Pa Raghavan's Blog, page 32

September 24, 2014

பலான கதை – 3.0.1

இந்தக் கதையில் வரும் எழுத்தாளனான ராமு என்கிற சுரேஷ் இந்தக் கதையை எழுதுகிற எழுத்தாளனான ராமு என்கிற சுரேஷின் வீட்டுக் கதவைத் தட்டி, ‘உங்களிடம் ஒரு நிமிடம் பேசலாமா?’ என்று கேட்டான்.


ராமு என்கிற சுரேஷ் ரேஷன் கார்டு வைத்திருக்கும் ஒரு தமிழன் என்பதால், தமிழ் பண்பாட்டுக்கு பங்கம் நேராமல் வாசல் கதவைத் திறந்து, வரு, இரிக்யு என்று உள்ளே அழைத்து உட்கார வைத்து உபசரித்தான். (குடிக்க இன்னும் தண்ணீர் கொடுக்கவில்லை.)


ராமு என்கிற சுரேஷ் வந்ததும் வராததுமாக முகமெங்கும் கோபத்தை நிரப்பிக்கொண்டு, ‘நீங்கள் செய்வது அநியாயம். ஆரம்பித்துவிட்டு மூன்று கந்தாயத்துடன் அப்படியே நிறுத்திவிட்டீர்கள். உங்களுக்கு எப்போதும் இதே வழக்கமாகப் போய்விட்டது. இது என் வாழ்க்கைப் பிரச்னை அல்லவா? அந்தப் பரதேசி கார்சியா மார்க்குவேஸ் ஆயிரத்தித் தொள்ளாயிரத்தி எண்பத்தி இரண்டிலேயே அந்த நாசமாய்ப் போன நோபல் பரிசை வாங்கிக்கொண்டு செத்தே போய்த் தொலைந்துவிட்டான். இன்னும் போராடிக்கொண்டிருக்கும் ஒரு தமிழ் எழுத்தாளனுக்கு நீங்கள் துரோகம் செய்துவிட்டீர்கள்’ என்று பொறுமலுடன் குற்றம் சாட்டினான்.


சில வினாடிகள் அமைதியாக இருந்த இந்தக் கதாசிரியனான ராமு என்கிற சுரேஷ், ‘இது துரோகம் செய்ய நினைத்துச் செய்யப்பட்ட துரோகம் அல்ல. ஆனால் ஒரு துரோகம் நிகழ்ந்துதான் விட்டது. காரணம், வாணி ராணியில் ஒரு கல்யாண சீக்வன்ஸ் ஓடுகிறது’ என்றான்.


தூக்கி வாரிப்போட்டு எழுந்த கதையில் வரும் ராமு என்கிற சுரேஷ், ‘என்ன பேத்துகிறீர்கள்?அந்தக் கல்யாணம் நடக்கப் போவதில்லை, கதிரை அத்தனை அண்டர் எஸ்டிமேட் செய்யாதீர்கள்; அவசியம் அவன் திருமணத்தை நிறுத்திவிடுவான்’ என்று கத்தத் தொடங்கினான்.


என்ன சொல்லி அவனை சமாதானப்படுத்துவது என்று ராமு அல்லது சுரேஷுக்குப் புரியவில்லை. மீண்டும் சில வினாடிகள் யோசித்தான். ‘சரி, உங்கள் கதையை நான் மீண்டும் எழுதத் தொடங்கவேண்டுமென்றால் நீங்கள் உங்கள் பெயரை ராபர்ட் என்று மாற்றிக்கொள்ள வேண்டும்’ என்றான்.


திகைத்துப் போன ராமு அல்லது சுரேஷ், ‘என்னது ராபர்ட்டா?’ என்று மீண்டும் அதையே ஒருமுறை கேட்டான்.


மிகச் சரி. இப்படித்தான் ஒவ்வொரு வரியாக ரிப்பீட் செய்து ஃபுட்டேஜ் சேவை செய்ய வேண்டும். ராபர்ட்டாகப் பெயர் மாற நீங்கள் மிகவும் பொருத்தமானவராகிவிட்டீர்கள் என்றான் ராமு அல்லது சுரேஷ்.


இப்போது ராமு அல்லது சுரேஷ் என்கிற ராபர்ட் வாணி ராணி கல்யாண சீக்வன்ஸில் மும்முரமாகியிருக்கிறான். அது முடிந்த பிறகு கார்சியா மார்க்குவேஸை மண் கவ்வச் செய்ய ஆரம்பிப்பான்.


Copyright © 2008-2011 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 24, 2014 05:18

September 20, 2014

பலான கதை – 03

கதைத் திருட்டு அல்லது அத்தியாயம் மூன்று 


பிரபல எழுத்தாளராகப் பின்னாளில் அறியப்படவிருக்கும் ராமு அல்லது சுரேஷின் சமீபத்திய சிறுகதை (ஒருவேளை இது நாவலாக நீளக்கூடும். தலைப்பு கபீஷின் வால்.) இவ்வாறு ஆரம்பமாகிறது:


பூமி அதிர்ந்தது.


கடலில் அலைகள் மதில்கள்போல் எழுந்து, மனிதனின் ஆசைக்கோட்டை போல் இடிந்து விழுந்தன. எங்களை வாரி வாயில் போட்டுக்கொள்ள வேண்டுவது போல் துரத்திக்கொண்டு ஓடிவந்தன. ஏமாற்றமடைந்த அரக்கனின் ஆத்திரம்போல, அவைகளின் கோஷம் காதைச் செவிடு படுத்திற்று. ஒரு அலை அவளைக் கீழே தள்ளிவிட்டது. வெறிக் கொண்டவள் போல் சிரித்தாள். ஜலத்தின் சிலுசிலுப்பு சதையுள் ஏறுகையில் நெருப்பைப் போல் சுறீலெனப் பொரிந்தது. புயலில் எங்கள் அங்கங்களே பிய்ந்துவிடும் போலிருந்தன.


திடீரென்று இடியோடு இடி மோதி ஒரு மின்னல் வானத்தில் வயிற்றைக் கிழித்தது. இன்னமும் என் கண்முன் நிற்கிறது அம்மின்னல். மறைய மனமில்லாமல் தயங்கிய வெளிச்சத்தில் நான் கண்ட காட்சி! குழுமிய கருமேகங்களும், காற்றில் திரைபோல் எழும்பி, குளவியாக கொட்டும் மணலும், கோபக் கண்போல் சமுத்திரத்தின் சிவப்பும், அலைகளில் சுழிப்பும், அடிபட்ட நாய்போல் காற்றின் ஊளையும், பிணத்தண்டை பெண்கள் போல் ஆடி ஆடி அலைந்து அலைந்து மரங்கள் அழும் கோரமும்…


இத்தனைக்கும் மூலகாரணிபோல் அவள் நிமிர்ந்து நின்றாள். அவள் ஆடை உடலிலிருந்து பிய்ந்துவிடும் போல் பின்புறம் விசிறி விரிந்து, காற்றில் தோகை போல் விறைத்து நின்று படபடத்தது. பிதுங்கிய சிற்பமென அங்க அவயவங்கள் நிமிர்ந்துகொண்டு நின்றன. மின்னலின் வழி, விசும்பு நின்றழிந்த விண்ணுலகத்தவள் போலிருந்தாள். ஜலமேறி அடையாய்க் கனத்த கூந்தல், காற்றின் மிகுதியில் நக்ஷத்திர வால்போல் சீறிற்று. இவ்வியற்கையின் இயக்கத்தில் அவளும் சேர்ந்து இழைந்து புயலுடன் நின்றாள்.


ராமு அல்லது சுரேஷுக்கு மேற்படி பத்தியை எழுதி முடிக்கும்போது கைவிரல்கள் நடுங்கின. உடனே ஓடிச் சென்று ஒரு சிகரெட் பிடித்தால் நன்றாயிருக்கும் என்று தோன்றியது. ஆனால் எழுந்து ஓடினால் எழுத்துவேகம் எதிர்மறையாகிவிடும். இதற்குத்தான் எழுதும்போது அருகில் கணக்கிலடங்கா சிகரெட்டுகளையும் தீக்குச்சிகளையும் வைத்துக்கொள்ளவேண்டும் என்பது. மனத்துக்குள் உதயமாகும் உணர்வுகளையும் காட்சிகளையும் புகைபோட்டுப் பழுக்கவைத்த சொற்களாக வார்த்தெடுத்து பேப்பரில் இறக்குவது ஒரு வேள்வி. ஏனோ ராமு அல்லது சுரேஷுக்கு அது வாய்க்கவில்லை.


