Pa Raghavan's Blog, page 12

March 17, 2017

பொலிக! பொலிக! 64

‘இப்போது நீங்கள் அனைவரும் உள்ளே வரவேண்டும் சுவாமி!’ என்று பளிச்செனக் கதவை விரியத் திறந்தாள் அந்தப் பெண்மணி. உடையவர் எடுத்து வீசிய பரிவட்டத் துணி அவளது புடைவையாக மாறியிருந்தது.


ராமானுஜரின் சீடர்கள் அத்தனை பேரும் திடுக்கிட்டுப் போனார்கள். அரைக் கணம் அவள் கதவு திறந்ததை அவர்கள் பார்த்திருந்தார்கள். ஆனால் ஆளைப் பார்க்கவில்லை. முகத்தைப் பார்க்கவில்லை. வெளியே எட்டிக்கூடப் பார்க்க முடியாதபடிக்குக் கட்டிப் போட்டிருந்த புடைவையின் பொத்தல்களைப் பார்க்கவில்லை. உடையவர் எப்படி கவனித்தார்?


‘இதில் வியக்க என்ன இருக்கிறது? இந்த வீடு பாகவதர்களுக்கு எப்போதும் திறந்திருப்பது என்பது அந்தப் பெண்ணின் அழைப்பிலேயே தெரிந்துவிட்டது. ஆனால் கதவுக்குப் பின்னால் ஒளிந்து நின்று அழைக்கிறாள் என்றால் வேறென்ன காரணம் இருந்துவிட முடியும்? ஏழைமையால் கதவைத்தான் மூடி வைக்க முடியும். இதயத்தை அல்லவே?’


மிகச் சிறிய வீடு அது. புழங்கும் இடத்தில் நாலைந்து பேர் அமர்வது சிரமம். ஒருவர் மட்டுமே நின்று சமைக்கக்கூடிய அளவில் அடுக்களை. பூச்சற்ற மண் சுவரும் கரி படிந்த தரையும் தாழ்ப்பாள் சரியில்லாத கதவும் உடையும் தரத்து உத்தரமுமாக இருந்தது. உடையவரும் ஓரிருவரும் மட்டும் வீட்டுக்குள் சென்று அமர, மற்றவர்கள் வெளியிலேயே இருந்தார்கள்.


‘அம்மா, உன் கணவர் எப்போது வருவார்?’


‘தெரியவில்லை சுவாமி. ஆனால் அவர் இல்லாமல் பசியாறுவது எப்படி என்று தயவுசெய்து கவலைப்படாதீர்கள். பாகவத உத்தமர்களுக்கு விருந்தளிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது நாங்கள் செய்த புண்ணியம். நீங்கள் குளத்துக்குச் சென்று நீராடிவிட்டு வாருங்கள். அதற்குள் உணவு தயாராகிவிடும்’ என்றாள் அந்தப் பெண்.


ராமானுஜர் தமது சீடர்களுடன் புறப்பட்டுப் போனார். அடுக்களைக்குள் நின்று யோசிக்க ஆரம்பித்தாள் அந்தப் பெண்.


வீட்டில் ஒருவர் உண்ணும் அளவுக்குக் கூட உணவேதும் இல்லை. சமைப்பதென்றால் பிடி அரிசியும் இல்லை. வாங்கி வரப் பணம் இல்லை. கடனுக்குத் தர ஆள்களும் இல்லை.


ஆனால் வந்திருக்கும் திருமால் அடியார்களைப் பசியோடு அனுப்ப முடியாது. அதற்குப் பேசாமல் இறந்துவிடலாம். என்ன செய்வது?


சட்டென்று அவளுக்கு அந்த மளிகைக்கடைக்காரன் நினைவுக்கு வந்தது. கண்ணில் காமத்தையும் சொல்லில் களவையும் எப்போதும் தேக்கி வைத்துக் காண்கின்ற போதெல்லாம் மனம் கூசச் செய்கிறவன். என்ன செய்ய? பணம் சேருகிற இடங்களில் குணம் கூடுவதில்லை. சற்றும் வெட்கமே இன்றி எத்தனையோ முறை தன்னைத் தவறாகக் கண்டவன் நினைவு சட்டென்று அவளுக்கு அப்போது வந்தது.


ஒரு கணம் யோசித்தாள். ஒரு முடிவுக்கு வந்தவளாக விறுவிறுவென்று வீட்டை விட்டுக் கிளம்பி நேரே அவனிடத்துக்குப் போய் நின்றாள்.


வணிகன் அவளைச் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. ‘அட, நீயா!’ என்றான் வியப்போடு.


‘ஐயா, எங்கள் வீட்டுக்கு பாகவத உத்தமர்கள் பலபேர் விருந்தாளிகளாக வந்திருக்கிறார்கள். என் கணவர் வீட்டில் இல்லாத நேரம் அவர்களை வெறும் வயிற்றுடன் என்னால் திருப்பி அனுப்ப இயலாது.’


‘அதெப்படி முடியும்? விருந்தாளி என்று வந்துவிட்டால் சமைத்துப் போட்டுத்தான் ஆகவேண்டும்.’


‘ஆனால் வீட்டில் அரிசி இல்லை. பருப்பில்லை. நெய்யில்லை. காய்கறி ஏதுமில்லை. மளிகைச் சாமான் எதுவுமே இல்லை. நீங்கள் உதவினால் மட்டும்தான் என்னால் அவர்களது பசியாற்றமுடியும்.’


வணிகன் அவளை உற்றுப் பார்த்தான். சிரித்தான்.


‘உதவலாம் பெண்ணே. ஆனால் நான் வியாபாரி. வாங்கும் பொருளுக்கு ஒன்று நீ பணம் தரவேண்டும். அல்லது பண்டமாற்றாகத்தான் எதையும் என்னால் தர முடியும்.’


அவள் துக்கம் விழுங்கினாள். கண்ணை இறுக மூடி ஒரு கணம் அமைதியாக இருந்தாள். மானத்தை விலையாகக் கேட்கிற வியாபாரி. நிலையற்ற இந்த உடலின்மீதா இவனுக்கு இத்தனை இச்சை? எத்தனைக் காலமாக இதையே திரும்பத் திரும்பப் பல்வேறு விதமாகக் கேட்டுவிட்டான்? திருமணமான ஒரு பெண்ணிடம் இப்படி நடந்துகொள்கிறோமே என்கிற வெட்கம் சற்றும் அற்றுப் போன வெறும் பிறப்பு.


‘என்ன யோசிக்கிறாய் பெண்ணே? எனக்கு உன்னைப் பிடிக்கும் என்பது உனக்கும் தெரியும். உன் கணவனுக்கு அஞ்சியோ, ஊருக்கு பயந்தோ, அல்லது உனக்கே விருப்பமில்லாமலோ இன்றுவரை நீ என் கருத்தைக் கண்டுகொண்டதில்லை. எனக்கும் ஆசை தீராமல் அப்படியேதான் இருக்கிறது. சொல்லப் போனால் நாளுக்கு நாள் உன்மீது மையல் கூடிக்கொண்டேதான் போகிறது.’


அவள் ஒரு முடிவுக்கு வந்தாள். சட்டென்று அவன் பேச்சை இடைமறித்து, ‘நீங்கள் எனக்கு எதையும் விளக்க வேண்டாம். வீட்டுக்கு வந்திருக்கிறவர்களுக்கு நான் முதலில் உணவு படைத்தாக வேண்டும்.’


‘அப்படியா? எத்தனை பேர் வந்திருக்கிறார்கள்?’


‘ஒரு முப்பது பேர் இருக்கும்.’


‘ஒன்றும் பிரச்னை இல்லை பெண்ணே. நீ மட்டும் சம்மதம் சொல். அடுத்த நிமிடம் என் ஆட்கள் உன் வீட்டை அரிசி பருப்பால் நிரப்பிவிடுவார்கள்.’


‘பாகவத ததியாராதனத்துக்கு இச்சரீரம்தான் உதவ வேண்டுமென்றால் அப்படியே ஆகட்டும். அவர்கள் உண்டு இளைப்பாறிச் சென்றபின் நான் உம்மிடம் வருவேன்.’ என்றாள் அவள்.


அவன் திகைத்துவிட்டான். உண்மையாகவா, உண்மையாகவா என்று திரும்பத் திரும்பக் கேட்டான்.


‘என் சொல் மாறாது. நீங்கள் என்னை நம்பலாம்.’


‘சரி, நீ வீட்டுக்குப் போ. இன்றைக்கு விருந்து தடபுடலாக நடக்கும் பார்!’ என்றான்.


சில நிமிடங்களில் அந்த வணிகனின் ஆட்கள் வண்டி எடுத்துக்கொண்டு அவளது வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். மூட்டை அரிசி. பானைகளில் பருப்பு வகை. உப்பு, புளி, மிளகாய் தனியே. நெய் ஒரு பக்கம். காய்கறிகள் ஒரு பக்கம். பாலும் தயிரும் பாத்திரங்களை நிரப்பின.


‘உன் வீட்டில் இத்தனை பேருக்குச் சமைக்கப் பாத்திரங்கள் போதாது என்று எஜமானர் இந்தப் பாத்திரங்களையும் கொடுத்து வரச் சொன்னார்’ என்று சொல்லி பளபளக்கும் புதிய பித்தளைப் பாத்திரங்களையும் எடுத்து வந்து வைத்துப் போனார்கள்.


அவள் பரபரவென்று சமையலை ஆரம்பித்தாள்.


வெளியே சென்றிருந்த அவளது கணவன் வீட்டுக்கு வந்தபோது வியந்து போனான். ‘இது நம் வீடுதானா?’


‘சுவாமி, திருவரங்கத்தில் இருந்து அடியார் சிலர் வந்திருக்கிறார்கள். இங்கே உண்ணலாம் என்று எண்ணிக்கொண்டு வந்தவர்களை இல்லை என்று சொல்லித் திருப்பி அனுப்ப மனமில்லை. அதனால்தான்..’


‘அதனால்தான்?’


அவள் நடந்ததைச் சொன்னாள்.


(தொடரும்)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 17, 2017 09:30

March 16, 2017

பொலிக! பொலிக! 63

சாலை ஓரமாக அவர்கள் நடந்துகொண்டிருந்தார்கள். முதல் வரிசையில் ராமானுஜரும் அவருடைய புதிய சீடர்களும் சென்றுகொண்டிருக்க, மூத்த சீடர்கள் பின்னால் வந்துகொண்டிருந்தார்கள். வழி முழுதும் பாசுர விளக்கங்கள். நடந்தபடி வேதாந்த விசாரம். குளம் கண்ட இடத்தில் தாகம் தணித்துக்கொண்டு, பிட்சை கிடைத்த இடத்தில் உணவு உண்டுகொண்டு, சாலையோர சத்திரங்களில் படுத்துத் தூங்கி, விடிந்ததும் பயணத்தைத் தொடர்ந்தார்கள்.


ராமானுஜருக்குத் திருமலை யாத்திரை மிகுந்த உற்சாகத்தை அளித்தது. காஞ்சி வழியே செல்லப் போகிறோம் என்ற எண்ணம் நடை வேகத்தை அதிகரித்தளித்தது. திருக்கச்சி நம்பி எப்படி இருக்கிறாரோ என்னமோ. பார்த்தே பலகாலம் ஆகிவிட்டது. அவரில்லாவிட்டால் இந்த ஜென்மம் இந்நேரம் என்ன ஆயிருக்கும்?


‘அவர் எப்படி இல்லாதிருந்திருப்பார் சுவாமி? உங்களை எங்களுக்கு அளிக்கவே அருளாளன் அவரை உலகுக்கு அளித்திருக்கிறான் என்பதில் எங்களுக்கு சந்தேகமே இல்லை.’


‘அற்புதமான ஆத்மா. அருளாளனைத் தவிர வேறு நினைவே இல்லாத மனிதர். சன்னிதியில் ஆலவட்ட கைங்கர்யம் செய் என்று ஆளவந்தார் அவரிடம் சொன்னாராம். இன்று வரை ஒரு நாளும் அவர் அதில் தவறியதே இல்லை. அருளாளனுக்கா வியர்க்கப் போகிறது? ஆனால் காஞ்சியில் வீசுகிற குளிர்க்காற்றெல்லாம் திருக்கச்சி நம்பியின் ஆலவட்ட கைங்கர்யத்தால் வீசுவதுதான்!’


பேசிக்கொண்டே நடந்தார்கள். ஒரு காட்டுப்பகுதியைக் கடந்து ஏதோ ஒரு கிராமத்தின் எல்லையை நோக்கி அவர்கள் போய்க்கொண்டிருந்தபோது அன்று மாலை ஆகியிருந்தது.


ராமானுஜர் ஒரு சீடனை அழைத்தார். ‘பிள்ளாய், இந்த ஊரில் நமது மடத்தில் பயின்ற மாணவன் ஒருவன் இருக்கிறான். யக்ஞேசன் என்று பேர். அவன் வீட்டுக்குப் போய் நமது குழு வந்துகொண்டிருக்கிற விவரத்தைச் சொன்னால் இரவு உணவுக்குச் சிரமம் இராது. தவிர இன்று நாம் இரவு தங்குவதற்கும் ஓர் இடம் வேண்டும். இங்கே சத்திரங்கள் ஏதும் இருக்காது என்று தோன்றுகிறது.’


‘நீங்கள் மெதுவாக வாருங்கள் சுவாமி. நான் முன்னால் சென்று ஏற்பாடு செய்துவிட்டு வருகிறேன்.’ என்று சொல்லிவிட்டு சீடன் முன்னால் விரைந்தான்.


சேரன் மடத்தில் பயின்ற யக்ஞேசன் வீடு எங்கே என்று கேட்டு விசாரித்துக்கொண்டு போனவனுக்கு பிரமிப்பாக இருந்தது. அது வீடல்ல. மாளிகை. யக்ஞேசன் அந்த ஊரில் ஒரு பெரிய நிலச்சுவாந்தாராக இருக்கிற விஷயம் அந்தச் சீடனுக்கு அப்போதுதான் தெரியவந்தது.


பார்க்க வேண்டும் என்று சொன்னதும் காவலாளி உள்ளே அழைத்துச் சென்றான்.


‘யார் நீங்கள்? என்ன வேண்டும் உங்களுக்கு?’


‘ஐயா நான் உடையவரின் மாணாக்கன். உடையவர் தமது சீடர்களுடன் திருமலை யாத்திரை புறப்பட்டு வந்துகொண்டிருக்கிறார். இன்றிரவு இங்கே…’


அவன் சொல்லி முடிப்பதற்குள் யக்ஞேசன் தனது பணியாளர்களை அழைத்தார். ‘என் குருநாதர் இன்று நமது இல்லத்துக்கு வருகிறார். விருந்து அமர்க்களப்பட வேண்டும்.’


