Jeyamohan's Blog, page 1659

March 29, 2017

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–58

58. முள்நுனிக் காற்று


அன்று பகல் முழுக்க தேவயானி ஆழ்ந்த அமைதியின்மை ஒன்றை தன்னுள் உணர்ந்துகொண்டிருந்தாள். தந்தையின் பயிற்றறைக்குச் சென்று அவர் கூறியவற்றை ஏட்டில் பொறிப்பது அவள் காலைப்பணிகளில் முதன்மையானதாக இருந்தது. அவர் குரலும் உணர்வுகளும் நன்கு பழகிவிட்டிருந்தமையால் பல தருணங்களில் உளம் அமையாமலேயே செவிகளும் கைகளும் இணைந்து ஒலியை எழுத்தாக்கின. அவள் எழுந்து விடைகொண்டபோது சுக்ரர் “இன்று நீ உளம் குவியவில்லை” என்றார். அவள் மறுமொழி சொல்லவில்லை.


தன் குடிலுக்கு வந்தபோது ஏனென்றறியாத தனிமையையும் ஏக்கத்தையும் உணர்ந்தாள். அது ஏனென்று தன்னுள் சென்று தேடத் தேட ஆழம் அதை உந்தி வெளித்தள்ளி விலக்குவதை உணர்ந்தாள். சலித்து எதையேனும் செய்து விலகலாம் என்றெண்ணி முன்பு படித்து எச்சம் வைத்திருந்த காவியம் ஒன்றை எடுத்து சுவடிகளை புரட்டினாள். எழுத்துக்களை மொழியென்றாக்க இயலாமல் மீண்டும் பட்டு நூலில் கட்டி பேழைக்குள் வைத்து மூடிவிட்டு எழுந்து வெளிவந்தாள்.


வேங்கைகள் அப்பால் மரத்தடியில் நிழலில் படுத்திருந்தன. அவளை நோக்கி செவி சொடுக்கிய வேங்கை ஒன்று கண்ணைச் சுற்றிப் பறந்த சிற்றுயிர்களை தவிர்க்கும் பொருட்டு இமைகளை மூடித்திறந்தது. அது எதையோ சொல்ல வருவதுபோல் தோன்றியது. அவற்றை நோக்கியபடி அவள் அங்கு நின்றாள். முன்பெலாம் எழுந்து உடல் குழைத்தபடி அவளை நோக்கி ஓடிவரும் வழக்கம் கொண்டிருந்த அவை அங்கிருந்து அவளை நோக்கியபின் வாய்திறந்து  தலை திருப்பிக்கொண்டன.


அடுமனைக்குச் சென்று அங்கு ஏதேனும் வேலை செய்யலாம் என்று தோன்றியது. ஆனால் அங்குள அடுமனையாளர்களும் பெண்களும் கடினமான வேலை எதையும் அவள் செய்ய ஒப்புவதில்லை. அவளைக் கண்டதுமே அரசிக்குரிய உடல் வணக்கத்தை அவளுக்களித்து பணிந்த குரலில் ஒற்றைச் சொற்களில் பேசி உரிய இடைவெளிவிட்டு அகன்று நிற்பார்கள். ஆயினும் அடுமனை அவளுக்கு உகந்ததாகவே இருந்தது. அங்கே ஏதோ ஒன்று நிகழ்ந்துகொண்டிருந்தது எப்போதும்.


அடுமனைக்குள் அவள் நுழைந்ததும் அவர்கள் பேசிக்கொண்டிருந்ததென்ன என்னும் சிறிய துணுக்குறலை அடைந்தாள். ஒவ்வொரு விழியிலும் அறுபட்ட சொல்லொன்று ஒளியென நின்றது. தன்னைப்பற்றித்தான் அவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று உணர்ந்தபின் “ஏதேனும் பணி இயற்றலாமென்று வந்தேன்” என்றாள். பணிவுடன் “இங்கு அனைத்தும் முடிந்துவிட்டன” என்றார் அடுமனையாளர். அவள் “நான் கீரைகளை நறுக்குகிறேன்” என்றாள். “ஆம், அது ஒன்றுதான் இப்போது எஞ்சியுள்ளது” என்றபின் கழுவிய கீரைக்கட்டையும் கத்தியையும் கொண்டுவந்து வைத்தார் அடுமனையாளர்.


ஒவ்வொரு கீரையாக நோக்கி புழுஅரித்த இலைகளைக் களைந்து சீராக நறுக்கி அப்பால் குவித்தாள். அடுமனைக்கு அவள் வருவது அரிதென்றாலும் மெல்ல மெல்ல எந்தப் பணியிலும் எப்போதும் அவளிடம் இருக்கும் முழுமை அதிலும் கூடியது. அவள் கைகள் தேர்ந்த சூதனின் விரல்கள் யாழிலென கீரையிலும் கட்டையிலும் கத்தியிலும் தொழிற்படுவதை அவர்கள் விழிதிருப்பாது நோக்கினர். பெரிதோ சிறிதோ அல்லாமல் சீரான அளவிலேயே கீரையை வெட்டிக் குவித்த பின்பு சிவந்த கைகளை நோக்கி “செங்குழம்பிட்டதுபோல்…” என்று அவள் புன்னகையுடன் சொன்னாள்.


அப்புன்னகை அவர்கள் அனைவரையும் எளிதாக்கியது. “காய்கள் எவையேனும் உள்ளனவா?” என்றாள். “கிழங்குகள் உள்ளன” என்றார் ஒருவர். அவர் கொண்டுவந்த கிழங்குகளை விரல் தடிமனுக்கு வெட்டி கலவைக்கூட்டுக்காக தனித்தனியாக வைத்தாள். அச்செயல்களினூடாக உள்ளமைந்திருந்த நிலைகுலைவை வென்றுசெல்ல அவளால் இயன்றது. கைகள் உள்ளத்தை இயக்கும் விந்தையைப்பற்றி எண்ணிக்கொண்டாள். உள்ளத்தை எங்குதான் கொண்டு செல்ல முடியவில்லை? கால்களில், கைகளில், கண்களில், சொற்களில். ஆனால் எத்தனை இறைத்தாலும் குறையா ஊற்றென அது உள்ளில் அமைந்திருக்கிறது. நன்று, மனிதருக்கு செயலாற்றும் அருள் அளிக்கப்பட்டுள்ளது. இவ்விலங்குகள்போல இங்கிருப்பவற்றை அப்படியே உண்டு அமைந்த இடத்திலேயே உறங்கி வாழவேண்டியதில்லை.


உச்சிப்பொழுது கடந்த பின்னர் கசன் காட்டிலிருந்து திரும்பி வந்தான். தொலைவில் காட்டின் விளிம்பில் அவனைக் கண்ட முதற்கணம் அவள் உணர்ந்தாள், அதுவரை அவளுக்குள் இருந்த பதற்றம் அவனைக் குறித்தே என்று. அது ஏனென்றும் அப்போது தெரிந்தது. அவனைக் கொல்ல முயன்றது எவர் என்று கண்டடைய முடியவில்லை. பாறை உச்சியிலிருந்து அவன் தவறி விழுந்திருக்கலாம் என்றுதான் சுக்ரரும் பிறரும் எண்ணினர். அவ்வாறு தவறி விழக்கூடியவன் அல்ல அவன் என அவள் அறிந்திருந்தாள். வேங்கைகளின் பிழையாத கால்நுண்மை கொண்டவன். அவனை எவரோ கொல்ல முயல்கிறார்கள் என்று தனித்திருக்கையில் மிக ஆழத்தில் ஒரு எண்ணம் உறுதியாக சொன்னது. மரத்தரையில் செவிவைத்து படுத்திருக்கையில் அப்பாலெங்கோ பேசும் குரல் சொல்புரியாது தலைக்குள் கசிந்து செல்வதுபோல.


எதன் பொருட்டு?  எதன் பொருட்டு அவன் வந்திருக்கிறான்? சஞ்சீவினிக்காக என்று சுக்ரரின் மாணவர்கள் அனைவரும் எண்ணுவது அவளுக்கு தெரிந்திருந்தது. அவ்வாறு எண்ணுவதற்கே அனைத்து வழிகளும் இருந்தன. ஆனால் அவள் அவ்வாறு எண்ண விழையவில்லை. அதனாலேயே அவ்வாறல்ல என்பதற்கான நூறு செல்வழிகளை உருவாக்கிக் கொண்டிருந்தாள். ஒன்றை மறுத்தாலும் பிறிதொன்றுக்கே கடக்க முடிந்தது. அத்தனை சொற்களையும் கொண்டு தன்னுள்ளத்தை அவ்வாறே பயிற்றுவித்தாள். ஆயினும் அந்த ஐயமும் எங்கோ எஞ்சியிருந்தது. புல்விதையையும் ஐயத்தையும் முற்றிலும் அகற்ற எவராலும் இயலாது என்று இளவயதில் கேட்ட முதுமொழியை எண்ணிக்கொண்டாள்.


வேங்கைகள் கசனைக் கண்டதும் பெண்மைநிறைந்த அசைவுகளுடன் அணுகி அவன் உடலில் உரசியபடி சுழன்று, தாவி கால்தூக்கி எழுந்து, தோள் தழுவி மடியில் படுத்துப் புரண்டு மகிழ்வொலி எழுப்பி, வால் சுழற்றி, பொய்க்கடி கடித்து, போலிச் சீறல் எழுப்பி மகிழ்வு கொண்டாடின. அவன் அவளருகே வந்து “இன்று முன்னதாகவே மீண்டுவிட்டேன்” என்று  சொன்னபோது ஏன் அந்த சீற்றம் தன்னுள் எழுந்ததென்று அவளுக்கு புரியவில்லை. கடுத்த முகத்துடன் “நன்று” என்றபின் திரும்பி தன் குடிலுக்குள் சென்றுவிட்டாள். அவள் உணர்வு மாற்றத்தை புரிந்துகொள்ளாமல் சில கணங்கள் நின்றுவிட்டு அவன் தன் குடிலுக்கு சென்றான்.


பிற்பகல் முழுக்க அவள் தன் அறைக்குள் முழங்காலை கட்டிக்கொண்டு சுவர் மூலையில் அமர்ந்திருந்தாள். பின்னர் அங்கேயே படுத்து காலிடுக்கில் கைகளை புதைத்துக்கொண்டு விழிமயங்கினாள். அவனிடம் ஏன் அச்சீறிய முகத்தைக் காட்டினேன்? ஏனெனில் இவன் நிலைகுலையச் செய்கிறான். உளம்தவித்து நான் விழையும் முற்றுறுதி ஒன்றை அளிக்க மறுக்கிறான். எழுந்துசென்று அவனை பற்றித்தூக்கி “சொல், என்னுள் நுழையாது உன்னுள் எஞ்சியிருப்பதென்ன…?” என்று கேட்கவேண்டும். ஆனால் ஒருபோதும் அதை கேட்டுவிட முடியாது. இப்புவியில் அனைத்து மகளிரும் ஆண்களிடம் கேட்பது அதைத்தான். அத்தனை உளச்சொல்லையும் பெண்களுக்கு அளித்துவிடும் ஆணென ஒருவன் இருக்கக்கூடுமோ? இருந்தால் அந்தப் பெண் அவனிடம் மேலும் எதை கேட்பாள்?


அந்தியிருள் பரவி சீவிடுகளின் ஒலியெழத் தொடங்கியதும் அவள் எழுந்து பின்பக்கம் சென்று முகத்தைக் கழுவி கூந்தலைச் சீவி முடிந்துகொண்டாள். நீராடலாம் என்று தோன்றியது என்றாலும் சோம்பலால் அதை ஒழிந்தாள். சேடி வந்து “உணவருந்துகிறீர்களா?” என்று கேட்டபோது வேண்டாமென்று கையை அசைத்தாள். குடிலின் பின்பக்கம் சிறு திண்ணையில் அமர்ந்து குடில் வளைப்புகளின் எல்லைக்கு அப்பால் குறுங்காட்டில் பறவைக்குரல்கள் எழுந்துகொண்டிருப்பதை கேட்டுக்கொண்டிருந்தாள்.


மின்மினிகள் எழுந்து இருளுக்குள் சுழன்று பறந்தன. காட்டு எருதொன்று காட்டின் எல்லையிலிருந்து வெளிவந்து அவளை நோக்கியது. அத்தனை தொலைவிலேயே அதன் விழிகள் மின்னித் திரும்புவதை அவள் கண்டாள். தலை குலுக்கி, செவிகளை உடுக்கென ஒலிக்கவிட்டு, எடைமிக்க காலடிகளை தூக்கி வைத்தது எருது. அதன் கால்பட்டு புரண்ட மட்கிய மரமொன்றிலிருந்து தழல்போல மின்மினிகள் எழுந்து காற்றில் சுழன்று சிதறி மறைந்தன. தோழி மீண்டும் வந்து “உணவருந்தவில்லையா, தேவி?” என்றாள். “வேண்டியதில்லை” என்று சொல்லி எழுந்து குடிலுக்குள் சென்றாள்.


மெல்லிய உறுமலோசை கேட்க சாளரம் வழியாக நோக்கியபோது கசன் தன் குடிலுக்கு முன்னால் வேங்கைகளுடன் விளையாடிக் கொண்டிருப்பதை கண்டாள். அவன் கால்களை அசைக்க அவற்றை இரையென நடித்து வேங்கைகள் பாய்ந்துசென்று உகிர் உள்ளிழுக்கப்பட்ட பூங்கால்களால் பற்றி பல் படாமல் கடித்து உறுமியபடி இழுத்து உதறி விளையாடின. மஞ்சத்தை விரிக்காமலேயே அவள் படுத்துக்கொண்டாள். மென்சேக்கை மீது முகத்தை அழுத்தி கைகளை தலைமேல் வைத்து இருளுக்குள் தன்னை புதைக்க முயன்றாள். துயில் வரவில்லை என்றாலும் விரைந்தோடிய எண்ணங்கள் ஒவ்வொன்றாக தயங்கி நின்றன. பொருளிலாச் சொற்களென சித்தம் சொட்டிக்கொண்டிருந்தது.


பிறகெப்போதோ விழித்துக்கொண்டபோதுதான் அனலோசையை கேட்டாள். விழிப்பதற்கு முன்பே கனவில் கசனுடன் அவள் நடந்து சென்று கொண்டிருந்தபோது காடு பற்றிக்கொண்டு தழல்மணம் எழுந்ததையும் செஞ்சுடர் பட்டுக்கொடி பறப்பதுபோல் ஓசையிட்டதும் நினைவுக்கு வந்தது. உண்மையிலேயே தீயா என அரைத்துயில் கொண்ட உள்ளம் திகைத்தது. அதற்குள் சக்ரனும் பிறரும் எழுப்பிய குரலை அவள் கேட்டாள். பதறியபடி கதவைத் திறந்து வெளிவந்தபோது கசனின் குடில் எரிந்து கூரை தரை நோக்கி அமிழ்ந்துவிட்டிருந்தது. சுவர்கள் எரிந்து அதன்மேல் விழுந்தன. குடில்களிலிருந்து அலறியபடி ஓடிவந்த அனைவரும் மரக்குடங்களும் குடுவைகளும் கொண்டு நீரள்ளி சூழ்ந்திருந்த பிற குடில்களின் கூரைகளில் வீசினர். அவன் அக்குடிலுக்குள் இல்லை என அவள் அப்போதே உணர்ந்துகொண்டாள்.



tigerமெல்லிய ஒலியொன்றைக் கேட்டு அவள் திடுக்கிட்டாள். எழுந்து நின்று காட்டையே உற்று நோக்கினாள். அது வேங்கைகளின் உறுமல் என தெரிந்தது. ஆனால் மிக மெல்ல ஒரு சிறு வண்டு காதோரம் சென்றதைப்போலவே அது ஒலித்தது. மீண்டும் செவிகூர்ந்தபோது அவ்வொலி கேட்கவில்லை. ஆனால் அது செவிமயக்கு அல்ல என உறுதியாகவே தெரிந்தது. காட்டுக்குச் செல்லும் பாதையை நோக்கி சென்றாள். “எங்கு செல்கிறீர்கள், தேவி?” என்றான் ஒருவன். ஒன்றுமில்லை என்றபடி அவள் இடைவழியினூடாக நடந்து காட்டின் விளிம்பை சென்றடைந்தாள்.


