Jeyamohan's Blog, page 845

January 13, 2022

விஷ்ணுபுரம் விழா – கொள்ளு நதீம்

விக்ரமாதித்யன் விருது விழா- உரைகள் விக்ரமாதித்யன் ஆவணப்படம், வீடும் வீதிகளும்

விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம்

23-12-21 வியாழன் இரவிலிருந்தே காட்பாடி ஜங்க்‌ஷனைத் தாண்டி எந்த ரயிலும் கோவை, பெங்களூர் மார்க்கத்திற்கு இயங்கவில்லை, கிட்டத்தட்ட நூறு வண்டிகள் ரத்தானதாக தென்னக ரயில்வே (கொஞ்சங் கொஞ்சமாக) அறிவித்துக் கொண்டே இருந்தது. அவ்வாறு அடுத்தடுத்து மூன்று டிக்கெட்டுகள் வீண்போனதால் ரம்ஜானுக்கு ஊருக்குப் போக முடியாத பதற்றம் என்னிடம் உருவானது. கடைசியில் சனிக்கிழமை இரவு சேரன் எக்ஸ்பிரஸ்-சில் (இரவுப் பயணத்தில் உறங்கிச் செல்லக்கூடிய சீலிப்பர் பெர்த் கிடைக்காத நிலையில்) சிட்டிங் சீட்டில் அமர்ந்து போகும் இருக்கை. அதிலும் இரண்டு பேர் இருக்கையை விரித்துப் போட்டு மூன்று பேராக முழு இரவையும் அமர்ந்து பேசிய படியே வந்த மணிப்புரி, அஸ்ஸாமிய இளைஞர்களின் சலசலப்பு வேறு. ஞாயிறு காலை கோவை வந்து சேர்ந்தேன்.

பாவண்ணன், அழிசி ஸ்ரீனிவாசன், மதார்

உலகளாவிய தீவிர இலக்கியங்கள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு வரத் தொடங்கி ஒரு நூற்றாண்டு காலமான நிலையில், தஸ்தாவ்ஸ்கியின் சமகாலத்தவரான ஆங்கிலேயர் George W. M. Reynolds (1814 – 1879) எழுதிய ‘Omar, a Tale of the War’ என்கிற நாவல் (1856) வெளியிடப்பட்டது. அதை தமிழில் – ‘உமறுஅ பாஷா யுத்த சரித்திரம்’ என்று நாகூர் குலாம் காதிறு நாவலர் (1833 – 1908) தமிழாக்கம் செய்துள்ளார். ஐம்பது, அறுபது ஆண்டுகள் அச்சில் இல்லாத இந்த முன்னோடி முயற்சியை சென்னைப் புதுக்கல்லூரி பேராசிரியரும் நண்பருமான முரளி அரூபன் மறுபதிப்பு செய்திருந்தார். இன்றைய எந்தவொரு சிறு வசதிகளும் அன்று பெரும் luxury-யாக இருந்த 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் எப்படி இவ்வளவு பெரிய முயற்சி முன்னெடுக்கப்பட்டது என்கிற சிறுபொறி என்னுள் எரிந்து கொண்டே இருந்தது.

ஜி.எஸ்.எஸ்.வி நவீன், அந்தியூர் மணி,திருச்செந்தாழை

மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, இந்தோனேசிய, மலேசிய போன்ற தூரகிழக்கு நாடுகளிலிருந்து சரியான இலக்கியப் படைப்புக்கள் எதுவும் இங்கு வந்து சேரவில்லை என்பதை கடந்த பத்தாண்டுகளாகவே என்னை உறுத்திக் கொண்டிருந்தது. ஏதேனும் இதற்கு என் அளவிலான இடையீடு அவசியம் என்று உந்துதலுடன் வேறு சில நண்பர்களின் கனவும், இலட்சியமுமாக இருந்தது. (வழக்கமாக இங்கு இதுவரை வந்து கொண்டிருந்ததுபோல ஆங்கிலம் வழியாக அல்லாமல்) அரபு, பார்சி, உருது மொழிகளுடன் சமகால தமிழ் இலக்கியத்தில் பயிற்சியுமுள்ள இணைமனங்களை கண்டறிவதில் வெற்றி பெற்றோம். ‘சீர்மை’ ஒரு பதிப்பகமாக வடிவம் பெறத் தொடங்கியது. இதில் உரிமையாளரெல்லாம் கிடையாது. சொல்லப் போனால் இதொரு கூட்டுறவு முன்னெடுப்பு.

சென்னைப் புத்தக கண்காட்சியில் கலந்துகொள்ள அரங்கு கேட்டு விண்ணப்பித்துவிட்டு அச்சாகிவந்த புத்தகங்களை விஷ்ணுபுர விழாவில் காட்சிப்படுத்தவது அவசியமாக இருந்தது. ஏனெனில் பபாசி நிகழ்வுக்கு வரக்கூடிய தீவிர இலக்கிய வாசகர்களில் பெரும்பாலானோர் கோவைக்கு வருவதை நான் கண்டிருக்கிறேன்.

ராஜகோபாலன்

ஆகவே முறைப்படி, முன்கூட்டியே கேட்கலாம் என்று இரவில் தங்களுக்கு மின்னஞ்சல் செய்துவிட்டு படுத்தேன், அடுத்த பத்து நிமிடங்களில் எந்தவொரு தயக்கமும் இல்லாமல் அனுமதி தந்த பதில் எனக்கு வியப்பு எதையும் தரவில்லை. எல்லா தரப்பு இலக்கிய பிரதிகளுக்கும் அதன் தரத்தின்படி ஏற்பும், விலக்கமும் தங்களிடம் உள்ளது என்பது எனக்குத் தான் ஏற்கனவே தெரியும்.

முதல் நாள் நிகழ்வுக்கு வராமல் போன வருத்தம் இருந்தாலும் எப்படியும் அதை யுடியுப்-ல் பார்த்துவிட முடியும் என்கிற சிறு ஆறுதல் இருக்கிறது. ஆனால் எப்படி பார்த்தாலும் பௌதீகமாக நாம் அரங்கில் இருக்கும்போது கிடைக்கும் நிறைவுக்கு ஈடாகாது என்பதால் இரண்டாம் நாள் ஞாயிறு அமர்வை ஒழுங்காக வகுப்பில் அமர்ந்து கற்கும் சீரியஸ் மாணவன் போல ஜென் நிலையில் குறிப்பேடும், பேனாவுமாக அமர்ந்து கொண்டேன்.

சுனீல்கிருஷ்ணன்

முதல் அமர்வு (தொடர் வரிசைப்படி ஒன்பதாம் அமர்வு) வடரேவு சின்ன வீரபத்ருடு அவர்களுடையது. தமிழகத்தின் வட மாவட்டங்கள் ஆந்திர, கர்னாடகா எல்லையை பகிர்ந்துகொள்ளக் கூடியவை. (நாடு விடுதலைக்கு முந்திய காலக்கட்டத்தில்) ஆம்பூர் சித்தூர் ஜில்லாவில்தான் இருந்துள்ளது. ஆகவே எங்கள் பகுதியின் (பூர்விக) வீட்டு மூலப்பத்திரங்களில் தெலுங்கு மொழியை காணலாம். இங்குள்ள அனைத்து சமூக பிரிவு மக்களின் திருமண உறவு மொழிகளையும், (மாவட்ட / மாநில) நிலவியல் எல்லைகளையும் கடந்தவை. சந்தையிலும், வீதியிலும், (காலணி, தோல்) தொழிற்சாலைகளிலும் தெலுங்கு, கன்னடத்துடன் உருது கலந்த தமிழ் புழங்கிவருகிறது, கோவையிலும், நாஞ்சில் நாட்டிலும் மலையாளம் கலந்த தமிழ் பேசுவதுபோல இருக்கும். பொதுவாகவே எல்லையோர பகுதிகள் நிர்வாக வசதிக்காக செயற்கையாக மாறி மாறி வரையறை செய்யப்பட்டாலும் பண்பாட்டு ரீதியாக மக்களின் வாழ்க்கை இந்த கெடுபிடிகளை மீறக்கூடியதே.

ஏற்கனவே ராஜு, ஆனந்த சீனிவாசன், இரம்யா போன்றோர் எழுதிய அருமையான அறிமுகக் கட்டுரைகளும், அதற்கு முன்பு (எங்கள் வாணியம்பாடி) இளம் முனைவர் (தமிழுக்கு நேரடி) மொழிபெயர்ப்புகளின் வழியாக (தெலுங்குச்) சிறுகதையுலகமும் அறிமுகம். அதனால் இந்த அமர்வை முழுமையாக கூர்ந்து கவனித்தேன்.

இலக்கியத்தை தாய்வீடாகவும் சினிமாவை தொழிலாகவும் கொண்ட இயக்குனர் வசந்த் சாய் பத்தாவது அமர்வில் வந்தார். பதினொன்றாம் அமர்வு கவிஞர் விக்ரமாதித்யனுடையது.

ஜெயராம்

இவ்வளவு கஷ்டப்பட்டு வந்திருக்கிறோம், அரங்கில் பேசிவிடலாம் என்று ஒருங்கிணைத்த சுனீல் கிருஷ்ணனிடம் அண்ணாச்சியின் லௌகீக பாடுகளை அவர் நடித்த திரைத்துறை சீர் செய்ததா, நடிப்பு கலையின் இன்னொரு வடிவம், அதை கவிஞனாக எப்படி அணுகினார், ‘நான் கடவுள்’ பிச்சைக்காரன் பாத்திரம், ‘இன்ஷா அல்லாஹ்’வில் முஸ்லிம் என – அதுபோக கூடவே பகவதி அம்மா நடித்தது என்றெல்லாம் எழுதிக் கேட்டேன், ஏனோ அவற்றை சுனீல் கிருஷ்ணன் சுய தணிக்கைக்கு ஆட்படுத்தினார்.

அசோகமித்திரன் ‘My Years with Boss At Gemini Studios’ என்று எழுதியதைப் போல அண்ணாச்சியிடமிருந்தும் கேட்டறிய பல விஷயங்கள் சினிமாவில் உள்ளது. தூய இலக்கியம் அங்கு செல்லுபடியாகாது என்பது வெறும் அழகான phenomena. அண்ணாச்சிக்கு கவிதைமூலம் பெரிய வருவாய் ஏதுமில்லை, வாழ்க்கையை எதிர்கொள்ள தொழிலாக அணுகிய சினிமா அண்ணாச்சியை சற்று கைத்தாங்கிக் கொண்டிருக்க வேண்டும். அதெல்லாம் கேட்பதுதான் என் உத்தேசம். இருப்பினும் ‘அம்புப் படுக்கை’யும், ‘நீலகண்டம்’ போன்ற கதைகளையும், ‘வளரொளி’யில் சிறந்த உரையாடலையும் நிகழ்த்தியவர் சுனீல் கிருஷ்ணன் என்பதால் அதை கண்டுக்கொள்ளாமல் விடலாம். ஆனால் அவர் ரொம்பத்தான் (கலை, கலைக்காக என்று கூறும்) தூய்மைவாதியாக இருப்பாரோ என்று எண்ணத் தோன்றியது.

