Pa Raghavan's Blog, page 25
March 22, 2016
பொன்னான வாக்கு – 13
இது தேர்தல் காலம். அரசியல் கட்சிகளை விடவும் இந்தச் சமயத்தில் படு பயங்கரத் தீவிரமாகக் கள ஆய்வு செய்வதில் கருத்துக் கணிப்பு நிறுவனங்களை அடித்துக்கொள்ளவே முடியாது. நாலே முக்கால் வருஷம் இவர்கள் எங்கே போய் கோலி ஆடிக்கொண்டிருப்பார்கள் என்று தெரியாது. ஆனால் தேர்தல் என்று சொல்லிவிட்டால் போதும். சொய்யாவெனப் பறந்து வந்து குதித்துவிடுவார்கள்.
நேற்று ஒரு கருத்துக் கணிப்பு முடிவினை வாசிக்க நேர்ந்தது. (http://spicknewstamil.in/survey-resul...) முதல் வரியிலேயே திடுக்கிட்டுத் தலைகுப்புற விழுவது போலாகிவிட்டது. இம்மாதம் நான்காம் தேதிதான் தேர்தல் தேதியே அறிவிக்கப்பட்டது. ஆனால் மழை வெள்ளத்துக்கு முன்பும் பின்புமாக மொத்தம் 31 நிறுவனங்களுடன் இணைந்து 70,20,000 வாக்காளர்களைச் சந்தித்து பொதுவாக யாருக்கு வாக்களிப்பீர்கள் என்று கேட்டு முடிவுகளை வெளியிட்டிருப்பதாகக் குறிப்பிடுகிறார்கள். இதில் முப்பத்தி நாலு லட்சத்தி சொச்சம் ஆண் வாக்காளர்களும், முப்பத்தைந்து லட்சத்தி சொச்சம் பெண் வாக்காளர்களும் கருத்துக் குருமா சமைத்திருக்கிறார்கள். அதிமுகவுக்கு 43.6 சதவீதம், திமுகவுக்கு 28.6 சதவீதம், மநகூவுக்கு 7.9 சதவீதம் என்கிறது இவர்களது முடிவு.
தெய்வமே, அதிமுக, திமுக கூட்டணி பேரங்களே இன்னும் படிந்தபாடில்லை. பெரியவர், பழம் எப்போது நழுவும் என்று இன்னும் கொட்டக்கொட்டக் கண் விழித்துக் காத்திருக்கிறார். அம்மணியோவெனில் அம்மையப்பனைக் கூடச் சுற்றாமல் அல்போன்சா ஞானப்பழம் கிடைக்குமா என்று பார்க்கிறார். மநகூ, தனது பிரசாரத்தைத் தொடங்கிவிட்டது என்றாலும் எழுபது லட்சம் சாம்பிளில் ஏழு சதவீத ஆதரவு பெறுமளவு அப்படி என்ன அசம்பாவிதம் நடந்துவிட்டது என்று புரியவில்லை.
இதோடு முடிந்துவிடுமா? இனிமேல் வாரத்துக்கு ஒரு கணிப்பு உற்சவம் நடக்க ஆரம்பிக்கும். வாயில் பேர் நுழையாத, என்னவாவது வடக்கத்தி கம்பெனியைச் சொல்லி, அவர்களோடு இணைந்து இன்னார் நடத்திய கருத்துக் கணிப்பு என்பார்கள். கலர் கலராக நிறைய கோழி முட்டைகள் போட்டு இன்னாருக்கு இத்தனை சதம், அன்னாருக்குப் பரமபதம் என்று திருவாய் மலரும் அல்ட்ரா மாடர்ன் ஆரூடவாதிகள் ஆங்காங்கே முளைப்பார்கள்.
இந்தக் கணிப்புகளை வைத்துக்கொண்டு தொலைக்காட்சி விவாதங்கள் நடக்கத் தொடங்கும். கட்சிக்காரர்கள் கய்யாமுய்யாவென சண்டை போடுவார்கள். நெறியாளருக்கு நெரி கட்டிப் போய் கன்னத்தில் கை வைத்து உட்காருவார். எப்படியும் நமக்குப் பொழுது போய்விடும்.
நிற்க. கருத்துக் கணிப்புகள் அனைத்துமே அபத்தம் என்பதல்ல. இதில் அறிவியல்பூர்வம், புவியியல்பூர்வம் என்று மண்டைக்கு மேலொரு கொண்டை வைக்கும்போதுதான் இடிக்கத் தொடங்கிவிடுகிறது. இரண்டாயிரமாவது ஆண்டுக்குப் பிறகு, நாளது தேதி வரை இந்தியாவில் நடத்தப்பட்ட எந்த ஒரு கருத்துக் கணிப்பும் வென்றதில்லை என்பதை எண்ணிப் பார்க்கலாம்.
கடந்த பிகார் பொதுத் தேர்தல் சமயம் ஆத்தா சத்தியமாக பாஜக ஜெயிக்கும் என்று ஆளாளுக்குக் கருத்துக் கதறல் அல்லது குதறல் செய்தார்கள். ஆனால் நடந்தது என்ன?
அதற்கு முன் நடந்த டெல்லி சட்ட மன்றத் தேர்தல் சமயத்திலும் இதே கூத்துதான். அட, நாமே பார்க்காததா? ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பும் இம்மாதிரியான கருத்துக் கணிப்புகள் மூலைக்கு மூலை வெளியாகும். ஏதாவது ஒரு கம்பெனி அதிமுக கூட்டணி ஜெயிக்கும் என்றால், இன்னொரு கம்பெனி திமுக கூட்டணி ஜெயிக்கும் என்று சொல்லும். காசா பணமா? அள்ளி விடவேண்டியதுதான். மாங்காய் விழுந்தால் அன்றே சொன்னார் அண்ணா என்று எழுந்து மார்தட்டிவிடலாம். கல்தான் விழுகிறது என்றால் கடையைக் கட்டிவிட்டு அடுத்தத் தேர்தலுக்கு பீனிக்ஸ் பறவை போல் எழுந்து வந்துவிடுவது.
வெற்றி – தோல்வியை விடுங்கள். இத்தனை தொகுதிகள் இன்னின்னாருக்கு என்கிறார்களே, அதில் ஒரு அஞ்சு பத்து பழுதானால்கூடப் பரவாயில்லை; யதார்த்தத்துக்குப் பக்கத்து சந்துப் பக்கம் கூட வராத முடிவுகளைத்தான் இந்தக் கணிப்புகள் இதுநாள் வரை நமக்குத் தெரிவித்து வந்திருக்கின்றன.
சாம்பிளிங் பழுது என்பார்கள். தம்மிடம் ஒன்று சொல்லிவிட்டு, வாக்குச் சாவடியில் ஓட்டை மாற்றிப் போடும் மக்கள் மீது போடு பழியை.
உண்மை என்னவெனில் வாக்களித்தலென்பது தாம்பத்தியம் போன்றதொரு சங்கதி. பெரும்பாலும் யாரும் அதைப் பகிரங்கப் படுத்த விரும்புவதில்லை. இந்த அடிப்படை உண்மை மேற்படி கணிப்பு கனவான்களுக்குத் தெரியாமலில்லை. ஆனாலும் ஒரு பரபரப்புக்கு என்னவாவது செய்தாக வேண்டியிருக்கிறது. ஆகக்கூடியது ஒன்றுமில்லாவிட்டால் அல்வா கிண்டி விற்பதில் என்ன பிரச்னை?
வாழ்க திடீர் இருட்டுக் கடைகள்.
(நன்றி: தினமலர் 23/03/16)
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
March 21, 2016
பொன்னான வாக்கு – 12
தமிழ்நாட்டு அறிவுஜீவிகள் சமூகம், மக்கள் நலக் கூட்டணிக்காக இலவசப் பிரசாரம் செய்யத் தொடங்கியிருப்பதைக் கடந்த சில தினங்களாக இணையத்தில் பார்க்கிறேன். ஊழல் இல்லை, அப்பழுக்கில்லை, குறுகிய நோக்கில்லை, பதவி ஆசையில்லை, சமூக நலனைத் தவிர வேறு சிந்தனையே இல்லை என்று சூடம் அணைத்து சத்தியம் செய்யாத குறையாக அப்படியொரு உணர்ச்சிப் பிரவாகம்.
ஊழல் என்பதே அதிகாரம் கைக்கு வந்த பிறகு நடைபெறுகிற சங்கதிதான். கரி அள்ளிப் போடாமலேயே கறை படியாத கரங்கள் என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர்.
இந்தக் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் நான்கு கட்சிகளும் போன வருஷமே மது ஒழிப்புப் போராட்டம் என்ற பெயரில் தமது கூட்டணி சாத்தியங்களைத் தெரியப்படுத்தியவை. இன்றுவரை கூட்டு தொடர்வது சந்தோஷமே. ஆனால் ஓட்டுகளைப் பிரிப்பது என்பதைத் தவிர இவர்களால் வேறு என்ன சமூக சேவை செய்ய இயலும் என்று தெரியவில்லை. எந்தக் கணத்திலும் இவர்களே பிரிந்துவிடலாம் என்பது தவிர்த்து.
