Pa Raghavan's Blog, page 20
December 31, 2016
ருசியியல் – 05
காலப் பெருவெளியில் கணக்கற்ற ரக சாத்தியங்களை உள்ளடக்கிய சமையற்கலையில் எனக்கு முத்தான மூன்று பணிகள் மட்டும் செவ்வனே செய்ய வரும். அவையாவன:
வெந்நீர் வைத்தல். பால் காய்ச்சுதல். மோர் தயாரித்தல்.
கொஞ்சம் மெனக்கெட்டு அரிசி களைந்து குக்கரில் வைத்துவிட முடியும் என்றே தோன்றுகிறது. ஆனால் ஒரு தம்ளர் அரிசிக்கு மூன்று தம்ளர் தண்ணீரா, இரண்டரைதானா என்பது குழப்பும். உதிர்சாத வகையறாக்களுக்கென்றால் தண்ணீரைச் சற்றுக் குறைத்து வைக்கவேண்டுமென்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் எவ்வளவு குறைத்து?
தவிரவும் அந்தக் குக்கரின் தலைக்கு கனபரிமாணம் சேர்க்கும் விஷயத்தில் எப்போதும் குழப்பமுண்டு. பரிசுத்த ஆவி எழுப்பப்பட்ட பிறகு வெய்ட் போடவேண்டுமா, அதற்கு முன்னாலேவா? இதுவே இட்லியென்றால் தலைக்கனம் கிடையாது. அதற்கென்ன காரணம்? அதுவும் தெரியாது.
வீட்டில் இத்தகு சந்தேகாஸ்பதங்களைக் கேட்டுத் தெளிய எப்போதும் உள்ளுணர்வு தடுத்துக்கொண்டே இருக்கும். துறையைத் தூக்கி நமது தலையில் கிடத்திவிட பெண்குலமானது உலகெங்கும் தயாராயிருக்கும். வம்பா நமக்கு? எனவே, உண்ண மட்டும் அறிந்தவனாகவே உடல் வளர்த்தாகிவிட்டது.
யோசித்துப் பார்த்தால், சமையல் என்பதே ஆண்களின் கலையாகத்தான் காலம்தோறும் இருந்துவந்திருக்கிறது. உலகப் பிரசித்தி பெற்ற சமையற்கலைஞர்கள் அனைவரும் ஆண்கள். மகாபாரதத்தில் பீமன் சமைப்பான். நள சரித்திரத்தில் நளனே சமைப்பான். புராணத்தை விடுங்கள். நாளது தேதியில் ஒரு வெங்கடேஷ் பட், ஒரு தாமு, ஒரு நடராஜன் அளவுக்கு எந்த மகாராணி இங்கு ஆள்கிறார்? நமது பிராந்தியம்தான் என்றில்லை. உலக அளவிலேயே சமையல் என்பது ஆண்களின் கோட்டையாகத்தான் இருக்கிறது. மெக்சிகோவைச் சேர்ந்த ஒராபெஸா, பெருவின் காஸ்டன் அக்யூரியோ, எகிப்தில் வசிக்கிற ஒசாமா எல் சயீத், இங்கிலாந்தின் கார்டன் ரம்ஸே போன்ற மடைக்கலை மன்னர்களெல்லாம் மில்லியனில் சம்பளம் வாங்கும் வல்லிய விற்பன்னர்கள். அட அத்தனை தூரம் ஏன்? நமது திருமணங்கள் எதற்காவது பெண்கள் சமைத்துப் பார்த்திருக்கிறீர்களா? அங்கே அவர்கள் காய்கறி நறுக்குவார்கள். சுற்றுவேலைகள் செய்வார்கள். அடுப்படி ராஜ்ஜியம் ஆண்களுக்கு மட்டும்தான்.
விசேஷ சமையலுக்கு ஆணென்றும் வீட்டுச் சமையலுக்குப் பெண்ணென்றும் விதிக்கப்பட்டதன் பின்னால் சில உளவியல் காரணங்கள் இருக்கின்றன. எடுத்துப் போட்டு விளக்கினால் நாளை முதல் எனது தர்ம பத்தினியானவள் என்னை அதர்ம பட்டினி போட்டுவிடும் அபாயம் உள்ளது. எனவே இங்கிதனை நிறுத்திக்கொள்கிறேன். நமது கதைக்கு வரலாம்.
ஏப்ரன் வாங்கினேன் என்று போன வாரம் சொன்னேன் அல்லவா? அதை ஒருநாள் வீட்டில் மனைவி இல்லாதபோது ரகசியமாக அணிந்து பார்த்தேன். எனக்கென்னமோ அது பனியனைத் திருப்பிப் போட்டுக்கொண்ட மாதிரியே இருந்தது. நிலைக்கண்ணாடியில் பார்த்தபோது பதினான்காம் லூயிக்குப் பைத்தியம் பிடித்துப் பாதி ஆடையைக் கிழித்துவிட்டுக் கொண்டாற்போலவும் தோன்றியது. தவிரவும் கழுத்து, தோள்பட்டைப் பிராந்தியங்களை அது மூடவில்லை. நமக்கு மூக்கு அரித்தாலும் சரி, நெற்றியில் வியர்வை சிந்தினாலும் சரி, உடனே வலக்கரம்தான் மேல் நோக்கி எழும். தோள்பட்டையில் ஒரு தேய். முடிந்தது கதை. அதற்குதவாத ஏப்ரனால் வேறென்ன லாபமிருந்து என்ன பயன்?
சரி, வாங்கியாகிவிட்டது. இனி சிந்திப்பது இம்சை.
ஆனால் சுயமாக சமைக்கிற முடிவில் பின்வாங்கத் தயாரில்லை என்பதால் ஆயத்தங்களில் இறங்கினேன். வாணலி தயார். வெண்ணெய் தயார். பனீர் தயார். தயிர் தயார். அதி ருசியாக ஒரு பனீர் டிக்கா செய்துவிடுவது எனது திட்டம்.
வேறு வழியில்லை. எனது புதிய உணவு முறைக்கு வடவர் சரக்குகள்தாம் ஒத்து வரக்கூடியவை. தனித்தமிழ்த் தயாரிப்புகளில் கார்போஹைட்ரேட் ஆதிக்கம் அதிகம். எனவே மனத்தளவில் தமிழனாகவும் வயிற்றளவில் வடவனாகவும் இருந்தாக வேண்டியது என்னப்பன் இட்டமுடன் என் தலையில் எழுதிய புதிய விதி. பனீர் டிக்கா. பாலக் பனீர். பனீர் மஞ்சூரியன். பனீர் பட்டர் மசாலா. முழுக்கொழுப்பெடுத்தவனின் முக்கிய ஆகாரம் இப்படியானவை.
ஆச்சா? பனீர் டிக்கா. அதைச் செய்வது எப்படி? முன்னதாக ஏழெட்டு சமையல் குறிப்புகளைப் படித்து ஒப்பீட்டாய்வு செய்துவைத்திருந்தேன்.
அதன்படி ஒரு பாத்திரத்தில் தயிரை எடுத்துக்கொண்டேன். மிளகாய்ப் பொடி, தனியாப் பொடி, மஞ்சள் பொடி, சீரகப்பொடி. கொட்டு அதன் தலையில். உப்புப் போடும்போது ஒரு கணம் தயங்கினேன். உப்பின் அளவு தயிரின் அளவுக்கானதா? பனீரின் அளவுக்கானதா? இரண்டுக்கும் சேர்த்தா? எம்பெருமானை வேண்டிக்கொண்டு ஒரு குத்து மதிப்பாக அள்ளிப் போட்டுக் கிளறி வைத்தேன்.
பிறகு பனீரைச் சதுரங்களாக்குதல்.
கத்தியைக் கையில் எடுத்தபோது எங்கிருந்தோ உக்கிரமானதொரு பின்னணி இசை கேட்டது. மானசீகப் பண்பலையின் மான சேத முன்னறிவிப்பா அது? பழகிய சவரக்கத்தியில் கூட நமக்குச் சரியாகச் சிரைக்க வராது. இதுவோ மின்னும் புதுக்கத்தி. வெண்ணை வெட்டியின் கன்னி முயற்சி படுதோல்வி கண்டால் பெரிய அவமானமாகிவிடுமல்லவா?
இஷ்ட தெய்வங்களையெல்லாம் கஷ்ட சகாயத்துக்குக் கூப்பிட்டுக்கொண்டபடிக்கு பனீரை நறுக்கத் தொடங்கினேன். பாதகமில்லை. சதுரமானது சமயத்தில் அறுகோண, எழுகோண வடிவம் கொண்டதே தவிர துண்டுகள் தேறிவிட்டன.
அதைத் தூக்கி தயிர்க் கலவையில் போட்டேன். ஊறட்டும் சரக்கு. ஏறட்டும் மிடுக்கு.
அடுப்பில் தோசைக்கல்லை ஏற்றினேன். சட்டென்று ஒரு குழப்பம் வந்தது. வீட்டில் இரும்பு தோசைக்கல் ஒன்று இருக்கிறது. இண்டாலியத்தில் ஒன்று. நான் ஸ்டிக் ஒன்று. தோசைக்கொன்று, சப்பாத்திக்கொன்று, பழைய மாவென்றால் ஒன்று, புதிதாக அரைத்ததென்றால் மற்றொன்று என்று பெண் தெய்வம் மாற்றி மாற்றிப் பயன்படுத்துவதைப் பார்த்திருக்கிறேன். என் பனீருக்கு கதிமோட்சம் தரவல்லது இதில் எது?
தெரியவில்லை. இனி யோசித்துப் பயனுமில்லை. கல்லில் கொஞ்சம் வெண்ணெய் விட்டு இளக்கி, தயிரில் தோய்த்த பன்னீர்த் துண்டுகள் நாலை எடுத்து அதில் வைத்தேன். ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிப் போடும் முயற்சியில் ஈடுபட ஆரம்பித்தபோதுதான் சதிதர்மிணியின் அசரீரிக் குரல் ஒலித்தது. பனீர் டிக்காவுக்கு தோசைக்கல் சரிப்படாது. அதை அவனில் வைத்து க்ரில் செய்வதே சிறப்பு.
இந்த மைக்ரோவேவ் சனியனில் எனக்கு வெந்நீர் வைக்க மட்டும்தான் தெரியும். க்ரில் என்றால் பால்கனியில் வைப்பது என்றும் தெரியும். பனீர் டிக்காவை க்ரில் செய்வது என்றால் என்ன?
ஒரு மாதிரி ஆகிவிட்டது. பாதி முயற்சியில் புறமுதுகிடவும் விருப்பமில்லை. சரி போ, இன்றெனக்கு என்ன வருகிறதோ அதுதான் பனீர் டிக்கா.
