Jeyamohan's Blog, page 1636

May 26, 2017

கதைகள் கடிதங்கள்

siru



வணக்கத்திற்குறிய ஜெ,


எளியவன் கோ எழுதுவது. தேவகி சித்தியின் டைரி என்ற தலைப்பு முல்க் ராஜ் ஆனந்தின் “morning face” நாவலில் வரும் தேவகி சித்தியை நினைவுபடுத்துகிறது. அந்த நாவல் எனக்கு மிகவும் நெருக்கமான ஒன்று. வாசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அந்த தாக்கத்தில் தான் தேவகி சித்தி என பெயர் வைத்துள்ளீர்கள் என்று ஒரு எண்ணம். ஆனால் அந்த எண்ணம் தங்கள் கதையில் வரும் சிறுவன் மரத்தில் ஏறி எட்டி பார்க்கும் வரையில் தான். மறுவரியில் மாயமாகி விட்டது. கதையின் முடிவில் ஜெயகாந்தனின் “அந்தரங்கம்” நினைவிற்கு வருவதை தவிர்க்க இயலவில்லை. இரு கதைகளும் மனித வாழ்வின் ஆணிவேரான அந்தரங்க உரிமையின் அவசியத்தை அடி கோடு இடுகின்றன. குடும்பம் என்ற ராட்சத அமைப்பின் கால்களில் மிதிபடும் அந்தரங்க உரிமையின் வலியை உங்கள் கதையில் உணறுகிறேன். டைரி எழுதுகிறாள் என்பதற்காகவே மனைவியை கை கழுவும் கணவன் மேல் கோவம் கொப்பளிக்கும் அதே வேளையில் அடுத்தவர் அந்தரங்கத்தில் எட்டி பார்க்க நினைக்கும் தரம் கெட்ட சமூகத்தை நினைத்து பரிதாபப்படாமல் இருக்க முடியவில்லை. இறுக்கமான மனங்களை தளர்த்திட வளமான படைப்புகளை தொடர்க.


நட்புடன்,

கோவர்தனா,

திருவண்ணாமலை


***


அன்புள்ள ஜெமோ


நான் சமீபத்தில் உங்களுடைய சிறுகதையான மாடன்மோட்சம் வாசித்தேன். சிரிக்கவைத்த அக்கதை கடைசியில் ஒரு பெரிய உலுக்கலை அளித்துவிட்டது. தவிர்க்கமுடியாத ஒரு சமூக மாற்றம் நிகழ்கிறது. ஆனால் கூடவே ஏதோ ஓர் அழிவும் நடந்துகொண்டிருக்கிறது. நாம் இன்றைய வாழ்க்கையை மாற்றும்போது நேற்றைய வரலாற்றையும் கூடவே மாற்றிக்கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் வந்தது


சுப்ரமணியம்


***


அன்புள்ள ஜெ


உங்கள் பெரியம்மாவின் சொற்கள் கதையை வாசித்தேன். இரண்டு பண்பாடுகள் ஒன்றை ஒன்று கண்டடையும் இடம் மிக அற்புதமாகவும் நுட்பமாகவும் சொல்லப்பட்டிருந்தது. அது நிகழ்வது ஒரு பாட்டியின் மனதில் என்பது மிக அழகானது


ஜெயஸ்ரீ


***


தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 26, 2017 11:33

நேரு ,மல்லையா -சில தெளிவுபடுத்தல்கள்

Nehru
தொழில்முனைவோர்- ஒர் எதிர்வினை
நேரு முதல் மல்லையா வரை. .

அன்பின் ஜெ. .


உங்கள் எதிர்வினைக்கும், கட்டுரையை வெளியிட்டதற்கும் நன்றி.


எனது தரப்பில் சில விஷயங்களைச் சொல்லிப் பார்க்கிறேன் – நாம் விவாதிப்பது தெளிவடைகிறதா என.


”நான் தொழில்முனைவோர் அனைவரும் பொதுநலம்நாடிகள் என்று சொல்லவில்லை. நல்லவர்கள் என்று சொல்லவில்லை. அவர்கள் அனைவரும் சமமானவர்கள் என்று சொல்லவில்லை. அவர்களில் பேதம் பார்க்கக்கூடாது என்று சொல்லவில்லை. அவர்களில் ஊழல் செய்பவர்களும் அரசை ஏமாற்றுபவர்களும் பொதுமுதலை மோசடி செய்பவர்களும் தண்டிக்கப்படக்கூடாது என்று சொல்லவில்லை.


மாறாக தொழில்முனைவோர் வலிமையான இடதுசாரி இயக்கங்களால் நிகர் செய்யப்பட்டிருக்கவேண்டும் என்று சொல்கிறேன். அரசும் அமைப்புகளும் அவர்களை எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும் என்கிறேன். தொழில்முனைவோர் லாபநோக்கம் மட்டுமே கொண்டவர்கள். அவர்கள் பொதுநலம் விரும்பிகள் அல்ல. ஆனால் லாபநோக்கம் சமூகத்துக்கு எதிரானது அல்ல. லாபநோக்கம் கொண்ட தொழில்செயல்பாடுகள் பொருளியல்ரீதியாக ஆக்கபூர்வமானதாக அமையமுடியும். ஆகவே சுயலாபச் செயல்பாடுகள் மேல் ஒட்டுமொத்தமாக நாம் கொள்ளும் காழ்ப்பு முதலாளித்துவப் பொருளியலுக்கு ஏற்புடையதல்ல என்கிறேன்.


அதேசமயம் இடதுசாரிகளால் தொழில்முனைவோர் அனைவருமே சுரண்டல்காரர்கள் என்று உருவாக்கப்பட்டுள்ள பிம்பத்தை நம்பி வெறுப்பைக் கக்குவதும், தேவையானபோது மட்டும் இடதுசாரி கோஷங்களை கையிலெடுத்துச் சேறுவீசுவதும் பிழை என்கிறேன். – இது உங்கள் வரிகள்.


இதுவரை, நான் உங்கள் கருத்துக்களை முற்றிலும் ஆமோதிக்கிறேன். ஆனால், நான் மாறுபடும் இடம் ஒன்றுதான். இதைச் சொல்ல நீஙக்ள் கையாண்ட உதாரணம் தவறு. மல்லையா. சுரண்டல் தொழில் மாதிரியில் இருந்து மேலெழுந்தவர் – எனவே தான் அவரின் வாழ்க்கை முறையும் சேர்ந்து இன்று அவர் வேட்டையாடப்படுகிறார்.


ஆனால், இந்திய சமூகத்தில் – அமைப்பு ரீதியாக இவர்கள் மிகவும் பத்திரமாக உள்ளார்கள் என்பதே உண்மை. இதே போன்ற குற்றத்தை அவர் அமெரிக்காவில் செய்திருந்தால், 30-35 ஆண்டுகள் வரை உள்ளே இருக்கும் சாத்தியங்கள் உண்டு என்பதுதான் உண்மை. அதனால் தான், சத்யம் ராஜூவும், ஹைதராபாத்தில் உண்மையைச் சொன்னார். அவரின் நிறுவனம் அமெரிக்கப்பங்குச் சந்தையில் லிஸ்ட் ஆன ஒன்று. அங்கே சொல்லியிருந்தால், குறைந்தது 25-30 வருடம் ஜெயில்.


”நவீனப்பொருளியலில் தொழில்முனைவோர் முக்கியமான இடத்தை வகிக்கிறார்கள் என்பது என் கருத்து என்கிறேன், ஆனால் இடதுசாரிகள் அதை மறுப்பதை புரிந்துகொள்கிறேன்” – உங்கள் வரிகள்


இந்த இடத்தையும் நான் ஒத்துக் கொள்கிறேன் ஒரு மாறுதலோடு – நான் இடதுசாரிகள் ஒரு தரப்பு – மொத்தச் சூழலையும் வைத்து, வலது- இடது என மட்டும் பாராமால், பொருளியல் செல்வம் உருவாக்குதல் என்னும் தரப்பிலிருந்து, இந்தியச் சமூகப் பொருளாதாரச் சூழலை (இன்றைய சூழலில், சூழியலும் உண்டு) அணுகும் ஒரு கருத்தியலை முன்வைக்கிறேன்.


உங்கள் கட்டுரையின் மையப் புள்ளியில் இருந்து நான் விலகும் இடம் இதுதான். ஏனெனில், கேரளத்தில் வெற்றிகரமாக இயங்கும் மில்மா கூட்டுறவுப் பால் உற்பத்தித் தொழில் நிறுவனத்தின் மாதிரியை அப்படி அணுகினால் தான் புரிந்து கொள்ள முடியும். FACT போன்ற, ஒரு பெரும் பொதுத் துறை நிறுவனத்தைச் செயலிழக்கச் செய்த இடதுசாரித் தொழிலாளிகளியக்கம், எப்படி மில்மாவை அனுமதித்தது என நோக்கினால், நான் சொல்ல வருவது புரியும். ஏனெனில் மில்மா, பல லட்சம் உள்ளூர் மக்களின் தினசரிப் பொருளாதாரத்தை நேர்மறையாகப் பாதிக்கும் ஒரு பொருளியல் சக்தி. உற்பத்தியாகும் பால், மக்களின் நிறுவனத்தால் கொள்முதல் செய்யப்பட்டு, உள்ளூர் நுகர்வோரிடையே விற்கப்பட்டு, பலன் வாரா வாரம் உற்பத்தியாளர்களுக்குக் கிடைக்கும் மாதிரி.


அங்கே வேலை நிறுத்தம் நடத்தினால், பொதுமக்களே அவர்களை அடித்துத் துரத்திவிடுவார்கள்.


அதே போல் தான் அர்விந்த கண் மருத்துவமனை மாதிரியும். அது இடது வலது என்னும் சித்தாந்தகளுக்கு அடங்காமல், அதைத் தாண்டிய ஒரு தளத்தில் இயங்குகிறது. இதையும் பாருங்கள் என வேண்டுகோள் வைக்கிறேன்.


”நான் சுட்டிக்காட்டுவது தொழில்முனைவோர்களுடன் அரசுக்கு இருக்கும் உறவை ஒருவகை மோசடி அல்லது ஊழல் என்று மட்டுமே பார்க்கும் பார்வையின் அபத்தத்தை மட்டும்தான். தன் தொழில்துறையில் நிதிமுதலீடு செய்யாத முதலாளித்துவ அரசு என ஏதுமில்லை. அதில் இழப்புகளை அத்தனை அரசுகளும் சந்திப்பதுண்டு. அந்த இழப்புகள் தள்ளுபடி செய்யப்படுவதும் இழப்புக்குள்ளான தொழில்துறைகளை அரசு பெரும்பணம் பெய்து மீட்பதும் எல்லாம் உலகமெங்கும் நிகழ்வது. சென்ற இருபதாண்டுகளில் அமெரிக்காவும் சிங்கப்பூரும் ஜப்பானும் அவ்வாறு நிதிபெய்து வங்கி, தொழில்துறைகளை மீட்டெடுத்த வரலாறு நம் முன் உள்ளது. இதை ஓர் இடதுசாரி கண்டிப்பதை புரிந்துகொள்கிறேன். எதையும் அறியாத ஒருவர் இதை வரிப்பணத்தை அள்ளிக்கொடுப்பது என்று மட்டுமே பிரச்சாரம் செய்யும் அறியாமையை மட்டுமே சுட்டிக்காட்டுகிறேன்” – உங்கள் வரிகள்


இந்தப் புள்ளியில் ஒரு வேறுபாட்டைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். இந்தியாவில், தொழில்த் துறையும், அரசும் இணையும் புள்ளிகள் பல – மிக முக்கியமான இணைவு அமைப்பு ரீதியாக – CII, NASSCOM, ASSOCHAM என அமைப்பு ரீதியாக இணையும் புள்ளிதான் ஓரளவு நேர்மையான இணைதல். ஆனால், நான் சொல்லும் க்ரோனி கேப்பிடலிஸ்ட்கள் இதைத் தாண்டிய உறவு வைத்திருப்பவர்கள் என்பது மிகக் கடுமையாக விமரிசிக்க வேண்டிய ஒன்று. எடுத்துக் காட்டாக, காங்கிரஸ் ஆட்சியில் அம்பானிகளும், ஜிண்டால்களும் கொண்டிருந்த உறவு. இந்த ஆட்சியில் அதானி கொண்டிருக்கும் உறவு. 2008 ல், அமெரிக்காவில் நிகழ்ந்த நிதி ஊழலில், அரசு, நிதிநிறுவனங்களை மீட்க, கிட்டத் தட்ட 1 ட்ரில்லியன் டாலருக்கும் (65 லட்சம் கோடி ரூபாய்) மேல் நிறுவனங்களுக்கு வழங்கியது. அந்த நிதியில் ஒரு முக்கியமான அளவை, அந்நிதி நிறுவனத்தில் இருந்த, அந்நிதி ஊழலில் ஈடுபட்ட உயர் அதிகாரிகள், தங்களுக்கான போனஸாக எடுத்துக் கொண்டதை நாம் கட்டாயம் கண்டித்தாக வேண்டும். இதை உங்கள் கட்டுரை சுட்டிக் காட்டத் தவறுகிறது. மத்திய, கிழக்கு மாநிலங்களின் பழங்குடியினரை வெளியேற்றி, நிறுவனங்கள் தாதுத் தோண்டல்களில் ஈடுபடுகின்றன. mindless mining என்றால் என்னவென்று, ஒரு முறை பெல்லாரிக்கோ / கோவாவிற்கோ சென்று பாருங்கள். இதை க்ரோனி கேப்பிடலிஸ்ட்கள் வரம்பு மீறிச் செய்கிறார்கள். இது வரிப்பணத்தை அள்ளிக் கொடுப்பதற்குச் சமமானதுதான்.


ஆனால் அதே சமயம், மென்பொருள்த் துறையின் துவக்க காலத்தில், வருமான வரிச் சலுகைகள் வழங்கப் பட்டன. அது அந்தத் தொழிலின் லாபத்தைப் பெருக்கி, இன்று பெரும் துறையாக உருவெடுத்ததில் அரசின் நேர்மறையான பங்கு. ஆனால், இன்று அம்பானி, அதானி, ஜிண்டால், ஜி. வி,கே, ஜெயப்ரகாஷ் இண்டஸ்ட்ரீஸ் போன்ற க்ரோனி கேப்பிடலிஸ்ட்களின் தொழிலுக்காகக் கொடுக்கப்பட்ட கடன்கள் வாராக் கடன்கள் எனச் சொல்லப் பட்டு, தள்ளுபடி செய்யப்பட்டால், அது நிச்சயம் வரிப்பணக் கொள்ளைதான். டாட்டாவோ / ஷிவ் நாடாரோ / அஸீம் ப்ரேம்ஜியோ / கிரண் மஜும்தாரோ தங்கள் கடனைத் தள்ளுபடி செய்யச் சொல்லக் கேட்கவில்லை எனக் கவனியுங்கள்.


*


”அன்புள்ள பாலா, பெருநோட்டு அகற்றம் குறித்து நீங்கள் எழுதிய பதற்றம்மிக்க கட்டுரைகளை, அதிபயங்கர ஆரூடங்களை இப்போது பார்க்கிறேன். அதிலிருந்த உணர்ச்சிகரமே இக்கட்டுரையிலும் உள்ளது” – உங்கள் வரிகள்


இது ஆதாரமில்லாத குற்றச் சாட்டு. அந்த சமயத்தில், நான் குழுமத்தில் எழுதியதெல்லாம் இவைதான்.



இது, வடக்கில், ரபிப் பருவ விதைப்பின் போது தடாலென அறிவிக்கப்பபட்டிருப்பது, வேளாண் பொருளாதாரத்தைப் பாதிக்கும்.
86% நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டால், நோட்டுப் பரிமாற்றம் மட்டுமே நிகழும் ஊரக்ப் பொருளாதாரத்தைப் பெருமளவு பாதிக்கும்.
பழைய நோட்டுக்களுக்குப் பதில் நோட்டுக்கள் தயாராக இல்லை. இதைப் ப்ரிண்ட் செய்ய 4-5 மாதங்கள் பிடிக்கும்.
பின் தயாரிப்புகள் இன்றி, அவசரத்தில் கொண்டு வரப்பட்ட திட்டம் – பொருளாதாரத்தின் அடித்தட்டு மக்களை மிகவும் பாதிக்கும் எனச் சொல்லியிருந்தேன்.
மன்மோகன் சிங் / ப. சி போன்றவர்களும் அமர்த்தியா சென், கௌஷிக் பாஸு, ஜான் ட்ரேஸ், அருண் ஷோரி, லாரி சம்மர்ஸ் எனப் பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்கள். அவர்கள், கள்ளப் பணம் ஒழிக்கும் நோக்கத்தில் தவறில்லை. -ஆனால், பணமாக இருக்கும் கருப்புப் பணம் 4-5 ச்தம் தான் – அப்படியே அதைச் செய்ய வேண்டு மெனிலும், அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்யாமல், பொது மக்களை அவதியுறச் செய்வது தவிர்க்கப் பட வேண்டுமெனச் சொல்லியிருந்தார்கள். இதற்கு, பாஜபா தரப்பு ஆதரவாளர்கள் – அர்விந்த் விர்மானி, பிபேக் டெப்ராய், சுர்ஜித் பல்லா, குருமூர்த்தி போன்ற பொருளாதார அறிஞர்கள் மறுப்புச் சொல்லியிருந்தார்கள் – கறுப்புப் பணம் இதனால் ஒழிந்து விடும் என.

2013 ஆம் ஆண்டு, காங்கிரஸ் அரசு கொண்டு வந்த நோட்டு மாற்றத் திட்டதை – அது வெறும் நோட்டு மாற்றம் தான் – பா. ஜ. பா, ஏழை மக்கள் பாதிப்பார்கள் என எதிர்த்து அறிக்கை விட்டது. அது யாருக்கும் தொந்தரவில்லாமல் செய்யப்பட்ட ஒரு சிறிய நடவடிக்கை. அதன் நோக்கம், கள்ள நோட்டுக்களைத் தடுப்பதுதான்.


ஆனால், உங்கள் கட்டுரையை நோக்குங்கள் – நீங்கள் சொன்னது என்ன என


இந்திய வரலாற்றில் எப்போதும் அறியப்பட்ட அரசியல்கட்சித் தலைவர்கள் கள்ளப்பணத்திற்கு ஆதரவாக இப்படி வெளிப்படையாகக் களமிறங்கியதில்லை. இப்படி அதை ஆதரித்து இத்தனை பொருளியலாளர்கள் பேசியதில்லை. அறிவுஜீவிகள் அதன் பொருட்டு கண்ணீர் மல்கியதில்லை. இடதுசாரிகள் கள்ளப்பணத்தைக் காப்பதற்காக பிரச்சார மோசடிகளில் ஈடுபடும் ஒரு காலத்தை நாம் கண்ணெதிரில் கண்டுகொண்டிருக்கிறோம்


இதை ஒரு எமோஷனல் ட்ராமாவாக உருவகித்தது நீங்கள் தான்,


இதைச் செய்து விட்டு, ஜப்பான் சென்ற பிரதமர், 4 நாட்கள் கழித்து வந்ததும், அதன் பிரச்சினைகளைக் கண்டு – என்னைக் கொல்ல சதி. . 70 ஆண்டுக் கொள்ளையைத் தடுக்க முயலும் என்னைக் கொன்று விடுவார்கள் என்று வசனம் பேசியது, மு,க வின் ‘கொல்றாங்கோ” டயலாக்கைத் தான் நினைவுபடுத்தியது.