அதோடு நிறுத்தாமல் உடனே ராமானுஜரை வரவேற்க, பரிவாரங்களை உபசரிக்க ஏற்பாடுகள் செய்யப் போய்விட்டார். ‘குருநாதர் அசந்து போகும்படியாக உபசாரங்கள் இருக்க வேண்டும். புரிகிறதா? அவரோடு கூட வருகிறவர்கள் வாழ்நாளில் இப்படியொரு ராஜ விருந்தை உண்டிருக்கக்கூடாது! சீக்கிரம் நடக்கட்டும் எல்லாம்!’


அடுப்படிக்கே சென்று உத்தரவிட்டார். தமது மனைவியிடம் விவரத்தைச் சொல்லி, அவளையும் தயாராகச் சொன்னான். உறவுக்காரர்கள், தெரிந்தவர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் அத்தனை பேருக்கும் ஆளனுப்பித் தகவல் சொன்னான். உடையவர் வருகிறார். என் பழைய ஆசிரியர். வந்து சேவித்து ஆசி பெற்றுக்கொள்ளுங்கள். இன்னொரு முறை இப்படியொரு சந்தர்ப்பம் கிடைக்காது. நீங்கள் சேரன் மடத்துக்குப் போனால் அங்கே பத்தோடு பதினொன்று. இங்கே என்னைத் தேடி அவரே வருகிறபடியால் என்னைச் சார்ந்தவர்களுக்கு என்று பிரத்தியேகமாக சிறப்புச் சொற்பொழிவே ஒன்றை ஏற்பாடு செய்கிறேன்.


பரபரவென்று விருந்து தயாராக ஆரம்பித்தது. யக்ஞேசன் வீட்டுக்கு யார் யாரோ வந்து சேரத் தொடங்கினார்கள். உடையவர் வருகிறார் என்று முன்னால் வந்து தகவல் சொன்ன சீடனை யக்ஞேசர் மறந்தே போனார். கால் கடுக்க நடந்து வந்தவனுக்குக் குடிக்க அங்கே ஒரு வாய் நீர் கூட யாரும் தரவில்லை. நெடு நேரம் காத்திருந்து பார்த்துவிட்டு சலிப்படைந்து திரும்பிவிட்டார்.


இதற்குள் ராமானுஜரும் அவரது பரிவாரங்களும் ஊர் எல்லைக்கு வந்துவிட்டார்கள்.


‘சுவாமி, அதோ பாருங்கள்!’ சீடர்கள் சுட்டிய திசையில் முன்னால் போன மாணவன் ஓட்டமும் நடையுமாக வந்துகொண்டிருந்தான்.


‘வாவா. யக்ஞேசனைப் பார்த்தாயா? நாம் வருவதைச் சொல்லிவிட்டாய் அல்லவா?’


‘மன்னிக்க வேண்டும் சுவாமி. தேடி வந்தவருக்குக் குடிக்க நீர் அளிக்க வேண்டும் என்பதுகூட அவருக்குத் தெரியவில்லை.’ என்று தொடங்கி நடந்ததை முழுதுமாக எடுத்துச் சொன்னார்.


ராமானுஜர் அமைதியாகக் கேட்டுக்கொண்டார்.


‘என்ன செய்யலாம்? நாம் வேறு எங்கேனும் போய்விடலாமா?’ என்று இன்னொரு சீடர் கேட்க, அந்த வழியே சென்ற ஒருவரை நிறுத்தி, ‘அப்பா! இந்த ஊரில் இரவு தங்கிச் செல்ல ஏதேனும் இடம் இருக்கிறதா?’ என்று வேறொருவர் விசாரித்தார்.


‘பணக்காரர்களுக்கு யக்ஞேசர் என்பவரின் வீடு எப்போதும் திறந்திருக்கும். ஏழைபாழைகள் என்றால் வரதன் வீட்டுக்குத்தான் போயாக வேண்டும்.’ என்றான் ஊர்க்காரன்.


‘அது யாரப்பா வரதன்?’ என்றார் ராமானுஜர்.


‘இந்த ஊர்க்காரர்தான் ஐயா. பரம ஏழை அவர். ஆனால் யாராவது பசிக்கிறது என்று போனால் ஏதாவது செய்து ஒரு கவளம் உணவு இட்டுவிடுவார்.’


‘அப்படியா? அவர் வீடு எங்கே இருக்கிறது?’


அவன் வழி சொல்லிவிட்டுப் போய்ச் சேர்ந்தான். ராமானுஜரும் சீடர்களும் வரதன் வீட்டைத் தேடிக்கொண்டு போய்ச் சேர்ந்தார்கள்.


அவர்கள் கதவைத் தட்டியபோது வரதன் வீட்டில் இல்லை. உள்ளிருந்து, ‘யாரது?’ என்றொரு குரல் கேட்டது. வரதனின் மனைவி.


‘அம்மா, திருவரங்கத்தில் இருந்து உடையவர் தமது பரிவாரங்களுடன் வந்திருக்கிறார். வரதன் வீட்டில் இருக்கிறாரா?’


அந்தப் பெண் கதவை மிகக் கொஞ்சமாகத் திறந்தார். ‘அவர் வீட்டில் இல்லை. ஆனால் நீங்கள் வரவேண்டும். அதற்குமுன்…’ என்று இழுத்தவள் சட்டென்று கதவை மூடிவிட்டாள்.


அரைக் கண நேரம்தான். கதவைத் திறந்ததும் பின்னால் மறைந்திருந்து முகத்தை மட்டும் சட்டென்று வெளியே காட்டி ஒருவரி பேசிவிட்டு அவள் உள்ளே இழுத்துக்கொண்டதும்.


அந்தச் சிறு அவகாசத்தில் ராமானுஜருக்குப் புரிந்துவிட்டது. சட்டென்று தம் தலையில் சுற்றியிருந்த பரிவட்டத்தைப் பிரித்து உள்ளே வீசினார்.


(தொடரும்)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 16, 2017 09:30

March 15, 2017

பொலிக! பொலிக! 62

பெரிய திருமலை நம்பி தகவல் அனுப்பியிருந்தார்.


உடையவர் சொல்லியிருந்தபடி திருமலையில் ஒரு பெரிய நந்தவனம் தயாராகிவிட்டது. பூத்துக் குலுங்கும் அதன் பேரெழில் பற்றி வியக்காதோர் கிடையாது. அனந்தாழ்வானும் அவனது மனைவியும் பகலிரவாக நந்தவனத்தை உருவாக்கும் பணியிலேயே ஈடுபட்டு அதையே தமது தியானமாக்கிக்கொண்டிருந்தார்கள். ஒரு நடை திருமலைக்கு வந்து சேவித்துவிட்டு அனந்தாழ்வானின் நந்தவனத்தையும் பார்த்துவிட்டுப் போகலாமே?


ராமானுஜருக்கு மிகுந்த மன நிறைவும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது. திருமலையில் ஒரு நந்தவனம் என்பது அவர் கனவு. நெடுநாள் கனவு. ஒரு சமயம் தமது சீடர்களுக்கு அவர் திருவாய்மொழி வகுப்பு எடுத்துக்கொண்டிருந்தார். முதலியாண்டான், கூரத்தாழ்வான் தொடங்கி, அருளாளப் பெருமான் எம்பெருமானார் வரை அத்தனை சீடர்களும் சபையில் கூடியிருந்தார்கள். மடத்தில் புதிதாகச் சேர்ந்திருந்த சீடர்களும் நெடுங்காலமாக ராமானுஜருடனேயே இருப்போருமாக நூற்றுக்கணக்கானோர் நிறைந்த சபையாக இருந்தது அன்று.


பாசுரங்களைச் சொல்லி விளக்கம் அளித்துக்கொண்டே வரும்போது சட்டென்று ஒரு வரியில் ராமானுஜர் நிலைத்து நின்றார்.


எந்தை தந்தை தந்தைதந்தை தந்தைக்கும்

முந்தை வானவர் வானவர் கோனொடும்

சிந்து பூமகிழும் திரு வேங்கடத்து

அந்தம் இல்புகழ்க் கார்எழில் அண்ணலே


என்பது பாசுரம். மரணமற்ற பெருவாழ்வு வாழ்கிற தேவர்கள் தமது தலைவரான சேனை முதலியாரோடு வந்து மலர் தூவிப் போற்றித் துதிக்கிற திருவேங்கடம்.


தேவர்கள் துதிக்க வரும்போது பூக்களைக் கையோடு எடுத்து வந்திருப்பார்களா அல்லது திருவேங்கடத்தில் இருந்தே பறித்துக்கொண்டிருப்பார்களா?


‘அவர்கள் ஏன் எடுத்து வரப் போகிறார்கள் சுவாமி? அங்கேயேதான் பறித்திருப்பார்கள்.’ என்றார்கள் சீடர்கள்.


‘தேவர்கள் உவந்து பறிக்கத்தக்க மலர்கள் அன்றைக்கு அங்கே பூத்திருக்கின்றன. ஆழ்வார் அதை எப்படி சிலாகித்திருக்கிறார் பாருங்கள். பறிக்கக்கூட வேண்டாம். பூக்கள் சிந்திக்கொண்டே இருந்திருக்கின்றன அன்றைக்கு. ஆனால், இன்றைக்குத் திருவேங்கடத்தில் ஒரு நந்தவனம் கூட இல்லையே.’ என்றார் ராமானுஜர்.


சீடர்கள் அமைதியாக இருந்தார்கள். ராமானுஜரும் சில வினாடிகள் அமைதியாகவே இருந்தார். சட்டென்று, ‘உங்களில் யாராவது திருவேங்கட மலைக்குச் சென்று அங்கே பெருமானுக்குப் புஷ்ப கைங்கர்யம் செய்யத் தயாராக இருக்கிறீர்களா?’ என்று கேட்டார்.


இதே போன்ற ஒரு தருணம் பெரிய திருமலை நம்பியின் வாழ்வில் நிகழ்ந்ததை அவர் எண்ணிப் பார்த்தார். அப்போது கேட்டவர் ஆளவந்தார். ‘இதோ நான் இருக்கிறேன்’ என்று அந்தக் கணமே திருமலைக்குக் கிளம்பிப் போன பெரிய திருமலை நம்பி இன்றுவரை அங்கேயேதான் இருக்கிறார். அவருக்கு உதவியாக ராமானுஜரின் தம்பி கோவிந்தன் அங்கே கைங்கர்யங்கள் புரிந்துகொண்டிருக்கிறான்.


ஆனால் ஒரு நந்தவனம் உருவாக்கி, பராமரித்து, தினமும் திருமலையப்பனுக்குப் புஷ்ப கைங்கர்யம் செய்ய இன்னொருவர் தேவை. பொறுப்பை ஏற்கிற ஒருவர். அது ஒன்றே தமது வாழ்வின் நோக்கமாகக் கருதி ஏற்கக்கூடியவர். அப்படி யாரும் இங்கே உண்டா?


ராமானுஜர் கேட்டபோது அனைவருமே தயங்கினார்கள். திருமலைக்குச் செல்வது என்பது பெரிய காரியம். பாதை கிடையாது. பகலிரவு தெரியாது. காட்டு மிருகங்களின் ஆதிக்கம் அதிகம். ஏழு மலைகளுக்கு அப்பால் எம்பெருமான் கோயில் கொண்டிருக்கிறான் என்பது உண்மையே. ஏறிப் போய்ச் சேர்ந்துவிட்டால் அவன் பார்த்துக்கொள்வான்தான். ஆனால் போய்ச் சேருகிறவரை புலிகளுக்குப் பசிக்காதிருக்க வேண்டுமே?


அத்தனை பேருமே தயங்கிக்கொண்டிருந்தபோது சட்டென்று அனந்தாழ்வான் எழுந்து நின்று கைகூப்பினான். ‘சுவாமி, அடியேனுக்கு உத்தரவிடுங்கள். நான் இன்றே திருமலை புறப்படுகிறேன்.’


ராமானுஜர் புன்னகை செய்தார். ‘சிறப்பு. ஆனால் நீ திருமணமானவன் ஆயிற்றே? உன் மனைவி இதற்கு ஒப்புக்கொள்ள வேண்டுமே? திருவரங்கம் போல அங்கே வசதிகள் கிடையாது. ஜனசந்தடி கூட அநேகமாகக் கிடையாது. ஒரு அவசர ஆத்திரத்துக்கு எதுவும் கிடைக்காத இடம் என்று கேள்விப்பட்டேன்.’


‘எம்பெருமான் இருக்கிறான் அல்லவா? அவன் நிழலில் நாங்கள் இருந்துகொள்வோம் சுவாமி. எங்களுக்கு வேண்டியது என்னவென்று அவனுக்கா தெரியாது?’


‘அருமை அனந்தாழ்வான். உனது துணிவு என்னைக் கவர்கிறது. எம்பெருமான் என்றும் உனக்குத் துணை இருப்பான். கிளம்பு!’ என்றார் ராமானுஜர்.


அன்று கிளம்பிப் போனவன்தான். அதன்பின் அவனிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை. திருமலைக்கு அனந்தாழ்வான் வந்து சேர்ந்த விவரத்தைக் கொஞ்ச காலம் கழித்து பெரிய திருமலை நம்பி சொல்லி அனுப்பியிருந்தார். அதன்பின் வேறு விவரங்கள் கிடையாது.


சட்டென்று அன்று தகவல் வந்தது. நந்தவனம் உருவாகிவிட்டது. காண்போர் வியக்கும் வண்ணம் பூத்துக் குலுங்குகிற நந்தவனம். அத்தனையும் அனந்தாழ்வானின் உழைப்பு. அவனும் அவனது கர்ப்பிணியான மனைவியும் வேறு சிந்தனையே இன்றி உருவாக்கிப் பராமரித்துக்கொண்டிருக்கிறார்கள். திருமலையப்பனுக்கு தினமும் மாலை கோத்து சாத்துகிற திருப்பணி தடையற நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.


‘ராமானுஜரே, ஒரு சரியான கர்மயோகியைப் பிடித்து அனுப்பி வைத்தீர்கள். உமது சீடன் பிரமாதப்படுத்திக்கொண்டிருக்கிறான். நீங்கள் ஒரு நடை வந்து பார்க்கக்கூடாதா?’ என்று கேட்டனுப்பியிருந்தார் பெரிய திருமலை நம்பி.


‘போகலாமே சுவாமி. திருவரங்கம் வந்ததில் இருந்து நாம் எங்குமே வெளியே போகவில்லை. காஞ்சிக்குக் கூட நீங்கள் செல்லவில்லை’ என்றார் முதலியாண்டான்.


‘ஆம் தாசரதி. நீ சொல்லுவது உண்மைதான். பேரருளாளனை நான் நினைக்காத நாளில்லை. ஆனால் விட்டு வந்தது முதல் ஒருமுறைகூட அங்கே போகவேயில்லை என்பது எனக்கே உறுத்தலாகத்தான் இருக்கிறது.’