அவனது தொழில் வில்லனான காபிரியேல் கார்சியாவின் பெண்டாட்டியானவள் புருஷன் எழுதுவதற்காகத் தனது ரிஸ்ட் வாட்சை அடமானம் வைத்து சிகரெட் பாக்கெட்டுகளை வாங்கி வந்து அடுக்கியிருக்கிறாளாம். பரதேசி ஒரு கடிதம் முழுதும் இதனைச் சொல்லிச் சொல்லிப் புளகாங்கிதம் அடைந்திருக்கிறான். என்ன மானங்கெட்ட பிழைப்பு இது? அடியேய், அவன் கேன்சர் வந்து செத்துத் தொலைக்க வேண்டும் என்பதுதான் உன் விருப்பமா? இனிமேல் செய்யாதே. உன் புருஷன் உலக இலக்கியத்துக்கு இல்லாவிட்டாலும் உன் நெற்றிப் பொட்டுக்காவது அவசியம் தேவைப்படுவான் என்று மார்க்குவேசின் பெண்டாட்டிக்கு ஒரு ரகசியக் கடிதம் அனுப்பிவிட்டு, கதவை மூடிக்கொண்டு தனக்கு ஏன் இப்படியொரு பெண்டாட்டி வாய்க்கவில்லை என்பதை எண்ணி கேவிக் கேவி அழத் தொடங்கினான்.


ராமு அல்லது சுரேஷின் பெண்டாட்டி வேறு எப்படியாக வாய்த்தாள் என்று கேட்பீர்களானால் வாசகர்களே, அவன் இன்னும் திருமணமாகாமல்தான் இருக்கிறான் என்பதை இப்போதே தெரிவித்துவிடுகிறேன். ஓர் எழுத்தாளனாகத் தன்னைக் குறைந்தபட்சம் நான்கு தீபாவளி மலர்களில் பதிவு செய்யாமல் திருமணம் செய்துகொள்வதில்லை என்று ராமு அல்லது சுரேஷ் தீர்மானம் செய்திருந்தான். அவனது இலக்கிய முயற்சி அவன் பத்தாங்கிளாசில் கோட்டடித்ததற்கு மறுநாள் ஆரம்பித்ததை நேயர்கள் அறிவார்கள். அன்று தொடங்கி அவனும் பக்கம் பக்கமாக எழுதித் தீர்த்துக்கொண்டுதான் இருக்கிறான். எழுதியதைப் படித்துப் பார்க்கும்போதெல்லாம் காவியமாகத்தான் தெரிகிறது. என்ன காத்திரம், எத்தனை மணிநேரம் அமர்ந்து எழுதி அடக்கி வைத்த மூத்திரம், நெஞ்சகத்தில் மையம் கொண்ட நிர்மூடச் சமூக ஆத்திரம்!


தோல்வியின் சகல ருசிகளையும் அவன் கடந்த பல சில ஆண்டுகளில் ஆண்டு அனுபவித்திருந்தான். சாதனையாளர்களுக்குத் தோல்வி சகஜம்தான் என்பதை ராமு அல்லது சுரேஷ் அறியாதவனல்லன். ஆனால் ஒரு மாபெரும் வெற்றிக்குப் பிறகு இந்த சனியன்கள் வந்து தொலைத்தால்தான் என்ன?


இதனை ராமு அல்லது சுரேஷ் தனது அம்மாவிடம் சொன்னபோது, ‘முண்டம், நீ என்ன பெரிய சாதன பண்ணிக் கிழிச்சன்னு இப்படிக் கெடந்து குதிக்கற? மொதல்ல ஜட்டிய தோய்ச்சிப் போடுற வழிய பாரு. இனிமே ஒனக்கு ஜாலிம் லோஷன் வாங்கிக் கட்டுப்படியாகாது’ என்றுவிட்டாள்.


சாதனை – சிறு குறிப்பு வரைக.


உண்ணாதிருப்பது. உறங்காதிருப்பது. தலைகீழாக நடப்பது. தண்ணீரில் ஒன்றேமுக்கால் மணிநேரம் மூச்சடைத்து மூழ்கியிருப்பது. பின்னால் ஓடுவது. ஒரு மணி நேரத்தில் ஏழாயிரம் சொற்கள் டைப்படிப்பது. காலால் வரைவது. மயிரைக் கட்டி பல்லவன் பஸ்ஸை இழுப்பது. மார்பில் புல்டோசரை ஓடவிட்டு உயிரோடிருப்பது. அரிசியில் தாஜ்மகால் வரைவது. ஆயிரம் பக்க நாவல் எழுதுவது. அதை ஆறு மாதத்தில் ஆயிரம் காப்பி விற்றுக் காட்டுவது. விற்றதற்கு ராயல்டி வாங்குவது. வந்த செக் பவுன்ஸ் ஆகாதிருப்பது. காபிரியேல் கார்சியாவை நோபல் ஷார்ட் லிஸ்டில் இருந்து தூக்குவது.


வெண்ண. சொந்தமா ஒரு பேரா எழுதுடா மொதல்ல. லீலா லெண்டிங் லைப்ரரிலேருந்து நீ சுட்டுட்டு வந்த ராமாமிருதம் புஸ்தகத்துல நாலு பக்கம் கிழிஞ்சிருந்தப்பவே நெனச்சேன். அவர்தான் அந்தப் பொண்ணுக்கு மொட்டையடிச்சாருன்னா நீ அவருக்கே அடிக்கப் பாக்கறியே தரித்திரம் புடிச்சவனே. தூத்தேறி இதெல்லாம் எங்க உருப்படப் போவுது? எழுதறானாம் பெரிசா.


காபிரியேல் கார்சியாவின் மனைவி அனுப்பிய பதில் கடிதத்தில் மேற்படி வரிகளை ராமு அல்லது சுரேஷ் ஒயிட்னர் வைத்து அவசரமாக மறைத்துக்கொண்டிருந்தபோது அவனது திருத்தாயானவள் கதவோரம் நின்று ரகசியக் கண்ணீர் சிந்திக்கொண்டிருந்தாள்.


(வெற்றி. அடுத்த அத்தியாயமும் வந்துவிடும்.)


Copyright © 2008-2011 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 20, 2014 05:29

September 18, 2014

பலான கதை – 02

கெமிங்வே கையசைத்த செம ஃபிகர் அல்லது அத்தியாயம் இரண்டு


ஆங்கிலம் மட்டும் தெரிந்த எர்னஸ்ட் ஹெமிங்வே, ஆங்கிலேயர்கள் அதிகமில்லாத பிரான்சு தேசத்தின் தலைநகரான பாரிஸில் நடந்துகொண்டிருந்தபோது யாரோ மொட்டை மாடியில் இருந்து உப்பு மூட்டையை அவிழ்த்துக் கொட்டினாற்போல பனி பெய்துகொண்டிருந்ததை ரசிகக் கண்மணியொருவர் புகைப்படமெடுத்துப் போட்டார். புகைப்படமானது பல்வேறு பிரபவ, விபவ வருடங்களுக்குப் பிறகு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுப் பிரசுரமானபோது ராமு அல்லது சுரேஷ் உள்ளிட்ட தமிழ்ச் சமூகமானது புளகாங்கிதமடைந்து அதைப் பலமணி நேரம் பார்த்துக்கொண்டே இருந்தது.


ஆ! எர்னஸ்ட் கெமிங்வே! எப்பேர்ப்பட்ட எழுத்தாளர். படித்த பிறகு நிச்சயமாக அப்படித்தான் தோன்றும். ஆனால் ஓர் எழுத்தாளனைப் படிப்பதற்கு அவன் எழுதியதைப் படிக்கவேண்டுமென்பதே இல்லை. ஒரு புகைப்படம் போதாதா? அதுவும் பிரான்சு நகர வீதியொன்றில் பனி மழையைப் பொருட்படுத்தாது நடந்து செல்லும் எழுத்தாளன். என்னவொரு கம்பீரம். எப்பேர்ப்பட்ட ஆளுமை. உதட்டில் ஒரு சிகரெட்டும் தொங்கிவிட்டால் தீர்ந்தது கதை.


பின்னொரு நாளில் அதே புகைப்படப் படைப்பை வேறொரு பெரிய சைஸ் சிறு பத்திரிகையானது மிம்மீள் பிரசுரம் செய்து ஹெமிங்வேயை காபிரியேல் கார்சியா மார்க்குவேஸ் எவ்வாறு சந்தித்தார் என்றொரு கட்டுரை வெளியிட்டிருந்ததை ராமு அல்லது சுரேஷின் அப்பா புரட்டிப் பார்த்துக்கொண்டிருந்தபோது ராமு அல்லது சுரேஷ் அங்கு இல்லை.


அங்கே இல்லாமல் அவன் எங்கே போனான் என்றுதானே அறிய விரும்புகிறீர்கள்? அதில்தான் இருக்கிறது சஸ்பென்ஸ். (ராமு அல்லது சுரேஷின் அப்பா சிறு பத்திரிகை வாசகரா என்று துணைக்கேள்வி எழுப்பினால் இந்தக் கதைக்கு ஒரு பைபாஸ் சாலை போடவேண்டி வரும். அது வாசிப்பு வேகத்தை மட்டுப்படுத்தும். எனவே அவர் சிறு பத்திரிகை வாசகர் இல்லை என்பதை மட்டும் சொல்லிவிட்டு நாம் ராமு அல்லது சுரேஷைத் தொடர்வதே நல்லது.)


