Jeyamohan's Blog, page 1036

March 7, 2021

கூர் – கடிதங்கள்

கூர் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

வழக்கம்போல கதைகள் வேறுவேறு களங்களிலிருந்து வேறுவேறு மனநிலைகளிலிருந்து வந்துகொண்டிருக்கின்றன. பதினேழாம்நூற்றாண்டு நாயக்கர் காலத்திலிருந்து சமகாலக் குற்றச்சூழலுக்குத் தாவுவது கொஞ்சம் கஷ்டமானதுதான். ஆனால் இந்த கதைவிழாவின் கொண்டாட்டமே அதுதான். ஃபிலிம் ஃபெஸ்டிவலில் ஒரே நாளில் சம்பந்தமில்லாமல் படங்களைப் பார்ப்பதுபோலிருக்கிறது

கூர் ஒரு விஷம்போன்ற கதை. அந்தப்பையன் எங்கே கூர்கொள்கிறான் என்பதுதான் கேள்வி. அவனுடைய முரட்டுத்தனம், அவனிருக்கும் கைவிடப்பட்ட நிலை எல்லாமே கதையின் வழியாக உருவாகி வருகிறது. கதையின் கேள்வி அவன் ஞானப்பனைக் கொல்லும் வெறியை எங்கிருந்து அடைகிறான் என்பது. அவன் அந்த வெறியை அடைவது ஞானப்பன் தன் பேரனைக் கொஞ்சுவதைக் கேட்கும்போதுதான். அந்த இடத்தில் குற்றம் என்ற இடத்திலிருந்து கதை அந்த சிறுவனின் ஏக்கம் என்னும் இடத்திற்குச் சென்றுவிடுகிறது. ஆழமான ஒரு மானுடத்துக்கத்தைச் சொல்லிவிடுகிறது

ஜெயக்குமார்

அன்புள்ள ஜெயமோகன்

எனக்கு எப்பவும் ஓர் எண்ணம் மனதை கீறுவதுண்டு‌.நமக்கு எப்போது பிறர் மேல் வெறுப்பு வருகிறதென.’கூர்’ கதை வாசித்தேன்.வெறுப்பு கூர் கொண்டு வருவதை அளவிட்டு கொண்டே வாசித்தேன்.பிறர் மேல் வெறுப்பு வருவதற்கு,அவர்களை விட நாமே பெரும் காரணம்.வெறுப்பு வருவதற்கு காரணம் தேடி கொண்டிருந்த சிறுவனுக்கு ஏக்கம் தான் அதை கொடுப்பதாய் இருக்கிறது.இப்படி சொல்லலாம்- கோபம் கொண்டவனுக்கு கோபம் கொண்டவனை விட மகிழ்ச்சியுடையவனே எதிரி.ஆற்றல் விரிந்து கிடப்பது சிறு வயதில் தான்.அவ்வயதில் நம் மனநிலையும் வாழ்க்கைமுறையும் கூர் அடைகிறது.

அன்புடன்

பாலா

 

அன்புள்ள ஜெ

கூர் போன்ற நான்கு ஐந்து கதைகள் முந்தைய நூறுகதைகளிலும் இருந்தன. குற்றத்தின் உலகம். ஆனால் குற்றத்தின் தீவிரம், அதைக் கண்டுபிடிக்கும் புத்திசாலித்தனம் ஆகிய இரண்டையுமே இக்கதைகள் பொருட்படுத்தவில்லை. குற்றம்வழியாக வெளிப்படும் ஒரு மனிதமனத்தைத்தான் கூறமுயல்கின்றன. சின்னப்பையன் கொல்வது அவனுடைய அப்பனைத்தான். தன் பேத்தியைக் கொஞ்சும் ஞானப்பனில் அவன் காண்பது தன்னை கைவிட்டுச்சென்ற அப்பனைத்தான்.

கதைமுழுக்க அப்பன் என்ற அடையாளம் அந்தப் பையன்களை எப்படியெல்லாம் படுத்துகிறது என்றுதான் சொல்லப்பட்டுள்ளது. கிண்டலாகவும் கசப்பாகவும் அவர்கள் அதைத்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள்

எம்.ராஜேந்திரன்

அன்புள்ள ஜெ

கூர் சட்டென்று தூக்கி கீழே போட்டுவிட்டது. இந்தக்கதையின் அழுத்தமும் இது அளிக்கும் கசப்பான உண்மையும் எனக்கு தெரியும். ஒரு அடிபோல விழுகிறது. ஆனாலும் இந்தவகையான கதைகள் உங்களுடையவை அல்ல. இவை உங்களுக்கு தூரமான கதைகள் என்று நினைக்கிறேன்

செல்வி ஆர்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 07, 2021 10:31

கொதி, வலம் இடம்- கடிதங்கள்

கொதி[ சிறுகதை]

அன்புள்ள ஜெ

கொதி ஆழ்ந்த துயரத்தை மட்டுமல்ல துயரமே ஓர் ஆன்மிக அனுபவமாக ஆவதைக் காட்டும் கதை. இந்த கொதி எடுக்கும் சடங்கு வட இந்தியாவிலும் உண்டு. ஆனால் கடுமையான பஞ்சம் திகழும் ஆப்ரிக்காவில் இல்லை. அங்கே என்னென்னவோ சடங்குகள் உண்டு. இது இல்லை. இந்தச் சடங்கு இப்போது இல்லை. ஆச்சரியமென்னவென்றால் முப்பதாண்டுகளுக்கு முன்புகூட இருந்தது. இன்றைக்கு இல்லாமலாகிவிட்டது. பகிர்ந்து உண்பதற்கு நேர் எதிரான சடங்கு இது. பக்கத்துவீட்டானை உணவை பங்குபோடவந்த எதிரியாகப்பார்க்கும் சடங்கு. இப்படி ஒரு சடங்கு இங்கே இருந்தது என்பதே ஆச்சரியமானதுதான். இப்படி ஒரு நிலைமையிலிருந்து சென்ற இருபதாண்டுகளாகவே வெளியே வந்திருக்கிறோம் என்பது மேலும் ஆச்சரியமானது

சிவ.குமாரவேல்

 

அன்புள்ள ஜெ

கொதி கதை நெகிழ்ச்சியடையச் செய்தது. இரண்டு எல்லைகள் இங்கே உள்ளன. கிறிஸ்தவப் பாதிரிமார்கள் இங்கே வரவில்லை என்றால் நாமெல்லாம் காட்டுமிராண்டிகளாக இருந்திருப்போம் என்ற ஒரு பக்க பிரச்சாரம். இன்னொரு பக்கம், கிறிஸ்தவர்கள் ஒன்றுமே செய்யவில்லை, அவர்களெல்லாம் ஆதிக்கத்தின் ஐந்தாம்படை என்று பிரச்சாரம். இரண்டு பிரச்சாரங்களுமே உண்மைக்கு எதிரானவை. வெறும் வெறுப்புகள்

ஆனால் மதப்பிரச்சாரம் செய்வதற்காக பாதிரிமார் வரவில்லை என்றால் நாம் பட்டினியால் செத்திருப்போம் என்று சொல்வதை மன்னிக்கலாம். அதேசமயம் அதற்கு எதிர்ப்பிரச்சாரமாக அந்த பாதிரிமார்களின் அர்ப்பணிப்பையும் மனிதாபிமானத்தையும் இழிவுசெய்வதை மன்னிக்க முடியாது. அது நன்றிகொன்ற செயல். ஆன்மீகமான இழிவு அது. இருட்டில் தள்ளிவிடுவது

இந்த இரு நிலைகளுக்கு நடுவே கூர்மையான சமநிலையுடன் சென்றுகொண்டே இருக்கிறீர்கள். கால்டுவெல்லைப் பற்றிய லாசர் கதையும் ஓலைச்சிலுவை கதையும் நற்றிணை கதையும் எல்லாம் தமிழிலக்கியத்தில் நிகழ்ந்துள்ள நன்றிக்கடன் செலுத்துதல்கள். தமிழிலக்கியத்தில் இந்தவகையான பதிவு உங்கள் கதைகளில் மட்டுமே உள்ளது

பொன். முருகானந்தம்

வலம் இடம் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

ஓராண்டுக்குப் பிறகும் தனிமையின் புனைவுக்களியாட்டுக்கு கடிதங்கள் வந்துகொண்டிருக்கின்றன. இன்னமும் அக்கதைகள் வாசிக்கப்பட்டு முடிவுறவில்லை. இதோ அடுத்த களியாட்டு. ஒவ்வொரு கதையும் அற்புதமான அனுபவங்கள். ஒன்று ஒருவகைக் கதை. அதை வாசித்து நிறைவதற்குள் அடுத்த கதை. ஒன்றைவிட ஒன்று மேல். ஒன்றுக்கும் இன்னொன்றுக்கும் சம்பதமே இல்லை. மிக ஆச்சரியமானதுதான்

வலம் இடம் ஒரு புதிரான கதை. ஆனால் நெகிழ்ச்சியான கதையும்கூட. சாவும் பிறப்பும்தான் அந்தக்கதையில் இரண்டு எருமைகள். வருவதும் போவதும். கண்ணுக்கு வாழ்வு தெரிகிறது. சாவு தெரிவதில்லை. அருகே நின்றிருக்கிறது. ஆனால் நுட்பமாக தெரியவும் செய்கிறது

 

சிவராம்

அன்பு ஜெ,

மனதுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் அருகிருந்தாலும் தொலைவிலிருந்தாலும் அவர்களோடு நாமறியாத உள்ளுணர்வின் மூலம் தொடர்பு கொண்டிருபோம். இங்கு குமரேசனுக்கும் அவருடைய எருமை மாட்டுக்கும் இடையேயான ஒரு அலவலாவள் சொற்களேதுமில்லாத உணர்வுகளின் வழி கடத்தக் கூடியதாய் அமைந்தொழுகி மனதை நிறைக்கிறது. முதன் முதலில் குமரேசன் இடது பசுவைப் பற்றி பிதற்றும்போது நானும் செல்லம்மாவைப் போலேயே அவனை தவறாக நினைத்துவிட்டேன். கதையை வாசித்துவிட்டு இரவு அதை அசை போட்டுக் கொண்டிருந்தேன். கனவில் இடது பசுவைக் கண்டேன். கதையின் ஆரம்பத்தில் மாட்டிற்கு வரும் வயிற்றுவலியின் போது இறந்து போன கன்றே இடது பசுவாக நின்றிருக்கிறது. அன்னையன்னும் நுண்ணுணர்வில் தன் கன்றை அறிந்து கொண்ட தாயை விட குமரேசன் என்னும் தாயின் அன்பு சிலிர்க்கச் செய்தது. அவன் இறுதியில் அந்தக் கனவில் ”மாட்டுவேவாரத்துக்கு மறைவெரல் பாசையில்” கண்டிப்பாக வலது மாட்டையே நினைத்துத் தொட்டிருப்பான். அதுவே லட்சுமி. அதுவே பல்லாயிரமாகப் பெருகி நிறைக்க முடியும். திடீரென நின்ற கோலத்தில் பெருமாள் நினைவிற்கு வந்தார். அவருக்கு வலத்தில் இருப்பவள் ஸ்ரீதேவி, இடத்தில் இருப்பவள் பூதேவி.. பின்னும் தங்கையா நாடார் சொன்ன இந்த வரிகளை நினைத்துப் பார்த்தேன் “தொளுவம் ஒளிஞ்சு கிடக்கக்கூடாது. மூத்தவ வந்து நின்னுகிடுவா”. கண்டிப்பாக அவர் வலத்தையே தொட்டிருக்க வேண்டும்.

”தாங்குறவனுக்குத்தான் தெய்வம் துக்கத்தை தரும். தாங்காதவனுக்கு சொப்பனத்தை குடுக்கும்.” என்று சொல்லியிருந்தீர்கள். குமரன் தாங்கமாட்டாதவன் தான். அவனுக்காகவே அம்மையின் அனுக்கிரகமாய் மீண்டும் வந்து சேர்ந்த ஸ்ரீதேவிக்காய் மகிழ்ந்தேன்.

