Pa Raghavan's Blog, page 13

March 10, 2017

பொலிக! பொலிக! 57

யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. வாதத்தின் இறுதி நாளான இன்று எப்படியும் ராமானுஜரைத் தோற்கடிப்பேன் என்று தமது சீடர்களிடம் சொல்லிவிட்டே யக்ஞமூர்த்தி புறப்பட்டிருந்தார். திருவரங்கத்து வைணவர்களும் ராமானுஜரைக் காண்பதற்காக வெளியூர்களில் இருந்து வந்திருந்தவர்களும் மண்டபத்தில் நிறைந்திருக்க, வாதம் இதோ தொடங்கிவிடும் என்று காத்திருந்தவர்கள் அத்தனை பேரும் திகைத்துப் போனார்கள்.


‘ஏன் யக்ஞமூர்த்தி? உமக்கு நிரூபிக்க இன்னும் நிறைய இருக்கிறதே? இன்று மாலைக்குள் வாதத்தை முடிக்கலாம் என்றுதானே சொல்லியிருந்தீர்கள்?’ என்றார் ராமானுஜர்.


கண்ணீரும் பரவசமுமாக யக்ஞமூர்த்தி கைகூப்பி நின்றார்.


‘சுவாமி, நிரூபணங்கள் தேவையற்ற பரமாத்மாவின் பரிபூரண அருளாசியுடன் நீங்கள் இன்று வந்திருப்பதை உமது முகமே சொல்கிறது. தத்துவங்களில் என்ன இருக்கிறது? தத்துவங்களுக்கு அப்பால் உள்ள பரமனே உங்கள் பக்கம் இருக்கிறபோது இந்த வாதங்களுக்கு அவசியம்தான் என்ன? என்னை ஆட்கொள்ள வந்த எம்பெருமானாரே, இந்த யக்ஞமூர்த்தி இனி உமது அடிமை.’


கூட்டம் பேச்சற்றுப் போனது. யக்ஞமூர்த்தியின் சீடர்கள் அதிர்ந்துவிட்டார்கள். ‘குருவே, என்ன ஆயிற்று உங்களுக்கு? ஏன் இப்படிப் பேசுகிறீர்கள்?’


‘என் குழந்தைகளே, நான் சாஸ்திரங்களில் கரை கண்டவனாக இருக்கலாம். வேதம் அளித்த ஞானத்தின் செழுமை எனக்கு இருக்கலாம். நூல் வாசிப்பும் வாத விவாதங்களில் பெற்ற அனுபவங்களும் என் பலமாக இருக்கலாம். உண்மை என்று நம்பி நான் ஏற்ற அத்வைத சித்தாந்தம் என் மூச்சுக்காற்றாக இருக்கலாம். ஆனால் எது பேருண்மையோ அது இவர் பக்கம் இருக்கிறது. நீயும் நானும் பேசுவதுபோல பகவான் இவரோடு உரையாடுகிறார். வினாக்களுக்கும் சந்தேகங்களுக்கும் விடை தருகிறார். பகவானின் பூரண அருளைப் பெற்றவரை வாதில் வென்று நான் எதை நிரூபிப்பேன்? அது அபத்தமல்லவா?’


அவர் பேசியது யாருக்கும் புரியவில்லை. ராமானுஜருக்கு மட்டும் புரிந்தது. கனவில் வந்த பேரருளாளன் சொன்னதைச் செய்துவிட்டான். இது தெய்வ சங்கல்பம். நாம் செய்ய ஒன்றுமில்லை. எனவே, ‘வாரும் யக்ஞமூர்த்தியே! ஶ்ரீவைஷ்ணவ தரிசனம் இனி உம்மாலும் செழுமை கொள்ளும். உமது ஞானத்தின் பலத்தை நாரணன் சேவைக்குத் திருப்புங்கள்!’ என்று சொன்னார்.


யக்ஞமூர்த்தி, சிகை நீக்கிய, ஏகதண்டம் ஏந்திய அத்வைத சன்னியாசி. ராமானுஜர் அவருக்குப் பஞ்ச சம்ஸ்காரம் செய்துவைத்து, மீண்டும் பூணூல் அணிவித்து, திரிதண்டம் வழங்கி, வைணவ தரிசனத்துக்குள் வரவேற்றார்.


‘காஞ்சிப் பேரருளாளன் சித்தம், நீங்கள் வைணவ தரிசனத்துக்குள் பிரவேசிக்க வேண்டுமென்று இருந்திருக்கிறது. எனவே நீங்கள் இனி அருளாளப் பெருமான் எம்பெருமானார் என்று அழைக்கப்படுவீர்.’


‘ஆஹா. எம்பெருமானார் என்பது தங்களுக்கு சாற்றப்பட்ட பேரல்லவா? தங்களது பரம ஆசாரியர்களுள் ஒருவரான திருக்கோட்டியூர் நம்பி சூட்டிய நாமமல்லவா? அதைப் போய் எனக்கு அளிக்கிறீர்களே சுவாமி! நான் தங்கள் கால் தூசு பெறுவேனா?’


‘இல்லை. எம்பெருமானே உவந்து தங்களை வைணவ தரிசனத்துக்கு அழைத்திருக்கிறான். எவ்விதத்திலும் நீங்கள் தாழ்ந்தவரல்லர்.’


‘நான் என்ன செய்ய வேண்டும்? கட்டளையிடுங்கள்.’


ராமானுஜர் அவருக்கு நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாசுரங்களைச் சொல்லிக் கொடுத்தார். யக்ஞமூர்த்தி சமஸ்கிருதத்தில் பெரும் பண்டிதர். வேத உபநிடதங்களில் தொடங்கி அவர் வாசிக்காததே கிடையாது. ஆனால் பிரபந்தம் படித்ததில்லை. அதில் ஆர்வம் செலுத்தியதும் இல்லை. எனவே ராமானுஜர் அதில் ஆரம்பித்தார். வெகு விரைவில் அவர் பிரபந்தங்களில் ஆழ்ந்த தேர்ச்சியுற்றது கண்டு மிகுந்த மகிழ்ச்சி கொண்டு, ‘சுவாமி, இனி நீங்கள் என்ன செய்யவிருக்கிறீர்கள் என்பதை நீங்கள்தாம் முடிவு செய்யவேண்டும். வைணவ தரிசனத்துக்கு நீங்கள் ஆற்றவிருக்கும் தொண்டு என்னவாயிருக்கும் என்று அறிய ஆவலாயிருக்கிறேன்.’


யக்ஞமூர்த்தி காவிரிக் கரையோரம் தனியே ஓரிடம் அமைத்துத் தங்கி நூல்கள் எழுத விரும்பினார். அதை ராமானுஜரிடம் அவர் தெரிவித்தபோது, அவரே ஒரு மடம் கட்டிக் கொடுத்தார்.


‘நீங்கள் இனி இங்கே தங்கலாம். தங்கள் விருப்பப்படி நூல்கள் இயற்றலாம்.’


அருளாளப் பெருமான் எம்பெருமானார் அன்றுமுதல் அந்தப் புதிய மடத்தில் தங்கி எழுத்துப் பணியில் ஈடுபட ஆரம்பித்தார்.


முதலியாண்டான் தொடங்கி ராமானுஜரின் அத்தனை சீடர்களுக்கும் இது பெரும் வியப்பாக இருந்தது. யக்ஞமூர்த்தியின் மனமாற்றம் அவர்கள் சற்றும் எதிர்பாராதது. இது எப்படி நிகழ்ந்தது, எப்படி நிகழ்ந்தது என்று பேசிப் பேசி மாய்ந்தார்கள்.


‘அவர் பெரிய ஞானஸ்தர். அவரது அறிவின் ஆழம் வைணவ தரிசனத்துக்கு அவசியம் என்று எம்பெருமான் நினைத்திருக்கிறான். இதில் நமது பங்கு என்ன இருக்கிறது?’ என்றார் ராமானுஜர்.


அன்றைக்கு மடத்துக்கு எங்கோ வெளியூரிலிருந்து நான்கு இளைஞர்கள் வந்தார்கள்.


‘சுவாமி, உம்மிடம் மாணாக்கர்களாகச் சேர்ந்து உய்ய வந்துள்ளோம். தயைகூர்ந்து எங்களை ஏற்றுக்கொள்ள வேண்டுகிறோம்’ என்று பணிந்து கேட்டார்கள்.


ஒரு கணம் ராமானுஜர் அமைதியாகக் கண்மூடி யோசித்தார். பிறகு, ‘நல்லது பிள்ளைகளே. அருளாளப் பெருமான் எம்பெருமானார் அங்கே காவிரிக் கரையில் தனியொரு மடத்தில் இருக்கிறார். அவரிடம் செல்லுங்கள். அவரை உமது ஆசாரியராகக் கொண்டு பயின்று வாருங்கள். அவருக்கு உரிய சேவைகளைச் செய்துவாருங்கள். அவர் உங்களுக்கு நற்கதி கொடுப்பார்.’ என்று சொல்லி அனுப்பி வைத்தார்.


அனந்தாழ்வான், எச்சான், தொண்டனூர் நம்பி, மருதூர் நம்பி என்ற அந்த நான்கு இளைஞர்களும் அப்போதே கிளம்பி அருளாளப் பெருமான் எம்பெருமானாரின் திருமடத்துக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.


‘என்ன விஷயம்?’


‘சுவாமி, நாங்கள் உடையவரிடம் சீடர்களாகச் சேர்வதற்காகப் போனோம். அவரோ எங்களைத் தங்களிடம் அனுப்பிவைத்தார். நீங்கள்தாம் எங்களுக்கு ஆசாரியராக இருந்து அருள்பாலிக்க வேண்டும்!’ என்று தாள் பணிந்து நிற்க, திகைத்துவிட்டார் அவர்.


ஒரு கணம்தான். சட்டென்று ஆட்களை அழைத்தார். ‘இம்மடத்தை இப்போதே இடித்துவிடுங்கள். இங்கே மடம் இருந்த சுவடே தெரியக்கூடாது!’ என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று சேரன் மடத்துக்குச் சென்றார்.


‘உடையவரே, இதென்ன அபத்தம்? நானே தங்களுடைய சீடனாகச் சேர்ந்து பயின்றுகொண்டிருப்பவன். என்னிடம் நான்கு பேரை அனுப்பி ஏன் பரிசோதிக்கிறீர்கள்? இனி எனக்குத் தனி மடம் வேண்டாம். தங்கள் நிழலாக இங்கேயேதான் இருப்பேன். காலம் முழுதும் தங்களின் சீடனாகவே இருந்து கழிப்பேன்!’


ராமானுஜர் புன்னகை செய்தார்.


(தொடரும்)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 10, 2017 08:30

A beautiful blog with no images required

Typology is a WordPress theme created for bloggers that just want to write, without the hassle of looking for the right featured image. It has a unique design based on beautiful typography and a modern, clean layout. Simply write your content and publish – Typology will handle the rest.





Efficiently negotiate enabled partnerships whereas team building channels. Competently visualize cross-platform action items rather than frictionless networks. Appropriately fabricate premium bandwidth with flexible ROI. Energistically provide access to equity invested vortals without innovative ROI. Dynamically revolutionize vertical users vis-a-vis goal-oriented value.