எங்கு விட்டோம்? ஆ. பனிமழை. எர்னஸ்ட் கெமிங்வே பனிமழையில் நனைந்தபடி சாலையில் நடந்துகொண்டிருந்தார். அப்போது அந்தப் பாரிசு நகர வீதியில் அவரைப் போலவே நடந்து போய்க்கொண்டிருந்த மக்கள் கூட்டமானது ‘மேஸ்ட்ரோ.. மேஸ்ட்ரோ..’ என்று கத்திக் கூப்பாடு போடத் தொடங்கியது. ஒரு மாபெரும் மக்கள் கூட்டமே ஒரு எழுத்தாளனை அடையாளம் கண்டு ஆர்ப்பரிக்கவல்லதாயிருந்தது பிரான்சு செய்த புண்ணியம். இதுவே நம்மூர் என்றால் எழுத்தாளனை எவன் மதிப்பான்? பரதேசி. பிச்சக்காரப் பய. பேமானி. சோமாறி. இதெல்லாம் எங்க உருப்படப் போவுது? தரித்திரம் புடிச்ச மூதேவி.


கெமிங்வே தனது முந்தைய ஜென்மத்தில் செய்த புண்ணியத்தின் பலனாகத்தான் பாரிசு நகருக்குச் சென்றிருந்தார். மேற்படி அற்புத சுகமளிக்கும் ரசிகக் கூட்டத்தையும் அதனாலேயே அவர் காண நேரிட்டது. அனைவருக்குமாக அவர் தனது மெல்லிய உதடுகளுக்குள் இருந்து ஒரு புன்னகையை எடுத்து வெளியில் பறக்கவிட்டார். பனித்துளிகள் அதனைச் சுமந்து சென்று சம பங்கு பிரித்து அனைத்து மக்களுக்கும் வினியோகம் செய்தபோது இந்தக் கதையின் கதாநாயகனான ராமு அல்லது சுரேஷின் பிரதம வில்லனான காபிரியேல் கார்சியா மார்க்குவேசுக்கும் அந்தப் பிரசாதம் கிடைத்தது.


காபிரியேல் கார்சியா மார்க்குவேஸ் என்பவன் கொலம்பியா நாட்டைச் சேர்ந்தவனாவான். ஒரு பத்திரிகையாளனாக அங்கே குப்பை கொட்டியது பத்தாமல் பிரான்சுக்கும் வந்து கொட்ட நினைத்திருந்தான். குப்பை கொட்ட வேண்டுமானால் குப்பை சேரவேண்டுமல்லவா? துரதிருஷ்டம் பிடித்த அந்தக் கொலம்பியனிடம் அப்போது அத்தனை குப்பை சேர்ந்திருக்கவில்லை. ஏன், குப்பை சேர்க்க அவனுக்கு அங்கே சொந்தமாகவோ வாடகைக்கோ ஓர் இருப்பிடம் கூட இருக்கவில்லை. எனவே அவன் ஒரு சாலையோர பெஞ்சியில் (பெஞ்சியின் பின்புறம் ஒரு டுலிப் மரம் இருந்திருக்கக்கூடும். அதில் இருந்து பிங்க் நிறத்தில் அழகழகான பூக்கள் கொத்துக் கொத்தாக சாலையெங்கும் அவசியம் உதிர்ந்திருக்கும். அவற்றில் ஒன்றிரண்டு அந்தக் கொலம்பியன் மீதும் விழுந்திருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.) படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தான்.


அடேய் பரதேசி! மாபெரும் படைப்பு வித்தகரான கெமிங்வேவே நடந்து போய்க்கொண்டிருக்கிறார்! உனக்கென்னடா தூக்கம்? எந்திரிடா பேமானி! என்றொரு அமானுஷ்யக் குரல் அவன் செவியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த வினாடி அவன் திடுக்கிட்டுத் துள்ளி எழுந்தான். அந்த இடத்தின் பேரலல் கட்டாகத்தான் “மேஸ்டிரோ.. மேஸ்டிரோ..” என்று பாரிசு நகர ரசிக மக்கள் உரத்த குரல் எழுப்பிக்கொண்டிருந்தார்கள்.


காபிரியேல் கார்சியாவுக்கு உடனே உடலெங்கும் (இந்த இடத்தில் ‘ஒருவித’ என்னும் சொல் அவசியம் என்று உங்களுக்குத் தோன்றினால் அதற்கு காபிரியேலோ அவன் எழக் காரணமாயிருந்த கெமிங்வேவோ பொறுப்பாகமாட்டார்கள்.) மின்சாரம் பாய்ந்த உணர்வு ஏற்பட்டது. பரவச மேலீட்டில் அவனும் “மேஸ்ட்ரோ…” என்று குரலுயர்த்திக் கத்திய கணம் அந்த எதிர்பாராத சம்பவம் நிகழ்ந்தது.


பல்லாயிரம் குரல்களில் தனித்துக் கேட்கும் இந்தக் குரல் யாருடையது? குரலிலேயே ஒரு எதிர்கால எழுத்து மேதை தெரிகிறானே என்று வியந்து போன எர்னஸ்ட் கெமிங்வே, தனது நடைவேகத்தை மட்டுப்படுத்தி திரும்பிப் பார்த்தார். அதே வினாடி காபிரியேல் கார்சியாவை முந்திக்கொண்டு முன்னால் பாய்ந்த ராமு என்கிற சுரேஷ், ‘கிழக்கில் உங்கள் கிளை திறக்கப் பிறந்தவன் நான். என்னை வாழ்த்துங்கள்!’ என்று முகலாய பாணியில் சலாமிட்டு நின்றான்.


கெமிங்வேவுக்கு மிகுந்த சந்தோஷமாகிவிட்டது. தனது இடது கையை உயர்த்தினார். ராமு என்கிற சுரேஷுக்கு அவர் சங்கராசாரியாரைப் போல் ஆசி வழங்கவிருப்பதாகத் தோன்றியது. ஆனால் இல்லை. கெமிங்வே உயர்த்திய இடது கையை மர்லின் மன்றோவைப் போல் இரு அசைப்பு அசைத்தார். போயே விட்டார்.


ராமு என்கிற சுரேஷுக்கு நடந்ததை நம்பவே முடியவில்லை. வெகு நேரம் திகைப்பில் அப்படியே ஆணியடித்தாற்போல் நின்றுவிட்டான். எத்தனை நேரம் நின்றான் என்றால், பனி மழை நின்று வெயிலடிக்கத் தொடங்கும்வரை நின்றான். அவன் சுய உணர்வுக்கு வரவிருந்த சமயத்தில் யாரோ ஒரு மனிதன் அவன் தோளில் கைவைத்தான். ராமு என்கிற சுரேஷ் திரும்பிப் பார்த்தபோது அங்கே அவனது எதிர்கால வில்லனான காபிரியேல் கார்சியா மார்க்குவேஸ் நின்றுகொண்டிருந்தான். அந்தோ, அவனும் ராமு என்கிற சுரேஷுக்காக அத்தனை நேரம் அங்கேயே நின்றிருக்கிறான்! சரி, வில்லன் என்றால் காத்திருக்கும் கொக்காகத்தான் இருந்தாக வேண்டும். வேறு வழியில்லை.


“என்ன வேண்டும்?” என்று ராமு என்கிற சுரேஷ் கேட்டான்.


“நீ எனக்கான ஆசியைப் பறித்தவன். நீ என் எதிரி!” என்று காபிரியேல் கார்சியா குற்றம் சாட்டினான்.


ராமு என்கிற சுரேஷ் அவசரமாக ஒரு கணம் யோசித்தான். (ஒரு கணம் என்பதே குறுகிய நேரம். அதிலும் அவசரமாக யோசிப்பது எப்படி என்று ஒரு கணம் யோசிக்கவேண்டியது வாசகர்களாகிய உங்கள் கடமை.) “போடா முட்டாள். மேஸ்டிரோ கையாட்டியது எனக்குமல்ல உனக்குமல்ல.. நம்மிருவருக்கும் பின்னால் ஒரு செம ஃபிகர் நடந்து போனதை நீ பார்க்கவில்லையா? நான் பார்த்தேன்” என்று சொல்லிவிட்டு ஓடியேவிட்டான்.


காபிரியேல் கார்சியா மார்க்குவேஸுக்குக் கடுங்கோபம் உண்டாகிப் போனது. “மவன டேய்.. செத்தடா.. செத்தடா நீ. ஒன்ன தோக்கடிக்கலன்னா நான் ஒரு அப்பனுக்குப் பொறக்கலடா!” என்று தொண்டை கிழியக் கத்தினான்.


கெமிங்வே நடந்து சென்ற சுவடோ, பனி மழை பொழிந்த சுவடோ அப்போது அங்கே அறவே இல்லை. காபிரியேல் கார்சியாவும் அவன் படுத்திருந்த பெஞ்சும் மட்டும்தான். உதிர்ந்திருந்த டுலிப் பூக்களும் வாடத் தொடங்கியிருந்தன.


(அநேகமாக மூன்றாவது அத்தியாயமும் வரும்)


Copyright © 2008-2011 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 18, 2014 23:53

பலான கதை – 01

முன்குறிப்பு :- இது ஒரு போஸ்ட் மார்டனிச, போஸ்ட் கலோனியலிச, (செமி) மேஜிக்கல் ரியலிச, கமர்ஷியல் கலைப்படைப்பு.


பாயிரம் அல்லது அத்தியாயம் ஒன்று


இந்தக் கதையின் நாயகனுக்கு முதலில் ஒரு பெயர் வைக்க வேண்டும். ராமு அல்லது சுரேஷ் என்று வைப்போமா?


