Pa Raghavan's Blog, page 32

November 15, 2014

கால வழு

படுத்து ஒரு ஜாமம் கழிந்தும் வியாசருக்கு உறக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு பார்த்தார். மேல் துண்டை இழுத்து முகத்தைச் சுற்றி மூடிக்கொண்டு தூங்கப் பார்த்தார். ஒரு பத்து நிமிடம் எழுந்து உட்கார்ந்து தியானம் செய்தால் ஒருவேளை தூக்கம் வருமோ என்று அதையும் முயற்சி செய்தார். ரொம்ப ஃப்ரெஷ்ஷாகிவிட்டது போலத் தோன்றியது.


அவருக்கு ரொம்ப பயமாகிவிட்டது. இப்படியே விட்டால் வாழ்நாளில் உறக்கம் என்பதே இல்லாமல் போய்விடக் கூடும். ஏதாவது செய்தே ஆகவேண்டும். சரேலென்று எழுந்தார். வேகவேகமாக நதி தீரத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.


சரியான இருட்டு. பாதை தெரியாத அளவுக்கு இருட்டு. ஆனாலும் பழகிய பாதங்களுக்கு இருளும் ஒளியும் ஒன்றுதான். கால் கரெக்டாகத்தான் செயல்படுகிறது. மனம்தான் பேஜார் பண்ணுகிறது.


‘மாப்ள.. இப்படியே விட்டன்னா நாளைக்கு வியாசன்னு ஒருத்தன் இருந்தான்னு சொன்னாக்கூட யாரும் நம்பமாட்டாங்க.. உன் தரிசனம், கற்பனை, கவித்துவம், புண்ணாக்கு எல்லாத்தையும் காலாவதியாயிருச்சின்னு சொல்லி கடாசிருவாங்க.. முழிச்சிக்கடா’ என்று சக முனித் தோழர் சொன்னது நினைவில் நிழலாடியது.


பதற்றம் அதிகரிப்பது போலிருந்தது. கேஸ் போட்டுப் பார்க்கலாமா என்று யோசித்தார். ஆனால் காலம் கடந்த பிரதிகளுக்கான காப்பிரைட் சட்டங்கள் தெளிவாக இருக்கின்றன. தவிரவும் தமிழ்நாட்டில் எந்தக் கதாசிரியனும் கேஸ் போட்டு ஜெயிக்க முடியாது. நாலு நாளைக்கு ஃபேஸ்புக்கில் வேணுமானால் பிரபலமாக இருக்கலாம். சே. இத்தனை யுகங்களுக்குப் பிறகு இப்படியொரு பிராணாவஸ்தை நேருமென்று அவர் நினைத்துப் பார்க்கவில்லை.


இத்தனை புகழும் பிராபல்யமும் தான் எழுதிய காலத்தில் தனக்கு வந்திருக்க வேண்டியது. எல்லாவற்றையும் சேர்த்து வைத்து யாருக்கோ சொத்தெழுதிக் கொடுத்துவிட்ட மாதிரியல்லவா இருக்கிறது? இதை அனுமதிக்க முடியாது. சும்மா ஒரு வணக்கம் போட்டுவிட்டு அனைத்தையும் லவட்டிக்கொண்டுவிட்டான். என்னவாவது செய்துதான் தீரவேண்டும்.


உறுதிபூண்டபின் அவருக்கு இருப்புக் கொள்ளவில்லை. மறுநாளே ரயிலேறிவிட்டார்.


வருகிற வழியில்தான் என்ன செய்யலாம் என்று தெளிவான ஒரு முடிவுக்கு அவரால் வரமுடிந்தது. கொஞ்சம் குரூரம்தான். ஆனால் வேறு வழியில்லை. இதெல்லாம் டார்த்தீனிய வகையறா. விட்டுவைத்தால் காடாகி அழித்துவிடும். இந்த நாடும் நாட்டு மக்களும் நம்மை ஒரு வில்லனாகவே பார்த்தாலும் பரவாயில்லை. இதை மட்டும் சும்மா விடக்கூடாது. படைப்பாளிக்கு அவன் முக்கியமல்ல. படைப்புதான் முக்கியம்.


சென்னை செண்ட்ரலில் ரயில் பெரும் சத்தமுடன் நுழைந்தது. வியாசர் தனது ஜோல்னாப் பையை இறுக்கிப் பிடித்துக்கொண்டு இறங்கினார். எந்தப் பக்கம் போவது என்று ஒரே குழப்பமாக இருந்தது. ரயில் வே ஸ்டேஷனே ஒரு ஊர் மாதிரி இருந்தது. சில வினாடிகள் திருதிருவென்று விழித்தார். பிறகு குத்து மதிப்பாக முடிவு செய்து, இறங்கிய இடத்திலிருந்து இடப்பக்கமாக நடக்க ஆரம்பித்தார்.


பத்தடி கூட நடந்திருக்க மாட்டார். யாரோ தபதபவென்று அவரை நோக்கி ஓடி வருவது போலத் தோன்ற, திரும்பிப் பார்த்தார். தோன்றியது பிழையில்லை. ஒருத்தரில்லை. நாலைந்து பேர். பாய்ந்து வந்து அவரைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, ‘நீங்கள்தானே வியாசர்?’ என்றார் நாலைந்தில் ஒருவர்.


வியாசர் திகைத்துவிட்டார். உடம்பெல்லாம் சிலிர்ப்பது போலிருந்தது. அது படைப்பாளிக்கே உரிய எளிய உணர்ச்சிவசப்படல். உடனே அவரது கண்ணில் கனிவும் பேரன்பும் பெருக ஆமென்று மெல்லத் தலையசைத்தார்.


‘உங்களத்தான் சார் தேடிட்டிருந்தோம். எங்க நல்லநேரம் நீங்களே வந்துட்டிங்க.’


‘நீங்க…’ என்று சீரியல் அப்பா மாதிரி செண்டன்ஸை முடிக்காமல் வியாசர் இழுக்க,


‘நாங்க விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்துலேருந்து வரோம் சார். இந்த வருஷ அவார்டு உங்களுக்குத்தான்!’ என்றபடி கையைப் பிடித்துக் குலுக்கினார் நாலைந்தில் இன்னொருவர்.


வியாசருக்கு ஒரு கணம் மூச்சடைத்தது. நிதானத்துக்கு வர மிகவும் சிரமப்பட்டார். பிறகு தன்னைத் தொகுத்துக்கொண்டு, ‘விழா கோயமுத்தூர்லதான?’ என்று கேட்டார்.


Copyright © 2008-2011 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 15, 2014 10:26

November 11, 2014

காகிதப் படகில் சாகசப் பயணம்

கருணாகரனை முதல்முதலில் பார்த்தபோது இந்த ஆசாமி கொஞ்சம் முசுடு என்று தோன்றியது. ஹலோ என்றால் ஹலோ என்பார். ஏதாவது கேட்டால் எத்தனை சொற்களில் கேட்கிறோமோ, அதில் சரி பாதி சொற்களில் பதில் சொல்வார். குமுதம் அலுவலகத்தில் என் கேபினுக்குப் பக்கத்து கேபினில் அவர் இருந்தார். ஒரு நாளில் நூறு முறையாவது நான் அந்தக் கண்ணாடிச் சுவரைத் திரும்பிப் பார்ப்பேன். ஒருமுறையும் அவர் நிமிர்ந்தோ, திரும்பியோ பார்த்ததில்லை. எப்போதும் டேபிளுக்கு மட்டுமே தலைகாட்டி என்னத்தையாவது எழுதிக்கொண்டோ, எடிட் செய்துகொண்டோ இருப்பார்.


