Jeyamohan's Blog, page 1684
January 28, 2017
செய்தியாளர்கள் -ஒரு கடிதம்
ஜெ,
https://www.youtube.com/watch?v=Qtb2l9tq0Vk
இது மிக நீளமான வீடியோ. முடிந்தால் முழுமையாக பார்க்கவும். அல்லது நிமிடம் 20 லிருந்து பார்க்கவும்.
10 வருடங்களுக்கும் மேலாக ஜல்லிகட்டுக்காகப் போராடி வரும் வழக்கறிஞர் திரு. அம்பலத்தரசு ஜல்லிகட்டு தொடர்பான ordinance பற்றி மிகத்தெளிவாக தமிழில் சட்டநுணுக்கங்களை விளக்குகிறார். அங்கிருந்த செய்தியாளர்களால் இதை விளங்கிக்கொள்ளவே முடியவில்லை. சார் நீங்க வளவளன்னு பேசுறீங்கன்னு அவரை மொக்கை செய்கிறார்கள். அவர் வேற உங்களுக்கு தெரியும் என்று அடிக்கடி சொல்கிறார். அவருக்கு தெரியாது இவர்களுக்கு ஒன்றும் தெரியாது. இவர்களுக்கு தேவை ஒரு தலைப்பு செய்தி அல்லது ஒரு வதந்தி.
இதை கூட தமிழில் விளங்கிக்கொள்ள முடியாதவர்கள் பத்திரிக்கையாளர்கள் என்று நினைத்தால் கவலையாக இருக்கிறது. டிவி சேனல்கள் பணத்தில் கொழிக்கின்றன. ஆனால் தரமோ மற்ற அனைத்து ஊடகங்களையும் விட மிக மோசம்.
ராஜ்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
ஆரோக்கிய நிகேதனம் – கடிதம்
அன்புள்ள ஆசிரியருக்கு,
ஆரோக்கிய நிகேதனம் வாசிப்பவர் அமைதியாக மரணிக்கலாம். நான் இதன் ஜீவநாடியான ஜீவன்தத்தருடன் பிறந்து அவர்கூடவே இன்பதுன்பங்களில் வாழ்ந்து அவரோடவே அமைதியாக மரணித்தேன். மரணந்தான் எத்துணை சுகந்தம்! மஞ்சரி சொன்னதைப்போலத்தான். எனக்கு இதுநாள் வரை இப்படி ஒரு தெளிவை யாரும் எதுவும் கொடுக்கவில்லை. தாராசங்கர் பானர்ஜி ஜீவன்தத்தாய் வாழ்ந்து எனக்கு காட்டிவிட்டார்.
அபயையிடம் அவர் சொல்லியபோதுதான் நானே என்னைப்பார்த்து ஒரு கேள்வி கேட்டுக்கொண்டேன். “அட ஆமால்ல கிறிஸ்டி….அன்னைக்கி எப்பிடி இந்த கடன்பிரச்சனைலேர்ந்து விடுபடபோறேன்னு தெரியலயேன்னு அவங்க அழுதப்ப…சரி எதுக்கு இவ்ளோ அவமானங்களைத் தாங்கிகிட்டு நாம உயிரோட இருக்கணும்…சரி செத்துருவோம்னு சாவைப்பற்றி இருவரும் நினைத்தீர்களே….இருவரும் சந்தோஷமாக இருந்தபோது….பையனைப் பற்றி பெருமையாகக் கேள்விப்படும்போது…உன்னையோ அவங்களையோ யாராவது பாராட்டும்போது….அப்படியே நிலைகொள்ளா சந்தோஷத்தில் திளைத்துப் போகும்போது….ஏன் அவ்வளவு தூரம்…அன்றைக்கு முதன்முதலாய் புத்தகக் கண்காட்சியைப் பார்த்து பரவசத்தில் புத்தகங்களை அள்ளும்போது ஏன் சாவைப்பற்றிய நினைவெழவில்லை? என. சந்தோஷமாயிருப்பது மட்டும் வாழ்க்கையல்ல. எவ்வளவுக்கெவ்வளவு இன்பமோ அவ்வளவுக்கவ்வளவு துன்பத்தையும் அனுபவிப்பதே வாழ்க்கை என்பதை அபயையுடனான ஜீவன்தத்தின் அற்புத உரையாடல் தெளிவாக விளங்கவைத்துவிட்டது.
“மனிதன் எப்போதும் உதவியைத் தேடும் ஒரு பிராணி”. இவ்வாக்கு முற்றிலும் உண்மை. ஒரு சஞ்சலம் நிறைந்த குழம்பியிருக்கும் மனிதனின் மனம் அமைதியடைந்து தெளிய அடுத்த மனிதனின் உதவி தேவைப்படுகிறது. அது எவ்வகையிலாவது இருக்கலாம்…நோயாளிக்கு வைத்தியனாக மாணவனுக்கு ஆசிரியனாக பக்தனுக்கு தெய்வமாக தொழிலாளிக்கு முதலாளியாக கணவனுக்கு மனைவியாக பிள்ளைக்கு தாயாக….. இங்கு ஜீவன்தத்துக்கு சாபமிட்டவள் சாபவிமோச்சனம் தருகிறாள். அந்த சாபவிமோச்சனம் அவருக்கு மரணத்தை தரும் என அவர் அறிந்திருந்தும் அதுதான் அவருக்கு அமைதியான மரணம். மரணத்தை ஆவலுடன் ஏற்றுக்கொள்கிறார். இன்னொரு குடைச்சலாக மஞ்சரி இருக்கிறாள் அவருக்கு. ஆனால் அவர்தான் தன் வாழ்நாள் முழுவதும் அப்படி நினைத்தாரே ஒழிய அதற்கு சற்றும் ஈடில்லை அவள். அது பெருத்த ஏமாற்றமாகிறது. இனி வாழ்வில் என்ன என்று ஒரு சலிப்பு.

தாராசங்கர்
இப்படித்தான் நானும் அவர்கள் அப்படி நினைத்துக் கொள்வார்களோ இப்படி நினைத்துக் கொள்வார்களோ என பயந்து பயந்து செத்துக்கொண்டிருப்பேன். கடைசியில் ஒன்றுமில்லாமல் புஸ்ஸென்று போய்விடும். அது தெரியாமல் வாழ்நாள் முழுக்க வலியும் வேதனையும் நாமாகவே வலிய வரவழைத்துக் கொண்டிருப்போம். மஞ்சரி முன்னாலும் பூபிபோஸ் முன்னாலும் எப்படியெல்லாம் போய் நிற்கவேண்டும் என கண்ட கனவுகளெல்லாம் இப்படி ஒன்றுமேயில்லாமல் போய்விட்டால் பிறகு வாழ்வதில் என்ன சுவாரஸ்யம்? நாமொன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைப்பதுபோல்.. எந்த மீன் சாப்பாட்டால் அபயை சாபமிட்டாளோ எதனால் ஜீவன் மனமுடைந்து போனாரோ அவளே மீன்கேட்கையில் ஜீவனால் எப்படி தராமல் இருக்கமுடியும்? தன் உயிரையும் சேர்த்தல்லவா தந்துவிட்டார்! தன் மனம் எதையாவது விரும்பி ஏங்கும்போது அது கிடைக்கும்வரை உயிரைக் கையில் பிடித்துக்கொண்டிருக்குமா? சாப்பிடச்செல்லும்போதே அவருக்கு நிம்மதியான மரணம் சம்பவித்துவிட்டது. அதே நிம்மதியான மரணத்தை கிழ மஞ்சரியிடம் அவர் தேடியது கிடைக்காதபோதும் அடைந்துவிட்டார்.
இதில் நிம்மதியாக மரணத்தை ஏற்றுக்கொண்ட ரானாவின் மனமும் அற்புதமான ஒன்று. இந்நாவல் சாவுக்கும் வாழ்வுக்குமான போராட்டத்தைப் பற்றிச் சொல்லும் நாவலா அல்லது நாடிவைத்தியத்துக்கும் நவீன வைத்தியத்துக்குமான போட்டியைப் பற்றிச் சொல்லும் நாவலா என ஒற்றைப்பார்வையில் சொல்லமுடியவில்லை. வைத்தியத்தினூடே வாழ்க்கை வருகிறது. வாழ்க்கையினூடே வைத்தியம் வருகிறது. இறுதியில் எந்த வைத்தியமாகட்டும் நாடிடாக்டர் ஜீவன் நவீனடாக்டர் பிரத்யோகின் உள்ளத்தில் தம் திறமையாலும் அன்பாலும் இடம்பிடித்துக்கொள்கிறார். அதேபோல பிரத்யோக் தம் திறமையாலும் தைரியத்தாலும் ஜீவனின் மனதில் இடம்பிடித்துக்கொள்கிறார். இருவைத்தியங்களும் மனிதனுக்கு உதவி செய்கின்றன. மனிதன் எப்போதும் உதவி தேவைப்படும் ஒரு பிராணிதான் என பதியவைக்கின்றன.
இறுதிவரை அடுத்தவருக்கு உதவிசெய்யவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியபடியே இருக்கிறது. முக்கியமாக அடுத்த மனிதன்…மனிதன் என்ன மனிதன் ….மரண தேவதையாகிய தெய்வத்திற்கே நான் உதவி செய்யவேண்டும் என்ற மனவெழுச்சி வந்தபோது என்னைமீறி வந்த கண்ணீரை அடக்கமுடியவில்லை.
அன்புடன்
கிறிஸ்டி.
ஆரோக்கிய நிகேதனம் பற்றி கிருஷ்ணமூர்த்தி
ஆரோக்கிய நிகேதனம் பற்றி கேசவமணி
ஆரோக்கிய நிகேதனம் பாண்டியன் ராமையா
அரோக்கிய நிகேதனம் பற்றி கடிதம்
ஆரோக்கிய நிகேதனம் பற்றி ஜெயமோகன்
தொடர்புடைய பதிவுகள்
தாரா சங்கர் பானர்ஜியின் ‘ஆரோக்கிய நிகேதனம்’
ஆரோக்கியநிகேதனம்
நேற்றைய புதுவெள்ளம்
January 27, 2017
நஞ்சு கசப்பு சிரிப்பு – வா.மு.கோமுவின் கதைகள்
பத்தாண்டுகளுக்கு முன்பு வாமுகோமு விஜயமங்கலத்திலிருந்து வெளியிட்டுக் கொண்டிருந்த ஒரு சிற்றிதழைக் குறித்து சில வரிகளில் நான் ஒரு மதிப்புரை எழுதியிருந்தேன். இலக்கியத்தை ஒரு அவச்சுவை விளையாட்டாக ஆக்கும் முயற்சி அவ்வெழுத்துகளில் இருப்பதாக. ஆனால் அவ்வப்போது அசலான நகைச்சுவை உணர்ச்சி அவற்றில் வெளிப்படுவதாகவும் கூறியிருந்தேன். குறிப்பாக அவ்விதழில் “அன்புள்ள கதலா…” என்று ஆரம்பித்து எழுதப்பட்டிருந்த ஒரு படிக்காத கிராமத்துப் பெண்ணின் காதல் கடிதம் போன்ற கவிதை சுவாரசியமாக இருந்தது.
தமிழின் இரண்டு முதன்மையான இலக்கியப்போக்குகளுக்கும் வெளியே சில எழுத்துமுறைகள் உண்டு. வணிகப் பேரிதழ்களில் கேளிக்கையை முதன்மையாகக் கொண்ட எழுத்து, அவற்றுக்கு மாறாக வந்து கொண்டிருந்த சிற்றிதழ்சார் எழுத்து. இவை இரண்டுக்கும் தொடர்பின்றி வந்துகொண்டிருந்த எழுத்துக்கள் முகம், தென்மொழி போன்ற சிற்றிதழ்களில் வெளிவந்த தனித்தமிழ் மற்றும் மரபிலக்கிய எழுத்துக்கள் ஒரு வகைமை. பல்வேறு வகையான குழுக்களால் நடத்தப்படும் பசுமை, நமது நம்பிக்கை போன்ற சிற்றிதழ்களில் சுயமுன்னேற்றவகை எழுத்துக்கள் இன்னொரு வகைமை. இவை ஒவ்வொரு வகைமையிலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட இதழ்கள் வெளிவந்து கொண்டிருந்தன.
இவற்றில் ஒன்று இலக்கியச் சிற்றிதழ்களின் வரிசையில் அடங்காது ஒரு படி கீழே வந்து கொண்டிருந்த குறுஇதழ்கள். முங்காரி, தொடரும், கல்வெட்டு பேசுகிறது போன்றவை உதாரணம். அவ்வகைமையைச் சேர்ந்த சுந்தர சுகன் போன்ற பிரசுரங்களில்தான் வா.மு.கோமு அதிகமும் எழுதியிருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு தலைமறைவு எழுத்து மரபாகவே இவர்கள் செயல்பட்டிருக்கிறார்கள். ஷாராஜ், ஹரிணி போன்ற சில பெயர்களை அப்போது பார்த்த நினைவுள்ளது. இவர்களின் எழுத்து இலக்கியப் படைப்பாக ஆவதற்கு ஒரு படி குறைவானது. ஆனால் வார இதழ் படைப்புகளை விடமேலானது. அடிப்படையான அவதானிப்பும், சுவாரசியமும் கொண்டது
பின்பு வா.,மு.கோமுவை நான் அடையாளம் கண்டு கொண்டது உயிர்மையில் அவர் எழுதிய பிசாசு என்னும் சிறுகதை வழியாக. ஒரு குறிப்பிடத் தகுந்த இலக்கியப் படைப்பு என்ற எண்ணம் ஏற்பட்டது. உயிர்மையில் ஒரு வாசகர் கடிதத்தில் அதைக் குறிப்பிட்டிருந்தேன் என்பது என் நினைவு. திருப்பூர் பின்னலாடைத் தொழிலில் இருக்கும் ஒரு பெண்ணின் பல்வேறு ஆண் தொடர்புகளை, ஒவ்வொரு தொடர்பிலும் அவள் கொள்ளும் விதவிதமான பாவனைகளை நகைச்சுவையும் சிறிய எரிச்சலும் கலந்து சித்தரித்தது அந்தப் படைப்பு. அதன் பின்னர் வா.மு.கோமுவின் எழுத்துக்களை தொடர்ந்து கவனித்து வருகிறேன். கவனத்திற்குரிய படைப்பாளி, ஆனால் மேலும் ஏதோ ஒன்றை அவரிடம் எதிர்பார்க்கிறேன் என்னும் இருநிலை தான் எனக்கிருந்தது.
