Jeyamohan's Blog, page 1735

September 6, 2016

சிங்கப்பூர் காவியமுகாம்

index


நண்பர்களே


விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் பல வருடங்களாக இலக்கிய முகாம்களை தொடர்ந்து நடத்திவருகிறது. இச்சந்திப்புகள் புதிய படைப்பாளிகளை பங்கேற்கச் செய்து அறிமுகப்படுத்துவதாகவும், இலக்கிய ரசனையை மேம்படுத்துவதாகவும், மரபிலக்கியத்தை தொடர்ந்து அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்துவதாகவும் அமைகின்றன.


2010ம் ஆண்டில் இருந்து விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பில் “ஊட்டி காவிய முகாம்” என்ற தலைப்பில் தொடர்ந்து ஒவ்வொருவருடமும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருட விஷ்ணுபுரம் காவிய முகாம் சிங்கப்பூரில் இந்த மாதம் (செப்டம்பர்) 17,18 சனி,ஞாயிறு கிழமைகளில் நடைபெற இருக்கிறது.


இந்தியாவில் இருந்து முப்பதுக்கும் மேற்பட்ட இலக்கிய ஆர்வலர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட 25 கவிதைகள் வழியாக கம்பராமாயணத்தின்அழகை எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பேச இருக்கிறார்.


எழுத்தாளர் சு வேணுகோபால், எழுத்தாளர். எம்.கோபாலகிருஷ்ணன் (சூத்ரதாரி) போன்றவர்கள் பங்கு கொள்கிறார்கள்


இதுதவிர சிறுகதை, நாவல் மற்றும் கவிதை பற்றி தனித்தனி அமர்வுகளும் அதை தொடர்ந்த விவாதங்களும் நடைபெறும்.


இறுதி நாளில் நாஞ்சில் நாடன், சு வேணுகோபால், எம் கோபாலகிருஷ்ணன் படைப்புகள்பற்றி அவர்களுடனான உரையாடல் நிகழ்வு நடைபெறும்.


மொத்தமாக ஐம்பது பேர்களுக்கு மட்டுமே அனுமதி என்பதால் முதலில் பதிவு செய்பவர்களுக்கே வாய்ப்பளிக்கும் கட்டாயத்தில் இருக்கிறோம்.


நிபந்தனைகள்



சந்திப்பு நிகழும் இரண்டு நாட்களும் வரவேண்டும்.
வரக்கூடியவர்கள் எல்லா அமர்வுகளிலும் முழுமையாகப் பங்கேற்க வேண்டும்.
வரவிரும்புகிறவர்கள் saran76@gmail.com என்னும் மின்னஞ்சலுக்கு தங்களைப்பற்றிய தகவல்களுடன் தெரிவித்தால் அழைக்கப்படுவார்கள். அழைக்கப்படாதவர்களுக்கு அனுமதி இல்லை. அனுமதி இல்லாமல் எவரையும் கூட்டி வரக்கூடாது.
தொடர்பு கொள்பவர்களுக்கு முகாமின் தேவைகளைப்பற்றி தகவல் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்
பதிவு செய்தபின் வர இயலாத சூழல் நேர்ந்தால் முன்னதாக தகவல் தெரிவிக்கவேண்டும். காத்திருப்பவர்களை அழைக்க ஏதுவாகும்.

முகாம் நடைபெறும் இடம்: Management Development Institute of Singapore (MDIS), Queens Town, Stirling Rd, Singapore


முகாம் நடக்கும் இரண்டு நாட்களுக்கும் காலை மற்றும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


தொடர்புக்கு saran76@gmail.com


இப்படிக்கு


சரவணன் விவேகானந்தன்


சிங்கப்பூர்

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 06, 2016 11:33

கனவுத்தமிழகம்,கோரதெய்வங்கள் -கடிதங்கள்

1


 


அன்பான ஜெயமோகன்


நலமாயுள்ளீர்களா?


.உங்களின் வலைத்தளம் மூலம் உங்கள் செயற்பாடுகளையும் சிந்தனைகளையும் அறிந்துகொள்கிறேன்


இன்று உங்கள் வலைத்தளத்தில் அகோர தெய்வங்களை வணங்குவதுசம்பந்தமாக நீங்கள் எழுதிய  ஒரு கட்டுரை பார்த்தேன்


மிக நல்ல கட்டுரை


அதனை நான் என் முக நூலில் இன்று பதிந்துமுள்ளேன்


அன்புடன்


மௌனகுரு


***


அன்பின் ஜெ..


உங்களிடம் பகிர்ந்து கொண்டேனா எனத் தெரியவில்லை. தென் ஆஃப்பிரிக்காவில் ஒரு அனுபவம்.


http://solvanam.com/?p=45519


இவர்களின் கனவிலும் தமிழகம் இருக்கிறது. மொழி இவர்களோடு போய்விடும். அடுத்த தலைமுறையை, மதம் இணைத்து நிற்கும்.


பாலா


 


 



 



தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 06, 2016 11:31

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 50

[ 4 ]


தொல்புகழ்கொண்ட இக்‌ஷுவாகு குலத்தில் சுத்யும்னனுக்கு மைந்தனாகப் பிறந்தவன் யுவனாஸ்வன் என்னும் அரசன். குருதி ஓயாத கொடுவாள் கொண்டவன் என அவன் புகழ்பாடினர் சூதர். பாரதவர்ஷத்தின் ஐம்பத்தாறுநாட்டு அரசரையும் அவன் அடிபணியச் செய்தான். அதன்பின்னரும் வெற்றிக்கான விடாய் ஓயாது மேலும் மேலுமென்று எழுந்தது அவன் உள்ளம். இரவுகள்தோறும் தன்னைப் பணியாத அரசர்களை வெல்வதைப்பற்றி கனவு கண்டான். அவர்களை வெல்லும் வழிதேடி போர்சூழ்கைகள் வகுத்தான். பகலில் தான் வென்ற நிலத்தின் மக்களுக்கு நீரும் அறமும் சீராகக் கிடைக்கும்படி கோல் நிறுத்தினான். பிறிதொரு எண்ணமே அவனுக்கு இருக்கவில்லை.


யுவனாஸ்வன் ஒன்பது மனைவியரை மணந்து பன்னிரு ஆண்டுகாலம் இல்லறம் நடத்தியும் அவனுக்கு மைந்தர் பிறக்கவில்லை. மணிமுடிக்கென மைந்தர் வேண்டுமென அவனிடம் அமைச்சர்கள் சொன்னபோது அதை அரசுசூழ்தலென்றே அவன் எடுத்துக்கொண்டான். தங்கள் மடியிலாட மகவுகள் தேவை என்று மனைவியர் சொன்னபோது அதை பெண்டிரின் இயல்பு என்று மட்டுமே புரிந்துகொண்டன். நாளும்பொழுதும் களம் வகுப்பதிலும் அரசு சூழ்வதிலும் அறமுரைப்பதிலுமே ஈடுபட்டிருந்தான். ஓயாது போரை எண்ணியிருந்தமையால் அவன் முகம் கற்சிலை போலிருந்தது. அசைவுகள் இரும்புப்பாவை போலிருந்தன. விழிகளில் முகமறியும் நோக்கே இருக்கவில்லை. குருதிபலி கோரும் கொடுந்தெய்வம் என்றே அவனை உணர்ந்தனர் சுற்றமும் சூழரும்.


கல் கனியாது அனல் பிறப்பதில்லை என்று நிமித்திகர் சொன்னார்கள். அரசனுக்கு மைந்தன் பிறக்கவேண்டுமென்றால் அவன் நெஞ்சு நெகிழவேண்டும். உடல் மென்மை கொள்ளவேண்டும். மண்ணில் பிறக்க விழையும் குழவியர் விண்ணில் நின்று கீழே நோக்குகிறார்கள். அருந்தவம் இயற்றுபவர்களையே அவர்கள் தேர்வுசெய்கிறார்கள். உளம்கனிந்த மடிகளிலேயே வந்து பிறக்கிறார்கள். இப்புவியில் நன்றோ தீதோ கோரப்படாது அளிக்கப்படுவதில்லை. மைந்தருக்கான பெருவிடாயை அவனுள் நிறைக்கவேண்டுமென அமைச்சர் விழைந்தனர். அவன் உடல் வேள்விக்குளமாக வேண்டும். அதில் விழைவெரியவேண்டும். ஆணவம் ஆகுதியாகவேண்டும்.


ஒருமுறை இரவுலாவச் சென்றபோது கால்களைத்து யுவனாஸ்வன் ஓர் அரசமரத்தடியில் தனித்து ஓய்வெடுக்கையில் முன்னரே அமைச்சர்கள் செய்து வைத்திருந்த ஏற்பாட்டின்படி எளிய சூதர்மகள் ஒருத்தி சற்றுமுன் பிறந்த தன் மகனுடன் அப்பால் படுத்திருந்தாள். காய்ச்சலுக்கான நச்சுமருந்து புகட்டப்பட்ட அவள் நோயுற்று மயங்கிக்கிடக்க அந்தக் குழந்தை வீரிட்டழத்தொடங்கியது. அவ்வொலியை முதலில் யுவனாஸ்வன் ஏதோ பறவை ஒலியென எண்ணினான். பின்னரே குழவியின் அழுகையென அறிந்தான். குழவிக்குரல்கள் எப்போதும் மானுடத்தை நோக்கியே எழுகின்றன, வேண்டுகின்றன, ஆணையிடுகின்றன, சீறுகின்றன. அதை ஒவ்வொருவரும் தங்களுக்கான தனிக்குரல் என்றே உணர்கின்றனர்.


செவிகுத்தும் அதன் அழுகையைக் கேட்டு அமர்ந்திருக்கமுடியாமல் அவன் எழுந்துசென்று நோக்கினான். அத்தனை தொலைவுக்கு அச்சிறிய குழந்தையின் குரல் வந்துசேர்ந்திருப்பதை உணர்ந்து வியந்தான். சருகில் கிடந்து குழந்தை செவ்விதழ்ச் செப்பு கோண கூவியழுதது. அங்கே சூதர்மகள் காய்ச்சல்கண்டு சுருண்டுகிடப்பதையும் குழவி அழுகையால் உடல்சிவந்து கைகால்கள் இழுபட்டு அதிர்ந்துகொண்டிருக்க தொண்டைதெரிய ஓசையிடுவதையும் கண்டான். தன் அமைச்சர்கள் வருகிறார்களா என வழிகளை பார்த்தான். அவர்கள் நீர்கொணரச் சென்றிருந்தனர். ஏவலரும் உடனில்லை.


அவன் அச்சூதமகளை காலால் மிதித்து எழுப்பினான். அவள் தன்னுணர்வில்லாத காய்ச்சலில் நடுங்கிக்கொண்டிருந்தாள். உதடுகள் உலர்ந்து ஒட்டியிருந்தன. மூச்சில் முலைக்குவைகள் எழுந்து அடங்கின. மெலிந்த உடல் அலைபாய்ந்தது. அழுது துடித்த குழவி ஓசையின்றி வலிப்புகொள்ளத் தொடங்கியது. யுவனாஸ்வன் அதை கையிலெடுத்தான். வாழைத்தளிர்போல அது கைகளில் குழைந்தது. மென்பட்டென வழுக்கியது. சுடர்துடிக்கும் அகல் என பதறச்செய்தது. அதை கையிலேந்திபோது கைகளுடன் கால்களும் நடுங்கின. அதை கீழே போட்டுவிடக்கூடாதென்று எண்ணி நெஞ்சோடணைத்துக்கொண்டான்.


நெஞ்சில் அதன் நெஞ்சத்துடிப்பை உணரமுடிந்தது. ததும்பும் சிறுகலம் என அதை ஏந்தியபடி அவன் அங்குமிங்கும் நிலையழிந்தான். என்ன செய்வதென்றறியாமல் சூழநோக்கினான். அவன் நெஞ்சத்துடிப்பை உடலால் உணர்ந்த அக்குழவி தன் கைகளால் அவன் மார்பின் முடியைப் பற்றிக்கொண்டது. பறவைக்குஞ்சுபோல நகம் நீண்ட அதன் கைகள் அவன் உடலைப் பற்றியபோது அவன் சிலிர்த்தான். அதை கையிலெடுத்தபோதே கனியும் கொஞ்சும் மன்றாடும் உளக்குரல் தன்னுள் ஊறியதை அறிந்தான். அக்குழவி அதை அறிந்து அழுகையை நிறுத்திவிட்டு தன் உடலை நெளித்து எம்பி தவிக்கும் வாயைக் குவித்து அவன் முலைக்கண்களைக் கவ்வி சப்பியது.


கூசித்திகைத்து அவன் பின்னடைந்தாலும் அது தன் வாயை எடுக்கவில்லை. அவன் மெய்விதிர்க்க சிலகணங்கள் நின்றான். தளர்ந்த கால்களுடன் மெல்ல பின்னடைந்து வேர்களில் அமர்ந்துகொண்டான். அவன் கண்கள் கலங்கி வழியலாயின. உடல் மெய்ப்புகொண்டு குளிர்ந்தடங்கி மீண்டும் அதிர்ந்து எழுந்தது. ஆழப்புண்பட்ட துளைவழியாக தன் குருதி வடிந்தோடுவதைப்போல உணர்ந்தான். முழுக்குருதியும் வழிந்தோட உடல் எடையழிந்து ஒழிவதாகத் தோன்றியது. கைகால்கள் இனிய களைப்பால் தொய்ந்தன. விழியிமைகள் சரிந்து ஆழ்துயில்போல ஒன்று அவனை ஆட்கொண்டது. அதில் அவன் பெண்ணென இருந்தான். அவன் கைகள் குழவியின் புன்மயிர்த்தலையை தடவிக்கொண்டிருந்தன.


அகலே நின்று நோக்கிய அமைச்சர்கள் ஓடி அருகணைந்தனர். முலையுறிஞ்சிக்கொண்டிருந்த குழந்தையை எடுத்து கொண்டுவந்திருந்த பாலை துணியில் நனைத்து ஊட்டினர். அந்நேரமும் அதை பிரியமுடியாதவனாக அவன் எழுந்து அதை நோக்கி கைநீட்டினான். அரண்மனைக்குக் கொண்டுசெல்லும்போது அக்குழவியை தன் கையிலேயே வைத்திருந்தான். அவன் மடியிலேயே அது உறங்கியது. இரவு தன்னருகே படுக்கவைத்து அதை தடவிக்கொண்டிருந்தான். தன் முலைக்கண்கள் ஊறுகிறதா என்றே ஐயம்கொண்டான். மீண்டும் இருளில் அதன் வாயில் முலைக்கண்களை அளித்து உடல் உருகலானான்.


அன்னை நோய்நீங்கி மறுநாள் விழித்ததுமே அக்குழவியை கேட்டாள். அவளை என்னருகே வந்தமர்ந்து முலையூட்டச்சொல் என்றான் அரசன். அவள் தன் குழந்தையைக் காண அரசனின் அறைக்குள் வந்தாள். அங்கு உடல்குறுக்கி அமர்ந்து முலையளித்தாள். குழவியை தன் அருகே இருந்து விலக்க அரசன் ஒப்புக்கொள்ளவில்லை. அரசப்பணியையும் நெறிகாத்தலையும் குழவியை கையிலேந்தியபடியே செய்தான். தனித்திருக்கையில் புவியில் பிறிதொன்றில்லை என்பதுபோல அக்குழவியையே நோக்கிக்கொண்டிருந்தான். கைவிரல்களால் ஓயாது வருடியும் மீளமீள முகர்ந்தும் அதை பார்த்தான். அதன் மென்தசையை முத்தமிட்டுச் சுவைத்தான். அதன் மூச்சொலி காதில்கேட்க காதுகளில் பிஞ்சுவயிற்றை சேர்த்துக்கொண்டான்.


பன்னிரு நாட்களுக்குப்பின் ஒருநாள் அமைச்சர் அக்குழவியையும் அன்னையையும் இரவிலேயே அரசனிடமிருந்து பிரித்து அவர்களின் அரச எல்லைக்கு அப்பால் கொண்டுசென்றுவிட்டனர். முகமறியா மக்கள்திரளில் அவள் முழுமையாக கலந்து மறையும்படி செய்தனர். விடிகாலையில் விழிப்புகொண்ட அரசன் அறியாமலேயே கைநீட்டி குழந்தையைத் துழாவி அதைக் காணாமல் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தான். “எங்கே? என் குழந்தை எங்கே?” என்று கூவியபடி அரண்மனை இடைநாழிகளில் பித்தனைப்போல ஓடினான். எதிர்ப்படுபவர்கள் அனைவரிடமும் குழந்தையைப்பற்றி கேட்டு அழுதான். தூண்களை ஓங்கி மிதித்தான். ஏவலரை அறைந்தான்.


குழந்தையும் அன்னையும் மறைந்துவிட்டிருப்பதை உணர்ந்ததும் மேலாடை இல்லாமல் முற்றத்தில் இறங்கி கூவியபடி ஓடிய அவனை அமைச்சர் பற்றிக்கொண்டுவந்தனர். அவனிடம் மெல்ல மெல்ல அவர்களை மீண்டும் காணமுடியாது என்று சொல்லி புரியவைத்தனர். “அது அவள் குழந்தை. அன்னை தன் குழவியை இன்னொருவருக்கு விட்டுத்தரமாட்டாள். அரசன் ஆயினும். பேரன்புடையவன் ஆயினும். அவள் தப்பிச் செல்வது இயல்புதான். அரசே, உங்கள் உடலில் எழுந்த மைந்தரே உங்களுக்குரியவர்கள்” என்றனர்.


அழுது அரற்றியும் பித்தன்போல புலம்பியும் ஏங்கி சொல்லிழந்தும் அவன் அரண்மனையில் இருந்தான். அவன் தேவியர் அவனை தேற்றமுடியவில்லை. அவன் எவரும் தன்னருகே வருவதை விரும்பவில்லை. அக்குழவியின் ஆடைகளை எடுத்து நெஞ்சோடணைத்துக்கொண்டான். அது படுத்திருந்த மெத்தையின் மெல்லிய குழியை வருடி வருடி கண்ணீர்விட்டான். நாளும் அவன் துயர் ஏறிஏறிச் சென்றது. அதன் உச்சியில் அத்துயர் மறுபுரிச்சுழற்சி கொண்டது. ஏழாம்நாள் அவன் அரைத்துயிலில் இருந்தபோது தன்னருகே குழவி இருப்பதை உடலால் உணர்ந்தான்.


விழிதிறந்தாலோ கைநீட்டினாலோ அது கலைந்துவிடுமென்றும் அறிந்திருந்தான். ஆனால் அவன் உள்ளம் உவகையால் நிறைந்தது. உடற்தசைகள் முறுக்கவிழ்ந்து தளர்ந்தன. குழவி மெல்ல அவன் முலைக்கண்ணை சுவைக்கத் தொடங்கியது. அவன் ஆழுணர்வில் அதில் திளைத்தான். குழவி அவனை உண்டபடியே இருக்க அவன் துயிலில் ஆழ்ந்தான். அங்கே அக்குழவியுடன் அறியா நிலங்களில் நடந்தான். விழித்துக்கொண்டபோது அருகே குழவி இல்லை என்னும் தெள்ளிய உணர்வு எஞ்சியிருந்தது, ஆனால் துயர் இருக்கவில்லை. குழவி கிடந்த அந்த மென்மையான மரவுரிக்குவையை கையால் நீவியபடி அவன் விழி கசிந்துவழிய படுத்திருக்கையில் தன் மேலாடை நனைந்திருப்பதைக் கண்டான். அவன் இருமுலைகளும் சுரந்திருந்தன.


யுவனாஸ்வன் மைந்தர் பிறப்பதற்கான வேள்விகளை இயற்றலானான். பிருகுநந்தனர் என்னும் பெருவைதிகர் அவன் அவையிலமர்ந்து அந்த வேள்விகளை அவனுக்காக ஆற்றினார். ஏழு புத்ரகாமேஷ்டிகளை அவன் செய்தான். ஏழாவது வேள்வியனலில் எழுந்த இந்திரன் “ஊழ்வினையின்படி இவ்வரசனுக்கு மைந்தர் இல்லை. இவன் அன்னையின் கருவுக்குள் பார்த்திவப்பரமாணுவாக இருக்கையிலேயே முடிவானது அது. விதைகள் அற்றது இவன் உடல்” என்றான். “ஊழ் பிரம்மனின் நெறி. வேதம் பிரம்மனையும் ஆளும் நெறிகொண்டது” என்றார் பிருகுநந்தனர். “வேள்விக்கு எழும் அத்தனை தெய்வங்களும் இங்கு வருக! பிரம்மனே வருக!”


மீண்டும் ஏழு புத்ரகாமேஷ்டி வேள்விகளை பிருகுநந்தனர் அமைத்தார். அமைச்சர்கள் உளம்சோர்ந்தனர். தேவியர் நம்பிக்கை இழந்தனர். கருவூலம் ஒழிந்துவந்தது. அரசன் படைக்களம் மறந்தான் என்றறிந்து எல்லைகளில் எதிரிகள் கொழுக்கலாயினர். அவன் நெறியவைக்கு வராமையால் குடிகள் கட்டவிழ்ந்தனர். “அரசருக்கு மைந்தர் இல்லை என்பதே ஊழ் என்றால் அவ்வண்ணமே ஆகுக! அரசரின் இளவல்கள் எவரேனும் அவருக்குப்பின் முடிசூடட்டும்” என்றனர் அமைச்சர். “நாங்கள் முதுமைகொண்டுவிட்டோம். எங்கள் வயிறுகள் கருக்கொள்ளும் ஆற்றலிழந்துவிட்டன. இப்பிறவியில் இப்படி என எண்ணி அமையவும் கற்றுவிட்டோம்” என்றனர் அரசியர்.


ஆனால் யுவனாஸ்வன் ஒரு சொல்லையும் செவிகொள்ளவில்லை. “உயிரின் இறுதித்துளி எஞ்சுவதுவரை மைந்தனுக்கான வேள்வியிலேயே இருப்பேன். என் உடல் முளைக்காமல் இங்கிருந்து அகலமாட்டேன்” என்றான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் அவன் மைந்தன் என்னும் நினைவிலேயே வாழ்ந்தான். அவன் உறுதிகொண்ட உடல் நெகிழ்ந்து குழைவுகொண்டது. முகத்தில் மயிர் உதிர்ந்து பெண்மை வந்தது. முலைகள் உன்னி எழுந்தன. இடைசிறுத்து தொடைபெருத்து நடை ஒல்கியது. இதழ்கள் நீர்மைகொண்டன. கண்கள் நீண்டு கூர்கொண்டு கனவுசூடின. குரலில் யாழும் குழலும் கலந்தன.