அந்த அரங்கு முடிந்த பிறகு வெளியேறி வந்த அண்ணாச்சி அனேகமாக பிரான்சிஸ் கிருபாவின் ஏதோ ஒரு நூலை வாங்கியபிறகு வேட்டிக்குள் சுருட்டி வைத்திருந்த பணத்தை எடுத்து தமிழினி வசந்தகுமாரிடம் நீட்டினார், இதை ஸ்டாலில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த பேராசிரியர் கால.சுப்பிரமணியம் வெடி சிரிப்பு எழுப்பினார், அண்ணாச்சி தன்னிடமுள்ள பட்டிக்காட்டான் அப்படியே விட்டுவைத்திருப்பதால் தான் கவிஞராகவே நீடிக்கிறார் போல் இருக்கிறது.

விஷ்ணுபுரம் விழாவில் (வெறுமனே பார்வையாளர்களாக) கலந்து கொள்வதற்குக்கூட ஆட்சேபணைகள் எழும் நிலையை ஜெயராம் ரமேஷ் போன்றவர்களேகூட அரங்கிலும், பொதுவெளியிலும் பதிவு செய்தது இன்னமும் நாம் இனக்குழு சமூக மனநிலையிலிருந்து மேலெழுந்து வரவில்லை என்பதையே காட்டியது.

விக்னேஷ்

விக்ரமாதித்யன் விருதுவிழா நடப்பதற்கு சரியாக ஒருவாரம் முன்பு Kobad Ghandy சென்னை வந்திருந்தார். சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் (வ.கீதா மொழிபெயர்ப்பு) செய்த அந்த அமர்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. மும்பையின் செல்வவளம் கொண்ட பார்சி சமூகத்தில் பிறந்த கோபட் காந்தி இலண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணக்கு பட்டவியல் (Chartered Accountancy) முடித்தவர். அதுபோக (1995-ல் வெளியான) கமலஹாசனின் குருதிப்புனல் திரைப்படத்தில் நாசர் ஏற்றிருந்த (பத்ரி பாத்திரம்) போல, (2012-ல் வெளியான) Chakravyuh இந்தித் திரைப்படத்தில் Om Puri ஏற்றிருந்த (Govind Suryavanshi என்கிற பாத்திரம்) இந்த கோபட் காந்தியை நகலெடுத்தது. எஸ்.என்.நாகராஜன் (1927 – 2021) அவர்களின் கீழை மார்க்சியம் போல, மனித மனம் இயங்குவிதம், அகவயமான தேடல்களை தான் செயல்பட்டுவந்த இடதுசாரி அமைப்புக்குள் விவாதிக்கிறவர், கோபட் காந்தி. மத்தியக் குழு உறுப்பினர் என்று குற்றச்சாட்டுக்காகவே பத்தாண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்தவரை இறுதியில் இயக்கம் வெளியேற்றியது நகைமுரண்.

இந்த பின்புலங்களை அறிந்திருந்த நான் அவருடைய (சென்னை) கூட்டத்துக்குப் போயிருந்தேன். அங்கு சாம்ராஜ் சற்று மேடான இடத்தில் கடைசி பெஞ்ச் மாணவர் போல அமர்ந்திருந்தார், அருகில் நானும் போய் உட்கார்ந்து கொண்டேன். இங்கு விஷ்ணுபுரம் வந்தபோதும்கூட அதே கடைசி பெஞ்சில் தோழரைப் பார்த்தேன். இதனால் அறியவரும் நீதியாதெனில் நானோ, சாம்ராஜோ முகாமின் அமைவிடம் இடது, வலது, நட்டநடு செண்டர் என்று பார்க்காமல் இருக்கிறோம் என்பதே.

அஜிதன்

(சுந்தர ராமசாமியின்) காலச்சுவட்டில், கோமல் சுவாமிநாதனின் சுபமங்களா, இந்திரா பார்த்தசாரதியின் கணையாழி வழியாக தங்களை அறிந்துகொண்டேன். 1997-ல் வேலை வாய்ப்பின் பொருட்டு அரபு நாட்டு எண்ணெய் வயல்களுக்கு சென்றபோது என்னிடம் விஷ்ணுபுரம் நாவல் இருந்தது. அங்கு என் ஆயுளின் மிக நீண்ட காலத்தை (மனைவி உடனிருந்த போதிலும்) தனிமையில் கழித்தபோது என்னை ஆற்றுப்படுத்தியது இலக்கியம். அதற்கு ஏதும் திருப்பி செலுத்த வேண்டும் என்கிற நேர்ச்சை போன்ற ஒன்றே 2012 முதல் இன்றுவரை கிட்டத்தட்ட சொல்லிக் கொள்ளும்படியான பெரிய வருமானம் ஏதுமில்லாவிட்டாலும்கூட இங்கு, இலக்கிய சூழலில் இருக்கவே மனம் பிரியப்படுகிறது.

அதேபோல பெரும்பாலும் சென்னையின் முக்கியமான இலக்கிய கூடுகைகளில் காணப்படும் பலரையும் இங்கு பார்க்க முடிந்தது.

அமிர்தம் சூர்யா, பாவண்ணன், கார்திகை பாண்டியன், அகரமுதல்வன், கீரனூர் ஜாகிர்ராஜா, சொல்புதிது சூத்ரதாரி எம்.கே.வையும், மதுரை சதகத்துல்லா உள்ளிட்டோரையும் விழாவில் காணப்பட்டனர். லா.ச.ரா.வின் மகன் பெரியர் சப்தரிஷி ‘அபி’ edit செய்த திருக்குர்ஆன் (போனில் பேசும்போது) கேட்டிருந்தார். கோவை விஷ்ணுபுரத்துக்கு வருவேன், எடுத்துட்டு வாங்கோ என்று சொன்னதால் கொடுத்தேன். அப்பாவைப் போலவே கண்ணன் என்று என்னை அழைப்பவர் அபி என்று கூறியபடியே தலைமேல் தூக்கி பெற்றுக் கொண்ட சப்தரிஷியை ஆன்மிக பெருக்குடன் கடலூர் சீனு மௌனசாட்சியாக பார்த்துக் கொண்டிருந்தார்.

இளம் தோழர்கள் இந்த தொடரோட்டத்தில் இணைந்திருப்பதும் சென்னையிலும், கோவையிலுமாக தாங்கள் எங்கு எந்த ஊருக்கு வந்தாலும் இவர்களை எது ஈர்க்கிறது என்பது வியப்பாகவே உள்ளது. மதார், நவீன், விக்னேஷ் ஹரிஹரன், அழிசி ஸ்ரீநிவாசன் – இன்னும் அறிமுகமாகிக் கொள்ளாத பலரும் இருந்தனர். விழாவில் (நான் பார்க்காமல்) தவறவிட்டவர்களில் தங்களின் குடும்ப உறுப்பினர்கள், கோவை ராம்குமார் போன்ற சிலர். விழா முடிந்த பிறகு திரும்பும் வழியில் நிஷா மன்சூர் தன் காரில் என்னை கோவை ஜங்கஷனில் இறக்கிவிட்டுப் மேட்டுப்பாளையம் சென்றார்.

அன்றிரவு சேரன் எக்ஸ்பிரஸ்சில் படுக்கை வசதியுள்ள இருக்கை கிடைத்தது. சென்னைப் புத்தக கண்காட்சியை எதிர்கொள்ளவும், அருண்மொழி அவர்களின் நூல் வெளியீட்டு விழா ‘நிவேதனம் ஹாலில்’ என்ற தங்களின் அறிவிப்பு முன்கூட்டியே இருந்ததால், அன்று சென்னையில் இருக்கும்படியாக டிக்கெட்டை ஒழுங்கு செய்திருந்தேன், பெருந்தொற்று, பொதுமுடக்கம் இரண்டையும் தள்ளிப்போட்டுவிட்டது. எங்கேனும் கூடிய விரைவில் சந்திக்கலாம், இலக்கியம் பேசலாம்.

கொள்ளு நதீம், ஆம்பூர்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 13, 2022 10:34

வளியில் ஒரு விந்தை – ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி

அன்புள்ள ஜெ

விஷ்ணுபுரம் இலக்கிய விழா சிறப்பாக நடந்தது. நன்றி

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி 25ஆந் தேதி ஏரியான் 5 விண்கலத்தில் பிரெஞ்ச் கயானாவிலிருந்து அனுப்பப்பட்டது. 20 வருட பெருங்கனவு செயலாக்கப் பட்டது.

செய்திகளில் உள்ள பெரும் தலைப்புகளை தவிர்த்து விடுகிறேன். சுருக்கமாக ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப், ஹபுள் டெலஸ்கோப்பின் அடுத்த தலைமுறை.

இந்த பெரும் திட்டத்தை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொறியாளர்கள் இருபது வருடங்களாக உலக அளவில் பங்கேற்று நிறைவேற்றி இருக்கிறார்கள்.

நமது நண்பர்களில் யாரேனும் ஒருவர் கூட இதில் முக்கிய செயற்பாட்டாளராக இருக்கலாம். அறிவியல் சிந்தனைகள் பல நமது தளத்தில் யாரேனும் ஒருவர் பதிவு செய்து பார்த்திருக்கிறேன். அது கோடல் எஷர் பாஃக் புத்தகமாக இருக்கலாம் அல்லது ஃபராக்டல் பற்றி இருக்கலாம். நமது நண்பர்களும் வாசகர்களும் ஒரு ஆழமான வியக்கத்தக்க வாசிப்பை உடையவர்கள். அதனால் இந்த விஷயம் பலருக்கும், உங்களுக்கும் கூட தெரிந்திருக்கலாம்.

சிறிதும் பெரிதுமாக, நுணுக்கமும் விஸ்தாரமாக பலவகை பொறியியல் சிந்தனைகள் இந்த திட்டத்தில் மிக நேர்த்தியாக செயல்படுத்தப் பட்டுள்ளன.

உதாரணமாக சில. இதில் உள்ள கண்ணாடிகள் பெரிலியம் என்று தனிமத்தால் ஆனது. அதற்கு மிக மெல்லிய தங்க முலாம் பூசப் பட்டுள்ளது. ஏனெனில் தங்கம் அகச்சிவப்புக் கதிர்களை மிக சிறப்பாக பதிவு செய்யக்கூடியது.

கண்ணாடிகளின் பின்புறம் பல சிறிய மோட்டார்கள் பொருத்தப் பட்டுள்ளன அவைகளை இயக்குவதன் மூலம் அந்த கண்ணாடி தளத்தின் வளைபரப்பை (curvature) மிக நுணுக்கமாக மாற்ற முடியும். இது தொழில்நுட்பத்தின் மிக உச்சமான புள்ளி என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.

