Jeyamohan's Blog, page 1037

March 6, 2021

நீர்ச்சுடர் – அவல நகைச்சுவை

இந்தக் கதை பெரும்பாலோனோருக்கு தெரிந்திருக்கும்  என்று  நினைக்கிறேன்.   ஒருவன் தன் வாழ்நாளை ஒரு நிமித்திகரிடம் கணிக்கும்போது நாளை அவன் இறக்கப்போவதாகத் தெரிவிப்பார்.  அவன் தன் ஊழை மாற்றி மரணத்தின் கையிலிருந்து தப்பிக்க எண்ணினான்.  தான் இதுவரை இருக்கும் இடத்திலேயே இல்லாமல் வேறு இடம் சென்றுவிட்டால் மரணத் தேவதை அவன் வீட்டில் வந்து ஏமாந்து போய்விடும் என  எண்ணி கடுமையாக முயற்சி செய்து, விரைவு வண்டியில் பிரயாணித்துவெகுதொலைவில் பலநூறு  மைல்கள்  தாண்டி   வேறு ஒரு ஊருக்கு இரவோடு இரவாக சென்று விட்டான்.  ஆனால், மறுநாள் அவனிருக்கும் இடதிற்கு வரும்  மரணதேவதை, “ஓ  வந்துவிட்டாயா? உன் உயிரை  இன்று இங்கு நான் கவர வேண்டும் என உள்ளது.  ஆனால் நீ வெகுதொலைவில் இருக்கிறாயே என்று  எண்ணினேன்”   என்று சொல்லி அவன் உயிரை கவர்ந்து சென்றது.

நீர்ச்சுடர் – அவல நகைச்சுவை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 06, 2021 10:30

March 5, 2021

கூர் [சிறுகதை]

பையனைப் பிடித்துவிட்டோம் என்று ஸ்டேஷனிலிருந்து போன் வந்தது. நான் டிபன் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். உரக்க, “எங்க ?எங்க ஆளு சிக்கினான்?” என்றேன்.

“முதலிலே இட்டிலிய தின்னுங்க. பிறவு பேசலாம்” என்றாள் ரெஜினா எரிச்சலுடன்.

“இருடி…” என்றபின் “சொல்லுடே தாமஸ்” என்றேன்.

“அண்ணி கோவிச்சுக்கிடுதாங்க போல.”

“ஆமடே, நான் இப்பம்தான் வீட்டுக்கே வந்தேன். நேத்து எஸ்பி கூட்டத்துக்குப் போயிட்டு ஸ்டேஷனிலே எட்டிப்பாத்துட்டு வாறதுக்கு ரெண்டு மணி… கிடந்து கண்ணசரல்லை, அதுக்குள்ள எம்.எல்.ஏக்க விளி.. சொல்லு. பயல எங்க பிடிச்சீங்க?”

”மணிகண்டன் வர்க்‌ஷாப்புக்கு பின்னாலே ஒரு டயர்குடோன் இருக்கு. ஆபிரகாம் முதலாளிக்க பழைய கிறிஸ்டோ ஃபேக்டரி தோட்டம். குடோன்லே பளைய டயர் குமிச்சு போட்டிருக்கான். இப்ப பளைய டயருக்கு வெலை இல்லைல்லா? முன்ன எதுக்காகவோ வாங்கினது, அந்தாலே கெடக்கு. கேஸிலே கெடக்குததனாலே அந்த தோட்டத்துக்க கேட்டை திறந்தே பத்துப்பதினஞ்சு வருசம் இருக்கும். காடுபிடிச்சு கெடக்கு. துருப்பிடிச்ச சாமான் ஏகப்பட்டது உள்ள நெறைஞ்சிருக்கு.”

“நான் பாத்திருக்கேன்.”

“குடோனும் கூரையெல்லம் உடைஞ்சுபோயி இப்ப அப்பன்னுதான் நிக்குது. அந்த குடோனுக்க ஜன்னல்கதவை உடைச்சு ஒரு கூட்டம் சின்னப்பையனுங்க உள்ள போயி ராத்திரி உறங்குத வளக்கம் உண்டு. எல்லாம் ஊரும்பேருமில்லாத்த பொறுக்கிப் பயக்க… பகலிலேயும் அங்க சிலபேரு கிடப்பானுக. ஒதுக்குபுறம் ஆனதனாலே ஆரும் கண்டுகிடுதது இலை. நம்ம கஞ்சா விக்குத லாரன்ஸ் ஒரு துப்பு குடுத்தான்.நாம தேடுதது சின்ன பையன்னாக்க ஒருவேளை அங்க இருக்க வாய்ப்பிருக்குன்னுட்டு. செரின்னு விடியக்காலையிலே போனோம்.”

“ஓகோ” என்றேன்.

“நான் போனிலே விளிச்சேன். நல்லா உறங்குதாருண்ணு அண்ணி சொன்னாவ. அதனாலே நானே போர்ஸ் கூட்டிக்கிட்டு போனேன். நாங்க நாலுபேருதான் போனோம். எஃப்.ஓ.பி பயக்க எட்டுபேரும் உண்டு. குடோனுக்கு கதவு நல்லா பூட்டியிருந்தது. வெளியே வாறதுக்கு ரெண்டு ஜன்னலு மட்டும்தான். அதனாலே ஈஸியா பிடிச்சுப்போட்டோம். பய உறங்கிட்டிருந்தான். இருட்டுலே ஆளை செரியா தெரியாததனாலே உள்ள இருந்த எல்லாவனையும் அடிச்சு ஜீப்பிலே ஏத்திக்கிட்டு வந்தோம்.”

“எத்தனை பேரு?”

”ஒம்பது பயக்க” என்றான் தாமஸ் ”ஒருத்தன் வளந்த ஆளு. ஆனா செரியான கஞ்சாப்பார்ட்டி. அடிச்சா சாவுத மாதிரி இருக்கான்.”

“ஆளு அவன்தானா?”

”அவனேதான். நான் கேட்டப்ப அவனே சம்மதிச்சான். அவன் தான் கொலகாரன்.”

“பயலுக்கு வயசு என்ன இருக்கும்டே?”

“பாத்தா ஒரு பத்துவயசு சொல்லல்லாம். இந்தமாதிரி பயலுகளுக்கு வயசு கூடுதலு இருக்கும். ஆனா எங்க போயி சர்ட்டிபிக்கெட்டு தேட?”

“செரி விசாரிச்சிட்டு இரு, நான் வாறேன். நாம ஆளைப்பிடிச்ச செய்தி இப்ப மேலே யாருக்கும் தெரியவேண்டாம்.”

“செரி… அண்ணிகிட்ட சொல்லுங்க.”

நான் மொபைலை வைத்ததும் ரெஜினா “என்ன கேஸு? அந்த சாராயக்காரனை கொன்ன கேஸா?” என்றாள்.

“ஆமா” என்றேன். “ஆனா ஞானப்பன் இப்ப சாராயக்காரரு இல்லை. அதெல்லாம் பழைய கதை. அவரு கடைசியிலே தொளிலதிபராக்கும். இருந்தாருன்னாக்க எம்.எல்.ஏ மந்திரின்னு ஆயிருப்பாரு. பாவம் நடுத்தெருவிலே கிடந்தாரு”

“ஆமா மேலே ஒருத்தரு உண்டுல்லா?. சாராயம் வித்த பய. அடிதடி கொலை கட்டப்பஞ்சாயத்து… அவன் செய்யாத பாவம் உண்டுமா? அதான் கர்த்தரு கூலி குடுத்திருக்காரு.”

“இஞ்சபாரு, கூலி குடுத்தது கர்த்தரு இல்லை. இவனைமாதிரியே இன்னொரு பெரிய கேடி. அவன் கஞ்சா கடத்துறவன்… பெருங்கொலைகாரன்.”

“சாத்தானை வைச்சுத்தான் கர்த்தர் பழிவாங்வாரு… நமக்கென்ன?”

“நமக்கென்னவா? ஏட்டி நானாக்கும் ஏரியா இன்ஸ்பெக்டர் .கொலைகாரனை புடிக்கவேண்டியவன். எஸ்பி, எம்எல்ஏ, பிசப்பு எல்லாரும் விளிச்சு நம்ம மேலே குதிரை ஏறுதான்.”

“புடிச்சாச்சு இல்ல?”

“ஆமா புடிச்சாச்சு. ஆள அப்பவே பாத்துட்டாங்க. பத்துவயசுப்பையன்…”

“ஆமா, சின்னப்பையன்னுட்டு தினத்தந்தியிலே வந்திச்சே”

“அவரு வாக்கிங் போற எடத்திலே பதுங்கி நின்னிருக்கான். அவரு எப்பமுமே ஜாக்ரதையான ஆளு. ஆனால் இவன் சின்னப்பையன் ஆனதனாலேயே கவனிக்காம விட்டுட்டாரு… சந்தையடி ரோட்டிலே காலம்பற செல்போன் பேசிக்கிட்டே நடந்து போயிருக்காரு. அவருக்க பாடிகார்டு எபநேசர் பின்னாலே வந்திட்டிருந்தான். இந்தப்பயலை பாத்து செல்போனிலே பேசிக்கிட்டே ஒதுங்கி கடந்துபோக பாத்திருக்காரு. சட்டுன்னு ஆன்னு கத்திக்கிட்டே பாய்ஞ்சு நீளமான ஸ்குரூ டிரைவராலே சரியா நெஞ்சிலே குத்திட்டான். ஹார்ட்டை துளைச்சு உள்ள போய்ட்டுது அது… எபநேசர் ஓடி வந்து பிடிக்கிறதுக்குள்ள பக்கவாட்டிலே தோட்டத்துக்குள்ளே பாய்ஞ்சு ஓடிப்போயிட்டான். அவன் வந்து தூக்குறதுக்குள்ள இவரும் போயிட்டார்.”

“இதோட எட்டாம் தடவ சொல்லியாச்சு.”

“இதக்கேளுடி… இது சாதாரண விசயம் இல்லை. மைனர் பையனுங்க கிரைம் பண்ணுறதுண்டு. ஆனா பத்துவயசுப்பையன் வாடகைக் கொலையாளின்னு இப்பதான் வருது… இது சாதாரண விசயம் இல்லை. பையனை புடிச்சாச்சு. ஆனா கேஸ் கோர்ட்டிலே நிக்கணுமே.”

“ஏன்?”

“பையனுக்கு ஏது மோட்டிவ்? கூலி வாங்கிட்டு கொலை பண்ணினான்னு சொன்னா கோர்ட்டு நம்புமா? சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பினாலும் ஒரு ரெண்டு வருசம், அவ்ளவுதான்.”

“அதுக்காகவா சின்னப்பையனுகளை கொலகாரனா அனுப்புறாங்க?”

“அதுக்கும்தான். அதோட பெரிய ஆளை அனுப்பி ஞானப்பனை கொன்னிருக்க முடியுமா? அவரு அலெர்ட் ஆகியிருப்பாரு. எபநேசரு அலெர்ட் ஆகியிருப்பான். சின்னப் பையன்னு நினைச்சேனேன்னு சொல்லி எபநேசரு அப்டி அளுதான்.”

”அந்த ஞானைப்பன் எத்தனை சின்னப் பையனுகளுக்க வாழ்க்கையை அளிச்சாரோ.”

“நீ உடனே அப்டி போ… ஏட்டி இது தொளில் போட்டி. குரூஸ் மிக்கேல் ஆளுவச்சு செஞ்ச கொலை. ஆனா சாட்சி இல்லை. இந்தச் சின்னப் பையனை மிரட்டினா மிஞ்சிப்போனா அவனுக்கு பைசா குடுத்தவன் பேரைச் சொல்லுவான். அதுவும் கோர்டிலே நிக்காது.”

நான் எழுந்து கொண்டேன். தொப்பியை எடுத்தபோது ரெஜினா “இந்த சின்னப் பையனுக்கெல்லாம் அம்மை அப்பன்னு ஆரும் இல்லியா?” என்றாள்.

“இருந்தா தெருவிலே சுத்துவானுகளா? பெரும்பாலும் தெருவுபொம்புளைங்க பெத்த புள்ளைங்க. அந்தாலே வெரட்டி விட்டிருவாளுக. தெருநாய்க்குட்டி மாதிரி அதுகளா வளரும்… வளரவளர கிரிமினலாட்டு வெளையும்” என்றேன்.

“சின்னப்பய, அடிக்காதீங்க.”

“நான் என்ன அடிக்கப்போறேன்? அடியெல்லாம் அவனுகளுக்கு ஒரு விசயமே இல்லை.”

நான் ஸ்டேஷனுக்கு போனபோது மொத்த கான்ஸ்டபிள்களும் பரபரப்பான நிலையில் இருந்தார்கள். தாமஸ் சல்யூட் அடித்து “உள்ள இருத்தி வைச்சிருக்கேன் சார். ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு டெவிலா இருக்கானுக.”

”அந்த கஞ்சாக்கேஸு என்ன ஆளு?”

“அவன்பேரு ஹரிதாஸ். ரெட்டியாரு பையன். பெரிய குடும்பம். அவன் அப்பன் பழைய பள்ளிக்கூட வாத்தியார். இவன் வீட்டைவிட்டு கெளம்பி எட்டு மாசமாவுதாம். அவனே எல்லாம் சொன்னான். அவன் அப்பனுக்கு ஃபோன் போட்டு சொல்லியிருக்கு.”

“வந்தா அனுப்பிருங்க. அது நமக்கு பொல்லாப்பு கேஸு. எங்க மத்த வெளைச்சல் பாட்டிகள்?”

எட்டு பையன்களும் பெஞ்சில் வரிசையாக அமர்ந்திருந்தார்கள். எவரிடமும் பயமோ தயக்கமோ இல்லை. முகங்களில் தழும்புகள். கைகால்களில் சொறி. கிழிந்த டிரௌசர் சட்டை. பரட்டைத்தலை. அந்த கண்களில் இருந்த வன்மம் என்னை கொஞ்சம் பதறச் செய்தது. தேர்ந்த குற்றவாளிகளிடம்கூட கொஞ்சம் பயம்தான் இருக்கும். சிலரிடம் சலிப்பும் சோர்வும் இருக்கும். இந்த வன்மம் எவரிடமும் இருக்காது.

“டேய் எந்திரிச்சு நின்னு அய்யாவுக்கு பேரைச் சொல்லுங்கடே” என்றார் தாமஸ்.

“அப்பமே பேரு சொன்னமே. எல்லாம் எளுதியாச்சுல்லா?” என்றான் ஒருவன்.

“செரிடே மக்கா, நான் கேக்கேன்ல. நீ இன்னொரு தடவை சொல்லு” என்றேன்.

“நீரு எனக்க அப்பனாவே? மக்கான்னு விளிச்சுதீரு?”

”லே, வாயை மூடுலே” என்றான் சாமிதாஸ்.

“என்னைய அடிச்சேன்னு வை, தாயளி என்னைக்கிருந்தாலும் உன் மண்டைய பொளக்காம விடமாட்டேன்” என்றான் அவன்.

“அடிக்கல்லை, சும்மா கேக்குதேன். விசாரிக்குறதுக்காக்கும். உன் பேரு என்ன?”

“ரசினிதாஸ்… அது நான் சொல்லுத பேரு.”

“வேற பேரு உண்டா?”

“எனக்க அம்மை ஒரு அறுதலி மிண்டை. அவ என்னை யாகப்பன்னு விளிப்பா.”

“யாகப்பன் என்கிற ரஜினிதாஸ். வயசு?”

“அது ஆருக்கு தெரியும். நீரு அளந்து பாத்துக்கிடும்”

“உயரத்தை அளந்தா வயசு தெரியுமா?” என்றேன்.

“அப்ப சுண்ணிய அளந்து பாரும்.”

”லேய்” என்று சாமிதாஸ் லத்தியை ஓங்கினான்.

“சாமி” என்றேன். அவன் பின்னால் சென்றான். இன்னொருவனிடம் “நீ சொல்லு, உன் பேரு என்ன?”என்றேன்

“மாணிக்கம்… ”

“அப்பன் பேரு தெரியுமா?”

“நீருதான்.”

எல்லா பையன்களும் சிரித்தனர். கறைபடிந்த பற்களுடன் சிரித்தாலும் சிரிப்பின்போது அவர்கள் அனைவரிடமும் குழந்தைத்தனம் வந்தது.

“நீரு எனக்க அம்மைய ஓத்துட்டு பைசா குடுக்காம ஓடினீருல்லா?”

மீண்டும் அத்தனைபேரும் சிரித்தனர். வேண்டுமென்றே சத்தமாக சிரிக்கிறார்கள் என்று தெரிந்தது.

நான் பெருமூச்சுவிட்டேன். இவர்களை விசாரிப்பதில் அர்த்தமே இல்லை.

”நம்ம கல்பிரிட் ஆராக்கும்?” என்றேன்.

“இவந்தான் சார்” என்று எட்டுபேரில் மிகச்சிறியவனை சுட்டிக்காட்டினான் தாமஸ்.

“இவனா?”

“ஆமா” என்றான் தாமஸ் “லே உன் பேரென்ன சொல்லுலே.”

“ஆரீஸ்” என்றான் பையன்.

“ஆரீஸ் நீயாலே கொலையை செஞ்சே?”

“அவன்தான் செஞ்சான். ஒற்ற குத்திலே சங்கிலே எறக்கிப்போட்டான்…” என்றான் மாணிக்கம். “ஆயிரம் ரூவா குடுத்தாங்க. நாங்க பரோட்டா தின்னு சினிமா பாத்தோம்.”

“மிச்சமுள்ளவனுகளை பேரு எளுதி, போட்டோ எடுத்து, கைரேகையும் கண்ணுரேகையும் பதிவு செய்துட்டு ஹோமிலே கொண்டு போயி விட்டிருங்க” என்றேன்.

“கிரைம் ரெக்காடு பண்ணணுமா சார்.”

“வேண்டாம், சந்தேகக் கேஸ்னு போட்டாப்போரும்.”

”ஏலே வாங்கலே.”

அவர்களின் பெயர்களையும் கைரேகைகளையும் சாமிதாஸ் பதிவுசெய்ய ஆரம்பித்தான். அவர்கள் ஏனோ துப்பிக்கொண்டே இருந்தார்கள். இவர்கள் அனைவருக்குமே இந்த பழக்கம் இருக்கிறது.

‘ஏலே, துப்பாதலே”

”ஆருவே துப்பினது?”

“சாமி அவனுகளை அனுப்பி வைடே”என்றேன்.

“நான் மறுக்கா வாறப்ப ஆளைப்போட்டுட்டுத்தான் வருவேன்” என்றான் மாணிக்கம். “அப்ப நீரு என்னைய பாத்து பயப்படுவீரு.”

கிளம்பும்போது ஒரு சிறுவன் “அப்பா, வாறேன்” என்று என்னிடம் சொன்னான்.

“பைசாகுடுக்காம ஓடின அப்பா வாறன், என்னடே?” என்றான் இன்னொருவன்.

