Pa Raghavan's Blog, page 4
May 9, 2025
அஞ்சலி: ரேவதி (என்கிற) ஈ.எஸ். ஹரிஹரன்
ரேவதி என்கிற ஈ.எஸ். ஹரிஹரன் நேற்றிரவு காலமானார் என்று இன்று காலை தகவல் வந்தது. வாழ்வில் யார் யார் இல்லாவிட்டால் இன்றைய நான் இல்லை என்று எண்ணிப் பார்த்தேன். அந்தச் சிறிய பட்டியலில் அவர் இருந்தார்.
டிசம்பர் 6, 1992 ஞாயிற்றுக்கிழமை அன்று கல்கியில் வேலைக்குச் சேர்ந்தேன். நல்ல நாள் என்று பார்த்ததால், ஞாயிறு என்று பார்க்கவில்லை. அலுவல் நேரம், விடுமுறை நாள் போன்றவற்றில் அரசு அலுவலகங்களைப் போலவே துல்லியம் கடைப்பிடித்தாலும், கல்கி என் விஷயத்தில் அதற்குச் சம்மதித்ததன் காரணம் மிக எளிமையானது. ஆசிரியர் கி. ராஜேந்திரனின் இயல்பே அதுதான். எதையும் மறுக்க மாட்டார். அன்றைக்கு ஈக்காடுதாங்கலில் கல்கி அலுவலகத்துக்குச் சென்று வேலையில் சேர்ந்தேன். கிரா என்னை எடிட்டோரியலுக்கு அழைத்துச் சென்று ஓர் இருக்கையில் அமரச் சொன்னார். ‘கொஞ்ச நேரம் எதுனா எழுதிட்டிருங்க. இன்னிக்கி அது போதும். நாளைலேருந்து கரெக்டா பத்து மணிக்கு வந்துருங்க’ என்று சொன்னார்.
மறுநாள் எனக்கு ஹரிஹரன் சார் அறிமுகமானார். அவர் கோகுலத்தின் ஆசிரியர். காய்ச்சிய பாலின் மீது படியும் ஆடை போன்ற தோற்றம் அவருக்கு. குணமும் குரலும்கூட அதே மிருது. எல்லா சந்தர்ப்பங்களிலும் எல்லோரிடமும் ஒரே விதமான தொனியில்தான் பேசுவார். அது கீழ்க்குரல் இல்லை. ஓங்கியும் ஒலிக்காது. வால்யூம் பட்டனை எப்போதும் ஒன்றில் வைத்தால் எப்படி ஒலிக்குமோ அப்படி. இந்த மனிதருக்கு கோபம், வெறுப்பு, சலிப்பு இதெல்லாம் வரவே வராதா என்று ஆச்சரியமாக இருக்கும். ஆனால் வராது. விடுமுறை நாள்களில் விளையாடித் தீர்த்த பின்பு என்ன செய்வதென்று தெரியாமல் இங்குமங்கும் அலைந்து திரியும் சிறு குழந்தையைப் போலத்தான் எப்போதும் இருப்பார்.
கல்கியில் முதல் முதலில் என்னை அவருக்குத்தான் உதவியாளனாக அமர்த்தினார்கள். சின்னப்பையன் என்று அலட்சியம் காட்ட மாட்டார். மிகவும் மரியாதையோடு நடத்துவார். ‘இதைச் செய்’ என்று சொல்ல மாட்டார். ‘செய்ய முடியுமா? நேரம் இருக்கா?’ என்றுதான் கேட்பார். கோகுலத்துக்கு வருகிற கதைகளை எப்படித் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கற்றுக்கொடுத்தார். கதைகளில் இடம் பெறும் ஒரு சொல்கூடப் பன்னிரண்டு வயதுச் சிறுவர் சிறுமியருக்குப் புரியாமல் போய்விடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார்.
‘குழந்தைகளுக்கு எழுதற கதைல என்ன இருக்கணும்? ஒண்ணு சிரிப்பு வரணும். இல்லேன்னா எதாவது ஒண்ண புதுசா தெரிஞ்சிக்கணும். இந்த ரெண்டும் இல்லேன்னா அது சரியா இல்லேன்னு அர்த்தம்’ என்பார்.
‘அதாவது ரிஜெக்ட் பண்ணிடலாம். கரெக்டா சார்?’ என்று அழுத்திக் கேட்டாலும், ‘திருத்தி சரி பண்ண முடியறதான்னு பாக்கலாம்’ என்றுதான் சொல்வாரே தவிர, எதையும் யாரையும் எதன் பொருட்டும் நிராகரிக்கும் மனம் அடிப்படையிலேயே அவருக்குக் கிடையாது.
கோகுலத்தின் முதலாசிரியர் அழ. வள்ளியப்பாவின் காலத்தில் நான் எட்டாம் வகுப்புச் சிறுவன். அப்போதே கோகுலத்தில் எழுதியிருக்கிறேன். ஹரிஹரன் சாருக்கு அது தெரியும். எனவே என்னை கோகுலத்துக்கு மீண்டும் நிறைய எழுதும்படிச் சொல்லிக்கொண்டிருப்பார். ஆனால், அந்நாள்களில் என் கவனமெல்லாம் கல்கியில் எழுதுவது சார்ந்தே இருந்தது. வேலை பார்ப்பது கோகுலத்துக்காக இருந்தாலும் வாரம் ஒரு சிறுகதையாவது கல்கிக்கு எழுதிக் கொடுத்துக்கொண்டே இருப்பேன். சிறுகதை பிரசுரமாகாவிட்டால் ஏதாவது கட்டுரை எழுதுவேன். சினிமா விமரிசனம் எழுதுவேன். டிவி விமரிசனம் எழுதுவேன். ஏதோ ஒன்று. கல்கியில் வாரம் தவறாமல் என் பெயர் வருகிறதா என்பதில் அப்படியொரு வெறி.
ஹரிஹரன் சாருக்கு நான் கோகுலத்தின்மீது ஆர்வமில்லாமல் இருந்ததில் உண்மையிலேயே மிகுந்த வருத்தம். அது எனக்கு நன்றாகத் தெரியும். என்னை எப்படியும் கல்கிக்கு மாற்றிக்கொண்டுவிடுவார்கள் என்பது அவருக்கும் தெரியும். இருந்தாலும் விடாப்பிடியாக என்னைச் சிறுவர்களுக்கு எழுதச் சொல்லிக்கொண்டே இருப்பார்.
அடிப்படை டெஸ்க் வேலைகளில் அவர்தான் எனக்குப் பயிற்சி அளித்தார். கல்கியில் அப்போது சில பக்கங்கள் மட்டும் வண்ணத்தில் வரும். சில பக்கங்கள் இரண்டு வண்ணங்களில் வரும். அதற்கேற்பக் கதை-கட்டுரைகளை எப்படித் தேர்ந்தெடுப்பது, எதற்கு நான்கு வண்ணம் தேவை, எதற்கு இரண்டு வண்ணங்கள் (கறுப்பு + நீலம் அல்லது கறுப்பு + மெஜந்தா) போதும், இந்த வண்ண வேறுபாடு வாசகரை உறுத்தாத விதத்தில் எப்படிப் பக்கங்களை வடிவமைப்பது என்பதையெல்லாம் அவரிடம்தான் கற்றேன். ஏனோ, நான் கோகுலத்தில் இருந்த ஆறேழு மாதங்களில் ஒரு கதையோ, பாடலோ, துணுக்கோகூட அதில் எழுதவேயில்லை. அப்போது எனக்கு அது குறித்து வருத்தமே ஏற்படவில்லை. ஆனால் அவருக்கு அது பெரிய குறையாகத் தோன்றியிருக்கிறது என்பது பிறகு புரிந்தது. அவரே பல முறை என்னிடம் அது குறித்து வருத்தப்பட்டுச் சொல்லியிருக்கிறார்.
பயிற்சி முடிந்து என்னைக் கல்கிக்கு மாற்றினார்கள். அதன் பிறகும் ஹரிஹரன் சாரை தினமும் பார்ப்பேன், பேசுவேன், சீண்டுவேன் எல்லாம் செய்வேனே தவிர, அவர் இருந்த காலம் வரை கோகுலத்துக்கு எதையுமே எழுதவில்லை. கல்கி அப்போது எண்பது பக்கங்கள். எண்பதில் இருபது பக்கங்களையாவது நான் எழுதிவிட வேண்டும் என்று வெறி கொண்டு வேலை செய்வேன். கண்டேபிடிக்க முடியாதபடி ஒரே இதழில் நான்கைந்து வேறு வேறு மொழி நடைகளிலெல்லாம் எழுதியிருக்கிறேன்.
எனக்குப் பிறகு அவருக்கு உதவி ஆசிரியராக சுஜாதா வந்து சேர்ந்தார் (இப்போது இந்து தமிழ் திசையில் இருக்கிறார்). ஹரிஹரன் சார் ஓய்வு பெறவிருந்த சமயம் அது. தன் குழந்தையை இன்னொரு குழந்தையின் பொறுப்பில் விட்டுவிட்டுக் கடை வீதிக்கு அவசரமாகப் புறப்பட்டுப் போகும் ஒரு தாயைப் போல அவர் சுஜாதாவுக்கு ‘கோகுலத்தைக் கற்பித்த’ காட்சிகள் இன்னும் எனக்கு நினைவிருக்கின்றன.
விடைபெற்ற நாளிலும் அவர் எனக்குச் சொன்னது ஒன்றுதான். ‘கோகுலத்துக்கு எழுதணும். மறந்துடக்கூடாது.’
நான் கோகுலத்தையோ அவரையோ உயிருள்ளவரை மறக்க முடியாது. ஆனால் என் ஆத்திரங்கள், பதற்றங்கள், ஆவேசம் அனைத்தும் தணிந்து, அந்தப் பத்திரிகையில் எழுத வருவதற்கு மேலும் பத்தாண்டுகள் தேவைப்பட்டன. கோகுலத்தில் நான் ‘புதையல் தீவு’ எழுதிய நாள்களில் இதழ் வெளியானதும் எனக்கு வருகிற முதல் போன் ஹரிஹரன் சாருடையதாகத்தான் இருக்கும். ‘ஐஸ் க்ரீம் பூதம்’ எழுதியபோது ஒரு முறை சொன்னார்,
‘எனக்குத் தெரியும், என்னிக்காவது இந்தப் பக்கம் வந்துடுவிங்கன்னு.’
அந்தக் குரலில் இருந்த குதூகலத்தை இப்போது எண்ணிக்கொள்கிறேன். மிக நிச்சயமாக ஒரு குழந்தைக்கு மட்டுமே சாத்தியமான வெளிப்பாட்டு விதம் அது. அவரது வாழ்த்தை ஆசியாக எடுத்துக்கொள்வதாகச் சொன்னேன்.
கற்றுக்கொடுப்போரைத் தவிர, பிற அனைவருக்கும் நாம் படுகிற கடன்களை எப்படியாவது அடைத்துவிட முடியும். தீராக்கடன் என்பது ஆசிரியர்களிடம் படுவது ஒன்றே. ஹரிஹரன் சார், இறுதிவரை என்னைக் கடன்காரனாக வைத்திருக்கப் போகும் மிகச் சிலருள் ஒருவர்.
அஞ்சலி.
All rights reserved. © Pa Raghavan - 2022
May 7, 2025
குறிப்புகளைப் பற்றிய ஒரு குறிப்பு
கையால் எழுதிக்கொண்டிருந்த நாள்களில் என் கையெழுத்து நன்றாக இருந்தது. எவருக்கும் புரியும்படி இருந்தது. குறிப்பாக, பவுண்டன் பேனாக்களைப் பயன்படுத்தி எழுதிக்கொண்டிருந்தபோது உண்மையிலேயே அச்செழுத்தைப் போலவே இருக்கும். பார்க்கர், பைலட் பேனாக்கள், எழுதுபவனின் கையெழுத்தை மெருகூட்டுவதற்கென்றே உருவாக்கப்படுபவை என்று தோன்றும்.