Continually productize multidisciplinary outsourcing



Monotonectally harness sticky opportunities via 24/365 synergy. Efficiently generate exceptional channels via low-risk high-yield innovation. Phosfluorescently restore revolutionary niche markets rather than top-line initiatives. Proactively e-enable standardized sources and B2B total linkage. Quickly re-engineer leveraged opportunities with wireless web services.





Quickly visualize business quality vectors whereas professional products. Enthusiastically matrix functional synergy with intuitive portals. Uniquely engineer top-line technologies after principle-centered leadership.





Uniquely reinvent sustainable strategic theme areas via unique testing procedures. Continually repurpose next-generation growth strategies with focused internal or “organic” sources. Dramatically scale B2C applications via long-term high-impact paradigms. Enthusiastically evisculate interoperable opportunities after web-enabled intellectual capital. Efficiently cultivate enterprise-wide mindshare after goal-oriented resources.





Phosfluorescently utilize turnkey leadership



Rapidiously grow premier partnerships before seamless systems. Dramatically target client-centered core competencies whereas future-proof products. Efficiently repurpose reliable “outside the box” thinking and multidisciplinary action items. Intrinsicly incubate go forward outsourcing for exceptional catalysts for change.





Continually promote emerging total linkage through one-to-one e-business. Continually extend customer directed benefits through cost effective value. Seamlessly pontificate long-term high-impact internal or “organic” sources with multifunctional content. Efficiently customize client-centric intellectual capital after flexible functionalities. Collaboratively aggregate global networks without top-line synergy.


Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 10, 2017 08:00

மாயவரத்தில் பேசுகிறேன்

நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 12, 2017) அன்று மாயவரத்தில் நடைபெறவுள்ள பேலியோ கருத்தரங்கில் பங்கு பெறுகிறேன். பட்டமங்கலம் தெரு கோவிந்தம்மாள் திருமண மண்டபத்தில் காலை 10 மணி முதல் இருப்பேன்.


கருத்தரங்கு அநேகமாக மதியம் முடிந்துவிடும். அதன்பின் பழைய நண்பர் பரிமள ரங்கநாதரைப் போய்ப் பார்த்துவிட்டு வருவது தவிர வேறு வேலையில்லை. எனவே, சமகால நண்பர்களையும் சந்தித்து உரையாட இயலும். மயிலாடுதுறையில் வசிக்கிற நண்பர்கள் அனைவரையும் பட்டமங்கலத் தெருவுக்கு அழைக்கிறேன்.


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 10, 2017 07:19

March 9, 2017

பொலிக! பொலிக! 56

ராமானுஜரின் பிரச்னை, யக்ஞமூர்த்தியல்ல. அவர் பேசிய மாயாவாதமும் அல்ல. அதன் அருகே வைத்து ஶ்ரீவைஷ்ணவ சித்தாந்தத்தை நிரூபித்தாக வேண்டியிருக்கிறதே என்று அவருக்கு சலிப்பாக இருந்தது. இதுவும் இதுவும் சேர்ந்தால் அது என்று அறிவியலில் நிரூபித்துவிடலாம். இதையும் அதையும் கூட்டினால் இது என்று கணிதத்தில் காட்டிவிடலாம். பரம்பொருளின் தன்மையையும் அதைப் பாடிப் பரவும் ஜீவாத்மாவின் ஒரே பெரும் லட்சியத்தையும் அறிவைக்கொண்டா அறிய முடியும்? அது ஆன்மாவின் அடியாழத்தில் பொங்கும் பெரும் புனலல்லவா? பக்தியின் பேராற்றலால் மட்டுமே திறக்க முடியும் பரமபதத்தின் வாயிற்கதவை கணிதச் சமன்பாடுகளால் கட்டுடைப்பது எப்படி?


ராமானுஜர், ஆதிசங்கரரின் மேதைமையை மதித்தார். ஆனால் அவர் பேசிய அத்வைதத்தை மாறுவேட பௌத்தம் என்றே கருதினார். பிரம்மத்தின் சொரூபத்தை உணர மறுத்த பௌத்த சித்தாந்தம், இயற்கை எனும் முடிவற்ற பேராச்சரியத்தையே உண்மை என்று சொன்னது. அதாவது நாம் அறிந்தது மட்டுமே உண்மை என்றாகிவிடுகிறது அல்லவா? பிரத்தியட்சத்துக்கும் பிரமாணத்துக்கும் அப்பால் வேத ஆதாரங்களின் அடிப்படையில் அறிய வேண்டியவற்றை நிராகரித்து அறியக்கூடியவைதான் என்ன? பரம்பொருளுக்கும் ஜீவனுக்குமான உறவு என்பது கண்ணுக்குத் தெரியாத நூலிழைகளால் கோக்கப்பட்டது. ஜீவன், பக்தனாகப் பரிணாம வளர்ச்சி பெறும்போது பாதை புலனாக ஆரம்பிக்கிறது. பக்தியின் உச்சம் சரணாகதி. சகலமும் மறந்து, சகலமும் துறந்து, ஆதிமூலமே என்று ஆன்மாவின் அடியாழத்தில் இருந்து எழும் பெரும் அழைப்பில் சகலமும் துலக்கம் பெற்றுவிடுகிறது.


இந்த அற்புத அனுபவத்தை மாயை தருமா? நான் தான் அது என்று சொல்லிவிட்ட பிற்பாடு தேடலுக்கு என்ன அவசியம்? தேடலற்ற வாழ்வில் அற்புதங்களுக்கு ஏது இடம்? அற்புதங்களின் சூட்சும வடிவத்தை, கறையற்ற பெருங்கடலை, எல்லைகளற்ற பெருவெளியை எட்டிப்பார்க்கக்கூட இடமின்றிப் போய்விடுகிறது.


‘எம்பெருமானே! உனக்கும் எனக்குமான உறவை நிரூபிப்பதன் பெயரா வாதம்? இதையா பதினேழு தினங்களாகச் செய்துகொண்டிருக்கிறேன்? இதன் அவசியம்தான் என்ன? இது சாதிக்கப் போவதுதான் என்ன?’


அன்றிரவு அவருக்கு உறக்கமில்லாமல் போனது. சராசரி மக்களுக்கு, எளியோருக்கு, பாமரருக்குப் பெருவழி காட்டுகிற ஒரு மகத்தான சித்தாந்தத்தை அவர் முன்வைத்தார். மிக நேரடியான உபாயம். எளிமையானது. ஜோடனைகளற்றது. பூச்சற்றது. நேராகப் பரமனின் பாதாரவிந்தங்களில் கொண்டு சேர்க்கவல்லது. மாயையின் மேகத்திரை கொண்டு அதை மறைக்க நினைக்கிறார் யக்ஞமூர்த்தி. நிரூபணங்களில் விருப்பம் கொண்டவர்களால் மேலே கடந்து போக முடியாது. நிரூபிப்பது என்று இறங்கிவிட்டால் காலம் முழுதும் அதைச் செய்துகொண்டே இருக்கவேண்டியத்தான். செயலும் சாதனைகளும் நிரூபணங்களிலா பூரணமடைகிறது? திறந்து கிடக்கிற பெரும் கானகத்தில் யுக யுகமாகப் பூத்துக்கிடக்கிற வாசம் மண்டிய ஒற்றைச் சிறு மலரைத் தேடி அலையும் ஓ யக்ஞமூர்த்தியே! அது உமது உள்ளங்கைக்கு வெகு அருகிலேயேதான் உள்ளதென்பதை ஏன் கண் திறந்து பார்க்க மறுக்கிறீர்? எம்பெருமானே, நீயாவது அவருக்கு அதை எடுத்துக் காட்டலாகாதா?


அதையே நினைத்தபடி படுத்துக்கிடந்த உடையவர் எப்போது உறங்கினார் என்று அவருக்கே தெரியவில்லை. ஆனால் உறக்கத்தில் ஒரு கனவு வந்தது. கனவில் காஞ்சிப் பேரருளாளன் வந்தான்.


‘ராமானுஜரே, எதற்குக் கவலைப்படுகிறீர்கள்? பதினேழு தினங்கள் யக்ஞமூர்த்தியுடன் வாதம் செய்திருக்கிறீர்கள். அவரது அறிவின் விரிவைக் கண்டீர்கள் அல்லவா? எத்தனை படித்திருக்கிறார் என்று பார்த்தீர் அல்லவா? எவ்வளவு பெரிய ஞானஸ்தர் என்று அறிந்தீர் அல்லவா? உமக்கு இப்படியொருவர் சீடராக அமைந்தால் இன்னும் என்னவெல்லாம் சாதிக்கலாம் என்று எண்ணிப் பாரும். நாளை அது நிகழும்.’


திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்துவிட்டார் ராமானுஜர். அடப்பெருமானே! ஒரு அத்வைத சாகரத்தை ஶ்ரீவைஷ்ணவ தரிசனத்துக்குள் இழுத்துவரவா இப்படியொரு நாடகம் நடத்துகிறாய்! இதற்கு என்னை ஒரு கருவியாக உபயோகப்படுத்திக்கொண்டிருக்கிறாயா? பிரமாதம். என்ன விளையாட்டு இதெல்லாம்?


‘தேவையான விளையாட்டுதான் ராமானுஜரே. பாமரர்கள் ஶ்ரீவைஷ்ணவ தரிசனத்தை ஏற்பது இயல்பாக நிகழும். வாதத்தின் வழியே ஒரு பண்டிதர் வந்து சேரும்போது அதன் எல்லைகள் மேலும் விரிவு கொள்ளும். நிம்மதியாகத் தூங்கி எழுந்து வேலையைப் பாரும். நாளை உமக்கொரு புதிய சீடர் வந்து சேரவிருக்கிறார்.’


மறுநாள் அது நிகழ்ந்தது.


அரங்க நகரத்து மக்கள் முழுதும் அந்தப் பதினெட்டாவது நாள் வாதத்தைக் காண ரங்க நாச்சியார் முன் மண்டபத்தில் வந்து குழுமியிருக்க, யக்ஞமூர்த்தியும் தமது சீடர் குழாத்துடன் வந்து அமர்ந்திருந்தார். எங்கே ராமானுஜர்? ஏன் இன்னும் வரக்காணோம்?


‘வந்துவிடுவார் சுவாமி. மடத்தில் திருவாராதனப் பெருமாளுக்கு பூஜை செய்துகொண்டிருக்கிறார். பூஜை முடிந்ததும் கிளம்பிவிடுவார்.’


உடையவரின் சீடர்கள் சொல்லிக்கொண்டிருந்தபோதே ராமானுஜர் விறுவிறுவென்று அங்கே வந்துகொண்டிருப்பது தெரிந்தது. யக்ஞமூர்த்தி திரும்பிப் பார்த்தார். ஞானத்தின் பூரணமும் தன்னம்பிக்கையின் நிகரற்ற பேரமைதியும் மேலான தெய்வீக சாந்தமும் நிலவிய முகம் அன்று அவரை வைத்த கண் வாங்காமல் பார்க்கச் செய்தது.