நடந்த குளறுபடிகளைப் பட்டியலிடுகிறேன்:



86 சதம் நோட்டுக்களுக்கு மாற்று நோட்டு இல்லை.
புது நோட்டுகளுக்கு ஏ. டி. எம் மெஷின்கள் மாற்றப்படவில்லை
கூட்டுறவு வங்கிகளை இதில் இருந்து நீக்கியது. அது விவசாயத்தைப் பாதிக்கும் என உணர்ந்து, அரசுப் பண்ணை விதைகள் வாங்க, ப்ழைய நோட்டுக்களை அனுமதித்தது.
கிட்டத்த்ட்ட 50 முறைகள் விதிகளை மாற்றியது / பணம் எடுப்போருக்கு விரலில் மை என விதி கொண்டு வந்து அதை 2 நாட்கள் நடத்தியது.
வங்கி மேனேஜர்களிடம் அதிக்ப் பணம் செலுத்துவோர் கணக்குக் காண்பிக்க வேண்டும் என விதிகளைக் கொண்டு வந்தது. குருமூர்த்தி போன்றவர்கள் அதற்கு சப்பைக் கட்டுக் கட்டியது
தவறு நடந்ததை மாற்ற பணமில்லாப் பரிமாற்றம் எனப் புதுக் கதை விட்டது. . பிச்சைக்காரர்கள் கூட பணமில்லாப் பரிமாற்றம் செய்கிறார்கள் என நாட்டின் பிரதமர் பேத்தியது.

இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலத்தில், தொலைக்காட்சி அறிவி ஜீவிகள் அனைவரும் ஏ. டி. எம்மில் பணம் இருக்கு / இல்லை என அடித்துக் கொண்டது – எனப் பல தமாஷ்கள் நடந்தன.


உங்களுக்கு, இதனால், ஏழை மக்கள் உண்மையிலேயே பாதிக்கப்பட்டிருக்கிறார்களா எனத் தெரிய வேண்டுமானால், எனது தோழி, அபர்ணா கிருஷ்ணனின் தொலைபேசி என் தருகிறேன் – இவர் ஒரு IISC பட்டதாரி. படிப்பு முடிந்து, க்டந்த 20 வருடங்களாக, திருப்பதி அருகே தலித்வாடா என்னும் தலித் கிராமத்தில் அவரக்ளோடு வசித்து வருகிறார். அவரை அழைத்துக் கேளுங்கள். நமக்குத் தெரிந்த நண்பரான, கண்ணன் தண்டபாணியைக் கேளுங்கள்.


இன்று, இந்தக் கூத்து முடிந்து ஆறு மாதங்களில், ஒரு நாள் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஜக்தீஷ் பக்வதி ஒரு நாள் கொடுத்த ஒரு நாலு பேரா பேட்டியை மேற்கோள் காட்டி, பணமதிப்பு பெரும் நன்மை எனப் பதிவிட்டிருந்தீர்கள். இதைத் தவிர பண மதிப்பிழப்பு நன்மை என யாராவது சொன்னார்களா எனப் பாருங்கள். வரிகள் பலமடங்கு அதிகமாகின என்னும் ஒரு வரியையும் பார்த்தேன் – நான் கண்ட வரையில், சோப்பு / டிடர்ஜெண்ட் நிறுவனங்கள், இரு சக்கர வாகனங்கள், கமர்ஷுயல் வாகனங்கள், கார்கள், என மத்திய வரிக்கட்டும் அனைத்து நிறுவனங்களும் அந்த மூன்று மாதங்கள் (அக்டோபர்-டிசம்பர்) – விற்ப்னைச் சரிவைச் சந்தித்தன. அரசே இன்று, அந்த மூன்று மாதங்களின் பொருளாதார வளர்ச்சி 0. 5 சத்ம் வீழ்ந்தது என அறிக்கை கொடுத்திருக்கிறது. (அதுவும், 2015 அக்டோபர்-டிசம்பர் பொருளாதார வளர்ச்சி மதிப்பைக் குறைத்து –  ) – ஆனாலும், மத்திய வரி அதிகரித்தது என்னும் நிதிமந்திரியின் கூற்றில் ஒரு உண்மை உண்டு – அது விலை குறைந்து போன க்ரூட் ஆயிலின் மீது, அரசு அதிகரித்த கலால் வரியின் விளைவு என நான் ஊகிக்கிறேன்.


டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற ஒரு இங்லீஸ் தினத்தந்தி பேப்பரின் மீது வைக்கும் மதிப்பை, உலகின் மிகப் பெரும் பொருளாதார நிபுணர்களான இந்தியர்கள் மீதும் வையுங்கள். அமர்த்தியா சென்னும், மன்மோகன் சிங்கும் பெரும் அறிஞர்கள். பின்னர், உர்ஜித் படேல், பாராளுமன்றக் குழுவுக்கு முன்பு சாட்சியம் அளிக்கையில், ஒரு சங்கடம் விளைவிக்கும் கேள்வி எழ, மன்மோகன் சிங், உர்ஜித் படேலிடம் – நீங்கள் அதற்குப் பதில் அளிக்க அவசியமில்லை என அவரை விடுவித்தார். ஜி. எஸ். டி மசோதாவில், ஒரு தேவையில்லாத ஷரத்தை எடுத்து வாதித்துக் கொண்டிருந்த காங்கிரஸ் எம். பிக்களிடம் – அது தேவையில்லாதது – நாம் முன்னே செல்வோம் எனச் சொல்லி, அதை முன்னெடுக்க உதவினார்.


மன்னிக்கவும் – அவர்களையெல்லாம் விட, உங்களுக்கு அதிகம் பொருளாதாரம் தெரியும் என நான் நம்பவில்லை.


அடுத்த மிக முக்கிய புள்ளி


இது அரசியல்கட்டுரை மட்டுமே என்றால் கோபம் கொள்ளமாட்டீர்கள்தானே?


இந்தப் புள்ளியை சந்தேகமேயில்லாமல் ஒப்புக் கொள்கிறேன். எனது கட்டுரை எனது அரசியல் நிலையை நிச்சயமாகப் பிரதிபலிக்கிறது.


நான் உங்களுடன் நேரில் உரையாடுவதில்லை எனவும் யோசித்தேன் – உங்களுடன் நேரில் இருக்கும் போது, உங்களை உபசரிக்கவோ / நீங்கள் சொல்வதை மட்டுமே கேட்கவோ தான் தோன்றுகிறது. வாதிட மனம் வருவதில்லை. இலக்கியம் என என் மனதில், ஒரு குருவின் இடத்தில் இருத்தியிருக்கும் போது, வாதிட சங்கடமாக உள்ளது.


கடிதத்தில், எனக்கே எனக்கான ஸ்பேஸ் என ஒரு ஆறுதல். வாழ்த்த வயதில்லை, அதனால் திட்றோம் கேஸ். .


பாலா




தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 26, 2017 11:32

‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-3

2. பிறிதோன்


flowerதமனரின் குருநிலையில் நூலாய்வுக்கும் கல்விக்குமென தனிப்பொழுதுகள் ஒதுக்கப்பட்டிருக்கவில்லை. அவருடைய நான்கு மாணவர்களும் எப்போதும் அவருடன்தான் இருந்தனர். விழித்திருக்கும் பொழுதெல்லாம் அவர் அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அவர் கற்பிப்பதுபோல தோன்றவில்லை. சிலசமயம் நகையாடுவதுபோல சிலசமயம் கதைகள் சொல்வதுபோல அவ்வப்போது தனக்குள் என பேசிக்கொள்வதுபோலவே இருந்தது. இரவில் அவர்கள் அவருடைய குடிலிலேயே படுத்துக்கொண்டனர். ஒருவன் விழித்திருக்க பிறர் அவருக்கு பணிவிடை செய்தபின் அவர் துயின்றதும் தாங்களும் துயின்றனர்.


வேதமுடிபுக் கொள்கை சார்ந்த குருநிலை என்பதனால் வேள்விச்சடங்குகளோ நோன்புகளோ திருவுருப் பூசனை முறைமைகளோ அங்கு இருக்கவில்லை. “வழிபடுவது தவறில்லை. ஒன்றை வழிபட பிறிதை அகற்றநேரும். மலர்கொய்து சிலையிலிடுபவன் மலரை சிலையைவிட சிறியதாக்குகிறான்” என்றார் தமனர். “தூய்மை பிழையல்ல. தூய்மையின்பொருட்டு அழுக்கென்று சிலவற்றை விலக்குதலே பிழை.” குருநிலைக்குள் குடில்கள் மட்டுமே இருந்தன. “இங்கிருத்தல், இக்கணத்தில் நிறைதல், இதற்கப்பால் யோகமென்று பிறிதொன்றில்லை” என்றார் தமனர்.


முதற்புலரியில் எழுந்து சௌபர்ணிகையின் கயத்தில் நீராடி அருகிருந்த வெண்மணல் மேட்டின்மீது ஏறிச்சென்று கதிரெழுவதை நோக்கி விழிதிறந்து கைகள் கட்டி அமர்ந்திருப்பதன்றி ஊழ்கமென்று எதுவும் அவர் இயற்றவும் இல்லை. “கற்பவை ஊழ்கத்தில்தானே நம் எண்ணங்கள் என்றாகின்றன? ஊழ்கமில்லாத கல்வி பொருளற்றது என்றல்லவா நூல்கள் சொல்கின்றன?” என்று தருமன் கேட்டார்.


“ஆம். அறிவது அறிவாவது ஊழ்கத்திலேயே. ஆனால் ஊழ்கமென்பது அதற்கென்று விழிமூடி சொல்குவித்து சித்தம் திரட்டி அமர்ந்திருக்கையில் மட்டும் அமைவதல்ல. சொல்லப்போனால் அம்முயற்சிகளே ஊழ்கம் அமைவதை தடுத்துவிடுகின்றன. நாம் நோக்குகையில் நம் நோக்கறிந்து அப்பறவை எச்சரிக்கை கொள்கிறது. இந்த மரத்தைப் போல காற்றிலும் ஒளியிலும் கிளைவிரித்து நம் இயல்பில் நின்றிருப்போமென்றால் அச்சமின்றி அது வந்து நம்மில் அமரும். நூல் நவில்க! அன்றாடப் பணிகளில் மூழ்குக! உண்க! உறங்குக! சூழ்ந்திருக்கும் இக்காட்டின் இளங்காற்றையும் பறவை ஒலிகளையும் பசுமை ஒளியையும் உள்நிறைத்து அதிலாடுக! இயல்பாக அமையும் ஊழ்கத்தருணங்களில் நம் சொற்கள் பொருளென்று மாறும். வாழ்வதென்பது ஊழ்கம் வந்தமைவதற்கான பெரும் காத்திருப்பாக ஆகட்டும். அதுவே என் வழி” என்றார் தமனர்.


மிகச்சிறியது அக்குருநிலை. தமனரும் மாணவர்களும் தங்குவதற்கான குடிலுக்கு வலப்பக்கமாக விருந்திருனருக்கான இருகுடில்கள் இருந்தன. நெடுங்காலமாக அங்கு எவரும் வராததனால் அணுகி வரும் மழைக்காலத்தை எண்ணி விறகுகளைச் சேர்த்து உள்ளே அடுக்கி வைத்திருந்தனர். பாண்டவர்கள் நீராடி வருவதற்குள் மூன்று மாணவர்கள் அவ்விறகுகளை வெளியே கொண்டு வந்து அடுக்கி குடில்களை தூய்மை செய்தனர். நீர் தெளித்து அமையச் செய்திருந்தபோதிலும்கூட உள்ளே புழுதியின் மணம் எஞ்சியிருந்தது. கொடிகளில் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்த ஈச்சம் பாய்களை எடுத்து உதறி விரித்தனர். மரவுரிகளையும் தலையணைகளையும் பரப்பினர்.


தமனரின் முதல் மாணவனாகிய சுபகன் உணவு சமைத்துக்கொண்டிருந்தான். அருகே நின்று தமனர் அவனுக்கு உதவினார். நீராடி வந்த திரௌபதி அவர்கள் சமைத்துக்கொண்டிருந்த கலத்தைப் பார்த்து “இவ்வுணவு போதாது” என்றாள். தமனர் திரும்பி நோக்கி “இளைய பாண்டவரைப்பற்றி அறிந்திருந்தேன். ஆகவேதான் ஐந்து மடங்கு உணவு சமைக்க வேண்டுமென்று எண்ணினேன்” என்றார். திரௌபதி “பத்து மடங்கு” என்று சொல்லி புன்னகைத்துவிட்டு ஆடைமாற்றும் பொருட்டு குடிலுக்குள் சென்றாள். பீமன் தன் நீண்ட குழலுக்குள் கைகளைச் செலுத்தி உதறி தோளில் விரித்திட்ட பின் “விலகுங்கள் முனிவரே, நானே சமைத்துக் கொள்கிறேன். இது எனக்கு இனிய பணி. எளியதும் கூட” என்றான்.


“எனது மாணவன் உடனிருக்கட்டும். சமையற்கலையை அவன் சற்று கற்றுக்கொண்டால் உண்ணும்பொழுதும் எனக்கு ஊழ்கம் கைகூடலாம்” என்றார் தமனர் சிரித்தபடி. “உண்பது ஒரு யோகம்” என்றான் பீமன். “ஆம், நல்லுணவைப்போல சூழ்ந்திருக்கும் புவியுடன் நல்லுறவை உருவாக்குவது பிறிதில்லை என நான் எப்போதும் இவர்களிடம் சொல்வதுண்டு” என்றார் தமனர். பீமன் அடுதொழிலை தான் ஏற்றுக்கொண்டான். அரிசியும் உலர்ந்த கிழங்குகளும் இட்டு அன்னம் சமைத்தான். பருப்பும் கீரையும் சேர்த்த குழம்பு தனியாக கலத்தில் கொதித்தது. ஒருமுறைகூட அவன் விறகை வைத்து திருப்பி எரியூட்டவில்லை. வைக்கையிலேயே எரி வந்து அதற்காக காத்திருப்பதுபோலத் தெரிந்தது. “எரியடுப்பில் இப்படி விறகடுக்கும் ஒருவரை பார்த்ததில்லை” என்றான் சுபகன். “அனல் அங்கே வாய்திறந்திருக்கிறது. அதில் விறகை ஊட்டினேன்” என்றான் பீமன்.


அவர்கள் அனைவரும் அமர பீமன் பரிமாறினான். அவர்கள் உண்டபின் பீமன் உண்ணுவதை தமனரின் மாணவர்கள் சூழ்ந்து நின்று வியப்புடனும் உவகைச் சொற்களுடனும் நோக்கினர். பெரிய கவளங்களாக எடுத்து வாயிலிட்டு மென்று உடல் நிறைத்துக்கொண்டிருந்தான். அப்பால் குடில் திண்ணையில் அமர்ந்திருந்த தமனர் தன்னருகே அமர்ந்திருந்த தருமனிடம் “பெருந்தீனிக்காரர்கள் உணவுண்கையில் நம்மால் நோக்கி நிற்க முடியாது. அது ஒரு போர் என்று தோன்றும். உயிர் வாழ்வதற்கான இறுதித் துடிப்பு போலிருக்கும். இது அனலெழுவதுபோல, இனிய நடனம் போல இருக்கிறது. ஒவ்வொரு அசைவும் தன் முழுமையில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது” என்றார். தருமன் “ஆம். இளையோன் எதையும் செம்மையாக மட்டுமே செய்பவன்” என்றார். மெல்ல புன்னகைத்து “கதையுடன் களம் புகும்போதும் அழகிய நடனமொன்றில் அவன் இருப்பது போலவே தோன்றும்” என்றார்.


flowerஉணவுக்குப்பின் அவர்கள் நிலவின் ஒளியில் சௌபர்ணிகையின் கரையில் இருந்த மணல் அலைகளின்மேல் சென்று அமர்ந்தனர். எட்டாம் நிலவு அகன்ற சீன உளி போல தெரிந்தது. நன்கு தீட்டப்பட்டது. முகில்களை கிழித்துக்கொண்டு மெல்ல அது இறங்கிச்சென்றது. முகிலுக்குள் மறைந்தபோது மணற்பரப்புகள் ஒளியழிந்து வெண் நிழல்போலத் தோன்றின. முகில் கடந்து நிலவெழுந்து வந்தபோது அலைகளாகப் பெருகி சூழ்ந்தன.


“இனி எங்கு செல்வதாக எண்ணம்?” என்று தமனர் கேட்டார். அவ்வினா ஒவ்வொருவரையும் தனித்தனியாக வந்து தொட்டது போல அவர்கள் திரும்பிப்பார்த்தனர். திரௌபதி தன் சுட்டுவிரலால் மென்மணலில் எதையோ எழுதியபடி தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். தருமன் அவளை சிலகணங்கள் பொருளில்லாது நோக்கிவிட்டு திரும்பி “இப்போதைக்கு இலக்கென்று ஏதுமில்லை. எங்கள் கானேகலின் பன்னிரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஓராண்டு எவர் விழியும் அறியாது இருந்தாகவேண்டுமென்பது எங்கள் நோன்பு” என்றார்.


“ஆம், நிமித்த நூலின்படி அது வியாழவட்டத்தின் முழுமைஎச்சம். ஹோரை பன்னிரண்டில் ஒன்று” என்றார் தமனர். “பூசக முறைப்படி உங்களுடன் இணைந்துள்ள காட்டுத்தெய்வங்களை அகற்றுவதற்காக! உருமாறிக்கரந்த உங்களை அவை ஓராண்டுகாலம் தேடியலையும். உங்கள் ஆண்டு அவற்றுக்கு நாள்.” தருமர் சற்று சிரித்து “இப்பன்னிரு ஆண்டுகளில் நாங்கள் அடைந்தவையும் அறிந்தவையும் எழுபிறவிக்கு நிகர். அணுகியுற்ற தெய்வங்கள் பல. அவை எங்களை விட்டாலும் நாங்கள் விடுவோமென எண்ணவில்லை” என்றார்.


“அஸ்தினபுரியின் அரசரின் எண்ணம் பிறிதொன்று என எண்ணுகிறேன்” என்றார் தமனர். “நீங்கள் காட்டிலிருந்தபோதும்கூட ஒவ்வொருநாளும் மக்கள் உள்ளத்தில் வாழ்ந்தீர்கள். அங்கு நீங்கள் கண்ட முனிவரைப்பற்றியும் வென்ற களங்களைப்பற்றியும் ஒவ்வொருநாளும் இங்கு கதைகள் வந்துகொண்டிருந்தன. அனைவரிடமிருந்தும் மறைந்தீர்கள் என்றால் இறந்தீர்கள் என்றே சொல்லிப்பரப்ப முடியும். அவ்வண்ணம் பேச்சு அவிந்ததே அதற்குச் சான்றாகும்.”


“ஆம், எவருமறியாமல் தங்கும்போது எங்களால் படைதிரட்ட முடியாது, துணைசேர்க்க இயலாது. குழிக்குள் நச்சுப்புகையிட்டு எலிகளைக் கொல்வதுபோல கொன்றுவிட்டால் அனைத்தும் முடிந்துவிடும்” என்றான் பீமன். “கொல்வதும் புதைப்பதும் வெவ்வேறாகச் செய்யவேண்டியதில்லை அல்லவா?” தமனர் ஏதோ சொல்ல நாவெடுக்க தருமன் “அவன் எப்போதும் ஐயுறுபவன், முனிவரே” என்றார். “அவரது ஐயம் பிழையும் அல்ல” என்றார் தமனர்.


