Jeyamohan's Blog, page 1738
August 26, 2016
தன்னறம்
இரண்டாயிரத்து மூன்றில் நான் குடும்பத்துடன் நண்பர் சோமசுந்தரத்தைப் பார்க்க டமன் சென்றிருந்தேன். அவர் எல்லைக் கடற்படையில் உயரதிகாரி.டமன் வருமாறு அழைத்துக்கொண்டே இருந்தார். டமன் நகரில் இருந்து ஏழு மணிநேரப்பயணத்தில் அஜந்தா இருக்கிறது. பேருந்தில் அஜந்தா சென்று வரலாம் என்று கிளம்பினோம்.
போகும்வழியில் ஒரு மோட்டலில் நிறுத்தினார்கள். நல்ல உயர்தரமான கட்டிடம். உள்ளே சென்று ஆளுக்கொரு லஸ்ஸி சாப்பிட்டோம். வெயிலுக்கு அது இதமாக இருந்தது. பேருந்து மீண்டும் கிளம்பியது. அஜிதன் பேருந்தில் வாந்தி எடுக்கக்கூடும் என்பதனால் அவனுக்கு மாத்திரை கொடுத்திருந்தோம். சைதன்யா சின்னப்பிள்ளை ஆனதனால் சளிபிடிக்கும் என லஸ்ஸி கொடுக்கவில்லை.
ஔரங்பாபாத் சென்று இறங்கினால் அஜிதன் உடம்பு கொதித்துக்கொண்டிருந்தது. இறங்கியதுமே வாந்தி எடுத்தான். சளியாக இருக்கும் என்று நினைத்து காய்ச்சலுக்கான மாத்திரை வாங்கிக்கொடுத்து விடுதி அறையிலேயே வைத்திருந்தோம். அது பெரிய முட்டாள்தனம். இரவெல்லாம் காய்ச்சல். அதிகாலையிலே கடுமையான காய்ச்சல். புலம்பவும் உருவெளிக்காட்சிகளைப் பார்க்கவும் ஆரம்பித்துவிட்டான்.
மறுநாள் விடுதியிலேயே கேட்டு அருகே இருந்த தனியார் மருத்துவமனைகளில் ஒன்றுக்குக் கூட்டிச் சென்றோம். ஒரு நான்குமாடிக்கட்டிடம். மூன்று சகோதரர்கள் நடத்தும் மருத்துவமனை. உடனே படுக்க வைக்கச் சொல்லிவிட்டார்கள். மூன்று பையன்களுமே எ·ப்.ஆர்.சி.எஸ் டாக்டர்கள். ஆழமானவர்கள். மிகமிகப் பண்பானவர்கள். மிகச்சிறந்த நிர்வாகிகளும் கூட. மூவருமே எங்கே வந்தாலும் கழுவுதொட்டி கழிப்பறை இரண்டையும் பார்க்காமல்செல்லமாட்டார்கள். தாதிகள் வேலைக்காரிகள் எல்லாருமே அன்பான மனிதர்கள். .அந்த மருத்துவமனைதான் நான் இதுவரை பார்த்ததிலேயே இலட்சிய மருத்துவமனை.
உணவு விஷமாகிவிட்டது என்றார்கள். அந்த லஸ்ஸி கெட்டுப்போயிருந்தது. ”வட இந்தியாவில் லஸ்ஸி சாப்பிடவே சாப்பிடாதீர்கள். மிஞ்சிய மோரில் மேலும் பாலை உறைகுத்திக்கொண்டே இருப்பார்கள். அதில் ஒருபகுதி பாலுக்கு வாரக்கணக்கில் கூட வரலாறு இருக்கும். அதில் சில தப்பான ரசாயனங்கள் இருக்கும்” அஜிதனுக்கு உள்ளே போன ரசாயனம் வாந்தியாக வரமுடியாமல் மாத்திரை தடுத்துவிட்டது.
சரி, உணவு விஷம் என்றால் அனேகமாக குடல் கழுவப்பட்டதும் சரியாகிவிடும் என்று நான் சொன்னேன். அருண்மொழி சைதன்யா இருவரையும் சோமசுந்தரத்துடன் அனுப்பி அஜந்தா எல்லோரா தௌலதாபாத் பார்த்து வரச்சொல்லிவிட்டு நான் ஆஸ்பத்திரியிலேயே இருந்தேன்.
ஆனால் மாலையில் காய்ச்சல் இன்னும் அதிகமாகிவிட்டது. என்னைப்பார்த்து ”அப்பா, உன் பக்கத்திலே யாரு ?” என்று கேட்க ஆரம்பித்தான். ‘அப்பா ஆனை! ஆனை!’ எழுந்து ஓட முயன்றான். முறிமருந்துகளின் கடுமை ஏறியபடியே சென்றது. நான் அருண்மொழி,சைதன்யா இருவரையும் சோமசுந்தரத்துடன் திருப்பி டமனுக்கே போய்விடும்படியும் நான் அங்கே இருந்து பார்த்துக்கொள்கிறேன் என்றும் சொன்னேன். அவர்கள் சென்றார்கள்.
மறுநாளும் அதே காய்ச்சல். உள்ளே சென்ற எதுவுமே நிற்காது. வாந்தி பேதி. காலராவாக இருக்கும் என்று சோதனை செய்தார்கள். காலரா இல்லை. வேறு என்ன? வயிறை பலமுறை கழுவியாகிவிட்டது. பலமுறை முறி மருந்து கொடுத்து விட்டார்கள். மூன்று சகோதரர்களும் மாறி மாறி வந்து பார்த்தார்கள். மறுநாள் காலையிலும் காய்ச்சல் இறங்கவில்லை. சகோதரர்கள் முகத்தில் கவலை படிந்துவிட்டது.
மாடியில் ஒரு சந்திப்புக்கூட்டம் போட்டு என்னை வரச்சொன்னார்கள். ”சிக்கலாக ஏதோ ஆகிவிட்டது. முடிந்தவரை செய்கிறோம்” என்றார்கள். ”மும்பை கொண்டுபோகட்டுமா?” என்றேன். ”பயணம் கடினமானது. உங்கள் விருப்பம்” என்றார்கள். நான் ”நான் உங்களை நம்புகிறேன் டாக்டர், நான் என்ன செய்யவேண்டும் சொல்லுங்கள்” என்றேன். டாக்டர் நெகிழ்ந்துவிட்டார்.
”இதற்குமேல் எவரும் எதுவும் செய்ய முடியாது… இன்னும் மதியம் வரை பார்ப்போம். அதன் பின் நான் இந்த ஔரங்காபாதில் உள்ள எல்லா முக்கிய டாக்டர்களையும் வரவழைத்துப் பார்க்கச் சொல்கிறேன். இன்றிரவுக்குள் மும்பையில் இருந்து எனக்குத்தெரிந்த ஒரு பெரிய மருத்துவரை விமானத்தில் வரவழைத்து பார்க்கச் செய்கிறேன். இதெல்லாம் என் செலவு” என்றார்
”செலவைப்பற்றி கவலை இல்லை” என்றேன். ”இல்லை எங்களால் நோயை ஊகிக்க முடியவில்லை என்பது எங்கள் தவறு” என்றார். அங்கே சாத்தியமான எல்லா சோதனைகளையும் செய்யலாம் என்று முடிவெடுத்து ஒவ்வொன்றாகச் செய்ய ஆரம்பித்தனர். குருதியில் கடுமையான நோய் எதிர்ப்பு செல்கள் உருவாகி உடல் மிகக்கடுமையாகப் போராடிக்கொண்டிருந்தது. ஆனால் எந்த பாக்டீரியா வைரஸ¤ம் இல்லை.
கடைசியில் மார்பு எக்ஸ்ரே எடுத்தபோது அதிர்ச்சி. இடது நுரையீரலில் நிமோனியா போல தெரிந்தது. நிமோனியாவா? குடித்த தயிர் எப்படியாவது நுரையீரலுக்கு போக நேர்ந்ததா? அதிர்ச்சியாக இருந்தது அவர்களுக்கு. என்னிடம் கேட்டார்கள். நான் நிமோனியாவுக்கு வாய்ப்பே இல்லை என்றேன்.
பையனுக்கு சுயநினைவு திரும்பவில்லை. காய்ச்சல் நீடித்தது. அந்த ஆஸ்பத்திரியில் இருந்த அத்தனை வட இந்தியப் பெண்களும் வந்து ‘பேட்டா’வுக்கு சாமி பிரசாதம் வைத்து விட்டார்கள். எனக்கு எதுவுமே தெரியாது. எல்லாமே பிற நோயாளிகளின் உதவியாளர்கள்தான் செய்தார்கள்.
அன்று மதியம் மூன்று டாக்டர்களின் தந்தையான டாக்டர் வந்தார். எண்பது வயது. டிராக் சூட் – ஷர்ட் போட்டுக்கொண்டு நடக்கச்சென்றவர் இங்கே வந்து அஜிதனைப் பார்த்தார். ஔரங்காபாதின் முக்கியமான மருத்துவர்களில் ஒருவராக இருந்து அந்த நிறுவனத்தை உருவாக்கியவர் அவர். தன் அறுபது வயதில் மருத்துவத்தில் இருந்து முழுமையாக விலகிக் கொண்டு தன் சொந்த மகிழ்ச்சிக்கான விஷயங்களில் ஈடுபட ஆரம்பித்துவிட்டாராம். அவருக்கு கோயில்களுக்கு நடந்து செல்வதுதான் அப்போதைய வாழ்க்கை. இந்தியா முழுக்க சென்றிருக்கிறார்.
பையனைப் பார்த்தார். ஒன்றுமே பிடிபடாமல் நாற்காலியில் அமர்ந்து பார்த்துக்கொண்டே இருந்தார். நிமோனியா இல்லை என்று உடனே நிராகரித்துவிட்டார். அப்படியானால் என்ன? எக்ஸ்ரேயை வேறு கோணத்தில் எடுக்கச் சொன்னார். அது ஏதோ ‘மெக்கானிக்கல்’ பிரச்சினை என்றார். ‘சின்னவயதில் பிரைமரி காம்ப்ளெக்ஸ் இருந்ததா?” என்றார் கிழ டாக்டர் ”ஆமாம்” என்றேன்
பிரைமரி காம்ப்ளெக்ஸ் காரணமாக நுரையீரல் ஒருபகுதியில் கொஞ்சம் வீங்கி அது இன்னொரு நுரையீரலை அழுத்துகிறது. அதுதான் எக்ஸ்ரேயில் தெரிந்தது. பெரிய டாக்டர் நிலைகொள்ளாமல் இருந்தார். மாடியில் அமர்ந்து என்னிடம் மீனாட்சி கோயிலைப்பற்றி பேசினார். சட்டென்று எழுந்து ”எல்லா முறி மருந்துகளையும் நிறுத்துவோம்” என்றார்
பையன்கள் பதறினார்கள். ”முடியாது,அது ஆபத்து” என்று மூத்தவர் நேராகச் சொல்லாமல் சுவரைப்பார்த்து சொன்னார். கிழவர் ”நிறுத்து, நான் சொல்கிறேன்” என்றார். மூவரும் இருண்ட முகத்துடன் செய்தார்கள். நான் கிழவரை நம்பினேன். துல்லியமான ஓர் உள்ளுணர்வு சொன்னது, அவருக்கு ஆழம் உண்டு என
அன்றிரவே காய்ச்சல் குறைந்தது. மறுநாள் முற்றிலும் காய்ச்சல் இல்லை. மதியம் எழுந்து அமர்ந்துவிட்டான். தூங்காமல் ஒருமணிநேரத்துக்கு ஒருமுறை மென்மையான உணவை கொடுத்துக்கொண்டே இருக்கச் சொன்னார்கள். நான் இரவெல்லாம் பகலெல்லாம் விழித்திருந்தேன். அஜிதனுக்கும் தூக்கமில்லை. நான் தொடர்ந்து நான்குநாட்கள் ஒருநாளுக்கு இரண்டுமணிநேரம்கூட தூங்காமல் இருந்த நாட்கள் அவை. உடலுக்கு மனம் விரும்பியபடிச் செல்லும் அபாரமான திறனுண்டு என உணர்ந்தேன்.அப்படியே இரண்டு நாட்கள்.
[image error]
நான் அவனுக்கு மெல்லிய குரலில் கதை சொல்லிக்கொண்டே இருந்தேன். மொத்த மகாபாரதத்தையும் ஆரம்பம் முதல் கடைசி வரை சொன்னேன். முடிக்க இரண்டுநாள் ஆகியது. ஏறத்தாழ இருபது மணிநேரம் சொல்லியிருப்பேன். கதையின் வேகமும் கிளர்ச்சியும் குழந்தையின் முகத்தில் ஏற்றும் உணர்ச்சி கொந்தளிப்புகளை இப்போதும் நினைவுகூர்கிறேன். கர்ணனுக்காக விசும்பி விசும்பி அவன் அழ ஒரு பாட்டி வந்து ‘வயிறு வலிக்கிறதா?’ என்று கேட்டு தடவி விட்டாள்.
மகாபாரதம் எத்தனை பெரிய வண்ண உலகம்! இன்றும் அஜிதன் அவன் வாழ்வின் பொன்னாட்கள் என அந்த இரு நாட்களை அடிக்கடிச் சொல்வான். அவன் அப்பா அவனை மட்டுமே கவனித்துக்கொண்டு அவனுடன் மட்டுமே இருந்த நாட்கள். ‘நல்ல வேளை அப்பலாம் செல்போன் கிடையாது. யாருமே கூப்பிடலை’ என்பான். நான் ஒரு மகத்தான கதைசொல்லி என அங்கீகரித்த முதல்பெரும் வாசகன் அவனே.
முற்றிலும் சரியாகி விட்டபின் டாக்டரிடம் கேட்டேன், என்ன நடந்தது என. கிழவர் சொன்னார். அஜிதனின் உடம்பு அவர்கள் அளித்த முறிமருந்துக்களை கிருமியாக, விஷமாக நடத்த ஆரம்பித்திருந்தது என. அல்லது நான் அப்படி புரிந்துகொண்டேன். டாக்டர் மீனாட்சிகோயிலைப்பற்றி பேசிக்கொண்டிருந்தபோது வெளியே நாய்க்குரைப்பொலி கேட்டதாம். அப்போது அவருக்கு அந்த எண்ணம் வந்தது. ‘திருடனை துரத்த நாய் உள்ளே வந்தது. திருடன் ஓடியும் நாய் உள்ளேயே சுற்றி வருகிறது!’ அதுதான் தீர்வு.
ஆச்சரியமாக இருந்தது. மறுநாள் மூத்தவரிடம் கேட்டேன், அது ஏன் உங்களுக்கு தோன்றவில்லை என. அவர் சொன்னார் ”எந்த துறையிலும் உள்ளுணர்வே முதன்மையானது. அடுத்தது கற்பனை. அதற்கடுத்ததே தர்க்கமும் அதை வலுப்படுத்தும் கல்வியும் எல்லாம். அப்பா அபாரமான நுண்ணுணர்வால் ஆனவர். அதை அவர் குழந்தைத்தனமான கற்பனை மூலம் மீட்டி எடுக்கிறார். அது மிகச்சிறந்த ஒரு வழிமுறை. ஆனால் அதற்கு மனதுக்குள் அந்தக் குழந்தை இருந்துகொண்டே இருக்க வேண்டும். நவீனக் கல்விமுறை கொஞ்சம் கொஞ்சமாக அந்தக்குழந்தையை அழிக்கிறது. அதை மீறி அந்தக் குழந்தையை தக்கவைத்திருப்பவரே மேதைகள்”
டாக்டர் சொன்னார் ”அத்துடன் அவரது அனுபவம். அனுபவம் மூலம் உள்ளுணர்வை தீட்டிக்கொண்டே இருந்திருக்கிறார். நானும் அந்த அனுபவத்தை அடையும்போது என் உள்ளுணர்வும் கூர்மையாகலாம். என்ன இருந்தாலும் நான் அவரது மகன்” சிரித்துக்கொண்டே தம்பி டாக்டர் சொன்னர் ”நாவலாசிரியர்கள் மட்டும்தான் தியானிக்கிறார்கள், கற்பனை செய்கிறார்கள் என்று நினைக்காதீர்கள்…நாங்களும்தான் செய்கிறோம்”
பெரிய டாக்டர் அஜிதனுக்கு ஒரு பரிசு கொடுத்தார். சாதாரணமான கட்டணம் வந்தது. நான் கட்டணம் குறைவாக இருக்கிறதே என்றேன். ‘பரவாயில்லை, எங்களூருக்கு வந்திருக்கிறீர்கள்’ என்றார் டாக்டர். ஆச்சரியமாக இருந்தது அந்த மனநிலைகள். நேர் எதிரே ஜோஷி என ஒரு மராட்டிய பிராமணர் மருந்துக்கடை வைத்திருந்தார். முதல்நாள் மருந்து வாங்கும்போது ”முதல் பிரிஸ்கிருப்ஷனா?” என்றார். ஆமாம் என்றதும் ஒரு ராமர்படத்து முன் அதை வைத்து பிரார்த்தனை செய்து அதன் பின் மருந்து கொடுத்தார். அதன் பிறகு சிக்கல்கள் உருவானபோது ஒவ்வொரு நாளும் அவரது மனைவி மேலே வந்து பூஜைசெய்த பிரசாதம் அளித்துவிட்டுச் சென்றார்.
அஜிதன் மூன்றாம்நாள் அழுகையுடன் இருந்தான். அத்தனை தூரம் வந்துவிட்டு அஜந்தா பார்க்காமல் திரும்புவதா? மேலும் சைதன்யாவே பார்த்துவிட்டாளே. ஊருக்குபோய் மானத்துடன் வாழவேண்டாமா? டாக்டர்கள் கூடவே கூடாது என்று சொல்லிவிட்டார்கள்.’உடலில் வலிமையே இல்லை. பேருந்தில் டமன் சென்று ஒருநாள் ஓய்வெடுத்து அங்கே ஒரு டாக்டரை பார்த்துவிட்டு ஊருக்குக் கிளம்புங்கள்’ என்றார்கள்.
கிழடாக்டர் வந்து அஜிதனைப் பார்த்ததுமே ”என்ன பிரச்சினை பேட்டா, முகம் சப்பி இருக்கிறதே?’ என்றார். அவனே அஜந்தாவைப் பற்றி சொன்னான். ”அங்கே வெறும் பொம்மைதான். இங்கே பக்கத்தில் மிருகசாலை இருக்கிறது.போய்ப்பார்” என்றார். ”எனக்கு சிற்பங்கள்தான் பார்க்க வேண்டும். அங்கே போதிசத்வர் சிலைகள் இருக்கிறது”
டாக்டர் அயர்ந்து ”நீங்கள் சொன்னீர்களா?” என்றார். அஜிதன் ”எங்க அப்பாவை விட எனக்கு தெரியும். நானே புத்தகத்தில் வாசித்தேன்” என்றான். டாக்டர் சிரித்து ”இத்தனை சொல்கிறான். பார்க்காமல் போகலாமா? ஒரு கூடை ஆரஞ்சு வாங்குங்கள். அந்தச் சுளைகளை உரித்து கொடுத்துக்கொண்டே கூட்டிச் செல்லுங்கள். சக்கையை துப்பிவிடவேண்டும். வேறு எதுவுமே கொடுக்க வேண்டாம். ஆரஞ்சு சாறு எதுவுமே கொடுக்கக்கூடாது. நேராக பழத்தில் இருந்து வரும் சாறு மட்டுமே உணவு. போய்வாருங்கள்” என்றார்.
அதைக் கேள்விப்பட்டு பெரிய மகன் மறுத்தான். அப்பா டாக்டர் ”இது ஒரு டாக்டராக நான் சொல்வது அல்ல, ஒரு மகாராஷ்டிரியனாக நான் சொல்வது. ஔரங்காபாத் வந்து அஜந்தா பார்க்காமல் போகலாமா? அதுவும் ஒரு இளம் மேதை?” என்று அஜிதனைப் பார்த்து கண்ணடித்தார்.
ஒரு கூடை நிறைய ஆரஞ்சும் துப்புவதற்கு பிளாஸ்டிக் பையுமாக கிளம்பிச் சென்றோம். அஜந்தா அஜிதனை கொள்ளை கொண்டது. ஒரு கனவில் இருப்பது போல இருந்தான். பதினைந்து நிமிடங்களுக்கு ஒருமுறை ஐந்து நிமிடம் அமர்ந்திருக்க வேண்டும் என்பது டாக்டரின் ஆணை. அஜந்தாவில் உள்ள நூற்றுக்கணக்கான மிகச்சிறிய கல்குகை அறைகளில் ஒன்றில் அமர்ந்தோம். இரு கட்டில் திண்டுகள். குளிர்ந்த கல். இருவருக்கு மட்டுமே இடமுள்ள குகை. ‘படுடா’ என்றேன். அவன் படுத்தான் இன்னொன்றில் நான் அமர்ந்தேன்.
மகாபாரதம் முன்தினமே முடிந்திருந்தது. அதில் நான் கீதையை சொல்லவில்லை. ‘கீதையைச் சொல்’ என்றான். கீதையை எப்படி ஐந்தாம் வகுப்புப் பையனுக்குச் சொல்வது? அதுவும் ஒரு சவாலே என்று சொல்ல ஆரம்பித்தேன். அவன் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். புரியாத போது உதாரணங்களுக்கு தாவினேன். கீதையையும் நாற்பத்தைந்து நிமிடங்களில் சொல்லி முடித்தேன்
‘தன்னறம்’ [ஸ்வதர்மம்] பற்றி மேலும் கேட்டான். ”எது உனக்குரிய செயலோ அது. எந்தச் செயலுக்காக நீ பிறந்திருக்கிறாயோ அது. அதைச் செய்யும்போதே மனநிறைவும் வாழ்வின் முழுமையும் கிடைக்கும். அதுவே கீதையின் மையச் செய்தி” என்றேன். ”அதை எப்படி கண்டு பிடிப்பது?” என்றான்.
நான் டாக்டர் நோயைக் கண்டுபிடித்த விதத்தை சொன்னேன். ”எந்தத் துறையில் உனக்கு உள்ளுணர்வு திறக்கிறதோ அதுவே உன் தன்னறம்” என்றேன்
நேற்று அஜிதன் சார்ல்ஸ் டார்வினின் ‘ஆர்ஜின் ஆ·ப் ஸ்பீஸ’ஸை வாசித்துக்கொண்டிருந்தான். அவன் வயதுக்கு அது கடுமையான மூல நூல். நூற்றைம்பதண்டு பழைய கஷ்டமான ஆங்கிலத்தை மூச்சுபிடித்து வாசிப்பதைக் கண்டேன். ”நெறைய விஷயங்கள் டார்வினுக்கு தெரியல்லை. டிங்கோ நாய் பழகிய நாயில் இருந்து உருவான காட்டு இனம். இவர் அதை காட்டுநாய்க்கும் பழகிய நாய்க்கும் நடுவே உள்ளது என்கிறார்” என்றான். ”இது பழைய புக்” என்றேன்
”நேச்சுரல் செலக்ஷன் வரை வந்திட்டேன்.. ராத்திரி படிச்சிட்டிருந்தப்ப திடீர்னு பயமா ஆயிட்டுது. அவருக்கு புதூசா நேச்சரல் செலக்ஷன்னு ஒரு விஷயம் தோணியிருக்கே. எவ்ளவு பயமா இருக்கும் அப்டி தோணுறப்ப” ”ஏன்?” ”பைத்தியம் புடிச்சிட்டுதுன்னா?” என்றான் .”எனக்கெல்லாம் நேத்து ரொம்ப பயமா இருந்தது”
”அப்ப விட்டுடு” என்றேன்.”இது எனக்க சொதர்மம்லா?” என்றபின் எழுந்து ”ஹை சொதர்மம்! ஆ அஜக்கு! ஆ குமுக்கு!” என்று ஆடிக்காட்டினான். இந்தப்பயலை எங்கேயுமே சேர்க்க முடியவில்லை என்பதே என் வாழ்க்கையின் முக்கியமான பிரச்சினை.
மறுபிரசுரம் முதற்பிரசுரம் Mar 30, 2010
தொடர்புடைய பதிவுகள்
யாதெனின் யாதெனின்…
கடவுள், மதம், குழந்தைகள் : ஒரு வினா
ஒரு மலரிதழை முளைக்க வைத்தல்
அலைகளென்பவை….
வலி
ஆன்மீகம், போலி ஆன்மீகம்,மதம்
”என்ன சேறது மாமி, அது அப்டித்தான்!”
கலைக்கணம்
கவிதையின் அரசியல்– தேவதேவன்
தோன்றாத்துணை
தெய்வ மிருகம்
பூதம்
வால்
அழிமுகம்
செய்தொழில் பழித்தல்
ஒரு பொருளியல் விபத்து
தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (5)
தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (4)
தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (3)
தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (2)
சிதையப்போவது பிரபஞ்சமன்று, நாமே!(அறத்தாறிது)
அன்பு ஜெயமோகன்,
சொற்கள் தரும் வசீகரத்தை ஒருபோதும் சொற்களுக்குள் கொண்டு வந்துவிடவே முடியாது. ஒரு உரையாடல், நாவல், சிறுகதை, கவிதை அல்லது கட்டுரை ஒன்றிலிருந்து அவ்வப்போது நான் எதிர்கொள்ளும் சில அல்லது பலசொற்களால் வாழ்வுக்குப் புதுவண்ணம் வந்ததைப் போன்றிருக்கும். கனிகளில் ஒன்றும் தெரியாதது போல் அமர்ந்திருக்கும் விதைகளைப் போன்றுதான் சொற்கள் எனக்குக் காட்சி தருகின்றன. சொற்களைத் தேடி அலையும் நாடோடியாக இருப்பதில் உள்ளார்ந்த கர்வமும் எனக்குண்டு.
சொற்களுக்கும் எனக்குமான உறவை, என் மூச்சுக்கும் காற்றுக்குமான உறவாகவே கருதுகிறேன். அதீத சோகமான தருணங்கள் பலவற்றிலிருந்து சொற்களே என்னை மீட்டு வந்திருக்கின்றன. உச்சபட்ச மகிழ்ச்சிகரமான கணங்களையும் சொற்களாலேயே பெற்றிருக்கிறேன். எப்போதிருந்து சொற்களின் பின்னே ஓடத்துவங்கினேன் என்பதை உத்தேசமாகக் கூடச் சொல்லத்தெரியாது. எனினும், சொற்களோடு நட்பு கொண்ட பின்தான் என் வாழ்வு வெளிச்சமாகியது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.
சொற்கள் என்றவுடனேயே தட்டையாக சொற்களைப் புரிந்துகொண்டுவிட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல. சொற்களின் வழியே நாம் பெறும் பரவச அனுபவங்களே சொற்கள். ஒரு சொல்லில் இருந்து ஒருவிதமான அல்லது ஒரே மாதிரியான அனுபவத்தை மட்டுமே நமக்குப் பழக்கப்படுத்தி இருக்கின்றனர். அதுவன்று நான் குறிப்பிடுவது. ஒரு சொல்லில் இருந்து முளைக்கும் பல்வேறுவிதமான பரிணாமங்களே நான் சொல்ல விழைவது. பறவை என்ற சொல் துவக்கத்தில் ஒரு உயிரினத்தை மட்டுமே குறிப்பதாகக் கருதியிருந்தேன். சொற்களின் வசீகரத்தில் பறிகொடுத்தபோதே அது வானமாக, மரத்தின் கிளையாக, சிறகின் தொகுப்பாக, மென்மையின் முகமாக.. இப்படி பல பரிமாணங்களைக் காட்டியது; இன்னும் காட்டுவதற்குத் தயாராக இருக்கிறது. அதனாலேயே பறவை எனும் சொல் எனக்கு ஒவ்வொரு முறையும் புதிதாய் இருக்கிறது. தயைகூர்ந்து சொற்களைத் தட்டையான அர்த்தங்களுக்குள் அடக்கி அவற்றைச் சிறுமைப்படுத்திவிட வேண்டாம்.
இதுகாறும் நான் கடந்து வந்த அல்லது எதிர்கொண்ட சொற்களில் மிகப்பலமாக என்னை உலுக்கியது அறம் எனும் சொல்தான். அறம் எனும் சொல்லை பிரபலப்படுத்தியதில் உங்களுக்கு அதிகப்பங்குண்டு என்றே நினைக்கிறேன். கல்லூரி காலத்தில் அச்சொல்லை ஒற்றை அர்த்தத்திலேயே நான் விளங்கிக்கொண்டு இருந்தேன். ”பொய் பேசாதே” என்பதை அறமாகக் கொண்டால், எச்சூழலிலும் பொய்பேசிவிடக்கூடாது என்பதாகத்தான் நான் புரிந்திருந்தேன். திருக்குறளை வாசிப்பாகப் படித்தபோது ’பொய் பேசுவதை’ ஓரிடத்தில் அவர் அறமாக வலியுறுத்தி இருப்பதை அறிந்து திகைத்துப் போனேன். ”திருக்குறள் ஒரு அறநூல். அது பொய் பேசாதே என்றும் சொல்கிறது. சில இடங்களில் பொய் பேசு என்றும் சொல்கிறது. எது சரியானது?” என எனக்கு நானே குழம்பிக் கொள்வேன். அக்குழப்பம் பலவருடங்களுக்கு முன்புவரை என்னில் தொடர்ந்தது. அக்குழப்பத்தை உங்கள் முரணியக்கம் எனும் சொல்லே தீர்த்து வைத்தது.
அறம் எனும் சொல்லைக் கொண்டு நீங்கள் கட்டி எழுப்பிய விஷ்ணுபுர நாவலை நான் இன்னும் உள்ளார்ந்து வாசிக்கவில்லை. கடவுள் தேடலில் நச்சரித்துக் கொண்டிருந்த மனதுக்குத் தீனி போடுவதற்காகவே விஷ்ணுபுர வாசிப்புக்கு வந்தேன். ஒட்டுமொத்த இந்தியாவின் தத்துவப்பின்புலத்தை இத்தனை செறிவாக ஒரு புனைவில் கொண்டு வர முடியுமா என அதிசயித்துப் போய்விட்டேன். ”ஒரு தத்துவம்தான் சிறந்ததாக இருக்க முடியும்” எனும் என் மொண்ணைப் புரிதலை முதலில் முருகவழிபாட்டின்போதான் சில ஆய்வுகள் முறியடித்தன என்றால், விஷ்ணுபுரம் இன்னும் அகலமாக என் புரிதலைச் சிதறடித்தது. மனதின் நமைச்சல் ஒடுங்குமளவிலான உரையாடல்களை விஷ்ணுபுரம் இயல்பாக நிகழ்த்திச் சென்றிருந்தது. பல அமர்வுகளில் நான் வாசித்த அந்நாவலில் இன்று பல பெயர்களும், சமபவங்களும் நினைவில் இல்லை. ஆனால், மகாதர்மம் எனும் சொல் ஆழப்பதிந்திருக்கிறது. அறம் எனும் சொல்லின் ஒரு பரிமாணமாகவே மகாதர்மத்தைக் கண்டேன்.
