Jeyamohan's Blog, page 1741
August 20, 2016
சிக்கவீர ராஜேந்திரன்- ஒரு மதிப்புரை
 
அண்ணன் ஜெயமோகனுக்கு,
நலமாக இருக்கிறீர்களா?
ஒரு வாசகனாக சிக்கவீர ராஜேந்திரன் குறித்த என் பார்வையை எழுதினேன்.
http://saravanansarathy.blogspot.in/2016/08/blog-post.html
நன்றி.
அன்புடன்,
பா.சரவணன்
 
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 33
[ 9 ]
பாலென நுரைபொங்கும் தூத்மதியே மிதிலையை அணைத்து ஓடிய முதன்மை ஆறு. ஜலதையும் பலானையும் கமலையும் ராத்வதியும் அதில் மலைச்சேற்று நிறங்களுடன் பெருகி வந்து இணைந்துகொண்டன. அங்கு எப்போதும் இளஞ்சேற்றின் நுரைமணம் இருந்தது. வடமேற்கே எழுந்த மலையடுக்குகளின் குளிர் ஊறிவந்த அந்த ஆறுகளின் பெருக்கால் மிதிலையின் அனைத்துச் சுவர்களும் எப்போதும் பனித்திருந்தன. அங்குள்ள மக்களின் விழிகளும் சொற்களும்கூட குளிர்ந்தவையே என்றனர் கவிஞர்.
மலையுருண்டு வந்த கற்களை அடுக்கிக் கட்டப்பட்ட உயரமற்ற கோட்டையால் சூழப்பட்டிருந்தது மிதிலை. கோட்டையின் வாயில்முகப்பில் மட்டும் மரத்தாலான உயர்ந்த காவல்கோபுரமும் அதன்மேல் மூன்று எச்சரிக்கைமுரசுகளும் இருந்தன. அதன்மேல் கவிழ்ந்த தாமரைக்கூரைக்குமேல் மிதிலையின் மேழிக்கொடி பறந்தது. தேர்கள் செல்வதற்கான மையச்சாலை மரத்தடிகள் பதிக்கப்பட்டிருந்தது. தேவதாரு மரங்களால் கட்டப்பட்ட மூன்றடுக்கு அரண்மனையை அது சென்றடைந்தது.
அரண்மனையின் முற்றத்தில் மிதிலையின் அரசர்களின் குலதெய்வமான பூமாதேவி ஒருகையில் அமுதகலமும் மறுகையில் மலரும் கொண்டு கோயில்கொண்டிருந்தாள். அரண்மனையைச் சுற்றி காவல் ஏதுமிருக்கவில்லை. அரண்மனை முற்றத்தையே மக்கள் சந்தையாகவும் பயன்படுத்தினர். மலையிறங்கி வரும் மக்கள் கொண்டுவரும் மதிப்புமிக்க கம்பளியாடைகளும் தோலாடைகளும் கீழே மலைச்சரிவுக்கு அடியிலிருந்து வணிகர்கள் கொண்டுவந்த வெண்கலப்பொருட்களும் இரும்புக்கருவிகளும் உப்புப்பாறைகளும் மரவுரியாடைகளும் அங்குதான் விற்கப்பட்டன.
மரங்களால் கட்டப்பட்ட உயரமற்ற சிறியவீடுகள் செறிந்த மிதிலையில் காலை மிகப்பிந்தியே வந்தது. ஒளியில் வெம்மை ஏறிய பின்னரே மக்கள் கணப்பின் சூடு பரவிய அறைகளின் கம்பளிப்போர்வைக்குள் இருந்து வெளிவந்தனர். சுருக்கங்கள் பரவிய முகங்களுடன் வெயிலை நோக்கியபடி நெடுநேரம் அமர்ந்திருந்தனர். அவர்களின் கால்நடைகள் அதன்பின்னரே மெல்ல தொழுவங்களிலிருந்து ஆவியெழும் உடலுடன் வெளிவந்தன. சூரியனை ஏற்று உடல் சிலிர்த்தன. குழந்தைகள் சிவந்த கன்னங்களுடன் வந்து தந்தையரை அணைத்துக்கொண்டு அமர்ந்தன. அவர்கள் முன்னால் ஒளியிலாடிய இறகுகளுடன் சிறிய பறவைகள் வந்து தெருக்களில் கிடந்த பழைய சாணியைக் கிளறி சிரித்து எழுந்து அமைந்து அப்பொழுதை கொண்டாடின.
அவர்கள் உச்சிப்பொழுதின் ஒளிமட்டுமேயான சூரியனின் கீழ் நின்றபடியே வயல் திருத்தினர். பெரும்பாலும் காய்கறிகளும் சோளமுமே அங்கு பயிரிடப்பட்டது. ஆண்டில் மூன்றுமாதம் மலைச்சரிவுகள் கரைந்து வழியும்படி பெருமழை பெய்தது. மக்கள் தங்கள் மரக்குடில்களில் ஒடுங்கி கணப்புகளுடன் ஒண்டியபடி மழையை கேட்டுக்கொண்டிருப்பார்கள். மக்களில் ஒருசாரார் ஐந்து ஆறுகளிலும் இறங்கி அவற்றின் கரையோர வண்டலை அள்ளி நீரில் கழுவி அதில் அருமணிகள் உள்ளனவா என்று பார்த்தனர். மிதிலையின் வருவாயின் பெரும்பகுதி அவ்வாறுகளில் அருமணிகளாகவே கிடைத்தது. அதை வாங்க கீழே பெருங்கடல் அலைக்கும் தாம்ரலிப்தியிலிருந்து வணிகர்கள் வந்தனர்.
மிதிலையின் மண்ணும் புழுதியும் காற்றும் அனைத்துமே ஐந்தாறுகளின் வண்டலால் ஆனவை. அவற்றை எவ்வகையிலும் தவிர்க்க முடியாதென அங்கு வந்த சிலகாலத்திலேயே வணிகர்கள் அறிந்தனர். மிதிலை நகரினர் புழுதியை ஒருபொருட்டென எண்ணுவதில்லை. அங்குள்ள வீடுகள் அனைத்தும் புழுதியால் மூடப்பட்டிருந்தன. அரண்மனையே மென்புழுதிப்படலத்துக்குள் இருந்தது. ஆலயத்திற்குள் தெய்வமும் ஐந்தாற்றுச் சேறு குழைத்து உருவாக்கப்பட்டதே.
ஐந்து ஆறுகளின் வண்டல் சந்தன நிறமான அலைவடிவாக படிந்திருந்த அப்படுகைக்கு தொல்பழங்காலத்தில் குடிவந்த மக்கள் தாரிகள் என அழைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் வாழ்ந்த தொல்நிலம் கீழே சரஸ்வதி ஓடிய சமவெளியில் அமைந்திருந்தது. பல்லாயிரமாண்டுகளாக அவர்கள் அங்கே கன்றுபெருக்கியும் மேழியோட்டியும் மதில்சூழ்ந்த சிற்றூர்கள் அமைத்து வாழ்ந்தனர். விண்ணிலிருந்து எழுந்த ஆணையொன்றால் சரஸ்வதி ஒழுக்கு நின்றது. அதன் நீர் ஆங்காங்கே சிறுகுளங்களென்றாகியது. அக்குளங்களின் நீருக்கென மக்கள் ஒருவருக்கொருவர் போரிட்டனர்.
பின்னர் அக்குளங்களும் சுருங்கி மண்ணுக்குள் மறையத் தொடங்கியபோது அவர்கள் நான்குதிசைகளிலும் நீரும் வாழ்வும் தேடி கிளம்பினர். ஒரு நிலத்தைக் கண்டடைந்தவர் அங்கு பிறர் வராதபடி செறுத்துப் போரிட்டனர். பெரியகுடிகள் ஈரமுள்ள நிலங்களைக் கண்டடைய சிறுகுடிகள் துரத்தப்பட்டு மேலும் மேலும் சிதறிப்பரந்தன. ஆண்களால் தலைமை வகிக்கப்பட்ட குடிகள் போர்த்தன்மை கொண்டிருந்தன. பெண்களால் தலைமை வகிக்கப்பட்ட குடிகளே மேலும் தொன்மையானவை. அவற்றால் அவர்களை எதிர்த்துப் போரிடமுடியவில்லை. அவை எல்லைகளுக்கு அகற்றப்பட்டன.
அவ்வாறு சிதறியவர்களில் ஒரு சிறுமலைக்குழு அவர்களின் முதுதலைவியாகிய சூசிகையால் மலைமீது வழிநடத்தி கொண்டுசெல்லப்பட்டது. அவர்களே ஐந்துஆறுகள் ஓடிய சேற்றுப்படுகையை கண்டடைந்தனர். தாரிமொழியில் மண் மிதி எனப்பட்டது. எனவே அந்நிலம் சூசிகையால் மிதிலை என்று அழைக்கப்பட்டது. அன்னை அங்கு அவர்கள் வாழ்வதற்கு ஆணை அளித்தாள். மேழி பற்றத்தெரிந்த அம்மக்களால் விரைவிலேயே அங்கு வளமான சிறுகழனிகள் அமைக்கப்பட்டன. பச்சைப்படிக்கட்டுகள் போல அவை மலைச்சரிவில் இறங்கி ஐந்து ஆறுகளை சென்றடைந்தன. சேறு அவர்களுக்கு வற்றாத உணவை அளித்தது.
நெடுங்காலம் மிதிலை சின்னஞ்சிறு மலைச்சிற்றூராக எவராலும் அறியப்படாமல் அங்கே இருந்தது. சேற்றைக்குழைத்து சிறுவீடுகளை கட்டிக்கொண்டனர். சேற்றிலேயே வாழ்ந்தமையால் அவர்கள் நீங்கா சேறுபடிந்த உடல்கொண்டிருந்தனர். அவர்கள் தங்களையும் மிதிகள் என்றே அழைத்துக்கொண்டனர். அவர்களின் காலடியில் அருமணிகள் புதைந்துகிடந்தன. அவர்கள் அதை அறியாமல் நிறைவாழ்வு வாழ்ந்தனர். மூதன்னையே அவர்களின் அரசி. அவள் முன்னிலையில் நன்றும் தீதும் முடிவாயின.
அவர்கள் அந்நிலத்தைக் கண்டடைந்த நாளை மிதிநாள் என கொண்டாடினர். அது பெருமழைக்காலம் முடிந்து வெள்ளம் வடிந்து மலைச்சரிவுகள் அனைத்தும் சேற்றுக்குழம்பு குமிழியிட்டு நொதித்துக்கொண்டிருக்கும் பருவம். மிதிநாளுக்கு முந்தைய பதினான்கு நாட்களுக்குள் பிறக்கும் பெண்குழந்தைகளில் மூத்ததை தெரிவுசெய்து அதை கொட்டும் குரவையுமாக மூங்கில்கூடையில் கொண்டுவந்து அச்சேற்றில் புதைத்துவைப்பார்கள். பூசைகள் செய்து நீர்தெளித்து அகழ்ந்து அவளை வெளியே எடுப்பார்கள். மண்ணன்னையின் மகள் அவள் எனக் கருதி கொண்டுசென்று இளவரசி என முடிசூட்டுவார்கள். வாழும் மூதன்னை மறைந்து கோல் ஒழியும்போது அவள் அரசியாவாள். மிதிலையின் அரசி என்பதனால் அவள் மைதிலி என்றும் குளிர்ந்தவள் என்பதனால் சீதை என்றும் அழைக்கப்பட்டாள்.
நெடுங்காலத்திற்குப் பின்னர்தான் மிதிலைக்கு அரசன் உருவானான். மிதிலையின் அருமணிகள் மேழியில் தட்டுப்படத் தொடங்கின. அவற்றை அவர்களின் குழந்தைகள் குழியாடலுக்கும் விரலாடலுக்கும் பயன்படுத்தின. அவ்வழியாகச் செல்கையில் அம்மலைக்குடிக்கு வந்து தங்கியிருந்த மலைவணிகன் ஒருவன் அதை கண்டான். குறைந்த விலைக்கு அவற்றை அவன் வாங்கிக்கொண்டான். சின்னாட்களிலேயே மிதிலையை நாடி வணிகர்கள் வரத்தொடங்கினர்.
செல்வம் வந்ததும் கள்வரும் வந்தனர். கள்வரை வெல்ல மிதிலை படைக்கலம் ஏந்தவேண்டியிருந்தது. படைகளை நடத்துவதற்காக மூதன்னையின் முதல்மைந்தன் தலைவனாக தெரிவுசெய்யப்பட்டான். அன்னையின் உடலின் ஒருபகுதியாக அவன் கருதப்பட்டான். அன்னையின் உடலாகப் பிறந்தவன் என்னும்பொருளில் அவன் ஜனகன் என்றழைக்கப்பட்டான். பின்னர் போருக்கு அரசனும் அறநெறிகளுக்கு மட்டுமே அன்னையின் அவையும் என்று ஆயிற்று.
காலப்போக்கில் மிதிலையின் அனைத்து அரசர்களும் ஜனகன் என்று அழைக்கப்பட்டனர். அரசனின் மூத்தமகளை சேற்றிலிருந்து அகழ்ந்தெடுத்து குலத்தலைவியாக்கினர். அவளே மண்ணன்னையின் ஆலயத்துப் பூசனைமுறைகளை ஆற்றக் கடமைப்பட்டவள். மைதிலி என்றும் சீதை என்றும் ஜானகி என்றும் அவள் அழைக்கப்பட்டாள். நெடுங்காலம் கழித்து மிதிலை பிற அரசகுடியினருடன் மணவுறவுகொள்ளத் தொடங்கி இளவரசி பிறநகருக்கு குடிபெயர்ந்தபோது அவள் தங்கை அப்பொறுப்புக்கு வந்தாள்.
நூற்றெட்டாவது ஜனகராகிய பூமித்வஜர் வேதமறிந்த அறச்செல்வர் என புகழ்பெற்றார். அவர் அவைக்கு கார்கியும் கௌதமரும் காத்யாயனரும் சிறப்பளித்தனர். அவர் செல்வத்தால் ஐதரேயக்காடும் பிருஹதாரண்யகமும் செழித்தன. அவருக்குப் பின்னர் வந்த பானுமதர், சத்குமான்யர், சூசி, ஊர்ஜநாமர், சத்வயர், கிருதி, அஞ்சனர், அரிஸ்நாமி, சுருதாயு, சுபாஸ்யு, சுர்யாசு, சிருஞ்சயர், சௌர்மாபி, அனேனர், பீமரதர், சத்யரதர், உபாங்கு, உபகுப்தர், ஸ்வாகதர், சனானந்தர், சுப்ராச்சயர், சுபாஷணர், சுச்ருதர், சுஸ்ருதர், ஜயர், விஜயர், கிருது, சுனி, வித்ஹப்யர், த்வதி, பகுலாஸ்வர், கிருதி, திருதியர் என்னும் ஜனகர்கள் அவர் பெருமையாலேயே சூதர்களின் பாடல்களில் அழியாது வாழ்ந்தவர்கள்.
கிருதி திருதியரின் கொடிவழியில் வந்தவர் எட்டாவது ஜனகராகிய ஸீரத்வஜர். அவர் மகளாகப் பிறந்த சீதையை அயோத்தியின் ரகுகுல ராமன் மணந்தான். இலங்கையின் அரக்கர்கோன் ராவணனால் அவள் கவர்ந்து செல்லப்பட்டாள். படை கொண்டுசென்று அவளை ராகவ ராமன் மீட்டுவந்த கதையை சூதர்பாடல்கள் பலவாறாகப் பாடின. எரிபுகுந்து சொல்திகழ்ந்த அவளை மண்ணன்னையின் பெண்வடிவு என புற்றுறைமுனிவர் பாடிய தொல்காவியம் அனைவர் நாவிலும் அழியாது வாழ்ந்தது.
எப்போதும் வேதம் முழங்கிக்கொண்டிருக்கும் அவை என்று மாமன்னர் பூமித்வஜ ஜனகரின் அவையை சொன்னார்கள் கவிஞர்கள். அங்கதக்கவிஞன் ஒருவன் ‘உடல்பழுத்த முதுவைதிகர்கள் அணிபொலியும் நடனப்பெண்களைவிட கண்களைக் கவரும் அவை’ என அதைப்பற்றி பாடினான். “நூறாண்டுகள் ஒழியாது வேதம் ஒலித்த மண் ஆகையால் அங்கே மானுடர் பேசுவதெல்லாம் வேதச்சந்தமாகவே ஒலிக்கிறது” என்றனர் கவிஞர். ஐதரேய மரபில் வேதமெய் கற்றுத்தேர்ந்த அந்தணராகிய அஸ்வலனர் ஜனகருக்கு அமைச்சராக அமைந்து அவைகளனைத்தையும் வழிநடத்தினார்.
சொல்தேர்பேரவை என அது பாரதவர்ஷம் முழுக்க அறியப்பட்டபோது அதைத் தேடி பாரதவர்ஷம் எங்கும் இருந்து வைதிகர்களும் புலவர்களும் வரலாயினர். எனவே ஒவ்வொரு நாளும் அங்கு புதிய மெய்யறிவு ஒன்று எழுந்தது. மறுநாள் எழுந்த ஒன்று அதை மறுத்தது. நிலைக்காத துலாமுள் என அந்த அவையின் மையம் மாறிக்கொண்டே இருந்தது. “அந்த அவையில் ஒருநாள் அமர்பவன் மெய்யறிவான். மறுநாளும் அமர்பவன் அதை இழப்பான்” என்றனர் அங்கதக்கவிஞர்.
நாளும் பெருகிக்கொண்டிருந்த மெய்ப்பூசலைக் கண்டு ஜனகரே கவலைகொள்ளத் தொடங்கினார். அனைத்தும் அறிந்த அரசமுனிவர் என அவர் அறியப்பட்டும்கூட அவரது அவை என்பதனாலேயே அவர் எங்கும் சொல்முதன்மைகொள்ள முடியவில்லை. வரவேற்பவருக்குரிய பணிவை அவர் பேணியாகவேண்டியிருந்தது. “அவை என்றால் இறுதிச்சொல் ஒன்று இருந்தாகவேண்டும். அதை ஒரு நாக்குதான் உரைக்கமுடியும். அது எது என்று வகுப்போம். அவ்வாறின்றி நிகழும் சொல்லாய்வுகள் வெறும் பறவைப்பூசல்களாகவே எஞ்சும்” என்றார் அமைச்சர் அஸ்வலனர். “இங்கு பகுதட்சிணைப் பெருவேள்வி ஒன்றை கூட்டுவோம். அதன் மெய்யவையில் முடிவாகட்டும் முதல்வர் எவர் என.”
அதை ஏற்று ஜனகர் ஒரு பெருவேள்வியை தொடங்கினார். அரச அறிவிப்பு நகர்முனைகளில் பொன்முகப்படாம் அணிந்த களிறுமேல் எழுந்த திருமுகத்தானால் பட்டோலை விரித்து வாசிக்கப்பட்டது. கொம்புகளும் முரசுகளும் முழங்கி அதை ஆதரித்தன. பாரதவர்ஷத்தின் அனைத்து கல்விச்சாலைகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. மானுடமொழி பேசும் எவரும் வந்தமர்ந்து தங்கள் மெய்யறிவை அங்கு தொடுக்கலாமென்று அறைகூவப்பட்டது.
பாரதவர்ஷத்தின் அத்தனை நகரங்களுக்கும் திருமுகங்கள் சென்றன. பாரதவர்ஷத்தின் தலைமை வேதப்படிவர் எவர் என அந்த அவையில் உறுதியாகுமென பேச்சு பரவியது. அது அறிஞரென அறியப்பட்டிருந்த அனைவரையும் அந்த அவைக்குச் செல்லத் தூண்டியது. “ஜனகரால் ஏற்கப்பட்டவர் நான்குவேதங்களாலும் ஏற்கப்பட்டவர்” என்றனர் சூதர்.
[ 10 ]
அவைகூடல் குறிக்கப்பட்டிருந்த சித்திரை மாதம் வளர்பிறை முதல்நாளை நோக்கி வைதிகர்களும் அறிஞர்களும் வரத்தொடங்கினர். மிதிலை நகரில் கோடைகாலம் முழுக்க முகில்குவைகள் போல புழுதி நிறைந்திருக்கும். அந்நகரை தொலைவிலிருந்து நோக்கியவர்கள் மலைச்சரிவில் ஒரு செந்நிறமுகில்மேல் அதன் கோபுரமுகடுகள் மட்டும் வெயிலில் மிதந்து நிற்பதை கண்டனர். அணுகும்தோறும் திரைக்குள் என அதன் கட்டடங்களும் மனிதர்களும் தெரியலாயினர். உள்ளே நுழைந்ததும் தாங்களும் அதில் கரைந்து மறைந்தனர். ஒவ்வொரு முகமும் புழுதிக்குள் இருந்து எழுந்து சிரித்து அணுகி சொல்லாடி புழுதிக்குள் மறைந்தது. “மிதிலை அன்னைமிதியின் நகரம். இங்கு காற்றும் ஒளியும் வானும் மண்ணாலானதே. அங்கு வேள்வியில் காண்பீர், எரிதழலும் மண்ணென்றே எழுந்து நிற்பதை” என்றனர் வணிகர்.
வேள்வியின் மெய்யவையில் வெல்லும் வேதப்படிவருக்கு ஆயிரம் வெண்பசுக்களும், அவற்றின் கன்றுகளும் ஆகொடையாக அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அப்பசுக்களின் கொம்புகள் பொன்கட்டப்பட்டிருக்கும். அவற்றை உரிமைகொண்டவரை பிற வைதிகர் எழுந்து வேதமுதல்வர் என சுட்டி வாழ்த்துவர். வேள்விக்கெனத் தேர்ந்து திரட்டப்பட்ட ஆயிரம் பசுக்களும் தூத்மதியின் கரையில் அமைந்த கொட்டகைகளில் கட்டப்பட்டிருந்தன. ஒவ்வொருநாளும் அவற்றைக் காண அயலூர் மக்கள் வந்து குழுமினர். “வெண்முகில்கள் போல. வெண்பளிங்குப் பாறைகள் போல. வெண்பட்டுக்குவியல்கள் போல” என்று சூதர்கள் அவற்றைப்பற்றி முச்சந்திகளில் நின்று பாடினர்.
வேள்விக்கு ஆரியவர்த்தத்தின் அனைத்து வேதநிலைகளிலும் இருந்து முதலாசிரியர்கள் தங்கள் மாணாக்கர்களுடன் வந்தனர். அவர்கள் தங்குவதற்கான குடில்கள் ஐந்து ஆறுகளின் கரைகளில் நிரைவகுத்தன. அவர்களைக் கண்டு வணங்கவும் தங்கள் குழவியரை அவர்கள் தொட்டு வாழ்த்தவும் விரும்பிய இல்லறத்தார் வைதிகர் தங்கள் நீர்வணக்கமும் நெருப்புக்கடனும் முடிந்து ஓய்வெடுக்கையில் அவர்களின் குடில்கள் முன் நிரைவகுத்து நின்று கண்டு வணங்கினர். பொன்னையும் வெள்ளியையும் காணிக்கை வைத்தவர்களுக்கும் வெறும்பழங்களுடன் வந்தவர்களுக்கும் நடுவே எண்ணத்துளியாலும் வேறுபாடு காட்டாமல் வாழ்த்தினர் அந்தணர்.
முதல்நாள் அஸ்வலனர் “மெய் என்பது சொல்லில் அமையும் தன்மைகொண்டது. எனவே அறியக்கூடியது. அழியாதது. எனவே மெய்யமைந்த சொல் அழியாதது. அழியாச்சொல்லே வேதம். அழிபவர் அனைவருக்கும் அழிவின்மையே அமுதம்” என்னும் முதற்சொல்லை அவையில் நிறுத்தி சொல்லாடலை தொடங்கினார். கௌதம மரபின் சால்வரும், சௌனக மரபின் உத்தாலகரும், வைசம்பாயனரும், கண்வரும், மத்யாதினரும் ஒவ்வொருநாளிலும் தங்கள் மெய்ச்சொற்களை முன்வைத்தனர். ஜரத்காரு முனிவரின் வழிவந்த அர்த்தபாகர், லஹ்ய முனிவரின் வழிவந்த ஃபுஜ்யர், கௌஷிதிய மரபில் வந்த கஹோலர் ஆகியோருக்குப்பின் உஷஸ்தி சக்ராயனரின் வழிவந்த உஷஸ்தர் ஆகியோர் மெய்யுரையை முன்வைத்தனர்.
ஒரு மெய்யறிதலை பிறிதொன்று வென்று சென்றது. வெல்லற்கரிய முழுமைகொண்டது என ஒரு மெய்ச்சொல் தோன்றும்போதே கனியினுள் இருந்து விதை என அதற்குள் இருந்தே சொல்லெடுத்து அடுத்த மெய்யறிவை வளர்த்து நிலைநாட்டினார் இன்னொருவர்.
பதினான்காம் நாள் முழுநிலவு. குருபூர்ணிமையாகிய அன்று காலைக்குமுன்னரே மாணவர்கள் எழுந்து இருளுக்குள் விழிமூடியபடியே சென்று நீராடி மணம்கொண்டு தேடி மலர்கொய்து தங்கள் ஆசிரியர்களின் குடில்களை அணுகி துயிலும் அவர்களின் கால்களில் மலரிட்டு வணங்கி விழிதிறந்து அக்கால்களை நோக்கினர். அதை நெஞ்சில் நிறுத்தி “வழிகாட்டுக! துணைவருக! இறைவடிவாக எழுந்தருள்க!” என வணங்கினர். மாணவர்களாகச் சேர விழைந்த இளையோர் கைகளில் மலர்களுடன் ஆசிரியர்களைக் காத்து குடில்கள் நடுவே நின்றிருந்தனர். அவர்களின் விழி தங்கள் மேல் பட்டபோது நிலம்படிய விழுந்து “அறிவுக்கொடை அளியுங்கள், ஆசிரியரே” என வணங்கினர்.
அன்றோடு அந்த அவை நிறைவுகொள்கிறது என்றறிந்தமையால் அனைவரும் அரண்மனை முகப்பிலிருந்த வேள்விப்பந்தலில் கூடினர். வேள்வி நிகழ்ந்துகொண்டிருக்கையில் அங்கு நீண்ட சடைமுடிக்கற்றைகள் தோளிலும் மார்பிலும் புரள எரிவிழிகளுடன் வந்த ஒரு யோகி உரத்த குரலில் “சமஸ்ரவஸே, வருக! இதோ உனக்கு நான் வாக்களித்த பசுக்களும் பொன்னும். கொண்டு சென்று உன் குடிபுரந்து ஆள்க!” என்றார். அனைவரும் திரும்பி நோக்கினர். அவரைப்போலவே தாடியும் சடையும் கொண்டிருந்த சமஸ்ரவஸ் என்னும் மாணவன் கையில் கோலுடன் அங்கு வேள்விக்கொடைக்காக கட்டப்பட்டிருந்த பசுக்களை நோக்கி சென்றான்.
சினந்தெழுந்த அஸ்வலனர் “நில்லும், யார் நீர்? இங்கு என்ன நிகழ்கிறதென்று அறிவீரா?” என்றார். “ஆம், அறிவேன். நான் உதறிச்சென்ற மரவுரிகளுக்கு நிகராகப் பெறத்தக்கவை இப்பசுக்கள்.” அப்போதுதான் சௌனகர் அவர் எவரென அடையாளம் கண்டுகொண்டார். “முனிவரே, நீங்கள் யாக்ஞவல்கியர் அல்லவா?” என்றார். “ஆம், அது என் முந்தைய வாழ்க்கை” என்றார் அவர். “இந்த அவை தங்களுக்குரியது. வந்தமர்ந்து வெல்க!” என்றார் கௌதமர். “என் மாணவன் இவன். என்னிடம் இந்த அவைகூடுவதை சொன்னான். அவனுக்கு இப்பசுக்கள் அவன் நாடுவதை அடைய உதவும் என்றான். பசுக்களை பெற்றுத்தருகிறேன் என்றேன். அதன்பொருட்டே வந்தேன்” என்ற யாக்ஞவல்கியர் திரும்பி சமஸ்ரவஸிடம் “பசுக்களை கொண்டுசெல்க!” என ஆணையிட்டார்.
“நில்லுங்கள், மாமுனிவரே! நான் உங்களை நன்கறிவேன். இப்போதுதான் நேரில்காண வாய்த்தது. வேதமுணர்ந்து மூத்தவர் நீங்கள் என்று அறிவேன். ஆயினும் இந்த அவையில் வேதமெய் உரைத்து இங்குள்ளவர்கள் அனைவரையும் சொல்வென்று மட்டுமே அந்த ஆநிரைகளை கொண்டுசெல்ல முடியும்” என்றார் அஸ்வலனர். “நன்று” என்றபடி யாக்ஞவல்கியர் உள்ளே வந்தார். “என்னுடன் சொல்லாட விழைபவர் எழுக!” அஸ்வலனர் “முதலில் நானே எழுகிறேன். இந்த அவையில் நான் முன்வைத்த முதல்வரிகளை மீண்டும் உங்களுக்காக உரைக்கிறேன்” என்றார்.
அவர் சொல்லிமுடித்ததும் யாக்ஞவல்கியர் கேட்டார் “அஸ்வலனரே, உணர்த்துவதும் உணர்வதும் இன்றி நின்றிருக்கும் மெய் உண்டா?” “ஆம்” என்றார் அஸ்வலனர். “அவ்வண்ணமென்றால் சொல்வதும் கேட்பதும் இன்றி நின்றிருக்கும் சொல் உண்டா?” அஸ்வலனர் “ஆம், அதுவே வேதம்” என்றார். “கேட்கப்படுகையில் அது குறைகிறதா மிகுகிறதா?” என்றார் யாக்ஞவல்கியர். அஸ்வலனர் திகைத்தார். “கேட்கப்படுபவனால் அது உருமாற்றம் அடைகிறதா?” என யாக்ஞவல்கியர் தொடர்ந்தார்.
“ஆம்” என்றார் அஸ்வலனர். “ஆகவேதான் வேதங்கள் மாறுபாடுகொள்கின்றன.” “அந்த மாறுபாடுகள் அனைத்தையும் தொகுத்துச் சுருக்கினால் தோன்றுவது மெய்மையா அல்லவா?” என்றார் யாக்ஞவல்கியர். திகைத்த அஸ்வலனரை நோக்கி “அதுவும் மெய்மையே. ஏனென்றால் இங்கு மெய்மை அன்றி பிறிதொன்றுமில்லை” என்றார் யாக்ஞவல்கியர். “அதெங்ஙனம்?” என எழுந்தார் உத்தாலகர். “ஏனென்றால் ஈஸோவாஸ்யம் இதம் சர்வம்” என்றார் யாக்ஞவல்கியர்.
அவர்களின் சொற்கள் ஒன்றை ஒன்று கூர்முனையில் மட்டுமே சந்திக்கும் அம்புகள் போல எழுந்தன. சொற்களனில் ஜனகர் எழுந்து கேட்டார் “முனிவரே, ஒன்று உரையுங்கள். இங்கு ஒவ்வொருநாளும் ஒரு முனிவரின் குரலாகத் திரண்டு வந்தது ஒரு கருத்து. உண்மைகள் ஏன் மாறுபடுகின்றன?” யாக்ஞவல்கியர் சொன்னார் “அரசே, நீங்கள் சிறுமகவாக அன்னையின் இடையிலிருக்கையில் அவள் சொன்ன ஏதேனும் நினைவிருக்கிறதா?” “ஆம், இன்றும் நினைவுள்ளது ஒரு வரி” என்றார் ஜனகர். “உணவை வீணாக்கலாகாது. அரசன் என்றான பின்னர் ஒவ்வொரு கூலமணியையும் ஓர் உழவனின் உழைப்பாக மட்டுமே பார்க்க அது எனக்கு கற்பித்தது.”
“உங்கள் தந்தையின் ஒரு சொல் என இன்றும் நின்றிருப்பது என்ன?” என்றார் யாக்ஞவல்கியர். “முற்றிலும் தண்டிக்கத்தக்க பிழை என்றோ முழுமையாகவே பேணப்படவேண்டிய நன்மை என்றோ ஏதுமில்லை என்று அவர் எனக்கு சொன்னார்” என்றார் ஜனகர். “அரசே, உங்கள் முதல் ஆசிரியரின் சொற்களில் உகந்தது எது?” என்றார். “எண்ணம் எழுத்தாவதற்கு நடுவே நின்றுள்ளது அறியாமை” என்றார் ஜனகர். “அரசே, உங்கள் வேதஆசிரியரால் சொல்லப்பட்டது என்ன?” என்றார் யாக்ஞவல்கியர். “அழியாத ஒன்றை அடைவது வரை அடைவதை அழியாமல் பேணுக!” என்றார் ஜனகர்.
“அரசே, இவையனைத்தும் உண்மை என்றால் இவை ஏன் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்றிருக்கின்றன?” என்று யாக்ஞவல்கியர் கேட்டார். “இவை நான் என்னும் தொடர்ச்சியால் இணைக்கப்பட்டுள்ளன. இவை என் வளர்ச்சிநிலைக்கேற்ப சொல்லப்பட்டவை.” யாக்ஞவல்கியர் “அவ்வண்ணமே வேதமும் வேதமெய்மையும் மானுடம் வளர்வதற்கேற்ப தாங்களும் வளர்ந்து வந்து சேர்கின்றன என்று கொள்க!” என்றார். “இவையனைத்தும் உண்மையே. இவ்வுண்மைகளை ஒன்றென இணைக்கிறது நாளும் வளரும் மானுடம்.” ஜனகர் கைகூப்பினார். “ஆனால், உங்கள் மெய்குரு ஒரு சொல்லையும் சொல்லவில்லை, ஜனகரே” என்றார் யாக்ஞவல்கியர்.
அப்போது பல்லக்கு ஒன்று வந்து அவ்வேதசாலை முன் இறங்கியது. அதை சுமந்துவந்தவர்கள் விலக அதைச் சூழ்ந்து வந்தவர்கள் உள்ளிருந்து மெலிந்து குறுகிய சிற்றுடல்கொண்ட கார்கியை வெளியே எடுத்தனர். இரு மாணாக்கியரின் கைகள் தாங்க அவர் மெல்ல நடந்துவந்தார். அவருக்குப் பின்னால் மழித்த தலையும் மரவுரியும் அணிந்த ஊழ்க மாணாக்கியர் மூவர் நடந்துவந்தனர். கார்கி அவைநடுவே வந்து “மாமுனிவராகத் திகழ்ந்த யாக்ஞவல்கியர் மீண்டும் வந்துள்ளார் என்று அறிந்தேன். அவருடன் சொல்கோக்கவே வந்தேன்” என்றார்.
“அமர்க, வேதப்படிவரே!” என்றார் ஜனகர். அவர் அமர்ந்ததும் “நான் கேட்க விழையும் வினா இது. மாமுனிவரே, மாமன்னன் ஒருவனின் அஸ்வமேதப்புரவி எதனால் ஆற்றல் கொண்டதாகிறது?” என்றார். “அவன் கொண்டுள்ள ஆள்தேர்யானைபுரவிப் படைகளால். அதைவிட அவன் குடிகள் அவன்மேல் கொண்டுள்ள பற்றால். அதைவிட அவன் உள்ளத்தின் உறுதியால். அதைவிட அவன் கொண்ட விழைவால். அதைவிட அவன் மூதாதையரின் வாழ்த்துக்களால். அதைவிட அவன் ஆற்றிய நல்வினைப்பயனால்.”
“யாக்ஞவல்கியரே, அவன் புரவி எதனால் தடுத்து வெல்லப்படுகிறது?” என்று கார்கி கேட்டார். “அறிவரே, அவனை எதிர்க்கும் அரசர்களால். அவர்களை குறைத்து மதிப்பிட்ட அவன் அறியாமையால். அதைவிட தன்னை மிகையாக எண்ணிய அவன் ஆணவத்தால். அதைவிட அவன் சினத்தால். அதைவிட அவன் பொறுமையின்மையால். அதைவிட அத்தருணத்தில் அமைந்த ஊழின் வலைப்பின்னலால்.” கார்கி கேட்டார் “முனிவரே, அவ்வாறு எங்குமே நிறுத்தப்படாத அஸ்வமேதப்புரவி இறுதியில் சென்றடையும் இடம் எது?”
அன்று பகல் முழுக்க, அந்தி அணைந்து, இரவு எழுவதுவரை அந்த வினாவும் விடையும் தொடர்ந்தன. கார்கி ஆயிரத்தெட்டு வினாக்களை கேட்டார். அனைத்துக்கும் விடைசொன்ன யாக்ஞவல்கியரை கார்கி வணங்கியபோது வெளியே முழுநிலவு உருகிய பொற்தாலமென எழுந்து வந்தது. அதன் ஒளிக்கற்றைகள் சரிந்து வேதசாலையை பொன்மெழுகின. அவை செவிகூர்ந்து அமைதிகொண்டிருக்க அனல்கொழுந்துகள் ஆடும் ஓசை மட்டுமே கேட்டது. கார்கி தன் இறுதிவினாவை கேட்க வாயெடுத்தபோது யாக்ஞவல்கியர் கைகூப்பியபடி “அவ்வினாவை நீங்கள் கேட்கலாகாது. நான் சொல்லலாகாது. அது எந்நிலையிலும் ஒரு வினாவல்ல, எதற்கும் விடையும் அல்ல” என்றார். “ஆம்” என்று கார்கி கைகூப்பினார். இருவரும் ஒருவரை ஒருவர் வணங்கியபடி அசைவிழந்து அமர்ந்திருக்க அவர்களை நோக்கியபடி ஜனகரும் அவையினரும் அமைந்திருந்தனர்.
அஸ்வலனர் முதலில் மீண்டார். “அவை வென்றீர், முனிவரே! அப்பரிசு தங்களுக்குரியது. பாரதவர்ஷத்தின் அந்தணமுதல்வர் தாங்களே. வேதமெய் முற்றுணர்ந்தவரும் தாங்களே” என்றார். அவரை திகைத்தவர் போல திரும்பிப்பார்த்தார் யாக்ஞவல்கியர். பின்பு தன் மாணவனை நோக்கி கையசைத்தார். அவன் சென்று அந்தப் பசுக்களை அவிழ்த்து ஓட்டிச்சென்றான். முற்றிலும் தனித்தவராக நீள்மூச்சுடன் எழுந்த யாக்ஞவல்கியர் “என் ஆசிரியை ஆனீர், கார்கி. என் விடைகளை எல்லாம் நான் உதறிவிட்டேன். விடையென ஆகாதது அன்றி இனி எதையும் கருத்தில் கொள்ளமாட்டேன்” என்றார். கார்கி அவரை வணங்கி “அவ்வண்ணமே என்னிடம் வினாக்களும் இல்லை, முனிவரே. எனக்கு மெய்மையை காட்டினீர். வினாக்களைக் கடந்ததை இனி நாடுவேன்” என்றார்.
யாக்ஞவல்கியர் மெல்லிய குரலில் கார்கியை வாழ்த்திப்பாடினார் “இன்மையில் இருந்து இருப்புக்கு, இருளில் இருந்து ஒளிக்கு, இறப்பிலிருந்து அமுதத்திற்கு…” கார்கி தலைவணங்கி “ஆம், அவ்வறே ஆகுக!” என்றார். சூழ்ந்து நின்ற முனிவரும் வைதிகரும் அவர்கள் அங்கு சொல்கடந்து சென்று கண்டதென்ன என்று அறியாமல் திகைத்து நோக்கி நின்றனர். வேறு எவரிடமும் விடைகொள்ளாது வடதிசை நோக்கி யாக்ஞவல்கியர் நடந்து மறைந்தார். எவரையும் உணராதவராக தென்திசை நோக்கி தன் மாணவிகளுடன் கார்கி சென்றார்.
கார்கியின் புகழ்மிக்க அம்மாணவிகளை அவையினர் அறிந்திருந்தனர். முதல் மாணவி வதவா பிரதித்தேயி கோசல அரசகுலத்தைச் சேர்ந்தவர். இரண்டாம் மாணவியான அம்பை காத்யாயனி காத்யாயன முனிவரின் மகள். மூன்றாம் மாணவியான சுலஃபை மைத்ரேயி ஜனகரின் முன்னாள் அமைச்சரும் வேதப்படிவருமான மித்ரரின் மகள். காத்யாயனியும் மைத்ரேயியும் யாக்ஞவல்கியரை விழிகளால்கூட அறியவில்லை. அவர் அவர்களை எண்ணத்தாலும் உணரவில்லை. அவர்கள் பிரிந்துசென்ற அந்தக் கணத்தை நகர்மக்கள் நெடுநாட்கள் நினைவில் சூடியிருந்தனர். அவர்கள் தங்கள் பாதைகளில் எங்கோ மீண்டும் சந்தித்தேயாகவேண்டும் என்றனர் கவிஞர். சந்திக்கவே முடியாதபடி விரிந்ததே பெருவெளி என்றனர் முனிவர்.
தொடர்புடைய பதிவுகள்
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 32
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 31
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 30
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 29
மாட்டிறைச்சி – அரசியலும் பண்பாடும்
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 73
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 37
August 19, 2016
மைத்ரேயிதேவியின் ‘கொல்லப்படுவதில்லை’
1994 ல் சிகாகோ பல்கலை இருநூல்களை ஒரேசமயம் வெளியிட்டது. ருமேனிய இந்தியவியல் அறிஞரும் நாவலாசிரியருமான மிர்சா யூக்லிட் [Mircea Eliade] எழுதிய பெங்கால் நைட்ஸ் [ Bengal Nights ] ஒன்று. வங்காள கவிஞரும் தாகூரின் சீடப்பெண்ணாக இருந்தவரும் புகழ்பெற்ற சமூகசேவகியுமான மைத்ரேயி தேவி எழுதிய ‘இட் டஸ் நாட் டை’ [It Does Not Die ] இன்னொன்று. இரண்டுமே சுயசரிதை நாவல்கள். ஒரே காதல்கதையின் இரு பக்கங்கள். பலவிதமான திருப்பங்களும் உள்முரண்பாடுகளும் உணர்ச்சிக்கொந்தளிப்புகளும் கொண்ட ஒர் இலக்கிய நிகழ்வு இந்நூல்களுக்குப் பின்னால் உள்ளது.
மிர்சாவின் நாவல் 1930 களில் கல்கத்தாவுக்கு வரும் அலென்[ Alain] என்ற ·பிரெஞ்சு இளைஞனைப்பற்றியது. அவனுடைய முதலாளியின் வீட்டில் தங்கவைக்கப்படும் அலென் அவரது பதினாறு வயதான மகள் மைத்ரேயியுடன் காதல்வயப்படுகிறான். அவள் அவனைத்தேடி அவனது அறைக்கு இரவுகளில் வருகிறாள். அவர்களுடைய உடலுறவு மிகுந்த தீவிரம் கொண்டதாக இருக்கிறது. தன் முதலாளி அவரது மகளை தனக்கு திருமணம் செய்துவைக்க விரும்புவதாகவே அலென் நினைக்கிறான். ஆனால் மைத்ரேயியின் தங்கை அவ்விஷயத்தை அறிந்து கடுமையான பொறாமை கொள்கிறாள். அவள் வழியாக மைத்ரேயியின் அப்பா அந்தக்காதலை அறிகிறார். காதல் மூர்க்கமாக முறிக்கப்படுகிறது, அலென் வீட்டைவிட்டு துரத்தப்படுகிறான்.மைத்ரேயி கட்டாய மணம் செய்து வைக்கப்படுகிறாள். கடுமையான துயரத்தில் உழலும் அலென் மனமுடைந்து ஐரோப்பா திரும்பி அவள் நினைவாக வாழ்கிறான்.
இது உலகப்புகழ்பெற்ற இந்தியவியல் அறிஞர் மிர்சாவின் உண்மைக்கதை என்றே விளம்பரம் செய்யப் பட்டது. இந்திய தத்துவம் பயில மிர்சா 1930ல் கல்கத்தா வந்தார். புகழ்பெற்ற இந்தியவியலாளரான தாஸ்குப்தாவின் மாணவராக அவர்கீழ் ஆய்வுசெய்தார். தாஸ் குப்தா மிர்சாவை தன் வீட்டிலேயே தங்கவும் வைத்தார். தாகூரின் மாணவியும் இளம் கவிஞருமாக இருந்த அவரது மகள் மைத்ரேயி தேவியும் மிர்சாவும்காதல் வயப்பட்டார்கள். அது தாஸ் குப்தாவுக்குத்தெரியவருகிறது. ஐரோப்பியர்கள் பாலியல் ரீதியாக நேர்மையானவர்களல்ல என்று எண்ணும் தாஸ் குப்தா மிர்சாவை வீட்டைவிட்டு வெளியேற்றினார். நான்குவருடம் கழித்து மைத்ரேயி தேவி இன்னொருவருக்கு மணமுடிக்கப்பட்டார்.
மிர்சா 1931ல் கல்கத்தாவில் இருக்கும்போதே தன்னுடைய முதல் நாவலை ருமேனிய மொழியில் வெளியிட்டிருந்தார். 1933ல் அவர் ‘மைத்ரேயி ‘ என்ற பேரில் பெங்கால் நைட்ஸ் நாவலின் மூலத்தை ருமேனிய மொழியில் எழுதிவெளியிட்டார். அது அவரது மூன்றாவது நாவல். உடனடியாக அது பெரும் வணிக வெற்றி பெற்றது. மிர்சா நிறைய பணமும் புகழும் பெற்றார். இத்தாலிய மொழியில் 1945 லிலும் ஜெர்மானிய மொழியில் 1948லும் ·ப்ரெஞ்சில் 1950 லிலும் ஸ்பானிஷ் மொழியில் 1952 லிலும் அதுவெளிவந்தது. 1993ல்தான் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளிவந்தது.
மிர்சாவின் நாவலைப்பற்றி மைத்ரேயி தேவி தன் தந்தையிடமிருந்தே கேள்விப்பட்டார். 1938ல் ·ப்ரான்ஸ் சென்ற தாஸ் குப்தா அந்நாவலைப்பற்றி கேட்டறிந்தார்.. ஆனால் அதன் உள்ளடக்கத்தை மைத்ரேயி தேவி அறியவில்லை.1953ல் ஐரோப்பிய பயணத்தின்போது மைத்ரேயி என்னும் பெயரைக்கேட்டதுமே பல ருமேனியர்கள் தன்னை அடையாளம் கண்டுகொள்வதை மைத்ரேயி கண்டார். அப்போதும் அவர் அதை பொருட்படுத்தவில்லை. ஏனெனில் சிறப்பான மணவாழ்க்கையும் வெற்றிகரமான பொதுவாழ்க்கையும் கொண்டிருந்த மைத்ரேயி தேவிக்கு மிர்சா என்பது ஒரு மறந்துபோன கடந்தகால நினைவு மட்டுமே.
ஆனால் 1972ல் கல்கத்தாவுக்கு இந்தியவில ஆய்வுக்காக வந்த மிர்சாவின் ருமேனிய நண்பர் செர்ஜி [Sergui al-Georghe] அந்நாவலைப்பற்றி விரிவாகக் கூறியபோது மைத்ரேயி தேவி அதன் ·ப்ரெஞ்சு மொழியாக்கத்தை வாங்கி நண்பரின் உதவியுடன் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வாசித்துப் பார்த்தார். அது அவருக்கு கடும் அதிர்ச்சியை அளித்தது. காரணம் அவர் மிர்சாவுடன் உடலுறவு ஏதும் கொண்டிருக்கவில்லை. சிலமாதங்களே நீண்ட அந்த உறவு சில பார்வைகள் ,தொடுகைகள், ஒரு முத்தம் ஆகியவற்றுக்கு அப்பால் செல்லவில்லை. உறவினர்களும் வேலையாட்களும் நிறைந்த ஒரு வங்காள மாளிகையில் , எந்தவித அந்தரங்கமும் அனுமதிக்கபடாத கலாச்சார சூழலில் அதற்குமேல் சாத்தியமும் இல்லை. விரைவிலேயே அந்த உறவு அனைவருக்கும் தெரியவும் வந்தது. மிர்சா தன்னை காமத்தில் வேகம் கொண்ட ஒரு கீழைநாட்டு மோகினியாகச் சித்தரித்திருந்தது மைத்ரேயி தேவியை கடுமையான மனப்பாதிப்புக்கு உள்ளாக்கியது. மிர்சாவின் அத்துமீறிய காமச்சித்தரிப்புகளை வாசித்து அவர் நோயுற்றார்.
மைத்ரேயி தேவியின் ஆரம்பகால எதிர்வினைகள் 1972ல் அவர் எழுதிய கவிதைகளில் இருந்தன. ஆதித்ய மரீசி [ சூரியக்கதிர்கள்] என்னும் அக்கவிதைத்தொகுதியில் அவரது மனக்கொதிப்புகளை பல கோணங்களில் வெளிப்படுத்தியிருந்தார். அப்போது மைத்ரேயி தேவிக்கு ஐம்பத்தேழுவயது.மிக இளம்வயதிலேயே மைத்ரேயிதேவி தாகூரின் முன்னுரையுடன் தன் கவிதைகளை வெளியிட்டிருந்தார். வங்க இலக்கியத்தில் கற்பனாவாதக் கவிஞராக அவருக்கு ஒரு முக்கிய இடம் இருந்தது. தாகூரைப்பற்றி அவர் எழுதிய நினைவுகளும் விமரிசனங்களும் வங்க இலக்கியத்தின் செவ்விலக்கிய ஆக்கங்களாக நினைக்கப்பட்டன. அவரது கணவர் புகழ்பெற்ற அதிகாரியாகவும், நிதானமான நகைச்சுவை உணர்வுகொண்ட கனவானாகவும் அறியப்பட்டிருந்தார். அவர்களுக்கு இரு குழந்தைகள் இருந்தன. அவர்களுக்கும் மணமாகி மைத்ரேயி தேவிக்கு பேரக்குழந்தைகளும் பிறந்துவிட்டிருந்தன. மலைவாசிக்குழந்தைகளுக்கு சேவைசெய்வதற்காக இரு சேவை நிறுவனங்களை அமைத்து அவற்றினூடாக அவர் புகழும் மதிப்பும் பெற்றிருந்தார். அந்த கட்டத்தில் எதிராபாராத இடத்திலிருந்து வந்த அந்த தாக்குதல் அவரது இதயத்தை ரணமாக்கியது. அதிலிருந்து இறுதிவரை அவரால் விடுபட முடியவில்லை.
1973ல் மைத்ரேயி தேவி சிகாகோ பல்கலைக்கு தாகூர் பற்றிய பேருரைகள் நிகழ்த்துவதற்கான ஓர் அழைப்பை ஏற்பாடு செய்துகொண்டார். அப்போது மிர்சா சிகாகோ பல்கலையின் இந்தியவியல் துறையில் ஆய்வாளராக இருந்தார். முன்பின் தெரிவிக்காமல் மிர்சாவின் அலுவலகத்தில் நுழைந்த மைத்ரேயி தேவி அவரிடம் உரையாடினார். ஆனால் மிர்சாவால் அவரை தலைதூக்கி கண்களை நோக்கி எதிர்கொள்ள இயலவில்லை. மைத்ரேயி என்று வேறு பெண்களும் உண்டு என்றும் தன் நாவல் ஒரு புனைவிலக்கியமே என்றும் அவர் சமாளிக்க முயன்றார். தொடர் சந்திப்புகளில் மெல்ல தணிந்துவந்து தன் நாவலில் உள்ளதெல்லாம் வெறும் கற்பனை மட்டுமே என்று சொன்னதாகத் தெரிகிறது. அந்தப் பகல் கனவுகள் மூலமே அவர் கடுமையான மனப்பாதிப்பிலிருந்து மீண்டதாகவும் மைத்ரேயி தேவியிடம் சொன்னார்.
அந்நாவலை மைத்ரேயி தேவி உயிருடன் இருப்பதுவரை ஆங்கிலத்தில் வெளியிடுவதில்லை என்ற வாக்குறுதியை அப்போது மிர்சா மைத்ரேயி தேவிக்குக் கொடுத்தார். இத்தகவலை அதன் ஆங்கில மொழிபெயர்ப்பாளருக்கு எழுதிய கடிதங்களில் மைத்ரேயி தேவி வெளிப்படையாகவே குறிப்பிடுகிறார். அந்நாவலின் பிந்தைய பதிப்புகளில் அதிலுள்ள நிகழ்வுகள் பெரும்பாலும் கற்பனையே என்று எழுதுவதாகவும் தன் சுய சரிதையில் அந்நிகழ்வுகளின் உண்மையை வெளியிடுவதாகவும் அப்போது ஆணையிட்ட மிர்சா பின்னர் சொன்னபடி அதைச்செய்யவில்லை. உண்மையில் மைத்ரேயி தேவி இறக்கும்வரை மிர்சா தன் நாவலை ஆங்கிலத்தில் வெளியிடாமைக்குக் காரணம் அப்படி வெளியிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக பல கடிதங்களில் மைத்ரேயி தேவி மிரட்டியிருந்ததேயாகும். ஐரோப்பாவை விட அமெரிக்காவில் அப்படிப்பட்ட சட்ட நடவடிக்கைகள் பொதுவாக எளியவை என்பதனால் மிர்சா அஞ்சியிருக்கலாம்.
1974ல் மைத்ரேயி தேவி தன் தரப்பை ஒரு சுயசரிதை நாவலாக எழுதினார். நா ஹன்யதே என்ற பேரில் வந்த இந்நாவல் வங்கத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. புகழ்பெற்ற ஒரு நாவலாசிரியராக அவரை நிலைநாட்டியது. பற்பல ஊர்களில் பல்லாயிரம் வாசகர் நடுவே தன் நாவலை மைத்ரேயி தேவி வாசித்துக்காட்டினார். அவரது வலியையும் சீற்றத்தையும் தேடலையும் சாதாரண வங்க பெண்கள்கூடப் புரிந்துகொண்டார்கள். 1976 ல் அந்நாவலுக்கு கேந்திர சாகித்ய அக்காதமி விருது வழங்கப்பட்டது. இந்திய மொழிகளில் எல்லாம் நா ஹன்யதே மொழியக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் மைத்ரேயி தேவியே மொழியாக்கம் செய்துள்ளார். இது மிர்சாவின் நூலுக்கான எதிர்வினை என்று அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் எடுத்துக்கொள்ளபட்டது.
1990 ல் மைத்ரேயி தேவி இறந்த பின் ஆங்கில நாவல் வெளியாயிற்று என்றாலும் மிர்சா சொன்ன சொல்லை அவரது மனைவி காப்பாற்றவில்லை. மிர்சாவின் நாவலை திரைப்படமாக்கும் உரிமையை அவர் ·பிரெஞ்சு இயக்குநர் நிக்கோலஸ் க்லோட்ஸ் [Nicholas Klotz] என்பவருக்கு விற்றார். 1986ல்தான் மிர்சாஇறந்தார். 1987 ல் கல்கத்தாவில் லெ நைட்ஸ் பெங்காலி [ Les Nuits Bengali] என்ற அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. ஆகவே மிர்சாவே உரிமையை விற்றிருக்கலாம் என்று ஊகிக்க இடமுள்ளது. ஹூ க்ராண்ட் [Hugh Grant ] சுப்ரியா பதக் ஆகியோர் நடித்த அப்படம் மைத்ரேயி தேவியின் உண்மையான காதல்கதை என்று இலஸ்ட்ரேட்டட் வீக்லில் பெரிய அளவில்செய்தி வெளியிட்டு பரபரப்பை உருவாக்கியது. சுப்ரியா பதக்கின் பலவிதமான அரைநிர்வாண படங்களும் வெளியாயின
ஆழமாக மனம் புண்பட்ட மைத்ரேயி தேவி தொடர்ந்து பல நீதிமன்ற வழக்குகளை தொடர்ந்தார். மையக்கதாபாத்திரத்தின் பெயர் காயத்ரி என்று மாற்றப்பட்டது. வங்காளப்பெண்ணைப்பற்றிய ஆபாசப்படம் எடுப்பதாக வங்கப்பத்திரிகைகள் எழுதியதைத் தொடர்ந்து வங்க மக்களின் அனுதாபம் மைத்ரேயி தேவி மீது குவிந்தது. இந்திய அரசு படத்துக்கு பல கட்டுப்பாடுகளை விதித்தது. படத்தை இந்தியாவில் திரையிடுவதில்லை என்ற வாக்குறுதியை அரசுக்கு தயாரிபபளர் பிலிப் டயஸ் [Philippe Diaz ] கொடுத்தார். 1989ல் இந்தியத்திரைப்படவிழாவில் இப்படம் ஒரே ஒருமுறை இந்தியாவில் காட்டப்பட்டது. பொதுவாக இது மோசமாக எடுக்கப்பட்ட ஆபாசப்படம் என்றே கருதப்பட்டது. எங்கும் அது ரசிகர்களைக் கவரவில்லை.
*
மேற்கண்ட தகவல்களை இப்போது இணையத்திலிருந்து பெற முடிகிறது. சிகாகோ பல்கலை வெளியீட்டகத்தில் நூல்களைப்பற்றிய தகவல்கள் உள்ளன [ The University of Chicago Press ]
சிகாகோ பல்கலை இணையதளத்தில் [http://www.press.uchicago.edu] கினு காமானி எழுதிய நீண்ட கட்டுரை ஒன்றில் [ A Terrible Hurt:The Untold Story behind the Publishing of Maitreyi Devi. :Ginu Kamani] இவ்விரு நூல்களையும் ஒப்பிட்டுள்ளார். மிர்சாவின் நாவல் இலக்கியத்தரமற்ற ஒரு கேளிக்கைப்புனைவு என்பதே அவரது எண்ணமாக இருக்கிறது. அதற்கு அளிக்கப்பட்டுள்ள இலக்கிய கௌரவம் அதன் ஆசிரியர் ‘உலகப்புகழ்பெற்ற’ இந்தியவியல் அறிஞர் என்பதனால்தான் . மிர்சாவின் நாவலில் காலனியாதிக்க காலகட்டத்து மேட்டிமை நோக்கும் ஆணாதிக்க மதிப்பீடுகளுமே நிறைந்துள்ளன என்கிறார். நேர் மாறாக மைத்ரேயி தேவியின் நாவல் உணர்ச்சிகரமானதாகவும் நேர்மையானதாகவும் இருப்பதாக கினு எண்ணுகிறார். மேலும் கட்டுப்பெட்டித்தனமும் உறவினர் பிடுங்கல்களும் நிறைந்த இந்தியசூழலில் மைத்ரேயி தேவி துணிவுடனும் நடுநிலையுடனும் தன் வாழ்க்கையைப்பற்றியும் தந்தை உட்பட தன் குடும்பத்தைப்பற்றியும் வெளிப்படையாகக் கூறி நாவலை எழுதியுள்ளமை பற்றி பெரிதும் வியப்பு தெரிவிக்கிறார்.
இவ்விரு நூல்களையும் குறித்து எழுதப்பட்ட பல்வேறு மதிப்புரைகளை விரிவாகவே ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும் கினு காமானி கணிசமான மதிப்புரைகளில் மைத்ரேயி தேவியின் நாவல் தேர்ச்சியின்றி எழுதப்பட்ட முரட்டுத்தனமான [naive] மறுப்பு என்றும் மிர்சாவின் நாவல் அறிவார்ந்ததும் உணர்ச்சிகரமானதுமாகும் என்றும் சொல்லப்பட்டிருப்பதை விரிவாகவே விவாதிக்கிறார். மைத்ரேயி தேவி முக்கியமான கவிஞராக அறியப்பட்டவர். அவரது நாவல் மிர்சாவின் நாவலைப்பற்றிய எந்தவிதமான அறிதலும் இல்லாத வங்க வாசகர்கள் நடுவே தனித்தன்மை கொண்ட ஒரு நாவலாகவே வெளிவந்து பெரும் வாசகப்பரப்பையும் விமரிசன மதிப்பையும் பெற்ற ஒன்று. அதற்கு சாகித்ய அக்காதமி விருது போன்ற முக்கியமான அங்கீகாரங்கள் கிடைத்தன. ஆனால் மேலை விமரிசகர்கள் மிர்சாவின் நுலை மையப்படைப்பாகவும் மைத்ரேயி தேவியின் நாவலை அதற்கு வந்த எதிர்வினையாகவும் மட்டுமே காண்கிறார்கள்.
ஒருதலைப்பட்சமானது . சுயமைய நோக்கு கொண்டது, மூர்க்கமான அறிவார்த்த மறுப்பு கொண்டது ” என்றும் (Carmel Berkson, “Lost Love in India”, Far Eastern Economic Review, November 17, 1994) ”அவரது கோபமான எதிர்வினை முரட்டுத்தனமானதும் முற்றிலும் இந்தியத்தனமானதுமாகும்” (Ian Buruma, “Indian Love Call”, New York Review of Books, September 22, 1994) என்றும் மைத்ரேயி தேவியின் நாவல் விமரிசிக்கப்பட்டதை சுட்டிக்காட்டும் கினு இவை எந்த அளவுக்கு ஒருதலைப்பட்சமான கருத்துகள் என்று காட்டுகிறார். மைத்ரேயி தேவி மிர்சாவுடன் உண்மையிலேயே உடலுறவு கொண்டிருந்தால் கூட மிர்சா எழுதிய அந்நாவல் சுயமைய நோக்கு கொண்ட ஒருவரின் நம்பிக்கைத் துரோகமாகவே அடையாளம் காட்டப்படவேண்டும். மாறாக மைத்ரேயி தேவி தன் நாவலில் மிர்சா மீது அவர் கொண்ட தூய காதலின் அழுத்தத்தையும் அழியாத தன்மையையும்தான் காட்டியிருக்கிறார்.
 