“பாரதவர்ஷத்தில் பிறர் அறியாமல் நாங்கள் இருக்கும் இடம் ஏதென்று கண்டடைய முடியவில்லை. பிறந்த முதற்கணம் முதல் சூதர் சொல்லில் வாழத்தொடங்கிவிட்டோம். எங்கள் கதைகளை நாங்களே கேட்டு வளர்ந்தோம். செல்லுமிடமெங்கும் நாங்களே நிறைந்திருப்பதையே காண்கிறோம்” என்றான் நகுலன். தமனர் புன்னகையுடன் தன் தாடியை நீவியபடி “உண்மை. நெடுங்காலத்துக்கு முன் நான் தமிழ்நிலத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு வழியம்பலம் ஒன்றில் இரவு தங்குகையில் தென்புலத்துப் பாணன் ஒருவன் தென்மொழியில் கிருஷ்ண துவைபாயன வியாசரின் பாடல்களைப் பாடுவதை கேட்டேன். உங்கள் புகழ் இலாத இடமென்று பாரத வர்ஷத்தில் ஏதுமில்லை” என்றார்.


தருமன் கசப்புடன் “ஆம். ஆகவேதான் காடுகளை தேடிச் செல்கிறோம். மனிதர்களே இல்லாத இடத்தில் மொழி திகழாத நிலத்தில் வாழ விழைகிறோம்” என்றார். “எந்தக்காட்டில் வாழ்ந்தாலும் தனித்து தெரிவீர்கள். அஸ்தினபுரியின் அரசன் தன் ஒற்றர்களை அனுப்பி மிக எளிதில் உங்களை கண்டடைய முடியும்” என்று தமனர் சொன்னார். “ஆம். நானும் அதையே எண்ணினேன்” என்றான் சகதேவன். “மனிதர்கள் மறைந்துகொள்ள மிக உகந்த இடம் மனிதச் செறிவே” என்றார் தமனர். “உங்கள் முகம் மட்டும் இருக்கும் இடங்கள் உகந்தவை அல்ல. உங்கள் முகம் எவருக்கும் ஒரு பொருட்டாகத் தோன்றாத இடங்களுக்கு செல்லுங்கள்.”


“அங்கு முன்னரே எங்கள் கதைகள் சென்றிருக்கும் அல்லவா?” என்றார் தருமன். “செல்லாத இடங்களும் உள்ளன. காட்டாக, நிஷத நாட்டை குறிப்பிடுவேன்” என்று தமனர் சொன்னார். “நிஷதர்கள் வேதத்தால் நிறுவப்பட்ட ஷத்ரியகுடியினர் அல்ல. விதர்ப்பத்திற்கு அப்பால் தண்டகாரண்யப் பெருங்காட்டில் பிற தொல்குடிகளை வென்று முடிகொண்ட பெருங்குடி அவர்கள். பதினெட்டாவது பரசுராமர் அவர்களின் மூதாதையாகிய மகாகீசகனுக்கு அனல்சான்றாக்கி முடிசூட்டி அரசனாக்கினார். அவன் அனல்குலத்து ஷத்ரியனாகி ஏழுமுறை படைகொண்டுசென்று பன்னிரு ஷத்ரியகுடிகளை அழித்தான். அவன் கொடிவழியில் வந்த விராடனாகிய உத்புதன்   இன்று அந்நாட்டை ஆள்கிறான்.”


“நிஷதத்தின் அரசர்கள் தங்கள் நாட்டிற்குள் பிறஷத்ரியர்களின் புகழ் பாடும் சூதர்கள் எவரையும் விட்டதில்லை. எனவே உங்கள் கதைகள் எதுவும் அங்கு சென்று சேர்ந்ததுமில்லை. நிஷத அரசனின் மைத்துனன் கீசகன் தன்னை பாரத வர்ஷத்தின் நிகரற்ற தோள்வீரன் என்று எண்ணுகிறான். அவன் குடிகள் அவ்வாறே நம்ப வேண்டுமென்று விழைகிறான். எனவே உங்களைக் குறித்த சொற்கள் எதுவுமே அவ்வெல்லைக்குள் நுழைய அவன் ஒப்பியதில்லை. மாற்றுருக்கொண்டு நீங்களே நுழையும்போது அவனால் உங்களை அறியவும் முடியாது.”


“அவன் எங்களை அறிந்திருப்பான் அல்லவா?” என்று தருமன் கேட்டார். “ஆம். நன்கறிந்திருப்பான். இளமை முதலே உங்கள் ஐவரையும், குறிப்பாக பெருந்தோள் பீமனையும் பற்றிய செய்திகளையே அவன் எண்ணி எடுத்து சேர்த்துக் கொண்டிருக்கிறான். அவன் உள்ளத்தில் ஒவ்வொரு கணமும் நீங்களே வாழ்கிறீர்கள். ஆனால் நேரில் நீங்கள் சென்றால் அவனால் உங்களை அடையாளம் காண முடியாது. ஏனெனில் அவனறிந்தது அச்சத்தால், தாழ்வுணர்ச்சியால் பெருக்கப்பட்ட வடிவத்தை. மெய்யுருவுடன் நீங்கள் செல்கையில் இத்தனைநாள் அவன் உள்ளத்தில் நுரைத்துப் பெருகிய அவ்வுருவங்களுடன் அவனால் உங்களை இணைத்துப்பார்க்க இயலாது. அரசே, நெடுநாள் எதிர்பார்த்திருந்த எவரையும் நாம் நேரில் அடையாளம் காண்பதில்லை” என்றார் தமனர்.


தருமன் “ஆம், அவ்வாறு நிகழ வாய்ப்புள்ளது” என்றார். “மாற்றுருக்கொள்வதென்பது ஒரு நல்வாய்ப்பு” என்றார் தமனர். “பிறந்த நாள் முதல் நீங்கள் குலமுறைமைகளால் கல்வியால் கூர்தீட்டப்பட்டீர்கள். காட்டுக்குள் அக்கூர்மையைக் கொண்டு வென்று நிலைகொண்டீர்கள். இன்று பன்னிருநாட்கள் உருகி பன்னிரு நாட்கள் கரியுடன் இறுகி இருபத்துநான்கு நாட்கள் குளிர்ந்துறைந்த வெட்டிரும்பு என உறுதி கொண்டிருக்கிறீர்கள். உங்களை நீங்களே முற்றிலும் துறப்பதற்குரியது இந்த வாழ்வு. நீங்கள் என நீங்கள் கொண்ட அனைத்தையும் விலக்கியபின் எஞ்சுவதென்ன என்று அறிவதற்கான தவம்.”


“மாற்றுருக்கொள்வது எளிதல்ல” என்றார் தமனர். “உடல்தோற்றத்தை மாற்றிக்கொள்ளலாம். உள்ளத்தை மாற்றிக்கொள்ளாவிட்டால் விழிகள் மாறாது. உடலில் அசைவுகளென வெளிப்படும் எண்ணங்கள் மாறாது. உள்ளே மாறாது வெளியே மாறியவனை தொலைவிலிருந்து நோக்கினால் மற்போரில் உடல்பிணைத்து திமிறிநிற்கும் இருவரை பார்த்ததுபோலத் தோன்றும்.” தருமன் “நாம் நமக்குரிய மாற்றுருவை கண்டுபிடிக்கவேண்டும், இளையோனே” என்று சகதேவனிடம் சொன்னார்.


“மாற்றுருவை வெளியே இருந்து கொண்டுவந்து அணியமுடியாது” என்றார் தமனர். “அவ்வுரு உங்கள் உள்ளே முன்னரும் இருந்துகொண்டிருக்கவேண்டும். உங்கள் விழியிலும் உடலசைவிலும் அதுவும் வெளிப்பட்டுக்கொண்டிருக்கவேண்டும். அரசே, மானுட உடலில் ஓர் ஆளுமை மட்டுமே குடியிருப்பதில்லை. ஒரு மரத்தில் பல தெய்வங்கள் என நம்முள் பலர் உள்ளனர். ஒருவரை நாம் நம்பி மேலெழுப்பி பிறர்மேல் அமரச்செய்கிறோம். அவருக்கு பிறரை படையும் ஏவலும் ஆக்குகிறோம். அவ்வாறு நம்முள் உள்ள ஒருவரை மேலெழுப்புவதே மிகச்சிறந்த மாற்றுருக்கொள்ளல்.”


“அவரும் நம்முருவே என்பதனால் நாம் எதையும் பயிலவேண்டியதில்லை. அடக்கப்பட்டு ஒடுங்கியிருந்தவராதலால் அவர் வெளிப்படுகையில் முழுவிசையுடன் பேருருக்கொண்டே எழுவார். அவரை எழுப்பியபின் அவருக்கு நம் பிறவுருக்களை ஒப்புக்கொடுத்தால் மட்டும் போதுமானது” தமனர் தொடர்ந்தார் “அவர் நமக்கு ஒவ்வாதவராக முதல்நோக்கில் தோன்றலாம். ஏனென்றால் அவ்வெறுப்பையும் இளிவரலையும் உருவாக்கி அதை கருவியெனக் கொண்டே நாம் அவரை வென்று ஆள்கிறோம். அவரைச் சூடுவதென்பது முதற்கணத்தில் பெருந்துன்பம். சிறு இறப்பு அது. ஆனால் சூடியபின் அடையப்பெறும் விடுதலை பேருவகை அளிக்கக்கூடியது. ஒருமுறை அவ்வுருவைச் சூடியவர் பின்னர் அதற்கு திரும்பிச்சென்றுகொண்டேதான் இருப்பார்.”


அவர்களின் விழிகள் மாறின. “அவை எது என உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளவேண்டியதில்லை. ஏனென்றால் நீங்கள் வென்று கடந்தது அது. வெறுத்து ஒதுக்கியது. உங்களுக்கு அணுக்கமானவர்கள் அதை அறிந்திருப்பார்கள். அதை அவர்களும் விலக்கிக்கொண்டேதான் இருப்பார்கள். அதை விலக்காமல் நீங்கள் அளிக்கும் உங்கள் உருவை அவர்கள் முழுதேற்க முடியாது. அதை முழுதேற்காமல் உங்களுடன் நல்லுறவும் அமையாது. ஆனால் எவருக்கும் எந்த மானுடருடனும் முழுமையான நல்லுறவு அமைவதில்லை. ஏனென்றால் எவரும் பிறர் தனக்களிக்கும் அவர் உருவை முழுமையாக நம்பி ஏற்பதில்லை” என்று தமனர் சொன்னார்.


“அவர்கள் உங்களை வெறுக்கும்போது, கடுஞ்சினம் கொண்டு எழும்போது நீங்கள் அளித்த உருவை மறுத்து பிறிதொன்றை உங்கள்மேல் சூட்டுவார்கள். அது உங்களை சினமூட்டும் என்பதனால் அதை ஒரு படைக்கருவியென்றே கைக்கொள்வார்கள். உங்களை சிறுமைசெய்யும் என்பதனால் உங்களை வென்று மேல்செல்வார்கள். அது என்ன என்று அவர்களிடம் கேளுங்கள். அதுவே உங்கள் மாற்றுரு” என்றார் தமனர். “அல்லது அவர்களின் கனவில் நீங்கள் எவ்வண்ணம் எழுகிறீர்கள் என்று கேளுங்கள்.” அவர்கள் அமைதியின்மை அகத்தே எழ மெல்ல அசைந்தனர். தருமன் “ஆனால்…” என்று ஏதோ சொல்லத் தொடங்கினார்.


“இது நோன்பு. நோன்பென்பது துயரைச் சுவைத்தல்” என்றார் தமனர். “அவர்கள் சூட்டும் அவ்வடிவை மாற்றுருவென்று சூடினால் அவ்வுருவில் முழுதமைவீர்கள். எவரும் ஐயுறாது எங்கும் மறைய முடியும். பன்னிரு ஆண்டுகள் ஆற்றிய தவத்தின் முழுமை இது. இது கலைந்தால் மீண்டும் அடிமரம் தொற்றி ஏறவேண்டியிருக்கும்.” தருமன் “ஆனால் வேண்டும் என்றே நம் மீது பொய்யான உருவம் ஒன்றை சுமத்துவார்களென்றால் என்ன செய்வது?” என்றார். “அவர்கள் சொல்லும்போதே நாம் அறிவோம் அது மெய்யென்று” என்றார் தமனர். “சினம்கொண்டு வாளை உருவினோமென்றால் அதுவே நாம்.” சிரித்து “அணுக்கமானவர்கள் அவ்வாறு பொருந்தா உருவை நமக்களிக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்களால் நம்மை அவ்வாறு உருக்காணவே இயலாது.”


தருமன் பெருமூச்சுவிட்டுக்கொண்டு தலைகுனிந்து அமர்ந்திருந்தார். “உங்கள் உருவை தெரிவுசெய்க! அதன்பின்னர் நிஷதத்திற்குச் செல்லும் வழியென்ன என்று நான் சொல்கிறேன்” என்றபின் தமனர் எழுந்து தன் மாணவர்களுக்கு தலையாட்டிவிட்டு நடந்தார்.


flowerநிலவொளியில் அறுவரும் ஒருவரை ஒருவர் நோக்காமல் அமர்ந்திருந்தார்கள். “அறுவரும் இன்று காய்ந்து கருமைகொண்டு மாற்றுருதான் சூடிக்கொண்டிருக்கிறோம்” என்றார் தருமன். பீமன் “அது இக்காட்டில். நிஷதத்திற்குள் நுழைந்தால் மீண்டும் நாம் நகரியர் ஆகிவிடுவோம். பதினைந்து நாட்களில் நம் அரசத்தோற்றம் மீளும். குரலும் உடலசைவும் அவ்வண்ணமே ஆகும். எவை மாறவில்லை என்றாலும் ஒரேநாளில் விழிகள் மாறிவிடும்” என்றான். “ஏன் நாம் அரண்மனைக்கு செல்லவேண்டும்?” என்றார் தருமன் எரிச்சலுடன். “மூத்தவரே, வேறெங்கும் நம் தோற்றம் தனித்தே தெரியும்” என்றான் நகுலன்.


“சரி, அப்படியென்றால் அவர் சொன்னதுபோலவே மாற்றுருகொள்ளப் போகிறோமா என்ன?” என்றார் தருமன். “ஆம், அது ஒன்றே வழி என எனக்குப்படுகிறது. அஸ்தினபுரி நம்மை அப்படி தப்பவிடாது. இயன்றதில் முழுமையை அடைந்தாகவேண்டும். இல்லையேல் மீண்டும் பன்னிரு ஆண்டுகள்” என்றான் சகதேவன். “என்ன சொல்கிறாய்? நாம் சூடவேண்டிய மாற்றுருவை பிறர் சொல்லவேண்டுமா?” என்று தருமன் கேட்டார். “நமக்குள் என்ன மந்தணம்? நாம் நம்மை நன்கறிவதற்கான தருணம் இது என்று கொள்ளலாமே” என்றான் பீமன். சகதேவன் புன்னகைத்து “எளியவர்களின் மாற்றுருக்கள் அவர்களின் முதன்மையுருவிலிருந்து பெரிதும் வேறுபடாதென்று எண்ணுகிறேன். மாமனிதர்களின் பெருந்தோற்றத்தின் அளவு அவர்களின் முதலுருவுக்கும் இறுதியுருவுக்குமான இடைவெளிதான் போலும்” என்றான்.


“சொல் தேவி, நம் இளையோன் சூடவேண்டிய தோற்றம் என்ன?” என்றான் பீமன். திரௌபதி ஏறிட்டு சகதேவனை நோக்கியபின் தலையசைத்தாள். “சொல்!” என்றான் பீமன் மீண்டும். “இவர் யார்? எளிய கணியன். நயந்துரைத்து பரிசில் பெற்று மகிழ்ந்திருக்கும் சிறியோன். பிறிதொன்றுமல்ல” என்றாள் திரௌபதி. சகதேவன் “ஆனால்…” என நாவெடுத்தபின் “ஆம்” என்றான். “சொல்க, அவர் எவர்?” என்று திரௌபதி பீமனிடம் கேட்டாள். “அவன் சூதன். குதிரைச்சாணிமணம் விலகா உடல்கொண்டவன். சவுக்கடி முதுகில் விழும்போது உடல்குறுக்க மட்டுமே தெரிந்தவன்” என்றான் பீமன். “மூத்தவரே…” என்று சகதேவன் வலிமிகுந்த குரலில் அழைத்தான். “சொல், நீ பிறிதென்ன? பாண்டவன் என்றும் இந்திரப்பிரஸ்தத்தின் இளவரசன் என்றும் நீ நடிக்கிறாய் அல்லவா?” என்றான் பீமன்.


நகுலன் சினத்துடன் “அவ்வண்ணமென்றால் நீங்கள் யார்? சொல்க, நீங்கள் யார்? நான் சொல்கிறேன். அடுமடையன். அடிதாங்கி தலைக்கொள்ளும் அடிமை. அரண்மனைப்பெண்டிருக்கு முன் வெற்றுடல் காட்டி நடமிடும் கீழ்க்களிமகன்” என்றான். பீமனின் உடல் நடுங்கியது. கைகள் பதறியபடி மணலில் உலவி ஒரு கை மணலை அள்ளி மெல்ல உதிர்த்தன. “சொல்க, மூத்தவரே நான் யார்?” என்று அர்ஜுனன் கேட்டான். பீமன் திடுக்கிட்டு நோக்கி “மூத்தவர் சொல்லட்டும்” என்றான். “இங்கு நாம் ஒருவர் குருதியை ஒருவர் அருந்தவிருக்கிறோமா?” என்றார் தருமன். “சொல்லுங்கள், மூத்தவரே” என்றான் பீமன்.


“இல்லை” என்று தருமன் தலையசைத்தார். மெல்லியகுரலில் திரௌபதி “நான் சொல்கிறேன்” என்றாள். அனைவரும் அவளை நோக்கி திரும்பினர். “பேடி. பெண்டிருக்கு நடனம் கற்பிக்கும் ஆட்டன். ஆணுடலில் எழுந்த பெண்.” அர்ஜுனன் உரக்கநகைத்து “அதை நான் அறிவேன். அது நான் அணிந்த உருவமும்கூட” என்றான். தருமன் தளர்ந்து “போதும்” என்றான். “சொல்லுங்கள் மூத்தவரே, திரௌபதி யார்?” என்றான் அர்ஜுனன். தருமன் “வேண்டாம்” என்றார். “சொல்க, தேவி யார்?” என்றான் பீமன். மெல்லியகுரலில் “சேடி” என்றார் தருமன். “சமையப்பெண்டு. நகம்வெட்டி காலின் தோல் உரசி நீராட்டி விடுபவள். தாலமேந்துபவள்.”


பெருமூச்சுடன் பாண்டவர் அனைவரும் உடல் அமைந்தனர். திரௌபதி “நன்று” என மணலை நோக்கியபடி சொன்னாள். ஆனால் அவள் உடல் குறுகி இறுக்கமாக இருப்பதை காணமுடிந்தது. பின்னர் அவள் மணலை வீசிவிட்டு செல்வதற்காக எழுந்தாள். “அமர்க தேவி, மூத்தவரின் உரு என்ன என்பதை அறிந்துவிட்டு செல்வோம்” என்றான் அர்ஜுனன். “அதை நாம் செய்யவேண்டாம்” என்றான் நகுலன். “ஆம்” என்றான் சகதேவன். பீமன் “இல்லை, அதுவும் வெளிப்பட்டால்தான் இந்த ஆடல் முழுமையடையும்” என்றான். “சொல்க, தேவி!” என்றான் அர்ஜுனன்.


