Pa Raghavan's Blog, page 12

March 12, 2017

பொலிக! பொலிக! 59

தம்மை மறந்த லயிப்பில் பிரபந்தம் பாடியபடி ஊர்வலம் மெல்லப் போய்க்கொண்டிருந்தது. அத்தனை பேரும் ராமானுஜரின் சீடர்கள். அவ்வப்போது அருகிலுள்ள திவ்யதேசங்களுக்கு அவர்கள் இவ்வாறு யாத்திரை கிளம்பிவிடுவார்கள். முதலியாண்டான் சில சமயம் உடன் வருவார். அவர் வேறு வேலையாகப் போயிருக்கிற நாள் என்றால் கூரத்தாழ்வான் வருவார். மடத்தின் மூத்த சீடர்கள் யாராவது ஒருவர் கண்டிப்பாக உண்டு. புதிய சீடர்களுக்குப் பாசுரங்களைச் சொல்லிக் கொடுத்து, விளக்கம் சொன்னபடி யாத்திரை முன்னேறும்.


அன்றைக்கு வில்லிதாசர் முன்வரிசையில் பாசுரம் சொன்னபடி போய்க்கொண்டிருந்தார். பின்னால் நூற்றுக்கணக்கான புதிய சீடர்கள். அத்தனை பேரும் உடையவரே கதி என்று நம்பி வந்து சேர்ந்தவர்கள். வண்டவில்லியும் செண்டவில்லியும் ஊர்வலத்தின் கடைசி வரிசையில் வந்துகொண்டிருந்தார்கள். ராமானுஜரிடம் சேர்ந்ததில் இருந்து அவர்கள் வில்லிதாசரைத் தாய்மாமன் என்று எண்ணுவதே இல்லை. அவர் உடையவரின் பேரன்புக்குப் பாத்திரமான சீடர்களுள் ஒருவர். தவிரவும் அரங்கனே கண் திறந்து நோக்கிய அற்புதப் பிறப்பு. சந்தேகமில்லாமல் மகான். அவர் பெற்ற அருளில், அவர் பெற்ற அறிவில் ஆயிரத்தில் ஒரு பங்கு தமக்கும் வாய்க்காதா என்ற ஞானத்தேடலுடன் வந்து இணைந்திருந்தார்கள்.


ஆனால் சக சீடர்களிடையே அவர்கள் இருவரைப் பற்றி அவ்வப்போது சில்மிஷமான பேச்சுவார்த்தைகள் நடக்கும். வில்லி சகோதரர்களின் தோற்றமும் நடையும். அவர்கள் மல்லர்கள். வரிந்து கட்டிக்கொண்டு குஸ்தியில் இறங்கினால் ஊரே அதகளப்படும். கட்டுமஸ்தான தேகமும் கொழுத்த கன்னங்களும் திரண்ட தோள்களும் முறுக்கிய மீசையுமாகப் பார்க்கவே சற்று பயங்கரமாக இருப்பார்கள். அந்தத் தோற்றத்தில் அவர்கள் தரிக்கும் திருமண் காப்பு சட்டென்று ஒரு சிறு நகைப்பைக் கொடுக்கும்.


‘அவன் தொப்பையைப் பாரேன்! பொங்கல் பானைக்குத் திருமண் சாற்றியது போல!’


‘அந்த மீசைக் கண்ணராவியை எடுத்துத் தொலைக்கவும் மாட்டேன் என்கிறான். நடு ராத்திரி அவனைப் பற்றி நினைத்துக்கொண்டுவிட்டால் விடிகிற வரைக்கும் பயமாகவே இருக்கிறது!’


‘மன்னனுக்கு மல்லர்கள் சகாயம் தேவைதான். நமது மடத்துக்கு எதற்கு இவர்கள்? இவன் பிரபந்தம் சொல்லுகிற லட்சணத்தைப் பார்த்தால் நாராயணனே அலறிக்கொண்டு ஓடிவிடுவான். ல, ள, ழ உச்சரிப்பில் சகோதரர்கள் இருவரும் சரித்திரம் படைத்துக்கொண்டிருக்கிறார்கள்!’


‘உடையவர் எப்படித்தான் சகித்துக்கொள்கிறாரோ.’


‘அவரை விடப்பா. கேட்டால், மனத்தில் பக்தி இருந்தால் போதும் என்று சொல்லிவிடுவார்.’


‘இந்த மாமிச மலைகளின் மனத்தில் பக்தியும் இருக்குமா என்ன?’


‘சந்தேகமாக உள்ளதா? பரிசோதித்துப் பார்த்துவிடுவோமா?’


அன்றைக்கு அவர்கள் விபரீதமாக ஒரு விளையாட்டை ஆடிப் பார்க்க முடிவு செய்தார்கள்.


சீடர்கள் நடந்துகொண்டிருந்த பாதையில் ஒரு சமணர் கோயில் எதிர்ப்பட்டது. வாயிலில் சிங்கமும் யானையும் செதுக்கப்பட்ட பெரும் கற்கள் எழுந்து நின்றன. அந்த இடத்தை ஊர்வலம் கடந்தபோது விஷமக்காரச் சீடர்கள் சிலர் வில்லி சகோதரர்களை அழைத்தார்கள்.


‘வண்டவில்லி, பெருமாள் கோயிலைக் கடந்துகொண்டிருக்கிறோம்! கோயிலை கவனிக்கமால் எங்கே பராக்குப் பார்த்துக்கொண்டு வருகிறீர்கள் இருவரும்?’


பாசுரத்தில் கவனமாக இருந்த வில்லி சகோதரர்கள் இருவரும் திடுக்கிட்டுப் பார்த்தார்கள். ஒரு கணம்தான். தடாலென இருவரும் அந்த இடத்தில் சாஷ்டாங்கமாக விழுந்துவிட்டார்கள். நாராயண, நாராயண என்று ஓங்கி உலகளந்த உத்தமனை எட்டும் ஆவேசத்துடன் அவர்கள் குரல் கொடுத்தபடியே விழுந்து சேவித்துக்கொண்டிருக்க, முன்னால் சென்ற சீடர்கள் திகைத்துப் போய் நின்றுவிட்டார்கள்.


‘என்ன ஆயிற்று உங்கள் இருவருக்கும்? இது சமணர் ஆலயம். எழுந்திருங்கள்!’


யார் யாரோ குரல் கொடுத்துப் பார்த்தும் இருவரும் எழவில்லை. நாராயண, நாராயண என்று தொடர்ந்து உச்சரித்துக்கொண்டே இருந்தவர்கள் பக்திப் பரவசத்தில் அப்படியே மயங்கிப் போனார்கள்.


முன்னால் போய்க்கொண்டிருந்த வில்லிதாசர் திரும்பிப் பார்த்தார். ‘என்ன அங்கே பிரச்னை?’


‘சுவாமி, வண்டவில்லியும் செண்டவில்லியும் சமணர் ஆலயத்தைப் பெருமாள் கோயில் என்று நினைத்து விழுந்து சேவித்தார்கள். விழுந்தவர்கள் எழவில்லை. அப்படியே மயங்கிவிட்டார்கள்.’


வில்லிதாசர் புன்னகை செய்தார். மெல்ல அவர்கள் அருகே வந்தார்.


‘யாராவது ஓடிச் சென்று தண்ணீர் கொண்டு வாருங்கள். மயக்கம் தெளிவிக்க வேண்டும்.’ யாரோ சொன்னார்கள்.


‘இல்லை, தண்ணீர் வேண்டாம். வில்லிதாசரே! நீர் நிற்கும் இடத்திலிருந்து சிறிது நகர்ந்து நில்லுங்கள்’ என்றார் இன்னொரு சீடர்.


வில்லிதாசருக்குப் புரியவில்லை. இருப்பினும் சட்டென்று நகர்ந்து நிற்க, அவர் குனிந்து வில்லிதாசர் நின்ற இடத்தில் இருந்து ஒரு பிடி மண்ணை அள்ளி மயங்கிக் கிடந்த வில்லி சகோதரர்கள் மீது தூவினார்.


சட்டென்று அவர்கள் மயக்கம் தெளிந்து எழுந்தார்கள்.


கூட்டம் திகைத்துவிட்டது. வில்லிதாசருக்கே தாங்க முடியாத வியப்பு.


‘சுவாமி! துளசி தீர்த்தம் தெளித்து மயக்கம் தெளிவிக்கலாம். பரம பாகவதரான தங்களது பாதம் பட்ட மண்ணும் அதற்கு நிகரானதே. தவிரவும் பெருமாள் கோயில் என்று சொன்னதும் சற்றும் யோசிக்காமல் விழுந்து சேவித்த இவர்கள் இருவரும் தங்களுக்குச் சரியான வாரிசுகள்தாம். தூணிலும் துரும்பிலும் இருப்பவன் இச்சமணக் கோயில் இருக்கும் இடத்தில் மட்டும் இல்லாதிருந்துவிடுவானா?’


விளையாட்டுக்கு வில்லி சகோதரர்களை சமணர் ஆலயத்தின்முன் விழவைத்த சீடர்கள் வெட்கத்தில் சுருங்கிப் போனார்கள்.


அகளங்கனிடம் இந்தக் கதையைச் சொன்ன அமைச்சர், ‘மன்னா! வண்டவில்லியும் செண்டவில்லியும் மழை வந்ததை நாரணன் வந்தான் என்று சொன்னதன் காரணம் புரிகிறதா? அவர்களுக்கு மழையும் நாரணன்தான், வெயிலும் நாரணன்தான். இரவும் பகலும் ஒளியும் இருளும் அனைத்தும் நாரணனே. சமணர் ஆலய வாசலிலும் நாரணன் பொற்பாதங்களைக் கண்டவர்கள் அவர்கள்.’


‘நம்பமுடியாத வியப்பாக இருக்கிறது அமைச்சரே. வில்லி சகோதரர்களே, உங்களது பக்தி மகத்தானது. நீங்கள் இங்கே அரண்மனைச் சேவை செய்து பொழுதை வீணாக்காதீர்கள். இனி நீங்கள் உங்கள் விருப்பப்படி எப்போதும் திருவரங்கத்திலேயே இருக்கலாம். உடையவர் அருகிலேயே வசிக்கலாம். மாதம்தோறும் உங்கள் சம்பளம் மட்டும் உங்களைத் தேடி வந்துவிடும். அந்தக் கவலை வேண்டாம்.’ என்றான் அகளங்கன்.


‘நன்றி மன்னா. அங்கே ஆலயத் திருப்பணி நடந்துகொண்டிருக்கிறது. உடையவர் எங்கள் இருவரையும் அந்த வேலையில்தான் ஈடுபடுத்தியிருக்கிறார். உங்களுடைய நல்ல மனத்தால் இனி நாங்கள் முழு நேரமும் அரங்கன் சேவையில் ஈடுபடுவோம்.’ என்றான் செண்டவில்லி.


‘நல்லது. விரைவில் நான் திருவரங்கம் வருகிறேன். உங்கள் உடையவரை நானும் தரிசிக்க வேண்டும்!’