எஸ்.என்.தாஸ்குப்தா
மிர்சாவை இறுதி நாட்களில் சந்தித்தபோது மைத்ரேயி தேவி பெரிதும் ஏமாற்றமடைந்தார் என்பதை கினு எடுத்துக்காட்டுகிறார்.”அவருக்கு இந்தியா பற்றி எதுவும் தெரியாது. தவறாகப்புரிந்துகொள்வதில் அவர் நிபுணர். என்ன காரணத்தால் அவர் இந்திய தத்துவ அறிஞர் நிபுணர் என்று கருதப்படுகிறார் என்று தெரியவில்லை” என்று ஒரு கடிதத்தில் மைத்ரேயி தேவி எழுதுகிறார். புகழும் செல்வமும் பெற்றிருந்த மிர்சா மைத்ரேயி தேவி இறுதியில் தன்னை தேடிவந்தபோது தான் நோபல் பரிசு பெற வாய்ப்புள்ள ஒரு முக்கியமான மனிதர் ஆதலால்தான் அவர் தன்னைப் பார்க்க வந்ததாக எண்ணுகிறார்.
மிர்சாவின் நாவல் பெற்ற வெற்றியின் ரகசியத்தை தன் நோக்கில் ஆராய்கிறார் கினு. அமெரிக்க வெளியீட்டாளார் ஒருவர் அவரிடம் பாலியல் கதைகள் எழுதி அளிக்கும்படி கோர அவர் எழுதி அளிக்கிறார். அக்கதைகளை வெளியீட்டாளர் திருப்பிவிடுகிறார். காரணம் கேட்கும்போது பாலியல் கதைகள் சுவாரசியமாக அமைய அவசியமான ‘சூத்திரம்’ அவற்றில் இல்லை என்று வெளியீட்டாளர் சொல்கிறார். கினுவின் கதையில் ஏராளமான மனிதர்கள், குறிப்பாக உறவினர்கள் வருகிறார்கள். பாலியல்கதைகள் இருவரைப்பற்றி மட்டுமே எழுதப்படவேண்டும். அவர்களின் தாபம், உறவு, பிரிவு ஆகியவை மட்டுமே அவற்றில் இருக்கவேண்டும். கவற்சியூட்டும் புதிய வாழ்க்கைச்சூழல் இருக்கவேண்டும். மிர்சாவின் கதை அந்த சூத்திரத்துக்கு சரியாகப் பொருந்துகிறது. மேலும் அது உலகப்புகழ்பெற்ற நூலாசிரியரின் உண்மைக்கதை என்ற பின்னணித்தகவலும் உள்ளது. ஆனால் மனிதர்கள் உணர்வுரீதியாகவும் இட ரீதியாகவும் செறிந்து வாழும் இந்தியச்சூழலில் அப்படிப்பட்ட ஓர் உறவு நிகழ வாய்ப்பே இல்லை.ஒரு ஐரோப்பியனுக்கு இந்தியா பற்றியும் இந்தியப்பெண்கள் பற்றியும் இருக்கக்கூடிய பலவிதமான விருப்பக் கற்பனைகளை, பாலியல் சார்ந்த ஆர்வங்களை நிறைவுசெய்கிறது என்பதே மிர்சாவின் நாவலின் வெற்றி
மைத்ரேயி தேவி மிர்சாவின் துரோகத்தை எண்ணி பெரிதும் மனம் கொதிப்பதை பல கடிதவரிகளில் எடுத்துக் காட்டுகிறார் மைத்ரேயி தேவி. ”மிர்சாவின் நம்பிக்கைத்துரோகத்தை எண்ண என் மனம் உடைகிறது. என் கன்னி நாட்களில் நான் அவனுடைய படுக்கையறைக்குச் சென்றேன் என்று சொல்லும் அந்த நூலை அவன் ஆங்கிலத்தில் வெளியிட்டால் கண்டிப்பாக நான் வழக்கு தொடர்ந்து அவனை தண்டிப்பேன். எத்தகைய பச்சை அவதூறு! ” மைத்ரேயி தேவி தன் கடிதங்களில் சொல்கிறார் ”நான் அவனை இரவுகளில் தேடிச்சென்றதாக அவன் எழுதியிருப்பது பச்சைப்பொய். அது தன்னுடைய பகல்கனவே என்று அவன் எழுதுவதாக என்னைச் சிகாகோவில் சந்தித்தபோது எனக்கு வாக்குறுதி அளித்தான். ஆனால் அதைச்செய்யவில்லை. வேண்டுமென்றே இவ்விஷயத்தை புகைமூட்டமாக வைத்திருக்கிறான். ஏன் அவன் வாக்கு தவறினான்!”
ஆனால் பின்னர் மைத்ரேயி தேவி இன்னொரு மனநிலையை அடைந்தார். ஓர் இலக்கியவாதியாக ‘நா ஹன்யதே’ அவருக்கு வங்க இலக்கியத்தில் அழியாத இடம் தேடித்தருவதை அவர் கண்டார். ”இது விதி. நான் மிர்சாவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அவனால்தான் என் வாழ்க்கையின் பாதையையே மாற்றிய இந்நூலை எழுதும் தூண்டுதலை நான் பெற்றேன். இந்த புகழைச்சொல்லவில்லை. இது வெறுமே அகங்காரத்துக்கு தீனிதான். இந்நூலை வாசித்த எல்லா தரப்பு மக்களிடமிருந்தும் எனக்குக் கிடைக்கும் பேரன்பையே சொல்கிறேன். அது என்னை பணிவும் விவேகமும் உள்ளவளாக ஆக்குகிறது…” இறப்பதற்கு சிலநாட்களுக்கு முன் மைத்ரேயி தேவி எழுதியது இது.
*
மைத்ரேயி தேவியின் நாவலான ‘நா ஹன்யதே’ தமிழில் சு.கிருஷ்ணமூர்த்தி மொழியாக்கத்தில் சாகித்ய அக்காதமி வெளியிட்டாக ”கொல்லப்படுவதில்லை” என்ற தலைப்பில் 2000த்தில் வெளியாகி இப்போது வாங்கக் கிடைக்கிறது. மொழியாக்கம் சிறப்பாகச்சொல்லப்பட ஏற்றதல்ல. குறிப்பாக உரையாடல்களில். மோசமான கட்டமைப்பு. ஆயினும் இந்நாவல் படிக்கப்பட வேண்டிய ஒன்று.
இந்நாவலை மேற்குறிப்பிட்ட பின்னணி ஏதும் தெரியாமல் சாதாரணமாக நான் படித்து முடித்தேன். முடிக்கும்போதுதான் இது சுயசரிதையாக இருக்கலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. காரணம் இதன் பின்னட்டையில் மைத்ரேயி தேவியின் வாழ்க்கைபற்றிய சில தகவல்கள் உள்ளன. குறிப்பாக அவருக்கும் தாகூருக்கும் இடையேயான குருசீட உறவைப்பற்றி. நாவலுக்குள் ஒரு முக்கிய கதாபாத்திரமாக வரும் தாகூரின் சித்திரம் அழகாக இருந்தது. இணையத்தில் தேடியபோது இந்நாவலின் பின்னணிக்கதை தெரியவந்தது. விஷ்ணுபுரம் எழுத பெரிதும் உதவியாக இருந்த நூல்களின் ஆசிரியரும் நான் அடிக்கடி குறிப்பிடும் மாபெரும் இந்திய தத்துவ ஆசிரியருமான தாஸ் குப்தாவின் மகள்தான் மைத்ரேயி என்பது ஓர் வியப்பு. இந்நாவலில் அவரும் பேராசிரியரின் சித்திரம் எழுப்பிய அதிர்ச்சி.
நாவலின் கதாநாயகி அமிர்தா. அவள் புகழ் பெற்ற சமூக சேவகி. பழைய தலைமுறைக் கவிஞர். இனிய குடும்பம் ஒன்றுக்குச் சொந்தக்காரர். அவரது பிறந்தநாள் விழாவின்போது ருமேனியாவிலிருந்து வந்த செர்ஜி செபாஸ்டின் என்பவரைச் சந்திக்கிறார். அவர் மிர்சா யூக்லிட் என்ற ருமேனிய எழுத்தாளரின் நண்பர். அவரிடம் மிர்சா எழுதிய நாவலைப்பற்றிக் கேட்கும் அமிர்தா அந்நாவலில் அவள் ஒரு காமமோகியாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும் கதையை அறிகிறார். கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளாகிறார்.
அமிர்தாவின் கடும் வலியும் துயரமும் நாவலில் பெரும்பகுதியை நிரப்பியுள்ளன. அவமதிக்கப்பட்ட பெண்மையின் சீற்றம். பொருக்கோடிய ரணம் மீண்டும் திறந்துகொண்டதுபோல கடந்தகால கசப்புநினைவுகள் எழுவதன் வலி. இறந்தகால ஏக்கத்தின் துக்கம். அதனூடாக அவள் மிர்சாவை நினைவு கூர்கிறாள். பேராசிரியர் தாஸ்குப்தா அவரிடம் இந்திய தத்துவம் பயில வந்த மாணவனாகிய மிர்சாவை அமிர்தாவுக்கு அறிமுகம் செய்கிறார். அவன் குறைவான பணத்துடன் கல்வி கற்க வந்தவன். ஆதலால் சேரியில் தங்கி கஷ்டப்படுகிறான். நம் வீட்டிலேயே தங்கட்டும் என்கிறார் பேராசிரியர்.
பேராசிரியர் புகழின் உச்சியில் இருந்த காலம் அது. அவரை இறைவனுக்கு நிகராக வழிபடும் பேரழகியான மனைவி. மாபெரும் நூலகத்துடன் கூடிய பங்களா. இரு அழகிய பெண்குழந்தைகள் — அமிர்தா,சாபி. செல்வம் மதிப்பு. பேராசிரியர் பேரறிஞர்களுக்கு வழக்கமான தன்முனைப்பு மிக்கவர். அவரைப்பொறுத்தவரை அவரது விருப்பமே அவரை சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையாக இருக்கவேண்டும். அது மீறப்படும்போது அவர் அழிக்கவும் தயங்க மாட்டார். அன்றைய சூழலில் இந்திய அறிஞனுக்கு ஓர் ஐரோப்பிய மாணவன் என்பது மிகுந்த கௌரவமான ஒரு விஷயம். அது பிரம்ம சமாஜிகள் ஐரோப்பியர்களை அனைத்து வகையிலும் போலிசெய்து வாழ்ந்த காலம். அவர்கள் பிற இந்தியர்களை இழிவாக நோக்கினர். பேராசிரியர் கௌரவத்தின்பொருட்டே பிரம்ம சமாஜிகர்களை போலிசெய்கிறார். உள்ளூர அவர் மரபுவாதி. தன் மகளை ஆங்கிலம் கற்கவும் சுதந்திரமாக ஆண்களுடன் பேசிப்பழகவும் பொதுநிகழ்ச்சிகளுக்குச் செல்லவும் அவர் அனுமதிப்பது இதனாலேயே. அவளோ பேரழகி. மிகச்சிறுமியாக இருக்கும்போதே கவிதைகள் எழுதி பிரசுரித்தவள். தாகூரின் மாணவி. அவள் கவிதைகள் தாகூரால் பாராட்டப்படுகின்றன. ”நாங்கள் இருவரும் அப்பாவின் பொருட்காட்சி சாலையில் உள்ள விலைமதிப்பு மிக்க இரு கலைப்பொருட்கள். அவர் எங்களை பிறருக்கு முன் பெருமையாகக் காட்டுகிறார்” என்று அமிர்தா சொல்கிறாள். அப்போது அமிர்தாவுக்கு பதினைந்து வயது. மிர்சாக்கு இருபத்து மூன்று.
பிற வங்க மாணவர்கள் அமிர்தாவின் அருகே நெருங்கவோ பேசவோ கூசும்போது மிர்சா நெருங்கிபழக அனுமதிக்கப்படுவது இந்த ஐரோப்பிய மோகம் காரணமாகவே. ஆகவே அவள் நெருங்கிப்பழகும் ஒரே அன்னிய ஆணாக அவன் இருக்கிறான். அவ்வயது கனவுகள் நிறைந்தது. ஐயங்கள் அற்றது. அன்பை எவ்வகையிலும் மறுக்க தெரியாதது. அமிர்தா மிர்சாவுடன் நெருங்க அதை மிர்சா பேராசிரியர் அவனை தன் மருமகனாக்கக் விழைவதாக புரிந்துகொள்கிறான். காரணம் அவன் ‘உயர்ந்த’ ஐரோப்பியன். கவிதையும் தத்துவமும் விவாதிக்கும் இளையோர் இருவரும் மெல்லமெல்ல நெருங்குகிறார்கள். அமிர்தாவின் நோக்கில் அது ஒரு முதிராவிருப்பம் மட்டுமே. அவள் அவனை ஒருமுறை முத்தமிட அனுமதிக்கிறாள். அவர்கள் இருவரும் நெருங்குகிறார்கள். ஆனால் அவனை மணம் முடிக்க முடியும் என்ற எதிர்பார்ப்போ சேர்ந்து வாழவேண்டுமென்ற கனவோ அவளில் தீவிரமாக இல்லை.
அமிர்தாவின் தங்கை சாபியின் எதிர்வினைதான் இந்நாவலிலேயே மிக முக்கியமான பகுதி. மிகச்சிறுமி அவள். ஆனால் என்ன ஏது என்று அறியாமலேயே அவளுக்கு அக்காதல் புரிகிறது. பொறாமை என தெரியாமலேயே அவள் கடும் பொறாமைகொண்டு அதை உடல் தாங்காமல் வலிப்பு நோயாளி ஆகிறாள். மண்ணில் எவ்வுயிருக்கும் அன்பு எத்தனை அபூர்வமான அமுதம் என்பது தெரியும். அதன் ஒருதுளியைக்கூட பிறருக்கு அளிக்க அவர்கள் தயாராக மாட்டார்கள். சாபி மிர்சாவை அடைய நினைக்கிறாள். நோயுற்றால் மிர்சா வந்து அருகே அமர்ந்து கைகளை தழுவுவான் என்பதனாலேயே நோயுறுகிறாள். அமிர்தாவும் மிர்சாவும் ஒருமுறை தோட்டத்தில் முத்தமிடப் போவதைக் கண்ட அவளுக்கு தன்னியல்பாகவே வலிப்புவருகிறது. அவளுடைய உளறல்கள் வழியாக உண்மை வெளியே தெரிகிறது.
பேராசிரியருக்கு ஒரு ஐரோப்பியன் மகளை நெருங்கியது அதிர்ச்சியாக உள்ளது. அவருடைய உள்ளத்தில் அவர்கள் அன்னியர்கள், ஒழுக்கமில்லாதவர்கள். மிர்சா வெளியேற்றப்படுகிறான். அமிர்தாவுடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்வதில்லை என்ற உறுதிமொழி அவனிடமிருந்து வாங்கப்படுகிறது. அவன் அவளை மறக்க முடியாமல் சாமியாராகி ஹரித்துவாரில் அலைகிறான். பின் ஊர் திரும்புகிறான். அப்போது சில கடிதங்களை அவன் அவளுக்கு எழுதினாலும் அவை அவளுக்கு கிடைக்கவில்லை.
மிர்சாவை பிரியும்போதுதான் அமிர்தாவுக்கு அவளுக்குள் மிர்சா மீது இருந்த காதல் எவ்வளவு ஆழமானது என்று தெரியவருகிறது. அவள் கடும் துயரம் கொள்கிறாள். ஆனால் மெல்லமெல்ல அதை வெறுப்பு என்ற பாறையை உருட்டி வைத்து மூடிக்கொள்கிறாள். மிர்சா தன்னை அடைய முயன்றதாகவும் பிடிக்கப்பட்டு விலக்கப்பட்டபின் அப்படியே கைவிட்டுவிட்டதாகவும் அவள் எண்ணிக் கொள்கிறாள். குருதேவ் தாகூரின் ஆசியுடன் அவள் மீண்டு வருகிறாள். கவிதைகள் எழுதுகிறாள். நான்குவருடம் கழித்து அவளுக்கு மணம் நிகழ்கிறது. அப்பா தேடிய மாப்பிள்ளை. அவர் ஒரு எஞ்சீனியர். நகைச்சுவை உணர்வும் நிதானமும் மிக்கவர். அமிர்தா அவரை மிக மதிகிறாள், காதலிக்கிறாள். மிர்சாமேலான காதல் மெல்லமெல்ல மனதின் ஆழத்துக்குள் சென்றுவிடுகிறது.ஆனால் ஒரு ரணமாகவே உள்ளது அது.
இமையமலைப்பகுதியில் அமைதியான குடும்பவாழ்க்கை வாழும் அமிர்தாவை தாகூர் வந்து சந்திக்கும்போது அப்படிப்பட்ட ஓர் இனிய குடும்பவாழ்க்கை வாழ்வதே கவிதைதான் என்கிறார். தன் அகம் முழுக்க ரத்தம் கசிந்திருப்பதைச் சொல்லும் அமிர்தாவை கண்டு தாகூர் அஞ்சுகிறார்.மெல்லமெல்ல சமூக சேவையில் ஈடுபடும் அமிர்தா வேறுவகையில் தன்னை உருவாக்கிக் கொள்கிறாள். மிர்சா மறக்கபடுகிறான்.மீண்டும் நாற்பத்திரண்டுவருடம் கழித்து செர்ஜியிடமிருந்து அம்ருதா மிர்சாவைப்பற்றிக்கேள்விப்படுகிறாள்.
உக்கிரமான துயரத்தில் தவிக்கும் அம்ருதா மெல்ல மெல்ல ஒரு மனநிறைவை அடைகிறாள். அந்தத் துயந்த்துடன் ஆழ்ந்த காதலும் கலந்துள்ளது. மிர்சா தன் நம்பிக்கைக்குப் பாத்திரமானவனல்ல என்றே அவள் நினைக்கிறாள். அவன் மீது அவளுக்கு உயர்ந்த எண்ணமும் இருக்கவில்லை. ஆனாலும் அவன் மீதான அவளதுய் காதல் பசுமை மாறாது அவளுக்குள் உள்லது. ”யாரோ” அவள் மீது அவதூறு சுமத்தியதனால் அவள் துயருறவில்லை. அது காதலின் துயர். அந்த முதியவயதில் அப்படி உள்ளம் கொள்ளா உணர்வொன்று தனக்குள் ஊறியதே அதிருஷ்டம்தான் என்ற எண்ணம் வளுக்கு ஏற்படுகிறது.
இந்தக் கருணை யாருடையதென்று அறியேன்
யார் கையில் உள்ளது இந்த வற்றாத கருணை ஊற்று?
நீர் வடிந்து எஞ்சிய சேற்றில்
யாருடைய இசையால் வெள்ளம் அலைமோதுகிறது?
ஆகா என்ன அதிருஷ்டம்!ஆகா என்ன அதிருஷ்டம்!
யார் அழைக்கிறார் என்னை
அந்த அறியாத குறியிடத்துக்கு?
அம்ருதா மிர்சாவை சென்று சந்திக்க விழைகிறாள். ஒரு அமெரிக்கப்பயணத்தை ஏற்பாடுசெய்துகொண்டு அவள் அமெரிக்கா செல்கிறாள். அங்கே பேராசிரியராக இருக்கும் மிர்சாவை அழைப்பில்லாமலேயே சென்று பார்க்கிறாள்.
”நான் நுழைந்த அதே வினாடியில் அந்த முதிர்ந்த வயது மனிதர் ‘உஷ்’ என்றார். பிறகு எழுந்து நின்றார். மறுபடி உட்கார்ந்தார். பிறகு மறுபடி எழுந்து எனக்கு முதுகைகாட்டிக்கொண்டு நின்றார். இதென்ன விபரிதம்? என்னை இந்த மனிதருக்கு அடையாளம் தெரிந்துவிட்டதா?”
அவள் அந்நகரில் நுழைந்ததுமே மிர்சா அதை அறிந்துவிட்டிருந்தார். அவளை அவர் திரும்பியே பார்க்கவில்லை. நடுங்கும் கைகளால் புத்தக அலமாரியையே பிடித்துக் கொண்டிருந்தார்.அவளைப்பார்க்க பலமுறை அவள் சொல்லியும் அவன் திரும்பவில்லை
”அந்த அனுபவம், ஒப்பற்றது. அவ்வளவு அழகான அனுபவத்தை மறுபடி தொடமுடியும்னு எனக்கு தோணல்ல. அதனால உன்னை காலத்துக்கும் இடத்துக்கும் அப்பாற்பட்டவளா வைச்சுக்கிட்டேன்”
”என்னை பார்க்க திரும்பு மிர்சா. நான் உன்னைப்பாக்கணும்”
”நான் உன்னை எப்படி பார்ப்பேன். பியாட்ரிசை மறுபடி புறக்கண்ணால பார்க்க முடியும்னு தாந்தே நினைச்சிருப்பானா?” \
மிர்சா சொல்கிறான், அவளைப்பற்றி எழுதியவைக்கு விளக்கமாக. ”கற்பனை வெறும் கற்பனை. நான் உன்னை மர்மம் நிறைஞ்ச தேவதையா — உன் செயல்களுக்கு விளக்கம் காணமுடியாதவளாக– சித்தரிக்க விரும்பினேன்.ஆச்சரியங்களை நிகழ்த்துகிற காளி மாதிரி…”
அவள் சொல்கிறாள்”அப்போ நாம யாருன்னு தெரியாதா உனக்கு? ஆயுதத்தால துளைக்க முடியாத நெருப்பால் எரிக்கமுடியாத அந்த உன்னைத்தேடித்தான் நான் இத்தனை தூரம் வந்தேன்”
மிர்சா சொன்னான் சம்ஸ்கிருதத்தில் ” கொல்லப்படும் உடலில் அது கொல்லப்படாதது”
அவள் கிளம்பும்போது அவன் பின்னால் கூவினான் ”கொஞ்சம் நில்லு அம்ருதா. நான் உன்னைத்தேடி வருவேன். நாம சந்திப்போம். இங்கே இல்லை. அங்கே கங்கை கரையில். அப்போது நான் என் உண்மையுருவை உனக்குக் காட்டுவேன்…”
*
மைத்ரேயிதேவி தேவியின் இந்த சுயசரிதைக்கு சுயசரிதை என்ற அடையாளம் இல்லாமலேயே ஒரு முழுநாவலாக நிற்கும் தகுதி உள்ளது. மிக நேரடியான நடையில் நினைவுகளகவும் மதிப்பிடுதல்களாகவும் தன்னுரையடல்களாகவும் தன் வாழ்க்கைச்சித்திரத்தை அளிக்கிறது இந்நாவல். இதன் புகழ்பெற்ற பூசல் மதிப்பைவிட அதிகமான மாறுபட்ட நுண்தளங்கள் இதற்கு உண்டு. இதில் வரும் தாகூரின் ஒளிமிக்க சித்திரம் ஓர் உதாரணம். வாழ்க்கை மீது காதல் கொண்டவராகவும், கனவுகளில் ஆழ்ந்திருப்பவராகவும், அதேசமயம் வாழ்வின் குரூரங்களால் வலியுறுபவராகவும் தாகூர் காட்டப்படுகிறார். தாகூர் அம்ருதாவை சந்தித்து உரையாடும் காட்சிகள் எல்லாமே அழகாக அமைந்துள்ளன. ”கவி பிறரிடம் உரையாடும்போது நேராகப் பார்த்து பேசமாட்டார். அவரது பார்வை கீழ்நோக்கியிருக்கும், அல்லது தூரத்தில் எங்கோ பதிந்திருக்கும்.அவர் ஒரு தனி மனிதனுடன் பேசவில்லை மானுட சமூகத்துடன் அல்லது காலத்துடன் பேசுகிறார் என்ற உணர்வு ஏற்படும்…” போன்ற நுண்ணிய சித்தரிப்புகள் புனைவின் சாத்தியங்களால் உருவாகக்க் கூடியவை
தாகூர் 1938ல் அம்ருதாவுக்கு எழுதிய கடிதத்தில் ”துன்பங்களை மறப்பதனால் வாழ்க்கை முழுமைபெற்றுவிடாது.துன்பத்தை ஓர் அனுபவமாக ஜீரணித்துக்கொண்டு கடுமையை மென்மையாக , புளிப்பை இனிப்பாக மாற்றிக்கொண்டு கனிவதன் மூலமே வாழ்க்கை பக்குவம் பெறுகிறது…”என்று எழுதிய வரிகளையே அம்ருதா முப்பத்தாறு வருடம் கழித்து தன் வாழ்க்கையின் இறுதிச் சோதனையின் போது தனக்குரிய வழிகாட்டலாகக் கொள்கிறாள்.
மைத்ரேயிதேவி தேவி தன் உறவினர்களை பற்றியும் தன்னைப்பற்றியும் ஆன்மசாதகனுக்குரிய இரக்கமற்ற பார்வையுடன் தான் ஆராய்ந்துசொல்கிறார். பேரறிஞரான தாஸ் குப்தா தன் சுயமைய நோக்கினாலேயே வீழ்ச்சி அடையும் சித்திரம் துன்பியல்தன்மை கொண்டது. வயதான காலத்தில் ஓரு மாணவி மீது மோகம் கொண்டு, நற்பெயரை இழந்து அவமானப்பட்டு சிறுமை அடைந்து, பின்பு அவளால் உதறப்பட்டு, செல்வம் புகழ் மனைவி எல்லாவற்றையும் இழந்து, துன்புற்று மறையும் போது தன் அகங்காரத்தின் உள்ளீடற்ற தன்மை அவருக்கு
சிலைகள் -கடிதம்
அன்பிற்க்கும் மதிப்பிற்க்கும் உரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம். தாங்கள் நலமா?
சமீபத்தில் நான் காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலுக்கும், திருப்பதிக்கும் முதன்முறையாக செல்லும் வாய்ப்புக் கிட்டியது. நீங்கள் எப்போதும் சொல்லுகின்ற, இந்து மதத்தின் மூன்றடுக்குக்குள் என்னை பொருத்த தெரியாது அலைகின்ற ஒருவன். எனக்குள் நேர்ந்த சில அனுபவங்களை உங்களிடத்தில் பகிற விரும்புகிறேன்.
வரதராஜ பெருமாள் கோவிலுக்குள் நுழைந்ததும், உங்கள் நினைவு தான் வந்தது. சிற்பங்கள் பார்க்க ஒரு முக்கியமான இடம் என்று ஈரோடு சந்திப்பில் சொல்லியிருந்தீர்கள். வேகமாக ஐந்து ரூபாய் கொடுத்து மண்டபத்திற்க்குள் சென்றேன். நானும் நூறு ரூபாய் கொடுத்து தெரிந்தே ஏமாந்தேன். பிறகு நானாக ஒவ்வொரு தூணையும் பார்க்க தொடங்கினேன். எனக்கு சிலைகளைப் பற்றிய அறிவு எதுவும் இல்லை. ஒரு பாமரனாக அந்த சிலைகள் என்னை வியப்பில் ஆழ்த்தியது. குறிப்பாக நீங்கள் சொன்ன பெண(கள்) சிலை இன்னும் என் கண்களுக்குள் நிற்க்கிறது. ஒருவேளை என் வயதும் ஒரு காரணமாக இருக்கலாம். முகம் உடைந்த சிலைகள் வருத்தம் தருவதாய் இருந்தது. இரண்டாம் நாள் ஈரோடு சந்திப்பில், காலையிலேயே சிலைகள் பற்றியும் அது அழிவது பற்றியும் பேசினீர்கள். எதுக்கு இவரு காலையிலேயே இதைப் போய் பேசகிறார் என்று அப்போது தோன்றிற்று. உண்மையில் அதன் முக்கியத்துவம் இன்று தான் விளங்கியது. இரண்டாவது முறை சுற்றி வரும்போதுதான் தெரிந்தது முதல் முறை சுற்றும் போது எத்தனை சிலைகள் பார்க்காமலே விட்டுவிட்டேனேன்று. பலவித நடனங்கள், குதிரைகள், கடவுள்கள். குறிப்பாக குதிரையில் அமர்ந்து இருக்கும் ஒருவரின் சிலையை பல்வேறு கோவில்களில் பார்த்திருக்கிறேன். எங்கள் வீட்டுக்கு அருகிலிருக்கும் மாடம்பாக்கம் புராதான சிவன் கோவிலிலூம் அதை கண்டு இருக்கிறேன். அது கட்டப்பட்டது கிபி 9 நூற்றாண்டுவாக்கில். அதே போல் கோர முகமும். இராமானுஜர் சிலை இருப்பதால் அந்த மண்டபம் அமைத்தது கிபி 12 நூற்றாண்டாக இருக்குமா? (அவர் வாழ்ந்த காலம் 12 நூற்றாண்டு என நினைக்கிறேன்). அதனைப் பற்றி கொஞ்சம் விளக்கினால் மகிழ்ச்சி. வேறு உலகத்தில் இருந்தது போல தோன்றிற்று, சிலைகளை பார்த்துவிட்டு வெளிவரும்போது. கலைகளின் உச்சம். மனம் மகிழ்ந்தது. கோவிலுக்குள் சென்றேன்.
சிகிலடைந்த ஓவியங்கள், அற்புதமான சிலைகள் எங்கும் நிறைந்து கிடந்தது. வரதராஜரை சேவிக்க படியேறி உள்ளே நுழைந்தேன். கருநிற மேனியன் நின்றிருந்தான். கலைகள் தந்த மலைப்பில் அவனைப் பார்த்தேன். நன்னா வேண்டிக்க என்றாள் அம்மா. கண்களை மூடி, வேண்டுவது என்வென்று தெரியாமல் விழித்தேன். உச்சகட்ட கலைகளின் நடுவே சூன்யமானவர், அற்ப்பத்தனமாய் வீடு வேண்டும், கார் வேண்டுமேன வேண்டுவோரைப் பார்த்து சிரிப்பதாய் இருந்தது அது. இந்த சூன்ய புன்னகையிலிருந்துதான் அற்புதமான கலைகள் தோன்றியிருக்குமோ என நினைக்க வைத்தது. எறிகின்ற சுடரின் நடுவே சூன்யமான கடவுள், அதைச் சுற்றி நெருப்பு. மையத்தை விட்டு விலக விலக அதன் சுடர் அடர்த்தி குறைந்து, இறுதியில் மறைகிறது. அதைப் போலத்தான் பெருமாளும் அவரைச் சுற்றி சிலைகளும் பிறகு அடர்த்தி குறைந்த இவ்வுலகும். அல்லது இப்படியும் கொள்ளளாம். அடர்த்தியில்லாத இந்த உலகம், மையத்தை நெருங்க நெருங்க அடர்த்தி கூடி மகிழ்ச்சியுற செய்யும் சிலைகள், மையத்தில் ஆனந்தம் தரும் சூன்யம். மிகப்பெரிய அதிர்ச்சி, ஒன்றுமே இல்லாத சூனியத்திற்க்கா இவ்வளவு கலைகளும் கட்டி எழுப்பப் பட்டிருக்கிறது?
பின்குறிப்பு: எப்படியும் சிலைகளைப் பற்றியும், மேலே சொன்னற்றை பற்றியும் எழுதியிருக்கலாம். திரும்ப அதைப் பற்றி கேட்பதற்க்கு மனிக்க வேண்டுகிறேன். நாங்கள் தெளிவடையும் வரை இந்த பிக்கல் புடுங்களை பொறுத்துக்கொள்ளவும்.
நன்றி
மகேந்திரன்.
 
