Jeyamohan's Blog, page 881

November 17, 2021

கல்குருத்து கடிதங்கள்-8

கல்குருத்து- சிறுகதை

அன்புள்ள ஜெ

கல்லின் கனிவு என்று அந்தக்கதையைச் சொல்லலாம். கன்மதம் என்று சம்ஸ்கிருதத்தில் ஒரு சொல்லாட்சி உண்டு. கந்தகத்துக்கான பெயர் அது. கல்லில் ஊறும் மதம் அது. [வெண்முரசில் நீங்கள் பயன்படுத்தியிருக்கிறீர்கள்] அது கல்லின் கோபம் என்றால் கல்லின் கனிவு இது. சிற்பியே சொல்கிறர். காலாதீதத்தில் உறைந்திருக்கும் கல்லானது ஒரு சிற்பமாக அல்லது அம்மியாக ஆவதென்பது கல்லின் கனிவுதான் என்று. அது காலத்தை ஏற்றுக்கொண்டு தன்மேல் காலம் ஓடவிடுகிறது

எத்தனை கற்பனைகளை அக்கதை எழுப்புகிறது என்று எண்ணிக்கொண்டேன். ஒரு பழைய அம்மிமேல் எத்தனை முறை குழவி உருண்டிருக்கும். அதெல்லாம் காலம் அதன்மேல் ஓடுவதுதானே? காலத்தால் அது மீண்டும் குருத்தாக ஆகிறது. காலம் அதை இளமையின் மெருகும் அழகும் கொள்ளச் செய்கிறது. ஒரு கவிதைபோல வளர்ந்துகொண்டே இருக்கும் இமேஜ் அது

என்.பி.சாரதி

 

ஜெ

இந்தக்கதையில் இரண்டு ஜோடிகளை நாம் பார்க்கவில்லை. ஊன்று ஜொடிகளைப் பார்க்கிறோம். சிற்பி தாணுலிங்கமும் காளியமையும். அவர்களும் அற்புதமான இணைதான். சிவபார்வதி வடிவம்

“இவ காப்பி குடிக்கமாட்டா.”

“அப்டியா?” என்றாள் அழகம்மை.

”ஆமா, காப்பின்னா கள்ளுமாதிரின்னு நினைப்பு களுதைக்கு”

என்று சொல்லும் அந்த ஜோடியும் சரி

“நாலஞ்சு தடவை கருப்பட்டி கருப்பட்டின்னு பேச்சு வாக்கிலே சொன்னா.., செரி, சவத்துக்கு இனிப்பு ஞாபகம் வந்துபோட்டுது போலன்னு நினைச்சு கொண்டுவரச் சொன்னேன்” என்றார் கிழவர்.

என்ற வரிகளும் சரி அழகாக ஒன்றுடன் ஒன்று இணைந்துகொண்டன. இரண்டு மூத்த ஜோடிகளும் பொருந்தி ஒன்றாக இருக்கிறார்கள். நடுவே இளைய ஜோடி உரசி உரசி மெல்லமெல்ல பாலீஷாகிக்கொண்டே இருக்கிறது

எஸ்.ராஜ்குமார்

அன்புள்ள ஜெ

நான் கல்குருத்து கதையை வாசித்துக்கொண்டே இருந்தேன். அங்கே இங்கே தொட்டுத்தொட்டுக் கதை சென்றுகொண்டே இருந்தது. கிழவனும் கிழவியும். அழகம்மையும் கணவனும். சிற்பியும் மனைவியும். அம்மிகள்… கதை முடியப்போகும் இடத்தில் இந்த வரி. மேடுகள் ஒண்ணொண்ணா இல்லாமலாகணும்… அதுதான் கதையின் மையம் என்று தெரிந்தது ஒரே கணத்தில். அப்படியே மெய்சிலிர்த்துவிட்டேன். நான் ஒரு கதையை இப்படி சொந்தமாக கண்டடைவது இப்படித்தான். அங்கே அந்தக்கதை மொத்தமாக ஒரு ஜுவல் போல ஆகிவிட்டது

செல்வி முருகானந்தம்

கல்குருத்து- கடிதம் -1 கல்குருத்து -கடிதம்-2 கல்குருத்து -கடிதம்- 3

கல்குருத்து -கடிதம்- 4

கல்குருத்து- கடிதம்-5

கல்குருத்து கடிதம் 6

கல்குருத்து கடிதம் 7

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 17, 2021 10:31

கவிதை இணையதளம் -கடிதம்

கவிதைக்கு ஓர் இணையதளம்

அன்புள்ள ஜெ

கவிதைக்கு ஓர் இணையதளம் பதிவு கண்டேன். முக்கியமான முயற்சி. கவிதைகளை தொகுத்தளிக்கும் பல முயற்சிகள் முற்காலங்களில் நிகழ்ந்தன. அவை தொடர்ச்சியாக நடைபெறவில்லை. அதற்குரிய சில காரணங்களைச் சொல்லலாம் என நினைக்கிறேன்

இது ஒரு ஆவணத்தொகுப்பு முயற்சியே ஒழிய, இதழ் அல்ல என்னும் தெளிவு தேவை. நாள்தோறும் வாசகர்கள் வந்துகொண்டே இருக்க வாய்ப்பில்லை. எதிர்வினைகளை நினைக்காமல் அப்டேட் செய்துகொண்டே இருக்கவேண்டும். சில ஆண்டுகளில் ஒரு பெரிய டேட்டாபேஸ் ஆக மாறும். யார் தேடினாலும் கூகிள் அங்கே கொண்டுவந்து விடும். அப்போதுதான் இதன் உண்மையான மதிப்பு தெரியும். இன்றைக்கு அழியாச்சுடர்கள் அப்படி ஒரு இடத்தில் உள்ளது

அடுத்தபடியாக சகட்டுமேனிக்கு கவிதை போடக்கூடாது. கவிதையில் குப்பைகள் மிகுதி. கடைசியில் எதையுமே படிக்கமுடியாதபடி ஆகும். ஒரு எடிட்டர்ஸ் செலக்சன் இருக்கவேண்டும்.

நல்ல கவிஞர்களின் எல்லா நல்ல கவிதைகளும் இங்கே கிடைக்கவேண்டும் என்ற கொள்கை தேவை. பதிப்புரிமைபெற்று போடலாம். தேவையென்றால் கொஞ்சம் பணம்கூட கொடுக்கலாம்.

தமிழ்நவீனக்கவிதை, மொழியாக்கக் கவிதை என்றெல்லாம் பகுப்புகள் வேண்டும். மொழியாக்கக் கவிதைக்குள் மொழி வாரியாக பகுப்புகள் இருக்கலாம். அதுதான் வாசிக்க வசதியானது. தேடவும் அவ்வாறு இருந்தால்தான் நல்லது.

கவிஞர்கள் பற்றிய முழுமையான குறிப்புகள் வேண்டும். ஆண்டுகள் புத்தகத்தலைப்புகள் விருதுகள் எல்லாமே அதில் சொல்லப்பட்டிருக்கவேண்டும்.

கவிதை பற்றிய நல்ல விமர்சனங்களையும் தொகுக்கலாம். அவற்றுக்கு அக்கவிதைகளுடன் லிங்க் கொடுக்கலாம். கவிதைகளை ஆராயவும் புரிந்துகொள்ளவும் உதவும்

ஆனால் இதெல்லாம் பொறுமையாக சில ஆண்டுகள் தொடர்ச்சியாகச் செய்யவேண்டிய வேலைகள். ஆரம்ப சூரத்தனத்துடன் தொடங்கிவிட்டு மற்றவர்களை குறைசொல்லிவிட்டு நிறுத்திக்கொள்வதே இங்கே அதிகம் நிகழகிறது

நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்

ஸ்ரீனிவாஸ்

 

கவிதைகள் இணையதளம்  புதிய இதழ்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 17, 2021 10:31

November 16, 2021

வசைபாடிகளின் உலகம்- எதிர்வினையும் பதிலும்

வசைபாடிகளின் உலகம்- கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

வசைபாடிகளின் உலகம்- கடிதங்கள் என்ற தலைப்பில் வெளியான எம். அர்விந்த்குமாரின் கடிதம் காழ்ப்பானது என்று சொன்னால் அது மென்மையான விமர்சனம்.

சங்கி முத்திரை வந்துவிடுமோ என்பதற்காக சம்பிரதாயத்துக்கு, “சங்கிகளின் காழ்ப்பை பற்றிச் சொல்லிவிடுகிறேன். அவர்கள் அரசியல் மனநோயாளிகள். ஆனால் இந்துக்களில் அவர்கள் பத்துசதவீதம்கூட இருக்க மாட்டார்கள். மிச்சமிருப்பவர்கள்தான் இலக்கிய வாசகர்கள். இங்கே அத்தனை பேருக்கும் அவர்கள்தான் வாசகர்கள்” என்று எழுதுகிறார்.

இந்துக்களில் பத்து சதவீதம் தான் இந்துத்துவர்கள் என்று இவர் எந்த புள்ளி விவரத்தின் அடிப்படையில் வந்தடைந்தார். பாஜகவுக்கு ஓட்டு போட்ட எல்லோரும் “சங்கிகள்” இல்லையென்று வைத்துக் கொண்டாலும் பத்து சதவீதத்தையும் தாண்டுவார்களே. சரி, பேச்சுக்கு பத்து சதவீதம் என்றாலும் எப்பேர்பட்ட தொகையில் பத்து சதவீதம் என்பது இரண்டு ஐரோப்பிய நாடுகளுக்கு நிகர்.

சம்பிரதாயத்துக்கு சங்கிகளை குட்டி விட்டு அப்புறம் மொத்தமாக விஷம் தொடர்கிறது. “ஆனால் சிறுபான்மையினரில் அனேகமாக அத்தனைபேருமே மதவாதக்கோணத்தில் மட்டும்தான் யோசிப்பார்கள். அரசியல், இலக்கியம் எதுவானாலும் அவர்களின் மதவெறி மட்டும்தான் வெளிப்படும். அவர்களுக்கு கலையோ இலக்கியமோ அழகியலோ ஒன்றுமே புரியாது. விதிவிலக்காக இணையத்தில் ஒருவர்கூட இதுவரை என் கண்ணுக்குப் படவில்லை”. நேற்றுக் கூட ஒரு சிறுபான்மை தனிக் குழுமத்தில் “பேட்டை” நாவல் பற்றி நல்லதொரு குறிப்பு வாசித்தேன்.

இப்படி அடித்து விடுவதற்கு அசாத்திய சமூக அறிவு வேண்டும். அதோடு நிற்காமல், பிராமணர்களுக்கு நற்சான்றிதழ் வேறு, “இந்துக்களில் பிராமணர்களுக்கு பிராமண மேட்டிமைவாதம் இப்படி சின்னவயசிலே புகுத்தப்படுகிறது. ஆனாலும் பலர் வெளியே வந்துவிடுகிறார்கள். சிறுபான்மையினருக்கு அது சாத்தியமே இல்லை என நினைக்கிறேன்.”. இதையெல்லாம் இவர் எழுதிவிட்டு சிறுபான்மையினர் பற்றி, “சிறுபான்மையினருக்கு அது சாத்தியமே இல்லை என நினைக்கிறேன்” என்று போகிற போக்கில் அடித்து விட்டு போகிறார்.

நான் இணையத்தின் அதிகமாக புழங்குகிறவன் என்கிற முறையில் சில வார்த்தைகள். உங்கள் எழுத்தை படித்து விவாதிப்பவர்கள் பல தரப்பட்டவர்கள். நிச்சயமாக இந்துக்கள், இந்திய ஜனத்தொகயை பிரதிபலித்துத்து, அதிகமாக இருப்பார்கள். அதே சமயம் உங்களை வசைப் பாடுபவர்களும் அநேகர். அதில் சர்வ நிச்சயமாக அநேகர் இந்துக்கள் தாம். “திராவிட அரசியல் பேசுபவர்கள்” என்கிறாரே அவர்கள் யார்? செவ்வாய் கிரகவாசிகளா? அநேகர் இந்துக்கள் தாம்.

இவ்வருடம் தலித் வரலாறு தொடர்பாக நிகழ்ச்சிகள் நடத்திய அனுபவத்தில் சொல்கிறேன் எல்லா வகையான மனிதர்களும் எல்லா தரப்பிலும் இருக்கிறார்கள். அயோத்திதாசர் என்றாலே கிண்டலடிக்கும் பிராமணர்களும் இருக்கிறார்கள், சரி என்ன தான் எழுதியிருக்கிறார் என்று கேட்கும் பிராமணர்களும் இருக்கிறார்கள். ஸ்டாலின் ராஜாங்கத்தின் நிகழ்ச்சியை முன் வைத்து அநேக விவாதங்கள், கிண்டல்கள், ஆர்வமுடன் கேள்வி எழுப்பியவர்கள் என்று பல தரப்பட்ட எதிர்வினைகள் வந்தன.

இணையத்தில் எனக்கு கிடைத்த அனுபவங்களில் ஒன்று பலருக்கும் தத்தமது குல/மத வரலாறு சார்ந்து தான் ஆர்வமிருக்கிறது. எந்த தரப்பின் வரலாறு அல்லது சமூகம் பற்றியாவது ஒரு குறிப்பு எழுதினால் மறு நாள் அந்த சமூகத்தவரிடமிருந்து 10-20 நட்பு அழைப்புகள் வரும். ஆனால் இதை தாண்டி அலாதியான செய்திகளும் அனுபவங்களும் கிட்டியிருக்கிறது. இங்கு இரண்டு பதிவுகள் பற்றி சொல்கிறேன்.

