Pa Raghavan's Blog, page 15
February 22, 2017
பொலிக! பொலிக! 41
ராமானுஜருக்குத் தமது சீடர்களின் மன ஓட்டம் புரிந்தது. இதற்குமேல் நீட்டித்துக்கொண்டிருந்தால், மல்லனின் மனம் சுருங்கும்படி யாராவது ஏதேனும் சொல்லிவிடும் அபாயம் இருக்கிறது. நல்லது. முடித்துவைத்துவிடுவோம் என்று முடிவு செய்தார்.
‘மல்லனே, பேரழகியான உன் மனைவியின்மீது வெயிலும் காற்றும் படுவதுகூட உனக்குச் சகிக்கவில்லையென்றால் அவளை வீட்டுக்குள்ளேயே வைத்துக்கொள்ள வேண்டியதுதானே? எதற்கு இத்தனை சிரமப்பட்டு வெளியே அழைத்து வருகிறாய்?’ என்று கேட்டார்.
‘நான் என்ன செய்யட்டும் சுவாமி? பொன்னாச்சிக்கு வசந்த உற்சவத்தைக் காணவேண்டும் என்று ஆசை. இதற்காகவேதான் திருவெள்ளறையில் இருந்து புறப்பட்டு வந்தேன். உற்சவம் முடிகிறவரை விடுமுறை கேட்டு நேற்றே மன்னர்பிரானுக்கு விண்ணப்பித்துவிட்டேன். அவரும் ஒப்புக்கொண்டுவிட்டதால் உடனே கிளம்பிவிட்டேன்.’
‘ஓ. அப்படியென்றால் உனக்கு உற்சவத்தில் பெரிய இஷ்டம் இல்லை என்று சொல்.’
‘எனக்குத்தான் எப்போதும் உற்சவமாயிருக்கிறதே. பாருங்கள் என் தேவியின் விழிகளை! என் பிரியை எனக்காகவே ஏந்திக்கொண்டிருக்கிறாள் பாருங்கள்!’
இப்படியும் ஒருத்தன் இருப்பானா? என்ன வார்ப்பு இது!
ஆனால் ராமானுஜர் காட்டிக்கொள்ளவில்லை. மிகவும் அமைதியாகச் சொன்னார், ‘நீ சொல்வதெல்லாம் சரிதான் அப்பனே. உன் மனைவியின் விழிகள் அழகானவைதான். கவிதை பொங்கச் செய்பவைதான். அதில் சந்தேகமில்லை. ஆனால் இதைக் காட்டிலும் பேரழகும் எதைக்காட்டிலும் ஒளி பொருந்தியதுமான விழிகளை நீ காண நேரிட்டால் என்ன செய்வாய்?’
அவன் ஒரு கணம் திடுக்கிட்டுப் போனான். சட்டென்று கோபம் வந்துவிட்டது.
‘என்ன உளறுகிறீர்கள்? இவளது விழிகளைவிடச் சிறந்த விழிகள் இந்த உலகில் யாருக்குமே இருக்க முடியாது.’
‘ஒருவேளை இருந்துவிட்டால்?’
‘நாந்தான் முடியாது என்கிறேனே.’
‘அட ஒரு பேச்சுக்குக் கேட்கிறேன். அப்படியொரு விழியை நானே உனக்குக் காட்டுகிறேன் என்று வைத்துக்கொள். அப்போது என்ன செய்வாய்?’
ஒரு கணம் அவன் யோசித்தான். பிறகு சொன்னான். ‘இவளது விழிகளைக் காட்டிலும் பேரெழில் படைத்த விழிகளைக் காண்பேன் என்று எனக்குத் தோன்றவில்லை சுவாமி. அப்படிக் காண நேரிட்டால் அவ்விழிகளுக்கு அடிமையாகிப் போவேன்.’
‘நல்லது வில்லி. என்னோடு வா, இப்போதே காட்டுகிறேன். ஆனால் அதற்குமுன் நீ நதியில் குளித்துவிட்டு வந்துவிடு.’
அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. உடையவர் அப்படி யாருடைய விழிகளைத் தனக்குக் காட்டப் போகிறார்? யோசனையுடன் காவிரியில் இறங்கிக் குளித்தான். ஈரம் சொட்டச் சொட்ட எழுந்து வந்து நின்றான்.
‘நான் தயார் சுவாமி. புறப்படலாம் வாருங்கள்!’
ராமானுஜர் அவனை திருவரங்கன் சன்னிதிக்கு அழைத்துச் சென்று நிறுத்தினார்.
அங்கே பச்சைமா மலைபோல் மேனி படுத்துக் கிடந்தது. பவளவாய் முறுவலித்துக்கொண்டிருந்தது. கமலச் செங்கண் திறந்திருந்தது.
‘அச்சுதா, அமரர் ஏறே! ஆயர்தம் கொழுந்தே! இவனைப் பார். கண்ணிருந்தும் குருடனாக இருக்கிற இம்மல்லன்மீது கொஞ்சம் கருணை காட்டு. கணப் பொழுதில் இல்லாமல் போய்விடக்கூடிய இவ்வுலக வாழ்வில் உன்னை நினைக்கக்கூட நேரமின்றித் தன் மனைவியின் விழிக் குளத்தில் மூழ்கிக்கொண்டிருக்கிறான். இவனது ஆண்மை, இவனது கம்பீரம், இவனது ஆளுமை அனைத்தும் நசுங்கிச் சின்னாபின்னமாகிக்கொண்டிருப்பதைக் கூட உணராதிருப்பவனை என்னால் என்ன செய்ய இயலும்? அதனால்தான் உன்னிடம் அழைத்து வந்தேன். அர்ஜுனனுக்குக் காட்டிய விசுவரூபத்தில் கொசுவளவு இவனுக்கு நீ காட்ட முடிந்தால் போதும். உன் விழி திறக்கிறபோதுதான் உலகம் இயங்குகிறது என்பதை இவனுக்கு உணர்த்தியே தீரவேண்டும். பேரொளியே! பெரும் பொருளே! உன் கருணை பொங்கும் விழிகளின் பேரெழிலுக்கு முன் காண்பதெல்லாம் வெறும் தூசென இவனுக்கு எப்படியாவது புரிய வை.’
கண்மூடிக் கைகூப்பி மானசீகமாக வேண்டினார் ராமானுஜர்.
அந்த அற்புதம் அப்போது நிகழ்ந்தது.
சன்னிதியில் ராமானுஜரின் எதிரே நின்றுகொண்டிருந்த வில்லி மெல்லத் தலை திருப்பி அரங்கனைக் கண்டான். பாதங்கள். முழங்கால். நாபிக் கமலம். திருமாமகள் உறையும் மார்பு. முகவாய். விரிந்த பெரும் இதழ்கள். உலகு சுவாசிக்கும் நாசி. அவனது பார்வை இன்னும் சற்று நகர்ந்து அரங்கனின் விழிகளைத் தொட்டபோது அது விரிந்தது.
கோடி சூரியன்களின் கொள்ளைப் பிரகாசம். கொட்டும் அருவியின் குளிர்ப் பிரவாகம். சுழலும் புவியும் விரியும் வானும் நிலைத்த அண்ட பேரண்டப் பெருவெளியில் நீந்தும் நட்சத்திரங்களும் அங்கே அடங்கியிருக்கக் கண்டான். அது கருணையின் ஜீவ ஊற்று. கனிவின் பெரும்பாற்கடல். கற்பனைக்கெட்டாத பேரெழில் புதையல். பல்லாயிரம் கோடி ஆண்டுகள் தவம் புரிந்தாலும் கிட்டாத மகத்தான் அனுபவத்தில் திக்குமுக்காடிப் போனான் வில்லி.
கண்டேன், கண்டேன், கண்டறியாதது கண்டேன் என்று அவன் நெஞ்சு விம்மி விம்மி வெடித்துச் சிதறியது. கண்ட காட்சியில் தன்னை மறந்து கதறிக் கொண்டிருந்தான்.
‘ஐயோ இதுவல்லவா அழகு! இதுவல்லவா ஒப்பற்ற பெருவிழிகள்! இதுவல்லவா தரிசனம்! இதுவல்லவா பிறவிப் பயன்!’
அணை உடைத்த வெள்ளமெனப் பெருகிய அவன் விழி நீரை ராமானுஜர் பார்த்தார். புன்னகை செய்தார். அவனைக் கலைத்துவிடாமல் அமைதியாக சன்னிதியை விட்டு வெளியேறிப் போனார்.
வில்லி அங்கிருந்து நகரவேயில்லை. காலம் அவனுக்குள் உறைந்து போனது. இரவா பகலா இது? தெரியவில்லை. இன்று வந்தேனா? நேற்று வந்தேனா? புரியவில்லை. எதுவுமே தெரியவில்லை. அங்கே அவன் இருந்தான். அரங்கன் இருந்தான். இடையில் வேறு எதுவும் இருக்கவில்லை.
வெகு நேரம் கழித்துத் தன் நினைவு மீண்டதும் அவன் சன்னிதியைவிட்டு வெளியே வந்தான். இருட்டியிருந்தது. அங்கிருந்த ஒரு காவலரிடம், ‘என்ன நாழி?’ என்று கேட்டான். தன்னை அழைத்து வந்த உடையவர் எப்போதோ திரும்பிச் சென்றுவிட்டதையும் தெரிந்துகொண்டு நேரே சேரன் மடத்துக்கு விரைந்தான்.
‘எம்பெருமானாரே! நான் வில்லி வந்திருகிறேன். உங்கள் அடிமை வந்திருக்கிறேன் சுவாமி, கதவைத் திறவுங்கள்!’ என்று குரல் கொடுத்தான்.
மடத்தின் கதவும் உடையவர் மனத்தின் கதவும் ஒருங்கே திறந்தன. அன்றே, அந்தக் கணமே அவன் ராமானுஜரின் சீடனாகிப் போனான்.
‘சுவாமி, இந்தப் பிறவிக்கு இது போதும். எதைக் கண்டுவிட்டால் வேறு எதையும் காண அவசியமில்லையோ, அதை நான் கண்டுகொண்டேன். இனி இந்த ஜென்மம் அரங்கன் சேவையில் மட்டுமே ஈடுபடும்.’ என்று சொல்லி அவர் தாள் பணிந்தான்.
ராமானுஜர் புன்னகை செய்தார்.
(தொடரும்)
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
February 21, 2017
பொலிக! பொலிக! 40
அவள் பேரழகிதான். சந்தேகமில்லை. உச்சந்தலை முதல் பாத நுனிவரை பார்த்துப் பார்த்து வரைந்த பேரோவியம் ஒன்று எழுந்து நடந்துகொண்டிருந்தாற்போல் இருந்தாள். நின்று பார்த்த தூரத்திலேயே அவளது நாசியின் கூர்மை தனித்துத் தெரிந்தது. காற்றில் அசைந்த காதோரக் குழலில் ஒரு கவிதை ஒளிந்திருந்தது. ஒரு தேரில் இருந்து தேவதை இறங்குவது போலிருந்தது அவள் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும்.
மெல்லிய வெட்கமும் மிதமான புன்னகையுமாக நடந்துகொண்டிருந்தவளின் முன்னால் ஒரு மல்லன் குடை பிடித்தபடி பின்புறம் அடியெடுத்து வைத்து நடந்துகொண்டிருந்தான். அவன் கண்கள் அவள்மீதே இருந்தன. குடையுடன் சேர்த்து அவன் மனமும் கவிந்தே இருந்தது. அவனுக்கு முன்னும் பின்னுமாகச் சில வீரர்கள். நடக்கிற தேவதையின் பாதம் மணலில் பட்டுத் தேய்ந்துவிடாதபடிக்கு அவள் கால் படும் பாதையெல்லாம் மென்கம்பளம் விரித்துப் போய்க்கொண்டிருந்தார்கள்.
ராமானுஜர் சுட்டிக்காட்டிய காட்சியைக் கண்ட அவரது சீடர்கள் வெலவெலத்துப் போய்விட்டார்கள்.
‘ஐயோ இதென்ன அக்கிரமம்! பட்டப்பகலில் பெண்டாட்டிக்கு இப்படி ஒருத்தன் குடை பிடித்துப் போவானா!’
‘பார்த்தால் எந்த நாட்டு அரசியாகவும் தெரியவில்லையே. வீரர்கள் அவளுக்குப் பட்டுப்பாதை விரித்துச் செல்வதைப் பாரேன்!’
‘அட அரசியாகவே இருக்கட்டுமே. எந்த நாட்டு அரசிக்கு வீதியெங்கும் விரிப்பு வாய்க்கிறது?’
‘ஆளைப் பார்த்தால் ஆஜானுபாகுவாக இருக்கிறான். ஆனால் இப்படியா ஒரு பெண் பித்தனாகத் தன்னை வெளிப்படுத்திக்கொள்வான்? வெட்கங்கெட்டவன்.’
ராமானுஜர் அவர்களைச் சற்று அமைதியாக இருக்கச் சொன்னார். ‘அவன் முகத்தைப் பாருங்கள். அவன் பார்வை அவளது விழிகளைத் தாண்டி நகரவேயில்லை. கண்ணிமைக்காமல் எப்படி அவளைப் பார்த்தபடியே நடக்கிறான்! அதுவும் கால்களைப் பின்னால் அடியெடுத்து வைத்து எத்தனை தூரம் நம்மால் நடக்க முடியும்? அவனால் அது முடிகிறது என்றால் என்ன அர்த்தம்?’
‘அவன் ஒரு கிறுக்கன் என்று அர்த்தம் சுவாமி.’
ராமானுஜர் புன்னகை செய்தார்.