அவர்கள் உரக்கச் சிரித்தபடி அடுத்த அறைக்கு சென்றனர்.

நான் பெருமூச்சுடன் என் பெல்ட்டை கொஞ்சம் இலகுவாக்கிக் கொண்டேன். அந்த சிறுவன் முன் அமர்ந்தேன்.

“ஆரீஸ், உனக்க பேரு ஆரீஸ்தானே?”

“ஆமா.”

“என்ன வயசு?”

“பத்துன்னு சொன்னாங்க.”

“ஆரு.”

”உங்க போலீஸுக்காரன்தான். காலை கவைச்சு நடக்கான்லா? அவனுக்கென்ன கொட்டை வீக்கமா?”

“சார்” என்றான் தாமஸ்.

“இருடே இரு… நானே கேக்கேன்” என்றேன். “செரி ஆரீஸ். நீதான் ஞானப்பனைக் கொன்னே இல்ல?”

“ஞானப்பனா மயிரப்பனான்னு எனக்கு தெரியாது… எனக்கு ஆளை காட்டிக்குடுத்தானுக. அவனை நான் கொன்னேன்.”

“ஞானப்பனை முன்னாலே உனக்கு தெரியுமா?”

“தெரியாது. எனக்கு ஆளைச் சூண்டி காட்டினானுக.”

“யாரு?”

“பைசா குடுத்தவனுக.”

“அவனுக பேரு என்ன, தெரியுமா?”

“பேரு தெரியாது… ஆயிரம் ரூவா குடுத்தானுக.”

“ஆளை பாத்தா காட்டித்தரமுடியுமா?”

“காட்டுதேன். எனக்கு என்ன பயமா?”

“செரி ஆரீஸ். நீ ஞானப்பனைக் கொன்னே இல்லியா?”

“அந்த நாயிக்க பேரு எனக்கு தெரியாதுன்னு சொன்னேனே.”

“இரு” என்றேன். புகைப்படத்தை காட்டி ”இந்த படத்திலே இருக்கிற ஆளைத்தானே கொன்னே?” என்றேன்.

“இவனைத்தான்.”

”ஆயிரம் ரூபாய்க்கு கொன்னே?”

“ஆமா.”

“இது பெரிய குற்றம் தெரியுமா? ஞானப்பன் பெரிய பணக்காரன்.”

“அவன் எவனா இருந்தா என்ன?” என்றான் “இம்பிடு பைசா வச்சிருக்கப்பட்டவன்னு தெரிஞ்சிருந்தா மேக்கொண்டு ஆயிரம் கேட்டிருக்கலாம். போவட்டு…”

“உன்னை தூக்கிலே போடுவாங்க.”

“போடமாட்டாங்க.”

“ஏன்?”

“என்னைய ஜெயிலிலே கூட போட மாட்டாங்க. நான் சின்னப்பையன். ஹோமுக்குத்தான் அனுப்புவானுக. அங்க போலீஸுக்காரனுக தொடைய தடவுவானுக… ராத்திரி கூட்டிட்டு போவானுக.”

”இதை ஆரு சொன்னது?”

“ரவி… அங்க போனான்லா ,அவன்.”

“உனக்கு அப்பன் உண்டா?”

“நீருதான் வே.”

“செரி, அப்பன்னே வச்சுக்க. நான் உனக்கு என்ன பண்ணணும்?”

“ஊம்பும்வே.”

“சார், இவனுக கிட்ட பேசி பிரயோஜனம் இல்லை.”

“இரு… ஆரீஸ், உனக்கு அம்மை உண்டா?”

“அந்த தேவ்டியா பஸ் ஸ்டாண்டிலே செத்து கிடந்தாள்லா?”

“செரி” என்றேன். தாமஸிடம் கண்களை காட்டினேன். அவன் வெளியே சென்றான். நான் மேலும் ஒருவகை அந்தரங்கத் தன்மையை உருவாக்கிக்கொள்ளும் பொருட்டு சற்று அணுகி அமர்ந்தேன். இந்த வழக்கில் ஏதேனும் ஒரு பிடி வேண்டும். இந்தப் பையனுக்கும் ஞானப்பனுக்கும் ஏதாவது தொடர்பை உருவாக்கவேண்டும். ஆனால் இவனை எதற்கும் பயிற்றுவிக்க முடியாது. உண்மையான ஏதாவது தொடர்பை கண்டுபிடித்தால் அதை வைத்து பின்னிக்கொள்ளலாம்.

எவராவது ஒரு மேஜர் ஆளை இதில் சம்பந்தப்படுத்தித்தான் ஆகவேண்டும். இல்லாவிட்டால் கேஸ் எந்தவகையிலும் நிற்காது. தந்தி பேப்பரில்கூட ஒழுங்காக செய்தி போடமாட்டான். இவனை புகைப்படத்தில் பார்ப்பவர்கள் பால்மணம் மாறாத பையன் என்றுதான் நினைப்பார்கள். இவனுக்கு பதினைந்து வயதாவது இருக்கும். தெருவில் வளர்ந்து சத்துக்குறைவான உணவால் நரங்கிப்போன உடல். முகமும் ஒடுங்கிய சின்னஞ்சிறுவனுக்குரியது. இவனைக் கண்டால் மனிதர்களின் அத்தனை மனிதாபிமானமும் பொங்கிப் பெருகும். போலீஸ் பொய்வழக்கு போடும் குற்றவாளிகளாக வசைபாடப்படுவார்கள்.

ஆனால் சிறுவன் கொலைசெய்ததை கண்ணால் பார்த்ததாக ஏற்கனவே எபநேசர் கோர்ட்டிலும் ஊடகத்திலும் சொல்லிவிட்டான். ஞானப்பனின் மனைவியே பத்திரிகைகளில் சிறுவனை வைத்து எதிரிகள் கொலைசெய்தார்கள் என்று சொல்லிவிட்டாள். ஆகவே இவனை முன்வைப்பது ஒன்றும் பிழையில்லை. மேலுமொரு பிடி வேண்டும். சின்னப்பிடி.

“நீ ஞானப்பனை எப்ப முதல்ல பாத்தே?”

“வெள்ளிக்கிழமை.”

கொலைநடந்தது வியாழக்கிழமை. நான் ஒருமுறை ஃபைலை பார்த்துவிட்டு “நல்லா யோசிச்சுச் சொல்லணும். வெள்ளிக்கிழமையா வியாழக்கிழமையா?” என்றேன்

“வெள்ளிக்கிழமை. அதுக்கு அடுத்த வியாழக்கிழமைதான் அந்தாளை போட்டுத்தள்ளினேன்.”

”ஓகோ” என்றேன். “எங்க வச்சு பாத்தே?”

“சர்ச்சு ரோட்டிலே… அவன் சர்ச்சுக்கு போய்ட்டிருந்தான்.”

“ஓ” என்றேன். ஒருவாரம் வேவு பார்த்திருக்கிறார்கள் என்பது புதிய தகவல்.“வேவு பாத்தீங்களோ?”

“என்னது?”

“எப்டி கொல்லுகதுன்னு தடம் பாத்திகளோ”

“இல்ல. என்னைய பணம் குடுத்த தாடிக்காரன் கூட்டிட்டு வந்து ஒரு வீட்டுக்க மாடியிலே உக்கார வைச்சான். அப்ப இந்தாளு காரிலே வந்து எறங்கி சர்ச்சுக்கு நடந்து போனான். நல்லா பாத்துக்க இந்தாளுதான்ன்னு சொன்னான். நான் மனசுக்குள்ள ஆளை குறிச்சுக்கிட்டேன்.”

“அதுக்குப்பிறகு சந்தையடி ரோட்டிலே வேவு பாத்தீங்க”

“இல்ல. சந்தையடியிலே இவன் நடக்கப்போவான்னு சொன்னானுக. நான் சந்தையடி ரோட்டுக்கு தனியாத்தான் போனேன்.”

“எப்ப?”

“மறுநாள்… சனிக்கிளமை”

“அப்ப என்ன பண்ணினே?”

“பாத்துட்டிருந்தேன்.”

“அவனை எப்டி கொல்லுறது, அவனுக்கு காவலா யாரு வாறாங்க, அவங்க கையிலே என்ன ஆயுதமிருக்கு எல்லாம் நோட்டம் விட்டே?”

“இல்ல. நான் என்னத்துக்கு அதெல்லாம் பாக்கணும். சாடி நெஞ்சிலே ஒரு குத்து… நான் ஒருக்கா மேய்ஞ்சுக்கிட்டிருந்த ஒரு எருமைக்குட்டியை ஒற்றைக் குத்திலே சாய்ச்சுப்போட்டேன். சங்கிலே ஸ்க்ரூடிரைவராலே சரியா ஒரு குத்து… சங்கு எங்க இருக்கும்னு எனக்கு தெரியும்.”

“எதுக்கு எருமைக்குட்டியை குத்தினே?”

அவன் கண்கள் இடுங்க புன்னகை செய்தான். “சும்மா”. அப்போது மீண்டும் குழந்தைபோல ஆனான்.

“வேற எதை குத்தியிருக்கே?”

“சும்மா லாரியிலே அரிசியோ சீனியோ கொண்டுபோறதைப் பாத்தா ஓடிப்போயி ஒற்றைக் குத்து குத்திருவேன். ஒளுகிட்டே போகும். லே, ரெத்தம் ஒளுகுதுலே ரெத்தம்லேன்னு சொல்லி சிரிப்போம்”

“ஓகோ…”

“ஒருக்கா எசக்கியேலு சொன்னான், ஏலே பண்ணிய குத்துவியான்னு. நான் பதுங்கி போயி பண்ணியை குத்தினேன். ஆனா பண்ணிய குத்த முடியாது. அதுக்க தோலு வேற மாதிரி. அது குத்துபட்டு ஓடிப்போச்சு. நான் சாக்கடையிலே விளுந்துபோட்டேன்”

“செரி, நீ செரியா குத்துத ஆளு. ஆனா அவனுகளுக்கு காவலுக்கு ஆளிருந்தா வேலை சரியா நடக்காதுல்ல? அதனாலே நீ நோட்டம் பாத்தே, இல்லியா?”

“இல்ல. காவலுக்கு எவன் வந்தா எனக்கென்ன? வளந்த தடிமாடனுங்க ஒருத்தனும் என்னைய பிடிச்சுக்கிட முடியாது. ஒற்றைக் குத்து, அந்தாலே ஓடிருவேன்.”

“அவன் துப்பாக்கி வச்சிருந்தா?”

“அது எனக்க மேலே படாது. நான் ஓடிருவேன்.”

”செரி, அப்ப எதுக்கு ஞானப்பனை சனிக்கிழமை கொல்லல?”

“நான் அவனுக்க முன்னாலேதான் நடந்துவந்தேன். அவன் மூஞ்சியப் பாத்தேன். பேசிக்கிட்டே போனான். அவனை எனக்கு பிடிக்கல்ல. ஆனா கொல்லுத மாதிரி பிடிக்காம ஆவல்ல… அந்தமாதிரி அவனை எனக்கு பிடிக்காம ஆனாத்தான் கொல்ல முடியும். அப்பதான் நல்லா ஓங்கி ஒற்றை குத்து…”

”சரிதான்” என்றேன். “அப்ப, நீ அவரை பாத்துட்டே இருந்தே. அவரு நீ வெறுக்கிற மாதிரி எதையாவது செய்யணும்னு நினைச்சே?”

“வெறுக்குததுண்ணா?”

”அதாவது உனக்கு பிடிக்கவே பிடிக்காத மாதிரி… பாத்ததுமே கொல்லணும்னு தோணுத மாதிரி.”

“ஆமா.”

“அவரு எப்டி இருந்தாரு?”

“வெள்ளை வேட்டி கெட்டி, வெள்ளை சட்டைபோட்டு, ஷூ போட்டுட்டு செல்போனிலே பேசிக்கிட்டே நடந்தாரு.”

“கெட்டவன் மாதிரி இருந்தாரா?”

“தெரியல்ல…”

“சனிக்கிழமையும் எபநேசரு மட்டும்தான் கூடவே இருந்திருக்கான், இல்லியா?”

“ஆமா”

“சனிக்கிழமை நீ அவரை பாத்தே. அவரு உனக்கு ரொம்ப கோவம் வாற மாதிரி ஒண்ணுமே செய்யல்ல. சரியா?”

”ஆமா.”

“என்ன செய்தாரு?”

“போனிலே ஆரையோ திட்டிக்கிட்டு போனாரு. வண்டைவண்டையா கெட்ட வார்த்தை.”

“பொறவு?”

”மறுக்காவும் போனேன்… ஞாயித்துக்கிளமை அவரு சந்தையடி ரோட்டிலே நடக்க வரல்லை. அதனாலே சர்ச்சுக்கு போனேன். அவரு சர்ச்சிலே மாஸ் முடிஞ்சபிறவு தனியா வந்தாரு. உள்ள போயி ஜெபம் செய்துபோட்டு திரும்பி போனாரு.”

“காரிலேயா வந்தாரு?”

“இல்ல நடந்துதான் வந்தாரு.”

“அப்பவும் அவரு உனக்கு பிடிக்காதமாதிரி ஒண்ணும் செய்யல்ல.”

“அந்த தாயளியை எனக்கு பிடிக்கல்ல.”

“அப்ப?”

“ஆனா கோவம் வரேல்ல, அம்பிடுதான்.”

“செரி. திங்கக்கிழமை போனியா?”

“ஆமா, திங்கக்கிழமை காலம்பற சந்தையடி ரோட்டிலே பாத்தேன்”

“அப்பவும் கோவம் வாற மாதிரி ஒண்ணும் நடக்கல்ல?”

“ஆமா…”

“பிறவு?”

”செவ்வாக்கிளமை அவரு வரேல்ல. நான் உச்சைநேரம் வரை காத்திருந்துட்டு திரும்பி வந்தேன். டயர் கெட்டிடத்திலே உறங்கிட்டிருக்கிறப்ப பைசா குடுத்தவன் என்னைய தேடி வந்து ஏண்டே கொல்லல்ல, பயப்படுதியான்னு கேட்டான். பயம் உனக்க அப்பனுக்கு, போவும்வே, உம்மை குத்திச் சாய்ச்சுப்போடுவேன்னு சொன்னேன். பின்ன எதுக்கு கொல்லல்லன்னு கேட்டான். எனக்கு அவனை கொல்லதுக்குண்டான வெறி வரேல்லன்னு சொன்னேன்.”

“அவன் என்ன சொன்னான்?”

“அந்தாளு கெட்டவன், பல சின்னப்பிள்ளைகளை கொன்னிருக்கான்னு சொன்னான். சின்னப்பிள்ளைகளை புடிச்சு வயத்த கிளிச்சு கிட்டுணியை எடுத்து வித்திருக்கான். கண்ணையெல்லாம் நோண்டி வித்திருக்கான். சின்னப்பையனுங்களை கெட்டிப்போட்டு தோலை உரிச்சு வித்திருக்கான். அதையெல்லாம் சொன்னான். மறுக்கா ஐநூறு ரூவா தாறேன்னு சொன்னான்.”

“செரி, நீ என்ன பண்ணினே?”

”புதன்கெளமையும் சந்தையடிக்கு போனேன். அவன் வந்தான்.”

“அப்ப கோவம் வரேல்லியா?”

“இல்ல. நான் பாத்துட்டே இருந்தேன்…”

“அவன் என்ன செய்தான்?”

“போனிலே பேசிக்கிட்டே இருந்தான்… அப்டியே என்னைய தாண்டிப்போனான்”

“நீ கொல்லணும்னு நினைக்கல்ல?”

“வெறி வரேல்ல.”

”அடுத்தநாள் வியாழக்கிழமை… அன்னைக்குதான் கொன்னே.”

“ஆமா”

“அப்ப எப்டி வெறி வந்தது?”

“தெரியல்ல. நான் அவனுக்கு எதுக்காலே வந்தேன். அவன் போனிலே பேசிக்கிட்டே வந்தான். அவன் பக்கத்திலே வந்தப்ப சட்டுண்ணு எனக்கு ஒர்ரே வெறி வந்துது. டீசலிலே தீ பற்றி எரியும்லா, அந்தமாதிரி. பாய்ஞ்சு குத்திச் சாய்ச்சுப்போட்டேன். அந்தாலே ஓடிட்டேன்.”

நான் பார்த்துக்கொண்டே இருந்தேன். அவன் எழுந்து “ஒண்ணுக்கு வருது” என்றான்.

“தாமஸ்” என்றேன்.

தாமஸ் வந்தான்.

“இவனை பாத்ரூம் கூட்டிட்டுப் போ” என்றேன் “பாத்து…. இதெல்லாம் முன்னபின்ன யோசிக்காத கூட்டம். வெலங்க அவுக்கவே அவுக்காதே”

”சரி சார்.”

அவன் கையில் விலங்கிட்டு தாமஸ் கூட்டிப்போனான். நான் என் இருக்கைக்கு வந்து ஒரு சிகரெட் பற்றவைத்துக்கொண்டேன்.

இந்த வழக்கில் ஒரு ’அடல்ட்’ வேண்டும். யாராவது சின்னக்குற்றவாளியை சிக்கவைத்து கேஸ் சமைத்துவிடலாம். ஆனால் அவனுக்கும் ஞானப்பனுக்கும் இடையேயான தொடர்பை நிரூபிக்க முடியாது. அது கோர்ட்டில் நிற்காது.

ஒரு நல்ல கான்ஸ்பிரஸி வேண்டும். அது இல்லாமல் இதை மேலே கொண்டுபோகவே முடியாது.

“சர், எபநேசர் வந்திருக்கான்” என்று ராமதாஸ் சொன்னான்.

“வரச்சொல்லு.”

எபநேசர் வந்தான். வணக்கம் சொல்லிவிட்டு பவ்யமாக நின்றான். வழக்கமான அடியாள். கருங்காலிக்கட்டை போல உடல். எப்போதோ அடிபட்டு உடைந்த மூக்கு சப்பையாக தெரிந்த மொண்ணை முகம். மங்கலான சிறிய கண்கள் நேருக்குநேர் பார்ப்பதில்லை. அறிவு குறைவானவன், அதனாலேயே விசுவாசமானவன். பதினெட்டு ஆண்டுகளாக ஞானையா கூடவே இருப்பவன். பல அடிதடிகள் ,கொலைகள் அவன் கணக்கில் இருந்தாலும் ஞானையா அவனை ஒருநாள்கூட ஜெயிலில் இருக்க விட்டதில்லை.

நான் தாமஸை அழைத்தேன். “இந்தாளாலே அடையாளம் காட்ட முடியுதா பாரு” என்றேன்.

“வாரும்வே” என்றான் தாமஸ்.

