Jeyamohan's Blog, page 877

November 24, 2021

புதுவை வெண்முரசு கூடுகை

அன்புள்ள நண்பர்களே , வணக்கம் , நிகழ்காவியமான “வெண்முரசின்  மாதாந்திர கலந்துரையாடலின் 44 வது  கூடுகை 27.11.2021  சனிக்கிழமை    அன்று   மாலை  6:00  மணி   முதல்  8:30  மணி   வரை  நடைபெற இருக்கிறது . அதில் பங்கு கொள்ள வெண்முரசு வாசகர்களையும் ஆர்வமுள்ளவர்களையும் வெண்முரசு கூடுகையின் சார்பாக அன்புடன் அழைக்கிறோம் கூடுகையின் பேசு பகுதி வெண்முரசு நூல் வரிசை 5 “பிரயாகை” , பகுதி ஏழு : பூநாகம் முதல்  5  வரை குதி எட்டு  : மழைப்பறவை1  முதல்  5  வரையிலான   பதிவுகள்    குறித்து நண்பர்   இரா . விஜயன்   உரையாடுவார் இடம்:கிருபாநிதி அரிகிருஷ்ணன்ஶ்ரீநாராயணபரம்” முதல் மாடி# 27, வெள்ளாழர் வீதி , புதுவை -605 001தொடர்பிற்கு:-
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 24, 2021 10:35

செருக்கும் கலைஞன் – பாலாஜி ராஜு

விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம் விஷ்ணுபுரம் விருந்தினர்கள் 2021

இந்த ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது கவிஞர் விக்ரமாதித்யனுக்கு அளிக்கப்படுவது மகிழ்வான செய்தி, தமிழின் தலைசிறந்த இன்னொரு கவிஞனைக் கொண்டாட ஒரு சந்தர்ப்பம். விழா சிறப்பாக அமைய என் மனமார்ந்த வாழ்த்துகள்.

இது குறித்த பதிவுகளில் வெளிவரும் அவருடைய புகைப்படங்களையும் கூர்ந்து கவனிக்கிறேன், புகைப்படக் கருவிகள் சில முகங்களிடம் மட்டும் அதீத வாஞ்சையுடன் இருந்துவிடுகின்றன. அவருடைய கவிதைத் தொகுப்புகள் கிண்டிலில் வாசிக்க கிடைத்தது. அவற்றில் சில கவிதைகளை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்,

கறுத்த மேகங்கள் திரளும் வானம்

இருளோ சமுத்ரமோ

அந்திக்கருக்கலோ என்றாகும்

ஈசானமூலையில் தென்வடலில்

அங்கே இங்கே நாற்புறமும்

இடி இடிக்கும் மழையைச் சொல்லி

சேரும் மஞ்சுக் கூட்டம்

…….

கருகும் புல் மீண்டும் துளிர்க்க விரும்பி

விமோசனம் எதிர்நோக்கும்

…….

தவளைகளின் வாய் ஓயா சப்தம் கேட்டு

அவித்துத் தின்ற மீத விதைநெல்லை

அளந்து பார்ப்பான் விவசாயி

…….

குளம் நிறையும் சந்தோஷத்தில்

ஊர்ஜனங்கள் நம்பிக்கைகொள்ள

நிலம் குளிரப் பெய்யும் மழை

 

மழை என்பது இயற்கையின் நிகழ்வுகளில் தலையாயது, சட்டென்று பூமியில் ஒரு சுறுசுறுப்பு தொற்றிக்கொண்டுவிடுகிறது. ஒரு கிராமத்து மனிதனின் எளிய வார்த்தைகளால் விவரிக்கப்படும் காட்சியாய் இந்த கவிதை மனதில் விரிகிறது.

 

நீச்சலுக் கென்றே

ஆற்றுக்கு வந்தவனை

உள் வாங்கும் சுழல்

பார்த்தபடி

தன் போக்கில் போகும் நதி

 

என்ற வரிகளில் ஒரு கலைஞன் எதிர்கொள்ளும் சிக்கல்களையும், என்றுமே கண்டுகொள்ளாத சமுதாயத்தையும் சாடுகிறார்.

 

கரையோர அலைகள்

கடக்க வேண்டும்

கட்டுமரங்கள்

 

பெருஞ்செயல்கள் ஆற்ற எத்தனிக்கும் மனதின் தொடக்க நிலைத் தடைகளாக அலைகள். இந்த கரையோர அலைகளைக் கடந்தால்தானே வாழ்வெனும் விரிந்த கடலை முழுமையாக தரிசிக்கமுடியும்.

 

 

மண்

கீறிப் புதைத்து வை

வான்

பார்க்க வருவேன் முளைவிட்டு

 

என கலைஞனின் செருக்கை, விடுதலை தேடும் மனத் திண்மையை கூர்மையான வரிகளில் சுருக்காகச் சொல்லிவிடுகிறார். ஒரு கலைஞன் கொள்ளும் கர்வம் கம்பீரமானது, பாரதி கவிதைகளில் இருக்கும் உக்கிரம் இந்த வரிகளில் தெரிகிறது.

 

எழுதினேன்

கவிதை என்றார்கள்

எழுதுகிறேன்

எதிர்கவிதை என்கிறார்கள்

எழுதுவேன்

ஏதாவது சொல்வார்கள்

 

என விமர்சகர்களை நோக்கி அங்கலாய்க்கிறார்.

 

எப்போவோ

போய்விட்டிருந்தது அந்திக்கருக்கல்

…..

கல்வி நிலையங்கள் திறக்கும் காலம்

பெண்களுக்கான பெட்டியிலும் நெரிசல்

…..

காத்திருக்கப் பொறுமையில்லாதபோதும்

காத்திருந்தேன்

வண்டி

புறப்படும் நேரம்

என்ன நினைத்துக்கொண்டிருந்தாளோ இவள்

உதடுதுடிக்க

பார்த்துக்கொண்டேயிருந்தான் பெரியவன்

தாடியைப்பிடித்திழுத்து

விளையாடிக்கொண்டிருந்தான் சின்னவன்

வெறுமையை உடைக்கத்தெரியாமல்

யோசித்துக்கொண்டிருந்தேன் நான்

நாளை இந்நேரம்

ஊரில் இருப்பார்கள்

பழகிப்போன தனிமைதானென்றாலும்

பயமுறுத்தத்தான் செய்யும் என்னை

 

பிழைப்புத் தேடி நகரத்தில் வாழவேண்டிய கட்டாயத்தையும், தனிமையின் தாக்கத்தையும் இந்த கவிதை பேசுகிறது. ‘நாளை இந்நேரம் ஊரில் இருப்பார்கள்’ எனும் வரிகளில் அவர் மனதில் ஊரின் பிம்பம் வந்துசெல்கிறது. கவிஞன் தன் வாழ்வின் ஒரு சிறு தீற்றலைச் சொல்லுவதாத் தோற்றம் கொண்டாலும், இதன் வலி எல்லோருக்கும் பொதுவானது. எளிய வரிகளக இருக்கலாம், பரவலான பேசுபொருளாக இருக்கலாம், ஆனால் இந்த கவிதை மனதில் ஏற்படுத்தும் தாக்கம் உண்மையானது, ஆழமானது.

பாலாஜி ராஜு

 

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்-16

விக்ரமாதித்யன் -விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள்-15

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 12

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 11

விக்ரமாதித்யன் விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 10

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 9

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 8

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 7

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 6

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 5

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 4

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 3

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 2

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 1

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 24, 2021 10:34

எழுத்து செல்லப்பா – உஷாதீபன்

சுவடு தெரிகிற தடத்திலே செல்ல மறுத்து, புதுத்தடம் போட்டுக் கொண்டு இலக்கியத்தின் எல்லைகளைச் சற்று விரிவடையச் செய்ய முயன்றவர்களைத்தான் சோதனைக்காரர்கள் என்று சொல்லலாம் – என்ற க.நா.சு.வின் கூற்றை ஏற்றுக் கொண்டுதான், அதனைக் குறிக்கோளாகக் கொண்டுதான் “எழுத்து” தொடங்கப்படுகிறது என்று குறிப்பிடுகிறார் சி.சு.செ.

இன்றைய புதுக்கவிதை வளமுற்று செழித்து விளங்குவதற்கு எழுத்துதான் அடிப்படையாகும். தான் எடுத்துக் கொண்ட கொள்கைக்கு ஏற்றவாறு “எழுத்து“ சாதனை புரிந்ததினால், நவீன தமிழ் இலக்கிய வளர்ச்சியில் ஓர் மைல் கல்லாக அது இருக்கிறது – என்று இப்புத்தகத்திற்கான பதிப்புரையில் திரு அ.ந. பாலகிருஷ்ணன் பதிப்பாசிரியர் தெரிவிக்கிறார்.

விமர்சனங்கள் – விமர்சிக்கின்றவரின் மீது விமர்சனங்கள் காணும் போக்கு விடுத்து, கதை மாந்தர்களின் மீது மட்டும் விமர்சனம் அமையுமானால் தமிழில் விமர்சனக் கலை மேலும் சிறக்கும் என்றும் குறிப்பிடுகிறார். இப்புத்தகம் வெளியிட்ட காலகட்டமான 2001 லேயே இம்மாதிரியான அபிப்பிராயங்கள் விரவி இருந்திருக்கின்றன என்பதை நாம் அறிய முடிகிறது.

தமிழ் எழுத்துலகில் “மணிக்கொடி எழுத்தாளர்கள்“ என்று சிறப்புப் பெயர் பெற்றிருந்த படைப்பாளிகளில் சி.சு. செல்லப்பாவும் ஒருவர் என்று கூறித்தான், அவரைப்பற்றியும், அவரின் எழுத்து இதழ் பற்றியதான தகவல்களையும் ஆரம்பிக்கிறார் திரு வல்லிக்கண்ணன். 1930 களில் தமிழ் சிறுகதைக்கு இலக்கியத்தரம் சேர்க்கவும், தமி்ழ் சிறுகதையை உலக இலக்கியத் தரத்துக்கு உயர்த்தவும் இலட்சிய வேகத்தோடு செயல்பட்டவர்கள் மணிக்கொடி எழுத்தாளர்கள் என்று புகழாரம் சூட்டுகிறார். வெறும் புகழ்ச்சியா இது? அன்றைய கால கட்ட எழுத்தாளர்களைத்தானே இன்றும் நாம் திரும்பத் திரும்பப் படித்து வழிகாட்டிகளாய்ப் பின்பற்றி வருகிறோம்?

புதுமைப்பித்தன், கு.ப.ரா., ந.பிச்சமூர்த்தி, மௌனி, பி.எஸ்.ராமையா, பெ.கோ.சுந்தரராஜன் (சிட்டி) ந.சிதம்பர சுப்ரமணியம், சி.சு.செ., க.நா.சு., எம்.வி.வி., இவர்கள் அவரவர் ஆற்றலையும், தனித்தன்மையையும் வெளிப்படுத்தும் சிறுகதைகளை எழுதக்கண்டுதானே பிற்காலத்தில் மணிக்கொடி எழுத்தாளர்கள் என்று குறிப்பிடப்பட்டார்கள். பின்னர் கதைகள் எழுத முற்பட்ட இளைஞர்களை இவர்களது எழுத்துக்கள்தான் பாதித்தன என்பதுதானே மறுக்கமுடியாத உண்மை?

தந்தை வழியில் சின்னமனூரும், தாய் வழியில் வத்தலக்குண்டுமாக நான் மதுரை ஜில்லாக்காரன் என்று கூறிப் பெருமை கொள்கிறார் சி.சு.செ. ஆனாலும் திருநெல்வேலியில் அவருக்கு ஒரு தனி அபிமானம் இருந்திருக்கிறது. அவரது தந்தை பொதுப்பணித்துறையில் ஓவர்சீயராக இருந்ததுவும், தாமிரபரணியிலிருந்து தூத்துக்குடிக்கு இருபத்திநாலு மைல் தூரம் குழாய்கள் அமைத்து தண்ணீர் கொண்டு செல்லும் பணியை வெற்றிகரமாகச் செய்து முடித்திருக்கிறார் என்பதையும் அறிய முடிகிறது.

அத்தோடு தாய் வழி ஊரான வத்தலக்குண்டு பற்றி அறியச் செய்ய வேண்டும் என்று பி.ஆர். ராஜம் அய்யருக்கு (கமலாம்பாள் சரித்திரம்) நூற்றாண்டு விழா எடுக்கிறார். ஸ்ரீவைகுண்டம் ஊரில் வசித்தபோது எழுத்தாளன் ஆக வேண்டும் என்கிற உந்துதலில் கதை எழுதி அந்த முதல் கதை சங்கு இதழில் வெளி வருகிறது. என் வாழ்வில் சங்கு சுப்ரமணியன் அவர்களை என்னால் மறக்கவே முடியாது. என் கதையை வெளியிட்டு என்னை ஊக்கப்படுத்தி முதல் கடிதத்தை எழுதியவர் அவர்தான் என்று பெருமையோடு நினைவு கூறுகிறார் சி.சு.செ.