கருணாவுக்கு பக்கத்து சீட்டில் இருந்த சிவகுமார் (என்கிற வாசுதேவ்) அவருக்கு முற்றிலும் நேரெதிர். கண்ணாடி அறைக்குள் இருந்து அவர் குரல் கொடுத்தால் குமுதம் ஆபீஸ் தாண்டி பக்கத்து அபிராமி தியேட்டர் வரைக்கும் கேட்கும். இருபத்தி நாலு மணிநேரமும் ஜோக்கடித்துக்கொண்டு, யாரையாவது கிண்டல் செய்துகொண்டு, எல்லோரையும் சிரிக்க வைத்துக்கொண்டே இருப்பவர். அவருக்கு அத்தனை நெருக்கத்தில் இருந்தும் கருணாகரன் மட்டும் ஏன் இப்படி இருக்கிறார்? குறைந்தபட்சம் சிவகுமார் அடிக்கும் ஜோக்குகளுக்குக் கூட சிரிக்க மாட்டார். முட்டைக் கண்ணாடிக்குள்ளிருந்து ஒரு முறைப்பு.


என்னால் அப்போது புரிந்துகொள்ளவே முடியாததாக இது இருந்தது. பிறகும் புரிந்ததில்லை. இத்தனை வருடங்கள் கழித்து கருணாகரனின் பத்திரிகை அனுபவங்கள் அடங்கிய ‘காகிதப் படகில் சாகசப் பயணம்’ நூலை இன்று வாசித்தபோது அதற்கான காரணத்தைக் கண்டேன். கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. வருத்தமாகவும். கருணா எனக்கு நண்பராகி நெருக்கமாகப் பேசிப் பழகத் தொடங்கிவிட்ட பிறகும் தனது சொந்தக் கஷ்டங்களை ஒருபோதும் சொன்னதில்லை. வலிகளைக் காட்டிக்கொண்டதில்லை. அது அவரது சுபாவம்.


என் சமகாலப் பத்திரிகையாளர்கள் பலரைக் கண்டு நான் வியந்திருக்கிறேன். பிரமித்திருக்கிறேன். மனமாரப் பாராட்டியிருக்கிறேன். ஆனால் யாரைக் கண்டும் பொறாமை கொண்டதில்லை. பத்திரிகை வாழ்வில் நான் ரகசியப் பொறாமை கொண்ட ஒரே திறமைசாலி கருணா. பணியில் அவரது வேகமும் தீவிரமும் உள்ளார்ந்த அர்ப்பணிப்பும் ஈடுபாடும் யாரையும் வெட்கமுற வைக்கும். நாங்கள் குமுதத்தில் ஒன்றாகப் பணியாற்றிய காலங்களில் கருணாகரன் இஷ்யு என்றால் அதற்குத் தனியொரு வாசனை இருக்கும். அவரைப் போன்ற ஒரு தேர்ந்த மசாலா விற்பன்னரை நான் இதுகாறும் சந்தித்ததில்லை. ஒரு வாரப் பத்திரிகைக்கு என்ன தேவை என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால் எது எத்தனை சதவீதம் என்கிற சூட்சுமமே இங்கு முக்கியம். கருணா அதில் மன்னன்.


இந்தப் புத்தகத்தில் அவர் குறிப்பிட்டிருக்கும் ரஜினி, கமல் தொடர்பான சம்பவங்களை அருகிருந்து பார்த்தவன் நான். இந்த வரிசையில் இன்னொரு செம ஜாலி விஷயத்தை எழுதுவார் என்று எதிர்பார்த்து மிகவும் ஏமாந்தேன். என்றைக்காவது இம்மாதிரி நான் ஒரு புத்தகம் எழுத நேர்ந்தால் அவசியம் அதைக் குறிப்பிடுவேன் (அது ஒரு பிரபல பெண் எழுத்தாளர் சம்மந்தப்பட்ட விஷயம்!)


கருணாவின் பலம் அவரது பிசாசு வேக மொழி. இந்தப் புத்தகத்தை வாசிக்க உங்களுக்கு ஒரு மணி நேரத்துக்குமேல் ஆகிறதென்றால் நீங்கள் தமிழில் வீக் என்று பொருள். கருணா மட்டும் ஒரு ரிஸ்க் எடுத்து பத்திரிகை வேலையைத் துறந்து முழுநேர எழுத்துக்கு வந்திருந்தால் இந்நேரம் அவர் இருந்திருக்கும் இடமே வேறு. மொழியை அவர் கையாளும் லாகவத்தை நான் எப்போதும் ரசிப்பேன்.


இந்தப் புத்தகத்தின் ஓர் அத்தியாயம் – அவரது மகளுக்கு இருந்த மருத்துவக் குறைபாடு பற்றியது – படித்தால் உங்களுக்கு நான் சொல்லுவது புரியும். முழுப் புத்தகத்துக்கும் அவர் தேர்ந்தெடுத்த மொழியை இந்த ஓர் அத்தியாயத்து மொழி வாரிச் சுருட்டித் தூர அடித்துவிடுகிறது.


எழுத்தில் கண் கலங்க வைப்பது பெரிய விஷயமல்ல. அது ஒரு தொழில்நுட்பம் மட்டுமே. ஆனால் தான் கதறியழுத தருணங்களை அழுகையின் தடத்தை மட்டும் தொட்டுக்காட்டி ரிப்போர்ட் செய்வது ஒரு சாகசம். இது உங்களை அழவைக்காது. ஆனால் செயல்படாமல் அடித்துவிடும். இதனை இராம திரு. சம்மந்தத்திடம் பயின்ற பாடம் மூலம் கருணா கற்றிருக்கலாம். அல்லது பெண்ணை ஏன் தேவதையாக்குகிறாய் என்று மாலன் கேட்டதில் இருந்து பெற்றிருக்கலாம். புதிய எழுத்தாளர்களுக்கு இந்த அத்தியாயம் நிச்சயமாக ஒரு பாடம்.


பத்திரிகைத் துறையை விரும்பக்கூடிய, ஒரு பத்திரிகையாளனின் அவஸ்தைகளைப் புரிந்துகொள்ளக்கூடிய, பத்திரிகையாளராக ஆகவேண்டும் என்று நினைக்கக்கூடியவர்களுக்கு இந்தப் புத்தகத்தில் சில நல்ல பாடங்கள் உள்ளன. கருணா இன்னும் விரிவாகவே எழுதியிருக்கலாம். ஆனால் இந்தப் புத்தகம் தன்னளவில் ஒரு முழுமையைக் கொண்டிருக்கிறது. இதழியலைப் பொறுத்தவரை தொடரும் என்பதுதான் முழுமையின் நிறைவுச் சொல்.


காகிதப் படகில் சாகசப் பயணம் | பெ. கருணாகரன் | குன்றம் பதிப்பகம், 73/31, பிருந்தாவனம் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை 600033 | தொபே: 9940010830


Copyright © 2008-2011 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 11, 2014 22:13

November 6, 2014

DND

சார் எங்க இருக்கிங்க? அர்ஜெண்ட்டா உங்கள பாக்கணும்.


ஒரு தொலைபேசி உரையாடலின் முதல் வரி இப்படியாகத் தொடங்கினால் எதிர்முனையாளர் ஏதேனும் ஒரு செய்தித் தொலைக்காட்சியில் இருந்து அழைக்கிறார் என்று பொருள்.


இன்னிக்கு செவன் தர்ட்டி நியூஸுக்கு ஒரு பைட் வேணும் சார் என்பது இரண்டாவது வரி.


எந்தத் தாலிபனாவது எங்காவது துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பான். இல்லாவிட்டால் இராக்கில் எவனாவது மசூதியிலோ பாலத்திலோ தூதரகத்திலோ குண்டு வைத்திருப்பான். இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் ஆரம்பித்திருக்கும். ஏதோ ஒன்று. என்னவானாலும் அஞ்சு நிமிஷ பைட்.


விவகாரம் சற்றுப் பெரிது (என்றால் பலி எண்ணிக்கை 15க்குமேல் என்று பொருள்) என்றால் உடனே ஒரு விவாதம். நாலைந்து கருத்து கந்தசாமிகளுடன் கலந்துரையாட வருவீர்.


எப்போது? இப்பவே சார். அல்லது மதியம் மூன்று மணிக்கு. ஆறு மணிக்கு ஏர்ல போகணும் சார்.


