Jeyamohan's Blog, page 1655
April 7, 2017
ஒளிர்வோர் -கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன்
இந்த இலுமினாட்டிகள் பற்றி அதிகம் வேண்டாமே
ஏற்கனவே ஒரு வெட்டி கூட்டம் லட்சத்திற்கும் மேலான youtube பார்வையாளர்களை கொண்டுள்ளது ..இது பற்றிய நகைச்சுவை விவாதம் கூட இன்னும் பல லட்சம் பேரை அந்த youtube இழுக்க கூடும். இது அவர்களுக்கு ஒரு விளம்பரமாக அமைந்துவிட போகிறது.
PS: ஏனென்றால் இதை seriousஆக எடுத்து கொண்டு இலுமினாட்டிகள் பற்றி அதிகம் பேச ஆரம்பித்து விடுவார்கள்
நன்றி
விஜய்
***
அன்புள்ள ஜெ
இல்லுமினாட்டிகள் பற்றிய கடிதம் கண்டேன். ஆச்சரியமாக இருக்கிறது. அவர் உங்கள் படைப்புகளை எல்லாமே படித்திருக்கிறார். இப்படி பலபேரை பார்த்திருக்கிறேன். ஒரு நூலை வாசிக்கையில் அது ஒரு அறிவை அளிக்கும் என நாம் நினைப்போம். அதிலும் தாங்கள் விரும்பியதையே வாசிக்கிறார்கள். சம்ஸ்கிருதத்தில் ஒரு பழமொழி உண்டு. பால்நிறைந்திருந்தாலும் கொசு பசுவின் மடியில் ரத்தமே குடிக்கும் என்று. இந்த கொள்கைக்காரர்கள் அரசியல்காரர்கள் மதக்காரர்கள் எல்லாம் படிப்பதே மேலும் வாசல்களை மூடிக்கொள்ளத்தான்
ராம் ஸ்ரீனிவாஸ்
***
ஜெ
இலுமினாட்டிகளைப்பற்றிய அந்தக் கடிதம் உண்மையிலேயே முக்கியமான விஷயங்களைச் சொல்கிறது. நீங்கள் உண்மையில் அந்த வலையில் இல்லாமலிருக்கலாம். ஆனால் நீங்கள் அவர்களின் கருத்துக்களினால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள். வைரஸ் பாதிப்பு போல
அரசு ராஜாங்கம்
***
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–67
67. வேள்விக்குதிரையின் கால்கள்
குருநகரியின் சந்திரகுலத்து அரசன் யயாதி சர்மிஷ்டையை மணங்கொள்ளவிருக்கும் செய்தி ஹிரண்யபுரியை பெருங்களியாட்டு நோக்கி கொண்டுசென்றது. சம்விரதரும் உடன்சென்ற அணிப்படையினரும் மீண்டு வருவதை முறைப்படி அறிவிக்கவில்லையென்றாலும். அரண்மனையிலிருந்து அப்பேச்சு வெளியே செல்வதற்கு சொல்லிலா ஒப்புதல் அளிக்கப்பட்டது. விளைவாக அரண்மனை ஊழியர்கள் அனைவரும் அரசுசூழ்தலில் கரைகண்டவர்களாக தோற்றம் தரத்தொடங்கினர். ஒவ்வொருவருக்கும் இவ்வளவே என அளந்து அவர்கள் செய்திகளை அளித்தனர்.
“இன்னமும் முழுச்செய்தி வரவில்லை. வந்தவற்றிலும் பெரும்பகுதியை வெளிச்சொல்லலாகாதென்று அரசுநெறிகள் தடுக்கின்றன. இளவரசியை குருநகரியின் சந்திரகுலத்து அரசர் மணம்கொள்வது உறுதி. அரசமுறையில் பிற பேச்சுக்கள் கோடை முடிந்ததும் தொடங்கும். சம்விரதர் வந்துகொண்டிருக்கிறார். எஞ்சியதை அவர்தான் சொல்ல வேண்டும். எதுவானாலும் நம் ஐங்குலப்பேரவை கூடி சொல்லாய்ந்தே முடிவெடுக்கும்” என்றார் அடுமனைப்பணியாளராகிய சம்புகர்.
“குருநகரியின் ஷத்ரிய அரசர்கள் இதுவரை அசுரகுலத்து அரசியை இடம் அமர்த்தியதில்லை. வேதவேள்விகள் இயற்றவேண்டுமெனில் குலத்தூய்மை முதன்மையானது. நமது அரசரின் படைபலத்தை அஞ்சியிருக்கலாம். இளவரசியின் எழில்நலத்தை எண்ணியிருக்கலாம். நம் செல்வத்தின்மீதும் ஒரு கண் அவர்களுக்கு உண்டு என்பது என் கருத்து. சம்விரதர் சொன்ன பின்னரே அவர்கள் எதிர்பார்ப்பு என்னவென்று தெரியும்” என்றார் தேர்ப்பாகனாகிய சூடகர்.
அவர்களைச் சூழ்ந்து நின்று அச்செய்தியை கேட்ட ஒவ்வொருவரும் அரண்மனைப் பணியாளராக மாறி தங்களுக்குள் நடித்துக்கொண்டனர். அங்கிருந்து சென்று பிறரிடம் சொல்கையில் தங்களுக்கு மிக அணுக்கமான ஒருவர் அரண்மனையில் இருப்பதாகவும் அவர் தன்னிடம் மட்டுமே சொன்ன செய்திகளில் ஒரு பகுதியை மட்டுமே பகிரப்போவதாகவும் முன்னுரைத்தனர். “ஆயிரம் யானைகள் தூக்கிச் செல்லும் பொன்னை யயாதி கேட்டிருக்கிறார். கருவூலத்தில் அத்தனை பொன் இருக்கிறதென்பது உண்மை. அதை அளித்தால் அதைக் கொண்டே ஷத்ரியர் படைதிரட்டி நம்மை எதிர்ப்பார்களோ என்றுதான் அரண்மனை ஐயப்படுகிறது” என்றார் நெய்வண்டி ஓட்டுபவராகிய கூர்மர்.
அவரைச் சூழ்ந்திருந்த பிற நெய்வண்டி ஓட்டுபவர்களில் ஒருவர் “ஆம், அதையும்தான் பார்க்கவேண்டும். நம்மிடம் பெற்ற செல்வத்தைக் கொண்டே நமக்கெதிராக படைதிரட்டினால் என்ன செய்வது? அசுரர்கள் ஏமாந்துபோன பல தருணங்கள் வரலாற்றில் உள்ளன” என்றார். “இம்முறை வேள்விநெருப்பில் தொட்டு அவர்கள் ஆணையிட வேண்டுமென அரசர் எண்ணுகிறார். என் தாய்மாமனின் மைந்தன் அரண்மனையில் அடைப்பக்காரனாக இருக்கிறான். அவன் இதை சொன்னான்” என்றார் கழுதையுடன் நின்றிருந்த ஒருவர். “முன்பு நாம் ஏமாந்தபோது நம்மிடம் வேதமறிந்த அந்தணர் எவருமில்லை. இன்று சுக்ரர் இருக்கிறார். ஏழு உலகிலும் அவரது எண்ணத்தைக் கடந்து தங்கள் உளம் ஓட்டும் திறனுடையவர் எவருமில்லை” என்றார் தலையில் நறுஞ்சுண்ணக் கடவத்துடன் நின்றிருந்த திண்ணர்.
தோழிகளுடன் தென்கிழக்கு மூலையில் அமைந்த கன்னியன்னையின் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு மீள்கையில் ஒவ்வொரு விழியும் தன்னை முற்றிலும் புதியவளென நோக்குவதை சர்மிஷ்டை உணர்ந்தாள். யயாதியின் செய்தி வந்துவிட்டதை அவளும் அறிந்திருந்தாள். பட்டுத் திரைச்சீலையில் வண்ணநூல்களால் பின்னப்பட்ட ஓவியம் ஒன்றை அவளிடம் காட்டினர். அதில் தெரிந்த யயாதி தன் தந்தையைப்போல் இருப்பதாக அவளுக்குள் முதல் எண்ணம் எழுந்தது. அது அவளை குன்ற வைத்தது. பிற எவரிடமும் அவ்வெண்ணத்தை பகிரமுடியாதென்று உணர்ந்தபோது அதை தவிர்க்க முயன்றாள். ஆனால் பிறிதொருமுறை விழிதூக்கி அவள் ஓவியத்தை நோக்கவில்லை.
அவளுடைய உளம்குன்றலை எவ்வண்ணமோ உணர்ந்து “பாரதவர்ஷத்தின் ஷத்ரிய அரசர்களில் இன்று இவரே தலையாயவர். தங்களை இவர் மணம்கொண்டாரென்றால் இங்குள்ள அசுரரும் ஷத்ரியரும் ஒருங்கே வந்து அடிபணியும் அரசி என்று அமர்ந்திருப்பீர்கள்” என்றாள் அணுக்கச்சேடி. அச்சொற்களின் பொருள் என்னவென்றே அவள் உளம் விரித்துக்கொள்ளவில்லை. ஆனால் தன்னால் சுமக்க முடியாத எடையொன்று அணுகிக்கொண்டிருக்கிறதென்று தோன்றியது. எப்போதும் ஓர் அச்சம் அவளுக்குள் இருந்துகொண்டே இருந்தது.
“என்னடி, முகமலர்வே இல்லாமல் இருக்கிறாய்? இந்த அரண்மனையே உன்னைத்தான் நோக்கிக்கொண்டிருக்கிறது என்பதை அறியமாட்டாயா?” என்று அன்னை அவளிடம் கடிந்துகொண்டாள். “நான் என்ன செய்ய வேண்டும்?” என்று அவள் கேட்டாள். “மணமகள்போல் இருக்க வேண்டும்” என்றாள் அரசி. “நான் முன்னர் மணமகள்போல் இருந்ததில்லையே?” என்றாள் சர்மிஷ்டை. வேடிக்கையாக சொல்ல முயன்று அது சிரிப்பாக ஆகாமல் அவள் உதடுகள் வளைந்தன.
“சிரிக்கிறாயா? உன்னை எண்ணி நீ நகைத்தால் பிறரும் உன்னை நோக்கி நகைப்பதற்கு நீ இடம்கொடுக்கிறாய் என்றே பொருள். நீ பாரதவர்ஷத்தின் பேரரசி. ஒவ்வொரு காலடியையும் அதை எண்ணி எடுத்து வை. ஒவ்வொரு சொல்லையும் அதை உணர்ந்து உரை. அவ்வண்ணமே ஆவாய்” என்றாள் அன்னை. “அமர்ந்திருக்கும் பீடத்தில் அமர்வதற்குரியவர்கள் அல்ல தாங்கள் என எண்ணுவது அசுரர்களின் இயல்பு. ஆகவே அவர்கள் தாழ்ந்து வளைகிறார்கள். அதை கடக்க தருக்கி நிமிர்கிறார்கள். இரண்டும் அழிவையே அளிக்கும். அடையப்படாத பீடங்கள்கூட தங்களுடையவையே என எண்ணுவதே ஷத்ரியர் இயல்பு. பீடங்கள் அவர்களை முழுமையாக தாங்குகின்றன.”
“ஊழ் உன்னை அங்கு கொண்டு அமர்த்துகிறது. இப்பாரதவர்ஷமே உன்னை அச்சாக்கி திசைசுழல்கிறது. இங்கு வாழ்வெழுந்த காலம்முதல் அசுரரும் ஷத்ரியரும் ஒருங்கிணைந்ததில்லை. உன்னில் அவ்விணைவு நிகழவிருக்கிறது” என்றபின் அவள் இரு கைகளையும் பற்றி “தெய்வங்களின் விருப்பம் போலும் அது. உன் குருதியில் பேரரசர்கள் எழவிருக்கிறார்கள்” என்றாள் அன்னை.
அச்சொல் அவளை சிலிர்க்கச் செய்தது. தேவயானி எழுதிய அப்பாடல்… சிம்மத்துடன் விளையாடும் ஒரு வீரன் எப்படி இருப்பான்? அச்சமென்பதே அறியாதவனாக. தன் ஆற்றலை நன்குணர்ந்தவனாக. ஆற்றல் மிக்கவன் கனிவுடையவனாகவும் இருந்தால் அவன் விழிகள் கருவறை அமர்ந்த தெய்வங்களுக்குரியவையாக ஒளிரும். துலாமுள்ளென நெறிகொண்ட பிறிதொருவன். அம்முகங்களை அவளால் உளத்திரையில் வரைந்துகொள்ள முடியவில்லை. மானுடமுகங்கள் எவையும் அங்கு பொருந்தவில்லை. பிறிதொரு முகம். விண்ணில் அது பரந்திருக்கிறது. பனித்துத் திரண்டு சொட்டும் ஓர் ஒளித்துளி. அவ்வெண்ணமே அவளை மலரச் செய்தது.
எண்ணியிராத இனிய நினைவொன்று எழுந்ததுபோல் உடல் மெய்ப்புகொள்ள உள்ளம் இனித்தது. முகம் அடிக்கடி சிவந்து துடிக்க, எளிய சொல்லாடலிலேயே குரல் உடைந்து தழுதழுக்க, கண்கள் நீர்மை கொள்ள அவள் அகம் ததும்பிக்கொண்டிருந்தாள். “அணி சூடு! பேரரசி என மக்கள் முன் தோன்று! உன்னை அவர்கள் இனி தெய்வவடிவென்றே காணவேண்டும்” என்றாள் இளைய அன்னை. ஊர்கோலம் கொண்ட அன்னைதெய்வம்போல உடலெங்கும் அணிகள் மின்ன நகருக்குள் சென்றபோது எதிர்ப்படும் அத்தனை விழிகளிலும் தெரிந்த பேருவகையைக் கண்டு மேலும் மேலுமென அகம் பெருகினாள். எங்கும் மக்கள் முகங்கள் நகைசூடியிருந்தன. “இக்களியாட்டுகள் எனக்கல்ல, என் இச்சிறு வயிற்றுக்கு” என்று எண்ணிக்கொண்டாள்.
நடந்தபடி கையை இயல்பாக தன் வயிற்றின்மேல் வைத்தபோது உடல் சிலிர்த்து நின்றுவிட்டாள். அணுக்கச்சேடி திரும்பி “அரசி…” என்றாள். இளங்காற்று வீச உடல் முழுக்க பூத்திருந்த வியர்வை குளிராகியது. “தேர் அருகில்தான் நின்றிருக்கிறது, அரசி” என்றாள் அணுக்கச்சேடி. “நன்று” என்றபின் மெல்ல நடந்தாள். பிறிதொருமுறை தன் வயிற்றை தொட்டுப் பார்த்தாள். அங்கு உறைகின்றனரா மணியாரமென நிரைவகுக்கும் மாவீரர்கள்? பிறிதெங்கோ ஒரு காலத்தில் எண்மங்கலங்கள் நிறைந்த தாலத்துடன் பெருங்குலங்கள் நிரைவகுத்து வந்து தென்மேற்கு மூலையில் பேரன்னை என அமர்ந்திருக்கும் அவள் முன் படையலும் பலியுமிட்டு வணங்கி வாழ்த்துரைக்க கூடினார்கள். கல்விழிகளால் அவர்களை கனிந்து நோக்கி கல்லுள் கரந்த சொல்லால் அவள் தன் குடியை தானே வாழ்த்தினாள்.
வயிற்றை மீண்டும் தொட்டு நோக்க விழைந்தாள். கையை அங்கு கொண்டுசெல்வதே கடினமென்று தோன்றியது. அதை எவரேனும் பார்த்துவிடுவார்களோ என்று விழியோட்டிவிட்டு மெல்ல நகர்த்திக்கொண்டுசென்று அஞ்சி அஞ்சி தொட்டாள். முற்றிலும் அறியா கையொன்று தொட்டதுபோல் அவள் உடல் விதிர்ப்பு கொண்டது. உள்ளங்கால் வியர்த்து நடை வழுக்கியது. அவள் தேரிலேறி அமர்ந்தபோது திரும்பி “அரண்மனைக்கா, இளவரசி?” என்று கேட்ட பாகனிடம் “இல்லை, குடில்தொகைக்கு” என்றாள்.
“இன்று அரண்மனையில் குடிப்பூசனைகள் நிகழ உள்ளன, இளவரசி. தங்களை அழைத்து வரவேண்டுமென்று ஆணை. சம்விரதரும் அணிப்படையினரும் இன்று மாலை அரண்மனைக்கு வந்து சேர்வார்கள். அவர்கள் அவை நிற்கையில் தாங்களும் அங்கிருந்தாக வேண்டும். குருநகரியின் அரசர் தங்களுக்கு அளிக்கும்பொருட்டு அருமணி மாலையொன்றையும் கணையாழியையும் அளித்துள்ளார். அப்பரிசை முறைப்படி உங்களுக்கு அளிக்கையில்தான் இரு நாட்டு உறவுகளும் உறுதிப்படும்” என்றாள் அணுக்கச்சேடி.
“நாம் உச்சிப்பொழுதுக்குள் திரும்பிவிடுவோம்” என்றாள் சர்மிஷ்டை. “என்னால் தனித்திருக்க முடியவில்லை. அங்கு சென்று மூத்தவருடன் இருந்தால் இந்த தத்தளிப்பை சற்று கடந்து செல்வேன்” என்றாள். அணுக்கச்சேடி எதையோ சொல்ல விழைந்து பின் நாவடக்கி தேரிலேறிக்கொண்டு பாகனிடம் “குடில்தொகைக்கு…” என்றாள். தேர்ச்சகடங்கள் அசைந்து உருளத்தொடங்கி எதிர்காற்றில் ஆடையும் குழலும் பறக்கையில் வியர்வை குளிர்ந்து மெல்ல சர்மிஷ்டை அமைதி கொண்டாள். “ஏன்? அங்கு சென்றால் என்ன?” என்று திரும்பி அணுக்கச்சேடியிடம் கேட்டாள்.
“அங்குதானே செல்கிறோம்!” என்றாள் அவள். “இல்லை. அங்கு செல்வதைப்பற்றி நான் சொன்னதும் உன் கண்களில் ஒரு தயக்கம் வந்தது” என்றாள் சர்மிஷ்டை. “பொழுதில்லையே என்றுதான்…” என்று அணுக்கச்சேடி சொல்ல “அல்ல… பிறிதொன்று…” என்றாள் சர்மிஷ்டை. “ஒன்றுமில்லை” என்றாள் அவள். “சொல்!” என்றாள் சர்மிஷ்டை. அவள் மெல்ல “அவரும் பெண்…” என்றாள். “ஆம், அதற்கென்ன?” என்றாள் சர்மிஷ்டை. “இளவரசி, பாரதவர்ஷத்தில் பிறந்த ஒரு பெண் சென்று அமையக்கூடிய உச்சம் நாளை இங்கு நிகழப்போகிறது.” விழிசுருக்கி நோக்கி “ஆம், அது ஊழின் ஒரு முடிச்சு. அவ்வளவுதான்” என்றாள் சர்மிஷ்டை.