இந்த மொத்த திட்டமே வழியிலுள்ள அகச்சிவப்பு கதிர்களை பதிவு செய்யத்தான். அகச்சிவப்பு கதிர்களை பிரபஞ்சத்தின் ஆரம்ப கட்டத்தில் உள்ள மிக முக்கியமான செய்திகளை உள்ளடக்கியுள்ளது என அறிஞர்கள் கருதுகின்றனர். இவை ஆரம்ப கட்டத்தில் (காலத்தில்?) புற ஊதாக்கதிர்கள் ஆக இருந்தாலும் டாப்பிளர் எபெக்ட் இன் ஆல் அகச்சிவப்பு கதிர்கள் ஆக மாறிவிடுகிறது. இதை ரெட் ஷிஃப்ட்  என்று கூறுகின்றனர். எனவே இந்த நுண்ணிய அகச்சிவப்புக் கதிர்களை பதிவு செய்வதே ஒரு முக்கியமான மற்றும் தேவையான செயல்பாடாகும்

அகச்சிவப்பு கதிர்களை பதிவு செய்வதில் சில சிக்கல்கள் உள்ளன முதலாவது சூரியக்கதிர்களும் அதனால் ஏற்படும் வெப்பமும் அகச்சிவப்பு கதிர்களை அழித்து விடுகின்றன. அதனால் இந்த டெலஸ்கோப்பின் இடம், பூமிக்கு பின்னால் தான் இருக்க வேண்டும் என முடிவு செய்தனர். இரண்டாவது பூமி சூரிய வெளிச்சத்தை பிரதிபலிப்பதாகவும், அது வேறு சில அகச்சிவப்புக் கதிர்களை உருவாக்குகிறதை கண்டு அறிந்துள்ளனர். இதனாலேயே பூமியிலிருந்து சற்று தொலைவில் இருக்க வேண்டும் என்பதையும் முடிவு செய்தனர்.  இதற்காக இந்த டெலஸ்கோப்பை கிட்டத்தட்ட 10 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் இருந்து இயக்கப்பட வேண்டும் என வரையறுத்தனர். இது பூமியில் இருந்து சந்திரன் உள்ள தூரத்தைப் போல குறைந்தபட்சம் நான்கு மடங்கு உள்ளது என்று குறிப்பிடத்தக்கது. மூன்றாவதாக இந்த உபகரணம், அனைத்தையும் மீறி வரும் சூரிய வெப்பத்தை தடுத்து, மிகக்குறைவான சக்தியை உபயோகித்து அது இயங்க வேண்டும்.

இந்தக் காரணங்களினால் லாக்ரானஜ் பாயிண்ட் என்னும் புள்ளிக்கு இந்த டெலஸ்கோப்பை எடுத்துச் செல்ல வேண்டும். லாக்ரானஜ் புள்ளிகளில் இன்னொரு நுணுக்கம் உள்ளது. சூரியனின் ஈர்ப்பு சக்தியும் பூமியின் ஈர்ப்பு சக்தியும்  சமன் செய்து இருக்கும் புள்ளிகள் ஆகும். இதில் இருக்கும் போது நாம் குறைந்த அளவு சக்தியிலேயே உபகரணங்களை இயக்க முடியும்

இப்பொழுது சில நிஜமான சிக்கல்கள். இந்தக் கலத்தை விண்வெளிக்கு செலுத்தும்போது இறுதி வடிவத்தில் இதை விண்வெளிக்கு அனுப்ப முடியாது. அதனை காகித மடிப்புகள் போல மடித்து விண்வெளிக்கு சென்ற பின் வெவ்வேறு இடங்களில் அது விரிந்து இறுதி வடிவத்திற்கு வர வேண்டும் அதையும் அவர்களது திட்டத்தில் வெவ்வேறு மைல்கற்களாக வடித்துள்ளனர். இந்த பொருள் ரீதியான மடிப்பை ஆரிகாமி என்கிற ஜப்பானிய காகித கலைக்கு ஒப்பிடலாம்.

இந்த தொலைநோக்கியை பற்றிய திட்டம் அதன் காணொளிகள் அது விண்ணில் சென்ற பின் தற்போது எங்கு உள்ளது இவை எல்லாம் இணையத்தில் சுட்டிகள் ஆக உள்ளன அதைக் கீழே குறிப்பிட்டுள்ளேன்.

இது பூமியில் இருந்து வெகு தொலைவில் இருப்பதால் இதை இயக்குவதும் கண்காணிப்பதும் தொலைவிலிருந்தே செய்யவேண்டிய அவசியமும் அதற்கான டிசைன்களும், கட்டமைப்பும், தொழில்நுட்பமும் இருக்க வேண்டும். இந்த அணுகுமுறை மிகப்பெரிய சாதனையாக இருக்கிறது. இந்த தொலைநோக்கி சேர்க்கும் தரவுகள் யாவும் ஓபன் சோர்ஸ் என்கிற முறையில் அனைவருக்கும் கிடைக்கக் கூடிய ஒன்றாகும். இதுவும் ஒரு முக்கியமான அணுகுமுறை

இந்த தொலை நோக்கியின் பணமதிப்பை தாண்டி இதை உருவாக்க, இயக்க, விண்ணில் செலுத்த, அதைத்தவிர தொடர்ச்சியாக அதை கண்காணிக்க ஒரு மாபெரும் பொறியாளர் சமூகமும், இதை சுற்றி சேகரிக்கும் தகவல்களை கொண்டு வானவியலில் உள்ள பல்வேறு ஆராய்ச்சிகளையும் சாத்தியப்பாடுகளை உள்ளடக்கிய ஒரு பெரும் கனவு பெரும் வியப்பாக, களிப்பாக இருக்கிறது.

கலீலியோவின் தொலைநோக்கி இதிலிருந்து நாம் வெகுதூரம் வந்துவிட்டோம் அது ஐரோப்பிய மறுமலர்ச்சியின் விதையாக இருந்தது. இந்த தொலைநோக்கி நமது கற்பனையையும் விஞ்ஞான நோக்கையும் சமன்செய்து புதிய நவீன கனவுகளை, அதைத் தொடர்ந்த ஆராய்ச்சிகளையும் விதைக்கிறது, வளர்க்கிறது.

எனது பார்வையில் இந்த முயற்சி உலக அதிசயங்களுக்கு ஒரு தளத்திற்கு மேலே சென்று விட்டது என தோன்றுகிறது. எனக்கு இருக்கும் களிப்பில் இதைப்பற்றி எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்கின்றேன். இது அனைவரும் கொண்டாடப்பட வேண்டிய ஒரு நிகழ்வு என்றும் எதிர்காலத்தில் ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒரு செயல்பாட்டில் இயங்கி ஒரு மாபெரும் செயல் செய்ய ஏதுவாக இருக்கும் என நம்புகிறேன்.

தன்னறம் பதிப்பாளர்கள் அளித்த பையில்  “பெருஞ்செயல் ஆற்றுக” என்ற அச்சை கண்டேன். இந்தத் தருணத்தில் ஏதோ ஒரு நல்ல இலக்கு கிடைத்த மகிழ்ச்சியாக இருக்கிறது.

அன்புடன் முரளி

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் பொறியியல் பித்து

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை கண்காணிக்க

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி விண்வெளிக்கு அனுப்புதல்

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எவ்வாறு இயங்குகிறது

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 13, 2022 10:31

விக்கி- கடிதங்கள்

விக்கிப்பீடியாவுக்கு மாற்று விக்கிபீடியாவிற்கு வெளியே

அன்புள்ள ஜெயமோகன்

சமீபத்தில் உங்கள் தளத்தில் தமிழ் விக்கிபீடியா மறுபடியும் அடிபடுகிறது. இதை 2009 லேயே கவனித்து உங்களுக்கு எழுதினேன், அதற்கு நீங்களும் பதிலளித்தீர்கள் https://www.jeyamohan.in/4249/

ஒருவர் சொன்னதுபோல விகிபீடியா `தமிழின் சராசரி அறிவுத்தளம் தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ளது` ; கடந்த 15 வருடங்களில் விகிபீடியாவில் தாலிபானியம் தன் பிடியை இன்னும் கெட்டிக்கொண்டுள்ளது அதாவது தமிழ்மொழியின் புற்றுநோய் முற்றிக்கொண்டு வருகிறது விக்கிபீடியா அந்த நிர்வாகிகளின் சொத்து அல்லவே அல்ல. ஒரு சிறுகுழமனப்பான்மை கொண்ட ஒரு குழு, அதை 2005-6 வாக்கில் கைப்பற்றியுள்ளது, அவர்களுக்கு ஒவ்வாத நிர்வாகிகளையும் எழுத்தாளர்களையும் விரட்டி அடித்துள்ளது. அவர்கள் தமிழுக்கும் அறிவுக்கும் விக்கிபீடியா இயக்கத்திற்கும் செய்த சேதம் மகத்தானது, விக்கிபீடியா மீளமுடியா நோயில் உள்ளது

வணக்கத்துடன்

வ.கொ.விஜயராகவன்

***

அன்புள்ள விஜயராகவன்

எதற்கும் ஒரு காரண காரிய உறவு இருக்கும். விக்கிப்பீடியா மிகச்சரியாக இருந்தாலும்கூட நமக்கு தமிழுக்கென ஒரு நவீன கலைக்களஞ்சியம் தேவை. அது நிகழ் விக்கிப்பீடியாவின் குளறுபடிகள் ஒரு காரணமாக அமைந்தன என்றே கொள்கிறேன்

ஜெ

***

அன்புள்ள ஜெ,

விக்கிப்பீடியாவுக்கு மாற்றாக ஒரு தளத்தை தமிழுக்கென அமைக்கும் முயற்சி மகத்தானது. அரசுகளே இன்று இப்பணியைச் செய்ய முடியும். தனிநபர் ஒருவர் முன்னெடுத்திருப்பது மிக மிக ஆச்சரியமானது. இதன்பின் உள்ள கனவு திகைப்பூட்டுகிறது. இக்கனவை நனவாக்கும் ஒரு பெரிய நட்புக்குழு உங்களுக்கு இருக்கிறது என நினைக்கிறேன்.

***

அன்புள்ள ஜெயராமன்,

நன்றி

ஆனால் எங்களுக்கு ஏராளமானவர்கள் தேவைப்படுகிறார்கள். குறிப்பாக தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழியாக்கம் செய்யக்கூடியவர்கள்.

ஜெ

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 13, 2022 10:31

மின்னும் வரிகள்

அன்புள்ள ஜெ

வெண்முரசை வாசித்து முடித்தபின் இன்று என் வழக்கம் அதை கைபோன போக்கிலே புரட்டி தென்படும் வரிகளை வாசிப்பது. அப்போதுதான் இந்த படைப்பு எத்தனை செறிவாக எழுதப்பட்டுள்ளது என்ற வியப்பு உருவாகிறது. முதல் வாசிப்பில் கதையோட்டமும் உணர்ச்சிகளுமே தெரிந்தன. ஆனால் இப்போது வரிகளாக வாசிக்கையில் ஒவ்வொரு வரியிலும் அரிய கவித்துவப் படிமங்கள், வாழ்க்கையைப் பற்றிய கூர்ந்த பார்வைகள் இருக்கின்றன. தனித்தனி வரியாகவே அற்புதமான புதுக்கவிதையாக நிலைகொள்ளும் தகுதிகொண்டவை. அத்தகைய வரிகளாலேயெ முழுநாவல்களும் எழுதப்பட்டுள்ளன.