பதினான்காவது வேள்வியில் எழுந்த பிரம்மனிடம் பிருகுநந்தனர் சொன்னார் “இங்கு நிகழும் அனல்வேள்வி என்பது அரசன் தன் உள்ளத்தால் செய்யும் எண்ணவேள்வியின் மறுவடிவே. இவ்வேள்வியைக் கடந்தாலும் அவ்வேள்விக்கு நீங்கள் நின்றாகவேண்டும், படைப்பிறையே. அருள்க!” பிரம்மன் “என் ஊழைக் கடப்பது முனிவரின் தவம். அது துணை செய்க!” என்று அருளினார். “திசைமுகனே, உங்கள் அருள் இந்த கங்கைநீரென்றாகுக! இதை அருந்தி அரசனின் துணைவியர் கருக்கொள்க!” என்றார் பிருகுநந்தனர். “அவ்வாறே” என்று பிரம்மன் சொல்லளித்தார்.


தர்ப்பையால் அனலைத் தொட்டு கங்கை நீர்க்குடத்தை வருடி அதில் நான்முகன் அருளை நிறைத்தனர். முறைமைசெய்து வேள்வி முடிந்து அந்த நீர்க்கலத்துடன் வேள்விச்சாலையிலிருந்து அருகிலிருந்த கொட்டகைக்குச் சென்ற வேதியர் அங்கேயே அமர்ந்தனர். ஆடைகளை மாற்றிக்கொண்டு மஞ்சத்துக்குச் செல்ல விழைந்தவர்கள் களைப்பால் அங்கேயே அவ்வண்ணமே படுத்துத் துயின்றனர். கொட்டகைக்கு நடுவே இருந்த சிறு பீடத்தில் பொற்கலத்தில் அந்த நீர் இருந்தது.


அவ்விரவில் வேள்வி முடிந்த மணியோசைகளையும் சங்கொலிகளையும் கேட்டுக்கொண்டே அருகே இருந்த வேள்விக்காவலனுக்கான பந்தலில் அரைத்துயிலில் இருந்த யுவனாஸ்வன் தன் உடலில் அனல் பற்றி எரிவதுபோல் கனவு கண்டான். உலர்சுள்ளியைப்போல அவன் கை பற்றிக்கொண்டது. கால்களும் தலையும் எரியலாயிற்று. முலைகள் கனலாயின. வயிற்றில் தழல்சுழன்றது. அந்த அனல் அவன் உடலின் கீழ்ப்பகுதியில் மூலாதாரத்தில் இருந்தே எழுந்தது என்றறிந்தான். விழித்துக்கொண்டபோது தன் உடல் விடாயில் தவிப்பதை உணர்ந்தான். அத்தகைய பெருவிடாயை அவன் முன்பறிந்ததே இல்லை. தொண்டையை கைகளால் வருடியபடி எழுந்து ஓடி கொட்டகைக்கு வந்தான். அங்கே பொற்கலத்திலிருந்த கங்கை நீரைக்கண்டு பிறிதொன்று எண்ணாமல் அதை எடுத்துக் குடித்தான்.


ஓசைகேட்டு விழித்துக்கொண்ட பிருகுநந்தனர் கையில் ஒழிந்த குடத்துடன் நின்றிருந்த யுவனாஸ்வனைக் கண்டு திகைத்தார். என்ன நிகழ்ந்ததென்று உடனே புரிந்துகொண்டார். அனைத்து வைதிகரும் பதறி எழுந்து அரசனைச் சூழ்ந்தனர். “என்ன செய்துவிட்டீர்கள், அரசே?” மைந்தனைப் பெறுவதற்கான வேள்விப்பயனை நிறைத்துவைத்த குடமல்லவா இது?” என்றார் பிருகுநந்தனர். “நிகரற்ற வல்லமைகொண்டவனாகிய மைந்தன் இந்த நீரில் நுண்வடிவில் உறைகிறான். பருவுடல் கொள்ள பெருவெளியில் அவன் காத்திருக்கிறான்.” யுவனாஸ்வன் “நான் அறிந்திலேன். இவ்வண்ணம் எப்படி நிகழ்ந்தது என்றே எனக்குத் தெரியவில்லை” என்றான்.


நிமித்திகரை அழைத்து வருகுறி தேர்ந்தனர். பன்னிரு களம் அமைத்து கல்லுருட்டி கணக்கிட்டு நிமிர்ந்த முதுநிமித்திகர் சாந்தர் சொன்னார் “அந்தணரே, தான் எனத் திரண்ட மைந்தன் பருவுடல்கொள்வது உறுதி. தந்தையை வெல்லும் ஆற்றல்கொண்டவன் ஆவான். ஏழு பெருவேள்விகளை நிகழ்த்தி குலம் வாழச்செய்வான்.” பின்னர் எவர் விழிகளையும் நோக்காமல் “நான் சொல்வது குறிகள் காட்டுவதை மட்டுமே. அந்த மைந்தன் அரசரின் உடலிலேயே கருவுறுவான். அங்கு உயிருடல் கொண்டு பிறப்பான்” என்றார்.


ஆனால் பிருகுநந்தனரோ யுவனாஸ்வனோ திகைப்புறவில்லை. அந்தணர் ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டனர். “அரசரின் பெருவிழைவு தன் உடல்முளைக்கவேண்டும் என்பதே. அவ்வாறே அருளின தெய்வங்கள்” என்றார் நிமித்திகர். “ஆம், அவ்வண்ணமே ஆகுக! அதுவும் நல்லூழே” என்றார் பிருகுநந்தனர். அரசன் நெடுமூச்செறிந்தபோது முலைகள் எழுந்தமைந்தன. கனவுடன் கண்முனைகள் கசிவுகொண்டன. இடைநலுங்க அணிகள் குலுங்க அவன் நடந்து தன் அறையைச் சென்றடைந்தான். அங்கு மஞ்சத்தில் களைப்புடன் படுத்துக்கொண்டு கண்மூடி புன்னகைக்கும் மைந்தனின் முகத்தைக் கண்டான். மெய்விதிர்ப்பு கொள்ள “என் தெய்வமே” என நெஞ்சில் கைவைத்து அழுதான்.


அரசனின் வயிறு பெருத்தது. வரிகளோடிச் சரிந்தது. அவன் முலைக்கண்கள் கருமைகொண்டன. புதுமணல்போல மென்வரிகளுடன் முலைக்குவைகள் பருத்துச் சரிந்தன. அவன் உதடுகள் கருமைகொண்டு மூச்சில் இனிய ஊன்மணம் கலந்தது. கழுத்தும் கையிடுக்குகளும் கன்றின. கண்வெளுத்து நடை தளர்ந்தது. அரண்மனைச் சுவர்களை உடைவாளால் சுரண்டி சுண்ணத்தை உண்டான். திரி எரிந்த சாம்பலை சுட்டுவிரலால் தொட்டுச் சுவைத்தான். குங்குமத்தையும் களபத்தையும் சிறு இலைப்பொட்டலமாக எடுத்துவைத்துக்கொண்டு தின்றான். சிறு ஒலி கேட்டும் திடுக்கிட்டான். நிற்கையிலும் நடக்கையிலும் தன் வயிற்றையே எண்ணிக்கொண்டான். தனியாக அமர்ந்து வானை நோக்கி கனவுகண்டான். சிறுபறவைகளையும் வண்ணப்பூச்சிகளையும் கண்டு குழந்தைபோல முகம்மலர்ந்து சிரித்தான்.


மாதங்கள் செல்ல அரசனின் வயிறு பெருத்து வலப்பக்கம் சரிந்தது. வலக்கை ஊன்றி பெருமூச்சுடன் எழுந்தான். புரியாத ஐயங்களும் அச்சங்களும் கொண்டு உளம் கலங்கி தனிமையில் அழுதான். மத்தகம் தூக்கி கொம்பு ஒளிவிட இருளிலிருந்து வரும் களிற்றுயானையை மீண்டும் மீண்டும் கனவுகண்டான். இரவில் முழுத்துயில் இல்லாது கண் சோர்ந்து எழுந்தான். கைகள் குடைச்சல்கொள்ள நாளெல்லாம் மஞ்சத்தில் அசைவில்லாது அமர்ந்திருந்தான். கால்கள் வீங்கின. பின் முகம் உப்பி ஒளிகொண்டது. கண்ணிமைகள் கனிந்து தொங்கின. சிறு அசைவுக்கே நெஞ்சு படபடக்கத்தொடங்கியது. மழலைச்சொல் உரைப்பவன் ஆனான். அனைவர்மீதும் கனிவும் அனைத்தின்மீதும் எரிச்சலும் மாறிமாறி வந்து அவனை அலைக்கழித்தன.


அரசன் வயிற்றில் மைந்தன் இருப்பதை மருத்துவர் உறுதிசெய்தனர். அவன் வளர்ந்து கையும் காலும் கொள்வதை தொட்டுப்பார்த்து சொன்னார்கள். முழுவளர்ச்சியடைந்த மைந்தன் ஒலிகளுக்கு செவிகொடுத்தான். காலால் தந்தையின் வயிற்றை உதைத்து உந்தி முழைகாட்டினான். அவன் அசைவை அறிந்து யுவனாஸ்வன் உடல்விதிர்க்க கூசிச்சிரித்து துள்ளினான். அந்த முழைமேல் கைவைத்து கூச்சலிட்டு நகைத்தான். “உயிர்கொண்டிருக்கிறான்! உயிர்!” என்று கூவினான். “என் உயிர்! என் உயிரை நானே தொடுகிறேன்!” ஊழ்கத்தில் என என் உயிர் என் உயிர் என்று சொல்லிக்கொண்டே இருந்தான்.


அம்மைந்தன் எப்படி பிறக்கமுடியும் என மருத்துவர்களுக்கு புரியவில்லை. அரசன் இறக்கக்கூடும் என அவர்கள் அஞ்சினர். பாரதவர்ஷமெங்கும் தூதர்களை அனுப்பினர். அகத்தியரின் வழிவந்த முதுமருத்துவர் ஒருவர் அவர்களின் அழைப்புக்கிணங்கி வந்தடைந்தார். இடையளவே உயரமிருந்த அவர் பெரிய உருண்டை விழிகளும் ஓங்கிய குரலும் கொண்டிருந்தார். “விலாபிளந்து மைந்தன் எழுவான். ஏனென்றால் மண்ணின் விலாபிளந்தே செடிகள் எழுகின்றன.”


அரசனுக்கு மூலிகைகொடுத்து மயங்கவைத்து அவரும் அவருடைய ஏழு மாணவர்களும் அவன் வயிற்றின் தசைகளைக் கிழித்து கனி அகழ்ந்து விதையைப் பிதுக்குவது போல மைந்தனை வெளியே எடுத்தனர். குருதிவழிய குளிர்கொண்டு அவன் அழுதான். அவன் உடலிலக்கணம் நோக்கி “அரியவன். ஆள்பவன்” என்றார் அகத்தியர். அழுகை கேட்டு உள்ளே ஓடிவந்த அமைச்சர்கள் “எங்கே? அரசர் எங்கே? அவர் நலமாக இருக்கிறாரா?” என்றார்கள். தசைகளைப் பொருத்தி குதிரைவால்மயிரால் சேர்த்துத் தையலிட்டு தேன்மெழுகும் அரக்குமிட்ட பட்டுத்துணியால் சுற்றிக்கட்டி பக்கவாட்டில் படுக்கவைக்கப்பட்டிருந்த யுவனாஸ்வன் குருதிமணத்துடன் துயின்றுகொண்டிருந்தான்.


குழந்தையின் அழுகுரல்கேட்டு ஒன்பது அன்னையரும் ஓடிவந்தனர். “அமுது! முதலமுது!” என அகத்தியர் விரைவுபடுத்தினார். சேடியர் ஓடிச்சென்று நறும்பாலை கொண்டுவந்தனர். அதை தூயபஞ்சுத்திரியில் தொட்டு மைந்தன் வாயில் வைத்தனர் அன்னையர். அவன் அதைத் துப்பி வழியவிட்டு செந்நிறக் கைகளைச் சுருட்டி ஆட்டி அடிக்கால்கள் சுருங்க கட்டைவிரல் சுழிக்க அதிர்ந்த வயிற்றுடன் அழுதான். அரியதொன்று இரண்டாகக் கிழிபடும் ஒலியுடன் அழுத அவனைக்கண்டு செய்வதறியாமல் அவர்கள் திகைத்தனர்.


“முலையூட்டும் சேடி ஒருத்தியை கொண்டுவருக!” என அமைச்சர் சாம்யர் ஆணையிட்டார். ஏவலர் ஓடி முலைப்பெண்டிர் எழுவரை கொண்டுவந்தனர். ஆனால் அவர்கள் தங்கள் கைகளால் தொட்டதுமே மைந்தனின் உடல் நீலம்பாரித்து விரைப்புகொண்டது. அவன் உதடுகள் அவர்களின் முலைக்கண்களை கவ்வவில்லை. நாண் இழுபட்ட சிறு வில் என அவன் அவர்கள் கைகளில் இறுகியிருந்தான். ஏழு முலைப்பெண்டிரும் அவனை ஊட்டமுடியவில்லை. முலைப்பாலை அவன் வாயில் பீய்ச்ச வைத்தபோதும் உண்ணாமல் கடைவாய் வழிய அவன் துடித்து நடுங்கினான்.


“குழவி கருவறைக்குள்ளேயே குருதிவழியாக அன்னையின் முலைப்பாலை அறிந்துள்ளது. அந்த மணமே அதை முலைக்காம்பு நோக்கி இழுக்கிறது. இம்மைந்தன் அதை அறிந்திருக்கவில்லை” என்றார் அகத்தியர். “என்ன செய்வது? இறப்புதான் இளவரசரின் ஊழா?” என்றார் அமைச்சர் சாம்யர். “அவ்வாறென்றால் நாம் என்ன செய்வது?” என்றார் அகத்தியர். அப்போது மெல்ல விழி அதிர்ந்து முகம் உயிர்கொண்ட யுவனாஸ்வன் “என்ன ஓசை?” என்றான். “அரசே, தங்கள் உடல்திறந்து வந்த மைந்தன்” என்று தூக்கிக்காட்டினார் அகத்தியர். “மைந்தன் ஏன் அழுகிறான்?” என்றான் யுவனாஸ்வன். “அவனுக்கு அன்னைமுலை உகக்கவில்லை. அவனுக்கு அமுதூட்ட வழியில்லை” என்றார் அமைச்சர்.


இடக்கையை ஊன்றி உடலை அசைத்துத் தூக்கி கைநீட்டிய யுவனாஸ்வன் “மாந்தாஸ்யதி!” என்றான். என்னை உண்ணுக என்றுரைத்து தந்தையால் தூக்கி நெஞ்சோடணைக்கப்பட்ட குழவி அள்ளி அவன் மார்பை பற்றிக்கொண்டது. அவன் முலைகளில் வாய்சேர்த்து உறிஞ்சி உண்ணலாயிற்று. அவனை அன்னையர் மாந்தாதா என்று செல்லப்பெயரிட்டு அழைத்தனர். தாயுமானவன் கையால் வளர்க்கப்பட்ட அவன் பிறரைவிட அரைமடங்கு உயரமானவனாக வளர்ந்தான். மூன்று மாதங்களில் பல் தோன்றியது. ஆறு மாதங்களில் பேசினான். எட்டு மாதத்தில் நடந்தான். ஒரு வயதில் வில்லேந்தினான். ஏழு வயதில் களம்புகுந்தான். பன்னிரு வயதில் பரிதொடர்வேள்வி செய்து மாமன்னன் என புகழ்பெற்றான்.


ஆஜகவம் என்னும் அவன் வில்லின் நாணோசை தீயவருக்கு இடியென்றும் நல்லவருக்கு யாழென்றும் ஒலித்தது என்றனர் சூதர். வெற்றித்தோள்களுடன் எழுந்த மைந்தனை நோக்கி நிறைவுகொண்ட யுவனாஸ்வன் ஒருநாள் கான்புகுதலுக்கு ஒருங்கினான். அவன் கால்களைத் தொட்டு வணங்கி எழுந்த மைந்தனிடம் “நான் உன்னிடம் சொல்வது ஒன்றே. நான் உன்னிடம் சொன்ன முதல் சொல் அது, என்னை உண்ணுக! எப்போதும் உன் நாவிலிருக்கட்டும் அச்சொல்” என்றான். அவனை கானக விளிம்புவரை சென்று வழியனுப்பிவைத்தான் மாந்தாதா.


தந்தை சொன்னதன் பொருளை மறுநாள் முதல் அவன் உணரலானான். காலையில் முதன்முதலாக அவன் கண்ட ஏவலனை நோக்கி சொல்லெடுக்கும் முன் ‘என்னை உண்ணுக!’ என்றது அவன் அகம். அகம்படியாளனை, அணுக்கனை, அமைச்சரை, காவலரை, அவையோரை நோக்கி அவன் எச்சொல் எடுப்பதற்கு முன்னரும் அச்சொல் எழுந்து நின்றது. அவையில் கைவிலங்கு பூட்டப்பட்டு நின்றிருந்த அயல்நாட்டு ஒற்றனின் தலைகொய்ய ஆணையிட எழுந்தபோதும் ஊடாக வந்தது அச்சொல். அருகே சென்று தலையை கையால் வருடி அஞ்சி உணர்வழிந்திருந்த அவன் விழிகளை நோக்கி அதை சொன்னான். அவன் விழிநீர் பெருக அரசனின் கால்களில் விழுந்தான்.


அரசாளும் அன்னை என்று மாந்தாதா மக்களால் அறியப்பட்டான். வற்றாத முலைப்பால் எழும் உடல்கொண்டவன் அவன் என்றனர் சூதர். பல்லாயிரம் ஊற்றுக்கள் எழுந்து ஓடைகளாகவும் ஆறுகளாகவும் பெருகும் வறனுறல் அறியா நறுஞ்சோலை என்றனர் கவிஞர். அவன் கால்பட்ட இடங்களில் பசுமரங்கள் முளைத்தன. அவன் சொல்கொண்டு வாழ்த்திய குழவியர் சொல்பெற்றனர். அவன் கைதொட்ட நோயாளர் ஆறுதல்கொண்டனர். அவன் அரசமுனிவரில் முதல்வனென்றனர் படிவர்.


அவன் உலகுநீத்தபோது விண்ணில் இந்திரவில் எழுந்து கரையாமல் நின்றது. பொற்துருவலென ஒளியுடன் மழைபொழிந்தது. சான்றோர் கூடி அவனை மண்ணில் புதைத்தனர். நிலமென விரிந்தான் அரசன், அவன்மேல் வேர்கொண்டெழுந்தன குடிகள் என்றன கதைகள். அவன் உடல்மேல் எழுந்து விதைத்தொடர் என ஆயிரம் ஆலமரங்கள் எழுந்தன என்றன தொல்குடிச் சொற்கள். இறுதி ஆலமரம் கிளைவிரித்து கனிகொண்டது. பல்லாயிரம் பறவைகள் அதன்மேல் சிறகு குவித்தமர்ந்தன. அதன் கீழ் வந்தமர்ந்த இளஞ்சூதனின் அறிதுயில் செவியில் சென்று யுவனாஸ்வன் உரைத்தான் “என்னை உண்ணுக!”


விழித்தெழுந்து திகைத்து அமர்ந்தான் அச்சிறுவன். அச்சொல்லை அறியாது அவன் வாய் அரற்றத்தொடங்கியது. பின் அவன் ஒவ்வொரு எண்ணத்துக்கு முன்னரும் அச்சொல் இணைந்துகொண்டது. நாளடைவில் அவன் நாவுரைக்கும் எச்சொல்லும் அச்சொல்லென்றே பொருள்கொண்டன. அன்னமெனக் கனிந்தது அவன் கை. ஒருநாளும் ஒழியாது அவனை உண்டு வயிறு குளிர்ந்தனர் மானுடர். முதிர்ந்து முழுமைகொண்டு கடந்துசெல்வதற்கு முன் அவன் அச்சொல்லை தன்னை அணுகிய பிறிதொருவனுக்கு உரைத்தான். நாவிலிருந்து நாவுக்குச் சென்று அச்சொல் அங்கே அழியாது வாழ்ந்தது. வேட்கும் வேள்விநிலைகளுக்கு நடுவே வேதிக்கும் வேதநிலையென அது திகழ்ந்தது. அங்கு அன்னம் ஒழிந்த தருணமே அமையவில்லை.


தொடர்புடைய பதிவுகள்

’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 4
வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 66
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 16
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 2
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 53
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 43
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 23
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 12
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 25
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 24
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 34
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 8
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 7
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 78
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 72
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 69
’வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 64
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 63
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 62
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 70
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 06, 2016 11:30

September 5, 2016

கனவுத்தமிழகம்

maxresdefault


 


 


சென்ற ஆண்டு கனடாவுக்குச் சென்றிருந்தபோது என்னுடைய நண்பரும் அறிவியலாளருமான வேங்கடரமணனைச் சந்தித்தேன். வேங்கடரமணன் அதற்கு முந்தையவருடம்  வெஸ் இண்டீஸ்  தீவுகளுக்கு ஒரு சுற்றுப்பயணம் செய்து வந்திருந்தார். உங்களுக்குச் சுவாரசியமான ஒரு விஷயத்தைக் காட்டுகிறேன் என்று சொல்லி தன் செல்பேசியில் பதிவுசெய்திருந்த ஒரு பாடலை ஒலிக்கவிட்டார்.


 


முதலில் நான் நன்கு அறிந்த நாட்டுப்புறத் தமிழ்ப்பாடல் போலிருந்தது.அதன்பின் அது வேறு ஏதோ மொழி என்பது தெளிவாகியது. ஒரு சொல்கூட புரியவில்லை. கூர்ந்து கேட்டுக்கொண்டே  இருந்தேன். ஒரு தமிழகப்பூசாரி பாடுவதுபோலவே இருந்தது. எந்த மொழி? ஐரோப்பிய மொழி அல்ல .ஆப்ரிக்க மொழியா? அல்லது ஏதாவது பழங்குடி மொழியா?


 


“தமிழேதாங்க…கேளுங்க” என்றார் வேங்கடரமணன். ”கடைசிவார்த்தைகளை மட்டும் கவனியுங்க”. மெல்ல ஒரு சொல் பிடிகிடைத்தது .”போற்றி!” பின்னர் அடுத்த வார்த்தை “காத்தவராயா”. அப்படி ஓரிரு சொற்கள். “ஓம்” நன்றாகவே கேட்கத்தொடங்கியது. “இதைப் பாடுவது யார்?” என்றேன். சிரித்தபடி அவர் விளக்கினார்.


 


அதைப்பாடியவர் தமிழர். காத்தவராயன் கோயிலின் பூசாரி. உடுக்கடித்து பூசைக்காக அவர் பாடியதுதான் அந்தப்பாடல். ஆனால் அவருக்கும் தமிழ்நாட்டுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. அவரது முன்னோர் தமிழகத்தைவிட்டுச்சென்று மூன்றுநூற்றாண்டுகள் ஆகிவிட்டன. 1776ல் தமிழகத்தைச் சூழ்ந்த முதல் தாதுவருடப் பஞ்சத்தில்  கோடிக்கணக்கானவர்கள் செத்து அழிந்தனர்.