‘நாம் கோஷ்டியாகத் திருமலைக்குச் சென்று வரலாமே சுவாமி? அது ஓர் அனுபவமாக இருக்குமல்லவா?’ என்று கேட்டார் வில்லிதாசர்.


‘நிச்சயம் பிரமாதமான அனுபவமாகத்தான் இருக்கும். ஆனால் இங்கே அரங்கத்தில் பணிகள் எதுவும் தொய்வடைந்துவிடக் கூடாதே என்று கவலைப்படுகிறேன்.’


‘அதெல்லாம் ஆகாது சுவாமி. நமது அகளங்க நாட்டாழ்வார் இருக்கிறார். பொறுப்பைத் தூக்கி அவர் தலையில் வையுங்கள். அவர் பார்த்துக்கொள்ளட்டும். நீங்கள் யாத்திரை கிளம்பும் யோசனையைத் தவிர்க்காதீர்கள்’ என்றார் கூரத்தாழ்வான்.


சீடர்கள் அத்தனை பேருக்கும் ஆர்வம் பிடித்துக்கொண்டது. உடையவருடன் ஒரு பயணம் என்பது அதுநாள் வரை அவர்களுக்கு வாய்க்காத விஷயம். அக்கம்பக்கத்து திவ்ய தேசங்களுக்கு அவ்வப்போது போய் வரக்கூடியவர்கள்தாம். உடையவரும் சமயத்தில் உடன் வருவார். ஆனால் அதெல்லாம் ஒரு சில தினங்களில் முடிவடைந்துவிடக்கூடிய பயணமாகவே இருக்கும். அவர்கள் எதிர்பார்த்தது ஒரு நெடும்பயணம்.


‘சுவாமி, யோசிக்காதீர்கள். திருமலை செல்லும் வழியில் உள்ள அத்தனை திவ்ய தேசங்களையும் சேவிக்க இது ஒரு வாய்ப்பு நமக்கு.’


சிறிது யோசித்துவிட்டு, ‘சரி, கிளம்பிவிடுவோம்!’ என்றார் ராமானுஜர்.


(தொடரும்)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 15, 2017 09:30

March 14, 2017

பொலிக! பொலிக! 61

‘மன்னனே, இந்த உலகையும் உயிர்களையும் படைத்தவன் இறைவனே என்றால் தனது படைப்புகளுக்குள் அவன் எப்படி பேதம் பார்ப்பான் அல்லது பிரித்து வைப்பான்? பேதங்கள் மனிதர்களால் உருவாக்கப்படுபவை. வாழ்வின் மீதான அச்சத்தின் பிடியில் சிக்கித் தவிப்போர் தமது குறைந்தபட்ச பாதுகாப்புக்காக உருவாக்கிக்கொண்டதே மேல் சாதி என்கிற அடையாளம். அது கீழே நிற்கும் சிங்கத்துக்கு பயந்து மரக்கிளை மீது ஏறி நின்று கொள்வது போல. ஒரு சூறைக்காற்று கிளையை முறித்துவிடும் என்பதை எண்ணிப் பாராமல் செய்கிற குழந்தைத்தனம். ஞானமும் பக்தியும் சாதி பார்க்காது. கனியின் ருசியைப் போன்றது அது. மண்ணுக்குள் இருக்கிறவரை எந்த விதை என்னவாக விளையும் என்று யாருக்குத் தெரியும்? விளைச்சல் சரியாக இருக்கிற போது ருசியும் மணமும் இயல்பாகச் சேரும்.’ என்றார் ராமானுஜர்.


‘நீங்கள் சொல்வது வியப்பாக உள்ளது சுவாமி. இறைவனை நெருங்கத் தகுதி என்ற ஒன்று இல்லவேயில்லையா?’


‘பக்தி ஒன்றே தகுதி. சாதியல்ல. வேறு எதுவும் அல்ல. ஒரு கணம் யோசித்துப் பாருங்கள். ஆழ்வார்களில் எத்தனை பேர் அந்தணர்கள்? வேதம் தமிழ் செய்த மாறன் என்ன இனம்? திருப்பாணாழ்வார் என்ன சாதி? மங்கை மன்னன் என்ன அந்தணனா? இவர்களைவிட இறைவனை நெருங்கியவர்கள் யார்?’


‘ஆஹா. அப்படியானால் என் பக்தி சரியாக இருந்தால் என்னாலும் இறைவனை நெருங்க முடியுமா?’


‘நீ ஏன் நெருங்குகிறாய்? அவன் நெருங்குவான் மன்னா! உன்னை அள்ளி எடுத்து அரவணைத்துக்கொள்வதைவிட அவனுக்கென்ன வேலை? உமது வில்லியைக் கொள்ளை கொண்டவன் அவன். இங்கே தாழ்ந்த குலத்தவர் என்று ஊரார் ஒதுக்கிவைத்த மாறனேர் நம்பிக்கு மோட்சத்தின் வாசலைத் திறந்து வைத்தவன். பரமாத்மாவுக்கு பேதம் கிடையாது. பேதம் பார்ப்பது பரமாத்மாவாக இருக்க முடியாது.’


‘நீங்கள் சொல்வதெல்லாம் கேட்பதற்குப் பரவசமாயிருக்கின்றன. காலகாலமாக வேதம் ஓதுபவர் உயர்ந்தவர் என்றும் மற்றவர்கள் தாழ்ந்தவர் என்றும் சொல்லிச் சொல்லியே வளர்த்துவிட்ட சமூகம் சுவாமி இது! உங்களை ஏன் புரட்சிக்காரர் என்கிறார்கள் என்பது இப்போது புரிகிறது.’


‘அடக்கடவுளே! இதுவா புரட்சி? இது அடிப்படை உண்மை மன்னா. மிக எளிமையான சுட்டிக்காட்டல். மோட்சத்தில் விருப்பம் கொண்ட யாரும் பேதத்தில் மயங்கிக் கிடக்கமாட்டார்கள். தக்கார் தகவிலார் என்பது எச்சத்தால் காணப்படும் என்பார்கள். சாதியின் உச்சம் அல்ல தகுதி. வாழ்ந்த வாழ்வின் சாரம் என்னவென்று பாருங்கள். பக்தி செய்தோமா, பாகவதனாக இருந்தோமா, பரோபகாரம் நமது இயல்பாக இருக்கிறதா, மனித குலத்தின்மீது நிபந்தனையற்ற அன்பு நமக்கு இருக்கிறதா, பிரதிபலன் நோக்காது இருக்கிறோமா… பார்க்க வேண்டியவை இவை மட்டும்தான்.’


அகளங்கன் கண் கலங்கிப் போனான். பரவசம் பொங்கக் கைகள் இரண்டையும் கூப்பி நின்றான்.


‘சுவாமி, இந்த அற்பனை ஒரு பொருட்டாக மதித்து இத்தனை நல்லவற்றைச் சொல்லியிருக்கிறீர்கள். இதற்கு நான் என்ன கைம்மாறு செய்வேன்!’


‘வைணவம் கைம்மாறு எதிர்பார்க்காது அகளங்கா. சொன்னேனல்லவா? நிபந்தனையற்ற அன்பு ஒன்றே அதன் அடையாளம். அது மனித குலத்தின்மீது வைக்க வேண்டியது. எதிர்பார்ப்புகளற்ற சரணாகதி ஒன்றே உச்சம். அது பரமாத்மாவின்மீது செய்யப்பட வேண்டியது.’


‘இரண்டையும் செய்ய நான் சித்தமாயிருக்கிறேன் சுவாமி!’


‘அப்படியென்றால் நீயும் ஒரு வைணவனே.’


‘வில்லிதாசருக்குக் கிட்டிய பேரருள் எனக்கும் வாய்க்குமா? காண்பதெல்லாம் கண்ணனே என்று தீர்மானமாக இருக்கிற அவரது மருமகன்களைப் போன்ற மனம் எனக்கும் அமையுமா? எனக்கு வேதம் தெரியாது. எதுவும் தெரியாது. நான் வெறும் மன்னன். தகுதியென்று எனக்கு இருக்கிற எதுவும் தகுதியே அல்ல என்று இன்று தெளிந்தேன். கடையனிலும் கடையனான எனக்கும் கதி மோட்சம் உண்டா?’


ராமானுஜர் அவனை நெருங்கி ஆசீர்வதித்தார். அகளங்கன் அன்று முதல் அகளங்க நாட்டாழ்வான் ஆகிப் போனான்.


‘அகளங்கா! நாம் அனைவரும் அரங்கன் ஆளும் மண்ணில் வசிக்கிறவர்கள். அரங்கனின் கோயில்தான் நமது கோட்டை. அங்கே நடைபெறுகிற சிறு அசைவும் ஒரு திருவிழாவாகவே இருக்கவேண்டும்.’


‘ஆம் சுவாமி. ஒப்புக்கொள்கிறேன்.’


‘அரங்கன் பணியில் இருப்போரை நாம் பத்து தனித்தனிக் கொத்துகளாகப் பிரித்துப் பணியாற்ற வைத்திருக்கிறோம். திருவரங்கத்துக்கு வருகிற பாகவத உத்தமர்களை கவனித்துக்கொள்கிறவர்கள் திருப்பதியார் கொத்து. திருப்பாற்கடல் தாசர், திருக்குருகைப் பிரான் பிள்ளை தொடங்கி, இங்கே உள்ள பல நிலச்சுவாந்தார்கள், பெரிய மனிதர்கள் அந்தக் கொத்தில் இருக்கிறார்கள்.’


‘ஓ!’


‘கோயில் திருப்பணியில் ஈடுபட்டிருப்போரை கவனித்துக்கொள்வதும், திருப்பணிகள் தடையற்று நடப்பதற்கு ஆவன செய்வதும் இரண்டாம் கொத்திலர்களின் பணி. நாலுகவிப் பெருமாள் தாசர், திருக்குருகூர் தாசர், சடகோப தாசர், திருக்கலிகன்றி தாசர், ராமானுச தாசரென ஐந்து பேர் அப்பணியில் இருக்கிறார்கள். மூன்றாவது கொத்து பாகவத நம்பிமார். இவர்கள் பெருமாளின் திருவாராதன கைங்கர்யங்களை கவனிப்பவர்கள். உள்ளூரார் என்கிற அடுத்தக் கொத்தினர் மேற்படி திருவாராதன கைங்கர்யம் செய்வோருக்கு உதவி செய்கிற குழுவினர். தோதவத்தித் தூய்மறையோர் என்று சொல்லப்படும் கொடுவாள் எடுப்பார் குழுவில் இருந்து இவர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம்.’


‘ஆஹா!’


‘விண்ணப்பஞ்செய்வார் திருக்கரகக் கையார், ஸ்தானத்தார், பட்டாள் கொத்து என்று அடுத்தடுத்து பல குழுவினர்கள் உண்டு. கோயில் திருவாசல் காப்போரை ஆரியபட்டாள் கொத்து என்று சொல்கிறோம். தொண்டரடிப்பொடி ஆழ்வார் காலம் தொடங்கி கோயிலுக்குப் புஷ்ப கைங்கர்யம் செய்யும் புண்டரீகதாசர் வம்சத்தவர்கள் பத்தாம் கொத்தில் வருவார்கள். அவர்களை தாசநம்பி கொத்து என்போம்.’


‘நல்லது சுவாமி. அரங்கன் சேவையில் அடியேனை எந்தக் கொத்தில் தாங்கள் சேர்ப்பீர்கள் என்று அறிய ஆவலாயிருக்கிறேன்.’


ராமானுஜர் ஒரு கணம் கண்மூடி யோசித்தார். ‘அகளங்கா, நீ மன்னன். நிர்வாகம் தெரிந்தவன். வேலைகள் சரிவர நடக்கிறதா என்று கண்காணிக்க முடிந்தவன். அந்தத் திறமையை நீ அரங்கன் சேவையில் செலுத்து.’


‘உத்தரவு சுவாமி!’


‘இன்று முதல் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களைப் பரிபாலிக்கிற பொறுப்பு உன்னுடையது. வருமானம் சிந்தாமல் ஶ்ரீபண்டாரத்தை வந்தடையும் வரை நீ கவனித்துக்கொள்ள வேண்டியது.’


அகளங்கன் கைகூப்பித் தாள் பணிந்தான். ஶ்ரீபண்டாரம் என்கிற கஜானாவை கவனிக்கத் தொடங்கும்முன் ஆயிரம் பொற்காசுகளைத் தம் பங்காக அதில் கொண்டு வந்து சேர்த்தான். தன்னிடம் பணியாற்றிக்கொண்டிருந்த மணவாள மாராயன், கிடாரத்து அரையன், உலகநாத அழகான், சோழ மாராயன் என்று பலபேரைத் திருவரங்கன் திருப்பணியில் ஈடுபடுத்தினான்.


வைணவ உலகம் வியப்பில் வாய்பிளந்து நின்றது.


(தொடரும்)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 14, 2017 09:30

March 13, 2017

பொலிக! பொலிக! 60

வில்லிதாசரால் முதலில் நம்ப முடியவில்லை. உண்மையாகவா, உண்மையாகவா என்று திரும்பத் திரும்பக் கேட்டார்.


‘ஆம் சுவாமி. மன்னருக்கு மனத்தில் என்னவோ பட்டிருக்கிறது. நமது ஆசாரியரை அவர் இதுவரை சந்தித்ததில்லை என்றாலும் அவர்மீது மிகுந்த மரியாதை கொண்டிருக்கிறார். விரைவில் நேரில் வந்து தரிசிப்பதாகவும் சொன்னார்.’


‘நல்லது செண்டவில்லி. இதுவும் அரங்கன் திருவுள்ளம்தான். அரங்கன் சேவையில் ஒரு மன்னனுக்கு ஈடுபாடு இருக்குமானால் மிகவும் நல்லது என்று உடையவர் சொல்லுவார். அகளங்கன் மூலம் அது நடக்குமானால் நமக்கும் மகிழ்ச்சியே.’


‘அப்புறம் இன்னொரு விஷயம் உண்டு.’


‘சொல் மருமகனே.’


‘மன்னர் இனி எங்களை அரண்மனைப் பணிக்கு வரவேண்டாம் என்று சொல்லிவிட்டார். திருமடத்திலேயே இருந்துகொள்ளலாம் என்றும் மாதச் சம்பளம் சரியாக வந்துவிடும் என்றும் சொன்னார்.’


வில்லிதாசருக்கு இது இன்னும் நம்பமுடியாததாக இருந்தது. தாம் உறையூரை விட்டு வந்தது முதல் அங்கே திரும்பிச் செல்லவேயில்லை என்பதை எண்ணிப் பார்த்தார்.


‘என்மீதே அவருக்கு நிரம்ப வருத்தம் இருக்கும் என்று நினைத்தேன்.’