(தொடரும்)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 12, 2017 09:30

March 11, 2017

ருசியியல் – 13

இன்றைக்குச் சுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்புவரை உணவைப் பற்றிய எனது புரிதல் ஒற்றைப் பரிமாணம் கொண்டதாக மட்டுமே இருந்தது. அதாவது, உணவு என்பது நாவை சந்தோஷப்படுத்தி, வயிற்றில் சென்று சேருகிற வஸ்து. அது நல்ல உணவா, நாராச உணவா, உடம்புக்கு ஒத்துக்கொள்ளுமா, கொள்ளாதா, நமக்கு ஏற்றதா, இல்லையா, இது அவசியமா, பிந்நாளைய உபத்திரவங்களுக்கு அச்சாரமா என்றெல்லாம் யோசித்தே பார்க்க மாட்டேன். எந்தப் பேட்டையிலாவது என்னவாவது ஒரு பலகாரம் பிரமாதமாக இருக்கிறது என்று யாராவது சொன்னால் போதும். உடனே என் மூஞ்சூறு வாகனத்தை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுவேன்.


ருசி மிகுந்த ஒரு மலாய் பாலை அருந்துவதற்காக தர்ம க்ஷேத்திரமாம் குரோம்பேட்டையில் இருந்து புறப்பட்டு ஒன்றரை மணி நேரம் பயணம் செய்து மண்ணடியை அடைவேன். குறிப்பிட்ட சேட்டுக்கடையானது விளக்கு வைத்து ஓரிரு மணிநேரங்களுக்குப் பிறகே திறக்கப்படும். அதன்பிறகு விறகடுப்பை மூட்டி அண்டாவில் பாலைக் கொட்டி அதன் தலைமீது வைத்துக் காயவிட்டு, அவர் வியாபாரத்தைத் தொடங்க அநேகமாக ஒன்பதரை, பத்து மணியாகிவிடும். ஜிலேபி, கலர் பூந்தி, பால்கோவா என்று அந்தக் கடையில் வேறு சில வஸ்துக்களும் கிடைக்குமென்றாலும் அங்கே மொய்க்கிற கூட்டமெல்லாம் அந்த மலாய் பாலுக்காகத்தான் வரும்.


எனக்குத் தெரிந்து பாலில் உண்மையிலேயே சுத்தமான காஷ்மீரத்துக் குங்குமப்பூ சேர்த்த ஒரே நல்ல சேட்டு அவர்தான். ஏலக்காய் போடுவார். சிட்டிகை பச்சைக் கற்பூரம் போடுவார். முந்திரி பாதாம் பிஸ்தா வகையறாக்களைப் பொடி செய்து போடுவார். கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்ப்பார். இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல உலர்ந்த வெள்ளரி விதைகளை ஒரு தகர டப்பியில் இருந்து இரு கைகளாலும் அள்ளி அள்ளி எடுத்து அதன் தலையில் கொட்டுவார்.


மேற்படி சேர்மானங்களெல்லாம் ஜீவாத்ம சொரூபம். பாலானது பரமாத்ம சொரூபம். இரண்டும் உல்லாசமாக ஊறியபடிக்கு விசிஷ்டாத்வைதபரமாக விறகடுப்பில் கொதித்துக் கிடக்கும். சேட்டானவர் ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு பெரிய கரண்டியைப் போட்டு நாலு கிளறு கிளறிவிடுவார். பிராந்தியத்தையே சுண்டி இழுக்கிற மணம் ஒன்று அதன்பின் வரும். அப்போதுதான் வியாபாரம் ஆரம்பமாகும்.


அந்த மலாய் பால், ஒருவேளை முழு உணவை நிகர்த்த கலோரி மிக்கது என்பதறியாமல், மூக்குப் பிடிக்கச் சாப்பிட்டுவிட்டு அந்தப் பாலுக்காகப் போய் நிற்பேன். அது ஒரு காலம்.


மேற்படி மண்ணடி சேட்டு மலாய் பால், கற்பகாம்பாள் மெஸ் ரவா ரோஸ்ட், மைலாப்பூர் ஜன்னல் கடை பொங்கல் வடை, வெங்கட்ரமணா தேங்காய் போளி என்று பிராந்தியத்துக்கொரு பலகார அடையாளமாகவே தருமமிகு சென்னை என் மனத்தில் பதிந்திருந்தது.


ஒன்பதாண்டுகளுக்கு முன்னால் என் நண்பர் பத்ரி, நுங்கம்பாக்கத்தில் உள்ள ஓர் உணவகத்துக்கு என்னை அழைத்துச் சென்றார். நான் அதுவரை போயிராத இடம். மெடிமிக்ஸ் ஆயுர்வேத சோப்பு தயாரிக்கும் கம்பெனி நடத்துகிற உணவகம். சஞ்சீவனம் என்று பேர்.


வழக்கமான உணவகம்தான். ஆனால் அங்கே தனிச்சிறப்பான முழுச் சாப்பாடு ஒன்று உண்டு. இயற்கை மருத்துவ நெறிக்கு (நேச்சுரோபதி) உட்பட்டுத் தயாரிக்கப்படுகிற உணவு என்று சொன்னார்கள்.


போய் உட்கார்ந்ததும் முதலில் மைல் நீள வாழையிலையின் ஒரு ஓரத்தில் ஒரு துண்டு நேந்திரம்பழத்துண்டு வைப்பார்கள். அதன்மீது ஒரு ஸ்பூன் தேங்காய்ப் பூ தூவுவார்கள். அடேய், நான் மலையாளி என்பது அதன் அர்த்தம். அதன்பிறகு சொப்பு சாமான் சைஸில் ஐந்து கண்ணாடிக் கிண்ணங்களில் வண்ணமயமான ஐந்து பானங்கள் வரும். ஒன்றில் கீரைச் சாறு. இன்னொன்றில் புதினா அரைத்துவிட்ட மோர். பிறகு ஏதேனுமொரு கொட்டைப் பயிரில் தயாரித்த சாறு. வாழைத்தண்டு சாறு. சாஸ்திரத்துக்கு ஒரு பழச்சாறு.


முடிந்ததா? இந்த ஐந்து பானங்களை அருந்தியானதும் ஐந்து விதமான பச்சைக் காய்கறிகளைக் கொண்டு வந்து வைப்பார்கள். சாலட் என்கிற காய்க்கலவை அல்ல. தனித்தனியே ஐந்து பச்சைக் காய்கறிகள். அதைச் சாப்பிட்ட பிற்பாடு, அரை வேக்காட்டுப் பதத்தில் மேலும் ஐந்து காய்கறிகள் வரும். அதையும் உண்டு தீர்த்த பிறகு முழுதும் வெந்த காய்கறிகள் இன்னொரு ஐந்து ரகம். கண்டிப்பாக ஒரு கீரை இருக்கும்.


ஆக மொத்தம் பதினைந்து காய்கறிகள் மற்றும் ஐந்து பானங்கள். உண்மையில் இவ்வளவுதான் உணவே. ஆனால் நமக்கெல்லாம் சோறின்றி அமையாது உணவு. எனவே கேரளத்து சிவப்பு குண்டு அரிசிச் சோறும் பருப்பும் கேட்டால் கொடுப்பார்கள். அதெல்லாம் முடியாது; எனக்கு சாம்பார் ரசம் இல்லாமல் ஜென்ம சாபல்யம் அடையாது என்பீர்களானால் அதுவும் கிடைக்கும்.


எதற்குமே அளவு கிடையாது என்பது முக்கியம். எதிலுமே குண்டு மிளகாயோ, வெங்காயமோ, பூண்டோ, எண்ணெயோ, புளியோ கிடையாது என்பது அதிமுக்கியம். இந்த ராஜபோஜனத்தை முழுதாக உண்டு முடித்தால் ஆயிரம் கலோரி சேரும். இது ஒரு நாளில் நமக்குத் தேவையான மொத்த கலோரியில் கிட்டத்தட்ட சரிபாதி.


விஷயம் அதுவல்ல. இதே ஆயிரம் கலோரிக்கு நீங்கள் வேறு என்ன சாப்பிட்டாலும் வயிறு புளிப்பானை போலாகிவிடும். ஆனால் இந்தக் குறிப்பிட்ட சாப்பாடு பசியைத் தீர்க்குமே தவிர வயிற்றை அடைக்காது. உண்ட உணர்வே இன்றி பசியழிப்புச் சேவையாற்றும் அந்நூதன உணவு என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. திரும்பத் திரும்ப அந்த உணவகத்துக்குச் சென்று சாப்பிட்டுப் பார்த்தேன். கூடவே ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் உணவு முறையைப் பற்றிப் படிக்கவும் ஆரம்பித்தேன்.


அதர்வ வேதத்தின் ஒரு பகுதியாக வருகிற ஆயுர்வேதம் என்பது சித்த வைத்தியத்துக்கு அண்ணனா தம்பியா என்றொரு விவாதம் ரொம்ப காலமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அது என்னவானாலும் இரண்டும் சகோதர ஜாதிதான் என்பதில் சந்தேகமில்லை. ஆயுர்வேதம் என்பது சுக வாழ்க்கை, சொகுசு வாழ்க்கைக்கான அறிதல் முறை. வெறும் மருத்துவமாக மட்டுமே அறியப்பட்டிருந்தாலும் இதில் வேறு பல சங்கதிகள் இருக்கின்றன. சமையல் கலையைப் பற்றி ஆயுர்வேதம் பேசும். சாப்பாட்டு முறை பற்றிப் பாடம் எடுக்கும். சட்டென்று அங்கிருந்து கிளம்பி விவசாயம் செய்வதைக் குறித்து விளக்கம் சொல்லும். கொஞ்சம் அறிவியல் வாசனை காட்டும். தடாலென்று தடம் மாறி ஜோதிட விளக்கம் சொல்லும். இன்னதுதான் என்று கிடையாது. மனுஷனாகப் பட்டவன் சௌக்கியமாக வாழவேண்டும். அதற்கு என்னெல்லாம் தேவையோ அதெல்லாம் இதில் உண்டு.


அடிப்படையில் ஆயுர்வேதம் சுட்டிக்காட்டுகிற ஒரு முக்கியமான சங்கதி என்னவென்றால், இப்புவியில் நம் கண்ணுக்குத் தென்படுகிற அத்தனைத் தாவரங்களுமே ஏதோ ஒரு விதத்தில் மருத்துவ குணம் கொண்டதுதான். சிலவற்றின் பயன்பாடு நமக்குத் தெரிந்திருக்கிறது. இன்னும் தெரியாத ரகசியங்கள் எவ்வளவோ உள்ளன. ஆரோக்கியமானது, நமது உடலுக்குள் உற்பத்தியாகிற சமாசாரம். இத்தாவரங்கள் அதைப் போஷித்து பீமபுஷ்டி அடைய வைக்க உதவுபவை.


சஞ்சீவனத்தில் உண்ட உணவும் இங்குமங்குமாகப் படித்த சில விஷயங்களும் சேர்ந்து என்னை ஒரு வழி பண்ண ஆரம்பித்தன. அதுவரை எனக்கு எண்ணமெல்லாம் எண்ணெய்ப் பதார்த்தங்களாகவே இருந்தது. இனிப்பு என்றால் கிலோவில்தான் உண்ணவே ஆரம்பிப்பேன். அது டன்னிலும் குவிண்டாலிலும் போய் நிற்கும். பரோட்டாவில் ஆரம்பித்து பீட்சா வரை தேக ஹானிக்கு ஆதாரமான சகலமான உணவினங்களையும் ஒரு வேள்வியேபோல் தின்று தீர்த்துக்கொண்டிருந்தேன்.


சட்டென்று ஒருநாள் போதும் என்று தோன்றியது. அன்றைக்குத்தான் இரண்டு முழு திருப்பதி லட்டுகளை ஒரே மூச்சில் கபளீகரம் செய்திருந்தேன்.


