Pa Raghavan's Blog, page 16

February 7, 2017

பொலிக! பொலிக! 26

‘சுவாமி, இது எங்களுக்குப் புரியவேயில்லை. இதுவரை நீங்கள் பதினேழு முறை திருக்கோட்டியூருக்குச் சென்று திரும்பிவிட்டீர்கள். உங்களிடம் என்ன குறை கண்டார் என்று நம்பிகள் இப்படி முகத்திலடித்தாற்போலத் திருப்பி அனுப்புகிறார்?’


ராமானுஜரின் சீடர்களுக்கு ஆறவேயில்லை. வித்யாகர்வம் இருக்க வேண்டியதுதான். ஆனால் இப்படியா? அதையும் இப்படியொரு மகாபுருஷனிடமா காட்டுவார்கள்? ஒருமுறை இருமுறை என்றால் பரவாயில்லை. பதினேழு முறை!


‘தயவுசெய்து போதும். இனி நீங்கள் திருக்கோட்டியூருக்குச் செல்ல வேண்டாம் சுவாமி!’ கண்ணீரோடு விண்ணப்பித்துக்கொண்டார்கள்.


‘இல்லை. அவரிடம் ரகஸ்யார்த்தம் கேட்க எனக்குத் தகுதி வரவில்லை என்று நினைக்கிறேன். பிழை அவர்மீதில்லை’ என்று சொல்லிவிட்டு ராமானுஜர் நகர்ந்துவிட்டார். ஆனால் அவருக்கும் அந்த உறுத்தல் இருந்தது. அப்படி என்ன பிழை செய்துவிட்டேன்? ஒவ்வொரு முறை செல்லும்போதும் இன்னொரு சமயம் வரச் சொல்லிவிடுகிறார். வந்ததற்கும் சந்தித்ததற்கும் அடையாளமாக ஒருவரி போதனை. அதைத் தவிர வேறில்லை.


நான்காவது முறை ராமானுஜர் விடாமல் திருக்கோட்டியூருக்குப் போனபோது ‘அகங்கார மமகாரங்களை ஒழிக்க வலுவில்லாவிட்டால் ஆத்மஞானம் இல்லை’ என்றார் நம்பி. ஆத்மஞானம் இல்லாது போனால் போகங்களின் மீதான இச்சை போகாது. இச்சை இருந்தால் இறை அன்பு இல்லை. பரம்பொருள்மீது அன்பு குவியாவிட்டால் பற்று நீங்காது. பற்று நீங்காவிட்டால் பரமனுக்கு அர்ப்பணமாகமாட்டோம். அப்படி அர்ப்பணமானால்தான் காமம் விலகும். காமம் விலகினால் வைணவ மனநிலை கைகூடும். அது கூடினால் சத்சங்கம் சேரும். சத்சங்கமே பாகவத சம்பந்தத்துக்குப் படி. பாகவத சம்மந்தமே பகவத் சம்பந்தத்தின் வாயில். அது கிடைத்துவிட்டால் மற்ற சிறு பலன்கள் ஒரு பொருட்டாகாது. சிறு பலன்களில் வெறுப்பு வந்தால், பெரும் பலனாகப் பரமனின் அடிமை ஆவான். அவனையே சரணமடைவான். அப்படிச் சரணாகதியடைந்த ஒருவனே திருமந்திரத்தையும் அதன் பொருளையும் ஏற்கத் தகுதி பெறுவான். அத்தகுதி யாருக்கு வாய்க்கிறதோ, அவருக்கே ரகஸ்யார்த்தம் வாய்க்கும்.


இதை முதல்நாளே மொத்தமாகச் சொல்லியிருந்தால் குருகைப் பிரானின் நோக்கம் அன்றே ராமானுஜருக்கு விளங்கியிருக்கும். அவர் ஒவ்வொரு முறை சென்றபோதும் ஒவ்வொரு வரியாகச் சொல்லி அனுப்பியதுதான் விசித்திரம்.


மொத்தமாகச் சேர்த்து யோசித்துப் பார்த்தார் ராமானுஜர். அடடா! சரணாகதியைத்தானே ஆசாரியர் வலியுறுத்துகிறார்!


சன்னிதியில் நெடுநேரம் கண்ணீர் மல்க நின்றுகொண்டிருந்தார். ‘அரங்கப் பெருமானே! சரணாகதியைத் தவிர வேறெதையும் நான் அறியேனே? உற்றோமேயாவோம் உமக்கேநாம் ஆட்செய்வோம் என்றல்லவா ஒப்புக்கோடுத்திருக்கிறேன்? ஆசாரியருக்கு இதை யார் எடுத்துச் சொல்வார்கள்? அவரது கருணைக் கண் எப்போது என்மீது திறக்கும்?’


அன்றைக்குத் திருவரங்கம் கோயிலுக்குத் திருக்கோட்டியூரில் இருந்து நம்பியின் சீடர் ஒருவர் வந்திருந்தார்.


‘சுவாமிகளே, நீங்கள் ஒவ்வொருமுறையும் நம்பிக்கையுடன் திருக்கோட்டியூருக்கு வருகிறீர்கள். ஆசாரியர் ஒவ்வொருமுறையும் தங்களைத் திருப்பி அனுப்புகிறார். தாங்களும் சளைக்காமல் மீண்டும் வருகிறீர்கள். எங்களுக்கெல்லாம் இது எவ்வளவு சங்கடமாக உள்ளது தெரியுமா?’ என்று கேட்டார் அவர்.


‘எம்பெருமான் இன்னும் ஆசாரியருக்கு அனுமதி தரவில்லை போலிருக்கிறது. அவர்மீது பிழை இல்லை ஐயா!’


உண்மையில் முதல்முறை ராமானுஜர் திருக்கோட்டியூருக்குச் சென்று திரும்பிய உடனேயே குருகைப் பிரானுக்கு அரங்கனின் அனுமதி கிடைத்துவிட்டது.


‘நம்பி! ராமானுஜர் தகுதிவாய்ந்த பாத்திரம். நீர் அவருக்கு ரகஸ்யார்த்தங்களை தாராளமாகச் சொல்லிக் கொடுக்கலாம்!’ என்று அவரது உட்செவியில் கேட்ட குரல் அரங்கனுடையதேதான். ஆனாலும் அவர் தயங்கினார். ஏனெனில் காலமாவதற்குச் சில தினங்களுக்கு முன்னர் ஆளவந்தார் அவரைத் தனியே அழைத்து ஒரு விஷயம் சொல்லியிருந்தார். ‘ரகஸ்யார்த்தங்கள் சக்தி மிக்கவை. யாரையும் பரிசோதித்துப் பாராமல் போதித்துவிடாதே! தகுதியற்ற ஒருவருக்கு அவை தப்பித்தவறிக்கூடப் போய்ச் சேர்ந்துவிடக் கூடாது!’


ராமானுஜர் முதல் முறை திருக்கோட்டியூருக்கு வந்து சென்ற பிறகு குருகைப் பிரான் ஒரு சமயம் திருவரங்கத்துக்குப் போனார். சன்னிதியில் வைத்துப் பெருமானிடம் இதனை விண்ணப்பித்துக்கொண்டு, ‘எம்பெருமானே! ராமானுஜர் தகுதி வாய்ந்த பாத்திரம் என்று நீ சொல்கிறாய். ஆனால் பரிசோதித்துப் பாராமல் பாடம் சொல்ல வேண்டாம் என்று என் ஆசாரியர் சொல்லியிருக்கிறார். ஆசாரியர் சொன்னதைத்தான் நான் கேட்க முடியும். நீ கொஞ்சம் பொறுத்துக்கொள்’ என்று சொல்லிவிட்டு வந்துவிட்டார்.


திருக்கோட்டியூர் நம்பியின் ஆசாரிய பக்தி அப்படிப்பட்டது. அரங்கனே உத்தரவு கொடுத்தாலும், ஆசாரியரின் உத்தரவுக்கு அப்புறம்தான் அது. அவருக்கு ஒன்றே ஒன்றுதான் தெரியவேண்டியிருந்தது. ராமானுஜரின் தீவிரம். ஒப்புக்காக ஒருதரம் வந்து கேட்டுவிட்டுப் போகிற நபராக இருந்துவிட்டால்?


ஆனால் அவர் அப்படி இல்லை.


பதினாறு முறை ஏமாந்து, பதினேழாவது முறையும் ராமானுஜர் திருக்கோட்டியூருக்குச் சென்றபோது நம்பிக்கு அது விளங்கிவிட்டது. அன்று சரணாகதி நிலையை அடைவதற்கான கடைசிக்கு முந்தைய படியைத் தமது ஒருவரிப் பாடமாக அவர் சொல்லி அனுப்பியபோதே, அடுத்த வருகையில் காரியம் கைகூடிவிடும் என்று தமது மானசீகத்தில் ஆசீர்வதித்துத்தான் அனுப்பியிருந்தார். ராமானுஜருக்கு அது எப்படித் தெரியும்?


திருவரங்கம் சென்று திரும்பிய நம்பியின் சீடர், நடந்ததைத் தமது ஆசாரியரிடம் எடுத்துச் சொன்னார். ‘சுவாமி, ராமானுஜர் மிகவும் மனம் நொந்திருக்கிறார். தாங்கள் இனியும் அவரைச் சோதிக்க வேண்டாமே?’


நம்பி கண்மூடி வெகுநேரம் அமைதியாக இருந்தார். பிறகு கண்களைத் திறந்து புன்னகை செய்தார்.


‘சரி, வரச் சொல்லுங்கள். ஆனால் பரிவாரங்களுடன் அல்ல. தண்டும் பவித்திரமுமாகத் தனியாகத்தான் வரவேண்டும்!’


தண்டும் பவித்திரமும் மட்டுமே துறவியின் சின்னங்கள். உறங்கும்போதும் உடனிருப்பவை. மற்ற எதனோடும் அவருக்கு உறவு கிடையாது. தவிரவும் ரகஸ்யார்த்தம் என்பது அனைவருக்கும் வினியோகிக்கிற பிரசாதமல்ல. தகுதி முக்கியம். தெய்வானுக்கிரகம் முக்கியம். அது நியமிக்கப்படுவது. பெரும் தவத்துக்குப் பிறகு மட்டுமே சித்திக்கும் வரம்.


செய்தி கிடைத்ததும் ராமானுஜர் பரவசக் கூத்தாடினார். ‘என்ன தவம் செய்தேன்! என்ன தவம் செய்தேன்! ஆசாரியர் ஒப்புக்கொண்டுவிட்டாரா? உண்மையாகவா? இப்பிறவியில் இதனைக் காட்டிலும் பெரும்பேறு வேறு சாத்தியமில்லை. நான் புறப்பட்டுவிட்டேன் என்று சொல்லுங்கள்!’


தகவல் கொண்டு வந்தவரிடம் சொல்லி அனுப்பிவிட்டு ராமானுஜர் பெரிய நம்பியிடம் ஓடினார். விஷயத்தைச் சொல்லி மகிழ்ந்து அவர் பாதம் பணிந்தார்.


‘போய் வாருங்கள் ராமானுஜரே! ஆனால் உம்மைத் தனியே வரச் சொல்லியிருக்கிறார்! கவனம்.’


தலையசைத்து வணங்கி விடைபெற்ற ராமானுஜர் மடத்துக்கு வந்ததும் முதலியாண்டானையும் கூரத்தாழ்வானையும் அழைத்தார்.


‘புறப்படுங்கள். நாம் இப்போதே திருக்கோட்டியூர் செல்கிறோம்!’ என்றார்.


(தொடரும்)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 07, 2017 08:30

February 6, 2017

பொலிக! பொலிக! 25

அன்று விடிகாலை திருவரங்கத்தில் இருந்து புறப்பட்ட ராமானுஜரின் பரிவாரம் ஒரு முழுப்பகல், முழு இரவு பயணம் செய்து மறுநாள் விடியும் நேரம் திருக்கோட்டியூரைச் சென்றடைந்தது. இடையே ஓரிடத்திலும் ராமானுஜர் தங்கவில்லை. உணவைத் தவிர்த்தார். ஆசாரியரைச் சந்திக்கப் போகிற பரவசமே அவருக்கு உற்சாகமளித்தது.


‘மகாபுருஷர்கள் வாழ்கிற காலத்தில் வாழ நாம் அருளப்பட்டிருக்கிறோம். இந்த வாய்ப்பை நல்ல விதமாகப் பயன்படுத்தாமல் விட்டால் அது பெரும்பிழையாகிவிடும். மக்கள் நம்மை நம்பி வந்து காலட்சேபம் கேட்கிறார்கள். தருமம் அறிய விழைகிறார்கள். கருணாமூர்த்தியான எம்பெருமானின் பாதாரவிந்தங்களைத் தரிசிக்க வழி காட்டுவோம் என்று மனப்பூர்வமாக நம்புகிறார்கள். அந்த நம்பிக்கைக்கு நாம் பாத்திரமாவது அனைத்திலும் தலையாயது’ என்றார் ராமானுஜர்.