சமீபமாய் ஆனந்தின் காலவெளிக்காடு கட்டுரைத்தொகுப்பைப் படிக்கும் வாய்ப்பமைந்தது. உங்கள் எழுத்தில் நான் கண்டது மாய வசீகரம் எனில், ஆனந்தின் எழுத்தில் நான் கண்டது யதார்த்த வசீகரம். அவரின் நான் காணாமல் போகும் கதை எனும் குறுநாவலை முன்னர் படித்திருக்கிறேன். வெகுயதார்த்தமான பாணியில் அமைந்திருந்த அந்நாவலின் காட்சிகள் வழியேயும், காலவெளிக்காடு கட்டுரைத் தொகுப்பு வழியேயும் அவர் முன்வைத்திருந்த பிரபஞ்ச நான் எனும் சொல் வழியே திரும்பவும் மகாதர்மத்தை வந்தடைந்தேன். அறம் எனும் சொல்லையே அதிகம் கையாண்டிருக்க மாட்டார் ஆனந்த். ஆனாலும், அவர் சொல்ல விழைகின்ற கருப்பொருளாக அதுவே நின்றிருந்தது. அறத்தை எவ்விடத்தும் புனிதப்படுத்தாமல் அதைக் கட்டுடைப்பதன் ஊடாக அதை இன்னும் எளிமையாக அணுகுவதற்கு அழகாக உதவி இருப்பார் அவர்.
”காலத்தைக் கடப்பது என்பது காலத்தைப் புரிந்து கொள்வதுதான்.”, “உண்மையில் நாம் புதிதாக எதுவும் கற்க வேண்டியதில்லை. எல்லோருக்கும் வேண்டியது அனைத்தும் எப்போதும் உள்ளது.”, “சமூகத்தளத்தின் எல்லைகளுக்குள் மட்டுமே இயங்கும் வாழ்க்கை அரைகுறையானது. அடிப்படையிலேயே பொய்யானது.”, “சூரிய ஒளி சூரியனின் செயல்பாடு அல்ல. அதன் அடிப்படைத்தன்மை. அவ்வாறே ‘நான்’ உணர்வு அறிவுணர்வாக இருப்பது அதன் தன்மை; அதன் செயல்பாடு அல்ல.”, “ நதியின் நீர் நதியல்ல. நதியிலிருந்து அள்ளப்பட்ட ஒரு வாளி நீரும் நதியல்ல. நதியின் ஓட்டமே நதி.”, “ கதவுகளைத் திறந்துவிட்டால் சிறையும் வீடுதான். வீடுகளை மூடிவைத்தால் வீடும் சிறைதான்.”, “தியானிப்பவர் இல்லாத நிலைதான் தியான நிலை” போன்ற வாக்கியங்கள் வழியே ஆனந்த் என்னைத் திணறடித்து விட்டார். இன்னும் கட்டுரைகளில் வாக்கியங்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றை வாசித்து அனுபவிக்க என்று தவிர்த்திருக்கிறேன். அறமெனும் சொல்லில் இருந்து கிளைத்த வாக்கியங்களாகவே அவை எனக்குப் படுகின்றன.
அறம் தொடர்பாய் ஒரு வரைபடம் தரலாம் எனப் பார்க்கிறேன். துவக்கத்தில் இருந்தது பிரபஞ்ச அறம். அதை மையமாகக் கொண்டே சமூக அறம், உயிர் அறம், மனித அறம், ஊர் அறம், தொழில் அறம், குல அறம் போன்றவை கிளைத்திருக்கின்றன. இப்படியான புரிதல் இன்று நமக்கு இல்லை. அதனால்தான் குல அறம் சாதிகளுக்கு இடையேயான மோதல்களாகவும், ஊர் அறம் முட்டாள்தனமான பிற்போக்குத்தனமாகவும், உயிர் அறம் ஆன்மிகவாதிகளுக்கு மட்டுமேயான தகுதியாகவும் கருதப்படும் அபத்த நிலைக்கு வந்திருக்கிறோம். ஒருபோதும் நாம் மறந்துவிடக் கூடாதது பிரபஞ்ச அறம். அதை மறந்தால் சிதையப்போவது பிரபஞ்சமன்று; நாமே.
முருகவேலன்(சக்திவேல் ஆறுமுகம்),
படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை,
கோபிசெட்டிபாளையம்.
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 39
[ 6 ]
“என்ன நிகழ்ந்தது என்று நான் இளைய யாதவனிடம் மூன்றுமுறை கேட்டிருக்கிறேன்” என்றார் சாந்தீபனி முனிவர். “முதல்முறை தவிர்க்கும் புன்னகையுடன் அதை பிறிதொரு தருணத்தில் சொல்கிறேன் ஆசிரியரே என்றான். அப்போது மூத்தவர் உடனிருந்தார். அவர் உரத்த குரலில் இவன் என்ன சொன்னான் ஆசிரியரிடம் என நானும் அறியேன். நான் பலமுறை அதை கேட்டுவிட்டேன். என்னிடமும் சொன்னதில்லை என்றார்.”
இரண்டாம் முறை நாங்கள் இருவரும் துவாரகையில் அவன் அறையில் தனித்திருக்கையில் கேட்டேன். என்ன நிகழ்ந்தது என சொல்லிவிடலாம் ஆசிரியரே. ஆனால் வெளியே நிகழ்ந்தவற்றை மட்டுமே சொல்லமுடியும். அதனால் பயன் என்ன? என்றான். அவன் முகத்தில் எப்போதுமுள்ள மாறாபுன்னகை அப்போதுமிருந்தது. ஆனால் விழிகளில் வலியை கண்டேன். ‘அப்படியென்றால் உனக்கும் வலி உண்டா? நீயும் துயர்கொள்வதுண்டா? நன்று’ என என் உள்ளம் சொல்லிக்கொண்டது. அதை உணர்ந்ததுபோல அவன் உரக்க நகைத்து “லீலை!” என்றான். மேலும் ஓசையெழச் சிரித்துக்கொண்டு “ஆம், லீலை… அரிய சொல்” என்றான்.
மூன்றாம் முறை நான் அவனிடம் கேட்டது எந்தை கிளம்பிச்சென்று பன்னிரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தபோது. முதியோர் இல்லம்விட்டு சென்றால் ஒரு வியாழவட்டம் நிறைவுகொண்டபின் விழிமறைந்தவர் மண்மறைந்துவிட்டார் என்று கணித்து நீர்க்கடன்கள் செய்வது வைதிகமுறைமை. மூன்றுவியாழவட்டம் காப்பது நடுஅகவையருக்கும் ஐந்து வியாழவட்டம் காப்பது இளமைந்தருக்கும் வழக்கம் என்று நிமித்திகர் என்னிடம் சொன்னார்கள். அதுவரை நான் அதை எண்ணியதில்லை. அதை அவர்கள் நாவிலிருந்து கேட்ட அன்றுதான் எந்தையை முற்றாக இழந்தேன்.
கங்கையில் நீர்க்கடன்களை முறைப்படி செய்து எந்தையை விண்ணேற்றினேன். அதன் பின் எனக்குள் சூழ்ந்த வெறுமையை தாளாமல் துயில் முற்றழிந்தேன். இந்த சாந்தீபனி குருநிலையின் வாயிலில் ஒருநாள் எந்தை வந்து நிற்கப்போகும் தருணத்தை நான் ஒவ்வொருநாளும் எதிர்பார்த்திருந்தேன் என அப்போது உணர்ந்தேன். அவருக்காகவே நான் இங்கு வேதச்சொல் பயின்றேன். அவர் இருந்த காலத்தைவிட இருமடங்கு பெரிதாக இதை வளர்த்தெடுத்தேன். என்னருகே அவர் எப்போதுமிருந்தார். மீண்டுவந்து அவர் சொல்லப்போகும் சொல்லை எத்தனை முறை நான் கருக்கொண்டு உருத்திரட்டியிருப்பேன்!
அவர் வரப்போவதில்லை என்று தெளிந்ததும் ஒருகணத்தில் அனைத்தும் பொருளிழந்தன. அதெப்படி என்று வியந்தபடி எண்ணியெண்ணி மருகியபடி இருந்தது என் அகம். அவர் மீண்டுவரவில்லை என்றால், நான் என்னவானேன் என அவர் அறியவே இல்லை என்றால், நான் அடைந்தவற்றைக்கொண்டு என்ன செய்வது? லீலை என்கிறோம், ஊழின் பெரும்பொருளின்மை என விளக்குகிறோம்… அச்சொல்லை வாழ்ந்தறிய நேர்வது நம் உடலும் நம் நகரும் நாமறிந்த அனைத்தும் துண்டுகளாக துகள்களாக பொடிபடலமாக உடைந்து சிதறிப் பரந்தழிவதற்கு நிகர்.
தாளாமலானபோது கிளம்பி துவாரகைக்கு சென்றேன். அங்கே அவன் தன் மனைவியருடன், கவிஞரின் பாடல்களிலும் சூதர் கலைகளிலும் போர்க் களியாட்டுகளிலும் மூழ்கித் திளைத்துக்கொண்டிருந்தான். அவனை அவ்வண்ணம் கண்டதும் எழுந்த பெருஞ்சினத்தை என்னால் அடக்கமுடியவில்லை. அவன் அவைநின்று “மூடா! உன் ஆசிரியர் மறைந்து வியாழவட்ட நிறைவாகிறது. அதை அறிவாயா?” என்று கூவினேன். “ஆம், நிமித்திகர் சொன்னார்கள். அவருக்கு நான் ஆற்றவேண்டிய சடங்குகள் ஏதுமில்லை என்றனர்” என்றான்.
“அவரைக் கொன்றவன் நீ” என்று கூவினேன். “பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் உன் சொற்களால்தான் அவர் துரத்தப்பட்டார். அப்பழியை நீ சுமந்தாகவேண்டும்” என்றேன். “ஆசிரியரே, அப்பறவை கிளையிலிருந்து விண்ணுக்கு எழுந்ததா இல்லை சிறகோய்ந்து மண்ணில் விழுந்ததா?” என்றான். “அது விண்ணேகியது என்றுதான் உங்கள் குருநிலையில் சொல்கிறீர்கள்.” நான் “ஆம், துறவிக்கு துறத்தல் எல்லாம் மெய்யறிதலே. அவர் வென்று சென்றார்” என்றேன். “அவரை வெல்லச்செய்தவன் எப்படி பழி சுமக்கவேண்டும் என்கிறீர்கள்?” என்று அவன் சிரித்தான்.
“நீ அவரை துயர்கொள்ளச் செய்யவில்லை என இந்த அவையில் உன்னால் உறுதிசொல்ல முடியுமா? அவர் செல்கையில் உன்னை வாழ்த்தினார் என்று ஆணையிட்டு உரைப்பாயா? ஆசிரியரின் இறுதிவாழ்த்தைப் பெறாதவன் கல்வி நிறைவடைந்தவனா என்ன?” என்றேன். “அவர் என்னை வாழ்த்தவில்லை. பழிச்சொல்லே அளித்துச் சென்றார்” என்று அவன் மாறாசிரிப்பிருந்த விழிகளுடன் சொன்னான். “ஆகவேதான் அவரது மெய்யறிதலின் ஒரு துளியையும் நான் எடுத்துக்கொள்ளப் போவதில்லை என உறுதிகொண்டிருக்கிறேன்” என்றான். “சாந்தீபனி குருநிலையுடன் எனக்கு இனி உறவில்லை. அங்கு நான் கற்றேன். ஆசிரியருக்குரிய கொடையையும் அளித்தேன்.”
“அவரிடம் நீ சொன்னதென்ன?” என்றேன். என் குரல் தணிந்திருந்தது. “அதை நான் ஒருபோதும் சொல்லப்போவதில்லை” என்றான். “ஏனென்றால் நான் சொல்வது என் தரப்பே ஆகும்.” நான் உரக்க “நீ நாணுகிறாய். நீ அஞ்சுகிறாய். உன் சிரிப்புக்குப் பின் அது இருப்பதை அவை அறிக!” என்றேன். அவன் நகைத்து “ஆசிரியரே, நான் எண்ணிக்கொண்டிருப்பது லீலையைப் பற்றி மட்டும்தான்” என்றான். நான் திகைத்து நோக்க சிரித்துக்கொண்டே “பெரும்பொருளின்மை” என்றான். நான் திரும்பி நடந்தேன்.
அங்கே ஒருகணமும் இருக்கமுடியாமல் நான் அன்றே கிளம்பிவிட்டேன். துவாரகையிலிருந்து பாலைநிலம் வழியாக உஜ்ஜயினிக்கு சென்றேன். செல்லும்வழியில் ஒரு பாலைச்சோலையில் முள்மரத்தடியில் இளைப்பாறிக்கொண்டிருந்தேன். அப்போது தொலைவில் புரவியில் அவன் தனியாக வருவதை கண்டேன். பாலையின் காற்றும் ஒளியும் கலந்த அலைமேல் அவன் உருவம் நெளிந்துகொண்டிருந்தது. அது என் விழிமயக்கா என ஐயம் கொண்டேன். அவனாகிய அலைகள் இணைந்து மெல்ல திரண்டு அவனேயாக மாற அருகணைந்தான். புரவிக்குளம்புகள் மணலில் அழுந்தி ஒலித்தன.
நான் நோக்கியபடியே இருந்தேன். அவன் இறங்கி அருகே வந்தான். முகமன் சொல்லாமல் “தங்களிடம் பேசவே வந்தேன், ஆசிரியரே” என்றான். “சொல்!” என்றேன். “சொல்லற்குரிய தருணம் அல்ல அது. ஆசிரியனைப் பழித்தல் என்பது இந்த ஆடலின் ஒரு தருணம்போலும். அதை இன்னமும் என்னால் கடக்க முடியவில்லை” என்றான். முதல்முறையாக அவன் முகம் கலங்குவதை நான் கண்டேன். “நான் கடக்கவே இயலாத ஒன்று அது” என்றபடி அமர்ந்தான். பெருமூச்சுவிட்டபடி மணலை அளைந்துகொண்டிருந்தான். “சொல்!” என்றேன்.
“நான் இதை உங்களுக்காகவே சொல்ல வந்தேன்” என்றான். “சொல்வதனூடாக நான் இதிலிருந்து விடுபடப்போவதில்லை. இதன் பொறி அத்தனை எளிதில் அறுபடுவதல்ல.” நான் அவனை நோக்கிக்கொண்டிருந்தேன். அதுவும் அவன் ஆடும் நாடகமா என எண்ணும் உள்ளத்தை என்னால் வெல்லமுடியவில்லை. “ஆனால் நீங்கள் இதில் சிக்கிக்கொண்டீர்கள் என இன்று அவையில் நீங்கள் கொண்ட சினம் கண்டு அறிந்தேன். இதிலிருந்து நீங்கள் மீண்டாகவேண்டும். இல்லையேல் உங்கள் கல்வியும் அறிவும் தெளிவும் இதனால் அழிந்துவிடக்கூடும். குருதியெல்லாம் நஞ்சாகக்கூடும்” என்றான்.
நான் அவன் சொன்ன சொற்களை விழிகளால் கேட்பவன் போல் அமர்ந்திருந்தேன். அவன் சொன்னது முற்றிலும் உண்மை என நான் அப்போது அறிந்தேன். அவ்வினாவுடன் நான் வாழ முடியாது. “ஆசிரியரே, எந்தை நந்தகோபரின் கை பற்றி நானும் என் தமையனும் கல்விச்சாலைக்குள் நுழைந்தபோது மையக்குடிலில் இருந்து ஆசிரியர் கைகளை விரித்தபடி பாய்ந்து என்னை பற்றிக்கொண்டார். ‘வந்தாயா, வந்துவிட்டாயா’ என்று கூவினார். திரும்பி ‘பிருகதரே, இவன்தான், இவனேதான்’ என்றார். ‘வந்துவிட்டான், இதோ என் முன் வந்து நின்றிருக்கிறான்’ என்று கண்ணீர் ஒலித்த குரலில் கூவினார்” என்றான் இளைய யாதவன்.
அவர் கொண்ட அக்கொந்தளிப்பைக் கண்டு எந்தை திகைத்தார். ‘ஆசிரியரே, இவர்களை நீங்கள் பிறிதெவரோ என எண்ணியிருக்கக்கூடும். இவர்கள் அரசிளங்குமரர்கள் அல்ல, யாதவர்கள். என் மைந்தர், கோகுலமென்னும் ஆயர்ச்சிறுகுடியினர்’ என்றார். ‘ஆம், இவர்களைப் பார்த்தாலே தெரிகிறதே, ஆயர்ச்சிறுவர். ஆனால் இவர்கள்தான் நான் தேடியவர்கள். இவர்களுக்காகவே இங்கு இக்கல்விநிலை எழுந்தது’ என்றார் அவர். என்னைத் தூக்கி தோளிலேற்றிக்கொண்டு அறைக்குள் சென்றார். அங்கிருந்த இன்னுணவை எடுத்து என்னிடம் தந்து ‘உண்க! இது என் முதல் இனிப்பு’ என்றார்.
அன்றுமுதல் நான் உஜ்ஜயினியின் சாந்தீபனி குருநிலையின் மாணவனாக அன்றி இளமைந்தனாகவே கருதப்படலானேன். இரவும் பகலும் நான் ஆசிரியருடன் இருந்தேன். பயிற்றமர்வுகள் முடிந்து மாணவர்கள் சென்றபின் அவர் மடிமேல் ஏறியமர்ந்து சொல்கேட்கத் தொடங்குவேன். என் ஐயங்கள் ரக்தபீஜனைப்போல துளியிலிருந்து ஒன்றென முளைப்பவை. அவர் ஒவ்வொரு வினாவுக்கும் மேலும் மேலும் மலர்ந்தபடியே செல்வார். விடைபெறாத வினா ஒன்று உதடுகளில் எஞ்ச அவர் அருகே படுத்து துயில்வேன். அவ்வினாவுடன் விழித்தெழுவேன். அவருடன் காலையில் நீராடுவேன். அனலோம்புகையில் அருகமர்வேன். அவர் உடலின் ஓர் உறுப்பென அவர் குருதி என்னில் ஓட என் துடிப்பு அவர் எண்ணமென்றாக வாழ்ந்த நாட்கள் அவை.
அந்நாளில்தான் என்னை அக்ரூரர் காணவந்தார். ‘இளையோனே, உனக்கான நாள் வந்துவிட்டது’ என்றார். கல்விநிலையின் சாலமரத்தடியில் அமரச்செய்து என்னிடமும் மூத்தவரிடமும் மதுராவில் என்ன நிகழ்கிறது என்று சொன்னார். இளமைந்தர்கள் கொன்றுவீழ்த்தப்பட்ட செய்திகேட்டு நான் உடல் விதிர்த்து எழுந்து நின்றுவிட்டேன். ‘இன்னுமா அவன் நெஞ்சு பிளக்கப்படவில்லை?’ என்றேன். ‘அதை நீ செய்யவேண்டுமென்பது ஊழ் போலும்’ என்றார் அக்ரூரர். ‘உன் ஆசிரியரின் வாழ்த்துபெற்று நாளை கிளம்புவோம்!’
நடுங்கும் உடலுடன் நான் ஆசிரியரை தேடிச்சென்றேன். அவர் தொலைவில் அமர்ந்து நூலாய்ந்துகொண்டிருந்தார். அவர் முகம் கொண்ட ஒளி என்னை எரிந்தெழச் செய்தது. ஓடிச்சென்று அந்தச் சுவடிகளைப் பிடுங்கி வீசிவிட்டு கூவினேன். ‘இந்நெறிகளுக்கு என்ன பொருள்? இங்கு நாம் ஆராயும் மெய்ச்சொல்லால் என்ன பயன்? சொல்திருந்தா இளமைந்தர் கொன்று குவிக்கப்படுகையில் அவன் நெஞ்சு கிழிக்க வாளென எழாத வேதங்கள் போல் இழிந்தவை எவை?’ என்றேன். தரையை காலால் உதைத்து ‘நம்மை கட்டிவைப்பதுதான் இச்சொற்களால் ஆவதென்றால் இவற்றை மிதித்துத் தள்ளுகிறேன்’ என்று கூவினேன்.
புன்னகையுடன் ஆசிரியர் ‘மைந்தா, அவர்கள் மானுட மைந்தர்கள் என்பதனால் நீ கொதித்தெழுகிறாய். ஏனென்றால் நீயும் மானுடன்’ என்றார். ‘திரும்பிப்பார், அதோ அக்கிளையில் சிறு கிளிக்குஞ்சை கவ்வி வந்து கூருகிரால் பற்றி அமர்ந்து கொத்திக் கிழித்து உண்ணுகிறது காகம். இப்போதும் கிளிக்குஞ்சின் கதறல் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது.’ திரும்பி நோக்கி நான் உடல் தளர்ந்தேன். ‘ஆம்’ என்றேன். ‘ஒருகணம் திரும்பி கீழே நோக்கு. துடிக்கத் துடிக்க அந்தப் புழுக்குழவியை கவ்வி கொண்டுசெல்கின்றன எறும்புகள்’ என்றார். நான் அக்கணத்திறப்பில் புவியென விரிந்த மாபெரும் கொலைக்களத்தைக் கண்டு குளிர்ந்துறைந்து நின்றேன்.
ஆசிரியர் ‘அலகிலா பேரின்பவடிவம் இப்புவி. அலகிலா துயரவெளியும்கூட. நெறி, அறம், அன்பு, இரக்கம், அழகு என நின்றுளது நம்முன். மீறல், மறம், வெறுப்பு, கொடுமை, இருள் என அதுவே மறுகணம் தன்னை காட்டுகிறது. மைந்தா, அதையே லீலை என்றேன்’ என்றார். ‘இருநிலைகளுக்கு நடுவே அசையா நிகர்நிலை கொண்டவன் அந்த லீலையை காண்கிறான். இன்பத்திலும் துன்பத்திலும், இருளிலும் ஒளியிலும், அறத்திலும் மறத்திலும் அசையாத சித்தம் கொண்டவனே யோகி.’ அவர் சொற்கள் என்னுள் இன்றும் ஒலிக்கின்றன.
ஆசிரியர் என் தோளில் கைவைத்து சொன்னார் ‘மைந்தா கேள், துயரத்தில் துவளாமல் இன்பத்தை நாடாமல் பற்றும் அச்சமும் சினமும் எழா உள்ளம் கொண்டவனே இப்பெருவிளையாடலை காணும் விழிப்புள்ளவன். அவனையே யோகி என்கின்றனர். பற்றின்றி இன்பத்தை நாடாமல் துயரை வெறுக்காமல் நின்றிருப்பவனின் சித்தமே நிலைபெற்றது. இங்கு அனைத்தும் புயலொன்றால் அலைக்கழிக்கப்பட்டு சுழன்று ஆடிக்கொண்டிருக்கின்றன. தானும் அதில் ஆடுபவன் ஆடலை அறிவதில்லை. சித்தம் அசைவற்றவன் அந்தப் பெருஞ்சுழற்காற்றை கண்டுகொள்கிறான்.’
நான் அதை கேட்டுக்கொண்டு சிலகணங்கள் நின்றேன். பின் என் உள்ளிருந்து ஒரு சீறல் எழுந்தது. அவர் கையை தட்டிவிட்டுவிட்டு வெளியே ஓடினேன். நேராக சென்று அக்ரூரரிடம் ‘கிளம்புக! இப்போதே…’ என்றேன். ‘ஆசிரியரின் வாழ்த்துரை பெற்றுவிட்டாயா?’ என்றார் அக்ரூரர். ‘நான் என் உள்ளுறைபவனின் வாழ்த்தை பெற்றுவிட்டேன்’ என்றேன். அவருடன் கிளம்பிச்சென்றேன். மதுரா நகர்புகுந்து என் மாமனை களத்தில் கொன்றேன். அந்தப் பாழ்பட்ட நிலத்தை குருதியால் மும்முறை கழுவினேன். அறம் மீறக்கண்டும் அஞ்சி அமர்ந்திருந்த மாக்கள் உயிர்வாழவும் தகுதியற்றோர் என அறிவித்து அவர்களை தேடித்தேடி வேட்டையாடினேன்.
குருதியைப்போல புரிந்துகொள்ள முடியாத ஒன்று இப்புவியில் இல்லை, ஆசிரியரே. அருந்த அருந்த விடாய்பெருக்கும் இனிய மது அது. எரியென்று கொழுந்துவிடும் நீர். கோடானுகோடி விதைகள் கலந்த ஓடை. நான் அதில் மிதந்துசென்றேன். எங்கோ ஓர் இடத்தில் என்னை நிறுத்திக்கொள்ள வேண்டுமென அறிந்திருந்தேன். ஆனால் குருதி குருதியை பெருக்கியது. ஒருநாள் மதுராவில் தெருவில் நடந்தபோது எதிரே வந்த இளமைந்தன் ஒருவனை நோக்கி புன்னகையுடன் குனிந்தேன். அவன் விழிகளில் எழுந்த அச்சத்தை, அவன் உடல் அறியாது குன்றிச் சிலிர்ப்பதை கண்டேன்.
என்னை உணர்ந்தவனாக நான் திரும்பி ஓடினேன். அங்கிருந்தே புரவியேறி சாந்தீபனி குருநிலைக்கு வந்தேன். தன் அறையில் அமர்ந்து அதைப்போலவே சொல்லாய்ந்துகொண்டிருந்த ஆசிரியரின் முன் சென்று கண்ணீருடன் நின்றேன். ‘ஆசிரியரே, நான் சொல்லாய்ந்த ஒருவன் செய்தற்கு அஞ்சும் அனைத்தையும் செய்துவிட்டு வந்துள்ளேன்’ என்றேன். கால்மடித்து அவர் முன் விழுந்து ‘என்மேல் தீச்சொல்லிடுக! என்னை எரியால் பொசுக்குக! நான் குருதியாடிய கொடுந்தெய்வம் இன்று’ என்றேன்.
ஆசிரியர் மாறாபுன்னகையுடன் ‘மைந்தா, நீ செல்லும்போது சொன்னதையே இன்றும் சொல்கிறேன், இது லீலை. இப்புவி என்றும் குருதியால் நனைந்தபடிதான் உள்ளது’ என்றார். நான் கடும் சினம் கொண்டேன். ‘அங்கு இறந்துவிழுந்த இளமைந்தரின் குருதியும் இவ்வீணரின் குருதியும் ஒன்றா?’ என்றேன். ‘என்ன ஐயம்? அனைத்துக் குருதியும் ஒன்றே. அம்மைந்தர் வளர்ந்து படைவீரர்களாகி களம்பட்டால் மட்டும் அது அறமென்றாகிவிடுமா?’ என்றார். ‘இவை பொருளற்ற இறப்புகள்’ என்றேன். ‘அனைத்து இறப்பும் பொருளற்றதே. ஏனென்றால் அனைத்து வாழ்வுகளும் பொருளற்றவையே’ என்றார் ஆசிரியர்.
அவர் என்னிடம் ‘பொருளின்மை எனும் கரிய யானையின் மத்தகத்தின்மேல் அமர்ந்தவனே யோகி. அவ்விருளில் வெண்தந்தங்கள் என இரு நிலவுகள் எழும். அதுவே மெய்மை’ என்று சொன்னார். அச்சொற்களை தாளமுடியாதவனாக நான் அங்கே அமர்ந்தேன். அவர் சொல்வனவற்றை வெறுமே பார்த்துக்கொண்டிருந்தேன். ‘நீ விழைந்ததை ஆற்றி மீண்டுவிட்டாய். இனி உனக்குக் கடமைகள் இல்லை. இங்கேயே இருந்து எஞ்சியதை கற்றுச்செல்க! ஒருவேளை இனிமேல் உனக்கு லீலை என்னும் சொல் பசுங்குருதி மணம் கொண்ட கருக்குழவி போல பொருள் அளிக்கக்கூடும்’ என்றார்.
நான் மீண்டும் சில ஆண்டுகள் குருநிலையில் கற்றேன். என்னுள் எழுந்த எரித்துளி மேல் மேலும்மேலும் சொற்களைப் போட்டு மூடிக்கொண்டே இருந்தேன். என்னை அங்குள்ள அனைவருமே அச்சத்துடனும் அருவருப்புடனும்தான் பார்த்தனர். ஆசிரியர் மட்டுமே என்னை அவருக்கு உகந்தவனாக கொண்டிருந்தார். ‘ஆம், அவனே என் முதல்மாணவன். சொல்லுக்கு அப்பால் சென்று சொல் எழுந்த ஊற்றைக் காணும்வரை செல்லத்துணிபவன்’ என்றார். அவரை எதிர்த்துப் பேச அவர்கள் அஞ்சினர்.
ஆனால் ஒருநாள் நான் வேள்விக்கு தர்ப்பைமேல் அமர்ந்த ஆசிரியரின் வலப்பக்கம் அமர்ந்திருந்தேன். அவர் கையின் பொருளுணர்ந்து அன்னத்தை எடுத்து அவியாக அளித்தேன். அன்று வேள்வி முடிந்ததும் மூத்தமாணவர் எழுவர் என் கைதொட்ட அவிமிச்சத்தை உண்ணமாட்டோம் என்று மறுத்தனர். என்னை சுட்டிக்காட்டி வெறுப்பு எழுந்த குரலில் ‘குருதிபடிந்த அன்னம் அது. தெய்வங்கள் ஏற்காதது’ என்றார் சம்யுக்தர். ‘ஷத்ரியன் போர்க்களத்தில் சிந்தும் குருதியன்றி பிற அனைத்தும் கொலையே. இவன் கன்றோட்டும் குலத்தின் நெறிமீறி தாய்மாமனைக் கொன்றவன். பழி சூழ்ந்தவன்.’
அக்கணத்தில் எழுந்த பெருஞ்சினத்தால் நான் கூவினேன் ‘ஆம், இங்கு நீர் ஆற்றும் இது பொருளற்ற வேள்வி. அங்கு மதுராவில் நான் ஆற்றிய குருதி வேள்வியே தெய்வங்களுக்கு உகந்தது. அங்கு எழுந்த நாணொலியும் வஞ்சினமுமே வேதம். அந்தணரே, பசித்தவனுக்கு அன்னமும் நோயுற்றவனுக்கு மருந்தும் தனித்தவனுக்குத் துணையும் வஞ்சிக்கப்பட்டவனுக்கு வாளுமென எழுவதே மெய்வேதம்.’ என் சினமே சொற்களை கொண்டுவந்து சேர்த்தது. ‘இங்கு இதைப்போல ஆயிரம் மடங்கு பெரிய குருதிவேள்வி ஒன்றை நிகழ்த்துவேன். அத்தனை தேவர்களையும் வரவழைத்து மெய்வேதம் எதுவென்று காட்டுவேன். இது என் ஆணை! அறிக தெய்வங்கள்!’