முன்பெல்லாம் இத்தகு பைட் சேவைகளை நட்புக்காகச் செய்து வந்தேன். ஒரு கட்டத்தில் இது என் அன்றாடப் பணிகளை மிகவும் கெடுக்கத் தொடங்கியது. கேமராவுக்கு உட்கார நேரமில்லை என்றாலும் பரவாயில்லை; போனில் கருத்து சொல்லுங்கள்; பதிவு செய்து புகைப்படத்துடன் போட்டுவிடுவோம் என்றார்கள்.


இது ஏதடா வம்பாப் போச்சே என்று தப்பிக்க ஒரு வழி கண்டுபிடித்தேன். பைட் கேட்கும் அனைவரிடமும் டீஃபால்ட்டாக பத்ரி, மருதன், சொக்கன் போன்ற சிலரின் எண்களை (அவரவர் சப்ஜெக்டுக்கேற்ப) கொடுத்துவிடுவேன். நான் ஊரில் இல்லை என்றோ, வேலை அதிகம் என்றோ சொல்லி போனை வைத்துவிடுவேன். அவர்கள் என் நண்பர்களை அழைத்தார்களா, இவர்கள் போய்ப் பேசினார்களா என்றெல்லாம் கவலைப்பட்டதேயில்லை. இதற்குக் கூட உதவாவிட்டால் அப்புறமென்ன நண்பர்கள்!


முதலில் என் பிரச்னை நேரம் சார்ந்ததாயிருந்தது. ஐந்து நிமிட பைட்டுக்கு நான் குறைந்தது ஒரு மணி நேரமாவது முன் தயாரிப்பு செய்ய வேண்டியது அவசியம். அத்தனை நேரம் கூடுதலாகக் கிட்டுமானால் இன்பமாகத் தூங்கிக் கழிக்கவே விரும்புவேன். இதனை நேரடியாகவே பலரிடம் சொல்லிப் பார்த்துவிட்டேன். யாரும் கேட்கத் தயாராயில்லை. பட்டனை அழுத்தினால் கருத்து கொட்டிவிடும் என்று நினைக்கிறார்கள் போல. நான் அதற்கு லாயக்கில்லை.


இரண்டாவது காரணம், இந்த ‘பைட்’டர்களுக்கு சம்மந்தப்பட்ட பிரச்னை அல்லது செய்தி குறித்த அடிப்படைத் தகவலறிவுகூட இருக்காது. செய்தி நிறுவனம் தரும் ஒருவரிக் குறிப்பைப் பார்த்துவிட்டு உடனே ஒரு மேட்டர் பண்ணக் கிளம்பிவிடுகிறார்கள். ஒரே ஒரு கேள்வி கேட்பார்கள். அது தொடக்கம். அதை வைத்துக்கொண்டு முழு பிரச்னையையும் விளக்கி, தீர்வையும் சொல்லிவிட வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.


டிவி என்று சொன்னால் மாட்டேன் என்று யாரும் சொல்லமாட்டார்கள் என்ற மனப்பான்மை இதில் மிகத் தீவிரமாக இயங்குவதையும் பார்க்கிறேன். பிசியா இருக்கேன் சார் என்றால் ஹாஃபனவர் கழிச்சி வரட்டுமா சார் என்று உடனே கேட்பார்கள்.


என்றைக்கு அந்த முடிவெடுத்தேன் என்று நினைவில்லை. இப்போதெல்லாம் யார் போன் செய்து ‘பைட்’ கேட்டாலும் முடியாது என்று கூசாமல் சொல்லிவிடுகிறேன். என்ன நினைத்துக்கொண்டாலும் கவலையில்லை.


பேசுவது என் தொழிலல்ல. கருத்து சொல்வது எனக்குக் கடமையும் அல்ல. எழுதுவது ஒன்றே என் சுதர்மம். நானாக எங்காவது பேசினால் அது என் சொந்த விருப்பம் சார்ந்ததாக மட்டுமே இருக்கும்.


ஒன்றைச் சொல்லி முடித்துவிடுகிறேன். வெகு சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தில் இருந்து ஒரு நண்பர் அழைத்தார். புதிதாகத் தொடங்கவிருக்கும் சமையல் நிகழ்ச்சியில் ஒரு பகுதியாகப் பல்வேறு விதமான உணவுப் பொருள்களின் வரலாறு குறித்துப் பேசக் கேட்டார். ஏற்கெனவே நான் எழுதியது, புதிய தலைமுறை டிவியில் டாக்குமெண்டரியாகவும் செய்ததுதான். இருப்பினும் நான் முன்னர் எழுதியவை தவிர மிச்சமுள்ள உணவுகளைப் பற்றி ஒவ்வொரு நாளும் சில நிமிடங்களாகச் செய்யலாம் என்றார்.


யோசிக்கிறேன் என்று சொல்லியிருந்தேன். நண்பர் விடாமல் சில நாள்கள் அழைத்துப் பேசிக்கொண்டே இருந்தார். இறுதியில் ஒரு நாள் நேரில் அழைத்து, பதினைந்து நிமிட நிகழ்ச்சிக்கு நான் படித்துத் தயாரிப்பது என்றால் என்ன, அதை எழுதுகிற பணி எத்தகையது, எடுத்துக்கொண்டு வந்து ஸ்டுடியோவில் அதை நானே ப்ரசண்ட் செய்கிற திருப்பணி எம்மாதிரியானது ஆகியவற்றை விலாவாரியாக விளக்கி இதற்கு ஒவ்வொரு எபிசோடுக்கும் எவ்வளவு தருவார்கள் என்று கேட்டுச் சொல்லுங்கள் என்று சொல்லி அனுப்பி வைத்தேன்.


இதென்ன பிரமாதம், எங்கள் ப்ரொட்யூசருடன் ஒரு மீட்டிங் அரேஞ்ச் பண்ணுகிறேன், வந்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டுப் போனவர்தான். ஆளைக் காணோம்.


அடடே இது நல்ல உத்தியாக உள்ளதே என்று எண்ணிக்கொண்டேன். இனி இதேபோல் பைட்டுக்கு அழைப்போரிடமும் ஒரு டாரிஃப் கொடுத்துவிடலாம் என்றிருக்கிறேன். அல் காயிதா சம்மந்தமென்றால் அஞ்சாயிரம். ஐ.எஸ்.ஐ.எஸ். என்றால் ஏழாயிரம். அமெரிக்கா என்றால் பத்தாயிரம். ஏதாவது புதிய இயக்கப் புறப்பாடு என்றால் கொஞ்சம் டிஸ்கவுண்ட்டும் கொடுக்கலாம், தப்பில்லை.


Copyright © 2008-2011 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 06, 2014 00:29

October 21, 2014

சாந்தி முகூர்த்தம்

சில தினங்களுக்கு முன்பு ஆப்பிள் வெளியிட்ட புதிய இயங்குதளமான Yosemiteக்கும் நேற்றிரவு வெளியான iOS 8.1க்கும் என் பிரதியில் நல்லபடியாக சாந்தி முகூர்த்தம் நடத்தி வைத்தேன்.


ஓர் இயங்குத் தளம் இத்தனை வியப்பளிக்குமா, வசீகரிக்குமா என்று இன்னமும் நம்ப முடியவில்லை. இதற்குமேல் தொழில்நுட்பத்தில் என்ன இருந்துவிடப் போகிறது என்று சென்றமுறை தோன்றியது போலவேதான் இப்போதும் தோன்றியது.


இப்போது என் கருவிகளின் செயல்பாட்டு வேகம் அதிகரித்திருக்கிறது. ஒரு வினாடியில் wifi, மூன்று அல்லது நான்கு வினாடிகளில் hotspot தொடர்பு பெற முடிகிறது. கைப்பேசிக்கு வரும் smsகளை என் மாக்குப் புத்தகக் காற்றில் வேலை செய்துகொண்டிருக்கும்போது, அந்தத் திரையிலேயே பெற்று பதிலனுப்ப முடிகிறது. பேசியை வேறு அறையில் வைத்துவிட்டாலும் வேலை கெடாமல் மா.பு.காவிலிருந்தே அழைப்புகளை ஏற்று பதில் சொல்ல முடிகிறது. Notesல் கிறுக்கி அங்கிருந்தே சமூக வலைத்தளங்களுக்கு எதையும் அனுப்பலாம். பிறகு தேடித் தொகுக்கும் பணி இனியில்லை.