இருக்கிற இரண்டு கம்யூனிஸ்டுகளும் காலகாலமாக திமுக – அதிமுக கூட்டணியில் குட்டிக்கரணமடித்து சீட்டு பெற்றவர்கள். வைகோ, திருமாவும் மாநில திராவிட நீரோட்டத்தில் முங்கிக் குளித்து மூச்சுத் திணறியவர்களே. ஒற்றை இலக்கத் தொகுதிகள் போரடித்த காரணத்தால்தான் இவர்கள் தனிக்கூட்டணி கண்டார்கள் என்றால் சரி. மற்றபடி மாற்று அரசியலை முன்வைக்கிற முகங்களாக இவர்களைப் பார்க்கச் சொல்வதெல்லாம் கொஞ்சம் அதிகப்படி.
ஏனெனில் மாற்று அரசியல் என்பதை வகுக்கும் மிக முக்கியக் காரணி, வலுவான கொள்கைகள். மநகூவின் கொள்கை என்ன? மதிமுகவின் கொள்கைகள் அந்தக் கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்டுகளுக்கே ஒத்துக்கொள்ளாது. இரண்டு கம்யூனிஸ்டுகளுமே தருணம் கிட்டினால் கரணமடித்து, பழைய குருடியின் கதவைத் தட்டிவிடக்கூடியவர்கள். விடுதலைச் சிறுத்தைகளின் தலித் வாக்கு வங்கி தமக்குச் சாதகம் என்னுமளவில் இந்த மூன்று கட்சிகளும் திருப்தியுறுமானால், அப்படி நினைத்து ஒன்றுக்கு இரண்டு முறை பல்பு வாங்கிய கலைஞரை அவர்கள் நினைத்துப் பார்க்கவேண்டும். திருமாவுக்கு விழாத தலித் ஓட்டுகள் அதிமுகவுக்குத்தான் விழுமே தவிர, பிறருக்கல்ல.
இந்த வகையில் அதிமுகவுக்கு விழக்கூடிய தலித் ஓட்டுகளில் கொஞ்சத்தைப் பிரித்து எடுத்து வந்திருப்பது தவிர இந்தக் கூட்டணி சாதித்ததும் சாதிக்கப் போவதும் பெரிதாக ஒன்றுமில்லை. மதிமுகவுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் ஓட்டு வங்கி என்று ஏதாவது இருக்கிறதா என்ன? அப்படி இருந்தால் அதெல்லாம் மல்லய்யாவுக்குக் கடன் கொடுத்தது போன்ற வங்கியாகத்தான் இருக்கும்.
ஆட்சி மாற்றம் என்பது தாரக மந்திரமாக இருந்துவிட்டுப் போவதில் ஆட்சேபணையே இல்லை. ஆனால் இவர்கள் விஜயகாந்தைத் தம் பக்கம் இழுப்பதற்குப் பட்ட பாடுகளைப் பார்த்தபோது கொஞ்சம் பயமாகிவிட்டது. அவருக்கு ஒரு நாலைந்து சத ஓட்டுகள் இருக்கின்றன என்பதைத் தாண்டி மாற்று அரசியலுக்கான முகமாக விஜயகாந்தைப் பார்த்துவிட இயலுமா? எம்பெருமானே.
விஜயகாந்த் தம் கூட்டணிக்கு வந்தால் முதல்வர் வேட்பாளராகவே அறிவிக்கத் தயாராக இருந்திருக்கிறது மநகூ. அது சாத்தியமில்லை என்று இன்று தெளிவாகிவிட்ட நிலையில் எப்படி வேண்டுமானாலும் மாற்றிச் சொல்லி மழுப்பப் பார்க்கலாம். ஆனால் கம்யூனிஸ்டு புரட்சியாளர்களும் கம்யூனிஸ்டு அல்லாத புரட்சியாளர்களும் அடங்கிய ஒரு கூட்டணி, புரட்சிக் கலைஞர் என்ற ஒரே காரணத்துக்காக விஜயகாந்துக்குக் கொடி பிடிக்க முன்வருவதெல்லாம் எம்மாதிரியான மாற்று அரசியல் என்று தெரியவில்லை.
எல்லாம் இந்தப் புரட்சி படுத்துகிற பாடு.
என்னைக் கேட்டால் மநகூ விஜயகாந்துக்கோ, ஜி.கே. வாசனுக்கோ ஏங்காமல், பேசாமல் டிராஃபிக் ராமசாமியுடன் கூட்டணி வைப்பதைக் குறித்து யோசிக்கலாம். தேர்தலில் நிற்கப் போகிற ஒவ்வொரு ஊழல்வாதிக்கு எதிராகவும் குறைந்தது இருநூறு, முன்னூறு பேரை நிறுத்தி வாக்குகளைச் சிதறடிக்கும் சக்கர வியூகம் அல்லது அக்ரம வியூகமொன்றை அவர் வகுத்து வருவதாகக் கேள்விப்பட்டேன். டிராஃபிக் ராமசாமி நிறுத்தும் அத்தனை பேருக்கும் எத்தனை ஓட்டு விழும் என்பது ஒருபுறமிருக்க, நிறுத்துவதற்கு அவரிடம் அத்தனை ஆட்கள் இருக்கிறார்கள் என்பதே குலைநடுங்கச் செய்கிறது.
ஒன்றுமே இல்லாவிட்டாலும் ஓட்டுகளைப் பிரிக்கும் கொள்கை அடிப்படையிலேனும் டிராஃபிக் ராமசாமி மநகூவுடன் ஒத்துப் போய்விடுவார் அல்லவா?
(நன்றி: தினமலர் 22/03/16)
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
March 20, 2016
பொன்னான வாக்கு – 11
பெட்ரோல் விலை, தங்கம் விலை, பங்குச் சந்தைப் புள்ளிகள், தமிழக அமைச்சரவை போன்ற சில சங்கதிகள் எப்போது வேண்டுமானாலும் மாறிக்கொண்டே இருக்கக்கூடியவை. என்ன காரணத்தால் பெட்ரோல் விலை திடீரென்று இன்று நடு ராத்திரி ஒண்ணே முக்கால் ரூபாய் ஏறியது என்று கேட்டால் நம்மால் பதில் சொல்ல முடியுமா? ஜெயலலிதா ஏன் ஒரு அமைச்சரை டமாலென்று தூக்கியடிக்கிறார் என்று சொல்ல முடியுமா? இன்று ஏறிய தங்கத்தின் விலை அட்சய திருதியைக்குப் பிறகு ஓரிரு வாரங்கள் கழித்துக் கொஞ்சம் குறையும். போன வருஷம் பதவி பறிபோன அமைச்சர் இந்த வருஷம் மீண்டும் சைரன் வைத்த காரில் போவது போல. இவர் இரண்டு வருஷங்களுக்கு முன்னால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே கூடக் கழட்டிவிடப் பட்டிருப்பார். அது ஏன் இது ஏன் என்றெல்லாம் கேட்கப்படாது. சாமி குத்தம்.
நேற்றைக்கு வாட்சப்பில் வந்த ஓர் ஒலிச்சித்திரத்தைக் கேட்க நேர்ந்தது. அதிமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் (பெண்மணி), தமது நண்பர் ஒருவருடன் (இவர் ஆண்) தொலைபேசியில் நிகழ்த்திய உரையாடல். பிரமாத ராணுவ ரகசியங்கள் ஏதுமில்லை என்றாலும் அவரது குரலில் தொனித்த கதனகுதூகலம் முக்கியமாகப் பட்டது. உல்லாசங்களில் யாருக்குத்தான் விருப்பமில்லை? எதுவும் பிழையல்ல. எதுவும் சிக்கலல்ல – சிக்கிக்கொள்ளாத வரை.
அது என் குரலே இல்லை என்று சம்மந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஓர் அறிக்கை வெளியிட்டுவிட்டால் தீர்ந்தது விஷயம். ஆனால் அறிக்கை வருவதற்குள் அசம்பாவிதமேதும் நடந்துவிடாதிருக்க வேண்டும்.
ஆனானப்பட்ட ஓ. பன்னீர் செல்வத்துக்கே சிக்கல். நத்தம் விசுவநாதனுக்குச் சிக்கல். பன்னீரெல்லாம் தப்பு செய்வார் என்று சொன்னால் இந்த சமூகம் அத்தனை சுலபத்தில் நம்பிவிடுமா? ஜெயலலிதா நடத்துவது ராமராஜ்ஜியமில்லாது போனாலும் பன்னீர் இருமுறை பரதன் வேடமேற்றவர். அதில் கனகச்சிதமாகப் பொருந்தியவர். பணிவுக்கு மறுபெயரல்லவா பன்னீர் என்பது? அவரா கட்சி விரோதக் காரியங்களை ஆலா போட்ட ஆத்ம சுத்தியோடு செய்திருப்பார்?
ஒரு வாரம் புகைந்த நெருப்பு ஒருவாறு இப்போது சற்றுத் தணிந்திருக்கிறது. சந்திப்புகள். சமாதானப் பேச்சுவார்த்தைகள். ஓம் சாந்தி. ஓம் சாந்தி. விஜயசாந்தி. டிஸ்கோ சாந்தி.