அதன்பின் அங்கு தங்க விரும்பாமல் கிளம்பிச் சென்றுவிட்டேன். மகதத்தை வென்று என் நிலத்தை மீட்டேன். கடலோரம் சென்று துவாரகையை அமைத்தேன். என் வினா என்னைத் துரத்த வெவ்வேறு மெய்நூல்கள்தோறும் சென்றுகொண்டிருந்தேன். வேதமெய்மையை வைரத்தின் பட்டைகள் என திருப்பித்திருப்பி முடிவிலா வெளியாகக் காட்டின அவை. பஞ்சுப்பொதிகளை எரிதுளி என அவற்றை என் வினா கடந்து சென்றது. நாள் செல்லச்செல்ல நாகத்தின் தலைக்குள் நஞ்சு முதிர்ந்து குளிர்நீல மணி ஆவதுபோல அவ்வினா என்னுள் எஞ்சியது. அதை பிற எவரிடமும் கேட்டறிய வேண்டியதில்லை என்று தெளிவுகொண்டேன். என்னுள் இருந்து ஓர் ஆசிரியன் எழுந்து அவ்விடையை எனக்கு அருளவேண்டும். அவனுக்காக காத்திருக்கலானேன்.
அப்போதுதான் ஆசிரியர் என்னை அழைத்து பிரபாச தீர்த்தத்திற்கு அழைத்துச்செல்லும்படி கோரினார். அவர் மைந்தர் முன்னரே மறைந்துவிட்டார் என நான் அறிந்திருந்தேன். அவர் புன்னகையுடன் ஒருநாள் அதை என்னிடம் சொன்னார். ‘என்னை வெல்ல அவன் கிளம்பிச்சென்றான்.’ மேலும் சிரித்தபடி ‘மைந்தர் தந்தையிடமிருந்து அகன்று அகன்று அவரை வெல்ல முயல்கிறார்கள். வெல்லுந்தோறும் அணுகி வந்தமைகிறார்கள். ஆனால் அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை, செல்வதை மட்டுமே அவனால் திட்டமிடமுடியும் என்று’ என்றார். ‘அவர் எங்கே?’ என்றேன். ‘பிரபாச தீர்த்தமாடச் சென்றான். அங்கு சென்றவர்களில் சிலரே மீள்கிறார்கள்’ என்றார்.
ஆனால் அன்று நான் பிறிதொரு ஆசிரியரை கண்டேன். அவர் நடுங்கிக்கொண்டே இருந்தார். ஒரேநாளில் பல்லாண்டுகால முதுமை வந்து கூடியதுபோல. அவர் கைபற்றி மலைப்பாதையில் அழைத்துச்சென்றபோது விட்டில் ஒன்றை பற்றியிருப்பதுபோலவே உணர்ந்தேன். அவர் மைந்தன் உயிருடனிருப்பதாக நிமித்திகர் சொன்னபோது கூண்டைத் திறந்து நான் முற்றிலும் அறியாத ஒருவர் வெளிவந்தார். அங்கு அலறிவிழுந்து நினைவுமீண்டு எழுந்ததுமே என் கைகளை பற்றிக்கொண்டு ‘என் மைந்தன்! என் மைந்தன்!’ என அரற்றத் தொடங்கினார்.
என்னிடம் அவர் மைந்தனை மீட்டுக்கொண்டு வரவேண்டும் என்று ஆசிரியக்கொடை கோரியபோது என் கைகளைப் பற்றி நெரித்துக்கொண்டிருந்த கைகளில், கலங்கி வழிந்த விழிகளில் நான் கண்டது பேதைமையையே ஆற்றலாகக் கொண்ட அன்னை ஒருத்தியைத்தான். என் நெஞ்சுக்குள் மிக ஆழத்தில் ஒன்று நலுங்கியது. நான் அவரிடம் அவர் மைந்தனுடன் மீள்வதாக உறுதியளித்தேன். ‘என் மைந்தனை ஒருநோக்கு காட்டு. அவன் கால்களை தோள்களை நான் ஒருமுறை விழிகொண்டால் போதும். மானுடன் என வந்தமைக்கு பிறிதொன்றும் எனக்குத் தேவையில்லை’ என்று அவர் அழுதார்.
நான் பஞ்சஜனத்தை வென்று அச்செய்தியுடன் அவரை காணச்சென்றேன். அவர் நான் வருவதை அறிந்து கண்ணீருடன் எனக்காகக் காத்திருந்தார். நான் அவர் தனியறைக்குள் சென்றதுமே ‘எங்கே என் மைந்தன்? எப்போது வருகிறான்?’ என்றார். ‘அவர் அங்கு ஆற்றிய பணிகளை முடித்துவிட்டு நாளை இங்கு வந்துசேர்வார். நான் துவாரகை வழியாக வந்தேன்’ என்றேன். அங்கு நிகழ்ந்ததை நான் சொல்வதைக் கேட்கும் பொறுமை அவருக்கு இருக்கவில்லை. ‘எப்போது கிளம்புவான்? இன்று கிளம்பியிருப்பானா? அவந்திக்கு அருகேதானே பஞ்சஜனம்? அவன் அங்கிருந்து இங்கு வர தேர் அளிக்கப்பட்டுள்ளதா?’
நான் அவர் விழிகளை நோக்கி என் நெஞ்சில் அதுவரை கொண்டுவந்த வினாவை கேட்டேன் ‘ஆசிரியரே, இந்த மைந்தனுக்கும் மதுராவில் கம்சனால் கொல்லப்பட்ட ஆயிரம் மைந்தருக்கும் வேறுபாடு ஏதேனும் உள்ளதா?’ நான் கேட்டதென்ன என்று அவர் அக்கணமே புரிந்துகொண்டார். நெஞ்சில் உதைபட்டவர்போல பின்னடைந்து நடுங்கும் இரு கைகளையும் நெஞ்சோடு கோத்து ‘என்ன சொல்கிறாய்?’ என்று அடைத்த குரலில் கேட்டார். ‘லீலை என்றால் என்னவென்று தாங்கள் சொன்னது இதுவா? இல்லை இது மாயை என்பதுவா?’ என்றேன்.
ஆசிரியரே, அப்போது என்னுள் எழுந்த இன்பத்தை எண்ணி இன்று கூசுகிறேன். அச்சொற்களை கேட்டவன் அறிதலின் வேட்கையால் அலைக்கழிக்கப்பட்ட மாணவன் அல்ல. அவன் பிறிதொருவன். அவனை நான் நன்கறிவேன். மிக எளியவன், ஆனால் அவனைத் தவிர எவரையும் ஒரு பொருட்டாக எண்ணாதவன். ஆசிரியனென்று வந்த ஒருவருக்கு மாணவனென்று பணிந்தமைய நேரிட்டமையாலேயே சினம் கொண்டவன். அவ்வஞ்சத்தை ஆயிரம் பட்டுத்துணிகளால் பொற்பேழைகளால் நறுமணங்களால் மூடிக்கரந்தவன். அத்தருணம் அவன் வணங்கியமைந்த அத்தனை தருணங்களுக்கும் மறுதுலா. அவன் வென்று பேருருவம் கொண்டெழுந்த கணம் அது.
ஆசிரியர் உடல்குன்றிச் சிறுப்பதை அப்போது நான் கண்டதைவிட பலமடங்கு தெளிவாக பின்னர் வந்த ஒவ்வொரு நாளிலும் கண்டேன். நுரைக்குமிழிகள் உடைந்துடைந்து அமைவதுபோல அவர் தான் சொன்ன ஒவ்வொரு சொல்லையும் எண்ணி மீட்டு உடைந்து அவிந்துகொண்டே சென்றார். உண்மையிலேயே அவர் உடல் சிறுத்து கூன்கொண்டது. ‘ஆம்!’ என்றார். தனக்குத்தானே என ‘ஆம்! ஆம்!’ என தலையசைத்தார். ‘லீலை!’ என முனகி ‘நஞ்சு… ஆலகால நஞ்சு’ என்றார். பின்னர் சீறல் ஒலி எழுப்பி அழுதபடி கால் தளர்ந்து அப்படியே தன் பீடத்தில் அமர்ந்தார். தோள்குறுக்கி தலைகவிழ்ந்து உடல் அதிர விசும்பினார்.
நான் அவரை நோக்கிக்கொண்டு நின்றேன். என்னுள் அப்பேருருவனும் படம்சுருக்கும் பாம்பென சிறுத்து சுருளத்தொடங்கினான். நான் பெருமூச்சுவிட்டு தோள் தளர்ந்தேன். அங்கிருந்து விலகிச் சென்றுவிட வேண்டுமென்று மட்டுமே அப்போது விரும்பினேன். ஒரு சொல்லேனும் சொல்லவேண்டும். ஆனால் எச்சொல் எடுத்தாலும் அது மேலும் கூரிய படைக்கலமாகவே ஆகும் தருணம் அது. நான் திரும்பிச்செல்ல உடலசைந்தபோது என் உடலுடன் பிணைக்கப்பட்டவர் போல அவர் உடல் விதிர்த்தது. ‘ம்’ என்று முனகியபடி அவர் நிமிர்ந்தார்.
என் விழிகளை அவர் விழிகள் சந்தித்தபோது அவற்றில் கூரிய நகைப்பு ஒன்றைக் கண்டு திகைத்தேன். ‘சரியான அம்பு, இளையோனே. சரியான இலக்கும்கூட’ என்றார். அவர் விழிகள் நாகக்கண்கள் போலிருந்தன. ‘ஆசிரியனைக் கொன்று உண்டு எழுகிறாய். நன்று!’ என் உடல் குளிர்ந்து நடுங்கத்தொடங்கியது. அவர் சொல்லப்போவதை நான் முழுதுணர்ந்துவிட்டேன். ‘இவ்வூழே உனக்குமென்றுணர்க! உன் முதல்மாணவன் உன்னை மறுப்பான். நீ வாழ்ந்தது எவருக்காகவோ அவர்களே உன்னை அழிப்பர்!’
நான் அது ஒரு நல்வாழ்த்து என்பதுபோல் கைகூப்பி தலைவணங்கினேன். ‘தன்னந்தனிமையில் நீயும் உணர்வாய், லீலை என்றால் என்னவென்று!’ பித்தனைப்போல உரக்க நகைத்து ‘நச்சுப் பாம்பை வளர்ப்பவன் அதனால் கடிபட்டாகவேண்டும் அல்லவா? உன்னிடமும் வளர்கிறது அச்சொல்’ என்றார். அவர் வெறிகொண்டு நகைத்து என்னை நோக்கி கைசுட்டி ‘லீலை! ஆம் லீலை!’ என்றார். நான் குனிந்து அவர் கால்களைத் தொட்டு சென்னி சூடினேன். அவர் ‘வெல்க!’ என என்னை வாழ்த்தினார். நான் திரும்பி மறுபக்க வாயிலினூடாக வெளியே சென்றேன். புரவியில் ஏறி அதை சவுக்கால் அடித்து விரையச்செய்து புழுதிபறக்க பாலைவெளியில் பாய்ந்து துவாரகை நோக்கி சென்றேன்.
“மறுநாளே உங்கள் தந்தை உஜ்ஜயினி நீங்கியதாகவும் நீங்கள் வந்தபோது அவர் அங்கு இல்லை என்றும் அறிந்தேன். நான் அவர் மீளமாட்டார் என அறிந்திருந்தேன் என்று என்னிடம் இளைய யாதவன் சொன்னான்” என்றார் சாந்தீபனி முனிவர். “நான் அவனிடம் ஒன்றும் சொல்லவில்லை. கண்களில் துயருடன் உரக்க நகைத்தபடி நாகம் என்னிடம் வளர்ந்துகொண்டே இருக்கிறது ஆசிரியரே என்றான். எழுந்து புரவிமேல் ஏறிக்கொண்டு பாலையில் புழுதி பறக்க திரும்பிச்சென்றான்.”
தருமன் “சில சொற்கள் கொலைவாள் போன்றவை” என்றார். “ஒருவர் தன் வாழ்நாளெல்லாம் எதை தன்னிடமிருந்தே மறைத்துவருகிறாரோ அதை அவரிடம் சுட்டும் சொற்கள். அவற்றை ஒருபோதும் நாம் சொல்லக்கூடாது. ஏனென்றால் கொல்லும் சொற்கள் எல்லாம் கொன்றபின் மேலும் குருதிப்பசி கொண்டு திரும்பிவருபவை.”
தொடர்புடைய பதிவுகள்
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 38
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 37
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 36
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 35
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 28
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 26
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 25
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 22
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 62
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 61
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 60
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 25
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 75
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 71
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 66
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 64
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 60
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 59
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 49
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 48
August 25, 2016
கி.ராஜநாராயணன்: இனக்குழு அழகியலின் முன்னோடி -2
கி.ராஜநாராயணனின் மொழி
கி.ராஜநாராயணன் ஒரு ‘ கதைசொல்லி ‘ [கதைசொல்லி X கதையெழுத்தாளன் என்ற வேறுபாட்டை ‘புன்னகைக்கும் கதைசொல்லி:அ.முத்துலிங்கத்தின் படைப்புலகம் ‘ என்ற கட்டுரையில் காண்க ] வாய்மொழிக்கதையே இலக்கியத்தின் அடிப்படை என்று மட்டுமல்ல, பிற்காலத்தில் இலக்கியத்தின் ஒரே வடிவமும் அதுதான் என்றுகூட சொல்லியிருக்கிறார். வாய்மொழிக்கதை சொல்லல் மீதான அவரது பிடிப்பு இயல்பானது. அவரது இனக்குழுத்தன்மையை சிறப்பாக வெளிப்படுத்த அவர் அதை சார்ந்தே ஆகவேண்டும். அழகியல் ரீதியாக ஒரு கதைசொல்லியாகவும் அவருக்கு அம்மரபின் கூறுகள் இன்றியமமையாதவை. ஆனால் அவர் எழுத முன்வந்தபோது அவரது மொழிநடையில் மேலோங்கியிருந்தது எழுத்துமொழியின் கூறுகள்தான். ‘மாயமான் ‘ கதையின் நடை சரளமான இதழியல் எழுத்துநடைதான். அதன் முன்னோடிகள் என்று தீவிர இலக்கியத்தில் கல்கி வழியினரைத்தான் சொல்லவேண்டும். ஆனால் கி.ராஜநாராயணனின் எழுத்தின் ஆரம்பகாலத்தில் அவர் மீது ஆழமான பாதிப்பைச் செலுத்தியவர் கு.அழகிரிசாமி என்று படுகிறது. இருவர் நடையும் துவக்கத்தில் பிரித்தறியவே முடியாதபடி உள்ளன.
ஆனால் அப்போதே வாய்மொழிமரபின் கூறுகளை தன் நடையின் அடிப்படை அம்சமாகக்கொண்டிருந்தார் கி.ராஜநாராயணன். ‘ராமசாமிக்கு நாலைந்து பெயர்கள் உண்டு . நெட்டைக்கொக்கு ராமசாமி, வளந்த பனை ராமசாமி, பீச்சாங்கை ராமசாமி, இன்னும் சுருக்கமாக ஒட்டகம் ஏணி மண்டு …இப்படி! பயல் ஒசரமாய் ஒல்லியாய் இருப்பான்… ‘ .ஆரம்பகாலம் முதலே அவரது நடையில் ஒரு தனித்தமிழ் தன்மையும் இருந்துவந்தது என்பதை வாசகர்கள் அறிந்திருக்கமாட்டார்கள். ‘நுண்மணல் ‘ [கண்ணீர்] போன்ற சொல்லாட்சிகளை அவரது கதைகளில் எபோதுமே இருந்து வந்துள்ளன. மற்ற நவீனத்துவத் தமிழ் படைப்பாளிகளைப்போல பழந்தமிழ் பயிற்சி அறவே இல்லாதவரல்ல அவர். அவருக்கும் அவரது நண்பர் கு.அழகிரிசாமிக்கும் பழந்தமிழில் , குறிப்பாக கம்பராமாயணத்திலும் தமிழிசைப்பாடல்களிலும் ஈடுபாடு இருந்தது. டி.கெ.சிதம்பரநாதமுதலியாரின் அவையில் பலகாலம் பங்கெடுத்தவர் கி.ராஜநாராயணன். தன் வட்டார வாய்மொழிமரபு, செவ்விலக்கியக் கூறுகள் , நேரடியான இதழியல்நடை ஆகிய மூன்று கூறுகளையும் கலந்தே அவர் தன் தனிநடையை உருவாக்கிக் கொண்டார்.
ஆனால் 2000 வாக்கில் நான் அவரை சந்தித்த போது [அப்போது பிரேமும் கூட இருந்தார்] கற்று வாசித்து பெறப்படும் எதுவுமே காலத்தில் நிற்காது என்றும் ,காதால்கேட்டது மட்டுமே கலாச்சார நினைவில் நிற்கும் என்றும் அழுத்தமாக சொன்னார். பேசி கேட்பது மட்டுமே உண்மையான மனித இயல்பு ,வாசித்தறிவது செயற்கையான ஒன்று என வாதிட்டார். அதில் அவரது நம்பிக்கை ஆச்சரியமளிப்பதாக இருந்தது. அக்கூற்று அவரது எழுத்துச்செயல்பாடுகளையே நிராகரிப்பது என்று சொன்னபோது ஒப்புக் கொண்டு, அதனாலேயே இலக்கியத்தை வாய்மொழிக்கூற்றுக்கு மிக அருகே கொண்டுவர முயன்றதாகச் சொன்னார். கி.ராஜநாராயணனின் அந்நம்பிக்கை அதிகப்படியான ஒன்று என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அதை நிராகரிக்கவும் முடியாது. ஏனெனில் இன்றும் எழுத்து ஆசிரியனின் கதைசொல்லலாக பார்க்கப்படும் உளவியல் தொடரவே செய்கிறது! அதற்காகவே ஆசிரியனின் புகைப்படம் ,வாழ்க்கைகுறிப்புகள் எல்லாமே தேவையாகின்றன. ஒரு புகைப்படம்கூட பிரசுரிக்கப்படாத , திட்டவட்டமான அடையாளம் இல்லாத பெயர்கொண்ட ஒரு படைப்பாளியை படிப்பது விசித்திரமான உளவியல் சிரமம் அளிப்பதாக இருக்கிறது .இன்று நாம் கேட்கவில்லை, ஆனால் நம் வாசிப்பில் கேட்கும் அனுபவம் கற்பனை செய்யப்படுகிறது.
ஆனால் சொல்வதைப்போல எழுத முடியாது. குரல் என்ற மனிதம் நிரம்பிய உயிர்த்துடிப்பான அம்சம் எழுத்தில் இல்லை. முகபாவனைகள் இல்லை. அதைவிட பேச்சு நம் புரிதலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு தொடரக்கூடிய ஒன்று. எழுத்து நிலையான பதிவு. நமக்காக அது வளையாது. ஆகவே பேச்சு நெகிழ்வாக இருக்கிறது, எழுத்து செறிவாக. ஒரு கதாபாத்திரம் பேசுவதை சொல்லிக் காட்டலாம். அதை அப்படியே எழுதினால் வளவளப்பாகவே முடியும். எழுத துவங்கும்போதே அதைநாம் செறிவாக்க ஆரம்பித்துவிடுகிறோம்.[ தொலைபேசியில் பேசுவதைபோல எவருமே கடிதம் எழுதுவது இல்லை] இந்த செறிவின் விளைவுகளில் முக்கியமானது படைப்பின் குறியீட்டுத்தன்மை. எழுத்து வரிவடிவையே நம்பி செயல்படவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அதில் பலவிஷயங்களை நம்மால் உணர்த்த முடிவதில்லை. ஆகவே வாசகனை ஊகிக்க வைக்க முயல்கிறோம். வாசக கற்பனையை விரிவடையச் செய்யவே இலக்கியத்தின் உத்திகள்பலவும் பொதுவாக பயன்படுத்தப்படுகின்றன. அதேபோல நமது பேச்சுமொழி எழுத்தின் சொற்றொடர் இயல்புகளை உள்வாங்கியபடியேதான் உள்ளது. கச்சிதமாக்குதல், தரப்படுத்துதல் ஆகிய இரு அம்சங்களை பேச்சுமரபுக்கு எழுத்துமரபே அளிக்கிறது என்று வகையில் சொல்லலாம்.
ஆகவே பேச்சுமரபு வேறு எழுத்து மரபு வேறு. இரண்டும் இருவேறு பணிகளை ஆற்றும் தனித்தனிப் போக்குகள். ஒன்று இன்னொன்றை பாதித்துக் கொண்டேஇருக்கிறது. எழுத்துமரபு செவ்வியலாக்கம் நோக்கிச் செல்கிறது. பேச்சுமரபு நடைமுறை பயன்பாடு நோக்கி. இரு சக்திகளும் சேர்ந்து உருவாக்கும் முரணியக்கமே மொழியின் சலன கதியை தீர்மானிக்கிறது. இலக்கியம் முற்றாக எழுத்துமொழியை சார்ந்து நிற்கும்போதுதான் மறைமலையடிகள்தமிழ் அல்லது மு வரதராசனார் தமிழ் போன்ற தட்டையான மொழி உருவாகிறது . பேச்சுமரபை மட்டுமே நம்பி இருக்கும்போதும் மொழியின் சலன சக்தி குறைவு படுகிறது . நம் மேடைப்பேசுகளில் உள்ள வெற்றோசை இதன் விளைவே. கி.ராஜநாராயணன் பேச்சுமொழிக்கு அதீத இடமளிக்க ஆரம்பித்த காலகடத்தில்தான் தன் சலன சத்தியை இழக்க ஆரம்பித்தார் .
பேச்சுமொழியை எழுத்து எப்படிப் பயன்படுத்துகிறது ? அ] புனைவின் நம்பவைத்தலுக்காக ஆ] சொலவடைகள் மற்றும் சொல்லாட்சிகளுக்காக இ] பயன்பாடுமூலம் சொற்கள் கொள்ளும் மெல்லிய பொருள் மாற்றங்களை அறிய. புனைகதைகளில் பேச்சுமொழி ஒரு சூழலை நம்பவைப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது . இப்படி தாத்தைய நாயக்கர் பேசினார் என்ற பிம்பத்தையே கி.ராஜநாராயணன் உருவாக்க முடியும். தன் திறமை மூலம் அதை நம்ப வைக்க முடியும். தாத்தைய நாயக்கரின் உண்மையான பேச்சை ஒருபோதும் பதிவு செய்யமுடியாது. வட்டார வழக்கு என்பது இலக்கியத்தில் புனைவுலகை, கதாபாத்திரங்களை வாசக மனதில் நம்பகமாக உருவாக்கும் உத்தி மட்டுமே. அது சமூக ஆவணம் என்றும், மாற்றுமொழி உருவாக்கம் என்றும் , மொழியை மக்கள் மயமாக்கல் என்றும் கூறப்படும் பொதுவான கூற்றுக்கள் மிகைப்படுத்தல்கள்மட்டுமே. மொழியின் பொதுச்செயல்பாட்டில் இலக்கியம் ஆற்றும் பங்கு மிக நுட்பமானதும் அறிவார்ந்த மையத்தில் மட்டுமேசெயல்படுவதனால் மறைமுகமானதுமாகும். நாளிதழ்கள் வணிகப்பயன்பாடுகள் போன்றவை செலுத்தும் பாதிப்பே நேரடியானது, உடனடியானது.
இலக்கியத்தில் மொழி பயன்படுத்தப்படுவது மிக நுட்பமான விதத்தில் என நாம் அறிவோம். மொழி அங்கே சொல்வதைவிட குறிப்புணர்த்தவே அதிகமும் பயன்படுத்தப்படுகிறது. குறிப்புணர்த்தல் என்பது கற்பனையை தூண்டுதல், முன்நினைவுகளில் சலனம் உருவாக்குதல், மொழியினூடாக சொற்தொடர்புகளின் ஒரு வலைப்பின்னலை உருவாக்குதல், ஒலி மூலம் கூடுதல் குறிப்புறுத்தல் ஆகியவற்றால் நிகழ்கிறது. ஆகவே அதற்கு ‘சீர் செய்யப்பட்ட ‘ ‘தரப்படுத்தப்பட்ட ‘ சொற்கள் மற்றும் சொல்லாட்சிகள் அதிகம் உதவி செய்வது இல்லை . ‘புதிய ‘ சொல்லாட்சிகள் தேவையாகின்றன. இவை பொதுவாக செயற்கையாக உருவாக்கப்படமுடியாதவை. மொழி வாழ்க்கையை சந்திக்கும் தருணங்களில் இயல்பாக எழுந்துவருபவை. எழுத்தாளனின் நுட்பமான மொழிப்புலன் ஒன்று அதை உள்வாங்கியபடியே உள்ளது .அது படைப்புசார்ந்த பல மாற்றங்களுக்கு உள்ளாகி அவன் படைப்புமொழியில் புதுவடிவம் கொண்டு வருகிறது. ‘நடை ‘ என்று நாம் சொல்லும் மொழித்தனித்தன்மைகள் இப்படி உருவாகிவரும் மொழிக்கூறுகளால் ஆக்கப்பட்டவையே. ஓர் இலக்கியப்படைப்பாளியின் தனிப்பட்ட அகவுலகை நமக்கு தெரியப்படுத்துவது அவனது நடையே
நடை என்பது தன்னைச்சுற்றியுள்ள மொழிச்சலனத்தை பின்தொடர்வதன்மூலம் எழுத்தாளனால் உருவாக்கப்படுவது . இந்த மொழிச்சலனம் என்பது பலவகைகளில் நடைபெறுகிறது. கல்வி, நிர்வாகம், வணிகம் ,செய்தி முதலிய பலதளங்களில் மொழி அன்றாடப் பயன்பாட்டுக்கு வரும்போது புதிய சாத்தியங்களை சந்திக்கிறது.பவற்றை எழுத்தாளனின் மொழிப்புலன் எடுத்து உள்ளூர சேர்த்துக் கொள்கிறது. அவற்றில் முக்கியமானது மக்கள்வாய்மொழியே. நல்ல படைப்பாளி என்பவன் மக்கள்வாய்மொழியில் தணியாத மோகம் கொண்டவனாகவே இருப்பான். காதில் விழும் மொழியே நடை என்ற அந்தரங்க ஊற்றை உருவாக்கும் மழை என்றால் மிகயல்ல.
உதாரணமாக நாஞ்சில்நாடனின் நடையில் குமரிமாவட்ட சொல்லாட்சிகள்தான் நடையாகின்றன ‘ மாப்பிள்ளைபிடித்த காசு பிள்ளை அழிக்க ஆச்சு என்பதுபோலத்தான் அன்றாடக் கணக்கும். ஒன்றும் சொல்வதற்கில்லை… ‘ என்ற அவரது நடையில் மொழியில் உருவாகி முளையின் மொழிப்புலனில் தேங்கிய ஒரு பகடி எழுந்துவருகிறது. இந்த அம்சம் சுந்தர ராமசாமியின் கட்டுப்படுத்தப்பட்ட நடையில் ஒருமுறை கழூவி உலர்த்தப்பட்டு மறுபிறப்புகொள்கிறது. ‘ டி.கெ.சி வெண்ணைகடையும்போது மத்தின் சத்தமே கேட்பதில்லை… ‘ வாய்மொழி மரபே மொழியில் புதிய சொலவடைகளையும் சொல்லாட்சிகளையும் உருவாக்குகிறது. மொழி காதில் விழாத இடத்தில் வாழும் ஒருவரால் உயிர்த்துடிப்பான உரைநடையை உருவாக்க முடியாது .
நடையின் முக்கியமான கூறு சொற்களின் மாற்றங்களைப் பற்றிய பிரக்ஞை . பேச்சுமொழி சொற்களைமாற்றியபடியே இருக்கிறது . ‘சரியான புன்னைகைமன்னன் அவன்.. ‘ இங்கே புன்னைகைமன்னன் என்ற சொல்லை நம் பேச்சுமொழியில் அறிமுகம் இல்லாத ஒருவரால் புரிந்துகொள்ளமுடியாமல்போகலாம். இலக்கியம் இம்மாதிரி சொற்களை எப்போதுமே தன் நுட்பமான தொடர்புறுத்தலுக்கு பயன்படுத்துகிறது. ஆக இம்மூன்று தளத்திலும் மக்கள்வாய்மொழி சார்ந்தே இலக்கியம் இயங்குகிறது. நல்ல இலக்கியம் கணந்தோறும் நிறம் மாறும் பேச்சு மொழியிலிருந்து கலாச்சாரத்தின் பருவடிவமாக நிரந்தரத்தில் உறைந்துள்ள பேரிலக்கியமொழி வரையிலான அகன்ற வெளியை தன் தொடர் மின்னல்களால் இணைக்கிறது.
கி.ராஜநாராயணன் தன் பெரும்பாலான கதைகளில் இந்த இணைப்புக்காக தீவிரத்துடன் எழுவதைக் காணலாம். தமிழிலக்கியத்தில் அவரது இடம் முக்கியமாக அவரது நடை மூலமே. இலக்கியமொழியில் இருந்து எடுத்துக் கொண்ட கச்சிதம், குறிப்புணத்தும் தன்மை , உள்ளடுக்குகளைக் கொண்டிருத்தல் ஆகியவை அவரது சிறந்த கதைகளில் இருக்கின்றன. பேச்சுமொழியின் சரளம் , சமத்காரம் ஆகியவற்றை தக்கவைத்துக் கொண்டே இவற்றை அடைய அவர் முயன்று தன்னுடைய சிறந்த கதைகளில் வெற்றியும் பெற்றிருக்கிறார். இக்கட்டுரையில் சொல்லப்பட்ட அவரது சிறந்த கதைகளில் இந்தச் சிறப்பு வெளிப்பட்டிருக்கிறது. உரையாடலை காதில் விழச்செய்யும் சொற்றொடர்கள்[ எடுக்கட்டும் பயபுள்ளைக. நல்ல்..ல திண்ணு கொழுத்துப்போய் அலையுதுக] நாட்டுப்புறச் சொலவடைகள் [என்னடா எளவாப்போச்சு, எளவிலேயும் பேரெளவா இருக்கே. சம்சாரி கொத்தைப்பருத்தியிலேயும் கேவலமா போயிட்டானே ]சொல்லாட்சிகளின் நுட்பமான மாறுபாடுகள் [ஊரெல்லாம் ஒரே கெக்கோல்.பேசிச்சிரிக்க விஷயம் கிடைத்துவிட்டதே]
இதன் மூலம் அவரால் மொழியின் நுட்பமான சாத்தியங்களை அதிகபட்சமாகப் பயன்படுத்திக் கொள்ளமுடிகிறது. கதைவடிவம் அளிக்கும் குறிப்புணர்த்தல்களை தாண்டி மொழி தன் ஒவ்வொரு துளியாலும் அளிக்கும் குறிப்புணர்த்தல்கள் நிரம்பிய பரப்புகள் அவை . கதை அளிக்கும் ஆர்வத்தைமீறி அவரது கூற்றே தனியான ஓர் ஆர்வத்தை அளிப்பது இதனால்தான். என்னைப்பொறுத்தவரை கி.ராஜநாராயணனின் கதையை விட அவரது சித்தரிப்புகளே முக்கியம் , அவற்றுக்குள் ஏராளமான கதைகளின் ரகசிய விதைகள் உள்ளன. உதாரணம் கொத்தைப்பருத்தியில் பெண்பார்க்க வந்த கலெக்டர் அப்பா கோனேரியின் களஞ்சியங்களைப்பார்த்து ‘ரட்ணக்காலை ‘ மாற்றி சாதாரணமாக உட்கார்வது.மொழியின் ஓர் சின்ன திருகலால் கதைக்குள் ஒரு கதையின் விதையை கி.ராஜநாராயணன் புதைத்து வைப்பதுண்டு. [ப.சிங்காரத்திடம் இப்படி பல துளிகளைக் காணலாம். உதாரணம் ‘டாலர் ‘ ராஜாமணி அய்யர். அய்யர் மோட்டார் டிரைவர் ஆகிய பரிணாமம் என்ன ?] எங்கும் ஓர் நிறையில் அங்கயற்கண்ணி,பேதையில் ஒரேயொரு வசனம் மட்டும் பேசும் காளி.
