Jeyamohan's Blog, page 1742

August 17, 2016

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 30

[ 3 ]


பிருஹதாரண்யகத்தை நோக்கிச் சென்ற பாதை மரப்பட்டைகளும் கற்பாளங்களும் பதிக்கப்பட்ட வண்டித்தடமாக இருந்தது. “ஒரு வேதக்காட்டுக்கு வண்டித்தடம் இருப்பதை இப்போதுதான் காண்கிறேன்” என்று தருமன் சொன்னார். “ஆம், இக்காடு மட்டுமே அவ்வாறு அரசர்களால் முற்றிலும் பேணப்படுகிறது” என்றான் அவர்களை அழைத்துச்சென்ற வைரோசனன் என்னும் மாணவன்.


அவர்கள் அவனை அப்பாதையில் அமைந்த முதல் அன்னச்சாவடியில் கண்டனர். தாழ்ந்த மரக்கூரை கொண்ட மையக்குடிலைச்சுற்றி வழிப்போக்கர் ஓய்வெடுப்பதற்கான கொட்டகையும் கொண்ட அச்சாவடியை கீர்த்திமான் என்ற அந்தணனும் துணைவியும் நடத்திக்கொண்டிருந்தனர். அதற்கு மிதிலையின் அரசர் ஜனகர் முன்பு எப்போதோ அளித்த அறக்கொடைச் சிற்றூர்களிலிருந்து தேவையான பொருட்கள் ஏழுநாட்களுக்கு ஒருமுறை வந்துகொண்டிருந்தன. கீர்த்திமானின் குடும்பம் தலைமுறைகளாக அந்தச் சாவடியை நடத்திக்கொண்டிருந்தது.


இளஞ்சாரல் மழையில் நனைந்தபடி பாண்டவர்கள் அங்கே வந்தபோது முன்னரே ஏழு ஒற்றைக்காளை வண்டிகள் அவிழ்க்கப்பட்டு நுகம் தாழ்த்தி நின்றிருந்தன. காளைகளும் பொதிசுமக்கும் பன்னிரு அத்திரிகளும் அருகே கொட்டகைக்குள் புல் மென்றுகொண்டு நின்றன. அவற்றை பூச்சிகள் கடிக்காமலிருக்க வேப்பிலைச் சருகிட்ட புகை எழும் கலங்கள் அங்கிருந்தன. கூரைமேல் வெண்புகை படர்ந்திருந்தது. அவற்றின் கழுத்துமணி ஓசையைத்தான் தருமன் தொலைவிலேயே கேட்டார். அவருக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த ஒற்றைக்காளை வண்டி அங்கே சென்று நின்றது. அதை ஓட்டிவந்தவன் காளையின் கழுத்துக்கயிற்றைப்பிடித்து நிறுத்தி சகடங்களுக்குக் கீழே கட்டையை வைத்தான். அதன் தேன்மெழுகு பூசப்பட்ட பாய்க்கூரை வளைவின்மேல் ஈரம் பளபளத்தது.


பீமன் சாவடியின் முற்றத்தை அடைந்ததும் “விருந்தினர் நாங்கள். உணவும் நீரும் விழைகிறோம்!” என்று உரக்கக் கூவினான். உள்ளிருந்து சிரித்தபடி இறங்கி வந்த இளைஞன் “வருக வருக!” என்று அவர்களை கொட்டகைக்குள் அழைத்துச்சென்றான். “நீராடி உணவுண்ணும் அளவுக்கு சிறிய பசி அல்ல என பேருருவரின் முகம் சொல்கிறது. இன்னும் சற்றுநேரத்தில் உணவுண்ணலாம்” என்றான். “நான் இங்குள்ள உணவால் நிறைபவன் அல்ல” என்றான் பீமன். “இளைய பாண்டவரின் உணவு குறித்து அறியாதோர் எவர்?” என்றான் இளைஞன். அவர்கள் கூர்ந்து நோக்க “ஐவரும் சென்றால் யாரென அறியாத எவரும் பாரதவர்ஷத்தில் இருக்கமுடியாது…” என சிரித்தான்.


“என் பெயர் வைரோசனன். நான் பிருஹதாரண்யகம் செல்லும் மாணவன். நீங்களும் அங்குதான் என நினைக்கிறேன்” என்றான். பீமன் “ஆம்” என்றான். “அங்கே பல்லாயிரம் மாணவர்கள் பயில்கிறார்கள். அக்காடு முழுக்க கல்விநிலைகள்தான். அவர்களுக்குரிய உணவும் பிறவும் நாளும் சென்றுகொண்டிருக்கின்றன. அங்குள்ள எதையும் உண்ணமுடியாதென்று அறிந்திருப்பீர்கள்” என்றான். “ஆம், அது கந்தகக்காடு என்றனர்” என்றான் பீமன். “அங்கு நீங்கள் உண்ண பெரிய விலங்குகள் ஏதுமில்லை” என்றான் வைரோசனன். “நன்று, சிறிய விலங்குகள் பல சேர்ந்தால் பெரிய விலங்களவே ஆகும்” என்றான் பீமன்.


வைரோசனன் பேசிக்கொண்டே இருந்தான். அவர்கள் உணவுண்டபின் கொட்டகைக்கு ஓய்வெடுக்க வந்தனர். திரௌபதி கீர்த்திமானின் துணைவியும் மகளும் தங்கியிருந்த உள்ளறைக்கு சென்றுவிட்டாள். வைரோசனன் சொன்னான் “இன்று இங்குமட்டுமே வேதங்களை முழுமையாக கற்றறியமுடியும் என்கிறார்கள். பிற வேதநிலைகள் எதிலும் கற்பிக்கப்படாத வேதப்பாடல்களும் இங்கு கற்பிக்கப்படுகின்றன. ஆகவே பிருஹதாரண்யகத்தில் சிறிதுநாள் கற்றால்மட்டுமே வேதப்பேரவைகளில் மதிப்பு என்றாகிவிட்டிருக்கிறது.”


யாக்ஞவல்கியரை முதலாசிரியராகக் கொண்ட கந்தகக்காடு நோக்கி மாணவர்கள் செல்லத்தொடங்கி பலநூறாண்டுகள் ஆகின்றன என்றான் வைரோசனன். பதின்மூன்றாவது யாக்ஞவல்கியர் அங்கே ஆசிரியராக இன்று அமர்ந்திருக்கிறார். வேதம் வளர்ந்த காடுகளில் அதுவே பெரியது என்பதனால் அது பிருஹதாரண்யகம் என அழைக்கப்பட்டது. வேதம் ஓம்பும் அரசர்களின் கொடைச்செல்வத்தை ஏந்திய அத்திரிகள் நாளும் நடந்து காட்டுக்குள் உருவான அழியாத்தடம் போன்றதே அக்கல்விநிலையின் மாணவர் நாவிலும் வேதச்சொல் பதிந்திருப்பது என்றனர் சூதர்.


அதை ஒரு காடென்று சொல்வதே பிழை என்று தருமன் எண்ணினார். செல்லும் வழியெங்கும் மாணவர்களுக்கு மலைப்பொருட்களையும் பிறவற்றையும் விற்கும் சிறுவணிகர் வந்து குடிலமைத்திருந்தனர். காட்டுக்குள் ஏவலர்களின் குடில்கள் நிரைவகுத்து தெருக்களைப்போன்றே அமைந்திருந்தன. அங்கிருந்து ஓயாத பேச்சொலியும் விலங்குகளின் ஒலியும் எழுந்துகொண்டிருந்தன. அச்சாலையில் நடக்கையில் எதிரே வந்த மாணவர்கள் அனைவரும் மரவுரியின் நிறத்திலேயே அமைந்த பருத்தியாடைகளை அணிந்திருப்பதை தருமன் கண்டார்.


அதை நோக்கிய வைரோசனன் “இங்கு ஆசிரியர்கள் பட்டும் அணிவதுண்டு. இன்னுணவு உண்பதும் சிறந்த குடில்களில் வாழ்வதும் மாணவர்களின் வழக்கம்” என்றான். “இது துறவியரின் அமைப்பு அல்ல, அரசே. இவ்வுலகில் இனியதனைத்தையும் எய்துவதே வேதத்தின் பயன்களில் முதலாவது என்று கற்பிப்பவை இவர்களின் நூல்கள்.” பீமன் “இக்குருநிலை இத்தனை புகழ்மிக்கதாக இருப்பது இதனால்தான்போலும்” என்றான்.


புன்னகையுடன் அவனை நோக்கியபின் வைரோசனன் “முதற்குரு யாக்ஞவல்கியர் இளங்கன்றின் இறைச்சியை விரும்பி உண்பவர் என்கின்றன பிராமணங்கள். நெய்யுடன் சேர்த்து அவித்த ஊன்சோறு அவருக்கு உகந்த உணவாக இருந்தது என்கிறார்கள். சதபதத்தில் நடந்த சொல்சூழ்கை ஒன்றில் பசுவையும் காளையையும் உண்ணலாகாது என்று சொல்லப்பட்டபோது அவர் எழுந்து அவை இளமையானவை என்றால் நாவுக்கு மென்மையானவை, ஆகவே நான் உண்பேன் என்று சொன்னதாக பிராமணம் கூறுகிறது” என்றான்.


“அவரை நான் மிகவிரும்புவேன் என நினைக்கிறேன்” என்றான் பீமன். வைரோசனன் உரக்க நகைத்து “இக்குருநிலைக்குரிய ஆநிரைகள் அங்கே கோபதத்தில் உள்ளன. இப்போது ஒன்றரை லட்சம் பசுக்களும் காளைகளும் உள்ளன என்கிறார்கள். முதல் யாக்ஞவல்கியர் கன்றுபெருக்குவதில் பேரார்வம் கொண்டிருந்தார். அவரிடம் பத்தாயிரம் பசுக்கள் இருந்தன என்கின்றன பிராமணங்கள்” என்றான். “மாணவர்கள் எளிதில் வேதத்தை அறிய கன்றுபெருக்குதலே வழி என்றுதான் சிலநாட்கள் முன்பு மூத்தவர் சொன்னார்” என்றான் பீமன். “அக்கன்றை உண்ணும்போது அதே மெய்மைகூடுவதை நானும் உணர்ந்திருக்கிறேன்.”


சினத்துடன் திரும்பிநோக்கியபின் தருமன் தன்னை அடக்கிக் கொண்டார். மூங்கில்கூட்டங்களை நட்டு உருவாக்கிய பெரிய கோட்டைபோன்ற வேலிக்கு நடுவே அமைந்த வாயிலை அவர்கள் சென்றடைந்தனர். அங்கிருந்த காவல் மாணவர்களிடம் வைரோசனன் வந்திருப்பவர் அஸ்தினபுரியின் அரசகுலத்தவரான தருமன் என்றதும் அவர்கள் இணைந்து மேடைவிட்டு கீழிறங்கி வந்து வணங்கினர். “தங்கள் வருகையால் பிருஹதாரண்யகம் நலம் பெறட்டும், அரசே” என்றான் மூத்தமாணவன். “நான் நலம்பெறவே வந்தேன்” என்றார் தருமன்.


அவர்களை ஓர் இளமாணவன் வழிகாட்டி விருந்தினர் குடில்களுக்கு அழைத்துச்சென்றான். அவனுடன் செல்கையில் பீமன் மெல்லிய குரலில் வைரோசனனிடம் “நீர் அவர்களிடம் எங்களுடன் வந்தவராக அறிமுகம் செய்துகொண்டீர் அல்லவா?” என்றான். “இல்லை, நான் ஒன்றும் சொல்லவில்லை. அவர்கள் அவ்வண்ணம் எண்ணிக்கொண்டால் அதைக் குலைத்து அவர்களை குழம்பவைப்பது கடுமையானது என உணர்ந்து அமைதி காத்தேன்.” பீமன் நகைத்து “இக்காட்டில் நான் உம்மிடம் நெருக்கமாக ஆவேன் என எண்ணுகிறேன்” என்றான்.


“இங்கு இப்போது கன்றிறைச்சி உண்ணுகிறார்களா?” என்று அவன் காதில் கேட்டான் பீமன். வைரோசனன் “ஆம், முறைப்படி அது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் சில வகை வேள்விகளில் கன்றுகள் பலியிடப்படுகின்றன. அன்றுமட்டும் கன்றுகளை உண்கிறார்கள்” என்றான். பீமன் “ஆம், இத்தனை பசுக்களை வளர்த்துவிட்டு அவற்றை உண்ணவில்லை என்றால் எப்படி காட்டை காக்கமுடியும்?” என்றான். “ஏன், சிங்கங்களை வளர்க்கலாமே?” என்றான் வைரோசனன். பீமன் அவன் தோளில் ஓங்கி அறைந்து பெருங்குரலில் நகைத்தான்.


அவர்களுக்கு அளிக்கப்பட்ட குடில்கள் அரண்மனைகளுக்கு நிகராக இருந்தன. பிரம்புகளைப் பின்னி செய்யப்பட்ட மஞ்சமும், பீடங்களும் இருந்தன. மேலே காற்றசைக்கும் தட்டிவிசிறிகள் தொங்கின. தரையில் செந்நிறமான மரவுரி விரிக்கப்பட்டிருந்தது. “இவை இப்படி பேணப்படுகின்றன என்றால் ஏவலர் பலர் இங்கு இருக்கவேண்டும்” என்றார் தருமன். “ஆம், இங்கு ஏழாயிரம் ஏவலர்கள் பணியாற்றுகிறார்கள்” என்றான் அவரை வழிகாட்டி அழைத்துவந்த மாணவன்.


அன்றுமாலை குடில்களுக்கு நடுவே ஒன்றன்மேல் ஒன்றென ஏழு அடுக்குகளாக ஏறிக் கவிழ்ந்த மரப்பட்டைக் கூரையிட்ட வட்டவடிவமான பெரும்வேள்விச்சாலையில் நிகழ்ந்த அந்திக்கொடையில் முதன்மை விருந்தினராக அவர்கள் சென்றமர்ந்தனர். ஆயிரம் வைதிகர் கூடி அமர்ந்து நூறு வேள்விக்குளங்களில் அனலோம்பி அவியளித்து வேதம் முழங்கினர். அவர்களைச் சூழ்ந்து ஐந்தாயிரம் வேதமாணவர்கள் கூடிநின்று அவ்வேதப்பேரிசையில் இணைந்துகொண்டனர். அவர்களில் நானூறு பெண்களும் இருந்தனர்.


தருமன் திரும்பி நோக்க வைரோசனன் “இங்கே மாணவிகளாகவும் ஆசிரியைகளாகவும் ஆயிரத்துக்குமேல் பெண்கள் இருக்கிறார்கள் என அறிந்துள்ளேன், அரசே” என்றான். அத்தனை முகங்களும் இளமையும் ஒளியும் கொண்டிருந்தன. பயின்று கூர்தீட்டப்பட்ட குரல்கள் ஒன்றென இணைந்து ஒலித்தபோது வேதச்சொற்கள் ஒவ்வொன்றும் ஒலிதிரண்டன. ஆண்குரல்களின் அனைத்து இடைவெளிகளையும் பெண்குரல்கள் நிறைக்க பிற எங்கும் கேட்டிருக்காத முழுமையை அடைந்தது. அது மானுடக்குரலெனத் தோன்றவில்லை, ஐம்பருக்களும் இணைந்து எழுப்பிய ஒலி அது என உளமயக்கு கொண்டார் தருமன்.


வேள்வி அனைத்து வகையிலும் முழுமைகொண்டிருந்தது. அவியென நெய்யும் சோமமும் சுராவும் அன்னமும் நெருப்பளிக்கப்பட்டன. மலரும் விறகும் எரிய அங்கிருந்த காற்றே நறுமணமென ஆகியது. நறுமணம் அவ்வேதச்சொற்கள் மேல் படர்ந்தது. அக்காட்சி மண்ணுலகில் அல்ல விண்ணிலெங்கோ நிகழ்கிறதென்ற கனவை உருவாக்கியது. வேள்விநிறைவுக்குப்பின் அவிமிச்சம் பங்கிட்டு அனைவருக்கும் அளிக்கப்பட்டது. அதன்பின் வேள்விமுற்றத்திற்கு வந்த மாணவர்கள் சாமவேதப்பாடல்களை வெவ்வேறு இசைமுறைமைகளில் இசைத்தனர். குழல்களும் யாழ்களும் முழவுகளும் மணிகளும் உடன்சேர்ந்துகொண்டன.


இறுகிய உடல்கொண்ட இளைஞர்கள் வந்து உடற்கலைகளை காட்டினர். சிறுத்தை எனப் பாய்ந்து காற்றில் சுழன்றனர். குரங்குகள் போல தாவித்தொற்றினர். உடல்கள் அம்புகள் போல காற்றில் பாய்ந்தன. ஒருவர் மேல் ஒருவரென ஏறி ஒரு மரம் என ஆயினர். கலைந்து யானை வடிவுகொண்டனர். பரவி முதலை என ஆயினர். நடனமும் போரும் ஒன்றேயான அக்கலை தருமனை விழிவியந்து அமரச் செய்தது. அருகிருந்த அர்ஜுனனிடம் “போர்க்கலை பயிற்றுவிக்கும் இடங்களில்கூட இத்தகைய தேர்ச்சியை கண்டதில்லை” என்றார். அர்ஜுனன் “போரெனப் பயின்றால் இத்திறன் அமையாது, மூத்தவரே” என்றான். தருமன் திரும்பி நோக்க “பெரிதொன்றுக்கான கருவியாகும்போதே கலை முழுமைகொள்கிறது” என்றான்.


அதன்பின் மகளிர் கைகளில் மலர்களுடன் நிரையமைந்து துணைவேதப் பாடல்களை இன்குரலில் பாடினர். பாடலுக்கேற்ப மலர்களைச் சுழற்றியும் அசைத்தும் குலைத்தும் அப்பாடலை வண்ணங்களாக விழியறிவதுபோல எண்ணச்செய்தனர். நீரே மழையாக, பனியாக, துளியாக, நதியாக, சுனையாக, கிணறாக, அருவியாக, அலைகடலாகத் தெரிவதுபோல வேதம் முடிவிலா வடிவம் கொண்டது. சித்தம் அழிய விழிகளுக்குள் ஆத்மன் முழுமையாக குடியேறியிருந்த தருணம்.


சங்கு முழங்க அவை முடிந்ததும் முதலாசிரியரும் யாக்ஞவல்கியருமான பிரபாகரர் எழுந்து அவையை வணங்கி தன் மாணவர்களுடன் விடைபெற்றுச் சென்றார். ஒவ்வொருவராக அகன்றனர். மலர்ந்த முகத்துடன் வெளிவந்த தருமன் “இளையோனே, இதுகாறும் நாம் பார்த்தவை அல்ல, இதுவே மெய்வேதத்தின் இடம். மானுடம் இங்கு சுவையாக, உணர்வுகளாக, அறிதல்களாக பெருகிக்கொண்டே செல்கிறது. அனைத்துமாகி நின்றிருக்கும் வேதமே மானுடருக்குரியது. அதை உணர்ந்தமையால்தான் வேதவியாசர் கிருஷ்ணசாகைகளும் வேதமே என வகுத்தார்” என்றார்.


வைரோசனன் “இக்குருநிலையின் கொள்கை அதுவே” என்றான். “பிரம்மம் ஒன்றே. ஆனால் இவை அனைத்துமாக ஆகி நிறையவேண்டுமென அது எண்ணியிருக்கிறது. ஆகவேதான் வேதமும் ஓதும் நாவும் கேட்கும் காதும் உணரும் சித்தமுமாக அதுவே இங்கு விரவியிருக்கிறது. வேதம் பிரம்ம வடிவம். மானுடன் அறியும் அனைத்துமாக அதுவே ஆகவேண்டும். அனைத்துக் கலைகளும் வேதமே, அனைத்து அறிதல்களும் வேதப்பகுதிகளே என யாக்ஞவல்கியர் சொன்னார். அரசே, வேதம் வேதாங்கங்களுடனும் உபவேதங்களுடனும் இணைந்தே கற்கப்படவேண்டும் என பிருஹதாரண்யக மரபு வகுக்கிறது” என்றான்.


“நீர் இருந்த குருநிலையைவிட பிருஹதாரண்யகத்தை நன்கறிந்திருக்கிறீர்” என்றான் பீமன். “ஆம், சென்ற மூன்றாண்டுகளாக இக்குருநிலையைக் குறித்தே எண்ணிக்கொண்டிருக்கிறேன். இங்கு நுழைவது கடினம் என்றார்கள். சௌனகம், கௌஷீதகம் முதலிய குருநிலைகளில் பயின்றவர்களை கடுமையான மாற்றுப்பயிற்சிகளுக்குப் பின்னரே இங்கு ஏற்கிறார்கள். துவைதவனத்தில் இருந்து எவரும் இங்கு வரவே முடியாது” என்றான் வைரோசனன் “நல்லூழாக நான் உங்களுடன் வந்தேன்.”


பீமன் “இங்கிருந்து செல்வதும் கடினம் என எண்ணுகிறேன். இங்குள்ள மடைப்பள்ளி நாகரன் என்னும் சூதரால் நடத்தப்படுகிறது. உணவை பிரம்மமென அறிந்த படிவர் என்றே அவரை சொல்லத் துணிவேன். இப்போது மடைப்பள்ளிக்குத்தான் செல்லப்போகிறேன்” என்றான். வைரோசனன் “இங்கு இலக்கணம், காவியம், வானியல், மருத்துவம், வில்லியல், இசையியல், பொருளியல் என அனைத்துமே வேதங்களுடன் இணைத்துக் கற்கப்படுகின்றன. காமநூலும் அடுமனையறிவும்கூட உபவேதங்கள் என்றே கொள்ளப்படுகின்றன” என்றான்.  பீமன் “நன்று, அன்னமே பிரம்மம் என்று உணர்ந்தவன் பிற அனைத்தையும் பிரம்மம் என்றுணர்வதன் முதற்படியில் இருக்கிறான்” என்றபின் விலகிச்சென்றான்.


“ஆம், இதுவே முறையான வேதக்கல்வி என்று நான் எண்ணுகிறேன். நாம் இதுவரை சென்ற இடங்களில் எல்லாம் அவர்கள் தங்களுக்கான வேதக்கல்வியை உருவாக்கிக் கொண்டிருந்தனர். இவர்கள் பாரதவர்ஷத்திற்குரிய வேதக்கல்வியை படைக்கின்றனர். இங்கிருந்து வேதம் எழுந்து பாரதத்தை தழுவிப்பரந்து வளரும்” என்றார் தருமன். “அர்த்தவேதம், தனுர்வேதம், கந்தர்வவேதம், ஆயுர்வேதம் ஆகியவை உபவேதங்கள். வியாகரணம், ஜோதிஷம், நிருக்தம், சந்தஸ், சிக்‌ஷா, கல்பம், சூத்திரம் ஆகியவை வேதாங்கங்கள். அவையின்றி வேதம் நிறைவுகொள்வதில்லை என்று வைசம்பாயன மரபு வகுத்தது.”


“அதை ஏற்பவர்கள்கூட அவ்வாறு வேதங்களை கற்கத் துணிவதில்லை. அவர்களின் உள்ளத்தில் வேதச்சொல்லுக்கு நோயாளியின் சீழ்குறித்துப் பேசும் ஆயுர்வேதச்சொல் எப்படி நிகராகும் என்னும் ஐயமே ஆட்டுவிக்கிறது. அந்த உளத்திரிபைக் கடக்க வேதத்தை பொருளறிந்து கற்பதும் வேதத்துடன் வாழ்க்கையை எதிர்கொள்ளச் செல்வதுமே ஒரே வழி. காடுகளில் உறைபவர்கள் வேதங்களை வெளியே மூன்றியல்புடன் கொந்தளிக்கும் வாழ்க்கையிலிருந்து வேறுபடுத்துகிறார்கள். இங்கு நம் முன்னோர் வாழத் துடித்தனர், வாழ்ந்து கடந்தனர். அவர்களின் விழைவும் கண்டடைதலுமே வேதம். வாழ்வில்லாத வேதம் வெற்றுச் சொல்லாய்வாகவே எஞ்சும்” என்றார் தருமன்.


திரௌபதி மெல்லிய குரலில் “இங்கு பெண்களுக்கு வேதக்கல்வி எப்போதிலிருந்து இருக்கிறது?” என்றாள். அவள் குரலைக் கேட்டே நெடுநாட்களாகின்றன என்று அப்போதுதான் தருமன் உணர்ந்தார். அவளை நோக்கி திரும்பாமலிருக்க விழிகளை கட்டுப்படுத்திக்கொண்டார். “பெண்கள் வேதமோதி வேள்வி நிகழ்த்தியது தொல்வேதகாலத்தின் இயல்பான வழக்கமாக இருந்தது, அரசி. அன்று வேதங்கள் குடிகளில் அன்றாடம் புழங்கின. வேள்விகள் இல்லமுற்றங்களில் நிகழ்த்தப்பட்டன. மூத்தோருடன் பெண்டிரும் மைந்தரும் அமர்ந்து வேதம் ஓதி அவியளித்தனர்” என்றான் வைரோசனன்.


“முனிவர்கூடிய வேதநிலைகளில் நால்வேதம் பகுக்கப்பட்டது என அறிந்திருப்பீர்கள். அவை முறையாக கற்பிக்கப்படும்பொருட்டு கல்விச்சாலைகள் அமைந்தன. அங்கே இளமைந்தர் காமவிலக்கு நோன்புகொண்டாலொழிய கல்வி அமைவதில்லை என்பதனாலும் காடுகளில் பெண்கள் வாழ்வது கடினம் என்பதனாலும் பெண்கள் விலக்கப்பட்டனர். வேதநிலைகளில் நெறிப்படி வேதம் பயின்றவரே வேள்வி இயற்றும் தகுதிகொண்டவர் என்றானபோது பெண்கள் வேள்வியிலமர்வதும் இல்லாமலாயிற்று.”


“ஆயினும் நால்வருணங்களும் தங்களுக்குரிய வேதத்தை இல்லங்களில் மகளிருக்கு கற்பித்துக்கொண்டுதான் இருந்தனர். அரசியர் வேதம் கற்பதும் வேதச்சொல்லாய்வு மன்றுகளில் அமர்வதும் இயல்பாகவே இருந்தது. பின்னர் அவர்கள் கிருஹ்ய சூத்திரத்தை மட்டும் கற்றால் போதுமென ஆயிற்று” என்றான் வைரோசனன். “கதைகளின் படி முதலாசிரியர் யாக்ஞவல்கியரே தன் இரு துணைவியருக்கும் வேதம் கற்பித்து வேள்விச்சாலையில் உடனமர்த்தினார் என்கிறார்கள். அவ்வழக்கம் இன்றும் இங்கு தொடர்கிறது.”


திரௌபதி தலையசைத்துவிட்டு நடந்தாள். அவள் ஏன் அவ்வினாவை கேட்டாள் என்று தருமன் எண்ணிக்கொண்டார். அவளை திரும்பி நோக்கவேண்டும் என்று எழுந்த உளவிசையை மீண்டும் வென்றார். அவர்கள் குடில்கள் அமைந்த வளாகத்தை அடைந்ததும் ஒவ்வொருவராக சொல்லின்றி விடைகொண்டு பிரிந்தனர். வழக்கம்போல அவர் நிற்பதையே அறியாதவளாக திரௌபதி சென்றாள். அவர் அவளை நோக்கவேண்டுமென இறுதிக்கணம் வரை எழுந்த துடிப்பை வென்று தன் குடிலைநோக்கி நடந்தார். குடில்முற்றத்தை அடைந்தபோது எடைசுமந்தவர் போல கால்கள் தளர்ந்திருந்தன.



[ 4 ]


மிதிலையின் அருகே சாலவனம் என்னும் காட்டில் காத்யாயன முனிவர் குடிலமைத்து தங்கியிருந்தார். அவர் மகள் காத்யாயினிக்கு இளமையிலேயே வேதச்சொல்லிலும் மெய்யிலும் ஈடுபாடு எழுந்ததைக் கண்ட தந்தை அவளை தன் மாணவியாக ஏற்று தானறிந்த அனைத்தையும் அவளுக்கு கற்றுக்கொடுத்தார். கற்றுத்தேர்ந்த காத்யாயினி கன்னியிளமைகொண்டபோது அவளுக்கு அவர் மணமகனை தேடத்தொடங்கினார்.


அங்கு வந்த முனிவர் ஒருவர் “நீர் செய்தது பெரும்பிழை. பெண்களுக்குரியது இல்லம். அவர்களுக்கு இல்லநெறி சொல்லும் கிருஹ்ய சூத்திரமே போதுமானது. வேதமறிந்த பெண் தன்னைவிட கற்றறிந்த ஒருவனிடம் மட்டுமே தன்னை உவந்தளிப்பாள். தன்னை ஆளாத ஆண்மகனை பெண் வெறுப்பாள். ஏனென்றால் அவள் அவனிடம் காண்பது தன் வயிற்றில் பிறக்கப்போகும் மைந்தனை. தன் மைந்தன் தன்னைவிட எளியவனாக இருக்க எந்த அன்னையும் ஒப்பமாட்டாள். காத்யாயனரே, பெண்ணின் உள்ளம் கருப்பையில் உள்ளது என்று சொல்கின்றன நூல்கள். இவளை வெல்பவனை எப்படி நீர் கண்டடைவீர்?” என்றார்.


“என்ன செய்வேன்?” என்று காத்யாயனர் திகைத்தார். அதற்கு ஒரு வழியை அவரே கண்டடைந்தார். மிதிலைக்குச் செல்லும் வேதமுனிவர்கள் அனைவரையும் தன் இல்லத்திற்கு உணவருந்த அழைத்தார். எவரேனும் ஒருவரை காத்யாயனியே சுட்டட்டும் என காத்திருந்தார். மிதிலையின் அரசர் ஜனகர் வேதமெய் காண்பதில் பெருவிழைவுள்ள அரசமுனிவர் என பெயர் பெற்றிருந்தமையால் மிதிலை நோக்கி அவ்வழியே நாளும் முனிவர்கள் செல்லும் வழக்கம் இருந்தது. வந்து அவள் கையால் உணவுண்டு சென்ற இளவைதிகர்கள், முனிமைந்தர்கள் எவரும் அவள் உள்ளம் கவரவில்லை.


ஒருநாள் அவர் இல்லத்திற்கு வந்த யாக்ஞவல்கியர் அவள் இட்ட மணையில் அமர்ந்து இலையில் காத்யாயினி பரிமாறிய அன்னத்தை கையில் எடுத்ததும் அவள் மெல்லிய குரலில் “முனிவரே, நீர் நீர்த்தூய்மை செய்துகொள்ளவில்லை” என்றாள். அவர் விழிதூக்கி நோக்கிவிட்டு உண்ணத்தொடங்கினார். அவள் பிறிதொன்றும் சொல்லாமல் உணவு பரிமாறினாள். யாக்ஞவல்கியர் மாமுனிவர் என்றும் அவரை காத்யாயினி விரும்பக்கூடும் என்றும் எதிர்பார்த்திருந்த காத்யாயனர் ஏமாற்றம் கொண்டு விழிதிருப்பிக்கொண்டார்.