‘இல்லை சுவாமி. நீங்கள் உடையவரின் வழிகாட்டுதலில் அரங்கன் திருப்பணியில் ஈடுபட ஆரம்பித்ததில் அவருக்கு மகிழ்ச்சிதான். நாங்களும் உங்களைப் பின்பற்றி இங்கே வந்துவிட்டோம் என்பதுதான் அவருக்கு வியப்பே. ஆனால் அவரவர் தனிப்பட்ட விருப்பங்களில் தலையிட வேண்டாம் என்று மன்னர் கருதுகிறார் போலிருக்கிறது.’


‘விருப்பங்களில் தலையிடாமல் இருப்பது பெரிய விஷயமில்லையப்பா. ஆனால் நீ மடத்தில் தங்கிக்கொண்டு கோயில் கைங்கர்யம் செய்வதற்கு அவர் மாதச் சம்பளம் அனுப்புவார் எனச் சொன்னாய் அல்லவா? அதுதான் பெரிது. நம்பவே முடியாத ஆச்சரியமாக இருக்கிறது.’


வில்லிதாசர் சொல்லிக்கொண்டிருந்தபோது சட்டென்று ஒரு குரல் இடைமறித்தது.


‘ஆனால் இது தவறு பிள்ளைகளே!’


குரல் வந்த திசையில் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார்கள். ராமானுஜர் அங்கே நின்றிருந்தார்.


‘சுவாமி..’


‘கேட்டேன் வில்லிதாசரே. அகளங்கன் பரந்த மனம் படைத்தவன் தான். அதில் சந்தேகமில்லை. ஆனால் அரசு உத்தியோகத்தில் இருக்கிறவர்கள், அரசாங்கத்துக்கு உழைக்காமல் சம்பளம் மட்டும் பெறுவது தவறு.’


‘சுவாமி, நாங்கள் எங்களுக்காக அதைச் செலவிடப் போவதில்லை. மன்னர் அனுப்புகிற பணத்தை அப்படியே திருப்பணிகளுக்குத்தான் கொடுத்துவிட இருக்கிறோம்.’


‘அது இன்னும் தவறு. உழைக்காமல் ஈட்டப்படும் செல்வத்தை அரங்கன் ஒருபோதும் ஏற்கமாட்டான். நீங்கள் உடனே அகளங்கனிடம் சம்பளம் வேண்டாம் என்று சொல்லிவிடுங்கள்.’


வண்டவில்லியும் செண்டவில்லியும் அன்றே கிளம்பி உறையூருக்குப் போனார்கள். மன்னரைப் பார்த்து உடையவர் சொன்னதைச் சொன்னார்கள்.


‘மன்னர்பிரானே, தாங்கள் தவறாக எண்ணக்கூடாது. உழைக்காமல் வருகிற செல்வத்தை அரங்கன் விரும்பமாட்டான் என்று உடையவர் சொல்லிவிட்டார். அதனால் எங்களுக்கு இனி சம்பளம் ஏதும் அனுப்பாதீர்கள். உடையவரிடம் பணிபுரிய எங்களை அனுமதித்ததே எங்களுக்குப் போதும்.’


திகைத்துப் போனான் அகளங்கன்.


‘இப்படி ஒரு மனிதரா?’


‘மன்னியுங்கள் மன்னரே. அவர் சராசரி மனிதரல்லர். சராசரிகளால் எட்ட முடியாத உயரங்களில் சஞ்சரிப்பவர். அரங்கனுக்கு உவப்பானவர்.’ என்றான் வண்டவில்லி.


‘அது மட்டும் இல்லை அரசரே. திருவரங்கத்துக்கு அவர் வந்த அன்று அரங்கப்பெருமானே அவரை அழைத்து நீரே இனி உடையவர் என்று திருவாய் மலர்ந்திருக்கிறான்!’


‘அப்படியா? இது எனக்குப் புதிதாக இருக்கிறதே.’


‘ஆம் மன்னா. உபய விபூதிச் செல்வங்களாகச் சொல்லப்படும் மண்ணுலகம், விண்ணுலகம் அனைத்துக்கும் உடையவர் அவர் ஒருவர்தாம். இதை இன்னொரு மனிதர் சொல்லியிருந்தால் நாம் பொருட்படுத்தியிருக்க வேண்டாம். ஆனால் அரங்கனே சொன்னது இது. இதற்கு அரங்க நகரமே சாட்சி.’


திகைத்துப் போனான் அகளங்கன். ‘சரி, நீங்கள் போகலாம்’ என்று அவர்களை அனுப்பி வைத்துவிட்டு அடுத்த நாளே அவன் திருவரங்கம் புறப்பட்டான்.


முன்னறிவிப்பு கிடையாது. எப்போதும் உடன் வரும் மந்திரிகள் கிடையாது. மெய்க்காப்பாளர்கள் கிடையாது. பல்லக்கு பரிவாரங்கள் கிடையாது. அகளங்கன் தனியாகவே திருவரங்கம் கிளம்பினான். கோயில் வாசலில் அவனைப் பார்த்துவிட்ட வில்லிதாசருக்கு ஒரே பரபரப்பாகப் போய்விட்டது.


‘வரவேண்டும் மன்னர் பிரானே! நீங்களா இப்படித் தன்னந்தனியாக..’


‘அதெல்லாம் பிறகு. நீர் சுகமாயிருக்கிறீரா? அதைச் சொல்லும் முதலில்!’


‘யாருக்கும் கிட்டாத பேரானந்த வாழ்வு எனக்கு வாய்த்தது ஐயா. எனது ஆசாரியரின் திருவடி நிழலில் பரம சுகமாக இருக்கிறேன். பாசுரங்கள் கற்கிறேன். கோயில் திருப்பணியில் ஈடுபடுகிறேன். உடையவர் தினமும் பாடம் சொல்லித்தருகிறார். உபன்னியாசம் செய்கிறார். அதையெல்லாம் கேட்கிறேன். ஒரு ஞானப்பெருங்கூட்டில் இந்தக் காட்டுக்குருவிக்கும் எப்படியோ இடம் கிடைத்துவிட்டது!’


‘மிக்க மகிழ்ச்சி வில்லிதாசரே. நான் உங்கள் உடையவரைக் காணத்தான் கிளம்பி வந்தேன்.’


வில்லிதாசர் திகைத்துவிட்டார். ‘எங்கள் உடையவரா! மன்னா, அவர் அனைவருக்கும் உடையவர். அனைத்தும் உடையவர். வாருங்கள் என்னோடு’ என்று அழைத்துக்கொண்டு மடத்துக்கு விரைந்தார்.


அன்று அது நடந்தது.


அகளங்கன் ராமானுஜரை வணங்கி எதிரே அமர்ந்து பேச ஆரம்பித்தான்.


‘சுவாமி, வில்லியும் அவரது மருமகன்களும் எனது படையில் பணியாற்றிக்கொண்டிருந்தவர்கள். அவர்களைப் பன்னெடுங்காலமாக நான் அறிவேன். நானறிந்த அவர்கள் வேறு. ஆனால் இப்போது காண்கின்ற நபர்கள் வேறு. அவர்கள் முகத்தில் தெரிகிற சாந்தம், பேச்சில் உள்ள அழுத்தம், செயல்பாடுகளில் காணப்படுகிற சிரத்தை, அனைத்துக்கும் மேலாக என்னவோ ஒன்று.. அதை எனக்கு விளக்கத் தெரியவில்லை. மூன்று மல்லர்களை நீங்கள் என்னவாகவோ மாற்றிவிட்டீர்கள்.’


ராமானுஜர் சிரித்தார். ‘நான் மாற்றவில்லை மன்னா. வில்லிதாசரை அரங்கனின் கண் மாற்றியது. அவரது மருமகன்களை அவரது மாற்றமே உருமாற்றியது.’


‘ஆனால் ஊர் உலகெங்கும் உங்களைப் பற்றியே பேசுகிறார்களே? நீங்கள் புனிதங்களைப் பொதுமைப்படுத்துவதாகக் கூடச் சொன்னார்கள்.’


‘புனிதம் என்று எதைக் கருதுகிறீர்கள்? பரமாத்மாவான ஶ்ரீமன் நாராயணன் மட்டுமே புனிதன். அவனது தாளைப் பற்றிக்கொள்கிற அத்தனை பேரும் புனிதத்துடன் சம்பந்தம் கொண்டுவிடுகிறார்கள் அல்லவா? நீரில் கலப்பது நீராகிறது. நெருப்பில் கலப்பது நெருப்பாகிறது. புருஷோத்தமனின் பாததூளி அனைத்தையும் பரிசுத்தமாக்கிவிடுகிறது. எனவே புனிதம் என்று தனியே ஒன்றுமில்லை மன்னா.’


‘ஜாதி, வருண வித்தியாசங்கள் கூடவா கிடையாது?’


உடையவர் அவனை உற்றுப் பார்த்தார். கனிவாகப் புன்னகை செய்தார். பிறகு பேச ஆரம்பித்தார்.


(தொடரும்)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 13, 2017 09:30

சூர்யா, ஒன்பதாம் வகுப்பு

சூர்யாநேற்று மயிலாடுதுறையில் சூர்யா என்றொரு சிறுவனை சந்தித்தேன். ஒன்பதாம் வகுப்பில் படிக்கிற பையன். ஒபிசிடி காரணமாக பேலியோ டயட் எடுத்து சுமார் 15 கிலோ எடை குறைத்தவன்.


விஷயம் அதுவல்ல.


இந்தச் சிறுவன் நேற்று என்னைத் தனியே வந்து சந்தித்தான். என்னுடைய பெரும்பாலான அரசியல் நூல்களை இவன் படித்திருக்கிறான். இந்தத் தகவலை அவனது தந்தை சொன்னபோது முதலில் எனக்கு சந்தேகமாக இருந்தது. அப்படியா என்று வெறுமனே கேட்டேன்.


சட்டென்று ஆயில் ரேகை புத்தகத்தின் சாரத்தைச் சொல்லி, அடுத்த பார்ட் எப்ப சார் என்று கேட்டபோது திகைத்துவிட்டேன்.


சதாம் படித்திருக்கிறான். 9/11 படித்திருக்கிறான். அல் காயிதா படித்திருக்கிறான். நிலமெல்லாம் ரத்தம் படித்திருக்கிறான். நம்பமுடியாத அளவுக்கு ஒவ்வொரு புத்தகத்திலும் ஆழம் தோய்ந்திருக்கிறான்.


தஞ்சாவூரில் ஏதோ ஒரு சிபிஎஸ்சி பள்ளியில் ஆங்கில மீடியத்தில் படிக்கிற மாணவன். தமிழில் ஆர்வம் கொண்டு படிப்பது ஒரு மகிழ்ச்சி என்றால், வெறும் கதைப்புத்தகங்களாக, அந்த வயதுக்கே உரிய புத்தகங்களாக அல்லாமல் அரசியல் நூல்களைத் தேடித்தேடி வாசிப்பது  சாதாரண விஷயமல்ல.


‘புரியறதெல்லாம் கஷ்டமா இல்ல சார். ஆயில் ரேகை மட்டும் கொஞ்சம் கஷ்டப்பட்டேன். ஆனா அதுவும் புரிஞ்சிடுச்சி’ என்று சொன்னான்.


சொக்கனின் மொசாட் பிடித்திருக்கிறது என்றான். சிஐஏ ஓகே என்றான்.  உங்கள் புத்தகங்களின் இறுதியில் கொடுக்கிற ஆதார நூல்களை எங்கே வாங்கலாம் என்று கேட்டான். எட்வர்ட் சயித் பற்றி விசாரித்தான்.


சூர்யாவின் தந்தை அறநிலையத்துறையில் பணியாற்றுபவர். எங்கே எந்தப் புத்தகக் கண்காட்சி நடந்தாலும் மகனை அழைத்துச் சென்று விடுவதாகச் சொன்னார். ‘நான், என் ஒய்ஃபெல்லாம் பொதுவான புக்ஸ் படிப்போம் சார். இவன் கொஞ்சம் இதுல ஆர்வமா இருக்கான். படிப்புலயும் கரெக்டா இருக்கறதால தடுக்கறதில்லை’ என்று சொன்னார்.


எக்காலத்திலும் அவனது விருப்பங்களில் குறுக்கிடாதீர்கள் என்று அவரிடம் சொன்னேன்.  ஒரு பதினான்கு வயதுப் பையன் மத்தியக் கிழக்கின் எண்ணெய்ப் பொருளாதாரத்தை அமெரிக்கா எப்படி அபகரிக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு பத்து நிமிடம் பேசுகிறான் என்றால் அவனைத் தலைமேல் வைத்துக் கொண்டாடவேண்டும். அல் காயிதா போன்ற அமைப்புகளால் ஏன் இனி எழ முடியாது என்பதையும் ஐஎஸ் எப்படி ஆதிக்கம் கொள்ள முடிகிறது என்பதையும் இந்த வயதிலேயே விளக்கத் தெரிந்திருப்பவன் நிச்சயம் எதிர்காலத்தில்  பெரிய ஆளாக வருவான் என்று சொன்னேன்.


புத்தகங்களுக்கான அடுத்த தலைமுறை வாசகர்கள் பற்றி எழுத்தாளர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் எப்போதும் ஓர் அச்சம் உண்டு.


இனி எனக்கு அது இல்லை. கண்ணுக்குத் தெரியாமல் எங்கெங்கோ இத்தகு சூர்யாக்கள் பிறந்தபடியேதான் இருப்பார்கள்.


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 13, 2017 09:23

பேய் ஓட்டுவது எப்படி?

 


12.3.2017  ஞாயிற்றுக்கிழமை அன்று மயிலாடுதுறையில் நடைபெற்ற பேலியோ கருத்தரங்கில் நான் நிகழ்த்திய உரை.


நண்பர்களே,


டாக்டர் பேசிக் கேட்டீர்கள். டாக்டர் கலைஞர், டாக்டர் ஜெயலலிதாபோல் டாக்டரான, விற்பன்னர் பேசிக் கேட்டீர்கள். நாளைக்குக் கட்சி ஆரம்பித்தால்கூட நாலைந்து தொகுதிகளில் ஜெயித்துவிடலாம் என்னும் அளவுக்கு உறுப்பினர்களைக் கொண்ட குழுமத்தில் உள்ளதையும் கொஞ்சம்போல் படித்துத் தெளிந்திருப்பீர்கள். ஆரோக்கியத்தின்மீது அக்கறை கொண்டு இங்கே வந்திருக்கிற உங்களுக்குப் புதிதாக நான் என்ன சொல்வது என்று யோசிக்கிறேன். ஒன்று செய்யலாம். உங்களுக்கு நான் பேய் ஓட்டக் கற்றுத் தரலாம் என்று தோன்றுகிறது.