 


வெள்ளைய அரசின் கொடூரமான வரிவசூல் முறைகளின் விளைவாக நம் ஊர்களில் இருந்த பஞ்சகாலத்துக்கான சேமிப்புகள் முழுமையாகச் சூறையாட்ப்பட்டமையால் அந்த பஞ்சம் ஏற்பட்டது. அப்படி பஞ்சத்தில் சிதறிய மக்களை கூட்டம் கூட்டமாக  விலைக்கு வாங்கி கப்பலில் ஏற்றிக்கொண்டு கிழக்கே நியூசிலாந்து முதல் மேற்கே வெஸ்ட் இண்டீஸ்  தீவுகள் வரை  கொண்டுசென்று தோட்டங்களை உருவாக்கினர். அவர்களில் பத்தில் ஒருவரே உயிர்பிழைப்பது வழக்கம். ஆகவே பத்துமடங்குபேரை கொண்டுசென்றனர்.


 


அப்படிச்சென்ற தமிழர் உலகம் முழுக்கப்பரவியிருக்கிறார்கள். அவர்களில் மலேசியா , இலங்கை தமிழர்களே தமிழ்நாட்டுடன் உறவுடன் உள்ளனர். பர்மா , ஆப்ரிக்கா, நீயூசிலாந்து, செஷல்ஸ், ஃபிஜி, கரீபியன் தீவுகளைச்சேர்ந்தவர்களுக்கு நம்முடன் எந்த உறவும் இல்லை. அவர்களின் மொழி மறைந்துவிட்டது. பெயர்கள் கூட மாறிவிட்டன. ஆனால் பெயரில் இந்துமதம் சார்ந்த சில தடங்கள் மட்டும் எஞ்சியிருக்கும். வெஸ்ட் இண்டீஸின் புகழ்பெற்ற கிரிக்கெட் ஆட்டக்காரர் காளிச்சரண் ஓர் உதாரணம்.


 


அவர்களிடம் மாரியம்மன் வழிபாடு, காத்தவராயன் வழிபாடு போன்றவை சற்று எஞ்சியிருக்கின்றன. அவற்றில் தமிழ் இப்படி நீடிக்கிறது.கரித்தாள் வைத்து பிரதி எடுக்கும்போது மிகமிக அடியிலிருக்கும் பிரதிபோல. தமிழ் என ஊகிக்கமுடியும், அவ்வளவுதான்


 


அத்தகைய ஒரு குடும்பத்தை நான் 1988ல்  ஒருமுறை சந்தித்தேன். பங்களாதேஷ் அருகே உள்ள மாவட்டத்தில் —- என்னும் ஊரில்.  சிறிய ஊர். அருகே கங்கை பெருகி ஓடிக்கொண்டிருந்தது . நான் காசியிலிருந்து படகில் கங்கைவழியாக செல்லவேண்டும் என்பதற்காக அந்தப்பயணத்தைச் செய்தேன். அலகாபாத்தில் ஒரு சரக்குப்படகில் நூற்றைம்பது ரூபாய் கட்டணம் பேசி ஏறிக்கொண்டேன்.


 


என் வாழ்க்கையின் மறக்கமுடியாத நான்கு இரவுகள் கங்கையின் நீரின்மேல் கழிந்தன. அன்றெல்லாம் ஏராளமான சரக்குப்படகுகள் அலஹாபாத் முதல் பங்களாதேஷ் எல்லைவரை  சென்றுகொண்டிருந்தன. பெரும்பாலும் விவசாய விளைபொருட்கள். அந்தப்படகுப்போக்குவரத்து இன்று மிகமிகக்குறைந்துவிட்டது. அந்தப்படகுப்பயணத்தின் பலவகையான சித்திரங்களை என் வெண்முரசு என்னும் மகாபாரத நாவல்களில் விரிவாக விவரித்திருக்கிறேன்


இரவெல்லாம் சுழன்றடிக்கும் காற்றில் அமர்ந்திருந்தேன். விடியற் காலையில் காய்ச்சல் வந்ததுபோல உடல் நடுங்கி கண்கள் எரிந்தன. உதடுகள் உலர்ந்திருந்தன. கரையிலிறங்கியபின்னரும் உடலில் ஆட்டம் எஞ்சியதனால் நடக்கமுடியாமல் தள்ளாடினேன். அங்கே நதிக்கரையோரம் சேறு மிதிபட்டு சாணியுடன் கலந்து வீச்சமடித்தது. எங்கும் பலவண்ணத்தலைப்பாகை கட்டிய மக்கள் கூச்சலிட்டபடியும் சுருட்டு பிடித்தபடியும்  கூடிநின்றனர்.


 


என்னுடன் அந்தப்படகில்  இருபது எருமைகளும் வந்திருந்தன. வயோதிக எருமைகள். அவற்றை கரையிறங்கச்செய்து மந்தையாக்கிக் கூட்டிச்சென்றனர். ஏராளமான எருமைகள் வந்திறங்கியிருந்தன. அவை எல்லைகடந்து பங்களாதேஷுக்கு இறைச்சிக்காகக் கொண்டுசெல்லப்படுபவை. சட்டவிரோத எல்லைகடத்தல் என்பது அங்கே ஒரு வணிகம் அல்ல, வாழ்க்கைமுறை.


 


உள்ளூர் புல் ஒன்றால் கூரையிடப்பட்டிருந்த பெரிய கொட்டகை ஒன்று பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. நடுவே பெரிய ஹூக்கா ஒன்றை வைத்திருந்தார்கள். சுற்றிலும் குந்தி அமர்ந்து அந்த குழாயை வாங்கி மாறி மாறி இழுத்தார்கள். வாயை வைக்கவில்லை. கைகளால் பொத்தியபடி இழுத்து மூக்கு வாய்வழியாக மேகம்போல புகை விட்டனர். மண்கோப்பைகளில் டீ. அது அன்று ஒரு ரூபாய். ஹூக்கா இலவசம்.


 


நான் ஒரு ரூபாய்க்கு டீ வாங்கி குடித்தேன். சமூசா இருந்தது. எனக்கு அன்றுமின்றும் சமூசா அதன் பின்நவீனத்துவ வடிவமான பப்ஸ் போன்றவை கொஞ்சம் கூட பிடிக்காதவை. அந்தக்காலைநேரத்திலேயே சப்பாத்தி சாப்பிடவும் பிடிக்கவில்லை. இன்னொரு டீ குடித்தேன். ஆனால் பால் சற்றுப்ப்ழையது. நன்றாகச் சுண்டவைத்தபோது அது குமட்டல் தரும் கசப்பு கொண்டிருந்தது.


 


நால்வருக்குச் சோறு வந்தது. துணைக்கு மீன்குழம்பு. மீன் தலையை அப்படியே குழம்பில் போடுவது வங்கப்பண்பாடு. மிகப்பெரிய மீன் புன்னகைபுரிந்தபடி உலகை நோக்கியது. பெரிய அலுமினிய ஏனத்தில் மீன்குழம்பு. அதை சுற்றி தட்டுகளுடன் அமர்ந்து சாப்பிட்டனர். நானும் சோறு சாப்பிடலாம் என எண்ணினேன். மீன்குழம்பின் வாசனையின் ஈர்ப்புதான் காரணம்


 


கடைக்காரரிடம் அதைச்சுட்டிக்காட்டி  அது வேண்டும் என்றேன். பங்காளியில் ஏதோ கேட்டார். புரியவில்லை என்றதும் இந்தியில் கேட்டார். இந்தியும் தெரியவில்லை என்றதும் கண்களைச் சுருக்கியபடி “எந்த ஊர் ?” என்றார். “தமிழ்நாடு” என்றேன். அவர் சிலகணங்கல் ஸ்தம்பித்ததுபோலிருந்தார். “தமிழ்நாடா?” என இந்தியில் மீண்டும் கேட்டார். “ஆமாம்” என்றேன்.


 


அவர் தொண்டை ஏறியிறங்கியது. மூச்சிழுக்க சிரமப்படுபவர் போலத்தோன்றினார்.  பின்னர் பொரித்த மீன் தலையுடன் வந்த அவரது மனைவியிடம் வங்காளியில் “இவர் தமிழ்நாட்டுக்காரர்” என்றாள். அந்த அம்மாள் கணீர் குரலில் “தமிழாளா?” என்றார். “ஆமாம்” என்றேன். “நீங்கள் தமிழ்நாடா?”. கடைக்காரர் “ஆமாம், தமிழ்நாடு…” என்றார். நான் ”தமிழ்நாட்டில் எங்கே ?” என்றேன். “தெரியாது” என்றார். “தமிழ்கூட பேசத்தெரியாது” என்று சொல்லி மூச்சிளைத்தார்


 


இருவருக்குமே தமிழில் உதிரிச்சொற்கள் மட்டுமே தெரிந்தன. ”ஆமாவா?” என்றனர். ஆகவே அவர்கள் தமிழகக் கர்நாடக எல்லையில் ஏதோ ஊரைச்சேர்ந்தவர்கள் என்று ஊகித்தேன். பேசினால் புரிந்துகொண்டனர். பேசப்பேச அவர்களுக்குள் இருந்து தமிழ் ஊறிப்பெருகிவந்தது. கொஞ்சநேரத்திலேயே  ஒருமாதிரி சமாளித்துப்பேசத்தொடங்கிவிட்டார்கள்


 


அவர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. அவர்களின் முன்னோர் இருநூறாண்டுகளுக்கு முன்பு பர்மாவுக்கு தோட்டத்தொழிலாளர்களாக கொண்டுசெல்லப்பட்டவர்கள். பலமுறை பல தோட்டங்களுக்கு இடம்மாறினர். இரண்டாம் உலகப்போரில் அவர்கள் தோட்டமே அழிந்தது.  அவரது தாத்தா ரங்கூன் அருகே ஒரு சிற்றுரில் கூலித்தொழிலாளராக வந்து குடியேறினார்.


 


போர் முற்றியபோது பர்மா ஜப்பானியரால் கைப்பற்றப்பட்டது. அவரது கொள்ளுத்தாத்தா ஜப்பானிய கூலியாகக் கொண்டுசெல்லப்பட்டார். காட்டில் கடும் உழைப்புமுகாம்களில் குடும்பத்துடன் இருந்தனர். பிரிட்டிஷ் பட குண்டுவீச்சில் அவரது குடும்பம் மீண்டும் சிதறியது .    அங்கிருந்து பங்களாதேஷ் வந்து குடியேறி அங்கே துப்புரவுத்தொழிலாளராக பணியாற்றினார்கள். ஐம்பதுகளில் பங்களாதேஷில் இந்துத்தொழிலாளர்கள் கொல்லப்பட்டபோது அவரது குடும்பம் மீண்டும் சிதறியது.


 


எழுபதுகளில் பங்களாதேஷில் இருந்து அகதியாக இந்தியாவந்தனர். சட்டவிரோதக்குடியேற்றம்தான்.  அந்த ஊரில் கூலிவேலை செய்து மெல்ல வேரூன்றினர். டீக்கடை வைத்து எட்டு ஆண்டுக்காலமாகிறது . நான்கு குழந்தைகள்.மூத்தபெண் ஒரு வங்காளியைத் திருமணம் செய்திருக்கிறாள். இரண்டாவது பையன் வேலைபார்க்கிறான். இரு சிறுவர்கள் படிக்கிறார்கள்.


 


இருநூறாண்டுக்காலமாக அவர்களில் எவருக்கும் தமிழகத்துடன் தொடர்பில்லை. இந்தியாவந்தபின் பிற தமிழருடனும் தொடர்பில்லை. அவர்கள் கிளம்பியபின் இருபெரும்போர்கள் நிகழ்ந்தன. பஞ்சங்கள் வந்தன. தேசங்கள் உடைந்தன. புதியதேசங்கள் பிறந்தன. வரலாறு பெரும்பிரவாகமாக அவர்களைச் சுழற்றியடித்துக்கொண்டுசென்றது. எதுவும் எஞ்சவில்லை.


 


ஆனால் மூதாதையரின் சொற்களாக பிறந்த மண் அவர்களிடம் எஞ்சியிருந்தது. தங்கள் ஊர் அருகே கடல் உண்டு என்றும் சித்ராபௌர்ணமிக்கு வண்டி கட்டிச்சென்று கடலோரம் அமர்ந்து சாப்பிடுவதுண்டு என்றும் சொன்னார்கள். பெரிய கோபுரம் கொண்ட ஒரு கோயிலும் அதேபோல வண்டிகட்டிச் செல்லும் தொலைவில் இருந்தது. இரண்டு கண்மாய்களால் விவசாயம் நிகழ்ந்தது.


 


தீபாவளியும் பொங்கலும் அவர்கள் நினைவில் இருந்தன. இரண்டையும் வங்கமுறைப்படிக் கொண்டாடினர். பிள்ளைகள் அவர்களிடமிருந்து பெற்ற சிலநூறு தமிழ்ச்சொற்களைப் பேசின. ”ஆனால் அவர்கள் வங்காளிகளைத்தான் திருமணம் செய்துகொள்வார்கள்.வேறுவழி இல்லை” என்றார் ரத்தினம். அவர் மனைவில் வள்ளியும் அதையேதான் சொன்னார். அவர்களின் பேரக்குழந்தையின் பெயர் மாணிக். வங்கப்பெயர்


 


“ஊருக்குப்போகலாம்னு தோணும். ஆனா எந்த ஊருக்கு போறது? அங்க யாருக்கு நம்மளத் தெரியும்?” என்றார் ரத்தினம். “அதனால நானே ஒரு ஊரை கற்பனைசெஞ்சுகிடுவேன். அங்க இருக்கிற ஆட்களை எல்லாம் தெளிவா நானே மனசுக்குள்ள உண்டுபண்ணிக்கிடுவேன். ராத்திரி நினைச்சுகிட்டா கண்ணீர் வந்திடும் சார். அழுதிட்டே தூங்கினா ஒரு பெரிய நிம்மதி”


 


நான் அன்று அவர்களுடன் தங்கினேன். வள்ளி சோறும் மீன்குழம்பும் தந்தார்கள். அவர்கள் சுவரில் துர்க்கை படம் வைத்திருந்தனர். அதை கும்பிடும்போது ஓரிருவரிகள் தமிழில் பாடினர். மாரியம்மன் பாட்டு அது. சொல் மழுங்கிப்போய் வங்கம் போல இருந்தது.


 


அன்றிரவு வெளியே கட்டில் போட்டு விண்மீன்களைப்பார்த்தபடி படுத்திருந்தபோது நான் கேட்டேன், “உங்களுக்கு பர்மிய மொழி தெரியுமா?” ரத்தினம் சிரித்துக்கொண்டு “இல்ல சார், அங்க இருந்ததைக்கூட சொல்லிகேட்டுத்தான் தெரியும். ஒரு ஊரோ முகமோ ஞாபகமில்லை” நான்  “பங்களா தேஷுக்கு மறுபடியும் போனீர்களா?” என்றேன். “இல்லசார். அது நமக்கு எதுக்கு? யாருதோ ஊருல்ல அது”


 


ஆனால் தமிழகம் இன்றும் அவர்களின் ஊர்தான். அவர்களுக்குள் நுண்ணிய கனவாக அது மரம்பூத்து  மண்மணக்க வாழ்ந்துகொண்டே இருக்கிறது. அது அழியாது என நினைத்துக்கொண்டேன். அவர்கள் திரும்பி வருவார்கள். தலைமுறைகள் கடந்தாலும்கூட


 


சென்ற ஆண்டு எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. பர்மாவில் உள்ள தமிழர்களின் கூட்டமைப்பு ஒன்று பொங்கல் கொண்டாடுவதைப்பற்றி அவ்வமைப்பின் செயலாளரான தியாகராஜன் என்பவர் எழுதியிருந்தார்.  உலகம் தொழில்நுட்பத்தால் இணைக்கப்படுகிறது. வரலாற்றால் சிதறடிக்கப்பட்டவர்களும் அதனூடாக இணையக்கூடும்.


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 05, 2016 11:34

கோரதெய்வ வழிபாடு ஏற்புக்குரியதா?

1


 


 


அன்பு ஜெ,


 


சமயம் சார்ந்த வழிகாட்டுகளுக்கு உங்கள் தளம் மிகவும் உகந்ததாக இருக்கிறது. நாளும் சமயம் குறித்தான கேள்விகள் சீடர்கள் தங்களின் குருவிடம் கேட்பது போல உங்களிடம் கேட்டு தெளிவு பெறுகிறோம். படைப்புகளைத் தவிர்த்து இவ்வாறு வாசகர்கள் எங்களுடன் நீங்கள் இணைந்தே இருப்பது. எங்கள் பேரு.


 


உறையூர் குங்குமவல்லித்தாயார் உடனுறை தான்தோன்றீஸ்வரர் கோயிலுக்குச் சென்றிருந்தேன். அக்கோயின் பிரகாரத்திலேயே, கோர தெய்வங்களான பிருத்தியங்கரா தேவி, வராகி, அட்ட பைரவர்கள், ஆகாய காளி, பூமா காளி, பாதாள காளி போன்ற தெய்வங்கள் இருந்தன. அந்த தெய்வங்களில் பிருத்தியங்கரா தேவியின் கோர ரூபம் இன்னும் கண்களிலேயே இருக்கிறது.


 


 


ஒரு காலத்தில் வழிபடப்பட்டதாக கூறப்பட்ட இந்த தெய்வங்கள் மீண்டும் எழுச்சிப் பெற்று பொது மக்களால் வழிபடக்கூடிய அளவிற்கு சென்றுள்ள. சில நாட்கள் முன் முகநூலில் கீழ் இணைத்துள்ள விளம்பரப் பதாகை கண்களில் பட்டது. கோவிலுக்கு வருகின்றவர்கள், வேம்பினை கொண்டுவாருங்கள் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


 


 


ஆயிரமாயிரம் தெய்வங்கள் உள்ள இந்து சமயத்தில் இந்த கோர தெய்வ வழிபாடு ஏற்புக்குறியதா? தற்போது சிவாலயங்களில் மட்டுமல்லாது, திருமால் ஆலையங்களிலும் சொர்ண ஆகார்சன பைரவரை வைத்து அட்டமி நாளில் சிறப்பு வழிபாடு செய்கின்றனர். மூல நாதனை மறந்து இப்படி ஏவல், காவல் தெய்வங்களை வழிபடும் போக்கு தற்காலத்தில் பெருகியுள்ளது ஆன்மீக எழுச்சியை வலியுறுத்துகிறதா? மக்களின் வாழ்வாதார பிரட்சனைகளுக்கு இறையை தேடுவது காட்டுகிறதா? இதனை எவ்வாறு நீங்கள் காண்கின்றீர்கள் என்பதை அறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்.


 


நன்றி.


 


ஜெகதீஸ்வரன் நடராஜன்


1

பிரத்யங்காரா


 


அன்புள்ள ஜெகதீஸ்வரன்


 


தெய்வம் என உருவகிக்கத் தொடங்கிவிட்டபின் பேரியற்கையில் நாம் அறியும் எல்லா ஆற்றல்வடிவங்களையும் தெய்வமாக உருவகிக்கத்தான் செய்வோம். இது உலகம் முழுக்க அனைத்து மதங்களிலும் உள்ளதுதான். தூய தத்துவ மதங்களான சமணம், பௌத்தம், அத்வைதம், கன்ஃபூஷியம், தாவோயியம் போன்றவை விதிவிலக்கு.


 


ஏ.எல்.பாஷாமின் The Wonder That Was India முக்கியமான ஒரு விடையை அளிக்கிறது. இந்தியாவில் வங்கம், ஒரிசா ,கடலோர ஆந்திரம், கேரளம் ஆகிய கடற்கரை மாநிலங்களில் சாக்தம் வலுவாக இருக்கிறது. காரணம், இயற்கையின் கோரத்தாக்குதல் இப்பகுதிகளில் அதிகம். வருடந்தோறும் புயல் வீசும் பகுதிகள் இவை. [கடலோரத் தஞ்சையும் இதில் சேர்க்கலாம்]


 


இயற்கையை கருணைகொண்ட அன்னையாக, அமுதூட்டி காப்பவளாக அறிகிறான் மனிதன். கூடவே இரக்கமே அற்ற கொடூர அழிவுசக்தியாகவும் காண்கிறான். இந்த இரு முகங்களையும் இணைத்துத்தான் காளி என்னும் உருவகம் உருவாகியது. எங்கும் அது உள்ளது, ஆனால் இப்பகுதிகளில் வலுவாக இருக்கிறது.


1

வராஹி


 


ஆக, தெய்வ உருவகம் மனிதனால் திட்டமிட்டு உருவாக்கப்படுவதல்ல. இயற்கையிலிருந்து அவன் தன் ஆதிநுண்ணுணர்வால் அடையப்பெற்றது. தொன்மையான பழங்குடி வாழ்க்கையிலிருந்து மெல்லமெல்ல வளர்த்தெடுத்தது. பழங்குடிவாழ்க்கையில் வேர் இல்லாத தெய்வமே இருக்கமுடியாது.


 


பழங்குடிகளின் பெரும்பாலான தெய்வங்கள் உக்கிரரூபம் கொண்டவை. நோய், இயற்கைச்சீற்றம் ஆகிய வடிவில் தன்னைக் காட்டும் மனிதனை மீறிய பேராற்றலை தெய்வமென உருவகித்தனர். கூடவே அவற்றிலிருந்து காத்து ஆண்டு அருளும் தெய்வங்களையும் உருவகித்தனர். இருவகை தெய்வங்களும் எல்லா தொன்மையான பண்பாடுகளிலும் உள்ளன. சாஸ்தா தவிர நம் நாட்டார் தெய்வங்கள் அனைத்துமெ உக்கிரரூபம் கொண்டவை அல்லவா?


 


பின்னர் அத்தெய்வங்கல் மேலும் மேலும் குறியீட்டு ரீதியாக விரிவாக்கம் செய்யப்பட்டன. அவற்றின் உருவம் முறைப்படுத்தப்பட்டது. அவற்றின் வழிபாடு வகுக்கப்பட்டது. அவற்றுக்கு தத்துவார்த்த விளக்கங்கள் அளிக்கப்பட்டன புராணங்கள் உருவாயின. அவை இன்றைய தெய்வங்களாக மாறின. இன்றைய எல்லா தெய்வங்களும் அவ்வாறு பல்லாயிரமாண்டுகளாகப் பரிணாமம் பெற்றவைதான்.


1


இந்த தொன்மையான தெய்வ உருவகங்கள் பின்னாளில் பெருந்தெய்வமாக மாறியபோதும்கூட அவற்றில் இந்த இரட்டைமுகம் இருப்பதைக் காணலாம். உலகாளும் விஷ்ணு ஒருமுகம் உக்கிரநரசிம்மர் மறுமுகம். ருத்ரனும் உமாமகேஸ்வரனும் ஒரே தெய்வம்தானே?