எப்படி சொல்வதென்று அறியாது பல சொற்களை எடுத்துவைத்து தயங்கி “இளவரசி, நாம் அதை பிறிதொரு பெண்ணிடம் சொல்லப்போகிறோம்” என்றாள் சேடி. “அவர்கள் அதை முன்னரே அறிந்திருப்பார்கள். இந்நகரமே பேசிக்கொண்டிருக்கிறது. மேலும் இன்று காலையே சிற்றமைச்சர் சரகர் சென்று முதலாசிரியரின் அவையில் முறைப்படி அறிவிப்பை அளித்திருக்கிறார்” என்றாள் சர்மிஷ்டை. ஆனால் அவள் உள்ளம் படபடக்கத் தொடங்கிவிட்டிருந்தது. அணுக்கச்சேடி நேரடியாக அவள் முகத்தை நோக்கி “தனக்கு மேல் பிறிதொருவர் இருப்பதை ஒருபோதும் ஒப்பாத உளநிலை கொண்டவர் சுக்ரரின் மகள். எந்நிலையிலும் அவர் எட்ட முடியாத இடத்திற்கு நீங்கள் செல்வதை அவரிடம் சொல்லப்போகிறீர்கள்” என்றாள்.
“அதெல்லாமே அவருக்குத் தெரியும்” என்றாள் சர்மிஷ்டை. “ஆனால் இப்போது நீங்கள் கொண்டுள்ள இத்தோற்றம் பிறிதொன்றை சொல்கிறது. சொல்லென அவர்கள் அறிந்தது அவர்கள் உள்ளத்திற்கு சென்றிருக்கும். கண்முன் காட்சியென்று நீங்கள் வந்து நின்றிருப்பது சித்தத்திற்கு கசிந்திறங்கும். இளவரசி, கல்வியென நெறியென முன்னோர் சொல்லென தன்னியல்பென நிற்பவை அனைத்தும் உள்ளத்தை மட்டுமே களம் கொண்டவை. சித்தம் நாமறியாத தெய்வங்களால் ஆளப்படுகிறது” என்றாள் தோழி. “என்ன சொல்கிறாய்?” என்றாள் சர்மிஷ்டை. “இப்போது இந்தக் கோலத்துடன் தாங்கள் அங்கு செல்லவேண்டாம்” என்றாள் அவள்.
“இப்போது தாங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று தாங்கள் அறியமாட்டீர்கள். கால்நகம் முதல் தலைவகிடு வரை பொலிந்துள்ளீர்கள். இப்போது நாம் அரண்மனைக்கு செல்வோம். சம்விரதரின் தூது வரட்டும். குருநகரின் கணையாழி தங்கள் கைகளில் அமையட்டும். அதன் பின்னர் நாம் முறைப்படி பரிசுகளுடன் சென்று முதலாசிரியரின் மகளை பார்ப்போம். இளையோள் என மகள்நிலை என நீங்கள் அவர்களின் கால்தொட்டு சென்னிசூடி வாழ்த்து கோருங்கள். அவர்களுக்குள் சித்தத்தையும் கடந்து வாழ்பவள் என்றுமுள பேரன்னையொருத்தி. அவள் எழுந்து ஒருசொல் வாழ்த்தி உங்கள் தலை தொடட்டும். பிறகு எதையும் நாம் அஞ்சவேண்டியதில்லை” என்று தோழி சொன்னாள்.
“நீ என்ன சொல்கிறாய் என்று எனக்கு விளங்கவில்லை” என்றாள் சர்மிஷ்டை. “அவர்கள் தன்னுணர்விலாது தங்களை வாழ்த்திப்பாடிய சொற்கள் உளம் கடந்து சித்தம் கடந்து என்றுமுள பெருவெளியில் இருந்த மூதன்னை ஒருத்தியால் சொல்லப்பட்டவை. அச்சொல்லே உங்களிடம் அவரளித்த கொடையென இருக்கவேண்டும். நாம் திரும்பிச் செல்வோம். அதுவே நன்று” என்றாள் அணுக்கச்சேடி. சர்மிஷ்டை இரு கரங்களையும் தன் நெஞ்சில் அமர்த்தி சில கணங்கள் அமர்ந்திருந்து பின்பு “என் மூத்தவளை அஞ்சி நான் திரும்பிச்செல்ல வேண்டுமா என்ன?” என்றாள். “அவருக்குள் நிறைந்துள்ள கருணையை அறிந்திருக்கிறேன். அழியாத வாழ்த்துச்சொல்லை பெற்றிருக்கிறேன். அதற்கும் அப்பால் இருளொன்று இருக்கக்கூடும் என்று ஐயுற்று இவ்வுள எழுச்சியை அவரிடம் பகிர்ந்துகொள்ளாமல் மீண்டேன் என்றால் அது என் உள இருளை அல்லவா காட்டுகிறது?”
“இளவரசி…” என்றாள் அணுக்கச்சேடி. “இல்லை, என் இன்றைய பொழுது மூத்தவளுடன் கழியட்டும்” என்றாள் சர்மிஷ்டை. சேடி பெருமூச்சுடன் திரைவிலக்கி வழியை நோக்கலானாள்.
சர்மிஷ்டையின் தேர் சென்று சுக்ரரின் குடில்தொகையின் முன் நின்றபோது சகட ஒலி கேட்டு குடில்களின் அனைத்துச் சாளரங்களிலும் மாணவர்களும் பெண்டிரும் தோன்றி அவளை நோக்கினர். தேர்த்தட்டில் எழுந்து திரைவிலக்கி அவள் தோன்றியதும் “ஹிரண்யபுரியின் இளவரசி வாழ்க! விருஷபர்வனின் குலக்கொடி வாழ்க! பாரதவர்ஷம் முழுதாளப்போகும் பேரரசி வாழ்க!” என்று வாழ்த்தொலிகள் எழுந்தன. அவள் அக்குரல்களால் நாணமுற்று உதடுகளை மடித்தபடி விழிதாழ்த்தி தன் மேலாடையை வலக்கை விரல்களில் சுற்றிக்கொண்டு தளர்ந்த நடையுடன் படிகளை அடைந்து மேலேறினாள்.
உள்ளிருந்து முதுமகள் ஒருத்தி ஐந்து மங்கலங்கள் கொண்ட தாலத்தை ஏந்தி வந்து அவள் முன் மும்முறை இடமும் வலமும் சுற்றி “பேரரசியென எங்கள் குடில்களுக்கு வந்துள்ளீர்கள். முடிசூடி அமர்ந்தவன் விஷ்ணுவின் வடிவம். அவன் இடம் அமர்ந்தவள் லட்சுமியின் உருவம். உங்கள் கால்பட்டு எங்கள் குடில்கள் பொலிக!” என்றாள். நாணச் சிரிப்புடன் இடை தளர்ந்து நின்ற சர்மிஷ்டையை நோக்கி பிறிதொரு முதுமகள் “ஆம், அவ்வாறே ஆகுக என்று சொல்லி மஞ்சள் அரிசியை எடுத்து எங்கள் குடில்களுக்குமேல் வீசிவிட்டு உள்ளே வாருங்கள், இளவரசி” என்றாள். சிரித்தபடி அவ்வாறே செய்து அவர்களை வாழ்த்தியபின் இரு கைகளையும் கூப்பியபடி அவள் காலெடுத்து வைத்து உள்ளே வந்தாள்.
கிருதர் வந்து “ஆசிரியர் வகுப்பிலிருக்கிறார். வருக! வந்து வாழ்த்து பெற்று செல்க!” என்றார். சர்மிஷ்டை “ஆம், முதல் வாழ்த்தை முதலாசிரியரிடம் இருந்து பெறுவது முறையென்று தோன்றியது” என்றாள். “ஆம், ஆசிரியரும் மகிழ்ந்துள்ளார். வருக!” என்று கிருதர் மையக்குடில் நோக்கி அவளை அழைத்துச்சென்றார். சுக்ரரின் மாணவர்கள் அனைவரும் குடில்முற்றத்தில் நின்றிருந்தனர். அவர்கள் அருகணைந்ததும் அனைவரும் வணங்கி தலைதாழ்த்தி முகம் நிறைந்தனர். மேல் திண்ணையில் நின்றிருந்த சத்வர் “வருக, பேரரசி!” என்றார். “என்ன இது?” என்று அவள் நாணிச்சிரிக்க “அரசியர் நாணுவதில்லை” என்றார் சத்வர். வாய்விட்டு சிரித்தபடி “நான் அரசியில்லை” என்று அவள் சொன்னாள். “எவர் சொன்னது? இன்னும் ஓரிரு நாட்களில் பாரதவர்ஷமே தங்கள் பெயரை சொல்லப்போகிறது. வருக!” என்று சத்வர் உள்ளே அழைத்துச் சென்றார்.
சுக்ரரின் மேடை முன் தேவயானியும் சற்று பின்னால் சாயையும் அமர்ந்திருந்தனர். சாயை சொல்ல தேவயானி எழுதிக்கொண்டிருந்தாள். சுக்ரரின் மரவுரி அப்பால் மேடைமேல் கிடந்தது. அவள் அசைவைக் கண்டு எழுத்தை நிறுத்தி சுவடியையும் எழுத்தாணியையும் பலகைமேல் வைத்துவிட்டு தேவயானி எழுந்து வந்து அவள் இரு கைகளையும் பற்றியபடி “வருக, நல்வரவு!” என்றாள். சிரித்தபடி “என்ன, நீங்களும் முறைமைச் சொல் சொல்கிறீர்கள்?” என்றாள் சர்மிஷ்டை. “முறைமைச் சொல்லுக்கு சில இடங்கள் உண்டல்லவா?” என்றாள் தேவயானி. பின்னால் வந்து நின்ற சாயை சர்மிஷ்டையைப் பார்த்து “அணிகளால் பூத்திருக்கிறீர்கள், இளவரசி” என்றாள்.
சர்மிஷ்டை தன் ஆடைகளை குனிந்து பார்த்தாள். அரண்மனையில் இருக்கையில் எப்போதும் முழுதணிக்கோலத்தில் இருப்பதுதான் அவள் வழக்கம். ஆனால் சில நாட்களாக அன்னை ஏழு சமையப்பெண்டிரை அமர்த்தி அவள் உடலெங்கும் அருமணிகளையும் அணிகளையும் சுடர வைத்திருந்தாள். அரசணிக்கோலத்தில் தான் ஒருபோதும் சுக்ரரின் குடில்தொகைக்கு வந்ததில்லை என்பதை சர்மிஷ்டை நினைவுகூர்ந்தாள். “இதை அரசணிக்கோலம் என்பார்கள். இதை அணிந்திருப்பதைப்போல் இடரொன்றில்லை. இயல்பாக நடக்கமுடியாது. உடலெங்கும் ஆயிரம் முட்கள் குத்திக்கொண்டிருக்கும். சேடியர் உதவி செய்யாமல் எங்கும் அமரவும் எழவும் இயலாது” என்றாள் சர்மிஷ்டை.
சாயை அவள் மேலாடையை நோக்கி “இது பீதர்நாட்டு கைத்திறன் என்று எண்ணுகிறேன். நாகசிம்மங்களும் மலர்களும் இடைவெளியின்றி கலந்துள்ளன. ஆடையொன்றில் அருமணிகளைச் சேர்த்து தைப்பதை இப்போதுதான் பார்க்கிறேன்” என்றாள். சர்மிஷ்டை தன் மேலாடை நுனியை எடுத்துப்பார்த்து “ஆம், உண்மைதான். நானே இப்போதுதான் பார்க்கிறேன்” என்றாள். “இந்த ஒரு மேலாடையே இங்குள்ள பல மன்னர்களின் மணிமுடியைவிட மதிப்புமிக்கதாக இருக்கும் போலிருக்கிறது” என்று சாயை அதை மெல்ல சுழற்றி நோக்கியபடி சொன்னாள். தேவயானி சர்மிஷ்டையின் கையை பற்றி “ஆடையைப்பற்றி பிறகு பேசலாம். வா, தந்தையிடம் அருள் பெற்றுக்கொள்!” என்றாள்.
உள்ளிருந்து சுக்ரர் கைகூப்பியபடி வெளியே வர சர்மிஷ்டை அணிகளும் ஆடையும் ஓசையிட அருகே சென்று அவர் கால்களைத் தொட்டு தலையில் வைத்து “என்னை வாழ்த்துங்கள், முதலாசிரியரே!” என்றாள். “செய்தி அறிந்தேன். மண்ணில் நிகரற்ற மாவீரர்களின் நிரை உன்னில் பிறந்தெழுக! இவ்விரிநிலம் உள்ளவரை உன் பெயர் வாழும். மூதன்னை என உன்னை கொடிவழிகள் வணங்கும். ஓம்! அவ்வாறே ஆகுக!” என்று வாழ்த்தினார். சர்மிஷ்டையின் இரு கைகளையும் பற்றிக்கொண்டு பிறிதொரு கையால் அவள் தோளை அணைத்து “வருக!” என்று அழைத்துச்சென்று தன்னருகே அமரவைத்தார்.
“இவ்வண்ணம் ஒரு நிகழ்வு உருவாகும் என்று நான் எண்ணியதில்லை. முன்பெப்போதும் அசுரருக்கும் ஷத்ரியருக்கும் இடையே குருதியுறவு இத்தனை எளிதாக நடந்ததும் இல்லை. அசுரகுலப் பெண்டிரின் மைந்தர்கள் அரசமர்ந்ததுண்டு. தந்தைவழியில் குருதிகணிக்கும் முறைமையால் அவர்கள் ஷத்ரியர் என்றே கருதப்படுவார்கள். அசுரகுல அரசி ஷத்ரியரின் இடம் அமர்ந்ததில்லை. வேதியரும் ஆரியரின் நாற்குலத்தோரும் இதை எப்படி எதிர்கொள்வார்கள் என்பது இன்னமும் உய்த்துணர முடியாததாகவே உள்ளது” என்றார் சுக்ரர். “நன்று நிகழலாம். அவ்வண்ணம் நிகழுமென்றில் அது மானுடத்திற்கு நல்லது.”
அவர் அவள் கைகளை பற்றி கண்களுக்குள் நோக்கி “இத்துலாவில் இரு தட்டும் நிகரென்று இருக்கவேண்டும். அரசியென்று நீ குருநகரிக்கு செல்கையில் அசுர குலத்தின் கொடியையே கொண்டு செல்கிறாய். ஒரு சொல்லிலும் ஒரு நோக்கிலும் ஷத்ரியகுலத்து அரசனுக்கு நீ குறைந்தவளென்று ஆகக்கூடாது. பிற எந்த அரசியும் உனக்கிணையாக அமரவும் உனக்கு எதிர்ச்சொல்லாற்றவும் கூடாது” என்றார். அவள் திகைப்புடன் அவரை நோக்கி “அதை நான் எப்படி கட்டுப்படுத்த முடியும்?” என்று கேட்டாள். சுக்ரர் ஒரு கணம் சினம்கொண்டு சுருங்கி உரத்த குரலில் “நீ அரசியென செல்கிறாய்” என்றார்.
சர்மிஷ்டை நடுங்கியபடியே திரும்பி தேவயானியைப் பார்த்து “ஆம்” என்றாள். தேவயானி “மணமுடித்தபின் மனைவியாவதே பெண்களின் வழக்கம். இப்போது எத்தனை சொன்னாலும் அவை வெறும் சொற்களே. தன் கடமையை அவள் ஆற்றுவாள், தந்தையே” என்றாள். “ஆற்றியாகவேண்டும். உன்னை வெறுமொரு கருவறை என ஷத்ரியர் எண்ணிவிடலாகாது. ஷத்ரியருக்கும் அசுரருக்குமிடையே நீரிலும் நிலத்திலும் ஆயிரம் இடங்களில் எல்லைப்பூசல்கள் உள்ளன. எண்ணற்ற அறச்சிக்கல்கள் நாளுமென எழுந்துகொண்டிருக்கின்றன. ஒவ்வொன்றிலும் உன் சொல் அவன் ஏந்தும் கோலுக்கு நிகரென நின்றாக வேண்டும். உன்னை அளிப்பது ஷத்ரியருக்குள் புகுந்து நாம் வெல்வதற்கே” என்றார் சுக்ரர்.
சினம் எரிந்த ஒற்றை விழியுடன் “அசுரரிடமிருந்து ஒரு பணயக்கைதியை கொண்டு சென்றோம் என்று ஷத்ரியர் எண்ணிவிடலாகாது. அசுரரின் கருவூலச் செல்வம் தங்கள் கைக்கு வந்ததென்று மகிழவும் கூடாது” என்றார் சுக்ரர். சர்மிஷ்டை “ஆம்” என்றபின் தேவயானியை பார்த்தாள். “இப்போதே இதையெல்லாம் சொல்லி அவளை அச்சுறுத்த வேண்டியதில்லை, தந்தையே. இங்கிருந்து அவளுக்கு வழிகாட்ட உரிய அமைச்சர்களும் உடன் செல்வார்கள் அல்லவா?” என்றாள் தேவயானி.
சர்மிஷ்டை கைநீட்டி தேவயானியின் கைகளை பற்றிக்கொண்டு “தாங்கள் உடன் வாருங்கள், மூத்தவளே” என்றாள். சாயை சினத்துடன் “என்ன சொல்கிறீர்கள்?” என்றாள். அவளைத் தொட்டு விலக்கிவிட்டு தேவயானி “நன்று. அதை பிறகு பேசுவோம்” என்றாள். “நீங்களும் உடன் வாருங்கள். நான் மிகவும் அஞ்சுகிறேன். ஒவ்வொரு சொல்லாலும் என் மேல் எடையேற்றுகிறார்கள்” என்றாள் சர்மிஷ்டை. “வா! இவை அனைத்தையும் விட்டு இன்றொரு நாள் எங்களுடன் களித்திரு. குருநாட்டரசனின் கணையாழியை பெற்றுக்கொண்டாயென்றால் உன்னால் சோலையாடவும் நீர்விளையாடவும் முடியாமல் போகலாம்” என்றாள் தேவயானி. சர்மிஷ்டை கண்களில் நீர் கசிந்திருக்க மீண்டும் சுக்ரரை வணங்கிவிட்டு எழுந்தாள்.
தொடர்புடைய பதிவுகள்
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–66
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–64
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–65
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–63
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–62
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–61
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–60
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–59
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–58
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–57
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–56
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–54
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–53
வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–52
வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–51
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–49
வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–48
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–14
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 37
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 19
சொல்வளர்காடு முன்பதிவு
சொல்வளர்காடு – வெண்முரசு நாவல் வரிசையில் பதினொன்றாவது நாவல்.
மெய்ம்மையைத் தேடுவதே தன் வாழ்க்கை என அமைத்துக்கொண்டவர் தருமன். அவருடைய விழிகளினூடாக வேதம்வளர்ந்த காடுகளை ஒற்றைக் கதைப்பரப்பாக இணைக்கிறது இந்நாவல். நேரடியாக தத்துவ, மெய்ஞான விவாதங்களுக்குள் செல்லவில்லை. கதைகளையே முன்வைக்கிறது. அனேகமாக அத்தனை கதைகளுமே கூறுமுறையில் வளர்ச்சியும் மாற்றமும் அடைந்தவை. நவீன கதைசொல்லல் முறைப்படி மீள்வடிவு கொண்டவை. அக்கதைகள் உருவாக்கும் இடைவெளிகளை, அக்கதைகளின் இணைவுகள் உருவாக்கும் இடைவெளிகளைத் தன் கற்பனையாலும் எண்ணத்தாலும் வாசகன் நிரப்பிக்கொள்ளவேண்டும் எனக் கோருகிறது இந்நாவல்.