பேலியோ வாழ்க்கை முறையை நான் பயில ஆரம்பித்த புதிதில் நான் எதிர்கொண்ட பெரிய பிரச்னையே அதுதான். ஒன்றல்ல இரண்டல்ல, மூன்று விதமான பேய்களை நான் சமாளிக்க வேண்டியிருந்தது.


எனக்குத் தெரிந்து பேய்களில் நல்ல பேய், கெட்ட பேய் என்று இரு விதம் கிடையாது. எல்லாமே ஒரே ரகம்தான். பேய்கள் கண்டிப்பாக நம்மைவிடக் கெட்டவை. இதில் இருந்து தெரிய வருவது என்னவென்றால் நாம் கொஞ்சம் நல்ல ரகம். அதனால்தான் பேய்களையும் பொருட்படுத்தாமல் பெரிய கனவுகளோடு இங்கு கூடியிருக்கிறோம்.


பேலியோ உணவு முறை என்பது கனபாடிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றுதான் பொதுவில் அறியப்படுகிறது. உண்மையில் எடைக்குறைப்பைக் காட்டிலும் சில சௌகரியங்கள் இதில் கிடைக்கின்றன. கொஞ்சம் விளக்கினால் புரியும் என்று நினைக்கிறேன்.


பரம சாது ஜென்மமான எனக்கு ஆறு மாதங்களுக்கு முன்னால் வரை ரத்தக்கொதிப்பு என்கிற கெட்ட வியாதி ஒன்று இருந்தது. கொதிக்கக்கொதிக்கக் குடிக்கவேண்டிய காப்பியைக் கூட ஃப்ரிட்ஜில் வைத்துக் குடிக்கிற எனக்குப்போய் எப்படி ரத்தம் கொதிக்கும் என்று புரியவேயில்லை. என் குடும்பத்துக்கு வைத்தியம் பார்த்தே குபேரனான டாக்டராகப்பட்டவர், இரண்டு வேளை சாப்பிடச் சொல்லி எனக்கு ஒரு மாத்திரை எழுதிக் கொடுத்தார். காலக்கிரமத்தில் அந்த இரண்டு மாத்திரைகளை மூன்றாக உயர்த்தி ஆசீர்வாதம் செய்து அனுப்பிவைத்தார்.


அந்த ஆறு மாதங்களுக்கு முன்னால் வரை நான் எப்படி இருந்தேன் என்று நன்கு அறிந்த சிலபேர் இங்கே இருக்கிறார்கள். என் வீட்டில் ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், டிவி, பீரோ, மேசை, நாற்காலிகள் எல்லாம் எப்படி வைத்த இடத்தில் அப்படியே இருக்குமோ அதே மாதிரிதான் நானும் இருந்தேன். பத்தடி நடந்தால் பிரசவ வலி எடுத்து இடுப்பைப் பிடித்துக்கொண்டு விடுவது வழக்கம். உட்கார்ந்த இடத்தில் என் சொர்க்கத்தை உருவாக்கிக்கொள்ள உடம்பு வலிக்காமல் என்னென்ன செய்ய முடியுமோ அனைத்தையும் செய்தேன். ரத்தம் என்ன. மொத்தமே கொதித்து ஆவியாகியிருக்க வேண்டியது.


ஓர் அதிசயம் போலத்தான் என் மனைவியின் மூலம் எனக்கு ஆரோக்கியம் நல்வாழ்வு குழுமம் அறிமுகமாகி நான் இந்தப் பேட்டைக்குக் குடி மாறி வந்தேன். ஆறு மாதங்களாகின்றன. இப்போது என் ரத்தம் கொதிப்பதில்லை. அச்சுறுத்தட்டுமா என்று கேட்டுக்கொண்டிருந்த சர்க்கரை அளவு இருந்த இடம் தெரியாமல் எங்கோ போய் ஒடுங்கிவிட்டது. உருவத்திலும் குணத்திலும் பூமியைப் போலிருந்தவன், இன்று குணத்தில் மட்டுமே அப்படி இருக்கிறேன். ஒரு மனிதனை உடலில் இருந்து மனம் வரை முற்றிலும் மாற்றி, புத்தம்புதிய பாட்ஷா மறுபதிப்பு போல் வெளியிட முடியுமா என்றால் முடியும். பேலியோ அதைச் செய்திருக்கிறது.


பேய்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தோம் அல்லவா? அந்த மூன்று பேய்களை இப்போது பார்க்கலாம்.


முதலாவது பேய், சந்தேகம். இதென்ன சரியான காட்டான் கூட்டமாக இருக்கிறதே, கொழுப்பைத் தின்று ஒரு மனிதன் எப்படி உயிரோடு இருக்க முடியும்? நாலு நாளில் ஹார்ட் அட்டாக் வந்து மண்டையைப் போட்டுவிட மாட்டோமா என்கிற அடிப்படைச் சந்தேகமே இங்குள்ள முதல் பேய்.


இரண்டாவது பேய்க்கு இரண்டு பேர் உண்டு. ஒன்று சங்கடம். இன்னொன்று தர்ம சங்கடம். ஒரு வீடு மாறினாலே ஆயிரத்தெட்டு சங்கடங்களை நாம் எதிர்கொள்ள நேரிடுகிறது. ரேஷன் கார்டு, ஆதார் கார்டு முதல் போஸ்ட் கார்டு வரை முகவரி மாற்றத்துக்கு அலைவதில் தொடங்கி, கேஸ் கனெக்‌ஷன் கேபிள் கனெக்‌ஷன் டெலிபோன் கனெக்‌ஷன் இண்டர்நெட் கனெக்‌ஷன் வரை மல்லுக்கட்டி நிற்பது தவிர்க்க முடியாதது. பேலியோவுக்கு மாறுவதென்பது கிட்டத்தட்ட வாழ்க்கை முறையையே மாற்றிக்கொள்வது. இதில் ஆரம்பச் சங்கடங்கள் இல்லாமல் எப்படி இருக்கும்? இந்தச் சங்கடங்கள் இயல்பானவையாக இருந்தால் அவை வெறும் சங்கடங்கள். இன்னொருத்தரால் வரும்போது அதுவே தர்மசங்கடமாகிவிடுகிறது.


இரண்டு முடிந்ததா? மூன்றாவது பேய் மட்டும் கொஞ்சம் பேஜாரானது. திடீரென்று உங்கள் ஆபீசில் உங்களை அண்டார்டிகாவுக்கு டிரான்ஸ்பர் செய்துவிடுகிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். காய்கறிகள் கிடைக்காது. சிக்கன் கிடைக்காது, மட்டன் கிடைக்காது, வெண்ணெய் கிடைக்காது, பால் கிடைக்காது, எதுவும் கிடைக்காத ஓரிடம். அங்கே போய் எப்படி பேலியோ கடைப்பிடிப்பது? பிரச்னைதான் அல்லவா?


ஆனால் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும் நண்பர்களே. எல்லா பூட்டுகளும் அவற்றுக்கான சாவிகளுடனேதான் தயாரிக்கப்படுகின்றன. பிரச்னைகளுக்கான தீர்வு அதற்குள்ளேயேதான் இருக்கிறது.


மேற்படி மூன்று பேய்களை விரட்டும் கலையைப் பற்றி நாம் சற்றுப் பேசலாம் என்று நினைக்கிறேன்.


சாஸ்திரத்திலேயே மூன்று விதமான தடைகளைப் பற்றிச் சொல்லுவார்கள். ஆதி தெய்விகம். ஆதி பௌதிகம். ஆத்யாத்மிகம். ஆதி தெய்விகம் என்றால் நமக்கு மீறிய சக்தியால் வருகிற தடை. அதை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. ஆதி பௌதிகம் என்பது நாம் ஒன்றை ஆரம்பிக்கும்போது யாராவது அல்லது ஏதாவது வந்து கட்டையைப் போட்டுக் குட்டையைக் குழப்புவது. ஆத்யாத்மிகம் என்பது நமக்குள் இருந்தே வருகிற தடை.


பேலியோவில் பயிற்சி செய்ய ஆரம்பித்தபோது இந்த மூன்று விதமான தடைகளையும் நான் சந்திக்க வேண்டியிருந்தது.


நண்பர்களே, நான் ஒரு தாவர பட்சிணி. இனிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் முட்டை இருக்கும் என்பதால் கேக்கைத் தொட்டுக்கூடப் பார்க்காத அளவுக்குத் தீவிரவாத வெஜிடேரியன். காய்கறிகளில் காளானை உண்ணமாட்டேன். அது ஓர் உயிரினம் என்று எப்போதோ சிறு வயதில் கேள்விப்பட்டதன் விளைவு. என் குடும்பப் பின்னணியோ, குலமோ, மற்றதோ இதற்குக் காரணமல்ல. எங்கள் குடும்பத்திலேயே வளைத்து வளைத்து சிக்கனையும் மட்டனையும் உண்ணுகிற ஜீவாத்மாக்களை நான் அறிவேன். மரக்கறி உணவு என்பதை முழு விருப்பத்துடன் தேர்ந்தெடுத்துக்கொண்டபடியால் மற்றதன்மீது எனக்கு இச்சை எழுந்ததில்லை.


ஆனால், எனக்கு எதை உண்டாலும் ருசியாக உண்ண வேண்டும்.   தரத்தில் அரைச் சிட்டிகை முன்னப்பின்ன இருந்தால்கூட முகம் சுளித்துவிடுகிற ஜந்து. உணவின் அதிதேவதையே மண்டியிடுகிற அளவுக்கு என் உணவின் ருசியில் எப்போதும் உயர்தரம் காக்கிறவன் நான். ஆனால் சைவ பேலியோவில் நானாவித சாத்தியங்கள் ஏதுமில்லையே என்றார்கள். தினமும் பாதாம் வறுத்துத் தின்றால் முப்பத்திரண்டில் மூன்றிலொரு பங்குப் பற்கள்தான் மிஞ்சும் என்றார்கள்.


அப்படியா?


பனீர் ஒரு துணைப் பொருள். அதை எப்படி முக்கிய உணவாக எடுத்துக்கொள்ள முடியும்? தினசரி வீட்டில் பனீர் டிக்காவும் பனீர் புர்ஜியும் சமைத்துக்கொண்டிருக்க நாமென்ன சேட்டுக்கடையா நடத்துகிறோம்? அதெல்லாம் முடியவே முடியாது என்றார்கள்.


அப்படியா?


ஒரு புளியோதரை இல்லாத வாழ்க்கை நமக்கு எதற்கு? உருளைக்கிழங்கில்லாத உலகில் வாழத்தான் முடியுமா? லட்டில்லாத வாழ்க்கை. குலோப்ஜாமூன் இல்லாத வாழ்க்கை. வறுத்த முந்திரியும் மாதுளை முத்துகளும் புதைந்த வண்ணமயமான கேசரி இல்லாத வாழ்க்கை. வாழைக்காய்ப் பொரியல் இல்லாத வாழ்க்கை. வத்தக்குழம்பு சாதம் இல்லாத வாழ்க்கை. அட, ஆயிரம் அப்பள நிலவுகள் பூக்காத, வடையற்ற, பஜ்ஜியற்ற, வகை வகையான ஐஸ் க்ரீம் அற்ற ஒரு வாழ்க்கையை எதற்காக வாழவேண்டும்?


ஐம்பதுகளின் தமிழ் சினிமாவிலும் இப்போதைய தொலைக்காட்சித் தொடர்களிலும் எப்போதும் குதித்து வந்து எதிரே நின்று பேசுகிற மனச்சாட்சி இதைக் கேட்டபோது எனக்குத் தோன்றிய பதில் இதுதான்.


இந்த ருசி உடல் நலனுக்குக் கேடென்றால் கேடற்ற உணவில் புதிய ருசிகளை நான் கண்டுபிடிப்பேன்.


விளையாட்டில்லை. உண்மையிலேயே அது என்னால் முடிந்தது. உணவைப் பொறுத்தவரை எனக்கு அதுநாள் வரை சாப்பிட மட்டுமே தெரியும். ஆனால் பேலியோ எனக்கு சமைக்கச் சொல்லிக் கொடுத்தது. ஒப்புக்குச் சமைப்பதல்ல. உயர்தரமாகச் சமைப்பது. என் எழுத்தில் எனக்குள்ள தீவிரமும் நேர்மையும் சமையலிலும் கூடி வந்திருப்பதை சரித்திரத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன்.


உண்மையைச் சொல்லுவதென்றால் என் வாழ்வில் நான் சமரசமில்லாத அதி உன்னத ருசியுள்ள உணவை தினசரி உண்ண ஆரம்பித்தது பேலியோவுக்கு வந்த பிறகுதான்.


ஆக, விதவிதமாக உண்ண முடியுமா, இந்த உணவு முறையில் ருசி இருக்குமா என்கிற அடிப்படை சந்தேகத்தை அடியோடு ஒழித்தேன். நாமெல்லாம் திரிசங்கு ஜாதி. சொர்க்கம் நமக்கில்லை, நரகம் நமக்கு வேண்டாம் என்றால் நமது சொர்க்கத்தை நாமே படைத்துக்கொள்வதுதான் சரி.


ஆனால் இந்த ஹார்ட் அட்டாக் பயம் இருக்கிறது பாருங்கள். அதை ஒழிப்பதுதான் இங்கே முதன்மையான சவாலாக இருக்கிறது.


பல வருடங்களுக்கு முன்னால் என் தந்தைக்கு ஹார்ட் அட்டாக் வந்தது. சென்னையில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்தோம். ஒரு நாலைந்து நாள் அங்கேயேதான் நான் வசிக்க வேண்டியிருந்தது. இரவு பகலாகக் கண் விழித்து உட்கார்ந்திருந்ததில் எனக்குக் கிடைத்த ஞானம் மிக எளிமையானது. பணக்காரன் ஏழை, உயர்ந்தவன் தாழ்ந்தவன், நல்லவன் கெட்டவன், ஆண் பெண் பேதமின்றி ஒரு காற்றைப் போல், நீரைப் போல், கடவுளைப் போல் அனைவரையும் சமமாக பாவித்து அருள்பாலிக்கிற தேவதை இந்த ஹார்ட் அட்டாக். என்ன ஒன்று இது கெட்ட தேவதை.


காலகாலமாக பேதமின்றி மனித குலத்தைத் தாக்கிக்கொண்டிருக்கிற ஹார்ட் அட்டாக்குக்கு பேலியோக்காரர்கள் என்றால் கொள்ளைப் பிரியம் என்பது எந்த வாட்சப் வெறியன் கிளப்பிவிட்ட பீதி என்று எனக்குப் புரியவில்லை. உண்மையில் பேலியோ உணவு முறை ஹார்ட் அட்டாக்கைக் கூடியவரை தள்ளிப் போடக்கூடியது. கொழுப்பு சாப்பிட்டால் மாரடைப்பு வரும் என்பது தண்ணீர் அருந்தினால் போதை ஏறும் என்பதைப் போல. ஆய்வுகள் சொல்லுவது என்னவென்றால் கொழுப்பு குறைவாக எடுக்கிறவர்களுக்குத்தான் பிரச்னைகள் அதிகம் வருகின்றன.