 


இந்திய புத்தமதத்தில் கோரத்தெய்வம் இல்லை. ஆனால் திபெத்திய பௌத்தம் பலநூற்றாண்டுகளுக்குப்பின் பல கோரத்தெய்வங்களை உருவாக்கிக்கொண்டது. கோரத்தோற்றம் கொண்ட காலதேவர், போதிசத்வர்கள் திபெத்திய, சீன, தாய்லாந்து, கம்போடிய பௌத்தத்தில் உண்டு. திபெத்திய வஜ்ராயன பௌத்தத்தில் கொடூரமான தோற்றம் கொண்ட புத்தரின் தோற்றம்கூட வழிபடப்படுகிறது.


 


கிறித்தவர்களின் ஜெகோவாவும் சரி இஸ்லாமியர்களின் அல்லாவும் சரி சீற்றம் கொண்டு தண்டிக்கும் தெய்வங்களும் கூட. மேலே சொன்ன விளம்பரத்தைப்போலத்தான் குமரிமாவட்ட கிறித்தவர்களின் கன்வென்ஷன் விளம்பரங்களும் இருக்கும். கிட்டத்தட்ட இதே வாசகங்கள் காணப்படும்.


 


இந்த தெய்வங்களின் நடைமுறைப் பயன்கள் என்ன? ஒன்று, மனிதனின் அச்சத்திற்கு இவை காப்பு. மானுடர் மிக எளியவர். தன்னம்பிக்கை, ஆணவம், அறிவுஜீவித்தோரணை ஆகிய அனைத்துக்கும் அடியில் அவர்கள் அஞ்சிக்கொண்டிருக்கிறார்கள். பதற்றத்தில் இருக்கிறார்கள். நிலையின்மையை, நோயை, மரணத்தை, காலப்பெருவெளியை எண்ணி அலைக்கழிகிறார்கள்.


 


index

அகோரநரசிம்மர்


 


 


அந்த அச்சமே தெய்வங்களை நோக்கிச் செலுத்துகிறது. கோரத்தோற்றமுடைய தண்டிக்கும் தெய்வங்கள் தங்களுக்கு காப்பாகும் என அவர்களின் ஆழ்மனம் நம்புகிறது. பெரியபேச்சு பேசியவர்கள்கூட ஒரு இக்கட்டில் சட்டென்று சரணடைந்துவிடுவதை நான் பலமுறை கண்டிருக்கிறேன்.


 


இரண்டாவதாக, இக்கோரதெய்வங்கள் மனிதன் தன் ஆழத்தில் உறையும் உக்கிரத்தை, ஆதிவிசையைக் கண்டடைய உதவிகரமாக உள்ளன. பிரத்யங்காரா போர்த்தெய்வம். உயிர்கொடுக்கக் களம்செல்லும் ஒருவீரனுக்கு அதற்கான வீரியத்தை அளிப்பவள். அவள் சாந்தமாக இருக்கமுடியுமா என்ன?


 


என் அனுபவத்தில் பல நிகழ்வுகளைச் சொல்லமுடியும். ஒன்று ஒருநண்பர் அணுக்கமான இருவரின் அவமரணத்திற்குப்பின் ஆழமான அக அதிர்ச்சிக்கு உள்ளாகி நரம்புப்பதற்றம் அடைந்த நிலையில் இருந்தார். அவர் வைணவப்பின்னணி கொண்டவர், மார்க்சியர். நான் அவரிடம் அவர் அகோரநரசிம்மரை வழிபடலாம் என்றேன். நூல்களில் அதுதான் சொல்லப்பட்டிருக்கிறது என்றேன்.


 


1

திபெத்திய போதிசத்வர்


 


அதை ஒரு சம்பிரதாய வைணவர் சொல்லியிருக்கக்கூடும். நான் சி.ஜி.யுங்கை எல்லாம் மேற்கோள் காட்டி விளக்கினேன். அது ஓர் ஆழ்மனப் பயிற்சி என சொன்னேன். அவர் நூற்றெட்டுநாள் அகோரநரசிம்மரை வழிபட்டார். அவர் மீண்ட விதம் எனக்கே பிரமிப்பூட்டியது. குறியீடுகளின் வல்லமை அப்படிப்பட்டது. அவை நம்மை நாமறியாத வரலாற்று ஆழத்துக்குக் கொண்டுசெல்கின்றன. பண்பாட்டின் விசை முழுக்க அவற்றில் அடங்கியிருக்கிறது.


 


இன்னொரு அனுபவம் பிரத்யங்காரா தேவி. ஒருவரை கும்பகோணம் அருகே உள்ள பிரத்யங்கரா தேவியை  வழிபடும்படி ஓரிரு நூல்களை மேற்கோள்காட்டிச் சொன்னேன். அவர் மரபில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர். ஒரு முக்கியமான வணிகமுடிவு எடுப்பதற்கு முன் தயங்கிக்கொண்டிருந்தார் அவர் துணிவுகொள்ளவும் போர்வேகம் கொள்ளவும் அவ்வழிபாடு உதவுவதை கண்டேன்.


 


ஆக கோரதெய்வங்கள் இருந்துகொண்டே இருக்கும். ஏனென்றால் அழகு, அருள்,நன்மை மட்டும் அல்ல இயற்கையில்  தெய்வவெளிப்பாடாக நாம் காண்பது. கோரம், அழிவு, தீமை ஆகியவையும்தான். ஒருவர் தெய்வம் என ஒன்றை மட்டும் பார்த்தார் என்றால் அவர் உண்மையின் ஒருபக்கத்தை மட்டுமே பார்க்கிறார். எங்கோ ஒரு புள்ளியில் அவர் ஏமாற்றத்தில் முட்டிக்கொண்டு மண்டையை உடைத்துக்கொள்வார்


 


1

ஜெஹோவா


 


கடைசியாக இரண்டு விஷயங்கள்.


 


 ஒன்று  : ஒருவருக்கு கோரமாகத் தெரிவது இன்னொருவருக்கு அப்படித்தெரியாமலிருக்கும். நீங்கள் சொல்லியிருக்கும் வராகி பன்றிமுகம் கொண்ட தேவதை. பழங்காலத்தில் மிக மங்கலமான தேவதையாக கருதப்பட்டாள். பன்றி நிலத்தை உழுவது. மேழி போன்ற முகம் கொண்டது. எனவே வளத்தின் குறியீடு.


 


அன்றெல்லாம் பன்றி நாம் இன்றுகொடுக்கும் எதிர்மறை அடையாளம் கொண்டது அல்ல. அன்றைய இந்தியப்பார்வையில் கருமை அழகு எனக் கருதப்பட்டது. பன்றி அழகும் ஆற்றலும் கொண்டது. வளம் நிறைப்பது. ஆகவே வழிபடப்பட்டது. பெருமாள் கூட பன்றியுருவத்தில் வராகராக வழிபடப்படுகிறார்


 


அதேபோல நாம் மங்கலமாகக் கருதும் யானைமுகப் பிள்ளையார், குரங்குமுக அனுமார் போன்ற தெய்வங்கள் ஐரோப்பியருக்கு அச்சமும் அருவருப்பும் ஊட்டும் வடிவங்களாகத் தெரிகின்றன.


 


 


இதைப்பற்றி ஒரு வெள்ளையர் கேட்ட கேள்விக்கு ஓஷோ ஒரு பதிலை அளித்தார். ஒரு கிறித்தவத் தம்பதியினர் சீனாவுக்குச் சென்றார்கள். அங்கே அவர்கள் சீனர்களின் பௌத்த மடாலயங்களில் உள்ள கோரத் தோற்றம் கொண்ட போதிசத்வர்களைக் கண்டு அருவருப்புடன் முகம் சுளித்தார்கள்


 


அன்று மாலையே அவர்களின் சீன வேலைக்காரி தப்பி ஓடிவிட்டாள். என்ன என்று போய் விசாரித்தால் அவள் இவர்கள் ஒரு மரச்சின்னத்தில் தொங்கும் குருதிவடியும் அரைநிர்வாணப் பிணத்தை வழிபடுவதை பார்த்து அருவருப்பு அடைந்துவிட்டாள் என்று தெரியவந்தது.


 


இரண்டு :கோரத் தெய்வங்கள் பெரும்பாலும் மானுடனின் அச்சத்துடன் தொடர்புடையவை. ஆகவே அந்த அச்சத்தையும் ஐயத்தையும் பயன்படுத்திக்கொண்டு வணிகம் செய்யும் பூசாரிகளும் மந்திரவாதிகளும்தான் அவற்றை அதிகமாக பிரச்சாரம் செய்வார்கள் – எல்லா மதங்களிலும். நீங்கள் காட்டிய சுவரொட்டி அத்தகையது.


 


அந்த வணிகத்துக்கு உடன்படுவது வழிபாடல்ல. அது ஒரு மனிதனின் பேராசைக்கோ சுயநலத்துக்கோ நம்மை அர்ப்பணிப்பது. அது பூசாரியாக இருந்தாலும் சரி பாதிரியாக இருந்தாலும் சரி. கடைசியாக எஞ்சுவது துயரமும் ஏமாற்றமும்தான்.


 


ஜெ


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 05, 2016 11:31

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 49

எட்டாம் காடு : மைத்ராயனியம்


[ 1 ]


சாந்தீபனி குருநிலையில் இளைய யாதவர் நான்குமாதங்கள் தங்கியிருந்தார். முதல்சிலநாட்களுக்குப்பின் அக்குருகுலத்தின் பெரும்பாலான மாணவர்கள் அவருக்கு அணுக்கமானார்கள். புலர்காலையிலேயே அவர்களை அழைத்துக்கொண்டு கால்நடைகளுடன் அவர் காட்டுக்குள் சென்றார். பசுக்களை அணிநிரைத்துக் கொண்டுசெல்லவும், தனிக்குழுக்களாகப் பிரித்து புற்பரப்புகளில் மேயவைக்கவும், மாலையில் மீண்டும் ஒருங்குதிரட்டவும் அவர்களுக்கு கற்பித்தார். பசுக்களின் கழுத்துமணி ஓசையிலிருந்தே அவை நன்கு மேய்கின்றனவா என்று அறியவும் அவை நின்றிருக்கும் தொலைவை கணிக்கவும் பயிற்றுவித்தார். அவருடன் பலநாள் பாண்டவர்களும் சென்றார்கள்.


“பசுக்களை நோக்கி புரிந்துகொள்ளுதல் ஆமருவுதலின் முதல்படி. அவற்றின் மீது பெரும் அன்பிருந்தாலொழிய அது கைகூடாது. நம் குரலை நம் அன்பென அது அறிகிறது. அதன் குரலை அதன் அன்பென நாம் அறிகிறோம். அன்புக்குரிய கலமென அங்கிருக்கும் பசு ஓர் அறிவென உள்ளமைதல் அடுத்த நிலை. சிறு ஓசைகளில் அசைவுகளில் மணங்களில் அவை நம்முள் முழுமையாக உருக்கொள்ளும்போது நாம் நம்மை என அதை அறிகிறோம். அறிவென ஆன பசு நம்மை தன்னறிவென அறிகிறது. நாம் அதை நம்மறிவென அறிவதைப்போல. பின்னர் ஒரு கணத்தில் பசு நம் அறிவைவிட்டு அகல்கிறது. அது நாமென ஆகிறது. அதன்பின் நாம் காடுசென்று மேய்ந்து கன்றூட்டுவதற்காக பாலூற தொழுதிரும்புகிறோம்” என்றார் அவர்.


“மாணவர்களே, இவை ஒன்றிலிருந்து ஒன்றென எழும் நிலைகள். சிறுமி முதிர்ந்து கன்னியாவதுபோல. கன்னி கனிந்து அன்னையாவதுபோல. ஒன்றைவிட பிறிது குறைந்தது அல்ல. அறிவென்று மாறாத அன்பு பற்றென்று திரிந்து வலையாகி சூழ்கிறது. அன்பிலிருந்து எழாத அறிவு ஆணவமெனத் திரண்டு பெருஞ்சுமையாகிறது. அறிக, அன்பிலும் அறிவிலும் ஏறியமையாத யோகம் வெறும் உளமயக்கு மட்டுமே. நீர்நிலை நிலவை அள்ளி அள்ளிக் குடிக்கும் மூடர்களின் வழி அது.” ஒருகணம் புன்னகைத்து “நீர்நிலவை மட்டுமே உண்ண இயலுமென அறிந்து அள்ளுபவனோ நிலவை உண்கிறான்” என்றார்.


அவர் எப்போது தத்துவச்சொல்லென உரையாடலை மாற்றுவார் என்று ஒருபோதும் முன்னறிய முடிவதில்லை என்பதே அவருடைய முதன்மைக் கவர்ச்சி என தருமன் எண்ணினார். கன்றோட்டும் கலையை சொல்லிவருபவர் பிறிதொன்றை சொல்லத் தொடங்கும் கணத்தில் கிளையசைய வானிலெழும் பறவையைக் காணும் அச்சிலிர்ப்பால்தான் அவரைச் சூழ்ந்து ஒருசொல்லும் தவறவிடாமல் மாணவர் சென்றுகொண்டிருந்தனர். “அவர் கன்றோட்டுகையில் ஞானி. வேதமேடையில் கன்றோட்டி” என்றான் இளமாணவன் ஒருவன். “எப்போது எவ்வுரு என்றறியாமையால் அனைத்தையும் ஒன்றாக்கிக் காட்டமுடிகிறது அவரால்” என்றான் அவன் தோழன்.


வேதச்சொல் உசாவும் அவையில் முதலாசிரியனாக மேடையமர்ந்து அவர் சொல்நிரை குறித்து சொல்கையில் இயல்பாக ஆவலன் ஆனார். “ஆற்றல்மிக்க பசுக்களை முதலிலும் இறுதியிலும் நிறுத்துக! பிறபசுக்களையும் கன்றுகளையும் நடுவே கொண்டு செல்க! வழிநடத்துவது வல்லமைகொண்டதாகுக! பெருவிழைவு கொண்டது பின்னால் உந்திச்செலுத்துக! நடுவே செல்வது தன் விரைவை தானே காணமுடியாது ஒழுகவேண்டும்.” அவர்கள் அக்கணத்தில் அவையிலிருந்து காட்டுக்குச் சென்றனர். அங்கே அவர் அவர்களுடன் நீராடிய ஓடைகளை, அவருடன் தாவிச்சென்ற கிளைகளை, அவர் அளித்த கனிகளை, அவர் நகையாட்டுகளை எண்ணி முகம் மலர்ந்தனர்.


அவரன்றி பிற எவரும் அங்கில்லை என்று மாணவர் உணரலான ஒருநாளில் அவர் துவாரகைக்கு கிளம்பினார். அச்செய்தியை சாந்தீபனி குருநிலை பெரும்பதற்றத்துடன் எதிர்கொண்டது. அவர் சென்றுவிடுவார் என்பதை அவர்கள் ஒவ்வொருவரும் அறிந்திருந்தனர். அவர் சிலநாட்கள் மட்டுமே அங்கிருப்பார் என்றே அவர்களுக்கு சொல்லப்பட்டது. பேரரசு ஒன்றின் தலைவன் அத்தனை மாதம் அங்கிருந்ததை எப்போதாவது எண்ணிக்கொள்கையில் அவர்கள் வியப்படைந்தனர். ஆனால் மீண்டும் அவர் அங்கிருந்து அகலாதவர் என்னும் மாயையை சூடிக்கொண்டு அதில் ஆடினர்.


அவர் கிளம்புகிறார் என்னும் செய்தி அதை கிழித்தபோது முதலில் அதை அவரது விளையாட்டெனக் கொள்ள முயன்றனர். அது மறையா நனவு என உணர்ந்ததும் அவர் மீண்டு வருவார் என ஆறுதல்கொண்டனர். ஒரேநாளில் சாந்தீபனி கல்விநிலை ஒலியடங்கி சோர்வு பரவி நிழலாடும் நீர்நிலைபோல ஆகியது. “அவர் இங்கிருந்தது ஒரு கனவு. நாம் அதிலிருந்து விழித்தெழுந்தே ஆகவேண்டும்” என்றார் சாந்தீபனி முனிவர். “ஆசிரியர்களின் சொற்களே அவர்கள் என்றுணர்க! இங்கு அவர் சொற்கள் முளைத்தெழுமென்றால் அவர் என்றும் இங்கிருப்பார்.”


அடுமனையிலிருந்து அகப்பையுடன் எழுந்து வந்து சொல்லவை முற்றத்தில் நின்று பத்ரர் கூவினார் “இங்கு அந்த ஆமருவி வந்து என்ன ஆயிற்று? இளையோரே, நீங்கள் கற்றது என்ன? அந்தணரும் ஷத்ரியரும் கன்றோட்டினர். கன்றுவாலிலிருந்து நீங்கள் கற்றறிந்த வேதம் என்ன? இவன் இழிமகன். இழிமக்கள் அணுக்கம் உங்களையும் இழிமக்களாக்குமென்று உணராவிடில் உங்களுக்கு மீட்பில்லை என்றறிக!” மாணவர்கள் வெவ்வேறு இடங்களில் நின்று அவரை நோக்கிக்கொண்டிருந்தார்கள். அவர் மேலும் மேலும் வஞ்சம் கொண்டு கொந்தளித்தபடியே சென்றார்.


“வேதம் மருவ வந்த வீணன். நீங்கள் கற்றவற்றை அவன் மறக்கச்செய்யவில்லை என்று உங்களால் சொல்லமுடியுமா? நான் நூறுமுறை உங்களிடம் கேட்டிருக்கிறேன். ஒவ்வொருமுறையும் ஆமென்று விழிகாட்டி முகம் திருப்பிக்கொண்டீர்கள். இளையோரே, நீங்கள் உணர்ந்தவை அனைத்தும் கலங்கிவிட்டன என்று உணரவில்லையா? அறிக, அவன் வந்தது அதற்காகவே! அவன் குழப்புபவன். கலங்கச்செய்பவன். வேதத்தை அதிலிருந்து உருவாகும் பொய்வேதமே அழிக்கமுடியும், நெருப்பை அதன் புகை அழிப்பதுபோல.”


மூச்சிரைக்க பத்ரர் தன் அகப்பையை தலைக்குமேல் தூக்கினார். “அன்னம் அளித்த கையால் சொல்கிறேன். இவன் அழிவையன்றி எதையும் கொண்டுவரப்போவதில்லை. இவன் தன் குலத்தின் குருதியிலாடி இங்கு வந்தவன். பாரதவர்ஷத்தின் குருதியில் களித்து கடந்துசெல்வான். ஆம், இது உண்மை!” அவர் குரல் உடைந்தது. கண்ணீர் வழிய அவர் சொன்னார் “அழியாதது மாறவும் கூடாது. மாறுவது அழிவது. மாறுவதும் அழிவதும் அடித்தளமாக அமையாது.” அகப்பையை ஆட்டி மேலும் சொல்ல விழைபவர் போல விம்மி பின் அவர் திரும்பினார்.


அவர் செல்வதைப் பார்த்தபடி தருமன் மரத்தடியில் நின்றிருந்தார். பின்னர் குடிலுக்குள் சென்று அர்ஜுனனுடன் உரையாடிக்கொண்டிருந்த இளைய யாதவரைக் கண்டு தயங்கி நின்றார். அவர்கள் இளங்காதலர்போல மென்குரலில் பேசிக்கொண்டு காலமறியாது அமர்ந்திருப்பதை அவர் எப்போதும் காண்பதுண்டு. இருவர் முகங்களும் ஒன்றையொன்று ஆடிகள்போல மாற்றொளித்து முடிவின்மை சூடியிருக்கும். அவர்கள் தாங்கள் மட்டும் தனியாக காட்டுக்குள் சென்று உலாவி விடிந்தபின் வருவதுமுண்டு. இளைய யாதவர் “வருக, அரசே!” என்றார். தருமன் அவர் அருகே அமர்ந்து கொண்டார்.


“விழிகளில் சொற்கள் உள்ளன” என இளைய யாதவர் புன்னகையுடன் சொன்னார். தருமன் “அந்தப் பெருவஞ்சம் பற்றி மட்டுமே நான் பேசவிழைவேன் என நீங்களும் அறிந்திருப்பீர்கள்” என்றார். “ஆம், அதைக் கேட்ட உணர்வு உங்களிடம் உள்ளது” என்றார் இளைய யாதவர். “யாதவரே, அந்தப் பெருவஞ்சத்தின் ஊற்று எது? ஒவ்வொருநாளும் நான் பிருகதரை சந்திக்கிறேன். நீங்கள் இங்கு வந்தநாளில் அவரிலெழுந்த அந்தக் காழ்ப்பு அவருள் வளர்ந்தபடியேதான் செல்கிறது. உங்கள் நல்லியல்புகள் ஒவ்வொன்றும் அவர் காழ்ப்பை வளர்க்கின்றன. அக்காழ்ப்பே அவர் மூச்சென்றாகிவிட்டது. அவர் உடலும்கூட காழ்ப்பின் பருவடிவென்று ஒளிகொண்டிருக்கிறது. காழ்ப்பினாலேயே அவர் ஆற்றல்கொண்டவராகிறார் என்று தோன்றுகிறது.”


“காழ்ப்பின் வழியாக அவர் என்னை அணுகியறியலாமே” என்று இளைய யாதவர் சிரித்தார். “என்னை விரும்புகிறவர் என் வெண்முகத்தை அறிகிறார்கள். வெறுப்பவர் கரியமுகத்தை. சுக்லகிருஷ்ண சாகைகளுடன் என்னை அறிகிறார்கள்.” மேலும் உரக்க நகைத்து “அதில் உங்கள் இடர் என்ன, அரசே?” என்றார். “பிருகதர் எளிய மனிதர். உங்களைப்போல பேருருவம்கொண்ட ஒருவர் மீதான காழ்ப்பு அவரை மேலும் விரிவாக்குகிறது. அது அவர் வாழ்வுக்கு பொருளும் ஆகிறது. ஆனால் பத்ரர் கற்றறிந்தவர். கற்றவற்றை கடந்துசெல்லவும் முடிந்தவர். அவரே உரைப்பதுபோல அன்னமிட்டமைந்த கை கொண்டவர். யாதவரே, அத்தனை கற்றும் தெளிந்தும் சென்றடையக்கூடிய இடம் அந்தக் கடுங்கசப்பின் பீடம்தானா?”