ஒரு தீவிரவாதியின் உக்கிரத்துடன் அத்தனைத் துண்டுகளையும் அடுத்தடுத்து தோசைக்கல்லில் சுட்டுத் தீர்த்தேன். தயிரில் ஊறிய பனீர், அந்த தோசைக்கல்லை சர்வநாசமாக்கியிருந்தது. சுரண்டி எடுக்கப் பலமணிநேரம் பிடிக்கக்கூடும். அதனாலென்ன? நான் முக்கால்வாசி ஜெயித்திருந்தேன்.
பிறகு வெங்காயம் குடைமிளகாய் வதக்கல்கள். தக்காளி வரிசைகளில் அவற்றை இடைசொருகி, பனீர்த் துண்டுகளின்மீது அலங்கரித்து, பல்குத்தும் குச்சியால் உச்சந்தலையில் ஓங்கி ஒரு குத்து. முடிந்தது மாபெரும் கலை முயற்சி.
அன்றெனக்குப் புரிந்தது. அடிப்படைகூடத் தெரியாதவன் என்றாலும் ஓர் ஆண் சமைக்கப் புகுந்தால் தனி ருசியொன்று தன்னால் சேரும்.
அந்த பனீர் டிக்கா உண்மையிலேயே நன்றாக இருந்ததாக என் மனைவி சொன்னார். ஒரே கிளுகிளுப்பாகிவிட்டது. அன்றெல்லாம் வெங்கடேஷ் பட்டைப் புறமுதுகிடச் செய்ய வேறென்னென்ன செய்யலாம் என்று திட்டமிட்டுக்கொண்டிருந்தேன்.
என்ன ஒன்று, இத்தனை களேபரத்தில், எடுத்து வைத்த ஏப்ரனைத்தான் மாட்டிக்கொள்ள மறந்துவிட்டிருந்தேன்.
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
December 29, 2016
பொலிக! பொலிக!
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
December 26, 2016
இந்த வருடம் என்ன செய்தேன்?
பல இம்சைகளின் மொத்தக் குத்தகை ஆண்டாக இருப்பினும் இந்த வருஷம் சில உருப்படியான காரியங்களைச் செய்திருக்கிறேன் என்னும் திருப்தி இருக்கிறது.
பல்லாண்டுக் கால உடலெடைப் பிரச்னைக்கு ஒரு தீர்வு கண்டேன். பேலியோ குழும நண்பர்கள் உதவியால் 111 கிலோவாக இருந்த எனது எடை நான்கு மாதங்களில் 88க்கு வந்து சேர்ந்திருக்கிறது. இந்தப் புதிய உணவு முறை மாற்றம் மிகுந்த உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் தந்திருக்கிறது. மதில் மீதிருந்த சர்க்கரை அளவு, உச்சத்தைத் தொடப் பார்த்த ரத்தக்கொதிப்பளவு இரண்டும் சீராகி பரம ஆரோக்கியமாக உள்ளேன். என்னைப் பொறுத்தவரை இது ஒரு மகத்தான சாதனை.
பல நாள் கனவான காரோட்டக் கற்பது இவ்வருடம் சாத்தியமாகி, ஒரு கார் வாங்கினேன். ஆனால் வாங்கியதில் இருந்து கடும் வேலை நெருக்கடி இருந்தபடியால் பெரிதாக ஓட்டத் தொடங்கியபாடில்லை. ஜனவரிக்குப் பிறகு மெதுவேக வண்டியோட்டற் கலையில் ஒரு மைக்கல் ஷூமேக்கராகிவிட முடிவு செய்திருக்கிறேன்.
கிண்டிலில் வாசிக்கும் வழக்கம் வந்து, முன்னைக்காட்டிலும் அதிகம் படிக்கத் தொடங்கியிருக்கிறேன். இவ்வருடம் சுமார் எழுபது புத்தகங்கள் படித்திருப்பேன் என்று நினைக்கிறேன். இது தவிர, சென்ற வருடம் தொடங்கிய பஷீர் வாசிப்பை முழுதாக முடித்து, மகாத்மா காந்தி நூல் வரிசையில் ஆறு முடித்திருக்கிறேன். சென்ற புத்தகக் கண்காட்சியில் வாங்கிய மொழிபெயர்ப்பு நூல்கள் அனைத்தும் மிகப்பெரிய ஏமாற்றமளித்தன. முரகாமி, ஓரான் பாமுக்கையெல்லாம் தமிழில் படிப்பது கொலைக்கொடூரம். இனி இத்தகு பரதேசிப் புண்யாத்மாக்களை ஆங்கிலத்தில் மட்டுமே வாசிப்பதென முடிவு செய்திருக்கிறேன். நமது ஆங்கில ஞானம் குற்றம் குறைகளைக் கூடியவரை மறைத்து வைக்கும். அதனால் மீண்டும் ரத்தக்கொதிப்பு உண்டாகாமல் இருக்கும்.
2013 ஜனவரியில் ஆரம்பித்த வாணி ராணி ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. நண்பர்கள் ஓ.என். ரத்னம் (இயக்குநர்), குமரேசன் (திரைக்கதை ஆசிரியர்) இருவருடனும் தொடக்கம் முதலே ஒத்த அலைவரிசை வாய்த்துவிட்டபடியால் வேலையானது வெண்ணெய் தடவிய வாழைப்பழமாகப் போகிறது. ஆயிரத்தி இருநூறு எபிசோடுகளைத் தொட்டுக் கடக்கும் ஒரு சீரியலுக்கு ஒரு எபிசோட் விடாமல் வசனம் எழுதிய ஒரே தமிழ் எழுத்தாளன் அநேகமாக நானாக இருப்பேன். ராடனுக்கு நன்றி.
நிறையப் படிக்க வேண்டியிருந்ததாலும் கொஞ்சம் உடம்பைக் கவனிக்கவேண்டியிருந்ததாலும் மூன்றாண்டுகளாக எழுதிக்கொண்டிருந்த கல்யாணப் பரிசை இந்த ஆண்டு விட்டேன். விட்டதனால் நிறையப் படித்தேன். உடம்பையும் குறைத்தேன்.
தமிழகப் பொதுத்தேர்தல் சமயம் தினமலரில் எழுதிய ‘பொன்னான வாக்கு’ மிகப்பெரிய அளவில் பேரெடுத்துக் கொடுத்த பத்தி. வண்டியை சிக்னலில் நிறுத்தினால்கூட ‘சார் நீங்கதானே தினமலர்ல எழுதறவரு?’ என்று கேட்க பக்கத்து பைக்கில் நல்லவர்கள் இருந்தார்கள். பல அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் தினசரி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அன்றன்றைய கட்டுரையைப் பற்றிப் பேசியது, சண்டை போட்டது, விவாதித்தது எல்லாம் சுவாரசியமான அனுபவம். முன்பு நிலமெல்லாம் ரத்தம் எழுதிக்கொண்டிருந்தபோது இப்படி நேர்ந்தது. மீண்டும் இப்போது.
ஆண்டிறுதியில் தி இந்துவில் ஆரம்பித்திருக்கும் ருசியியல் இதே அனுபவத்தை வேறு தளத்தில் வழங்கத் தொடங்கியிருக்கிறது. சென்ற ஆண்டு எந்தப் பத்திரிகைத் தொடரும் எழுதவில்லை. இந்த வருடம் இந்த இரண்டு. என்னை ஊசி வைத்துக் குத்தாத குறையாக இத்தொடர்களை எழுத வைத்தவர் என் மனைவி. இம்மாதம் எழுதி முடித்த ஐ.எஸ் பற்றிய புத்தகத்துக்கும் தூண்டுகோல் அவரே. அடுத்தடுத்த இரு நூல்களுக்குத் திட்டமும் செயல்திட்டமும் தயார். விரைவில் ஆரம்பித்துவிடுவேன். இந்த மாதிரியெல்லாம் மனைவி அமைய நீங்கள் அடுத்த ஜென்மத்தில் பாராகவனாகப் பிறப்பது தவிர வேறு வழியில்லை.
இந்த வருடம் படங்கள் ஏதும் பார்க்கவில்லை. கடந்த சில வருடங்களாகவே படம் பார்க்கும் வழக்கம் குறைந்து வருகிறது. நேரமில்லை என்பது எளிய காரணம். விருப்பமில்லாது போகிறதோ என்று இப்போது எண்ணிப் பார்க்கிறேன். அப்படியே பார்க்க உட்காருகிற படங்களைக் கூட பத்திருபது நிமிடங்களுக்குமேல் பார்க்க முடிவதில்லை. இருப்பினும் இந்த வருடம் இரண்டு படங்களுக்கு ஸ்கிரிப்ட் எழுதி வைத்தேன். இதெல்லாம் வருமா என்று தெரியாது. எழுதி முடித்தேன் என்பதுதான் எனக்கு முக்கியம்.
தினசரி வேலைகளை முடித்துவிட்டுப் படுக்கப் போகிறபோது ஒரு பாசுரம் என்ற கணக்கில் திருமங்கை ஆழ்வாரைத் தொடர்ந்து படித்தேன். ஒவ்வொரு வாசிப்பிலும் புதுப்புது தரிசனங்களைக் கொடுத்துக்கொண்டே இருக்கிறார் இந்தப் பிரகஸ்பதி. தமிழ்க் கவிஞர்களுள் ஒரு மாபெரும் சாகசதாரியென மங்கை மன்னனைச் சொல்வேன். (என்னளவில் அவர் கவிஞர்தாம். புலவரல்லர்.) மொத்தமாக மனப்பாடமாகிவிடாதா என அவ்வப்போது ஏக்கம் வரும். ஆனால் சிறு வயதில் இருந்த மனப்பாட சக்தி இப்போது போய்விட்டது.
அடுத்த ஆண்டு என்னை இன்னும் சற்று செப்பம் செய்துகொள்ளச் சில திட்டங்கள் கைவசமுள்ளன. எப்போதும் என் திட்டங்களைப் பொறுமையாகப் பரிசீலித்து, எடிட் செய்து, தேவைப்பட்டால் ரீரைட் செய்யும் எம்பெருமான் இப்போதும் செதுக்கிச் சீரமைப்பான். என்னை கவனித்த நேரம் போகத்தான் அவன் உலகைக் கவனிக்கிறான் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.
நண்பர்கள் யாவருக்கும் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகள். ஜனவரி 6ம் தேதி தொடங்கும் சென்னை புத்தகக் காட்சியில் சந்திப்போம். இந்த வருடம் நாலைந்து நாள்களாவது கண்டிப்பாக அங்கு செல்லவேண்டும் என்று நினைத்திருக்கிறேன். பார்க்கலாம்.