வெண்முரசை வாசித்து முடிக்க முடியாது என்பது இதனால்தான். மேலோட்டமாக எதையாவது வாசித்துவிட்டு வாசித்தோம் என்று சொல்லிக்கொள்ளலாம். அது எந்த புராணத்தை குறிப்பிடுகிறது, எந்தப்புராணத்தை எப்படி மாற்றுகிறது என்பதெல்லாம் நுட்பமான வாசிப்பின் வழியாகவே அறியமுடியும். எங்கே எப்படி அது தொன்மத்தை இன்றைய வாழ்க்கையுடன் இணைக்கிறது என்பது வாசிப்பின் நுட்பம் அறிந்தவர்களால் மட்டுமே உணரத்தக்கது. தமிழில் இன்னொரு எழுத்தை இதற்கு மேலோட்டமாகக்கூடச் சமானமாகச் சொல்லிவிட முடியாது.

நான் டிவிட்டரில் அடிக்கடி வெண்முரசு என தேடுவேன். அதில் உதிரி வரிகளாக வரும் மேற்கோள்களை வாசிப்பேன். அவற்றில் இருந்து இதை யார் எந்த சந்தர்ப்பத்தில் சொன்னார்கள் என்று யோசிப்பதும், வெண்முரசுக்குள் செல்வதும் ஒரு பெரிய அனுபவம். தனித்த வரியாகவே அபூர்வமான கவிதையனுபவமும் வாய்க்கும். இன்றைக்கு உங்கள் வாசகி ரம்யா டிவிட்டரில் கொடுத்திருந்த வரிகள் இவை.

இந்த வரிசையின் கடைசி வரி ஒரு அற்புதமான ஒருவரிக்கவிதை

எம்.பாலகிருஷ்ணன்

***

படைக்கலம் என்பது மானுடஉள்ளத்தின் பருவடிவே. ஆற்றலால் அல்ல, நுண்மையாலேயே கருவிகள் வெல்லற்கரியவை ஆகின்றன. எந்த வில்லை விடவும் நுண்மையானது யாழும் அதன் சுருதியும் என்றுணர்க!

“இந்த மண்ணில் முன்பு விழுந்து எழுந்து கண்ணீருடன் விலகிய கணமே நான் அறிந்தேன், உங்களை சினம் கொள்ளச் செய்வது எது என. உங்கள் கருவிகளில் ஒவ்வொருநாளும் நீங்கள் அறியும் நிறைவின்மைதான். நான் அந்நிறைவை அடைந்தேன்.”

விழைவு உடல் புகுந்த நோய் போல. முற்றிலும் விலகுவதில்லை.

“இன்றறிந்தேன், குருதிதேடும் கான்விலங்குகள் உறவுகள். குருதிவிளையும்வரைதான் நாம் பேணப்படுவோம்”

“ஆற்றலற்ற உள்ளங்கள் எப்போதும் மிகையாகவே எதிர்வினை புரியும். அவர்கள் தங்கள் ஆற்றலின்மையை அஞ்சுகிறார்கள். அதை சினத்தால் மறைக்கிறார்கள்”

அவர் கண்டது மெய்களை அனைத்தும் அறிந்து அறிவதற்கு அப்பால் என நின்ற கல்வித் திருமகளை. -மத்ர நாட்டு இளவரசி

பருப்பொருளென தன்னை விரித்து இங்கே நிறைந்திருக்கும் மாயை ஒலி மட்டுமே என அவர் முன் நின்றது. -வீணை இசை

நிகரற்ற வைரம் தூய வெண்பட்டிலேயே அமர்ந்திருக்கவேண்டும். மண்ணாளும் மணிமுடி ஒன்றே அதை சூட வேண்டும். தெய்வம் என்பது ஏழ்நிலை மாடம் எழுந்த பேராலயத்திலேயே அமர வேண்டும்

உடலசைவுகளால் மானுடன் காலத்தை சமைத்துக் கொண்டிருக்கிறான். அசைவற்ற உடல் காலத்தை அசைவற்றதாக்குகிறது. அசைவற்ற உடலை அசைக்க உள்ளம் கொள்ளும் முயற்சியை வென்றால் அதுவும் அசைவிழந்து உடல்மேல் படிவதைக் காணலாம்.

உள்ளத்தை வெல்ல உள்ளத்தால் முயல்பவன் யோகி. அவர்களின் வழிகள் பல. உள்ளத்தை உடலால் வெல்லமுடியும் என அறிந்தவன் வீரன். மாபெரும் யோகிகள் அடையாத உச்சங்களை எளிய வீரர்கள் சென்றடையலாகும்’

உள்ளம் தெளிந்து புது எண்ணங்கள் வருவதற்கு தெய்வங்கள் அருளும் தருணம் இது: பிரம்மமுகூர்த்தம்

ஒவ்வொரு எண்ணமும் சரியான சொல்லில் சென்று அமர கலைவாணி புன்னகைக்கும் நேரம். சித்தம் சார்ந்த எத்தொழிலும் முன்புலரியிலேயே நிகழவேண்டும் என்று அனைத்து நூல்களும் சொல்கின்றன.

எந்தப் பெருவீரனும் அவனை அணுகித் தெரிந்தவர்க்கு அத்துணை வீரனல்ல. மானுடரை அணுகும்தோறும் அவர்களின் அச்சமும் அலைவுறுதலும்தான் அறியவரலாகும்.

ஏழு மரங்களும் உடலில் சுழலும் ஏழு யோகத்தாமரைகளே என்பார்கள். மூலாதாரம் முதல் சகஸ்ரம் வரை மலர்ந்த ஏழு புள்ளிகள். அவற்றை தன்னிலை என்ற ஒற்றைப்பாம்பால் நேர்கோடென ஆக்கி ஊழ்கமெனும் அம்பால் முறித்து மெய் நிலையை அடைந்தான் ராமன்.

இங்கு ஒரு மானுட உடலில் எதுவோ ஒன்று தன்னை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. அதன் விளிம்பில் அயலென நின்றிருக்கும் நாம் எப்போதும் உடலெனத் திறந்த இவ்வைந்து பொறிகளால் அவரை கண்டுகொண்டிருக்கிறோம். -இளைய யாதவர் பற்றி அக்ரூரர்

அவர் மானுடரல்ல என்று என்னுள் ஏதோ ஓர் புலன் சொல்கிறது. அது அறிவல்ல. மானுட உணர்வும் அல்ல. இரவில் மூதாதையர் நடமாட்டத்தை உணரும் நாய் கொண்டுள்ள நுண்புலன் என்று அதை சொல்வேன். -இளைய யாதவர் பற்றி அக்ரூரர்

பிறகு ஒருபோதும் நிகழாதது என்று ஒரு கணமும் என்றோ கண்டு உணர்ந்தது என மறு கணமும் தோன்றச் செய்யும் அருங்கணங்களில் ஒன்று அது. எனவே அக்காட்சிகளை முழுக்க விழிகளால் தொட்டு எடுக்க விழைந்தேன்.

முகமலர்வு என்பது எவரிலும் நிலையாகத் தெரிவதல்ல. சுடர் போல அது எழுந்தும் விழுந்தும் அலைவுற்றே மானுடரிடம் திகழும். சித்திரம் என எழுதிய முகமலர்வு என்பது தெய்வங்களுக்கு உரியது.

மானுடர் மானுடரை தங்கள் இருளைக்கொண்டே அறிந்து மதிப்பிடுகிறார்கள்.

நாகத்தின் விழிகளில் மானுடரை நோக்கிய இளக்காரம் ஒன்று உண்டு. யுக யுகங்களாக கூடாது குறையாது ததும்பி நின்றிருக்கும் ஏளனம் அது.

இந்தப் பாலையிடம் எவ்வினாவையும் எழுப்ப முடியாது. எத்திசையிலும் மாறாத ஊமைப்புன்னகையுடன் அது நின்றிருக்கிறது.

ஒரு அழுகை காலத்தை கற்பாறைகள் என மாற்றி நிற்கச் செய்துவிடும்.

“மொழியாக மாறும் உணர்வுகள் நமக்கு வெளியே பொருட்களென ஆகின்றன. அவற்றை ஐம்புலன்களாலும் காணமுடியும். ஆராயமுடியும்”

அனைவரும் அறிந்த ஒன்றென்பதனாலேயே எவராலும் சொல்லப்படாத ஒன்றாக இது எஞ்சும்.

“கீழ்மை நிறைந்த ஒரு பொது மந்தணம் நட்பு என்றென்றும் உறுதியாக இருக்க இன்றியமையாதது அல்லவா?”

மானுட எண்ணங்கள் நீரலைகள் போன்றவை. ஒவ்வொரு கணமும் அவை நிகழ்ந்து கொண்டிருப்பதே அவற்றின் அழகு. நீரலைகளை நோக்கி கல்லில் செதுக்கி வைப்பது போன்றது எழுத்து. அது அலையல்ல, மானுடனின் அச்சத்தின் சான்று மட்டுமே.”

நிலையின்மையென இங்கு நிறைந்துள்ள அனைத்தையும் சொல்லாலும் விழியாலும் தொட்டு நிலைத்தவை என ஆக்க முயல்கிறது மானுட அச்சம். நிலையற்று விரிந்திருக்கும் இப்பெருவெளியே உண்மை.

தீயவை செய்வதற்கு முன் கடக்கவேண்டிய ஒரு கணம் உண்டு என்று ஒருமுறை என் ஆசிரியர் சொன்னார். நூற்றியெட்டு தெய்வங்களால் காக்கப்படும் பெரும் அகழி அது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு முகம் கொண்டு எழுந்து வந்து நம்மை விலக்கும். மூதாதையென, குல தெய்வங்களென, அறநெறிகளென, அயலென, உறவென, குலமென, குடியென, கல்வியென,அகச்சான்று என உருக்கொண்டு சினந்தும் அழுதும் நயந்தும் பேருரு காட்டியும் பேதையென நின்றும் சொல்லெடுக்கும்.ஒரு கணத்தில் அவற்றை தாண்டிச் சென்றுதான் தீயவை எவற்றையும் நாம் ஆற்றுகிறோம்.

நல்லவை ஆற்றுவதற்கும் ஒரு கண தடையே உள்ளது. அச்சமென, ஐயமென, விழைவென, ஆணவமென உருக்காட்டுகின்றன. அக்கணத்தைக் கடந்து நாம் உரியவற்றை இன்றியமையாதவற்றை மேன்மையானவற்றை முழுமையை அடைய முடியும்

ஒரு கணம்தான். இத்தருணத்தில் அதை கடக்காவிடில் பிறகு ஒருபோதும் அது நிகழாமல் ஆகிவிடும். ஒரு கணம் விரிந்து ஒரு பிறவியென்றாகலாம். ஏழ்பிறவியென எழலாம். முடிவிலி கூட ஆகலாம்

பீலிவிழி இமைப்பதில்லை. விழியிமைக்கும் இடைவெளிகளில் வாழும் தெய்வங்களே! உங்களைப் பார்க்கும் விழி அது ஒன்றே அல்லவா?”