கி.ராஜநாராயணனின் எல்லை அவரது ‘கதைசொல்லி ‘ இயல்பிலிருந்து உருவாகிறது. கதைசொல்லிகள் சொல்வதற்கு மட்டுமே மொழியின் சாத்தியங்களைப் பயன்படுத்துகிறார்கள். கி.ராஜநாராயணன் சித்தரிப்புக்கும் ஓரளவு பயன்படுத்துகிறார் என்றாலும் அச்சித்தரிப்புகூட ‘சொல்லவே ‘ படுகிறது. மனதின் கட்டுக்குமீறிய ஓட்டங்களை , மாறிமாறி வரும் புறக்காட்சியின் அமைவுகளை , அறிவார்ந்த விவாதங்களை அனைத்தையுமே வாய்மொழிமரபின் சாத்தியங்களைப்பயன்படுத்தி மேலும் வளர்த்தெடுக்கும் தீவிரம் அவரில் இல்லை.
உதாரணமாக அசோகமித்திரனின் ‘வாழ்விலே ஒரு முறை ‘ கதையில் ஒரு லாரி ஒரு சிறுவன் மீது பாயும் கணம் ஒருபக்கத்துக்கும் மேலாகவே சொல்லப்பட்டுள்ளது. அதை சொல்ல வாய்மொழிக்கூறுகளை எப்படி பயன்படுத்தலாம், மெளனியின் ;அசையும் தோணி கடப்பதறியாது எல்லைகடக்கும் ‘ இடத்தை இம்மொழியால் எப்படி தொடலாம் ? அவை பெரிய சவால்கள். வைக்கம் முகம்மது பஷீர் அந்த சாத்தியங்களை பெருமளவுக்கு பயன்படுத்தியுள்ளார். ஆன்மீக அகஅனுபவத்தின் எழுச்சி வாய்மொழிக்கூறுகளால் சொல்லப்பட்ட சிறந்த பஷீர் கதைகள் உள்ளன. குர்-ஆன் ஹதீஸ் உறவுகளைப்பற்றி ஒரு தச்சனிடம் பேசுவதுபோன்று எழுதப்பட்ட அவரது கட்டுரை அறிவார்ந்த விவாதங்களை வாய்மொழிக்கூறுகளால் எழுதுவதன் சிறந்த உதாரணம். ஆங்கிலத்தில் யுலிசஸ் நாவலில் ஜேம்ஸ் ஜாய்ஸ் அதை சாதித்தார் என்கிறார்கள், என்னால் அந்நாவலை உணர்ந்து படிக்கமுடியவில்லை .கி.ராஜநாராயணன் சொல்லலில் மட்டுமே தன் படைப்பியக்கத்தை நிறுத்திக் கொண்டவர்.
கி.ராஜநாராயணனின் கருத்தியல் பிரச்சினைகள்
எழுத்தாளனின் கருத்தியலை அவன் படைப்புகளில் தேடுவது பெரும்பாலும் அசட்டுத்தனமாகவே முடியும், ஏனெனில் நல்ல எழுத்தாளன் தன் ஆழ்மனதைச் சார்ந்து எழுதுபவன் என்பதனாலேயே திட்டவட்டமான கருத்தியல் ஒன்று அவனது படைப்புலகத்தில் இருக்க முடியாது. திட்டவட்டமான அரசியல் , கருத்தியல் நிலைப்பாடுகள்கொண்ட பொன்னீலன் போன்ற எழுத்தாளர்களின் படைப்புகளிலேயேகூட திட்டவட்டமான கருத்தியல் இல்லை, அது அவரது கட்சிக்காரர்களை எப்போதும் குழப்புகிறது. ஏற்கனவே இக்கட்டுரையில் சொன்னதுபோல இனக்குழு அடையாளத்துக்கும் மார்க்ஸிய கருத்தியலுக்கும் இடையேயான சமர் தான் கி.ராஜநாராயணனின் படைப்புகளின் இயக்கவிலை உருவாக்குகிறது. அவரது அடிப்படைக் கருத்தியல் பெரும்பாலும் மார்க்ஸிய மனிதாபிமான நோக்கே. ஆனால் அவரது இனக்குழுப்பார்வை சில சிக்கல்களை அதில் உருவாக்குகிறது. நமது இனக்குழுப்பார்வை எப்போதுமே ஆண்மைய , ஆதிக்கத்தன்மை கொண்ட பார்வைதான்.
கி.ராஜநாராயணனின் ஆக்கங்களில் பெரும்பாலும் பெண்கள் மீதான கருணையும் அவர்கள் மீது இழைக்கப்படும் கொடுமைகள் சார்ந்த தர்மாவேசமும் வெளிப்படுகிறது என்பது உண்மையே. இக்கதைகளுக்கு மகுடம் என ‘கண்ணீர் ‘ என்ற கதையைச் சொல்லலாம். ஆனால் அவரது மொழிநடையில் எப்போதுமே பெண்களைப் பற்றிய பிரியம்தோய்ந்த ஒரு இளப்பம் வெளிப்படுகிறது. ‘ பாவம், பெண்டுகளுக்கு என்ன தெரியும் ‘ என்பதுபோன்ற ஒரு தோரணை. பற்பல உதாரணங்களை எடுத்து அதைவிளக்கலாம் . குறிப்பாக சொல்லவேண்டிய கதைகள் என ‘வலி வலி ‘ போன்ற கதைகள். அதைப்போல அவர் ஆதிக்கசாதி அடிமைசாதிகள்மீது செலுத்தும் வன்முறையையும் சுரண்டலையும் அவர் உக்கிரமாகவே சொல்லியிருக்கிறார், உதாரணம் ‘கிடை ‘ . ஆனால் விவசாயத்தொழிலில் உள்ள சுரண்டலை அவரது பல கதைகள் போகிறபோக்கில் நியாயபடுத்தி சென்றுவிடுகின்றன. சிறந்த உதாரணம் ‘நிலைநிறுத்தல் ‘ .மாசாணம் ‘வாங்க ‘ப்படுவது , அவன் தன் தனித்தன்மைமூலம் அச்சமூகத்தில் இடம் பெறுவது பற்றிய சித்திரத்தில் எப்படியோ அது ஓர் இயல்பான விஷயம் என்ற தொனி உள்ளது.
அனைத்தையும்விட முக்கியமானது கி.ராஜநாராயணனின் உலகில் தலித் மக்களின் வாழ்க்கை குறிப்பிடத்தக்க அளவில் சொல்லப்படவில்லை என்பதே. கி.ராஜநாராயணனின் ஆசியுரையுடன் வெளிவந்துள்ள இலட்சுமணப்பெருமாளின் சிறுகதைதொகுப்பில் ஒரு கதையில் பயிட்டன் என்ற பகடை [சக்கிலியர் ] அவர் அம்மா கடனுக்கு வாங்கிய ஒரு புடவையிந் விலைக்கு ஈடாக எட்டு வயதுமுதல் எழுபதுவயது வரை நில உடைமை நாயக்கரிடம் அடிமையாக உழைத்து , திருமணம் கூட செய்துகொள்ளாமல் வாழ்ந்து இறுதியில் அக்கிராமத்தில் உருவாகும் ஒரு விழிப்புணர்வால் விடுதலைபெறும் சித்திரம் உள்ளது. நாயக்கர்களின் கிராமசபை பயிட்டனை மேலும் அடிமையாக வைத்திருப்பதே நியாயம் என்றே பேசுகிறது .அடிதடி ஏற்படும் என்ற அச்சமே பயிட்டனுக்கு விடுதலையை வாங்கி தருகிறது. கி.ராஜநாராயணனின் கதைகளில் வரும் அதே உலகம்,அதே மக்கள் .ஆனால் சமூகக்காட்சி முற்றிலும் வேறு.கி.ராஜநாராயணன் காட்ட மறந்த காட்சி. அவரது கதைகளில் நாம் காணும் பலவிதமான நாயக்கர்களில் அப்பாவிகள் தான் அதிகம். அபூர்வமாக சிலர் அவர்களை ஏய்த்துண்ணும் தந்திரசாலிகள். அனைவரையும் ஒருவித கேலிச்சித்திரங்களாக ஆக்குவதன்மூலம் கி .ராஜநாராயணன் அவர்களை நாம் பிரியத்துடன் பார்க்க வழி செய்கிறார். இடைசெவலை நம் வாசகர்கள் நேசித்தது அதனால்தான். அவர்கள் கொண்டாடும் வாழ்க்கையின் உள்ளே உள்ள இந்த உக்கிரமான கருமை நம்மை அவர் கதைகளின் வழியாக வந்தடைவது இல்லை.
இதை மேலும் நீட்டித்துப் பார்த்தால் கி.ராஜநாராயணனின் மனநிலையில் உள்ள முக்கியமான ஓர் அம்சத்தைக் கண்டடையலாம். அவரது பார்வையில் காலம் முன்னகரவில்லை, பின்னகர்கிறது! விவசாயம் பொய்த்து நிலங்கள் பொட்டல்களாகின்றன. மேழிபிடிக்கும் கை பார்வேந்தர் வணங்கும் கை மதிப்பிழக்கிறது[ கொத்தைப்பருத்தி] தீப்பெட்டித்தொழில் வந்து மக்கள் அடிமையாகிறார்கள்.[ ஒரு குரல்] பயிட்டனைப்பொறுத்தவரை அவனது உழைப்புக்கு விலைபேசும் ஓர் உரிமைக்குரல் அவருக்கு ஆதரவாக எழுவது மாபெரும் முற்போக்குப் பாய்ச்சல் அல்லவா ? அவரது குழந்தைகள் தீப்பெட்டித்தொழிலுக்கு போவதை ஒரு பெரும் விடுதலையாகக் கொண்டாடலாமே ? பயிட்டனின் மகன் கதை எழுதினால் அவன் இக்காலகட்டத்தை எப்படிச் சித்தரிப்பார் ?
ஆக நாம் இக்கட்டுரையில் முதலில் கேட்ட கேள்விக்கு மீண்டும் வந்து சேர்ந்திருக்கிறோம். கி.ராஜநாராயணனை பொறுத்த வரை வரலாறு ஒரு பெரிய முன்னகர்வே. ஆனால் கடந்த சில வருடங்கள் சரிவு. அது அவரது இனக்குழுவுக்கு ஏற்பட்ட சரிவுதான். அவர்கள் சார்ந்திருந்த நிலப்பிரபுத்துவ அமைப்புக்கு ஏற்பட்ட சரிவு. அதை கி.ராஜநாராயணன் ஆழ்ந்த துயரத்துடந்தான் சித்தரிக்கிறார். மின்சாரம் மறுக்கப்படும் விவசாயியின் நியாயமான கோபம் அவரால் எழுதப்படுகிறது, சுயகெளரவம் மறுக்கப்படும் விவசாயக் கூலி கதைப்பரப்புக்குள் வரவேயில்லை.இங்கே ஒரு மார்க்ஸிய முற்போக்காளரான கி.ராஜநாராயணனை அவரது இீனக்குழுமனம் வெறு முன்சென்றுவிடுகிறது. நிலப்பிரபுத்துவ அமைப்பின் வீழ்ச்சியைக் கொண்டாடவேண்டியவர் அதற்காக பெருமூச்சு விடுகிறார். அவரது கருத்தியலின் முக்கியப்பிரச்சினை இதுவே.
இனக்குழுசார்ந்த ஆழ்மனம்கொண்ட படைப்பாளியான கி.ராஜநாராயணன் நவீனயுகத்தின் சித்தாந்தமாகிய மார்க்ஸிய மனிதாபிமான நோக்கால் உசுப்பப்பட்டு அவை இரண்டுக்கும் இடையேயான முரணியக்கமாக தன் படைப்பியக்கத்தை உருவாக்கிக் கொண்டார். அந்தமோதலும் முயக்கமும் உக்கிரமாக நிகழ்ந்த காலகட்டமே அவரது நல்லபடைப்புகளின் பிறப்பை சாதித்தது. வாய்மொழிக்கூறுகள் மூலம் கதைசொன்ன கதைசொல்லி அவர். அக்கூறுகளை மனம் என்ற மேலும் நுட்பமான அமைப்பை அறிய அவர் பயன்படுத்தவில்லை. இனக்குழுமனம் அவரது மார்க்ஸிய சார்பை உண்டு செரித்தபோது அவரது பயணம் நின்று இனக்குழு ஆவணநிபுணராக அவர் உருக்கொண்டார். தமிழில் கி.ராஜநாராயணனின் சிறப்பிடம் நமதுமரபின் ஆழ்மனம் எப்படி நவீனகாலகட்டத்தை எதிர்கொண்டது என்ற சித்திரத்தை அளிக்கும் சிறந்த சிறுகதைகளிலும் கோபல்ல கிராமம் என்ற நாவலிலும் உள்ளது
.
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
கடிதங்கள்
ஐயா,
சாங்கிய காரிகை பற்றி முழுமையான தமிழ் நூல் உள்ளதா? நான் இணையத்தில் தேடினேன், கிடைக்கவில்லை. ஆங்கிலத்தில் கே.பி.பகதூர் எழுதியதை மட்டும் படித்திருக்கிறேன்
பகவதிராஜன்
***
அன்புள்ள பகவதி ராஜன்
சாங்கிய காரிகை தமிழில் கடலங்குடி நடேச சாஸ்திரி மொழியாக்கம் மற்றும் உரையுடன் 1910 வாக்கில் வெளிவந்தது. என்னிடம் பிரதி உள்ளது. வாங்கவும் கிடைக்கும். கடலுங்குடி பிரசுரம்
ஆனால் மொழி மிகமிகப்பழமையானது
ஜெ
இனிய ஜெமோவிற்கு ,
வணக்கங்கள். அங் மோ கியோ வாசக வட்ட சந்திப்பில் உங்களை கண்டதில் மகிழ்ச்சி. பேரிலக்கியம் பற்றிய விவாதமும் தொடர்புடைய கேள்வி பதில்களின் உரையும் பல சிந்தனைகளுக்கு வித்திட்டன. குறிப்பாக சமநிலை, அனைத்தையும் உள்ளடக்கிய தன்மை, தரிசனம் என்னும் மூன்று முக்கிய அடிப்படையில் பேரிலக்கியங்களை பிரிக்கலாம் என்பதை கேட்கப்பெற்றதில் மகிழ்ச்சி. ஒப்புநோக்க தமிழில் கம்பராமாயணம் ஆக சிறந்த எடுத்துக்காட்டு எனும்பொழுதே ஒரு நாள் இல்லை ஒரு நாள் படிக்க முயற்சி செய்ய வேண்டும் என்ற ஆசை மனதில் தோன்றியதென்றால் அது மிகையில்லை.
உரைநடை ஜன்மங்களான எங்களுக்கு, கம்பரை தங்கள் கைவண்ணம் ‘மூலம் கொஞ்சம் கட்டுரை எழுதி கோடிட்டு காட்டினால் இன்னும் சிறப்பு.
வரலாற்றுத்தன்மை அற்ற படைப்புகள் பேரிலக்கியம் ஆகா என்னும் இடத்தில் ஒரு சிறிய நெருடல், உதாரணத்திற்கு மோகமுள்ளில் வசதியான இடங்களில் கதை பயணிப்பதில் தொடங்கி கதை நடக்கும் சுற்றுப்புற பகுதிகளை குறிப்பிடாமையும் கதையின் சிற்சில classic இல்லாமற்போனதற்கான குறைகள் என்றும் சிறுகதைகளை பற்றி பேசும்பொழுது திரு புதுமைபித்தனே ஓர் முன்னோடி என்றும் கூறியதை கேட்கப்பெற்றேன். என்னுடைய கேள்வி என்னவெனில் வரலாற்றுத்தன்மை அவசியப்படாவிடில் அதை ஏன் உள்நுழைக்க முயற்சி செய்யவேண்டும், அடுத்தது புதுமைப்பித்தன் நவீன இலக்கியங்களில் முன்னோடி எனும்பொழுது, முன்பொரு தடவை இதே அரங்கில் புதுமைப்பித்தனின் எந்தவொரு படைப்பிலும் விடுதலைப்போராட்ட சுவடுகள் எழுதவில்லை என்றும் தங்கள் கூறியதை கேட்கப்பெற்றேன், மேலும் விளக்கினால் தெளிவுறுவேன்.
நீங்கள் பேசிய தலைப்பை தவிர்த்து மனதில் கேட்கவேண்டும் என்று இங்கே சில, நேரமிருந்தால் பதில் அளியுங்கள், சந்தோஷப்படுவேன்.
விஷ்ணுபுரத்தின் யானையின் மதத்தை விவரிப்பதில் ஆகட்டும், காட்டில் கீரக்காதனின் சிறப்பையும் காட்டிற்கு ராஜா சிங்கமல்ல யானையே என்பதிலும், Dr. K என்று அறியப்பட்டவரை “யானை” டாக்டர் என்று பெயரிட்டு பிரம்மாண்டபடுத்தலும், ஐஸ் கட்டி அல்லது ஐஸ் பாறை என்னும் கதையை வெள்ளை’யானை என்று பிரபலப்படுத்தி கொண்டுசெல்வதிலும் உங்களுக்கும் யானை பற்றிய ஒரு பிம்பத்திற்கும் ஒரு பெரிய தொடர்பு இருப்பது அல்லவா தோன்றுகிறது, என்ன தொடர்பு அது?
பிராமண, க்ஷத்ரிய, வைஸ்ய, சூத்திர என்னும் வர்ணங்களின் அடிப்படையில் பிரிக்கப்பட்டனராம் நாம்..! இப்பொழுது நினைக்கும்பொழுது புன்னகை மட்டுமே மிச்சம்! இங்கே அனைவரும் வைஸ்யனே என்னும் நினைப்பு மேலோங்குகிறது. நடைமுறை பிராமணன் என்ன படிச்சா எவ்வோளோ சம்பளம் வரும் என்றும், ஆளும் பரம்பரை புராணம் பேசும் அன்பர்கள் எதை பிடித்தால் எவ்வளவு பெயர்க்கலாம் என்றும், நடைமுறை (கொடைத்தன்மை’அற்ற) வைசியர்கள் மேலும் சம்பாதிக்க முயற்சி செய்வதும், மனதிற்கு தெரியப்படுத்துவது என்னவெனில் இங்கு பணமே பிரதானம், மற்றவை வெறும் பேச்சு. இங்கு அனைத்தையும் capitalize செய்யவேண்டும் என்னும் காலகட்டத்தில் எப்படி உங்களுக்கு ஒரு வெண்முரசு போன்ற படைப்பை எவ்வித வியாபார யுக்தியும் இல்லாமல் இணைய உலகத்திற்கு இலவசமாக அளிக்க முடிகிறது? எப்படி இந்தவொரு மனநிலை, தெரிந்தால் நாங்களும் தூய்மையடைவோம்.
வெண்முரசு என்னும் இன்ப புதைகுழியில் சிக்கியுள்ள தாங்கள் எப்பொழுது பின் தொடரும் கதை, காடு போன்ற பெரு நாவல்களை எழுத போகிறீர்கள், விரைவில் எதிர்பார்க்கலாமா?
முடிவாக சிங்கையின் ஒரு மாத வாழ்க்கை எத்தனை ஸ்வாரஸ்யமானது, அனுபவத்தை பகிர முடியுமா? நேரமிருப்பின் இன்னுமொரு வாசக சந்திப்பு சாத்தியமா?
உங்களின் புத்தகங்களை படிப்பதிலும், உங்களை நேரில் கண்டு உரையாடியதிலும் மிக்க மகிழ்ச்சி. உங்களின் எழுத்துப்பணி மென் மேலும் சிறப்பாக தொடர இந்த எளிய அடியேனின் பிரார்த்தனைகள்.
லங்கேஷ்.
***
அன்புள்ள லங்கேஷ்,
ஒருபடைப்பு பேரிலக்கியம் ஆகியே தீரவேண்டும் என நான் சொல்லவில்லை. அதை பேரிலக்கியம் ஆக்குவது எப்படி என்றும் சொல்லவில்லை. நான் சொன்னது எதை நாம் பேரிலக்கியமாகக் கருதிவருகிறோம் என்றுதான். அதன் ஆசிரியனின் பார்வையின் விரிவு, அதன் கருவின் ஆழம், அதன் வரலாற்றுத்தேவை ஆகியவற்றின் மூலம் அவ்வாறு ஒருபடைப்பு விரிவடைகிறது. எந்த ஒருகருவையும் ஆசிரியன் தன் பார்வையின் விரிவின்மூலம் வரலாற்றுப்பெருக்கின் ஒரு பகுதியாக வைத்து அணுகமுடியும், அதுவே வரலாற்றியல்பு -Historicity – என்று சொல்லப்படுகிறது. எந்த ஒருகதையையும் சிலமனிதர்களின் கதையாக அன்றி மானுடக்கதையாக மாற்றமுடியும். அது அவ்வாசிரியன் அக்கருவில் எத்தனை தொலைவுக்குச் செல்கிறான் என்பதைச்சார்ந்தது. அவ்வாறுசெல்லும்போதே அது பேரிலக்கியம். இதை விரிவாக என் இலக்கியமுன்னோடிகள் வரிசை நூல்களில் விளக்கியிருக்கிறேன்
யானை என் இளமைமுதலே அணுக்கமான விலங்கு. எழுத்தாளர்களுக்குச் சில விஷயங்கள் அவர்களுக்குரிய குறியீடுகளாக உருவகங்களாக மாறிவிட்டிருக்கும். அவை அவர்களின் உள்ளத்தை வெளிப்படுத்தும் கருவிகள். எல்லா எழுத்தாளர்களும் சில விஷயங்களை நுணுக்கமாகத் திரும்பத்திரும்ப சொல்லி மேம்படுத்தியபடியே செல்வதைக் காணலாம். அவ்வுருவகங்களைத் தொகுத்து அவனை மேலும் அறிவது ஒரு நுண்வாசிப்பு
நால்வருணம் பற்றி நீங்கள் சொல்வது சொல்லிச் சொல்லி நம் மரபால் அளிக்கப்பட்ட ஒர் உருவகம் மட்டுமே, என்றுமே அப்படி தெளிவான குணாதிசயங்கள் இருந்ததில்லை. ஓர் அரசரின் அமைச்சர் பதவிக்காகவும், வேள்வியில் அளிக்கப்படும் பசுக்களைப் பரிசாகப் பெறவும் போட்டியிட்ட அந்தணர்களை உபநிஷதக் கதைகள் சொல்கின்றன. குயவப்பெண்ணின் மகனும் காட்டுப்பெண்ணின் மகனும் பிரம்மஞானம் நோக்கிச் சென்றதையும் அவை காட்டுகின்றன. நீங்கள் வெண்முரசு வாசித்துப்பார்க்கலாம். மானுடரின் தனிப்பட்ட குணங்களை வெளியே இருந்து எந்த அமைப்பும் வகுத்துவிடமுடியாது.
நால்வருணங்கள் என்பவை நாலாயிரம் நாற்பதாயிரம் நாலுலட்சமாக பிரிந்துபெருகிக்கிடந்த குலங்களை, குடிகளை, கோத்திரங்களை, கூட்டங்களை ஒரு பொதுச்சட்டகத்திற்குள் தோராயமாகத் தொகுக்கும் ஒரு முயற்சி. அரசமைக்க அப்படித் தொகுப்பது அவசியமானது. 1891 ல் முதல் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடந்தபோது வெள்ளைய அரசும் அதையே வேறுவகையில் செய்தது. சமானமான சமூக நிலையும் குணங்களும் கொண்ட சாதிகளை ஒன்றாக்கி ஒரே அடையாளம் அளித்தது. அந்தத் தொகுப்புகளே பெருஞ்சாதிகளாக இன்று தொடர்கின்றன.
இந்தயுகம் வணிக யுகம் என்பதில் ஐயமில்லை. ஏனென்றால் பொருள் அடிப்படையில் விலைபொருளாக மாறிவிட்டிருக்கிறது. ஆகவே உழைப்பும் விலைபொருளே. அது இயல்பு. ஆனால் எல்லா பொருளும் விலைபொருள் அல்ல. சேவைகள், அறிவியக்கங்கள் முழுக்க விலைபொருளாக ஒருபோதும் ஆகாது
வெண்முரசு இன்னும் சில வருடங்கள் நீளலாம். பார்ப்போம்
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 38
[ 5 ]
“பெரும்பாலான வெற்றிகளை இளைய யாதவன் படைவல்லமை இல்லாமல்தான் அடைந்திருக்கிறான் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள், அரசே” என்றார் சாந்தீபனி முனிவர். தருமன் புன்னகையுடன் “ஆம்” என்றார். “இரு வகையில் அவன் வெற்றிகள் அமைந்துள்ளன என்று கதைகள் காட்டுகின்றன. ஒன்று மிகச்சிறிய படையுடன் எதிர்பாராத தருணத்தில் சென்று பெருந்தாக்குதலை நிகழ்த்தி வென்றதுமே விலகிச்சென்றுவிடுவது. அது வேங்கையின் வழி. அது வருவதையும் செல்வதையும் விழிகளறிய முடியாது. கூர்ஜரத்தின் கருவூலங்களை அவன் வென்றது அவ்வண்ணமே.”
“பிறிதொன்று தனிக்களிறின் வழி” என அவர் தொடர்ந்தார். “மத்தகம் குலுக்கியபடி அது தன்னந்தனியாக வந்து மன்றில் நிற்கும். துதிக்கை தூக்கி தூக்கி சின்னம் விளித்து அறைகூவும். தன் தனிவல்லமையாலேயே வென்று நின்றிருக்கும். துவாரகையின் ஒற்றர்கள் பஞ்சஜனத்தை உளவறிந்துகொண்டிருப்பதை நான் அறிந்திருந்தேன். ஒருநாள் துவாரகையின் தலைவன் பஞ்சஜனம் மீது போர்கொள்வான் என எண்ணியும் இருந்தேன். உண்மையில் எனக்கு அதில் உணர்வுகள் ஏதுமில்லை. அந்த ஆடல் எவ்வகையில் முடியும் என்றறிவதற்கான மெல்லிய ஆர்வம் மட்டுமே இருந்தது.”
வணிகர்களாகச் சென்ற என் ஒற்றர்களிடமிருந்து இளைய யாதவன் என்னைப் பற்றி விசாரித்தறிந்ததை நானும் உணர்ந்துகொண்டேன். என்னைத் தேடி அவன் வருவான் என எதிர்பார்த்தேன். வேங்கையாகவா யானையாகவா என்று எண்ணி எண்ணி நோக்கினேன். அப்போதறிந்தேன், அவனுடன் நான் உளப்போரில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதை. நான் விலகிய இடைவெளியில் எந்தைக்கு இனியவனாக ஆனவன் என அவனை அறிந்திருந்தேன். எங்கோ மைந்தன் என என் உள்ளம் தந்தையை உரிமைகொண்டிருந்தது. மைந்தனுக்கும் மாணவனுக்குமான சமர் வரலாற்றில் முடிவதேயில்லை.
அவன் வந்தால் அவனை வென்று நின்றிருக்கவேண்டும் என உறுதிகொண்டேன். அவனைவிட ஒரு படி மேலானவன் என அவன் என்னை உணரும் தருணமே என் இறுதி வெற்றி. நான் ஆற்றியவை அனைத்தும் தந்தைக்குமேல் நான் கொண்ட வெற்றிகள் என நன்கறிந்திருந்தேன். அவர் அளித்த மொழியும், அவர் கற்பித்த வேதமும் முற்றிலும் பயனற்ற சூழலில் வந்து என் தனித்திறனால் முளைத்தெழுந்து அரசொன்றை அமைத்திருக்கிறேன். அவர்களுக்குரிய வேதங்களை அருளியிருக்கிறேன். அவர் தன் முழுதறிவால் ஆக்கிய முதன்மை மாணவனை வென்றால் எந்தையிடம் நான் பிறிதொன்றும் சொல்வதற்கில்லை. அந்தத் தருணத்தை எட்டுத்திசைகளிலும் எக்கணமும் என எதிர்நோக்கியிருந்தேன்.
இன்று எண்ணுகையில் வியப்புடனும் நாணத்துடனும் எண்ணிக்கொள்கிறேன். நான் ஆற்றிய அனைத்துக்கும் பின் எந்தையிடம் “பாருங்கள், என்னால் என்ன இயலும் என்று” என மீளமீள சொல்லிக்கொண்டே இருந்திருக்கிறேன். என் முன்னிருந்து அவர் விலகி நின்ற தருணமே இருந்ததில்லை. நான் அவரை விட்டு வந்ததே அவரை மீறி வளர்வதற்காகத்தான். ஆனால் அவர் பொருட்டே நான் வாழ்ந்திருக்கிறேன். அவரற்ற உலகில் எனக்கு இலக்குகளே இல்லை.
நான் இளைய யாதவன் சோனகர் அல்லது யவனர் துணையுடன் ஒரு கூர்த்தாக்குதலை பஞ்சஜனம் மீது தொடுப்பான் என்றே எண்ணினேன். உண்மையில் ஒரு பெரிய யவனக்கப்பல் தன் விற்பொறிகளுடன் வந்து கரையணைந்தது என்றால் பஞ்சஜனம் வீழ்ச்சி அடைந்துவிடும். ஆகவே மகாசங்க மலையின் பாறைமடிப்புகள் முழுக்க சிறிய நோக்குமேடைகளை அமைத்து அங்கு இரவும் பகலும் எரியம்புகளுடன் தொலைவில்லவரை நிறுத்தினேன். மகாசங்க முடிமேல் ஒரு காவல்மாடத்தை அமைத்து தொலைகடலை கூர்நோக்க ஆணையிட்டேன்.