’அழுவாச்சி வருதுங் சாமி’ என இந்த சிறுகதைத் தொகுதியை முன்வைத்து அவரது எழுத்துக்கள் மீதான எனது உளப்பதிவை தொகுத்துக் கொள்கிறேன். வா.மு.கோமுவின் அழகியல் இரண்டு சரடுகளால் ஆனது. ஒன்று சிற்றிதழ் சார்ந்த இலக்கிய உலகின் அடித்தளத்தில் செயல்படும் ஒருவனின் கசப்புகளும் நையாண்டிகளும் கலந்த ஒரு படைப்புலகு. இத்தொகுதியிலேயே ’தோழர் பெரியசாமி புதிய தரிசனம்’ ’தோழர் பெரியசாமி சில டைரி குறிப்புகள்’ போன்ற கதைகளை உதாரணமாகச் சுட்டலாம். கொஞ்சம் சுயசரிதைத் தன்மை கொண்டவை. இலக்கியக் குறிப்புகளின் வடிவில் எழுதப்பட்டவை. பொதுவாக நக்கல், கசப்பு நிறைந்தவை. தொடக்கம் முதலே வா.மு.கோமுவின் எழுத்தில் இவ்வகை படைப்புகள் முக்கியமான அளவு உள்ளன.
தமிழ்ச் சிறுபத்திரிகைச் சூழலை அறிந்த ஒருவரால் தான் எவ்வகையிலேனும் இவற்றை ரசிக்க முடியும். இதில் இருப்பது ஒரு எரிச்சல் என்று சொல்லலாம். தமிழ்க் கருத்தியல் இயக்கம் மீதான ஒவ்வாமை. அதில் உள்ள பாவனைகள் மீதான் எள்ளல். கழிவிரக்கம். அதே சமயம் தமிழ்க் கருத்தியல் சூழலை ஆழமாகப் புரிந்து கொள்ளாமல் பொத்தாம் பொதுவாக வெளியிலிருந்து பார்த்து எழுதப்பட்டவை. ஆகவே இவை முன்வைக்கும் விமர்சனத்திற்கு பெரிய மதிப்பேதும் இல்லை. ஆசிரியரின் ஒரு கோணம் என்பதற்கு அப்பால் இவற்றை வாசகன் கருத்திலும் கொள்ளவேண்டியதில்லை
இக்கதைகளில் அவ்வப்போது வரும் மெல்லிய கிண்டல் மட்டுமே சிறுபுன்னகைக்கு உரியது. இக்கதைகள் காட்டும் இதே எரிச்சலை இத்தொகுதிக்கு ’இப்படியே இருந்துவிட்டுப் போகலாமேடா’ என்ற பெயரில் சுகன் எழுதிய முன்னுரையிலும் காண முடிகிறது. சுகன் சௌந்தர சுகன் என்ற பெயரில் சிற்றிதழ் நடத்தியவர்.இவரை நான் இருமுறை சந்தித்திருக்கிறேன். மிக நேர்மையான தீவிரமான இளைஞர். அர்ப்பணிப்புடன் பொருள் இழப்புடன் சுகன் இதழை நடத்திக் கொண்டிருந்தார். ஆனால் தமிழ் அறிவியக்கத்தின் வீச்சை வாசித்துப் புரிந்து கொள்ளும் உழைப்பை அவர் அளிக்கவில்லை. ஆகவே அதன் மையப் பெருக்கில் நுழைவதற்கான அறிவார்ந்த தகுதியை அடையவும் இல்லை. விளைவாக அதன் மீது ஒரு ஒவ்வாமையை உருவாக்கிக் கொண்டு அதேசமயம் விலகவும் முடியாமல் அதன் விளிம்பிலேயே திரிந்து கொண்டிருந்தார்.
இன்று எண்ணுகையில் சுகன் இதழில் பெரும்பாலான படைப்புகள் முதிரா முயற்சிகளாகவும் அவ்வப்போது எளிய சீண்டலாகவும் இருப்பதை நினைவுகூர்கிறேன். ஒரு தீவிர இலக்கிய வாசகன் அவற்றின் உண்மையான தீவிரத்தைப் புரிந்து கொள்ளும் போதே அவற்றின் ஆழமின்மையும் உணர்ந்து கொண்டிருப்பான். இவ்வியல்புகள் அனைத்தும் வா.மு.கோமுவின் படைப்புகளிலும் உள்ளன. அனேகமாக ஒரு சிற்றிதழுடன் தொடர்புடையவர்கள் அச்சிற்றிதழின் அடிப்படை இயல்புகளை தாங்களும் கொண்டவர்களாக இருப்பது வழக்கம்.
வா.மு.கோமு குறிப்பிடத்தகுந்த சிறுகதை ஆசிரியராக தெரியத் தொடங்கியது அவர் வழக்கமான சிறுகதை வடிவிற்கு வந்து ஈரோடு, திருப்பூர் வட்டாரத்தின் அடித்தள மக்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் கதைகளை எழுதத் தொடங்கிய பிறகுதான். பின்னலாடைத் தொழில், நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் மக்களின் வாழ்க்கையின் ஒரு கோணம் நம்பகமாக இவரது படைப்புகளில் வெளிப்பட ஆரம்பித்தது. இத்தொகுதியிலும் முதல்வகைக் கதைகள் உள்ளன. இரண்டாம் வகைக்கதைகளே எனக்கு முக்கியமெனப் படுகின்றன
வா.மு.கோமுவின் முக்கியத்துவம் எப்படி வருகிறது? அதுவரைக்கும் அவ்வாழ்க்கையை எழுதிய பெரும்பாலான படைப்பாளிகள் முற்போக்கு அணுகுமுறை கொண்டிருந்தார்கள். உழைப்பவர்களை ஆதரித்து அவர்களுக்காக வாதிட்டு கசிந்து கண்ணீர் மல்கும் தோரணை அவர்களுக்கிருந்தது. கூடவே அம்மக்களுடைய வாழ்க்கையைப் பற்றிய கோட்பாட்டு அணுகுமுறை. இவை சில வாசல்களைத் திறந்தன என்பதை மறுக்க முடியாது. குறிப்பாக அடித்தள மக்களின் வாழ்க்கையை ஒரு பெரிய வரலாற்றுப் பின்புலத்திலும் பொருளியல் பின்புலத்திலும் வைத்துப்பார்க்கும் சித்திரத்தை இடது சாரிகளால் தான் அளிக்க முடிந்தது.
ஆனால் அதன் மிகப்பெரிய பலவீனம் என்பது அவ்வெழுத்தாளன் தன்னை அவர்களில் ஒருவனாக இல்லை என்பதே. அவன் அவர்களை விட மேம்பட்டவனாக, அரசியல் மற்றும் தத்துவ பயிற்சி கொண்டவனாக, மனிதாபிமானம் நிறைந்தவனாக கற்பிதம் செய்து கொள்ளும் இடத்தில் இருக்கிறான். ஆகவே குனிந்து பார்த்து அனுதாபத்துடன் எழுதும் ஒரு கோணம் அவற்றில் வந்துவிட்டது. ஏதோ ஒருவகையில் அவன் தன் பார்வைக்காக அவ்வாழ்க்கையைத் திரிக்கிறான். அவ்வாழ்க்கையில் இருந்து அவனுக்கு எதுவும் கிடைப்பதில்லை, அவன் அவ்வாழ்க்கையை மறு ஆக்கம் செய்பவனாக இருக்கிறான். சமீபத்திய மிகச்சிறந்த உதாரணம் பாரதிநாதன் எழுதிய தறியுடன் என்னும் பெருநாவல்.
நேரடியாக முற்போக்கு இயக்கத்துடன் தொடர்பில்லை என்றாலும் கூட இவ்வாழ்க்கையை எழுதிய சுப்ரபாரதி மணியன் எம்.கோபாலகிருஷ்ணன் போன்றவர்களிடம் கூட இந்த விலகல் அணுகுமுறை அழுத்தமாக உண்டு. அது அவர்களுடைய அறிவுஜீவி சுயத்தில் இருந்தே உருவாகிறது.
மாறாக வா.மு கோமு முற்றிலும் அவர்களில் ஒருவராக இருக்கிறார். ஆகவே அவருக்கு அம்மக்கள் மேல் எந்த அனுதாபமும் இல்லை.இருப்பது தன்னிரக்கமும் கசப்பும்தான். ஆகவே அவர்களுடைய சிறுமைகளை நடிப்புகளை கயமைகளை எந்த தயக்கமும் இன்றி சொல்ல அவரால் முடிகிறது. இக்காரணத்தால் முன்னரே குறிப்பிட்ட எழுத்துக்கள் தொடாத பல இடங்களை இவை சென்று தொட்டு உயிர்பெறச்செய்கிறன.
இரண்டாவதாக சென்ற தலைமுறை வரை எழுத்தாளர்களை கட்டிவைத்திருந்த ஒழுக்கம் சார்ந்த நம்பிக்கை வா.மு.கோமுவிடம் இல்லை. பாலியல் மீறலை அறக்கண்டனத்துடன் அவர் பார்க்கவில்லை. ஒருவரை ஒருவர் நுகர்ந்தும் வெறுத்தும் ஏமாற்றியும் களியாட்டமிடும் இவ்வாழ்க்கைப் பரப்பை ஒருவகையான கொண்டாட்டமாகவே அவர் பார்க்கிறார். அதற்கு வெளியே இருக்கும் வாசகனுக்கு அது கீழ்மையின் களியாட்டமாகத் தெரியலாம். ஆனால் காமம் குரோதம் எனும் அடிப்படை உணர்வுகளின் ததும்பலாகவே அவனால் அவற்றை காண முடியும். வா.மு.கோமுவின் உலகில் அவர் அவர்களுடன் சேர்ந்து அக்களியாட்டத்தை நிகழ்த்துவது தெரிகிறது. இந்த இருகூறுகளால் வா.மு. கோமுவின் கதைகள் தமிழிலக்கியத்தில் ஒரு தனியிடத்தைப் பெறுகின்றன.
வா.மு.கோமுவின் இத்தொகுதியில் அவருடைய தனித்தன்மை வாய்ந்த எழுத்தை அடையாளம் காட்டும் இரு கதைகளை ஒன்று, ‘நீங்க பண்றது அட்டூழியமுங்க சாமி’. தலைப்பை வாசித்ததும் இக்கதை இன்றைய தமிழ்ச் சூழலில் எந்த நிலைபாடு எடுத்து எழுதப்பட்டிருக்கும் என்று வாசகனுக்கு ஓர் எண்ணம் வரும். அல்லது வேண்டுமென்றே அதற்கு எதிர்நிலைபாடு எடுத்திருக்கக்கூடுமோ என்று கூட அவன் ஐயப்படலாம். அவ்விரண்டுக்குமப்பால் ஒரு மூர்க்கமான நேர்மையுடன் நின்றிருக்கிறது இக்கதை.
டீக்கடை வாசலில் ”சாமி கொஞ்சம் டீத்தண்ணி ஊத்துங்க” என்று தம்ளரை ஏந்திநின்று கேட்கும் நஞ்சனின் சித்தரிப்பில் தொடங்குகிறது கதை. டீக்கடையில் கவுண்டர்கள் வருகிறார்கள், ‘பொறணி’ பேசுகிறார்கள்.நாளிதழ் வாசிக்கிறார்கள். எழுந்து செல்கிறார்கள். பேருந்து வந்து செல்கிறது. நஞ்சனின் குரல் கேட்டுக்கொண்டே இருக்கிறது. இறங்கி கெஞ்சி மன்றாடி ஒரு தருணத்தில் கண்ணாடிக் குவளைகளை உடைத்து வீசி விட்டுச் செல்கிறான். அந்த இடத்தில் கதை இன்னொரு கட்டத்திற்கு திரும்புகிறது.
தங்கள் மேல் சுமத்தப்படும் இந்த இழிவுக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிராக நஞ்சனின் தந்தையும் நஞ்சனும் தங்கள் துடுக்குத்தனம் வழியாக மீறல்கள் வழியாக ஆற்றும் எதிர்வினைகள் கதையாக வளர்கின்றன. தன்னை அடித்த கவுண்டரின் கிணற்றுக்குள் இறங்கி ஒன்றுக்கடித்துவிட்டு செல்லும் நஞ்சனின் தந்தையும் சரி, ஊர்க்கவுண்டர் செத்துவிட்டார் என்று பல ஊர்களுக்குச் சென்று செய்தி சொல்லி காசு சம்பாதித்துவிட்டு பல நாள்கள் தலைமறைவாகிவிட்டு திரும்பி வரும் நஞ்சனும் சரி, தங்கள் மீறலை ஆயுதமாகக் கொண்டு ஒடுக்குமுறைக்கு எதிர்வினையாற்றுகிறார்கள்.