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 13, 2022 10:30

January 12, 2022

சிங்கப்பூர் தமிழிலக்கியத்தின் மரபும் செல்திசையும்- ஜெயமோகன்

இன்றைய சூழலில் சிங்கப்பூர் இலக்கியத்தின் முன் உள்ள சவால் என்பது இதுதான்… அடையாளங்களைக் கடந்து அடையாளங்களை ஆக்கி விளையாடும் வரலாற்று விசைகளை, பண்பாட்டு உட்குறிப்புகளைப்பற்றியும் பேசுவது. மானுட உணர்வுகளை அந்த பெரும் பகைப்புலத்தில் வைத்துப்பார்ப்பது. இந்நாட்டின் இச்சமூகத்தின் உள்ளத்தையும் ஆளுமையையும் வடிவமைத்துள்ள அனைத்து பண்பாட்டுக்கூறுகளையும் கண்டடைவது, அதன் உளவியல்கூறுகளை கட்டமைத்திருக்கும் ஆழ்படிமங்களை மீட்டு எடுப்பது.

சிங்கப்பூர் உமறுப்புலவர் மையத்தில் 15-9-2016 அன்று நிகழ்ந்த சிங்கப்பூர் இலக்கிய போக்குகள்குறித்த கருத்தரங்கில் ஜெயமோகன் பேசிய உரையின் வரிவடிவம்.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 12, 2022 10:35

விஷ்ணுபுரம் விழா- சிவராஜ்

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,

எனது அம்மாவுடைய ஊர் பெயர் அறச்சலூர். அது ஈரோட்டுக்கும் காங்கேயத்துக்கும் நடுவில் அமைந்திருக்கும் ஒரு சிற்றூர். வரலாற்று ரீதியாக, சமணர்களுக்கான முக்கியமானதொரு இடமாக அவ்வூர் அமைந்திருக்கிறது. அங்கு அருகிலிருக்கும் நாகமலையில்தான் இசைக்கல்வெட்டுகள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. உங்களது ‘அருகர்களின் பாதை’ பயணத்தை நீங்கள் அங்கிருந்துதான் துவங்கினீர்கள். அந்த நாகமலை அடிவாரத்திலிருந்து சற்று தொலைவில் பழமையான ஒரு சிவன் கோவில் உள்ளது.

என்னுடைய சிறுவயதில் அக்கோவிலில் வைத்து நான் கண்ட ஒவ்வொரு விழாவும் எனக்கு நினைவிலிருக்கிறது. மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி தினத்தில் விநாயகருக்கான வழிபாடு இரவு நிகழும். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என சில பக்தர்கள் காலையிலிருந்து எதுவுமே உண்ணாமல் விரதமிருந்து, மாலையிரவில் நிலவைப் பார்த்து பிரார்த்தித்துவிட்டு, அதன்பின் அக்கோவிலில் கிடைக்கும் பிரசாத உணவை உண்பார்கள். அதுமட்டுமின்றி, வருடந்தோறும் இராமநவமி உற்சவ விழா வெகு விமரிசையாக நிகழும். அதிலும் திரளாக பக்தர்கள் பங்கேற்பார்கள்.

வருடத்தில் மூன்று நாட்கள் அத்திருவிழா கொண்டாடப்படும். அவ்விழாவின் ஒரு அம்சமாக, கர்நாடக இசைக்கலைஞர்கள், நாதஸ்வரக்கலைஞர்கள், வாய்ப்பாட்டு பாடும் பாடகர்கள் பலர் வந்து ஒருநாள் கலந்துகொள்வார்கள். இன்னொருநாள், ஆசான் ஞானசம்பந்தம், குன்றக்குடி அடிகளார், கிருபானந்த வாரியார், சத்தியசீலன் உள்ளிட்ட தமிழறிஞர்களும் பங்கேற்று இறையுரை நிகழ்த்துவார்கள். என் பால்யகாலங்களில் இவர்கள் எல்லோரையும் நேரில் பார்த்து, அவர்களின் குரலையும் இசையையும் கேட்டது இன்னும் எனக்கு நினைவிருக்கிறது.

அந்தக் கோவில் திருவிழா அனைத்தையும் முன்னின்று பொறுப்பேற்று நிகழ்த்தி ஒருங்கிணைத்தவர் பெயர் கனகராஜ். ஏதோவொருவிதத்தில், தனது பெருஞ்செல்வச் சேகரங்கள் அனைத்தையுமே அவர் திருவிழா பணிகளுக்காகத் தொடர்ச்சியாக இழந்துவந்தார். எல்லாமே கைவிட்டு சென்றபிறகும்கூட, தன் மரணத்தின் கடைசிக்கணம் வரையிலும் அவர் கோவில் விழாவிற்கான பணிகளைச் செய்துவந்தார். எதன்பொருட்டும் அத்திருவிழா என்றைக்குமே தடைபட்டு நின்றதில்லை. அவ்வூரின் பண்பாட்டுக் கொண்டாட்டமென அது நிலைபெற்றது.

அண்மையில் நிகழ்ந்த விஷ்ணுபுரம் இலக்கிய விழாவும் எனக்கு அத்தகைய மனயெழுச்சியைத் தந்திருக்கிறது. ஒருமித்த மனிதர்களின் அகத்தால் விளைகிற பெருஞ்செயல் என்றே இவ்விழாவை நான் கருதுகிறேன். நாங்கள் வந்த நேரத்தில் அங்கு ஆழிகை, மாசிலன், நிலாயினி, லிகிதன் என குழந்தைகள் ஆங்காங்கே நிகழ்விடத்தில் நிறைந்திருந்தார்கள். குழந்தைகள் விளையாடியது, அழுதது, சிரித்தது என அக்காட்சிகள் அனைத்துமே எனக்கு என் பால்யகாலத்து திருவிழா நாட்களை நினைவுமீட்டின. வளர்ந்தவர்களுக்கான இலக்கிய நிகழ்வுச்சூழலில் குழந்தைகளுக்கான இருப்புச்சூழலும் அமைவது இந்நிகழ்வினை ஓர் ஊர்த்திருவிழா போல உணரச்செய்தது.

இறைத்திருப்பணிகளுக்காக அர்ப்பணிப்புடன் வாழ்வுமுழுக்க செயலாற்றிய கனகராஜ் போன்ற மனிர்களின் நிறைநீட்சியாகவே விஷ்ணுபுரம் நிகழ்வைத் திட்டமிட்டு ஒருங்கிணைக்கும் அத்தனை மனிதர்களின் ஆன்மாவையும் நான் எண்ணிக்கொள்கிறேன். இந்திய இலக்கியச்சூழலில் இனி நிகழப்போகும் நிறைய நற்கூடுகைகளுக்கான ஓர் பாதைத்தடத்தை நிச்சயம் இந்நிகழ்வு அமைத்துத்தரும் என்பதில் ஐயமில்லை.

இம்முறை விஷ்ணுபுரம் விருதளிப்பு நிகழ்வுக்காகவே, உங்களுடைய ‘எழுதுக’ , ‘தன்னைக் கடத்தல்’ ஆகிய புத்தகங்களை வெளியிட நேர்ந்தது எங்களுக்கான மிகப்பெரும் நல்லசைவு. குக்கூ காட்டுப்பள்ளியில், ‘நியதி’ எனும் பெயரில் இளையோர்களுக்கான மாதாந்திர கூடுகை நிகழ்வு நிகழ்கிறது. பெரும்பாலும், பதினெட்டு வயதிலிருந்து இருபத்தைந்து வயது வரையில் உள்ள இளைஞர்களுக்கான கூடுகை அது. உங்களுடைய ‘தன்மீட்சி’ நூலுக்குப் பிறகுதான், இளையவர்களிடம் முழுக்க முழுக்க நேர்மறையான விடயங்களை கொண்டுசேர்க்கும் இம்முன்னெடுப்பைத் திட்டமிட்டோம்.

எங்களை நோக்கி வரக்கூடிய ஏராளமான இளையவர்கள் சந்திக்கக்கூடிய பெருஞ்சிக்கல்கள் தான் ‘தன்னைக் கடத்தல்’ புத்தகத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் இந்நூல் எத்தனையோ இளையமனங்களின் அகத்தத்தளிப்புக்கான பதில்களைச் சுமந்திருக்கிறது. ஆகவே, தன்மீட்சிக்கு அடுத்தபடியாக நாங்கள் இளையவர்களின் கைகளில் ஒப்படைக்கும் நல்லதொரு நூலாக இனி ‘தன்னைக் கடத்தல்’ நூலும் நிச்சயம் இருக்கும்.

இதுவரை வெளிவாரத தேவதேவன் கவிதைகளைத் தொகுத்து புத்தகமாக்கும் செயற்பணிகள் நிகழ்ந்துகொண்டிருந்த காலச்சூழலில், ஆனந்த் அவர்களின் ‘டிப் டிப் டிப்’ கவிதைத்தொகுப்பும் ஒருசேர நன்முறையில் நிறைவுற்று அச்சடைந்து வந்திருப்பதையும் ஓர் ஆசியாகவே கருதுகிறோம்.

விஷ்ணுபுரம் விழாவின் முதல்நாள் காலைப்பொழுதில் இந்த மூன்று புத்தகங்களும் உங்கள் கைவந்து சேர்த்த கணம் எங்களுக்கு பெருநிறைவையும் மகிழ்வையும் தந்தது. சின்னதொரு புன்னகையுடன் நீங்கள் அப்புத்தகங்களை விரித்துப் படங்களைப் பார்த்த கணம் மனதில் நிறைந்திருக்கிறது. தன்மீட்சி புத்தகத்தை வாசித்துவிட்டு தாக்கமடைந்து, தான்கற்ற கட்டிடக்கலையும் ஓவியத்தையும் வாழ்வென நேசித்து செயலியங்கும் தோழமையான அக்சயா அவர்கள் வரைந்த கோட்டோவியங்கள்தான் ‘தன்னைக் கடத்தல்’ புத்தகத்தில் அச்சாகியுள்ளன.

தோழமை இரம்யா அவர்கள் வெண்முரசு குறித்தும், குறளினிது உரை குறித்தும் எழுதிய தொடர்கட்டுரைகள் மூலமாவும், முகம் விருது அழிசி ஸ்ரீநிவாசனின் நேர்காணலுக்கு உதவிபுரிந்தது மூலமாகவும் நாங்கள் இரம்யாவை அகத்திற்கு அணுக்கமாக உணரத்துவங்கியிருக்கும் காலகட்டம் இது. அதே இரம்யாவும் ஆனந்த்தும் சேர்ந்து ‘டிப் டிப் டிப்’ புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு பேசிய காட்சிகள் மனதுக்குள் மகிழ்ச்சியை வரவழைத்தன.

குக்கூ நண்பர்களின் அரங்குகள் அனைத்துமே விழா நண்பர்களின் அன்பைப் பெற்றிருந்ததை உணர்ந்தோம். பொன்மணியின் துவம் மூலமாக கிராமத்துப் பெண்களால் தைக்கப்பட்ட துணிப்பைகளும் துணிப்பொம்மைகளும் பல நண்பர்களின் கரங்களைச் சென்றடைந்தது… பாலகுருநாதன் துகள் முன்னெடுப்பு மூலமாக 600 துணிப்பைகளை நிகழ்வு முடிந்தபிறகு எல்லோருக்கும் ஒப்படைத்தது… ஜே.சி.குமரப்பா நாட்காட்டியை தோழமைகளுக்கு தந்தனுப்பியது என எல்லாமும் நலமுற அமைந்தன.