“சொல்கிறேன், நான் சொல்வதில் நால்வரில் எவருக்கு மாற்றுக்கருத்து இருந்தாலும் இதை பிழையென்றே கொள்வோம்” என்றாள் திரௌபதி. “சொல்க!” என்றான் அர்ஜுனன். நால்வரும் அவளை நோக்கினர். பதைப்புடன் மணலை அள்ளியபடி தலைகுனிந்து அமர்ந்திருந்தார் தருமன். “சகுனி” என்றாள் திரௌபதி. “நாற்களத்திறவோன். தீயுரை அளிப்போன். அரசனின் ஆழத்திலுறையும் ஆணவத்தையும் கீழ்மையையும் கருக்களாக்கி ஆடுவோன்.”


NEERKOLAM_EPI_03


“இல்லை” என்றபடி தருமன் பாய்ந்தெழுந்தார். “இது வஞ்சம். என் மேல் உமிழப்படும் நஞ்சு இது.” ஆனால் அவர் தம்பியர் நால்வரும் அமைதியாக இருந்தனர். “சொல்… இதுவா உண்மை?” என்று தருமன் கூவினார். ஐவரும் சொல்லில்லாமல் நோக்கி அமர்ந்திருக்க “இல்லை இல்லை” என்றார். பின்னர் தளர்ந்து மணலில் விழுந்து “தெய்வங்களே” என்றார்.


தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-2
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–45
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–12
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–9
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–8
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–7
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–6
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–5
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 60
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 55
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 54
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 49
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 23
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 17
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 16
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 12
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ – 3
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 88
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 79
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 77
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 26, 2017 11:30

May 25, 2017

பெருவெள்ளம்

one-world-one-future


அன்பின் ஜெ.மோ அவர்களுக்கு வணக்கம்.


’புலம் பெயர்ந்த ஒரு நீண்ட கால வனவாசம்’ என் வாழ்விலும் கடந்துபோனது. அப்பொழுது தமிழக எழுத்தாளர்களைப் பற்றி ‘வாசிப்பு பழக்கமுள்ள’ பிரவாச  மலையாளிகளிடம் அடிக்கடி புழங்கிய பெயர் தங்களுடையது.  குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் கைராளியின் ‘குன்னி முஹம்மது’ம் ஏசியாநெட்-ன் கோபுகுமாரிடமும் அவ்வாறு கூறக் கேட்டேன்.


திருக்குறளுக்கு ‘சுஜாதா’வும் அதன்பிறகு ‘பட்டுக்கோட்டை’ பிரபாகர் எழுதிய மொழிபெயர்ப்பு அல்லது சுருக்கமான விளக்கத்தால் கவரப்பட்டு திருக்குர்ஆனை அப்படி தமிழில் கொண்டு முடியுமா என்கிற முயற்சியில் ஈடுபட்டு ஒரு மொழியாக்கத்தை – அல்லாஹ் என்கிற பெயர்ச்சொல்லை தவிர்த்து வேறு எந்த அரபு அல்லது உருது சொல்லையும் கலக்காமல் ஒரு மொழியாக்கம் செய்ய உத்தேசித்து குழுவாக அதை சாத்தியப்படுத்தினோம். அதன் பிரதியை தங்களுக்கும் அனுப்பி வைக்கிறேன்.


மகிழ்ச்சியான ஒரு செய்தி என்னவென்றால், அக்குழுவில் இருந்த ஆறு பேரில் மூவர் தங்களை நன்கு அறிந்தவர்கள் – அதாவது தங்களின் எழுத்தின் ஊடாக. குறிப்பாக நானும், கடையநல்லூர் ஷாஹுல் ஹமீதும் தங்களின் அனைத்து (?) நூல்களையும் வாசித்தவர்கள், குறிப்பாக ‘வெண்முரசு’ தொடரை தினந்தவறாமல் வாசிக்கும் பழக்கமுடையவர்கள். தங்களின் நண்பர் மதுரை சதகத்துல்லா ஹசனி-க்கு இதெல்லாம் நன்கு தெரியும். சரி – கேட்க வந்ததை கேட்டு விடுகிறேன்.


‘கீதை’யை சுருக்கியெல்லாம் புரிந்துக் கொள்ளமுடியாது என்கிறீர்கள். இன்றைய ‘தி இந்து – தமிழ் பதிப்பு’ தலையங்கத்தில் ‘கணிசமான இளைஞர் கூட்டம் இன்று நொடி வாசிப்பு கலாச்சாரத்தில் சிக்கியிருக்கும் நிலையில் அவர்களை வளர்த்தெடுக்க அவர்கள் மத்தியில் நிமிடக் கட்டுரைகளினூடே இனி புழங்க முற்படுகிறோம்’ என்றும் பதிவுகள் மேலும் எளிமையாகவும் சுருக்கமாகவும் சுவாரசியமாகவும் மாற்றப்படும் என்றும் கூறுகிறது.


கூடவே என்னை சங்கடப்படுத்திவரும் விஷயம் ஒன்றை பகிர்ந்துகொள்கிறேன். 89 முதல் சென்னை புத்தக கண்காட்சிக்கு வந்துகொண்டிருக்கிறேன். குறைந்தபட்சம் கால் நூற்றாண்டு வாசிப்பு பழக்கம் இருக்கிறது. அந்த பெரும் பயணத்தை வாசிப்பு பழக்கமுள்ள கணிசமானவர்களைப் போல இடதுசாரிகளுடனேயே நடந்திருக்கிறேன். இதற்காக ‘முஸ்லிம் அடிப்படைவாதி’களால் ‘காஃபிர்’ கூட ஏன் சுற்றுகிறாய் என்றும் வையப்பட்டிருக்கிறேன். இருந்தும் அவர்களையெல்லாம் விட்டுவிட்டு உங்களிடம் கேட்க தோன்றியது – அதனால் கேட்கிறேன்.


’கை வீசம்மா கை வீசு – கடைக்கு போகலாம் கைவீசு என்கிற எளிமையான பாடல் கடந்த பல தலைமுறைகளாக நாமெல்லாம் நம் குழந்தைப் பருவத்தில் மொழியை சாதாரண பாடலின் வழியாக கற்றுவருகிறோம். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு என் தாயும் அதை சொல்லிக் கொடுத்த நினைவு உள்ளது.


ஆனால் மிக தாமதமாக பிறந்த என் மகன் அப்துல்லா படிக்கும் மழலைப் பள்ளிக்கூடத்தில் இதே பாடல் சொல்லித்தரப்பட்டிருக்கிறது. முன்கதை சுருக்கமாக அந்த பள்ளிக்கூடம் முஸ்லிம்களால் நடத்தப்படும் பள்ளிக்கூடம் என்பதையும் முதலிலேயே சொல்லிவிடுகிறேன். அந்த பாடலின் இடையே வரும் வரியான ‘கோவிலுக்கு போகலாம் கைவீசு’ என்பதை பாடிய அல்லது முணுமுணுத்த ஒரு குழந்தையின் குடும்பத்தில் அரசல் புரசலாக பேசப்பட்ட விஷயம், இன்று அந்த ‘முஹல்லா’விலுள்ள ‘அடையாள மீட்டெடுப்பு அரசியல்’ செய்யும் முஸ்லிம் இயக்கங்களால் விவாத பொருளாக மாற்றப்பட்டுள்ளது.


70-களின் மத்தியில் எனக்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட அதே பாடல் என் பெற்றோர்களால் சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. என் வாழ்வில் பல நூறு முறை கோயில்களுக்கும், தேவலாயங்களுக்கும் போய்வந்திருப்பது என் ‘ஈமான்’-ல் மத நம்பிக்கையில் எனக்கு எந்த பாதிப்பையும் தரவில்லை. அதற்காக எம்மதமும் சம்மதம் என்று நான் பேசாவிட்டாலும் ஏனெனில் என் நிலைப்பாடு ‘பிற தெய்வங்களை நிந்திக்காதீர்கள்’ என்கிற திருக்குர்ஆனின் 06:108 வசனத்தோடும், ‘அவர்களின் மார்க்கம் அவர்களுக்கு – உனது மார்க்கம் உனக்கு’ திருக்குர்ஆன் அத்தியாயம் 109-ன் சாரம் அது என்பதான புரிதல் எனக்கு உள்ளது.


நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 70-களின் மத்தியில் என் தாயாருக்கு உறுத்தாத ஒரு மழலைப்பாடல் இன்று வேறுவிதமாக பொருள் கொள்ளப்பட என்ன காரணம் இருக்கமுடியும்? இங்கு அவர்கள் மண்டைக்காடு முதல் சமீபத்திய கோவைக் கலவரம் வரை பலநூறு எடுத்துக்காட்டுகளை காட்டி பேசுகின்றனர். ஒருவேளை அது போன்ற ‘புறக்காரணிகள்’ பூதாகரமானதாக இப்பொழுதைய இளம் தாய்-க்கு தோன்றியிருக்கலாம். ஆனால் அதுவல்ல எனது அச்சம்.


80-களில் இங்கு, தமிழகத்தில் தோன்றிய ‘தூய்மைவாத இஸ்லாம்’ பேசுபவர்களால் குறிப்பாக எங்கள் மாவட்டத்தில் வீட்டில் உருதுவும், வீதியில் தமிழும் பேசக்கூடிய ‘தேவ்பந்தி’ (வட இந்திய பழமைவாத) முல்லாக்களின் பிரச்சாரம் போன்றவை இந்த எளிய மக்களை மென்மேலும் உள்ளொடுங்கி போக வைப்பதும், அவர்கள் மைய நீரோட்டத்தில் கலந்துகொள்ளமுடியாமல் தனித்தொரு தீவுகளாக மாறிப்போவதையும் மிகவும் கவலையோடும், பயத்தோடும் எதிர்கொள்கிறேன்.


மூன்றரை வயதேயான எனது மகன் ‘அப்துல்லா’ “கும்பிட்டு வரலாம் கைவீசு” என்பதை அபிநயத்தோடு பாடிய ‘கணம்’ கைபேசியில் படம்பிடித்து வைத்திருக்கிறேன். எனது மரபு, எனது முப்பாட்டனின் தொடர்ச்சியை அவனில் கடத்திவிட்ட மகிழ்ச்சியும், பூரிப்பும், பரவசமும் ஏன் தடுக்கப்படுகிறது என்பது எனக்கு விளங்கவில்லை. ஒருவேளை தங்களுக்கு இது ஒரு பெரிய பிரச்சனையாக தெரியாது. ஆனால் என் வேர்களை வெட்டியதில் ‘இந்து வலதுசாரிகளுக்கு இருந்த அல்லது இருக்கின்ற பங்கைவிட என் சொந்த சமூகத்திலிருக்கும் ஒருசாராருக்கே பெரும் பங்கு உண்டு’ என்பதை ஜுரணிக்கமுடியவில்லை. அதை எப்படி கடந்துசெல்வது என்பது என்னளவில் பெருங்கவலை.


கொள்ளு நதீம், ஆம்பூர்


***


அன்புள்ள  கொள்ளு நதீம்  அவர்களுக்கு,


உங்கள் கடிதம் வந்து நெடுநாள் ஆகிறது அதற்கு ஒரு பதில் எழுத வேண்டுமென்று எடுத்து வைத்தேன். பின்னர் ஒரு சோர்வு. இன்றைய சூழலில் எந்த ஒரு பதிலும் பிழையாகவே புரிந்து கொள்ளப்படுகிறது. பிழைகளைப் பெருக்கி இஸ்லாமியரையும் பிறரையும் அகற்றும் வெறியுடன் களமிறங்கியிருக்கிறார்கள் பலர். முற்றிலும் வேறுபட்ட கருத்தியல்கள் கொண்டவர்கள், ஆனால் ஒரே செயலைச் செய்துகொண்டிருக்கிறார்கள். அத்தனைபேரும் உச்சகட்டப் பதற்றத்துடன் வாள்சுழற்றிக் கொண்டிருக்கிறார்கள்.


இன்றி இன்றிருக்கும் மிதமிஞ்சிய ஊடகச் சூழல்தான் இதற்கு காரணம் என்று நினைக்கிறேன். ஒரு பூதக்கண்ணாடி போல அது அனைத்தையும் மும்மடங்கு பெருக்குகிறது. வெறுப்புகளை விரைவில் பெருவதானால் அது முன்னூறு மடங்காகிவிடுகிறது. சாதாரணமாக வலைதளங்களுக்குச் சென்று பார்த்தால் அதீதமான எதிர்மறை வேகத்துடன் எழுதப்படும் கட்டுரைகள்தான் அதிகமாகத் தென்படுகின்றன. யாரோ யாரையோ மிதமிஞ்சிய வெறுப்புடன் வசைபாடிக் கொண்டிருக்கிறார்கள். நுண்சதிகளைக் கண்டுபிடிக்கிறார்கள். துரோகிகளைப் பட்டியலிடுகிறார்கள்.


ஆனால் நேற்று இன்னொரு கடிதம் வந்தது. புரிந்துகொள்வதற்கான ஒரு மெல்லிய முயற்சி அது. தயக்கத்துடன் கூடிய ஒரு கைகுலுக்கல். அது ஒரு நம்பிக்கையை அளித்தது. திரும்பத்திரும்ப இந்த மாதிரி விஷயங்களை எழுதிப் பதிவு செய்துகொண்டே இருக்கலாம் என்று தோன்றுகிறது.


இருபதாண்டுகளுக்கு முன்பு ஒருமுறை ஒரேநாளில் அட்டப்பாடியில் ஒரு பழங்குடி இல்லத்த்திற்கும் ஒரு உயர்குடி தொழிலதிபர் இல்லத்திற்கும் செல்லும் அனுபவம் அமைந்தது. அந்தப் பழங்குடிக் குடும்பமே முகமலர்ச்சியுடன் எங்களை எதிர்கொண்டது. மீண்டும் மீண்டும் பலவகையில் உபசரித்தது. ஒரு தேவதூதனைப்போல நாங்கள் உணர்ந்தோம். அன்று மாலையே பாலக்காட்டில் ஒரு புகழ்பெற்ற தொழிலபதிரின் இல்லத்திற்கு செல்ல நேர்ந்தது. நாங்கள் வருவதை முன்னரே அறிவித்து அனுமதி பெற்றிருந்தோம். அவர் இல்லத்தில் அவர் மட்டுமே எங்களை வரவேற்றார். மிகக்குறைந்த சொற்களில் உரையாடினார். விருந்தினரை வரவேற்பதற்கு என ஒரு தனி அறை அவர் இல்லத்திற்கு அருகே தனியாக அமைக்கப்பட்டிருந்தது. இல்லத்தின் பிறபகுதிகளில் எங்கும் விருந்தினருக்கு அனுமதியில்லை. வேலையாள் காப்பி கொண்டு வைத்தார். விருந்தினருக்கு என்றே ஒதுக்கப்பட்டுள்ள விலைமதிப்புள்ள அழகியகோப்பைகள். முறையான உபசாரச் சொற்களை அவர் சொன்னார். தேவையானவற்றை பகிர்ந்துகொண்டார். இருபது நிமிடங்களில் விடை கொடுத்து உபசாரச்சொற்களைச் சொல்லி அனுப்பி வைத்தார்.


பழங்குடியினரின் இல்லத்தில் மொத்த வீடே எங்களை நோக்கித் திறந்திருக்க இங்கு எங்களுடைய இடத்தை அந்த தொழிலதிபர் வரையறை செய்திருந்தார். இவ்வளவுதான் பேசலாம். இங்குதான் செல்லலாம். இவ்வளவு நேரம்தான் எடுத்துக்கொள்ளலாம் என்று .முதலில் அந்த வேறுபாடு மிகவும் உறுத்தியது. விருந்தோம்பலை இழந்துவிட்டோம். மனிதப்பண்புகளை துறந்துவிட்டோம் என்றெல்லாம் இதை எளிதில் விளக்கலாம். ஆனால் உண்மையில் அதை வேறொரு கோணத்தில் பார்க்கவேண்டும் என நான் பின்னர் எண்ணிக்கொண்டேன்.


பழங்குடியினர் தங்களை மிக இறுக்கமான நில எல்லைக்குள், குல அடையாளங்களுக்குள், உறவுமுறைகளுக்குள், தன்னிலை வரையறைக்குள் நிறுத்திக் கொண்டவர்கள். பல்லாயிரம் ஆண்டுகளாக அவர்களுக்கு எந்த புறப்பண்பாடுகளுடனும் தொடர்பு கிடையாது. எந்த வகையிலும் பிற மானுடருடன் அவர்களுக்கு ஆக்க பூர்வமான உரையாடல் நிகழவில்லை. ஆகவேதான் அவர்கள் பழங்குடிகளாகவே இருக்கிறார்கள். இன்றுவரை அவர்கள் விவசாயத்தைக் கற்றுக்கொள்ளவில்லை. சமையல் கற்றுக்கொள்ளவில்லை. மலைகளில் பொறுக்கித் தேடியவற்றை விற்று வரும் வருமானத்தில் வாழ்பவர்களாகத்தான் இருந்தார்கள். புற பண்பாடுகளுடன் உறவு இல்லையென்பதனாலேயே எப்போதாவது வரும் விருந்தினர் முன் தங்களைத் திறந்து வைக்கிறார்கள். அவர்களை எண்ணிப் பரவசம் கொள்கிறார்கள்.


மாறாக, அந்தத் தொழிலதிபர் ஒவ்வொரு நாளும் குறைந்தது ஐம்பதுக்கும் மேற்பட்ட விருந்தினர்களைச் சந்திக்கிறார். வெவ்வேறு வகையானவர்கள். அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள், வணிகத்துக்கு வருபவர்கள், விற்பனைப்பிரதிநிதிகள், நன்கொடை கேட்டு வருபவர்கள், சாமியார்கள். ஆகவே தன்னுடைய இடத்தை அவர் தெளிவாக வரையறுத்துக்கொள்கிறார். இல்லையேல் அவர் வீடு ஒரு பொது இடமாக ஆகிவிடும்


இதை ஒர் உருவகமாகச் சொன்னேன். சென்ற காலங்களில் மதங்களும் சாதிகளும் மக்களை வரையறுத்து ஒடுக்கி எல்லைக்குள் நிறுத்தி வைத்துக் கொண்டிருந்தன. அந்த எல்லைகள் உறுதியாக இருந்ததனால் அதைப்பற்றி அவர்கள் கவலை கொள்ளவில்லை. அது இயல்பாக ஆகி காலப்போக்கில் அதை மறந்தும்விட்டிருந்தனர். எனவே இயல்பாக பிறரிடம் பேசினார்கள். எப்படி பேசினாலும் ஒரு அளவுக்கு மேல் அந்தப் பரிமாற்றம் நிகழாது, எவ்வகையிலும் எல்லைகள் அழியாது என்று அவர்களுக்குத் தெரிந்திருந்தது.