இது கிராமத்தில் ஒரு வகை விளையாட்டாகவே நடக்கிறது. சமயங்களில் அடிதடி. பெரும்பாலான தருணங்களில் “சரிவிடு அவன் புத்தி அப்டித்தான்” என்று சமரசம். ஏனென்றால் தலித்துக்கள் இல்லையேல் விவசாயவேலைக்கு ஆளில்லை. அதைச் சித்தரித்துச் செல்லும் கதை உயர்ஜாதிப்பெண்ணைக் காதலித்துக்கூட்டிக் கொண்டு போகும் நஞ்சனின் மகனை காட்டுகிறது. நஞ்சன் அதன் பொருட்டு அடிவாங்குகிறான். ஆனால் சில நாள்கள் கழித்து இரவில் வந்து கதவைத் தட்டும் நஞ்சனின் மூத்தமகனிடம் அம்மா பதறிக்கொண்டு கேட்கிறாள். “என்ன ஆச்சு? அந்தப்பிள்ளை என்னவானாள்?”
“அது ஆவாது அம்மோ அவளுக்குச் சோறாக்கத் தெரியலே. ஒரு மண்ணும் தெரியலே. ஆட்டுக்கறி கோழிக்கறி மாட்டுக்கறி ஒரு கறியும் திங்கமாட்டாளாம் .நானும் திங்கப்படாதாம் .அவ சொல்றப்ப தான் தொடணுமாம். ஆவறதில்லேன்னு போட்டுட்டு வந்துட்டேன்” என்கிறான் மகன். நஞ்சன் மனதில் “இப்பதாண்டா நீ எம்பட பையன்” என்று நினைத்துக் கொண்டு படுக்கையிலிருந்து எழுந்தமர்ந்து ஒரு பீடியை பற்ற வைத்துக்கொள்கிறான்.
இந்தக் கதை நமது கிராமப்புறங்களில் இருக்கும் அசாதாரணமான ஒரு அதிகாரச் சதுரங்க ஆட்டத்தை முன் வைக்கிறது. இதே விஷயத்தை என் இளமைப்பருவ அவதானிப்பிலிருந்து நானும் ஓரிரு இடங்களில் சொல்லியிருக்கிறேன். ஒடுக்கப்படும் தலித்துகள் கேலி கிண்டல் மீறல் வழியாக எதிர்வினையாற்றுவது. சோ.தருமன் இதை வேறுவகையில் எழுதியிருக்கிறார், அவருடைய காடுவெட்டி முத்தையா [தூர்வை] ஒரு முக்கியமான கதாபாத்திரம்.
இக்கதை உறையிலிருந்து வாளை உருவும் ஒளியுடன் அமைந்திருக்கிறது. கீழ்மை நிறைந்த ஒடுக்குமூறை ஒரு தட்டு என்றால் இரக்கமற்ற மீறல் மறுமுனையிலிருக்கிறது. அது நஞ்சனின் மகனின் தலைமுறையிடமல்ல, நஞ்சனிடமும் அவன் தந்தையிடமும் இருந்திருக்கிறது எனும்போது மானுடமனம் அளக்கமுடியாதென்று தோன்றுகிறது. அது ஒரு வரலாற்று தொடர்ச்சி கொண்டிருக்கிறது என்று தோன்றுகிறது. எளிமையான முற்போக்கு- மனிதாபிமான- சமூகவியல் ஆய்வுக் கோணங்களுக்கு அப்பாற்பட்டு அத்தனை கருவிகளைக் கொண்டும் விளக்க வேண்டிய ஒரு சமூக உண்மையின் சித்தரிப்பாக நின்றிருக்கிறது இந்தக் கதை. தமிழில் எழுதப்பட்ட சிறந்த சிறுகதைகளின் வரிசையில் இக்கதையை வைப்பதில் எனக்குத் தயக்கமில்லை. நெடுநாட்களுக்கு இக்கதை வினாக்களை எழுப்பிக் கொண்டிருக்கும் என்றுதான் தோன்றுகிறது.
இக்கதையின் இன்னொரு முகம் என்று ’திருவிழாவுக்குப்போன மயிலாத்தாள்’ ஐ சொல்லலாம். இங்கு தலித்துக்கு பதில் பெண். கணவனிடம் மயிலாத்தாள் கொண்ட பணிவும் குறுகலும் அவனுடைய துடுக்கும் திமிரும் கதை நெடுகிலும் சித்தரிக்கப்படுகிறது. குடி, சுரண்டல், பாலியல் அத்துமீறல், வன்முறை என்று தான் மனைவியை நடத்துகிறான் கணவன். திருமணமாகி இரண்டு மாதங்களுக்குள்ளேயே கணவனெனும் விசித்திரமான மிருகத்தை மயிலாத்தாள் அடையாளம் கண்டுவிடுகிறாள். திடீரென்று சென்னிமலைக்கு அழைத்துச் செல்கிறான். அங்கு அவன் மீண்டும் மீண்டும் மது அருந்துகிறான். சற்று வழி தவறி தொலைந்துவிட்ட மயிலாத்தாளைப் பிடித்து பொது மக்கள் முன்னிலையில் அடிக்கிறான்.
அவளை அப்படியே விட்டுவிட்டு குடிவெறியில் வீடு திரும்பிவிடுகிறான். ஒருவழியாக அங்கே இங்கே அல்லாடி வீட்டுக்கு வந்து கணவனைச் சந்திக்கும் மயிலாத்தாளை ஓங்கி அறைகிறான். சட்டென்று அவள் அவனை அறைந்து வீழ்த்தி ”மாமா இப்படியே சும்மாங்காட்டி முதுகில என்னை மொத்தினேன்னா எங்கூர்ல ராசாத்தி அக்கா செஞ்ச மாதிரி மாமா உனக்கும் நானு செஞ்சு போடுவேன் மாமா. ராசாத்தி அக்கா அவ புருஷனுக்கு சோத்தில வெஷம் வெச்சு கொன்னுபோட்டா. அதுமாதிரி உன்னயக் கொன்னு ரெண்டு நாள் அழுதுபோட்டு நான் எங்கூருக்கு போயிடுவேன் மாமா” என்கிறாள். ஒரு கணத்தில் தராசு மறு தட்டை அடைந்துவிடுகிறது. இத்தொகுப்பின் முக்கியமான சிறுகதைகளில் ஒன்று இது.
”கூட்டப்பனை சாவக்கட்டு” கிராமத்தில் மிக நுட்பமாக நிகழும் அதிகாரச் சுரண்டல்களைக் காட்டுகிறது. ஊர்க்கவுண்டன் எப்படி ஒவ்வொரு முறையும் வெவ்வேறு பலியாடுகளை தேடி கண்டுபிடித்து அவர்களை மாட்டிவிட்டு விலகிக் கொள்கிறான் எனும் சித்திரம் கூரியது. தந்திரம் மூலமே கிராமத்தின் மொத்த அதிகாரத்தையும் அவன் கையில் வைத்திருக்கும் சித்திரம் கூர்மையுடன் சொல்லப்படுகிறது. வெறும் தந்திரத்தின் கதை அல்ல இது. செல்வம், அதிகாரம் ஆகியவற்றுக்கு அப்பால் அடித்தள மக்களின் உணர்ச்சிகளை புரிந்துகொண்டு உயர்சாதியினர் ஆடும் அதிகாரவிளையாட்டுதான் அந்த சேவல்கட்டு.
இத்தொகுதியில் உள்ள இத்தகைய கதைகள் வழியாகவே வாமு கோமு தமிழ் சிறுகதை இலக்கியத்தில் ஒரு முக்கியமான இடத்தைப் பெறுகிறார் என்று நினைக்கிறேன்.
[அழுவாச்சி வருதுங் சாமி. சிறுகதைகள். வா.மு.கோமு. எதிர் வெளியீடு]
வா.மு கோமு இணையப்பக்கம்
தொடர்புடைய பதிவுகள்
பாலுணர்வெழுத்து தமிழில்…
எரியும் தேர்
வலசைப்பறவை 6 : பகற்கனவின் பாதையில்
காடு – பிரசன்னா
நாவலைப்பற்றி ஏராளமாக எழுதப்பட்டுவிட்டதால் எனக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்திய ஒரு இழையை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன் – சடுதியில் முடிந்துவிடும் வாழ்க்கை, அதன் நிலையாமை, உண்மையில் இந்த அம்சத்தை இப்பொதெல்லாம் நான் காணும், படிக்கும் அத்தனை விஷயங்களிலும் பாம்புத்தொடுகை போல் உடனே பிடித்துவிடுகிறேன் அல்லது அதை மட்டும் அதீதமாக கவனிக்கிறேன்.
‘அவ்வளவேதானா இளமை?’ என்பது போல் அவ்வளவேதானா வாழ்க்கை என்று ஒவ்வொரு தினமும் தவிப்படைகிறேன். அப்படி கேட்டுக்கொள்ளாதவர்கள் யார் என கதையில் வருகிறது. இருந்தாலும் முப்பது வயதில் எனக்கு இருக்கும் இந்த தவிப்பு கொஞ்சம் அதிகமாகவே தோன்றுகிறது. கண்ணெதிரே ஒரு தலைமுறை வயதாகி விட்டதையும், இதோ இப்போதுதான் பார்த்து ரசித்த கலைஞர்கள் எல்லாம் பழைய ஆட்களாக ஆகிப்போனதையும் அதிர்ந்தபடியே தான் நோக்குகிறேன்.
இந்தப் பதட்டத்தை காலங்களை முன்பின்னே கடக்கும் கதையின் அமைப்பு அதிகரிக்கவே செய்கிறது. ஏதோ கனவில் மட்டும் பார்த்துக்கொண்டவர்கள் நேரில் சந்திப்பதைப்போல் இருந்தது கடையில் உட்கார்ந்திருக்கும் குரிசு, குலசேகரத்தில் போத்தி, மலைமேல் அய்யர் போன்ற கிரியின் சந்திப்புகள்.
கிரி, லௌகீக வாழ்க்கையில் தோல்வி அடைவது எதனால் என்ற கேள்வி சில நாட்கள் கழித்து அலைக்கழித்தது. ‘உன் அகங்காரம் தான் காரணம்’ என அய்யர் சொன்னாலும் அது மட்டுமேவா? அவன் சங்கப்பாடல்களில் லயிக்கும் அளவிற்கு நுண்ணறிவு கொண்டவன். ஆனால் கனவுகளில் வாழ்பவன். அதீதங்களை தேடுபவன். பகலில் அடிக்கடி போய் படுத்து தூங்கிவிடுகிறான், இரவில் விழித்திருக்கிறான். அவனது அப்பா தோல்வி அடைந்து யதார்த்தத்தை புரிந்துகொள்ளாதவர் என்பது இங்கு முக்கியம்.. நடைமுறை வாழ்வில் தோல்வி அடைந்தவர்களின் பிள்ளைகள் அது மறுபடி நடக்கக்கூடாது என்பதில் பெரும் பதட்டம் கொண்டவர்கள், ஆனால் அந்த பதட்டம் கிரிக்கு வரவில்லை – அவனது மகனுக்கு வாய்த்தது.
ஆனால்.. அப்படிப்பார்த்தால் எதிர்வீட்டு தமிழ் வாத்தியார் – கம்ப இராமாயண பித்தர். அவர் குடும்பத்துக்கு அனைத்தையும் சரியாக செய்தவர்தான்.. இருந்தும் கடைசியில் அவர் சந்திப்பது வெறுப்பை மட்டுமே. இதற்கெல்லாம் என்ன அர்த்தம்?
காமத்தை முழுமையாக புரிந்து வெல்ல முடியுமா? வெல்லத்தான் வேண்டுமா? குறிஞ்சிப்பூவை பார்ப்பது போல் புறவயமாக காமத்தை செயல்படுத்திப் பார்த்ததுமே ஏன் அவ்வளவு ஏமாற்றம்? மனத்தில் எத்தனை நாட்கள் நிகழ்த்திப் பார்த்தாலும் அலுப்பதில்லையே? காடு என்பது காமமா, இளமையா?
இது ஒரு புறம். மலையன் புரத்தை வெட்டிக்கொண்டு போகப்போகும் சாலை.. பாடம் பண்ணபட்ட கீரக்காதன்….என பதைக்க வைக்கும் காட்டழிவு காட்சிகள்.. . குறிஞ்சியில் உட்காரும் வண்டை பார்த்து ‘இனி எத்தனை தலைமுறை கழித்து வண்டு இனத்திற்கு இந்த தொடுகை வாய்க்குமோ?’ என பரிதாபப்படும் கிரி, மனிதனைப்பார்த்து பரிதாபப்படும் இயற்கை…
காமத்தின் அம்சங்களே இதில் எழுத்து வடிவமாக; நீலி-கிரி சந்திப்பு முதலிலேயே நிகழ்ந்து, எடுத்த எடுப்பிலேயே தழுவி எல்லாம் முடிந்திருந்தால் ஏமாற்றமே மிகுந்திருக்கும். எவ்வளவு ஏக்கத்தை கடந்து எத்தனை பக்கங்கள் தாண்டி எல்லாம் நடக்காமல் நடந்து முடிகிறது? அதுவே அந்த நினைவை துடிப்படங்காமல் இருக்க வைக்கிறது.
மேலே உள்ள பத்திகளே காடு போல் கெச்சலாக இருப்பதும் காரணமாகத்தான் போலும். நாவலில் வரும் காட்டின் மனிதர்கள், மிருகங்கள், பருவங்கள், சம்பவங்கள், ஊர், அன்றாடம் என்று அனைத்தும் ஏற்படுத்திய தாக்கத்தை வார்த்தையில் முறையாக வெளிப்படுத்தினாலே அதன் அணுக்கம் போய் விடும். அப்படியே உணர்வாகவே இருப்பது மேல்.