சிரிக்கலாம். ஆனால் இது சிரிக்கத் தகுந்த சங்கதியல்ல. அமைச்சர்களின் தவறு என்பது முதல்வரின் அவமானம். கட்சியில் இருந்தும் அதிகாரத்தில் இருந்தும் ஒரு வேகத்தில், ஒரு கோபத்தில் தூக்கியடித்துவிட்டு, பிறகு காலக்கிரமத்தில் மீண்டும் அரவணைத்துக்கொள்வதைக் கட்சிக்காரர்கள் வேண்டுமானால் தாய்ப்பாசம் என்று வருணிக்கலாம். நம்பி வாக்களித்த மக்கள் என்ன நினைப்பார்கள்?
கடந்த ஐந்தாண்டுக் காலத்தில் மாற்றப்பட்ட அமைச்சர்களின் பட்டியல் ஒன்றைத் தயாரித்துப் பார்க்கலாம். இது சுட்டிக்காட்டும் அடிப்படைப் பிரச்னை என்னவென்றால், அதிகாரத்தில் உள்ள யாருமே ஒழுங்காக இல்லை என்பதுதான். இது அதிகாரிகளின் பிரச்னையா? அதிகார மையத்தின் பிரச்னையா? ஜெயலலிதாவின் மீது சுமத்தப்பட்ட வழக்குகளில் ஒன்றிரண்டு மட்டுமே நிரூபிக்கப்பட்டவை என்பதால், மற்றவர்கள் செய்யும் பிழைகளை அவசியத்துக்கேற்ப அவர் மன்னிப்பதில் பிழையில்லை என்று ஆகிவிடுமா?
தேர்தல் வேளையில் அதிமுக வளாகத்தில் நிகழும் இம்மாதிரியான அசம்பாவிதங்கள் வெகு நிச்சயமாக அக்கட்சியின் தொண்டர்களை உளவியல் ரீதியில் பாதிக்கவே செய்யும். பொதுவாழ்வில் ஒழுக்கம் என்பது பிரசார வாகனங்களின் முன்புற பம்ப்பர் போல ஆகிவிட்டது. ஒரு பந்தாவுக்கு வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம். இஷ்டமில்லாவிட்டால் கழட்டிக் கடாசிவிடலாம்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்து நின்றதைப் போலவே இந்த சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக தனித்து நின்றுவிட முடிவு செய்யலாம். ஆனால், அதிபயங்கரத் துணிச்சல் என்பது உள்ளார்ந்த அச்சத்தின் வேறு வடிவமே. சென்னை, கடலூர் மாவட்டங்களில் கொடுமழைக் காலத்தில் நேர்ந்த கோரங்களை நேரில் காணவும் ஆறுதல் சொல்லவும் முதல்வர் வராதது முதல், உடுமலையில் நிகழ்ந்த சாதித் திமிர் படுகொலைச் சம்பவத்தைக் கண்டித்து ஒற்றைச் சொல்லைக்கூட உதிர்க்காதது வரை அவர் மீதான மக்களின் அதிருப்தி என்பது மாற்றம் கண்ட அமைச்சரவைப் பட்டியலினும் பெரிது.
பலம் என்று சொல்லிக்கொள்ள எதிர்க்கட்சிகளிடம் இப்போதைக்குக் கைவசம் ஒன்றுமில்லாதது ஒன்றே ஜெயலலிதாவின் பலம். தனது ஆட்சியின் பலவீனங்களை இந்த ஒரு பலம் மறைத்துவிடும் என்று அவர் நினைப்பாரானால், அது பெரும் சரித்திரப் பிழையாகிப் போகும் வாய்ப்பு மிகப் பிரகாசமாக இருக்கிறது.
(நன்றி: தினமலர் – 21/03/16)
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
March 18, 2016
சில கடிதங்கள்
தினமலர் தேர்தல் களத்தில் நான் எழுதும் பத்திக்கு நிறைய மின்னஞ்சல்கள் வருகின்றன. இதில் எழுபது அல்லது எண்பது சதவீதம் பிரசுரிக்க இயலாதவை. நான் மட்டுமே படித்து ரசிப்பதற்காக எழுதப்படுபவை. அவை போக மிச்சமுள்ளவற்றில் சிலவற்றை இங்கே பிரசுரித்திருக்கிறேன். பொறுமையாக எடுத்துத் தொகுக்கவும் , பிழை திருத்தம் செய்யவும் நேரமில்லை. நண்பர்கள் தவறாக எண்ணவேண்டாம். இனி வரும் நாள்களில் மின்னஞ்சல்கள் வரும்போதே தனியே சேமித்து வைக்கப் பார்க்கிறேன். அப்போது பிரசுரிக்க வசதியாக இருக்கும்.
0
அன்புள்ள கட்டுரையாசிரியர் பா.ராகவன் அவர்களுக்கு வணக்கம்.
தினமலரில் “தேர்தல் களம்” பகுதியில் தாங்கள் எழுதி வரும் கட்டுரைகளைப் படித்து வருகிறேன். கட்டுரைகள் விமரிசன நோக்குடன் கிண்டல் தொனி கலந்த நடையில் எழுதப்பட்டு வருகின்றன.உங்கள. பரவலாக வாசிக்கப்பட்டு ஒரு வகையில் சிந்திக்கத் தூண்டும் என்பதில் சந்தேகமில்லை.
அன்புடன்,
ம.திருமலை,
முன்னாள் துணைவேந்தர்.
0
அன்புமிக்க பாரா அவர்களுக்கு,
இன்றைய தினமலரில் உங்கள் கட்டுரை நன்றாக இருந்தது. வருடம் ஐந்து சதவிகிதம் இட ஒதுக்கீட்டை குறைத்துவந்தால் இருபது ஆண்டுகளில் நமது தேசம் இட ஒதுக்கீடு இல்லாத நாடாக மாறி விடும். கொடுமை என்ன வென்றால் நகரத்தார் சமூகத்தினை மிக பிற்படுத்தப்பட்ட சமூகமாக அறிவிக்க கோரிக்கைகள் வைக்கப்பட்டன. ஒதுக்கீடு இல்லையென்றால் ஜாதி பிரச்சனை குறையும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. புரட்சிக்கவிஞ்சரான பாரதியை எடுத்ததற்கெல்லாம் மேற்கோள் காட்டும் கழகத்தினர் வசதியாக ‘ஜாதிகள் இல்லையடி பாப்பா’ என்பதை மறந்து விடுகின்றனர். மறதி ஒரு வர ப்ரசாதமா அல்லது சாபமா என்பதை சாலமன் பாப்பையாதான் சொல்ல வேண்டும்.
அன்புடன் ,
ஆர்.நந்தகுமார்.
0
இன்னார் கட்டுரையாளர், எழுத்தாளர் ஆகலாம்’ அல்லது ‘இன்னார் ஆகக்கூடாது’ என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. படாத பாடுபட்டு அடைந்த சுதந்திரமும் ஜனநாயகமும், கேவலம்,ஒருத்தருக்கு இந்த விருப்ப சவுகரியத்தைக் கூடக் கொடுக்கவில்லை என்றால், அப்புறம் என்ன தண்ட கருமாந்திரத்துக்கு ஜனநாயகமும், சுதந்திரமும்? எனவே, பா. ராகவன் எழுத்தாளராக ஆசைப்படலாம். தப்பே இல்லை.
L. சரவணன்
0
அய்யா ராகவா நீங்களாம் பத்திக்கையாளர்களா??? மாநாட்டில் எடுத்துரைத்த நல்ல கருத்துக்களையும் அப்படியே சொல்லியிருக்கலாம்… மதுவிலக்கு தமிழ்நாட்டுக்கு தான் கொண்டு வர எண்ணுகிறார்கள் மாநாட்டுக்கு வந்தவர்கள் எல்லாம் தமிழ்நாட்டவர்கள் தான்.. அவர்களா திருந்தனும்னா எதுக்குப்பா மதுவிலக்கு… என்ன சொன்ன ஊழலையும் கொசுவையும் ஒழிக்க முடியாதா.. உன்னலாம் பத்தரிக்கையாளன்னு சொல்ல வாய் கூசுது.. சமுதாயத்தின் மீது அக்கறை அற்ற சமூக விரோதி நீ.. இனி நீ எழுதாத சமூகம் நல்லா இருக்கும்..
இப்படிக்கு
நல்லதை வரவேர்ப்பவர்
க ஞானசூரியன்
0
Dear Sir
I have read your article published in Dinamalar dated 17.3.16 about the murder of dalit man in udumalapet.you have mentioned about the rulling party and the opposition party could not raise their voice about this murder . These corrupted leaders are not in a position to raise their voice against these murders.Only the people of Tamilnadu could come forward to eradicate these corrupted leaders.
The following steps are to be taken
1.Chief minister,primeminister should be elected for 2 times only.
2.interparty democracy should be followed among the parties
3.Chiefminister or primeminister congress (US system) should be followed
4.The personality cult should be destroyed
Kindly make suggestions
Regards
M.Selvakumaran
0
Respected sir,
I have noticed from the above news (reference as above), I am sorry to say that it is totally one sided and very partial. It is right that if the news headline goes with the headline as ‘பொன்னான வாக்கு -அ.தி.மு.க.,வின் கள்ள மவுனம்’. It would have been proper, opt and correct news.