அவர்கள் உள்ளே சென்றார்கள். நான் எபநேசரையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவன்தான் கொலையின் முக்கியமான சாட்சி. கண்ணால் கண்ட சாட்சி. கொன்றவன் சின்னப்பையன் என்று திரும்பத்திரும்ப எல்லா இடங்களிலும் சொன்னவன். அவன் அப்படி மாறாமல் சொல்லுவான் என்று தெரிந்தே அவர்கள் ஞானையாவை கொல்ல அவன் அவர் கூடவே இருக்கும் வேளையை தேர்வுசெய்திருக்கிறார்கள். கேஸில் ஒரு அடல்ட் கொலையாளியை உள்ளே கொண்டுவர முடியாமலிருக்கும் முக்கியமான தடையே எபநேசர்தான்.

தாமஸ் வெளியே வந்தான். என்னை பார்த்து தலையை அசைத்தான்

எபநேசர் பின்னால் வந்தான்.

“என்னவே, அவனா?” என்றேன்.

“ஆமா சார். எட்டுபேரிலே அவனை பாத்ததுமே சொல்லிட்டேன். சார், இந்தபய ரெண்டுமூணு தடவை அந்த ரோட்டிலே லாந்துறதை பாத்திருக்கேன். அதனாலேதான் அன்னைக்கு கொஞ்சம் அசால்டா இருந்துபோட்டேன்.”

”செரி உக்காரு” என்றேன்.

“இருக்கட்டும் சார்.”

“உக்காருடே.”

அவன் முக்காலியில் அமர்ந்தான்.

“ஞானப்பன் எப்பமும் ஃபோனிலே பேசிக்கிட்டேதான் நடக்கப் போவாரு இல்லியா?”

“ஆமா சார்.”

“என்ன பேசுவாரு?”

“சில விசயங்களை வீட்டுக்குள்ளே பேசமுடியாது இல்லியா? அண்ணிக்கு இப்பல்லாம் ஒண்ணும் பிடிக்கிறதில்லை. பிள்ளைக வளந்துபோச்சு. மூத்தவ டாக்கிட்டராக்கும். இப்ப ரெண்டாம் பிரசவத்துக்கு வீட்டுக்கு வந்திருக்கா… அதனாலே வீட்டிலே பலதும் பேசுறதில்லை.”

”பலதும்னா?”

“இந்தமாதிரி உள்ள விசயங்கள்…”

“நீ பேசுறதை கேக்குறதுண்டா?”

“ஆமா, செவியிலே விளுமே.”

“கொலை நடக்கிறதுக்கு முன்னாலே அந்த வெள்ளிக்கிழமை என்ன பேசினார்னு தெரியுமா?” என் கையில் ஞானப்பனின் செல்பேசி உரையாடலின் எண் பதிவுகள் இருந்தன.

“அதெப்பிடி சார்?”

“நம்பர் சொல்லுதேன்”

நான் எண்ணைச் சொன்னதும் எபநேசர் “அது மத்தவன்சார்… பெருமாள்புரம் மணி. அவனுக்க கையிலே ஒரு நல்ல தொகை நிக்குது. பளைய சரக்கு குடுத்த கணக்கு. கேட்டா அல்லுசல்லு சொல்லுதான். அவனை எக்குதப்பா பேசிட்டு இருந்தாரு… வெட்டி வகுந்திருவேன்னு சொன்னாரு. போனை நிப்பாட்டிக்கிட்டு எங்கிட்ட அவனுக்கு ஒருமாசம் டைமு குடு. இல்லேன்னா ஆனதை செஞ்சிரவேண்டியதுதான்னு சொன்னாரு”

“செரி, இந்த நம்பர்? இதிலேதான் சனிக்கிழமை பேசியிருக்காரு”

அவன் நம்பரை ஒருமுறை நினைவுகூர்ந்து “இது நம்ம ஆளுசார். அப்பப்ப சின்ன வேலைகள் நமக்காகச் செய்வான். கொலை வரை போகமாட்டான். சும்மா அடிக்கிறது, சீவுறது இந்தமாதிரி…”

“அவன் கிட்ட என்ன பேசினாரு?”

“ஒரு வேலை சொன்னாரு. சாமித்தோப்பு பக்கம் ஒருத்தன்… அலம்பு பார்ட்டி. அவனை கொஞ்சம் பயமுறுத்தி வைக்கணும்டேன்னு சொன்னாரு.”

“இது திங்கள்கிழமை பேசினது.”

அவன் அந்த எண்ணை தன் செல்பேசியில் டயல்செய்து அதன் ஆளைப்பார்த்துவிட்டு “இது கோரோயில் பாலு… இவனும் ஒரு வில்லங்கப் பார்டியாக்கும். ஒரு கெட்டிட விசயமா கொஞ்சநாளாகவே அடியும்பிடியும் போயிட்டிருக்கு. இவனையும் விசயம் முடியல்லேன்னா இந்த ஆண்டே போட்டுத்தள்ளணும்னு சொல்லுவாரு. அன்னைக்கு நல்ல வாய்ச்சண்டைதான்…”

நான் ”புதன்கிழமை அதே நம்பர்” என்றேன்.

”ஆமா, அவன் அடங்கமாட்டேன்னு நின்னான். அவன் மத்தபார்ட்டிகளை தேடிப்போயிருவானோன்னு பயந்தாரு. வவுந்திருவேன்லேன்னு சொல்லி மெரட்டினாரு.”

“செரி, இது அவரு சாவுறப்ப அந்த நேரத்திலே பேசிட்டிருந்த நம்பர்.”

அவன் அந்த எண்ணை பார்த்தான். “இது தெரியல்லியே” என்றான். அந்த எண்ணை டயல்செய்து பார்த்தான். “நம்ம கணக்கிலே இந்த நம்பர் இல்ல பாத்துக்கிடுங்க”

நான் அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன். எனக்குள் முடிவுசெய்துவிட்டிருந்தேன். இவன் சாட்சி அல்ல, இவன்தான் முதன்மைக் குற்றவாளி. ஞானப்பனைக் கொன்றது இவன் என்றுதான் வழக்கை ஜோடிக்கவேண்டும். சிறுவன் குத்திவிட்டு ஓடினான். ஆனால் அது ஆழமான காயம் அல்ல. ஏனென்றால் அவன் சிறுவன். அந்த ஸ்க்ரூ டிரைவரை எடுத்து மறுபடியும் ஆழமாக குத்தியவன் எபநேசர்தான். எபநேசருக்கு ஞானப்பனிடம் பணம் கொடுக்கல்வாங்கல் இருந்தது. அதனால் பகை இருந்தது. அதுதான் கதை. இன்னொருவரை உள்ளே கொண்டுவராமலேயே கேஸை முடித்துவிடலாம்.

நான் புன்னகைச் செய்தேன். ”தாமஸ்” என்றேன்.

“சர்”

“எபநேசர் கிட்ட ஸ்டேட்மெண்டு வாங்கிக்க. ஆதார், பேங்க் நம்பர், மற்ற டீடெயில் எல்லாம் வேணும்…” இடைவெளிவிட்டு “கைரேகைகளும் கொஞ்சம் வேணும்” என்றேன்.

தாமஸ் புரிந்துகொண்டான். புன்னகைத்து “சரி சார் ” என்றான்.

“வாறேன் சார்” என்று எபநேசர் எழுந்துகொண்டான்

“அந்த நம்பர் எங்களுக்கு தெரியும்” என்று நான் சொன்னேன். “அது அவருக்க மகளுக்க நம்பர். பிரசவத்துக்கு வந்திருக்காள்லா, அவ”

“ஆமா சார்… அவரு அவகிட்டதான் பேசிட்டு வந்தார். அவருக்க பேரனுக்க கிட்ட போனை குடுக்கச்சொல்லி அவனை போனிலே கொஞ்சிக்கிடே வந்தாரு… பேரனைக் கொஞ்சுறப்ப தன்னை மறந்திருவாரு. பச்சைப்புள்ளை மாதிரித்தான் இவரும் பேசுவாரு. அப்டி சத்தமா கொஞ்சிட்டு வந்தாரு… செரியா அப்பதான் இந்த நாயி பாய்ஞ்சு குத்திப்போட்டுது…”

“செரி போவும்” என்றேன். பெருமூச்சுடன் கால்களை நீட்டிக்கொண்டேன்.

எபநேசர் வணக்கம் போட்டுவிட்டுச் சென்றான். தாமஸ் என்னிடம் “எளுதிக்கிடலாமா சார்?” என்றான்

“வேறவளி? அந்தாள் போயிட்டான். இவன் இப்டியே வெளியே இருந்து என்ன செய்யப்போறான்?” என்றேன்.

***

 

6. யட்சன் [சிறுகதை] 5. கந்தர்வன் [சிறுகதை] 4.குமிழிகள் [சிறுகதை] 3.வலம் இடம் [சிறுகதை] 2.கொதி[ சிறுகதை] 1.எண்ணும்பொழுது [சிறுகதை]
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 05, 2021 10:35

நாகர்கோயிலில் ஓர் உரை

லக்ஷ்மி மணிவண்ணனின் ‘விஜி வரையும் கோலங்கள்’ கவிதை வெளிவந்தபோதே என் தளத்தில் சுட்டி அளித்து ஒரு குறிப்பு எழுதியிருந்தேன். அழகிய கவிதைச்சித்திரம் அது- கவிதை நிகழ்வை படிமமாக ஆக்கி மேலெழுவதற்கு மிகச்சிறந்த உதாரணம். அக்கவிதையை தலைப்பாகக் கொண்டு வெளிவந்திருக்கிறது அவர் அண்மையில் தொடர்ச்சியாக வெளியிட்டுவரும் கவிதைச் சிறுதொகுதிகளின் நிரையில் மூன்றாவது நூல்.

ஐயா வைகுண்டருக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கும் இந்நூலை ஐயா வைகுண்டர் அவதார நாளான மார்ச் 4 அன்று நாகர்கோயிலில் வெளியிட்டார். கவிஞர் விக்ரமாதித்தன், கவிஞர் மதார், எழுத்தாளர் பிகு, எழுத்தாளர் சுஷீல்குமார் ஆகியோருடன் நானும் கலந்துகொண்டேன்.

நண்பர் கே.பி.வினோத் மாலை நான்குமணிக்கு வீட்டுக்கு வந்திருந்தார். அருள், சுஷீல்குமார், ஜி.எஸ்.எஸ்.வி நவீன் ஆகியோரும் வந்திருந்தார்கள். நானும் அருண்மொழியும் சைதன்யாவும் கிளம்பினோம். இரு கார்களிலாக விழா அரங்கை அடைந்தோம். ஐம்பதுபேர் வரை வந்திருந்தனர். அரங்கில் அ.கா.பெருமாள் வந்திருந்தார். நெல்லையிலிருந்தும் பல நண்பர்கள் வந்திருந்தனர்.

நெடுநாட்களுக்குப்பின் பல நண்பர்களைப் பார்க்கமுடிந்தது. என் தளத்தில் சிறுகதை எழுதி அறிமுகமான ஜெயன் கோபாலகிருஷ்ணனைப் பார்த்தேன். அதன்பின் பெரிதாக ஏதும் எழுதவில்லை என்று சொன்னார். எழுத உத்தேசமிருப்பதாக தெரிவித்தார். மதுரையிலிருந்து குக்கூ ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டிருந்த ‘ஜே.சைதன்யாவின் சிந்தனைமரபு’ நூலுடன் வந்திருந்தார்.

விக்ரமாதித்தன் லேசாக தொப்பை போட்டிருந்தார். மதுவை ஒரு ஆண்டுக்கும் மேலாக தொடுவதில்லை என்றார். ஆச்சரியமாக இருந்தது. அவருடைய சிரிப்பு கட்டற்றது. எந்தவிதமான எச்சரிக்கையும் தன்னுணர்வும் இல்லாமல் சிறுவனைப்போலச் சிரிப்பவர். நீண்டநாட்களுக்குப் பின் அண்ணாச்சியைப் பார்ப்பது நெகிழ்ச்சியூட்டும் அனுபவம்.

அன்றுதான் சுஷீல்குமாரின் ’மூங்கில்’ சிறுகதைத் தொகுதி வெளிவந்திருந்தது. சுஷீல் எழுத்தாளராக ஆன நாள். உற்சாகமாக இருந்தார். நூலை சம்பிரதாயம் மீறி அந்த அரங்கிலேயே வெளியிட்டோம். விக்ரமாதித்தன் வெளியிட சுஷீல் பெற்றுக்கொண்டார். விக்கி கையால் ஓரு வாழ்த்து என்பது எந்த எழுத்தாளனுக்கும் நல்லூழ் என்பது என் எண்ணம். அவர் கவிஞர் என்பதற்கும் சற்றுமேல் ஒரு நிறைவான ஆளுமை.

விழாவில் நான் லக்ஷ்மி மணிவண்ணனின் கவிதைகளை வெளியிட்டுப் பேசினேன். அண்ணாச்சியின் சிறப்பான பேச்சுக்களில் ஒன்று. மதார், பிகு இருவருமே சிறப்பாக தயாரித்துக் கொண்டுவந்து பேசினார்கள். லக்ஷ்மி மணிவண்ணனின் உரை அவருடைய வாழ்க்கையனுபவங்களிலிருந்து எழுந்து நேரடியாக, உணர்ச்சிகரமாக வெளிப்பட்ட ஒன்று. ஜி.எஸ்.தயாளன் தொகுத்து வழங்கினார்.

சிறப்பான நிகழ்வு. நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்து விட்டு கிளம்பிவந்தேன். சிலநாட்களுக்கு முன்னரே எடுத்த முடிவுதான், இதுதான் நான் நாகர்கோயிலில் கலந்துகொள்ளும் இறுதிப் பொதுநிகழ்வு. இனி இங்கே கூட்டங்கள் இல்லை, பேச்சுக்களும் இல்லை. அது லக்ஷ்மி மணிவண்ணனின் நிகழ்வாக அமைந்தது நிறைவளித்தது.

விஜி வரையும் கோலங்கள் வாங்க

வெளியேற்றம்- கடிதங்கள்

நாகர்கோயில்- கடிதங்கள்

நாகர்கோயிலும் நானும்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 05, 2021 10:34

குமிழிகள்,கடிதங்கள்

[image error]

குமிழிகள் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

குமிழிகள் உங்கள் ஒரு ஆழமான விவாதங்கள் கொண்ட கதைப்பாணியில் அமைந்துள்ளது. எந்தவகையான அறிவுபூர்வத்தன்மையும் இல்லாமல் வெறும் கதையாகவே அமைபவையே இந்தக்காலத்தில் நீங்கள் எழுதும் கதைகள். ஆழம் அவற்றின் உள்ளே உள்ளடங்கியிருக்கும். ஆனால் திசைகளின் நடுவே, போதி தொடங்கி பிழை போன்ற கதைகள் வரை ஆழமான விவாதங்கள் கொண்ட கதைகள் உண்டு. அத்தகைய கதைகளில் ஒன்று இது.

இந்த வகையான கதைகளில் ஏதேனும் ஒரு தரப்பை நீங்கள் வலியுறுத்துவதில்லை. எல்லா தரப்பையும் சமமாகவே சொல்லிவிடுகிறீர்கள். இதனால் நிலைபாடு எடுக்கும் வாசகர்கள் குழம்பிவிடுகிறார்கள். இதில்கூட இரண்டு தரப்புகள் உள்ளன. ஒன்று, பெண் ஆணுக்கு நிகரான இடத்தை சமூகத்தில் அடையவேண்டும் என்றால் அவள் தன் உடலையும் ஆளுமையையும் ஆணைச்சார்ந்ததாக வைத்துக்கொள்ளக்கூடாது என்னும் நிலைபாடு. அவள் தன்னளவில் முழுமைக்குத்தான் முயற்சி செய்யவேண்டும். அவளுடைய விடுதலை அப்படித்தான் இருக்கமுடியும்

இல்லை, ஆணைச்சார்ந்துதான் அவள் உடல் இருக்கமுடியும் என்றால் அடுத்த கேள்வி அவளுடைய ஆன்மீகம் மட்டும் தன்னியல்பானதாக இருக்கமுடியுமா என்பதுதான். ஒரு பெண் துறவி ஆணுக்கு உரியவளாக இருந்தால்தான் மோட்சம் அமையுமா என்ன? இல்லையே. அப்படியென்றால் லௌகீகத்தில் மட்டும் ஏன் அப்படி என்று வரையறை செய்யவேண்டும்?

அதற்கு எதிராக சாம் சொல்வது அடிப்படையான கேள்வி. அப்படி பெண் தனித்தபாதையில் விடுதலை நோக்கிச் சென்றால் அவள் ஆணின் காமத்தை தவிர்க்கவேண்டியிருக்கும். ஆணும்பெண்ணும் அப்படி தனிப்பாதை தேர்வுசெய்தால் உலகில் காமம் காதல் என்பதே இல்லாமலாகிவிடுமே? அது இயற்கையின் விதி அல்லவா?

இரண்டுமே சரிதான்.இந்த வகை கதைகளில் அந்த மையப்புள்ளியை அடைந்தபிறகு கதை ‘சொல்வது’ என்ன என்று பார்க்கக்கூடாது. நமக்கு பிடித்ததை எடுத்துக்கொள்ளவேண்டும்

எனக்கு படுவது இதுதான். லிலி போன்ற சிலர்தான் அப்படி மீறிச்செல்கிறார்கள். ஜான்சி ராணி லட்சுமிபாய் மாதிரி. பி.டி.உஷா மாதிரி. இந்திராகாந்தி மாதிரி. அவர்கள் ஆணுக்கானது என தன்னிடம் எதையும் வைத்திருக்கமாட்டார்கள். அவர்களின் முழுமை அவர்களே நிரப்பிக்கொள்வதாகவே இருக்கமுடியும்

ஆனால் இந்தக்கதை இருப்பது அதற்கு மேலேதான். அப்படி ஒரு முழுமையை தன்னைத்தானே பெண் அடைவாள் என்றால் அது என்னவாக புரிந்துகொள்ளப்படும் எப்படி ஆணால் எடுத்துக்கொள்ளப்படும் என்பதுதான் கதையே.

எஸ்.

அன்புள்ள ஜெ

குமிழிகள்.இக்கதையில் இரண்டு தொன்மையான படிமங்கள் குறிப்பிட படுகின்றன. வாசிப்புக்காக அவற்றைபற்றி இணையத்தில் தேடினேன்.

ஒன்று: அப்சரஸ். ஈர்ப்பதன் பொருட்டு தங்களின் உருவங்களை மாற்றிகொள்பவர்கள். பொருளுலகின் தெய்வங்கள் என்று குறிப்பிடபடுகிறார்கள். தீரா இளமையும் அழகும் கோரி தவமிருந்து சிவனிடமிருந்து அதை பெற்றார்கள் என்பது தொன்ம கதை.