‘வெறும் கிறுக்கனல்ல சுவாமி. பெண் கிறுக்கன். காமக் கிறுக்கன்.’
‘உங்கள் பதற்றம்தான் எனக்கு வேடிக்கையாக இருக்கிறது. சரி, ஒன்று செய்யுங்கள். யாராவது போய் அவனை இங்கே அழைத்து வாருங்கள்’ என்றார் ராமானுஜர்.
சீடனொருவன் அந்த மல்லனை நோக்கி ஓடினான். தொலைவில் இருந்து பார்த்தபோது நினைத்தபடி இழித்துப் பேச முடிந்ததுபோல நெருங்கியபோது முடியாது என்று தோன்றியது. நெருக்கத்தில் அவன் பெரும் பலசாலி என்று தெரிந்தது. தடித்துத் திரண்டிருந்த தோல் அவனது முரட்டுத்தனத்தைப் பறைசாற்றியது. முகம் மீறிய சுருள் மீசையின் அடர்த்தியில் அவனது பேராண்மை புலப்பட்டது. கம்பீரமும் பிரம்மாண்டமும் நிறைந்த விழிகளை உருட்டி அவன் சீடனைப் பார்த்தான்.
‘என்ன?’
‘ஐயா, உடையவர் தங்களை அழைக்கிறார்’ மெல்லிய நடுக்கத்துடன் தொலைவில் சுட்டிக்காட்டினான். அவன் பார்த்தான்.
சட்டென்று அவனது விடைப்பு குலைந்து ஒரு பணிவு கூடியது. ‘ஆஹா, அவரா ராமானுஜர்! என்ன பாக்கியம் செய்தேன் நான்! ஊரெல்லாம் அவரைப் பற்றித்தானே பேச்சாக இருக்கிறது? தரிசிக்கவும் தாள் பணியவும் இன்று எனக்கு வாய்த்திருக்கிறதா? இது என் பேறன்றி வேறல்ல.’
இரு கரம் கூப்பியபடியே அவன் உடையவரை நோக்கி விரைந்தான். நெருங்கியதும் அப்படியே பாதம் பணிந்து நின்றான்.
‘எழுந்திரப்பா. யார் நீ? உன் பெயர் என்ன?’
‘ஐயா, என் பெயர் வில்லி. உறையூர் மன்னன் அகளங்கனிடம் சேவகம் புரிகின்றேன். பிறப்பால் வேடன். பிழைப்பால் மல்லன்.’
‘அப்படியா? எனக்கென்னவோ நீ உறையூர் மன்னனிடம் சேவகம் புரிபவனாகத் தெரியவில்லையே அப்பா. அதோ நிற்கிறாளே, அவள் யார்? உன் ராணியா? அவளது சேவகனோ என்று நினைத்துவிட்டேன்.’
சட்டென்று அவனுக்கு வெட்கம் வந்துவிட்டது. ‘ஒரு நிமிடம் சுவாமி!’ என்று சொல்லிவிட்டு ஓடோடிச் சென்று தனது மனைவியை அழைத்து வந்தான்.
‘பொன்னாச்சி, நமது இன்றைய தினம் உடையவர் தரிசனத்துடன் விடிந்திருக்கிறது. விழுந்து வணங்கிக்கொள்!’
அந்தப் பெண் பணிவோடு ராமானுஜரை வணங்கி எழுந்தாள்.
‘தீர்க்க சுமங்கலியாக இரம்மா. உன் புருஷனுக்குத்தான் உன்மீது எத்தனை அபாரமான காதல்! அப்பப்பா. பொதுவெளி என்றும் பாராமல் இப்படிக் குடை பிடித்து வருகிறானே?’
‘அவர் சொன்னால் கேட்கமாட்டேன் என்கிறார் சுவாமி. எனக்குத்தான் வெட்கம் பிடுங்கித் தின்கிறது.’
அப்போதும் அவள் வெட்கப்பட்டாள்.
‘அதனால் பாதகமில்லை. மனைவியை மதிக்கத் தெரிந்த கணவன் அமைவது ஒரு கொடுப்பினை. ஆனால் மல்லனே, உன் மனைவிக்கு இருக்கிற நாணம் உனக்கு ஏன் இல்லை? பார்க்கிறவர்களெல்லாம் எப்படி கேலி பேசிச் சிரிக்கிறார்கள் தெரியுமா?’
‘தெரியும் சுவாமி. ஆனால் நான் அதைப் பற்றிக் கவலை கொள்வதில்லை. இந்த உலகில் யாருக்கும் வாய்க்காத ஒரு பேரழகி எனக்கு மனைவியாக வாய்த்திருக்கிறாள். இந்த அழகை சிந்தாமல் சிதறாமல் கணம்தோறும் நான் நெஞ்சில் ஏந்திப் பருகிக்கொண்டிருக்கிறேன். வெயில் பட்டு அவள் மேனி வாடிவிடக்கூடாதே என்று கவலைப்படுகிறேன். கல்லும் மண்ணும் பட்டால் அவள் பாதம் மேலும் சிவந்துவிடுமே என்று அஞ்சுகிறேன். காற்று சற்று வேகமாக வீசினாலும் கவலையாகிவிடுகிறது ஐயா. பொன்னில் குழைத்துச் செய்த மேனியை அது உரசி காயப்படுத்திவிட்டால் என் நெஞ்சே வெடித்துவிடும்.’
ராமானுஜர் புன்னகை செய்தார்.
‘ஓ. நீ வெறும் மல்லன் என்று நினைத்தேன். பெரும் கவிஞனாகவும் இருப்பாய் போலிருக்கிறதே?’
இப்போது அவன் வெட்கப்பட்டான். ‘அதற்குக் காரணம் நானல்ல சுவாமி. என் தேவி பொன்னாச்சியின் கண்கள். வெட்கத்தைவிட்டுச் சொல்கிறேன். நாளெல்லாம் பொழுதெல்லாம் இவளது கண்களை நான் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். ஒரு குளத்தைப் போன்ற அதன் அகலத்தில் நான் என்னைத் தொலைத்துவிடுகிறேன். முக்குளித்து மீண்டு வரும்போது மீண்டும் அக்கண்களின் நட்சத்திர ஜொலிப்பில்தான் தலை துவட்டிக்கொள்கிறேன். அவள் இமைக்கிற போதெல்லாம் எனக்குச் சிலிர்க்கிறது. அவள் பார்வை நகரும் போதெல்லாம் நான் பொடிப்பொடியாகிவிடுகிறேன். இந்தக் கண்கள்தாம் என் கலங்கரை விளக்கம். இந்த உலகை நான் என் தேவியின் விழிகளில் மட்டுமே தரிசிக்கிறேன்.’
திகைத்துவிட்டார்கள் ராமானுஜரின் சீடர்கள். ‘இவன் ஒரு முழுப் பைத்தியம்தான்; சந்தேகமில்லை!’ என்று தமக்குள் கிசுகிசுத்துக்கொண்டார்கள்.
(தொடரும்)
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
February 20, 2017
பொலிக! பொலிக! 39
தகித்துக்கொண்டிருந்தது மணல் வெளி. முந்தையக் கணம் வரை சூடு பொறுக்க முடியாமல் தத்தளித்துக்கொண்டிருந்த அத்தனை பேருக்கும் திருக்கோட்டியூர் நம்பி பேசத் தொடங்கியதும் அந்நினைவே இல்லாது போனது. உலகு மறந்து கரம் கூப்பி நின்றுவிட்டார்கள்.
‘எம்பெருமானாரே, நீர் பட்டினி கிடந்து வாடியது போதும். இதோடு உமது உபவாசத்தை நிறுத்திக்கொள்ளும்.’
ராமானுஜரால் பதில் சொல்ல முடியவில்லை.
‘சொல்வது காதில் விழுகிறதா? இன்னொரு விஷயம். இனி நீங்கள் ஏழு வீடுகளில் பிட்சை எடுக்க வெளியே செல்ல வேண்டியதில்லை. நான் சொல்கிறேன். உமக்கு இனி ஓரிடத்துப் பிட்சைதான். அதையும் இந்தக் கிடாம்பி ஆச்சான் மட்டுமே செய்வார்.’
‘சுவாமி..!’
‘மறு பேச்சே கிடையாது. வைணவம் தழைக்க நீங்கள் வேண்டும். நீங்கள் வேண்டுமென்றால் நீங்கள் நீடு வாழவேண்டும். உணவில் விஷம் கலக்கிற உத்தமர்களிடம் பிட்சை எடுத்து உண்டு என்னாவது?’
திடுக்கிட்டுப் போனது கூட்டம். மிக அந்தரங்கமான ஒரு சிலரிடம் ராமானுஜர் நடந்ததைத் தெரிவித்திருந்தது உண்மையே. ஆனால் அத்தனை பேருக்கும் வெட்டவெளிச்சமாக்கிவிட்டார் திருக்கோட்டியூர் நம்பி.
‘என்ன, ராமானுஜருக்கு உணவில் விஷம் கலந்து கொடுக்கப்பட்டதா? யார் செய்தது இந்நீசச் செயலை?’ கொதித்துப் போய்விட்டார்கள் அரங்கன் அடியார்கள்.
‘இல்லை. விட்டுவிடுங்கள். யார் என்பது முக்கியமல்ல. எண்ணத்தில் விஷம் தோய்ந்தவர்களும் எம்பெருமான் கோயில் கொண்டிருக்கிற தலத்திலேயேதான் வசிக்கிறார்கள். அவனே சகித்துக்கொள்ளும்போது நாம் பொறுமை இழக்கக்கூடாது’ என்று தடுத்துவிட்டார் ராமானுஜர்.
‘இங்கேயே பேசிக்கொண்டிருந்தால் எப்படி? அனைவரும் திருமடத்துக்கு வாருங்கள். இலை போடத் தயாராக நான் முன்னால் போகிறேன்’ என்று சொல்லிவிட்டுக் கிடாம்பி ஆச்சான் முன்னால் விரைந்தான்.
அன்று மடத்தின் சமையலறை அவனது கட்டுப்பாட்டுக்கு வந்தது. உடையவர் உண்ண ஏற்றது எது என்று அவனே தீர்மானிப்பான். இன்னொருத்தரை நெருங்க விடாமல் தன் கையால் தானேதான் சமைப்பான். சீடர்கள், பக்தர்கள், விருந்தினர்கள் யாரானாலும் சரி. எத்தனை பேரானாலும் சரி. ராமானுஜர் வசித்து வந்த சேரன் மடத்தில் தளிகை அவனுடையதுதான்.
‘எம்பெருமானாரே! நீர் என்னிடம் கேட்ட ரகஸ்யார்த்தங்களுக்கு அப்பால், பெரிய நம்பிகள் சொல்லிக்கொடுத்த ரகஸ்யார்த்தங்களுக்கு அப்பால் அவசியம் பயிலவேண்டிய இன்னொன்று உண்டு. அது, திருவாய்மொழி விளக்கம். நான் திருமாலையாண்டானிடம் சொல்லி வைக்கிறேன். அவர் உமக்கு இனி திருவாய்மொழி வகுப்பெடுப்பார்’ என்று பரிவோடு சொன்னார் திருக்கோட்டியூர் நம்பி.
திருமாலையாண்டான் நம்பியும் ஆளவந்தாரின் சீடர்களுள் ஒருவர். பெரும் ஞானஸ்தன். ஆளவந்தார் சொல்லிக் கொடுத்ததற்குமேல் அணுவளவும் இன்னொருவர் சொன்னது அவர் செவியில் ஏறாது. அப்படியொரு குருபக்தி கொண்டவர்.
அன்று மதிய உணவின்போது திருக்கோட்டியூர் நம்பி இதனைச் சொன்னபோது, ‘சுவாமி, இதைவிட எனக்கு பாக்கியம் ஏது? காத்திருக்கிறேன்!’ என்றார் ராமானுஜர்.
‘இப்போதெல்லாம் உடையவருக்குப் பாடம் கேட்க நேரம் கிடைப்பது அரிதாக இருக்கிறது நம்பிகளே. திருக்கோயில் பணிகள் மூச்சு முட்ட வைக்கின்றன’ என்றார் பெரிய நம்பி.
‘உண்மைதான் சுவாமி. ஆனால் அரங்கன் ஆளும் பூமி இது. அக்கிரமங்கள் கூடாதல்லவா? அதிகார துஷ்பிரயோகம் தவறல்லவா? ஒரு சாதாரண அரசனுக்கு அவப்பெயர் வந்தாலே தாங்க மாட்டாமல் தவியாய்த் தவித்துவிடுவான். இவன் அரசனுக்கெல்லாம் அரசனல்லவா! அருளாட்சி புரிகிறவனல்லவா? அவனது திருக்கோயிலில் தவறுகள் நடைபெறுவதை என்னால் காணச் சகிக்கவில்லை.’
அவர்களுக்குப் பிரச்னையின் தன்மை தெரியும். அதன் தீவிரம் தெரியும். சிறு ஊழல்களைப் பற்றி ராமானுஜர் சிந்திக்கவில்லை. நெடுநாள் நோக்கில், பிழைபடாத பெருந்தொண்டாகக் கோயில் நிர்வாகம் வார்த்தெடுக்கப்பட வேண்டுமென அவர் விரும்பினார். செய்த சீர்திருத்தங்கள் எல்லாமே அதற்காகத்தான்.
சோழ தேசத்தில் சைவம் செழித்துக்கொண்டிருந்த காலம். ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசனும் சிவத்தொண்டனாக இருந்தான். ஊருக்கு ஊர், வீதிக்கு வீதி சிவாலயங்களைக் கட்டுவித்து, தினப்பணிகளும் திருவிழாக்களும் தவறாமல் நடக்க மானியங்கள் எழுதி வைத்துக்கொண்டிருந்தார்கள்.