இஸ்லாமிய மரபு சார்ந்த முனாஜாத்து என்கிற வழிபாட்டு பாடல் மரபில் “சரஸ்வதி முனாஜாத்து” என்ற தலைப்பில் நண்பர் எழுதியதை பகிர்ந்தேன்

https://www.facebook.com/arvindkannaiyan/posts/10219568786349864

இன்னொரு பதிவு, “திரவுபதி அம்மன் வழிபாட்டில் காவல் தெய்வமான முத்தால ராவுத்தர் வழிபாடும்” என்ற தலைப்பில்

https://www.facebook.com/arvindkannaiyan/posts/10219622158364131 .

காந்தியை பற்றி இஸ்லாமியர் எழுதி வெளியிட்டவைகளை ஒரு இஸ்லாமிய நண்பர் அனுப்பினார். அது பற்றி தனியே எழுத வேண்டும். வாசகர்களே குறைவாக இருக்கும் சூழலில் தேடல் கொண்ட வாசகர்கள் அதனினும் அரிது ஆனால் அவர்கள் எல்லா தரப்பிலும் இருக்கிறார்கள்.

சமீபத்தில் அமெரிக்காவில் மிக முக்கிய செய்தி பேஸ்புக் நிறுவனம் பற்றியது. சமூக வலைதளம் எப்படி காழ்ப்புகள், பொய் செய்திகள் பரவ வகைச் செய்கிறது என்றும் அவற்றை தடுக்க பேஸ்புக் நிறுவனம் தடுக்க தவறியது என்கிற விஷயம் விவாதமானது. அதில் முக்கிய நாளிதழ்கள் இந்தியாவில் பரவும் வெறுப்பரசியல் பற்றி முதல் பக்க கட்டுரைகளே வெளியிட்டன. இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான சொல்லாடல்களைக் கண்டு பேஸ்புக் நிறுவனத்தின் ஊழியர்களே திக்குமுக்காடிவிட்டனர். இந்த செய்தியை நீங்களும் மறுக்க வாய்ப்புண்டு. இது அமெரிக்ககள் இந்தியா மீதுள்ள காழ்ப்பு என்று ஆனால் நிஜம் அதுவல்ல.

“எவ்வளவு படித்தாலும் என்ன சிந்தித்தாலும் அடிப்படையான மனநிலை மதக்காழ்ப்பு மட்டும்தான்” என்று அர்விந்த்குமார் முடித்திருக்கிறார். அது அவருக்கு தான் முதலில் பொருந்தும்.

நன்றி,

அரவிந்தன் கண்ணையன். 

அன்புள்ள அரவிந்தன்,

அந்தக் கடிதம் வெளியான அன்றே நண்பரும் சிறந்த இலக்கியவாசகருமான கொள்ளு நதீம் எழுதிய குறிப்பு [நூல்வேட்டை ] வெளியாகியிருக்கிறது. அவர் ஆழ்ந்த மதநம்பிக்கை கொண்ட இஸ்லாமியர், இஸ்லாமிய அறிஞர் மற்றும் செயல்பாட்டாளர். என் தளத்திலேயே தொடர்ச்சியாக சிறுபான்மையினரான இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் பங்கேற்றுக்கொண்டிருக்கிறார்கள். இந்த தளமே ஆழ்ந்த மதநம்பிக்கை கொண்ட கிறிஸ்தவரான சிறில் அலெக்ஸ் தொடங்கியதுதான்.

ஆகவே அர்விந்த்குமார் மகாதேவன் எழுதியது ஒற்றைப்படையான, குத்துமதிப்பான உளப்பதிவு. தர்க்க அடிப்படை அற்றது. எளிதில் தோன்றும் உளப்பதிவை முழுமுடிவாக முன்வைப்பது. ஆனால் நம் இளமைக்காலச் சிந்தனைகள் பெரும்பாலும் அப்படித்தான் உருவாகின்றன.

அக்கடிதம் எனக்கு வெறும் காழ்ப்பு அல்ல என்று ஏன் தோன்றியதென்றால், அதை எழுதியவர் மதக்காழ்ப்பெல்லாம் இல்லாத இளைஞர். சமூகவலைத்தளங்களில் செயல்படுபவர். ஒருவேளை இலக்கியவாதியாக ஆகக்கூடும். அங்கே சிறுபான்மை மதத்தினரான சிலர் உருவாக்கும் காழ்ப்பின் புகைமூட்டம் இத்தகைய சித்திரத்தை மிக வலுவாக ஏராளமானவர்கள் மனதில் உருவாக்கியிருக்கிறது. மிகமுக்கியமாக விவாதிக்கவேண்டிய ஓர் உளப்பதிவு இது.

குறிப்பாக இணைய உலகில் கடும் மதவெறியுடன் இலக்கியவாதிகளையும் பொதுவான பண்பாட்டு ஆளுமைகளையும் தாக்கியும் வசைபாடியும் எழுதுபவர்கள் இத்தகைய உளப்பதிவை மிக எளிதாக பரப்பிவிடுகிறார்கள். அர்விந்த்குமாரை எனக்குத் தெரியும். அவர் இந்த உளப்பதிவை அடைந்தது இளையராஜா மேல் சிறுபான்மையினரில் ஒருசாரார் ஒருங்கிணைந்து தொடுத்த காழ்ப்புகளைக் கண்ட பின்னர்தான். எனக்கு அதுபற்றி ஓராண்டுக்கு முன் அவர் ஒரு விரிவான கடிதத்தை எழுதியிருந்தார்.

பொதுவான தமிழ் ஆளுமைகள் ஒவ்வொருவருக்கும் அவர்களை தலைமேல் கொள்ளும் ரசிகர்களும் வாசகர்களும் இருப்பார்கள். ஏதோ ஒருவகையில் பொது ஆளுமைகள் மதம்கடந்தவர்கள். ஆகவே மதக்காழ்ப்பாளர் அவர்களையே முதன்மையாகத் தாக்குவார்கள். ஏனென்றால் அந்தப் பொது ஆளுமைகளுக்கு அவர்களின் மதங்களில் ரசிகர்கள், ஆதரவாளர்கள், வாசகர்கள் இருப்பார்கள். அதை ஒருவகை மதமீறலாகவே இந்த வெறியர்கள் எண்ணுகிறார்கள். ஆகவே அந்தப் பொது ஆளுமைகளை தாக்கி ‘காலிசெய்ய’ முயல்கிறார்கள்.சமூக வலைத்தளங்களில் அதற்காகக் கூட்டாக முயல்கிறார்கள்.

இந்த மதவெறியர்கள் பொது ஆளுமைகள் அனைவரையும் தாக்கும் வெறியில் மிக எளிதாக ஒட்டுமொத்தச் சமூகத்தையே எதிர்ப்பக்கம் தள்ளிவிடுகிறார்கள் என்பது ஓர் நடைமுறை யதார்த்தம். மதக்காழ்ப்பாளர்கள் அதற்கு அந்தந்த தருணங்களுக்கு ஏற்ப பல காரணங்களைச் சொல்வார்கள். முற்போக்குக் காரணம், அரசியல் காரணம். ஆனால் அதெல்லாம் பாவனையே என்பதை அவர்களின் நாலைந்து பதிவுகளைக் கண்டாலே உணர்ந்துகொள்ள முடியும். பாவலாக்கள்தான் முதலில் அப்பட்டமாக வெளியே தெரியும்.

இன்று வந்த இன்னொரு கடிதத்தில் ஏறத்தாழ இதே பதிவை ஒருவர் எழுதியிருக்கிறார். ‘நீங்கள் துணிவாகக் கருத்துச் சொல்கிறீர்கள். ஆகவே இவர்கள் உங்களை எதிர்க்கிறார்கள் என்று கொள்வோம். ஆனால் எஸ்.ராமகிருஷ்ணனையும் இதேபோலத்தான் வசைபாடுகிறார்கள். சில நாட்களுக்கு முன் அவர் யாரோ ஆட்டோ ஓட்டுநர் பற்றி ஒரு நிகழ்வைச் சொன்னார் என்று காரணம் கற்பித்து வெறிகொண்டு தாக்கினார்கள். இந்த மதவெறி கவலை தருகிறது’

இந்தக் கவலையை அல்லது உளப்பதிவை வெறும் மதக்காழ்ப்பு என்று நிராகரிப்பது உங்கள் விருப்பம். ஆனால் அவ்வண்ணம் எந்த முன்முடிவுகளும் இல்லாத  பல்லாயிரவர் சமூகவலைத்தளங்களுக்கு சென்று சிலகாலம் புழங்கியதுமே சிறுபான்மை மதத்தவர் எல்லாமே மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள், அவர்களால் வேறெந்தவகையிலும் சிந்திக்க முடியாதென்ற உணர்வை அடைவது கண்கூடான நடைமுறை உண்மை. வாரம் ஒருமுறை எவராவது அதைச் சொல்லவும் கடிதமெழுதவும் காண்கிறேன்.

ஓராண்டுக்குக்கு முன்பு என் அறைக்கு ஓரு கிறிஸ்தவ வாசகர் வந்து சென்றதுமே கூட இருந்த ஒருவர், அவர் ஓர் இடதுசாரி, சொன்னார்.  “ஆச்சரியம்தான், இவங்களுக்கு இவங்களோட ஸ்டஃப் இல்லாத எதையுமே படிக்க முடியாது. இவர் படிக்கிறார்னா ரொம்பப் பெரிய பாய்ச்சல்… பாவம் வீட்டிலேயும் சமூகத்திலேயும் சரியான அடிவாங்குவார். இல்லேன்னா பரம ரகசியமா படிப்பார்’ . வந்தவர் என் வாசகர் அல்ல, வைரமுத்து வாசகர் என்பதையும் சொல்லியாகவேண்டும்.

இடதுசாரி நண்பர் சொன்னார் “அவங்க மதம் டீனேஜிலேயே கடுமையாக டிரெயினிங் குடுத்திடுது… மதத்தேவைக்காக அவங்க தற்காலிகமா இடதுசாரி ஆதரவாளர்களா ஆகலாம். இடதுசாரியா ஆகிறது அனேகமா நடக்கவே நடக்காது”

நீங்கள் என்ன சொன்னாலும் இதுவே பொதுவான மனப்பதிவு. சமூக வலைத்தளங்களின் வசைப்போக்குகள் இதை நிறுவிக்கொண்டே இருக்கின்றன. இதை உருவாக்குபவர்கள் சிறுபான்மையினரில் அதீதவெறி கொண்ட சிலர். அவர்கள் உருவாக்கும் சித்திரத்துக்கு அனைவரும் பொறுப்பேற்க வேண்டியிருக்கிறது என்பதை சிறுபான்மையினல் உள்ள ரசனையும், நுண்ணுணர்வும், சமநிலையும் கொண்டவர்கள் யோசிக்கவேண்டும். அதற்கான காலம் நெருங்கிவிட்டது. அதை வலுவாகச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஆம், இதேபோல இந்துத்துவ வெறியர்களும் வெறுப்பைக் கக்குகிறார்கள். ஆகவே அந்தக் கடிதமெழுதிய அரவிந்த்குமார் கூட ஒருவார்த்தை அவர்களை கண்டித்த பிறகுதான் பேசவேண்டியிருக்கிறது. அந்த ஒரு வரியையாவது சிறுபான்மையினர்ல் உள்ள சமநிலையும் ரசனையும் கொண்டவர்கள் அவர்கள் மதம்சார்ந்த வெறியர்கள் பொதுஆளுமைகள் மேல் கட்டவிழ்த்துவிடும் வசைகளின்போது பதிவுசெய்ய வேண்டும். இனிமேலும் அவர்கள் பம்மிக்கொண்டிருந்தால் இழப்பு அவர்களுக்கே உருவாகும். அவர்கள் பேசுவதற்குரிய பொதுக்களங்களே இல்லாமலாகும்.

பொதுவாக நான் எவ்வகையிலும் அரசியல்சரிகளை கணக்கில்கொண்டு பதுங்கியும் மழுப்பியும் எதையும் சொல்பவன் அல்ல. இதைச்சொன்னதும் இதே வெறியர்கள் என்னை சிறுபான்மையினரின் எதிரியான ‘சங்கி’ என மேலும் கூச்சலிடுவார்கள் என தெரியும். அவர்களை எப்போதும் தூசெனவே கருதி வந்திருக்கிறேன்.ஆனாலும் கவனத்தில் கொள்ளப்பட்டேயாக வேண்டிய குரல் என நினைத்தே அதை வெளியிட்டேன்.

முன்பொருமுறை இதேபோல இஸ்லாமியர் தங்கள் இல்லத்திருமணங்களுக்கும் ரம்ஸான் போன்ற விழாக்களுக்கும் மாற்றுமதத்தவரை வீட்டுக்கு அழைக்கலாகாது என பல இடங்களில் உருவாகும் கெடுபிடிகளை பற்றி கவலை தெரிவித்து எழுதியிருந்தேன். என்னை சிறுபான்மையினர் மேல் காழ்ப்பை வெளிப்படுத்துகிறவன் என வசைபாடினர். வசைபாடியவர்கள் பலர் இடதுசாரிகள். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அவர்களில் பலர் அதையே மேலும் கவலையுடன் எழுதினர். இதையும் சில ஆண்டுகளுக்குப்பின் எழுதுவார்கள்.