சரி. ராமு அல்லது சுரேஷ்.


ராமு அல்லது சுரேஷ் தனது பதினைந்தாவது வயதில் முதல் முதலாக ஒரு சிகரெட் பிடித்துப் பார்த்தாலென்ன என்று எண்ணினான். அதற்கு அவனுக்கு இரண்டு காரணங்கள் இருந்தன. தன்னைப் பெரியவனாக உணரச் செய்ய சிகரெட் உதவும் என்பது அவனது நம்பிக்கை. இரண்டாவது காரணம்தான் மிகவும் கவித்துவமானது.


ராமு அல்லது சுரேஷின் வகுப்பில் அப்போது நிரஞ்சனா என்று ஒரு பெண்ணும் படித்துக்கொண்டிருந்தாள். நிரஞ்சனா ஓர் அழகி ஆவாள். பள்ளிக் கூடத்திலேயே அவள்தான் பெரிய அழகி என்று ராமு அல்லது சுரேஷ் நினைத்தான். இல்லை இல்லை, ஊரிலேயே நிரஞ்சனாதான் பேரழகி என்று அவனது சக வகுப்பர்களில் சிலர் சொல்லப் போக, ராமு அல்லது சுரேஷுக்கு பயம் பிடித்துக்கொண்டது. தனக்கு முன்னால் வேறு யாராவது நிரஞ்சனாவிடம் “ஐ லவ் யூ நிரஞ்சனா” என்று சொல்லிவிடுவார்களோ என்ற பயம்.


ஆ! நான் நிரஞ்சனாவைக் காதலிக்கிறேனா என்ன? – இப்படியும் ராமு அல்லது சுரேஷுக்கு அவ்வப்போது தோன்றும். ஏனென்றால் அவன் தன்னை ஒரு நல்ல பிள்ளையாக வீட்டாரிடம் பதினைந்து வருடங்களாக அறிமுகம் செய்து வந்திருக்கிறான். நல்ல பிள்ளைகள் பொதுவில் காதல் வயப்பட மாட்டார்கள்.


ராமு அல்லது சுரேஷுக்கு என்றைக்கு இரட்டை மனம் உண்டானதோ, அன்று முதல் அவனது நிம்மதி பறிபோனது. நான் உன்னைக் காதலிக்கவில்லை என்று திரும்பத் திரும்ப மனத்துக்குள் சொல்லிக்கொண்டே எப்போதும் நிரஞ்சனாவை நினைத்துக்கொள்ள ஆரம்பித்தான். குறிப்பாகக் குளிக்கப் போகிறபோது அவளைக் குறித்த ஞாபகங்கள் அதிகரித்துவிடும். சோப்பைத் தேய்த்துக்கொண்டிருக்கும்போது சடாரென ஒரு கணத்தில் தேய்ப்பதை நிறுத்திவிட்டு நிரஞ்சனாவைக் குறித்து யோசிக்க ஆரம்பித்துவிடுவான்.


நினைப்பது என்றால் நினைப்பதுதான். கண், மூக்கு, உதடுகள், கன்னம், தலைமுடி, பின்னல், ஜிமிக்கி, யூனிஃபார்ம் உள்ளிட்ட உறுப்புகளை மனத்துக்குள் ஒருங்கிணைத்துப் பார்த்துக்கொண்டே இருப்பதன் பெயர் தான் நினைப்பது. அது ராமு அல்லது சுரேஷுக்கு மிகவும் பிடித்தது. எத்தனை நேரம் அப்படியே நினைத்துக்கொண்டிருப்பானோ சொல்ல முடியாது. “ஏண்டா சனியனே.. உள்ள போய் எவ்ளோ நேரமாகுது? வெளிய வர்ற எண்ணமே இல்லியா? இன்னிக்கு பள்ளிக்கூடத்துக்குப் போகலியா?” என்று பெற்றவள் குரல் கொடுக்கும்வரை நினைத்துக்கொண்டே இருப்பான். அதற்குள் உடலமெங்கும் தடவிய சோப்பு காய்ந்து போய் வறவறவென்றாகியிருக்கும். தலையெழுத்தா இது? கட்டை விரலால் சுரண்டிச் சுரண்டித் தண்ணீர் ஊற்றிக் குளித்து முடித்து வெளியே வருவான்.


“தரித்திரம் புடிச்ச மூதேவி! என்னிக்காவது இவ்ளோ நேரம் பொறுமையா உக்காந்து படிச்சிருக்கியா நீ? ஜலக்ரீடை நடத்துறான் பேமானி” என்று தந்தையானவர் ஒரு வரி சொல்லிவிட்டு நகர்ந்து செல்வார்.


ராமு அல்லது சுரேஷின் தலையாய பிரச்னையே இதுதான். அவனது எந்தையும் தாயும் என்றைக்குமே அவனது படிப்பைக் குறித்துப் பேசாதிருந்ததில்லை. இந்தக் குளியல் விவகாரம்தான் என்றில்லை. பிடித்த சினிமா பாடல் வரி எதையாவது எப்போதாவது அவன் முணுமுணுத்தால்கூட அவர்களுக்குப் பொறுக்காது. “புத்தி எங்க போவுது பாரு.. பாட்டெல்லாம் மனப்பாடம் ஆகுது.. பாடத்துல ஒண்ணும் காணம்” என்றுவிடுவார்கள்.


பாடமெல்லாம் பாடல் போல் அத்தனை எளிதாகவா இருக்கிறது? இது “அந்தக்காலத்து பிஏ” படித்த அப்பாவுக்கும் புரிவதில்லை; எந்தக் காலத்திலும் எதுவும் படித்திராத அம்மாவுக்கும் புரிவதில்லை.


ஆகவே ராமு என்கிற சுரேஷின் இருப்பியல் பிரச்னை என்பதாகப்பட்டது அவனது பெற்றோரின் மனோலயத்தில் உதயமாகிறது.


தனது வீட்டார் குறித்த எரிச்சல் கலந்த நினைவின்மூலம் நிரஞ்சனா குறித்த இனிமை கலந்த நினைவைச் சற்றே மறந்து அவன் ஒரு நாள் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தபோதுதான் அந்தக் காட்சியைக் காண நேரிட்டது. ஒரு சாலையோர சினிமா போஸ்டரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்டைலாக சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தார். முந்தைய கணமே உதட்டை விட்டு விழுந்திருக்க வேண்டுமே? இது எப்படி இன்னும் அங்கே தொற்றி நிற்கிறது? என்று எண்ணச் செய்யும் விதத்தில் இருந்தது அந்த ஸ்டைல்.


ராமு அல்லது சுரேஷுக்கு அந்த சூப்பர் ஸ்டார் ரஜினி போஸ்டர் ஒரு பொருட்டல்ல. (அவன் காதல் இளவரசன் கமலகாசன் ரசிகன். காசன்தான். ஹாசன் அல்ல.) ஆனால் அவனது பெரும்பாலான நேரத்தைக் களவாடிக்கொண்டிருந்த கன்னிகையான நிரஞ்சனா, தோளில் சுமந்த புத்தகப் பையின் கனம் மறந்து அந்த போஸ்டரை நின்று ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.


ராமு அல்லது சுரேஷுக்கு இக்காட்சி பெரும் கிளர்ச்சியை உண்டாக்கிவிட்டது. உடனே அவன் நிரஞ்சனாவை நோக்கி “பின்னங்கால் பிடறியில் பட” ஓடினான். மூச்சிறைக்க நின்று, “நிரஞ்சனா.. நீ ரஜினி ரசிகையா?” என்று கேட்டான்.


“இல்லியே, ஏன் கேக்கற?” என்று அவள் கேட்ட தோரணையே ரஜினி கேட்பது போலத்தான் இருந்தது.


“இல்ல.. இவ்ளோ நேரமா இங்கயே நின்னு பாத்துட்டிருக்கியேன்னு கேட்டேன்.”


“ப்ச். நான் ரஜினிய பாக்கல. அந்த சிகரெட்ட பாத்துட்டிருந்தேன்” என்று சொல்லிவிட்டு நிரஞ்சனா பள்ளிக்கூட மணியடித்துவிடும் என்று ஓடியே போய்விட்டாள்.


ஆக, நிரஞ்சனாவுக்கு சிகரெட் பிடித்தால் பிடிக்கும் என்று ராமு அல்லது சுரேஷ் முடிவுக்கு வந்தான் என்று சொல்ல வேண்டாம் அல்லவா?


“உன் எதிர்காலத்த நெனச்சா ரொம்ப கவலையா இருக்குடா” என்று தந்தையானவர் அவ்வப்போது சொன்னதை ராமு அல்லது சுரேஷ் நினைத்துப் பார்த்தான். அவனுக்குமே கொஞ்சம் போல் அப்படித்தான் இருந்தது அப்போது. சரி மற்றக் கவலைகளுடன் இதையும் சேர்த்துக்கொண்டால் தப்பில்லை என்று ஏதோ ஒரு கணத்தில் தோன்றிவிட்டது.