‘சரியாகச் சொன்னீர் ஆசாரியரே! எனக்குக் கிட்டிய வாய்ப்பை நான் தவறவிடவில்லை. எப்படியோ உம்மைச் சேர்ந்துவிட்டேன்!’ என்றான் கூரேசன்.


‘அபசாரம். நமது ஞானமென்பது புல்நுனி நீர்த்துளியின் கோடியில் ஒரு பங்கு. ஒரு பெரிய நம்பியின் உயரத்தை நம்மால் அண்ணாந்து பார்க்க முடியுமா! அவரே வியக்கும் திருக்கோட்டியூர் நம்பியின் ஆளுமை எப்பேர்ப்பட்டதாக இருக்கும்! இவர்களுக்கெல்லாம் பரம ஆசாரியராக விளங்கிய ஆளவந்தாரின் அறிவு விஸ்தீரணம் எண்ணிப் பார்க்கவும் இயலாத ஒன்றாக அல்லவா இருக்கும்!’


‘இருக்கலாம். ஆனால் ஆளவந்தாரே தமக்குப் பிறகு உம்மையல்லவா தம் இடத்துக்கு மனத்துக்குள் வரித்திருக்கிறார்?’ என்றான் முதலியாண்டான்.


‘பதவி சுகமானதல்ல முதலியாண்டான்! அதுதான் பயத்தைத் தருவது. பொறுப்பை உணர்த்துவது. வாழ்நாளுக்குள் நம்மைத் தகுதியாக்கிக்கொள்ள வேண்டியதன் இன்றியமையாமையை எப்போதும் எடுத்துச் சொல்லிக்கொண்டே இருப்பது. தயவுசெய்து என்னைப் பெரிதாக எண்ணாதீர்கள். ஆசாரியரைத் தவிர வேறு சிந்தனையே வேண்டாம்!’


ஆனால் அவர்களால் தமது ஆசாரியரைத் தவிர வேறு யாரையும் எண்ணிப் பார்க்க முடியவில்லை.


வழி முழுதும் ராமானுஜர் திருக்குருகைப் பிரான் என்னும் திருக்கோட்டியூர் நம்பியைப் பற்றியும் திருக்கோட்டியூரைப் பற்றியுமே பேசிக்கொண்டு வந்தார்.


‘முதலியாண்டான்! திருக்கோட்டியூருக்குப் பெயர்க்காரணம் தெரியுமோ உனக்கு?’


‘இல்லை சுவாமி. கோஷ்டி என்றால்…’


‘இது சுத்தமான தமிழ்ப் பெயர் கொண்ட திவ்யதேசம். திருக்கு என்றால் பாவம். திருக்கை ஓட்டுகிற ஊர் இது. பாவம் தொலைக்கும் புண்ணிய பூமி. பேயாழ்வார் இந்த ஊருக்கு வந்திருக்கிறார். சௌமிய நாராயணப் பெருமாளை அவர் பாடியிருக்கிறார். பூதத்தாரும் வந்திருக்கிறார். பெரியாழ்வார் பாடியிருக்கிறார். மங்கை மன்னன், திருமழிசைப்பிரான் என ஐந்து ஆழ்வார்களால் பாடப்பெற்ற தலம் அது.’


பெரிய நம்பி மூலம் தானறிந்த அனைத்து விவரங்களையும் தமது சீடர்களுக்குச் சொல்லிக்கொண்டே வந்தார். ஊர் எல்லையை அடைந்ததும் பரபரப்பானார். பேச்சு நின்றுவிட்டது. கண்மூடிக் கரம் குவித்தார். மானசீகத்தில் அரங்கனை வேண்டிக்கொண்டு, குளத்தில் குளித்தெழுந்து கோயிலுக்குச் சென்று சேவித்துவிட்டு வந்தார்.


‘சரி. நீங்கள் அனைவரும் இங்கே இருங்கள். நான் சென்று ஆசாரியரை தரிசித்துவிட்டு வருகிறேன். அவர் அனுமதியோடு உங்களையும் அழைத்துச் செல்கிறேன்’ என்று சொல்லிவிட்டு நம்பிகளின் இல்லம் இருக்கும் இடத்தை விசாரித்துத் தெரிந்துகொண்டு, அத்திக்கு நோக்கி விழுந்து வணங்கினார். அப்படியே தண்டனிட்டுக்கொண்டே போகத் தொடங்கினார்.


ராமானுஜரின் உடன் வந்திருந்த குழுவினருக்கு ஒரே வியப்பாகிப் போனது. எம்மாதிரியான ஆசார்ய பக்தி இது! இந்தப் பணிவல்லவா இவரது உயரத்தை வகுத்தளித்திருக்கிறது! ஆளவந்தார் மிகச் சரியாகத்தான் கணித்திருக்கிறார் என்று தமக்குள் பேசிக்கொண்டார்கள்.


தண்டனிட்டபடியே குருகைப்பிரான் இல்லத்தை அடைந்த ராமானுஜர், ஆசாரியரின் அனுக்கிரகத்துக்காகக் காத்திருந்தார். உள்ளிருந்து வந்து விசாரித்துச் சென்ற நம்பியின் சீடர்கள் அவரிடம் சென்று ராமானுஜர் வந்திருக்கும் விவரத்தைச் சொன்னதும், ‘வரச் சொல்’ என்றார். ராமானுஜர் வீட்டுக்குள் சென்றார்.


ஆசாரியரைக் கண்டதும் சாஷ்டாங்கமாக விழுந்து சேவித்து, பணிவும் பவ்யமுமாகப் பேசத் தொடங்கினார்.


‘அடியேன் ராமானுஜன். திருவரங்கத்தில் பெரிய நம்பி வழிகாட்டி, தங்களைத் தேடி வந்திருக்கிறேன். பரம ஆசாரியரான ஆளவந்தாரின் பிரிய சீடரான தாங்கள், எனக்கு ரகஸ்யார்த்தங்களை போதித்து அருள வேண்டும்!’


திருக்கோட்டியூர் நம்பி, ராமானுஜரை உற்றுப் பார்த்தார். ‘காஞ்சியில் திருக்கச்சி நம்பி நலமாக இருக்கிறாரா?’


‘பேரருளாளன் நிழலில் வசிப்பவர் அவர். அவரால்தான் காஞ்சிக்குப் பெருமை. அடியேன் திருவரங்கம் வந்து சேர்ந்த பிறகு அவரை தரிசிக்க இன்னும் வாய்க்கவில்லை.’


‘ஓஹோ. அரங்கத்தில் பெரிய நம்பி நலமா? அரையர் சுகமாக உள்ளாரா?’


‘பகவத் கிருபையால் அனைவரும் நலமாக உள்ளார்கள். அடியேன் பெரிய நம்பியிடம்தான் தற்சமயம் பாடம் கேட்டுக்கொண்டிருக்கிறேன். த்வய மந்திரத்தின் உட்பொருளை போதித்துக்கொண்டிருந்தபோதுதான் சுவாமிகள் தங்களைப் பற்றி எடுத்துச் சொன்னார். எனக்கு ரகஸ்யார்த்தங்களைத் தாங்கள்…’


‘போய்விட்டுப் பிறகொரு சமயம் வாருங்கள்!’ என்று சொல்லிவிட்டு திருக்குருகைப் பிரான் எழுந்துவிட்டார்.


ராமானுஜர் திடுக்கிட்டுப் போனார். ‘சுவாமி, அடியேன்..’


‘பிறகு வாருங்கள் என்றேன்’ என்று சொல்லிவிட்டு உள்ளே போனவர் என்ன நினைத்தாரோ, மீண்டும் ஒருதரம் சட்டென்று வெளியே வந்தார்.


‘ஓய் ராமானுஜரே! மோட்சத்தில் ஆசையுடைய ஜீவன் வாழ்க்கையில் ஆசை துறக்க வேணும். புரிகிறதா?’ என்று கேட்டுவிட்டு சட்டென்று உள்ளே போய்விட்டார்.


ராமானுஜர் மிகவும் குழப்பமானார். ஆசாரியர் இப்படித் தன்னை முற்றிலும் ஒதுக்கக் காரணம் என்னவாக இருக்கும்? புரியவில்லை. சரி, பிறகொரு சமயம் வரச் சொல்லியிருக்கிறாரல்லவா? அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்று கிளம்பிவிட்டார்.


ஆனால் மறுமுறை அவர் திருக்கோட்டியூருக்கு வந்தபோதும் நம்பி மசியவில்லை. இப்போதும் அதே பதில். போய்விட்டுப் பிறகு வாரும். இம்முறை விடைதரும்போது முந்தைய வருகையின்போது கடைசியாகச் சொன்ன வரியின் தொடர்ச்சியேபோல் மற்றொரு வரியைச் சொன்னார்.


‘ஆசையைத் துறந்தால்தான் அகங்காரம் ஒழியும். மமகாரம் நீங்கும்.’


ராமானுஜர் மூன்றாவது முறை சென்றபோது, ‘அகங்கார மமகாரங்களை ஒழிப்பதற்கு வலுவில்லாவிட்டால் ஆத்மஞானம் கிடையாது’ என்றார்.


திருவரங்கத்துக்கும் திருக்கோட்டியூருக்குமாக ராமானுஜர் பதினெட்டு முறை நடக்கவேண்டியிருந்தது. அவர் சளைக்கவேயில்லை. எப்படியாவது நம்பியின் அருட்பார்வை தன்மீது பட்டுவிடாதா, தன்னை ஏற்றுக்கொண்டு அருள்பாலிக்க மாட்டாரா என்ற எண்ணம் தவிர வேறில்லை அவருக்கு. ஆனால் ஒவ்வொரு முறை சென்றபோதும் ஒருவரி போதனை கிடைத்ததே தவிர, அவர் தேடி வந்த ரகஸ்யார்த்தப் பேழையை நம்பி திறந்தபாடில்லை.


ராமானுஜர் துவண்டு போனார்.


(தொடரும்)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 06, 2017 08:30

February 5, 2017

பொலிக! பொலிக! 24

திருவரங்கம் பெரிய கோயிலின் நிர்வாக விவகாரங்களைப் பெரிய நம்பிதான் அப்போது கவனித்துக்கொண்டிருந்தார். ஆளவந்தாரின் பீடத்துக்குப் பொறுப்பேற்று ராமானுஜர் வந்து சேர்ந்த உடன், இந்தப் பணிகளும் அவருடையதாயின. பகல் பொழுதுகள் முழுதும் திருக்கோயில் ஊழியத்திலேயே அவருக்குக் கழிந்துகொண்டிருந்தது. மடத்துக்கு வந்து உட்கார்ந்தால் காலட்சேபம் கேட்க பக்தர்கள் வந்துவிடுவார்கள். இரவு உணவுக்குப் பிறகு படுக்கப் போகிற நேரத்தில்தான் சீடர்களுடன் கொஞ்சமாவது உரையாட அவகாசம் கிடைக்கும்.


ராமானுஜருக்கு இதுதான் பிரச்னையாக இருந்தது. தன்னளவில் அவர் ஓர் ஆத்மஞானி. வைணவம் என்னும் சித்தாந்தம் இயல்பிலேயே அவரது சிந்தனைப் போக்கை வடிவமைத்திருந்தது. தாம் சிந்திக்கும் வகைமைக்கு வைணவம் என்று பேர் என்பதை மட்டும்தான் அவர் போகப் போக அறிந்துகொண்டார். நம்மாழ்வார் தொடங்கி, ஆளவந்தார் வரை சொல்லி வைத்த அனைத்துமே இதன் விரிவும் ஆழமும் தேடிச் செல்கிற வழிகள்தாம் என்பதை அவர் உணர்ந்தார். எனவே சரணாகதியை அடிப்படையாகக் கொண்ட வாழ்வியலின் அடி முதல் நுனிவரை பாடம் கேட்டு, அலசி ஆராய்ந்து பயிலும் பெருவிருப்பம் அவருக்குள் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது.


‘சுவாமி, நான் பயிலவேண்டும். ஆளவந்தாரின் திருவடி சம்மந்தம் எனக்கு வாய்க்கவில்லை. அதற்குப் பதிலாக உங்களைச் சரண் புகுந்தேன். பாசுரங்களும் மற்றவையும் பயின்றுகொண்டுதான் இருக்கிறேன் என்றாலும் போதாமை உறுத்துகிறது. அர்த்த விசேஷங்களில் மனம் லயித்துக்கிடக்கிறது. அனைத்தையும் அனைவர் மூலமும் அறிந்துவிட மாட்டோமா என்று ஏங்கிக் கிடக்கிறேன். நீங்கள்தான் ஆரம்பித்துவைக்க வேண்டும்!’ என்று பெரிய நம்பியின் தாள் பணிந்து கேட்டார் ராமானுஜர்.