2021ம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் இலக்கிய விருதை, எழுத்தாளர் விக்ரமாதித்யன் அவர்களுக்கு வழங்குகிற பெருவிழாவென அமைந்திருந்த இந்நிகழ்வுக்கு, வெவ்வேறு ஊர்களிலிருந்து திரளாக மனிதர்கள் வந்திருந்து, இலக்கிய அமர்வுகளில் பங்கேற்று, இனிதுற பேசிமகிழ்ந்து, நிறைவோடு கிளம்பிச்சென்றது வரை அனைத்துப் படிநிலைகளும் நிச்சயம் பெரும் நம்பிக்கையின் குறியீடுதான். நிகழ்வு ஒன்றடுத்து ஒன்றென அழகியல் நேர்த்தியாக தன்னியல்பு கொள்கிறது.

விக்ரமாதித்யன் அவர்களைப்பற்றிய ஆவணப்படத்தை திரையிடும்போது, அவருடைய மனைவி திரையில் தோன்றி பேசுகிற அந்தக்காட்சி எனக்குள் ஒருவித நடுக்கத்தையும் அழுகையையும் உண்டாக்கியது. உண்மையில் அவ்விடத்தில் நான் கண்கலங்கிவிட்டேன். மேலும், அம்மாவை கெளரவிக்கும் கணத்தில் அந்நிகழ்வின் மொத்த ஆன்மாவும் நிறைந்துவிட்டதாக நான் எனக்குள் எண்ணிக்கொண்டேன். அதற்கு ஒரு முக்கியக் காரணம் ஒன்றுண்டு.

இன்று (டிசம்பர் 30), நம்மாழ்வாருடைய நினைவுநாள்! அய்யா அடிக்கடி சொல்வதுண்டு, “நான் இன்னைக்கு இவ்ளோ தூரம் இத்தன மக்கள்ட்ட போய்ச் சேர்ந்திருக்கேனா… அது எல்லாத்துக்கும் காரணம் எனக்குத் துணையாயிருந்த சாவித்ரிதான். அவளுக்காக நான் எதையுமே பண்ணாம, மத்த எல்லாத்துக்காகவும் என்னென்னமோ செய்றதுக்கு மனசாற அவ தந்த சுதந்திரம் தான்ய்யா காரணம்” என. இக்கடிதத்தை எழுதிக்கொண்டிருக்கும் இக்கணத்தில், நான் அய்யாவுடைய சொற்களை அகமேந்திக் கொள்கிறேன்.

விஷ்ணுபுரம் நிகழ்வுசார்ந்து ஏதேதோ ஞாபகங்கள் கிளர்ந்தெழுந்து, தொடர்ந்து இக்கடிதத்தை எழுதச் சொல்லி நீட்டித்துக்கொண்டே செல்கிறது. விழாவின் இரண்டாம் நாள், மீனாம்பிகை உங்களை பார்த்தவுடன், நீங்கள் சிறிதாக அவருடைய கரத்தை அரவணைக்கையில் அவர் தன்னையறியாமல் உடைந்தழுதார். அதே கணத்தில் செந்தில் அண்ணனும் கண்கலங்கி நின்ற அக்காட்சி, என்றுமழியாத அகப்பெருக்கின் நற்கணமாக விரிந்துநீண்டது. இந்தப்புள்ளிதான் என்னை இந்நிகழ்வை கரங்குவித்து வணங்கச் செய்கிறது.

இத்தனை மனிதர்கள்… யாருக்கும் எவ்வித மனத்தடையும் இல்லாமல்… எல்லோருமே நல்லதிர்வையும் நம்பிக்கையும் பெற்றுத் திரும்புவதற்கான உறுதிப்பாட்டை இவ்விழா ஒவ்வொருமுறையும் நிகழ்த்திவிடுகிறது. குறையாத இறையாசி என்றும் இவ்விழாவுக்கு அமைந்திருக்கும்!

எல்லாவற்றுக்கும் மேலாக, நீங்கள் குறிப்பிட்ட ‘அனைத்துக்கும் அப்பால் ஒன்றுண்டு. அது குருவருள்’ என்ற நித்ய சைதன்ய யதியின் ஊழ்கச்சொல்லை கண்ணீரோடு அகம்பட உச்சரித்து, விஷ்ணுபுரம் இலக்கிய விழா நிகழ்வுக்காக உழைத்திட்ட அத்தனை மனிதர்களையும் மானசீகமாக வணங்கி, அவர்கள் அனைவருக்கும் அவர்களது குடும்பத்திற்குமான பிரார்த்தனையை இப்பேரிறை முன்பாக பாதம்வைத்து வேண்டிக்கொள்கிறேன்.

மல்லசமுத்திரம் ஊருக்குப் பக்கத்தில் ஒரு பொதுக்கிணற்றை தூர்வாரி மீட்டெடுக்கும் பணிகள் தற்போது நிகழ்ந்துகொண்டிருக்கிறது. காந்தியின் அஸ்தி கரைக்கப்பட்ட கிணறு! அக்கிணற்றில் நீர்சுரக்கும் நற்தருணத்தில், உங்கள் அனைவருக்குமான இறைவேண்டலை முன்வைக்கிறோம். விஷ்ணுபுரம் விழா தந்திட்ட நல்லதிர்வோடு இப்புத்தாண்டு துவக்கம்கொள்கிறது. இயற்கையும் இறையும் துணையிருந்து அருள்க!

நிகழ்வின் ஒளிப்படங்கள்: மோகன் தனிஷ்க்

~

கரங்குவிந்த நன்றியுடன்,

சிவராஜ்

தன்னறம் நூல்வெளி

குக்கூ காட்டுப்பள்ளி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 12, 2022 10:33

வேதாளம் – கடிதம்

வேதாளம் [சிறுகதை]

அன்பு ஜெ,

கடந்த வருடம் விக்ரமாதித்யனோடு முடிந்தது என்றால் புத்தாண்டு வேதாளம் சிறுகதையோடு ஆரம்பித்தது. வெடிச் சிரிப்புடனேயே தான் கதையை வாசித்தேன். இந்த கதாபாத்திரங்கள் எல்லாருமே என் புனைவுலகத்தில் மிகத்துலக்கமாக துலங்கி வருவதால் இப்பொழுதெல்லாம் அவர்களின் சிறு அசைவுகள், உணர்வுகள், பேச்சுமொழியின் ஒலி, தொனி ஆகியவையையும் துல்லியமாக என்னால் காண முடிகிறது. சடாட்சரத்தின் மொழியின் வழி அவனது உடல்மொழியையும், சிந்தனை ஓட்டத்தையும் பின் தொடர முடிகிறது.

பாயிண்ட் த்ரீ நாட் த்ரீ என்ஃபீல்டை வேதாளமாக சித்தரிக்க ஆரம்பித்து அதை மரபின் குறியீடாக விலக்க முடியாததன் குறியீடாக நீங்கள் சொல்லிக் கொண்டு வந்ததை பார்த்துக் கொண்டிருந்தேன். மெல்ல மெல்ல திருடன் ஒரு வேதாளமாக மாறும் ஒரு தருணத்தை நோக்கி கதை செல்வதாகப்பட்டது. இறுதியில் அவன் பிணமாகி வேதாளமாகி நின்றிருந்த தருணம் கதையில் ரைஃபிளைப் பற்றிச் சொன்னதையெல்லாம் மீள்வாசிப்பு செய்தேன்.

வேதாளத்திற்கு நிகராக இங்கு விக்ரமாதித்யனும் சடாட்சரத்தின் வழி சொல்லப்படுகிறான். ”நீ என்ன விக்ரமாதித்யனாவே?” என்பதிலிருந்து “அவனாவது காடாறுமாசம் நாடாறுமாசம்… ஏலே நமக்கு எப்பமும் காடுல்லா?” என்பது விக்கி அண்ணாச்சியைத்தான் நினைவுறுத்தியது.

ஒரு பக்கம் சடாட்சரத்தின் வழி உலகியலையும், மரபைப் பிடித்துக் கொண்டிருப்பவனாகவும், அதிகாரத்தை வியந்தோதுபவனாகவும், அன்றாடங்களில் சிக்கிக் கொள்பவனாகவும், பகடியும் கொண்டவனாக “விக்ரமாதித்யன்” பிம்பம் காட்டப்படுகிறது. “அது எப்பமும் அப்டியாக்கும். பூமிதாங்குத ஆமையாக்கும் கான்ஸடபிளுன்னு சொல்லப்பட்டவன். அவனாக்கும் கடைசி. அவனுக்க மேலேதான் அம்பிடுபேரும் இருந்து பேளுவாங்க…” அத்தகைய அழுத்தமான வாழ்க்கை. ஒரு வகையில் திறமையான கச்சிதமான வாழ்க்கை.

திருடுவது ஒரு கலை என்பார்கள். அதுவும் தாணப்பனின் திருட்டு என்பது ஒரு சுவாரசியமானது. அவன் கலைஞன், ரசிகன், வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்பவன். திருடனின் வழி எழுந்து வந்த வேதாளத்தின் சித்திரம் இப்படி இன்னொருபுறம்.

//மீண்டும் வந்த பாதையை பார்த்தார். அவ்வளவு தூரம் தூக்கிக்கொண்டு மேலேற முடியாது. தூரம் கூடுதலென்றாலும் இறங்குவது எளிது. தூக்கிக்கொண்டு மெல்ல மெல்ல இறங்கி தார்ச்சாலையை அடைந்தால் யாரையாவது பார்க்கமுடியும்.// என்ற இறுதி வரிகளும் கூட வெளிச்செல்லலா வீடு திரும்புதலா என்று  வியக்க வைக்கும் நம்பியை நினைவுபடுத்தியது.

இறுதிச் சித்திரத்தில் ஏனோ விஷ்ணுபுர விழாவில் பேசிய சோ தர்மன் ஐயாவின் உரையும் உங்கள் உரையும் நினைவிலெழுந்தது. கவிஞர் விக்ரமாதித்யனை வேதாளமாகத் தூக்கிச் சுமப்பவர்கள், அவர் தூக்கி சுமக்கும் வேதாளமான விடயங்கள், மனிதர்கள் என சித்திரம் விரிந்தது.

“அலைகடல் நடுவண் ஓர் அனந்தன்
மலையென விழி துயில் வளரும் மாமுகில்”

என்ற கம்பனின் வரிகள் நினைவிற்கு வந்தது. அதையொட்டி நண்பர்களுடன் செய்த சிறு விவாதமும் நினைவிலெழுந்தது. அரிதுயில்/யோக நித்திரை நிலையை மையமாகக் கொண்டால் அறிந்து இருக்கும் நிலையை ஒரு முனையாகவும் அறிதல் ஏதுமில்லாது துயிலும் நிலையை இன்னொரு முனையாகவும் கொள்ளலாம். இதை நான் உலகியல் எனத் திகழும் ஒரு முனைக்கும், கலையின் மறு முனையில் மதுரத்தின் உச்சத்தில் பித்து நிலையில் இருக்கும் இன்னொரு முனையையும் ஒப்பிட்டுக் கொண்டேன். இவை இரண்டுக்குமிடையேயான ஊசலாட்டத்தில் இருந்தால் மட்டுமே நிதர்சன வாழ்க்கையில் தொடர்ந்து செயலாற்ற முடியும். இதை நீங்கள் எப்போதுமே சொல்லிக் கொண்டு வருகிறீர்கள்.