பிரசன்னா
http://tamilkothu.blogspot.in/
தொடர்புடைய பதிவுகள்
என்னை வாசிக்கத் தொடங்குதல்
அகக்காடு- கடிதம்
காடு- கடிதம்
குட்டப்பனுக்கு ஏன் தெரியவில்லை?
காடு- கடிதம்
காடு வாசிப்பனுபவம்
காஞ்சிரம்-கடிதம்
காடு- கே.ஜே.அசோக் குமார்
சுவை- கடிதம்
பிறழ்வுகள்
துணை இணையதளங்கள்
காமமும் காடும்
காடு – ஒழுக்கத்துக்கு அப்பால்…
காடு-கேசவ மணி
வாசிப்பும் எழுத்தும் எதிர்வினையும்
இரு கடிதங்கள்
ஒரு முதற்கடிதம்
காடு ஒரு கடிதம்
காடு-கடிதங்கள்
காடு-கடிதம்
January 26, 2017
மாலிரும்மொழிச்சோலை
இனிய ஜெயம்,
நாடி ஜோதிடக்காரன் சுவடிக்கட்டில் கயிற்றைப் போட்டுப் பிரித்து, வரும் பகுதியில் என்ன வருகிறதோ அதை வாசிப்பதைப் போல, சங்க இலக்கிய நூல்களுக்குள் உழன்றுகொண்டு இருக்கிறேன்.
கணியன் பூங்குன்றனாரின் குரல் ”மானுடம் வென்றதம்மா” போன்றதொரு எழுச்சிக் குரல். அதன் மறு எல்லையை இன்று பரிபாடல் மூன்றாம் பாடலில் கண்டேன்.
தீயினுள் தெறல் நீ, பூவினுள் நாற்றம் நீ,
கல்லினுள் மணியும் நீ,சொல்லினுள் வாய்மை நீ,
அறத்தினுள் அன்பு நீ, மறத்தினுள் மைந்து நீ,
வேதத்து மறை நீ, பூதத்து முதலும் நீ,
வெஞ்சுடர் ஒளியும் நீ, திங்களுள் அளியும் நீ,
அனைத்தும் நீ, அனைத்தின் உட்பொருளும் நீ…
திருமால் தலைப்பின் கீழ் வரும் பாடல். காணும் அனைத்திலும் சாரமான ஒன்றினை [வேதம் போன்ற கெனான் உட்பட] கண்டு, அதை முற்ற முழுதான ஒன்றுடன் இணைக்கும் தத்துவ நோக்கு, கவித்துவமாகவும் துல்லியமாகவும் உருவாகி வந்த கவிதை.
பிரபந்தப் பாடல் ஒன்றின் வரிகளை வாசிப்பது போலவே இருக்கிறது. பக்தி இலக்கியங்கள் வடிவத்தாலும், [ஒரு உணர்ச்சியை நேரடியாக தொட்டு அதை உச்சத்துக்கு கொண்டு செல்லும்] வெளிப்பாட்டாலும், அவைகள் சங்க இலக்கியத்தில் வேர் பிடிக்காத தனி ஜானர் என்றே புரிந்து வைத்திருந்தேன். புரட்டிப் போட்டு விட்டது. அறத்தினுள் அன்பு நீ.
இனிய ஜெயம், சங்க இலக்கியத் தொகுதிகள், என்பதை அதன் அழகியலை தத்துவ நோக்கை கொண்டு பார்த்தால். பரிபாடல் வகைமை ” தனித்து” இருக்கிறதே ஏன்?
கடலூர் சீனு
***
அன்புள்ள சீனு
இந்தியாவை ஆக்கிய கருத்தியல்பெருக்கு என்றால் அது பக்தி இயக்கம்தான். கிபி ஏழாம் நூற்றாண்டு வாக்கில் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார் போன்றவர்கள் உருவாக்கியது வைணவ பக்தி அலை. நாயன்மார்களால் சைவ பக்தியலை உருவாக்கப்பட்டபோது அது ஒரு சமூக இயக்கமாக ஆகியது. தெற்கிலிருந்து வடக்கு நோக்கி அது பரவிச்சென்றது.
பக்தி எப்போதும் உள்ளது. அது ஓரு சமூக இயக்கமாக ஆனதே பக்தி இயக்கம் என ஆய்வாளர்களால் குறிப்பிடப்படுகிறது. முதன்மையாக பக்தி இயக்கம் இலக்கியம் சார்ந்தது. இசை, நிகழ்த்துகலைகளை இணைத்துக்கொண்டது. சாராம்சத்தில் வேள்விகள், ஆசாரங்கள், சடங்குகள் ஆகியவற்றுக்கு மாற்றாக தூய பக்தியை நிறுத்தும் தத்துவநோக்கு கொண்டது. கொள்கையடிப்படையில் ஞானமார்க்கத்தைவிட பக்தியை மேலாக எண்ணுவது. பக்தி என்றால் இறைக்கு முழுமையான தன்படைப்பு செய்வது என்பதே அதன்பொருள்.
சமூகவியல் அடிப்படையில் பக்தி இயக்கம் குடியானவர்கள் கைவினைஞர்கள் போன்ற அடித்தளத்தினரின் எழுச்சியை உருவாக்கியது. வேள்விகளைச் சார்ந்த வைதிகமதங்கள் பிராமணர் மற்றும் ஷத்ரியர்களின் மேலாதிக்கம் கொண்டவை என்றும் சமண, பௌத்த மதங்கள் வைசியரின் மேலாதிக்கம் கொண்டவை என்றும் சொல்லலாம். ஏழாம் நூற்றாண்டு வாக்கில் சமண, பௌத்த மதங்கள் இந்தியாவை முழுமையாகவே ஆண்டிருந்தன.
சமண, பௌத்த மதங்களின் கொள்கைரீதியான பாதிப்பினாலும், அவற்றுக்கு எதிராகவும் உருவானதே பக்தி இயக்கம் அதற்கு முந்தைய காலகட்டத்தில் இருந்த மதச்சித்திரத்தை இவ்வாறாக உருவகிக்கலாம். உயர்குடிகள் வேதவேள்விகள், ஆலயவழிபாடு மற்றும் தத்துவக்கல்வியை அடிப்படையாகக் கொண்ட வைதிகமதங்களில் ஈடுபட்டிருந்தனர். அவை இந்திரன், விஷ்ணு, சிவன் போன்ற பெருந்தெய்வங்களை மையமாகக் கொண்டவை.
பெரும்பான்மையினரான அடித்தள மக்கள் நாட்டார் தெய்வங்களையும் குலதெய்வங்களையும் வழிபட்டனர். அவர்கள் கொள்கையளவில் அரசர் மற்றும் உயர்குடிகளின் பெருந்தெய்வ மதங்களை ஏற்றுக்கொண்டு அவற்றில் அமைந்திருந்தாலும் நடைமுறையில் தங்கள் சிறுதெய்வங்களையே வழிபட்டனர். இன்றுகூட இந்த இரட்டை மதநம்பிக்கையே மிகஅடித்தளங்களில் நிலவுகிறது.
சமணமும் பௌத்தமும் வந்தபோது அவையும் இதே இரட்டை நிலையைத்தான் பேணின. மக்கள் நாட்டார் தெய்வங்களையும் குலதெய்வங்களையும் வழிபட்டு கொள்கையடிப்படையில் சமணரோ பௌத்தரோ இரண்டுமோ ஆக திகழ்ந்தனர். சைவ வைணவப் பெருந்தெய்வங்களின் வழிபாடும் தொடர்ந்தது. இந்திரவிழா போன்றவை வைணவ மதத்தில் இருந்து அப்படியே சமணத்தால் எடுத்துக்கொள்ளப்பட்டன.
ஆனால் வைதிக மதங்களான சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், காணபத்யம், சௌரம் ஆகியவற்றை விட சமண, பௌத்த மதங்கள் அடித்தள மக்களுக்கு அணுக்கமானவையாக இருந்தன. அவை அவர்களுக்கு உணவு, கல்வி, அடைக்கலம், மருத்துவம், அறவுரை என ஐந்துமுறைகளில் சேவையாற்றின. அவை வணிகவலையில் ஊர்களை இணைத்தன. அதன்மூலம் ஊர்கள் வளர வழிவகுத்தன. ஆகவே அவை மக்கள் மதங்களாக இருந்தன.
இச்சூழலிலேயே பக்தி இயக்கம் எழுந்தது. அதுவே சமண, பௌத்த மதங்கள் இந்திய மண்ணில் பின்னடைவு கொள்ளக் காரணமாக அமைந்தது. முதன்மையாக அதன் போக்கு சைவ, வைணவப் பெருமதங்களின் மையத்தை நெகிழ்வாக ஆக்குவதாக இருந்தது. வேள்விகள், சடங்குகள், ஆகியவற்றுக்கு பதிலாக எளிய பக்தியை முன்வைத்தது. அத்தனை நாட்டார் தெய்வங்களின் வழிபாட்டுமுறைகளையும் உள்ளிழுத்தது. அவர்களின் அத்தனை கலைவடிவங்களையும் தன்னுள் கொண்டது. அவர்கள் பங்கெடுக்கும் மாபெரும் திருவிழாக்களை உருவாக்கியது. இவையனைத்துக்கும் மையமாக அத்தனைமக்களுக்கும் பங்களிப்புள்ள ஆலயவழிபாட்டு முறைமையை அமைத்தது.
பெருந்தெய்வங்களுக்கு பல சிறுதெய்வங்கள் உடன்அமைந்த கூட்டாலயம் முன்னரே இருந்ததை சிலம்பு காட்டுகிறது. இது கோட்டம் எனப்பட்டது. கோட்டம் என்றால் வளைவு [compound] என பொருள். மணிவண்ணன் கோட்டத்தில் கோவலன் வழிபட்டான் என காண்கிறோம். அவை புகார் போன்ற பெருநிலங்களில் இருந்தன. அந்த அமைப்பு சிற்றூர்களிலும் உருவானது. ஆறுமதங்கள் மூன்று பெருமதங்களாயின. அவற்றுள் பலநூறு வைதிக தெய்வங்களும் நாட்டார்ச் சிறுதெய்வங்களும் உள்ளடக்கப்பட்டன.
இந்தப் பக்தி இயக்கத்தின் உண்மையான ஊற்றுமுகம்தான் என்ன? பின்னுக்குப்பின்னாக தேடிச்சென்றால் நாம் சென்றடைவது இரு புள்ளிகளை. ஒன்று சிலப்பதிகாரத்தின் ஆய்ச்சியர் குரவை. இன்னொன்று பரிபாடல். இவற்றில்தான் ‘தத்துவச்சுமை’ இல்லாததும் ‘சடங்குகளின் இறுக்கம்’ இல்லாததுமான தூயபக்தி கலைவடிவாக வெளிப்படுவதைக் காண்கிறோம்.
கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன்
இன்றுநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழி!
பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவன்
ஈங்குநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழி!
இதிலுள்ளது ஓர் அரிய இணைப்பு. ஆய்ச்சியர்குரவை என்பது ஒரு நாட்டார்பாடல் வடிவம். அதில் வைணவப் பெருமதத்தின் தத்துவமும் அழகியலும் இணைவுகொள்கின்றன. இதுதான் பரிபாடலிலும் நிகழ்கிறது. அந்த இணைவுதான் பக்தி இயக்கமாக சிலநூற்றாண்டுகளுக்குப்பின் எழுந்தது.
பரிபாடல் காலத்தால் மிகப்பிற்பட்டது. அது சங்கப்பாடலாக கொள்ளப்பட்டாலும் சங்கம் மருவியகாலத்தது என அதன் மொழியே காட்டுகிறது. சிலம்பும் அதுவும் ஒரே காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம். அப்போது சமணமும் பௌத்தமும் உச்சத்தில் இருந்தன. ஆனால் அவற்றுக்கு அடியில் தமிழகத்தின் நாட்டார்ப்பண்பாடு சைவ வைணவப் பெருமதங்களை சென்று தொட்டு இணையத் தொடங்கிவிட்டிருந்தது.
அதன்பின் முந்நூறாண்டுக்காலம் களப்பிரர் ஆட்சி நிலவியது. அது சமணம் ஓங்கிய காலம். ஆனால் அப்போது வைதிக மதங்கள் ஒடுக்கப்படவில்லை. அவை சமண பௌத்த மதங்களுடன் உரையாடி விரிவடைந்தன. பலநூறு ஞானசபைகளில் அந்த அறுபடா விவாதம் நிகழ்ந்தது என்பதையே மணிமேகலையின் அறமுரைத்த காதை காட்டுகிறது. மறுபக்கம் பரிபாடல் காட்டும் இணைவு வலுத்தபடியே வந்தது. ஏழாம் நூற்றாண்டில் களப்பிரர் வெல்லப்பட்டு அரச ஆதரவு பெற்றபோது பேரியக்கமாக ஆகியது. பக்தி இயக்கம் எனப் பெயர்கொண்டது.
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
மலைக்கிராமம் -கடிதங்கள்
சார் வணக்கம்
உங்களின் மலைக்கிராம பயணத்தை வழக்கம் போல பொறமையுடனேதான் வாசித்தேன். மழை பெய்த ஈரத்தில் இருக்கும் மாடும் கன்றுமான கயிற்றுக்கட்டிலுடன் இருந்த அந்த கிராமத்து வீட்டில் தங்கும் தொடக்கமே அருமையாக இருந்தது. .மக்காச்சோள இலைகள் எண்ணை பூசப்பட்ட வாள்கள்// எத்தனை சரியென்று மீண்டும் இன்று மக்காச்சோள இலைகளை எங்களூரில் பார்த்ததும் ரசித்தேன். மலை ஏறுவது குறித்த விளக்கம் மிக உதவி சார். எனக்கு மலை ஏறுவது என்பது இந்த காதடைத்து, நெஞ்சடித்து வேர்த்துக்கொட்டும் பயங்கரத்தினாலேயே பல சமயங்களில் கண்ணைக்கட்டும் அதி பயங்கர அனுபவமாகவே இருக்கிறது. இப்போது நீங்கள் சொல்லி இருக்கும் வழிமுறைகளை அடுத்த முறை பரீட்சித்துப்பார்க்கிறேன்.