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 32
[ 7 ]
பிருஹதாரண்யகத்தில் மைத்ரேயி இளைய அறத்துணைவியாகவும் காத்யாயனியின் ஏவல்பெண்டாகவும் வாழத்தொடங்கினாள். இருபதாண்டுகளாக பிருஹதாரண்யகக் கல்விநிலை வளர்ந்து பேருருக்கொண்டிருந்தது. ஒவ்வொரு கிளையிலிருந்தும் பறவைச்செய்திகள் வழியாகவே தொடர்புகள் நிகழ்ந்தன. வரும்செல்வத்திற்கு கணக்குகள் வைத்துக்கொள்வதும், மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அவற்றை முறையாக பகிர்ந்தளிப்பதும், ஒவ்வொருநாளுமென வந்துகொண்டிருந்த நூற்றுக்கணக்கான பூசல்களுக்கும் மனக்குறைகளுக்கும் தீர்வுகாண்பதும் ஓர் அரசு நடத்துவதற்கிணையான செயல்களாக இருந்தன.
அப்பொறுப்பை தன் எட்டு மாணவர்களுக்கும் நான்கு மைந்தர்களுக்குமாக பகிர்ந்தளித்திருந்தார் யாக்ஞவல்கியர். ஆயினும் இறுதியில் அவரே அனைவரும் ஏற்கும் முடிவை எடுத்தாகவேண்டியிருந்தமையால் மெய்ப்பொருள் எண்ணுவதும் ஊழ்கத்திலாழ்வதும் அவருக்கு அரிதாகவே வாய்த்தன. ஐவேளை எரியோம்புவதே அடையாளச் சுருக்கமாகத்தான் செய்யமுடிந்தது. முதற்புலரியில் எழுந்து அவர் கதிர்வணக்கம் புரிகையிலேயே கரையில் அவருக்காக மாணவர்களும் ஆசிரியர்களும் ஏவலர்தலைவர்களும் காத்து நின்றிருப்பது வழக்கமென்றாயிற்று. அவர் நாளின் அனைத்துக் கணங்களும் பங்கிடப்பட்டிருந்தன.
நாளும் அரசர்களின் தூதர்களும் முனிவர்களும் அக்கல்விநிலைக்கு வந்தனர். அயல்நிலத்து முனிவர் நெடுந்தொலைவு கடந்து அவரைக் காணவென்றே வந்தனர். அரசர்களும்கூட காணவருவதுண்டு. அவருடைய நாட்கள் அச்சந்திப்புகளுக்காக நேரத்தை பகுப்பதிலேயே கழிந்தன. அவ்வாழ்க்கையின் பொருளின்மைகூட சித்தத்தில் படாத அளவுக்கு அவர் ஓடிக்கொண்டிருந்தார். எப்போதாவதுதான் அவர் தன் அறத்துணைவியர் இருந்த குடிலுக்கு வந்தார். அங்கு தனக்கு இரு மனைவியர் இருப்பதை அப்போதுதான் நினைத்துக்கொண்டதுபோல விழிப்புகொண்டு உளம் திரட்டி அவர்களிடம் இன்சொல் உரைப்பார்.
நாள்போக்கில் களைத்து தளர்ந்து மஞ்சத்திற்கு வரும்போது நிழலென விழிக்கு தோன்றும் இளம்துணைவியிடம் ஓரிரு சொற்கள் பேசுவதும் அரிதாயிற்று. மகளிருடன் மகிழ்கையிலும் உள்ளே துறவுநிலை கொண்டவர்கள் உண்டு, துறவுக்குள்ளும் காமம் கரப்பவர் போல. அவருள் வாழ்ந்த வேதப்படிவர் உண்மையில் மணம்புரிந்து மகளிரை அறியவே இல்லை. காத்யாயனியின் காதலில் உவந்திருந்தபோதும், அவள் அளித்த இளமைந்தரை கையிலேந்தி களித்தபோதும்கூட அந்த வேதப்படிவர் அதை உணரவில்லை. அன்று மேற்பரப்பு மட்டும் உருகிய அரக்குக்கட்டி போன்றிருந்தார், பின்னர் அதுவும் உறைந்து நிலைமீண்டது. ஓயாக்காற்றில் ஏற்று நின்றிருக்கும் காற்றாடிப்பொறியின் அச்சு என அவர் தேய்ந்துகொண்டிருந்தார்.
ஆனால் மைத்ரேயி தன்னை இயல்பாக அச்செயற்பெருக்கில் பொருத்திக்கொண்டாள். அவள் வருகையில் எந்த எதிர்பார்ப்புடனும் இருக்கவில்லை. தன்னை எவ்விதமாகவும் உருவகித்துக் கொண்டிருக்கவுமில்லை. எனவே வந்ததுமே அங்குள்ள மண்ணில் புதுமுளை என தளிர்விட்டெழ அவளால் இயன்றது. யாக்ஞவல்கியருக்குரிய பணிவிடைகளை அவர் குடிலுக்கு வரும்போது இயல்பாக ஆற்றினாள். அவரில்லாதபோதும் அங்கு அவர் இருப்பதாகவே எண்ணிக்கொண்டாள். கொல்லையின் கன்றுகளையும் அடுமனையின் ஏவல்பெண்டுகளையும் புரந்தாள். தன் மூத்தவளுக்கு இயல்பான தோழியாகவும், ஏவல்பெண்ணாகவும் இருந்தாள்.
மெல்ல அவள் கைகள் விரிந்து அக்கல்விநிலையின் அனைத்து அன்றாடப்பணிகளையும் நிகழ்த்தத் தொடங்கின. கல்விநிலையில் இளமைந்தரின் நலன்களை நோக்கத் தொடங்கியவள் செல்வம் வருவதையும் போவதையும் வழிநடத்தலானாள். பின்னர் நெறி நிறுத்தவும் மீறல்களைக் கண்டு சுட்டவும் தொடங்கினாள். யானை தன் பாகனை கண்டுகொள்வதுபோல அக்கல்விநிலை தன் தலைவியை மத்தகத்தில் ஏற்றிக்கொண்டது.
யாக்ஞவல்கியருக்காகக் காத்திருந்த பலமுடிவுகள் அவளால் எடுக்கப்பட்டன. அவள் எடுக்கும் ஒரு சிறந்த முடிவு பத்து புதிய முடிவுகளை கொண்டுவந்து வாயிலில் நிறுத்தியது. நாளடைவில் அவளே பிருஹதாரண்யகக் கல்விநிலையின் அனைத்துப் பிரிவினராலும் ஏற்கப்பட்ட முதல்வி என்றானாள். யாக்ஞவல்கியரின் நான்குமைந்தரும் அவளையே முதன்மை அன்னை என கருதினர். ஆசிரியர்கள் அவளை யாக்ஞவல்கியரின் மாற்றுருவென எண்ணினர். முதற்புலரியிலெழுந்து மங்கலத் தோற்றத்தில் தன் குடிலருகே இருக்கும் கொட்டகைக்கு ஏவல்பெண்டிருடன் அவள் வரும்போது அங்கே அவளுக்காக கல்விநிலைகளின் தலைவர்களும், அரசதூதர்களும், ஆசிரியர்களும், பொருள்காப்பாளர்களும் காத்து நின்றிருந்தனர்.
அவளால் யாக்ஞவல்கியரின் பணிச்சுமைகள் குறைந்தன. ஆனால் விடுவிக்கப்படும்தோறும் அவர் விலகிச்சென்றார். ஒருகட்டத்தில் அப்பெரும் கல்விநிலையில் அவர் ஆற்றுவதற்குரிய செயல்கள் மிகக்குறைவாக ஆயின. அப்பெருக்கு அவரைக் கடந்து முன்னால் சென்றுவிட்டிருந்தது. அவர் அந்த மாற்றத்தையும் அறியவில்லை. அவர் உள்ளம் வேதச்சொல்லை நாடியது. நாட்கணக்கில் மீளாச்சித்தத்துடன் சொற்களைத் தொடர்ந்து புறமென்றான மொழியிலும் உள்ளென்றான காட்சிகளிலும் அலைந்தார். அவரைக் காணவென வந்த வேதப்படிவர்கள்கூட ஓரிரு சொற்களுக்குப்பின் மைத்ரேயியை சந்தித்து மீள்வதையே விரும்பினர்.
மைத்ரேயி கூடவே காத்யாயனியுடன் மேலும்மேலும் அணுக்கமாகிக்கொண்டிருந்தாள். யாக்ஞவல்கியர் நாளெல்லாம் ஓடிச்செய்த பணிகளை அரைநாளிலேயே முடித்து இல்பேணவும் அவளுக்கு நேரமிருந்தது. இரவுகளில் மூத்தவளுடன் தனியாக அமர்ந்து பேசிக்கொண்டிருப்பது அவள் வழக்கம். தொடக்கநாட்களில் கோயிற்சிலை என சொல்அறியாதவளாக இருந்த காத்யாயனியின் விழிகள் பின்னர் மெல்ல அவளை அடையாளம் கண்டுகொண்டன. அவளுக்காக தேடலாயின. பின்னர் அவளிடம் மட்டுமே மூத்தவள் பேசினாள். மழலைபோல மெல்லிய குரலில் பறவைகளைப்பற்றியும் பசுக்களைப்பற்றியும் அவள் சொன்னாள். சிரித்து நாணினாள். விண்மீன்களைச் சுட்டி புரியாத சொற்கள் பேசுகையில் கனவுக்குள் சென்று நீள்மூச்சுடன் மீண்டாள்.
அவள் பேச்சின் உள்ளடக்கம் என்பது எப்போதுமே அங்கிருந்து கிளம்புவதாகவே இருப்பதை அவள் ஒருநாள் உணர்ந்தாள். வெளியே என கைசுட்டியபடிதான் அவள் பேசத்தொடங்கினாள். பேசிப்பேசி களைத்து அவள் துயிலும்போதும் கைகள் வெளியே என சுட்டப்பட்டிருக்கும். அச்சுட்டுவிரலை நோக்கியபடி அவளருகே அமர்ந்திருக்கையில் மைத்ரேயி பெரும் உளக்கிளர்ச்சியை அடைந்தாள். அவளருகே படுத்து அவளுக்கிணையாக தலைவைத்து அந்த சுட்டுவிரல் காட்டிய திசையை நோக்கிக்கொண்டிருந்தாள். அப்பால் கரிய வானம் விண்மீன்சிமிட்டல்கள் பெருகிப்பரக்க வளைந்திருந்தது. வெட்டவெளி. பொருளின்மை. அறியமுடியாமை. அனைவரும் சென்றுசேரும் கருமை அது என்கின்றன நூல்கள்.
அவள் விட்டுத்தாவி சுழன்று மீண்டும் ஆடும் எண்ணங்களை தொடர்ந்து கொண்டிருக்கையில் ஒரு விண்மீன் கீழிறங்கியது. அது கிழித்த செந்நிறக்கோடு சிலகணங்கள் எஞ்சியிருந்தது. அவள் அது மறைவதைக் கண்டு கண்களைமூடி இமைகளுக்குள் மேலும் சிலகணங்கள் அதை நீட்டித்தாள். எங்கோ இலைகள் கலையும் ஒலி. கன்றின் சாணிமணத்துடன் காற்று வந்து குழல்கலைத்துச் சென்றது.
அவள் விழிமூடப்போகும்போது ஒருவிண்மீன் சுழன்று பறந்தபடி அணுகுவதைக் கண்டாள். அது அவளை நோக்கித்தான் வந்துகொண்டிருந்தது. நோக்கியிருக்கையிலேயே ஐயமெழுந்தது. அதை விழிகளுக்குள் தேக்கிக்கொள்ளவேண்டுமென முனைந்தாள். விழிமூடி அந்த ஒளித்துளியை அசையாது நிறுத்தினாள். வேதச்சொல் ஒன்றை அதனுடன் இணைத்து இசைக்க வைத்தாள். அச்சொல் ஒளிச்சுடராக அவள் விழிகளுக்குள் நின்றிருந்தது.
ஒருநாள் யாக்ஞவல்கியர் தன் ஊழ்க அறையிலிருந்து எழுந்து தான் உருவாக்கிய கல்விநிலையினூடாகச் சென்றுகொண்டிருந்தபோது எதிரேவந்து வணங்கி அகன்ற மாணவன் ஒருவனின் விழிகளுக்கு தான் முற்றிலும் அயலான் எனக் கண்டுகொண்டு உளம் அதிர்ந்தார். அது வெறும் ஐயமா என்று திகைத்து ஒவ்வொருவர் விழிகளாக நோக்கிக்கொண்டு சென்றார். அனைவருமே அவரை முற்றிலும் அயலான் என்றே நோக்கினர். பின்னர் உணர்ந்தார், உண்மையில் அவர்கள்தான் அவருக்கு அயலவர் என்று. எவர் பெயரும் முகமும் அவருக்கு தெரிந்திருக்கவில்லை. அவர் மாணவர்களை சந்தித்து உரையாடியே பல்லாண்டுகள் ஆகியிருந்தன. ஆசிரியர்கள் பலரை அவர் முழுமையாகவே மறந்துவிட்டிருந்தார். அடையாளம் காணாவிழிகளை விழிகள் அடையாளம் காண்பதில்லை.
அப்படியென்றால் நான் இறந்துவிட்டேனா என அவர் தனக்குத்தானே கேட்டுக்கொண்டார். அலைகளை நீர்ப்பரப்பு என இறந்தவர்களை மானுடம் அக்கணமே மறந்துவிடும் என அவர் கற்றிருந்தார். உடலென எஞ்சும்போதே ஒருவன் இறந்துவிடக்கூடுமா? அவ்வெண்ணமே பேரச்சத்தை எழுப்பியது. ஒவ்வொருவரையாக அழைத்து “நான் இறக்கவில்லை” என்று கூவவேண்டுமென வெறி எழுந்தது. ஒருநாள் முழுக்க அந்தக்கொந்தளிப்பு நீடித்தது. பிருஹதாரண்யகக் கல்விநிலை அமைந்தபோதே அங்கு வந்த மூத்த ஆசிரியர் ஒருவரை தேடிச்சென்றார். அவரைக் கண்டதுமே எழுந்து வணங்கி நின்ற அவர் விழிகளில் இருந்தது இறந்துபட்ட மூதாதையர் மேல் கொண்ட பணிவே என உணர்ந்ததும் ஒரு சொல் பேசாது மீண்டார்.
அன்று ஆற்றங்கரையில் நீரொழுக்கை நோக்கி அமர்ந்திருக்கையில் அஸ்வாலாயனரின் சொற்றொடர் எண்ணத்தில் ஓடியது. “மூன்றுமுறை பிறக்காதவன் முறையாக இறப்பதில்லை.” பலநூறுமுறை பேசி ஆய்ந்த சொற்றொடர் ஆயினும் அத்தருணத்தில் அது திகைப்புடன் எழச்செய்தது. வைசம்பாயனரின் குருநிலையில் இருந்து கிளம்பும்போது அதே போன்று தான் இறந்துவிட்டதாக அவர் உணந்திருக்கிறார் என நினைவுகூர்ந்தார்.
அன்று நோக்கும் விழிகளெல்லாம் மிக அப்பால் பிறிதெவரோ என தோன்றின. அவர்கள் வாழும் ஒவ்வொரு இடத்தையும், அவர்கள் சொல் ஒவ்வொன்றையும் இது அல்ல இது அல்ல என்று விலக்கியே அவர் பிருஹதாரண்யகக் காட்டுக்கு வந்தார். சூரியரைச் சந்தித்து அவர் அளித்த மெய்சொல்லைப் பெற்றபோது மீண்டும் பிறந்தெழுந்தார். ‘இது இரண்டாவது இறப்பு, நான் மூன்றாவதாகப் பிறந்தெழவேண்டும்’ என சொல்லிக்கொண்டார். சொல்லென அமைத்தபோது முதலில் திகைப்பூட்டும் பொருளின்மைகொண்டிருந்தது அவ்வெண்ணம். சொல்லச்சொல்ல அணுகி காற்றென வெளியென சூழ்ந்துகொண்டது. அதில் வாழத்தொடங்கினார். மெல்ல அது இனிதாகியது. ஆம், இரண்டாவது இறப்பு, மூன்றாம் பிறப்பு.
தன் இல்லறக்குடிலை அவர் அடைந்தபோது நாளும் அவர் அங்கே வந்துசெல்வதுபோன்ற இயல்புடன் மைத்ரேயி வந்து அவரை வரவேற்றாள். அவர் கைகால் கழுவி பீடம்கொண்டதும் இன்னீர் கொண்டுவந்தளித்தாள். அவர் அருகே வணங்கி நின்றாள். அவளுடைய அழகிய இளமுகத்தை அவர் அன்று புதிதென நோக்கினார். அவர் புன்னகைத்தபோது அவளும் அது புதிதல்ல என்பதுபோல புன்னகைசெய்தாள். “இளையவளே, உன் மூத்தவளையும் இங்கு அழைத்துவா” என்றார் யாக்ஞவல்கியர். “இன்று நான் உங்களுக்கான இறுதிச்சொற்களை சொல்லவிருக்கிறேன்.”
மைத்ரேயி சென்று காத்யாயனியை அழைத்து வந்து அருகே நிறுத்தினாள். “இல்லத்தரசிகளே, நான் இன்றுமாலையுடன் இந்த வாழ்க்கையிலிருந்து இறந்து அகலவிருக்கிறேன். நாளை முற்றிலும் புதிய வாழ்வொன்றில் பிறிதொருவனாக மீளப்பிறப்பேன். செல்வதற்கு முன் இப்ப்பிறவியில் நான் இயற்றிய அனைத்தையும் முழுமையாக முடித்துச்செல்ல விரும்புகிறேன்” என்றார் யாக்ஞவல்கியர். மைத்ரேயியின் முகத்தில் புன்னகை அவ்வண்ணமே இருந்தது. காத்யாயனி அச்சொற்களை கேட்டதாகவே தெரியவில்லை.
காத்யாயனியிடம் “எனக்கு இனியதுணைவியாக இருந்தாய். என் மூதாதையர் மகிழும் மைந்தரை அளித்தாய். நான் உனக்கு ஆற்றியவற்றில் குறைகளும் பிழைகளும் இருந்தால் அவை முழுமையாகவே என்னைச் சார்ந்தவை. என் மூதாதையர் பொருட்டும் என் மைந்தர் பொருட்டும் அவற்றை நீ பொறுத்தருளவேண்டும் என்று கோருகிறேன். உன் கணவனாக வந்தவன் முதிர்ந்து மைந்தனாகி அமைந்துள்ளேன். உன் கால்களில் தலைவைத்து இன்சொல்லை கோருகிறேன்” என்றார். அவள் முகம் அச்சொற்களுக்கு அப்பால் இருந்தது.
மைத்ரேயியிடம் “இளையவளே, நீ விழைந்து வந்தது என்ன என நான் அறியேன். மானுடரை ஒவ்வொரு வயதுக்கும் அப்பருவத்திற்குரிய பூதங்கள் பிடித்தாட்டுகின்றன. என்னை சொல்பூதம் ஆண்டது. பின்னர் காமம் கைப்பற்றியது. பொருள்பூதம் கையிலிட்டு விளையாடியதுண்டு. நீ வந்தபோது என்னை ஆண்டது நானறியா பூதம் ஒன்று. அது என்னை கொண்டுசென்று காட்டியவை எவையென இன்றும் என்னால் சொல்லிவிட இயலாது. உன்னை நான் புறக்கணித்தேன். கணவன் என உனக்கு நான் அமையவில்லை. நீ எனக்கு அளித்த அனைத்துக்கும் பிறிதொரு உலகில் ஈடுசெய்கிறேன். என்னை வாழ்த்தி நற்சொல் உரைக்கவேண்டும்” என்றார். அவள் புன்னகையுடன் “எப்போதுமிருக்கும் சொல்லுக்கு அப்பால் ஏதுமுரைக்கவேண்டியதில்லை” என்றாள்.
“இக்கல்விநிலையின் பொறுப்புகளை அடித்தளம் முதலே பகிர்ந்தளித்துக்கொண்டுதான் வந்துள்ளேன். என் மைந்தருக்கும் ஆசிரியர்களுக்கும் உரிய பொறுப்புகளை எழுதி வைத்திருக்கிறேன்” என்றார் யாக்ஞவல்கியர். “இனி உங்களுக்கு நான் செய்யவேண்டியது. குலமகளிருக்குரியவை இல்லங்களும் நிலங்களும் ஆநிரையும் பொன்னும் என்கின்றன நூல்கள். இக்கல்விநிலையில் நான் தங்குவதற்கென அமைக்கப்பட்ட குடில்கள் உங்களுக்குரியவை. இக்கல்விநிலைக்கு அப்பால் எனக்கு மட்டுமென மன்னர்கள் அளித்த கழனிகளை இருவருக்கும் இணையாக பகிர்ந்தளிக்கிறேன். எனக்கு வேள்விக்கொடை என அளிக்கப்பட்ட ஆநிரைகள், எனக்கு கல்விக்கொடை என அளிக்கப்பட்ட பொன் ஆகியவற்றையும் இரண்டாகப் பகுத்து இருவருக்கும் அளிக்கிறேன். உங்கள் வாழ்க்கை துயரற்றதாக ஆகவேண்டும் என்றும், நீங்கள் நிறைவடையவேண்டும் என்றும் வாழ்த்துகிறேன்” என்றார்.
மைத்ரேயி புன்னகை மாறாமல் “இவற்றை நீங்கள் ஏன் அளிக்கிறீர்கள்?” என்றாள். “ஏனென்றால் இவற்றால் எனக்கு இனி பயனில்லை. நான் இப்பிறப்பில் இனி வாழப்போவதில்லை” என்றார் யாக்ஞவல்கியர். “அப்படியென்றால் இங்கிருந்து பயனுள்ள எதை எடுத்துச்செல்கிறீர்கள்?” என்றாள் மைத்ரேயி. அக்கேள்வியை எதிர்கொண்டதும் அவர் ஒருகணம் திகைத்தார் “நீ கேட்டபின்னரே எண்ணினேன். மானுடன் மறுபிறவிக்கு கொண்டுசெல்லக்கூடியவை இரண்டே, வினைப்பயனும் மெய்யறிவும். வினைப்பயன் தானாக உடன் வரும், மெய்யறிவு எடுத்துச்செல்லப்படவேண்டும்.”
“ஆசிரியரே, பயனுள்ளவற்றை நீங்கள் எடுத்துச்செல்கிறீர்கள் என்றால் பயனற்ற பழையவற்றை எங்களுக்கு விட்டுச்செல்கிறீர்கள் என்றல்லவா பொருள்?” என்றாள் மைத்ரேயி. “நான் அளிப்பவை இப்புவியில் கணவன் மனைவிக்கு அளிக்கக்கூடியவை அனைத்தும் அல்லவா? இவையே இவ்வாழ்வின் பொருள் என்பதனால்தான் பொருளென அழைக்கப்படுகின்றன” என்றார் யாக்ஞவல்கியர். “இவற்றில் என்றுமழியாதவை எவை?” என்று அவள் கேட்டாள். “அழிவதே பொருள்” என்றார் யாக்ஞவல்கியர். “அழிபவை அழியாத ஒன்றை அளிக்க இயலுமா?” என்றாள் மைத்ரேயி. “இல்லை, அவை அளிக்கும் அனைத்தும் அழிபவையே.”
“ஆசிரியரே, அழியக்கூடிய ஒன்று எப்படி நிறைவை அளிக்கமுடியும்? மாறாநிலையே நிறைவு எனப்படுகிறது” என்றாள் மைத்ரேயி. “நிறைவை அளிக்கும் செல்வம் எது?” என்று அவள் மீண்டும் கேட்டாள். “விடுதலை” என்று அவர் சொன்னார். “விடுதலையை அளிப்பது எது?” என்றாள் மைத்ரேயி. “கட்டியிருப்பது அறியாமை. அறிவே விடுதலையாகும்” என்றார் யாக்ஞவல்கியர். “அறிவின் உச்சம் என்ன?” என்றாள். “தன்னை அறிதல்” என்றார் யாக்ஞவல்கியர். “முழுவிடுதலை எப்படி அடையப்பெறும்?” என்றாள் மைத்ரேயி. “அறியும்தோறும் அறிதலே கட்டுகளாகின்றது. அறிவிலிருந்து அடைவதே முழுவிடுதலை” என்றார். “ஆசிரியரே, விடுதலை அடைந்தவன் எப்படி இருப்பான்?” என்றாள். “அறிவழிந்து அறிவென அமைந்திருப்பான்” என்றார் யாக்ஞவல்கியர். “ஆசிரியரே, அந்த மெய்யான செல்வத்தை எங்களுக்கு அருளவேண்டும்” என்று அவள் கோரினாள்.
அப்போதுதான் அவர்களை பெண்கள் என்றே தான் எண்ணியதை யாக்ஞவல்கியர் உணர்ந்தார். மாணவர்களாக அவர்கள் ஏன் ஒருகணமும் விழிகளில் தென்படவில்லை என வியந்தார். அப்போது தன்னுள் ஓடிய உளச்சித்திரங்களில் காத்யாயனியின் விழிகளைக் கண்டபோது அதிலிருந்த தீராத ஏக்கம் எதன்பொருட்டு என்று அறிந்தார். இரு கைகளையும் கூப்பியபடி “பெரும்பிழை செய்துவிட்டேன், இப்போது அறிகிறேன் அனைத்தையும். இங்கு நான் இயற்றிநிறைவுசெய்யாத பெரும்பணி என்பது உங்கள் இருவருக்கும் நானறிந்த மெய்யறிவை முற்றளிப்பதே” என்றார்.
“அருகமர்க!” என அவர்களை அழைத்தார். அவர்களை அணைத்து தலையை சுற்றிப்பற்றி காதில் அவர்களுக்கு மட்டுமேயான குரலில் ஊழ்கச்சொல்லை சொன்னார் “அஹம் பிரம்மாஸ்மி.”
[ 8 ]
பிருஹதாரண்யகத்திலிருந்து முதற்காலடியை எடுத்துவைப்பதைப்பற்றி யாக்ஞவல்கியர் அன்றிரவு முழுக்க எண்ணிக்கொண்டிருந்தார். கொந்தளித்த உள்ளத்துடன் தன் குடிலுக்குள் சுற்றிவந்தார். வெளியே மின்மினிகள் செறிந்த இருட்டு ரீங்கரித்துக்கொண்டிருந்தது. பல்லாண்டுகளுக்கு முன்பு சூரியரைப்பார்ப்பதற்காக அக்காட்டுக்குள் முதற்காலடியை எடுத்துவைத்த நாளை மீண்டும் மீண்டும் எண்ணிக்கொண்டார். எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு முழுமையாகவே உளக்காலத்தில் மறைந்து விட்டிருந்த நாள் அது. அப்போது ஒவ்வொரு மணற்பருவும் ஒவ்வொரு ஒலித்துளியும் தெளியும்படியாக எழுந்துவந்தது.
அவர் இடையாடை அன்றி ஏதுமில்லாது அந்தப்பெயரற்ற காட்டின் அருகே வந்து சுழித்தோடிய வெண்ணிறஓடையை நோக்கியபடி நின்றார். அக்காடு பிற எங்குமில்லாத ஒன்றை கொண்டிருந்தது, அது என்ன என்று கூர்ந்தார். பறவைகளின் ஒலிகள். அணில்களும் பிற சிற்றுயிர்களும் எழுப்பிய ஒலிகள். காற்றின் ஒலி. கந்தகம் கலந்த மணம். பின்னர் உணர்ந்தார், அக்காடு எவரையும் கொல்வதில்லை என. அங்கு நாகங்களோ கொலைவிலங்குகளோ இல்லை. அதை அறிந்ததுமே அக்காட்டின் ஒலி பெரும் கொண்டாட்டமாக ஆகியது. மாற்றிலாத வாழ்வு மட்டுமே தேங்கிய ஒரு பசும்பரப்பு.
அங்கு பிறமானுடர் எவருமில்லை என்றே அப்போது எண்ணினார். சூரியர் குகைக்குள் தவம்செய்வதை ஓர் உள்ளுணர்வாக அவர் அடைந்தது அதன்பின்னர்தான். அந்த ஓடையை தாண்டுவதா என எண்ணி ஒருகணம் தயங்கிநின்றார். அப்பால் புதருக்குள் இருந்து வெளிவந்த கீரி ஒன்று இளவெயிலில் பிசிறிநின்றிருந்த மென்மயிர் உடலுடன் குழந்தைமுகத்துடன் இருகால்களில் அமர்ந்து எழுந்து நின்று அவரை நோக்கியது. அதன் மணிக்கண்களில் ஒரு திகைப்பு இருந்தது. அவர் தன் இடையாடையை எடுத்து அப்பால் வீசிவிட்டு ஓடைகடந்து காட்டுக்குள் காலடி எடுத்துவைத்ததும் அது திடுக்கிட்டு அமர்ந்திருந்த இடத்திலேயே இல்லாமலாயிற்று. அவர் நடந்தபோது அவருக்குப்பின் அது வளையிலிருந்து எழுந்து அமர்ந்து அதே திகைப்புடன் நோக்கியது.
அவர் அக்காலடியை பேருவகையுடன் உடல்முழுக்க உணர்ந்தார். மீண்டுமொரு கால்வைத்தபோது “இதோ! இதோ!” என்று கூச்சலிட்டு கொப்பளித்தது உள்ளம். “இத்தருணம்! இது என்றுமிருக்கும். நான் அதை அத்தனை அழுத்தமாக எனக்குள் உணர்கிறேன்.” அதை அவர் பின்னர் பலமுறை மாணவர்களுக்கு சொல்லியிருக்கிறர். பிருஹதாரண்யக கதாமாலிகாவிலும் மற்ற சில நூல்களிலும் அத்தருணம் பலவகையாக காவியத்தன்மைகொண்டு மொழியில் பதிந்திருக்கிறது. பின்னர் அது காவியநிகழ்வாகி அவரிடமிருந்தும் அகன்றது.
மறுநாள் புலர்வதற்காக அவர் காத்திருந்தார். கருக்கிருட்டு செறிந்தபோது, காற்றின் குளிர் அழுத்தம்கொண்டபோது வெளியே சென்று வானை நோக்கினார். விடிவெள்ளி தோன்றுவதைப் பார்க்க அங்கே காத்து நின்றார். வானம் விண்மீன்வெளியாக கிடந்தது. பெரும்பெருக்கொன்று கிழக்கிலிருந்து மேற்குநோக்கி ஒழுகிச்செல்வது போல, அல்லது மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியா? அவ்வாறு எண்ணியதுமே அது தீப்பந்தப்பொறி போல நாலாபக்கமும் தெறித்துப்பரவுவதை காணமுடிந்தது. ஒருகணத்தில் மாறாது காலக்கருமையில் அமைந்திருந்தது. விடிவெள்ளி எப்படி தோன்றும்? சூரியனையும் சந்திரனையும்போல தொடுவான் கோட்டிலிருந்து உதித்தெழுமா?
முதல் கரிச்சானின் மெல்லிய குரலை கேட்டார். அது விடிவெள்ளி கண்டபின்னரே குரலெழுப்பும் என்பார்கள். விழிதூக்கியபோது விடிவெள்ளி அங்கிருந்தது, அது எப்போதுமே அங்குதான் அமைந்திருக்கும் என்பதுபோல. திகைப்புடன் அவர் அதையே நோக்கிக்கொண்டிருந்தார். இருளிலிருந்து பிதுங்கி வந்ததா? இல்லை பிறிதொரு விண்மீனிலிருந்து துளித்துச் சொட்டியதா? இல்லை தன் விழிகளிலிருந்து அங்கு சென்றதா? தன் எண்ணத்தில் அது முளைத்ததா? அவ்வெண்ணம் ஒருகணம் அவரை உடல்திறந்து காற்றாக ஆக்கி பரப்பியது. “இவை நான்!”
மீண்டபோது விடிவெள்ளி மேலெழுந்திருந்தது. பறவைக்குரல்கள் சூழ ஒலித்தன. உள்ளே சென்று தன் பொருட்களை எடுத்துக்கொண்டு செல்லவேண்டுமென எண்ணியதுமே புன்னகை எழுந்தது. அங்கிருந்தே கிளம்பி இருளுக்குள் காட்டுப்பாதையில் நடந்தார். மையச்சாலையில் அப்போது பேச்சுக்குரல்கள் ஒழுகத்தொடங்கிவிட்டிருந்தன. ஆனால் காடு இருட்டுக்குள்தான் கிடந்தது. தலைக்குமேல் விடிவெள்ளியால் எழுப்பப்பட்ட பறவைகளின் ஒலி நிறைந்திருந்தது. நீரின் ஒலி கூடவே வந்துகொண்டிருந்தது.
பின்புலரியில் அவர் காட்டின் அறியாத மறு எல்லை ஒன்றை அடைந்திருந்தார். அங்கு அவருடன் புதருக்குள் வந்துகொண்டிருந்த வெண்ணிற ஓடை வளைந்து புல்வெளியில் ஒளிவிட்டபடி கிடந்தது. அதற்கப்பால் சென்ற பசும்புல்பரப்பை கண்டார். ஓடைக்கரையை அடைந்ததும் மறுபக்கமிருந்து வந்த காற்றே சொன்னது, அது பிருஹதாரண்யகத்தின் எல்லை என்று. அங்கு மேய்ந்துகொண்டிருந்த மான் அவரைக் கண்டதும் தலைதூக்கி காதுகளை முன்கோட்டி மூக்கு கூர்ந்தது.
தனக்குள் எந்த எண்ணம் எழுகிறது என்று பார்த்தார். தன் எண்ணங்களை நோக்கியபடி நடந்துகொண்டே இருந்தார். ஒன்றும் நிகழவில்லை. உள்ளம் மிக இயல்பாக ஓடிக்கொண்டிருந்தது. ஓடையைக் கடந்தபின்னர்தான் அவர் அதை கடந்திருப்பதையே உணர்ந்தார். மான் இடச்செவியை மட்டுமே அவருக்காக ஆட்டியது. முன்வலக்காலை உதறியபடியும் தும்மலோசை எழுப்பியபடியும் அது மேய்ந்துகொண்டிருந்தது. அவர் அதை கடந்துசென்றதை விழியுருளலால் மட்டுமே அது எதிர்கொண்டது.
தன் குருநிலைகளில் இருந்து யாக்ஞவல்கியர் மறைந்துவிட்டதை மெல்லமெல்லத்தான் அனைவரும் அறிந்தனர். சிலநாட்கள் அது உணர்வெழுச்சியுடன் பேசப்பட்டது. யாக்ஞவல்கியர் காட்டில் ஒரு மானால் கொல்லப்பட்டார் என்றன சில கதைகள். அவர் ஒரு வேட்டுவப்பெண் வயிற்றில் பிறந்து சிறுவனாக புதியகாட்டை அறிந்துகொண்டிருக்கிறார் என்றன. அவரை நீண்ட சடைமுடிக்கற்றைகளுடன் இமயக்குகை ஒன்றில் கண்டதாக சொன்னார்கள் சிலர்.
பிருஹதாரண்யகம் சொல்தழைத்து வளர்ந்தது. அரசர்களின் கொடைகளைச்சுமந்து அதன் களஞ்சியங்களை நோக்கி வண்டிகளும் அத்திரிகளும் வந்துகொண்டிருந்தன. அதன் கல்விநிலைகளை நோக்கி இளமைந்தர் கண்களில் வினாக்களுடன் அணுகிக்கொண்டிருந்தனர். மைத்ரேயி அங்கே அதன் தலைவி என இருந்து ஆண்டாள். அவளை ஆசிரியரின் மெய்யுரு என வழிபட்டனர் மாணவர்கள். ஒவ்வொரு உயிரசைவையும் நோக்கும் இமையா விழிகொண்டவள் அவள் என்று அவளைப்பற்றி பாடினர் சூதர்.
ஆனால் அவள் மேலும் மேலும் தனிமைகொண்டவளாக மாறிக்கொண்டே சென்றாள். தன் ஊழ்கச் சொல்லுடன் காட்டுக்குள் சென்று அமர்ந்திருப்பதையே அவள் விரும்பினாள். ஒருநாள் அவள் அக்காட்டின் எல்லைக்குச் சென்று அமர்ந்திருந்தபோது வெண்ணிற நீர் சுழித்தோடிய ஓடைக்கு அப்பல் விழிசுருக்கி நின்றிருந்த இளமைந்தன் ஒருவனை கண்டாள். அவனருகே சென்று “எங்கு வந்தாய்?” என்றாள். “எனக்கு மட்டுமே உரியதொன்றை அறிய” என அவன் சொன்னான். “என்ன கற்றிருக்கிறாய்?” என்று அவள் கேட்டாள். “இதுவரை எதையும் கற்கவில்லை” என்று அவன் சொன்னான்.
அவன் அழகிய விழிகளை நோக்கி அவள் வியந்து நின்றாள். “இவ்வழியை எப்படி அறிந்தாய்?” என்றாள். “இளமையிலேயே எனக்குப் பிடித்த மணம் ஒன்றிருந்தது. நான் அதை மட்டும் தேடித்தேடி அலைந்தேன். அது வலுத்துவலுத்து என்னை இங்கழைத்து வந்தது” என்றான் அவன். “உன் பெயர் என்ன?” என்று அவள் கேட்டாள். “சூரியன்” என்றான். அவள் கைகளை விரித்து “இது உன் இடம், வருக மைந்தா!” என்றாள். அவனைத் தழுவியபடி தன் கல்விநிலைக்கு மீண்டாள்.
அவனுக்கு ஒருநாள் முதல்விடியலில் “நானே பிரம்மம்” என்னும் ஊழ்கவரியைச் சொல்லி ஆற்றுப்படுத்திவிட்டு மைத்ரேயி அங்கிருந்து கிளம்பினாள். பிருஹதாரண்யகத்திலிருந்து காத்யாயனியை அழைத்தபடி மைத்ரேயியும் கிளம்பியபோது அனைவரும் கண்ணீர்விட்டனர். உளக்கிளர்ச்சியுடன் பேசிக்கொண்டனர். அதுவும் சின்னாட்களில் பழங்கதை என்றாகியது.
தொடர்புடைய பதிவுகள்
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 31
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 30
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 29
மாட்டிறைச்சி – அரசியலும் பண்பாடும்
August 18, 2016
கைவிடு பசுங்கழை -2