‘என் பெருமானுக்கு அப்படியொரு தொண்டு மனம் கொண்ட மன்னன் வாய்க்கமாட்டானா’ என்று ராமானுஜர் ரகசியமாக ஏங்கிக்கொண்டிருந்தார். ஒரு மன்னனின் கவனிப்பு இருந்துவிட்டால் மற்றவர்களின் ஆட்டமும் கொட்டமும் அடங்கிவிடும். அதிகார துஷ்பிரயோகங்கள் இருந்த சுவடு தெரியாமல் ஓடிவிடும். மானியங்கள் பொருட்டல்ல. தானியங்களும் பொருட்டல்ல. மாலவன் தாள் பணியும் மன்னன் ஒருவன் வேண்டும்.
‘எனக்குப் புரிகிறது உடையவரே. ஒரு மன்னனே தொண்டன் ஆகி உம் மனக்குறையைப் போக்கட்டும்!’ என்று சொல்லிவிட்டு திருக்கோட்டியூர் நம்பி கிளம்பிப் போனார். ராமானுஜர் தமது வழக்கமான பணிகளில் மூழ்கத் தொடங்கினார்.
கோயிலில் வசந்த உற்சவம் ஆரம்பமானது. வண்ண விளக்கொளியும் வாண வேடிக்கைகளும் சுடர்விடத் தொடங்கின. எங்கெங்கிருந்தோ பக்தர்கள் திருவரங்கத்தை நோக்கி வரத் தொடங்கினார்கள். நான்கு புறமும் சூழ்ந்த காவிரிக்கு அணை கட்டினாற்போல எங்கும் மனித முகங்கள். ஊரெங்கும் மங்கல வாத்திய முழக்கங்கள். ஆடல் பாடல் அரங்கேற்றங்கள். திரும்பும் இடமெல்லாம் பிரபந்தப் பாராயணம் ஒலித்துக்கொண்டிருந்தது. இங்கே காலட்சேபங்கள். அங்கே கலை நிகழ்ச்சிகள். பூவுலக சொர்க்கமென வருணிக்கப்படும் திருவரங்கம் அப்போது சொர்க்கத்தை விஞ்சிய பேரெழில் நகரமாக ஜொலித்துக்கொண்டிருந்தது.
கண்ணிமைக்க நேரமில்லாமல் உடையவரும் அவரது சீடர்களும் திருக்கோயில் பணிகளில் தம்மைக் கரைத்துக்கொண்டார்கள். அதிகாலை துயிலெழுந்து காவிரிக்குக் குளிக்கப் போகிற வரைதான் நேரம் அவர்களுடையதாக இருக்கும். நித்ய கர்ம அனுஷ்டானங்கள் முடிந்தபிறகு கோயில் வேலைகள் கூடிவிடும்.
அன்றைக்கு அப்படித்தான் உடையவரும் அவரது சீடர்களும் காவிரிக்குக் குளிக்கப் போனார்கள். பிரபந்தம் பாடியபடியே நீராடி முடித்துக் கரையேறிய ராமானுஜர் ஒரு கணம் அப்படியே திகைத்துப் போய் நின்றுவிட்டார்.
‘சுவாமி, என்ன ஆயிற்று?’ என்றான் கூரத்தாழ்வான்.
‘அங்கே பார்!’ என்று அவர் சுட்டிக்காட்டிய திசையில் அத்தனை பேரும் திரும்பிப் பார்த்தார்கள்.
புவி காணாத ஒரு சம்பவம் அங்கே நிகழ்ந்துகொண்டிருந்தது. எந்த யுகத்திலும் யாரும் கற்பனை செய்துகூடப் பார்த்திருக்க முடியாத ஒரு சம்பவம். அறியாமையின் எல்லையும் கவித்துவ மனத்தின் வெளிப்பாட்டு உச்சமும் கூடிக் களிக்கிற மகத்தானதொரு மாயத் தருணம்.
அவர்கள் யாருக்கும் பேச்சே எழவில்லை. திகைப்பு நீங்கவே பல கணங்கள் பிடித்தன.
(தொடரும்)
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
February 19, 2017
பொலிக! பொலிக! 38
அதிர்ந்து நின்றது திருவரங்கத்து அடியார் கூட்டம். திடீரென்று ராமானுஜர் உபவாசம் இருக்கக் காரணம் என்னவாயிருக்கும்?
‘முதலியாண்டான்! உமக்குத் தெரியாதிருக்காது. தயவுசெய்து நீர் சொல்லும். இது எதற்கான விரதம்?’
‘தெரியவில்லை சுவாமி. உடையவர் என்னிடம் இது குறித்துப் பேசவேயில்லை!’ என்றான் முதலியாண்டான்.
‘அன்று காலைகூட பிட்சை கேட்டுத்தானே கிளம்பிப் போனார்? உபவாசம் என்றால் கிளம்பியிருக்கவே மாட்டாரே!’ கூரத்தாழ்வான் வேறொரு கூட்டத்தின் நடுவே சிக்கிக்கொண்டு விளக்கம் சொல்லிக்கொண்டிருக்க வேண்டியதானது.
‘போன இடத்தில் ஏதோ நடந்திருக்கிறது. இல்லாவிட்டால் இப்படி திடீரென்று ஆரம்பித்திருக்க வாய்ப்பே இல்லை.’
‘ஏதோ ஒரு நாள் இரண்டு நாள் உபவாசம் என்றால் சரி. இதென்ன வாரக்கணக்கில் நீண்டுகொண்டே போகிறதே!’
கவலை அலையெனப் பரவிக்கொண்டிருந்தது. பெரிய நம்பி மடத்துக்கு வந்து ராமானுஜரைச் சந்தித்துப் பேசிப் பார்த்தார். தேகம் மெலியத் தொடங்கிவிட்டதே, ஏன் இப்படி வருத்திக்கொள்கிறீர்கள் என்று திருவரங்கப் பெருமாள் அரையர் கவலையோடு வந்து கேட்டார். கூரத்தாழ்வானின் தர்ம பத்தினியான ஆண்டாள் கெஞ்சிப் பார்த்துப் பலனின்றிக் கதறியே விட்டாள். ஆளவந்தாரின் சீடர்கள், அவரவர் குடும்பத்தார், ராமானுஜரின் நேரடி சீடர்கள், பக்தர்கள், திருவரங்கத்து மக்கள், கோயில் பணியாற்றுகிறவர்கள் ஒருவர் மிச்சமில்லை.
எதற்காக இந்த உபவாசம்?
ராமானுஜர் யாருக்கும் பதில் சொல்லவில்லை. இது தீர்மானம். கேவலம் இந்த உடலம் இருப்பதும் இயங்குவதும் அல்லவா அவர்களைச் சங்கடப்படுத்தியிருக்கிறது? இயக்குபவன் அரங்கனே என்பதை எண்ணிப் பாராதிருந்துவிட்டார்கள். செய்வது அனைத்தும் அவனுக்குத்தான். செய்ய வைப்பதும் அவனேதான். எனில் கலந்த விஷம் யாரைச் சென்று தாக்கும்?
அரங்கப் பெருமானே, அவர்கள் தெரியாமல் பிழை புரிந்துவிட்டார்கள். தண்டித்து விடாமல் இரு. பிராயச்சித்தமாக நான் இருக்கிறேன் உபவாசம்.
அது மழை மேகம் நிகர்த்த பெருங்கருணையின் மௌன வெளிப்பாடு. யார் என்ன சொன்னாலும் கேளாத திட சித்தத்தின் தீவிரம் அன்று அவர்களுக்குப் புரிந்தது.
‘இல்லை. இப்படியே விட்டால் உடையவர் நமக்கு இல்லாமல் போய்விடுவார். உபவாசம் தொடங்கி ஒரு மாதமாகிவிட்டது. பருக்கைச் சோறு கூட உள்ளே போகவில்லை. இது ஆபத்து. பெரிய ஆபத்து. ஏதாவது செய்தாக வேண்டும்!’ என்றார் பெரிய நம்பி.
என்ன செய்வது என்றுதான் யாருக்கும் புரியவில்லை. விஷயம் மெல்ல மெல்ல திருவரங்கத்தைத் தாண்டியும் பரவத் தொடங்கியது. எங்கெங்கு இருந்தோ பக்தர்கள் அலையலையாகத் திரண்டு வர ஆரம்பித்தார்கள். ‘வேண்டாம் இந்த உபவாசம். தயவுசெய்து நிறுத்திக்கொள்ளுங்கள்!’ என்று கதறத் தொடங்கினார்கள்.
‘ஒரு மாதம் கடந்துவிட்டதா! எம்பெருமானே, இதென்ன விபரீதம்?’ என்று அங்கே திருக்கோட்டியூரில் துடித்து எழுந்தார் குருகேசப் பிரான்.
‘இதற்குமேல் பொறுத்திருக்க இயலாது. கிளம்புங்கள்!’ என்று தமது சீடர்களுக்கு உத்தரவிட்டுவிட்டு அந்தக்கணமே வெளியே பாய்ந்துவிட்டார்.
ராமானுஜரைப் பார்க்க திருக்கோட்டியூர் நம்பி புறப்பட்டிருக்கிறார் என்னும் தகவல் அவர் வந்து சேருமுன் திருவரங்கத்தை எட்டிவிட்டது.
‘நம்பிகள் மிகவும் வயதானவர். அவர் எதற்கு என்னைக் காண வரவேண்டும்? அபசாரம்!’ என்று ராமானுஜர் துடித்துப் போனார். ஆனால் தடுத்து நிறுத்துவது இயலாத காரியம்.
‘வரட்டும். அவர் சொன்னாலாவது கேட்கிறாரா பார்ப்போம்!’ என்று முதலியாண்டான் உள்ளிட்ட சீடர் குழாம் அமைதியாக இருந்தது.
ராமானுஜரால் அப்போது எழக்கூட முடியவில்லை. உடல் முற்றிலும் துவண்டு ஒரு ஓரத்தில் சுருண்டு கிடந்தார். கண்கள் இருண்டு, நரம்புகள் தளர்ந்துவிட்டிருந்தன. பேச்சில்லை. செயல் இல்லை. அசைவும் இல்லை. மூச்சு மட்டும் விட்டுக்கொண்டிருந்தார். எந்தக் கணத்திலும் அது நின்றுபோகலாம் என்னும் அபாயம் அரங்க நகர் முழுதும் அறிவிக்கப்பட்டிருந்தது.
என்ன நிகழப் போகிறதோ என்று அத்தனை பேரும் மனத்துக்குள் அலறிக்கொண்டிருந்தபோது யாரோ ஓடி வந்து சொன்னார்கள், ‘திருக்கோட்டியூர் நம்பி ஆற்றைக் கடந்துவிட்டார். காவிரிக் கரையோரம் அவரது கோஷ்டி வந்துகொண்டிருக்கிறது.’
எங்கிருந்துதான் அந்த பலம் அவருக்கு வந்ததோ. சட்டென்று வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தார் ராமானுஜர். ‘புறப்படுங்கள். ஆசாரியரை நாம் எதிர்கொண்டு வரவேற்க வேண்டும்!’
சீடர்கள் கைத்தாங்கலாக அவரை அழைத்துச் செல்ல, காவிரி மணல் படுகையில் திருக்கோட்டியூர் நம்பியை ராமானுஜர் பார்த்துவிட்டார்.
‘சுவாமி…!’ என்று ஓடோடிச் சென்று தடாரென்று அப்படியே அவர் காலில் விழுந்தார்.
அது உச்சிப் பொழுது. வெயில் அடித்து வீழ்த்திக்கொண்டிருந்த சமயம். வெறுங்காலுடன் ஆற்று மணல் வெளியில் ஓடிய ராமானுஜர் தமது மெலிந்த தேகத்தை அப்படியே சுடுமணலில் கிடத்தி சேவித்துக்கொண்டிருந்தார்.
எழுந்திரு என்று ஆசாரியர் சொல்லாமல் எழுந்திருக்க முடியாது. அது மரியாதை இல்லை. ஆனால் இந்தத் திருக்கோட்டியூர் நம்பி ஏன் வாய் திறக்காமல் அப்படியே பார்த்துக்கொண்டிருக்கிறார்?
சீடர்கள் துடித்தார்கள். என்ன வெயில், எப்பேர்ப்பட்ட சூடு! ஆற்று மணலில் ஒரு மனிதர் விழுந்து கிடக்கிறார். எழுந்திரு என்று ஏன் இவர் இன்னும் சொல்லவில்லை? ஐயோ ஐயோ என்று அவர்கள் மனத்துக்குள் அலறிக்கொண்டிருந்தபோது சட்டென்று ஒரு குரல் கேட்டது.
‘இது தகாது நம்பிகளே! உபவாசத்தால் அவர் ஏற்கெனவே மெலிந்து கருகிவிட்டிருக்கிறார். நீங்கள் இப்படி வெயிலில் இட்டு வாட்டிக்கொண்டிருப்பது அராஜகம்!’ என்று கூவியபடி சட்டென்று ராமானுஜருக்கு அருகே தான் படுத்துக்கொண்டு அவரை அப்படியே தூக்கித் தன்மீது போட்டுக்கொண்டான் அவன்.
அத்தனை பேரும் திடுக்கிட்டுப் போனார்கள். யார், யார் என்று கூட்டம் முண்டியடித்து எட்டிப் பார்த்தது.
அவன் கிடாம்பி ஆச்சான். பெரிய திருமலை நம்பியின் தூரத்து உறவினன். அவர்தான் ஆச்சானை ராமானுஜரிடம் சென்று சேரச் சொல்லி அனுப்பிவைத்தவர்.