இந்த நூற்றாண்டு அப்படியல்ல. இன்று ஒவ்வொரு தனியடையாளங்களும் எல்லை திறந்து விரிந்து கலந்துகொண்டிருக்கின்றன. பண்பாடுகள் பல்வேறு வெளிப்பாதிப்புகளுக்குள்ளாகி ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டிருக்கின்றன. செய்தித்தொடர்புகள் வழியாக போக்குவரத்து வழியாக ஒரு பெருங்கலவை நிகழ்கிறது. இன்று எந்த நாட்டிலும் எல்லாப்பண்பாட்டையும் பார்க்க முடியும்.  இன்றைய மனிதன் ஜப்பான் முதல் அமெரிக்கா வரை பெரும்பாலும் ஒன்றாகவே தெரிகிறான்


இப்படி ஒரு காலகட்டம் வந்துவிட்டதனால்தான் இன்று உலகமெங்கும் வலதுசாரி அலைகிளம்பியிருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது. இறுக்கிப்பிடிக்காவிட்டால் அனைத்துமே அழிந்துவிடும் எனும் அச்சம் வந்துவிட்டது போலும். எல்லைகளை மூடிக்கொள்ளாவிட்டால் உள்ளிருக்கும் அனைத்தும் வெளியே பறந்துவிடும் என்று பயப்படுகிறார்கள். கொச்சையாகச் சொல்லப்போனால் மனைவியின் கற்பை சந்தேகப்பட்டு வாயிலைப்பூட்டி சாவியைக் கையிலே வைத்திருப்பவர்களைப் போல இருக்கிறார்கள் இன்றைய வலது சாரிகள்.


உலகஅளவில் வலதுசாரித்தனம் வளர்வதற்கான காரணம் வலதுசாரிகள் தங்கள் ஆதாரமாகக் கருதும் பழமைவாதங்கள் அனைத்தையுமே இந்தக் காலத்து உலகமயமாக்கம் அழித்து இல்லாமலாக்கிக் கொண்டிருக்கிறது என்பதே. காற்றில் பறக்கும் உடையைப் பற்றிக் கொண்டிருப்பது போல அவர்கள் பழமைவாதத்தை பற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.  உண்மையில் அவர்களுக்கு அவர்களின் மரபு மேல் அதிக நம்பிக்கை இல்லை. அது மனிதனுக்கு இன்றியமையாதது. ஆகவே ஒருபோதும் மனிதன் அதைக் கைவிட மாட்டான் என்று அவர்கள் நம்பினார்கள் என்றால் அதை வலியுறுத்துவதற்கு இவ்வளவு மூச்சுப்பிடிக்க மட்டார்கள். ஏனென்றால் அவர்கள் மரபின்மேல் விமர்சனநோக்கு கொண்டிருக்கவில்லை. மரபிலிருந்து சாரமானவற்றை பிரித்தறிந்து எடுத்துக்கொள்வதில்லை. ஒட்டுமொத்த மரபையும் அப்படியே பேண நினைக்கிறார்கள். அதாவது சென்றகாலத்தை அப்படியே தக்கவகைக்க முயல்கிறார்கள். நமது முன்னோர்கள் முட்டாள்கள் அல்லவென்றும் நமது மதநூல்களில் அனைத்துமே சொல்லப்பட்டிருக்கிறதென்றும் எல்லா மதத்தினரும் சொல்கிறார்கள். அவர்களுக்குத் தெரியும் அப்படி அல்ல என்று. ஆகவேதான் அதை அத்தனை ஆவேசமாகச் சொல்கிறார்கள்


இந்நூற்றாண்டின் ஊடகப்பெருக்கம் வழியாக ஒவ்வொரு குழந்தைக்கும் வந்து சேரும் அறிவின் பிரம்மாண்டம் இவர்கள் சொல்லி வைத்திருக்கும் பாரம்பரியத்தையும் மதத்தையும் மிகச்சிறிதாக ஆக்கிக் கொண்டிருக்கிறது. பாரம்பரிய அடையாளங்கள் அழிந்துவிடுமென்ற அச்சம் அந்த அடையாளங்களை நம்பி அரசியல் செய்பவர்களை, அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டிருப்பவர்களை பதற்றமடைய வைக்கிறது அதை ஒரு வகையில் புரிந்துகொள்ள வேண்டுமென்று நினைக்கிறேன்.


உலகம் அனைத்து தளங்களிலும் வலதுசாரித்தனத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. அடிப்படைவாதத்தை நோக்கி பின் காலடி எடுத்து வைக்கிறது. அமெரிக்காவிலிருந்து இந்தியா வரை அரேபியாவிலிருந்து மலேசியா வரை எங்கு பார்த்தாலும் இந்தச் சித்திரமே நமக்குக் கிடைக்கிறது. இதையெல்லாம் பார்க்கத் தெரிந்தவன் சலிப்பும் ஏமாற்றமும்தான் அடைய முடியும். அவநம்பிக்கையின் உச்சத்தில் தான் நிற்க முடியும். ஆனால் ஏனோ விலக்க முடியாத ஒரு நம்பிக்கை உணர்வை நான் அடைகிறேன்.  இது ஒரு வகையான கடைசித் துடிப்பு என்ற எண்ணம் தான் எனக்கு ஏற்படுகிறது. உருவாகி வந்து கொண்டிருக்கும் புத்தம்புது உலகம் ஒன்றை எதிர்கொள்ளும் போது அந்தக் கடைசித் தருணத்தில் உருவாகும் ஒரு திமிறல் மட்டும் தான் இது.


உலகம் தோன்றிய காலம் முதல் மானுட அறிவு ஒன்றுடன் ஒன்று கலந்து ஒற்றைப்பேரமைப்பாக, ஒரே பெருக்காக ஆகிக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் காலனியாதிக்க யுகம் தொடங்கியபோது அது பலமடங்காகியது. அச்சு ஊடகம் பெருகியபோது மேலும் பலமடங்காகியது. இணைய யுகத்தில் ஏறத்தாழ உலகமே ஒரே அறிவுத்தளமாக ஆகிவிட்டிருக்கிறது. எப்போதெல்லாம் விக்கி பீடியா தளத்திற்குள் செல்கிறேனோ அப்போதெல்லாம் இந்த அசாதாரணமான பேருணர்வை, பிரமிப்பை நான் அடைகிறேன். முப்பதாண்டுகளுக்கு முன்பு கூட இப்படி ஒன்று நிகழும் என்று என் தலைமுறையினர் எண்ணியிருக்கமாட்டார்கள். முப்பதாண்டுகளுக்குள் உலகத்தின் அனைத்து ஞானமும் ஒரு இடத்தில் ஒருகணத்தில் கிடைக்கும்படி மாறிவிட முடியுமென்று அன்று என்னிடம் எவரேனும் சொல்லியிருந்தால் வாய்விட்டுச் சிரித்திருப்பேன். மிக இயல்பாக நாம் அதை ஏற்றுக்கொண்டிருக்கிறோம்.


இதெல்லாம் என்ன விளைவை உருவாக்கும், நாளை எந்த வகையான சமுதாயத்தை கட்டமைக்கும் என்று நாம் பெரிதாக யோசிப்பதில்லை, ஆனால் அது நிகழ்ந்து கொண்டிருப்பதை ஒருவகையான் உள்ளுணர்வால் அனைவரும் உணர்ந்து கொண்டும் இருக்கிறார்கள். அதை அஞ்சுபவர்கள் எச்சரிக்கையாகிறார்கள். ஆகவே தான் ஒவ்வொருத்தரையும் கட்டம்போட்டு வாயில்களை மூடி கட்டுப்படுத்த முயல்கிறார்கள்.


எந்தக் குழந்தைக்கும் ஞானத்தை இனிமேல் கட்டுப்படுத்த முடியாது. வெளிவாயில்களை அடைக்க முடியாது. ஆகவே உள் வாயில்களை அடைக்கிறார்கள். பிறன் என்ற ஒன்றை உருவாக்கி அந்த வெறுப்பைக் கட்டமைத்து அந்த வெறுப்பைக் கொண்டு குழந்தைகளை எல்லைக்குள் நிறுத்த முயற்சி செய்கிறார்கள். இது ஒரு கடைசி முயற்சி. இது தற்காலிகமாக வளரும். ஆனால் ஒரு கட்டத்தில் காலப்பெருக்கில் தூசி போல அடித்துச் செல்லப்படும்.


இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்குள் உலகம் முழுக்க ஒற்றை அறிவுப்பெருகே இருக்கும். ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒவ்வொரு தனித்தன்மைக்கும் அதில் இடமிருக்கும். ஆனால் எதுவும் தான் மட்டுமே என வாயில்மூடி நீடிக்க முடியாது. அந்த பிரம்மாண்டமான மாற்றம் நிகழும் போது இன்று நாம் பார்க்கும் இந்த அடையாளங்களும் இது சார்ந்த காழ்ப்புகளும் எல்லாம் வேடிக்கையாக மாறிவிட்டிருக்கும் என்று தான் நினைக்கிறேன். பெருவெள்ளம் வரும்போது உங்கள் தனிக்கிணறுகளால் என்ன பயன் என்று கீதையில் ஒரு வரி வருகிறது. இத்தருணத்தில் அதைத்தான் நினைத்துக் கொள்கிறேன்.


ஜெ


***


தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 25, 2017 11:34

கிளம்புதல் –கடலூர் சீனுவுக்கு

கிளம்புதலும் திரும்புதலும் -கடலூர் சீனு
கிளம்புதல் -ஒரு கடிதம் 
அம்மாக்களின் நினைவுகள் – எம்.ரிஷான் ஷெரீப்
வீட்டை விட்டு ஓடும் ஜீவிதம்- எம்.ரிஷான் ஷெரீப்

P1000498


அன்பின் சீனுவிற்கு,


ஒவ்வொருவருக்கெனவும் எழுதப்பட்டிருக்கும் ஜீவிதம் இப்படித்தான் இல்லையா? இதைத் தாண்டி எதனை வாழ்ந்து விடப் போகிறோம்?


அப்பாவின் மரணத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இந்த விடயத்தில் எமதிருவருக்குமிடையில் ஒரு ஒற்றுமை இருக்கிறது. நோய்வாய்ப்பட்டிருந்த எனது தந்தையின் மரணமும், தாயின் மடியில் தலை சாய்த்தபடியே நிகழ்ந்தது. அப்போது சிறு வயது எனக்கு. மரணத்தையும், இழப்பையும் புரிந்து கொள்ளக் கூடிய வயதாகவும் இருக்கவில்லை. அப்பா நலமாக இருந்த காலத்தில் என்னுடனான நினைவுகள் தெளிவற்ற கண்ணாடியின் பிம்பங்கள் போலவே நினைவிருக்கின்றன. அப்பாவின் முகமும் அவ்வாறுதான். இந் நிலையில் அப்பாவோ அம்மாவோ இருந்தும், இல்லாததைப் போல, அவர்களைக் கவனிக்காமல் வாழ்பவர்களைப் பார்த்து ஒரு வித ஆற்றாமையும், ஏக்கமும் எழுகிறது. இதை என்னால் எளிதில் கடந்து செல்ல முடியவில்லை. கடந்து செல்ல முடியுமானால்தான் எப்போதுமே குதூகலமாக, பொறுப்புக்களேதுமற்ற பயணியைப் போல, காற்றில் உதிர்ந்தலையும் அப்பூப்பன் தாடி பூப் போல வாழ்ந்து விட முடியுமே… அல்லவா?


எம்மிலிருந்தே உதிக்கிறது பிறரதும் ஜீவிதம். அடுத்தவர் வாழ்க்கையையும் நம்மிலிருந்தேதான் காண்கிறோம். அதுதான் பிரச்சினை. ‘ஒருவரது வாழ்க்கையைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் அவரது பாதங்களில் நின்று அதனைப் பார்’ எனச் சொல்லும் ஒரு நாட்டுப் பழமொழி இருக்கிறது. இக் காலத்தில் அனைவரும் எளிதில் தவிர்த்து விடும் விடயமது. வசை பாடுவதற்காக வேண்டி மட்டுமே அடுத்தவர் வாழ்க்கையை எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ரமணரும், விவேகானந்தரும், புத்தரும் கூட இந்தச் சூழ்நிலைகளை எளிதில் கடந்திருக்கச் சாத்தியமில்லை எனத் தோன்றுகிறது.


அனைவரையும் நேசிப்போம்.. அதுதானே இறுதியில் எஞ்சப் போகிறது. எப்பொழுதும் கூடவே இருப்பவர்களை அதிகளவில் நேசிப்போம். அவர்கள்தானே நம் இறுதிவரை வரப் போகிறார்கள். நேசத்தின் புள்ளியில்தான் உலகமே இயங்குகிறது. பரப்பப்பட வேண்டிய அதன் மகரந்தங்கள் நீங்களும், நானும் முடிவிலிகளாக.


(எனது அன்பு சீனுவுக்கு ஒரு சிறு குறிப்பு – ரியாஸ்…அழகான பெயர்தான். ஆனால் அது எனது பெயரல்ல.. எனது பெயர் எம்.ரிஷான் ஷெரீப்.. சிநேகத்துடன் ரிஷான் என்று கூப்பிட்டாலும் போதும் )


மனமார்ந்த நன்றியும் அன்பும் !


என்றும் அன்புடன்,


எம்.ரிஷான் ஷெரீப்

03.05.2017


 


மனதிற்கான வைத்தியசாலை


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 25, 2017 11:32

கடிதங்கள்


sama


அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,


கடந்த இரண்டு மாதங்களாகத்தான் தங்கள் இணையதளத்தை தொடர்ந்து வாசிக்கிறேன்.


தங்களுக்கு வரும் கடிதங்களும் வாசகர்களின் விசாலமான ஆர்வத்தையும், சிந்தனையையும் பிரதிபலிக்கின்றன. உ-ம் ஷண்முகவேல் என்று ஒரு ஓவியர் இவ்வளவு சிறந்த படைப்புகளை உருவாக்கியுள்ளார் என்று எனக்கு நேற்று வரை தெரியாது்.


சில கடிதங்களில் உள்ள கடுமையான கருத்துக்கள் சமூகத்தில் மண்டியுள்ள மனக்கசப்பையும், பிறர் உணர்ச்சிகளை மதியாத மனப்போக்கையும், நம்பிக்கையின்மையையும் காட்டுகின்றன. கி ராஜநாராயணன் அவர்களுக்கு உரிய கௌரவம் அளிக்கப்பட வேண்டும் என்ற கருத்து கூட கொச்சைப்படுத்தப்பட்டது என்பது ஒரு ஆழமான வியாதியின் அடையாளம். திராவகத்தை பேனாவில் நிரப்பி மனத்தின் இருளை நிஷ்டூரமான சொற்களால் பிரசுரம் செய்பவர்கள் உண்மையில் பரிதாபத்துக்குரியவர்கள்.


சென்ற மாதம் என் கடிதம் ஒன்றுக்கு பதிலாக உலகெங்கும் பொது வாழ்வில் வசை மொழிகள் பரிமாறிக்கொள்வது நிகழ்கிறது என்று குறிப்பிட்டிருந்தீர்கள்.


மேலை நாகரிக நாடுகளில் யாரும் அவர்களது சொல், செய்கைகளின் விளைவுகளிலிருந்து தப்ப முடியாது. விமர்சகர்கள் வெகு ஜாக்ரதையாக தனி நபர் மீதான விமர்சனங்களை தவிர்த்து, சொல், செய்கைகளையே குறி வைப்பர். விமர்சனங்களை படிப்பவர்களும் அப்படியே விழுங்குவதில்லை. அதிக படிப்பறிவு இல்லாதவர்கள் கூட எதையும் சுய அறிவினால் சீர் தூக்கிப் பார்த்தே செயல்படுவர்.


Verbal aggression is a telltale sign of inferiority complex என்ற அறிவு பரவலாக இருப்பதால் கொச்சைப்படுத்துபவர்கள் கழிக்கப்படுகிறார்கள். மதிப்பிற்குரிய விமர்சனங்களால் புகழ் அடைந்தவர்களும் உண்டு். திறந்த மனம் என்பது ஒரு கலாசார பண்பாடு். தவறு என்று தெரிந்தால் வெளிப்படையாக ஒப்புக்கொள்வார்கள். உலகம் முழுதும் ஒப்புக்கொண்ட கருத்திலிருந்து மாறுபடவும் தயங்கமாட்டார்கள். மேலும் Judge not என்ற மத உபதேசம் நாஸ்திகர்களாலும் மதிக்கப்படுகிறது். வசையாளர்கள் செய்வது character assassination, ஒரு கொலை. கல்லடி போல சொல்லடியும் கொல்லும். என் சொந்த அனுபவத்தை பகிர்கிறேன்.


என் எட்டாம் வயதிலேயே பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டு தாய்வழி பாட்டனாரிடம் வளர்ந்தேன். Zero assets குடும்பம், அன்றாடம் ஒரு வேளை உணவுக்கே திண்டாட்டம். ஆனால், அன்பும், ஞானமும், ஒழுக்கமும், பன்மொழி வேதாந்த அறிவும் கொண்ட பாட்டனார், பாட்டி, மாமா. இவை ஒவ்வொன்றும் என்னிடம் கொஞ்சம் ஒட்டிக்கொண்டு இன்றளவும் பல நன்மைகளை செய்துகொண்டு இருக்கின்றன. ஆனால் எட்டு வயதிலிருந்து ஒரு கொடுமை. அவ்வப்போது வரும் ஒருவர் பொழியும் வசைமழை. “நன்றி கெட்ட பன்றி, கர்வக்கட்டை, பன்னாடை, தேவாங்கு, “இத்யாதி. சாப்பாடு இறங்காது. என் வகுப்பில் உள்ள மாணவர் சராசரி எடையில் பாதி தான் இருப்பேன். விளையாட்டு, அறிவு திறமை போட்டிகள் எதிலும் சேர்ந்தது இல்லை.  பணியிலும் என் potential அளவு நான் முன்னேறவில்லை என்று கணித்தார்கள். அப்படியும் நான்கு பதவி உயர்வுகள். மேலும் மூன்று முறை பதவி உயர்வு நேர் காணலை புறக்கணித்து மறுத்தேன். சிகந்தராபாத், பம்பாய் நகரங்களில் ராமகிருஷ்ண மடத்தில் ரங்கநாதானந்தா, நிராமயானந்தா ஆகியோரது உரைகளை கேட்டேன். துறவி ஆகலாம் என்று இருந்தேன்.


எங்கள் Training Systemஇல் Behavioural Science, Transactional analysis பயிற்சிகளின் பயனாக என் இளம் வயது அனுபவங்கள் ஆழ்மனத்தில் ஒரு இயலாமையையும், frustration ஐயும் உண்டாக்கி உள்ளதை நான் உணர்ந்தபோது ஆயுட்காலத்தில் பாதி கழிந்துவிட்டது!


என் தமிழ் இலக்கிய வரலாறு ஆசிரியர் பழநி அவர்கள் தம் வழிகாட்டியாக கூறிய வரிகள் என் மனதில் பதிந்திருந்தன. அவை


நல்லது செய்தல்ஆற்றீர் ஆயினும்


அல்லது செய்தல் ஓம்பேன்மின்(*)


* இணையதளத்தில் ஓம்புமின் என்று உள்ளது்.


எது சரி என்று தெரியவில்லை. புறநானூறு 195


என் பதினேழாம் வயதிலிருந்து இதையே ஒரு விரதமாக கடைபிடிக்கிறேன். இதனால் வாழ்க்கை தாழ்நிலையில் இருந்தாலும் சீராக இருந்து வந்தது. 32 வயதில் (தங்களுக்கு வாய்த்தவர் போல்) ஒரு க்ருஹலக்ஷ்மியை ஏற்றுக்கொண்டு சந்தோஷமாக வாழ்கிறேன்.