ஒரு நீண்ட காலத்துக்கு பின் சிற்றிலக்கியங்களில் உலகம் உருவாகி வந்தது. அதற்கான அரசியல் சூழல் ஒன்று இருந்தது. இங்கிருந்த மூன்று பேரரசர்களும் அழிந்துவிட்டார்கள். சிறு சிறு ஜமீந்தார்களை நம்பி கவிஞர்கள் வாழவேண்டிய காலம் வந்தது. மதுரையை, தஞ்சையை ஆண்டவர்கள் தெலுங்கு பேசியவர்கள். தமிழை அவர்கள் ஆதரிக்கவில்லை. சின்னச் சின்ன சபைகளில் சின்னச் சின்ன சக்திக்கேற்ற சின்ன காவியங்கள் எழுதக்கூடிய கவிராயர்கள் வந்தனர்.அதுதான் சிற்றிலக்கியங்களின் காலம். பெரும்பாலும் இந்தக் கவிதைகளில் இருப்பது ஒரு தொழிற்திறன்தான். ஒரு வித்தை. மொழியைக் கற்று அதில் ஒரு சாமர்த்தியத்தை காட்டுவது
பத்துரதன் புத்திரனின் மித்திரனின் சத்துருவின்
 பத்தினியின் கால்வாங்கித் தேய்
என்று ஒரு பாட்டு இருக்கிறது. ஒரு காலில் முள் குத்தினால் என்ன செய்வது? பத்துரதன் – தசரதன், புத்திரனின் – மகன் ராமனின், மித்திரனின் – ராமனின் நண்பன் சுக்ரீவனின், சத்துருவின் – சுக்ரீவனின் பகைவன் வாலியின், பத்தினி – வாலியின் மனைவி தாரையின். கால்வாங்கி – நெடில் அடையாளத்தை எடுத்து, அதாவது தரை. தரையில் தேய் என்று அர்த்தம்.
இதுவும் ஒரு வகையான ரசனையாக ஒரு நூற்றைம்பது வருஷம் தமிழை ஆண்டிருக்கிறது. இதில் நிறைய வகைகள் இருக்கின்றன. மடக்கு, யமகம், சித்திரகவி, நாகபந்தம். மதுரைக்கோவில் போனீர்கள் என்றால் நாகபந்தக் கவிதைகளையும் சித்திரகவிதைகளையும் பாக்கலாம். பாம்பு சுற்றிச் சுற்றி இருப்பதுபோல வடிவம். அதில் சுற்றிச் சுற்றி க ங ப என்று இருக்கும். அதை வாசித்து, கணக்காக ஆக்கி தீர்வுகண்டால் ஒரு கவிதையாக மாற்றிக் கொள்ளலாம். சதுரங்க விளையாட்டுக்கும் கவிதைக்கும் இடையில் ஒரு ரசனை. கிட்டத்தட்ட இருநூறு வருடம் இது தான் கவிதை என்று நம்பிக்கொண்டிருந்தார்கள்.
இன்னொரு வகையாக , சுருக்கமாகவும் ரத்தினமாகவும் வாழ்க்கைத் தத்துவங்களை சொல்லும் செய்யுள்கள் கவிதை எனப்பட்டன. ஔவையாருடைய கவிதைகளில் ஒன்று இது
  ஈதல் அறம் ஈட்டல் பொருள்
  