In the past two days, from DMK, Mr.Stalin (Treasurer) and Mr.Kalaignar (Leader of DMK) have very strongly condemned the horror ‘day light’ brutal killing at Udumalaipet. Only Jaya (CM of Tamilnadu) has not said anything nor condemned against this brutal caste based day light killing..
In that case, what is the need for you to add DMK’s name unnecessarily and that is totally unacceptable.
Hope and wish to know the reason for your false implication of DMK;s name; hence I request you to find out the truth and provide the correct information and details..
Thanks and regards,
S Viswanathan
0
Dear sir,
Regular leader of your article in dinamalar daily.
Since it is the election time,most of the political party’s would take the recent murder of a young man in udumalpet.
Why don’t you write a article on this very sensitive issue.
Leave the cast,political and social issue.it is brutal murder which has to be condemned by all and the perpetuators to be brought under justice.
In my openion the root cause for this cinima,mobile and internet.
What sort of maturity we could expect from a 22 years old boy and 20 years girl to face the life and its struggle.
No body in this country to talk about morality and human value.
Take this mega serials irrespective of any languages.
All shown and highlighted is crap which is not going to help anybody.
It is very unfortunate all the so called intellectuals talk only the effect.not the cause.
Saying goes when there is a cause there would be an effect.
Sincerely expecting your article on this subject.
Thanks and regards.
Sundaram.
0
Dear Mr Raghavan
I enjoyed reading your article in Dinamalar dated 9th March. You have very humourously depicted the Aryan food and the Dravadian Emotions on the subject. In the election times Dravadian parties will not make it an election issue on the food habits because they very well know the Aryan votes do matter most and not the Aryan food or habits or Aryans as a whole. Once they are in the chairs, then the language issues and other unimportant issues will take centre stage because the Dravadian Parties fully well know that the general public will not bother them with the issues that will not affect them.
I am sorry that Tamilians can be easily fooled in Election Times with the famous Aryan Biriyanis; this land will be saved only when the general public starts omitting the Biriyanis from their menus.
Thanks for the article and do keep writing….
Regards
Ramnath from Palani
0
Dear Mr Para,
You hit the nail on the head with your write-up on the silence of DMK and ADMK regarding the honour killing of Sankar in Dinamalar dated March 17.
I feel the two parties are more culpable than the killers themselves for the atrocity.
I want to thank you for writing the truth.
Regards
TN Raghu
0
Dear Raghavan. Vanakkam
I have read your article in DINAMALAR today. Well written. DMK and aiadmk
Stealthy silence on udumalpet murder
Very rightly said that it is nothing
But votebank politics. Buy peoples
Welfare front strongly condemned it
Which you have not mentioned
In many placed. Protest meetings are
Held
I very much appreciate
Your progressive thought
Com v Santhanam. Chrompet
0
Mr.. Ragavan, seems like you are a ADMK guy… Why you write in a newspaper against Vijaykanth.. ???? Go and do campaign like what Vadivel did.. Good comedy.. Wait and see… You will see that you are totally wrong… Wait until May 16.
Krishnan AR
0
ஆசிரியர் பா.ராகவன் அவர்களுக்கு
இன்று தினமலர் தேர்தல் களம் பகுதியில் இளமை எனும் பூங்காற்று தலைப்பில் வந்த கட்டுரையை படித்தேன் வியப்பாக இருந்தது. காரணம் நமக்கு நாமே டூரெல்லாம் போய் வந்திருக்கிறார் ஆக்டிவாக இருக்கிறார் என்று எழுதியிருந்தீர்கள் நீங்கள் கட்சிக்கு வெளியில் இருந்து பார்க்கிறீர்கள் அதனால் அழகாக தெரிகிறது.ஒவ்வொரு மாவட்டம் தோரும் மாவட்டச்செயலாளர் என்ற பெயரில் 35, 40 வருடங்களாக மாவட்டத்தை கோலோச்சித்துக்கொண்டு வலம் வருகிறார்கள் முதலில் அவர்களை மாற்றச்சொல்லுங்கள் ஓட்டுக்கள் தானாகவே வந்து விழும் உதயசூரியன் சின்னத்தில்.
திலகர் தினகர்ராஜ்
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
March 17, 2016
பொன்னான வாக்கு -10
ஓட்டுக்குப் பணம் வாங்கினால் ஓராண்டு காலச் சிறை என்று தேர்தல் கமிஷன் அறிவித்திருக்கிறது. ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை வருகிற தேர்தலை மகா ஜனங்கள் ஒரு திருவிழா ஆக்குவதே மேற்படி சங்கதியால்தான். அப்படி இருக்கிற நிலையில் இப்படியெல்லாம் இசகுபிசகாகச் சட்டம் கொண்டு வந்து அண்டர்வேருக்குள் அணுகுண்டு வைத்தால் என்ன அர்த்தம்? இதெல்லாம் மனித உரிமை மீறல் வகையறாவுக்குள் வருமா என்று தெரியவில்லை.
கட்சிகள் எதுவும் இன்னும் பிரசாரம்கூட ஆரம்பிக்காத நிலையிலேயே கிட்டத்தட்ட எட்டுக் கோடி ரூபாய் பறிமுதலாகியிருக்கும் போலிருக்கிறது. இதையெல்லாம் எங்கிருந்து எங்கே கொண்டுபோய்க்கொண்டிருந்தார்களோ. எத்தனை பேர் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டார்களோ. எல்லாம் எள்ளு.
சென்ற தேர்தல் சமயம் இந்தப் பணப் பட்டுவாடா விவகாரம்தான் தொலைக்காட்சிகளில் பெரும் பரபரப்பு அம்சமாக இருந்தது. ஓலைச் சரிவுகளின் பின்னால் லுங்கியை மடித்துக் கட்டி, குத்திட்டு அமர்ந்து சூட்கேஸ்களிலிருந்து கத்தை கத்தையாக எடுத்துக் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். நள தமயந்தி படத்தில் மோர்சிங் வித்வான் அப்பளத்தை எண்ணுவாரே, அப்படி எண்ணினார்கள்.
பயபுள்ளைகளுக்கு எத்தனை சமூக அக்கறை! அதுநாள் வரை சூட்கேஸ் நிறைந்த பணத்தை ஜெய்சங்கர் படங்களில் மட்டுமே பார்த்த தமிழ் சமூகத்துக்கு அது சந்தேகமில்லாமல் கண்கொள்ளாக் காட்சிதான். தொலைக்காட்சி படப்பிடிப்பாளர்கள் சுழன்று சுழன்று இந்தப் பட்டுவாடா திருவிழாவைப் படமெடுத்து ஒளிபரப்பினார்கள். எந்த சானலைத் திருப்பினாலும் இதே காட்சி. மறு ஒளிபரப்புகளிலேயே கதி மோட்சம் கண்ட காட்சி அது.
இதற்குத்தான் இந்த முறை வேட்டு அறிவித்திருக்கிறது தேர்தல் கமிஷன். தவிரவும் வீடு தோறும் ஒரு விழிப்புணர்வுக் குழு தீர்த்த யாத்திரை மேற்கொண்டு, ஏன் பணம் பெறக்கூடாது என்று பிரசாரம்வேறு செய்யப் போகிறது. சற்றே மிஷனரித்தனமான நடவடிக்கையாகத் தோன்றினாலும் இதுவும் தேவையே.
கொஞ்சம் உரக்க யோசித்துப் பார்த்தால் பரிதாபமாகத்தான் உள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் பிரதானப் போட்டியாளர்களை உள்ளடக்கிய இரண்டு பெரும் கட்சிகள் பணம் தர நினைக்குமா? ஓட்டுக்கு நூறு இருநூறு? அல்லது வீட்டுக்கு ஐந்நூறு ஆயிரம்? அதற்குமேல் வாய்ப்பில்லை. அம்மக்கள் மிஞ்சிப் போனால் தமது நாலைந்து நாள் உழைப்பில் இந்தப் பணத்தைச் சம்பாதித்துவிட முடியும்.
இந்தக் குறைந்தபட்ச வருவாய்க்காகத் தமது கம்பீரத்தை, கௌரவத்தை அடகு வைக்கிறோம் என்று யோசித்து அறியத் தெரியாதவர்களைத்தான் இக்கட்சிகள் வட்டமிடுகின்றன. அவர்களே பெரும்பான்மையானவர்களாக இருப்பது ஒரு துரதிருஷ்டம் என்றால், அந்தப் பெரும்பான்மையின் சதவீதத்தைக் குறைந்துவிடாமல் பார்த்துக்கொள்வதில் ஆட்சியாளர்கள் காட்டும் அக்கறை அதனினும் பெரிய துரதிருஷ்டம்.
1997ம் வருடம். பிகாரில் பொதுத் தேர்தல். லாலுவின் வீட்டுத் தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த மாடுகளில் ஒன்றை நிறுத்தினால்கூட ஜெயித்துவிடும் என்று பேசிக்கொண்டிருந்தார்கள். எனவே லாலு நிற்பதில் பிரச்னை என்பது புரிந்தது. அப்படியேதான் ஆனது.