மிக நெருக்கமானவர்களின் இறப்பின் உள்ளுணர்வு மீண்டும் என் தாத்தாவை நினைவுபடுத்தியது. எனக்கும் அது இருந்தது. அவர் இறப்பதற்கு ஆறு மாதத்திற்கு முன்னரே அவர் இறந்துவிடுவார் என்று எண்ணி அழுது கொண்டிருந்தேன். அவர் இறப்பதற்கு பத்து நாட்களுக்கு முன்னர் அவரைப் பார்க்க வயல்காட்டிற்கு சென்றபோது அவர் மிகவும் சுருங்கிப் போயிருந்தார். எப்பொழுதும் போல என் கைகளை தன் மடியில் வைத்து கையின் ரேகைகளை தொட்டு கோடு போட்டுக் கொண்டிருந்தார். எப்போதும் சொல்லும் கிருஷ்ணரின் கதைகளினின்று ஏதும் சொல்லவில்லை. தன் கைகளை என்னிடம் நீட்டி தனக்குக் கைகளின் நடுவில் சக்கரம் இருப்பதாகக் காட்டினார். நான் சரி என்று முத்தமிட்டேன். மதிய உணவை நான் ஊட்டி விட்டபின் அவர் வேப்பமர நிழலில் நாற்காலியில் உட்கார்ந்து வயல்காட்டையே வேறேதோ இடத்திலிருந்து பார்த்துக் கொண்டிருப்பதைப் போல மூழ்கியிருந்தார். நான் அருகே போய் படுத்துக் கொண்டு அவரையே பார்த்திருந்தேன். திடீரென அவரிடம் “தாத்தா சாவறத பத்தி நீ என்ன நினைக்கிற” என்று சொன்னேன். அவருக்குக் காது கேட்காது என்பது நினைவிற்கு வரவே அமைதியானேன். மீண்டும் அழைத்து ”படு” என சைகை காணித்தேன். “படுத்தா எந்திரிக்க மாட்டேன். உக்காந்திருக்கேன்” என்று சொல்லிவிட்டு மீண்டும் வயக்காட்டில் உழுத மண்ணை வெறிக்க பார்த்துக் கொண்டிருந்தார். இரண்டு வாரங்கள் கழித்து அவர் எழுந்திரிக்கவே முடியாத ஒரு இடத்தில் தூங்கிப் போனார். எப்போதும் போல் இன்றும் எங்கோ தொலைவில் அவர் இருப்பதாய் நினைத்து அவருடன் பேசிக் கொண்டு தான் இருக்கிறேன். அவர் இல்லையென்று சொல்லிவிட முடியாது. குமரேசனுக்கு மீண்டும் அம்மை கிடைத்தது போல எனக்கும் அந்தத் தருணம் கிடைக்கும் என்றே நினைக்கிறேன். நுண்ணுணர்வின் அன்பு ஆழமானது. பைத்தியமானதும் கூட. நெகிழ்வான கதை ஜெ. நன்றி.

அன்புடன்

இரம்யா.

கொதி, வலம் இடம்- கடிதங்கள் வலம் இடம்,கொதி- கடிதங்கள் கொதி, வலம் இடம்- கடிதங்கள் 3

கொதி -கடிதங்கள்-1

வலம் இடம்- கடிதங்கள்

கொதி- கடிதங்கள் 2

கொதி, வலம் இடம்- கடிதங்கள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 07, 2021 10:31

நீலமும் முதற்கனலும்- முனைவர் ப.சரவணன்

‘வெண்முரசு’ நாவல்தொடரில் முதல் நாவல் ‘முதற்கனல்’. இந்த நாவலைப் பொறுத்தவரை ‘கனல்’ என்பது, நெருப்பால் ஆனது அல்ல; வெறுப்பால் ஆனது. பெருந்துயருற்றவர் அடையும் வெறுப்பு அவருக்குள்ளாகவே மிகுந்து மிகுந்து அளவு மீறிச் செல்லும்போது, அது ஆலகாலவிஷமென அவரின் நெஞ்சில் இறங்கி, தங்கி விடுகிறது. அவரின் உடலைச் சிதையில் எரித்தபோதும்கூட அந்த வெறுப்பின் விஷம் மட்டும் காய்ந்து, அழியாமல் தாமரையிலையின் மீது உருளும் நீர்த்துளியென உயிர்ப்போடு, தான் உருப்பெற காரணமாக அமைந்தவர்களை அழித்தொழிக்கத் தருணம் பார்த்துக்கொண்டு, காலவெளியில் நிலைகொண்டிருக்கும்.

‘திரௌபதியின் கண்ணீர்தான் மகாபாரதம்’ என்று பொதுவாக நாம் புரிந்து வைத்திருப்போம். துரௌபதி போன்றே காலவெளியில் நிறைந்து ததும்பும் நூற்றுக்கும் மேற்பட்ட துரௌபதிகளின் நெஞ்சில் வடியும் கண்ணீரே ‘மகாபாரதம்’ என்பதை ‘முதற்கனல்’ நாவல் கோடிட்டுக் காட்டுகிறது. இந்தக் கனலை நாம் வள்ளுவரின் துணைகொண்டு அறியலாம்.

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே

செல்வத்தைத் தேய்க்கும் படை. ” ( திருக்குறள் , 555)

அரசன் அறம் செய்யாமையால் குடிகள் துன்பமுற்று அதனைப் பொறுக்க மாட்டாது அழுத கண்ணீரே, அரசனின் செல்வத்தைக் குறைக்கும் கருவியாக மாறிவிடுகிறது. அல்லற்படுத்திய பாவத்துக்குக் காரணமாகிய கண்ணீரைவிடக் கொடிது வேறு இல்லை. அந்தக் கண்ணீர் நீர்த்துளியாக வடிந்தாலும் நெஞ்சில் தீத்துளியாக நிலைபெற்றுவிடுகிறது. அது கனன்று கனன்று கடும் சூட்டுடன், தகித்து, கனலாகிறது. இது நெஞ்சில் கனல்வதால் அகக்கனலாகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட அகக்கனல்களின் மீதே மகாபாரதம் உருவாகி, தழலாடி இருக்கிறது.

மகாபாரதத்தில் ஓர் இழையாக மட்டுமே வந்து இணையும் ஒவ்வொரு பெண்ணும் ஏதோ ஒரு வகையில் அடக்க முடியாத கண்ணீருடன்தான் வாழ்ந்து மறைகிறார். ஒவ்வொரு கண்ணீர்த் துளிக்குப் பின்னாலும் சமாதானப்படுத்த முடியாத துயர் துள்ளிக் கொண்டிருக்கிறது.

‘மகாபாரதத்தின் முதற்கனல் எது?’ என்று கேள்வியை நாம் நமக்குள் எழுப்பிக் கொண்டால், அது ‘மகாபாரதத்தோடு தொடர்புடைய ஒவ்வொரு பெண்ணின் ஆற்ற முடியாத துயரங்களின் திரள்’ என்பதையே விடையாக ஏற்க நேரும்.

மகாபாரதத்தில் கண்ணீரை வெளிப்படுத்தும் பெண்களுக்கு நிகராகக் கண்ணீரைக் கட்டுப்படுத்திக்கொண்டு செய்வதறியாது திகைத்து நிற்கும் ஆண்களும் நம் கவனத்திற்கு உரியவர்களே. குறிப்பாக, மகாபாரதத்தில் இடம்பெறும் குரு வம்சத்து அரசர்கள், அவர்களுக்கு அணுக்கத் துணையாக நிற்கும் மதியமைச்சர்கள், அவர்களை உருகி உருகிப்பாடும் சூதர்கள், நிமித்தர்கள், அரசகுடியினருக்குத் தொண்டூழியம் செய்து தன் வாழ்வையே அவர்களுக்காக அர்ப்பணித்துள்ள எளிய மக்கள் போன்றோரைக் குறிப்பிடலாம்.

‘மகாபாரதத்தை ஒருவேள்வித்தீ’ என நாம் மனத்தில் கற்பனை செய்துகொண்டால், அந்த வேள்வித்தீயில் முதல் கனலாக இருப்பவர் ‘அம்பை’. அம்பை தனக்கு இழைக்கப்பட்ட அவமானங்களால் தன்னையே கனலாகவும் தன்னைத்தானே ஊதிப் பெருக்கித் தழலாகவும் மாற்றிக் கொண்டவர். தன்னைப் போலவே கண்ணீர்ச் சிந்துவோரையும் அணைத்து அவர்களுக்குள்ளும் தனது சினத்தீப் பற்றி எரியுமாறு செய்து, அவர்களும் தொடர்ந்து எரிய தன்னையே இடு பொருளாக ஆக்கிக் கொள்கிறார் அம்பை.

வாழ்நாள் தோறும் அழும் பெண்களுக்குத் தோன்றாத் துணையாகவும் அணைத்துத் தேற்றும் தோழியாகவும் ஆதரவு அளிக்கும் அன்னையாகவும் அம்பை விளங்குகிறார். அம்பை தனித்த ‘முதற்கனல்’ மட்டுமல்ல, மகாபாரதம் முழுக்கப் பற்றி எரியக் கூடிய அனைத்துத் திரிகளையும் ஏற்றி வைக்கும் முழு முதற்பெருங்கனலும் ஆவார்.

அணையாத் தீயாக நின்றெரியும் பெண்களின் கண்ணீருக்கு முடிவற்ற காலத்திடம்கூட விடை இல்லை. வரலாற்றில் ஆண்களின் கண்ணீர்த் தடத்தைக் காணமுடிகிறது. பெண்களின் கண்ணீர் இன்றும்  உருளும் துளியாகவே இருக்கிறது. ‘ஒட்டுமொத்த மகாபாரதமும் கண்ணீர்த் துளிகளால் எழுதப்பட்டதே!’ என்று உணரமுடிகிறது.

அரசு தன் அதிகார நிலைநிறுத்தத்திற்கு வெளிப்படையான பலிகளாகப் பெண்களின் மனதும் மறைமுகமான ஆகுதிகளாக ஆண்களின் குருதியும் தேவைப்படுகின்றன போலும். அறத்தை நிலைநாட்ட வேண்டி உருவாக்கப்பட்ட ஒவ்வொரு பேரரசும் அறமற்ற சக்கரங்களைக் கொண்டே நகருகின்றன. அந்தச் சக்கரங்களில் சிக்கிச் சிதைவுறும் பெண்களைக் கொன்று, தெய்வமாக்கி முன்னகர்கிறது பேரரசு. அம்பையும் அப்படித்தான் தெய்வமாகப்படுகிறாள். ‘மகாபாரதம்’ எனும் அறத்தேரின் நெடுவழியில் அம்பையைப் போன்ற எத்தனையோ தெய்வங்களைக் காண நேரும். அவர்களுக்குக் ‘கட்டியம்’ கூறுவதாகவே இந்த ‘முதற்கனல்’ நாவல் அமைந்திருக்கிறது.

அம்பையின் அகம் எந்த அளவுக்குப் பீஷ்மர் மீது சினம் கொள்கிறதோ அதே அளவுக்கு அவரை நேசிக்கவும் செய்கிறது என்பதை ஒரு குறிப்பின் வழியாக அறிய முடிகிறது.

பீஷ்மர் காசிநகரின் மூன்று இளவரசிகளையும் சிறையெடுத்து, கங்கைநதியில் படகில் அஸ்தினபுரிக்குச் செல்லும்போது, அம்பைதான் சால்வரையே விரும்புவதாகக் கூறுகிறார். ஆனால், அப்போதே அவளின் அகம் பீஷ்மரை விரும்பத் தொடங்கிவிடுகிறது.

தன்னுடைய தாயகமும் தன்னைப் புறக்கணித்தபோது அம்பை கங்கையில் விழுந்து தற்கொலை செய்துகொள்ள நினைக்கிறாள். அப்போது ‘விருஷ்டி’ என்ற தேவதை, அம்பையிடம் ‘உன் அகம் பீஷ்மரை விரும்புகிறது’ என்பதைக் குறிப்புணர்த்துகிறது. அதனால்தான் அவள் பீஷ்மரை நாடிச் செல்கிறார். அவரும் புறக்கணித்தபோது அவர் மீது அவளுக்கு மாறாச் சினம் ஏற்படுகிறது. ஆனாலும் அவர் மீது அவளின் அகம் கொண்ட பற்று சிறிதும் குன்றவில்லை. இதனைப் பீஷ்மர் சப்தசிந்து நாட்டில் அதிதியாகத் தங்கும் இரவில் உர்வரை காணும் கனவிலிருந்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

சிகண்டி வராஹியாக மாறி உர்வரையின் கனவில் வந்து பீஷ்மரைக் கொல்வதாகக் கூறப்படுகிறது. அதே கனவு சிகண்டிக்கும் வருகிறது. சிகண்டிக்குக் கனவில் வரும் உர்வரை தன்னுடைய அன்னை அம்பையாகவே தெரிகிறது. மறுநாள் விடியலில் உர்வரை பீஷ்மரை மணந்துகொள்ள விரும்புவதாகக் கூறுகிறாள். ‘நீங்கள் என்னை மணந்துகொண்டால் வராஹி உங்களைக் கொல்வதிலிருந்து தப்பிவிடலாம்’ என்று கூறுகிறார் உர்வரை.