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
December 24, 2016
ருசியியல் – 04
எனக்கு தேக திடகாத்திரம் காட்டுவதில் இஷ்டம் கிடையாது. ஓடுவது, பஸ்கி எடுப்பது, கனம் தூக்குவது, ஜிம்முக்குச் சென்று ஜம்மென்று ஆவதெல்லாம் சொகுசு சௌகரியங்களுக்கு ஹானியுண்டாக்கும். அவை எப்பவுமே நமக்கு ஆகாத காரியம். உட்கார்ந்த இடத்தில் உலகத்தை ஜெயிக்க என்னென்ன பிரயத்தனங்கள் உண்டோ அதைச் செய்து பார்ப்பதில் ஆட்சேபணை இல்லை. எனது அதிகபட்ச ஆரோக்கியம் சார்ந்த எதிர்பார்ப்பு என்னவென்றால், குனிந்தால் நிமிர்ந்தால் மூச்சுப் பிடித்துக்கொள்ளாமல் இருந்தால் போதும் என்பதுதான்!
ஆ, மூச்சுப்பிடிப்பு! அது தர்ம பத்தினி இனக்குழுவைச் சேர்ந்ததொரு காத்திர இம்சை. வந்துவிட்டால் லேசில் போகாது. உருண்டு திரண்ட உடற்பந்தில் அந்து எந்தப் பிராந்தியத்தைத் தேர்ந்தெடுக்கும் என்றும் சொல்ல முடியாது. நான் உரமிட்டு வளர்த்த சதைப்பற்று மிக்க உடலானது, விதியேபோல் அடிக்கடி அப்பிடிப்புக்குத் தன்னை ஒப்புக் கொடுத்துவிடுவது வழக்கம். கடந்த சில வருஷங்களில் இந்த மூச்சுப் பிடிப்புச் சங்கடமானது ஒரு தீவிரவாத மனோபாவத்துடன் அடிக்கடி என்னை உபத்திரவப்படுத்திக்கொண்டிருந்தது. எதைக் குறைத்தால் இதைச் சரிக்கட்டலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தபோதுதான் எடை குறைத்தால் சரியாகும் என்று அசரீரி கேட்டது.
அங்கும் சிக்கல். நம்மால் ஓடியாட முடியாது. டயட் இருந்து குறைக்கலாம் என்றால் பசி தாங்கும் வல்லமை கிடையாது. நாவையும் நாபிக்கமலத்தையும் காயப்போட்டு வாழ்வதைக் காட்டிலும் ஜீவன்முக்தி அடைந்துவிடலாம். இது வெறும் பலவீனங்களாலான ஜீவாத்மா. பழிவாங்குதல் தகாது.
வேறென்ன செய்யலாம் என்ற தீவிர ஆராய்ச்சியில் இருந்தபோது சில உத்தமோத்தமர்கள் ஒரு சூட்சுமத்தைச் சொல்லிக்கொடுத்தார்கள். உடல் இயக்கத்துக்குத் தேவையான சக்தி என்பதை இரு வழிகளில் உற்பத்தி செய்யலாம். முதலாவது மாவுச்சத்து மூலம். அது நாம் எப்போதும் சாப்பிடும் அரிசி பருப்பு வகையறா. இரண்டாவது கொழுப்பு மூலம். இது பலான பலான வகையறா. மாவு ஜாதி அரிசி பருப்புகளைக் குறைத்து, கொழுப்பு ஜாதி பால் பொருள்கள் மற்றும் கொட்டை வகையறாக்களை உணவாக்கிக் கொள்வதன்மூலம் எடையைக் குறைத்துவிட முடியும்.
இத்தகவல் மிகுந்த கிளுகிளுப்பைக் கொடுத்தது. ஏனென்றால் பகவான் கிருஷ்ண பரமாத்மாவுக்கு அப்புறம் சீரார் தயிர் கடைந்து, மோரார் குடமுருட்டி, ஆராத வெண்ணெய் விழுங்குவதென்றால் நமக்கு அல்வா உண்பது போல. எனவே முயற்சி செய்து பார்த்துவிடலாமே?
உடலியக்கத்துக்கான மொத்த சக்தியில் எழுபது சதவீதத்தைக் கொழுப்பில் இருந்து பெறுவது. ஒரு இருபத்தி ஐந்து சதத்தைப் புரதத்தில் இருந்து கபளீகரம் செய்வது. (இது கொஞ்சம் பேஜார். தாவர ஜீவஜந்துக்களுக்கு எத்தனை பரதம் ஆடினாலும் புரதம் கிட்டுவது கடினம். நிறைய மெனக்கெட வேணும்.) ஒரு ஐந்து சதம் போனால் போகிறது, மாவுப் பொருள் வழிச் சக்தி.
இதுவே அசைவ உணவாளிகளென்றால் மேற்படி ஐந்து சத மாவுச் சத்து கூட இல்லாமல் மொத்தத்தையுமே கொழுப்பு மற்றும் புரதத்திலிருந்து எடுத்து விட முடியும். நமக்குப் பிராப்தம் அப்படி இல்லையே? விளைகிற எந்தக் காய்கறியைத் தொட்டாலும் அதில் கார்போஹைட்ரேட் உண்டு. காதற்ற ஊசிகூடக் கடைவழிக்கு வரும். ஆனால் ‘கார்ப்’பற்ற காய் எதுவும் கடைத்தெருவுக்கு வராது என்பதுதான் யதார்த்த பதார்த்தம்.
விஷயத்துக்கு வருகிறேன். எடையைக் குறைத்தே தீருவது என்று முடிவு பண்ணியாகிவிட்டது. மேற்படி கொழுப்புப் புரட்சிக்கும் மனத்தளவில் தயாராகி ஒரு மருத்துவசீலரை அணுகினேன். அவர் என் நண்பர். பெயர் புரூனோ. என்னைப் போலவே அகன்று பரந்த தேக சம்பத்து உள்ளவர். பிரமாதமாக ஜோதிடமெல்லாம் பார்ப்பார். காரசாரமாக எழுதுவார். வம்படியாக ஃபேஸ்புக் சண்டைகளில் பங்கு பெறுவார். மட்டுமன்றி, ஓய்ந்த பொழுதுகளில் மூளை, நரம்பு, மூட்டுப் பிராந்தியங்களில் உண்டாகும் வியாதிகளுக்கும் சொஸ்தமளிக்கும் வினோத ரசமஞ்சரி அவர்.
சொல்லும், வைத்தியரே! நான் என்ன செய்யலாம்?
ஒரு பேப்பரை எடுத்தார். மூன்று வரி எழுதினார். பசி கூடாது. சீனி கூடாது. தானியம் கூடாது.
முடிந்தது கதை.
மேலோட்டமாகப் பார்த்தால் ரொம்ப சுலப சாத்தியமாகத் தெரியும். கொஞ்சம் தோண்டித் துருவிப் பார்த்தால் இது பகாசுர வம்சத்தையே கபளீகரம் செய்யக்கூடியது என்பது புரியும்.
பசி கூடாது என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால் சீனி கூடாது என்றால்? இனிப்பான எதுவும் கூடாது என்று அர்த்தம். சீனிதானே கூடாது? வெல்லம் கூடும், கருப்பட்டி கூடும், தேன் கூடும் என்றெல்லாம் சொல்லப்படாது. அதெல்லாம் அபிஷ்டுத்தனம்.
தானியமென்றால் அரிசி தொடங்கி கோதுமை, கம்பு, கேழ்வரகு, சோளம், ஓட்ஸ், க.உ.து.ப. பருப்புகள் வரை எதுவும் கூடாது. இதில் சிறு தானியம் என்று சொல்லப்படுகிற குதிரைவாலி, தினை, சாமை ரகங்களும் விலக்கல்ல.
அட எம்பெருமானே, ஒரு சொகுசு ஜீவாத்மா வேறு எதைத்தான் தின்று உயிர் வாழும்?
டாக்டரான நல்லவர் ஒரு தீவிர அசைவி. நடப்பன, ஊர்வன, பறப்பனவற்றில் செரிப்பன என்னவாக இருந்தாலும் அவருக்குச் சம்மதமே. அவற்றில் தானியமில்லை. சீனி இல்லை. அவை குப்பையுணவும் இல்லை. தவிரவும் பெரும்பாலும் நற்கொழுப்பு. தரமான புரதம். இட்லி மாவு, அடை மாவு தொடங்கி எந்த மாவுச் சத்தும் கிடையாது.
‘என்னைப் பார், எப்படி இளைத்துவிட்டேன்!’ என்று காட்டிக்காட்டி இரும்பூதெய்தினார். பேசியபடியே ஒரு சின்ன டப்பாவில் எடுத்து வந்திருந்த வறுத்த பாதாமை மொக்கிக்கொண்டிருந்தார்.
அவர் இளைத்திருந்தது உண்மையே. அதுவும் நம்ப முடியாத அளவில்.
ஆனால் பாவப்பட்ட பாராகவன் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடுகிறவனல்லவா? அவன் எப்படி ஓடிய ஆட்டையும் பாடிய மாட்டையும் பசித்துத் தின்னுவான்? தவிரவும் எனக்குப் பசிகூடப் பெரிய விஷயமில்லை. உண்ணுவதில் ருசி பெரிய விஷயம்.
உங்களுக்கு ஒரு தயிர்சாதம் எப்படித் தயாரிப்பது என்று தெரியுமா? தயிர் சாதத்துக்குத் தேவை, தயிரல்ல. நன்கு சுண்டக் காய்ச்சிய முழுக் கொழுப்புப் பால் மட்டுமே. பால் சாதம் கலந்து அரை ஸ்பூன் புளிக்காத தயிரை மேலே தெளித்துவிட்டால் போதும். அதுவே சில மணி நேரங்களில் தயிர்சாதமாகிவிடும். புளிக்காத அதிருசித் தயிர் சாதம். மேலுக்கு நீங்கள் வெள்ளரி போடுகிறீர்களோ, கேரட் போடுகிறீர்களோ, மாதுளை தூவுகிறீர்களோ, முந்திரி வறுத்து சொருகுகிறீர்களோ அது உங்களிஷ்டம். என்னைப் போன்ற ரசனையாளி என்றால் ஒரு கை வெண்ணெய் அள்ளிப் போட்டுக் கலக்கத் தோன்றும். தாளிக்கும் கடுகை நெய்யில் தாளித்து, கொஞ்சம் மூடி வைத்திருந்து பிறகு திறந்து உண்டு பாருங்கள். பகவான் கிருஷ்ணரும் பாராகவனும் அவ்வாறு உண்டு வளர்ந்தவர்களே.