  
   காதலருவர் கருத்தொருமித்து –ஆதரவு
  
  
   பட்டதே இன்பம் பரனை நினைத்து இம்மூன்றும்
  
  
   விட்டதே பேரின்ப வீடு
அறம் பொருள் இன்பம் வீடு மூன்றையும் ஒரே பாடலில் சொல்லியிருக்கிறார். இந்த இரண்டு வகையும்தான் அதிகமாக கவிதையாக கருதப்பட்டன. வாரியார் சுவாமிகளின் உரையில் இந்த வகையான கவிதைகள் தான் அதிகமாக மேற்கோள் காட்டுவார். அவரே அப்படி நிறையச் சொல்வார். தாமரைக் கண்ணால் நோக்கினார், தாம் அரைக் கண்ணால் நோக்கினார்- இப்படி.
இந்தச் சிற்றிலக்கிய வகைமைக்குள் பலவகையான பேரிலக்கியங்கள் உள்ளன என்பதை நான் மறுக்கவில்லை. இந்த அழகியல் குறைவானது என்றும் சொல்லவில்லை. இது ஒருவகைப் பொதுப்போக்கு என்றுதான் சொல்லவந்தேன். சிற்றிலக்கியங்களில் மீனாட்சியம்மைப்பிள்ளைத்தமிழ் ஒரு பெரிய கிளாஸிக். திருப்புகழ் ஒரு கருவூலம்.
ஆக ஒரு பெரும் மரபை நான் கோட்டுச்சித்திரமாக இவ்வாறு சுருக்கிக்கொள்கிறேன். ஒரு வசதிக்காகத்தான். இறுதியாக வகுத்துரைக்கவில்லை. எவரும் சண்டைக்கு வரவேண்டாம்.
1.சங்க காலம் – கண்ணிலிருந்து உணர்வுக்கு நேரடியாக போகும் வடிவம்
2.காப்பிய காலகட்டம் – தத்துவத்தின் ஊடாட்டம்.
3.பக்திக் காலகட்டம் – மதமெய்யியலை மையமாக்குதல். மதம் சார்ந்த உருவக உணர்வுகள்
4.சிற்றிலக்கியங்களின் காலகட்டம்- சொல்விளையாட்டுகளும் கருத்துச் சுருக்கங்களும். பழைய அழகியலின் நுண்மையாக்கல்கள்
இவ்வாறு நம் நெடுமரபு விரிந்து செழித்துத் தேங்கிய காலகட்டத்தில் தான் தமிழில் வாராது வந்த மாமணியாக பாரதி தோன்றினான். நவீன இலக்கியம் என்றால் என்ன என்று கேட்டால் எப்போதுமே பாரதிக்கு முன் – பாரதிக்கு பின் தான். பாரதிக்கு முன்னால் இருப்பது நவீன காலகட்டத்துக்கு முந்தைய காலம் .பாரதிக்கு பின்னால் நவீன காலகட்டம்.
பாரதி வாழ்ந்த காலத்தில் பழைய இலக்கியமே மையப்போக்கு .உ.வெ.சா.வின் சுயசரிதையில் ஒரு சம்பவம் வருகிறது. சென்னை கவர்னர் ஓய்வு பெற்று போகிறார். அதற்கு ஒரு பாராட்டு .கவிதை படிக்கவேண்டும். அன்றைய சென்னை கவர்னருக்கு தமிழ் தெரியும். ஆகவே மாம்பழக்கவிச்சிங்க கவிராயர் என்ற ஒரு மரபான கவிஞரைக் கொண்டு வந்து ஒரு வாழ்த்து எழுதவைக்கிறார்கள். அவர் ஒரு பெரிய நிலைமண்டில ஆசிரியப்பா எழுதிக்கொடுத்து பணம் பெற்றுக்கொண்டு செல்கிறார்.
விழா தொடங்குவதற்கு ஒரு பதினைந்து நிமிடங்களுக்கு முன்னால் அந்தக் கவிதையை பிழை திருத்தி அளியுங்கள் என்று உ.வெ.சாவிடம் கொடுக்கிறார்கள். இவர் அதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.. முதல் ஏழு பாடல்களும் கவர்னருடைய மனைவியின் முலைகளின் அழகைப்பற்றி பாடப்பட்டியிருக்கிறது. சபையில் அதைப்பாடினால் துரை என்னதான் செய்ய மாட்டார்? பதறிப்போய் வெட்டிட்டு உ.வே.சா வேறு ஒன்று சொந்தமாக எழுதுகிறார். அதைத்தான் அன்று படித்தார்கள்
மாம்பழக்கவிசிங்கராயர் செய்தது நம் மரபுசார்ந்த ஒரு செயல். திருமலைநாயக்கன் முன்னால் பாடவேண்டியதை கவர்னர் முன்னால் பாடிவிட்டார், அவ்வளவுதான். மரபில் அரசியின் ஸ்தனங்களை பாடும் ஒரு வழக்கம் இருந்திருக்கிறது. மாம்பழக்கவிராயருக்கு அவர் என்ன தப்பு செய்தார் என்று தெரியாது. நவீன இலக்கியத்தை நோக்கி காலம் வந்துவிட்டது என்பதை கவிராயர்கள் உணராமலே இருந்துவிட்டார்கள். முன்னழகுகளின் காலம் பின்னழகுகளின் காலம், கூந்தல்களின் இதழ்களின் கண்களின் காலம் முடிந்து போய் வேறு காலம் வந்துவிட்டது. அந்தக் காலகட்டத்தை தான் நாம் நவீன காலகட்டம் என்று சொல்கிறோம்.
இந்த காலகட்டத்தின் தனிச்சிறப்பு என்ன என்று கேட்டால் முதல் தனிச்சிறப்பு என்பது கவிதை என்பது நேரடியான அனுபவ உணர்ச்சி வெளிப்பாடுக்கு அப்பால் போய் ஓர் அறிவார்ந்த தன்மையின், ஒரு நுண்ணுணர்வின் வெளிபாடாக மாறியது என்பதே. அதை நீங்கள் பாரதியில் பார்க்கலாம். அதாவது நவீனக் கவிதைக்கு சாராம்சமாக இருக்கும் நவீன எண்ணம், அதாவது ‘modern idea’ அவரிடம் ஏற்கனவே இருந்தது.
இன்றைக்கும் இந்த வித்தியாசத்தை நீங்கள் பார்க்கலாம். மரபுக்கவிதை எழுதும் ஒருவர் அறிவுஜீவியாக இருக்கவேண்டிய அவசியம் கிடையாது. அப்பாவியாகக்கூட இருக்கலாம். அப்படித்தான் இருக்கிறார்கள். ஆனால் புதுக்கவிதை எழுதும் ஒருவர் பொருட்படுத்தக்கூடிய இரண்டு கவிதைகளை எழுதினால்கூட அவர் அறிவுஜீவிதான். அப்படி இல்லாமல் அந்தக் கவிதையை எழுத முடியாது.
நவீனக் கவிஞனுக்கு அனைத்தின்மீதும் ஒரு ஆர்வம் இருக்கவேண்டும். அரசியல் பிரக்ஞை வேண்டும். நவீன அறிவியலும் அறிமுகம் இருக்கவேண்டும். ஒரு நவீன அறிவுஜீவிதான் நவீன கவிதை எழுத முடியும். ஆனால் மரபுக்கவிதை எழுத ஓரளவுக்கு அழகனுபவம் இருந்தாலே போதும். வீட்டில் தன்மனைவி அழகாக இருக்கிறாள் என்று தோன்றினாலே போதும் நல்ல கவிதை எழுதிவிடலாம். ஆனால் புதுக்கவிதைக்கு அது போதாது.
பாரதி அவருடைய உரைநடையில் ஒரு வரி எழுதுகிறார்.
 மண்ணில் வேலி போடலாம் வானத்தில் வேலி போடலாமா என்றார் ராமகிருஷ்ண முனி. போடலாம் மண்ணிலும் வானம் தானே நிரம்பி இருக்கிறது. மண்ணைக் கட்டினால் வானத்தைக் கட்டியது ஆகாதா?
இது ஒரு கட்டுரையின் முதல் பத்தி. இரண்டு வருடம் கழிந்து ஒரு கவிதை எழுதினார்.
  கண்ணில் தெரியும் பொருளினை கைகள் கவர்ந்திட மாட்டாவா – அட
  
  
   மண்ணில் தெரியுது வானம் அது நம் வசப்படலாகாதா?
அதேதான். அந்தக் கருத்திலிருந்து இந்தக் கவிதைக்கு வரும் ஒரு தாவல் இருக்கிறதே, அது தான் நவீன கவிதை. மண்ணில் வேலி போடலாம், வானத்தில் வேலி போட முடியுமா என்றார் ராமகிருஷ்ண முனி. போடலாம். மண்ணிலும் வானம் தானே நிரம்பியிருக்கிறது. இது Poetic statement .கண்ணில் தெரியும் பொருளினை கைகள் கவர்ந்திட மாட்டாவா – அட
மண்ணில் தெரியுது வானம் அது நம் வசப்படலாகாதா- என்பது prose poetry . இங்கெ உரைநடை கிட்டத்தட்ட கவிதைக்கு பக்கத்தில் இருக்கிறது. அதில் பழுத்து இதில் கவிதை என உருவாகிவருகிறது.
மாமரத்தின் எந்தப்பகுதியை எடுத்து வாயில் போட்டாலும் ஒரு மாங்காய் மணம் வரத்தான் செய்யும். இலையில், தளிரில் எல்லாம் இருக்கிறது அந்த மணம். அது கனிந்துதான் மாம்பழமாக ஆகிறது. உரைநடை என்பது ஒரு சமூகத்தின் ஒட்டு மொத்த சிந்தனை .அதன் கனிந்த ஒரு பகுதிதான் நவீன கவிதை. இந்த ஒரு மாற்றத்தை நிகழ்த்தக்கூடிய ஒருவனைத்தான் நவீனக் கவிஞன் என்று சொல்கிறோம்.
இரண்டாவதாக முக்கியமான ஒரு வேறுபாடு இருக்கிறது. எஸ்.ரா.பௌண்ட் A Retrospect to Imagism என்னும் முக்கியமான கட்டுரையில் நவீன கவிதையின் இலக்கணங்களை சொல்கிறார். அதை தமிழில் க.நா.சு மொழிபெயர்த்திருக்கிறார். அதுதான் புதுக்கவிதையின் manifesto. அதில் பல விஷயங்களை அவர் சொல்கிறார். முதல்விஷய்ம் ஓசை நயம் என்பதை விட்டு விடலாம். ஏனெனில் அதற்காக வலிந்து சொற்களைச் சுழற்றவேண்டியிருக்கும். சுருக்கமாக சொன்னால் போதும் . இரண்டாவதாக, அனைவருக்குமான பேச்சுமொழியில் எழுதலாம். கவிதைக்கு என்று ஒரு தனி மொழியில் எழுதவேண்டிய அவசியமில்லை.
மூன்றாவதாக மிக முக்கியமான விதி. அலங்காரங்கள் , அணிகள் ஆகியவற்றை களைந்துவிடலாம் என்று எஸ்ரா பவுண்ட் சொல்கிறார். இதன் முக்கியத்துவம் என்ன என்பது தமிழாசிரியர்களுக்கு தெரிவதில்லை. முகம் என்று சொன்னால் அது கவிதையாகத் தெரிவதில்லை. மலர் முகம் என்று சொல்லவேண்டும். நெற்றி என்று சொன்னால் சரியாக இல்லை. நறுநெற்றி என்று இருக்கவேண்டும். ஏனென்றால் அணிகளே பழைய இலக்கியம்.
ராமேஸ்வரம் கோபுரத்தைப் பார்த்திருக்கிறீர்களா சிற்பம் இல்லாத இடமே இருக்காது. அங்கு தூணில் ஆறடி உயரத்தில் ஒரு சிலை இருக்கிறது. அதன் கையில் ஒரு கட்டாரி இருக்கிறது. அந்தக் கட்டாரியின் பிடியில் சிற்பங்கள் இருக்கின்றன. அதை யார் பார்ப்பார்? பார்க்கவேண்டாம், அது அப்படி பூத்து நிறையும். அதுதான் அதன் அழகியல் , அவ்வளவுதான்.அணிகள் என்பவை பழைய இலக்கியத்தின் உலகப்பார்வை. அதை சம்ஸ்கிருதத்தில் அலங்காரம் என்று சொல்வார்கள். அந்த அழகியல் இங்கு ஓர் உச்சத்தை அடைந்தது. அது வெறும் தொழில்நுட்பம் அல்ல, அதற்குப்பின் ஒரு பெரிய வாழ்க்கைநோக்கு இருந்தது.
இந்த அணிகளை வெறும் அழகுக்காக மட்டுமே பயன்படுத்துவதை முற்றாக தவிர்த்துவிடுவோம் என்கிற பிரகடனத்திலிருந்து தான் புதுக்கவிதை உருவாகியது. அப்படி ஒரு அணியைப் பயன்படுத்தினார்கள் என்றால் அதற்கு குறிப்பாக ஒரு அர்த்தம் இருக்கவேண்டும். ஆகவே தான் பழைய இலக்கியத்தில் உள்ள உவமை, உருவகம், தற்குறிப்பேற்றம் போன்ற அனைத்தையும் நவீன இலக்கியத்தில் பொதுவாக Poetic Image என்று, படிமம் என்ற வார்த்தையை பயன்படுத்தி, சொன்னார்கள். படிமம் என்றால் அதுவும் ஒருவகையில் உவமைதான். ஒரு பழைய கவிஞன் அது உவமைதானே என்றுதான் கேட்பான். உவமைதான், ஆனால் உவமையும் அல்ல.
படிமம் என்பதும் உவமை போல ஒரு காட்சிதான். அர்த்தம் ஏற்றப்பட்ட ஒரு காட்சி. கைவிடு பசுங்கழை என்பது ஒரு உவமைதான். அணிதான். ஆனால் அது நவீனக்கவிதையில் படிமம் ஆக மாறும்போது என்ன ஆகும் என்றால் அது எதைச் சுட்டுகிறதோ அது முழுக்க முழுக்க வாசகனின் கற்பனைக்கு விடப்பட்டிருக்கும்.
 குறவர் எழுப்பிய 
ஒலிக்கு அஞ்சி
காட்டுயானை
கைவிட்ட மூங்கில்
எழுகிறது
மீண்டும்.
அவ்வளவுபோதும் நவீனக்கவிதைக்கு. உதாரணமாக ஒரு குறளைப் பார்ப்பொம்
தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்கு
 கற்றனைத்தூறும் அறிவு
தொட்டு அனைத்து ஊறும் மணற்கேணி என்று மட்டும் எழுதி அடுத்த வரியை வாசகனின் கற்பனைக்கே விட்டால் அது படிமம். அது எதைக் குறிக்கிறது என்கிறதை நீ சொல்ல வேண்டாம், நானே வாசிக்கிறேன் என்று நவீன வாசகன் சொல்கிறான். ஒரு காட்சியை மட்டும் வாசகனிடம் கொடு. அதில் உணர்ச்சியும் பொருளும் தொனிக்கவை. அது முழுக்க முழுக்க வாசகனுடைய ரசனையினால் வளர்ந்து பொருள்கொள்ளட்டும். அதுவே அது படிமம். ஆம், சங்கப்பாடல் முதல் இன்றுவரை இப்படி இது உருவாகிவந்த ஒரு பாதை உள்ளது. அதைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறேன்
பிச்சமூர்த்தி ஆரம்பகால கவிதைகளில் படிமமாக ஆகாத உருவகக்காட்சிகளை எழுதியிருப்பார். ’படிகக்குளத்தோரம் கொக்கு’ .கொக்கு குளத்தோரம் உட்கார்ந்திருக்கிறது. செங்கால், கழுத்துநீளம். நாம் பாக்கும்போது கீழ தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறது. அதிலும் அதன் பிம்பம் தெரிகிறது. எப்போதோ ஒருமுறைதான் ஒரு மீன் கிடைக்கிறது. இவர் இப்படி முடிக்கிறார்.
  வாழ்வும் குளம் 
  
  
  செயலும் கலை 
  
  
  நாமும் கொக்கு. 
  
  
  சிலவேளை மீனழகு 
  
  
  பலவேளை நிழலகா? 
  
  
  எதுவாயினென்ன? 
  
  
  தவறாது குளப்பரப்பில் 
  
  
  நம்மழகு _ 
  
  
  தெரிவதே போதாதா?
அதாவது அவர் சொல்வது உவமைதான். அது படிமம் என்னும் வடிவம் உருவாகி வருவதன் தொடக்கம். ஆனால் ‘நம் பிம்பத்தை நாமே பார்த்து உட்கார்ந்தாலே போதாதா?’ என்னும் விளக்கம் நவீனக் கவிஞனால் அளிக்கப்படுவதல்ல. அந்த பிம்பத்தை மட்டும் எழுதி முடித்துக்கொள்வான். முடிக்கிற இடத்தில் அமைதி இருந்தால் வாசகனின் இடம் பெரிதாகிக்கொன்டே போகிறது.
நவீன கவிதையில் கவிஞனுக்கும் வாசகனுக்குமான உரையாடலுக்கான இடம் விரிந்துகொண்டே போகிறது. சொல் சுருங்க பொருள் விரிகிறது. கவிஞன் ஒரு சின்ன குறிப்பு காட்டும்போதே வாசகன் புரிந்துகொள்கிறான். ஆகவே திரும்ப சங்க காலம் மாதிரியே ஒருகாலம் வந்துவிட்டது. ஒரு குறுகிய வட்டமும் அமைந்துவிட்டது. அதே மாதிரி இன்றைக்கும் அதிக பட்சம் ஐயாயிரம் பேர் மட்டுமே கொண்ட வட்டம்தான். இங்கே நண்பர் இசை இருக்கிறார். அவர் ஒரு கவிதை எழுதினால் சென்னையில் இருக்கும் அவர் நண்பர் இளங்கோ கிருஷ்ணனுக்கு தெரியும். அவர்கள் இரண்டு பேரும் தான் படித்துக்கொண்டு ரசிப்பார்கள். லிபி ஆரண்யாவுக்கு சொல்வார்கள்.
இன்று உலகமெங்கும் இப்படி தான் ஒரு சின்ன வட்டத்துக்குள் நவீனக்கவிதை இருக்கிறது. நீங்கள் அந்த வட்டத்துக்குள் போகவேண்டும். கிட்டத்தட்ட ஐஐடிக்கு நுழைவுத்தேர்வு அளவுக்கு கஷ்டமானது.. இப்படி உலகமெங்கும் நுண்பொருள் கொள்ளும் சிறுவட்டங்களால் ஆனதாக மாறிவிட்டது கவிதை. அவர்களுக்குள்தான் படிமம் என்பது செறிவாகி பெரும்பாலும் நுட்பமாக உணர்த்தி மட்டுமே நிற்பதாகத் திகழ்கிறது.
சிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு
 காற்றின் தீராத பக்கங்களில்
 ஒருபறவையின் வாழ்க்கையை எழுதிச் செல்கிறது
நான் இங்கு ஒரு கொள்கையை சொல்வதற்காகத்தான் மிகப் பிரபலமான கவிதையைச் சொல்கிறேன். இதிலுள்ளது ஒரு படிமம். அர்த்தம் குறிப்பாலுணர்த்தப்பட்ட ஒரு காட்சி மட்டும்தான் இது. பழைய கவிதைகள் எனில் ‘அதைப்போல’ என்று ஆரம்பித்து மேலே சொல்லும் கருத்து தேவை. இது எதைக் குறிக்கிறது? பறவை பறந்து போய்விட்டது.சிறகிலிருந்து ஒரு இறகு உதிரும்போது அப்படி சுழன்று சுழன்று தான் இறங்கும். அது எழுதுவது போல் இருக்கிறது. அலையலையாக அதன் அடியில் புரண்டு வரும் தீராத காற்றுப் பக்கங்களில் அது எதையோ எழுதிக்கொண்டிருக்கிறது. எதை எழுதுகிறது? அந்தப்பறவையின் வாழ்க்கையை எழுதிப்போகிறது. காவியம் என்று இந்தக் கவிதைக்கு பிரமிள் தலைப்பு வைக்கின்றார். அச்சிறகு அந்தப்பறவையின் காவியம். அப்பறவை விட்டுச்செல்லும் அறிவிப்பு. அப்பறவையாக இங்கே எஞ்சிநிற்பது அது.
நவீன கவிதையில் இரண்டு வகையான கூறுமுறை இருக்கிறது. ஒன்று படிமம் இன்னொன்று கவியுருவகம். Metaphor என்று சொல்வார்கள். படிமம் என்பதன் முதல் இலக்கணமே அது கண்ணுக்குத் தெரியக்கூடிய ஒரு காட்சியாக இருக்கவேண்டுமென்பது தான். பிரமிளின் கவிதை ஒரு படிமம். நீங்கள் படித்த உடனே அந்த காட்சி உங்கள் கற்பனையில் வருமென்றால்தான் அது படிமம். அந்தப்படிமம் மூளைசார்ந்ததாக இருக்கும்பட்சத்தில் அது உருவகமாக மாறிவிடும். அது ஏதோ ஒரு நோக்கத்துக்ககா உருவாக்கியிருப்பார்கள் , அந்த நம் எண்ணத்திலும் நோக்கம் வந்துவிடும். கவியுஉருவகம் என்பது நவீனக்கவிதையில் இரண்டாம் பட்சமான விஷ்யமாக தான் கருதப்படுகிறது. நவீனக் கவிதை பெருமளவுக்கு படிமம் வழியாக தொடர்புறுத்தக்கூடிய ஒன்றாக இருக்கிறது இன்று.
தேவதேவனுடைய ஒரு கவிதையை நினைவுகூர்கிறேன்.
  அசையும்போது தோணி அசையாத போது தீவு
  
  
   தோணிக்கும் தீவுக்கும் நடுவே
  
  
   மின்னற்பொழுதே தூரம்
இது படிமத்தின் அடுத்த கட்டம். படிமத்தை பின்னி ஒரு பரப்பை உருவாக்கிக்காட்டுகிறது இக்கவிதை. இது உறைந்த படிமம் அல்ல. ஒரு நதியில் இருக்கிறது தோணி .அசையாத போது அது ஒரு தீவு. அசையும் கணம் அது ஒரு தோணி. அந்த தீவுக்கும் இந்த தோணிக்கும் நடுவே மின்னற் பொழுதே தூரம். ஒரு கணம் தான் ஆனால் பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர் கடந்து போக முடியும். இதில் நதி,படகு ஒரு படிமம். தோணி தீவு இன்னொரு படிமம். மின்னல் இன்னொரு படிமம். மூன்று படிமங்களை இணைத்து ஒரு நெசவு. ஒரு விளையாட்டு. படிமத்தைப் படிமப்பின்னலாக்கிவிட்டது இது. இப்படித்தான் நவீன கவிதையின் பரிணாமம் நிகழ்ந்தது.
கவிதையின் சமகாலம் என்பது என்ன? கவிஞர்கள் எஸ்ரா பவுண்ட் காலத்தில் ஆரம்பித்து படிமங்களில் திளைத்து படிமங்களில் புழங்கி கிட்டத்தட்ட ரூபாய் நோட்டுக்குச் சமானமாக படிமங்களை வைத்து புழங்க ஆரம்பித்த ஒரு காலம் இருந்தது. அப்போதுதான் உலக அளவில் ஒரு பெரிய அசம்பாவிதம் நடந்தது. எம்.டிவின்னு ஒன்று வந்தது. ஒரு நாளைக்கு முப்பதாயிரம் படிமங்களை கொட்ட ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு நல்ல கவிஞன் இரவுபகலாக எழுதறவிட நல்ல படிமங்களை காட்சியாக உருவாக்கினார்கள் தொலைக்காட்சியாளர்கள்.
விளைவாக உலக அளவில் கிட்டத்தட்ட ஒரு ஐந்தாறு வருஷத்தில் படிமம் என்பதே இல்லாமல் போய்விட்டது. படிமமற்ற கவிதை அல்லது Plain poetry உருவாகி வந்தது. அதில் இரண்டு வகை இருக்கிறது .ஒன்று குறுஞ்சித்தரிப்பு. ஒரு சின்ன நிகழ்ச்சியை மட்டும் காட்டுவது. நண்பர் இசை எழுதும் பெரும்பாலான கவிதைகள் அப்படிப்பட்டவை. ஒரு காட்சியை மட்டும் சொல்லக்கூடியவை.ஒரு சந்தப்பத்தை மட்டும் சொல்லக்கூடியவை. அது படிமமா என்று கேட்டால் படிமம் மாதிரிதான் . ஆனால் படிமம் மட்டும் அல்ல. இன்றைய பொதுப்போக்கு இதுதான். ஒரு பைத்தியம் அதிகாலையில் சூடான டீயை வாங்கிக்கொண்டுசெல்கிறது. அந்தக்காட்சி மட்டும்தான் கவிதை. கவிஞன் அந்த டீ சூடாறாமல் இருக்கவேண்டுமென வேண்டிக்கொள்கிறான். அவ்வளவுதன. மீண்டும் சங்ககாலம். மீண்டும் வெறும்காட்சி!
ஆக கைவிடு பசுங்கழையிலிருந்து இன்றைய கவிதை வரைக்கும் ஒரு நீண்ட பரிணாமக்கோடு இருக்கிறது நண்பர்களே.
நன்றி, வணக்கம்.
[ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அமைப்பின் சார்பில் ஆகஸ்ட் 16, 2015 அன்று ரசனை முற்றம் என்னும் பெயரில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் ஆற்றப்பட்ட உரை ]
 