பலமுறை காடுகளுக்கு செல்கிறேன். அப்போதெல்லாம் நான் வேறு ஒருத்தியாகவே இருப்பேன் சார். மாசுகளிலிருந்து தப்பித்த அந்த சில நாட்களின் உற்சாகத்திலேயே மீதி பல நாட்களைக்கழிக்கிறேன் //மலையடுக்குகளில் உள்ள ஆழ்மௌனம் நம்முள் குடியேறும்போதுதான் நம் காட்டு அனுபவம் தொடங்குகிறது// இதை நீங்கள் சொன்னதும் தான் காடுகளில் பயணிக்கையில் மாணவர்களின் பாட்டும் பேச்சுக்களும் என்னை ஏன் எரிச்சலையடைய செய்கின்றது என்பதை உணர்ந்தேன்.
ஏழு மலை ஏழு கடல் தாண்டியும் சென்றடையும் நம் தமிழ் குத்துப்பாட்டுக்களை என்னதான் சொல்வது சார்?நூறைக்கடந்த பாட்டியும் மூன்றே வயதில் குழந்தையுமாக உழைக்கவும், கர்ப்பிணிகளெல்லாம் சாதாரணமாக மலைஏறிக்கடக்கவும் காரணமான ஆரோக்யமும், சொற்ப சூரிய விளக்குகளும், சுத்தமான சுற்றுப்புறமும், பனி மூடிய குளிர்ந்த இரவுகளும், நீரோடைகளும், புன்செய் விவசாயமும், உழைக்கும் இளைஞர்களுமாய் அந்த மலைக்கிராமத்தையும், எந்நேரமும் அலைபேசியும், அதன்தொடர்புகளும் தொல்லைகளும் கொசு விரட்டிகளுடனும் கரப்பான் விரட்டிகளுடனும் கழியும் இரவுகளும், பூச்சிக்கொல்லி மருந்துகளால் நாளும் கொல்லப்படும் நம்மையும் ஒப்பிட்டால் கட்டாயம் நாம்தான் சார் மிக மிக பரிதாபத்துக்கு உரியவரகள்.
ஒரு குக்கிராமத்தில் வசிக்கும் எனக்கே உங்களின் இந்த பயண அனுபவம் இத்தனை மனமகிழ்ச்சியைத் தருமென்றால், சென்னை போன்ற பெருநகரத்தில் வசிக்கும் உங்கள் வாசகர்களுக்கு இது போன்ற அனுபவப் பகிர்வுகள் எத்தனை ஏக்கத்தை கொடுக்கும்? அவர்களெல்லாம் இன்னுமே பரிதாபத்திற்கு உரியவர்கள் சார்
அன்புடன்
லோகமாதேவி
அன்புள்ள ஜெ
நலமாக இருக்கிறீர்களா?
உங்கள் பயணக்கட்டுரைகளை விட நான் அதிகம் விரும்பியது நீங்கல் இங்கே தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் செய்த பயணங்கள்தான். காடுகளிலும் பச்சைப்புல்வெளிகளிலும் நீங்கள் நண்பர்களுடன் செய்த பயணங்களை மிகவும் லயித்து வாசிப்பேன். அக்காமலையின் அட்டைகள் என்ற கட்டுரையின் தலைப்பே அபாரமானது. கேரளத்தின் மழையைப்பார்க்க நீங்கள் சென்ற மழைப்பயணங்கள் மிக அற்புதமானவை
சமீபத்தில் நீங்கள் அப்படிப்பட்ட பயணங்கள் அதிகமாகச் செய்வதில்லை. ஆகவே இக்கட்டுரையை ஆவலுடன் வாசித்தபின்னர்தான் முன்பே வாசித்த கட்டுரை என்று தெரிந்துகொண்டேன். ஆனாலும் அந்தச் சின்ன ஊர் அற்புதமாக மனதில் இருந்தது
ஜெயராமன்
ஜெ
உங்கள் கட்டுரை மலைக்கிராமம் ஒரு அழகான சிறுகதை. அந்தச் சின்ன கிராமத்துக்கும் நம் நாகரீகத்துக்குமான தூரம், அங்கே உள்ள வாழ்க்கை, அங்குள்ள சுத்தம் எல்லாமே சொல்லப்பட்டு கடைசியில் இங்கிருந்து ஏறிச்சென்று அம்மக்களை கேஸில் சிக்கவைக்கும் போலீஸின் குரூரத்தைச் சொல்லி முடித்திருந்தீர்கள். காலகாலமாகப் பழங்குடிகள் மீது படையெடுத்து அழிப்பதுதான் நம்மைப்போன்ற நாகரீக மக்களின் மனநிலையாக உள்ளது இல்லையா?
ஆர் ராஜேஷ்
ஒருமலைக்கிராமம்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
நாகம்
அன்பின் ஜெ
ஒரு சாமானியனின் முதல் கடிதத்திற்கு பதில் அனுப்புவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை
எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்பதைப் போன்ற முறைமை சொற்களோடு எழுதி எனக்கு பழக்கமில்லை, போலவே முப்பது வருடத்திற்கும் மேலாக எழுத்துலகில் இருக்கும் உங்களுக்கும் இது போன்ற முறைமை சொற்கள் அயர்ச்சியைத் தான் கொடுக்கும் என்பது என் அபிப்ராயம்
எழாம் உலகமும் ஏழாம் உலகத்தினைப் பற்றியும் எழுதும் உங்களிடம் நாகப்பாம்பைப் பார்த்திருக்கிறீர்களா என்று கேட்பது குழந்தைத்தனம் என்பதால் கேள்வியை வேறுமாதிரியாக கேட்கிறேன் உங்கள் முகத்திற்கு நேர் முன்னால் படமெடுத்து நிற்கும் நாகத்தைப் பார்த்திருக்கிறீர்களா..? ஆமெனில் மனதில் எந்த சலனுமுமின்றி அதன் அழகை குறைந்தபட்சம் இரண்டு நிமிடமேனும் ரசித்திருக்கிறீர்களா..?
நான் ரசித்திருக்கிறேன். என் வீட்டின் மல்லிகைப் பந்தலின் கீழே ஒரு குட்டி கருநாகம் (அதிகபட்சம் போனால் அரையடி நீளம் கூட இருக்காது) படமெடுத்து நின்றதை வைத்த கண் எடுக்காமல் நான் ரசித்திருக்கிறேன். அதன் பளபளப்பான கருப்பு மற்றும் மஞ்சள் கலந்த தோலினை. இரண்டு இன்ச் உயரத்திற்கு தன் தலையைத் தூக்கி அசையாது நின்ற அந்த பாங்கு. சற்றும் அங்குமிங்கும் நகராத அதன் நேர்பார்வை. மற்ற எந்த ஊர்வனவற்றிற்கும் இல்லாத ஒரு பெருமை பாம்பிற்கு மட்டுமே உண்டு. பரவசம் கலந்த பயம். எனக்கு அந்த குட்டி பாம்பைப் பார்த்தபொழுது பயமென்று எதுவும் தோன்றவில்லை மாறாக காதலியைப் பார்க்கும் காதலனின் பரவச மனநிலை தான் தோன்றியது. அதை அள்ளி கையிலெடுத்துக் கொள்ளும் ஆர்வமும் மூண்டது. குழந்தைகள் சுதந்திரமானவர்கள் ஜெயனண்ணா.. அவர்கள் வளர வளர தான் சுதந்திர விரும்பிகளாக மாறிவிடுகிறார்கள். அதனால் என் ஆசையை அடக்கிக் கொண்டேன்.
ஆனால் அந்த பயம் கலந்த பரவசத்தை வேறோரு இடத்தில் அனுபவித்தேன். உயிர் கொண்ட உடல்களோடு அல்ல ஏழடி உயர கொற்றவை சிலையோடு. பீர்மேடின் அருகிலிருக்கும் பாஞ்சாலி மேட்டிலிருக்கும் அந்த கருங்கல் கொற்றவை தான் எனக்கு அந்த பயம் கலந்த பரவசத்தைக் கொடுத்தாள். மூடுபனியால் சூழ்ந்திருந்த அந்த மேட்டின் கீழே நின்று பார்த்தபொழுது, சிவப்பு சேலையால் சுற்றப்பட்டிருந்த அந்த கொற்றவை நிஜமாகவே என்னைத் திகிலில் ஆழ்த்திவிட்டது. பின்னர் அந்த கொற்றவையின் அருகே சென்று நின்ற பொழுது பயமும் இல்லை பரவசமும் இல்லை அவளின் அழகு மட்டுமே என் கண்ணிற்கு தெரிந்தது.
பதில் கடிதம் எழுத துவங்கிவிட்டு வேறு ஏதேதோ எழுதிக் கொண்டிருக்கிறேன் மன்னிக்கவும். என் கடிதத்திற்குரிய பதிலில் “நான் பைக்கில் பின்னால் அமர்ந்துதான் செல்லமுடியும். அது ஒரு நல்ல அனுபவம் அல்ல” என்று எழுதியிருந்தீர்கள். பல நூறு கிலோமீட்டர்களுக்கு வண்டியை ஓட்டிச் செல்வது ஒருவகையான அனுபவமெனில் பின்னால் அமர்ந்து பயணிப்பது என்பது வேறு விதமான அனுபவத்தைக் கொடுக்கும் என்பது என் தரப்பு வாதம்.
மேலும் சாலையோர தேநீர் கடைகளில் காரில் சென்று இறங்கும் மனிதர்களையும் பைக்கில் சென்று இறங்கும் மனிதர்களையும் ஒன்று போல பார்ப்பதில்லை. முன்னவர்கள் அவர்கள் கவனத்தைப் பெரிதாக கவர்வதில்லை. பின்னவர்களை அவர்கள் பார்க்கும் பார்வையில் ஒரு தோழமை இருக்கும். இது என் தனிப்பட்ட அனுபவம்.
பிகு. படம் விரித்து நின்ற அந்த குட்டி நாகத்தின் படத்தையும் இத்துடன் இணைத்துள்ளேன்.
Never quit. winners never quit, quitters never wins…
thanks & regards
வாஸ்தோ
தொடர்புடைய பதிவுகள்
நாகமும் டி எச் லாரன்ஸும்
நாகம் (புதிய சிறுகதை)
நாகம்
கடி
நாராயணகுருகுலம் நிதியுதவி
ஊட்டி நாராயணகுருகுலத்தைச் சுற்றி ஒரு கம்பிவேலி அமைக்காவிட்டால் அதற்குள் காட்டெருதுகள் புகுவதைத்தடுக்க முடியாதென்னும் நிலை இருப்பதையும் அதற்கு சுவாமி வியாசப் பிரசாத் முயற்சி செய்வதையும் அதற்கு ஆர்வலர்களிடமிருந்து நிதி கோரியும் ஓர் அறிவிப்பு இந்தத்தளத்தில் வெளியாகியது. குறைவான நிதியே அதற்கு வந்துள்ளது. தேவை 7 லட்சம். இரண்டு லட்சம் வரைத்தான் சேர்ந்துள்ளது. ஆகவே வேலிபோடும் பணி தொடங்கப்படவே இல்லை.
உதவ எண்ணும் நண்பர்கள் உதவிசெய்யவேண்டும் என விரும்புகிறேன். மீண்டும் விண்ணப்பிக்கிறேன்
ஜெ
Cheques are to be drawn in favor of Narayana Gurukulam
Postal Address:
Swamy Vyasaprasad
Narayana Gurukulam
Fern Hill PO
Nigiris District
Tamilnadu India
Bank Transfers can be made to the following account
AC Name: Narayana Gurukulam
Current Ac No: 10834912288
IFS Code: SBIN 0000891
Bank Name: State Bank of India
Branch: Udhagamandalam
*
*
சுவாமி வியாசப்பிரசாத் வகுப்புகள் யூ டியூபில்
https://www.youtube.com/watch?v=ck8XZ...
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
January 25, 2017
சி.சரவணகார்த்திகேயனின் ’இறுதி இரவு’
சி. சரவண கார்த்திகேயன், இணைய ஊடகங்களில் எழுத ஆரம்பித்து அங்கிருந்து அச்சு ஊடகங்களுக்கு சென்று எழுத்தாளராக அறியப்பட்டவர். இணைய ஊடகங்களில் எழுதுபவர்களின் முக்கியமான சிக்கல் என்னவென்றால், அங்கு தரப்படுத்தப்பட்ட வாசகர்கள் இல்லை என்பது. சிற்றிதழ்களுக்கோ இடைநிலை இதழ்களுக்கோ அவர்களின் வாசகர்களுக்கோ அந்த இதழ்களாலேயே தரப்படுத்தப்பட்டு தெரிவு செய்யப்பட்டவர்களாக இருப்பார்கள். இணையம் அனைவரும் வந்து செல்லும் ஒரு பொதுவெளி போலிருக்கிறது.
தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் அழைக்கப்பட்ட விருந்தினர் நடுவே மூடிய அறையில் ஆற்றும் உரைக்கும் முச்சந்தியில் ஆற்றும் உரைக்குமான வித்தியாசம். எவர் கவனிக்கிறார்கள் அவர்களின் தகுதி என்ன அவர்களுக்கு என்ன புரிகிறதுஎன்பதே தெரியாமல் ஆற்றப்படும் உரை .இக்காரணத்தால் இணையத்தில் எழுதும் எழுத்தாளர்களால் எதிர்வினைகளால் செதுக்கப்படுவதும் மேம்படுத்தப்படுவதும் அரிது. பல ஆண்டுகள் இணையத்தில் எழுதிய போதும் கூட எவ்வகையிலும் தங்களது எழுத்தை மேம்படுத்திக் கொள்ளாதவர்களாகவே எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்.
அச்சு ஊடகங்களில் சென்ற உடனேயே எழுத்தாளர்களின் தரம் சற்று மேம்படுவதை ஆச்சரியத்துடன் கவனித்துக் கொண்டிருக்கீறேன். புது எழுத்தாளரின் எழுத்து அச்சுஊடகங்களுக்குச் செல்லும் போது அதைப்பரிசீலிக்க அங்கு ஆசிரியர் என்று ஒருவர் இருக்கிறார். அவருடைய எதிர்பார்ப்பை நிறைவேற்றவேண்டியிருக்கிறது. வாசக எதிர்வினைகளும் ஓரளவேனும் வர ஆரம்பிக்கின்றன. சமீபகாலமாக அறிமுகமான இணைய எழுத்தாளர்களின் வளர்ச்சிக்கான காரணம் இதுவே.
சி.சரவணகார்த்திகேயனின் இத்தொகுப்பின் சாதகமான அம்சமென்பது இவரது கதைகள் பல்வேறு கதைக்களங்களை நோக்கிச் செல்கின்றன என்பதுதான். அணுகுண்டு குறித்த வெண்குடை சிறுகதைக்கு அடுத்ததாக தாஜ்மகாலுக்கும் ஔரங்கசீபுக்குமான உறவைப்பற்றிய கறுப்பு மாளிகை, பிணத்துடன் புணர்பவனைப்பற்றிய கிராமத்துக் கதையான இறுதி இரவு தொடர்ந்து நவீனப்பெண்ணின் வாழ்க்கைப் பின்புலம் உள்ள மதுமிதா சிலகுறிப்புகள் என்னும் கதை என இக்கதைகள் தொடர்ந்து களம் மாறிக்கொண்டே இருக்கின்றன.
இது தொகுப்பை வாசிக்கும் சலிப்பை பெருமளவுக்கு இது குறைக்கிறது. ஆனால் தமிழ் நவீன இலக்கியத்துக்குள் இந்த அம்சம் எதிர்மறையாகத்தான் பார்க்கப்பட்டது. உதாரணமாக பூமணியின் கதைகளை எடுத்துக் கொண்டால் அவர் நன்கு அறிந்த கரிசல் காட்டு வாழ்க்கையை மட்டுமே அவர் மீண்டும் மீண்டும் எழுதுகிறார். கி.ராஜநாராயணனையோ கண்மணி குணசேகரனையோ சு.வேணுகோபாலையோ சுப்ரபாரதிமணியனையோ கூட அப்படிதான் வரையறுக்கமுடியும். ஒர் எழுத்தாளன் அவன் பிறந்து வளர்ந்து உளம் உருவான சூழலை தன்னியல்பாக நுட்பமாக வெளிப்படுத்துவதுதான் கலை என்பது சிற்றிதழ்ச்சூழல் உருவாக்கிய ஒரு மரபு. வெவ்வேறு கதைப்புலங்களுக்கு செல்வதும், கதைக்களச்சோதனைகளை மேற்கொள்வதும் வணிக எழுத்தாளர்களுக்குரிய குணங்களாகத்தான் கருதப்பட்டது. தமிழில் அத்தகைய முயற்சிகளை பி.வி.ஆர், சுஜாதா, பாலகுமாரன் போன்றவர்களே அதிகமும் செய்தனர்.
தீவிர இலக்கியப் புலத்திற்குள் அத்தகைய முயற்சிகள் மிக அரிது. ஓரளவேனும் செய்துபார்த்தவர் மிகத் தொடக்க காலத்தில் எம்.எஸ்.கல்யாணசுந்தரம். அதனாலேயே அவருடைய கதைகள் இலக்கியவிவாதங்களில் தவிர்க்கப்பட்டன. எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தின் பொன்மணல், மீன் சாமியார் போன்ற கதைகள் தமிழ்வாசகச்சூழல் அறியாத கதைக்களங்களுக்குள் செல்கின்றன. அவரது நாவலான இருபது வருடங்கள் ஒரு சராசரி தமிழ் எழுத்தாளனின் கற்பனைக்குள் அடங்காத ஒரு புதிய அனுபவப் புலத்தைமுன் வைக்கின்றது.
கறாரான எதார்த்தவாதமே இலக்கியத்தின் முதன்மை அழகு என்ற அளவுகோல் உருவான பிறகு இத்தகைய எழுத்துக்கள்மேல் ஒரு நிராகரிப்பு சிற்றிதழ்ச் சூழலில் உருவாகியது. ஒருபக்கம் கைலாசபதி முன்னெடுத்த முற்போக்கு எழுத்து அதைத்தான் சொன்னது. மறுபக்கம் அவர்களுக்கு நேர் எதிரான நிலைபாடு கொண்ட க.நா.சுவும் அதையே சொன்னார். ஆர்.சண்முகசுந்தரத்தை ஒரு அடையாளமாக முன்வைத்து எழுத்தாளன் நன்கறிந்த ஒரு வாழ்க்கைப்பின்புலம் கதையில் அமைய வேண்டும் என்பதையே அடிக்கோடிட்டபடியே இருந்தார் க.நா.சு. சுந்தர ராமசாமி அதை வலியுறுத்தினார்.
எளிமையான சுவாரசியத்திற்காக வெவ்வேறு கதைப்புலங்களுக்கு செல்வதென்பது எழுத்தாளனின் தரத்தை குறைக்கிறது என்றே நான் எண்ணுகிறேன். எழுத்தாளனின் அந்தரங்கத்தேடல் அவனை வழிநடத்த வேண்டுமே ஒழிய மேலோட்டமான ஆர்வங்களும் வாசகனின் கவனத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமே என்ற கட்டாயமும் அல்ல. புதிய கதைக்களங்களை எடுத்துக்கொள்ளும்போது நேரடி அனுபவத்தால் அடையப்படும் நுண் அவதானிப்புகள் இல்லாமலாகின்றன. பிற நூல்களைச் சார்ந்து எழுதும் இரண்டாம்தள சித்தரிப்பு வந்துவிடுகிறது.
ஆனால் வெவ்வேறு கதைப்புலங்களை எடுத்து எழுதிய மேதாவி, மாயாவி போன்ற எழுத்தாளர்கள் அவர்களின் சமகாலத்தவராகிய எம்.எஸ். கல்யாணசுந்தரத்திடமிருந்து வேறுபடுகிறார்கள். எம்.எஸ்.கல்யாணசுந்தரம் கதைச் சுவாரசியத்திற்காக அந்தக் கதைப்புலங்களை பயன்படுத்தவில்லை தன் அடிப்படையான வாழ்க்கைத் தேடல் சார்ந்துதான் புதிய கதைப்புலங்களைஅவர் தேர்ந்தெடுத்தார். அவரது கதைகள் அனைத்திலும் நேர்நிலை நோக்கு கொண்ட அவருடைய அணுகுமுறை அதற்கான சான்றுகளை தேடிச்செல்வதைத்தான் நாம் காண்கிறோம்.
அதன் பின்னர் அத்தகைய இலக்கியத்தகுதிகொண்ட மாறுபட்ட கதைப்புலங்களைத் தேடிச் செல்லும் எழுத்து என்றால் அ.முத்துலிங்கத்தை சொல்ல வேண்டும். தொழிற்சூழல், வணிகச்சூழல் என்றும் ,ஆப்ரிக்கா அரேபியா அமெரிக்கா என்றும் அவருடைய கதைகளின் புலங்கள் விரிந்து பரவிக் கிடக்கின்றன. ஆனால் வெறும் கதைச் சுவாரசியத்திற்காக அவர் ஒருபோதும் கதைக்கருக்களை எடுத்துக் கொள்வதில்லை. அவருக்கென்று ஒரு வாழ்க்கைத் தேடலும் அவர் அவற்றைக் கண்டடையும் தருணங்களும் உள்ளன. அவற்றுக்குத்தான் இந்த மாறுபட்ட கதைப்புலங்கள் பின்னணியாகின்றன.
மாறுபட்ட கதைப்புலங்களின் தேவை என்ன? ஏன் ஒரே நிலப்பின்னணியையும் வாழ்க்கைப்புலத்தையும் படைப்பாளி எடுத்துக் கொள்ளுகிறான் என்றால் அவன் அவற்றில் பிறந்து வளர்ந்த காரணத்தினாலேயே அவை அவனுள்ஆழமான பாதிப்பைச் செலுத்தி அவன் கனவுக்குள் புகுந்து படிமத்தன்மை கொண்டிருக்கின்றன என்பதனால்தான். வண்ணதாசனின் புனைவுலகில் அவர் திரும்பத் திரும்பச் சொல்லும் நகர்ப்புற மரங்கள் ஒருவகையான அந்தரங்கப் படிமங்கள் ஆ.மாதவனின் சாலைத்தெரு அவருக்கு உலகியல் கொந்தளிப்பு நிகழும் சமகால வாழ்க்கையின் குறியீடேதான் .
ஒரே கதைப்புலத்துக்குள் எழுதும் எழுத்தாளர் அவர் எழுதும் அனைத்தையும் எப்படியோ படிமங்களாக மாற்றுவதன் வழியாக அவரது புனைவுக்கு மேலும் மேலும் ஆழத்தை கொண்டுவருகிறார். தன் ஆழ்மனம் சென்று படியாத புதிய கதைக்களங்களை அவர் தேடும்போது வெறும் சுவாரசியச் சித்தரிப்பாகவே அவற்றை நிறுத்திவிடும் அபாயம் உள்ளது. ஆகவே தான் அவற்றை இலக்கியம் தவிர்க்க வேண்டும் என்று கோரப்பட்டது.
ஆனால் ஒரு எழுத்தாளனுடைய தேடல் தத்துவார்த்தத் தன்மை கொண்டிருந்ததென்றால் , புதிய சிந்தனைகளைச் சார்ந்தது என்றால் அவனுக்கு ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியின் வாழ்க்கை உருவாக்கும் ஆழ்படிமங்கள் மட்டும் போதாது. தத்துவத் தேடலின் நுட்பமான பல தருணங்களை விளக்கும் புதிய படிமங்களுக்காக அவன் தேடுகிறான். அவற்றை வரலாற்றிலோ அறிவியலிலோ பிற நிலங்களின் வாழ்க்கையிலோ அவன் கண்டடையக் கூடும். இந்தக் கட்டாயம் தான் அறிவியல் புனைகதைகளுக்கு இலக்கிய மதிப்பை அளிக்கும் அடிப்படையாகும்.
காலம் என்றால் என்ன என்ற வினாவை எழுப்பிக்கொள்வதற்கு ஒரு கிராம விவசாய பின்புலம் போதாது. உள்ளமும் மூளைநரம்பமைப்பும் வேறுவேறா என்று ஆராய குடும்பச்சூழல் போதாது.அதற்கு நுண்துகள் அறிவியலின் ஒரு படிமம் தேவையாக ஆகலாம். ஒரு அறுவைசிகிழ்ச்சைச்ச்சூழல் தேவைப்படலாம். அல்லது வரலாற்றுச்சூழல் தேவைப்படலாம். அதே போல ஆன்மீகமான தேடல்களை முன்வைப்பதற்கும் எளிமையான வாழ்க்கையின் பின்புலம் போதாமலாகும். மதம் சார்ந்தும், தொல்குடி வாழ்க்கை சார்ந்தும், இங்குள்ள தொன்மங்களையும் நம்பிக்கைகளையும் கலைவடிவங்களையும் அவன் தேடிச் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்படலாம்
ஆகவே ஒரு புதிய கதைக்களம் தேடிச் செய்யப்படுவதற்கான காரணமாக அமைவது அந்த ஆசிரியனின் தேடல் எப்படிப்பட்டது என்பது மட்டும் தான். அந்தக் கோணத்தில் பார்த்தால் சி.சரவண கார்த்திகேயனின் பலகதைகள் வெறும் சுவாரசியம் சார்ந்தே எழுதப்பட்டிருக்கின்றன என்ற எண்ணம் ஏற்படுகிறது. இவ்வாறு கதைகளுக்கான களங்களைத் தேடுவது தனது சிந்தனைத்தேடல் சென்று துழாவும் ஒரு வினாவுக்கான விடையாக அமைகிறதா அல்லது புதிதாக வெளிப்படவேண்டுமென்ற வெறும் விழைவு மட்டும் தானா என்பதை ஆசிரியர் பரிசீலித்துக்கொள்ள வேண்டும். இறுதி இரவு போன்ற கதைகளில் அவருடைய அடிப்படையான தேடல் வெளிப்பட்டுள்ளது. கறுப்பு மாளிகை போன்ற கதைகளில் வெறும் ஆர்வம்தான் உள்ளது.