எனவே, ருசிசார் சமரசங்களே இல்லாத ஒரு சௌக்கியமான மாற்று உணவைக் கண்டறிந்துவிடுவது என்று முடிவு செய்துகொண்டேன். அதற்கு முதலில் நீ சமைக்கக் கற்க வேண்டுமடா என்றான் என்னப்பன் இருடீகேசன்.
சமையல் என்ற ஒன்றில்லாமல் சாப்பாடு என்ற இன்னொன்று வராது என்ற அளவில் மட்டுமே அதுநாள் வரை நான் அறிந்திருந்தேன். இப்போது நானே சமைப்பதென்றால் நல்லது பொல்லாததற்கு யார் பொறுப்பு?
நானேதானாயிடுக என்றான் நம்பெருமான். விட்டு வைப்பானேன்? முதல் காரியமாக சரவணா ஸ்டோர்ஸுக்குப் போய் ஒரு ஏப்ரன் வாங்கி வந்தேன்.
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
December 21, 2016
IS – புதிய புத்தகம்
அல் காயிதா தொடங்கி மத்தியக் கிழக்கின் அனைத்துப் போராளி இயக்கங்கள், தீவிரவாத இயக்கங்களைப் பற்றியும் எழுதி முடித்து, இனி அங்கே வேறு யாரும் இல்லை என்று நிம்மதிப் பெருமூச்சு விட்ட தருணத்தில் ஐஎஸ் (என்று இன்று அழைக்கப்படுகிற ஐ.எஸ்.ஐ.எஸ்) பிறந்தது.
இராக்கில் ஐஎஸ் கோரத்தாண்டவம் ஆடத் தொடங்கிய 2003ம் ஆண்டு முதல் அந்த இயக்கத்தின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன். அவ்வப்போது சிறு குறிப்புகளாக எழுதி வைப்பேன். ஒரு புத்தகமாக இது வடிவம் பெற இத்தனை ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றன.
இப்போதுகூட இரண்டு பேரின் தொடர் வற்புறுத்தல்கள் இல்லாவிட்டால் இதனை எழுதியிருப்பேனா என்று தெரியவில்லை. ஒருவர், என் மனைவி. இரண்டாமவர் நண்பர் ஹரன் பிரசன்னா.
முதலில் ஒரு பத்திரிகைத் தொடராகவே இதனை எழுத எண்ணினேன். ஆனால் அந்த வடிவம் இதற்குப் பிடிபடவில்லை. ஐஎஸ் ஒரு முகமற்ற அமைப்பு. அல்லது எண்ணிலடங்கா முகங்கள் கொண்ட அமைப்பு. இன்றுவரை இந்த அமைப்பின் உள் கட்டுமானம் பற்றிய சரியான, முழுமையான விவரங்கள் வெளிவரவில்லை. ஒரு தலைமை இருப்பது தெரியுமே தவிர, அவருக்குச் சில கமாண்டர்கள் உதவி புரிவது தெரியுமே தவிர, அதன் நிர்வாக அடுக்குப் புதிர்கள் விடுவிக்கப்படவில்லை. முதன்மைக் கதாபாத்திரங்களாக ஒரு சிலரையேனும் உலவ அனுமதிக்காத ஒன்றைத் தொடராக எழுதுவதில் நடைமுறைச் சிக்கல்கள் அதிகம். தவிரவும் சித்தாந்தப் பின்புலம் ஏதுமற்ற ஒரு வெற்று தடாலடிக் கூட்டத்துக்குக் கதாநாயக அந்தஸ்து தர எனக்கு விருப்பமில்லை. எனவே இப்போது இது நேரடி நூலாக வெளிவருகிறது. அந்த அமைப்பின் மூர்க்க சுபாவமே இந்நூலின் முகமும் மையமும் ஆகும்.
இந்தத் துறையில் என்னை ஒரு நிரந்தர ஆய்வு மாணவனாக்கி, தொடர்ந்து செயல்பட வைத்துக்கொண்டிருக்கும் என் ஆசிரியர் திரு இளங்கோவனை எப்போதும்போல் இப்போதும் நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன்.
சூறைக் காற்று சுழன்றடித்து, பெரும்புயலாக உருக்கொண்ட வர்தா, சென்னை நகரில் ஒரு பேயாட்டம் ஆடிச் சென்ற டிசம்பர் 12ம் தேதி காலை ஒன்பது மணிக்கு இதன் இறுதி வடிவை எழுத ஆரம்பித்தேன். சரியாகப் பத்து தினங்கள். ஒவ்வொரு நாளும் குறைந்தது பதினைந்து மணி நேரம் எழுதி இதனை நிறைவு செய்தேன். இந்நாள்களில் என்னை இன்குபேட்டரில் வைத்த குழந்தையைப் போல் கருதி கவனித்துக்கொண்ட என் மனைவிக்கும் மகளுக்கும் என் நிரந்தர அன்பு.
பா. ராகவன்
22 டிசம்பர் 2016
[புத்தகம், சென்னை புத்தகக் காட்சி சமயத்தில் வெளியாகும். கிழக்கு பதிப்பகம் வெளியிடுகிறது.]
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
December 20, 2016
லா.ச.ரா : அணுவுக்குள் அணு
லாசரா எனக்கு முதல் முதலில் அறிமுகமானபோது நான் விவேக் ரூபலாவின் கொலைவெறி ரசிகனாக இருந்தேன். பத்தாம் வகுப்பு முடித்திருந்த நேரம். எங்கள் பேட்டையில் அப்போது இருந்த லீலா லெண்டிங் லைப்ரரியில் தினமும் ஒரு கிரைம் நாவலை எடுத்துப் படிப்பது என்பதை ஒரு சமூகக் கடமையாக நினைத்தேன். சுஜாதாவெல்லாம் என்னைக் கவரவில்லை. ராஜேஷ்குமார்தான். உலகின் ஒரே உன்னத எழுத்து என்றால் அது அவரது க்ரைம் நாவல்தான். அத்தகு ரத்த தினம் ஒன்றில் எங்கள் குடும்ப நண்பர் கவிஞர் நா.சீ. வரதராஜன், ‘நீ நிறைய படிக்கறியாமே? லாசரா படிச்சிருக்கியா?’ என்று கேட்டார்.
‘ராஜேஷ்குமார் மாதிரி சூப்பரா எழுதுவாரா சார்?’
அவர் பதில் சொல்லவில்லை. மாறாக, பைண்ட் செய்யப்பட்ட பழைய புத்தகம் ஒன்றை எடுத்துக் கொடுத்து, ‘முடிஞ்சா படிச்சிப் பாரு. புரியலன்னா கவலப்படாத. அப்பறமா புரியும்’ என்று சொன்னார். இந்த அறிமுகமே எனக்கு திகிலாக இருந்தது. சரி, ராஜேஷ்குமாரைவிடப் பெரிய ஆள் போலிருக்கிறது என்று எடுத்து வந்து புரட்ட ஆரம்பித்தேன். அது ஜனனி சிறுகதைத் தொகுப்பின் முதல் பதிப்பு. தடிதடியான தாள்கள். பழுப்பேறி இருந்தது. முதல் பக்கத்தில் லாசராவின் ஆட்டோகிராஃப் இருந்தது. அந்தக் கையெழுத்து எனக்குப் பிடித்தது. இஸ்திரி செய்த அங்கவஸ்திரத்தைக் கொடியில் போட்ட மாதிரி எழுத்து.
ஆனால் கையெழுத்து கவர்ந்த அளவுக்குக் கதை கவரவில்லை. முதல் சிறுகதையின் முதல் பத்தியிலேயே நான் காலி. அணுவுக்குள் அணுவாம் பரமாணுவுக்குள் எனக்கு அப்போது நுழையத் துப்பில்லை.
ஆனால் நான் லாசராவின் புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு திரிந்ததைக் கண்ட ஒரு சிலர் என்னை ஒரு மாதிரி பார்க்க ஆரம்பித்தர்கள். அந்த லுக் எனக்குப் பிடித்தது. புரியாவிட்டாலும் இந்த ஆள் நமக்கு உதவுவார் என்று தோன்றியது.
இதே மாதிரி ரகத்தில் வேறு யார் யாரெல்லாம் உண்டு என்று எனக்குத் தெரிந்த மாபெரும் இலக்கிய ஏஜெண்டான லீலா லெண்டிங் லைப்ரரியின் உரிமையாளர் சாமியப்பனிடம் கேட்டபோது அவர் அம்மா வந்தாளை எடுத்துக் கொடுத்தார்.
பகல் பதினொரு மணிக்கு அதைப் படிக்க ஆரம்பித்து மூன்று மணிக்கு முடித்தது முதல் எனக்கு நிலைகொள்ளாமல் போய்விட்டது. அந்தக் கதை என்னவோ செய்தது. இரவு தூக்கம் வரவில்லை. மறுநாள் மீண்டும் படித்தேன். மேலும் சிலது புரிவது போலிருந்தது. மூன்றாம் நாள் மறுபடியும். முற்றிலும் பிடிபட்டு கிறுகிறுத்துவிட்டது.
பிசாசு அடித்த மாதிரி அது முதல் ஜானகிராமனின் அத்தனை நாவல்களையும் தேடிப் பிடித்து மூன்று மாதங்களில் படித்துத் தீர்த்தேன். அதன் பிறகுதான் மீண்டும் லாசராவுக்கு வந்தேன்.
அணுவுக்குள் அணு.
அப்போதும் எனக்கு ஜனனி பிடிபடவில்லை. ஆனால் த்வனி பிடித்தது. கதை புரிதலைவிட இம்முறை மொழியை ரசிக்க ஆரம்பித்தேன். கண்ணாடியில் பிம்பம் விழும் த்வனிகூட எனக்குக் கேட்கிறது என்னும் வரியை நாளெல்லாம் நினைத்து வியந்துகொண்டிருந்தேன். லாசராவின் பெண்களையும் ஜானகிராமனின் பெண்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும் வழக்கம் உண்டானது. என்னால் ஜானகிராமன் காட்டிய பெண்களை சுலபமாகத் திருட்டுக்காதல் செய்ய முடிந்ததைப் போல ராமாமிருதம் சுட்டிய பெண்களை நெருங்க முடியவில்லை. அது பயமில்லை. மிரட்சி. சுநாதனி போன்ற ஒரு பெண்ணை வாழ்வில் என்றேனும் சந்திக்க நேர்ந்தால் விழுந்து சேவித்துவிடுவேன் என்று தோன்றியது.