எப்போதுமே மதவெறியர் ஒட்டுமொத்த மதத்தின் பிரதிநிதிகளாக தங்களை பாவனை செய்துகொண்டு, மதக்காவலர்களாக எண்ணிக்கொண்டு பொதுவெளியில் பேசுவார்கள். அதை ஆணித்தரமாக மறுக்கவேண்டியது, அவர்கள் மதத்தின் முகங்கள் அல்ல என சொல்லிக்கொண்டே இருக்கவேண்டியது, மதத்தின்மேல் நம்பிக்கை கொண்டவர்களின் தலையான கடமை. இல்லையேல் அவர்கள் மதவெறியரசியலுக்கு தங்கள் மதங்களை காவுகொடுக்கிறார்கள். அதை இந்து இஸ்லாமிய கிறிஸ்தவ மதத்தவர் அனைவருக்கும் மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 16, 2021 10:34

புத்தனாகும் புழுக்கள் – கடிதங்கள்

புத்தனாகும் புழுக்கள்-தங்கபாண்டியன்

அன்புள்ள ஜெ

உங்கள் தளத்தில் வரும் கடிதங்களை விரும்பி வாசிப்பேன். மிகப்பெரும்பாலான கடிதங்களில் சுருக்கமாக ஒரு வாழ்க்கைச் சித்திரம் இருக்கும். எத்தனை வகையான மனிதர்கள், எவ்வளவு கதைகள் என்னும் திகைப்பு உருவாகும். அவ்வாறு நான் சமீபத்தில் வாசித்த மிகச்சிறந்த கடிதம் புழுக்களைப் பற்றி டாக்டர் தங்கபாண்டியன் எழுதியது. அந்தக் கடிதத்தின் மொழிநடையை மட்டும் வைத்தால் நீங்கள் எழுதியதென்றே தோன்றும். அத்தகைய கூர்மையான மொழி. அபாரமான கவித்துவம். ஒரு மகத்தான சிறுகதை போலத் தோன்றியது அந்தக் கடிதம். அவருக்கு என் வணக்கம்.

செந்தில்ராஜா

 

அன்புள்ள ஜெ

தங்கபாண்டியன் அவர்கள் எழுதிய கடிதம் என்னை உலுக்கியது. அதனுடன் இருந்த படத்தை பார்த்ததுமே அதை வாசிக்காமல் கடந்துவிட்டேன். ஆனால் அந்தத் தலைப்பு என்னை தொடர்ந்து வந்துகொண்டே இருந்தது. புத்தனாகும் புழுக்கள். அற்புதமான தலைப்பு. பௌத்தம் என்ன சொல்கிறதென்றால் மானுடப்பிறவி உயிர்களில் உயரியது. அதில் உயரியது புத்தநிலை. உயிர்களில் கீழ்நிலை புழுக்கள். புழுக்கள் புத்தனாவது என்பது எவ்வளவு பெரிய தரிசனம். அதன் பின் அக்கடிதத்தை வாசித்தேன். அது வெண்முரசுக்கு வந்த மிகச்சிறந்த எதிர்வினைகளில் ஒன்று. உடன் இணைந்த வெண்முரசு பக்கங்களையும் படித்தேன். ஒரு வாழ்க்கைத்தரிசனம், ஒரு மாபெரும் காவியப்பகுதிபோல இருந்தன அனைத்தும் இணைந்து

மிக அற்புதமான வரிகள். வெண்முரசின் வரிகள் ஓர் அபாரமான புனைவுநிலையில், ஒரு ஞானநிலையில் எழுதப்பட்டவை. அந்த வரிகளை இயல்பாக எட்டிநிற்கின்றன தங்கபாண்டியனின் வரிகள். எங்கள் இறப்பறி சோதனைக்கூடம் முழுவதும், மேலும் வழிநெடுகிலும் நெளியும் புழுக்கள். மரணத்தின் மேல் மரணமின்மையின் குதூகலம் என. ஓர் இலக்கியப்படைப்பு வாசகனை அந்த இலக்கியப்படைப்பாளியின் உச்சத்துக்கே கொண்டுசெல்லும், அவனை கடந்துசெல்லவும் வைக்கும் என்பதற்கான சாட்சியமாக அந்த வரிகளை எடுத்துக்கொண்டேன். கடிதமெங்கும் தலைப்பை விளக்கவில்லை. ஆனால் தலைப்பையே அக்குறிப்பு விளக்கி நிற்கிறது.

அற்புதமான கடிதம். உங்கள் தளத்தில் லோகமாதேவி போன்ற நிபுணர்கள் எழுதும் கடிதங்களில் இயல்பாக வெளிப்படும் கவித்துவம் பிரமிக்கச் செய்கிறது

எஸ்.ஆர்.ராஜ்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 16, 2021 10:34

விஷ்ணுபுரம் விருந்தினர்-5, சுஷில்குமார்

விஷ்ணுபுரம் விருந்தினர்-1, கோகுல் பிரசாத்

விஷ்ணுபுரம் விருந்தினர்-2, காளிப்பிரசாத்

விஷ்ணுபுரம் விருந்தினர்-3, எம்.கோபாலகிருஷ்ணன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-4, பா.திருச்செந்தாழை

விஷ்ணுபுரம் விருந்தினர் அரங்கில் இளம்படைப்பாளியான சுஷில்குமார் கலந்துகொள்கிறார். மூங்கில் என்னும் சிறுகதைத் தொகுதி வெளிவந்துள்ளது. நாகர்கோயில் காரர். கோவையில் ஆசிரியப் பயிற்சியாளராக பணியாற்றுகிறார்

மூங்கில் தொகுதி வாங்க

 

கதைகள்

தோடுடையாள்

சப்தாவர்ணம்

பச்சைப்பட்டு

மரம்போல்வர்- சுஷீல்குமார்

மூங்கில்[சிறுகதை] சுஷீல்குமார்

மண்ணுள் உறைவது

சுவர்மாடன்

சிப்பி

முருகக்கா

மந்தாரம்

நங்கையின் நாராயணன்

இரு கோடுகள்

சிலை

விதை

பிறப்பொக்கும்

நல்லதோர் வீணை

கேசினோ

திகம்பரபாதம்

கதக்

சுருக்குக் கம்பி

தனிமையிருள்

 

விவாதங்கள்

கதை திகழும் புள்ளிகள்- ஒரு விவாதம்

மரம்போல்வர் -கடிதங்கள்

மண்ணுள் உறைவது, கடிதங்கள்

மூங்கில்- கடிதங்கள்

மறைமுகம், மூங்கில் -கடிதங்கள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 16, 2021 10:34

கல்குருத்து – கடிதங்கள் 7

கல்குருத்து- சிறுகதை

அன்புள்ள ஜெயமோகன்,

பாட்டாவும் பாட்டியும் நாள்பட்ட அம்மியும் குழவியும் போல் நெடிய வாழ்வு இசைபட வாழ்ந்து மாடனும் மாடத்தியுமாக ஆவது போல், மூத்த கருங்கல் பாறையான கண்ணப்பனை நீலிமை எனும் தனது பிரேமையால் உடைத்து மெருகேற்றி குருத்தென வடித்தெடுக்கும் அழகம்மை அடையும் தாய்மை உணர்வு மிக இனிமை.

நெல்சன்

 

அன்புள்ள ஜெ

கல்குருத்து கதையை நுட்பமாக வாசித்து உள்வாங்க வேண்டியிருக்கிறது. ஒரு கதை நுட்பமாக இருக்கவேண்டும் என்பதற்காகவே நுட்பமாக காட்டிக்கொள்ளும். மொழியை திருகி எழுதினால், நீளநீள சொற்றொடர்களாக எழுதினால், நாம் அதை நிறுத்தி கூர்ந்து வாசிப்போம். அப்போது சின்னச்சின்ன வரிகள் கூட நம் கவனத்தில் நிற்கும். அது ஆழமான கதை என்ற எண்ணம் வரும். பொதுவாகவே நாம் கஷ்டப்பட்டு ஒன்றை வாசித்தால் அதை நல்ல படைப்பு என்று சொல்லும் மனநிலை வந்துவிடும். ஆனால் மாஸ்டர்கிளாஸ் கதைகள் இயல்பானவை. சரளமான ஒரு வாழ்க்கைச்சித்திரத்தை மட்டுமே அளிப்பவை. அவற்றை சாதாரணமாக வாசித்துச் சென்றுவிடுவோம். அவற்றின் ஆழமும் கவித்துவமும் தெரியாமலாகிவிடும்

கல்குருத்து தலைப்பிலேயே இது கவித்துவமான கதை என்று சொல்லிவிடுகிறது. ல்லா தோட்டங்களும் ஆற்றை நோக்கி சரிவனதான் என்ற வரியிலேயே கூர்ந்து வாசி என்று சொன்னது. எல்லா கலைக்கும் உண்டு அதுக்கான சோசியம், அதுக்குமேலே காலதேவனுக்க கண்ணு விளப்போகுது, ரெண்டு பேருக்கும் வயித்திலே அக்கினி இல்ல என வரிகள் வந்துகொண்டே இருக்கின்றன.

மீண்டும் மீண்டும் வாசிக்க வைக்கும் கதை. இதன் மையத்தை படிமமாக பார்க்கலாம். ஆனால் அப்படி பார்க்கவேண்டும் என்பதுமில்லை. இயல்பாக ஒரு அம்மிகொத்தும் கதையாகவும் இருக்கிறது. எந்த வகையிலும் தன்னை முன்னிறுத்தாமல் இயல்பாக இருக்கிறது இந்தக்கதை.

எம்.பிரபாகர்

 

அன்புள்ள ஜெ

அம்மிகொத்தும் கலையை நான் பார்த்ததே இல்லை. ஆனால் நீலச்சாயம் முக்கி அதை உருட்டி மேடுகளை கரைக்கும் உத்தி அழகாக இருந்தது. கல்லில் இருக்கும் மேடுகளை தொட்டுத்தொட்டுக் கரைக்கும் அந்த உளியை கண்ணருகே பார்க்கமுடிந்தது. ”ஒரு கல்லு கோயிலிலே நிக்குது. ஒரு கல்லு தான் தேய்ஞ்சு சமையலுக்கு கூடுது. ரெண்டும் கல்லுக்க கனிவுதான்” அற்புதமான வரி

எஸ், ராஜசேகர்  

கல்குருத்து- கடிதம் -1 கல்குருத்து -கடிதம்-2 கல்குருத்து -கடிதம்- 3

கல்குருத்து -கடிதம்- 4

கல்குருத்து- கடிதம்-5

கல்குருத்து கடிதம் 6

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 16, 2021 10:32

அழிந்த நூல்களும், மீட்டிக் கொண்ட நம்பிக்கையும்- கொள்ளு நதீம்

book நூல்வேட்டை – கொள்ளு நதீம் கொள்ளு நதீம் இணையப்பக்கம்

வணக்கம் ஜெ.

கடந்த 10ந்தேதி பெய்த பேய் மழையில் என் 250/300 நூல்கள் மழையில் நனைந்து சேதமடைந்துவிட்டன. அதுபோக அதை வைத்திருந்த புத்தக கடைக்கு அதைவிட பல மடங்கு சேதம். ஒன்றும் செய்ய வழியின்றி திக்கித்துப் போய்விட்டேன். மாதமொன்றுக்கு குறைந்தபட்சம் ஆயிரம் / இரண்டாயிரம் என்று நூல்களை காசு கொடுத்து வாங்கிக் கொண்டே இருக்கிறேன், என் மாத பட்ஜெட்டின் முதல் ஒதுக்கீடே இந்த நூல்களை வாங்குவதற்காக எடுத்து வைக்கும் பணம்தான். இந்த நிலையில் வாசிப்பு வாழ்வில் முதன்முறையாக இவ்வளவு பெரியளவில் நூல்களை பறிகொடுத்ததில்லை. அதைவிட பெருந்துயரம் பல்லாண்டுகளாக இலக்கிய அமர்வுகளில், நூல்களில், நேர்பேச்சில் என கையிலெழுதிய குறிப்பேடுகளையும் வாரிச் சென்றுவிட்டது இந்த அடைமழை.

திருவல்லிக்கேணி வாலாஜா பழைய பள்ளிவாசலின் எதிர்புறமுள்ள பெருநாள் தொழுகைக்கான (பல ஏக்கர்) திடல் முழங்கால் வரை குளம்போல் நான்கு நாட்கள் ஏரிபோல் கிடந்தது. பேயறைந்த சூன்யத்தில் இருந்தேன். அபி சார் 13-ந்தேதி காலையில் சென்னை வந்துவிட்டார், நிலவரம் இயல்பாக இருந்து இருந்தால் நான் எழும்பூர் ரயில் நிலையத்துக்கு சென்றிருப்பேன். காலையிலிருந்தே வேறு நண்பர்களிடம் நேரில் போகச் சொல்லி அபிசார் நலம் விசாரித்தேன். மாலை 6 மணியளவில் மனம் நிலைகொள்ளவில்லை. நேரே தி.நகர் வாணிமகால் விழா அரங்கிற்கு சென்றேன். பபாசி விருது விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அபி சாரை (நேரில் விஷ்ணுபுரம் விழாவில்தான் 2019) கடைசியாக பார்த்தது, பெருந்தொற்று, பொதுமுடக்கம் அனைத்து சந்திப்புகளையும் சீர்குலைத்திருந்தது அல்லவா?  ஈரோடு / மதுரை நவீனுக்கு போன் போட்டுவிட்டு சென்றிருந்ததால் அவரும் என்னை எதிர்நோக்கியிருந்தார். அபி சார், ஒன்றும் கவலைப்படாதே என்று கைகளைப் பற்றிக் கொண்டு கூறியதும் பாதி உயிர் வந்தது, இதுதான் இயேசுவின் healing touch-ச்சாக இருக்கும்போல் தோன்றியது.