ஒன்றின் இடைவெளியில் இருந்து பிறிதொன்றைக் கண்டடைந்து நீளும் இதன் பாதை இந்திய மெய்ஞான மரபின் வளர்ச்சியின் தோற்றமும்கூட. ஆனால் தத்துவத்தை படிமங்கள் வழியாகவே இலக்கியம் பேசுகிறது. அந்த விவாதத்தை முழுமைசெய்ய வாசகனின் பங்களிப்பைக் கோருகிறது.
728 பக்கங்கள் கொண்ட நாவல் இது. 58 வண்ணப் புகைப்படங்களும் இந்நாவலில் உள்ளன.
இந்நூலை முன்பதிவு செய்ய கடைசி நாள்: ஏப்ரல் 25, 2017.
முன்பதிவு செய்பவர்கள் கவனத்துக்கு:
* இந்தியா முழுக்க தபால் செலவு இலவசம். எனவே ஆர்டர் செய்யும்போது தபால் செலவு இல்லாத வழியையே தேர்ந்தெடுத்து ஆர்டர் செய்யவும்.
* முன்பதிவு செய்தவர்களுக்கு ஒரு பதிவு எண் தரப்படும். அந்தப் பதிவு எண் கிடைக்கப்பெறாதவர்கள் கிழக்கு பதிப்பகத்தைத் தொடர்புகொண்டு அதைப் பெற்றிடவேண்டும்.
* ஆசிரியரின் கையெப்பம் வேண்டுமெனில் குறிப்பில் தெரிவிக்கவும்.
* முன்பதிவு திட்டத்தில் கேஷ் ஆன் டெலிவரி, விபிபி கிடையாது. பணம் செலுத்தி பதிவு எண் பெற்றுக்கொண்டவர்களுக்கு மட்டுமே புத்தகம் அனுப்பப்படும்.
* மே 20ம் தேதிக்கு பிறகு புத்தகம் அனுப்பி வைக்கப்படும். முதலில் பதிவு செய்தவர்களுக்கு முதலில் புத்தகம் அனுப்பப்படும்.
* ஆன்லைனில் பதிவு செய்யமுடியாதவர்கள் டயல் ஃபார் புக்ஸ் 94459 01234 ஐ அழைக்கலாம்.
* எம் ஓ, டிடி, செக் மூலம் பணம் அனுப்ப விரும்புகிறவர்கள் New Horizon Media Private Limited என்ற பெயருக்கு செக் அல்லது டிடி எடுத்து, New Horizon Media Private Limited, 177/103, Ambals building, Royapettah, Chennai – 600 014, Tamilnadu என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும். மறக்காமல் உங்கள் முகவரி, தொலைபேசி எண்ணோடு அனுப்பி வைக்கவும்.
* Money transfer செய்ய விரும்புபவர்கள் 94459 01234 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு, தேவையான விவரங்களைப் பெற்றுக்கொள்ளவும். அல்லது nhm-shop@nhm.in என்ற மின்னஞ்சலுக்கு மடல் அனுப்பவும்.
* Paytm மூலம் வாங்க 95000 45609.
* Paypal மூலம் பணம் அனுப்ப விரும்புவர்கள் badri@nhm.in என்ற paypal அக்கவுண்ட்டுக்கு பே பால் மூலம் பணம் அனுப்பவும். பணம் அனுப்பிய விவரத்தை nhm-shop@nhm.in என்ற முகவரிக்குத் தெரியப்படுத்தவும்.
* வெளிநாட்டிலிருந்து ஆர்டர் செய்பவர்கள் அதற்கான ஷிப்பிங் சார்ஜையும் சேர்த்தே பணம் செலுத்தவேண்டும். ஷிப்பிங் சார்ஜ் தொகையை ஆன்லைனில் ஆர்டர் செய்யும்போது அறிந்துகொள்ளலாம்.
* மேலதிக விவரங்கள் தேவைப்பட்டால் nhm-shop@nhm.in என்ற முகவரிக்கு மடல் அனுப்பவும்.
* FAQ – https://www.nhm.in/shop/FAQ.html
கிழக்கு பதிப்பகம் இணைப்பு மேலதிகத் தகவல்களுக்கு
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
April 6, 2017
எழுதலின் விதிகள்
அன்புள்ள ஜெ. அவர்களுக்கு,
சோம்பலை களைவதை பற்றிய உங்கள் கேள்விக்கான பதில் மிக மிக மகிழ்ச்சி ஊட்டியது.
உங்கள் இளம் வயதில், நீங்கள் மகாபாரதத்தின் ஒரு பகுதியை நாவலாக எழுதிய ஒரு மலையாள எழுத்தாளரைச் சந்தித்து உரையாடுகையில், அவர் உங்களிடம் ஏதோ கேட்க, நீங்கள் அவரிடம் முழு பாரதத்தையும் மீள எழுதப்போகிறேன் என கூறியபோது, உங்கள் இளம் மனதில் ஒரு கர்வம், நம்பிக்கை, உற்சாகம் நிரம்பியிருக்குமே. அந்த நம்பிக்கையோடு கேட்கிறேன்.
நான் என் துறையில் நீங்கள் சாதித்தை விட பெரிய சாதனைகளை செய்ய வேண்டும் என்ற பெருங்கனவு கொண்டவன், ஒரு மூன்று மாதமாக இந்தச் சோம்பல் என்னை செயலிழக்க வைத்துவிடுகிறது. உங்கள் பதில் எனக்கு கொம்பு சீவியிருந்தாலும், இன்னும் நுணுகி அணுக, உங்கள் ஒரு நாளை எப்படி வகுத்துக் கொள்கிறீர்கள் எனக் கூறினால் பெரும் உதவியாக இருக்கும்.
கவனம் சிதறடிக்கும் விஷயங்களை எப்படி தவிர்ப்பீர்கள்.
உதாரணத்துக்கு, ஒரு 30 நிமிடம் தொடர்ச்சியாக எழுதிய பிறகு, மனம் போதும் என்று ஒரு தடை போடுமே, அந்தத் தடையை எப்படி முறியடிப்பது, அந்த தருணத்தை எப்படிக் கையா ள்வீர்கள்? நான் கணினியில் வேளை பார்ப்பவன், சற்றேற்குறைய ஒரு எழுத்தாளனைப் போலவே சதா கணினி முன் அமர்ந்திருக்கும் வாழ்க்கை. ஆனால் ஒரு 30 நிமிடத்திற்கு மேல் தானாக மனமும், உடலும் ஒத்துழைப்பதில்லை.
கடிவாளம் மீறி இயங்கி, கவனம் சிதறி, வேறு திசைகளுக்கு இட்டுக் கொண்டு போய், நேரத்தையும் சமயங்களில் ஒரு நாளையேக் கூட வீணடித்துவிடுகிறேன். இது ஒரு 3 மாதமாக எனக்கு நானே வைத்துக் கொள்ளும் சூன்யம் போல ஒரு குற்றவுணர்வு நெருடுகிறது.
அன்புடன்,
கார்த்திக்
***
அன்புள்ள கார்த்திக்,
முந்தைய கடிதத்திலேயே மிகத் தெளிவாக ஒரு விஷயத்தை சொல்லியிருந்தேன். தன்னைச் செயலூக்கம் உள்ளவராக தீவிரமானவராக ஆக்கிக் கொள்ளும் பொருட்டு ஒருவர் கண்டடைந்த வழிமுறைகள் பிறருக்கு எவ்வகையிலும் உதவாது. ஏனெனில் ஒவ்வொருவரும் தங்கள் இயல்பை ஒட்டி அந்த வழியை தாங்களே தான் கண்டுகொள்ள வேண்டியிருக்கிறது. ஆகவே பொதுவான சிலவற்றைத் தான் சொல்ல முடியுமே தவிர குறிப்பான திட்டவட்டமான வழிகளை எவரும் காட்டிவிட முடியாது.
நான் செயலின்மையில் நீந்திக்கிடந்த காலங்கள் உண்டு. ஏனெனில் இளமைப்பருவத்தில் எதையுமே செய்யாமல் வெற்றுக் கனவில் மிதந்து நெடுங்காலத்தை செலவிட்டிருக்கிறேன். கனவில் வாழ்ந்தவனாக அலைந்து திரிந்திருக்கிறேன். என் தாயும் தந்தையும் தற்கொலை செய்து கொண்டபின்னர் உருவான சோர்வு ஒரு வருடத்திற்கு மேலாக என்னை வெறும் நடைபிணமாக வைத்திருக்கிறது. மனக்கொந்தளிப்புகளும் ஆழ்ந்த தனிமையும் சோர்வும் அடைந்த அந்தக் காலகட்டத்தை கடப்பதற்கு பிறருடைய அனுபவங்களோ பிறர் அளித்த சொற்களோ எனக்கு உதவவில்லை.
உண்மையில் அச்சோர்வில் சுழன்று சுழன்று அதன் உச்சத்தை அடைந்தேன். அந்த உச்சியிலிருந்து திரும்பி வந்துதான் செயலூக்கம்மிக்கவனாக ஆனேன்- அதை விரிவாகவே எழுதியிருக்கிறேன். நான் பங்களிப்பதற்கு ஒன்றுள்ளது, சென்று சேர்வதற்கு ஒரு இடமுள்ளது என்னும் தன்னுணர்வு அது. அந்தத் தன்னுணர்வே என்னை செயலூக்கம் மிக்கவனாக ஆக்கியது. அந்தத் தன்னுணர்வை ஒவ்வொருவரும் தாங்களே கண்டு கொள்வதையே நான் வலியுறுத்துகிறேன். அதையே கீதா முகூர்த்தம் என்று சொல்கிறேன். கீதை சார்ந்த எனது உரைகள் அனைத்திலுமே இத்தருணத்தையே வெவ்வேறு வகையில் சொல்லியிருக்கிறேன்.
இங்கு பல்வேறு வகையில் மதநூல்கள் மனிதனின் ஆழம் நோக்கிப் பேசுகின்றன. மனிதனைச் செயலூக்கம் மிக்கவனாக ஆக்குவதற்கு உதவும் முதன்மையான நூல் என்று பகவத்கீதையை சொல்லவேண்டும். ‘ஆகவே செயல்புரிக’ என்று அறைகூவும் அந்த நூல் ஏன் செயல்புரியவேண்டும் என்பதை வெவ்வேறு வகையில் விளக்குகிறது. சாங்கிய யோகம் இவ்வுலகில் புகழும் வெற்றியும் பெற்று நிறைவடைவதற்கு செயல்புரிய வேண்டும் என்கிறது. கர்ம யோகம் செயலின் மூலமாகவே உவகையையும் நிறைவையும் அடைவதற்கு ஏன் செயல்புரியவேண்டும் என்று விளக்குகிறது. ஞான யோகம் செயல் என்பது எப்படி தன்னைத் தானே அறிவதற்கும் கடந்து செல்வதற்கும் உதவுகிறது என்று சொல்கிறது. அவ்வாறு பதினெட்டு அத்தியாயங்களில் ஏன் செயல்புரிய வேண்டுமென்பதை அது விளக்குகிறது. செயலைக் கடந்து செயலின்மையை அடைந்து முற்றும் விடுதலை பெறுவதற்கான வழி என்றும் கீதை காட்டுகிறது. அதற்கப்பால் ஒரு கொள்கையை நான் சொல்லிவிட முடியாது.
நீங்கள் ஆற்றவேண்டிய பணி என்ன, அதில் உங்கள் திறன் என்ன, நீங்கள் சென்றடையும் இலக்கென்ன என்பதை நீங்கள் கண்டு கொண்டீர்கள் என்றால் அதில் முற்றாக ஈடுபடுவது ஒன்றே வழி .அவ்வாறு கண்டு கொள்ளாத போதுதான் ஆழ்ந்த சோர்வும், செயலின் பயனென்ன என்ற எண்ணமும் ஏற்படுகிறது. சரி, என்ன சொன்னாலும் ஒருவர் அந்தச்சோர்வுதான் எஞ்சுகிறது என்பாரென்றால் அது அவரது வாழ்க்கை, அவ்வளவுதான். நாம் செயலாற்றியாகவேண்டும் என இயற்கையோ ஊழோ அடம்பிடிக்கவில்லை. செயலாற்றுவது நமக்கே ஒழிய வேறெதற்காகவும் அல்ல. இங்கு எவரும் எச்செயலும் ஆற்றவில்லை என்றாலும் எனக்கு ஒன்றுமில்லை என்று கீதை அதைத்தான் சொல்கிறது.
பலசமயம் செயலின்மை, சோம்பல் ஆகியவற்றை தங்கள் பிரச்சினையாகச் சொல்பவர்கள் அதை உள்ளூர ரசித்துமகிழ்ந்துகொண்டே முன்வைக்கிறார்கள். அதைக் கடக்க அவர்கள் மட்டுமே முயலமுடியும், பிறர் காட்டும் எந்த வழியையும் அவர்கள் மட்டுமே தேர்வுசெய்யமுடியும் என்பதை பொருட்படுத்துவதில்லை. சோம்பலாலும் செயலின்மையாலும் தேங்கியிருக்கும் ஒருவர் கவனிக்கவேண்டியது உண்மையிலேயே அவருக்கு அதிலிருந்து விடுபடும் எண்ணம் உண்டா என்பதுதான்.
ஏனென்றால் மானுட உள்ளம் சோம்பலைத்தான் மிகவிரும்புகிறது. செயலூக்கம் என்பது மானுட இயல்புக்கு எதிரானது. பசி, காமம், உயிரச்சம் தவிர வேறு எவையும் உயிர்களை செயலூக்கம்கொள்ளச் செய்வதில்லை. இமையமலைப்பகுதியில் மனிதர்கள் மிகமிக இன்பமாக சோம்பலில் சொக்கி அமர்ந்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். அது மிக இனிய போதை. அதில் மூழ்கியிருக்கையில் எழும் குற்றவுணர்ச்சியை மறைக்கவே அவ்வப்போது சோம்பலில், சோர்வில் இருந்து விடுபடமுடியவில்லை, என்ன செய்யலாம் என கொஞ்சம் பேசிப்பார்க்கிறோம்.
சென்ற பல்லாண்டுகளில் எனக்கு எப்போதும் நீடித்த செயலின்மையோ சோம்பலோ ஏற்பட்டதில்லை. ஆனால் புனைகதை எழுதுபவனாகிய நான் புனைகதைகளில் இருந்து அடையும் உணர்வுகளைக் கடக்க முடிவதில்லை. பெரும்பாலான தருணங்களில் நான் எழுதிய கதைகளின் உணர்வுகள் வந்து ஆக்ரமித்துக் கொள்கின்றன. கதாபாத்திரங்களின் துயரங்கள். அவமதிப்புகள் இழப்புகள் என்னையும் ஆட்டிப்படைக்கின்றன. சோர்வை ரசிக்கும் ஆழம் அதை பல்வேறுவகைகளில் பெருக்கிக்கொள்வதும் உண்டு.
ஆனால் அதிலிருந்து மீண்டும் எழுதுவதன் வழியாகவே வெளி வருகிறேன். எழுத்து என்பது ஒரு நிகர்வாழ்க்கையாகவே எனக்கு இருக்கிறது. அந்த வாழ்க்கை இந்த அன்றாட வாழ்க்கையில் இருக்கும் அனைத்துக் குறைகளையும் ஈடுகட்டுகிறது. ஒருவனின் தன்னறம் அப்படி அவனை முழுதாக நிறைப்பதாகவே இருக்கும். அவன் அதில் எங்கிருந்தும் சென்று மூழ்கிவிடமுடியும். அத்தகைய உலகை கண்டுகொண்ட ஒருவன் இவ்வாழ்க்கை ஒரு தீவிரமான செயல்பயணமாகவே கருதுவான் என்று நினைக்கிறேன். நம் காலகட்டத்தின் மாபெரும் கர்மயோகியான காந்திக்கும் இச்சோர்வுகள் இருந்தது. காந்தி பல தருணங்களில் தான் செய்வது சரிதானா இதில் பயனுண்டா என்ற எண்ணங்களை அடைந்திருக்கிறார். ஆனால் செயல் மூலமாகவே மீண்டும் அதிலிருந்துதிரும்பி வந்திருக்கிறார். இது செயலாற்றும் அனைவருக்குமான வழிமுறை என்று சொல்லலாம்.
இதற்கப்பால் அன்றாட வாழ்க்கையில் நான் என்ன செய்கிறேன் என்றால் சில சாதாரணமான குறிப்புகளை சொல்ல முடியும், இது பிறருக்கு உதவுமா என்று எனக்கு தெரியாது.
என்னைப் பொறுத்தவரை காலை என்பது மிக முக்கியமானது. துயில் எழுந்து அமரும்போது உள்ள மனநிலை ஒருபோதும் சோர்வும் தனிமையும் சலிப்பும் கொண்டதாக அமையக்கூடாது. ஒருகாலையை புதிய ஒரு கொடையாக ஒர் இனிய தருணமாக உணரும் மனநிலை இருந்தால் , அந்தக்கொண்டாட்டத்துடன் அந்த நாள் தொடங்கினால் அது நன்கு துலங்குமென்பது என் அனுபவம். அது இயல்பிலேயே இருக்குமா என்றால் அப்படி அல்ல என்பதே உண்மை. அவ்வாறு சொல்லி நம்மை நாமே ஏற்க வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு காலையில் எழுந்து இனிய காலை என்று நீங்க்ள் நினைக்கிறீர்கள் என்றால் அது இனிய காலையாக மாறுவதைப்பார்க்கலாம். இனிய வெயில், இனிய காற்று, இனிய ஓசைகள், காட்சிகள் என்று எண்ணிக் கொண்டீர்கள் என்றால் அதையேதான் உள்ளம் விரிவாக்கிக்கொள்ளும்.
ஆகவே காலையில் அவ்வினிமையைப்போக்கும் எதையும் செய்யாமலிருப்பது நன்று என்று நான் நினைக்கிறேன். அந்த நாளில் நாம் இயற்ற போகும் பணி எதுவோ அதிலிருந்து நம்மை திசைதிருப்பும் எதையும் அன்று காலையில் நாம் எதிர்கொள்ளக்கூடாது. ஆகவே காலையில் ஒரு போதும் செய்தித் தாள்களை படிக்கக்கூடாது என்பது எனக்கு நானே விட்டுக்கொண்ட அறிவிப்பு. மின்னஞ்சல்களைக் கூட காலையில் மிகப்பிந்தியேபார்ப்பேன்.