செயல் சரியானதுதான். ஆனால் கோபக்காரப் பெரியவரான திருக்கோட்டியூர் நம்பி இதனை எப்படி எடுத்துக்கொள்ளப் போகிறார்?
திகிலுடன் அவர்கள் நம்பியைப் பார்த்தபோது அவர் முகத்தில் மிகச் சிறிதாக ஒரு புன்னகை விரிந்தது.
‘வாரும் கிடாம்பி ஆச்சான்! உம்மைப் போல் ஒருவரைத்தான் தேடிக்கொண்டிருந்தேன். இந்தப் பெருங்கூட்டத்தில் உடையவரின் திருமேனிமீது யாருக்கு அதிகப் பரிவு உள்ளதென்று சோதித்துப் பார்க்க விரும்பித்தான் அவரை எழச் சொல்லத் தாமதித்திருந்தேன். உமது அன்பும் குரு பக்தியும் ஒப்பற்றதென இப்போது விளங்கிவிட்டது. உடையவருக்கு உணவிட நீரே சரியான நபர்!’ என்று திருக்கோட்டியூர் நம்பி சொன்னதும் திடுக்கிட்டுப் பார்த்தார் ராமானுஜர்.
(தொடரும்)
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
February 18, 2017
ருசியியல் – 10
மனுஷகுமாரனாகப் பிறந்த காலம் முதல் என்னால் இன்றுவரை முடியாத காரியம் ஒன்றுண்டு. மேலே சிந்திக்கொள்ளாமல் சாப்பிடுவது.
கையால் எடுத்துச் சாப்பிடுவது, ஸ்பூனால் அலேக்காகத் தூக்கி உள்ளே தள்ளுவது, அண்ணாந்து பார்த்து கொடகொடவென தொண்டைக்குழிக்குள் கொட்டிக்கொள்வது, ஸ்டிரா போட்டு உறிஞ்சுவது, கலயத்தை வாய்க்குள்ளேயே திணித்து பாயிண்ட் டு பாயிண்ட் அடிப்பது உள்ளிட்ட நானாவித உபாயங்களிலும் பல்லாண்டுகாலப் பயிற்சியும் முயற்சியும் செய்து பார்த்துவிட்டேன். ம்ஹும். கறை படாத கரங்கள் இருந்து என்ன பிரயோசனம்? கறை படியாத சட்டை இன்றுவரை எனக்கு வாய்த்ததில்லை.
உண்பது ஒரு கலை. உதட்டில்கூட சுவடு தெரியாமல் உண்கிறவர்கள் சிலரைப் பார்த்திருக்கிறேன். சீனத் திரைப்படங்களில் நீள நீள நாக்குப்பூச்சி நூடுல்ஸை இரட்டைக் குச்சியால் அள்ளி உண்ணும் சப்பை மூக்கு தேவதைகளை எண்ணிப் பெருமூச்சு விட்டிருக்கிறேன். ஜேம்ஸ் பாண்ட் படங்களில் கதாநாயகராகப்பட்டவர் எத்தனை நளினமாக மது அருந்துவார்! என் நண்பர் பார்த்தசாரதி டிபன் பாக்ஸில் இருந்து சாப்பாட்டை எடுத்துச் சாப்பிடும் அழகைப் பார்ப்பதே ஒரு ஒடிசி நடனம் பார்ப்பது போலிருக்கும்.
எனக்கு இதையெல்லாம் ரசிக்கவும் வியக்கவும் முடியுமே தவிர, ஒருநாளும் செய்து பார்க்க முடிந்ததில்லை. சாப்பிட உட்கார்ந்தால் தட்டு பரமாத்மா, நான் ஜீவாத்மா. விசிஷ்டாத்வைத சித்தாந்தப் பிரகாரம் பரமாத்மாவைச் சென்றடைவது ஒன்றே நமது இலக்கு. கண்ணை மூடிக்கொண்டு கபளீகரம் செய்ய ஆரம்பித்துவிட்டால் ஜட உலகம் மறந்துவிடும். பரிமாறுகிறவர்களும் மறைந்து, பலகாரங்கள் மட்டுமே சிந்தனையை ஆக்கிரமிக்கும். சிந்தனை தப்பில்லை. அது அவ்வப்போது சிந்திவிடுவதுதான் பெரும் சிக்கல்.
இது ஏதோ திரவ வகையறாக்களுக்கு மட்டும் பொருந்துவது என்று எண்ணிவிடாதீர்கள். சாம்பார் சாதம், ரசம் சாதமும் சிந்தும். சனியன், தரையில் சிந்தினால் துடைத்து எடுத்துவிடலாம் என்றால் அவையும் சட்டையில் மட்டுமே சிந்தும். இந்த வம்பே வேண்டாம் என்று புளியோதரை, எலுமிச்சை சாதம் எனத் தடம் மாற்றிப் பயணம் மேற்கொண்டாலும் சட்டைப் பையில் நாலு பருக்கை அவசியம் இருக்கும்.
நுங்கம்பாக்கத்தில் ராஜ்பவன் உணவகத்தின் வாசலில் ஒரு ஐஸ் க்ரீம் கடை உண்டு. எனக்கு அந்தக் கடையில் கோன் ஐஸ் சாப்பிடுவது என்றால் ரொம்ப இஷ்டம். மதிய உணவுக்கு அந்தப் பக்கம் போக நேர்ந்தால் கண்டிப்பாக ஐஸ் க்ரீம் சாப்பிடாமல் திரும்பியதில்லை. அப்போதெல்லாம் பெரும்பாலும் பார்த்தசாரதியுடன்தான் போவேன்.
ஒரு ஐஸ் க்ரீமைத் தின்று முடிக்க மிஞ்சிப் போனால் ஐந்து நிமிடம் ஆகுமா? அந்த ஐந்து நிமிட அவகாசத்தில் என் கரம் சிரம் புறமெல்லாம் அந்தச் சிறிய கோன் ஐஸ் வண்ணம் தீட்டிவிடும். வாழ்நாளில் ஒருமுறை கூட கோனை உடைக்காமல் நான் கோன் ஐஸ் ருசித்ததில்லை. ஆனால் அந்த துஷ்டப் பண்டமானது பார்த்தசாரதியை மட்டும் ஒன்றும் செய்யாது. ஒரு குழந்தையைக் கையாளும் தாயின் லாகவத்தில் அவர் கோன் ஐஸைக் கையாள்வார். கையை ஆட்டி ஆட்டிப் பேசினாலும் ஒரு சொட்டுகூட அவருக்குச் சிந்தாது. உண்ட சுவடே இல்லாத உதட்டை கர்ச்சிப்பால்வேறு ஒற்றிக்கொள்வார். பார்க்கப் பார்க்கப் பொறாமைத் தீ கொழுந்துவிட்டு எரியும். என்ன செய்ய? என்னைத் தின்னத் தெரிந்தவனாகவும் அவரை உண்ண அறிந்தவராகவும் படைத்த பரதேசியைத்தான் நொந்துகொள்ள வேண்டும்.
ஒரு சமயம் திருச்சி தென்னூரில் ஏதோ ஒரு கூட்டத்தில் பேசக் கூப்பிட்டிருந்தார்கள். கூட்டம் மாலைதான். பகல் பொழுது முழுக்க என் வசம் இருந்தது. சும்மா ஊரைச் சுற்றலாம் என்று புறப்பட்டு மதியம் வரைக்கும் சுற்றிக்கொண்டே இருந்தேன்.
பசி வந்த நேரம் கண்ணில் ஒரு கடை தென்பட்டது. ‘ஶ்ரீமுனீஸ்வரன் துணை கம்மங்கூழ்’ என்ற சாக்பீஸ் போர்டுடன் சாலையின் ஒரு ஓரமாக நின்றிருந்த தள்ளுவண்டி.
அட, ஒருவேளை கூழ் குடித்துப் பார்த்தால்தான் என்ன? கம்பங்கூழ் ஆரோக்கியமானது. கம்பங்கூழ் குளிர்ச்சி தரக்கூடியது. கம்பில் இரும்புச் சத்து அதிகம். தவிரவும் பிறந்த கணம் முதல் சென்னைவாசியாகவே வாழ்ந்து தீர்ப்பவனுக்கு இம்மாதிரித் தருணங்களெல்லாம் எந்த விதமான கிளுகிளுப்பைத் தரும் என்று லேசில் விவரித்துவிட முடியாது.
ஒரு ஆட்டம் ஆடிப் பார்த்துவிடுவோம் என்று முடிவு செய்து எடுத்த எடுப்பில் இரண்டு சொம்பு கூழ் வாங்கினேன்.
முதல் வாய் ருசித்தபோது ஒரு மாதிரி இருந்தது. பழக்கமின்மையால் எழுந்த தயக்கம். இரண்டாவது வாய் குடித்தபோது அதன் வாசனை கொஞ்சம் பிடித்த மாதிரி தென்பட்டது. கடகடவென்று ஒரு சொம்புக் கூழையும் குடித்து விட்டு வைத்தபோது அபாரம் என்று என்னையறியாமல் உரக்கச் சொன்னேன்.
‘நல்லாருக்குங்களா? அதான் வேணும். நம்முது மெசின்ல குடுத்து அரைக்கற கம்பு இல்லிங்க. உரல்ல போட்டு இடிக்கற சரக்கு. வெறகு அடுப்பு, ஈயப்பானைதான் சமைக்கறதுக்கு பயன்படுத்தறது. அப்பத்தான் மணம் சரியா சேரும்’ என்றார் கடைக்காரர்.
காய்ச்சுகிறபோது உப்பு. காய்ச்சி இறக்கியதும் சிறு வெங்காயம். ஆறியபின் கெட்டி மோர். இவ்வளவுதான் கம்பங்கூழுக்கு. விசேடம் அதுவல்ல. கூழுக்குத் தொட்டுக்கொள்ள நாலைந்து விதமான பதார்த்தங்களை அந்தக் கடைக்காரர் கொடுத்தார். அதில் ஒன்று புளிச்சாறில் ஊறவைத்த பச்சை மிளகாய்.
இதைச் சற்று விளக்கவேண்டும். மிகவும் குறைவாக நீர் சேர்த்து, புளியை கெட்டியாகக் கரைத்துக் கொதிக்க வைத்துவிட வேண்டியது. அது உருண்டு திரண்டு பசை போல் வந்ததும் பச்சை மிளகாயின் விதைகளை அகற்றி (தேவைப்பட்டால் கொஞ்சம் சேர்க்கலாம்) நீளநீளத் துண்டுகளாக அந்தக் கொதியில் போட்டு அப்படியே ஊற விடுவது. கொஞ்சம் மஞ்சள் தூள். சற்றே உப்பு. வேறு எதுவும் அதில் கிடையாது. ஆனால் எப்பேர்ப்பட்ட ருசி தெரியுமா!
அந்தக் கம்பங்கூழும் புளி மிளகாயும் என் காலம் உள்ளவரை நினைவைவிட்டுப் போகாது. காரணம் அதன் ருசி மட்டுமல்ல.
காணாதது கண்டாற்போல அன்றைக்கு மூன்று சொம்பு கம்பங்கூழை வாங்கிக் குடித்து மூச்சு விட்ட பிறகு பூவுலகுக்குத் திரும்பி வந்தேன். பார்த்தால் என் சட்டையெல்லாம் கூழ். சட்டைப் பையில் சொருகியிருந்த பேனாவின் மூடிக்குள் வரை ஊடுருவியிருந்தது அக்கூழ்மாவதாரம்.
திடுக்கிட்டுவிட்டேன். அடக்கடவுளே! விழாவுக்கு இந்தச் சட்டையுடன் எப்படிப் போய் நிற்பது? மாற்றுச் சட்டை ஏதும் கைவசம் இல்லை.
‘தொடச்சி விட்டுருங்க தம்பி. போயிரும்’ என்றார் கடைக்கார நல்லவர்.
வேறு வழி? கூழ் பட்டுப் பாழ்பட்ட இடங்களையெல்லாம் நீர்விட்டுத் துடைத்தேன். அதற்குப் பேசாமல் குளித்திருக்கலாம். முழுச் சட்டையும் நனைந்து கசங்கிவிட்டது.
சரி போ, சட்டையில் என்ன இருக்கிறது? தவிரவும் எழுத்தாளனாகப்பட்டவன் எப்போதும் ஒரு ஏடாகூடம்தான் என்பதை இச்சமூகம் இந்நாள்களில் நன்கறிந்திருக்கும் என்று என்னை நானே தேற்றிக்கொண்டு மாலை வரை அதே சட்டையில் சுற்றிவிட்டு விழாவுக்குப் போய்ச் சேர்ந்தேன்.
நடந்த விழா முக்கியமல்ல. முடிந்த பிறகு புகைப்படக்காரர் சொன்னார். ‘காலர்ல எதோ கறை பட்டிருக்கு சார்.’
அது அந்தப் புளி மிளகாய்ப் பசையின் கறை.
கொண்டையை மறைக்கத் தெரியாதவனெல்லாம் இப்படித்தான் கால் நூற்றாண்டுக்குப் பிறகு கட்டுரை எழுதிக்கொண்டிருப்பான்.
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
பொலிக! பொலிக! 37
அவர்களால் தாங்க முடியவில்லை. கோயில் நிர்வாகத்தில் ராமானுஜர் செய்த மாற்றங்களை மட்டுமல்ல. பக்தியின் மிகக் கனிந்த நிலையில் அரங்கனை ஒரு குழந்தையைப் போல் கவனித்துக்கொள்ள அவர் மேற்கொண்ட சில ஏற்பாடுகளும் அவர்களுக்கு வெறுப்பூட்டியது.