சிவன் அம்பைக்குக் கூறிய அருளுரையின்படி, அம்பை தன் அகக் கனலை முழுமையாகச் சிகண்டியிடம் கையளித்து, பீஷ்மரைக் கொல்லுமாறு கூறுகிறாள். அதே அம்பைதான் பீஷ்மர் மீது தன் அகத்தில் இருக்கும் காதலின் காரணமாக உர்வரையின் கனவில் வந்து, பீஷ்மரை மணக்க விரும்புகிறாள். அதனால்தான் அவள் தன் மகன் சிகண்டிக்கும் உர்வரையின் வடிவில் தானே வெளிப்பட்டு நிற்கிறாள். ஒரு மனிதரை ஒரே நேரத்தில் முற்றிலும் கொல்லவும் முழுமுதலாக விரும்பவும் அம்பையால் மட்டுமே முடிகிறது.

அன்னையின் அல்லது தந்தையின் ஆணைகளைச் சிரமேற்கொண்டு செய்து முடிக்கும் மைந்தர்களாகப் பலரை நாம் இந்த நாவலில் காணமுடிகிறது. தன் தாயின் அல்லது தந்தையின் கனலைத் தன் நெஞ்சில் சுமந்து சென்று, ஏற்றுக்கொண்ட செயலை முடித்து அந்தக் கனலை அவிக்கும் மகன்களாக நாம் மனசாதேவின் மகன் ஆஸ்திகனையும் (நாகர்குலத்தைக் காக்கும் பொறுப்பு) பிரதீபரின் இரண்டாவது மகன் சந்தனுவையும் (கங்கர்களுடன் மணஉறவை ஏற்படுத்தும் பொறுப்பு), சத்யவதியின் மூத்தமகன் வியாசரையும் (அஸ்தினபுரிக்கு வாரிசுகளைத் தோன்றச் செய்யும் பொறுப்பு) குறிப்பிடலாம்.

அம்பையைப் போலவே வாழ்க்கையில் மிகுந்த சினத்தை ஏந்தி அலைபவராக நாம் சிகண்டியையும் (அம்பைக்கு ஏற்பட்ட இழிவு) பால்ஹிகரையும் (தன் அண்ணன் தேவாபிக்கு ஏற்பட்ட இழிவு), கங்காதேவியும் (சந்தனு தனக்குக் கொடுத்த வாக்கை மீறியதால்), வியாசரையும் (அவரின் அன்னை சத்யவதி மச்சகுலம் என்பதால் அவர் ஞானம் பெறுவதற்கு அதுவே தடையாக இருப்பதால்) எண்ணிக் கொள்ளலாம். அவர்களிடம் இறக்கி வைக்க இயலாத சினம் பெருகியபடியே இருக்கிறது. அது அவர்களின் மனத்தைப் பிறழச் செய்து, உயிரைக் குடித்துவிடுகிறது.

இந்த நாவலில் அம்பையின் கனல் அடிநாதமாக இருந்தாலும் எண்ணற்றவர்களின் அகக்கனல்களும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. ஆக மொத்தத்தில் இந்த நாவல் எண்ணற்றவர்களின் முதற்கனலின் தொகுப்பு என்றும் கூறலாம்.

நன்மையைச் செய்வதாலேயே எண்ணற்றவர்களின் அகக்கனல்களைத் தன் மீது ஏற்றிக்கொண்டு, வாழ்நாள் முழுவதும் பழிசூழ்ந்த மனிதராகவே இந்த மகாபாரதத்தில் வலம்வரும் தனிப்பெரும் ஆளுமையாகப் பீஷ்மர் காட்டப்பட்டுள்ளார்.

‘புகழையும் பழியையும் சமஅளவில் பெறுவதுதான் எட்டாவது குழந்தையாகப் பிறந்தோருக்கு விதிக்கப்பட்டுள்ளதோ!’ என்றும் நினைக்கத் தோன்றுகிறது. அதற்குச் சான்றுகளாக நாம் இருவரைக் குறிப்பிடலாம். ஒருவர் ஸ்ரீகிருஷ்ணர். மற்றொருவர் பீஷ்மர்.

‘முதற்கனல்’ நாவல் வழியாக நாம் அறியும் அறுதி உண்மை, ‘எந்தக் கனலும் தான் உருவாகக் காரணமானவரை அழிக்காமல் அவிவதில்லை’ என்பதே. பெருந்துயர்களுக்கு நீதிதேடி, கண்ணீர்த் துளிகளுக்குப் பெருமை சேர்க்கும் நாவலாக ‘முதற்கனல்’ நம் நெஞ்சில் கனலென எரியத் தொடங்குகிறது.

– – –

 

‘வெண்முரசு’ நாவல்தொடரில் நான்காவது நாவல் ‘நீலம்’. இந்த நாவலைப் பொறுத்தவரை ‘நீலம்’ என்பது, வெறும் நிறமல்ல; அது பரம்பொருள். பூமியில் மனிதர்களின் நிழல் உள்பட, எல்லாவற்றின் நிழலும் கரிய நிறத்தில் படிகிறது. அதுபோலவே, பரம்பொருளின் நிறம் இந்தப் பிரபஞ்சம் முழுவதும் நீலநிறத்தில் படிகிறது. தன் அகம் திறந்து, இயற்கையைப் பார்ப்போருக்கு அந்த நீல நிறம் தெளிவாகத் தெரியும். அதனை உணர்ந்து, அதன் அடிபணிவதே மானுடம் செய்யத் தக்க ஒரே செயல். மற்ற அனைத்தையும் அந்த நீலமே செய்துகொள்ளும்.      ஸ்ரீகிருஷ்ணரின் பிறப்பு முதல் அவரின் பதினைந்தாவது வயதுவரை நிகழ்ந்தவற்றை  ஆழ்நிலைக் கண்ணோட்டத்தோடு எழுதியுள்ளார் ஜெயமோகன். ஸ்ரீகிருஷ்ணர் பிறந்து புலம்பெயர்வது தொடங்கி, மதுராவின் முடிசூடுவது வரையிலான நிகழ்ச்சிகளே இந்த நாவலின் மையச் சரடு. இதுவே, மையச் சரடாக இருந்தபோதிலும் ‘ஸ்ரீகிருஷ்ணர் இந்த நாவலில் வந்துபோகிறார்’ என்றுதான் கூறத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு இந்த நாவல் முழுக்க ராதையே நிறைந்திருக்கிறார். ராதையின் அகமும் புறமும் ஸ்ரீகிருஷ்ணரே நிறைந்திருக்கிறார். ராதையின் ஸ்ரீகிருஷ்ணரைப் பற்றிய நினைவுகள் மிகப்பெரிய நீர்க்கொடி போல இந்த ‘நீலம்’ நாவலைச் சுற்றிப் படர்ந்திருக்கிறது. ராதையின் வழியாகவே ஸ்ரீகிருஷ்ணரை நாம் அறியமுடிகிறது. அதுவே, ஸ்ரீகிருஷ்ணருக்கான ‘ராஜபாட்டை’.

இந்த நாவல் 12 பகுதிகளையும் அவற்றுனுள் 37 அத்யாயங்களையும் உள்ளடக்கி, 288 பக்கங்களில் புத்தகமாக உருப்பெற்றுள்ளது. ‘வெண்முரசு’ நாவல்தொடரில் இந்த நாவல் மட்டுமே பக்க அளவில் குறைந்தது. சங்க இலக்கியத் தொகுப்பில் பத்துப்பாட்டுத் தொகுதியில் ‘முல்லைப்பாட்டு’ அடிகளின் எண்ணிக்கை அளவில் சுருங்கியிருப்பது போல, இதுவும் பக்க அளவில் சுருங்கி இருக்கிறது எனலாம்.

முல்லைப்பட்டில், ‘இன்ன பருவகாலத்தில் வருவேன்’ என்று சொல்லிப் பிரிந்த தலைவனுக்காகத் தலைவி அந்தப் பருவகாலம் கடந்த பின்னரும் காத்திருத்திருக்கிறாள். நீளும் காத்திருப்பால் ஏற்படும் மனத்துயர் குறித்து முல்லைப்பாட்டில் நப்பூதனார் விரிவாகக் கூறியுள்ளார். ‘நீலம்’ நாவலில் ராதையின் ‘காத்திருப்பு’ யுகங்களைக் கடந்ததாகவும் அளக்க முடியாத விரிவும் ஆழமும் கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீகிருஷ்ணருக்காக ராதை கணந்தோறும் முடிவின்றிக் காத்திருக்க நேர்கிறது. மின்னி மின்னி மறையும் ஒளிபோல ஒரு கணம் ஸ்ரீகிருஷ்ணர் ராதைக்குப் புலப்படுகிறார். மறுகணம் மறைந்து மாயமாகியார். ஸ்ரீகிருஷ்ணரின் வருகைக்காகவே, அவரைப் பார்ப்பதற்காகவே ராதை தன் இருவிழிகளையும் இமைக்காமலிருக்க நேர்கிறது. ராதையின் மனத்திற்குள் ஓடும் முடிவற்ற கற்பனையில், கனவில் ஸ்ரீகிருஷ்ணரின் பாதச்சுவடுகளும் குழலிசையும் அழியாமல் இருக்கின்றன. அவற்றைப் பார்த்தபடியேயும் கேட்டபடியேயும் ராதை காத்திருக்கிறார்.

‘நீலம்’ நாவலைப் படிப்பது ஓர் இசைப்பாடலைப் படிப்பதுபோல இருக்கும். ‘திருப்புகழை வாசிப்பதுபோல’ என்றும் கூறலாம். ஸ்ரீகிருஷ்ணரின் புல்லாங்குழல் இசை போலவே, மனத்தை மயக்கும் தேர்ந்த செவ்வியற்தமிழ்ச் சொற்களால் மட்டுமே இந்த நாவல் எழுதப் பெற்றுள்ளது. இந்த நாவலின் அத்தனை வரிகளும் தேர்ந்த செவ்வியற்கவி வரிகளே! உவமைகளும் உருவகங்களுமாகச் சுழித்தோடும் ‘சங்கச்சொற்கவியாறு’ இந்த நாவல்.

ஒட்டுமொத்தத்தில், ‘வெண்முரசு’ நாவல்தொடரில் உள்ள பிற நாவல்களைவிடச் சொல்லாழத்திலும் பொருளாழலத்திலும் மிகப் பெரியது இந்த நாவலே என்று கூறுவது பொருத்தமானதே. ஜெயமோகனுக்குப் பரம்பொருள்  கையளித்துள்ள சொல்வளத்தை இந்த நாவலில் கண்டுணர்ந்து, வியக்க முடிகிறது. சங்க இலக்கிய வாசிப்புப் பயிற்சி இல்லாமல் ‘நீலம்’ நாவலை வாசிக்க இயலாது. அத்தகைய பயிற்சி அற்றவர்களுக்கு இந்த நாவல் வெறும் சொற்குவியலாகத்தான் தெரியும். தொடர்பயிற்சியாலும் முயற்சியாலும் இரண்டு செந்தமிழ்ச் சொற்கள் இணைவதால் உருப்பெறும் படிமத்தை உணரக் கற்றுக்கொண்டால், இந்த நாவல் கற்கண்டாக இனிக்கத் தொடங்கிவிடும்.

மகாபாரதத்துக்கும் இந்த நாவலுக்குமான நேரடித் தொடர்பு நான்கு வரிகள் மட்டுமே!  ஆயர்குல மலைமருத்துவரும் நிமித்திகருமான ஒருவர் மதுராவின் அரசர் ஸ்ரீகிருஷ்ணரை அணுகி, அவரின் கையைப் பற்றி, நாடியைத் தொட்டு நோக்கி, தியானித்து, பாண்டவர் முடிமீட்ட கைகள். பார்த்தனுக்கு உரைத்த இதழ்கள். பாரதப்போர் முடித்த கண்கள். அரசர்குழாம் பணியும் அடிகள். ஆற்றுவது ஆற்றி அமைந்த நெஞ்சம்” (நீலம், பக்கம் 286) என்று கணித்துக் கூறுகிறார். இந்த நான்கு வரிகள் கொண்டே, ‘இந்த நாவல் ‘வெண்முரசு’ நாவல்தொடரில் இணைகிறது’ என்று கூறுவது, நமக்கு வியப்பை ஏற்படுத்தும்.