சிலகணங்கள் அவரை கூர்ந்து நோக்கியபின் “அரசே, உங்கள் வினா எழுவது எங்கிருந்து? அவருடன் சேர்ந்து சிலகணங்கள் அக்குரலை ஒலித்த உங்கள் அகத்திலிருந்தா?” என்றார். விழிகளை அவர் மேல் நிலைக்கவிட்டு மாறாமுகத்துடன் “ஆம்” என்றார் தருமன். “அங்கு நின்ற அனைவரும் அச்சொற்களை தாங்களும் சொல்லி திடுக்கிட்டு மீண்டனர். அவர் குரலுடன் வந்து இணையும் ஆயிரம் உளக்குரல்களாலேயே அது வல்லமைகொண்டதாகிறது” என்று இளைய யாதவர் சொன்னார். “அதனாலேயே நான் அதை வீண்குரல் என சொல்லமாட்டேன். அதை கேளாது கடந்துசெல்லவும் மாட்டேன். அரசே, இன்றுமாலை விடைபெறுகையில் முறைப்படி பத்ரரைச் சென்றுகண்டு அவரிடம் சொல்கொண்டபின்னரே கிளம்புவேன்.”


தருமன் அவர் சொல்லப்போவதை காத்திருந்தார். “அவர் அடுமனை மெய்மையின் களம். ஆனால் அவர் அங்கே ஒற்றைச்சுவைக்கு சமைக்கிறார்” என்றார் இளைய யாதவர். “கற்பரசிகள் கட்டுண்டிருப்பவற்றிலிருந்து பரத்தையர் எளிதில் விடுபடுகிறார்கள்.” அவர் அச்சொல்லாட்சியால் உளஅதிர்வு கொண்டார். ஆனால் அவர் முகத்தையே நோக்கிக்கொண்டிருந்தார். “பல காடுகளை கண்டுவிட்டீர்கள், அரசே. அனைத்துக் காடுகளுக்குச் செல்லும் வழிகளும் இணையும் காடு ஒன்றுள்ளது. மைத்ராயனியக் காட்டுக்கு செல்க!” தருமன் “ஆம், தங்கள் சொல் என் வழி” என்றார்.


[ 2 ]


வேதம் வளர்ந்த காடுகள் அனைத்திலும் சென்று கல்விகற்ற லௌபாயனர் என்னும் முனிவரின் கதை ஆரண்யகங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. தன் உள்ளுறைந்த அழலை அவிக்கும் மெய்ப்பொருளைத் தேடி அவர் ஏழு வயதில் உபநயனம் முடிந்ததும் இல்லம்விட்டு கிளம்பினார். பெரும்பசிகொண்டவன் அன்னம்தேடிச் செல்வதுபோல இளம்கால்களால் மலைகளை மிதித்தேறி ஐதரேயக்காட்டுக்கு வந்தார். நான்காண்டுகளுக்குப் பின் அங்கிருந்து தைத்ரியக்காட்டுக்கு சென்றார். துவைதத்திலும் காம்யகத்திலும் பிருஹதாரண்யகத்திலும் நான்காண்டுகள் வாழ்ந்து வேதமெய்மையை கற்றார். அரசே, அவர் கற்காத கல்விநிலைகளே இங்கில்லை என்கிறார்கள். அறியப்படாத காடுகளாகிய ஹிரண்யகேசம், பைப்பாலடம் போன்றவற்றிலும் அவர் கற்றிருக்கிறார்.


தன் அறுபது வயதுவரை அவர் கற்றுக்கொண்டே இருந்தார் என்கிறார்கள். தான் புதைத்து மறந்த செல்வத்தைத்தேடி அகழ்ந்து அகழ்ந்து ஏமாற்றமடையும் கருமியைப்போல அவர் கண்ணீருடன் பதறியபடி குருநிலையிலிருந்து குருநிலைக்கு சென்றார் என்கின்றன நூல்கள். ஒவ்வொன்றிலும் பேரார்வத்துடன் நுழைந்து வெறிகொண்டு கற்றுக் கடந்துசென்று எஞ்சிய உளவினாவுடன் தனித்துவிடப்பட்டு கண்ணீருடன் கிளம்பிச்செல்வதே அவர் வழக்கம். இறுதியாக மாண்டூக்யக் காட்டிலிருந்து கிளம்பி சென்ற வழியில் ஒரு இசைச்சூதனை கண்டார். வேதக்காடுகளை முழுதறிந்திருந்த அச்சூதனிடம் பேசியபோது ஒன்றை அறிந்துகொண்டார், அவர் செல்வதற்கு மேலும் சொல்வளர்காடுகள் இல்லை.


உள்ளம் வெறுமைகொள்ள மகாதலம் என்னும் இடத்திலிருந்த அன்னவிடுதி ஒன்றை அடைந்தார். அங்கு நூறுவயதான சுஃபலர் என்னும் முதிய சூதர் தன்னந்தனியாக அவ்வழிப்போகும் அயலவருக்கு உணவளித்துவந்தார். அவரிடம் உணவு பெற்று உண்டு அங்கு நின்றிருந்த மாபெரும் ஆலமரத்தின் அடியில் இரவு தங்கினார். அந்திக் காற்று குளிருடன் வீசிக்கொண்டிருந்த வேளையில் அவர் அருகே வந்து படுத்துக்கொண்ட சுஃபலர் தன் கதையை சொன்னார்.


அந்த ஆலமரம் அமைந்த காட்டுவழியினூடாக சுஃபலர் இளஞ்சிறுவனாக அவ்வழி சென்றார். அவருடன் வந்த முதியதந்தை காட்டுக்குள் பாம்பு கடித்து இறந்தபோது மேலும் செல்லும் வழியறியாமல் அழுதபடி திரும்பிவந்து பசித்துக் களைத்து அம்மரத்தின் வேர்க்குவையில் சோர்ந்து படுத்துத் துயின்றார். அவ்வழி சென்ற வணிகர்குழு ஒன்று அந்த மரத்தடியில் ஓய்வெடுத்தது. கிளைகளுக்குமேல் அவர்கள் கலங்களை கட்டிவைத்திருந்தனர். மரம் ஏறமுடியாமல் களைத்திருந்தமையால் சுஃபலரிடம் அந்தக் கலங்களை எடுத்துக் கொடுக்கும்படி சொன்னார்கள். அவர் அடிமரத்தின் விழுதுப்புடைப்புகளில் தொற்றி அதன்மேல் ஏறி கிளைக்குவையில் இருந்த கலங்களை எடுக்கையில் அவரிடம் எவரோ எதையோ சொன்னதை கேட்டார்.


அஞ்சி நிலையழிந்து விழப்போனவர் அள்ளிப்பற்றிக்கொண்டார். கலங்களுடன் உடல்தளர கீழே வந்தார். அது கீழே எவரோ பேசியதன் ஒரு கீற்றே என தன்னை ஆறுதல்படுத்திக்கொண்டார். அவர்கள் அவரிடம் “சூதரே, சமைத்துக்கொடுங்கள்” என்றார்கள். சமையலுக்கு அடுப்புமூட்டும்போது அவர் அச்சொல்லை கேட்டார். அது அவர் உதடுகளில் அசைவாக இருந்தது. அச்சொல் தன்னுள் எண்ணச்சரடென ஓடிக்கொண்டிருப்பதை அறிந்தார். அதை வியந்து நோக்கியது பிறிதொரு உள்ளம்.


அவர் சமைத்து அளித்த உணவை அவர்கள் உண்டு எஞ்சியதை அவரிடமே அளித்துவிட்டுச் சென்றனர். அவர் அவ்வுணவை உண்ணும்போது இரு மலைப்பயணிகள் அங்கு வந்தனர். பசித்திருந்த அவர்களுக்கு அவ்வுணவை அவர் பகிர்ந்தளித்தார். அன்றிரவு வணிகர்கள் அளித்த அரிசியும் பருப்பும் எஞ்சியிருந்தது. அதைக்கொண்டு மறுநாள் அவர் சமைக்கும்போது மேலும் சில வணிகர் அவ்வழி வந்தனர். அவர்கள் அளித்துச்சென்ற அரிசியும் பருப்பும் மேலும் சிலநாட்களுக்கு திகைந்தது. அவ்வழி சென்ற அந்தணருக்கு அவ்வுணவை அவர் கொடையாக அளித்தார். சிலநாட்களுக்குள் அது ஓர் உணவுச்சாவடியாகியது. உண்டவரில் உள்ளவர் அளித்துச்சென்றது இல்லாதவருக்கும் அவருக்கும் போதுமான உணவாகியது.


“வேறெங்கும் செல்லவில்லையா?” என்று லௌபாயனர் கேட்டார். “ஆலமரத்தடியிலிருந்து ஆலமரத்தடிக்குச் செல்லலாம். மரங்கள் வேறு, நிலம் ஒன்று” என்றார் சுஃபலர். அந்த மறுமொழி தனக்கேயானது என்று எண்ணியவராக லௌபாயனர் அவரை நோக்கி அமர்ந்திருந்தார். பின்னர் “சூதரே, இதில் நீங்கள் நிறைவுறுகிறீர்களா?” என்றார். “ஆம், நான் முழுமையடைந்துவிட்டேன். இன்று இறப்பினும் விண்ணுலகில் என் மூதாதையரை தேடிச்செல்வேன்” என்றார் சுஃபலர். “ஏனென்றால் நான் இதுவரை அன்னமென பரிமாறியது என் நெஞ்சு அறிந்த ஒற்றைச் சொல்லையே.”


“சுஃபலரே, இப்புவி விரிந்துபரந்தது. ஏராளமான ஊர்கள், எண்ணற்ற மாந்தர். எண்ணித்தீராத மெய்மைகள். இங்கு இவ்வொரு செயலில் அமைந்து நீங்கள் அவற்றை இழந்துவிட்டீர்கள் அல்லவா?” என்றார் லௌபாயனர். “இந்த ஆலமரம் இங்கு மட்டும்தானே நின்றுள்ளது” என்று சுஃபலர் சொன்னார். “சிற்றுயிர்ப்பூச்சிகள் பறந்தலைகின்றன. பறவைகள் ஊர்தேடிச் செல்கின்றன. யானைகளுக்கு ஒற்றைக்காடு மட்டுமே. யானைக்கூட்டங்கள் வந்து நின்று இளைப்பாறும் நிழல்கொண்ட இந்த மரம் எங்கும் செல்வதில்லை.”


அவர் சொல்வனவற்றை உணர்ந்துசொல்கிறாரா அல்லது எங்கோ கேட்டவையா அவை என எண்ணி லௌபாயனர் அவரை நோக்கிக்கொண்டிருந்தார். “ஆனால் இதன்வேர்கள் அங்கே அடிமலைச்சரிவுவரை செல்கின்றன. இதன் மகரந்தம் இக்காடு முழுக்க செல்கிறது. இதன் கொடிவழி ஒருவேளை தென்குமரிவரைக்கும்கூட சென்றிருக்கக் கூடும்.”


லௌபாயனர் நெஞ்சு இளகப்பெற்றார். “நான் இங்குள்ள அத்தனை குருநிலைகளுக்கும் சென்றுவிட்டேன், சுஃபலரே. நான் தேடுவதை கண்டடையவில்லை” என்றார். “அவ்வாறெனில் அது உங்களை தேடிவரட்டும், அந்தணரே. கனிமரங்களைப் பறவைகளும் பூக்களை வண்டுகளும் தேடிவருகின்றன” என்று சுஃபலர் சொன்னார். அவர் சொல்வதை புரிந்துகொண்டு லௌபாயனர் மெய்குளிர்ந்தார்.


“நான் உங்களை நல்லாசிரியனாகப் பணிகிறேன். நான் ஆற்றிய பிழை என்ன?” என்றார். “காட்டுப்பசுக்களின் பாலின் சுவை தொழுவத்துப் பசுக்களுக்கில்லை” என்றார் சுஃபலர். “இந்த ஆலமரத்தை ஒவ்வொருநாளும் நோக்கிக்கொண்டிருக்கிறேன். இங்கு அத்தனை பறவைகளும் கூடணைகின்றன. கிளைவிரித்து இது நின்றிருப்பது அவற்றை வரவேற்பதற்காகவே.”


நெடுநேரம் அந்த ஆலமரத்தையே நோக்கிக்கொண்டிருந்தார் லௌபாயனர். சுஃபலர் விரைவிலேயே துயின்றுவிட்டார். துயிலில் அவர் இதழ்கள் அசைந்துகொண்டிருப்பதை கண்டார். அச்சொல் என்ன என்பதை கூர்ந்து நோக்கினார். விழியுடன் செவி குவியவில்லை. ஆகவே செவிகளை மறந்து விழியால் அதை கேட்கமுயன்றார். விழிகள் அறிந்தது செவிக்குரிய சொல்லாகவில்லை. சலித்து பெருமூச்சுவிட்டு அவரும் படுத்துத் துயின்றார். துயிலில் மணிமுடிசூடிய முதிய அரசர் ஒருவர் தோன்றினார். அவர் விழிகளைக் கண்டதும் அவர் திகைத்து “சுஃபலரே நீங்களா?” என்றார். அவர் அக்குரலை கேட்கவில்லை. ஒருசொல்லை சொன்னார். தெளிவாக அதை அவர் விழிகளும் செவிகளும் அறிந்தன. அவர் அதை திரும்பச் சொன்னார். உடனே விழித்துக்கொண்டார்.


அது புலர்காலை. அவர் எழுந்தபோது அருகே சுஃபலர் இறந்துகிடப்பதை கண்டார். உடல் தளர்ந்திருந்தாலும் முகம் முலையுண்டு நிறைந்து உறங்கும் குழவியைப்போலிருந்தது. அவரை நோக்கிக்கொண்டிருந்தபோது தன் உதடுகள் அசைந்து ஒரு சொல்லை உரைப்பதை அவர் கேட்டார். சுஃபலரை அக்காட்டில் மண்மறைவு செய்துவிட்டு அங்கேயே லௌபாயனர் தங்கிவிட்டார். அங்கிருந்த அன்னச்சாவடியை அவர் தொடர்ந்து நடத்தினார். முதற்புலரியில் எழுந்து கிழங்குகளும் கீரைகளும் காய்களும் சேர்த்துவருவார். சமைத்துவைத்துக்கொண்டு வருவிருந்துக்காக காத்திருப்பார். செல்விருந்து ஓம்பி துயில்வார்.


அவர் எவரிடமும் பேசுவதே இல்லை. ஆயினும் அவர் மெய்ஞானி என்று மெல்ல புகழ்பெறலானார். அவரைத்தேடி மாணவர்கள் வந்தனர். அங்கு எவ்விலக்கும் எந்நெறியும் இல்லை என்பதனால் அத்தனை மெய்யுசாவிகளும் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்களுக்குள் தொடர்ச்சியான சொல்லாடல்கள் நிகழ்ந்தன. சாங்கியர்களும் வைசேஷிகர்களும் மீமாம்சகர்களும் அமணர்களும் சார்வாகர்களும் வேதாந்திகளும் ஒருவரை ஒருவர் சந்தித்து சொல்மடுக்கும் இடமாக அது மாறியது. பிற எங்காயினும் தவிர்க்கமுடியாதபடி நிகழும் பூசல்கள் அங்கே லௌபாயனரின் இருப்பினால் தவிர்க்கப்பட்டன.


இரவும்பகலும் தத்துவம் பேசப்படும் இடம் என மகாதலம் சூதர்களால் சொல்லப்பட்டது. வணிகர்கள் அங்கு வந்து தங்கி கொடையளித்துச் செல்ல அது வளர்ந்தது. லௌபாயனரின் மாணவர்கள் அவரிடம் அடுமனையாளர்களாக சேர்ந்தனர். அவர் ஒற்றைச் சொற்களில் ஆணையிடும் பணிகளைச் செய்து அவருடன் இருந்தனர். ஆனால் அவர்களிலிருந்தே அனைத்துக் கொள்கைகளையும் நன்கறிந்த அறிஞர்களும் அறிந்ததைக் கடக்கும் படிவர்களும் உருவாகிவந்தனர். அவர்களில் முதல்மாணவரான மாதவர் அதை ஓர் கல்விநிலையாக வளர்த்தெடுத்தார். பலநூறுபேர் அங்கு ஒழியாது தங்கி சொல்லாடினர். ஆனால் அங்கு முதன்மையாக அன்னமே வழங்கப்பட்டது.


லௌபாயனர் தன் எண்பத்தெட்டாவது வயதில் நிறைவடைந்தார். ஆலமரத்தடியில் மலர்ந்த முகத்துடன் மல்லாந்து படுத்து அதன் விரிந்த கிளைகளில் கூடணைந்திருந்த பல்லாயிரம் பறவைகளை நோக்கிக்கொண்டிருந்த அவர் தன் அருகே இருந்த மாதவரிடம் அந்த மரத்தைச் சுட்டி “மைத்ரி” என்று சொன்னார். விழிமூடி நீள்துயில்கொண்டார். அந்த ஆலமரம் அதன் பின்னர் மைத்ரி என்று அழைக்கப்பட்டது. அதன் விதைகள் அக்காடு முழுக்க நட்டு விரிவாக்கப்பட்டபோது அக்காடே மைத்ராயனியம் எனப்பட்டது. ஒருங்கிணைவின் பெருங்காட்டில் எந்தக் கொள்கையும் நிகரான ஏற்புடையதே என்று இருந்தது. ஆனால் அதனாலேயே அங்கு வேதமெய்மை நிலைநின்றது. அது வேதச்சொல் வாழும் காடுகளில் முதன்மையானது என்று அறியப்பட்டது.


[ 3 ]


மைத்ராயனியக் காட்டிற்கு தன் தம்பியருடன் உச்சிப்பொழுதில் தருமன் வந்துசேர்ந்தபோது அதை ஒரு கல்விநிலை என்றே அவரால் எண்ணமுடியவில்லை. நூற்றுக்கணக்கான அத்திரிகளும் குதிரைகளும் மலைக்கழுதைகளும் அங்குள்ள மரநிழல்களில் பொதியவிழ்த்துக் கட்டப்பட்டிருந்தன. அவற்றின் சாணிமணமும் மிதிபட்டு சிறுநீருடன் கலந்த புல்லின் மணமும் அவற்றின் உடலில் எழுந்த வியர்வைமணமும் அங்கு நிறைந்திருந்தன. கனிகொண்ட ஆலமரம்போல அப்பகுதியே ஓசையால் நிறைந்திருந்தது. எவரும் எவரையும் முறைப்படி வரவேற்கவில்லை. முகமன்கள் உரைப்பதற்கு எவருக்கும் நேரமில்லை என்பதுபோல அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள்.


அங்கே ஓடிய நீரோடையில் கைகால்களை கழுவிவிட்டு குடில்வளாகத்திற்குள் நுழைந்தார்கள். மையமாக நின்றிருந்த சாலமரத்தின் அடியில் சுஃபலர், லௌபாயனர், மாதவர் மற்றும் அதன்பின்னர் அமைந்த பதினேழு ஆசிரியர்களின் நினைவாக கல்விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன. மைத்ரியன்னை என்னும் அந்த முதல்மரம் அங்கு வருபவர்களின் தெய்வமாக ஆகிவிட்டிருந்ததை அதன் கிளைகளில் தொங்கிய சிறிய மலர்மாலைகள் மற்றும் வேண்டுதல் எழுதி சுருட்டிக்கட்டப்பட்ட ஓலைநறுக்குகள் ஆகியவற்றிலிருந்து உணரமுடிந்தது.


குடில்களின் மையமாக ஒரேபந்தியாக ஐந்நூறுபேர் உண்ணும் அளவுக்கு பெரிய அன்னசாலை அமைந்திருந்தது. அதற்குப் பின்னால் தொலைவில் அணையா அடுப்புகொண்ட அடுமனையிலிருந்து செங்கல்லால் ஆன புகைபோக்கி வழியாக அடுப்புப்புகை எழுந்து வானில் திருநீற்றுக் கீற்றென கரைந்து இழுபட்டு நின்றிருந்தது. அங்கிருந்து ஒரு கூரையிடப்பட்ட நீள்பாதை வழியாக உணவுக்கலங்கள் அன்னசாலைக்கு கொண்டுவரப்பட்டன. உணவுண்டவர்கள் கைகளைக் கழுவுவதற்காக நீரோடையின் ஒரு கிளை வடக்குப் பக்கமாக திருப்பிவிடப்பட்டு வளைந்துசென்றது. அதனருகே எச்சில் இலைகளும் இலைத்தொன்னைகளும் நிறைந்த பெரிய மூங்கில்கூடைகள் நின்றன. அவற்றை பொதியென ஆக்கி எடுத்துச்செல்லும் கழுதைகள் நின்றிருந்தன.


அன்னசாலையைச் சுற்றி நீளமான கொட்டகைகள் அமைந்திருந்தன. மூங்கில்நாராலான நூற்றுக்கணக்கான கட்டில்கள் வரிசையாக போடப்பட்டு ஒவ்வொரு கட்டிலுக்கும் ஒரு பரணும் அமைந்திருந்தது. அவற்றில் வணிகர்களும் வழிப்போக்கர்களும் அமர்ந்து உரத்த குரலில் பேசிச் சிரித்துக்கொண்டிருந்த ஒலி கூரைப்பரப்பை மீறி மேலெழுந்தது. “நாம் உணவு உண்டபின் இவர்களிடம் பேசுவோம்” என்றான் பீமன். “இங்கு மாணவர்கள் தங்குவதற்கான குடில்கள் எங்குள்ளன?” என்று தருமன் கேட்டார்.


அருகே நின்றிருந்த ஒரு சூதர் “இங்கு தனித்தனியான குடில்கள் எவருக்குமில்லை, உத்தமரே. முதலாசிரியர் மகாசங்கரும் கூட கொட்டகைகளில்தான் தங்கிக்கொள்கிறார். பெண்களுக்கு தனியான கொட்டகைகள் உள்ளன” என்றார். “இங்கு தங்குபவர்கள் அனைவரும் அன்னசாலையில் பணியாற்றவேண்டும் என்பது மரபு. இங்கு முதன்மையாக அன்னமே அளிக்கப்படுகிறது.” “இங்கு வேதவேள்விகளும் சொல்லவைகளும் இல்லையா?” என்று தருமன் கேட்டார். “அன்னமே இங்குள்ள வேள்வி. வயிற்றில் அன்னம் நிறைந்தபின் இயல்பாக எழுவதே மெய்ச்சொல்” என்றார் சூதர்.


மைத்ரியக் காடு ஏழு வேதக்காடுகளுக்குச் செல்லும் பாதைகள் சந்தித்துக்கொள்ளும் மையத்தில் இருந்தது. உண்மையில் அவ்விடுதியே அப்பாதைகளை உருவாக்கியது. அங்கு அன்னம் அறாது என்பதை அறியாத பயணிகள் இருக்கவில்லை. பின்னர் வணிகர்கள் சந்தித்துக்கொள்ளவும் அந்தணரும் சூதரும் உரையாடவுமான மையமாக அது ஆகியது. ‘மைத்ரியக்காட்டில் பேசப்படாத செய்தி’ என்ற சொல்லாட்சியே உருவாகி புழக்கத்திலிருந்தது. வெவ்வேறு நாடுகளின் நாணயங்களை உரியமுறையில் மாற்று கொள்வதற்குரிய இடமாகவும் அது காலப்போக்கில் மாறியது.