சட்டென்று ஒருநாள் ராமானுஜர் கேட்டார், ‘முதலியாண்டான்! அரங்கனின் திருமுகம் வாடியிருக்கிறதே. இன்று என்ன அமுது செய்யப்பட்டது?’
மடைப்பள்ளியில் என்ன தளிகையாகிறது என்று கவனிக்க வேண்டியது முதலியாண்டான் பொறுப்பு. அரங்கனுக்கு அமுது செய்விக்கப்படுகிற அனைத்து வகை உணவினங்களும் உயர்தரமாக இருக்கவேண்டும் என்பது உடையவர் கட்டளை. புளியோதரையோ, சர்க்கரைப் பொங்கலோ, வெண்பொங்கலோ, வேறெதுவோ. சேர்மானங்களில் ஒரு சிறு பிழையும் நேர்ந்துவிடக் கூடாது.
நேர்ந்ததும் இல்லை. முதலியாண்டான் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக்கொண்டிருந்த நாளில்தான் ராமானுஜர் கேட்டார். அரங்கன் திருமுகம் ஏன் வாடியிருக்கிறது?
தோற்றமா, தோற்ற மயக்கமா என்ற வினாவுக்கே இடமில்லை. உடையவர் மனத்தில் அப்படிப் பட்டுவிட்டது.
‘தெரியவில்லை சுவாமி! இன்று ததியோதனம் (பால் சேர்த்த தயிர்சாதம்)தான் அமுது செய்யப்பட்டது. வழக்கம்போலத்தான் தளிகையானது.’
‘இல்லையே. அப்படித் தெரியவில்லையே. அவர் முகம் வாடியிருக்கிறது. ஜலதோஷம் உண்டாகியிருக்கிறது என்று நினைக்கிறேன். ஏதோ தவறு நடந்திருக்கிறது.’
முதலியாண்டான் யோசித்துக்கொண்டிருந்தபோது ராமானுஜரே கேட்டார், ‘வெறும் ததியோதனம் மட்டுமா?’
‘ஆம் சுவாமி. அது மட்டும்தான். ஆனால் அதற்குப் பிறகு நாவல் பழம் அமுது செய்யப் பண்ணினேன். நல்ல பழங்கள்தாம். பரிசோதித்துவிட்டுத்தான் சன்னிதிக்குள் எடுத்துச் சென்றேன்.’
‘அதுதான் பிழை’ என்றார் ராமானுஜர். ‘தயிர் சாதத்துக்குப் பிறகு யாரேனும் நாவல் பழம் உண்பார்களோ? கண்டிப்பாக அது உடல்நலக் குறைவைத்தான் உண்டுபண்ணும்.’
யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. ‘ஆனால், சுவாமி…’
‘ம்ஹும். கூப்பிடுங்கள் கருடவாகன பண்டிதரை!’
அவர் திருக்கோயில் தன்வந்திரி சன்னிதிக்குப் பொறுப்பாளர். உடையவர் அழைக்கிறார் என்றதும் ஓடோடி வந்தவரிடம், ‘உடனே எம்பெருமானுக்குக் கஷாயம் தயாராகட்டும்.’ என்றார்.
அதோடு நிற்கவில்லை. கற்பூரம், கஸ்தூரி மஞ்சள், குங்குமப்பூ மூன்றையும் சேர்த்து அரைத்து பெருமான் திருமேனியில் உடனே சாற்றச் சொன்னார்.
பார்த்துக்கொண்டிருந்த அத்தனை பேரும் வாயடைத்துப் போனார்கள். இது எம்மாதிரியான கரிசனம்! பக்திதான். ஆனால் வெறும் பக்தியல்ல. பாவனைதான். ஆனால் அனைவருக்கும் சாத்தியமானதல்ல. ஆத்மார்த்தமாக அரங்கனோடு கரைந்து போகாத ஒருவருக்கு இப்படியெல்லாம் தோன்றுவதற்கு வாய்ப்பே இல்லை. ஒரு ஜீவன் உள்ளே உடம்புக்கு முடியாமல் படுத்திருக்கிறது; அதைப் பார்த்துக்கொள்ள வேண்டியது நமது கடமை என்று வீட்டில் இருப்போர் நினைப்பது போன்றே கோயில் கொண்டிருப்பவனையும் கருத முடியுமா! ராமானுஜரால் முடிந்தது.
‘வெறும் அபத்தம். சரியான கிறுக்குத்தனம்!’ என்றது எதிர்க்கூட்டம்.
ஒவ்வொரு வேளை உணவுக்குப் பிறகும் பெருமாளுக்கு வெற்றிலை மடித்துக் கொடுப்பது, அந்த வெற்றிலை மடிப்பில் சிறிது பச்சைக் கற்பூரம் சேர்ப்பது, தாலாட்டி உறங்கச் செய்வது, தாலாட்டுக்கு முன்னால் ரங்க நாச்சியார் சன்னிதிக்கு எழுந்தருள வைத்து ஊஞ்சலில் அமர வைப்பது, ஊஞ்சலை மெல்லப் பிடித்து ஆட்டிவிடுவது என்று அவர் கொண்டு வந்த நடைமுறைகள் யாவும் கலாபூர்வமானவை. வெறும் நம்பிக்கையல்ல. அதற்கும் அப்பால். வெறும் பக்தியல்ல. பிரேம பக்தி. பூரண சரணாகதிக்குப் பிறகு கிடைக்கிற உள்ளார்ந்த நெருக்கம்.
‘ஓய், இதெல்லாம் நமக்குச் சரிப்பட்டு வராது. இவர் அடிக்கிற அத்தனை கூத்துக்கும் நாம் கணக்கு எழுதிக் காட்டவேண்டியிருக்கிறது. முன்னைப் போல் கோயில் மடைப்பள்ளியில் இருந்து வீட்டுக்கு எதுவும் எடுத்துச் செல்ல முடிவதில்லை. நன்கொடைகளில் நமக்குப் பங்கு வருவதில்லை. முன்னெல்லாம் விளைச்சல் நடந்து அறுவடையாகி வந்தால் மூட்டை மூட்டையாக நமக்குத் தானியங்கள் தனியே வரும். இப்போது அதெல்லாம் இல்லை என்றாகிவிட்டது. இப்படியே போனால் நாமும் பிட்சைக்குப் போகவேண்டியதுதான்.’
‘புலம்பாமல் யோசிக்கலாம் சுவாமி. என்ன செய்யலாம் என்று நீரே சொல்லும்.’
முகமும் பெயருமற்ற அந்தக் கூட்டம் அடிக்கடிக் கூடிப் பேசி ஒரு முடிவு செய்தது. ராமானுஜரைக் கொன்றுவிடலம்.
சன்னியாசிகளுக்கான இலக்கணப்படி தினமும் ஏழு வீடுகளில் பிட்சை எடுத்து உண்பதே ராமானுஜரின் வழக்கம். வசதியாகப் போய்விட்டது. ஏழிலொரு வீட்டானைப் பிடித்து போடுகிற பிட்சையில் விஷத்தைக் கலக்கச் சொன்னால் தீர்ந்தது.
பிடித்தார்கள். பேசினார்கள். சம்மதிக்க வைக்கப் பொன்னும் பொருளும் கொடுத்தார்கள்.
‘நீ என்ன செய்வாய் என்று தெரியாது. நாளைக் காலை ராமானுஜர் உன் வீட்டுக்குப் பிட்சைக்கு வரும்போது உணவில் விஷம் கலந்துவிட வேண்டும். உண்ட மறுகணம் அவர் உயிர் பிரிந்துவிட வேண்டும்.’
‘ஆனால் இது தவறல்லவா? ஆசாரிய அபசாரம் அல்லவா? நமக்கு நரகமல்லவா கிடைக்கும்?’ என்று தவித்தாள் அவனது மனைவி.
‘நாளைய நரகத்தைப் பற்றி இன்று ஏன் நினைக்கிறாய்? இதோ பார், வந்து குவிந்திருக்கும் பொன்னையும் பொருளையும். நான் வாழ்நாள் முழுதும் சம்பாதித்தாலும் நமக்கு இத்தனை சொத்து சேராது. நீ சொன்னதைச் செய். ராமானுஜருக்கு இடுகிற உணவில் இந்த விஷத்தைக் கலந்தே தீரவேண்டும்!’
கட்டாயப்படுத்தி மனைவியிடம் விஷத்தைக் கொடுத்துவிட்டு, காரியம் முடிந்துவிடும் என்று நிம்மதியாகப் போனான் அவன்.
மறுநாள் ராமானுஜர் அந்த வீட்டுக்குப் பிட்சைக்கு வந்தார். அன்னமிட வந்தவளுக்குக் கைகள் நடுங்கின. நடை தளர்ந்தது. சட்டென்று உடையவரின் பாதம் பணிந்து தம் கண்ணீரால் கழுவினாள்.
‘தாயே, ஏன் அழுகிறீர்கள்?’
‘ஒன்றுமில்லை உடையவரே! இந்தாரும்…’
கணவன் சொல்லைத் தட்ட முடியாமல் உணவை இட்டாள். ராமானுஜர் ஒரு கணம் அவளை உற்றுப் பார்த்தார். தயிர் சாதத்துக்குப் பிறகு நாவல் பழம் சாப்பிட்டு அரங்கனுக்கு வந்த ஜலதோஷத்தையே அறிய முடிந்தவருக்கு அந்தப் பெண் இட்ட உணவில் விஷம் கலந்திருப்பதையா புரிந்துகொள்ள முடியாது?
ஒரு கணம் கண்மூடி அமைதியாக நின்றார். இட்ட பிட்சையை அப்படியே எடுத்துக்கொண்டு ஆற்றங்கரைக்குப் போய் நீரில் கரைத்துவிட்டு அங்கேயே அமர்ந்துவிட்டார்.
பிட்சைக்குச் சென்று நெடுநேரமாகியும் ராமானுஜர் மடத்துக்குத் திரும்பவில்லையே என்று கவலைப்பட்டு அங்கிருந்து தேடிக்கொண்டு ஆட்கள் போனார்கள். ஆற்றங்கரையில் அவரைக் கண்டதும் ஓடி வந்து, ‘என்ன ஆயிற்று சுவாமி? ஏன் இங்கு அமர்ந்திருக்கிறீர்கள்? நீங்கள் இன்னும் சாப்பிடவில்லையா?’
‘இல்லை. நான் இன்றுமுதல் உணவருந்தப் போவதில்லை.’ என்றார் ராமானுஜர்.
(தொடரும்)
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
February 17, 2017
பொலிக! பொலிக! 36
கொட்டார வாசலுக்குத் தெற்கே உமிக்கட்டிலில் அமர்ந்திருந்தார் உடையவர். கோயில் மாடுகளுக்காகக் கொண்டு வரப்படும் தவிடைச் சேகரித்து வைக்கிற இடம் அது. முதலியாண்டான் பக்கத்தில் இருந்தான். கூரத்தாழ்வான் சற்றுத் தள்ளி அமர்ந்திருந்தான். கோயில் நிர்வாகிகள் பலபேர் சுற்றி நின்றிருந்தார்கள்.
‘கூரேசா! நாங்கள் கணக்கு வழக்கு பார்க்கப் போகிறோம். உனக்கு இடைஞ்சலாக இருக்குமானால் நீ வேறு இடம் சென்று அமர்ந்து உன் வேலையைப் பார்க்கலாம்’ என்றார் ராமானுஜர்.
தமது முதன்மைச் சீடர்கள் இரண்டு பேருக்கும் வேலைகளைப் பகிர்ந்து கொடுத்திருந்தார் அவர். வைணவ நடைமுறைகளை எளியோரும் புரிந்துகொள்ளும்படி எழுத்தில் ஆவணமாக்கும் பொறுப்பு கூரத்தாழ்வானுக்கு. கோயில் நிர்வாகம் சிக்கலின்றி நடைபெற உரியதைச் செய்து மேற்பார்வை இடுகிற பொறுப்பு முதலியாண்டானுக்கு.
கூரத்தாழ்வான் வேலையில் ராமானுஜருக்குப் பெரிய பிரச்னைகள் இல்லை. அது அவரும் அவனும் மட்டும் சம்பந்தப்பட்டது. அவன் கர்மயோகி என்கிறபடியால் சுணக்கத்துக்கு வாய்ப்பில்லை. ஆனால் கோயில் நிர்வாகம் அப்படிப்பட்டதல்ல. ஏராளமான தொழிலாளர்கள், எக்கச்சக்கமான உத்தியோகஸ்தர்கள், அவர்களுக்கு மேலே அதிகாரிகள், அதற்கும் மேலே மேற்பார்வையாளர்.
திருக்கோயில் பணியே என்றாலும் தொழிலாகிவிடுகிறபோது தொல்லைகள் வராதிருப்பதில்லை. இண்டு இடுக்குகளில் கரப்பான்பூச்சிகளும் சந்து பொந்துகளில் ஊழல்களும் எங்கும் எதிலும் தவிர்க்க முடிவதில்லை. அது பெரிய கோயில். எத்தனை தலைமுறைகளாக, எத்தனை எத்தனை மன்னர்களின் மானியங்கள் சேர்ந்து கிடக்கின்றன! நிலங்களாக, வயல்களாக, தோப்பும் துரவுமாக, பொன்னும் மணியுமாக, காலகாலமாகத் தொடரும் கட்டளைக் கல்வெட்டுகளாக – யாரும் அதுவரை எண்ணிப் பார்த்ததுகூட இல்லை.
ராமானுஜர் செய்ய ஆரம்பித்தார்.