ஆகையால் என் பணிவான பரிந்துரை தங்களுக்கு வரும் வசை “இலக்கியங்களை” படிக்காமல் ஒதுக்கிவிடுங்கள். தங்களுக்கும் நல்லது. தங்கள் இணையதளத்தில் சஞ்சரிக்கும் இளையதலைமுறையினருக்கும் நல்லது. வசையாளர்களுக்கும் நல்லது். அவர்களுடைய அரைவேக்காட்டு சீற்றத்தை பதிவு செய்யாமைக்காக நாளை அவர்கள் நன்றி சொல்வார்கள்.


அன்புடன்


***


சாம கிருஷ்ணன்


***


ஜெமோ,


நீங்கள் பலமுறை குறிப்பிட்டதைப் போல, தமிழர்களுக்கு எப்போதும் தாழ்வுணர்ச்சி அதிகம். அதிலே சுகமும் கண்டவர்கள்.


சமீபகாலமாக, இத்தாழ்வுணர்ச்சி அதன் உச்சத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இது பெரும்பாலும் எதிர்வினைகளையே உருவாக்குகிறது.


“நான் நன்றாக எழுதுவேன். இதோ, என்னுடைய இந்த புத்தகங்களைப் படித்துப் பாருங்கள்” என்று ஒருவர் கூறினால் அதை என்னவென்று கூட பார்க்காமல், உனக்கு ஆணவம், கர்வம் என்ற ரீதியில் தான் இத்தாழ்வுமன்பான்மை கொண்ட மனங்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்கின்றன.


அதென்ன பக்கத்து இலைக்குப் பாயாசம்? உங்கள் இலைக்கே கேட்கும் தகுதி உங்களுக்கு உண்டென்றே நம்புகிறேன். உங்களுக்கும் ஒரு தாழ்வுமன்ப்பான்மை உண்டோ? என்று எண்ணுகிறேன், தனக்கு பாயாசம் வேண்டும் என நீங்கள் கேட்கத் தயங்குவதால்.


In my opinion, branding is very important to bring the people closer to our product. It applies to all products and their producers including writers and their books.


உங்களுடைய எழுத்துக்களை வாசித்தபிறகு நானும் எழுத உந்தப்பட்டேன் என நான் எழுதியிருந்ததிற்கு, நீங்கள் வாழ்த்துக்கள் சொல்லி எழுதிய கடிதத்தை என் நண்பர்களோடு பகிர்ந்து கொண்டேன். எழுதுவதற்கு முன்னரே, இதென்ன சுயவிளம்பரம் என்று நான் ஒரு கணம் நினைத்தேன். ஆனால், என்னைப் பொறுத்தவரை என்னுடைய இலக்குகளை அடைவதற்கு இந்த சுயவிளம்பரம் அவசியமென்றே நினைக்கிறேன்.|


அன்புடன்


முத்து


***


தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 25, 2017 11:32

அமிர்தம் சூரியா உரைகள்

amir


நண்பர் அமிர்தம் சூரியா இருபதாண்டுகளுக்கு முன் சென்னையில் இருந்த சிறிய நண்பர்குழுவில் ஒருவராக அறிமுகமானவர். அன்றைய நண்பர்களில் தொடர்ச்சியாக இலக்கிய ஆர்வத்துடன் செயல்பட்டுக்கொண்டிருப்பவர். கல்கி வார இதழில் பணியாற்றுகிறார். அவருடைய இலக்கியச் சொற்பொழிவுகளை யூடியூபில் பார்த்தபோது முன்பிருந்த தயக்கமும் தாழ்ந்த குரலும் இல்லாமல் செறிவாகவும் சீராகவும் பேசுபவராக ஆகிவிட்டிருப்பதை உணரமுடிகிறது. இலக்கியம் குறித்த உரையாடல்கள் குறைந்துவரும் சூழலில் இக்குரல் முக்கியமானது என நினைக்கிறேன்


 


ஜெ


 


 


















அமிர்தம் சூரியா வலைத்தளம்



தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 25, 2017 11:31

‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-2

1. குருதிச்சாயல்


flowerபுலர்காலையில் காலடிச் சாலையின் ஓரமாக கட்டப்பட்டிருந்த வழிவிடுதி ஒன்றிலிருந்து பாண்டவர்களும் திரௌபதியும் கிளம்பினார்கள். முந்தையநாள் இரவு எழுந்தபோதுதான் அங்கே வந்துசேர்ந்திருந்தனர். அது அரசமரத்தின் அடியில் கட்டப்பட்டிருந்த சிறிய மரப்பட்டைக்கூரையிடப்பட்ட மண் கட்டடம். வழியருகே அது விதர்ப்ப அரசன் அமைத்த விடுதி என்பதைச் சுட்டும் அறிவிப்புப்பலகை அரசமுத்திரையுடன் அமைந்திருந்தது. செம்மொழியிலும் விதர்ப்பத்தின் கிளைமொழியிலும் எழுதப்பட்டிருந்த அறிவிப்புக்குக் கீழே மொழியறியா வணிகர்களுக்காக குறிவடிவிலும் அச்செய்தி அமைந்திருந்தது.


அது ஆளில்லா விடுதி. உயரமற்ற சோர்ந்த மரங்களும் முட்புதர்களும் மண்டிய காட்டை வகுந்து சென்ற வண்டிப்பாதையில் ஒருபொழுதுக்குள் அணையும்படி அரசன் அமைத்த பெருவிடுதிகள் இருந்தன. அங்கே நூறுபேர் வரை படுக்கும்படி பெரிய கொட்டகைகளும் காளைகளையும் குதிரைகளையும் இளைபாற்றி நீர்காட்டும் தொட்டிகளும் அவற்றை கட்ட நிழல்பந்தலும் அமைக்கப்பட்டிருந்தன. சில விடுதிகளில் பத்து அடுமனையாளர்கள்வரை இருந்தனர். எப்போதும் உணவுப்புகை கூரைமேலெழுந்து விடுதியின் கொடி என நின்றிருந்தது. பறவைகள் கூடணைந்த மரம்போல அவ்விடுதிகள் ஒலியெழுப்பிக்கொண்டிருந்தன. பிரிந்து விலகிய சிறிய கிளைப்பாதைளில்தான் பேணுநர் இல்லாமல் விடுதிகள் மட்டுமே அமைந்திருந்தன. அப்பாதைகளில் பலநாட்களுக்கு ஒருமுறையே எவரேனும் சென்றனர்.


பாண்டவர்கள் பெரும்பாலும் பெருஞ்சாலைகளை தவிர்த்து கிளைப்பாதைகளிலேயே நடந்தார்கள். தொலைவிலேயே உயர்மரம் ஏறி நோக்கி பெருஞ்சாலையில் எவருமில்லை என்பதை பீமன் உறுதிசெய்த பின்னரே அவற்றில் நடக்கத் தலைப்பட்டனர். கிளைச்சாலைகளிலும் காலடிகளை தேர்ந்து வழிச்செலவினர் இருக்கிறார்களா என்பதை பீமன் அறிந்தான். எவரையும் சந்திப்பதை அவர்கள் தவிர்த்தனர். அவர்களை சொல்லினூடாக அறிந்தவர்களே ஆரியவர்த்தமெங்கும் இருந்தனர். அனைவரிடமிருந்தும் விலகிவிடவேண்டுமென்று தருமன் ஆணையிட்டிருந்தார். “நானிலம் போற்றும் புகழ் என்று சூதர் சொல்லலாம். தெய்வங்களின் புகழைவிடவும் பெரியது இப்புவி. நாம் எவரென்றே அறியாத மானுடர் வாழும் நிலங்களை அடைவோம். எளியவர்களாக அங்கிருப்போம். அது மீண்டுமொரு பிறப்பு என்றே நமக்கு அறிவை அளிப்பதாகட்டும்.”


இமயமலைச்சாரலில் இருந்து அவர்கள் கிளம்பி ஆறு மாதங்கள் கடந்துவிட்டிருந்தன. மலையிலிருந்து திரிகர்த்த நாட்டின் நிகர்நிலத்துக்கு இறங்கினர். திரிகர்த்த நாட்டின் பெரும்பகுதி கால்தொடாக் காடுகளாகவே இருந்தமையால் அவர்கள் விழிமுன் நிற்காமல் அதைக் கடந்து உத்தர குருநாட்டுக்குள் வரமுடிந்தது. அங்கே விரிந்த மேய்ச்சல் நிலங்களில் கன்றுகள் பகலெல்லாம் கழுத்துமணி ஒலிக்க மேய்ந்தன. ஆயர்களின் குழலோசை காட்டின் சீவிடுகளின் ஒலியுடன் இணைந்து கேட்டுக்கொண்டிருந்தது. மணியோசைகள் பெருகி ஒழுகத்தொடங்குகையில் கன்றுகள் குடிதிரும்புகின்றன என்று உணர்ந்து அதன் பின்னர் நடக்கத் தொடங்கினர்.


இருளுக்குள் சிற்றூர்களை கடந்து சென்றனர். பீமன் மட்டும் கரிய கம்பளி ஆடையால் உடலைமூடி மரவுரியை தலையில் சுற்றிக்கட்டி ஊர்களுக்குள் நுழைந்து “சுடலைச் சிவநெறியன். மானுட முகம் நோக்கா நோன்புள்ளவன். என்னுடன் வந்த ஐவர் ஊரெல்லைக்கு வெளியே நின்றுள்ளனர். கொடை அளித்து எங்கள் வாழ்த்துக்களை பெறுக! இவ்வூரைச் சூழ்ந்த கலி அகல்க! களஞ்சியங்களும் கருவயிறுகளும் கன்றுகளும் பொலிக! சிவமேயாம்! ஆம், சிவமேயாம்!” என்று கூவினான். அவன் இரண்டாவது சுற்று வரும்போது வீடுகளுக்கு முன்னால் அரிசியும் பருப்பும் வெல்லமும் வைக்கப்பட்டிருந்தன. அவன் அவற்றை தன் மூங்கில்கூடையில் கொட்டி எடுத்துக்கொண்டு திரும்பிவந்தான்.


இரவில் காட்டுக்குள் அனல்மூட்டி அவற்றை சமைத்து உண்டு சுனைநீர் அருந்தினர். பகல் முழுவதும் சோலைப்புதர்களுக்குள் ஓய்வெடுத்தனர். இரவுவிலங்குகள் அனைத்தையும் விழியொடு விழி நோக்க பழகினர். பகலொளி விழிகூசலாயிற்று. அயோத்தியை அடைந்தபோது அவர்களின் தோற்றமும் கடுநோன்பு கொள்ளும் சிவநெறியர்களைப்போலவே ஆகிவிட்டிருந்தது. சிவநெறியர்களுடன் சேர்வது பின்னர் எளிதாயிற்று. எவரென்று எவரையும் உசாவாது தானொன்றே ஆகி தன்னை கொண்டுசெல்லும் தகைமை கொண்டிருந்த சிவநெறியர்களுடன் எவராலும் நோக்கப்படாமல் செல்ல அவர்களால் இயன்றது. கங்கைக் கரையோரமாக காசியை அடைந்தனர். கங்கைக்கரைக் காடுகளில் சிவநெறியினரின் சிறுகுடில்களில் தங்கி மேலும் சென்றனர்.


கங்கையைக் கடந்து சேதிநாட்டை அடைந்தபோது மற்றொரு உரு கொண்டனர். சடைகொண்ட குழலும் தாடியும் கொண்டு மரவுரியாடை அணிந்து கோலும் வில்லும் தோல்பையும் கொண்டு நடக்கும் அவர்களை எவரும் அறிந்திருக்கவில்லை. மேகலகிரி அருகே மலைப்பாதையைக் கடந்து விந்தியமலைச்சாரலை அடைந்தபோது மீண்டும் மானுடரில்லா காட்டுக்குள் நுழைந்தனர். விந்தியமலையின் பன்னிரு மடிப்புகளை ஏறி இறங்கி மீண்டும் ஏறிக் கடந்து குண்டினபுரிக்குச் செல்லும் வணிகப்பாதையில் ஒரு மானுடரைக்கூட முகம் கொள்ளாமல் அவர்களால் செல்லமுடிந்தது.


கோடைக்காலமாதலால் விந்தியமலைகளின் காடுகள் கிளைசோர்ந்து இலையுதிர்த்து நின்றன. காற்றில் புழுதி நிறைந்திருந்தது. குரங்குகளின் ஒலியைக்கொண்டே நீரூற்றுகள் இருக்குமிடத்தை உய்த்தறிய முடிந்தது. கனிகளும் கிழங்குகளும் அரிதாகவே கிடைத்தன. எதிர்ப்படும் விலங்குகளெல்லாம் விலாவெலும்பு தெரிய மெலிந்து பழுத்த கண்களும் உலர்ந்த வாயுமாக பெருஞ்சீற்றம் கொண்டிருந்தன. பன்றிகள் கிளறியிட்ட மண்ணை முயல்கள் மேலும் கிளறிக்கொண்டிருந்தன. யானைகளின் விலாவெலும்புகளை அப்போதுதான் தருமன் பார்த்தார். “நீரின்றியமையாது அறம்” என்று தனக்குள் என முணுமுணுத்துக்கொண்டார்.


விடுதியின் முகப்பில் சுவரில் எழுதப்பட்டிருந்த சொற்களைக் கொண்டு தாழ்க்கோல் இருக்கும் கூரைமடிப்பை அறிந்து அதை எடுத்து பீமன் கதவை திறந்தான். நெடுநாட்களாக பூட்டிக்கிடந்தமையால் உள்ளிருந்த காற்று இறந்து மட்கிக்கொண்டிருந்தது. பின்கதவையும் சாளரங்களையும் திறந்தபோது புதுக்காற்று உள்ளே வர குடில் நீள்மூச்சுவிட்டு உயிர்ப்படைந்தது. அருகே கிணறு இருப்பதைக் கண்ட பீமன் வெளியே சென்று அதற்குள் எட்டிப்பார்த்தான். ரிப் ரிப் என ஒலிகேட்க மரங்களில் குரங்குகள் அமர்ந்திருப்பதை கண்டான். அன்னைக்குரங்கு அவன் கண்களைக் கண்டதும் “நல்ல நீர்தான்…” என்றது. “ஆம்” என்றான் பீமன். “நீ எங்களவனா?” என்றாள் அன்னை. “ஆம், அன்னையே” என்றான் பீமன்.


அப்பால் நின்றிருந்த ஈச்சைமரத்திலிருந்து ஓலைவெட்டி இறுக்கிப்பின்னி தோண்டி செய்தான். ஈச்சைநாராலான கயிற்றில் அதைக் கட்டி இறக்கி நீரை அள்ளினான். குரங்குகள் குட்டிகளுடன் அவனருகே வந்து குழுமின. “நான்… நான் நீர் அருந்துவேன்” என்றபடி ஒரு குட்டி பிசிறிநின்ற தலையுடன் பாய்ந்துவர இன்னொன்று அதன் வாலைப்பற்றி இழுத்தது. அதனிடம் “அப்பால் போ!” என்றது தாட்டான் குரங்கு. “நீ எப்படி இப்படி பெரியவனாக ஆனாய்?” என்று பீமனிடம் கேட்டது. பீமன் புன்னகையுடன் நீரை அதற்கு ஊற்ற அது “குழந்தைகளுக்குக் கொடு!” என்றது.


பீமன் இலைத்தொன்னைகள் செய்து அதில் நீரூற்றி வைத்தான். குட்டிகள் முட்டிமோதி அதை அருந்தின. அன்னையரும் அருகே வந்து நீர் அருந்தத் தொடங்கின. அப்பால் இலந்தை மரத்தடியில் அமர்ந்திருந்த ஐவரும் அதை நோக்கிக்கொண்டிருந்தார்கள். பீமன் நீரை தொன்னையில் கொண்டுசென்று தருமனுக்கு அளித்தான். “பெருங்குரங்கு இன்னமும் அருந்தவில்லை” என்றார் தருமன். “குடி அருந்திய பின்னரே அது அருந்தும்” என்றான் பீமன். “அவன் அருந்தட்டும். இக்காட்டின் அரசன் அவன். அவன் மண்ணுக்கு நாம் விருந்தினர். முறைமைகள் மீறப்படவேண்டியதில்லை” என்றார் தருமன்.


தாட்டான் குரங்கும் நீர் அருந்திய பின்னரே தருமன் நீரை கையில் வாங்கினார். மும்முறை நீர்தொட்டு சொட்டி “முந்தையோரே, உங்களுக்கு” என்றபின் அருந்தினார். ஒரு மிடறு குடித்தபின் திரௌபதிக்கு கொடுத்தார். அவள் அதை வாங்கி ஆவலுடன் குடிக்கத் தொடங்கினாள். பாண்டவர்கள் நால்வரும் நீர் அருந்திய பின்னர் பீமன் நீரை அள்ளி நேரடியாகவே வாய்க்குள் விட்டுக்கொண்டான். கடக் கடக் என்னும் ஒலியை குரங்குகள் ஆவலுடன் நோக்கின. “இன்னொருமுறை காட்டுங்கள்” என குட்டி ஒன்று ஆர்வத்துடன் அருகே வந்து கோரியது. பீமன் அதன்மேல் நீரைச் சொட்டி புன்னகை செய்தான்.


நீரை அள்ளித்தெளித்ததும் குடில் புத்துணர்ச்சி கொண்டது. பின்னறைக்குள் உறிகளில் அரிசியும் பருப்பும் உப்பும் உலர்காய்களும் இருந்தன. கலங்களை எடுத்து வைத்து நீர்கொண்டுவந்து ஊற்றினான் பீமன். மூங்கில் பெட்டிகளில் மரவுரிகளும் ஈச்சைப்பாய்களும் இருந்தன. அவற்றைக் கொண்டுவந்து விரித்ததும் தருமன் அமர்ந்தார். நகுலனும் சகதேவனும் மல்லாந்து படுக்க வாயிலருகே சுவர்சாய்ந்து அமர்ந்த அர்ஜுனன் மடியில் வில்லை வைத்துக்கொண்டான்.


வெளியே ஓசையெழுந்தது. பீமன் அங்கே நான்கு யானைகள் வந்து நின்றிருப்பதை கண்டான். “நீர் போதுமான அளவுக்கு உள்ளதா, மந்தா?” என்றார் தருமன். “அருந்துவதற்கு போதும்” என்றான் பீமன். “அருந்தும் நீரில் குளிக்கலாகாது” என்று சொன்னபின் தருமன் விழிகளை மூடிக்கொண்டார். திரௌபதி உரைகல்லை உரசி அனலெழுப்பி அடுப்பை பற்றவைத்தாள். பானையில் நீரூற்றி உலையிட்டாள். அடுமனைப்புகை அதை இல்லமென்றே ஆக்கும் விந்தையை பீமன் எண்ணிக்கொண்டான். நெடுநாட்களாக அவர்கள் அங்கே தங்கியிருப்பதைப்போல உளமயக்கெழுந்தது.


வெளியே சென்று நிலத்திலிருந்த பள்ளமான பகுதியை தெரிந்து அங்கே குழி ஒன்றை எடுத்தான். அதன்மேல் இலைகளையும் பாளைகளையும் நெருக்கமாகப் பரப்பி அது அழுந்திப்படியும்பொருட்டு கற்களைப்பரப்பி மண்ணிட்டு மூடியபின் அதன்மேல் கிணற்றுநீரை அள்ளி நிறைத்தான். யானைகள் துதிக்கையால் நீரை அள்ளி வாய்க்குள் சீறல் ஒலியுடன் செலுத்தி நீள்மூச்சுவிட்டு அருந்தின. நீர்ச்சுவையில் அவற்றின் காதுகள் நிலைத்து நிலைத்து வீசின. அடுமனையிலிருந்து திரௌபதி எட்டிப்பார்த்து “உணவு, இளையவரே” என்று சொல்லும்வரை அவன் நீர் இறைத்துக்கொண்டிருந்தான்.