நான் மருத்துவ விவகாரங்களுக்குள் போக விரும்பவில்லை. அந்தத் தகுதியுள்ளவனும் அல்ல. ஆனால் இந்த ஹார்ட் அட்டாக் பூச்சாண்டி பல மூலைகளில் இருந்து தாக்கக்கூடியது என்பதை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன்.


நான் நூற்றுப் பத்து கிலோ எடைக்குமேல் இருந்தவன். சரசரவென்று எடை இறங்கி எண்பதில் தொடங்கும் ஓர் எண்ணை எட்டிப் பார்த்த தினத்தில் என் அம்மா சொன்னார். ‘எல்லாம் ஓகேதான். அதான் எடை குறைஞ்சிடுச்சே. விட்டுட்டு எப்பவும்போல சாப்டேன்?’


‘இத விட்டுட்டா திரும்ப ஏறிடுமேம்மா? அப்ப என்ன பண்றது?’ என்றதற்கு அவர் சொன்ன பதில், ‘அப்ப திரும்ப இதுக்குப் போயிடு. குறைச்சிட்டு திரும்பவும் பழைய மாதிரி சாப்டு.’


பாசம் போலத் தெரிந்தாலும் இதன் உண்மைப் பெயர் பயம். பயல் கொழுப்பு சாப்பிடுகிறான். அது ஹார்ட் அட்டாக்கைக் கொடுக்கும்.


என் அப்பா பசிக்குத் தின்ற நாலு கவளம் சோற்றைத் தவிர, எதையுமே உண்ணாதவர். கிட்டத்தட்ட ஒரு யோகியின் வாழ்க்கை வாழ்ந்தவர். அவருக்கும் ஹார்ட் அட்டாக் வந்ததை அம்மாவால் எண்ணிப் பார்க்க முடியவில்லை.


ஆதி தெய்விகம் என்று சொன்னேன் அல்லவா? விதியின் தடை. அதுதான் இது. நாம் தவிர்க்க முடியாதது அது ஒன்றைத்தான். ஆனால் தவிர்க்கத்தான் முடியாதே தவிர, தள்ளிப் போட முடியும். ஆரோக்கியம் நல்வாழ்வு குழுமத்தில் ஃபரூக் அப்துல்லா என்றொரு டாக்டர் எழுதிக்கொண்டிருக்கிறார். அவரைப் படித்துப் பாருங்கள். டாக்டர் ஹரிஹரனின் பழைய கட்டுரைகளைத் தேடிப் படித்துப் பாருங்கள். எப்படித் தள்ளிப் போடலாம் என்று ஒண்ணாங்கிளாஸ் வாத்தியார் போல சொல்லிக் கொடுக்கிறார்கள் இவர்கள். இந்த மருத்துவர்களுக்கெல்லாம் நாம் என்ன கைம்மாறு செய்ய முடியும், கையெடுத்துக் கும்பிடுவதைத் தவிர?


இனி இரண்டாவது பேயை விரட்டப் பார்க்கலாம். இது அன்னிய சக்தி, அயல்நாட்டு சதி வகையறாவுக்குள் வருவது.


எங்கள் குடும்பத்தில் எனக்கு அடுத்த தலைமுறையில் ஏராளமான இளைஞர்களும் யுவதிகளும் பன்னெடுங்காலமாகக் கல்யாணம் ஆகாமல் இருந்தார்கள். சரி அவர்கள் சௌக்கியமாக இருக்கிறார்கள் என்று கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டேன்.


ஆனால் சொல்லி வைத்த மாதிரி நானும் என் மனைவியும் பேலியோ உணவு முறைக்கு மாறியதில் இருந்து ஒவ்வொருவராக வந்து திருமண அழைப்பிதழை நீட்ட ஆரம்பித்தார்கள்.


சொன்னால் நம்பமாட்டீர்கள். நாங்கள் பேலியோ பயிலத் தொடங்கிய முதல் மூன்று மாதங்களில் ஏழெட்டு திருமண விசேஷங்களில் கலந்துகொள்ள வேண்டியிருந்தது. இந்த மாதிரி விசேஷங்களில்தான் உறவினர்களின் பாசமானது தேர்தல் நேரத்து அரசியல்வாதிகளின் பாசம் போல் பொங்கிப் பீறிடத் தொடங்கிவிடும்.


என்ன பெரிய டயட்? ஒருநாள் சாப்பிட்டால் ஒன்றும் ஆகாது. டேய், ஜானவாச ஸ்வீட் அசோகா. ஒனக்கு ரொம்ப பிடிக்குமேன்னு தனியா ஒரு டிபன் பாக்ஸ்ல எடுத்து வெச்சிட்டேன். அக்கார அடிசில் பிரமாதமா இருந்ததே, நீ சாப்ட்டியோ?


நம்மை இழுத்துக்கொண்டுபோய் உட்கார வைத்து சாப்பிட வைப்பதில்தான் அவர்களுக்கு என்னவொரு ஆனந்தம்! தீபாவளிக்கு பட்சணம் சாப்பிட்டால் தப்பில்லை. பொங்கலுக்குப் பொங்கல் சாப்பிட்டால் தப்பில்லை. பிள்ளையார் சதுர்த்திக்குக் கொழுக்கட்டை சாப்பிட்டால் தப்பில்லை. நவராத்திரிக்கு சுண்டல் தின்றால் தப்பில்லை.


தப்பைத் தப்பில்லாமல் செய்வதில் நாம் தப்பே செய்வதில்லை.


இந்தச் சங்கடங்களுக்கு என் மனைவி ஓர் உபாயம் கண்டுபிடித்தார். என்ன பண்டிகையானாலும் சரி. என்ன மாதிரியான குடும்ப விசேஷமானாலும் சரி. நூறு பாதாம் வறுத்து சாப்பிட்டுவிட்டுப் போய்விடுவது. அல்லது கையில் எடுத்துக்கொண்டு போய்விடுவது. யாராவது சாப்பிடக் கூப்பிட்டால், ‘ஓ, நான் போன பந்திலயே சாப்ட்டேனே? சீக்கிரம் போங்க, பூசனி அல்வா தீந்துடப் போறது’


முடிந்தது கதை.


சீட்டிங் என்று சொல்கிறார்கள். நாம் எதை ஏமாற்றுகிறோம் என்று ஒரு கணம் யோசித்துப் பாருங்கள். நாம் நம்மை நாமேதான் ஏமாற்றிக்கொள்ள விரும்புகிறோம். இதன் நஷ்டம் யாருக்கு என்று யோசித்துப் பார்த்தால் அதைச் செய்யத் தோன்றாது.


ஒன்று சொன்னால் நம்புவீர்களா? மாதம் ஒருநாளாவது, மதிய உணவாக கால்கிலோ மைசூர்பாவும் கால் கிலோ ஆனியன் பக்கோடாவும் சாப்பிட்டுக்கொண்டிருந்தவன் நான். என் குடும்பத்துக்கு நான் முக்கியம் என்று என்று நினைத்தேனோ, அன்று அதை விட்டேன். இன்று நான் இனிப்பைத் திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை. இதனால் எதையுமே இழக்கவில்லை – எடையைத் தவிர.


இந்த உரையின் இறுதிக்கட்டத்துக்கு நாம் வந்துவிட்டோம் என்று நினைக்கிறேன். ஆம். அந்த மூன்றாவது பேய் மிச்சம் இருக்கிறது. அதையும் பார்த்துவிடலாம்.


தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் என்ன செய்வது? நீங்கள் அசைவம் உண்பவர் என்றல் உங்களுக்கு அப்படியொரு சூழ்நிலையே வராது. அண்டார்டிகாவில்கூட மீன் கிடைக்கும். பெங்குவின் கிடைக்கும். கொஞ்சம் மெனக்கெட்டால் திமிங்கலமே கிடைக்கும். துளி கார்ப்பும் இல்லாமல் கீடோ டயட்டே இருக்கலாம்.


பிரச்னையெல்லாம் மைனாரிடிகளுக்குத்தான். சமூகமானால் என்ன, சாப்பாடானால் என்ன? கஷ்டப்படுவது அவர்கள்தாம். ஆனால் எனக்கு என்ன தோன்றுகிறதென்றால், இந்தக் கஷ்டங்கள் அனைத்துமே நம் மனம் உருவாக்கும் மாயத்தோற்றம்தான்.


நான் கலைத்துறையில் இருப்பவன். சாதாரண மதிய உணவில் இருந்து மகத்தான இரவு விருந்து வரை சகலமும் அசைவ மயமாகவே அங்கே இருக்கும். ஆனால் எப்பேர்ப்பட்ட அசைவ விருந்திலும் வெங்காயப் பச்சடி இருக்கும். வெள்ளரிக்காய், கேரட் கலந்த சாலட் இருக்கும். தயிர் இருக்கும். பிரியாணிக்குத் தொட்டுக்கொள்ள தால்ச்சா என்ற பெயரில் அவர்கள் கொண்டு வந்து வைக்கிற கத்திரிக்காய் கூட்டு இருக்கும்.


மனமிருந்தால் மார்க்கபந்து.


உங்களை நான் கேட்டுக்கொள்வதெல்லாம் ஒன்றுதான். படியுங்கள். கண்மூடித்தனமாக எதையும் நம்புவதைவிடப் படித்து, பேசி, அலசி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருவது நல்லது. நான் பேலியோவை ஏற்பதற்கு முன்னால் இதை எப்படியெல்லாம் கிண்டல் செய்தேன், எவ்வாறெல்லாம் வாரியெடுத்து வாயில் போட்டு மென்று துப்பினேன் என்பது நண்பர்களுக்குத் தெரியும். ஆனால் எப்போது இதன் அறிவியல் அடிப்படைகளைப் படித்துப் புரிந்துகொண்டேனோ, அப்போது என்னை மாற்றிக்கொண்டேன்.


எந்த மகத்தான மாற்றமும் ஆரம்ப எதிர்ப்புகளைச் சமாளித்துத்தான் தீரவேண்டும். பேலியோவுக்கு வருகிறவர்களுக்கு உள்ள முதல் எதிர்ப்பு, அது பற்றிய பயம்தான். ஆனால் அது தேவையற்ற பயம்.


நண்பர்களே, இது மரணமற்ற பெருவாழ்வுக்கான மகத்தான முதல்படி. தயங்காமல் அடியெடுத்து வையுங்கள். நீங்கள் நோயற்று வாழ என் மனமார்ந்த பிரார்த்தனைகள்.


நன்றி, வணக்கம்.


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 13, 2017 07:35

March 12, 2017

பொலிக! பொலிக! 59

தம்மை மறந்த லயிப்பில் பிரபந்தம் பாடியபடி ஊர்வலம் மெல்லப் போய்க்கொண்டிருந்தது. அத்தனை பேரும் ராமானுஜரின் சீடர்கள். அவ்வப்போது அருகிலுள்ள திவ்யதேசங்களுக்கு அவர்கள் இவ்வாறு யாத்திரை கிளம்பிவிடுவார்கள். முதலியாண்டான் சில சமயம் உடன் வருவார். அவர் வேறு வேலையாகப் போயிருக்கிற நாள் என்றால் கூரத்தாழ்வான் வருவார். மடத்தின் மூத்த சீடர்கள் யாராவது ஒருவர் கண்டிப்பாக உண்டு. புதிய சீடர்களுக்குப் பாசுரங்களைச் சொல்லிக் கொடுத்து, விளக்கம் சொன்னபடி யாத்திரை முன்னேறும்.


அன்றைக்கு வில்லிதாசர் முன்வரிசையில் பாசுரம் சொன்னபடி போய்க்கொண்டிருந்தார். பின்னால் நூற்றுக்கணக்கான புதிய சீடர்கள். அத்தனை பேரும் உடையவரே கதி என்று நம்பி வந்து சேர்ந்தவர்கள். வண்டவில்லியும் செண்டவில்லியும் ஊர்வலத்தின் கடைசி வரிசையில் வந்துகொண்டிருந்தார்கள். ராமானுஜரிடம் சேர்ந்ததில் இருந்து அவர்கள் வில்லிதாசரைத் தாய்மாமன் என்று எண்ணுவதே இல்லை. அவர் உடையவரின் பேரன்புக்குப் பாத்திரமான சீடர்களுள் ஒருவர். தவிரவும் அரங்கனே கண் திறந்து நோக்கிய அற்புதப் பிறப்பு. சந்தேகமில்லாமல் மகான். அவர் பெற்ற அருளில், அவர் பெற்ற அறிவில் ஆயிரத்தில் ஒரு பங்கு தமக்கும் வாய்க்காதா என்ற ஞானத்தேடலுடன் வந்து இணைந்திருந்தார்கள்.


ஆனால் சக சீடர்களிடையே அவர்கள் இருவரைப் பற்றி அவ்வப்போது சில்மிஷமான பேச்சுவார்த்தைகள் நடக்கும். வில்லி சகோதரர்களின் தோற்றமும் நடையும். அவர்கள் மல்லர்கள். வரிந்து கட்டிக்கொண்டு குஸ்தியில் இறங்கினால் ஊரே அதகளப்படும். கட்டுமஸ்தான தேகமும் கொழுத்த கன்னங்களும் திரண்ட தோள்களும் முறுக்கிய மீசையுமாகப் பார்க்கவே சற்று பயங்கரமாக இருப்பார்கள். அந்தத் தோற்றத்தில் அவர்கள் தரிக்கும் திருமண் காப்பு சட்டென்று ஒரு சிறு நகைப்பைக் கொடுக்கும்.


‘அவன் தொப்பையைப் பாரேன்! பொங்கல் பானைக்குத் திருமண் சாற்றியது போல!’


‘அந்த மீசைக் கண்ணராவியை எடுத்துத் தொலைக்கவும் மாட்டேன் என்கிறான். நடு ராத்திரி அவனைப் பற்றி நினைத்துக்கொண்டுவிட்டால் விடிகிற வரைக்கும் பயமாகவே இருக்கிறது!’


‘மன்னனுக்கு மல்லர்கள் சகாயம் தேவைதான். நமது மடத்துக்கு எதற்கு இவர்கள்? இவன் பிரபந்தம் சொல்லுகிற லட்சணத்தைப் பார்த்தால் நாராயணனே அலறிக்கொண்டு ஓடிவிடுவான். ல, ள, ழ உச்சரிப்பில் சகோதரர்கள் இருவரும் சரித்திரம் படைத்துக்கொண்டிருக்கிறார்கள்!’


‘உடையவர் எப்படித்தான் சகித்துக்கொள்கிறாரோ.’


‘அவரை விடப்பா. கேட்டால், மனத்தில் பக்தி இருந்தால் போதும் என்று சொல்லிவிடுவார்.’