சரவண கார்த்திகேயனின் மிகப்பெரிய பலவீனம் என்பது அவருடைய மொழிநடை அது இன்னும் பயிலப்படாததாகவும், வார இதழ்களிலிருந்து பெற்ற தேய்வழக்குகள் நிறைந்ததாகவும் இருக்கிறது. இது வாசிப்பில் ஒர் ஆழமின்மையை வாசகன் உணரச்செய்கிறது. ஒரு குறிப்பிட்ட தருணத்தைச் சித்தரிப்பதற்கான அனைத்து தேய்வழக்குகளையும் ஆசிரியன் தவிர்த்துவிடுவானென்றால் அவன் புதிதாக ஒன்றை சொல்லிவிடவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறான். அங்குதான் நடை என்பது உருவாகும். தொலைந்துபோன ஒன்று திரும்பக் கிடைக்கும் போது ’வயிற்றில் பால் வார்த்தது போல் இருந்தது’ என்று எழுதுவது தான் இயல்பாக வரும். அத்தகைய சொல்லாட்சிகளை தவிர்க்கும்போது அந்த உணர்வை எப்படிச் சொல்ல வேண்டும் என்ற அறைகூவலை எழுத்தாளன் எடுத்துக் கொள்கிறான். அதுதான் அவனுடைய சுயமான அவதானிப்புகளையும் அவனுக்குள் இருக்கும் தனித்துவமான மொழியையும் வெளிக்கொண்டுவரும் எழுத்தாக அமையும்.
நல்லிரவின் பூரணை ஆக்ராவின் மீது வெண்ணமுதினை பொழிந்துகொண்டிருந்தது” என கறுப்புமாளிகை ஆரம்பிக்கிறது. “ஷாஜகான் சிலமாதங்கள் வரையிலும் நடைபிணமாகவே ஆகிப்போனான். அவர் விழிகளிலிருந்து கண்ணீர் அவரை அறியாமலேயே சுரந்து உதிர்ந்துகொண்டே இருக்கிறது” என அதில் ஒரு சித்தரிப்பு வருகிறது. இதுதான் தட்டையான சித்தரிப்பு என்று சொல்லப்படுகிறது. இந்தத்தருணத்தில் எவராயினும் எழுதப்படும் சாதாரணமான வரிகள் இவை. சரவணக்கார்த்திகேயன் மட்டுமே எழுதும் வரிகள் இங்கு இருந்திருக்கவேண்டும்
இந்தச் சாதாரண வரிகளைத் தவிர்த்தால் ஒரு பெருந்துயரத்திற்கு பின் அக்கதாபாத்திரம் என்னவாக மாறினான், எப்படி அவன் துயரம் வெளிப்பட்டது என்பதை தனித்தன்மையுடன் சொல்வதுதான் ஆசிரியனின் அறைகூவலாக இருக்கும். உதாரணமாக “அந்நிகழ்வுக்கு பிறகு ஷாஜகான் பேசுவதே நின்றுவிட்டது. ஆனால் அவர் உடல் உதடுகள் எப்போதும் ஒரு உச்சரித்து அசைந்து கொண்டே இருந்தன. கண்கள் நிலையற்றிருந்தன. விரல்கள் நடுங்கியபடி ஒன்றையொன்று தொட்டுக்கொண்டு அசைந்தன” என்றொரு சித்திரம் வந்திருக்கிறது என்று கொள்வோம், வாசகன் அங்கொரு மனிதரைப்பார்க்கிறான். புறச்சித்தரிப்பு வழியாகவே அந்த துயரம் சொல்லப்படுகிறது. “நான்குபக்கமும் கல் அடுக்கி வாசலோ சாளரமோ இல்லாமல் கட்டி எழுப்பப்படும் ஒரு கல்லறைக்குள் அவன் சிக்கிக்கொண்டதாக உணர்ந்தான்” என்றால் ஒரு படிமம், அல்லது கனவு வழியாக அதே உணர்வு சொல்லப்படுகிறது. மேலே குறிப்பிட்ட தேய்வழக்குகள் மட்டும் வரும்போது எந்த உணர்வும் தொடர்புறுத்தப்படுவதில்லை.
இறுதிஇரவு அனைத்து வகையிலும் ஒரு நல்ல சிறுகதைக்கான முடிவைக் கொண்டிருக்கிறது. சிறுகதையின் முடிவென்பது வாசகனுடன் நிகழ்த்தும் ஒரு விளையாட்டாக அமையக்கூடாது. ’மயிரு’ கதையில் வருவது போல கதை படித்து முடிக்கும்போது எதிர்பாராத ஒரு சிறிய காய்நீக்கத்தை ஆசிரியன் நடத்திவிட்ட உணர்வை மட்டுமே வாசகன் அடைவான். சிறுகதையின் முடிவு ஒரு கருத்தை கதாபாத்திரம் சொல்வது போல் அமையக்கூடாது. கறுப்பு மாளிகை ஔரங்கசீப் தான் செய்த ஒரு செயலை தானே நியாயப்படுத்தி பேசுவது போல அமைந்துள்ளது. முடிவு அக்கதையின் கட்டுமானத்துக்குள் தன்னியல்பாக வரவேண்டிய ஒன்று. அக்கதை எழுப்பும் வினாக்களுக்கு தன்னியல்பான திருப்பம் வழியாக முன்னகர்வை அளிப்பது. அதுதான் சிறுகதைக்குரிய இறுதி.
அதற்கு உதாரணம் இறுதி இரவு கதையின் முடிவு. அதுவரைக்கும் சொல்லப்பட்ட மொத்தக் கதையுமே வேறொன்றாக திரும்பி மீண்டும் ஒரு கதையை உருவாக்கத் தொடங்குகிறது. அப்போதுதான் வாசகன் ஆசிரியனூடாக தன்னுடைய சொந்த கதைப்புலத்துக்கு சென்று சேர்கிறான். அக்கதையை தன் வாசிப்பினூடாக விரித்து எடுக்க முயற்சி செய்கிறான்.
இன்னொரு குறிப்பிடத்தகுந்த கதை மதுமிதாசில குறிப்புகள். கதை சொல்லும் முறையில் புதுமையும் சமகால இளைஞர் வாழ்க்கையை குறித்த நுண்ணவதானிப்புகளும் உள்ளன. இதனாலேயே அக்கதை கூர்ந்து வாசிக்க வைக்கிறது. இக்கதையில் சரவண கார்த்திகேயன் வெற்றியும் தோல்வியும் அடைகிறார். வெற்றி என்பது ஒரு இளம் பெண் இன்றைய நவீன வாழ்க்கையில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் அனைத்து களங்களையும் கலைடாஸ்கோப்பை சுழற்றுவது போல மிக விரைவாக சித்தரித்துக் காட்டுவதிலுள்ள நுட்பம். ட்விட்டரில், முகநூலில், மின்னஞ்சலில், கடிதங்களில், ஸ்கைப்பில், கைப்பைக்குள் என ஒரு பெண் எங்கேல்லாம் எந்தெந்த வகையில் வெளிப்படுகிறாள் என்பது மிக ஆரவமூட்டும் ஒரு வாசிப்புக்குரியது.
உண்மையில் இந்த அளவுடன் நின்றிருந்தால்கூட இது நல்ல கதையாக அமைந்திருக்க கூடும். அப்பெண்ணின் ஒவ்வொரு வெளிப்பாடுகளுக்கும் உள்ளே இருக்கும் முரண்பாடும் ஒவ்வொரு வெளிப்பாட்டிலும் அந்த வடிவம் அவளிலிருந்து உருவாக்கி எடுக்கும் ஆளுமைகளுக்கு இடையே உள்ள வேறுபாடும் மிக முக்கியமானது. ஆனால் கதை அங்குமுடியவில்லை என்ற எண்ணத்தால் ஒருகொலை, வைரங்கள் என்று மிகச்செயற்கையான ஒரு திருப்பத்தைஇறுதியில் கொடுக்கிறார். நவீனச்சிறுகதையின் அறைகூவல் வாழ்க்கைத்தருணங்களில், மனிதர்களில் வெளிப்படும் வாழ்வின் புதிர்களையும் தத்துவங்களையும் முன்வைப்பதே ஒழிய திருப்பங்களை அளித்து மகிழ்விப்பதல்ல என ஆசிரியர் உணர்ந்திருக்கவில்லை என்பதனால் இது நிகழ்ந்துள்ளது.
உண்மையில் அந்தத் திருப்பத்திற்காகத்தான் இத்தனை தகவல்கள் என்றால் இது சலிப்பூட்டக்கூடிய சித்திரமாக மாறிவிடும். அதற்கு இத்தனை நுண்தகவல்கள் எந்த வகையிலும் தேவையில்லை. ஒரு வார இதழில் கதை பிரசுரமாகவேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு முடிவு போல் இருக்கிறது. வாசித்து வரும்போது பல ஆடிகளுக்கு நடுவே நின்றிருக்கும் ஒரு பெண்ணை ஆடிகளினிடம் மட்டுமே பார்க்கும் ஒரு அனுபவம் எனக்கு கிடைத்தது. ஒவ்வொரு ஆடியும் இன்னொன்றை பிரதிபலித்து ஒரு முடிவின்மையை உருவாக்கியது. மிக முக்கியமான ஒரு கதை என்ற எண்ணத்தில் படித்து சென்று இறுதியில் கைவிடபப்ட்ட உணர்வை அடைந்தேன்.
அதே போல முக்கியமான முயற்சி ஆனல் நழுவவிடப்பட்டது என்று சொல்லவேன்டியது மண்மகள் என்னும் கதை. ராவணன் மண்டோதரி போன்றவர்களைச் சொல்வதில் நிகழ்ந்துள்ள தேய்வழக்குகளை தவிர்த்தால் ஆர்வமூட்டும் ஒரு கருவை எடுத்துக் கொண்டிருக்கிறது. சீதை ராவணனின் மகளாக இருக்கிறாள் பல நாட்டார் கதைகளில். அந்த வாய்ப்பை எடுத்துக் கொண்டு வெவ்வேறு கோணங்களில் ஒன்றுடன் ஒன்று பொருத்தி வெவ்வேறு கோணங்களில் ஒன்றுடன் ஒன்று பொருத்தி ஒரு நவீனக் கதையை சொல்ல முயன்றிருக்கிறார்.
இத்தகைய கதைகளை எழுதும்போது ஆசிரியன் சீட்டுகளை புரட்டி புரட்டி வித்தை காட்டுவது போல் தோன்றாமல் தன்னியல்பான் ஒழுக்குடன் எழுதுவது முக்கியமானது. இந்தக் கதையை ஆசிரியர் கூற்றாக அல்லாமல் வெவ்வேறு முனிவர்களின் கூற்றாகவோ நூல்களின் கூற்றாகவோ சித்தரிப்புகளாகவோ சொல்லி ஒன்றுடன் ஒன்று இணைத்திருந்தால் தன்னியல்பான ஓட்டம் அமைந்திருக்கக்கூடும். அந்தந்த கதை வடிவுகளுக்குரிய மொழி நடையில் அமைக்கப்பட்டிருந்தால் கதை முழுமையடையும். இந்தக் கதையின் நவீனத்தன்மை காரணமாக இந்த சித்தரிப்புகள் அனைத்தும் ஒரு நவீன கணிப்பொறி ‘ஆப்’ வழியாக விளையாடுவது போல சேர்க்கப்பட்டிருந்தால் கதையின் வாசிப்பு சாத்தியம் அடுத்த கட்டத்திற்கு செல்லும். எவ்வளவோ சாத்தியங்கள்
ஒரு தொடக்க எழுத்தாளனின் முதல்தொகுதி இத்தகைய நல்ல வாசிப்புத்தன்மையுடன் இருப்பது பாராட்டுக்குரியது. இன்றைய எழுத்தின் மாதிரி என்பதனால் பலவகையிலும் கவனத்துக்குரியது இந்ந்நூல். தனது கதைகளை நிறைகளையும் குறைகளையும் கூர்ந்து நோக்கி தனது வல்லமை என்ன என்று அடையாளம் கண்டு கொண்டு மேலதிக காலடி எடுத்துவைப்பதே சிறந்த எழுத்தாளனின் வழிமுறையாக இருக்கும். வலிமையான ஒரு காலடியோடுதான் சரவண கார்த்திகேயன் நுழைந்திருக்கிறார்.
இறுதி இரவு முன்னுரை
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
தலையல்லால் கைமாறிலேன்- கடிதம்
ஓவியம்: ஷண்முகவேல்
திரு.ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம் ,
நலமாக இருக்கிறீர்களா? நீண்ட இடைவெளிக்கு பின் தங்களுக்கு எழுதும் கடிதம் . இதற்கு முன்பாக மூன்று கடிதம் எழுதியிருந்தேன் . என்ன காரணத்தினாலேயோ அதற்கு தங்களிடமிருந்து பதில் இல்லை.கடைசிக் கடிதம் நான் சிங்கப்பூரில் இருந்த போது உங்களின் சிங்கப்பூர் சந்திப்பு குறித்த கடிதம் கண்ட பின் எழுதியது. நீங்களும் அப்போது அங்குதான் இருந்தீர்கள்.என் பயணத்திட்டத்தை அதை ஒட்டியே ஒருங்கமைத்திருந்தும் ஏமாற்றமே.
விஷ்னுபுரம் விவாதப் பகுதியை ஆழ்ந்து படிக்க முற்படும் போதுதான் எனக்கு ஒருவிஷயம் புரிபட ஆரம்பித்தது. அது எனக்கு ஒரு மின்னலின் பொறி எனவும் அதே சமயம் புரியாமை என்கிற ஆயாசத்தையும் ஒரே சமயத்தில் ஏற்படுத்தியது. சிக்கலான கோட்பாடுகளை புரிந்து கொள்ள அது தன் உள் அடுக்குகளிலில் துழாவத் தொடங்கியது ஆழ்படிமங்களில் அது இருப்பதாக உணர்த்திய பின் அது “அகப்பையில் இருந்தும் புறப்பைக்கு” வர மறுத்தது.அது ஒரு வகையான வதை. நானே இரண்டாக பிளந்தது போல ஒரு உணர்வு.