மறுநாள் நற்றுணை – யாவரும் இணைந்து நடத்திய எஸ்.ரா.வின் நிகழ்வு. கடைசியாக தாங்கள் இந்த ஆண்டு தொடக்கத்தில் டோக்கியோ செந்திலின் ‘இசுமியின் நறுமணம்’ நூலை வெளியிட்ட அதே அரங்கு. சினிமா தியேட்டர் வாசலில் டிக்கெட் செக் செய்பவரைப் போல் வழிமறித்த காளிபிரசாத், சௌந்தர் ஆகியோரிடம் வெறுமனே ஒரு ஹாய் சொல்லி உள்ளே நுழைந்தேன், நீதிபதி சந்துரு பேசி முடித்திருந்தார், தேநீர் இடைவெளியில் எஸ்.ரா.விடம் சற்று பேசிக் கொண்டிருந்தேன்,

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கடி இலக்கிய நிகழ்வுகளில் பார்த்துக் கொண்டிருந்த பல்வேறு முகங்களை இங்கு பார்த்ததே ஆறுதலாக இருந்தது. அபிசார் போன் செய்தார், முழு சார்ஜ் ஏற்றிக் கொள்ள இந்த வாய்ப்பை தவறவிடக் கூடாது என்று நேராக ராதாகிருஷ்ணன் சாலை யெல்லோ பேஜஸ்-சிலிருந்து நுங்கம்பாக்கம் பால்குரோவ் ஓட்டலுக்கு சென்றேன். அங்கு யோகேஷ் ஹரிஹரனை அழைத்துக் கொண்டு நவீன் வந்து சேர்ந்தார். இரண்டு மணிநேரம் போனதே தெரியவில்லை, இதற்கிடையே எனக்கு கேரள தொடர்பு இருப்பதால் கூனம்பாறை சந்திப்பு : தம்பி அந்தோணியின் மலையாள நாவல், வளைகுடா அரபு நாட்டில் பணிபுரிந்ததால் அதை கதைக் களனாக கொண்டு ஆசாத் எழுதிய மின்தூக்கி நாவல்; Conrad Wood எழுதிய The Moplah Rebellion and its genesis

ஐராவதம் மகாதேவன், கி.கஸ்தூரிரங்கன், மாலன் ஆகியோர் ஆசிரியராக இருந்தபோதிருந்து தினமணி படித்துக் கொண்டிருந்தேன். பிறகு இராம.திரு.சம்பந்தம் ஆசிரியர் பொறுப்பேற்றபோது தங்களின் நண்பர் மதுரை மவ்லவி சதக்கத்துல்லா ஹசனியும் அவ்வப்போது நடுப்பக்க கட்டுரைகளை எழுதிக் கொண்டிருந்தார். சுகதேவும் கூட என்று நினைக்கிறேன், அதனால் அவருடைய கட்டுரைத் தொகுதியான “படைப்பாளிகள் முகமும் அகமும்” என நான்கு நூல்களிலிருந்து ”போணி” செய்திருக்கிறேன்.

அப்துல்வஹாப் பாகவி என்று ஒருவர் முன்பு இருந்தார். இன்று தமிழின் மிக முக்கியமான நட்சத்திர எழுத்தாளர்கள் பலரும் இவரை தங்களின் குருவென கூறுகின்றனர், “திராட்சைகளின் இதயம்” என்கிற நாவலில் தமிழ் மரபின் நீட்சியென வந்த ஒரிஜினல் சூஃபி மாஸ்டர்களில் ஒருவர் என்பது உண்மையும்கூட. பள்ளிவாசல்களுக்கு வெளியே மாலை வேளைகளில் சிறு பிள்ளைகளுக்கு மந்திரித்து தண்ணீர் ஓதி ஓதும் இந்த ஆலிம்சா புகைப்பவர். ஏனிந்த சிகரெட் என்று கேட்டவர்களிடம் சொல்லும் பதில்தான் என்னுடையதும்.

250/300 நூல்கள் என்பது என் முழு ஆண்டு நூல் கொள்முதலைவிட பெரியது, இருப்பினும் முன்பு போலவே இந்த நான்கு நூல்களுடன் மீண்டும் வாசிப்பு பந்தயத்தில் இணைந்து கொண்டிருக்கிறேன், இதில் தங்களின் வலைதளத்தில் ஏதோ பெரியவரைப் போல முதிர்ச்சியான கடிதங்களை எழுதிய விக்னேஷ் ஹரிஹரன் அபிசாருடன் அமர்ந்திருந்தபோது சிறுவனைப் போல தெரிந்தார். அவருடைய வயதில் நான் வெறும் வணிக எழுத்தாளர்களிடம் பல்லாண்டுகள் வீணடித்திருந்தேன். இதுபோன்ற இளம் வாசகர்கள் அலையலையாக வந்துகூடும் சரணாலயம் விஷ்ணுபுரம். சொல்லப் போனால் என் இருபதுகளுக்கு போன நம்பிக்கையை இந்த கூடுகைகள் அளிக்கின்றன, அபிசாருக்கும் – விருந்தோம்பலுடன் புது நம்பிக்கையை பெற்றுக் கொள்ள ஏதோவொரு வகையில் காரணமான காளிபிரசாத், சௌந்தர், ஜீவகரிகாலன் ஆகியோருக்கும் – இவை அனைத்துக்கும் பின்னே முகம் காட்டாமல் பின்னணியில் மறைமுக வினையூக்கியாக இருக்கும் தங்களுக்கும் நன்றி.

கொள்ளு நதீம்

ஆம்பூர்.

அன்புள்ள கொள்ளுநதீம்,

நூல்களின் இழப்பு துயர்மிக்கது. என்னால் அழிந்துபட்ட நூல்களை கண்ணால் பார்க்கவே முடியாது. ஆனால் வாசித்தவை நமக்கு வெளியே நூல்களில் இருக்கலாகாது என்பதற்கான அறிவுறுத்தலாகவும் எடுத்துக்கொள்ளுங்கள்.கிரானடா நாவலிலேயே நூல்கள் அழிந்தபின்னரும் அவை நினைவு வழியாக நீடித்துவாழ்வதன் சித்திரம்தானே உள்ளது

ஜெ

கிரானடா நாவலும் அச்சங்களும்- கொள்ளு நதீம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 16, 2021 10:31

November 15, 2021

நூல்வேட்டை

கொள்ளு நதீம் இணையப்பக்கம்

வணக்கம் ஜெ

தாங்கள் கட்டுரைகளில் முன்வைக்கும் நூல்களை சக்திக்கு இயன்றவரை  வாங்கிக் கொள்கிறேன், பிறவற்றை நூலகங்களில், நண்பர்களிடம் இரவல் பெற்றுக் கொள்கிறேன். அவற்றில் பல இன்று அச்சில் இல்லாதவை என்று சென்னையில் இருக்கும் புத்தக கடைகள் கூறிவிடுகின்றன. பிற எழுத்தாளர்கள், முந்தைய தலைமுறை எழுத்தாளர்களின் நூல்களை மீளவும் படிப்பது (மறுபதிப்பு கண்டாலொழிய) சாத்தியமில்லை என்றே படுகிறது.

குறைந்தபட்சம் சமகால எழுத்தாளர்களின் நூல்களாவது எப்பொழுதும் கிடைக்கும்படியாக இருப்பது அத்தியாவசியம் என்று உணர்கிறேன்.தஙக்ளின்  கீழ்க்கண்ட நூல்களான ’எழுதியவனைக் கண்டுபிடித்தல்’ உரையாடல், ‘மேற்குச் சாளரம்’ கூட நான் அறிந்தவரை இப்பொழுது எங்கும் கிடைப்பதில்லை. தங்களின் நூல்களை பல பதிப்பகங்கள் வெவ்வேறு காலகட்டத்தில் வெளியிட்டுள்ளன. குறைந்தபட்சம் விக்கிபீடியாவில்கூட அவை முழுமையான பட்டியலாக இல்லை.   எஸ்.ராமகிருஷ்ணன் முன்பு (தன்னுடைய அட்சரம் இதழில்) எழுதியிருந்த ‘அதே இரவு – அதே வரிகள்’கூட  உயிர்மையோ யாரோ வெளியிட்டிருந்த நூலும் இப்பொழுது கிடைப்பதில்லை

நோபல் பரிசு அறிவிக்கப்படும் போதெல்லாம் இந்த நூல் நினைவுக்கு வரும். அதாவது நான் சொல்ல வந்த விஷயம், குறைந்தபட்சம் இணையத்திலாவது எங்கேனும் இந்த நூல் கிண்டில் வடிவில், மின்னூல் வடிவில் கிடைக்கும் வழியை எழுத்தாளர்கள் பரிசீலிக்க வேண்டும் என்பதே,

நன்றி

கொள்ளு நதீம்

9442245023 ஆம்பூர்

அன்புள்ள கொள்ளு நதீம்,

தமிழில் இரண்டு முக்கியமான படைப்பிலக்கியவாதிகளின் பெயர்களைச் சொல்கிறேன். எம்.எஸ்.கல்யாணசுந்தரம், ரசிகன். இருவரின் முக்கியமான படைப்புகளின் முதல்பதிப்புக்குப் பின் ஐம்பதாண்டுகள் கழித்து அடுத்த பதிப்பு வெளிவந்தது. அப்பதிப்பு விற்றுபோக ஐந்தாண்டுகள் ஆயிற்று. கிடைக்காமலாகி பத்தாண்டுகளாகின்றன. இன்னொரு ஐம்பதாண்டுகளாகும் அடுத்த பதிப்புக்கு.

சமீபத்தில் பதிப்பாளர் மணிகண்டன் [நூல்வனம்] என்னைச் சந்தித்தபோது கரிச்சான் குஞ்சுவின் சிறுகதைகளை வெளியிடப்போவதாகச் சொன்னார். அவை மறுபதிப்பு கண்டு முப்பதாண்டுகள் ஆகிவிட்டன. இப்படி இன்னும்  மறு அச்சு வராத பலநூல்கள் உள்ளன. குறிப்பாக அல்லையன்ஸ், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் போன்ற இன்று செயலூக்கத்துடன் இல்லாத பதிப்பகங்கள் பதிப்பித்த நூல்கள் மறுபடி வருவதே இல்லை. சாகித்ய அக்காதமி, நேஷனல் புக்ஸ்டால் வெளியிடும் நூல்கள் முப்பது நாற்பது ஆண்டுகளாகியும் மறு அச்சுக்கு வருவதில்லை.

இன்றைய சூழலில் உள்ள நடைமுறைச்சிக்கல்கள் ஏராளமானவை. அச்சில் நூல்கள் தொடர்ச்சியாக கிடைத்துக்கொண்டிருப்பதென்பது சாதாரணமான விஷயம் அல்ல. இங்கே ஒரு பேசப்படும் நூலையே முந்நூறு பிரதிகள்தான் அச்சிடுகிறார்கள். அறியப்படாத நூல்களை மிகக்குறைவாகவே அச்சிட முடியும். அச்சிட்ட பிரதிகள் விற்பனையானபின் மீண்டும் ஒரு தேவை ஏற்பட்டாலொழிய அதை அச்சிடுவது பதிப்பகத்தாருக்கு பெரும் சுமை. குறைந்தது நூறு பிரதிகளுக்கான தேவை உருவான பின்னரே அச்சிடுவார்கள்.

இன்று பிரிண்ட் ஆன் டிமான்ட் வழி நூல்கள் அச்சிடப்படலாம். அதற்கும்கூட பத்துபேர் கேட்கவேண்டும். ஆனால் பெரும்பாலான நூல்களுக்கு அந்த அளவுக்குக் கூட தேவை இருப்பதில்லை. பிஓடி நூல்களை கேட்பவர்களிடம் மேலும் பத்து பேரை சேர்த்துக்கொண்டு வாருங்கள் என்று பதிப்பகங்கள் கேட்கும் நிலையே இன்று உள்ளது

இங்கே எந்த ஆசிரியருக்கும், எந்நூலுக்கும் பெரிய சந்தை ஏதும் இல்லை. அந்த ஆசிரியரோ அவருக்கு வேண்டியவர்களோ முயற்சி எடுத்து தொடர்ச்சியாக நூல்களை நிலைநிறுத்தினால்தான் உண்டு. ஞானபீடப்பரிசு பெற்ற அகிலன் அல்லது பெரும்புகழ்பெற்ற சாண்டில்யன் நூல்களுக்கே இதுதான் நிலைமை.[ நான் அறிந்தவரை ஜாஃப்னா பொதுநூலகத்தில் மேற்குச்சாளரம் ஒரு பிரதி உள்ளது]

என் பல நூல்கள் அச்சில் இல்லை. அவற்றை அச்சிடும்படி நான் பதிப்பகத்தாரிடம் கோர முடியாது. ஏனென்றால் அவை வாங்கப்படும் என்னும் உறுதிப்பாட்டை நான் அளிக்க மாட்டேன்.தமிழ் வாசகர்கள் மேல் எனக்கு எந்த நம்பிக்கையும், எந்த எதிர்பார்ப்பும் இல்லை. என் நூல்களையே என் வாசகர்களில் ஒருசாரார்தான் விலைகொடுத்து வாங்குகிறார்கள். இணையத்தில் இலவசமாகக் கிடைப்பவற்றைத்தான் மிகப்பெரும்பாலானவர்கள் வாசிக்கிறார்கள்.அவர்களிலும் ஒருசாரார் தேடுவதற்குச் சோம்பல்பட்டு என்னிடமே இணைப்பு கோருபவர்கள்.