இல்லை. இவர் நேற்றுப் பார்த்த உடையவர் இல்லை. பதினேழு தினங்களாகப் பார்த்துக்கொண்டிருக்கிற மனிதர் இல்லை. இவர் வேறு. அல்லது இவருக்குள் நிகழ்ந்திருப்பது வேறு. எனது வாதங்களைத் தவிடுபொடியாக்கவா இவர் வந்துகொண்டிருக்கிறார்? ஆண்டவனே, நானே தவிடுபொடியாகிக்கொண்டிருக்கிறேனே? இவரிடம் வாதம் செய்து எப்படி என்னால் நிரூபிக்க முடியப் போகிறது? எதை நான் நிரூபிப்பேன்? நிரூபணமே தேவையற்ற பூரண அருளுடன் அல்லவா இவர் வந்துகொண்டிருக்கிறார்? எனக்குத் தெரிந்துவிட்டது. சர்வநிச்சயமாக இவர் பகவானின் பிரதிநிதி. வெல்ல முடியாத ஆகிருதி. வெல்ல அவசியமற்ற பேருண்மையின் பிரசாரகர். நான் தோற்றேன்.


தடதடவென்று அவரது உடல் நடுங்கியது. அப்படியே மெல்ல எழுந்து கரம் கூப்பி நின்றார். ராமானுஜர் நெருங்கி வந்தபோது, ‘சுவாமி!’ என்று அவர் பாதங்களில் விழுந்து வணங்கினார்.


திடுக்கிட்டுப் போனார் ராமானுஜர். ‘யக்ஞமூர்த்தி, என்ன இது? நான் உம்முடன் வாதம் புரிய வந்திருக்கிறேன். இன்று நம் வாதின் இறுதி நாள். ஶ்ரீவைஷ்ணவ தரிசனத்தை உமக்கு இன்று விளங்கச் செய்யாமல் மறு காரியமில்லை என்று எண்ணிக்கொண்டு வந்திருக்கிறேன். எழுந்திரும்.’


‘அவசியமில்லை சுவாமி. வாதம் வீண். உமது பாதம் ஒன்றே என் கதி மோட்சம்.’


கூட்டம் திகைத்துவிட்டது.


(தொடரும்)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 09, 2017 08:30

March 8, 2017

பொலிக! பொலிக! 55

ரங்க நாச்சியார் சன்னிதிக்கு எதிரே உள்ள மண்டபத்தில் கூட்டமான கூட்டம் திரண்டிருந்தது. ஒருபுறம் ராமானுஜரும் அவரது சீடர்களும் அமர்ந்திருக்க, எதிர்ப்புறம் யக்ஞமூர்த்தியும் அவரது சீடர்களும் இருந்தார்கள். யக்ஞமூர்த்தியின் ஓலைச் சுவடிகளை அடுக்கி வைத்துக்கொண்டு தலைமைச் சீடன் தயாராக இருந்தான். ஆதாரங்களுக்கும் ஒப்பீடுகளுக்கும் அவை முக்கியம். மேற்கோள் இல்லாமல் அவரால் பேச முடியாது.


‘உடையவரே, நீங்கள் ஓலைச் சுவடிகள் ஏதும் கொண்டு வரவில்லையா? நாம் வாதம் புரிய வந்திருக்கிறோம். சொற்பொழிவாற்ற அல்ல.’ என்றார் யக்ஞமூர்த்தி.


‘சமைக்கப்பட்டவற்றுக்குக் குறிப்புகள் அவசியம். இயல்பாக இருப்பதற்கு அது எதற்கு?’ என்றார் ராமானுஜர்.


ஒரு விருந்து தயாராகிறது. பலவிதமான ருசி மிக்க உணவு வகைகள் அணிவகுக்கின்றன. உண்ண உண்ண இன்னும் இன்னும் என்று ஆவல் எழுகிறது. எத்தனை பிரமாதமான விருந்து! இதை எப்படிச் செய்தீர்கள்? என்னவெல்லாம் சேர்த்தீர்கள்? என்று கேட்டால் குழம்பில் இன்னின்ன சேர்த்தேன், பாயசத்தை இப்படிச் செய்தேன், வடை மாவு இந்தப் பதம், அக்கார அடிசில் இப்படிச் செய்யவேண்டும் என்று விளக்கலாம்.


இதுவே கடும் தாகமெடுக்கும் நேரம் ஒரு குவளை நீர் கொடுத்து ஆற்றுப்படுத்துகிறவரிடம், ‘இந்தத் தண்ணீரை எப்படிச் சமைத்தீர்?’ என்று கேட்பார்களா?


ராமானுஜர் அதைத்தான் சொன்னார். வைணவம் இயல்பானது. காற்றையும் நீரையும் நெருப்பையும் போன்று அநாதியானது. ஏனெனில் பரம்பொருள் அவ்வாறானது. பிரம்மம், கர்மத்தால் தீண்டப்படுவதில்லை. அதற்கு தோஷங்கள் இல்லை. மூப்பில்லை, இறப்பில்லை, பிறப்பில்லை, சுக துக்கங்களோ, பசி தாகமோ இல்லை. அநாதியாக இருக்கிற அதனுள்ளேதான் அனைத்தும் அடங்கியிருக்கிறது.


‘அனைத்தும் என்று எதைச் சொல்வீர்? ஞானமயமான பிரம்மம் ஒன்றே மெய். இந்த உலகம் பொய். காட்சிகள் பொய். அனுபவங்கள் பொய். வெறும் மாயை. இந்தப் பொய்களும் மாயையும் எவ்வாறு பிரம்மத்தில் ஒடுங்கும்?’ என்றார் யக்ஞமூர்த்தி.


‘மாயை என்று அத்வைதம் சொல்வதையும் உற்பத்தி செய்தது அந்த பிரம்மமே அல்லவா? மாயையும் பிரம்மத்துக்குள் அடங்கியிருப்பதுதான். ஒரு நோக்கம் உள்ளது ஐயா. படைப்பதும் காப்பதும் நிர்மூலம் செய்வதும் தொடர்ந்து நடைபெறுவதற்காகவே பிரம்மம் மாயையைத் தனக்குள் வைத்திருக்கிறது. ஜீவனும் ஈசனும் மெய்யென்றால் மாயை என்று நீங்கள் சொல்லும் உலகமும் மெய்யானதே. பிரம்மம் படைக்கும் ஒன்று எவ்வாறு பொய்யாகும்? முழு உண்மை பிரம்மமே என்றால் அது படைப்பதும் உண்மையே அல்லவா? பரம்பொருள் எப்படி பொய்யான ஒன்றைப் படைத்துக் காட்டும்?’


வேதங்களை ஆதாரமாகக் கொண்டு கட்டியெழுப்பப்பட்டது, ஹிந்து மதம். த்வைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம் என்று அதிலுள்ள மூன்று பிரிவுகளும் சந்தேகமற ஒப்புக்கொள்ளும் ஒரே விஷயம் பிரம்மம் அநாதியானது என்பது. பிரம்மத்துக்கும் ஜீவனுக்கும் உள்ள தொடர்பு சார்ந்துதான் வாத விவாதங்கள் அனைத்தும். ஜீவாத்மா வேறு, பரமாத்மா வேறல்ல என்பது அத்வைதம். இரண்டும் வேறு வேறுதான்; எந்நாளும் சேராது என்பது த்வைதம். இரண்டும் வேறுதான்; ஆனால் இரண்டும் இணைந்திருக்கும் என்பது விசிஷ்டாத்வைதம்.


‘சுவாமி, ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்குமான தொடர்பு பக்தியின்மூலம் கட்டி எழுப்பப்படுவது. பக்தி செய்வதே ஜீவனின் கடன். பக்தியின் மூலம் பரமாத்மாவை நெருங்கிச் செல்கிறோம். நாம் நெருங்கலாம், ரசிக்கலாம், அனுபவிக்கலாம், ஆனால் ஜீவன் ஒருபோதும் பரமாத்மாவாகாது. பரமாத்மாவாகிவிட்டால் ஜீவனுக்கு சொர்க்க நரகங்கள் எதற்கு? அவற்றை அனுபவிக்க வேண்டிய அவசியம்தான் எதற்கு?’


‘இல்லை. இதை ஒப்புக்கொள்ள முடியாது. தத்வம் அஸி ஸ்வேதகேதோ என்று வருணன் ஸ்வேதகேதுவைப் பார்த்துச் சொன்னதைப் பொய் என்பீரா? பிரபஞ்சத்தைப் படைத்த ஈஸ்வரனும் நீயும் ஒன்றே என்றல்லவா இதற்குப் பொருள்?’


‘இப்படிப் பாருங்கள். ஒரு மீனுக்குக் கடலின் ஆழம் தெரியும். அகலம் தெரியும். பிரம்மாண்டம் தெரியும். ஆனந்தமாக அது நீந்திக் களிக்கிறது. கடலுக்குள் இருக்கப் பணிக்கப்பட்டது அது. ஆனால் மீன் தான் கடலா? இல்லை அல்லவா? மீனாக இருப்பதால்தான் அது கடலை அனுபவிக்கிறது. ஜீவாத்மா அப்படித்தான். பரமனுக்குள் ஒடுங்கி அனுபவிக்கவே படைக்கப்பட்டவன் அவன். நீங்கள் சொல்லுவது எப்படி என்றால், உப்பும் கடலில்தான் உள்ளது. மீனைப் போல் அல்லாமல் அது கடல் நீரில் இரண்டறக் கலந்திருப்பது. அதனால் கடலை அனுபவிக்க முடியுமா? உப்புக்குக் கடலின் ஆழ அகலங்கள் தெரியுமா? பிரம்மாண்டம் தெரியுமா? கடல் வேறு, உப்பு வேறு என்பதை ஒப்புக்கொள்வீர்கள் அல்லவா? ஜீவாத்மாவும் சரி, இந்தப் பரந்த உலகமும் சரி. பரம்பொருளின் அங்கங்கள்தாம். பரமாத்மா என்றும் பிரம்மம் என்றும் இன்னும் பலவாகவும் சொல்லப்படுகிற எம்பெருமானின் அருள்தான் நமக்கு வேண்டியது. அதன்மூலம் சரீரத் தொடர்பை விடுத்து அவன் பாதாரவிந்தங்களை எட்டிப் பிடிப்பதே மோட்சம் என்று சொல்லப்படுகிறது. மோட்சத்துக்கு பக்தி ஓர் உபாயம். சரணாகதி மிகச் சிறந்த உபாயம். வைணவம் இதைத்தான் சொல்கிறது.’ என்றார் ராமானுஜர்.


யக்ஞமூர்த்தி ஏற்கவில்லை. வாதம் விடாமல் தொடர்ந்தது. ஒரு நாள். இரண்டு நாள். ஒரு வாரம். இரண்டு வாரம். மூன்றாவது வாரமும் முடிந்துவிடும் போலிருந்தது. ஆனால் வாதம் முடியவில்லை.


யக்ஞமூர்த்தி பேசிய அத்வைதம், வேதங்கள் விரிக்கும் ஞான காண்டத்தை அடிப்படையாகக் கொண்டது. அதில் சடங்குகளுக்கும் யாகங்களுக்கும் பெரிய இடம் கிடையாது. அது தத்துவங்களின் வெளி. அறிவின் கூர்மையால் அலசிப் பார்க்கப்படுவது. ஆத்மானுபவம் சேராது.


ஆனால் ராமானுஜர் பேசிய விசிஷ்டாத்வைதம் சராசரி மனிதர்களுக்கான கதி மோட்ச உபாயம். மண்டை உடைக்கும் தத்துவச் சிக்கல்களுக்குள் புகாமல் மிக நேரடியாகச் சரணாகதியைச் சுட்டிக்காட்டுகிற பெரும்பாதை. சேருமிடம் குறித்த தேர்ந்த தெளிவும் சென்றடையும் வழி பற்றிய துல்லியமும் கொண்ட உபாயம்.