சுமார் பத்து முறையாவது திரும்பத் திரும்பப் படித்து அந்தத் தொகுப்பை ஒருவாறு உள்வாங்கியபிறகு ஒரு நாள் லாசராவுக்கு ஒரு போஸ்ட் கார்ட் போட்டேன். அப்போது அவர் அம்பத்தூர் ஞானமூர்த்தி நகரில் இருந்தார். ‘எனக்குப் புரியவில்லை; ஆனால் படிக்காமல் இருக்கமுடியவில்லை’ என்பதுதான் அந்தக் கடிதத்தின் சாரம். மிகவும் மொக்கையான மொழியில் இதைச் சுற்றி வளைத்துத் தெரிவித்திருந்தேன். அவரிடமிருந்து நாலு நாளில் பதில் கார்ட் வந்தது.
சிரஞ்சீவி ராகவனுக்கு, ஆசிகள் என்று ஆரம்பித்து அஞ்சலட்டையின் ஒன்றரைப் பக்கத்திலும் இடைவெளியின்றி எழுதியிருந்தார். அதே கையெழுத்து. அதே அழகு. அதில் ஒருவரி எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. எல்லாம் புரிந்தேதான் தீரவேண்டுமென்று என்ன கட்டாயம்? என்றாவது புரியட்டும். அவசரப்பட வேண்டாம். இறுதிவரை புரியாவிட்டாலும் நஷ்டமில்லை.
இது என்னைச் சீண்டியது. இந்த மனிதரைப் புரிந்துகொள்ளாமல் அடுத்த வேலை இல்லை என்று முடிவு செய்து மீண்டும் மீண்டும் வாசிக்கத் தொடங்கினேன். அவரது மாய மொழியின் அடர்ந்த வலைப்பின்னலைக் களைந்து கதையின் அந்தராத்மாவைத் தொடுவதுதான் அங்கே எனக்கிருந்த ஒரே ட்ராப். மொழி போதையிலேயே திளைத்து உள்ளே போகாதிருந்ததுதான் நான் செய்த தவறு. அதைப் புரிந்துகொண்ட மறுகணமே லாசராவின் விஸ்வரூப தரிசனம் எனக்குக் கிடைக்கத் தொடங்கிவிட்டது.
தமிழ் சமூகத்தில் அப்போதுதான் குடும்பம் என்னும் அமைப்பு ஆங்காங்கே சிதைய ஆரம்பித்திருந்தது. தனிக்குடித்தனத் தனியாவர்த்தனங்கள் பரவலாக அரங்கேறத் தொடங்கியிருந்தன. லாசராவின் கதைகள் எனக்குக் குடும்பத்தின் மீதான பிரேமையை உருவாக்கியளித்தன. உறவுக்கார மகாஜனங்களின் குற்றம் குறைகளையும் ரசிக்கப் பழகினேன். மனிதன் என்பவன்தான் யார்? ஏராளமான பிசிறுகளின் நேர்த்தியான தொகுப்பே அல்லவா? சிக்குப் பிடித்த தலைமுடியை உட்கார்ந்து எண்ணெய் தடவி வாரி, சல்லாத்துணி போலாக்குவதில் ஒரு லயம் உள்ளது. சிக்கு பிடிக்கத்தான் செய்யும். வாரிக்கொண்டேதான் இருக்கவேண்டும். மொட்டையே சுகமென்றால் சொல்ல ஒன்றுமில்லை. லாசராவின் ஒரு கதாநாயகி பிரமாதமான கூந்தலழகி. இறுதியில் அவள் உயிரைக் கொடுத்த இறைவனுக்கு மயிரைக் கொடுக்கிற தருணம் ஒன்று கதையில் வரும். மழித்தாலும் அது விளைந்துவிடுவதுபோலத்தான் உறவென்னும் நினைவுப் போதம்.
பின்னர் அவருக்கு எத்தனையோ தபாலட்டைகள் அனுப்பியிருக்கிறேன். அவரும் சளைக்காமல் பதில் போடுவார். கதைகள் மீதான எனது புரிதல் அளவு உயர்ந்து வருவதை ஒரு கடிதத்தில் பாராட்டியிருந்தார். அவரது சுபமங்களா பேட்டி வெளியானபோது, ‘இதற்குமேல் தாங்காது; உங்களை நேரில் சந்திக்கவேண்டும்’ என்று எழுதினேன். வரச் சொல்லி வீட்டு விலாசத்தைக் குறிப்பிட்டு குரோம்பேட்டையில் இருந்து எப்படி வருவது என்று வழியெல்லாம் விளக்கியிருந்தார்.
அந்த நாளை என்னால் மறக்க முடியாது. முதல் பார்வையில் எனக்கு அவர் ஒரு மகரிஷி போலக் காட்சியளித்தார். கண்ணைச் சுருக்கி என்னைப் பார்த்தார். சரேலென ஒரு புன்னகை. உட்காரச் சொல்லி நிறைய பேசினார். என்ன படிக்கற. அப்பா என்ன பண்றார். மூத்தவனா நீ? கூடப் பொறந்தவா எத்தன பேர். எழுதறியா. ஜாக்கிரதை. படிப்ப கெடுத்துண்டுடாம எழுது. சினிமா பாப்பியா. குறைச்சிக்கோ. ராத்திரி ரொம்ப நேரம் கண்ணு முழிக்காத.
என்னைப் பொறுத்தவரை அவர் மகரிஷிதான். ஆனால் அந்த முதல் சந்திப்பிலேயே என் அப்பாவின் அன்னியோன்னியத்தை அவரிடம் காண முடிந்தது. இது எனக்குப் பெரிய வியப்பை அளித்தது. வாழ்வில் நான் சந்தித்த கொம்பு முளைக்காத முதல் எழுத்தாளர். (அடுத்தவர் அசோகமித்திரன்.)
லாசராவைப் படிக்கத் தொடங்கியபிறகு வெகுகாலம் நான் வேறெந்த எழுத்தாளரையும் ஏறெடுத்துப் பார்க்கவில்லை. மற்ற எதுவுமே வேண்டாம் என்று நினைக்கச் செய்துவிடும் எழுத்து அவருடையது. மொழியின் மீதான அவரது சாகசம் திரும்பத் திரும்ப இங்கு பேசப்பட்டிருக்கிறது. உண்மையில் வாழ்வின்மீது அத்தகு சாகசம் நிகழ்த்தாமல் மொழியில் அது பிரதிபலிக்க வாய்ப்பில்லை.
ஜென் குரு ஒருவர் இறக்கும் தருவாயில் ஆசைப்பட்டு ஓர் இனிப்புப்பண்டம் வாங்கி வரச் சொல்லி உண்டு முடித்த வேளையில் அவரது சீடர்கள் கேட்டிருக்கிறார்கள். ‘குருவே, இறுதியாக ஒரு சொல்லை அளியுங்கள்.’
குரு சொன்னார், ‘அப்பா! என்ன ருசி!’
லாசராவின் எழுத்தில் நான் அடைந்தது அதுதான். வாழ்வின் மீதான பூரண ருசி.
[வலம் – டிசம்பர் 2016 இதழில் வெளியானது]
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
December 19, 2016
ருசியியல் – 03
மதராசப்பட்டணத்தில் புயல் மழைப் புரட்சியெல்லாம் நடக்கும் என்று யாரும் சொப்பனத்தில்கூட நினைத்துப் பார்த்திருக்க முடியாத கடந்த ஜூன் மாதத்திலேயே ஒரு பெரும் புரட்சி இப்புண்ணிய க்ஷேத்திரத்தில் நிகழ்ந்தது. அது புயல் புரட்சியல்ல. எடைப் புரட்சி. அதுவும் ஒரு நபர் புரட்சி. புரட்சியாளர் வேறு யார்? எனது பிராண சிநேகிதன் பாராகவன்தான்.
அன்றைக்கு அவனுக்கு காஷ்மீரி புலாவ் மசக்கை. ஒரு தமிழ்ப் புலவனை காஷ்மீரப் புலவன் எவ்வாறு எதிர்கொள்வான் என்று பார்த்தே விடுவது. கடிக்குக் கடி நெரிபடும் வறுத்த முந்திரிகள். தவிரவும் பொடியாக நறுக்கிப் போட்ட பரவசப் பைனாப்பிள். இங்கே சில உலர்ந்த திராட்சைகள். அங்கே சில மாதுளை உதிரிகள். முற்றிலும் நெய்யில் சமைத்த நேர்த்தியான மதிய உணவு. ஒரு கட்டு கட்டினால் சொர்க்கம் நாலடி தூரத்தில் தட்டுப்படும்.
எனவே போனோம். எனவே சாப்பிட்டோம்.
வெளியே வந்தபோது பாராகவன் தன்னைச் சற்றுக் கனமாக உணர்ந்தான். எப்போதுமே கனபாடிகள்தான். இருந்தாலும் அன்றைக்குச் சற்றுக் கூடுதல் கனவானாகத் தெரிந்தபடியால் எடை பார்க்கலாமா என்று என்னைக் கேட்டான்.
இதெல்லாம் என்ன கெட்ட பழக்கம்? நாம் எடை வளர்ப்பவர்கள். என்றைக்கு எடை பார்ப்பவர்களாக இருந்திருக்கிறோம்?
பரவாயில்லை, இன்றொருநாள் பார்க்கலாம் என்றான். குத்து மதிப்பாக, எண்பத்தைந்துக்கும் தொண்ணூற்றைந்துக்கும் இடைப்பட்ட ஏதோ ஒரு கிலோவில் எடையானது இடைகாட்டி நிற்கும் என்று பட்டது. சரி கேட்டுத் தொலைத்துவிட்டான்; எனவே பார்த்துத் தொலைத்துவிடுவோம் என்று எடை காட்டும் இயந்திரத்தின் மீதேறி நின்றேன். ஒரு ரூபாய் நாணயம் உள்ளே போனதும் அந்தப் பச்சையழகி கண்ணடித்தாள். அடேய், நீ நூற்றுப் பதினொரு கிலோ.
பாராகவனாகப்பட்டவன் உண்மையில் அன்று மிரண்டு போனான். வளர்ச்சி விகிதம் இப்படியெல்லாம் தறிகெட்டுப் போனால் என்னாவது? தவிரவும் அவன் தமிழ்நாட்டு எதிர்காலம். அவனுக்கு என்னவாவது ஒன்றென்றால் ஒரு சமூகமே படுத்துவிடும். சமூகமென்பது அவனோடு சேர்த்து இரண்டரை பேர்தான் என்றாலும் இங்கு படுப்பதுதான் பிரச்னை.