நம்பிக்குப் புரிந்தது. ஆளவந்தாரிடம் ஒரு வழக்கம் இருந்தது. தமது அனைத்துச் சீடர்களையும் அவர் சமமாகவே நடத்தினார், அனைத்தையும் சொல்லிக் கொடுத்தார் என்றாலும் ஒவ்வொருவரிடமும் ஒரு குறிப்பிட்ட மந்திரம் அல்லது சுலோகம் அல்லது தத்துவத்தின் சிறப்புப் பொருளைத் தமது பிரத்தியேகப் பரிசாக வழங்கியிருந்தார். அது இன்னொருவருக்குத் தெரியாது. சம்மந்தப்பட்டவரைத் தவிர வேறு யாருக்குமே தெரியாது. அதைத்தான் ராமானுஜர் கேட்டார். எனக்கு அனைத்தும் வேண்டும். அனைவரிடம் இருந்தும் வேண்டும்.


‘புரிகிறது ராமானுஜரே. நானறிந்த த்வய மந்திரத்தைத் தங்களுக்கு போதிப்பதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.’ என்று சொல்லிவிட்டு ஒரு நல்ல நாள் பார்த்து வகுப்பை ஆரம்பித்தார்.


‘த்வயம் என்பது வேதங்களின் சாரம். காற்றைப் போல், ஒளியைப் போல் இவ்வுலகெங்கும் நீக்கமற நிறைந்து அந்தர்யாமியாக நீந்திக்கொண்டிருக்கும் அத்தனை மந்திரங்களிலும் ஆகச் சிறந்ததும் உயர்ந்ததும் இதுவே.’


‘அற்புதம் சுவாமி! த்வய மந்திரத்தின் அவசியத்தை முதலில் சொல்லுங்கள்.’


பெரிய நம்பி ஒரு கணம் கண்மூடி யோசித்தார். ‘அவசியம்தானே? சொல்கிறேன். பந்தங்களில் இருந்து விடுதலை பெறவும் மிக நேரடியாக மோட்சத்தை அடையவும் இது அவசியம். இது மட்டுமே அவசியம்.’


தொடர்ந்து பல நாள்களுக்குப் பெரிய நம்பி ராமானுஜருக்கு த்வய மந்திர வகுப்பெடுத்தார். ஒன்றைத் தொட்டு ஒன்று என்று அர்த்த விசித்திரங்கள் எத்தனை எத்தனையோ எல்லைகளைக் கடந்து வேதத்தின் மையத்தைச் சென்று தொட்டுக் காட்டியது.


ராமானுஜர் ஆனந்தப் பரவசத்தின் உச்சத்தில் இருந்தார். எப்பேர்ப்பட்ட பெருங்கருணை இந்த மனிதருக்கு! அற்பனான என்னையும் ஒரு பொருட்டாக மதித்து, சீடனாக ஏற்று எத்தனை உயர்வான விஷயங்களை போதிக்கிறார்!


கண்ணீர் மல்க அப்படியே பெரிய நம்பியின் கால்களில் விழுந்து வணங்கினார்.


‘ஆசாரியரே! எத்தனை பூடகமான பேருண்மைகளை எனக்கு நீங்கள் எளிதாக விளக்கியிருக்கிறீர்கள் என்று விவரிக்கவே முடியாது. எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நான் தங்களுக்குக் கடன்பட்டிருப்பேன்.’


பெரிய நம்பி புன்னகை செய்தார். ‘ராமானுஜரே! நான் சொன்னதைக் காட்டிலும் அர்த்த விசேஷம் திருக்கோட்டியூர் நம்பியிடம் உண்டு. ஆளவந்தாரின் சீடர்களிலேயே மாபெரும் ரகசியப் பேழை என்றால் அவர்தாம். திருமந்திரமாகட்டும், த்வயமாகட்டும், சரம சுலோகமாகட்டும். அவர் அறிந்த அர்த்த ரகசியங்கள் அபாரமானவை. நாங்கள் ஒன்றாகப் பயின்றவர்கள்தாம். ஆனால் அவர் நன்றாகப் பயின்றவர்களில் ஒரு நாயகன் என்று சொன்னால் உங்களுக்கு விளங்குமா?’


ராமானுஜருக்கு ஒரே ஆச்சரியமாகப் போய்விட்டது. ஒரு மேதை. மாபெரும் ஞானி. அரங்கனின் அரவணைப்பில் வசிக்கிற பெருமான். ஆளவந்தாரின் நேரடிச் சீடர். தம்மைக் காட்டிலும் இன்னொருவர் உயர்ந்தவர் என்று கைகாட்டுகிறார் என்றால், இவரது பணிவின் ஆழ அகலங்களுக்கு முன் இப்பூவுலகு எம்மாத்திரம்?


‘இல்லை ராமானுஜரே! என்னைவிட அவர் உயர்ந்தவர். திருக்கோட்டியூர் நம்பி நம்பமுடியாத அளவுக்கு ஞானஸ்தர். ஆசாரியர் ஆளவந்தாருக்குப் பாதமும் கரமுமாக இருந்தவர். என்னைக் கேட்டால் நீங்கள் அவரை நேரில் சந்தித்துப் பாடம் கேட்பது மிகவும் அவசியம் என்பேன்.’ என்றார் பெரிய நம்பி.


‘நீங்கள் அவரைப் பற்றிச் சொல்லும்போதே எனக்கு அவரைக் காண மனம் துடிக்கிறது சுவாமி. எங்கிருக்கிறார் அவர்? சொல்லுங்கள், இப்போதே புறப்படுகிறேன்.’


‘சிவகங்கைக்குப் பக்கத்தில் உள்ள திருக்கோட்டியூரில்தான் வசிக்கிறார். ஆசாரியர் இருந்தவரை திருவரங்கத்திலேயே தங்கியிருந்தவர், அவரது மறைவுக்குப் பிறகு சொந்த ஊருக்குப் போய்விட்டார்.’


‘ஓ. ஒன்றும் பிரச்னையில்லை சுவாமி. நான் திருக்கோட்டியூருக்குச் சென்றே அவரை தரிசிக்கிறேன்.’


‘நல்லது. மீண்டும் சொல்கிறேன், அவர் அத்தனை சாதாரணமான மனிதரல்ல. பாண்டிய நாட்டில் பெரியாழ்வார் வசித்து வந்த காலத்தில், அவருக்கு நெருக்கமான சீடராக இருந்த செல்வநம்பியின் வம்சத்தில் பிறந்தவர் இவர். குருகேசன் என்பது இயற்பெயர். தெரியுமா உமக்கு? உங்களுடைய திருக்கச்சி நம்பிகூட இவரிடம் சிலகாலம் குருகுலவாசம் செய்திருக்கிறார்!’


‘அப்படியா? நம்பிகள் சொன்னதில்லை. எப்படியானாலும் சரி, நான் திருக்கோட்டியூர் நம்பியைச் சென்று சேர்ந்து அவரிடம் ரகஸ்யார்த்தங்களைக் கற்றே தீருவேன்.’


பெரிய நம்பி ஆசீர்வதித்துவிட்டுக் கிளம்பிச் சென்றார்.


அன்று இரவெல்லாம் ராமானுஜர் முதலியாண்டானிடம் திருக்கோட்டியூர் நம்பியைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார்.


‘ஆசாரியர் ஆளவந்தார் திருநாட்டுக்கு எழுந்தருளிய சமயம் திருக்கோட்டியூர் நம்பியை இங்கு சந்தித்தேன். ஆனால் அப்போது அவரைச் சரியாக அறிந்துகொள்ளவோ, பேசவோ முடியாமல் போய்விட்டது.’


‘அதனாலென்ன சுவாமி! நாளை கிளம்பிவிடுவோமல்லவா?’


‘அவசியம். அதைவிட வேறென்ன வேலை நமக்கு?’


திருவரங்கத்தில் இருந்து திருக்கோட்டியூர் சுமார் நூறு காத தூரம் (337 கிலோமீட்டர்). ‘பல்லக்கெல்லாம் வேண்டாம்; ஆசாரியரை சேவிக்கப் போவதால் நடந்தே போய்விடுவோம்’ என்றார் ராமானுஜர்.


ஆனால் அவர் பதினெட்டு முறை நடக்கவேண்டியிருந்தது!


(தொடரும்)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 05, 2017 08:30

February 4, 2017

ருசியியல் – 09

தங்கத் தமிழகத்தில் பக்தி இயக்கம் பெருகி வேரூன்றியதில் கோயில்களின் பங்கைவிட, கோயில் பிரசாதங்களின் பங்கு அதிகம் என்பது என் அபிப்பிராயம். பின்னாள்களில் ஈவெரா பிராண்ட் நாத்திகம், இடதுசாரி பிராண்ட் நாத்திகம், இலக்கிய பிராண்ட் நாத்திகம் எனப் பலவிதமான நாத்திக நாகரிகங்கள் வளரத் தொடங்கியபோது, கோயிலுக்குப் போக விரும்பாதவர்களும் பிரசாதம் கிடைத்தால் ஒரு கை பார்க்கத் தவறுவதில்லை.


இதில் ஒன்றும் பிழையில்லை என்று வையுங்கள். தூண், துரும்பு வகையறாக்களில் எல்லாம் வேலை மெனக்கெட்டுப் போய் உட்கார்ந்துகொள்பவன் ஒரு புளியோதரையிலும் சர்க்கரைப் பொங்கலிலும் மட்டும் இருந்துவிட மாட்டானா என்ன?


வெளிப்படையாகச் சொல்வதில் வெட்கமே இல்லை. எனக்குப் பெருமாளைப் பிடிக்கும். பிரசாதங்களை ரொம்பப் பிடிக்கும்.


பிரசாதம் என்று நான் சொல்லுவது பிரபல கோயில்களின் பிரத்தியேக அடையாளங்களையல்ல. உதாரணத்துக்கு, திருப்பதி என்றால் நீங்கள் லட்டைச் சொல்லுவீர்கள். பழனி என்றால் பஞ்சாமிர்தம். அதுவல்ல நான் சொல்லுவது. இந்தப் பிரபலப் பிரசாதங்களுக்கு அப்பால் ஒவ்வொரு கோயிலிலும் வேறு சில ரகங்கள் அபார சுவையோடு தளிகையாகும். திருப்பதியில் எனக்கு லட்டைவிட கோயில் தோசை ரொம்பப் பிடிக்கும். பர்கரில் பாதியளவுக்கு கனத்திருக்கும் தோசை. அதை நெய் விட்டு வார்ப்பார்களா, அல்லது நெய்யில் குளிப்பாட்டி வார்ப்பார்களா என்று தெரியாது. மிளகு சீரகமெல்லாம் போட்டு ஜோராக இருக்கும். ஆறினால் நன்றாயிராது; தொட்டுக்கொள்ள சட்னி வேண்டும் என்பதெல்லாம் கிடையாது. மந்தார இலையில் சுற்றி எடுத்துக்கொண்டு கிளம்பிவிடலாம். இரண்டு மூன்று நாள் வைத்திருந்து சாப்பிட்டாலும் ருசி பங்கம் கிடையாது.


இங்கே, சிங்கப்பெருமாள் கோயில் புளியோதரையும் அந்த ரகம்தான். நல்லெண்ணெய், மிளகு. இந்த இரண்டும்தான் இந்தப் புளியோதரையின் ஆதார சுருதி. ஒரு வாய் மென்று உள்ளே தள்ளினால் அடி நாக்கில் இழுக்கும் பாருங்கள் ஒரு சுகமான காரம்! அதை ஒரு வாரத்துக்குச் சேமித்து வைத்து அவ்வப்போது கூப்பிட்டுச் சீராட்ட முடியும்.


திருவாரூருக்குப் பக்கத்தில் திருக்கண்ணபுரம் என்று ஒரு திவ்யதேசம் இருக்கிறது. சௌரிராஜப் பெருமாள் அங்கே பிரபலஸ்தர். அவருக்கு முனியதரன் பொங்கல் என்று ஒன்றை நட்ட நடு ராத்திரி அமுது செய்விப்பார்கள். யாரோ முனியதரன் என்கிற குறுநில மன்னர்பிரான் ஆரம்பித்து வைத்த வழக்கம். இன்றைக்கு வரைக்கும் கோயிலில் பெருமாளுக்கு இந்த நடு ராத்திரி டின்னர் உண்டு. முனியதரன் படைத்ததென்னவோ வெறும் அரிசி, பருப்பு, உப்பு சேர்த்த மொக்கைப் பொங்கல்தான். பரிமாண வளர்ச்சியில் இன்று இப்பொங்கல் அமிர்த ஜாதியில் சேர்ந்துவிட்டது.


மிகச் சிறு வயதில் இந்த ஊர் உற்சவத்துக்கு ஒரு சமயம் போயிருக்கிறேன். நள்ளிரவு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது யாரோ எழுப்பும் சத்தம் கேட்டது. கொதிக்கக் கொதிக்க உள்ளங்கையில் பிரசாதத்தை வைத்துக்கொண்டு அப்பா நின்றிருந்தார். சூடு பொறுக்காமல் சர்வர் சுந்தரம்போல் அவர் பொங்கல் பந்தை பேலன்ஸ் செய்யத் தவித்து என் வாயில் சேர்த்த காட்சி இப்போதும் நினைவில் உள்ளது. வாழ்நாளில் அப்படியொரு பொங்கலை நான் உண்டதே இல்லை. அது வெறும் நெய்யும் பாலும் பருப்பும் சேர்வதால் வருகிற ருசியல்ல. வேறு ஏதோ ஒரு சூட்சுமம் இருக்கிறது. பெரும் தங்கமலை ரகசியம்.