இந்தக் குறிப்பை Notesல்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன். இங்கிருந்தே ஃபேஸ்புக்குக்கும் ட்விட்டருக்கும் எனது writerpara.com வலைத்தளத்துக்கும் தூக்கிப் போடுகிறேன். வந்து சேர்கிற வேகத்தைப் பாருங்கள்!

TUE 21 OCT 1:31 PM IST


Copyright © 2008-2011 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 21, 2014 01:04

October 3, 2014

புதிய பதிப்பு

IMG_3028


 


மேற்கண்ட எனது சில புத்தகங்கள் மதி நிலையம் வாயிலாகத் தற்போது மறு பிரசுரம் கண்டுள்ளன. இவ்வருட இறுதிக்குள் இன்னும் சில புத்தகங்கள் இவ்வாறாக வரும் என்று நினைக்கிறேன். பிரதி வேண்டுவோர் mathinilayambook@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.


ஆன்லைனில் வாங்கும் வசதி உண்டா என்று சம்பிரதாயமாக ஒரு கேள்வி உடனே வருவது இந்நாள்களில் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. என்.எச்.எம், டிஸ்கவரி போன்ற புத்தக விற்பனைத் தளங்களில் முயற்சி செய்யலாம். மதி நிலையம் தனது நேரடி இணைய விற்பனையைத் தொடங்குவதற்குள் தமிழர்கள் செவ்வாயில் சிலபல ஏக்கர்கள் வளைத்துப் போட்டிருப்பார்கள்.


என்ன புத்தகம், யார் பதிப்பாளரென்றாலும் என்னிடம் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருகிறேன் என்று ஹரன் பிரசன்னா லவுட் ஸ்பீக்கர் வைத்து கூவிக்கொண்டிருக்கிறார். அவரைப் பிடித்தால் காரியம் நடக்கும். haranprasanna@gmail.com இது அவரது மின்னஞ்சல்.


Copyright © 2008-2011 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 03, 2014 07:58

October 1, 2014

தொகுப்புக்கு உதவி தேவை

ஜனவரி சென்னை புத்தகக் கண்காட்சியில் என்னுடைய சிறுகதைகளின் தொகுப்பொன்றைக் கொண்டுவரலாம் என்று நினைத்தேன். நான் சிறுகதை எழுதி நாளாகிவிட்டது. ஆனால் இப்போதும் அவ்வப்போது யாராவது பழைய கதைகளைக் குறிப்பிட்டோ, புத்தகம் கேட்டோ எழுதுகிறார்கள். இன்று ஒளிப்பாம்புகள் எங்கே கிடைக்கும் என்று ஒரு நண்பர் மின்னஞ்சலில் கேட்டிருந்தார்.


மொத்தமாக இதுவரை எழுதியவற்றைத் தொகுத்து ஒரே புத்தகமாக்கலாம் என்று தோன்றியது. ஆனால் பல கதைகள் என் கைவசம் இல்லை. குறிப்பாக குமுதத்தில், ஜங்ஷனில், குமுதம் காலத்துக்குப் பிறகு பிற பத்திரிகைகளில் எழுதியவற்றை சேகரிக்காது இருந்துவிட்டேன்.


காந்தி சிலைக் கதைகள் வரை இருக்கிறது. அதன்பின் எழுதிய பல கதைகளை எங்கே போய்த் தேடுவது என்று தெரியவில்லை. பேப்பரில் எழுதிய காலம்.


நண்பர்கள் யாரிடமாவது அவர்களது சேகரத்தில் எனது சிறுகதைகள் ஏதேனும் (புத்தகமாக வந்தவை போக மற்றவை) இருக்குமானால் அனுப்பி உதவ வேண்டுகிறேன். இந்த உதவி செய்வோருக்கு நூல் வரும்போது அன்பின் அடையாளமாக ஒரு பிரதி அனுப்பப் பதிப்பாளர் தயாராக இருக்கிறார்.


இதனுடன் கூட தற்சமயம் பதிப்பில் இல்லாத புவியிலோரிடம், அலை உறங்கும் கடல், மெல்லினம் ஆகிய நாவல்களும் ஜனவரியில் மறு பிரசுரம் காண்கின்றன என்ற தகவல் ஒருவேளை ஒரு சிலருக்கு மகிழ்ச்சியும் வேறு சிலபலருக்குக் கலவரமும் தரலாம்.


Copyright © 2008-2011 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 01, 2014 10:56

காலமும் காந்தியும் கதைகளும்

[காந்தி சிலைக் கதைகள் தொகுப்புக்கு நான் முன்னர் எழுதிய முன்னுரையை இன்று காந்தி டுடே இணையத் தளத்தில் கண்டெடுத்தேன். பிழை திருத்தம் மட்டும் செய்து இங்கு மறு பிரசுரம் செய்கிறேன். சுநீல் கிருஷ்ணனுக்கு நன்றி.]


காந்தியை எனக்குப் பிடிக்கும். அவரை விமரிசிப்பதும், பிடிக்காது என்று சொல்லுவதும் ஒரு நாகரிகம் ஆகியிருக்கும் காலத்தில் இந்த ஒரு வரி கருத்து இலேசான புன்னகை வரவழைக்கலாம். உண்மையில், அத்தகையவர்களைப் பார்க்கும் போது பரிதாபமே ஏற்படுகிறது. என்னளவில் காந்தி என்றால் வழுக்கைத் தலையும் பொக்கை சிரிப்பும் கொண்டு புகைப்படங்களில் சிரிக்கும் கிழவர் அல்லர். அவர் எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கும் சுமார் பதினாறாயிரம் பக்கங்கள்.


சென்னை காந்தி மண்டபத்திலுள்ள சிறு நூலகக் கட்டடத்தினுள்ளே இருக்கிற புத்தகங்களின் மூலம்தான் காந்தி எனக்கு முறைப்படி அறிமுகமானார். முன்பெல்லாம் எழுதுவதற்காக அங்கே போவேன். எழுதாமல் அமர்ந்து படிப்பேன்.


பிரமாதமான மொழிநடை என்று சொல்ல முடியாது. கட்டுரைகளில் கோவை கூட ஆங்காங்கே உதைக்கும். உட்கார்ந்து மெனக்கெட்டு எடிட் செய்தால் மெருகு கூடும் என்று பல இடங்களில் தோன்றும். சில கட்டுரைகள் ரீரைட் செய்ய வேண்டும் என்றே தோன்றச் செய்யும். ஒருவேளை அதெல்லாம் மொழிபெயர்ப்பாளரின் கைங்கர்யமாகக்கூட இருக்கலாம்.


ஆனால் தன்னைத்தானே விதைத்துக்கொண்டு, தானே முளைவிட்டு, முட்டி மோதி மேலெழுந்து வந்து காற்றில் அலையும் ஒரு காட்டுக் கொடி போலத்தான் அவரது சிந்தனைகள் எனக்கு தோற்றமளித்தன . வேரிலிருந்து உச்சாணிக் கொண்டையில் துளிர்த்திருக்கும் கட்டக் கடைசி இலை வரை மருத்துவ குணம் கொண்ட மூலிகைக் கொடி அது.


ஒரு மனிதன் வாழ்நாள் முழுவதும் மானுட குலத்தின் நலனுக்காகவே சிந்தித்து இருக்கிறான் என்பது எப்பேர்பட்ட விஷயம்! ஏன் நம்மால் அதை, அதன் முழுப் பரினாமத்துடன் உணர முடியாமல் போய்விட்டது?