சரி விட்றா பாத்துக்கலாம் என்று சமாளிக்கப் பார்த்தேன். அவன் கேட்கிறபடியாக இல்லை. பத்தாத குறைக்கு அவனது மனைவி என்னமோ ஒரு புதுவித டயட் உள்ளதென்றும், அதில் பட்டினி கிடக்க வேண்டாம் என்றும், இப்போது உண்பதைக் காட்டிலும் இன்னும் ருசியாக உண்ணும் சாத்தியங்கள் உண்டென்றும், மின்னல் வேகத்தில் எடை குறையும் என்றும் சொல்லி வைக்க, அன்று முதல் பாராகவனின் நடவடிக்கைகள் சுத்தமாக மாறிப் போயின.
நாற்பத்தியைந்து வருடங்களாக நான் பார்த்த நல்லவனா அவன்? வெட்கம்! வெட்கம்! அரிசியைத் தொடமாட்டானாம். சர்க்கரையை மறந்துவிட்டானாம். பழங்கள் கிடையாதாம். எண்ணெய் கிடையாதாம். பொழுதுக்குப் பத்திருபது பூரி தின்னக்கூடியவன், இனி கோதுமை தேசத்து ஹன்சிகா மோத்வானியைக் கூட ரசிக்க மாட்டேன் என்று சொன்னபோது எனக்கு நெஞ்சே வெடித்துவிடும் போலிருந்தது.
அரிசி கோதுமை மட்டுமல்ல. அதனையொத்த வேறு எந்த தானியமும் கிடையாது. பருப்புகள் கிடையாது. பாதாம் அல்வா கிடையாது. ஐஸ் க்ரீம் கிடையாது, மைசூர்பா கிடையாது. உருளைக்கிழங்கு போண்டா கிடையாது. சே, மனிதன் எப்படி வாழ்வது?
அவன் ரொம்பத் தீவிரமாகத் தனது புதிய டயட்டைப் பற்றி என்னிடம் விளக்கத் தொடங்கினான். அதில் எனக்குப் புரிந்ததைப் பற்றி அடுத்த வாரம் எழுதுகிறேன். இப்போது அந்தப் பொடி விவகாரத்தை முடித்துவிடுவோம். இரண்டுவாரக் கடன் பாக்கி.
பாராகவன் தனது புதிய டயட்டைக் கடைப்பிடிக்கத் தொடங்கி சரியாக ஒரு மாத காலம் கழித்து ‘வா நாம் எடை பார்க்கலாம்’ என்று மீண்டும் அந்த ஓட்டல் வாசல் நாசகார இயந்திரத்துக்கு அழைத்துச் சென்றான். என்ன ஆச்சரியம்?! இயந்திரமானது இம்முறை எடை 102 கிலோ என்றது. ஒரு மாதத்தில் ஒன்பது கிலோ எப்படிக் குறையும்? ஒன்று எடை இயந்திரம் பழுதாகியிருக்க வேண்டும். அல்லது பாராகவன் ஒரு யோகியாகி, பட்டினி பயின்றிருக்க வேண்டும்.
இரண்டும் இல்லை. என்னோடு வா என்று வீட்டுக்கு அழைத்துச் சென்று நூறு பாதாம் பருப்புகளை நெய்விட்டு வறுக்கத் தொடங்கினான்.
டேய் கிராதகா! இது முழுக் கொழுப்பல்லவா? இது உன்னைக் கொன்றுவிடுமே! இதையா தினமும் உண்கிறாய்?
பொறு நண்பா.
அந்த பாதாமானது பொன்னிறத்தில் வறுபட்டதும் ஒரு கப்பில் கொட்டினான். உப்பு, மிளகுத் தூள் சேர்த்தான். அதன்பின் ஏதோ ஒரு பொடியை தாராளமாக ஒன்றரை ஸ்பூன் அதன் தலையில் கொட்டி நன்றாகக் கிளற ஆரம்பித்தான். என்ன பொடி அது என்று கேட்டேன்.
இது தனியா பொடி. சிவப்பு மிளகாய், நாலு முந்திரி சேர்த்து மிக்சியில் அரைத்தது என்று சொன்னான். எனக்கு திக்கென்றது. பாதாமுக்கு முந்திரித் தூவலா? எம்பெருமானே!
‘இதோ பார். பாதாம் ருசியானதுதான். அதுவும் நெய்யில் வறுத்த பாதாம் அதிருசி ரகம். உப்பு, மிளகுத் தூள் போதவே போதும்தான். ஆனால் அதற்குமேல் அதில் ஏதோ ஒன்று எனக்குத் தேவைப்பட்டது. அது இதில் இருக்கிறது. சற்று ருசித்துப் பார்’ என்று இரண்டு பாதாம் பருப்புகளை ஸ்பூனில் எடுத்துக் கொடுத்தான். பொடி போட்ட பாதாம்.
மென்று பார்த்தபோது அபாரமாக இருந்தது.
‘ருசி என்பது காண்ட்ராஸ்டில் உள்ளது மகனே! சாலையில் போகிற சிட்டுப் பெண்களைப் பார்! நீல டாப்ஸுக்கு சிவப்பு ஸ்கர்ட் ஏன் அணிகிறார்கள்? அது கண்ணின் ருசிக்கு அளிக்கப்படும் கருணைக்கொடை. கதிரி கோபால்நாத் சாக்ஸஃபோன் கேட்டிருக்கிறாயா? அநியாயத்துக்குத் தவிலைப் பக்கவாத்தியமாக வைப்பார். அது காதுகளின் ருசிக்குக் கிடைக்கும் காண்ட்ராஸ்ட் காராசேவு. அடுப்பில் கொதிக்கும் சாம்பாரை நுகர்ந்துவிட்டு சட்டென்று வண்டியின் பெட்ரோல் டாங்க்கைத் திறந்து அந்த வாசனையை சுவாசித்துப் பார். உன் நாசியின் மிருதுத்தன்மை கூடியது போலத் தோன்றும்.’
எனக்குக் கிறுகிறுத்துவிட்டது. என்ன ஆகிவிட்டது இவனுக்கு?
அவனேதான் சொன்னான். ‘நான் இந்த பாதாமுக்கு என்ன பொடி சேர்க்கலாம் என்று ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தபோதுதான் உள்ளுணர்வு அந்த வாசனையைக் கண்டறிந்தது. அன்று பாய்க்கடை தள்ளுவண்டி சுண்டலில் தூவப்பட்டது தனியா பொடிதான். ஆனால் அதில் நாலு கற்பூரவல்லி இலை சேர்த்து இடிக்கப்பட்டிருந்தது. சின்னக் காஞ்சீபுரத்துப் பொடி ஊத்தப்பம் நினைவிருக்கிறதா? அந்த மிளகாய்ப் பொடியோடு ரெண்டு ஏலக்காயும் எள்ளும் இடித்துச் சேர்த்திருந்தார்கள்.’
ருசியின் அடிப்படை, நூதனம். அது மணத்துக்குச் சரிபாதி இடமளிப்பது. ஆனால் டயட்டில் ருசிக்கு ஏது இடம்?
அவன் சிரித்தான்.
நாக்கைக் காயப்போடுவது டயட்டல்ல நண்பா. உடம்புக்கு ஊறானதைக் கண்டுபிடித்து நகர்த்துவதுதான் டயட் என்று சொன்னான்.
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
ருசியியல் – 02
சென்ற வாரக் கந்தாயத்திலே குறிப்பிட்ட விரோதிக்ருது வருஷத்து ஜனனதாரி பாராகவன், எனக்கு ரொம்ப நெருக்கமான சினேகிதன். எவ்வளவு நெருக்கம் என்று கேட்பீர்களானால், வங்கியில் பணமெடுக்கப் போகிறவர் நிற்கிற வரிசை நெருக்கத்தைக் காட்டிலும் பெரிய நெருக்கடி நெருக்கம். நடை உடை பாவனையில் ஆரம்பித்து, எடை இடை சோதனை வரைக்கும் என்னை அப்படியே காப்பியடிப்பது அவன் வழக்கம். ரொம்ப முக்கியம், அவனும் ஒரு சிறந்த சாப்பாட்டு ராமன்.
ஓர் உதாரணம் சொன்னால் உங்களுக்கு அவனை அல்லது என்னைப் பின் தொடரலாமா வேண்டாமா என்று முடிவு செய்ய உபகாரமாயிருக்கும்.
ஒரு சமயம் அவனும் நானும் உத்தியோக நிமித்தம் காஞ்சீபுரத்துக்கு சிறு பயணமொன்று மேற்கொண்டிருந்தோம். உத்தியோக நிமித்தமென்பது ஒன்றரை மணி நேர வேலையே. எனவே அதை முடித்த பிற்பாடு என்ன செய்யலாம் என்று கேட்டேன். ஒரு நிமிஷம் இரு என்று சொல்லிவிட்டு பாராகவன் யாருக்கோ போன் செய்தான். அப்போதெல்லாம் மொபைல் போன் கிடையாது. செட்டியார் கடை போன் தான். ஒரு ஏழெட்டு நிமிடம் பேசியிருப்பான். கவனமாக என்னிடம் காசு வாங்கி கடைக்காரருக்குக் கொடுத்துவிட்டு, ‘நாம் சில மணி நேரம் இங்கே ஊரைச் சுற்றுவோம். இரவு ஒன்பது மணிக்குக் கிளம்பி சின்ன காஞ்சீபுரத்துக்குப் போகிறோம்’ என்று சொன்னான். பேருக்கொரு தம்பி இருந்தென்ன? ஊருக்கே ஒரு தம்பி உண்டென்றால் அது இங்கேதான்.
மணி அப்போது மதியம் பன்னிரண்டரை என்று நினைவு. ஒன்றிரண்டு மணி நேரம் சுற்றிக்கொண்டே இருந்தோம். களைப்பாகிவிட்டது. டேய், இரவு வரை ஊர் சுற்றிக்கொண்டாவது எதற்காக அல்லது யாருக்காகக் காத்திருக்க வேண்டும்? திருவெஃகா யதோத்காரியைச் சேவிக்கவா? திருமழிசையாழ்வார் அளவுக்கு இல்லாவிட்டாலும் கொஞ்சம் சுமாராக எனக்கும் வெண்பா எழுத வரும். விரும்பிக் கேட்பாரானால் ஆழ்வாரைப் போல் அவர் பேருக்கொன்று எழுத ஆட்சேபணை இல்லை. எனக்காக அவர் பைந்நாகப் பாயைச் சுருட்டிக்கொண்டு நான் நின்றிருந்த அரப்பணச்சேரிக்கே வர முடிந்தால் இன்னும் விசேடமாயிற்றே? கால் வலி கொல்கிறது மகனே.
