும் திட்டமிட்டபடி இவர்களால் முற்றிலும் தடுக்க முடிந்தால் அது மிகப்பெரிய காரியம். என்றென்றும் பேர் சொல்லத்தக்க செயல்.


ஏனெனில், தானாக உற்பத்தியாகாத தன்மானத்தைத் தடியால் அடித்தாவது உயிர்த்திருக்கத்தான் செய்யவேண்டும்.


(நன்றி: தினமலர் – 24/03/16)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 23, 2016 20:06

March 22, 2016

பொன்னான வாக்கு – 13

இது தேர்தல் காலம். அரசியல் கட்சிகளை விடவும் இந்தச் சமயத்தில் படு பயங்கரத் தீவிரமாகக் கள ஆய்வு செய்வதில் கருத்துக் கணிப்பு நிறுவனங்களை அடித்துக்கொள்ளவே முடியாது. நாலே முக்கால் வருஷம் இவர்கள் எங்கே போய் கோலி ஆடிக்கொண்டிருப்பார்கள் என்று தெரியாது. ஆனால் தேர்தல் என்று சொல்லிவிட்டால் போதும். சொய்யாவெனப் பறந்து வந்து குதித்துவிடுவார்கள்.


நேற்று ஒரு கருத்துக் கணிப்பு முடிவினை வாசிக்க நேர்ந்தது. (http://spicknewstamil.in/survey-resul...) முதல் வரியிலேயே திடுக்கிட்டுத் தலைகுப்புற விழுவது போலாகிவிட்டது. இம்மாதம் நான்காம் தேதிதான் தேர்தல் தேதியே அறிவிக்கப்பட்டது. ஆனால் மழை வெள்ளத்துக்கு முன்பும் பின்புமாக மொத்தம் 31 நிறுவனங்களுடன் இணைந்து 70,20,000 வாக்காளர்களைச் சந்தித்து பொதுவாக யாருக்கு வாக்களிப்பீர்கள் என்று கேட்டு முடிவுகளை வெளியிட்டிருப்பதாகக் குறிப்பிடுகிறார்கள். இதில் முப்பத்தி நாலு லட்சத்தி சொச்சம் ஆண் வாக்காளர்களும், முப்பத்தைந்து லட்சத்தி சொச்சம் பெண் வாக்காளர்களும் கருத்துக் குருமா சமைத்திருக்கிறார்கள். அதிமுகவுக்கு 43.6 சதவீதம், திமுகவுக்கு 28.6 சதவீதம், மநகூவுக்கு 7.9 சதவீதம் என்கிறது இவர்களது முடிவு.


தெய்வமே, அதிமுக, திமுக கூட்டணி பேரங்களே இன்னும் படிந்தபாடில்லை. பெரியவர், பழம் எப்போது நழுவும் என்று இன்னும் கொட்டக்கொட்டக் கண் விழித்துக் காத்திருக்கிறார். அம்மணியோவெனில் அம்மையப்பனைக் கூடச் சுற்றாமல் அல்போன்சா ஞானப்பழம் கிடைக்குமா என்று பார்க்கிறார். மநகூ, தனது பிரசாரத்தைத் தொடங்கிவிட்டது என்றாலும் எழுபது லட்சம் சாம்பிளில் ஏழு சதவீத ஆதரவு பெறுமளவு அப்படி என்ன அசம்பாவிதம் நடந்துவிட்டது என்று புரியவில்லை.


இதோடு முடிந்துவிடுமா? இனிமேல் வாரத்துக்கு ஒரு கணிப்பு உற்சவம் நடக்க ஆரம்பிக்கும். வாயில் பேர் நுழையாத, என்னவாவது வடக்கத்தி கம்பெனியைச் சொல்லி, அவர்களோடு இணைந்து இன்னார் நடத்திய கருத்துக் கணிப்பு என்பார்கள். கலர் கலராக நிறைய கோழி முட்டைகள் போட்டு இன்னாருக்கு இத்தனை சதம், அன்னாருக்குப் பரமபதம் என்று திருவாய் மலரும் அல்ட்ரா மாடர்ன் ஆரூடவாதிகள் ஆங்காங்கே முளைப்பார்கள்.


இந்தக் கணிப்புகளை வைத்துக்கொண்டு தொலைக்காட்சி விவாதங்கள் நடக்கத் தொடங்கும். கட்சிக்காரர்கள் கய்யாமுய்யாவென சண்டை போடுவார்கள். நெறியாளருக்கு நெரி கட்டிப் போய் கன்னத்தில் கை வைத்து உட்காருவார். எப்படியும் நமக்குப் பொழுது போய்விடும்.