இதற்குத் தீர்வு என்பது இணையத்தில் மின்னூல்களாக அனைத்து நூல்களும் இருக்குமபடிச் செய்வது. அதைத்தான் நண்பர் அழிசி ஸ்ரீனிவாசன் போன்றவர்கள் செய்கிறார்கள். ஆனால் அதற்கு திட்டமிட்டு தடைகளை உருவாக்குகிறார்கள். அழிசி ஸ்ரீனிவாசன் க.நா.சுவின் நூல்களை மின்னூல்களாக வலையேற்றினார். அவை நாட்டுடைமை ஆக்கப்பட்டவை.

ஆனால் திருட்டு பிடிஎஃப்களை வெளியிடும் கூட்டத்தில் ஒரு ஆசாமி அமேசானுக்கு அந்நூல்களின் பதிப்புரிமை தன்னிடமிருப்பதாக ஒரு கடிதம் அனுப்பினான். அவன் எந்த ஆதாரத்தையும் சமர்ப்பித்திருக்க வாய்ப்பில்லை. அந்தக் கடிதத்தை ஆதாரமாகக்கொண்டு அமேசானில் உள்ள சில மடையர்கள் அழிசி ஸ்ரீனிவாசன் வலையேற்றியிருந்த மொத்த நூல்களையும் அழித்துவிட்டனர். அவற்றில் க.நா.சு நூல்கள் தவிர ஏராளமான பழைய நூல்கள் இருந்தன. அனைத்துமே மறைந்துவிட்டன.

அமேசானுக்கு அழிசி ஸ்ரீனிவாசன் க.நா.சு நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டவை என்ற செய்தியை பலமுறை தெரிவித்தும் அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை. ஏனென்றால் அங்கே இவற்றை கையாள்பவர்கள் தமிழ் இளைஞர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு புத்தகம் என்றால் என்ன, நாட்டுடைமை என்றால் என்ன, பதிப்புரிமை என்றால் என்ன என்ற எந்தப் புரிதலும் இருக்க வாய்ப்பில்லை.

[அமேசானுக்கு இந்த அபத்தமான நடவடிக்கை பற்றி வாசகர்கள் கூட்டாக சில கடிதங்களை அனுப்பலாம். சட்டபூர்வமான நோட்டீஸ் கூட அனுப்பலாம். ஏனென்றால் திருட்டு பிடிஎஃப் காரர்களை இப்படியே விட்டால் இவர்கள் இங்குள்ள மின்னூல் வணிகத்தையே அழித்துவிடுவார்கள்]

தமிழிலுள்ள ஏராளமான அரிய நூல்களின் பதிப்புரிமை எங்கே எவரிடமிருக்கின்றன என்பதே தெரியவில்லை.கண்டுபிடிப்பதும் எளிதல்ல. ஆகவே வேறு வழியே இல்லை. நூலகங்களை நம்பி இருக்கவேண்டியதுதான். எங்கோ ஒரு பிரதி இருக்கும், தேடினால் கிடைக்கும் என்று நம்பவேண்டியதுதான்.

நாம் ஒன்றை உணரவேண்டும். நாம் வாழ்ந்துகொண்டிருப்பது அறிவியக்கத்துக்கு எதிரான பொதுமனநிலை கொண்ட ஒரு சமூகத்தில். இந்த கடிதத்தை இணையத்தில் வெளியிட்டுப்பாருங்கள். ‘புத்தகங்களால் என்ன நன்மை? சமூகத்துக்கு தேவையான செயல்களைச் செய்யலாமே’ என்பதுபோன்ற அரிய கருத்துக்களைச் சொல்லும் மொண்ணைகள் அலையலையாக கிளம்பி வந்து எதிர்வினை ஆற்றுவார்கள். ‘நான் எதையுமே படிப்பதில்லை’ என்று பெருமையாக வந்து அறிவித்துக்கொள்வார்கள்.

இச்சூழலில் நாம் ஒரு கண்காணா இயக்கம்போல அறிவியக்கத்தை முன்னெடுக்கிறோம். நமக்குரிய அறிவுத்தொடர்புகளை நாமேதான் உருவாக்கிக் கொள்ளவேண்டும். அதற்கு சமூகத்திடம் கோரிக்கை வைக்க முடியாது. பதிப்பாளர்கள் சமூகத்தை நம்பி இருப்பாவ்ர்கள், அவர்கள் வணிகம் செய்கிறார்கள். அவர்கள் நூலகங்களை நம்பியே நூல்களை வெளியிடுகிறார்கள்.அவர்களால் நம் தேவைகளை நிறைவேற்ற முடியாது. இந்த யதார்த்தத்தை நாம் புரிந்துகொண்டாக வேண்டும்.

எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் அமேசான் போன்ற தளங்கள் கூட உதவி செய்யாத நிலையில் அரிய நூல்களுக்கான ஒரு பிடிஎஃப் சுற்றுமுறையை ஆய்வாளர்களும் வாசகர்களும் உருவாக்கிக் கொள்ளுவதே நல்லது என்று.

ஜெ

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 15, 2021 10:35

விஷ்ணுபுரம் விருந்தினர்-4, பா.திருச்செந்தாழை

விஷ்ணுபுரம் விருந்தினர்-1, கோகுல் பிரசாத்

விஷ்ணுபுரம் விருந்தினர்-2, காளிப்பிரசாத்

விஷ்ணுபுரம் விருந்தினர்-3, எம்.கோபாலகிருஷ்ணன்

இன்றைய இளம்படைப்பாளிகளில் மிகவும் கவனிக்கப்படுபவரான பா.திருச்செந்தாழை மதுரையில் வணிகம் செய்துவருகிறார். சென்ற இரண்டாண்டுகளில் தமிழில் இணையதளங்களில் வெளியான இவருடைய சிறுகதைகள் மிகப்பெரிய வாசக ஏற்பைப் பெற்றன. கூரிய மொழியுடன் மானுட உள்ளங்களை ஊடுருவிச்செல்லும் இவர் கதைகள் தமிழில் இன்னும் எழுதப்படாத களங்கள் என்னென்ன உள்ளன என்பதை காட்டுபவை

திருச்செந்தாழை இணையப்பக்கம்

 

திருச்செந்தாழை கதைகள்

ஆபரணம்

மஞ்சள் பலூன்கள்

துலாத்தான்

துடி

விலாஸம்

டீ-ஷர்ட்

தேவைகள்

ஆண்கள் விடுதி: அறை எண் 12

காப்பு

வேர்

திருச்செந்தாழை விமர்சனங்கள்

ஆபரணம், பா.திருச்செந்தாழை

ஆபரணம், கடிதங்கள்-3

ஆபரணம், கடிதங்கள்-2

ஆபரணம், கடிதங்கள்

ஒரு புதிய வீச்சு

துவந்தம், கடிதங்கள்

துவந்தம், கடிதங்கள்

கதை திகழும் புள்ளிகள்- ஒரு விவாதம்

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 15, 2021 10:34

கடவுளை காதலராகக் கொள்வது- சுனில் கிருஷ்ணன்

கோவை கவிதை நிகழ்வு,கடிதங்கள்

கோவை கவிதைநிகழ்வு- கடிதம்

கோவை கவிதைவிவாதம் – கடிதம்

கோவையும் கவிதையும் ஒரு கோழியும்

அரங்கில் விவாதிக்கப்பட்ட படைப்புகள்

(கோவை கவிதை கூடுகையில் ஆன்மீக கவிதை கள் என்பதை  பேசுபொருளாக கொண்டு எழுதிய கட்டுரை)

  1

 எழுத்தாளர் கோணங்கி ஒரு உரையாடலின் போது கவிஞர்  உலகின் முதல் மனிதர், நாவலாசிரியர் உலகின் கடைசி மனிதர் என்று குறிப்பிட்டார். முதல் மனிதர் ஒரு குழந்தையின் குறுகுறுப்பைக்கொண்டவர், யாவற்றையும் அறியத்துடிப்பவர், அவருக்கு இவ்வுலகின் ஒவ்வொரு துளியும் வியப்பின் பெருவெளி. கடைசி மனிதர் கனவுகளை இழந்தவர். அனைத்தும் தலைகீழாகவும் பொருளற்றும் திரிந்தும் போவதை கண்ணுறுபவர். நாவலாசிரியருக்கு அல்லது பொதுவாகவே புனைவெழுத்தாளருக்கு கவிதையின் மீதிருக்கும் மையல் இங்கிருந்தே தொடங்குகிறது. தூயதும், அரியதுமான வெகுளித்தனத்தின் மீதான, மூர்க்கமான பிரேமையின் மீதான ஈடுபாடு. ஏக்கம். தொலைந்த பால்யத்தை போல மீள முடியாத ஆனால் பரவசமளிக்கும் வெளியை கவிதையே அவருக்கு அளிக்கிறது.

இந்த கட்டுரைக்கு நான்  கவிதைகளைத் தேர்ந்தெடுக்க வைத்துக்கொண்ட முதன்மையான அளவுகோள் ஆன்மீகவாதிகளின் கவிதை வெளிப்பாடு என்பதே. கவிஞர்களின் ஆன்மீக‌ வெளிப்பாடு என வரயறையை சற்று மாற்றியமைத்தால் பாரதி தொடங்கி வேணு வெட்ராயன் வரை பலருடைய கவிதைகளை பேச இயலும். ஆனால் அவை வேறொரு சந்தர்ப்பத்தில் விவாதிக்கப்பட வேண்டியவை. அவை எப்படி இக்கவிதைகளுடன் நீட்சிகொள்கின்றன என்பதை கவனிக்க இயலும்.

கவிதையை மொழியின் முதலும் உச்சமுமான வெளிப்பாடு என கொள்ளலாம். ஆகவே காலங்காலமாக கவிதையே ஆன்மீக வெளிப்பாட்டுக்கான ஊடகமாக திகழ்ந்து வருகிறது. சங்கரரின் சவுந்தர்ய லகரியைப் பற்றி நடராஜ குரு குறிப்பிடும்போது அது எப்படி படிமம் மற்றும் காட்சி ஏற்படுத்தும் அதிர்வு வழியாக தொடர்புறுத்தும் ஆதி மொழியை (proto language) கையாள்கிறது என விளக்குகிறார். ஆதி மொழி தான் இப்போது வரை நீடிக்கும் ஆகப்பழமையான மொழி அமைப்பு, மீமொழி (meta language) அறிவார்ந்த உரையாடலுக்கு உரியது. ஆதிமொழி வடிவவியல் பிரக்ஞை (geometric orientation) கொண்டது. கவிதை, இசை மற்றும் குறியீடுகளை பயன்படுத்தும் கலை வடிவங்களுக்கான தொல்கால விதைநிலம் அதுதான். ஆதி மொழி எழுதப்பட்டதிலிருந்து எழுதப்பட முடியாததை தொற்றிக்கொள்ள உரிய வாகனம் என சொல்லலாம்.

சவுந்தர்ய லகரிக்கு பொருந்துவது பொதுவாக ஆன்மீக கவிதைகளுக்கும், ஒரு எல்லையில் மொத்த கவிதைகளுக்கும் பொருந்துவதும் ஆகும். கவிதை மொழியில் உள்ள சொல்லுக்கும் பொருளுக்கான பிணைப்பை தளர்த்தி பொருள்கோடல் சாத்தியங்களை பெருக்குகிறது. கவிதைகளில் வரும் மலையும் நிலவும் கடலும் வெறும் மலையும் நிலவும் கடலும் அல்ல. கவிதையின் கள்ளமின்மை அல்லது குழந்தைமை என நாம் சுட்டுவது இந்த ஆதி மொழியைத்தான். கவிதை சுடு சரமென  நம்மை கிழித்து உட்புகுவதற்கு என தனிப்பாதையை தேர்ந்துகொள்ளும். நவீன கவிகளில் கூட பெரும்பாலான கவிகள் ஏதோ ஒரு புள்ளியில் ஆன்மீகத்தை தொட்டு மீள்கிறார்கள். ஞானிகள் படிபடியாக ஏறிச்சென்று காண்பதை  கவிகள் ஒரு கணத்தில் எல்லைகளை கடந்து காணும் பேறு பெற்றவர்கள். ஆகவேதான் பண்டைய காலத்தில் ஊழ்கத்தில் அமர்ந்து ஞானத்தில் திளைத்த ரிஷிகளையும் கவி என்றழைத்தார்கள். ரிக்வேதத்தின் சிருஷ்டி கீதம் இதற்கான சான்று.

 

சிருஷ்டி கீதம்

அப்போது அசத் இருக்கவில்லை

சத்தும் இருக்கவில்லை

உலகம் இருக்கவில்லை

அதற்கப்பால்

வானமும் இருக்கவில்லை

 

ஒளிந்துகிடந்தது என்ன?