என் கையெழுத்து கெடத் தொடங்கிய புள்ளி, பால்பாயிண்ட் பேனாக்களில் எழுத ஆரம்பித்ததுதான் என்று நினைக்கிறேன். அதிலிருந்து கம்ப்யூட்டருக்கு மாறிய பின்பு, கையால் எழுதுவது அறவே நின்று போனது. எப்போதாவது எழுத நேரும்போதுதான் அது கெடத் தொடங்கியிருக்கிறது என்பது உறைக்கும். ஆனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இனிமேல் கையால் எதற்கு எழுதப் போகிறோம் என்கிற அலட்சியம். அப்படியே விட்டுவிட்டதால் அது தன் இஷ்டத்துக்கு மோசமாகிப் போனது.
சென்ற மாதம் ஆன்லைன் கீதை வகுப்பு ஒன்றனில் சேர்ந்தேன். பதினெட்டு நாள் வகுப்பு. வகுப்பு நடத்தியவர் நல்ல ஞானஸ்தர். பேசும்போதே பத்தி பிரித்துத் தெளிவாகப் பேசுபவராக இருந்தார். கீதையை நான் அணுகும் விதமும் அவர் அணுகிய விதமும் முற்றிலும் வேறு வேறாக இருப்பினும் புதிதாகச் சில தரிசனங்கள் அந்த வகுப்பில் எனக்குக் கிடைத்தன.
விஷயம் அதுவல்ல. அந்த வகுப்பில் கலந்துகொண்ட பதினெட்டு நாள்களும் தவறாமல் அவர் பேசும்போது குறிப்பெடுத்தேன். அவர் என்னவோ நிறுத்தி நிதானமாகத்தான் ஒவ்வொரு சுலோகத்தையும் விளக்கினார். ஆயினும் என்னையறியாமல் கிறுக்கித் தள்ளித்தான் எழுதிக்கொண்டேன். மொத்த வகுப்புகளும் முடிந்த பின்னர் அந்த நோட்டுப் புத்தகங்களைப் புரட்டிப் பார்த்தால் எனக்கே என் கையெழுத்து அவமானமாக இருந்தது. ஒரு அவசர ஆத்திரத்துக்குக் கூட இன்னொருவரிடம் எடுத்துக் காட்ட முடியாது என்று தோன்றியது. நல்ல வேளையாக நான் எழுதுவது எனக்கே புரியாமல் போவதில்லை. அதை நினைத்து மகிழ்ச்சியடைய வேண்டியதுதான் என்று எண்ணிக்கொண்டேன்.
ஒருவரது கையெழுத்து அவரது குணத்தை வெளிக்காட்டும் என்பதை நான் நம்பவில்லை. மிக அழகான கையெழுத்தைக் கொண்ட மிக மோசமான மனிதர்களை நான் அறிவேன். அதைப் போலவே மிக மோசமான கையெழுத்துடைய நல்லவர்களையும் அறிவேன். ஆனால், என் கையெழுத்தைக் கொண்டு என்னால் அறிய முடிந்ததெல்லாம் ஒன்றுதான். பழக்கம் விட்டுப் போனால் எதுவானாலும் சீக்கிரம் கெட்டுப் போய்விடும்.
கடிதங்கள் வழக்கில் இருந்த காலத்தில் கையெழுத்து, பேசுபொருளாக இருந்தது. இன்று அதை யாரும் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை. மிகவும் மோசமாக எழுதப்படும் கையெழுத்து மட்டும் எப்போதாவது சுட்டிக்காட்டப்படுகிறது. சமீபத்தில் சலம் நாவல் பிரதியில் வாசகர் ஒருவருக்கு ‘அன்புடன்’ என்று எழுதிக் கையெழுத்திட்டிருந்த லட்சணத்தைச் சுட்டிக்காட்டி நண்பர் ரமேஷ் வைத்யா ஃபேஸ்புக்கில் கிண்டல் செய்திருந்தார். சிறிது வெட்கமாக இருந்தது.
சில சமயம் தோன்றும். முயற்சி செய்தால் முடியாத செயல் என்ற ஒன்றில்லை. ஆனால் முழு மூச்சாக இறங்க வேண்டும். அப்படிச் சாதித்தவை பல உண்டு. கணிசமான நேரத்தையும் உழைப்பையும் கோரும் விஷயங்களை இப்போதெல்லாம் இது நமக்குத் தேவையா, எடுப்பதா வேண்டாமா என்று தீரப் பரிசீலிக்காமல் கை வைப்பதில்லை. எத்தனை மூட்டைகளைத்தான் முதுகில் ஏற்றிக்கொண்டே போவது?
கையெழுத்து சார்ந்து எனக்குள்ள கவலையெல்லாம் ஒன்றுதான். இப்போது நேரம் இல்லாவிட்டாலும் பிற்காலத்தில் என் மகள் அவற்றைப் படித்துப் பார்க்க நினைக்கலாம். என் கதைகள், கட்டுரைகள் என்று எதுவும் கையெழுத்துப் பிரதியாக இப்போது இல்லை. பிறர் எழுதியவை, பேசியவை, நான் படித்தவை சார்ந்து எழுதி வைத்த குறிப்புகள்தாம் உள்ளன. அவற்றை அவள் எப்போதேனும் எடுத்துப் படித்துப் பார்க்க வேண்டும் என்பது என் விருப்பம். நான் ஒரு தரமான ‘நோட்ஸ்’ தயாரிப்பாளன். என் குறிப்புகளைக் கொண்டு மிக நிச்சயமாக அந்தக் கருப்பொருள் சார்ந்து நான் அறிந்தவற்றின் முழுமையை எட்டித் தொட்டுவிட முடியும் என்று நம்புகிறேன். அதனைப் பிடித்துக்கொண்டு இன்னும் பரந்த வெளியில் தேடிச் செல்லவும் ஆங்காங்கே வழி சொல்லியிருப்பேன்.
சலம் எழுதுவதன் பொருட்டு சுமார் இரண்டாண்டுக் காலம் அதர்வ வேதத்தையும் அதன் உபநிடதங்களையும் மட்டும் படித்துக்கொண்டிருந்தேன். வீட்டிலும் அலுவலகத்திலுமாகக் கையால் எழுதிய குறிப்புகள், கணினியில் டைப் செய்து வைத்த குறிப்புகள், போனில் எழுதி வைத்த குறிப்புகள், பிடிஎஃப்பில் ஹைலைட் செய்து, கமெண்ட் பாக்ஸில் எழுதியவை, பிடிஎஃப்களிலேயே பக்கவாட்டில் ஆப்பிள் பென்சில் கொண்டு எழுதிய குறிப்புகள், தொடர்பான இணையச் சுட்டிகள் என்று அவற்றை மட்டும் தொகுத்தால் இன்னொரு சலம் அளவுக்குப் புத்தகமே தேறும்.
எக்காலத்திலாவது என் மகள் அவற்றையெல்லாம் எடுத்துப் பார்ப்பாள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. சில குறிப்புகள் அவளுக்குப் புரியும். பெரும்பாலும் புரியாமல் போகப் போகிறதென்பதுதான் வருத்தமாக இருக்கிறது. வாழ்க்கை முழுதும் ஒரு மனிதன் அப்படி என்ன கிறுக்கித் தள்ளியிருக்கிறான் என்கிற ஆர்வத்தை மட்டும் தனக்கென வைத்துக்கொண்டு அந்தப் பிரதிகளைத் தனக்கடுத்த தலைமுறைக்கு அவள் விட்டுச் செல்லக்கூடும்.
அவளது ஓய்வுக் காலத்தில், அதைப் படிக்க முடியாவிட்டாலும் இந்தக் குறிப்பைப் படிப்பாள் அல்லவா? என் புத்தகங்களில் என்னையும் என் நோட்டுப் புத்தகங்களில் என் அக்கறைகளையும் சேமித்து வைத்திருக்கிறேன் என்பதாவது அப்போது அவளுக்குப் புரியும்.
இந்த இரண்டுக்கும் நடுவே உள்ள குறுகிய இடைவெளியில்தான் வாழ்ந்து தீர்த்துக்கொண்டிருக்கிறேன்.
All rights reserved. © Pa Raghavan - 2022
May 4, 2025
பயண இலக்கியம்
குலசேகரபுர க்ஷேத்திரமென்னும் குரோம்பேட்டையிலிருந்து தெற்கே பதினைந்து மைல்களுக்கு அப்பால் உள்ள காட்டாங்குளத்தூர் என்னும் தலத்துக்கு, பாலிய சிநேகிதன் ஒருவனது குமாரத்தியினுடைய கலியாண நிமித்தம் சென்று வர வேண்டியிருந்தது. முன்னொரு காலத்தில் வேதாசலபுரமென்றும் பின்னொரு காலத்தில் மறைமலை நகரென்றும் அழைக்கப்பட்ட காட்டாங்குளத்தூருக்கு சாலை மார்க்கமாக அல்லாமல் மின்சார இரயில் வண்டி மார்க்கமாகப் பயணப்பட முடிவு செய்தேன்.
இந்நாள்களில் புறநகர் இரயிற் பயணங்களை மேற்கொள்வதென்பதே எனக்கு அரிதாகிப் போய்விட்டது. எங்கு செல்வதென்றாலும் இரு சக்கர வாகனத்திலோ ப்ளெசரிலோ செல்லும் வழக்கம் உண்டான பின்பு புறநகர் இரயிற் பயணம் நினைவை விட்டே அகன்றுவிட்டிருந்தது. ‘நீங்கள் அவ்வாறு இருத்தல் ஆகாது. மக்களோடு மக்களாகப் பயணஞ்செய்து திரும்புவதன் சந்தோஷத்தினை இழக்கின்றீர்கள். தவிர பிரயாண நெரிசலில் சிக்காது சென்று வரவும் அதுவே சரியான உபாயமுமாகும்’ என்று மனையாளும் பரிந்துரைத்தபடியினாலே காட்டாங்குளத்தூர் கலியாண வைபவத்துக்கு இரயில் பயணம் மேற்கொள்வதென்று தீர்மானஞ் செய்துகொண்டேன்.
விடிகாலை சூர்யோதயத்துக்கு மிகவும் முன்னால் ஐந்து மணி அளவிலேயே எழுந்து ஸ்நானபானஞ்செய்து, ஐந்தே முக்காலுக்குத் தயாரானேன். என் மனையாளே இரு சக்கர வாகனத்தில் என்னை ஏற்றிச் சென்று இரயிலடியில் இறக்கிவிட்டார். முன்னொரு காலத்திலே நான் குரோம்பேட்டை என்னும் குலசேகரபுரத்தின் இரயிலடிக்கு நாடோறும் படியேறி இறங்குபவனாக இருந்ததெல்லாம் நினைவைக் கவ்வி ஆக்கிரமித்துக் குதியாட்டம் போடத் தொடங்கியது. மூன்று பத்தாண்டுகள் கழிந்த பிற்பாடும் ரயிலடியின் தோற்றத்தில் எந்த மாற்றமும் ஏற்பட்டிருக்கவில்லை என்பதைக் காண அதிசயமாயிருந்தது. இடப்புறமொன்றும் வலப்புறமொன்றுமாக இரண்டு நடைமேடைகள் புதிதாக எழுப்பப்பட்டிருந்தன. ஜனங்கள் விண்ணளாவிய படிகளில் ஏறி மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அவதிப்படாதிருக்கும் பொருட்டு சர்க்கார் எப்போதோ தானியங்கி மின்சாரப் படிக்கட்டுகளைக் கட்டுவித்திருக்க வேண்டும். அதை நமது கலாசாரப்படிப் பயன்கொள்ளத் தகாததாக உருமாற்றிக் கழட்டி வைத்திருந்தனர். நான் நீண்ட பெரும் படிகளேறி மேலே சென்று பயணச் சீட்டு வாங்குமிடத்தை அடைந்தேன்.