நிற்க. கருத்துக் கணிப்புகள் அனைத்துமே அபத்தம் என்பதல்ல. இதில் அறிவியல்பூர்வம், புவியியல்பூர்வம் என்று மண்டைக்கு மேலொரு கொண்டை வைக்கும்போதுதான் இடிக்கத் தொடங்கிவிடுகிறது. இரண்டாயிரமாவது ஆண்டுக்குப் பிறகு, நாளது தேதி வரை இந்தியாவில் நடத்தப்பட்ட எந்த ஒரு கருத்துக் கணிப்பும் வென்றதில்லை என்பதை எண்ணிப் பார்க்கலாம்.


கடந்த பிகார் பொதுத் தேர்தல் சமயம் ஆத்தா சத்தியமாக பாஜக ஜெயிக்கும் என்று ஆளாளுக்குக் கருத்துக் கதறல் அல்லது குதறல் செய்தார்கள். ஆனால் நடந்தது என்ன?


அதற்கு முன் நடந்த டெல்லி சட்ட மன்றத் தேர்தல் சமயத்திலும் இதே கூத்துதான். அட, நாமே பார்க்காததா? ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பும் இம்மாதிரியான கருத்துக் கணிப்புகள் மூலைக்கு மூலை வெளியாகும். ஏதாவது ஒரு கம்பெனி அதிமுக கூட்டணி ஜெயிக்கும் என்றால், இன்னொரு கம்பெனி திமுக கூட்டணி ஜெயிக்கும் என்று சொல்லும். காசா பணமா? அள்ளி விடவேண்டியதுதான். மாங்காய் விழுந்தால் அன்றே சொன்னார் அண்ணா என்று எழுந்து மார்தட்டிவிடலாம். கல்தான் விழுகிறது என்றால் கடையைக் கட்டிவிட்டு அடுத்தத் தேர்தலுக்கு பீனிக்ஸ் பறவை போல் எழுந்து வந்துவிடுவது.


வெற்றி – தோல்வியை விடுங்கள். இத்தனை தொகுதிகள் இன்னின்னாருக்கு என்கிறார்களே, அதில் ஒரு அஞ்சு பத்து பழுதானால்கூடப் பரவாயில்லை; யதார்த்தத்துக்குப் பக்கத்து சந்துப் பக்கம் கூட வராத முடிவுகளைத்தான் இந்தக் கணிப்புகள் இதுநாள் வரை நமக்குத் தெரிவித்து வந்திருக்கின்றன.


சாம்பிளிங் பழுது என்பார்கள். தம்மிடம் ஒன்று சொல்லிவிட்டு, வாக்குச் சாவடியில் ஓட்டை மாற்றிப் போடும் மக்கள் மீது போடு பழியை.


உண்மை என்னவெனில் வாக்களித்தலென்பது தாம்பத்தியம் போன்றதொரு சங்கதி. பெரும்பாலும் யாரும் அதைப் பகிரங்கப் படுத்த விரும்புவதில்லை. இந்த அடிப்படை உண்மை மேற்படி கணிப்பு கனவான்களுக்குத் தெரியாமலில்லை. ஆனாலும் ஒரு பரபரப்புக்கு என்னவாவது செய்தாக வேண்டியிருக்கிறது. ஆகக்கூடியது ஒன்றுமில்லாவிட்டால் அல்வா கிண்டி விற்பதில் என்ன பிரச்னை?


வாழ்க திடீர் இருட்டுக் கடைகள்.


(நன்றி: தினமலர் 23/03/16)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 22, 2016 21:00

March 21, 2016

பொன்னான வாக்கு – 12

தமிழ்நாட்டு அறிவுஜீவிகள் சமூகம், மக்கள் நலக் கூட்டணிக்காக இலவசப் பிரசாரம் செய்யத் தொடங்கியிருப்பதைக் கடந்த சில தினங்களாக இணையத்தில் பார்க்கிறேன். ஊழல் இல்லை, அப்பழுக்கில்லை, குறுகிய நோக்கில்லை, பதவி ஆசையில்லை, சமூக நலனைத் தவிர வேறு சிந்தனையே இல்லை என்று சூடம் அணைத்து சத்தியம் செய்யாத குறையாக அப்படியொரு உணர்ச்சிப் பிரவாகம்.


ஊழல் என்பதே அதிகாரம் கைக்கு வந்த பிறகு நடைபெறுகிற சங்கதிதான். கரி அள்ளிப் போடாமலேயே கறை படியாத கரங்கள் என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர்.