இல்லை. இது பக்தி சம்பந்தப்பட்டதில்லை. பசி சம்பந்தப்பட்டது என்று பாராகவன் சொன்னான். மாலை வரை நடந்து தீர்த்தால் பசி பிறாண்டும். அதோடு ஒரு சினிமாவுக்குப் போவோம். உள்ளூர் தியேட்டரில் என் தங்கை கல்யாணி ரிலீஸ் ஆகியிருக்கிறது. கொலைப்பசியோடு கூட உணர்ச்சி வேகங்களையும் ஏற்றிக்கொண்டு ஒரு சிறு பயணம் மேற்கொள்வோம். சின்ன காஞ்சீபுரம். உலகின் அதி உன்னத ஊத்தப்பமானது அங்கே உள்ள ஒரு ராயர் மெஸ்ஸில்தான் கிடைக்கும்.
ஆன்மாவுக்கு நெருக்கமானவன் யாருக்கோ போன் செய்து விசாரித்து இப்படியொரு தகவலைச் சொல்லும்போது நான் எப்படி மறுக்க முடியும்? அன்று முழுநாளும் சுற்றித் தீர்த்துவிட்டு சின்னக் காஞ்சீபுரம் ராயர் கடைக்குப் போய்ச் சேர்ந்தபோது மணி எட்டே முக்கால்.
அந்த மெஸ்ஸானது இருட்டிய பிறகுதான் திறக்கும். எட்டு மணிக்கு மேல்தான் கூட்டம் வரும். பதினொரு மணிக்குள் எப்படியும் முன்னூறு நாநூறு ஊத்தப்பங்கள் கபளீகரமாகிவிடும் என்றார்கள்.
இது எனக்கு வியப்பளித்தது. நானறிந்த காஞ்சீபுரமானது, இட்லிக்குப் புகழ்பெற்றது. ரெகுலர் இட்லியல்ல. காஞ்சீபுரம் இட்லி என்பது வைஷ்ணவ ருசி அடையாளங்களுள் ஒன்று. பல நூற்றாண்டு கால வரலாறு கொண்டது. வரதராஜப் பெருமாள் இன்றளவும் தளதளவென மின்னுபுகழ் தேக சம்பத்தோடு இருப்பதற்கு அதுவே காரணம்.
மூன்று தம்ளர் அரிசிக்கு ஒரு தம்ளர் உளுத்தம்பருப்பு. இரண்டையும் சேர்த்தே அரைக்க வேண்டும். கிரைண்டரெல்லாம் அநாசாரம். உரலில் இட்டுத்தான் அரைக்கவேண்டும். அதுவும் அரை நறநறப்புப் பதத்தோடு அரையல் நின்றுவிட வேண்டும். பிறகு சுக்கு, மிளகு, சீரகம், பெருங்காயம், கருவேப்பிலை என ஐந்து ஐட்டங்களை அதே நறநறப்புப் பதத்தில் இடித்து அதன் தலையில் கொட்டி, மேலுக்கு அரை தம்ளர் உருக்கிய நெய், இரண்டு கரண்டி நல்லெண்ணெய் சேர்ப்பது அவசியம். உப்பு சேர்த்துக் கிளறி பொங்க வைத்துப் பிறகு இட்டு அவித்தால் இட்டவி என்கிற இட்லி தயார். எள் சேர்த்து அரைத்த மிளகாய்ப்பொடியைத் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் இந்தக் காஞ்சீபுரம் இட்லியைக் கிலோ கணக்கில் சாப்பிட்டுக்கொண்டே இருக்கலாம். நிறுத்தத் தோன்றாது.
ஆனால் இங்கு இதனை நிறுத்திவிட்டு மேற்படி ராயர் கடை ஊத்தப்பத்துக்கு வருவோம். நான் அங்கே நான்கு ஊத்தப்பங்களுக்கு ஆணை கொடுத்தேன். காலை சாப்பிட்டதற்குப் பிறகு வேறெதையும் உண்டிராதபடியால் கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது. இத்தனை மெனக்கெட்டுக் காத்திருந்து வந்திருக்கும் ராயர் கடை ஏமாற்றிவிடக் கூடாது என்று தவிப்பு ஒருபுறம். பத்து மணிக்குமேல் இந்த வெண்ணைக்குச் சென்னை செல்லப் பேருந்து கிட்டுமா என்கிற பயம் ஒருபுறம்.
எல்லாம் சிறிது நேரம்தான். ஊத்தப்பங்கள் வந்தன. பொன்னிறத்துப் பெண்ணுக்கு சந்தனக்காப்பு இட்டாற்போன்றதொரு நிறம். நடுநடுவே குழித்துக்கொண்ட ஓட்டைகளில் உலகளந்த பெருமாள் உறைந்திருக்கலாம். இதிலும் நெய் – நல்லெண்ணெய் கலந்திருந்ததை நாசி காட்டிக்கொடுத்தது. தொட்டதும் சுட்டதில் ஒரு சுகமிருந்தது. விண்டெடுத்து வாயில் இட்டபோது விண்டுரைக்க முடியாத அதிருசியை அனுபவித்தேன்.
ஒரு விஷயம். தோசை மாவு புளித்தால் ஊத்தப்பம் என்பது அக்வாகார்டில் வடிகட்டிய அயோக்கியத்தனம். ஊத்தப்பத்துக்கு நிறைய மெனக்கெட வேண்டும். அதிகம் புளிக்காத மாவில் சேர்க்கப்படும் ரவையின் அளவு இதில் முக்கியம். தக்காளி, கேரட், வெங்காயம், குடைமிளகாய்த் தூவல் முக்கியம். விதை எடுத்த பச்சை மிளகாயின் நேரடி வாசனை அதிமுக்கியம். மாவில் சீரக, பெருங்காயச் சேர்மானம் அனைத்திலும் முக்கியம். இவை அனைத்துக்கும் பிறகு சமைப்பவரின் பொறுமை. வருடும் சூட்டில்தான் அடுப்புத்தீ இருக்க வேண்டும். ஒரு பக்கம் வெந்து முடிக்க இரண்டு மூன்று நிமிடங்கள் ஆகலாம். திருப்பிப் போட்டு மூடி வைத்து மேலும் இரண்டு மூன்று நிமிடங்கள்.
உலகத்தர ஊத்தப்பம் செய்வதென்பது ஆயகலை அறுபத்து நான்கைவிட அசகாயக் கலை. அதை அந்த ராயர் மெஸ்ஸில்தான் நான் உணர்ந்தேன். என்ன ருசி! எப்பேர்ப்பட்ட ருசி! கிரங்கிப் போய் உண்டுகொண்டிருந்தபோது, பொடி ஊத்தப்பம் கொண்டு வரவா என்றார் ராயர். பொடி தோசை போலப் பொடி ஊத்தப்பம் போலும். சரி அதற்கென்ன? கொண்டு வாருங்கள்.
வந்தது. ஒரு விள்ளல். அடுத்த விள்ளல். மூன்றாவது விள்ளலில் நான் அலறியேவிட்டேன். ஐயா இது என்ன பொடி? எப்படி இதில் இத்தனை ருசி?
கல்லாதாரி சிரித்தார். ‘என்ன பொடின்னு தோணறது?’ என்று எதிர்க்கேள்வி கேட்டார்.
அது மிளகாய்ப் பொடிதான். அதைத்தாண்டி அதில் வேறு ஏதோ கலந்திருக்கிறது. என்னவாயிருக்கும்? அவர் சொல்லவில்லை. சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டு, விடைகொடுத்துவிட்டார்.
ஏற்கெனவே சுண்டலின் மேலிட்ட வண்டலின் சூட்சுமம் புரியாது குழம்பிக்கொண்டிருந்தவனுக்கு இது இரண்டாவது தாக்குதல். ஏதேது, முடியின்றி மூவுலகில்லாதது போலப் பொடியின்றி உணவின் ருசியில்லை போலிருக்கிறதே?
சரி, முதலில் பொடியைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிப் பார்த்துவிடுவோம் என்று அன்று முடிவு செய்தேன்.
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
December 3, 2016
ருசியியல் – 01
இருபதாம் நூற்றாண்டின் விரோதிக்ருது வருஷத்தில் நான் பிறந்தபோது ‘ஆநிரைகளும் தாவரங்களும் உன்னைப் பசியாதிருக்கச் செய்யக்கடவன’ என்று எம்பெருமான் என் காதில் மட்டும் விழும்படியாக ஹெட்ஃபோனுக்குள் சொன்னான். அன்றுமுதல் இன்றுவரை நான் மற்றொன்றினைப் பாராதவன்.
பாரத தேசத்தில் தாவர உணவாளிகளின் சதவீதம் முப்பதுக்கும் குறைவு. அதுவும் இந்த ஒரு கழுதை ஆயுட்கால வருஷங்களில் மேலும் படிப்படியாகக் குறைய ஆரம்பித்துவிட்டதைப் பார்க்கிறேன். மீன் ஜல புஷ்பமாகி, முட்டை, முட்டைக்கோஸை முந்தி, காளான் தாவரமாகவே ஆகிவிட்டது. இன்னமும் சாணி போட்டு எச்சில் பிரட்டும் ஆசார பயங்கரவாதிகளின் வீடுகளில் கூட, அடுத்தத் தலைமுறையின் ஊட்டச்சத்து நலன் கருதி ‘வெளியே’ முட்டை சாப்பிட்டுக்கொள்ள அனுமதிக்கத் தொடங்கிவிட்டார்கள். அது முட்டையின் தாய்க்கு முன்னேற்றம் அடைவதும் காலக்கிரமத்தில் நடந்துவிடுகிறது.
ஒரு முட்டையை வைத்துக்கொண்டு எத்தனை விதமான பதார்த்தங்கள் சமைக்க முடியும் என்று என் கல்லூரி தினங்களில் வி.பி. சற்குணநாதன் என்ற நண்பனொருவன் எடுத்துச் சொன்னான். தன் இயல்பில் முட்டைக்கு ருசி கிடையாது. ஆனால் சேர்மானங்கள் சரியாக அமைந்துவிட்டால் அதை அடித்துக்கொள்ள இன்னொன்று கிடையாது என்பதும் அந்தப் புண்ணியாத்மா சொல்லித்தான் எனக்குத் தெரியும்.
ஒரு சுப தினத்தைத் தேர்ந்தெடுத்தான். இன்றைக்கு உனக்கு முட்டையின் அதி உன்னத ருசியை நான் அறிமுகப்படுத்தியே தீருவேன் என்று சொல்லியிருந்தான். எனக்குச் சற்றுத் தயக்கமாக இருந்தது. ஒரு சிறு ஆர்வமும், உடன் பாரம்பரியத் தடையுணர்வும். சரி போ, தூணிலும் துரும்பிலும் இருப்பவன் முட்டையில் மட்டும் இல்லாமலா போய்விடுவான்? அவன் நம்மை அளித்துக் காப்பான்.