லிலியும் அதையே செய்கிறாள். தான் தேர்ந்தெடுத்துக் கொண்ட வாழ்க்கைக்கான(role) உருமாறி கொள்கிறாள். தன்னை நோக்கி ஈர்க்கும் உடல். அதற்க்காக அவள் ஆணை மட்டுமல்ல தன்னுடைய காமத்தையே கூட கடக்கிறாள். முதலில் அதில் சாம் க்கு அதில் ஆன்மீகமான இடர் ஒன்றுள்ளதாக படுகிறது. ஆனால் அவனும் இத்தனை காலம் கடந்தும் மர்லின் மன்றோ புகைப்படத்தால் ஈர்க்கபடுகிறான். அதுவும் கையால் சுடுவதை போன்ற புகைப்படம், ஒருவேளை பெண் தன் அழகின் மூலம் ஈர்க்க அல்ல அடக்கவே நினைக்கிறாளோ.

இரண்டு: அபிதகுசலாம்பாலை பற்றியது. தான் வணங்கப்படாததால் பார்வதி தவமிருந்து சிவனின் பாதி உடலை கோரி பெற்று அர்தநாதிஸ்வராவது தொன்மம். அபிதகுஜாம்பாளுக்கு உண்ணாமுலை அம்மன் என்றும் பெயர். சாம் இந்த தொன்மத்தின் வழியாகவே லிலி யை புரிந்து கொள்கிறான். உடலும் அழகும் போன பின்னும் பிறரிடமிருந்து அதே மதிப்பும் வணக்கமும் வியப்பும் செல்வாக்கும் இருந்தால் லிலி இதை செய்யப்போவதில்லை. அப்படி இல்லாததனால் தான் இதை செய்கிறாள்.

இக்கதையில் வட இந்தியா அமெரிக்கவை, தென் இந்தியா வட இந்தியாவை பாவனை செய்கிறது என்று வருகிறது. இதை நாங்கள் சமூகவியலில் படித்திருக்கிறோம். அது எங்களுக்கு sanskritization என்று விளக்கப்பட்டது. அது அடிதட்டில் இருக்கும் சமூகம் பொருளாதாரத்திலும் அதிகாரத்திலும் மேல்நிலையில் உள்ள சமூகத்தின் உடை, வாழ்க்கைமுறை, பாவனைகள், சடங்குகளை தனதாக்கிகொள்ளும் என்பது.

“கட்டிப்பிடித்து முத்தமிடவா முடியும்;

ஒரு காப்பி சாப்பிடலாம், வா.”

என்பது தேவதேவனின் கவிதை.

கதையில் சாமிநாதன் சாம் ஆனதுபோல், லலிதா லிலி ஆனதுபோல். முலைகள் கோப்பைகளாகவும், சிவப்பு வைன் பெண்மையின் சாரமாகவும் ஆகிறது. வைனை கோப்பையில் ஊற்றும் போது குமிழ்கள் தோன்றி மறையும். உடல் என்னும் குமிழ்களை பருகுபவன் வெறும் நுரையையே உண்கிறான், அவன் பெண்மையின் சாரத்தை உண்பதில்லை.

கதைக்குள் ஆணுக்கும் பெண்ணுக்கும் இரு வேறு நிலைகளில் இருந்து விவாதம் நிகழ்கிறது. கதை தொல்காலதிலிருந்து  இன்று வரை மாறாத நியதியை சொல்கிறது.

என்ன தேவதேவனின் கவிதையின் காமத்தில் எதிரே அமர ஒரு பெண் வேண்டும். இக்கதையில் அதுவும் வேண்டியதில்லை. விருப்பமுடைய முலைகள் போன்ற கோப்யையும் பழரசமும் போதும் என்கிறது. ஒரு உன்னதமாக்கல் நிகழ்கிறது. கோப்பையும் பழரசமும் உடலை கடந்த உன்னதமாக்க பட்ட உரையாடல் ஆகிறது.

நன்றி

பிரதீப் கென்னடி.

அன்புள்ள ஜெ

குமிழிகள் சிறுகதை பலவாறாக வாசிக்கப்படுகிறது. அதற்கு வரும் எதிர்வினைகள் ஆச்சரியமூட்டுகின்றன. எங்கள் நட்புக்குழுமத்தில் மிகத்தீவிரமான விவாதங்கள் நடந்தன. என்ன பிரச்சினை என்றால் பலநாள் பேசவேண்டிய கதை. பேசிமுடிப்பதற்குள் அடுத்த கதை வந்துவிடுகிறது

குமிழிகள் கதையில் நான் வாசித்தது இதுதான். எந்த ஒருவிஷயமும் முதலில் ஒரு அப்ஜெக்டிவான பிராக்டிகலான பயாலஜிக்கலான விஷயமாக இருக்கிறது. அது மெல்லமெல்ல இமேஜினேட்டிவாக, சிம்பாலிக்காக ஆகிவிடுகிறது. அழகியலாக ஆகிவிடுகிறது. மார்பகங்களும் அப்படித்தான். அவை பெண் பாலூட்டுவதற்கு தகுதியானவளா என்று அவளை கருவுறச்செய்யும் ஆண் பார்ப்பதற்கும் மதிப்பிடுவதற்கும் உரியவை. ஆகவே அவை பாலுணர்வை அளிப்பவையாக ஆயின. அவை மூடப்பட்டதும் அவை ரகசியமாக ஆயின. கண்ணிலிருந்து மறைந்தன. உடனே அவை கலையாக மாற ஆரம்பித்தன

ஆப்ரிக்க சிற்பங்களில் முலைகள் பற்றி ஒரு வரி கதையிலே வந்தது. ஆப்ரிக்காவில் முலைகளை மூடுவதில்லை. ஆகவே அங்குள்ள சிற்பங்களில் ரொமாண்டிக் சித்திரம் இல்லை. யதார்த்தமான முலைகளை ஆப்ரிக்கச் சிலைகளில் மட்டும்தான் பார்க்கமுடியும். இந்தியாவில் முலைகள் மூடப்பட்டதுமே கற்பனை கட்டின்றி பறக்க ஆரம்பித்தது. இந்தியச் சிலைகளில் ஐடியல் முலைகளுக்கான தேடலே உள்ளது.

அதேதான் இங்கே நடக்கிறது. முலைகள் பெண்ணின் பெர்சனாலிட்டி சார்ந்தவையாக ஆகின்றன. அவை அவளுடைய உடைமைகள் ஆகின்றன. தொடமுடியாதவை ஆகின்றன. எல்லா பெண்களும் அபிதகுசலாம்பாளாக ஆகின்றனர். அப்போது என்னாகிறது? ஆண் காமத்தை கலையாக ஆக்கிக்கொள்கிறான். கனவில் அதை பெருக்கிக்கொள்கிறான். வைன் கிளாஸிலும் படங்களிலும் முலைகளை மறு கண்டுபிடிப்பு செய்கிறான். கதை முடியும் இடம் அதுதான்

எஸ்.ராமச்சந்திரன்

குமிழிகள்- கடிதங்கள்-1
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 05, 2021 10:34

கந்தர்வன் – கடிதங்கள்

கந்தர்வன் [சிறுகதை]

அன்பின் ஜெமோவிற்கு வணக்கம்.

இந்தக் கொரோனா விடையார்த்தி(!) கதைகளைப் படித்து வருகிறேன்.

‘கந்தர்வன்’ ஓர் அற்புதமான, கச்சிதமான சிறுகதை.அதிலும் கன்னியாகுமரியின் வட்டார நடையில் நீங்கள் எழுதும் கதைகளைப் படிப்பதில் ஓர் அலாதி சுகம் எப்போதுமே எனக்குண்டு.இந்த மொழிக்குள்தான் தங்களின் பகடிகள் எப்படிப் பொருந்திப் போகின்றன? இந்தக் கதையை அறையில் நான் படித்துக் கொண்டிருக்கும்போது ஓரிடத்தில் என்னையறியாமல் வெடித்துச் சிரித்து விட்டேன் போல.சமையலறையிலிருந்து எட்டிப்பார்த்த சக தர்மிணி “என்ன? ஜெயமோகனா? ரொம்பதான் பித்துப் பிடிச்சு அலையுறீங்க.”என்று கழுத்தை வெட்டிக்கொண்டு போனாள்.போகட்டும்.

இந்தக் கதையின் ஆன்மாவை எட்டிப்பிடிக்க முயன்று மீண்டும் மீண்டும் படித்தும் நான் வெற்றியடைந்தேனா என்ற சந்தேகம் என்னைப் படுத்துகிறது.

ஊர்ப் பெண்களின் கண்கள் பண்டாரத்தின் உடற்கட்டை மொய்ப்பதைப் படிக்கும்போது வள்ளியம்மையின் சத்தியங்களை முதலில் நம்பத்தான் முடியவில்லை.ஆனால் ‘பண்டாரம் எவரையும் பார்ப்பதில்லை.சோறு தவிர இவ்வுலகில் அவனுக்கு ஆர்வமிருப்பதாகவும் தெரியவில்லை’ என்ற வரிகளைக் கடந்து கதை பயணித்தபோது நம் மனசில் இருந்த சஞ்சலம் நீங்கி பண்டாரம் நம்மை மெல்ல மெல்ல ஆட்கொள்ளத் தொடங்குகிறான்.

மாராயக்குட்டிப்பிள்ளையிடம் அவன் கையளித்து ‘ஊருக்காக செத்தா நல்லதுதான்.இது ஊரு போட்ட சோத்தில வளர்ந்த உடம்பு’ என்று கூறி’ செரி.நல்லா வாழுங்க.. நல்ல படியா நெறைஞ்சு வாழுங்க’என்றதுமே நம் மனசில் அவன் கந்தர்வனாக இறங்கிவிட்டான்.

கதையில் வள்ளியம்மையின் பாத்திரத்தைத்தான் நம்மால் பாம்பென்றும் பழுதென்றும் பிரித்தரியமுடியாமல் மயக்கமடைய வைக்கிறது .முருகப்பன் இறந்துவிட்டான் என்று கூறி அழைத்துவரப்பட்ட வள்ளியம்மை தலையிலும் மார்பிலும் அறைந்து கதறியபடி சிதையருகே ஓடிவந்தவள் பிணத்தைப் பார்த்ததும் திகைத்து ஒரு சொல்லும் பேசாமல் துவண்டு தரையில் குந்தியவரையில்  கதையோட்டத்தில் கரைந்து போகும் நாம் அவள் திடீரென்று சிதையில் பாய்ந்து அவன் உடலைத் தழுவிக்கொண்டதும் நெய்தீ அவள் ஆடைகளைப் பொசுக்கி ‘அவள் உடல் துடிப்பதும் நெளிவதும்’ என்ற க்ளாசிக் வரிகளில் திகைத்து நின்று விடுகிறோம்.

ஆக,அணைஞ்ச பெருமாள் என்ற பெயரை(உண்மையில் யாரையும் அணையாத பெருமாள்) அந்த பாத்திரத்திற்கு சூட்டியது அவன் ஊருக்காக உயிரை அணைந்ததாலா இல்லை வள்ளியம்மை அணைந்ததாலா என்ற கேள்வி அந்தரத்தில் நின்று கொண்டிருக்கிறது.

இப்படிக்குத் தங்கள் அன்புள்ள,

இரா.விஜயன்.

புதுச்சேரி-10.

 

அன்புள்ள ஜெ,

என்னதான் சொன்னாலும் கதை என்பதுதான் இலக்கியத்தின் பேரின்பம். ஒரு செறிவான வாழ்க்கையை அருகே பார்ப்பதுபோன்ற அனுபவம். தத்துவம் சரித்திரம் எல்லாம் சரிதான். கதையை ஒழுங்காகச் சொல்பவன்தான் கதாசிரியன். வலம் இடம் கதை தெளிவான கதை. ஆனால் கந்தர்வன் கதைசொல்லலில் ஓர் உச்சம். எந்த சிரமமும் இல்லாமல் ஓட்டம்மாகச் செல்கிறது.

ஒரு சிறுகதையில் எத்தனை கதாபாத்திரங்கள். எத்தனை ஜாதிகள். கூட்டம்கூட்டமாக மனிதர்கள். ஒரு முழு வரலாற்றுச் சூழலே உள்ளது.ஒரு மையக்கதை ஆற்றுவெள்ளம்போல குப்பை செத்தைகளுடன் செல்கிறது.ஆனால் அதனூடாக மிக நுட்பமாக இன்னொரு கதை ஊடாடிச் செல்கிறது. இப்படித்தான் எழுதமுடியும் வேறெப்படியும் முடியாது என்று சொல்லத்தக்கவகையில் முதல்கதையின்மேல் இரண்டாவது கதை ஏறி அமர்ந்துவிடுகிறது

கதாபாத்திரங்களைப் பற்றி விரிவாகச் சொல்லவில்லை. ஆனால் அத்தனைபேரின் முகங்களும் அருகே தெரிகின்றன. எனக்கு மிக சுவாரசியமாகத் தெரிந்தமுகம் முருகப்பனுடையது. அவன் சந்தேகத்தால் மனைவியை எதிர்த்திசைநோக்கி தள்ளுபவன். மாராயக்குட்டிப்பிள்ளை என்ற சூழ்ச்சிக்கார கிழவர். ஆனால் ஒரு தந்தைவடிவமும்கூடத்தான். பண்டாரத்தை தேர்வுசெய்தபின் அழவும் செய்கிறார். நல்லசிவம் செட்டியார் என்ற சூழ்ச்சிக்காரர், சட்டென்று தன் மகனை கொள்ளிபோடச்செய்து கோயிலுக்கு பாத்தியம் பெற்றுவிடுகிறார்.

நல்லெண்ணையை உள்ளங்காலில் பூசி வழுக்கிவிழுவதிலிருந்து பிரச்சினை வந்தால் ஓடிவிட நினைப்பது, பண்டாரத்தை ஏற்றிவிட்டுவிட்டு ‘நாம சொன்னா அவன் புத்தி எங்க போச்சு?’ என அவனையே வைவது வரை பிள்ளைமாரின் புத்தி. எதிலும் லாபநோக்கம், பிள்ளைமாருடன் ரகசியப்போட்டி என்று செட்டியார்களின் உலகம். இலக்கியம் எழுதப்படுவதே இதற்காகத்தான். நாம் அறிந்தே இருக்காத ஒரு முழு உலகமும் கிளம்பி வந்துவிட்டது. நாம் நம் பண்பாட்டில் ஒரு கட்டத்தில் போய் வாழ்ந்துவிட்டு வந்துவிட்டோம்

ஆனால் அது மட்டும் அல்ல. வரலாறு என்பது எழுதப்படுவது. எழுதப்படாதது பெண்களின் வரலாறு. அகத்தின் வரலாறு. எழுதப்பட்ட வரலாறு வழியாக எழுதப்படாத வரலாறு நோக்கிச் செல்கிறது கதை. அங்கே ஒரு மின்னலைக் காட்டிவிட்டு முடிந்துவிடுகிறது. கதை என்றால் இதுதான். சொல்லச்சொல்ல பெருகிக்கொண்டே போகும் ஒரு பெரிய அனுபவப்பரப்பு

எம்.சந்திரசேகர்

அன்புள்ள ஜெ

அணைஞ்சபெருமாளின் கதாபாத்திரம் ஆரம்பம் முதலே கந்தர்வன். அவன் இந்த உலகைச் சேர்ந்தவன் அல்ல. அவனுடைய தோற்றம் தேவர்களுக்குரியது. கோபுரத்தின் உச்சியில் இருக்கும் சிலைதான் அவன். பார்த்து ரசிக்கலாம், அணுகமுடியாது. அங்கிருந்து கீழே உதிர்ந்து வானுக்குச் சென்றுவிடுகிறான். அவன் நன்றாகச் சாப்பிட்டு எந்தக்கவலையும் இல்லாமல் கால்களை ஆட்டிக்கொண்டு படுத்திருக்கும் காட்சி கண்களை நிறைக்கிறது

வள்ளியம்மையை கவர்ந்தது அவன் உடல் என நான் நினைக்கவில்லை. அவனுடைய கவலையே அற்ற நிலைதான். அந்த தெய்வீகத்தன்மைதான். அவள் கணவன் வியாபாரி. அவள் அவனிடமிருந்து கந்தர்வனுடன் வானம்போக ஆசைப்பட்டதில் ஆச்சரியமில்லை

சி.எஸ்.ராம்

 

அன்புள்ள ஜெ

கோபுரத்திலேறி குதிப்பது என்பது தமிழகத்தின் இடைக்கால வரலாற்றில் ஒரு பெரிய கலாச்சார ஃபினாமினான் ஆகவே இருந்திருக்கிறது. நிறைய குறிப்புகள் உள்ளன. வரிவசூலுக்கு எதிராகவும், கோயிலின் ஊழலுக்கு எதிராகவும், கோயிலை ஆக்ரமிப்பதற்கு எதிராகவும் கோபுரத்தில் இருந்து குதித்திருக்கிறார்கள். நீங்கள் சொல்லும் இதே சம்பவம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் நடந்தது என்று நினைக்கிறேன். சுசீந்திரம் கோயில் கோபுரத்திலிருந்துகூட ஒரு நம்பூதிரி குதித்துச் செத்திருக்கிறார். இது நம் ஊரின் ஒரு ஹராகிரி முறை. அநீதிக்கு எதிராக சாமானியன் எதிர்வினையாற்றுவது இப்படித்தான்.

தமிழகத்தில் நாயக்கர் ஆட்சிக்காலத்தில்தான் இப்படி உயரமான கோபுரங்கள் நிறைய வந்தன. அத்துடன் கோபுரத்தற்கொலைகளும் தொடங்கின. அத்தனை உயரமான இடம் அதற்குமுன் தமிழ்நாட்டில் எங்கும் இல்லை. உயரம் வந்ததுமே வீழ்ச்சியும் வருவது ஒரு ஆச்சரியமான முரண்பாடுதான்.

இந்தச் சரித்திரப் பின்புலம் கதைக்கு மிக அழுத்தமான ஒரு பெரிய அர்த்தத்தை அளிக்கிறது. பெரிய ஒரு கோயிலைச் சுற்றி சிறியதெய்வங்கள் உருவாகிக்கொண்டே இருப்பதைப்போல ஆச்சரியமான நிகழ்வு வேறு கிடையாது

ராஜ்குமார் செல்லையா

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 05, 2021 10:33

பெண்ணெழுத்துக்கள்

பெருந்தேவி

அன்புள்ள ஜெ,

இந்தப் புத்தகக் கண்காட்சி முடிவதற்குள் ஒரு கேள்வி. நீங்கள் நூல்களைப் பரிந்துரை செய்கிறீர்கள். இளம்படைப்பாளிகளின் நூல்களையும், மூத்த படைப்பாளிகளின் நூல்களையும். உங்களுக்கு இலக்கியத்தை கொள்கைகளின் அடிப்படையில் பிரித்துப்பார்ப்பதில் ஈடுபாடில்லை என்று தெரியும்.இருந்தாலும் பெண்ணியம் பற்றி எழுதுபவர்களை நீங்கள் பரிந்துரை செய்வதென்றால் எதைப் பரிந்துரைசெய்வீர்கள்?