இந்தப் பிரசாத வகையறாக்களில் நவீனத்துவத்தைப் புகுத்தியவர்கள் என்று ஹரே கிருஷ்ணா இயக்கத்தவர்களைச் சொல்லுவேன். பெங்களூரில் உள்ள இஸ்கான் கோயிலுக்கு ஒருமுறை சென்றிருந்தபோது அங்கு நான் கண்டது பிரசாத ஸ்டால் அல்ல. பிரசாத ஹால். பந்தி பரிமாறுகிற மாதிரி வரிசையாக டேபிள் போட்டு நூற்றுக்கணக்கான பிரசாத வெரைட்டி காட்டி மிரட்டிவிட்டார்கள். சகஸ்ர சமோசா. கைவல்ய கட்லெட். தெய்வீக ரசகுல்லா. பக்தி பர்கர். பரவச பீட்ஸா. மதுர மசாலா தோசை.


ஆன்மிக ஆம்லெட் மட்டும்தான் இல்லை.


யோசித்துப் பார்த்தால் பக்தியே ஒரு ருசிதான். எங்கோ தொலைதூரத்தில் இருந்து பித்துக்குளி முருகதாஸின் ஒலித்தட்டுக் குரல் கேட்டால், அடுத்தக் கணம் எனக்குக் கண் நிறைந்துவிடும். பண்டிட் ஜஸ்ராஜின் மதுராஷ்டகம் கேட்டிருக்கிறீர்களா? கிருஷ்ணனே இறங்கி வந்து பால்சாதம் ஊட்டிவிடுவது போல இருக்கும். ரசனை, மனநிலை சார்ந்தது. அனுபவிப்பது என்று முடிவு செய்துவிட்டால் ஆழம் பார்த்துவிட வேண்டும்.


ஒரு சமயம் சிங்கப்பூர் போயிருந்தபோது, ‘கோகுல்’ என்றொரு ஓட்டலுக்குச் சென்றிருந்தேன். அது ஹரே கிருஷ்ணா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் நடத்துகிற ஓட்டல். மெனு கார்டில் மட்டன், சிக்கன் என்றெல்லாம் இருந்ததைக் கண்டதும் திகிலாகிவிட்டது.


என்ன அக்கிரமம் இது! கிருஷ்ணர் சிங்கப்பூர் போனபோது கட்சி மாறிவிட்டாரா என்ன?


ஹரே கிருஷ்ணா என்று அந்தராத்மாவில் அலறிக்கொண்டு எழுந்தபோது, உடனிருந்த என் நண்பர் பத்ரி ஆசுவாசப்படுத்தினார். அது சும்மா ஒரு எஃபெக்டுக்காகச் சேர்ப்பதுதானாம். டோஃபு துண்டுகளைச் சேர்த்துக் கிளறி நான் வெஜ் கடிக்கிற உணர்வைக் கொடுத்துவிடுவார்கள் போலிருக்கிறது. பன்னாட்டுப் பயணிகள் வந்து போகிற பிரதேசம். பெயரளவில் அசைவம் சேர்ப்பதில் பாவமொன்றுமில்லை என்று நினைத்திருக்கிறார்கள்.


சர்வம் கிருஷ்ணார்ப்பணம்! கொஞ்சம் ஆசுவாசமடைந்த பிறகு ரொஜாக் என்றொரு ஐட்டத்தை ஆர்டர் செய்து, சாப்பிட்டுப் பார்த்தேன். பழங்கள், பாலாடைக்கட்டி, டோஃபு, வெல்லம், சீரகம் என்று கையில் கிடைத்த எல்லாவற்றையும் சேர்த்துக்கொட்டிக் கிளறி, தக்காளி சூப் மாதிரி எதிலோ ஒரு முக்கு முக்கி எடுத்து வந்து வைத்தார்கள். அசட்டுத் தித்திப்பும் அநியாயப் புளிப்புமாக இருந்த அந்தப் பதார்த்தம் ஒரு கட்டத்தில் எனக்குப் பிடித்துவிடும்போல் இருந்தது.


இன்னொன்று கேட்கலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தபோது, நண்பராகப்பட்டவர் வினோதமான ஒரு பேரைக் கொண்ட (மீ கொரெய்ங் என்று ஞாபகம்) ஏதோ ஒரு மலாய் உணவுக்காகக் காத்திருந்தார். முன்னதாக மெனு கார்டில் அதன் சேர்மானங்களையெல்லாம் ஊன்றிப் படித்து நாலைந்து பேரிடம் விசாரித்த பிறகுதான் அதை உண்ணத் தயாராகியிருந்தார். கோர நாஸ்திக சிகாமணியான அவரை பகவான் கிருஷ்ணர் தமது உணவகம் வரைக்கும் வரவழைத்துவிட்டதை எண்ணி நான் புன்னகை செய்துகொண்டிருந்தபோது அவர் ஆணையிட்ட உணவு வகை மேசைக்கு வந்து சேர்ந்தது.


நண்பர் சாப்பிட ஆரம்பித்தார்.


‘நன்றாக இருக்கிறதா?’ என்று கேட்டேன். முதல் வாய் உண்டபோது சிரித்தபடி தலையசைத்தார். இரண்டாவது, மூன்றாவது, நான்காவது கவளம் உள்ளே போனபோது மீண்டும் கேட்டேன், ‘பிடித்திருக்கிறதா?’


மீண்டும் அவர் தலையசைத்தார். ஆனால் ஏதோ சரியில்லாத மாதிரி தோன்றியது. ஒரு கட்டத்தில் வேகவேகமாகச் சாப்பிட ஆரம்பித்தார்.


அந்த உணவகத்தில் மிக மெல்லிய ஒலியளவில் கிருஷ்ண பஜன் ஒலித்துக்கொண்டிருந்தது. அதன் தாள கதிக்கு ஏற்ப அவர் உண்டுகொண்டிருந்த மாதிரி தோன்றியது. சட்டென்று ஏதோ ஒரு கணத்தில் அவர் பிளேட்டை விடுத்து, என்னை நிமிர்ந்து பார்த்தார். அவர் கண்ணில் இருந்து கரகரவென நீர் வழிந்துகொண்டிருந்தது.


ஆ! எப்பேர்ப்பட்ட அற்புதத் தருணம் அது! தமது பள்ளி நாள் தொடங்கி, கடவுள் இல்லை என்று சொல்லி வளர்ந்த பிள்ளை அவர். தென் தமிழ் தேசத்தில் இருந்து எங்கோ மூவாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு அழைத்து வந்து அவரை இப்படிக் கிருஷ்ண பக்தியில் கரைய வைத்த பெருமானின் லீலா வினோதம்தான் எப்பேர்ப்பட்டது!


நான் புல்லரித்து நின்றபோது நண்பர் சொன்னார், ‘செம காரம்.


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 04, 2017 08:31

பொலிக! பொலிக! 23

வரதராஜர் கோயிலில் அப்போது உற்சவம் நடந்துகொண்டிருந்தது. திருக்குளத்தில் பள்ளி கொண்டிருக்கும் அத்தி வரதர் நாற்பதாண்டுகளுக்கு ஒருமுறை வெளிப்பட்டுக் காட்சியளிக்கும் பரவசத் திருவிழா. அக்கம்பக்கத்து தேசங்களில் இருந்தெல்லாம் மக்கள் கூட்டம் கூட்டமாகக் காஞ்சியை நோக்கி வந்துகொண்டிருந்தார்கள். கோயிலில் நிற்க இடம் கிடையாது. எங்கும் பக்தர்கள். எல்லா பக்கங்களிலும் பிரபந்த பாராயணம். வாண வேடிக்கைகளும் மங்கல வாத்திய முழக்கங்களுமாக நான்கு வாரங்களுக்கு நீண்டுகொண்டிருந்த உற்சவம்.


உற்சவ களேபரங்களில் பெருமாளுக்கான நித்தியப்படி நியமங்கள் தினமுமே சற்றுத் தாமதமாகிக்கொண்டிருந்தன. பக்தர்களின் சந்தோஷத்துக்கு முன்னால் தனது நேர ஒழுங்கை அவன் அத்தனை பெரிதாகக் கருதாதவன்தான். ஆனாலும் அன்று அது நடக்கவேண்டும் என்று இருந்திருக்கிறது.


இரவு பெருமாளுக்குத் திருவாராதனம் முடியத் தாமதமாகிப் போனது. வீதி உலா போயிருந்த உற்சவர் இன்னும் சன்னிதிக்குத் திரும்பியபாடில்லை. ஆனால் கதவு அடைக்கப்படும் சத்தம் கேட்டு, வரதனுக்குக் குழப்பமாகிவிட்டது.


‘இதென்ன நம்பிகளே, விசித்திரமாக இருக்கிறதே. இன்னும் நமக்குத் திருவாராதனமே ஆகவில்லை. அதற்குள் ஏன் கோயில் நடை சாத்தப்படுகிறது?’ என்று திருக்கச்சி நம்பியிடம் கேட்டான் பெருமான்.


‘பெருமானே, அது கோயில் நடை சாத்தும் சத்தமல்ல. கூரத்தில் கூரேசனின் அன்ன சத்திரக் கதவு அடைக்கப்படுகிற சத்தம். இப்போது இன்னொரு சத்தம் வரும் கேளுங்கள்’ என்றார் திருக்கச்சி நம்பி.


வரதன் கவனித்துக்கொண்டிருந்தான். சொல்லி வைத்த மாதிரி கலகலவென்று பொன்னும் மணியும் சிதறும் பெரும் சத்தம்.


‘ஆ, இது என்ன?’


‘இன்று தானதருமங்களை முடித்தபிறகு மிச்சம் இருப்பதை அளந்து கொட்டிக்கொண்டிருக்கிறார் கூரேசர். நாளைப் பொழுது விடிந்ததும் மீண்டும் தருமங்களைத் தொடங்க இப்போதே ஆயத்தம் செய்துவிட்டுத்தான் அவர் படுக்கப் போவது வழக்கம்.’


ஒரு கணம் திகைத்துவிட்டான் எம்பெருமான். ‘அத்தனை செல்வமா கூரேசனிடம்!’


மறுநாள் திருக்கச்சி நம்பி கூரேசனைச் சந்தித்து இந்த விவரத்தைச் சொன்னார். ‘அப்பனே, அருளாளப் பெருமானையே உனது ஐஸ்வர்யம் மயக்கிவிட்டதப்பா!’


தனக்குள் சிறுத்துப் போனார் கூரேசன்.


‘எம்பெருமானே! இந்தப் பொன்னின் ஒலி உன்னையே மயக்குகிறதென்றால், இத்தனைக் காலம் இதனை வைத்திருந்த பெரும் பாவத்தையல்லவா நான் செய்திருக்கிறேன்! உன் பேரருளையும் பெருங்கருணையையும் தவிர வேறு எதற்கும் கட்டிப்போடும் சக்தி இருந்துவிடக் கூடாது. முடிந்தது இன்றோடு!’


ஆண்டாளைக் கூப்பிட்டான் கூரேசன். ‘இதோ பார் ஆண்டாள்! நீ என்ன செய்வாய் என்று எனக்குத் தெரியாது. இன்றோடு நமது சொத்து சுகம் அத்தனையும் வெளியே போயாகவேண்டும். நாளைக் காலை நாம் காஞ்சிக்குக் கிளம்புகிறோம். அங்கு ராமானுஜரைச் சந்தித்து, அவரோடு ஐக்கியமாகிவிட வேண்டும். இல்லாவிட்டால் இந்தப் பொன் மூட்டைகளின் சுமையில் நாம் மூச்சடைத்து இறந்துவிடுவோம்.’


‘ஆகட்டும் சுவாமி’ என்றாள் ஆண்டாள்.


மறுநாள் முழுதும் அவர்கள் அன்ன சத்திரத்தின் வாசலிலேயே நின்றுகொண்டார்கள். வாயிற்கதவின் இருபுறமும் மூட்டை மூட்டையாகப் பொற்காசுகள், அணிகலன்கள், சேர்த்து வைத்த பெரும் சொத்துகள். சாப்பிடப் போகிற அனைவரையும் வேண்டிய அளவுக்கு எடுத்துக்கொள்ளச் சொன்னார்கள். ஒரே ஒரு நிபந்தனை. சாப்பிட்டு முடித்து வெளியே வரும்போது, முதலில் எடுத்த அதே அளவுக்கு மீண்டும் எடுத்தாக வேண்டும்.


கூரேசனின் மனம் அப்படிப்பட்டது. அவனுக்கு வாய்த்தவள் அவனைவிட சுத்த ஆத்மா.


முதலியாண்டான் இதையெல்லாம் நினைத்துப் பார்த்தபடியே கூரத்தாழ்வானுடன் திருவரங்க எல்லை வரை நடந்து போனான்.