காந்தி ஓர் அரசியல்வாதி இல்லை. நிச்சயம் இல்லை. ஆனால் அவரை விடாப்பிடியாக அப்படியே பார்க்கப் பழகிவிட்ட மக்களுக்கு வேறு எந்த விதத்திலும் சிந்தித்துப் பார்க்க முடியமாலாகிவிட்டது. இது சந்தேகமில்லாமல் துரதிருஷ்டம் தான். அவர் ஒரு பரிபூரணமான சுய சிந்தனையாளர். பூமிக்கு மேலே, ஆகாயத்துக்குக் கீழே இருக்கிற அத்தனை விஷயங்கள் பற்றியும் ஆற அமர உட்கார்ந்து யோசித்திருக்கிறார். தான் யோசித்ததை, கண்டடைந்ததை , துளியும் குறை மிகையின்றி எழுத்திலும் பேச்சிலுமாகப் பதிவு செய்து இருக்கிறார். அவர் எழுதியவை பேசியவை அனைத்தையும் இன்னொரு வேதமாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. குறைந்தபட்சம் பொருட்படுத்திப் படித்துக் கூடப் பார்க்காமல் அவரை விமரிசிப்பவர்களை எண்ணித்தான் பரிதாபப்படுகிறேன்.


அவரது கிராம ராஜ்ஜியம் , சுதேசி பொருளாதாரம் போன்ற பிரயோகங்கள் இன்றைக்குத் தேர்தல் உபகரணங்களாகியிருக்கின்றன .தேவைக்கேற்பப் பயன்படுத்தப்பட்டபின் , ஆணுறை மாதிரி வீசி எறியப்படுகின்றன . உண்மையில் ஓரெல்லை வரை நடைமுறை சாத்தியம் உள்ள யோசனைகளையே அவர் தொடர்ந்து முன்வைத்து வந்து இருக்கிறார். முன் தீர்மானங்கள் ஏதுமின்றி காந்தியை அணுகிப் படித்தால் இது புரியும்.


இந்தக் கதைகளைப் பற்றிச் சொல்ல வந்தேன். கதாநாயகராகவும், துணைப் பாத்திரமாகவும் வெறும் சாட்சியாகவும் வழிப்போக்கராகவும் இன்னபிறவாகவும் இவற்றில் காந்தி வருகிறார். இந்த எல்லா கதைகளின் களனும் சென்னை மெரீனா கடற்கரையிலுள்ள காந்தி சிலையைச் சுற்றிய பகுதியாக அமைந்து இருப்பது தற்செயல் அல்ல. நிலவைக் காட்டி சோறூட்டுவது போல சிலையைக் காட்டி கதை சொல்ல விரும்பியதன் வெளிப்பாடு.


இந்தியாவைப் பொறுத்தவரை காந்தி ஒரு பொதுச் சொத்து. யார் வேண்டுமானாலும் சேதப்படுத்தலாம் என்றாகிவிட்டது. ஒரு மாறுதலுக்கு காந்தி ஜெயந்தி அல்லாத நாளில் கூட அவர் சிலையின் மீது படிந்து கிடக்கிற எச்சங்களைத் துடைத்து சுத்தப்படுத்தலாம் என்று நினைத்தேன், அதனால் இவற்றை எழுதினேன்.


பிரசாரம் என் நோக்கமில்லை . எனக்கு அது முடியவும் முடியாது. ஆனால் நமது வாழ்க்கைக்கு சம்பந்தமில்லாத எது ஒன்று பற்றியும் அவர் சிந்தித்ததில்லை, பேசியதில்லை என்பதை இந்தக் கதைகள் எழுதிய பொழுது தன்னால் வந்து விழுந்த பொருத்தங்கள் எனக்கு நிரூபித்தன. அதாவது, கதைகளைத் தீர்மானித்துவிட்டு நான் காந்தியப் பொருத்தம் தேடவில்லை. மாறாக, எழுதப்படும் எந்த ஒரு வாழ்க்கைச் சம்பவத்திலும் காற்றைப் போல அவரது சிந்தனைகள் மறைபொருளாகக் கலந்திருக்கக் கண்டேன்.


காலத்தால் கொள்ளை கொண்டு போகமுடியாத மிகச் சில அபூர்வமான சிந்தனையாளர்களுள் ஒருவர் அவர்.


இரு வருடங்களுக்கு முன்பு காந்தி சிலைக் கதைகள் எனும் பொதுத் தலைப்பில் இக்கதைகள் குமுதம் ஜங்ஷன் இதழில் வெளியாயின. வெளியான காலத்தில் கடிதங்கள் மூலம் இதனைப் பாராட்டி வரவேற்ற வாசகர்களை நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன். பல நண்பர்கள் அப்போதே இவற்றைத் தொகுத்து நூலாகக் கொண்டுவர வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்கள். இப்பொழுதுதான் அது சாத்தியமாகி இருக்கிறது.


எப்போதும் விமரிசகர்களுக்காக அல்லாமல் , எனக்காகவும் வாசகர்களுக்காகவும் மட்டுமே எழுதுபவன் நான். இதுகாறும் நான் எழுதிய சிறுகதைகளுள் எனக்கு மிகவும் திருப்தி தந்த கதைகள் இவை. அந்தத் திருப்தி வாசிப்பவர்களுக்கும் கிடைக்க வேண்டுமென்பது என் அவா.


[இக்கதைத் தொகுப்பின் மறுபதிப்பு டிசம்பர் 2014ல் மதி நிலையம் வெளியீடாக வரவிருக்கிறது.]


காந்தி சிலைக் கதைகள் – சுநீல் கிருஷ்ணன் மதிப்புரையை இங்கே காணலாம்.


Copyright © 2008-2011 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 01, 2014 06:47

September 24, 2014

பலான கதை – 3.0.1

இந்தக் கதையில் வரும் எழுத்தாளனான ராமு என்கிற சுரேஷ் இந்தக் கதையை எழுதுகிற எழுத்தாளனான ராமு என்கிற சுரேஷின் வீட்டுக் கதவைத் தட்டி, ‘உங்களிடம் ஒரு நிமிடம் பேசலாமா?’ என்று கேட்டான்.


ராமு என்கிற சுரேஷ் ரேஷன் கார்டு வைத்திருக்கும் ஒரு தமிழன் என்பதால், தமிழ் பண்பாட்டுக்கு பங்கம் நேராமல் வாசல் கதவைத் திறந்து, வரு, இரிக்யு என்று உள்ளே அழைத்து உட்கார வைத்து உபசரித்தான். (குடிக்க இன்னும் தண்ணீர் கொடுக்கவில்லை.)


ராமு என்கிற சுரேஷ் வந்ததும் வராததுமாக முகமெங்கும் கோபத்தை நிரப்பிக்கொண்டு, ‘நீங்கள் செய்வது அநியாயம். ஆரம்பித்துவிட்டு மூன்று கந்தாயத்துடன் அப்படியே நிறுத்திவிட்டீர்கள். உங்களுக்கு எப்போதும் இதே வழக்கமாகப் போய்விட்டது. இது என் வாழ்க்கைப் பிரச்னை அல்லவா? அந்தப் பரதேசி கார்சியா மார்க்குவேஸ் ஆயிரத்தித் தொள்ளாயிரத்தி எண்பத்தி இரண்டிலேயே அந்த நாசமாய்ப் போன நோபல் பரிசை வாங்கிக்கொண்டு செத்தே போய்த் தொலைந்துவிட்டான். இன்னும் போராடிக்கொண்டிருக்கும் ஒரு தமிழ் எழுத்தாளனுக்கு நீங்கள் துரோகம் செய்துவிட்டீர்கள்’ என்று பொறுமலுடன் குற்றம் சாட்டினான்.


சில வினாடிகள் அமைதியாக இருந்த இந்தக் கதாசிரியனான ராமு என்கிற சுரேஷ், ‘இது துரோகம் செய்ய நினைத்துச் செய்யப்பட்ட துரோகம் அல்ல. ஆனால் ஒரு துரோகம் நிகழ்ந்துதான் விட்டது. காரணம், வாணி ராணியில் ஒரு கல்யாண சீக்வன்ஸ் ஓடுகிறது’ என்றான்.


தூக்கி வாரிப்போட்டு எழுந்த கதையில் வரும் ராமு என்கிற சுரேஷ், ‘என்ன பேத்துகிறீர்கள்?அந்தக் கல்யாணம் நடக்கப் போவதில்லை, கதிரை அத்தனை அண்டர் எஸ்டிமேட் செய்யாதீர்கள்; அவசியம் அவன் திருமணத்தை நிறுத்திவிடுவான்’ என்று கத்தத் தொடங்கினான்.