உடனே பள்ளிக்கூடத்தின் பின்புறம் இருந்த நாடார் கடைக்குச் சென்று முகத்தை அறுபத்தியேழு டிகிரி கோணலாகத் திருப்பி வைத்துக்கொண்டு “நாடார்.. சார்மினாராம் ஒண்ணு குடுங்க” என்று கேட்டான். அதாவது யாருக்காகவோ வாங்கிச் செல்வது போன்ற ஒரு பாவனை. (இதே நாடார் கடையில்தான் ராமு அல்லது சுரேஷின் அப்பா அவ்வப்போது வெற்றிலை பாக்கு வாங்குவார். இது கதையின் முக்கியத் திருப்பமாகப் பின்னால் ஒருவேளை வரலாம்.)


நாடார் என்னவாவது சொல்லிவிடுவாரோ, கேட்டுவிடுவாரோ என்று ஒரு உதைப்பு இருந்தது அவனுக்கு. ஆனால் அப்படியேதும் அசம்பாவிதம் நிகழவில்லை. “அறுவது காசு சில்றையா குடு” என்று சொல்லி பணத்தை வாங்கிப் போட்டுக்கொண்டு நாடார் சார்மினாரைக் கொடுத்தே விட்டார்.


அதுவரை பெரிய பதற்றமேதும் இல்லாதிருந்த ராமு அல்லது சுரேஷுக்கு அந்த சார்மினாரை வாங்கி பாக்கெட்டில் வைத்ததும் உடல் நடுங்கத் தொடங்கிவிட்டது. சட்டென்று தொண்டை வறண்டுவிட்டது போன்றதொரு உணர்வு. காக்க காக்க கனகவேல் காக்க நோக்க நோக்க நொடியில் நோக்க என்று சொல்லிக்கொண்டே (அடுத்த வரி தெரியாது) மூச்சையடக்கி ஓடத் தொடங்கினான். வகுப்பு வந்து சேரும் வரை அவன் நிற்கவில்லை.


நல்லவேளை அவன் போவதற்குள் முதல் பீரியட் சார் வந்திருக்கவில்லை. அவர் வரும்போது அவர் என்ன சப்ஜெக்ட் சார் என்று சொல்லிக்கொள்ளலாம். ராமு அல்லது சுரேஷ் தன் இடத்தில் அமர்ந்து பரபரப்பாக புத்தகங்களை எடுத்து வெளியே வைத்தான். ஒரு வாய் தண்ணீர் குடித்தால் நல்லது என்று தோன்றியது. உடனே ஒரு யோசனையும் உண்டானது.


“நிரஞ்சனா கொஞ்சம் தண்ணி குடேன்” என்று பக்கத்து, பெண்கள் வரிசையில் இருந்தவளிடம் உரிமையுடன் கேட்டான்.


“எதுக்கு? பாய்ஸுக்கெல்லாம் தரமுடியாது” என்றுவிட்டாள்.


அந்தக் கணத்தில் ராமு அல்லது சுரேஷுக்கு சுறுசுறுவென்று கோபமும் ஆண்மையும் வீரமும் மேலோங்க, தடாலென்று எழுந்து நின்றான். பாக்கெட்டில் இருந்து சார்மினாரை எடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினியைப் போலவே உதட்டில் தொங்கவிட்டபடி, “பாய்ஸுக்கு அப்ப வேற என்ன தருவ?” என்று கேட்டான்.


இவ்வாறாக ராமு அல்லது சுரேஷின் பள்ளிப் படிப்பு ஒரு முடிவுக்கு வந்தது.


(அநேகமாகத் தொடரலாம்.)


Copyright © 2008-2011 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 18, 2014 11:51

September 16, 2014

பதிவுத் தபாலுக்குப் பத்து நிமிஷம்

வர்த்தமானன் பதிப்பகத்தில் இருந்து (மகாத்மா காந்தி நூல் தொகுப்புக்காக) பணம் கட்டச் சொல்லி கடிதம் வந்துவிட்டது. ரூ. பத்தாயிரம் மதிப்புள்ள இருபது தொகுதிகளை சலுகை விலையாக ரூ.6000க்கு அளிக்கும் புண்ணியாத்மாக்கள்.


காசோலையைப் பதிவுத் தபாலில் அனுப்பச் சொல்லியிருந்தார்கள். எனவே குரோம்பேட்டை தபால் நிலையத்துக்குப் போயிருந்தேன். மருந்துக்கும் அங்கே கஸ்டமர்கள் யாரும் இல்லை. ஊழியர்கள் மட்டும் ஆளுக்கொரு பக்கம் ஆனந்த விகடன், குமுதம் படித்துக்கொண்டிருந்தார்கள். (நேரம் பிற்பகல் 12.35)


எனக்கு இந்தப் பதிவுத் தபால், வேகத்தபால் விவகாரங்கள் எல்லாம் அவ்வளவாகத் தெரியாது. முதல் கவுண்ட்டரில் இருந்த பெண்ணிடம் இதற்கு எத்தனை ஸ்டாம்ப் ஒட்டவேண்டும் என்று கேட்டேன்.


ஸ்டாம்ப்பெல்லாம் இல்லை; அவரிடம் கொடுங்கள், பதிவுத் தபால் தொகையைச் சொல்லி கவரை வாங்கிக்கொள்வார் என்றார். முத்திரையிட்டு அனுப்பிவிடுவார் என்றார்.


அவர் சுட்டிக்காட்டியது, அவருக்குப் பக்கத்து இருக்கைப் பெண்மணி. அன்னார், கம்ப்யூட்டரில் எதையோ தடவிக்கொண்டிருந்தார். (வேலை செய்வதற்கும் தடவுவதற்குமான வித்தியாசத்தைப் பின்புறம் பார்த்தே சொல்லிவிட முடியும் அல்லவா.) அவரிடம் கவரை நீட்டி, பதிவுத் தபால் அனுப்பவேண்டும் என்று சொன்னேன்.


கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார் என்றார். கொஞ்சமென்றால் எவ்வளவு நேரம் எடுக்கும்?


ஒரு பத்து நிமிஷம் ஆகும். இல்லன்னா பதினஞ்சு நிமிஷம் என்றார்.


பதிவுத் தபால் அத்தனை சிரமமான வேலையா? ஒருவேளை ஃபாரம் கொடுத்து ஃபில்லப் செய்யச் சொல்லிவிடுவாரோ என்று கலவராமனேன். இல்லையாம். அவர் டெஸ்பாச் அனுப்பவேண்டுமாம். அதை முடித்துவிட்டு உள்ளே போய்விட்டு வந்து அதன்பிறகு என் கவரை வாங்கிக் கொள்வேன் என்று சொன்னார். கவனிக்கவும். அத்தனை பெரிய தபால் நிலையத்தில் என் ஒருவனைத் தவிர வேறு யாருமே இல்லை. குறிப்பாகப் பதிவுத் தபால் அனுப்ப அந்த அம்மணியைத் தொந்தரவு செய்ய ஒருத்தருமில்லை.


அம்மணி, பதிவுத் தபால் அனுப்ப எத்தனை நேரமாகும் என்று கேட்டேன். அதெல்லாம் உடனே ஆகிவிடும் என்பது அப்போது தெரிந்தது.


இருப்பினும் யாருமற்ற டீக்கடையில் அவர் யார் கொடுத்த எதனை பதினைந்து நிமிடமெடுத்து டெஸ்பாச் செய்யப் போகிறார்?


கடுப்புடன் கூரியரில் போட்டுவிடலாம் என்று கிளம்பிவிட்டேன்.


வேலை செய்தாலும் செய்யாவிட்டாலும் அரசு கொடுக்கும் மாதச் சம்பளம் என்னும் திமிரைத் தவிர இந்த அலட்சியத்துக்கு வேறு காரணமில்லை. இதனாலேயே அரசு ஊழியர்கள் அதுவும் மக்கள் பணியில் இருப்போர் என்றால் ஒரு வெறுப்பு வந்துவிடுகிறது.


ஒரு கவரை வாங்கிப் போட்டுக்கொண்டு தன் வேலையை (அப்படி ஒன்று இருக்குமானால்) தொடர என்ன தடை? அல்லது, வேறு பணிகள் இருக்கும் ஒருவரை கஸ்டமர் கவுண்ட்டரில் எதற்கு அமர வைக்கவேண்டும்?


தந்தி ஒழிந்தது போல் தபாலும் ஒருநாள் ஒழியும். ஆனால் அன்றும் இந்தப் பெண்மணிக்கு பென்ஷன் வரும்.


இது அந்தத் திமிர்.


Copyright © 2008-2011 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 16, 2014 05:44

August 25, 2014

நான் கேசரி சாப்பிட்ட கதை

சிக்கல். பெரும் சிக்கல்.


ஒரு புருஷனாகப்பட்டவன் சமைக்கத் தெரிந்தவனாயிருக்க வேண்டுமென்று விரும்புவது ஒரு பெண்ணாதிக்க மனோபாவம் என்பது பெரும்பான்மை மற்றும் மிச்சமிருக்கும் சிறுபான்மைப் பெண்களுக்குத் தெரிவதேயில்லை. இந்த அறியாமைக்கு உரம் போட்டு வளர்ப்பதில் சில பெண்ணியச் சார்பு ஆண்கள் அதிதீவிர ஆர்வம் காட்டுவது இந்த நூற்றாண்டின் ஆகப்பெரிய அவலம்.