இந்தக் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் நான்கு கட்சிகளும் போன வருஷமே மது ஒழிப்புப் போராட்டம் என்ற பெயரில் தமது கூட்டணி சாத்தியங்களைத் தெரியப்படுத்தியவை. இன்றுவரை கூட்டு தொடர்வது சந்தோஷமே. ஆனால் ஓட்டுகளைப் பிரிப்பது என்பதைத் தவிர இவர்களால் வேறு என்ன சமூக சேவை செய்ய இயலும் என்று தெரியவில்லை. எந்தக் கணத்திலும் இவர்களே பிரிந்துவிடலாம் என்பது தவிர்த்து.


இருக்கிற இரண்டு கம்யூனிஸ்டுகளும் காலகாலமாக திமுக – அதிமுக கூட்டணியில் குட்டிக்கரணமடித்து சீட்டு பெற்றவர்கள். வைகோ, திருமாவும் மாநில திராவிட நீரோட்டத்தில் முங்கிக் குளித்து மூச்சுத் திணறியவர்களே. ஒற்றை இலக்கத் தொகுதிகள் போரடித்த காரணத்தால்தான் இவர்கள் தனிக்கூட்டணி கண்டார்கள் என்றால் சரி. மற்றபடி மாற்று அரசியலை முன்வைக்கிற முகங்களாக இவர்களைப் பார்க்கச் சொல்வதெல்லாம் கொஞ்சம் அதிகப்படி.


ஏனெனில் மாற்று அரசியல் என்பதை வகுக்கும் மிக முக்கியக் காரணி, வலுவான கொள்கைகள். மநகூவின் கொள்கை என்ன? மதிமுகவின் கொள்கைகள் அந்தக் கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்டுகளுக்கே ஒத்துக்கொள்ளாது. இரண்டு கம்யூனிஸ்டுகளுமே தருணம் கிட்டினால் கரணமடித்து, பழைய குருடியின் கதவைத் தட்டிவிடக்கூடியவர்கள். விடுதலைச் சிறுத்தைகளின் தலித் வாக்கு வங்கி தமக்குச் சாதகம் என்னுமளவில் இந்த மூன்று கட்சிகளும் திருப்தியுறுமானால், அப்படி நினைத்து ஒன்றுக்கு இரண்டு முறை பல்பு வாங்கிய கலைஞரை அவர்கள் நினைத்துப் பார்க்கவேண்டும். திருமாவுக்கு விழாத தலித் ஓட்டுகள் அதிமுகவுக்குத்தான் விழுமே தவிர, பிறருக்கல்ல.


இந்த வகையில் அதிமுகவுக்கு விழக்கூடிய தலித் ஓட்டுகளில் கொஞ்சத்தைப் பிரித்து எடுத்து வந்திருப்பது தவிர இந்தக் கூட்டணி சாதித்ததும் சாதிக்கப் போவதும் பெரிதாக ஒன்றுமில்லை. மதிமுகவுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் ஓட்டு வங்கி என்று ஏதாவது இருக்கிறதா என்ன? அப்படி இருந்தால் அதெல்லாம் மல்லய்யாவுக்குக் கடன் கொடுத்தது போன்ற வங்கியாகத்தான் இருக்கும்.


ஆட்சி மாற்றம் என்பது தாரக மந்திரமாக இருந்துவிட்டுப் போவதில் ஆட்சேபணையே இல்லை. ஆனால் இவர்கள் விஜயகாந்தைத் தம் பக்கம் இழுப்பதற்குப் பட்ட பாடுகளைப் பார்த்தபோது கொஞ்சம் பயமாகிவிட்டது. அவருக்கு ஒரு நாலைந்து சத ஓட்டுகள் இருக்கின்றன என்பதைத் தாண்டி மாற்று அரசியலுக்கான முகமாக விஜயகாந்தைப் பார்த்துவிட இயலுமா? எம்பெருமானே.


விஜயகாந்த் தம் கூட்டணிக்கு வந்தால் முதல்வர் வேட்பாளராகவே அறிவிக்கத் தயாராக இருந்திருக்கிறது மநகூ. அது சாத்தியமில்லை என்று இன்று தெளிவாகிவிட்ட நிலையில் எப்படி வேண்டுமானாலும் மாற்றிச் சொல்லி மழுப்பப் பார்க்கலாம். ஆனால் கம்யூனிஸ்டு புரட்சியாளர்களும் கம்யூனிஸ்டு அல்லாத புரட்சியாளர்களும் அடங்கிய ஒரு கூட்டணி, புரட்சிக் கலைஞர் என்ற ஒரே காரணத்துக்காக விஜயகாந்துக்குக் கொடி பிடிக்க முன்வருவதெல்லாம் எம்மாதிரியான மாற்று அரசியல் என்று தெரியவில்லை.


எல்லாம் இந்தப் புரட்சி படுத்துகிற பாடு.


என்னைக் கேட்டால் மநகூ விஜயகாந்துக்கோ, ஜி.கே. வாசனுக்கோ ஏங்காமல், பேசாமல் டிராஃபிக் ராமசாமியுடன் கூட்டணி வைப்பதைக் குறித்து யோசிக்கலாம். தேர்தலில் நிற்கப் போகிற ஒவ்வொரு ஊழல்வாதிக்கு எதிராகவும் குறைந்தது இருநூறு, முன்னூறு பேரை நிறுத்தி வாக்குகளைச் சிதறடிக்கும் சக்கர வியூகம் அல்லது அக்ரம வியூகமொன்றை அவர் வகுத்து வருவதாகக் கேள்விப்பட்டேன். டிராஃபிக் ராமசாமி நிறுத்தும் அத்தனை பேருக்கும் எத்தனை ஓட்டு விழும் என்பது ஒருபுறமிருக்க, நிறுத்துவதற்கு அவரிடம் அத்தனை ஆட்கள் இருக்கிறார்கள் என்பதே குலைநடுங்கச் செய்கிறது.


ஒன்றுமே இல்லாவிட்டாலும் ஓட்டுகளைப் பிரிக்கும் கொள்கை அடிப்படையிலேனும் டிராஃபிக் ராமசாமி மநகூவுடன் ஒத்துப் போய்விடுவார் அல்லவா?


(நன்றி: தினமலர் 22/03/16)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 21, 2016 20:06

March 20, 2016

பொன்னான வாக்கு – 11

பெட்ரோல் விலை, தங்கம் விலை, பங்குச் சந்தைப் புள்ளிகள், தமிழக அமைச்சரவை போன்ற சில சங்கதிகள் எப்போது வேண்டுமானாலும் மாறிக்கொண்டே இருக்கக்கூடியவை. என்ன காரணத்தால் பெட்ரோல் விலை திடீரென்று இன்று நடு ராத்திரி ஒண்ணே முக்கால் ரூபாய் ஏறியது என்று கேட்டால் நம்மால் பதில் சொல்ல முடியுமா? ஜெயலலிதா ஏன் ஒரு அமைச்சரை டமாலென்று தூக்கியடிக்கிறார் என்று சொல்ல முடியுமா? இன்று ஏறிய தங்கத்தின் விலை அட்சய திருதியைக்குப் பிறகு ஓரிரு வாரங்கள் கழித்துக் கொஞ்சம் குறையும். போன வருஷம் பதவி பறிபோன அமைச்சர் இந்த வருஷம் மீண்டும் சைரன் வைத்த காரில் போவது போல. இவர் இரண்டு வருஷங்களுக்கு முன்னால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே கூடக் கழட்டிவிடப் பட்டிருப்பார். அது ஏன் இது ஏன் என்றெல்லாம் கேட்கப்படாது. சாமி குத்தம்.


நேற்றைக்கு வாட்சப்பில் வந்த ஓர் ஒலிச்சித்திரத்தைக் கேட்க நேர்ந்தது. அதிமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் (பெண்மணி), தமது நண்பர் ஒருவருடன் (இவர் ஆண்) தொலைபேசியில் நிகழ்த்திய உரையாடல். பிரமாத ராணுவ ரகசியங்கள் ஏதுமில்லை என்றாலும் அவரது குரலில் தொனித்த கதனகுதூகலம் முக்கியமாகப் பட்டது. உல்லாசங்களில் யாருக்குத்தான் விருப்பமில்லை? எதுவும் பிழையல்ல. எதுவும் சிக்கலல்ல – சிக்கிக்கொள்ளாத வரை.


அது என் குரலே இல்லை என்று சம்மந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஓர் அறிக்கை வெளியிட்டுவிட்டால் தீர்ந்தது விஷயம். ஆனால் அறிக்கை வருவதற்குள் அசம்பாவிதமேதும் நடந்துவிடாதிருக்க வேண்டும்.