அணுகியபோது வேங்கைகளின் உறுமலை அவள் கேட்டாள். அச்சிறு ஒலியிலேயே அவள் உள்ளம் அச்சம் கொண்டது. அவளறியாத வேறு வேங்கைகள் அங்கே காட்டிற்குள் இருப்பதாகத்தான் தோன்றியது. இருளுக்கு விழிபழகுந்தோறும் மரங்களின் கிளைகள் தெளிந்தன. பின்பு இலைகளின் வான்விளிம்பு துலங்கியது. பாதை செந்நிறத் தடமாக வளைந்து சென்றது. காட்டின் எல்லையை அவள் அடைந்தபோது உள்ளே புதர்களுக்குள் மூன்று வேங்கைகளும் படுத்திருப்பதை கண்டாள். அவள் காலடியோசை கேட்டு ஒன்று எழுந்து அவளை நோக்கி செவிகோட்டியது. வலது முன்காலை நீட்டி வாய்திறந்து வெண்பற்கள் தெரிய உரக்க உறுமியது. அக்கணத்திலேயே அவள் அறிந்தாள், அவை கசனைக் கொன்று உண்டுவிட்டன என்று.


திரும்பி பாதையினூடாக ஓடி குடில்தொகையை அடைந்தபோது கசனின் குடில் எரிந்து முடிந்திருந்தது. அதன்மேல் மணலையும் நீரையும் வீசி தழல்களை அணைத்துவிட்டிருந்தனர். நீராவியும் கரிப்புகையும் கலந்த மணம் சூழ்ந்திருந்தது. அவள் அங்கு கூடிநின்றவர்களை உந்திக் கடந்து சுக்ரரின் குடிலை அடைந்து படிகளில் பாய்ந்தேறி அங்கு திண்ணையில் கிருதரின் அருகே நின்று எரியணைப்பதை நோக்கிக்கொண்டிருந்த சுக்ரரின் கைகளைப்பற்றி “தந்தையே, அவரை உயிர்பிழைக்க வையுங்கள், உடனே” என்றாள். திகைப்புடன் “என்ன சொல்கிறாய்?” என்று சுக்ரர் கேட்டார்.


அவர் கைகளை உலுக்கியபடி மூச்சிரைக்க உடைந்த குரலில் “அவர் கொல்லப்பட்டுவிட்டார். அவரை அவை உண்டுவிட்டன” என்றாள். “எவை?” என்றார் சுக்ரர். “வேங்கைகள். அவை அவரை உண்டுவிட்டன. எந்தையே, அவரை மீட்டளியுங்கள். அவரை மீட்டளியுங்கள். இக்கணம் இங்கு அவர் எழவில்லையென்றால் நாளை புலரியில் நானிருக்க மாட்டேன். தெய்வங்கள்மேல் மூதன்னையர்மேல் ஆணை!” என்றாள்.


அவள் முகத்தை மெல்லிய ஒளியில் பார்த்தபோது சுக்ரர் அவள் உணர்வுகளை முழுக்க உணர்ந்துகொண்டார். அவள் கண்ணீரிலிருந்தே கசன் உயிருடனில்லையென்பது அவருக்கு உறுதியாகத் தெரிந்தது. “அஞ்சாதே, வா! அவனை நான் மீட்கிறேன்” என்றார். தன் பீடத்தில் சென்று அமர்ந்த பின்னரே தேவயானி சொன்னது என்னவென்பதை உளம் வாங்கிக்கொண்டார் சுக்ரர். திகைப்புடன் “என்ன சொல்கிறாய்? உன்னுடைய வேங்கைகளா?” என்றார். “ஆம். அவைதான். நான் நன்கறிவேன்” என்றாள். “நீ பார்த்தாயா?” என்றார். “பார்த்தேன்” என்றாள். “அவனை அவை உண்டனவா?” என்றார். “அவற்றின் கண்களை பார்த்தேன்” என்றாள்.


அவர் விழிசுருக்கி கூர்ந்துநோக்கி “கண்களையா?” என்றார். “கண்களை ஏந்திவரும் உடலையும்தான். அவைதான். அவை உண்ணும். நான் அறிவேன்” என்றாள். வாய் சற்று திறந்திருக்க அசைவிழந்து அவளையே நோக்கிக்கொண்டிருந்தார் சுக்ரர். பின்னர் கலைந்து “ஆம். உண்ணக்கூடும்” என்றபின் அருகிருந்த அகல்சுடரை தன்னருகே இழுத்துவைக்கச் சொன்னார். அவளால் அதை எடுக்க முடியவில்லை. கையிலிருந்து சுடருடன் நடுங்கி எண்ணெய் சிந்தியது. அதை தரையில் வைத்து தள்ளி அவர் அருகே கொண்டுவந்தாள். சுடரையே நோக்கிக்கொண்டிருந்த பின் அவர் திரும்பி “சஞ்சீவினியை சொன்னால் அவை மூன்றும் வயிறுகிழிந்து உயிர் துறக்கும்” என்றார். “சாகட்டும். அவை செத்தொழிந்தால் மட்டுமே எனக்கு விடுதலை. அவை அழியட்டும்” என்று பற்களைக் கடித்தபடி இரு கைகளையும் விரல்சுருட்டி இறுக்கிக்கொண்டு அவள் சொன்னாள்.


அரைக்கணம் விழிநிமிர்த்தி அவளை நோக்கியபின் “நன்று” என்ற சுக்ரர் பெருமூச்சுவிட்டார். கண்களை மூடி சுடர் நோக்கி கைநீட்டி சஞ்சீவினியை சொன்னார். மெல்லிய வலி முனகலொன்று அவளிடம் எழுந்ததைக் கேட்டு கண்களைத் திறந்து அவளை பார்த்தார். அவள் கழுத்து நரம்புகள் இழுபட்டிருந்தன. வலிப்பு வந்து பக்கவாட்டில் சரிந்து விழுபவள்போல் தெரிந்தது. “என்ன செய்கிறது?” என்று அவர் கைநீட்டி அவள் தொடையை தொட்டார். அவள் விழி திறந்து “ஒன்றுமில்லை” என்றபின் பெருமூச்சுவிட்டபோது உடல் முழுக்க மெல்லிய வியர்வை பூத்திருப்பதை நோக்கினார். “என்ன ஆயிற்று?” என்றார்.


“அவை இறந்துவிட்டன” என்றாள். “எப்படி தெரியும்?” என்று கேட்ட சுக்ரர் அக்கேள்வியை கலைக்க விரும்புபவர்போல தலையசைத்து “நன்று, அவன் உடனே வந்துவிடுவான். அவன் உடல் அழியவில்லை” என்றார். அவள் எழுந்து வெளியில் சென்று பார்ப்பாள் என்று அவர் எண்ணினார். அவள் கால்களைக் குவித்து அதன்மேல் கைகளைக் கட்டி முட்டுகளில் முகம் அமர்த்தி அமர்ந்திருந்தாள். எழுந்து அவள் குழல் கற்றைகளைத் தொட்டு வருடி என்ன செய்கிறது உனக்கு என்று கேட்க வேண்டுமென்று சுக்ரர் எண்ணினார். ஆனால் அவராலும் தன் இருக்கையிலிருந்து எழ முடியவில்லை.


சத்வர் உள்ளே வந்து “காட்டுக்குச் சென்றிருந்த கசன் திரும்பி வந்துவிட்டான். அவன் குடில் எரிந்ததை பார்த்துக்கொண்டிருக்கிறான்” என்றார். “அவனை இங்கு வரச்சொல்க!” என்றார் சுக்ரர். “சரி” என்று சத்வர் திரும்ப வெளியே செல்வதற்குள் கூரிய வேலால் குத்தப்பட்டதுபோல உடல் துடிக்க எழுந்து தேவயானி ஆடையோசையும் அணிகளின் ஓசையும் எழ பாய்ந்து குடிலைவிட்டு வெளியே சென்று இருளில் இறங்கி ஓடினாள். கைகளை ஊன்றி எழுந்த சுக்ரர் குடில் வாயிலில் நின்று நோக்கியபோது எரிந்த குடில் அருகே நின்றுகொண்டிருந்த கசனை நோக்கி பாய்ந்தோடி அவன் தோள்களை தாவிப் பற்றிக்கொண்ட தேவயானியை கண்டார்.


கசனின் கைகளைப்பற்றி தன் தோளிலிட்டு இடைவரை வளைத்து அவன் தோளில் தலைசேர்த்து அன்னைக்குரங்குடன் ஒட்டிக்கொள்ளும் குட்டிக்குரங்கென ஆகி நின்றிருந்தாள் தேவயானி. அவன் அவள் தலைமயிரைக் கோதியபடி “என்ன இது? ஏன் அழுகிறாய்?” என்றான். ஓசையின்றி விம்மியபடி “ஒன்றுமில்லை, ஒன்றுமில்லை” என்று சொன்னாள். “சொல்! என்ன ஆயிற்று உனக்கு? ஏன் அழுகிறாய்?” என்று அவன் கேட்டான். “எங்கு சென்றிருந்தீர்கள்?” என்றாள்.


“அறியேன். காட்டில் விழித்துக்கொண்டேன். என்னைச் சுற்றி நம் வேங்கைகள் மூன்றும் இறந்துவிட்டவைபோல் கிடந்தன. தொலைவில் இந்தத் தீ எரிந்து அணைவதைக் கண்டேன். எழுந்து இடைவழியினூடாக நடந்து இங்கு வந்தேன்” என்றான். “காட்டிற்கு எப்படி சென்றீர்கள்?” என்றாள். “அது எனக்கு நினைவில்லை” என்றபின் “நேற்று குடிலில் படுத்தேன். ஆழ்ந்த துயிலில் புகை மணத்தை அறிந்தேன். மெல்லிய வெண்பட்டாடை ஒன்று பறந்து என்மேல் விழுந்தது. என் மூக்கு வழியாகவும் காது வழியாகவும் அது எனக்குள் புகுந்தது. என் தலை கல்லால் ஆனதுபோல் ஆயிற்று. கைகால்கள் எடைகொண்டு என்னால் அசைக்க முடியாமல் ஆயின. அப்போது என் அறைக்குள் மூன்று புலிகள் நுழைந்தன” என்றான்.


“புலிகளா?” என்றாள். “ஆம். எரிதுளிபோல மின்னும் அவற்றின் விழிகளை கண்டேன்” என்றபின் தலையை வலக்கையால் மெல்ல தட்டி “ஆனால் அவை மனிதர்கள்போல் எழுந்து நடந்தன. என்னை கூர்ந்து நோக்கின. என் உள்ளங்காலை ஒன்று முகர்ந்தது. பிறிதொன்று என் முகத்தை முகர்ந்தபோது அதன் மூச்சுக்காற்று ஊன்மணத்துடன் நீராவியுடன் என்மேல் படிந்தது. பின்னர் அவை அறைக்குள் நின்று மெல்லிய குரலில் பேசிக்கொண்டன” என்றான். தேவயானி “என்ன பேசிக்கொண்டன?” என்றாள். “தங்களுக்குள் பேசிக்கொண்டன, பெண் குரலில்” என்றான்.


“பெண் குரலிலா?” என்று அவள் கேட்டாள். “ஆம், அதில் ஒரு புலி என்னிடம் ஏதோ சொன்னது. பிற இரு புலிகளும் அப்புலியை கடிந்தன. பிறகு அவை மூன்றும் மாறி மாறி என்னிடம் பேசத்தொடங்கின.” அவன் சொல்வதை அவள் விழிகள் கூம்ப கேட்டுக்கொண்டிருந்தாள். “மூன்று புலிகள். ஒன்று சிறுமிபோல பேசியது. பிறிதொன்று மூதன்னையைப்போல. பிறிதொன்றின் குரல் இளங்கன்னியின் குரல். பின்னர் அவை மூன்றும் சேர்ந்து என்னைக் கவ்வி எடுத்துக்கொண்டன” என்றான். “கொல்ல விழைந்தனவா?” என்றாள். “கவ்வின என்றால்… உண்பதற்காக அல்ல. குழந்தையை பல்படாமல் கவ்வுமே அதைப்போல. என்னை அவை காட்டுக்குள் கொண்டு சென்றன.”


அவள் “நீங்கள் பிறிதொன்றையும் நினைவுகூரவில்லையா?” என்றாள். “இல்லை” என்றான் அவன். “வருக!” என்று அவனை தன் குடிலுக்கு அழைத்துச் சென்றாள். “இன்று இங்கு தங்குங்கள்.” அவன் மஞ்சத்தில் அமர்ந்து கைகளை கட்டிக்கொண்டான். “நான் எங்கு வாழ்கிறேன் என்பதே அடிக்கடி குழம்பிப்போகிறது. நான் இங்கிருப்பது ஒரு கனவு என்றும் பிறிதெங்கோ வாழ்ந்துகொண்டிருக்கிறேன் என்றும் தோன்றுகிறது. ஒவ்வொரு முறையும் கனவில் அந்த மெய்வாழ்வே இருக்கிறது. அதில் இவ்வாழ்வை கனவு காண்பேன். ஆனால் இந்தப் புலிகள் அங்கும் இருக்கின்றன. மூன்று வேங்கைகள், ஒளிரும் விழிகள் கொண்டவை” என்றான்.


“களைத்திருக்கிறீர்கள். இங்கேயே படுத்துக்கொள்ளுங்கள்” என்றாள். “வேண்டாம். நான் வேறேதாவது குடிலுக்கு செல்கிறேன்” என்றான். “படுத்துக்கொள்ளுங்கள்!” என்று அவள் அன்னையின் குரலில் அதட்ட “சரி” என்று அவன் மஞ்சத்தில் உடல் நீட்டி படுத்து கண்களை மூடிக்கொண்டான். “ஏதேனும் அருந்துகிறீர்களா?” என்று அவள் கேட்டாள். “ஆம். நன்கு விடாய் கொண்டிருக்கிறேன். இதுவரை என் உடலில் இருந்த பதற்றம் அந்த விடாய்தான். நீ கேட்கும்வரை அதை அப்படி புரிந்துகொள்ள முடியவில்லை” என்றான்.


“இருங்கள்” என்று அவள் வெளியே சென்று அடுமனைச்சேடி ஒருத்தியை அழைத்து நறும்பால் கொண்டு வரச்சொன்னாள். மஞ்சள்தூளும் மிளகுமிட்டு வெல்லத்துடன் கொதிக்க வைக்கப்பட்ட பாலை மண்கலம் ததும்ப கொண்டுவந்து கொடுத்தாள் சேடி. அதை உள்ளே கொண்டுவந்து அவனிடம் அளித்து “அருந்துங்கள்” என்றாள். “ஆம், இதை அருந்துவது போலவே கனவு கண்டேன்” என்றபடி அவன் அதை வாங்கினான். “எப்போது?” என்று அவள் கேட்டாள். “இப்போது. நான் அதை அருந்திக்கொண்டிருக்கும் போதுதான் உன் காலடிகள் கேட்டன. விழித்துப் பார்த்தால் கலத்துடன் நீ வருகிறாய்.” பின்பு மெல்லிய ஓசையெழ கலத்தின் பெரும்பகுதி பாலைக் குடித்து அப்பால் வைத்தான். வாயை துடைத்தபின் “உடல் முழுக்க எரிந்த அனல் அணைவதுபோல் இருந்தது. மிகுந்த பசியும் இருந்திருக்க வேண்டும்” என்றான்.


அவள் “உங்களுக்கு அகிஃபீனா புகை போடப்பட்டிருக்கிறது” என்றாள். “எனக்கா?” என்றான். “ஆம், ஆகவேதான் இனிப்புவிடாய். நீங்கள் விரும்பி அதை இழுத்திருக்க மாட்டீர்கள். உங்கள் குடிலுக்குள் எவரேனும் புகைக்கலமாக அதை கொண்டு வைத்திருக்கலாம்.” அவன் “எவர்…?” என்றான். “அவ்வறைக்குள் வந்தவர்களைத்தான் நீங்கள் புலிகளாக எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்.” “ஆனால் ஏன் அவர்கள் புலிகளாக வரவேண்டும்?” என்றான். “நீங்கள் புலிகளுடன் விளையாடிவிட்டுச் சென்றதனால் இருக்கலாம். புலிகளையே எண்ணிக்கொண்டு படுத்திருப்பீர்கள்” என்றாள். “அவர்கள் உங்களைக் கொன்றிருக்கிறார்கள்.”