நான் வசிக்கும் அடுக்குமாடி அப்பார்ட்மெண்ட்டின் கீழ்தளக்காரரின் மனைவிக்கு நேற்று பிறந்த நாள். மனிதர் மனைவிக்கு வாழ்த்துச் சொல்லிவிட்டு, நல்லதாக ஒரு பட்டுப் புடைவை எடுத்துக் கொடுத்துவிட்டுப் போகவேண்டியதுதானே? ஒரு சினிமா அல்லது பீச் அல்லது வேறெங்காவது அழைத்துச் சென்றாலும் தப்பில்லை.


அதையெல்லாம் விட்டுவிட்டு அந்த உத்தமோத்தமர் ஒரு காரியம் செய்தார். அதிகாலை அவரது மனைவி எழுமுன்னர் அவர் எழுந்து பரபரவென்று குளித்து முழுகி, அடுப்பை மூட்டி சமைக்கத் தொடங்கியிருக்கிறார்.


முன்பசிக்கு இட்லி, சட்னி, முழுப் பசிக்கு சாதம், பூசனிக்காய் சாம்பார், ரசம், கத்திரிக்காய் ரசவாங்கி, பத்தாத குறைக்கு மனைவி பிறந்த நாள் மிக ஸ்பெஷலாக ஒரு கேசரி.


விஷயம் கேள்விப்பட்டு மிரண்டு போய்விட்டேன். எனக்குத் தெரிந்து இந்த சாம்பார், ரசம், ரசவாங்கி, கேசரி வகையறாக்கள் எல்லாம் சாப்பிடும் ஐட்டங்கள் மட்டுமே. அவற்றை சமைக்கும் ஐட்டங்களாக அவர் எனக்கு மறு அறிமுகம் செய்யப் பார்த்ததில் சற்றே கலவரமாகிவிட்டேன்.


இது ஏதடா வம்பாப் போச்சே என்று நகரப் பார்த்தால் விதி யாரை விட்டது? கீழ்தளக்காரர் ஒரு கம்யூனிஸ்ட் என்றாலும் மிகவும் நல்லவர். எனக்கு நெருங்கிய நண்பராகவும் ஆகிவிட்டவர். எனக்கு கேசரி பிடிக்கும் என்பதை எப்படியோ தெரிந்துகொண்டு ஒரு கப்பில் என் மனைவியிடம் கொடுத்தனுப்பியிருந்தார்.


சிக்கலே அப்போது ஆரம்பித்ததுதான். நான் அதைச் சாப்பிட்டு முடிக்கும்வரை அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்த எனது அதர்ம பத்தினியானவர், ‘இது அவரே பண்ணின கேசரி.’ என்றார்.


ஒன்றுமே தெரியாதவன் போல, ‘ஓ, அப்படியா? பரவாயில்லை. நன்றாகத்தான் செய்திருக்கிறார்’ என்றேன். ‘ஒய்ஃப் பர்த்டேன்னா எப்படியெல்லாம் செலிபரேட் பண்றாங்க பாரு’ என்று அடுத்த கல் ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு வந்து விழுந்தது.


இதை இப்படியே விட்டால் ஐ.எஸ்.ஐ.எஸ் தாக்குதலாக உருமாற்றம் கண்டுவிடும் அபாயம் உள்ளதைத் தெரிந்துகொண்டேன். எனவே திடீர் சத்தியாவேசம் கொண்டு, ‘என்றாவது ஒரு நாள் நானும் சமைக்கக் கற்றுக்கொண்டு உனக்கு ரசவாங்கி சமைத்துத் தருகிறேன்’ என்று சொல்லிப் பார்த்தேன்.


‘கிழிச்ச. முதல்ல ரசம் வெக்கக் கத்துக்கறியா பாரு. அப்பறம் ரசவாங்கிய பத்தி யோசிக்கலாம்’ என்றுவிட்டாள்.


அதுவரை ஐந்தரை அடி உயரமாயிருந்தவன் அவமானத்தில் இரண்டடியாகச் சுருங்கி அமர்ந்துவிட்டேன்.


எனக்கும் கொஞ்சம் சமைக்கத் தெரியும். வென்னீர் வைப்பேன். ஒரு ஆழாக்கு அரிசிக்கு மூணு தம்ளர் தண்ணீர் சேர்த்து சாதம் வைப்பேன். சுமாராகக் காப்பி போடுவேன். இந்த சாம்பார், ரசம், பொறியல் வகையறாக்கள்தான் பேஜார். பாதகமில்லை. காலக்கிரமத்தில் நானும் கீழ்தளக்கார கம்யூனிஸ்டு நண்பரைப் போல் கத்திரிக்காய் ரசவாங்கி மற்றும் கேசரி அளவில் மேற்படிப்பு படித்தால் போயிற்று. இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா.


ஆனாலும் அந்த கேசரி என்னை என்னவோ செய்தது. மனைவி எதிரிலாவது சாப்பிடாமல் இருந்திருக்கலாம் என்று சாப்பிட்ட பிறகு தோன்றியது. கடும் கோபம் ஏற்பட்டது.

விறுவிறுவென்று கீழே போனேன்.


கீழ்தளக்கார கம்யூனிஸ்டு நண்பர் வாசலிலேயே ரெடியாக நின்றிருந்தார். அநேகமாக எங்களுக்கிடையே நிகழ்ந்த அன்புச் சொல் பரிமாற்றங்கள் அவர் காதில் விழுந்திருக்க வேண்டும். ஒரு கேசரியில் என்னை காலி பண்ணிவிட்ட உத்தமோத்தமர். நல்லது.


‘நல்லா இருந்ததா சார்?’ என்று அன்புடன் கேட்டார்.


‘ஓ, சூப்பர் சார். நீங்கள் ஒரு கம்யூனிஸ்டாக இருந்தாலு காவி கலரில் இனிப்பு செய்துதான் உங்கள் மனைவியின் பிறந்தநாளைக் கொண்டாடவேண்டியிருக்கிறது பாருங்கள்!’ என்று சொல்லிவிட்டு ஓடியே போய்விட்டேன்.


பாவப்பட்ட பாரா இப்படியாகப் பழிதீர்த்துக்கொண்டான்.


Copyright © 2008-2011 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 25, 2014 22:03

August 15, 2014

அஞ்சலி: பால கைலாசம்

பால கைலாசம் மறைந்துவிட்டார் என்ற செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது. அவரது ஆன்மா சாந்தியுற மனமாரப் பிரார்த்திக்கிறேன்.


கைலாசம் என்னைவிடப் பத்து வயது மூத்தவர். ஆனால் எப்போது சந்தித்தாலும் அந்த வித்தியாசத்தை உணர்ந்ததில்லை. புதிய தலைமுறை தொலைக்காட்சி ஆரம்பிப்பதற்குக் கொஞ்சம் முன்னால் ஈக்காடுதாங்கலில் அந்த அலுவலக வாசலில் உள்ள பெட்டிக்கடையில் அவரைச் சந்தித்தேன்.


‘ராகவன், உணவு குறித்த உங்கள் குமுதம் ரிப்போர்ட்டர் தொடர் படிக்க அருமையாக இருந்தது; அதை டாக்குமெண்டரியாகச் செய்ய முடியுமா உங்களால்?’ என்று கேட்டார். யோசித்துவிட்டு, ‘முழுவதையும் செய்வது சிரமம்; சிலவற்றை முயற்சி செய்து பார்க்கலாம்’ என்று சொன்னேன்.


எனக்கு டாக்குமெண்டரி ஸ்கிரிப்ட் எழுதிப் பழக்கம் கிடையாது. அப்போது நான் முழுக்க முழுக்க சீரியல்களில் மூழ்கத் தொடங்கியிருந்தேன். ஒரே சமயத்தில் ஆறு சீரியல்கள் எழுதிக்கொண்டிருந்தேன். நேரம் மிகப்பெரிய பிரச்னையாக இருந்தது. இருந்தாலும் கைலாசம் கேட்டு செய்ய முடியாது என்று சொல்லத் தோன்றவில்லை. ஒப்புக்கொண்டு, அப்போது ஆரம்பித்ததுதான் கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு.


கைலாசம் நிறைய மாதிரி டாக்குமெண்டரிகளைக் கொடுத்து பார்க்கச் சொன்னார். நான் ஒன்றிரண்டைப் பார்த்தேன். அதற்குமேல்  பார்க்கவில்லை. எனக்குத் தோன்றுவதை எழுதினால் போதும் என்று ஆரம்பித்துவிட்டேன். அந்த அபுனை தொடருக்கு மிக நல்ல வரவேற்பு இருந்தது. கைலாசத்துக்கு ரொம்ப சந்தோஷம். சரியாக வருகிறது; விடாமல் செய்யுங்கள் என்றார். துரதிருஷ்டவசமாக என் சீரியல் பணிகள் என்னை கொசோகொவ-வை சுமார் முப்பது எபிசோடுகளுக்குமேல் தொடரமுடியாதபடி செய்துவிட்டன. நாலைந்து வாரங்கள் ரொம்ப லேட்டாக ஸ்கிரிப்ட் கொடுக்கும்படியாகிவிட்டது. ஷூட்டிங் போகப் படாதபாடு பட்டுவிட்டார்கள். எனக்கே ரொம்ப சங்கடமாகப் போய்விட்டது.