காட்டாங்குளத்தூருக்குச் சென்று திரும்பும் விதமான சீட்டொன்றைக் கோரி, நூறு உரூபாத் தாளினைச் சீட்டுப் பணியாளரிடம் நீட்டியபோது, ‘சில்லறையாக இருபது உரூபா இருந்தால் கொடுங்கள்’ என்று சொன்னார். இது எனக்குச் சிறிது வியப்பையும் மேலதிகக் குழப்பத்தையும் விளைவித்து, ‘எத்தனை உரூபா?’ என்று கேட்டு உறுதி செய்துகொள்ளப் பார்த்தேன்.
‘போகப் பத்தும் திரும்பி வருவதற்குப் பத்துமென ஆக மொத்தம் இருபது உரூபா’ என்று சீட்டுப் பணியாளர் மீண்டும் சொல்லவே, இருபது உரூபாக்களை எண்ணிக் கொடுத்துச் சீட்டைப் பெற்றுக்கொண்டு, இரயில் வண்டி வந்து நிற்கும் நடைமேடையை நோக்கி இறங்கத் தொடங்கினேன்.
கால மாற்றத்தில் விலைவாசி எல்லாம் ஆகாசத் தொலைவினை நோக்கிச் சென்றுவிட்டிருந்தாலும் சாமானிய மக்கள் செலவுச் சுமையின்றிப் பயணஞ் செய்வதன் பொருட்டு இரயிற்பாதைக் கட்டணத்தை மட்டும் பெரிய அளவினிலே உயர்த்தாது விட்டு வைத்திருக்கும் சர்க்காரின் பெரிய மனத்தினை எண்ணிச் சிலாகித்த வண்ணம் இரயில் வருவதற்காகக் காத்திருக்கலானேன்.
சில மணித்துளிகளில் சென்னை கடற்கரையிலிருந்து திருக்கச்சி மாநகர் வரை செல்லும் இரயில் வண்டியொன்று வந்து நின்றது. ஏறியதும் சன்னலோர இருக்கை சித்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். இவ்வாறு சன்னலோர இருக்கையில் அமர்ந்து இரயிற் பிரயாணஞ்செய்து நெடுங்காலமாகிவிட்டதை நினைத்துக்கொண்டேன். காலைச் சூரியனின் முதற் கிரணங்கள் படரத் தொடங்கிவிட்டிருந்தன. புள்ளினங்கள் வானில் விரைய, சில்லென்ற காற்று மேனியில் மோத, இரயிற் பயணம் ஆரம்பமானது.
வண்டி சானடோரியம், தாம்பரம் என்கிற இரண்டு நிறுத்தங்களைக் கடந்து பயணப்படத் தொடங்கியபோது, காலை நேர ஆரோக்கிய உணவெனச் சொல்லி அவித்த நிலக்கடலை விற்றுக்கொண்டு வந்தார் ஒரு நாரி. முன்பெல்லாம் பழைய செய்தித் தாளில் பொட்டணம் மடித்துத் தருவார்கள். இன்றோவெனில் காகிதக் கிண்ணத்தில் அவித்த நிலக்கடலையைக் குவித்துத் தருகிறார்கள். அந்த விடிகாலைப் பொழுதினிலும் அவித்த கடலையை விரும்பி உண்ணும் மக்கள் இருப்பதைக் கண்டு மனத்தின்கண் குறித்துக்கொண்டேன். அவ்வண்ணமே புஷ்பங்கள் விற்கும் பெண்களும் பாடசாலைகளுக்குச் செல்லும் பிள்ளைகளுக்குப் பயன்படும் பென்சில், பேனாக்களை விற்போரும் கூவி விற்றுச் சென்றதைக் கண்டேன். அவர்களைப் பொருட்படுத்தாது, பெட்டியிலிருந்தோர் அவரவர் கைப்பேசியில் கண்ணுங்கருத்துமா யிருந்ததையுங் கண்டேன்.
இரயில் வண்டி பெருங்களத்தூர் நிறுத்தத்தை நெருங்கியது. பண்டொரு காலத்தில் பிற்காலப் பல்லவர்களுக்கும் மிச்சம் மீதமிருந்த பிற்காலச் சோழர்களுக்கும் யுத்தம் மூண்டபோது அது நிகழ்ந்த பெரும் களமாக இருந்தபடியினாலே அந்தத் தலத்துக்குப் பெரும் களத்தூர் என்ற பெயர் உண்டானது. (இதனைத் திரித்து, சோழர்கள் ஆண்ட காலத்திலே பெரிய குளமொன்று இந்த இடத்தினில் இருந்தபடியினாலே இது பெருங்குளத்தூர் என அழைக்கப்பட்டதாகவும் பின்னர் அது மருவி பெருங்களத்தூரானதாகவும் சொல்வர். ஆயினும் அதற்கு சரித்திர சாட்சியங்கள் கிடையா. சரிதான், பல்லவ-சோழ யுத்த களேபரத்துக்கேனும் சரித்திர சாட்சியம் உண்டாவென்பீரானால் அதுவும் கிடையா.) ஆனால் இந்த ஊரினையும் கமலகாசன் என்னும் கலாவிற்பன்னர் உருக்கொண்ட களத்தூரினையும் போட்டுக் குழப்பிக்கொள்ளல் ஆகாது. வெறும் களத்தூர், முதுகளத்தூர், பெருங்களத்தூர், சிறுகளத்தூர் என மாகாணமெங்கும் பல போர்களின் நினைவாகக் களப்பெயர் பூண்ட தலங்கள் உண்டு.
பெருங்களத்தூரினின்று புறப்பட்ட இரயில் வண்டி அடுத்தபடியாக வண்டலூர் நிறுத்தத்தில் நின்றது. சுற்றிலும் வனம் அடர்ந்த மலைகளும் சிறியதொரு நதியும் ஓடிய பிராந்தியமாகப் பொது யுகம் இரண்டாம் நூற்றாண்டு வரையிலும் இத்தலம் திகழ்ந்திருக்கிறது. அதன் பிறகு வனம் சுருங்கி, மலைகள் நாலாபுறமும் பெயர்க்கப்பட்டு, நதி சேர்த்த வண்டலெல்லாம் கட்டுமானப் பணிகளுக்கென்று எடுத்துச் செல்லப்பட்ட பின்பு, நதியும் தீர்ந்துபோய் விடவே, சிறியதொரு கானுள்ள பிராந்தியமாகச் சுருக்கி வடிவமைக்கப்பட்டது. கால மாற்றத்தில் இவையெல்லாம் தவிர்க்க இயலாததன்றோ? இருப்பினும் நமது சரித்திரம் வேர் கொண்ட புவியியலினை முற்றிலுமாக மறந்துவிடுதல் தகாதென்ற எண்ணத்தில் சர்க்கார் இந்தத் தலத்தினிலே கானுயிர்களுக்கென ஒரு பூங்கா அமைத்துச் செம்மையாகப் பராமரித்து வருகின்றார்கள். சிங்கம், புலி போன்ற கொடுமிருகங்களிலிருந்து நாய் பூனை போன்ற மென்மிருகங்கள் ஈறான ஐயறிவினங்கள் இந்தப் பூங்காவிலே சௌக்கியமாக வாசஞ்செய்து வருகின்றன.
வண்டலூர் நிறுத்தத்தினை அடுத்து வந்தது ஊரப்பாக்கம் இரயில் வண்டி நிறுத்தம். இது காலத்தால் மிகவும் பிற்பட்ட குடியிருப்புப் பிராந்தியமென அறியப்படுவது. மக்கட்தொகைப் பெருக்கம் மிகத் தொடங்கி, வடக்கே சென்னை மாநகரமும் தெற்கே செங்கற்பட்டு மாநகரமும் இடுப்பூதிப் போக ஆரம்பித்தபோது இரு பெரும் நகரங்களுக்கு இடைப்பட்ட மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலப் பரப்பும் கானிழந்து ஆங்காங்கே மேகத் திட்டுகளைப் போலே கான்கிரீட்டெனும் கவின்மிகு கற்கோலம் பூணத் தொடங்கியதன் விளைவாக உற்பத்தியான நகரங்களுள் இதுவும் ஒன்றாகும். இதனையடுத்த கூடுவாஞ்சேரி என்கிற இரயில் நிறுத்தப் பிராந்தியமும் அப்படியே உருவானது என்பதும் நினைவிற் கொள்ளத் தக்கது. இப்புதிய நகரங்களின் இறுதியொட்டாக வருகின்ற பாக்கம், சேரி போன்ற பதங்களைக் கூர்த்து நோக்குவோமானால் ஆதியிலே இவ்விடங்கள் எவ்விதமாக இருந்தனவென்பது தெள்ளெனப் புலப்படும்.
எட்டு மணி ஆவதற்கு எட்டு மணித்துளிகள் இருந்தபோது ஒரு வழியாக இரயில் வண்டி காட்டாங்குளதூர் நிறுத்தத்துக்கு வந்து சேர்ந்தது.
இறங்கும்போதே காட்டாங்கொளத்தூர் என்ற பிழைபட்ட பெயர்ப்பலகை கண்ணில் தென்படவே, சிரித்துக்கொள்ளும்படியானது. பெருங்களத்தூரைப் பெருங்குளத்தூராக்கியதைப் போலவே காட்டாங்குளத்தூரைக் காட்டாங்கொளத்தூராக்கிவிட்டிருக்கின்றார்கள்!
முன்னொரு காலத்தில் இந்த ஊரின் சிறப்பைச் சொல்வதற்குச் சிவானந்த குருகுலம் எனும் ஓர் ஆசிரமம் இருந்தது. ஆசிரமம் இருக்கும் இடத்தைச் சுற்றிப் பெருங்காடாக மட்டுமே இருக்கும். மாலைப் பொழுதில் நரிகளைப் பார்வையிடலாம். சற்று உள்ளடங்கிச் சென்றால் வேறு சில காட்டு மிருகங்களும் காணக் கிடைக்கும் என்றாலும் மிருகங்களைத் துன்பப்படுத்தலாகாது என்னும் எண்ணத்தில் நான் சென்றதில்லை. பிற்பாடு மக்கள் இங்கெல்லாம் குடியேறத் தொடங்கிய பின்பு வீடுகளும் சாலைகளும் விளக்குகளும் வணிக வளாகங்களும் கலாசாலைகளும் இதர நவீனங்களும் ஆமைபோலப் புகுந்து நிறைந்துவிட்டிருக்கின்றன. மிருகங்கள் இருந்த இடமும் தெரியாமல், சென்ற இடமும் தெரியாமல் போய்விட்டன.
காணாத காட்சியெல்லாம் கண்டு ரசித்த வண்ணம் இரயில் நிலையத்தினின்றும் வெளியேறிச் சாலையை அடைந்தேன்.
கண்ணெட்டும் தொலைவிலேயே நான் போகவிருந்த கலியாண மண்டபம் இருந்தது. மகிழ்ச்சியுடன் அதனை எட்டிப் பிடித்து, வைபவத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திவிட்டு, பாலிய நண்பர்களையெல்லாம் சந்தித்துச் சிறிது நேரம் சல்லாபித்துக்கொண்டிருந்தேன். பிரிய மனமின்றிப் பிரிந்து மீண்டும் காட்டாங்குளத்தூர் இரயில் நிலையத்தை அடைந்தபோது நேரம் ஒன்பதாகியிருந்தது. செங்கற்பட்டிலிருந்து சென்னைக் கடற்கரை நோக்கிச் செல்லும் இரயில் வண்டி வந்ததும் ஏறிக்கொண்டேன்.