பஞ்சஜனத்திற்கு வரும் இரண்டு மலைப்பாதைகளிலும் காவலரண்களை அமைத்து படைகளை நிறுத்தினேன். பெரியபடை வந்ததென்றால் உடனே அறிவிக்கும்படி மலைக்காவல்மாடங்களில் ஆட்களை வைத்தேன். முள்ளம்பன்றி என அஞ்சி கூர்சிலிர்த்து நின்றிருந்தது பஞ்சஜனம். சங்கன் என்னிடம் “எதை அஞ்சுகிறீர், அந்தணரே?” என்று கேட்டான். “துவாரகை நம்மை வென்றாகவேண்டும்” என்றேன். “நம்மை எவரும் வெல்லமுடியாது. ஏனென்றால் நிலத்தைக் கைவிட்டு காடுகளுக்குள் புகுந்துகொள்வோம்” என்று அவன் சொன்னான். “மூடா! நீ சேர்த்த செல்வம் இருக்கும்வரை எங்கும் படைகள் உன்னை நாடிவரும்” என்றேன். புரியாமல் என்னை விழித்துப்பார்த்தான்.
ஏழுமாதகாலம் நான் யாதவர்களுக்காக காத்திருந்தேன். அவன் வரவில்லை. துவாரகையிலிருந்து படை எழுவதற்கான எந்த அடையாளமும் கிடைக்கவில்லை. மெல்ல சங்கனும் படைகளும் எச்சரிக்கை இழந்தனர். அவ்வாறு எச்சரிக்கையை இழக்கச்செய்வதே அவன் நோக்கமா என்று எண்ணி நான் மேலும் எச்சரிக்கை கொண்டேன். அத்தனை கதைகளை கேட்டிருந்தும்கூட அவன் அவ்வாறுதான் செய்வான் என என்னால் ஏன் எண்ணமுடியவில்லை என்று இன்று வியக்கிறேன். அவன் பஞ்சஜனர்களின் அலைவிழா அன்று விழவுக்களத்தில் தோன்றினான்.
தரங்கர்களின் தொல்விழா அது. அவர்களுக்கு கடலே முழுமுதல் தெய்வத்தின் கண்தொடு வடிவம். பெருந்தோற்றம் கொண்ட அன்னையின் ஆடைநுனி என அவர்கள் கடலை எண்ணினர். ஒவ்வொருநாளும் அதைத்தொட்டு வணங்குவர். மலரும் அன்னமும் கொண்டு அதை வழிபடுவார்கள். அலைகளின் கை வந்து தங்கள் படையல்களை வாங்கிச் செல்லும்போது குரவையிட்டு கண்ணீர் மல்குவர். குழந்தை பிறந்த ஏழாவதுநாளே சிறு மரப்படகில் ஏற்றி அலைகளுக்குமேல் கொண்டுசெல்வது அவர்களின் சடங்கு. ஏழாவது வயதில் தன்னந்தனியாக கடலுக்குள் ஊர்ந்து அலைப்பரப்பைக் கடந்து ஆழ்கடல் வரை சென்றுவரவேண்டும். பதினெட்டு வயதில் ஆழ்கடலுக்குள் சென்று அவன் உருவை விடப் பெரிய ஒரு மீனை பிடித்துவரவேண்டும்.
பஞ்சஜனத்தின் கடற்கரை பேரலைகள் எழுவது. அது ஏன் என்று நான் கண்டடைந்திருந்தேன். இருபக்கமும் இரு மலைகள் கடலுக்குள் இறங்கிச் சென்றிருக்க நடுவே நின்றிருக்கும் நிலம் அது. அலைகள் மலைநீட்சிகளில் அறைபட்டு வெண்ணுரை சிதற எழுந்து சுழன்று கொப்பளிக்கும். அங்கு எழும் அலைகளின் திசைகளையும் சுழிகளையும் அங்கேயே பிறந்து வளர்ந்த முதியோராலும் கணிக்க முடியாது. கடலோட்டமும் காற்றும் அப்பாறைகளின் அமைப்பும் இணைந்து ஆற்றும் பெருநடனம் அது. அறியாதோர் அந்தக் கரையில் நின்றிருப்பதே கூட உயிரிடர் அளிக்கலாம். அலை வலமிருந்தோ இடமிருந்தோ மட்டுமல்ல சுழன்று நேர்பின்னாலிருந்துகூட வரும். ஒரு மரத் தடியை நீரிலிட்டால் விறகுத்துகள்களாகவே அதை காணலாம். பஞ்சஜனர் மட்டுமே அவ்வலைகளில் ஆட இயலும்.
அலையற்ற கடற்கரைகளையே மீனவர்குடிகள் நாடுவது வழக்கம். ஆனால் தரங்கர் இக்கடற்கரையை அறியாத தொல்காலத்திலேயே தெரிவுசெய்திருந்தனர். சிலமீன்கள் அலைநுரைக்கும் அருவிமுனையை நாடுவதுபோல. ஏனென்றால் அவை அங்கு வாழப் பழகிக்கொண்டால் எதிரிகளை அஞ்சவேண்டியதில்லை. தரங்கர்களுக்கு அங்குள்ள கொலைக்கடலே பெரும்காவல். அவர்களன்றி எவரும் அக்கடல் வழியாக அவர்களை அணுகமுடியாது. இருபக்கமும் எழுந்த மலைச்சுவர்கள் பக்கக் காவல். எதிரிகளற்றிருந்தமையால் அவர்கள் நட்புகளும் அற்றவர்கள் ஆனார்கள். ஆகவே காலத்தால் கைவிடப்பட்டு அங்கேயே மாற்றமின்றி வாழ்ந்தனர். பாரதத்தை அலைக்கழித்து கோத்திணக்கிய வேதப்பொற்சரடு அங்கு வந்துசேரவேயில்லை.
அவர்கள் பிற நான்கு குடிகளுடன் இணைந்தபோதுதான் உண்மையில் உரையாடவே கற்றனர் என்பார்கள். பஞ்சஜனர் அரசமைத்து சுங்கம் கொள்ளவும் வணிகம் செய்யவும் தொடங்கிய பின்னர் ஐந்துகுடிகளின் மொழிகளும் இணைந்து பஞ்சஜனம் என்னும் மொழியாகியது. வணிகர்களுடன் பேச அவர்கள் செம்மொழியின் சொற்களை கற்றனர். அரசே, நீர்ப்பாசியின் ஒருதுளி போன்றது செம்மொழியின் ஒரு சொல். அது எங்கோ வேதத்தில் இருந்து வந்திருக்கும். துளி ஈரம்போதும், அது முழுவேதத்தையும் கொண்டுவந்து அங்கே பரப்பிவிடும்.
ஐங்குடி அமைந்தபின் அங்கு வந்து அவர்களில் ஒருவனாகிய முதல் வைதிகன் நான். நான் அங்கு வேதமெழச் செய்தேன். விண்மீன் கணிக்கவும் கடல்மீன் கணிக்கவும் வேதம் உதவுவதை அவர்கள் கண்டனர். அங்கு சங்கன் காவலென அமர முதல்பெருவேள்வியை நான் இயற்றியபோது அவர்களும் இப்பெருநிலத்தின் வேர்ப்பின்னலில் இணைந்து இதன் குடிகளானார்கள். அவர்கள் கடலன்னையின் குரல் குடிகொண்ட சங்கத்தை வழிபடும் வழக்கம் கொண்டவர்கள். அவர்களின் குடிமூத்தோர் தலையில் ஒரு சங்கை அணிந்தபடியே அவையமரும் வழக்கம் கொண்டிருந்தனர். அவர்களின் தெய்வச்சொல்லின் வெண்ணிறவடிவம் என அமைந்திருந்தது பாஞ்சஜன்யம்.
பாஞ்சஜன்யத்தின் ஓங்காரமே வேதத்தின் முதல் ஒலித்துளி என நான் அவர்களுக்கு கற்பித்தேன். அவர்களின் அனைத்து இறைவழிபாடுகளிலும் பாஞ்சஜன்யம் மையமென அமர்ந்தது. தரங்கர்களின் அலைவிழவை ஐங்குடியினரும் கொண்டாடும் பெருவிழவென நான் மாற்றினேன். அதன் முதல்நாள் வேள்வியின் எரிகொடையும் மூன்றாம்நாள் கடற்கொடையும் நிகழும். கடற்கொடைநாளில் முதற்புலரியில் அலையன்னைக்கு அன்னமும் மலரும் அளித்து வணங்கியபின் பகல் முழுக்க போர்விளையாட்டுகளும், பெண்டிரின் நடனங்களும் நிகழும். அதன்பின் இளையோர் அலையிலிறங்கி கடலாடுவார்கள்.
உணவுக்கும் மதுவுக்கும் பின் அலைநீராட்டு நிகழ்ந்துகொண்டிருந்தது. வெற்றுடல்கொண்ட ஆணும் பெண்ணும் கொந்தளித்துச் சுழன்றடித்த அலைகளுக்குள் பாய்ந்து நீந்தித் துடித்தனர். சினந்த புரவிகள் போல பிடரி பறக்க எழுந்து வந்த அலைகள்மேல் தாவி ஏறி கைவீசி பறந்தனர். அறைந்து சுருண்ட அலைகளில் சென்று கரியபாறைகளை கைகளால் கவ்விக்கொண்டு ஏறி மேலே சென்றனர். ஆண்களும் பெண்களும் உடல்தழுவி நீருக்குள் புகுந்தனர். வெண்பற்கள் ஒளிவிடச் சிரித்தபடி மேலெழுந்து வந்தனர்.
முதியோர் கரைமுழுக்க நிரைநின்று கைவீசிக் கூவியும் துள்ளி ஆர்ப்பரித்தும் அவர்களை ஊக்கினர். கரைமீள்பவர்களுக்காக மணல்வெளியில் ஊனுணவும் மீனுணவும் சமைக்கப்பட்டன. அரசமேடையில் சங்கன் கோல்சூடி மணிமுடி அணிந்து பொன்னணிகளும் மணியாரங்களும் ஒளிவிட அமர்ந்திருந்தான். அவனருகே ஐங்குலத்தைச்சேர்ந்த அவன் ஐந்து அரசியரும் முடிசூடி அமர்ந்திருந்தனர். பின்னால் அமைச்சர் குழு நின்றிருந்தது. அரசமேடையின் வலப்பக்கம் பொன்மேடையில் பாஞ்சஜன்யம் மலர்சூடி அமர்ந்திருந்தது. அதனருகே வைதிகனுக்கான தர்ப்பைமேடையில் நான் அமர்ந்திருந்தேன். இடப்பக்கம் மங்கலமுழவுகளும் கொம்புகளும் குழல்களுமாக இசைச்சூதர் நின்றனர்.
அலைகளில் பெருங்கூச்சல் எழுவதை நான்தான் முதலில் கண்டேன். சுறாமீன் வந்திருக்குமென முதலில் எண்ணினேன். ஆனால் அத்தகைய அலைவெளியில் பெருஞ்சுறா நீந்த முடியாது. எப்போதாவது தவறிவரும் பெருமீன்கூட பாறைகளின் அறைபட்டு உயிரிழந்து உடல்சிதறிக் கரையொதுங்குவதே வழக்கம். அனைத்து இளையோரும் ஒருங்கு திரண்டு ஒரு மீன்சுழி என ஆவதை, அவர்கள் அலைகளில் எழுந்தமைந்து ஏதோ கூவுவதை கேட்டேன். அலை ஒன்று மேலெழுந்து அமைந்தபோது அதன் உச்சியில் ஒருகணம் யானைமருப்பிலென அமர்ந்து கைவீசி இறங்கி மறைந்த இளைய யாதவனை அடையாளம் கண்டுகொண்டேன்.
வந்தவன் இளைய யாதவன் என்று நான் சொன்னதும் சங்கன் சினத்துடன் எழுந்து நின்றான். “படைகொண்டு வந்துள்ளானா? எங்கே?” என்றான். “தனியாக வந்துள்ளான். கடல்வழியாக” என்றேன். “நீந்தியா? இக்கடல் வழியாகவா?” என்றான் சங்கன். நான் “ஆம்” என்றேன். அவன் திகைப்புடன் நோக்கி நின்றான். அவன் மனைவியர் வியப்புடன் கிளர்ந்து எழுந்து நின்று நோக்கினர். தங்களுக்குள் துள்ளும் குரலில் மொழியாடிக்கொண்டனர்.
முதலில் இளையோரிடம் எழுந்த திகைப்பும் விலக்கமும் அகல்வதை கண்டேன். அவன் அந்த அலைகளில் ஏறிவந்தான் என்பதே அவனை அவர்களில் ஒருவனாக ஆக்கியது. அவனை அவர்கள் பிடிக்க முயன்றனர். அவன் அவர்களின் தோள்களை மிதித்து தாவி அகன்றான். தழுவிய கைகளினூடாக நழுவிச்சென்றான். ஒரு கட்டத்தில் அது ஓர் விளையாட்டாகியது. நீர்த்துளிகள் பளிங்குமணிகளாகத் தெறித்து ஒளிவிடும் வெளியில் அவன் கரிய முகம் எழுந்து சிரித்து மறைந்துகொண்டிருந்தது. கரையில் இருந்த அனைவருமே சொல்லின்றி அதையே நோக்கிக்கொண்டிருந்தனர். “அலைபிறந்தவன் போலிருக்கிறான்” என்று ஒரு பெண் சொன்னாள். “அவனை அலைமகள் கொழுநன் என்கிறார்கள்” என்று இன்னொருத்தி சொன்னாள். இக்கதைகளை எல்லாம் இவர்கள் எப்படி அறிந்தனர் என்று நான் வியந்தேன்.
பின்னர் அவன் கரையணைந்தான். அவனைச் சூழ்ந்து ஐங்குடியின் இளம்பெண்கள் முலைததும்பும் இளைய உடல்களுடன் கைவீசி நீந்தி வந்தனர். அவனைத் தழுவியும் அவன் உடல்தொட்டு வழுக்கியும் நீந்திச் சிரித்தனர். மணல்விளிம்பில் அவன் கரையேறியபோது அவன் உடலையே அங்கிருந்த அனைவரும் முழுவிழியாலும் நோக்கிக்கொண்டிருந்தனர். முற்றிய எருமைக்கொம்பு போல என நான் எண்ணிக்கொண்டேன். கருமையின் ஒளி. உறுதியின் ஒளி. உயிரின் ஒளியும்கூட. அத்தசை வளைவுகள், எலும்பசைவுகள்.
அவன் வந்து சங்கனின் அரசமேடைக்கு முன்னால் நின்றான். “அரசே, யாதவனாகிய நான் இங்கே உங்கள் குடியென வந்து நின்றிருக்கிறேன். தங்கள் பாதங்களை வணங்குகிறேன்” என்றான். சங்கன் அச்சொற்களை எதிர்பார்க்கவில்லை. முகம் மலர்ந்து அரியணையில் அமர்ந்து நிமிர்ந்த தலையுடன் “நன்று, வாழ்க!” என்று வாழ்த்தினான். “நான் இங்கு உங்கள் குலத்தை போருக்கு அறைகூவுகிறேன். படைக்கலம் எதுவாயினும் போர்முறை எதுவாயினும் எவருடனும் தனிப்போருக்கு நான் ஒருக்கமாக உள்ளேன். வென்றால் உங்கள் ஐங்குலமும் எனக்கு அடங்கவேண்டும்” என்றான்.
அவனைச் சூழ்ந்து வேலியென நின்றிருந்த ஐங்குடியினர் அதை எதிர்பார்க்கவில்லை. சிலகணங்கள் அமைதிக்குப்பின் ஒலிகள் கலைந்தன. மெல்லிய குரலில் அவன் என்ன சொன்னான் என்று பேசிக்கொண்டனர். மெல்ல குரல்கள் எழுந்து முழக்கமாயின. “பாரதவர்ஷம் முழுக்க இருக்கும் நடைமுறை இது. நீங்கள் என்னிடம் போர்புரிய மறுக்க முடியாது” என்றான். நான் சங்கனிடம் “வேண்டாம், மறுத்துவிடு!” என்றேன். என் விழிகளை அவன் சந்திக்கவில்லை. பீடத்தில் கைகளை வைத்தபடி விழிசுருக்கி நோக்கி அமர்ந்திருந்தான்.
இளைய யாதவன் “இங்குள்ள கன்னியர் சொல்க, நான் கோருவது பிழையா என” என்றான். அத்தனை பெண்களும் கைகளைத் தூக்கி “பிழையல்ல! ஆண்கள் எழுக! போர் நிகழ்க!” என்று கூவினர். பற்கள் ஒளிவிட கிள்ளைக்குரல்களுடன் கூவிச்சிரித்தனர். நான்கு பெண்கள் ஓடிச்சென்று அவனைத் தூக்கி தங்கள் தோள்மேல் உயர்த்தினர். “ஆம்! இளைய யாதவனுக்கு இங்கே யார் நிகர்?” என்று ஒருத்தி உரக்கக் கூவினாள். “ஆம்! ஆம்! சொல்க!” என்று மற்ற பெண்கள் கூவினர்.
சங்கன் எழுந்து தன் செங்கோலையும் மணிமுடியையும் எடுத்து அமைச்சர்களிடம் கொடுத்தான். நான் “வெறும் மற்போர் போதும். வென்றான் என்றால் அவன் கோருவதை அளிப்பேன் என சொல்லளிக்க வேண்டாம்” என்றேன். “இச்சிறுவன் வெல்வான் என்கிறீர்களா, அந்தணரே?” என்றான் சங்கன் சினத்துடன். ஒன்றும் சொல்லமுடியாதென்று உணர்ந்து நான் அமைதியானேன். சங்கன் மேலாடையைக் களைந்தபடி “இளையோனே, என்னுடன் தோள்கோத்து களம் நில்!” என்றான்.
“அவ்வண்ணமே” என்றான் இளைய யாதவன். “வெற்றிக்குப்பின் நான் கோருவது ஐங்குலத்தின் அரசனாக அமர்தலை” என்றான். “முதலில் நீ களத்தில் எத்தனை கணம் நிற்பாய் என்று பார்… தன்னந்தனியாக கடலுக்குள் சென்று சுறா கொண்டுவந்து அரசனாக ஆனவன் நான்” என்றான் சங்கன். “ஆம், அதை அறிந்தே உங்களை வெல்லவந்தேன். அச்சுறாவையும் இன்று வென்றவனாவேன்” என்றான் இளைய யாதவன். பெண்கள் கூவிச்சிரித்து “வெல்க! வெல்க!” என்றனர்.
அவர்கள் மணலில் இறங்கி தோள்விரித்து நின்றனர். கொடுக்கு விரித்த கடல்நண்டின் முன் ஒரு சிறு கருவண்டு நிற்பதுபோலத்தான் இருந்தது. தன் பெருந்தோள்களைத் தட்டியபடி சங்கன் சுற்றிவர அவனை கூர்ந்து நோக்கியபடி இளைய யாதவன் சுழன்றான். அப்போதும் அவன் முகத்தில் இளநகைப்பு இருந்தது. அவனை நோக்கிக்கொண்டிருந்தபோது எனக்கு ஏற்பட்ட வியப்பை இப்போதும் நினைவுகூர்கிறேன். அவனுக்கு அச்சமென்பதே இல்லையா? வென்றுவிடுவோம் என அத்தனை உறுதியாகவா எண்ணுகிறான்? தனிப்போரில் எந்தப் பெருவீரனும் தோற்பதற்கு வாய்ப்புள்ளது என்று அறிந்திருக்கிறேன். தான் யாரென அறிந்தவர்களுக்குரிய உறுதியா அது? அல்லது எதையுமே அறியாத குழந்தையாடலா? அனைத்தையும் வெறும் லீலை என்று கற்பிக்கும் எந்தையின் சொற்களை அவ்வண்ணமே தலைசூடிக்கொண்டானா?
ஆனால் போர் தொடங்கியதுமே தெரிந்துவிட்டது, அவனே வெல்வான் என. அவனே வென்றாகவேண்டும். அதை பின்னாளில் பலமுறை பகுத்து ஆய்வு செய்திருக்கிறேன். நம் எண்ணங்களிலும் வாழ்க்கையிலும் கதைகளுக்கான இடம் பற்றி எண்ணிப்பாருங்கள். கதைகளில் உள்ள ஒத்திசைவு வாழ்க்கையில் இல்லை. எனவே நாம் கதைகள் வாழ்க்கையை வழிநடத்தவேண்டுமென விழைகிறோம். கதை போல வாழ்க்கையை ஆக்க நம்மையறியாமலேயே முயல்கிறோம். அப்படியே கதைபோல நிகழ்ந்தது என்பதே நாம் ஒரு நிகழ்வைப்பற்றி சொல்லும் உச்சநிலை பாராட்டு. அது கதையல்ல என்றால் கதையென்றாக்கிக் கொள்வோம். கதையென ஒத்திசையாத ஒன்றை நினைவிலிருந்தே அகற்றுவோம்.
அரசே, நம் வாழ்க்கையில் பெரும்பாலும் கதையாக நாம் கேட்டவற்றையே மீளவும் நடிக்கிறோம். அந்நிகழ்வின் அறமோ நெறியோ அல்ல, அதில் செயல்படும் ஆற்றல்கள் அல்ல, அதன் பின்னாலுள்ள கதையின் வடிவமே நம் உள்ளத்துள் கரந்து அத்தருணத்தை முடிவுசெய்கிறது. அங்கே இளைய யாதவன் வெல்வதை அத்தனை இளையோரும் உளவிழிகளால் நோக்கிவிட்டனர். ஏனென்றால் அதற்கிணையான கதைகளை அவர்கள் பலமுறை கேட்டு அதில் பலமுறை உளம்நடித்திருந்தனர். அவனை நீங்கள் நன்கறிவீர்கள் அரசே, தன்னை ஒரு கதையென ஆக்கிக்கொள்வதையே எப்போதும் செய்துகொண்டிருக்கிறான். ஓர் எழுச்சிமிக்க நாடகத்தருணமென அனைத்தையும் ஆக்கிக்கொள்கிறான். அன்று அவன் அலைகளின் மீதேறி பஞ்சஜனத்தின் விழாவுக்கு வந்ததே சிறந்த நாடகத் தொடக்கம்.
தனித்த அழகிய இளைஞன், ஒளிவிடும் சிரிப்புடன் மழலையின் தெளிந்த விழிகளுடன் வந்து மற்களத்தில் நிற்கிறான். எதிரே அவனைவிட பல மடங்குபெரிய தோள்கள் கொண்ட மல்லன். அங்கிருக்கும் அன்னையரும் கன்னியரும் யார் வெல்லவேண்டுமென விழைவார்கள்? அத்தனைபேரின் விழிகளும் வேண்டிக்கொண்டிருந்தன. உள்ளங்கள் ஏங்கிக் கனிந்திருந்தன. நான்குமுறை அவன் சங்கனை தோள் தவிர்த்துத் தாவியகன்றபின் இளையோரும் அவன் வெல்வதையே விழைந்தனர். ஏனென்றால் அவன் வென்றால்தான் புதுவரலாறு நிகழ்கிறது. ஏதோ ஒன்று முன்னகர்கிறது. இளையோர் விழைவதெல்லாம் புதியனவற்றை மட்டுமே. அது அழிவேயாக இருப்பினும்.
அங்கு அது புதிது. ஆனால் எத்தனைமுறை நிகழ்ந்த கதை! அங்கு கதை மெல்ல அனைவரையும் கைப்பற்றிக்கொண்டு தன்னை நிறுவியது. இனி அதன் விழைவே நிகழுமென நான் நன்கறிந்திருந்தேன். வியப்பென்னவென்றால் அதை சங்கனும் உள்ளூர அறிந்திருந்தான். அங்குள்ள உள்ளங்கள் திரண்டு வந்து எதிரே நின்றபோது அவன் தோள்கள் அவ்வெடை தாளாது தழையத் தொடங்கின. அத்தனைபேரையும் கதைமாந்தராகக் கொண்டு அந்த நாடகம் நிகழ்ந்து முடிந்ததுமே நேராகத் தொன்மமாக ஆகியது. அவன் சங்கனை தூக்கிச்சுழற்றி தரையில் அறைந்து அவன் இரு கைகளையும் பற்றி முறுக்கி ஒன்றாக பிடித்துக்கொண்டு கைதூக்கி வெற்றிக் குரலெழுப்பினான். கூடி நின்ற அனைவரும் அவனுடன் சேர்ந்து ஆர்ப்பரித்தனர்.
அவன் எழுந்தபோது இளங்கன்னியர் பாய்ந்துசென்று அவனைப் பற்றித் தூக்கி தலைமேல் வீசி கூவி ஆர்த்தனர். இளையோர் அவன் மேல் மேலாடைகளையும் கிளிஞ்சல்களையும் வீசி கூச்சலிட்டனர். அன்னையர் அவனை தொட்டு நோக்க முண்டியடித்தனர். அங்கே நிகழ்ந்துகொண்டிருந்த உணர்வுக்கொப்பளிப்பை என் பீடத்தில் அமர்ந்தபடி நான் நோக்கிக்கொண்டிருந்தேன். எத்தனை முறை நிகழ்ந்த நாடகம் இது. இன்னும் எத்தனை முறை இது இங்கே நிகழும். ஒருவேளை மண்மீது எங்கோ ஒவ்வொரு நாளும் கணமும் இது நிகழ்ந்துகொண்டிருக்கிறதுபோலும். ஒரு தலைவனை தங்களுக்குள் இருந்து எடுத்து முன்வைக்கிறார்கள். எவர் முன்? இதோ தலைக்குமேல் தூக்குகிறார்கள். அப்படியென்றால் தெய்வங்களுக்கா காட்டுகிறார்கள்?
அவன் வீரர்களுக்குரிய முறையில் நடந்துகொண்டான். சங்கன் முடிதுறக்க அதை வாங்கி தான் அணிந்துகொண்டு ஐங்குடியின் கோல்சூடி அரியணையில் அமர்ந்து அலைவிழவை தலைமைதாங்கி முடித்துவைத்தான். உடனே அந்த முடியை எடுத்து சங்கனின் மூத்த மைந்தனின் தலையில் சூடி அரிமலரிட்டு வாழ்த்தி அவனை ஐங்குடியின் அரசனாக ஆக்கினான். சங்கனின் ஐந்து துணைவியரையும் அன்னை என ஏற்று அடிபணிந்து மலர்கொண்டு வாழ்த்து பெற்றான். தன் வெற்றிக்கு ஈடாக அவன் கோரியது இரண்டே. ஐங்குலம் என்றும் துவாரகைக்கு அணுக்கர்களாக இருக்கவேண்டும். என்னை அங்கிருந்து அழைத்துச்செல்ல ஒப்பவேண்டும்.
ஐங்குலத்து மூத்தோர் கூடி அவனை வணங்கி அவர்களின் அருங்கொடையாக பாஞ்சஜன்யத்தை அவனுக்கே அளித்தனர். ஐங்குலம் என்றும் துவாரகையின் ஒருபகுதி என்பதை அக்கொடை வழியாக அவர்கள் உறுதியளித்தனர். இன்று அவ்வுறவு மேலும் வலுவாகிவிட்டிருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். பட்டத்து இளவரசர் பிரத்யும்னர் சங்கனின் மகளை மணம் புரிந்துகொண்டிருக்கிறார். துவாரகையின் வல்லமை வாய்ந்த கடலோடிகளில் பெரும்பாலானவர்கள் ஐங்குலத்தோரே.
பாஞ்சஜன்யம் இன்று துவாரகையின் அரசவையில் பொற்பீடத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் துவாரகையின் குடிப்பேரவை கூடும்போது குலங்கள் இணைந்தமர்வதற்கான அறைகூவலாக அது ஒலிக்கிறது. அவை நிறைவில் இளைய யாதவன் தன் ஆணைகளை உரைத்து முடித்ததும் அவன் சொல்லுக்கு தெய்வங்கள் அளிக்கும் ஆதரவுக்குரலாக அது ஒலித்தமைகிறது. பாஞ்சஜன்யமே அவனுள் வாழும் தெய்வத்தின் ஓசை என்கிறார்கள் துவாரகையின் சூதர்.
அவன் என்னிடம் வந்து பணிந்து “உங்களுக்காகவே இங்கே வந்தேன், ஆசிரியமைந்தரே. உங்களை என் ஆசிரியரிடம் அழைத்துப்போவதாக உறுதி கொடுத்தேன்” என்றான். “நான் அதை அறிந்திருக்கிறேன். எந்தையை சந்திப்பதில் எனக்கும் ஆர்வமிருக்கிறது. நீ செல்க! நான் இங்கு என் பணிகளை இருநாட்களில் முடித்துவிட்டு உன்னைத் தொடர்ந்து உஜ்ஜயினிக்கு வருகிறேன்” என்றேன். “நன்று, உங்கள் சொற்களை ஆசிரியரிடம் அறிவிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு அவன் துவாரகைக்கு மீண்டான்.
நான் அங்கே செய்து முடிக்க பல பணிகளிருந்தன. எனக்குப்பின் அங்கு வைதிகனாக அமர்வதற்கு என் முதல்மாணவனாகிய சக்ரனை அமைத்தேன். ஐங்குடிக்குரிய முதல்நூல்களையும் வழிநூல்களையும் வகுத்து அந்நெறிகளை அரசவை ஏற்க வைத்தேன். அங்கு வேள்விகளும் பூசனைகளும் நிகழவேண்டிய முறைமையையும் குடிகளின் ஒழுக்கமும் அறமும் செல்லவேண்டிய வழிகளையும் வகுத்து நான் எழுதிய சங்கஸ்மிருதி என்னும் நூலை அவர்களின் குடியவை ஏற்க வைத்தேன். அனைத்தையும் ஒருக்கியபோது அங்கு நான் இருந்தாகவேண்டுமென்பதில்லை என்று ஆயிற்று. அவர்களிடம் விடைபெற்று நான் கிளம்பினேன்.
ஐங்குடியினரும் விழிநீர் வார வந்து என்னை வழியனுப்பினர். என் கால்களில் இளையோர் நிரையென வந்து விழுந்து வணங்கி மலரும் சொல்லும் கொண்டனர். இளங்குழவியரை என் காலடித் தடங்களில் வைத்து எடுத்தனர். என் கால்பொடியை எடுத்து ஆடைகளில் முடிந்துகொண்டனர். பஞ்சஜனத்தின் எல்லையில் நின்று திரும்பி நோக்கியபோது அழுநீர் நிறைந்த ஆயிரம் விழிகளைக் கண்டபோது ஒன்றுணர்ந்தேன், நான் முன்னரே அங்கிருந்து கிளம்பிவிட்டிருக்கவேண்டும்.