//”ஒருத்தனுக்கு தண்டனை குடுக்கணுமானா இன்னொருத்தனுக்க பொணத்தோட அவனை சேத்து கட்டி தூக்கி ஆத்திலே போட்டிருவாங்க. அவன் பொணத்தோட நீந்தி கரைசேந்தா தப்பிச்சிடலாம்…”// என்ற வரிகளிலும் கூட இதையே கண்டேன். வாழ்வின் கரை சேருவதற்கு இந்த ஊசலாட்டம் அவசியம்.

கலையின் மதுரத்தின் உச்சத்தில் சடாட்சரத்தின் வரிகளான “சோறு திங்கனும்லா, சாவ முடியாதுல்லா” என்ற வரியே நம்மை இயக்க முடியும். ஒரு கால் உலகியலில் இருக்க வேண்டுமென எடுத்துக் கொள்கிறேன். இந்த வருடத்தின் இனிமையான ஆரம்பம். அருமையான கதை ஜெ. நன்றி

பிரேமையுடன்

இரம்யா.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 12, 2022 10:31

ஆயிரம் ஊற்றுகள் -கடிதம்

ஆயிரம் ஊற்றுகள் மின்னூல் வாங்க

அச்சு நூல்கள் வாங்க

https://www.vishnupurampublications.com/

அன்புள்ள ஜெயமோகன்,

முதலில் மலையரசி கதையைத்தான் படித்தேன். அதிலே பராசக்தியின் இரு தரிசனங்களை விரித்துக் கொள்ளமுடியும். வாசகர் கடிதத்தை படித்தபின் லட்சுமியும் பார்வதியும் கதையை படித்தேன். இரண்டும் இரட்டைக் கதைகள். ஒரு தெய்வத்தின் இரு முகங்களை நமக்கு காட்டும் இரு ஆடிகள். ஒருவள் கனிந்த அன்னை, இன்னொருவள் துணிந்த அன்னை. இருவரும் ஒருவரே. தன் மக்களை காப்பாற்ற தன்னையே அழித்துக்கொள்ளும் அன்னை. தன் மக்களை காப்பாற்ற தன் மகனை அழிக்கும் அன்னை.

இதில் கருணை மகத்தானது? தன்னை காப்பாற்ற அத்தனை சாத்தியங்களுமுண்டு. சாத்தியத்தை அடைய மலையளவு தங்கமுண்டு. தங்கத்தை எடுத்தால் வெள்ளையன் கொண்டு போய்விடுவான். தான் அழிந்தாலும் அச்செல்வம் தன் மக்களுக்கு பயன்படவேண்டுமென்று தன்னை அழித்துக்கொள்ளும் கருணையா? தன் மக்களை காப்பாற்ற தன் மகனை அழிக்கும், அதனால் விளையும் இருளையும் தன் மக்களுக்காக தாங்கும் குரூரமா? இரண்டுமே  பெருங்கருணையின் இருமுகங்கள். வெளிப்படும் முகத்தை அவளே தீர்மானிக்கிறாள்.

அக்காள் தன் மக்களுக்காக வெள்ளையனை கெஞ்சுகிறாள். அடுத்த தலைமுறை தன் மக்களுக்காக துணிகிறாள். சுதந்திர வேட்கையின் துவக்கத் தருணம். பொறுமையால் பின் துணிவால் வென்றோம்.

மேல்சொன்னவற்றைத்  தாண்டி கதையை படிக்கும்பொழுது அகத்தில் கோபம் எழுந்தது. வெளியேயிருந்து வந்த வெள்ளையன் நம் தலைமீது செலுத்திய ஆதிக்கம், எப்படிச் சொல்வது? ஒரு எரிச்சல், கோபம், இயலாமை. நம் குலசேகரன்கள் அறமிழந்து  கொலைசேகரன்களாய் மாறியபின் வெளியேயிருந்து வந்த குலசேகரன் வெள்ளையன். இதுவும் பராசக்தியின் ஆடல். அவனும் கொலைசேகரனாய் மாறியபின் குணசேகரன் காந்தி வந்து குலசேகரனானார்.

அன்புடன்,
மோகன் நடராஜ்

அன்புள்ள ஜெ

திருவிதாங்கூர் வரலாறு சார்ந்த கதைகள் நூல்களாக வெளிவந்துள்ளனவா? ஒரு நூலாக வெளிவருமளவுக்கு கதைகள் உள்ளன என்று நினைக்கிறேன். அவை உண்மையில் திருவிதாங்கூர் வரலாறு சார்ந்த கதைகள் அல்ல. வரலாறு எப்போதும் எப்படி அதிகாரத்துடன் சம்பந்தப்பட்ட ஒருவகை புனைவாகவே உள்ளது என்பதை, அப்புனைவுக்குள் ஊடாடும் மானுடரின் உண்மையை நோக்கிச் செல்லும் பாதையைக் காட்டும் கதைகளாக உள்ளன. எவருக்கும் அவை தங்கள் சொந்த வரலாற்றை நோக்கித் திறக்கும் கதைகளாகவே இருக்கும்

ஆர்.ராஜாராம்

ஆயிரம் ஊற்றுகள் முன்னுரை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 12, 2022 10:31

காதலின் நாற்பது விதிகள்

காதலின் நாற்பது விதிகள் வாங்க

காதலின் நாற்பது விதிகள் – எலிஃப் ஷஃபாக் – தமிழில்: ரமீஸ் பிலாலி
– ஓர் அறிமுகம்

நாவல், இரண்டு மையக் கதையோட்டப் பரப்புகளைக் கொண்டுள்ளது. எல்லா என்கிற நாற்பது வயதான பெண், தனது மூன்று‌ பிள்ளைகளுடனும் கணவனுடனும் நார்த்தாம்படனில் வசித்துவருகிறார். மணவாழ்வில் காதல் குன்றியமையும் கணவனின் வேறு காதல் உறவுகளும் அவள் தனக்கே என உருவாக்கி வைத்திருந்த இனிய உலகின் சமநிலையைக் குலைத்துவிடுகிறது.

சலிப்பினாலும் வெறுமையினாலும் அர்த்தமற்றுப் போன வாழ்வைப் புதுப்பித்துக் கொள்ள இலக்கிய முகவம் ஒன்றில் புத்தக மதிப்புரையாளராக, பகுதி நேரப் பணியில் இணைகிறார். அவரது கைகளுக்கு அஸீஸ் ஜகாரா என்கிற நாடோடி புகைப்பட கலைஞர் எழுதிய இனிய துரோகம் (Sweet Blasphemy) என்னும் நாவல் வந்தடைகிறது.

தன் வாழ்விலிருந்து தொலைந்துப் போன அல்லது கண்டடையாத காதலை, எல்லா நாவலின் மையக் கதாப்பாத்திரமான ஷம்ஸ் தப்ரேஸின் நாற்பது காதலின் விதிகள் மூலம் கண்டடைகிறாள். இதுவே நாவலின் கச்சாவாக இருந்தாலும் ஷம்ஸ் – மௌலானா ரூமியின் நட்பும் காதலும் ஆன்மிகத் தேடலும் பேசப்பட்டிருப்பதன் மூலம், நாவலின் தளம் விரிவடைகிறது.

பதின்மூன்றாம் நூற்றாண்டு காலத்தில் வாழ்ந்த ஸூஃபி குருக்களான ஷம்ஸூம் ரூமியும் இனிய துரோகம் என்ற உள்ளமை பிரதியின் மையக் கதாப்பாத்திரங்கள். நாடோடி தர்வேஷாகச் சுற்றிக் கொண்டிருக்கும் ஷம்ஸ், ஞானம் மிகுந்தவரும் மரபைத் தளர்த்திப் பிடிக்கவும் மரபை விட்டு அகலாமலும் இருக்கத் தெரிந்த கலகக்காரராகவும் இருக்கிறார்.

ரூமியோ திருக்குரான், ஷரிஅத், ஹதீஸ் சட்டங்களைப் பேணி வாழ்ப்பவராகவும் மக்களுக்கு அதை அன்றாடம் போதிக்கும் மார்க்க அறிஞராகவும் இருக்கிறார். ஆனால் அவருள் வெறுமையின் கிண்ணம் தனக்கு உணவளிக்குமாறு கதறுகிறது. குடும்பம், பேர், புகழ், சீடர்கள் என அனைத்தும் இருந்தும் உள்ளார்ந்து நிறைவடையாமல் இருப்பவரை நிறைக்கக்கூடிய தளும்பும் பாத்திரமாக ஷம்ஸின் வருகை அமைகிறது.

ஷம்ஸின் வருகையால் வெள்ளிக்கிழமைகளில் மத்றசாவில் போதிக்கும் அறிஞராக சுருங்கியிருந்த ரூமி பிரபஞ்சத்தின் நெடுங்கணக்குகளை நிறைவை உயர்காதலை காலம் நீளும்வரை நிலைக்கச் செய்யும் சொற்களின் அரசனாகிவிடுகிறார். ரூமியின் பிரபஞ்ச கவியுள்ளம் திறப்பதற்கு ஷம்ஸ் என்னும் தர்வேஷின் நட்பு தேவைப்படுகிறது. அது நட்பு என்னும் தளத்தைத் தாண்டி இறைக்காதலின் மானுட வடிவமாக ரூபமெடுக்கிறது.

ரூமிக்கு காதலின் நிழலின் உலகைக் காண, அழகேயான ஜமாலனைக் (இறைவனை) காண ஓர் ஷம்ஸ் அமைந்ததைப் போல் எல்லாவிற்கு நாவலாசிரியன் அஸிஸினால் காதல் மலர்கிறது. அந்தக் காதல் அஸிஸின் மேலேயே மலர்கிறது. இரண்டு காதலும் எப்படி நிறைவடைகின்றன என 484 பக்கங்களில் பேசுகிறது நாவல்.

பகுத்தறிவின் சாத்தியங்களை எட்டிவிட்ட ரூமிக்கு, சிறிதளவு உள்ளுணர்விலும் மையல் வேண்டுமென கற்றுக் கொடுக்கும் ஆசானாக, மேலான காதலான ஷம்ஸ், சித்தரைப் போல் இடைப்படுகிறார். உபநிடதங்களையும் வேதங்களையும் கற்றுத் தேர்ந்த பாரதி, அருந்தவப்பன்றியாக உழல்வதிலிருந்து மீட்டு ஒளியின் தாலத்தில் கூத்தாடும் சக்தியை உள்ளுணர்வினால் கண்டு கொள்ளச் செய்ய குள்ளச் சித்தன் தேவைப்பட்டதைப் போல் ரூமிக்கு நாடோடி தர்வேஷான ஷம்ஸ் தேவைப்படுகிறார். பிடரி முடியிலும் நெருக்கமாக உள்ள இறைவனை அகத்துள் நிறைத்துக் கொண்ட மஸ்தில் (போதையில்) வாழும் ஷம்ஸ், கிறிஸ்துவின் மறுவார்ப்பாகவே காட்சித் தருகிறார்.