ஆனால் மறுநாள் காத்யாயினி “தந்தையே, எனக்கு யாக்ஞவல்கியர் முனிவரையே மணமகனாகப் பாருங்கள்” என்றாள். காத்யாயனர் வியந்து நோக்க “வேதத்தால் தூய்மை செய்யப்பட்டவர்களுக்கு பிறிதொரு தூய்மை தேவையில்லை என்று நேற்று உணர்ந்தேன்” என்றாள். “அவர் தன் தேவைக்குமேல் ஒரு பருக்கையும் உண்ணவில்லை. இலையில் ஒரு பருக்கையும் எஞ்சவைக்கவில்லை. ஒவ்வொரு கவளம் சோறும் பிறிதொன்று போலவே இருந்தன. ஒவ்வொரு கையசைவும் வாயசைவும் ஒருமைகொண்டிருந்தன. ஒவ்வொரு துளி உணவிலும் முற்றிலும் சுவையுணரப்பட்டது. உண்பது வேள்வி என நிகழ்வதைக் கண்டேன். வேள்வியாற்றுதல் என்பதன் உச்சம் செய்வதனைத்தும் வேள்வியாதலே” என்றாள்.


“ஆம், அவர் உணவில் சுவைகொண்டவர். ஊனுணவை விரும்பி உண்பவர் என்று சொல்லப்படுகிறது” என்றார் காத்யாயனர். காத்யாயினி புன்னகைத்து “நான் அவருக்கு வைத்த ஒரு கூட்டில் உப்பும் புளிப்பும் சேர்க்கவில்லை. வேப்பெண்ணையையே கலந்திருந்தேன். பிறிதொன்று இனியது. அவர் முகத்தில் இரண்டுக்கும் வேறுபாடே தெரியவில்லை. இரண்டிலும் சுவையறிந்தவர் பிரம்மத்தையே உண்கிறார்” என்றாள்.


யாக்ஞவல்கியரைச் சென்று கண்டு தன் மகளின் விழைவை உணர்த்தினார் காத்யாயனர். “தகுதியான பெண்ணின் விழைவை மறுக்கலாகாது. அவள் வயிற்றில் காத்திருப்பவர்களின் தீச்சொல்லுக்கு இடமாகும்” என்றார் யாக்ஞவல்கியர். அனற்சான்றாக்கி அவர் காத்யாயினியை மணந்தார். அவர்களுக்கு காத்யாயனர், சந்திரகாந்தர், மகாமேதர், விஜயர் என்னும் நான்கு மைந்தர்கள் பிறந்தனர். பின்னாளில் வேதம் முற்றுணர்ந்த முனிவர்கள் என அவர்கள் புகழ்பெற்றனர்.


யாக்ஞவல்கியருடன் காத்யாயினி பிருஹதாரண்யகத்தின் குடிலில் வாழ்ந்தாள். நாள்தோறும் பெருகிக்கொண்டிருந்த குருநிலையின் செல்வமும் மாணவர்களும் அவளால் ஆளப்பட்டன. ஆசிரியர்துணைவியை இறைவடிவம் என மாணவர்கள் வணங்கினர். அவள் அவருக்கு மந்தணத்தில் காதலியாகவும் அவைகளில் அறத்துணைவியாகவும் இடர்களில் அமைச்சராகவும் நோயில் அன்னையாகவும் திகழ்ந்தாள். ஆடுகளத் தோழனாகவும் ஆளும் கணவனாகவும் மைந்தருக்குத் தந்தையாகவும் அவர் அவளுடன் இருந்தார்.


ஆனால் அவளிடம் அவர் ஒருநாளும் வேதமெய்மையை பேசவில்லை. வேள்வியவைகளுக்கு அவளை கைத்துணைக்கு எனக்கூட அழைத்துச்செல்லவில்லை. அது கண்மறைத்த காதலால் என முதலில் அவள் எண்ணினாள். பின்னர் அன்னையென்றே அவளைக் காட்டிய குழவியரால் என நம்பினாள். பின்னர் உணர்ந்தாள் அவருக்கு அவள் ஓர் ஆத்மா என தெரியவில்லை என. ஒருமுறைகூட அவள் தன் விழைவை அவரிடம் சொல்லவில்லை.


SOLVALAR_KAADU_EPI_30


மைந்தரும் வேதம் கற்கச் சென்றபோது அவள் தனிமைகொண்டாள். அவர்களும் தந்தையின் விழிகளையும் அசைவுகளையும் பெற்றபோது முற்றிலும் தனித்தாள். கொல்லையில் பசுக்களிடமும் வந்தமரும் பறவைகளிடமும் மட்டும் பேசலானாள். சொல்லெடுக்காதவர்களின் விழிகளில் தெரியும் ஒளி அவளிடமும் தோன்றியது. சொல் எரிந்த உடல் உருகி எலும்புரு ஆகியது. கன்னங்கள் குழிந்தன. தோல் சுருங்கி பூசணம்படிந்தது. அவள் தேம்பல்நோய் கொண்டிருக்கிறாள் என்றனர் மருத்துவர். எந்த மருந்தும் அவளை நலம்பெறச் செய்யவில்லை.


யாக்ஞவல்கியர் அவளிடம் அன்புடனிருந்தார். அவள் நோய்நீங்கும்பொருட்டு புதிய மருத்துவர்களை நாளும் கொணர்ந்தார். அவள் உணவுகளை தானே தெரிவுசெய்தார். அவளுடன் இருக்க எப்போதும் ஏவல்பெண்டுகளை அமர்த்தியிருந்தார். ஆனால் அவளை அவர் அணுகியறியவே இல்லை. கனியும்தோறும் அகல்வதும் உறவுகளில் நிகழ்வதுண்டு. அது கனிபவர் அவ்வாறு தன்னை உணர்கையில் நிகழ்வது.



தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 12
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ – 3
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 23
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 17
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 16
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 88
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 79
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 77
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 62
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 60
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 57
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 56
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 25
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 76
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 71
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 59
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 45
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 91
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 87
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 86

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 17, 2016 11:30

August 16, 2016

மாஸ்தி வெங்கடேச அய்யங்காரின் ‘சிக்கவீர ராஜேந்திரன்’

masti-venkatesh-iyengar-folk-factory.img

மாஸ்தி


 


 


வரலாற்று நாவல் என்றால் என்ன என்று தமிழில் எளிய வாசகனிடம் கேட்டால் கல்கி, சாண்டில்யன் கதைகளைக் குறிப்பிடுவான். துரதிர்ஷ்டவசமாக சமீப காலம் வரை கல்வித்துறைசார்ந்த இலக்கிய விமரிசகர்களும் இதையே கூறிவந்தனர்.


ராஜா ராணி பற்றிய பாட்டிக்கதைகள் வரலாற்றுக் கதைகளா? ராஜாவுக்கு ராஜராஜ சோழன் என்றும் ராணிக்கு பெருந்தேவி என்றும் பெயரிட்டுவிட்டால் போதுமா? வரலாற்றுத் தகவல்களைப் பயன்படுத்தியதனால் மட்டும் ஒரு நாவல் வரலாற்று நாவல் ஆகிவிடுவதில்லை. வரலாறு மீதான அதன் ஆய்வுமுறையே அவ்வியல்பை தீர்மானிக்கும் அம்சமாகும்.


வரலாறு என்று இன்று நாம் கூறும்போது பொதுவானதும் தகவல்சார்ந்ததுமான கடந்தகாலச் சித்திரத்தையே குறிப்பிடுகிறோம். அது வெறும் தகவல் தொகுப்பு மட்டுமே. இத்தகைய வரலாற்று சித்திரம் நம் மரபில் இல்லை. இறந்தகாலத்தை நாம் தகவல்களாக ஞாபகம் வைத்திருக்கவில்லை. அறமதிப்பீடுகள் சார்ந்து தான் இறந்தகாலத்தை வகுத்தும் தொகுத்தும் வைத்திருக்கிறோம். ஒரு விழுமியத்தை சாரமாக முன்வைக்காத நிகழ்ச்சி எத்வும் நம் நினைவின் வரலாற்றுத் தொகுப்பில் நிலைநிற்பதில்லை.


ஆகவேதான் நமது வரலாறு முழுக்க ஐதீகங்களாகவும் புராணங்களாகவும் உள்ளது. ராஜராஜ சோழன் பற்றிய வரலாற்றுச்சித்திரம் நம்மிடம் இருக்கவில்லை. ராஜராஜன் குறித்த ஐதீகமே இருந்தது. ஐதீகம் என்பது அறநெறிகளை முதன்மைபடுத்தும் பொருட்டு மாற்றியமைக்கப்பட்டதும், செறிவூட்டப்பட்டதுமான வரலாறுதான். ஆகவே நம் மனதில் மரபு மூலம் வந்து சேர்ந்துள்ள ராஜராஜன் சிற்பிக்கு தாம்பூலம் சுருட்டித் தந்த சிவனருட் செல்வன். அவன் காலத்தில்தான் வலங்கை இலங்கை சாதியினரிடையே பெரும் பூசல்கள் தொடங்கின என்பது நம் மரபின் நினைவில் இல்லை.


மாறும் அறநெறிகளுக்கேற்ப ஐதீகங்களை ஒவ்வொரு சமூகமும் மாற்றியமைத்தபடியே உள்ளது. வாய்மொழி மூலமாகவே இந்த மாற்றம் நடைபெறும். சமூகத்தின் தேவைக்கும் மனநிலைக்கும் ஏற்ப ஐதீகத்தின் சில பகுதிகள் மேலும் அழுத்தம் பெறுகின்றன. சில பகுதிகள் கைவிடப்படுகின்றன. ராஜராஜ சோழனின் வரலாறு திராவிட இயக்கத்தால் மறுபுரிதலுக்கு உள்ளானபோது சிற்பவெற்றியான கலைக்கோயிலைப் படைத்தவன், கடாரம் கொண்டவன் என்ற சித்திரம் முதன்மைப்பட்டு சிவனருட்செல்வன் என்பது பின்னடைந்தது


இந்த மாற்றம் இயல்பாக நடப்பதில்லை. வரலாற்றாய்வு ஒரு பக்கம் இதை நிகழ்த்துகிறது. இலக்கிய படைப்புகள் அதை சமூகமனத்தில ஆழமாக நிறுவுகின்றன. ராஜராஜ சோழன் குறித்த நம் மனச்சித்திரம் கல்கியால், பொன்னியின் செல்வன் மூலம் உருவாக்கப்பட்டது. அரு ராமநாதனின் ராஜராஜ சோழன் நாடகம் மூலமும் ஏ.பி.நாகராஜன் -சிவாஜி கணேசன் கூட்டு உருவாக்கிய திரைப்படம் மூலமும் நிறுவப்பட்டது


அச்சு ஊடகம் வந்து, இலக்கியம் வெகுஜன மனநிலையுடன் நேரடியாக உரையாட ஆரம்பித்த பிறகு வணிக எழுத்து உருவாயிற்று. ஐதீகங்களை மறுபுனைவு செய்வது வெகுஜன எழுத்தின் முக்கியப் பணிகளில் ஒன்று ஆயிற்று. அதாவது மரபை நிகழ்காலத்திற்கு உவப்பாக, சமகாலத்துக் கருத்தியலுக்கு சார்பாக, மாற்றி புனைந்து கொள்வது. கல்கியும் சாண்டில்யனும் செய்தது இதையே. அவர்கள் எழுதியது வரலாற்றைப் பற்றி அல்ல; ஐதீகங்களைப் பற்றிதான். அவர்கள் படைப்புகளை வேண்டுமெனில் ‘ஐதீக நாவல்கள்’ எனலாம்.


அங்கும் பிரச்சனை எழுகிறது. அவை நாவல்கள் தாமா? வாழ்வை தொகுத்து பார்த்து தீவிரமான தேடலொன்றை நிகழ்த்துவதற்குரிய வடிவம் நாவல். மேற்குறிப்பிட்டப் படைப்புகளின் நோக்கம் கேளிக்கை. மரபை நமது பகற்கனவுக்கு ஏற்ப மாற்றி ரசிக்கும் உத்தியே அவற்றில் உள்ளது. எனவே மேற்கத்திய இலக்கிய வடிவ நிர்ணயப்படி அவற்றை உணர்ச்சிக் கதைகள் (Romances) என்று கூற முடியும்.


வரலாற்று நாவலின் முதல் இயல்பு அது தகவல்களிலான, புறவய வரலாற்றை தன் விளைநிலமாகக் கொண்டிருக்கும் என்பதே வரலாற்றுப் பார்வையில் உள்ள இடைவெளிகளை தன் புனைவு மூலம் நிரப்புவதே வரலாற்று நாவல் என்பது பொதுவான ஒரு வரையறை. ஏன் அவ்வாறு நிரப்ப வேண்டும் என்பது அடுத்த கேள்வி. அவ்வாறு வரலாற்றில் ‘தலையிடுவதனூடாக’ அது அவ்வரலாற்றுப் பார்வையை விமரிசிக்கவோ மாற்றியமைக்கவோ முயல்கிறது. ஆகவே வரலாற்றில் கற்பனை மூலம் ஊடுருவி வரலாற்றுக் கட்டுமானத்தின் அடிப்படைபார்வையை விமர்சித்து, மாற்றியெழுத முற்படுவதே வரலாற்று நாவலாகும்.


ஆகவே பொதுப்பார்வையின் இடைவெளிகளை நிரப்புவதே வரலாற்று நாவலின் பணியாகும். உதாரணமாக நமது அதிகாரப்பூர்வ சோழர் வரலாற்றில் ராஜராஜன் பெரியகோவிலைக் கட்டினான் என்று மட்டுமே உள்ளது. அதற்குரிய செல்வம் எப்படி சுரண்டி சேகரிக்கப்பட்டது, அக்கால சமூகச் சூழலில் அதன் விளைவுகள் என்ன, என்று ஒரு நாவலாசிரியன் கற்பனை செய்து எழுதலாம். மன்னனை மையம் கொண்ட ஒரு பார்வையை மக்களை மையம் கொண்டதாக அவன் மாற்றுகிறான். தமிழில் இவ்வாறு வரலாற்றை சமானியர்களை பெரிதும் முதன்மைப் படுத்தி எழுத முற்பட்ட நாவல்கள் பிரபஞ்சனின் மானுடம் வெல்லும், வானம் வசப்படும், என்ற நாவல் தொடர்கள்.


பிரபஞ்சன் பேட்டியன்றில் வரலாற்று நாவல் குறித்த பிரக்ஞையை தன்னிடம் உருவாக்கிய இரண்டு நாவல்கள் என்று கூறியிருக்கிறார், ஒன்று அலக்ஸி தல்ஸ்தோயின் ‘சக்கரவர்த்தி பீட்டர்’ சிக்க வீரராஜேந்திரன்.  எஸ்.ராமகிருஷ்ணன் மொழி பெயர்ப்பில் தமிழில் வெளிவந்துள்ளது. இன்னொன்று ‘சிக்கவீர ராஜேந்திரன்’. ஸ்ரீரங்கத்து தமிழரான மாஸ்தி வெங்கடேச அய்யங்கார் எழுதிய கன்னட நாவல்.


சார்பதிவாளராக கர்நாடகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று, தன் 96வது வயதில் மறைந்த மாஸ்தி கன்னடத்தில் எழுதியது அவரது அதிர்ஷ்டம். ஓர் இலக்கியவாதிக்கு இந்தியாவில் சாத்தியமான எல்லா கௌரவங்களையும் அவர் அங்கு அடைந்தார். `சிக்கவீர ராஜேந்திரனுக்கு 1985ல் `பாரதீய ஞானபீட விருது’ கிடைத்தது. அவரது புனைபெயர். `ஸ்ரீனிவாச’ .இறுதிகாலத்தில் அசல் பெயரில் எழுதினார். ‘சென்ன பசவ நாயக்கன்’ அவருடைய இன்னொரு வரலாற்று நாவல். அது தமிழில் மொழி பெயர்க்கப்படவில்லை.


மாஸ்தியின் மொழி பெயர்ப்பாளரான ஹேமா ஆனந்த தீர்த்தன் கிளுகிளுப்பான பல கதைகளையும் மாத நாவல்களையும் எழுதிய தமிழ் எழுத்தாளர். தன் வாழ்நாளின் இறுதியில் இம் மொழிபெயர்ப்பே தன் வாழ்நாளின் சாதனை என்று அவர் கூறி இருக்கிறார்.


தன் 90வயதில் ஞானபீடப்பரிசு பெற்றபோது மாஸ்தி தன் ஏற்புரையில் தனக்கு மதத்தில் இருந்த நம்பிக்கை முற்றாக மறைந்துவிட்டது என்றார். மனித குலத்தின் மேலான முழுமையான வாழ்வு விஞ்ஞானம் மூலமே சாத்தியம் என்று இப்போது தோன்றுகிறது என்றார். விஞ்ஞானமென்றால் வாழ்க்கையைப்பற்றிய நிரூபணம் சார்ந்த தர்க்கபூர்வமான புறவயப் பார்வையே என்று விளக்கினார்.


மாஸ்தியின் படைப்புலகை அணுக திறந்த வாசல் இதுவே. அவரது எழுத்துகளில் எவ்விதமான யதார்த்த மீறல்களும் இல்லை. கனவுகளும் இலட்சியவாதிகளும் இல்லை. தீவிர மனஎழுச்சிகளோ நெகிழ்வுகளோ இல்லை. அனைத்து தளங்களிலும் சமன்படுத்தப்பட்ட, தர்க்கபூர்வமான, முற்றிலும் யதார்த்தமான நாவல்கள் அவருடையவை.


*


Portrait_of_Chikka_Veera_Rajah,_the_last_King_of_Coorg

சிக்க வீர ராஜேந்திர குழந்தையாக


 


 


கர்நாடக மாநிலத்துடன் இன்று இணைந்துள்ள குடகு (அல்லது கூர்க்) வரலாறு தொடங்கும்போதே தனி நாடாகவே இருந்து வந்துள்ளது. அதன் மீது மைசூர் ஆட்சியாளர்களின் ஆதிக்கம் அவ்வப்போது இருந்து வந்தது என்றபோதிலும் கூட குடகு மலைப் பகுதியின் நிலரீதியான தனித்தன்மையும், அங்குள்ள குடகர்களின் இனரீதியான சிறப்படையாளமும், தனிமொழியும் அவர்களை எந்த மையநில கலாச்சாரத்துடனும் இணையவிடவில்லை. ஒருபக்கம் மலையாளநாடு, ஒருபக்கம் மைசூர், ஒருபக்கம் மங்கலூர் நாயக்க அரசுகள் என எப்போதும் எதிரிகளினால் சூழப்பட்டிருந்தமையால் போர்சன்னத்ததுடனேயே குடகு இருந்துவந்தது.


குடகு மன்னன் உண்மையில் பற்பல குலத்தலைவர்களினாலும், அவர்களுடைய குல ஆச்சாரங்களினாலும் கட்டுப்படுத்தப்படுபவன். இந்த ‘ஜனநாயக’ அம்சம் குடகு மன்னனுக்கும் அவனது குடிச்சமூகத்திற்கும் இடையே நேரடியான உறவை உருவாக்கியது. ஆகவே பிற பகுதிகளைப் போல மன்னனை வென்று ஆட்சியைப் பிடிப்பது குடகில் சாத்தியமாகவில்லை. குடகின் மன்னன் உண்மையில் ஒரு சிறு பழங்குடித்தலைவன் மட்டுமே என்று கூறலாம். பெரிய தேசங்களிலும் பேரரசுகளும் உருவாகும்போது. மன்னன் படிப்படியாக தனிமைப்படுகிறான். வரம்பில்லா அதிகாரம் உடையவன் ஆகிறான். அது வேறுவகையான ஆட்சிமுறைகளுக்கு வழிவகுக்கிறது.


குடகின் வல்லமை மிக்க மன்னனாகிய தொட்ட வீர ராஜேந்திரனுக்கு தேவம்ம்மா என்று ஒரே ஒரு பெண் குழந்தைதான். தனக்குப்பின் தேவம்மா ஆட்சி செய்யவேண்டுமென்று தொட்ட வீர ராஜேந்திரன் விரும்பினான். தொட்ட வீர ராஜேந்திரனுக்குப்பின் தேவம்மா ஆட்சியமைத்தபோதிலும்கூட தொட்ட வீர ராஜேந்திரனின் தம்பி லிங்க ராஜன் குடகின் இனக்குழுத்தலைவர்களையும் அமைச்சர்களையும் கவர்ந்து அவளை ஆட்சியில் இருந்து நீக்கிவிட்டு அவனே அரசனானான். தன் மகன் சிக்க வீரராஜேந்திரனுக்கு தனக்குப்பின் பட்டம் கிடைக்கவேண்டுமென்று அவர்களிடம் உறுதியும் பெற்றுக் கொள்கிறான்.


சிக்கவீர ராஜேந்திரன் இயல்பிலேயே கோழை. மிகச்சிறு வயதிலேயே அவன் லிங்க ராஜனின் சதியாலோசனைகளைக் கண்டு அஞ்சியும் ,மன்னனாக முடியுமா என்னும் ஏக்கத்திலும் வளர்கிறான். அவனை எவருமே கவனித்து வளர்க்கவில்லை. ஆகவே அவன் குடிகாரனாக, பெண்பொறுக்கியாக ஆணவமும் அற்பத்தனமும் கொண்டு வளர்கிறான். அவன் வாழ்க்கையில் நடந்த ஒரே நல்ல விஷயம் குடகர்குலத்தைச் சேர்ந்தவளான கௌரம்மா அவனுக்கு மனைவியானதுதான். ஆனால் அதனால் பயனில்லாதபடி அவனுடைய குணம் ஏற்கனவே கெட்டுபோய்விட்டிருந்தது.


ஆங்கிலேயருக்கு கப்பம் கட்டும் தேசமாக அதற்குள் மாறிவிட்டிருந்தது. எனவே பாதுகாப்பு சம்பந்தமான சவால்கள் ஏதும் இருக்கவில்லை. குடகின் பொருளாதாரம் படிப்படியாக சரிந்து வந்தாலும் அது மேல்மட்டத்தில் உறைக்க ஆரம்பிக்கவில்லை. விளைவாக முழுமையான செயலின்மைக்கும் சோம்பலுக்கும் அரசன் ஆளாகிறான். அவனுடைய முரட்டுத்தனமும் பொறுப்பின்மையும் வளர்கின்றன. மிதமிஞ்சிய போகம் உடலையும் ஆன்மாவையும் சிதைக்கிறது. லிங்கராஜனுக்கு சோரபுத்திரனான நொண்டி பசவன் அனாதையாக சவரக்காரர் வீட்டில் வளார்கிறான். மிகுந்த மதிக்கூர்மையும் தந்திரமும் குரூரமும் கொண்டவனாகிய நொண்டி பசவன் சிறுவயதிலேயே சிக்க வீரராஜேந்திரனுக்கு தோழனாகி அவனை சகல இருட்பாதைகள் வழியாகவும் அழைத்துச் செல்கிறான்.


படிப்படியாக பிரச்சனைகள் பெருகி வருகின்றன. நாவல் தொடங்கும் கட்டத்தில் வீழ்ச்சியின் விரைவுக்கட்டத்தில் பிரச்சினைகளின் நடுவே நிற்கிறான் சிக்க வீரராஜேந்திரன். தங்கை தேவம்மாவின் கணவன் பசவராஜன் தன் இடத்தைப்பறிக்க கூடுமென உணர்ந்து அவளை சிறைவைத்திருக்கிறான். வலிமை மிக்க குடகுத்தலைவர்களின் பெண்கள் மீது ஆசைப்பட்டு அவர்களைப் பகைத்துக் கொள்கிறான். மிதமிஞ்சிய ஊழல்கள் மூலம் பொருளாதாரச் சிக்கலில் இருக்கிறான். வெள்ளையருடனான உறவுகளை சீரழித்துக் கொண்டிருக்கிறான். மந்திரிகளை அவமதித்து அவர்களின் வெறுப்பை குவித்து வைத்திருக்கிறான். இந்நிலையில் ஒருபோதும் செய்யக்கூடாதவற்றையே தன் ஆணவம் மற்றும் மூர்க்கத்தனம் காரணமாக செய்தபடியே செல்கிறான் சிக்க வீரராஜேந்திரன்.


ஏறத்தாழ பதினான்கு வருடகாலம் சிக்க வீரராஜேந்திரன் ஆட்சி செய்கிறான். ஒரு கட்டத்தில் அவனுடைய ஆட்சி தேவையில்லை என்று அவனது அமைச்சர்களும் குடகு சமூகமும் கருதும் நிலை ஏற்படுகிறது. இம்மாதிரியான தருணங்களைத் தவற விடாத ஆங்கிலேயர் உட்புகுந்து குடகின் அதிகாரத்தை கைப்பற்றுகிறார்கள். நிகழ்ச்சிகள் அவர்களுக்கு ஏற்பவே அமைகின்றன. அல்லது சிக்க வீர ராஜேந்திரன் அமைத்துத் தருகிறான்


மன்னனின் தங்கை தேவம்மாவும் மைத்துனரும் ஆங்கிலேயரிடம் சரண் அடைகிறார்கள். அவர்களின் குழந்தைமட்டும் தவறிவிழுந்து சிக்கவீர ராஜேதிரன் கையில் சிக்கிவிடுகிறது.அவர்களை விட்டுத் தரும்படி மன்னன் கோருகிறான். ஆங்கிலேயர் அதற்கு ஒப்பவில்லை. ஏற்கனவே ஆங்கிலேய பகுதியில் சரண் அடைந்த சென்ன வீரனை விசாரணைக்கு என அழைத்துக்கொண்ட சிக்க வீரராஜேந்திரன் உடனே அவனை சுட்டு தள்ளினான். அவ்விசாரணை பற்றி ஆங்கிலேயர் கேட்ட எந்த கேல்விகளுக்கும் அவன் பதில் சொல்லவில்லை. ஆங்கிலேயர் பால் கோபம் கொண்ட சிக்க வீரராஜேந்திரன் அந்தக்குழந்தையைக் கொல்கிறான். ஆங்கிலேயரின் தூதரான கருணாகர மேனன் சிக்க வீரராஜேந்திரனால் கைதுசெய்யப்படுகிறான்


ஆங்கிலேயப்படைகள் கர்னல் ·ப்ரேசர் தலைமையில் குடகை சுற்றி வளைக்கின்றன. தன் முதலமைச்சர் போபண்ணாவே ஆங்கிலேயருடன் சேர்ந்துகொள்வதை சிக்க வீரராஜேந்திரன் காண்கிறான். குடகு வீழ்கிறது. நொண்டி பசவன் கொல்லப்படுகிறான். சிக்கவீர ராஜேந்திரன் கைதுசெய்யபட்டு நாடுகடத்தப்பட்டு லண்டனில் வீட்டுச்சிறையில் இருந்து மடிகிறான். அவன் மகள் மதம் மாறி ஆங்கிலேய காப்டன் காம்பெல் என்பவரை மணம் புரிந்துகொள்கிறாள். அக்குடும்பமே குடகு வரலாற்றில் இருந்து மறைந்து மறக்கப்பட்டு போகிறது. ‘சிக்கவீர ராஜேந்திரன்’ நாவலின் ‘கதை’ இதுதான்.


ஏறத்தாழ தொண்ணூறு சதம் அசல் சரித்திர சம்பவங்களை ஒட்டியே எழுதப்பட்ட நாவல் இது. தகவல்களை கருவாக தொகுத்து படைப்பை வடிவமைப்பதில் வரலாற்றாய்வாளரின் முறைமையையும் நேர்த்தியையும் மாஸ்தி கையாள்கிறார். பிரிட்டிஷ் ஆட்சியாலரின் கடிதங்கள்னப்படியே அளிக்கப்பட்டுள்ளன. ராஜதந்திர நடவடிக்கைகள் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் மிக நம்பகமாக விரிவாக நாவலில் அளிக்கப்படுகின்றன.


இந்நாவலின் வழியாக மாஸ்தி உண்மையான வரலாற்றில் ஆற்றும் ‘தலையீடு’ என்ன? வரலாற்றில் இயங்கு முறை குறித்த நேர்த்தியான சித்தரிப்பு ஒன்றை அவர் தருகிறார். ஒரு வரலாற்று நூலில் ‘சிக்கவீர ராஜேந்திரன் குடகின் கடைசி மன்னன். நிர்வாகச் சீர்கேடினால் பதவி இழந்து நாடுகடத்தப்பட்டான்’ என்ற ஒற்றை வரியை மட்டுமே காணமுடியும். ஆனால் புனைவு மூலம் இதை விரிவு படுத்துகையில் நாம் காண்பது ஒரு பெரிய மானுட நாடகம்.


மாஸ்தியின் நாவலில் சிக்கவீர ராஜேந்திரன் ஒரு மையப்புள்ளி. ஒரு பக்கம் பசவன்,. பகவதி முதலிய சீரழிவு சக்திகள் அவனை சரிவை நோக்கி இழுக்கின்றன. மறுபக்கம் அவன் மனைவி கவுரம்மாஜி, அமைச்சர் போபண்ணா, லட்சுமிநாராயணய்யா போன்ற நலம்நாடும் சக்திகள் அவனை மீட்க போராடுகின்றன. இருபக்கங்களிலுமாக அலை மோதி படிப்படியாக அவன் சரிந்து மறைகிறான். ஒரு வரலாற்று நிகழ்வு முழுமையடைகிறது. மலைமீதிருந்து ஒரு பாறை சரிகிறது, அது புவியின் ஈர்ப்பு விதி. ஆனால் அணுகும் பார்வையால்தான் அச்சரிவில் நசுங்கும் உயிர்களின் வலி தெரியவருகிறது.


குடகு ஆங்கிலேயர் கரங்களுக்கு போனது தவிர்க்க முடியாத ஒரு வரலாற்று நிகழ்வு. அத்தனை தனியரசுகளும் அப்படி சரிந்தன. ஆகவே, எதற்கும் சிக்கவீர ராஜேந்திரனை குறை கூற முடியாது. வரலாறு எனும் பகடையில் ஒரு காய்தான் அவன். ஆனால் அவன் பலவீனங்களும் பலங்களும் உடைய மனிதன். அவனது ஒவ்வொரு சரிவிலும் அவனுடைய பங்கும் உள்ளது. வரலாறு சிக்கவீர ராஜேந்திரன் உருவாக்கியதா இல்லை அவன் வரலாற்றை உருவாக்கினானா? இதே கேள்வியை வரலாற்றில் எல்லா மன்னர்கள் மீதும் விரிவடையச் செய்யலாம். ‘போரும் அமைதியும்’ நாவலில் தல்ஸ்தோய் எழுப்பிய வினாதான் அது.