யக்ஞமூர்த்தி அதை ஏற்கவில்லை. பதினேழு தினங்கள் தொடர்ந்து விவாதம் நடந்துகொண்டே இருந்தது. யார் வெல்லப் போகிறார் என்றே புரியாமல் மக்கள் தினமும் சபைக்கு வந்து அலுத்துத் திரும்பினார்கள்.


அன்றைக்கு ராமானுஜருக்கே அலுப்பாகிவிட்டது. வறட்டுத் தத்துவ வாதங்களில் என்ன இருக்கிறது? பரம்பொருளான நாராயணனைச் சரணமடைவது ஒன்றே மோட்சத்துக்கு வழி என்பதை எப்படி இந்தப் பண்டிதருக்குப் புரியவைப்பது?


களைத்துப் போய் மடத்துக்குத் திரும்பியவர், தமது திருவாராதனப் பெருமாளான பேரருளாளனிடம் கைகூப்பிக் கேட்டார். ‘ஏனப்பா இப்படிச் சோதிக்கிறாய்? எதற்கு இந்த வீண் விவாதங்கள்? நீதான் எல்லாம் என்பதை அந்த யக்ஞமூர்த்திக்கு நீயே புரியவைக்கக் கூடாதா?’


(தொடரும்)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 08, 2017 08:30

March 7, 2017

பொலிக! பொலிக! 54

காவிரிக் கரையோரம் பல்லக்கு வந்துகொண்டிருந்தது. பல்லக்கின் பின்னால் யக்ஞமூர்த்தியின் சீடர்கள் பத்திருபது பேர் நடந்துவந்துகொண்டிருந்தார்கள். அவர்களுக்குப் பின்னால் ஒரு மாட்டு வண்டியில் கட்டுக்கட்டாக ஓலைச் சுவடிகள்.  சுவடி வண்டிக்குப் பின்னால் இன்னொரு குழுவாக மேலும் பத்திருபது பேர்.


நதியின் மேல் பரப்பில் இருந்து பிறந்து வந்த குளிர்ச்சியைக் கரையோர மரங்கள் கலைத்து நகர்த்தி, காற்றோடு விளையாடிய கணத்தில் பல்லக்கின் திரைச்சீலை படபடத்து நகர்ந்தது. ஒரு சுவடியைக் கையில் வைத்துக்கொண்டு யக்ஞமூர்த்தி அமர்ந்திருப்பது தெரிந்தது. தூய காவியும் முண்டனம் செய்த தலையும் திருநீறு துலங்கும் நெற்றியும் அவரது தீட்சண்யம் மிக்க கண்களை அலங்கரிக்கச் செய்த ஏற்பாடு போலிருந்தது. அருகே சாய்த்து வைக்கப்பட்டிருந்த தனது ஏக தண்டத்தை எடுத்துச் சற்றே நிமிர்த்தி வைத்தார். தொண்டையை லேசாகக் கனைத்துக்கொண்டு வெளியே மெல்லத் தலைநீட்டிக் கேட்டார். ‘இன்னும் எவ்வளவு தூரம்?’


‘வந்துவிட்டோம் குருவே. அரங்க நகரின் எல்லையைத் தொட்டுவிட்டோம். அங்கே பாருங்கள். கோபுரம் நெருக்கத்தில் தெரிகிறது.’


பல்லக்கின் அருகே நடந்து வந்துகொண்டிருந்த சீடன் சுட்டிக்காட்டிய திசையில் அவர் பார்த்தார். விண்ணுக்கும் மண்ணுக்குமான இட்டு நிரப்ப இயலாத இடைவெளியைச் சுட்டிக்காட்டுகிற கோபுரம். ராமாயண காலத்து விபீஷணனுக்கு ராமச்சந்திர மூர்த்தி தன் நினைவின் பரிசாகக் கொடுத்தனுப்பிய விமானம். அது அவரது குலச் சொத்து. இக்ஷ்வாகு குலம் தோன்றிய காலம் முதல் தலைமுறை தலைமுறையாகப் பாதுகாக்கப்பட்டு வந்த ரங்க விமானம். ராமன் அதை விபீஷணனுக்குக் கொடுக்க, விபீஷணன் அதைத் தலையில் ஏந்தி வந்து திருவரங்கத்தை அன்று ஆண்டுகொண்டிருந்த தர்மவர்மா என்னும் மன்னனிடம் ஒப்படைத்ததாகச் சொல்லுவார்கள். விமானம் வந்து சேர்வதற்கு முன்னால் திருவரங்கத்துக்கு அந்தப் பெயர் கிடையாது. அது சேஷ பீடம் என்று அழைக்கப்பட்டது. ரங்க விமானம் வந்த பிறகுதான் அது திருவரங்கம் ஆனது.


யக்ஞமூர்த்திக்கு அந்தக் கதைகள் தெரியும். வடக்கில் உதித்த இக்ஷ்வாகு குலத்தின் தெற்கு வழித்தோன்றல்களே சோழ மன்னர்கள் என்பதும் தெரியும். அதை வசிஷ்டரே உறுதிப்படுத்தி எழுதி வைத்த சுலோகத்தை அவர் படித்திருந்தார். அவருக்குச் சிரிப்பு வந்தது. சோழர்கள் இன்று சிவபக்தர்கள். அத்வைத சித்தாந்தத்தில் ஆழ்ந்த பற்றுக் கொண்டவர்கள். ஊருக்கு ஊர் சிவாலயங்களைக் கட்டியெழுப்பி அறம் வளர்ப்பவர்கள். ஆனால், அவர்கள் ஆட்சிக்கு உட்பட்ட திருவரங்கத்தில் அத்வைத சித்தாந்தமே அழிக்கப்பட்டுவிட்டது.


ஒரு தனி மனிதர் இந்தக் காரியத்தைச் செய்திருக்கிறார். பிராந்தியத்தில் அத்தனை பேரையும் வைணவர்களாக மாற்றிக்கொண்டிருக்கிறார். திருவரங்கம் தாண்டித் தென் இந்திய நிலப்பரப்பு முழுதும் மக்கள் அவரைப் பற்றிப் பேசுகிறார்கள். அவர் புகழ் பாடுகிறார்கள். அவர் வழியே சிறந்ததெனக் கண்மூடித்தனமாக நம்புகிறார்கள். என்னத்தைக் கண்டுவிட்டது இம்மூட ஜனம்? அவர் பேசுகிற விசிஷ்டாத்வைதம் புரியுமா இவர்களுக்கு? சாமானியர்கள் சித்தாந்தங்களால் கவரப்படுவதில்லை. அது அவர்களை முழுதாக எட்டுவதுமில்லை. ஒரு நம்பிக்கை. நாடி பிடித்துப் பார்க்கிற வைத்தியனின் முகக் கனிவு கொடுக்கிற நம்பிக்கை போன்ற ஒன்று.


ஆனால் தோற்றமல்ல, மக்களே. அதற்கு அப்பால். எதற்கும் அப்பால் என்றும் நிலைத்திருப்பது என்று ஒன்று உள்ளது. மடத்தனமாக அதை எதற்கு வெளியே தேடிக்கொண்டிருக்கிறீர்கள்? அறிவதற்கு மூன்று வழிகள் இருக்கின்றன. பிரத்யட்சம், பிரமாணம் சுருதி. கண்ணுக்குத் தென்படுவது பிரத்யட்சம். சூரியன் பிரயட்சம். சந்திரன் பிரத்யட்சம். மரங்களும் நதியும் கடலும் பிரத்யட்சம்.


ஆனால் நெருப்பு சுடும் என்பது பிரமாணம். நீ தொட்டுத் தெளிய வேண்டாம். தொட்டுப் பார்த்தவர்கள் சொல்லி வைத்தது போதும். அது அனுமானம். நீ தொடாவிட்டாலும் அது சுடத்தான் செய்யும். தொட்டுத்தான் பார்ப்பேன் என்று கை வைத்து சுட்டுக்கொண்டால் உன் இஷ்டம்.


சுருதி என்பது முன்னறிவு. வேதங்கள் வழங்குகிற பேரறிவு. அதுதான் பிரம்மம் ஒன்றே உண்மை என்கிறது. பிரம்மம் ஒன்றே உண்மை என்றால் மற்றதெல்லாம் மாயையே அல்லவா? இதுவல்லவா சத்தியம்?  மாயையே சத்தியம் என்பதைக் கேட்டு நகைக்காதே. நான் நிரூபித்துக் காட்டுகிறேன். கூப்பிடுங்கள் உங்கள் ராமானுஜரை. இரண்டில் ஒன்று பார்த்துவிடுகிறேன். இரண்டே இல்லை; ஒன்றுதான் (அ-த்வைதம் என்றால் இரண்டல்ல; ஒன்றே என்று பொருள்) என்பதை நிரூபித்துக் காட்டுகிறேன்.


தனது மானசீகத்தில் ஒரு பெரும் கூட்டத்தின் எதிரே நின்று அவர் பிரகடனம் செய்துகொண்டிருந்தார். திருவரங்கத்து மக்களின் எதிரே ராமானுஜர் முன்வைக்கும் வைணவ சித்தாந்தத்தைத் தோற்கடித்து அரங்கமாநகரில் அத்வைத சித்தாந்தத்தை நிலைநாட்டும் அடங்காத பேரவா அவரைப் புரட்டிப் போட்டுக்கொண்டிருந்தது.


அவர் பெரும் பண்டிதர். கங்கைக் கரையில் பல்லாண்டு காலம் பல்வேறு குருகுலங்களில் பயின்றவர். ஆதி சங்கரரின் அடிச்சுவடே உய்ய வழி என்று நம்பி ஏற்றுத் துறவறம் பூண்டவர். துறவுக்குப் பிறகு வட இந்தியா முழுதும் சுற்றித் திரிந்து அத்வைத சித்தாந்தத்தைப் பிரபலப்படுத்தியவர். ராமானுஜரின் பெயரும் புகழும் அங்கே எட்டியபோதுதான் யக்ஞமூர்த்திக்குக் கோபம் மூண்டது. அப்படியென்ன வெல்லவே முடியாத ஆளுமை? வென்று காட்டுகிறேன் பார்.


பல்லக்கும் பரிவாரமும் சேரன் மடத்தின் வாசலுக்கு வந்து சேர்ந்தது.


யக்ஞமூர்த்தியின் சீடர்கள் சிலர் உள்ளே சென்று தகவலைச் சொன்னார்கள். ‘வந்திருப்பவர் மகா பண்டிதர். தெற்கில் பிறந்து வடக்கே போனவர்தாம். ஆனால் வட இந்தியா முழுதும் இன்று புகழ் பெற்ற அத்வைத மகாகுரு. உங்களுடைய ஆசாரியர் ராமானுஜரைச் சந்திக்க வந்திருக்கிறார்.’


‘அதற்கென்ன சந்திக்கலாமே?’ என்று எழுந்து வந்தார் ராமானுஜர்.


‘உம்மை வெறுமனே பார்த்துப் போக நான் வரவில்லை ராமானுஜரே. உம்முடன் வாதம் செய்ய வந்திருக்கிறேன்.’


‘வாதமா? என்ன காரணம் பற்றி?’