ஒட்டுமொத்த மகாபாரதமும் உருவாகி, நிலைநிற்க மூலக்காரணம் ஸ்ரீகிருஷ்ணரே!. விதையை உருவாக்கி, அதிலிருந்து மரத்தை உருவாக்கி, அதிலிருந்து ஆயிரமாயிரம் விதைகளை உற்பத்தி செய்தது இயற்கை என்றால், அந்த இயற்கை செய்த பங்களிப்புக்கு நிகரானதுதான் மகாபாரதம் உருப்பெறுவதற்கு ஸ்ரீகிருஷ்ணரின் பங்களிப்பு. அவரின் அதிதிறனை வெளிப்படுத்தும் களமாகவே ‘நீலம்’ நாவல் திகழ்கிறது. அந்த வகையில் ஒட்டுமொத்த மகாபாரதத்துக்கும் அச்சாணியாக விளங்குவது இந்த ‘நீலம்’ நாவல்தான்.

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு

அச்சாணி அன்னார் உடைத்து ( திருக்குறள் 667)

‘அச்சாணி’ அளவில் சிறியதாகத்தான் இருக்கும். ‘நீலம்’ நாவலும் பக்க அளவில் மிகச் சிறியதே! மிகக் குறைந்த வயதில் ஸ்ரீகிருஷ்ணர் மதுராவின் மணிமுடியைக் கைப்பற்றுகிறார். அச்சாணியின் முக்கியத்துவம் பெருந்தேரைக் குடைசாயாமல் உருளச்செய்வதிலும் நிர்ணயித்த இலக்கை அடையச் செய்வதிலுமே அடங்கி இருக்கிறது. ‘மகாபாரதம்’ என்ற உருள்பெருந்தேருக்கு ஸ்ரீகிருஷ்ணரே ‘அச்சாணி’. அவர் இல்லாமல், ‘மகாபாரதம்’ ஒரு வரி கூட நகர முடியாது.

ஸ்ரீகிருஷ்ணர் தன் குழந்தைப் பருவத்தில் செய்த கோடிக் குறும்புகளையும் அவர் வளர வளர புரிந்த அரும்பெருஞ்செயல்களையும் தொட்டு தொட்டு வளர்ந்துள்ளது இந்த நாவல். ஸ்ரீகிருஷ்ணரை மையமாகக் கொண்ட இந்த நாவலில் முழுக்க நிறைந்திருக்கிறார் ராதை. ஸ்ரீ கிருஷ்ணரின் மையம் ராதைதானே! ஸ்ரீ கிருஷ்ணரை நிறைத்ததும் அவருக்கு ஓர் அடி முன்னின்று, உலகுக்கே பேரன்னையாகத் திகழ்பவரும் அந்த ராதையே!

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை இதனோடு தொடர்புபடுத்தினால், ‘ராதையே ஸ்ரீகிருஷ்ணரைவிட உயர்ந்தவர்’ என்பதை எளிதில் புரிந்துகொள்ள முடியும்.

‘கௌரிமா’ என்ற பக்தை ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரையும் அன்னை ஸ்ரீ சாரதாதேவியையும் தன்னுடைய தாய்-தந்தையராகவே எண்ணி, போற்றி வந்தார். ஒருமுறை கௌரிமா நகபத்தில் அன்னை ஸ்ரீ சாரதாதேவியுடன் தங்கியிருந்தார். அப்போது ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் அங்குச் சென்றிருந்தார். பேச்சின் இடையில் அவர் கௌரிமாவிடம், “கௌரி! எங்கள் இருவருள் யாரை நீ அதிகம் நேசிக்கிறாய்? என்னையா? அவளையா? என்று கேட்டார் அதற்கு கௌரிமா நேரடியாகப் பதில் கூறாமல் பின்வரும் இனிய பாடலைப் பாடினார்.

கண்ணா! நீ ஒன்றும் ராதையை விடப் பெரியவன் அல்ல.

துன்பத்தில் மக்கள் உன்னை அழைக்கின்றனர்.

உனக்குத் துன்பம் வரும்போதோ

! ராதேஎன்று நீ அவளை அழைக்கிறாய்”.

              (கடவுளுடன் வாழ்ந்தவர்கள் பகுதி – 2, பக்கம் 324)

சங்க இலக்கியங்களுள் ஒன்றான திருமுருகாற்றுப்படையினை நக்கீரர் எழுதும்போது, அவர் முருகனின் செம்மைப் பேரெழிலைத் தன் மனத்தால் தொட்டு உணர்ந்திருப்பார். அதுபோலவே ஜெயமோகனும் இந்த ‘நீலம்’ நாவலை எழுதும்போது, ஸ்ரீகிருஷ்ணரின் நீலப் பேரெழிலைத் தம் சொற்களால் தீண்டியிருப்பார் என்று நிச்சயமாக உணரமுடிகிறது.

திருமுருகாற்றுப்படையினைப் படிப்பவர்கள் முருகனை நினைந்து நினைந்து பரவசமாகி, உருகுவது போலவே, இந்த ‘நீலம்’ நாவலைப் படிப்பவர்கள் கோடான கோடி மாயங்கள் ஒன்றுகூடி உறையும் ஸ்ரீகிருஷ்ணரையும் உலக அன்னையர்கள் அனைவரும் ஒன்றுகூடி உறையும் ராதையையும் மனத்தால் நினைந்து, உருகிப் பரவசமடைவர். அதற்கு வழிசெய்யும் வகையில்தான் சொல்லடுக்கி சொல்லடுக்கிச் சொல்லில் சொல்லிவிட முடியாத பரம்பொருளைச் சொல்ல முனைந்திருக்கிறார் ஜெயமோகன். எவர் நாவிலும் படாத பிரம்மத்தைத் தித்திக்கும் தமிழ்ச் சொற்களில் நனைத்துத் தந்திருக்கிறார்.

இந்த நாவல் முழுவதும் ஆயிரம் அன்னையர் வந்துசெல்கின்றனர். அனைவருமே ராதைதான். காலந்தோறும் உள்ளத்தாலும் கருத்தாலும் காதலாலும் கருணையாளும் மாறாத ராதையர்கள். ஆனால், வெவ்வேறு உருக்கொண்ட ராதையர்கள். அவர்களுள் ஒரு ராதையை மட்டும் எடுத்து, அவளுக்குள் உறையும் ஆயிரம் ராதைகளை நமக்குக் காட்டியுள்ளார் ஜெயமோகன்.

இந்த நாவலின் களங்கள் பர்சானபுரி, கோகுலம், விருந்தாவனம், மதுரா.  முல்லைப்பாட்டிலும் கலித்தொகையில் முல்லைக்கலியிலும் நாம் காணும் அதே ஆயர்குலமே இங்கும் சூழந்துள்ளது. இதற்கு முன்னர் எந்த இலக்கியமும் விரிவாக எடுத்துரைக்காத ஆயர்குலத்தின் வாழ்வியல் பெருநெறியை இந்த நாவல் தன்போக்கில், கதைநகர்வுக்காகச் சொல்லிச் செல்கிறது. ஆயர்குலத்தின் வீரம், தொழில்நேர்த்தி, கற்புநெறி எனப் பலவற்றை விளக்கி, அந்தக் குலத்தினர் மீது நம்மைப் பொறாமைகொள்ளச் செய்துவிடுகிறார் ஜெயமோகன்.

இந்த நாவலில் ராதையில் உறையும் ஸ்ரீகிருஷ்ணருக்குத்தான் ‘திருப்பல்லாண்டு’ வாழ்த்து கூறப்பெற்றுள்ளது. ராதையே ஸ்ரீகிருஷ்ணர் உறையும் ஆலயமாகவும் ராதையே ஸ்ரீகிருஷ்ணரை நிறைக்கும் பெரும்பொருளாகவும் அமைகிறார். இந்த நாவல் ராதையின் அதிகனவுகளாலும் அவற்றை அவள் நினைவாக, சொல்லாக மாற்றிப் பார்க்கும் நிகழ்வுகளாலும் கட்டமைக்கப் பட்டுள்ளது. அதனால், ஸ்ரீகிருஷ்ணரின் பிறப்புக்கு முன்னரும் பின்னரும் நடந்த அனைத்தும் வரிசை மாறியே இந்த நாவலில் இடம்பெற்றுள்ளது. இந்த நாவலின் கதை பெரும்பாலும் ராதையின் மனப் போக்கிலும் இடையிடையே சூதர்கள், குறமகள்கள், நிமித்திகர்கள், முதுபெண்டிர்கள் போன்றோரின் சொற்களிலும் தேய்ந்து தேய்ந்து நகர்கிறது.

இந்த நாவலின் தொடக்கமே சில வாசகர்களைத் துரத்தியடித்துவிடும் தன்மையில்தான் அமைந்துள்ளது. அதாவது, தனக்குரிய வாசகரை மட்டுமே இந்த நாவல் தன்னுள் ஏற்கிறது. வாசிப்புப் பயிற்சி அற்றவர்களையும் சொற்களை அனுபவமாக மாற்றிக்கொள்ளப் பழகாதவர்களையும் இந்த நாவல் புறக்கணித்துவிடும்.

நீலம் நிழலாய், ஒளியாய் இந்தப் பிரபஞ்சத்தில் பட்டு, உலகம் தூக்கத்திலிருந்து மீள்வதில் தொடங்குகிறது இந்த நாவல். தூக்கம் நீங்கி எழும்போது ஏற்படும் சோம்பல் பர்சானபுரியில் உள்ள யாருக்கும் எவற்றுக்கும் ஏற்படுவதில்லை. காரணம், அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரின் அறாத குழலிசையில் மயங்கி, தியானத்தில் அல்லவா இருக்கிறார்கள்!.

பர்சானபுரியில் உள்ள ஒவ்வொரு உயிரும் மாயக் குழலிசையைக் கேட்டு, தியானத்தில் மூழ்கியுள்ளன. தியானத்தில் இருந்து எழுபவர்கள் சோம்பல் அடைவதில்லையே! இந்த நாவலின் தொடக்கம் உலகம் தியானம் கலைந்து எழுவதைக் காட்டுகிறது. தென்றல் தவழ்ந்து வந்து ராதையை எழுப்புகிறது.

ஆண்டாளின் திருப்பாவையில், விடியற்காலையில் ஆயர்குலப் பெண்களை எழுப்புவதாகப் பாடல் அமைந்திருக்கும். முன்னெழுந்தவர்கள் திருமாலின் புகழைப் பாடி உறக்கத்தில் உள்ள அனைத்து ராதையர்களையும் (பெண்களையும்) எழுப்புவார்கள். இந்த நாவலில் தென்றல் பர்சானபுரிக்குள் நுழைந்து, ஸ்ரீகிருஷ்ணருக்காகவே உடற்கனிந்துவரும் ராதையை, அவளுக்கு அவளின் அகவிழிப்பினை அறிவிக்க எழுப்புகிறது. காலந்தோறும் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, இறந்துபடும் எண்ணற்ற ராதையர் வரிசையில் அவளும் ஒருத்தி.

கிருஷ்ணரைக் கொல்ல கம்சன் பூதனையைப் பயன்படுத்துகிறார். பூதனையை நாம் அரக்கியாகத்தான் அறிந்திருக்கிறோம். ஆனால், ஜெயமோகன் பூதனையைப் பிள்ளைப் பித்தேறியவளாகக் காட்டுகிறார். அந்தப் பித்தினை நாம் ‘அதீத தாய்மைநிலை’ என்றும் கொள்ளலாம். அதாவது, பூதனையை நமக்கு அரக்கியாகக் காட்ட ஜெயமோகனுக்கு விருப்பம் இல்லை. அவளையும் தாயாகவே நம் முன் நிறுத்த அவர் விரும்பியுள்ளார்.

கோகுலத்திலுள்ள பெண்களும் பர்சானபுரியிலுள்ள பெண்களும் விருந்தாவனத்திலுள்ள பெண்களும் சிறுவன் ஸ்ரீகிருஷ்ணர் மீது பேரன்பு கொள்கின்றனர். அவனின் குறும்புகளை எண்ணி எண்ணி வெறுத்து ஒதுக்கும் மனங்களே மறுபுறம் திரும்பி, அவனை நினைத்து நினைத்து விரும்பி ஏங்குகின்றன. இதையே ‘ஸ்ரீகிருஷ்ணரின் திருவிளையாடல்’ (‘ஸ்ரீகிருஷ்ணலீலா’) என்றும் கொள்ளலாம்.