அரண்மனை, நிர்வாகம், அந்தப்புரம் என்றெங்கும் நமது ராஜாராணி கதைகள் மூலம் நாம் உருவாக்கி வைத்துள்ள கற்பனைகளை சர்வசாதாரணமாக நொறுக்கிச் செல்லும் நாவல் இது. மன்னன் ஒரு மனிதன்தான் என்றால் அரண்மனையும் ஒரு வீடுதானே? சிக்கவீர ராஜேந்திரனின் பலவிதமான உறவுச் சிக்கல்கள் மிக நுட்பமாக இந்நாவலில் காட்டப்படுகின்றன. எதற்கும் கட்டுப்படாத அவனால் லட்சுமி நாராயணய்யா, உத்தய்ய தக்கன் போன்ற முதியவர்களை எவ்வகையிலும் எதிர்த்து பேச முடியவில்லை. விரும்பிய பெண்ணை சிறைப்பிடித்து அடைத்து வைக்கும் அவன் தொட்டவ்வா போன்ற ஒரு தாயின் முன் கூசி தலைகுனிகிறான். அவனுள் உறையும் மனிதனை அவன் பலவீனங்கள் தொடர்ந்து சிதறடிக்கின்றன


சிக்கவீர ராஜேந்திரனின் வீழ்ச்சியை நாம் அவனுடைய கோணத்திலும் அனுதாபத்துடன் நோக்க வாய்ப்பு அளித்திருப்பதே இந்நாவலின் வெற்றியாகும். மன்னர் குலத்தில் பிறக்கும் குழந்தை அன்னையின் அணைப்பும் தந்தையின் வழிகாட்டலையும் பெற்று வளர்வதில்லை. அது சேடிகளின் செவிலிகளின் அணைப்பில் வளர்கிறது. அவர்கள் அக்குழந்தைக்கு அடிமைகளாகவே இருக்கிறார்கள். அவர்கள் அவனை கண்டிப்பதும் தண்டிப்பதும் இல்லை. விளைவாக தனக்கு சுற்றும் தன் சொல்லை ஆணையாக ஏற்று வாழும் மானுடக்கூட்டத்தை கண்டு வளரும் அக்குழந்தை மிதமிஞ்சி வீங்கிய அகந்தையுடன் உருவாகிறது. அகந்தை அதன் நற்குணங்களையெல்லாம் மறைத்து விடுகிறது. அகந்தை சீண்டப்படுகையில் குரூரமாகிறது. புகழப்படுகையில் முட்டாள்தனமாகிறது.


உண்மையில் சிக்கவீர ராஜேந்திரன் அவனது சூழலால் உருவாக்கப்பட்ட ஒரு பொம்மை. அச்சூழலின் மொத்த கனத்தையும் அதுவே தாங்குகிறது. நசுங்கி உடைகிறது. அவ்வாறு உடைந்ததன் குற்றத்தையும் வரலாறு அதன் மீதே சுமத்தி அவனை நிரந்தரமாக தண்டித்துக் கொண்டிருக்கிறது. சொல்லப்போனால் அச்சூழலை உருவாக்கியதன் பொறுப்¨ப்பம் அவன் மீதே சுமத்திவிடுகிறது.


*


Chikka Veerarajendra - The Last King of Coorg with the princess Gowramma

சிக்கவீர ராஜேந்திரன். லண்டனில், நாடுகடத்தப்பட்ட நிலையில், தன் மகளுடன்


 


குடகின் நிர்வாகஅமைப்பை உருவாக்கி நிலை நிறுத்தும் அதிகாரங்கள், உணர்வுகள், குறியீடுகள், மரபுகள் அனைத்தும் இந்நாவலில் பலவகையில் காட்டப்படுகின்றன. சார்ந்த வாசகன் கற்பனை வழியாக இந்திய மன்னராட்சி முறையின் பல்வேறு இயல்புகளை இந்நாவல் வழியாக அடைய முடியும். வரலாறு குறித்த நமது உருவகங்களை பல்வேறு கோணங்களில் உடைத்து ஆராயமுடியும். அதுவே இந்நாவலை இந்திய மொழிகளில் எழுதப்பட்ட முக்கியமான நாவல்களில் ஒன்றாக ஆக்குகிறது.


அரசு என்பது புறவயமான ஓர் அமைப்பு அல்ல என்பதை இந்நாவல் காட்டுகிறது எனலாம். அது சில நம்பிக்கைகள் மரபுகள் மனோபாவங்கள் ஆகியவற்றின் விளைவாக உருவாகிவருவதாகும். சிக்கவீர ராஜேந்திரன் அற்பன் அயோக்கியன் என்பதை குடகே அறியும். ஆனாலும் அம்மக்களும் அமைச்சர்களும் அரச விஸ்வாசத்துடன்தான் இருக்கின்றனர். மன்னனின் கொடுமையால் தன் நீதியுணர்வு உலுக்கபடும்போதுகூட அமைச்சர் லட்சுமி நாராயணய்ய ராஜதுரோகத்தை எண்ணிப்பார்க்க முடியாதவராகவே இருக்கிறார்.


ஆனால் ஓர் எல்லை இருக்கிறது. குடிமக்களை வதைப்பது அவர்கள் வீட்டுப்பெண்களை கற்பழிபது எனறு அவனது வெறி எல்லைகடக்கும்போது ஒவ்வொருவராக விலகிச்செல்கிறார்கள். சாத்வீக உருவமான ரேவண்னச்செட்டியின் மனமுறிவு அதன் முதல் அடிக்கல்நகர்வு. அதன் பின் குடகுமலை பழங்குடித்தலைவனாகிய உத்தய்ய தக்கனின் விலகல். கடைசியில் போபண்ணாவின் விலக்கம். அதன் பின் சிக்கவீர ராஜேந்திரன் ஒரு உளுத்த மரம்தான் . வெள்ளையர் சற்று உலுக்கினாலே போதும்.


வெள்ளையர் இந்தியாவைக் கைப்பற்றியதன் பின்னனியில் சிக்கவீர ராஜேந்திரனைப்போன்ற பொறுப்பில்லாத குரூரமான மன்னர்களின் பங்களிப்பு மிக அதிகம். பிரிட்டிஷ் அரசாட்சியை இந்திய மக்கள் விரும்பி நன்றியுடன் ஏற்றுக்கொண்ட இடங்களே அதிகம். மக்கள் பிரிட்டிஷாருக்கு எதிராக கிளர்ந்தெழுந்த சரித்திரம் இக்காலகட்டத்தில் இல்லை. பலவீனமான மன்னர்களைக் கைக்குள் போட்டிருந்த நொண்டி பசவனைப்போன்றவர்களும் அதிகம்.


இதே கதை கேரள வரலாற்றிலும் நடந்தது. கேரள வரலாற்றில் இதேபோன்று ஜயந்தன் நம்பூதிரி என்பவர் மன்னரை ஆட்டிப்படைத்து போலி ஆட்சி நடத்தினார். கொடுமை தாளாமல் மக்கள் திவான் வேலுத்தம்பி தளவாய் தலைமையில் கிளர்ந்தெழுந்தார்கள். போபண்ணாவைப்போலவே பிரிட்டிஷ் உதவியை வேலுத்தம்பி நாடினார். ஆனால் பிரிட்டிஷார் ஆட்சியை எடுத்துக்கொள்வதை எதிர்த்து போராடி கொல்லப்பட்டார்.


*


1

விக்டோரியா கௌரம்மா. சிக்கவீர ராஜேந்திரனின் மகள். ஆங்கிலேயரால் லண்டனுக்கு அனுப்பப்பட்டு மதமாற்றம் செய்யப்பட்டாள்.


 


இந்நாவலில் மிக உயிர்துடிப்பான கதாபாத்திரம் சிக்க வீர ராஜேந்திரனின் மனைவியான கௌரம்மா. அழகும் கம்பீரமும் நிறைந்த குடகுப்பெண் அவள். எந்நிலையிலும் அவளுடையசுய கௌரவத்தை அவள் இழப்பதில்லை. ஆனால் சிக்கவீர ராஜேந்திரன் அவளை இழிவாக நடத்துவதை வசைபாடுவதை மிகுந்த பொறுமையுடன் சகித்துக் கொள்கிறாள். அவனுடைய உள்ளூர உறையும் தார்மீகத்தை பிடித்துக்கொண்டு அவனை கட்டுப்படுத்த மீண்டும் மீண்டும் முயல்கிறாள்


நாவலில் ஒருமுறை சிக்க வீர ராஜேந்திரன் நோயுற்று படுக்கையில் கிடக்கும்போது கௌரம்மா அவனை உடனிருந்து தாசிபோல கவனித்துக் கொள்வதை சிகிழ்ச்சை அளிக்க வந்த வெள்லைக்கார டாக்டர் பார்க்கிறார். சிக்க வீர ராஜேந்திரனுக்கு அளிக்கப்படும் மருந்துகளை அவளே சற்று குடித்துப் பார்த்துவிட்டுத்தான் கொடுக்கிறாள். டாக்டர் துரை இந்த உதவாக்கரையை இப்படி பேணுகிறாளே, இவளுக்குப் பெண் என்ர சுயமரியாதையே இல்லையா’ என்று எண்ணி இளக்காரமே கொள்கிறாள்.


ஆனால் அசாதாரணமான பொறுமையும் மதிவன்மையும் கொண்டவள் கௌரம்மா. ஒருகட்டத்தில் அவளே ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொள்வது நல்லது என்ற எண்ணம்கூட அமைச்சர்களுக்கு உருவாகிறது.அவள் அதை ஏற்கவில்லை. உள்ளூர அவளுக்கு ஒன்று தெரியும், ஆண்மைய சமூகமான குடகு அவளை உள்ளூர ஏற்காது. தேவம்மா எவ்வகையிலும் மேம்பட்டவளாக இருந்தும் கூட குடகின் வீரர்குழுவும் அமைச்சர்குழுவும் எந்தவிதமான தகுதியும் இல்லாத லிங்கராஜனையும் சிக்கவீர ராஜேந்திரனையும் அவர்கள் ஆண்கள் என்பதனாலேயே தொட்ட வீர ராஜேந்திரனின் விருப்பத்தையும் மீறி மன்னர்களாக ஏற்றனர். அவ்வகையில் குடகின் விதியை தீர்மானித்தவர்கள் அவர்களே.


சரிந்தபடியே இருக்கும் சிக்க வீர ராஜேந்திரனின் அரசை தூக்கி நிறுத்திவிட தன் கடைசி சக்தியையும் செலவிடுகிறாள் கௌரம்மா. சொல்லப்போனால் அவளுடைய வாழ்க்கையே கணவனின் சரிவுக்கு அணைகொடுக்கும் இடைவிடாத முயற்சிமட்டுமே. கணவனை மீண்டும் மீண்டும் குடகின் உண்மையான அதிகார அமைப்புடன் சமரசம் செய்துவைக்க அவள் முயல்கிறாள். எல்லா முயற்சிகளிலும் முழுமையான தோல்வியை கண்டு சிக்கவீர ராஜேந்திரனின் முழு வீழ்ச்சியை கண்டு மனம் உடைந்து இறக்கிறாள்.


என் வாசிப்பு நினைவில் இக்கட்டுரையை எழுதிய முதல்பிரதியில் கௌரம்மாவின் பெயரை நஞ்சம்மா என்றே எழுதிருந்தேன். அது பைரப்பாவின் ஒரு குடும்பம் சிதைகிறது நாவலில் வரும் கதாநாயகியின் பெயர். இவ்விரு கதாபாத்திரங்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமை பிரமிப்பூட்டுவது. வாழ்நாளெல்லாம் இருவருமே முரட்டுமுட்டாளான கணவனை பாதுகாத்து தங்கள் நிலையை தக்கவைத்துக்கொள்ள போராடினார்கள்.அவர்களின் வீரம் விவேகம் பொறுமை அறிவு அனைத்துமே அதில் வீணாகச் செலவானது. அவர்கள் இருவரின் வாழ்க்கையும் துன்பியல் காவியத்தன்மை கொண்டதுதான்.


கௌரம்மா அரசி. நஞ்சம்மா எளிய கிராமத்துப்பெண். கௌரம்மா தன் மகளின் அரசபதவிக்காக வாழ்நாளெல்லாம் போராடினாள்.நஞ்சம்மா குழந்தைகளின் வயிறு நிறைவதற்காகவே உழைத்து உழைத்து தேய்ந்தாள். ஆனால் இரு பெண்களுமே தங்கள் கம்பீரத்தை இழக்கவில்லை. நஞ்சம்மாவும் அரசிக்குரிய மாண்புடனேயே வாழ்ந்தாள். இவ்விரு கதாபாத்திரங்களையும் ஒப்பிடும்தோறும் வாழ்க்கையின் இருமுகங்கள் மனக்கண்ணில் விரிகின்றன, இரண்டிலும் நிறைந்திருக்கும் ஒரே விழுமியமும் தெரிகிறது.


*


‘சிக்க வீர ராஜேந்திரன்’ நாவலின் முக்கியமான கவற்சி ஒன்று உண்டு. சிக்க வீர ராஜேந்திரன்கைதாகி வேலூர் சென்று அங்கிருந்து லண்டன் சென்று மறைந்தபின் பலவருடங்கள் கழித்து இதை எழுதிய ஆசிரியரின் கூற்றாக மிஈண்டும் நீளும் பகுதிதன அது. நாவல் உருவான கதை என விரியும் அப்பகுதி இந்நாவலுக்கு ஒரு சிறந்த மீபுனைவு [ மெட்டா ·பிக்ஷன்] என்னும் தளத்தை அளித்துவிடுகிறது. நாவல் முழுக்க ஊடாடிய பல நுண்ணிய சரடுகள் ஒன்றாக இணைந்து நாவலை அடுத்த கட்டத்துக்குத் தூக்குகின்றன.


உத்தய்ய தக்கனின் கொள்ளுப்பேரன் உத்தய்யனுடன் குடகுக்குச் செல்லும் ஆசிரியர் குடகின் கடைசி மன்னன் சிக்க வீர ராஜேந்திரனின் கதையை க் கேள்விப்படுகிறார். அப்போது கூட இருந்த நண்பர்களில் ஒருவர் லண்டன் செல்கிறார். அங்கே யதேச்சையாக சிக்க வீர ராஜேந்திரனின் மகள் விக்டோரியா கௌரம்மாவின் மகள் எடித் சாது கௌரம்மாவைக் காண்கிறார். அங்கே கௌரம்மாவின் ஓவியத்தைக் கண்டு அதில் தெரியும் கம்பீரத்தை உணர்ந்து கைகூப்பி எழுந்துநிற்கிறார். ‘விதி வேறு மாதிரி இருந்திருந்தால் குடகே என்னுடையதாக இருந்திருக்கலாம்’ என்கிறாள் எடித்.


எடித்தின் அம்மா அவளது மரணப்படுக்கையில் தன் குழந்தை ஆணாக இருந்தால் உத்தய்யன் என்றும் பெண்ணாக இருந்தால் சாது என்றும் பெயரிடவேண்டும் என்று கோருகிறாள். அதுவரை நாவலில் மிக மௌனமாக ஓடிய ஒரு அதிதீவிரமான காதலின் சரடு சட்டென்று வெளிபப்டும் இடம் அது. தன் அம்மாவை அப்பா வெறுத்துவிட்டார் என்கிறாள் எடித். அம்மாவின் விலைமதிப்பற்ற நகைகளுடன் வங்கிக்குச் சென்றவர் திரும்பவில்லை. கொல்லப்பட்டிருக்கலாம், தப்பிச்சென்றிருக்கலாம். நுண்ணிய மௌனங்களுடன் சட் சட்டென்று விரியும் பல தளங்கள் கொண்ட வரலாற்றுச் சித்திரம் இது. இங்கிருந்து நாவலின் முதல் அத்தியாயத்துக்கு , முதல் வரிக்கு வரும்போது நாவல் முற்றிலும் புதிதாக தொடங்குவதைக் காணலாம்.


இந்த ஒட்டுமொத்த வரலாற்றின் மாபெரும்சோக நாயகி விக்டோரியா கௌரம்மாதான். நினைவறியா நாளிலேயேஅவர் நாடுகடத்தப்படுகிறார். முற்றிலும் அன்னியர்களுடன் வளர்கிறார். கட்டாய மதமாற்றம். நாடுகடத்தப்பட்ட பஞ்சாப் இளவரசர் துலிப் சிங்கை மணக்க விரும்புகிறார். அந்த மணம் நடக்கக்கூடாது என்பதற்காக கேப்டன் கேம்பலுக்கு கட்டாய மணம் செய்விக்கப்படுகிறார். அன்னிய நிலத்தின் குளிரில், அறியாத ஆசாரங்களில் சிக்கி வதையுண்டு சாகிறார். அன்னிய நிலத்தில் அவருக்காக ஒரு சிலுவை மட்டும் எஞ்சுகிறது. ஒரு அற்புதமான இரண்டாம் பாகத்துக்கான வாய்ப்புள்ள உண்மைக்கதை இந்நாவல். எவரேனும் எழுதலாம்.


 


*


மாஸ்தி உத்வேகமூட்டும் கதைசொல்லியல்ல. முதிர்ந்த தாத்தா ஒருவர் பற்றின்றிச் சொல்லிச்செல்வதுபோன்ற பாவனையில் குறைவான வர்ணனைகளுடன் கதைசொல்கிறார். தல்ஸ்தோய்த்தனமான எளிய நடை. அவ்வபோது ஆசிரியர் கூற்றாக வரும் வரிகளிலும் தல்ஸ்தோய்க்குரிய எளிமையும் விவேகமும் தெரிகிறது .”அரண்மனையிகளில் எப்போதும் அபின் முதலானவை இருக்கும். அரண்மனை வாழ்வில் ஆகாரம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவே விஷமும் முக்கியமானது. முறை தவறிய வாழ்க்கைக்கு ஆகாரத்தைவிட விஷமே விருப்பமான வஸ்து, ஆகாரம் தராத விடுதலையை தரக்கூடியது ” போன்றவரிகள் நாவலெங்கும் நம்மை வந்தடைகின்றன.


அதேசமயம் மாஸ்தி நிகழ்வுகளையும் நிகழ்வுகளை ஊடறுத்தோடும் மன உணர்வுகளையும் மிகுந்த வல்லமையுடன் சொல்கிறார் என்பதையும் காணலாம். சிறந்த உதாரணம் சிக்கவீரன் தன் தங்கை குழந்தையை கொல்லும் இடம். அவனுடைய ஆழ்மன அச்சம் அதிலிருந்து வந்த குரூரமும் அவசரமும் சிந்திக்காமல் செய்யும் கொலை உடனே வந்து கவ்வும் இனம் புரியாத அச்சம் . அதன்பின் அவன் அக்கொலையை கண்டிக்காத ஒருவனாகிய பசவனை தேடுவது அவனைக் கண்டதுமே சுதாரித்துக்கோண்டு விடுவது போன்ற நிகழ்ச்சிகளில் ஆசிரியரின் திறன் வியப்பூட்டும்படி வெளிபப்டுகிற. சிந்தனைக்கு அப்பால் உள்ள போதத்தை தொடு உலுப்பும் காட்சி இது.


மாஸ்தியின் திறன் வெளிப்படும் முக்கியமான இடங்களில் முதிர்ச்சியும் விவேகமும் உள்ள மனிதர்கள் உரையாடும் இடங்கள் முக்கியமானவை. உத்தய்ய தக்கன் ரேவண்ன செட்டி அரசனிடம் உரையாடும் இடம், லட்சுமி நாராயணய்யா கௌரம்மா பதவியேற்க வேண்டுமென கோரும் இடம் போன்றவை நாசுக்கும் பெரும்போக்கும் நுட்பமும் கலந்த அரசவை உரையாடல்களுக்கு மிகச்சிறந்த உதாரணங்கள்.


வரலாறு என்பது ஒவ்வொரு கணமும் நிகழ்ந்து பின்னகர்ந்து பொய்யாக, பழங்கதையாக,கனவாக மாறிக்கொண்டிருக்கும் வாழ்க்கையே என்று காட்டும் அபூர்வமான நாவல் சிக்க வீர ராஜேந்திரன்.


 


பின்செய்தி


1992ல் மாஸ்தியின் நாவலை தூர்தர்சனில் தொடராகப்போடமுன்வந்தனர். ஆனால் வீரசைவ மடங்களின் கடுமையான எதிர்ப்பால் இந்த புகழ்பெற்ற நாவலை ஒளிபரப்புவது தவிர்க்கப்பட்டது. சிக்கவீர ராஜேந்திரன் ஒரு வீரசைவ மன்னன், அவனை எதிர்மறையாகக் காட்டுவதை ஏற்கமுடியாது என்றன மடங்கள். இந்நாவலேகூட இன்று பொதுவாக அச்சில் இல்லை.


 


இதேகாலகட்டத்தில் தகழி சிவசங்கரப்பிள்ளையின் ஞனாபீடப்பரிசு பெற்ற நாவலான கயிறு தூரதர்சனில் இந்தியில் ஒளிபரப்பு தொடங்கப்பட்டது. எம்.எஸ்.சத்யூ இயக்கம்.அதில் மலையாளிகளின் தாய்வழிச்சமூக அமைப்பு காட்டப்பட்டதனால் ‘அவமானம் ‘ அடைந்த கேரள அமைப்புகளின் எதிர்ப்பால் அதுவும் நிறுத்தப்பட்டது.


 


இந்தியாவின் பண்பாட்டுச்சூழலில் சென்ற இருபத்தைந்தாண்டுக்கலமாக உருவாகிவலுப்பெற்றுவரும் அடிப்படைவாதப்போக்குகளின் உதாரணங்கள் இவை.


 


[சிக்கவீர ராஜேந்திரன்_மாஸ்தி வெங்கடேச அய்யங்கார்; தமிழில்: ஹேமா ஆனந்ததீர்த்தன் நேஷனல் புக் டிரஸ்ட்]


 


மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் Jan 29, 2006


 


சிக்கவீர ராஜேந்திரன் விக்கி பக்கம்

தொடர்புடைய பதிவுகள்

லட்சுமி நந்தன் போரா’

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 16, 2016 11:34

இசையும் மணிகண்டனும் – கடிதங்கள்



அண்ணன் ஜெயமோகனுக்கு,


இசையின் கவிதை பற்றி மணிகண்டன் எழுதியதை வாசித்தேன்


எமக்குத் தொழில் கவிதை என்று இருக்க முடியாத தமிழ் கவிஞனுக்கு ஒரு நாளின் இருபத்து நான்கு மணி நேரத்தில், உப்பு புளி தேடுவது முதல் இருட்டு கடை அல்வாவில் இளைப்பாறுவது வரை அத்தனையையும் செய்து தீர வேண்டி இருக்கிறது.” — என,


இசையின் கவிதையைப் பற்றிப் படர்ந்திருக்கும் ஏ.வி. மணிகண்டனின் கட்டுரைக் கொடி, வேர் நிலம் புதிதாய், வீரியம் புதிதாய், வடிவச் சொற்திரட்சி முட்டித் திளைக்கும் வாசகனை வசமாக்கும் கட்டுரை.


தங்களுடன் இதைப்பற்றி உரையாடியபொழுது, இப்பொழுதுதான் எழுத ஆரம்பித்துள்ளார் என்றீர்கள். மணிகண்டனின் கட்டுரை வடிவமும், அதன்வழி இசையின் கவிதையைப் பேசும் அனுபவச் சிலாக்கியமும், ஒரு படைப்பிற்குள் ட்டனல் வழி (Tunnel) கீழ் புகுந்து. .. பின் கீழ் ஊர்ந்து, நடுவே மத்தியில் முட்டி மேல் வெளிவரும் அசாத்திய சைக்கிளத்திறன் (cyclotron) பாங்கு…


ரிமோட் கண்ட்ரோல்களுக்கு முந்தைய கால கட்டத்தில், தேவதேவனுக்கு மனைவியோடு சண்டை வந்தால் கோபத்தை எதில் காட்டுவார்? பசுவய்யாவுக்கு BSA சைக்கிளில் சென்று லேடிபார்ட் சைக்கிளை துரத்துவது பற்றி ஏதும் கனவுகள் இருந்ததா? மயிலாப்பூரின் குளத்தில் உறு மீனுக்காக காத்திருக்கும் கொக்கிடம் சொல்ல ஞானக்கூத்தனுக்கு ஏதாவது இருந்ததா? பிரமிளுக்கு லூஸ் ஹேர் பிடிக்குமா? என்று நமக்கு தெரியவில்லை. அவர்களுடைய கவிதைகள் அவர்களே நமக்கு முன் வைக்கும் தேர்வுகள் மட்டுமே. ஒரு நாளின் சில மணி நேரங்களை, ஒரு வாழ்வின் ஆன்மீகமான சில பகுதிகளை மட்டுமே அவர்கள் நமக்கு முன்வைக்கின்றனர். அந்தவகையில் இசை தமிழின் முதன்மையான 24×7 கவிஞர். பொத்தான்களை கழற்றி விட்டு, உள்ளே நுழைத்த சட்டையை வெளியே எடுத்து விட்டு, இழுத்து வைத்திருந்த தொப்பையை தொங்க விட்டு, பிறகு பேசத் துவங்குவதை போல கவிதையிலிருந்து இருந்து கவிதையைகழற்றி வைத்து விட்டு பேச துவங்குபவை. அதனால் தான் நான் முதல் முறை பார்த்த பொழுது கவிதையை அதன் தலைக்கு மேலே தேடிக் கொண்டிருந்திருக்கின்றேன்.


இப்படியாய் நவீனத்தமிழ்க் கவிதையின் ஒரு காலக்கணக்கை இன்றைய இசையின் (கவிஞர்) இசத்துடன் கடந்து செல்லும் உத்தி, என்வரையில் சமீபத்தில் நான் படித்த இலக்கியக் கட்டுரைகளில் மிக எளிதாக, கட்டுரை பாணியிலிருந்து கட்டுரையை கழற்றி வைத்து விட்டு பேசத்துவங்கியிருக்கும் முக்கியமான கட்டுரையாக மணிகண்டனின் கட்டுரை அமைந்துள்ளது.


நீங்கள் சொல்லியபடி அவரை ஓவியரென்றும், வெண்முரசின் ஓவியங்களில் அவர் பங்கும் உள்ளதென்று அறிகிறேன்.


மணிகண்டன், கட்டுரையும் கைப்பழக்கம்தான்… ஓவியத்தோடு நின்றுவிடாதீர்கள்


நெப்போலியன்


சிங்கப்பூர்


***


ஜெ


இசை பற்றி மண்கண்டன் எழுதிய கட்டுரை மிகச்சிறப்பாக இருந்தது. இசையின் கவிதைகளில் உள்ள ‘unbearable lightness of being’ அதே உற்சாகத்துடன் வெளிப்பட்டிருந்தது. வாழ்த்துக்க்ள்


செல்வா


***


அன்புள்ள ஜெ


மணிகண்டனின் கவிதை வாசிப்பு இசையின் உலகுக்கு மிக ருகே உள்ளதை கண்டபோது ஆச்சரியமாக இருந்தது. நல்ல உரை


ஜெயராம்



தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 16, 2016 11:31

வெண்முரசு கலந்துரையாடல் (சென்னை) – ஆகஸ்ட் 2016

SOLVALAR_KAADU_EPI_16


அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்


இம்மாத சென்னை வெண்முரசு கலந்துரையாடல் வரும் ஞாயிறன்று (21-08-2016) மாலை 4 மணிக்கு துவங்கும்.


நண்பர்கள் சிவகுமார் மற்றும் வெங்கட்ராமன் இருவரும் வெண்முரசு குறித்து உரையாற்றுவர்.


சிவகுமார் அவர்கள் “வெண்முரசில் சமண தரிசனம்” என்கிற தலைப்பில் உரையாற்றுவார்.


வெங்கட்ராமன் வெண்முரசில் கதாபாத்திரங்ளுக்கிடையிலான சொற்பிரயோகங்களை முன்வைத்து “வெண்முரசு உரையாடல்களின் சமகாலப் பொருத்தப்பாடு” என்கிற தலைப்பில் அவர் கவனித்த விஷயங்களைப் பற்றி பேசுவார்.


வெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்..


நேரம்:-


வரும் ஞாயிறு (21-08-2016) மாலை 4:00 மணிமுதல் 08:00 மணி வரை


இடம்:-


SATHYANANDHA YOGA CENTRE,


15/11, SOUTH PERUMAL KOIL, 1ST STREET,


VADAPALANI (NEAR HOTEL SARAVANA BHAVAN – ARCOT ROAD)


Phone No.: 9952965505


தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 16, 2016 11:31

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 29

ஆறாம் காடு:   பிருஹதாரண்யகம்


[ 1 ]


வேதம் செழித்த காடுகளில் அதுவே பெரிது. நெடுங்காலம் அதற்குப் பெயரே இல்லாமலிருந்தது, ஏனென்றால் அதை மானுடர் பார்த்ததே இல்லை. அங்கே முதன்முதலாகச் சென்று குடியேறியவர் கௌஷீதக மரபிலிருந்து விலகிச்சென்ற சூரியர் என்னும் வேதமுனிவர். கௌஷீதகத்தில் இருபதாண்டுகாலம் வேதம் பயின்று வேள்வியை அறிந்து முதிர்ந்த சூரியர் ஒருநாள் அம்மரபின் முதன்மை ஆசிரியர் அஸ்வாலாயனரிடம் “ஆசிரியரே, இவ்வேதங்கள் அனைவருக்கும் உரியவையா?” என்றார். “ஆம், வேதங்கள் மானுடத்திற்குரியவை” என்றார் அஸ்வாலாயனர்.


“நான் மானுடன் அல்ல” என்று சூரியர் சொன்னார்.  “அன்னத்தாலான இந்தக் கூடு மானுடத்தில் இருந்து பெறப்பட்டது. இதற்குள் வாழ்வது எங்குமுள பிறிதொன்று. நான் வேதமோதும்போது அது அச்சொற்களுக்குச் செவிகொடுக்காமல் அகன்று தனித்து நிற்பதை காண்கிறேன். நான் தொட்டு எழுவதை மட்டுமே நான் காண்கிறேன். என் உலகு நான் படைப்பதே. எனவே எனக்குரிய வேதம் என ஒன்றுண்டு, அதை என் நா இன்னமும் கண்டுகொள்ளவில்லை என்று உணர்கிறேன்.”


அஸ்வாலாயனர் சினந்து “இது வெறும் ஆணவம் மட்டுமே. உன்னை நீ பிறிதில்லா ஒன்று என உயரத்தில் நிறுத்திக்கொள்கிறாய்” என்றார். “நான் உயரத்தில் நிறுத்திக்கொள்ளவில்லை, ஆசிரியரே. ஆனால் நான் பிறிதில்லாத ஒன்றே” என்றார் சூரியர். அஸ்வாலாயனர் “மைந்தா, நான் சொல்வதை கேள்.  நீ அறியக்கூடுவது உன்னை மட்டுமே. நீ உள்நோக்கி அறிந்தமையாலேயே நீ உனக்கு அணுக்கமானவன். நீ அறிந்தமையால்தான் நீ பிறிதில்லாதவன் என உணர்கிறாய். இங்குள்ள புல்லும் புழுவும் உனக்கு முற்றிலும் நிகரே” என்றார்.


“ஆம், அவை எனக்கு முற்றிலும் நிகர் என்றும் உணர்கிறேன். ஆனால் அவை மகிழும் வேதம் அல்ல என்னுடையது. ஆசிரியரே, பிறிதில்லாத ஒன்று மேம்பட்டது என்று ஏன் சொல்லவேண்டும்? இது பிறஎதுவும் போன்றது அல்ல. இங்குள்ள ஒவ்வொன்றையும்போலவே” என்றார் சூரியர். “ஒவ்வொருவருக்கும் ஒரு வேதம் என்பது எப்படி இருக்கமுடியும்?” என்று ஆசிரியர் கேட்டார். “ஒவ்வொருவருக்கும் ஒரு முகம் இருக்கமுடியும்போது வேதம் ஏன் இருக்கமுடியாது?” என்றார் மாணவர். அச்சொல்லாடல் எழுந்து அனல்கொண்டு மெல்ல தணிந்தது.