என்ன சொல்லி அவனை சமாதானப்படுத்துவது என்று ராமு அல்லது சுரேஷுக்குப் புரியவில்லை. மீண்டும் சில வினாடிகள் யோசித்தான். ‘சரி, உங்கள் கதையை நான் மீண்டும் எழுதத் தொடங்கவேண்டுமென்றால் நீங்கள் உங்கள் பெயரை ராபர்ட் என்று மாற்றிக்கொள்ள வேண்டும்’ என்றான்.


திகைத்துப் போன ராமு அல்லது சுரேஷ், ‘என்னது ராபர்ட்டா?’ என்று மீண்டும் அதையே ஒருமுறை கேட்டான்.


மிகச் சரி. இப்படித்தான் ஒவ்வொரு வரியாக ரிப்பீட் செய்து ஃபுட்டேஜ் சேவை செய்ய வேண்டும். ராபர்ட்டாகப் பெயர் மாற நீங்கள் மிகவும் பொருத்தமானவராகிவிட்டீர்கள் என்றான் ராமு அல்லது சுரேஷ்.


இப்போது ராமு அல்லது சுரேஷ் என்கிற ராபர்ட் வாணி ராணி கல்யாண சீக்வன்ஸில் மும்முரமாகியிருக்கிறான். அது முடிந்த பிறகு கார்சியா மார்க்குவேஸை மண் கவ்வச் செய்ய ஆரம்பிப்பான்.


Copyright © 2008-2011 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 24, 2014 05:18

September 20, 2014

பலான கதை – 03

கதைத் திருட்டு அல்லது அத்தியாயம் மூன்று 


பிரபல எழுத்தாளராகப் பின்னாளில் அறியப்படவிருக்கும் ராமு அல்லது சுரேஷின் சமீபத்திய சிறுகதை (ஒருவேளை இது நாவலாக நீளக்கூடும். தலைப்பு கபீஷின் வால்.) இவ்வாறு ஆரம்பமாகிறது:


பூமி அதிர்ந்தது.


கடலில் அலைகள் மதில்கள்போல் எழுந்து, மனிதனின் ஆசைக்கோட்டை போல் இடிந்து விழுந்தன. எங்களை வாரி வாயில் போட்டுக்கொள்ள வேண்டுவது போல் துரத்திக்கொண்டு ஓடிவந்தன. ஏமாற்றமடைந்த அரக்கனின் ஆத்திரம்போல, அவைகளின் கோஷம் காதைச் செவிடு படுத்திற்று. ஒரு அலை அவளைக் கீழே தள்ளிவிட்டது. வெறிக் கொண்டவள் போல் சிரித்தாள். ஜலத்தின் சிலுசிலுப்பு சதையுள் ஏறுகையில் நெருப்பைப் போல் சுறீலெனப் பொரிந்தது. புயலில் எங்கள் அங்கங்களே பிய்ந்துவிடும் போலிருந்தன.


திடீரென்று இடியோடு இடி மோதி ஒரு மின்னல் வானத்தில் வயிற்றைக் கிழித்தது. இன்னமும் என் கண்முன் நிற்கிறது அம்மின்னல். மறைய மனமில்லாமல் தயங்கிய வெளிச்சத்தில் நான் கண்ட காட்சி! குழுமிய கருமேகங்களும், காற்றில் திரைபோல் எழும்பி, குளவியாக கொட்டும் மணலும், கோபக் கண்போல் சமுத்திரத்தின் சிவப்பும், அலைகளில் சுழிப்பும், அடிபட்ட நாய்போல் காற்றின் ஊளையும், பிணத்தண்டை பெண்கள் போல் ஆடி ஆடி அலைந்து அலைந்து மரங்கள் அழும் கோரமும்…


இத்தனைக்கும் மூலகாரணிபோல் அவள் நிமிர்ந்து நின்றாள். அவள் ஆடை உடலிலிருந்து பிய்ந்துவிடும் போல் பின்புறம் விசிறி விரிந்து, காற்றில் தோகை போல் விறைத்து நின்று படபடத்தது. பிதுங்கிய சிற்பமென அங்க அவயவங்கள் நிமிர்ந்துகொண்டு நின்றன. மின்னலின் வழி, விசும்பு நின்றழிந்த விண்ணுலகத்தவள் போலிருந்தாள். ஜலமேறி அடையாய்க் கனத்த கூந்தல், காற்றின் மிகுதியில் நக்ஷத்திர வால்போல் சீறிற்று. இவ்வியற்கையின் இயக்கத்தில் அவளும் சேர்ந்து இழைந்து புயலுடன் நின்றாள்.


ராமு அல்லது சுரேஷுக்கு மேற்படி பத்தியை எழுதி முடிக்கும்போது கைவிரல்கள் நடுங்கின. உடனே ஓடிச் சென்று ஒரு சிகரெட் பிடித்தால் நன்றாயிருக்கும் என்று தோன்றியது. ஆனால் எழுந்து ஓடினால் எழுத்துவேகம் எதிர்மறையாகிவிடும். இதற்குத்தான் எழுதும்போது அருகில் கணக்கிலடங்கா சிகரெட்டுகளையும் தீக்குச்சிகளையும் வைத்துக்கொள்ளவேண்டும் என்பது. மனத்துக்குள் உதயமாகும் உணர்வுகளையும் காட்சிகளையும் புகைபோட்டுப் பழுக்கவைத்த சொற்களாக வார்த்தெடுத்து பேப்பரில் இறக்குவது ஒரு வேள்வி. ஏனோ ராமு அல்லது சுரேஷுக்கு அது வாய்க்கவில்லை.


அவனது தொழில் வில்லனான காபிரியேல் கார்சியாவின் பெண்டாட்டியானவள் புருஷன் எழுதுவதற்காகத் தனது ரிஸ்ட் வாட்சை அடமானம் வைத்து சிகரெட் பாக்கெட்டுகளை வாங்கி வந்து அடுக்கியிருக்கிறாளாம். பரதேசி ஒரு கடிதம் முழுதும் இதனைச் சொல்லிச் சொல்லிப் புளகாங்கிதம் அடைந்திருக்கிறான். என்ன மானங்கெட்ட பிழைப்பு இது? அடியேய், அவன் கேன்சர் வந்து செத்துத் தொலைக்க வேண்டும் என்பதுதான் உன் விருப்பமா? இனிமேல் செய்யாதே. உன் புருஷன் உலக இலக்கியத்துக்கு இல்லாவிட்டாலும் உன் நெற்றிப் பொட்டுக்காவது அவசியம் தேவைப்படுவான் என்று மார்க்குவேசின் பெண்டாட்டிக்கு ஒரு ரகசியக் கடிதம் அனுப்பிவிட்டு, கதவை மூடிக்கொண்டு தனக்கு ஏன் இப்படியொரு பெண்டாட்டி வாய்க்கவில்லை என்பதை எண்ணி கேவிக் கேவி அழத் தொடங்கினான்.


ராமு அல்லது சுரேஷின் பெண்டாட்டி வேறு எப்படியாக வாய்த்தாள் என்று கேட்பீர்களானால் வாசகர்களே, அவன் இன்னும் திருமணமாகாமல்தான் இருக்கிறான் என்பதை இப்போதே தெரிவித்துவிடுகிறேன். ஓர் எழுத்தாளனாகத் தன்னைக் குறைந்தபட்சம் நான்கு தீபாவளி மலர்களில் பதிவு செய்யாமல் திருமணம் செய்துகொள்வதில்லை என்று ராமு அல்லது சுரேஷ் தீர்மானம் செய்திருந்தான். அவனது இலக்கிய முயற்சி அவன் பத்தாங்கிளாசில் கோட்டடித்ததற்கு மறுநாள் ஆரம்பித்ததை நேயர்கள் அறிவார்கள். அன்று தொடங்கி அவனும் பக்கம் பக்கமாக எழுதித் தீர்த்துக்கொண்டுதான் இருக்கிறான். எழுதியதைப் படித்துப் பார்க்கும்போதெல்லாம் காவியமாகத்தான் தெரிகிறது. என்ன காத்திரம், எத்தனை மணிநேரம் அமர்ந்து எழுதி அடக்கி வைத்த மூத்திரம், நெஞ்சகத்தில் மையம் கொண்ட நிர்மூடச் சமூக ஆத்திரம்!