“என்னையா?” என்று அவன் உரக்க கேட்டான். “ஆம். உங்களை மயங்கவைத்து கொன்றிருக்கிறார்கள். குருதியின் மணம் ஏற்றதால் வேங்கைகள் உள்ளே வந்திருக்கின்றன. உங்களை வேங்கைகளுக்கு உணவாக்கியிருக்கிறார்கள்.” அவன் “நான் எப்படி மீண்டு வந்தேன்?” என்றான். “வேங்கையின் வயிற்றைக் கிழித்து வந்திருக்கிறீர்கள்.” அவன் “ஆம், புரிகிறது. அவை அங்கு இறந்துதான் கிடந்தன என்று தெரிகிறது” என்றான்.


மீண்டும் படுத்துக்கொண்டு “நான் உயிர்மீள வேண்டுமென்பதற்காக அவை இறக்க வேண்டியிருந்தது. இனிய விலங்குகள், தங்கள் முழுதுள்ளத்தை எனக்களித்தன” என்றான். “ஆனால் அவை உங்களை உண்டன” என்றாள் தேவயானி. “குருதி விடாயென்பது அவற்றின் உடலில் உறைகிறது. அவற்றின் ஆன்மா எதையும் அறியாது” என்றான் கசன். “கலத்தின் அழுக்கு பாலிலும் உண்டு என்பார்கள். புலியின் உடலில் ஆன்மா புலி வடிவில் வாழ்கிறது” என்றாள். அவன் அதை கேட்காததுபோல் நீள்மூச்சுவிட்டு “அவற்றின் முகத்தில் மாறாக் குழந்தைத்தன்மை ஒன்றிருந்தது. அவற்றில் ஒன்றை என் மகள் என எண்ணிக்கொள்வேன்” என்றான்.


அவள் கைகளைக் கட்டியபடி அவனை நோக்கிக்கொண்டிருந்தாள். “துயிலுங்கள்” என்றாள். “இன்றிரவு அவற்றை எண்ணாமல் என்னால் துயில முடியவில்லை” என்று கசன் சொன்னான். “அவற்றின் விழிகள் மிக அருகிலென்று தெரிகின்றன. ஆறு அருமணிகள். கைநீட்டினால் அவற்றை தொடமுடியும். ஆனால் மின்மினிகள்போல பறந்து சென்றுவிடுமோ என்று தோன்றுகிறது.” “வீண்பேச்சு. கண்ணைமூடி படுத்திருங்கள். துயிலுங்கள்” என்றாள். “துயிலவேண்டும். இந்த சித்தப்பெருக்கிலிருந்து துயிலொன்றே என்னை மீட்கும்” என்றபின் “தேவயானி” என அழைத்தான். “என்ன?” என்றாள்.


“அவை என்னை எத்தனை விரும்பி உண்டிருக்கும்! ஓர் உடலை உண்பதென்பது அதை முத்தமிட்டுக் கொஞ்சுவது போலத்தானே?” என்றான். அவள் “உளறவேண்டாம்” என்றபின் எழுந்து அவிழ்ந்து சரிந்த தன் கூந்தலை முடிந்துகொண்டாள். “அல்ல, ஓர் உடலை உண்பதென்பது முலையருந்துவதுபோல. அதை தன் உடலுடன் இணைத்துக்கொள்வதுபோல. அதுவாக ஆவதைப்போல. அவை என் உடலில் சுவைத்து திளைத்திருக்கின்றன. இதுநாள்வரை அவற்றிடம் நான் கொஞ்சியபோது ஒருபோதும் அந்த இரண்டின்மையை அடைந்ததில்லை.”


“இந்தப் பேச்சு எனக்கு சலிப்பூட்டுகிறது. துயிலுங்கள். துயிலவேண்டுமென்று எண்ணுங்கள். துயில் வந்து சேரும்” என்று அவள் சொன்னாள். “ஆம், துயின்றாக வேண்டும்” என்று தனக்குத்தானே என அவன் சொல்லிக்கொண்டான். பின் கண்களை மூடி கால்களை நீட்டிக்கொண்டு “இனிய வேங்கைகள். அவ்விழிகளிலிருந்து எனக்கு விடுதலை இல்லை” என்றான். அவன் முகம் மலர்ந்தது, பின் ஆழ்ந்த துயர்கொண்டது. “அவை மிக அருகே நின்றிருக்கின்றன. என்னை முத்தமிடுகின்றன. ஊன்மணம் கலந்த வெப்பக்காற்று” என்றான். “இனியவை… என் பிறவா மைந்தர்கள்” என்றபின் பெருமூச்சுவிட்டு “இல்லை, மகள்கள்” என்றான்.


தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–57
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–56
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–54
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–53
வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–52
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–49
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–55
வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–51
வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–48
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–14
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 37
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 13
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 2
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 67
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 89
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 31
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 26
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 25
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 12
‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 2
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 29, 2017 11:30

March 28, 2017

தளம் முடக்கம்

index


 


அன்புள்ள ஜெமோ அவர்களுக்கு,


 


உங்கள் வெப்சைட் இயங்கவில்லையா? சில மணிநேரங்களாக ஏதோ பிரச்னை எனக்காட்டுகிறதே. எங்கே ஹோஸ்டிங் செய்திருக்கிறீர்கள்? இவ்வளவு காலத்திற்கு நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்களே.


 


அன்புடன்


ஶ்ரீதர்


 


வணக்கம்.


 


உங்கள் இணையதளம் முடக்கப்பட்டுவிட்டதோ என்ற சந்தேகத்தில் இருக்கிறேன். ‘இந்து முல்லாகள் உருவாக அனுமதிப்போமா?’ என்ற கட்டுரைக்குப் பின் இன்று இரவு உங்கள் தளம் முடக்கியுள்ளதைப் பார்த்ததும் இதுபோன்ற எண்ணத்திற்கு இடமிருக்கிறது. மார்ச் 24ஆம் தேதிக்குப் பிந்தைய பதிவுகள் எதுவும் தளத்தில் இல்லை. டம்மியாக ஒரு பக்கம் மட்டும் காட்டப்படுகிறது. அதில் தோன்றும் எந்த பதிவை க்ளிக் செய்தாலும் முடக்கப்பட்டதன் அறிகுறியையே அளிக்கிறது. ஒரு வேளை நீங்கள் அறிந்தே தளத்தை மேம்படுத்தும் பின்னணி வேலை நடக்கிறதா? அப்படி இருக்குமானால் முன்கூட்டியே சொல்லியிருப்பீர்கள். மின்னஞ்சலில் இன்றைய பதிவுகள் (நேற்றே பதிவிட்டவை) வரப்பெற்றன. இருப்பினும், தளம் என்னவாயிற்று? மூன்றாமவர் புகவில்லை என்றால் தெரியப்படுத்த வேண்டுகிறேன். ஒரு கலைக்களஞ்சியம் முடங்கியது போலத்தான் இது என்பதால் பதிலுக்குக் காத்திருக்கிறோம்.


 


நன்றி.


ஸ்ரீனிவாச கோபாலன்


 


 


அன்புள்ள ஸ்ரீதர், ஸ்ரீனிவாச கோபாலன்,


 


அவ்வப்போது இப்படி நிகழ்கிறது. முன்பு பார்வையாளர் எண்ணிக்கை மிகுந்து தளத்தால் தாளமுடியாமலானபோது அடிக்கடி இப்படி ஆகியது. அதன்பின்னரே மேலும் பொருட்செலவில் கிளவுட் முறைக்குச் சென்றோம். இப்போது மீண்டும் ஆரம்பித்துள்ளது


 


பொதுவாக அதிகமானபேர் இணையதளத்தை வந்துபார்த்து அதன் பார்வைஎண் மிகுதியாக ஆகும்போது  இது நிகழ்கிறது என ஊகிக்கிறோம். பெரும்பாலும் சினிமா சார்ந்த செய்திகள், மத அரசியல் சார்ந்த செய்திகள் வரும்போது. எந்திரன் பற்றிய ஒருசெய்தி வந்தபோது. ஜக்கிவாசுதேவ் கட்டுரை வந்தபோது இவவாறு நிகழ்ந்தது.


 


அப்போது தளம் எவராலோ கவனிக்கப்படுகிறது. அது ஹேக்கிங் செய்யப்படுகிறது. பெரும்பாலும் பாகிஸ்தானில் உள்ள இணையதளங்களில் இருந்து. இந்தியாவிலுள்ள எல்லா இணையதளங்களும் அங்கிருந்துதான் ஹேக்கிங் செய்யப்படுகின்றன என்கிறார்கள். அரசியல் எல்லாம் இல்லை, வெறும் ஃபேஷன் தளங்களும் பாதிக்கப்படுகின்றன.


 


நாங்கள் இதன்பொருட்டே நிறையச் செலவுசெய்து ஒரு பின்பதிவு இணையதளமும் வைத்திருக்கிறோம். மொத்த தளத்திற்கும்ஒரு பிரதி அங்கே இருக்கும். அதைக்கொண்டு இதை மீண்டும் வலையேற்றிவிடுவோம். ஆனால் அதை எளிதில் நாங்கள் செய்ய இயலாது. ஊதியம்பெற்று பணியாற்றும் நிபுணர்கள் தேவை. அவர்கள் காலை எட்டு மணிக்குமேல்தான் தொடர்புக்கே வருகிறார்கள்.


 


இதிலுள்ள சிக்கல் செலவு பன்மடங்கு கூடுகிறது என்பதே. இப்போது இந்த இணையதளம் ஆண்டுக்கு இரண்டுமூன்றுலட்சம் ரூபாய்வரை செலவிழுப்பதாக ஆகிவிட்டிருக்கிறது. விளம்பரமோ சந்தாவோ இல்லாமல் நண்பர்களின் சொந்தச்செலவிலேயே இதை இதுவரைக் கொண்டுசென்றுவிட்டோம். பார்க்கலாம்


 


ஜெ

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 28, 2017 22:33

கருத்துக்கெடுபிடி

reli


 


சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் முரளி திரிச்சூர் லலிதகலா அக்காதமி தலைவராக இருந்தபோது அவருடைய அலுவலக அறையில் பேசிக்கொண்டிருந்தோம். நடக்கவிருந்த சர்வதேச நாடகவிழாவுக்காக வந்திருந்த சிலர் உள்ளே வந்தனர். என்னை எழுத்தாளர் என அறிமுகம் செய்துகொண்டதும் இயல்பாகப் பேச்சு ஆரம்பமாகியது.


ஒருவர் பாகிஸ்தான் நாடகாசிரியர். இன்னொருவர் துர்க்மேனிஸ்தான்காரர். ஒருவர் ஈரான். இன்னொருவர் பங்களாதேஷ். அவர்கள் ஒன்றாகவே உள்ளே வந்தனர். அனைவருமே இஸ்லாமியர். ஆனால் வெவ்வேறு உள்மதப்பிரிவுகளைச் சார்ந்தவர்கள்.


நாடகத்தை சென்ஸார் செய்வதைப்பற்றிப் பேச ஆரம்பித்தபோது ஒவ்வொருவரும் அவர்களின் நாட்டுச்சூழலைச் சொல்லத் தொடங்கினர். மெல்ல மெல்ல நான் உள்ளூர நடுங்கத் தொடங்கினேன். நம் வாழ்க்கையில் நாம் அதற்கிணையான கருத்தியல் கெடுபிடியை சந்தித்திருக்கவே மாட்டோம். உண்மையில் அச்சூழலை நம்மால் எண்ணிப்பார்க்கவே முடியாது. இந்தியாவில் நெருக்கடிநிலைக் காலகட்டத்திலும்கூட அத்தகைய துல்லியமான  கண்காணிப்பு – கருத்து ஒடுக்குமுறை – தண்டனை அமைப்பு இருந்ததில்லை.


அந்த நான்குபேருமே பலமுறை விசாரிக்கப்பட்டிருக்கிறார்கள். வங்கதேசத்தவர் தவிர பிறர் இரண்டுமுறைக்குமேல் சிறைசென்றிருக்கிறார்கள். துர்க்மேனிஸ்தான்காரர் மூன்றுகசையடிகள் பெற்றிருக்கிறார். தழும்பை காட்டினார். ஆனால் அவர்கள் தீவிரமான கருத்துக்கள் கொண்ட போராளிகள் அல்ல.அரசையோ அமைப்பையோ விமர்சிப்பவர்களும் அல்ல. சொல்லப்போனால் அவர்கள் அரசுக்கு ஆதரவாளர். ஆகவேதான் அவர் இந்தியாவுக்கு அனுப்பப் பட்டிருக்கிறார்கள்.


ஆனாலும் அவ்வப்போது சிலகருத்துக்கள் பிசிறு தட்டுவதுண்டு. அல்லது வெறும் சந்தேகம் எழுவதுண்டு. ஏதேனும் ஒரு இஸ்லாமிய மதகுருவுக்கு ஒருவரி இஸ்லாமுக்கு எதிரானது, மதநிந்தை என ‘தோன்றினாலே’ போதும். எது தோன்றும் என்று சொல்லவேமுடியாது. உதாரணமாக ’விண்ணிலும் மண்ணிலும் வேறு எதைவிடவும் நீ எனக்கு முக்கியமானவள்’ என காதலன் காதலியிடம் சொல்லும் வசனம் குர் ஆனுக்கு எதிரானதாகக் கருதப்பட்டது. பன்னிரண்டுநாள் சிறைவாசம் ஓரிரு அடிகள். அந்நாடகத்தையே திரும்பப்பெற்றுக்கொண்டபின் சரியாகியது.


சரி என அதை ஓர் அளவுகோலாகக் கொள்ளமுடியாது, ஏனென்றால் அதைவிட கடுமையான வசனங்கள் வேறெங்காவது அனுமதிக்கப்பட்டிருக்கும். இது ஒரு மதகுருவின் கண்ணுக்குப்பட்டு அவருடைய அப்போதைய மனநிலையில் அப்படித் தோன்றியது, அவ்வளவுதான் காரணம்.


அதோடு முக்கியமான பிரச்சினை மற்ற எழுத்தாளர்கள். ஒருவரைக் கவிழ்க்க இன்னொருவர் அவருடைய எழுத்தை மதநிந்தனை என திரித்து போட்டுக்கொடுப்பார். அதனூடாக தான் மேலேறி வரமுயல்வார். பெரும்பாலும் முக்கியமான கலைஞர்களுக்கு எதிராக அரைகுறைகள் இதைச்செய்துகொண்டே இருப்பார்கள். ஆனால் ஆச்சரியமாக மிகமுக்கியமான படைப்பாளிகளும் பிறருக்கு இதைச் செய்திருக்கிறார்கள். அதை தமிழ்ச் சூழலைவைத்து நன்றாகவே புரிந்துகொள்ளமுடிந்தது.


“சோவியத் ருஷ்யாவின் அடக்குமுறையிலிருந்து விடுதலை கிடைத்தது உங்கள் நாட்டுக்கு என்றல்லவா சொல்லப்படுகிறது?” என்றேன். “ருஷ்யாவுக்குத்தான் உண்மையில் விடுதலை கிடைத்தது. ஏனென்றால் அது ஐரோப்பாவின் பகுதி. அங்குள்ள மக்களுக்கும் ஐரோப்பியப் பண்பாடு உண்டு. அங்கே முன்னரே மதத்தை அரசியலில் இருந்து விலக்கிவிட்டிருந்தனர். பிற நாடுகள் எல்லாம் சோவியத் ருஷ்யாவுக்குள் சென்றபோது இருந்ததைவிட மோசமான ஆட்சிக்குள்தான் சென்றனர். பலநாடுகளில் மதத்தலைமையே அரசியலை ஆள்கிறது.


reli


“மதவாதம் எதுவானாலும் மிகமிகக் குறுகியதாகவும், வளர்ந்து விரிவதற்கு எதிரானதுமாகவே இருக்கும்” என்றார் துர்க்மேனிஸ்தான் நாடகாசிரியர்.முரளி மார்க்ஸியர் ஆகையால். மிகுந்த உற்சாகத்துடன் அதை அன்று மேடையில் சொல்லப்போவதாகச் சொன்னார். நால்வருமே பதறிஎழுந்து “அய்யோ’ என கூச்சலிட்டுவிட்டனர். “அதைவிட நீங்கள் எங்களை நேரடியாகவே சிறைக்கு அனுப்பிவிடலாம். எங்களைப்பற்றி ஒரு வார்த்தைகூட எழுதவேண்டாம். இந்த சிறிய பயணத்தில்தான் நாங்கள் பேசிக்கொள்கிறோம். எவரும் கேட்கமாட்டார்கள் என்பதால்தான் பேசமுடிகிறது” என்றார்.