“இளையோனே, இவ்வெண்ணத்தை மட்டும் சூழ்ந்து நோக்கியபடி மேலும் ஓராண்டுகாலம் இங்கிரு. உன்னுள் இருந்து நான் வேறு என உணர்த்தும் அது நானும் அதுவே என உணர்வதற்கு ஒரு வாய்ப்பு கொடு. ஓராண்டு நீடிக்காத எச்சிந்தனையும் வெறும் உணர்ச்சி மட்டுமே. அதன்பின்னரும் அவ்வண்ணமே தோன்றும் என்றால் நீ உன் சொல்லைத்தேடி கிளம்பலாம்” என்றார் அஸ்வாலயனர்.


அதை தலைவணங்கி ஏற்ற சூரியர் ஒராண்டுகாலம் கழித்து வந்து ஆசிரியரை வணங்கி சொன்னார் “இப்போது விளாம்பழம் முற்றிலும் கனிந்துவிட்டது.” ஆசிரியர் தலையசைத்து “ஆம், தொடங்கப்படுவது எவ்வண்ணமோ முடியும். நன்று சூழ்க!” என்றார். ஆசிரியரின் கால்களைத் தொட்டுவணங்கி “வாழ்த்துக!” என்றார் மாணவர். “நான் கற்பித்தவை வழித்துணையாகுக, கைவிளக்காகுக!” என்றார் ஆசிரியர்.


கௌஷீதகத்தின் சோலையில் இருந்து கிளம்பிய சூரியர் பன்னிரு நாட்கள் இளங்காடுகளினூடாக பயணம் செய்தார். எங்கும் மானுடரே விழிகளுக்கு தென்பட்டனர். எவரும் அறியாத ஓர் இடத்தில் தன்னுள் அமைந்த அது மட்டுமே தன்னை உணரும்தருணம் வேண்டுமென அவர் விழைந்தார்.  முற்றிலும் தனித்திருக்கையிலேயே அதன் குரலை கேட்கமுடியும் என எண்ணினார். ஒவ்வொரு காட்டையும் அடைந்து ‘இதுவல்ல! இதுவல்ல!’ எனத் தவிர்த்து கடந்து சென்றார்.


பல காடுகளில் வேதநிலைகள் இருந்தன. பலவற்றில் முனிவர்கள் தவம்செய்தனர். அனைத்துக் காடுகளிலும் மலைக்குடிகள் வாழ்ந்தனர். மானுடரில்லாக் காடு அவர் கண்களுக்கு தெரியவேயில்லை. “மானுடரில்லா இடமென்று ஒன்றில்லை, முனிவரே. ஏனென்றால் சூரியன் மானுட விழிகளை தீட்டுகிறது. மானுட விழிகளால் இப்புடவிச்சித்திரம் தீட்டப்படுகிறது” என்றார் சௌனகக் கல்விநிலையின் ஆசிரியர். “மானுடர் அறியாத நிலம் என ஒன்றுண்டு என்றால் அது உருவாகவில்லை என்றே பொருள்.” சூரியர் “ஆம், நான் உருவாக்கி எடுக்கும் காடு எனக்குத் தேவை” என்றார்.


அந்நாளில் அவரைச் சந்தித்த மலைமகன் ஒருவனிடம் “மானுடர் அறியாத காடு எங்கேனும் உண்டா?” என்று கேட்டார். “முடியில் பேன் போல காடெங்கும் மலைமக்கள் வாழ்வார்கள். அவர்களில்லாத காடு எங்குமில்லை” என்றான் அவன். “இல்லை, இத்தேடல் எனக்குள் எழுந்தமையாலேயே எங்கோ ஒரு பெருங்காடு அவ்வண்ணம் எனக்காகக் காத்திருக்கிறது என்று உணர்கிறேன்” என்றார் சூரியர். அவன் எண்ணி பின் தெளிந்து “என்னுடன் வந்து எங்கள் முதுபூசகரை பாருங்கள். அவருக்குள் ஆயிரம் மலைத்தெய்வங்கள் குடிகொள்கின்றன. அவற்றில் ஏதேனும் ஒன்று அதை அறிந்திருக்கக்கூடும்” என்றான்.


மலைமகனுடன் சென்று அவர்களின் குன்றுசூழ் குறுங்குடியை அடைந்து அங்கே முதியமரப்பொந்தில் ஏழு தெய்வக்கற்களுடன் தனித்துவாழ்ந்த  முதுபூசகர் அருகே அமர்ந்து உசாவினார். அவருக்குள் வாழ்ந்த ஆயிரம் மலைத்தெய்வங்களில் ஒன்று பெருங்கூச்சலுடனும் நடுக்குடனும்  எழுந்து விடைசொன்னது. “வடக்காக செல்க! எங்கிருந்து வெண்ணிறமான நீர் வழியும் ஓடைகள் வருகின்றனவோ அப்பெரும்காடு இன்னமும் மானுடரால் கண்டடையப்படவில்லை. ஆகவே அதற்கு மானுட மொழியில் பெயருமில்லை. சூரியன் மட்டுமே அறிந்த அந்நிலத்தில் மலைத்தெய்வங்கள் மட்டுமே வாழ்கின்றன. அவற்றை நிறைவுசெய்தவன் அங்கே வாழமுடியும்…”


வணங்கி விடைபெற்று சூரியர் கிளம்பிச்சென்றார். வெண்ணிறமான ஓடை என்றால் அதில் சுண்ணமும் கந்தகமும் கலந்திருக்கக்கூடும் என அவர் உய்த்துணர்ந்தார். காட்டில் ஓடிவரும் ஓடைகளின் நீரை அள்ளி ஒரு வாய் அருந்திப்பார்த்து  அவற்றில் சுண்ணமும் கந்தகமும் மணக்கும் ஓடையை தெரிவுசெய்து அத்திசை நோக்கிச் செல்வதையே தன் வழியாகக் கொண்டு ஓராண்டுகாலம் காட்டுக்குள் சென்றார். ஓடைநீரின் நாற்றமும் வெண்மையும் மிகுந்தபடியே வந்தன. பின்னர் அவர் பாலென நுரைக்கும் ஓடைகளை கண்டுகொண்டார். அணுகமுடியாத அளவுக்கு அவற்றிலிருந்து கந்தகவாடை எழுந்தது.


அதன்பின் காட்டின் நீரெல்லாமே கந்தகமாக இருந்தது. ஓடைக்கரைகளில் மஞ்சள்சேறு கனிந்திருந்தது. காய்களிலும் கனிச்சாறுகளிலும் கந்தகமே மணத்தது. சூரியர்  மலைக்கற்றாழைச் செடிகளின் இலைக்குவைக்குள் தேங்கிய மழைநீரையும் மாலையில் இலைத்தளிர்களில் துளித்துநின்ற பனியையும் தொகுத்து அருந்திக்கொண்டும் துவர்க்கும் கனிகளை மட்டும் தேர்வுசெய்து உண்டபடியும் மேலும் சென்று பெயரற்ற பெருங்கானகத்தை கண்டுகொண்டார்.


அங்கே மண்ணில் ஆயிரம் புண்கள் இருந்தன. அவை வெம்மைநிறைந்த வெண்ணிற ஆவியுடன் புண்ணுமிழ் சலம் என சேற்றை உமிழ்ந்து கொதித்துக்கொண்டிருந்தன. விம்மி அழும் நிலத்துக்குமேல்  வெண்புகை காளான்குடை என வானில் எழுந்து நின்றது. அங்கு பெரிய விலங்குகள் எவையும் வாழவில்லை. நீர் உண்ணும் வழக்கமில்லாத கீரிகளும் முயல்களும் எலிகளும் மட்டுமே வாழ்ந்தன. பறவைகளின் ஒலியே அங்கே உயிரொலியாக இருந்தது.


எவராலும் அறியப்படாத, எப்பெயரும் சுட்டாத மரங்களும் உயிர்களும் நிறைந்த காட்டில் சூரியர் வாழ்ந்தார். தன் பெயரை இழந்தார். கண்டடையப்படாதவராக அதில் தொலைந்து மறைந்தார்.  அங்குள்ள ஒளிபுகா மலைக்குகை ஒன்றுக்குள் புகுந்து விழிகளை மூடிக்கொண்டார். இருளுக்குள் எழுந்து நான் என உணர்ந்த ஒன்று ஒளியின்றி தவித்ததை கண்டார். மின்மினி போல அது நான் நான் என அதிர்ந்து மெல்ல சுடர்கொண்டது. தன்னொளியால் அது அவ்விருளை அகற்றியது. ஒவ்வொன்றின் மேலும் சென்று அமர்ந்து ஒளிர்ந்து எழுந்து அப்பொருளை ஆக்கி நிறுத்தியது. ஒவ்வொரு கணமும் ஒரு பொருள் பிறந்து வந்தது. பின்னர் அவர் அப்பேருலகில் முழுமையாக வாழலானார்.


இருபதாண்டுகாலம் அவர் அங்கே தன்னந்தனிமையில் வாழ்ந்தார். அன்னமென எழுந்த ஒன்று உண்ணப்படாது வீணாவதில்லை. அறிவு வளராமல் மறைவதுமில்லை.  மண்ணுக்குள் செல்லும் பிலத்திற்குள் அமர்ந்து ஒருவர் மெய்யறிதலை அடைந்தால்கூட மாணவர்கள் தேடிவருகிறார்கள். அவரைத் தேடி ஓர் இளைஞன் வந்தான். அவர் அவன் காலடிகள் காலத்தின் மறுமுனையிலிருந்து அணுகிவருவதை கேட்டார். அவன் விழிகள் இருளில் இருமின்மினிகள் என இணையாகப் பறந்து வந்தன.  அவர் இருந்த இருட்குகைக்குள் நுழைந்து தாள்பணிந்து மெய்யறிதலை தனக்கு அளிக்கும்படி கேட்டான்.


SOLVALAR_KAADU_EPI_29


“நீ யார்?” என்று சூரியர் கேட்டார். “நான் கிளம்புவதற்கு முன்பிருந்த பெயரையும் மரபையும் துறந்துவிட்டேன்” என்றான் அவன். “முன்பிருந்த எதுவும் பின்னிற்காத மெய்யறிதல் ஒன்றைத் தேடி நான் இவ்வேதக்காடுகளில் அலைந்தேன். நேதி நேதி எனத் துறந்து இக்காட்டை கண்டுகொண்டேன்.” சூரியர் “எவ்வண்ணம் இதை கண்டாய்?” என்றார். “நான் பறவைகளை பார்த்துக்கொண்டே வந்தேன். இத்திசையிலிருந்து எப்பறவையும் வெளிவரவில்லை. இத்திசை நோக்கி பிறநிலத்துப் பறவைகள் செல்லவுமில்லை. இங்குள்ள காடு தனித்தது என்று உணர்ந்தேன்.”


சூரியர் “நீ வேண்டுவதென்ன?” என்றார். “பிறிதொன்றில்லாத மெய்மை” என்றான் இளைஞன். “மானுடர் தங்களில் பாதியை பெயரெனக் கொண்டவர்கள், இளையோனே. நான் சூரியன் என்றே என்றும் என்னை உணர்ந்திருந்தேன். விழிமறையும் இக்காரிருளில் இருபதாண்டுகாலம் தன்னந்தனிமையில் நான் அமர்ந்திருக்கையில் என்னுள் எழுந்த சுடரால் அனைத்தும் துலங்குவதை கண்டேன்.” அவர் அவனை தன் கையால் தலைவளைத்து நெற்றிப்பொட்டை தன் சுட்டுவிரலால் தொட்டு  தானறிந்த வேதவரியை சொன்னார் “நானே பிரம்மம்.”


அவனை ஆசிரியர் யாக்ஞவல்கியர் என்று அழைத்தார். அகம்பிரம்மாஸ்மி என்னும் அவ்வரியில் தொடங்கிய அவன் கல்வி பதினெட்டு ஆண்டுகாலம் நீண்டது. சூரியர் வீடுபேறடைந்து ஒன்பதாண்டுகள் கழித்து அந்த வரியில் வந்து முடிந்தது. அப்போது அது ஒலியாக, பொருளாக, உள்ளோவியமாக இருக்கவில்லை. மொழியென மாறுவதற்கு முன் எப்படி இருந்ததோ அப்படி திரும்பிச்சென்றமைந்திருந்தது.



[   2 ]


வேதமறிந்த வைசம்பாயனர்கள் எழுவர். முதல் வைசம்பாயனர் கௌஷீதக மரபின் ஆசிரியரான அஸ்வாலாயனரின் முதன்மை மாணவர். அவர் தன் ஆசிரியரிடம் முரண்பட்டுச் சென்று தன் வேதமரபை தானே உருவாக்கினார். கௌஷீதகத்திலிருந்து கிளம்பிச்சென்று வேதவியாசரை சென்றடைந்தார். வியாசரின் மாணவராக நாற்பதாண்டுக்காலம் அமைந்து வேதங்களை காவியவடிவில் கற்றறிந்தார். சொல்பெருகும் வேதமரபு ஒன்றை உருவாக்கினார். அது கிருஷ்ண யஜுர்வேதம் என்றழைக்கப்பட்டது. கரியவேதம் கட்டற்றதாக இருந்தது. அதைக் கற்க அவர் உருவாக்கிய முறைமை கிருஷ்ணாரண்யம் என அழைக்கப்பட்டது.


கௌஷீதக ஆரண்யகங்களில் ஒன்றில் அவர் கிளம்பிச்சென்ற தருணம் கதையாக சொல்லப்பட்டிருக்கிறது. அஸ்வாலாயனர் தன் மாணவர்களுக்கு  வேதமெய்மையை கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கையில் வைசம்பாயனர்  எழுந்து  “ஆசிரியரே, பெருவல்லமை கொண்டது எது?” என்றார். “செல்லும்தோறும் மேலும் பெருகும் ஆறு” என்றார் அஸ்வாலாயனர். “துணை கொண்ட ஒன்றே விசைமிக்கது.”


வைசம்பாயனர் “ஆசிரியரே, முளைப்பதில் உயிர்த்திறன் மிக்கது எது?” என்றார். “முருங்கை. அது தடியிலும் கிளையிலும் தளிரிலும் முளைப்பது. உடல்முழுக்க விதைகளால் ஆனது” என்றார் அஸ்வாலாயனர்.  அவர் என்ன கேட்கப்போகிறார் என்பதை அவரது முந்தைய தனிச்சொல்லாடல்களிலிருந்து அறிந்திருந்த பிற மாணவர்கள் திகைப்பும் எதிர்பார்ப்புமாக காத்து நின்றனர்.


வைசம்பாயனர்  “ஆசிரியரே, அழியாத காட்டுயிர் எது?” என்றார். “எலி. காட்டரசர்களாகிய யானைகள் அளவுக்கே அவை மண்ணுக்குள் வாழ்கின்றன. யானைகள் அஞ்சும் எதையும் எலி அஞ்சுவதில்லை” என்றார் அஸ்வாலாயனர். “ஏனென்றால் அவை ஒன்றிலிருந்து ஆறென பெருகிக்கொண்டே இருக்கின்றன. மாணவனே, எது விரைந்து பெருகுகிறதோ அதுவே அழியாதது.”


“ஆசிரியரே, அவ்வண்ணமென்றால் வேதம் மட்டும் ஏன் கட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கவேண்டும்? அதன் சொல்லும் பொருளும் ஏன் வரையறுக்கப்படவேண்டும்? மலையிறங்கி நிலம்பெருகும் நதிகளைப்போல அது செல்லட்டுமே. முருங்கைபோல முளைக்கட்டும். எலிகளைப்போல பெருகட்டும்” என்றார் வைசம்பாயனர். உரத்த குரலில் “வேதங்களால் தவிர்க்கப்பட்டவை என மும்மடங்கு தொல்வேதப்பாடல்கள் உள்ளன. வேதம் முளைத்தெழுந்து உருவான பன்மடங்குப் பாடல்கள் உள்ளன. அவற்றில் சிறந்தவையும் இணைந்து வேதம் சிறக்குமென்றால் என்ன தடை?” என்றார்.


“மைந்தா, வரையறுக்கப்படாத ஒன்றுக்கு இருப்பென்பதே இல்லை” என்றார் அஸ்வாலாயனர். “அவ்வரையறையை அவை இணைதலின் வழியாக இயல்பாக உருவாக்கிக் கொள்ளட்டும். நாம் அவற்றை முன்னரே அணையிட்டு நிறுத்தினால் காலப்பெருக்கில் சொல்லை கட்டிப்போடுகிறோம்” என்றார் வைசம்பாயனர். “என் மரபு மாறாச்சொல் என்பதையே வேதமெனக்கொண்டது. மாறுமென்றால் அது வேதமே அல்ல” என்றார் அஸ்வாலாயனர். “நால்வேதங்களும் வரையறை செய்யப்பட்டதே மாற்றம் அல்லவா?” என்றார் வைசம்பாயனர். “மைந்தா, நீ அதை வேதம் வகுத்த வியாசரிடமே கேட்கலாம். நூற்றி எட்டாவது மகாவியாசர் இன்று வியாசவனத்தில் அமர்ந்திருக்கிறார். அவரிடம் செல்க!” என்று சொல்லி அஸ்வாலாயனர் முடித்துக்கொண்டார்.


கௌஷீதகம் நீங்கி வியாசவனம் சென்று ஆசிரியரென அமர்ந்திருந்த வேதவியாசரின் தாள்பணிந்தார் வைசம்பாயனர். வளர்வதே அழியாச்சொல் என்று தான் எண்ணுவதை  அவர்முன் வைத்தார். “வேதங்களை உருத்திரமணி என கோத்து கழுத்தில் அணிய நான் விரும்பவில்லை, ஆசிரியரே. விதைக்கூடை என எடுத்துக்கொண்டு வளம் நிறைந்த இம்மண்ணில் உலவ விழைகிறேன்.”


“மைந்தா, தத்துவம் அருமணிகளைப்போல. பிறிதொன்றிலாத தன்மையாலேயே அது மதிப்பு பெறுகிறது. இலக்கியம் விதைகளைப்போல. முளைத்துக் காடாவதனால் அது மதிப்பு கொள்கிறது. வேதம் தத்துவமே” என்றார் வியாசர். “அது ஏன் இலக்கியமும் ஆகக்கூடாது?” என்றார் வைசம்பாயனர். “ஏனென்றால் வேதம் அடித்தளம். அது உறுதியாக அமைந்தாகவேண்டும். வேதம் படைக்கலம், அது நெகிழலாகாது. வேதம் துலாமுள், அது நிலைநின்றாகவேண்டும்.”


“வேதம் தத்துவமாக இருந்ததில்லை. அதை வகுத்து தத்துவமாக ஆக்கியவர்கள் உங்கள் முன்னோடிகளே” என்றார் வைசம்பாயனர். “மைந்தா, இலக்கியம் கண்டடையும், ஆனால் பயனளிக்கவேண்டும் என்றால் அது மந்தரமலையால் கடையப்பட்டாகவேண்டும். அமுதும் நஞ்சும் பிரிக்கப்பட்டாகவேண்டும். தத்துவமென மாறாத இலக்கியம் வெறும் களியாட்டு மட்டுமே” என்றார் வியாசர்.


“ஆசிரியரே, குவிவதன் வழியாக கடந்துசென்று எய்துவது ஒருவழி. அகன்று உலகை அணைப்பதனூடாக எய்தும் வழியை ஏன் ஒடுக்கவேண்டும்?” என்றார் வைசம்பாயனர். “ஏனென்றால் வேதம் அழியாத முன்னறிவென அனைத்து அறிதல்முறைகளுக்கும் பின்னால் நின்றுகொண்டிருக்கிறது. அதை திருத்தமுடியும் என்றால் அது சான்றென எங்கும் நிற்கமுடியாது” என்றார் வியாசர். “வேதமென அமைந்தது அதை நாம் வெளியே நின்று வகுத்தளிக்கும் இலக்கணம் வழியாக தன்னை ஒருங்கமைத்துக்கொள்ள வேண்டுமா என்ன? அதன் தன்னியல்பாலேயே அது ஒருங்கிணைய முடியாதா? அன்னப்பறவைகள் நடுவே வாத்துக்கள் கலந்துவிடும் என்று நாம் அஞ்சுகிறோமா?” என்றார் வைசம்பாயனர்.


“இங்கு இவ்விருக்கையில் அமர்ந்து நான் நீ சொல்வதை ஏற்கமுடியாது. வகுத்து எண்ணி ஒலியமைத்து உளம்கொண்டு நாவிலமைந்த சொல்லென்றே இங்கு வேதம் திகழமுடியும். ஆயினும் உன்னை விலக்க நான் விழையவில்லை. இவ்வனத்தின் தென்மேற்கு மூலையில் பிறன் என நீ தங்குக!” என்றார் வியாசர்.  “அவ்வண்ணமே” என தலைவணங்கி அகன்றார் மாணவர்.


பின்னொருநாளில் கானுலா சென்ற வியாசர் அனைத்து விலங்குகளும் அசைவிழந்து விழிமின்ன நின்று வேதச்சொல் கேட்பதை கண்டார். மரங்களில் பறவைகள் பூக்களைப்போல வண்ணம் மட்டுமென நிறைந்திருந்தன. புலியருகே மான் நின்றிருந்தது. மலைப்பாம்பின் வளைவின்மேல் முயல் அமர்ந்திருந்தது. வியந்து அருகணைந்தபோது அங்கே ஒரு சுனைக்கரையில் அமர்ந்து வைசம்பாயனர் வேதமோதுவதை கண்டார்.


வேதச்சொல் முழுதமைந்ததும் அவர் முன் சென்று “இது நான் கேட்டறியாத வேதம். எங்கிருந்தது இது?” என்றார். “இது தொல்வேதச் சொல். மலைநாகர்களிடம் புழங்கியது. அவர்களின் தெய்வங்களால் மீட்டி வளர்க்கப்பட்டது” என்றார் வைசம்பாயனர். வியாசர் திகைத்து நின்றபின் பெருமூச்சுடன் “ஆம், வகுக்கையில் வெளியேறுவது மேலும் வளர்ந்து முன்னால் வந்து நிற்கிறது. தொகுப்பவர்களை முடிவின்மை வந்து சந்திப்பது அப்படித்தான்” என்றார்.


வியாசரின் ஆணைப்படி முறைப்படுத்தப்படாத பாடல்களைச் சேர்த்து வைசம்பாயனர் அமைத்த அவ்வேதம் கிருஷ்ணயஜுர்வேதம் எனப்பட்டது. அம்முறை ஏற்கப்பட்டதும் விரைவிலேயே நால்வேதங்களுக்கும் கிருஷ்ண, சுக்ல சாகைகள் உருவாயின. கரியவேதம் மலரொடு சருகும் கொண்டு வெள்ளம் பெருகும் கங்கை போலிருந்தது. நிலம்பரவி உலகூட்டியது. வெண்ணிற வேதமோ மலையுச்சியின் மானசரோவரம் போல நின்றிருந்தது. வேதத்தை முற்றறிபவர்கள் அவற்றை கிருஷ்ண சுக்ல சாகைகளுடன் சேர்த்து கற்றுணரவேண்டுமென நெறி அமைந்தது.


வைசம்பாயனரின் வேதநிலைக்கு இளமாணவனாக வந்து சேர்ந்த அந்தணச் சிறுவனை அவர் யக்ஞன் என அழைத்தார். மாணவர்களில் அவர் பேரன்புக்குரியவனாக அவனே இருந்தான். ஒளிவிடும் சிறிய கண்களும் கொழுத்த வெண்ணிற உடலும் மணிக்குரலும் கொண்டிருந்தான். வேதமோதுவதில் இருந்த அதே ஒன்றலுடனும் உவகையுடனும் உணவுண்டான். அவனை பறவைகள் தங்களைப்போலவே விடுதலையானவன் என அடையாளம் கண்டுகொண்டன. ஆசிரியர் தன்னருகே அவனிருக்கையில் உவகையும் புரியாத அச்சமும் ஒருங்கே எழக்கண்டார்.


ஒருநாள் கானுலா செல்கையில் காட்டுப்பறவை ஒன்று வேதவரி ஒன்றை சொல்வதைக் கேட்டு வியந்து நின்ற வைசம்பாயனர் அது எவ்வண்ணம் கற்றது என மாணவர்களிடம் கேட்டபோது யக்ஞன் இரவு முழுக்க காட்டுக்குள் அமர்ந்து வேதமோதிப் பயில்கிறான் என்று சொன்னார்கள். வேதங்களின் கிருஷ்ணசாகைகளை கற்றுத்தேர பன்னிரண்டு ஆண்டுகளாகும் என்பது அனைத்துக் கல்விநிலைகளும் கொண்டுள்ள வகுநெறி. மூன்றாண்டுகளில் அதை கற்றுத்தேர்ந்தவர் வைசம்பாயனர் என அனைத்து கதைகளும் வியந்தன. யக்ஞன் அதை ஒரே ஆண்டில் கற்று முடித்துவிட்டான் என்றனர் மாணாக்கர். நால்வகைச் சொல்முறையிலும் அவன் வேதங்களைச் சொல்லி விளையாடுவதுண்டு என்றனர்.


வைசம்பாயனர் அதைக் கேட்டு இறும்பூது எய்தினார். எட்டு கானகங்களில் இருந்து வந்த வேத ஆசிரியர்களின் முன்னிலையில் அவனை நிறுத்தி ஒரு தேர்வு நிகழ்த்தினார். அவன் ஒரு சொல் பிழைக்காமல், ஒரு சந்தம் மாறாமல் வேதங்களை முற்றோதியதைக் கண்டதும் அவர்கள் எழுந்து நின்று கைதூக்கி  “நீள்புகழ் கொள்க! நீடு வாழ்க!” என்று வாழ்த்தினர். “இனி வேதமரபின் முதன்மை அறிஞன் என இவ்விளைஞனே அறியப்படட்டும்” என்றார் வியாசர்.  அன்று ஆசிரியர் உள்ளத்தில் மாணவனைப் பற்றிய முதல் முள் குடியேறியது. பின்னர் அது நாளும் வளரலாயிற்று.


பிறிதொருநாள் சொல்லவையில் வைசம்பாயனர் தொல்வேத வரியொன்றை வேதத்துடன் இணைத்துப் பாடியபோது யக்ஞன் எழுந்து அதை மறுத்தான். “வேதமெய்மைக்கு எதிரான வரி வேதத்தில் அமையலாகாது” என்றான். “மானுடப்பலியை வேதம் கடந்து வந்துவிட்டது. இவ்வரியில்  நோன்புகொண்டவனின் தூய ஊனை தெய்வங்கள் விரும்புகின்றன என்று ஒரு வரி வந்துள்ளது.”


சினத்துடன் “மூடா, இது கட்டற்றது என்பதனாலேயே கிருஷ்ணசாகை” என்றார் வைசம்பாயனர். “ஆம், ஆனால் அப்போதும் அது வேதமென்றே அறியப்படுகிறது. நீங்கள் இணைத்த வரி வேதங்களுக்கு மாறானது. அது வேதம் அல்ல” என்றான் யக்ஞன். வென்று அடக்கியிருந்த அனைத்துச் சினமும் ஒன்றாகக்கூடி முகத்தில் கனல “அதை முடிவுசெய்யவேண்டியன் நான்” என்று வைசம்பாயனர் சீறினார். “இல்லை, முடிவுசெய்யவேண்டியவர்கள் நாங்கள். இது கங்கை. உங்கள் படித்துறையில் நீங்கள் எதை கலக்கிறீர்கள் என்பதை அடுத்த படித்துறையில் நீராடுபவர்களே முடிவுசெய்யவேண்டும்” என்றான் யக்ஞன்.


“இந்தக் கல்விநிலை என்னுடையது. இங்கு விளங்குவது என் ஆணை” என்றார் வைசம்பாயனர். “இல்லை ஆசிரியரே, எங்கும் திகழ்வது வேதத்தின் ஆணை மட்டுமே” என்றான் யக்ஞன். அவர்கள் சொல்மோதிக்கொள்வதை மாணவர்கள் திகைப்புடன் நோக்கி நின்றனர். அது எங்கு சென்று முடியும் என அவர்கள் அறிந்திருந்தனர். உடல்நடுங்க எழுந்த வைசம்பாயனர் கைவீசி பெருங்குரலில் “மூடா, வேதம் கற்றமையால் நீ ஆசிரியனை விஞ்சிவிடுவாயா என்ன? நானறியாத வேதவரி ஒன்றைச் சொல்ல முடியுமா உன்னால்? சொல். நீ என்னிலும் மேலோன் என ஒப்புகிறேன்” என்றார். “ஆணை” என்று தலைவணங்கிய யக்ஞன் நூறு யஜுர்வேத வரிகளை சொன்னான்.


கிருஷ்ணயஜுர்வேதத்தின் தொகைக்காரரான வைசம்பாயனர் அவ்வரிகளைக் கேட்டு திகைத்து நின்றார். அவை வேதமென அவர் உணர்ந்தார், ஆனால் அவற்றை முன்பு அறிந்திருக்கவில்லை. திகைப்புடன் “இதை எங்கு கற்றாய்?” என்றார். “ஆசிரியரே, நீங்கள் கற்பித்த அதே வேதச்சொற்கள்தான். சொல்கூட்டும் முறைகளினூடாக வேதத்தினுள்ளேயே இதை நான் அடைந்தேன்” என்றான் யக்ஞன். “அவ்வாறு எல்லைகடந்து சொற்கூட்ட நான் உனக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இது ஆசிரியனாகிய என்னை சிறுமை செய்வது. இதன்பொருட்டு உன்மேல் நான் தீச்சொல்லிடுவேன்” என்றார்.


“கற்றவற்றினூடாக விரிவதே கிருஷ்ணசாகைகளின் வழி என்றிருக்க இதற்கு நான் ஏன் ஒப்புதல் பெறவேண்டும்?” என்றான் யக்ஞன். “ஒப்புதல்பெற வேண்டும். நான் கற்பித்தது என்று சொல்லி நீ ஒரு பிழைவேதத்தை இங்கு நிறுவிச் செல்லலாகாது. நான் கற்பித்தது அது என பின்னர் அனற்சான்றாக ஆகும். என் ஒப்புதல் அதற்கில்லை என உலகோர் அறியவும் மாட்டார்கள்” என்று வைசம்பாயனர் கூவினார். “நீ என்னை மீறியமையால் இனி எனக்கு மாணவன் அல்ல. இதோ, உன் ஆசிரியராக நின்று நான் ஆணையிடுகிறேன். நான் கற்பித்தவை அனைத்தையும், அவற்றிலிருந்து நீ பெற்றவை முழுமையும் இங்கே கூறிவிட்டு இக்குருகுலம் விட்டு அகல்க!”