‘காரணமென்ன காரணம்? உமது சித்தாந்தத்தின் அபத்தத்தை உலகுக்குச் சொல்லப் போகிறேன். துணிவிருந்தால் வாதத்துக்குத் தயாராகுங்கள். மகாபாரத யுத்தம் பதினெட்டு தினங்கள் நடந்தன. நாமும் பதினெட்டு நாள் வாதம் செய்வோம். நீங்கள் வாதில் வென்றால் நான் உமது அடிமையாவேன். நீங்கள் வென்றால் உமது வைணவ சித்தாந்தத்தை விடுத்து, அத்வைதமே சத்தியமென்று ஏற்கவேண்டும்.’


ராமானுஜர் ஒரு கணம் அமைதியாக யோசித்தார்.


‘வாதத்துக்கு நான் தயார். ஆனால் உயிர் இருக்கும்வரை மாய, சூனிய வாதங்களை என்னால் ஏற்க இயலாது. வேண்டுமானால் நான் தோற்றால் வைணவப் பிரசாரப் பணிகளை நிறுத்திக்கொள்கிறேன்’ என்று சொன்னார்.


(தொடரும்)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 07, 2017 08:30

March 6, 2017

பொலிக! பொலிக! 53

‘ஆ, வரமா! உண்மையாகவா? அரங்கனே வாய் திறந்து வரம் தருவதாகச் சொன்னானா? என்ன அற்புதம்! என்ன அற்புதம்! இதைப் போய் எங்களிடம் சொல்லாமல் விட்டுவிட்டீர்களே சுவாமி!’


சீடர்கள் மிகவும் பரவசமாகிப் போனார்கள். விஷயம் கேள்விப்பட்டு மடத்துக்கு வெளியில் இருந்தும் பலபேர் உள்ளே வந்து நின்றுவிட, எதை எப்படிச் சொல்லுவதென்று புரியாமல் உடையவர் திகைத்துப் போனார்.


சொல்லுங்கள் சொல்லுங்கள் என்று அவர்கள் விடாமல் நச்சரிக்கவே அவருக்கு வேறு வழியில்லாது போனது.


‘சொல்லக்கூடாது என்ற எண்ணமில்லையப்பா! சலவைத் தொழிலாளிக்கு வாய்த்த அனுபவம் நமக்கு வாய்க்கவில்லையே என்று வருத்தப்படுவீர்களே என்று எண்ணித்தான் தவிர்த்தேன்.’


‘உண்மைதான் சுவாமி! இது பெரிய விஷயம். அந்தத் தொழிலாளி தமது பணிக்குள் பரமனைக் கண்டிருக்கிறார். அதனால்தான் நம்பெருமாள் அவரிடம் பேசியிருக்கிறான். அதுசரி, அவர் என்ன வரம் கேட்டார்?’


உடையவர் புன்னகையுடன் கூரத்தாழ்வானைப் பார்க்க, அவர் சொல்லத் தொடங்கினார்.


‘நம்மிடம் இப்படி என்ன வரம் வேண்டும் என்று கேட்டால் நாம் என்ன கேட்போம்?’


‘இதிலென்ன சந்தேகம் கூரேசரே? நமக்கு நல்ல கதி கொடுக்கச் சொல்லிக் கேட்போம். மோட்சத்தினும் சிறந்தது வேறென்ன உள்ளது?’


‘அதுதான் விஷயம். ஆனால் அந்த சலவைத் தொழிலாளி தனக்கு மோட்சம் கேட்கவில்லை.’


‘பிறகு?’


‘அரங்கப் பெருமானே, நீயேதான் கிருஷ்ணாவதாரம் எடுத்தவன் என்று உடையவர் சொன்னார். கிருஷ்ணாவதாரத்தில் நீ அடித்துக்கொன்ற சலவைத் தொழிலாளிக்கு இப்போதேனும் மோட்சம் கிடைக்கச் செய் என்று அவர் வேண்டிக்கொண்டிருக்கிறார்!’


ஆஹா என்று சிலிர்த்துப் போனது சீடர் குழாம்.


நடந்தது ராமானுஜருக்கே வியப்புத்தான். ஓர் அற்புதம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. யாரும் நம்பமுடியாத சம்பவம். பாம்பணையில் பள்ளி கொண்டிருக்கும் பரமாத்மா வாய் திறந்து பேசுகிறான். வில்லிக்குக் கண் திறந்து காட்டிய அதே அரங்கன். சுத்த பக்தர்கள் யாரானாலும் சரி, எந்தக் குலத்தவரானாலும் சரி, அவர்கள் எனக்கு முக்கியம் என்று திரும்பத் திரும்ப நிரூபிக்கிற பரமாத்மா.


அவனே வாய் திறந்து உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்கிறபோது அந்த சலவைத் தொழிலாளி கேட்ட வரம் ராமானுஜரைத் தூக்கிவாரிப் போடச் செய்துவிட்டது.


‘ஏனப்பா, அரங்கனே வரம் தருகிறேன் என்று சொல்லுகிறபோது உனக்கு மோட்சம் கேட்காமல், எந்த யுகத்திலோ இறந்துபோன சலவைத் தொழிலாளிக்கு மோட்சம் கேட்கிறாயே, இது என்ன வினோதம்?’ என்று அவனிடம் கேட்டார்.


‘நீங்கள் சொல்லுவது சரிதான் சுவாமி. அந்த யுகத்து சலவைத் தொழிலாளி யாரோ என்னமோ நான் அறியேன். ஆனால் எங்கள் குலத்தில் பிறந்து கிருஷ்ணர் கையால் அடிபட்டு இறந்திருக்கிறார். பகவான் கேட்டு, மறுத்த பாவத்தை எப்படியோ செய்து தொலைத்துவிட்டார். இது எங்கள் குலத்துக்கே ஒரு களங்கமல்லவா?’


‘அப்படியெல்லாம் ஏன் நினைத்துக்கொள்கிறாய்? கிருஷ்ணர் கையால் இறப்பதென்பது அவனது விதியாக இருந்திருக்கிறது. கிருஷ்ணர் கால் பட்ட காளிங்கனுக்கே மோட்சம் கிடைத்திருக்கிறதே, கைபட்ட சலவைத் தொழிலாளிக்கா கிடைத்திருக்காது? எப்படியோ நீ ஒரு வரத்தை வீணாக்கிவிட்டாயப்பா.’


‘இல்லை சுவாமி. ஒருவேளை அவன் நரகம் போயிருந்தால்? இன்றைக்கு எங்களை நேர் வழியில் செலுத்தவும் நல்லது சுட்டிக்காட்டவும் மோட்சத்தின் பாதையைப் புலப்படுத்தவும் நீங்கள் இருக்கிறீர்கள். அந்த அப்பாவி சலவைத் தொழிலாளிக்கு அப்படி ஒரு ராமானுஜர் அன்று இல்லையே? அதனால்தானே கிருஷ்ண பரமாத்மாவையே கோபமுறச் செய்தான்? அவன் சொர்க்கம் போக அன்றைக்கு வழி இருந்திருக்காது. அதனால்தான் இன்று எனக்குக் கிட்டிய வாய்ப்பை அதற்குப் பயன்படுத்தி அவனை அனுப்பிவைத்தேன்.’


‘அதுசரி. நீ எப்படி சொர்க்கம் போவாய்?’


‘அதற்கென்ன சுவாமி! எனக்கு நீங்கள் இருக்கிறீர்கள். அதெல்லாம் நீங்கள் பார்த்துக்கொள்வீர்கள். எங்கள் கதி, யதிராஜ முனி!’ என்று சொல்லி அவர் பாதம் பணிந்தான்.


அவனை அப்படியே தூக்கி நிறுத்தி ஆசீர்வதித்தார் ராமானுஜர்.


நடந்ததை கூரத்தாழ்வான் சொல்லி முடிக்கவும் சீடர்கள் பேச்சு மூச்சற்றுப் போனார்கள். நம்பிக்கை என்றால் இதுவல்லவா? பக்தி என்றால் இதுவல்லவா? சரணாகதி என்பதும் இதுவேயல்லாமல் வேறென்ன?


‘உய்ய ஒரே வழி உடையவர் திருவடி என்பதை உணர்ந்திருக்கிறார் அந்த சலவைத் தொழிலாளி. அவர் என்ன குலம்? அவரது சீலம் இந்தத் திருவரங்கத்து அந்தணர்களுக்கு வருமா? அவருக்கு வாய்த்தது இங்கே வேறு யாருக்கு வாய்க்கும்?  சாதியா அவரை அந்த உயரத்துக்குக் கொண்டு சென்றது? இப்படி ஒரு சம்பவம் நடந்தது என்றால் மற்றவர்கள் என்ன செய்வார்கள்? இந்நேரம் ஊரைக் கூட்டி பறைசாற்றியிருக்க மாட்டார்களா? ஆனால் அந்த சலவைத் தொழிலாளி யாரிடமாவது வாய் திறந்தாரா? அவரது மனைவி மக்களுக்கே சொல்லியிருப்பாரா என்பதுகூடச் சந்தேகம்தான்.’ கூரத்தாழ்வான் சிலிர்ப்புற்றுப் பேசிக்கொண்டே போனார்.


‘கூரேசா, நமது குருகுலத்தில் உள்ளவர்களுக்கு முதலில் இது புரியவேண்டும். மாறனேர் நம்பியோ, அந்த சலவைத் தொழிலாளியோ, நமது வில்லிதாசரோ அடைந்த உயரம் மிகப் பெரிது. இடைவிடாத பக்தியும் தடையிலாது சரணாகதி செய்தலுமே மோட்சத்தின் பாதைக்கு இட்டுச் செல்லக்கூடியவை. இது புரிந்துவிட்டால் சாதி பேதம் பார்க்கிற வழக்கம் நின்றுவிடும்.’ என்றார் ராமானுஜர்.


பரபரவென்று காரியங்கள் நடக்கத் தொடங்கின. கோயில் திருப்பணியில் இன்னும் அதிகமாகப் பல சாதிக்காரர்களைக் கொண்டு வந்து சேர்த்தார் உடையவர். பெருமாளுக்கு தினமும் ஒரு புதிய மண் பாண்டத்தில்தான் அமுது செய்விக்க வேண்டும். குயவர்கள் உள்ளே வந்தார்கள். தச்சு வேலைகளுக்காக ஆசாரிகள் வந்தார்கள். வண்ண மாடங்களுக்கும் நின்ற நெடுமதில்களுக்கும் சுண்ணமடிக்க ஆள் வந்தார்கள். தேரைப் பராமரிக்கவும் கோபுரங்களை கவனிக்கவும் இன்ன பிற கட்டுமானம் சார்ந்த பணிகளைச் செய்யவும் பல சாதிக்காரர்கள் வந்தவண்ணம் இருந்தார்கள்.


அத்தனை பேரையும் கோயிலுக்கு அருகிலேயே தங்க வைத்தார் ராமானுஜர். அரங்கனைச் சுற்றி அந்தணர்கள் மட்டும்தான் இருக்கவேண்டும் என்று யார் சொன்னது? நான் சொல்கிறேன், அரங்க நகரத்தைச் சுற்றிய காவிரியின் அத்தனைத் துளி நீரும் காவிரியேதான் என்பதுபோல் அரங்கனைச் சுற்றியிருக்கும் அதனை பேரும் பாகவத உத்தமர்கள்தாம். சாதி சொல்லிப் பிரிப்பதை ஒருக்காலும் அனுமதிக்க மாட்டேன்.