கைலாசம் ஒரு நாள் கூப்பிட்டு ரொம்ப வருத்தப்பட்டார். ‘உங்களுக்கு சீரியல்தான் பிடித்திருக்கிறது. நான் ஃபிக்‌ஷன் பணியை மதிப்பதில்லை’ என்றார்.


அதற்கென்ன செய்வது? ஒரு எபிசோட் கொசோகொவ எழுதும் நேரத்தில் பத்து எபிசோட் முந்தானை முடிச்சு, பத்து எபிசோட் முத்தாரம் எழுதிவிட முடிகிறது. ஒரு முழு மாதத்துக்கான தேவதை எழுதிவிட முடிகிறது. தவிரவும் ஆய்வுக்காகப் படிப்பதற்கு நேரம் கிடைப்பதே பெரும்பாடாக இருக்கிறது. இதையெல்லாம் சொல்லிவிட்டுத்தானே ஆரம்பித்தேன் என்கிற என் சமாதானம் அவருக்குப் போதவில்லை.


‘நீங்கள் ஒரு நல்ல ஜர்னலிஸ்ட். ஆனால் வலுக்கட்டாயமாக உங்களை அதிலிருந்து பிடுங்கிக்கொண்டுவிட்டீர்கள்’ என்றார்.


ரொம்ப திட்டிவிட்டதாக நினைத்தாரோ என்னவோ. மறுநாள் போன் செய்து, முந்தைய நாள் செல்லமே வசனம் ஒன்றைக் குறிப்பிட்டு, ‘பின்றய்யா’ என்றார்.


கைலாசம் ஒரு நல்ல ஜர்னலிஸ்ட். டாக்குமெண்டரிகள் மூலம் நிறைய சாதிக்கலாம் என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டவர். கணபதி ஸ்தபதியைக் குறித்த அவரது ஒரு டாக்குமெண்டரிப் படம் தேசிய விருது பெற்றது. ஒரு சமயம் எனக்கு அதைப் போட்டுக்காட்டி கருத்துக் கேட்டிருக்கிறார். அவரது விஷுவல் மொழி நம்பமுடியாத அளவுக்கு சிறப்பானது. நுணுக்கமும் தெளிவும் கொண்டது. ஏகப்பட்ட பிபிசி டாக்குமெண்டரிகளைக் கொடுத்து என்னைப் பார்த்தே தீரவேண்டும் என்று எப்போதும் கட்டாயப்படுத்துவார். வட கிழக்கு மாநிலங்களில் ஒரு நீண்ட சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான் ஒரு டாக்குமெண்டரி செய்யவேண்டும் என்று பல சமயம் கேட்டிருக்கிறார்.


‘சார், டாக்குமெண்டரியில் எனக்கு ஆர்வமில்லை; சீரியல்தான் என் இஷ்டம்’ என்று நேரடியாகவே சொல்லியிருக்கிறேன். முறைத்துவிட்டுத் திரும்பிக் கொள்வார். இருப்பினும் ரமணி vs ரமணி மாதிரி ஒரு காமெடி கான்செப்ட் பிடிங்க; நாம செய்வோம் என்றும் சொல்லியிருக்கிறார்.


என்னுடைய ரெண்டு நாவலை அவரளவு திரும்பத் திரும்ப வாசித்தவர்களோ பாராட்டியவர்களோ யாருமில்லை. ‘அட்டகாசம்யா. இப்படி ஒரு கதையப் போட குங்குமத்துக்கு செம துணிச்சல்’ என்றார்.


கடும் உழைப்பாளி. பல நாள் ராத்திரி பத்து மணிக்கு மேலே அவரை நான் பு.த. அலுவலகத்தில் சந்தித்திருக்கிறேன். பிரம்மாண்டமான எடிட்டோரியல் ஹால் முழுதும் காலியாக இருக்கும். ஓரத்தில் இருக்கும் அவரது சிறு அறையில் அவர் மட்டும் தனியே உட்கார்ந்து என்னவாவது செய்துகொண்டிருப்பார். மீட்டிங் என்று போனால் வெட்டி அரட்டைகளுக்கு இடமே இல்லை. முதல் வரியில் மேட்டரை ஆரம்பித்துவிடுவார். பேசி முடித்த பிறகு ‘அப்பறம்?’ என்பார். அந்த ‘அப்பறம்?’ வரவில்லை என்றால் அவர் அப்போதும் பிசி என்று அர்த்தம்.


ஆர்வமும் சுறுசுறுப்பும் அபாரமான விஷயஞானமும் கொண்ட மனிதர். சிறந்த படிப்பாளி. தன் தந்தையின் புகழ்ச் சாயலைத் தன்மீது அவர் படியவிட்டதே இல்லை. நம்பமுடியாத அளவுக்கு எளிமையானவர். அவர் இறந்துவிட்டார் என்பதையும் என்னால் நம்பத்தான் முடியவில்லை.


அஞ்சலிகள்.


Copyright © 2008-2011 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 15, 2014 09:29

August 14, 2014

நான் என் தேசத்தை நேசிக்கிறேன்

நண்பர்களுக்கு சுதந்தர தின நல்வாழ்த்துகள்.


தேசப்பற்று உள்பட சகலமானவற்றையும் கிண்டல் செய்யும் ஆஃப்பாயில் அறிவுஜீவிதம் நாட்டில் மலிந்துவிட்டது. இணையப் பொதுவெளியில் இந்தப் போக்கு சமீப காலத்தில் மிகவும் அதிகரித்திருப்பதைப் பார்க்கிறேன்.


ஒரு பக்கம் இந்த ரக டிஜிட்டலி கரப்டட் அறிவுஜீவிகளை நினைத்தால் பாவமாக இருக்கிறது. மறுபுறம் இத்தனை அபத்தங்களைப் பொதுவெளியில் வாந்தியெடுக்கும் சுதந்தரத்தையும் இந்த தேசமும் இதன் ஜனநாயகமும்தான் இவர்களுக்குத் தந்திருக்கிறது என்பதை நினைத்துப் பார்க்கிறேன்.


என் நண்பர் ஜெயக்குமார் ஶ்ரீநிவாசனுடன் சில நாள்கள் முன்னர் பேசிக்கொண்டிருந்தபோது ‘இங்கே (இராக்கில்) இப்போது ஃபேஸ்புக் கிடையாது; திருட்டு வழியில்தான் வரவேண்டும்’ என்று சொன்னார். சீனாவில் என்னென்ன தடை செய்யப்பட்டிருக்கிறது என்று எப்போதோ ஒரு தளத்தில் பெரிய பட்டியலொன்று பார்த்தேன். நமக்கு இந்த இம்சையெல்லாம் என்றுமே இருந்ததில்லை. மிஞ்சிப் போனால் சவீதா பாபி கிடைக்காது போவாள். வேறு யாராவது ஒரு பாவியைக் கொண்டு பொழுதை ஓட்டிவிடலாம்.


காந்தி வேஸ்ட், சமஸ்கிருதம் ஒழிக, பட்ஜெட் மோசம், தமிழ் சினிமா உருப்படாது, தமிழ்நாடு தேறாது, இந்தியா உருப்படாது, போலிஸ் பக்ருதீன் நல்லவன், நரேந்திர மோடி கெட்டவர், நீயா நானா குப்பை, என்னைக் கூப்பிட்டால் மட்டும் ரத்தினம் – எதற்கு இதெல்லாம்?


செய்வதற்கு நிறைய இருக்கிறது. ஆக்கபூர்வமாக. அறிவுபூர்வமாக. ஆத்மார்த்தமாக. நான் என் தேசத்தை நேசிக்கிறேன் என்று வெளிப்படையாகச் சொல்வதற்குக் கூட யோசிக்கும் அளவுக்கு சூழலை நாசமாக்கி வைத்திருக்கும் அறிவுஜீவி பயங்கரவாதிகளை அடையாளம் கண்டு விலகியிருங்கள். இந்த தேசம் நமக்கு நிறைய செய்திருக்கிறது. பதிலுக்கு நம்மால் முடிந்ததை சந்தோஷமாகச் செய்வோம். அட, ஒழுங்காக வரி கட்டிவிட்டுப் போவதைக் காட்டிலும் ஒரு தேச சேவை உண்டா. நடு ரோடில் வண்டி ஓட்டிக்கொண்டே எச்சில் துப்பாதிருப்பது அடுத்தது.


ஜெய்ஹிந்த்.


Copyright © 2008-2011 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 14, 2014 08:01

பரி(தாப)சோதனை

வேறு வழியில்லை. நீங்கள் சகித்துக்கொண்டே தீரவேண்டும் இத்தீராப் பரிசோதனைகளை. இது விரைவில் அழிக்கப்படும்.