‘இதோ பார் முதலியாண்டான்! ஒவ்வொன்றுக்கும் எனக்குக் கணக்கு வேண்டும். தினசரி வரவு செலவு முதல் ஆண்டிறுதிக் கணக்கு வரை எதிலும் ஒரு சிறு பிழையும் நேர்ந்துவிடக்கூடாது. இது புல்லுக்குப் பொசிகிற நீர் அல்ல. அரங்கன் சொத்தில் அரை நெல்லளவும் வீணாகிவிடக்கூடாது.’
‘உத்தரவு சுவாமி!’
அன்று அது ஆரம்பித்தது. கோயில் நிலங்களில் இருந்து வருகிற தானியங்கள் அளக்கப்பட்டன. யார் யாரிடமிருந்து என்ன வருகிறது, எவ்வளவு வருகிறது என்று எழுதிவைக்கப்பட்டது. எடுத்து செலவு செய்யும்போதெல்லாம் தவறாமல் குறித்து வைக்கப்பட்டது. வேலை செய்யும் ஒவ்வொருவருக்கும் ராமானுஜரே சம்பளம் நிர்ணயித்தார். அவரவர் பணிகளுக்கு நியாயமான சம்பளம். உரிய நாளில் அது சரியாகக் கொடுக்கப்படுகிறதா என்று பார்க்க ஓர் ஊழியர்.
அரங்கனுக்கு ஆண்டு முழுதும் உற்சவம்தான். உற்சவம் என்றால் செலவில்லாமல் எப்படி? எப்போதும் கட்டுமானப் பணிகள் இருக்கும். எப்போதும் செப்பனிடும் பணிகள் இருக்கும். மதில் சுவர்களைப் பராமரிப்பதே பெரும்பணி. ஒவ்வொன்றையும் கவனித்துச் செய்ய நிபுணர்களைத் தருவித்தார்.
ஆ, சோலைகள் முக்கியம். வண்டினம் முரலும் சோலை. மயிலினம் ஆலும் சோலை. கொண்டல் மீதணவும் சோலை. குயிலினம் கூவும் சோலை.
‘காவிரி பாய்ந்து செழிக்கிறது தாசரதி! இந்நகரில் கண்ணில் படும் இடமெல்லாம் சோலைகளாக இருக்க வேண்டாமா? அரங்கனின் அர்ச்சனைக்கு நானாவித மலர்களும் துளசியும் தவனமும் வந்து குவிய வேண்டாமா?’
‘அவசியம் சுவாமி!’
கண்கட்டு வித்தையே போல் திருவரங்கம் முழுதும் சோலைகள் உதித்தன. எங்கும் பூத்துக் குலுங்கின. தோட்டப் பணிகளுக்கு ஏராளமான பேர் சேர்க்கப்பட்டார்கள். கோயில் வேலைக்கு யாரும் வரலாம். குலம் பொருட்டல்ல. சாதி பொருட்டல்ல. அந்தஸ்து பொருட்டல்ல. அரங்கன்மீது மாளாக்காதல் கொண்டவனா? வா, போதும். செய்வது சேவைதான். ஆனால் சம்பளம் உண்டு. அதுவும் சரியான சம்பளம்.
மறுபுறம் கருவூல நிர்வாகம். கணக்காளர். உதவியாளர்கள். யாரும் தனியே உட்கார்ந்து வேலை பார்க்கக்கூடாத இடம். ‘கொத்திலவராகவே இருக்கட்டும்!’ என்றார் ராமானுஜர். கொத்துக்கொத்தாகத்தான் அவர் ஆள்களைப் பணியமர்த்தினார். யாரும் நப்பாசையில்கூடத் தவறு செய்துவிட முடியாதபடிக்கு ஏற்பாடு.
மடைப்பள்ளி நிர்வாகத்துக்குத் தனியொரு குழுவை அமைத்தார். எம்பெருமானுக்கு அமுது செய்விப்பது பெரிய காரியம். பிரசாதமாக அதுதான் பக்தர்களுக்குப் போகிறது. மடைப்பள்ளிக்கு உள்ளே வருகிற அரிசி, பருப்பு, மிளகு, வெல்லம், நெய் எதிலும் தரத்தில் ஒரு மாற்றும் குறையக்கூடாது.
‘அனைத்தும் செய்துவிடலாம் உடையவரே! ஆனால் சிப்பந்திகள் அத்தனை பேருக்கும் கோயிலுக்கு அருகிலேயே வீடு கட்டித் தரவேண்டும் என்கிறீர்களே, அதுதான் சற்று…’
நிர்வாகிகள் தயங்கினார்கள்.
‘ஏன், இதிலென்ன தயக்கம்? ராஜாவுக்கு சேவகம் செய்கிறவர்கள் கோட்டைக்குள்ளேயேதான் இருப்பார்கள். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரவேண்டாமா? இவன் ராஜனுக்கெல்லாம் ராஜன். இவனது சேவகர்கள் மட்டும் எதற்குச் சிரமப்படவேண்டும்? தவிர, கோயில் காரியத்தில் இருக்கிற அத்தனை பேரும் அரங்கன் திருமுன் சமமானவர்கள். அவர்கள் வசிக்கும் வீடுகளும் ஒரே மாதிரிதான் இருந்தாக வேண்டும்.’
அதிகாரியா, அடிமட்ட ஊழியனா என்ற பேச்சுக்கே இடமில்லை. அரங்கன் சேவையில் இருக்கிறவர்கள். அவ்வளவுதான். விக்கிரம சோழன் வீதியில் ராமானுஜர் மேற்பார்வையிலேயே ஊழியர் குடியிருப்புகள் கட்டப்பட்டன. அத்தனை பேரையும் அவரே அழைத்து வந்து அங்கே குடிவைத்தார்.
‘சுவாமி, கோயில் பணியாளர்களுக்காக இப்படியொரு வீதியே அமைவது இதுதான் முதல் முறை. இந்த வீதிக்கு என்ன பெயர் இடலாம்?’
‘பெயரென்ன பெயர்? கோயில் உள்துறைப் பணியாளர்கள் வீதி இது. அவ்வளவுதானே!’
உள்துறைப் பணியாளர் வீதிதான் பிறகு உத்தர வீதியாக மருவிப் போனது.
‘சுவாமி, எனக்கென்னவோ நீங்கள் உள்துறை ஊழியர்கள் அத்தனை பேரையும் ஒரே இடத்தில் குடி வைத்ததற்கு வேறு காரணம் இருக்கலாம் என்று திரும்பத் திரும்பத் தோன்றுகிறது!’ தயங்கித்தான் சொன்னான் முதலியாண்டான்.
‘எளிய காரணம்தான் தாசரதி. திருவரங்கப் பெருமான் உற்சவங்கள் பெரும்பாலும் இரவில் தொடங்குகின்றன. இரவுப் பொழுதிலேயேதான் முடியவும் செய்கின்றன. பணியாளர்கள் நள்ளிரவுக்குப் பிறகு கோயில் காரியங்களை முடித்துவிட்டு அவரவர் வீடு போய்ச் சேர்வது சிரமம். கோயிலுக்குப் பக்கத்திலேயே வீடிருந்தால் அவர்களுக்குச் சற்று நிம்மதியாக இருக்கும். தவிர, அரங்கனுக்கு அருகில் இருக்கிறோம் என்னும் எண்ணம் எப்போதும் அவர்களைத் தவறுகளில் இருந்து தள்ளி நிற்கச் சொல்லும்.’
முதலியாண்டானுக்குப் புரிந்தது. மிகவும் பிடித்தது. ஆனால் வேறு சிலருக்கு இது அறவே புரியவும் இல்லை, பிடிக்கவும் இல்லை.
‘சீர்திருத்தமாவது மண்ணாங்கட்டியாவது? இந்த மனிதரைத் தீர்த்துக்கட்டிவிட்டுத்தான் மறுவேலை!’ என்று முடிவு செய்தது ஒரு கூட்டம்.
(தொடரும்)
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
February 16, 2017
பொலிக! பொலிக! 35
காலை எழுந்தவுடன் வாசல் பெருக்க வேண்டும். பிறகு ஆற்றுக்குச் சென்று நீர் எடுத்து வருதல். வீடு பெருக்கிச் சுத்தமாக்கிய பிறகு துணிமணிகளைத் துவைத்துப் போடவேண்டும். சமையலறை சார்ந்த நானாவித காரியங்கள். மழைக்குக் குடை. பசி நேரத்துக்கு உணவு. வாழ்வினுக்கு எம்பெருமானாரின் திவ்ய நினைவுகள்.
முதலியாண்டான் அத்துழாயின் புகுந்த வீட்டுக்குப் போய்ச் சேர்ந்து மாதங்கள் ஓடிவிட்டன. அவளது மாமியாருக்குப் பெரிய திருப்தி. அப்படி வா வழிக்கு. சொல்லிக்காட்டினால்தானே காரியம் நடக்கிறது? இல்லாவிட்டால் அந்தப் பெரிய நம்பியிடம் இருந்து எதைப் பெற முடிகிறது?
அவர்களுக்கு முதலியாண்டான் யார் என்று தெரியாது. அவனது புலமை தெரியாது. தெளிவுகளும் தீர்மானங்களும் தெரியாது. ஒரு தவமாக ஏற்று அவன் அத்துழாயின் இல்லத்தில் சேவை புரிய வந்ததன் பின்னணி தெரியாது.
அவனுக்கென்ன அதனால்? பணியில் இழிவென்று எதுவும் இல்லை. தவிரவும் அது குரு உத்தரவு. குருகைப் பிரான் சொன்னதை அடிக்கடி எண்ணிப் பார்த்துக்கொள்வான். மூன்று ஆணவங்கள். பிறப்பால், கல்வியால், செல்வத்தால் வருகிற சிக்கல்கள். எண்ணிப் பார்த்தால் ராமானுஜர் மிகச் சரியான பணியைத்தான் கொடுத்திருக்கிறார் என்று தோன்றியது. மூன்றையும் மொத்தமாகக் களைய இது ஓர் உபாயமல்லவா? மகா பண்டிதனானாலும் மடைப்பள்ளி உத்தியோகத்துக்குக் கைப்பக்குவமே முக்கியம். அள்ளிப் போடுகிற உப்புக்கும் மிளகுக்கும், கிள்ளிச் சேர்க்கிற வாசனாதி திரவியங்களுக்கும் அவனது படிப்பு முக்கியமல்ல. பதமே பிரதானம். நிதானம் அதனினும் முக்கியம்.
அத்துழாய்க்கு ஒரு கவலை விட்டது. மாமியாரின் வாயை அடைத்தாகிவிட்டது. இனி அவளால் என்ன பேச முடியும்? முதலியாண்டானின் பணி செய்யும் வேகம் எண்ணிப் பார்க்க இயலாததாக இருந்தது. எதையும் சொல்லி முடிப்பதற்குள் செய்து முடிக்கிற வித்தகன் அவன். தவிரவும் ஓய்வுப் பொழுதில் எத்தனையோ நல்ல விஷயங்களைச் சொல்லிக்கொடுக்கிற ஆசிரியராகவும் விளங்குகிறவர். ஜீயர் அண்ணா அனுப்பிய ஆள் என்றால் சும்மாவா?
ஒருநாள் வீட்டுக்குச் சில பண்டிதர்கள் வந்திருந்தார்கள். அத்துழாயின் மாமனாருக்கு வேண்டப்பட்டவர்கள். வால்மீகி ராமாயணத்தில் கரை கண்டவர்கள் என்று வீட்டில் பேசிக்கொண்டார்கள்.
‘ஓய் தாசரதி! விருந்து தடபுடலாக இருக்கவேண்டும். வந்திருக்கிறவர்கள் மகா பண்டிதர்கள். காலட்சேபம் முடிந்ததும் இலை போட்டாக வேண்டும்!’ என்று சொல்லிவிட்டு அவர்களோடு உட்கார்ந்துவிட்டார் அத்துழாயின் மாமனார். குடும்பமே கூடத்தில் இருந்தது. வந்த பண்டிதர்கள் ராமாயணம் சொல்ல ஆரம்பித்தார்கள்.
சமையலறையில் முதலியாண்டான் வேலையை ஆரம்பித்தான். காது மட்டும் வெளியே இருந்தது. உபன்னியாசத்தைக் கேட்டுக்கொண்டே வந்தவனுக்கு ஓரிடத்தில் சுருக்கென்றது. பண்டிதரானவர் வால்மீகி முனிவரின் ஒரு குறிப்பிட்ட பாடலுக்குத் தவறான பொருள் சொல்லிக்கொண்டிருந்தார். அது ஶ்ரீராமச்சந்திர மூர்த்தியின் பெருமைக்குக் களங்கம் சேர்க்கும் விதமான பொருளாக இருந்தது.
தாங்க முடியவில்லை அவனால். கதவோரம் வந்து நின்று கவனிக்க ஆரம்பித்தான். உதடு துடித்தது. ஆனால் அவர்களிடம் எப்படிச் சொல்லுவது? இது அபசாரம். மிகப்பெரிய பாவம். ஒரு தவறான பொருள் நாலு பேருக்குப் பரவினால் அது அவ்வண்ணமே நாநூறு பேருக்குப் போய்ச் சேரும். நாநூறு நாலாயிரமாகும். மேலும் பரவும்.
தாங்க முடியாமல் மெல்ல விசும்பினான்.
சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்த அத்துழாயின் மாமனாருக்கு ஒன்றும் புரியவில்லை. ‘என்ன ஆயிற்று தாசரதி? ஏன் அழுகிறீர்?’
‘தாங்க முடியவில்லை சுவாமி. மகாகவி வால்மீகியின் சுலோகங்களுக்கு இச்சபையில் மிகத் தவறான பொருள் தரப்பட்டுக்கொண்டிருக்கிறது.’