பாண்டவர்கள் உள்ளே உணவுண்டுகொண்டிருந்தனர். அவனுக்கு அடுமனையிலேயே தனியாக இலைகளைப் பரப்பி உணவை குவித்திருந்தாள். அவன் அமர்ந்ததுமே குரங்குகள் வந்து சூழ்ந்துகொண்டன. “குழந்தைகளுக்கு மட்டும் போதும்” என்று தாட்டான் ஆணையிட்டது. குட்டிகள் வந்து பீமனைச் சூழ்ந்து அமர்ந்து சோற்றில் கைவைக்க முயன்று வெப்பத்தை உணர்ந்து முகம் சுளித்தன. ஒன்று சினத்துடன் பீமனின் காலை கடித்தது. ஒரு பெண்குட்டி பீமனின் மடியில் ஏறி சாதுவாக அமர்ந்துகொண்டிருந்தது. அதன் காதுகள் மலரிதழ்கள்போல ஒளி ஊடுருவும்படி சிவப்பாக இருந்தன. மென்மயிர் உடலும் மலர்ப்புல்லி போலவே தோன்றியது.


முதல்பிடி சோற்றை அள்ளி உள்ளங்கையில் வைத்து ஊதி ஆற்றியபின் அதன் வாயில் ஊட்டினான் பீமன். அது வாய்க்குள் இருந்து சோற்றை திரும்ப எடுத்து உற்று நோக்கி ஆராய்ந்தபின் அன்னையிடம் “சுவை” என்றது. அன்னை பற்களைக் காட்டி “உண்” என்றது. “தந்தையே தந்தையே” என்று அழைத்த குட்டிக்குரங்கு ஒன்று அவன் தாடையைப் பிடித்து திருப்பி “நான் மரங்களில் ஏறும்போது… ஏறும்போது…” என்றது. இன்னொரு குட்டி “இவன் கீழே விழுந்தான்” என்றது. “போடா” என்று முதல்குட்டி அவனை கடிக்கப்போக இருவரும் வாலை விடைத்தபடி பாய்ந்து குடிலின் கூரைமேல் தொற்றி ஏறிக்கொண்டார்கள்.


“நீங்கள் குறைவாகவே உண்கிறீர்கள், இளையவரே” என்றாள் திரௌபதி. “எனக்கு இது போதும்… நான் நாளை ஏதேனும் ஊனுணவை உண்டு நிகர்செய்கிறேன். சுற்றத்துடன் உண்ட நாள் அமைந்து நெடுங்காலமாகிறது” என்றான் பீமன். திரௌபதி சிரித்து “அன்னையருக்கும் பசி இருக்கிறது. நீங்கள் வற்புத்தவேண்டுமென விழைகிறார்கள்” என்றாள். பீமன் நகைத்து “பெரும்பசி கொண்டவன் தாட்டான்தான். தனக்கு பசியையே தெரியாது என்று நடிக்கிறான்” என்றான். இருட்டு வந்து சூழ்ந்துகொண்டது. காட்டின் சீவிடு ஒலி செவிகளை நிறைத்தது.


குரங்குகள் அவர்களின் குடிலைச் சுற்றியே அமர்ந்துகொண்டன. பீமன் திண்ணையிலேயே வெறும்தரையில் படுத்து துயில்கொண்டான். அவனருகே இரு குட்டிக்குரங்குகள் படுத்தன. “நான் நான்” என்று நாலைந்து குட்டிகள் அதற்காக சண்டையிட்டன. “சரி, எல்லாரும்” என்றான் பீமன். அவன் மார்பின்மேல் அந்தப் பெண்குட்டி குப்புற படுத்துக்கொண்டது. அதைக் கண்டு மேலுமிரு குரங்குகள் அதனருகே தொற்றி ஏற அது பெருஞ்சினத்துடன் எழுந்து பற்களைக் காட்டி சீறியது. ஏறியவை இறங்கிக்கொண்டன. நகுலன் நகைத்து “எல்லா குடிகளிலும் தேவயானிகள் பிறக்கிறார்கள்” என்றான்.


அப்பால் அதை நோக்கிக்கொண்டிருந்த தருமன் “நம் மைந்தர் நலமுடன் இருக்கிறார்களா, நகுலா?” என்றார். “ஆம், மூத்தவரே. திரிகர்த்த நாட்டில்தான் இறுதியாக செய்தி வந்தது” என்றான். சகதேவன் “அபிமன்யூ வில்லுடன் வங்கம் கடந்து சென்றிருக்கிறான். உடன் சதானீகனும் சுதசோமனும் சென்றிருக்கிறார்கள். பிரதிவிந்தியன் நூல்நவில்வதற்காக துரோணரின் குருநிலையில் இருக்கிறான். சுருதகீர்த்தியும் சுருதகர்மனும் அவனுடன் உள்ளனர்” என்றான். தருமன் பெருமூச்சுவிட்டபடி “நலம் திகழ்க!” என வாழ்த்தினார்.


அவர்கள் துயிலத்தொடங்கினர். இருளுக்குள் தருமனின் நீள்மூச்சு ஒலித்தது. பின்னர் நகுலனும் சகதேவனும் நீள்மூச்செறிந்தனர். இருளுக்குள் மூச்செறிந்து மார்பில் கிடந்து துயில்கொண்டிருந்த பைதலை மெல்ல அணைத்தபடி ஒருக்களித்த பீமன் மீண்டும் அவர்களின் நீள்மூச்சுகளை கேட்டான். அவர்கள் மூச்செறிந்தபடி புரண்டுபுரண்டு படுத்துக்கொண்டிருந்தார்கள். பீமன் அர்ஜுனனின் பெருமூச்சு கேட்கிறதா என்று செவிகூர்ந்தான். நெடுநேரம். அர்ஜுனன் இருளுக்குள் மறைந்துவிட்டவன் போலிருந்தான். அவன் எங்கிருக்கிறான்? உடல் உதிர்த்து எழுந்து சென்றுவிட்டிருக்கிறானா? பின்னர் அவன் அர்ஜுனனின் நீள்மூச்சை கேட்டான். அது அவனை எளிதாக்கியது. பிறிதொரு நீள்மூச்சுடன் அவன் புரண்டுபடுத்தான். துயிலுக்குள் ஆழ்ந்துசெல்லும்போதுதான் திரௌபதியின் நீள்மூச்சை கேட்கவேயில்லை என நினைவுகூர்ந்தான்.


flowerவெயில் வெண்ணொளி கொண்டு மண்ணை எரிக்கத் தொடங்குவதற்கு முன்பே பாதித்தொலைவை கடந்துவிடலாமென்று எண்ணியிருந்தனர். ஆனால் மிக விரைவிலேயே சூரியன் தழலென மாறிவிட்டிருந்தான். கூழாங்கற்கள் அனல்துண்டுகளென்றாயின. மணல்பரப்புகள் வறுபட்டவை என கொதித்தன. புல்தகிடிகளை தேடித்தேடி காலடி வைத்து செல்லவேண்டியிருந்தது. அவர்களின் கால்கள் பன்னிரு ஆண்டுகாலம் கற்களிலும் முட்களிலும் பட்டு தேய்ந்து மரப்பட்டைகளென ஆகிவிட்டிருந்தன. ஆயினும்கூட அங்கிருந்த வெம்மை அவர்களை கால்பொத்திக்கொண்டு விரைந்து நிழல்தேடச் செய்தது.


கானேகிய முதனாட்களில் ஒருமுறை பீமன் மரப்பட்டையால் மிதியடிகள் செய்து திரௌபதிக்கு அளித்தான். கூர்கற்களில் கால்பட்டு கண்ணீர் மல்கி நின்றிருக்கும் திரௌபதியைக் கண்டு அவன் அவளை பல இடங்களில் சுமந்துகொண்டு வந்திருந்தான். கொல்லைப்பக்கம் கலம் கழுவிக்கொண்டிருந்த அவள் முகம் மலர்ந்து அதை வாங்கி “நன்று… இவ்வெண்ணம் எனக்கு தோன்றவேயில்லை” என்றாள். அப்பால் விறகுகளை வெட்டிக்கொண்டிருந்த நகுலன் கோடரியைத் தாழ்த்தி புன்னகை செய்தான். குடில்திண்ணையில் அமர்ந்திருந்த தருமன் நோக்கை விலக்கி மெல்லிய குரலில் “காடேகலென்பது தவம். நாம் அறத்தால் கண்காணிக்கப்படுகிறோம்” என்றார். திரௌபதி விழிதாழ்த்தி கையால் மிதியடியை விலக்கிவிட்டு குடிலுக்குள் திரும்பிச்சென்றாள். பீமன் கசப்புடன் அதை நோக்கிவிட்டு வெளியே சென்று காட்டுக்குள் வீசினான்.


வழிநடையின் வெம்மையும் புழுதியும் கொண்டு அவர்கள் விரைவிலேயே களைப்படைந்தார்கள். புழுதிநிறைந்த காற்று மலைச்சரிவில் சருகுத்துகள்களுடன் வந்து சுழன்று வீசிக்கொண்டிருந்தது. அவர்களின் குழல்கள் புழுதிபரவி வறண்டு நார் போலிருந்தன. வியர்வை வழிந்த உடல்களுடன் களைப்பால் நீள்மூச்சுவிட்டு அவ்வப்போது நிழல்தேடி நின்றும் பொழுதடைவதைக் கண்டு எச்சரிக்கை கொண்டு மீண்டும் தொடங்கியும் அவர்கள் சென்றனர்.


திரௌபதி தன் மரவுரியாடையின் நுனியை எடுத்து தலைக்குமேல் போட்டு முகத்தை மூடி புழுதிக்காற்றை தவிர்த்தாள். சூழ்ந்திருந்த காடும் அப்பால் தெரிந்த மலைகளும் நோக்கிலிருந்து மறைந்து கால்கீழே நிலத்தில் ஒரு வாள்பட்டு காய்ந்த நீள் வடு எனத் தெரிந்த மண்சாலையை மட்டுமே அவளால் பார்க்கமுடிந்தது. அதில் விழுந்து எழுந்து விழுந்து சென்ற பீமனின் காலடிகள் மட்டுமே அசைவெனத் தெரிந்தன. ஓயாது பேசும் வாய் ஒன்றின் நா என அவ்வசைவு. வருக வருக என அழைக்கும் கைபோல. நினைத்து நினைத்து நெடுங்காலமாகி நினைப்பொழிந்த உள்ளம் எளிதில் வாய்த்தது அவளுக்கு.


நெடுவழி நடக்கும்போது ஒரு சொல்லும் அவர்கள் பேசிக்கொள்ளவில்லை. நிழலை அடைந்ததும் திரௌபதி தோல்பையிலிருந்த நீரை வாய்பொருத்தி அருந்திவிட்டு வெறும்தரையிலேயே உடல்சாய்த்து படுத்துக்கொண்டாள். நடக்கையில் வியர்வை புழுதியைக் கரைத்தபடி முதுகில் வழிந்தது. புருவங்களில் தேங்கி பின் துளித்துச் சொட்டி வாயை அடைந்து உப்புக் கரித்தது. நிழலில் அமர்ந்தாலும் நெடுநேரம் உடல்வெம்மை தணியவில்லை. இளங்காற்றும் வெப்பம் கொண்டிருந்தது. அமர்ந்தபின் மேலும் வியர்வை எழுவதாகத் தோன்றியது. பின்னர் உடல்குளிர்ந்தபோது கண்கள் மெல்ல சொக்கி துயிலில் ஆழ்ந்தன. எழுந்தபோது புழுதியும் வியர்வையின் உப்புமாக உடலில் ஒட்டியது.


அவளைச் சூழ்ந்து பாண்டவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் நோக்காமல் அமர்ந்திருந்தனர். நீரை அருந்துகையில் மட்டும் விழிகள் தொட்டன. அவ்வப்போது எவரேனும் அசைகையில் பிறர் திரும்பிப் பார்த்தார்கள். பிறர் முகங்கள் தோல்கருகி உதடுகள் உலர்ந்து புல்லின் வேர்த்தொகைபோல தாடியும் மீசையும் சலிப்புற்ற கண்களுமாக தெரிவதைக் கண்டு தங்கள் உருவத்தை உணர்ந்துகொண்டார்கள்.


கிளம்பும் முடிவை எப்போதும் தருமன்தான் எடுத்தார். அவர் எழுந்ததும் பீமன் தன் கைகளை விரித்து சோம்பல் முறித்தபின் நீர்நிறைந்த தோல்பையையும் உணவும் ஆடைகளும் கொண்ட பையையும் தோளிலேற்றிக்கொண்டான். அர்ஜுனன் நோக்கு மட்டுமாக மாறிவிட்டிருந்தான். நகுலனும் சகதேவனும் தங்களுக்குள் விழிகளாலும் தொடுகையாலும் ஓரிரு சொற்களாலும் உரையாடிக்கொண்டு பின்னால் வந்தார்கள்.


மீண்டுமொரு நிழலில் அவர்கள் அமர்ந்தபோது பீமன் திரௌபதியின் கால்களை பார்த்தான். குதிகால்வளைவு நெருக்கமாக வெடித்து உலர்களிமண்ணால் ஆனதுபோலத் தெரிந்தது. விரல்களின் முனைகளும் முன்கால் முண்டுகளும் காய்த்து விளாங்காய் ஓடுபோலிருந்தன. அவன் கைநீட்டி அவள் கால்களை தொட்டான். மரவுரியை முகத்தின்மேல் போட்டு துயின்றுகொண்டிருந்த திரௌபதி கனவுகண்டவள்போல புன்னகைத்தாள். அவன் அவள் கால்களை தன் கைகளால் அழுத்தி நீவினான். பின்னர் எழுந்துசென்று பசைகொண்ட பச்சிலைகளை எடுத்துவந்து சாறுபிழிந்து அவள் கால்களில் பூசி விரல்களால் நீவத் தொடங்கினான். புழுதி விலகியதும் இலைகளால் அழுந்த துடைத்தான். காய்த்த காலின் தோலில் முட்கள் குத்தியிறங்கி முனையொடிந்திருந்தன. அவன் நீண்ட முள் ஒன்றை எடுத்துவந்து முட்களை அகழ்ந்து எடுக்கத் தொடங்கினான். ஒவ்வொரு முள்ளையாக எடுத்து சுட்டுவிரல்முனையில் வைத்து நோக்கி வியந்தபின் வீசினான். முட்களை எடுக்கும்தோறும் முட்கள் விரல்முனைக்கு தட்டுப்பட்டுக்கொண்டே இருந்தன.


அவனை பாண்டவர் நால்வரும் கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தார்கள். அர்ஜுனனின் விழிகள் சுருங்கி உள்ளே நோக்கு கூர்முனை என ஒளிகொண்டிருப்பதை பீமன் கண்டான். பெரிய முட்களை உருவி எடுத்த இடங்களில் இருந்து குருதி கசியத் தொடங்கியது. சற்றுநேரத்தில் அவள் உள்ளங்கால் குருதியால் சிவந்து தெரிந்தது. பீமன் பச்சிலைச்சாற்றை ஊற்றி கைகளால் வருடிக்கொண்டிருந்தான். குருதி நின்றபின் அவன் பெருமூச்சுவிட்டு கால்மடித்து அமர்ந்தான். நகுலனும் சகதேவனும் பெருமூச்சுவிட்டனர். அர்ஜுனன் முனகுவதுபோல ஏதோ ஒலியெழுப்பி வில்லுடன் எழுந்து சென்றான். பீமன் தருமனின் பெருமூச்சை எதிர்பார்த்தான். நீண்டநேரத்திற்குப்பின் “எந்தையரே…” என்றார் தருமன்.


flowerவிதர்ப்ப நாட்டில் சௌபர்ணிகை என்னும் சிற்றாற்றின் கரையில் மூங்கில்புதர் சூழ்ந்த சோலைக்குள் அமைந்திருந்த தமனரின் தவக்குடிலுக்கு பின்மாலைப்பொழுதில் பாண்டவர்களும் திரௌபதியும் வந்து சேர்ந்தார்கள். திரௌபதியை பீமன் ஒரு நார்த்தொட்டில் அமைத்து தன் முதுகில் அமரச்செய்து தூக்கிக்கொண்டு வந்தான். தொலைவிலேயே குருநிலையின் காவிக்கொடியை அர்ஜுனன் கண்டு சுட்டிக்காட்டினான்.


அங்கு செல்வதற்கான பாதை பொன்மூங்கில்காடுகளுக்கு நடுவே வளைந்து சென்றது. மூங்கில்புதர்களுக்குள் யானைக்கூட்டங்கள் நின்றிருந்தன. அவை பீமனை ஆழ்ந்த ஒலியால் யார் என வினவின. பீமன் அதே ஒலியில் தன்னை அறிவித்தான். அன்னை யானை “நன்று, செல்க!” என வாழ்த்தியது. காலடியில் ஒரு நாகம் வளைந்து சென்றது. சௌபர்ணிகையில் மிகக் குறைவாகவே நீர் ஓடியது. சிறிய பள்ளங்களில் ஒளியுடன் தேங்கிய நீர் ஒரு விளிம்பில் மட்டும் வழிந்தெழுந்து வளைந்து சென்று இன்னொரு சிறுபள்ளத்தை அணுகியது. ஆற்றுக்குள் மான்கணங்கள் நீர் அருந்திக்கொண்டிருந்தன. காலடியோசை கேட்டு அவை திடுக்கிட்டு தலைதூக்கி செவிகோட்டி விழித்து நோக்கி உடலதிர்ந்தன.


தமனரின் குடிலில் அவரும் நான்கு மாணவர்களும் மட்டுமே இருந்தனர். அவர்கள் சென்ற பொழுதில் தமனர் மாணவர்களுடன் மரநிழலில் அமர்ந்து இன்சொல்லாடிக்கொண்டிருந்தார். கைகூப்பி அருகணைந்த தருமனைக் கண்டதுமே தமனர் கைகூப்பியபடி எழுந்து அருகே வந்தார். “பாண்டவர்களுக்கும் தேவிக்கும் என் சிறுகுடிலுக்கு நல்வரவு” என்றார். தருமன் முகமன் சொல்லி அவரை வணங்கினார். பீமனின் தோளிலிருந்து இறங்கி நின்ற திரௌபதி நிலையழிந்து அவன் தோளை பற்றிக்கொண்டாள்.


“இங்கு நான் எந்த நல்லமைவையும் தங்களுக்கு அளிக்கவியலாது. கடுநோன்புக்கென்றே இக்காட்டுக்கு வந்தேன்” என்றார் தமனர். “ஆனால் குளிக்க சௌபர்ணிகையில் நீர் உள்ளது. போதிய உணவும் அளிக்கமுடியும்.” தருமன் சிரித்து “அவ்விரண்டும் மட்டுமே இப்புவியில் நாங்கள் விழையும் பேரின்பங்கள்” என்றார். “வருக!” என தமனர் அவர்களை அழைத்துச்சென்றார். அவர் அளித்த குளிர்நீரையும் கனிகளையும் அவர்கள் மரநிழலில் அமர்ந்து உண்டனர்.