ஒன்றரை நாழிகைப் பொழுதுக்குள் குரோம்பேட்டை இரயில் நிலையத்தை வந்தடைந்துவிட முடிந்தது. பேசி வைத்திருந்தாற்போலே மனையாள் மீண்டும் இரு சக்கர வாகனத்துடன் இரயிலடிக்கு வந்து காத்திருந்தாள். எனவே அதிலேறி இல்லம் வந்தடைந்து, சென்று வந்த சங்கதிகளையும் க்ஷேமலாபங்களையும் அவளிடம் சொல்லிக் களித்தேன். குறுக்கிடாமல் கேட்டுக்கொண்டிருந்துவிட்டுப் பிறகு அவளொரு முத்தாய்ப்பு வைத்தாள். அதுவாவது:-
‘இருவது ரூவாய்ல மேட்டர் முடிஞ்சதுல கிளுகிளுப்பாகி இவ்ள பேசுற. இதே கார் வெச்சிகிட்டுப் போயிருந்தேன்னா ஆயிர்ருவா பழுத்திருக்கும். அப்ப இந்த வாயி திறக்கும்?’
All rights reserved. © Pa Raghavan - 2022
April 28, 2025
பிரதி கர்ப்பம்
எப்போதாவது எழுதுபவர்களுக்கும் இதற்கும் தொடர்பில்லை. எப்போதாவது மட்டும் எழுதாமல் இருப்போருக்கு மட்டுமே இந்த வலியின் தீவிரம் புரியும்.
ஒரு பெரிய நாவல் அல்லது ஏதாவது ஒரு புனைவல்லாத நூலை எழுத ஆரம்பிப்பேன். முன்னதாகப் பல மாத காலம் – சில சமயம், சில வருட காலம் அதற்காக உழைத்திருப்பேன். தகவல்கள் தேடித் திரட்டித் தொகுத்து, ஒரு வடிவத்துக்குக் கொண்டு வந்த பின்புதான் எழுதலாம் என்றே தோன்றும். அதன் பிறகு நல்ல நாள் பார்த்து, ஊர் உலகத்தில் வசிக்கும் அனைத்து தெய்வங்களையும் சகாயத்துக்குக் கூப்பிட்டு வைத்துக்கொண்டு, என்னைக் காக்கும் சித்தர்களைத் தொழுது, மனத்துக்கண் தாற்காலிக மாசிலனாகி, செயலொன்றே சித்தம் என்று ஆரம்பித்திருப்பேன். பத்திருபது நாள்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லாமல் எழுதி நூறு, நூற்றைம்பது பக்கங்கள் அல்லது பதினையாயிரத்தில் தொடங்கி இருபதாயிரம் சொற்கள் வரை எழுதி முடித்திருப்பேன். ஏதாவது ஒரு காரணத்தினால் ஒன்றிரண்டு நாள்களுக்கு எழுத முடியாமல் போகும். பிறகு எனக்கே தெரியாமல் சுதி பிசகி நின்றுவிடும்.
அப்படி நிற்கும் பிரதிகளைச் சிறிது இடைவெளி விட்டு மீண்டும் தொடரப் பார்ப்பேன். பெரும்பாலும் முடியாது. எனவே மீண்டும் முதலிலிருந்து எழுத ஆரம்பிப்பேன். அப்படி எழுதி நிறைவு செய்த நூல்கள் சில உண்டு.
உதாரணமாகக் கபடவேடதாரி. இந்த நாவலை மூன்று முறை கிட்டத்தட்ட முழுமைக்கு அருகே கொண்டு சென்று நிறுத்தி, நிறுத்தி, மீண்டும் முதலில் இருந்து தொடங்கி, நான்காவது முறைதான் எழுதி முடிக்க முடிந்தது. என்ன காரணம் என்று கேட்டால், தெரியாது. பூனைக்கதையின் இரண்டாம் பாகத்தை மட்டும் முழுதாக இரண்டு முறை எழுதியிருக்கிறேன். இறவானில் ஒரு குறிப்பிட்ட அத்தியாயத்தை மட்டும் பதினேழு முறை மாற்றி மாற்றி எழுதிப் பார்த்தேன். முற்றிலும் வேறு வேறு வடிவங்களில்.
அரசியல் நூல்கள் எழுதும்போது இது அடிக்கடி நடக்கும். 9/11, ஐ.எஸ்.ஐ., காஷ்மீர் (நினைவுப் பிசகால் மாற்றிச் சொல்லியிருக்கிறேன்.) சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்துக்கு – மூன்றையும் முழுதாகவே இரண்டு முறை எழுதியிருக்கிறேன். வட கொரியா எழுதும்போது குறைந்தது இருபது முறையாவது வேலை தடைப்பட்டு நின்றது. கிட்டத்தட்ட ஒரு வருட காலம் என் மனைவிக்குக் கூடச் சொல்லாமல் ரகசியமாக எழுதிக்கொண்டிருந்துவிட்டு, இறுதியில் அவளது ஆலோசனை இல்லாமல் அதை எழுதி முடிக்கவே முடியாது என்று தோன்றிய பின்புதான் ஒருநாள் காலை நடையின்போது நான் அதை எழுதிக்கொண்டிருக்கும் விஷயத்தைச் சொன்னேன். பிறகு எழுத்துக்கான திட்டத்தை அவள் சொன்னபடி வகுத்துக்கொண்டு மீண்டும் எழுதத் தொடங்கி, ஐந்து மாதங்களில் முற்றிலும் புதிய பிரதி ஒன்றை எழுதி நிறைவு செய்து அச்சுக்குக் கொடுத்தேன். இவையெல்லாம் எப்படியாவது முடித்துவிட்ட புத்தகங்கள்.
ஆனால் இன்று வரை ஏன் நின்றது என்றும் தெரியாமல், எப்படித் தொடர்வது என்றும் புரியாமல் போட்டு வைத்திருக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை இருபதுக்கு மேலே (மேலே உள்ள படத்தில் இருக்கும் கோப்புகளை எண்ணிக்கொள்ளுங்கள்). இதில் மூன்று நாவல்களும் அடங்கும்.
எழுதும் விஷயத்தில் நான் மிகுந்த கவனமும் கூர்ந்த அக்கறையும் கொண்டவன். மனத்துக்குள் முற்றிலும் தயாராகாமல் எழுதத் தொடங்கியதே இல்லை. கருவும் மொழியும் உருத் திரண்டு, ஒத்திசைவாய் வருவதை உறுதி செய்துகொள்ளாமல் ஆரம்பிக்க மாட்டேன். நாவல் என்றால் களமும் மொழியும். கதாபாத்திரங்களையோ சம்பவங்களையோ சிந்திக்க மாட்டேன். அது எழுத எழுதத் தன்னால் வந்துவிடும். சலம் ஆரம்பிப்பதற்கு முன்னால் அதர்வன் அதன் கதாநாயகனாக இருப்பான் என்றுதான் நினைத்தேன். ஆனால், எழுதத் தொடங்கிய பத்தாவது அத்தியாயத்தில், ‘நீ யார் அதை முடிவு செய்வது?’ என்று நாவல் குத்சனை யானை மீது ஏற்றிக்கொண்டு போய்விட்டது.
அப்படி நடப்பது சாதாரணமான விஷயம். எல்லோருக்கும் எப்போதும் நடக்கும். அதுவல்ல என் சிக்கல். எவ்வளவுதான் உரிய ஆயத்தங்களுடன் எழுத உட்கார்ந்து, காலமும் நேரமும் சகாயம் செய்தாலும்கூடச் சில புத்தகங்கள் பாதியில் நின்றுவிடும். இறுதிவரை அதைத் தொடர்ந்து முடிக்க வழி புலப்படாது.
‘முதல் நாவலைத் தொடங்கினேன். பாதியில் நின்று, மிகுந்த மனச்சோர்வாகிவிட்டது’ என்று சொல்லிக்கொண்டு பலபேர் வருவார்கள். அப்படிப் பாதியில் நின்றதற்கெல்லாம் சோர்ந்து போவதென்றால் இந்நேரம் நான் மனநோய் விடுதியில்தான் இருந்திருப்பேன் என்று சொல்வேன். எழுதுபவனுக்கு அடிப்படையில் ஓர் எருமைமாட்டுத்தனம் தேவை. எழுத்து தொடங்கி வாழ்க்கை வரை எதையும் உணர்ச்சிவசப்படாமல், நிதானம் குலையாமல் அணுகத் தெரிவது மிகவும் முக்கியம் என்று கருதுகிறேன். சொல்கிறேனே தவிர, வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் தடுமாறி விழுந்திருக்கிறேன். ஆனால் எப்போதும் எழுத்தில் அப்படி நிதானம் தவறியதில்லை. அப்படியும் சில பிரதிகள் தேங்கிவிடுகின்றன.
இவ்வாறு நின்றுபோன புத்தகங்களைக் குறித்து ஓரிரு மாதங்களுக்கு முன்னர் சொக்கனுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன். எழுதி முடித்து இன்னும் அச்சாகாத புத்தகங்களைக் குறித்து அவன் சொன்னான். அதிர்ஷ்டவசமாக எனக்கு அப்படிப்பட்ட அனுபவம் ஏதுமில்லை. பல வருடங்கள் காத்திருந்து இரண்டு சிறுவர் நூல்கள் பிரசுரமாயின. நானே வேண்டாம் என்று நிறுத்தி வைத்த ஓர் அரசியல் நூலை (ஹமாஸ்), இப்போது வெளியிடலாம் என்று நினைத்து, சில வருடங்களுக்கு முன்னர் கொண்டு வந்தேன். வேறு வருந்தத்தக்க அனுபவங்கள் ஏதும் பதிப்பு சார்ந்து எனக்கு ஏற்பட்டதில்லை.
ஆனால், இந்த நின்று போன புத்தகங்கள் அடங்கிய ஃபோல்டரைப் பார்க்கும் போதெல்லாம் சிறிது துக்கம் எழும். உடனே அதை மூடி வைத்துவிட்டு வேறு ஏதாவது செய்ய ஆரம்பித்துவிடுவேன். ஏனென்றால், அத்துக்கத்தைப் பெருக அனுமதித்தால் வேறெந்த வேலையும் செய்ய முடியாது.
இரண்டு, இரண்டரை வருடங்களுக்கு முன்னர் ஒரு நாவலை எழுத ஆரம்பித்தேன். அது மட்டும் வெளிவருமானால் அநேகமாக அனைத்து உலக மொழிகளுக்கும் செல்லக்கூடிய தகுதியுடன் இருக்கும் என்று தீர்மானமாகத் தோன்றியது. கருவாக மனத்தில் அது விழுந்தபோதே அதிலிருந்த சர்வதேசத்தன்மையைக் கண்டுகொண்டேன். வாழ்வில் வேறெதற்குமே தராத உழைப்பினை அதற்குச் செலுத்தியிருந்தேன். கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுக் காலம், தரவு சேகரிப்புக்கும் ஆய்வுக்குமே செலவானது. எனக்கு வருமானம் தரக்கூடிய அனைத்துப் பணிகளையும் உதறிவிட்டு (எழுத்துப் பயிற்சி வகுப்புகள் உள்பட.) முழு மூச்சாக அந்நாவலை எழுத ஆரம்பித்தேன்.
வழக்கத்துக்கு விரோதமாக அதன் ஒவ்வோர் அத்தியாயமும் ஒரு குறுநாவல் அளவுக்குப் பெருகிக்கொண்டே சென்றது. அது நான் எண்ணிப் பார்த்திராதது. அத்தியாயங்களை ஆகக் கூடியவரை சிறிதாக அமைப்பதையே எப்போதும் விரும்புவேன். ஆனாலும் என் கட்டுப்பாட்டை மீறி, ஒவ்வோர் அத்தியாயமும் ஐயாயிரம், ஆறாயிரம் சொற்களுக்கெல்லாம் சென்றுகொண்டிருந்தது.