வி.பி. சற்குணநாதன் என்னை அடையாறு மத்திய கைலாசத்துக்கு எதிர்ப்புறச் சாலையில் அப்போதிருந்த ஓர் அசைவ மெஸ்ஸுக்கு அழைத்துச் சென்றான்.
உள்ளுக்குள் எனக்கு உதறிக்கொண்டிருந்தது. ஒரு கஞ்சா அல்லது கள்ளச்சாராய அனுபவத்துக்கு முதல்முறை போகும் பதற்றம். வெளியே காட்டிக்கொள்ளாதிருக்க நிரம்ப சிரமப்பட்டேன். முன்னதாக வீட்டுக்குத் தெரியாமல் அசைவம் சாப்பிட்டுக்கொண்டிருந்த என் உறவுக்கார உத்தமோத்தமர்கள் இரண்டு பேரை மனத்துக்குள் நினைத்துக்கொண்டேன். பித்தெனத் தொடங்கிவைத்த பிள்ளையார் சுழியர்கள். தவிரவும் அவர்கள் கட்டுடல் காளையர்கள். நானோ தர்பூசனிக்குத் தார்ப்பாலின் சுற்றியது போலிருப்பவன்.
‘அதாண்டா சங்கதியே. தயிர் சாதம் சாப்ட்டு ஒன்னால ஃபிட்டா இருக்கவே முடியாது. ந்யூட்ரிஷன் பர்சண்டேஜ் அதுல ரொம்பக் கம்மி. சொல்லப் போனா, இல்லவேயில்ல. நீ திங்கற எதுலயுமே புரோட்டின் கிடையாது. தெரியுமா ஒனக்கு?’ என்றான் சற்குண நல்லவன்.
ஒரு கலவையான உணர்வில் அன்று நானிருந்ததை இப்போது நினைத்துக்கொள்கிறேன். அதற்கு மேலே ஒரு லேயர் பயத்தின் டாப்பிங்ஸ்.
ஆச்சா? மெஸ்ஸுக்குச் சென்று உட்கார்ந்தோம். அழுக்கு பெஞ்சும் ஆடியபாத டேபிளும். ‘என்ன சாப்பிடற?’ என்றான் சற்குணநாதன். என்ன சொல்லலாம்? ஒரு ப்ளேட் மைசூர் போண்டா. ஒரு மசால் தோசை. பிறகொரு காப்பி.
சற்குணநாதன் முறைத்தான். ‘பரோட்டா சொல்றேன். முட்ட பரோட்டா. இங்க அது செம ஸ்பெஷல்’ என்றான்.
ஆர்டரே கிடைத்து விட்ட மாதிரி சப்ளையர் நகர ஆரம்பித்தபோது உயிர்க்குலை நடுங்கும் தொனியில் அலறினேன். ‘இருங்க, இருங்க’
‘என்னடா?’ என்றான் உத்தமபுத்திரன்.
‘வேணாண்டா.’
ஒரு மாதிரி பார்த்தான். போடா லூசு என்று சொல்லிவிட்டு, தனக்கு மட்டும் எடுத்து வரச் சொல்லி சாப்பிட்டு முடித்தான்.
அந்தப் பத்துப் பதினைந்து நிமிடங்கள் அவன் சாப்பிடுவதையே பார்த்துக்கொண்டிருந்தேன். தொட்டபெட்டா ரோட்டுமேல முட்ட பரோட்டா. நீ தொட்டுக்கொள்ள சிக்கன் தரட்டா. கேட்டுக் கேட்டுப் பரிமாறிய சப்ளையரின் அக்கறையே அந்த உணவின் ருசியாக மாறியிருக்க வேண்டும்.
பிறகொரு சமயம் சற்குணநாதன் சொன்னான்: ‘வாழ்நாள்பூரா ஒனக்கு ருசின்னா என்னன்னே தெரியாம போயிடப் போவுது பாரு.’
அந்தச் சொல் என்னை உறுத்தியது. ருசி என்பது காற்றைப்போல், கடவுள்போல் அங்கிங்கெனாதபடி நிறைந்திருப்பதல்லவா? ஒவ்வொரு உணவுக்கும் ஒரு ருசி. ஒவ்வொரு உணர்வுமே ஒரு ருசிதான். இந்தப் பேருலகில் ருசியற்ற ஒன்று கிடையவே கிடையாது என்று தோன்றியது.
ஆனால் சிறந்தவற்றைத் தேடிப்பிடிப்பது ஒரு சாகசம். அது ஒரு வீர விளையாட்டு. பெரும்பாலும் காலைவாரி, எப்போதாவது காலர் தூக்கி விட்டுக்கொள்ளச் செய்கிற சுய குஸ்தி. நான் உணவில் தோயத் தொடங்கியது அதன்பிறகுதான்.
நான் வசிக்கும் பேட்டையில் அக்காலத்தில் தள்ளுவண்டி சுண்டல் வெகு பிரபலம். மணப்பாறை முறுக்கு திருநெல்வேலி அல்வா காஞ்சிபுரம் இட்லிபோல அந்தச் சுண்டலுக்கு வாழ்நாள் சந்தாதாரிகள் அதிகம். பத்திருபது கிலோ மீட்டர் பஸ்ஸேறி வந்தெல்லாம் சாப்பிட்டுப் போகிறவர்கள் இருந்தார்கள். ஒரு பிளேட் சுண்டல் ஐந்து ரூபாய். அதில் எல்லாரீஸ்வரி பொட்டு சைஸுக்கு நாலு மசால்வடைகளை உதிர்த்துப் போட்டு மேலே கொஞ்சம் வெங்காயம், புதினா, கொத்துமல்லி தூவி, அதற்கும் மேலே என்னமோ ஒரு பொடியைப் போட்டுத் தருவார்கள்.
எத்தனை விசாரித்தாலும் அந்தப் பொடியில் என்னென்ன ஐட்டங்கள் கலந்திருக்கின்றன என்பதைப் பிரகஸ்பதிகள் சொல்லமாட்டார்கள். ஆனால் அந்த அரை ஸ்பூன் பொடித்தூவல் கொடுத்த மணம் பேருந்து நிலையம் முழுவதையும் மணக்கச் செய்துவிடும்.
பிறகு வந்த துரித உணவகங்கள் சுண்டல் கடைகளைச் சாப்பிட ஆரம்பித்தன. பெரிய ஓட்டல்களின் பிராந்தியக் கிளைகள், சிறிய ஓட்டல்களோடு சேர்த்துத் துரித உணவகங்களை விழுங்கத் தொடங்கின. பீட்சாக்காரர்கள் வந்தார்கள். டோர் டெலிவரி சௌகரியத்தில் ஓட்டல்காரர்களின் பிழைப்பில் அரைப்பிடி மண்ணைப் போட்டார்கள்.
ஆயிற்று முப்பது வருஷம். அந்தத் தள்ளுவண்டி சுண்டல் கடை பொடியின் நெடி மட்டும் என் நாசியில் அப்படியே தேங்கிவிட்டது.
இடைப்பட்ட காலத்தில் நானொரு உணவுத் தீவிரவாதியாக மாறியிருந்தேன். உடலைத் தாங்கி நிற்பது நாக்கு என்று முடிவு செய்து சகட்டு மேனிக்குச் சாப்பிடத் தொடங்கினேன். இனிப்பென்றால் குவிண்டாலில். காரமெனில் கிலோவில். பட்சண பலகாரம் எதுவானாலும் பத்துக்குக் கீழே தொட்டதே கிடையாது.
சொகுசுக்கு பங்கமின்றி என்னளவு தின்று தீர்த்தவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். கென்யாவிலிருந்து மொடொகெ (Moteke – ஒரு பிரமாதமான வாழைப்பழ டிஷ்), ஜப்பானில் இருந்து யூபா (சோயா பாலில் படியும் ஏடிலிருந்து செய்யப்படுவது) அரபு நிலத்திலிருந்து ஒட்டகப்பால், ஸ்விச்சர்லாந்திலிருந்து சாக்லெட், சைனாவில் இருந்து தேயிலைத்தூள், ஆஸ்திரேலியாவிலிருந்து அசகாய சீஸ் என்று தேடித் தேடி வரவழைத்துத் தின்ற ஜாதி நான்.
ஊறிய ருசிக்கு முன்னால் ஏறிய கலோரிகள் எம்மாத்திரம்? ஆனால் அனைத்தையும் நிறுத்திய நாளில்தான் எனக்கு அந்த சுண்டலுக்கு மேலே போட்ட வண்டலின் சூட்சுமம் பிடிபட்டது.
இது பேசித் தீராத கதை. மெல்லப் பேசுவோம்.
(தி ஹிந்து.தமிழில் 03/12/16 அன்று வெளியானது)
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
December 2, 2016
ருசியியல்
தமிழ் ஹிந்து நாளிதழில் நாளை முதல் (03/12/16) ஒரு பத்தி தொடங்குகிறேன். ருசியியல் என்ற தலைப்பில். சமையலின் ருசியும் வாழ்வின் ருசியும் வேறுவேறல்ல என்பது என் தீர்மானம். அந்தந்த தினத்தின் மனநிலையே அன்றன்றைய சமையலின் ருசியைத் தீர்மானிக்கிறது என்பதைப் பன்னெடுங்காலமாக கவனித்து வந்திருக்கிறேன்.
வாழ்வையும் உணவையும் மனமார நேசிப்பவன் நான். தவிரவும் உண்ணும் விஷயத்தில் ஒரு முழு வட்டம் சுற்றி மீண்ட அனுபவம் உள்ளபடியால் இதனை எழுதுவது எனக்குத் தனித்த சந்தோஷம்.
முன்னர் குமுதம் ரிப்போர்ட்டரில் உணவின் வரலாறு எழுதியதை நினைவுகூர்கிறேன். அதற்காக நிறைய உழைத்தேன். எக்கச்சக்கமாகப் படித்தேன். பலபேரிடம் பேசி, பேட்டி கண்டு என்னென்னவோ செய்தேன். பிறகு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு ஆவணத் தொடருக்கு எழுதியபோதும் இப்படித்தான்.
இப்போது இந்தத் தொடருக்கு அதெல்லாம் இல்லை. இது முற்றிலும் சொந்த அனுபவம் சார்ந்த வெளிப்பாடாகவே இருக்கும்.
தொடரைப் பற்றிய உங்கள் கருத்துகளை எனக்கு எழுதுங்கள். எழுத்தின் ருசி, வாசிப்பவர் திருப்தியில்தான் பூரணமெய்துகிறது.
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)