‘இந்த மாமிச மலைகளின் மனத்தில் பக்தியும் இருக்குமா என்ன?’


‘சந்தேகமாக உள்ளதா? பரிசோதித்துப் பார்த்துவிடுவோமா?’


அன்றைக்கு அவர்கள் விபரீதமாக ஒரு விளையாட்டை ஆடிப் பார்க்க முடிவு செய்தார்கள்.


சீடர்கள் நடந்துகொண்டிருந்த பாதையில் ஒரு சமணர் கோயில் எதிர்ப்பட்டது. வாயிலில் சிங்கமும் யானையும் செதுக்கப்பட்ட பெரும் கற்கள் எழுந்து நின்றன. அந்த இடத்தை ஊர்வலம் கடந்தபோது விஷமக்காரச் சீடர்கள் சிலர் வில்லி சகோதரர்களை அழைத்தார்கள்.


‘வண்டவில்லி, பெருமாள் கோயிலைக் கடந்துகொண்டிருக்கிறோம்! கோயிலை கவனிக்கமால் எங்கே பராக்குப் பார்த்துக்கொண்டு வருகிறீர்கள் இருவரும்?’


பாசுரத்தில் கவனமாக இருந்த வில்லி சகோதரர்கள் இருவரும் திடுக்கிட்டுப் பார்த்தார்கள். ஒரு கணம்தான். தடாலென இருவரும் அந்த இடத்தில் சாஷ்டாங்கமாக விழுந்துவிட்டார்கள். நாராயண, நாராயண என்று ஓங்கி உலகளந்த உத்தமனை எட்டும் ஆவேசத்துடன் அவர்கள் குரல் கொடுத்தபடியே விழுந்து சேவித்துக்கொண்டிருக்க, முன்னால் சென்ற சீடர்கள் திகைத்துப் போய் நின்றுவிட்டார்கள்.


‘என்ன ஆயிற்று உங்கள் இருவருக்கும்? இது சமணர் ஆலயம். எழுந்திருங்கள்!’


யார் யாரோ குரல் கொடுத்துப் பார்த்தும் இருவரும் எழவில்லை. நாராயண, நாராயண என்று தொடர்ந்து உச்சரித்துக்கொண்டே இருந்தவர்கள் பக்திப் பரவசத்தில் அப்படியே மயங்கிப் போனார்கள்.


முன்னால் போய்க்கொண்டிருந்த வில்லிதாசர் திரும்பிப் பார்த்தார். ‘என்ன அங்கே பிரச்னை?’


‘சுவாமி, வண்டவில்லியும் செண்டவில்லியும் சமணர் ஆலயத்தைப் பெருமாள் கோயில் என்று நினைத்து விழுந்து சேவித்தார்கள். விழுந்தவர்கள் எழவில்லை. அப்படியே மயங்கிவிட்டார்கள்.’


வில்லிதாசர் புன்னகை செய்தார். மெல்ல அவர்கள் அருகே வந்தார்.


‘யாராவது ஓடிச் சென்று தண்ணீர் கொண்டு வாருங்கள். மயக்கம் தெளிவிக்க வேண்டும்.’ யாரோ சொன்னார்கள்.


‘இல்லை, தண்ணீர் வேண்டாம். வில்லிதாசரே! நீர் நிற்கும் இடத்திலிருந்து சிறிது நகர்ந்து நில்லுங்கள்’ என்றார் இன்னொரு சீடர்.


வில்லிதாசருக்குப் புரியவில்லை. இருப்பினும் சட்டென்று நகர்ந்து நிற்க, அவர் குனிந்து வில்லிதாசர் நின்ற இடத்தில் இருந்து ஒரு பிடி மண்ணை அள்ளி மயங்கிக் கிடந்த வில்லி சகோதரர்கள் மீது தூவினார்.


சட்டென்று அவர்கள் மயக்கம் தெளிந்து எழுந்தார்கள்.


கூட்டம் திகைத்துவிட்டது. வில்லிதாசருக்கே தாங்க முடியாத வியப்பு.


‘சுவாமி! துளசி தீர்த்தம் தெளித்து மயக்கம் தெளிவிக்கலாம். பரம பாகவதரான தங்களது பாதம் பட்ட மண்ணும் அதற்கு நிகரானதே. தவிரவும் பெருமாள் கோயில் என்று சொன்னதும் சற்றும் யோசிக்காமல் விழுந்து சேவித்த இவர்கள் இருவரும் தங்களுக்குச் சரியான வாரிசுகள்தாம். தூணிலும் துரும்பிலும் இருப்பவன் இச்சமணக் கோயில் இருக்கும் இடத்தில் மட்டும் இல்லாதிருந்துவிடுவானா?’


விளையாட்டுக்கு வில்லி சகோதரர்களை சமணர் ஆலயத்தின்முன் விழவைத்த சீடர்கள் வெட்கத்தில் சுருங்கிப் போனார்கள்.


அகளங்கனிடம் இந்தக் கதையைச் சொன்ன அமைச்சர், ‘மன்னா! வண்டவில்லியும் செண்டவில்லியும் மழை வந்ததை நாரணன் வந்தான் என்று சொன்னதன் காரணம் புரிகிறதா? அவர்களுக்கு மழையும் நாரணன்தான், வெயிலும் நாரணன்தான். இரவும் பகலும் ஒளியும் இருளும் அனைத்தும் நாரணனே. சமணர் ஆலய வாசலிலும் நாரணன் பொற்பாதங்களைக் கண்டவர்கள் அவர்கள்.’


‘நம்பமுடியாத வியப்பாக இருக்கிறது அமைச்சரே. வில்லி சகோதரர்களே, உங்களது பக்தி மகத்தானது. நீங்கள் இங்கே அரண்மனைச் சேவை செய்து பொழுதை வீணாக்காதீர்கள். இனி நீங்கள் உங்கள் விருப்பப்படி எப்போதும் திருவரங்கத்திலேயே இருக்கலாம். உடையவர் அருகிலேயே வசிக்கலாம். மாதம்தோறும் உங்கள் சம்பளம் மட்டும் உங்களைத் தேடி வந்துவிடும். அந்தக் கவலை வேண்டாம்.’ என்றான் அகளங்கன்.


‘நன்றி மன்னா. அங்கே ஆலயத் திருப்பணி நடந்துகொண்டிருக்கிறது. உடையவர் எங்கள் இருவரையும் அந்த வேலையில்தான் ஈடுபடுத்தியிருக்கிறார். உங்களுடைய நல்ல மனத்தால் இனி நாங்கள் முழு நேரமும் அரங்கன் சேவையில் ஈடுபடுவோம்.’ என்றான் செண்டவில்லி.


‘நல்லது. விரைவில் நான் திருவரங்கம் வருகிறேன். உங்கள் உடையவரை நானும் தரிசிக்க வேண்டும்!’


(தொடரும்)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 12, 2017 09:30

March 11, 2017

ருசியியல் – 13

இன்றைக்குச் சுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்புவரை உணவைப் பற்றிய எனது புரிதல் ஒற்றைப் பரிமாணம் கொண்டதாக மட்டுமே இருந்தது. அதாவது, உணவு என்பது நாவை சந்தோஷப்படுத்தி, வயிற்றில் சென்று சேருகிற வஸ்து. அது நல்ல உணவா, நாராச உணவா, உடம்புக்கு ஒத்துக்கொள்ளுமா, கொள்ளாதா, நமக்கு ஏற்றதா, இல்லையா, இது அவசியமா, பிந்நாளைய உபத்திரவங்களுக்கு அச்சாரமா என்றெல்லாம் யோசித்தே பார்க்க மாட்டேன். எந்தப் பேட்டையிலாவது என்னவாவது ஒரு பலகாரம் பிரமாதமாக இருக்கிறது என்று யாராவது சொன்னால் போதும். உடனே என் மூஞ்சூறு வாகனத்தை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுவேன்.


ருசி மிகுந்த ஒரு மலாய் பாலை அருந்துவதற்காக தர்ம க்ஷேத்திரமாம் குரோம்பேட்டையில் இருந்து புறப்பட்டு ஒன்றரை மணி நேரம் பயணம் செய்து மண்ணடியை அடைவேன். குறிப்பிட்ட சேட்டுக்கடையானது விளக்கு வைத்து ஓரிரு மணிநேரங்களுக்குப் பிறகே திறக்கப்படும். அதன்பிறகு விறகடுப்பை மூட்டி அண்டாவில் பாலைக் கொட்டி அதன் தலைமீது வைத்துக் காயவிட்டு, அவர் வியாபாரத்தைத் தொடங்க அநேகமாக ஒன்பதரை, பத்து மணியாகிவிடும். ஜிலேபி, கலர் பூந்தி, பால்கோவா என்று அந்தக் கடையில் வேறு சில வஸ்துக்களும் கிடைக்குமென்றாலும் அங்கே மொய்க்கிற கூட்டமெல்லாம் அந்த மலாய் பாலுக்காகத்தான் வரும்.


எனக்குத் தெரிந்து பாலில் உண்மையிலேயே சுத்தமான காஷ்மீரத்துக் குங்குமப்பூ சேர்த்த ஒரே நல்ல சேட்டு அவர்தான். ஏலக்காய் போடுவார். சிட்டிகை பச்சைக் கற்பூரம் போடுவார். முந்திரி பாதாம் பிஸ்தா வகையறாக்களைப் பொடி செய்து போடுவார். கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்ப்பார். இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல உலர்ந்த வெள்ளரி விதைகளை ஒரு தகர டப்பியில் இருந்து இரு கைகளாலும் அள்ளி அள்ளி எடுத்து அதன் தலையில் கொட்டுவார்.


மேற்படி சேர்மானங்களெல்லாம் ஜீவாத்ம சொரூபம். பாலானது பரமாத்ம சொரூபம். இரண்டும் உல்லாசமாக ஊறியபடிக்கு விசிஷ்டாத்வைதபரமாக விறகடுப்பில் கொதித்துக் கிடக்கும். சேட்டானவர் ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு பெரிய கரண்டியைப் போட்டு நாலு கிளறு கிளறிவிடுவார். பிராந்தியத்தையே சுண்டி இழுக்கிற மணம் ஒன்று அதன்பின் வரும். அப்போதுதான் வியாபாரம் ஆரம்பமாகும்.


அந்த மலாய் பால், ஒருவேளை முழு உணவை நிகர்த்த கலோரி மிக்கது என்பதறியாமல், மூக்குப் பிடிக்கச் சாப்பிட்டுவிட்டு அந்தப் பாலுக்காகப் போய் நிற்பேன். அது ஒரு காலம்.


மேற்படி மண்ணடி சேட்டு மலாய் பால், கற்பகாம்பாள் மெஸ் ரவா ரோஸ்ட், மைலாப்பூர் ஜன்னல் கடை பொங்கல் வடை, வெங்கட்ரமணா தேங்காய் போளி என்று பிராந்தியத்துக்கொரு பலகார அடையாளமாகவே தருமமிகு சென்னை என் மனத்தில் பதிந்திருந்தது.


ஒன்பதாண்டுகளுக்கு முன்னால் என் நண்பர் பத்ரி, நுங்கம்பாக்கத்தில் உள்ள ஓர் உணவகத்துக்கு என்னை அழைத்துச் சென்றார். நான் அதுவரை போயிராத இடம். மெடிமிக்ஸ் ஆயுர்வேத சோப்பு தயாரிக்கும் கம்பெனி நடத்துகிற உணவகம். சஞ்சீவனம் என்று பேர்.


வழக்கமான உணவகம்தான். ஆனால் அங்கே தனிச்சிறப்பான முழுச் சாப்பாடு ஒன்று உண்டு. இயற்கை மருத்துவ நெறிக்கு (நேச்சுரோபதி) உட்பட்டுத் தயாரிக்கப்படுகிற உணவு என்று சொன்னார்கள்.


போய் உட்கார்ந்ததும் முதலில் மைல் நீள வாழையிலையின் ஒரு ஓரத்தில் ஒரு துண்டு நேந்திரம்பழத்துண்டு வைப்பார்கள். அதன்மீது ஒரு ஸ்பூன் தேங்காய்ப் பூ தூவுவார்கள். அடேய், நான் மலையாளி என்பது அதன் அர்த்தம். அதன்பிறகு சொப்பு சாமான் சைஸில் ஐந்து கண்ணாடிக் கிண்ணங்களில் வண்ணமயமான ஐந்து பானங்கள் வரும். ஒன்றில் கீரைச் சாறு. இன்னொன்றில் புதினா அரைத்துவிட்ட மோர். பிறகு ஏதேனுமொரு கொட்டைப் பயிரில் தயாரித்த சாறு. வாழைத்தண்டு சாறு. சாஸ்திரத்துக்கு ஒரு பழச்சாறு.


முடிந்ததா? இந்த ஐந்து பானங்களை அருந்தியானதும் ஐந்து விதமான பச்சைக் காய்கறிகளைக் கொண்டு வந்து வைப்பார்கள். சாலட் என்கிற காய்க்கலவை அல்ல. தனித்தனியே ஐந்து பச்சைக் காய்கறிகள். அதைச் சாப்பிட்ட பிற்பாடு, அரை வேக்காட்டுப் பதத்தில் மேலும் ஐந்து காய்கறிகள் வரும். அதையும் உண்டு தீர்த்த பிறகு முழுதும் வெந்த காய்கறிகள் இன்னொரு ஐந்து ரகம். கண்டிப்பாக ஒரு கீரை இருக்கும்.


ஆக மொத்தம் பதினைந்து காய்கறிகள் மற்றும் ஐந்து பானங்கள். உண்மையில் இவ்வளவுதான் உணவே. ஆனால் நமக்கெல்லாம் சோறின்றி அமையாது உணவு. எனவே கேரளத்து சிவப்பு குண்டு அரிசிச் சோறும் பருப்பும் கேட்டால் கொடுப்பார்கள். அதெல்லாம் முடியாது; எனக்கு சாம்பார் ரசம் இல்லாமல் ஜென்ம சாபல்யம் அடையாது என்பீர்களானால் அதுவும் கிடைக்கும்.


எதற்குமே அளவு கிடையாது என்பது முக்கியம். எதிலுமே குண்டு மிளகாயோ, வெங்காயமோ, பூண்டோ, எண்ணெயோ, புளியோ கிடையாது என்பது அதிமுக்கியம். இந்த ராஜபோஜனத்தை முழுதாக உண்டு முடித்தால் ஆயிரம் கலோரி சேரும். இது ஒரு நாளில் நமக்குத் தேவையான மொத்த கலோரியில் கிட்டத்தட்ட சரிபாதி.