நான் காலையில் எழுந்து எதை உணரவேண்டும், அன்று எதைச் சிந்திக்கவேண்டுமென்பதை நானே முடிவெடுக்க வேண்டும். அன்று என் வாசலில் வந்து விழும் புறவுலகு அதை முடிவு செய்யக்கூடாது. அன்று செய்தித்தாளில் இருக்கும் செய்தி என்னை நிலை குலைய வைக்கலாம். அன்று இணையதளத்தில் வாசிக்கும் ஒரு வரி அல்லது அன்று மின்னஞ்சலில் வரும் ஒரு உணர்வு என்னை திசைதிருப்பலாம். ஆகவே எழுந்த உடனேயே அன்றைய காலை ஒளியை எதிர்கொள்கிறேன். பின் நேரடியாகவே அன்றைய வேலைக்குள் செல்கிறேன். பெரும்பாலும் வெண்முரசுக்குள்.பத்து மணிக்கு மேல் எனது மனநிலை ஊக்கம் கொண்டதாக அமைந்தபிறகுதான் மின்னஞ்சல்களையோ செய்தித் தாள்களையோ பார்ப்பது வழக்கம்.
இரண்டாவதாக, எந்த மனநிலையில் எங்கு சென்றாலும் அடித்தளத்தில் நாம் அன்று செய்ய வேண்டிய பணியை நினைவில் வைத்திருப்பது என் வழக்கம். மிகத்தீவிரமான இலக்கிய விவாதத்தின் நடுவே ஒரு மணி நேரத்தை எடுத்துக் கொண்டு வந்து அமர்ந்து வெண்முரசை எழுத முடியும் என்ற நிலையிலே என்னை வைத்திருக்கிறேன். ஒவ்வொரு நாளும் என் முதன்மைக் கடமையை மீண்டும் மீண்டும் நினைவு கூர்ந்து கொண்டே இருப்பேன்.
மனம் ஒருபோதும் தன்னிச்சையாக நம் பணிகளை எண்ணிக் கொள்ளாது. கவலைகளை விரிவாக்கிக் கொள்வது அதன் முதல் இயல்பு. கவலைகள் இல்லையேல் அது உதிரி நினைவுகளில் அலையும். நம் முதன்மைப் பணியை முனைந்து எண்ணத் தொடங்கினால் அதுவே எண்ணமாக ஓடுவதையும் காணலாம். அப்படி நம் முதன்மைப் பணியில் ஆழம் ஈடுபட்டுக்கொண்டே இருந்தால் எந்த இடைவெளியிலும் அதைச் செய்யமுடியும். நான் வெண்முரசை விமான நிலையங்களில் ரயில்களில் காத்திருப்பறைகளில் எல்லாம் எழுதியிருக்கிறேன். ஏனென்றால் எப்போதும் அதில்தான் இருக்கிறேன்.
மூன்றாவதாக, நான் பல தருணங்களில் சொல்லியிருக்கும் மிக எளிமையான விஷயம். புறச்சூழல்களே நமது எண்ணங்களை வடிவமைக்கின்றன. நமது ஆளுமையில் புறச்சூழலில் உள்ள இடத்தை நாம் ஒருபோதும் மறுக்கக்கூடாது. நம்மை நாம் ஒருவகையான சுயம்பு, தூய மனம் என்றெல்லாம் கற்பனைசெய்யவேண்டியதில்லை. அது வெற்று ஆணவமேயாகும்.நாம் ஒரு கண்ணாடிபோல ஒருவகையான பிரதிபலிப்ப்ய்தான். மனதிற்கு உகந்த இடத்தில் உகந்த முறையில் உங்கள் இருப்பை அமைத்துக் கொள்வதென்பதே உங்களைச் செயலாற்ற வைக்கும்.
அதாவது ஆழ்மனதுக்கு உகந்த முறையில் உங்கள் இடம் அமைய வேண்டும். அந்த இடத்தை மாற்றிக் கொள்ள முடியாது. எனது இருக்கையிலோ நாற்காலியில் கணிப்பொறி முன் அமர்ந்தாலே என்னால் எழுத முடியும். இடத்தை தொடர்ந்து மாற்றுவது, அந்த இடத்தில் பிறவகையான தொந்தரவுகளை அனுமதிப்பது ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். இந்த அம்சத்தை இளையராஜா முதலிய பலரிடம் கவனித்திருக்கிறேன்.
நான்காவதாக, ஒரு நீண்ட வேலையை பல சிறு அலகுகளாக பிரித்துக் கொள்வது என்பது தொடர்ந்து பணியாற்றுவதற்கான வழி. தொடர்ந்து பத்து மணிநேரத்திற்குமேல் கூட நான் எழுதுவதுண்டு. வெண்முரசின் இரண்டு அத்தியாயங்களை எழுதுவதற்கு சாதாரணமாகவே அவ்வளவு நேரமாகும். பத்து மணி நேரம் ஒருவர் தொடர்ந்து அமர்ந்திருப்பாரென்றால் இயல்பிலேயே அவருடைய மூளை சோர்வடைந்துவிடும். ஆனால் நான் ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் ஒருமுறை எழுவேன். கீழே சென்று டீ போட்டுக் குடிப்பதுண்டு. சிறிய நடை சென்று வருவதுண்டு.
ஆனால் இந்த இடைவெளிகளுக்குப்பிறகு மீண்டும் அதே இடத்தில் வந்து சேர்வேன். ஒரு வேலையின் முடிவில் ஒரு எச்சத்தை விட்டுச் செல்வதென்பது ஒரு நல்ல வழிமுறை. ஓர் அத்தியாயத்தை அல்லது ஒரு பத்தியை முழுமையாக முடித்துவிட்டு எழமாட்டேன். ஒரு சொற்றொடர் பாதியில் நிற்கும்போதுதான் எழுந்து செல்வேன். திரும்பி வரும்போது விட்டதை முடிக்க முயன்றாலே அந்த மனநிலை அமைந்துவிடும். ஒர் அத்தியாயத்தை முடித்துவிட்டு போனால் புதிய ஒர் அத்தியாயம் தொடங்குவது மிகக்கடினமானது. முந்தைய வேலையை சரிபார்ப்பது, சீரமைப்பது என்பது மேலும் அதில் ஈடுபடுவதற்கான சிறந்த வழி .ஒரு கட்டுரையை எழுதியிருந்தேன் என்றால் அதை பிழைதிருத்தும்போது தொடர்ந்து எழுதுவதற்கான உளநிலை அமைகிறது.
கடைசியாக, எப்போதும் ஊக்க நிலையில் இருந்து கொண்டிருத்தல். தளர்ந்த அன்றாட மனநிலைக்கு திட்டமிட்டே இடம் கொடுக்காமலிருத்தல். அரட்டைகளை, அன்றாட எளிய செயல்களை முழுமையாகத் தவிர்த்துவிடுவது. தவிர்த்துவிடுகிறேன் என்பதை நானே அறிவிப்பதென்பதே தவிர்ப்பதற்குச் சரியான வழி. அனைவரிடமும் ’இல்லை இச்சிறுவிஷயங்களில் நான் ஈடுபடுவதில்லை, நான் தவிர்த்துவிடுகிறேன்’ என்று காட்ட ஆரம்பிக்கும்போதே உங்களை அவர்கள் தவிர்க்க ஆரம்பிப்பார்கள். அது பெரிய விடுதலை.
ஆனால் அனைத்துச்செயல்பாடுகளுக்கும் அடிப்படையாக இருந்தாகவேண்டிய ஒரு குணம் உண்டு, அதை தன்முனைப்பு என்று சொல்லலாம். இன்னும் கூர்மையாக ஆணவம் என்றும் சொல்லலாம். இவ்வுலகம் மிகமிகப்பிரம்மாண்டமானது. இதன் அறிவுப்பெருக்கு நினைத்தற்கு அரிய பேருருக்கொண்டது. மாமேதைகளும் வரலாற்றுமானுடரும்கூட இதில் சிறுதுளிகளே. ஆகவே ஒருவன் செயலாற்றினாலும் ஆற்றாவிட்டாலும் அதில் குறிப்பாக ஒன்றும் நிகழப்போவதில்லை. அவன் தன் பங்களிப்பை ஆற்றவேண்டும், அதற்கு தான் முக்கியமானவன், தேவையானவன் என அவன் நம்பவேண்டும். காலத்தின் முன் நான் என எழுந்து நிற்கும் தன்னம்பிக்கை அவனுக்குத் தேவை. அறிவியக்கத்தில் செயல்படும் எவருக்கும் அந்த தணியா ஆணவமே கடைசிவரைக்கும் வரும் அருந்துணை
ஜெ
***
பழைய கட்டுரைகள்
செயலின்மையின் இனிய மது
ஒருமரம் மூன்று உயிர்கள்
செயலின்மையைச் சொல்கிறதா இந்துமதம்?
தன்னறம் சாங்கிய யோகம்
கர்மயோகம்
தன்னறம்
யாதெனின் யாதெனின்…
செய்தொழில் பழித்தல்
விதிசமைப்பவனின் தினங்கள்
நான்கு வேடங்கள்
தேடியவர்களிடம் எஞ்சுவது
***
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
குற்றமும் தண்டனையும் -செம்பதிப்பு
அன்பின் ஜெ
தங்களிடம் முன்பே பகிர்ந்து கொண்டபடி என் தமிழ் மொழிபெயர்ப்பில் 2007ஆம் ஆண்டு வெளிவந்த ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவலைத் தற்போது சென்னை நற்றிணை பதிப்பகத்தார் தங்கள் சிறப்பு வெளியீடாக செம்பதிப்பாக வெளியிட்டுள்ளனர்.
தங்கள் பார்வைக்கு முகப்பட்டை படத்தை இத்துடன் இணைத்திருக்கிறேன்…
* சென்ற ஆண்டு நான் முடித்திருக்கும்
NOTES FROM THE UNDERGROUND இன் மொழியாக்கம்
நிலவறைக்குறிப்புக்கள்
என்னும் தலைப்பில் விரைவில் நற்றிணை வெளியீடாக வர இருக்கிறது.
திருத்தங்கள் முடித்தாயிற்று,ஈரோடு புத்தகக்கண்காட்சியின்போது வரக்கூடும்
எம் ஏ. சுசீலா
***
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
யோகி- கடிதங்கள்
அன்பிற்கினிய ஜெ,
வணக்கம்! நலமா? நீங்கள் யோகி ஆதித்யநாத்தின் வெற்றியை பற்றி பேசியிருப்பது மறுக்க முடியாதது.ஜனநாயக விழுமியத்தில் ஒரு மடாதிபதி அதுவும் பழங்கால பண்ணையாரிய மரபில் ஊரிய பகுதியில் இருந்து அவர் உருவாகி வந்தது எதை நோக்கி உ.பியை கொண்டு செல்லும் என்று வருத்தப்பட்டிருந்தீர்கள்.உ.பியில் இதற்கு முன் ஜனநாயக விழுமியங்களின் எச்சங்களா ஆட்சி செய்தார்கள்? யாதவ் குண்டாராஜ்தானே நடந்தது? அரசியல்வாதிகளின் எருமை மாட்டை காணவில்லை என்றால் காவல்துறை ஆய்வாளரே விரட்டி பிடிக்க வேண்டும் என்பதுதானே நிலை.
சட்டையும்/பேண்ட்டும் போட்டுவிட்டால் சட்டத்தின் ஆட்சி நடக்கும் என்றில்லையே.ஜாதிய வன்மத்தை ஏதேனும் ஒரு பொது போர்வைக்குள் கொண்டு வந்து சில கட்டுபாடுகளுடன் முன்னேற்ற வேண்டிய கடைமை உள்ளதே.கட்டற்று இடதுபுறம் சென்ற வாகனத்தை அதைவிட வேகமாக வலதுபுறம் திருப்பினால்தானே நடுநிலையை அடைந்து சீராகும்.உங்களுடைய அச்சம் எதார்த்தமானது உங்களுடைய கள அனுபவமும் பெரிது இரு முனையும் கூராகிறது என்கிற நுண்ணிய பார்வையை யாராலும் மறுக்க முடியாது.நிச்சயம் யோகி அந்த விளிம்புநிலை வரை செல்லமாட்டார் என்றே தோன்றுகிறது.
நன்றி
சுந்தர்ரராஜசோழன்
மயிலாடுதுறை
***
அன்புள்ள சுந்தர்ராஜ சோழன்
நீங்கள் சொல்லியிருப்பது இன்னொருவகை உண்மை. உத்தரபிரதேசத்தில் மாயாவதியும் லல்லுவும் ஆட்சி செய்தபோது சென்றிருக்கிறேன். அந்த நிலப்பிரபுத்துவ அமைப்பை எவ்வகையிலும் அவர்கள் கலைக்க விரும்பவில்லை. அதன் அதிகார அமைப்பில் சுகம் கண்டார்கள். யாதவர்கள் அதில் டாக்கூர் பூமிகார் பிராமணர்களின் இடத்தை யாதவர்கள் எடுத்துக்கொண்டார்கள். மாயாவதிகூட அங்கே தலித்துக்களை அடிமைகளாக வைத்திருக்கும் அமைப்பை ஆதரித்தார் என்பதே உண்மை
சாலைகளிலேயே நேரடியான ரவுடித்தனம் உபியின் முக அடையாளம். எல்லா சாலைகளிலும் தனிப்பட்ட ரவுடிகள் செக்போஸ்ட் அமைத்து காசுவசூல் செய்வார்கள். பிகாரிலும் இது உண்டு. தட்டிக்கேட்கவே முடியாது. உபியில் பல இடங்களில் பொதுமக்களே கையில் துப்பாக்கியுடன் அலைவதைப்பார்க்கமுடியும். ஆனால் யோகி ஆதித்யநாத்தும் அந்தப் பண்பாட்டில் வந்தவரே. அவர் அதை மாற்றுவார் என எனக்குப் படவில்லை
ஜெ
***
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–66
66. கிளையமர்தல்
சர்மிஷ்டையை தான் எந்த வகையிலும் பொருட்படுத்தவில்லை என்று தேவயானி எண்ணினாள். அதையே ஒவ்வொரு அசைவிலும் வெளிக்காட்டிக் கொண்டாள். பரிவையும் ஏளனத்தையும் கலந்து மிகக் கீழிறங்கிவரும் தன்மையில் அவளிடம் உரையாடினாள். ஆனால் தனிமையில் எழும் தன்னுணர்வில் பிற எவரையுமே உள்ளூர தான் பொருட்படுத்தவில்லை என்றுணர்ந்து எரிச்சல் கொண்டாள். அதை வெல்ல மேலும் ஏளனத்தையும் பரிவையும் கலந்து அவளிடம் காட்டினாள். அதை சாயையும் அறிந்திருந்தாள். அவளும் அதையே சர்மிஷ்டையிடம் காட்டினாள்.
ஒவ்வொரு நாளும் சர்மிஷ்டையைப் பற்றி சாயை ஏதேனும் ஒரு பகடியை தேவயானியிடம் சொன்னாள். சிறு வேடிக்கைக்கும் தேவயானி வாய்விட்டு உரக்க நகைத்தாள். ஒன்றாகவே பறக்கும் இரு கருவண்டுகள், இரு செந்தாமரை மொட்டுகளில் எதில் அமர்வதென்று இணைந்தே தடுமாறுகின்றன என்ற பாடல்வரியைக் கேட்டு தேவயானி தலையசைத்துப் பாராட்ட அவை எழுந்ததும் சாயையிடம் “ஏன் அந்த கருவண்டுகள் இணையாக பறக்கின்றன, அவை உடன்பிறந்தவையா?” என்று சர்மிஷ்டை கேட்டாள். “ஆம், அந்த மொட்டுகள்தான் இரட்டைப்பிறவிகள்” என்று சாயை சொன்னாள். சர்மிஷ்டை “மெய்யாகவா?” என வியந்தாள். அதை சாயை தேவயானியிடம் சொன்னபோது அவள் சிரித்ததில் புரைக்கேறியது.
சாயையும் தேவயானியும் சோழியாடிக்கொண்டிருக்கையில் உள்ளே வந்த அவள் “எங்கள் அரண்மனையில் சேடியர்தான் இதை ஆடுவார்கள்” என்றாள். “அரசியர் நாற்களமே ஆடவேண்டும் என்றார் அன்னை.” சாயை சிரிப்பை ஒதுக்கியபடி “உங்களுக்கு நாற்களமாடத் தெரியுமா, இளவரசி?” என்றாள். “தெரியாதே…” என்றபடி சர்மிஷ்டை அமர்ந்தாள். “சோழியாவது ஆடுவீர்களா?” சர்மிஷ்டை “இல்லை, நான் அமர்ந்து பார்த்திருக்கிறேன். ஒரே தருணத்தில் அவ்வளவு செயல்களைச் செய்ய என்னால் இயல்வதில்லை” என்றாள். “அரசியர் சோழியாடுவதில்லை இளவரசி, சோழியாடுவது கந்தர்வர்களின் விளையாட்டு” என்றாள் சாயை. “மெய்யாகவா?” என சர்மிஷ்டை வியந்து முகவாயில் கைவைத்தாள். “போதுமடி” என்றாள் தேவயானி.
“ஆடுகிறீர்களா, இளவரசி?” என்று சாயை எழுந்துகொண்டாள். “இல்லை… அய்யோ!” என சர்மிஷ்டை பின்னடைந்தாள். “பிடித்து அமர வை” என்றாள் தேவயானி சிரித்தபடி. சாயை பின்னால் நகர்ந்து சுவரில் முட்டிக்கொண்ட சர்மிஷ்டையைப் பிடித்து தோள்களை அழுத்தி அமரச் செய்தாள். “எனக்கு உண்மையிலேயே ஆடத்தெரியாது” என்றாள் சர்மிஷ்டை குரல் தளர. “அதை நான் கற்றுத்தருகிறேன்” என்றபடி தேவயானி சோழிகளை பரப்பி அதில் ஒன்றை எடுத்து மேலே வீசி அது கீழே வருவதற்குள் கீழிருந்து சோழிகளை அள்ளி அள்ளியவற்றை இரண்டாகப் பகுத்து மீண்டும் பரப்பினாள். “என்னால் மேலெழும் சோழியைப் பார்த்தால் கீழே அள்ள முடியவில்லை” என்றாள் சர்மிஷ்டை. “மிக எளிது… இரண்டையுமே பார்க்கவேண்டியதில்லை. கைகளின் ஒத்திசைவை மட்டும் கண்கள் கண்காணித்தால் போதும்” என்றாள் தேவயானி.
சோழியாடுதல் ஒவ்வொரு நாளும் பலநூறு இடங்களில் அரண்மனை அகத்தளத்தில் நடந்துகொண்டிருந்த போதிலும்கூட சர்மிஷ்டை அவ்வாட்டத்தை கூர்ந்ததே இல்லை. சேடிகளும் செவிலியரும் ஆடும்போது அவளும் அருகே அமர்ந்து நோக்கியதுண்டு. சோழி ஆடல் கைத்திறனும் கண்திறனும் கணக்குத்திறனும் இணைந்து ஊழுடன் முயங்கி ஆடும் ஒரு நடனம் என்று அவளுக்குத் தோன்றியது. கைகள் மேலும் கீழும் பறக்க ஊடே விழிகள் அலைய அவர்கள் ஆடுவது ஓர் இசைக்கருவியை வாசிப்பது போலிருக்கும். கைகள் மட்டுமே எனக் கண்டால் ஒரு நடனம். அல்லது வானில் சுழன்றுகொண்டிருக்கும் இரு பறவைகள்.