இந்தியாவில் நாம் அரசின் ஒடுக்குமுறையை, கருத்தியல் கெடுபிடியைச் சந்தித்ததே இல்லை என்பதே உண்மை. ஆகவே இங்கே நம்மைப் போராளிகளாகக் காட்டிக்கொள்ளும் பொருட்டு ஒடுக்குமுறை என்றெல்லாம் கூவுகிறோம். இந்தியாவின் மாபெரும் ஜனநாயகம் கருத்துப் பரிமாற்றத்தை ஒப்புகிறது, அதன் அடிப்படை அலகாக உள்ள எளிய இந்தியன் எண்ணங்களின் வளர்ச்சியில் நம்பிக்கை கொண்டவன் என்பதே அதற்குக் காரணம்.


ஒத்திசைவு ராமசாமியின் இந்தக்குறிப்பு மீண்டும் அந்நினைவுகளுக்குக் கொண்டுசென்றது. கருத்துரிமையை அடிப்படை உரிமையாக வைத்த தேசமுன்னோடிகளை நினைத்துக்கொண்டேன். வேறு எதன்பொருட்டும் அதை இழக்கலாகாது. பட்டினி கிடந்தாலும்கூட.


தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 28, 2017 11:35

நீலஜாடி -கடிதம்

blue jar


ஜெ வணக்கம்


நீல ஜாடி கதை படித்தேன். கச்சிதமான மொழியாக்கம். முன்னரே தெரிந்து இருந்தால், படித்து, அருண்மொழி மேடம் நேரில் பார்த்த பொழுது வாழ்த்து சொல்லியிருக்கலாம். வாழ்த்துக்களை தெரிவித்து விடுங்கள்.


தஞ்சை சந்திப்பு போன்ற தீவிர இலக்கிய கூட்டத்தில் கலந்துக் கொள்ள ஆசை. அமைகிறதா என்று பார்ப்போம்.


இரண்டு வாரம் முன்பு தான் தான், சிறு கதை என்பது, என்று பதிவிட்டீர்கள்.


//வளர்ச்சிப்போக்கில் அது இன்று சிறிய எல்லைக்குள் ஆழமான உருவக உலகை உருவாக்கும் கலை என மாறியிருக்கிறது. வெறும் அன்றாடவாழ்க்கையின் ஒரு படச்சட்டகம் இன்று கலையென ஆவதில்லை//


1942ல் எழுதப்பட்ட கதை. அன்றே நீங்கள் மேலே குறிபிட்ட வடிவத்தை அடைந்து விட்டது.


ஒன்பது நாட்கள், அந்த மாலுமியுடன் தனித்து பயணம் செய்திருக்கிறாள். அந்த ஒன்பது நாட்களின் நிகழ்ந்தது, வாசக கற்பனைக்கே விட்டு விடுகிறார் எழுத்தாளர்.


அந்த ஒன்பது நாட்களின் நினைவை மீட்க, உலகமெங்கும் சுற்றுகிறாள், ஒரு நீல ஜாடியை வாங்க. ஜாடியை விட, அந்த நீல நிறம் தான் முக்கியம். தன் தந்தையிடம் பூடமாக கூறுகிறாள்


//Surely there must be some of it left from the time when all the world was blue.// .


உலகமே நீலமாக இருந்த காலத்தில் இருந்து கண்டிப்பாக கொஞ்சமாவது மிச்சம் இருக்கும் என்கிறாள்.அந்த ஒன்பது நாட்களில் வானிலும் நீலம், நீரிலும் நீலம், அனைத்திலும் நீலம். அவள் வாழ்ந்த அந்த நீலத்தை தேடுகிறாள்.கதையின் முடிவில் அவள் தேடிய நீலத்தை கண்டு அடைகிறாள். தான் இறந்தவுடன் அந்த நீலத்தின் நடுவே தன் இதயத்தை வைக்க கோருகிறாள்.


சொல்லமால் காற்றில் விட்ட காதல் அல்லாமல், இதுவரை பூடமாக இருந்த அவள் காதலை சொல்லும் தருணம். எழுத்தாளர் மிக அருமையாக வடித்திருக்கிறார். காதலின் உச்சத்தில் இருக்கும் உணர்ச்சிகளை கச்சிதமாக எழுதியிருக்கிறார்


//in the midst of the blue world my heart will be innocent and free, and will beat gently, like a wake that sings, ..//


அந்த நீலத்தின் நடுவிலே, எனது இதயம், களங்கமற்றும், கட்டற்ற விடுதலையோடும், மிதமான துடிப்போடும், (படகின்) பின்னால் போகும் அலையின் பாடல் போலும்…


இதற்கு எடுத்த வரிதான் எனக்கு மிகவும் முக்கியமான வரியாக பட்டது. முதன் முறையாக ஹெலனா நேரடியாக அந்த ஒன்பது நாட்களை குறிப்பிடும் தருணம். நேரடியாக தன் காதலை வெளி படுத்தும் தருணம்.


//like the drops that fall from an oar blade//


துடுப்பின் முடிவில் உள்ள கத்தியில் இருந்து சிதறும் நீரின் துளியை போல.


அந்த ஒன்பது நாட்களும், அந்த துடுப்பில் இருந்து சிதுறும் நீரின் துளிகளை எத்தனை மணி நேரம் பார்த்திருப்பாள். ஒரு சீரான வேகத்தில், தாலாட்டு போன்று, உலகத்தில் எல்லாவற்றையும் வென்று எடுத்து விடலாம், நீயும் நானும் இருந்தால், என்று மிதமான திமிரோடு, முற்றிலும் தூய்மையான, நிறங்களற்ற நீர் துளி வழியாக அவளை சுற்றி இருந்த நீலத்தை பார்த்து, பார்த்து, மனதில் சூடு போட்ட தடயம் போன்று அந்த நிறம் பதிந்திருக்கும்.


அந்த நீலத்தை கண்டவுடன் நிறைவுடன் மறைகிறாள்.


படிக்க வாய்ப்பு ஏற்படுத்தி தந்த உங்கள் தளத்துக்கும். இந்த கதைக்கு விமர்சனம் எழுதிய சுசித்ராவுக்கும் நன்றி.


சதிஷ்குமார் கணேசன்


***


தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 28, 2017 11:32

செய்திக்கட்டுரை -கடிதம்

news


 


ஜெயமோகன் அவர்களுக்கு அன்பு வணக்கம்.


“நமது செய்திக் கட்டுரைகள்” குறித்துத் தங்களின் கட்டுரையைப் படித்தேன். அந்தக் கட்டுரையே சுவைமிக்கதாகவும் தெளிவுமிக்கதாகவும் இருக்கிறது. மேலும் இதழாளர்களுக்குப் பயன்படும் பாடமாகவும் வழிகாட்டியாகவும் இருக்கிறது.


பண்படுத்தவும், சரிபடுத்தவும், மேன்மைபடுத்தவும், தரமுயர்த்தவும்தாம் தாங்கள் கருத்துகளைச் சொல்கிறீர்கள். உரியவர்கள் அவற்றைக் குற்றச்சாட்டுகளாகக் கருதிக்கொண்டு, உங்கள் மீது வெறுப்புமிழ்வது வாடிக்கையாகி விட்டது.


“இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்


கெடுப்பார் இலானும் கெடும்” குறளை அவர்கள் உணர்வதில்லை.


நல்ல மனதுடன்தான் தாங்கள் குறைகளைச் சுட்டிக்காட்டுகிறீர்கள். எவரையும் காயப்படுத்தும் நோக்கமில்லை என்பதை நானறிகிறேன். உரியவர்களைச் சரிவிலிருந்து மீட்டுக் கைதூக்கிவிடும் பண்புதான் அது. அதற்கான தகுதி உங்களுக்கு இருக்கிறது. ஆழ்ந்தும் உயர்ந்தும் பரந்தும் உள்ள உங்கள் வாசிப்பறிவு இனி எவரும் தொடமுடியாத வியப்பின் உச்சம்தான். அதனால்தான் இதுபோன்ற நெறிபடுத்தல்களை வகுத்து வழிகாட்ட முடிகிறது.


இப்படி எழுதுவதெல்லாம் சரியல்ல என்று சொல்வது பொத்தாம் பொதுவானவை. அதை எப்படி எழுத வேண்டும் என்று எடுத்துக் காட்டுகளுடன் புரிய வைப்பதுதான் வழிகாட்டும் முறை. நல்ல மனம்தான் எப்போதும் வழிகாட்டி மரமாக இருக்கும்.


இந்த ஒரு கட்டுரையையே இதழியல் கல்லூரியின் மிக முக்கியமான பாடமாக இருக்கத் தகுதி வாய்ந்தது.


“சென்னை ராயப்பேட்டையில் சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த தமிழறிஞரான திரு.வி.கல்யாணசுந்தரனார்  கூவம் ஆற்றில் தினமும் குளித்து சிவபூசை செய்வது வழக்கம்” – இது இதழியலுக்குரிய ஈர்ப்புள்ள தொடக்கம். என்ற எடுத்துக்காட்டு மிகவும் சிறப்பானது.


அடடா கூவம் ஆற்றில் குளித்தார்களா என நினைக்கும் போது, அதுவும் தமிழறிஞர் ஒருவர் குளித்து சிவபூசை செய்துள்ளார் என வரலாற்றுக் குறிப்போடு தொடங்கும்போது… ஈர்ப்பும் வியப்பும் நம்மை மேலும் படிக்கத் தூண்டுகின்றன.


”ஒரு நிருபரை அசோகமித்திரன் இல்லத்திற்கு அனுப்பி அங்கே அவருடைய இறுதிப்பயணம் நிகழ்ந்ததைச் சித்தரித்து எழுதுவது.ஏதோ ஒருவகையில் அது வரலாற்றுத்தருணம். பல ஆண்டுகளுக்கு பின்னரும்கூட அதற்கு அபாரமான ஆவணமதிப்பு உண்டு. உதாரணமாக புதுமைப்பித்தன் அல்லது தி.ஜானகிராமனின் இறுதிப்பயணத்தின் ஒரு சித்தரிப்பு இன்று எப்படி வாசிக்கப்படும் என எண்ணிப்பாருங்கள். [அங்கு சென்ற நண்பர்கள் எவராவது எழுதியனுப்பினால் நம் இணையதளத்திலாவது பதிவுசெய்து வைக்கலாம்]” என்றும் எழுதி உள்ளீர்கள். சரிதான். தங்களைப்போல் மலையாளத்திலும் தமிழிலும் எழுதிவந்த இளஞ்சேரன் என்பவர், அண்ணாவின் இறுதி நாட்களைப் பதிவு செய்துள்ளது நினைவுக்கு வருகிறது.


தினமணி, தி இந்து தமிழ்நாளிதழ் ஆகியவை மட்டுமே சொல்லத்தகுந்த தரமான நாளிதழ்களாக தமிழில் வருகின்றன. செய்திகளுக்காக தி இந்து தமிழ் நாளிதழை யாரும் வாங்குவதில்லை. அதில்வரும் செய்திக்கட்டுரைகளாலும் பிற கட்டுரைகளாலும்தாம் வாசகர்கள் பெருகி உள்ளனர். அதன் ஆசிரியர் குழுவில் ஆற்றல் வாய்ந்த ஆர்வம் மிக்க இளைஞர்கள் பலர் உள்ளனர். உங்களைப் போன்றவர்களின் ஆலோசனைகளை அவர்கள் ஏற்றுச் செயல்படுத்துவார்கள் என உறுதியாக நம்புகிறேன். பிற நாளிதழ்களுக்கு நீங்கள் அறிவுரை சொல்லவில்லை. தி இந்து நாளிதழ் தரத்தின் மீதும் ஆசிரியர் குழுவின் மீதும் தாங்கள் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் வைத்திருப்பதால்தான் இந்த வழிகாட்டுதல்களை வரிசைப்படுத்தி உள்ளீர்கள்.


விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு நேர்மையோடு கட்டுரையை எழுதுவதுதான் முதல் விதியாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். தங்கள் நெறியுறுத்தல்களுக்கு மேலும் மெருகூட்ட இன்னும் சில நுட்ப விதிகளை அனுபவமுள்ள இதழாளர்கள் வகுக்கலாம்.


கடைசியாக ஒன்று…


செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதிநல்கையுடன் நடந்த பயிலரங்குகளுக்குச் சென்றுள்ளேன். முந்தைய நூற்றாண்டுகளில் பலர்கூறிப் புளித்துப்போன, சலித்துப்போன கருத்துகளையே நகலெடுத்துப் பேசுகிறார்கள். சிலர் அதுகூடப் பேசாமல் சொதப்பி விட்டு, அறிஞர் தாமென மிதப்பில் திளைக்கிறார்கள். முனைவர் பட்டமும் பல்லாயிரம் சம்பளமும் பெற்றுள்ள அவர்களோடு ஒப்பிடும் போது, நம் இதழாளர்களும் கட்டுரையாளர்களும் உயர்ந்திருக்கிறார்கள்.


அன்புடன்


கோ. மன்றவாணன்


***


அன்புள்ள மன்றவாணன் அவர்களுக்கு,


அப்படியெல்லாம் எவரும் இதையெல்லாம் நல்லநோக்குடன் எடுத்துக்கொள்ளமாட்டார்கள் என்பதே என் அனுபவம். இவ்வகையான எதிர்க்கருத்துக்கள் காழ்ப்புடனும் கசப்புடனும் மட்டுமே பார்க்கப்படும். பலவகையான எதிரிகளையே உருவாக்கும். ஆனால் வாசகர் தரப்பில் ஓர் எதிர்பார்ப்பு உருவாகும். அது முக்கியமானது. அத்துடன் அடுத்த தலைமுறை எழுத்தாளர்களுக்கு அது உதவக்கூடும். எழுதப்பட்டு இருக்கட்டுமே என எண்ணினேன், அவ்வளவுதான்


ஜெ


***


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 28, 2017 11:32

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–57

57. குருதித்தழல்


ஓநாய் வயிற்றிலிருந்து மீண்டு வந்த கசன் ஆளுமையில் மிக நுட்பமான மாறுதல் இருப்பதை தேவயானி உணர்ந்தாள். அது என்னவென்று அவளால் உய்த்துணரக்கூடவில்லை. அவன் முகத்தின் மாறாச்சிரிப்பும், அசைவுகள் அனைத்திலும் இளமையும், குரலின் துள்ளலும் அவ்வாறேதான் இருந்தன. ஆனால் ஒவ்வொன்றிலும் பிறிதொன்று வந்து சேர்ந்துவிட்டிருந்தது. அது ஓர் ஓநாய்த்தன்மை என்று எப்போதோ ஒருமுறை மிக இயல்பாக அவள் உள்ளம் சொல்லாக்கிக்கொண்டது. உடனே என்ன இது என்று அவளே திகைத்தாள். தன் உள்ளம் கொள்ளும் பொய்த்தோற்றம் அது என்று சொல்லிக்கொண்டாள். ஆனால் அச்சொல்லையே அவள் மீண்டும் மீண்டும் சென்றடைந்துகொண்டிருந்தாள்.