எம்.லலிதா

உமா மகேஸ்வரி

அன்புள்ள லலிதா,

நான் இலக்கியத்தை கொள்கைகளின் அடிப்படையில் பிரித்துப்பார்க்கக் கூடாது என நினைப்பவன் அல்ல. கொள்கைகளின் அடிப்படையில் எழுதக்கூடாது என நினைப்பவன். ஏனென்றால் எழுத்து எழுதியபின்னரே தெளிவடையும் ஒரு செயல்பாடு. எழுதித்தெரிந்துகொள்ளவே நல்ல படைப்புக்கள் எழுதப்படுகின்றன. எழுதியபின் உருவாகும் கண்டடைதலே எழுத்தாளனின் கொண்டாட்டம்.

கொள்கைகளின் அடிப்படையில் இலக்கியத்தை வரையறைச் செய்யலாம், அது இலக்கியவிமர்சனத்தின் வழிமுறை. ஆனால் கொள்கைகளின் அடிப்படையில் எந்தப்படைப்பையும் அறுதியாக வரையறைசெய்துவிடக் கூடாது. அது படைப்பைக் குறுக்குவது. ஆகவே எந்த அடையாளத்தையும் கொஞ்சம் ரத்துசெய்துவிட்டே பயன்படுத்தவேண்டும்.

ஏனென்றால் எத்தனை வரையறை செய்தாலும் நல்ல படைப்பில் எப்போதும் கொஞ்சம் மிச்சம் கிடக்கும். என்ன ஆச்சரியமென்றால், கலைப்படைப்பில் அது எதை முதன்மையாகச் சொல்கிறதோ அதற்கு நேர் எதிரான தரப்பும், அதன் மறுப்பும் கவிழ்ப்பும்கூட, பதிவாகியிருக்கும். அது தன்னைத்தானே ரத்துச்செய்யவும் கூடும்.

ஆகவே ஒரு படைப்பை நான் ஒரு உணர்வுக்களமாக, ஒரு விவாதப்பரப்பாக மட்டுமே பார்க்கிறேன். ஒற்றைப்படையாக இருந்தால் என்னால் அதை கலை என ஏற்கமுடியாது. அதை தேவையானவர்கள் எழுதுவதில், தேவையானவர்கள் படிப்பதில், எனக்கு எந்த மாற்றுத்தரப்பும் இல்லை. ஒரு வாசகனாக, விமர்சகனாக அவை எனக்கு அளிக்க ஏதுமில்லை என்று நினைக்கிறேன்.

இக்கோணத்தில் நான் பெண்ணியம் என்று ஒரு படைப்பைச் சுட்டுவேன் என்றால் அது பெண்ணியக்கோணத்தை முன்வைப்பதாக இருக்காது. அது பெண்ணியம் சார்ந்த ஒரு உணர்வுதளத்தை, விவாதக்களத்தை உருவாக்குவதாக இருக்கும். வரையறை செய்யும்போதே மிஞ்சியும் கிடக்கும். தலைசெல்லும் திசைக்கு எதிராக வால்செல்லவும்கூடும்.

இரு படைப்பாளிகளை முக்கியமானவர்களாகச் சுட்டுவேன். உமாமகேஸ்வரிதான் எனது தலைமுறையின் பெண் புனைகதையாளர்களில் முதன்மையானவர். அவருடைய கவிதைகளும் மொழியின் அழகும் உணர்வுத்தளமும் சந்திக்கும் அழகிய வரிகளாலானவை.

ஆழ்ந்த உணர்ச்சிகரம் கொண்ட படைப்புக்கள் அவருடையவை. அவருடைய சிறுகதைகளைப் பற்றி முன்னரும் விரிவாக எழுதியிருக்கிறேன். தொலைகடல், மரப்பாச்சி என்னும் தொகுதிகள் முக்கியமானவை.

யாரும் யாருடனும் இல்லை என்னும் நாவலும் வெளிவந்துள்ளது. இந்தப் புத்தகக் கண்காட்சியில் வம்சி, தமிழினி பதிப்பகங்களில் அவர்களின் நூல்கள் கிடைக்கும்.

சமீபமாக உரைநடைக்குள் வந்துள்ள பெருந்தேவி தமிழின் பெண் கவிஞர்- எழுத்தாளர்களில் முக்கியமானவர். மூன்று தளங்களில் அவர் தமிழ் அறிவுச்சூழலுடன் மோதுகிறார். நாம் அறிந்த வழிவழியாக வந்த படிமக்கவிதை, சித்தரிப்புக் கவிதை, படிமமற்றக் கவிதைகளின் பாணியிலிருந்து மீறிச்செல்லும் எதிர்கவிதைகளை எழுதுகிறார். அக்கவிதைகளுக்கு நேர் எதிர்த்திசையில் சென்று ஸ்ரீவள்ளி என்றபேரில் கற்பனாவாதம் கனிந்த கவிதைகளையும் எழுதுகிறார்.

சமகால அரசியல், சமூகவியல் விவாதங்களில் எப்போதும் விடுபடும் ஒன்றைச் சொல்லி வலுவான ஊடுருவலை நிகழ்த்துபவராக பெருந்தேவி இருக்கிறார். கவிதை என்பதற்கு அப்பால் இது முக்கியமானது. தமிழில் எழுதும் பெண்எழுத்தாளர்களில் தன் கலை, சமூகப்பார்வை ஆகியவற்றைப் பற்றி புறவயமாக விவாதிப்பவர்கள் என வேறு எவருமில்லை. முன்னுதாரணமாகச் சொல்லத்தக்க அம்பைகூட குறிப்பிடத்தக்கவகையில் ஏதும் எழுதியதில்லை.

நான் அரசியல்நிலைபாடுகளை உரக்கச் சொல்வதை குறிப்பிடவில்லை. அடிப்படையான தத்துவப்பார்வையுடன் எல்லா பக்கங்களையும் கருத்தில் கொண்டு உருவாக்கும் விவாதங்களையே குறிப்பிடுகிறேன். எப்போதும் மறுதரப்புடன் விவாதிக்க முனையும் நிதானம் கொண்டவை அவருடைய கட்டுரைகள்.

குறுங்கதைகள்

சமீபகாலமாக பெருந்தேவி புனைகதைகளை எழுதிவருகிறார். அவருடைய குறுங்கதைகள் இணையவெளியில் வெளியாகி விரும்பப்பட்டன. அவை நூலாக வெளிவந்துள்ளன.

இவர்களை பெண்ணிய எழுத்தாளர்கள் என்று சொல்லிவிடமுடியாது. பெண்ணியக்கூறுகள் இவர்களின் புனைவுலகிலும் கருத்துலகிலும் ஆழமாக வெளிப்பட்டுள்ளன, ஆனால் நான் சொல்லிவருவதைப்போல உடனே அவற்றை மறுத்து எதிர்த்திசையில் செல்லும் கூறுகளும் உள்ளன. இவற்றை பெண்ணெழுத்து என்று சொல்லலாம்.

அதைக்கூட, நான் இவர்களின் பேசுபொருளில் பெண் என்னும் பார்வை இருப்பதனால் ஓரு புறவயமான அடையாளமென சொல்கிறேன். உண்மையில் பெண் எழுத்து என்று பெண்கள் சொல்லிக்கொள்கிறார்களே ஒழிய, எழுத்தில் அப்படி எந்த பால் வேறுபாட்டையும் என்னால் காணமுடியவில்லை.

ஜெ

இறந்தவனின்  நிழலோடு தட்டாமாலை ஆடும்போது..

உடல் பால் பொருள்- கட்டுரைகள் பெருந்தேவி

பெருந்தேவி குறுங்கதைகள் ஹைன்ஸ்ஹால் கட்டிடத்தில் வாழும் பேய்

உன் சின்ன உலகத்தை தாறுமாறாகத்தான் புணர்ந்திருக்கிறாய்

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 05, 2021 10:31

கொதி, வலம் இடம்- கடிதங்கள் 3

கொதி[ சிறுகதை]

அன்புள்ள ஆசிரியருக்கு,

வணக்கம்.

ஈஸ்ட்டர் திருவிழாவுக்கான தவக்காலத்தில் இருக்கிறோம். இந்த நேரத்தில் “கொதி” சிறுகதை. திட்டமிட்டு எழுதியதா அல்லது தன்னிச்சையான நிகழ்வா என தெரியவில்லை. மனதிற்கு நெருக்கமான ஒரு புனைவு. இறைவன் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.

ஃபாதர் ஃப்ரெடெரிக் பிரென்னென், ஃபாதர் ஞானையா, ஃபாதர் சூசைமரியான் போன்ற குருக்கள் இன்றும் தேவைப்படுகிறார்கள். ஓதுவதற்காக அல்ல. இருக்கும் உணவைப் பகிர்ந்தளிக்க.

என்றும் அன்புடன்,
லெனி

 

அன்புள்ள ஜெ

நீதியின்மேல் பசிதாகம் உள்ளவர்களாக இருங்கள் என்று விவிலியம் சொல்கிறது. பசி என்பதை ஒரு தவமாகவே  பைபிள் சொல்கிறது. எவ்வளவு உண்டாலும் தீராத பெரும்பசி என்பது  ஒரு பெரிய கொடை. அவர்களுக்கு உணவின்மேல் விருப்பம் குறையாமலேயே இருக்கும். உணவு அவர்களுக்கு எப்போதுமே ருசிக்கும்.

ஃபாதர் ஞானையா உணவின்மேல் பசி கொண்டிருந்தார். அதற்குமேலாக நீதியின்மேல் பசி கொண்டிருந்தார். ஆகவேதான் தன் இதயத்தை கிறிஸ்துவின் தூய ரத்ததால் நிறைக்கவும், தன் ஆத்தும விடுதலையை அடையவும், பரலோக ராஜ்ஜியத்தை சுதந்திரித்துக்கொள்ளவும் அவரால் முடிகிறது.

 

கெவின்

வலம் இடம் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

வலம் இடம் கதை நினைவுகளிலிருந்து நினைவுகளுக்குக் கொண்டுசெல்கிறது. எருமைகள் நம்முடைய வாழ்க்கையிலிருந்து வேகமாக விலகிச்சென்றுகொண்டிருக்கின்றன. இன்றைக்கு எருமை மேய்ப்பது என்பது லாபகரமானது அல்ல. எருமைகளைவிட பலமடங்கு பாலை நவீன ஒட்டுப்பசுக்கள் அளிக்கின்றன. பால் வீடுகளில் உற்பத்திசெய்யப்படுவதில்லை. மாடுகள் பண்ணைகளில் வளர்க்கப்படுகின்றன.

எருமைக்கு ஒரு தாய்மைக்குணம் உண்டு. அது ஒரு ராட்சன அன்னை. எருமையின் கண்களை அதை வளர்த்தவர்கள் மறக்கவே மாட்டார்கள். நான் அந்த எருமையின் சாவையும் அது திரும்பி வந்ததையும்தான் உணர்ச்சிகரமாக வாசித்தேன். எனக்கு அதுவே ஒரு அழியா நினைவு

 

என் குமார்

 

அன்புள்ள ஜெ

வலம் இடம் கதையிலுள்ள ஒரு சின்ன விஷயம் என் நினைவிலேயே நின்றது. பசுவோ எருமையோ வீட்டுக்கு கொண்டுவரப்படும்போது அது வாயில் புல்லுடன் வந்தால் அது மகாலட்சுமியே வருவதுபோல. ஆகவே அது வரும்போது புல்லை கொடுப்பார்கள். ஆனால் கீழே போட்டால் அமங்கலம். இயல்பாக அது நடக்கவேண்டும். இங்கே அந்த செல்லக்குட்டி வாயில் ஒரு செம்பரத்திப் பூக்கிளையோடு வருகிறது. எவ்வளவு பெரிய ஆசி. சொல்லுக்கருப்பட்டி நிறமான அந்த கன்றுக்குட்டியை பார்ப்பதுபோலவே இருக்கிறது. மானசீகமாக கட்டித்தழுவிக்கொண்டேன்

மீனாட்சி ராம்

கொதி -கடிதங்கள்-1

வலம் இடம்- கடிதங்கள்

கொதி- கடிதங்கள் 2

கொதி, வலம் இடம்- கடிதங்கள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 05, 2021 10:31

ஒருமையும் முழுமையும்

அன்புள்ள ஜெ

நலம்தானே?

உங்கள் படைப்புக்களை தொடர்ந்து வாசித்துக்கொண்டிருக்கிறேன். சென்ற 2017ல் நான் கல்லூரிப்படிப்பை முடித்தபோது உங்கள் தளம் அறிமுகமாகியது. அன்றில் இருந்து இன்றுவரை உங்கள் கட்டுரைகள், கதைகளை வாசிக்காத ஒருநால் கூட இல்லை. ஆனால் சென்ற ஆகஸ்ட் வரை வெண்முரசு வாசிக்கவேண்டும் என்று தோன்றவில்லை. வெண்முரசை தொடவேண்டும் என்று நினைப்பேன். சரி போகட்டும் என்றுவிட்டேன். எனக்கு மெச்சூரிட்டி வரவில்லை என்று சொல்லிக்கொண்டே இருந்தேன். ஆனால் சென்ற ஆகஸ்டில் சட்டென்று ஏதோ தோன்றி வாசிக்க ஆரம்பித்து இப்போது முடிக்கப்போகிறேன். முடித்துவிட்டு எழுதலாமென நினைத்தேன். இப்போது எழுதுவது இதுவரை வாசித்தபோது வந்த ஒரு பெரிய தவிப்பையும் தனிமையையும் நீக்கிக்கொள்வதற்காகத்தான்.

வெண்முரசை நான் வாசிக்க ஆரம்பித்தபோது அது ஓர் உற்சாகமான கதையாக இருந்தது. முதலில் எனக்கு ஆச்சரியமளித்தது தொன்மங்களுக்கும் கதைகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுதான். இந்த வேறுபாட்டை யோசித்ததே இல்லையே என்று நினைத்துக்கொண்டேன். தொன்மங்கள் என்றால் சிவன் – தாட்சயணி கதை. கதை என்றால் அம்பை- பீஷ்மர் கதை. ஆனால் அந்தக்கதைகளெல்லாம் ஒன்றை ஒன்று சரியாக சந்திப்பதையும் ஒரு தொன்மம் இன்னொரு கதைக்கு வேறொரு அர்த்தம் அளிப்பதும் மிக ஆச்சரியமாக இருந்தது.வெண்முரசில் இருந்து நான் பெற்றுக்கொண்டது என்றால் இதுதான். கதைகளை தொன்மங்கள் எப்படி தாங்கி நிற்கின்றன என்பது. கதைகள் தொன்மங்களாகின்றன. தொன்மங்கள் மறுபடி கதைகளாகின்றன. யயாதி கதையாக இருக்கிறார். ஆனால் மகாபாரத கதாபாத்திரங்களுக்கே அவர் தொன்மமும் ஆக இருக்கிறார்

வெண்முரசு முழுக்க எல்லா தொன்மக்கதைகளுக்கும் அதற்குமேல் ஒரு கதையர்த்தம் அளிக்கப்பட்டுள்ளது. பாற்கடல் கடைவதுகூட அப்படித்தான் விளக்கப்பட்டுள்ளது. அல்லது இப்படிச் சொல்லலாம். தொன்மம் என்றால் புராணம். கதையாக வருவதெல்லாம் இதிகாசம். இதிகாசம் என்பது புராணம் அல்ல. அதில் வரலாறு உள்ளது இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்துதான் செயல்படுகின்றன. ஒன்றுக்கு இன்னொன்று கூடுதல் அர்த்தம் அளிக்கிறது. வெண்முரசு முழுக்க எப்படியும் நூறு தொன்மங்களாவது கதைகளுடன் பிணைக்கப்பட்டிருக்கும். தொன்மங்களுக்கு ஒரு கற்பனைவீச்சு உள்ளது. கதைகளில் நேரடியான வாழ்க்கை உள்ளது. வெண்முரசு இரண்டையும் பின்னிக்கொண்டே செல்லும் வடிவம் கொண்டது. எழுத எழுத பின்னிக்கொண்டே போவதற்கான புதிய புதிய வழிகளை நீங்கள் கண்டைந்துகொண்டே இருக்கிறீர்கள். அதுதான் இந்த நாவல்வரிசையிலுள்ள சாதனை

நான் வாசிக்க வாசிக்க அடையும் வியப்பு என்னவென்றால் இதிலுள்ள யூனிட்டி தான். நான் இலக்கியத்தில் இதையெல்லாம் கிளாஸிக் கேரக்டரிஸ்ட்ஸ் என்று வாசித்திருக்கிறேனே ஒழிய இப்படி எல்லாம் உணர்ந்ததே இல்லை. நாவல் தொடங்கியதுமே முதற்கனலிலேயே எரிபுகுந்த தாட்சாயணியின் கதை வந்துவிடுகிறது. அவமானப்படுத்தப்பட்ட பெண்மை. அதன் தீயை காண்கிறோம். அந்தப்புள்ளி கடைசிவரை தொடர்கிறது. அம்பை, அம்பிகை, அம்பாலிகை, சத்யவதி, மாத்ரி, குந்தி, காந்தாரி என்று தீக்குள் சென்றுகொண்டே இருக்கிறார்கள். தீயின் மகளாக திரௌபதி வருகிறாள். தீயின் வெப்பம் கொண்டவளாக தபதி வருகிறாள். இப்படி எல்லாமே அற்புதமாக ஒன்றையொன்று நெருக்கமாக காட்டுகின்றன. இப்படி ஒருகதையில் இன்னொரு கதையை கண்டடைந்துகொண்டே இருப்பதைத்தான் வெண்முரசு வாசிப்பின் மிகச்சிறந்த அனுபவம் என்று சொல்கிறேன்

ஒவ்வொரு கதாபாத்திரமும் எப்படி முடியும் என்று முன்பே கண்டுவிட்டு ஒட்டுமொத்தமாகத்தான் ஆரம்பம் முதலே உருவாக்கி வருகிறீர்கள். ஈகோ என்பதன் அடையாளமாக வரும் குந்தி சிறுமியாகவே அப்படித்தான் இருக்கிறாள். அப்படியே வளர்ந்து முழுக்க ஈகோ அழிந்து காட்டுக்குச் செல்கிறாள். அதேபோல ஆரம்பம் முதலே பெருந்தன்மையான அன்னையாகவே காந்தாரி வருகிறாள். எல்லா கதாபாத்திரங்களுக்கும் இருக்கும் அற்புதமான யூனிட்டியும், அதேசமயம் ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்தனியாக தெளிவாக அமைக்கப்பட்டிருப்பதும் எண்ணி எண்ணி வியப்படையச்செய்கின்றன

இப்போதைக்கு என்னுடைய வியப்பை மட்டும்தான் பதிவுசெய்திருக்கிறேன். இன்னும் எழுதவேண்டுமென்றால் நிறைய யோசிக்கவேண்டும். நிறையவே தொகுத்துக்கொள்ள வேண்டும்.