அங்கே அதுவரை நான் இருந்தது என் ஆணவத்தால்தான். அந்தணன் விதைக்கவும் காக்கவுமே கடமைப்பட்டவன், அறுவடையை செய்வான் என்றால் அவன் சூத்திரனாவான். களஞ்சியம் நிறைப்பான் என்றால் வைசியன் ஆவான். கோல்கொண்டு அதை காக்கையில் ஷத்ரியன் ஆவான். பசித்தவருக்கு பகிரமறுத்தான் என்றால் வருணமற்றவன் ஆவான். ஒருபோதும் தன் அந்தண்மையை மீண்டும் அடையமாட்டான்.
நீள்மூச்சுடன் திரும்புகையில் எண்ணிக்கொண்டேன், எந்தை காலடியில் சென்று பணிவேன். வெல்வதன் தோல்வியை அறிந்துவிட்டேன் தந்தையே. அனைத்தும் லீலையே என்பதை விழிமுன் கண்டு மீண்டுவிட்டேன். இனி என்னை மாணவனாக ஏற்றுக்கொள்க. இனி உங்கள் மெய்மையை எனக்குள் ஊற்றுக. இவையனைத்தும் இக்கலம் இவ்வண்ணம் ஒழிவதற்காகத்தான் நிகழ்ந்தன போலும்.
ஆனால் நான் மீண்டு வந்தபோது எந்தை சாந்தீபனி குருநிலையில் இல்லை. நான் வந்துசேர்வதற்கு முந்தையநாள்தான் இளைய யாதவன் வந்து எந்தையிடம் சொல்லாடிச் சென்றிருந்தான். அன்றுகாலை எந்தை குருநிலை நீங்கியிருந்தார். அவர் எனக்கிட்ட ஆணை மட்டும் அங்கிருந்தது. நானே சாந்தீபனி குருநிலையின் ஆசிரியனாக அமர்ந்து அதை நடத்தவேண்டும் என்று தந்தை கூறியிருந்தார்.
அதை என்னிடம் சொன்ன அவரது மாணவர்களிடம் நான் திகைப்புடன் கேட்டேன் “நானா? எனக்கு அவர் எதையும் கற்பிக்கவில்லையே?” அவர்கள் “இல்லை, கற்பிக்கவேண்டிய அனைத்தையும் அவனுக்கு அளித்துவிட்டேன். அவனே அமர்க என்றே முதலாசிரியர் சொன்னார்” என்றனர். “குருகுலக் கல்வி முடித்து அவன் மீள்கிறான். தந்தையின் வாழ்த்து அவனுக்கு உண்டு என்று சொல்லுங்கள் என்றார் முனிவரே” என்றனர்.
“அவர் சொல்லிச்சென்றது என்ன என்று எனக்குப்புரியவில்லை. ஆனாலும் அவர் ஆணையை ஏற்று நான் இக்குருநிலையின் தலைவனாக ஆனேன். அதன் பின் அறிந்தேன் அவர் சொன்னதன் பொருளென்ன என்று” என்றார் சாந்தீபனி முனிவர். “அவர் கற்பிக்க விழைந்தது பெருவிளையாட்டை. அவரது மாணவர்கள் அதை லீலை என்னும் கருத்துருவாகவே அறிந்தனர். நான் அதில் ஆடி மீண்டு வந்திருந்தேன்.”
தொடர்புடைய பதிவுகள்
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 37
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 36
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 35
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 28
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 26
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 25
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 22
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 62
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 61
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 60
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 25
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 75
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 71
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 45
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 87
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 86
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 82
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 45
பிரயாகை- ஒருமை
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 39
August 24, 2016
கி.ராஜநாராயணன்: இனக்குழு அழகியலின் முன்னோடி
கி.ராஜநாராயணனின் ‘கோபல்லகிராமம் ‘ நாவலின் முடிவை நினைவிருக்கிறதா ? கோபல்ல கிராமத்துக்கு மேல் வெள்ளையர் ஆதிக்கம் உருவாகும் காலம். அவர்களை எப்படி எதிர்கொள்வது என்று வயது முதிர்ந்து பழுத்து உதிரும் நிலையில் இருக்கும் , இரு நூற்றாண்டுகளைக் கண்ட, தொட்டவ்வாவிடம் கேட்கிறார்கள். வெள்ளைக்காரன் பெண்களை பலாத்காரம் செய்கிறானா, கொள்ளையடிக்கிறானா என்று அவள் கேட்கிறாள். இல்லை என்று சொல்கிறார்கள்.அப்படியானால் அவர்களை நாம் வரவேற்போம், அவர்களுடன் சேர்ந்துகொள்வோம் என்று அவள் பதில் சொல்கிறாள்.
நமது சுதந்திர இந்தியாவில் எழுதப்பட்ட பெரும்பாலான கதைகளில் சுதந்திரப் போராட்டத்தின் விளைவாக உருவான இலட்சியவேகம், வெள்ளைய ஆட்சிக்கு எதிரான மனநிலை ஆகியவற்றைக் காண்கிறோம். அதன் பிறகு வந்த ஆக்கங்களில் இலட்சியவாதத்தின் சரிவை , அதன் விளைவான சமூக வீழ்ச்சியின் சித்திரத்தைக் காணமுடிகிறது. கமலாம்பாள் சரித்திரம், பத்மாவதி சரித்திரம் ஆகியவை முதல் வகை. ‘பொய்த்தேவு ‘ [க நா சுப்ரமணியம்] முதல் ‘ ஒரு புளியமரத்தின் கதை வரை நாவல்கள் பெரும்பாலும் வீழ்ச்சியின் சித்திரத்தை அளிப்பவை. ஆனால் இரு போக்குகளிலும் இருந்து விலகி கோபல்ல கிராமம் ஒரு தனியான பார்வையை அளிக்கிறது .
அப்பார்வை மேலே சொன்ன பொதுவான கருத்தியல் போக்குகளிலிருந்து உருவானதல்ல. மாறாக தன் இனக்குழுப்பின்னணியிலிருந்து கி ராஜநாராயணன் உருவாக்கிக் கொண்டது. அதை வேறு எவரும் எழுதிவிடமுடியாது. அந்த தனித்த இனக்குழுவேர்தான் தமிழுக்கு அவரது பங்களிப்பு. அவரது கலையின் ஆதாரம். அவரது ஆக்கங்களின் உள்வலிமை . அவரது ஆக்கங்களின் எல்லையையும் இங்கேயே நாம் தேடவேண்டியுள்ளது.
கி.ராஜநாராயணனின் அழகியல் கூறுகள்
கி.ராஜநாராயணனை தான் சந்தித்த தருணங்களைப்பற்றி சுந்தர ராமசாமி என்னிடம் தனிப்பட்ட உரையாடல்களில் சொல்லியிருக்கிறார் . முதலில் டி.கெ.சிதம்பரநாத முதலியாரின் ‘வட்டத்தொட்டி ‘ அவைகளில் . அப்போது அவர் சட்டைபோடாமலேயே ஊரில் இருந்து வருவார், தரையில் ஒரு மூலையில் அமர்வார் , சபையில் எதுவுமே பேசமாட்டார் என்று சுந்தர ராமசாமி நினைவு கூர்ந்தார். பிறகு விவசாயிகள்போராட்டங்கள்மூலம் இடதுசாரி அரசியலுக்கு வந்த கி.ராஜநாராயணனை நெல்லை கம்யூனிஸ்ட் வக்கீல் என்.டி. வானமாமலை வீட்டில் வைத்து சந்தித்ததையும் அப்போது அவரில் உருவாகியிருந்த மாற்றங்களையும் நினைவு கூர்ந்த சுந்தர ராமசாமி ஆனால் அவரது பேச்சுமொழி மட்டும் மாறவேயில்லை. பேச்சிலே சாதாரணமாக அவர் கிராமத்து உவமைகளையும், கதைகளையும் தான் பயன்படுத்துவார் என்றார்.
கி.ராஜநாராயணனின் படைப்புலகின் முக்கிய அம்சங்கள் அனைத்தையும் இதன் மூலம் நான் அடையாளம் காண்கிறேன். டி.கெ.சிதம்பரநாத முதலியாரின் வழியாக கி.ராஜநாராயணன் பெற்றுக் கொண்டது ரசனையை என்று சொல்லலாம். கம்யூனிஸ்டு இயக்கங்கள் மூலம் முற்போக்கு மனிதாபிமான பார்வையை . அவரது பிறப்பு வளர்ப்பு ஆகிய பின்னணியிலிருந்து கிடைத்து அவரது மனதில் முக்கியமான் இடம் பிடித்திருந்த கிராமத்துப் பண்பாட்டுக் கூறுகள் இவ்விரு புதுக் கூறுகளுடனும் கலந்து அவரது ஆளுமையை உருவாக்கின .
ரசனை என்பதை கி ராஜநாராயணனின் அழகியல் அடிப்படைகளில் முக்கியமான ஒன்றாகவே காணலாம். அவர் பிறந்து வளர்ந்து வாழ்ந்த சூழலையே வெளியே இருந்து வந்த ஒருவனின் பார்வையுடன் பார்த்து ரசித்து சொல்லும் பாணியை அவரது கதைகளில் வாசிக்கிறோம். இயற்கைச் சூழலை , மனிதர்களின் குணாதிசயங்களை , அவர்களின் வாழ்க்கைச் சரித்திரத்தை எல்லாமே ஒரு வேடிக்கை பார்க்கும் கண்ணோடு விலகி நின்றே அவர் பார்க்கிறார் . இந்தப் பார்வையே அவருடைய படைப்புகளில் வெகுஜன ரசனையையும் திருப்தி செய்யும் கூறாக உள்ளது. ஏறத்தாழ இதே சூழலை எழுதிய பூமணியிடம் இத்தகையை ரசனை அம்சமே இல்லை என்பதையும், அவர் படைப்புகளில் வாழ்க்கை சாதாரணமாகத் தகவல்களாகவே வருகிறது என்பதையும் இத்துடன் நாம் ஒப்பிட்டுப் பார்க்கலாம். ரசிப்பது, அந்த ரசனையை நுட்பத்துடனும், ஆர்வத்துடனும் பகிர முயல்வது கி.ராஜநாராயணனின் இயல்பு.
இயற்கையைச் சித்தரிப்பதில்வெற்றி அடைந்த தமிழ் எழுத்தாளர்கள் குறைவே. தி.ஜானகிராமன்[காவிரிக்கரைகள்] ப.சிங்காரம் [கடல்] இருவரை மட்டுமே என்னால் குறிப்பிட்டுச் சொல்லமுடிகிறது. இயற்கையை சித்தரிப்பதில் ஒரு எழுத்தாளன் எங்கே தோல்வி அடைகிறான் ? ஒன்று இயற்கையை வெறும் தகவல்களாக புறவயமாக சொல்லி செல்லும்போது, க.நா.சுப்ரமணியம் ,செல்லப்பா போல. அல்லது அகவயமான உணர்வுகளை முக்கியப்படுத்தி , பிரயத்தனப்படுத்தி அவற்றை இயற்கை மீது ஏற்றும்போது. உதாரணம் மெளனி, சுந்தர ராமசாமி. இயற்கையைப் பற்றிய சிறந்த சித்தரிப்பு அதில் ஆழ்மனம் ஈடுபடுவதன் தன்னிச்சையான வெளிப்பாடாக இருக்கும். இயல்பான காட்சிப்படத் தன்மையைக் கொண்டிருக்கும்போதே அக உணர்வுகளைபிரதிபலித்து படிமத்தன்மையும் கொண்டிருக்கும். இயற்கையின் பிரம்மாண்டம் ஒரு படைப்பாளியிடம் உண்மையான எதிர்வினையை எழுப்பியிருக்கிறதென்றால் அது கண்டிப்பாக கட்டுப்பாடற்ற தன்மையைத்தான் கொண்டிருக்கும். ப.சிங்காரத்தின் மொழி உளறல்போல மாறுவதைக் காணலாம். காரணம் தன் சுயத்தை நிராகரித்தே ஒரு மனம் இயற்கையில் ஈடுபட முடியும்.
கி.ராஜநாராயணனின் படைப்புகளில் நவீனத் தமிழில் உள்ள மிகச்சிறந்த சில இயற்கைச் சித்தரிப்புகளைக் காண்கிறோம். இவற்றில் முதன்மையானது கோபல்ல கிராமம் நாவலில் கிராமத்தில் காலைநேரம் விடிந்து எழும் சித்திரம்தான். அவரது பிஞ்சுகள் என்ற குழந்தைகள் நாவல் இயற்கையின் அழகிய சித்தரிப்புக்காக முக்கியமானது. கி.ராஜநாராயணன் தன் கதைகூறல்முறைகளில் எப்போதுமே நாட்டார் வாய்மொழி மரபின் அழகியலையே கைக்கொள்கிறார். அதன் சாமர்த்தியம், நக்கல்கள், இடக்கரடக்கல்கள், அனைத்தையும் விட முக்கியமாக நிதரிசனப்பாங்கு. ஆனால் இயற்கையை சொல்லும்போது மட்டும் அவர் செவ்வியல்தன்மைக்குள்ள் சென்றுவிடுகிறார். ஏனெனில் இயற்கையை விலகி நின்று பார்த்து வியப்பது நாட்டார் மரபின் இயல்பல்ல. இயற்கை தன்னிச்சையான ஓர் இடத்தை மட்டிலுமே நாட்டார் மரபில் பெறமுடிகிறது. இயற்கையை சொல்லுமிடத்தில் கி.ராஜநாராயணனின் வாசாலகத்தன்மை அகன்று அவர் மொழி செறிவும் வேகமும் கொண்டு கவிதைவாவது நவீனத் தமிழிலிலக்கியத்தின் முக்கியமான அழகுகளில் ஒன்று.
‘ ..மூணாம்நாள் காலையில் மஞ்சள் வெயில் அடித்தது. அலசி விட்டதைப்போல வானம் சுத்த நீலமாய் இருந்தது.யாரோ மேற்கே கை காண்பித்தார்கள். வெகுதூரத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சிமலை இன்று ரொம்பக் கிட்டே வந்திருப்பதுபோல தோன்றியது. எப்பவும் ஒரு நீல அம்பாரமாக மட்டுமே தெரியும் மலை இன்று அதனுள்ளே இருக்கும் மலையின் திருப்பங்கள் மடங்கள் கூட தெளிவாகத் தெரிவதை பார்த்தார்கள். யாரோ அதிலிருந்த பாறைகள் மரங்கள் கூட தெரிவதாகச் சொன்னார்கள் கோயிலின் படிக்கட்டின் அடியிலிருந்து ‘டொர்ர் டொறக் ‘என்று ஒரு சொரித்தவளை சத்தம் கொடுத்தது…
வேகமாக நகர்ந்துகொண்டிருந்த வெள்ளைமேகங்கள் மதியத்துக்கு மேல் நிறைசூல் கொண்ட யானைமந்தைகள்போல நகர முடியாமல் அப்படியே நின்றுவிட்டன உச்சியில். கட்டுத்தறியை அறுத்துக் கொண்ட காளையொன்று குதியாளம் போட்டது.இரைக்கு சென்றிருந்த அரசமரத்து காகங்கள் பாதியிலேயே கத்திக் கொண்டு திரும்பிவந்துகொண்டிருந்தன. வடஞ்சுருட்டி மூலையில் திடாரென்று மின்னல் அந்த பகலிலும் கண்னை வெட்டியது…. ‘ [நிலைநிறுத்தல்]
நீண்ட கோடைக்கு பிறகு வரும் மழையின் சித்திரத்தை அளிக்கும்போது இக்கதையின் மொத்த குறியீட்டுத்தன்மையும் தீவிரமாக மேலெழுவதைக் காணலாம். மேகங்கள் குளிர்ந்து நிற்பது, அந்தக் காளையின் குதியாட்டம் எல்லாமே உளநிகழ்வுகளும் கூட! நாட்டார் மரபிலிருந்தே கிராஜநாராயணன் துவங்குகிறார். ஆனால் டி.கெ.சி அம்சம் அவரை அதிலிருந்து நகர்த்திக் கொண்டு செல்கிறது.
மனிதர்களைப்பற்றி சொல்லும்போது அவர்களுடைய மனஓட்டங்களை பெரும்பாலும் குறிப்பாகச் சொல்லி , உடல் அசைவுகளை விவரித்து சித்தரிப்பது கி.ராஜநாராயணனின் பாணி . நேரடியாக மனதை சித்தரிப்பது அவரது இயல்பல்ல என்பதனாலேயே அவற்றை அவர் சொல்லும் இடங்கள் எல்லாம் ஆசிரியர் கூற்றாக அமைந்து ‘பரிந்துரை ‘த்தன்மை கொண்டிருக்கின்றன. ஆனால் அந்த உணர்வுகளை அவர் கதாபாத்திரங்களின் உடல் மொழியின் வழியாக சொல்லும்போது எப்போதுமே புதுமையும் தீவிரமும் உருவாகிவிடுகின்றன.கோபல்ல கிராமத்தில் கி.ராஜநாராயணன் கோபல்லகிராமத்தின் வெவ்வேறு நாயக்கர்களைப்பற்றி சொல்லுமிடங்களில் முழுக்க உடல்மொழியையே பிரதானமாக சொல்லியிருப்பதைக் காணலாம்.
‘ ஊர்க்கூட்டத்துக்கு ஊர் சாட்டியவுடன் வந்து சேரும் முதல் நபரும் அவரே. விறுவிறுவென்று சாப்பிட்டுவிட்டு தெருவழியே கையைத் துடைத்துக் கொண்டே கடைக்கு வந்து எழாயிரம் பண்ணை தென்னைப்பொடியில் ஒரு சிட்டிகை ஓசிப்பொடி வாங்கிக் கொண்டு கூட்டம் கூடும் இடத்தில் உயரமான இடமாகப் பார்த்து வகையாய் உட்கார்ந்துவிடுவார். விவகாரம் கேட்கும்போது இடதுகையை இடுப்பில் வைத்து வலதுகையை சின்முத்திரைபோல வைத்துக் கொண்டு ஒரு பூவை முகர்ந்துபார்பதுபோல அதை முகர்ந்துகொண்டே லயிப்பில் கண்களைமூடி மண்டையை மண்டையை ஆட்டிக் கொண்டு ராகஆலாபனனையைகேட்பதுபோல எதிராளியிடம் கேட்டுக் கொண்டே வருவார் ‘ [கிடை]
மனங்கள் உரசிக் கொள்ளும் நுட்பமான தருணக்களைக் கூட கி. ராஜநாராயணன் உடல்மொழியின் வழியாக சொல்லிவிடுகிறார்
‘உணவு படைக்கும்போது மல்லாம்மாவிடம் மெளனமாக தன் கையை நீட்டிக் காண்பிக்கிறான்கொண்டையா. கையில் இரத்த விளாறுகளாக நகங்களால் கீய்ச்சப்பட்ட காயங்கள் .இரவில் அவள் படுத்திருந்த திசையில் அவன் கை நீண்டதற்கு அவள் கொடுத்த பதில்கள் அவை. அதைப் பார்த்தும் பார்காததுபோல அவனுக்கு நெய் வட்டிக்கிறாள். வேண்டாம் போதும் போதும் என்று அவன் கை தடுக்கிறது. அப்போது அந்த காயங்களின்மேல் சொட்டுகிறது நெய் ‘[ கனிவு]
இந்த ரசனைக்கூறுதான் கிராஜநாராயணனின் கலையின் மிக முக்கியமான அம்சம் . இன்று அவரை வாசக மனதில் நிலைநிறுத்தியிருக்கும் அம்சமே இதுதான். மிக நுட்பமான புலன் பதிவுகளைக் காண்கையில் ஏற்படும் பரவசத்துக்காகவே நான் கிராஜநாராயணன். படைப்புகளை மீண்டும் மீண்டும் படிப்பது. ‘கிறிஸ்தவர்களுக்கே உண்டான ஒரு வாசனை ‘ [ஒரு காதல் கதை] ‘ பால் நிறைந்து கொண்டே வரும் பாத்திரத்தில் நுரைமீது பாலைபீய்ச்சும்போது ஏற்படும் சப்தத்தைப்போல மெல்லிய குரட்டை ஒலி ‘ [கன்னிமை] ‘ … ‘சேங்கரன்கோயில்! ‘ பஸ் கண்டக்டரின் குரல் வெங்கலத்தினால் செய்தது. அவன் முன்பு காப்பி ஹோட்டல் சர்வராக வேலைபார்க்கும்போது ‘ஒரு தோசை ஸ்பெஷலே ‘ என்று குரல்கொடுத்தால் ஏழு ஹோட்டல் சரக்குமாஸ்டர்களுக்கு கேட்கும் ‘[ அவத்தொழிலாளர்] பிரம்மாண்டமான பூதம் ஒன்று இருண்ட கரும்புகையாக மாறி , அந்தப்புகை வரவரச் சின்னதாக மாறி , ஒரு சிறு குப்பிகுள் புகுந்துகொண்டு தானாகவே கார்க்கால் மூடிக் கொண்டதுபோல அவளுடைய எண்ணத்தின் விசுவரூபம் குறைந்து தற்காலிகமாக மனசினுள் ஒரு மூலையில் அட்டைபோல சுருங்கி ஒட்டிக் கொண்டது ‘[பலாபழம்] அப்பளக்கட்டை பிரித்து ஒவ்வொரு அப்பளமாக எடுப்பதுபோல புதிய ரூபாய்க் கட்டிலிருந்து ரூபாய்த்தாள்களை எடுத்தாள்[குருபூசை]
கிராஜநாராயணனின் படைப்புகளின் பார்வையில் மார்க்ஸியக் கருத்தியலின் பாதிப்பு குறிப்பிடத்தக்கது. கதவு, தோழன் ரங்கசாமி, அவத்தொழிலாளர் வேட்டி போல பல கதைகளில் மார்க்ஸிய சமூகப்பார்வை நேரடியாகவே பிரச்சாரக்குரலுடன் வெளிப்படுகிறது. ‘வேலை வேலை வேலையே வாழ்க்கை ‘ போன்ற கதைகளில் அது உள்ளார்ந்த கண்ணோட்டமாக உள்ளது. பெரும்பாலான கதைகளில் மார்க்ஸிய மனிதாபிமானக் குரலே கி.ராஜநாராயணனிடம் ஓங்கி ஒலிக்கிறது எனலாம். கனிவு, கன்னிமை போன்ற அக உலகம் சார்ந்த கதைகளில் கூட அக்குரலை உள்ளே நாம் அடையாளம் காணமுடியும். கோபல்லகிராமம் உருவாகி வரும் சித்திரத்தை அளிப்பதில் மார்க்ஸிய நோக்கு செல்வாக்கு செலுத்துகிறது. மனித உழைப்பின் சிருஷ்டிகரத்தை மார்க்ஸிய எழுத்துக்கள் எப்போதுமே முன்னிறுத்தியுள்ளன. தகழி சிவசங்கரப்பிள்ளை , யஷ்பால் , நிரஞ்சன போன்றவர்களின் படைப்புகளில் நாம் இதன் அழகிய சித்த்திரங்களக் காணலாம். ஆனாலும் கோபல்லகிராமம், விஷகன்னி [ எஸ் கெ பொற்றெகாட்/ மலையாளம் ] ஆகிய படைப்புகளில்தான் உழைப்பின் சிருஷ்டிகரம் கவித்துவமாக பதிவாகியுள்ளது.
நமது முற்போக்கு விமரிசகர்கள் பொதுவாக கட்சி அட்டைக்கு கொடுக்கும் அங்கீகாரத்தை அழகியலுக்கு கொடுத்தது இல்லை . நம் முற்போக்கு அழகியலின் முன்னோடி புதுமைப்பித்தன் என்றால் அதன் அடிப்படைகளை வடிவமைத்தவர்கள் சுந்தர ராமசாமியும் ஜெயகாந்தனும் ஜி நாகராஜனும் என்றால் அதன் அடுத்தகட்ட நகர்வை நிகழ்த்தியவர் கி.ராஜநாராயணன். நமது முற்போக்கு இலக்கியத்தின் அடுத்த கட்டத்தவர்களான பொன்னீலன், பூமணி , சு சமுத்திரம், மேலாண்மைபொன்னுச்சாமி முதல் இன்றைய முக்கிய முற்போக்கு அழகியல்வாதிகளான சோ.தருமன், தங்கர் பச்சான் ,இமையம், இலட்சுமணப்பெருமாள், கண்மணி குணசேகரன் வரையிலானவர்களிடம் கி.ராஜநாராயணனின் அழுத்தமான பாதிப்பு உண்டு. கதையை நவீன யதர்த்தவாதத்தின் சாத்தியங்கள் எதையும் நழுவவிடாமல் நாட்டார் மரபின் வாய்மொழிக்கூற்றுமுறைக்கு அருகே கொண்டு செல்ல முயல்தல் என இதை மதிப்பிடலாம்.
ஆயினும் கி.ராஜநாராயணனின் தனித்தன்மையை வடிவமைப்பது ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல அவரது இனக்குழுவேர்தான். அதை தனியாகவே காணவேண்டும்.
இனக்குழு அழகியலின் முதல்வடிவம்
இனக்குழு என்றபெயரை அழகியல் விவாதத்தில் பயன்படுத்தி வழிகாட்டியவர் பிரேம். சாதி என்ற பேரை சாதாரணமாக பயன்படுத்தலாம்தான், இரு தடைகள். ஒன்று அது அதிகமும் எதிர்மறையான பொருளையே இங்கு அளிக்கிறது. கி.ராஜநாராயணன் போல அடிப்படையில் முற்போக்குத்தன்மை கொண்ட ஒரு படைப்பாளியைப்பற்றி பேசும்போது அச்சொல் உசிதமற்றதாக மாறிவிடலாம். இரண்டாவதாக நம் சூழலில் சாதி என்பது உண்மையில் உள்சாதிகளாக பிரிந்து சென்ற படியே இருக்கும் ஒன்று. ஒரு நபரை ஒரு குறிப்பிட்ட சாதியினர் என்று இங்கே தோராயமாகவே அடையாளப்படுத்தமுடியும். பல சாதிகள் ஒரு பொது அடையாளத்தின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக தொகுத்துப் பார்க்கப்படுவது இங்கே இயல்பாகவே உள்ளது.
மூன்றாவதாக இலக்கியக்கலைச்சொல் விரிவாக்கத்துக்கு சாத்தியம் கொண்டதாக இருக்கவேண்டும். இனக்குழு அடையாளம் என்றால் என்ன ? அதன் இயல்புகளைகீழ்க்கண்டவாறு வகுக்கலாம் அ] அது பிறப்பு அடிப்படையில் ஒருவன் மீது உருவாகக் கூடியது ஆ] ஒரு குறிப்பிட்ட மக்கள் சமூகம் ரத்த உறவின் அடிபடையில் சேர்ந்து நூற்றாண்டுகளாக வாழும்போது உருவாகும் வாழ்க்கைமுறையை தன் தனியியல்பாக கொண்டது இ] உட்பிரிவுகள் இருப்பினும் உட்பிரிவுகள் கொண்டுள்ள தனித்தன்மையை விட பொதுத்தன்மை அதிக வலுவாக இருக்கக் கூடியது.
தமிழிலக்கியத்தில் அதற்கு முன் செயல்பட்ட முற்போக்கு எழுத்தாளர்களில் எவருமே தங்கள் இனக்குழு அடையாளத்தை படைப்புகளில் வெளிப்படையாக வைக்கவில்லை. ஜெயகாந்தன் எந்த சாதி என்று பெரும்பாலான அவர்து வாசகர்களுக்கு தெரியாது. சுந்தர ராமசாமிக்கும் ஜி நாகராஜனுக்கும் அவர்கள் சாதியடையாளம் பிறரால் ஓயாது நினைவூட்டப்படுவதன் வழியாகவே தங்கி நிற்கிறது.நேர்மாறாக கி.ராஜநாராயணன் தன் தனித்த சாதி அடையாளத்துடன் தான் எழுத்துக்கு வந்தார் . அவரது முதல்கதையான மாயமான்[1958. சாந்தி இதழ்] அவ்வடையாளத்தை துல்லியமாக பதிவு செய்கிறது. பிற்காலக் கதைகளில் மிக விரிவாக பதிவான தெலுங்கு நாயக்கர் சாதியின் வாழ்க்கையை இக்கதையில் காண்கிறோம்
‘அப்போதுதான் நாயக்கர் அவர்கள் எண்ணை ஸ்நானம் செய்துவிட்டு ,வெள்ளைவேட்டியை கட்டிக்கொண்டால் எண்ணைச் சிக்கு ஆகும் என்று ஒரு பழையகண்டாங்கி சேலையை வேஷ்டிக்குப் பதிலாக உடுத்திக் கொண்டு அந்த சேலையின் மறுகோடியையே தலையில் கட்டிக் கொண்டைபோல சுற்றிவிட்டு நெற்றிக்கு இட்டுக் கொள்ள நாமம் குழைத்துக் கொண்டிருந்தார் ‘ [மாயமான்] இந்தக் கதையில்கி.ராஜநாராயணனின் பிற அழகியலடிப்படைகளான ரசனை,முற்போக்கு அணுகுமுறை ஆகிய இரண்டுமே வலுவாக இடம் பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டுப்புற வாய்மொழிக் கதைசொல்லிகளின் வம்சத்தை சேர்ந்தவர்தான் கி.ராஜநாராயணன். அவரது மொழியும் கூறுமுறையும் அந்த அழகியல்புகளை கொண்டிருக்கின்றன. அதை மீறிச்சென்று அவரை நவீனக் கதைசொல்லியாக ஆக்கும் அம்சங்கள் பலவும் அவரிடம் உண்டு. அவற்றை பிறகு காணலாம். நாட்டார் கதைசொல்லிகள் ஒரு சமூகத்தின் வம்சகதைப்பாடகர்களைப்போன்றவர்கள். எல்லா பழங்குடி சமூகங்களிலும் இவர்கள் இன்றியமையாதவர்கள். அவர்களே அச்சமூகத்தின் வரலாற்றை தொடர்ச்சியாக்குபவர்கள் என்றால் அது மிகையல்ல. அவர்கள் வழியாகவே அச்சமூகத்தின் மூதாதையர் வரிசை நினைவில் நிறுத்தப்படுகிறது. அவர்கள் வழியாகவே அச்சமூகத்தின் விழுமியங்கள் அடுத்த தலைமுறைக்கு கைமாறப்படுகின்றன. வாழ்க்கைமுறையின் அடிப்படைக்கூறுகள் தக்கவைத்துக் கொள்ளப்படுகின்றன.[புன்னகைக்கும் கதைசொல்லி :அ.முத்துலிங்கத்தின் படைப்புலகம் என்ற கட்டுரையில் இதை விரிவாகவே விவாதித்துள்ளேன்] அந்த கதைசொல்லியிலிருந்து நவீன இலக்கியவாதியாக உருவெடுத்தவர் கி.ராஜநாராயணன்.