ஓநாயின் நோக்கல்ல, உடலசைவல்ல, ஓநாயென எண்ணுகையில் எழும் எதுவுமே அல்ல, ஆனால் ஓநாயென்று உளமுணரும் ஒன்று அவனிடம் குடியேறிவிட்டிருந்தது. அவன் உண்ணுகையில் அப்பால் நின்று அவள் நோக்கினாள், ஓநாயின் பசி அவனில் உள்ளதா என்று. நிலவில் அவன் அமர்ந்திருக்கையில் தன் குடிலில் நின்று தூணில் மறைந்து நின்று நோக்கினாள், அது ஒநாயின் தனிமையா என.  என்ன செய்கிறோம், பித்தியாகிவிட்டோமா என்று தனக்குத் தானே கேட்டுக்கொண்டாள். இல்லை இல்லை என நூறுமுறை மறுத்துக்கொண்டாள். ஆனால் அவன் திரும்பும் ஓர் அசைவில் ஓரவிழியின் மின்னில் ஓநாய் எழுந்து மறைந்தது.


இறந்தவன் மீள்வதென்பது இயல்பானதல்ல. மானுடம் அறியாத வேறெங்கோ சென்று மீண்டிருக்கிறான். அவ்வுலகத்தின் இருளோ கெடுமணமோ ஒன்று அவனில் படிந்திருக்கிறது. சென்றவர்கள் மீளலாகாதென்றே பிரம்மத்தின் பெருநெறியைக் கடந்து வந்திருக்கிறான். ஆனால் அதுவும் பிரம்மம் அளித்த நுண்சொல்லால்தானே என எண்ணம் பகடைபுரண்டது. வழக்கத்திற்கு மாறான ஒன்று நிகழ்ந்ததனால் உருவாகும் ஐயமா இது? சற்றே வண்ணம் மாறிய உணவைக்கண்டு உருவாகும் ஒவ்வாமை போலவா? எனக்குள் நானே இதை தொட்டுத் தொட்டு வளர்த்துக்கொள்கிறேனா?


அந்த ஐயம் உருவானதால் மேலும் வெறியுடன் அவள் அவன் மீது ஒட்டிக்கொண்டாள். மேலும் மேலும் தன் அன்பை அவன் மேல் குவித்தாள். அவன் நினைவன்றி மறு உள்ளமின்றி இரவும்பகலும் இருந்தாள். ஓரிரு நாட்களில் தன் உள்ளத்தை அது வெறும் எண்ணமயக்கமே என்று நம்பவைக்க அவளால் முடிந்தது. ஆனால் ஒருமுறை வகுப்பு முடிந்து அவன் எழுந்துபோனதும் சுக்ரர் கிருதரிடம் “ஓநாய்க்குட்டியென மாறிவிட்டிருக்கிறான். ஒருதுளிக் குருதியைக்கூட நூறுமுறை நக்கும் அதன் பசியும் சுவையும் அவனுக்கு சொல்லில் அமைந்துள்ளது” என்றார். அவள் உள்ளம் நடுங்கிவிட்டது. கிருதர் “ஆம், இப்போது ஒவ்வொரு சொல்லிலும் புதிய வாயிலொன்றை திறக்க முடிகிறது அவனால்” என்றார்.


அவள்  தலைகுனிந்து தன் கைநகங்களை பார்த்துக்கொண்டிருந்தாள். “இத்தனை விரைவில் கற்றால் இவன் கற்பதற்கு இனி இப்புவியில் ஏதும் எஞ்சாது” என்று சுக்ரர் சொன்னார். “எது மையமோ அங்கே சென்று நிற்பான்” என்றார் கிருதர். அவள் ஒன்றும் சொல்லாமல் சுக்ரரின் காலைத்தொட்டு தலையில் சூடியபடி எழுந்து வெளியே சென்றாள். அவர் அவளை நோக்கிவிட்டு புருவம்தூக்கி கிருதரை நோக்கினார். கிருதர் “அவளிடம் மெல்லிய அமைதியின்மை ஒன்று குடியேறியுள்ளது, ஆசிரியரே” என்றார். “அவளிடமா? அவன் மேல் பித்தாக அல்லவா அலைகிறாள்?” என்றார். “ஆம் கட்டற்ற பெரும் காதல்மயக்கில் இருக்கிறாள். அவளுள் அவனன்றி வேறு எதுவுமே இல்லை என்பதை விழிகள் காட்டுகின்றன. ஆனால் அடியாழத்தில் ஓர் அமைதியின்மை இருக்கிறது.”


சுக்ரரால் அவர் சொல்வதை புரிந்துகொள்ள முடியவில்லை. “அவள் ஐயம் கொண்டிருக்கலாம்” என்றார் கிருதர். “என்ன ஐயம்?” என்று சுக்ரர் கேட்க கிருதர் “பெருங்காதல் அதன் பெருவிசையாலேயே இயல்பற்ற ஒன்றாக ஆகிவிடுகிறது. இயல்பற்ற ஒன்று எவ்வளவு காலம் நீடிக்கும் என்ற ஐயம் அதற்கே எழுகிறது. விரைந்தெழுவது நுரை. மலைப்பாறைகளின் உறுதி அதற்கில்லை என்பதை அதுவே அறியும்” என்றார்.


“ஏன் ஒரு நுரையென இருக்கவேண்டும் அது? உலகியல் உணர்வுகள் அனைத்தும் குறுகியவை, எனவே நிலையற்றவை என்று நாம் கற்றிருக்கிறோம். ஆனால் எப்போதும் அது அவ்வண்ணமே ஆகவேண்டும் என்பதில்லை. நுரையென எழுந்து பாறையென்றாகி முடிவிலிவரை நீடிக்கும் ஒரு பெருங்காதல் இம்மண்ணில் நிகழக்கூடாதா என்ன?” என்றபின் சுக்ரர் நகைத்து “பிரம்மனுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்து பார்ப்போம்” என்றார். கிருதர் மெல்ல புன்னகைத்தார்.




tigerகசனிலிருந்த மாற்றத்தை சக்ரனும் உணர்ந்தான். காட்டில் அவனுடன் உரையாடியபடி தேன் சேகரிக்கச் செல்லும்போது அவன் மணத்தை அறிந்ததுமே மிகத்தொலைவில் ஓநாய்கள் ஊளையிடத்தொடங்குவதை அவன் கேட்டான். ஓரே ஒருமுறை தன்னியல்பாக அவன் முன் தோன்றிய ஓநாய் ஒன்று வேங்கைமுன் வந்துவிட்டதுபோல அச்சத்தில் உறைந்து பிடரிமயிர் சிலிர்க்க முன்னங்கால் தூக்கி நடுங்கி நின்றது. பின்னர் உயிர்கொண்டு தீ பட்டதுபோல துடித்து துள்ளித் தாவி புதர்களில் விழுந்து புரண்டெழுந்து ஓடி மறைந்தது. நெடுந்தொலைவிற்கு அதன் துயர்மிகுந்த ஊளை கேட்டுக்கொண்டிருந்தது. அதைக் கேட்டு மலைமடிப்புகளிலும் மரப்பொந்துகளிலுமிருந்து நூற்றுக்கணக்கான ஓநாய்கள் ஓலமிடத்தொடங்கின.


அன்று மாலை சக்ரன் தன் தோழரிடம் சொன்னான் “அவன் ஒநாய்களை கிழித்தெழுந்ததை அவை அறியும். நினைவாக அல்ல, மணமாக இருக்கலாம், அல்லது பிறிதொரு புலனுணர்வாக இருக்கலாம். ஆனால் ஓநாய்கள் அஞ்சும் ஒன்று அவனில் குடியேறியுள்ளது.  ஒநாய்கள் அனைத்திலும் வாழும் ஒன்று. பேருருவம் என்று அல்லது செறிவு என அதை சொல்லாக்குவேன். அது என்னையும் அச்சுறுத்துகிறது.” “நமக்கு இன்னும் நெடுநாள் வாய்ப்பில்லை” என்றான் சூக்தன். “மீண்டும் அரசரின் ஆணையை சுகர்ணர் அளித்திருக்கிறார். இன்னும் அவன் கொல்லப்படவில்லை என்ற செய்தியை சொன்னபோது மீண்டும் ஒருமுறை இச்செய்தியைக் கேட்க அரசர் விரும்பமாட்டார் என்றார். அவ்விழிகள் என்னை சிறுமையுறச் செய்தன.”


“ஒருமுறை பிழைத்த முயற்சி என்பது மீண்டும் அதை பழுதறச்செய்வதற்கான வாய்ப்பென்று கொள்வோம். இம்முறை ஒவ்வொன்றையும் எண்ணி இயற்றுவோம். நான் முன்னரே சொன்னதுதான், எரியூட்ட இயலாது. புதைப்பது பயனற்றது. ஓநாய்கள் அவன் உடலை தொடுமென்று தோன்றவில்லை” என்றான் பிரபவன். “மேலும் வெம்மை கொண்ட எரி. அது என்ன?” விறகுப்புரையில் நின்று அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது மிகத் தொலைவில் வேங்கைகளின் ஒலியை சக்ரன் கேட்டான். பின்னர் தனக்குள் என “அவை வெறும் விலங்குகள்” என்றான்.


“எவை?” என்றான் பிரபவன். “அந்த வேங்கைகள். சென்ற முறை அவன் மறைந்துவிட்டதை முன் உணர்ந்து சொன்னவை அவை. ஓர் இரவுப்பொழுது கடந்திருந்தால் அவன் உடல் ஓநாய்களின் வயிறுகளில் எரிந்தழிந்திருக்கும். மீண்டு வந்திருக்கமுடியாது. இம்முறை அவற்றுக்கு அவ்வாய்ப்பை நாம் அளிக்க வேண்டியதில்லை” என்றான். “எப்படி?” என்றான் சூக்தன். “அவனை அவை விரும்புகின்றன. விரும்பியவற்றை அவை உண்ணவும் கூடும்” என்றான் சக்ரன். “குருதி! அவற்றிலிருந்து அவை தப்ப முடியாது. இக்குடிலுக்குள் வந்து இவ்வாறு வளர்ந்து இவை அடைந்த அறிவனைத்தும் இப்பிறவிக்குரியவை. அவற்றின் குருதி யுகங்களின் தொன்மைகொண்டது. அக்குருதி தேடுவது குருதியையே.”


மறுநாள் இரவு கசன் தன் குடிலுக்குள் துயின்றுகொண்டிருக்கையில் ஓசையற்ற காலடிகளுடன் அவர்கள் குடிலை அடைந்தனர். ஒருவன் அகிஃபீனா பொடியிட்ட புகை கொண்ட தூபக்கலத்தை சாளரத்தினூடாக மெல்ல கசனின் துயிலறைக்குள் வைத்தான். மெல்லிய புகை எழுந்து அறையைச் சூழ ஆழ்ந்து அதை உள்ளிழுத்து மூச்சில் கலந்து கொண்டான் கசன். இருமுறை அவன் தும்மியபோது அவர்கள் திடுக்கிட்டு அசையாமல் நின்றனர். அவனுக்கு விழிப்பு வந்துகொண்டே இருந்தாலும் நனைந்த மரவுரி கோழிக்குஞ்சை என துயில் அவனை மூடி அழுத்திக்கொண்டது. மெல்ல உடல் தளர்ந்து ஆழ்துயில் கொள்ளலானான்.


அதன் பிறகு எழுவரும் கதவுப்படலைத் திறந்து உள்ளே சென்று மஞ்சத்தை சூழ்ந்துகொண்டனர். சூக்தன் வெளியே என்ன நடக்கிறது என்று நோக்கி நிற்க சக்ரன் தன் வாளை உருவி கசனின் தலையை வெட்டினான். ஓசையுடன் உருண்டு தலை மரத்தரையில் விழுந்தது. துள்ளி உதைத்துக்கொண்டிருந்த கால்களை பிறிதொருவன் வெட்டினான். விரல் சுருட்டி அதிர்ந்த கைகளை பிறிதொருவன் வெட்டினான்.  எழுவர் ஏழு வாட்களால்  மிக விரைவில் அவனை சிறு சிறு துண்டுகளாக வெட்டினர்.


சக்ரன் வெளியே சென்று திண்ணையில் நின்று நோக்கினான். தேவயானியின் குடில்முன் நாவல்மரத்தடியில்  குருதிமணம் அறிந்து முன்னரே எழுந்து நின்றிருந்த வேங்கைகளில் ஒன்று மெல்ல உறுமியபடி ஓர் அடி எடுத்து வைத்தது. அவன் தாழ்ந்த குரல்கொடுத்து அழைத்தான். அவற்றின் செவிகள் அவ்வோசைக்கேற்ப அசைந்தன. கண்களின் ஒளி மின்னித் தெரிந்தது. “அவை குருதியை அறிந்துவிட்டன” என்றான் சக்ரன். “ஆம், அவை வரட்டும்” என்று சாம்பவன் சொன்னான்.


முதல் வேங்கை மூக்கை நீட்டியபடி இருவிழிச்சுடர்களாக மெல்ல காலெடுத்து வைத்து அணுகி வந்தது. அதைத் தொடர்ந்து பிற இரு வேங்கைகளும் இரு வெண்ணிறநிழல்கள் போல வந்தன. “அவற்றை இவ்வறைக்குள் கொண்டு வா!” என்றான் சக்ரன். ஒருவன் முற்றத்தில் இறங்கி சிறு கல் ஒன்றை எடுத்து முதலில் வந்த வேங்கையின் மேல் எறிந்தான். கல் அப்பால் விழுந்தாலும் விதிர்த்து உடலொடுக்கிப் பதுங்கிய மூன்று வேங்கைகளும் உறுமலுடன்  பாய்ந்து அவனை நோக்கி வந்தன. அவன் ஓடி கசன் படுத்திருந்த அறைக்குள் நுழைந்தான். வேங்கைகள் வந்து திண்ணையிலேறி குருதி மணத்தில் கசனை உணர்ந்து திகைத்து நின்றன.


“சாளரத்தினூடாக வெளியேறுங்கள்!” என்று மெல்லிய குரலில் ஆணையிட்டான் சக்ரன். அவர்களனைவரும் வெளியேற அவன் மட்டும் அங்கே நின்றான். முதல் வேங்கை தலைதாழ்த்தி மெல்ல உறுமியது. இன்னொன்று முகம் சுளிக்க வாய்திறந்து உள்வளைந்து நுனி எழுந்த நீள்நாக்கு பதைக்க அப்படியே வயிறு பதித்து படுத்தது. இருவேங்கைகளுக்கு இடையே தன்னை நுழைத்து மூன்றாவது வேங்கை எட்டிப்பார்த்தது. சக்ரன் அவற்றின் கண்களைப்பார்த்து அசையாமல் நிண்றான். பின்னர் குனிந்து தன் அருகே கிடந்த கசனின் உடல் துண்டுகளில் ஒன்றை எடுத்து அவற்றை நோக்கி வீசினான்.


தங்கள் முன் வந்து விழுந்த ஊன் துண்டை மூன்றுவேங்கைகளுமே விலாவும் தோளும் தோல்விதிர்க்க உற்றுப் பார்த்தன. அவற்றின் தோள்களுக்குள் கால் எலும்புகள் துழாவி அசைந்தன. வால்கள் மேலே தூக்கப்பட்டு மெல்ல  சுழன்றன. முதல்வேங்கை மேலுமொரு அடிவைத்து நாக்கை நீட்டி கீழே சொட்டிக்கிடந்த குருதித்துளி ஒன்றை நக்கியது. மூன்று வேங்கைகளும் ஒரே குரலில் உறுமத்தொடங்கின. அரங்களை உரசிக்கொள்வதுபோல. பனையோலை இழுபடுவதுபோல. அவை பிறந்த கணம் முதல் வாழ்ந்த மானுடச்சூழலை முற்றிலும் உதறி கான்விலங்குகளாக மாறுவதை காணமுடிந்தது. அவை சேற்றில் தவளை விழுவதுபோன்ற ஒலியுடன் சப்பு கொட்டின.


முதல் வேங்கை பதுங்கி மேலுமொரு காலடி எடுத்து வைத்து  அந்த ஊன் துண்டை முகர்ந்தது. அதன் மேல் படிந்த குருதியை தழல்போன்ற நாவால் நக்கியது. பின்னர் காதுகளை விரித்து அதை நோக்கி உடல் சிலிர்த்துக்கொண்டே இருக்க அசையாமல் நின்றது. பின்னர் மெல்ல கால்களை நீட்டி வயிற்றை நிலம்பதித்து படுத்தது. முன்னங்காலால் அவ்வூன் துண்டை தட்டி தன்னை நோக்கி கொண்டுவந்தது.  நாக்கை நீட்டி அவ்வூன் துண்டை சுழற்றி எடுத்து கடித்து ஒருமுறை தயங்கியபின் முகத்தை ஒருக்களித்து கடைவாயால் மென்று விழுங்கியது. உறுமியபடி எழுந்து உள்ளே துண்டுகளாகக் கிடந்த கசனின் உடல் நோக்கி வந்தது.