தங்களை சந்திக்க நினைத்தது முதல் செல் என்றும் செல்லாதே என்றும் இரட்டை நிலைபாடு விவாதித்து கொண்டே இருந்தது.உங்களை சந்திக்கும் அந்த கணம் வரை படுத்தி எடுத்தது.ஆனால் நான் கோவை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருந்தேன்.இறுதியாக எதற்கான இந்த தயக்கம், எதனை எது எதற்கு அஞ்சுகிறது என கேள்விகளுக்கு பின் தீர்க்கமாக தங்களை சந்திக்க வேண்டிய அவசியத்தை அனுமானித்த பிறகே உங்களை கோவையில் சந்தித்தேன்.
ஒரு கணம் அதனின்று வெளிவராமல் போயிருந்தால் பெரும் இழப்பையும் அந்த இழப்பின் இழவை அறியாதே போயிருப்பேன்.தங்களின் இந்து ஞானபரபின் கருத்துகள் ஏதாவதொரு வடிவத்தில் தங்கள் ஆக்கங்களிலும் பதிவுகளிலும் இருந்து கொண்டே இருக்கிறது.தங்களின் வெண்முரசின் ஆக்கத்திற்கு பின் உங்கள் மனநிலை என்னவாக இருக்க கூடும் என யூகித்துப் பார்க்கிறேன்.அனைத்தையும் கொட்டி விட்ட நிம்மதியா? அல்லது சொல்லாதே விட்டவை இதைவிட அதிகம் என்கிற குறையா? தெரியவில்லை.
தீவிரமான ஶ்ரீவைஷ்ணவ குடும்பத்தில் பிறந்த எவருக்கும் உள்ள அகவய அபிப்ராயம் அதைத் தொடர்ந்த புறவயமான பேச்சினால் ஏற்பட்ட ஒற்றை சிந்தனை என வளர்ந்தாலும்,ஓயாத ஒவ்வாமையும் சேர்ந்தே வளர்ந்தது.அது எங்கும் எவர்மத்தியிலும் ஒத்துபோகாத மனநிலையை எப்போதும் அளித்துவந்தது. இயற்கையான சுபாவம் அதைப் பற்றிய பேசும் திடத்தை கொடுக்கவில்லை.எங்கோ ஏதோ சரியில்லை என்னும் புரிதலையும் மட்டும் அது உள்ளே பொதிந்து வைத்தது.
விசிஸ்டாத்துவைத சித்தாந்தத்தை “எம்பெருமானார் தரிசனம்” என்பது ஶ்ரீவைஷ்ணவத்தில் பிரசித்தி.அது சம்பந்தமாக புத்தகங்களை இருபது வருடங்களாக படித்ததினால் ஏற்பட்ட பாதிப்பு அது பற்றிய சிந்தனை ஓட்டத்தில் “வெண்முரசை” புரிதலுக்கு எடுக்க என்னிடம் நிறைய குறைபாடுகள் உள்ளதாக தோன்றியது. அதுவே என்தேடலை அதிகப்படுத்தியது.
“பேசிற்றே பேசலல்லால்,”ஏகக்கண்டர்கள்” என்று சொல்மாறாது அர்த்தம் மாறாதே பேசுதல் சம்பிரதாயம் என்றிருக்கும் போது அதில் நவீன சிந்தனை பற்றி பேசுதலை “தான்தோன்றி” என குற்றமாக பார்ப்பது வழக்காரு.நான் இந்த பொதுச் செயளாலர் பதவிக்கு வரும்போது சம்பிரதாயப்படி கடமைகளை ஆற்றிய பிறகு என்தேடலுக்கு வடிகாலாக பார்த்தது “திறந்த மன்றம்” அதில் நவீன பார்வைகள் முன்வைக்கப்பட வேண்டும் என்கிற ஆவலில் பல திக்குகளுக்கு ஓடி நின்றது, உங்களை சந்தித்த பிறகுதான்.
“முந்தைய சிந்தனைகளின் பிந்தைய தொகுப்புத்தான் புதுமை என்பது. முந்தைய சிந்தனைகளை தொகுத்திருக்கின்ற தொகுப்பு முறையும் அவற்றில் காணப்பட்ட இடைவெளிகளைத் புதிய தொகுப்பினால் விளக்கக்கூடிய நிரவல்களை கொண்டது” என்கிற உங்கள் எழுத்து பல அடுக்கு திறப்புகளைக் கொண்டாதாக இருந்தது.என்னை தெளிவு படுத்தியது.பல வருட மண்டை குடைச்சல் ஒழிந்து தெளிவென சிந்திக்க இயலுகிறது.
பகவத் சங்கல்பம் என்றே தயங்காது கூறுவேன்.எனக்கு “வெண்முரசு” கிடைத்ததற்கு.ஆனால் அதை தொடர்வது எளிதானதாக இல்லை.ஒவ்வொரு கருத்திற்கும் என் உள்ளே ஒன்று எழந்து எழுந்து மறுத்து மறுத்து முரண்டு அடித்தது,அதனுடனான ஒரு ஒப்பந்தத்திற்கு வரும் வரை. அதன் பிறகே அது என்னை “வெண்முரசை” படிக்கவிட்டது.
“வெண்முரசு” படிப்பது ஒரு தொடர் ஓட்டம் போல.விடாது பின் தொடருதல் பெரும் ஆயாசத்தையும் அதை ஒட்டிய வேகத்தையும் இணைத்தே கொடுத்தது. தங்களின் வெவ்வேறு ஆக்கங்களையும் ஏக கால வாசிப்புகளுக்கு பிறகு உற்று நோக்கினால் அவற்றின் ஊடுபாவாக உங்கள் ஆழ்மனப் படிமங்கள் “வாழுதல்” என்கிற பரிணாமம் கொண்டு எழுந்து வருவதாகப் புலப்படுகிறது.இத்தனை வருடங்களாக ஊற்றாக பெருகிய எண்ணப்பெருக்கு மதகு உடைப்பெடுக்கும் முன் பல ஆக்கங்களின் வழியாக அது பெருகி வழிந்தாலும் , வெண்முரசு ஆக்கம் உங்களை வற்ற அடிக்கும் முயற்சியாக தெரிகிறது.அது என்னை என்னவோ செய்கிறது.அது பற்றி தனியாக எழுத வேண்டும்.
கடந்த இரண்டு வருடங்களாக உங்கள் எழுத்துக்களையே படித்துவருகிறேன்.இதுலிருந்து வெளிவர ஜெயகாந்தன் கல்கி நா.பா என பல்வேறு எழுத்தாளர்களின் ஆக்கத்தை படிக்க முயற்சித்து ஏனென்று தெரியவில்லை அனைத்தும் தடைபற்றி நிற்கிறது.
“நம் அறிவுச்சூழலில் இந்து மெய்ஞான மரபு குறித்துக் கடுமையான துவேஷம் கொண்டவர்கள் ,மற்றும் மிகப் பெரிய பக்தி கொண்டவர்கள் பலர் உள்ளனர் இருசாராருக்குமே இம்மரபு குறித்து போதுமான அளவு தெரியாது இவர்கள் வெறும் மனப்பதிவுகளையும் ஒற்றைப்படை புரிதல் மட்டும் உள்ளவர்களே.வெறுப்பவர்களுக்கும் வழிபடுபவர்களுக்கும் இடையே வியக்கதகு ஒற்றுமை.இந்து ஞான மரபு என்பது முற்றிலும் ஆன்மீக மரபுதான் என்றும் , அது தவிற்கவியலாத மதச்சடங்குகளுடனும் நம்பிக்கைகளுடனும் தொடர்பு கொண்டுள்ளது என நம்புவதுதான்“.என்றீர்கள்.
இதில் நான் இரண்டாவது வகை
“இந்நூல் இந்த இருவகைச் சிறுமைப்படுத்துதல்களுக்கும் எதிரான தரப்பை தெளிவாக முன்வைக்கிறது” என்கிற வரி ஆழ்ந்த திகைப்பை ஏற்படுத்தி அதுவரை நான் கொண்டிருந்த முன் முடிவுகளை கலைந்து விட்ட பிறகே அது தன் நிஜமாகவே முகத்தை காட்டத்தொடங்கி பின் என்னை முழுமையாக உள்ளிழுத்துக் கொண்டது.
என்னுடனான என் ஒப்பந்தம். உங்கள் கருத்துக்களை இரண்டாக பிறித்துக்கொள்ளவது ஒன்று;அனைத்தையும் அது சொல்லும் வகையில் புரிந்து பொதிவது. இரண்டு;ஏற்கவியலாததை தனியாக வைத்துக்கொள்வது.
மேலும் ஏற்கவியலாததை இரண்டாக பிரித்துக்கொள்வது.ஒன்று;அவற்றை அக்கால சூழல் உணர்ந்து புரிந்து கொள்வது, அல்லது தற்கால சூழலை ஒட்டி அது திரிபடைந்திருக்கும் நிலையை அனுமானிப்பதின் வழியே அவற்றை புரிந்து கொள்ள முயற்சிப்பது.இரண்டு; மற்றவற்றை கடக்கவியலும் காலம் வரை விட்டு வைப்பது.ஆனால் உங்களின் “ஆறு தரிசனம்” ஆக்கம் வாசிப்பிற்கு பிறகு இந்தப்பகுதியில் தற்கால சூழலை ஒட்டி அது திரிபடைந்திருக்கும் நிலையாக அனுமானிப்பதின் வழியே அவற்றை கடப்பது என்கிற ஒரு பொது புத்தி எழுந்து வந்துள்ளது.அவற்றை நியாயப்படுத்த தொடங்கினேன்.
உங்கள் ஆறு தரிசனம் ஆக்கத்தை வாங்கி பல மாதங்களாகி இருந்தது .அதை படிப்பதற்கு ஏற்ற மனநிலைக்கு காத்திருத்தேன்.தங்களின் “கிராதம்” முற்றிய பிறகு இந்த இடைப்பட்ட காலத்தில் ஆறு தரிசனம் வாசிக்க துவங்கினேன்.கிராதத்தில் அர்ஜூனனின் ஸ்வர்காரோகணப் பகுதியில் “அர்ஜூன பாலி” விவாதம் மின்னெளென பொறிதட்டியதாக உணர்ந்ததை வார்த்தையில் வடிக்க இயலாமை என்பது மற்றொரு வதை.
இன்று என் சிந்தனை வெளிப்பாடாக நான் நினைக்கும் எல்லாம் என் ஆழ்மன எண்ணங்களாக உங்கள் எழுத்திலிருந்தே எடுத்து தொகுத்தபடி முன்நகர்கிறேன்.எனக்கு எழுதிய கடிதத்தில் நீங்கள் உங்களை “சுத்த அத்வைத கொள்கைகளை கடைபிடிப்பவன்” என கூறியிருந்தீர்கள்.அது அப்போது எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை கொடுத்தது.இன்றைய சூழலில் அது சாத்தியமானதா என நினைத்தேன் ஆனால் வெண்முரசு மற்றும் ஆறு தரிசனங்கள் இன்றைய காந்தி போன்ற ஆக்கத்தின் வாசிப்பிற்கு பிறகு அதை முழுவதுமாக புரிந்து கொள்வதுடன் உங்களை மிக அனுக்கமாகவும் உணர்கிறேன்.
“இன்றைய காந்தி” வாசிப்பு ஒரு ஈடு இணையற்ற ஆக்கம்.நான் ஆரசியலை ஒரு அனுபவமாக பார்த்திருக்கிறேன் என்னால் அதற்குள் இந்தளவு பிரவேசிக்க இயலும் என நினைத்துப்பார்க்க வில்லை.கால மடிப்புகளை நீவி தட்டையாக்கியது உங்கள் எழுத்து.எனவே என்னால் அந்த காலகட்டத்தை பார்க்க முடிந்தது காந்தியை புரிந்து கொள்ளமுடிவதுடன் நானும் அங்கு ஒரு நபராகவே நின்றிருந்தேன் என்றால் மிகையல்ல.
அம்பேத்கார் பற்றிய குறிப்பில் அவரை பற்றிய எதிரும் புதிருமாக ஆர்பரிக்கும் கடல் போன்ற தரவுகளின் இடையே எதிலும் படாத பயணத்திற்கு பாதை காட்டி விளக்கியது பிரம்மிப்பைக் கொடுத்தது.
என்ன சொல்ல ” தலையல்லால் கைமாறிலேன்” என்பதைத் தவிற .என்னை எனக்கே அடையாளம் காட்டி எனக்கென ஒரு உலகலளாவிய கருத்தும் நேரான பார்வை,பாதை இருப்தாக நினைக்க வைத்ததற்கும்.எனக்கென ஒரு எழுத்து உருவாவதற்கும் காரணமான உங்களை வாழ்நாளில் மறக்க இயலாது.ஏறக்குறைய இரண்டு வருங்களாக நிறுத்தி வைத்திருந்த இயக்க விஷயங்களை தடையற தொடர முடியும் என நினைக்கிறேன்.
அரிகிருஷ்ணன்
பாண்டிச்சேரி
***
அன்புள்ள அரிகிருஷ்ணன்
உங்கள் பயணத்தைப்பற்றிய சித்திரம் எனக்கு அணுக்கமானதாக இருந்தது. நான் வாசித்ததும் இப்படித்தான் என்றுதான் சொல்லவேண்டும். முரண்படுதல், குழம்புதல், மேலும் சற்று முன்னகர்தல் என்றுதான் நானும் சென்றுகொண்டிருக்கிறேன். நீங்கள் உடன்வரும் உணர்வு எனக்கு ஏற்படுகிறது
பணிகள் உங்கள் இயல்புக்குரியவை என உணர்ந்தால் அதை தீவிரமாகச் செய்வதே சரியானது. அனைத்தையும் அதனூடாகவே கண்டுகொள்ளமுடியும்
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