கலித்தொகை முல்லைக்கலியில் ‘ஏறு தழுவுதல்’ என்னும் முல்லை நில வழக்கம் இடம் பெறக் காணலாம். ‘ஆயர்மகள் தனது துணைவன் ஏறு தழுவ துணிவு கொண்டவனாக இருக்க வேண்டும்’ என்றே விரும்புவாள் என்று கூறப்படுகிறது.

  “ கொல்லேற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும்

               புல்லாளே ஆயமகள். ” ( கலித்தொகை , 103; 63-64)

தன்மகள் தேவகியைக் கம்சனின் நண்பர் வசுதேவருக்குத் திருமணம்செய்து தர விரும்பாத தேவகர், சற்றுச் சிந்திக்கிறார். தன் மகளுக்குத் தன் மண ஏற்பினை நடத்த விரும்புகிறார். ‘வசுதேவருக்கு உடல்வலிமை இல்லை’ என்பதை நன்கு அறிந்தவர் என்பதால், தன் மகளின் திருமணத்திற்கு ‘ஏறுதழுவுதலை’ ஒரு விதியாக முன்வைக்கிறார் தேவகர். ஆனால், தன் மண ஏற்பு நிகழ்வின்போது, ஏறுதழுவும் களத்தில் முதுசேடி வேடத்தில் நுழையும் கம்சன், ஏறுதழுவி, காளையின் கொம்பில் சுற்றப்பட்டுள்ள மங்கல நாணை எடுத்து, “இது என் நண்பன் வசுதேவனுக்காக நான் வென்ற மங்கலநாண்!” என்கிறான்.

உடல் வலுமிக்க, நெஞ்சில் துணிவு மிகுந்த ஆண்மகனை திருமணம் செய்ய  வேண்டும் எனப் மணப்பெண் விரும்புவதால்தானே ‘ஏறுதழுவுதல்’ நிகழ்ச்சியே, போட்டியே நடத்தப்படுகிறது!. அதில் ஒருவர் மற்றவருக்காக ஏறுதழுவுவதை எவ்வகையில் ஏற்க இயலும்?. ஒருவருக்குப் பதிலாக மற்றவர் தேர்வு எழுதுவதை ஏற்றுக்கொள்வதைப் போலல்லவா இது ஆகிவிடுகிறது?

ஆனால், இங்கு நிகழ்வது தேவகியின் ‘தன்மண ஏற்பு’. அதனால்தான், கம்சன் காளையை அடக்கியதும் சூதகர் வேடத்தில் ரதத்தில் அங்கு வந்த வசுதேவரை நோக்கி, ஓடிச் சென்று, அவரின் கைகளைப் பற்றிக் கொள்கிறாள் தேவகி.

‘மதுராவின் மணிமுடி யாருக்கு?’ என்ற நிலை ஏற்படும்போது, கம்சனின் சதித்திட்டத்தால் ஒரு யானைக்கு மது புகட்டப்படுகிறது. அந்த யானையின் துதிக்கையில் வரவேற்புமாலையைக் கொடுத்து ஸ்ரீகிருஷ்ணரின் முன்பாக அனுப்புகின்றனர். அந்த யானைக்கும் ஸ்ரீகிருஷ்ணருக்குமான சண்டையில் கம்சன் தன்னையே அந்த யானையாக மனத்துக்குள் நினைத்து, ஸ்ரீகிருஷ்ணருடன் சண்டையிடுவதாக அந்தக் காட்சியை உருவாக்கியுள்ளார் ஜெயமோகன்.

அந்தக் காட்சியில்  உளவியல் அடிப்படையிலான மிகச் சிறந்த ‘நாடகீயம்’ அங்கு நிகழ்த்தப்பட்டுள்ளது. போர் என்பதும் சண்டை என்பதும் ஆயுதங்களில் இல்லை; மாறாக உள்ளத்தில்தான் மூர்க்கத்தனமாக நடைபெறுகின்றன. அவற்றின் நிழல்களைத்தான் நாம் களத்தில் போராகவும் சண்டையாகவும் காண்கிறோம்.

‘நீலம்’ நாவல் வழியாக நாம் அறியும் அறுதி உண்மை, ‘ராதை என்றுமே கன்னியும் அன்னையுமானவள்’ என்பதே. அதனால்தான், ‘ஸ்ரீகிருஷ்ணர் ஒருகணம் அவளை அணைத்தும் மறுகணம் அவளைத் தொழுதும் நிற்கிறார்’. பெண்மையைப் போற்றி, பெண்களுக்குப் பெருமை சேர்க்கும் நாவலாக ‘நீலம்’ நம் நெஞ்சில் நிலைகொள்கிறது.

முனைவர் ப. சரவணன், மதுரை.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 07, 2021 10:30

March 6, 2021

கோவையில் ஓஷோ பற்றிப் பேசுகிறேன்

கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் நடத்தப்படும் ‘எப்போ வருவாரோ?’ உரைவரிசைகள் புகழ்பெற்றவை. அவ்வுரைகள் முடிந்தபின் தனியாகவும் சில உரைகள் நிகழ்கின்றன. அதிலொன்றாக ஓஷோ பற்றிய ஒரு உரைவரிசையை ஆற்றமுடியுமா என 2019 முதலே கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இப்போது அந்த வேளை வந்திருக்கிறது.

வரும் மார்ச் 12,13,14 தேதிகளில் கோவையில் ஓஷோ பற்றிப் பேசுகிறேன். மார்ச் 12 காலை கோவை வந்து 15 மாலை நாகர்கோயில் திரும்புவேன். நண்பர்கள் பல ஊர்களிலிருந்தும் வருவதனால் இம்முறை தங்க பெரிய இடம் பார்க்கச் சொல்லியிருக்கிறேன். கோவை என்றுமே உள்ளத்திற்கு இனிய இடம்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 06, 2021 10:36

படையல் [சிறுகதை]

காலையில் இருந்தே மெல்லிய மழை பெய்துகொண்டிருந்தது. விடாமல் பிசுபிசுவென்று இறங்கிய தூறல் வானை முற்றிலுமாக மறைத்து, அந்தியை சீக்கிரமே கொண்டுவந்தது.மரங்களின் இலைகள் பளபளத்து அசைந்து நீர்த்துளிகளைச் சொட்டிக்கொண்டிருந்தன. நயினார் முகம்மது எங்கிருந்தோ கொஞ்சம் விறகுக்கட்டைகளை எடுத்துவந்தார்.அவற்றை கல்மண்டபத்தின் ஓர் ஓரமாக போட்டார். அவை நனையாமலிருக்க பழைய பாய் ஒன்றால் உருட்டி கட்டியிருந்தார்.

அங்கே அமர்ந்திருந்த ஆனைப்பிள்ளைச் சாமி “எங்கேருந்து எடுத்தே பாய்?”என்றார். “நல்ல உலந்த வெறகா இருக்கே? இந்த மளையிலே”

“பாத்துட்டே போனேன் சாமி. எல்லா எடமும் நனைஞ்சு சொட்டுது. மளை தொடங்கி பதினெட்டுநாள் ஆச்சுல்லா?”என்றார் நயினார் முகம்மது. “எல்லா எடமும் நனைஞ்சிருதது. அப்ப ஒரு குடிசையை பாத்தேன். அப்டியே சரிஞ்சு விளுந்து போட்டுது. உள்ள ஆருமில்லை. நாலைஞ்சு உடைஞ்ச சட்டிபானை மட்டும்தான். உளுது வெள்ளாமை போட்டிருக்கான். அதையும் அப்டியே விட்டுப்போட்டு ஓடியிருக்கான். குடிசைபோட்டிருந்த கட்டைங்களை அப்டியே எடுத்துட்டு வந்துட்டேன்… ரெண்டுநாளைக்கு போரும்…”

“அப்டியே மேக்கே போயிப்பாரு. அந்தப்பக்கம் திருணாமலை வரை இப்டி உடைஞ்ச குடிசைங்க ஆயிரமாவது இருக்கும். நீ சாவுறது வரை குளிரு காயலாம்” என்றார் மூலையில் ஒடுங்கியிருந்த சாம்பிராணி மஸ்தான்.

“தீ கடையணுமே”என்றார் நயினார் முகம்மது. “கல்லு வச்சிருக்கேரா சாயவு?”

“இந்தா” என்று சாம்பிராணி மஸ்தான் இரண்டு சிறிய கற்களையும் பஞ்சுத்திரியையும் நீட்டினார். “சாம்பிராணிவச்ச பஞ்சு… சமைஞ்சபுள்ள சிரிக்கிறாப்பிலே பத்திக்கிடும்”

ஆனைப்பிள்ளை சாமி விறகை அடுக்கி குவியலாக்கினார். முற்றிக் காய்ந்த மூங்கில்கழிகள் இரண்டு இருந்தன. அவற்றை தரையில் அறைந்து உடைத்து சிம்புகளாக்கி அடுக்கினார். நயினார் முகம்மது கற்களை உரசியதுமே பஞ்சு புகைந்து பற்றிக்கொண்டது. அந்த நெருப்பை மூங்கில்சிம்புகள் நடுவே வைத்து ஊதி ஊதி அனலை எழுப்பினார். அவை தயங்கியபடி பற்றிக்கொண்டன.

ஆனைப்பிள்ளை சாமி உடலை உந்தி எழுந்து அருகே வந்து தணலில் தன் சிலும்பியை பற்றவைத்துக்கொண்டார்.

“ஓய் ஓய், பொளுது இருட்டட்டும் ஓய்”என்றார் சாம்பிராணி மஸ்தான்

“இருட்டியாச்சு”என்றார் ஆனைப்பிள்ளை சாமி

“அது மளை இருட்டு”

”இருட்டாச்சுன்னா ராத்திரிதான்”

“கிரகணம் ராத்திரியாயிருமோ?”

”இரும், இப்ப என்ன? ராத்திரியா பகலான்னு தெரியணும், அவ்ளவுதானே? பாவா கிட்டேயே கேப்போம். ஏன் பாவா இப்ப ராத்திரியில்லா?”என்றார் ஆனைப்பிள்ளை சாமி

“பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்” என்று மண்டபத்தின் தெற்குமூலையில் சரிகை தொப்பி வைத்து பச்சை சால்வையப் போர்த்தி அமர்ந்திருந்த எறும்பு பாவா சொன்னார்.

“கேட்டாச்சுல்லா? பாவா சொல்லியாச்சு”

“வாப்பா எப்பமும் அதொண்ணுதானே சொல்லுவாரு?”என்றார் சாம்பிராணி மஸ்தான்

“அப்ப நீரு இப்ப பகலான்னு கேட்டுப்பாரும் ஓய்”

“அதெப்பிடி , வாப்பா சொல்லியாச்சுல்லா?”

“அப்ப வாயை மூடிட்டிரும்” என்றார் ஆனைப்பிள்ளை சாமி

“என்னா இருட்டு… இந்த மாதிரி இருட்டு உண்டுமா? மை போலே மானத்திலே இருந்து எறங்கிட்டிருக்கே”என்றார் சாம்பிராணி மஸ்தான்.

“எல்லாம் ஒரே இருட்டுதான்… அம்மையிருட்டுக்கு ஆயிரம் குட்டி இருட்டு” என்ற ஆனைப்பிள்ளை சாமி தீயை ஊதி ஊதி சிலும்பியை கனியவைத்தார். இருமிக்கொண்டு புகையை இழுத்து நெஞ்சில் நிறுத்தி சிவோஹம் என உறுமியபடி மூக்குவழியாக ஊதினார். அவரைச் சுற்றி ஒரு குட்டி மேகம் பறந்தது. கனைத்தபடியும் செருமியபடியும் மீண்டும் இழுத்தார். கையை தரையில் இரண்டு முறை அடித்தபின் பாடினார்.

“இருட்டுக்கு இருட்டான ஒளியே அல்லவோ? என்-

மருட்டுக்கு மருந்தான நோயே அல்லவோ?

கருத்துக்கு கருத்தான கருமையே அல்லவோ? இக்-

கருணைக்கும் கரவுக்கும் காரணமே அல்லவோ?”

அவர் குரல் காட்டுவிலங்கின் குரல்போல கடுமைகொண்டிருந்தது. அது கற்பாறை உருகிநெகிழ்வதுபோல் குழைந்தது.

“சொல்லிச் சொல்லி கண்ட சொல்லல்லவோ?- நான்

சொல்லாமல் விட்டுவிட்ட சித்தமே அல்லவோ?