‘தாசரதி! நீ மடத்துக்குத் திரும்பிவிடு. ஆசாரியர் அங்கே தனியாக இருப்பார். நான் வரும்வரை அவரை பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டியது உன் பொறுப்பு’ என்றார் கூரேசர்.


முதலியாண்டானுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. ஆசாரியர் தனியாக இருப்பதா? திருவரங்கத்துக்கு வந்து சேர்ந்த நாள் முதல் ஒரு கணம் கூட அப்படி ஒரு சந்தர்ப்பம் அவருக்கு வாய்த்ததே இல்லை. எப்போதும் அவரைச் சுற்றி நூறு பேர் இருந்துகொண்டே இருந்தார்கள். அவர்கள் புறப்பட்டால் அடுத்த வரிசையில் இன்னும் நூறு பேர்.


‘எனக்கு வாசிக்கவே நேரமில்லாமல் போய்க்கொண்டிருக்கிறதப்பா!’ என்று எத்தனை முறை கவலைப்பட்டிருக்கிறார்!


‘கூரேசரே, நீங்கள் தமது பத்தினியை அழைத்துக்கொண்டு சீக்கிரம் திரும்பும் வழியைப் பாருங்கள். நீங்கள் வந்து சேரும்வரை நமது ஆசாரியருக்கு இருப்புக் கொள்ளாது.’


முதலியாண்டான் மடத்துக்குத் திரும்பிவிட, கூரேசர் காஞ்சியை நோக்கி நடக்கத் தொடங்கினார்.


இரு வாரங்களில் அவர் கூரத்தை அடைந்து வீடு சேர்ந்தார்.


‘வாருங்கள். ஆசாரியர் நலமாக உள்ளாரா?’


‘போகிற வழியில் பேசிக்கொள்வோமே? நீ உடனே கிளம்பிவிடு ஆண்டாள்!’


வேறு ஒரு வார்த்தை கிடையாது. வாசற்படியிலேயே நின்றபடிக்குத்தான் கூரேசர் சொன்னார்.


‘ஒரு நிமிடம்’ என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று பத்து வினாடிகளில் திரும்பிய ஆண்டாள், ‘கிளம்பலாம்’ என்று சொல்லிவிட்டாள்.


கதவைப் பூட்டவில்லை. யாரிடமும் சொல்லிக்கொள்ளவில்லை. எத்தனை நாள் பயணம், எங்கே போகிறோம், எப்போது திரும்புவோம் அல்லது திரும்புவோமா – எதுவுமே கேட்கவில்லை. கிளம்பு என்றால் கிளம்புவது மட்டுமே கடன்.


அன்றிரவு அவர்கள் மதுராந்தகத்தைக் கடந்து ஒரு காட்டு வழியே போகவேண்டியிருந்தது.


‘இந்தக் காட்டைக் கடக்காமல் போகமுடியாதா?’ என்று கவலையுடன் கேட்டாள் ஆண்டாள்.


‘ஏன் கேட்கிறாய்? காட்டைக் கண்டால் பயமா?’


அவள் மெல்லத் தலையசைத்தாள். ‘காட்டில் கள்வர் நடமாட்டம் இருக்குமல்லவா?’


‘பைத்தியமே. மடியில் கனமிருந்தால்தான் வழியில் பயம். நம்மிடம் என்ன இருக்கிறது?’


ஆண்டாள் தயங்கியபடி தன் இடுப்பில் முடிந்து வைத்திருந்த ஒரு சிறு பொன் வட்டிலை எடுத்துக்காட்டினாள். ‘பயணம் எத்தனை நாளாகுமோ தெரியவில்லை. நீங்கள் சாப்பிடுவதற்கு ஒரு பாத்திரம் கூட எடுத்துக்கொள்ளாவிட்டால் எப்படி? அதுதான்..’


கூரேசர் புன்னகை செய்தார். அன்போடு அந்த வட்டிலை வாங்கித் தூரப் போட்டார்.


‘ஆண்டாள், இந்தப் பொன் செய்யும் மாயத்தைக் கண்டாயா? அகந்தையைக் கொடுக்கிற பொருள் அச்சத்தையும் தருகிறது. நமக்கெதற்கு அது? ஆசாரியரின் திருவடியை எப்போதும் மனத்துக்குள் ஏந்தியிருப்போம். நிரந்தரமான நிதி என்பது அதுதான். வா, போகலாம்!’ என்று அழைத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தார்.


அடுத்த பதினைந்து தினங்களில் அவர்கள் திருவரங்கத்துக்குச் சென்று சேர்ந்தார்கள்.


‘அப்பாடா! வந்துவிட்டீர்களா! இனி நான் நிம்மதியாகப் படிக்கப் போவேன்!’ என்றார் ராமானுஜர்.


(தொடரும்)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 04, 2017 08:30

February 3, 2017

அஞ்சலி: கன்னிவாடி சீரங்கராயன் சிவகுமார்

புத்தகக் காட்சியில் ஞாநி ஸ்டால் வாசலில் சிவகுமார் அமர்ந்திருந்தான். என்னைப் பார்த்ததும் சட்டென்று இழுத்து அருகே உட்காரவைத்து, ‘அப்றம்? எளச்சிட்டாப்டி?’’


நான் இளைத்த கதையைச் சொல்லிக்கொண்டிருந்தபோது அழகியசிங்கரிடம் இருந்து போன் வந்தது. விருட்சத்தின் 101வது இதழை வெளியிட வரவேண்டும் என்று சொன்னார்.


‘சிவா, மௌலி கூப்பிடறார். விருட்சம் வெளியிடணுமாம். வாயேன்கூட.’


அன்று விருட்சத்தின் 101வது இதழை நான் வெளியிட அவந்தான் பெற்றான். பிறகு வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். நான் எழுத உத்தேசித்திருக்கும் நாவலின் ஒருவரியைச் சொல்லப் போக, அடுக்கடுக்காக நூறு கேள்விகள் கேட்டான். முக்கால் மணி நேரம் சென்றிருக்கும். ‘நல்லாருக்குய்யா. நீ எழுதிருவ. என்னைய மாதிரி சோம்பேறி இல்ல’ என்றான்.


‘நீ ஏன் இப்படி இருக்க? தினமலர் வேலைய ஏன் விட்ட?’


‘போதுமே, இப்ப என்ன? அதவிடு. ஒரு செம சப்ஜெக்ட் இருக்கு. ஆதிமங்கலத்து விசேஷம், குணசித்தர்களையெல்லாம் தூக்கி சாப்ட்டுரும். சொல்றேன் கேக்கறியா? தனித்தனி சேப்டரா படிச்சா கட்டுரை. சேத்துப் படிச்சா நாவல்.’


‘சொல்லு.’


சொன்னான். அவன் பிறவிக் கலைஞன். அனுபவங்களை வெகு அநாயாசமாகக் கலையாக்கத் தெரிந்தவன். விதை தூவும் விவசாயியின் லாகவத்தில் மொழியைக் கையாளுவான். அரை வட்ட விரிப்பில் வீசியெறியப்படும் வித்து மொட்டுகள் தமக்கான மண்ணைத் தேடிப் புதைவதுபோன்றது அவன் மொழி. கவிதைக்கும் உரைநடைக்கும் இடையில் தனக்கென ஒரு பிரத்தியேக மயக்க வெளியை உருவாக்கி வைத்திருந்தவன். அவனது சொற்களின் சங்கீதம் மட்டும் எப்போதும் தனித்துக் கேட்கும். அவன் என்ன எழுதினாலும் ரசிப்பேன். எப்போதாவது மோசமாக எழுதினாலும் எனக்குப் பிடிக்கும். ஏனெனில் எனக்கு அவனைத் தெரியும். குறை நிறைகளோடு. தகுதி தகுதியின்மைகளோடு. சுமார் ரகத்தில் அவனிடமிருந்து என்னவாவது ஒன்று வந்திருக்கிறதென்றால், பயல் பாக்கெட்டில் கொஞ்சம் காசு இருக்கிறது என்று பொருள். அந்தக் கதையோ கட்டுரையோ கெட்டுப் போனால் என்ன? அவன் சந்தோஷமாக இருக்கிறான். அது போதும் என்று எண்ணிக்கொள்வேன்.


‘சொல்லு. இத எங்க டிரை பண்ணலாம்? விகடன் வேணான்னு படுது. இப்ப அதுல வர்ற பத்திய எல்லாம், படிக்கறப்பவே ஜன்னி கண்டுடுது…’


‘உன்னோடது உருப்படியா இருக்கா? அது வரைக்கும் பாரு போதும். கண்ணண்ட்ட பேசு. அவருக்கு இது பிடிக்கும்னு படுது. இல்லன்னா, சிவராமன்ட்ட பேசு. ரசனை உள்ள ஆளு. நீயும் ஃப்ரீயா எழுதலாம். குங்குமத்துல வந்தாலும் ரீச் நல்லாவே இருக்கும்.’


பேசினானா தெரியாது. இன்று அவன் இல்லை என்று செய்தி வருகிறது.


கண்காட்சியில் சந்தித்தபோது, அவன் ஒரு வேலையில் நிலைக்கமாட்டாத ஆதங்கத்தில் கொஞ்சம் நிறையவே கடிந்துகொண்டேன். என்னைப் பற்றிய கடைசி நினைவு எனது கோபத்தைக் குறித்துத்தான் அவன் மனத்தில் பதிந்திருக்கும் என்பது இப்போது வருத்தமாக இருக்கிறது.


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 03, 2017 10:06

பொலிக! பொலிக! 22

கோவிந்தன் இப்போது இங்கு வர அவசியமில்லை. அவன் பெரிய திருமலை நம்பியிடமே சிறிது காலம் இருக்கட்டும் என்று ராமானுஜர் சொன்னார்.


சுற்றியிருந்த சீடர்களுக்கு இது வியப்பாக இருந்தது. ‘ஆசாரியரே, உமது தம்பி மனம் மாறி வைணவ தரிசனத்துக்கு மீண்டும் வந்து சேர்ந்த மகிழ்ச்சியில் நீங்கள் உடனே அவரைக் காண விரும்புவீர்கள் என்று நினைத்துத்தான் நம்பிகள் அவரைத் திருவரங்கத்துக்குக் கிளம்பச் சொல்லியிருக்கிறாராம்.’


‘மாற்றம் நிகழவேண்டும் என்பது மட்டுமே என் விருப்பம். கோவிந்தனால் ஆக வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன. ஆனால் அவன் பக்குவம் அடையவேண்டியது அனைத்திலும் முக்கியம். அவன் திருவரங்கம் வருவதைவிட நம்பியிடமே இருந்து பயில்வதுதான் சிறப்பு’ என்றார் ராமானுஜர்.


விஷயம் பெரிய திருமலை நம்பிக்கு எட்டியது. ஒரு நல்ல நாள் பார்த்தார். கோவிந்தனைத் தன்னோடு திருமலைக்கு அழைத்துச் சென்று பஞ்ச சம்ஸ்காரம் செய்து வைத்தார். அன்றே அவனுக்கு ராமாயண வகுப்பைத் தொடங்கிவிட்டார். ராமாயணத்தின் கதைக்கு அப்பால் உள்ள ஆழ்ந்த உட்பொருள்களை ஒவ்வொன்றாக எடுத்துச் சொல்லி விளக்குவதில் நம்பிகள் கைதேர்ந்தவர். அது ஆளவந்தார் அவருக்கு அளித்த வரம்.


‘கோவிந்தா, ராமன் பிறப்பின் சாரம் உனக்குச் சரியாகப் புரிந்துவிட்டால் நீ நான்கு வேதங்களையும் கணப்பொழுதில் புரிந்துகொண்டுவிட முடியும். தத்துவங்களின் உச்சம் என்பது ராமாவதாரம். புரிகிறதா?’


செய்தி மீண்டும் திருவரங்கத்தை எட்டியது. முதலியாண்டான் ராமானுஜரை அணுகி, கோவிந்தனுக்கு ராமாயணப் பாடம் ஆரம்பிக்கப்பட்ட விவரத்தைச் சொல்ல, ‘அப்படியா? மிக்க மகிழ்ச்சி. உடனே கூரேசனை ஊருக்குப் போய் அவனது பத்தினியை இங்கே அழைத்து வரச் சொல்!’ என்றார் ராமானுஜர்.


முதலியாண்டானுக்குப் புரியவில்லை. தன்னைத் தேடிக் கிளம்பிய தம்பியைத் திருவரங்கத்துக்கு இப்போது வரவேண்டாம் என்று சொல்லித் தடுத்தவர், கூடவே இருக்கும் கூரத்தாழ்வானை எதற்கு இப்போது ஊருக்குத் துரத்துகிறார்?


கூரத்தாழ்வானே சற்றுத் தயங்கத்தான் செய்தான். ‘அத்தனை அவசரமில்லை ஆசாரியரே. நான் உங்களுடன் இருக்கவே விரும்புகிறேன்.’