என்.ஆர்.கதிர்வேல்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 05, 2021 10:30

March 4, 2021

யட்சன் [சிறுகதை]

கந்தர்வன் [சிறுகதை]

[ 1 ]

பொட்டல்காட்டில் கட்டப்பட்ட குடிசையில் முருகப்பன் தங்கியிருந்தான். பெரும்பாலான இரவுகளில் அவன் அங்கேதான் தங்குவது வழக்கம். தொலைவிலிருந்து பார்த்தால் இரண்டுபேர் தங்கும்படியான பனையோலைக் குடிசைதான் தெரியும். ஆனால் உள்ளே இருபதடி ஆழத்தில், நாற்பதடிக்கு நாற்பதடி சதுரமாக, பெரிய குழிவெட்டப்பட்டிருந்தது. அது ஒரு நிலவறை

நல்ல உறுதியான சொறிப்பாறையின் விளிம்புகள் சீராக வெட்டப்பட்டு செங்கல்சுவர் போல இருந்தன. அதன்மேல் பனந்தடிகளை நெருக்கமாக அடுக்கி, மேலே புல்பாய் போட்டு மண்பரப்பி, சருகுப்பத்தைகள் விரித்து அந்த பள்ளத்தை மூடி நிலவறையாக ஆக்கியிருந்தார்கள். அந்த சருகுப்பரப்பின் மேல்தான் அந்த சின்ன குடிசை அமைந்திருந்தது. குடிசைக்குள் நுழைந்து மரத்தாலான ஏணி வழியாக நிலவறைக்குள் இறங்கலாம். ஏணியை தூக்கி உள்ளே வைத்து பலகைகளை அடுக்கி அதன்மேல் புல்பாயை விரித்தால் கீழே நிலவறை இருப்பது தெரியாது. அதன்மேல் ஒரு கயிற்றுக்கட்டில்போட்டு அவன் படுத்துக்கொள்வான். துணைக்கு சங்குத்தேவன் வெளியே கையில் வேல்கம்புடன் எந்நேரமும் குந்தி அமர்ந்திருப்பான். அவன் தூங்குவதும் குந்தி அமர்ந்துதான்

தொலைவில் ஆரல்வாய்மொழி வண்டிச்சாலை போயிற்று. பழையசாலையை மங்கம்மாள் பெரியதாக வெட்டி சத்திரங்கள் வைத்து மரம்நட்டு விருத்தி செய்திருந்தாள். சாலையில் இருந்து ஒரு மண்சாலை பிரிந்து சென்று, நீரில்லாத கண்மாய்க்குள் இறங்கும். முருகப்பனுக்கு சரக்கு வரும் வண்டிகள் நாலைந்து சேர்ந்து ஒரு கூட்டமாகவே வரும். அவை பணகுடி கடந்ததும் எண்ணைவிளக்குகளை அணைத்துவிடும். காளைகளின் கழுத்துமணிகளும் அவிழ்க்கப்படும். இருட்டுக்குள் சகட ஓசை மட்டும் கேட்கும். கண்மாய்ச்சாலை விலக்கில் ஆள் நின்றிருக்கும். அவன் ஓசையால் அடையாளம் காட்டியதும் வண்டிகள் ஒதுங்கி பிரிந்து கண்மாய்க்குள் இறங்கி நின்றுவிடும். அங்கிருந்து அரிசிமூட்டைகளை தோள்சுமையாக கொண்டுவந்து நிலவறைக்குள் அடுக்கிவிடுவார்கள். சரசரவென்று ஒருநாழிகைக்குள் நிலவறைக்குள் மூட்டைகளை அடுக்கிவிட்டு வண்டிகளை திருப்பிக் கொண்டுசெல்வார்கள்.

வண்டிகள் அப்படியே திரும்பி ஆரல்வாய்மொழி சுரத்தைக் கடந்து வந்த பாவனையில் காலையில் பணகுடிக்கு வெளியே பொட்டலில் கட்டிப்போடப்பட்டிருக்கும். அங்கிருந்து உதிரிச் சரக்குகளை ஏற்றிக்கொண்டு மதிய வாக்கில் கிளம்பி திருநெல்வேலிக்கும் களக்காடுக்கும் செல்லும். பெரும்பாலும் வாழைக்குலைகள், தேங்காய்கள், வெற்றிலைச்சிப்பங்கள், கருப்பட்டிப் பொதிகள். அவை முந்தையநாள் இரவு அரிசிச்சரக்கு கொண்டுவந்தவை என்பது பல ஆண்டுகளாகவே பணகுடி மக்களுக்கு தெரியாது. ஏனென்றால் ஆரல்வாய்மொழிப் பாதையில் தினம் முந்நூறு மாட்டுவண்டிகள் மலையாளநாட்டுக்குச் சென்று திரும்பி பாண்டிநாட்டுக்கு வந்தன. கேரளவர்ம வலிய தம்புரான் காலம்முதலே அந்தச் சாலை புகழ்பெற்றதுதான். ஆரல்வாய்மொழியில் இருபக்கமும் சுங்கம் வசூலிப்பார்கள். அந்தப்பக்கம் வேணாட்டுச் சுங்கம். இந்தப்பக்கம் மதுரைநாட்டுச் சுங்கம். ஆரல்வாய்மொழி கடந்தால் அந்தப்பக்கம் தோவாளை தாண்டி கோட்டாறு சந்தை. கோட்டாறு கம்போளம் அரிசிக்குப் புகழ்பெற்றது. திருவனந்தபுரம் வரைச் செல்லும் மொத்த தானியமும் அந்த ஒரே சந்தையில்தான் விற்பனையாயிற்று.

நிலவறையில் இறக்கப்பட்ட சரக்குகளை இரவோடு இரவாக தலைச்சுமையாக எடுத்துக்கொண்டு, மலையேறி மறுபக்கம் கொண்டுசென்று இறக்க சுமையாட்கள் இருந்தனர். எல்லாம் அந்தப்பக்கம் ஒசரவிளை, பறக்கை பகுதி ஆட்கள். அதில் எல்லா சாதிகளும் உண்டு. அவர்களுக்கு கூலி என்று கிடையாது. ஒருமூட்டை அரிசி விலை இவ்வளவு என்று சொல்லி விற்பதுதான் கணக்கு. அதன்பின் மூட்டைகளைத் தலையில் சுமந்து ,இரு சுங்கங்களையும் ஏமாற்றி, அந்தப்பக்கம் இறக்கி அங்கிருந்து வண்டிகளில் கோட்டாறு கம்போளத்திற்கு கொண்டுபோனால் அரைப்பங்கு விலை கூடுதல் கிடைக்கும். பதினைந்துநாள் வயலில் மண்சுமந்தால் கிடைக்கும் கூலியைவிட அதிகம்.

ஆனால் எல்லாரும் செய்துவிடமுடியாது. மலையில் வழி தெரிந்திருக்கவேண்டும். கண்குத்தும் இருட்டில் மூட்டையுடன் ஓசையே இல்லாமல் செல்லவேண்டும். வழியில் செந்நாய்க்கூட்டம் உண்டு, யானைக்கூட்டமும் நிற்பதுண்டு. அதைவிட வழிகள் என்பவை மலைப்பிளவுகள். ஓர் இடத்தில் ஒரு காலடி வழி தவறினால் அதன்பின் சுற்றிச்சுற்றி அங்கேயே கிடக்கவேண்டியதுதான். ஆரல்வாய்மொழி மலைப்பகுதி பெரும்பாலும் மொட்டைக்குன்று. ஊற்று இருக்குமிடமே மலையில் வழிதேர்ந்தவர்களுக்குத்தான் தெரியும். செங்குத்தான பாறைமுனம்புகளும் ஏராளம். விழுந்துசெத்தவர்களின் எலும்புகள் கீழே குவிந்து கிடக்கும்.

முருகப்பன் இப்படி அரிசிவியாபாரம் செய்வது அவன் மனைவி வள்ளியம்மைக்குத் தெரியாது. எப்போதுமே பணகுடி அரிசிச்செட்டிகளில் சிலர் செய்துவந்த இரண்டாம் வியாபாரம்தான் இது. அவன் ஆரம்பித்து எட்டாண்டுகள் ஆகின்றன. ஆனால் இப்போது நாயக்கர் நாட்டு வரி நான்குமடங்காக ஏறியபின்னால் பாதிபேர் அதைச் செய்ய ஆரம்பித்துவிட்டனர். பணகுடிப்பொட்டலில் ஐம்பது நிலவறைகளுக்குமேல் இருந்தன. நிலவறை பெருகப்பெருக ஆபத்துதான்.

முருகப்பன் சூதானமாக தொழில்செய்துவந்தான். சரக்கு கொண்டுவருவதும் சரி, மூட்டை கொண்டுபோவதும் சரி, நாலைந்து ஆண்டுகளாக அவனுக்குத் தெரிந்தவர்களாகவே இருக்கவேண்டும். தெரியாதவர்கள் எவரானாலும் அவன் அப்படியே அசமஞ்சமான ஒரு முகம்தான் காட்டுவான். ஊர் கண்ணுக்கு அவன் மாசத்துக்கு ஒரு வண்டி அரிசியை கோட்டாறுக்கு கொண்டுபோய் விற்றுவருவான். அதைப்பற்றி ஒருமாதம் புலம்புவான். எப்போதுமே தரித்திரத்தை நடித்துவந்தான். அழுக்கு வேட்டி அழுக்கு மேல்துண்டு. மூக்குத்தூள் நாறும் மீசை. சலிப்படைந்த பேச்சு. தலைக்கு எண்ணைக்காக எண்ணைச்செட்டி ஆண்டியப்பனிடம் போய் கைநீட்டுவான். அங்கே பேச்சுகேட்டு இளித்து வாங்கி தலையில் பொத்திக்கொண்டு குளிக்கப்போவான்.

அவன் சேர்த்து வைத்த பணம் முழுக்க ஊருக்குள் இருந்த அவனுடைய பழைய கடையில் இருந்தது. அங்கே அவன் அரிசி சில்லறை வியாபாரம் செய்துவந்தான். இரண்டு மூட்டை அரிசிதான் திறந்து வைத்திருப்பான். நயம் அரிசி கையில் காசு ஓட்டம் உள்ளவர்களுக்கு. மோட்டா அரிசி ஏழைபாழைகளுக்கு. அங்கே காலையில் கடை திறந்து நான்கு நாழிகைக்குள் மூடிவிடுவான், அதுவும் ஒரு கண்துடைப்புதான். அங்கே அரிசியில் பாதி கடனாகத்தான் போகும். கடைக்குள் சுவரில் ஓட்டைபோட்டு பொந்தில் பொன்னாக மாற்றி பணத்தை வைத்திருந்தான்.

யாருமே இல்லாதபோது கடையை உள்ளிருந்து பூட்டிவிட்டு அவன் பொந்தை திறந்து பொன்நாணயங்களை எடுத்து எண்ணிப்பார்ப்பான். பொன்னை தவிர எதையும் அவன் நம்பவில்லை. முன்பெல்லாம் மதுரையின் நாயக்கர் வராகன்கள். அதன்பிறகு இப்போது கொஞ்சநாளாக தூத்துக்குடி பறங்கிப்பொன் நாணயங்களையும் சேர்த்து வைத்திருந்தான். அவற்றை எண்ணி எண்ணி வருடி மகிழ்ந்தபின் திரும்ப வைத்துவிடுவான். அவை கூடிக்கொண்டே இருந்தன. முட்டையிட்டு பொரித்து பெருகுபவைபோல.

முருகப்பன் காலையில் நிலவறைக்குமேல் குடிலில் தூங்கி எழுந்து கோவேறுகழுதையில் ஏறி பணகுடிக்கு சென்றான். வீட்டுக்குச் சென்று துண்டை எடுத்துக்கொண்டு ஆண்டியப்பனின் எண்ணைச் செக்குக்குச் சென்றான். செக்கு ஓய்ந்திருக்க ஆண்டியப்பனின் வீடும் பூட்டியிருந்தது. எண்ணை இல்லாமலேயே குளத்துக்குச் சென்று குளித்துவந்தான். ஊரே பரபரப்பாக இருந்தது. திருக்கணங்குடிக்கு பெரியநாயக்கர் விஜயரங்க சொக்கநாதர் வருகிறார் என்று அவன் நினைவுகூர்ந்தான். காராய்மைக்காரர்களும் கரைவேளாளர்களும் கிளம்பிச் சென்றிருக்கிறார்கள். தெருவில் கொஞ்சநாட்களாகவே அனைவரும் அதையே பேசிக்கொண்டிருந்தார்கள். அவனுக்கு அதில் பெரிய ஆர்வம் எழவில்லை

வள்ளியம்மை புட்டு அவித்திருந்தாள். தொட்டுக்கொள்ள காராமணிப்பயறு சுண்டலும் கதலிவாழைப்பழமும் இருந்தன. முருகப்பன் சாப்பிட அமர்ந்தபோது அவள் முகத்தை பார்த்தான். அவள் வழக்கம்போல பொம்மைபோல முகத்தை வைத்திருந்தாள். சின்ன செம்பு போல சிறிய முகம். சிறிய மூக்கு, சிறிய உதடுகள், மென்மையான மயிர் படந்த கன்னம். சிறுமி போல இருந்தாள். அவள் இமைப்பீலிகளும் பெரியவை. அவை அவளை குழந்தைபோலவே காட்டின.

முந்தையநாள் மாலை அவன் கிளம்பும்போது அவளுக்கு ஓர் அடி வைத்திருந்தான். அந்த ‘கெறுவு’ இருக்கும் என எதிர்பார்த்தான். முகத்தில் ஒன்றும் தெரியவில்லை. அவளை கூர்ந்து பார்த்தபடி, “பப்படம் காய்ச்சல்லியா?”என்று அவன் கேட்டான்.

“எண்ணை குறைவா இருக்கு… எண்ணைச்செட்டிக்கு ஆறுபணம் நிக்குது”என்றாள் வள்ளியம்மை

“பணம் எங்கபோகுது? குடுக்க மாட்டமா? நீ கேக்க மாதிரி கேட்டுப்பாக்கணும்” என்றான் முருகப்பன்

“நான் கேட்டேன்… இல்லேன்னு சொல்லிப்போட்டான்”

“அதெப்பிடிச் சொல்லுவான்? மொறையா எண்ணை வாங்குத வீடாக்குமே இது”என்றான் முருகப்பன்.

அவள் ஒன்றும் சொல்லவில்லை. அவன் அவள் முகத்தை ஒளிகண்ணால் பார்த்தான். அவளை அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவள் ஒன்றும் சின்னப்பெண் இல்லை. முகத்தை பாவம்போல வைத்துக்கொள்ள கற்றிருக்கிறாள். உள்ளே ஒரு நாகப்பாம்பு இருக்கிறது. அது அவனுக்கு தெரியும். அது சீறி நெளிந்தபடி வெளிவரும்போது அவன் பயந்துவிடுவான்.

அவன் அவளிடம் முந்தையநாள் இரவில் “என்ன இன்னைக்கு?” என்றான்

அவள் எழுந்து ஆடையை சுருட்டிக்கொண்டு ஜலசுத்திக்குக் கிளம்பினாள். அவன் அவளை நோக்கி “பாம்புல்லா படமெடுத்து ஆடிச்சு?”என்றான்

அவள் திரும்பிப் பார்க்காமல் வெளியே போனாள். அவள் சும்மா போனது அவனுக்கு எரிச்சலை எழுப்பியது. அந்த நடையில் ஒரு செருக்கு இருந்தது. அவன் எழுந்து பின்னால் போய் “எண்ணைப்பண்டாரத்தை நினைச்சுக்கிட்டியோ?”என்றான்

அவள் ஒன்றும் சொல்லவில்லை. செம்பில் நீர் ஊற்றி எடுத்துக்கொண்டு குடிமறைப்புக்குள் போக முயன்றாள். அவன் அவளை மறிப்பதுபோல முன்னால் சென்று  “எனக்கு தெரியும், அவனை நினைச்சாத்தான் நீ உருகுதே”என்றான்

அவள் நின்றாள். உதட்டைச்சுழித்து “அதுக்கு இப்ப என்ன?”என்றாள்

“ஏட்டி, என்ன சொல்லுதே?”என்று அவன் பதறினான்

“என்ன கேட்டியளோ அதுக்கு பதில் சொல்லுதேன்”

“என்னடி சொன்னே? சொல்லுடி…ஏட்டி இன்னொருவாட்டி சொல்லுடி”

“இன்னொருவாட்டி கேளுங்க சொல்லுதேன்”

“நாறத்தேவ்டியா”

“ஆமா தேவ்டியாதான்….தேவ்டியா ஒண்ணும் புதிசில்லியே…”

“என்னடி சொல்லுதே? ஏய்” என்று அவன் கூவினான்

“நேத்து பொன்னுத்தாய் வந்து மிச்சம் பணத்தை கேட்டா”

“அவகிட்டே நான்…” அவனுக்கு கடும் கோபம் வந்தது. “அது ஆம்புளைங்க பளக்கம். அப்டித்தான். நீ உன் சோலியப்பாருடி”

“நான் என் சோலியத்தான் பாக்கிறேன்”

அவள் மீண்டும் குடிமறைக்குள் செல்ல முயல அவன் “உன் சோலி அந்த பண்டாரம்கூடத்தானேடி? தெரியும்”என்றான்

“தெரியும்ல? போங்க”

அவன் மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் நின்றான். பிறகு பாய்ந்து அவளை அடித்தான். செம்பு தரையில் விழுந்து உருண்டது

அப்பால் கிழவி “அங்க என்ன சத்தம்? ஏட்டி வள்ளி, பூனையா பாரு”என்றாள்

அவள் கன்னத்தை கைகளால் பொத்தியபடி முள்போன்ற பார்வையுடன் அசையாமல் நின்றாள்

”தேவ்டியாச் சிறுக்கி…நாறத்தேவ்டியாச் சிறுக்கி” என்று அவன் உறுமினான். இன்னொரு அடி வைக்க அவனால் முடியவில்லை. அவள் பார்வையை தவிர்த்து அங்குமிங்கும் பார்த்தான். அதன்பின் வெளியே போய்விட்டான். இருட்டில் இறங்கி நின்று நட்சத்திரங்களைப் பார்த்தான். உடம்பெல்லாம் மிளகாய் அரைத்துப் பூசியதுபோல எரிந்தது.