வாடிவாசல் நெடுங்கதையை எழுதுவதற்காக மஞ்சிவிரட்டு நடக்கும் இடத்திற்குச் சென்று கையில் ஒரு காமிராவோடு அவரே பல கோணங்களில் அந்த ஜல்லிக்கட்டு நிகழ்வைப் படம் பிடித்து வந்ததும், வீட்டிலேயே ஒரு இருட்டறை அமைத்து, அந்த ஃபிலிம்களைக் கழுவி புகைப்படங்களை உயிர் பெறச் செய்ததும் அந்த சிறு நாவலை எழுதுவதில் அவர் எவ்வளவு ஆர்வமும், தன் முனைப்பும் காட்டியிருகி்கிறார் என்பதை நாம் அறிய முடிகிறது.  

பிறகு இலக்கிய விமர்சனத்தில் அதிக நாட்டம் ஏற்பட்டு அமெரிக்கன் லைப்ரரி, பிரிட்டிஷ் லைப்ரரி என்று பெரிய பெரிய புத்தகங்களை எடுத்து வந்து விடா முயற்சியோடு படித்திருக்கிறார். அந்த சமயம் அவர் வசித்தது சென்னை திருவல்லிக்கேணி பிள்ளையார் கோயில் தெரு. வத்தலக்குண்டில் போதிய இலக்கிய ஆர்வம் இல்லை என்று கூறி சென்னைக்கு இடம் பெயர்ந்து வந்து, பிறகு பையனுக்கு பெங்களூர் மாறுதலில் அங்கும் சென்று வசித்து, அந்தச் சூழலும் பிடிக்காமல் தனியே மனைவியோடு வந்து மீளவும் திருவல்லிக்கேணிக்கே வந்து சேர்கிறார்.

இதழுக்கு “எழுத்து” என்று பெயர் வைத்தபோது கேலி செய்தவர்கள் அநேகம். இதிலென்ன தவறிருக்கிறது? இங்கிலீஷில் ரைட்டிங், நியூ ரைட்டிங் என்றெல்லாம் பெயர் வைத்து இதழ் நடத்தவில்லையா? அதே மாதிரிதான் இதுவும் என்று பதிலளிக்கிறார் சி.சு.செ. சந்தாதாரர்களுக்கு மட்டுமே இவ்விதழ், கடை விற்பனை கிடையாது என்று கண்டிப்பாகக் கூறிவிடுகிறார். இதழுக்கு சந்தா சேர்ப்பதற்காக ஊர் ஊராக அலைந்து பஸ்ஸிலும், ரயிலிலும் பயணம் செய்து, வாசிப்பில் ஆர்வமுள்ளவரிகளிடம் இதழ்பற்றி எடுத்துச் சொல்லி இதழை வளர்க்க அவர் பட்ட பாடு நம்மை நெகிழ வைக்கிறது.

அதுபோல் சிறந்த புத்தகங்களை வெளியிட வேண்டும் என்கிற ஆர்வமும் அதிகரிக்க, வ.ரா., ந.பிச்சமூர்த்தி, சிட்டி ஆகியோரின் படைப்புக்களை எழுத்து பிரசுரமாகக் கொண்டு வருகிறார். வல்லிக்கண்ணன் எழுதி, தீபத்தில் வெளிவந்த ”புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்” என்ற கட்டுரை நூலை நான்தான் கொண்டு வருவேன் என்று ஆர்வத்தோடு சொல்லி வெளியிட்டிருக்கிறார். அது முழுதும் விற்றுப் போகிறது. ஆனால் அந்தப் பணம் வெவ்வேறு வகையில் செலவாகிப்போக, மனசாட்சி உறுத்த, ஒரு கட்டத்தில் ஒரு ஆயிரம் ரூபாயைச் சேர்த்துக் கொண்டு வல்லிக்கண்ணனிடம் சென்று கொடுக்க, அவர் காசு வேண்டாமே என்று மறுக்க, நீங்கள் அப்படிச் சொல்லக் கூடாது, இது முதல் தவணைதான் என்று சொல்லி வற்புறுத்திக் கொடுத்து வருகிறார். பிற்பாடு இன்னொரு சமயத்தில் இன்னொரு ஆயிரம் ரூபாயை வழங்கி இப்போதுதான் மனம் நிம்மதியாச்சு என்று கூறி மகிழ்கிறார். அந்த நேர்மை உள்ளமும், நாணயமும்…இன்று ஒவ்வொருவரும் கண்டிப்பாக நினைத்துப் பார்க்க வேண்டிய ஒன்று.

எழுத்து பிரசுரம் நூல்களைக் கடைக்காரர்கள் வாங்க மறுக்க, வற்புறுத்திக் கொடுக்க, விருப்பமின்றி வாங்கி மூலையில் போட்டு வைக்கிறார்கள். பார்வையாய் அடுக்காமல் மூலையில் அடுக்கினால் எப்படி விற்கும்? எவ்வளவு விற்றிருக்கிறது? என்று அடுத்து இவர் போய் ஆர்வமாய் நிற்க, ஒண்ணு கூடப் போகலீங்க…என்று திருப்பிக் கொடுத்து விடுகிறார்கள். இந்தப் புத்தகங்களையும், எழுத்து இதழ்களையும் தரமான வாசகர்களிடம் கொண்டு சேர்க்கவும், பல்கலைக்கழகங்கள், பள்ளிகள் நூலகங்கள் என்று சி.சு.செ.யோடு வல்லிக்கண்ணனும் சேர்ந்து அலைந்திருக்கிறார்கள். நெல்லை மாவட்டத்தில் சி.சு.செ.யோடு அலைந்ததோடு வல்லிக்கண்ணன் நின்று கொள்கிறார். புத்தக மூட்டைகளை, பைகளைச் சுமந்து சுமந்து தோள்பட்டை வலியெடுத்து, கால் மூட்டு வலி பெருகி, ஒரு கட்டத்தில் சி.சு.செ.யும் இனி அலைதல் ஆகாது என்று நிறுத்திக் கொள்கிறார்.

பணத்தின் தேவை அவருக்கு எப்போதும் இருந்து கொண்டேயிருந்திருக்கிறது. அத்தனையும் எழுத்து இதழுக்காகவும், புத்தகங்கள் போடுவதற்காகவும் என்று கரைந்திருக்கிறது. கோவை ஞானி அவர்கள் ஒரு முறை ஆயிரம் ரூபாய் அனுப்புகிறார். அதைக்கூட மறுத்து விடுகிறார் சி.சு.செ. அது உடல் நலமின்றி அவர் இருந்த நேரம். இருந்தாலும் அன்பளிப்புப் பெறுவதில்லை என்பதில் கண்டிப்பாக இருந்திருக்கிறார். என் விஷயத்திலும் இப்படி நடந்து கொள்வார் என்று எதிர்பார்க்கவேயில்லை என்று வருந்துகிறார் ஞானி அவர்கள். அமெரிக்காவின் குத்துவிளக்கு அமைப்பு புதுமைப்பித்தன் நினைவுப் பரிசு வழங்கியபோதும் அதை மறுத்துவிடுகிறார். அந்தப் பணத்தைப் பெற்று புத்தகங்கள் வெளியிடப் பயன்படுத்தலாமே என்று நண்பர்கள் கூற, அதை நீங்களே செய்யுங்கள் என்று இவர் கூறிவிட, பிறகுதான் சி.சு.செல்லப்பாவின் என் சிறுகதை பாணி என்ற நூல் வெளி வருகிறது.

 பிறகு பி.எஸ்.ராமையாவின் கதைக்களம் என்ற புத்தகத்தைக் கொண்டுவருகிறார். பிறகுதான் மகத்தான நாவலாக “சுதந்திர தாகம்” வெளி வருகிறது. பி.எஸ்.ராமையாவின் மீது அவ்வளவு அன்பு அவருக்கு. படைப்புக்களத்தில் ராமையாதான் பெஸ்ட். வேர்ல்ட் ஃபிகர் என்று புகழ்கிறார். ராமையா அவர்களின் எழுத்துபற்றி வேறு விதமாய்க் கருத்துக்களை வெளியிடுபவரை அவர் விரோதியாய் மதித்திருக்கிறார். அப்படியான ஒரு கருத்தை திரு சி.கனகசபாபதி அவர்கள் கூறிவிட ரெண்டு பேருக்கும் சண்டை வந்துவிடுகிறது. பேச்சு நின்று போகிறது. கடைசிவரை இருவரும் பேசவேயில்லை என்பதுதான் துயரம்.

குங்குமப்பொட்டுக் குமாரசாமி போன்ற கதைகளெல்லாம் சுமார் ரகம்தானே என்று ஒரு முறை திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் கூறிவிட உடனே சுவரைப் பார்த்துத் திரும்பிக் கொள்கிறார் சி.சு.செ. உங்களோடு பேசுவதைவிட சுவரோடு பேசுவதே மேல் என்கிறார்.

திருப்பூரார் அவர்கள் அதை தமாஷாக இப்படிக் கூறுகிறார். அறையில் ஏற்கனவே இரண்டு பேர் இருந்தோம். இப்போது மூவராகிவிட்டோம்.  நான், அவர், சுவர்….

ராமையாவை விமர்சிக்கும் நபரோடு எனக்கு பேச்சு வார்த்தை கிடையாது என்று சொல்ல, சரி…நாம் அவரை விட்டுவிட்டு வேறு பேசுவோம் என்று கூற சரி என்று அவர் பக்கம் திரும்பிக் கொள்கிறார். குழந்தை மனம் கொண்ட கோபம். அந்த உதட்டில் ஒளிந்து கொண்டிருந்த சிரிப்பு…என்னடா பண்ணுவேன்…என்னால உன்னோட பேசாம இருக்க முடியாதே….!!! – மனம் நெகிழ்கிறது இவருக்கு. நமக்கும்தான்.

நான் தேர்ந்து கொண்ட கொள்கைகளிலிருந்து வழுவாமல் கடைசிவரை நேர்மையாக வாழ்ந்து கழித்து விட்டேன். அந்த திருப்தி எனக்குக் கிடைத்துவிட்டது. என்று பெருமையுறும் சி.சு.செ.1998 டிசம்பர் 18ல் அந்தத் திருவல்லிக்கேணி பிள்ளையார் கோயில் வீட்டில் காலமாகிறார்.

சி.சு.செ.யைப்பற்றி இப்படிப் பல நினைவலைகளைப் பெருமையாய்ப் பகிர்ந்து கொள்ளும் வல்லிக்கண்ணன் அவரின் இலக்கிய சாதனைகள் தமிழ் இலக்கிய வரலாற்றில் அவருக்கு சிறப்பான இடத்தைப் பெற்றுத் தந்திருக்கின்றன என்பதில் சந்தேகம் இல்லை என்று நிறுவுகிறார்.

இத்தொகுப்பில் காந்தியவாதி செல்லப்பா  என்று ஏ.என்.எஸ். மணியன் என்பவர் எழுதிய கட்டுரை மிகவும் மன நெருக்கமானதாகவும், ஆழ்ந்த நட்பு கொண்டதாகவும், மிகுந்த நேசத்தோடு விளங்குவதாகவும் அமைந்துள்ளது. சி.சு.செ., க.நா.சு. பற்றிய  சில குறிப்புகள் என்ற தலைப்பில் திரு தி.க.சிவசங்கரன் அவர்கள் (தி.க.சி) எழுதிய அற்புதமான கட்டுரையும் இந்நூலுக்கு பெருமை சேர்க்கிறது. எழுத்து இதழை மதிப்பீடு செய்து சின்னக்குத்தூசி அவர்கள் எழுதிய சில அத்தியாயங்கள் கொண்ட நீண்ட கட்டுரையும் இப்புத்தகத்திற்கு அழகு செய்கிறது. ஒரு சிறந்த ஆவணமாய்ப் பாதுகாக்கப்பட வேண்டிய வல்லிக்கண்ணனின் இந்நூல் இலக்கிய ஆர்வலர்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டிய பொக்கிஷம்

உஷாதீபன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 24, 2021 10:34

திருவெள்ளறை – கிருஷ்ணன் சங்கரன்

2019 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி, ஒவ்வொரு மாத முதல் சனிக்கிழமையும் இந்து சமய அறக்கட்டளை நடத்தும் அந்தக் கருத்தரங்குக்குச் சென்றிருக்காவிட்டால் எனக்கு திருவெள்ளறை என்ற பெயரே தெரிந்திருக்காது.ஸ்வேதகிரி என்கிற திருவெள்ளறை நூற்றுஎட்டு வைணவத்திருப்பதிகளில் ஒன்று. ஸ்ரீரங்கம், திருப்பதி போன்ற தலங்களை விடப் பழமையானது. அதன் காரணமாகவே ஆதிவெள்ளறை என்றழைக்கப்படுவது.   இதுபோல தெரியாத தலங்கள்தான் எத்தனையோ? அன்று நடந்த கருத்தரங்கு திருவெள்ளறைக் கோயிலில் சமீபத்தில் நடந்த மறுசீரமைப்பு குறித்த ஒன்று. மறுசீரமைப்பைத் தலைமையேற்று நடத்திய குமரகுருபரன் ஸ்தபதி உரை நிகழ்த்தினார். அவரை அறிமுகம் செய்தவர் சென்னை ஐ ஐ டி கட்டுமானத்துறைத் தலைவர் அருண் மேனன். கிட்டத்தட்ட கைவிடப்பட்ட நிலையில் இருந்த இந்தப் புராதனக் கோயிலை ஜெயபால் என்கிற ஒரு தனி மனிதர் தன் சகோதரரோடு உயிர்பெற்றெழச் செய்திருக்கிறார். இங்குள்ள கைவிடப்பட்ட பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த முன்கோபுரம் தமிழகத்தில் ஹொய்சாள பாணியில் கட்டப்பட்ட ஒரே கோபுரம் என்று கருதப்படுகிறது. (வேணுகோபாலன் சந்நிதி, ஸ்ரீரங்கம் – சுற்றுச்சுவர், அடிக்கட்டுமானம் மட்டும் ஹொய்சாள பாணியில் அமைந்தவை.) ஜெயபால் ஒரு என்ஜினீயர். அவர், சென்னை ஐ ஐ டி, குமரகுருபரன் ஸ்தபதி என்கிற முக்கூட்டு முயற்சியால் இந்தக்கோபுரம் விழாமல் காக்கப்பட்டிருக்கிறது. அது எவ்வாறு நிகழ்ந்தது என்று விளக்குமுகமாக இந்த உரை நிகழ்ந்தது.