எங்கே?

யாருடைய ஆட்சியில்?

அடியற்ற ஆழமுடையதும்

மகத்தானதுமான நீர்வெளியோ?

மரணமிருந்ததோ

மரணமற்ற நிரந்தரமோ?

அப்போது இரவுபகல்கள் இல்லை

ஒன்றேயான அது

தன் அகச்சக்தியினால்

மூச்சுவிட்டது

அதுவன்றி ஏதுமிருக்கவில்லை

 

இருட்டால் போர்த்தப்பட்ட வெளி

வேறுபடுத்தலின்மையால்

ஏதுமின்மையாக ஆகிய வெளி

அது நீராக இருந்தது

அதன் பிறப்பு

வெறுமையால் மூடப்பட்டிருந்தது!

தன் முடிவற்ற தவத்தால்

அது சத்தாக ஆகியது

 

அந்த ஒருமையில்

முதலில் இச்சை பிறந்தது

பின்னர் பீஜம் பிறந்தது

அவ்வாறாக அசத் உருவாயிற்று!

 

ரிஷிகள்

தங்கள் இதயங்களை சோதித்து

அசத்தில் சத்தைக் கண்டடைந்தனர்

அதன் கதிர்கள்

இருளில் பரந்தன

 

ஆனால் ஒருமையான அது

மேலே உள்ளதா?

அல்லது கீழே உள்ளதா?

அங்கு படைப்புசக்தி உண்டா?

அதன் மகிமைகள் என்ன?

அது முன்னால் உள்ளதா?

அல்லது பின்னால் உள்ளதா?

திட்டவட்டமாக யாரறிவார்?

 

அதன் மூலக்காரணம் என்ன?

தேவர்களோ

சிருஷ்டிக்குப் பின்னர் வந்தவர்கள்!

அப்படியானால் அது எப்படிப்பிறந்தது?

யாருக்குத்தெரியும் அது?

 

அதை யார் உண்டுபண்ணினார்கள்

அல்லது உண்டுபண்ணவில்லை?

ஆகாய வடிவான அதுவே அறியும்

அல்லது

 

அதுவும் அறியாது!

 

அறிதலின் வெகுளித்தனமும் வியப்புமே கவிதையாக வெளிப்படுகிறது. கபீரின் இவ்வரிகள் சிருஷ்டி கீதத்தின் அதே உணர்வின் நீட்சி என சொல்லலாம்.

சகோதரனே சொல்

ஆகாயத்தை விரிகுடையெனச்

செங்குத்தாக நிறுத்தி வைத்தது யார்? நீலப்பெருந்திரையில் 

விண்மீன்களை மினுங்கவைத்தவர் யார்? அதைத் தீட்டிய

அபாரமான தூரிகையாளன் எவன்?’

புலர் பொழுது உலக இயக்கத்தை தொடங்கி வைக்கும் பெருவியப்பு உஷை சூக்தமாகிறது. உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. அல்லும் பகலும் அயராமல் வந்து கொண்டிருக்கிறார்கள். சோர்ந்து அமரவோ சோம்பல் கொள்ளவோ ஏதுமில்லை. இரவையும் பகலையும் பற்றிய கவிதை மரணத்தை பற்றியும் காலாதீதத்தை பற்றியும் பேசும் புள்ளியில் சட்டென வேறொரு தளத்திற்குச் செல்கிறது. பகலும் இரவையும் போல் பிறப்பும் மரணமும் இயல்பாகிறது. மரணத்தின் துக்கமும் அச்சமும் விலகுகிறது.

உஷை

(ரிக் வேதம் முதல் மண்டலம், 113வது சூக்தம்)

வந்தது ஒளிகளிற் சிறந்த இவ்வொளி

பிறந்தது  எங்கும் பரவும் பிரகாசம்

செங்கதிர்த் தேவன் எழ

வெளிச்சென்ற ராத்ரி

உஷைக்குப் பிறப்பிடம் ஈன்றாள்.

தன் வெண்மகவுடன் வந்தாள் சுடர்ப்பெண்

கரியவள் தன் இல்லத்தை அவளுக்களித்தாள்

ஒன்றான இவ்வுறவுகள்

நிறம் மாறி

ஒருவரையொருவர் தொடர்கின்றனர்

அழிவற்று.

முடிவற்றது

ஒன்றேயானது

சகோதரிகளின் பாதை

மாறிமாறி அதில் பயணிக்கின்றனர்

இந்த தேவியர்

இரு நிறமும் ஒரு மனமும் கொண்ட

பகலும் இரவும்

முறைதவறுவதில்லை

மோதிக் கொள்வதுமில்லை.

இன்னொளிசேர் சோதித் தலைவியைக்

காண்கின்றன எம் கண்கள்

கதவுகளைத் திறந்தாள்

பொலிவுடன்

உலகை சிலிர்க்கச் செய்து

செல்வங்களைக் காட்டினாள்

உஷை

புவனத்தின் ஒவ்வொரு உயிரையும்

எழுப்பினாள்.

உறக்கத்தில் சுருண்டு கிடந்தோரை

சுகவாழ்விற்கென

வேள்விக்கென

பொருள் தேடலுக்கென

எழுந்தோடச் செய்தாள்

சிறிதே கண்டோர் பெரிதாய்க் காண

உஷை

புவனத்தின் ஒவ்வொரு உயிரையும்

எழுப்பினாள்.

வீரச்செயலுக்கென ஒருவனை

புகழுக்கென ஒருவனை

மகத்தான வேள்விக்கென ஒருவனை

பலனுக்கென ஒருவனை

உழைப்பிற்கென ஒருவனை

தொழிலுக்கென அனைவரையும் என

உஷை

புவனத்தின் ஒவ்வொரு உயிரையும்

எழுப்பினாள்.

யுவதி வெண்துகிலினள் வான்மகள்

மண்மீது காணும் செல்வங்களின் தலைவி

இதோ வருகிறாள் உஷை

மங்கல நல்லொளியினளே

இந்தக் காலையில்

எமக்காகத் துலங்குக.

கடந்து சென்ற காலைகளின் வழிச்செல்பவள்

இனிவரும் முடிவற்ற காலைகளின் முதல்வி

உஷை

உயிருள்ளவை அனைத்தையும்

உந்திச் செலுத்துகிறாள்

மரித்தவற்றையும் உணர்விக்கிறாள்.

உஷையே

நீயே அக்னி சுடரத் தூண்டுவித்தவள்

கதிரோனின் கண்வழி உலகைப் புலப்படுத்தியவள்

வேள்வி செய்யவேண்டி மானுடரை எழுப்பியவள்

தெய்வீக நற்செயல்கள் புரிபவள்.

எத்தனை காலமாக

எழுகிறார்கள் உஷைகள்?

நமக்கு இன்னொளி தர

இன்னும் எத்தனை காலம்

எழுவார்கள்?

கடந்து சென்ற வைகறைகளுக்காக ஏங்கி

வரப்போகும் வைகறைகளுடன்

மகிழ்ச்சியாகச் செல்கிறாள்

உஷை.

போய்விட்டனர்

முன்னாட்களில்

உஷையின் உதயம் கண்ட மானிடர்

நாம்

இன்று வாழும் நாம்

அவளது நல்லொளி காண்கிறோம்

வரும் நாட்களில் அவளைக் காண

நமது பின்னோர் வருகிறார்கள்.

எதிர்ப்போரைத் துரத்துபவள்

பிரபஞ்சலயத்தில் தோன்றியவள்

பிரபஞ்சலயத்தைக் காப்பவள்

உவகையூட்டுபவள்

இன்னொலிகளை விழிப்புறச் செய்பவள்

சுமங்கலி

தேவர் விரும்பும் வேள்வியை ஏந்திவருபவள்

பெரும்புகழ் கொண்ட உஷை

இன்று எமக்காக உதித்திடுக.

உஷை

முற்காலங்களில்

இடையறாது உதித்தாள்

செல்வம்சேர் தேவி

இன்றும் தன் ஒளி காட்டுகிறாள்

வரும் நாட்களிலும் உதிப்பாள்

தன்னாற்றலால் இயங்குகிறாள்

அந்த அமுதப் பெண்

அழிவற்று.

வான் விளிம்புகளைத் தன்னொளியால்

சுடர்வித்தாள்

தேவி தன் கருந்திரையை

வீசிஎறிந்து விட்டாள்

உஷையின்

செம்பரிகள் பூட்டிய தேர் கண்டு

உலகம் விழித்தெழுகிறது.

உயிர்வளர்க்கும் செல்வங்கள் ஏந்தி

உணர்வளித்து

அற்புத எழிலொளி பரப்பி

கடந்து சென்ற பல வைகறைகளின் இறுதியாக

வரப்போகும் ஒளிமிகு வைகறைகளின் முதலாக

இன்று உஷை எழுந்தாள்.

எழுவீர்

வந்தது மீண்டும் வாழ்வும் உயிரும்

சென்றது இருள்

தோன்றுகிறது ஒளி

கதிரவனுக்காக

வழிதிறந்தாள் உஷை

நம் ஆயுளும் உணவும் செழிக்கும் இனி.

2

கவிதை எங்கிருந்து ஊற்றெடுக்கிறது எனும் கேள்விக்கு எனக்கு. அரவிந்தரின் கோட்பாடு நெருக்கமாக உள்ளது.  கவிதையைப் பற்றிற அறுதியான கோட்பாடாக இதை காண வேண்டிறதில்லை.‌ ஆன்மீக ரீதியில் கவிதையை புரிந்துகொள்ள ஒரு வழிமுறை எனும் எல்லையுடன் இந்த புள்ளிகளை அணுக வேண்டும். மனித ஆன்மா பிரபஞ்ச பேரிருப்புடன் கொள்ளும் தொடர்பின் அடையாளமாக கவிதையை காண்கிறார் அரவிந்தர். சாமானிய மனம் (ordinary mind), உயர் மனம் (higher mind), ஒளிர் மனம் (illumined mind), உள்ளுணர்வு மனம் (intuitive mind) மற்றும் மேலான மனம் (over mind) என  ஐந்து பரிணாம படிநிலைகளை குறிப்பிடுகிறார். இதை தவிர்த்து   பிரபஞ்ச மனம் (universal mind), அதி பிரக்ஞை இருப்பும் (super conscient being) உள்ளது.

ஒவ்வொரு அடுக்கிற்கும் அதற்குகந்த படைப்பூக்கம் சொல்லப்படுகிறது. சாமானிய மனதில் படைப்பூக்கத்திற்கு பெரிதாக வேலையில்லை. ஒளி ஊடுருவ இயலாத அளவிற்கு இறுக்கமும் கணதியும் கொண்டது. உயர் மனம் சற்றே தெளிந்தது. தத்துவவியலாளர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் இந்த நிலையிலிருந்து செயல்படுவார்கள்.‌ மீ மொழியின் தளம் என சொல்லலாம். ஒளி சில புள்ளிகளில் இருந்து ஊடுருவும். அசல் சிந்தனைகள் தோன்றும். எனினும் தர்க்கத்தை கடக்க இயலாது. இந்த நிலையிலிருந்து அமைதி கைகூடி வரும்போது இயல்பாக ஒளிர் மன அடுக்கை சென்றடையும். பெரும் முயற்சிகள் ஏதுமின்றியே சத்தியத்தையுய் ஆனந்தத்தையும் உணர இயலும். சிறு புள்ளிகளில் ஊடுருவிய ஒளி இப்போது வெள்ளமாக பொழியும். கவிதைகளுக்கான வெளி இதுவே. மனம் இந்நிலையை அடைந்ததற்கான அறிகுறிகளில் ஒன்று கவிதை சட்டென ஊறி பிறப்பெடுப்பது என்கிறார் அரவிந்தர்.

அரவிந்தர் கவிதையே மனதின் உயர் அடுக்குகளை பற்றி சொல்வதற்கு உகந்த ஊடகம் எனவும் சொல்கிறார். சொற்களின் பொருளை கடந்து அதன் ஒலிக்குறிப்பு மற்றும் ஒலிச் சேர்க்கையே அதன் அதிர்வுகளை கடத்த வல்லது. சொற்கள் அதிர்வுகள் உடுத்தும் ஆடைகள் மட்டுமே என்பது அவர் கருத்து. ஆதிமொழியின் வல்லமை ஒலி அதிர்வுகளின் ஊடாக தொடர்புறுத்தும் என்கிறார் நடராஜ குரு. ஆனால் இந்த தளத்தில் படைப்பூக்கத்தை தொடர்ந்து தக்கவைப்பது கடினம். ஒரே ஆக்கத்தில் சில வரிகளில் தாக்கம் தென்பட்டு பிற இடங்களில் சாதாரனமாக கடந்து செல்லும். இந்நிலையில் தொடர்பற்ற சீரற்ற படிமங்களையும் அறிதல்களையும் காண முடியும்.