பந்தியில் ஐவரும் அமர்ந்தனர். திரௌபதி அப்பால் பெண்களுக்கான பந்தியில் அமர்ந்தாள். அங்கே பன்னிரு பெண்களே இருந்தனர். பத்துபேர் தங்கள் பாணர்களுடன் வந்த விறலியர். ஒருத்தி முதுபார்ப்பனி. ஒருத்தி வணிகர்களுடன் வந்த பரத்தை. “தங்கள் குலமறிவித்து பந்தி கொள்க!” என்றான் உணவுபரிமாறுபவன். திரௌபதி விறலியருடன் சென்று அமர்ந்துகொண்டாள். அனைவர் முகங்களிலும் வியப்பு தெரிந்தாலும் அவர்கள் ஒன்றும் கேட்கவில்லை.


தருமன் தன்னை வழிப்போக்கனாகிய சூதன் என்று அறிவித்துக்கொண்டான். பரிமாறுபவன் விழிகளில் ஐயத்துடன் “அப்பேருருவரும் சூதரா?” என்றான். “ஆம்” என்றான் பீமன். “நான் அடுமனைப்பணியாளன். உண்டு பெருத்தவன்.” அவன் புன்னகைத்து “நன்று” என்றான். அவர்களுடன் ஐநூறுபேர் உணவருந்தினர். அது உச்சிப்பொழுதின் நாலாவது பந்தி. ஆயினும் உணவு சூடாகவும் சுவையுடனும் இருந்தது. கீரையும் கிழங்கும் கோதுமை மாவும் சேர்த்து பிசைந்து அவித்த அப்பங்கள். அரிசியுடன் பயறு சேர்த்து பொங்கப்பட்ட அன்னம். பருப்பும் கீரையும் கலந்த கூட்டு. உள்ளே வெல்லம் வைத்து தீயில் சுட்ட கிழங்கு. எண்ணையிட்டு வதக்கப்பட்ட வழுதுணையும் வெண்டையும். புளிக்காய் சேர்த்து கொதிக்கவைக்கப்பட்ட மோர். சுக்கு போட்டு கொதிக்கவைக்கப்பட்ட குடிநீர்.


அவர்கள் உண்ணத்தொடங்கிய சற்றுநேரத்திலேயே பீமன் உண்பதை நோக்கியபடி அனைவரும் விழிமறந்து அமர்ந்திருந்தார்கள். அடுமனைப்பணியாளர் இருவர் அவனுக்காகவே பரிமாறத்தொடங்கினர். தருமன் “மந்தா… சூழை நோக்கு… மந்தா” என பலமுறை மெல்ல இடித்துரைத்தபோதும் அதை பீமன் கேட்கவில்லை. உணவைக் கண்டதுமே அவன் அதனுடன் கலந்துவிட்டிருந்தான். தருமன் தடுமாற்றத்துடன் அப்பாலிருந்த அர்ஜுனனை நோக்க அவன் புன்னகையுடன் “இரண்டின்மை” என்றான். நகுலன் “ஒன்றும் செய்யமுடியாது, மூத்தவரே” என்றான். “அவனை எவர் என அறிந்துவிடுவார்கள்” என்றார் தருமன். “அங்காடியில் யானை என அவரை சற்றுமுன் அந்த சூதன் சொன்னான். எப்படி மறைக்கமுடியும்?” என்றான் சகதேவன்.


சற்றுநேரத்தில் அடுமனைப்பொறுப்பான முதியவர் கரிபடிந்த மரவுரி ஆடையும் வியர்வை வழிந்த உடலுமாக வந்தார். விறகுப்புகை அவருடன் வந்தது. உரத்த குரலில் “நல்லுணவு கொள்பவர் ஒருவர் வந்துள்ளார் என்றனர். தாங்களென அங்கிருந்தே அறிந்தேன், விருகோதரரே. என் கைசமைத்த உணவு இனிது என நம்புகிறேன்” என்றார். “நல்லுணவு என்பதற்கு அப்பால் ஒன்றும் சொல்வதற்கில்லை. எல்லா உணவும் நன்றே” என்றான் பீமன். “ஆம், உண்மை. இதில் கூடுதலாக உள்ளது எங்கள் அன்பு மட்டுமே” என்றார் அடுமனைத்தலைவர்.


“பெரும்பசிக்காக தவம்புரிகின்றன அடுமனைகள். இங்கு நாங்கள் எவரையும் வரவேற்பதோ வழியனுப்புவதோ இல்லை, இளையபாண்டவரே. தங்களுக்காக எழுபவை என் நாவின் தனிச்சொற்கள். தங்களுக்கு என்னவேண்டுமென சொல்லலாம்” என்று அவர் பீமன் அருகே வந்து நின்றார். “மேலும் உணவு!” என உரக்க நகைத்தபடி பீமன் சொன்னான். “ஆம், உணவு உள்ளது. தாங்கள் மகோதரர் ஆனாலும் எங்கள் உணவுக்குவையை ஒழித்துவிடமுடியாது” என்றார் முதியவர். “அதை அறிவேன். ஆனால் என் இருகைகளாலும் ஒருவாயாலும் அதை நிகழ்த்தவே முயல்வேன்” என்றான் பீமன்.


“அடுமனைத்தலைவரை வணங்குகிறேன். நான் மூத்த பாண்டவனாகிய யுதிஷ்டிரன். இவர்கள் என் தம்பியர். அங்கே பெண்கள்நிரையில் என் அரசி அமர்ந்திருக்கிறாள்” என்றார் தருமன். “நன்று, தாங்கள் இவ்வழி செல்லவிருக்கிறீர்கள் போலும்” என்றார் அடுமனைத்தலைவர். “இல்லை, நாங்கள் வேதம் பயிலும் காடுகளினூடாக சென்றுகொண்டிருக்கிறோம். மேலும் மேலும் உண்ணவிழையும் பசிநோய் கொண்டவர்கள்போல. இங்கு வரலாம் என்று எங்கள் தோழர் ஒருவர் சொன்னார். இங்கு தங்கி கற்க விழைகிறோம்” என்றார் தருமன்.


“இங்கே கல்விச்சாலை என ஏதுமில்லை. ஆசிரியர்களும் மாணவர்களும் என எவரும் இல்லை” என்றார் அடுமனைத்தலைவர். “இது ஒரு அடுமனை, ஓர் அன்னசாலை. அதற்குமேல் எதுவும் இங்கு அமைக்கப்படலாகாது என்பது எங்கள் முதன்மையாசிரியரான மாதவரின் ஆணை. அவருடைய ஆசிரியரும் இவ்வன்னசாலையின் மெய்யாசிரியருமான லௌபாயனர் முதல் அனைவருமே இங்கு அன்னம் சமைத்து பரிமாறி நிறைவதை அன்றி எதையும் செய்ததுமில்லை.” பீமனை நோக்கி விழிசுட்டி “இவர் நல்ல அடுமனையாளர் என அறிந்திருக்கிறேன். எனக்கு பெருந்துணையாக இருப்பார். பிறர் விரும்பினால் இங்கு கொட்டகைகளில் தங்கி அடுமனைகளில் பணியாற்றலாம்.”


“அது எங்கள் பேறு” என்று தருமன் சொன்னார். “முகமன் நன்று. ஆனால் அடுமனைப்பணி அத்தனை எளிதல்ல” என்று சொல்லி அடுமனைத்தலைவர் திரும்பினார். “உண்டு ஓய்வெடுத்தபின் அடுமனைக்கு வருக! உங்களுக்கு எவரும் பணி அளிக்கமாட்டார்கள். நீங்களே இங்கு நிகழும் அன்னவேள்வியில் உங்கள் இடத்தை கண்டடையலாம்” என்றபின் அவர் உள்ளே சென்றார். அருகே நின்றிருந்த அடுமனைப்பணியாளன் “அவர்தான் இக்கல்விச்சாலையின் முதலாசிரியர் பிரபவர். அடுமனை பேணலையே கல்வியென செய்துவருகிறார்” என்றான். “ஆம், நான் எண்ணினேன்” என்றார் தருமன்.


உணவுண்டு முடித்து ஓய்வெடுப்பதற்காக அவர்கள் கொட்டகைக்குள் சென்றனர். அங்கே பாதிக்கும்மேலான கட்டில்களில் வணிகர்கள் துயின்றுகொண்டிருந்தனர். அவர்களுடன் வந்த காவல்நாய்கள் அவர்களின் பொதிகளுக்கு அருகே சுருண்டுகிடந்தன. காலடியோசைகளில் அவற்றின் செவிகள் அசைந்து மடிந்து நிமிர்ந்தன. அவற்றின் விழிகள் மட்டும் உருண்டு அவர்களை நோக்கின. கட்டில்களைத் தெரிவுசெய்து படுத்து உடல்தளர்த்திக்கொண்டதுமே தருமன் கண்மயங்கலானார். அவரருகே நகுலனும் சகதேவனும் படுத்தனர். “மந்தன் எங்கே?” என்றார் தருமன். “அவர் அடுமனைக்குள் சென்றுவிட்டார். இளையவரும் உடன் சென்றார்” என்றான் நகுலன். தருமன் கண்களை மூடியபடி “அவர்களுக்கு சோர்வே இல்லை… அவர்கள் உடல்களுக்கு இவ்வுலகு போதவில்லை” என்றார்.


“தாங்கள் அடுமனைப்பணியாளனாக செல்லவேண்டியதில்லை, மூத்தவரே” என்று நகுலன் சொன்னான். தருமன் விழி திறக்காமலேயே புன்னகைத்து “மாறாக இது ஒரு நல்வாய்ப்பென்றே எண்ணுகிறேன். அடுமனைப்பணியில் திறனற்றவை என சில இருக்கும். இசைச்சூதனாகச் செல்வதும் குதிரைச்சூதனாக சாட்டையெடுப்பதும்தான் கடினம்” என்றார். நகுலன் “இங்கு இப்படி ஒரு பெருங்கூட்டத்தில் தத்துவக்கல்வி எப்படி நடக்கமுடியும்? எவர் எதை கற்றுக்கொள்ள முடியும்?” என்றான். சகதேவன் “சந்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 05, 2016 11:30

September 4, 2016

மொழியெனும் நதி

Falgu River

ஃபால்குனா நதி, கயா


 


 


கயாவில் இருந்து 2008 செப்டெம்பர் 17 காலை பத்து மணிக்கு நாளந்தாவுக்குச் சென்ற பயணம் இன்றும் நினைவில் காட்சிகாட்சியாக நீடிக்கிறது. செப்டெம்பரில் வட இந்தியாவில் மழை தொடங்கிவிடும். எங்கள் பயணத்தில் விந்தியனைக் கடந்ததுமே மழையை எதிர்கொள்ளத் தொடங்கிவிட்டிருந்தோம். நாக்பூர், போபால் போன்ற நகர்களை ஒரு முகத்தைக்கூடப் பார்க்காமல் மழைத்திரைக்குள்ளேயே கடந்துசென்றோம். எங்கள் நோக்கம் நகரங்கள் அல்ல, தொல்லியல் சார்ந்த இடங்கள்தான்


கயாவில் மழை இருக்கவில்லை. ஆனால் முகில்கள் வானை நிறைத்திருந்தன. இந்தியாவில் ஒரு சர்வதேச மையம் கயா. புத்தர் ஞானமடைந்த மண். பதிமூன்றாம் நூற்றாண்டில் நாளந்தா பல்கலையை பக்தியார் கில்ஜி அழித்து அங்கிருந்த பத்தாயிரம் பிக்ஷுக்களை கொலைசெய்தபின் பிகாரில் பௌத்தம் சரியத் தொடங்கியது. நாளந்தா கைவிடப்பட்டது. கயாவும் மறக்கப்பட்டது.


இந்தியாவில் கிட்டத்தட்ட அழிந்துபோய், இலங்கையிலும் பர்மாவிலும் தாய்லாந்திலுமெல்லாம் உருமாற்றம் அடைந்து தேக்கநிலையில் இருந்த புத்தமதம் இந்தியாவையும் இலங்கையையும் பர்மாவையும் ஆண்ட ஆங்கிலேயரால்தான் பதினெட்டாம் நூற்றாண்டில் மீட்டு எடுக்கப்பட்டது. ரைஸ் வில்லியம்ஸ், பால்காரஸ், ஹென்றி ஸ்டீல் ஆல்காட் ஆகிய மூவரையும் பௌத்ததை மீட்டு எடுத்தவர்கள் என்று சொல்லலாம்.


ஹென்றி ஸ்டீல் ஆல்காட் சென்னையை மையமாகக் கொண்டு செயல்பட்டவர். அவரது மாணவரான அநாகரிக தம்மபால என்னும் பௌத்தப்பிரச்சாரகர்தான் சர்வதேச அளவில் நிதி திரட்டி கயாவில் இன்றிருக்கும் ஆலயத்தை அமைத்தவர். முன்பு கயாவிலிருந்து இலங்கைக்குக் கொண்டுசென்று அங்கே பொலனருவாவிலும் அனுராதபுரத்திலும் நட்டுப்பேணபட்ட போதி மரத்திலிருந்து ஒரு கிளை மீண்டும் கயாவுக்குக் கொண்டுவந்து நடப்பட்டது. ஹென்றி ஸ்டீல் ஆல்காட்டின் இன்னொரு மாணவர் தமிழ்பௌத்தத்தின் நிறுவனராகிய பண்டித அயோத்திதாசர்


கயா இன்று பணக்கார பிக்‌ஷுக்களால் நிறைந்துள்ளது. காரணம் பௌத்தம் திகழும் பெரும்பாலான நாடுகள் செல்வ வளம் மிக்கவை. அதேசமயம் பீகார் இந்தியாவின் வறுமை மிக்க மாநிலம். நவீன செல்பேசிகளும் மடிக்கணினிகளுமாக செல்லும் பிக்‌ஷுக்களை பிச்சைக்காரக் குழந்தைகள் துரத்தித் துரத்திப்பிச்சை எடுத்துக் கெஞ்சும் காட்சியே கயாவின் அடையாளம். வேடிக்கை என்னவென்றால் பிக்‌ஷு என்றால் பிச்சைக்காரன் என பொருள். பிச்சை என்னும் சொல் பிக்‌ஷை என்னும் வடமொழிச்சொல்லில் இருந்து வந்தது


கயாவிலிருந்து பால்குனா நதியின் கரையோரமாகவே சாலை சென்றது. சிலநாட்களுக்கு முன் பெய்த பெருமழையின் வெள்ளம் சற்றே வடிந்து மணல்படுகைகளுடன் செங்கலங்கல் நீர் சுழித்தோடிய ·பால்குனா சிவந்த ஒளியாக வலப்பக்கம் தெரிந்துகொண்டே இருந்தது. சிலசமயம் அது அந்திவானம் போல விழிகளை ஏமாற்றியது


பீகார் மிக வளமான பூமி. பெரும்பாலும் கங்கை மற்றும் அதன் துணைநதிகளின் வண்டல்படுகைதான். எங்கும் நெல்வயல்கள், தோப்புகள். வானில் மேகங்கள் இருந்தமையால் வெயில் சுடவில்லை, நீர்த்துளிகள் சிதறிக் கலந்த இதமான குளிர்காற்று. மகாபோதியின் நினைவு எஞ்சிய மனம் ஒருவகை நிறைவில் அசையாதிருந்தது. இத்தனை நாட்களுக்குப்பின்பும் அந்தப்பயணம் இனிய நினைவாக நீடிப்பதற்குக் காரணம் அதுவே.


பால்குனா நதியின் பாலம் மீது சென்றுகொண்டிருந்தபோது எவரோ எங்களைத் தொடர்வதை உணர முடிந்தது. “எவரோ தொடர்ந்து வருகிறார்கள்” என்று கிருஷ்ணன் சொன்னார். “நம்மையா? நாம் என்ன செய்தோம்?” என்றேன். “பீகார் கொள்ளைக்காரர்களின் ஊர் சார். என்ன ஏது என்று நாம் என்ன கண்டோம்? வண்டியை நிறுத்தவேண்டாம்” என்றார் சிவா


வண்டியில் சென்றபடியே பார்த்தோம். தொடர்ந்து வந்தது ஒரு யமஹா பைக். அதிலிருந்தவர் மொட்டைத்தலையில் குடுமி வைத்து காவி மேலாடையைச் சுற்றியிருந்த வடக்கத்திப் பண்டா. “கயாவில் சடங்குசெய்கிற ஏதோ பிராமணர் போலிருக்கிறது” என்றேன். “இங்கே பிராமணர்கள்கூட பெரிய ரவுடிகள். கேள்விப்பட்டிருப்பீர்கள், பண்டாக்களுக்கும் பிக்‌ஷுக்களுக்கும் அடிக்கடி அடிதடி நடக்கும். கல்லெறியில் பலர் மண்டை உடைந்திருக்கிறது”


பீதியை உருவாக்கிக்கொள்ள விரும்பினோம் என்றுதான் சொல்லவேண்டும். அடுத்த பாலத்திலும் அந்த பைக் விடாது பின்னால் வந்தது. “இவ்வளவு தூரம் வரான் . என்னன்னுதான் பாப்பமே” என்றார் வசந்தகுமார். “தனியாத்தான் வர்ரான். நாம இவ்வளவுபேர் இருக்கோம்” என்றார் செந்தில். “கடைசீல அவன் சும்மா நம்மள கடந்து போயிருவான் . எல்லா திரில்லும் போயிரும். இப்டியே நம்மள ஒருத்தன் ஃபாலோ பண்ணினான்னு நம்பி அந்தக் கதையிலேயே ஊருக்குப்போவோம்” என்றார் கிருஷ்ணன்


அடுத்த பாலத்தில் வசந்த குமார் “நிப்பாட்டுங்க. . ஒரு ஷாட் எடுக்கறேன். நல்ல லொக்கேஷன்” என்றார். நிறுத்திவிட்டு நீர் வழிந்த ஃபால்குனா நதிப் படுகையை பார்த்துக்கொண்டு நின்றிருந்தோம். ஓரக்கண்ணால் பைக் காரரையும் நோக்கினோம். அவர் பைக்கில் வந்து சற்று அப்பால் நின்றார். பின்னர் அருகே நடந்து வந்து தமிழில் “தமிழ்நாடா சார்?” என்றார்.


“ஆமாம். . நீங்க?” என்றோம். காரைக்குடிக்காரரான ராம்குமார். அவரது முன்னோர்கள் முந்நூறு வருடம் முன்பு அங்கே ஒரு சிற்றூரில் குடியேறிவிட்டிருந்தார்கள். பால்குனா நதி முன்னோர்களுக்கான நீர்க்கடன்கள் செய்வதற்கு மிகவும் முக்கியமானதாக அக்காலத்தில் கருதப்பட்டிருந்தது. அன்றெல்லாம் தமிழகத்தின் பல ஊர்களிலிருந்து பீகாரில் அந்தச் சிற்றூருக்கு வந்து அங்கிருந்த பால்குனா கங்கை நதிச்சந்திப்பில் முன்னோருக்கு நீர்க்கடன்கள் செய்துவந்தனர். அவரது குடும்பம் அப்போது அங்கே வந்தது.


ஆனால் சென்ற நூறாண்டுகளாக அப்படி எவரும் தென்னகத்திலிருந்து வருவதில்லை என்றார் ராம்குமார். தென்னாட்டினருக்கு சடங்குகள் செய்துவைக்கும் புரோகிதர் குடும்பத்தைச் சேர்ந்த அவர்கள் வட இந்தியச்சடங்குகளுக்கு மாறி வட இந்தியப்பாண்டாக்களாகாவே மாறிவிட்டிருந்தனர். அவர் பெயர்கூட ராம்குமார் பாண்டேதான்.


ராம்குமார் ஆங்கில இலக்கியம் படித்துக் கொண்டிருக்கிறார் என்றார். சிவப்பாக வட இந்தியக் களையுட்ன் இருந்தார். தமிழ்நாட்டுக்கு அவரோ அவரது தந்தையோ வந்ததே இல்லை. ஆனால் வீட்டில் தமிழ்தான் பேசுகிறார்கள். வினோதமான தமிழ் உச்சரிப்பு நம்மூரில் கம்பிளி விற்கவரும் ராஜஸ்தானியர் பேசுவதுபோலிருந்தது.


சாலையில் தமிழ்நாட்டு பதிவெண் உள்ள வண்டியைக் கண்டதனால் பரவசமைந்து முப்பது கிலோமீட்டர் தூரம் விரட்டி வந்ததாகச் சொன்னார். அவரது மனதில் தமிழ்நாடு ஒரு கனவு பூமியாகவே இருக்கிறது என்று தெரிந்தது. அவருக்குத் தெரிந்ததெல்லாம் காரைக்குடி, புதுக்கோட்டை, தேவகோட்டை, கந்தர்வகோட்டை, திருமயம், திருப்பத்தூர் என்று ஊர்ப்பெயர்கள் மட்டும்தான். தமிழ்நாட்டின் காட்சிச்சித்திரம் கூட இல்லை. ஏனென்றால் அவர் அறிந்த எவரும் தமிழகத்தைப் பார்த்ததில்லை.


ஆச்சரியமாக இருந்தது. எது அவரை தமிழன் என உணரச்செய்கிறது? அந்த உணர்ச்சி அவரை அங்கே அவர் வாழும் ஊரில், அப்பண்பாட்டிலிருந்து தனிமைப்படுத்தவே செய்யும். அவரது உலகியல் வாழ்க்கைக்கு அதனால் ஒருலாபமும் இல்லை. அந்த அடையாளத்தால் அவர் அடையும் மகிழ்ச்சிக்கு உண்மையில் வாழ்க்கையின் பயன்சார்ந்த எந்த அர்த்தமும் இல்லை.


அதை அவரால் சொல்லமுடியும் என்று தோன்றவில்லை. “எங்கள் வீட்டில் தமிழ்தான் பேசுவோம். என் பாட்டி தமிழில் பேசும்படிச் சொல்லிக்கொண்டே இருப்பார். இப்போது பாட்டி இல்லை. என் அக்காவின் குழந்தைகளுக்கு பத்துவயதும் ஆறுவயதும்தான். அவர்களும் தமிழ்பேசுவார்கள். தமிழ் எழுதப்படிக்கக்கூடத் தெரியும். நான் பாட்டியிடமிருந்து தமிழ் படித்து என் தங்கைக்கும் அக்கா குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுத்தேன்”


“ஏன் தமிழ் படிக்கிறீங்க?” என்று கேட்டுவிட்டேன். “சந்தோஷமா இருக்கு சார். தமிழ் பேசுறப்ப ரொம்ப பழைய தாத்தா பாட்டியெல்லாம் கூடவே இருக்கிறதுபோல இருக்கு” என்றார் ராம்குமார். ”நான் தமிழ் ஸ்லோகமெல்லாம் கூடச் சொல்லுவேன். வைஷ்ணவர்களுக்கு நிறைய தமிழ் ஸ்லோகங்கள் இருக்கு”


மொழி என்பது வெறுமே ஒரு பண்பாட்டுச்சின்னம் மட்டும் அல்ல என்று எப்போதும் உணர்வதை மீண்டும் உறுதிப்படுத்திக்கொண்டேன். அது அறிவின் வடிவம் மட்டும் அல்ல. அது குறியீடுகளின் தொகுப்பு மட்டும் அல்ல. அதற்கு ஒருவரின் ஆன்மாவை தாங்கி நிற்கும் சக்தி இருக்கிறது. நம் மூதாதையர் அதைப்பேசினர் என்பதே நமக்கு அதை அணுக்கமாக ஆக்குகிறது.