தனக்குள்ளாகச் சிதிலமடைந்து சரிந்து கொண்டிருக்கும் கோபுரத்தின் உள்கட்டுமானத்தை சரிசெய்து, அதனை மேலும் எடைதாங்கக் கூடியதாக்கச் செய்வது முக்கியப்பணி. முற்றிலும் கைவிடப்பட்ட வெளிப்பிரகாரங்களை செப்பனிட்டு, இலுப்பை, புங்கை, கடம்பு போன்ற மரங்களை நட்டு, அங்கு மிகச் சிறந்த முறையில் ஒரு நந்தவனத்தை ஏற்படுத்தி தொடர்ந்து பாதுகாத்து வருவது இன்னொரு முக்கியப்பணி. இந்து அறநிலையத்துறையிடம் அனுமதி வாங்குவது, லட்சக்கணக்கில் தன் சொந்தப்பணத்தை செலவழித்து, கோபுரம் கட்டுவதற்கான பொருட்களை இந்தியாவெங்கும் பயணம் செய்து திரட்டுவது, பொத்தாம்பொதுவாகப் போடப்படுகிற வழக்குகளை எதிர்கொள்வது என்று பெருமாளைப் போல தசாவதாரம் எடுத்திருக்கிறார் ஜெயபால். வேலைகள் ஆரம்பித்து நடக்க நடக்க ஐம்பதுவருடத்திற்கு முந்தைய சில கட்டுமானங்கள் தெரிய ஆரம்பிக்கின்றன. அதாவது முன்னிருந்தவர்கள் கோபுரம் விழாதிருக்க சிமெண்டால் செய்த ஒட்டுவேலைகள். இதையெல்லாம் நீக்கி பாரம்பரியக் கட்டுமானப் பொருட்களைக் கொண்டு எப்படி உள்கட்டமைப்பு நிலைநிறுத்தப்படுகிறது என்று இந்தக் காணொளி விளக்கமாகக் காட்டுகிறது. பெருமாளை ஏழப்பண்ணுவது என்று கூறுவார்கள். அதாவது பெருமாளை அலங்கரித்து பல்லக்கில் அமர்த்துவது. இது பெருமாள் கோயில் கோபுரத்தை ஏழப்பண்ணுவதுதான்.

கோவிட் தொற்றின் காரணமாக வீடடைந்து கிடந்ததில் ஏதோ வாழ்க்கையே சூனியமாகத் தெரிந்த நேரத்தில், நண்பர்கள் ஏற்பாடு செய்த கொடைக்கானல் சுற்றுலாவில் கலந்துகொண்டு சிறப்பித்துவிட்டு வருகிறவழியில் திருச்சியில் இறங்கிக்கொண்டேன். அங்குள்ள முக்கியக் கோயில்களைப் பார்ப்பது திட்டம். முதல் கோயில் திருவெள்ளறை. காலையில் ஐந்தரை மணிக்கே  கிளம்பிவிட்டேன். திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து  பேருந்தில் அண்ணாசிலையில் இறங்கி துறையூர் செல்லும் பேருந்தில் ஏறினேன். திருச்சி, சேலம், கோவை நகரங்களில் கடந்த இருபது வருடங்களாகப் பயணம் செய்ததில் மாறாத ஒன்று பேருந்துகளில் மிக அதிக சத்தத்தில் பாடல்களை ஒலிக்கச்செய்வது. இன்றும் அதேதான். நடத்துனரிடம் சொன்னால் ‘சில பாட்டு அந்த மாதிரி ‘ரெகார்ட்’ ஆயிருக்குதுங்கண்ணா, அடுத்த பாட்டுல சரியாயிரும்’ என்றார். நன்கு தயாரிக்கப்பட்ட பதில். அடுத்த பாட்டு முதல்பாட்டை விட சத்தமாக இருந்தது. நிச்சயமாக திவ்யதேசங்களுக்குப் போகும்போது கேட்டுக்கொண்டு போகும் பாடல்கள் அல்ல. மிஷ்கின் படங்களின் குத்துப்பாட்டு வரிசை. காலையின் அமைதி கெட்டது. கண்ணுக்கு இமைபோல காதுக்கு ஏதாவது இருந்தால் தேவலை என்றிருந்தது. எத்தனை சிறந்த பாடலாக இருந்தாலும் சினிமாப்பாடல் காலை எட்டுமணிக்குள் கேட்கக்கூடிய ஒன்றல்ல என்பதே என் எண்ணம். வரும் வழியில் மணச்சநல்லூரிலிருந்து திருப்பைஞ்ஞீலி (இறைவன்பெயர் ஞீலிவனநாதர், ஞீலி – வாழைமரம், தலவிருட்சம்) செல்லும் வழி தனியாகப் பிரிகிறது. அது ஒரு பாடல் பெற்ற சிவத்தலம். எல்லாப்பேருந்துகளிலும் திருப்பைங்கிளி என்று எழுதியிருந்தார்கள். அரைமணி நேரப்பயணத்தில் திருவெள்ளறை வந்து சேர்ந்தது. அப்பாடா…

திருச்சி துறையூர் சாலையில் மண்ணச்சநல்லூர் தாண்டி ஏழாவது கிலோமீட்டரில் திருவெள்ளறை. சற்றே பெரிய கிராமம். லேசான தூறல் போட்டு வாசல் தெளிக்கிற வேலையை இல்லாமலாக்கியிருந்தது. வானம் மழைமேகம் கோர்த்து சாம்பல் நிறத்தில் இருந்தது. சாலையின் இருபுறமும் நெடுக புளியமரங்கள். பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஒரு கிமீ உள்ளே நடந்து சென்றால், செந்தாமரைக் கண்ணன் செங்கமலத்தாயாருடன் குடிகொண்டிருக்கும் புண்டரீகாட்சப்பெருமாள் கோயில். முதல்பார்வையிலேயே கோயிலின் பழமை தெரிந்து விடுகிறது. பழமையான அந்த மொட்டைக்கோபுரமே கம்பீரமாகத்தான் இருக்கிறது. இதன் உள்கட்டமைப்புதான் மீட்டுருவாக்கப்பட்டுள்ளது. ஒரு இருபது படி ஏறினால்தான் நுழைவாயிலை அடைய முடியும். இது போன்ற கோயிலை மலைக்கட்டுக்கோயில் என்கிறார் வேளுக்குடி கிருஷ்ணன். மேலே கட்டுமானப்பணி தொடரப்படவில்லை. வழக்கு முடியாமல் இருக்கலாம். பெரிய கோட்டைச்சுவர் போல நீண்ட நெடுஞ்சுவர். மிகப்பெரிய வெண்பாறைமலை மீது அமைந்த கோயில். அதை பிரகாரத்தில் நடக்கும்போதே உணரமுடிகிறது. ஆள், அரவம் இல்லை. நான் மட்டும்தான். புகைப்படம் எடுத்துக்கொண்டே பிரதட்சிணம் செய்தேன். பிரகாரத்திலேயே ஒரு ஆலமரத்தின் கீழ் கற்றளி. உள்ளே மார்க்கண்டேய மகரிஷி தவம் செய்த குகை. தொடர்ந்து மயில்களின் அகவலும், கிளிகளின் கீச்சிடலும் எதிரொலித்துக்கொண்டே இருந்தது. நிறைய மரங்கள் கொண்ட மிகப்பெரிய நந்தவனம், காட்டுக்குள் இருப்பதுபோலவே இருந்தது. கோட்டைச் சுவர்மீது வரிசையாக அமர்ந்திருந்தன மயில்கள். பிரகாரத்தில் சிதறிக்கிடந்தன அவற்றின் எச்சங்கள்.

அர்ச்சகர் அப்போதுதான் கதவைத் திறந்து கொண்டிருந்தார். ஐந்து பேர் கொண்ட ஒரு குடும்பம் வந்திருந்தது. முதலில் ஆண்டாள் சந்நிதி. ‘இங்க தாயாருக்கே ஏச்சம். புறப்பாடோ, பூஜையோ தாயாருக்குத்தான் மொதல்ல’ என்றார். ஏச்சம், (ஏட்சமா? ஏற்றம் என்பதன் மரூஉவாக இருக்கலாம்) புதியவார்த்தை.  ‘பெருமாள் சந்நிதிக்கு வரவேண்டியவர் வரலை, நான்தான் வரணும்’ என்றார். அவருடனேயே நடந்து பெருமாள் சந்நிதியை அடைந்தோம். போகிற வழியில் சிவனுக்கு பிரம்மஹத்தி நீங்கியதைக் குறித்த ஒரு சுதைச்சிற்பம் இருந்தது. சைவக் கோயில்களில் வைணவக் கோயில்களையும், வைணவக் கோயில்களில் சைவக்கோயில்களையும் மட்டம் தட்டக்கூடிய ஏதாவது ஒரு வரலாறு இவ்வாறு வழங்கப்படுகிறது. சீர்காழியில் விஷ்ணுவை சட்டையாக அணிந்துகொண்ட சட்டநாதர் நினைவுக்கு வந்தார். மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளையும் நினைவுக்கு வந்தார். பல கோயில்களுக்கு தலவரலாறு எழுதியவர் அவர். இது யாரோ அவருடைய மூதாதையாக இருக்கும். போகும் வழியில் ஒரு நுழைவாயிலில் குபேரனின் செல்வக்குவைகளான சங்கநிதி, பதுமநிதி இருவரும் துவாரபாலகர்களாய் நின்றிருந்தார்கள். உத்தராயணம், தட்சிணாயனம் என்று இரண்டு நுழைவாயில்கள் பெருமாள் சந்நிதிக்கு. ஆறுமாதத்திற்கு ஒரு நுழைவாயில்.

பெருமாள் சந்நிதியில் கர்ப்பகிருகத்தில் குடும்பசகிதமாக ‘குரூப் போட்டோ’ எடுத்துக்கொண்டிருப்பது போல ஒரே கூட்டம். அதாவது கடவுளர் திருக்கூட்டம். ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய்ப் பெருமாள். கருத்த மேனியோடு நின்ற திருக்கோலம். கையில் பிரயோகச் சக்கரம். சந்திரர், சூரியர், ஆதிசேஷன், கருடன் பக்கத்தில்.   பெருமாளின் கல்யாண குணநலன்களை விளக்கிக்கொண்டிருந்தார் அர்ச்சகர். பெரியாழ்வார், திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்தது. பெருமாள் சிபிச்சக்கரவர்த்திக்கு காட்சி கொடுத்த தலம். மகாலட்சுமியும், மார்க்கண்டேய மகரிஷியும் தவம் செய்த தலம். எங்களாழ்வார் விஷ்ணுசித்தரும், மணவாள மாமுனிகள் உய்யக்கொண்டாரும் அவதரித்த திருத்தலம். செங்கல்பட்டிற்கு அருகில் உள்ள சிங்கப்பெருமாள்கோயில் நரசிம்மரைப் போல திடுக்கிடச்செய்யும் உருவ அமைப்பு இல்லை. சாந்தமான முகம்தான். ஆனால், பொதுவாக சமீப காலத்திய பெருமாள் கோயில்களில் இருப்பது போன்ற பளிச்சிட்டுத் துலங்குகிற முக அமைப்பு இல்லையென்பதே, இதன் புராதனத்தை தெரியப்படுத்துகிறது.