அறைமுழுக்க சிந்திக்கிடந்த குருதியை அது நக்கி உண்ணத்தொடங்கியதும் பிற இரு வேங்கைகளும் எழுந்து உறுமியபடி அறைக்குள் நுழைந்து அவன் உடலைக் கவ்வி உண்ணலாயின. அவை உள்ளே நுழைந்ததுமே பாய்ந்து சாளரத்தினூடாக வெளியேறிய சக்ரன் “கதவுகளை மூடுங்கள். அவை உண்டு முடித்தபின் வந்து திறந்து விடலாம்” என்றபின் மெல்ல வெளியேறி அகன்றான். “ஒருவர் மட்டும் இங்கு நின்று என்ன நிகழ்கிறதென்று சொல்லுங்கள். பிறர் விறகுப்புரையருகே காத்திருப்போம்” என்று ஆணையிட்டான்.


அவர்கள் இருளுக்குள் ஒடுங்கி காத்துநின்றனர். குடிலுக்குள் வேங்கைகளின் உறுமல் கேட்டுக்கொண்டே இருந்தது. அவை கசனின் உடலை உண்கின்றன என்று நோக்கி நின்றவன் கைகளால் குறிப்புணர்த்தினான். இருளில் விலகி நின்றபோது குருதிமணம் மேலும் வீச்சத்துடன் எழுந்தது. அவர்களின் நாவில் எச்சில் ஊறிக்கொண்டே இருந்தது. மாறி மாறி உமிழ்ந்தனர். உண்டு முடித்துவிட்டன என்று அவன் கைகாட்டியதும் சக்ரனும் பிறரும் அணுகி சாளரத்தினூடாக நோக்கினர். அங்கு கசனின் உடலில் வெள்ளெலும்புகளும் முடிநீண்ட தலையும் மட்டுமே எஞ்சியிருந்தன. அவன் காலை கடித்துமென்றுகொண்டிருந்த வேங்கை கைகளால் அதைப்பற்றியபடி தலைதூக்கி அவர்களை நோக்கி பன்றிபோல மெல்ல உறுமியது.


செய்கையால் கதவை திறவுங்கள் என்றான் சக்ரன். சூக்தன் கதவைத் திறந்ததும் அவ்வசைவை நோக்கிய முதல் வேங்கை எழுந்து நீண்ட நாக்கால் தன் பக்கவாயை நக்கியபடி நிறைந்த வயிறு மெல்ல தொங்கிக் குலுங்க குருதி ஒட்டிய கால்களை தூக்கி வைத்து வெளியேறியது. திண்ணையில் அமர்ந்து தன் கால்களை  புரட்டி நோக்கி நக்கியது. பிற இரு வேங்கைகளும் வெளியே வந்து அதனருகே படுத்து தங்கள் கால்களை நக்கின. புரண்டு எழுந்து அப்பால் எழுந்த ஓசை ஒன்றை கூர்ந்து உறுமிவிட்டு மீண்டும் படுத்து கால்களை நக்கியது ஒன்று.


அறைக்குள் இருந்த வெள்ளெலும்புகளை சிறிய கூடையொன்றில் பொறுக்கிச் சேர்க்கும்படி சக்ரன் தாழ்ந்த குரலில் சொன்னான்.  சாளரம்வழியாக உள்ளே நுழைந்து கசனின் எலும்புகளை கூடையில் சேர்த்துக்கொண்டு வெளியே சென்ற சூக்தனை ஒரு வேங்கை திரும்பிப் பார்த்தது.  வாலைச் சொடுக்கியபடி எழுந்து நின்று அவனை நோக்கி உறுமியது. திண்ணையிலிருந்து தாவி முற்றத்தில் ஒருகணம் தயங்கியபின் அவனை நோக்கி ஓடிவந்தது. “ஓடு” என்று சக்ரன் சொன்னான் சூக்தன் கூடையுடன் விரைந்தோடத்தொடங்கினான்.


முன்னால் வந்த வேங்கை திண்ணையிலிருந்த பிறவேங்கைகளை நோக்கி உறும அவை பாய்ந்து வாலை தூக்கிச் சுழற்றியபடி அவனை துரத்திக்கொண்டு ஓடின. அவன் இடைவழியினூடாக பாய்ந்தோடி காட்டுக்குள் நுழைந்தான். வேங்கைகள் தாவித்துரத்தி மிக விரைவில் அவனை அணுகின. அதற்குள் அவ்வெலும்புகளை காட்டுக்குள் வீசிவிட்டு பாய்ந்து மரமொன்றில் ஏறிக்கொண்டான். புதர்களைத் தாவி இருள்செறிந்த காட்டிற்குள் சென்ற வேங்கைகள் இலையசைவுகளுக்குள் மூழ்கி மறைந்தன. சருகுகளுக்குள் அவ்வெலும்புகளை தேடி கண்டடைந்து கவ்விக்கொண்டு வந்து தரையிலிட்டு இருகால்களாலும் பற்றியபடி நக்கி உடைத்து கடைவாயால் மென்று உண்ணத்தொடங்கின.


“அக்குடிலை கொளுத்திவிடுங்கள்” என்று சக்ரன் ஆணையிட்டான். உள்ளே புகைந்து கொண்டிருந்த தூபத்திலிருந்து குடிலின் ஓலைக்கூரை வரை பற்றி ஏறும்படியாக ஒரு பட்டுச்சால்வையை நீட்டி வைத்துவிட்டு அவர்கள் விலகிச்சென்றனர். விறகுப்புரை அருகே நின்று பார்த்தபோது சால்வை மெல்ல பற்றிக்கொண்டு தழல் மேலேறுவது தெரிந்தது. செந்நிறமான வண்ணத்துப்பூச்சிபோல் சிறகு அசைய மேலெழுந்து கூரையில் தொற்றிக்கொண்டது. கூரையில் ஈச்சையோலைச்சருகுகள் சரசரவென்னும் ஒலியுடன் நெருப்பை வாங்கிக்கொண்டன.


நெருப்பு நன்றாக கூரைமேல் எழுந்ததும் சக்ரன் “நெருப்பு! நெருப்பெழுகிறது! ஓடிவாருங்கள்!” என்று கூச்சலிட்டபடி அதை நோக்கி ஓடினான். “ஓடிவருக! தீ! தீ!” என்று கூவியபடி பிறரும் அவனுடன் இணைந்துகொண்டார்கள். அதற்குள் வெவ்வேறு குடிசைகளிலிருந்து இளைஞர்களும் முனிவர்களும் வெளியே வந்து கசனின் குடில் தீ பற்றி எரிவதை பார்த்தனர். அருகே ஓடிவந்து என்ன செய்வதென்று தெரியாமல் அலைமோதி நாற்புறமும் மணலை அள்ளி அதன் மேல் வீசினர். சக்ரனும் பிறரும் மரக்குடுவைகளுடன் சிற்றோடைக்குச் சென்று நீரை அள்ளிக்கொண்டு வந்து அக்குடில் மேல் வீசினர்.


ஆனால் விரைவிலேயே கூரை எரிந்து மூங்கில் உத்தரங்கள் கரியாகி முனகி உடைந்து முறிவோசையுடன் சரிந்து குடிலுக்குள் விழுந்தது. சுவர்களும் மூங்கில்தூண்களும் பற்றிக்கொள்ள மொத்தக் கூரையும் பற்றிக்கொண்டது. “பிற குடில்களின் கூரைகளில் நீர் விடுங்கள். தீ பரவாமலிருக்கட்டும்… இனி இக்குடிலை மீட்கமுடியாது” என்று சக்ரன் ஆணையிட்டான். கசனின் குடிலைச் சுற்றியிருந்த குடில்கள் அனைத்தின் கூரைகளையும் நனைத்தனர். அனல் பற்றி எரிந்த கூரைகளின் முளைகள் வெடிக்க சிம்புகள் தழல் துண்டுகளாகப்பறந்து வந்து அக்கூரைகளில் விழுந்து ஈரத்தில் வண்டுகள் போல் ஒலியெழுப்பி நனைந்து அணைந்தன.


“அருகில் நெருங்க வேண்டாம்… மூங்கில் தெறிக்கிறது” என்று சத்வர் கூவினார். அனல் மூங்கிலை நொறுக்கி உண்ணும் ஒலி கேட்டது.  சுக்ரரும் கிருதரும் அவர்கள் குடில்களிலிருந்து எழுந்து வந்தனர். சக்ரன் அவர்களை நோக்கி சென்று “உள்ளே இளமுனிவர் இல்லை, ஆசிரியரே. எங்கு சென்றார் என்று தெரியவில்லை. வெறும் குடில்தான் எரிந்தது” என்றான். “ஆம், அவன் உள்ளே இருக்க வாய்ப்பில்லை” என்று தாடியைத் தடவியபடி சுக்ரர் சொன்னார். தேவயானி எழுந்துவந்து எரியும் குடிலை நோக்கிக்கொண்டிருந்தாள். சக்ரன் அவளிடம் “அனற்புகையின் மணம் பெற்று எழுந்தேன். ஆனால் அதற்குள் கூரை எரியத்தொடங்கிவிட்டது, தேவி” என்றான். “அஞ்சவேண்டாம், கதவு திறந்து கிடந்தது. உள்ளே எவருமில்லை.”


அவள் “தெரிந்தது” என்றாள். “தூபமோ அகல்விளக்கோ விழுந்து எரிந்திருக்கலாம்” என்றான் பிரபவன். “அவர் எங்கு போனார்?” என்று ஒரு பெண் கேட்டாள். “அறியேன். ஆனால் இரவுகளில் அவர் காட்டுக்குள் கிளம்பிச்செல்வதை பலமுறை பார்த்திருக்கிறேன். நாமறியாத சில வழிகள் அவருக்கு இருக்கும் என எண்ணுகிறேன். ஊழ்கமோ விண்ணவர் தொடர்போ” என்றான் சக்ரன். தேவயானி “வேங்கைகள் எங்கே?” என்றாள். அவன் “அவை வழக்கம்போல காட்டுக்குள் வேட்டையாடச் சென்றிருக்கும்” என்றான். “அவை பின்காலையிலேயே வேட்டையாடச்செல்வது வழக்கம்” என்றாள். “அவை விலங்குகள், பசித்திருக்கலாம்” என்றான் பிரபவன். “ஆம்” என்றான் சக்ரன்.


அவள் காட்டை நோக்கியபடி நடந்தாள். அவள் உள்ளம் திடுக்கிட்டுக்கொண்டே இருந்தது. அது ஏன் என்று மீண்டும்மீண்டும் எண்ணிக்கொண்டாள்.  அவன் காட்டுக்குள் செல்வதாக அவள் அறிந்ததே இல்லை. ஆனால் போகலாகாதென்றில்லை. அவன் தனியன், தவத்தோன். அவனுக்கான நுண்வழிகள் பல இருக்கக்கூடும். அவள் ஓர் எண்ணம் எழுந்த விசையால் உடல் உறைய நின்றாள். வேங்கைகளைப் பற்றி கேட்டபோது சக்ரனின் விழிகள் கொண்ட மாறுதலை அவள் உள்ளம் அடையாளம் கண்டுகொண்டிருந்தது. மிக ஆழத்தில் மிகக்கூரிய ஒரு ஊசிமுனை சென்று அந்த ஊசிமுனைப்புள்ளியை தொட்டறிந்திருந்தது.


அவள் தன் தொடை ஒன்று நடுநடுங்கிக்கொண்டிருப்பதை உணர்ந்தாள். அவ்வுணர்வுக்கு ஒரு சொல் அமைந்தால் அதை கடந்துவிடலாமென்று தோன்றியது. மூச்சுக்களை ஊதி ஊதி விட்டுக்கொண்டு நெஞ்சைத் துழாவி “வந்துவிடுவார்” என்றாள். அச்சொல் பொருந்தாமலிருப்பதைக் கண்டு “காட்டுக்குள் இருக்கிறார்” என்றாள். பின்னர் நெற்றிப்பொட்டை அழுத்தியபடி நரம்புகள் மெல்ல அதிர்வதை உணர்ந்தபடி குனிந்தபோது “வேங்கைகள் உடனிருக்கின்றன” என்றது உள்ளம்.


அச்சொல் அவள் உள்ளத்தின் எடையை குறைத்தது. வேங்கைகளுடன் உலவச்சென்றிருக்கலாம். வேட்டைக்குக்கூட சென்றிருக்கலாம். அவை அவனுடன் இருப்பது வரை எவரும் அவனை நெருங்கமுடியாது. அவற்றின் இருள்கடக்கும் விழியும் தொலைவைக்கடக்கும் மோப்பமும் புலன்கள் மட்டுமேயான உள்ளமும் அவனுடன் எப்போதுமிருக்கும். அவனைவிட்டு அவற்றின் சித்தம் ஒருகணமும் விலகியதே இல்லை. அவையே அவனுக்கு காவல்.


அவள் முகத்தசைகள் எளிதாக நீள்மூச்செறிந்தபடி திண்ணையில் அமர்ந்தாள். தொலைவில் காட்டில் காற்று நிகழ்த்திய இருளசைவு. அதைக் கடந்து மூன்று விழியெரிகள் தெரியக்கூடும். அவனுடைய நிழலுருவம் தெளியக்கூடும். அவள் தாடையை கையால் தாங்கியபடி நோக்கிக்கொண்டிருந்தாள். காடு அவளுக்கு இதோ அவன் என ஒவ்வொருகணமும் காட்டி விளையாடிக்கொண்டிருந்தது.


தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–56
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–55
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–54
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–53
வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–52
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–49
வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–51
வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–48
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–14
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 37
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 17
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 13
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 2
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 67
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 89
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 31
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 26
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 25
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 12
‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 2
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 28, 2017 11:30

மலேசியாவில்

பட்டறை


வரும் மேமாதம் இறுதியில் நானும் நாஞ்சில்நாடனும் கலந்துகொள்ளும் இலக்கியப் பட்டறை மலேசியாவில் கொலாலம்பூரில் நிகழவிருக்கிறது. மலேசியநண்பர்கள் கவனத்திற்கு


 


 


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 28, 2017 05:48

March 27, 2017

இந்து முல்லாகள் உருவாக அனுமதிப்போமா?

pranava


 


இன்றைய தி ஹிந்து தமிழ் நாளிதழில் ‘மகாபாரதம் தொடர்பான சர்ச்சைக்கருத்து- நடிகர் கமல்ஹாசனுக்கு எதிராக வழக்கு தொடுக்க முடிவு. மைசூரு பசேவேஸ்வரா மடத்தின் மடாதிபதி பிரணவானந்தா பேட்டி என்னும் செய்தி வந்துள்ளது. கமல்ஹாசன் ஒரு பேட்டியில் மகாபாரதம் பற்றிச் சொன்ன கருத்துக்கு எதிராக அவர் வழக்கு தொடுக்கப்போகிறாராம்.


ஒற்றைவரியில் சொல்லப்போனால் இஸ்லாமிய மதத்தினரின் ‘மதநிந்தனை சட்டம்’ போன்று ஒன்றை இந்துமதத்தில் உருவாக்குவதற்கான முயற்சி இது. சென்ற பலகாலங்களாகவே இது நிகழ்ந்துவருகிறது. இப்போது அரசதிகாரம் கையில் வருந்தோறும் மேலும் வலுப்பெற்று வருகிறது. இது இன்று ஏதோ சில தலைச்சூடு ஆசாமிகளின் விளம்பரவெறி அல்ல. அதிகாரம் கொண்ட அமைப்புகளின் ஒடுக்குமுறை முயற்சி.