சோழிகளை மட்டும் நோக்கினால் மேலெழுந்து கீழே வரும் சோழியும் கீழிருந்து கைகளுக்குள் புகும் சோழிகளும் தங்களுக்குள் பிறிதொரு ஆடலை எவருமறியாமல் நிகழ்த்திக்கொண்டிருப்பதாகத் தோன்றும். சிரிப்புகள், பகடிகள். ஊழென்று கொண்டால் ஒவ்வொரு முறையும் மிகச் சிலரே அதில் வெல்வதெப்படி? திறன் என்று கொண்டால் பெருந்திறன் கொண்டவர்களை எளியவர்கள் வெல்வதெப்படி? “அமர்க, இளவரசி” என்று சேடியர் சொல்கையில் “இல்லை, அரசியர் இதை ஆடலாகாது” என பின் நகர்ந்துகொள்வாள்.
“மிக எளிய விளையாட்டு. ஆடத்தொடங்கினால் பித்தாக்கி விடும்” என்றாள் அவள் அணுக்கத்தோழி சியாமளை. “இதோ, மேலே துள்ளி எழுவது இவ்வரண்மனைக்கு வெளியே உள்ள உலகு. கைகளால் நாம் அள்ளிப்பற்றி எடுப்பது அகத்தளத்தில் உள்ளது. எழுவது ஆண், பரவுவது பெண். ஆண் தெய்வம், பெண் இயற்கை” என்றாள் இளம்விறலி. வெற்றிலை மென்ற பற்கள் தெரிய சிரித்தபடி முதுவிறலி “எங்கு கற்றாய் இதை?” என்று கேட்டாள். “இவ்வளவு சொற்களைச் சேர்த்து அள்ளுவதால்தான் இவள் ஒருபோதும் ஆட்டத்தில் வெல்வதில்லை போலும்” என்றாள் பிறிதொருத்தி.
சாயையும் தேவயானியும் ஆடும் ஆட்டம் முற்றிலும் நிகர்நிலை கொண்டது. தேவயானி தன் ஆடிப்பாவையுடன் ஆடுவதாகவே தோன்றும். விழிகள் கூர்கொள்ள சாயை மிக மெல்ல தன் கையை நீட்டும்போது புலிபோலிருப்பாள். நிகர் எடை கொண்ட இரு துலாக்கள் நடுவே முள் என ஊழ் நின்று ஆடுவதையே அவள் கண்டாள். ஒவ்வொரு கணமும் வெற்றி இதோ என்றும் இல்லை மறுபக்கம் என்றும் ஆடியது. காலை முதல் தொடங்கிய ஆடல் உச்சி உணவு வரை நீடித்தது. எப்போதும் அடுத்த ஆடலுக்கான வஞ்சினத்துளியை எஞ்சவிட்டு முடிந்தது.
சர்மிஷ்டை தேவயானியின் கைகளை நோக்கியபடி விளையாடத் தொடங்கினாள். அவளால் சோழிகளை அள்ள முடியவில்லை. எழுந்ததை நோக்கிய விழி தாழுமுன் கீழிருந்த கை அனைத்து சோழிகளையும் தவறவிட்டது. மீண்டும் மீண்டும் கை நழுவ கண்ணீர் மல்கி “என்னை விட்டுவிடுங்கள்… என்னால் இயலாது” என்றாள். “நீ ஆடியே ஆகவேண்டும். ஒவ்வொருநாளும் ஒருமுறையேனும்” என்றாள் தேவயானி. “வேண்டாம்” என்று அவள் கண்ணீரை ஒற்றியபடி தலையசைத்தாள். “ஆடியே ஆகவேண்டும்” என்று உரத்த குரலில் தேவயானி சொல்ல அவள் தலை நிமிராமலேயே கண்திறந்து பார்த்து சரியென்று தலையசைத்தாள். “அத்தனை ஆடல்களும் திறனுக்கும் ஊழுக்குமான போர்கள். ஆடலறியாமல் எவரும் ஆளமுடியாது” என்றாள் தேவயானி.
ஒவ்வொரு நாளும் கேலிக்குரிய வகையில் சர்மிஷ்டை தோற்றுக்கொண்டிருந்தாள். தன் ஆட்டம் சுவை கொள்வதற்காகவே அவளுக்கு சற்று விட்டுக்கொடுக்க வேண்டிய நிலைக்கு ஆளானாள் தேவயானி. மேலெழும் சோழிக்கும் கீழிருக்கும் சோழிகளுக்கும் நடுவே விழி அலையவும், இரு கைகளும் தங்களை அறியாமலேயே இலக்குகளை நோக்கி செல்லவும் பயிற்றுவித்தாள். “எண்ணாதே! எண்ணிக் கணக்கிட்டால் இச்சிறு காலத்துளிக்குள் இரு கைகளும் அவற்றை நிகழ்த்த முடியாது. எண்ணத்தைவிட விரைவுகொண்டது சித்தம். அதற்கு விழிகளையும் கைகளையும் ஒப்படை” என்றாள் தேவயானி.
“சோழியாடலின் நுட்பமென்பது எண்ணத்தை முற்றழியச் செய்வதே. எண்ணமென்பது நிலையழிவு. உடலுறுப்புகளும் உள்ளமும் முழுமையான ஒத்திசைவு கொள்கையில் எண்ணம் அழிகிறது. எண்ணமே காலம். காலம் அழிகையில் காலமில்லாப் பெருவெளியில் வாழும் ஆழ்சித்தம் எழுந்து நின்று விளையாடத் தொடங்குகிறது. அதற்கு கண்கள் ஆயிரம், கைகள் பல்லாயிரம்” என்றாள் தேவயானி. அவள் சொன்னவை அப்போது புரியவில்லை, ஆனால் அவள் குரலென்பதனால் சித்தத்தில் செதுக்கப்பட்டன. சொல்சொல்லென உடன்வந்தன. நினைவொழிந்து கனவெழுகையில் முளைத்துக்கொண்டன. ஆயிரம் கைகளில் ஒளிரும் விண்மீன் சோழிகளுடன் அவள் இருளும் ஒளியுமிலா வெளியொன்றில் அமர்ந்திருந்தாள்.
மெல்ல மெல்ல அவள் கற்றுக்கொள்ளத் தொடங்கினாள். ஒருமுறை அக்காலத் தெறிப்புக்குள் கை நிகழ்ந்து முடிந்தபோது அவளே வியந்து கூச்சலிட்டாள். மறுமுறை கையே அதை அறிந்திருப்பதை உணர்ந்தாள். மிகச் சரியாக சோழிகளைப் பறித்துப் பரப்பியபோது தேவயானி உரக்க நகைத்து கை நீட்டி அவள் தொடையில் தட்டி “நன்று! நன்று!” என்று பாராட்டினாள். ஒவ்வொரு பாராட்டும் அவளுக்கு உவகையை பெருக்கியது. “உடல் எவ்வளவு தெரிந்திருக்கிறது!” என அவள் வியந்தாள். “அப்படியென்றால் உளம் எவ்வளவு அறிந்திருக்கும்” என்று தொடர்ந்தாள். “வெல்வதை உள்ளமும் உடலும் விரும்புகின்றன” என்றாள் தேவயானி. “வெற்றியின்போது அவை கொள்ளும் மதர்ப்பு வியப்பூட்டுகிறது. தங்களை கட்டிவைத்திருக்கும் காலத்தையும் வெளியையும் அவை கடந்து செல்கின்றன அப்போது.”
அந்த ஆடலில் அவள் ஒருமுறை தேவயானியை வென்றாள். நான்குமுறை வென்று தேவயானி வெறுங்களம் கண்டபோது “ஒருநாள் உங்களை மெய்யாகவே வெல்லப்போகிறேன்” என்று அவள் சொன்னாள். “வெல்! வென்று காட்டு! அன்று உனக்கு ஒரு பரிசு தருகிறேன்” என்றாள் தேவயானி. “நான் விரும்பும் பரிசாக அது இருக்க வேண்டும்” என்று அவள் சொன்னாள். “நீயே சொல்” என்றாள் தேவயானி. “சுமக்க முடியாத பரிசு, அழியவே அழியாதது… சரியா?” என்றாள் சர்மிஷ்டை.
தன் இல்லத்துக்கு மீண்டதும் இரவில் தோழியரை அழைத்து அமரச்செய்து வெறியுடன் பயின்றாள். தன்னந்தனிமையில் இருக்கையில் கண்ணுக்குத் தெரியாத சோழிகளை ஆடிக்கொண்டிருந்தன அவள் கைகள். ஆழ்கனவில் மீண்டும் மீண்டும் அவள் தேவயானியுடன் விளையாடினாள். தேவயானிக்கு நிகராக சாயையென அவள் அமர்ந்து ஆடினாள். பின்னர் தேவயானியென அமர்ந்து சாயையுடன் ஆடினாள். சாயையும் தேவயானியுமாக ஆடும் அவளை அவளே நோக்கிக்கொண்டிருந்தாள்.
அவள் திறன் பெருகிவருவதை தேவயானி உணர்ந்தாள். சாயையிடம் “மிக அருகே வந்துவிட்டாள். இத்தனை விரைவில் இவள் இதை கற்றுக்கொள்வாள் என்று எண்ணவே இல்லை” என்றாள். “அவர்களின் கைகள் மெலிந்தவை, அரசி. மிக விரைவாக அவை சுழலமுடியும்” என்றாள் சாயை. “ஆம், அதைவிட பிறிதொன்றுண்டு. வெல்வதன் இன்பம் நம்மைவிட அவளுக்கு மிகுதி. அது அவளை வெறிகொண்டு எழச்செய்கிறது. உடல்வலுக் குறைந்தவர் வில்லவரும் வேலவரும் ஆவதன் நுட்பம் அது என்பார்கள்” என்றாள் தேவயானி.
அவள் தூணில் சாய்ந்து நோக்கி நிற்கையில் தேவயானியும் சாயையும் விளையாடிக்கொண்டிருந்தனர். தேவயானி சோழியை அள்ளிப்பரப்பி களம்வென்று “இனி உனக்கு” என்றாள். சோழியை கைகளால் அள்ளிப் பரப்பி மூன்று சோழிகளை மேலெழுப்பி அவை வருவதற்குள் மும்முறை அள்ளிப்பரப்பி மீண்டும் பரப்பி கணக்கிட்டு விழிதூக்கினாள் சர்மிஷ்டை. ஒருகணம் தேவயானியின் விழிகளில் திகைப்பு வந்து மறைந்தது. சாயை உரக்க நகைத்து “வெற்றி! எளிய வெற்றியல்ல, மத்தகத்தால் மோதி உடைத்து உட்புகும் வெற்றி” என்றாள். தேவயானியும் நகைத்து “ஆம், வென்று விட்டாள்… தன்னை கடந்துவிட்டாள்” என்றாள்.
சர்மிஷ்டை “உங்கள் அடி தொடர்ந்தேன்” என்றாள். “நீந்துகையில் பறந்தேன். இப்போது கிளைநுனியில் இறகசையாது அமர்ந்திருக்கிறேன்.” தேவயானி அவள் கைகளைத் தொட்டு “சொல், நான் நீ கோரும் பரிசை அளிக்கிறேன்” என்றாள். “என்னையும் என் கொடிவழியையும் வாழ்த்தி ஒரு பாடல் புனைந்து எனக்களியுங்கள், அந்தணர் செம்மொழியில்” என்றாள் சர்மிஷ்டை. “இவ்வளவுதானா?” என்று சாயை சிரித்தாள். தேவயானி “சரி, ஆனால் ஒருமுறைதான் சொல்வேன். அதற்குள் அது உன் உளம் நின்றால் அப்பாடலுக்கு நீ தகுதியுடையவள் என்று பொருள்” என்றாள். “ஆம்” என்றாள் சர்மிஷ்டை.
தேவயானி “சிம்மத்துடன் விளையாடுபவன் அழகன், துலாமுள் என நெறிநிற்பவன் பேரழகன். அவனை ஈன்றவளோ தன் கனிவால் அழகுகொண்டாள். மலர்நாடும் வண்டே, கேள். மலர்களில் அழகென்பதே கனிகளில் சுவையென்றாகிறது” என்றாள். புரியாமல் விழித்து நோக்கிய சர்மிஷ்டை சட்டென்று கைகூப்பி “என் கொடிவழியில் எழுபவர்களா அவர்கள்?” என்றாள். தேவயானி “சொல் பார்க்கலாம்” என்றாள். ஒவ்வொரு சொல்லும் ஒரு தனி உயிரென வந்து தன் முன் அணிவகுத்து நிற்பதை சர்மிஷ்டை கண்டாள். ஒவ்வொன்றையும் தொட்டு அவற்றின் பேர் சொல்ல அவளுக்கு எந்த இடரும் இருக்கவில்லை.
தேவயானி “நன்று, உன் நாச்சுழிப்பும் கூர்மை கொண்டுள்ளது” என்றாள். “உங்களுடன் உரையாடுகிறேன் அல்லவா?” என்றாள் சர்மிஷ்டை. “அந்தணச் செம்மொழியில் அசுரருக்கு இயற்றப்பட்ட முதல் பாடல் இது” என்று சாயை சொன்னாள். தேவயானி “உண்மையாகவா? எவரும் பாடியதில்லையா?” என்றாள். “அது வேதமொழி அல்லவா?” என்றாள் சாயை. “மலர்கள் மண்ணில்தான் வேர்கொண்டுள்ளன” என்றாள் தேவயானி. சர்மிஷ்டை “இப்பாடலை எனது கொடிவழிகள் பாடும். எங்கள் அரண்மனையில் இது பொறிக்கப்பட்டிருக்கும்” என்றாள்.
சாயை குடிலுக்குப் பின்பக்கம் சென்று பிற சேடிகளை அழைத்து “இளவரசிமேல் அரசி ஒரு பாடல் புனைந்திருக்கிறார்கள். கேளுங்கள்” என்றாள். “பாடலா…?” என்று உள்ளே வந்த சேடியரிடம் சாயையே அப்பாடலை உரக்க சொன்னாள். “நன்று!” என்று அவர்கள் மெல்லிய திகைப்புடன் சொல்லி ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டனர். சர்மிஷ்டை “அழியாத சொல். ஒரு மூச்சென இயல்பாக வெளிப்படும் கவிதை என்றுமழியாது என்று முன்பு என் ஆசிரியர் சொல்லியிருக்கிறார்” என்றாள். அவர்கள் ஒருவரோடொருவர் விழிநோக்கி இதழ்களுக்குள் புன்னகை செய்தார்கள்.
அன்று முழுக்க அக்கவிதையையே சொல் மாற்றிச் சொல்லி பொருள் மாற்றிக் கொண்டு விளையாடினார்கள். “என்னடி இது, ஒரு பாடலை பந்தென போட்டு விளையாடுகிறீர்களே?” என்று தேவயானி சினந்துகொண்டாள். “ஆம், இக்கவிதையை இனி பிறரெவரும் சொல்லக்கூடாதென்று தடை சொல்லப்போகிறேன்” என்றாள் சர்மிஷ்டை. “இது என் மூத்தவளிடம் இருந்து எனக்குக் கிடைத்த நற்பரிசு. பிறர் அதை தொடவேண்டியதில்லை” என்றாள். சேடி ஒருத்தி “ஆம், இனி எவருமே இதை பாடக்கூடாது என ஆணையிடவேண்டும்” என்றாள். சர்மிஷ்டை அந்தப் பகடியை புரிந்துகொள்ளாமல் “ஆம்” என்றாள். அவர்கள் சிரிப்புடன் திரும்பிச்சென்றனர்.
அந்தியில் சுக்ரரின் வகுப்பில் சாயை எழுந்து “இன்று தேவி பாடிய பாடல் இது, ஆசிரியரே” என்றாள். “சொல்க!” என்று சொல்லி சுக்ரர் முகமலர்வுடன் நோக்க சர்மிஷ்டை அப்பாடலை சொன்னாள். “அரிய பாடல்” என்றார் சுக்ரர். “ஒரு பெண்ணின் அழகு அவள் மைந்தரில்தான் முழுமையாக வெளிப்படுகிறது. எங்கோ இன்னும் எழாத காலக்களத்தில் இளவரசியின் முகம் எழுவதை உள்விழியால் நோக்கமுடிகிறது.”
கிருதர் “பரிசு என்று இப்பாடலை ஏன் கேட்டீர்கள், இளவரசி?” என்றார். இயல்பாக “பெற்றுக்கொள்ளும் அளவுக்கு இங்கு பிற பொருள் எது? அனைத்தும் எந்தையின் கருவூலத்திலிருந்து வந்தவை” என்றாள் சர்மிஷ்டை. கிருதரின் விழிகள் ஒருகணம் மாற அவர் தேவயானியை நோக்கி திரும்பினார். தேவயானியின் முகம் மாறிவிட்டதை அங்கிருந்த அனைவரும் உணர்ந்தனர். சர்மிஷ்டை மட்டும் அதை காணவில்லை. “பொன்னும் பொருளும் எங்களிடம் உள்ளன. இல்லாதது கல்வி அல்லவா? அதைத்தான் நான் தேவியிடம் கேட்டேன்” என்றாள். “நன்று” என்று சுக்ரர் தலையசைத்தார்.
சர்மிஷ்டை கிளம்பிச்சென்ற பின்னரும் அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். “அரசகுடியினரின் சொல் என்பது ஆயிரம்முறை மடக்கப்பட்ட கூரிய கத்தி என்பார்கள். சொல்லெண்ணிப் பேசும்பொருட்டே அவர்களுக்கு அனைத்துக் கல்வியும் அளிக்கப்படுகிறது” என்றார் சத்வர். “அவள் சொன்னதில் பிழையேதுமில்லை, தேவியிடம் அவள் பிறிதெதை கேட்கமுடியும்?” என்றார் சுக்ரர். “அவர் கொடிவழியில் பேரரசர் எழவிருப்பதை சொல்லிவிட்டீர்கள், தேவி. நெறிநின்றாளும் அரசனும், சிம்மத்துடன் விளையாடும் வீரனும்” என்றார் கிருதர்.
“அவர்களுக்கும் நம் தேவிக்கும் அகவை ஒன்றே. ஆனால் பல ஆண்டுகள் இளையவள் போலிருக்கிறார். உடலும் உள்ளமும் முதிராதவள்போல்” என்றார் சுஷமர். “ஆம், அரண்மனையில் இளவரசியென அவர் மட்டுமே இருக்கிறார். அவரை மணம்கொள்பவர் அசுர நாடனைத்தையும் தானும் கொண்டவராவார். அதனாலேயே செம்பட்டில் பொதிந்து சந்தனப்பேழையில் வைத்திருக்கும் அருமணிபோல் இத்தனை நாள் அவரை பேணிவிட்டார்கள். அவரும் புறவுலகு காணாதவராகவே இருந்துவிட்டார்” என்றார் கிருதர்.