அடுத்தடுத்த கோயில்களுக்குச் செல்லும் அவசரத்தில் திருவெள்ளறை கோயிலில் நான் முக்கியமான ஒரு இடத்தைக் காணத்தவறிவிட்டேன். மகாலட்சுமி தவமிருந்த பூங்கிணறு. ‘ஸ்வஸ்திகா குளம்’ என்று அழைக்கப்படுகிறது. திரும்ப வந்து திருச்சிக்கு பேருந்துக்காக காத்திருக்கும்போதுதான் எதிரே இந்திய அகழ்வாராய்ச்சி நிறுவனத்தின் வழக்கமான நீலநிறப் பலகையை கவனித்தேன். வாய்ப்பு போனது போனதுதான். சாலையைக் கடந்து எதிர்ப்புறம் செல்வதற்குள் கண்முன்னால் ஒரு பேருந்தைத் தவறவிட்டிருந்தேன். ‘ஏன் யாரும் ஏறவில்லை?’ என்று அருகில் இருப்பவரைக் கேட்டேன். ‘இது எல்லாம் சாரதாஸ், மங்கள் & மங்கள்ல்ல வேலை பாக்குற பொண்ணுக. இப்ப கோபாலன் வருவான் பாருங்க. அவன்தான் கடைகிட்டயே எறக்கிவிடுவான்’ என்றார். பெருங்கூட்டம். ஐந்தே நிமிடத்தில் வந்த கோபாலன், மேலுதட்டில் மென்மயிர்ப் பரவலும், மருண்ட பார்வையுமாக கைபேசியோடு நின்றுகொண்டிருந்த பெண்கள் அனைவரையும் வாரிப்போட்டுக்கொண்டு போய்விட்டான். ‘ஆளொளிஞ்ச கோயிலிலே கல்விளக்காய் நின்னுஞான்’ என்ற மோகன்லாலின் பாடல் வரி திடீரென்று நினைவுக்கு வந்தது. அடுத்த வண்டி அரைமணி நேரம் கழித்தே வந்தது.

கிருஷ்ணன் சங்கரன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 24, 2021 10:31

வெண்முரசெனும் புதுச்சொற்களஞ்சியம்- முனைவர் ப. சரவணன், மதுரை.

புனைவிலக்கியத்தில் புதிய சொற்கள் இடம்பெறுகிறதெனில் அது கவிதையிலக்கியமாகத்தான் இருக்கும். அதற்கடுத்த நிலையில் நாவலிலக்கியத்தில் அவ்வாறு இடம்பெற வாய்புள்ளது. அந்த வகையில் புதிய சொற்களைத் தொடர்ந்து உருவாக்கி, தன் நாவல்களில் இடம்பெறச் செய்யும் எழுத்தாளர்களுள் முதன்மையானவர் எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்கள். அவர் மகாபாரதத்தை நவீன நடையில் மீட்டுருவாக்கம் செய்து, ‘வெண்முரசு’ என்ற தலைப்பில் எழுதியுள்ள நாவல் தொடரில் எண்ணற்ற புதியசொற்கள் இடம்பெற்றுள்ளன.

“தேவையே புதியனவற்றைக் கண்டுபிடிப்பதற்குத் தாய்” (Necessity is the mother of invention) என்ற பழமொழிக்கு ஏற்ப, ‘மகாபாரதம்’ நடந்த காலக்கட்டம் பழைய காலம் என்பதாலும் அதனை நவீன யுகத்து வாசகருக்கு அதன் செவ்வியல் தன்மை மாறாமல் கையளிக்க வேண்டும் என்ற எழுத்தாளரின் வேட்கையாலும் ‘வெண்முரசு’ நாவல்தொடரில் பல்வேறு புதிய சொற்களைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது.

பழைய, தேய்வழக்குச் சொற்களையும் தொடர்களையும் மீண்டும் மீண்டும் தன்னுடைய புனைவிலக்கியத்தில் பயன்படுத்த விரும்பாத எழுத்தாளர் புதிய சொற்களைத் தன்னுடைய அறிவுத்திறனால் கண்டடைந்து, உருவாக்கியுள்ளார்.

இதுகுறித்து ஆர். மாணிக்கவாசகம், தனித்தமிழியக்கம் உருவாகி அது பங்களிப்பை ஆற்றி, முடிந்துவிட்டது என்றே எண்ணியிருந்தேன். தனித்தமிழுக்கு இனிமேல் இடமே இல்லை என்று அனைவரும் சொல்லும்போது இருக்கலாமென்றே நானும் எண்ணியிருந்தேன். இத்தனை ஆண்டுகளுக்குப்பின் ஒரு தனித்தமிழ்க் காவியம் இங்கே நிகழ்கிறதென்பதே பெருமகிழ்வுக்கு ஆளாக்கியது என்று ‘வெண்முரசு’ நாவல் தொடர் எழுதும் எழுத்தாளரின் முயற்சியினைப் பாராட்டியுள்ளார்.

அவர் ‘வெண்முரசு’ நாவல் தொடரைப் படித்த அனுபவத்தைப் பின்வருமாறு பகிர்ந்துள்ளார்.

ஏராளமான தமிழ்ச்சொற்கள். ஒவ்வொன்றுக்கும் இவ்வளவு நுட்பமான தமிழ்ச்சொற்கள் இருக்கின்றன என்பதே வியப்புக்குரியது. ராஜதந்திரம் என்பதை அரசுசூழ்தல் என்று வாசித்தபோது ஏற்பட்ட மகிழ்ச்சி என்பது அரிதானது. அப்படி எத்தனை சொற்கள்!. பல்லாயிரம் புதிய சொற்கள். மகாபாரதத்தைப் படிக்க எனக்கு ஒரு மனத்தடை இருந்தது. அது வடமொழிக்காப்பியம் என்பதுதான் அதற்குப் பின்னணி. ஆனால், அதைத் தூய தமிழில் எழுதமுடியும் என்று எண்ணிப் பார்க்கவே இல்லை. முழுமையாகவே தனித்தமிழில் எழுதப்பட்டு வருகிறது வெண்முரசு என்று வியந்து கூறியுள்ளார்.

       ‘புதிய சொற்கள்’ என்று இங்குக் குறிப்பிடப்படுவன இதுவரை யாரும் பயன்படுத்தாத, தமிழ் அகராதிகளில் இடம்பெறாத சொற்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இரண்டு சொற்களை இணைத்துக் கூறும்போது அவை ஒன்றிணைந்து புதிய அகதரிசனத்தைத் தரும் என்ற நிலையிலும் அவற்றைப் புதிய சொற்களாகவே கொள்ளவேண்டும்.

சொற்களை இணைப்பது எளிதுதான் எனினும் சொற்களை இணைப்பதால் புதிய உணர்வுநிலையினை வாசகரின் மனத்தில் உருவாக்க முடிந்தால், அது ஒருவகையில் ஒரு புதிய உத்தியே என்பதை நாம் மறுக்க இயலாது. அத்தகைய சொற்களையும் நாம் தமிழ்மொழியின் சொல்வளத்துக்கு அந்த எழுத்தாளர் அளித்துள்ள கொடையென்றே கொள்ளப்பட வேண்டும். இந்த அடிப்படையில் நோக்கும்போது, ‘வெண்முரசு’ நாவல் தொடரில் சில நூறு புதிய தமிழ்ச்சொற்களைக் கண்டறிய முடிந்துள்ளது.

வெண்முரசில் பயன்படுத்தப்பட்டுள்ள புதிய சொற்கள் குறித்தும் அவை பொதுப்பயன்பாட்டுக்கு வந்துவிட்ட நிலை பற்றியும், வெண்முரசில் நானே உருவாக்கிய நூற்றுக்கணக்கான சொற்கள் இன்று பொதுப்புழக்கத்திற்கு வந்துவிட்டிருக்கின்றன. தினத்தந்தியில்கூட அவ்வப்போது அவற்றைப் பார்ப்பதுண்டு. இன்றுகூட ஒரு சொல்லைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டேன். வெண்முரசில் இருந்து விக்ஸனரி போன்ற தளங்களுக்குச் சென்று பொதுப்புழக்க மொழியில் கலந்துவிடுகின்றன என்கிறார் எழுத்தாளர்.

கோ. மன்றவாணன் என்பவர் எழுத்தாளர் ஜெயமோகனின் புனைவிலக்கியத்தில் புதியசொற்கொடை பற்றிக் கூறும்போது, சிலர் புதுச்சொற்களை எழுதும்போதோ புரியாத சொற்களைப் பயன்படுத்தும் போதோ அடைப்புக்குறிக்குள் அச்சொல்லின் பிறமொழிச் சொற்களை எழுதுவார்கள். ஆனால், நீங்கள் எந்தச் சொற்களுக்கும் அடைப்புக் குறிக்குள் பொருளையோ, பிறமொழிச் சொல்லையோ குறிப்பது இல்லை. நீங்கள் எழுதும் புதுச்சொற்களே தம்மைத் தாமே அறிமுகப்படுத்திக் கொள்கின்றன. அதற்கான சூழலை உங்கள் சொற்றொடர்கள் உருவாக்கித் தருகின்றன. பிறமொழிச் சொற்களுக்குத்தான் நீங்கள் புதுச்சொல் உருவாக்குகிறீர்கள் என்பது அல்ல, சூழலின் போக்குக்கு ஏற்ப, சொல்லும்  கருத்துகளின் நுண்மைக்கு ஏற்ப எந்த மொழியிலும் இல்லாத புதுச்சொற்களையும் தமிழுக்குத் தந்து வருகிறீர்கள். உங்கள் படைப்புகளில் உள்ள புதுச்சொற்கள் அனைத்தையும் தொகுக்க வேண்டும். அந்தப் பணியை நான் செய்ய வேண்டும் என்ற ஓர் எண்ணம் எனக்கு நீண்ட காலமாகவே உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இவரைப் போலவே பேராசிரியர் எம்.ஏ. சுசீலா அவர்கள், “நான் மட்டும் இப்போது பணியில் இருந்திருந்தால் ஆர்வமுள்ள மாணவக்குழுவையோ ஆய்வாளர்களையோ ஒருங்கிணைத்து வெண்முரசின் அரிய சொற்களை LEXICON ஆக்கப் பணித்திருப்பேன். அதற்கு வழிகாட்டி அதன் அடிப்படையில் ஆய்வு செய்ய உதவியும் இருப்பேன். மட்டுமே அதில் ஈடுபட முடியாமல் என் வயதின் தளர்ச்சியும் பிற பணிச்சுமைகளும் என்னைத் தடுக்கின்றன. எனினும் வருங்காலத்தில் எவரேனும் அதைச் செய்யக்கூடும் என்ற ஆழ்ந்த உள்ளார்ந்த நம்பிக்கையோடு காத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

       நான் ‘வெண்முரசு’ நாவல்தொடரை வாசித்தபோது என்னளவில் புதிய தமிழ்ச்சொல் என நான் கண்டடைந்த சில நூறு சொற்களுள் 160 சொற்களை மட்டும் இங்குத் தொகுத்தளித்துள்ளேன்.