(ருசிக்கலாம்…)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 11, 2017 08:31

பொலிக! பொலிக! 58

‘நகர்வலம் போகலாமா?’ என்று அகளங்கன் கேட்டான்.


உறையூர் சிற்றரசனுக்கு அவ்வப்போது அந்த ஆசை வந்துவிடும். ஆங்காங்கே பல்லக்கை நிறுத்தி இறங்கி மக்களோடு பேசுகிற அரசன். ராஜேந்திரனுக்குக் கட்டுகிற கப்பத்தொகையை அவர்களே அளிக்கிறார்கள் என்பதை எப்போதும் மறவாத மன்னன். முடிந்ததைச் செய்வதில் அவனுக்கு ஒரு திருப்தி. செய்ய முடியாவிட்டாலும் காது கொடுத்துக் கேட்பதிலும் அன்பாக நாலு வார்த்தை பேசுவதிலும் அவனை விஞ்ச ஆள் கிடையாது. மக்களுக்குப் பிடித்த மன்னனாக இருப்பது எல்லோருக்கும் முடிகிற காரியமல்ல. அகளங்கன் அப்படி இருந்தான். 


வில்லி அவனிடம் மெய்க்காப்பாளனாக இருந்தபோது வாரம் ஒருமுறையாவது நகர்வலம் கிளம்பிவிடுவான். ஒவ்வொரு பகுதியின் பிரச்னையையும் வில்லி முன்கூட்டியே மன்னனிடம் விவரித்துவிடுவது வழக்கம். என்ன பேசவேண்டும், எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று அவனுடன் விவாதித்துக்கொண்டு கிளம்பினால் போகிற காரியம் எளிதாக முடியும்.


சந்தேகமில்லாமல் அகளங்கனுக்கு வில்லி பெரும் பலமாக இருந்தான். சட்டென்று இடம் மாறிச் சென்றுவிட்ட வில்லி.


‘என்னால் நம்பவே முடியவில்லை அமைச்சரே. நமது உறங்காவில்லி திருவரங்கத்து உடையவரின் தாசானுதாசராகி, அவரது மடமே கதியென்று கிடக்கிறாராமே?’


‘ஆம் மன்னா. சேரன் மடத்துக்குச் சற்றுத் தள்ளி ஒரு குடிசை போட்டுக்கொண்டு வசிக்கிறார் என்று கேள்வி.’


‘பொன்னாச்சி ஒப்புக்கொண்டுவிட்டாளா? இந்த வாழ்க்கை அவளுக்கும் பிடித்திருக்கிறதாமா?’


‘நீங்கள் வேறு. அரங்கன் சேவையில் அவள் வில்லியை விஞ்சிவிடுகிறாள் என்று திருவரங்கத்துக்காரர்கள் சொல்கிறார்கள். உடையவர் இட்ட பணியை மறு கணமே இருவரும் போட்டி போட்டுக்கொண்டு நிறைவேற்றுகிறார்களாம்.’


‘வியப்புத்தான். என்னிடம் வில்லி பணியாற்றிக்கொண்டிருந்தவரை பொன்னுக்கும் பொருளுக்கும் அவருக்குப் பஞ்சமே கிடையாது. முடிந்தவரை அவரை நாம் சௌக்கியமாகத்தான் வைத்திருந்தோம். சட்டென்று எப்படி இப்படியொரு துறவு மனப்பான்மை வந்துவிட முடியும்?’


‘அது துறவு மனப்பான்மை அல்ல மன்னா. தன்னையும் தன்னைச் சார்ந்தோரையும் நேசிப்பதில் இருந்து உயர்ந்து புவி முழுவதையும் நேசிக்கிற பெருமனம். உடையவரைச் சேர்ந்தவர்கள் அத்தனை பேருமே அப்படித்தான். வில்லிக்கு அவர் அரங்கனின் கண்ணைத் திறந்து காட்டிவிட்டாரே. அதற்குமேல் ஒருவர் எப்படி மாறாதிருக்க முடியும்?’


அகளங்கனுக்கு அது தீராத வியப்பு. அப்படியா அப்படியா என்று வாய் ஓயாமல் வெகுநாள் கேட்டுக்கொண்டே இருந்தான். இனி அரங்கனின் சேவையே வாழ்க்கை என்று வில்லி முடிவெடுத்து திருவரங்கத்திலேயே தங்கத் தொடங்கியபோது, ‘தொந்தரவு செய்யாதீர்கள், அவர் விருப்பப்படி இருக்கட்டும்’ என்று சொன்ன மன்னன் அவன்.


‘வில்லி இங்கில்லாவிட்டால் என்ன? அவரது மருமகன்கள் இருவரும் நமது படையில்தானே பணியாற்றுகிறார்கள்?’


‘யார், வண்டவில்லியையும் செண்டவில்லியையும் சொல்கிறீர்களா? அவர்களும் பாதி நேரம் சேரன் மடமே கதியென்றுதான் இருக்கிறார்கள். இங்கே வேலை முடிந்தால் அடுத்த நிமிடம் திருவரங்கத்துக்குக் கிளம்பிவிடுகிறார்கள்.’


‘அட, அப்படியா?’


‘ஆம் மன்னா. ராமானுஜரிடம் பஞ்ச சம்ஸ்காரம் பெற்று அவர்களும் வைணவ தரிசனத்துக்குத் தம்மை ஒப்புக்கொடுத்துவிட்டதாகக் கேள்வி.’


அகளங்கனுக்கு இது இன்னும் ஆச்சரியமாக இருந்தது. வில்லியின் மருமகன்கள் இருவரும் இளைஞர்கள். வாலிப மிடுக்கும் வயதின் வேகமும் கொண்டவர்கள். தவிரவும் மல்லர்கள். வீரம் அவர்கள் ரத்தத்தில் தோய்ந்தது. அகளங்கனின் படையில் முக்கியமான வீரர்களாக அடையாளம் காட்டப்பட்டவர்கள். காதல், திருமணம், குடும்பம், செழிப்பான வாழ்க்கை என்று இயல்பாக எழக்கூடிய ஆசைகளை ஒதுக்கிவிட்டு எப்படி அவர்களாலும் இறைப்பணியில் ஒதுங்க முடிந்தது?


எப்படி யோசித்துப் பார்த்தாலும் அகளங்கனுக்குப் புரியவில்லை. ‘எங்கே, கூப்பிடுங்கள் அவர்கள் இருவரையும். இன்று நகர்வலத்துக்கு அவர்களும் வரட்டும் நம்மோடு’ என்று உத்தரவிட்டான்.


செய்தி வண்டவில்லிக்குப் போனது. ‘மன்னர்பிரான் அழைக்கிறார். நகர்வலம் புறப்பட வேண்டுமாம். உன்னையும் உன் சகோதரனையும் கையோடு அழைத்து வரச் சொன்னார்!’


‘அப்படியா? இதோ’ என்று இருவரும் புறப்பட்டார்கள்.


வீட்டை விட்டு வெளியே வந்ததும் வானம் பார்த்த வண்டவில்லிக்குச் சட்டென்று சிறு தயக்கம் எழுந்தது. கருமேகங்கள் சூழத் தொடங்கியிருந்தன. சட்டென்று அவன் அரண்மனையை நோக்கி ஓடத் தொடங்கினான். செண்டவில்லியும் அவன் வேகத்துக்கு ஈடு கொடுத்து உடன் ஓட,  சில நிமிடங்களில் அரண்மனையை அடைந்தார்கள்.


‘நில்லுங்கள். எதற்கு இப்படி ஓடி வருகிறீர்கள்?’ வாயிற்காப்போன் தடுக்க, ‘அட நகர்ந்து நில்லப்பா.. மன்னர் எங்கே? கிளம்பிவிட்டாரா? அவரைத் தடுத்தாக வேண்டும். வழியை விடு’ என்று அவனை விலக்கிவிட்டு இருவரும் சபையை நோக்கி ஓட்டமாக ஓடினார்கள்.


மன்னர் அங்கே நகர்வலத்துக்குப் புறப்பட்டு, மந்திரிகளுடன் தயாராகக் காத்திருக்க, ‘ஓ மன்னா! நாரணன் வந்தான், நாரணன் வந்தான்! நகர்வலம் இன்று வேண்டாம் மன்னா!’ மூச்சிறைக்கப் பேசினான் வண்டவில்லி.


அகளங்கனுக்கு ஒன்றும் புரியவில்லை.


‘என்ன ஆயிற்று வண்டவில்லி? ஏன் நகர்வலம் வேண்டாம் என்கிறாய்?’


‘வெளியே நாரணன் வந்துவிட்டான். அவன் உலாப் போகிறபோது நாம் போவது எப்படி?’


மன்னனுக்கு அப்போதும் புரியவில்லை. ‘மந்திரியாரே, வெளியே சென்று பார்த்து வாரும். இவன் சொல்வது எனக்கு சுத்தமாகப் புரியவில்லை.’


அமைச்சர் வெளியே போய்ப் பார்த்தார். அப்போது மழை வேகம் எடுத்திருந்தது. நகர்வலம் போவது சிரமம் என்று அவருக்கும் தோன்றியது. யோசனையுடன் உள்ளே வந்தவர், ‘மன்னா, வெளியே நல்ல மழை பெய்கிறது. நாம் இன்னொரு நாளைக்கு நகர்வலம் போகலாம் என்று தோன்றுகிறது!’


மன்னனுக்குப் பெரும் வியப்பாகிப் போனது. ‘வண்டவில்லி, வெளியே மழைதானே வந்திருக்கிறது? நீ நாரணன் வந்தான் என்று சொன்னாயே.’


சட்டென்று அவன் ஆழி மழைக்கண்ணா என்று பாட ஆரம்பித்தான். ஆண்டாளின் பாசுரம். மேகங்களின் அதிபதியான பர்ஜன்ய தேவனை அழைத்து கண்ணனின் கருணைப் பெருமழையே போல் பொழியச் சொல்கிற பாசுரம்.


வண்டவில்லி பாடத் தொடங்கியதும் செண்டவில்லியும் சேர்ந்துகொண்டான். இருவரும் கண்மூடிக் கைகூப்பிப் பாடிக் களித்துக்கொண்டிருப்பதைக் கண்ட அகளங்கனுக்கு ஒரு கணம் அவர்கள் லவகுசர்கள் போலத் தெரிந்தார்கள். என்ன ஒரு மாற்றம்! எப்பேர்ப்பட்ட மாற்றம்! மழையைக் கண்டதும் நாரணன் வந்தான் என்று அறிவிக்க முடிகிற மனம் எப்பேர்ப்பட்ட மனம்! எல்லோருக்கும் முடியுமா இது? சொல்லிக் கொடுத்து வருவதா? பக்தி அனைவருக்கும்தான் இருக்கிறது. ஆனால் சிந்தை முழுதும் எம்பெருமானே நிறைந்திருப்பதென்பது எப்படி சாத்தியம்?


‘முடியும் மன்னா. ஒரு சம்பவம் சொல்கிறேன். முடியுமா முடியாதா என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்!’ என்றார் அமைச்சர்.