“பாரதவர்ஷத்தை ஆளும் விருஷபர்வனின் அரண்மனைக்கு புறவுலகு கை சொடுக்கினால் வந்து சேருமே?” என்றார் சத்வர். “வந்து சேரும், அங்கு காற்று எப்படி வருகிறதோ அதைப்போல. அனைத்துச் சாளரங்களிலும் வெட்டிவேர்த் தட்டிகள் தொங்குகின்றன. மலர்கள் நிறைந்த மரங்கள் அனைத்துச் சாளரங்களுக்கு அப்பாலும் நிறைந்துள்ளன. நறுமணக் காற்று மட்டுமே சென்ற பல தலைமுறைகளாக அவ்வரண்மனையை அடைந்திருக்கிறது. நல்லிசையை மட்டுமே அது சுமந்து வந்திருக்கிறது” என்றார் கிருதர்.
“அதற்காக பேரரசனின் மகளை இழிமணமும் கொடு ஓசையும் கொண்டு பழக்க முடியுமா?” என்றார் சுஷமர். “ஊற்றில் கொப்பளிப்பது ஒருபோதும் ஆறல்ல. மாசுகள் அடைந்தாலும் கரை பிறழாது கடல் நோக்கி ஒழுகுவதே ஆறு. இளவரசி இன்னும் எதையும் அளிக்கக் கற்கவில்லை. அனைத்தையும் பெற்றுக்கொண்டு குழந்தையென வளர்ந்திருக்கிறார்” என்றார் கிருதர். “அன்னையென்றாகி முதிரும்போது அளிக்கும் பயிற்சி பெற்றுவிடுவாள்” என்று சுக்ரர் நகைத்தார்.
கிருதர் “அவருக்கு இவ்வாண்டே மணம்முடிக்கும் எண்ணம் விருஷபர்வனுக்கு உள்ளதென்று எண்ணுகின்றேன்” என்றார். “மணத்தன்னேற்பு வைக்கப்போகிறானா?” என்றார் சுக்ரர். “அவ்வெண்ணம் அவருக்கு இருந்தது. ஆனால் முதன்மை அமைச்சர் அதை உடனடியாக மறுத்துவிட்டார். பாரதவர்ஷத்தின் மணிமுடிக்கான மணத்தன்னேற்பல்லவா அது? அது இந்நிலத்தில் அரசர்களுக்கிடையே போட்டிகளையும் கசப்புகளையும் உருவாக்கி மணம்நிகழ்ந்த பின்னரும் நீடிக்கும். பெரும்போராகவே மாறக்கூடும்” என்றார் கிருதர். “மேலும் உகந்த மணமகனை தெரிவுசெய்யும் திறன் இளவரசிக்கு உண்டு என்றும் அரசர் எண்ணவில்லை.”
“பிறகு என்ன செய்யவிருக்கிறார்?” என்றார் சத்வர். “சந்திரகுலத்து அரசன் யயாதிக்கு அவரை மணமுடித்துக் கொடுக்கலாம் என்று எண்ணுகிறார் விருஷபர்வன்” என்றார் கிருதர். தேவயானி நிமிர்ந்து நோக்காமல் சுவடிகளை அடுக்கி நூல்கண்டால் கட்டினாள். “நகுஷனின் மைந்தனுக்கா?” என்று சத்வர் வியப்புடன் கேட்டார். “ஆம்” என்றார் கிருதர். “அவன் முன்னரே மூன்றுமுறை மணமுடித்து விட்டானே? இளவரசியைவிட பன்னிரண்டாண்டு அகவை முதிர்ந்தவன்” என்றார் சத்வர்.
“அரசனுக்கேது அகவை? பாரதவர்ஷத்தில் இரண்டு மணிமுடிகளே இன்று நிகரானவை. ஹிரண்யபுரியின் மணிமுடியும் குருநகரியின் சந்திரகுலத்து மணிமுடியும். ஒருநாள் இரு படைகளும் களம்நின்று மோதப்போகின்றன என்று பல ஆண்டுகளாக எதிர்பார்த்திருக்கிறார்கள் அரசுசூழ்வோர். அசுரரும் ஷத்ரியரும் போரிடுவார்களென்றால் இரு இணைமதயானைகள் மத்தகம் முட்டுவதற்கு நிகர் அது. இரண்டுமே இறந்து வீழும். அது கழுதைப்புலிகளுக்கும் ஓநாய்களுக்கும் கொண்டாட்டமாக ஆகிவிடும். அமைச்சர் அதை எண்ணியே இம்முடிவை எடுத்திருப்பார்” என்றார் கிருதர்.
“யயாதி சர்மிஷ்டையை மணந்தால் பாரதவர்ஷத்தில் பல தலைமுறைகளுக்கு போர் முழுமையாக நிறுத்தம் செய்யப்படும். அவர்கள் குருதியில் பிறக்கும் மைந்தனோ இங்கு பகைவர்களென எவருமே அற்றவனாக இருப்பான்” என கிருதர் தொடர்ந்தார். சத்வர் மெல்ல தனக்குள் என “யயாதி அழகன் அல்ல. வீரனும் அல்ல. நெறிநூல்கற்றவன், மொழி தேர்ச்சி கொண்டவன் என்கிறார்கள்” என்றார். கிருதர் “இளவரசி அழகியல்ல, எனவே அவனுக்கும் அழகு தேவையில்லை. இரு நாடுகள் இணையுமென்றால் எதிரிகளில்லை, ஆகவே வீரமும் தேவையில்லை. ஆனால் இப்பெருநிலத்தை ஒரு குடைக்கீழ் ஆள்பவன் துலாக்கோல் முள்ளசையாது காக்கும் நெறியறிந்தவனாக இருக்கவேண்டும். அத்தகுதி அவனுக்கு உண்டு என்கிறார்கள். பிறகென்ன?” என்றார்.
“தூது அனுப்பப்பட்டுள்ளதா?” என்றார் சுக்ரர். கிருதர் “ஆம், விருஷபர்வன் தன் தலைமை அமைச்சரையே நேரில் சென்றுவர ஆணையிட்டிருக்கிறார். சம்விரதர் சிறிய அணிப்படையுடன் கிளம்பிச்சென்று மூன்று நாட்கள் ஆகின்றன என்று இன்றுதான் அறிந்தேன். இளவரசியின் சிறப்புகளை எடுத்து இயம்ப ஏழு விறலியரும் இசைப்பாணர் நால்வரும் உடன் சென்றிருக்கிறார்கள். யயாதிக்கு ஒப்புதல் என்றால் அச்செய்தியுடன் அவர்கள் திரும்பி வருவார்கள். அதன் பின்னரே தங்களிடம் வந்து முறைப்படி அறிவிக்கவேண்டுமென்று விருஷபர்வன் எண்ணியிருக்கிறார்” என்றார். “அவன் ஒப்பிவிட்டான் என்றே தோன்றுகிறது. ஆகவேதான் செய்திகள் வெளிவருகின்றன.”
சுக்ரர் “நன்று! என்னிடம் முன்னால் கேட்டிருந்தால்கூட முதலில் யயாதியின் ஒப்புதலைப் பெற்று வருக என்றே சொல்லியிருப்பேன்” என்றார். தயங்கிய குரலில் “எவ்வண்ணம் இருப்பினும் அவர்கள் ஷத்ரியர்” என்று கிருதர் சொன்னார். “அசுரரைவிட தாங்கள் ஒரு படி மேலென்று எண்ணுபவர்கள் அவர்கள். விண்ணில் திகழும் சந்திரனின் கொடிவழியினர் என்று பாடப்பட்டவர்கள் அக்குடியினர். அவைகூடி கருத்தறிய முற்பட்டான் என்றால் விருஷபர்வனின் மணத்தூது வீணாகவும் வாய்ப்புள்ளது” என்றார். சுஷமர் “அதற்கு வழி இல்லை” என்றார். கிருதர் “தாங்கள் என்ன எண்ணுகிறீர்கள், ஆசிரியரே?” என்றார்.
சுக்ரர் “அவன் வீரனல்ல என்றீர்கள். விருஷபர்வன் வீரனென்று அவன் அறிவான். இத்தூதை ஒரு நல்வாய்ப்பென்றே அவன் கருதுவான்” என்றபின் மெல்ல நகைத்து “நெறியறிந்தவன் வீரனல்ல என்றால் கோழையாகவே இருப்பான். நெறிகளனைத்தும் வீரத்தால் மட்டுமே நிலைநிறுத்தப்படுபவை என்று அவன் அறிந்திருப்பான். எனவே நெறியை எண்ணி ஒவ்வொரு கணமும் அஞ்சிக்கொண்டிருப்பான்” என்றார்.
அன்று திரும்பி வருகையில் தேவயானி சாயையிடம் “யயாதியைப்பற்றி நீ என்ன எண்ணுகிறாய்?” என்றாள். “கோழை” என்று சாயை சொன்னாள். மெல்லிய சீற்றத்துடன் “முழுமையாக சொல்லடி” என்றாள். “முன்னரே நான் அறிந்திருக்கிறேன். நான் அங்கு அகத்தளத்தில் இருக்கையிலேயே அவரைப்பற்றிய செய்திகளை அரசியர் சேர்த்துக்கொண்டிருந்தார்கள். அறிவுள்ள கோழை நெறிநூல்களை துணைபற்றுகிறான். கோழைகளுக்குக் காவலாக நெறிநூல் நின்றிருக்குமென்று அவன் அறிகிறான். இளமையிலேயே நெறிகளை தன்னைச் சுற்றி அமைத்து கோட்டை கட்டிக்கொள்ளும் ஒருவன் அறியாது அதற்குள் சிறைப்படுகிறான். சிறைப்பட்டவனின் காமம் அணைக்குள் செறிந்த நீரின் பேரெடை கொண்டது.”
“ஒழுகாத நீர் ஒவ்வொரு அணுவையும் அழுத்திக்கொண்டிருக்கிறதென்பார்கள். யயாதியை பெருங்காமம் கொண்டவனென்று சூதர்கள் பாடுகிறார்கள். தன் அரசின் மூன்று பெருங்குடிகளிலிருந்தும் மணம் புரிந்திருக்கிறான். அதற்கப்பால் என்று அவ்வுள்ளம் தாவிக்கொண்டிருக்கும்” என சாயை தொடர்ந்தாள். “சர்மிஷ்டையை பெண்ணென்று அல்ல பெருங்கொடை என்று எண்ணுவான்.” தேவயானி ஒன்றும் சொல்லாமல் உடன்வந்தாள். “ஏன் வினவினீர்கள், அரசி?” என்றாள் சாயை. “அவள் அவனை மணந்தால் புவியில் பிற அரசர்கள் தனிமுடி சூட இயலாது அல்லவா?” என்றாள் தேவயானி. அவள் உள்ளம்செல்லும் திசையை அறிந்த சாயை “ஆம்” என்றாள்.
“அவனை நான் கண்டேன்” என்றாள் தேவயானி. “எங்கு?” என்றாள் சாயை திகைப்புடன். “கனவில். தோள் ஓய அம்புசெலுத்தி பெருகிச்செல்லும் நீரை அணைகட்ட முயன்றுகொண்டிருந்தான்.” சாயை சிரித்து “பெருக்கு அவிந்ததா?” என்றாள். தேவயானி “முற்றிலும் எப்படி நிலைக்கும்? அவன் ஆவநாழி ஒருபோதும் ஓயமுடியாது” என்றாள். சாயை சிரித்து “மூடன்” என்றாள். “நான் பிறிதொருத்தியையும் அக்கனவில் கண்டேன். வராகி, அனல்வடிவோள்” என்றாள் தேவயானி. சாயை புரியாமல் நோக்கிக்கொண்டு உடன்வந்தாள். “எரியும் காட்டில் அவள் குரல் முழங்குவதை கேட்டேன்” என்றாள் தேவயானி.
தொடர்புடைய பதிவுகள்
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–64
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–62
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–54
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–63
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–61
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–53
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–65
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–60
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–59
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–58
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–57
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–56
வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–52
வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–51
வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–48
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 59
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–55
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–49
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–14
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 37
April 5, 2017
சதுரங்க ஆட்டத்தில்
”டே நீ சி.வியை வாசிச்சிருக்கியா?”என்றார் பாலசந்திரன் சுள்ளிக்காடு. ”ஆமாம்” என்றேன். ”என்ன வாசிச்சே?” நான் யோசித்து ”எல்லாம் ஹிஸ்டாரிகல் ரொமான்ஸ். அதெல்லாம் லிட்டரேச்சர் இல்லை” என்றேன். அப்போது நான் சுந்தர ரமசாமியின் ஞானப்பிடியில் அடங்கி இருந்த காலம். யோசித்து யோசித்து, பூடகமாக எழுதப்படும் நவீனத்துவ யதார்த்த எழுத்து அல்லாமல் எதுவுமே இலக்கியமல்ல என்ற நம்பிக்கை என்னுள் நடப்பட்டு ஓயாமல் நீரூற்றப்பட்டுக்கொண்டிருந்தது.
”போடா மயிரே…நீ கண்டே பெரிசா…” என்றார் பாலசந்திரன். சி.வி.ராமன்பிள்ளையின் தர்மராஜா என்ற நாவலில் இருந்து ஒரு பக்கத்தை முழுக்க கடகடவென்று ஒப்பித்தார். ஹரிபஞ்சானனன் என்ற உக்கிரமான எதிர்மறைக் கதாபாத்திரம் தர்மராஜா என்ற மூலம்திருநாள் மகாராஜாவுக்கு எதிராக செய்த சதிகளெல்லாம் முறியடிக்கப்பட்டபின் தன் வாழ்க்கைநோக்கமே இல்லாமலாகிவிட்டது என்று உணர்ந்து இருளில் இறங்கி ஓடும்போது சொல்லும் வசனங்கள். ”இருளா விழுங்கு, விழுங்கு இவனை” என்று ஆரம்பிக்கும் அந்த வசனங்கள் ஒரு ஷேக்ஸ்பியர் துன்பியல் நாடகத்தில் வரவேண்டியவை.
நான் ”இது நாடகம் போலிருக்கிறது. நாவல் என்றால் யதார்த்தமாக இருக்க வேண்டும்” என்று சொன்னேன் ”யாருடைய யதார்த்தம்?”என்றார் பலசந்திரன் சுள்ளிக்காடு. ”இன்றைக்கு இருக்கிற யதார்த்தம் நாளைக்கு இல்லை. நேற்றிருந்த யதார்த்தம் என்ன என்றே நமக்கு தெரியாது. எந்த யதார்த்தத்தை நம்பி எழுத்தாளன் எழுதவேண்டும்? யதார்த்தங்கள் மாறிக்கோண்டே இருக்கும். இலக்கியபப்டைப்பு மாறாது. டேய், சி.வி.ராமன்பிள்ளை காலத்தில் இருந்த ஒரு கல் கூட இன்றைக்கு கிடையாது. அவரது சொல் நின்றுகொண்டிருக்கிறது.”
நான் வாயடைந்து போய்விட்டேன். ”டேய், இலக்கியப்படைப்புக்கு ஒரே ஒரு யதார்த்தம் மட்டும்தான். அந்த படைப்பு அதற்குள் உருவாக்கி அளிக்கும் யதார்த்தம். வேறு எந்த யதார்த்ததை வைத்தும் அதை அளக்க முடியாது. டேய் மயிரே, நீ சின்ன பையன். . நீ என்னத்துக்கு கண்டகண்ட தமிழ்பட்டர்கள் சொல்லுவதையெல்லாம் கேட்டு சீரழிகிறாய்? ஒன்றுமில்லையென்றாலும் நீ ஒரு நல்ல நாயரல்லவா? நமக்கு நம்முடைய ஞானமும் திறமையும் இல்லையா? டேய், சி.வி.ராமன்பிள்ளையின் மார்த்தாண்ட வர்மா நாவலில் உள்ள யதார்த்ததை வைத்துக்கொண்டு தர்மராஜாவை அளக்க முடியாது தெரியுமா?”
நான் ஒன்றும் சொல்லவில்லை. பாலசந்திரன் இன்னும் ஒரு சி.வி.ராமன்பிள்ளை வசனத்தைச் சொன்னார். சம்ஸ்கிருதத்தின் முழக்கமிடும் சொற்களும் புராதன மலையாளச் சொற்களும் கூடி முயங்கி உருவாகும் அதிநாடகத்தன்மை. கரும்பாறைக்கூட்டங்கள் போல கண்ணெட்டும் தூரம் வரைக்கும் விரிந்து கிடக்கும் சொல்வெளி. ”டேய், நல்ல எழுத்தாளன் எழுத வேண்டியது வாழ்க்கையை. வாழ்க்கையின் உச்சமாக அபூர்வமான தருணங்களில் எழுந்துவரக்கூடிய அற்புதமான தருணங்களை. ஒரு எழுத்தாளன் அதை நுட்பமாக எழுதி வைப்பான். ஒருவன் கொந்தளித்து குமுறுவான். அதெல்லாம் அந்தந்த படைப்பாளியின் இயல்பு. ஒன்று சரி, இன்னொன்று தப்பு என்று எவனால் சொல்ல முடியும்? ஆனால் ஒருவன் அந்த அற்புதக்கணத்தைத் தொட்டுவிட்டான் என்றால் அது அவனுடைய படைப்பில் தெரியும்”
பாலசந்திரன் தொடர்ந்தார்.” சி.வி.ராமன்பிள்ளை கதகளி கண்டு வளர்ந்த கலைஞன். கதகளியின் உக்கிரமான நாடகத்தன்மைதான் அவரது கலையிலும் இருக்கிறது. சிவியின் நாவல்களில் பழிவாங்கும் குரோதம், மகத்தான தியாகம், பேரன்பு, வரலாற்றால் உருவாக்கப்படக்கூடிய மாற்று இல்லாத துக்கம் என்று எத்தனை அடிப்படை மானுட உணர்ச்சிகள் கொந்தளிக்கின்றன. அதெல்லாம்தான் எழுத்தாளன் எழுத வேண்டிய விஷயங்கள். அதல்லாமல் துரைகள் என்ன எழுதியிருக்கிறார்கள் என்று நாகர்கோயிலில் இருந்துகோண்டு நெற்றிமீது கையை வைத்து பார்க்கிறதல்ல இலக்கியம். போய் சொல்லு உன் பட்டரிடம்”
ஆகவே சுந்தர ராமசாமியிடம் வந்து சொன்னேன். அவர் ஒரே சொல்லில் நிராகரித்துவிட்டார். ”ஹிஸ்டாரிகல் நாவல் எல்லாம் லிடரேச்சரே கெடையாது” நான் ”அப்ப வார் ஆண்ட் பீஸ்?” என்றேன். ”அது அப்ப உள்ள யதார்த்தம். இன்னைக்கு அதிலே பெரும்பகுதிக்கு வேல்யூவே கெடையாது” ஆனால் அவர் சி.வி.ராமன்பிள்ளையின் மார்த்தண்டவர்மாவைத்தவிர எதையும் வாசிக்கவில்லை என்றும் சொன்னார். நான் அதனால் சற்று குழப்பம் அடைந்தேன். நான் இன்னொருமுறை அவரது நாவல்களை வாசிக்க வேண்டும் என்று முடிவுசெய்தேன். அந்த முடிவு வழியாக சுந்தர ராமசாமியைவிட்டு நிரந்தரமாக விலக ஆரம்பித்தேன்.