இதற்கடுத்த நிலையில் எல்லாம் தெளிவடைகிறது. சொற்கள் தனது அலங்காரங்களை துறக்கிறது. உள்ளுனர்வு மனம் எனும் தளம் சத்தியத்தைப்பற்றிய நினைவு களன் என்கிறார். ஒளி வெளியிலிருந்து வருவதில்லை. இயல்பாக எப்போதும் யாவற்றையும் ஒளி சூழ்ந்திருக்கிறது. தர்க்கத்தின் பிடியிலிருந்த தன்னை முழுமையாக விடுவித்து கொண்டது. மேலான மனம் மனித பிரக்ஞையின் உச்சம். அது பிரபஞ்சமளாவிய பிரக்ஞை ஆனால் தனியிருப்பும் தொடர்கிறது. இதுவே கடவுளர்களின் வெளி. உலகின் மதங்கள் அனைத்தும் இங்கே உதித்தவை. கால வெளி எல்லைகளை கடந்த நிலை. கவிதை மந்திரமாவது இத்தளத்தில்தான். துண்டுபடாத தொடர் ஒளி சூழ்ந்து இருக்கும்.

அமைதியும் நிலைபேறும் கொண்ட மனதில் காற்றில்லா வானத்தை பறந்து கடக்கும் பறவைகளை போல எண்ணங்கள் சுவடின்றி கடந்து மறையும். அத்தகைய மனதில் பிரபஞ்ச மனம் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும். புனித நூல்களில் காலம் கடந்து நிற்பவை ஆகச்சிறந்த கவிதை வரிகள். அவை மந்திரத்தன்மையை எழுப்புபவை. உதாரணமாக  ‘வானத்து பறவைகளை பாருங்கள்‌, அவை விதைப்பதும் இல்லை அறுப்பதும் இல்லை’ எனும் விவிலிய வசனம் ஒரு கவித்துவ வாக்கு (poetic utterance). ஹெரால்ட் ப்ளூம் விவிலியத்தை புனைவு நூலாக வாசிக்க இயலும் என சொல்கிறார். குறிப்பாக பழைய ஏற்பாட்டை. ஜெ எனும் பெண் எழுத்தாளர் எழுதியிருக்கக்கூடும் எனும் ஊகமும் அவருக்கு உண்டு. இந்த வரிசையில் மத நூல்களையும் புனித நூல்களையும் கவிதைகளாகவும் வாசிக்க இடமுண்டு.

முண்டக உபநிஷத்தின் தொடக்கத்தில் வரும்

‘இரு பறவைகள்

இணைபிரியாத் தோழர்கள்

ஒரே மரத்தில்.

ஒன்று கனிகளை உண்கிறது

மற்றொன்றோ

உண்ணாமல் பார்த்துக் கொண்டிருக்கிறது.’

இதுவும் ஒரு கவித்துவ வாக்குதான். கவி ஊடகம் கவிதை அவன் வழியாக வெளிப்படுகிறது என்பது ஒரு பார்வை. ஆனால் இதன் அடுத்த கட்டமாக கவிதையையும் கூட ஒரு ஊடகமாக காண முடியும்.  காலாதீத சத்தியம் சொற்களாக திரண்டு கவிஞன் வழியாக கவிதையாக கனிந்து வெளிப்படுகிறது என்றும் கொள்ளலாம்.

இந்திய மரபில் தியான சுலோகங்கள் என ஒவ்வொரு இறைவனுக்கும் அவரை விவரிக்கும் துதிகள் உண்டு. உதாரணமாக விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் ‘க்ஷிரோ தன்வத்..’ என தொடங்கும் துதி உண்மையில் திருமால் பாற்கடலில் அணிகளுடன் படுத்திருக்கும் காட்சியை விவரிப்பது. அவருடைய முகம், அகம், அமர்ந்திருக்கும் முறை, அணிந்திருக்கும் ஆடை அணிகள் என துல்லியமான விவரனைகள். இவை புலன் நிகர் அனுபவத்தை அளிப்பவை.  தியானத்திற்குரியவை. வேதாந்தம் நிதித்யாசன மந்திரங்கள் என சிலவற்றை வரையறை செய்கிறது.  சங்கரரின் நிர்வாண ஷடகம் இத்தகையது. அடிப்படையில் தியான சுலோகங்களும் நிதித்யாசன மந்திரங்களும்  கவிதைகளே. நிதித்யாசனத்திற்கு உரியவை கருத்தை அடிப்படையாக கொண்டவை எனும் போது படிமத்தை அல்லது காட்சி அனுபவத்தை அடிப்படையாக கொண்ட தியான சுலோகங்கள் நவீன கவிதைக்கு சற்று கூடுதல் நெருக்கமானவை என சொல்லலாம்.

ஆழியின் துளி

துளிகள் கலந்து ஆழி ஆவதை

அறிவர் எல்லாரும்

ஆழி உலர்ந்து

ஒரு துளியாவதை அறிபவனோ

ஆயிரத்தில் ஒருவன்.

கபீரின் இவ்வரிகள் தியான சுலோகமாக கருதத்தக்கது. தேவதேவன், தேவதச்சன் ஆகியோரின் பல கவிதைகளை தியானத்திற்குரியதாக கருத இயலும்.  கபீரின் ‘பிரசவம்’ எனும்  கவிதையை நவீன கவிதை என்றே சொல்லிவிட முடியும்.  புறத்தை அவதானித்து அகவயப்படுத்திக்கொள்கிறது.

வானம்பார்த்து மல்லாந்து

அலையில் மிதக்கும் சிப்பி

தவிப்புடன் காத்திருக்கிறது

சுவாதி மழைத்துளிக்காக

வெறும் வயிற்றில் துளிநீர் விழுந்ததுமே

உடல் புரண்டு முத்தை சூல் கொள்ளப் பயணிக்கிறது

கடல் ஆழத்தை நோக்கி

ரூமியின் ஒரு கவிதையில் உள்ள வரிகள் தேவதச்சனின் ஓரு கவிதையில் ஷூ லேஸ் கட்டும் குண்டு பெண்மணியை நினைவுப்படுத்தியது. ‘அவ்வுலகும்/ இவ்வுலகும்/ தொட்டு உறவாடும்/ வாயிலின் வழியாக/ மனிதர்கள் பயணித்தவண்ணம் இருக்கின்றனர்./ வட்டவடிவான அவ்வாயிலோ/ திறந்து கிடக்கிறது இப்போது/ துயிலச் சென்றுவிடாதே மீண்டும்.’

உறக்கச்சடவு என்பது விழிப்பு நிலைக்கும் கனவு நிலைக்கும் இடையில் நொறுங்கிக்கொண்டிருக்கும் சிறிய மேடை. இணை பிரபஞ்சங்களுக்கு இடையிலான  வாயில் உறைவதற்கு முன்னாலான நீர்மை நிலை.

கவிதையைப் பற்றி சொல்வதற்கு கருத்துக்களை சார்ந்திருப்பதை விட கவிதைகளே உகந்தது. ஒரு கவிதையே மற்றொரு கவிதைக்கான திசை சுட்டி. ஆகவே கவிதை குறித்தான கட்டுரையில் அதிக கவிதைகளை மேற்கோள்காட்டுவது இயல்பானது

3

கவிதையின் பேசுபொருள் மற்றும் தன்மை சார்ந்து தோராயமாக ஆன்மீக கவிதைகளை மறைஞான கவிதை, மெய்யியல் கவிதை, விழிப்புணர்வு நிலை கவிதை (mindfulness) ஐக்கிய வேட்கை கவிதை மற்றும் கண்டன கவிதை என ஐந்தாக வகுக்கலாம். மெய்யியல் கவிதைக்கு சிறந்த உதாரணம்  ‘இது’ எனும் தாவோ கவிதை. கிட்டத்தட்ட தத்துவ கோட்பாடு இங்கு கவிதையாக உருகொள்கிறது. சாமான்ய மொழியில் செல்லும் போது ‘இதைப் பின் தொடர்கையில் இதற்கு முதுகு இல்லை

இதை எதிர்கொள்கையில் இதற்கு முகம் இல்லை’

எனும் பயன்பாடு வழியாக கவித்துவமான ஆதிமொழிக்குள் வழுக்கி செல்கிறது. இதுவே இதை கவிதையாக்குகிறது.

இது

பார்த்தாலும் இதைப் பார்க்க முடியாது

இது உருவத்திற்கும் சிறியது:

கவனித்தாலும் இதைக் கேட்க முடியாது;

இது ஒலியிலும் மெல்லியது;

ஊகிக்கலாம் ஆனால் தொட்டுவிட முடியாது;

இது, உணர்வுகளுக்கு அடியில் உள்ளது;

மேலான பொருட்கள்

இவைகள்தான் என்று வரையறை

செய்வதற்குள் தப்பிவிடுகின்றன.

மேலும் இவை கலந்து ஒற்றைப்புதிராய் உள்ளது

இது எழும்போது அங்கே ஒளியில்லை

இது விழும்போது அங்கே இருளில்லை

இது விளக்கத்திற்கும் அப்பாற்பட்ட

ஒரு தொடர்ச்சியான மெல்லிழை

வெளிப்பட முடியாத உள்வலை

வடிவமில்லாதது இதன் வடிவம்

ஒன்றுமில்லாதது இதன் உருவம்

மௌனம் இதன் பெயர்;

இதைப் பின் தொடர்கையில் இதற்கு முதுகு இல்லை

இதை எதிர்கொள்கையில் இதற்கு முகம் இல்லை

இதற்கு முன்னும் இல்லை, பின்னும் இல்லை

போனதைப் புரிந்துகொள்ள இருப்பதைக் கவனியுங்கள்

ஆக உங்களுக்கு இயற்கை வழியின்

தொடரைப் பிடிக்க முடியும்

நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள்

என்று சற்று உணர்ந்து பாருங்கள்

இதுவே இதன் ஞானரசம்

விழிப்புணர்வு நிலை கவிதைக்கு சிறந்த உதாரணம் ஜென் மற்றும் வேதாந்த கவிதைகள்.  போகன் மொழியாக்கம் செய்துள்ள சீன கவிதைகள் நல்ல உதாரணம்.

லஸ்டர் கணவாயில் இரவு மழை..

பள்ளத்தாக்கு நதியின் வெற்றிடத் தெளிவைத் தகர்த்துக்கொண்டுமழை உள்ளே வருகிறது.கூதல் காற்று கிசுகிசுப்புகள் இரவின் பின்பகுதியில் தொடக்கம்..பத்தாயிரம் முத்துகள் ஒரே தட்டில் விழுந்து ஒலி எழுப்புகின்றனஒவ்வொன்றின் ஒலியும் என் எலும்புகளைத் துளைக்கும் துல்லியம்.நான் கனவில் என் தலையைச் சொரிகிறேன்எழுந்து விடியும்வரை கூர்ந்து  கேட்கிறேன்.ஒவ்வொரு சப்தமும் தோன்றுவதை,மறைவதை..

என் வாழ்க்கை முழுவதும் நான் மழையைக் கேட்டிருக்கிறேன்என் முடி இப்போது வெளுத்திருக்கிறது.இருந்தாலும் வசந்த கால நதி மீது பெய்யும்இரவு மழையை நான் அறிந்திருக்கவில்லை.

இக்கவிதையில் எப்போதும் இருப்பவற்றை விழிப்படைந்த மனம் நோக்கும்போது ஏற்படும் திடுக்கிடலை  பதிவு செய்கிறது. ஒருவகையில் கவிதை கதை இன்னும் சற்று விரிவாக சொல்வதானால் கலை, அறிவியல் கண்டுபிடிப்புகள் போன்றவை  கூட இத்தகைய அகம் விழிக்கும் தருணங்களால் ஆனதே. ஆர்கிமெடீஸ் தத்துவம், கனவில் தோன்றிய பென்சீன் வடிவம், நியூட்டன் தலையில் விழுந்த ஆப்பிள் பழம் என பல உதாரணங்களைச் சொல்ல முடியும். சட்டென வேறொரு நிதர்சனத்தில் விழித்தெழுவது.

பொருள்முதல்வாதிகள் ஒட்டுமொத்த மானுட வரலாறையும் புறவயமான பொருளாதார, சமூக மற்றும் அரசியல் தருணங்களாக காண்பதற்கு மாற்றாக கருத்துமுதல்வாதிகள் ஒட்டுமொத்த மானுட வரலாறையும் இத்தகைய விழிப்புணர்வின் தருணங்களாக மட்டும் காண முடியும். ஆதி மொழி என்பதே பிரபஞ்சம் தங்களுக்குள்ளாக உரையாடிக்கொண்டிருக்கும் மொழி. விழித்தெழும் மனம் அந்த மொழியையும் உரையாடலையும் கவனிக்கத்தொடங்குகிறது. உரையாடத் தொடங்குகிறது. தானறிந்த மொழியில் அதை பிரதிசெய்ய மானுட மனம் யத்தனிக்கிறது.

கவி காளிதாசனின் நாக்கில் அன்னை எழுதியது முதல் மூங்கையான் கவிஞனானான். அன்னையென்பது சக்தி, பிரகிருதி, கட்டற்ற இயற்கையின் வடிவம். சாமான்ய மொழியில் உழன்றவனை ஆதி மொழி நோக்கி விழிக்க செய்தாள் அவள். சூரிய ஒளியில் ஒளிரும் ஒற்றை புழு நீடுழி வாழ்க எனும் செய்தியை எப்படி ஜெயமோகனுக்கு சொல்லியிருக்க இயலும்? கவி ஆதிமொழி வழியாக சொல்லின்மையின் அனுபவத்தை கடத்த முயல்கிறார்.

போகன் மொழியாக்கம் செய்த மற்றோரு கவிதை அன்றாடத்தின் உறைகணம் அளிக்கும் திறப்பைச் சொல்கிறது.