“ஆணை” என வணங்கிய யக்ஞன் கைகூப்பி அமர்ந்து தான் கற்றவேதத்தை முழுமையாக உரைத்து முடித்தான். கற்றவற்றிலிருந்து தான் சென்றடைந்தவற்றையும் ஒரு சொல் மாறாது உரைத்து முழுமை செய்தான். வைசம்பாயனர் “இவற்றில் ஒரு சொல்லேனும் உன்னில் எஞ்சவில்லை என ஆணையிடுக!” என்றார். யக்ஞன் “ஆணை” என்று நிலம்தொட்டு உறுதியளித்தான். ஆசிரியரை வணங்கி அன்றே விலகிச்சென்றான்.


வேதத்தை மீண்டும் புதிதாக முதற்சொல்லில் இருந்து கற்றுமீள யக்ஞன் விழைந்தான். அவன் சென்ற அத்தனை குருநிலைகளுக்கும் முன்னரே அவனை வைசம்பாயனர் பழிச்சொல்லிட்டு புறந்தள்ளிய கதை தெரிந்திருந்தது. தேடி நெடுந்தொலைவு சென்று, சென்ற இடங்களில் சிறுமைகொண்டு, ஒருகணமும் சோர்வுறாமல்  பயணம்செய்து இறுதியாக சூரியர் வாழ்ந்த கந்தகப் பெருங்காட்டை கண்டடைந்தான். அவர் முன் வணங்கும்போது அவனுள்ளும் அவன்  வாழ்ந்த சொல்வளர்காடுகள் சுருங்கி மறைந்துவிட்டிருந்தன. அவர் முன் அமர்ந்து வேதமெய்ப்பொருளை கற்றறிந்தான். அவனை ஆசிரியர் யாக்ஞவல்கியர் என்றழைத்தார்.


தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 5
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ – 2
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ -1
மாட்டிறைச்சி – அரசியலும் பண்பாடும்
கோவையில் உரையாற்றுகிறேன்
எழுத்தாளனின் ஞானம்
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 40
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 38
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 34
‘வெண்முரசு’- நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 33
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 28
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 4
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 2
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 16, 2016 11:30

கி.ராவுக்கு இயல்

kira


 


கி.ராஜநாராயணனுக்கு இயல் விருது வழங்கப்படவுள்ளது. வாழ்நாள்சாதனைக்கான இவ்விருதைப்பெறும் கி.ராவை வணங்குகிறேன்.


தமிழ் இலக்கியச் சாதனை 2016 விருதுக் கேடயமும், ஒரு லட்சம் ரூபாய் பணமுடிப்பும் வழங்கப்படுகிறது.


விருது விழா சென்னை, கவிக்கோ மன்றத்தில் 27 ஆகஸ்டு 2016 சனிக்கிழமை, மாலை 6.00 மணிக்கு நடைபெற உள்ளது. கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் சார்பாக இந்த விருதை சென்னை ரஹ்மத் அறக்கட்டளையின் நிறுவனர் எம்.ஏ. முஸ்தஃபா அவர்கள் வழங்குகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 16, 2016 07:30

August 15, 2016

யு ஆர் அனந்தமூர்த்தியின் ‘சம்ஸ்காரா’

03adoor6


 


யு.ஆர். அனந்த மூர்த்தியின் சம்ஸ்காரா அளவுக்கு மேலைநாடுகளில் புகழ்பெற்ற இந்திய நாவல்கள் முறைவு. காரணம் ஏ.கெ. ராமானுஜனின் சிறப்பான மொழியாக்கம். முதல் மொழியாக்கப்பதிப்பு அமெரிக்காவிலேயே வெளியானமை. பட்டாபி ராம ரெட்டி இயக்க, திரைக்கதையை  அனந்தமூர்த்தியும் கிரிஷ் கர்னாடும் அமைக்க, எடுக்கபப்ட்ட நாவலின் புகழ்பெற்ற திரைவடிவம்.


ஆனால் உண்மையில் அதுமட்டுமே காரணமா? அல்ல. இந்நாவலின் மையமான நோக்கு முற்றிலும் மேலைநாடு சார்ந்தது. மேலைநாட்டினருக்கு எளிதில் புரிந்துகொள்ளத்தக்கது. ஆர்.கெ.நாராயணன், சல்மான் ருஷ்தி ,அருந்ததி ராய், விக்ரம் சேத் போன்ற இந்திய-ஆங்கில எழுத்தாளர்கள் இந்தியா பற்றி எழுதும்போது வெளிப்படும் மேலைநாட்டு பார்வைக்கோணம் இந்த அசல் கன்னட நாவலிலும் உள்ளது. ஆனால் இந்திய-ஆங்கில நாவகள் அனைத்துமே பொதுவாக மேலை நாட்டு பொது வாசகர்களுக்கு ஆர்வமூட்டும் நோக்கத்துடன் அவர்களுக்காக சமைக்கப்பட்ட மேலோட்டமான ஆக்கங்கள். அவற்றின் இலக்கிய மதிப்பு என் நோக்கில் மிகமிகக் குறைவு. அமிதவ் கோஷ் விதிவிலக்கு


ஆனால் சம்ஸ்காரா இந்தியப் பண்பாட்டின் அடிப்படையான நெருக்கடிகளைப்பற்றிய உண்மையான அவதானிப்பை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்திய வாழ்க்கையின் நுட்பங்களை உள்ளிருந்தே நோக்கும் ஒருவருக்குரிய இயல்பான துல்லியத்துடன் காட்டுகிறது.இது தன் சமகால கன்னடப் பண்பாட்டை நோக்கியே பேசவும் முயல்கிறது. அவ்வகையில் இது முற்றிலும் இந்திய நாவல்தான். இந்திய-ஆங்கில நாவல்களைப்போல போலியான ஒன்று அல்ல.


பண்பாட்டு சிக்கல்களை ஆராயும் அனந்தமூர்த்தியின் வாழ்க்கைத் தத்துவம் மேலைநாட்டு இருத்தலியல் சார்ந்தது. ஆகவே நாவல் மூலம் அவர் முன்வைக்கும் தீர்வு அல்லது கண்டடையும் முடிவு முற்றிலும் மேலைநாடு சார்ந்ததாக உள்ளது. இது அவருடைய ஆளுமை சார்ந்ததும் கூட. அவரது பிற நாவல்களான ‘அவஸ்தே’ ‘பாரதிபுரம்’ ஆகியவற்றிலும் இதைக் காணலாம்.அனந்தமூர்த்தி கன்னடத்தில் நவ்யா [நவீனத்துவ] இயக்கத்தை உருவாக்கிய முன்னோடிப் படைப்பாளிகளில் ஒருவர். நவீனத்துவத்தின் தத்துவக்குரல்தான் இருத்தலியம் என்று சொல்லப்படுகிறது


அறுபதுகளில் இந்தியா முழுக்க மேற்கத்திய நவீனத்துவம் அறிமுகமாயிற்று. இந்தியச் சூழலில் அது மிகுந்த தனித்தன்மைகள் கொண்ட இந்திய நவீனத்துவமாக மாறி வளர்ந்தது. காலனி ஆட்சிக்கு எதிரான ஓர் இயக்கமாகவே இந்திய மறுமலர்ச்சி உருவாயிற்று என்பது வரலாறு. இந்திய மறுமலர்ச்சி இந்திய மரபை மறுகண்டுபிடிப்பு செய்வதில் இருந்து தொடங்கியது. இந்தியாவின் பண்டைப் பாரம்பரியத்தின் சிறப்பான பகுதிகள் மீண்டும் கவனப்படுத்தப்பட்டன. குறைபாடுகள் களையப்படவேண்டும் என்ற ஆர்வம் எழுந்தது. முரண்பாடுகளை அகற்றவும், சமரசப்படுத்தவும், பலசமயம் மழுப்பவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்போக்கின் அடுத்தபடியாக இந்தியமரபின் சிறப்பான பகுதிகளை மிதமிஞ்சி அழுத்திக்கூறும் போக்கு பிறந்தது. காலனியாதிக்கத்தின் அழுத்ததிற்கு எதிரான எதிர்வினை இது. சுய கண்டடைதலின் அல்லது சுய உருவாக்கத்தின் காலகட்டம் இது


இந்தியா சுதந்திரம் பெற்று சில வருடங்களுக்கு இந்த வேகம் நீடித்தது. பிறகு பழைய-புதிய பொற்காலங்கள் குறித்த கனவுகள் கலைய ஆரம்பித்தன. யதார்த்தப் பார்வை முளைவிடத் தொடங்கியது. இந்த ‘பின்-சுதந்திர’ விரக்தியின் வெளிப்பாடாகவே இந்திய நவீனத்துவம் இங்கு உருவெடுத்தது. நம்பிக்கைகளுக்கு மாறாக விமரிசனப் பாங்கு கொண்ட பகுத்தறிவு வாதத்தை அது முன்வைத்தது. மரபு குறித்த பெருமிதங்களுக்குப் பதிலாக மரபுகளை முற்றாக உதாசீனம் செய்யும் எதிர்ப்பு நிலை உருவாகியது. தனிமனிதவாதமும் தனித்துவம் சார்ந்த தரிசனங்களும் அடிப்படைகளாக அமைந்தன. இத்தகைய இந்திய நவீனத்துவ அணுகுமுறையின் மிகச்சிறந்த உதாரணம் என்று யு.ஆர். அனந்தமூர்த்தியின் படைப்புலகைக் குறிப்பிடலாம். இந்திய நவீனத்துவம் உருவாக்கிய மிகச்சிறந்த இலக்கியப்படைப்புகளில் ஒன்று என்று பரவலாக ஒத்தக்கொள்ளப்படும் நாவல் அனந்தமூர்த்தியின் சம்ஸ்காரா.


நவீனத்துவத்தின் எல்லா பலங்களும் இதற்குண்டு. அடிவயிற்றில் செருகப்பட்ட துருப்பிடித்த ஆணி போல விஷமும் கூர்மையும் உடையது இது. (நன்றி ஜெ.ஜெ. சில குறிப்புகள்). நவீனத்துவத்தின் எல்லா பலவீனங்களும் இதற்குண்டு. அமுதமும் விஷமும் சமன் செய்யப்பட்ட நிலை இதில் இல்லை. மூர்க்கமான எதிர்ப்பு மட்டுமாகவே நின்றுவிடுகிறது. ‘கலாச்சாரம்’ ‘சவ அடக்கம்’ ஆகிய இரண்டு அர்த்தங்கள் வரும் ஒருசொல்லை தன் நாவலுக்கு தலைப்பாக அனந்தமூர்த்தி சூட்டியிருப்பதே எல்லாவற்றையும் கூறிவிடுகிறது.


உடுப்பி ராகவாச்சார் அனந்தமூர்த்தி உடுப்பி அருகே மாத்வாச்சாரிய குருபரம்பரையில் வைதீக வைணவ மரபில் பிறந்து ஆங்கிலப் பட்டமேற்படிப்பு படித்து மேற்குநாடுகளில் பணியாற்றியவர். அவர் அமெரிக்காவில் இருக்கும்போது எழுதிய நாவல் இது. பல இந்தியமொழிகளில் உடனடியாக மொழிபெயர்க்கப்பட்டது. இந்நாவல் தமிழில் இருமுறை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. முதலில் தி.சு. சதாசிவம் அவர்கள் மொழிபெயர்த்து காவ்யா வெளியீடாக வந்தது. பிறகு ஓரியன்ட் லாங்மேனின் பிழைமலிந்த மொழிபெயர்ப்பு வந்தது. தமிழிலும் பரவலாக கவனிக்கபப்ட்ட படைப்பு.



இன்று நவீனத்துவத்தின் வேகம் அனேகமாக இந்தியமொழிகளில் முழுக்க தணிந்துவிட்டது. இறுதிக்கணக்கெடுப்பின்போது ஒவ்வொரு மொழியிலும் மிகச்சில நவீனத்துவ படைப்புகளே அடுத்த கட்டத்திற்காக சட்டை உரித்து புதிதாகப் பிறவி கொள்ளும் தகைமையுடன் உள்ளன. மலையாளத்தில் இவ்வகையில் கசாகின் இதிகாசம் (ஒ.வி.விஜயன்) ஆள்கூட்டம் (ஆனந்த்) நீத்தார் திரியை (எம். சுகுமாரன்) ஆகிய மூன்று நாவல்களை மட்டுமே குறிப்பிடமுடியும். தமிழில் ஒரு புளியமரத்தின் கதை, ஜெ.ஜெ.சிலகுறிப்புகள் (சுந்தர ராமசாமி) பதினெட்டாவது அட்சக்கோடு, தண்ணீர் (அசோகமித்திரன்) கிருஷ்ணப்பருந்து (ஆ. மாதவன்) என் பெயர் ராமசேஷன் காகித மலர்கள் [ஆதவன்] நாளை மற்றுமொருநாளே[ ஜி.நாகராஜன்] ஆகியவை.


நவீனத்துவ அலையின்போது மரபைத் துறப்பது ஒரு புனிதசடங்காக இருந்தது. பிராமணர்கள் மாட்டு மாமிசம் சாப்பிட்டார்கள். கிருதா வைத்துக் கொண்டார்கள். ‘தூக்கிவீசும்’ துடிப்புள்ள கதைகள் எழுதப்பட்டன. கலாச்சார அதிர்ச்சி கொடுப்பதே கலையின் முக்கியமான இயல்பு என்ற எண்ணம் பொதுவாக இருந்தது. இந்த திமிறல்களில் பெரும்பாலானவை ஆழமற்றவை. வெறும் சுய ஏமாற்றுக்கள். இவற்றுக்குப் பின்னனியில் உள்ள உண்மையான சிக்கலையும் தர்மசங்கடத்தையும் கூறிய படைப்புகள் குறைவு. அனந்தமூர்த்தியின் சம்ஸ்காரா அப்படி வெற்றியடைந்த படைப்புகளில் ஒன்று


*


சம்ஸ்காராவின் கதாநாயகர் பிராணேசாச்சாரியார் மரபால் உதாரணப்படுத்தப்படும் உத்தம பிராமணர். புலனடக்கம், சாஸ்திர ஞானம், நியம நிஷ்டைகள் ஆகியவற்றுடன் ஊர் மரியாதைபெற்று வாழ்பவர். அவரது மனைவி வெகுநாள் முன்னரே நோயுற்று படுத்த படுக்கையாக இருக்கிறாள். ஆகவே புலனடக்கம் பயில நல்வாய்ப்பாகப் போயிற்று. அவளை தினமும் குளிப்பாட்டி பணிவிடை செய்து தானே சமைத்து உண்டு வைதீக கர்மங்களை ஆற்றி வாழ்கிறார்.


அவருடைய அதே பழைமை நிரம்பிய அக்ரஹாரத்தில்தான் நாரணப்பாவும் வாழ்கிறான். அவருக்கு நேர் எதிராக தன்னை மாற்றிக் கொள்கிறான். அவருடைய பிராமணியத்திற்குச் சவால் விடுகிறான். மாமிசம் உண்கிறான். விபச்சாரம் செய்கிறான். வெளிப்படையாகவே அவன் பிராணேசாச்சாரியாருக்கு சவால் விடுகிறான். அவரது தவம் வெறும் ஆஷாடபூதித்தனம் என்கிறான். அவனை அக்ரஹார பிராமணர்கள் ஜாதிபிரஷ்டம் செய்திருக்கலாம். ஆனால் அது பிராணேசாச்சாரியார் வாழும் அக்ரஹாரத்திற்கு அவமானம் ஆகிவிடும். அதைவிட அவர்களுடைய புரோகிதத் தொழிலையும் பாதிக்கும். மேலும் அவனை தன் தவ வல்லமை மூலம் மாற்றிவிடலாம் என்று பிராணேசாச்சாரியார் நம்புகிறார். உண்மையில் அவனை மாற்றுவது தன் தவ வலிமைக்கு சான்றாக தனக்கே அமையும் என்று பகற்கனவு காண்கிறார் அவர்


ஆனால் நாரணப்பா இறந்து போகிறான். அவனை அடக்கம் செய்வது யார் என்பதே நாவலில் பிரச்சினை. நாரணப்பா வெளிப்படையாகவே பிராமணியத்தை உதறியவன். ஆனால் பிராமணர் அவனுக்கு சாதிவிலக்கு செய்யவில்லை. அவன் பிராமணியத்தை விட்டாலும் பிராமணியம் அவனை விடவில்லை. எனவே வைதீக முறைப்படியே அவனை அடக்கம் செய்யமுடியும். ஆனால் அதைச் செய்பவர் அவனுடைய பாவங்களுக்குப் பொறுப்பாகி ஜாதிப்பிரஷ்டமாக நேரும். பிராணேசாச்சாரியார் அதைச்செய்ய தயார்தான், ஆனால் அவர் அவ்வூரின் தலைவர். அவர் செய்வதை ஊரார் ஒப்புக்கொள்ளவில்லை. மடத்திலிருந்து உத்தரவு வரட்டும் என்று காத்திருக்கிறார்கள்.


முடிவெடுக்க முடியாத நிலையில் அக்ரஹாரம் தத்தளிக்க அழுகும் பிணத்தில் இருந்து பிளேக் பரவி ஊரையே சூறையாடுகிறது.பிளேக் பரவியபின்னரும் கூட அக்ரஹாரம் நாரணப்பா விஷயத்தில் முடிவெடுக்கவில்லை. கடைசியில் நாரணப்பாவின் காதலி சந்திரி சிலர் உதவியுடன் அவன் சடலத்தை எரியூட்டுகிறாள். ஆனால் பிளேக் ஊரை கொள்ளையடித்துச் சூரையாடுகிறது. பயம் கொண்ட பிராமணர்கள் ஊரைவிட்டே ஓடுகிறார்கள். எலிகளைப்போல சாகிறார்கள்


சந்தர்ப்பத் தவறினால் பிராணேசாச்சாரியர் வீட்டு திண்னையில் வந்து தங்கும் சந்திரியுடன் அவர் உறவு கொள்ள நேர்கிறது. அத்தனை நாள் அவர் கட்டிக்காத்த பிரம்மசரிய விரதம் கலைகிறது. ஆழமான குற்றவுணர்வடைந்து ஊரைவிட்டேப் போகும் பிராணேசாச்சாரியார் விவசாயிகளின் சந்தை ஒன்றை அடைகிறார். அர்த்தமில்லாமல் சுற்றிவருகிறார். அவருள் கொந்தளிக்கும் சிந்தனைகளுக்கு விடையாக அமைகிறது வெளியே கொந்தளிக்கும் உண்மையான வாழ்க்கை. படிப்படியாக அவர் தன் தெளிவை அடைகிறார். தன் ‘மகாவைதிக’ வேடத்தைக் கலைத்துவிட்டு சாதாரண மனிதனாக மக்களிடையே உலவி, மெல்ல தன் தரிசனத்தை அவர் அடைவதை மிக நுட்பமாக நாவல் சித்தரிக்கிறது. பிராணேசாச்சாரியார் திரும்பிவருகிறார்.


*


நவீனத்துவ நாவல்களுக்குரிய வடிவம் உடைய ஆக்கம் இது. கருத்துருவகத் [அலிகரி] தன்மை இதன் கவித்துவத்தை தீர்மானிக்கிறது. காம்யூவின் பிளேக் நாவலில் இருந்து தன் தூண்டுதலை இது பெற்றுக்கொண்டிருக்கக் கூடுமென படுகிறது. இறுக்கமான கருத்துருவகங்களால் ஆனது இதன் மொத்தச் சித்தரிப்பும்.


மிக வெளிப்படையாக இந்நாவலில் உள்ள கருத்துருவகங்கள் மூன்று. நாரணப்பாவின் பிணம். பிராணேசாச்சாரியாரின் பிரம்மசரியம்.பிளேக். பிராணேசாச்சாரியாரின் பிரம்மசரியம் இந்திய வைதீக மரபு கட்டிக்காத்துவரும் தூய்மை என்ற உருவகத்தைச் சுட்டிககட்டுகிறது. கருத்துக்களின் மாறாத தன்மை என்னும் தூய்மை. வெளிப்படையாகவே கடைப்பிடிக்கப்படும் ஆசார அனுஷ்டானங்கள் என்னும் தூய்மை. அனைத்துக்கும் மேலாக இது உன்னதமானது,நான் உயர்ந்தவன் என்னும் தூய்மை. விரதங்கள் மூலம் ஓயாது தூய்மைப்படுத்திக் கொண்டே இருக்கவேண்டிய ஒன்று பிராணேசாச்சாரியார்ரின் மதமும் பண்பாடும்.


நாரணப்பா உயிரோட்டிருந்தவரை அவரால் வைதீகமதத்தை ஒன்றும் செய்யமுடியவில்லை. அது தன் முடிவற்ற வளைந்துகொடுத்தல்கள் மூலம் நாரணப்பாவையும் உள்ளேயே வைத்திருந்தது. ஆனால் பிணம் ஒரு பெரும் வினா. அதற்கு வைதீகத்திடம் விடையில்லை. அது திகைத்து நின்றுவிடுகிறது. பிணத்திலிருந்து பிளேக் கிளம்புகிறது. பதிலளிக்கப்படாத வினா போல நோய் பெருகி வைதீகத்தையே உண்டுவிடத்துடிக்கிறது. வழிபடக்கூடிய கருடன் தூக்கிவந்து போடும் எலி வழியாக அது பரவுகிறது என்ற நாவலின் குறிப்பு மிகமுக்கியமானது


நவீனத்துவ நாவல்கள் தங்களளவில் தத்துவ ஆய்வாகவும் நிற்கக் கூடியவை, உதாரணம் காம்யூவின் அன்னியன். ஆகவேதான் அவை குறிப்புருவகம் என்ற வடிவை அடைகின்றன. ஆகவே அவற்றின் கதாபாத்திரங்களையும் கூட விரிவான பொருளில் குறியீடுகளாகவே கொள்ளவேண்டும். அவ்வகையில் பிராணேசாச்சாரியர் நாரணப்பா இருவருமே முக்கியமான இருகுறியீடுகள். ஒன்று பழைமை, மரபு. இன்னொன்று புதுமை, எதிர்ப்பு. நாரணப்பாவின் தீவிரம் முழுக்க பிராணேசாச்சாரியாருக்கு எதிராக அவன் திரட்டிக் கொண்டது என்பது நாவலில் தெளிவாக உள்ளது. அதே சமயம் பிராணேசாச்சாரியாரின் தீவிரமும் ஒரு வகையில், மிக மிக உள்ளார்ந்த முறையில், எதிர்மறையானதுதான். அவர் மனதில் நாரணப்பா இல்லாத தருணமே இல்லை. அவர் காவியம் பயில்கையில் நாரணப்பா நாடகம் ஆடுகிறான். அவருடைய மறுபாதிதான் அவன்.


கிடைத்த முதல் தருணத்திலேயே பிராணேச்சாரியார் சந்திரியுடன் உடலுறவு கொள்கிறார் என்றால் அதற்குக் காரணம் அவர் நாரணப்பா வடிவில் அவளை அதற்கு முன்பே மீண்டும் மீண்டும் அனுபவித்திருந்தார் என்பதே. தன்னுள் உறைந்துள்ள நாரணப்பாவை அடையாளம் காண்பதே பிராணேசாச்சாரியரை உலுக்குகிறது. அவரை தான் உண்மையில் யார் என்று தேடி அலைய வைக்கிறது. நாரணப்பாவும் பிராணேச்சாரியாரும் இயல்பாக இணையும் ஒரு புள்ளியையே இறுதியில் பிராணேசாச்சாரியார் கண்டடைந்தார் என்று கூறலாம்.


நாவல் முடியும் இந்தப்புள்ளியிலிருந்து ஒரு புதிய வினா எழுகிறது. தன்னுள் உறையும் பிராணேசாச்சாரியரை நாரணப்பா அடையாளம் கண்டு கொண்டானா? கண்டிப்பாக. அவனுடைய செயல்களில் உள்ளது தன்னை வதைத்துக்கொள்ளும் முனைப்பு. அது தன்னுள் உறையும் பிராணேசாச்சாரியரை வதைப்பதன் மூலம் அவன் அடைவது. (ஒருவகையில் தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான உறவு போன்றது இது). பிராணேசாச்சாரியரின் பிரச்சினையைவிட நாரணப்பாவின் பிரச்சினையே இந்நாவலைப் பொறுத்தவரை முக்கியமானது. ஏனெனில் அவன் தன் சமநிலைப்புள்ளியை கண்டு கொள்ளவில்லை. செத்து அழுகி, தன் சவாலை முழு உச்சத்திற்கு கொண்டு போவதுடன் அவன் வாழ்வு முடிந்துவிடுகிறது.


நாரணப்பாவின் பிரச்சினையே இந்திய நவீனத்துவத்தின் பிரச்சினை. அதன் முடிவு இந்திய நவீனத்துவத்தின் முடிவு. ஒரு அடிவயிற்று ஆவேசமாக, ஒரு கேள்வியாக தன்னை உருமாற்றி பண்பாட்டின் முற்றத்தில் வீசிவிடுவதே நவீனத்துவம் அதன் உச்சநிலையில்கூட செய்யக்கூடுவதாக உள்ளது. விடை அதன் வட்டத்துக்கு வெளியே எங்கோ உள்ளது. விடை தேடி பண்பாட்டை ஒட்டுமொத்தமாக ஆராய்வதோ நுண்மைகளில் ஊடுருவுவதோ சாரத்தில் உறையும் முரண்இயக்கத்தை தொட்டு எழுப்புவதோ அதனால் முடிவதில்லை. நவீனத்துவ நாவல்கள் எல்லாமே ஒருதலைப்பட்சமானவை. அவற்றில் உணர்ச்சிவெளிப்பாட்டில் சமநிலை இருக்கும். ஆனால் தரிசனத்தில் சமநிலை உருவாவதேயில்லை. நவீனத்துவத்திற்கு பின்பு உருவான இன்றைய புத்திலக்கியத்தின் சவால் நவீனத்துவத்தின் மொழிநேர்த்தியை அடைந்தபடி விடைகளைத்தேடி பண்பாட்டை ஒட்டுமொத்தமாக ஆராயும் முழுமைநோக்கில்தான் உள்ளது.


இந்நாவலில் குறிப்பாகக் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. இதில் உள்ள பிளேக் காம்யூவின் உலகப்புகழ்பெற்ற ‘கொள்ளை நோய்’ பிளேக்குக்கு எதிர்வினையாகும். காம்யூவின் கொள்ளை நோய் மனிதர்களை செயலிழக்க வைப்பது, நிலைபிறழ வைப்பது, மனிதர்களை மீறியது. சம்ஸ்காராவில் உள்ள இந்தக் கொள்ளைநோய் மனித வினைகளின் விளைவு. அது மானுடனின் அடிப்படை இருப்பையே உலுக்குகிறது. இது மனித அறம் மரணத்திற்கு முன் எப்படி பொருள்படுகிறது என்று வினவுவதுடன் நின்றுவிடுகிறது. சமகால மலையாள நாவலான ஓ.வி. விஜயனின் ‘கசாகின் இதிகாசத்’திலும் கொள்ளைநோய் (அம்மை) ஒரு முக்கியமான நிகழ்வாக வருகிறது. மேற்கத்திய நவீனத்துவத்திற்கும் இந்திய நவீனத்திற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை இம்மூன்று கொள்ளை நோய்களையும் ஒப்பிடுவதன் மூலமே ஒருவர் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.


*


சம்ஸ்காரா எதிர்கொண்ட சிக்கலை பேசும் பிற இந்திய நாவல்கள் இரண்டு சட்டென்று நினைவுக்கு வருகின்றன. ஒன்று ரவீந்திர நாத் தாகூரின் ‘கோரா’ இன்னொன்று எஸ்.எல்.பைரப்பாவின் ‘வம்ச விருக்ஷா’


கோரா நாவலின் நாயகன் கோரா பிரம்ம சமாஜம் ஓங்கி வங்க பண்பாட்டை ஆட்கொள்ள முயன்ற காலகட்டத்தில் வாழ்கிறான். சமூக சீர்திருத்த இயக்கமான பிரம்ம சமாஜம் அடிப்படையில் மேலைநாட்டு மனநிலை கொண்டது. பிரம்ம சமாஜிகள் மேலைநாட்டு வாழ்க்கைமுறை, ஆங்கிலக் கல்வி ஆகியவற்றைக் கொண்டிருக்கிறார்கள். கிறித்தவ தேவாலய வழிபாட்டு முறையை இந்துமதத்தில் புகுத்துகிறார்கள். ஐரோப்பிய பாணியில் இந்துமதத்தை மாற்றுவதே அவர்களின் சீர்திருத்தம் என்பது


இது இந்திய தேசிய அடையாளத்தையும் இந்து மதத்தின் அடிபப்டைகளையும் அழித்துவிடும் என்று எண்ணும் கோரா போன்ற இளைஞர்கள் இந்துமதத்தை அப்படியே மாறாமல் கடைப்பிடிக்க முயல்கிறார்கள். பிரம்ம சமாஜத்தின் பின்னால் உள்ள ஐரோப்பிய மோகத்தை எதிர்கொள்ள அதுவே சிறந்த வழி என்று எண்ணுகிறார்கள். தீண்டாமை உட்பட ஆசாரங்களைக் கடைப்பிடிக்கும் கோரா இப்போது இவ்வாசாரங்களில் எவை உகந்தவை எவை தேவையற்றவை என்று சிந்திக்க நேரமில்லை, முதலில் நாம் மரபை மீட்டு எடுப்போம் என்று வாதிடுகிறான்.


ஆனால் கோராவுக்கு அவன் ஒரு வெள்ளைய ‘மிலேச்ச’க் குழந்தை, தத்து எடுக்கப்பட்டவன் என்று தெரியவருகிறது. ஆழமான மன அதிர்ச்சிக்கு உள்ளாகும் கோரா ஆன்மீகமான ஒரு கொந்தளிப்பை அடைகிறான். நாவலின் இறுதியில் மத இன வேறுபாடுகளைக் கடந்த ஒரு பொதுமானுட தரிசனத்தை அவன் அடைகிறான்


வம்சவிருக்ஷாவின் கதாநாயகர் வைதீகரான சிரௌத்ரி. அவரது மருமகள் ஒரு குழந்தையுடன் விதவையாகிறாள். மரபின் ஆழமான பிடிப்பு கொண்ட அவர் அவளை ஒரு இந்துவிதவைக்குரிய கட்டுப்பாடுகளுடன் வைக்கிறார். அவள் அவரை மீறி கல்வி கற்கச்செல்கிறார். அங்குள்ள பேராசிரியருடன் காதல் கொள்கிறாள். அவரை மணம் செய்கிறாள். அது சிரௌத்ரிக்கு பேரிடியாக அமைகிறது. இந்து விதவையின் மறுமணமென்பது அவர் நோக்கில் பெரும் பாவம். தன் பேரனை தன்னிடமே வைத்துக் கொள்கிறார். மருமகள் இறந்ததகவே அவர் சடங்குகள் செய்து கொள்கிறார்.


மருமகள் நோயுற்று மரணப்படுக்கையில் கிடக்கிறாள். தன் மகனைப்பார்க்க அவள் விழைகிறாள். ஆனால் அதற்கு சிரௌத்ரி ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் மனம் பொறாமல் ஏதேனும் வழி இருக்குமா என தன் அப்பா எழுதிவைத்த பழைய குறிப்புகளை ஆராய்கிறார். ஒரு உண்மை தெரியவருகிறது. அவரது பெற்றொருக்கு குழந்தை இல்லை. வைதீக கர்மங்களுக்கு மகன் தேவை என்பதனால் வைதீக மரபு அனுமதித்த முறைப்படி அவர் தந்தை ஒரு வைதிகனை தன் வீட்டில் தங்கவைத்து தன் மனைவியுடன் உடலுறவு கொள்ளச்செய்கிறார். அப்படிப்பிறந்தவர்தான் சிரௌத்ரி.