சி.வி.ராமன்பிள்ளை யின் நாவல்கள் வால்டர் ஸ்காட்டின் நாவல்களை முன்னுதாரணமாகக் கொண்டவை. அவற்றை வடிவ ரீதியாக வரலாற்று உணர்ச்சிக்கதைகள் என்றுதான் வகைப்படுத்த வேண்டும். மார்த்தாண்ட வர்மா, தர்மராஜா, ராம ராஜா பகதூர் ஆகிய மூன்று நாவல்களும் அவரது முக்கியமான ஆக்கங்கள். அவை மூன்றுமே திருவிதாங்கூர் வரலாற்றைச் சித்தரிப்பவை. 1730ல் திருவிதாங்கூரில் ஆட்சிக்கு வந்து அதை வலுவான நாடாக ஆக்கிய மன்னர் மார்த்தாண்ட வர்மா அவரைக் கொன்று ஆட்சியைக்கைப்பற்ற முயன்ற எட்டுவீட்டுப்பிள்¨ளைமார் என்ற பிரபுகுலத்தை வென்று ஆட்சியைக் கைப்பற்றிய வரலாற்றை முதல் நாவல் சொல்கிறது. அது எளிமையான ஒரு சாகஸ நாவல் மட்டும்தான்.
வெற்றி பெற்ற மார்த்தாண்ட வர்மா மகாராஜா அந்த பிரபுகுலக் கட்டுமானத்தையே ஒழிக்க எண்ணினார். அது அரசியல் ரீதியாக ஒரு நல்ல முடிவுதான். ஆனால் அது ஒரு பெரும் மானுட அழிவு. வேரூன்றிய பழைய குடும்பங்கள் பூண்டோடு அழிக்கப்பட்டன. ஆண்கள் அனைவரும் கொல்லப்பட்டார்கள். முதியவர் முதல் கைக்குழந்தை வரை. பெண்கள் அனைவரும் பிடித்து கடற்கரையில் கொண்டுபோய் மீனவர்களுக்குப் பரிசளிக்கப்பட்டார்கள். ‘துறையேற்றம்’ என்று சொல்லப்படும் இந்த தண்டனை 1934 ல் குளச்சல் கடலோரத்தில் நடந்தது. இவ்வாறு வேருடன் பிடுங்கப்பட்ட வம்சங்களில் எஞ்சிய பழிவாங்கும் ஆவேசம் மீண்டும் மீண்டும் திருவிதாங்கூரைத் தாக்குவதை பிற இருநாவல்களும் காட்டுகின்றன.
பிந்தைய இரு நாவல்களும் செவ்வியல் ஆக்கங்கள் என்ற தகுதியைப்பெறுவதற்கான காரணம் அவற்றில் உள்ள எதிர்கதாபாத்திரங்கள்தான். மானுட அளவைவிடப் பிரம்மாண்டமான ஆளுமை கொண்ட அசுர கதாபாத்திரங்கள் அவை. தீமையின் வலிமையை, ஏன் கம்பீரத்தை, சி.வி.ராமன்பிள்ளை அக்கதாபாத்திரங்கள் வழியாக சித்தரிக்கிறார். கதகளியில் ராமனும் கிருஷ்ணனும் சின்ன கதாபாத்திரங்கள். துரியோதனனும் ராவணனும் நரகாசுரனும் எல்லாம்தான் மையக்கதாபாத்திரங்கள். கதகளி அந்த எதிர்நாயகர்களின் வீழ்ச்சியின் கதையைச் சொல்லும் அவலநாடக வழடிவம். சி.வி.ராமன்பிள்ளை நாவல்களும் அப்படியே. ஹரிபஞ்சானனின் குணச்சித்திரத்தில் மானுட இயல்புகளை விட ராட்சத இயல்புகளே மேலோங்கியிருக்கின்றன.
அந்த உக்கிர மனநிலைகளைச் சொல்வதற்கான தனித்த மொழிநடையை சி.வி.ராமன்பிள்ளை உருவாக்கிக்கொண்டார். செண்டைமேளம் போல முழங்கும் மொழிநடை அது. வர்ணனைகளின் கம்பீரமான தோரணையில் உள்ளது சி.வி.ராமன்பிள்ளையின் கலை. குணச்சித்திரங்களையும் அவர்களின் அக ஓட்டங்களையும் ஆசிரியர் கூற்றாக ஆவேசமான மொழிநடையில் சொல்லிச் சொல்லிச்செல்லும் சி.வி.ராமன்பிள்ளை நாவல்கள் அசாதாரணமான ஒரு வாழ்க்கைத்தரிசனத்தை அளிப்பவை. பெரும் காவிய அனுபவத்தின் சாயல் கொண்டவை. அவை மனிதவாழ்க்கையை சி.வி.ராமன்பிள்ளையே உருவாக்கிக்கொண்ட ஒரு தனி யதார்த்தத்துக்குக் கொண்டு சென்று நிறுத்தி ஆராய்கின்றன. நல்லியல்புகளை விட தீய இலய்ல்புகள் பல மடங்கு ஆற்றல் கொண்டவை என்று அவை காட்டுகின்றன. ஆனால் மண்ணில் தியாகத்தை வெல்ல எந்த சக்தியாலும் முடியாதென அவை நிறுவுகின்றன.
1858ல் ஒரு நடுத்தர நாயர் குடும்பத்தில் பிறந்தவர் சி.வி.ராமன்பிள்ளை. அரண்மனையில் உயர்பதவியில் இருந்த ஒருவர் சி.வி.ராமன்பிள்ளையின் உண்மையான தந்தை என்றும் அவரது உதவியால் சி.வி.ராமன்பிள்ளை அன்றைய சூழலில் கிடைக்கச்சாத்தியமான உயர்கல்வியை அடைய முடிந்தது என்றும் சொல்லபப்டுகிறது. சம்ஸ்கிருதமும் ஆங்கிலமும் ஓரளவு ஆயுர்வேதமும் சி.வி.ராமன்பிள்ளை கற்றார். அரண்மனையுடன் நெருக்கமான உறவிருந்ததனால் திருவிதாங்கூர் வரலாறு அவருக்கு நூல்கள் வழியாகவும் செவி வழியாகவும் கிடைத்தது.
ரோஸ் என்ற பெயருள்ள வெள்ளைய பள்ளி ஆசிரியரால் சி.வி.ராமன்பிள்ளை மிகவும் கவரப்பட்டார். அவரிடமிருந்து வால்டர் ஸ்காட் நாவல்களை அறிமுகம் செய்துகொண்டார். பின்னாளில் வீடுகட்டியபோது அதற்கு ரோஸ் கோர்ட் என்றே பெயரிட்டார். சில நாடகங்களை எழுதியபின்னர் ஸ்கட்டை முன்னுதாரணமாகக் கொண்டு 1880 ல் தன் முதல் நாவலான ‘மார்த்தாண்ட வர்மா’ வை எழுதினார். 1885ல் தான் அது அச்சிலேரியது. இன்றும் கேரளத்தில் மிகவும் விரும்பிப்படிக்கப்படும் நூல் அது.
ஆனால் அதன்பின் இருபது வருடம் அன்று உருவாகிவந்த அரசியல் செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபடலானார். அக்காலத்தில் திருவிதாங்கூர் அரசு பிராமணர்களின் பிடியில் இருந்தது. திவான், பேஷ்கார் உட்ப்ட எல்லா பதவிகளையும் அய்யர்களும் ராவ்களுமே வகித்தார்கள். ஐம்பது வருடம் முன்பு கடைசி நாயர் திவானாக இருந்த வேலுத்தம்பி தளவாய் திருவிதாங்கூரை கப்பம் பெற்று மேலிருந்து ஆட்சி செய்த வெள்ளையருக்கு எதிராக சுதந்திரப் பிரகடனம்செய்து கிளர்ந்தெழுந்து பெரிய அழிவை உருவாக்கினார். அந்தக்கிளர்ச்சியை அடக்கி அவரைக் கொன்ற பின்னர் மீண்டும் நாயர்கள் பதவிக்கு வருவதை வெள்ளையர் விரும்பவில்லை.
அனைத்து துறைகளிலும் நாயர்கள் அடக்கி வைக்கப்பட்டு பிராமணர் முன்னிறுத்தப்பட்டார்கள். கேரளம் முழுக்க நாயர்களிடையே ஒரு பெரிய அதிருப்தி உருவாகி மெல்ல வளர்ந்தது. ‘மலையாளி மெம்மோரியல்’ என்று பிற்பாடு அழைக்கப்பட்ட ஒரு அரசியலியக்கம் நாயர்களுக்கு அரச பதவிகளில் உரிய இடம் பெற்றுத்தருவதற்காக தொடங்கி நடத்தப்பட்டது. மகாராஜாவுக்கு கூட்டுமனு கொடுப்பதாக தொடங்கிய இவ்வியக்கம் பின்னர் பெரிய ஒரு அமைப்பாக ஆகியது. இவ்வியக்கம் தென்னிந்தியாவில் பிராமணரல்லாதார் இயக்கம் உருவாவதற்கான அடிப்படைகளில் ஒன்று. பின்னர் ஜஸ்டிஸ் கட்சி உருவாவதிலும் நாயர்கள் முக்கியப்பங்காற்றினார்கள். நாயர் சர்வீஸ் சொசைட்டி என்ற அமைப்பு பிற்பாடு உருவாவதற்கும் இந்தக்கிளச்ச்சி காரணமாகியது. இதில் சி.வி.ராமன்பிள்ளை பெரும் பங்காற்றினார்
இக்காலத்தில் சி.வி.ராமன்பிள்ளை இலக்கியத்தை விட்டு விலகிச்சென்றார். சி.வி.ராமன்பிள்ளை இருபதாண்டுக்காலம் எதுவுமே எழுதவில்லை. மார்த்தாண்ட வர்மா மூலம் கிடைத்த புகழ் மெல்ல மெல்ல இல்லாமலாயிற்று. மார்த்தாண்ட வர்மா நாவலையே அவர் எழுதவில்லை என்ற அவதூறும் உருவாயிற்று. ஆனால் முதுமைக்காலத்தில் அரசியலில் நம்பிக்கை இழந்த சி.வி.ராமன்பிள்ளை தொடர்ச்சியாக எழுத ஆரம்பித்தார்.1913 ல் அவர் தான் வகித்துவந்த அரசுப்பதவியை ஒரு மனக்கசப்பில் ராஜினாமா செய்தார். அதன்பின்னரே அவரது முக்கியமான நாவலாகிய தர்மராஜா எழுதப்பட்டது. 1918ல் அவரது மிகச்சிறந்த ஆக்கமென்று கருதப்படும் ராமராஜாபகதூர் வெளிவந்தது. 1922 மார்ச் மாதம் 1 ஆம் தேதி சி.வி.ராமன்பிள்ளை மரணமடைந்தார்.
பி.கெ.பரமேஸ்வரன் நாயர் எழுதிய ‘சி.வி.ராமன்பிள்ளை’ என்ற வாழ்க்கை வரலாற்றை படித்தபோதுதான் சி.வி.ராமன்பிள்ளையின் கலையின் சிறப்பியல்பு எனக்குப் புரிந்தது. அப்போது நான் சுந்தர ராமசாமியிடம் விவாதிக்க ஆரம்பித்திருந்தேன். ”எல்லாமே அவர்ட்ட ஜாஸ்தி கலரா இருக்கு”என்று சொன்ன சுந்தர ராமசாமியிடம் நான் சொன்னேன் ”அது உங்க ஸ்கேல் சார். உங்க வாழ்க்கையிலே கலரே இல்லை. மிக மிகச்சாதாரணமான ஒரு மிடில் கிளாஸ் பிராமண வாழ்க்கை உங்களுக்கு. அதைவைச்சுக்கிட்டு நீங்க மத்த வாக்கைகளைப் பாக்கிறீங்க. சிவியோட வாழ்க்கை அவரோட நாவல்களை மாதிரியே கலர்புல் ஆனது”
சி.வி.ராமன்பிள்ளை வாள்சண்டையும் கம்புச்சண்டையும் தெரிந்தவர். அரசுப்பணியில் திருவிதாங்கூர் முழுக்க அலைந்தவர். குதிரை மீது ஏறி திருடர்களை துரத்தியிருக்கிறார். ஊழல்களை விசாரித்து தண்டனை கொடுத்திருக்கிறார். ஒரு வரலாற்று அரசியல் இயக்கத்தை முன்னணியில் நின்று நடத்தியிருக்கிறார். அதிகாரத்துக்கான சதிகள் , மாற்றுச்சதிகளில் இருபதாண்டுக்காலம் ஈடுபட்டிருக்கிறார்.
பி.கெ.பரமேஸ்வரன் நாயர் எழுதிய வாழ்க்கை வரலாற்றில் ஒரு நிகழ்ச்சி. இளைஞனாகிய சி.வி.ராமன்பிள்ளை ஆலப்புழை காயல் வழியாக படகில் வந்துகோண்டிருக்கிறார். 1883 ல் அவர் சிறிய அரசு வேலையில் இருந்தார். பெரிய குலச்சிறப்பும் இல்லை. காயலில் படகில் வந்து சரக்குத்தோணிகளைக் கொள்ளையடிக்கும் கும்பலை கண்காணிக்கும் வேலை. மத்தியான்ன நேரம். மிக மிகக் கடுமையான பசி. காயலருகே ஒரு பெரிய நாயர் தறவாட்டு வீட்டைக் கண்டதும் படகை அங்கே கொண்டுசெல்லச்சென்றார். அக்காலத்தில் ஆலப்புழா பகுதிகளில் போக்குவரத்து என்பதே படகுகள் வழியாகத்தான். ஆகவே இன்று வீடுகள் சாலையை நோக்கிக் கட்டப்பட்டிருப்பதுபோல அன்று காயலை நோக்கிக் கட்டப்பட்டிருக்கும். வீட்டுமுன் பெரிய படித்துறை இருக்கும்.
படித்துறையில் இறங்கி மேலே சென்றபோது அங்கே எதிரில் வந்த மூத்த நாயரிடம் ”நான் அரண்மனை சேவகன், எனக்கு கொஞ்சம் சாப்பாடு கிடைக்குமா?”என்று கேட்டார். அவர் அலட்சியமாக ”பின்பக்கம் ஊட்டுபுரைக்குப் போ”என்று கையைக் காட்டினார். சி.வி.ராமன்பிள்ளை மனம் புண்பட்டார். திரும்பிவிடலாம் என்று யோசித்து தயங்கியபோது ஓர் பேரழகி அவர் எதிரில் வந்தாள். அந்த நாயரின் மூத்த மகள். ”ஏன் திரும்புகிறீர்கள்? வாருங்கள், சாப்பிட்டுவிட்டுச்செல்லலாம்”என்று சொல்லி அழகிய சிரிப்புடன் அவரை கட்டாயப்படுத்தி உள்ளே கூட்டிச்சென்றாள்.
சி.வி.ராமன்பிள்ளை சாப்பிட்டு ஓய்வெடுக்கும்போதெல்லாம் அவளையே பார்த்துக்கொண்டிருந்தார். கிட்டத்தட்ட ஒரு ராஜகுமாரி. அவளைவிட்டு கண்களையும் மனத்தையும் விலக்க முடியவில்லை. சாப்பிட்டுவிட்டு கிளம்பிச்செல்லும்போது பித்து எடுத்த நிலையில் இருந்தார். ஆனால் அவர் ஒருசாதாரண சேவகன். அந்த தறவாட்டு வீட்டு பூமுகக்கட்டிடத்தில் நுழையும் அருகதைகூட இல்லாதவர். ஆகவே அந்தக்கனவை அவர் தன் நெஞ்சுக்குள்ளேயே வைத்துக்கொண்டார்.
மூன்று வருடம் கழித்து மார்த்தாண்ட வர்மா வெளிவந்தது. பெரும்புகழும் நல்ல பதவியும் தேடி வந்தன. திருமண ஆலோசனைகள் வந்தன. அதில் ஒன்று ஆலப்புழா பகுதியில் இருந்து. தன்னுள் இருந்த கனவு உயிர்பெறக்கண்டார். ஆலப்புழாவுக்கு பெண் பார்க்கச்சென்று இறங்கியபோது தெரிந்தது, அதே வீடு. மனம் முரசு போல் அதிர்ந்தது. நிற்க முடியாமல் கால்கள் குழைந்தன. அந்தப்பெண்ணா? விதி சூதாடுகிறதா?
ஆனால் அவள் ஏற்கனவே மணமாகிச்சென்றுவிட்டிருந்தாள். அவள் பெயர் ஜானகியம்மா. அவளுடைய தங்கை பாகீரதியம்மாவைத்தான் சி.வி.ராமன்பிள்ளை பெண் பார்க்க வந்திருந்தார். அழகில் ஒருபடி குறைந்தவள். ஆனாலும் அந்த வீட்டுடன் ஒரு உறவென்பது சி.வி.ராமன்பிள்ளையின் கனவு. திருமணம் நடந்தது. ஜானகியம்மாவை அப்போது சி.வி.ராமன்பிள்ளை மீண்டும்பார்த்தார். அரசகுலத்தவரும் பிரபல ஓவியருமான ஸி.ராஜராஜ வர்மாவின் மனைவியாக இருந்தாள் அவள். அவளுடைய பேரழகு மேலும் முழுமை அடைந்திருந்தது. ஜானகியம்மா தன்னுடைய மிகச்சிறந்த வாசகி என்பதை சி.வி.ராமன்பிள்ளை கண்டார்.
பாகீரதியம்மாவை மணந்த சி.வி.ராமன்பிள்ளை திருவனந்தபுரத்தில் ஒரு வீடு கட்டி அதில் வாழலானார். அவருக்கு ஆறு குழந்தைகள் பிறந்தன. கடைசிக்குழந்தை பிறந்ததுமே பாகீரதியம்மா நோயாளியாகி படுக்கையில் விழுந்தாள். கடைசிக்குழந்தையின் பெயர் மகேஸ்வரியம்மா. அவள் பின்னர் பிரபல மலையாள எழுத்தாளரான இ.வி.கிருஷ்ணபிள்ளையை மணம்புரிந்துகொண்டாள். அவளுக்குப்பிறந்த மகன் பெரிய நகைச்சுவை நடிகர் ஆனார். அடூர் பாஸி.
நோயில் கிடந்த பாகீரதியம்மா¨வை சி.வியால் கவனிக்க முடியவில்லை. மலையாளி மெமோரியல் உச்சத்தில் இருந்த காலம். அப்போது ஸி.ராஜராஜவர்மா மரணமடைந்திருந்தார். ஆலப்புழை வீட்டில் இருந்த விதவையான ஜானகியம்மா தங்கையின் உடல்நிலையை கவனிக்க வந்து சேர்ந்தார். அவருக்கு குழந்தைகள் இல்லை. சி.வி.ராமன்பிள்ளையின் வீட்டிலேயே தங்கி குழந்தைகளையும் தங்கையையும் அவர் கவனித்துக்கொண்டார்.