ஏரியைக் கடந்து செல்லுதல்.

ஒரு மீனவன் தனது படகை வெகுதூரம்ஏரியினுள் ஓட்டிச் செல்கிறான்.எனது முதிய கண்கள் அவன் வழியைக் கடைசிவரை பின் தொடர்கின்றன.காட்சிக்குள் துல்லியமாக அவன் வருவதும் போவதுமான நெசவை..

பிறகு இது வினோதமடைகிறதுசட்டென்று அவன்  நாணலின் மீது சம நிலையுடன் நிற்கும்ஒரு நீர்ப்பறவை ஆகிவிட்டான்

நித்ய சைதன்ய யதியின் ஒரு கவிதையை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளலாம்.

காலைப்பனியை நான் முத்தமிடுவதில்லை

நீ ஒரு மலர்

வண்டெதுவும் முத்தமிடாத  மலர்

நீ ஒரு பாடல்

மறையக்கூடிய உதடுகளால் இசைக்கப்படாத பாடல்

என் அகத்தை தூய்மையாக்கும்

இறைகூறும் இரகசியம் நீ

பேரின்பப் பரவசம் நல்கும்

இன்னிசைப் பாடல் நீ

நிலவை நான் கைகளில் அள்ளுவதில்லை

காலைப்பனியை முத்தமிடுவதுமில்லை

உன்னை என் கனவுகளில் காண்பதும்

நிலைபேற்றின் இன்னிசையை என

உன்னிடம் அன்பு பாராட்டுவதும் ஒழிய

வேறொன்றையும் நான் விழையவில்லை

 

கால்களை சேறாக்கிக் கொள்ளாமல்

மண்ணில் நடக்கும் ரகசியத்தை

உன்னிடமிருந்து கற்கவேண்டும் நான்

 

இக்கவிதையின் இறுதிவரிகளை

‘அவன்

வனத்தில் நுழையும்போது

புற்கள் நசுங்குவதில்லை

நீரில் இறங்குகையில்

சிற்றலையும் எழுவதில்லை’ (பெயரற்ற யாத்ரீகன், ஜென் கவிதைகள், தமிழில் எம்.யுவன்) எனும்  ஜென் கவிதையுடன் சேர்த்து வாசிக்க இயலும்.

மறை ஞான கவிதைகள் பண்பாட்டு கூறுகளில் இருந்து சில குறியீடுகளை பயன்படுத்தி கவிதையை சமைத்துக்கொள்ளும். மீமொழியின் கூற்றுகளை பயன்படுத்திக்கொள்ளும்.  கபீரின் இந்த கவிதையை உதாரணமாக சொல்லலாம்.

வெண்பட்டாடை

மெல்லிய

மிக மெல்லிய வெண்பட்டாடையை

அவன் நெய்கிறான்

அவனுக்கு வாய்த்த ஊடு இழை எது?

பாவு இழை எது?

ஆடையை நெய்ய

தேர்ந்த நூல் எது?

இங்கலத்தை தறியாக்கி

பிங்கலத்தை கயிறாக்கி

சூக்குமத்தை நூலாக்கி

வெண்பட்டாடையை

அவன் நெய்கிறான்

எண்ணிதழ் தாமரையைத்

தகளியாக்கி

ஐம்பூதங்களையும் முக்குணங்களையும்

நூல்புரியாக்கி

அவன் ஆடை நெய்கிறான்

தறியை அசைத்தசைத்து

ஒவ்வொரு நூலையும் சரிபார்த்து

அன்னையின் கருப்பையில் பத்து மாதங்கள்

நெய்கிறான்

எடுத்தணிந்த தேவரும் முனிவரும்

மனிதரும் அதைக் கறையாக்கி நிற்க

சேவகன் கபீரோ

அழுக்கின்றி

அப்படியே வைத்திருக்கிறான்

அந்த வெண்பட்டாடையை.

இடம், பிங்கலம், சுழுமுனை போன்ற தாந்திரிக குறியீடுகள் இக்கவிதையில் பயன்படுத்தப்பட்டுள்ளதை கவனிக்க முடியும். மற்றொரு கவிதையில் கபீர் பிரபஞ்சமளாவிய சித்திரத்தை அளிக்கிறார்.

‘நானோ

எனது தறியின்

ஊடு இழைக்கான நூல்களைப்

பிணைத்துக்கொண்டிருந்தேன்

பூமியையும்

ஆகாயத்தையும் பூட்டி

அவன் தறியைச் செய்கிறான்

சூரியனையும் சந்திரனையும்

சட்டங்களாக்கி

ஒருசேர

அசைக்கிறான்.’

 

திருமந்திரம், சித்தர்பாடல்கள் போன்றவை இந்த வகைப்பாட்டிற்கு உதாரணமாக சொல்லலாம். அக்கம்மாதேவியும்

‘அத்தை மாயை

மாமன் பிறவி

மூன்று இளைய மைத்துனர்கள் புலி போன்றவர்கள்

நான்கு நாத்திகள்

கேள் தோழி/

ஐந்து மூத்த மைத்துனர்களுக்குத் தெய்வமில்லை

ஆறு ஓரகத்திகளை மீறமுடியவில்லை

தாயே

ஏழு பணிப்பெண்கள் என்னைக் காவல் காக்கிறார்கள்

கர்ம வினையான என் கணவனின் வாயில் அறைந்து

சிவனோடு சோரம் போவேன்

மனமென்ற சுகப் பிரசாதத்தால்

சிவனோடு கலந்து அனுபாவத்தைக் கற்றேன்

ஸ்ரீசைல மலையின் உடலழகிய

சென்னமல்லிகார்ச்சுனனைக்

கூடுகையில்

நல்ல கணவனைச்

சேர்ந்திருக்கிறேன்.’

நேரடி பொருளுக்கு அப்பால் பல மறைபொருளை கொண்டவை. அண்மைய காலத்தில் வந்த சிறந்த மற்றும் சிக்கலான மறைஞான கவிதை காவியம் அரவிந்தரின் சாவித்திரி. மறைஞான கவிதைகளின் மிக முக்கியமான இயல்பு அக – புற ஒத்திசைவு. அண்டத்திலும் பிண்டத்திலும் உள்ளவற்றை இணைவைத்தல். இயற்கைக்கும் மனிதனுக்குமான (அப்படிச்சொல்வதே அபத்தமாக தோன்றும்) நீட்சியை, உறவை, ஒத்திசைவை பேசுபவை. இவை நவீன கவிதைகளிலும் தொடர்வதை கவனிக்க முடியும்.

‘ஐக்கிய வேட்கை கவிதை’ ஆன்மீக கவிதைகளில் இவையே மிகப்பெரும்பாலானவை. உணர்ச்சிகரமானவை. காதலர்-கணவர், தோழர், அடிமை,  தாய் – தந்தையர், பிள்ளை போன்ற பாவங்களை சூடிக்கொள்பவை. நாயக நாயகி பாவம் , தாஸ பாவம் ஆகியவையே பெரும்போக்கானவை. பொதுவாக இக்கவிதைகள்  மூன்று உணர்வு நிலைகளில் செயல்படுவதை கவனிக்க முடியும். பெருங்காதலின் காத்திருப்பை தவிப்பை சொல்பவை முதல் நிலை, அடைதலின், இயையதலின் உவகையை சொல்பவை இரண்டாம் நிலை, அடைந்தது கைவிட்டுபோகும் பிரிவாற்றாமை நிலையை அரற்றுவது மூன்றாம் நிலை.  காம வேட்கையை உன்னதமாக்கி ஆன்மீக அனுபவத்தை அளிப்பவை. தூய காதல் கவிதைகளாக இவற்றை வாசிக்க இடமுண்டு. தமிழில் ஆண்டாள், மாணிக்கவாசகர் காரைக்கால் அம்மையார் ஆகியோர் தமிழின் முதன்மை கவிகள். சூஃபி கவிகளையும் இவ்வரிசையிலேயே வைக்க முடியும்.

பற்றியெரியும் நகரம்

 தீப்பற்றியெரிகிறது!

விறகேதுமின்றி எரியும் அதை

அணைக்கும் சக்தி படைத்த

மனிதன் எவரும் இங்கில்லை

எனக்குத் தெரியும்

அது உன்னிடமிருந்துதான்

பரவியது!

அந்தத் தீ

உலகம் முழுவதையும்

எரிக்கின்றது

அந்தப் பொறி

துவங்கியது

நீரிலிருந்துதான்

எரிய எரிய அது

நீரை அவிக்கின்றது

முடிவின்றி எரியும் அது

கண்ணியர் ஒன்பது பேரையும்

எரிக்கின்றது

அதை அவிக்கும்

நீர் யாருக்கும் அகப்படவில்லை

நகரம் பற்றியெரிகிறது

காவலரோ உறங்குகின்றனர்

அவர்களது கனவில்

அவரவர்களின் வீடுகள்

பத்திரமாய் இருக்கின்றன

ஓ இராமா

உனது நிறங்கள் எரிகின்றன

துடிக்கின்றன.

முடவன்

அறிவை நம்பி இருக்கிறான்

அதை மீறி

அவன் யோசிக்கலாகாது.

அதை எண்ணியே

வாழ்நாள் முழுதும் வீண் போய்விட்டது

உடலோ

தணியாத தாகத்தோடு தவிக்கிறது

பிறர் முன் நடிப்பவனை விடப்

பெரிய முட்டாள்

வேறெவருமில்லை

அவன் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்கிறான்.

கபீர் சொல்கிறேன்

ராமனின் கண்களில்

நாம் அனைவரும் பெண்களே

இது கபீரின் கவிதை‌.  ‘ராமனின் கண்களில்

நாம் அனைவரும் பெண்களே’. ஏறத்தாழ இதே வரியை அக்கம்மாதேவி சென்ன மல்லிகார்ச்சுனனுக்கும் மீரா கண்ணனுக்கும் பொருத்திச்சொல்கிறார்கள். மீரா பாடுகிறாள்

போகாதே போகாதே

போகாதே போகாதே என

நின்பாதம் பணிகிறேன்.

நான் உனக்கானவள்.

பக்தியின் பாதை எங்குள்ளது என எவரறிவர்

எங்கு செல்வதென நீயே வழிகாட்டு

என் உடல் பத்தியாகட்டும்,  சந்தனமாகட்டும்.

அது உன்னால் கொளுத்தப்படட்டும்.

வெறும் சாம்பலாக நான் உதிர்ந்த பின்

உன் தோளிலும் மாரிலும் எனை பூசிக்கொள்.

மீரா சொல்கிறாள்- கிரிதரனே என்னிடம் துளி ஒளியுண்டு

எனக்கதை நின்னுடையதுடன் கலக்க வேண்டும்.

‘காதலின் நுனிநாக்கால் தீண்டப்பட்டவனே அறிவான் என் அரற்றலை’ எனும் கபீரின் வாக்கு ரூமிக்கும் அக்கம்மாதேவிக்கும் ஆண்டாளுக்கும் மீராவுக்கும் துல்லியமாக பொருந்தும். இக்கவிதைகள் பெரும்பாலும் கடல், நிலவு பறவை போன்ற பழக்கப்பட்ட அன்றாட படிமங்களை சரளமாக பயன்படுத்துபவை. அவற்றின் ஆற்றல்  முழுக்க முழுக்க உணர்வுநிலையிலிருந்து வருபவை. பெரும் பித்து நம்மைப்பற்றி கொள்ளும். ‘என் உடல் பத்தியாகட்டும்,  சந்தனமாகட்டும்.

அது உன்னால் கொளுத்தப்படட்டும்.

வெறும் சாம்பலாக நான் உதிர்ந்த பின்

உன் தோளிலும் மாரிலும் எனை பூசிக்கொள்.’ என அனத்துகிறாள் மீரா. உன்னை எப்போது காண்பேனோ அப்போது வாரி விழுங்கிவிட வேண்டும் என்றிருந்தேன் ஆனால் நீயோ என்னை முந்திக்கொண்டு என்னை முழுதாக விழுங்கிவிட்டாய் என்கிறாள் ஆண்டாள்1. மேலும் நாளுக்கு நாள் உயிரையும் உண்டு என்னை முழுவதும் உண்டான் என்கிறாள் அவள்2. பதினாறாயிரம் பேர் பாத்திருக்க பொதுவில் மாதவனின் வாயமுதத்தை நீ மட்டும் பருகுகிறாயே அதை நிறுத்து என வெண்சங்கிடம் சினந்து கொள்கிறாள்3. ‘சுகமே படுக்கை பார்வையே அணிகலன்

ஆலிங்கனமே ஆடை முத்தமே ஊட்டம்

காதல் பேச்சு தாம்பூலம்

உணர்ச்சி மோகனம் நறுமணத் தைலம்

சென்னமல்லிகார்ச்சுனனோடு கலத்தல் பரமசுகம் அம்மா!’

என்கிறாள் அக்கம்மா தேவி.

‘வாழ்வைத் துறந்தபோது நான்

கடவுளின் உறைவிடம் ஆனேன்

என்னை நான் எரித்தபோது

என்னவானேன் என சொல்லக்கூடுமோ?

உலகில் அனைவரும் தொடர்ந்து வாழ விரும்புகிறார்கள்

ஆனால் என் நண்பனே, நான்

மரணத்தில் எரிக்கப்பட விழைகிறேன்

ஓ மொய்ன், காதலனோடு

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 15, 2021 10:34

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.