வழிவிடுதி, 2. தொலைபயணி, 3. பொழுதிணைவு, 4. ஊழ்கம், 5. துயில்நீக்கப்பணி, 6. வாயுமிழ்தல், 7. அன்னநீர், 8. முகச்சொல், 9. கதிரெழுதல், 10. கதிரமைதல், 11. உளப்பாடம், 12. சுடராட்டு, 13. பூச்செய்கை, 14. வயற்றாட்டி, 15. விழிக்கோள், 16. இலைப்பொதிக்கூடு, 17. வழிப்பெறுகை, 18. வெயிலெழுகை, 19. பொழுதிடை, 20. தாழ்வில்லை, 21. நாளவன், 22. வாய்மணம்கொள்ளுதல், 23. முன்தூக்கம், 24. சொல்லடங்குக, 25. பொழுதணைவு, 26. தாலச்சுடர், 27. மூப்பிளமைமரபு, 28. முற்றொப்புதல், 29. மறிச்சொல், 30. சொல்சூழ்கை, 31. சொல்லெண்ணுதல், 32. எண்ணமாற்று, 34. உளமோட்டுதல், 35. முழுதணிக்கோலம், 36. சொல்மன்று, 37. முறைமைச்சொல், 38. சொல்லாடுதல், 39. அணிச்சொல், 40. உளவிழி, 41. மாற்றுருதி, 42. விண்ணுலாவி, 43. திசையுலாவி, 44. உளச்சொல், 45. விழியுசாவுதல், 46. சூழநோக்குதல், 47. விழிச்சான்று, 48. சொல்தீட்டுதல், 49. முன்னேற்பு, 50. இயல்கை, 51. வானருள், 52. வினாழிகை, 53. செவிகுவித்தல், 54. படிவர், 55. ஐம்பரு, 56. வாழ்கடன், 57. ஆலயவளைப்பு, 58. மலராட்டு, 59. குருதியாட்டு, 60. எடுத்துரைப்பு அளித்தல், 61. பிறவிமீன், 62. முழுதாற்றுதல், 63. கொலையாட்டு, 64. முற்றணிகொள்ளல், 65. செல்கைச்சடங்குகள், 67. காலிளைப்பாற்றுதல், 68. தூநீர்வாவி, 69. வருகணக்கு, 70. செல்கணக்கு, 71. அருகணைதல், 72. அரிதியற்றுதல், 73. தண்துளி, 74. பேரளி, 75. இசையிமிழ்தல், 76. உள்ளனல், 77. அனலுருளை, 78. மூக்குத்திறன், 79. காட்டெரி, 80. எழுயுகம், 81. வழிச்சாவடி, 82. வீழொலி, 83. விழியோட்டுதல், 84. உளப்பெருக்கு, 85. சிற்றணுவிடை, 86. நீரன்னை, 87. எரிகடன், 88. நிகர்நிலம், 89. அறத்தீங்கு, 90. பழிநிகர், 91. ஒலிநதி, 92. இருளுலாவி, 93. எண்கணுக்கள், 94. தென்னிலை, 95. முதலோன்வாளி, 96. இருளுருகுதல், 97. அனற்குவை, 98. இணையகவை, 99. நுண்ணனல், 100. அணித்திரை, 101. அணியர், 102. விழிதழைத்தல், 103. உயிராழ்வு, 104. அணித்தடம், 105. நேரக்கணியர், 106.விழியாடுதல், 107. அளியவன், 108. பொற்துருவல், 109. கணிநிறைவு, 110. முழுதுரு, 111. சொற்சரடு, 112. மின்னரசன், 113.
சொற்குவை, 114. முழுத்தவை, 115. உளநுண்மை, 116. நிகர்த்திறை, 117. பூசலோசை, 118. செறுத்துநிற்பு, 119. இருட்தோற்றம், 120. சொல்திறம்புதல், 121. தீயூழ், 122. நிகருடல், 123. நீர்ச்சரடு, 124. நற்றுயில், 125. புரவியூன், 126. எரிநூலேணி, 127. புரவிச்சிதை, 128. நீர்வேலி, 129. பொன்னீக்கள், 130. விழிச்சுனை, 131. ஐந்தனல், 132. பொற்கொன்றை, 133. நெறியுசாவுதல், 134. நீர்மணிகள், 135. வீணுயிர், 136. பேரழல், 137. கூரொளி, 138. கூரலகு, 139. நிகருலகு, 140. புழுதிமுகில், 141. நீரன்னம், 142. கருவுறக்கம்,  143. நீணாள், 144. தீயூழினன், 145. கணிக்களம், 146. இருட்புலரி, 147. இருட்கதிரவன், 148. வெற்றோசை, 149. ஊழிடர், 150. சிற்றூரன், 151. ஒளிச்சட்டம், 152. கெடுநரகம், 153. புதரொலி, 154. அனற்கடன், 155. தன்னேற்பு மணம், 156. கூரழகு, 157. அரசுசூழ்தல், 158. கதிர்மைந்தன், 159. செல்வழி, 160. நீர்ச்சுடர்.

இங்குக் குறிப்பிடப்பட்டுள்ள 160 புதிய சொற்களிலிருந்து பத்துச் சொற்களுக்கு மட்டும் விளக்கம் தர விழைகிறேன்.

‘பொழுதிணைவு’ – இரவும் காலையும் இணையும் பொழுது அல்லது மாலையும் இரவும் இணையும் பொழுது.‘அன்னநீர்’ – வெந்த சோற்றை வடிப்பதன் வழியாகக் கிடைக்கப் பெறும் வடிகஞ்சி.‘இணையகவை’ – ஒத்த வயது.‘மூப்பிளமைமரபு’ – வயதின் அடிப்படையில் முதன்மைதரும் மரபு.‘சொல்லாடுதல்’ – பேசிக்கொண்டிருத்தல்.‘நற்றுயில்’ – நல்ல தூக்கம் அல்லது நல்ல உறக்கம்.‘நீணாள்’ – நீண்ட நாள் அல்லது நெடிய நாள்.‘சிற்றூரன்’ – சிறிய ஊரைச் சார்ந்தவன்.‘கணிக்களம்’ – குறிசொல்பவர்கள் குறிபார்ப்பதற்காக உருவாக்கும் மிகச் சிறிய இடம்.‘புதரொலி’ – காற்றினால் புதர் அசைந்து எழுப்பும் ஓசை.

இதுபோன்று 160 புதிய சொற்களுக்கும் உரிய விளக்கத்தை அளிக்க இயலும். இந்தச் சொற்களுள் பல தமிழ் அகராதியில் இடம்பெறவில்லை. அவற்றை உரிய முறையில் தமிழ்ச் சொல்லகராதியில் சேர்க்க வேண்டியது இக்காலத் தமிழராகிய நமது தமிழ்ப் பணிகளுள் ஒன்றாகும்.

ப.சரவணன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 24, 2021 10:30

November 23, 2021

பொலிதல்

தொடர்புக்கு: info@vishnupurampublications.com

மதிப்பிற்குரிய ஜெ

வணக்கம்,  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். இன்று தபாலில் “குமரித்துறைவி”  புத்தக வடிவில் கிடைக்கப்பெற்றேன். நீண்ட நாள் நண்பன் ஒருவனை நேரில் சந்தித்த மகிழ்ச்சி இந்த புத்தகத்தை தபாலில் பெறும்போது.

பலமுறை இணையத்தளத்தில் படித்தபோதும், புத்தகமாய் கையில் வைத்து படிக்கும் போது கிடைக்கும் ஆனந்தமே தனிதான். இனிய தொடக்கமாய், இன்று கிடைக்கப்பெற்ற, இந்த ஆறு புத்தகத்தை, நெருங்கிய நண்பர்களுக்கு தீபாவளி பரிசாக கொடுக்க உள்ளேன். (தீபாவளிக்கு  இதை விட சிறப்பு பரிசு என்ன இருக்க முடியும்)

உங்கள் வாக்கின் படி,  இந்த “மங்கலப்படைப்பு” எங்கள் பண்டிகை  நாளில் மங்களமாய் திகழட்டும்.

மரியாதையுடன்,

முரளி அண்ணாமலை

அன்புள்ள முரளி அண்ணாமலை,

நான் தனிப்பட்ட முறையில் இன்று மிக அணுக்கமாக உணரும் நூல்களில் ஒன்று குமரித்துறைவி. ஒருவகையில் அறம், குமரித்துறைவி இரண்டுமே ஒரு தேடலின் இருமுனைகள். இரண்டுமே நன்னம்பிக்கையில் நிறைவுகொண்ட படைப்புக்கள்.

அறம் பல்லாயிரம்பேரைச் சென்றடைந்தமைக்குக் காரணம் அது பலரால் இலவசநூல்களாக வழங்கப்பட்டதுதான். அதன் இலட்சியவாதம் அவ்வாறாக ஒரு பொதுப்பேச்சுக்கு வந்து சேர்ந்தது. தமிழில் அதற்கு முன் நடந்திராத ஒரு பெருநிகழ்வு அது.

அதைப்போலவே குமரித்துறைவியும் சென்றடையவேண்டும் என்று விரும்புகிறேன். அதை ஆர்வலர் அன்பளிப்புகளாக, திருமணப்பரிசுகளாக பரவலாக அளிக்கவேண்டும். அதற்கான கொடையாளர்களைக் கண்டடையவேண்டும். அது பல்லாயிரம் கைகளுக்குச் செல்லவேண்டும்.

அறம் திட்டவட்டமான கருத்துநிலை ஒன்றை முன்வைக்கும் படைப்பு. சமகாலத்தன்மை கொண்டதும் கூட. ஆகவே அதன் பயன்பாடு கண்கூடானது. குமரித்துறைவி அப்படியல்ல. ஒரு சாமானிய வாசகர் அதை ஓர் எளிய வரலாற்றுப்புனைவு என்று கொள்ள வாய்ப்புண்டு. பேசிப்பேசியே அதை பற்றிய தெளிவை அடையமுடியும்

குமரித்துறைவி ஒருமைப்பாடு என்பதை முன்வைக்கிறது. அறங்களில் தலையாய அறம் அதுவே. அனைவரும் கூடி, ஒன்றென்றே ஆகி நிகழ்த்திக்கொள்ளும் ஒரு விழா அது. அனைவருக்கும் நிகரான பங்களிப்பு கொண்டது. மானுடர் ஒன்றாகி மகிழ்ந்திருக்கும்போது தெய்வங்கள் அணிக்கோலம் கொள்கின்றன. இயற்கை மங்கலம் கொள்கிறது.அறங்களில் முதன்மையானது மைத்ரி என்னும் ஒருமைப்பாடுதான். குமரித்துறைவி அதை முன்வைக்கும் நூல்.

ஆகவே முழுமையான மங்கலநூல் அது. துளியும் எதிர்மறைத்தன்மைஉஅற்ற நிறைவுகொண்டது. பண்டிகைகளுக்கு மட்டுமல்ல அனைத்து விழாக்களுக்கும் உரியது. உண்மையில் ஓர் இலட்சியத் திருவிழாவின் காட்சி அது.

ஜெ

ஜெயமோகன் மின்நூல்கள் வாங்க குமரித்துறைவி அச்சுநூல் வாங்க  வான் நெசவு அச்சுநூல் வாங்க விஷ்ணுபுரம் பதிப்பக நூல்கள்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 23, 2021 10:35

உள்ளுலகம் – சக்திவேல்

விஷ்ணுபுரம் விருது விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம் விஷ்ணுபுரம் விருந்தினர்கள் 2021

உள்வாங்கும் உலகம் விக்கி அண்ணாச்சியின் மூன்றாவது கவிதை தொகுப்பு. பொதுவாக ஒரு கவிதை தொகுப்பின் தலைப்பு அந்த தொகுப்பில் உள்ள நல்ல கவிதை ஒன்றின் தலைப்பாக இருப்பது காண கிடைப்பது. அந்த முதல் விஷயத்திலேயே இந்த தொகுப்பு வித்தியாசமாகிறது.

உள்வாங்கும் உலகம் என்ற தலைப்பை சூடி எந்த கவிதையும் உள்ளே இல்லை. யோகத்தின் ஐந்தாவது அங்கமான பிரத்யாஹாரம் கவனத்தை உள்நோக்கி திருப்புவது. தியானத்திற்கான முதல் படி. உலகத்தை விழைவின்றி உள்வாங்கி கொள்வது அதன் நோக்கம். இந்த தொகுப்பை முதல்முறை வாசிக்கையில் எனக்கு நிகழ்ந்தது அந்த தியான அனுபவம் தான்.

இவற்றில் களிப்பும் தரிசனமும் கவிஞனின் துயரும் என அனைத்தும் உள்ளன. அவை வளர்ந்து வளர்ந்து சென்று முற்றாக தன்னில் மகிழ்ந்திருக்கும் கவிஞனை சென்றடைகின்றன. பாமரன் என தொடங்கும் முதல் கவிதை சுற்றியுள்ள சகமனிதனின் துயரை சொல்ல ஆரம்பித்து பெரிய வித்தியாசமொன்றுமில்லை என்ற இறுதி கவிதையை அடைகையில் தன்னில் மகி்ழ்ந்திருக்கும் கவிஞனை கண்டு கொள்கிறது.

இத்தொகுதியில் கவிஞனின் கையறுநிலை, சமூக புறக்கணிப்பு, இங்குமங்குமான அவனது ஊசலாட்டம், வாழ்க்கை தரிசனங்கள், புன்னகை தருணங்கள் என்ற வகையில் கவிதைகள் வந்து கொண்டேயிருக்கின்றன. அத்தனையிலும் அவற்றை அப்பால் நின்று பார்க்கும், கவிஞனுக்கான ரசவாத கண்கள் நிறைந்திருக்கிறது. அதுவே இதை முதன்மை ஆக்குகிறது.

இத்தொகுப்பில் உள்ள ஏறத்தாழ அத்தனை கவிதைகளுமே பிடித்திருத்தாலும் என்னால் சொல்லாடியை நோக்கி பிடிக்க முடிந்த கவிதைகளின் மேலான ரசனைகளை பகிர்ந்து கொள்கிறேன்.

 

பாமரன்

பாடுபடுகிறான்

 

மேஸ்திரி

வேலை வாங்குகிறான்

 

மேலாளன்

நிர்வாகம் செய்கிறான்

 

முதலாளி

லாபம் சம்பாதிக்கிறான்

 

பொதுவில்

காய்கிறான் சூரியன்

 

பொதுவாகப்

பெய்யவும் பெய்கிறது மழை .

உழைப்பாளிகள் இங்கு இக்கருத்தை சொல்லாமல் கடந்து போகும் நாளென ஒன்றை நாம் பார்த்திருக்கிறோமா ? இந்திய தொழிலாளிகளின் பல்லாயிரம் நாவுகளில் ஒலிக்கும் ஏக்கம். வெயிலும் மழையும் போல என்று கிடைக்கும் எங்கள் உரிமை ?