சரி, என்னதான் ஆகிறதென்று பார்ப்போம் என்று எழுதிக்கொண்டே இருந்தேன். ஒன்பது அத்தியாயங்கள் ஓடி, ஓரிடத்தில் முட்டிக்கொண்டு நாவல் நின்றது.
எழுதிய வரை புத்தகமாக்கினால் நிச்சயமாக அறுநூறு பக்கங்கள் வரும் என்று தோன்றியது. ஆனால் அது நான் எழுத நினைத்திருந்த நாவலின் இருபது சதம்கூட இல்லை. என் மொத்த சக்தியையும் திரட்டி அடுத்த அத்தியாயத்துக்குள் நுழைந்துவிடப் பல மாதங்கள் முயற்சி செய்தும் நடக்கவில்லை. எத்தனையோ நாள் இரவெல்லாம் துக்கம் பொங்கிக் கண்ணீர் வரும். என்னை எழுத வைத்துக்கொண்டிருக்கும் சித்தர்களெல்லாம் கைவிட்டுவிட்டுச் சென்றுவிட்டார்களோ என்றெல்லாம் அஞ்சி நடுங்கி, உறக்கத்தில் அலறி எழுந்திருக்கிறேன். நான் அப்படி உறக்கத்தில் அலறி எழுந்துகொள்வதற்கு என் மனைவியும் மகளும் வேறு பல குடும்பக் காரணங்களைக் கண்டுபிடித்துச் சொல்லிக்கொண்டிருந்ததை வைத்தே ஒரு கதை எழுதலாம் போலிருந்தது.
இது இப்படியே நீடித்தால் உண்மையிலேயே பைத்தியம் பிடித்துவிடும் என்று தோன்றியது. ஒருநாள் திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமிகள் ஜீவசமாதிக்குச் குடும்பத்துடன் சென்று சிறிது நேரம் உட்கார்ந்திருந்துவிட்டு வந்தேன். அன்றிரவு உறக்கத்தில் சலத்தின் ஊற்றுக்கண் திறந்துகொண்டது. அது, யதி எழுதுவதற்கு முன்னால் மனத்தில் உதித்த கரு.
எழுத ஆரம்பித்து முடிக்க முடியாதிருப்பவை பற்றிய வருத்தங்கள் நிச்சயமாக எனக்குண்டு. முடித்தவை குறித்த நினைவுகளால் அதனை மறைத்து வைத்துக்கொள்கிறேன். பிரதிகளின் கர்ப்பகாலம் தெரிந்துவிட்டால் எழுதுவதில் உள்ள புதிர்த்தன்மை நீர்த்துவிடும் என்று இதற்கு சமாதானம் சொல்லிக்கொள்கிறேன்.
All rights reserved. © Pa Raghavan - 2022
April 24, 2025
மகாத்மா காந்தி சிகரெட்
ஒருவர் பிரபலமாக இருந்தால் அவரை விளம்பரப் படங்களுக்குப் பயன்படுத்திக்கொள்வார்கள். இக்காலத்தில் பெரும்பாலும் திரைப்படத் துறையினர். அல்லது கிரிக்கெட் வீரர்கள். வேறு துறைப் பிரபலங்கள் வருவதை அபூர்வமாகவே பார்க்கிறோம்.
ஆனால் யோக்கியமாக ஒப்பந்தம் செய்து, உரிய தொகை கொடுத்தே விளம்பரங்களில் நடிக்கச் சொல்கிறார்கள். அத்துமீறல்கள் இதில் இப்போது இருக்கின்றனவா என்று தெரியவில்லை. இது விஷயத்தில் முன்னொரு காலத்தில் அநியாய அழிச்சாட்டியமெல்லாம் நடந்திருக்கும் போலிருக்கிறது.
பெயர் தெரியாத ஒரு சிகரெட் கம்பெனி, ‘மகாத்மா காந்தி சிகரெட்’ என்றொரு பிராண்டை அறிமுகப்படுத்தியிருக்கிறது. எந்த வருடத்திலிருந்து எப்போது வரை அது இருந்தது என்று தெரியவில்லை. ஆனால் 1921 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி வெளியான யங் இந்தியாவில் காந்தி இது குறித்து ஒரு குறிப்பு எழுதியிருக்கிறார். மது, சிகரெட் இரண்டின் மீதும் தனக்குள்ள ஒவ்வாமையை விரிவாக எடுத்துச் சொல்லி, சம்பந்தப்பட்ட நிறுவனம், அந்த பிராண்டை நிறுத்திக்கொள்ளவோ, மக்கள் அதைப் புறக்கணிக்கவோ செய்தால் மிகுந்த நன்றி சொல்வேன் என்று பணிவுடன் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தக் குறிப்பில் இருந்து நான் எடுத்துக்கொண்ட விஷயங்கள் இரண்டு.
1. 1921லேயே காந்தி, மகாத்மா என்று அறியப்பட்டிருக்கிறார்.
2. காந்தியை விளம்பர மாடலாகக் கொண்டால் பொருள் விற்கும் என்று அப்போதே வியாபாரக் கணக்குகள் போடப்பட்டிருக்கின்றன.
கீழே கொடுக்கப்பட்டுள்ள காந்தியின் மறுப்பைப் பாருங்கள். மறுப்பு-எதிர்ப்பு-கண்டனம்தான் சாரம். ஆனால் சற்றும் பதறாத இயல்பும் நிதானம் தவறாத மொழியும் நிச்சயமாகத் திகைப்பூட்டும்.

நிலமெல்லாம் ரத்தம் என்ற தலைப்பில் வெற்றிமாறன் ஒரு படம் எடுக்கிறார் என்று தெரிய வந்தபோது எவ்வளவு எரிச்சலடைந்தேன் என்பதை எண்ணிப் பார்க்கிறேன். வெட்கத்துடன் இம்மனிதரின் தாள் பணிவதல்லாமல் செய்வதற்கு வேறொன்றுமில்லை.
All rights reserved. © Pa Raghavan - 2022
April 23, 2025
சலுகை வாரம்
உலகுக்கெல்லாம் புத்தக தினக் கொண்டாட்டம் ஒரு நாள் என்றால் என் பதிப்பாளர்கள் இம்மாத இறுதி வரை (ஏப்ரல் 30) அனைத்துப் புத்தகங்களுக்கும் இருபத்தைந்து சதவீதச் சலுகை அறிவித்திருக்கிறார்கள். இது என் புத்தகங்களுக்கு மட்டுமல்ல. ஜீரோ டிகிரி வெளியிட்டிருக்கும் அனைத்துப் புத்தகங்களுக்கும் என்றாலும் நமது வாசகர்களுக்குத் தனியே எடுத்துச் சொல்வது கடமை அல்லவா?
நேற்று வெளியான சலம் தொடங்கி, ஜீரோ டிகிரி இதுவரை வெளியிட்டுள்ள என்னுடைய 79 புத்தகங்களையும் இந்த வாரம் முழுவதும் (ஏப்ரல் 30 வரை) 25 சதவீதம் சிறப்புச் சலுகை விலையில் பெறலாம். மீண்டும் ஒருமுறை இந்த வாய்ப்பு எப்போது வரும் என்று தெரியாது. அவர்களுடைய இணையத்தளத்தில் நீங்கள் ஆர்டர் செய்யும்போது check out பக்கத்தில் தள்ளுபடித் தொகை காட்டப்படும். எனவே…
ஆர்வமுள்ளோர் பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஜீரோ டிகிரி இணையத்தளத்தில் என்னுடைய புத்தகங்கள் அடுக்கப்பட்டுள்ள பக்கம் இது.
All rights reserved. © Pa Raghavan - 2022
உருப்படாதது
புத்தக அடுக்கை எப்போதெல்லாம் சுத்தம் செய்கிறேனோ, அப்போதெல்லாம் புதைபொருள் ஏதாவது கிடைக்கும். அவை என் முந்தைய காலத்தின் ஏதாவது ஒரு பக்கத்தை நிச்சயமாக நினைவூட்டும். எண்ணிப் பார்த்தால் சிறிது வியப்பாகவே இருக்கிறது. புத்தக அடுக்குகள் தவிர, வீட்டில் வேறெங்கும் எதிலும் என் தடயங்களை என்றுமே கண்டெடுத்ததில்லை.
முன்பெல்லாம் அடிக்கடி ரயில் டிக்கெட்டுகள் எந்தப் புத்தகத்திலிருந்தாவது கீழே விழும். ஓரிரு முறை சீசன் டிக்கெட்டைக் கண்டெடுத்திருக்கிறேன். அவை குமுதம் காலத்துப் பொருள்கள். போஸ்ட் கார்ட்கள், இன்லண்ட் லெட்டர்கள் அகப்பட்ட காலமும் முடிந்துவிட்டது. போஸ்ட் கார்டுகள் பெரும்பாலும் திகசி அல்லது லாசராவிடமிருந்து வந்தவையாக இருக்கும். தொடக்க காலத்துக் கதை நிராகரிக்கப்பட்ட கடிதங்கள், பிரசுரத்துக்குத் தேர்வான கடிதங்கள், ஆஃபர் லெட்டர்கள் எனப் பலவற்றையும் புத்தகங்களுக்குள்ளேயே வைத்திருக்கிறேன். அவை ஒவ்வொன்றும் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பிறக்கும்.
இந்தக் கடிதங்கள் எல்லாம் சாதுவானவை. அவை போக பான்பராக் கவர்கள், மானிக்சந்த் கவர்கள், மாவாத் தூள், மாவா பாக்கெட்டுகள் எப்போது புத்தக அடுக்கைக் கலைத்தாலும் எதிலிருந்தாவது கீழே விழும். பான்பராக் ஒரு ரூபாய்க்குக் கிடைத்த காலத்தில் அதை மென்றிருக்கிறேன். பிறகு மானிக்சந்த். அது சற்று விலை அதிகமென்றாலும் ருசியின் பொருட்டு அங்கே சிறிது காலம். இவை இரண்டுமே வாங்க முடியாத விலைக்குச் சென்றதும் ஃபூல்சந்த் சூப்பர் என்றொரு பிராண்டை சில காலம் பயன்படுத்தியிருக்கிறேன். அதற்கும் பிறகுதான் மாவா.
பதினெட்டு வயதில் தொடங்கிய இந்தப் புகையிலைப் பொருள்கள் பயன்பாட்டை முற்றிலுமாக நிறுத்தி இரண்டாண்டுகள் ஆகின்றன. கொடுமை என்னவென்றால், சென்ற வாரம் புத்தக அடுக்கைச் சுத்தம் செய்துகொண்டிருந்தபோது ஏதோ ஒரு புத்தகத்துக்கு உள்ளே இருந்து ஒரு ஃபூல்சந்த் சூப்பர் பாக்கெட் கீழே விழுந்தது. 1996 முதல் 2000 ஆவது ஆண்டு வரை அது என் பக்கத்துணையாக இருந்திருக்கிறது. இரண்டாயிரமாவது ஆண்டு குமுதத்தில் வேலைக்குச் சேர்ந்தபோதுதான் புரசைவாக்கம் சேட்டுகளின் மாவாவுக்கு ரசிகனாகிப் போனேன்.
நிற்க. அந்த ஃபூல்சந்த் சூப்பர் பாக்கெட்டைப் பார்த்ததும் ஒரு தருணம் நினைவுக்கு வந்தது. நியாயமாக ஒரு கதையாகவே எழுதக்கூடிய சம்பவம்.