விஷயம் காட்டுத் தீயேபோல் எங்கெங்கும் பரவியது. எங்கெங்கிருந்தோ ஜனங்கள் வண்டி கட்டிக்கொண்டு ராமானுஜரைப் பார்க்க திருவரங்கம் வரத் தொடங்கினார்கள்.


(தொடரும்)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 06, 2017 08:30

March 5, 2017

பொலிக! பொலிக! 52

வண்டவில்லியும் செண்டவில்லியும் மூச்சிறைக்க மடத்துக்கு ஓடி வந்தார்கள். ‘எங்கே உடையவர்? நாங்கள் உடனே அவரைப் பார்க்க வேண்டும்!’


‘பொறுங்கள் பிள்ளைகளே. கொஞ்சம் மூச்சு விட்டுக்கொள்ளுங்கள். எதற்கு இந்த அவசரம்?’ என்று கேட்டார் கூரத்தாழ்வான்.


‘ஐயோ சுவாமி உங்களுக்கு விவரம் தெரியாது. பெரிய நம்பி வீட்டு வாசலில் இன்றைக்கு நடந்த களேபரம் ஊரையே ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது. அவரை ஜாதி விலக்கம் செய்த அந்தணர்கள் அத்தனை பேரும் இப்போது அவர் காலடியில் விழுந்து கதறிக்கொண்டிருக்கிறார்கள். உடையவருக்கு இதைச் சொல்லிவிட்டுத்தான் மறு காரியம். கொஞ்சம் ஒதுங்குங்கள்’ என்று உள்ளே போகப் பார்த்தவர்கள், சட்டென்று நின்றார்கள். முதலியாண்டானும் ராமானுஜரும் அறையை விட்டு வெளியே வந்துகொண்டிருந்தார்கள்.


கூரத்தாழ்வான் புன்னகை செய்தார். ‘நல்லது பிள்ளைகளே. அதோ அவர் வந்துவிட்டார். போய்ச் சொல்லுங்கள்.’


‘என்னவாம்?’ என்றார் ராமானுஜர்.


‘சுவாமி, இன்றைக்கு நம்பெருமாள் ரதோத்சவம் அல்லவா? ரதம் வீதிவலம் வந்துகொண்டிருந்தபோது ஒரு பெரிய சம்பவம் நடந்துவிட்டது.’


‘அப்படியா? அசம்பாவிதம் ஒன்றும் இல்லையே?’


‘அசம்பாவிதம் இல்லை சுவாமி. இது அற்புதம். பெரிய நம்பியின் மகள் அத்துழாய் ஒரு சத்தம் போட்டாள் பாருங்கள், நம்பெருமாளின் தேர் நகராமல் நின்றேவிட்டது.’


திகைத்துவிட்டார் ராமானுஜர். முதலியாண்டான், கூரத்தாழ்வான் தொடங்கி மடத்தில் இருந்த அத்தனை சீடர்களும் அங்கே கூடிவிட நடந்ததை வில்லிதாசரின் மருமகன்கள் இருவரும் மாற்றி மாற்றி விவரிக்க ஆரம்பித்தார்கள்.


‘பெரிய நம்பியை அந்தணர்கள் ஜாதி விலக்கம் செய்து வைத்ததில் அத்துழாய்க்குக் கடும் கோபம் சுவாமி.’


‘நியாயமானதுதானே?’


‘அவர்கள் நியாயம் கேட்க நேற்று உம்மிடம் வந்தார்கள். அத்துழாய் இன்று அரங்கனையே வழியில் நிறுத்தி நியாயம் கேட்டுவிட்டாள்.’


‘அவள் செய்யக்கூடியவள்தான்.’


‘வியப்பு அதுவல்ல சுவாமி. அவள் தேரை நிறுத்தி, குமுறிக் கொட்டிய கணத்தில் இருந்து, அந்தணர்கள் மனம் திருந்தி மன்னிப்புக் கேட்டதுவரை தேர் நகரவேயில்லை.’


‘நகர்த்த முடியவில்லை சுவாமி! பெருமான் சித்தமே பெரிய நம்பியின் பக்கம்தான் என்பது அவர்களுக்குப் புரிந்த பிறகுதான் தேர் அசைந்து கொடுத்தது.’


ராமானுஜர் கண்மூடிக் கரம் கூப்பி சில வினாடிகள் அப்படியே நின்றார். இது ஒரு தருணம். திருவரங்கத்து அந்தணர்கள் சிந்தைத் துலக்கம் பெறுவதற்கான தருணம்.  ஜாதியின் கோரப் பிடியில் சிக்கி எத்தனைக் களங்கப்பட்டுவிட்டது இச்சமூகம்! தனி மனிதர்களா இதைச் சரி செய்ய முடியும்? அரங்கனே இறங்கி வந்தால்தான் முடியும்.


‘சுவாமி, திருக்கோயில் கைங்கர்யத்தில் அனைத்து சாதிக்காரர்களையும் நீங்கள் ஈடுபடுத்தியிருக்கிறீர்கள். அதிலேயே திருவரங்கத்து அந்தணர்களுக்குக் கடும் புகைச்சல் கண்டிருக்கிறது என்று பேசிக்கொள்கிறார்கள்’ என்றார் முதலியாண்டான்.


‘புகைந்து என்ன ஆகிவிடும்? பரமன் திருமுன் படைப்புகள் அனைத்தும் சமம். பக்தி ஒன்றுதான் அளவுகோல். அந்தணர் என்பதால் அரங்கன் அரவணைத்துவிடுவானா அல்லது பஞ்சமன் என்பதால் பத்தடி தள்ளித்தான் நிற்கச் சொல்லுவானா? இவர்களெல்லாம் யோசிக்க மறுக்கிறார்கள் தாசரதி.’


‘சுவாமி, சில நாள் முன்பு சன்னிதிக்கு நீங்கள் ஒரு சலவைத் தொழிலாளியை அழைத்துச் சென்றது பற்றிச் சொன்னீர்களே..’ கூரத்தாழ்வான் தயங்கித் தயங்கி மெல்ல ஆரம்பிக்க, சுற்றியிருந்தவர்கள் ஆர்வமாகிப் போனார்கள்.


‘அது தெரியாதே எங்களுக்கு? என்ன நடந்தது சுவாமி?’


நடந்தது ஓர் அற்புதம்தான். ஆனால் ராமானுஜர் அதைப் பற்றி யாரிடமும் சொல்லியிருக்கவில்லை. அன்றைக்கு அவர் கோயிலில் இருந்து வெளியே வந்தபோது எதிரே கூரத்தாழ்வான் வந்துகொண்டிருந்ததால் அவரிடம் மட்டும் நடந்ததைச் சொல்லியிருந்தார்.


‘தயவுசெய்து சொல்லுங்கள் சுவாமி. யார் அந்த சலவைத் தொழிலாளி? என்ன நடந்தது அவருக்கு?’


‘இங்கே காலட்சேபம் கேட்க தினமும் வருகிறவர்தாம். பாகவதம் சொல்லிக்கொண்டிருந்தபோது கிருஷ்ணர் ஒரு சலவைத் தொழிலாளியை அடித்துவிட்டார் என்று சொன்னேன் அல்லவா?’


‘ஆம் சுவாமி. மதுராவில் கம்சனை வதம் செய்யப் போய்க்கொண்டிருந்தபோது எதிர்ப்பட்ட சலவைத் தொழிலாளி. நன்றாக நினைவிருக்கிறது. மன்னரின் உடைகளைத் தாம் அணிந்துகொள்ள விரும்பி, கிருஷ்ணர் கேட்கப் போக, அவரை அவமானப்படுத்துகிற விதமாகப் பேசிவிட்டதால்…’


‘அதேதான். இந்த சலவைத் தொழிலாளிக்கு அந்த சலவைத் தொழிலாளியைப் பற்றியே நினைப்பு போலிருக்கிறது. என்னிடம் வந்து பெருமாளுக்கு தினமும் சாற்றுகிற வஸ்திரங்களை நான் வெளுத்துத் தரலாமா என்று கேட்டார். அதற்கென்ன, தாராளமாகச் செய் என்று சொல்லி அனுப்பினேன்.’ ராமானுஜர் சற்றே நிறுத்த, கூரத்தாழ்வான் தொடர்ந்தார்.


‘அந்த சலவைத் தொழிலாளி தினமும் பெருமாள் வஸ்திரங்களைத் துவைத்துக் காயவைத்துக் கொண்டுவந்து கொடுத்துக்கொண்டிருந்தார். உடையவர் அடிக்கடி அவரை அழைத்து, அவரது வேலை சிறப்பாக இருப்பதாகப் பாராட்டிக்கொண்டிருந்தார்.’


‘ஓ, அது தெரியுமே. நானே பார்த்திருக்கிறேனே’ என்றார் வில்லிதாசர்.


‘அதேதானப்பா! அந்தத் தொழிலாளி ஒருநாள் என்னிடம் வினோதமாக ஒரு கேள்வியைக் கேட்டார். சுவாமி, என் வேலை சிறப்பாக இருப்பதாக நீங்கள் பாராட்டுகிறீர்கள். ஆனால் நான் வெளுத்துக் கொடுக்கும் ஆடையை தினமும் அணிந்துகொள்ளும் அரங்கன் என்ன நினைக்கிறான் என்று தெரியவில்லையே..’


‘அதுசரி. அரங்கன் வாய் திறந்து பாராட்டவேண்டும் போல.’


‘அதேதான்! அவர் ஆசைப்பட்டதில் என்ன தவறு? எடுத்துக்கொண்ட பணியை சிறப்பாகச் செய்துகொண்டிருக்கிறவருக்கு ஒரு அங்கீகாரம் வேண்டாமா? சரி வா என்னோடு என்று சன்னிதிக்கு அழைத்துச் சென்று நிறுத்தினேன்.’


‘நம்பவே முடியவில்லை சுவாமி. சன்னிதியில் ஏதும் அற்புதம் நிகழ்ந்துவிட்டதா?’


‘இல்லையா பின்னே? இவன் வெளுக்கும் ஆடைகள் உனக்குப் பிடித்திருக்கிறதா இல்லையா என்று நீயே சொல்லு என்று கொண்டு போய் முன்னால் விட்டேன். கோரிக்கை நியாயம் என்பதால் அரங்கன் பேசிவிட்டான்.’


ஆடிப் போனது கூட்டம். அப்படியா அப்படியா என்று வாய் ஓயாமல் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.


‘அரங்கன் பேசியது பெரிதில்லை. அவனுக்கு ஒரு வரமும் கொடுத்தான் பார், அதுதான் பெரிது!’


திகைத்துவிட்டார்கள் சீடர்கள். ‘வரமா? என்ன வரம்? சீக்கிரம் சொல்லுங்கள் சுவாமி!’


ஆர்வம் தாங்கமாட்டாமல் அத்தனை பேரும் தவித்தார்கள்.


ராமானுஜர் புன்னகை செய்தார்.


எதைச் சொல்லுவது? எப்படிச் சொல்லுவது? நடந்தது அவர் மனத்துக்குள் மீண்டும் ஒருமுறை ஓடத் தொடங்கியது. நம்ப முடியாத சம்பவம்தான். ஆனால் நடந்துவிட்டதே!