எண்ணி எண்ணி சேர்த்த எண்ணமே அல்லவோ?- நான்

எண்ணாத வெளியான ஏகாம்பரம் அல்லவோ?”

“பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்”என்றார் எறும்பு பாவா

மஸ்தான் “செரி, ஒரு இளுப்பு நமக்கும் குடும். குளிருல்லா ஏறி அடிக்குது? மய்யத்துக்குள்ள நெறைஞ்சிருக்குத அதே குளிரு” என்றார்.

“இந்தாரும் வே”

மஸ்தான் சிலும்பியை ஒருமுறை ஆழமாக இழுத்துவிட்டு “புகை நல்லதாக்கும். புகைமேலே மலக்குகளும் ஜின்னுகளும் ஹூறிகளும் உண்டு” என்றார்.

“பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் “என்றார் பாவா.

நயினார் முகம்மது மூன்று கற்களை கூட்டிவைத்தார். அதன்மேல் நீர் நிறைந்த பானையை கொண்டுவைத்து ஒரு பழைய சட்டியிலிருந்து அரிசியை எடுத்து அதன்மேல் கொட்டினார்.

”தண்ணி கொதிச்சு அதுக்குப்பின்னாடி அரிசிபோடுவாளுக குடும்பஸ்த்ரீகள்”என்றார் ஆனைப்பிள்ளைச் சாமி . அதை அவர் ஒவ்வொருமுறையும் சொல்வதுண்டு

“இது பிச்சைக்காரன் சோறு”என்றார் நயினார் முகம்மது. “பிச்சைக்காரன் சோறும் பேய் திங்குத பொணமும்னு கணக்கு”

“பாவா கேட்டிட்டிருக்காரு” என்று நயினார் சொன்னார்.

”அவரு காணாத மலக்குகளா ஜின்னுகளா?”ஆழமாக இழுத்து மஸ்தான் சொன்னார்.“அவருல்லா பிச்சைக்காரனுக்க ராஜா” என்றார் மஸ்தான்

“ஆமா” என்றார் ஆனைப்பிள்ளைச் சாமி “வடகோடு உயர்ந்தென்ன தென்கோடு தாழ்ந்தென்ன வான்பிறைக்கே”

“அதென்னது பாட்டு?”

“பட்டினத்தார் பாட்டு. அவரும் நம்ம பாவா மாதிரி, நம்மளை மாதிரி பிச்சைக்காரனாக்கும்”

“எப்பவுமே இருந்திட்டிருக்கானுக பிச்சைக்காரனுக”என்றார் நயினார். ‘அந்தாலே சனம் பசிச்சு சாவுது. ராசாக்கள் அடிச்சு சாவுதானுக”

“ஆனை பொருதும் அருங்காட்டில் அஞ்சுவதுண்டோ அன்றில்கள்?” என்றார் ஆனைப்பிள்ளை சாமி. சிலும்பிக்காக கைநீட்டினார். அதற்குள் இருமல் வந்தது. மஸ்தானின் கண்கள் கனன்றுவிட்டன. ஆனைப்பிள்ளைச் சாமிக்கு பிந்தித்தான் ஏறும்.

“கேட்டேரா சாமி? நான் இங்க வாறப்ப இங்க இவரு மட்டும்தான் இருந்தாரு. இந்த மண்டபம் அப்ப இப்டி இல்ல. குப்பைகூளம் பாம்பு தேளு எறும்பு நட்டுவாக்காளி… இவரு அதுக்கு நடுவிலே இப்டியே இருந்திட்டிருக்காரு… மாடுமேய்க்குற பயக்க அப்பப்ப என்னமாம் திங்க குடுப்பாங்க. மாட்டுக்க பாலை கறந்து எலையிலே ஊத்தி குடுப்பாங்க. வளிப்போக்கனுங்க மிஞ்சிய அப்பமோ புளிசோறோ எறிஞ்சு குடுப்பாங்க. அம்பிடுதான். மத்தபடி சாப்பாடு இல்லை. எதுகேட்டாலும் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் மட்டும்தான் பதில். அது என்ன சொல்லுறாருண்ணு இங்க யாருக்கும் தெரியாது. பாக்க சின்ன உருவம்… இப்ப சால்வையும் தொப்பியும் போட்டு நான் கொஞ்சம் பெரிசு பண்ணியிருக்கேன். அப்ப இந்தா, ஒரு மூணுவயசு குளந்தை அளவுக்குதான் இருப்பாரு. கையையும் காலையும் ஊணி கனவேகமா நடப்பாரு. பாத்தா எறும்பு மாதிரி இருப்பாரு. அதனாலே எறும்பு பாவான்னு மாட்டுக்காரப் பயக்க போட்ட பேரு” என்றார் மஸ்தான்.

“எறும்புபாசையிலே எறும்புகளோட பேசுறதனாலே அப்டி பேருன்னு சொன்னீருல்லா?”என்றார் நயினார் முகம்மது , ஏமாற்றத்துடன்.

சமாளித்துக்கொண்ட மஸ்தான் “அப்டியும் சிலரு சொல்லுவாக” என்றார். “எறும்பு பாவான்னு நானும் சொல்ல ஆரம்பிச்சேன். அவரு தனியாட்டு உக்காந்து மலக்குகளிட்ட பேசிட்டிருக்கிறத பாத்த பிறகுதான் யா ரஹ்மான், இது ரஹ்மானுக்க குரலை கேட்க சக்தியுள்ள வலியுல்லாஹ் இல்லியோன்னு முடிவுசெய்தேன்… ஒரு ஞானத்தொப்பி வேணுமே? உம்மாணை ஓய், நான் நினைக்கல்லை. நினைச்சு முடிக்கல்லை. அப்ப ஒரு வண்டி போகுது. திருச்சிராப்பள்ளி போற கூட்டம். அதிலே ஒருத்தரு பச்சைத்தொப்பி போட்டிருந்தாரு. ’அய்யா, ஞானவானாகிய வலியுல்லாஹ் இங்க இருக்காரு. அந்த பச்சைத்தொப்பிய குடுங்கய்யா’ன்னு கேட்டேன். அவங்க எறங்கிட்டாக. ஒருத்தர் பாவாகிட்டே ’உம்ம பேரென்ன ஓய்’னு கேட்டார். பாவா அவரைப்பாத்து சிரிச்சு ‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்’ன்னு சொன்னாரு. அப்டியே விளுந்து கும்பிட்டுடாங்க.  அவங்க குடுத்துட்டுப்போன பச்சைத்தொப்பி, பச்சை சால்வை… இப்ப இங்க என்ன ஒரு ஐஸ்வரியம்…”என்றார்

“அப்ப வேற கதை சொன்னீரு”என்றார் நயினார் முகம்மது மேலும் ஏமாற்றத்துடன்.

”அதுவும் உண்மை”என்றார் சாம்பிராணி மஸ்தான், மீண்டும் சிலும்பியை வாங்கி ஆழமாக இழுத்தபடி. புகையை ஊதிவிட்டு, கடுமையாக நயினார் முகம்மதுவை பார்த்தபிறகு “வலியுல்லாஹ் திவ்ய சரித்திரங்களை கேள்வி கேக்கப்பிடாது”என்றார்.”அது ஹராம்… அஹங்காரமான ஹராம். பர்க்கத்துள்ளவன் கேள்வி கேக்க மாட்டான்”

“நான் கேள்வி கேக்கல்லை”என்று நயினார் முகம்மது தரையைப் பார்த்து சொன்னார்

“நீ கேள்வி கேட்டே… முந்தாநாள் கேட்டேல்ல?”என்றார் சாம்பிராணி மஸ்தான் உரக்க. “சொல்லும் ஓய், சாமிகிட்ட சொல்லு”

“என்ன கேள்வி?”என்றார் ஆனைப்பிள்ளைச் சாமி

“ஒண்ணுமில்லை”என்றார் நயினார் முகம்மது

“சொல்லும் ஓய்”என்றார் ஆனைப்பிள்ளைச் சாமி

“ஒண்ணுமில்லை… போனவாரம் வந்தவாசியிலே நடந்த சம்பவம்… வழிப்போக்கன் ஒருத்தன் சொன்னான். இப்பம் எங்க பாத்தாலும் சண்டையும் கொள்ளையுமில்லா நடந்திட்டிருக்கு? இந்தப்பக்கம் பாளையக்காரனுகளுக்க பட்டாளம் வாளும் கோலுமா கண்டவனை எல்லாம் கொன்னு கொள்ளையடிச்சுட்டு போறாங்க. அந்தப்பக்கம் நவாபு பட்டாளம் காட்டுத்தீ மாதிரி ஒரு ஓரத்திலே இருந்து எரிஞ்சு பரவி ஒரு மிச்சம் மீதி இல்லாம அரிச்சு அள்ளி எடுத்து அழிச்சுப்போட்டு போகுது. நடுநடுவே மராத்திக்காரனுக குதிரைப்படையோட வாறானுக. மலைவெள்ளம் இறங்குற மாதிரி வந்து சூறையாடிட்டு அப்டியே போறாங்க… இதுக்குமேலே அங்கங்கே சின்னச்சின்னக் கொள்ளைக்கூட்டம்… பாவப்பட்ட மனுசப்பயக் கூட்டம் தீ பட்ட பூச்சிப்பட்டாளம் மாதிரி பரிதவிச்சு பதறிப்பறந்து கெடக்கு. காலெடுத்து நடக்குற நெலைமையிலே இருக்கிறவன்லாம் வலிஞ்சு இளுத்து எப்டியாவது கும்பினிக்காரன்  பாண்டிச்சேரிக்கும் மதராசப்பட்டினத்துக்கும் ஓடிட்டிருக்கானுக”

“அது தெரிஞ்சதுதானே? கோல்கொண்ட மன்னவன் குடிகெட்டு போனால் மால்கொண்டு இருளுமே மாநிலம் தானுமேன்னு சொல்லியிருக்குல்லா?”

“அது கொஞ்சநாளாட்டு நடக்குது… என் குடும்பமும் மாடும் கன்னும் எல்லாம் நவாப்புப் படையாலே அப்டியே போச்சு… என் சீவன் மட்டும் மிச்சமாச்சு, கொள்ளிக்கட்டையிலே மிஞ்சியிருக்க தீபோல எரிஞ்சுகிட்டு இந்தா இங்க இருக்கேன்” என்றார் நயினார் முகம்மது.

“நீரு கேட்டதைச் சொல்லும் ஓய்”என்று சாம்பிராணி மஸ்தான் கைநீட்டி சொன்னார்

“நான் ஒண்ணும் சொல்லல்ல”என்றார் நயினார் “நான் பாவப்பட்டவன். யா அல்லாஹ் உன் ராச்சியம் வரணும்னு மட்டும் சொல்லத்தெரிஞ்ச கபோதி”

“செரி, இப்ப நீ கேட்ட கேள்வியைச் சொல்லு” என்றார் ஆனைப்பிள்ளைச் சாமி

“இல்ல, வந்தவாசியிலே ஒரு பள்ளிவாசல்… அதிலே இமாம் இல்லை.முக்கிரி மட்டும்தான் இருந்திருக்காரு. மழைக்காலம்னு அந்தவழியா போன இந்துக்காரனுக முசல்மானுங்க எல்லாரும் பள்ளிவாசலுக்கு உள்ள ஏறி படுத்திருக்கானுக. எல்லாரும் மதராசப்பட்டினம் போறகூட்டம். பாதிப்பேரு கையிலே கிடைச்சத பொட்டலம் கெட்டி வச்சிருக்கானுக”

“ராத்திரிக்கூரைக்கு அணைஞ்சிருக்கானுக”என்றார் ஆனைப்பிள்ளைச் சாமி

“ஆமா, அரைச்சக்கரம் வாங்கிக்கிட்டு முக்ரி எடம்குடுத்திருக்கான்… ஆளு உள்ள இருக்கிறத பாத்துட்டு போறவனும் வாறவனும் உள்ள வந்து உக்காந்துட்டான். கடைசியிலே உக்கார எடமில்லை. அடிபிடி சண்டை ஆயாச்சு. அந்தப்பக்கமா நவாப்பு பட்டாளம் போய்ட்டிருக்கு. அவனுக இந்த சத்தத்தை கேட்டானுக. இங்க யாரோ பட்டாளம் ஒளிச்சிருக்குன்னு நினைச்சு வந்திட்டாங்க. யாத்திரக்காரனுகன்னு தெரிஞ்சதும் வாளை உருவிட்டு உள்ள பூந்திட்டானுக…”

“பாவமே”என்றார் ஆனைப்பிள்ளைச் சாமி

“மொத்தம் நூத்தி எளுவத்தெட்டு தலை சாமி…நூத்தி எளுவத்தெட்டு…ஆம்புள பொம்புள கெளடு கொளந்தை எல்லாம் உண்டு… ஆடு அறுக்குத மாதிரி அறுத்துப்போட்டானுக. மூட்டை முடிச்சையெல்லாம் வெட்டி அறுத்து தேடினானுக. ஒருமணி தங்கம் வெள்ளி ஒரு சக்கரம் காசு கிடைக்கல்ல. அப்டியே போய்ட்டானுக” நயினார் சொன்னார்.