நான் அவ்வளவு ஒன்றும் யோக்கியமில்லை என்று என் பெற்றோருக்குத் தெரியும். ஆனால் எவ்வளவு அயோக்கியன் என்று சரியாகத் தெரியாத காலம் ஒன்று இருந்தது. அப்போது நாங்கள் குடியிருந்த வீட்டின் மாடியில் குடியிருந்தவர்களுக்கு மூன்று பெண்கள். அந்த மூவரில் ஒருத்தி பார்க்கக் கொஞ்சம் ஸ்டைலாக இருப்பாள். இரவெல்லாம் ஸ்டீரியோவில் பாட்டுப் போட்டு அலறவிடுவாள். படியிறங்கி வரும்போதும் போகும்போதும் அவளது ஹீல்ஸ் செருப்பு பிரத்தியேகமாக ஒரு சத்தமெழுப்பும். வாரப்படாத கூந்தலும் தொளதொளவென்ற சட்டைக்காரிச் சட்டையும் தொடையை இறுக்கிப் பிடிக்கும் ஜீன்ஸ் பேன்ட்டுமாக, அவள் எப்போதும் என் அம்மாவின் கண்களுக்கு ஒரு ‘உருப்படாதது’.
உண்மையில் அந்தப் பெண் பரம சாது. தங்கமான குழந்தை. ஆனால் உலகம் தோற்றத்தைக் கொண்டல்லவா யாரையும் மதிப்பிடுகிறது?
சரி, எனக்கென்ன. நான் ஒரு ஃபூல்சந்த் சூப்பரை உரித்து வாயில் கொட்டிக்கொண்டு ஜன்னல் வழியே வெளியே குப்பையை வீசிவிடுவேன். வீடு பெருக்க வருகிற பெண்மணி காம்பவுண்டுக்கு உட்புற இடைவெளியையும் பெருக்கித் தள்ளுவார் என்கிற நம்பிக்கையில் செய்தது அது.
ஆனால் அவரோ, நமது பண்பாடு மீறாத பெண்மணியாக இருந்திருக்கிறார். அந்த ஓரடி இடைவெளியில் யார் வரப் போகிறார்கள், என்ன பெரிய குப்பை இருந்துவிடப் போகிறது என்று அந்தப் பக்கமே தலைவைத்துப் படுக்க மாட்டார் என்பது மிகவும் தாமதமாகத்தான் தெரிந்தது.
என்றைக்கோ எதற்கோ அந்தப் பக்கம் சென்ற என் அம்மா, ஜன்னலுக்கு வெளியே குவிந்து கிடந்த ஃபூல்சந்த் சூப்பர் பொட்டலங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இயல்பாக அவரது தலை உயர்ந்து மாடி ஜன்னலைப் பார்த்தது. அதுதான் அந்த ‘உருப்படாதது’ வசிக்கும் அறை. அங்கிருந்துதான் ஸ்டீரியோ அலறும்.
‘நான் சொல்லல, அது உருப்படாதுன்னு? பாரு. பான்பராக் போட்டு, பாக்கெட்டை வெளிய கொட்டிக் குவிச்சிருக்கா. இதெல்லாம் நாளைக்கு இன்னொருத்தன் வீட்டுக்கு வாழப் போயி என்ன பாடு படுத்தப் போகுதோ?’ என்று புலம்பிக்கொண்டே குப்பைகளை அள்ளிக் கொட்டிவிட்டு வந்தார்.
அதன் பிறகு வீட்டில் நான் பாக்குப் போடுவது இன்னும் எளிதாயிற்று. எத்தனை பாக்கெட்டுகளை ஜன்னலுக்கு வெளியே வீசினாலும் அது நான் போட்டதல்ல. மாடி வீட்டு உருப்படாதது போட்டது. அந்தப் பெண்ணை என்னைக் காக்க வந்த பெண் தெய்வமாகவே எண்ணிக்கொண்டேன்.
பிறகு எங்கள் வீட்டுக்கு ஒரு பெண் தெய்வம் வந்தது. இது சற்று உக்கிரமான தெய்வம். அநீதிகளுக்கு அடிபணியாததும், சுட்டிக்காட்டினால் பிரச்னையாகும் என்று தெரிந்தால், அழுத்தந்திருத்தமாகவே சுட்டிக்காட்டும் இயல்பு கொண்டதுமானது.
வீட்டுக்குத் தெரியாமல் நான் செய்துகொண்டிருந்த காரியத்தை முதல் முதலில் போட்டுக் கொடுத்து மாட்டிவிட்ட புண்ணியவதி என் மனைவியே.
‘பாக்குப் போட்டுத் துப்பறதும் குப்பைய வெளிய கொட்றதும் மாடி வீட்டு சுப்ரியா இல்ல. உங்க புள்ளதான்’ என்று அனைத்துக் குடும்ப உறுப்பினர்களுக்கும் எதிரே போட்டு உடைத்தாள்.
இல்லவே இல்லை, இருக்கவே இருக்காது என்று அப்போதும் என் அம்மா சொல்லத்தான் செய்தார். ஆனால் உண்மைக்கென்று ஒரு வாசனை உண்டு. அது ஃபூல்சந்த் சூப்பர் குட்காவின் வாசனையைக் காட்டிலும் வீரியம் மிக்கது.
இருபத்தேழு, இருபத்தெட்டு வருடங்களுக்குப் பிறகு இப்போது அந்த ஃபூல்சந்த் சூப்பர் பாக்கெட் ஒன்று ஒரு புத்தகத்தினுள் பதுங்கியிருந்து வெளிப்படும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அந்த மாடி வீட்டு சுப்ரியா இப்போது எங்கே இருக்கிறாளோ எப்படி இருக்கிறாளோ தெரியாது. அவளுக்கே ஒரு குழந்தை பிறந்து, அது வளர்ந்து பெரிதாகியிருக்கும். ஃபூல்சந்த் சூப்பர் என்றொரு குட்கா பிராண்ட் ஒரு காலத்தில் இருந்ததென்ற தகவல்கூட அவளுக்குத் தெரிந்திருக்காது. அவ்வளவு ஏன்? எந்தக் காலத்திலோ கீழ் வீட்டில் குடியிருந்த என் முகமே அவளுக்கு நினைவிருக்க வாய்ப்பில்லை. என் அம்மா அவளை உருப்படாதவற்றின் பட்டியலில் வைத்திருந்த சரித்திரக் குறிப்பும் தெரிந்திருக்காது.
எல்லாவற்றையும் இருபத்தெட்டு வருடங்களாகத் தனக்குள் சேகரித்து வைத்திருந்த அந்தப் பழைய குட்கா பாக்கெட்டை ஒருமுறை முகர்ந்து பார்த்துவிட்டுக் குப்பையில் போட்டேன். பிறகு இதை எழுதினேன்.
All rights reserved. © Pa Raghavan - 2022
April 19, 2025
அபினுக்கு அப்பால்
கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் என்ற பொதுத் தலைப்பில் சீனி விசுவநாதன் பாகம் பாகமாக பாரதியின் படைப்புகளைச் செம்பதிப்பாகக் கொண்டு வந்திருக்கிறார். அவை வெளியான காலத்தில் உடனுக்குடன் ஒவ்வொரு பாகத்தையும் ஆர்வமுடன் வாங்கினேன். ஆயினும் எப்படியோ சில பகுதிகள் விடுபட்டுவிட்டன. இந்தக் காலவரிசைப்படுத்தலின் முக்கியத்துவம் என நான் கருதுவது, ஒரு கலைஞனின் சிந்தனை காலக்கட்டம் தோறும் எப்படி வளர்ந்து, இறுதியில் என்னவாக மலர்ந்து நிறைந்திருக்கிறது அல்லது வாடிச் சுருங்கியிருக்கிறது என்பதை அறிய முடிவதுதான்.
நேற்று, என்னுடைய புத்தக அடுக்குகளைச் சுத்தம் செய்துகொண்டிருந்தபோது சீனி விசுவநாதன் பதிப்புகளை எடுத்துச் சிறிது நேரம் புரட்டிக்கொண்டிருந்தேன். தனது வாழ்வில் மூன்று சித்தர்களை பாரதி நேரில் சந்தித்துப் பெற்ற அனுபவங்களைப் பதிவு செய்திருக்கிறார். அவர்கள் அவருக்கு உண்மை ஞானம் என்பது என்னவென்று தெரிந்துகொள்வதற்கான பாதையைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். அந்தத் தருணங்களுக்குப் பிறகு பாரதி எழுதிய பாடல்களில் மட்டுமே ‘ஆன்மிகம்’ வருகிறது. அதற்கு முன்பு அவர் எழுதிய பக்திப் பாடல்கள் அனைத்தும் வெறும் துதியாக உள்ளன. கண்ணன் மீது, விநாயகர் மீது, முருகன் மீது, இதர பல தெய்வங்களின்மீது அவர் பாடிய எதுவும் ‘தேறித் தெளிந்தவனின்’ சொற்களாக அல்லாமல் உணர்ச்சிமயத்துக்கு அப்பால் வேறெதையும் அறியாத வேறொரு கவிஞனையே சுட்டிக்காட்டுகின்றன.
பாரதி சந்தித்த மூன்று சித்தர்களைப் பற்றிய குறிப்புகள் அவரது சுய சரிதையில் வருகின்றன. குள்ளச்சாமி என்றொரு சித்தர். கோவிந்தசாமி என்றொரு சித்தர். பிறகு யாழ்ப்பாணச் சாமி என்பவர்.
இதில் குள்ளச்சாமி, பாரதியை மிகவும் பாதித்தவர் என்று எண்ண முடிகிற விதமாக அவரைக் குறித்துச் சற்று நிறையவே எழுதியிருக்கிறார்.
‘சாமி, நீங்க யாருன்னு எனக்குப் புரியல. ஒரு பார்வைல பரமசிவனா தெரியறிங்க. இன்னொரு பார்வைல பைத்தியக்காரனாட்டம் தெரியறிங்க. சின்னப் பசங்களோட ரோட்ல திரியறிங்க. சொறிநாய்ங்க கூடல்லாம் விளையாடிட்டிருக்கிங்க. உங்கள கேடகரைஸ் பண்ண முடியல. நீங்களே சொல்லிடுங்க, யார் நீங்க?’ என்று ஒரு சந்தர்ப்பத்தில் அவரிடம் கேட்கிறார்.
சித்தர் அப்போது நல்ல மூடில் இருந்திருக்கிறார். சரி, வா என்று ஒரு பாழடைந்த வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். புராதனமான, இடிபாடுகள் மிகுந்த, யாரும் வசிக்காத இடம். அங்கே ஒரு கிணறு இருந்திருக்கிறது. அதனருகே பாரதியை அழைத்து வரும் குள்ளச்சாமி, ‘மேல பாரு’ என்று சொல்லவும் பாரதி அண்ணாந்து பார்த்திருக்கிறார்.
‘என்னா தெரியுது?’
‘சூரியன்.’
‘குனி. அப்புடியே கிணத்துத் தண்ணியப் பாரு.’
பாரதி பார்க்கிறார்.
‘இப்ப என்னா தெரியுது?’
‘அதே சூரிய வெளிச்சம்தான் தண்ணில விழுது.’
‘அவ்ளதான் மேட்டர். போ.’
சொல்லிவிட்டுப் போய்விடுகிறார். பாரதி எழுதுகிறார்:
தேசுடைய பரிதிஉருக் கிணற்றினுள்ளே
தெரிவதுபோல் உனக்குள்ளே சிவனைக் காண்பாய்
பேசுவதில் பயனில்லை, அனுபவத்தால்
பேரின்பம் எய்துவதே ஞானம் என்றான்.
இன்னொரு சந்தர்ப்பத்தில் அந்தச் சித்தர் எப்போதும் சுமந்து வரும் அழுக்கு மூட்டை குறித்து பாரதி அவரிடம் கேட்டிருக்கிறார்.
‘எதுக்குங்க இந்த கப்படிக்கற மூட்டைய எப்பம்பாரு தூக்கிட்டுத் திரியறிங்க? சித்தர்னா இப்படித்தான் இருந்தாகணும்னு எதாச்சும் ரூல் இருக்குதா?’