 

கோயிலுக்கு

 

வாசல்

நான்கு

 

சந்நிதி

இரண்டு

 

சுயம்புலிங்கம்

சொல்ல ஒரு விசேஷம்

 

அம்மன்

அழகு சுமந்தவள்

 

ஐந்து கால

பூஜை நைவேத்யம்

 

பள்ளியறையில்

பாலும் பழமும்

 

ஸ்தல விருக்ஷம் பிரகாரம்

நந்தவனம் பொற்றாமரைக் குளம்

 

வசந்தோற்சவம் தேரோட்டம்

நவராத்திரி சிவராத்திரி

 

பட்டர் சொல்லும் மந்திரம்

ஒதுவார் பாடும் தேவார திருவாசகம்

 

சேர்த்து வைத்த சொத்து

வந்து சேரும் குத்தகை

 

ஆகமம் ஆசாரம்

தவறாத நியமம்

தெய்வமும்

ஐதிகத்தில் வாழும்

 

கோயிலொன்றின் சித்திரம் விரைவான கோடுகளினாலான ஒவியமாக எழுந்து வந்து தெய்வமும் ஐதிகத்தில் வாழும் என்ற ஈற்று வரியில் கவிதையாகி விடுகிறது.

தெய்வம் நமக்காப்பால் இருந்து நம்மை நோக்குகிறது என்பது நம்பிக்கை. அதுவும் நம்முடன் தான் நம்மை போலத்தான் உழல்கிறது என்பது நமக்கு ஒரு ஆசுவாசம் தருவதாக இருக்கிறதோ! இன்னொன்று பெருந்தெய்வத்தை என் வீட்டு நாட்டார் தெய்வமாக .பார்க்கையில் நான் உணரும் அணுக்கம் வேறு.

 

ஆனால்

 

பூமி

பூராவும் முளைத்துத் திரிகின்றன

 

மண்ணில்

குடைந்தும்

ஒட்டையிட்டும் வாழ்கின்றன

 

இருப்புக் கொள்ளாமல்

ஊர்ந்து அலைந்து

கொண்டு இருக்கின்றன

 

அவற்றுக்கும்

திட்டங்கள் இருக்கலாம்

லட்சியங்களும் கூட

 

எவ்வுயிருக்கும் தெரியும்

பிள்ளைப்பூச்சிகள்

பிள்ளைப்பூச்சிகள் தான்

 

அந்த பிள்ளைப்பூச்சிகள் எவையென்று சொல்லாமல் விட்டு செல்வது எதுவாக வேண்டுமானாலும் விரிக்க கூடியதாகிறது. ஒரூயிர் மற்றொரு உயிரை காணுகையில் இப்படி தான் நினைத்து கொள்ளுமோ ? அதற்குள்ளும் ஒன்று மற்றொன்றை காணுகையில் அப்பாடித்தான் நினைத்து கொள்ளும் போலும்.

எல்லாம் அப்படி காலச்சூழலில் விழியறியாது காணாமல் செல்பவை தான் என்றாலும் அவையும் கொண்டிருக்கின்றன திட்டங்களும் லட்சியங்களும்!

 

ஏற்கெனவே

கற்றுச் சொல்லித் தந்தவற்றை

மறக்க வேண்டியதுதான் என் பிரச்சனை

 

மேலும்

மேலும்

கற்றுச் சொல்லித்

தந்து கொண்டிருக்கிறார் அநேகர்

 

கற்றுக்

கொள்ள வேண்டிய

நிர்பந்தம் எனக்கு

சொல்லித்

தரவேண்டியதும்

நிர்பந்தமாக இருக்கலாம் அவர்களுக்கு

 

கற்றுக்கொண்ட பின்பும்

மறந்துவிடத்தான் பார்ப்பேன் நான்

சொல்லித்தந்த பின்பும்

நினைவில் இருத்தி வைத்திருக்கத்தான் பார்ப்பார்கள்

அவர்கள்

 

எத்தனை கற்றாலும் உள்ளுணர்வின் ஒளியை மாசிலாது பேண வேண்டும் என்கிறார் கவிஞர் தேவதேவன் ஒரு பேட்டியில். கவிஞர்களின் பிரகடனமாக ஒலிக்கிறது இக்கவிதை. அறிந்ததை மறக்காவிடில் அறியாதது பிடிபடுவதில்லை. அறிந்ததை அறியாது அறியாததை சென்றடைய முடிவதில்லை என்னும் விந்தை அது. உலகும் கவிஞனும் உரசிக் கொள்கையில் வெளிப்படுகிறதா உண்மையெனும் வியப்பு ?

 

நீயும்

காய் நகர்த்துகிறாய்

 

நானும்

ரகசியமாக

 

இரண்டு பேருமே

தொடர்ந்து

தோற்று கொண்டு வருவது

துக்கமா

வெட்கமா

 

சந்திப்புகள் எப்போதும் சதுரங்கம் போலே தான். கண்ணறியும் காயை கொண்டு நகர்த்துகிறோம். ஆனால் அதை நடத்தும் கருத்தறிய முடிவதில்லை. இங்கு உள்ள களமோ பகடை புரளுதலின் நெறியமைந்தது. எவரும் வெல்லாமல் தோற்கையில் வருவது துக்கமா வெட்கமா! ஆட்டத்தை அறிந்தவன் வெட்கமும் அறியாதவன் துக்கத்தையும் சூடுகிறானா என்ன ?

 

பிழைப்புக்காகக் கூட

பொய் சொல்ல

பாசாங்காக இருக்க

 

கறை சுமந்து திரிய

கணக்காக நடந்து கொள்ள

 

முடிந்ததா

முடிந்ததா இன்னமும்

 

எனது காய்கள்

இப்படித்தான் வெட்டுப்படுகின்றன

 

வயிற்றுவலிப் பயத்தில்

கூட

குடிப்பதை

 

நடுவழியே

நல்லது

 

கலைஞர்கள்

துருவ சஞ்சாரிகள்

 

இது விக்ரமாதித்யனின் தன்னுரையாகவே உள்ளது. குடிக்கும் போதை தரும் எதையும் எவராலும் நிறுத்தமுடிவதில்லை. கலைஞனும் உண்மை எனும் தேனருந்தி மயங்குபவன் தானே ? திரிபடையாத உண்மை உலகியலில் பயன்படுவதில்லை. முடிந்ததா முடிந்ததா இன்னமும் என்ற வரி அவருள் வாழும் கவிஞனிடம் அவரே வினவுவது போல் உள்ளது. ஆனால் இவர் மட்டுந்தானா இப்படி ? ஏதோ ஒருவகையில் எல்லா கலைஞனும் துருவ சஞ்சாரிகள் தான்.

 

சமீபகாலமாக

 

யோசிப்பதையே

நிறுத்தி வைத்துவிட்டேன்

 

படிப்பதையே

ஒதுக்கி வைத்து விட்டேன்

 

எழுதுவதும்

இல்லை

நட்புகளில்

ஆர்வம் காட்டுவதும் இல்லை

 

நேரம்

தவறாமல் சாப்பாடு

 

மதியச்

சாப்பாட்டுக்குப் பிறகு தூக்கம்

 

நிறைய

தமிழ் சினிமா

 

உடம்பில்

கொஞ்சம் சதைபோட்டிருக்கிறது

 

முகத்தில்

ஒரு பொலிவு கூடியிருக்கிறது

 

ஆனாலும் ரொம்பக் கொடுமை

மக்கள்

நூறாண்டுகால உயிர் வாழ்க்கை

 

முந்தைய கவிதையில் நடுவழியே நல்லது என்று வருத்தப்படும் கவிஞன் தான் இந்த கவிதையில் ஆனாலும் ரொம்பக் கொடுமை என சலித்து கொள்கிறான். இருகவிதைகளையும் சேர்த்து வாசிக்கையில் விக்ரமாதித்யனை இன்னும் சற்று நெருங்க முடிகிறது. கூடவே பெரும்பாலன கவிகளின் மனநிலையையுமே.

ஒவ்வொரு முறை வாசிக்கையிலும் நல்ல கவிதை இன்னொன்றாக நமக்குள் வளர்ந்து கொண்டேயிருக்கிறது. நடுவழியே நல்லது என்ற முந்தைய கவிதையின் வரியை ஞானத்தின், புத்தர் சொல்லும் நடுவழியாகவும் கொள்ளலாம். ஏனெனில் கவிஞனின் தேடல் ஞானம் தான். அப்படி வாசித்தால் இந்த கவிதையை தனித்த ஒன்றாக, உலகியலின் மேலான அவனது பிடிப்பும் விலக்கமுமாக வாசிக்கலாம்.

 

விரும்புவது

நதிக்கரை நாகரீகம்

 

விதிக்கப்பட்டது

நெரிசல்மிக்க நகரம் .

 

நதிக்கரை நாகரீகம் நதியென கணமென ஒழுகுவது. அங்கிருந்து இங்கு வந்து இங்கிருந்து அங்கு செல்லும் விழைவு தான் கவிஞனாகிறது போலும்.

 

எங்கும்

சூழ்ந்து

பரவி

விரிந்து கிடக்கிறது வெளி

 

எதோ

வொரு புள்ளியில் மையங்கொண்டு

தகைந்திருந்திருக்கிறது வீடு

 

வெளியின் பிரமாண்டத்துக்கு முன்

சிறுத்துத் தெரிகிறது

வீட்டின் இருப்பு

 

நிகழ்வாழ்வும்

நிம்மதியில்லா மனமும்

வீடும் வெளியுமென்று

ஊடே வெட்டிச் செல்கிறது வொரு மின்னல்

 

வீடு

வெளி போல

விளக்கங் கொள்வதும்

 

வெளி

வீடு போல

சுருக்கமடைவதும்

 

வாழ்வு நதியின்

மாய தோற்றங்கள்

 

வீடு

வெளி

கடந்த ஞானம்

வித்தகர்க்கல்லால்

வேறே யாருக்கு வாய்க்கும்

 

நிகழ்வாழ்வும் நிம்மதியில்லா மனமும் வீடும் வெளியுமென்று என்ற வரியில் இருந்து கவிதையின் சுட்டுதளம் துலங்கி விடுகிறது. நோக்க நோக்க ஏதுமிலாதாகும் விந்தை பெருக்கே மனமென்பது. புறமோ மேலும் மேலும் உறுதிகொள்வது. அறிய தொடங்குகையில் எழுப்பும் வியப்பு இது.

அறிதல் முதிர்ந்து செல்கையில் உறுதி உருக்குலைந்து பெருகுவதும் பெருகும் வெளியோ சுருங்கும் சிமிழாக ஆவதும் நிகழ்கிறது. ஆனால் இம்மாயை கடந்த ஞானம் வித்தகர்க்கல்லால் வேறே யாருக்கு வாய்க்கும்!

 

அக்கரையில்

என் தோட்டம் காடு வயல்கள்

 

இக்கரையில்

என் வீடு வாழ்வு மனசு

 

நதி

எதிரில்

 

தோட்டமும் வீடும் விருப்பம் போல அமைபவை. வாழ்வும் காடும் அவற்றின் விருப்பம் போல நம்மை அமைப்பவை. அது கொடுக்கும் ஏராளத்தில் இருந்து குவளையில் அள்ளிய நீர் போல் வயலும் மனசும். அக்கரையில் இருப்பவை எல்லாம் என் கைக்கு முற்றுரிமையில்லாது கிடைப்பவை. இக்கரையில் இருப்பவையோ நான் ஆள்பவை, சிலநேரங்களில் என்னையும் ஆள்பவை. இவை இணை கோடுகளுக்கு இடையில் ஓடும் அந்நதி வாழ்வு அல்லவா! அந்த பெருக்கில் செல்லும் துளி போலும் நான்!

 

இதிகாசமும்

வரிகளாலானது

 

வரிகளையுடைத்தால்

வாக்கியங்கள்

 

வாக்கியங்கள் முறித்தால்

வார்த்தைகள்

 

வார்த்தைகளைப் பிரித்தால்

எழுத்துகள்

 

எழுத்தில்

என்ன இருக்கிறது .

 

இது இவ்வாறு நடந்தது என்ற பொருளுண்டு இதிகாசம் என்ற வார்த்தைக்கு. வாழ்வு இவ்வாறெல்லாம் இருக்கிறது என காட்டி அதனை பொருளாக்குவது இதிகாசம். கட்டுடைத்து கட்டுடைத்து சென்றால் எழுத்தே மிஞ்சுகிறது. அதுவோ காற்றில் கரைந்தழியும் வெற்றொலி. இணைகையில் முழுமையும் பிரிகையில் இன்மையும் கொள்ளுவது எது ?

 

செடிகள்

வளர்கின்றன

 

குழந்தைகள்

வளர்கிறார்கள்

 

எனில்

மரங்களுக்கு

வருவதில்லை மனநோய்

 

நேற்றை காற்றோடு உதிர்த்துவிடுவதால் தான் செடியான மரம் செழுமையாகவே உள்ளது போலும்!