மூதாதையர் தேவைதானா? விலங்குகளுக்கு மூதாதையர் நினைவுகளில்லை. அவற்றின் மரபணுவில் வாழும் மூதாதையர் மட்டுமே உள்ளனர். நாம் நினைவுகளில் சுமந்து கொண்டிருக்கிறோம். அழியாது தலைமுறைகள் தோறும் கொண்டு செல்கிறோம். அதுவே நமக்கும் விலங்குகளுக்கும் இடையேயான வேறுபாடு


தமிழ் ஃபால்குனா நதிபோல. எத்தனை தலைமுறைகள் அதில் மூச்சென எண்ணங்களெனக் கலந்திருப்பார்கள். அதன் கரையில் வாழும்போது நாம் அப்பெருக்கால்தான் அடையாளப்படுத்தப்படுகிறோம். ராம்குமார் பேணிக்கொண்டிருப்பது அந்த பல்லாயிரமாண்டுக்காலத் தொடர்ச்சியை. இறந்தகாலத்தை அழியவிடுவதே இல்லை மனிதன். ஏனென்றால் அவனுடைய இன்றுக்கு பொருள்தருவது அதுதான். கயாவிலிருந்து நாளந்தா சென்று நின்றபோது அதைத்தான் மீண்டும் எண்ணிக்கொண்டேன்.

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 04, 2016 11:36

மௌனி -கடிதங்கள்

images


 



“பவிஷாசை என்பது என்ன மொழி என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை….” என மௌனியின் இலக்கிய இடம்- 2 ல் கூருகிறீர்கள்.


பவிஷு என்ற சொல்லை பல தடவை கேட்டிருக்கிறேன். “அற்பனுக்கு பவிஷு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்” என்ற பழமொழியை கேட்டதில்லையா? மெட்ராஸ் லெக்சிகான் இந்த அர்த்தத்தை கொடுக்கிறது


பவிஷு paviṣu : (page 2543)


, n. < T. bavisi. 1. Affluence, opulence, prosperity; ஐசுவரியம். 2. Felicity, splendour; சோபை. பத்து முகத்துள்ள பவிஷெல்லாம்போய் (இராமநா.


லெக்சிகான்படி இது தெலுங்கிலிருந்து வந்த சொல்.


மதிப்புடன்


வ.கொ.விஜயராகவன்


*


அன்புள்ள விஜயராகவன்


மௌனியின் அந்த ஒலிநேர்த்தியில்லாத சொல்லிணைப்பை கிண்டல்செய்வதற்காக எழுதிய வரி அது.


ஜெ


***


அன்புள்ள ஜெ எம்


மௌனி பற்றிய பதிவு வாசித்தேன்.


உங்களுக்கு தெரியுமா? மௌனியின் மகன், இங்கு Toledoவில் தான் இருக்கிறார். நல்ல பழக்கம் உண்டு.


மௌனி பற்றிய என் கணிப்பு. அவருக்கு முன்னோடியாக Virginia Wolfe இருக்கலாம். Wolfeன் நாவல்கள் பெரும்பாலும் ‘Stream of Consciousness’ வகையில் செல்லும். அதே போல் மௌனியின் பல கதைகள் அப்படி ஒரு நனவோட்டத்தைக் கொண்டிருக்கும்.


இன்னொரு விஷயம். மௌனி schizophrenia என்ற மனப் பிறழ்வு கொண்டவர்.


இந்தியா திரும்பி விட்டீர்களா? ஆசிரிய அனுபவம் எப்படி இருந்தது?


அன்புடன்


சிவா சக்திவேல்


*


அன்புள்ள சிவா


நலமாக இருக்கிறேன்


வாத்தியார் வேலை செய்ய ஆரம்பித்தபின் உலகிலுள்ள அத்தனை வாத்தியார்களும் தெய்வங்கள் என எண்ணம் வந்துவிட்டது


கவனிக்காதவர்களிடம் பேசிப்பேசி ஒரு பயிற்சி வந்துவிட்டது. ஊருக்கு வந்தபின் கோயில் சிலைகளிடமெல்லாம் பேசத்தொடங்குவேன் என நினைக்கிறேன்


ஜெ


***


அன்புள்ள ஜெ


மௌனியை மிகக்கறாராக மதிப்பிட்ட கட்டுரை. நன்றி


பொதுவாக மௌனி வகையறா மொழிப்புகை கொண்ட எழுத்தாளர்களைப் பற்றி எழுதும்போது விமர்சகர்கள் தாங்களும் அதேபோல ஆகிவிடுவதைக் கண்டிருக்கிறேன். கச்சாமுச்சாவென்று இவர்கள் எழுதுவதைப்பார்க்க அவரே பரவாயில்லை என்று தோன்றும். அவருக்காவது ஒரு சின்ன கவித்துவம் இருக்கும். விமர்சகர்களுக்கு மொழியே பரிதாபமாக இருக்கும்


நீங்களும் எழுத்தாளர் என்பதனால் கச்சிதமாகப் பல விஷயங்களைச் சொல்லியிருக்கிறீர்கள்.


சித்ரா



தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 04, 2016 11:31

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 48

[ 19 ]


நீண்டபேச்சுக்குப்பின் வரும் அமைதியில் சித்தத்திலும் சொற்களில்லாமல் ஆகிவிடும் விந்தையை அதிலிருந்து விழித்தபின் தருமன் எண்ணிக்கொண்டார். காற்று மரங்களை உலைக்கும் ஒலி மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. மிகத்தொலைவில் காட்டுக்குள் கருங்குரங்குகள் நாய்க்குரைப்பு போல ஒலியெழுப்பின. அரசமரத்திலிருந்து இலைகள் சுழன்றிறங்கி சரிந்து சென்றன.


இளைய யாதவரின் சொற்களினூடாக நெடுந்தூரம் சென்று அறியா நிலங்களில் வாழ்ந்து மீண்டபோது உதிரியான காட்சிகள் மட்டும் கனவு கலைந்து எஞ்சுவன போல அவருள் இருந்தன. இளைய யாதவர் சற்று அசைந்தபோது அவ்வோசையால் அவர் முழுமையாக மீண்டு வந்தார். “நெடுநேரமாயிற்று” என இளைய யாதவர் சொன்னார். “ஆம், நீங்கள் இதைப்போல கட்டற்றுப் பேசுவதை நான் கேட்டதே இல்லை” என்றார் தருமன்.


இளைய யாதவர் நிமிர்ந்து நோக்கி விழிகளில் சிரிப்புடன் “அப்படியா? நான் பேசிக்கொண்டே இருப்பவன் என்றல்லவா என் கல்வித்தோழர்களும் பெண்களும் சொல்கிறார்கள்?” என்றார். “இளவயதில் என்னால் ஒன்றை பேசத்தொடங்கினால் நிறுத்தமுடியாது. நான் எவர் செவிக்காகவும் பேசுபவன் அல்ல. என்னுள் எழும் ஒரு சித்திரத்தைத்தான் பேசிப் பேசி முழுமையாக்கிக்கொள்வேன். தொடுத்துச்செல்வது முழுமையடையாமல் என்னால் நிறுத்தமுடியாது. பேசத்தொடங்கியதுமே கேட்பவர்களை மறந்துவிடுவேன்” என்றபின் மேலும் சிரித்து “நான் கற்ற தத்துவநூல்களை முழுமையாகவே பேசித்தான் தொகுத்துக்கொண்டேன். அவற்றை மறுப்பதும் பேசியபடிதான்” என்றார்.


“முழு தத்துவநூலையும் நின்று கேட்பதென்றால் கடினம்தான்” என தருமன் நகைத்தார். இளைய யாதவரும் நகைத்துக்கொண்டு “அந்நூலை எவ்வகையிலும் எதிர்கொள்ளவில்லை என்றால் கேட்கலாம். என்னுடன் சுதாமன் என்னும் அந்தணன் பயின்றான். எளிய வைதிகன். என் சொற்களை சொற்களாகவே கேட்டு கடந்துசெல்பவன். இரும்புக்காதுகொண்டவன் என அவனை சொல்வார்கள்” என்றார்.  “அவன் நெடுநாட்களுக்குப்பின் என்னை காணவந்திருந்தான். பெரிய குடும்பம், பதினெட்டு குழந்தைகள். எப்படி அவர்களுடன் வாழ்கிறாய் என்று கேட்டேன். யாதவனே, நான் உன் ஒருவனிடம் அடைந்ததை இவர்கள் பதினெட்டுபேரும் சேர்ந்து எனக்கு அளித்ததில்லை என்றான்.”


தருமன் அவர் சிரிப்பை நோக்கிக்கொண்டிருந்தார். பின்பு “யாதவரே, நீங்கள் நகையாட்டாகவும் மன்றுரையாகவும் பேசுவதை நான் கேட்டிருக்கிறேன். இன்று பேசியதுபோல உங்கள் செயல்களை நீங்கள் விளக்கிப்பேசியதில்லை” என்றார். இளைய யாதவர் விழிமாறுபட “ஆம்” என்றார். தலைகுனிந்து “அதைப்பற்றியே நான் வியந்துகொண்டிருக்கிறேன்” என்றார். தருமன் “ஏனென்றால் இதையெல்லாம் நீங்கள் இன்னமும் முழுக்க உங்களுக்கே விளக்கிக் கொள்ளவில்லை” என்றார். இளைய யாதவர் விழிகளைத் தூக்காமல் “ஆம்” என்றார். “நீங்கள் செய்தவை உங்கள் நெஞ்சில் இருந்து உறுத்துகின்றனவா?” என்றார் தருமன். அவ்வாறு அவர் ஒருபோதும் இளைய யாதவரிடம் பேசியதில்லை என்று எண்ணமெழுந்தது.


“இல்லை, இதுவே எல்லை என்றுணர்கிறேன். யாதவர் முற்றழிவின் விளிம்புவரை சென்றுவிட்டார்கள். கூர்வாளைச் சுழற்றி விளையாடும் மைந்தனை கல்வீசி வீழ்த்துவதுபோன்றது நான் ஆற்றியது” என்று இளைய யாதவர் சொன்னார். “பிறிதொரு வழி இல்லை. அனைத்தையும் நோக்கிவிட்டு நான் அடைந்தது இது. இந்த அறுவைமருத்துவமே அவர்களை ஒன்றாக்கியது. ஆனால் இதையும் அவர்கள் கடப்பார்கள் என்றால் இனியொன்றும் செய்வதற்கில்லை.”


“அவர்கள் முற்றடங்கிவிட்டார்கள் என்றீர்கள்?” என்று தருமன் கேட்டார். “ஆம்” என்றார் இளைய யாதவர். “யாதவர்கள் ஆழத்தில் பெரும்கோழைகள். ஷத்ரியர்களைப்போல எதையும் போராடிப்பெறும் உளம்கொண்டவர்கள் அல்ல. வேளாண்குடிகளைப்போல நெடுநாட்களாக நிலம்காத்து நின்றிருப்பவர்களும் அல்ல. ஒவ்வாததை கைவிட்டுச் சென்றுகொண்டிருக்கும் உளநிலை எப்போதும் அவர்களை ஆள்கிறது. மனித உள்ளங்கள் அவர்கள் புழங்கும் சூழலில் உள்ளவற்றில் உள்ளுறைந்துள்ள பொருளை தாங்களும் பெற்றுக்கொள்பவை. எப்போதும் அக்கரைப்பச்சை நாடும் கால்நடைகளால் சூழப்பட்டவர்கள் யாதவர்.”


“களங்களில் நான் அவர்களை கூர்ந்து நோக்கியிருக்கிறேன். அவர்களால் போரைத் தொடங்குவதுதான் கடினம். இடர் என வந்ததுமே அங்கிருந்து விலகிச்செல்வதைத்தான் அவர்களின் உள்ளம் நாடுகிறது. அவர்களின் உடல்கள் விலகாதபோதுகூட உள்ளம் விலகி நெடுந்தொலைவு சென்றிருக்கும்” என்றார் இளைய யாதவர். “ஆகவே நீச்சலுக்கு அஞ்சிப்பின்னடைபவனை நீரில் தள்ளிவிடுவதைப்போல ஒவ்வொருமுறையும் அவர்களை போருக்குள் செலுத்துவது என் வழக்கம். போரில் ஈடுபட்டபின் அவர்கள் தங்கள் அச்சத்தை தாங்களே காண்கிறார்கள். அதை வெல்லும்பொருட்டு இரக்கமற்றவர்களாகவும் கண்மூடித்தனமான வெறிகொண்டவர்களாகவும் தங்களை ஆக்கிக்கொள்கிறார்கள்.”


“அவர்கள் போரிடுவதேகூட ஷத்ரியர்களைப்போல அதில் திளைப்பதற்காக அல்ல, அதை முடிந்தவரை விரைவாக முடித்து அதிலிருந்து விலகிவிடவேண்டுமென்பதற்காகவே. அவர்கள் வெற்றியமலை ஆடுவதை நோக்கியிருக்கிறேன். அவர்கள் கொண்டாடுவது தங்கள்மேல் தாங்கள் கொண்ட வெற்றியைத்தான்” என இளைய யாதவர் சொன்னார். “அவர்களின் உள்ளத்தில் நீங்காத அச்சத்தை நிலைநிறுத்திவிட்டேன். இனி ஒரு பூசலுக்கு தன்னியல்பாக அவர்கள் எழப்போவதில்லை. அது அவ்வண்ணமே நீடிக்கும்வரை யாதவரின் ஒற்றுமைக்கும் இடரில்லை.”


“ஆனால் நீங்கள் அதை நம்பவில்லை. உங்கள் உள்ளத்தின் கலக்கம் அதன்பொருட்டே” என்றார் தருமன். இளைய யாதவர் ஒன்றும் சொல்லவில்லை. “இங்கு வருவதற்கு முன் உங்கள் ஆற்றல்மிக்க உள்ளத்தால்கூட வகுத்துக்கொள்ள முடியாத ஒன்று நிகழ்ந்தது. அதனால்தான் அர்ஜுனனைத் தேடி வந்திருக்கிறீர்கள். நீங்கள் இவ்வளவு பேசியதுகூட அதனால்தான்” என்று தருமன் மீண்டும் சொன்னார். “ஆம்” என்றார் இளைய யாதவர். அவர் மேலே சொல்வதற்காக தருமன் காத்திருந்தார். ஆனால் உடையை சீரமைத்தபடி இளைய யாதவர் எழுந்துவிட்டார்.


தருமன் எழுந்தபடி இயல்பான குரலில் “இளையவன் தங்களுக்காக காத்திருக்கிறான் என நினைக்கிறேன்” என்றார். “ஆம், இருவரும் இன்று காட்டுக்குள் வேட்டைக்குச் செல்லலாம் என சொல்லியிருந்தேன்” என்றார் இளைய யாதவர். “வருகிறேன், அரசே” என்றபின் தயங்கி “நான் இன்று அரசியிடம் சற்று கடுமையாகப் பேசிவிட்டேன் என நினைக்கிறேன். அவர்களிடம் என் அன்பை தெரிவிக்கவேண்டும்” என்றார். “நீங்களன்றி எவர் அதை அவளிடம் சொல்லமுடியும்?” என்றார் தருமன். “இன்னொருமுறை சந்திக்கும்போது சிரிக்க வைத்துவிடுகிறேன்” என்றபடி இளைய யாதவர் தன் சால்வையை மீண்டுமொருமுறை சீராக போட்டுக்கொண்டார்.


பின்னர் தருமனை நோக்காமல் “சால்வனின் படையெடுப்பின்போதெல்லாம் மூத்தவர் துவாரகையில் இல்லை. பாலைவேட்டைக்குச் சென்றவர் அவ்வழியாக மதுராவுக்கும் பின் மதுவனத்திற்கும் சென்ற பின்னர் திரும்பிவந்தார். திரும்பிவரும்வரை அவரிடம் எதுவும் சொல்லப்படவில்லை. அது என் ஆணை, அவரிடம் அரசியல்செய்திகளை சொல்லவேண்டியதில்லை என்பது” என்றார். தருமன் காத்து நின்றார். “வந்ததுமே அவர் தன் அரசியிடம்தான் பேசினார். மறுநாள் என் மன்றுக்கு அவர் வரவில்லை. மாலை என் அறைக்கும் அவர் வரவில்லை.”


“அவர் எளிதில் உளத்திரிபு கொள்பவர். எளிதில் உளம்திரிபவர்களை வெல்வதும் எளிது” என்றார் தருமன். “ஆம், இடம்பொருள் அறியாப் பெருஞ்சினமே மூத்தவரின் இயல்பு. அது ஓரிரு சொல்லில் அணைந்து குளிர்வதையும் நான் அறிவேன். ஆணவமும் தன்னலமும் தொடாத உள்ளம் கொண்டவர் அவர். ஆகவேதான் அவர் சினம் கொண்டிருப்பார் என்றும் அச்சினம் தணிந்த பின்னர் அவரே வரட்டும் என்றும் ஒருநாள் காத்திருந்தேன். அவர் வரவில்லை என்று கண்டதும் நானே இயல்பாக அவர் அரண்மனைக்குச் சென்றேன். நான் வரும் செய்தியை முன்னறிவிப்பு செய்யவில்லை. வாயிலில் நின்றபின் காவலனிடம் வந்திருப்பதை அறிவிக்கும்படி சொன்னேன்.”


“உள்ளே அரசி இருந்தார்கள். அவர்கள் சென்றபின் நான் உள்ளே சென்றேன். மூத்தவர் சினம்கொண்டு பெருங்கைகளை ஓங்கியபடி என்னை தாக்க வருவார் என எண்ணினேன். பலமுறை என்னை அவர் தாக்கியதும் உண்டு. இரண்டு அடிகளை நான் வாங்கிக்கொண்டேன் என்றால் அவர் கை அதன்பின் எழாது. அவரிடம் சொல்லவேண்டிய சொற்களை எனக்குள் கோத்தபடி அவர் அறைக்குள் நுழைந்தேன். அவர் பீடத்தில் அமர்ந்திருந்தார். என் காலடியோசை கேட்டதும் நிமிர்ந்து நோக்கியபின் விழிகளை திருப்பிக்கொண்டு அமர்க என்று கைகாட்டினார்.”


நான் அமர்ந்துகொண்டேன். அவர் உடலும் முகமும் காட்டிய மூத்தவரை நான் அதற்கு முன் கண்டதே இல்லை. ஆகவே என் உள்ளம் மலைப்புகொண்டிருந்தது. எங்கு பேச்சை தொடங்குவதென்று தெரியவில்லை. கைகளை கோத்தபடி அமர்ந்திருந்தேன். அவரும் நான் பேசுவதற்காக காத்திருந்தார். அது அவர் இயல்பே அல்ல. நான் இயல்பாக மதுவனத்தில் பிதாமகர் எப்படி இருக்கிறார் என்று கேட்டேன். நன்றாக இருக்கிறார் என்று ஒற்றைச் சொல்லுரைத்தார். பெரியதந்தையர் பற்றி கேட்டேன். அதற்கும் ஒற்றைவரியே மறுமொழியாக வந்தது. மதுராவில் தந்தையைப்பற்றியும் அன்னையரைப்பற்றியும் கேட்டேன். நலமாக இருக்கிறார்கள், இடரொன்றும் இல்லை என்றார்.


அவருடைய இயல்பே அல்ல அது என்பதனால் நான் செயலிழந்துவிட்டேன். பின்னர் என்னை திரட்டிக்கொண்டு ஊக்கமெழுந்த குரலில் நான் சால்வனை வென்றதைப்பற்றி சொன்னேன். என்னிடம் வெளிப்படும் சிறுவனை மூத்தவர் பெரிதும் விரும்புவார் என எனக்குத் தெரியும். அதனாலேயே அவர்முன் இருக்கையில் என்னையறியாமலேயே நான் சிறுவனாகிவிடுவதுண்டு. என் குரல் விரைவுகொள்ளும். சிறுவர்களைப்போல கைகால்களை வீசி ஒவ்வொன்றையும் விவரிப்பேன். மலர்ந்தமுகத்துடன் அவர் கேட்டிருப்பார். ‘மூடா! மூடா!’ என தலையிலடித்து சிரிப்பார். ‘பார்த்தீர்களா இவனை, மூடச்சிறுக்கன்!’ என அருகிருப்பவரிடம் சொல்வார்.


அன்று சால்வனின் போர்நிகழ்வுகளை சொல்லச் சொல்ல அவர் விழிகள் வெறுமையாக என்னை நோக்கியிருந்தன. ஆகவே என் குரல் தணிந்தது. அதை நான் மேலெழச்செய்தபோது மிகையாகியது. செயற்கையாக சிறுவனைப்போல் நடிக்கிறேன் என உணர்ந்ததுமே என் பேச்சு அறுபட்டு நின்றது. என்ன ஆயிற்றென்றே தெரியாமல் நான் தன்னிரக்கம் கொண்டேன். ‘மூத்தவரே, இங்கு நிகழ்ந்தவை வெறும் உளப்பிளவுகள் மட்டுமல்ல. யாதவர்களுக்கு குலப்பூசல் புதிதும் அல்ல. ஆனால் தன்குலத்தை போர்முனையில் காட்டிக்கொடுப்பதை இன்றுவரை யாதவர் செய்ததில்லை. நம்மவர் அதையும் செய்தனர். கீழ்மையின் அடியிலி. அதை என் நெஞ்சு தாளவில்லை’ என்றதுமே என் கண்கள் நீர்கொண்டு குரல் உடைந்தது.


அது உண்மை உணர்வு, அரசே. நான் ஆயிரம் அலுவல்சொற்களாலும், நாள்நிகழ்வுகளாலும் மூடிமூடிவைத்திருந்த அனல். அதை மிக அணுக்கமான எவரிடமாவது சொல்ல ஏங்கியிருந்தேன். அவரன்றி அத்தனை அருகே பிறர் எவருமிருக்கவில்லை என்று உணர்ந்தேன். ‘தொன்மை மிக்க ஹேகயகுடியினர் அதை செய்தனர். என்னை களத்தில் சால்வனிடம் ஒற்றுக்கொடுத்தனர். நான் வென்றது வீரத்தால் அல்ல, அவ்வஞ்சம் கண்டு எழுந்த பெருஞ்சினத்தால்தான்’ என்றேன். என் உணர்வுகள் கட்டின்றி பெருகின. தெய்வத்தின் முன் என அமர்ந்து என் உள்ளத்தை பெருக்கினேன்.