(தொடரும்)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 05, 2017 08:30

March 4, 2017

ருசியியல் 12

அன்றைக்கு என் மனைவி வீட்டில் இல்லை. ஆவக்காய் தேசத்தில் வசிக்கிற தனது சகோதரனின் இல்லத்துக்கு ஒரு விசேஷத்துக்காகப் போயிருந்தாள். எனவே சமையலறையை முற்றுகையிட்டுக் கைப்பற்றுவது எனக்கு எளிதாக இருந்தது. முன்னதாக மனைவி ஊருக்குப் போயிருக்கிற தினங்களில் எப்படியெல்லாம் அட்டூழியங்கள் புரியலாம் என்று சிந்தித்து ஒரு பட்டியலே தயாரித்து வைத்திருந்தேன். அதன்படி எனது முதல் முயற்சியை பனீர் டிக்காவில் தொடங்கினேன்.


இந்த பனீர் டிக்காவின் ருசிக்கு அடிப்படை, தயிர். தயிர்தான் டிக்காவின் உள்ளுறை பிரம்மம். அந்தத் தயிரானது அதிகமாகவும் ஆகிவிடக் கூடாது, குறைந்தும் போய்விடக் கூடாது. புளித்திருக்கவும் கூடாது, இனிப்பாகவும் இருந்துவிடக் கூடாது. கல்லால் உடைக்க வேண்டிய அளவுக்குக் கெட்டிப் பட்டிருக்க வேண்டியது அனைத்திலும் அவசியம். அந்தக் கெட்டித் தயிரை நீர் சேர்க்காமல் கடைந்து நுங்கு பதத்துக்குக் கொண்டு வரவேண்டியது முக்கியம். ஒரு சிறந்த பனீர் டிக்காவை ருசிப்பதற்கு நீங்கள் முழுக் கொழுப்புப் பாலில் தோய்த்த தயிரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.


தயிர் உருவாக்கத்தில் நமது பங்களிப்பு ஒன்றுமில்லை என்பதால் அன்றைக்கு எனக்கு மிகச் சிறந்த தயிர் வாய்த்துவிட்டது. காஷ்மீரத்து மிளகாய்த் தூள் கொஞ்சம், பொடித்த கடுகு கொஞ்சம். சீரகம் மற்றும் தனியாத் தூள் கொஞ்சம், அரைச் சிட்டிகை மஞ்சள் தூள், அளவோடு உப்பு. சேர்த்துக் கலக்கினால் முடிந்தது கதை.


தயிரைத் தயார் செய்து வைத்துவிட்டுத்தான் வெங்காய நறுக்கலில் உட்கார்ந்தேன். பொதுவாக நமது உணவகங்களில் வெங்காய விற்பன்னர்கள் பனீர் டிக்காவுக்கென சிறப்பு மெனக்கெடல் ஏதும் செய்ய மாட்டார்கள். தடிதடியாகக் கிண்ணம்போல நறுக்கி, அதே அளவு தடிமனில் தக்காளி மற்றும் குடை மிளகாயையும் சேர்த்து நறுக்கில், மூன்றின் இடையே பனீரைச் சொருகி, பல் குத்தும் குச்சியால் அதன் அடி வயிற்றில் ஓங்கி ஒரு குத்துக் குத்தி கொண்டு வந்து வைத்துவிடுவார்கள்.


என்னைப் பொறுத்தவரை இது ஒரு தண்டக் கருமாந்திரத் தயாரிப்பு. சற்றும் கலையுணர்ச்சி இல்லாமல் உருவாக்கப்படுவது. அந்த அபூர்வா ஓட்டல் அஸ்ஸாமிய நாரீமணியைப் பற்றிச் சொன்னேனே? அவரைப் போல நூதனமாக ஏதாவது முயற்சி செய்வதே உணவுக்கு நாம் செய்யும் மரியாதை.


ஆச்சா? வெங்காய துவந்த யுத்தம் ஆரம்பமானது. ஒரு வெங்காயத்தை, ஒரு துண்டு கூடக் கீழே விழாமல் முற்றிலும் சுருள் சுருளாக, மெலிதாக ஒரே வளையம் போல் வார்த்தெடுப்பது என்பது ஒரு பெரும் வித்தை. இதற்கென என்னவாவது கருவி கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம். எனக்குத் தெரியவில்லை. அந்த அஸ்ஸாமியப் பெண் கையாலேயே வெங்காய மாலை தொடுத்ததைக் கண்ணால் கண்டுவிட்ட படியால் நாமும் முயற்சி செய்யலாம் என்று நினைத்தேன்.


ஆனால் முற்றிலும் காந்தியவாதியான எனக்குக் கத்தியைச் சரியாகப் பயன்படுத்த வரவில்லை. எத்தனை லாகவமாக அதை வெங்காய வடிவத்துக்கு வளைத்து மடித்தாலும் நான் கோக்க நினைத்த மாலையானது இரணிய கசிபு வதைப் படலத்தை உத்தேசித்தே நகர்ந்துகொண்டிருந்தது. சுமார் அரை மணி நேரம் வெங்காயத்தோடு துவந்த யுத்தம் நிகழ்த்திவிட்டு, இறுதியில் துவண்டு தோற்றேன். ரொம்ப அவமானமாகப் போய்விட்டது.


நாராசமாக நறுக்கப்பட்ட வெங்காயத்தை வீணாக்கவும் முடியாது. ஒரு சிறந்த பனீர் டிக்காவுக்கு அதை உபயோகிக்கவும் முடியாது. என்ன செய்யலாம்? இந்தத் தீவிர யோசனையில், ஃப்ரிட்ஜில் இருந்த பனீரை வெளியே எடுத்து வைக்க மறந்துவிட்டிருந்தேன். பனீர் ஒரு பத்து நிமிடங்களாவது அறை வெப்பத்தில் இருந்தால்தான் வெட்டுவதற்கு நெகிழ்ந்து கொடுக்கும். ஃப்ரிட்ஜில் இருந்து வெளியே எடுத்த வேகத்தில் கத்தியைக் கொண்டுபோய் அதன் கன்னத்தில் வைத்தால் வடிவம் கண்ணராவியாகிவிடும்.


என்ன ஒரு இம்சை! மேலும் பத்து நிமிடங்கள் பனீருக்காகக் காத்திருந்து, அதைச் சதுரங்களாக்கித் தயிரில் போட்டு ஊற வைப்பதற்குள் தயிரின் குணம் மாறிவிடும். இந்தத் தயிரானது, மனைவி இனத்தைச் சேர்ந்த ஒரு பொருள். என்ன செய்தாலும் முகம் சுளிக்கும். பதம் தவறினால் கதம் கதம்.


எனவே எனது கலைத்தரம் மிக்க பனீர் டிக்கா கனவானது அன்று விதியால் கபளீகரம் செய்யப்பட்டது. என்ன செய்யலாம் என்று தீவிரமாக யோசித்தேன். நான் ருசித்து உண்பது மட்டுமே இதில் விஷயமல்ல. நான் வசிக்கிற அச்சுவெல்ல அடுக்குமாடி வீட்டின் கீழ்த்தளத்தில் எனக்கு கோபால் என்ற நண்பரொருவர் இருக்கிறார். கம்யூனிஸ்டு என்றாலும் அடிப்படையில் கலை மனம் கொண்டவர். அவரைக் கூப்பிட்டுக் கொஞ்சம் ருசி பார்க்கச் சொல்லிவிட்டால் போதுமானது. மனைவி ஊரில் இருந்து திரும்பும்போது வாசலிலேயே நிறுத்தி வைத்து எனது தீர பராக்கிரமங்களைப் பற்றிப் பிரஸ்தாபித்துவிடுவார்.


ஆக, அந்த எண்ணத்திலும் மண். என்ன செய்யலாம் என்று யோசித்தேன். டிக்கா முடியாது என்று தெரிந்துவிட்டது. எனவே மாற்றுப்பாதையில் போவதென முடிவு செய்து, எனது அன்றைய நூதனத் தயாரிப்பு ஒரு பனீர் கிச்சடியாக இருக்கும் என்று எனக்குள் அறிவித்துக்கொண்டேன். இப்போது பனீரை நறுக்க வேண்டிய அவசியமில்லை. இளகிய பதம் தேவையில்லை. பரோட்டாவுக்கு மாவு பிசைவது போல எனதிரு கரங்களாலும் பனீர்க் கட்டியை ஏந்திப் பிடித்துப் பிசைந்து கொட்டினேன்.


சட்டென்று ஒரு பயம் பிடித்துக்கொண்டது. அடக்கடவுளே, கிச்சடிக்குத் தயிர் எப்படிச் சேரும்? அசகாய மசாலாக் கலவையெல்லாம் தயாரித்து அதன் தலையில் கொட்டி சமாஸ்ரயணம் செய்து வைத்திருக்கிறேனே? அத்தனையும் வீணா?


மீண்டும் யோசித்து கிச்சடி யோசனையைக் களி யோசனையாக மாற்றிக்கொண்டேன். களிப்பூட்டும் களி. செய்கிற விதத்தில் செய்தால் அதன் ருசியும் அபாரமாகவே இருக்கும். எனவே, அடுப்பில் வாணலியை ஏற்றி, இரண்டு கரண்டி நெய்யை ஊற்றி நாலு கடுகு, இரண்டு குண்டு மிளகாய்களைப் போட்டெடுத்து எனது வெங்காய சம்ஹார சரக்கை அவிழ்த்துக் கொட்டி வதக்க ஆரம்பித்தேன். களிக்கு வெங்காயம் உண்டா என்றெல்லாம் கேட்கப்படாது. கலைஞன் ஒரு வினோத ரச மஞ்சரி. அவன் என்னவும் செய்வான். பெரும்பாலும் கிறுக்குத்தனங்கள் என்பதைச் சொல்லவேண்டியதில்லை.


ஆக, வெங்காயம் வதங்கியது. இப்போது உதிர்த்துப் பிசைந்த பனீரை அதில் போட்டுக் கொஞ்சம் தண்ணீர் ஊற்றினேன். சட்டென்று தயிர் நினைவுக்கு வந்தது. ஐயோ தண்ணீர் எதற்கு? நிறுத்திவிட்டு, எடுத்துக் கொட்டு தயிரை.


இந்த உலகில், வாணலியில் வதங்குகிற ஒரு வஸ்துவில் தயிரைக் கொட்டி வேகவிட்ட ஒரே ஜென்மம் நானாகத்தான் இருப்பேன். பிரச்னை என்னவெனில், முதலில் மறந்துபோய் சேர்த்துவிட்ட தண்ணீரும் தயிரும் கலந்து, எனது களியானது மோரில் வேகத் தொடங்கியது. ரொம்பக் கேவலமாக இருக்குமோ என்று பயம் வந்து சட்டென்று அடுப்பை அணைத்தேன். படாதபாடு பட்டு கொதித்துக்கொண்டிருந்த அந்த மோர்க்கரைசலை வடித்து வெளியே கொட்டிவிட்டு, மீண்டும் அடுப்பில் ஏற்றினேன்.


ஆனது ஆகிவிட்டது. இனி நடப்பது எம்பெருமான் செயல். தக்காளி, குடை மிளகாய், இஞ்சி, கொத்துமல்லி என்று கிடைத்தது அனைத்தையும் அள்ளிக்கொட்டி என்னமோ ஒன்றைச் செய்து முடித்தேன். நான் செய்ததில் ஒரே நல்ல காரியம், அடுப்பை மிதமான சூட்டிலேயே பத்து நிமிடங்களுக்கு வைத்திருந்ததுதான்.