 

எனது தள்ளாடும் நிழலோடு நான்

 

எனது

தள்ளாடும் நிழலை மிதித்து மிதித்துத்தான்

நான்

முன்னே போக வேண்டியிருக்கிறது

 

எனது

தள்ளாடும் நிழலை மிதிக்காமல்

நான்

நடக்க முடிவதில்லை

 

சூரிய

வெளிச்சத்திலும் சரி

சந்திர

ஒளியிலும் சரி

 

எனது

தள்ளாடும் நிழல்

என்

காலடியில்

 

எனது

தள்ளாடும் நிழல்

எங்கே போகும்

என்னை விட்டு

 

நான்

எங்கே போவேன்

எனது

தள்ளாடும் நிழலை விட்டு

 

எனினும்

எனது தள்ளாடும் நிழல் சமயங்களில்

என்னை விழுங்கப் பார்க்கும்

 

நான்

எனது தள்ளாடும் நிழலை

மிதித்து மிதித்து நடப்பேன்

 

நான் என உணரும் தன்னிலையில் அலைபாயும் இச்சையை தள்ளாடும் நிழலென்று உருவகித்து கொண்டேன். சமயங்களில் என்னை விழுங்கப் பார்க்கும் அது நாகம் தான். சத்தமில்லாது சாவும் வரை வருவது.

சூரிய வெளிச்சத்திலும் சரி சந்திர ஒளியிலும் சரி என்ற வரிகளிலிருந்து கடுமையிலும் இனிமையிலும் சூழிலும் தனிமையிலும் என்னோடே இருப்பது. ஒளியும் இருளுமாக நானும் எனது தள்ளாடும் நிழலும். ஒன்றுக்கொன்று பிரியாதப்படி பிணைக்கப்பட்டோம்.

 

கரையான்

 

இற்று

விழப் பார்க்கிறது உத்தரம்

 

தேக்குமரங்களை விலைபேச

வருகிறார்கள் தரகர்கள் சிலர்

 

வெள்ளையடிக்கப்பட்டு

தயாராக இருக்கிறது வீடு

 

தாத்தா மனசுநோக

பேரப்பிள்ளைகள் அறியாது

பேரத்தில் இழுபடுகிறது ஜீவன்

 

ஆனாலும்

ஆச்சியின் துக்கம்

அந்தரத்தில் நிற்கிறது எதிர்பார்த்து

 

ஆண்டாண்டு உழைத்தாலும் உலுத்து கொட்டினால் உலைக்கு வைக்க தயங்குவதில்லை நாம். அழித்து கொள்ள அத்தனை துடிக்கும் நமக்குள் வாழும் அது என்ன ? ஆச்சி எதிர்பார்த்திருப்பது தாத்தாவின் மரணத்தையோ என கேள்வி எழுவது இயல்பு தான். இக்கவிதை வாசிக்கையில் குருட்டு ஈ என்ற தேவதச்சனின் இக்கவிதை தான் நினைவுக்கு வந்தது.

 

குருட்டு ஈ

 

ஆஸ்பத்திரியில்

வெண்தொட்டியில்

சுற்றுகிறது

இறந்து கொண்டிருக்கின்ற குழந்தையின்

மூச்சொலி

பார்க்கப்

பயமாக இருக்கிறது

சுவரில்

தெரியும் பல்லி

சீக்கிரம் கவ்விக் கொண்டு

போய்விடாதா

என் இதயத்தில்

சுற்றும் குருட்டு ஈயை

 

ஒன்று எண்ணி எதிர்நோக்க இன்னொன்று எண்ணாமல் எண்ணி மருகி பின்வர, நம்முள் அழியாமல் வாழும் அழித்து பார்க்க விரும்பும் அவ்வியல்பு என்பது என்ன என்ற கேள்வியை எழுப்பி செல்கிறது.

 

எரியவேண்டிய தீக்கு

எண்ணெய் வார்த்து வளர்த்து

அணைக்க வேண்டிய தீக்கு

தண்ணீர் கொட்டி அவித்து

அக்னியின் இயற்கை

அழியாது காக்கலாகாதா

உலகுயிர்க்கெல்லாம் முலைதரும் அம்மையே

தலைமாலே சூடித் திரியும் சுடலைக் காளியே

 

முலைதரும் அம்மை எண்ணெய் வார்த்து வளர்க்கமாட்டாளா ? சுடலை காளி தண்ணீர் கொட்டி அவிக்க மாட்டாளா ? என அறிந்ததை அறியாத கோணத்தில் காட்டி செல்கிறது கவிதை. சுடலை நெருப்பு நீராவதும் வெறுப்பு அன்பாவதும் முலைதந்த பால் தண்மை குறைந்து வெம்மை கொள்வதும் எப்படி ? ஒன்றுக்குள் ஒன்றென பின்னி நிற்கும் அவர்களிருவரிடம் அழியாமல் காக்க வேண்டுவது எந்த ஒன்றை ? அது அக்னி, அனைத்துமான அக்னி. அதை நீருள் உறையும் நெருப்பே என்கிறது வேதம்.

 

நான்

யாருடைய தற்கொலைப் படையிலும் இல்லை

 

வசந்தம் தவறியபோதும்

வண்ணத்துப்பூச்சிகளின் வாழ்க்கையில்

வன்கொலைச் சாவுக்கு இடமில்லை

 

வெயில் காயும்

மழை புரட்டிப்போடும்

அல்பப் புழுக்களும் வாழ்ந்து

கொண்டிருக்காமல் இல்லை

 

நீ

கலகக்காரன் இல்லை

 

நல்லது நண்ப

 

நானும் கூடத்தான்

 

எனது இருபதுகளில்

 

கவிதைகள் பலவகை. சில உணர்ச்சியின் சுழலில் சிக்க வைப்பவை, வேறுசில தத்துவத்தின் கனத்தை அளித்து செல்பவை. சில எடையற்று பறக்க வைப்பவை, இனிய புன்னகையை தருபவை. கண்ணீரை கொடுப்பவை, புன்னகையை விரிய வைத்து சோகத்தை அள்ளி பரிமாறுபவையும் உண்டு. அந்த வகையில் ஒன்று இந்த கவிதை.

 

நீ கலகக்காரன் இல்லை

நல்லது நண்ப

 

நானும் கூடத்தான்

எனது இருபதுகளில்

 

என்ற வரி தரும் புன்னகையில் எழுகிறது கவிதை. வானம் தனக்காக காத்திருக்கிறது, ஒரு எட்டு வைத்தால் பறந்து விடலாம் என துடிக்கும் வயது அது. சிறகுகள் முளைத்து வண்ணத்துப்பூச்சியாக வெளிவரும் காலமது. கவிஞன் அங்கேயே நின்றுவிட்டவன். வசந்தம் தவறிய போதும் வண்ணத்துப்பூச்சிகளின் வாழ்வில் வன்கொலை சாவுக்கு இடமில்லை என்கையில் அந்த துயரம் வந்து அறைகிறது.

 

தூரத்திலிருந்து

பார்க்கும்போது

அழகாகத்தான்

இருக்கிறது ஊர்

 

அழகின் உச்சம் என்பது விருப்பமும் விலக்கமும் ஒருங்கே நிகழ்வது. இந்த உணர்ச்சியை வாழ்வில் துளியளவேனும் காணாதவர் அரிது. அதை சொல்லில் செதுக்கி காலமிலா மெய்மைக்கு நகர்த்துவதால் இது கவிதை.

 

யுத்தம்

தோன்றியபோதே

 

யுத்த

தந்திரமும்

 

யுத்தம் வலிமையின்மைகளின் வலிமைக்கான போட்டி. சிகரங்கள் சிறகுகளை ஒரு பொருட்டாக கொள்வது இல்லை.

 

அண்ணி மேல் கொண்ட ஆசை

கொழுந்தனைக் குழப்ப

அந்நிய இடமாகும் வீடு

 

நான்கு சுவர்கள் அல்ல, நான்கு பேரால் ஆன உறவுகளே வீடு. உறவுகள் உருமாறினால் உருக்குலைந்து விடுகிறது அது.

 

சாதுக்கள் சுவாமிகள் சித்தர்கள்

என்றெல்லாம் பேசுவது சுலபம்

 

பேசத்தான்

செய்கிறோம்

 

நடப்பில் முடியாதது

பேச்சில்

 

பேசுவது ஓர் தன்நடிப்பு. பல்லாயிரம் தன்நடிப்புகளின் ஊடாக வாழ்கிறான் மனிதன்.

 

வானத்தில்

நிறைய நட்சத்திங்கள்

 

பூமி

எதிர்பார்த்திருப்பது மழை

 

அழகு அமுதமாகி சொட்டாவிடில் என்ன பயன் ? அழகும் அமுதமும் ஒன்றாவது எப்போது!

 

ஒடுங்கி

உறையலாம் உள்ளேயே

 

வெளியேயிருந்துதான்

வரவேண்டும் காற்று

 

காற்றான ஒன்று அசைவான ஒன்று. அசைவான ஒன்றே அகிலம் என நிற்பது. சாவுக்கு தான் உள்ளே செல்ல வேண்டும். வாழ்வோ வளி என வெளியே இருப்பது. உள்ளத்தை உறைய வைப்பவன் எப்போதும் வந்து கொண்டிருப்பதை எப்படியாவது பிடித்துவிடத்தான் முயற்சிக்கிறான் போலும் – யோகி.

 

பெரிய

வித்தியாசமொன்றுமில்லை அடிப்படையில்

 

தீப்பெட்டிப் படம்

சேகரித்துக் கொண்டிருக்கிறான் என் மகன்

 

கவிதை

எழுதிக் கொண்டிருக்கிறான் நான் .

 

காலம் முழுவதும் பிஞ்சு நெஞ்சத்தை பறிக்கவிடாமல் பொத்தி பொத்தி வளர்ப்பவன் கவிஞன். அழகாக இருப்பதற்காக மட்டுமே சேகரிக்கப்படுகின்றன படங்கள். மகனுக்கு தெரியாது தீப்பெட்டி என்னவெல்லாம் செய்யுமென்று. இவனுக்கும் தெரியாது கவிதையை எப்படியெல்லாம் ஆக்கமுடியுமென்று. இவனொரு வளர்ந்த குழந்தை, நித்தியத்தில் வாழும் குழந்தை.

 

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்-16

விக்ரமாதித்யன் -விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள்-15

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 12

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 11

விக்ரமாதித்யன் விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 10

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 9

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 8

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 7

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 6

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 5

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 4

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 3

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 2

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 1

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 23, 2021 10:34

அறம் கடிதங்கள்

வணக்கம் ஐயா,

ஊரடங்கு காலத்தில் புத்தகம் வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டது.பொன்னியின் செல்வன் தொடங்கி ஐந்தாவது புத்தகமாக அறம் வாசித்தேன்.பாரதி பாஸ்கர் அவர்கள் அறத்தில் ஆச்சி கதாபாத்திரத்தினை விளக்கும் வகையில் காணொலி காட்சி யினை வலைதளத்தில் கண்டேன் அதன் மூலம் அறத்தினை படிக்க ஆர்வம் ஏற்பட்டது.ஒவ்வொரு மனிதர்களின் உண்மை கதையை படிக்கும் போது மனதில் ஒவ்வொரு விதமான மனநிலை ஏற்பட்டது.dr.k,கெத்தேல் சாகிப், அறம் ஆச்சி,100 நாற்காலிகள் காப்பன்,நெய்யலூர் மக்களின் பாசத்திற்குரிய சாகிப்பே,மத்துறு தயிர் பேராசிரியர், ராஜம்… நன்றி ஐயா புதிய மனிதர்களை அறிமுகம் செய்ததற்கு… மேலும் புதிய மனிதர்களின் உண்மை கதையை படிக்க அறம் இரண்டாம் பகுதியை எதிர்ப்பார்க்கும் புதிய வாசிப்பாளராக நானும் என் நண்பர்களும்

அழகுப்பிரியா

 

அன்புள்ள ஜெ

அறம் கதைகளை மீண்டும் இப்போது படித்தேன். தமிழகத்தில் நவீன இலக்கியத்தில் மிக அதிகமாகப் படிக்கப்பட்ட கதைகள் என்றால் அறம் தொகுதியைத்தான் சொல்ல முடியும். அவற்றில் பல கதைகள் இன்று தொன்மங்களாகவே ஆகிவிட்டன. இத்தனைக்குப்பிறகும் இக்கதைகளை இன்று படிக்கையில் மீண்டும் மீண்டும் புதியவற்றைக் கண்டுபிடித்துக்கொண்டே இருக்கிறோம் என்பதே இக்கதைகளை ஆற்றல்மிக்க புனைவுகளாக ஆக்குகிறது

உதாரணமாக யானை டாக்டர். அந்த கதையில் கதைசொல்லும் அதிகாரிக்கும் குரங்குகளுக்குமான ஒர் உரையாடல் உள்ளது. அவரை காடு ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் யானை டாக்டரை காடு ஏற்றுக்கொண்டு விட்டிருக்கிறது. அந்த நுட்பத்தை இப்போதுதான் கவனித்தேன். அறம் கதைகளைப் பற்றி பேசும் எவரும் மேலோட்டமாகவே பேசுகிறார்கள் என்றும் அவற்றின் உண்மையான ஆழம் சிலருக்கே தெரியவந்துள்ளது என்றும் படுகிறது

நட்புடன்

விவேக் சுப்ரமணியம்

அறம்- கடிதம்

அறம்- கடிதங்கள்

அறம்- கடிதம்

அறம்- கடிதங்கள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 23, 2021 10:33

அக்கா

நடராஜ குருவின் மாணவரும், நித்ய சைதன்ய யதியின் இளையவரும், பெங்களூர் சோமனஹள்ளி நாராயண குருகுலத்தின் ஆசிரியருமான சுவாமி வினயசைதன்யா அவர்களால் கன்னடத்தில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழியாக்கம் செய்யப்பட்ட அக்கமாகாதேவியின் கவிதைகள் புகழ்பெற்றவை. அவற்றைப் பற்றி நண்பர் விக்ரம் எழுதிய கட்டுரை

அக்கா என்னும் திருமந்திரம்

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 23, 2021 10:31

குழந்தை கடோத்கஜன்

அன்புள்ள ஜெயமோகன் சார்,

தனித்தனியான விசயங்களை இந்த ஒரு கடிதத்திலேயே சேர்த்து எழுதி விட்டேன்.