விஷயம் அதுவல்ல. இதே ஆயிரம் கலோரிக்கு நீங்கள் வேறு என்ன சாப்பிட்டாலும் வயிறு புளிப்பானை போலாகிவிடும். ஆனால் இந்தக் குறிப்பிட்ட சாப்பாடு பசியைத் தீர்க்குமே தவிர வயிற்றை அடைக்காது. உண்ட உணர்வே இன்றி பசியழிப்புச் சேவையாற்றும் அந்நூதன உணவு என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. திரும்பத் திரும்ப அந்த உணவகத்துக்குச் சென்று சாப்பிட்டுப் பார்த்தேன். கூடவே ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் உணவு முறையைப் பற்றிப் படிக்கவும் ஆரம்பித்தேன்.


அதர்வ வேதத்தின் ஒரு பகுதியாக வருகிற ஆயுர்வேதம் என்பது சித்த வைத்தியத்துக்கு அண்ணனா தம்பியா என்றொரு விவாதம் ரொம்ப காலமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அது என்னவானாலும் இரண்டும் சகோதர ஜாதிதான் என்பதில் சந்தேகமில்லை. ஆயுர்வேதம் என்பது சுக வாழ்க்கை, சொகுசு வாழ்க்கைக்கான அறிதல் முறை. வெறும் மருத்துவமாக மட்டுமே அறியப்பட்டிருந்தாலும் இதில் வேறு பல சங்கதிகள் இருக்கின்றன. சமையல் கலையைப் பற்றி ஆயுர்வேதம் பேசும். சாப்பாட்டு முறை பற்றிப் பாடம் எடுக்கும். சட்டென்று அங்கிருந்து கிளம்பி விவசாயம் செய்வதைக் குறித்து விளக்கம் சொல்லும். கொஞ்சம் அறிவியல் வாசனை காட்டும். தடாலென்று தடம் மாறி ஜோதிட விளக்கம் சொல்லும். இன்னதுதான் என்று கிடையாது. மனுஷனாகப் பட்டவன் சௌக்கியமாக வாழவேண்டும். அதற்கு என்னெல்லாம் தேவையோ அதெல்லாம் இதில் உண்டு.


அடிப்படையில் ஆயுர்வேதம் சுட்டிக்காட்டுகிற ஒரு முக்கியமான சங்கதி என்னவென்றால், இப்புவியில் நம் கண்ணுக்குத் தென்படுகிற அத்தனைத் தாவரங்களுமே ஏதோ ஒரு விதத்தில் மருத்துவ குணம் கொண்டதுதான். சிலவற்றின் பயன்பாடு நமக்குத் தெரிந்திருக்கிறது. இன்னும் தெரியாத ரகசியங்கள் எவ்வளவோ உள்ளன. ஆரோக்கியமானது, நமது உடலுக்குள் உற்பத்தியாகிற சமாசாரம். இத்தாவரங்கள் அதைப் போஷித்து பீமபுஷ்டி அடைய வைக்க உதவுபவை.


சஞ்சீவனத்தில் உண்ட உணவும் இங்குமங்குமாகப் படித்த சில விஷயங்களும் சேர்ந்து என்னை ஒரு வழி பண்ண ஆரம்பித்தன. அதுவரை எனக்கு எண்ணமெல்லாம் எண்ணெய்ப் பதார்த்தங்களாகவே இருந்தது. இனிப்பு என்றால் கிலோவில்தான் உண்ணவே ஆரம்பிப்பேன். அது டன்னிலும் குவிண்டாலிலும் போய் நிற்கும். பரோட்டாவில் ஆரம்பித்து பீட்சா வரை தேக ஹானிக்கு ஆதாரமான சகலமான உணவினங்களையும் ஒரு வேள்வியேபோல் தின்று தீர்த்துக்கொண்டிருந்தேன்.


சட்டென்று ஒருநாள் போதும் என்று தோன்றியது. அன்றைக்குத்தான் இரண்டு முழு திருப்பதி லட்டுகளை ஒரே மூச்சில் கபளீகரம் செய்திருந்தேன்.


(ருசிக்கலாம்…)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 11, 2017 08:31

பொலிக! பொலிக! 58

‘நகர்வலம் போகலாமா?’ என்று அகளங்கன் கேட்டான்.


உறையூர் சிற்றரசனுக்கு அவ்வப்போது அந்த ஆசை வந்துவிடும். ஆங்காங்கே பல்லக்கை நிறுத்தி இறங்கி மக்களோடு பேசுகிற அரசன். ராஜேந்திரனுக்குக் கட்டுகிற கப்பத்தொகையை அவர்களே அளிக்கிறார்கள் என்பதை எப்போதும் மறவாத மன்னன். முடிந்ததைச் செய்வதில் அவனுக்கு ஒரு திருப்தி. செய்ய முடியாவிட்டாலும் காது கொடுத்துக் கேட்பதிலும் அன்பாக நாலு வார்த்தை பேசுவதிலும் அவனை விஞ்ச ஆள் கிடையாது. மக்களுக்குப் பிடித்த மன்னனாக இருப்பது எல்லோருக்கும் முடிகிற காரியமல்ல. அகளங்கன் அப்படி இருந்தான். 


வில்லி அவனிடம் மெய்க்காப்பாளனாக இருந்தபோது வாரம் ஒருமுறையாவது நகர்வலம் கிளம்பிவிடுவான். ஒவ்வொரு பகுதியின் பிரச்னையையும் வில்லி முன்கூட்டியே மன்னனிடம் விவரித்துவிடுவது வழக்கம். என்ன பேசவேண்டும், எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று அவனுடன் விவாதித்துக்கொண்டு கிளம்பினால் போகிற காரியம் எளிதாக முடியும்.


சந்தேகமில்லாமல் அகளங்கனுக்கு வில்லி பெரும் பலமாக இருந்தான். சட்டென்று இடம் மாறிச் சென்றுவிட்ட வில்லி.


‘என்னால் நம்பவே முடியவில்லை அமைச்சரே. நமது உறங்காவில்லி திருவரங்கத்து உடையவரின் தாசானுதாசராகி, அவரது மடமே கதியென்று கிடக்கிறாராமே?’


‘ஆம் மன்னா. சேரன் மடத்துக்குச் சற்றுத் தள்ளி ஒரு குடிசை போட்டுக்கொண்டு வசிக்கிறார் என்று கேள்வி.’


‘பொன்னாச்சி ஒப்புக்கொண்டுவிட்டாளா? இந்த வாழ்க்கை அவளுக்கும் பிடித்திருக்கிறதாமா?’


‘நீங்கள் வேறு. அரங்கன் சேவையில் அவள் வில்லியை விஞ்சிவிடுகிறாள் என்று திருவரங்கத்துக்காரர்கள் சொல்கிறார்கள். உடையவர் இட்ட பணியை மறு கணமே இருவரும் போட்டி போட்டுக்கொண்டு நிறைவேற்றுகிறார்களாம்.’


‘வியப்புத்தான். என்னிடம் வில்லி பணியாற்றிக்கொண்டிருந்தவரை பொன்னுக்கும் பொருளுக்கும் அவருக்குப் பஞ்சமே கிடையாது. முடிந்தவரை அவரை நாம் சௌக்கியமாகத்தான் வைத்திருந்தோம். சட்டென்று எப்படி இப்படியொரு துறவு மனப்பான்மை வந்துவிட முடியும்?’


‘அது துறவு மனப்பான்மை அல்ல மன்னா. தன்னையும் தன்னைச் சார்ந்தோரையும் நேசிப்பதில் இருந்து உயர்ந்து புவி முழுவதையும் நேசிக்கிற பெருமனம். உடையவரைச் சேர்ந்தவர்கள் அத்தனை பேருமே அப்படித்தான். வில்லிக்கு அவர் அரங்கனின் கண்ணைத் திறந்து காட்டிவிட்டாரே. அதற்குமேல் ஒருவர் எப்படி மாறாதிருக்க முடியும்?’


அகளங்கனுக்கு அது தீராத வியப்பு. அப்படியா அப்படியா என்று வாய் ஓயாமல் வெகுநாள் கேட்டுக்கொண்டே இருந்தான். இனி அரங்கனின் சேவையே வாழ்க்கை என்று வில்லி முடிவெடுத்து திருவரங்கத்திலேயே தங்கத் தொடங்கியபோது, ‘தொந்தரவு செய்யாதீர்கள், அவர் விருப்பப்படி இருக்கட்டும்’ என்று சொன்ன மன்னன் அவன்.


‘வில்லி இங்கில்லாவிட்டால் என்ன? அவரது மருமகன்கள் இருவரும் நமது படையில்தானே பணியாற்றுகிறார்கள்?’


‘யார், வண்டவில்லியையும் செண்டவில்லியையும் சொல்கிறீர்களா? அவர்களும் பாதி நேரம் சேரன் மடமே கதியென்றுதான் இருக்கிறார்கள். இங்கே வேலை முடிந்தால் அடுத்த நிமிடம் திருவரங்கத்துக்குக் கிளம்பிவிடுகிறார்கள்.’


‘அட, அப்படியா?’


‘ஆம் மன்னா. ராமானுஜரிடம் பஞ்ச சம்ஸ்காரம் பெற்று அவர்களும் வைணவ தரிசனத்துக்குத் தம்மை ஒப்புக்கொடுத்துவிட்டதாகக் கேள்வி.’


அகளங்கனுக்கு இது இன்னும் ஆச்சரியமாக இருந்தது. வில்லியின் மருமகன்கள் இருவரும் இளைஞர்கள். வாலிப மிடுக்கும் வயதின் வேகமும் கொண்டவர்கள். தவிரவும் மல்லர்கள். வீரம் அவர்கள் ரத்தத்தில் தோய்ந்தது. அகளங்கனின் படையில் முக்கியமான வீரர்களாக அடையாளம் காட்டப்பட்டவர்கள். காதல், திருமணம், குடும்பம், செழிப்பான வாழ்க்கை என்று இயல்பாக எழக்கூடிய ஆசைகளை ஒதுக்கிவிட்டு எப்படி அவர்களாலும் இறைப்பணியில் ஒதுங்க முடிந்தது?


எப்படி யோசித்துப் பார்த்தாலும் அகளங்கனுக்குப் புரியவில்லை. ‘எங்கே, கூப்பிடுங்கள் அவர்கள் இருவரையும். இன்று நகர்வலத்துக்கு அவர்களும் வரட்டும் நம்மோடு’ என்று உத்தரவிட்டான்.


செய்தி வண்டவில்லிக்குப் போனது. ‘மன்னர்பிரான் அழைக்கிறார். நகர்வலம் புறப்பட வேண்டுமாம். உன்னையும் உன் சகோதரனையும் கையோடு அழைத்து வரச் சொன்னார்!’


‘அப்படியா? இதோ’ என்று இருவரும் புறப்பட்டார்கள்.


வீட்டை விட்டு வெளியே வந்ததும் வானம் பார்த்த வண்டவில்லிக்குச் சட்டென்று சிறு தயக்கம் எழுந்தது. கருமேகங்கள் சூழத் தொடங்கியிருந்தன. சட்டென்று அவன் அரண்மனையை நோக்கி ஓடத் தொடங்கினான். செண்டவில்லியும் அவன் வேகத்துக்கு ஈடு கொடுத்து உடன் ஓட,  சில நிமிடங்களில் அரண்மனையை அடைந்தார்கள்.


‘நில்லுங்கள். எதற்கு இப்படி ஓடி வருகிறீர்கள்?’ வாயிற்காப்போன் தடுக்க, ‘அட நகர்ந்து நில்லப்பா.. மன்னர் எங்கே? கிளம்பிவிட்டாரா? அவரைத் தடுத்தாக வேண்டும். வழியை விடு’ என்று அவனை விலக்கிவிட்டு இருவரும் சபையை நோக்கி ஓட்டமாக ஓடினார்கள்.


மன்னர் அங்கே நகர்வலத்துக்குப் புறப்பட்டு, மந்திரிகளுடன் தயாராகக் காத்திருக்க, ‘ஓ மன்னா! நாரணன் வந்தான், நாரணன் வந்தான்! நகர்வலம் இன்று வேண்டாம் மன்னா!’ மூச்சிறைக்கப் பேசினான் வண்டவில்லி.


அகளங்கனுக்கு ஒன்றும் புரியவில்லை.


‘என்ன ஆயிற்று வண்டவில்லி? ஏன் நகர்வலம் வேண்டாம் என்கிறாய்?’


‘வெளியே நாரணன் வந்துவிட்டான். அவன் உலாப் போகிறபோது நாம் போவது எப்படி?’


மன்னனுக்கு அப்போதும் புரியவில்லை. ‘மந்திரியாரே, வெளியே சென்று பார்த்து வாரும். இவன் சொல்வது எனக்கு சுத்தமாகப் புரியவில்லை.’


அமைச்சர் வெளியே போய்ப் பார்த்தார். அப்போது மழை வேகம் எடுத்திருந்தது. நகர்வலம் போவது சிரமம் என்று அவருக்கும் தோன்றியது. யோசனையுடன் உள்ளே வந்தவர், ‘மன்னா, வெளியே நல்ல மழை பெய்கிறது. நாம் இன்னொரு நாளைக்கு நகர்வலம் போகலாம் என்று தோன்றுகிறது!’


மன்னனுக்குப் பெரும் வியப்பாகிப் போனது. ‘வண்டவில்லி, வெளியே மழைதானே வந்திருக்கிறது? நீ நாரணன் வந்தான் என்று சொன்னாயே.’


சட்டென்று அவன் ஆழி மழைக்கண்ணா என்று பாட ஆரம்பித்தான். ஆண்டாளின் பாசுரம். மேகங்களின் அதிபதியான பர்ஜன்ய தேவனை அழைத்து கண்ணனின் கருணைப் பெருமழையே போல் பொழியச் சொல்கிற பாசுரம்.


வண்டவில்லி பாடத் தொடங்கியதும் செண்டவில்லியும் சேர்ந்துகொண்டான். இருவரும் கண்மூடிக் கைகூப்பிப் பாடிக் களித்துக்கொண்டிருப்பதைக் கண்ட அகளங்கனுக்கு ஒரு கணம் அவர்கள் லவகுசர்கள் போலத் தெரிந்தார்கள். என்ன ஒரு மாற்றம்! எப்பேர்ப்பட்ட மாற்றம்! மழையைக் கண்டதும் நாரணன் வந்தான் என்று அறிவிக்க முடிகிற மனம் எப்பேர்ப்பட்ட மனம்! எல்லோருக்கும் முடியுமா இது? சொல்லிக் கொடுத்து வருவதா? பக்தி அனைவருக்கும்தான் இருக்கிறது. ஆனால் சிந்தை முழுதும் எம்பெருமானே நிறைந்திருப்பதென்பது எப்படி சாத்தியம்?


‘முடியும் மன்னா. ஒரு சம்பவம் சொல்கிறேன். முடியுமா முடியாதா என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்!’ என்றார் அமைச்சர்.


(தொடரும்)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 11, 2017 08:30