‘தவறு கூரேசா! நீ திருமணமானவன். உன் மனைவியை அங்கு தனியே விட்டுவிட்டு இங்கு நீ எந்த தருமத்தையும் காக்க இயலாது. மட்டுமல்ல. உனது தவம் எத்தனை சிறப்பானதென்றாலும், அது பூரணமடைவது உன் மனைவியால்தான்.’


வேறு வழியின்றி கூரத்தாழ்வான் காஞ்சிக்குப் புறப்பட்டான். பழைய கூரேசன் என்றால் பல்லக்கில்தான் போவான். பல்லக்குத் தூக்கிகள் தவிர, சேவகத்துக்கென ஒரு படையே பின்னால் வரும். இப்போது அதெல்லாம் இல்லை. அனைத்தும் உதிர்ந்த நினைவுகள். அந்தக் கூரேசன் வேறு. அவனது ஆகிருதி வேறு. ஊரில் அவனுக்கு இருந்த பேரும் மரியாதைகளும் வேறு.


முதலியாண்டான் அடிக்கடிக் கேட்பான். ‘எப்படி விட முடிந்தது? எப்படி உதற முடிந்தது? ஒன்றுமில்லாதவர்கள் உஞ்சவிருத்திக்குப் போவது பெரிய விஷயமல்ல. நீங்கள் ராஜ வாழ்க்கை வாழ்ந்த மனிதர். ஒரு கணத்தில் உதறித் தள்ள எப்படி சாத்தியமானது கூரேசரே?’


கூரேசன் புன்னகை செய்வான்.


ஒரு சம்பவம் நடந்தது. அதை எப்படி அனைவரிடமும் சொல்லிக்கொண்டிருக்க முடியும்? கேட்பவருக்கு ஆஹாவென வாய் பிளக்கத் தோன்றினாலும் அவனைப் பொறுத்தவரை அது அவமானகரமான விஷயம். முதலியாண்டான் துருவித் துருவிக் கேட்டபோது வேறு வழியின்றி சொன்னான்.


கூரேசன் பிறவிப் பணக்காரன். கூரத்தில் இருந்து காஞ்சியைத் தாண்டி நெடுந்தொலைவுக்கு அவனது புகழ் பரவியிருந்த நேரம் அது. பணத்தோடு சேர்த்துக் குணம் படைத்த பெரிய மனிதர். எப்படி அள்ளி அள்ளிக் கொடுக்கிறார் இந்த மகாத்மா! யாருக்கு இந்த மனம் வரும்! வியக்காத வாயில்லை.


தனது மாளிகைக்கு அருகே ஓர் அன்ன சத்திரத்தை நிறுவி நாளும் பொழுதும் பசித்து வருவோருக்குப் பந்தி பரிமாறி மகிழும் சுபாவம் அவனுக்கு. பரம பக்திமான். தனது சொத்து முழுதும் தான தருமங்களுக்குத்தான் என்பதில் நெல்லளவு மாற்றுச் சிந்தனையும் அவனுக்கு இருந்ததில்லை.


சொல்லி வைத்த மாதிரி அவனுக்கு வாய்த்த மனைவியும் அதே குணம் கொண்டவளாக இருந்தாள். ஆண்டாள். ஆ, எப்பேர்ப்பட்ட பேரழகி! ஆனால் விதி அவளுக்கு ஜாதகக் கட்டங்களில் விளையாட்டுக் காட்டிக்கொண்டிருந்தது.


‘ஐயா உமது மகளை யார் திருமணம் செய்துகொண்டாலும் அவருக்கு உடனடி மரணம் நிச்சயம்’ என்று சோதிடர்கள் சொல்லிவிட்டுப் போயிருந்தார்கள்.


கூரேசனுக்கு அது வியப்பாக இருந்தது. வாழ்வையும் மரணத்தையும் தீர்மானிப்பது பரமாத்மா அல்லவா? சோதிடர்களுக்கு அச்சக்தி உண்டென்றால் பரந்தாமன் எதற்கு?


‘சரி, உங்கள் மகளை நான் மணந்துகொள்கிறேன்’ என்று ஆண்டாளின் தந்தையிடம் போய்ச் சொன்னான். பெருங்கோடீஸ்வரர். ஊரறிந்த உபகாரி. அப்பழுக்கற்ற பக்திமான். ஆனால் ஐயா, என் மகளை நீங்கள் மணந்தால் உங்கள் வாழ்க்கை முடிந்துவிடுமே?


‘அதையும் பார்க்கிறேன்’ என்று சொல்லித்தான் அவன் ஆண்டாளைக் கைப்பிடித்திருந்தான்.


‘ஆண்டாள்! மனித வாழ்க்கை மிகவும் சிறியது. தவிரவும் அற்பமானது. கண்மூடித் திறக்கும் நேரத்தில் பிறவி முடிந்துவிடும். வாழும் கணங்கள் ஒவ்வொன்றிலும் நாம் அடுத்தவருக்குப் பயன்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்பது என் ஆசை.’ என்றான் கூரேசன்.


‘பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் நாலு இலையை எடுத்துப் போடலாமே? வெளியே பசியோடு பலபேர் காத்துக்கொண்டிருக்கிறார்கள்’ என்றாள் ஆண்டாள்.


அப்படி ஒரு மனைவி இன்னொருத்தருக்கு வாய்க்கமாட்டாள். இருவருக்கும் பேரருளாளனை விஞ்சிய தெய்வம் இல்லை. ராமானுஜரை விஞ்சிய ஆசாரியர் இல்லை.


‘நாம் அவரை அண்டித் தாள்பணிய நாள் நெருங்கிக்கொண்டிருக்கிறது ஆண்டாள். நம் ஊருக்கு இத்தனை பக்கத்தில் ஞானச்சுடரொளி தகித்துக்கொண்டிருக்கிறபோது நாம் அர்த்தமே இல்லாமல் இங்கு தினங்களை வீணடித்துக்கொண்டிருக்கிறோம்.’


‘ஏன் வீணடிக்க வேண்டும்? கிளம்பிவிட வேண்டியதுதானே?’


‘கிளம்பலாம்தான். ஆனால் இருக்கிற சொத்துபத்தையெல்லாம் அத்தனை சீக்கிரம் தானம் செய்துவிட முடியாது போலிருக்கிறதே.’


‘பொறுப்பை என்னிடம் விடுங்கள்’ என்றாள் ஆண்டாள். அன்று முதல் கூரேசனின் இல்லம் ஒரு தானத் திருமாளிகையானது. போகிற வருகிறவர்களையெல்லாம் கூப்பிட்டுக் கூப்பிட்டுக் கொடுத்தார்கள். இரு கரம் ஏந்தி அளிக்கையில் சிந்தும் சத்தம் இருபது காத தூரம் வரை கேட்டது. பொன்னும் மணியும் ரத்தினங்களும் வைர வைடூரியங்களும், கல்லும் மண்ணுமெனத் தோன்றியது அவர்களுக்கு. ஊரே மூச்சடைத்து நின்றது. என்ன ஆகிவிட்டது கூரேசனுக்கு? நூற்றாண்டு கால சொத்து சுகங்களை எதற்காக இப்படிக் கண்மூடித்தனமாக அள்ளிக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்?


பதில் சொல்லிக்கொண்டிருக்கக்கூட அவகாசமில்லாமல் இருவரும் காரியத்தில் கண்ணாக இருந்தார்கள்.


அப்போது அது நடந்தது.


(தொடரும்)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 03, 2017 08:30

February 2, 2017

பொலிக! பொலிக! 21

வடகாவிரிக் கரையில் ஊர் திரண்டு நின்றிருந்தது. அத்தனை பேருக்கும் நெஞ்சு கொள்ளாத மகிழ்ச்சி. ஒருபுறம் திருமால் அடியார்கள் பிரபந்தம் சொல்லிக்கொண்டிருந்தார்கள். மறுபுறம் மங்கல வாத்திய ஒலி விண்ணை நிறைத்துக்கொண்டிருந்தது. கோயிலில் இருந்து அழகிய மணவாளனே புறப்பட்டுவிட்டான் என்று சேதி வந்தபோது கூட்டத்தின் பரவசம் உச்சத்துக்குப் போனது. ராமானுஜரை வரவேற்கப் பெருமானே வருகிறான் என்றால் இது எப்பேர்ப்பட்ட தருணம்!


எல்லாம் நல்லபடி நடக்கவேண்டும். இங்குதானே வருகிறார்? இங்கு இருக்கத்தானே வருகிறார்? ஆளவந்தாரின் பீடத்தை அலங்கரிக்கத்தானே வருகிறார்? எப்படியோ அரையர் சாதித்துவிட்டார். தம் பாட்டுத் திறத்தால் காஞ்சி வரதராஜனைக் கட்டிப்போட்டுவிட்டார். ஒப்புக்கொண்டு ராமானுஜரும் புறப்பட்டுவிட்டார் என்று சேதி வந்தபோதே திக்குமுக்காடிப் போனார்கள் திருவரங்கவாசிகள்.


பரமபதம் அடைந்துவிட்ட ஆளவந்தாரின் மூடிய விரல்களை நிமிர்த்திக் காட்டிய மகான். பேசியது ஒருவரிதான். ஆனால் எத்தனை தெளிவு, எவ்வளவு அழுத்தம், தன்னம்பிக்கை! தவிரவும் இளைஞர். வைணவ தரிசனம் இவரால்தான் தழைக்க வேண்டுமென்று எம்பெருமான் எண்ணிவிட்டால் யார் மாற்ற முடியும்?


வானில் கருடன் வட்டமிட்டான். காற்று குளிர்ந்து வீசி அரவணைத்தது. ரங்கா ரங்கா என்று கூட்டம் உற்சாகக் குரல் கொடுத்துக்கொண்டிருக்க, தாள வாத்தியங்கள் உச்சத்தில் ஒலித்துக்கொண்டிருக்க, கோயிலில் ஒலித்த மணிச்சத்தம் அனைத்தையும் மீறி வடகாவிரிக் கரையை வந்து தொட்டபோது ராமானுஜர் திருவரங்கம் வந்து சேர்ந்தார்.


‘எம்பெருமானே! எனக்காக நீங்களா முன்னால் வந்து காத்திருக்க வேண்டும்? இது என்ன அபசாரம்?’ என்று பதறி ஓடி வந்து, எழுந்தருளியிருந்த உற்சவ மூர்த்தியின் திருமுன் விழுந்து வணங்கினார் ராமானுஜர்.


‘தவறில்லை ராமானுஜரே! வைணவத்தில் பாகவதனே பெரியவன். பகவான் அவனுக்கு அடுத்தபடிதான். நீங்கள் அறியாததா? ஶ்ரீவைஷ்ணவ தருமத்தைப் புவியெங்கும் அறிவித்துக்கொண்டிருப்பவர் தாங்கள். உங்களைப் பேரருளாளன் விட்டுக் கொடுத்ததே எங்களுக்குப் பெரிய விஷயம். வாருங்கள்!’ என்று வரவேற்றார் பெரிய நம்பி.


கூட்டம் ஊர்வலமாகக் கிளம்பிக் கோயிலுக்குச் சென்றது. வழியெங்கும் வீட்டு வாசல்களில் மலர்ந்திருந்த பெரிய பெரிய கோலங்களிலும் நிலைப்படிகளை அலங்கரித்திருந்த மாவிலைத் தோரணங்களிலும் மக்களின் மகிழ்ச்சியைப் புரிந்துகொண்டார் ராமானுஜர்.


நான் என்ன செய்துவிட்டேன்! ஆளவந்தாரின் ஞானத்தின்முன் கால் தூசு பெறுவேனா! திருக்கச்சி நம்பியின் பிரேம பக்திக்கு முன் நிற்க முடியுமா என்னால்? இதோ, இந்தப் பெரிய நம்பியின் சிரத்தை எத்தனை பிறப்பெடுத்தாலும் எனக்கு வருமா? எடுத்த காரியத்தை முடிக்கிற வல்லமை கொண்ட அரையரின் திறன் எப்பேர்ப்பட்டது! என்னை வரவேற்கவா இத்தனைக் கோலாகலம்?


கூச்சத்தில் சுருங்கியவரைக் கண்டு புன்னகை செய்த பெரிய நம்பி, ‘சுவாமி! இந்தப் பணிவுதான் உமது உயரம்’ என்றார்.


கோயில் சன்னிதியில் நெடுநேரம் ராமானுஜர் கண்மூடி நின்றிருந்தார். செய்ய வேண்டிய கடமைகள் ஏராளம். நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகள் அதைக் காட்டிலும் அதிகம். அனைத்தையும்விடக் கற்கவேண்டியவை கடலளவு உள்ளன. பெருமானே! நான் பயின்று தெளிய இந்த ஒரு ஜென்மம் எப்படிப் போதும் எனக்கு?


சம்பிரதாயங்கள் முடித்து திருமடத்துக்கு வந்து அமர்ந்தபோது முதலியாண்டானும் கூரத்தாழ்வானும் ‘முதல் பணி என்ன?’ என்று கேட்டார்கள்.


‘கோவிந்தன்!’ என்றார் ராமானுஜர்.