அதிர்ச்சியும் மனக்குழப்பமும் அடையும் சிரௌத்ரி மெல்ல ஆன்மீகமான விழிப்பை அடைகிறார். கங்கைக்கு எப்படி மண்ணில் விதிகள் இல்லையோ அதுபோலவே தாய்மையும் என்ற புரிதல் அது. தாய்மையை அளவிட மண்ணில் சாஸ்திரங்கள் இல்லை. பேரனுடன் அவர் மருமகளைப் பார்க்க வருகிறார்.


கோரா, சிரௌத்ரி இருவரும் பிராணேசாச்சாரியார் போலவே மரபின் பிரதிநிதிகள் அவர்கள் அடையும் தர்மசங்கடங்கள் ஏறத்தாழ பிராணேசாச்சாரியார் அடையும் தர்ம சங்கடத்திற்கு நிகரானவை. அவற்றிலிருந்து இக்கதாபாத்திரங்கள் எப்படி மீண்டன என்பதே முக்கியமானது. கோரா மதத்தையும் மரபையும் கடந்து மானுடமான ஒரு தளத்தை அடைகிறான். சிரௌத்ரி மதத்துக்கும் பண்பாட்டுக்கும் அப்பாற்பட்ட ஆதிப் பழங்குடிசார் மெய்மை ஒன்றை அடைகிறார். பிராணேசாச்சாரியார் அடைவது மேலைநாட்டு தத்துவ இயலாளர் கண்டடைந்த இருத்தலிய தரிசனத்தை. பண்பாட்டையும் மரபையும் சுய அடையாளங்கள் அனைத்தையும் கழற்றிவிட்டு வெறும் மனிதனாக காலத்தின் முன் நிற்பதை.


சம்ஸ்காராவின் முக்கியமான பலவீனமும் பலமும் அது நவீனத்துவ பிரதி என்பதே. செறிவான கதைப்போக்கு, கூரிய நடை, அறிவார்ந்த கூறுமுறை, மிதமான உணர்ச்சிவெளிப்பாடு கொண்ட நாவல். ஆனால் அதன் உச்சம் காலாதீதமான ஓர் உண்மையை தீண்டவில்லை, இருபதாம் நூற்றாண்டின் இறுதிக்குரிய ஒரு தத்துவநிலைப்பாட்டையே சென்றடைகிறது.


[சமஸ்காரா _ யூ.ஆர். ஆனந்தமூர்த்தி; தமிழாக்கம், தி.சு. சதாசிவம் : 1986, காவ்யா பதிப்பகம், பெங்களூர்]


 


மறுபதிப்பு /முதற்பதிப்பு Feb 2, 2007

தொடர்புடைய பதிவுகள்

சிவராம் காரந்த்தின் ‘மண்ணும் மனிதரும்’
‘ஸ்ரீரங்க’வின் ‘முதலில்லாததும் முடிவில்லாததும்’
தகழி சிவசங்கரப்பிள்ளையின் ஏணிப்படிகள்
புனத்தில் குஞ்ஞப்துல்லாவின் மீசான் கற்கள்.
கிரிராஜ் கிஷோரின் ‘சதுரங்கக் குதிரைகள்’
குர்அதுல் ஜன் ஹைதரின் ‘அக்னி நதி ‘
பி.கேசவதேவின் ‘அண்டைவீட்டார்’
வி.எஸ்.காண்டேகரின் யயாதி.
அதீன் பந்த்யோபாத்யாய’வின் ‘நீலகண்ட பறவையை தேடி’
மைத்ரேயிதேவியின் ‘கொல்லப்படுவதில்லை’
பன்னாலால் பட்டேலின் ‘வாழ்க்கை ஒரு நாடகம்’
எஸ். எல். பைரப்பா வின் ஒரு குடும்பம் சிதைகிறது
வெங்கடேஷ் மாட்கூல்கரின் ‘பன்கர் வாடி’
சித்திரவனம்
விபூதி பூஷன் பந்த்யோபாத்யாய’ வின் ‘பதேர் பாஞ்சாலி’
லட்சுமி நந்தன் போரா’வின் ‘ கங்கைப் பருந்தின் சிறகுகள் ‘
மாஸ்தி வெங்கடேச அய்யங்காரின் ‘சிக்கவீர ராஜேந்திரன்’
தாரா சங்கர் பானர்ஜியின் ‘ஆரோக்கிய நிகேதனம்’
சாக்கியார் முதல் சக்கரியா வரை
காடு வாசிப்பனுபவம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 15, 2016 11:38

பனிமனிதன் -கடிதங்கள்

article-2463934-18C923B300000578-435_634x445


 


திரு. ஜெயமோகன் அவர்களே!


என் ஏழாம் வகுப்பு படிக்கும் மகனுக்கு பனிமனிதனை வாசித்து காண்பித்தேன். எங்களிருவருக்குமே மிகவும் பிடித்திருந்தது – கதையைப்படித்த பொன்னான தருணங்கள்! இருவருமே சாயங்காலம் வருவதற்காக கிட்டத்தட்ட தவமிருக்கவே தொடங்கியிருந்தோம் – தினமும் பத்திலிருந்து பதினைந்து பக்கங்கள் மட்டுமே படிப்போம். சங்கல்ப் (என் மகன்) இந்தக்கதை முடியவே கூடாதென்று தினந்தோறும் சொன்னபடியே இருந்தான்! நேற்றுடன் முடிவடைந்தது – பனிமனிதனின் சீக்குவல் வேண்டுமென மிகவும் விரும்புகிறான்!


பனிமனிதனின் கதை, குழந்தைகளுக்கு மட்டுமானது அன்றி, அனைத்து தரப்பினருமே படிக்கவேண்டும்! வீரம், வெற்றி ஆகியவற்றைத்தாண்டி ஈரம், நல்குணம் போன்ற இந்திய வாழ்வியலைக் கொண்டாட, நிறைவாழ்வு வாழ பனிமனிதன் மிகவும் உதவுவான். பனிமனிதனில், நல்லவனாக வாழ்வதற்கான சாவிகளை நீங்கள் நிறையவே புதைத்துள்ளீர்கள், அதில் சிலவற்றையெடுத்து, என் மகனுக்கும் கொடுத்துள்ளேன்!


சரி, பனிமனிதன் – பாகம் 2 ஐ, உடனடியாக அனுப்பிவைக்கவும்!


மிக்க நன்றி


பி.ஆர். கல்யாண்


***


அன்புள்ள கல்யாண்


பனிமனிதனின் தொடர்ச்சியாக திபெத் அல்லது லடாக் பின்னணியில் ஒரு நாவல் எழுதும் எண்ணம் இருந்தது. இப்போதும் உள்ளது. பார்ப்போம். அந்நாவலிலேயே அந்தக்குறிப்பு உண்டு.


ஏதாவது சிறுவர் இதழில் தொடராக எழுத முடிந்தால் நல்லது என நினைக்கிறேன்


ஜெ


***


அன்புள்ள ஜெ


என் மகனுக்குப் பனிமனிதனை நான் முதல் எட்டு அத்தியாயங்கள் வாசித்துக் கேட்கவைத்தேன். அவனுக்கு 7 வயது .மூன்றாம் வகுப்பு. அதன்பின் அவனே உட்கார்ந்து எழுத்துக்கூட்டி மிச்சத்தைப் படித்துவிட்டான். இமையமலை பற்றி ஒரே பரவசமாகப் பேசிக்கொண்டிருக்கிறான்.


குழந்தைகளுக்குக் கதைகள் சுருக்கமாக இருக்கவேண்டும் என்பதும் மாயாஜாலங்கள் இருக்கவேண்டும் என்பதும் நாமே போட்டுக்கொள்வதுதான். பல குழந்தைக்கதைகளில் ‘ஹாரிபாட்டர் அந்த ராட்சதச் சிலந்தியிடம் பேசினான்’ என்ற வகையில் மிகவும் எளிமையான விவரிப்புதான் வரும். இதில் இயற்கை வர்ணனை மிகவும் விரிவாக வருகிறது. ஆனால் அதுதான் பிள்ளைகளுக்குப் பிடித்திருக்கிறது. தொடக்கவரியே இமையமலையை வர்ணிப்பதுதான்


ஏன் என்று நான் நிறைய யோசித்தேன். பிள்ளைகள் வெளியுலகை கற்பனைசெய்துகொண்டே இருக்கின்றன. மொத்தத்தில் வீட்டை விட்டு கிளம்பியாகவேண்டும். இப்படி அற்புதமான கனவுபோன்ற நிலவர்ணனைகள் அவர்களுக்கு பெரும் மனக்கிளர்ச்சியை அளிக்கின்றன. அவர்கள் அங்கே சென்றுவிடுகிறார்கள். வீட்டுக்குள் நடப்பது போல கதை எழுதினாலோ வகுப்பில் நடக்கும் கதைகளோ அவர்களுக்குப் பிடிப்பதே இல்லை என்பது இதனால்தான்


ஜெயலட்சுமி


***


அன்புள்ள ஜெயலட்சுமி


நாவல் வெளிவந்தபோது அன்று ஆரம்பப்பள்ளி ஆசிரியராக இருந்த தேவதேவன் இதைத்தான் சொன்னார்


ஜெ

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 15, 2016 11:32

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 28

[ 9 ]


பீமனும் அர்ஜுனனும் முன்னரே விதுரரின் குடில்முகப்பில் நின்றிருந்தனர். தருமனும் நகுலனும் அவர்களைப் பார்த்தபின் சற்று நடைவிரைவுடன் நோக்கு விலக்கி அணுகினர். “ஐவரையும் வரச்சொன்னார் அமைச்சர்” என்றான் நகுலன். தருமன் கேட்காமலேயே “நம்மை மட்டும்தான், அரசியை கூப்பிடவில்லை” என்றான். தருமன் தலையசைத்தார். வெயில் உடலிலிருந்து வியர்வையை ஆவியாக எழச்செய்தது. அன்றும் மழை இருக்கும் என்று தோன்றியது. ஆனால் வானம் ஒளிநிறைந்திருந்தது.


அவர்கள் அவர் வருவதற்காகவே காத்திருந்தனர் எனத்தெரிந்தது. அவர் அருகே வந்ததும் சொல்லின்றி தலைவணங்கினர். தருமன் முதலில் நடந்து உள்ளே செல்ல பீமன் தொடர்ந்து வந்தான். அவன் உடலில் இருந்து காட்டின் தழைமணமும் சேற்றுமணமும் எழுந்தது. அர்ஜுனனும் நகுலனும் சகதேவனும் இறுதியாக வந்தனர். காலடிகள் மட்டும் ஒலித்தன. அவர்கள் குடிலுக்குள் நுழைந்ததும் அவை ஒலிமாறுபாடு கொண்டன.


தருமன் அமர்வதற்கு மட்டுமே பீடமிருந்தது. அவர் அமர்ந்ததும் மருத்துவ உதவியாளன் அவருக்கு தலைவணங்கியபின் விதுரர் தோளைத்தொட்டு “வந்து விட்டார்கள், அமைச்சரே” என்றான். அவர் கண் திறந்தபோது அவை தெளிந்திருப்பதை தருமன் கண்டார். நோயுற்றவர்களின் கண்களில் இருக்கும் அனற்படலம் அவற்றில் இருக்கவில்லை. உதடுகளும் ஈரம்கொண்டிருந்தன. மருத்துவ உதவியாளன் “பழச்சாறு அருந்தினார். காய்ச்சல் பெரும்பாலும் நின்றுவிட்டது” என்றான்.


தருமன் “வணங்குகிறேன், தந்தையே. உடல்நிலை மீண்டுவிட்டது என்றனர். இன்னும் சிலநாட்களில் எழுந்துவிடுவீர்கள்” என்றார். விதுரர் “ம்” என தலையை அசைத்து “உடல்நிலை சீரடைந்ததும் நான் தமையனிடமே மீளப்போகிறேன்” என்றார். தருமன் “ஆம், தாங்கள் அங்கிருப்பதே நன்று. இந்தக் காடு தங்களுக்கு ஒவ்வாதது. அஸ்தினபுரியில் நல்லுணவும் மருத்துவ உதவியும் உங்களை மீளச்செய்யும்” என்றார். “ஆம்” என்றார் விதுரர். “அங்கு தமையன் இருக்கிறார். நான் அவரிடம் மீண்டுசெல்லவேண்டும்.”


சிலமுறை முனகியபின் விழிகளை மூடியபடி “என் இடம் அதுவே. நான் அவரை ஒருகணமும் மறக்கவில்லை. என்னால் உறவுகளிலிருந்து விலக முடியாது. உறவுகளுக்கு மேலே எனக்கு எதுவும் இல்லை. அறமென்றும் விடுதலை என்றும் நான் எண்ணிக்கொள்ளலாம். அது உண்மை அல்ல என உறவுகளை விட்டுவிட்டு வந்தபோதுதான் தெரிந்தது” என்றார். சொல்லத் தொடங்கியதும் அவர் துயர் முழுதும் மொழியாகியது. “எத்தனை ஏங்கியிருக்கிறேன் இப்படி கிளம்பி வருவதைப்பற்றி! இத்தகைய ஒரு கானக வாழ்க்கையைப்பற்றி. யுதிஷ்டிரா, அங்கிருக்கையில் ஒவ்வொருநாளும் அங்கிருந்து கிளம்பிச்செல்வதைப்பற்றியே எண்ணிக்கொண்டிருப்பேன். நுணுக்கமாக திட்டங்கள் போடுவேன். ஆகவேதான் மிக எளிதாக நான் அஸ்தினபுரியிலிருந்து வெளியேற முடிந்தது.”


“என் பேரன்னை சத்யவதியும் அன்னையரும் காடேகக் கண்டபோது என்னுள் உருவான எண்ணமாக இருக்கலாம் இது. அவர்களை காட்டுக்குள் கொண்டுசென்று விட்டவன் நான்தான். ஒருநாள் நானும் வந்துவிடுவேன் என்பதே அன்று என் உள்ளம் கொண்ட எழுச்சி. அஸ்தினபுரியிலிருந்து கிளம்பியபோது அக்காட்டுக்குத்தான் சென்றேன். அங்கு சென்றதும் ஒன்று தெரிந்தது, என் உள்ளத்திற்குத்தான் அது அரசியரின் காடு. காடு அதை மறுநாளே கடந்துவிட்டது. புதிய முளைகள், புதிய உயிர்கள் என அது மாறுதோற்றம் கொண்டுவிட்டது. எத்தனை சிறியவர்கள் மானுடர்! நீர்மேல் ஓயாது எழுதிக்கொண்டிருக்கும் நீர்ப்பூச்சிகள்…”


அவர் பேசட்டும் என தருமன் காத்திருந்தார். “இங்கு வந்தபோதுகூட நான் தனியாக வரவில்லை.” அவர் அஸ்வதந்தம் பற்றிச் சொல்லப்போகிறார் என தருமன் எண்ணினார். ஆனால் அவர் அதைக் கடந்து “எங்கும் நான் தனியாகச் செல்லமுடியாது. உன்னைப் பார்ப்பவர் யோகி என எண்ணக்கூடும். நீ பிரியமுடியாத உறவுகளுடன் காடேகியவன் என அவர்கள் அறிவதில்லை. என் உறவுகள் விழிக்குத்தெரியாமல் தொடர்பவர்கள்.” அவர் மெல்ல புன்னகை செய்தார். “ஆனால் நான் நம்பி அமர்ந்திருந்த ஒன்று உடைந்துவிட்டது. அறமென நான் எண்ணிய ஒன்றின்மேல் கட்டப்பட்டவை என் எண்ணங்கள் யாவும். இவ்வுலகை சமைப்பதில் அறம் எப்பங்கும் ஆற்றவில்லை என்று உணர்ந்தபின் ஆடையற்று அவைமுன் நிற்பவனாக உணர்ந்தேன்.”


அச்சொல் அவர் வாயில் வந்தபோதுதான் அது தன்னுள் எப்போதுமிருக்கும் எண்ணம் என உணர்ந்தார். “ஆம், அந்த அவைநிகழ்ச்சி. அது அனைவருக்கும் காட்டியது அவர்கள் உண்மையில் எவர் என. மிகைநடிப்பு வழியாகவும், அமைதியினூடாகவும், சொற்களினூடாகவும், கனவுகளினூடாகவும் அவர்கள் அதை கடந்துசெல்கிறார்கள். நான் அதைக் கடந்து செல்லாதவன். ஏனென்றால் அவை நடுவே அவ்வண்ணம் நின்றது அவள் அல்ல.” பெருமூச்சுடன் “அப்போதே கிளம்பியிருக்கவேண்டும். ஆனால் ஒவ்வொன்றையும் சீரமைத்துவிடலாமென்னும் நம்பிக்கை அப்போதும் எஞ்சியிருந்தது. என் மீதான நம்பிக்கை, அதைவிட என் தமையன் மீதான நம்பிக்கை” என்றார்.


“நான் துவைதக்காட்டுக்குத்தான் சென்றேன்” என்றார் விதுரர் “அங்கே சார்வாக மெய்யறிவை கேட்டேன். நான் எண்ணிவந்தவை அதே சொற்கள். அறமென்பது அரண்மனகளைப்போல, கோட்டைகளைப்போல பயனுள்ளது. ஆனால் எவருடையது அது என்பதே அறியப்படவேண்டியது. இன்பவிழைவன்றி இப்புவியில் எதுவுமே உண்மையான விசைகள் அல்ல. அது நீர் மதுவென்றும் தேனென்றும் மருந்தென்றும் மாற்றுருக்கொள்வதுபோல நம் முன் வந்து நிற்கிறது என்றார்கள்.”


“அங்கு கேட்ட ஒரு வரி என்னை நிலையழியச் செய்தது” என்றார் விதுரர் “அறத்தை நாம் ஏன் நம்புகிறோம் என்றால் நம் இன்பவிழைவை நாம் மறைக்க விரும்புகிறோம் என்பதனால்தான். உண்மை உண்மை என என் உள்ளம் அந்த அவையிலமர்ந்து ஆயிரம் முறை உரக்கக் கூவியது” விதுரர் சொன்னார். “ஆனால் மெல்லமெல்ல அந்த அவையிலிருந்து நான் விலகத்தொடங்கினேன். முற்றிலும் சீரான சொல்லொழுங்குடன் முன்வைக்கப்பட்ட அவ்வெண்ணங்கள் அவற்றின் ஒழுங்காலேயே முழுமையற்றவை என எண்ணத்தலைப்பட்டேன். உண்மையின் நடுவே ஒர் அறியமுடியாமை இருந்தே தீரும். இல்லையேல் மானுடனின் எண்ணப்பெருக்கு என்றோ நின்றிருக்கும். இன்று தொடங்கி பல்லாயிரமாண்டுகாலம் கடந்த பின்னரும் மையமானது சொல்லப்படாமலேயே எஞ்சும்.”


“அங்கிருந்து இங்கு வந்தேன். என்னுள் அனைத்தும் கலைந்திருந்தன. என்னால் அவற்றை சொற்களாக்கி அடுக்கி எண்ணமாக்கிக் கொள்ளமுடியவில்லை. ஆனால் உள்ளம் சலிப்பதே இல்லை. அதற்கு வேறுவழியே இல்லை. அது தன் புடவியை தன்னிலிருந்து நூற்று நெய்து எடுத்தாகவேண்டும்.” அவர் புன்னகைத்தார். “இந்த நோயுறுதல் ஒரு நல்லூழே. ஓயாது ஓடிக்கொண்டிருந்த தறி நின்றது. கனவும் கடந்து ஆழ்நிலை கூடியது. அங்கே அனைத்தையும் கண்டேன். மொழி சென்றடையாத ஆழங்கள். யுதிஷ்டிரா, கனவுத்தளம் காட்சிகளால் ஆனது. ஆழ்தளமோ வெறும் உணர்வுகள். உடலற்ற ஆத்மாக்களைப்போல இம்மண்ணில் எதன்மேலும் ஏறிக்கொள்ளாதவை. எதன்பொருட்டுமென்றில்லாத உணர்வுகளை அளைந்தபடி இங்கே கிடந்தேன்.”


“அப்போது ஒன்றும் தெரியவில்லை. விழித்தெழுந்தபோது அடைந்தவற்றை சொல்லாக ஆக்கமுயன்றேன். உடைபட்ட சொற்களாக அவை மாறத்தொடங்கியதும் மீளலானேன்” என்றார் விதுரர். “அங்கு நான் அடைந்த உணர்வுகள் அனைத்தும் என் உறவுகளுக்கானவை. என் மைந்தர், மனைவி, மூத்தவர்…” பெருமூச்சுடன் “அவைதான் நான் என்றால் அவற்றை நான் ஏன் அஞ்சவேண்டும்? ஏன் உதறி வெவ்வேறு மாற்றுருக்களை சூடவேண்டும்? நான் இனி அவற்றை எவ்வகையிலும் தவிர்க்கப்போவதில்லை, அவற்றால் ஆனது என் உள்ளம்” என்றார்.


“சார்வாக நெறி இருபெரும் ஆசிரியர்களால் இரண்டாக பகுக்கப்பட்டுள்ளது” என்றார் விதுரர். “முதலாசிரியரான பிரஹஸ்பதி இன்பமே விழுப்பொருள் என்கிறார். ஆனால் பிறருக்கும் இன்பம் தேவையென்ற கட்டுப்பாடு அதன் எதிர்விசை. அந்த உணர்வை மானுடர் இங்கு வாழ்வதற்கு இன்றியமையாதது என்கிறார். சுக்ரரோ அந்த எதிர்விசை தூய ஆற்றலால் மட்டுமே எதிர்கொள்ளப்படவேண்டும் என்கிறார். இருவருமே காணாத ஒன்றுண்டு. அறமென்றும் பிறிதென்றும் இங்கு அணிசூடி நின்றிருப்பது மானுடனின் பற்று மட்டுமே. இன்பத்தைவிட முதன்மையானது அது.”


“யுதிஷ்டிரா, இப்புவியில் விழியிழந்த என் தமையனின் அருகமைதல் எனக்கு எந்த இன்பத்தைவிடவும் மேலானது. மானுடம் உறவுகளால் பின்னப்பட்டது. பற்றே இதன் இயக்கவிசை. அன்பென்று அதை சொல்கிறோம். இரக்கமென்று பிறிதொரு தருணம் கூறுகிறோம். நெஞ்சுருகாதவன் வாழ்வதே இல்லை. இங்குள்ள அனைத்தும் அவனுக்கு மறுக்கப்பட்டுள்ளது” என்றார் விதுரர். “அதை இப்போது மலைகளைப்போல பெரும்பருவடிவாக அருகறிகிறேன். அன்பு செலுத்துக, அதன்பொருட்டே வாழ்க! பிறிதொன்றுமில்லை. தெய்வங்களெனத் தோற்றம்காட்டி நின்றிருக்கும் பிற அனைத்தும் நம் ஆத்மாவை திருடிச்செல்லும் பூதங்கள்.”


“நான் சென்று என் தமையனிடம் இதை சொல்வதாக இருக்கிறேன்” என்றார் விதுரர். “அவர் இருக்கும் நிலையே உயர்ந்தது. விலங்குகளைப்போல எண்ணப்படலத்தால் மறைக்கப்படாத அன்பு. அது அழிக்கலாம், அன்பில்லாத அழிவை விட அன்பால் நிகழும் அழிவு மேல் என்பதே என் மறுமொழி.” அவர் பெருமூச்சுடன் கண்களை மூடிக்கொண்டார். பேச்சின் விசையால் அவர் மூச்சு விரைவுகொண்டிருந்தது. மெல்லிய சீழ்க்கை ஒலி ஒன்று மூச்சுடன் கலந்திருந்தது.


சிவந்த விழிகளைத் திறந்து “நான் இன்னும் சரியான சொற்களில் இவற்றை சொல்லப்போகிறேன் என எண்ணுகிறேன்” என்றார். உடனே பற்கள் தெரிய நகைத்து “பின்னாளில் சூதர் இதை விதுரநீதி என்றே சொல்லக்கூடும்” என்றார். தருமன் புன்னகை செய்து “அவ்வாறு ஒரு நெறிநூல் நமக்கு அமையட்டுமே, அமைச்சரே” என்றார். விதுரர் “இங்கிருந்து எங்கு செல்லவிருக்கிறீர்கள்?” என்றார்.


“இங்கிருந்து பிரகதாரண்யகம் செல்லலாம் என்பது எங்கள் எண்ணம். இங்கே அனைத்தும் மெல்ல திரும்பி எங்களுக்கு எதிராக ஆகிக்கொண்டிருக்கின்றன. விழிகளெல்லாம் விலகிவிட்டன” என்றார் தருமன். “ஆம், அதை என்னால் உணரமுடிகிறது. இங்குள்ள வேதநிலைகள் அனைத்திலுமே வேர்என இளைய யாதவர் மீதான சினம் கரந்துள்ளது” என்றார் விதுரர். புன்னகையுடன் திரும்பி சகதேவனிடம் “முதியவன் பல சுவர்களில் முட்டிச்சலித்து நீ சொன்ன இடத்துக்கே வந்துவிட்டேன், இளையவனே” என்றார்.


சகதேவன் “ஆம்” என்றான். “இத்தனை கடந்து அனைத்தையும் பார்ப்பவன் எப்படி எதிலுமே பற்றின்றி இருக்கிறாய், மைந்தா?” என்றார் விதுரர். “அமைச்சரே, நிமித்திகன் வெறும் சான்றுமட்டுமே. ஊழ் வடிவில் அவனுக்கு பிரம்மம் காட்சியாகிறது. தன்னிலை கரைந்து வழிபட்டு நிற்பதன்றி அவன் செய்யக்கூடுவது பிறிதொன்றுமில்லை” என்றான் சகதேவன். விதுரர் அவனையே சிலகணங்கள் நோக்கியபின் விழிதிருப்பி “நன்று” என்றார்.


 


[ 10 ]


விதுரர் கிளம்பிச்செல்லும் நாளில்தான் துவாரகையின் செய்தி வந்தது. காலனுக்கு பறவைவழியாக குந்தி அனுப்பிய செய்தி நான்குநாள் பயணத்தில் அவனுக்கு வந்தபோது அப்பால் விதுரரின் குடில்வாயிலில் தருமனும் தம்பியர் நால்வரும் நின்றிருந்தனர். விதுரரை அழைத்துச்செல்வதற்கான அத்திரியும் துணைசெல்லும் வீரர்கள் இருவரும் பொதிசுமக்கும் அத்திரியும் அதை ஓட்டும் மலைமகனும் அப்பால் நின்றிருந்தனர். அத்திரிகள் காதுகளை அடித்துக்கொண்டும் தும்மிக்கொண்டும் குனிந்து நிலத்தில் கிடந்த சருகுகளை எடுத்து கடித்துத் துப்பிக்கொண்டும் நின்றன.


காலன் அவர்களை அணுகி இயல்பாக நின்றான். அவன் வந்து நின்றதைக் கண்டதுமே நகுலன் அவனிடம் செய்தி ஏதோ இருப்பதை உணர்ந்துகொண்டான். அவர்கள் அவனை உளமில்லா விழிகளால் நோக்கிவிட்டு திரும்பிக்கொண்டனர். நகுலன் மெல்லிய குரலில் “அவருக்கான மாற்றாடைகள் எந்தப் பொதியில் உள்ளன?” என்றான். ஏவலன் “அத்திரிமேல், இளவரசே” என்றான். “அவர் நீராடி உடைமாற்றுகையில் அனைத்துப் பொதிகளையும் அவிழ்க்கமுடியாது. அவற்றை மட்டும் தனியாக எடுத்து ஏவலன் தன் தோளில் போட்டுக்கொள்ளட்டும்” என்றான். ஏவலன் தலை வணங்கினான்.


பீமன் “வரும்போது இவை ஏதுமில்லாமல் வந்தார்” என்றான். மிக இயல்பாக அச்சொற்கள் விழுந்தாலும் அதிலிருந்த இடக்கை காலன் உணர்ந்தான். “உறவுகள் தேவை என அவர் மெய்யறிவை அடைந்ததும் ஒவ்வொன்றாக ஒட்டிக்கொள்கின்றன. பெரும்பாலும் அஸ்தினபுரியைச் சென்றடையும்போது ஒரு சிறு ஊரே அவருடன் செல்லும் என எண்ணுகிறேன்” என்றான். “மந்தா, விடம்பனம் தேவையில்லை” என்றார் தருமன் மெல்லிய கசந்த குரலில். “அதை இத்தருணத்தை அமைத்த விசைகளிடம் அல்லவா சொல்லவேண்டும், மூத்தவரே?” என்றான் பீமன்.


நகுலன் புன்னகைக்க தருமன் தலைதிருப்பிக்கொண்டார். அப்போது அவன் அவர் பார்வையில் பட்டான். “என்ன?” என்றார். ‘ஒன்றுமில்லை’ என அவன் தலையசைத்தான். ஏவலன் ஒருவன் குடிலைவிட்டு வெளியேவந்து ஒரு சங்கை எடுத்து ஊதினான். அங்கிருந்த அனைவரும் சித்தமான உடலசைவுகள் எழுந்தன. அப்பால் குடில்களுக்குள் இருந்து வேதமாணவர்கள் வெளியே வந்தனர். மையக்குடிலில் இருந்து ஒரு முதியமாணவன் தாலத்தில் பழங்களும் நீரும் மலர்களும் தகழியும் சுடரும் கொண்டு நடந்துவந்தான். அவனுடன் இன்னொருவன் ஒரு மூங்கில்பெட்டியுடன் வந்தான். மூன்றாமவன் மணியொன்றை ஒலிக்கவைத்தபடி தொடர்ந்தான்.


குடிலுக்குள் இருந்து ஏவலன் ஒருவனின் தோளைப்பற்றியபடி விதுரர் மெல்ல காலடி எடுத்துவைத்து நடந்து வந்தார். மூச்சிளைத்து நின்று பின்பு மெல்ல படிகளில் கால் வைத்து இறங்கினார். தருமன் அவர் அருகே நெருங்கி கைகளைப்பற்றி உதவினார். முற்றத்தில் நின்று இளைப்பாறிய விதுரர் அவர்களை திரும்பிப்பார்த்தார். “இன்னும் சிலநாட்களுக்குப்பின் கிளம்பியிருக்கலாம், அமைச்சரே. மலைச்சரிவில் அத்திரிப்பயணம் கடினமானது” என்றார் தருமன். “ஆம், ஆனால் கடினமான பயணம் என்னை மீண்டெழச்செய்யும்” என்றார் விதுரர்.