அவள்  மீண்டும் புட்டு கொண்டு வந்து வைக்கும்போது அவள் கன்னத்தை பார்த்தான். அடியின் வடுவேதும் இல்லை. நன்றாக வடு வருவதுபோல ஓர் அறைகூட அவனால் விடமுடியவில்லை

“ஏட்டி, ஒரு கோவத்திலே அடிக்கிறதுதானே? மனசிலே வச்சுக்காதே”

“செரி”

“போவட்டு… மனசிலே வச்சுக்காதே”

“இல்ல”

“அதை ஏன் இப்டி சொல்லுதே? சிரிச்சுகிட்டே சொல்லு”

“அத்தை அந்தாலே இருக்கா”

“அவ கெடக்கா, செவிட்டு முண்டை”

அவள் உள்ளே போய்விட்டாள். அவன் எழுந்து கைகழுவிவிட்டு தாம்பூலம் போட்டுக்கொண்டான். தெருவில் சென்றுகொண்டிருந்த மக்களை கொஞ்சநேரம் திண்ணையில் அமர்ந்து வேடிக்கை பார்த்தான். அன்றைக்கு கடைதிறக்க வேண்டியதில்லை என்று முடிவுசெய்தான். கோயிலிலேயே சமையல். மக்கள் வீட்டில் அடுப்பு மூட்ட வாய்ப்பில்லை.அவனுடைய வியாபாரம் எல்லாம் பிள்ளைகள் பசித்து அழ ஆரம்பித்தபின் அரிசிக்கு ஓடிவருபவர்கள்தான்

அவன் கோவேறு கழுதையில் ஏறி மீண்டும் பணகுடிப்பொட்டலில் தன் குடிசைக்கு போனான். அன்றிரவு காவல் கொஞ்சமாகத்தான் இருக்கும். பட்டாளம் முழுக்க திருக்கணங்குடியிலேயே கிடக்கும். எஞ்சிய அரிசி முழுவதையும் ஏற்றிவிடவேண்டும். கையுதவிக்கு இருக்கும் கொச்சன்நாயரை மறுபக்கம் ஆட்களிடம் தூதனுப்பி அன்று மூட்டைகளை கொண்டு போக நல்ல வாய்ப்பிருப்பதாக அறிவித்தான். அந்தி இருண்டபோதே வர ஆரம்பித்தனர். விலைப்பணம் கையிலேயே கொடுத்துவிடவேண்டும். அவன் குடிலில் அமர்ந்து பணத்தை எண்ணி கணக்கிட்டு பெட்டியில் போட்டு மூட்டைகளை ஏற்றி அனுப்பினான்

இரவெல்லாம் மூட்டைகள் போய்க்கொண்டிருந்தன. வெள்ளி முளைப்பது வரைக்கும்கூட ஆட்கள் வந்தனர். அவர்கள் போனபின் அவன் நிலவறையை பார்த்தான். இருபது மூட்டைக்கும் குறைவாகவே இருந்தது. மனநிறைவுடன் சங்குத்தேவனுக்கும் கொச்சன்நாயருக்கும் ஆளுக்கு இரண்டுபணம் பரிசு கொடுத்தான். குடிலுக்கு வெளியிலேயே கயிற்று கட்டிலை எடுத்து கருவேலமரத்தடியில் போட்டு தூங்கிவிட்டான்

வெயில் நன்றாக ஏறிக்கொண்டிருக்கும்போதுதான் பணகுடியில் இருந்து மாணிக்கம் செட்டியாரும் ரத்தினம் செட்டியாரும் அங்கே வந்தனர்.அவர்கள் நிலவறை வணிகத்தில் அவனுடைய பங்காளிகள். அவர்கள் ஏதேதோ செய்தி கேள்விப்பட்டு பதைப்புடன் வந்திருந்தனர். திருக்கணங்குடி ராயசத்தின் படைகள் அங்கே தேடி வருமென்றால் அதற்குள் மூட்டைகளை அகற்றிவிடலாம் என்று நினைத்தனர். அதற்குத்தான் பதறியடித்து வந்திருந்தனர்.

வண்டியிலிருந்து இறங்கிய மாணிக்கம் செட்டியார் சங்குத்தேவனிடம் “ஏலே சங்கு, உன் செட்டி எப்பலே போனான்?”என்றார்

“செட்டி உறங்குதாரு” என்று அவன் சொன்னான்

“உறங்குதாரா? ஏலே, அவன் எப்பலே எந்திரிச்சு திருக்கணங்குடி போனான்?”

“செட்டியாரே, நம்ம செட்டி இந்தா உறங்குதாருல்லா?”

மாணிக்கம்  “ஆ” என்று அலறி நின்றுவிட்டான்

ரத்தினம் அருகே வந்து “என்ன ?” என்று கேட்டான். மாணிக்கம் சுட்டிக்காட்டினான். அவன் பதறிவிட்டான்

“அய்யோ… இதென்ன நடக்குது?”

“ஆளு மாறிப்போச்சு”

“என்னவே சொல்லுதீரு?”

“கோபுரத்திலே இருந்து குதிச்சவன் நம்ம முருகப்பன் இல்லை. வேற ஆரோ”

முருகப்பன் பேச்சு சத்தம் கேட்டு எழுந்து அமர்ந்து “என்னவே, எப்ப வந்தீக?”என்றான்

“நீ திருக்கணங்குடிக்கு போனியா?”என்றான் ரத்தினம்

“இல்லியே, நான் எதுக்கு போகணும். வாய்ப்பான நாள்னுட்டு இங்க வந்துபோட்டேனே”

”அப்ப அங்க போயி கோபுரத்திலே இருந்து குதிச்சது யாரு?”

“என்ன சொல்லுதீக?”என்றான் முருகப்பன்

ரத்தினம் “ஏலே வேற யாரோ குதிச்சான்னு வைச்சாக்கூட நம்ம காராய்மைக்காரங்கள்லா அடையாளம் காட்டியிருக்காங்க? அதவிட இவன் பெஞ்சாதி வள்ளியம்மைல்லா போயி உடன்கட்டை ஏறியிருக்கா”

“என்னவே சொல்லுதீக?”என்று பதறியபடி முருகப்பன் ரத்தினத்தின்  கழுத்தை பாய்ந்து பிடித்தான்.

“டேய் நீ குதிக்காதே. இரு… நான் சொல்லுதேன். என்னமோ பெரிய தப்பு நடந்துபோச்சு… ராஜா காரியம். இப்ப நீ நடுவிலே பூந்து குதிச்சா உன் தலை போயிரும்… நீ உக்காரு சொல்லுதேன்”

“என்னடே இது… நீங்க என்ன சொல்லுதீக? வள்ளியம்மைக்கு என்ன ஆச்சு?”

“வள்ளியம்மை நேத்து மத்தியான்னமே இங்கேருந்து குருதையிலே போயிருக்கா… அங்க ஒருத்தன் கோபுரத்திலே இருந்து குதிச்சு செத்திருக்கான். அவ செத்தவன் தன் புருசன்தான்னு சொல்லி அவன் கூட சிதையிலே ஏறிப்போட்டா”

”செத்தவன் யாரு?”

“ஏலே கோட்டி, செத்தவன் நீயாக்கும்னாக்கும் சொல்லுகானுக. இல்லேன்னா அவ உடன்கட்டை ஏறுவாளா? நம்ம சாதிசனம் தெரண்டு கொடையும் காணிக்கையுமாட்டு திருக்கணங்குடிக்கு போய்ட்டிருக்கு”

“என்னடே சொல்லுதீக? எனக்கு ஒண்ணுமெ வெளங்கல்லியே”

“இங்கபாரு, அங்க ஒருத்தன் விளுந்து செத்தான். அது நீயிண்ணு அடையாளம் காட்டினானுக காராய்மைக்காரனுக. அதை நம்பி இப்ப அங்க நம்ம இனவன்மாரு சேந்து பிரதிஷ்டை பண்ணியிருக்கப்பட்டது உன்னையாக்கும். உன்னை எறிமாடன் சாமின்னு அங்க கல்லு நிப்பாட்டியாச்சு. பக்கத்திலே வள்ளியம்மைக்கு சதிக்கல்லும் நிப்பாட்டியாச்சு. இன்னைக்கு சாயங்காலம் மகாராஜா பெரியநாயக்கரு வந்து அங்க சாமி கும்பிட்டு முதல் படையல போடுதாரு. அதாவது, பணகுடி அரிசிவாணியன் மாயாண்டி மகன் முருகப்பன் இப்ப எறிமாடன்சாமி ஆயாச்சு. அதை இனிமே மாத்தமாட்டாங்க”

“அதெப்டி? நான் இருக்கேன்லா?” என்று முருகப்பன் முனகலாகச் சொன்னான். அவனுக்கு அழுகைகூட வரவில்லை. மொத்தத்தில் வயிற்றில் ஒரு பதைப்பு மட்டும் இருந்தது.

“டேய் நல்லா சிந்திச்சு பாரு. எப்பமுமே ராஜா செய்றது சரி. மந்திரி சொல்லுறது நியாயம். ஊரு சொல்லுதது உண்மை. தனியாளு சொல்லு சபையேறாது. இப்ப நீ உசிரோட இருக்கே, செத்தவன் ஆளு வேறேன்னா என்ன ஆகும்? அடையாளம் சொன்னவன், சாமிக்கல் நாட்டினவன் எல்லாரும் களுவிலே ஏறணும் இல்லியா? அதுக்கு அவனுக விடுவானுகளா? அதுக்கு உன்னைய இருசெவி அறியாம வெட்டி புதைக்கிறதுதானே சுருக்கவளி?”

முருகப்பன் திகைத்துப்போனான்.

“அதனாலே நீ பேசாம இங்க இருந்துக்கோ. என்ன நடந்தது ஏது நடந்ததுன்னு நாங்க விசாரிச்சு சொல்லுதோம். அதுக்கு உண்டானதை செய்வோம். இப்ப நீ வெளியே தலைகாட்டினா உனக்குத்தான் தலை இருக்காது”

“இது என்னடே அக்குறும்பா இருக்கு…நான் என்ன தப்பு செய்தேன்” என்று முருகப்பன் அழ ஆரம்பித்தான்.

“நேரம் நிறைய இருக்கு. நிதானமாட்டு இருந்து அளுதுக்கோ. நாங்க போயி விசாரிச்சுட்டு வாறோம்”என்றான் ரத்தினம்

“ஊரே பெருகி போய்ட்டிருக்கு. புருசன் கோபுரத்திலே இருந்து குதிச்சான், பெஞ்சாதி உடன்கட்டை ஏறினா. நினைச்சு நினைச்சு பேசிக்கிடுதானுக. பொட்டைப்புள்ளைக கண்ணீருவிட்டு அளுவுதாளுக… நம்ம சாதியே எளகி நிக்குது பாத்துக்க. ஆயிரம் வருசத்திலே இப்டி ஒரு விசயம் நடந்ததில்லை. இப்ப செத்தது நீயில்லை, கண்டவனுக்கு உன் பெஞ்சாதி உடன்கட்டை ஏறிட்டான்னு தெரிஞ்சா எம்பிடு கேவலம்… மானம் காக்கணும்னு நம்மாளுகளே உன்னைய வெட்டி புதைச்சிருவானுக” மாணிக்கம் சொன்னான்.

”நான் என்ன செய்வேன்? எனக்க உடைய சாஸ்தாவே, நான் என்ன செய்வேன்” என்று முருகப்பன் விசும்பி அழுதான்.

”நான் நினைக்கப்பட்டது அதில்லே…அதெப்பிடி அவளுக்கு சொந்த புருசன் முகம் தெரியாம போச்சு?”என்றான் ரத்தினம்

“உடம்பு மேலே இருந்து விளுந்திருக்கு… கெளங்குமூட்டை மாதிரி செதறிப்போயிருக்கும்… பாத்தா தெரிஞ்சிருக்காது.” மாணிக்கம் சொன்னான்.

“இல்ல அவளுக்கு தெரியும்”என்றான் முருகப்பன்

“என்ன சொல்லுதே?”

“அவன், அந்த மூதேவி பண்டாரப்பயதான் மேலே இருந்து குதிச்சவன். அதை நம்ம காராய்மைக்காரனுக சொல்லி ஏற்பாடாக்கினானுக. செம்பகராமன் மண்டபத்திலே அவனுக பேசிட்டிருக்கிறத நான் பாத்தேன். அப்ப ஒண்ணும் தெரியல்ல, இப்ப புரியுது”

ரத்தினம் வாய் திறந்து வெறித்துப் பார்த்தான். மாணிக்கம் “இருக்கும்டே. அந்த பண்டாரப்பயல ரெண்டுநாளாட்டு வச்சு கொண்டாடினானுக. புதுத்துணியெல்லாம் வாங்கி குடுத்தானுக”

“அவனை என் பேரிலே அனுப்பியிருக்கானுக. எனக்க கண்டிகையை மாராயக்குட்டிப்பிள்ளை கேட்டாரு. நான் களட்டிக் குடுத்தேன்”

“அந்தக் கண்டிகையை வச்சுத்தான் அடையாளம் காட்டியிருக்கானுக. அதோடத்தான் உடம்ப செதையிலே ஏத்தியிருக்காங்க. வள்ளியம்மைக்க தாலியும் மெட்டியும் அவ உடம்பிலே இருந்திருக்கு. செதையிலே உருகிக்கிடந்த வெள்ளியையும் தங்கத்தையும் சேத்து எடுத்து உருக்கி எறிமாடன் சாமிக்கு காப்பு போட்டிருக்காங்க” என்றான் ரத்தினம்.

“வேணும்னே செஞ்சுட்டாங்கடே” என்றான் முருகப்பன் உடைந்த குரலில்.

“செரிடே, ஆனா உனக்க பெஞ்சாதி ஏன் அந்த பயலுக்காக உடன்கட்டை ஏறினா?” என்றான் மாணிக்கம்.

முருகப்பன் ஒன்றும் சொல்லவில்லை.

“ஆளு தெரியல்லியோ?” என்றான் ரத்தினம். அவன் தலை காக்காய்போல சரிந்து உள்ளே ஓடிய சந்தேகத்தைக் காட்டியது.

”அதெப்பிடி, அவன் பொலிகாளை மாதிரில்லா இருப்பான்?” என்றான் மாணிக்கம்.

“தெரிஞ்சேதான் ஏறியிருக்கா”என்றான் முருகப்பன்

“தெரிஞ்சுகிட்டா… ஏண்டே?”என்றான் ரத்தினம்

முருகப்பன் பதில் சொல்லவில்லை

“ஏண்டே?”என்று அவன் மீண்டும் கேட்டான்

முருகப்பன் தலைகுனிந்து அமர்ந்திருந்தான். அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.

 

[ 2 ]

 

முருகப்பனை விட்டுவிட்டு ரத்தினம் செட்டியாரும் மாணிக்கம் செட்டியாரும் நேராக மாட்டுவண்டியில் திருக்கணங்குடிக்குத்தான் போனார்கள். அங்கே அவர்கள் சென்றபோது எறிமாடனும் உடன்நின்ற நங்கையும் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிறுகோயிலில் பெரியநாயக்கர் வந்து கும்பிட்டுவிட்டு சென்றுவிட்டிருந்தார். பொதுமக்களை உள்ளே அனுமதித்துக்கொண்டிருந்தனர். பெரும் கூட்டம் சூழ்ந்து கூச்சலிட்டுக்கொண்டிருந்தது.

மூங்கில்கால் நாட்டி, மேலே கீற்றோலை வேய்ந்த கொட்டகையில் இரு நடுகற்கள் நின்றன.ஒன்றின்மேல் தலைப்பாகைபோல செம்பட்டு கட்டப்பட்டிருந்தது. இன்னொன்றில் செம்பட்டு விசிறிமடிப்பாக அமைக்கப்பட்டு பாவாடை கட்டப்பட்டிருந்தது. எறிமாடனுக்கு கரிய கண்களும் மீசையும் வரையப்பட்டிருந்தன. உடன்நின்ற நங்கைக்கு புதுப்பொன் தாலியை மஞ்சள் சரடால் கட்டியிருந்தனர்.

பெரியநாயக்கர் வந்து மலர்மாலை சார்த்தி பூசைசெய்துவிட்டு சென்றிருந்தார். அவரைத் தொடர்ந்து அமாத்யரும் தளவாயும் ராயசமும் பிறரும் வரிசையாக மலர்மாலை சூட்டி வழிபட்டனர். அவர்கள் சென்றதுமே அந்த மலர்மாலைகள் அகற்றப்பட்டு அருகே பெரிய கடவத்தில் சேர்க்கப்பட்டன. மேலும் மேலும் மலர்மாலைகளுடன் மக்கள் வந்துகொண்டிருந்தமையால் மாலைகள் மாடனுக்கும் அம்மனுக்கும் சூட்டப்பட்டு உடனே எடுக்கப்பட்டன.

சன்னிதி முன் தூபம் புகைந்துகொண்டிருந்தது. இருபக்கமும் இரண்டு நெய்ப்பந்தங்கள் நெய்யூற்றி தொடர்ச்சியாக எரியவிடப்பட்டன. மாடனுக்கு இளநீரும் அம்மனுக்கு தேங்காய்பழமும் படைக்கப்பட்டன. ”வரிசையா வரிசையாட்டு வாருங்க” என்று கூட்டத்தை ஒழுங்குசெய்துகொண்டிருந்த திருக்கணங்குடி மூத்தசெட்டியார் அரவணைப்பெருமாள் கூச்சலிட்டார். ”பாத்து… பொம்புளையாளுங்க தனியாட்டு போங்க” என்று பணகுடி செட்டிகுல முதலடி நாராயணன் செட்டியார் இன்னொருபக்கம் கூப்பாடு போட்டார்

மாடனுக்கும் அம்மனுக்கும் பூசைசெய்யும் பொறுப்பை திருக்கணங்குடி நல்லசிவம் செட்டியார் ஏற்றுக்கொண்டார். மாடனுக்கு இறுதிச்சடங்கு செய்தது அவரும் அவர் பேரனும் என்பதனால் அவர்களின் குடும்பத்துக்கு முறைபாத்தியதை இருந்தது. இருந்தாலும் முருகப்பனின் பெரியம்மை மகன்  அனந்தன் செட்டி வந்து சிலைக்கு அருகிலேயே சப்பணம் போட்டு அமர்ந்துகொண்டான். அவனும் அவ்வபோது ஓரிரு மலர்களை எடுத்து சிலைக்கு முன் போட்டபடி ஓரக்கண்ணால் உண்டியலையும் தட்டத்தையும் பார்த்துக்கொண்டிருந்தான்.

அவ்வப்போது சில வெள்ளிக்காசுகளை நல்லசிவம் செட்டியார் எடுத்து தன் சுருக்குப்பையில் போடுவதை அவன் கவனித்தான்.

அவனிடம் அவனுடைய நண்பனும் பங்காளியுமான கிருஷ்ணன் செட்டி “ஏலே அவன் பணத்தை எடுத்துக்கிடுதாம்லே”என்றான்.

“ஆமா”என்றான் அனந்தன் செட்டி

“அது உனக்க பணம். செத்தவன் உனக்க பங்காளி பாத்துக்கோ”

“இரு இரு. பாப்பம். கூட்டம் கொஞ்சம் குறயட்டும். அப்டி விட்டிர முடியதுல்லா?”என்று அனந்தன் செட்டி சொன்னான்.

அவர்கள் பேசிக்கொள்வதை நல்லசிவம் செட்டியார் ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு, கூட்டத்தை நோக்கி  “சீக்கிரம் வாருங்க… எங்க பிறந்தா என்ன, நம்மூருலே தெய்வமாகணும்னு விதியிருந்திருக்கே… திருக்கணங்குடி எறிமாடசாமிய கும்பிட்டு அருள் வாங்கிட்டு போங்க வாங்க” என்று கூவினார்.