(தொடரும்)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 11, 2017 08:30

March 10, 2017

பொலிக! பொலிக! 57

யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. வாதத்தின் இறுதி நாளான இன்று எப்படியும் ராமானுஜரைத் தோற்கடிப்பேன் என்று தமது சீடர்களிடம் சொல்லிவிட்டே யக்ஞமூர்த்தி புறப்பட்டிருந்தார். திருவரங்கத்து வைணவர்களும் ராமானுஜரைக் காண்பதற்காக வெளியூர்களில் இருந்து வந்திருந்தவர்களும் மண்டபத்தில் நிறைந்திருக்க, வாதம் இதோ தொடங்கிவிடும் என்று காத்திருந்தவர்கள் அத்தனை பேரும் திகைத்துப் போனார்கள்.


‘ஏன் யக்ஞமூர்த்தி? உமக்கு நிரூபிக்க இன்னும் நிறைய இருக்கிறதே? இன்று மாலைக்குள் வாதத்தை முடிக்கலாம் என்றுதானே சொல்லியிருந்தீர்கள்?’ என்றார் ராமானுஜர்.


கண்ணீரும் பரவசமுமாக யக்ஞமூர்த்தி கைகூப்பி நின்றார்.


‘சுவாமி, நிரூபணங்கள் தேவையற்ற பரமாத்மாவின் பரிபூரண அருளாசியுடன் நீங்கள் இன்று வந்திருப்பதை உமது முகமே சொல்கிறது. தத்துவங்களில் என்ன இருக்கிறது? தத்துவங்களுக்கு அப்பால் உள்ள பரமனே உங்கள் பக்கம் இருக்கிறபோது இந்த வாதங்களுக்கு அவசியம்தான் என்ன? என்னை ஆட்கொள்ள வந்த எம்பெருமானாரே, இந்த யக்ஞமூர்த்தி இனி உமது அடிமை.’


கூட்டம் பேச்சற்றுப் போனது. யக்ஞமூர்த்தியின் சீடர்கள் அதிர்ந்துவிட்டார்கள். ‘குருவே, என்ன ஆயிற்று உங்களுக்கு? ஏன் இப்படிப் பேசுகிறீர்கள்?’


‘என் குழந்தைகளே, நான் சாஸ்திரங்களில் கரை கண்டவனாக இருக்கலாம். வேதம் அளித்த ஞானத்தின் செழுமை எனக்கு இருக்கலாம். நூல் வாசிப்பும் வாத விவாதங்களில் பெற்ற அனுபவங்களும் என் பலமாக இருக்கலாம். உண்மை என்று நம்பி நான் ஏற்ற அத்வைத சித்தாந்தம் என் மூச்சுக்காற்றாக இருக்கலாம். ஆனால் எது பேருண்மையோ அது இவர் பக்கம் இருக்கிறது. நீயும் நானும் பேசுவதுபோல பகவான் இவரோடு உரையாடுகிறார். வினாக்களுக்கும் சந்தேகங்களுக்கும் விடை தருகிறார். பகவானின் பூரண அருளைப் பெற்றவரை வாதில் வென்று நான் எதை நிரூபிப்பேன்? அது அபத்தமல்லவா?’


அவர் பேசியது யாருக்கும் புரியவில்லை. ராமானுஜருக்கு மட்டும் புரிந்தது. கனவில் வந்த பேரருளாளன் சொன்னதைச் செய்துவிட்டான். இது தெய்வ சங்கல்பம். நாம் செய்ய ஒன்றுமில்லை. எனவே, ‘வாரும் யக்ஞமூர்த்தியே! ஶ்ரீவைஷ்ணவ தரிசனம் இனி உம்மாலும் செழுமை கொள்ளும். உமது ஞானத்தின் பலத்தை நாரணன் சேவைக்குத் திருப்புங்கள்!’ என்று சொன்னார்.


யக்ஞமூர்த்தி, சிகை நீக்கிய, ஏகதண்டம் ஏந்திய அத்வைத சன்னியாசி. ராமானுஜர் அவருக்குப் பஞ்ச சம்ஸ்காரம் செய்துவைத்து, மீண்டும் பூணூல் அணிவித்து, திரிதண்டம் வழங்கி, வைணவ தரிசனத்துக்குள் வரவேற்றார்.


‘காஞ்சிப் பேரருளாளன் சித்தம், நீங்கள் வைணவ தரிசனத்துக்குள் பிரவேசிக்க வேண்டுமென்று இருந்திருக்கிறது. எனவே நீங்கள் இனி அருளாளப் பெருமான் எம்பெருமானார் என்று அழைக்கப்படுவீர்.’


‘ஆஹா. எம்பெருமானார் என்பது தங்களுக்கு சாற்றப்பட்ட பேரல்லவா? தங்களது பரம ஆசாரியர்களுள் ஒருவரான திருக்கோட்டியூர் நம்பி சூட்டிய நாமமல்லவா? அதைப் போய் எனக்கு அளிக்கிறீர்களே சுவாமி! நான் தங்கள் கால் தூசு பெறுவேனா?’


‘இல்லை. எம்பெருமானே உவந்து தங்களை வைணவ தரிசனத்துக்கு அழைத்திருக்கிறான். எவ்விதத்திலும் நீங்கள் தாழ்ந்தவரல்லர்.’


‘நான் என்ன செய்ய வேண்டும்? கட்டளையிடுங்கள்.’


ராமானுஜர் அவருக்கு நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாசுரங்களைச் சொல்லிக் கொடுத்தார். யக்ஞமூர்த்தி சமஸ்கிருதத்தில் பெரும் பண்டிதர். வேத உபநிடதங்களில் தொடங்கி அவர் வாசிக்காததே கிடையாது. ஆனால் பிரபந்தம் படித்ததில்லை. அதில் ஆர்வம் செலுத்தியதும் இல்லை. எனவே ராமானுஜர் அதில் ஆரம்பித்தார். வெகு விரைவில் அவர் பிரபந்தங்களில் ஆழ்ந்த தேர்ச்சியுற்றது கண்டு மிகுந்த மகிழ்ச்சி கொண்டு, ‘சுவாமி, இனி நீங்கள் என்ன செய்யவிருக்கிறீர்கள் என்பதை நீங்கள்தாம் முடிவு செய்யவேண்டும். வைணவ தரிசனத்துக்கு நீங்கள் ஆற்றவிருக்கும் தொண்டு என்னவாயிருக்கும் என்று அறிய ஆவலாயிருக்கிறேன்.’


யக்ஞமூர்த்தி காவிரிக் கரையோரம் தனியே ஓரிடம் அமைத்துத் தங்கி நூல்கள் எழுத விரும்பினார். அதை ராமானுஜரிடம் அவர் தெரிவித்தபோது, அவரே ஒரு மடம் கட்டிக் கொடுத்தார்.


‘நீங்கள் இனி இங்கே தங்கலாம். தங்கள் விருப்பப்படி நூல்கள் இயற்றலாம்.’


அருளாளப் பெருமான் எம்பெருமானார் அன்றுமுதல் அந்தப் புதிய மடத்தில் தங்கி எழுத்துப் பணியில் ஈடுபட ஆரம்பித்தார்.


முதலியாண்டான் தொடங்கி ராமானுஜரின் அத்தனை சீடர்களுக்கும் இது பெரும் வியப்பாக இருந்தது. யக்ஞமூர்த்தியின் மனமாற்றம் அவர்கள் சற்றும் எதிர்பாராதது. இது எப்படி நிகழ்ந்தது, எப்படி நிகழ்ந்தது என்று பேசிப் பேசி மாய்ந்தார்கள்.


‘அவர் பெரிய ஞானஸ்தர். அவரது அறிவின் ஆழம் வைணவ தரிசனத்துக்கு அவசியம் என்று எம்பெருமான் நினைத்திருக்கிறான். இதில் நமது பங்கு என்ன இருக்கிறது?’ என்றார் ராமானுஜர்.


அன்றைக்கு மடத்துக்கு எங்கோ வெளியூரிலிருந்து நான்கு இளைஞர்கள் வந்தார்கள்.


‘சுவாமி, உம்மிடம் மாணாக்கர்களாகச் சேர்ந்து உய்ய வந்துள்ளோம். தயைகூர்ந்து எங்களை ஏற்றுக்கொள்ள வேண்டுகிறோம்’ என்று பணிந்து கேட்டார்கள்.


ஒரு கணம் ராமானுஜர் அமைதியாகக் கண்மூடி யோசித்தார். பிறகு, ‘நல்லது பிள்ளைகளே. அருளாளப் பெருமான் எம்பெருமானார் அங்கே காவிரிக் கரையில் தனியொரு மடத்தில் இருக்கிறார். அவரிடம் செல்லுங்கள். அவரை உமது ஆசாரியராகக் கொண்டு பயின்று வாருங்கள். அவருக்கு உரிய சேவைகளைச் செய்துவாருங்கள். அவர் உங்களுக்கு நற்கதி கொடுப்பார்.’ என்று சொல்லி அனுப்பி வைத்தார்.


அனந்தாழ்வான், எச்சான், தொண்டனூர் நம்பி, மருதூர் நம்பி என்ற அந்த நான்கு இளைஞர்களும் அப்போதே கிளம்பி அருளாளப் பெருமான் எம்பெருமானாரின் திருமடத்துக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.


‘என்ன விஷயம்?’


‘சுவாமி, நாங்கள் உடையவரிடம் சீடர்களாகச் சேர்வதற்காகப் போனோம். அவரோ எங்களைத் தங்களிடம் அனுப்பிவைத்தார். நீங்கள்தாம் எங்களுக்கு ஆசாரியராக இருந்து அருள்பாலிக்க வேண்டும்!’ என்று தாள் பணிந்து நிற்க, திகைத்துவிட்டார் அவர்.


ஒரு கணம்தான். சட்டென்று ஆட்களை அழைத்தார். ‘இம்மடத்தை இப்போதே இடித்துவிடுங்கள். இங்கே மடம் இருந்த சுவடே தெரியக்கூடாது!’ என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று சேரன் மடத்துக்குச் சென்றார்.


‘உடையவரே, இதென்ன அபத்தம்? நானே தங்களுடைய சீடனாகச் சேர்ந்து பயின்றுகொண்டிருப்பவன். என்னிடம் நான்கு பேரை அனுப்பி ஏன் பரிசோதிக்கிறீர்கள்? இனி எனக்குத் தனி மடம் வேண்டாம். தங்கள் நிழலாக இங்கேயேதான் இருப்பேன். காலம் முழுதும் தங்களின் சீடனாகவே இருந்து கழிப்பேன்!’


ராமானுஜர் புன்னகை செய்தார்.


(தொடரும்)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 10, 2017 08:30

A beautiful blog with no images required

Typology is a WordPress theme created for bloggers that just want to write, without the hassle of looking for the right featured image. It has a unique design based on beautiful typography and a modern, clean layout. Simply write your content and publish – Typology will handle the rest.





Efficiently negotiate enabled partnerships whereas team building channels. Competently visualize cross-platform action items rather than frictionless networks. Appropriately fabricate premium bandwidth with flexible ROI. Energistically provide access to equity invested vortals without innovative ROI. Dynamically revolutionize vertical users vis-a-vis goal-oriented value.





Continually productize multidisciplinary outsourcing



Monotonectally harness sticky opportunities via 24/365 synergy. Efficiently generate exceptional channels via low-risk high-yield innovation. Phosfluorescently restore revolutionary niche markets rather than top-line initiatives. Proactively e-enable standardized sources and B2B total linkage. Quickly re-engineer leveraged opportunities with wireless web services.