Copyright © 2008-2011 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 14, 2014 06:23

January 12, 2013

சென்னை புத்தகக் கண்காட்சி 2013

bookfair 039நந்தனம் ஒய்யெம்சியேவுக்கு இடம் பெயர்ந்திருக்கும் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு இன்று மாலை சென்று வந்தேன். அண்ணாசாலை முகப்பிலிருந்து கண்காட்சி அரங்கைச் சென்றடைவதற்குள்ளேயே நாக்கு தள்ளி விடுகிறது. அதற்குமேல் அத்தனாம்பெரிய வரிசைகளை முழுதாக ஒரு முறை சுற்றி வந்தால் சுமார் நாலே முக்கால் கிலோ இளைத்துவிடலாம். இந்த இடப்பெயர்ச்சியின் விளைவாக நிறையப்பேர் வருவார்கள் என்று அமைப்பாளர்கள் எதிர்பார்க்கலாம். ஆனால் ஒரு நாள் வந்தவர் நிச்சயமாக மறுநாள் வர யோசிப்பார் என்றே எனக்குத் தோன்றுகிறது.


நிற்க. இடம்தான் மாறியிருக்கிறதே தவிர ஏற்பாடுகளில் எந்த மாற்றமும் இல்லை. அதே படு கேவலமான நடைபாதை. பாதை அகலம் குறைந்திருக்கிறதோ என்னமோ, ரொம்ப அடைசலாக உணர்ந்தேன். இரண்டு மூன்று இடங்களில் கால் தடுக்கி விழப் பார்த்தேன். ஒரே நாளில் நடைக்கம்பளங்கள் பல்லை இளித்துவிட்டன. ஆங்காங்கே மரத்தரையும் தொளதொளத்து இருக்கிறது. கவனமாகத்தான் நடக்க வேண்டும்.


கடைகளின் எண்ணிக்கை கூடியிருப்பதுபோல் பட்டது. ஆனால் பிரமாதமாகச் சிலாகிக்கும்படி புதிதாக புத்தகங்கள் வந்திருப்பதாகத் தெரியவில்லை. ஒருவேளை ஒளிந்திருக்கலாம். என் கண்ணில் படவில்லை. விகடனில் மட்டும் புதிதாகக் கொஞ்சம் பார்த்தேன். கிழக்கின் உள்ளே போக முடியவில்லை. நல்ல கூட்டம். நண்பர்கள் யாராவது கண்ணில் படுகிறார்களா என்றால் அதுவுமில்லை. கிழக்கின் ஏதோ ஒரு கடையில் யாரோ ஒரு புது அம்மணி, கிடைச்சாண்டா கோயிஞ்சாமி என்று என்னை இழுத்து வைத்து டயல் ஃபார் புக்ஸின் அருமை பெருமைகளை விளக்கப் பார்த்தார். நானா சிக்குவேன்? பின்னங்கால் பிடரி.


bookfair 044முழுதாக ஒரு சுற்றுதான் இன்று முடிந்தது. ரொம்ப கவனமாகப் பார்த்தேன் என்று சொல்ல முடியாது. ஆனால் ஏனோ சுவாரசியமாக இல்லை. நீண்ட நாள்களுக்குப் பிறகு சில நண்பர்களைச் சந்திக்க முடிந்ததுதான் மகிழ்ச்சியளித்தது. சண்டே இந்தியன் அசோகன், குமுதம் தளவாய் சுந்தரம் இருவரும் கண்காட்சியைப் போலவே இடம் பெயர்ந்திருக்கிறார்கள். தளவாய், காட்சிப்பிழை என்ற சினிமா [மக்கள் சினிமா அல்ல; அறிவுஜீவி சினிமா] பத்திரிகையின் ஆசிரியராகியிருக்கிறார். அசோகன், அந்திமழைக்கு. தளவாய், காட்சிப்பிழை இதழொன்றைக் கொடுத்தார். அட்டையில் சமந்தா அழகாக இருந்தார். அறிவுஜீவிகளுக்கும் சமந்தா பிடிக்கும். அசோகன், தனது நாவலொன்று வந்திருக்கிறது என்றும், கிளம்பிப் போவதற்குள் எனக்கொரு பிரதி கொடுத்தாக வேண்டும் என்றும் சொன்னார். 108 ராமஜெபம் செய்து அவர் கண்ணில் படாமல் தப்பித்து வந்துவிட்டேன். ஐகாரஸ் பிரகாஷைப் பார்த்தேன். மூக்குக் கண்ணாடி இல்லாமல் இருந்தார். விசாரித்தால் ரிப்பேருக்குக் கொடுத்திருப்பதாகச் சொன்னார். கண்ணாடியில் ரிப்பேர் செய்யக்கூடிய பாகம் எதுவாயிருக்கும் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.


bookfair-045உள்ளே நுழைந்த கொஞ்ச நேரத்திலேயே கால் வலிக்க ஆரம்பித்துவிட்டது. பெரும்பாலும்  நண்பர் குகனின் [நாகரத்னா பதிப்பகம்] தோளில் கைபோட்டு பாதி வெயிட்டை அவர்மீது தள்ளியபடியேதான் நடந்தேன். குகன் ஒரு சமத்துக் குழந்தை. எனவே ஒன்றும் சொல்லவில்லை. ஆர்வமுடன் சில புதிய புத்தகங்களை அவர் வெளியிட்டிருக்கிறார். அவை நன்றாக விற்று, அவர் மேலும் புத்தகங்கள் வெளியிடும்படியான உற்சாகத்தை இந்தக் கண்காட்சி அவருக்குத் தரவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். நான் கிழக்கில் இருந்த காலத்தில் குகன் சொல்லிக்கொண்டிருந்த உலக சினிமா புத்தகத்தை இப்போது முடித்து, கொண்டு வந்திருக்கிறார். புரட்டியதில், அவர் குறிப்பிட்டிருக்கும் படங்களில் பாதிக்குமேல் நான் பார்த்ததில்லை என்பதே தமிழ்த் திரையுலகில் எனது கொடி பட்டொளி வீசிப் பறக்கும் என்பதைப் பறைசாற்றுவதாக இருந்தது.


bookfair 051கிளம்புவதற்குக் கொஞ்ச நேரம் முன்னால் கேபிளும் அப்துல்லாவும் எதிரே வந்தார்கள். இந்தக் கண்காட்சியில் கிழக்கு சந்து என்ற ஒன்று இல்லாதபடியால் டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் தலையைத் தடவி, அந்தக் கடை வாசலைக் குத்தகை எடுத்திருக்கிறார்கள். சிறிது நேரம் அங்கே நின்று பேசிக்கொண்டிருந்தேன். அப்துல்லா பேண்ட், டி ஷர்ட்டில் வந்திருந்தது எனக்குப் பிடிக்கவில்லை. அந்த வெள்ளை வேட்டி சட்டைதான் அவருக்கு கம்பீரம். தம்பி நாளைக்கு ஒழுங்காக வேட்டியில் வரவேண்டும் என்று கண்டித்துவிட்டு வந்தேன்.


0


bookfair 046

மதி நிலையத்தின் ஸ்டால் இடப்புறமிருந்து முதல் வரிசையிலேயே அமைந்திருக்கிறது. [ஒருவேளை இரண்டாவது வரிசையோ?] என்னுடைய அன்சைஸ் வெளியாகிவிட்டது. அதற்கு அழகாக ஒரு பேனரெல்லாம் வைத்திருக்கிறார்கள். அந்த பேனர் காரணத்தால் மதிநிலையம் ஸ்டாலானது மொத்த கண்காட்சிக்கே ஒளிதரும் சூரியனாகத் தகதகக்கிறது என்பதைச் சொல்லத் தேவையில்லை.


என்னுடைய பல நூல்கள் இக்கண்காட்சியில் மதி நிலையத்தின் மறு பதிப்பாக வெளியாகியிருக்கின்றன. மாயவலை இன்னும் கடைக்கு வந்து சேரவில்லை. ஆனால் விளம்பரம் பார்த்து, பலபேர் வந்து விசாரித்து, போன் நம்பர் கொடுத்துவிட்டுப் போயிருப்பதாகச் சொன்னார்கள். இருந்த கொஞ்ச நேரத்தில் சிலபல ஆட்டோகிராபுகள் போட்டுக்கொடுத்து சமூக சேவையாற்றிவிட்டுக் கிளம்பினேன்.


இக்கண்காட்சியில் நான் விரும்பி வாங்க நினைத்த புத்தகங்கள் இரண்டு மட்டும்தான். ஒன்று பேயோனுடையது. இன்னொன்று மாம்ஸுடையது. இரண்டுமே இன்று வரவில்லை. எனவே ஒன்றும் வாங்கவில்லை.


சாப்பிட வாங்க என்ற பெயருடன் வளாகத்தின் வெளியே பெரிய கேண்டீன் இருப்பதைப் பார்த்தேன். ஆனால் போகவில்லை. நாளைக்கு அநேகமாகப் போவேன் என்று நினைக்கிறேன். மகளும் வருவதாகச் சொல்லியிருக்கிறாள். எனவே திட்டம் கடைசி நேர மாறுதலுக்குட்பட்டது.


பி.கு:- இங்கே உள்ள படங்களாகப்பட்டவை எனது புதிய ஐபேடில் எடுக்கப்பட்டவை. எனவே அவற்றைத் தனியே சிலாகிக்கவும். இன்னும் நிறைய படங்கள் எடுத்தேன். ஆனால் அப்லோடு செய்ய நேரமெடுக்கிறபடியால் நிறுத்திவிட்டேன்.


Copyright © 2008-2011 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)

Share/Bookmark

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 12, 2013 09:34