வெண்முரசில் கிருஷ்ணின் குழந்தைப் பருவத்தைக் காட்டிலும், என் மனதிற்கு மிக நெருக்கமானது கடோத்கஜனின் குழந்தைப் பருவம் தான், தந்தைக்கும் மகனுக்கும் இருக்கும் அரிதான நாட்கள் அவை, தன் குருதியில் முளைத்தவனை தன்னால் இயன்றவரையில் இந்த உலகத்தை எதிர் கொள்ளவும் , அதில் வாழவும், தன்னுடைய மூதாதையர்களைப் பற்றிய நினைவுகளை அவனில் விதைத்து விடவும் ஆசைப்படும் தந்தையாகவே பீமன் இருக்கிறான். அதே சமயம் மகன் தன்னை மிஞ்சி விடுவானோ என்று மனத்தின் அடியாழத்தில் எழும் மெலிதான கசப்பையும் காட்டுகிறான். அவர்களுக்குள் நடக்கும் இனிய உரையாடல்கள். அவற்றை ஒலிப்பதிவு செய்யும் போது , முழுமையாகவே கடோத்கஜனின் பேச்சாகவே மாறிப் போனேன். குழந்தைகளை கொஞ்சுவதற்கு அழகு சார்ந்தவைகளை மட்டுமே உவமையாக சொல்வதில் இருந்து, பீமனின் கொஞ்சல் “என் கரும்பாறைக் குட்டியல்லவா” என்று கடோத்கஜனை சொல்லும்போது வெடித்துச் சிரித்தேன்.வெண்முரசு_5_பிரயாகை_61:

இந்த ஒரு ஒலிப்பதிவை மட்டும் முதல் 5 நிமிடங்களாவது நேரம் ஒதுக்கி கேட்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன், தாங்கள் எழுதியதை த்த்தந்தையே என்பதை அப்பிடியே கடோத்கஜன் போலவே வந்துள்ளது.எப்பிடி உங்களின் எழுத்துக்களை நீங்கள் எழுதியிருப்பீர்கள் என்பதை ஆழ்மனம் அப்பிடியே வெளிக் கொண்டு வருவதாகவே எண்ணுகிறேன்.

இதை தாங்கள் எழுதும் போது பீமனாகத் தான் உணர்ந்திருப்பீர்கள் என்றே தோன்றுகிறது. உங்களுக்கும் அஜிதன் அவர்களுக்கும் நிகழ்ந்த உரையாடலில் அவரின் மொழிகளை அப்பிடியே கடோத்கஜன் மொழியாக கொண்டு வந்ததாக தோன்றுகிறது. தன்மீட்சி புத்தகத்தில் முதல் அத்தியாயத்தில் அஜிதன் அவர்களுக்கு, நீங்கள் மகாபாரதம் கதையை முழுமையாக சொல்லி முடித்ததாக எழுதியிருந்தீர்கள், அதை அப்பிடியே பீமன் கடோத்கஜனுக்கு கதையை சொல்வதுடன் ஒப்பிட்டுக் கொள்கிறது மனம். தங்களின் கதைகளில் வரும் குழந்தைகள் அனைவருமே ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் பாப்பா பாவம் என்றோ, கண்ணன் பாவம் என்றோ, தன்னைத்தானே பாவம் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள், யாரைப் பார்த்து இதை ரசித்தீர்கள், உங்களிடம் அப்படி பேசிய முதல் குழந்தை எது ?

பெரிய உருவம் கொண்டவர்கள் , நான் பார்த்தவரையில் பெருந்தன்மை உள்ளவர்களாகவே இருந்திருக்கிறார்கள்,   வெண்முரசிலும் தாங்கள் அதையே தான் சொல்லிச் செல்கிறீர்கள், ஹஸ்தி , திருதாஷ்டிரர், பீமன், துரியோதனன், கடோத்கஜன் என நீளும் வரிசை, என் கணவரிடம் இதைப்பற்றி உரையாடிக் கொண்டிருக்கும் போது, அவர் கூறிய ஒரு விசயம் இது, They never feel threatened.ஒரு மனிதன் எதைக் கண்டும் பயப்படாத போது, அல்லது அவனால் எதையும் வெற்றி கொள்ள முடியும் என்று எண்ணும் போது, அந்த முழுமை நிலையில் இருக்கும் மனிதர்களிடம் தான், பெருந்தன்மையும், கருணையும் இருக்குமா? கிருஷ்ணன் தன்னை தூற்றும் மனிதர்களிடமும், போற்றுபவர்களிடமும் ஒரே புன்னகையை தருவது, அவனின் முழுமையான ஆற்றலினால் தான் முடிந்ததா?

இதை நான் நிறைய முறை யோசித்து உள்ளேன், கொஞ்சமாக என்னுடைய பள்ளி வாழ்க்கையைப் பற்றி யோசித்து போது, எனக்கு தோன்றிய ஒரு விசயம், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்த சமயம், நான் தான் பள்ளியின் முதல் மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று, பத்தாம் வகுப்பில் நுழைந்த முதல் கணம் முதல் , அனைத்து பாடம் புத்தகங்களையும் வேட்கையுடன் படிக்க ஆரம்பித்தேன்.எங்கள் கிராமத்தில் Private Tution எடுப்பவர்கள் இல்லை. அரசு பள்ளியில் தான் படித்தேன். அங்கே ஆசியர்களின் பாடங்கள் மட்டும் தான்.பள்ளிப் பரீட்சைகளில் நான் தான் முதல் மதிப்பெண் எடுத்தேன்.எந்த கேள்வி வந்தாலும் அதற்கான பதில் எனக்கு தெரிந்தே இருக்கும்.அனைத்து மாதிரி தேர்வுகளிலும், அனைத்து கேள்விகளுக்கும் பதிலை எழுதும் அளவுக்கும் என்னுடைய வேகம் கூடியிருந்தது.

ஒரு சமயத்தில் எனக்கே என் Preparation மேல் நல்ல நம்பிக்கை வந்து விட்டது. அப்போது தான், தேர்ச்சி மதிப்பெண் கூட எடுக்க முடியாமல் இருப்பவர்களை கவனித்தேன்.எப்பிடி இவர்களால் இது முடியவில்லை, மதிப்பெண் எடுப்பது வெகு சுலபம் தானே என்று எனக்குத் தோன்றியது.அன்று முதல் அந்த 13 மாணவ, மாணவிகளுக்கு (அவர்களிடம் அதற்கு முன் நான் பேசியதில்லை) தினமும் மாலை பள்ளி முடிந்தவுடன் அவர்களுக்கு என்று புரியும் வகையில் அனைத்துப் பாடங்களையும் சுலபமாக சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தேன். அவர்கள் எப்பிடியாவது தேர்ச்சி மதிப்பெண் எடுத்து விட்டால் போதும் என்று தான் தோன்றியது. பரீட்சைக்கு 3 மாத காலம் இருக்கும் போது , இந்த பயிற்சியை தொடங்கினேன். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் எங்கள் பள்ளியில் நூறு சதவீதம் தேர்ச்சி . அந்த மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்று விட்டனர்.

நான் பள்ளியில் இரண்டாம் மதிப்பெண் தான் பெற்றேன், மூன்று மதிப்பெண்கள் வித்தியாசத்தில் ஆயினும் நிறைவுடனே இருந்தேன், மனதில் எந்த சிறு வருத்தமும் இல்லாமல், எனக்கே ஆச்சரியமாக இருந்தது, ஒரு மதிப்பெண் குறைந்தாலே அழுது விடும் நான், இப்போது எப்பிடி நிறைவாக இருக்கிறேன் என்று?முதல் மதிப்பெண் பெற ஆரம்பித்த என் பயணம், அனைவரையும் தேர்ச்சி பெறச் செய்வது , என்று திசை மாறியதன் காரணம் என்ன வென்று அப்போது தெரியவில்லை.ஆனால்  வாசிக்க தொடங்கிய பிறகு, உங்களின் எழுத்துக்களில் அதை நான் கண்டு கொண்டேன். இதை இவ்வாறு நான் நினைப்பது சரியா என்று கூட தெரியவில்லை. ஒரு மனிதனின் உள்ளத்தில் பெருந்தன்மையும், கருணையும் தோன்ற வேண்டுமெனில், அவன் அனைத்திலும் நிறைவு பெற்றவனாக இருந்தால் மட்டும் தான் முடியுமா?

நீலம் நாவலில் ராதைக்கு கண்ணனின் மீதிருந்த தீராப் பெருங்காதலை காட்டிலும், தங்களுக்கு ராதையின் காதலின் மேல் பெருங்காதல் இருப்பதாகவே தோன்றுகிறது.அது தான் , “பிரம்ம கணத்தில் அவன் பெயர் அழிந்த பிறகும், அடுத்த அரைக் கணமேனும் உன் பெயர் நிலைப்பதாக ” என்று ராதையை வாழ்த்தியதில் இருந்து நான் கண்டடைந்தது.

இந்த ஒரு பிறப்பில் தங்களின் கதைகளின் மூலமாக , எத்தனையோ வாழ்க்கையை வாழ்ந்து விட்டேன். ஒலிப்பதிவு செய்யும் போது கணக்கிலடங்கா மனிதர்களாகவே மாறினேன். அரசனாக , அரசியாக , அவர்களின் சேவகர்களாக , அசுரர்களாக , சூதர்களாக , ரிஷிகளாக, இளவரசியாக, படைத் தளபதிகளாக, எண்ணற்ற வாழ்க்கையை வாழ்ந்து விட்டேன். அனைத்திற்கும் மிக்க நன்றி.

தங்களின் எழுத்துக்கள் தொடர்ந்து புத்தகங்களாக வெளிவருவதை பார்க்கும்போது மனம் இப்போது தான் நிம்மதியாக இருக்கிறது.உங்களின் எழுத்துக்கள் எல்லாமே வாசிக்க ஆர்வம் இருக்கும் அனைவருக்கும் இலவசமாகவே தங்களின் தளத்தில் பதிவிடுகிறீர்கள்.ஆனால் இதன் மூலம் உங்களுக்கு என்று எந்த பொருளாதார பலனும் இல்லையே என்று என் கணவரிடம் , இதைப்பற்றி வருத்தப்பட்டுக் கொண்டே இருப்பேன்.ஆனால் இப்போது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. விஷ்ணுபுரம் பதிப்பகம் ஆரம்பித்திருக்கும் இந்த சமயத்தில், அமேசான் kindle போல தங்களின் எழுத்துக்கள் ஒலி வடிவிலும் வர வேண்டும் என ஆசைப்படுகிறேன். அதையும் விஷ்ணுபுரம் அமைப்பின் சார்பிலே உங்களின் அதிகாரப் பூர்வமாக வந்தால் இன்னும் சிறப்பாகவே இருக்கும்.

தங்களின் புத்தகங்களை வாங்குவதைப் போல் , இந்த ஒலிப் புத்தகத்தையும் வாங்க விருப்பப் படுவர்கள் வாங்கலாமே. புத்தகம் படிக்க இயலாதவர்களுக்கு இது ஒரு வரட்பிரசாதமாகவே அமையும். என்னால் இயன்றவரையில் தங்களின் எழுத்துக்களை ஒலிப்பதிவு செய்து வருகிறேன். இதில் என்னுடைய பொருளாதார நோக்கம் எதுவும் இல்லை என்பதை தெளிவாகவே சொல்லி விடுகிறேன். உங்களின் புத்தகங்களை ஒலிப்பதிவு செய்யும் வாய்ப்பை மட்டுமே நிறைவாக நினைக்கிறேன்.

நன்றி,

அன்புடன்,

மனோபாரதி விக்னேஷ்வர்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 23, 2021 10:30

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.