தோல்வியின் சகல ருசிகளையும் அவன் கடந்த பல சில ஆண்டுகளில் ஆண்டு அனுபவித்திருந்தான். சாதனையாளர்களுக்குத் தோல்வி சகஜம்தான் என்பதை ராமு அல்லது சுரேஷ் அறியாதவனல்லன். ஆனால் ஒரு மாபெரும் வெற்றிக்குப் பிறகு இந்த சனியன்கள் வந்து தொலைத்தால்தான் என்ன?


இதனை ராமு அல்லது சுரேஷ் தனது அம்மாவிடம் சொன்னபோது, ‘முண்டம், நீ என்ன பெரிய சாதன பண்ணிக் கிழிச்சன்னு இப்படிக் கெடந்து குதிக்கற? மொதல்ல ஜட்டிய தோய்ச்சிப் போடுற வழிய பாரு. இனிமே ஒனக்கு ஜாலிம் லோஷன் வாங்கிக் கட்டுப்படியாகாது’ என்றுவிட்டாள்.


சாதனை – சிறு குறிப்பு வரைக.


உண்ணாதிருப்பது. உறங்காதிருப்பது. தலைகீழாக நடப்பது. தண்ணீரில் ஒன்றேமுக்கால் மணிநேரம் மூச்சடைத்து மூழ்கியிருப்பது. பின்னால் ஓடுவது. ஒரு மணி நேரத்தில் ஏழாயிரம் சொற்கள் டைப்படிப்பது. காலால் வரைவது. மயிரைக் கட்டி பல்லவன் பஸ்ஸை இழுப்பது. மார்பில் புல்டோசரை ஓடவிட்டு உயிரோடிருப்பது. அரிசியில் தாஜ்மகால் வரைவது. ஆயிரம் பக்க நாவல் எழுதுவது. அதை ஆறு மாதத்தில் ஆயிரம் காப்பி விற்றுக் காட்டுவது. விற்றதற்கு ராயல்டி வாங்குவது. வந்த செக் பவுன்ஸ் ஆகாதிருப்பது. காபிரியேல் கார்சியாவை நோபல் ஷார்ட் லிஸ்டில் இருந்து தூக்குவது.


வெண்ண. சொந்தமா ஒரு பேரா எழுதுடா மொதல்ல. லீலா லெண்டிங் லைப்ரரிலேருந்து நீ சுட்டுட்டு வந்த ராமாமிருதம் புஸ்தகத்துல நாலு பக்கம் கிழிஞ்சிருந்தப்பவே நெனச்சேன். அவர்தான் அந்தப் பொண்ணுக்கு மொட்டையடிச்சாருன்னா நீ அவருக்கே அடிக்கப் பாக்கறியே தரித்திரம் புடிச்சவனே. தூத்தேறி இதெல்லாம் எங்க உருப்படப் போவுது? எழுதறானாம் பெரிசா.


காபிரியேல் கார்சியாவின் மனைவி அனுப்பிய பதில் கடிதத்தில் மேற்படி வரிகளை ராமு அல்லது சுரேஷ் ஒயிட்னர் வைத்து அவசரமாக மறைத்துக்கொண்டிருந்தபோது அவனது திருத்தாயானவள் கதவோரம் நின்று ரகசியக் கண்ணீர் சிந்திக்கொண்டிருந்தாள்.


(வெற்றி. அடுத்த அத்தியாயமும் வந்துவிடும்.)


Copyright © 2008-2011 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 20, 2014 05:29

September 18, 2014

பலான கதை – 02

கெமிங்வே கையசைத்த செம ஃபிகர் அல்லது அத்தியாயம் இரண்டு


ஆங்கிலம் மட்டும் தெரிந்த எர்னஸ்ட் ஹெமிங்வே, ஆங்கிலேயர்கள் அதிகமில்லாத பிரான்சு தேசத்தின் தலைநகரான பாரிஸில் நடந்துகொண்டிருந்தபோது யாரோ மொட்டை மாடியில் இருந்து உப்பு மூட்டையை அவிழ்த்துக் கொட்டினாற்போல பனி பெய்துகொண்டிருந்ததை ரசிகக் கண்மணியொருவர் புகைப்படமெடுத்துப் போட்டார். புகைப்படமானது பல்வேறு பிரபவ, விபவ வருடங்களுக்குப் பிறகு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுப் பிரசுரமானபோது ராமு அல்லது சுரேஷ் உள்ளிட்ட தமிழ்ச் சமூகமானது புளகாங்கிதமடைந்து அதைப் பலமணி நேரம் பார்த்துக்கொண்டே இருந்தது.


ஆ! எர்னஸ்ட் கெமிங்வே! எப்பேர்ப்பட்ட எழுத்தாளர். படித்த பிறகு நிச்சயமாக அப்படித்தான் தோன்றும். ஆனால் ஓர் எழுத்தாளனைப் படிப்பதற்கு அவன் எழுதியதைப் படிக்கவேண்டுமென்பதே இல்லை. ஒரு புகைப்படம் போதாதா? அதுவும் பிரான்சு நகர வீதியொன்றில் பனி மழையைப் பொருட்படுத்தாது நடந்து செல்லும் எழுத்தாளன். என்னவொரு கம்பீரம். எப்பேர்ப்பட்ட ஆளுமை. உதட்டில் ஒரு சிகரெட்டும் தொங்கிவிட்டால் தீர்ந்தது கதை.


பின்னொரு நாளில் அதே புகைப்படப் படைப்பை வேறொரு பெரிய சைஸ் சிறு பத்திரிகையானது மிம்மீள் பிரசுரம் செய்து ஹெமிங்வேயை காபிரியேல் கார்சியா மார்க்குவேஸ் எவ்வாறு சந்தித்தார் என்றொரு கட்டுரை வெளியிட்டிருந்ததை ராமு அல்லது சுரேஷின் அப்பா புரட்டிப் பார்த்துக்கொண்டிருந்தபோது ராமு அல்லது சுரேஷ் அங்கு இல்லை.


அங்கே இல்லாமல் அவன் எங்கே போனான் என்றுதானே அறிய விரும்புகிறீர்கள்? அதில்தான் இருக்கிறது சஸ்பென்ஸ். (ராமு அல்லது சுரேஷின் அப்பா சிறு பத்திரிகை வாசகரா என்று துணைக்கேள்வி எழுப்பினால் இந்தக் கதைக்கு ஒரு பைபாஸ் சாலை போடவேண்டி வரும். அது வாசிப்பு வேகத்தை மட்டுப்படுத்தும். எனவே அவர் சிறு பத்திரிகை வாசகர் இல்லை என்பதை மட்டும் சொல்லிவிட்டு நாம் ராமு அல்லது சுரேஷைத் தொடர்வதே நல்லது.)


எங்கு விட்டோம்? ஆ. பனிமழை. எர்னஸ்ட் கெமிங்வே பனிமழையில் நனைந்தபடி சாலையில் நடந்துகொண்டிருந்தார். அப்போது அந்தப் பாரிசு நகர வீதியில் அவரைப் போலவே நடந்து போய்க்கொண்டிருந்த மக்கள் கூட்டமானது ‘மேஸ்ட்ரோ.. மேஸ்ட்ரோ..’ என்று கத்திக் கூப்பாடு போடத் தொடங்கியது. ஒரு மாபெரும் மக்கள் கூட்டமே ஒரு எழுத்தாளனை அடையாளம் கண்டு ஆர்ப்பரிக்கவல்லதாயிருந்தது பிரான்சு செய்த புண்ணியம். இதுவே நம்மூர் என்றால் எழுத்தாளனை எவன் மதிப்பான்? பரதேசி. பிச்சக்காரப் பய. பேமானி. சோமாறி. இதெல்லாம் எங்க உருப்படப் போவுது? தரித்திரம் புடிச்ச மூதேவி.