‘காலந்தோறும் அடிமைப்பட்டுக் கிடந்த குலம், மூத்தவரே. இன்று காலம் ஒரு பீடத்தை நமக்கு காட்டுகிறது. இது ஒரு தற்செயல். நீரொழுக்கில் செல்பவன்மேல் வந்து முட்டும் தெப்பம்போன்றது. நம்மைவிடத் தகுதியான குலங்கள் பல இங்கிருக்கலாம். நமக்கு இது அமைந்தது. புதுநிலங்களை தேடிச்சென்ற நம் குடி பெருகியதனால். நம்குடிகளை இணைக்கும் வணிகப்பாதைகள் உருவாகி வந்தமையால். நம்மை வெல்லும் படைவல்லமை கொண்ட ஷத்ரியப் பேரரசுகள் இன்மையால். ஷத்ரியப் பேரரசுகளின் உட்பூசல்களால். கலங்கள் கட்டும் கலை வளர்ந்து கடல்வணிகம் பெருகியமையால். ஆயிரம் உட்சரடுகள். அவை பின்னிய வலையில் நாம் மையம் கொண்டிருக்கிறோம்.’


‘சூத்திரர் படைகொண்டு பெயர்கொண்டு வரலாற்றில் எழுந்து வரமுடியும் என்று நாம் பாரதவர்ஷத்திற்கு காட்டியாகவேண்டும். அப்பொறுப்பை நமக்கு அளித்துள்ளது காலம். அதை நாம் தவறவிட்டோம் என்றால் இப்பெருநிலத்தில் பிறகு அது நிகழ மேலும் பல்லாயிரமாண்டுகள் ஆகலாம். ஒவ்வொரு நிலத்திலும் எழுந்து வந்துகொண்டிருக்கின்றன தொல்குடிகள். அனைவருக்கும் முன்னால் செல்லும் கொடி நம்முடையது’ என்றேன். ‘அனைத்துக்குடிகளும் வளர்ந்தாகவேண்டும். அதுவே இப்பெருநிலத்தின் நல்லூழ். இங்கு நாம் கோட்டையும் கொடியும் கொண்டு அமர்ந்திருப்பது அதன்பொருட்டே.’


‘இந்தச் சுடரை நாம் அணையவிடலாகாது. அப்பெரும் பழியிலிருந்து நம்மை வரும் தலைமுறைகள் விடுவிக்காது. நம் எதிரிகள் வரவிருக்கும் புதிய பாரதவர்ஷத்திற்கு குறுக்கே நிற்பவர்கள். பெருவெள்ளத்தைத் தடுக்கும் எளிய மதகுகள். அவர்கள் உடைக்கப்பட்டாகவேண்டும். அதைவிட நம்முள் முளைக்கும் வஞ்சகர்கள் முழுமையாக அகற்றப்பட்டாகவேண்டும். தங்கள் அறிவின்மையால் தன்னலத்தால் அவர்கள் அழிப்பது மாபெரும் மானுடக் கனவொன்றை.’


‘ஆம், நான் மிகையான வன்மையுடன் இவர்களை தண்டிக்கிறேன். மூத்தவரே, நான் யானையின் கையிலிருக்கும் கழி. என் எடையைவிட நூறுமடங்கு பெரியது என் அடியின் விசை. நான் வரவிருக்கும் யுகத்தின் படைக்கருவி. புதுமழையில் நிலம் முளைப்பதுபோல பாரதவர்ஷம் தளிர்த்துக்கொண்டிருக்கிறது. ஒவ்வொருநாளும் ஒரு புதியகுடி கோல்கொண்டு எழுந்துவருகிறது. நாளுமொரு வணிகப்பாதை சென்று அறியா நிலமொன்றை தீண்டுகிறது. நிலம்பிளந்து எழுந்துவரும் பெருந்திரளின் முகப்பிலெழுந்தது இக்கருடக்கொடி.’


நான் பேசிக்கொண்டிருக்கையில் அவர் விழிகள் நிலையற்று அசைந்தன. தோள்களில் தசைகள் இறுகித்தளர்ந்தன. இயல்பாகத் திரும்பி அருகே இருந்த தாலத்திலிருந்து மாங்கனி ஒன்றை எடுத்து கைகளால் அதன் தோலை உரிக்கத் தொடங்கினார். அக்கணத்தில் என்னில் பெருஞ்சினம் எழுந்தது. ‘ஆகவே என் செயல்களுக்கு நான் இன்றுள்ள எவருக்கும் விளக்கமளிக்க வேண்டியதில்லை. கோடிமாந்தரை கால்கீழிட்டு மிதித்து எழுந்து இவர்கள் இங்கு அமைத்திருக்கும் அரசுகளின் முறைமைகளுக்கும் நெறிகளுக்கும் நான் கட்டுப்பட்டவனும் அல்ல. எளியோரின் விழிநீரை அறியாத இவர்களின் அறமல்ல என் அறம். மானுடத்தை பேரன்புடன் அணைத்துக்கொள்ளாத இவர்களின் இறுகிய வேதமல்ல என் சொல்’ என்றேன்.


‘என்னுள் இருந்து ஆணையிடும் விராடபுருஷனுக்கு மட்டுமே நான் செவிசாய்க்கிறேன். இச்சிறு உடல் அல்ல நான். இக்குடியினன் அல்ல. இக்குலத்தோனும் அல்ல. பாரதவர்ஷமெங்கும் வேரோடி பல்லாயிரம் கிளைவிரித்து வான்சுமந்து நின்றிருப்பவன். இவர்கள் அகம் பிரம்மாஸ்மி என்று சொல்லும் வீண் சொல் அல்ல என் உள்ளமைந்தது. முற்றுணர்ந்து சித்தமென்றாகி நின்றிருக்கிறேன் அவ்வறிதலை. ஆம், நானே பரமபுருஷன்!’ என்றேன். அதன்பின் சொல் செல்லாதென்று உணர்ந்து அமைதியடைந்தேன். சிலகணங்கள் தரையை நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தேன். பின்னர் எழுந்து தலைவணங்கி அவர் அறைவிட்டு வெளியேறினேன்.


ஆனால் என் அறை நோக்கி செல்லச் செல்ல சோர்வடைந்தபடியே சென்றேன். நான் சொன்ன முழங்கும் சொற்களை மீண்டும் கேட்கையில் எவருடையவையோ என ஒலித்தன. அவற்றை ஏன் அத்தனை முழக்கினேன்? அவ்வாறென்றால் நான் அவற்றை உண்மையில் நம்பவில்லையா? தொலைவில் நின்றிருப்பவர்களிடமே கூவிச்சொல்கிறோம், தன்னுடன் சொல்லும் சொற்களை எவரும் கூவவேண்டியதில்லை என்று ஆசிரியர் சொல்வதுண்டு. என் அகம் எனக்குள் அத்தனை ஆழத்திலா அமைந்திருக்கிறது? அவை உண்மை. ஆனால் அவையே உண்மை அல்ல. அதற்கப்பாலும் ஓர் உண்மை உள்ளது. அது என்ன? அதை நான் அறிவேன். அதன்மேல் உணர்வுகளால் போர்வையிட்டிருக்கிறேன்.


அது என்ன என்று என் அறைக்குள் சென்று பீடத்திலமர்ந்ததும் உணர்ந்தேன். நான் சொன்னவை அனைத்தும் மெய்யே. பாரதவர்ஷத்தின் பல்லாயிரம் புதுக்குலங்கள் முளைத்தெழுவதை காண்கிறேன். அவை எழுந்து தழைத்து இத்தொல்பெருநிலம் வாழவேண்டுமென விழைகிறேன். இதன் தொல்மூதாதையர் அறிந்த மெய்மை பல்லாயிரம் கிளைகள் கொண்டு பெருகவேண்டுமென கனவுகாண்கிறேன். அதன்பொருட்டே இங்கு முடிசூடியிருக்கிறேன். அதற்காகவே குருதிசூடி களம் நிற்கிறேன்.


ஆனால் அது எனக்குள் வாழும் அந்த விராடபுருஷனுக்கு எவ்வகையிலும் ஒருபொருட்டல்ல. அவன் நின்றிருக்கும் வெளியில் அவனைச் சூழ்ந்திருப்பது முழுமுற்றான இன்மை மட்டுமே. அதை உணர்ந்ததுமே நான் விடுபட்டேன். இரும்புத்தூண்மீது படிந்த களிம்பு இந்த யாதவத்தோற்றம். நான் இதுவல்ல. ஆனால் இதுவும் நானே.


அன்றிரவு மீண்டும் என் உள்ளம் உருகத்தொடங்கியது. என் மூத்தவர் என் வெண்ணிழல் என என்றும் என்னுடன் இருந்தவர். கற்றும் கருதியும் நான் வளர்ந்தபோது இழந்தவை அனைத்தும் கூடி அவர் வடிவாக என்னைத் தொடர்ந்தன. அவரின்றி என்னை எண்ணிக்கொண்டதே இல்லை. அவருடன் ஆயிரம் பூசல்கள் வெடித்துள்ளன, ஆனால் அவர் என்னிடமிருந்து விலகியதே இல்லை. வெளித்தோற்றத்திற்கு அன்று நிகழ்ந்தது ஒரு எளிய விலக்கம் மட்டுமே. ஒருநாளில் ஓரிரு சொல்லில் அதை கரைத்தழிக்க முடியும். அவர் என்னிடமிருந்து விலகியதில்லை, எனவே விலகப்போவதுமில்லை. அதை நானே சொல்லிக்கொண்டேன். ஆனால் அது உண்மையல்ல என்று ஆழம் அறிந்திருந்தது.


மறுநாளே மீண்டும் மூத்தவரை காணச்சென்றேன். அவர் மாறாத விழிகளுடன் உணர்வற்ற ஒற்றைச் சொற்களுடன் என்னை எதிர்கொண்டார். தோற்று சினம்கொண்டு திரும்பி வந்தேன். இரண்டுநாட்கள் அவரை எண்ணாமலிருக்க முயன்றேன். என் அன்றாட அரசுப்பணிகளில் மூழ்கினேன். ஆனால் அவரையே எண்ணிக்கொண்டிருந்தேன் என மீண்டும் அறிந்தேன். கடல்மாளிகையில் இருந்த அவரை மீண்டும் சென்று கண்டேன். விழிநோக்கா தெய்வச்சிலைபோல அவர் மாறிவிட்டிருந்தார்.


இருநாட்களுக்குப்பின் சீற்றம்கொண்டு அவரைத் தேடிச்சென்றேன். ‘மூத்தவரே, என்னை தண்டிப்பதென்றால் எதன்பொருட்டு என்று சொல்லுங்கள். என் மேல் சினம்கொண்டிருப்பது ஏன்? அதை நான் அறிந்தாகவேண்டும்’ என விழிநோக்கி சொன்னேன். என் கண்களிலிருந்து நீர் பெருகியது. ‘நான் உங்கள் இளையோன். உங்கள் மைந்தனாகவே என்னை உணர்பவன். என் பிழையென்ன என்று சொல்லுங்கள். என் தலையால் அதை களைகிறேன்’ என்றேன். ‘அப்படி ஏதுமில்லை, உன் மிகையெண்ணம் அது’ என்றார். ஆனால் அவர் சொல்லும் விழியும் மாறவில்லை.


உணர்வு மிகுதியுடன் நான் அவர் முன் சென்று கைகளை பற்றிக்கொண்டேன். ‘மூத்தவரே, நீங்கள் என்னை அடித்திருக்கிறீர்கள். வசைபாடியிருக்கிறீர்கள். உங்கள் இந்த உளவிலக்கம் அதைவிட என்னை வதைக்கிறது. நான் என்ன செய்யவேண்டுமென சொல்லுங்கள்’ என்றேன். என் கையை மெல்ல உருவியபடி ‘ஒன்றுமில்லை. நீ சொல்வன ஏதும் எனக்குப் புரியவில்லை’ என்றார். விழிகள் உணர்வற்றிருந்தன. பெரும் ஏமாற்றம் என் நெஞ்சை நிறைத்து மறுகணமே சினமாக மாறியது. நான் அவரை நிறைந்த கண்களுடன் நோக்கி நின்றேன். அவர் என் விழிகளைத் தவிர்த்து திரும்பிச்சென்றார்.


அவரை என்னால் எவ்வகையிலும் ஊடுருவ முடியவில்லை. அவர் உளத்திரிபு ஏன் என்று எல்லா வகையிலும் எண்ணிப்பார்த்தேன். சத்யபாமையிடம் அவரைச் சென்றுகண்டு அடிபணிந்து பொறுத்தருளும்படி கோரவேண்டுமென ஆணையிட்டேன். அவளே என் துயர்கண்டு உளம்வருந்தியிருந்தாள். மூத்தவரைச் சென்றுகண்டு அவர் கால்தொட்டு சென்னி சூடி பொறுத்தருளும்படி கோரினாள். அப்போது தன் அனைத்து கட்டுகளையும் இழந்து விம்மியழுதுவிட்டாள். அவர் ‘ஒன்றுமில்லை, எனக்கு சினமோ துயரோ இல்லை. நீங்கள் தேவையில்லாது மிகைப்படுத்திக் கொள்ளவேண்டியதில்லை’ என்றுதான் மீண்டும் சொன்னார்.


என் தேவியர் சென்று குக்குடர்குலத்து அரசி ரேவதியை கண்டனர். எங்களுக்குள் நிகழ்ந்த உளப்பிளவை சீர்செய்ய அவர்களால்மட்டுமே முடியுமென மன்றாடினர். முதலில் சினந்தும் பின்பு தருக்கியும் சொல்லாடியபின் மெல்ல அவரும் தணிந்தார். அவரே சென்று பேசியபோதும் மூத்தவர் உளம் மாறவில்லை. எரிச்சலுற்று ‘மீளமீள இதையே சொல்கிறீர்கள், நீங்கள் சொல்வன ஏதும் எனக்குப் பிடிபடவில்லை’ என்று கூவினார். அக்ரூரரும் பிறரும் அவரை நான்குமுறை அவைக்கு கொண்டுவந்தனர். அவையில் ஒரு சொல் பேசாமல் மீசையை நீவியபடி எங்கோ விழியகல நெஞ்சு அலைய அமர்ந்திருந்தார்.


அவரை எண்ண எண்ண என் ஏமாற்றம் மிகுந்து வந்தது. ஒரு தருணத்தில் அது எரிச்சலாக ஆகியது. அக்ரூரரிடம் ‘இனி அவரைப்பற்றி என்னிடம் பேசவேண்டியதில்லை. மூடத்தனத்திற்கும் அளவுண்டு. எதையுமே புரிந்துகொள்ளாத ஒருவரிடம் பேசுவது பாறைமேல் தலைமுட்டுவதுபோல. அவர் விழைந்தபடி செய்யட்டும்’ என்று கசந்து சொன்னேன். அவர் கொண்டுள்ள அந்த விழியின்மையை எண்ணி எண்ணி வெறுக்கலானேன். நான் சொன்னவை எதையும் அவரால் மறுக்கமுடியாது. அவருக்கென மாற்றுநிலையும் இல்லை. ஆனால் உளஒப்புதலும் இல்லை என்றால் அவரை ஏன் மானுடராக நான் ஏற்கவேண்டும்? ஆம், அவரை நான் புறக்கணிக்கிறேன், அவர் இங்கில்லை என்றே கொள்கிறேன். அதையே மீளமீள சொல்லிக்கொண்டேன்.


ஒருநாள் அவர் தன் அரசியுடன் கிளம்பி மதுராவுக்குச் சென்றார். செல்வதற்கு முந்தைய நாள்தான் எனக்கு செய்தியறிவிக்கப்பட்டது. உண்மையில் அவர் கிளம்பிச்சென்றது ஆறுதலைத்தான் அளித்தது. அவருக்கான அனைத்தையும் செய்ய ஆணையிட்டேன். அவர் கிளம்பும்போது சற்றே விழிகனிந்து என்னிடம் பேசக்கூடுமென என் உள்ளத்தின் ஆழம் எதிர்பார்த்தது. அப்போது அதே வெற்றுவிழிகளுடன் ஒற்றைச் சொல்லுடன் நான் மறுமொழி உரைக்கவேண்டும் என எண்ணிக்கொண்டபோது நெஞ்சின் ஓரத்து எரிச்சல் மேல் குளிர் பரவியது.


ஆனால் அவர் அப்போதும் அதே விழிகளுடன்தான் விடைபெற்றார். என்னையும் நான் இறுக்கிக்கொண்டேன். முறைமைச்சொற்களுக்கு அப்பால் நாங்கள் பேசிக்கொள்ளவில்லை. ஆனால் அவர் விழிமுன்னிருந்து மறைந்ததும் நெஞ்சு ஏக்கம் கொண்டு விம்மியது. விழிகளில் நீர்கோத்து நோக்கு மறைந்தது. என் அறைக்குச் சென்றபோது என்னால் நடக்கவே முடியவில்லை. தனிமையில் அமர்ந்து எண்ணத்தொடங்கியபோது ஒவ்வொரு எண்ணமாக எழுந்து வந்து என்னை அழுத்தின. விழிநீர் சிந்த தனிமையில் அமர்ந்து அழுதேன்.


“மறுநாளே கிளம்பி இங்கு வந்தேன். பார்த்தனின் அருகே மட்டுமே என்னால் சற்றேனும் மீட்புகொள்ள முடியுமெனத் தோன்றியது” என்றார் இளைய யாதவர். “இங்கு அனைத்தையும் கழற்றி வீசிவிட்டு சிறுவனைப்போல் சிலநாட்கள் வாழவேண்டும். அதைத்தவிர பிறிதொன்றையும் நான் எண்ணவில்லை.” தருமன் பெருமூச்சுவிட்டு “அவ்வாறு நிகழ்ந்தால் அது நன்றே” என்றார். இளைய யாதவர் விழிதூக்கி அவரை நோக்கிவிட்டு திரும்பிக்கொண்டார். பின்பு தலையை சரித்து குழல்கற்றைகளை அள்ளிக்கட்டி பீலி நிறுத்தியபின் “நான் வருகிறேன் அரசே, பார்த்தன் காத்திருக்கிறான்” என்றார். “நன்று” என்றார் தருமன்.


மீண்டும் ஏதோ கேட்க அவரிடம் எஞ்சியிருந்தது. அச்சொல்லில் சிலகணங்கள் தத்தளித்த பின்பு “அரசே, தாங்கள் எண்ணுவதென்ன? மூத்தவரின் உளவிலகல் சீரமைய வாய்ப்புள்ளதா?” என்றார் இளைய யாதவர். தருமன் கூரிய குரலில் “இல்லை” என்றார். திடுக்கிட்டவர் போல இளைய யாதவர் நிமிர்ந்து பார்த்தார். “சொல்லாக மாற்றத்தக்க கசப்புகளும் சினங்களும் சொல்லாக ஆக்கி வெளித்தள்ளத்தக்கவை. இது நஞ்சென அங்கு ஊறிவிட்டது. அங்கே முளைத்துப்பெருகுவது. அதை அகற்ற அவரால்கூட இயலாது. அது எவ்வண்ணம் எங்கிருக்கிறதென்பதையே அவர் அறிந்திருக்க மாட்டார்” என்றார் தருமன். “சில பிளவுகள் பளிங்கில் மயிர்கோடென தெரிபவை. ஆனால் அவை அமையும்போதே நாம் அறிந்துவிடுவோம், அவை பிளந்து விரிபவை.”


“ஆம், நானும் அதையே எண்ணினேன்” என்றார் இளைய யாதவர். “பெருஞ்செயல்களுக்காக நாம் எழும்போது சிறியவை நமக்கு எதிராகத் திரள்வதில்லை, அவை சிதறி விலகிவிடுகின்றன. பிற பெரியவையே நிகரான ஆற்றலுடன் எழுந்து வந்து வழி மறிக்கின்றன. பெருங்கனவுகளை காக்கின்றன இரக்கமற்ற தெய்வங்கள். அவை விழிநகைக்க கைசுட்டி கேட்கின்றன, நீ எதை ஈடுவைப்பாய்? எதையெல்லாம் இழப்பாய்? நம் கனவின் மதிப்பை அதன்பொருட்டு இழப்பவற்றைக்கொண்டே அறிகிறோம்.” அவர் புன்னகைத்து “என் முன் எப்போதும் முதல் எதிரி என என் மூத்தவரே நின்றிருப்பார். அதுவே ஊழ் எனில் அவ்வாறே ஆகுக!” என்றபின் நடந்தார்.


SOLVALARKAADU_EPI_48


தருமன் அவர் நடையின் தளர்வை நோக்கினார். வந்தபோது அதிலிருந்த சிறுவன் மறைந்துவிட்டிருந்தான். அவர்  இரண்டு அடி வைத்து பின்னால் சென்று “யாதவரே, இதுவும்கூட உங்களுள் எழுந்த விராடவடிவனுக்கு ஒரு பொருட்டில்லை அல்லவா?” என்றார். “ஆம், பொருட்டே அல்ல. அவனுக்கு நானேகூட ஒரு பொருட்டில்லை” என்றபின் சிரித்தபடி இளைய யாதவர் நடந்து சென்றார்.


தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 44
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 47
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 45
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 37
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 36
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 75
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 10
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 87
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 35
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 43
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 42
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 41
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 39
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 38
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 28
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 26
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 25
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 22
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 62
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 61
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 04, 2016 11:30

வெண்முரசு சென்னை கலந்துரையாடல் – செப்டம்பர் 2016

இம்மாதத்திற்கான சென்னை வெண்முரசு கலந்துரையாடல் வரும் ஞாயிறன்று (11-09-2016) மாலை 4 மணிக்கு துவங்கும்.


SOLVALAR_KAADU_EPI_11


முதலாவதாக, “வெண்முரசில் வெகுமக்கள்” என்கிற தலைப்பில் பொதுமக்கள் உளவியல் குறித்து  சுநீல் கிருஷ்ணன் பேசுவார்.


SOLVALAR_KAADU_EPI_29


அடுத்து, “சொல்வளர்காட்டின் கல்விநிலையங்கள்”  என்கிற தலைப்பில் தத்துவங்கள் சார்ந்து அஜிதன் பேசுவார்.


கலந்துரையாடல் நான்கு மணிக்கு துவங்கும்.


வெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்..


நேரம்:-


வரும் ஞாயிறு (11-09-2016) மாலை 4:00 மணிமுதல் 08:00 மணி வரை


இடம்:-


SATHYANANDHA YOGA CENTRE,


15/11, SOUTH PERUMAL KOIL, 1ST STREET,


VADAPALANI (NEAR HOTEL SARAVANA BHAVAN – ARCOT ROAD)


Phone No.: 9952965505


தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 04, 2016 05:01

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.