திருமலையில் கைங்கர்யம் செய்துகொண்டிருந்த பெரிய திருமலை நம்பிக்கு உடனே ஒரு கடிதம் எழுதிக் கொடுத்தனுப்பினார். ‘நீங்கள் பெயர் வைத்த பிள்ளை கோவிந்தன். காளஹஸ்தியில் சிவ ஸ்மரணையில் தன்னை மறந்து இருக்கிறான். கீதை சொல்லுவதை அவனுக்கு நினைவுபடுத்துங்கள். அவரவர் ஸ்வதர்மம் என்று ஒன்று இருக்கிறது. வைணவ குலத்தில் பிறந்து பெருமானுக்குச் சேவை செய்ய வேண்டியவன் இப்படிப் பொறுப்பு மறந்து வாழலாமா என்று கேளுங்கள்.’


பெரிய திருமலை நம்பி, கோவிந்தனுக்கும் தாய்மாமன்தான். ஆனால் பெயர் வைத்த பிறகு அவர்கள் சந்தித்ததே இல்லை. நம்பி மலையை விட்டு இறங்கி ஊருக்கு வருவதற்கு, அப்புறம் சந்தர்ப்பமே கூடவில்லை. அவர் வந்தபோது கோவிந்தன் அங்கு இல்லாமல் போயிருந்தான்.


எனவே அவருக்குச் சிறு குறுகுறுப்பு இருந்தது. என்னை அவன் எப்படி எதிர்கொள்ளப் போகிறான்?


காளஹஸ்திக்கு நம்பிகள் வந்து சேர்ந்தார். கோவிந்தன் தினமும் குளித்து முழுகி சிவபூஜைக்குப் பூப்பறித்துச் செல்லும் குளக்கரைக்கு வந்து உட்கார்ந்தார். கோவிந்தன் பூப்பறிக்க வந்தபோது மெல்ல பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தார்.


‘அப்பனே, உனக்கு உன் சகோதரன் இளையாழ்வானை ஞாபகமிருக்கிறதா? குருவே ஆனாலும் மாயாவாதம் பேசுகிற இடத்தில் மறுத்துப் பேசி அவன் வெல்லும்போதெல்லாம் கரகோஷம் செய்து நீ சந்தோஷப்பட்டது நினைவிருக்கிறதா? இருவருமாகக் காஞ்சிப் பேரருளாளன் சன்னிதியில் பழி கிடந்த தினங்கள் மறக்காதிருக்கிறதா?’


‘ஐயா, நீங்கள் யார்?’


அன்று தொடங்கி பத்து நாள்களுக்குப் பெரிய திருமலை நம்பி இடைவிடாமல் கோவிந்தனுடன் பேசிக்கொண்டே இருந்தார். ‘நான் யார் என்று சொன்னால் நீ யார் என்பது உனக்குப் புரியுமா கோவிந்தா? எம்பெருமானின் பாதாரவிந்தங்களில் பழிகிடக்க வேண்டிய உன் கடமை புரியுமா? இந்தப் பூக்களைக் கொண்டுபோய் நீ சேர்க்க வேண்டிய இடம் விஷ்ணுவின் பாதங்கள் அல்லவா? எத்தனை சிறப்பானதானாலும் உனது தருமத்தை ஒதுக்கி வைத்துவிட்டு இன்னொன்றைக் கைக்கொள்வது கற்றவனுக்கு அழகா? நீ படித்தவன் அல்லவா? ஞானஸ்தன் அல்லவா?’


‘ஆனால் ஐயா, கங்கைக் கரையில் பாணலிங்க வடிவில் என்னிடம் வந்து சேர்ந்தவர் சாட்சாத் ஈஸ்வர மூர்த்தியே அல்லவா?’


‘ஒரு பேச்சுக்குக் கேட்கிறேன். உனக்குக் கிடைத்தது சாளக்கிராமமாக இருந்திருந்தால்தான் நீ பிறந்த குலத்தின் பெருமை காத்திருப்பாயா? ஒன்றுமே கிடைக்காதிருந்திருந்தால்? நாத்திகனாகியிருப்பாயோ?’


பெரிய திருமலை நம்பி, ஆளவந்தாரின் சீடர். அவரது ஞானத்தின் சாறை அப்படியே ஏந்திக் குடித்த மகாபண்டிதர். சித்தாந்தங்களுக்கு அப்பால், தத்துவங்களுக்கு அப்பால், தருக்கங்களுக்கு அப்பால் அனைத்துக்கும் பொருளாக நிறைந்திருக்கிற பரமாத்மாவின் சொரூபம் அறிந்தவர். கோவிந்தன் மனத்தை மாற்ற அவருக்கு ஒரு கணம் போதும். இருப்பினும் அவன் நம்பிக்கொண்டிருந்த அத்வைத சித்தாந்தத்தைவிட சரணாகதி என்னும் ஒற்றைத் தாரக மந்திரத்தின் அருமையை அவனுக்கு உணர்த்தவே அவர் அந்த அவகாசத்தை எடுத்துக்கொண்டார்.


பத்தாம் நாள் முடிவில் கோவிந்தன் மனம் மாறினார். ‘என் அண்ணா இப்போது எங்கே இருக்கிறார்?’ என்று கேட்டார்.


‘திருவரங்கத்துக்குச் செல் மகனே. ஒரு பெரும் விசை அங்கு உன்னைச் செலுத்தக் காத்திருக்கிறது!’


(தொடரும்)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 02, 2017 08:30

February 1, 2017

பொலிக! பொலிக! 20

‘என்ன சொல்கிறீர்? ஆளவந்தார் இறந்துவிட்டாரா! எம்பெருமானே!’ என்று நெஞ்சில் கைவைத்து அப்படியே சரிந்துவிட்டார் திருக்கச்சி நம்பி.


‘நம்பமுடியவில்லை சுவாமி. அவர் பாதம் பணிந்து, உபதேசமாக ஓரிரு ரத்தினங்களையேனும் பெற்றுவரலாம் என்று எண்ணித்தான் திருவரங்கத்துக்கே போனேன். ஆனால் போன இடத்தில் எனக்கு வாய்த்தது இதுதான்.’


ராமானுஜர் கண்களைத் துடைத்துக்கொண்டார். வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அடுத்த அடி எடுத்து வைப்பதற்கு முன்னால் இப்படியொரு அடி விழுந்துவிடுகிறது. மிகச் சிறு வயதில் தந்தையை இழந்தது முதல் அடி. சுதாரித்துக்கொண்டு கல்வியைத் தொடர்ந்தபோது தமது குணத்துக்குச் சற்றும் பொருந்தாத ஒரு பெண்ணை மணந்து வாழநேர்ந்தது அடுத்த அடி. அம்மா எப்படியாவது அவளைத் திருத்தி, சரிசெய்துவிடுவாள் என்று ராமானுஜர் நினைத்திருந்தார். ஆனால் அவளும் போய்விட்டாள். அது மூன்றாவது. பயிலச் சென்ற இடத்தில் ஆசாரியருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு நான்காவது. எப்படியாவது திருக்கச்சி நம்பியிடம் சீடனாகச் சேர்ந்துவிடலாம் என்று எண்ணியிருந்தபோது அந்த வாய்ப்பு தனக்கில்லை என்று தெரிந்தது ஐந்தாவது. இதோ, ஆளவந்தாரை தரிசிக்கப் போய் அவரது இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள நேர்ந்தது ஆறாவது.


‘மனத்தைத் தளரவிடாதீர் ராமானுஜரே! இருந்த காலம் வரை அவரிடமிருந்து என்ன பெற்றோம், எத்தனை பெற்றோம் என்று எண்ணிப் பார்த்து நிம்மதியடைவோம்.’


‘எனக்கு அதுவும் வாய்க்கவில்லையே. என்றேனும் ஒருநாள் அவரை தரிசித்துத் தாள் பணியும் கணத்தில் அப்படியே அவரது ஞானத்தின் ஜீவரசத்தை உறிஞ்சி எடுத்துக்கொண்டுவிடமாட்டோமா என்று ஒரு காலத்தில் பைத்தியம்போல் எண்ணிக்கொண்டிருப்பேன். வேத உபநிடத வகுப்புகளில் ஒவ்வொரு வரிக்கும் யாதவர் சொல்லும் பொருளை எதிரே வைத்து, ஆசாரியர் ஆளவந்தார் இதற்கு எவ்வாறு பொருள் சொல்வார் என்று நினைத்துப் பார்த்துக்கொண்டே இருப்பேன். அவரது எண்ணத்தின் வரி வடிவங்கள் ஒரு தரிசனம்போல் என் மனத்தில் அப்படியே ஏறிவிடுவதாக உணர்வேன்.’


திருக்கச்சி நம்பி புன்னகை செய்தார். ‘புரிகிறது ராமானுஜரே! அவர் விடைபெற்றுத்தான் போயிருக்கிறார். விட்டுவிட்டுப் போகவில்லை. அதுவும் உம்மை.’


‘என்னையா! நிச்சயமாக இல்லை நம்பிகளே. நான் அற்பனிலும் அற்பன். பாவிகளில் பெரும் பாவி. இல்லாவிட்டால் ஆசாரியரின் தரிசனம்கூடவா எனக்கு கிடைத்திருக்காது?’


ராமானுஜர் வெகுநாள் சமாதானமாகவே இல்லை. திருவரங்கத்தில் ஆளவந்தாரின் நேரடிச் சீடர்கள் எதிரே காட்ட முடியாத தமது உணர்ச்சிகளையெல்லாம் காஞ்சியில் நம்பிகளிடம் கொண்டு வந்து கொட்டிக்கொண்டிருந்தார்.


‘நீர் கோயிலுக்கு வாரும். பேரருளாளன் சன்னிதியில் பிரபந்தம் சொல்லிக்கொண்டிரும். ஆசுவாசம் உமக்கு அதில்தான் கிடைக்கும்.’ என்று திருக்கச்சி நம்பி அவரைத் தேற்றி கோயிலுக்கு அழைத்துச் சென்றார்.


அப்போதுதான் திருவரங்கப் பெருமான் அரையர் அங்கு வந்து சேர்ந்தார்.


திருக்கச்சி நம்பிக்கு அப்போதே புரிந்துவிட்டது. ஆனால் காட்டிக்கொள்ளவில்லை. அரையரை வரவேற்று மரியாதை செய்து சன்னிதிக்கு அழைத்துச் சென்றபோது அவர் கேட்டார். ‘நம்பிகளே, நான் வரதன் திருமுன் நாலு பாசுரம் பாட விரும்புகிறேன். உத்தரவு கிடைக்குமா?’


காஞ்சி கோயிலுக்கும் அரையர் உண்டு. இசையாலும் நாட்டியத்தாலும் இறைவனை மகிழ்விக்கும் திருப்பணியாளர். அவர் சொன்னார், ‘அரங்கன் அனுபவித்தது எங்கள் வரதனுக்கும் இன்று கிட்டுமென்றால் யார் தடுப்பார்கள்? தாராளமாக ஆரம்பியுங்கள்!’


கச்சிக்கு வாய்த்தான் மண்டபத்தில் பேரருளாளன் வீற்றிருந்தான். சுற்றிலும் கோயில் முக்கியஸ்தர்கள். ஆலவட்டம் வீசுகிற திருக்கச்சி நம்பி. அவருக்குச் சற்றுத் தள்ளி தமது சீடர்களுடன் அமர்ந்திருந்த ராமானுஜர். இங்கே காஞ்சி நகர் அரையர். எதிரே திருவரங்க அரையர்.


‘பாடுங்கள் அரையரே!’


அவர் ஆரம்பித்தார். அது உயிரை உருக்கும் குரல். பூச்சற்ற பக்தியின் பூரண வெளிப்பாடு. உருகி உருகிப் பாடிக் களித்த பன்னிரண்டு பேரின் உள்ளத்தை உருவி எடுத்து முன்னால் வைத்து வணங்குகிற பெருவித்தை. பாசுரங்களின் உருக்கத்தில் அரையர் தன்னை மறந்து ஆடவும் ஆரம்பித்தார். பத்து நிமிடம். அரை மணி. ஒரு மணிநேரம். அவர் எப்போது தொடங்கி எப்போது நிறுத்தினார் என்று யாருக்குமே தெரியவில்லை.


ராமானுஜர் பிரமை பிடித்தாற்போலப் பார்த்துக்கொண்டிருந்தார். என்ன குரல்! என்ன தெய்வீகம்! எப்பேர்ப்பட்ட கலை ஆளுமை இவர்! இப்படியொரு சங்கீதத்திலா அரங்கன் தினசரி குளித்துக் குளிர்ந்துகொண்டிருக்கிறான்! அவனுக்கு எப்பேர்ப்பட்ட கொடுப்பினை!


மண்டபத்தில் கூடியிருந்த அத்தனை பேரும் அரையரைப் போற்றிப் பேச வாய் திறந்த தருணத்தில் அது நிகழ்ந்தது. வரதனே வாய் திறந்தான்!


அது அசரீரியா, அந்தராத்மாவுக்குள் ஒலித்த பேரருளாளனின் ரகசியக் குரலா – யாருக்கும் புரியவில்லை. ஆனால் பேசியது அவந்தான். அதில் சந்தேகமில்லை.