இஸ்லாமியநாடுகளில் உள்ள மதநிந்தனைச் சட்டத்தை எதிர்த்து உலகளாவிய அறிவுஜீவிகள் பேசும் குரல் நாள்தோறும் வலுத்துவருகிறது. இஸ்லாமுக்குள்ளேயே முற்போக்குக் குரல்கள் எழுந்துள்ளன. இந்துமதத்திற்குள் அப்படி ஒரு சட்டம் உருவாவதற்கு தத்துவ அடிப்படையில், நெறிகளின் அடிப்படையில் எந்த வழியும் இல்லை. ஆனால் அதை உருவாக்க நினைக்கிறார்கள்.


மதநிந்தனைச் சட்டம் போன்றவற்றின் முக்கியமான பிரச்சினை என்ன? எது மதநிந்தனை என எப்படி முடிவுசெய்வது? அப்படி முடிவுசெய்யும் அதிகாரம் சில அதிகார அமைப்புக்களிடம் அளிக்கப்படும். அல்லது அவர்களே எடுத்துக்கொள்வார்கள். பின்னர் தங்களுக்குப்பிடிக்காத எதையும் மதநிந்தனை என அவர்கள் முத்திரைகுத்தி வேட்டையாடுவார்கள். கருத்துச்சுதந்திரம் என்பதே முழுமையாக ரத்துசெய்யப்படும்.


முதலில் மதநிந்தனை என சொல்லப்படுவது உண்மையிலேயே கடுமையான எதிர்கருத்தாக இருக்கும். ஆனால் அந்தக் கருத்தை ஒடுக்கும் அதிகாரத்தை அவர்களிடம் அளித்தால் நாளடைவில் அது எதற்கும் எதிராகக் கிளம்பும். மைசூரு பசேவேஸ்வரா மடத்தின் ஊழல்களையோ முறைகேடுகளையோ ஒருவர் தட்டிக்கேட்டால் அவர்மேலும் அந்த அதிகாரம் பாயும். அந்த அதிகார அமைப்பு வன்முறையையும் கையில் எடுத்துக்கொண்டால் அவ்வளவுதான், இருண்டகாலம் ஆரம்பமாகிவிடும்.


இந்துமதத்தை அழிக்கும் முயற்சி இது. எதிர்த்து தடுக்கப்பட்டாகவேண்டியது. இது நாத்திகர்களின் பிரச்சினை அல்ல, இந்துமதம் ஒரு மெய்ஞான வழியாக நீடிக்கவேண்டும் என்றும் அது பல்வேறு மதவெறியர்களாலும் மதகுருக்களாலும் அடக்கி ஆளப்படும் அதிகாரக்கட்டமைப்பாக சடங்குமுறையாக நீடிக்கக் கூடாது என்றும் விரும்பும் உண்மையான இந்துக்களின் பிரச்சினை.


அவர்கள் இங்கே இதை தவறவிட்டால் பல்லாயிரமாண்டுக் காலமாக தாங்கள் அடைந்து வந்த மெய்ஞானப்பயணத்துக்கான சுதந்திரத்தை முற்றாக இழப்பார்கள். அவர்களுக்கு சடங்குகளால் மூடப்பட்ட, வாழ்க்கையின் ஒவ்வொரு அணுவும் மதத்தலைமையால் கட்டுப்படுத்தப்படும் ஒரு அமைப்பே வந்துசேரும். ஒருமுறை உருவாகிவிட்டால் அதை கடப்பது பலநூறாண்டுகள் ஆனாலும் சாத்தியமில்லை


kamal


மேம்போக்காகப் பார்த்தால் இந்துக்களிலேயே ஒருசாராருக்கு இதில் பெரிய பிழை இல்லை என்ற எண்ணம் ஏற்படும். இந்து மதநூல்களை எவர் வேண்டுமென்றாலும் என்ன வேண்டுமென்றாலும் சொல்லிவிடலாமா என்ற கேள்வி எழும், இதேபோல இஸ்லாமிய நூல்களைப்பற்றிச் சொல்வார்களா என்பது அடுத்த கேள்வியாக வரும்.


முதல் விஷயம் இந்துமதத்தின் நெறிகளில், அடிப்படைக் கொள்கைகளில் எங்குமே இந்துமதத்தின் நூல்களை நிராகரிக்கக்கூடாது என்று சொல்லப்படவில்லை. ஒட்டுமொத்த இந்துமதத்திற்கும் பொதுவான, மறுக்கமுடியாத, மூலநூல் என்ற ஒன்று இல்லை. சில பிரிவுகள் சிலநூல்களை புனிதமானவையாகக் கருதலாம், இன்னொரு சாராருக்கு அப்படித் தோன்றவேண்டுமென்றில்லை.


இந்துமதத்தின் மெய்ஞானிகளில் எவரை எடுத்துக்கொண்டாலும் அவர் தொன்மையான நூல்களில் ஒருபகுதியை மிகக்கடுமையாக நிராகரித்து வேறுசிலவற்றை முன்வைப்பவராகவே இருப்பார். ராமலிங்க வள்ளலார் திருமுறைகளில் எந்தச்சாரமும் இல்லை என்றார்.


இந்துமதம் பலவகையான உட்பிரிவுகள் கொண்டது. ஒவ்வொரு பிரிவும் இன்னொன்றை கடுமையாக மறுப்பதாகவே இருக்கிறது. வைணவர்களுக்கு சைவநூல்கள் மொத்தமாகவே பொருளற்ற குப்பைகள். இந்த பசவ வீரசைவ மடம் அதிகாரத்தைக் கையிலெடுத்துக்கொண்டு வள்ளலார் மேலும் வைணவர் மேலும் வழக்குதொடுக்கும் என்றால் இந்தியாவில் என்னதான் நிகழும்?


இப்போது இதை அனுமதித்தால் இந்துமதத்திற்குள் ஞானவிவாதமே நிகழமுடியாது. மதவழிபாடுகளால் எந்த அர்த்தமும் இல்லை. ஆலயமும் கழிப்பறையும் ஒன்றுதான் என ஓர் அத்வைதி சொல்லக்கூடும். அவனை உடனே பிடித்து சிறையில் அடைக்க ஒரு கும்பல் கிளம்பும் என்றால் இந்தியா ஒரு மாபெரும் மனநோய் விடுதியாக ஆகிவிடும்


இந்துமதத்திற்குள்ளேயே வலுவான நாத்திகவாதம் உண்டு. சித்தர்மரபுக்குள் ஒருபோக்காக அது இன்றும் வாழ்கிறது. இந்து ஆன்மிகம் என எதையெல்லாம் சொல்கிறோமோ அதையெல்லாம் முழுமையாக, கடுமையாக நிராகரித்து ஒரு யோகி இங்கே ஞானச்சொல் அளிக்கக்கூடும். அவரை இந்த நாலாந்தர மதவெறியர்களின் அதிகாரத்திற்கு விட்டுக் கொடுக்கப்போகிறோமா என்ன?


மேலும் இவ்வாறு வழக்குதொடுக்கும் அதிகாரம் எவருக்கு உள்ளது? இந்துமதத்திற்கு என ஒரு தலைமைப்பீடமோ, அதிகாரம் கொண்ட அமைப்போ கிடையாது. இந்துமதம் சார்ந்த அமைப்புக்கள் அனைத்துமே வெவ்வேறு வகையான ஆலய நிர்வாக அமைப்புக்கள் மட்டுமே. பழையபாணி அறக்கட்டளைகள்தான் அவை. அவற்றின் தலைவர்கள் தங்களை ஞானிகளாகவோ மதத்தின்மேல் அதிகாரம் கொண்டவர்களாகவோ எண்ணவேண்டியதில்லை. அவர்களை அங்கே அமரச்செய்ய வேண்டியதுமில்லை.


தீண்டாமையேகூட மதநெறி, அதை மாற்றக்கூடாது என வாதிட்டவர்கள் நம் மடத்தலைவர்கள். அவர்களை வாயைமூடவைத்தே இந்த அளவு முன்னகர்ந்திருக்கிறோம். அந்த அதிகாரம் மக்களிடமிருந்தது. அதை திரும்ப அந்த மடத்தலைவர்களிடம் அளிக்கப்போகிறோமா என்ன?


இந்துமதத்திற்குள் நவீன முல்லா மௌல்வி அதிகாரத்தை உருவாக்க அவர்கள் ஆசைப்படலாம், அதற்கு இந்துக்களாகிய நாம் வாய்ப்பளிக்கக் கூடாது. அது மிகப்பெரிய நச்சுக்களை ஒன்றை நம் மதம்மீது படரவிடுவது ஆகும்.


இந்துமதம், இந்து நூல்கள் குறித்து என்னவேண்டுமென்றாலும் சொல்லலாமா? சொல்லலாம். ஏதோ ஒன்றைச் சொல்லக்கூடாது என ஆரம்பித்தால் எதையுமே சொல்லக்கூடாது என்னும் இடம் நோக்கித்தான் அது சென்று சேரும். எதைச் சொல்லலாம், எவ்வளவு சொல்லலாம் என தீர்மானிப்பவர் எவர்? அவர்களுக்கு அந்த அதிகாரத்தை அளித்தது யார்?


அப்படி ஒவ்வாதன சொல்லப்பட்டால் அந்தக்கருத்தை மிகவன்மையாக மறுக்கலாம். மிகக்கடுமையாக அவரை எதிர்க்கலாம். அதற்கான உரிமை எவருக்கும் உள்ளது. ஆனால் அக்கருத்தை ஒடுக்கமுயல்வது, அச்சுறுத்துவது மிகமிக கீழ்மையான செயல். இந்துமதத்தின் சாராம்சமான மெய்ஞானப்பயணத்தை ஒடுக்கி அதை அழிக்கும் முயற்சி


சட்டபூர்வ நடவடிக்கைதானே, அதில் என்ன தப்பு என கேட்கலாம். சட்டநடவடிக்கை என்பது இங்கே ஒரு வெளிப்படையான மிரட்டல். ஏனென்றால் இங்கே சட்டநடவடிக்கை என்பது ஆண்டுக்கணக்காக இழுத்துச் செல்லப்படும் ஒரு வீண்செயல். நேரவிரயம், பணவிரயம், மனஉளைச்சல். ஒரு தனிமனிதனை ஓர் அமைப்பு சட்டப்போருக்கு இழுக்கும் என்றால் அந்த தனிமனிதனின் வாழ்க்கையே அழியும். வாழ்நாள் முழுக்க அவன் நீதிமன்றத்தில் வாழவேண்டியிருக்கும்.


கமல்ஹாசனுக்கு எதிரான இந்தச் குற்றச்சாட்டு சட்டப்படி எந்தவகையிலும் பொருட்படுத்தப்படவேண்டியது அல்ல. ஒரு சட்டம் தெரிந்த நீதிபதி முதல்விசாரணையிலேயே இதை ரத்துசெய்வார். வழக்கு போட்டவரை கண்டிக்கவும் கூடும். ஏனென்றால் இந்திய அரசியல்சட்டம் வழங்கும் கருத்துரிமை என்னும் அடிப்படை உரிமைக்கு எதிரானது இது. எப்போதுமே இந்திய நீதிமன்றம் இப்படித்தான் தீர்ப்பளித்துள்ளது.


ஒருவரின் கருத்து நேரடியாக மதஇன, உணர்வுகளைப் புண்படுத்தி சமூக ஒற்றுமைக்கு பங்கமாக அமையக்கூடாது என்னும் துணைவிதி அதற்குள் உள்ளது. அதைப்பயன்படுத்தி தங்கள் உணர்வுகள் புண்பட்டுவிட்டன என்றுதான் இவ்வழக்கைத் தொடுக்கிறார்கள். இது சமூகமோதலை உண்டுபண்ணக்கூடும் என்கிறார்கள். அக்கூற்று நீதிமன்றத்தால் ஏற்கப்படாது. ஆனால் அந்த தீர்ப்பு வருவதற்குள் வழக்குதொடுக்கப்பட்டவர் அலைந்துநாறவேண்டியிருக்கும் என்பதே நடைமுறை


ஆனால் நம்மூர் நாத்திகர்கள், தமிழ்த்தேசியர்கள், தலித்தியர்கள் இதைக் கண்டிக்கும் தார்மிக உரிமையை இழந்தவர்கள். சில ஆண்டுகளுக்கு முன் ஒரு சாதாரணமான கருத்துக்காக நடிகை குஷ்புவை இதே நீதிமன்ற மிரட்டல் என்னும் ஆயுதத்தைக் கொண்டுதான் அவர்கள் வேட்டையாடினார்கள்.


என்ன செய்யலாம்? இதை ‘வன்மையாக கண்டிப்பதி’ல் அர்த்தமில்லை. இதே ஆயுதத்தை இதை ஏந்தி வருபவர்களுக்கு எதிராகவே திருப்பலாம். இந்த மடாதிபதியின் பேச்சுக்களை எடுத்துக்கொண்டு இவர்மேல் பல இடங்களில் இதேபோல வழக்குகள் தொடரலாம். அப்படி வழக்கு தொடுப்பதற்கான அமைப்புக்களை உருவாக்கலாம். அவரும் வந்து நீதிமன்ற வாசலில் அமர்ந்திருக்கட்டும். சட்டத்தைக்கொண்டு மிரட்டுவதன் உண்மைப்பொருள் என்ன என அவரும் தெரிந்துகொள்ளட்டும்.


ஜெ


***

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 27, 2017 20:01

காட்டிருளின் சொல்

Beeran Auliya Uppapa(ra)



இளவயதில் நான் மிக ரசித்த கதகளிகளில் ஒன்று கிராதம். காட்டுமிராண்டித்தனம் என தமிழ். காட்டுமிராண்டியோ தென்னாடுடைய சிவன். எங்கள் ஊர்மையத்திலமைந்த மகாதேவன். அர்ஜுனனுக்கும் சிவனுக்குமான அந்த போர்க்களியாடலை பலமணிநேரங்களுக்கு வளர்த்துக்கொண்டுசெல்வார்கள். அர்ஜுனன் ஏவிய பிரம்மாஸ்திரத்தைப் பிடித்து காதுகுடைந்து மயங்கும் காட்டாளனைப் பார்த்து சிரித்துத் துவண்டிருக்கிறேன்


பின்னர் காட்டாளன் அர்ஜுனனுக்கு வழங்கிய பாசுபதம் என்பது ஒரு தத்துவம், ஒரு வழிபாட்டு முறை எனத் தெரிந்துகொண்டபோது அந்த கதகளி என்னுள் பலவாறாகத் திறந்துகொள்ளத் தொடங்கியது. நம் மரபின் அடித்தட்டில் இருக்கும் மகத்தான ரகசிய விவேகங்களில் ஒன்று அது. எங்கெல்லாம் அக்காட்டாளன் இறுதியில் முக்கண்ணும் நாகமும் உடுக்கும் சூலமும் புலியுரியும் நீறுமாக எழுந்தருள்கிறானோ அங்கே ஞானம் முழுமைகொள்கிறது. யோகமரபின் எந்தத் துளியிலாயினும் தொட்டு முன்னகரும் எவரும் உணர்ந்தறியும் ஒன்று.


அந்தத் தருணம்நோக்கிச் செல்லும் ஒருநாவலாக இதை உருவகித்தேன். திசைவென்ற அர்ஜுனன் நாககண்டனின் கால்களில் சென்றமர்ந்து அதுவரை கற்று வென்றதை கடந்து முழுமைசெய்துகொள்கிறான். வேதங்கள் ஒன்றல்ல பல என்னும் செய்தி அத்தனை மறுதொகுப்புகளுக்குப் பின்னரும் மகாபாரதத்தில் உள்ளது. வேதங்களினூடாகச் சென்று வேதம்கடந்து வேதப்பொருளென நின்றிருப்பதை அறியும் அர்ஜுனன் யோகி. மாவீரர்கள் மாபெரும் ஞானப்பயணிகள் என்பது எல்லா தொன்ம மரபுகளிலும் உள்ளதுதான்


காவியங்களின் தொகைவடிவம் இயல்பாகவே வரலாற்றில் உருவாகிவந்தது யுலிஸஸின் பயணமாயினும் சீவகனின் செலவாயினும். ஒரு வீரனின் பயணமென்பது அவன் தன்னைக் கடந்து தன்னுள் என ஆழ்ந்து செல்வதென்றே காவியங்கள் சொல்கின்றன. திசைவெல்லும்பொருட்டு அர்ஜுனன் சென்ற பயணங்கள் வழியாக கதைகளினூடாக தொன்மங்களினூடாக படிமங்களினூடாக இந்நாவல் கிராத மெய்மையை நோக்கிச் செல்கிறது.