அதற்குக் குள்ளச்சாமி சொல்கிறார், ‘டேய் நானாச்சும் வெளிய, முதுகுல தூக்கிட்டு சுத்தறேன். நீ உள்ளார இல்ல குவிச்சி வெச்சிருக்கற?’
புறத்தே நான் சுமக்கின்றேன் அகத்தினுள்ளே
இன்னதொரு பழங்குப்பை சுமக்கி றாய்நீ
– என்பது பாரதியின் விவரிப்பு. சம்பவங்களை, அவை நடந்த விதத்திலேயே கவிதையில் அவர் விவரிப்பதைப் படிப்பது பேரனுபவமாக இருக்கிறது.
பாரதி சந்தித்த இன்னொரு சித்தர், கோவிந்த சாமி. இவர் சற்று வேறு மாதிரி போலிருக்கிறது. கவிஞரை முதலில் திகைக்க அடித்துவிட்டு, அதன் பிறகுதான் உபதேசிக்கத் தொடங்கியிருக்கிறார். அதாவது, பாரதியின் (மறைந்த) தாய் தந்தையின் உருவத்தைத் தான் ஏந்தி அவர்முன் காட்சியளித்திருக்கிறார்.
‘செத்துப் போன உன் அப்பன் ஆத்தாள பாத்துக்க.’
இது எப்படி சாத்தியம்? பாரதியின் பெற்றோரை சித்தருக்குத் தெரியாது. அவர்கள் வாழ்ந்தது வேறு காலம். இறந்தவர்களின் உருவைத் தன் முகத்தில் ஏந்தி, அவர்களது பிள்ளைக்கு ஒரு மனிதன் காட்டினால் அவன் சுருண்டு காலில் விழுந்துவிட மாட்டானா?
அதுதான் நடந்திருக்கிறது.
… இறந்த எந்தை
தன்னுருவம் காட்டினான் பின்னர் என்னைத்
தரணிமிசைப் பெற்றவளின் வடிவம் உற்றான்
அன்னவன்மா யோகியென்றும் பரம ஞானத்
தனுபூதி உடையனென்றும் அறிந்துகொண்டேன்
மன்னவனைக் குருவென நான் சரணடைந்தேன்
மரணபயம் நீங்கினேன்; வலிமை பெற்றேன்.
இதில் ‘மரணபயம் நீங்கினேன்’ என்கிற சொற்கள்தாம் சாரம். எதுவும் அழிவதில்லை; உடலைத் தவிர என்கிறது கீதை. இந்த சாமி அதை பாரதிக்குப் புரிய வைத்த விதத்தில் சிறிது மேஜிக் கலந்திருந்தாலும் சொல்ல நினைத்தது சரியாகச் சென்று சேர்ந்துவிட்டதுதான் முக்கியம்.
யாழ்ப்பாணச் சாமி என்ற மூன்றாவது சித்தரைக் குறித்து எழுதும்போது, தங்கத்தால் இழைத்துக் கோயில் கட்டி, லிங்கப் பிரதிஷ்டை செய்து நீங்கள் கும்பிடுகிறீர்கள். எனக்கு இவன் கண்கள் போதும். இவனைப் பார்ப்பதும் சிவனைப் பார்ப்பதும் எனக்கு ஒன்றுதான் என்று சொல்லிவிடுகிறார்.
பாரதியின் சித்தர் தொடர்புகளைத் தொட்டால் உடனே நம் நினைவுக்கு வருவது குள்ளச்சாமி அவருக்கு அபின் கொடுத்தார் என்கிற விவரம்தான். அதைத்தான் பல ஆய்வறிஞர்கள் விரித்து விவரித்துக் களித்திருக்கிறார்கள். வ.உ. சிதம்பரம் பிள்ளைகூடத் தனது புத்தகம் ஒன்றில் இது குறித்து மிக விரிவாகச் சொல்லி, அந்தக் கருமத்தை விட்டுத் தொலையப்பா என்று நண்பருக்கு அக்கறையுடன் அறிவுரை சொன்னதைக் குறிப்பிட்டிருக்கிறார்.
குள்ளச்சாமியிடம் பாரதி பெற்றது அபின் மட்டுமல்ல. ஆனால் துரதிருஷ்டவசமாக பாரதியின் வாழ்வில் அந்தக் கட்டத்தைத் தோண்டி எடுத்து நாம் பெறுவது அது ஒன்றைத்தான்.
All rights reserved. © Pa Raghavan - 2022
April 18, 2025
ஆன்ட்டி வெறியன்
முன்னொரு காலத்தில் அருணாவின் கண்களை ரசித்தேன். பிறகு ஜெயப்ரதா, மாதவி போன்றோரையும் அதே காரணத்துக்காக ரசித்தேன். சிலுக்கு ஸ்மிதாவைப் பார்த்த பிறகு கண் மூக்கு காது என்றெல்லாம் இல்லாமல் மொத்தமாகவே இது எம்மாதிரியான வடிவம் என்று திகைத்து நின்ற அனுபவம் ஏற்பட்டது. பாரதி ராஜாவின் என்னுயிர்த் தோழன் பார்த்தபோது அந்தப் படத்தின் கதாநாயகியைப் பிடித்தது. பிறகு சுவலட்சுமியைப் பிடித்தது. ஊர் உலகமெல்லாம் சிம்ரன் ஜோதிகாவின் பின்னால் சுற்றிக்கொண்டிருந்தபோது என்னால் அவர்கள் இருவரையுமே ரசிக்க முடியாதிருந்தது. இரண்டாயிரமாவது ஆண்டுக்குப் பிறகு எல்லா மொழி நடிகைகளும் எல்லா மொழிப் படங்களிலும் நடிக்கத் தொடங்கினார்கள். ஆனால் பார்ப்பதற்கு எல்லோருமே ஒரே மாதிரி இருப்பது போலத் தென்பட்டது. உலக அழகிகள் என்று சொல்லப்பட்டவர்களை என்னால் ரசிக்க முடியவில்லை. ஆனால் சங்கீதாவைப் பிடித்தது (பாலா படத்தில் நடித்தவர்). இங்கே பெரிய ரசிகர்கள் படை இல்லாத பூனம் பஜ்வா, நிக்கி கல்ரானி, பூஜா ஹெக்டே போன்றோரை ரசித்தேன். விஜய் டிவி சீரியல் மூலம் அறிமுகமான ஹேமாராஜ் சதீஷ், லாவண்யா, ஷாலினி போன்றோரை இன்று ரசிக்கிறேன். பெயர் தெரியாத சில விளம்பரப் பட நடிகைகள் இருக்கிறார்கள். ஏதோ ஒரு சூப்பர் சிங்கர் போட்டியில் பார்த்த பெயர் நினைவில் இல்லாத இன்னொரு பெண் இருக்கிறாள். இவர்களையெல்லாம் நிதானம் இடறாமல் கூர்ந்து ரசிக்கிறேன்.
பெரும்பான்மை சமூகம் இவர்களை ரசிக்கிறதா, இல்லையா என்பது பற்றியெல்லாம் நான் பொருட்படுத்துவதில்லை. என் ரசனை உயர்ந்ததா, சுமாரானதா, தாழ்ந்ததா என்பது குறித்தும் அக்கறையில்லை. நான் ரசிக்கிறேன். அவ்வளவுதான்.
நிற்க. இந்த நீண்ட பட்டியலுக்கும் விளக்கத்துக்கும் பின்னால் ஒரு விவகாரம் இருக்கிறது.
என் வீட்டில் அவ்வப்போது என்னுடைய ரசனைகள் சார்ந்த தீவிர விமரிசனக் கூட்டம் நடைபெறும். அப்படியொரு தருணத்தில் என் மகள், ‘அப்பா உன் ரசனை அடிப்படையில் நீ ஒரு சரியான ஆன்ட்டி வெறியன்’ என்று சொன்னாள். அவள் இறுதி ஆண்டுப் படிப்புக்குச் செல்லவிருக்கும் பொறியியல் கல்லூரி மாணவி. அவளது வகுப்புத் தோழர்களில் சிலர் இத்தகைய ஆன்ட்டி வெறியன்களாக இருப்பதை நினைவுகூர்ந்து ஆன்ட்டி என்கிற பதத்துக்கு அவளது தலைமுறை வைத்திருக்கும் இலக்கணத்தைச் சொன்னாள். அதன் அடிப்படையில் நான் தற்போது ரசிக்கத் தொடங்கியிருக்கும் கயாடு லோஹரும் ஒரு ஆன்ட்டிதான். அவள் அதைச் சொன்னதுமே என் மனைவி ‘கயாடுவின் புஸ்ஸி ஆனந்த்’ என்று குறிப்பிட்டாள். அந்த விளியில் இருந்த நுணுக்கத்தை மிகவும் ரசித்தேன். இருவர் சொன்னதையும் எண்ணி நாளெல்லாம் சிரித்துக்கொண்டிருந்தேன்.
திரைப்படங்கள் சார்ந்த என்னுடைய ரசனையை மிக எளிதாக இரண்டாகப் பிரித்துவிட முடியும். ஒன்று, மிகத் தீவிரமான இரானியப் படங்கள், ஹங்கரி, பிரெஞ்சுப் படங்களைப் பார்ப்பேன். இதைப் பெரும்பாலும் அலுவலகத்தில் தனியே இருக்கும்போது மட்டுமே செய்வேன். வீட்டில் இருக்கும்போது சுந்தர் சி ரக நகைச்சுவைப் படங்களைப் பார்ப்பேன். விஜய் படம், அஜித் படம், சூர்யா படம், ரஜினி-கமல் படங்கள் போன்றவற்றில் பெரிய விருப்பம் இருந்ததில்லை. மீறிச் சில படங்களைப் பார்க்கிறேன் என்றால் அது என் மனைவிக்காகவோ மகளுக்காகவோ உடன் செல்வதாக மட்டுமே இருக்கும். கடைசியாக நானே விரும்பி புக் செய்து, சென்று பார்த்து ரசித்துவிட்டு வந்த படம் மதகஜ ராஜா என்று சொன்னால் எளிதாகப் புரியும் என்று நினைக்கிறேன்.
சுந்தர் சியைத் தாண்டி நான் வர மறுப்பதனாலேயே நானொரு பூமர் தலைமுறைப் பிரதிநிதி என்று என் மகள் சொல்வாள். பூமராக இருப்பதனால்தான் ஆன்ட்டி வெறியனாகவும் இருக்கிறேன் என்பது அவளது தரப்பு. உண்மையில், திரைப்படங்களின் மீதான ஈர்ப்பு போய்விட்டது. வலிந்து என்னை மாற்றிக்கொள்ள நினைத்துப் பார்க்க உட்கார்ந்தாலும் ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்கு மேலே எந்தப் படத்தையும் பார்க்க முடிவதில்லை. ஆனால் சுந்தர் சியின் முத்தின கத்திரிக்கா என்ற படத்தைக் குறைந்தது இருநூறு முறை பார்த்திருப்பேன். அநேகமாக வாரம் ஒரு முறையாவது நிச்சயமாகப் பார்க்கிறேன். அது அலுப்பதில்லை. காரணம், சிந்திப்பதற்காகவோ, கற்பதற்காகவோ, எதையாவது தேடிப் பெறும் சுகத்துக்காகவோ நான் அந்த ரகப் படங்களைப் பார்ப்பதில்லை. சாப்பிட உட்காரும் நேரத்தில் பத்து நிமிடங்கள் என்னை மறந்து சிரித்து இளைப்பாறும் பொருட்டு மட்டுமே பார்க்கிறேன். அவை என்னை ஏமாற்றுவதில்லை.