தமிழ் சூழலில் தன் வேர்களுடன் நேர்மையான உறவுள்ள எந்த படைப்பாளிக்கும் அவனது இனக்குழுத்தன்மையின் தனித்துவம் இருக்கும் என்றே நான் எண்ணுகிறேன். அந்த இனக்குழு அடையாளத்தை மறைக்கவோ, இல்லை என்று பாவனை செய்ய்வது செய்வது நேர்மையான இலக்கியப்படைப்பாளியின் செயலல்ல.தன் வேர்களுடன் முற்றிலும் தொடர்பற்ற படைப்பாளி தனக்கென கலாச்சார சுயத்துவம் இல்லாதவனாகவே இருப்பான். மோதல்களற்றவனாகவும் தேடல்கள் அற்றவனாகவும் அதனாலேயே வடிவசோதனை போன்றவற்றில் மிதமிஞ்சிய நாட்டம் கொண்டவனாகவும் இருப்பான்.
வேர்கள் எனும்போது மொழி, நிலப்பகுதி, தேசியம், மதம் , மரபிலக்கியமும் கலைகளும் என பல கூறுகள் அதில் உள்ளன. ஆனால் நம் சூழலில் முதலிடம் பெறுவது இனக்குழு அம்சமே. ஏனெனில் நாம் பிறந்து விழுவது அதில்தான். நமது மனம் அதிலிருந்தே உருவாகி வருகிறது. நாம் கல்வி மூலம் வாசிப்பு மூலம் அரசியல்பிரக்ஞை மூலம் அதிலிருந்து எவ்வளவுதான் விலகி வந்தாலும் நம் ஆழ்மனம் அதிலிருந்தே உருவாகியுள்ளது . இலக்கியப்படைப்பை பொறுத்தவரை ஒருவனின் பிரக்ஞைக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை, அது ஆழ்மனம் மொழியை சந்திக்கும்பொருட்டு உருவாக்கப்பட்ட கலை.
மரபான இனக்குழுக் கதைசொல்லிகள் தங்கள் இனக்குழு உருவாக்கிய கருத்தியல் எல்லையை தங்கள்போதம் மூலம் மாற்றுவதில்லை, நிகழும் மாற்றங்கள் பெரும்பாலும் தன்னிச்சையானவை. வாழ்க்கையின் இன்றியமையாத அலைகள்மூலம் அச்சமூகம் அடைந்த மாற்றங்களை அக்கதைசொல்லிகள் பிரதிபலிக்கிறார்கள். அதாவது இனக்குழுக்கதைசொல்லியின் பிரக்ஞை கவன் இனக்குழுவை சரியாக பிரதிபலிக்குமளவுக்கு அதனுடன் சமானமாக ஓடுகிறது. நவீனப்படைப்பாளியின் பிரக்ஞை அச்சமூகத்துக்கு முன்னால்தான் ஓடிக் கொண்டிருக்கிறது.
ஆக இனக்குழுவேர் கொண்ட நவீனப்படைப்பாளியை அவனது இனக்குழுப் பிரக்ஞைக்கும் நவீன காலகட்டத்திற்குரிய கருத்தியல்களுக்கும் நடுவேயுள்ளவனாக நாம் ஊகிக்கலாம். அவன் எப்போதுமே ஒரு பயணத்தில் ஒரு போராட்டத்தில் இருகிறான் .சர்வ சாதாரணமாக அவனால் புதுமைகளை ஏற்றுக் கொள்ள முடியாது, பழைமையில் ஊறிக்கிடப்பதும் சாத்தியமில்லை. இந்தப்போராட்டமே அவனது கலையின் முக்கியமான முரணியக்கமாகும். இதை அவனது பிரக்ஞைக்கும் நனவிலிக்கும் இடையேயான போராட்டம் என்று சொல்லலாம். அவன் முன்னிலைப்படுத்தும் சமூகத்துக்கும் அவனுக்கும் இடையேயான போராட்டமாக உருவகிக்கலாம். அவனது கலையின் தன்னிச்சையான கூறுகளுக்கும் அவனது வடிவ உணர்வுக்கும் இடையேயான மோதலாகவும் காணலாம்.
இத்தகைய இயல்பான முரணியக்கம் இல்லாத படைப்பாளிகள் இல்லை. இன்று மேலைநாடுகளில் பெரும் படைப்பாளிகளுக்குள் உள்ள இந்த இனக்குழுத்தன்மையை தொண்டி எடுத்து ஒற்றைப்படையாக வெட்டி முன்வைத்து அவர்களை முன்முடிவுகளும் மனக்குறுகல்களும் கொண்டவர்களாக சித்தரித்துக் காட்டும் போக்கு ஒன்று உள்ளது. ஷேக்ஸ்பியர் முதல் டி எஸ் எலியட் வரை அதற்குத் தப்பவில்லை. ஆனால் அதற்கு பெரிய இலக்கிய முக்கியத்துவம் அங்கு உருவாகவில்லை என்பதே என் எண்ணம். நம் சூழலில் இலக்கியப் படைப்பாளிகளுக்கும் தெருமுனைக் கூட்டங்களில் கோஷமிடுபவர்களுக்கும் இடையே வேறுபாடு தெரியாதவர்களின் ஓயாத ‘பிளாக் மெயிலுக்கு ‘ ஆளாகியபடித்தான் தமிழ் எழுத்தாளன் செயல்பட வேண்டியுள்ளது . இலக்கிய ஆக்கத்தின் சிக்கலான முரணியக்கநிலைகளை சற்றும் அறியாத அரசியல்வாதிகள் இலக்கியவிமரிசனம் என்றபேரில் நிகழ்த்தும் முத்திரைகுத்தல்கள் இலக்கிய ஆக்கத்தின் அடிப்படைகளுக்கே ஆபத்தாக மாறிவிட்டிருக்கின்றன. சென்றகாலங்களில் மதவாதிகளும் ஒழுக்கவாதிகளும் உருவாக்கிய கெடுபிடிகளுக்கு சற்றும் குறைந்ததல்ல இது. இலக்கிய ஆக்கத்துக்கு முற்போக்கு அல்லது மனிதாபிமானம் அல்லது ஒழுக்கம் அல்லது அழகு கூட ஒரு நிபந்தனையாக ஆகமுடியாது. படைப்பு என்பது இலக்கியவாதியின் ஆழ்மனம் . ஆகவே அது அச்சமூகத்தின் பொதுஆழ்மனமும் கூட. தீவிரமான இலக்கியப்படைப்பாளி இக்கூச்சல்களை முற்றிலும் உதாசீனம் செய்து தன் அந்தரங்கத்தை மொழியால் அளப்பதில் மட்டுமே குறியாக இருப்பான்.
ஒரு படைப்பாளியின் இனக்குழுத்தன்மையை அவன் படைப்புகளைவைத்து மதிப்பிடுவதே இயல்பானது .அவன் படைப்புக்ளில் வெளிப்படும் இனக்குழுத் தன்னிலை என்ன என்பதற்கு அப்படைப்பு சில சமயம் நேரடியான பதிலை அளிக்கலாம், சிலசமயம் உள்ளடங்கிய பதிலை. புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன் , லா.ச. ராமாமிருதம் ஆகியோரின் படைப்புகளின் அவ்வடையாளம் தெளிவாக உள்ளது. ப.சிங்காரத்தின் படைப்பில் படைப்பின் உள்வலிமையாக ஆனால் பூடகமாக உள்ளது. புதுமைப்பித்தன் தன்னை எப்படி அடையாளப்படுத்திக் கொள்கிறார் ? அவரது அடையாளங்களை குறைந்தபட்ச அலகின் அடிப்படையில் வகுக்கலாம். வேளாளர், சைவர், திருநெல்வேலிக்காரர், தமிழர் , இந்து – என. வேளாள அடையாளம் அவரது படைப்பின் சூழல் சித்தரிப்பு மற்றும் கதாபாத்திரங்களுக்கு தெளிவாக இருப்பதனால் அதை நாம் இனம் கண்டுகொள்ள முடிகிறது. அந்த வேளாளசைவ அம்சம் இல்லையேல் புதுமைப்பித்தனின் படைப்புகள் எந்த அளவுக்கு வெளிறி நிறமிழந்திருக்கும் என்று யோசிக்கலாம். அவரது கதாபாத்திரங்கள் வெற்று முகங்கள் ஆகியிருக்கும். மொழி தட்டையானதாக ஆகியிருக்கும். அதைவிட முக்கியமாக அவரது படைப்புகளின் முக்கியமான படிமவெளி இல்லாமலாகியிருக்கும். கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும், கபாடபுரம், கயிற்றரவு, சிற்பியின் நரகம் போன்ற சாதனைப்படைப்புகள் உருவாகியிருக்காது.
ஆனால் இந்த இனக்குழு அடையளத்தை ‘சார்ந்து ‘ செயல்பட்டவரல்ல புதுமைப்பித்தன். அதிலிருந்து மேலைநவீனத்துவ அழகியல் மற்றும் பொருள்முதல்வாத தத்துவநிலைப்பாடு ஆகியவற்றை நோக்கி நகரும் துடிப்பே அவரில் இருந்தது. தென்னாடுடைய சிவன் அவரிடமிருந்து விடைபெறவில்லை, அவரது புனைவுப்பரப்பில் தோன்றி மேலைநாத்திகக் குரலை பிரதிபலிக்கிறார்.புதுமைப்பித்தனின் இந்த போராட்டமே அவரது படைப்பியக்கத்தின் செயல்வலிமைக்கு காரணம். சிற்பியின் நரகம் பேசும் கலைச்சிக்கல் உண்மையில் புதுமைப்பித்தனின் குரலே. தன் இனக்குழு அடையாளத்துக்கு உள்ளே வாழக்கூடிய ஒருவர் ஒருபோதும் ‘ நாசக்கார கும்பல் ‘ , ‘ துன்பக்கேணி ‘ போன்ற கதைகளை உருவாக்க முடியாது. இலக்கியப்படைப்பாளி இனக்குழுத்தன்மையால் உருவாக்கப்பட்டவன், அதிலிருந்து மீறிச்செல்லும் தேடல் கொண்டவன்.
கி.ராஜநாராயணன் துவங்குவது அவரது இனக்குழு அடையாள்த்தில் இருந்தே. தெலுங்கு நாயக்கர்களின் சமூக, வரலாற்று, அன்றாட வாழ்க்கைப் பின்புலம் அவரது ஆக்கங்களில் தீவிரமாக வெளிப்படுகிறது. அவரது கதைக்கருக்கள் பல அச்சமூகத்தின் தொன்மங்களில் இருந்து உருவானவை. ஆனால் தன் நாற்பதுவயதுக்குமேல் மார்க்ஸிய அரசியலில் ஆர்வம் கொண்டபிறகுதான் எழுத ஆரம்பித்தார் என்ற செய்தி நம் முன் உள்ளது. அதாவது அதுவரை இனக்குழு மனநிலை அவரில் நேரியக்கமாகவே இருந்தது . மார்க்ஸிய அரசியல் கருத்துக்களும் சமூக ஆய்வுக் கோட்பாடுகளுமே எதிரியக்கமாக அமைந்தன. இவை இரண்டும் உருவாக்கும் முரணியக்கமே அவரது இலக்கியம். அவரது முதல்கதையான ‘ மாயமான் ‘ இவ்விரு இழைகளும் கலந்து உருவானது . அதன் தலைப்பையே நாம் ஒரு குறியீட்டு ஆய்வுக்காக பயன்படுத்தலாம். சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவில் முதலாளித்துவ அமைப்பு குறித்தும் அதன் இலட்சியவாதங்கள் குறித்தும் உருவாகி வந்த ஆழமான அவநம்பிக்கையை இக்கதை சொல்கிறது. ‘சோஷலிச ‘ அரசாங்கம் அளிக்கும் உதவிகள் நடைமுறையில் மோசடிகளாக ஆவதைப்பற்றிய கதை இது. அதற்கு அவரது ‘வைணவ ‘ கரிசல் மண்ணில் வேரூன்றிய ராமாயணத்திலிருந்து படிமத்தை எடுத்துக் கொள்கிறார்.
தன் கதைகள் முழுக்க கி.ராஜநாராயணன் மார்க்ஸிய அழகியலை ‘கரிசல்படுத்த ‘ முயன்றார் . மார்க்ஸிய அழகியலின் முக்கியமான குறை அது கோட்பாட்டுக்கு உதாரணமாகத்தான் வாழ்கையைக் காண்கிறது என்பதே. இந்தியச்சூழலில் ‘சப்பையான ‘ மார்க்ஸியர்களில் கோட்பாட்டிலிருந்து துவங்கும் தன்மையைக் காண்கிறோம். உதாரணம் டி.செல்வராஜ், மேலாண்மை பொன்னுச்சாமி போன்றவர்கள். சிறந்த எழுத்தாளர்களில் வாழ்க்கையிலிருந்து துவங்கி கோட்பாட்டை எட்ட முயலும் தன்மையைக் காணலாம். உதாரணம் தகழி சிவசங்கரப் பிள்ளை. கி.ராஜநாராயணன் இரண்டாம் வகைக்கு இந்திய முற்போக்கு இலக்கிய வரலாற்றிலேயே முக்கியமான முன்னுதாரணம். இப்படி வாழ்விலிருந்து தொடங்கி கோட்பாட்டுக்கு வரும்போது பொதுவாக ‘கச்சிதமாக ‘ கோட்பாட்டுக்கு வந்துவிட முடிவது இல்லை . குறி கொஞ்சம் தவறிவிடுகிறது . அப்போது தி.க.சிவசங்கரனைப்போனற ‘அட்டை பரிசோதகர்கள் ‘ இதனால் குழம்பிப்போய் இவர்களை வாசலிலேயே நிற்கச்செய்துவிடுகிறார்கள். தகழி இப்படி ‘விசாரணைக்கு ‘ உட்படுத்தப்பட்டதுண்டு, ஆனால் அங்கே ஜோசப் முண்டசேரி போல அழகியல் அறிந்த மார்க்ஸிய விமரிச்கர்கள் இருந்தனர். இங்கே தி.க.சிக்கள்.
இப்படி கி.ராஜநாராயணன் மார்க்ஸிய அழகியலுடன் முரண்படும் அம்சம் இனக்குழுத்தன்மையே என சொல்லவேண்டியதில்லை. மார்க்ஸியக் கோட்பாடு ‘உலகு தழுவிய ‘ மானுடம் பற்றிய கனவை முன்வைப்பது. மனிதனை அவனது ஒட்டுமொத்தம் சார்ந்து பேசமுற்படுவது, அந்த ஒட்டுமொத்தத்தின் அடிப்படையாக அவனை ‘ உற்பத்தி அலகு ‘ மட்டுமாக சுருக்கும் தன்மை கொண்டது. அவனது கலாச்சாரத்தின் ஒட்டுமொத்தத்தை பொருளாதார அமைப்பின் மேற்கட்டுமானம் மட்டுமாக பார்ப்பது. மார்க்ஸியம் மனிதவரலாறு கண்ட மாபெரும் குறுக்கல்வாதம், மகத்தான குறுக்கல்வாதமும் கூட ! மனிதனின் கலாச்சாரத்தை அவனது உள்ளுணர்வுகளின் ஒட்டுமொத்தமாக, அவனது மனதை அதன் ஒரு துளியாகப் பார்க்கும் பார்வையையே இலக்கிய அழகியல் முன்வைக்கிறது. மார்க்ஸிய அழகியல் என்பது இவ்விரு நோக்குகளுக்கும் இடையேயான முரணியக்கம் அல்லது சமரசத்தின் விளைவு.கி.ராஜநாராயணனின் கோணம் முதலில் அவனை அவன் சார்ந்துள்ள இனக்குழு கலாச்சாரத்தின் ஓர் அலகாக பார்க்கிறது. அங்கிருந்து தொடங்கி உற்பத்தியை அடித்தளமாக கொண்ட பொருளியல் /சமூக/ அரசியல் அமைப்பின் அடிப்படை அலகாகப் பார்க்க முயல்கிறது.
இந்த விவாதத்தில் இனக்குழுப்பார்வை மிக வெளிப்படையாக, கொச்சையாக என்றும் சொல்லலாம், வெளிப்படும் இடத்திலிருந்து நாம் தொடங்குவது உசிதமானது . ‘ஒரு காதல் கதை ‘ கி.ராஜநாராயணன் கதைகளில் அதிகமும் பேசப்படாத ஒன்று. வேறு சாதியைச்சேர்ந்த கிறித்தவப்பெண் ராணிமேரியை காதலித்து மணந்துகொண்ட ராகவனின் கதை இது. அவர்களுடைய காதல் குறையவில்லை, ஆனால் உணவு உடை பழக்கவழக்கம் எதிலுமே அவர்களால் ஒத்துப்போக முடியவில்லை. அவர்கள் அழுதபடியே பிரிகிறார்கள். இதற்கு மாற்றாக ராகவனின் நண்பனான கதைசொல்லி தன் சாதியைசேர்ந்த தனக்கு இளமையிலேயே அறிமுகமான லட்சுமியை மணம்ச் செய்துகொண்டு மிக நிறைவாக வாழ்கிறான். இவ்விரு எதிரீடுகளும் கதையில் மிக அழுத்தமாக சொல்லியிருக்கிறார். ராகவன் மேரியை பிரிந்து மீண்டும் தாய்மதம் திரும்பி தன் சாதி /மதத்துப் பெண்ணை மணந்துகொள்கிறான். இச்செய்தியைக்கேட்டதும் லட்சுமி ‘எனக்குத்தெரியும் இப்படித்தான் ஆகும் என ‘ என்கிறாள்.
இக்கதை ஒரு நிதரிசனப்பார்வையின் விளைவு என்பதில் ஐயமில்லை . நானறிந்த எத்தனையோ உதாரணங்களை இதற்கு ஆதரவாக அடுக்கலாம். ஆனால் கி.ராஜநாராயணன் இந்த நிதரிசனத்திலிருந்தே கதையை உருவாக்கி விட்டிருக்கிறார். காதல் மணம் ஏற்றதல்ல ,இனக்குழு உள்மணமே சிறப்பானது என்று இக்கதை சொல்கிறது. ஏன் ? ஒரு மனிதன் தன் இனக்குழுவின் அடிப்படை உறுப்பினன் என்பதனால். அவனது இருப்பின் முக்கிய அம்சங்களையெல்லாமே அது தீர்மானிக்கிறது என்பதனால் என்கிறது கதை. ஆனால் இது உண்மையா ? கரணிய ஆய்வு இதை ஏற்குமா ? என் பார்வையை சொல்கிறேன். திருமணம் என்பது ஒரு மரபுசார் அமைப்பு. சாதி இன்னொரு மரபு சார் அமைப்பு. ஆகவே மரபான மணமுறை அதில் இயல்பாக அதிகப்பொருத்தமாக இருக்கிறது. அந்த முறையில் மணம் முடிக்கும் இருவரை மரபின் எல்லா அம்சங்களும் சேர்த்து பிடித்துள்ளன. ஒர
சனிக்கிழமை கி.ராவுக்கு விருதளிப்பு விழா
மூன்றுமுறை கி.ரா. ஞானபீடத்திற்காகப் பரிசீலிக்கப்பட்டார் என நான் அறிவேன். ஒவ்வொருமுறையும் தமிழ்பிரதிநிதிகளால் அது தவிர்க்கப்பட்டது. அவர்கள் அதிகாரம் மிக்கவர்களுக்கு அதை அளிக்க விரும்பினார்கள். கி.ராஜநாராயணனும் அசோகமித்திரனும் மலையாளிகள் என்றால் இதற்குள் ஞானபீடம் அவர்களின் காலடியில் அமர்ந்திருக்கும்.
கி.ரா தமிழிலக்கியத்தின் தலைமகன்களில் ஒருவர். இலக்கியத்தின் சாராம்சமாக அமையும் தரிசனங்கள் பலவகை. மரபின்மீதான விமர்சன நோக்கு – புதுமைப்பித்தன் சுந்தர ராமசாமிபோல. சமூகவிடுதலை விழைவு – ஜெயகாந்தன் போல. நவீனத்துவ வாழ்க்கைப்பார்வை – அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதிபோல. கி.ரா தமிழுக்களித்தது முற்றிலும் புதிய ஒன்று. கிராமியவிவேகம். நாட்டார் மரபிலிருந்து பெறப்பட்ட ஒரு பண்பாட்டுக்கூறு அது. அதுவே தமிழுக்கு அவரது கொடை. இன்று தமிழில் அவ்வகையில் அவரது மிகச்சிறந்த வாரிசு என சு.வேணுகோபாலைச் சொல்வேன்
கி.ராவின் கதைச்சூழலான கிராமங்கள் இன்றில்லை. உறவும் உழைப்புமாக திகழ்ந்த கிராமங்கள் வணிகமயமாகிவிட்டன. அவரது கதாபாத்திரங்களை இன்று பார்க்கமுடியாது, அவர்களுக்கெல்லாம் வயதாகிவிட்டது அல்லது மண்மறைந்துவிட்டனர். தூங்காநாயக்கரையோ தாத்தையநாயக்கரையோ இனி அவரது கதைவெளியில்தான் சந்திக்கமுடியும். ஆனால் அக்கதைகள் அளிக்கும் அந்த நாட்டுப்புற விவேகம் என்றுமழியாதது.
இன்றைய வாசகனுக்கு அவரது கதைவெளி யதார்த்தம் அல்ல, ஒருவகை புனைவுப்பரப்பு மட்டுமே. அறிவியல்புனைகதைகளுக்கோ வரலாற்று, புராணப்புனைகதைகளுக்கோ நிகரானது அது. அக்கதைகள் இன்று ஆசிரியரின் நிதானமான உலகியல்பார்வையும், எல்லா தரப்பையும் நோக்கும் சமநிலையும், ஆண்டு அறிந்து கடந்த புன்னகையும் அளிக்கும் அகத்தெளிவால் ஒளிகொண்டவையாகத் தெரிகின்றன
கி.ரா இன்னமும்கூட கூர்ந்து வாசிக்கப்படாத நம் முன்னோடி. நம் அமைப்புகளால் புறக்கணிக்கப்பட்ட மேதை. ஆனால் நாம் அப்படித்தான், ‘சரிதான், தாத்தன் திண்ணையிலே இருக்கட்டுமே’ என்னும் அலட்சியநோக்கு நம்முடையது. கனடாவின் இயல் விருது அவருக்கு அளிக்கப்படுவது பெருமைக்குரிய தருணம். நாம் இயல் விருது அமைப்புக்குக் கடமைப்பட்டிருக்கிறோம்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
அங் மோ கியோ நூலகத்தில்…
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலமாயிருக்கிறீர்களா?
அங் மோ கியோ நூலகத்தில் நடந்த உரையாடல் பற்றிய சிறு பதிவு.
https://amaruvi.in/2016/08/24/an-evening-with-jeyamohan/

தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 37
[ 4 ]
அந்திவேளை வேள்வியும் சொல்லாடலும் முடிந்தபின் முன்னிரவில் சாந்தீபனி குருநிலையின் முதன்மை ஆசிரியரின் தனியறைக்குள் தருமன் அவர் முன் அமர்ந்திருந்தார். அவர்களுக்குள் நிகழ்ந்த உரையாடல் முறுகிச்சென்று முறிந்திருந்ததன் அமைதி அங்கே நிலவியது. “பிருகதர் எந்தையின் அணுக்கர். இனியவர். எளிய பற்றுக்களால் ஆனவர். அவருக்கு எந்தைமேல் உள்ள அன்பு இப்போது இளைய யாதவன் மீதான வஞ்சமாக மாறிவிட்டது” என்றார் சாந்தீபனி முனிவர். அவர் முகம் மெல்லிய சிரிப்பில் வளைந்தது. “அது எளியதென்பதனாலேயே கடினமானதும்கூட.”
“அரசே, எளியமானுடர் இனியோர் என்று அறிவுடையோர் இரங்கிச் சொல்வதை கேட்டிருப்பீர். அது கற்றவரின் ஆணவத்தால் சொல்லப்படுவதன்றி வேறில்லை. கல்வியே ஒருவனை தன்னைத் தான் காணச்செய்கிறது. தன்னை அறியாதவனின் உணர்வுகள் அனைத்தும் விலங்கியல்பு போல தன்பெருக்காக எழுபவை. அது அன்பென வெளிப்படுகையில் அதிலிருக்கும் கட்டின்மை நம்மை வியக்கச்செய்கிறது. எண்ணத்தெரிந்தவனின் தடைகளேதும் அதில் இருப்பதில்லை என்பதனால் அது இறைவடிவமென்றே நம்மால் எண்ணப்படுகிறது.”
“ஆனால் வெறுப்பும் சினமும் ஐயமுமாக அது மாறும்போது அந்தக் கட்டின்மையும் விளக்கமின்மையும் நம்மை அச்சுறுத்துகின்றன. நம் சொற்களும் நெறிகளுமெல்லாம் முழுமையாகவே தோற்று நின்றிருக்கும் இடம் அது” என்றார் சாந்தீபனி முனிவர். “கட்டற்ற பேரன்பு மட்டுமே அவ்வண்ணம் ஒருவனில் வெளிப்படும் என்றால் அவன் கல்லாத எளியோன் அல்ல, கடந்துசென்ற மெய்யறிவன். ஆனால் பேரன்புக்கும் பெருவஞ்சத்திற்கும் அணுவிடையே வேறுபாடு. பாலே திரிவதற்கு எளியது.”
“ஆம்” என்று தருமன் சொன்னார். “அதை நெறியவைகளில் பலமுறை பார்த்திருக்கிறேன். நெறிகளுக்கு அப்பாற்பட்ட பெருவஞ்சமும், ஆறாச் சினமும், விழிமூடிய தன்னலப்போக்கும் எளிய மக்களில்தான் பெரும்பாலும் வெளிப்படுகின்றன.” சாந்தீபனி முனிவர் “எந்தைக்கும் இளைய யாதவனுக்கும் இடையே நிகழ்ந்த பூசல் என்னவென்று என்னால் ஒருசொல் மாறாது சொல்லிவிடமுடியும். ஏனென்றால் அவர் நானே” என்றார். “நான் உஜ்ஜயினி சாந்தீபனி குருநிலைக்குத் திரும்பி வந்தபோது எந்தை அங்கில்லை. கதறியபடி ஓடிவந்த பிருகதர் அவர் அன்று காலையிலேயே கிளம்பிச்சென்றதை என் காலடியில் விழுந்து நெஞ்சிலறைந்தபடி சொன்னார். அக்கணமே அனைத்தையும் நான் தெளிவுறக்கண்டேன். பின்பு ஒவ்வொருவரிடமாக கேட்டு அறிந்துகொண்டேன். துவாரகையில் சென்று தங்கிய நாட்களில் இரு யாதவர்களிடமும் நிகழ்ந்தவை குறித்து பேசியிருக்கிறேன்.”
எந்தைக்கு மலைமகள் ஒருத்தியில் பிறந்தவன் நான். நீர் எளிதில் துளியாகிறது. உலோகம் மிகுவெப்பத்தில் உருகி அனலென்று சொட்டுகிறது. எந்தை துறவுபூணவே எண்ணியிருந்தார். ஐம்புலன்களையும் வெல்வது அவருக்கு எளிதாகவே இருந்தது. ஆனால் கனிவு என்னும் ஆறாவது புலனை வெல்ல அவரால் இயலவில்லை. காட்டில் நீராடச்செல்லும்போது ஒர் அன்னைநாய் தன் மைந்தனை நாவால் உடலெங்கும் நக்குவதை கண்டார். அன்னையின் கண்களிலிருந்த மயக்கம் அவரை மெய்விதிர்ப்பு கொள்ளச்செய்தது. எளிய நாய் ஒன்று தெய்வவடிவாக அங்கிருப்பதை கண்டார். அக்கணத்தில் அவர் ஒரு மைந்தனுக்காக விழைந்தார்.
அவ்விழைவே நான். அரிதில் பிறந்தவனாகிய என்னை தன் வடிவாகவே அவர் கண்டார். தன் மடியிலமர்த்தி வேதச்சொல் கற்பிப்பார். தானறிந்த அனைத்தையும் ஒரேநாளில் எனக்கு கற்பிக்க முயல்வார். என் இளமையின் சிறிய கலத்தை உணர்ந்ததும் சினந்து என்னை உலுக்குவார். உடனே கனிந்து தழுவி கண்ணீர்மல்குவார். எப்போதும் என்னைச் சூழ்ந்தே இருந்தது அவருடைய சித்தம். அதை நான் ஒரு மாறாத்துணை என என்னுடன் எப்போதுமே உணர்ந்துகொண்டிருந்தேன். மழைக்காலப் பேரருவியென என்மேல் கொட்டிக்கொண்டே இருந்தார்.
அவரிடமிருந்து தப்புவதற்காக இளமையிலேயே எங்காவது கிளம்பிச்செல்லத் தொடங்கினேன். ஆனால் ஓரிரு நாட்களிலேயே நான் அவருக்காக தவிக்கத் தொடங்குவேன். மீண்டு வந்தால் படுத்தபடுக்கையாக இருக்கும் அவரைத்தான் காணவேண்டியிருக்கும். ஒரு சொல் எழாமல் என்னைத் தழுவி கண்ணீர்விடுவார். அரசே, தாயுமான தந்தை இரண்டுக்கும் அப்பால் சென்று பலிகொள்ளும் தெய்வமாக ஆகிவிடுகிறார்.
பின்னர் என்னையே நான் நுணுகி ஆராயத்தொடங்கினேன். ஏன் அவரை விட்டுப்போக என்னால் இயலவில்லை? அது பேரன்பினால் என்றால் அவருடனிருக்கையில் நான் ஏன் விட்டுச்செல்லத் தவிக்கிறேன்? அவர் என்னை முற்றிலும் சூழ்ந்துகொண்டிருந்தார். என் காற்றும் வானும் பொருள்வயப் பேருலகும் அனைத்தும் அவரே என்பதுபோல. அவர் சொல்லாகவே இருந்தது என் சித்தம். நானே எதையேனும் எண்ணிக் கண்டடைந்து மகிழ்ந்த மறுகணமே அது அவரது சொற்களே என்று உணரும் தருணத்தின் சோர்வு ஒவ்வொன்றும் ஓர் இறப்பாக இருந்தது எனக்கு.
அப்படியென்றால் அது அன்பல்ல. ஏன் நான் மீண்டு வருகிறேன் என்றால் பிறிதொரு உலகில் வாழ எனக்குப் பழக்கமில்லை என்பதனால்தான். அந்த மெய்யுலகங்களில் நான் அயலவனாகத் தவிக்கிறேன் என்பதனால்தான். நான் என்னை மீட்டுக்கொள்ளாவிட்டால் வெறும் நிழலென எஞ்சுவேன். உயிர்வாழும் ஏட்டுச்சுவடி. மெய் பிதற்றும் கிளிப்பிள்ளை. நான் என்னை அவ்வாறு எண்ணவே நடுங்கினேன். நான் எனும் சொல்லாக எனக்குள் எழுந்த தெய்வம் விழிசீற ஆயிரம் கைகள் கொண்டு எழுந்தது அப்போது. பின்பு தெளிந்த நிலையிலும் அதுவே உறுதியாகப் பட்டது. எந்தைக்கு நல்மைந்தனாக நானிருப்பதென்பதேகூட அவரிலிருந்து பிரிந்து நான் என என்னை வளர்த்துக்கொள்வதே.