ஊழல் குற்றச்சாட்டுகள், வாத விவாதங்கள், தீர்ப்புக் களேபரங்களின் இறுதியில் லாலு இல்லாத ஒரு தேர்தலை பிகார் எதிர்கொள்ளும் சூழல் உருவானபோது, தெய்வாதீனமாக அவர் தொழுவத்து ஜீவாத்மாக்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்காமல் தமது மனைவி ராப்ரி தேவியை முதல்வர் வேட்பாளராகத் தன் கட்சியின் சார்பில் நிறுத்தினார். இதில் அவரது எதிர்க்கட்சிகளுக்கும் எதிரிக் கட்சிகளுக்கும் அதி பயங்கரக் கோபம். ராப்ரிக்கும் அரசியலுக்கும் என்ன சம்மந்தம்?
அச்சமயம் பிகாரில் உள்ள பக்சர் என்னும் பிராந்தியத்தில் சுற்றுப்பயணம் செய்துகொண்டிருந்தேன். ஒரு குப்பம். அங்கே எந்த வீட்டுக்குள் நுழைந்தாலும் ஒவ்வொருத்தர் கையிலும் ஒரு கைத்துப்பாக்கி இருந்தது. அதிர்ந்துவிட்டேன். அவை லாலு எதிர்ப்பாளர்கள் வீடு வீடாகச் சென்று வழங்கிவிட்டுப் போனவை.
நீ என் கட்சிக்கு ஓட்டுப் போடு அல்லது போடாது போ. ஆனால் ஆர்ஜேடி ஆட்கள் வந்தால் சுட்டுவிடு என்று சொல்லிவிட்டுப் போனார்களாம்.
நல்லவேளை அம்மாதிரி அசம்பாவிதம் ஏதும் நடைபெறவில்லை என்றாலும் துப்பாக்கியை அன்பளிப்பாகக் கொடுத்தாலும் வாங்கிக்கொள்ளும் மனநிலையைக் கவனிப்பது அவசியம்.
வாக்காளர்களிடையே விழிப்புணர்வு வேண்டும் என்பதும், பணம் வாங்க மறுப்பதை அவர்கள் பெருமையாகக் கருதவேண்டும் என்பதும் ஓட்டளிப்பதை ஒரு தேசியக் கடமையாக உணரவேண்டும் என்பதும் அவசியமே. இந்த விழிப்புணர்வுப் பிரசாரத்தைத் தொடங்கிவைக்கும் கையோடு தேர்தல் கமிஷன் இன்னொரு சட்டத்தையும் பொதுவில் தூக்கிப் போடலாம்.
பணம் அல்லது பொருளை லஞ்சமாகக் கொடுக்கும் கட்சிகள் (வேட்பாளர்களல்ல; கட்சிகள்) அடுத்தப் பத்திருபது வருஷங்களுக்கு கார்ப்பரேஷன் தேர்தல்களில்கூட நிற்க முடியாது!
முடியுமா? செய்வார்களா? தேர்தல் கமிஷன் இதைச் செய்தால் கண்ணை மூடிக்கொண்டு விழுந்து சேவிக்கலாம்.
(நன்றி: தினமலர் 18/03/16)
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
March 16, 2016
பொன்னான வாக்கு – 09
ஞாயிற்றுக் கிழமை ஒரு சம்பவம் நடக்கிறது. உடுமலைப் பேட்டையில் தலித் இளைஞர் ஒருவரை ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த, சாதி வெறி மண்டிய தாதாக்கள் சிலர் வெட்டிக் கொன்றுவிட்டு பைக்கேறிப் போகிறார்கள். திங்கள் போனது, செவ்வாய் போனது, புதனும் போய்விட்டது. இதனை கௌரவக் கொலை என்று சொல்லலாமா, ஆணவக் கொலை என்று குறிப்பிடலாமா என்று வல்லுநர்கள் ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார்கள்.
ஆராய்ச்சியாளர்கள் அதை க்ஷேமமாகச் செய்யட்டும். ஆட்சேபணையே இல்லை. ஆனால் நமது அரசியல் தலைவர்கள் இந்தப் படுகொலையைக் கண்டித்தார்களா? அம்மாவின் பொற்கால ஆட்சியில் உடுமலைப்பேட்டை உள்ளிட்ட தமிழக நகரங்கள் அனைத்துமே அமைதிப் பூங்காதான். கொலையா நடந்தது? சேச்சே. இருக்காது. இருந்திருந்தால் அறிக்கை வந்திருக்கும். மாறாக மாண்புமிகு மகாராணி சாதிக் கட்சிக்காரர்களுடன் கூட்டணிப் பேச்சல்லவா நடத்திக்கொண்டிருக்கிறார்? யாரோ யாரையோ செல்லமாகத் தட்டியிருக்கிறார்கள். அவ்வளவுதான். தண்டத்துக்கு ஊதிப் பெரிதாக்காதீர்கள்.
மறுபுறம் திமுக தலைவர் என்ன சொல்கிறார்? கலைஞருக்கு சமூக அக்கறை ஒரு பிடி தூக்கலல்லவா? துன்பம் நேர்கையில் யாழெடுத்து இன்பம் சேர்க்க அவர் விரும்பமாட்டார். கண்டிப்பாக அவர் கண்டித்திருப்பார் என்று சல்லடை போட்டுத் தேடினாலும் நாலு வரி கூட அகப்படக் காணோம்.
அட அவருக்கு வேறு வேலையா இல்லை? அதான் ஸ்டாலின் கண்டித்துவிட்டாரே என்பீர்களானால் ஸ்டாலினின் கண்டனம் சம்பவம் பற்றியதா அல்லது சம்பவம் நடந்த பொற்கால ஆட்சியின் தலைமைப் பீடத்தைப் பற்றியதா என்ற சந்தேகம் வந்துவிடுகிறது. ஜெயலலிதாவைத் திட்ட இது இன்னொரு சந்தர்ப்பம். முடிந்தது கதை.
இன்னொரு பிரகஸ்பதி இதெல்லாம் கருத்து சொல்லவே லாயக்கில்லாத சங்கதி என்ற ரீதியில், பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டபோது எழுந்து போயே போய்விட்டார். பிறகு போனால் போகிறது என்று ஒண்ணே முக்கால் வார்த்தையில் ஒப்புக்கு ஒரு கண்டனம்.
அட எழவே, நீ ஏன் தேர்தல் சமயத்தில் விழவேண்டும் என்பதுதான் நமது பெருந்தலைவர்களின் ஒரே பெரும் ஆதங்கமாக இருக்கிறது. கொல்லப்பட்ட இளைஞர் ஒரு தலித் என்பது அனுதாபத்துக்குரியதுதான். ஆனால் கொன்றவர்கள் ஆதிக்க சாதியினர். தவிரவும் நிறைய ஓட்டுகள் உள்ள சாதியினர். இன்னாருக்குப் போடு என்றால் போடுவார்கள். கூடாது என்றால் கிடையாது.
இப்போது, நடந்த கோரச் சம்பவத்தை என்ன சொல்லிக் கண்டிப்பார்கள்? ஏ சாதி வெறி பிடித்த மிருகங்களே, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்களுக்குத்தான் முதல் ஆப்பு என்று சொல்ல நமக்கேது திராணி? கோகுல்ராஜ் சம்பவத்தின்போது அப்படிச் சொன்னார்களா? இளவரசன் மரணத்தின்போது பேசப்பட்டிருக்கிறதா? ம்ஹும்.
வன்மையான கண்டனங்களைக்கூட மென்மையான பேக்கேஜிங்கில் பொதித்துத் தரும் வல்லமை நமது தலைவர்களுக்கு உண்டு. ஆனால், இம்மாதிரியான சாதித் திமிர்ப் படுகொலைச் சம்பவங்களின்போது வன்மை மென்மையைக் காட்டிலும் மௌனம் பேரழகு என்று இருந்துவிடுவார்கள்.
சிக்கல்கள் மிகுந்த சாதிக் கட்டமைப்புகளை உள்ளடக்கியது நமது சமூகம். இங்கே அரசியல் செய்வது அத்தனை சுலபமில்லைதான். பாமகவைப் போல வெளிப்படையாக சாதிக் கட்சிதான் என்று காட்டிக்கொண்டுவிட்டால் இம்மாதிரித் தருணங்களில் அதிக தர்ம அடி விழாது. ஆனால் அனைத்துச் சாதியினரும் தமக்குரிய இயக்கமாக சுவீகரித்துக்கொண்டிருக்கும் திமுகவும் அதிமுகவும் இப்படிக் கள்ள மௌனம் காப்பது கேவலமன்றி வேறல்ல. தமிழக பாஜகவுக்கு இவ்விஷயத்தில் உள்ள சொரணைகூட இவ்விரு பேரியக்கங்களுக்கு இல்லாமல் போய்விட்டதன் ஒரே காரணம், ஓட்டு.
நேற்றைக்கெல்லாம் சமூக வலைத்தளங்களில் ரொம்ப சீரியசாக ஒரு விஷயம் ஓடிக்கொண்டிருந்தது. படிக்கிற வயதில் இந்தப் பெண்களுக்கும் பையன்களுக்கும் காதல் எதற்கு? கல்யாணம் எதற்கு? இவர்கள் கொழுப்பெடுத்துப் போய் காதலித்துவிட்டு அப்புறம் குத்துதே குடையுதே என்று அலறினால் என்ன அர்த்தம் என்கிற ரீதியில் விற்பன்னர்கள் வீர உரையாற்றிக்கொண்டிருந்தார்கள். ஒரு பிரகஸ்பதி என்னுடைய ஃபேஸ்புக் பக்கத்துக்கே வந்து, ‘அவரவர் சாதியிலேயே பிறந்த பெண்ணைக் காதலித்தால் இம்மாதிரி பிரச்னையெல்லாம் வராதல்லவா?’ என்று திருவாய் மலர்ந்துவிட்டுப் போனார்.
எனக்கு பகீரென்று ஆகிவிட்டது. தாலிபானியம் என்பது ஆப்கனிஸ்தானில் ஒரு குறிப்பிட்ட மாணவர் அமைப்பினரால் வழிநடத்தப்பட்ட ஓர் இயக்கம் என்று தான் இதுநாள்வரை எண்ணிக்கொண்டிருந்தேன். இல்லை; அது ஒரு மனநிலை – மனித குலத்துக்கே பொதுவானது என்று இப்போது தோன்றுகிறது. அருவருப்பூட்டக்கூடிய அடிப்படைவாத மனநிலையைக் கண்டிக்க வேண்டிய தலைவர்கள், ஓட்டுக்காக வாயை மூடிக்கொண்டிருந்துவிட்டு, பிற்பாடு இதர விஷயங்களில் சீர்திருத்தம் குறித்தும் புரட்சி குறித்தும் லெக்-டெம் நடத்தும்போது எந்தப் பக்கம் திரும்பி நின்று சிரிப்பதென்று தெரியவில்லை.
இப்படியொரு படுகொலைக்குக் காரணமான ஆதிக்க சாதியினரின் ஓட்டு எனக்கு வேண்டாம் என்று மார்தட்டிச் சொல்லக்கூடிய ஒரு தலைவர் இங்கில்லை. ஏனெனில் நாம் அப்படியொருவரை விரும்புவதில்லை. நாம் விரும்புவதெல்லாம் இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வகையறாக்களை வழங்கும் தலைவர்களை மட்டுமே.
0
(நன்றி: தினமலர் 17/03/16)
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
சொந்த சோகம்
தினமலர் பத்தி எழுதத் தொடங்கியது முதல் தினசரி இருபது முப்பது மின்னஞ்சல்களாவது போற்றியும் தூற்றியும் வருகின்றன.
நானும் பார்க்கிறேன், எழுதுகிற இத்தனை பேரில் ஒருவராவது ஜெயமோகனுக்கு எழுதுவதுபோல அறிவுஜீவித்தனமாக எழுதுவாரா என்று. ம்ஹும். கல்கி, குமுதம் காலத்தில் வாசிக்கக் கிடைத்த அரவக்குறிச்சிப்பட்டி அசோக்ராஜா, அரகண்டநல்லூர் விஜி, அய்யாறு வாசுதேவன் வகையறாக் கடிதங்கள்தாம் எல்லாமே.
திட்டுகிறவர்கள்கூட இலக்கியத் தரமாகத் திட்டமாட்டேனென்கிறார்கள். டேய் பாப்பாரக் கூமுட்டை என்று தொடங்கும்போது மட்டும் இலக்கிய வாசனை காட்டிவிட்டு, அடுத்த வரியிலேயே காலம் பதில் சொல்லும் என்று முடித்துவிடுகிறார்கள்.
இதெல்லாம் இப்படியே போனால் என்றைக்கு நான் எனக்கு வரும் மின்னஞ்சல்களையெல்லாம் இணையத்தில் ஏற்றுவது? இந்த ஜென்மத்தில் அந்த பாக்கியம் இல்லை போலிருக்கிறது.
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
March 15, 2016
பொன்னான வாக்கு – 08
ஆக, விஜயகாந்த் தனித்துக் களம் காண முடிவு செய்துவிட்டார். தெய்வாதீனமாக இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகளும் ஒரே பக்கமாக ஒதுங்கிப் போனதால் திமுக, அதிமுகவும் பிக்கல் பிடுங்கல் இல்லாமல் சுதந்தரமாக வேலை பார்க்கலாம். இந்தப் பக்கம் பாமக, அந்தப் பக்கம் பாஜக. எண்டர்டெயின்மெண்டுக்கு இருக்கவே இருக்கிறது மதிமுக, விடுதலை சிறுத்தைகள் மற்றும் மேற்படி கம்யூனிஸ்டுகளை உள்ளடக்கிய மநகூ.
யோசித்துப் பார்த்தால் இம்மாதிரி ஒரு கண்கொள்ளாக்காட்சி சமீபகாலங்களில் நமக்கு சித்தித்ததேயில்லை. இரண்டு பொட்டலம், மிஞ்சிப் போனால் மூன்று பொட்டலம். உடனே மூன்றாவது அணியின் வெற்றி சாத்தியங்கள் என்று பக்கம் பக்கமாக ஆய்வுக் கட்டுரைகள் வந்துவிடும். எத்தனை தேர்தல்களில்தான் இதையே பார்ப்பது?
இம்முறை சீட்டுக்கட்டுகள் பிரித்துப் போடப்பட்டிருக்கின்றன. அதிர்ஷ்டம் யார் காயங்களை ஆற்றப் போகிறதென்று பார்த்துவிடலாம். ஒரு விதத்தில் நமது கட்சிகளுக்கே இந்த அனுபவம் சற்றுப் புதிதாகத்தான் இருக்கும். மொழி தெரியாத பரதேசத்துக்குப் போய் நிற்கிற உணர்வு வர வாய்ப்பில்லை என்றபோதும் கொஞ்சம் முழி பிதுங்கிப் போவதை யாரும் தவிர்க்க முடியாது என்றே தோன்றுகிறது.
காரணம் இருக்கிறது. உலக வங்கியின் செயல்பாடுகளை இதுவரை யாராவது முழுக்கப் புரிந்துகொண்டிருக்கிறார்களா? அந்த மாதிரிதான் இந்த வாக்கு வங்கி என்பதும். எந்தக் கட்சி பிரகஸ்பதியைக் கூப்பிட்டுக் கேட்டாலும் தமது கட்சிக்கு இத்தனை சதவீத வாக்கு வங்கி என்று பாயிரம் பாடிவிட்டுத்தான் காவியத்துக்குள் நுழைவார்கள். முதலில் சதவீத அடிப்படையில் ஆரம்பிப்பார்கள். சே, ஒன்று இரண்டு மூன்று சதவீதம் என்று சொல்லுவதெல்லாம் ரொம்பக் கம்மியாகத் தெரிகிறதே என்று உடனே இத்தனை லட்சம் வாக்காளர்கள் என்று நிறைய சைபர் சேர்த்துச் சொல்லுவார்கள்.
சாதனைகள் சதவீதங்களைத் தீர்மானித்த காலமெல்லாம் வேறு. இது இன்ஸ்டண்ட் புரட்சிகளின் காலம். இன்றைய சதவீதம் நாளைய பக்கவாதம். அல்லது நேற்றைய முடக்குவாதம் இன்றைய பிழைப்புவாதம்.
எனக்கென்னவோ விஜயகாந்த் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராவதற்காக இம்முடிவை எடுத்ததாகத் தெரியவில்லை. தனித்துப் போட்டி என்பதுதான் அவர் கட்சி தொடங்கிய காலத்தில் அவருடைய யுஎஸ்பியாக இருந்தது. பிறகு காலத்தின் கட்டாயத்தால் அவரும் சமஷ்டி பிரியாணி சமைக்கத் தொடங்கினாலும் இம்முறை தனித்து நிற்க எடுத்திருக்கும் முடிவுக்கு வேறு காரணம் இருக்குமென்று தோன்றுகிறது.
சொன்னேனே வாக்கு வங்கி. அதிலுள்ள பேலன்ஸைப் பார்க்க நினைத்திருக்கலாம். ஏனெனில் கடந்த வருடங்களில் பிரதான எதிர்க்கட்சியாக இருந்தபோதும் அவரது கட்சி குறிப்பிடத்தக்க சாதனை என்று எதையும் செய்யவில்லை. தம் பங்குக்கு விஜயகாந்த் சில பத்திரிகையாளர்களைச் செல்லமாகத் தட்டிக் கொடுத்ததையும் பஞ்ச் டயலாக் பேசியதையுமெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது. அவரது திருமதியாரின் வீரப் பேருரைகளுக்கு அபிதான சிந்தாமணியை எடுத்து வைத்துக்கொண்டுதான் அர்த்தம் தேடியாகவேண்டும்.
எனவே நீடித்த செயல்பாடுகளுக்குத் தனியாவர்த்தனம் சரியாக வருமா என்கிற சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ள எண்ணியிருக்கலாம். இது அல்லாமல், தன்னையொரு எம்ஜிஆராகக் கற்பனை செய்துகொண்டு களம் காண முடிவெடுத்திருப்பாரேயானால், நாம் சொல்ல ஒன்றுமில்லை. விஜயகாந்துக்கு மிஞ்சிப் போனால் நாலைந்து சத வாக்குகள்தாம் இங்கே. அது எம்ஜிஆருக்கு விழாமல் போன வாக்குகளின் சதவீதமாயிருக்கும்.
பாமகவைப் பற்றித் திரும்பவும் சொல்லவேண்டியதில்லை; மநகூவைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. பாரதிய ஜனதாவைப் பற்றி அப்புறம். இப்போது நமக்குத் தெளிவாகியிருக்கும் ஒரே சங்கதி, இந்தத் தேர்தல் திமுக – அதிமுகவுக்கு இடையிலான போட்டியாக மட்டுமே நடக்கப் போகிறது என்பது. மற்ற அத்தனை பேருமே துரதிருஷ்டவசமாக மற்றும் பலர்தான்.
ஒருவேளை விஜயகாந்த் திமுக கூட்டணிக்கு வந்திருப்பாரேயானால் ஒரு சில லாபங்கள் இரு தரப்புக்குமே சித்தித்திருக்கலாம். இனி அதைப் பற்றிப் பேசிப் பயனில்லை. ஆனால் விஜயகாந்த் இல்லாதது திமுகவுக்கு நஷ்டமாகாது என்றாலும், அது அதிமுகவுக்கு லாபமாகச் சில வாய்ப்புகள் இருக்கின்றன.
சென்ற தேர்தலில் போனால் போகிறதென்று தேமுதிகவுக்கு வாக்களித்தவர்களில் பெரும்பாலும் அதிமுக அனுதாபிகள். கூட்டணி காரணத்தால் விருப்பம் இருந்ததோ இல்லையோ வாக்களித்துத் தீர்த்தவர்கள். இம்முறை அவர்கள் மனச்சிக்கல் ஏதுமின்றி அதிமுகவுக்கே தமது ஓட்டுகளை அளிக்க நினைப்பார்கள்.
அப்படிப் போகும் ஓட்டுகளைத்தான் விஜயகாந்த் இம்முறை நுணுக்கமாகக் கவனிக்கவேண்டும். அதையும் சேர்த்துத்தான் தனது வாக்கு வங்கியாக இதுநாள் வரை எண்ணிக்கொண்டிருந்தோம் என்பதை உணருவாரேயானால் –
இந்தத் தேர்தல் அல்ல; அடுத்தத் தேர்தல் அவருக்கு ஒருவேளை இனிக்கக்கூடும்.
0
(நன்றி: தினமலர் 16/03/16)
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
March 14, 2016
பொன்னான வாக்கு – 07
இன்னார் முதல்வர் ஆகலாம் அல்லது இன்னார் ஆகக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. படாத பாடுபட்டு அடைந்த சுதந்தரமும் ஜனநாயகமும் கேவலம் ஒருத்தருக்கு இந்த விருப்ப சௌகரியத்தைக்கூடக் கொடுக்கவில்லையென்றால் அப்புறம் என்ன தண்ட கருமாந்திரத்துக்கு ஜனநாயகமும் சுதந்தரமும்? எனவே அன்புமணியும் முதல்வராக ஆசைப்படலாம். தப்பே இல்லை.
அவர் டாக்டர் கலைஞர் போலவோ, டாக்டர் ஜெயலலிதா போலவோ டாக்டரானவரில்லை. மருத்துவக் கல்லூரியில் படித்து டாக்டரானவர். ஒரு வசூல்ராஜா எம்பிபிஎஸ் ஆவதற்கு சகல சாத்தியங்கள் இருந்தும் அவற்றை விடுத்துப் பொது வாழ்க்கைக்கு வந்தவர்.
ஆனால் அன்புமணியாகிய நான் என்று தொடங்கிய அவரது விளம்பரம் முதல் முதலில் வெளிவந்தபோது, மெய் உலகிலும் மெய் நிகருலகிலும் மகா ஜனங்கள் அவரைக் கழுவி ஊற்றிக் கவிழ்த்துவிட்டார்கள். இந்த வகையில் விஜயகாந்தை மண்கவ்வச் செய்த பெருமை அவரைச் சாரும். எத்தனை எத்தனை நையாண்டி மேளங்கள்!
இத்தனைக்கும் அவர் கொடுத்திருந்த வாக்குறுதிகள் எல்லாம் பரம உத்தமமானவை. மதுவை ஒழிப்பேன். ஊழலை ஒழிப்பேன். கல்வியையும் சுகாதார சௌகரியங்களையும் இலவசமாக்குவேன். பசுமைப் புரட்சி செய்வேன். வீட்டுக்கு ஒருத்தராவது உத்தியோக சித்தியடையச் செய்வேன்.
இதெல்லாம் நடைமுறைச் சாத்தியமற்ற வாக்குறுதிகள் என்று மக்கள் எண்ணிவிட்டார்களா? பாமக மாநாட்டுக்குப் போன இளவட்டங்கள் கிளாசும் கையுமாகக் கூடி நின்று குளிர்ந்தேலோரெம்பாவாய் பாடிய போட்டோக்களை ஃபேஸ்புக்கெங்கும் நிரப்பித் தள்ளினார்கள். அன்புமணி அசரவில்லை. எங்கள் கட்சிக்காரர்களையும் தடுத்தாட்கொள்ளத்தான் அந்த வாக்குறுதி என்று சொல்லிப் பார்த்தார். ம்ஹும். யார் கேட்கிறார்கள்?
இதுகூடப் பரவாயில்லை. அந்த ஊழல் ஒழிப்பு வாக்குறுதிதான் ஏகப்பட்ட ரத்த காயங்களைச் சந்திக்க நேர்ந்தது. கொசுவையோ ஊழலையோ ஒழிக்க இயலாது என்பது மக்களுக்குத் தெரிந்திருப்பதுபோலத் தலைவர்களுக்கு ஏனோ தெரிந்திருக்கவில்லை. வாக்குறுதிதானே? காசா பணமா என்று எடுத்துப் பொது வெளியில் போட்டால் இப்படித்தான் பேஜாராகிவிடுகிறது.
தவிரவும் அவர் பசுமைத்தாயகம் கண்டவர். வேளாண்மைத் துறையில் புரட்சி செய்ய நினைப்பது நல்ல விஷயம்தான். ஆனாலும் ஒரு மரம் வெட்டிக் கட்சியின் முகமாகத்தான் பாமகவுக்கு வெளியே உள்ளவர்கள் இப்போதும் பார்க்கிறார்கள் என்பதை உடனிருப்பவர்கள் அவருக்கு எடுத்துச் சொல்லவேண்டும்.
ஆ! அங்கேயும் ஒரு சங்கதி உள்ளது. அன்புமணியின் சில பொதுக்கூட்ட வீடியோக்களை இணையத்தில் பார்த்தேன். மேடையில் அவருக்கு இடது வலது பக்கங்களில் அமர்ந்திருப்போரெல்லாம் சாதி சங்கத் தலைவர்களைப் போலத்தான் காட்சி தருகிறார்கள், பேசுகிறார்கள். டாக்டர் மட்டும் பேண்ட் சட்டை போட்டு, டீக்காக இன் செய்து, நாசூக்கு மொழியில் பேசுகிறாரே தவிர மருந்துக்கும் மற்றொருவர் அப்படி இல்லை.
பிரச்னை இதுதான். சிக்கலும் இதுதான். ஒரு ஹைடெக் தலைவராக அன்புமணியை முன்னிறுத்தும் பாமக, சரக்கு எப்படி இருந்தாலும் பிரச்னை இல்லை; பேக்கேஜிங் பக்காவாக இருந்தால் போதுமென்று நினைப்பது போலத் தெரிகிறது.
ஏரியாவாரியான சாதி ஓட்டுகள் என்பவை திமுக, அதிமுக உள்பட அனைத்துக் கட்சிகளுக்கும் உள்ளதுதான். எந்த சாதியினர் அதிகமாக உள்ளனரோ, அந்த சாதிக்காரரை வேட்பாளராக நிறுத்தினால் அந்த ஓட்டுகளுக்கு கேரண்டி. மேலுக்கு இருக்கவே இருக்கிறது கட்சி ஓட்டுகள், கொள்கை ஓட்டுகள்.
பாமகவின் மிகத் தீவிரமான பிரச்னையாக நான் இதனைத்தான் பார்க்கிறேன். அவர்களுக்கு சாதி ஓட்டுகளில் பிரச்னையே இல்லை. கண்ணை மூடிக்கொண்டு போட்டுவிடுவார்கள். ஆனால் அவர்கள் சாதிக்கு வெளியே உள்ளோர் அப்படிச் செய்வார்களா? ஒரு எம்.ஜி.ஆரோ, கலைஞரோ சாதி ஓட்டுகளை மட்டுமே நம்பிக் கட்சி நடத்தியதில்லை என்பதை நினைவுகூரலாம். இன்றைய தேதியில் பாமகவின் ஆகப்பெரிய பலவீனம் இதுவே.
அன்புமணியாகிய நான் என்று அடுத்தப் பத்திருபது வருஷங்களிலாவது அவர் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்ள எல்லாம் வல்ல எம்பெருமானைப் பிரார்த்தித்துக்கொள்கிறேன். ஆனால் தனது சாதி அடையாளத்தைப் பாமக முற்றிலுமாகக் களைந்தாலொழிய மைய நீரோட்டத்தில் இணைய முடியாது. பாமகவுக்கு பேண்ட் ஷர்ட் போட்டு இன் செய்து நாசூக்காகப் பேசுகிற ஒரு தலைவர் தேவைப்படுவதுபோல பெருவெளித் தமிழ் மகா ஜனங்களும் தாம் மதித்து ஓட்டளிக்க சில அடிப்படைத் தகுதிகளைக் கட்சிகளிடையே எதிர்பார்ப்பதில் பிழையில்லை அல்லவா? அடிப்படையில் அத்தனை பேருக்கும் சாதிக் கண்ணோட்டம் இருந்தாலுமேகூட.
நானோ என் குடும்பத்தாரோ பதவிக்கு ஆசைப்பட்டு அதிகாரத்தைத் தேடி அலைந்தால் கட்டி வைத்து அடியுங்கள் என்று சொன்னவரின் மகனாகவேறு போய்விட்டார். கொஞ்சம் கஷ்டப்பட்டுத்தான் தமிழ் மக்களைச் சரிக்கட்ட வேண்டும்.
அதற்குக் கலாம் சொன்னதைக் கடைப்பிடிக்காமல், களத்தில் இறங்கி உழைத்தாக வேண்டும்.
0
(நன்றி: தினமலர் – 15/03/16)
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
March 11, 2016
பொன்னான வாக்கு – 06
எனக்கு காந்தியை நினைக்கும்போதெல்லாம் இயேசுவின் ஞாபகம் வருகிறது என்று யாரோ சொன்னதைச் சிறு வயதில் படித்த நினைவிருக்கிறது. அந்த யாரோ யார் என்று தலையைப் பிய்த்துக்கொண்டிருக்கிறேன், இன்னும் தோன்றியபாடில்லை. பிரபல பொன்மொழிகளை எழுதும் திரு. யாரோவாகத்தான் அவர் இருக்கவேண்டும். ஆனால் எனக்கு காந்தியை நினைத்தால் இன்னொருத்தர் ஞாபகமெல்லாம் வருவதில்லை. மு.க. ஸ்டாலினை நினைத்தால்தான் இங்கிலாந்து இளவரசர் சார்லஸின் ஞாபகம் வந்துவிடுகிறது.
சார்லஸுக்கு இன்றைக்கெல்லாம் அறுபத்தியேழு வயதாகிறது. அவர் இந்தியா சுதந்தரம் அடைந்ததற்கு அடுத்த வருஷம் பிறந்தவர். ஸ்டாலின், சார்லஸைவிட சில வருடங்கள் இளையவர். அவருக்கு அறுபத்தி மூன்று வயது ஆகிறது.
இருவருமே உள்ளூர் அரசியலில் ஊறித் திளைத்தவர்கள். சார்லஸாவது வாலிப வயதில் ஜாலியாக நிறைய சுற்றியவர். ஸ்டாலின் தமது பதினான்காவது வயதிலேயே அரசியலில் ஈடுபட ஆரம்பித்துவிட்டவர். 1967 பொதுத் தேர்தல் சமயத்திலேயே பிரசாரத்தில் இறங்கியவர். 76ல் மிசா, 82ல் இளைஞரணித் தலைமைப் பொறுப்பு, 89ல் எம்.எல்.ஏ, 96ல் மேயர். அதன்பின் நடந்ததெல்லாம் அனைவருக்கும் தெரியும்.
இன்றைக்கெல்லாம் தமிழ்நாட்டில் ஜெயலலிதா – கருணாநிதி அல்லாமல் வேறு யார் முதல்வராகலாம் என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு பெரும்பான்மையானவர்கள் கைகாட்டக்கூடிய இடத்தில் இருக்கும் தலைவர் (இளைஞர் என்று சொல்லவேண்டுமோ?) ஸ்டாலின். இதில் சந்தேகமே இல்லை. வாரிசு அரசியல் என்னும் குற்றச்சாட்டெல்லாம் என்றோ ஒரு காலத்தில் எடுபட்டிருக்கலாம். ஸ்டாலின் விஷயத்தில் இனி அதற்கெல்லாம் அர்த்தமே இல்லை. அனுபவமும் பக்குவமும் அவருக்குத் தகுதியை வழங்கியிருப்பதை யாரும் மறுக்க இயலாது.
அறுபத்தியெட்டு வயதான சார்லஸுக்கும் அனுபவம் இல்லாமலிருக்காது. பக்குவமும் இல்லாதிருக்க வாய்ப்பில்லை. அவரும் ஸ்டாலினைப் போலவே பேரன் பேத்தியெடுத்தவர்தாம். ஆனாலும் ஸ்டாலினைப் போலவே இளைஞரும்கூட. இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள இன்னொரு (கிட்டத்தட்ட) ஒற்றுமை, ஸ்டாலின் பூரம், சார்லஸ் பூரட்டாதி என்பது. இந்தப் பூரம், பூராடம், பூரட்டாதி மூன்றுமே (முப்பூரம் என்பார்கள்) ஏடாகூடமான ஜாதி. என்ன ஏடாகூடம் என்பது இங்கே வேண்டாம். நோக்கம் தடம் புரண்டுவிடும். நமக்குத் தெரியவேண்டியது, பூரம் சுக்ரன் ஆட்சி. பூரட்டாதி குரு ஆட்சி. போதும்.
குரு ஆட்சிக்காரர் என்றாலும் சார்லஸ் சிஷ்யராகத்தான் கடைசி வரை இருக்கவேண்டியிருக்கும். ஸ்டாலின் விஷயத்தில் அந்த ஒரு சிக்கல் இல்லை – ஜோதிட ரீதியாக. (இடைச்செருகலாக ஓர் அவசர பிகு: எனக்கு ஜோதிடமெல்லாம் தெரியாது. மேற்படி விவரங்களை கம்ப்யூட்டர் சயின்ஸ், எம்.பி.ஏவெல்லாம் படித்துவிட்டு ஜோசியரான நண்பர் பெருங்குளம் ராமகிருஷ்ணனிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன்.)
சார்லஸ் இங்கிலாந்தின் மன்னராவது எலிசபெத் ராணி கையில் உள்ள சங்கதி. ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராகவாவது முன்னிறுத்தவேண்டியது கலைஞர் எடுக்க வேண்டிய முடிவு. சார்லஸ் எக்கேடு கெடட்டும். நமக்கு ஸ்டாலின் தான் முக்கியம்.
சென்ற பொதுத் தேர்தல் சமயத்திலேயே கலைஞர் ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இல்லை. அதன் பிறகு ஏற்பட்ட உள்நாட்டுக் கலவரங்களின் இறுதியில் தனது இறுதித் தீர்ப்பாக மேற்படி அறிவிப்பை அவர் வெளியிடக்கூடும் என்று ஆரூடங்கள் கணிக்கப்பட்டன. ம்ஹும். இந்தத் தேர்தலே வந்துவிட்ட சூழலிலும் அதற்கான அவசியம் இல்லை என்று தி.மு.கவினர் சொல்லலாம். ஆனாலும் அடி மனத்து இச்சை என்பது உதட்டோரத் தேன்தான். பொதுவில் இல்லாவிட்டாலும் தனியே ருசிக்கச் சொல்லுகிற சங்கதி.
எனக்கென்ன தோன்றுகிறதென்றால், கலைஞர் சற்று சீரியசாகவே இதனை யோசிக்கலாம். தேமுதிகவை எப்படியாவது கூட்டணிக்குள் இழுத்துவிட வேண்டும் என்று அவரும் படாதபாடு பட்டுப் பார்த்தார். கேப்டன் மசியவில்லை. புலிக்கு வாலாக இருப்பதைவிட புல்புல்தாராவுக்கு ஃப்ரேமாக இருக்கலாம் என்பது அவரது கணக்கு. சென்ற பொதுத் தேர்தலில் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்ததை அவர் எண்ணிக்கொண்டிருக்கலாம். அது கூட்டணி கொடுத்த வரம். இப்போது ஓட்டணிகள் பிரிந்திருக்கும் சூழலில் கேப்டனின் நிஜ பலத்தை சமூகம் தரிசிக்க இத்தேர்தல் ஒரு வாய்ப்பை அளித்திருக்கிறது.
அது எப்படி ஆனாலும் ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக திமுக முன்னிறுத்தினால் திமுகவுக்கு இதுவரை ஓட்டுப் போடாத பலர் அந்தக் கட்சியின் பக்கம் திரும்ப ஒரு வாய்ப்பு இருக்கிறது. ஆக்டிவாக இருக்கிறார். நமக்கு நாமே டூரெல்லாம் போய் வந்திருக்கிறார். தேமுதிக மூலம் வரக்கூடிய ஓட்டு என்று கலைஞர் எண்ணியிருந்ததை இது கணிசமாக ஈடுகட்டக்கூடும்.
ஆனால் நடக்குமா? இந்தப் பூரம் இருக்கிறதே, பூரம்…
வேண்டாம். கட்டு கடையை.
(நன்றி: தினமலர் – 12/03/16)
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)