அழகிகள் என்று நான் கருதும் பெண்களும் இந்த வகைமைக்குள் வருபவர்களாகத்தான் இருக்க வேண்டும். நடிகைகளின் வயதையோ நிறத்தையோ திருமணம் ஆனவர், ஆகாதவர், சினிமா நடிகை-டிவி நடிகை என்கிற பிரிவினையையோ ஒருபோதும் கருதுவதில்லை. மேலே உள்ள பட்டியலைக் கூர்ந்து பார்த்தீர்களென்றால் குண்டு – ஒல்லி பேதமும் இல்லை என்பது விளங்கும். இந்தப் பெண்களுக்கும் சுந்தர் சி படங்களுக்கும் என்னளவில் பெரிய வித்தியாசங்கள் இல்லை. நிச்சயமாக ரசிக்கிறேன். ஆனால் எந்தக் கட்டத்திலும் நெக்குருகி நின்றதில்லை. இந்தத் தலைமுறைக்கு அவர்கள் ஆன்ட்டியாகத் தோன்றலாம். ஆனால் நிச்சயமாக நான் வெறியனெல்லாம் இல்லை.
நான் சுருண்டு விழுந்து தாள் பணிந்து கிடக்கும் இடங்கள் சில உள்ளன. சித்தர்களின் மெய்யியல், காந்தியின் நேர்மை, திருவருட்பாவின் அழகு, பழைய ஏற்பாட்டின் கவித்துவம், பிஸ்மில்லா கான், இளையராஜா போன்றோரின் இசை, பஷீர், அசோகமித்திரன், வண்ணநிலவன் போன்றோரின் எழுத்து, ஆப்பிள் கணினியின் பயன்பாட்டு எளிமை, மினியன், ஆஸ்வல்ட் போன்ற பொம்மைப் படங்களின் அழகியல், எல்லா வகை இனிப்புகளிலும் உறைந்திருக்கும் பிரம்மத்தின் ருசி – இங்கெல்லாம் புழங்கும் நான் வேறு ஆள். இந்தச் சிறிய பட்டியலில் உள்ள எதையும் யாரையும் நான் வெறுமனே ரசிப்பதில்லை. சொல்லப் போனால் ரசித்த காலமெல்லாம் முடிந்துவிட்டது. மாறாக நான் – அது அல்லது அவர்கள் என்னும் இருமை நிலையைத் தகர்த்து இரண்டறக் கலந்துவிடப் பார்க்கிறேன். ஆனால், என்னைச் சுற்றி இருப்போரிடம் இருந்து கவனமாக அந்த வேறு ஆளை மறைத்து வைத்துவிடுகிறேன். அவனைப் புரிந்துகொள்ளவோ, ரசிக்கவோ, குறைந்தபட்சம் விமரிசனம் செய்யவோ, கிண்டல் செய்து மகிழவோகூட முடியாது.
சுந்தர் சி படங்களை, கயாடு லோஹரை ரசிப்பவனாக; ஒரு நல்ல பூமராக, ஆன்ட்டி வெறியனாகக் காட்சியளிப்பதில் எனக்கு மகிழ்ச்சியே. ஒரு வகையில் எனது தீவிர மனம் குவியும் புள்ளிகளின் பிரத்தியேகத்தன்மையை அது காப்பாற்றித் தருகிறது. அர்த்தமற்ற கருத்துக் குவியல்களின் குப்பை அவற்றின்மீது உதிராமல் பார்த்துக்கொள்ள முடிகிறது. அப்படி இருப்பதனால்தான் என்னால் இரண்டு ஆண்டுகளில் அதர்வ வேதத்தை அர்த்தம் புரிந்து கற்க முடிந்தது. ஒரு பெண் கதாபாத்திரம் கூட இல்லாத சலத்தை எழுத முடிந்தது.
All rights reserved. © Pa Raghavan - 2022
April 15, 2025
என்றும் இருக்கும் இனம்
உங்களுக்கு இது மிகவும் சாதாரண விஷயமாகத் தோன்றலாம். தவறில்லை. ஆனால் எனக்கு அப்படியல்ல. முப்பது வருடங்களுக்கு மேலாக எழுதுவதைத் தவிர வேறெதையும் கருதாதவனுக்கு இது ஒரு சரித்திரத் தருணம். பல்வேறு சந்தர்ப்பங்களில் வேறு பல விதங்களில் இது எனக்கு நிகழ்ந்திருக்கிறது என்றாலும் இந்தத் தருணம் முற்றிலும் வேறு விதமானது.
வாட்சப் சேனலில் மிருது என்றொரு கதையை எழுதத் தொடங்கினேன். சலம் போன்றதொரு உக்கிரமான நாவலை எழுதி முடித்த பிறகு நான் சமநிலைக்கு வருவதன் பொருட்டு ஆரம்பித்த மிக எளிய, நகைச்சுவையுடன் கூடிய காதல் கதை. எழுதிப் பிரசுரிப்பதில் இருந்து எட்டு மணி நேரம் மட்டுமே அத்தியாயம் சேனலில் இருக்கும். அதன் பிறகு டெலிட் செய்துவிடுவேன் என்று சொல்லியிருந்தேன். பெரிய காரணங்கள் ஏதுமில்லை. எழுதுவதில் எனக்கு இருக்கும் கமிட்மெண்ட், படிப்பதில் வாசகருக்கு இருக்க வேண்டுமென்கிற குறைந்தபட்ச எதிர்பார்ப்பு. அவ்வளவுதான்.
பன்னிரண்டு அத்தியாயங்கள் அப்படித்தான் வெளியாயின. வெளியான வேகத்தில் படித்துவிட்டு வாசகர்கள் மதிப்புரைகளையும் கேலிச் சித்திரங்களையும் அனுப்பிக்கொண்டிருந்தார்கள். சில நாள் பகல் பொழுதில் எழுதுவேன். சில நாள் மாலை வேளைகளில். சில நாள் இரவு. இதர வேலைகள் முடியும்போது மிருதுவை எழுதுவது என்று வைத்துக்கொண்டிருந்தேன்.
நேற்றிரவு மெட்ராஸ் பேப்பர் வெளியீடு தொடர்பான பணிகள் மிகவும் நேரம் இழுத்துவிட்டதால் மிருது அத்தியாயத்தை எழுத முடியவில்லை. ‘தாமதமாகும்; நள்ளிரவுக்குள் பிரசுரித்துவிடுவேன்’ என்று அறிவித்திருந்தேன். சொன்னபடி நள்ளிரவுக்குப் பத்து நிமிடங்களுக்கு முன்பாகவே அத்தியாயத்தைப் பிரசுரித்தேன்.
அதில் சிறப்பேதுமில்லை. ஆனால், ‘நள்ளிரவு நெருங்குகிறது; அத்தியாயம் இன்னும் வரவில்லை’ என்று அதே நேரத்தில் ஒரு மின்னஞ்சல் வருகிறது. அத்தியாயம் பிரசுரமானதும், ‘அத்தியாயம் வந்துவிட்டது’ என்று அதே வாசகர் அக்னாலட்ஜ் செய்கிறார். அந்நேரத்தில் விழித்திருந்து அத்தியாயத்தைப் படித்துவிட்டு மூன்று பேர் மதிப்புரை எழுதுகிறார்கள். நான்கு மீம்கள் வருகின்றன. என்ன நடக்கிறது என்று எனக்கு உண்மையிலேயே புரியவில்லை.
ஒரு கதை நன்றாக இருக்குமானால் எங்கிருந்தாவது எப்படியாவது வாசகர்கள் தேடி வருவார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் நள்ளிரவுப் பொழுதில் உறக்கத்தை மறந்து காத்திருந்து படித்துவிட்டுக் கையோடு கருத்தும் எழுதுவார்கள் என்பது இக்காலக்கட்டத்தின் தன்மைக்குப் பொருந்தாதது. இது நிச்சயமாகவே நான் எதிர்பாராதது. எழுதுவதில் எனக்குள்ள கமிட்மெண்ட்டைக் காட்டிலும் படிப்பதில் வாசகர்களுக்கு இருக்கும் தீவிரம் உண்மையிலேயே என்னைத் திகைப்புறச் செய்தது.
முன்னொரு காலத்தில் கல்கி பத்திரிகையில் அலை ஓசை முதல் முறை தொடராக வெளிவந்தபோது, தனது கிராமத்து மக்கள் கல்கி பார்சல் வருவதற்காக ரயிலடியில் சென்று காத்திருந்ததைப் பார்த்திருக்கிறேன் என்று என் அப்பா அடிக்கடி சொல்வார். ஏதோ ஓர் அத்தியாயத்தில் யாரோ ஒரு கதாபாத்திரம் இறந்துவிட்டபோது, ‘அடியே, சீதா போயிட்டாடி…!’ என்று ஒரு கையில் கல்கியை உயர்த்திப் பிடித்துக்கொண்டு யாரோ ஒரு பெண் வீதிக்குள் கதறியபடியே ஓடி வந்த காட்சியை அவர் விவரிக்கும்போது பேச்சு மூச்சற்றுக் கேட்டுக்கொண்டிருந்திருக்கிறேன்.
அது, கதைகள் கட்டி ஆண்ட காலம். இன்று அதெல்லாம் கற்பனையில் கூடச் சாத்தியமில்லாத விஷயமாகிவிட்டது. ஆனால் நமது எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் திரும்பத் திரும்பப் பாடும் ‘வாசகர்கள் இல்லாமல் போய்விட்டார்கள்’ என்னும் சோகப் பாடல் பொருளற்றது என்பதை நேற்று திடமாகக் கண்டுணர்ந்தேன். எழுதுபவனும் எழுத்தும் சரியாக இருக்குமானால் படிப்பதற்கு வாசகர்கள் எல்லா தலைமுறையிலும் தயாராகவே இருக்கிறார்கள். அவர்களைச் சரியாகச் சென்றடைகிறோமா என்பதுதான் விஷயம்.
சலம் புத்தக ஆக்கம் முடிந்து, அச்சுக்குப் போனபின்பு, அத்தனை பெரிய நாவல், அவ்வளவு விலைகூடிய புத்தகத்தை எத்தனை பேர் உடனே வாங்கிப் படிக்க நினைப்பார்கள் என்று சிறிது கவலைப்பட்டேன். கெட்டி அட்டைப் பதிப்பைக் குறைவாகவும் சாதாரண பதிப்பைச் சிறிது அதிகமாகவும் வெளியிட்டுப் பார்க்கலாம் என்று என் பதிப்பாளரிடம் சொன்னேன். ஆனால் முன்பதிவு அறிவிக்கப்பட்டபோது நடந்தது முற்றிலும் வேறு. என் கணிப்புக்கு நேர் மாறாக, விலை கூடிய கெட்டி அட்டைப் பதிப்பினைத்தான் வாசகர்கள் அதிக அளவில் விரும்பிப் பதிவு செய்திருந்தார்கள். இரு விதப் பதிப்புகளுக்கும் ஆர்டர் செய்திருந்த மொத்த வாசகர்களின் எண்ணிக்கை அதைக் காட்டிலும் ஆச்சரியமளித்தது. இப்போது நான் அதை வெளியிடப் போவதில்லை. புத்தகம் வெளியாகும் நாளில் புகைப்படங்களைப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
சொல்ல வந்தது இதுதான். வாசகன் இறந்துவிட்டான் என்பது இலுமினாட்டிகளின் பொய்ப் பிரசாரம். உலகுள்ள வரை அவன் இருப்பான். இனி என்றென்றும் எனக்கு இக்கவலை இராது.
நேற்றைய எனது நள்ளிரவுப் பொழுதை வாழ்நாள் முழுதும் மறக்க முடியாதபடி செய்துவிட்ட வாசகர்கள் ரவி அர்விந்த், காந்தி பாபு, வினோத்குமார் சுப்பிரமணியன், வெங்கடேசன் சிங்கபுத்திரன், சத்தியநாராயணன் ஆகியோருக்கு என் தீரா அன்பு.
All rights reserved. © Pa Raghavan - 2022