வேறு வழியே இல்லை, குருதி வழிய அறுத்துக்கொண்டுதான் ஆகவேண்டும். உடைந்து விழுந்த பிஞ்சிலிருந்தும் பால் வடியும். அது தாய்மரத்தின் பால்தான். ஆயினும் அப்பிஞ்சின் குருதியும் கூட. கிளம்பிச்சென்றாகவேண்டும், இன்றே, இல்லை நாளை. இனி பிந்தலாகாது, இனியில்லை பொழுது… இவ்வாறு நாட்களை செலுத்திக்கொண்டிருந்தேன். என் குழப்பங்களை அறியாது தந்தை மேலும் மேலும் கைகள் பெற்று என்னை தழுவிக்கொண்டிருந்தார். ஒரு கை எனக்கு ஊட்டியது. ஒரு கை என்னை நீராட்டியது. ஒரு கை எனக்கு கற்பித்தது. ஒரு கை இரவில் என்னை கால்தழுவி ஆற்றியது. ஆசிரியர், நண்பர், ஏவலர் அனைவரும் அவரே.
பொறுக்கமுடியாமல் ஒருநாள் கிளம்பிச்சென்றேன். அது இயல்பான உதிர்வே என கிளம்பியபின் கொண்ட விடுதலையால் உணர்ந்தேன். அவ்விடுதலை நாள் செல்லச்செல்ல வளர்வதிலிருந்து உறுதி செய்துகொண்டேன். சாந்தீபனி காட்டிலிருந்து தெற்கே உஜ்ஜயினி வந்தேன். அங்கிருந்து மேலும் சென்றேன். அங்கிருந்து கிளம்புவதற்கு முன் பிருகதரை அழைத்து நான் பிரபாச நீரில் ஆடிவிட்டு திரும்பிவருவதாகச் சொன்னேன். ஆனால் நான் சென்றது மேற்குமலைகளின் உச்சியில் சௌராஷ்டிர நாட்டுக்குள் அஷ்டசிரஸ் முடிமேல் இருக்கும் பிரபாசத் தீர்த்தத்துக்கு அல்ல. மாளவத்திற்கு வடக்கே இன்றைய துவாரகைக்கு தென்னெல்லையாக அமைந்த பிரபாசக் கடல்துறைக்கு. அனைவரும் அறிந்த இடம் யாதவர்களின் தூநீராட்டுத் தலமான பிரபாச தீர்த்தம்தான். அப்படித்தான் பிருகதர் எடுத்துக்கொண்டார்.
எந்தை என்னைப் பின் தொடர்ந்து வந்து நாளும் என்னைப் பற்றிய செய்திகளை அவருக்கு அனுப்ப தன் மாணவர்களையோ ஒற்றர்களையோ அமைப்பார் என அறிந்திருந்தேன். ஓரிரு நாட்களுக்குள்ளாகவே என்னை திரும்பிச்செல்லும்படி கோரி மன்றாட்டு வந்துவிடும். தந்தையிடம் பொய் சொல்லக்கூடாது என்பதனால் பிராபச ஜலம் என்று பிருகதரிடம் சொன்னேன். அவர் தான் எண்ணியதையே கேட்கும் எளிய உள்ளத்தவர் என அறிந்திருந்தேன். அவ்வண்ணமே நிகழ்ந்தது. எந்தை பிரபாச தீர்த்தம் வரை ஒற்றர்களை அனுப்பி நான் அங்கே சென்றடையவில்லை என்று கண்டடைந்தார்.
பிரபாசத் துறை குறித்து நான் வியாசரின் காவியத்தில்தான் படித்தேன். அது கடல் நிலத்திற்குள் பீரிட்டு வந்து உருவாக்கிக்கொண்ட ஒரு பெருஞ்சுழி. அதன் விளிம்பில் இறங்கினால் நீர் நம்மை அள்ளி நெடுந்தொலைவுக்கு சுழற்றிக் கொண்டுசென்று மறு எல்லையிலுள்ள சிறிய குகைவாயிலுக்கு முன் விட்டுவிடும். அக்குகை அதனுள் உள்ள இயற்கையான அருமணிகளால் ஒளிகொண்டது. அதனுள் அமர்ந்தால் ஊழ்கம் எளிதில் வயப்படும் என்றது வியாசமாலிகை. ஆனால் அங்கு செல்லும் தகுதி நமக்கு உண்டா என்பதை கடலே முடிவு செய்யும். தகுதியற்றவர்களை அது தன் சுழிமையத்திற்கு கொண்டுசென்று விழுங்கிவிடும்.
“அங்கு சென்று என்னை நானே நோக்கி அறியவேண்டுமென விழைந்தேன். ஓராண்டில் திரும்பி வரலாமென்று எண்ணித்தான் சென்றேன். ஆனால் அங்கே நான் எண்ணாதவை அனைத்தும் நிகழ்ந்தன” என்று சாந்தீபனி முனிவர் தொடர்ந்தார். “பிரபாசத் துறைக்கு நெடுங்காலமாக எவரும் செல்வதில்லை என்று அவந்திக்குச் சென்ற பின்னரே அறிந்தேன். மாளவத்தின் ஆட்சிக்கு அப்பாற்பட்ட நிலம் அது. அங்கு முனிவர்கள் செல்வதற்கான பாதை ஒன்று முன்பிருந்தது. ஆனால் சிலநூறாண்டுகளாக அப்பகுதியில் வாழ்ந்த ஐந்து தொல்குடிகள் ஒற்றைக் குமுகமாக இணைந்து அரசு ஒன்றை அமைத்துக்கொண்டிருந்தனர். அதற்கு பஞ்சஜனம் என்று பெயர். மாளவமும் பிற அரசுகளும் அதை அஞ்சின.”
ஐந்து வெவ்வேறு குடிகள் கலந்துருவானது பஞ்சஜனம். அந்நிலம் முற்றிலும் வேறுபட்ட ஒன்று. அடர்காடு சூழ்ந்த மலைப்பிரிவு ஒன்று நீண்டு கடலுக்குள் இறங்கி நின்றிருக்கும். அது சங்கு வடிவமானது. அதை இன்று சங்ககிரி என்றே சொல்கிறார்கள். மலைத்தெய்வமான தாரையை வழிபடும் தாராபுத்ரர்களும், பறக்கும் நாகத்தை வழிபடும் சிரோநாகர்களும், முகில்வடிவ யானையை வழிபடும் கஜமேகர்களும் அந்த மலைக்காட்டில் வேட்டையாடி வாழ்ந்தனர். கடலாமையை வழிபடும் மகாஜலர்களும் அலைத்தெய்வத்தை வழிபடும் தரங்கர்களும் கடலோரமாக மீன்பிடித்து வாழ்ந்தனர். அவர்களுக்குள் பல்லாயிரமாண்டுகளாக ஓயாது போர் நிகழ்ந்துவந்தது.
சிலநூறாண்டுகளுக்கு முன்பு பெருங்கடல்கொந்தளிப்பு ஒன்று நிகழ்ந்தது. கடலலைகள் எழுந்து சங்ககிரியை முழுமையாகவே மூடின. கடலை அறிந்திருந்த தரங்கர்ளும் மகாஜலர்களும் நீருக்குமேல் படகுகளில் ஏறி தப்பினர். அலைகள் மலைவிலாவை ஓங்கி அறைந்து நுரை எழுப்பின. நீர் வடிந்து கடல் நிலைமீண்டபோது பாறையிடுக்குகளில் எல்லாம் சிப்பிகளும் சங்குகளும் சோழிகளும் நிறைந்திருப்பதை மலைமக்கள் கண்டனர். அவர்கள் அதை ஆர்வத்துடன் பொறுக்கி சேர்த்தனர். ஏனென்றால் கடல்குடிகளை அஞ்சி அவர்கள் கடலருகே செல்லும் வழக்கமே இருக்கவில்லை.
இரு பாறைகளுக்கு நடுவே கிடந்த பெரிய சங்கு ஒன்றை கஜமேகர்குலத்தைச்சேர்ந்த இளைஞன் ஒருவன் கண்டான். முதலில் அதை அவன் ஒரு வெண்பன்றிக்குட்டி என்றே எண்ணினான். பின்னர் அது பளிங்குப்பாறை என நினைத்தான். வழுக்குப் பாறைகளில் தொற்றி ஏறி அவன் மேலே சென்று அதை கையில் எடுத்தான். வெண்ணை உறைந்து கல்லானதுபோல குளிர்ந்து போயிருந்த அது ஒரு பெரிய சங்கு என தெரிந்தது. பிற சங்குகளிலிருந்து அது வேறுபட்டிருப்பதை அவன் கண்டான். அது வலம்புரியாக சுழன்றிருந்தது.
அதை அவன் எடுத்துக்கொண்டு சென்று துளையிட்டு ஊதினான். சிம்மம்போல அது ஒலியெழுப்பக் கேட்டு மலைச்சரிவில் வாழ்ந்த மதயானைகள்கூட மத்தகம் தாழ்த்தின. அதை கையிலேந்தியதனாலேயே அவன் குடியில் அவன் அனைவராலும் பணியப்பட்டான். அவனை அக்குடி தங்கள் அரசனாக்கியது. ஒருநாள் கஜமேகர்கள் தங்கள் படைக்கலங்களுடன் திரண்டு அவன் தலைமையில் மலையிறங்கி தரங்கர்களின் சிற்றூர்களுக்கு சென்றார்கள். அவர்கள் வருவதைக்கண்டு சினந்து தங்கள் மீனெறி வேல்களுடனும் தூண்டில்முட்களுடனும் தரங்கர்கள் எதிர்த்துவந்தனர். கஜமேகர்களின் தலைமுகப்பில் அவர்களின் தலைவன் மிகப்பெரிய வலம்புரிச் சங்குடன் வருவதைக் கண்டனர். அவன் அதை மும்முறை ஊதியதும் அவர்கள் படைக்கலங்களை விட்டுவிட்டு முழங்கால் ஊன்றி பணிந்தனர்.
அவன் அவர்களை வென்று அவர்களை தன் மக்கள் என அறிவித்தான். அவர்களின் குலத்தலைவி அமரும் பாறைப்பீடத்தில் அந்த சங்கை தன் தலையில் வைத்தபடி அரசன் என அமர்ந்தான். அவர்கள் அவனுக்கு மீனும் சிப்பியும் முத்துக்களும் அளித்து வணங்கினர். அவன் பெருஞ்சங்கத்தின் கதை அனைத்து குலங்களுக்கும் பரவியது. எந்த எதிர்ப்பும் இன்றி ஐந்து குலங்களும் அவனை தங்கள் அரசனாக ஏற்றுக்கொண்டன. அவன் தன் தலையில் அந்த வெண்சங்கை முடியெனச்சூடி அமர்ந்து ஆட்சி செய்தான். அவனை அவன்குடி சங்கன் என்று அழைத்தது. மாளவர்களும் பிறரும் அவனை சங்காசுரன் என்றனர்.
சங்கனின் வழிவந்த அரசர்கள் மாளவம், விதர்ப்பம், கூர்ஜரம் போன்ற பிற அரசுகளின் எல்லைகளைத் தாக்கி கருவூலங்களைக் கொள்ளையிடுவதை தங்கள் பொருள்வளர்க்கும் வழியாகக் கொண்டிருந்தனர். வணிகப்பாதைகளில் வண்டிகளை மறித்து சூறையாடினர். பயணிகளில் பெண்களையும் அரசகுடியினரையும் அந்தணரையும் பிணையாகப் பிடித்துக்கொண்டுசென்று சிறையிட்டு பெரும்பொருளுக்கு விலைபேசினர். செல்வம் சேரச்சேர அவர்கள் கோட்டையையும் அரண்மனையையும் கட்டிக்கொண்டனர். அவர்களின் அரசன் சங்குவடிவமான பொன்முடியை சூடிக்கொண்டான். அவர்களின் குலக்குறியான அந்த வலம்புரிச் சங்கு அரண்மனையின் மையத்தில் ஒரு பொற்பீடத்தில் அமைக்கப்பட்டிருந்தது. அதை பாஞ்சஜன்யம் என்றனர்.
சங்கனின் படைகள் முன்னரே ஒருமுறை துவாரகைக்கு வந்த யாதவப்பெண்களை கவர்ந்து கொண்டுசெல்ல முயன்றன. செய்தி அறிந்த கிருஷ்ணனும் பலராமனும் ஒருசிறு புரவிப் படையுடன் குறுக்குவழியாகச் சென்று அவர்களை மறித்து போரிட்டு தங்கள் பெண்களை மீட்டனர். சங்கனின் மைந்தன் ஒருவன் அப்போரில் கொல்லப்பட்டான். துவாரகை உருவாகி வந்தமை பஞ்சஜனர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தது. துவாரகைக்கு வரும் கலங்களை பஞ்சஜனர் தாக்கி கொள்ளையடித்தனர். அவர்களை சென்று தாக்கி வெல்லும் அளவுக்கு துவாரகைக்கு படைவல்லமையும் இருக்கவில்லை. எனவே ஒவ்வொருநாளுமென அங்கே கரையிலும் கடலிலும் போர்களும் பூசல்களும் நிகழ்ந்துகொண்டிருந்தன.
இவை எதையும் அறியாமல் நான் பிரபாசத் துறைக்கு சென்றேன். நான் எங்கு செல்கிறேன் என்பதை எவரிடமும் சொல்லவில்லை. மாளவத்தின் எல்லையைக் கடந்ததுமே என்னை எவரோ தொடர்வதுபோல உணர்ந்தேன். சற்றுநேரத்திலேயே என்னை வளைத்துக் கொண்டார்கள். என்னை அறைந்து வீழ்த்தி கைகளை பின்னால் கட்டி இழுத்துச்சென்றனர். அவ்விளமையில் அதையும் ஒரு காவிய நிகழ்வாகவே எண்ணிக்கொண்டேன். என்னை கொண்டுசென்று சங்கன் முன் நிறுத்தினர். முதற்சங்கரசரின் பன்னிரண்டவது கொடிவழியினன் அவன். என்னிடம் என் கொடிவழியையும் குருமுறைமையையும் கேட்டான்.
நான் வேண்டுமென்றே பொய் சொன்னேன். என் குருமுறை கௌதமநெறி என்றும் என் தந்தை பெயர் விபாசர் என்றும் சொன்னேன். ஏன் அப்படி சொன்னேன் என்று இன்றும் தெரியாது. அந்த இளமையையே சுட்டுவேன். ஏதோ ஒன்று நிகழவேண்டுமென எண்ணினேன். முனிவர்களை கொல்லமாட்டார்கள் என எண்ணியிருக்கலாம். அல்லது பிணைத்தொகைக்காக அவர்கள் என் தந்தையை அணுகக்கூடாது என்பதனாலாக இருக்கலாம். என் ஆணவம் நிமிர்வதற்கான ஒரு தருணமல்லவா அது?
அவர்கள் என்னைப்பற்றி தூதுக்களை அனுப்பினர். மாளவர் என்மேல் ஆர்வம் காட்டவில்லை. கௌதமர்கள் தங்களில் எவரும் காணாமலாகவில்லை என்று சொல்லிவிட்டனர். ஓராண்டுகாலம் என்னை அவர்கள் சிறை வைத்திருந்தனர். பின்னர் என்னை அவர்களின் படகுகளில் அடிமைப்பணிக்காக சேர்த்துக்கொண்டனர். உண்மையில் எனக்கு அவ்வுலகம் புத்தம்புதியதாக இருந்தது. ஒவ்வொருநாளும் புதிய அறிதலுடன் விடிந்தது. கடுமையான உடலுழைப்புக்குப்பின் பெரும்பசியுடன் உண்பதும் உடல் சோர்ந்து தன்னைமறந்து துயில்வதுமே பேரின்பம் என்று கண்டுகொண்டேன். படகோட்டவும் கடல்புகுந்து மீன்கொள்ளவும் பயின்றேன். அவர்கள் மொழியை நன்கு கற்றேன். நாளடைவில் அவர்களில் ஒருவனாக ஆனேன். அவர்களால் விரும்பப்பட்டேன்.
என் கல்விப்புலம் எனக்கு உதவியமையால் அவர்களில் கற்றோன் என முதன்மை பெற்றேன். எங்கும் எக்குலத்திலும் அந்தணனுக்கான இடமொன்று உள்ளது. செந்தண்மை என்பதே அந்தண்மை என்பதனால். அவர்களின் மொழிக்கு நான் இலக்கணம் அமைத்தேன். அவர்களிடமில்லாத சொற்களை செம்மொழியிலிருந்து எடுத்து அளித்தேன். அவர்களின் கடற்குறிகளைத் தொகுத்து சமுத்ரலக்ஷணகாரிகை என்னும் நூலை இயற்றினேன். அந்நூலை அவர்கள் அனைவரும் மனப்பாடம் செய்யவைத்தேன். அவர்களின் குமுகநெறிகளை தொகுத்து சங்க ஸ்மிருதி ஒன்றை அமைத்தேன். அவை புதிய தலைமுறைகளுக்கு எளிதாக கற்பிக்கப்பட்டன. அவர்களின் தொழிலும் குமுகமும் சொற்களால் உறுதியாக கட்டி நிறுத்தப்பட்டன.
என்னை அங்கே எவரும் சிறையிட்டிருக்கவில்லை. விரும்பியிருந்தால் நான் கிளம்பி வந்திருக்கமுடியும். ஆனால் மீண்டு வந்து நான் ஆற்றும் செயற்களங்கள் ஏதுமிருக்கவில்லை. எந்தை நான் இறந்துவிட்டதாக எண்ணி இறுதிச்சடங்குகளைச் செய்தார் என சூதன் ஒருவனிடமிருந்து அறிந்தபோது பெரும் விடுதலையையே அடைந்தேன். அங்கே மூன்று சங்ககுலக் கன்னியரை மணந்தேன். அவர்களில் எனக்கு ஏழு மைந்தர் பிறந்தனர். ஏழு விழுதுகளால் மண்ணுடன் அசையாது பிணைக்கப்பட்டேன். நான் இயற்றிய உலகில் அதன் மைய அறிஞனாக என் வாழ்க்கையை அமைத்துக்கொண்டேன். சிலந்திக்கு தன் வலையே சிறை.
ஒருமுறை என் தந்தை எனக்கான நீர்க்கடனை இயற்றும்பொருட்டு சௌராஷ்டிரத்தில் அஷ்டசிரசுக்குமேல் அமைந்திருந்த பிரபாசதீர்த்தம் சென்றிருந்தார். அவருடன் துவாரகையிலிருந்து வந்த இரு யாதவர்களும் துணைசென்றனர். நான் அங்குதான் உயிர்துறந்ததாக அவர் எண்ணிக்கொண்டிருந்தார். அங்கு சென்று எனக்கான கடன்களை முற்றும் செய்து தான் துறவுபூண்டு உலகியல் கடன்களில் இருந்து விடுபடவேண்டுமென விழைந்தார். இப்பிறவியில் தனக்கு எஞ்சியிருப்பது அது என்றே அவர் எண்ணினார்.
அவர் உள்ளத்தில் நான் கொண்டிருந்த இடமென்ன என்று யாதவர்களுக்கோ பிற மாணவர்களுக்கோ தெரியாது. நான் இறந்ததாக செய்தி கேட்டதுமே எந்தை அதை தெய்வங்களின் அடி என்றே எடுத்துக்கொண்டார். தீபட்ட யானைபோல அலறித்துடித்தபடி அவர் தன் ஆசிரியரிடம் ஓடினார். அனைத்தையும் துறந்து மலைக்குகை ஒன்றில் தவம் செய்திருந்த அவர் “அரியதே பறிக்கப்படும் என்னும் ஊழின் நெறியை காவியங்களை நோக்கினாலே அறியலாம். அது உனக்கு அரியதென்று தோன்றியதேகூட அது பறிக்கப்படும் என நீ அறிந்ததனால்தானோ?” என்றார்.
“அத்தனை இரக்கமற்றதா அது? அத்தனை நெறியின்மையா நம்மை ஆள்கிறது?” என்றார் எந்தை நெஞ்சில் ஓங்கி அறைந்தபடி. “அதன்மேல் கேள்விகளால் மோதாதே, மூடா! கேட்கக்கேட்க விடையின்மை கொள்வதன் பெயரே ஊழ் என்பது. அதைவிட்டு விலகிச் செல். உன் ஊழுக்கு உன்னை ஒப்படை” என்றார். “என் மைந்தன்! நான் அவனை விழியால் பிறிதொருமுறை பார்ப்பேனா? பிறிதொன்றையும் நான் வேண்டேன்” என்று எந்தை நெஞ்சுடைந்து கதறினார். “இறப்பைக் கண்ட அனைவரும் சொல்பவை இவை. சொற்களைக் கருதி வை. ஒருவேளை நீ அவனை மீண்டும் காண நேர்ந்தால் அத்தனை சொல்லும் பொருளின்றிப்போகும்” என்றார் ஆசிரியர்.
எந்தை அவர் சொல்வன எதையும் செவிகொள்ள முடியாதவராக இருந்தார். நாற்பது நாட்கள் தன் குருநிலையின் இருளுக்குள் ஒடுங்கிக் கிடந்தார். தன்னை இறுக்கிச் சுருட்டி ஓசையே இன்றி அத்துயரை முழுக்க பெற்றுக்கொண்டார். ஒரு சொல்கூட மிச்சமின்றி என்னை தன் உள்ளத்திற்குள் செலுத்திப் புதைத்தார். என்னைப்பற்றி அவர் எவரிடமும் பேசுவதில்லை. என்னை அவர் முற்றிலும் மறந்துவிட்டதாகவே பிருகதர் போன்றவர்கள் எண்ணியிருந்தனர். ஆனால் அவருக்குள் ஆறாத புண் என நான் குருதி கசிந்துகொண்டிருந்தேன். என்னை அவர் எண்ணுவதே இல்லை. ஆனால் அவர் கனவில் மாறா இளமையுடன் நான் வந்துகொண்டிருந்தேன்.
அந்த இருளிலிருந்து அவரை மீட்டது இளைய யாதவனைப் பற்றிய கனவு. அனைத்திலும் நம்பிக்கையிழந்து இருண்டு சென்றுகொண்டிருந்த அவருக்கு மீண்டும் வாழ்விருப்பதாக அறிவித்தது. மலையடிவாரத்து சாந்தீபனி குருநிலையை உதறி உஜ்ஜயினிக்கு வந்து அவனுக்காகக் காத்திருக்க முடிவெடுத்ததே அவரை மீட்டது. தன் மாணவர்கள் சென்று துவாரகையை அமைத்து படைவல்லமை கொண்டதும் எந்தை அவர்களிடம் கோரியது தன்னை மைந்தன் இறந்த பிரபாச தீர்த்தத்திற்கு கொண்டுசெல்லவேண்டும் என்றுதான்.
உண்மையில் மூத்த யாதவர் அவருக்கு ஒரு மைந்தன் இருந்ததையே அப்போதுதான் அறிந்தார். “ஆசிரியரே, உங்களுக்கு மைந்தன் ஒருவன் இருந்தானா? நான் இன்றுவரை அறியவில்லையே? உங்கள் மைந்தனே இவன்தான் என்றல்லவா எண்ணினேன்?” என்றார். “ஆம், இவனும் என் மைந்தனே. இவனுக்கு எப்படி கற்பிப்பது என அவனிடமிருந்தே கற்றேன். என் மைந்தன் மேல் கற்பாறை விதைமுளைமேல் என அமர்ந்திருந்தேன். அவன் என்னை உதறிச்சென்று விடுதலைகொண்டான்” என்றார் எந்தை. இளையவன் அதைக் கேட்டு புன்னகையுடன் வேறெங்கோ நோக்கி நின்றிருந்தான்.
யாதவர்களுடன் கிளம்பி பன்னிரு நாட்கள் பயணம் செய்து அரிய மலைவளைவுகளைக் கடந்து பிரபாச தீர்த்தத்தை அணுகி நீர்க்கடனுக்காக அமர்ந்தார் எந்தை. இலைமேல் அன்னமும் மலரும் படைக்கப்பட்டு என் வடிவாக அங்கிருந்து எடுக்கப்பட்ட சிறிய கூழாங்கல் ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது. சடங்குகள் செய்வதற்காக அமர்ந்த முதிய அந்தணர் விழியறியாதவர். அவர் அக்கூழாங்கல்லைத் தொட்டதுமே “இது உயிருள்ளதாயிற்றே!” என்றார். “என்ன சொல்கிறீர்கள்?” என்றார் எந்தை. “இம்மைந்தன் இறக்கவில்லை. உயிருடன் எங்கோ இருக்கிறான். இவனுக்களிக்கப்பட்ட அன்னத்தையும் நீரையும் இவன் மூதாதையரே இதுவரை பெற்றுக்கொண்டனர்… ஐயமே இல்லை” என்றார் அந்தணர். எந்தை “மைந்தா! என் உயிரே!” என அலறியபடி மயங்கி விழுந்துவிட்டார்.
திரும்பிவரும் வழியெங்கும் எந்தை கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தார். அவரிடம் இளைய யாதவன் ஒருசொல்லும் கேட்கவில்லை. சாந்தீபனி குருநிலையை அடைந்ததும் எந்தை இரு யாதவர்களையும் அருகழைத்தார். “நான் உங்களுக்கு ஆசிரியனாக அமைந்து இதுகாறும் கற்பித்தேன். ஆசிரியக்கொடை இன்றி கல்வி முழுமையாவதில்லை. இன்று உங்களிடம் ஆசிரியக்கொடை கோருகிறேன், என் மைந்தன் எங்கிருந்தாலும் மீட்டுக் கொண்டுவருக! அவனை கண்டபின்னரே நான் அனலவிந்து உயிர்துறக்க முடியும். பிறிதொன்றும் இப்புவியில் எனக்குத் தேவையில்லை” என்றார். மூத்த யாதவர் “எட்டாண்டுகாலம் ஆகிவிட்டது. அவர் விழைந்திருந்தால் மீண்டு வந்திருக்கக்கூடுமே” என்றார். “எதையும் நான் கேட்க விழையவில்லை. என் மைந்தனை எனக்கு கொண்டுவந்து கொடுங்கள்… அது ஒன்றே எனக்குரிய ஆசிரியக்கொடை” என்றார் எந்தை. “அவ்வண்ணமே ஆகுக!” என்றான் இளைய யாதவன்.
நான் விடைபெற்றுச் சென்றதை பிருகதரிடமிருந்து மீண்டும் கேட்டறிந்தான். ஒவ்வொரு சொற்துளியையும் ஒவ்வொரு முகக்குறியையும் அவரிடமிருந்து மீட்டெடுத்தான். ஏழுநாட்கள் பன்னிருமுறை அவரிடம் அவன் உரையாடினான் என்கிறார்கள். இறுதியில் அவன் அவராக மாறி என் முன் அத்தருணத்தில் நின்றிருந்தான். என் விழிகளின் கரவை கண்டடைந்தான். பிரபாச தீர்த்தம் என்னும் சொல்லை நான் தவிர்த்ததை, பிரபாச நீர் என்றே சொன்னதை உணர்ந்தான். மூத்தவரிடம் “ஐயமே இல்லை மூத்தவரே, அவர் சங்கனின் சிறையில் இருக்கிறார்” என்றான்.
“ஆனால் அவர்கள் பிணையர்களைப் பற்றி செய்தி அறிவிப்பார்கள். பிணைமீட்புச் செல்வம் கோருவார்கள்” என்றார் மூத்தவர். “ஆம், அது நிகழவில்லை. ஆசிரியரின் மைந்தர் தன் பெயரையும் குலத்தையும் மறைத்திருக்கலாம். அவர்கள் அந்தணரை கொல்வதில்லை” என்றான். “ஆனால் அவர் இத்தனை நாள் எங்கிருக்கிறார்? அவர்களுடன் அவர் வாழ்கிறாரா?” என்றார் மூத்தவர். “அறியேன். அவரை தேடிச் செல்வோம். அவரை மீட்காமல் திரும்பமாட்டோம் என உறுதிகொள்வோம்” என்றான் இளைய யாதவன்.
நான் வந்த வழியை அவர்கள் அவ்வாறே மீண்டும் நடித்தனர். என்னைப் போலவே உஜ்ஜயினிக்கு வந்து அங்கிருந்து பஞ்சஜனத்தின் எல்லைவரை வந்தனர். அங்கே ஒரு வணிகச்சாவடியில் அவர்களிடம் பஞ்சஜனத்தின் கஜமேக குலத்தைச் சேர்ந்த வணிகன் ஒருவன் அறிமுகமானான். அவன் துவாரகைக்குச் சென்று வணிகம்செய்ய விரும்பினான். அவன் அவர்களிடம் துவாரகைபற்றி கேட்டுக்கொண்டிருந்தான். அவர்கள் துவாரகை பற்றி அவனிடம் பேசிக்கொண்டே பஞ்சஜனம் குறித்து கேட்டறிந்தனர். அவன் நான் இயற்றிய கடல்நூலில் இருந்து ஒரு செய்யுளை பாடினான். அதைக் கேட்டதுமே இளைய யாதவன் சொல்லிவிட்டான் “ஐயமே இல்லை, இது சாந்தீபனி குருநிலையில் பயின்றவரால் யாக்கப்பட்டது. இதை இயற்றியவர்தான் நாம் தேடுபவர்.”
“நான் என் பெயரை கிரிஜன் என்று அங்கே சொல்லியிருந்தேன். அவர்கள் மீட்டுச் செல்ல விரும்புவது என்னைத்தான் என அன்றே அவர்கள் முடிவு செய்தனர்” என்றார் சாந்தீபனி முனிவர். “அன்று அவர்களால் பஞ்சஜனரை வெல்லமுடியாத நிலை இருந்தது. படைகொண்டு சென்றால் என்ன என்று மூத்தவர் கேட்டபோது இளைய யாதவன் சிரித்தபடி “மூத்தவரே, நாம் படைகொண்டுசென்றால் பஞ்சஜனரின் படைகளுடன் மட்டுமல்ல அதை நடத்திவரும் சாந்தீபனி குருநிலையின் பேரறிவுடனும் போரிட வேண்டியிருக்கும். நாம் வெல்லமுடியாது” என்றான். “அப்படியென்றால் என்னதான் செய்வது?” என்றார் மூத்தவர். “வென்றாகவேண்டும் என்றால் அதற்கான வழி ஒன்று இருப்பதை கண்டுகொள்ளலாம்” என்றான் இளையவன்.
தொடர்புடைய பதிவுகள்
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 36
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 75
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 45
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 87
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 35
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 35
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 28
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 26
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 25
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 22
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 62
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 61
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 60
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 40
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 25
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 24
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 74
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 71
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 59
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 66
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers