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
முத்து – கடிதங்கள்
ஜெ,
“நா.முத்துக்குமாரை சினிமா விழுங்கிவிடாமல் இருக்க ஸ்ரீரங்கநாதரைப் பிரார்த்திக்கிறேன்…” என்று சுஜாதா சொன்னதாக வாசித்தேன். உண்மையில் அதுதான் நிகழ்ந்தது என நினைக்கிறேன். வருத்தமாக இருந்தது
செல்வராஜ்
***
அன்புள்ள செல்வராஜ்
இறுதியாகச் சந்தித்தபோது இதைத்தான் நா.முத்துக்குமாரிடம் பேசினேன். மிகவும் கடுமையான மொழியில். உண்மையில் சினிமா இருவகையில் விழுங்குகிறது, வெற்றிவழியாக, தோல்வி வழியாக. தோல்வி கசப்பை நிறைக்கிறது. எதிர்மறை மனநிலையைக் கொண்டுவருகிறது. வேறு எதிலும் சென்று வெற்றிபெற முடியாமலாக்குகிறது. அப்படிப் பலரைக் கண்டிருக்கிறேன்
வெற்றி நேரத்தை முழுமையாகப் பறித்துக்கொண்டுவிடுகிறது. உடலை எவ்வகையிலும் பேண முடியமாலாக்குகிறது. குறிப்பாக மிக அதிகமாகப் படங்கள் தயாரிக்கப்படும், இரவுபகலாக படங்கள் முடிக்கப்படும் மலையாளத்தில் இச்சிக்கல் மிக அதிகம். என் நண்பர்கள் பலர் அந்நிலையில் உள்ளனர்.
மனித உடலில் தூக்கம், உணவு இரண்டுமே சீராக அமைந்தாகவேண்டும். இளமையில் அதனுடன் விளையாடலாம். நானும் விளையாடியிருக்கிறேன். அதற்கு ஓர் எல்லை உண்டு. அதற்கான நேரக்கணக்கை அமைத்துக்கொள்வதை உடல் கைவிட்டதென்றால் பிறகு அனைத்துமே சிக்கலாகிவிடும். இன்று என் மகனிடம் அதை மேலும் மேலும் அழுத்திச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
சினிமாப் பாடலாசிரியர்கள் ஒரு தனி உலகில் வாழநேர்கிறது. பெரும்பாலும் படங்களுக்கான பாடல்கள் அமைக்கப்படுவதும் பதிவுசெய்யப்படுவதும் இரவில்தான் என்றாகிவிட்டிருக்கிறது. நா.முத்துக்குமார் மாலையில் எழும் வாழ்க்கைக்குச் செல்லவேண்டியிருந்தது. காலையில் தூங்குவதும் எப்போதும் சாத்தியமல்ல. அதிலிருந்து ஒவ்வொன்றாக அனைத்துக் கட்டாயங்களும் உருவாகின்றன.
உண்மையில் இதிலிருந்து முழுமையாகத் தப்ப முடியாது. மூர்க்கமாக ஓர் ஒழுங்கை நமக்கென அமைத்துக்கொள்ளலாம். ஆனால் இனிய பழக்கவழக்கங்கள் கொண்டவர்களுக்கு அது எளிதல்ல. உணர்வுநிலைகளின் சிக்கல்கள்கொண்டவர்களுக்கு இன்னும் கடினம். இதை தமிழில் நான் முக்கியமானவர்கள் என நினைக்கும் பல சினிமாக்கலைஞர்களை நோக்கிச் சொல்ல விழைகிறேன். தூக்கம் உணவு இரண்டிலும் ஒழுங்கை ஓரளவுக்குமேல் மீறவேண்டாம். உடல் மிகமிக நொய்மையான ஒன்று
முத்துவை சினிமா விழுங்கியது என்று சொல்வதற்கான காரணங்களில் பிறிதொன்று, அவர் எழுதுவதாக இருந்த சுயசரிதை நாவல். அதன் கட்டமைப்பு தெரிந்தவர்களுக்கு எழுதப்பட்டிருந்தால் தமிழில் முக்கியமான ஒரு படைப்பாக இருந்திருக்கும் என்னும் எண்ணம் இருக்கும்.
ஜெ
***
இனிய ஜெயம்,
பாடலாசிரியர் நா. முத்துக்குமார் அவர்களை, சில முறை பவாவின் இல்லத்தில் சந்தித்து இருக்கிறேன். முதல் சந்திப்பு வெண் முரசு ப்ரமோ காணொளி எடுப்பதற்காக.
பெரும்பாலானோர் போல ஜெயமோகனின் கருத்தியல் தளத்துக்கு மாற்றானவராகவே இருந்தார். அடுத்தடுத்த சந்திப்புகளிலேயே இலகுவாக பேச முடிந்தது. தீவிர இலக்கிய வாசிப்பாளர். அவரது இலக்கிய ஈடுபாடே திரைத் துறையில் அவரது பாடல்களின் தனித்துவமும் சாரமுமான உணர்ச்சிகரத்துக்கு வழி வகுத்தது என எண்ணுகிறேன்.
நான் அவரைக் கண்ட சில சந்திப்புகளில், அவர் புகையிலும், மதுவிலும், அளவற்ற ஈடுபாடு கொண்டவராகவே இருந்தார்.
அவரது குடும்பத்தை கண்ட சில தினங்களில்,அவரது மனைவியும் மைந்தனும், அவர் மேல் வைத்திருக்கும் பிரியமும், அவர் அவர்கள் மேல் கொண்ட பிரியமும் கண்டு விதிர்த்துப் போனேன். ஒரே சொல்லில் சொல்ல வேண்டும் எனில், காட்டுத் தனமான பிரியம். கோடி கோடி தந்தையர் கொண்ட பிள்ளைப் பாசத்தை ஒருவனே ஏந்தி, அனைத்தையும் மைந்தன் மேல் பொழிதை, அத்தினங்களில் கண்டேன்.
ஒரு முறை அவர் ஒரு விருந்தளித்தார். (அன்று அவருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டிருந்தது) அவரே எனக்கு பரிமாறியபடி ” தண்ணி அடிக்க மாட்ட, தம்மடிக்க மாட்ட, 24 மணி நேரமும் புத்தகம், அநியாயத்துக்கு ஜெயமோகன் சிஷ்யனா இருக்கியேயா” என்று சிரித்தவாறு ” இப்படித்தான் ஒரு தடவை எங்க வாத்தியார் பாலு… என துவங்கி அப்படியே நிறுத்தினார், முகம் சிந்தனையில் ஆழ, விழி எங்கோ நிலைத்தது. அன்றிரவு அவர் எய்திய மது , இப்போது நினைத்தாலும் அச்சம் அளிக்கிறது.
கடலூர் சீனு
***
மோகன்,
இன்னும் குற்றாலத்தில்தான் இருக்கிறேன். நீங்கள் நேற்று முத்துக்குமாரைப் பற்றிப் பேசும் போது கவனமாக அதிலிருந்து விலகி வேறு பேச்சு பேசிக் கொண்டிருந்ததை கவனித்தீர்களோ, என்னவோ! இரண்டு நாட்களாக ஏதேதோ செய்து பார்க்கிறேன். முத்துவைப் பற்றிய நினைவுகள் சுற்றி சுற்றி வந்துக் கலங்கடிக்கின்றன.
கூடவே கிடந்த பயல். பத்து வருடங்களாக முதல் இடத்தில், பிஸியாக இருந்தான். ஆனாலும் அவனது பிறந்த நாளுக்கு ஃபோன் பண்ணி பேசுவான். அதற்கு முன் வாத்தியார், சீமான், மற்றும் எனக்கு தனித்தனியாக ஸ்வீட் பாக்ஸ் வாங்கி வந்து காலில் விழுந்து ஆசி வாங்கிச் செல்வான். இந்த பிறந்த நாளுக்கும் ஃபோன் பண்ணிப் பேசினான். அதுதான் கடைசிப் பேச்சு.
‘உபசாரம் படிச்சேண்ணே. ஏற்கனவே படிச்ச கட்டுரைகள்தான். ஆனாலும் புஸ்தகத்துல படிக்கும் போது அத்தனை சுவாரஸ்யம். வீட்ல ரெஸ்ட்ல இருக்கேன். உங்க புஸ்தகம் எனக்கு எவ்வளவு உற்சாகத்தை தந்தது தெரியுமா? எப்பேர்ப்பட்ட சோர்வையும் உங்க எழுத்து போக்கிடும்ணே. திருநவேலி ஹோட்டல்லல்லாம் போயி சாப்பிட்டிருக்கேந்தான். ஆனாலும் நீங்க எழுதிப் படிக்கும் போது உங்கக் கூட வந்து சாப்பிடணும்னு ஆசையா இருக்குண்ணே. சாலிகிராமம் பக்கம் வரும் போது உங்களை வந்து பாக்கறேன்.
அடுத்த படத்துல புதுமை பண்றேன்னு நாஞ்சில் நாடன், ராமகிருஷ்ணன், ஜெயமோகனையெல்லாம் பாட்டெழுத வச்சீங்கன்னா அவ்வளவுதான். எல்லா பாட்டையும் தம்பிதான் எழுதுவேன். மீறி ஏதாவது பண்ணுனீங்க. வீட்டுக்கு வந்து அண்ணிக்கிட்ட சொல்லி பெரிய சண்டை போடுவேன்’.
இப்படி பேசியவனை எப்படி மறப்பேன்! கண்களை மூடினால் இந்தக் குரல்தான் ஒலிக்கிறது. சற்று நேரத்துக்கு முன் தனியாக அமர்ந்து வாய்விட்டு கதறி அழுது தீர்த்தேன். வேறென்ன செய்வது?
சுகா
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 31
[ 5 ]
அங்கிரீசரின் மைந்தர் கர்கரின் கொடிவழிவந்த வாசக்னு முனிவருக்கு ஒரு மகள் இருந்தாள். அவளுக்கு தன் முன்னோரின் பெயரைக்கொண்டு கார்கி என்று பெயரிட்டார் வாசக்னு. அன்னையின் கருவிலிருந்து அவள் வெளிவந்ததுமே கருவறைக்குள் எழுந்த பெண்களின் சேர்ந்தொலி மகிழ்வாலானதல்ல என்று அவர் உணர்ந்தார். கண்களை மூடி தன் அகவிழியால் அவர் அக்குழவியை பார்த்துவிட்டார். எனவே வளைந்த முதுகும் குறுகிய கைகளும் அவரைவிதைபோல நீண்ட தலையுமாக கொண்டுவந்து காட்டப்பட்ட பெண்குழந்தையைக் கண்டு அவர் வியப்புறவில்லை. அதை அவர் நா அறியாமல் “அறிவுப்புகழ் கொள்க!” என வாழ்த்தியது.
அவ்வாறு பெண்குழந்தைகளை வாழ்த்தும் வழக்கம் இல்லை. இனியவாழ்வும், செல்வமும் பெருக என்று மட்டுமே வாழ்த்துவது வழக்கம். முனிமைந்தரை வாழ்த்தும் அச்சொல் தன் வாயில் ஏன் எழுந்தது என அவர் எண்ணி வியந்தபோது அக்குழவியின் அழகின்மையினால்தான் அவ்வாறு தோன்றியது என்று கண்டடைந்தார். ஆகவே அக்குழந்தை மொழியறிந்தபோது அதனிடம் சொன்னார் ‘நீ பிறப்பிலேயே விடுதலைகொண்டவள், மகளே. பெண்கள் தங்கள் அழகிய உடலின் சிறையிலிருந்து வெளிவருவது கடுந்தவத்தால் அன்றி அரிது. உடலழகு அவர்களின் உள்ளமென்று ஆகிறது. சித்தப்பெருவெளியை நிரப்பி நீர்ப்பாசி என படர்கிறது. வான் விரிந்து நின்றாலும் தன் முகத்தை அதில் நோக்கி அவள் அணிகொள்கிறாள்.”
“அழகுடைய பெண்கள் தெய்வங்களால் கைபற்றப்பட்டவர்கள். அவள் விழிகளை ஆதித்யர்களும், குரலை கந்தர்வர்களும், முலைகளை தேவர்களும், கருவறையை பூமாதேவியும் ஆள்கிறார்கள். மகளே, அவள் நெஞ்சை நூற்றெட்டு நாகங்கள் ஆள்கின்றன. அழகில்லாத பெண் அத்தெய்வங்களில் இருந்து விடுதலைபெற்றவள். நீ எவரென்றும் உன் பாதை எதுவென்றும் நீயே முடிவுசெய்யலாகும். அந்நல்வாய்ப்பு உனக்கு அமைந்தமையால் நீ பிறந்து வந்த கணமே நீ அறிவுப்புகழ் அமையவேண்டுமென உன் தந்தையாகிய நான் வாழ்த்தினேன். அது உன் இலக்காகுக!” என்றார் வாசக்னு.
தன் மகளுக்கு தொல்வேதமுனிவர் தீர்க்கதமஸுக்கு காக்ஷிவதியில் பிறந்த கோஷையின் கதையை அவர் சொன்னார். இளமையிலேயே கைகால்கள் குறுகி அவள் பிறந்தாள். அவள் அன்னையும் கைதொட்டு எடுத்து அவளை முலையூட்டத்தயங்கினாள். கருகிய சுள்ளிபோலிருந்த அவளை எடுத்து தன் முகத்தோடு சேர்த்து தீர்க்கதமஸ் சொன்னார், மகளே உனக்கு வேதமே உலகாகுக! அங்கு நீ ஒளிகொள்வாய்!
கோஷை வேதங்களை முழுமையாக கற்றுத்தேர்ந்தாள். அஸ்வினிதேவர்களை அவள் தன் வேதச்சொல்லால் அருகணையச்செய்தாள். நிழலுருவும் ஒளிவிட எழுந்த இரட்டையர் அவளிடம் “நீ விழைவதென்ன?” என்றனர். அவள் ஆயிரம் விழைவுகொண்டிருந்தாள். நல்லுடல், நற்காதல், இனிய மைந்தர், இல்லம். ஆனால் அவள் அத்தருணத்தில் “மெய்மை” என்றே கோரினாள். “ஆம், அது அளிக்கப்பட்டது” என்று சொல்லி மறைந்தனர். அவள் உடல் மின்மினி போல ஒளிகொண்டதாக ஆயிற்று.
சொல்திகழத் தொடங்கிய் இளநாவால் வேதங்களை கற்று ஓதத்தொடங்கினாள் கார்கி.. நால்வேதங்களையும் கற்று நிறைந்தாள். வேதச்சொல்லுசாவுவதில் அவளுக்கு நிகரான எவரும் விதேக நாட்டிலேயே இல்லை என்று வைதிகர் சொன்னார்கள். கோஷையின் குரல் என ரிக்வேதத்தில் எஞ்சிய இருபாடல்களை அவள் தன் தனிவேதமாகக் கொண்டிருந்தாள். அவளுக்குள் மூச்சென எண்ணங்களை பின்னிச் சுழன்றபடி அது ஓடிக்கொண்டிருந்தது.
பன்னிரு வயதில் அவள் மிதிலையில் ஜனகரின் அவையில் நிகழ்ந்த வேதச்சொல்லாய்வுக்கு வந்தபோது அவளுடைய எட்டு மாணவர்கள் அவளை பட்டுமஞ்சலில் தூக்கி வந்தார்கள். அதிலிருந்து ஆமைபோல தன் பெரிய கூனை தூக்கியபடி வளைந்த கால்களை எடுத்துவைத்து குறுகிய கால்களை ஆட்டியபடி அவள் நடந்துவந்தபோது விழிகள் வியப்புடன் அவளை நோக்கின. அவள் விழிகளை அறிவதேயில்லை என்று அவர்கள் உணர்ந்தனர். நோக்கப்படும்போது பெண்களின் உடலில் நிகழும் எந்த மாற்றமும் அவளில் எழவில்லை.
ஜனகரின் அவையில் முதலில் அவள் குரல் எழுந்தபோது அதிலிருந்த தூய ஒலி பிறரை அமைதியடையச்செய்தது. வேதம் தனக்குரிய மானுடக்குரலை தெரிவுசெய்துவிட்டது என்றார் ஜனகர். அவையாடலில் மெல்லமெல்ல அனைவரும் சொல்லடங்கி ஆசிரியர் முன் மாணவர்கள் என்றாயினர். அவள் திரும்பிச்செல்லும்போது முதுவைதிகர் பன்னிருவர் அவள் உடைமைகளை எடுத்தபடி அவள்பின் பணிந்து சென்றனர். அவள் ஏறிய பல்லக்கை அவர்கள் சுமந்து நகர் எல்லைவரை கொண்டுசென்றனர். அவள் குடிலுக்கு வெளியே எந்நேரமும் அவள் வெளிவரும் தருணத்தைக் காத்து நின்றிருந்தனர் மாணவர்.
“யாழ் ஏன் வளைந்துள்ளது என இன்று கண்டறிந்தேன்” என்றார் பெருவைதிகரான சபரர். “நிமிர்வென்பது பிறிதொன்றால் வெல்லப்படாதிருத்தல். உடலென்று அமைந்த அன்னத்தை வென்றிருக்கிறது வேதம். வேள்வியில் எரிகுளத்தில் அனல்பட்டு உருகி வளையும் விறகு தானும் அனலாகிக்கொண்டிருக்கிறது.” கார்கி விதேகத்தின் வேதச்செழுமையின் உச்சம் என்று சூதர்களால் பாடப்பட்டாள். அவள் காலடியில் அமர தென்னக நாடுகளில் இருந்தெல்லாம் நெடுநாட்கள் நடந்து வந்தணைந்தனர் வேதவிழைவோர்.
ஜனகரின் அமைச்சரான மித்ரரின் மகள் சுலஃபை தன் தோழியருடன் நீர்விளையாட்டுக்குச் சென்றிருந்தாள். முதிரா இளமையை அடைந்திருந்த அவளும் தோழியரும் கன்னியரென விளைந்த பெண்களின் உடலையும் ஆடைகளையும் பேச்சையும் அசைவுகளையும் கூர்ந்து நோக்கி தங்களுக்குள் பேசிக்கொள்ளும் வழக்கம் கொண்டிருந்தனர். எவர் தோள்கள் பெரியவை, எவர் முலைகள் எழுந்தவை, எவர்குரல் இனியது என அவர்கள் சொல்லாடினர். கன்னியர் ஆண்களை நோக்கி விழிமுனையால் உரைக்கும் சொற்களை அவர்கள் அறிவதற்கு முன்னரே இவர்கள் அறிந்தனர். எந்த அழகியை எவரெல்லாம் விழைகிறார்கள், எவருக்கெல்லாம் அவள் விழிகொடுக்கிறாள், எவரையெல்லாம் அவள் தன் வழிநிறுத்தி ஆடுகிறாள் என்று நீருக்குள் கழுத்தளவு மூழ்கி நின்று நாழிகைபோவதறியாமல் கோழிக்குஞ்சுகள்போல மென்குரலில் பேசி சிரித்துக்கொண்டார்கள்.
நீராடி முடித்து அவள் சோலைவழியாக தோழியருடன் கூவிச்சிரித்தபடி வருகையில் குடில் ஒன்றின்முன் இளைஞர்கள் கூடி நின்றிருப்பதை கண்டாள். அழகுடலும் ஒளிரும் விழிகளும் கொண்டவர்கள் அக்குடில்வாயிலை நோக்கி உணவுக்காக வந்தமர்ந்திருக்கும் பறவைகள்போல காத்து நின்றனர். “அவர்கள் எவரைக் காத்து நின்றிருக்கிறார்கள்?” என்று அவள் அங்கிருந்த காவலனிடம் கேட்டாள். “வேதப்பேரறிவரான கார்கிதேவிக்காக அவர்கள் நின்றிருக்கிறார்கள். அவர்களில் எவரை அவர் ஏற்பார் என்று தெரியாதனனால் தவிப்புகொண்டிருக்கிறார்கள்” என்றான் அவன்.
அவள் தன் தோழியருடன் அங்கே சென்று அந்த முற்றத்தில் தானும் நின்றாள். அங்கிருந்த இளையோர் எவருமே அவளையோ தோழியரையோ நோக்கவில்லை. நெடுநேரம் கடந்து கதவு மெல்லத்திறந்து ஒரு மாணவன் வெளிவந்து கார்கிதேவியின் வரவை அறிவித்தான். இரு மாணவர் தொடர வெளிவந்த கூனுடல் பெண்ணைக் கண்டு திகைத்து சுலஃபை பின்னடைந்தாள். அவள் உடல் அறியாது நடுங்கிக்கொண்டிருந்தது. அக்கூனுடலியை நோக்கி சென்ற இளைஞர்கள் அவள் காலடியில் பணிந்து “கல்வியை கொடையளியுங்கள், ஆசிரியரே” என்று இறைஞ்சினர். அவள் அவர்களின் தலைமேல் கைவைத்து வாழ்த்தினாள்.
திரும்பி ஓடி தன் படுக்கையறைக்குள் சென்று ஒடுங்கிக்கொண்டாள் சுலஃபை. இரவெல்லாம் எண்ணம் ஒழுங்குறாது தவித்துக்கொண்டிருந்தாள். மறுநாள் துயிலின்மையின் மயக்குடன் சோர்ந்து கிடந்தாள். அன்றிரவு அனைத்தையும் மறந்து துயின்றாள். மறுநாள் தெளிவுடன் விழித்து அக்கூனுடலை தன் எண்ணங்களிலிருந்து முழுமையாகவே தவிர்த்து நாள்கடத்தினாள். இசைகேட்டாள். நூல்பயின்றாள். மலர்த்தோட்டத்தில் பந்தாடினாள். அன்றிரவு துயில்கையில் ஒரு கனவெழுந்தது. அதில் அவள் கூனுடலுடன் ஒரு பீடத்தில் அமர்ந்து சுவடி நோக்கிக்கொண்டிருந்தாள்.
திகைத்து எழுந்து அமர்ந்து உடல்நடுங்கி வியர்வைகுளிர்ந்தாள். நெஞ்சைத் தொட்டபடி கண்ணீர்விட்டாள். எவரிடம் அதை பகிர்வதென்றே அறியாமல் தவித்தலைந்தாள். மறக்கவும் கடக்கவும் முயல்கையில் பெரிதென எழுந்தது அவ்வெண்ணம். ஒரு கட்டத்தில் ஓடிச்சோர்ந்து களைத்த முயல் சீறித்திரும்புவதுபோல எதிர்நின்று அதை சந்தித்தேயாகவேண்டும் என அவள் முடிவுசெய்தாள். “ஏன் நான் அஞ்சுகிறேன்?” என கேட்டுக்கொண்டாள். “எதை வெறுக்கிறேன்?” அவ்வண்ணம் ஒரு வினாவாக அனைத்து அலைக்கழிப்புகளையும் தொகுத்துக்கொண்டதுமே நுரை நீர்ப்படலமாக சுருங்கியழிவதுபோல அது எளிதாகியது.
“என் நினைவறிந்த நாள் முதல் பேரழகி என்றே சொல்லப்பட்டிருக்கிறேன். எந்தையின் விழிகளின் பெருங்காதலையே நான் முதலில் கண்டேன். அதன் ஒளிமுன் நான் வளர்ந்தேன். அழகி அழகி என என்னிடம் சொன்ன விழிகளை மட்டுமே நான் கண்டிருக்கிறேன்” அவள் தன்னிடம் சொல்லிக்கொண்டாள். “ஆகவே அழகே என் தகுதி என்று எண்ணலானேன். அழகு கவர்வதென்பதனால் மேலும் கவர்வதனூடாக மேலும் அழகுகொள்ளலாம் என எண்ணினேன். என்னை அழகுசெய்தேன். அழகிய அசைவுகளை கற்றுக்கொண்டென். இனிய நடிப்புகளை பழகினேன். பிறரைக் கவர்பவளாக ஆவதற்காகவே என் வாழ்க்கையை இதுவரை அமைத்துக்கொண்டிருக்கிறேன்.”
அவ்வெண்ணம் அவளை எரியச்செய்தது. “தங்களைக் கவர்வதற்காகவே நான் வாழவேண்டுமென எனக்கு ஆணையிட்டவர் எவர்? எனக்கென்று ஏதுமின்றி தொழும்பர்நிலை கொள்வதே என் தகுதி என நான் எவ்வண்ணம் எண்ணலானேன்? ஏவல்தொழில் செய்ய இளமையிலேயே பழக்கப்படுத்தப்படும் விலங்கா நான்?” அவள் அச்சொற்களை தன்மேல் விழுந்த எரிதுளிகளாக உணர்ந்தாள். ஆனால் மீண்டும் மீண்டும் அச்சொற்களை அள்ளி தன்மேல் சொரிந்து அதில் நீராடி மீண்டெழுந்தாள். “நான் விழைவதென்ன என்றுகூட இன்றுவரை நான் அறிந்ததில்லை. என் விழைவையே அறியாத நான் என்று என் மகிழ்வை அறியப்போகிறேன்? என்று என் நிறைவை சென்றடையப்போகிறேன்?”
“அழகிலாத கூனிவடிவம் என்னை ஏன் கூசச்செய்கிறது? ஏனென்றால் நான் இளமைமுதலே அதனிடமிருந்து அஞ்சி விலகி ஓடிவந்துகொண்டிருக்கிறேன். ஒவ்வொரு ஆடையாலும் ஒவ்வொரு அணிப்பொருளாலும் அதை தவிர்த்து முன்செல்கிறேன். ஆனால் நான் செல்லும்பாதையின் இறுதியில் அதுவே எனக்காக காத்திருக்கிறது. எந்தத் தெய்வமும் என்னை அதிலிருந்து காக்கமுடியாது. அழகியின் நரகம் முதுமை. அவளை அது கேலிப்பொருளாக்குகிறது. தன்னைத்தானே வெறுக்கச்செய்கிறது.”
தன் ஆடைகளை அள்ளி முதுகில் கட்டிக்கொண்டு கூனியென மாற்றுருக்கொண்டு ஆடியில் நோக்கினாள். அவள் எண்ணியதுபோல உள்ளம் அஞ்சி விலகவில்லை. அவள் அதை நோக்க நோக்க அது அவளையும் நோக்கியது. எந்த முனிவர் முதுமையை அஞ்சுகிறார்? அவர்களின் சிறப்பு காலத்தால் வளர்வது. அளிக்கும்தோறும் பெருகுவது. அந்தக் கூனுடலி சிற்றகவையிலேயே முனிவராகி முதுமைகொண்டவள் மட்டுமே. அவள் அன்றிரவெல்லாம் அக்கூனுடலை நோக்கிக்கொண்டிருந்தாள். அந்த ஆடிமுன்னால் சரிந்து விழுந்து துயின்று அக்கனவில் கூனுடலியாக தன்னை கண்டாள். அவ்வுடல் அவளுக்கு இயல்பானதாக இருந்தது.
சுலஃபை மறுநாள் காலையில் கிளம்பிச்சென்று கார்கி வாசக்னேயியைக் கண்டு தாள்பணிந்து தன்னை மாணவியாக ஏற்றுக்கொள்ளும்படி கோரினாள். அவளிடம் “நீ இன்னும் முதிரா இளம்பெண். உன் தந்தையிடம் ஒப்புதல் பெற்று வருக!” என்றாள் கார்கி. மித்ரர் தன் மகளின் விழைவைக் கேட்டு அஞ்சினார். “பெண்ணே, நீ அவள் பெற்றிருக்கும் புகழைக்கண்டு வியக்கிறாய். பெண்ணுக்கு அது எந்த இன்பத்தையும் அளிப்பதில்லை. அக்கூனியின் உள்ளத்தை அணுகி அறிந்தால் காதலுக்காகவும் தாய்மைக்காகவும் ஏங்கும் ஒரு பெண்ணை நீ காண்பாய்” என்றார் மித்ரர். “அவ்வண்ணம் அணுகுவதற்கும் அவர் மாணவியாக நான் ஆகவேண்டும், தந்தையே” என்றாள் சுலஃபை.
“அவள் எதைவெல்ல வேதத்தை அள்ளி அணைத்துக்கொண்டிருக்கிறாள் என்று நீயே காண்பாய். மானுடரை அவர்களின் உப்பைக்கொண்டு எப்போதைக்குமென அறிக! சொற்களை அத்தருணத்துடன் மட்டும் அமைத்துக்கொள்க!” என்றார் மித்ரர். “தந்தையே, அவள் தழுவிக்கொண்டிருக்கும் வேதம் பிரம்மத்தின் ஒலிவடிவம் என்கிறார்கள். அது கணவனைவிட மைந்தரைவிட இல்லறத்தைவிட மேலான முழுமையை அளிக்காதா என்ன?” என்றாள் சுலஃபை. தடுமாறிய மித்ரர் “அளிக்கும் என்றே சொல்கின்றன நூல்கள். ஆனால் வேதம் முற்றுணர்ந்த மாமுனிவரும் காமத்தால் நிலையழிந்த கதைகளைத்தானே புராணங்கள் சொல்கின்றன. அசையாத பீடத்தில் அமர்ந்த முனிவன் துருவன் மட்டுமே” என்றார். “அதை விழைவதையாவது நான் எனக்குரியதாகக் கொள்ளலாமே” என்றாள் சுலஃபை.
“நீ பேரழகி. உனக்காக ஆரியவர்த்தத்தின் மாமுனிவர்களின் இளமைந்தர் சொல்காத்திருக்கிறார்கள். அழியாப்புகழ்கொண்ட மைந்தரை நீ பெற்றெடுக்க முடியும். இல்லமகளாக நிறைந்து பேரன்னையென முதிர்ந்து விண்ணுலகு ஏக முடியும்” என்றார் மித்ரர். “இன்று என் உள்ளம் விழைவது இதுவே. இது பொய்யான விழைவா என நூறுமுறை கேட்டுக்கொண்டேன். இதுவொன்றே நான் என்கிறது என் ஆழம். இதை இன்று தவிர்த்தால் நான் பிறகு வெற்றுடல் என்றே எஞ்சுவேன்.” “அவ்வண்ணமென்றால் எனக்கு ஓர் உறுதியளி. நீ காமத்துறப்பு நோன்பு கொள்ளலாகாது. உரிய அகவையில் மணம்புரிந்துகொள்ளவேண்டும்” என்றார் தந்தை. மகள் அவ்வுறுதியை அளித்தபோது “நீ விழைவதை அடைக!” என வாழ்த்தினார்.
[ 6 ]
கார்கியின் மாணவியாக ஆகி அவளுடன் சுலஃபை கிளம்பிச்சென்றாள். மிதிலையின் எல்லைக்கு அருகே இருந்த கர்கவனம் என்னும் காட்டில் அமைந்த குடிலில் ஆசிரியையுடன் தங்கினாள். அவள் காலடியில் அமர்ந்து சுலஃபை வேதம் கற்றாள். நால்வகை சொல்முறையையும் அறுவகைநோக்குகளையும் ஆழ்ந்து அறிந்தாள். அவர்களிருவரும் இணைந்து வேதச்சொல்லவைகளுக்கு சென்றனர். ஆசிரியைக்குப் பின்னின்று ஏடு எடுத்தளிக்கும் முதல் மாணவியாக அவள் ஆனாள்.
கார்கியின் மெய்த்திறன் தன்னைச் சூழ்ந்ததும் அவள் உடலழகு தன் விழிகளை நிறைப்பதை சுலஃபை உணர்ந்தாள். ஆசிரியையின் விழிகளில் ஒளியென ஒரு சொல் தோன்றி அது இதழ்களை அடைவதற்குள்ளாகவே அவள் அதை அறிந்தாள். அந்தச் சொல்திகழ்ந்தபின் அவள் இதழ்களில் எஞ்சிய புன்னகையிலிருந்து அடுத்த சொல்லின் ஊற்றுமுகத்தை கண்டாள். சிறுபறவை ஒன்றின் ஒலி என எழுந்த கார்கியின் சிரிப்புக்கு நிகரான இனிமையை அவள் எங்கும் காணவில்லை. குறுங்கால்களை எடுத்துவைத்து ஆசிரியை நீராடச்செல்லும்போது ஒவ்வொரு பாதச்சுவடிலும் தொட்டுத்தொட்டு சென்னி சூடித் தொடர்ந்தது அவள் உள்ளம்.
சொல்திறக்கும் கணத்தின் பேருவகையை சுலஃபை கண்டுகொண்டாள். மெய்வெளியின் அணுவடிவே சொல். விசும்புகனிந்த பனித்துளி போல. கோடியாண்டுகள், பல்லாயிரம்கோடி விசைகள், அறியாத பெருநோக்கம் ஒன்று. சொல்லென வந்து நின்றிருப்பதைத் தொட்டு மீண்டும் வெளியாக்குவதே தவம். இன்பத்தில் தலையாயது தவமே. தன்னையழிப்பதே முழுமை. அவள் பிறிதிலாது அங்கிருந்தாள். ஒவ்வொருகணமும் மாறிக்கொண்டிருந்தாள். அது வளர்ச்சி அல்ல என்றறிந்தாள். முழுமையிலிருந்து முழுமைநோக்கிச் செல்லும் கணங்கள் அவை. ஒன்றை ஒன்று முழுமையாக நிரப்பிக்கொள்பவை. காலமற்றவை.
அவள் கன்னியானதும் மித்ரர் அவள் அளித்த வாக்கை நினைவுபடுத்தினார். அவள் அதை தவிர்க்கமுடியாமல் தவித்தபோது மேலும் மேலும் வற்புறுத்தினார். “நீ மணம்செய்துகொள்ளலாம், அதுவே நன்று” என்றாள் கார்கி. “என் உடலே எனக்குக் காப்பு. நீ அமர்ந்த அவைகள் எதிலும் உன் உடலுக்குமேல் சொல் ஈர்க்கவில்லை. கன்னி என நீ இருக்கும்வரை உன்னால் உடலை கடக்க முடியாது.” சுலஃபை “ஆனால் என்னை பெண் என அணுகும் ஆண்களனைவரும் எனக்கு கசப்பையே ஊட்டுகிறார்கள். என்னை மனைவியென்றும் அன்னையென்றும் ஆக்கி தளைக்கவே அவர்களின் உளம் விழைகிறது.”
உரக்கச் சிரித்தபடி கார்கி சொன்னாள் “ஆம், அவர்களின் குருதி அப்படி பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது.” “அன்னையே, உடலென மட்டும் ஒரு பெண்ணை அணுகுபவன் அப்பெண்ணை சிறுமைசெய்யவில்லையா?” கார்கி சொன்னாள் “ஆம், ஆனால் அவளை அவன் குருதி கருவறை என்று அணுகுகிறது. அது அவனை ஆளும் தெய்வங்களின் ஆணை. மகளே, மானுடரை விரும்பக் கற்றுக்கொள்ளாமல் எவரும் விடுதலைகொள்வதில்லை.”
“என் தந்தை முன்பு என்னிடம் சொன்னார், உங்களை அணுகியறிகையில் உங்களுக்குள்ளும் மனைவியும் அன்னையும் ஒளிந்து ஏங்கிக்கொண்டிருப்பதை நான் காணலாகும் என்று. இத்தனை ஆண்டுகளில் நான் அவ்வண்ணம் எதையும் காணநேரவில்லை” என்றாள் சுலஃபை. “நானே நூறாயிரம் முறை திசைமாற்றி நின்று அவ்வினாவை என்னிடம் கேட்டிருக்கிறேன். இல்லை இல்லை என்றே என் அகம் சொல்கிறது” என்றாள் கார்கி. “என் உடலுக்குரிய தெய்வங்கள் இளமையிலேயே என்னை கைவிட்டிருக்கலாம். அல்லது நான் என் வேதத்தால் அவர்களை நிறைவுபடுத்தி விண்புகச் செய்திருக்கலாம்.”
“இன்று என்னால் கூறமுடிவது ஒன்றுண்டு, ஆண்களைவிட பெண்களுக்கே காமநீப்பும் துறவும் எளிதானது. பெண்களின் காமத்தில் வென்றடக்குவது என்னும் விழைவு கலந்திருப்பதில்லை. ஏற்றவற்றின் முன் தன்னை முழுதளிக்கவும் பெண்களால்தான் முடியும்” என்றாள் கார்கி. “ஆகவே பெண்களுக்கு மெய்மை மெல்லவே வந்தடையும். வந்தடைந்தவை முழுமையாகவே விடுதலையாக உருமாற்றம் கொள்ளும். ஆண்களில் அதன் பெரும்பகுதி ஆணவமெனத் திரிந்து அகம்நிறைத்து நாறும்.”
“வேதத்தை பெண்கள் ஆண்களுக்கு நிகரென அறியமுடியாதென்று இன்னும் முனிவரவை எண்ணுகிறது” என்றாள் சுலஃபை. “ஆண்கள் அறியும் வேதத்தை அவர்களுக்கு நிகரென அறிவது பெண்களால் இயல்வதல்ல. பெண்கள் அறியும் வேதத்தை ஆண்களும் அறியமுடியாது. இம்மண்ணும் வானும் அனைவருக்கும் உரியவை என்றால் மகிழ்வும் அறிவும்கூட அவ்வண்ணமே” என்றாள் கார்கி. “எளிய உள்ளம் கொண்டவர் இம்முனிவர்கள். அளியவர் என்றே சொல்லவேண்டும். அவர்கள் அறிந்தவர்கள் என்பதனால் அறிவினூடாக அன்றி பிறிதை அறியமுடியாமல் தளையுண்டிருக்கிறார்கள்.”
மித்ரர் நாள் செல்லச்செல்ல அச்சம் மிக்கவராக ஆனார். ஒவ்வொருநாளும் மகளிடம் வந்து “உன் மணமகனை சுட்டு. நான் அவருக்கு உன்னை அளிக்கிறேன். இன்னமும் பிந்துவது உகந்தது அல்ல. இப்போதே என்குடியில் பழிச்சொற்கள் எழத்தொடங்கிவிட்டன” என்றார். அவள் “உகந்தவரை சொல்கிறேன்” என்று சொல்லி கடந்துசென்றாள். “உன் தந்தைக்கு அளித்த சொல் இது. இது பிழைத்தால் நான் உயிர்வாழமாட்டேன்” என்றார் மித்ரர். “என்னால் ஆண்களை ஏற்கமுடியவில்லை, தந்தையே” என்றாள் சுலஃபை. “ஏன் இதை இப்படி தலைமேற்கொள்கிறீர்கள்?” மித்ரர் “நீ அறியமாட்டாய். மணம்புரியாத பெண்ணின் தந்தை பழிசுமந்து சாகவேண்டுமென்பதே இங்குள்ள வழக்கம்” என்றார்.
மிதிலையின் பேரழகி தங்களை மறுக்கிறாள் என்னும் செய்தியே இளைஞரை சினம்கொள்ளச் செய்தது. அவளைப்பற்றிய அலர்களை அவர்களே உருவாக்கினர். அவள் கந்தர்வபூசனை வழியாக பெண்மையை இழந்து உடலுக்குள் ஆணாகிவிட்டாள் என்றனர். அவள் முனிவர்களுடன் முறைமீறிய உறவுகொண்டு வேதக்கல்வியை பெற எண்ணுகிறாள் என்றனர். அவளை மிக விழைந்தவர்களே அவ்வலரை பெருவிருப்புடன் கேட்டு பிறரிடம் பரப்பினர். அவளை வழிபட்டவர்கள் அதைக்கேட்டு தங்கள் முகம்மலர்வதைக் கண்டு தாங்களே வியந்துகொண்டனர். அலர் எழுந்து சூழச்சூழ மித்ரர் நிலையழிந்து பித்துகொண்டவர் போலானார்.
ஜனகரின் அவைகூடலுக்கு வந்த யாக்ஞவல்கியரை அப்போதுதான் சுலஃபை கண்டாள். அவையில் வெண்ணிறத் தாடியும் தோள்புரண்ட பனிக்குழலும் இனியபுன்னகையுடன் எழுந்து நின்று அவர் வேதமெய்மையை உரைத்தார். “தாமரைமலரிதழ் மேல் நீர்த்துளி என அமர்ந்திருக்கிறது இப்புடவி” என சம்பிரமாதி என்னும் முனிவர் சொன்னபோது “அந்தத்தாமரை நீரளவு மாறினும் ஒழுக்கு கொள்ளினும் நிலைமாறுவதில்லை. அதன் தண்டும் வேரும் அடிச்சேற்றில் ஆழ ஊன்றியிருக்கின்றன” என்று அவர் சொன்னார். அவை “ஆம், ஆம்” என்றுரைத்தது. அவையில் அமர்ந்திருந்த கார்கியிடம் மெல்ல குனிந்து “அன்னையே, நான் இவரை மணந்துகொள்கிறேன்” என்றாள் சுலஃபை. கார்கி புன்னகைபுரிந்தாள்.
ஆனால் மித்ரர் திகைத்து பின் சினம் கொண்டு கூவினார். “நீ சொல்வதென்ன என்றறிவாயா? அவர் என் வயதே ஆனவர். அவருக்கு முன்னரே மனைவியும் நான்கு மைந்தரும் உள்ளனர்” என்றார். “ஆம், அனைத்தையும் அறிந்தே சொல்கிறேன். என் விழைவை மட்டும் அவரிடம் சொல்லுங்கள்” என்றாள் சுலஃபை. “இது அறிவின்மை. நீ பேரழகி. நீ ஒரு முதியவரை மணந்தாய் என்றால் இங்குளோர் என்ன நினைப்பார்கள்?” சுலஃபை “என்னை அழகிய உடல் மட்டுமென்றே எண்ணியவர்களுக்கு நான் கூறும் மறுமொழி இது. நான் மதிப்பதும் விழைவதும் என்ன என்பதற்கான விளக்கமும் இதுவே” என்றாள்.
மூச்சிளைக்க, உடல் பதற அவளை நோக்கி நின்றார் மித்ரர். அவள் வெண்கலச் சிலையை எரியில் வைத்து பழுக்கச்செய்தது போலிருந்தாள். எது அவளை மேலும் பேரழகியாக்குகிறது? இப்போது அவள் அணிசெய்துகொள்வதில்லை. அழகிய அசைவுகளோ இன்சொற்களோ அவளிடமில்லை. உள்ளிருந்து ஒன்று எழுந்து ஒளியென விரிகிறது. “உனக்கு மைந்தர் பிறப்பதும் அரிது” என்று அவள் விழிகளை விலக்கி சாளரத்தை நோக்கி நின்று மித்ரர் சொன்னார். “அது நன்று என்றே எண்ணுகிறேன்” என்றாள் சுலஃபை. “தந்தையே, என்னைவிட மெய்யறிவில் இளைத்தவர் ஒருவருக்கு மனைவியாகும் இழிவிலிருந்து நான் இவ்வண்னம் தப்புகிறேன். அதைமட்டும் நோக்குக!”
சலிப்புடன் திரும்பி தன் மாளிகையை அடைந்து சுருண்டு படுத்துக்கொண்டார் மித்ரர். அவர் துணைவி சபரி அவர் அருகே வந்தமர்ந்து “இவ்வாறு அவள் மணம்புரிய ஒப்புக்கொண்டதே நல்லூழ் என்று கொள்வோம். பெண்ணின் உளம்நிறைக்கும் கணவன் எவர் என பிறர் ஒருபோதும் சொல்லிவிடமுடியாது” என்றாள். சினத்துடன் “அவள் எதிர்நிலை கொண்டு இம்முடிவை எடுத்திருக்கிறாள். இது சின்னாட்களிலேயே அவளுக்கு சுமையாகும்” என்றார் மித்ரர். “இல்லை, அவள் ஆசிரியனை கணவனாக ஏற்றிருக்கிறாள்” என்றாள் சபரி. “ஆண்களுக்கு மனைவி தோழியோ அன்னையோ மட்டுமே. பெண்ணுக்கு கணவன் பிறிதொன்றுமாகவேண்டும். சிலருக்கு தந்தை, சிலருக்கு தோழன்,சிலருக்கு காவலன், சிலருக்கு ஆசிரியன்.”
அவள் சொல்கேட்டு ஒருவாறாகத் தேறி பிருஹதாரண்யகம் சென்று யாக்ஞவல்கியரைக்கண்டு தன் மகளின் விழைவை சொன்னார் மித்ரர். “விண்ணின் விழைவில்லாமல் பெண் உள்ளத்தில் அவ்வாறு தோன்றாதென்கின்றன நெறிநூல்கள். ஆனால் நான் முதுமைகொண்டிருக்கிறேன். என் குருதி இனி முளைக்காது என்றே உணர்கிறேன். என் மனைவியின் ஒப்புதலும் இதற்குத்தேவை. ஆனால் நான் சென்று அவளிடம் ஒப்புதல்கோரமுடியாது, அது என் விழைவை அறிவித்தலாகும்” என்றார் யாக்ஞவல்கியர். “என் மகள் வந்து உங்கள் மனைவியைக் கண்டு ஒப்புதல் கோரட்டும்” என்றார் மித்ரர். அந்த ஒப்புதல் கிடைக்கப்பெறாது என்றே அவர் நம்பினார்.
தந்தையுடன் சுலஃபை பிருஹதாரண்யகக் காட்டுக்கு வந்தாள். யாக்ஞவல்கியரின் குடிலுக்குள் சென்று காத்யாயனியை பார்த்ததுமே அவள் அனைத்தையும் புரிந்துகொண்டாள். குனிந்து அவள் கால்களைத் தொட்டு “மூத்தவரே, உங்களுக்கு இளையவளாக இங்கிருக்க அருளவேண்டும்” என்றாள். காகங்களை நோக்கிக்கொண்டிருந்த காத்யாயனி திரும்பி தன் கடந்துசென்ற கண்களால் அவளை நோக்கினாள். “நான் உடனிருக்கிறேன் அக்கா” என்றாள் சுலஃபை. “ஆம்” என்று சொல்லி காத்யாயினி அவளை தலைதொட்டு வாழ்த்தினாள்.
யாக்ஞவல்கியர் தன் மைந்தரின் ஒப்புதலுடன் மாணவர் புடைசூழ சுலஃபையை மணம்புரிந்தார். அவள் பிருஹதாரண்யகப் பெருங்காட்டில் இரண்டாவது ஆசிரியமனைவியாக மைத்ரேயி என்னும் பெயருடன் அமைந்தாள்.
தொடர்புடைய பதிவுகள்
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 30
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 29
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 55
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 54
மாட்டிறைச்சி – அரசியலும் பண்பாடும்
August 17, 2016
கைவிடு பசுங்கழை
நண்பர்களே, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த சொற்பொழிவுத் தொடரில் நான் எடுத்துக்கொண்டிருக்கும் தலைப்பு, கைவிடு பசுங்கழை . உங்களில் சிலர் உடனடியாக கூகுளில் அதை அடித்து குறுந்தொகையில் அது எந்தப்பாடலில் வருகிறது என்பதை அறிந்திருப்பீர்கள். ‘அணிலாடு முன்றிலார்’ போன்று சில கவிஞர்களுடைய பெயர்கள் அந்த கவிஞர் எழுதிய சிறப்பு வரியாலேயே குறிப்பிடப்படுவது உங்களுக்குத் தெரிந்திருக்கும். சங்கப்பாடல்களில் முக்கியமான பல கவிதைகளை எழுதிய பெருங்கவிஞர்கள் இருக்கிறார்கள். கபிலர், பரணர், ஔவையார் போல. ஆனால் சிலர் ஒரு தனி சொல்லாட்சியை மட்டுமே அளித்துவிட்டு வேறு எதையும் எஞ்சவைக்காமல் வரலாற்றில் மறைந்து போனவர்கள்.அவர்களில் ஒருவர் மீனெறி தூண்டிலார். அவர் எழுதிய ஒரு சங்கப்பாடல் இது.
  யானே ஈண்டையேனே என்நலனே
  