“உம்ம கிட்ட இந்தக்கதைய யாரு சொன்னா?”

“இங்க ஒரு கூட்டம் வந்திச்சு… இந்தாலே திருச்சிராப்பள்ளி போற கால்நடைக்கூட்டம். நடந்து தளர்ந்து அந்த ஊற்றங்கரையிலே உக்காந்தாங்க. கஞ்சி காய்ச்சலாம்னு அரிசிப் பொக்கணத்தை அவுத்தாங்க. அது அரிசியில்லே சாமி, ரெத்தக் கட்டி… அப்டியே ரெத்தத்திலே ஊறிப்போய் கட்டிபிடிச்சு இருக்குற அரிசி… அந்த பள்ளிவாசலிலே இருந்து உசிரோட தப்பின கூட்டம்… வழிதவறி இந்தப்பக்கமாட்டு வந்திட்டானுக. தப்பி வாறப்ப கையிலே சிக்கின அரிசிப்பொதிய தூக்கிட்டு வந்திட்டானுக… அது மனுசரெத்தத்திலே ஊறி இருக்கு”

“என்ன செய்தானுக?”

“அப்பதான் நான் போயி கை நீட்டினேன்…. ’ஞானத்தொப்பி போட்ட எறும்பு பாவா வலியுல்லாஹ் சாகிப்புக்கு அன்னம் குடுங்கய்யா’ன்னு கேட்டேன். அப்டியே தூக்கி என் கையிலே குடுத்துப்போட்டான். ‘கொண்டுபோயி குடு உனக்க ஞானிக்கிட்டே. இந்த அரிசிச்சோத்த அவருதான் திங்கமுடியும். அவருக்குதான் எறங்கும்’னு சொன்னான். நான் அப்டியே ஓடிவந்துபோட்டேன்”

“பிறவு?”

“பிறவு மறுபடியும் போயி எடுத்துட்டு வந்தேன். அந்தா அங்க தூணுக்கு பொறத்தாலே இருக்கு… அது பாவாவுக்குன்னு குடுத்தது. அதை வேண்டாம்னு சொல்ல நாம ஆளில்லை. ஆனா அதை களுவி சமைக்க எனக்கு தெம்பில்லை”

“அதான் கேட்டியா?”

“ஆமா, நான் கேட்டது வேற ஒண்ணுமில்லை. இந்த ரெத்தச்சோறு பாவாவுக்கு செமிக்குமான்னு கேட்டேன்” என்றார் நயினார்

“பாவான்னா இவன் என்ன நினைச்சிருக்கான் பாருங்க”என்றார் மஸ்தான்

“நான் ஒண்ணுமே கேக்கல்ல…செமிக்கும்னா நான் சமைச்சு போடுறேன்”

“நீ சமைப்பே… பாவா மேலே உனக்கு அப்டி ஒரு சந்தேகம்”

“நான் சந்தேகப்படல்ல”என்றார் நயினார் முகம்மது. “நீங்க சொல்லுங்க. நான் சமைச்சுப்போடுறேன்”

“சமையும் ஓய்”என்றார் மஸ்தான் “பாவா, அதைச் சமைக்கவா?”

“பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்” என்றார் எறும்பு பாவா.

”சொல்லியாச்சு”என்றார் மஸ்தான்

”ஓய், பாவா சாப்பிட்ட மிச்சத்தைல்லா ஓய், நாம கைநீட்டமாட்டு சாப்பிடுதோம்? நமக்கு செமிக்குமாவே?”என்றார் ஆனைப்பிள்ளைச் சாமி

மஸ்தான் “ஆமால்ல?”என்றார். “ஓய் நயினார், அதை அப்டியே வச்சுப்போடும்… பிறவு பாப்போம்”

இரண்டு குதிரைகள் மழைக்குள் குளம்போசையிட்டபடி வந்தன. அதன்மேல் நனைந்த ஆடைகளுடன் குறுகி அமர்ந்திருந்த இருவர் மண்டபத்தை கண்டதும் குதிரைகளை திருப்பி அருகே வந்தனர். குதிரைகளை  அருகே நின்ற அரசமரத்தின் அடியில் கட்டிவிட்டு மண்டபத்திற்குள் வந்தனர். இருவரும் இடையில் உடைவாள்கள் தொங்கவிட்டிருந்தனர். கையில் நீண்ட ஈட்டியும் இருந்தது

“ஆருடா இங்க?”என்று ஒருவன் கேட்டான்

“நாங்க பிச்சைக்காரங்க”என்றார் நயினார் முகம்மது

“பிச்சைக்கார நாயிங்க நல்லா சமைச்சு தின்னு மழைநனையாம இருக்கீங்க போல?”என்றான் ஒருவன்.

இன்னொருவன் “அவனுகளுக்கு என்ன? நல்ல சீவிதம்”என்றபடி தன் வேட்டியையும் தலைப்பாகையையும் கழற்றி கோவணத்துடன் நின்றபடி பிழிந்தான்.

“தீயிருக்கு, நல்ல காரியம்”என்றான் முதல் வீரன். “அங்க பிடிச்ச மழை. நடுங்கின நடுக்கத்திலே நாலு எலும்பு உடைஞ்சிருக்கும்”

அவனும் ஆடைகளை பிழிந்தான். சுற்றுமுற்றும் பார்த்தபின் ஈட்டியை மண்டபத்தின் கல்லிடுக்குகளில் பொருத்தி குறுக்காக வைத்து அவற்றின்மேல் துணிகளை காயப்போட்டான். இன்னொருவன் அதைக்கண்டு அவனும் அப்படியே செய்தான்.

அவர்கள் உடைவாளுடன் அடுப்பின் அருகே அமர்ந்து உடலை குறுக்கிக்கொண்டு குளிர் காய்ந்தனர்.அவர்கள் உடலெங்கும் சிவப்பான புதிய காயங்களும், ஆறிக்கொண்டிருந்த நீலநிற காயங்களும், பழைய தழும்புகளும் நிறைந்திருந்தன.

ஒருவன் பாவாவை பார்த்து “இவரு யாரு?”என்றான்

“எறும்பு பாவா… வலியுல்லாஹ் சாகிப், ஞானியாரு”என்றார் நயினார் முகம்மது

“சின்னப்பையன மாதிரி இருக்காரு”

“அவருக்கு வயசு நூறுக்குமேலே”என்றார் நயினார் முகம்மது

“நூறு வயசா? பேசுவாரா?”

”பேசுவாரு”

“ஓய், உம்ம பேரு என்ன? எந்தூரு?”

“பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்”என்றார் பாவா

“என்ன சொல்லுறார்?”

“கொரான் மந்திரம்… அல்லாவை கூப்பிடுதாரு”

“அதுக்கு என்ன ஓய் அர்த்தம்?”

“அல்லாவே பெரியவருன்னு…அல்லா பெயராலேன்னு”

“அப்ப நவாப்பு பெரியவரு இல்லியோ? உங்க நவாப்பு?”

“பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்”என்றார் பாவா

“ஓய், உங்க நவாப்பை பாத்தா அந்த தொப்பியை எடுப்பேரா?”

“பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்”என்றார் பாவா

“என்னவே இவரு சொன்னதையே சொல்லிட்டிருக்காரு?”

“அவரு அப்டித்தான், வேற ஒண்ணையும் சொல்ல மாட்டாரு”

“வேற பேசமாட்டாரா?”

”பேசமாட்டாரு”

“அய்யோ அம்மா ஆத்தான்னுகூட கத்த மாட்டாரா?”

”அவரு வாயிலே அது மட்டும்தான் வரும்”

“பாத்திருவோம்” என்று அவன் எழுந்து சென்று அவர் அருகே நின்றான். ஓங்கி அவரை உதைத்தான்.

அவர் “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்”என்றபடி உருண்டார். ஆனால் தொப்பியை கையால் பிடித்துக்கொண்டார்

”அய்யோ, வேண்டாம், அவரு அருளுள்ள ஞானியாரு” என்று நயினார் பதறி கூவினார்.

மஸ்தான் அவரை பிடித்து நிறுத்தி “அவன் அடிக்கட்டும் ஓய்… அவருக்கு எல்லாம் ஒண்ணுதான்”என்றார்

அவன் மீண்டும் அவரை உதைத்தான். அவர் “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்”என்று மட்டும் சொன்னார்.

“வெளையாடுறாண்டா”என்றபடி அவன் உடைவாள் உறையால் அவர் மண்டையில் ஓங்கி அறைந்தான். பச்சை தொப்பி கீழே விழுந்தது. உடைவாளின் உறை அவர் மண்டையில் பட்டு ஏதோ காய் உடைந்து சாறு தெறிப்பதுபோல ரத்தம் தெறித்தது.

அவர் அப்போதும் “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்”என்று மட்டும்தான் சொன்னார். குரல் உயரவோ தாழவோ இல்லை.

“மாப்பிள்ள, அது கிறுக்குன்னு நினைக்கிறேன். இவனுக அந்த கிறுக்கனை காட்டி பிச்சை எடுத்து பிழைக்கிறானுக”

“இருக்கும்” என்றபின் அவர்மேல் காறி துப்பிவிட்டு அவன் வந்து தீயருகே அமர்ந்தான்.

“கஞ்சி உங்களுக்காடா?”என்றான் அடித்தவன்.

“விருந்தாளிக்கு முதல்ல குடுப்போம். அவங்க பசியாறி மிஞ்சினா நாங்க சாப்பிடுவோம்”

“உங்க கிறுக்கன் செத்தானா இல்லியான்னு தெரியல்ல… பாரு”என்றான் இன்னொருவன்.

நயினார் ஓடிப்போய் எறும்பு பாவாவை எழுப்பினான். அவர் முகமெல்லாம் ரத்தம் வழிந்தது.

“வெட்டு பட்டிருக்கு” என்றான்.

“சால்வையை வைச்சு கட்டுடா… எந்திரிச்சு வந்தா உனக்கு இருக்கு”என்றான் அடித்தவன்.

நயினார் சால்வையால் பாவாவின் காயத்தை சேர்த்து முண்டாசு போல கட்டினான். பச்சை முண்டாசு ரத்தத்தால் நனைந்தது. அவன் அவரை தூக்கி அப்படியே சாய்த்து அமரச்செய்தான்.

”கஞ்சிய எடுத்து கொட்டுடா”என்றான் அடித்தவன்.

மஸ்தான் “இருங்க”என்று ஏற்கனவே பறித்து வைத்திருந்த அகலமான நவரை இலைகளை எடுத்து வந்தார். புழுதியில் பள்ளம் தோண்டி அதன்மேல் இலைகளை பரப்பி கிண்ணம்போல செய்தார். அதன்பின் அகப்பை ஒன்றை எடுத்துவந்து கஞ்சியை அள்ளி அள்ளி இரண்டு இலைக்குழிகளிலும் ஊற்றினார்

“தொட்டுக்கிட ஒண்ணும் இல்லியாடா?”

“தொட்டுக்கிடுறதுக்கு பாட்டுதான்”

“அதுசெரி”என்றான் அடித்தவன். “பாட்டு பாடுத காலம் வரும் உனக்கெல்லாம்… நாலுநாள் முன்னாடி என்ன நடந்ததுன்னு தெரியும்ல?”

“எங்க?”

“திருவண்ணாமலை கோயிலிலே?”

“நாங்க எங்க செய்திகளை கேள்விப்படுறோம்? பிச்சைக்காரப் பொழைப்பு” என்றார் மஸ்தான்.