அதிர்ந்துவிட்டார்கள் வந்திருந்த பண்டிதர்கள். ‘ஓஹோ. சமையல்காரனுக்கு சாஸ்திரம் தெரியுமோ? எங்கள் விளக்கத்தில் குற்றம் கண்டுபிடிக்கும் அளவுக்கு நீர் தேர்ச்ச் பெற்றவரோ?’
‘நான் அற்பன் ஐயா. ஆனால் எனது ஆசாரியர் ஓர் ஞானக்கடல். அதன் ஓரத்தில் நின்று கால் நனைத்தவன் அடியேன். அதனால்தான் பிழை பார்த்தபோது பதைத்துவிட்டது. தவறாக எண்ணாதீர்கள்.’
‘எங்கே, சொல்லுங்கள் பார்ப்போம்! நீர் சொல்லும் விளக்கத்தை நாமும் கேட்போம்!’
முதலியாண்டான் ராமானுஜரை மனத்தில் வேண்டிக்கொண்டு குறிப்பிட்ட சுலோகத்தின் பொருளைத் தாம் அறிந்தவாறு எடுத்துச் சொன்னான். திகைத்துப் போனது கூட்டம். பண்டிதர்களுக்குப் பேச்செழவில்லை.
‘இது மகாபாவம் ஐயா. இப்பேர்ப்பட்ட ஞானஸ்தனை நீர் உமது சமையற்காரனாக வைத்திருப்பது பெரும்பிழை. நரகத்தில்கூட உம்மை நுழைய விடமாட்டார்கள் பார்த்துக்கொள்ளுங்கள்!’ என்று சொல்லிவிட்டு எழுந்து போய்விட்டார்கள்.
திகைத்துப் போனது அத்துழாயின் குடும்பம்.
‘ஐயா, உண்மையைச் சொல்லும். நீங்கள் யார்?’ அப்போதுதான் முதல் முறையாகக் கேட்டார் அத்துழாயின் மாமனார்.
‘அவர் பெயர் முதலியாண்டான். என் ஜீயர் அண்ணாவின் சீடர்!’ என்றாள் அத்துழாய்.
கலவரமாகிப் போய் தடாலெனக் காலில் விழுந்தார் அந்த மனிதர். ‘மன்னித்துவிடுங்கள் சுவாமி! உங்கள் தகுதி தெரியாமல் நடந்துகொண்டுவிட்டோம். நீங்கள் கிளம்பிவிடுங்கள். இனியும் எங்கள் இல்லத்தில் நீங்கள் சமைத்துக்கொண்டிருப்பது தகாது.’
‘சாத்தியமில்லை ஐயா. இது என் குருவின் உத்தரவு. அவர் சொல்லாமல் நான் இங்கிருந்து நகரமாட்டேன். தவிர, ஒரு சீதன வெள்ளாட்டி வராத காரணத்தால்தானே பெரிய நம்பியின் குழந்தை இங்கே சீண்டப்பட்டது? அத்துழாயின் நிம்மதியும் மகிழ்ச்சியும் எனக்கு முக்கியமானது. நான் பண்டிதனானால் என்ன? என் சமையல் ருசிக்கிறதல்லவா? அதை மட்டும் பாருங்கள்.’
‘முடியவே முடியாது. இது எங்களது பாவக்கணக்கைக் கூட்டும் ஐயா. நீங்கள் இந்தப் பணியைச் செய்ய வேண்டாம்.’
‘என் குரு சொல்லாமல் நான் நிறுத்தமாட்டேன்’ என்று முதலியாண்டான் சொல்லிவிட்டதால் அந்த மனிதர் தலைதெரிக்க திருவரங்கத்துக்கு ஓடினார். ராமானுஜரைக் கண்டு நெடுஞ்சாண்கிடையாக விழுந்தெழுந்தார். ‘பெரிய மனசு பண்ணுங்கள் சுவாமி! முதலியாண்டானைத் திரும்ப அழைத்துக்கொள்ளுங்கள்! இனி பெரிய நம்பியின் மகளுக்கு எமது இல்லத்தில் எந்தக் குறையும் இராது. அதற்கு நான் உத்தரவாதம்.’
ராமானுஜர் புன்னகை செய்தார். ‘என்ன அத்துழாய், முதலியாண்டானை நானே திரும்ப அழைத்துக்கொள்ளட்டுமா?’
‘ஓ! நீங்கள் என்ன செய்தாலும் சரிதான் அண்ணா’ என்றாள் அத்துழாய்.
தமது மூன்று கர்வங்களும் அழியப்பெற்ற முதலியாண்டானுக்கு அதன்பிறகு ராமானுஜரே ரகஸ்யார்த்தங்களை போதித்தார்.
(தொடரும்)
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
February 15, 2017
எண்ணாதே, தின்னாதே!
நான் ஒரு காரியத்தில் இறங்குகிறேன் என்றால் ஒன்று அதை வெறித்தனமாக வேகத்தோடு செய்வேன். அல்லது இறங்கிய சூட்டில் கரை ஏறிவிடுவேன். வைத்துக்கொண்டு வழவழா கொழகொழாவாக மாரடிக்கிற கதையே கிடையாது. இன்று நேற்றல்ல. சிறு வயது முதலே இப்படித்தான்.
ஆறு மாதங்களுக்கு முன்னர் பேலியோ டயட்டுக்கு மாற முடிவு செய்தபோது அது குறித்து எக்கச்சக்கமாக முதலில் படித்தேன். தமிழில் சொற்பம்தான். பேலியோ குழுமத்தில் எழுதப்படுகிற குறிப்புகளைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. நியாண்டர் செல்வனின் புத்தகம் ஒன்று இருந்தது. ஒரு மணி நேரத்தில் அதை முடித்துவிட்டேன். பிறகு அந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருந்த அறிவியல் குறிப்புகளைப் பல்வேறு வல்லுநர் சிகாமணிகளின் கட்டுரைகளோடு ஒப்பிட்டுப் பார்க்க ஒரு வாரம் ஆனது. பேலியோவுக்கு முந்தைய எடைக்குறைப்பு உணவு முறைகளைப் பற்றியும் அவற்றின் லாப நஷ்டங்களைப் பற்றியும் அறியவேண்டி மேலும் சிறிது படித்தேன்.
என்னால் ஓரளவுக்கு மேல் அறிவியலுக்கு உள்ளே போக முடியாது. என் மன அமைப்பு அப்படி. மேலோட்டமான கவனிப்பில் சற்றேனும் சரக்கு உள்ளே இறங்கினால் மட்டுமே மேற்கொண்டு நாலு வரி படிப்பேன். இல்லாவிட்டால் எப்பேர்ப்பட்ட அமர காவியமானாலும் தூக்கி வைத்துவிடுவதே வழக்கம்.
பேலியோ டயட்டில் அடிப்படையாக என்னைக் கவர்ந்த அம்சம் ஒன்றுதான். அது புரிந்துகொள்ள எளிதாக இருந்தது. ஒரு பெட் ரோல் வண்டிக்கும் டீசல் வண்டிக்கும் உள்ள வித்தியாசத்தை விளக்கி, எந்த எரிபொருளில் வண்டி ஓடலாம் என்று கேட்ட விதம் எனக்குப் பிடித்திருந்தது. எனக்கு எடை குறைத்தாக வேண்டும். எனவே இது நமக்குச் சரியாக வரும் என்று முடிவு செய்து இறங்கினேன்.
அரிசிச் சோறு இல்லாமல் நம்மால் முடியாது, இனிப்பில்லாமல் உன்னால் சத்தியமாக வாழமுடியாது என்று எத்தனையோ பேர் என்னென்னவோ சொல்லிவிட்டார்கள். அனைவருமே எனது அன்பர்களும் நண்பர்களும்தான். என்னை அறிந்தவர்களும்கூட. ஆனால் அவர்கள் அறியாத ஒன்றுண்டு. அது எனது தீர்மான சுபாவம். ஒன்று வேண்டாம் என்று முடிவு செய்தால் என்றைக்குமே எனக்கு அது வேண்டாம்தான். பன்னீர் செல்வம் கட்சிக்கும் சசிகலா கட்சிக்கும் இடையே ஊசலாடுகிற விவகாரமெல்லாம் கிடையாது.
இதனால்தான் பேலியோ தொடங்கிய நாள்முதல் ஒருநாள்கூட என் உணவு முறையை மாற்றவேயில்லை. ஆசைக்காகக் கூட ஒருநாள் அரிசிச் சோறு உண்ணவில்லை. எனக்கு மிகவும் பிடித்த இனிப்பு வகையை எண்ணிப் பார்க்கக்கூட இல்லை. இடையே சில பண்டிகைகளும் பல குடும்ப விசேஷங்களும் வந்தபோதும் உணவில் சமரசம் செய்யவில்லை. பொங்கலன்று சாஸ்திரத்துக்கு அரை ஸ்பூன் சர்க்கரைப் பொங்கல் சாப்பிட்டதுடன் சரி.
கடந்த டிசம்பர் 12ம் தேதி ஒருநாள் மட்டும் திட்டமிட்டு சீட்டிங் செய்யலாம் என்று முடிவு செய்தேன். அன்று மூன்று மசால்தோசை சாப்பிட்டேன். ‘கார்ப் ஷாக்’ என்று இதனைக் குறிப்பிடுவார்கள். உடல் கொழுப்பில் இயங்கிக்கொண்டிருக்கும்போது சட்டென்று ஒருவேளை அதனை மாற்றி கார்போஹைடிரேட் நிறைந்த உணவை அளிப்பதன்மூலம் தேக நிர்வாகத்தில் ஒரு குழப்பத்தை உண்டுபண்ணுவது. அதன்மூலம் காணாதது கண்டாற்போல ஒரு பசி வரும். அந்தப் பசியைச் சகித்துக்கொண்டு வாரியர் விரதம் இருந்து, சட்டென மீண்டும் கொழுப்புணவுக்கு மாறினால் மேலும் எடை குறையும் என்று ஒரு தியரி.
இதனை முயற்சி செய்து பார்க்கலாம் என்று ஒரு வாரம் திட்டமிட்டு டிசம்பர் 12ம் தேதியென நாள் குறித்திருந்தேன். துரதிருஷ்டவசமாக அன்று சென்னையைப் புயல் தாக்கியது. மின்சாரம் இல்லாமல், பிற அடிப்படை வசதிகள் அனைத்தும் குலைந்து போனது. இருந்தாலும் விடாமல் மூன்று மசால் தோசைகளைச் சாப்பிட்டு, நினைத்ததை முடித்தேன்.
ஆனால் எதிர்பார்த்த பலன் கிட்டவில்லை. ஏனெனில் கார்ப் ஷாக்குக்கு முன்னும் பின்னும் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க விதிகளை என்னால் அச்சமயம் கடைப்பிடிக்க முடியவில்லை. ISIS புத்தகப் பணி என் நேரத்தைத் தின்றுகொண்டிருந்த சமயம். கிட்டத்தட்ட பதினெட்டு மணி நேரம் எழுதிக்கொண்டிருந்த தினங்கள் அவை. எனவே உண்ணாவிரதம் இருப்பது சிக்கலாக இருந்தது. இக்காரணங்களால் எனது கார்ப் ஷாக் நடவடிக்கை தோல்வி கண்டது.
சரி போ என்று விட்டுவிட்டேன். மீண்டும் அதை முயற்சி செய்து பார்க்கவில்லை. ஆனால் ஆசை இருந்தது. பல நண்பர்களிடம் கார்ப் ஷாக் குறித்து அவ்வப்போது விசாரித்துக்கொண்டிருந்தேன். செய்யலாம், தப்பில்லை என்றே பெரும்பாலானவர்கள் சொன்னார்கள். ஆனால் நியாண்டர் செல்வன் வேண்டாம் என்றார். தாம் ஒருநாளும் அதை முயற்சி செய்து பார்த்ததில்லை என்று அவர் சொன்னது என்னைச் சற்று நிதானப்பட வைத்தது.
நூற்றுப் பதினொரு கிலோ எடையில் இருந்தவன் நான். பிரமாதமான பிரயத்தனங்கள் ஏதுமின்றி, வெறும் உணவு முறை மாற்றத்தாலேயே இருபத்தி மூன்று கிலோ குறைந்துவிட்டது. ஆரம்ப எடைக்குறைப்பு வேகம் மட்டுப்பட்டுவிட்டதுதான். ஆனாலும் குறையாமல் இல்லை. இனியும் அதிவேகமாக அதிரூப அழகுசுந்தரனாகி என்ன சாதிக்கப் போகிறேன்? இருபது வருஷங்களுக்கு முன்னர் கல்யாணம் கூட ஆகிவிட்டது.
எனவே இந்த கார்ப் ஷாக் வைத்தியம் வேண்டாம் என்று முடிவு செய்தேன்.
கடந்த வாரம் வீட்டில் தை வெள்ளி நிமித்தம் திருக்கண்ணமுது (இதன் மிக எளிய வடிவமே பாயசம் எனப்படும்) தளிகையானது. ஏகப்பட்ட முந்திரி பாதாம் வகையறாக்களை நெய்யில் வறுத்துப் போட்டு என் மனைவி உக்கிரதாண்டவம் ஆடிக்கொண்டிருந்தார். (இத்தனைக்கும் அவரும் பேலியோவில் இருப்பவர். இதெல்லாம் மகளுக்காகவும் மற்றவர்களுக்காகவும் மட்டுமே.) சமைத்துக்கொண்டிருந்தபோதே எனக்கு அது பிராணாவஸ்தை அளித்துக்கொண்டிருந்தது. எங்கே என் விரதம் கலைந்துவிடுமோ என்று அஞ்சினேன். கடந்த ஆறு மாதங்களில் முதல் முறையாக அப்படியொரு அச்சம் வந்தது.