திரௌபதி எழுந்து தமனரின் குடிலருகே சௌபர்ணிகையில் இருந்த ஆழ்ந்த கயத்தை பார்த்தாள். “இயல்பாக உருவான மணற்குழி அது. யானைமூழ்கும்படி நீர் உள்ளது அதில். நல்ல ஊற்றுமிருப்பதனால் நீர் ஒழிவதே இல்லை” என்றார். திரௌபதி “நான் நீராடி நெடுநாட்களாகின்றன” என்றாள். “நீராடி வருக, அரசி!” என்றார் தமனர். “அதற்குள் இங்கே தங்களுக்கு நல்லுணவு சித்தமாக இருக்கும்.” திரௌபதி “நீராடுவதையே மறந்துவிட்டேன் என்று தோன்றுகிறது” என்றாள். பீமன் “வருக!” என அவள் கையை பிடித்தான். “இன்று நான் உன் நீராட்டறை ஏவலன்.” அவள் மெல்லிய உதட்டுவளைவால் புன்னகைத்து முன்னால் நடக்க மரவுரிகளை வாங்கிக்கொண்டு பீமன் பின்னால் சென்றான்.


செல்லும் வழியிலேயே சௌபர்ணிகை நோக்கி ஓடியிறங்கிய சிற்றோடைகளின் கரையிலிருந்து தாளியிலைகளைக் கொய்து தன் கையிலிருந்த மூங்கில்குடலையில் நிறைத்துக்கொண்டே சென்றான். மணல் சரிந்து ஆற்றை நோக்கி இறங்கிய பாதையில் கால்வைத்ததும் திரௌபதி “பஞ்சுச் சேக்கைபோல” என்றாள். பீமன் புன்னகை செய்தான். வெண்மணலில் பகல் முழுக்க விழுந்த வெயிலின் வெம்மை எஞ்சியிருந்தது. ஆனால் அதுவும் கால்களுக்கு இனிதாகவே தெரிந்தது.


கயத்தின் கரையில் மான்கூட்டங்களும் நான்கு காட்டெருமைகளும் நீர் அருந்திக்கொண்டிருந்தன. பீமன் புலிபோல ஓசையெழுப்பியதும் அவை அஞ்சி செவிகூர்ந்தன. உடல்விதிர்க்க நின்று நோக்கியபின் அவன் அணுகியதும் சிதறிப் பரந்தோடின. “அரசியின் குளியல். அது தனிமையிலேயே நிகழவேண்டும்” என்றான் பீமன் சிரித்தபடி. “புலியல்ல குரங்கு என்று கண்டதும் அவை மீண்டு வரப்போகின்றன” என்றாள் திரௌபதி தானும் சிரித்துக்கொண்டு.


கயத்தின் நீர் மெல்ல சுழன்றுகொண்டிருந்தது. ஒளியவிந்த வானின் இருள்நீலம் அதை இருளச்செய்திருந்தது. “இச்சுனைக்கு மகிழநயனம் என்று பெயரிட்டிருக்கிறார்கள்” என்றான் பீமன். அவள் “ஆம், பொருத்தமானது” என்றாள். மேலாடையை கழற்றிவிட்டு இடையில் அணிந்த மரவுரியுடன் நீரில் இறங்கினாள். “ஆ… ஆ…” என ஓசையிட்டாள். “என்ன?” என்றான் பீமன். “எரிகிறது” என்றாள். “உடலெங்கும் நுண்ணிய விரிசல்களும் புண்களும் இருக்கும். கோடையால் அமைந்தவை. நீர் அவற்றுக்கு நன்மருந்து” என்றான் பீமன்.


அவள் நீரில் திளைத்துக்கொண்டிருந்ததை நோக்கியபடி பீமன் தாளியிலைகளுக்குள் கற்களைப் போட்டு கைகளால் பிசைந்து கூழாக்கினான். அவள் குழல் நீரில் அலையடித்து நீண்டது. சிறுமியைப்போல சிரித்தபடி கைநீட்டி நீரில் துள்ளி விழுந்தாள். நீர்ப்பரப்பின்மேல் கால் உந்தி எழுந்து அமைந்து வாயில் நீர் அள்ளி நீட்டி கொப்பளித்தாள். சிரித்தபடி “இன்குளிர்நீர்… மண்ணில் பேரின்பம் பிறிதில்லை என்று உணர்கிறேன்” என்றாள். “வா, தாளிப்பசை பூசிக்கொள். குழலில் அழுக்கும் புழுதியும் விலகட்டும்” என்றான் பீமன்.


NEERKOLAM_EPI_02_UPDATED


அவள் நுங்கின் வளைந்த மென்பரப்பென ஒளிர்ந்த எழுமுலைகளிலிருந்து நீர் வழிய எழுந்து அருகே வந்தாள். அவன் “அமர்க!” என்றான். அவள் அவன் முன் குழல்காட்டி அமர அவன் அவள் குழல்பெருக்கை கைகளால் அள்ளி ஐந்தாக பகுத்தான். ஐம்புரிச்சாயல் நீரில் நனைந்து கரிய விழுதுகளாக சொட்டிக்கொண்டிருந்தது. தாளியிலை விழுதை அள்ளி அதில் பூசினான்.


அவள் “என்ன மணம்?” என்று திரும்பிப்பார்த்தபின் அவன் கைகளை பற்றினாள். அவனுடைய வலக்கை வாளால் என வெட்டுபட்டு குருதி வழிந்துகொண்டிருந்தது. “என்ன ஆயிற்று?” என்றாள். “தாளியை கூழாங்கற்களை இட்டு பிசைந்தேன். அதில் ஒன்று கூரியது” என்றான் பீமன். பின்னர் சிரித்தபடி “குழலுக்கு குருதி நன்று” என்றான்.


தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–45
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–12
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–9
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–8
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–7
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–6
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–5
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 60
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 55
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 54
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 49
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 23
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 17
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 16
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 12
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ – 3
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 88
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 79
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 77
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 62
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 25, 2017 11:30

May 24, 2017

நான் எண்ணும் பொழுது…

balu


பழைய புகைப்படங்களைப்பார்க்கையில் ஒரே உடலுக்குள் நாம் எப்படியெல்லாம் மாறிவந்திருக்கிறோம் என்னும் உணர்வு எழுகிறது. பரவலாக இருக்கும் மாயை ஒன்றுண்டு. உடல் மாறாமலிருக்கிறது, உள்ளம் மாறிக்கொண்டே இருக்கிறது என. உண்மையில் உடல்தான் கணந்தோறும் மாறுகிறது. உள்ளம் அப்படியே நீடிக்கிறது என நினைக்கிறேன்.


இல்லை, உள்ளமும்தான் மாறிக்கொண்டிருக்கிறது. மாறாமலிருப்பது நாம் நமக்கெனத் தொகுத்து வகுத்து சூடிக்கொள்ளும் தன்னிலை மட்டுமே. நாம் அதை நம் உருவாக்கிக்கொள்ளும்பொருட்டே உறவுகளில் ஆடுகிறோம். செயல்களில் திளைக்கிறோம். வெல்கிறோம், அடைகிறோம், வைத்துக்கொள்கிறோம்.


பழைய புகைப்படங்கள் நினைவுகளால் ஆனவை. ஒவ்வொரு புகைப்படத்துடனும் இடமும் காலமும் உறவுகளும் பிணைந்துள்ளன. அன்றுநாம் எப்படி இருந்தோம் என்பதை இப்போது நினைவாகவே மீட்டெடுக்கமுடிகிறது. உண்மையில் அவை இன்று நாம் உருவாக்கிக்கொள்ளும் நினைவுகள். ஆகவே எந்நிலையிலும் நம்மால் அன்றிருந்த உளநிலையைக்கூட மீட்டுக்கொள்ளமுடிவதில்லை. எந்த வகையிலும் காலத்தால் பின்னகர முடியாது. அக்கரையில் நின்றிருக்கும் அடையாளங்கள் இப்புகைப்படங்கள். அங்கே செல்லாமல் இங்கு நின்று ஏங்கலாம்


ஒருமுறை பாலு மகேந்திராவின் அலுவலகம் சென்றபோது அவர் இலங்கையிலிருந்த காலகட்டத்தில் எடுத்த பழைய கறுப்பு வெள்ளைப் புகைப்படங்களை எடுத்துக்காட்டி உற்சாகமாக பேசிக்கொண்டிருந்தார். ஆனால் முகம் துயர்கொண்டிருந்தது. ஒருகட்டத்தில் கண்கலங்கினார். நான் “பழையபுகைப்படங்களை ஏன் பார்க்கிறீர்கள், அப்படியென்றால் வாழ்க்கையை இழுத்து மூடிவிட முடிவெடுத்துவிட்டீர்களா? இனி இறந்தகாலம் மட்டும்தானா? வருங்காலக் கனவுகள் திட்டங்கள் ஏதுமில்லையா?” என்றேன்.


 


Dethan2

தத்தன் புனலூர்


 


முகம் இருள “இல்லையே” என்றார். “அப்படியென்றால் எடுத்து அப்பால் வையுங்கள். கடந்தகால ஏக்கம் போல கொல்வது வேறில்லை. அது அர்த்தமில்லாத துயரில் ஆழ்த்தி வைக்கும். அது தேவைதான். எப்போதாவது தனிமையில் ஓர் அரைமணிநேரம் அந்த நஞ்சின் தித்திப்பில் திளைக்கலாம். ஆனால் அதை மீட்டிக்கொண்டிருப்பது நிகழ்கால வாழ்க்கையை மறுதலிப்பது. செயலின்மையில் மூழ்குவது. வாழ்க்கை என்னும் பரிசுக்கு முகம் திருப்பிக்கொள்வது” என்றேன்.


சற்றுநேரம் கசப்புடன் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தபின் ‘’சரிதான்’’ என்றார். சிலநாட்களுக்குப்பின் தொலைபேசியில் அழைத்து இரண்டு பெரிய எதிர்காலத் திட்டங்கள் வைத்திருப்பதாகச் சொன்னார். ஒரு சினிமாப்பயிற்சிநிலையம். ஒரு கலைப்படம். இரண்டையும் அவர் செய்தார்.


எங்களுக்கிடையே வயது வேறுபாடு மிக அதிகம். ஆனால் என்னை தனக்குச் சமானமான வயதுடையவராக பாலு நடத்தினார். நான் அவரை பாலு என அழைப்பதை விரும்பினார். ‘நம்ம ஜெனரேஷன்லே…’ என்று அடிக்கடி என்னிடம் பேசுவார். அவர் என் வழியாக இளமையை அடைந்துகொண்டிருந்தார். அது ஒருவகையில் எனக்கும் உற்சாகமானதாகவே இருந்தது


 


????????? ?????


நானும் அவரும் ஒருவகையில் சமானமானவர்கள். என்னைப்போலவே அவரும் கடந்த நிலத்திற்கு மீளமுடியாதவர். அவர் ஒருபோதும் மீளமுடியாத பிறந்த நிலம் இலங்கை. சட்டபூர்வமாகவே அவர் வெளிநாடு செல்லமுடியாது. அவர் மீதான குற்றவியல் வழக்குகள் இரண்டு இருந்தன. குடியுரிமைச்சட்ட மீறல் அதில் ஒன்று. ஒரு கலைஞன் என்பதனால் அவ்வழக்குகள் கடைசிவரை அப்படியே கிடப்பில் போடப்பட்டிருந்தன என்றுதான் நினைக்கிறேன்.


இயல்விருது ஒன்றுக்காக அவரை பரிந்துரைசெய்தபோது அவர்தான் தனக்கு இந்தியக்குடியுரிமை, கடவுச்சீட்டு இல்லை என்றும் அதை வாங்குவதில் சிக்கல்கள் உண்டு என்றும் சொன்னார். மேற்கொண்டு கேட்டுக்கொள்ளவில்லை. அன்று அவரது உண்மை வயதும் தெரிந்தது. ‘அதிகாரபூர்வ’ வயதைவிட மிக அதிகம்


’சமவயதினன்’ என்பதனால் பாலு அவரது மாணவர்கள் எவரிடமும் பேசாதவற்றை எல்லாம் என்னிடம் பேசியிருக்கிறார். ஆனால் அத்தனை நெருக்கமான, அத்தனை அந்தரங்கமான நீண்ட உரையாடல்களில்கூட ஒருமுறைகூட ஷோபா பேச்சில் வந்ததே இல்லை. மிக இயல்பாக அவர் அதைக் கடந்து செல்வார். நாங்கள் பேசிக்கொண்டவற்றில் பெண்ளும் மலையாள சினிமாவின் எழுபதுகளும்தான் அதிகம். அனைத்திலும் ஷோபா உண்டு. ஆனால் அவர் அச்சொல்லையே சொல்லி நான் கேட்டதில்லை.


 


p126b


கடந்தகாலத்தை எண்ணி ஏங்குகிறோம். கடந்தகாலத்தில் ஒரு பகுதியை அப்படியே வெட்டி வீசிவிடுகிறோம். ஒருவேளை அப்படி நினைவில் வெட்டி வீசப்பட்ட பகுதிகள்தான் கனவில் மேலும் தீவிரமாக வெளிப்படுமோ என எண்ணியிருக்கிறேன். அப்படி அல்ல என்று தோன்றுகிறது. நினைவுகளான் ஆன நம் ஆளுமை என்பது நாமே தொகுத்துக்கொள்வதுதான். ஆகவே நாம் விரும்பாதவற்றை கொஞ்சம் கொஞ்சமாக அகற்றிவிடமுடியும். ஒன்றைப்பற்றி பேசாமலிருந்தாலே அது விலகிச்சென்றுவிடும். காலப்போக்கில் இல்லாமலேயே, நிகழாததாகவே ஆகிவிடக்கூடும்.


இன்றிரவு  இரு புகைப்படங்கள் அகப்பட்டன. 1997 ல் தத்தன் புனலூர் எடுத்த புகைப்படத்தில் நான் கொழுகொழுவென்று அப்படியே மல்லுத்தனமாக இருக்கிறேன். இத்தனை துல்லியமான மல்லு முகம் எனக்கிருந்தது என நினைக்கையில் வேடிக்கையாக இருக்கிறது


இன்னொரு புகைப்படம் 1992 ல் திருவண்ணாமலையில் எடுத்தது. திருவண்ணாமலையில் கலை இலக்கிய இரவு ஒன்றை ஒட்டிய இலக்கிய நிகழ்ச்சியில் எடுத்தது என நினைக்கிறேன்.சா. கந்தசாமியும் சா.தேவதாஸும் உடனிருக்கிறார்கள். இதில் தலைநிறைய முடியுடன் அடிதடிக்கு பாயப்போகும் முகபாவனையுடன் இருக்கிறேன்


 



இன்றிரவு கடந்தகால ஏக்கத்தின் சில துளிகளை சுவைக்க விரும்பினேன். ஆகவே புகைப்படங்கள். அழியாநினைவுகளின் சிதறல்கள்.தனிப்பட்ட முறையில் பாலுவுக்கு மிகப்பிடித்தமான பாடல் ‘நான் எண்ணும் பொழுது’. அவருக்கு சலீல் சௌதுரி மலையாளப்படங்களில் பணியாற்றும்போது மிக நெருக்கம். அவர் பணியாற்றிய முதல்படமான நெல்லு சலீல் சௌதுரி இசையில் வெளிவந்ததுதான். இளையராஜாவிடம் ஒரு சலீல் அம்சம் உண்டு. பாலு அதை மிக விரும்பினார்.


நான் எண்ணும் பொழுது பாடலுக்கு பாலுவுக்கு பிடித்தமான கடந்தகால ஏக்கம் என்னும் அம்சமும் உண்டு. அழியாத கோலங்களே கடந்தகால ஏக்கம் பற்றிய படம்தான். அதன் தலைப்பிலிருந்தே. அது ஒருவகையில் அவருடைய சுயசரிதை என்று சொல்லியிருக்கிறார்


இன்றிரவு அதில் ஏறி மேலும் பின்னால் சென்றேன். சலீல் சௌதுரி தன் மெட்டுக்களை மீண்டும் மீண்டும் போடும் வழக்கம் கொண்டவர். சின்னசின்ன வேறுபாடுகளுடன் உணர்வுகளை முற்றிலும் மாற்றிவிடுவார். நான் எண்ணும் பொழுது பாடலின் மூலமான  நா ஜியா லேகே லதாமங்கேஷ்கர்  குரலில் பிறிதொரு உணர்வுநிலை கொண்டது. ஆனால் அதுவும் இன்றிரவில் இனிய கடந்தகாலத்தின் கொல்லும் அமுதே


 



 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 24, 2017 11:34

விஷ்ணுபுரம் சிங்கப்பூர் கிளையிலிருந்து ஒரு கடிதம்

IMG_0621


ஜெமோ,


நேற்று என் கனவுல நயந்தாரா வந்திருந்தார் ….


விஸ்ணுபுரம் விழாவிற்கு அவர்தான் சீஃப் கெஸ்ட். அவரை அழைத்து வரும் பணி எனக்கு கொடுக்கப்பட்டிருந்தது :-)


நயந்தாராவின் விழா உரை ரொம்ப நல்லா இருந்துச்சு, ஜெமோ.


“உங்களுக்கு முன் இந்த மேடையில் இன்ஃபிரியராக ஃபீல் பண்ணுவதை போல் இதற்க்கு முன்எந்த மேடையிலும் நான் இவ்வளவு இன்ஃபிரியராக ஃபீல் பண்ணியதேயில்லை” என்பதுதான் அவர் உரையின் தொடக்கமாகவே இருந்துச்சு.


“பின்தொடரும் நிழலின் குரல்” என்பதை புத்தகத்திற்க்கு உருவகபடுத்திபேசியதும், இந்த உலகம் மனிதர்களால் அல்ல, புத்தகங்களால் மட்டுமே ஆளப்படுகிறது, இந்த புத்தகங்களின் கைபாவையாக இருப்பது மட்டுமே மனிதனின் பெருமையாக இருக்கிறது என்றும் சொன்னது ரொம்ப இம்ப்ரசிவ் ஆக இருந்தது. இந்த புத்தகங்களுக்கு தங்களுக்கென ஒரு திட்டம் இருக்கிறது, அவை தங்களுக்குள் ரகசியமாக உரையாடி இவ்வுலகை ஆள்கின்றன என்றும் சொன்னார். அவை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தது. நான் அவர் உங்கள் மகாபாரதக் கதைகளை படித்திருப்பார் என்று நினைத்துக் கொண்டேன்.


என்னுடைய குழப்பம், ஆக்சுவலா என்னுடைய ஃபேவரைட் ஆன சார்மிதானே என் கனவில் வந்திருக்க வேண்டும், ஏன் நயன்தாரா வந்தார்?


உண்மைதான், இலக்கியம் என்பது ஒரு கராறான செயல்பாடு, நமக்கு பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள், வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்ற எந்த பாகுபாடும் இலக்கிய செயல்பாடுகளுக்கு இல்லைதான் போல … :-)


சரவணன் விவேகானந்தன்


***


அன்புள்ள சரவணன் விவேகானந்தன்


நயனதாரைக்கு வயது ஆகிவிட்டது. அந்தக்காலத்தில் லோகிததாஸின் ஆல்பத்தில் அம்மையார் சான்ஸ் தேடி அனுப்பிய படத்தைப்பார்த்த ஞாபகம். அதாவது கால்நூற்றாண்டுக்கு முன்பு.


அரங்கசாமி மாதிரி இளைஞர்கள் கேதரைன் தெரஸாவையே கொஞ்சம் வயசாயிடுச்சு, இருந்தாலும் பரவாயில்லை என்று சொல்லும் காலகட்டம் இது


ஜெ


***


பிகு


புரஃபைல் படத்தின் ஃபோட்டோஷாப் வேலை சிறப்பு. நீங்களே செய்ததா?


***


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 24, 2017 11:31

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.