  
   ஏனல் காவலர் கவணொலி வெரீ
  
  
   கான யானை கைவிடு பசுங்கழை
  
  
   மீனெறி தூண்டிலின் நிவக்கும்
  
  
   கான நாடனொடு ஆண்டு ஒழிந்தன்றே
யான் இங்கிருக்கிறேன். என் நலன், என் அழகு, தினைப்புனம் காக்கும் கிணைப்பறையின் ஒலியைக் கேட்டு அஞ்சிய காட்டு யானை தான் பிடித்த மூங்கிலை அப்படியே விட்டுவிட்டு செல்ல, அந்த மூங்கில் மீன் விழுந்த தூண்டிலின் கோல் நிமிர்வது போல மீண்டு செல்லும் காட்டுக்குரியவனோடு அன்றே சென்றுவிட்டது.
இது தான் அந்தக் கவிதை .இந்தக் கவிதையில் நான் எடுத்துக் கொண்ட வரி ‘கைவிடு பசுங்கழை’. கான யானை கைவிடு பசுங்கழை. அந்தக் காட்சியை உங்கள் நெஞ்சில் விரிக்க விரும்புகிறேன். யானை காட்டில் உள்ள உயரமான மூங்கிலை பற்றி இழுத்து வளைத்து அந்த ஓலையை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது. அப்பொழுது தினைப்புனம் காக்கிறவர்கள் பறையடிக்கிறார்கள். யானை அந்த பறையொலியைக் கேட்டு மூங்கிலை விட்டு விட்டு போகிறது. கைவிடப்பட்ட மூங்கில் மீன் கவ்வியதனால் இழுபடும் தூண்டில் போல மீண்டு மேலே போகிறது.
இந்தக் காட்சியை சொல்லும் தலைவி ’தலைவன் என்னை விட்டு அகன்று சென்றாலும் அவனை நோக்கி என் உள்ளம் திரும்பி போகிறது’ என்று சொல்வதற்காகத்தான் அந்த வரியை குறிப்பாக முன்வைக்கிறாள். ‘அந்த நாட்டைச் சேர்ந்தவனிடம் என்னுடைய உள்ளம் சென்றுவிட்டது. எவ்வண்ணம் பற்றினாலும் வளைந்தாலும் இறுதியில் அவன் நினைவுக்கே திரும்பி போகும் உள்ளம் கொண்டவனாக இருக்கிறேன்’ என்று அவள் சொல்கிறாள்.
இங்கே அந்த வரியை என்னுடைய வாசகசுதந்திரத்தால் வேறொரு பொருளில் கவிதை ரசனைக்கான குறியீடாக எடுத்துக் கொண்டேன். இப்படி சொல்கிறேன், அந்த மூங்கிலை அந்த யானை வளைப்பது கவிதையின் எழுத்து. திரும்பி அந்த மூங்கில் செல்லும் பயணம் தான் கவிதை ரசனை. எத்தனை தூரம் அந்த மூங்கில் திரும்பி போகிறது என்பது தான் ரசனை .அது மீனெறி தூண்டில். எந்த மீனைக் கவ்விச் செல்கிறது அது என்பது தான் கவிதை ரசனை.
கவிதை ரசனை என்பது எது படிக்கப்படுவது என்பது அல்ல, படிக்கப்பட்ட பிறகு அந்த மூங்கில் எந்த அளவு மீண்டு செல்கிறது என்பதுதான். கவிதையின் ரசிப்பு நிகழ்வது கவிதை படிக்க்கப்படும் கணத்தில் அல்ல, படித்த பிறகு நீங்கள் உங்களுடைய ஆளுமைக்கு திரும்பிப் போகும் பயணத்தில். ஒரு கவிதையில் நீங்கள் என்ன படித்தீர்கள் என்பது முக்கியமல்ல, என்ன கற்பனை செய்தீர்கள் என்பது தான் முக்கியம். என்ன தெரிந்து கொண்டீர்கள் என்பது முக்கியம் கிடையாது, என்ன உணர்கிறீர்கள் என்பது முக்கியம். ஒரு கவிதையின் சாரம் என்பது எது அதில் நேரடியாக சொல்லப்படவில்லையோ, அங்கு இருக்கிறது. ஆம், கவிதை என்பது மறைபொருள்.
நண்பர்களே, நெடுங்காலமாக நாம் இறைச்சி என்ற வார்த்தையை அப்பொருளில் சொல்லிக் கொண்டிருக்கிறோம். உள்ளுறை பொருள் அது. ஒரு கவிதையில் அதனுடைய சொற்களின் ஒவ்வொரு இடைவெளிக்கும் நடுவே எதோ ஒன்று இருக்கிறது. அது அந்த வாசகனால் அடையப்படுவது. அது தான் கவிதை. இறைஞ்சப்படுவதனால் எழுவதுதான் இறைச்சியா என்ன?
ஈராயிரம் வருடங்களாக நம்முடைய் கவிமரபு இப்படித்தான் இருக்கிறது. யோசித்து பார்த்தால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. பல குறுந்தொகைப் பாடல்கள் பதினாறு வார்த்தைகளுக்குள் தான் இருக்கின்றன. இத்தனை நுட்பமாக ஒரு விஷயத்தைச் சொல்லி யாரை நம்பி அதை வைத்துவிட்டு போனார்கள் அக்கவிஞர்கள்? இரண்டாயிரம் வருஷங்களாக இங்கு திருப்பி திருப்பி அதை தொட்டு எடுக்கவும் ஆட்கள் இருக்கிறார்களே. அவ்வளவு நம்பிக்கை அவனுக்கு இருந்திருக்கிறது. கவிதைமேலான நம்பிக்கை அது.
ஏன், நம்முடைய பிரபல நவீனக் கவிஞர்களுக்கு பெரும்பாலும் அந்த நம்பிக்கை வருவதில்லை? ஒரு வரியில் சொல்ல வேண்டியதை அவர்கள் ஏன் ஒரு கவியரங்கத்தில் ஒன்பது பக்கங்களில் பாடுகிறார்கள்? ஏனெனில் அவர்கள் தன் முன்னால் இருப்பவனை நம்புவதில்லை. தன் காலத்தைக் கடந்து வருபவனை காண்பதில்லை. சுந்தர ராமசாமி சொல்வார் ஒரு கவிஞரைப் பற்றி, தலைவாழை இலையில் அறுசுவை உணவு பரிமாறி அவரே சாப்பிட்டுவிட்டுப் போய்விடுவார் என்று. நல்ல கவிதை வாசகனை நம்பும், வாசகனின் ஆழத்துடன் அது பேசும்.
இதோ இந்தக் கவிதை, ‘நான் இங்கிருக்கிறேன். என்னுடைய அழகு யானை கைவிட்ட மூங்கில் போல நிமிர்கிறது. என் நலன் அந்த நாட்டைச் சேர்ந்தவனோடு அன்றே போயிற்று. இந்த இரண்டுக்கும் நடுவே உள்ள இணைப்பை நிகழ்த்தவேண்டிய பொறுப்பை தன் வாசகனுக்கு விட்டுவிட்டு அவனால் விலக முடிகிறது. ஓர் உரையில் சங்கப்பாடலை பற்றி சொல்லும்போது ஏ.கே.ராமானுஜன் சொன்னார், இந்த அளவுக்கு நுட்பமான, இந்த அளவுக்கு மறைபொருள் கொண்ட கவிதைகள் இந்தியாவிலேயே குறைவாகத்தான் எழுதப்பட்டிருக்கின்றன என. என்ன காரணம் என்றால் இதை இயற்றி ரசித்தவர்கள் நுண்ரசனைகொண்ட ஒரு சிறிய வட்டத்தினர் என்பதுதான்.
எந்த அளவுக்கு ரசிகர்கள் சிறிய வட்டத்தை சார்ந்தவர்களாக இருக்கிறார்களோ அந்த அளவுக்கு கலை நுட்பமாக ஆக முடியும். உங்களுக்குத் தெரியும், உங்கள் வீட்டுக்குள் பேசிக் கொள்ளும் சில குழூக்குறிகள் வெளியே இருப்பவர்களுக்கு தெரியாது. என்னுடைய நண்பருடைய வீட்டில் அவர்கள் அப்பாவை சி.எம் என்று சொல்வார்கள். ‘சி.எம். ப்ரொட்டோகால் என்ன?’ என்றால் அவர்களின் அப்பா எப்ப வருவார் என்று அர்த்தம். இப்படி வீட்டுக்குள் ஒரு மொழி உருவாவது போல ஒரு குறு சமூகத்திற்குள் ஒரு மொழி உருவாகும்போது அந்தக் கவிதை மேலும் மேலும் நுட்பமானதாக ஆகிறது.
இரண்டாவதாக, இந்தக் கவிதைகள் அனைத்துமே அமைப்பை வைத்துப்பார்த்தால் பாணன் பாடி, விறலி நடனமிடுவதற்காக எழுதப்பட்டவை எனத் தெரிகிறது. ஒரு நிகழ்த்து கலையின் எழுத்து வடிவம் போலுள்ளன இவை. முனைவர் துளசி ராமசாமி விரிவாகவே இதை எழுதியிருக்கிறார். ஆகவே இந்தக் கவிதையை ஒரு மேடையில் ஆடும் விறலி தன் அபிநயம் வழியாக வளர்த்து எடுத்து சொல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. இந்தக் ‘கைவிடு பசுங்கழையை’ ஒரு பதிமூன்று அல்லது பதினைந்து சைகைகள் வழியாக நடித்துக் காட்டியிருப்பார்கள். அதனுள் இருக்கும் எல்லா அர்த்தங்களும் வெளிப்பட்டிருக்கும்
இதற்கு சமானமாக சொல்லப்படுவதென்றால் இன்றைக்கு கதகளியைச் சொல்லலாம். கதகளிக்கு பெரும்பாலும் முப்பது பேருக்குமேல் ரசிகர்கள் இருக்க மாட்டார்கள். ஐம்பது பேர் இருந்தால் பெருங்கூட்டம், அந்த நடிகன் பதறிப்போய்விடுவான் என்கிறார்கள். இந்த முப்பது பேரும் ஒவ்வொரு முறையும் கதகளியை தொடர்ந்து பார்ப்பவர்களாக இருப்பார்கள். திருவட்டாறில் வருடத்தில் இரண்டு முறை தொடர்ந்து பத்து பத்து நாட்கள் கதகளி நடக்கும் அதே ஐம்பது பேர்தான் உட்கார்ந்திருப்பார்கள். ஒவ்வொரு வருஷமும் அதே நளசரித்திரம் கதையாடல்தான். ஒவ்வொரு வருஷமும் அதே நளன் அதே அன்னப்பறவையை தமயந்திக்கு தூது விடுவான். ஆனால் ஒவ்வொருமுறையும் மனோதர்மம் எனப்படும் கற்பனை புத்தம்புதியது.
நூறுவருஷத்திற்கும் மேலாக இந்த தூது நடந்துகொண்டிருக்கிறது. கேட்டால் சொல்வார்கள், போன முறை விட்ட அன்னம் அல்ல இது. இது வேறுஅன்னம். அன்னப்பறவையை எடுத்து தம்யந்தியிடம் அனுப்பும் நளன் அந்த அன்னப்பறவையை என்னவாக மாற்றுகிறான் என்றுதான் இவர்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அன்னப்பறவை தூது போகும் என்று அவர்களுக்குத் தெரியும். அந்த அன்னப்பறவை ஒரு காதல் கடிதமாக ஆகலாம். நளனின் உள்ளமாக ஆகலாம். ஒருமுறை நான் கதகளி பார்த்துக்கொண்டிருந்தேன். அன்னப்பறவையை மாவேலிக்கரை சிவராமன் நாயர் அனுப்பிக்கொண்டிடிருந்தார். என் பக்கத்தில் உட்காந்திருந்த பாட்டி ”ஆஹா” என்றாள். ”என்ன?” என்று கேட்டேன். ”அன்னப்பறவையை தாமரையாக மாற்றிவிட்டார்” என்றார். ”ஒவ்வொரு இதழாக விரித்து அனுப்புகிறார்” என்றாள்.
இங்கே அந்தக் கலைஞனுக்கும் ரசிகைக்கும் நடுவே கண்ணுக்குத் தெரியாத ஒரு தொடர்பு நிகழ்கிரது. அன்னப்பறவை எப்படி வெள்ளைத்தாமரையாக மாறும்? முத்திரைகளில் அப்படி மாற்றிவிட்டார். அத்தகைய நுட்பமான ஊடாட்டம் எப்போது ஒரு வாசகருக்கும் கவிஞருக்கும் இடையில் இருக்கிறதோ அப்போது தான் கவிதை ரசனை தொடங்கிறது. அது சங்கப்பாடல்கள் எழுதி ரசிக்கப்பட்ட காலத்தில் இருந்தது. ஆகவேதான் அவை அத்தனை நுட்பமானவையாக இருந்தன. அப்படிப் பார்க்கும்போது சங்கப்பாடல் ஒரு நீண்ட கவிமரபின் கடைசிக் கணக்கு புத்தகங்கள் போல் தோன்றுகிறது. அதாவது ஒரு பெரிய மரபு முடிந்த பின்னர் அதில் சிறந்ததை மட்டுமே எடுத்து தொகுத்து உருவாக்கப்பட்டவை அவை. ஆகவே பெரும்பாலும் எல்லாக் கவிதைகளுமே நன்றாக இருக்கின்றன.
நானூறு என்பது சமணர்களின் எண்ணிக்கை. சுண்டிப்பார்த்து தேர்வுசெய்திருப்பார்கள். சில கவிதைகள் மிகச்சாதாரணமொழியில் எழுதப்பட்ட சிறந்தகவிதைகளாக இருக்கின்றன. சில கவிதைகள் மிகச்சிக்கலான சொல்லமைப்பு கொண்டவை . சிலகவிதைகள் சிக்கலான படிம அமைப்பு கொண்டவை. ஒருவரியில் இரண்டு உவமை வருகிறது. மீனின் முள் போல, சிட்டுக் குருவியின் நகம் போல, தாழை முள் இருந்தது என ஒருவரி. ஒரு தாழைமுள் பற்றிய வர்ணனை!
சில கவிதைகளில் ஒரு சாதாரண உவமை கூட இல்லாமல் வெறுமே காட்சி மட்டுமே இருக்கிறது. வெறுமே காமிரா கிளிக்கி நிற்கிறது. ஆனால் அது ஆழ்ந்த உணர்ச்சியின் வெளிப்பாடாகவும் நின்றுகொண்டிருக்கிறது. சங்கப்பாடல்களுக்கென ஓர் அழகியல் உண்டு. அதை நான் இப்படி சொல்வேன், கண்ணுக்கும் உணர்ச்சிக்கும் நேரடியான ஒரு பாதை அது. எப்படி நீங்கள் கண்ணால பார்க்கிறீர்களோ அந்தக் காட்சி அப்படியே உணர்ச்சியாக மாறிவிடுகிறது. அதற்கு நடுவில் ஒரு அறிவார்ந்த மாற்றம், ஒரு சமையல் நடந்திருக்கிறது. அந்தக்காட்சித் தருணம் உள்ளக் காட்சியாகிவிட்டிருக்கிறது. இந்த நேரடியான காட்சித் தன்மைதான் மிகப்பெரிய அழகையும் நுட்பத்தையும் கொடுக்கிறது சங்கப்பாடல்களுக்கு.
ஓடை போகிறது. அதன் ஓரத்தில் இருக்கும் வேர்களை வெண்ணிறமான மெல்லிய விரல்கள் என்று ஒரு வர்ணனை சொல்கிறது. மாசறக்கழுவிய யானைபோன்ற பாறைகள் என ஒரு உவமை. எருமை போன்ற கருங்கல்பாறைகள் பரவிய மலைச்சரிவு என ஒரு சித்திரம். எல்லாமே நேரடியாக நீங்கள் அங்கு போனால் பார்க்க வாய்ப்புள்ள காட்சிகள். ஆமாம், நானும் பாத்திருக்கிறேன் என்று சொல்லக்கூடிய வரிகள். அந்தக் காட்சியை அப்படியே உணர்ச்சியோடு தொடர்பு படுத்தியிருப்பார்கள். அதற்கு நடுவில் எந்த கருத்தோ கொள்கையோ அழகியல் இலக்கணமோ ஊடாடியிருக்காது.
புதுமைப்பித்தன் சங்கப்பாடல்களை எந்தவகையிலுமே தன்னைப்பாதிக்காதவை என்று சொல்கிறார். போட்டோகிராபி கவிதை என்கிறார். நான் கம்பராமாயணத்தில் ஊறித்தோய்ந்த பேராசிரியர் ஜேசுதாசன்அவர்களை நேரில் சந்தித்த போது அவரும் அதையே சொன்னார். எனக்கு சங்கப்பாடல் எந்த அனுபவத்தையும் கொடுக்கவில்லை, எல்லாம் வெறும் படங்கள். அவர்கள் ஒரே சிந்தனைப்பள்ளி. நான் சொன்னேன். ‘இல்லைசார், அவை வெறும் சித்திரங்கள் அல்ல. அந்த சித்திரங்களுக்கு மேல் ஒரு உணர்வு ஏற்றப்பட்டிருக்கிறது’ ஆனால் அவர் ‘அந்த உணர்வு அதில் இல்லையே. வெறும் சித்திரம் தானே இருக்கிறது’ என்று சொன்னார்.
தமிழின் கற்பனாவாதத்தின் உச்சகாலத்தைச் சேர்ந்த ரசிகர்களுக்கு பெரும்பாலான சங்க இலக்கியங்கள் பிடிகொடுப்பதில்லை. அவை வெறும் வாழ்க்கைச் சித்திரங்கள்தான் என்ற எண்ணம் உருவாகும். உண்மையில் சங்கப் பாடல்களுக்கு உரை எழுதிய பல உரையாசிரியர்கள்கூட வெறும் வாழ்க்கை சித்திரங்களுக்கு உரை எழுதுவதாகத்தான் எழுதியிருக்கிறார்கள். ‘இந்தப்பாடல்கள் சங்க கால மக்களின் வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டுகின்றன’ என்ற வரியை நீங்கள் அத்தனை பேரும் பள்ளியில் படித்திருப்பீர்கள். ‘படம் பிடித்து’ காட்டுவதற்காக ஒருவன் இத்தனை சொல்நுணுக்கிக் கவிதை எழுதுவானா?
ஓவியங்கள் அல்ல இவை. அதற்கப்பால் சொல்லப்படாத ஒரு உணர்வின் இணைப்பு இருக்கிறது. அந்த இணைப்பு பிற்காலத்தில் தான் நமக்கெல்லாம் துலங்கி வந்தது. இன்னும் சொல்லப்போனால் கொஞ்சம் வெட்கத்தோடு சொல்லப்போனால் கன்னடனரான ஏ.கே.ராமானுஜம் போன்ற ஒருவரால்தான் அந்த இணைப்பு நம் வாசிப்பில் வலுவாக ஊன்றப்பட்டது. Interior Landscape என்று அவர் சங்கப் பாடல் தொகுப்புக்கு தலைப்பு கொடுத்தார். அகநிலக்காட்சி! இவற்றில் உள்ல நிலம் உண்மையான நிலம் அல்ல. இத்தகைய நிலம் அன்றும் இன்றும் இருந்திருக்கமுடியாது. இது ஒரு கற்பனைநிலம். உணர்வுகளின் நிலம். உள்ளத்தின் ஆழத்தில், கனவுகளில் உள்ள நிலம். சங்க காலத்தில் இப்படியொரு யானை வந்து மூங்கிலைப்பிடித்து இழுத்ததா என்பதல்ல இங்கே முக்கியம். தன்னுடைய உள்ளம் எப்படி விசையுறு பந்தினைப்போல் அவரிடம் திரும்பிச் செல்கிறது என்று என்று சொல்ல விழைந்த ஒரு கதாநாயகியின் கற்பனையில் உருவாகிய நிலம் அது. ஆக இது ஒரு வாழ்க்கைக் காட்சி அல்ல, உளநிலக்காட்சி. இந்த வாசிப்பு வந்த பிறகு தான் சங்கப்பாடல்களின் அழகு மேலும் துலங்க ஆரம்பிக்கிறது.
மு.வரதராசனார் நற்றிணை இன்பம் என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அவரது வாசிப்பு இப்படித்தான் இருக்கும் ”யானை எவ்வளவு அற்புதமாக மூங்கிலை இழுத்து சாப்பிடும் என்ற காட்சியை மிக அற்புதமாக சொல்லியிருக்கிறார்”. இவை வாழ்க்கை அல்ல, கனவுகள். நிலம் அல்ல உள்ளம். இந்த நிலமும் இவைகாட்டும் வாழ்க்கையும் இவை இயற்றப்பட்ட காலத்திற்கு நெடுநாட்களுக்கு முன்பு எப்போதோ இருந்தவை. நாம் இப்போதும் ராஜாராணிக்கதை பேசுகிறோமே அதைப்போல. அவர்களின் கனவுக்குள் வளர்ந்த கடந்தகாலம் இது. சென்று மறைந்த அரைப்பழங்குடி வாழ்க்கை. அதன் நிலம். ஆகவேதான் சங்கப்பாடல்களில் ஒரு விசித்திரத்தைப்பார்க்கமுடிகிறது. புறநாநூறு காட்டும் வாழ்க்கை மிக வளர்ச்சியடைந்த ஒன்றாகவும் அகப்பாடல்கள் காட்டும் வாழ்க்கை அரைப்பழங்குடிவாழ்க்கையாகவும் உள்ளன
இதைமட்டும் நாம் கருத்தில் கொண்டால் சங்கப்பாடல்கள் ஒவ்வொன்றும் வேறு வேறு வாசல்கள் திறந்து நமக்குக் காட்டுவதைக் காணலாம். தொடர்ந்து சங்கப்பாடல்களைப்பற்றி அந்த வாசிப்புகளை நிகழ்த்தி புத்தகங்களை வெளியிட்டிருக்கிறேன்.
குருகு என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். நானும் என்னுடைய மகனும் வயல்வெளியில் நடந்து சென்று கொண்டிருந்தோம். அவன் பறவையியலில் மிகுந்த நாட்டம் கொண்டவன். ஒரு வெண்பறவை வயலில் இருந்து எழுந்து தாழையில் உட்கார்ந்தது. இவன் “குருகு !குருகு!” என்று கத்தினான். நான் “குருகுன்னா கொக்குதானே ?” என்று சொன்னேன். அவன் கடுங்கோபத்துடன் “குருகு வேற, கொக்கு வேற. இதப்பார் இது குருகு. கால் குட்டையாக இருக்கும். அதனாலேயே கழுத்தும் குட்டையாக இருக்கும். குருகு புதருக்குள்தான் வாழும். பெரும்பாலும் அதற்கு மணமே கிடையாது. நாய் பக்கத்தில் போனால் கூட அதை பிடிக்க முடியாது. ஒரு வயலில் ஒரு குருகு இருப்பதை அந்த வயலில் வருடம் முழுக்க வேலை பார்த்தாலும் கூட நீங்கள் பாக்காமல் இருக்க வாய்ப்பிருக்கிறது. அவ்வளவு ரகசியமான பறவை. மிகத்தற்செயலாக தான் அது கண்ணுக்குப்படும்.
அப்போதுதான் அந்த சங்கப்பாடல் எனக்கு ஞாபகம் வந்தது.
  யாரும் இல்லை, தானே கள்வன்
  