கெமிங்வே தனது முந்தைய ஜென்மத்தில் செய்த புண்ணியத்தின் பலனாகத்தான் பாரிசு நகருக்குச் சென்றிருந்தார். மேற்படி அற்புத சுகமளிக்கும் ரசிகக் கூட்டத்தையும் அதனாலேயே அவர் காண நேரிட்டது. அனைவருக்குமாக அவர் தனது மெல்லிய உதடுகளுக்குள் இருந்து ஒரு புன்னகையை எடுத்து வெளியில் பறக்கவிட்டார். பனித்துளிகள் அதனைச் சுமந்து சென்று சம பங்கு பிரித்து அனைத்து மக்களுக்கும் வினியோகம் செய்தபோது இந்தக் கதையின் கதாநாயகனான ராமு அல்லது சுரேஷின் பிரதம வில்லனான காபிரியேல் கார்சியா மார்க்குவேசுக்கும் அந்தப் பிரசாதம் கிடைத்தது.


காபிரியேல் கார்சியா மார்க்குவேஸ் என்பவன் கொலம்பியா நாட்டைச் சேர்ந்தவனாவான். ஒரு பத்திரிகையாளனாக அங்கே குப்பை கொட்டியது பத்தாமல் பிரான்சுக்கும் வந்து கொட்ட நினைத்திருந்தான். குப்பை கொட்ட வேண்டுமானால் குப்பை சேரவேண்டுமல்லவா? துரதிருஷ்டம் பிடித்த அந்தக் கொலம்பியனிடம் அப்போது அத்தனை குப்பை சேர்ந்திருக்கவில்லை. ஏன், குப்பை சேர்க்க அவனுக்கு அங்கே சொந்தமாகவோ வாடகைக்கோ ஓர் இருப்பிடம் கூட இருக்கவில்லை. எனவே அவன் ஒரு சாலையோர பெஞ்சியில் (பெஞ்சியின் பின்புறம் ஒரு டுலிப் மரம் இருந்திருக்கக்கூடும். அதில் இருந்து பிங்க் நிறத்தில் அழகழகான பூக்கள் கொத்துக் கொத்தாக சாலையெங்கும் அவசியம் உதிர்ந்திருக்கும். அவற்றில் ஒன்றிரண்டு அந்தக் கொலம்பியன் மீதும் விழுந்திருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.) படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தான்.


அடேய் பரதேசி! மாபெரும் படைப்பு வித்தகரான கெமிங்வேவே நடந்து போய்க்கொண்டிருக்கிறார்! உனக்கென்னடா தூக்கம்? எந்திரிடா பேமானி! என்றொரு அமானுஷ்யக் குரல் அவன் செவியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த வினாடி அவன் திடுக்கிட்டுத் துள்ளி எழுந்தான். அந்த இடத்தின் பேரலல் கட்டாகத்தான் “மேஸ்டிரோ.. மேஸ்டிரோ..” என்று பாரிசு நகர ரசிக மக்கள் உரத்த குரல் எழுப்பிக்கொண்டிருந்தார்கள்.


காபிரியேல் கார்சியாவுக்கு உடனே உடலெங்கும் (இந்த இடத்தில் ‘ஒருவித’ என்னும் சொல் அவசியம் என்று உங்களுக்குத் தோன்றினால் அதற்கு காபிரியேலோ அவன் எழக் காரணமாயிருந்த கெமிங்வேவோ பொறுப்பாகமாட்டார்கள்.) மின்சாரம் பாய்ந்த உணர்வு ஏற்பட்டது. பரவச மேலீட்டில் அவனும் “மேஸ்ட்ரோ…” என்று குரலுயர்த்திக் கத்திய கணம் அந்த எதிர்பாராத சம்பவம் நிகழ்ந்தது.


பல்லாயிரம் குரல்களில் தனித்துக் கேட்கும் இந்தக் குரல் யாருடையது? குரலிலேயே ஒரு எதிர்கால எழுத்து மேதை தெரிகிறானே என்று வியந்து போன எர்னஸ்ட் கெமிங்வே, தனது நடைவேகத்தை மட்டுப்படுத்தி திரும்பிப் பார்த்தார். அதே வினாடி காபிரியேல் கார்சியாவை முந்திக்கொண்டு முன்னால் பாய்ந்த ராமு என்கிற சுரேஷ், ‘கிழக்கில் உங்கள் கிளை திறக்கப் பிறந்தவன் நான். என்னை வாழ்த்துங்கள்!’ என்று முகலாய பாணியில் சலாமிட்டு நின்றான்.


கெமிங்வேவுக்கு மிகுந்த சந்தோஷமாகிவிட்டது. தனது இடது கையை உயர்த்தினார். ராமு என்கிற சுரேஷுக்கு அவர் சங்கராசாரியாரைப் போல் ஆசி வழங்கவிருப்பதாகத் தோன்றியது. ஆனால் இல்லை. கெமிங்வே உயர்த்திய இடது கையை மர்லின் மன்றோவைப் போல் இரு அசைப்பு அசைத்தார். போயே விட்டார்.


ராமு என்கிற சுரேஷுக்கு நடந்ததை நம்பவே முடியவில்லை. வெகு நேரம் திகைப்பில் அப்படியே ஆணியடித்தாற்போல் நின்றுவிட்டான். எத்தனை நேரம் நின்றான் என்றால், பனி மழை நின்று வெயிலடிக்கத் தொடங்கும்வரை நின்றான். அவன் சுய உணர்வுக்கு வரவிருந்த சமயத்தில் யாரோ ஒரு மனிதன் அவன் தோளில் கைவைத்தான். ராமு என்கிற சுரேஷ் திரும்பிப் பார்த்தபோது அங்கே அவனது எதிர்கால வில்லனான காபிரியேல் கார்சியா மார்க்குவேஸ் நின்றுகொண்டிருந்தான். அந்தோ, அவனும் ராமு என்கிற சுரேஷுக்காக அத்தனை நேரம் அங்கேயே நின்றிருக்கிறான்! சரி, வில்லன் என்றால் காத்திருக்கும் கொக்காகத்தான் இருந்தாக வேண்டும். வேறு வழியில்லை.


“என்ன வேண்டும்?” என்று ராமு என்கிற சுரேஷ் கேட்டான்.


“நீ எனக்கான ஆசியைப் பறித்தவன். நீ என் எதிரி!” என்று காபிரியேல் கார்சியா குற்றம் சாட்டினான்.


ராமு என்கிற சுரேஷ் அவசரமாக ஒரு கணம் யோசித்தான். (ஒரு கணம் என்பதே குறுகிய நேரம். அதிலும் அவசரமாக யோசிப்பது எப்படி என்று ஒரு கணம் யோசிக்கவேண்டியது வாசகர்களாகிய உங்கள் கடமை.) “போடா முட்டாள். மேஸ்டிரோ கையாட்டியது எனக்குமல்ல உனக்குமல்ல.. நம்மிருவருக்கும் பின்னால் ஒரு செம ஃபிகர் நடந்து போனதை நீ பார்க்கவில்லையா? நான் பார்த்தேன்” என்று சொல்லிவிட்டு ஓடியேவிட்டான்.


காபிரியேல் கார்சியா மார்க்குவேஸுக்குக் கடுங்கோபம் உண்டாகிப் போனது. “மவன டேய்.. செத்தடா.. செத்தடா நீ. ஒன்ன தோக்கடிக்கலன்னா நான் ஒரு அப்பனுக்குப் பொறக்கலடா!” என்று தொண்டை கிழியக் கத்தினான்.


கெமிங்வே நடந்து சென்ற சுவடோ, பனி மழை பொழிந்த சுவடோ அப்போது அங்கே அறவே இல்லை. காபிரியேல் கார்சியாவும் அவன் படுத்திருந்த பெஞ்சும் மட்டும்தான். உதிர்ந்திருந்த டுலிப் பூக்களும் வாடத் தொடங்கியிருந்தன.


(அநேகமாக மூன்றாவது அத்தியாயமும் வரும்)


Copyright © 2008-2011 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 18, 2014 23:53