ஆனானப்பட்ட ஓ. பன்னீர் செல்வத்துக்கே சிக்கல். நத்தம் விசுவநாதனுக்குச் சிக்கல். பன்னீரெல்லாம் தப்பு செய்வார் என்று சொன்னால் இந்த சமூகம் அத்தனை சுலபத்தில் நம்பிவிடுமா? ஜெயலலிதா நடத்துவது ராமராஜ்ஜியமில்லாது போனாலும் பன்னீர் இருமுறை பரதன் வேடமேற்றவர். அதில் கனகச்சிதமாகப் பொருந்தியவர். பணிவுக்கு மறுபெயரல்லவா பன்னீர் என்பது? அவரா கட்சி விரோதக் காரியங்களை ஆலா போட்ட ஆத்ம சுத்தியோடு செய்திருப்பார்?


ஒரு வாரம் புகைந்த நெருப்பு ஒருவாறு இப்போது சற்றுத் தணிந்திருக்கிறது. சந்திப்புகள். சமாதானப் பேச்சுவார்த்தைகள். ஓம் சாந்தி. ஓம் சாந்தி. விஜயசாந்தி. டிஸ்கோ சாந்தி.


சிரிக்கலாம். ஆனால் இது சிரிக்கத் தகுந்த சங்கதியல்ல. அமைச்சர்களின் தவறு என்பது முதல்வரின் அவமானம். கட்சியில் இருந்தும் அதிகாரத்தில் இருந்தும் ஒரு வேகத்தில், ஒரு கோபத்தில் தூக்கியடித்துவிட்டு, பிறகு காலக்கிரமத்தில் மீண்டும் அரவணைத்துக்கொள்வதைக் கட்சிக்காரர்கள் வேண்டுமானால் தாய்ப்பாசம் என்று வருணிக்கலாம். நம்பி வாக்களித்த மக்கள் என்ன நினைப்பார்கள்?


கடந்த ஐந்தாண்டுக் காலத்தில் மாற்றப்பட்ட அமைச்சர்களின் பட்டியல் ஒன்றைத் தயாரித்துப் பார்க்கலாம். இது சுட்டிக்காட்டும் அடிப்படைப் பிரச்னை என்னவென்றால், அதிகாரத்தில் உள்ள யாருமே ஒழுங்காக இல்லை என்பதுதான். இது அதிகாரிகளின் பிரச்னையா? அதிகார மையத்தின் பிரச்னையா? ஜெயலலிதாவின் மீது சுமத்தப்பட்ட வழக்குகளில் ஒன்றிரண்டு மட்டுமே நிரூபிக்கப்பட்டவை என்பதால், மற்றவர்கள் செய்யும் பிழைகளை அவசியத்துக்கேற்ப அவர் மன்னிப்பதில் பிழையில்லை என்று ஆகிவிடுமா?


தேர்தல் வேளையில் அதிமுக வளாகத்தில் நிகழும் இம்மாதிரியான அசம்பாவிதங்கள் வெகு நிச்சயமாக அக்கட்சியின் தொண்டர்களை உளவியல் ரீதியில் பாதிக்கவே செய்யும். பொதுவாழ்வில் ஒழுக்கம் என்பது பிரசார வாகனங்களின் முன்புற பம்ப்பர் போல ஆகிவிட்டது. ஒரு பந்தாவுக்கு வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம். இஷ்டமில்லாவிட்டால் கழட்டிக் கடாசிவிடலாம்.


கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்து நின்றதைப் போலவே இந்த சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக தனித்து நின்றுவிட முடிவு செய்யலாம். ஆனால், அதிபயங்கரத் துணிச்சல் என்பது உள்ளார்ந்த அச்சத்தின் வேறு வடிவமே. சென்னை, கடலூர் மாவட்டங்களில் கொடுமழைக் காலத்தில் நேர்ந்த கோரங்களை நேரில் காணவும் ஆறுதல் சொல்லவும் முதல்வர் வராதது முதல், உடுமலையில் நிகழ்ந்த சாதித் திமிர் படுகொலைச் சம்பவத்தைக் கண்டித்து ஒற்றைச் சொல்லைக்கூட உதிர்க்காதது வரை அவர் மீதான மக்களின் அதிருப்தி என்பது மாற்றம் கண்ட அமைச்சரவைப் பட்டியலினும் பெரிது.


பலம் என்று சொல்லிக்கொள்ள எதிர்க்கட்சிகளிடம் இப்போதைக்குக் கைவசம் ஒன்றுமில்லாதது ஒன்றே ஜெயலலிதாவின் பலம். தனது ஆட்சியின் பலவீனங்களை இந்த ஒரு பலம் மறைத்துவிடும் என்று அவர் நினைப்பாரானால், அது பெரும் சரித்திரப் பிழையாகிப் போகும் வாய்ப்பு மிகப் பிரகாசமாக இருக்கிறது.


(நன்றி: தினமலர் – 21/03/16)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 20, 2016 21:43