‘அரையரே, நெக்குருகச் செய்துவிட்டீர்! என்ன வேண்டும் உமக்கு? தயங்காமல் கேளும்.’


கோயில் பிரசாதங்களும் பரிவட்ட மரியாதையும் மற்றதும் முன்னால் வந்து நின்றன.


அரையர் கைகூப்பி மறுத்தார். ‘அருளாளா! எனக்குப் பரிவட்ட மரியாதையெல்லாம் வேண்டாம். பதிலாக இந்த ராமானுஜரை என்னோடு அனுப்பிவைத்துவிடு. ஶ்ரீவைஷ்ணவ தரிசனம் தழைக்க இவர் இங்கிருப்பதைவிட அரங்க நகரில் வந்து ஆசாரிய பீடத்தை அலங்கரிப்பதே உகந்தது.’


ராமானுஜர் திடுக்கிட்டுப் போனார். ‘நானா! நானெப்படி வருவேன்? என்னால் வரதனைவிட்டு நகர முடியாது.’


அரையர் அவருக்கு பதில் சொல்லவில்லை. அருளாளனைப் பார்த்தேதான் பேசினார். ‘என்ன வேண்டுமென்று நீ கேட்டாய். நான் வேண்டியதைச் சொல்லிவிட்டேன். மற்றபடி உன் இஷ்டம்.’


‘தர்மசங்கடப் படுத்துகிறாய் அப்பனே. ராமானுஜர் நமக்கு உகந்தவர். அவரை எப்படி நான் அரங்கனுக்கு விட்டுக் கொடுப்பேன்?’


‘அது உன் இஷ்டம். கேட்டதைக் கொடுக்கும் தெய்வமென்று பேரெடுத்தவன் நீ. பேர் நிலைக்க நினைத்தால் அதற்குரியதைச் செய்.’


ராமானுஜருக்குப் புரிந்துவிட்டது. மதுராந்தகம் ஏரிக்கரையில் பெரிய நம்பியை முன்னொரு சமயம் சந்தித்தபோதே தோன்றியதுதான். எம்பெருமான் சித்தம் நடைமுறைக்கு வர இத்தனைக் காலம் பிடித்திருக்கிறது. நல்லது. இதுவும் அவன் விருப்பம்.


‘முதலியாண்டான்! நீ திருமடத்துக்கு உடனே சென்று நமது திருவாராதனப் பெருமாளை எடுத்து வந்துவிடு. திருவரங்கத்துக்கு நாம் போனாலும் அருளாளனுக்குச் செய்யும் ஆராதனை நிற்காது.’


அன்றே ராமானுஜர் அரங்கமாநகருக்குப் புறப்பட்டார்.


(தொடரும்)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 01, 2017 08:30

January 31, 2017

பொலிக! பொலிக! 19

ஒன்றுமே நடவாதது போல நகர்ந்து போய்க்கொண்டிருந்தது காவிரி. ஊர் தோன்றிய காலம் தொடங்கி அனைத்துக்கும் சாட்சியாக அரங்கனுக்கு ஜோடி போட்டுக்கொண்டு கவனித்துக்கொண்டிருக்கிற நதி. மகிழ்ச்சியும் துயரமும் நதிக்குக் கிடையாது. ஆனால் எத்தனையோ மகிழ்ச்சித் தருணங்களுக்கும் துயரப் பொழுதுகளுக்கும் தனது இருப்பைச் சகாயமாக்கியிருக்கிறது.


இதே காவிரிக் கரையில் எத்தனை நாள், எத்தனை பொழுதுகள் ஆளவந்தாரோடு சத்விஷயம் பேசியபடி நடந்து சென்றிருக்கிறோம்! நம்பமுடியாத அபூர்வப் பிறப்பு அவர். நம்மாழ்வாரிடமிருந்து நேரடியாகத் தமிழ் மறைகளைப் பெற்ற நாதமுனியின் பேரன் வேறு எவ்விதமாகவும் இருந்துவிட முடியாதுதான். தமது ஞானத்தையும் சரி; தான் கற்ற பிரபந்தங்களின் உள்ளுறை பொருள்களையும் சரி. ஒரு நதியைப் போலவே வாரி வழங்கியவர் அவர். திருவரங்கக் கோயில் நிர்வாகம் ஒருபுறம். வைணவ தரிசன விஸ்தரிப்பு ஒருபுறம்.


ஆ, அதுதான் பெரிய சவால். எந்தச் சோழன் மறைந்தாலும், எந்தப் புதிய சோழன் வந்தாலும் தேசத்தில் சைவத்துக்குத்தான் மரியாதை. காணுமிடம் எங்கும் சிவத்தலங்கள். கால் படும் இடங்களில் எல்லாம் திருப்பணிகள். வைணவ தரிசனத்தை மூடி மறைத்துத்தான் பரப்பவேண்டியிருந்தது.


மன்னர்களும் மனிதர்களே அல்லவா? மனிதர்களால் எதைத் தடுத்துவிட முடிகிறது? ஒரு பூ மலரும் கணத்தில் யாரும் அதை நேரில் கண்டதில்லை. எல்லாப் பூக்களும் மலர்ந்தபடியேதான் இருக்கின்றன. யுகம் யுகமாக. இன்றுவரை ஒரு சாட்சி ஏது?


ஆனால் ஆளவந்தார் எதைக் குறித்தும் கவலைப்பட்டதில்லை என்பதைப் பெரிய நம்பி நினைத்துப் பார்த்தார். ‘ஆசாரியரே, உமக்குப் பின் எங்களுக்குக் கதிமோட்சம் தரப் போவது யார்?’ என்று அவரது இறுதி நாள்களில் சீடர்கள் கதறியபோதுகூட அவர் அமைதியாகத்தான் இருந்தார். ராமானுஜரை அழைத்து வரச் சொன்னதுகூட எந்த நூற்றாண்டிலோ எழுதி மறைக்கப்பட்ட ஒரு புராதனமான ஓலைச் சுவடியைத் தேடி எடுத்து தூசு தட்டும் விதமாகத்தான் வெளிப்படுத்தினார். என் விருப்பம் இது. எம்பெருமான் விருப்பம் என்னவோ அதுதான் நடக்கப் போகிறது என்கிற பாவனை. ஒருவேளை நோயின் கடுமை அளித்த உளச் சோர்வாகவும் இருக்கலாம்.


பலவிதமாக யோசித்தபடியே பெரிய நம்பி நதிக்கரையோரம் நடந்துகொண்டிருந்தார். சற்றுப் பின்னால் அவரது நண்பர்கள் வந்துகொண்டிருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் ஒரே ஒரு யோசனைதான். பெரிய நம்பி எதற்கு இத்தனை யோசிக்கிறார்? ஆளவந்தாரின் விருப்பம் ராமானுஜர்தான் என்பது தெரிந்துவிட்டது. அவரது மடங்கிய விரல்கள் நிமிர்ந்த கணத்தில் அதைத் தவிர வேறு யோசனைக்கே இடமில்லை என்பது நிரூபணமாகிவிட்டது. அப்புறம் என்ன?


ஒரு கணம் நின்று திரும்பிய பெரிய நம்பி அவர்களை உற்றுப் பார்த்தார். ஒரு கேள்வி கேட்டார். ‘அரங்கன் சித்தம் அதுதான் என்றால் ராமானுஜர் ஏன் உடனே காஞ்சிக்குத் திரும்பிச் சென்றிருக்க வேண்டும்?’


‘அதுதானே? காரியங்கள் முடிகிற வரைக்கும் இருந்த மனிதர், பெருமாளைச் சென்று சேவிக்கக்கூட இல்லாமல் அப்படியே போய்விட்டாரே?’ என்றார் மாறனேர் நம்பி.


‘திருவரங்கத்துக்கு வந்துவிட்டு, கோயிலுக்குப் போகாமல் திரும்பிய ஒரே மனிதர் அவராகத்தான் இருப்பார்!’ என்றார் திருக்கோட்டியூர் நம்பி.


‘இல்லை நம்பிகளே! ராமானுஜரைத் தவறாக எண்ணாதீர்கள். அவருக்கு அரங்கன்மீது கோபம். தமது மானசீக ஆசாரியரான ஆளவந்தாரை தான் வந்து சேவிக்கும் சில நிமிட நேரம்கூட விட்டு வைக்காமல் எடுத்துக்கொண்டுவிட்டானே என்கிற ஏமாற்றம்.’ என்றார் பெரிய நம்பி.


‘பெரிய நம்பி சொல்வதுதான் சரி. இதுவே எங்கள் காஞ்சிப் பேரருளாளன் என்றால் பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றிவிட்டுத்தான் நியாய தருமத்தையே யோசிப்பான் என்று முணுமுணுத்துக்கொண்டேதான் அவர் கிளம்பிச் சென்றார். நான் கவனித்தேன்!’ என்றார் திருமாலையாண்டான்.


‘நமக்கு நமது ஆசாரியரின் விருப்பம் நிறைவேறியாக வேண்டும். ஶ்ரீவைஷ்ணவ தரிசனம், ஒரு சரியான நிர்வாகியில்லாமல் அப்படியே இருந்துவிடமுடியாது. ஏதாவது செய்தாக வேண்டும். யாராவது செய்துதான் தீரவேண்டும்’ என்றார் அரங்கப் பெருமாள் அரையர்.


அரை வினாடி கண்மூடி யோசித்த பெரிய நம்பி ஒரு முடிவுடன் சொன்னார், ‘நல்லது அரையரே. பொறுப்பை உம்மிடமே விடுகிறோம். செய்து முடித்து, அழைத்து வாருங்கள்’ என்றார்.


திடுக்கிட்ட அரையர், ‘நானா? என்னால் எப்படி முடியும்?’


அவர்கள் மொத்தமாகக் கோயிலுக்குப் போனார்கள். கைகூப்பிக் கேட்டார்கள்.


‘எம்பெருமானே, திருக்கச்சி நம்பியைப் போல உன்னுடன் நேரடியாக உரையாடும் வக்கெல்லாம் எங்களுக்கு இல்லை. ஆனால் எங்கள் பக்தி உனக்குத் தெரியும். எங்கள் நோக்கம் நீ அறியாததல்ல. ஆளவந்தாரின் பீடத்தை அடுத்து அலங்கரிக்க ராமானுஜரை நாங்கள் இங்கே தருவிக்க விரும்புகிறோம். இது நடக்குமா? யாரால் சாத்தியமாகப் போகிறது?’


அவர்களது தயக்கத்திலும் தடுமாற்றத்திலும் ஒரு நியாயம் இருந்தது. ஏனென்றால் ராமானுஜர் காஞ்சிப் பேரருளாளனுடன் தனது மானசீகத்தில் இரண்டறக் கலந்திருந்தார். கோயிலென்றால் வரதர் கோயில். தெய்வமென்றால் பேரருளாளன். விந்திய மலைக்காட்டில் வேடுவனாக வரதன் வந்த கணத்தில் உருவான சொந்தம் அது. பேரருளாளனின் திருவடியை இறுக்கமாகப் பற்றிக்கொண்டுவிட்டோம் என்கிற உணர்வுதான் அவரது உணவாகவும் உயிர் மூச்சாகவும் இருந்தது.


பெரிய நம்பிக்கு இது தெரியும். அவரது சகாக்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் ராமானுஜர் திருவரங்கம் வந்தே தீரவேண்டும். காஞ்சியில் இருந்து அவரைக் கிளப்புவது எப்படி?


அரங்கன் சன்னிதியில் இந்தக் கோரிக்கையுடன் அவர்கள் கைகூப்பி நின்றபோது சட்டென்று ஓர் எண்ணம் ஒரே சமயத்தில் அனைவர் மனத்திலும் உதித்தது. அது அரங்கன் திருவுள்ளம்.


காஞ்சிப் பேரருளாளனுக்கு சங்கீதம் என்றால் இஷ்டம். நாட்டியம் என்றால் அதைவிட இஷ்டம். கலாரசிகனான அவன் உத்தரவு தராமல் ராமானுஜர் காஞ்சியைவிட்டுக் கிளம்பமாட்டார். எனவே இசையிலும் நடனத்திலும் நிகரற்றவரான அரையர், காஞ்சிக்குச் சென்று வரதராஜனை மகிழ்வித்து, காரியத்தை சாதித்துவிட வேண்டியது.


இப்படி ஒரு யோசனை மனத்தில் பட்ட மறுகணமே அனைவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். அரையருக்கு வியப்பில் கிறுகிறுத்துவிட்டது.


‘நான் அப்போதே சொன்னேனே?’ என்றார் பெரிய நம்பி.


‘தாமதிக்கவேண்டாம் அரையரே. இன்றே கிளம்பிவிடுங்கள். திரும்பி வரும்போது ராமானுஜரோடுதான் நீங்கள் வரவேண்டும்!’


‘அரங்கன் சித்தம்!’ என்று சொல்லிவிட்டு அரையர் புறப்பட்டார்.


(தொடரும்)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 31, 2017 08:30