Quickly visualize business quality vectors whereas professional products. Enthusiastically matrix functional synergy with intuitive portals. Uniquely engineer top-line technologies after principle-centered leadership.





Uniquely reinvent sustainable strategic theme areas via unique testing procedures. Continually repurpose next-generation growth strategies with focused internal or “organic” sources. Dramatically scale B2C applications via long-term high-impact paradigms. Enthusiastically evisculate interoperable opportunities after web-enabled intellectual capital. Efficiently cultivate enterprise-wide mindshare after goal-oriented resources.





Phosfluorescently utilize turnkey leadership



Rapidiously grow premier partnerships before seamless systems. Dramatically target client-centered core competencies whereas future-proof products. Efficiently repurpose reliable “outside the box” thinking and multidisciplinary action items. Intrinsicly incubate go forward outsourcing for exceptional catalysts for change.





Continually promote emerging total linkage through one-to-one e-business. Continually extend customer directed benefits through cost effective value. Seamlessly pontificate long-term high-impact internal or “organic” sources with multifunctional content. Efficiently customize client-centric intellectual capital after flexible functionalities. Collaboratively aggregate global networks without top-line synergy.


Copyright © 2008-2017 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 10, 2017 08:00

மாயவரத்தில் பேசுகிறேன்

நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 12, 2017) அன்று மாயவரத்தில் நடைபெறவுள்ள பேலியோ கருத்தரங்கில் பங்கு பெறுகிறேன். பட்டமங்கலம் தெரு கோவிந்தம்மாள் திருமண மண்டபத்தில் காலை 10 மணி முதல் இருப்பேன்.


கருத்தரங்கு அநேகமாக மதியம் முடிந்துவிடும். அதன்பின் பழைய நண்பர் பரிமள ரங்கநாதரைப் போய்ப் பார்த்துவிட்டு வருவது தவிர வேறு வேலையில்லை. எனவே, சமகால நண்பர்களையும் சந்தித்து உரையாட இயலும். மயிலாடுதுறையில் வசிக்கிற நண்பர்கள் அனைவரையும் பட்டமங்கலத் தெருவுக்கு அழைக்கிறேன்.


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 10, 2017 07:19

March 9, 2017

பொலிக! பொலிக! 56

ராமானுஜரின் பிரச்னை, யக்ஞமூர்த்தியல்ல. அவர் பேசிய மாயாவாதமும் அல்ல. அதன் அருகே வைத்து ஶ்ரீவைஷ்ணவ சித்தாந்தத்தை நிரூபித்தாக வேண்டியிருக்கிறதே என்று அவருக்கு சலிப்பாக இருந்தது. இதுவும் இதுவும் சேர்ந்தால் அது என்று அறிவியலில் நிரூபித்துவிடலாம். இதையும் அதையும் கூட்டினால் இது என்று கணிதத்தில் காட்டிவிடலாம். பரம்பொருளின் தன்மையையும் அதைப் பாடிப் பரவும் ஜீவாத்மாவின் ஒரே பெரும் லட்சியத்தையும் அறிவைக்கொண்டா அறிய முடியும்? அது ஆன்மாவின் அடியாழத்தில் பொங்கும் பெரும் புனலல்லவா? பக்தியின் பேராற்றலால் மட்டுமே திறக்க முடியும் பரமபதத்தின் வாயிற்கதவை கணிதச் சமன்பாடுகளால் கட்டுடைப்பது எப்படி?


ராமானுஜர், ஆதிசங்கரரின் மேதைமையை மதித்தார். ஆனால் அவர் பேசிய அத்வைதத்தை மாறுவேட பௌத்தம் என்றே கருதினார். பிரம்மத்தின் சொரூபத்தை உணர மறுத்த பௌத்த சித்தாந்தம், இயற்கை எனும் முடிவற்ற பேராச்சரியத்தையே உண்மை என்று சொன்னது. அதாவது நாம் அறிந்தது மட்டுமே உண்மை என்றாகிவிடுகிறது அல்லவா? பிரத்தியட்சத்துக்கும் பிரமாணத்துக்கும் அப்பால் வேத ஆதாரங்களின் அடிப்படையில் அறிய வேண்டியவற்றை நிராகரித்து அறியக்கூடியவைதான் என்ன? பரம்பொருளுக்கும் ஜீவனுக்குமான உறவு என்பது கண்ணுக்குத் தெரியாத நூலிழைகளால் கோக்கப்பட்டது. ஜீவன், பக்தனாகப் பரிணாம வளர்ச்சி பெறும்போது பாதை புலனாக ஆரம்பிக்கிறது. பக்தியின் உச்சம் சரணாகதி. சகலமும் மறந்து, சகலமும் துறந்து, ஆதிமூலமே என்று ஆன்மாவின் அடியாழத்தில் இருந்து எழும் பெரும் அழைப்பில் சகலமும் துலக்கம் பெற்றுவிடுகிறது.


இந்த அற்புத அனுபவத்தை மாயை தருமா? நான் தான் அது என்று சொல்லிவிட்ட பிற்பாடு தேடலுக்கு என்ன அவசியம்? தேடலற்ற வாழ்வில் அற்புதங்களுக்கு ஏது இடம்? அற்புதங்களின் சூட்சும வடிவத்தை, கறையற்ற பெருங்கடலை, எல்லைகளற்ற பெருவெளியை எட்டிப்பார்க்கக்கூட இடமின்றிப் போய்விடுகிறது.


‘எம்பெருமானே! உனக்கும் எனக்குமான உறவை நிரூபிப்பதன் பெயரா வாதம்? இதையா பதினேழு தினங்களாகச் செய்துகொண்டிருக்கிறேன்? இதன் அவசியம்தான் என்ன? இது சாதிக்கப் போவதுதான் என்ன?’


அன்றிரவு அவருக்கு உறக்கமில்லாமல் போனது. சராசரி மக்களுக்கு, எளியோருக்கு, பாமரருக்குப் பெருவழி காட்டுகிற ஒரு மகத்தான சித்தாந்தத்தை அவர் முன்வைத்தார். மிக நேரடியான உபாயம். எளிமையானது. ஜோடனைகளற்றது. பூச்சற்றது. நேராகப் பரமனின் பாதாரவிந்தங்களில் கொண்டு சேர்க்கவல்லது. மாயையின் மேகத்திரை கொண்டு அதை மறைக்க நினைக்கிறார் யக்ஞமூர்த்தி. நிரூபணங்களில் விருப்பம் கொண்டவர்களால் மேலே கடந்து போக முடியாது. நிரூபிப்பது என்று இறங்கிவிட்டால் காலம் முழுதும் அதைச் செய்துகொண்டே இருக்கவேண்டியத்தான். செயலும் சாதனைகளும் நிரூபணங்களிலா பூரணமடைகிறது? திறந்து கிடக்கிற பெரும் கானகத்தில் யுக யுகமாகப் பூத்துக்கிடக்கிற வாசம் மண்டிய ஒற்றைச் சிறு மலரைத் தேடி அலையும் ஓ யக்ஞமூர்த்தியே! அது உமது உள்ளங்கைக்கு வெகு அருகிலேயேதான் உள்ளதென்பதை ஏன் கண் திறந்து பார்க்க மறுக்கிறீர்? எம்பெருமானே, நீயாவது அவருக்கு அதை எடுத்துக் காட்டலாகாதா?


அதையே நினைத்தபடி படுத்துக்கிடந்த உடையவர் எப்போது உறங்கினார் என்று அவருக்கே தெரியவில்லை. ஆனால் உறக்கத்தில் ஒரு கனவு வந்தது. கனவில் காஞ்சிப் பேரருளாளன் வந்தான்.


‘ராமானுஜரே, எதற்குக் கவலைப்படுகிறீர்கள்? பதினேழு தினங்கள் யக்ஞமூர்த்தியுடன் வாதம் செய்திருக்கிறீர்கள். அவரது அறிவின் விரிவைக் கண்டீர்கள் அல்லவா? எத்தனை படித்திருக்கிறார் என்று பார்த்தீர் அல்லவா? எவ்வளவு பெரிய ஞானஸ்தர் என்று அறிந்தீர் அல்லவா? உமக்கு இப்படியொருவர் சீடராக அமைந்தால் இன்னும் என்னவெல்லாம் சாதிக்கலாம் என்று எண்ணிப் பாரும். நாளை அது நிகழும்.’


திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்துவிட்டார் ராமானுஜர். அடப்பெருமானே! ஒரு அத்வைத சாகரத்தை ஶ்ரீவைஷ்ணவ தரிசனத்துக்குள் இழுத்துவரவா இப்படியொரு நாடகம் நடத்துகிறாய்! இதற்கு என்னை ஒரு கருவியாக உபயோகப்படுத்திக்கொண்டிருக்கிறாயா? பிரமாதம். என்ன விளையாட்டு இதெல்லாம்?


‘தேவையான விளையாட்டுதான் ராமானுஜரே. பாமரர்கள் ஶ்ரீவைஷ்ணவ தரிசனத்தை ஏற்பது இயல்பாக நிகழும். வாதத்தின் வழியே ஒரு பண்டிதர் வந்து சேரும்போது அதன் எல்லைகள் மேலும் விரிவு கொள்ளும். நிம்மதியாகத் தூங்கி எழுந்து வேலையைப் பாரும். நாளை உமக்கொரு புதிய சீடர் வந்து சேரவிருக்கிறார்.’


மறுநாள் அது நிகழ்ந்தது.


அரங்க நகரத்து மக்கள் முழுதும் அந்தப் பதினெட்டாவது நாள் வாதத்தைக் காண ரங்க நாச்சியார் முன் மண்டபத்தில் வந்து குழுமியிருக்க, யக்ஞமூர்த்தியும் தமது சீடர் குழாத்துடன் வந்து அமர்ந்திருந்தார். எங்கே ராமானுஜர்? ஏன் இன்னும் வரக்காணோம்?


‘வந்துவிடுவார் சுவாமி. மடத்தில் திருவாராதனப் பெருமாளுக்கு பூஜை செய்துகொண்டிருக்கிறார். பூஜை முடிந்ததும் கிளம்பிவிடுவார்.’


உடையவரின் சீடர்கள் சொல்லிக்கொண்டிருந்தபோதே ராமானுஜர் விறுவிறுவென்று அங்கே வந்துகொண்டிருப்பது தெரிந்தது. யக்ஞமூர்த்தி திரும்பிப் பார்த்தார். ஞானத்தின் பூரணமும் தன்னம்பிக்கையின் நிகரற்ற பேரமைதியும் மேலான தெய்வீக சாந்தமும் நிலவிய முகம் அன்று அவரை வைத்த கண் வாங்காமல் பார்க்கச் செய்தது.


இல்லை. இவர் நேற்றுப் பார்த்த உடையவர் இல்லை. பதினேழு தினங்களாகப் பார்த்துக்கொண்டிருக்கிற மனிதர் இல்லை. இவர் வேறு. அல்லது இவருக்குள் நிகழ்ந்திருப்பது வேறு. எனது வாதங்களைத் தவிடுபொடியாக்கவா இவர் வந்துகொண்டிருக்கிறார்? ஆண்டவனே, நானே தவிடுபொடியாகிக்கொண்டிருக்கிறேனே? இவரிடம் வாதம் செய்து எப்படி என்னால் நிரூபிக்க முடியப் போகிறது? எதை நான் நிரூபிப்பேன்? நிரூபணமே தேவையற்ற பூரண அருளுடன் அல்லவா இவர் வந்துகொண்டிருக்கிறார்? எனக்குத் தெரிந்துவிட்டது. சர்வநிச்சயமாக இவர் பகவானின் பிரதிநிதி. வெல்ல முடியாத ஆகிருதி. வெல்ல அவசியமற்ற பேருண்மையின் பிரசாரகர். நான் தோற்றேன்.