2016 அக்டோபர் 7 அன்று கேதார்நாத் சென்றேன். கிராதம் திகழ்ந்த படிக்கட்டுகளில் ஏறி இறங்கி வந்து இதை எழுதுகையில் மெல்ல நிலைபெயர்ந்து பித்தனென்று ஆனேன். பித்துபோல பெருநிலை பிறிதில்லை


இந்நாவலை அலைதலின் காலங்களில் என் கொதித்துக்கொண்டிருந்த புன்தலை பணியும் வாய்ப்பு பெற்ற ஓச்சிற உப்பூப்பா பீரான் அவுலியா [ரலி] அவர்களுக்குப் படைக்கிறேன். மூன்றுமுறை அவரைச் சென்று வணங்கி உடன் இருந்திருக்கிறேன். மெய்மையென்றாகி அமர்ந்த அவர் முகத்தின் பெருங்களிப்பை நினைவுகூர்கையில் இவ்விரவில் மீண்டும் அனைத்திலிருந்தும் மேலெழுகிறேன்


ஜெயமோகன்





தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 27, 2017 11:35

பறக்கை – கடிதம்

1

லக்ஷ்மி மணிவண்ணன் கவிதை வாசிக்கிறார். அருகே ரோஸ் ஆன்றோ


அன்புள்ள ஆசிரியருக்கு,


மஞ்சள் ஒளிவிளக்குகளின் வெளிச்சம் சூழ்ந்திருக்கும் அதிகாலையின் நிசப்தத்தினூடே தூத்துக்குடியை விட்டு என் பயணத்தை தொடங்கினேன். திருநெல்வேலியிலிருந்து நண்பர் ஜானும் வருவதாக சொல்லியிருந்தார். அதிகாலை விடிந்த போது திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் நண்பருக்காக காத்துக் கொண்டிருந்தேன். எல்லா காகங்களையும் போல அந்த ஒற்றைக்காலுடைய காகம் தன் கூட்டத்துடன் சேர்ந்திருக்க வில்லை. விடியலின் துவக்கத்தில் தன் உணவு சேகரிக்கும் பணியில் சற்றே எச்சரிக்கையுடன் தன் கிராபைட் பளபளப்பு அலகை திருப்பி திருப்பி தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தது. இரண்டு கால்களில் ஒன்றை ஏதாவது விபத்தில் அது இழந்திருக்க கூடும் அல்லது வேறு ஏதாவது சாத்தியக் கூறுகள் இருக்கவும் கூடும். என்னதான் பறவைகளுக்கு சிறகுகள் இருந்தாலும் கால்களும் தேவைப்படுகின்றன. பறவை என்பதை பறக்கும் இறகுகளோடு மட்டுமே நாம் தொடர்பு படுத்திக்க கொள்கிறோம் அதன் கால்களை பற்றிய கவலை நமக்கு ஏன் இல்லாமல் போனது? நாம் கண்டுகொள்ளாமல் இருப்பதால் மட்டுமே பறவைகளுக்கு கால்கள் அவ்வளவு முக்கியமில்லை என்பதல்ல. பூமியில் சிதறிக்கிடக்கும் உணவுகளை பெற, கிளைகளின் அமர்ந்து இளைப்பாற வானத்தில் பறக்கும் சிறகுகளால் மட்டுமே அடைந்து விட முடியாது அல்லவா?


niza9


நம்மிடம் இல்லாத ஒன்று தான் நம் கவனத்தை அதிகம் பெறுகிறது. பறவையின் சிறகுகளும் அவ்வாறு தான் மேலதிக கவனத்தை பெற்றிருக்க கூடும். அதற்குள் ஜான் வந்து விட்டார். நாகர்கோவில் பேருந்தில் இருவரும் பயணத்தை தொடங்கினோம். எப்போதும் பாலைவனத்திலிருந்து மரங்கள் அடர்ந்த பகுதிக்கு வருவதை போலத்தான் தூத்துக்குடியிலிருந்து நாகர்கோவிலுக்கு வருவதும் வழிமுழுக்க மரங்களை கண்டாலும் கோடையின் தாக்கம் அங்கும் பிரதிபலிக்கத்தான் செய்தது. நண்பரிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டே வந்தேன். சிறிது நேரத்திற்குப் பின் அமைதியாகி நிலத்தின் காட்சியை பார்த்துக் கொண்டே வந்தேன். பெரிய பெரிய ராட்சச காத்தாடிகளில் சில சுழன்றுகொண்டும் சில அமைதியாகவும் நின்றிருந்தன. வாழை தோப்புகள் மரங்கள் என எல்லாவற்றிலும் கோடை தன்னை பிரதிப்பலித்துக் கொண்டிருந்தது. இவை எவற்றைப் பற்றியும் எனக்கு கவலையில்லை என நிமிர்ந்து வானம் தொட்டுக்கொண்டிருந்த மலைகள் என ஒவ்வொன்றாக பின்செல்ல நாகர்கோவிலை வந்தடைந்தோம்.


2nizal


நாங்கள் வரும்போது 15 நிமிடம் தாமதமாகியிருந்தது. அதற்குள் ஜெ வந்து விட்டிருந்தார் பல வாசகர்களும் முன்னரே வந்து விட்டிருந்தனர். அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் பற்றி ஜெ பேசிக்கொண்டிருந்தார். துவக்கத்தைப் போலவே பெரும்பாலான உரையாடல்கள் கல்வியைப் பற்றியே சுழன்று கொண்டிருந்ததது. உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள கல்வி முறைகள் வாசிப்பு புத்தகங்கள் என ஜெ தான் பல்வேறு நாடுகளில் பெற்ற அனுபவங்களுடன் இணைத்து ஒரு சித்திரத்தை அளித்துக் கொண்டிருந்தார். ஜப்பானின் வீழ்ச்சி, அதன் கல்வி முறையின் குறைபாடுகள் மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகள் ஐரோப்பிய நாடுகளை போல படைப்பூக்க முடைய கல்வியை தனது குடிமக்களுக்கு அளிக்க எடுத்துக்கொள்ளும் முயற்சிகள் அதிலுள்ள சவால்கள் என தொடர்ந்து ஆழமாக பேசிக்கொண்டிருந்தார். ஐரோப்பா உலகிற்கு அறிவியல் ஐடியாக்களை வழங்குவதின் மூலம் தான் உற்பத்தி துறையை விட அதிக வருமானம் ஈட்டுகிறது. பின் மெல்ல மெல்ல இயற்கையை பற்றியும் தோரா, எமெர்ஸன் பற்றியும் உரையாடல் நீண்டது. தனிமனிதன் இயற்கை அரசு என மிக மெல்ல உரையாடல் தத்துவத்தை நோக்கி செல்ல தொடங்கியது.


nizal4

அருட்தந்தை யுடன்


இலக்கியவாதிகளுக்கு தத்தவர்த்தமான பார்வை வேண்டும் என்பதை ஜெ வெண்முரசில் எழுதியிருந்த முள் உவமையின் மூலமும், ஒரு தாய் தன் குழந்தையை கொல்வது உதாரணத்தின் மூலமும் விளக்கினார். வேத சகாய குமார் அவர்களும் போகன் சங்கர் அவர்களும் வந்திருந்தனர். வேதசகாயகுமார் அவர்கள் பேராசிரியர் ஜேசுதாசன் அவர்களின் மாணவர் என்பதையும் விமர்சகர் என்பதையும் ஜெமோவின் தளத்தின் வாயிலாகவே அறிந்திருந்தேன். இடையிடையே உரையாடலை அவரும் ஆழமாக இழுத்துச்சென்றார். பெண்ணியம் தலித்தியம் போன்றவற்றைப் பற்றியும் டி ஆர் நாகராஜ், பி கே பாலகிருஷ்ணன், பின்நவீனத்துவம், தெரிதாவின் கட்டுடைப்பு அதை நம் இலக்கியக்கோட்பாட்டாளராகள் படுத்தியபாடு போன்றவற்றைப் பற்றியும் செறிவான உரையாடலாகவும் இருந்தது. கவிதைகளில் இன்றைய காலகட்டத்தின் தேக்க நிலை லட்சியவாதம், அடுத்த கட்டம் என போகன் சங்கரோடும் ஜெ உரையாடினார்.


ni1


நூலக பூதங்கள்  உ வே ச சேகரித்த சுவடிகளில் 25% தான் அவரால் பயன்படுத்தப் பட்டது, மீதமுள்ள சுவடிகளை எந்த விதமான உபயோகமும் இல்லாமல் அப்படியே வைத்திருப்பது போன்றவையும் சாதிய, கருத்தியல் பாகுபாடுகளால் ஆவணங்களை மற்ற ஆய்வாளர்களுக்கு கிடைக்க விடாமல் செய்வது மதுரை அலெக்ஸின் ஆய்வு எப்படி வெள்ளையானைக்கு அடிப்படையாக அமைந்தது என உரையாடல் செறிவாக சென்றது


nizal88


மதிய உணவு இடைவெளியிலும் நண்பர்களோடு ஜெ தொடர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார். நல்ல மதிய உணவை படிகம் சிலேட் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர். சாப்பிட்ட பின் விஷ்ணு, சிவன் போன்ற தெய்வங்கள் உருவாகி வந்த வரலாறு மற்றும் சிற்பங்களை எவ்வாறு பார்க்க வேண்டும் என வாசகர் கேட்ட கேள்விக்கு அவருடைய பயணத்தில் உடன்வந்த இஸ்லாமிய வாசகரைப் பற்றியும் பின்னர் அவருக்கு சிற்பங்களில் ஈடுபாடு வந்ததை பற்றியும் நகைச்சுவையோடு சொல்லிக் கொண்டிருந்தார். ஏற்கனவே அறிமுகம் ஆகியிருந்த நண்பர் சிவக்குமார் அவர்களையும் உணவு இடைவேளையில் தான் சந்தித்து பேசிக்கொண்டிருந்தேன்.


vishnu


மதிய அமர்வு லட்சுமி மணிவண்ணன் அவர்களின் ஒரு கவிதை வாசிப்போடு தொடங்கியது. மெக்காலே பற்றிய கற்பிதங்கள் அதுபோல நாம் நம்பிக்கொண்டிருக்கும் ஏராளமான கற்பிதங்கள் பற்றியும் அவற்றுக்கான ஆதாரங்கள் எவையும் இல்லையென்பதையும் ஜெ விரிவாக பேசினார். தகவல் சார்ந்த கற்பித்தலுக்கு  எந்தவித பயனும் இனி இல்லை எனவும் கருத்துக்களை பற்றிய கல்வியே இனி பயனளிக்க கூடியது எனவும் கூறினார். ஜெ சிங்கப்பூரில் குழந்தைகளுக்கு வகுப்பெடுக்கும் பொது  அறிவியலை தவறாக பயன்படுத்துவதை (frankenstein) பற்றி கற்றுக் கொடுக்கும் போது  அதன் அடிப்படையில் அமைந்திருக்கும் ஏராளமான ஹாலிவுட் படங்களை அவர்களே கண்டறிந்ததையும் அதிலுள்ள அடிப்படையை குழந்தைகள் கண்டடையும் போது அவர்களுக்கு ஏற்படும் அனுபவத்தை பற்றியும் பகிர்ந்து கொண்டார். இறுதியாக ஜெ தன் நூலகத்தில் இருக்கும் புத்தகங்களில் சுமார் 200 புத்தகங்களை வாசகர்களுக்காக கொண்டுவந்திருந்தார். அவரவர்களுக்கு தேவையான புத்தகங்களை எடுத்துக்கொண்டோம். நான் டால்ஷ்டாயின் காசாக்குகள், அசோகமித்திரனின் அப்பாவின் சிநேகிதர்கள், தேவதேவனின் விண்வரையும் தூரிகைகள், வரலாறு பற்றிய ஒரு புத்தகம் ஒரு ஆப்பிரிக்க சிறுகதை புத்தகம் போன்றவற்றை எடுத்துக் கொண்டேன். நிகழ்வு இனிதாக முடிந்தது.


 


nizal

அஞ்சலிக்கூட்டம்


 


மாலை 6.00 மணிக்கு நாகர்கோவிலில் ஏற்பாடு செய்யப்பற்றிருந்த அசோகமித்ரனுக்கான அஞ்சலியில் கலந்துகொண்டேன். இரண்டு நிமிட மௌன அஞ்சலிக்குப் வேதசகாய குமார் அவர்கள் முதலில் பேச தொடங்கினார். அசோகமித்ரனுக்கும் அவருக்குமான முதல் சந்திப்பிலிருந்து அசோகமித்திரனின் மீதான அன்றைய காலகட்டத்தின் விமர்சனங்கள், சிறு பத்திரிகை உலகத்தின் செயல்பாடுகள், சமரசங்கள் என கடந்த காலத்தின் தமிழ் இலக்கிய உலகம் பற்றிய ஒரு சித்திரத்தை அளித்துச் சென்றார். இறுதியாக அசோகமித்திரனின் மீதான தன் மதிப்பீடுகளில் ஏற்பாட்டை மாற்றத்தையும் பதிவு செய்து தன் அஞ்சலியை நிறைவு செய்தார்.


அதன் பின் பேசியவர்களில் போகன் சங்கர், அனீஸ் கிருஷ்ணன், லட்சுமி மணிவண்ணன், கார்த்திகை பாண்டியன் போன்றோர்கள் பேச இறுதியாக  ஜெ பேசினார். தான் அசோகமித்ரனை தொடர்ந்து 25 ஆண்டுகளாக முன்னிறுத்தி வருவதையும் அதற்காக தான் செய்த பணிகளையும் தொகுத்து அளித்தார் .  அசோகமித்திரனின் இயல்புகள் பற்றியும், கருணாநிதி அவர்களின் புத்தக வெளியீட்டிற்கு அசோகமித்திரன் அழைத்துச் செல்லப்பட்ட நிகழ்வையும் அந்த மேடையில் அசோகமித்திரனின் பேச்சை தெலுங்கு கவிக்கும் என் டி ராமராவிற்கும் இடையே நடந்த நிகழ்ச்சியையும் ஒப்பிட்டு  ஒரு கலைஞனின்  எதிர்ப்பை பற்றியும் நகைச்சுவையாக கூறி நிறைவு செய்தார். ஒரு எழுத்தாளர் தன் காலத்தால் கவனிக்கப் படாமல் அங்கீரிக்கப்படாமல் இருப்பது பற்றி, அவனை சாதியால் அடையாளப்படுத்துவதுபற்றி எல்லோருக்கும் விமர்சனம் இருந்தது.


 


ml


ஜெவின் இணையத்தில் தான்  முதன்முதலாக அசோகமித்திரனை பற்றி நான் அறிந்துகொண்டேன். அதன் பின் தான் அவரின் எழுத்துக்களை வாசிக்க தொடங்கினேன் என்பதை நினைத்துக்கொண்டேன் .தமிழ் சமூகம் அவரை கைவிட்டது என்பது மறுக்க முடியாத உண்மையேயாகவும் மாற்ற முடியாத உண்மையாகவும் இதுவரை தொடர்கிறது இனியும் அவ்வாறு தொடர்வதற்கான வாய்ப்புகளும் பிரகாசமாக ஒவ்வொரு தமிழனிடமும் தெரிகிறது. நிகழ்வின் முடிவில் போகன் சங்கர் அவர்களை அறிமுகம் செய்துகொண்டேன். இறுதியாக கூட்டம் களைய நண்பர்களிடம் விடைபெற்றுக்கொண்டு தூத்துக்குடியை நோக்கி பயணமானேன்.


 


எல்லா நாட்களும் செறிவான நாட்களாக அமைவதில்லை. ஆசிரியரின் அருகாமையினால் அவரின் சொற்களால்  இந்த நாள் செரிவாக்கப் பட்டது.  அவ்வகையில் இந்த வாய்ப்பை ஏற்படுத்தி தந்த படிகம் நண்பர்களுக்கும் லட்சுமி மணிவண்ணன் அவர்களுக்கும் என் அன்பும் நன்றியும்.


 


விஷ்ணுபிரகாஷ்


***

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 27, 2017 11:34

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.