உண்டு பார்த்தபோது திகைத்துவிட்டேன். உண்மையில் அது ஒரு நூதன பனீர் புர்ஜி. உப்புமாவுக்கும் பொங்கலுக்கும் பிறந்த கலப்புக் குழந்தைபோல் இருந்தது.


இன்னொரு முறை செய்வேனா என்று தெரியாது. அற்புதங்கள் எப்போதாவதுதான் நிகழும்.


(மேலும் ருசிக்கலாம்..)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 04, 2017 08:31

பொலிக! பொலிக! 51

குமுறிக் குமுறிக் கொட்டிக்கொண்டிருந்தது கூட்டம். பதற்றமும் கோபமும் அறிவை மறைக்க, பேசத் தகாத வசை மொழியில் பெரிய நம்பியை மென்று துப்பிக்கொண்டிருந்தார்கள்.


‘பெரிய நம்பிக்கு புத்தி கெட்டுவிட்டது ஓய். ஆன வயதுக்கு அக்கடாவென்று வீட்டில் கிடக்காமல் இதெல்லாம் என்ன பைத்தியக்காரத்தனம்?’


‘ஆளவந்தாரிடம் படித்தால் அறிவு வேண்டுமானால் விருத்தியாகியிருக்குமே தவிர குலம் உயர்ந்துவிடுமா என்ன?’


‘கிழவருக்கு ஆசையைப் பார்த்தீரா? அந்தணர் கையால் இறுதிக் காரியம் செய்யவேண்டுமென்பதைத் தமது இறுதி விருப்பமாகச் சொன்னாராம்.’


‘அது வெறும் திமிர் சுவாமி. நம்மை அவமானப்படுத்துவதற்காகத்தான் அவர் அப்படிக் கேட்டிருக்கிறார்.’


‘அதுசரி, அவர்தான் கேட்டாரென்றால் இவருக்கு எங்கே போயிற்று அறிவு?’


‘இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் விட்டால் நாளை அக்ரஹாரத்தில் அரைக்காணி இடம் கிடைக்குமா என்று கேட்டு வருவார்கள்.’


‘அதெப்படி விடுவது? பெரிய நம்பி செய்தது பெரிய தவறு. இதற்கான பலனை அவர் அனுபவித்தே தீரவேண்டும்.’


‘சரியாகச் சொன்னீர். அவரை ஜாதிப் பிரஷ்டம் செய்வதுதான் சரி.’


‘அவர் வீட்டு வாசல்முன் முள்ளைக் கொண்டு கொட்டி மூடுங்கள். யார் வீட்டு விசேஷத்துக்கும் அவருக்கு இனி அழைப்பு கூடாது. அவர் வீட்டு நல்லது கெட்டதுக்கும் நமக்கும் இனி சம்மந்தமில்லை.’


திருவரங்கத்து அந்தணர்கள் பெரிய நம்பியை விலக்கி வைப்பதாக அறிவித்தார்கள். நம்பி ஒன்றும் சொல்லவில்லை. அப்படியா என்று கேட்டுக்கொண்டார். இது அவர்களை மேலும் கோபப்படுத்தியது.


‘இவரை நாம் ஒதுக்குவது போதாது. உடையவர் ஒதுக்க வேண்டும். அப்போதுதான் புத்தி வரும்.’


யாரோ சொன்னார்கள். உடனே ஒரு கூட்டம் ராமானுஜரைச் சந்திக்கக் கிளம்பியது.


சேரன் மடத்து வாசலில் ராமானுஜரை அழைத்து நடந்ததை விவரித்தார்கள். காலமான மாறனேர் நம்பிக்குப் பெரிய நம்பி பிரம்ம மேத சம்ஸ்காரம் செய்திருக்கிறார். இறந்த பிராமணருக்கு உயிருடன் இருக்கிற இன்னொரு பிராமணர் மட்டுமே செய்ய வேண்டிய காரியம். இது எப்படித் தகும் உடையவரே? உமது ஆசாரியர் செய்ததால் மட்டும் சரியாகிவிடுமோ?


ராமானுஜர் அமைதியாகக் கேட்டுக்கொண்டார். சிறிது யோசித்துவிட்டு, ‘சரி, பெரிய நம்பியை விசாரிப்போம், பொறுங்கள்’ என்றார்.


நம்பி வந்து சேர்ந்தபோது கூட்டம் அதிகரித்திருந்தது. என்ன சொல்லப் போகிறார் பெரிய நம்பி? என்ன சொல்லப் போகிறார் ராமானுஜர்? இப்படியொரு சம்பவம் திருவரங்கத்துக்கு முற்றிலும் புதிது. யாரும் செய்யாதது. எண்ணிக்கூடப் பார்த்திராதது. வெறும் துணிச்சலோ, அலட்சிய உணர்வோ இதனைச் செய்ய வைத்திருக்காது. வேறென்ன காரணம் இருக்கும்?


அவர்கள் காத்திருந்தார்கள்.


ராமானுஜர் பெரிய நம்பியைப் பார்த்துக் கேட்டார், ‘சுவாமி, இவர்கள் சொல்வது சரியா? மாறனேர் நம்பிக்கு நீங்கள் பிரம்ம மேத சம்ஸ்காரம் செய்தீர்களா?’


‘ஆம், செய்தேன். அதிலென்ன தவறு?’


‘எப்படிப் பேசுகிறார் பார்த்தீரா சுவாமி? இவரை ஜாதிப் பிரஷ்டம் செய்தது சரிதான்.’ என்று ஒரு குரல் உயர, ஆமாம் ஆமாம் என்று கூட்டம் அலறியது.


‘கொஞ்சம் பொறுங்கள் ஐயா. நீங்கள் சொல்லுங்கள் சுவாமி’ என்றார் ராமானுஜர்.


‘மாறனேர் நம்பி ஒரு சிறந்த பாகவதர். ஆளவந்தரின் அத்யந்த சீடர். அவரது இறுதி ஆசையை நிறைவேற்றுவது ஒரு திருப்பணியே அல்லாமல் வேறல்ல.’


‘அது சரி, ஆனால்…’


‘ஜடாயு இறந்தபோது ராமபிரான் அந்தப் பறவை அரசனுக்கு பிரம்ம மேத சம்ஸ்காரம் செய்ததாக வால்மிகி மகரிஷி எழுதுகிறார். ராமனைவிட நான் பெரியவனா அல்லது மாறனேர் நம்பிதான் ஜடாயுவைவிடத் தாழ்ந்தவரா?’


திடுக்கிட்டுப் போனது கூட்டம். ராமானுஜர் புன்னகையுடன் கேட்டுக்கொண்டிருந்தார்.


‘பாரதம் படித்திருக்கிறீர்களா? விதுரர் ஒரு பணிப்பெண்ணின் மகன். அவர் இறந்தபோது மாமன்னன் தருமபுத்திரன் அவருக்கு இறுதிச் சடங்கு செய்தான். நான் என்ன தர்ம புத்திரனைவிடப் பெரியவனா அல்லது மாறனேர் நம்பிதான் விதுரரைக் காட்டிலும் தாழ்ந்தவரா?’


‘நிச்சயம் இல்லை சுவாமி.’


‘பிறகெதற்கு விசாரணை? ஆழ்வார்களைப் படித்தவர்கள் இப்படி அபத்தமாக உளறிக்கொட்ட மாட்டார்கள். குலமும் செல்வமும் நலமும் மற்ற அனைத்தும் தருவது நாராயணனின் திருநாமம் மட்டுமே. வாழ்வின் இறுதிக் கணம் வரை அதை மட்டுமே உச்சரித்துக்கொண்டிருந்த ஒருவர் இறந்திருக்கிறார் என்றால் அவருக்குச் செய்வதா பிழைபடும்? அது பிழை என்றால் நான் பிழை புரிந்தவனாகவே இருந்துவிட்டுப் போகிறேன். ஜாதிப் பிரஷ்டம்தான் இதற்குத் தண்டனை என்றால் எனக்கு என் ஜாதியே வேண்டாம்.’


பெரிய நம்பி பேசியதைக் கேட்ட கூட்டத்தின் கொதிப்பு அதிகரித்தது. ‘உடையவரே, எப்படிப் பேசுகிறார் கேட்டீரா? இவரை என்ன செய்யலாம் என்று நீங்கள் இப்போது சொல்லுங்கள்!’


‘விழுந்து சேவித்து மன்னிப்புக் கேட்டுவிட்டுப் போங்கள். அது ஒன்றுதான் செய்யக்கூடியது’ என்று அமைதியாகச் சொன்னார் ராமானுஜர்.


ஆடிப் போனார்கள் அவர்கள்.


‘நீங்களெல்லாம் பிறப்பால் உயர்ந்தவர்கள் என எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள். அந்தணன் என்பவன் அறவோன் என்று ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் ஒருவர் சொல்லி வைத்திருக்கிறார். அறம் வளர்க்கிற விதம் இதுவா? மனத்துக்கண் மாசிலன் ஆதலே அறம். மாறனேர் நம்பி அந்த விதத்தில் சந்தேகமின்றி அந்தணர். அதைப் புரிந்துகொண்டு அவருக்கு இறுதிக் காரியம் செய்துவைத்த இந்தப் பெரிய நம்பி அந்தணருக்கும் மேலே. அரங்கனுக்குப் பக்கத்தில் நிற்கிறவர். என்ன தெரியும் உங்களுக்கு? தீண்டாதவர் என்றும் திருக்குலத்தார் என்றும் நீங்கள் ஒதுக்கி வைத்த மாறனேர் நம்பி இல்லாவிட்டால் ஆளவந்தாரின் ராஜ பிளவை நோய் அவரை இன்னும் முன்னதாகவே எடுத்து விழுங்கியிருக்கும். அப்பேர்ப்பட்ட சிறந்த ஆத்மாவின் இறுதி ஆசையை இவராவது நிறைவேற்றாதிருந்திருந்தால் இந்த அரங்கமாநகரையே இந்நேரம் நதி கொண்டு போயிருக்கும்.’


உணர்ச்சி மேலிட்டு அவர் பொழிந்துகொண்டிருந்ததைக் கேட்ட கூட்டம் வாயடைத்து நின்றது. என்ன பேசுவதென்று யாருக்கும் புரியவில்லை.


‘மாறனேர் நம்பியின் உடல் புண்களைக் கழுவித் துடைத்து இவர் மருந்திடுவதை நான் கண்டேன். உங்கள் உள்ளத்தின் புண்ணெல்லாம் சீழ் பிடித்து ஒழுகுவதை உங்களால் உணர முடியவில்லையா? சுத்த வைணவன் என்றால் சாதி பார்க்க மாட்டான். மனித குலம் முழுதும் ஒரே சாதி என எண்ண முடிந்தவனால்தான் பரமாத்மாவின் பாதங்களை எட்டிப் பிடிக்க முடியும். இனி நீங்கள் யார் என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். நம்பிகளே! நீங்கள் வீட்டுக்குப் போங்கள்’ என்று சொல்லிவிட்டு ராமானுஜர் போய்விட்டார்.


(தொடரும்)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 04, 2017 08:30