தடதடவென்று அவரது உடல் நடுங்கியது. அப்படியே மெல்ல எழுந்து கரம் கூப்பி நின்றார். ராமானுஜர் நெருங்கி வந்தபோது, ‘சுவாமி!’ என்று அவர் பாதங்களில் விழுந்து வணங்கினார்.


திடுக்கிட்டுப் போனார் ராமானுஜர். ‘யக்ஞமூர்த்தி, என்ன இது? நான் உம்முடன் வாதம் புரிய வந்திருக்கிறேன். இன்று நம் வாதின் இறுதி நாள். ஶ்ரீவைஷ்ணவ தரிசனத்தை உமக்கு இன்று விளங்கச் செய்யாமல் மறு காரியமில்லை என்று எண்ணிக்கொண்டு வந்திருக்கிறேன். எழுந்திரும்.’


‘அவசியமில்லை சுவாமி. வாதம் வீண். உமது பாதம் ஒன்றே என் கதி மோட்சம்.’


கூட்டம் திகைத்துவிட்டது.


(தொடரும்)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 09, 2017 08:30

March 8, 2017

பொலிக! பொலிக! 55

ரங்க நாச்சியார் சன்னிதிக்கு எதிரே உள்ள மண்டபத்தில் கூட்டமான கூட்டம் திரண்டிருந்தது. ஒருபுறம் ராமானுஜரும் அவரது சீடர்களும் அமர்ந்திருக்க, எதிர்ப்புறம் யக்ஞமூர்த்தியும் அவரது சீடர்களும் இருந்தார்கள். யக்ஞமூர்த்தியின் ஓலைச் சுவடிகளை அடுக்கி வைத்துக்கொண்டு தலைமைச் சீடன் தயாராக இருந்தான். ஆதாரங்களுக்கும் ஒப்பீடுகளுக்கும் அவை முக்கியம். மேற்கோள் இல்லாமல் அவரால் பேச முடியாது.


‘உடையவரே, நீங்கள் ஓலைச் சுவடிகள் ஏதும் கொண்டு வரவில்லையா? நாம் வாதம் புரிய வந்திருக்கிறோம். சொற்பொழிவாற்ற அல்ல.’ என்றார் யக்ஞமூர்த்தி.


‘சமைக்கப்பட்டவற்றுக்குக் குறிப்புகள் அவசியம். இயல்பாக இருப்பதற்கு அது எதற்கு?’ என்றார் ராமானுஜர்.


ஒரு விருந்து தயாராகிறது. பலவிதமான ருசி மிக்க உணவு வகைகள் அணிவகுக்கின்றன. உண்ண உண்ண இன்னும் இன்னும் என்று ஆவல் எழுகிறது. எத்தனை பிரமாதமான விருந்து! இதை எப்படிச் செய்தீர்கள்? என்னவெல்லாம் சேர்த்தீர்கள்? என்று கேட்டால் குழம்பில் இன்னின்ன சேர்த்தேன், பாயசத்தை இப்படிச் செய்தேன், வடை மாவு இந்தப் பதம், அக்கார அடிசில் இப்படிச் செய்யவேண்டும் என்று விளக்கலாம்.


இதுவே கடும் தாகமெடுக்கும் நேரம் ஒரு குவளை நீர் கொடுத்து ஆற்றுப்படுத்துகிறவரிடம், ‘இந்தத் தண்ணீரை எப்படிச் சமைத்தீர்?’ என்று கேட்பார்களா?


ராமானுஜர் அதைத்தான் சொன்னார். வைணவம் இயல்பானது. காற்றையும் நீரையும் நெருப்பையும் போன்று அநாதியானது. ஏனெனில் பரம்பொருள் அவ்வாறானது. பிரம்மம், கர்மத்தால் தீண்டப்படுவதில்லை. அதற்கு தோஷங்கள் இல்லை. மூப்பில்லை, இறப்பில்லை, பிறப்பில்லை, சுக துக்கங்களோ, பசி தாகமோ இல்லை. அநாதியாக இருக்கிற அதனுள்ளேதான் அனைத்தும் அடங்கியிருக்கிறது.


‘அனைத்தும் என்று எதைச் சொல்வீர்? ஞானமயமான பிரம்மம் ஒன்றே மெய். இந்த உலகம் பொய். காட்சிகள் பொய். அனுபவங்கள் பொய். வெறும் மாயை. இந்தப் பொய்களும் மாயையும் எவ்வாறு பிரம்மத்தில் ஒடுங்கும்?’ என்றார் யக்ஞமூர்த்தி.


‘மாயை என்று அத்வைதம் சொல்வதையும் உற்பத்தி செய்தது அந்த பிரம்மமே அல்லவா? மாயையும் பிரம்மத்துக்குள் அடங்கியிருப்பதுதான். ஒரு நோக்கம் உள்ளது ஐயா. படைப்பதும் காப்பதும் நிர்மூலம் செய்வதும் தொடர்ந்து நடைபெறுவதற்காகவே பிரம்மம் மாயையைத் தனக்குள் வைத்திருக்கிறது. ஜீவனும் ஈசனும் மெய்யென்றால் மாயை என்று நீங்கள் சொல்லும் உலகமும் மெய்யானதே. பிரம்மம் படைக்கும் ஒன்று எவ்வாறு பொய்யாகும்? முழு உண்மை பிரம்மமே என்றால் அது படைப்பதும் உண்மையே அல்லவா? பரம்பொருள் எப்படி பொய்யான ஒன்றைப் படைத்துக் காட்டும்?’


வேதங்களை ஆதாரமாகக் கொண்டு கட்டியெழுப்பப்பட்டது, ஹிந்து மதம். த்வைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம் என்று அதிலுள்ள மூன்று பிரிவுகளும் சந்தேகமற ஒப்புக்கொள்ளும் ஒரே விஷயம் பிரம்மம் அநாதியானது என்பது. பிரம்மத்துக்கும் ஜீவனுக்கும் உள்ள தொடர்பு சார்ந்துதான் வாத விவாதங்கள் அனைத்தும். ஜீவாத்மா வேறு, பரமாத்மா வேறல்ல என்பது அத்வைதம். இரண்டும் வேறு வேறுதான்; எந்நாளும் சேராது என்பது த்வைதம். இரண்டும் வேறுதான்; ஆனால் இரண்டும் இணைந்திருக்கும் என்பது விசிஷ்டாத்வைதம்.


‘சுவாமி, ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்குமான தொடர்பு பக்தியின்மூலம் கட்டி எழுப்பப்படுவது. பக்தி செய்வதே ஜீவனின் கடன். பக்தியின் மூலம் பரமாத்மாவை நெருங்கிச் செல்கிறோம். நாம் நெருங்கலாம், ரசிக்கலாம், அனுபவிக்கலாம், ஆனால் ஜீவன் ஒருபோதும் பரமாத்மாவாகாது. பரமாத்மாவாகிவிட்டால் ஜீவனுக்கு சொர்க்க நரகங்கள் எதற்கு? அவற்றை அனுபவிக்க வேண்டிய அவசியம்தான் எதற்கு?’


‘இல்லை. இதை ஒப்புக்கொள்ள முடியாது. தத்வம் அஸி ஸ்வேதகேதோ என்று வருணன் ஸ்வேதகேதுவைப் பார்த்துச் சொன்னதைப் பொய் என்பீரா? பிரபஞ்சத்தைப் படைத்த ஈஸ்வரனும் நீயும் ஒன்றே என்றல்லவா இதற்குப் பொருள்?’


‘இப்படிப் பாருங்கள். ஒரு மீனுக்குக் கடலின் ஆழம் தெரியும். அகலம் தெரியும். பிரம்மாண்டம் தெரியும். ஆனந்தமாக அது நீந்திக் களிக்கிறது. கடலுக்குள் இருக்கப் பணிக்கப்பட்டது அது. ஆனால் மீன் தான் கடலா? இல்லை அல்லவா? மீனாக இருப்பதால்தான் அது கடலை அனுபவிக்கிறது. ஜீவாத்மா அப்படித்தான். பரமனுக்குள் ஒடுங்கி அனுபவிக்கவே படைக்கப்பட்டவன் அவன். நீங்கள் சொல்லுவது எப்படி என்றால், உப்பும் கடலில்தான் உள்ளது. மீனைப் போல் அல்லாமல் அது கடல் நீரில் இரண்டறக் கலந்திருப்பது. அதனால் கடலை அனுபவிக்க முடியுமா? உப்புக்குக் கடலின் ஆழ அகலங்கள் தெரியுமா? பிரம்மாண்டம் தெரியுமா? கடல் வேறு, உப்பு வேறு என்பதை ஒப்புக்கொள்வீர்கள் அல்லவா? ஜீவாத்மாவும் சரி, இந்தப் பரந்த உலகமும் சரி. பரம்பொருளின் அங்கங்கள்தாம். பரமாத்மா என்றும் பிரம்மம் என்றும் இன்னும் பலவாகவும் சொல்லப்படுகிற எம்பெருமானின் அருள்தான் நமக்கு வேண்டியது. அதன்மூலம் சரீரத் தொடர்பை விடுத்து அவன் பாதாரவிந்தங்களை எட்டிப் பிடிப்பதே மோட்சம் என்று சொல்லப்படுகிறது. மோட்சத்துக்கு பக்தி ஓர் உபாயம். சரணாகதி மிகச் சிறந்த உபாயம். வைணவம் இதைத்தான் சொல்கிறது.’ என்றார் ராமானுஜர்.


யக்ஞமூர்த்தி ஏற்கவில்லை. வாதம் விடாமல் தொடர்ந்தது. ஒரு நாள். இரண்டு நாள். ஒரு வாரம். இரண்டு வாரம். மூன்றாவது வாரமும் முடிந்துவிடும் போலிருந்தது. ஆனால் வாதம் முடியவில்லை.


யக்ஞமூர்த்தி பேசிய அத்வைதம், வேதங்கள் விரிக்கும் ஞான காண்டத்தை அடிப்படையாகக் கொண்டது. அதில் சடங்குகளுக்கும் யாகங்களுக்கும் பெரிய இடம் கிடையாது. அது தத்துவங்களின் வெளி. அறிவின் கூர்மையால் அலசிப் பார்க்கப்படுவது. ஆத்மானுபவம் சேராது.


ஆனால் ராமானுஜர் பேசிய விசிஷ்டாத்வைதம் சராசரி மனிதர்களுக்கான கதி மோட்ச உபாயம். மண்டை உடைக்கும் தத்துவச் சிக்கல்களுக்குள் புகாமல் மிக நேரடியாகச் சரணாகதியைச் சுட்டிக்காட்டுகிற பெரும்பாதை. சேருமிடம் குறித்த தேர்ந்த தெளிவும் சென்றடையும் வழி பற்றிய துல்லியமும் கொண்ட உபாயம்.


யக்ஞமூர்த்தி அதை ஏற்கவில்லை. பதினேழு தினங்கள் தொடர்ந்து விவாதம் நடந்துகொண்டே இருந்தது. யார் வெல்லப் போகிறார் என்றே புரியாமல் மக்கள் தினமும் சபைக்கு வந்து அலுத்துத் திரும்பினார்கள்.