சி.வி.ராமன்பிள்ளை தன் மனதில் உள்ள ஆசையை ஒருபோதும் வெளிக்காட்டவில்லை. அவர் அதிகமாகப் பேசக்கூடியவர் அல்ல. கோபமும் மூர்க்கமும் கொண்ட படைவீரரின் மனநிலை உடையவர். பிறரிடம் உணர்ச்சிகளைக் காட்டுவதே இல்லை. அதிலும் ஜானகியம்மா மீதுள்ள காதலை மனைவி அறியாமல் முற்றிலுமாக மறைத்திருந்தார். நோய் முற்றி பாகீரதியம்மா மறைந்தார்.
ஆறுகுழந்தைகளுடன் சி.வி.ராமன்பிள்ளை தனியரானார். ஒரு மாதம் ‘புலைதீட்டு’ கழியும் வரை ஜானகியம்மா கூடவே இருந்தார். ஒருநாள் அவர் தன் பெட்டியுடன் கிளம்பினார். சி.வி.ராமன்பிள்ளை அப்போது வாசல் திண்ணையில் இருந்தார். அவரைக் கடந்து சென்ற ஜானகியம்மா ”நான் கிளம்புகிறேன். எல்லாவற்றையும் வேலைக்காரியிடம் சொல்லியிருக்கிறேன்”என்றார். சி.வி.ராமன்பிள்ளை பேசாமல் வெற்றிலை மென்றபடி தலை குனிந்து அமர்ந்திருந்தார். ஜானகி அம்மா கடைசிப்படி இறங்கும்போது சட்டென்று உடைந்த குரலில் சி.வி.ராமன்பிள்ளை ”எனக்கும் என் பிள்ளைகளுக்கும் இனி யார் இருக்கிறார்கள்?”என்று கேட்டார்
கண்ணீருடன் நின்ற ஜானகியம்மா ”அதனால் நான் இங்கே நிற்க முடியுமா? இனி எனக்கு இங்கே என்ன உறவு?” என்றார் ”என்பிள்ளைகளுக்கு அம்மாவாக இருந்து கொள்” என்றார் சி.வி.ராமன்பிள்ளை. ஜானகி அம்மா கண்ணீருடன் வந்து சி.வி.ராமன்பிள்ளையின் கைகளைப்பிடித்துக்கொண்டாள். அவளை அவர் மறுமணம் புரிந்துகொண்டார்.
ஆலப்புழை வீட்டில் படகில்வந்த நாள் முதல் சி.வி.ராமன்பிள்ளைவின் மீது மாளாத மானசீகக் காதல் கொண்டிருந்தார் ஜானகியம்மா. அது பாகீரதியம்மாவுக்கு அப்போதே நன்றாகத்தெரியும். ஆனால் வேறு வழியில்லாமல் ஸி. ராஜராஜவர்மாவை மணக்க நேர்ந்தது. பாகீரதியை மணக்க சி.வி.ராமன்பிள்ளை வந்தபோது பாகீரதி தயங்கினார். அக்காவின் கட்டாயத்தால்தான் மணக்கச் சம்மதித்தார். நோயுற்று மரணப்படுக்கையில் இருந்த பாகீரதி தனக்குப்பின் தன் கணவனை அக்காவே மறுமணம் புரிந்துகொள்ள வேண்டுமென கோரியிருந்தார்.
ஆனால் அவர்கள் ஒருசொல்கூட பேசிக்கொள்ளவில்லை. கிட்டத்தட்ட பதினைந்து வருடம் அந்த காதல் இருவர் உள்ளத்திலும் ஆழத்தில் புதைந்துகிடந்து கனல் போல நீறி நீறிச் சுடர்விட்டுக்கொண்டிருந்தது. விதியின் சதுரங்கத்தில் அவர்கள் இணைந்தார்கள்.
ஆச்சரியமான விஷயம் இன்னும் ஒன்று உண்டு. ஜானகியின் மீது கொண்ட காதல் தன்னுள் எரிந்துகொண்டிருந்தபோதுதான் சி.வி.ராமன்பிள்ளை மார்த்தாண்ட வர்மாவை எழுதினார். அவளை இழந்தபின் பின்னர் இருபதாண்டுக்காலம் அவர் எழுத்தாளராகவே இல்லை. மீண்டும் ஜானகியை அடைந்தபின் பெரும் ஆவேசத்துடன் மீண்டும் இலக்கிய உலகுக்கு வந்து தன் சிறந்த படைப்புகளை உருவாக்கினார். அந்தக்காதல்தான் அவரது படைப்பூக்கத்தின் விசையா?
அவர் தர்மராஜாவையும் ராமராஜாபகதூரையும் எழுத வேண்டுமென்று எண்ணிய ஒரு சக்தி அவரை கவனித்துக்கொண்டிருந்ததா? இருபது வருடம் அது அவரைச் சோதனைசெய்து பார்த்துவிட்டு ஜானகியை அவரிடம் ஒப்படைத்ததா?
எத்தனை விசித்திரமான வாழ்க்கைச் சந்தர்ப்பங்கள்! இதில் பாதி சுந்தர ராமசாமிக்கு வாய்த்திருந்தால் அவர் எழுதிய நாவல்கள் வேறு வகையாகத்தான் இருந்திருக்கும் என்று எண்ணுகிறேன்.
மறுபிரசுரம்/முதற்பிரசுரம் Dec 19, 2012 @ 0:00
தொடர்புடைய பதிவுகள்
நயத்தக்கோர்
ஜெயகாந்தன்,சுந்தர ராமசாமி, வாசிப்பு குறித்து…
இரு வேறு ஆளுமைகள்
தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (5)
தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (4)
தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (3)
தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (2)
தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (1)
அடுத்தகட்ட வாசிப்பு
துணை
அதே மொழி
ஒரு மலரிதழை முளைக்க வைத்தல்
எம்.ஓ.மத்தாயின் நினைவுகள்-1
எம்.ஒ.மத்தாயின் நினைவுகள் 2
எம்.ஓ.மத்தாயின் நினைவுகள் 3
அலைகளென்பவை….
ஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல் -1
ஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல் — 2
நீல பத்மநாபனின் நாவல்கள் சாதாரணத்துவத்தின் கலை
இனிதினிது…
ஊமைச்செந்நாய் -வாசகர் கடிதம்
மதிப்பிற்குரிய ஜெயமோகன் ஐயா அவர்களுக்கு,
நலம் தானே. உங்களுக்கு ஒரு வாசக கடிதம் எழுதச்சொல்லி என்னை பல முறை வற்புருத்தியவர் வானவன் மாதேவி அக்கா, எனக்கு தான் உங்களிடம் எழுதுவதில் ஒரு தயக்கம் அதை எப்படி சொல்வது என்று தெரியவில்லை. சிறிது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு இந்த வாசக கடிதத்தை எழுதுகிறேன்.
இனி நான் எழுத இருப்பதில் ஏதேனும் இலக்கண, இலக்கிய பிழை இருப்பின் என்னை மன்னித்து விடுங்கள்.
“ஊமைச்செந்நாய்” உங்கள் கதைகளின் தலைப்பே என்னை எப்போதும் கவர்ந்த விடும் “வணங்கான் “,”சோற்றுக்கணக்கு” தலைப்பே கதைக்குள் இட்டு செல்லும் கருவியாக இருக்கிறது.
ஊமைச்செந்நாய் கடைசி வரையில் ஊமையாகவே இருந்துவிடுகிறான்
துரை அவனிடம் ஏன் பேசாமல் இருக்கிறாய் என்றதற்கும் நான் ஒரு ஊமைச்செந்நாய் என்றே பதில் கூறுகிறான்.
ஒரு காட்டில் வேட்டையாடி வருகின்ற அனுபவத்தை இந்த கதை கொடுத்தது. காட்டை மிகவும் அழகாக சித்தரித்து இருந்தீர்கள். பின் அந்த காலத்து அடிமைத்தனத்தை மிகச்சிறந்த முறையில் சொல்லி இருந்தீர்கள்.
கதையில் அமைந்த உவமைகள் எல்லாம் ஊமைச்செந்நாயின் பார்வையில் இருந்து காண்பித்து இருந்தது மிக அருமை . ஒரு காட்டை மட்டுமே அறிந்த ஒருவனாக அவன் காண்பவற்றை அனைத்தையும் விவரிக்கிறான். எடுத்துக்காட்டாக
கதையை ஆரம்பிக்கும் போதே அந்த யானைத் துப்பாக்கி என்று பின் அதை ராஜநாகம் போல் இருக்கிறது என்றது. பின் அந்த வாத்துகழுத்து குப்பி, பூனைக்கால் கரண்டி, கொக்குக்கால் கோப்பை, கொக்கின் கால் விரல்கள் போன்ற வேர்கள், தூக்கணாங்குருவிக்கூடு உவமை. மேகப்பொதிகளை வெண்முயல்கள் என்றும், யானையின் துதிக்கையை மலைப்பாம்பு என்றது இது அனைத்தும் ஒரு காட்டிலிலே வாழ்ந்த ஒருவன் பார்க்கும் பார்வையாக அமைந்தது படிக்கும் எவருக்கும் அதே பார்வை கிடைக்கிறது. அந்த பார்வை தான் உங்களின் தனி அம்சம் என்று தோன்றுகிறது,
மேலும் ஒரு உவமை அந்த கோழைமான் இறக்கும் தருவாயில் அதன் கண்களையும் ஊமைச்செந்நாய் சோதியுடன் புணர்ந்த போது அவள் கண்களையும் ஒப்பிட்டு கூறியது ஒரு மன அதிர்வை ஏற்படுத்தியது என்றுதான் சொல்ல வேண்டும். அவள் உச்சத்தை அடையும் போது அவள் கண்களும் அந்த கோழைமான் இறக்கும் போது அந்த சோர்ந்து மூடும் கண்கள் அவை என்னுள் ஒரு அதிர்வை உண்டு பண்ணியது. அதை கற்பனை செய்யும் போது எவ்வளவு உன்னிப்பான வர்ணனை என்று தோன்றுகிறது.
உங்கள் நீர், நிலம், நெருப்பு ஆவணப்படத்தில் உங்கள் கதைகளில் எப்போதும் யானையும், பாம்புகளும் வருவது இயல்பானது என்று கூறியுள்ளீர்கள் இங்கும் யானையும் பாம்பையும் மிக அருமையாக சித்தரித்து இருந்தீர்கள் யானையும் பாம்பையும் சேர்த்து ஒரு வர்ணனை அந்த யானையின் துதிக்கையை, “மலைப்பாம்பு தந்தங்களின் நடுவில் இருந்தது” போல என்றது மிக நேர்த்தியாக இருந்தது.
அந்த பச்சைப்பாம்பு துரையின் கையில் சிக்கி தவிக்கும் நிலை ஊமைச்செந்நாய் தன் நிலைப்போல கொள்ள முடிகிறது. பின் இந்த கதைகளில் என்னை கவர்ந்த வாக்கியங்களை எப்படி சொல்லாம் இருப்பது “வெயில் காற்றில் ஆடுவதை காட்டில் தான் காண முடியும்”, “பொறுமை விளையாட்டில் மிருகங்களை வெல்ல எந்த மனிதனாலும் முடியாது”, ” மிருகம் சாவின் மூலம் மனிதனை வென்றுவிடுகிறது”. கடைசி வாக்கியம் மிருகத்திற்கு மட்டும் அல்லாமல் மனிதனுக்கு கூட பொருந்தும் அல்லவா. நாமக்கு துன்பம் தந்த ஒருவரை நம் சாவின் மூலம் வென்று விட முடியும் தானே?? இதை கதை முடிவில் காண முடிந்தது.
பின் அந்த துரையின் அதிகார தன்மையை மிக நன்றாக கூறியிருந்தீர்கள். அவன் தன் துப்பாக்கி மேல் கொண்ட பற்று எல்லையற்றது. தான் புணர்ந்த ஒரு பெண்ணை தன் ஆடிமை புணர்ந்தான் என்று தெரிந்தும் அவன் அவனை ஒரு நான்கு ஆடிகள் அடித்துவிட்டு செல்கிறான். ஆனால் தன் துப்பாக்கியை அவன் தொட்டான் எப்பதற்காக அவன் ஆவனை கொள்ளவும் தயங்கமாட்டேன் என்கிறான். துப்பாக்கியை அவன் ஒரு பெண் போலவே பாவிக்கிறான்.
ஊமைச்செந்நாய் பெயருக்கு ஏற்றார் போல அதிகம் பேசவே இல்லை தன் மனதிற்குள் பேச அதை துரை புரிந்துகொள்கிறான். எல்லா இடங்களிலும் அடிபனிந்தும் செல்கிறான். இறுதியில் துரையை அவன் காப்பாற்றிய பிறகு அவன் தன் நிலை இன்னது என்று புரிந்து கொள்கிறான்.
செந்நாய்களால் ஊமைச்செந்நாய் மரணத்தருவாயில் இருக்கும் இடம் ஒரு பொருள் மயக்கநிலை என்று எண்ணுகிறேன். இப்போது அவன் துரையின் உதவியை மறுத்து உயிர் துறக்கிறான்.
உங்கள் கதை முடிக்கும் மிக நேர்த்தியானது அது உங்கள் தனி “ஸ்டைல்” என்று சொல்லாம் “காடு என்னை நோக்கி பொங்கி வர ஆரம்பித்தது” மிக அருமையான வரிகள். இந்த” ஊமைச்செந்நாய் என்ற மிருகம் சாவின் மூலம் துரையை வெல்கிறான் ” இது அவன் அடையும் வெற்றி தானே? இதற்கு பின் துரை எப்படி உயிர் வாழ்வான் அவன் வாழும் போதே நரகத்தைதான் அனுபவிப்பான்.
ஒரு கதைக்கு நான் தெளிவாக எழுதும் முதல் வாசக கடிதம் இது, எனவே என்னுடைய மொழியில், மொழிநடையில் தவறு இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி
பா. சுகதேவ்
***
அன்புள்ள சுகதேவ்
முதல்கடிதம் என்னும் வகையில் நோக்கினால் சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள். வாசகர்கடிதம் என்பது உண்மையில் ஒரு தொடக்கம். சிந்தனைகளை எழுத்துக்களாக ஆக்கும் பயிற்சியை அதன் வழியாக மேற்கொள்ளவேண்டும்
அதற்கு சில விதிகளை வரையறைசெய்துகொள்ளுங்கள்
1 ஒரு கதை அல்லது கட்டுரையைப்பற்றி நீங்கள் சொல்வதற்கான ஒரு கருத்தைக் கண்டடையுங்கள். ஒரு தரப்பு, ஒரு மதிப்பீடு, ஒரு புரிதல். ஊமைச்செந்நாய் எதைக்குறிக்கிறது என நினைக்கிறீர்கள், அதைப்பற்றிய உங்கள் கருத்து என்ன என தொகுத்துக்கொள்வீர்கள் -அதுதான் தொடக்கம்
2 அந்த கருத்தை வலியுறுத்தவும் உதாரணம் காட்டவும் கதை, கட்டுரையின் அம்சங்களை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் எப்படி சான்றுகளையும் தர்க்கங்களையும் எடுத்துவைப்பார் என்று நினைக்கிறீர்களோ அப்படி
3 மொத்தமாக ஒரு கடிதம் அல்லது கட்டுரைக்கு ஒரு வடிவம் இருக்கவேண்டும். அது சொல்லவேண்டிய விஷயங்களை வரிசையாகச் சொல்லி முடிவாக ஒன்றை உரைத்து முடியவேண்டும்.
தொடர்ந்து எழுதுங்கள். எழுத்து உங்களை தொடரட்டும்
வாழ்த்துக்களுடன்
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
சீனுவுக்கு இரு கடிதங்கள்
அன்பின் சீனு!
எனக்கும் யோகிக்கும் இடையே நீங்கள் ‘’புக் மார்க்’’ போல எனக் கூறியதை மிகவும் ரசித்தேன்.
நாம் செத்தவரை சென்று வந்த இரண்டாம் நாள் மயிலாடுதுறை நண்பர் ஒருவருடன் மீண்டும் அங்கே சென்றேன். இம்முறை உள்ளூர் விவசாயி ஒருவர் வழிகாட்டினார். நாம் ஏறிச் சென்ற பாதைக்கு இணையான ஒரு பாதை இருந்தது. விவசாயி இலகுவாக ஏறினார். பாறைகளில் முட்டி போட்டு தவழ்ந்து மெல்ல மேலேறினோம். எங்களுக்கு வியர்த்துக் கொட்டி மூச்சு வாங்கியது. இரண்டு இடங்களில் பத்து நிமிடம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு மேலே சென்றோம். இரண்டு தினங்கள் முன்னால் பாதி தூரம் ஏறிய அனுபவம் இருந்ததால் கால்கள் உயரத்தைக் கடந்து செல்ல பழகியிருந்தன. உச்சிப் பொழுதில் பங்குனி வெயில் தீயாய் எரியும் வேளையில் கற்பாறைகள் பார்வையெங்கும் நிறைந்திருக்க குகையின் குளிர்ச்சியில் பாறை ஓவியங்களின் முன் நின்றது மகத்தான உணர்வெழுச்சித் தருணமானது.பனி மனிதனில் வரும் கைகளைப் பற்றிய சுலோகம் நினைவில் எழுந்தது.
வீடு திரும்பியதும் சில வரிகளை எழுதினேன்.
காத்தல்
—————
துக்கம் மேலிட்ட
பெண்
கண்ணீருடன்
கை கூப்பி
கடவுளிடம்
பேசியதைக்
கேட்டேன்
வேல் ஏந்திய இளைஞன்
விரித்த கரம்
அவளைப்
பார்த்தது
அவள்
பாதங்களைக் கண்டாள்
அவன் முகத்தைக் கண்டாள்
அவன் கொடியைக் கண்டாள்
அவள் அலறல் நிற்கவில்லை
பொங்கிய துக்கம்
வடிந்து போன போது
கடவுளின் கரம்
கண்ணில் பட்டது
அவள்
நம்பிக்கைகளுடன்
நீங்கிச் சென்றாள்
ஆழியேந்தியவன்
தன் மாணாக்கனுக்கு
கரத்தினைக் காட்டி
ஆதலால் செயல் புரிக
என்றான்
***
அன்புடன்,
பிரபு
மயிலாடுதுறை
***
அன்புள்ள கடலூர் சீனு
கடலூர் சீனுவின் “ஜியோ” கேள்விக்கு பல கோணங்களில் பதில் தேடலாம்.
ஜியோ வந்த பிறகு பல தொலை தொடர்பு நிறுவனங்கள், இதனால் பெரிதும் பாதிப்பும் அதிர்ச்சியும் அடைந்ததாக பல செய்திகள் வந்தது.
இப்பொழுது போல் விலை குறைக்கப்படவில்லை என்றால், ஜியோவின் ஆதிக்கம் இன்னும் கூடவே செய்யும்.
இதனால் எந்த அளவு யாருக்கு லாபம் என்பது அந்தந்த நிறுவனங்கள் கூறினாலொழிய நமக்கு தெரிய வாய்ப்பில்லை
இதன் மற்றொரு விளைவாகவே, தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் “வோடபோன்” “ஐடியா” மொபைல் நிறுவனங்களை இணைப்பதற்கான முடிவு.
இதில் ஏமாற்ற உணர்வாக எண்ண வேண்டிய அவசியமில்லை.
லட்சுமணன்
***
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