“தாங்கள் சொன்னவற்றைத்தான் எண்ணிக்கொண்டிருக்கிறேன், அமைச்சரே. என் சொற்களாக அதையே பெரியதந்தையிடம் சொல்லுங்கள். எங்கள்பொருட்டு அவர் சற்றேனும் துயர்கொண்டிருந்தால் அது தேவையில்லை. நாங்கள் இங்கு உவகையுடன் இருக்கிறோம். பன்னிரண்டு ஆண்டுகாலம் நீண்டது, அதை முடித்து நாங்கள் அவரை மீண்டும் காண்போம் என நான் எண்ணவில்லை. அவர் எங்களைப்பற்றிய குற்றவுணர்வு ஏதுமின்றி கடந்து செல்லட்டும்” என்றார் தருமன். “ஆம், அதை உன் சொற்களாகச் சொல்கிறேன்” என்றார் விதுரர்.


பீமனை நோக்கிய தருமன் “மந்தா, தந்தையை வணங்கு” என்றார். பீமன் அருகே சென்று குனிந்து வணங்க விதுரர் வெடித்துச் சிரித்து “குனிந்தபின் என் உயரம் இருக்கிறான். இவனை மானுடன் என்றே எண்ணத் தோன்றவில்லை” என்றார். “நான் உண்மையில் குனிவதே இல்லை, அமைச்சரே” என்றான் பீமன். “அவ்வண்ணமே என்றும் திகழ்க!” என விதுரர் வாழ்த்தினார். அர்ஜுனனும் நகுலனும் சகதேவனும் சென்று வணங்கி வாழ்த்து கொண்டனர்.


“செல்கிறேன்” என்று சொல்லி அவர் கிளம்பினார். அவர் திரௌபதியைப்பற்றி ஏதேனும் கேட்பார் என காலன் எண்ணினான். அவர் அச்சொல்லையே எடுக்கவில்லை. ஆனால் அவர்கள் அப்போது அவளைத்தான் எண்ணுகிறார்கள் என எப்படியோ தெரிந்தது. விழிகள் இருக்கும்வரை மானுடர் மறைப்பது என ஏதுமில்லை. விதுரர் நடக்கத்தொடங்கியதும் எதிரே வந்த தாலப்பொலியினர் அவரை சந்தித்தனர். தாலமேந்திய மாணவன் “தங்கள் வருகை மங்கலம் கொணர்ந்தது. விடைபெறல் மெய்யறிவை எஞ்சவைக்கிறது. நன்று சூழ்க என ஆசிரியர் வாழ்த்தினார்” என்றான்.


“ஆம், நான் மறக்கமுடியாத ஓர் இடம். இங்கு ஒரு புதையலை நான் முற்பிறவிகளில் புதைத்து மறந்திருந்தேன்” என்றார் விதுரர். இன்னொருவன் மூங்கில் பேழையைத் திறந்து உள்ளிருந்து ஒரு மஞ்சள்நிறமான பட்டுத்துணியை எடுத்து விதுரருக்குப் போர்த்தி “இது எங்கள் ஆசிரியரின் வழித்துணை வாழ்த்து, அமைச்சரே” என்றான். “பேறுபெற்றேன்” என்றார் விதுரர்.


அவர்கள் நடந்து அத்திரியை நோக்கி சென்றனர். வீரர்களின் உதவியுடன் விதுரர் அத்திரிமேல் ஏறிக்கொண்டதும் அவர் கால்களை சேர்த்து தோல்நாடாவால் கட்டினர். அவர்கள் ஒருவருக்கொருவர் சொல்பரிமாறிக்கொண்டதும் முகப்பில் செல்பவன் தன் சங்கை ஊதினான். குருநிலையின் அனைத்து மாணவர்களும் “வழி சிறக்க! பூஷன் துணை வருக!” என வாழ்த்தினர்.


அவர்கள் சென்று மறைவதை நோக்கி நின்றிருந்த பீமன் “நமக்கு எவரும் இப்படி வழியனுப்புகை அளித்ததில்லை” என்றான். “நாம் கானகர்” என்றார் தருமன். “ஆம், மீண்டும் அரசர்கள் ஆவோம் என்பதில் உறுதியுமில்லை. பட்டு ஏன் வீணாகவேண்டும்?” என்றான் பீமன். முகம் சுளித்து திரும்பிய தருமன் “என்ன செய்தி?” என காலனிடம் கேட்டான். “அரசே, துவாரகை பற்றிய செய்தி வந்துள்ளது” என்று அவன் சொன்னான். அர்ஜுனன் முகம் மாறியது. அவன் அருகே வந்து “ம்” என்றான்.


28


“செய்தி அஸ்தினபுரிக்கு பேரரசியின் கைகளுக்குச் சென்றிருக்கிறது. எனக்கு வந்தது அவர் அனுப்பிய மந்தண ஓலை. தங்களிடம் செய்தி சொல்லும்படி ஆணை” என்றான் காலன். “ம்” என்றார் தருமன். “துவாரகையின் யாதவர்களுக்குள் மெல்லிய ஊடல்கள் எப்போதும் இருந்துகொண்டிருந்தன என அறிந்திருப்பீர்கள். அரசியின் குலமான அந்தகர்களும் அரசரின் குலமான விருஷ்ணிகளும் தங்களை முதன்மைக்குடிகளாக எண்ணுவதை தடுக்கமுடியவில்லை. போஜர்களும் ஷைனியர்களும் குக்குரர்களும் ஹேகயர்களும் சினம்கொண்டபடியே சென்றனர். நாம் சூதுக்களத்திற்குச் சென்ற நாட்களில் அப்பிளவு பெரிதாகியது.”


“குக்குரர்களில் ஒரு சாராரிடம் சால்வநாட்டரசர் மந்தணப்பேச்சு நடத்தியிருக்கிறார். ஹேகயர்களும் உடனிணைந்துள்ளனர். அவர் துவாரகையின் எல்லைகளுக்கு மேல் படைகொண்டுசென்றார் என்றால் அவர்கள் போரில் கலந்துகொள்ளமாட்டார்கள் என்று உறுதிபெற்று அவர் துவாரகையின் வடக்கு எல்லைகளை தாக்கியிருக்கிறார். மலைப்பொருட்கள் கொள்ளும் சந்தைகளிலும் சிந்துவின் படகுகளிலும் சுங்கம் கொள்ளும்பொருட்டு துவாரகை அமைத்திருந்த பன்னிரு சாவடிகளை சால்வர்ன் தாக்கியிருக்கிறார். எதிர்ப்படை கொண்டுசென்ற சாத்யகியை சால்வரின் படைகள் வென்றன.”


அர்ஜுனன் “ம்” என்றான். “துவாரகையில் அப்போது இளைய யாதவர் இல்லை. நடந்தது ஒரு சிறு கொள்ளை என எண்ணி பலராமர் சிறிய படையைத்தான் சாத்யகிக்கு அளித்திருக்கிறார். சாத்யகி படைகொண்டு செல்லும் வழியிலேயே அந்தகர்களும் விருஷ்ணிகளும் தவிர பிறர் நின்றுவிட்டனர். எல்லைக்குச் சென்றபோதே சால்வருடன் சைந்தவரின் படைகளும் பால்ஹிகரின் படைகளும் துணைநிற்பதை சாத்யகி கண்டார். அவர் படை முழுமையாக அழிந்தது. புண்பட்டு அவர் களத்திலிருந்து மீண்டார்.”


“செய்தியறிந்து இளைய யாதவர் திரும்பிவந்தார். சால்வரை வெல்லாவிட்டால் துவாரகைக்கு அது பேரிழிவு. மேலும் துவாரகை ஆற்றலற்றது என்ற சொல்லும் எஞ்சும். ஆனால் எல்லைகளைத் தாக்கியதென்பது சால்வர் துவாரகையின் படைகளை தனக்கு உகந்த இமயமலையடிவாரத்திற்கு இழுக்கும்பொருட்டு செய்த சூழ்ச்சியே. அங்கே அவர் தோழர்கள் அவரை துணைக்கிறார்கள். சைந்தவரும் பால்ஹிகரும் படைகொடுக்கிறார்கள். திரிகர்த்தர்களும் உடன்நிற்பதாக சொல்லப்படுகிறது. அஸ்வத்தாமரும் கூர்ஜரரும் அறியாது படைத்துணை அளிப்பார்கள்.”


“ஆகவே படைகொண்டு சென்றால் வென்றாகவேண்டும். யாதவர் ஒன்றாகத் திரண்டு நிற்காமல் படைவெல்லல் அரிது. இந்திரப்பிரஸ்தத்தின் உதவியும் இல்லை என்பதனால் இளைய யாதவர் தயங்கிக்கொண்டிருக்கிறார். பாரதவர்ஷத்தில் துவாரகை இன்று முற்றிலும் தனித்துவிடப்பட்டுள்ளது” என்று காலன் சொன்னான். “ஆம், இத்தருணத்தைப் பயன்படுத்தி அதை முற்றழிப்பதே அரசுசூழ்தலில் சிறந்த முடிவாக இருக்கமுடியும்” என்று அர்ஜுனன் சொன்னான். “இவையனைத்துக்கும் பின்னால் அங்கன் இருக்கிறான் என்பதில் ஐயமில்லை.”


“பேரரசி அவ்வாறு சொல்லவில்லை” என்றான் காலன். “அன்னை சொல்லமாட்டார்கள்” என்றான் அர்ஜுனன். உடனே “அவர்களுக்கு அது தெரிந்திருக்காது” என்று சேர்த்துக்கொண்டான். “இப்போரிலுள்ள சூழ்ச்சி எண்ணுந்தோறும் விரிகிறது, மூத்தவரே” என தருமனிடம் சொன்னான். “படைகொண்டு செல்ல சால்வர் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டார்? பால்ஹிகனும் திரிகர்த்தனும் தூயஷத்ரியர் அல்ல. சைந்தவனும் அஸ்வத்தாமனும் அஸ்தினபுரிக்கு உறவினர். ஆகவே சால்வர். அவரை யாதவர் தாக்கினால் ஷத்ரியர் அணிதிரள்வார்கள். அஸ்தினபுரியின் படைகளும்கூட வெவ்வேறு பெயர்களில் கலந்துகொள்ளக்கூடும்.”


“இளைய யாதவரை எவரும் வெல்லமுடியாது” என்றார் தருமன். “ஆம், ஆனால் இது தனிப்போர் அல்ல. படைப்போர். இங்கு ஒன்றுதிரண்ட படை வேண்டும். என்ன நிகழ்கிறது துவாரகையில் என்றே தெரியவில்லை” என்றான் அர்ஜுனன். “அங்கே யாதவர்களை ஒன்றெனத் திரட்ட முயற்சிகள் நிகழ்கின்றன என்கின்றது செய்தி. நாளும் இளைய யாதவர் யாதவச் சிற்றூர்கள்தோறும் சென்று தன் குடியினரிடம் பேசுகிறார். அவர்கள் அவரை இன்னும் முழுதேற்கவில்லை” என்றான் காலன்.


“அது மானுட அறியாமை” என்றார் தருமன். “யாதவர் இப்போது இளைய யாதவருக்கு முன்னால் அவர்கள் கன்றோட்டும் சிறுகுடியாகச் சிதறி பெருமையழிந்து கிடந்ததை முழுமையாக மறந்திருப்பார்கள். ஒவ்வொருவரும் இன்று பழம்பெருமை மிக்கவர்கள் என சொல்லி அதை உண்மையிலேயே நம்பத்தலைப்பட்டிருப்பார்கள். இளைய யாதவருக்கு மேல் தங்கள் குலம் கொள்ளும் வெற்றியைத்தான் அவர்கள் இன்று எண்ணிக்கொண்டிருப்பார்கள்.”


காலன் “யாதவகுடிகள் எப்போதுமே பூசலிடுவதில் பெருவிருப்புள்ளவர்கள்” என்றான். “இன்று அத்தனைபேருமே கார்த்தவீரியனின் கொடிவழியினர் என்கிறார்கள். பெருமைமிக்க அக்குலத்திற்கு இளைய யாதவர் சிறுமை கொண்டுவந்துவிட்டார் என்று பேசிய ஒரு முதியவனை நான் ஒருமுறை துவாரகையில் கண்டேன்.” சற்றுநேரம் அமைதி நிலவியது. “எதிரிகள் சூழும்போதேனும் அவர்கள் ஒன்றுபடலாம்” என்றார் தருமன்.


“ஆம், அது பொதுவாக நிகழ்கிறது. ஆனால் அவர்களில் ஒருவர் மறுதரப்பில் இருக்கும்போது அவ்வாறல்ல. அஸ்வத்தாமனின் தோழனாகிய யாதவ குடித்தலைவன் கிருதவர்மன் இன்று இளைய யாதவர் மேல் நிகரற்ற பெருஞ்சினத்துடன் இருக்கிறான். அவன் ஒருகாலத்தில் இளைய யாதவருக்கு நிகரான வீரன் என அறியப்பட்டவன்” என்றான் அர்ஜுனன். “அவரை ஆதரித்தால் விருஷ்ணிகளும் அந்தகர்களும் வீழ்ச்சியடைவார்கள் என்று சொன்னால் போதும்… அவ்வாறுதான் நடந்திருக்கும்.”


“ஆம், இப்படி ஏதோ நிகழ்கிறது என நான் உணர்ந்திருந்தேன். இல்லையேல் இளைய யாதவர் நம் உதவிக்கு வந்திருப்பார்” என்றார் தருமன். “அதை திரௌபதி நன்றாகவே உணர்ந்திருக்கிறாள்” என்று அவர் சொன்னபோது பிறர் முகங்கள் மாறின. “நாம் செய்வதற்கொன்றுமில்லை. நன்று நிகழ்க என்று நம் மூதாதையரை வேண்டிக்கொள்வோம். இளைய யாதவரின் சொல்வன்மையையும் சூழ்ச்சித்திறனையும் நம்புவோம்” என்றார் தருமன்.


“அன்னைக்கு இதையே என் செய்தியாக அனுப்பிவிடுங்கள், காலரே” என்றபடி தருமன் திரும்பினார். “மூத்தவரே, இன்று இளைய யாதவர் இக்கட்டில் இருக்கிறார். நம் உதவியை அவர் நாடக்கூடும். இளையவன் வில்லுடன் சென்றால் அவரை வெல்ல இவர்களால் முடியாது. இது நம் கடமை” என்றான் பீமன். “நாம் இன்று கானேகிவிட்டவர்கள்” என்றார் தருமன். “கான்விட்டு மீள்வோம்!” என தன் தொடையில் அறைந்து ஒலியெழுப்பியபடி பீமன் கூவினான்.


“நம்மை சொல்மீறச் செய்து காட்டிலிருந்து கொண்டுவந்து போர் வென்றால் அது இளைய யாதவருக்கு பெருமை அல்ல, மூத்தவரே” என்றான் அர்ஜுனன். “இது அவரது களம். அவருக்கு உருவாகும் முதன்மை எதிர்விசை. அதை அவரே வென்று மீளட்டும்.” பீமன் சினத்துடன் தலையசைத்தான். “நற்செய்தி சின்னாட்களில் வரும்” என்றான் அர்ஜுனன். “நான் அறிவேன் அவரை. அவர் வெல்லற்கென வந்தவர்.”



தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 71
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 27
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 22
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 18
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 88
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 83
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 77
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 62
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 25
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 59
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 39
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 88
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 45
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 14
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 91
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 90
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 88
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 87
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 86
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 33

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 15, 2016 11:30

August 14, 2016

தகழி சிவசங்கரப்பிள்ளையின் ஏணிப்படிகள்

1


 


கதையில், குறிப்பாக நாவலில் வாசிப்பார்வம் எப்படி உருவாகிறது? அடுத்தது என்ன என்ற ஆவலை தொடர்ச்சியாக அது ஊட்டுவதன் மூலம்தான். அடுத்தது என்ன என்று ஒவ்வொரு தருணத்திலும் தெரிந்திருக்கையில் ஒரு நாவல் நமக்கு எப்படி அர்த்தப்படும்? சமகால வரலாற்று நாவல்களின் சவால் இது. சமகால வரலாற்றில் நாமறியாத தகவல்கள் குறைவு


அபூர்வமான தகவல்களைப் பெரும்பாலும் கலைப்படைப்புகள் கண்டுபிடிப்பதில்லை. அவை தகவல் சார்ந்த புதுமைகளுக்காக முயல்பவை அல்ல. அறிந்தவற்றின் ஆழங்களையே அவை நாடுகின்றன. அறிந்த விஷயங்கள் மீதான புதிய கோணம், அறிந்த தகவல்களின் புதிய வகை தொகுப்பு ஆகியவை மூலம் ஆர்வத்தையும் கலையனுபவத்தையும் ஊட்டவே அவை முயல்கின்றன.


தமிழின் சமகால வரலாற்று நாவல்கள் எனப் பலவற்றை நாம் சுட்டிக்காட்டலாம். பொன்னீலனின் ‘புதிய தரிசனங்கள்’, கெ. முத்தையாவின் ‘உலைக்களம்‘, ‘விளைநிலம்’, ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’, ‘மண்ணகத்துப் பூந்துளிகள்’, ‘பாதையில் படிந்த அடிகள்’, ‘குறிஞ்சித்தேன்’, ‘வளைக்கரம்’ வாசந்தியின் ‘நிற்க நிழல் வேண்டும்’, ‘மௌனப்புயல்’ முதலியவை உடனடியாக நினைவுக்கு வருபவை.சமகால வரலாற்றை அவை தங்கள் கோணத்தில் ஆராய்ந்து அர்த்தப்படுத்தி அளிக்கின்றன. இன்று நம் வாழ்க்கையில் வரலாறு அரசியலுக்குத்தான் அதிகமும் பயன்படுகிறது. ஆகவே சமகால வரலாற்று நாவல்களில் பெரும்பாலானவை அரசியல் நாவல்களே.


சமகால வரலாற்று நாவல் என்ற வடிவுக்குப் பல பிரச்சினைகள் உண்டு. பண்டைய வரலாறு என்பது கால ஓட்டத்தில் அழுத்திச் சுருக்கப்பட்டு ஒருவகையில் சாராம்சப் படுத்தப்பட்டிருக்கும். உதாரணமாக ராஜராஜசோழனின் வரலாற்றில் அவனுடைய குணாதிசயம், ஆட்சி-முறை, அவன் எதிர்கொண்ட பிரச்சினைகள் ஆகியவை சார்ந்து ‘முக்கியமான’ தகவல்கள் மட்டுமே இன்று கிடைக்கின்றன. பிற, காலத்தில் மட்கிவிட்டன.


ஆனால், எம்.ஜி.ஆரின் வரலாற்றில் உண்மையும் பொய்யும், அவசியமானவையும் அவசியமற்றவையுமாக தகவல் பெருங்குப்பை நம்மீது வந்து மோதுகிறது.பழைய வரலாறு என்பது ஏற்கனவே கதையாக மாறிய ஒன்று. இலக்கியம் அதை மீண்டும் கதையாக்குகிறது. சமகால வரலாறு என்பது தகவல்களின் பெருங்குவியல்


பழைய வரலாறு ஏற்கெனவே சாராம்சப்படுத்தப்பட்டிருப்பதனால் அது சார்ந்து துல்லியமான சில தரப்புகள் கலாச்சார மதிப்பீட்டில் உருவாகியிருக்கும். ராஜராஜனை சிவனருட் செல்வனாகவோ, வேளாள ஆதிக்கத்தின் உச்சப்-புள்ளியாகவோ, தமிழ் மன்னர்களில் தலைசிறந்தவனாகவோ பார்க்கும் மதிப்பீடு தமிழில் உண்டு; அவற்றை ஏற்றோ மறுத்தோ நாம் எழுதலாம். எம்.ஜி.ஆரைப் பற்றிய மதிப்பீடுகள் எண்ணற்றவை, ஆளுக்கு ஆள் மாறுபடுபவை.


கடைசியாக ஒன்று, ராஜராஜனின் வரலாறு இன்று ஐதீகச்சாயல் மிகுந்து உள்ளது. இவ்வைதீகங்கள் அவன் கதைக்கு ஒரு கனவுத்தோரணையைத் தருகின்றன. அவற்றை இன்றைய படைப்பாளி குறியீடாகவோ படிமமாகவோ மாற்றிக்-கொள்ளலாம். பழைய வரலாற்று நாவல்களில் எளிதாக ஒரு கனவுச்சாயல் உருவாகி வருகிறது. அது புனைவை விறுவிறுப்பாக ஆக்குகிறது.


உதாரணமாக ராஜராஜசோழன் சைவத் திருமுறைகளை மீட்டது பற்றிய ஐதீகத்தை கற்பனையால் விரிவுபடுத்திக் கொள்ளலாமெனில் நான் இப்படி எழுதுவேன். சைவத்திருமுறைகளை மீட்கும் பொருட்டு ராஜராஜன் பொன்னாலான சைவக்குரவர்களை உருவாக்கினான். அவை மிக உயர்ந்த, இலட்சிய சிற்ப வடிவில் இருந்தன. அவை அச்சைவக்குரவர்களின் பலதோற்றங்களில் ஒன்று மட்டுமே. அவற்றை கொண்டுபோய் சிதம்பரம் நூல்களஞ்சியத்தைத் திறந்தபோது அவற்றுக்கு ஈடான திருமுறைப் பகுதிகள் மட்டும் வெளிப்போந்தன. பிறகு எளிமையும் கனிவும் கொண்ட ஒரு சிவனடியார் மண்ணில் செய்யப்பட்ட சைவக்குரவர் சிலைகளுடன் வந்தபோது பக்தியில் நெகிழ்ந்துருகிய பாடல்கள் வெளிவந்தன.


ஐதீகங்கள் இவ்வாறு மறுஆக்கம் செய்யப்படுவதனூடாகவே ஒரு சமூகம் மரபை புரிந்து, உள்வாங்கிக்கொள்கிறது. பழைய வரலாறு இவ்வாறு தொடர்ந்து உருமாறுகிறது. ஆனால் சமகாலவரலாறு தகவல்களின் கறாரான இரும்புப்பிடிக்குள் உள்ளது. அதை கற்பனை மீறவே முடியாது. உதாரணமாக எம்.ஜி.ஆருக்கு இரண்டு முகம் உண்டு என்பது தெரிந்ததே. ஒரு குறிப்பிட்டவகை தரிசனத்தை என் படைப்பில் நிலைநாட்டுவதற்காக உண்மையில் எம்.ஜி.ஆர். என்ற ஆளுமை இருமனிதர்கள் சேர்ந்து உருவாக்கியது என்றும் சினிமாவில் தெரியும் எம்.ஜி.ஆர். தம்பி, மேடைகளில் வரும் எம்.ஜி.ஆர். அண்ணா, இருவரும் இதை பிறர் அறியாத ரகசியமாக வைத்திருந்தார்கள் என்றும் ஒரு கதையை நான் எழுதிவிடமுடியாது. அது மிகவும் செயற்கையாகத் தொனிக்கும்.


ஆகவே ஒரு சமகால வரலாற்று நாவல் தகவல்களின் உலகுக்குள்ளேயே, தகவல்களின் மறு வடிவமாக, இயங்கவேண்டியுள்ளது. இந்நிலையில் ஒரு சமகால வரலாற்று நாவலை தோற்கடிக்கும் பல அம்சங்களில் முதன்மையானது நாவலாசிரியன் நாவலில் முன்வைக்கும் தரப்புக்கு ஏற்ப வரலாற்றுத் தகவல்களைக் குறைவாகவோ திரித்தோ தருவதுதான். இதன் மூலம் உண்மையில் உருவாகி வருவது சமகால வரலாற்றின் ‘குறைவுபட்ட’ ஒரு சித்திரிப்புதான்.


உதாரணமாக அவசரநிலைக்காலம் பற்றிய ‘புதிய தரிசனங்கள்’, ‘உலைக்களம்’ இரண்டு நாவல்களுமே மிக்க குறைபட்ட சித்திரத்தையே தருகின்றன. ஒரு காங்கிரஸ்காரனும், கட்சி சார்பில்லாத அன்றைய குடிமகன் ஒருவனும், தங்கள் தரப்பை இதைப்போலவே எழுதினால், அவற்றையும் இந்நாவல்களுடன் இணைத்தால், மட்டுமே அவசர நிலைக் காலகட்டத்-தின் முழுமையான சித்திரம் நமக்குக் கிடைக்கமுடியும்.


இலக்கியம் வரலாற்றை முழுமைப்படுத்துவது என்று நான் நம்புகிறேன். வரலாற்று சித்திரம் தகவல்களினாலும், அத்தகவல்களை பலவாறாக கோக்கும் கண்ணோட்டங்களினாலும் ஆனது. எந்த வரலாற்று நூலிலும் ஒரு கோணம் மட்டுமே இருக்கும். ஆனால் வரலாறு இலக்கியமாகும்போது இவ்வனைத்து கோணங்களும் பிணைந்து உருவாகும் ஒட்டுமொத்தச் சித்திரம் அதில் இருக்கும். ஆனால், அது மட்டும் இருந்தால்கூட அது இலக்கியப் படைப்பு ஆவதில்லை. கூடவே வரலாற்றாய்வில் எது தவறவிடப்-படுகிறதோ அது, மானுடமனம்சார்ந்த ஒரு தளம் என அதை மிகத் தோராயமாக கூறலாம்.


உண்மையில் இலக்கியப் படைப்பில் இருக்கும் வரலாற்றின் மீது மனிதமன ஓட்டங்களை ஏற்றிப்பார்க்கும் கலைஞனின் பார்வையின் விளைவு அது. வரலாற்றின் மீது உள்ளுணர்வுசார்ந்த ஆய்வுமுறை ஒன்றை பிரயோகித்துப் பார்ப்பதன் விளைவு அது. வரலாற்றின் மீது அடிப்படையான மானுட அறம் ஒன்று கலைஞனின் தரப்பாக பரவும்போது ஏடிற்படும் விசேஷ அழுத்தம் அது. தமிழில் எழுதப்பட்ட அத்தனை சமகால வரலாற்று நாவல்களிலும் ஒரு தரப்பு மட்டுமே உணர்ச்சிகரமாக முன்நிறுத்தப்பட்டுள்ளன. ஒரு அரசியல் / வரலாற்று நூல் அளிக்காத உபரியான தரிசனம் எதையும் அவை அளிப்பதுமில்லை.


*


மலையாள எழுத்தாளரான தகழி சிவசங்கரப்பிள்ளை கடல் சார்ந்த நிலப்பகுதியான ஆலப்புழையில் பிறந்து வளர்ந்து அதைப்பற்றி மட்டும் எழுதியவர். அவரை ‘குட்டநாட்டின் வரலாற்றாசிரியன்’ [குட்டநாடு ஆலப்புழாவின் மறுபெயர்] என்பதுண்டு. ஆரம்பகாலம் முதலே தகழி அரசியல் ஈடுபாடு உடையவர். கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக இருந்தவர், தேடப்பட்டு தலைமறைவாக அலைந்தவர், தேர்தலில் போட்டியிட்டவர். ஆரம்பகாலப் படைப்புகளில் தகழியும் கட்சிசார்பான, சித்தாந்தம் சார்பான கோணத்தில் தன் நாவல்களை எழுதினார் ‘இரண்டு கைப்பிடியளவு’, ‘தோட்டியின் மகன்’, ‘அனுபவங்கள் பிழைகள்’ முதலிய நாவல்கள் இதற்கு உதாரணமாகக் கூடியவை.


இப்போக்கில் முதல் திருப்புமுனையாக அமைந்த நாவல் அவருடைய ‘ஏணிப்படிகள்’. இந்நாவலில் தகழி சித்தாந்தப் பிரச்சாரத்தை விட்டுவிடுகிறார்.மாத்ருபூமி வார இதழில் வெளிவந்து அக்காலகட்டத்தில் மிகப்பரபரப்பான வாசிப்பைப் பெற்றது. சி.ஏ. பாலனின் மொழி பெயர்ப்பில் தேசிய புத்தக நிறுவனத்தால் 1975இல் வெளியிடப்பட்டுள்ளது. மூல ‘ஏணிப்படிகள்’ 1964இல் எழுதப்பட்டது.


‘ஏணிப்படிகள்’ முந்தைய நாவல்களைப் போலன்றி ‘ஒட்டுமொத்த’ சித்திரத்தை உருவாக்க சிரத்தை மேற்கொண்ட ஒரு சமகால வரலாற்று நாவல். ஒருதரப்பை மட்டும் முன்வைப்பது அதன் நோக்கமல்ல. ஒரு குறிப்பிட்ட விஷயத்தை மையமாக்க குவிப்பதும் அதன் இலக்கு அல்ல. சுதந்திரத்திற்கு முந்தைய திருவிதாங்கூர் சமஸ்தான அரசில் சிறிய குமாஸ்தாவாக நுழையும் கேசவபிள்ளை படிப்படியாக அதிகாரத்தின் ‘ஏணிப்படிகளில்’ ஏறி, இறுதியில் சீப் செகரடரி என்ற மிக உயர்ந்த பதவியை அடைவதுதான் இந்நாவலின் ‘கதை’. ஒவ்வொரு படியை ஏறவும் ஏதாவது ஒன்றை உதற வேண்டியுள்ளது. தன் காதலை உதறும் கேசவபிள்ளையின் இளம்பருவ சித்திரத்தில் தொடங்கும் நாவல் தன் அறவுணர்வை முற்றிலும் உதறிவிட்டு அதிகார வர்க்கத்தின் தரகராக நிற்கும் கேசவபிள்ளையின் காட்சியில் முடிகிறது.


இந்தக்கதைநகர்வை யதார்த்தமான நம்பகத்தன்மைக்காகவே மிகுந்த கவனம் எடுத்துக் கொண்டு செதுக்கியிருக்கிறார் தகழி. நாவலெங்கும் அசாதாரணமான நிகழ்ச்சிகள் ஏதுமில்லை. பரபரப்பான நிகழ்ச்சிகள் நடந்தாலும்கூட அவை பரபரப்பாகச் சொல்லப்படவில்லை.வடக்கு திருவிதாங்கூரில் ஒரு கிறாமப்புற விவசாயியின் மகனாக பிறந்து கடுமையாக கஷ்டபட்டு பிஏ படித்த கேசவபிள்ளை வேலைக்காக திருவனந்தபுரம் வருகிறார். சிபாரிசுக்காக யாருமில்லை. தெரிந்தவர்களும் யாருமில்லை. மன்னராட்சியின் நிர்வாக அமைப்பில் ஒரு எல்லையில் ஒட்டிக்கொள்வதுமட்டும்தான் அவரது ஆசை. தலைமைச்செயலர் வீட்டுமுன் பழி கிடக்கிறார். ‘விடாதே, கோபம் உள்லவரானாலும் கனிவும் உள்ளவர்’ என்று வாயில் காவலன் சொல்கிறான்.


கடைசியில் ஒருநாள் தலைமைச்செயலர் காரை நிறுத்தி என்ன என்று கேட்டபோது ”பிஏ படித்திருக்கிறேன்.சாப்பிட வழியில்லை’ என்று கண்ணிருடன் சொல்கிறார் கேசவ பிள்ளை.முதலில் சில தடவை எரிந்துவிழுந்த தலைமைச்செயலர் ஒருநாள் கேசவபிள்ளையை உள்ளே கூப்பிட்டு கீழ்மட்ட குமாஸ்தாவாக நியமனம் செய்கிறார். ஏணிப்படிகளில் கேசவபிள்ளை கால்வைக்கிறார்.