அன்றைக்கு ராமானுஜருக்கே அலுப்பாகிவிட்டது. வறட்டுத் தத்துவ வாதங்களில் என்ன இருக்கிறது? பரம்பொருளான நாராயணனைச் சரணமடைவது ஒன்றே மோட்சத்துக்கு வழி என்பதை எப்படி இந்தப் பண்டிதருக்குப் புரியவைப்பது?


களைத்துப் போய் மடத்துக்குத் திரும்பியவர், தமது திருவாராதனப் பெருமாளான பேரருளாளனிடம் கைகூப்பிக் கேட்டார். ‘ஏனப்பா இப்படிச் சோதிக்கிறாய்? எதற்கு இந்த வீண் விவாதங்கள்? நீதான் எல்லாம் என்பதை அந்த யக்ஞமூர்த்திக்கு நீயே புரியவைக்கக் கூடாதா?’


(தொடரும்)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 08, 2017 08:30

March 7, 2017

பொலிக! பொலிக! 54

காவிரிக் கரையோரம் பல்லக்கு வந்துகொண்டிருந்தது. பல்லக்கின் பின்னால் யக்ஞமூர்த்தியின் சீடர்கள் பத்திருபது பேர் நடந்துவந்துகொண்டிருந்தார்கள். அவர்களுக்குப் பின்னால் ஒரு மாட்டு வண்டியில் கட்டுக்கட்டாக ஓலைச் சுவடிகள்.  சுவடி வண்டிக்குப் பின்னால் இன்னொரு குழுவாக மேலும் பத்திருபது பேர்.


நதியின் மேல் பரப்பில் இருந்து பிறந்து வந்த குளிர்ச்சியைக் கரையோர மரங்கள் கலைத்து நகர்த்தி, காற்றோடு விளையாடிய கணத்தில் பல்லக்கின் திரைச்சீலை படபடத்து நகர்ந்தது. ஒரு சுவடியைக் கையில் வைத்துக்கொண்டு யக்ஞமூர்த்தி அமர்ந்திருப்பது தெரிந்தது. தூய காவியும் முண்டனம் செய்த தலையும் திருநீறு துலங்கும் நெற்றியும் அவரது தீட்சண்யம் மிக்க கண்களை அலங்கரிக்கச் செய்த ஏற்பாடு போலிருந்தது. அருகே சாய்த்து வைக்கப்பட்டிருந்த தனது ஏக தண்டத்தை எடுத்துச் சற்றே நிமிர்த்தி வைத்தார். தொண்டையை லேசாகக் கனைத்துக்கொண்டு வெளியே மெல்லத் தலைநீட்டிக் கேட்டார். ‘இன்னும் எவ்வளவு தூரம்?’


‘வந்துவிட்டோம் குருவே. அரங்க நகரின் எல்லையைத் தொட்டுவிட்டோம். அங்கே பாருங்கள். கோபுரம் நெருக்கத்தில் தெரிகிறது.’


பல்லக்கின் அருகே நடந்து வந்துகொண்டிருந்த சீடன் சுட்டிக்காட்டிய திசையில் அவர் பார்த்தார். விண்ணுக்கும் மண்ணுக்குமான இட்டு நிரப்ப இயலாத இடைவெளியைச் சுட்டிக்காட்டுகிற கோபுரம். ராமாயண காலத்து விபீஷணனுக்கு ராமச்சந்திர மூர்த்தி தன் நினைவின் பரிசாகக் கொடுத்தனுப்பிய விமானம். அது அவரது குலச் சொத்து. இக்ஷ்வாகு குலம் தோன்றிய காலம் முதல் தலைமுறை தலைமுறையாகப் பாதுகாக்கப்பட்டு வந்த ரங்க விமானம். ராமன் அதை விபீஷணனுக்குக் கொடுக்க, விபீஷணன் அதைத் தலையில் ஏந்தி வந்து திருவரங்கத்தை அன்று ஆண்டுகொண்டிருந்த தர்மவர்மா என்னும் மன்னனிடம் ஒப்படைத்ததாகச் சொல்லுவார்கள். விமானம் வந்து சேர்வதற்கு முன்னால் திருவரங்கத்துக்கு அந்தப் பெயர் கிடையாது. அது சேஷ பீடம் என்று அழைக்கப்பட்டது. ரங்க விமானம் வந்த பிறகுதான் அது திருவரங்கம் ஆனது.


யக்ஞமூர்த்திக்கு அந்தக் கதைகள் தெரியும். வடக்கில் உதித்த இக்ஷ்வாகு குலத்தின் தெற்கு வழித்தோன்றல்களே சோழ மன்னர்கள் என்பதும் தெரியும். அதை வசிஷ்டரே உறுதிப்படுத்தி எழுதி வைத்த சுலோகத்தை அவர் படித்திருந்தார். அவருக்குச் சிரிப்பு வந்தது. சோழர்கள் இன்று சிவபக்தர்கள். அத்வைத சித்தாந்தத்தில் ஆழ்ந்த பற்றுக் கொண்டவர்கள். ஊருக்கு ஊர் சிவாலயங்களைக் கட்டியெழுப்பி அறம் வளர்ப்பவர்கள். ஆனால், அவர்கள் ஆட்சிக்கு உட்பட்ட திருவரங்கத்தில் அத்வைத சித்தாந்தமே அழிக்கப்பட்டுவிட்டது.


ஒரு தனி மனிதர் இந்தக் காரியத்தைச் செய்திருக்கிறார். பிராந்தியத்தில் அத்தனை பேரையும் வைணவர்களாக மாற்றிக்கொண்டிருக்கிறார். திருவரங்கம் தாண்டித் தென் இந்திய நிலப்பரப்பு முழுதும் மக்கள் அவரைப் பற்றிப் பேசுகிறார்கள். அவர் புகழ் பாடுகிறார்கள். அவர் வழியே சிறந்ததெனக் கண்மூடித்தனமாக நம்புகிறார்கள். என்னத்தைக் கண்டுவிட்டது இம்மூட ஜனம்? அவர் பேசுகிற விசிஷ்டாத்வைதம் புரியுமா இவர்களுக்கு? சாமானியர்கள் சித்தாந்தங்களால் கவரப்படுவதில்லை. அது அவர்களை முழுதாக எட்டுவதுமில்லை. ஒரு நம்பிக்கை. நாடி பிடித்துப் பார்க்கிற வைத்தியனின் முகக் கனிவு கொடுக்கிற நம்பிக்கை போன்ற ஒன்று.


ஆனால் தோற்றமல்ல, மக்களே. அதற்கு அப்பால். எதற்கும் அப்பால் என்றும் நிலைத்திருப்பது என்று ஒன்று உள்ளது. மடத்தனமாக அதை எதற்கு வெளியே தேடிக்கொண்டிருக்கிறீர்கள்? அறிவதற்கு மூன்று வழிகள் இருக்கின்றன. பிரத்யட்சம், பிரமாணம் சுருதி. கண்ணுக்குத் தென்படுவது பிரத்யட்சம். சூரியன் பிரயட்சம். சந்திரன் பிரத்யட்சம். மரங்களும் நதியும் கடலும் பிரத்யட்சம்.


ஆனால் நெருப்பு சுடும் என்பது பிரமாணம். நீ தொட்டுத் தெளிய வேண்டாம். தொட்டுப் பார்த்தவர்கள் சொல்லி வைத்தது போதும். அது அனுமானம். நீ தொடாவிட்டாலும் அது சுடத்தான் செய்யும். தொட்டுத்தான் பார்ப்பேன் என்று கை வைத்து சுட்டுக்கொண்டால் உன் இஷ்டம்.


சுருதி என்பது முன்னறிவு. வேதங்கள் வழங்குகிற பேரறிவு. அதுதான் பிரம்மம் ஒன்றே உண்மை என்கிறது. பிரம்மம் ஒன்றே உண்மை என்றால் மற்றதெல்லாம் மாயையே அல்லவா? இதுவல்லவா சத்தியம்?  மாயையே சத்தியம் என்பதைக் கேட்டு நகைக்காதே. நான் நிரூபித்துக் காட்டுகிறேன். கூப்பிடுங்கள் உங்கள் ராமானுஜரை. இரண்டில் ஒன்று பார்த்துவிடுகிறேன். இரண்டே இல்லை; ஒன்றுதான் (அ-த்வைதம் என்றால் இரண்டல்ல; ஒன்றே என்று பொருள்) என்பதை நிரூபித்துக் காட்டுகிறேன்.


தனது மானசீகத்தில் ஒரு பெரும் கூட்டத்தின் எதிரே நின்று அவர் பிரகடனம் செய்துகொண்டிருந்தார். திருவரங்கத்து மக்களின் எதிரே ராமானுஜர் முன்வைக்கும் வைணவ சித்தாந்தத்தைத் தோற்கடித்து அரங்கமாநகரில் அத்வைத சித்தாந்தத்தை நிலைநாட்டும் அடங்காத பேரவா அவரைப் புரட்டிப் போட்டுக்கொண்டிருந்தது.


அவர் பெரும் பண்டிதர். கங்கைக் கரையில் பல்லாண்டு காலம் பல்வேறு குருகுலங்களில் பயின்றவர். ஆதி சங்கரரின் அடிச்சுவடே உய்ய வழி என்று நம்பி ஏற்றுத் துறவறம் பூண்டவர். துறவுக்குப் பிறகு வட இந்தியா முழுதும் சுற்றித் திரிந்து அத்வைத சித்தாந்தத்தைப் பிரபலப்படுத்தியவர். ராமானுஜரின் பெயரும் புகழும் அங்கே எட்டியபோதுதான் யக்ஞமூர்த்திக்குக் கோபம் மூண்டது. அப்படியென்ன வெல்லவே முடியாத ஆளுமை? வென்று காட்டுகிறேன் பார்.


பல்லக்கும் பரிவாரமும் சேரன் மடத்தின் வாசலுக்கு வந்து சேர்ந்தது.


யக்ஞமூர்த்தியின் சீடர்கள் சிலர் உள்ளே சென்று தகவலைச் சொன்னார்கள். ‘வந்திருப்பவர் மகா பண்டிதர். தெற்கில் பிறந்து வடக்கே போனவர்தாம். ஆனால் வட இந்தியா முழுதும் இன்று புகழ் பெற்ற அத்வைத மகாகுரு. உங்களுடைய ஆசாரியர் ராமானுஜரைச் சந்திக்க வந்திருக்கிறார்.’


‘அதற்கென்ன சந்திக்கலாமே?’ என்று எழுந்து வந்தார் ராமானுஜர்.


‘உம்மை வெறுமனே பார்த்துப் போக நான் வரவில்லை ராமானுஜரே. உம்முடன் வாதம் செய்ய வந்திருக்கிறேன்.’


‘வாதமா? என்ன காரணம் பற்றி?’


‘காரணமென்ன காரணம்? உமது சித்தாந்தத்தின் அபத்தத்தை உலகுக்குச் சொல்லப் போகிறேன். துணிவிருந்தால் வாதத்துக்குத் தயாராகுங்கள். மகாபாரத யுத்தம் பதினெட்டு தினங்கள் நடந்தன. நாமும் பதினெட்டு நாள் வாதம் செய்வோம். நீங்கள் வாதில் வென்றால் நான் உமது அடிமையாவேன். நீங்கள் வென்றால் உமது வைணவ சித்தாந்தத்தை விடுத்து, அத்வைதமே சத்தியமென்று ஏற்கவேண்டும்.’