மாணிக்கம் செட்டியாரும் ரத்தினம் செட்டியாரும் எறிமாடனையும் உடன்நின்ற நங்கையையும் வணங்கி விபூதி குங்குமம் பெற்று மறுபக்கம் வந்தனர். அவர்கள் கண்களால் துழாவி மாராயக்குட்டிப்பிள்ளையை கண்டடைந்தனர். அவர்கள் தங்களைப் பார்ப்பதை அவரும் கண்டார். அவர்கள் அணுகியதும் வாருங்கள் பேசலாம் என்று சைகை காட்டி அழைத்துச்சென்றார்

ஓரமாக அழைத்துச்சென்று வேளாளத்தெருவில் சண்முகம் பிள்ளையின் மருமகன் வீட்டு திண்ணையில் அமரச்செய்து அவர் நடந்ததை எல்லாம் சொன்னார். “வாறதை பாத்துக்கிடலாம்னு நினைச்சு செஞ்சதாக்கும். பண்டாரப்பயலுக்கு கேக்க ஆளில்லேன்னு நினைச்சோம். இந்தக் குட்டி இப்டி செய்வான்னு மனசிலையும் நினைச்சுப் பாத்ததில்லை. செரி, எல்லாம் நல்லதா நடந்துபோட்டுதுன்னு வையுங்க. இப்ப மகாராஜா வரிகுறைக்க சம்மதிப்பாருன்னு தோணுது. திருச்செவி வரை செய்தியை கொண்டுபோயாச்சு. திருநெல்வேலியிலே முகம் காட்டுறது நல்லபடியா நடந்தா செட்டிகளுக்கும் லாபமாக்கும்” என்றார்

“ஆமா, ஆனா ஒரு குடும்பம் சீரளிஞ்சுபோச்சு” என்றான் மாணிக்கம்

“அந்தக்குட்டி செய்ததுக்கு நாங்க பொறுப்பில்லை”என்றார் மாராயக்குட்டிப்பிள்ளை. “இனியிப்போ செத்தது முருகப்பன் இல்லேண்ணு மாத்திக்கிட முடியாது. முருகப்பனுக்கு உண்டான நட்டத்தை குடுத்துப்பிடலாம். அவன் ஒரு நாலஞ்சு வருசம் மலையாளக்கரைப் பக்கமாட்டு போயி தொளிலு பாக்கட்டும். அவன் உங்க பங்காளிதானே. உங்களுக்கு அங்கையும் ஏவாரம் உண்டுல்லா? எடம் மாறிக்கிடுங்க, அதிலே ஒண்ணும் நட்டம் இல்லல்லா?”

“ஆனா…”என்று மாணிக்கம் ஆரம்பிக்க மாராயக்குட்டிப் பிள்ளை இடைமறித்தார்

“ஆனா பூனா ஒண்ணுமில்லை. செட்டி முத்தப்பிடாது, சாரை பத்தி எடுக்கப்பிடாதுன்னு சொல்லு உண்டுல்லா? சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னேன். நீங்க ஏவாரம் பண்ணுத ஆளுங்க. சாதியிலே மூத்த கூட்டம். வே, பஞ்சாயத்திலே இருந்து பேசுத கௌரவம் உள்ள ஆளுக நீங்க, எந்திரிச்சு நின்னு சத்தம் போடலாமா? குலமுறைன்னு ஒண்ணு இருக்கா இல்லியா? இல்ல கேக்கேன்”

“அது உண்மைதான்”என்றான் மாணிக்கம்

“இப்ப செத்தது முருகப்பன் இல்லேன்னு மாத்த முடியாது. முருகப்பன் சாவல்லேன்னு சொன்னா சாவடிக்கவேண்டிய பொறுப்பு எங்களுக்கு வந்துபோடுது. அது உங்களுக்கும் பொறுப்புதான்னு வையிங்க. பாத்தியள்ல, காசு வாறது உங்க மடியிலேயாக்கும். அவன் சாவப்பிடாதுன்னுதான் நாங்க இந்த பாடுபட்டு உங்ககிட்ட பேசிட்டிருக்கோம்”

“அது தெரியாதா?”என்றான் ரத்தினம்

“அப்ப காரியங்கள் நடக்கட்டு… கெளம்புங்க”

“ஆனா சட்டுன்னு அவனை அந்தாலே அனுப்புறதுன்னா கொஞ்சம் செலவுண்டு”

“என்னண்ணு சொல்லுங்க செஞ்சுருவோம்”

“ஒரு நூறு பணமாவது ஆவும்”

“நூறு பணமா?”மாராயக்குட்டிப்பிள்ளை யோசித்தார். “இப்ப எப்டியும் சிவராத்திரிக்கு ராமலிங்கசாமிக்கு உச்சவம் வரும். அதிலே செட்டிப்பிள்ளைக உங்க சாதிப்பங்குக்கு செலவளிப்பீக. அதிலே நூறுபணம் குறைச்சுக்கிடலாம்… செரி, குறைச்சாச்சுன்னே வச்சுக்கிடுங்க.. அப்ப நூறுபணம் குடுத்தது மாதிரில்லா? செரி பாப்போம்”

திரும்பும்போது ரத்தினம் “இந்தக் கிளவன் செரியான நஞ்சவிஞ்சான்.வெசம் இவனுக்க கிட்டே இருந்துதான் போயிருக்கு” என்றான்

மாணிக்கம் “இப்பம் என்னடே செய்யுதது?”என்றான் “நாம காரியங்களை நம்ம செட்டிமுதலடி கிட்டே சொல்லிருவோம். சபை கூடி முடிவெடுக்கட்டும். அதாக்கும் முறை”

“இருடே” என்றான் ரத்தினம். “இப்ப செட்டிசபை கூடினா என்ன செய்யும்? முருகப்பன் செத்தாச்சுன்னுதானே முடிவுசெய்யும்? மாத்தி முடிவெடுக்க நமக்கு சங்குறைப்பு இல்லல்லா?”

“அதெப்படி? தவளை பறக்குறதும் செட்டி சீறுறதும் அளந்து வைச்ச கணக்குதான்னு ஒரு சொல்லு உண்டுல்லா? இப்ப செட்டிமுதலடிக்கும் நல்ல லாபமாக்கும்… மூஞ்சி தெளிஞ்சுல்லா இருக்கு!”

“அப்ப என்ன? செட்டிமுதலடி கூடி முருகப்பன் சாவல்லேன்னு முடிவுசெய்து அவனை வேத்தூருக்கு அனுப்பினா அவனுக்க வீடும் கடையும் மத்த சொத்துக்களும் செட்டிமுதலடிக்கு போவும். நமக்கு என்ன லாபம்?”

“ஆமா”

“அவன் அப்டியே செத்தாச்சுன்னு இருந்தா எல்லாம் நமக்கு வரும். ஏன்னா நாம அவனுக்க பங்காளிகள். நமக்கு நட்டம் வரப்பிடாதுல்லா?”

“ஆமா”

“அப்ப அப்பிடி… அவனை அப்டியே அனுப்பி வைப்போம்”

மாணிக்கமும் ரத்தினமும் இரவில் பணகுடி பொட்டலுக்கு வந்தபோது  முருகப்பன் காத்திருந்தான். அவர்கள் அவனை ரகசியமாக கொண்டுசென்று அமரவைத்து பேசினர்

“டேய் காரியங்க கைமீறிப் போயாச்சு. இனி பேசி பிரயோசனமில்லை பாத்துக்கோ. அங்க செத்துப்போன முருகப்பன் எறிமாடன் ஆயாச்சு. வள்ளியம்மை உடன்நின்ற நங்கையா இருந்தாச்சு. பெரியநாயக்கரு வந்து கும்பிட்டாச்சு. ஆயிரம்பேரு காணிக்கையிட்டு பலிகொடை குடுத்தாச்சு. இனி ஒண்ணும் சொல்லுறதுக்கில்லை. நாங்க கொஞ்சமாட்டு சொல்லிப்பாக்கலாம்னு நினைச்சோம். அப்பதான் ஒரு செய்தி கிடைச்சுது. அந்தாலே ஓடி வந்துட்டோம். ”

“என்ன செய்தி?” என்றான் முருகப்பன்

”உன்னைதேடி ஆளு போயிருக்கு…நல்லவேளை நீ இங்க குடிசையிலே இருக்கே. இப்டி ஒரெடம் இங்க இருக்கிற செய்தி காராய்மைக்காரனுகளுக்கு தெரியாது. ஊரிலேயும் ஒருத்தனுக்கும் தெரியாது. ”

“எதுக்கு தேடுதானுக?” என்று முருகப்பன் நடுக்கத்துடன் கேட்டான்.

“காதோடு காதா வெட்டி புதைக்கத்தான்.வேறே என்னத்துக்கு? நீ இருக்கிற செய்தி தெரிஞ்சா காராய்மைக்காரனுகளுக்கு களுமரம்லா கணக்கு? செட்டி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 04, 2021 10:35

நகரங்கள், மலைகள்

சென்ற பிப்ரவரி 14 ஆம் தேதி வீட்டைவிட்டு கிளம்பி மார்ச் ஒன்றாம்தேதிதான் திரும்பிவந்தேன். வழக்கம்போல ஊரிலிருந்து ஊருக்கு பயணம். பாலக்காட்டில் ஒரு திரைவிவாதம். அங்கிருந்து கோவை. அங்கே கி.ராஜநாராயணனின் ‘மிச்சக்கதைகள்’ நூல் வெளியீட்டுவிழா.

மிச்சக்கதைகள் என்பது கி.ரா அவர்கள் இனி எழுதமாட்டேன் என்று சொல்லி தொகுத்தது அல்ல. ஏற்கனவே எழுதிய பலகதைகளில் சேர்க்கமுடியாதுபோன மிச்சங்களால் ஆனது. மகிழ்விக்கும் வாசிப்புத்தன்மைகொண்ட நூல். கி.ராவின் அழகிய புகைப்படங்களுடன்.

ரசிகமணியின் பேரர்நடராஜன், கோவைலாலா விடுதி உரிமையாளர்சு.வேணுகோபால்டி.பாலசுந்தரம்விஜயா வேலாயுதம்’தமிழினி’ கோகுல் பிரசாத்ஓவியர் ஜீவாகே.என்.செந்தில்கவிஞர் இசைஎம்.கோபாலகிருஷ்ணன்

கோவைக்கு பத்தொன்பது இரவே வந்துவிட்டேன். இருபதாம்தேதியே நண்பர்கள் பார்க்கவந்தனர். வழக்கமாகச் சொற்பொழிவுகளுக்கு முந்தையநாள் அவ்வளவு பேசுவதில்லை. என் தொண்டை அப்படிப்பட்டது. குரல் கணீர்க்குரல் அல்ல. [பவா செல்லத்துரை குரலை கேட்கும்போதெல்லாம் கொலைவெறிப் பொறாமை வருவதுண்டு] ஆகவே அதிகம்பேசாமலிருக்கவேண்டுமென முடிவுசெய்வேன். என்னுடன் பேசவென்றே வரும் வாசகர்கள், நண்பர்களிடம் பேசப்பேச உரையாடல் நீண்டு நீண்டு செல்லும்

என்னுடன் அணுக்கமாக இருக்கும் நண்பர்களுக்கேகூட தேடிவரும் வாசகர்களைக் கண்டு திகைப்பு உண்டு. “சைட்லே கடிதங்களை படிக்கிறப்ப இத்தனைபேர் எங்கிருக்காங்கன்னு தோணும். ஆனா நேர்ல் வர்ரவங்களைப் பாத்தா அதுக்குப் பலமடங்கு. எல்லாருமே அதிதீவிர வாசகர்கள். வாழ்க்கையையும் இலக்கியத்தையும் இணைச்சுக்கிட்டவங்க. வேறு எந்த இலக்கியச் சூழலிலேயும் அவங்க கண்ணுக்குப் படுறதே இல்லை. இவங்கள்லாம் யாருங்கிற திகைப்புதான் வருது” என்றார் நண்பர்

டமருகம் நண்பர்களுடன்

கி.ரா விழா உற்சாகமாக நிகழ்ந்தது. கோவையில் நண்பர்கள் அனைவரையும் சந்திக்கும் நிகழ்வு. ஒவ்வொருவரையாக கண்டு, தழுவி, புகைப்படம் எடுக்கையில் நடுவே ஓராண்டு கடந்துசென்றிருப்பது நினைவிலிருந்து அகன்றுவிட்டது.

காலையில் கூட்டம் வைக்கப்பட்டிருந்தாலும் கிக்கானி அரங்கு நிறையுமளவு திரள் இருந்தது. என் வாசகர் பலர் திருநெல்வேலி, ராம்நாதபுரம், தேனி,தென்காசி என தொலைவிலிருந்தெல்லாம் வந்திருந்தனர். பெங்களூரிலிருந்தும் சென்னையிலிருந்தும் வழக்கமாகவே வருவார்கள்.

விழாவில் விஜய் ஆனந்த், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், நாஞ்சில்நாடன் ஆகியோர் சிறப்பாகப் பேசினார்கள். கி.ராவின் மகன் கி.ரா.பிரபியைச் சந்தித்தேன். கோவையின் முதன்மை மனிதர்கள் திரண்டிருந்த அவை. கி.ரா. நிகழ்ச்சியை செல்பேசியில் பார்த்துக்கொண்டிருப்பதாகச் சொன்னார்கள்.

அன்றுமாலையே ஈரோடு சென்றேன். இரவு காஞ்சிகோயிலில் செந்தில் பண்ணைவீட்டில் தங்கிவிட்டு அங்கிருந்து ஈரட்டி. ஐந்துநாட்கள் அங்கே தங்கியிருந்தேன். நண்பர்கள் காஞ்சி சிவா, ஜி.எஸ்.வி.நவீன், பிரபு,அந்தியூர் மணி, வழக்கறிஞர் செந்தில், ஈரோடு கிருஷ்ணன், ஈரோடு சிவா, மணவாளன், வழக்கறிஞர் ஈஸ்வரமூர்த்தி, ஆகியோர் உடனிருந்தார்கள்.

ஈரட்டியில் காடு காய ஆரம்பித்துவிட்டது. இவ்வாண்டு மூங்கில் பூத்திருக்கிறது. இன்னும் சிலநாட்களில் முழுமையாகவே காய்ந்துவிடும். ஜூன் மாதம் மழை. அதில் மூங்கில் மீண்டும் முளைத்தெழும். அது வரை யானைகள் உணவுக்காக ஊருக்குள்தான் அலையும் என நினைக்கிறேன்.

அந்தியூர் மணிமணவாளன், அந்தியூர் மணி, ஈரோடு கிருஷ்ணன்மணவாளன்

காஞ்சி சிவாவை  அந்தியூர் மணி அழைத்து வரும் வழியில் தாமரைக்கரை – ஈரட்டி சாலையில் ஒரு யானையை பார்த்தார்கள். நான் ஈரட்டி வரத்தொடங்கி 10 ஆண்டுகளாகின்றன. இன்னும் யானையைப் பார்க்கவில்லை. யானைபார்க்க ஏங்கித்தவிப்பவர் வழக்கறிஞர் ஈஸ்வரமூர்த்தி. அவர் கண்ணுக்கும் தட்டுப்படவில்லை. கிட்டத்தட்ட மெய்ஞானம்போல, தேடாமல் இருந்தால் எதிரே வந்து நிற்கும். ஆனால் எதிரே பார்த்தபோது அந்தியூர் மணி நாட்டுமொழியில் சொல்வதென்றால் ‘பீ கலங்கி’ ஓடிவந்துவிட்டார். அதுவும் ஞானத்தில் வழக்கமாக நடைபெறுவதே.

ஈரட்டியிலும் அருகிலிருக்கும் பகுதிகளிலும் வெயிலில் அலைந்தேன். என்ன சிக்கலென்றால் இங்கே வெயிலில் வெப்பம் தெரியாது, காற்று குளிராக இருக்கும். ஆனாலும் வெயில்வெயிலேதான். என் தலையில் இப்போது முடியின் காப்பு இல்லை. ஆகவே தலைச்சருமம் வெந்துவிட்டது. அந்தியில் தொட்டுப்பார்த்தால் தீப்பட்டதுபோல இருந்தது

ஈரட்டியைச் சுற்றியிருக்கும் மலைக்கிராமங்கள் அழகானவை. தொடர்ந்து சென்றுகொண்டே இருக்கிறோம். ஆனால் இன்னும் இன்னுமென புதிய இடங்கள் கண்ணுக்குப் பட்டுக்கொண்டே இருக்கின்றன. இம்முறை அடர்காட்டுக்குள் தனியாக இருக்கும் ஒரு சோளகர் கிராமத்துக்குச் சென்றோம். அது மலையுச்சி. கீழே மிக ஆழத்தில் குளத்தூர், மேட்டூர் தெரிந்தது. மலையுச்சியில் நின்று பேசிக்கொண்டிருந்தோம்

செல்லும்போதும் வரும்போதும் எக்கணமும் யானை தென்படுமென்ற எதிர்பார்ப்பு இருந்தது. தென்படவில்லை. காடு யானையை தன்னுள் மறைத்துக்கொண்டு சூழ்ந்திருந்தது. அந்தியிருளில் காடு முற்றிலும் இன்னொன்றாக, நிழல்களாலானதாக, இருள்வடிவாக, மாறிவிடுகிறது.

ஈரோட்டிலிருந்து மீண்டும் பயணம். இன்னொரு நகர். இன்னொரு உலகம். லீ மெரிடியனின் குளிர்ந்த தனித்த ஆடம்பர அறை. வெளியே ஓங்கிய நவீன கட்டிடங்கள். நானிருப்பது இந்தியாவா என்ற ஐயம் எழும் சூழல். தூங்கி எழுந்ததும் எங்கிருக்கிறோம் என்னும் திகைப்பு எழுகிறது. இலக்கியநண்பர்கள் சூழ்ந்த ஒருவனாக, தன்னந்தனியனாக தொழிற்சூழலில், மலைகளின் நடுவே காடுசூழ ஒருவனாக, ஆடம்பரவிடுதிகளின் கண்ணாடிச்சாளரத்துக்கு இப்பால்… ஓர் ஊசல் என் வாழ்க்கை. ஒருபக்கம் இலக்கியம் மறுபக்கம் உலகியல்.

நாகர்கோயில் வந்தடைந்தேன். அரைமாதம் கடந்துவிட்டிருந்தது. நெடுஞ்சாலைப்பணி பார்வதிபுரத்தின்மேல் புழுதியை படரச்செய்கிறது. நாகர்கோயிலில் என் வீட்டுக்கு முன் கட்டப்படும் புதியகட்டிடம் முளைத்து மேலெழுந்துவிட்டிருந்தது. நம் நகர்கள் நுரைத்து நுரைத்து குமிழிகளாக எழுந்துகொண்டே இருக்கின்றன.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 04, 2021 10:34

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.