அவரது பக்கத்து சீட் தங்கம்மாவுடையது. மெல்ல பழக்கம் காதலாகிறது. ஆனால் ஊருக்கு கூப்பிடும் அப்பா கேசவபிள்ளைக்கு திருமணம் நிச்சயித்திருப்பதைச் சொல்கிறார். அவரது நண்பரின் மகள் கார்த்தியாயினி என்ற கிராமத்துப் பெண்.கேசவபிள்ளை கொதிக்கிறார், எதிர்த்துப் பேச முடியவில்லை. வழியில் அவரைச் சந்திக்கும் அப்பாவின் நண்பர் கிட்டுமாமா ‘அவள் மிகப்பெரிய அதிர்ஷ்டசாலி. அவளைக் கட்டுகிறவன் பாக்கியவான். ஜாதகத்தை பார்த்தேன்’ என்கிறார். ”ஆனால் இன்னொன்றும் உள்ளது, வாழ்க்கை முழுக்க அவளுக்கு மனநிம்மதி இல்லை” என்றும் சொல்கிறார். கேசவபிள்ளையின் மனதில் அது ஆழப்பதிகிறது.


சிறிய மனப்போராட்டத்துக்குப் பின் கேசவபிள்ளை கார்த்தியாயினியை மணம்செய்ய சம்மதிக்கிறார். அதை தங்கம்மாவிடம் மறைத்து அவளிடமே பணம் கடன் வாங்கி ஊருக்குப்போய் கார்த்தியாயினியை கரம்பிடிக்கிறார். ஏணிப்படிகளுக்காகச் செய்த முதல் துரோகம் அது. இந்த துரோகத்தைச் செய்யும்போது குற்றவுணர்வு அவரை நெடுநாள் வருத்துகிறது. ஆனால் ஆழத்தில் ஊறியுள்ள சுயநலமே வெல்கிறது.


கார்த்தியாயினியும் தங்கம்மாவும் அவரது வாழ்க்கையின் இரு பெண்கள். கார்த்தியாயினிக்கு கணவன் சமையலறை அல்லாமல் வேறு உலகமேயில்லை.தங்கம்மா அந்தரங்கத்தில் மிக ஆவேசமான காமவிருப்புள்ளவள். புயல் போல கேசவ பிள்ளையை அவள் சுழற்றி எடுத்துக் கொள்கிறாள். அவளுடனான அவர் உறவு தொடர்கிறது. தாலிகட்டிய மனைவியை ஊரிலேயே விட்டுவிட்டு திருவனந்தபுரத்தில் தங்கம்மாவுடன் உறவில் இருக்கிறார் கேசவபிள்ளை. கார்த்தியாயினி கண்ணிருடன் ஏக்கத்துடன் காத்திருக்கிறாள். தங்கம்மா ஒருநாள் கேசவபிள்ளையின் காமச்செயல்பாடு போதாமலாகி அவரை உதைத்து துரத்துகிறாள். அவர் ஊருக்குப்போய் கார்த்தியாயினியை காண்கிறார். அப்போதுதான் அவர்கள் கணவன் மனைவியாகிறார்கள்.


தன் நிலத்தை அரசாங்கம் அரசுவேலைக்கு எடுத்துக் கொண்டதன் விலையை பெற அதிகாரத்தின் படிகள் தோறும் அலையும் கோபாலன்நாயர் கேசவபிள்ளையை தேடிவருகிறார். கைக்காசையெல்லாம் லஞ்சமாக்க கொடுத்து தனக்கு உரிமைப்பட்ட அப்பணத்தைப் பெற முயலும் கோபாலபிள்ளையிடம் பதிமூன்று ரூபாயை பேரம்பேசி வாங்கிக் கொள்கிறார் கேசவ பிள்ளை. முதல் லஞ்சம். இது அவரது மனசாட்சியை பாதிக்கும் விதம் இன்னும் சற்று குறைவுதான். காரணம் ஏணிப்படிகளின் அடுத்த படி மட்டுமே அவரது கவனத்தில் உள்ளது.


தலைமைச்செயலகத்துக்கும் திவானுக்குமான அதிகாரப்போட்டியில் ஒருநாள் கறிவேப்பிலை போல தலைமைச்செயலர் தூக்கி வீசப்படுகிறார். தங்கம்மாவின் சித்தப்பா கிருஷ்ணபிள்ளை திவானாகிறார். அவரது மனைவி பகவதிக்குட்டி பேரழகி. திவானின் காரியதரிசி அவளுடைய காதலன். மனைவி மூலமே அதிகார வாசல்களைக் கடந்து கருவறை வரை வந்தவர் கிருஷ்ண பிள்ளை. தங்கம்மாவை வைத்து எப்படியாவது தலைமைச்செயலகத்துக்குச் செல்லும்படி பியூன் மாதேவன் பிள்ளை உபதேசம் செய்கிறார். ” பெரிய ஆளாகும்போது எங்களை மறக்கக் கூடாது” என்கிறார். கேசவபிள்ளை புன்னகைச் எய்வதுடன் சரி


தங்கம்மாவின் பெற்றோர் அவளுடைய எதிர்காலக் கணவனாகவே கேசவபிள்¨ளையை எண்ணி அவருக்காக சிபாரிசு செய்கிறார்கள். கேசவபிள்ளை ஏணிப்படிகளின் அடுத்த படியை எட்டுகிறார். அவருடன் படித்து அவருக்கே சூபரிண்டெண்டாக வந்து அவரை முன்பின் தெரியாதவர் போல நடத்தும் [தனிப்பட்ட மூறையில் இவ்வனுபவம் எனக்கும் அலுவலக வாழ்வில் உண்டு.] ராமச்சந்திர பிள்ளையை தன்னைத்தேடிவரச்செய்து ‘ ஒன்றுமில்லாவிட்டாலும் நானும் நீயும் கல்லூரித்தோழர்கள்!’என்று சொல்லவைக்கிறார் கேசவபிள்ளை. அதிகாரத்தின் முதல் சுவை!


மெல்லமெல்ல அதிகாரத்தின் போதை கேசவபிள்ளையின் பேச்சை பார்வையை மாற்றுகிறது. அவரை உதறும் தங்கம்மா ராமச்சந்திரபிள்ளையின் காதலியாகிறாள்.அத்தகவலை வந்து சொல்லும் முன்னாள் சக ஊழியர் கோவிந்தன் நாயர் கேசவபிள்ளை அதிர்ச்சி அடைவதில்லை என்று காண்கிறார். அத்தகவலை எவரிடமும் சொல்லக்குட்டாது என்று சொல்லும் கேசவபிள்ளை உடன்பட மறுக்கும் அவரிடம் ; ”அண்ணனுக்கு மோட்டுக்குடிக்கு டிரான்ஸ்பருக்கு நேரமாயிட்டுது போல் இருக்கே ” என்று மிரட்டும் கேசவபிள்ளையில் மாரிய விஷமுகத்தை கோவிந்தன் நாயர் காண்கிறார். முதல் மிரட்டல்!


அதன் பின் அதிகாரத்தின் படிகளில் வேகமாக ஏறுகிறார்கேசவபிள்ளை. திவான் தலைமைச்செயலர் மேல் கோபமாக இருக்கிறார். அவர் காங்கிரஸ் மீது அனுதாபம் கொண்டவரோ என திவானுக்கு சந்தேகம். காங்கிரஸை கடுமையாக ஒடுக்கும்படியும் காங்கிரஸின் முக்கிய தலைகளை லஞ்சம் மூலமும் ஆசைகாட்டியும் அடக்கும்படியும் கேசவபிள்ளை தலைமைச் செயலருக்கு ஆலோசனை சொல்லி வழிமுறைகளும் வகுத்துக் கொடுக்கிறார். அதை திவானிடம் தலைமைச்செயலர் சொல்லியதனால் திவானுக்கு கேசவபிள்ளை மேல் நல்லெண்ணம் வருகிறது. முதல் சதி!


தலைமைச்செயலரின் கைத்தடியாக மாறி காங்கிரஸை உடைத்து தோட்டமுதலாளிகளின் உதவியுடன் திருவிதாங்கூர் காங்கிரஸ் என்ற போட்டி அமைப்பை உருவாக்கி காங்கிரஸை பலமிழக்கச் செய்கிறார். ஈழவ,நாயர் சாதிக்கட்சிகளை திவானுக்கு ஆதரவாகத் திரட்டுகிறார். மெல்லமெல்ல அதிகாரம் மிக்கவராகிறார். கூடவே ஊழலால் சம்பாதிக்கிறார். ராமச்சந்திர பிள்ளையால் கைவிடப்பட்டு தன்னிடம் மீளும் தங்கம்மாவை வைப்பாட்டியாக வைத்து பங்களா கட்டிக்கொடுக்கிறார்.


காங்கிரசை உடைத்து காங்கிரஸ் ஆதரவுக் கூட்டங்களை குழப்பி மக்களை அடித்து சிறையில் இட்டு வதைத்துஅரசு வன்முறையின் சூத்ர தாரியாக விளங்கும் கேசவபிள்ளை மக்கள் விரோதியாக அடையாளம் கானப்படுகிறார். அவரது சொந்த ஊரிலேயே ‘கேசவபிள்ளையை தூக்கில் போடு! ஊழல் சொத்துக்களை ஜப்தி செய் !’ என்ற கோஷம் எழுகிறது. ”ஊரார் சாபம் ஏற்கவா உன்னை படிக்கவைத்தேன்” என்று மனம் புழுங்கும் தந்தையையும் தாயையும் தன் முன்னேற்றத்துக்குத் தடையானவர்கள் என்று வசைபாடுகிறார் கேசவபிள்ளை.


தலைமைச்செயலரின் சூபரிண்டெண்ட் ஆகிறார் கேசவபிள்லை. பின்னர் செயலர் ஆகிறார். ஏணிப்படிகளில் வேகமாக ஏற ஆரம்பித்துவிட்டார். கோபாலன் நாயர் கேசவபிள்ளையின் வீட்டு முன்னாலேயே தூக்கில் தொங்கி இறக்கிறார். நிலத்தை அரசு எடுத்துக் கொண்ட பணத்தைப் பெறும் முயற்சியில் அவரது வீடும் இல்லாமலாகிறது. வெறும் காகிதக்கற்றைகளை தன் மகன் முகுந்தனுக்கு அளித்துவிட்டு வாழ்க்கையைமுடித்துக் கொள்கிறார். அந்த நிகழ்ச்சி கேசவபள்ளையின் ஆழத்தில் இனம்புரியா அச்சமொன்றை நிறைக்கிறது.


ஆனால் அந்த அச்சம் அவரை மேலும் மூர்க்கமாக ஆக்குகிறது. அன்று தன் பங்களா முன் காவல் நின்ற காவலர் குடும்பங்களை வேலைநீக்கம் செய்கிறார். எங்கள் குடும்பங்கள் நிர்க்கதியாகும் என்று அவர்கள் புலம்புகையில் அவர் உதாசீனம் செய்கிறார். அநீதியை அநீதியாலேயே மூடி மறைக்கும் அதிகார மமதை.


ஒரு தருணத்தில் திவானின் கருணையால் கேசவபிள்ளை சட்டென்று தலைமைச்செயலர் ஆகிவிடுகிறார். ஏணிப்படிகளின் உச்சம். கிளப்புகளுக்குச் செல்கிறார். பெரியமனிதர்களுடன் அமர்ந்து குடிக்கிறார். ஆனால் மனைவியை ஊரிலேயே விட்டிருக்கிறார் கேசவபிள்ளை. திருவனந்தபுரத்தில் அதிகாரத்தின் படிகளில் கீழே இருப்பவனின் மனைவியை மேலே இருப்பவன் சுகிப்பதென்பது ஒரு கேளிக்கை மட்டுமல்ல, ஒரு அதிகார உத்தியாகவே உள்ளதென அவர் அறிவார்.


ஊரில் அன்னியப்பட்டு மனம் வருந்தி வாழ்கிறார்கள் கேசவபிள்ளையின் பெற்றோர். கோபாலன் நாயரின் மகன் முகுந்தனால் கேசவபிள்ளையின் தந்தை கொல்லப்படுகிறார். அந்த நிகழ்ச்சியையும் தன் முன்னேற்றத்துக்காக பயன்படுத்த கேசவ பிள்ளையால் முடிகிறது.


சுதந்திரம் நெருங்கி வருகிறது. திவானுடன் சேந்துகொண்டு தனி திருவிதாங்கூருக்காக முயல்கிறார் கேசவபிள்ளை. ஆனால் உள்ளூர அச்சம் வாட்டி வதைக்கிறது. காங்கிரஸ் பதவிக்கு வருவது உறுதி. வந்தால் என்ன ஆகும்? தூக்கில் போடுவார்களா? சொத்துக்களை பறிப்பார்களா? மனைவியடம் சொல்ல முடியாமல் உள்ளுரப் புழுங்குகிறார்


ஆனால் சுதந்திரம் கிடைத்து திருவிதாங்கூர் இந்திய யூனியனுடன் சேரும்போது சுதந்திரநாளைக் கொண்டாடும் பொறுப்பே அவருக்குத்தான் வருகிறது. அவரால் நம்பவே முடியவில்லை. காங்கிரஸ் தலைவர்கள் அவரை நேரில் கண்டபோது கைகூப்பி பணிந்து நின்றார்கள். அவர் அவ்வழியாகசெல்லும்போது சாதாரண கிளார்க்குகளைப்போல பாய்ந்து எழுந்து நின்றார்கள். அவர்கள் வெறும்மேடைப் பேச்சு வீரர்கள் என அவர் அறிகிறார். மனைவியிடம் சொல்லிச் சொல்லிச் சிரிக்கிறார்.


அவருக்கு வியப்பு. நீண்டகாலமாகவே தெய்வமாக வணங்கிவந்த மன்னரை வெறுத்து இந்த வாய்வீரர்களை எப்படி மக்கள் நம்பி நாட்டையே ஒப்படைக்கிறார்கள்? காரணம் பிரிட்டிஷ் ஆட்சிமேலான வெறுப்புதான். ஆனால் ஆட்சியைப்பிடித்த காங்கிரஸ்காரர்களுக்கு ஆளத்தெரியவில்லை. அல்லது ஆட்சி செய்வது எபப்டி என்ற மலைப்பு. அவர்கள் எவருமே அதிகாரத்தை கையாண்டவர்கள் அல்ல. மேலும் பிரிட்டிஷ்-மன்னர் கால நிர்வாக அமைப்பு மேல் அவர்களுக்கு உள்ளூர மரியாதை. அது அப்படியே நிலைநிற்கவேண்டுமென அவர்கள் நினைக்கிறார்கள்.


ஒவ்வொருவருக்கும் சொந்த நலன்கள் உள்ளன. மலைக்குத்தகை, நிலக்குத்தகை என. அதற்கு உதவக்கூடிய அமைப்பு தேவை அவர்களுக்கு. ஏற்கனவே இருந்த அமைப்பு அவ்வாறு ஊழல்களை பாதுகாக்க, ஊழலுக்கு உதவ நாநூறுவருடம் பயிற்சி எடுத்த அமைப்பு. அவர் மன்னராட்சியில் திவானுக்குச் செய்த அதே செயல்களை அப்படியே இப்போது மந்திரிகளுக்குச் செய்ய வேண்டும் என கேசவபிள்ளை கண்டுகொள்கிறார்.


கேசவபிள்ளை கதர் உடுத்து தேசவிடுதலைக் கொண்டாட்டங்களை கொண்டாடுகிறார். அதிகார அமைப்பு என்பது ஓர் இயந்திரம். அது பாரபட்சமற்றது. நேற்று அவர்களுக்காக உழைத்தோம் இனி உங்களுக்காக. இதை பலமாக வைக்காவிட்டால் நாடு சிதறிப்போகும் என்கிறார் காங்கிரச்காரர்களிடம். அதை ஆமோதிக்கிறது காங்கிரஸ். வலிமையான அரசு இல்லாவிட்டால் ஜனநாயகமே இல்லை என்ற முரணியக்கத்தை அவர்களை நம்பவைக்கிறார்


கேசவபிள்ளைக்கு உதவியாக வந்துசேர்கிறது கைதாகி சிறையில் இருக்கும் சுதந்திரப்போராட்ட வீரர்களை விடுதலைசெய்யும் பிரச்சினை. ஒட்டுமொத்தமாக விடுதலை செய்தால் நாட்டுமக்களுக்கு சட்டத்தின் ஆட்சி மீதான நம்பிக்கை சிதறிப்போகும் எகிறார் கேசவபிள்ளை. மேலும் உண்மையான குற்றவாளிகளும் ஊடே தப்பித்துவிடக்கூடும். ஆகவே தனித்தனியாக அவர்களின் சொந்தக்காரர்கள் தலைமைச்செயலருக்கு விண்ணப்பிக்கட்டும், அவற்றை பரிசீலனைசெய்வோம் என்கிறார். அப்படியாக காங்கிரஸ் தியாகிகள் சுதந்திர அரசில் தலைமைச்செயலரின் கருணைக்காக காத்து நிற்கும் நிலை ஏற்படுகிறது.


சுதந்திரத்துக்குப் பின் வந்த முதல் தேர்தலில் தீவிரகாங்கிரஸ்காரர்களின் அமைப்பு அதிகாரமேற்கலாகாது என மிதவாத கோஷ்டி விரும்புகிறது. கம்யூனிஸ்டுகள் பற்றிய அச்சமும் அவர்களுக்கு இருக்கிறது. கேசவபிள்ளை ‘குடுமப பாரம்பரியமும் கௌரவமும்’ உள்ளவர்களுக்கு இடம் கொடுங்கள். போராடுவதற்கு பஞ்சைப்பராரிகள் வேண்டும்தான், அவர்கள் நாடாள முடியாது. ஆண்டால் எல்லாம் கெட்டுப்போகும் என்கிறார். ‘புலையனும் பறையனும் வந்து என்ன செய்யப்போகிறார்கள்?’ என்கிறார். அது காங்கிரசுக்கும் ஏற்புடையதாகிறது.


திருவிதாங்கூர் காங்கிரஸையும் சாதிக்கட்சிகளையும் சேர்த்துக்கொண்டு தீவிரவாத கும்பலை வெல்லுங்கள் என்று அறிவுரை சொல்கிறார் கேசவபிள்ளை. ஒவ்வொரு ஊரிலும் தேர்தலை நடத்த பணபலமும் ஆள்பலமும் உள்ள ஆட்களை கட்சியில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்கிறார். விளைவாக நேற்றுவரை பிரிட்டிஷ்- மன்னராட்சியின் தரககர்களாக இருந்த அதே கும்பல் காங்கிரஸில் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டு அதிகாரத்தைபிடிக்கிறது. ஆட்சி மாறியது. ஆனால் கேசவபிள்ளை மாறவில்லை!


கார்த்தியாயினி அவருக்காக கண்ணிர் வடிக்கிறாள் அவரது சதிகளும் வெற்றிகளும் அவளுக்குச் சரியாகத்தெரியவில்லை. அவரது அப்பா ஊரார் திரும்பிப்பார்க்காமல் அனாதைப்பிணமாக செத்ததை அவள் கண்டாள். அவளுடைய தோழிகளே அரசால் அடித்து வதைக்கப்பட்டதைக் கண்டாள். அரசு என்பது ஒரு பெரும்பாவச்செயல் என அவள் உணர்ந்தாள். கேசவபிள்ளை தன் மகளுக்கு ஓர் அரசு ஊழியனைதேடியபோது அவள் அதை மூர்க்கமாக எதிர்த்து ஒரு விவசாயியே போதும் அரசூழியர்களுக்கு நீதியும் நேர்மையும் இல்லை என்கிறாள்.வாழ்நாள்முழுக்க நான் பட்ட கஷ்டங்கள் அவளுக்கு வேண்டாம் என்கிறாள்.


தீவிர காங்கிரஸ் கோஷ்டி கம்யூனிஸ்டுகளாகிறார்கள். கம்யூனிஸ்டு கிளர்ச்சி வலுக்கிறது. காங்கிரசாக வேடம்பூண்ட நிலப்பிரபுத்துவ- புது முதலாளித்துவ கும்பல் அஞ்சுகிரது. திவானுக்குசெய்த அதே சேவையை கேசவபிள்ளை காங்கிரஸ்காரர்களுக்காகவும் செய்ய நேர்கிறது. வெளிஎதிரிகளான கம்யூனிஸ்டுகளை வேட்டையாடுகிறார். உள் எதிரிகளை அழிக்க சதிவகுத்து அளிக்கிறார், வியூகங்கள் அமைக்கிறார். அரசே அவர் கையில்தான் இருக்கிறது. தனிப்பட்ட சிக்கல்களுக்குக் கூட அவரே ஆலோசனை சொல்கிறார்.


கம்யூனிஸ்டுகள் அடக்குமுறையை மீறி பலம்பெறுகிறார்கள். தேர்தலில் வென்று ஆட்சியைப்பிடிக்கிறார்கள். தலைமைச்செயலராக ஒரு மேனன் வருகிறார். கேசவபிள்ளை அவமானகரமாக தூக்கிவீசப்படுகிறார். ஒரு மேனன் முதல் கேசவபிள்ளையின் அரசுப்பணி தொடங்குகிறது, இன்னொரு மேனனில் முடிகிறது. அந்த மேனனும் குணாதிசயத்தில் இன்னொரு கேசவபிள்¨ளையேதான் என நாவல் காட்டுகிறது.


புதிய ஆட்சி, புதிய தியாகிகள், புதிய தலைவர்கள். ஆனால் அதிகார அமைப்பு அதுவேதான். கம்யூனிஸ்டுகள் நடத்திய புன்னப்புரா வயலார் போராடத்தில் திவானின் பட்டாளத்தை கூட்டிக்கொண்டு வீடுவீடாகப்போய் மனிதவேட்டை ஆடிய அதே முதலாளிகள் கட்சிக்குள் கூட்டணிக்காரர்களாக வந்து அதிகாரத்தை அடைகிறார்கள். அடிபட்டு ரத்தம் கக்கிய தியாகிகள் மறக்கப்படுகிறார்கள்.


அரை எக்கர் நிலம் கிடைக்கும் என்று அரசாங்கத்திடம் மனுபோட்டு தேசப்போராட்டத் தியாகி சங்கரப்பிள்ளையும் சரி, கைதான மகனை விடுவிக்கக் கோரி தலைமைச்செயலகத்திற்கு அலையும் புன்னப்ர வயலார் தியாகி கிருஷ்ணனும் சரி ஒரே இடத்தில்தான் இருக்கிறார்கள். கிளார்க் ஒருவன் தெளிவாகவே சொல்லிவிடுகிறான். ”எது மாறினாலும் அதிகாரம் மாறாது. இன்று நாங்கள் கம்யூனிஸ்டுகளுக்கு கப்பம் கொடுக்கவேண்டியுள்ளது. மக்கள் எங்களுக்கு லஞ்சம் கொடுத்தேயாகவேண்டும்”


இரு தியாகிகளும் சேர்ந்தே தலைமைச்செயலகம் முன் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். அலட்சியம்செய்யப்பட்டு தற்கொலை செய்துகொண்டு இறக்கிறார்கள். மன்னராட்சியில் ஒருவர் இறந்த அன்றுதான் தலைமைச் செயலகத்தில் கேசவபிள்ளை பதவி ஏற்றார். இவர்கள் இறந்த அன்று அவர் வெளியேறினார். மூன்று அதிகார வற்கம் மாறி வந்துவிட்டது, அதிகார அமைப்பில் எதுவுமே மாறவில்லை


கேசவபிள்ளையின் மகள் ஒரு கம்யூனிஸ்டைக் காதலிக்கிறாள். அதை கார்த்தியாயினி ஆதரிக்கிறாள். இறந்த தங்கம்மாவில் கேசவபிள்ளைக்குப் பிறந்த குழந்தையுடன் அவர்கள் திருவனந்தபுரம் விட்டு வெளியேறும்போது நாவல் முடிகிறது.


*


இந்தக் கதை வழியாக தகழி சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் கேரள [இந்திய] அதிகார அமைப்பில் ஏற்பட்ட மேலோட்டமான மாற்றங்களையும் மாறாத அடிப்படைக் கட்டுமானத்தையும் விரிவாகச் சித்திரிக்கிறார். எல்லா இலட்சியவாதங்களும் ஏதோ ஒரு இடத்தில் அதிகாரத்திடம் சமரசம் செய்துகொண்டு அதன் பகுதியாக ஆகி, மேலும் அதிகாரம் செலுத்த ஆரம்பித்துவிடுகின்றன. சமரசம் செய்யவே முடியாத தியாகி சங்கரப்பிள்ளையைப் போன்றவர்கள் முழுமையான தோல்விக்கு ஆளாகிறார்கள்.


சுதந்திரம் கிடைக்கிறது, காங்கிரஸ் பதவி ஏற்கிறது, அதிகாரப்போட்டியில் மந்திரிசபைகள் கவிழ்கின்றன. கம்யூனிஸ்ட் ஆட்சி வருகிறது. எதுவும் அடிப்படையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை. அரசியல் என்பது துயரப்படும் மக்களுக்கு விடிவுகாலம் வருகிறது என்று சொல்லி போதையூட்டும் ஒரு மாயமாக, ஒரு வகைக் கேளிக்கையாக மட்டுமே உள்ளது என்கிறது இந்நாவல்.


அப்படியானால் அதிகாரத்தை, அடிப்படையான அறக்கோட்பாடுகளை மாற்றியமைப்பது எது? அது நாவலில் ஒருவகையில் சுட்டப்படுகிறது. இந்த நீண்ட காலஓட்டத்தில் அதிகார சுமையும், அற அடிப்படைகளும் வேறு ஒரு விதத்தில் கண்ணுக்குத் தெரியாமல் மாறியபடிதான் உள்ளன. தொடர்ச்சியான மக்கள் போராட்டம் நிகழ்ந்தபடியேதான் உள்ளது. அது பலவற்றை இழந்தாலும் பலவற்றை அடையவும் செய்கிறது. ஒரு பொதுப்பார்வையில் அரசரின் ஆட்சியும் கம்யூனிஸ்டு ஆட்சியும் ஒன்றுதான் என்றுபடலாம். ஆனால் அது உண்மையல்ல. மக்களின் குரல் ஓங்கியிருக்கிறது. சுததிர உணர்வும் உரிமையுணர்வும் உருவாகியுள்ளன. மாற்றங்கள் இப்படித்தான் வர முடியும். நுட்பமாக, கண்னுக்குத்தெரியாமல். மற்றபடி மனித இயல்பில் புரட்சிகர மாறுதல்கள் ஏதும் நிகழ்வதற்கு வாய்ப்பில்லை என்று தகழியின் முதிர்ந்த லௌகீக விவெகம் நாவலில் பேசுகிறது


வரலாறெங்கும் மனிதனின் திருப்தியற்ற தேடல்தான் புதியவற்றை கண்டடைகிறது, கைப்பற்றுகிறது. ஒன்றை அடைந்ததுமே இன்னொன்றுக்கான தேடல் தொடங்குகிறது.தியாகி சங்கரப்பிள்ளை தோற்றாரென்றால் கேசவபிள்ளைகூடத்தான் வேறு ஒரு விதத்தில் பூரணமான தோல்வியை அடைந்தார் என்று நாவலின் இறுதியில் ஒரு மனபிம்பம் ஏற்படுவது உண்மை.


தகவல்களைக் கறாராக்க கடைப்பிடித்து, பத்திரிகை அறிக்கைகளின் தெளிவுடன், நேரடியாக கதை சொல்கிறார் தகழி. ஆர்வப்படுத்துவதோ, விறுவிறுப்பூட்டுவதோ அவரது இயல்பல்ல. நம்பகத்தன்மையே அவருடைய குறி. நிதானமாக வலைபோல விரிந்து பரந்து செல்கிறது நாவல். தொடர்கதை வாசித்துப் பழகியவர்களுக்கு இந்த சாதாரணத்தன்மையும் நிதானமும் சலிப்பூட்டக்கூடும். சலிப்பும் அலுப்பும் சிறிதளவேனும் ஊட்டாத பெரும் நாவல் ஏதும் உலக இலக்கிய வரலாற்றில் இல்லை என்பதே இதற்குப் பதிலாக அமையமுடியும்.


அதேசமயம் நுட்பங்களை ரசிப்பவர்களுக்கு, வேகத்தை உதாசினம் செய்பவர்களாக அவர்கள் இருந்தால், இப்படைப்பு தொடர்ந்து தீனி போட்டபடியே செல்லும். மன உணர்வுகளை தகழி எப்போதும் ஊசிமுனையால் தொட்டு எடுக்கிறார். காம உறவின் பல்வேறு சூட்சுமமான சுருதிபேதங்களை மிக மிக யதார்த்தமான குரலில் தொட்டுக் காட்டுகிறார்.


உதாரணமாக கேசவபிள்ளை கார்த்தியாயினியைக் கல்யாணம்செய்துகொள்ளும் இடம். அவர்களுக்குள் உறவு மெல்லமெல்ல உருவாகும் விதம். கார்த்தியாயினியின் உடலெங்கும் வியர்வை அழுக்கு. சரியாக்க குளிக்கவே அவளுக்குத்தெரியவைல்லை. ஆனால் அவர் அதில் ஒரு விருப்பத்தை மெல்ல கண்டடைகிறார். அவருள் உறையும் விவசாயியால் விரும்பப்படுபவள் அவள். அவருள் எஞ்சும் ஒரே மனசாட்சியின் அம்சம். ஆனால் அவருள் உறையும் தலைமைச்செயலரின் காதலிதான் தங்கம்மா.


‘தங்கம்மா’ மிதமிஞ்சிய சுதந்திர இச்சை உடையவள், மீறலில் தன்னை அடையாளம் காண்பவள். ஆனால், ஒரு இடத்தில் தன் துடிப்புகளுக்குப் பின்னணியாக வலுவான ஓர் ஆளுமையால் தான் கட்டுப்படுத்தப்படவேண்டும் என்ற விழைவும் இருந்ததை அவளே கூறுகிறாள். இந்த விசித்திரமும் நுட்பமும் கூடிய மனஇயக்கத்தை நாவல் முழுக்க தகழி மிகுந்த நம்பகத் தன்மையுடன் கூறிச் செல்வது கவனத்தைக் கவர்வதாகும்.


நாவலில் ஒருவகை மனசாட்சியின் குரலாக கருதப்படும் கார்தியயினிக்கேகூட அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதும் சொத்துசேர்ப்பதும் தவறென படவில்லை. அது இயல்பான ஒன்றாக அதிகாரச்செயல்பாட்டின் ஒருபகுதியாகமட்டுமே தெரிகிறது. மக்கள் மீதான வன்முறையை மட்டுமே அவள் எதிர்க்கிறாள். இது நம் நாட்டுப்புறமக்களின் இயல்பு. காரணம் பலநூற்றாண்டாக அதிகார அமைப்பு இப்படித்தான் செயல்பட்டுவருகிறதென அவர்கள் அறிவார்கள்.


வரலாற்றை எடுத்துப் பார்த்தால் லஞ்ச ஊழல் என்பவை குற்றம் என்பதெல்லாம் மேலைநாட்டு ஜனநாயகக் கோட்பாடுகளால் இங்கு கொண்டுவரப்பட்ட லட்சியங்கள் மட்டுமே. மன்னராட்சியிலும்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 14, 2016 11:35

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.