ராமானுஜர் ஒரு கணம் அமைதியாக யோசித்தார்.


‘வாதத்துக்கு நான் தயார். ஆனால் உயிர் இருக்கும்வரை மாய, சூனிய வாதங்களை என்னால் ஏற்க இயலாது. வேண்டுமானால் நான் தோற்றால் வைணவப் பிரசாரப் பணிகளை நிறுத்திக்கொள்கிறேன்’ என்று சொன்னார்.


(தொடரும்)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 07, 2017 08:30

March 6, 2017

பொலிக! பொலிக! 53

‘ஆ, வரமா! உண்மையாகவா? அரங்கனே வாய் திறந்து வரம் தருவதாகச் சொன்னானா? என்ன அற்புதம்! என்ன அற்புதம்! இதைப் போய் எங்களிடம் சொல்லாமல் விட்டுவிட்டீர்களே சுவாமி!’


சீடர்கள் மிகவும் பரவசமாகிப் போனார்கள். விஷயம் கேள்விப்பட்டு மடத்துக்கு வெளியில் இருந்தும் பலபேர் உள்ளே வந்து நின்றுவிட, எதை எப்படிச் சொல்லுவதென்று புரியாமல் உடையவர் திகைத்துப் போனார்.


சொல்லுங்கள் சொல்லுங்கள் என்று அவர்கள் விடாமல் நச்சரிக்கவே அவருக்கு வேறு வழியில்லாது போனது.


‘சொல்லக்கூடாது என்ற எண்ணமில்லையப்பா! சலவைத் தொழிலாளிக்கு வாய்த்த அனுபவம் நமக்கு வாய்க்கவில்லையே என்று வருத்தப்படுவீர்களே என்று எண்ணித்தான் தவிர்த்தேன்.’


‘உண்மைதான் சுவாமி! இது பெரிய விஷயம். அந்தத் தொழிலாளி தமது பணிக்குள் பரமனைக் கண்டிருக்கிறார். அதனால்தான் நம்பெருமாள் அவரிடம் பேசியிருக்கிறான். அதுசரி, அவர் என்ன வரம் கேட்டார்?’


உடையவர் புன்னகையுடன் கூரத்தாழ்வானைப் பார்க்க, அவர் சொல்லத் தொடங்கினார்.


‘நம்மிடம் இப்படி என்ன வரம் வேண்டும் என்று கேட்டால் நாம் என்ன கேட்போம்?’


‘இதிலென்ன சந்தேகம் கூரேசரே? நமக்கு நல்ல கதி கொடுக்கச் சொல்லிக் கேட்போம். மோட்சத்தினும் சிறந்தது வேறென்ன உள்ளது?’


‘அதுதான் விஷயம். ஆனால் அந்த சலவைத் தொழிலாளி தனக்கு மோட்சம் கேட்கவில்லை.’


‘பிறகு?’


‘அரங்கப் பெருமானே, நீயேதான் கிருஷ்ணாவதாரம் எடுத்தவன் என்று உடையவர் சொன்னார். கிருஷ்ணாவதாரத்தில் நீ அடித்துக்கொன்ற சலவைத் தொழிலாளிக்கு இப்போதேனும் மோட்சம் கிடைக்கச் செய் என்று அவர் வேண்டிக்கொண்டிருக்கிறார்!’


ஆஹா என்று சிலிர்த்துப் போனது சீடர் குழாம்.


நடந்தது ராமானுஜருக்கே வியப்புத்தான். ஓர் அற்புதம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. யாரும் நம்பமுடியாத சம்பவம். பாம்பணையில் பள்ளி கொண்டிருக்கும் பரமாத்மா வாய் திறந்து பேசுகிறான். வில்லிக்குக் கண் திறந்து காட்டிய அதே அரங்கன். சுத்த பக்தர்கள் யாரானாலும் சரி, எந்தக் குலத்தவரானாலும் சரி, அவர்கள் எனக்கு முக்கியம் என்று திரும்பத் திரும்ப நிரூபிக்கிற பரமாத்மா.


அவனே வாய் திறந்து உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்கிறபோது அந்த சலவைத் தொழிலாளி கேட்ட வரம் ராமானுஜரைத் தூக்கிவாரிப் போடச் செய்துவிட்டது.


‘ஏனப்பா, அரங்கனே வரம் தருகிறேன் என்று சொல்லுகிறபோது உனக்கு மோட்சம் கேட்காமல், எந்த யுகத்திலோ இறந்துபோன சலவைத் தொழிலாளிக்கு மோட்சம் கேட்கிறாயே, இது என்ன வினோதம்?’ என்று அவனிடம் கேட்டார்.


‘நீங்கள் சொல்லுவது சரிதான் சுவாமி. அந்த யுகத்து சலவைத் தொழிலாளி யாரோ என்னமோ நான் அறியேன். ஆனால் எங்கள் குலத்தில் பிறந்து கிருஷ்ணர் கையால் அடிபட்டு இறந்திருக்கிறார். பகவான் கேட்டு, மறுத்த பாவத்தை எப்படியோ செய்து தொலைத்துவிட்டார். இது எங்கள் குலத்துக்கே ஒரு களங்கமல்லவா?’


‘அப்படியெல்லாம் ஏன் நினைத்துக்கொள்கிறாய்? கிருஷ்ணர் கையால் இறப்பதென்பது அவனது விதியாக இருந்திருக்கிறது. கிருஷ்ணர் கால் பட்ட காளிங்கனுக்கே மோட்சம் கிடைத்திருக்கிறதே, கைபட்ட சலவைத் தொழிலாளிக்கா கிடைத்திருக்காது? எப்படியோ நீ ஒரு வரத்தை வீணாக்கிவிட்டாயப்பா.’


‘இல்லை சுவாமி. ஒருவேளை அவன் நரகம் போயிருந்தால்? இன்றைக்கு எங்களை நேர் வழியில் செலுத்தவும் நல்லது சுட்டிக்காட்டவும் மோட்சத்தின் பாதையைப் புலப்படுத்தவும் நீங்கள் இருக்கிறீர்கள். அந்த அப்பாவி சலவைத் தொழிலாளிக்கு அப்படி ஒரு ராமானுஜர் அன்று இல்லையே? அதனால்தானே கிருஷ்ண பரமாத்மாவையே கோபமுறச் செய்தான்? அவன் சொர்க்கம் போக அன்றைக்கு வழி இருந்திருக்காது. அதனால்தான் இன்று எனக்குக் கிட்டிய வாய்ப்பை அதற்குப் பயன்படுத்தி அவனை அனுப்பிவைத்தேன்.’


‘அதுசரி. நீ எப்படி சொர்க்கம் போவாய்?’


‘அதற்கென்ன சுவாமி! எனக்கு நீங்கள் இருக்கிறீர்கள். அதெல்லாம் நீங்கள் பார்த்துக்கொள்வீர்கள். எங்கள் கதி, யதிராஜ முனி!’ என்று சொல்லி அவர் பாதம் பணிந்தான்.


அவனை அப்படியே தூக்கி நிறுத்தி ஆசீர்வதித்தார் ராமானுஜர்.


நடந்ததை கூரத்தாழ்வான் சொல்லி முடிக்கவும் சீடர்கள் பேச்சு மூச்சற்றுப் போனார்கள். நம்பிக்கை என்றால் இதுவல்லவா? பக்தி என்றால் இதுவல்லவா? சரணாகதி என்பதும் இதுவேயல்லாமல் வேறென்ன?


‘உய்ய ஒரே வழி உடையவர் திருவடி என்பதை உணர்ந்திருக்கிறார் அந்த சலவைத் தொழிலாளி. அவர் என்ன குலம்? அவரது சீலம் இந்தத் திருவரங்கத்து அந்தணர்களுக்கு வருமா? அவருக்கு வாய்த்தது இங்கே வேறு யாருக்கு வாய்க்கும்?  சாதியா அவரை அந்த உயரத்துக்குக் கொண்டு சென்றது? இப்படி ஒரு சம்பவம் நடந்தது என்றால் மற்றவர்கள் என்ன செய்வார்கள்? இந்நேரம் ஊரைக் கூட்டி பறைசாற்றியிருக்க மாட்டார்களா? ஆனால் அந்த சலவைத் தொழிலாளி யாரிடமாவது வாய் திறந்தாரா? அவரது மனைவி மக்களுக்கே சொல்லியிருப்பாரா என்பதுகூடச் சந்தேகம்தான்.’ கூரத்தாழ்வான் சிலிர்ப்புற்றுப் பேசிக்கொண்டே போனார்.


‘கூரேசா, நமது குருகுலத்தில் உள்ளவர்களுக்கு முதலில் இது புரியவேண்டும். மாறனேர் நம்பியோ, அந்த சலவைத் தொழிலாளியோ, நமது வில்லிதாசரோ அடைந்த உயரம் மிகப் பெரிது. இடைவிடாத பக்தியும் தடையிலாது சரணாகதி செய்தலுமே மோட்சத்தின் பாதைக்கு இட்டுச் செல்லக்கூடியவை. இது புரிந்துவிட்டால் சாதி பேதம் பார்க்கிற வழக்கம் நின்றுவிடும்.’ என்றார் ராமானுஜர்.


பரபரவென்று காரியங்கள் நடக்கத் தொடங்கின. கோயில் திருப்பணியில் இன்னும் அதிகமாகப் பல சாதிக்காரர்களைக் கொண்டு வந்து சேர்த்தார் உடையவர். பெருமாளுக்கு தினமும் ஒரு புதிய மண் பாண்டத்தில்தான் அமுது செய்விக்க வேண்டும். குயவர்கள் உள்ளே வந்தார்கள். தச்சு வேலைகளுக்காக ஆசாரிகள் வந்தார்கள். வண்ண மாடங்களுக்கும் நின்ற நெடுமதில்களுக்கும் சுண்ணமடிக்க ஆள் வந்தார்கள். தேரைப் பராமரிக்கவும் கோபுரங்களை கவனிக்கவும் இன்ன பிற கட்டுமானம் சார்ந்த பணிகளைச் செய்யவும் பல சாதிக்காரர்கள் வந்தவண்ணம் இருந்தார்கள்.


அத்தனை பேரையும் கோயிலுக்கு அருகிலேயே தங்க வைத்தார் ராமானுஜர். அரங்கனைச் சுற்றி அந்தணர்கள் மட்டும்தான் இருக்கவேண்டும் என்று யார் சொன்னது? நான் சொல்கிறேன், அரங்க நகரத்தைச் சுற்றிய காவிரியின் அத்தனைத் துளி நீரும் காவிரியேதான் என்பதுபோல் அரங்கனைச் சுற்றியிருக்கும் அதனை பேரும் பாகவத உத்தமர்கள்தாம். சாதி சொல்லிப் பிரிப்பதை ஒருக்காலும் அனுமதிக்க மாட்டேன்.


விஷயம் காட்டுத் தீயேபோல் எங்கெங்கும் பரவியது. எங்கெங்கிருந்தோ ஜனங்கள் வண்டி கட்டிக்கொண்டு ராமானுஜரைப் பார்க்க திருவரங்கம் வரத் தொடங்கினார்கள்.


(தொடரும்)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 06, 2017 08:30