  
   தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ
  
  
   தினைத்தான் அன்ன பார்க்கும்
  
  
   குருகு முண்டுதான் மணந்த ஞான்றே” (குறு.25)
இப்பாடல் என்ன சொல்கிறது. அவன் என்னை மணந்து கை தொட்டு சத்தியம் செய்து கொடுத்த அந்த நாளில் சான்றாக பக்கத்தில் குருகு மட்டும் தான் இருந்தது. அது மட்டும் தான் சான்று.
கிட்டத்தட்ட நூறு வருஷமாக இதற்கு கொக்கு என்று உரை எழுதியிருக்கிறார்கள் பண்டிதர்கள். நான் அஜிதனிடம் சொன்னேன். இப்படி ஒரு பாட்டு இருக்கிறது என்று. அதற்கு கொக்கு என்று உரை எழுதியிருக்கிறார்கள் என்றபோது அப்படியே சிரித்துவிட்டான். “அப்பா கொக்கு திறந்த வெளியில் வாழக்கூடியது. அப்ப தலைவியை திறந்தவெளியிலா உடலுறவு கொண்டான்?”. ஆம், குருகு தாழைக்குள் எங்கென்று தெரியாமல் இருக்கும் ஒன்று. திரும்பிச்சென்றால்கூட கண்டுபிடிக்க முடியாத ஒன்றுதான் தனக்கு சாட்சியாகிறது என்று சொல்லும்போதுதான் அந்தக் கவிதைக்கு ஒரு அர்த்தமே வருகிறது. எங்கே பாத்தாலும் கண்ணில் படும் கொக்குதான் சாட்சி என்று சொன்னால் அது கவிதையே இல்லை. இது தான் சங்க இலக்கியத்தின் நுட்பம்
சங்கப்பாடல்களில் ஒரு குறிப்பிட்ட வகையான பறவையோ மலரோ சொல்லப்படும்போது அதற்கு உரை எழுதிய பேராசிரியர்கள் அதைப்பற்றி கவலையே கொள்ளாமல் பொருள்கொள்வார்கள். அவர்கள் திண்ணையை விட்டு வெளியே போகாதவர்கள். அந்தப்பூ என்ன, அந்தப்பறவை என்ன என்று அவர்கள் விசாரிக்கவே மாட்டார்கள். ‘இதுவாகத்தான் இருக்கும், வேற என்ன எழுதியிருக்கப்போறாங்க’ என்று பொருள் எழுதிவிட்டார்கள். இன்றைக்கு நம் நவீன வாசிப்பில் நாம் சங்கப்பாடலை முழுக்க திருப்பி பொருள் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். சங்கப்பாடல்களில் இருந்து நம் மூங்கில் வெகுதூரம் நம்மை நோக்கி திரும்பி வரவேண்டியிருக்கிறது.
சங்கம் மருவிய காலகட்டம் என்று அடுத்த காப்பியகாலகட்டத்தை சொல்கிறார்கள். சிலப்பதிகாரம், மணிமேகலை,சீவகசிந்தாமணியின் காலம். சங்க காலத்துக்கும் இதற்குமான வேறுபாடு என்ன என்று கேட்டால் முதன்மையாகத் தத்துவச் சிந்தனை. தத்துவநோக்கு தமிழ் மரபில் வலுவாக வேரூன்றிய காலகட்டம் என்று இதைச் சொல்லலாம். பௌத்த, சமண தத்துவங்கள் இங்கே வந்தன. பிரபஞ்சம் பற்றிய சிந்தனை வந்தன. வாழ்க்கையின் ஒட்டுமொத்தம் பற்றிய கேள்விகள் வந்தன. தத்துவ சிந்தனை வந்த உடனே என்ன நிகழ்ந்தது என்றால் காட்சிக்கும் உணர்வுக்கும் நடுவில் தத்துவ சிந்தனை வந்து நின்றது. வாழ்க்கைக் காட்சி தத்துவ சிந்தனையால் மறு ஆக்கம் செய்யப்பட்டு பரிமாறப்படலாயிற்று. காட்சிகள் குறியீடுகளாயின.
புகழ் பெற்ற அந்த வரியை இங்கு நினைவு கூர்கிறேன். கோவலனும் கண்ணகியும் மதுரைக்குள் நுழைகிறார்கள்.
 போர் உழந்தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
 வாரல் என்பதுபோல் மறித்து கைகாட்ட
என்கிறார். கொடி வராதீர்கள் என்று கைகாட்டுகிறது. இந்த வகையான ஒரு படிமத்தை நீங்கள் சங்கப்பாடலில் பார்க்க முடியாது இதை இன்றைக்குள்ள நவீன வாழ்க்கையில் சொல்லப்போனால் cereberal image என்று சொல்லலாம். சிந்தனை சார்ந்த படிமம். ஒரு சிந்தனையாளனாகிய ஒருவரால், தத்துவத்தை அறிந்த ஒருவரால், உருவாக்கப்பட்ட படிமம். கண்டெடுக்கப்பட்ட படிமம் அல்ல. வயல்வெளிக்கு சென்று அங்கு ஒரு மலரையோ பறவையையோ பார்த்து அதிலிருந்து ஒரு தூண்டுதல் அடைந்த கவிதை அல்ல இது. சிந்தித்து எழுதப்பட்ட கவிதை. இந்த மாற்றம் தான் தமிழ்க் கவிதையின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு காரணமாக இருந்தது. \
இது இந்தியாமுழுக்க நிகழ்ந்தது என்று சொல்லலாம். தமிழில் இந்த மாற்றம் நிகழ்வதற்கு கொஞ்ச காலத்துக்கு முன்னால் சமஸ்கிருதத்தில் இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இந்த மாற்றம் நிகழ்வதற்கான காரணம் என்ன என்பதற்கு ஒரு விஷயத்தை மட்டும் விரிவாக சொல்கிறேன். சங்கநூல்களில் நான்கு கவிதைகளை எழுதியவர் கொல்லன் அழிசி . அவர் வெறும் கவிஞன் அல்ல, கொல்லன். ஆனால் தத்துவம் வந்தபிறகு முழு நேரக்கவிஞர்கள் மெதுவாக உருவாகலானார்கள். தமிழ்ப்பெருங்காவியம் ஒன்றை எழுதியவன் மதுரை கூலவாணிகனாகிய சாத்தன். ஆனால் பின்னர் தத்துவ ஞானியும் மத அறிஞனும் ஆகிய கவிஞன் உருவாகிவந்தான். கவிஞன் மட்டுமேயான கவிஞன். அவைக்கவிஞன். புரவலரால் பேணப்பட்டவன். இந்த மாற்றம் வந்த பிறகுதான் அழகியலில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது.
ஆற்றுர் ரவிவர்மாவிடம் பேசிக்கொண்டிருந்த போது நான் ஓர் உவமையை ரசித்து சொன்னேன். கதாசப்தசதியில் வரும் ஓர் உவமை. மையுண்ட இருகண்களும் நிறைந்து கதாநாயகியின் கண்ணீர் துளிகள் விழுந்தன. அந்த மை கலந்த கண்ணீர்த்துளிகள் அவளுடைய பொன்னிறமான மார்பில் கோடுகளாக நீண்டன. அவை மஞ்சள் நிறமான மரத்தை அறுப்பதற்காக நூல்கட்டி கரிக்கோடு போட்டது போல் இருந்தன. பிரிவென்னும் ரம்பத்தால் உள்ளத்தை காலம் அறுக்கப்போகிறது .அதற்காக போட்ட கரிக்கோடு போல அவள் கண்ணிலிருந்து விழுந்த கரிக்கோடு அது.
ஆற்றுர் ரவிவர்மா சொன்னார், இது cerebral ஆன உவமை. இந்த விஷயத்தை சொல்வதற்காக தன் உள்ளத்தில் இருந்து அவன் எடுக்கவில்லை. சிந்தனையிலிருந்து உருவாக்கியிருக்கிறான். இது அழகற்ற உவமை என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் சங்ககால உவமைக்கு நிகரானதல்ல. இது வேறு வகையான உவமை. இது ஒரு கவிஞனால் உருவாக்கப்படும் உவமை. ஒரு கவிச்சூழலால் சமைக்கப்பட்ட உவமை. இதற்கொரு அழகு இருக்கிறது. இது ஒரு பொற்கொல்லன் மிக நுட்பமாக நகை செதுக்குவது போல . ஒரு நுட்பமான பொன்மலர் இது. ஆனால் வெளியில் சென்று ஒர் அழகான ஆவாரம்பூவை எடுத்துப்பார்த்தால் அதற்கும் இதற்கும் மிகுந்த வித்தியாசம் இருக்கிறது. இதுதான் சங்கப்பாடலுக்கும் அடுத்த காலகட்டத்துக்கும் இடையே இருக்கும் அடிப்படையான வேறுபாடு
இதிலிருந்து ஆரம்பித்து கவிதை ‘செய்தல்’ நிகழ்ந்த பெரிய காலம் இருக்கிறது. Improvisation னின் காலம். நுட்பமாக மேம்படுத்திக் கொண்டே போவது. நுண்மையாக்கிக் கொண்டே செல்வது. ஒவ்வொரு கவிஞனுக்கும் அவனுடைய பெருங்க்களம் முன்னரே இருக்கிறது. அவன் சொந்தக் களஞ்சியத்திலும் கொஞ்சம் படிமங்கள் இருக்கின்றன. எழுத எழுத கவிதைக்கான கருவூலங்கள் நிறைந்துகொண்டே இருந்தன. Stock Images அதை எடுத்து இவன் எப்படி மாற்றியமைக்கிறான் என்பது தான் கவித்திறமை எனப்பட்டது.
நான் ஏற்கனவே சொன்னேன். அதே நளன், அதே தமயந்தி ,அதே அன்னம். ஆனால் இங்கு அவர் தாமரைப்பூவாக மாற்றுகிறார் அல்லவா, அதுமாதிரி . அதுவும் அழகுதான். ஆனால் முந்தைய காலகட்டத்தில் இருந்து அடுத்த கட்டத்துக்கு வந்துவிட்டார்கள். களங்கமற்ற கவிஞன் இல்லை, அறிஞன் வந்துவிட்டான்.
 வருவார் கொழுநர் எனத்திறந்தும்.
 வாரார் கொழுநர் எனவடைத்தும்
 திருகும் குடுமி விடியளவும் தேயும்
என்று கலிங்கத்துப்பரணியில் ஒரு வரி வருகிறது. காதலன் வரப்போகிறன் என்று எதிர்பார்த்துத் திறந்தும் வரவில்லை என்ற ஏக்கத்தில் மூடியும் இரவெல்லாம் சுழன்று காலையில் கதவு அமைந்திருக்கும் குமிழ்க்குடுமி தேய்ந்துவிட்டது . இது மூளைப்படிமம். செம்மையாக்கப்பட்ட படிமம்.
இது ஒரு சித்திரம்தான். ஆனால் இதன் நீள்வாசிப்பு என்னவென்றால் அந்தக்கதவு அவள் மனம். கிரீச்சிட்டு திறந்து, மூடியும், உரசிச் சூடாகி தேய்ந்து மறைவது அவள் அகம். அது அவள் உள்ளமென்றாகும்போது அதில் ஒரு அழகை உருவாக்குகிறார். ஆனால் இது ஒரு நிரந்தரப்படிமம். முன்னரே இருந்துவரும் ஒரு படிமத்தின் இன்னொரு வகைமாதிரி இது. இதை ஜெயங்கொண்டார் தன் கவித்திறமையால் கொஞ்சம் நுட்பமாக்குகிறார். இன்னொருவர் அதை இன்னமும் நுட்பமாக்குவார். இது ஒருவகையில் செவ்வியல் ஆக்கத்தின் அடிப்படை. கிளாசிசத்தின் இயல்பே இதுதான். கிளாசிசம் நேரடியாக வாழ்க்கையிலிருந்து படிமங்களை எடுத்துக் கொள்ளும். அதை ஒரு பெரிய கருவூலமாக மாற்றும். அதன் பிறகு வரும் கவிஞர்கள் அந்த கருவூலச்செல்வத்தை பெருக்கி நுண்மையாக்கிக்கொண்டே இருப்பார்கள்.
டிசம்பர் மாதம் நீங்கள் சென்னை கச்சேரிக்கு போனிர்கள் என்றால் ஒரு அறுபது அல்லது எழுபது பாட்டைதான் திருப்பி திருப்பி பாடுவார்கள். நகுமோ மோ கனலேனி சென்ற வருடம் எப்படி பாடினாரோ அதே மாதிரிதான் இந்த வருஷமும் பாடுவார். ஆனா சென்றவருடம் பாடினதைவிட இந்த வருடம் கொஞ்சம் மாறியிருக்கும். மனோதர்மம் என அதைச் சொல்வார்கள். மேம்படுத்துவது, நுட்பமாக்குவது, செதுக்குவது வழியாகத்தான் செவ்வியல்கலை செயல்படும். அதை ஒரு பொற்தேர் என்று நான் சொல்வேன். ஒவ்வொருவரும் தன்னுடைய அணிகலனை செதுக்கி அதில் அணிவிக்க்கிறார்கள். ஆயிரமாண்டுக்காலம் நம் முன்னோர் துளித்துளியாகச் சேர்த்த ஒரு தேர் என நம்முடைய வீதியில் உருண்டோடி இங்கு வரைக்கும் வந்து சேர்ந்திருக்கிறது அது.
காப்பிய காலகட்டத்துக்கு பிறகு பக்தி காலகட்டம் வந்தது. காப்பிய காலகட்டத்தில் இருந்து பக்தி காலகட்டத்துக்கான முதன்மையான மாற்றம் என்ன என்று கேட்டால் இரண்டு விஷயங்களைச் சொல்வேன். ஒன்று, பக்தி தத்துவத்தை நேரடியாகவேச் சொல்லக்கூடியது. இதை நீங்கள் காப்பிய காலத்திலும் பார்க்கலாம் அங்கு ஒரு கதைக்குள்ள தத்துவம் இருந்தது. நேரடியான தத்துவ உரையாடல்கள் இருந்தன. ஆனால் பக்தி காலகட்டத்தில் நேரடியாகவே இறைதத்துவத்தை மட்டுமே சொல்லக்கூடிய கவிதைகள் வந்தன. கவிதையின் நோக்கம் இறையனுபவத்தைச் சொல்வது என எண்ணப்பட்டது. ஆகவே கவிதை முக்கியம் அல்ல அதன் இறையியல் உள்ளடக்கமே முக்கியம் என்றாயிற்று.
என் நண்பர் வேதசகாயம் சொல்வார் 1970கள் வரைக்கும் கூட திருநெல்வேலியில் சைவ சித்தாந்த உள்ளடக்கம் இல்லாத கவிதை எழுதியவரை கவிஞர் என்று ஒத்துக் கொள்ளமாட்டேன் என்று சொல்லக்க்கூடிய பிள்ளைவாள்கள் வாழ்ந்திருக்கிறார்கள். பூனை நாலுகாலில் சைவ சித்தாந்தத்தில் விழுந்தாகவேண்டும். பக்தியை பாடினால்கூட அந்த உணர்ச்சியை மட்டும் சொன்னால், சைவ தரிசனத்தை மட்டும் சொன்னால் அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. அந்த வம்சம் இன்றைக்கு கிட்டத்தட்ட அழிந்தே போய்விட்டது
நெடுங்காலம் நம்முடைய கவிதை ரசனையில் சுருக்கமாக ஒரு மதத்தத்துவத்தை சொன்னாலே அது உயர்ந்த கவிதை என்று நம்பக்கூடிய வழக்கம் இருந்தது. இன்றைக்கு கூட தமிழகம் முழுக்க இருக்கும்ய சைவப்பேராசிரியர்களின் கவிதை ரசனை அதுவே. ‘ரத்தினச் சுருக்கமாக சொல்லிட்டான்! பாத்திங்களா என்ன அற்புதமாக சொல்லிட்டான்!” உண்மையில் இதுவும் ஒரு ரசனை தான். கவிதை எல்லாமும்தான். ஆனால் ரசனையின் ஒரு பகுதி மட்டும்தான் இது.
  பல்லுருவை எல்லாம் படர்வித்த வித்தா உன்
  
  
   தொல்லுருவை யாரறிவார்
என்று நம்மாழ்வார் கவிதை. இங்கிருக்கிற அத்தனை உருவங்களையும் உருவாக்கியவனே உன் உருவை யாரறிவார். இந்த வரியை எடுத்துக்கொண்டுபோய் அருவமான பரம்பொருள் உருவமாக மாறுவதைப் பற்றிய அத்தனை தத்துவத்தையும் பேசிவிட முடியும். இங்கிருக்கும் அத்தனை உருவங்களும் உருவமற்ற ஒன்றின் உருவங்களே. இங்கிருக்கும் அத்தனை உருவங்களில் இருந்தும் அந்த உருவற்ற ஒன்றை போய் சேரவும் முடியும். அருவமான ஒன்று உருவமாக மாறுகிறது. உருவமான ஒன்று அந்த அருவமான ஒன்றுள் ஒளிந்திருக்கிறது.
பெரும்பாலான சைவ வைணவ பக்தி நூல்களில் இருந்து ஒரு பெரிய தத்துவத்தை நோக்கி போகமுடியும். அவ்வரிகள் வழிகாட்டும் அம்புக்குறிகள் மாதிரித்தான். சென்னையைச் சுற்றியுள்ள அவ்வளவு ஊர்களிலும் சென்னையைக் குறித்து ஓர் அம்புக்குறி இருப்பதைப்போலதான் அனைத்து நூல்களிலும் சிவனை நோக்கியோ விஷ்ணுவை நோக்கியோ போகும் ஓர் அம்புக்குறி இருக்கிறது.
இது ஒரு பொதுவான மதப்பாடல்களின் மீதான ரசனை ஆனால் வைணவ இலக்கியத்தில் மட்டும் மேலதிகமான ஒன்று உள்ளது. அது ஒரு வகையான பரவச உணர்ச்சி என்று சொல்லலாம்.
  விடுவேனோ என் விளக்கை என் ஆவியை
  
  
   நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை
  
  
   தொடுவே செய்து இள ஆய்ச்சியர் கண்ணினுள்
  
  
   விடவே செய்து விழிக்கும் பிரானையே?
முதல் இரண்டு வரி பக்தி இயக்கத்தின் உணர்வுப்பெருக்கின் அடையாளம்.. விடுவேனா என் விளக்கை? என் ஆவியை? நான் போன பாதையில் நடுவே வந்து மறித்து ஆட்கொண்ட தெய்வத்தை நான் விடுவேனா? ஆனால் இரண்டாவது வரிதான் மிகவும் சுவாரசியமானது. ஆய்ச்சியரை தொட்டு அவர் உள்ளத்தில் குடிபுகுந்து அவளுடைய அழகிய கண்களில் காதலென வெளிப்படும் கண்ணனை நான் விடுவேனா? தெருவில் பார்க்கும் ஆய்ச்சியரின் கண்களின் அழகாக வெளிப்படக்கூடியவன் கண்ணன். அந்தக் கண்ணனை நான் விடுவேனா. இந்த வரிதான் வைணவக்கவிதைகளில் இருக்கும் அழகு. இந்த உணர்வை நீங்கள் பின்னால் கண்ணதாசனில் பார்க்கலாம்.
  மார்கழி நன்னாளில் மங்கையர் இளந்தோளில்
  
  
   கார்குழல் வடிவாக கண்ணன் வந்தான்
கண்ணனின் கருப்பு நிறம் பொன்னிறமான மங்கையர் தோளில் படிந்த கூந்தல் என்று சொல்கிறார். எதிர்ப்படும் பெண்ணின் கண்ணின் அழகாக வரும் கண்ணன் என்ற நம்மாழ்வாருடைய வரியின் தொடர்ச்சிதான் அது. இந்த ஒரு பரவசநிலை வைணவ இலக்கியத்துடைய ஒருதனிக் கவிதை பாணியாக தொடர்ந்து வருகிறது. இவ்வுலகத்தில் உள்ள அனைத்தையுமே கொண்டாடக்கூடிய மனநிலை. அது சைவத்தில் கிடையாது. அதனால் தான் கிருஷ்ணனை கோலாகலன் என்று சொல்கிறான். கோலாகலன் என்றால் கொண்டாட்டக்காரன் என்று தமிழில் சொல்லலாம்.
வாழ்க்கையை ,இயற்கையை, இன்பங்களை அனைத்தையுமே கொண்டாடக்கூடிய மனநிலையை உருவாக்கியவன் அவன். இவ்வனைத்திலுமே அவனைப்பார்க்க முடியும் இவ்வனைத்தும் அவன்தான். இந்த மனநிலையை வெளிப்படுத்தும் ஆழ்வார் பாடல்களில் மற்ற எந்த பக்திப்பாடல்களிலும் இல்லாத அளவுக்கு ஒரு தனி காப்பியச்சுவை இருக்கிறது. அது தமிழுடைய மிக முக்கியமான மரபுகளில் ஒன்று
மேலும்…..
[ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அமைப்பின் சார்பில் ஆகஸ்ட் 16, 2015 அன்று ரசனை முற்றம் என்னும் பெயரில் ஏற்பாடு செய்யப்பட்ட கூ
காந்தியின் கருத்துலகு – சில பரிமாணங்கள்
அன்புள்ள ஜெ,
சிறுவயதில் ‘நல்ல வேளை சுட்டான். இல்லேன்னா நாட்ட இன்னுங்கெடுத்திருப்பான் பாவி’ என்ற என் பாட்டனாரின் கூற்றை அவ்வப்போது கேட்டதுமுதல் ஆரம்பித்தது காந்தியை உதாசீனம் செய்யும் மனநிலை. எம்.ஜி.ஆர் எழுதிய சுயசரிதையில் அவர் தாய் வெள்ளையர்கள் கடவுள் அவதாரமென்று நம்பியதையும் அவர்களே உலகை ஆளத்தகுதியுள்ளவர்கள் என்று கருதியதையும் எழுதியிருந்தார். என் பாட்டனார் அந்தவகையாக இருந்திருக்கலாம்.
பின் என் இருபதுகளின் மத்தியில் ஓஷோ எழுத்துக்களில் கிறங்கிக்கிடந்தபோது ‘காந்தி ஒரு போலி மகாத்மா’ என்பதாகக் கையில் கிடைப்பவர்களிடம் – ஓஷோவில் வாசித்ததை ஒப்பித்து – பலமுறை நிரூபித்திருக்கிறேன்!
இப்போக்கு முற்றிலுமாக மாறி, தற்போது முப்பதுகளின் மத்தியில், காந்தியின் மீது கவனமும் ஆர்வமும் உண்டானதற்கு உங்கள் கட்டுரைகள் முக்கியக்காரணம். அக்கட்டுரைகளை ‘இன்றைய காந்தி’யில் மீள்வாசிப்பும் செய்துவருகிறேன். வயதும் பொறுப்புகளும் கூடிக்கொண்டுபோவதும், அனுபவத்தின் விளைவாக எதையும் கொந்தளிப்பல்லாது ஆராய்ச்சிபூர்வமாக அணுகவேண்டும் என்ற நோக்கம் வளர்ந்திருப்பதும் மற்ற காரணங்களாக இருக்கலாம் என நினைக்கிறேன்.
காந்தியின் கல்வி, ஆரோக்கியவாழ்வு ஆகிய தொகுப்புகளை வாசித்து எழுதிய கட்டுரை சொல்வனத்தில் பிரசுரமாகியுள்ளது. இணைப்பு இங்கே;
http://solvanam.com/?p=46100
சிவானந்தம் நீலகண்டன்
சிங்கப்பூர்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers
 

 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
  