தொழுநோயாளி, குடிகாரன், பரத்தை போன்று சமூகத்தால் குற்றஞ்சாட்டப்படும் மக்களின் நண்பராக இருக்கிறார். கிறிஸ்து தேவாலயப் பிரஜைகளால் கல்லெறிந்து கொல்லப்பட இருந்த பரத்தையை, உங்களில் குற்றம் செய்யாதவன் முதலில் கல்லெறியட்டும் என்றுகூறி மீட்டதுபோல ஷம்ஸ், பள்ளிவாசலுக்குள் நுழைந்ததற்காகக் கொல்லப்படவிருந்த பாலை ரோஜா என்னும் பரத்தையை மீட்கிறார்.

திருக்குரான் நான்கு படிநிலைகளில் வாசிக்கப்பட காத்திருக்கிறது. அது ஒவ்வொருவரின் மனவிரிவிற்கு ஏற்றாற் போல விருத்தியடைகிறது என்று ஷம்ஸ் கூறுமிடத்தில் பைபிள் கல், நீர், தேறல் (Stone, water, wine) என மூன்று நிலைகளில் வாசிக்கப்பட காத்திருக்கும் நூல். தனியொருவனின் எல்லைகளற்ற அகத்தின் நூல் வடிவமே பைபிள் என்ற கருத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது. ஷம்ஸ் அதை உறுதி செய்யும்படி, ஒவ்வொரு மனிதனும் குரான் என்கிறார்.

இசுலாமியச்‌ சட்டங்களுக்குள் அடங்காத ஷம்ஸை, மார்க்க வல்லுநர்களுக்கும் மத அடிப்படைவாதிகளுக்கும் பிடிக்கவில்லை. ரூமியிடமிருந்து அவரை விலக்க நினைக்கின்றனர். அது எப்படிச் சாத்தியமாயிற்று? எல்லா எப்படி நாவலாசிரியர் அஸிஸுடன் இணைந்தார் என்பதையும் கூறி நாற்பாதாவது காதல் விதியோடு நிறைவடைகிறது நாவல்.

இசுலாமிய ஸூஃபித்துவ மரபையும் அதன் பயிற்றுமுறைகளையும் அறிய விரும்புபவர்க்கு இந்நாவல் நல்லதொரு அடித்தளமாக அமையும்.

ஸூஃபித்துவக் கோட்பாடுகளைத் தமிழில் தேர்ந்த முறையில் அறிமுகம் செய்துவரும் ரமீஸ் பிலாலி, இந்நாவலைத் தமிழ்செய்துள்ளமையால் மார்க்கம் சார்ந்த சொற்களுக்கும் பெயர்களுக்கும் நாவலின் இறுதியில் இனிய விளக்கமும் கொடுத்துள்ளார். எல்லா சம்பந்தபட்ட அத்தியாயங்களில் நவீனத்துவ மொழியையும் ஷம்ஸ் – ரூமி தொடர்பான அத்தியாயங்களில் செவ்வியல் மொழியையும் இணைத்து இடையூறின்றி படிக்கும் தமிழில் நுண்ணிய அழகியலுடன் தமிழாக்கம் செய்திருக்கிறார் பேராசிரியர் ரமீஸ் பிலாலி.

சமூக-அரசியல் காரணிகள், இறைநேசர்களைக் காலத்தைப் பற்றி எழுதும்போது போதிய அளவு இடம்பெறாதது நாவலின் சிறுகுறை எனலாம். உள்ளடக்கத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளும் போது அது ஒதுக்கப்பட (Negligible) வேண்டிய குறையே ஆகும்.

காதலின் நாற்பது விதிகள், அனைத்துவித உளச்சீற்றத்தையும்‌ தவிப்பையும் காதலைக் கொண்டு எதிர்கொள்ள பலன் தருபவை. கணந்தோறும் புது அர்த்தம் தரக்கூடிய விரிவு நிறைந்தவை. ஆன்மிகத் தேடல் உள்ள அனைவரும் ஏந்த வேண்டிய முக்கிய நூல், இது.

அன்புடன்

இம்மானுவேல்.

சீர்மை பதிப்பகம்
விலை: 590.

ஜின்களின் ஆசான் – சௌந்தர்

ரூமியின் வைரங்கள்

காதலின் நாற்பது விதிகள் பற்றி…

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 12, 2022 10:31

January 11, 2022

புலிப்பாணி

புத்தனாகப் போகிறவன்
அன்பின் கரங்களிலிருந்து
விடுவித்துக்கொண்டு
அடர்கானகம் புகுந்தான்.
ஒரு இறுகிய முஷ்டி
ஒரு கணம் திறப்பது போல
திறந்து
அறிவின் வனம்
அவனை மூடிக்கொண்டது.
அவன் பின்னால்
அவனை
திரும்ப
அழைக்கும் குரல்கள்
கேட்டுக்கொண்டே இருந்தன.
தாயின் குரல்.
தந்தையின் குரல்.
காதலின் குரல்.
மகளின் குரல்.
அவன் தடுமாறினான்.
அவன் கண்ணீர்த்துளிகள்
காட்டு மலர்களைக் கருக்கின.
அவன் தளர்ந்து
ஒரு நதியோரம் அமர்ந்தான்.
அழுதான்.
அவன் அருகே யாரோ அமர்ந்தார்கள்.
ஒரு வன்புலி.
ஆனால் அதற்கு மனிதக்கண்கள் இருந்தன.
அது புழையில்
தன் உருவத்தைப் பார்த்தபடியே
நெடு நேரம் அமர்ந்திருந்தது.
பிறகு அவன் பக்கம் திரும்பி
தன் கைகளைக் காண்பித்தது.
“நீ ஏன் அழுகிறாய்?
இன்னும் அறியவில்லையா நீ?
நகங்களை நீட்டும்முன்பு
புலியின் கை போல்
மென்மையானதொன்று
புவிமேல் கிடையாது”

போகன் சங்கர்

அண்மையில் எழுதப்பட்ட மிகச்சிறந்த தமிழ்க்கவிதைகளில் ஒன்று இது. என்றும் எங்கும் கவிதையின் முதன்மை அறைகூவல் மானுடனின் என்றுமுள தேடல்களையும் தத்தளிப்புகளையும் அவற்றின் விளைவான சிந்தனைகளையும் கொள்கைகளையும் தரிசனங்களையும் தன் அழகியலினூடாக எதிர்கொள்வதே. நாமறிந்த மகத்தான உலகக் கவிதைகளெல்லாம் அவ்வகைப்பட்டவையே. கவிஞன் ஞானியின், தத்துவ அறிஞனின் அருகமரும் தருணங்கள் அவை. தமிழ்ப்புதுக்கவிதையிலேயே அத்தகைய அரிய படைப்புகளின் ஒரு தொகை உள்ளது.

ஆனால் நம்மைச்சுற்றி எழுதப்படும் கவிதைகளில் மிகப்பெரும்பாலானவை மிகமிக எளிமையான அன்றாட உணர்வுகளால் ஆனவை. உறவும் பிரிவுமென, அறிதலும் மயக்குமென இங்கே நடந்துகொண்டிருக்கும் வாழ்க்கையை திரும்ப நமக்கே சொல்பவை. அறிந்தவற்றை அவற்றில் கண்டுகொண்டு, ஆம் நானுமறிவேன் என்று சொல்வதையே இங்கே எளிய கவிதைவாசகர் கவிதையனுபவமென அடைந்துகொண்டிருக்கிறார்கள். உச்சங்கள் என எழும் கணங்களை அடையும் கவிதைகள் அரிதாகிக்கொண்டிருக்கின்றன. மெய்மைநாட்டத்தையும் மெய்மையைத் துறத்தலையும், அறிதலையும் அறிதலின்மையில் அமைதலையும் முன்வைக்கும் ’சற்றே ஆழ்ந்த’ கவிதைகளை எப்போதோதான் வாசிக்க இயல்கிறது.

ஏனென்றால் வாசகர் அறிவை அல்ல, கவிஞனிடமிருந்து தங்கள் அறிதலுக்கொரு சான்றை விரும்புகிறார்கள். அறிந்ததை அறிவதென்பது அறிவல்ல, பலசமயம் அது அறிந்தவற்றைக் கொண்டு கவசங்கள் செய்து அறிதலை தடுத்துக்கொள்ளும் முயற்சிதான். எந்த இலக்கியப்படைப்பும் நாம் சற்றுமறியாத ஒன்றைச் சொல்லப்போவதில்லை. நாம் அறிந்த துளியை பெருக்கி மலையென நிற்கச்செய்வதே இலக்கியத்தின் வழி. நம் புறம் அறிந்தவற்றில் இருந்து நம்மை நம் அகமறிந்தவற்றை நோக்கி படைப்புகள் கொண்டுசெல்கின்றன. அவற்றை உணரும் கூருணர்வு கொண்ட வாசகர் சிலரே எச்சூழலிலும் இருக்க இயலும். ஆகவே பெருவாரியானவர்கள் விரும்புவது ஒருபோதும் கவிதையென ஆவதில்லை. கவிதை ஒரு சூழலின் பொதுரசனையின் எல்லைக்கு நீடுதொலைவு முன்னால் சென்றுகொண்டிருக்கும் வழிகாட்டி விண்மீன்.

கவிதையின் மிகப்பெரிய தடை அன்றாடமே. நாம் அனைத்தையும் அன்றாடப்படுத்தியிருக்கிறோம். அனைத்தையும் புழக்கப்பொருளாக ஆக்கிவிட்டிருக்கிறோம். அன்றாடத்தில் இருந்து கவிதை விலக முடியாது. ஏனென்றால் அதன் வேர் உலகியலில் உள்ளது. இங்கே இன்று என்பதே எந்த மகத்தான கவிதைக்கும் தொடக்கம். இங்கே இன்று என்பதில்லை என்பதனாலேயே மீபொருண்மைக் கவிதைகள் [Metaphisical Poetry ] ஒரு படி கீழானவை என விமர்சகர்களால் கருதப்படுகின்றன.

ஆனால் அன்றாடத்தை அன்றாடத்தில் இருந்து எழுந்து நின்று நோக்கவில்லை என்றால் கவிதை நம் சூழலில் ஒலிக்கும் பலநூறு குரல்களில் ஒன்றென ஆகிவிடும். கவிதையின் சிறப்பென்பதே அது பிறிதொன்றிலாத தன்மை கொண்டிருத்தல்தான். அடிக்கோடிடப்படுகையில் மட்டுமே சொற்கள் கவிதையாகின்றன. தனித்து ஒலிக்கும்போது மட்டுமே கவிதையின்மேல் அர்த்தங்கள் படியத் தொடங்குகின்றன. எளிய கவிதைகள் சலிப்பூட்டுவது அவற்றைப்போல பிற பல உள்ளன என்பதனால்தான். எளிய கதை, எளிய கட்டுரை சலிப்பூட்டுவதில்லை. தனித்தன்மை அற்ற கவிதை கவிதையற்ற கவிதையே.

இக்கவிதை என்றுமுள புதிர் ஒன்றை எதிர்கொள்கிறது. அன்பென்றும் அறிதலென்றும் நாமறியும் இரு மகத்துவங்களும் ஒன்றின் மகத்துவத்தை இன்னொன்று கிழித்துக்காட்டும் விளையாட்டில் இருக்கின்றன.

[புலிப்பாணி, நான் இக்கட்டுரைக்குப் போட்ட தலைப்பு]

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 11, 2022 10:35

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.