சும்மா ஒரு வாய் டேஸ்ட் செய்தால் தப்பில்லை என்று என்முன் ஒரு கரண்டி நீட்டப்பட்டது. ஒரு கரண்டிதானே என்று நானும் ருசித்து வைத்தேன்.
பிடித்தது சனி. அன்றுமுதல் தினசரி மதிய உறக்கத்தில் பாயசக் கனவாகவே வந்து தொலைக்கிறது. என் வீட்டுக்குப் பக்கத்தில் ஓர் இனிப்புக் கடையின் சமையல் கூடம் உள்ளது. தினமும் அங்கிருந்து விதவிதமான வாசனை காற்றில் ஏறி வரும். கடந்த பல மாதங்களாக என் நாசியைச் சீண்டாதிருந்த அந்த வாசனையெல்லாம் இப்போது சேர்த்துவைத்துத் தாக்கிக்கொண்டிருக்கின்றன.
இன்றுகாலை ஜெயமோகனின் பழம்பொரியை வாசித்துத் தொலைத்தது இன்னும் பெரிய இம்சை. படத்தைவேறு போட்டுத் தொலைத்திருக்கிறார். பார்க்கும்போதே மணக்கிறது அது.
எல்லாம் அந்த ஒரு கரண்டி பாயசம் ஆரம்பித்துவைத்த உபத்திரவம். 130க்கு மேல் இருந்த சர்க்கரை எண் 88ல் வந்து திடகாத்திரமாக நிற்பதை அடிக்கடி எண்ணி எண்ணி ஆற்றுப்படுத்திக்கொள்கிறேன்.
மனிதனால் அரிசியை வெல்ல முடியும். சர்க்கரையை வெல்வது அத்தனை சுலபமல்ல போலிருக்கிறது. இந்தக் கணம் என் அப்பாவை எண்ணிக்கொள்கிறேன். அவர் பன்னெடுங்கால சர்க்கரை மனிதர். ஆனால் நாற்பது வருடங்களுக்கும் மேலாக இனிப்பையே தொடாதிருப்பவர். அந்த மனத்திடம் அபாரமானது. எளிதில் யாருக்கும் வசப்படாதது.
என் அப்பாவின் சர்க்கரைச் சொத்து எனக்கு இல்லை. ஆனால் இந்த திட சித்தம் வந்து சேரவேண்டும். பழம்பொரியைக் கண்டபோது அதைத்தான் நினைத்துக்கொண்டேன்.
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
பொலிக! பொலிக! 34
மடத்தில் இருந்தவர்கள் திகைத்துவிட்டார்கள். முதலியாண்டான், அத்துழாய்க்கு சீதன வெள்ளாட்டியா? பெரிய நம்பியே இதனை ஒப்புக்கொள்ள மாட்டாரே?
‘இல்லை ஓய். அத்துழாய் சின்னப் பெண். அவளை சமாதானப்படுத்துவதற்காக ஜீயர் சுவாமிகள் அப்படிச் சொல்லியிருக்கிறார். வேறு ஏதாவது ஏற்பாடு செய்வார், பொறுத்திருந்து பாரும்!’
‘பாவம், சின்னப் பெண் என்று பாராமல் மாமியார் வீட்டில் படுத்துகிறார்கள் போலிருக்கிறது. பெரிய நம்பிக்குத் தெரிந்தால் ரொம்ப வருத்தப்படுவார்.’
அவர்கள் பேசிக்கொண்டிருந்த இடத்துக்கு சட்டென்று அத்துழாய் வந்து நின்றாள். ‘நான் ஊருக்கு வந்தது இன்னும் அப்பாவுக்குத் தெரியாது. வீட்டுக்கே இன்னும் நான் போகவில்லை. அண்ணாவைப் பார்த்து விவரத்தைச் சொல்லிவிட்டு அதன்பின் தேவைப்பட்டால் அப்பாவைப் பார்க்கப் போகலாம் என்றிருந்தேன். வந்த காரியம் முடிந்துவிட்டதால் இப்படியே ஊருக்குத் திரும்பிவிடலாம் என்று பார்க்கிறேன்.’ என்று சொன்னாள்.
அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. பதிலேதும் சொல்லாமல் முதலியாண்டானை நெருங்கி, ‘என்ன நடக்கிறது இங்கே? நீங்களா இந்தப் பெண்ணுடன் வேலைக்காரனாகப் போகப் போகிறீர்கள்?’
‘ஏன், அதிலென்ன பிழை? இது என் ஆசாரியர் உத்தரவு. யோசிக்க என்ன இருக்கிறது?’
‘அதில்லை சுவாமி.. தாங்கள்போய் இந்தச் சிறுமிக்கு…’
‘இவள் சாதாரண சிறுமி இல்லை ஐயா. ராமானுஜருக்கு ஒரு சமயம் கோதைப் பிராட்டியாகவே காட்சி கொடுத்தவள். பெரிய நம்பியைக் கேட்டுப் பாருங்கள். கதை கதையாகச் சொல்லுவார்!’
அவர்களுக்கு அப்போதும் ஒன்றும் புரியவில்லை. அத்துழாய், கோதையானாளா? அது எப்போது?
‘ஓய், வேஷமிட்டிருப்பாள் குழந்தை. அதைச் சொல்கிறார் இவர்.’
‘இல்லை ஐயா. அது வேடமில்லை. தோற்றமோ, தோற்ற மயக்கமோ இல்லை. அது ஒரு நிலை. எனது ஆசாரியரின் பரம பக்தியின் உச்ச நிலை ஒருநாள் அத்துழாயைக் கோதையாக்கிவிட்டது.’
‘சுத்தம். ஒன்றுமே புரியவில்லை ஐயா!’
முதலியாண்டானுக்குப் புன்னகை வந்தது. எண்ணிப் பார்க்கும்தோறும் சிலிர்ப்பூட்டுகிற நினைவுகள் எத்தனை எத்தனை!
அப்போது ராமானுஜர் திருவரங்கத்துக்கு வந்து சேர்ந்திருந்த புதிது. பெரிய நம்பி அவருக்குப் பாடம் சொல்ல ஆரம்பித்திருந்த சமயம். ஆளவந்தாரின் நூல்களில் இருந்துதான் அவர் ஆரம்பித்திருந்தார். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாகப் பிரபந்தப் பாசுரங்கள்.
துறவு இலக்கணப்படி ராமானுஜர் வீடு வீடாகச் சென்று பிச்சை எடுத்தே உண்பார். அப்படிப் பிட்சைக்குச் செல்கிற நேரம், உண்ணுகிற நேரம் தவிர மற்றப் பொழுதனைத்தும் பெரிய நம்பியுடனேயேதான் இருந்தார். நம்பியின் மகன் புண்டரீகாட்சனுக்கும், மகள் அத்துழாய்க்கும் அவர் பிரியத்துக்குரிய அண்ணா. ஜீயர் அண்ணா. ராமானுஜர் வீட்டுக்கு வரும்போதெல்லாம் அத்துழாய்க்கு சந்தோஷம் பிடிபடாது. மணிக்கணக்கில் அவரோடு பேசிக்கொண்டிருப்பாள். ஒரு ஞானத் திருவிளக்கு தன் வீடு தேடி வந்திருக்கிறது என்பது அவளுக்குத் தெரியாது. அவரது ஆளுமையின் பிரம்மாண்டம் தெரியாது. அவரது பக்தியின் ஆழம் தெரியாது. அவரது அறிவின் வீச்சு தெரியாது. ஒன்றும் தெரியாது. ராமானுஜர் அவளது அண்ணா. சமத்து அண்ணா. நல்ல பேச்சுத்துணை. சிரிக்கச் சிரிக்கப் பேசி மகிழ வைக்கிற அண்ணா. என்னமோ காரணத்தால் வீடு வீடாகப் போய் பிட்சை எடுத்துச் சாப்பிடுகிறார். ஆனால் ஊரே அவரைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிடுகிறது. எனவே அண்ணா ரொம்பப் பெரிய ஆள்தான் என்று எண்ணிக்கொண்டிருந்தாள்.
அன்றைக்கும் ராமானுஜர் பிட்சைக்குக் கிளம்பினார். நாளுக்கொரு வீதி. வீதிக்கொரு பாசுரம். உதடுகள் உச்சரித்துக்கொண்டே இருந்தாலும் உள்ளம் அரங்கனின் பாதாரவிந்தங்களில் மட்டுமே நிலைத்திருக்கும். பிட்சைக்குக் கிளம்பி, பாட ஆரம்பித்துவிட்டால் ராமானுஜருக்கு உலகம் மறந்துவிடும். பாசுரங்களின் பொருளோடு இரண்டறக் கலந்து தன்னை இழந்துவிடுவார்.
அன்று அவர் பாடியபடி நடந்தபோது குறுக்கே பந்தோடு ஓடி வந்தது ஒரு விளையாட்டு குழந்தை. அது அத்துழாய். அது பெரிய நம்பியின் வீடிருந்த வீதியேதான்.
திருப்பாவையின் பதினெட்டாவது பாசுரமான ‘உந்துமதகளிற்றன்’ அவரது உதடு திறந்து உதித்துக்கொண்டிருந்தது. அதிலே ஒரு வரி, ‘பந்தார் விரலி உன் மைத்துனன் பேர் பாட’ என்று வரும். செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப வந்து திறவாய் என்று முடித்திருப்பாள் ஆண்டாள்.
ராமானுஜர் பந்தார் விரலியைப் பாடி வந்த சமயம் செந்தாமரைக் கையில் சீரார் வளையொலிக்க அத்துழாய் பந்தோடு குறுக்கே ஓடி வந்ததும் அவருக்குப் புல்லரித்துப் போய்விட்டது. அவர் கண்ணுக்கு அவள் அத்துழாயாகத் தெரியவில்லை. ஆண்டாளாகவேதான் தெரிந்தாள்.
‘ஆஹா, என்ன தவம் செய்துவிட்டேன்! உன்னைத்தானே அம்மா எண்ணிக்கொண்டே வருகிறேன். என்னைப் பார்க்க நீயே வீதிக்கு வந்துவிட்டாயா? இச்சிறியவன்மீது அப்படியொரு கருணையா?’
பரவசத்தில் கண்கள் நீர் சொரிய, நடுச்சாலையில் அவள் பாதங்களைத் தொட்டு அப்படியே விழுந்து சேவித்தார். மயக்கமாகிப் போனார்.
திகைத்துவிட்டாள் அத்துழாய். ‘ஐயோ அண்ணா, என்ன காரியம் இதெல்லாம்? அப்பா.. அப்பா..’ என்று அழைத்தபடியே வீட்டுக்குள் ஓடினாள்.
‘என்ன அத்துழாய்?’
‘பிட்சைக்குப் போய்க்கொண்டிருந்த ஜீயர் அண்ணா என் காலில் போய் விழுந்துவிட்டார் அப்பா. என்ன ஆகிவிட்டது அவருக்கு? ஓடி வந்து பாருங்களேன்!’
பெரிய நம்பி அவள் கையில் வைத்திருந்த பந்தைப் பார்த்தார். ஒரு கணம் கண்மூடி யோசித்தார்.
‘ம்ம்.. ராமானுஜர் உந்துமதகளிற்றன் பாடிக்கொண்டு வந்தாரோ?’
‘ஆமாம் அப்பா. உங்களுக்கு எப்படித் தெரியும்?’
புன்னகையுடன் எழுந்து வீதிக்கு வந்தார் பெரிய நம்பி. மயக்கமுற்றிருந்த ராமானுஜரைத் தெளிவித்து வீட்டுக்குள் அழைத்துச் சென்று அமர வைத்தார்.
‘உம்மைப் போல் திருப்பாவையில் கரைந்து போகிற பாக்கியம் எனக்கென்று இல்லை; யாருக்குமே வாய்க்கவில்லை ராமானுஜரே. ஓதுவதும் உணர்வதுமா பக்தி? வரிகளின் வீரியத்தில் தன் வசமிழந்து போகிறீர் பாரும். அதுதான் ஐயா பக்தி! நீர் வெறும் ஜீயரல்லர். இன்றுமுதல் நீர் திருப்பாவை ஜீயர்!’
கரம் கூப்பி நின்றார் ராமானுஜர்.
‘நீர் பிட்சைக்குச் சென்றுகொண்டிருக்கிறீர். வழியில் நான் உள்ளே இழுத்துவந்துவிட்டபடியால் வெறும் கையுடன் அனுப்ப முடியாது. ஒரு நிமிடம் பொறுங்கள்’ என்றவர் தன் மகன் புண்டரீகாட்சனையும் அத்துழாயையும் அழைத்து ராமானுஜரின் கரங்களில் ஒப்படைத்தார்.
‘உம்மைக்காட்டிலும் ஓர் உயர்ந்த ஆசாரியர் எனது குழந்தைகளுக்கு வாய்க்கமாட்டார்கள். இனி இவர்கள் உம் பொறுப்பு!’ என்றார்.
முதலியாண்டான் இச்சம்பவத்தை நினைவுகூர்ந்து அவர்களிடம் சொன்னபோது அவர்கள் வாயடைத்துப் போனார்கள்.
‘ஐயா, ஆண்டாளாகவே என் ஆசாரியருக்குத் தோன்றியவளுக்கு சீதன வெள்ளாட்டியாகப் போவது என் பாக்கியமல்லவா?’ என்று கேட்டான்.
(தொடரும்)
Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)