“ஆர்க்காடு நவாப்பு ராஜா சாகிப்பு ஒரு வருஷமா திருவண்ணாமலைக் கோயிலிலேதான் தம்பு அடிச்சிருந்தான். அவன் பட்டாளம் நாலாயிரம்பேரு உள்ள தங்கியிருந்தாங்க… இப்ப அங்க மதசாரப்பட்டினத்திலே சண்டை தொடங்கியிருக்கிறதனாலே அவன் ஜமேதார் உபைதுகான்னு ஒருத்தன் தலைமையிலே எழுநூற்றம்பது பேரை மட்டும் அங்க விட்டுட்டு மிச்ச பட்டாளத்தை கூட்டிட்டு போயிட்டான்”

இன்னொருவன் கஞ்சி ஊற்றும்படி கைகாட்டினான். மஸ்தான் அவனுக்கும் கதைசொன்னவனுக்கும் கஞ்சி ஊற்றினார்.

“தியாகதுர்க்கத்திலே மராட்டிப்படை நின்னுட்டிருக்கு, தெரியும்ல? கின்னேதார் கிருஷ்ணராவுன்னா நவாபுக்கே பயம்தான். நாலுவாட்டி அவனை பிடிக்க போனாங்க. தப்பி மலைமேலே ஏறிட்டான். நவாப்புப் பட்டாளம் மதராசப்பட்டினம் போனதை அறிஞ்சதும் கிருஷ்ணராவு ராத்திரியோட ராத்திரியா வந்து கோயிலுக்குள்ள பூந்துட்டான். அவன்கூட வந்தவனுக மூவாயிரம்பேரு… மழைவேற அலறிட்டு பேயுது. அதுக்குள்ள சத்தம் காட்டாம வந்திட்டாங்க. பாதாளலிங்கம் சன்னிதி வழியா ஒரு சுரங்க வழி இருக்கிறது கிருஷ்ணராவுக்கு தெரியும். அவன் அங்கதான் நாலுமாசம் தம்படிச்சிருந்தான். உள்ளார பூந்து காவல்காரனுகளை கொன்னுட்டு கதவையும் திறந்துட்டாங்க. கிருஷ்ணாராவும் கூட்டமும் அப்டியே உள்ள பூந்து தூங்கிட்டிருந்த துலுக்கப்படை முச்சூடையும் கொன்னு குவிச்சிட்டானுக. கண்டம் துண்டமா வெட்டிட்டானுகன்னு கணக்கு… மொத்தம் எழுநூத்தி அம்பதுபேரு… உள்ள இருந்த அத்தனைபேரும்…”

மஸ்தான் “இன்னும் கொஞ்சம் கஞ்சி?”என்றார்

“ஊத்து”என்றான் கதை சொன்னவன்

மஸ்தான் இருவருக்கும் கஞ்சி ஊற்றினார். ”நவாப்பு நடுங்கியிருப்பான். ஆனா விடமாட்டான். அவன் திரும்ப வாரப்ப மராட்டிக்காரன் மலையேறியிருப்பான். ஊரிலே உள்ளவனுக அத்தனைபேரையும் நவாப்பு தலைவாங்குவான்”

“ஆமா, அது உள்ளதுதானே?”என்றார் ஆனைப்பிள்ளைச் சாமி

“நீரு சாமியாருல்லா ஓய்? நீரு எதுக்கு இந்த துலுக்கன்கூட சேந்திருக்கீரு?”

“சேல்கொண்ட விழியாள் இருமங்கை மணம்கொண்டு வேல்கொண்டு வெண்பரி ஊரும் ராவுத்தனல்லோ என் தெய்வம்?”

”அது என்ன ஓய்?”

”அருணகிரி திருப்புகழ்”

“மயிரு மாதிரி இருக்கு பாட்டு. ஓய், நீரு தொப்பி போட்டாச்சா?”

“போட்டாலும் போடாட்டியும் நம்ம தலைமேலே முகில்மேவும் ஆகாசமாக்கும்”

“இன்னும் கொஞ்சம் கஞ்சி?”என்றார் மஸ்தான்.

“அவ்ளவுதானே இருக்கு? செரி ஊத்து”

அவர்கள் கடைசியாக சட்டியைக் கவிழ்த்தனர். இலையை வழித்து குடித்து விரல்களை நக்கிக்கொண்டனர்

“ஏன் ஓய், உம்ம எறும்பு இருக்கா செத்திரிச்சா?”

“அவருகிட்டயே கேக்கிறது” என்றார் மஸ்தான்.

”ஏன் ஓய்,இருக்கேரா செத்துட்டீரா?”என்றான் அடித்தவன்.

“பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்”என்று பாவா சொன்னார்.

“சரியான குரலுடா இதுக்கு….மணியடிச்ச மாதிரி சொல்லுதே”

அவர்கள் எழுந்து வெளியே தேங்கி நின்ற நீரில் கைகளை கழுவிக்கொண்டார்கள்.

“மழை விட்டிருக்கு… சட்டுன்னு குதிரையை வெரட்டினா ஊருக்குள்ள போயிடலாம்… கட்டையைச் சாய்க்கணுமே” என்றான் அடித்தவன்

“துணி காயல்ல”

”பரவாயில்ல. காத்திலே கொஞ்சம் காயும்”

அவர்கள் ஆடைகளை அணிந்துகொண்டார்கள். விடைபெறும்படி ஒன்றும் சொல்லாமல் குதிரைகளை நோக்கி நடந்தனர்.

அவர்கள் குதிரைகளில் ஏறி செல்வதை மூவரும் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் சென்றபின் சாம்பிராணி மஸ்தான் நயினாரிடம் “வேற அரிசி இருக்கா ஓய்?”என்றார்

“இல்ல” என்றார் நயினார் “அந்த ரெத்தம்பட்ட அரிசிதான் இருக்கு”

“அதுவேண்டாம்”என்றார் ஆனைப்பிள்ளைச் சாமி.

“அப்ப இனிமே ராத்திரிக்கு அன்னத்துணையில்லை, உம்ம பாட்டுத்துணைதான்” என்றார் மஸ்தான்

“பாட்டிருக்க பயமேதுமில்லை”என்றார் ஆனைப்பிள்ளைச் சாமி

“பாடும் ஓய்”என்றார் மஸ்தான். “பாவா, பாடச்சொல்லலாமா?”

“பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்”என்றார் பாவா

மஸ்தான் அவரே எழுந்து சென்று சிலும்பியை மூட்டினார். அதை ஆழமாக இழுத்து மூக்கு வழியாக வெளிவிட்டார்

ஆனைப்பிள்ளைச் சாமி  தன் கைகளை தட்டிக்கொண்டு பாடினார்

“ஓணாண்டி தனைக்கண்டு மோகம் கொண்டாள்- மத

யானைமகள் நாணத்தால் குனிந்து நின்றாள்- அய்யா

கோலாண்டி தனைக்கண்டு காதல்கொண்டாள்-நல்ல

குறத்திமகள் கொஞ்சி குலாவி நின்றாள்!”

நயினார் பாவாவின் தலையை பார்த்தார் . ரத்தம் நின்றுவிட்டிருந்தது. பாவாவின் சிறிய விழிகள் எலிகளின் கண்கள் போல தெரிந்தன. அவர் ஆனைப்பிள்ளைச் சாமி கைதட்டி பாடுவதை கேட்டுக்கொண்டிருந்தார்.

ஆனைப்பிள்ளைச் சாமி  சிலும்பியை வாங்கி ஆழமாக இழுத்தார். அதன்பின் மீண்டும் உரத்த குரலில் பாடத்தொடங்கினார்

”வேணாண்டி இந்த மகன் வெறும்பேச்சு சிறுக்கி மகன் -அடியே

அப்பனோ சுடலையாண்டி அம்மையோ வெங்கருப்பி.

கோணாண்டி கொம்பனடி அண்ணன் !மாமனோ பாம்பாட்டி- அவன்

இருக்கவோ மலைமேடு இவனோடி உனக்கு மாரன்?”

பாட்டு வேகம் பிடித்ததும் ஆனைப்பிள்ளைச் சாமி  எழுந்து நின்று கைவீசி நடனமிட்டார். நயினாரும் உடன் சேர்ந்துகொண்டார்.

“ஆறுமுக புருசனென்றால் அடுக்குமோடி எம்மகளே- ஏய்

அடுக்குமோடி எம்மகளே?

ஆறுமுகத்தால் வேவுபாத்தால்  எம்மகளே- நீ

அடுத்தமனை பாக்க ஏழுமுகம் வேணுமேடி! ”

ஹொஹொஹொ என்று சிரித்தபடி ஆனைப்பிள்ளை சாமி கைகொட்டி நடனமாடினார். சாம்பிராணி மஸ்தானும் சேர்ந்துகொண்டார். மஸ்தான் கைதட்டிச் சிரித்தபடி நின்றார்.

மழைக்குள் ஒரு கூன் விழுந்த உருவம் மெல்ல நடந்து வந்தது.

“ஓய், பாட்டு தின்னு பசியடக்க ஒரு விருந்தாடி வாறான் ஓய்”என்றார் மஸ்தான்.

வந்தவர் ஒரு கிழவர். சடைமுடியும் காதுகளில் அணிந்த எலும்புக் குண்டலமும் அவரை சிவனடியார் என்று காட்டின.

“சிவாய நம”என்றார்

“சிவாய நம”என்றார் ஆனைப்பிள்ளைச் சாமி  “உள்ள வாரும்”

சிவனடியார் உள்ளே வந்தார். “சிவாய நம… நனைஞ்சிட்டேன்”என்றார்

“இங்க நனையாம இருக்கலாம்… தணலிலே சூடும் இருக்கு”

“தணல் எம்பெருமான் வடிவம். அண்ணாமலையென எழுந்த பரம்”

“பாடுவேரா ஓய்?”என்றார் மஸ்தான்

“நாமாவளி சொல்லுவேன்”

“சொல்லவேண்டியிருக்கும்… ஏன்னா இப்ப இங்க பசிக்கு அதுதான்”

“எனக்கு பசி இருக்கு… ஆனா சிவநாமம்னா அதுவும் போதும்தான்… இது யாரு சின்னப்பையன்?”

“சின்னப்பையன் இல்லை. அது எறும்பு பாவா… ஞானியார்”என்றார் மஸ்தான்

“என்ன பேரு?”

“எறும்பு பாவா…”

“சிவாய நம”என்றார் சிவனடியார் பாவாவை நோக்கிக் கைகூப்பியபடி.

”பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்”என்று  பாவா சொன்னார்.

“ஓம் ஓம் ஓம்”என்றார் சிவனடியார்.

அவர் நெருப்பின் அருகே அமர்ந்துகொண்டார்.

“எங்க போறீர்?”என்றார் மஸ்தான்.

“சிதம்பரத்துக்கு”என்று சிவனடியார் சொன்னார் “பல இடங்கள் பாத்தாச்சு… காசியும் கேதாரமும் கண்டாச்சு… நடந்த காலு. சிதம்பரம் போனா உக்காந்திரும். வேற எங்கயும் போறதா இல்லை”

“ஏன்?”

“அதான் சித் அம்பரம்… சித்தம் அம்பரமாயாச்சு”

“சாமி சித்தி கூடுறதுக்கு போற வழி போல”என்றார் ஆனைப்பிள்ளைச் சாமி

“சித்தியா? தெரியல்ல. ஆனா கேள்விக்குமேல் கேள்வியா இருந்ததெல்லாம் போயாச்சு. எல்லா கேள்விக்குமான ஒற்றைப் பதிலா ஒண்ணு வந்து சேந்தாச்சு. இனி சொல்லடங்கணும். இடம் அமையணும்”

“சாமி திருணாமலையிலே இருந்து வாறிகளோ?”என்றார் ஆனைப்பிள்ளைச் சாமி

“ஆமா”

“சாமிக்கு சிவமூலிப் பழக்கம் உண்டுதானே?”என்று மஸ்தான் சிலும்பியை நீட்டினார்

“வேண்டாம்… இனி வேண்டியிருக்காது”என்றார் சிவனடியார்

“இனி இனின்னு சொல்லுதீக”என்றார் ஆனைப்பிள்ளைச் சாமி

“நான் முந்தாநாள் புதிசாப்பெறந்தேன்… கருப்பை புகுந்து குருதியும் சலமும் சீழும் மலமும் ஆகிய வைதரணியிலே நீந்தி மறுபடி பிறந்து வந்தேன்.. நமச்சிவாயம்”

“என்ன ஆச்சு?”என்றார் மஸ்தான்.

“நான் காளஹஸ்தி பக்கத்திலே ஒருத்தனை வெட்டிக்கொன்னுட்டேன்” என்றார் சிவனடியார்

“சாமி, நீங்களா? உங்க கையாலா?”என்று நயினார் முகம்மது கூவினார்

“ஆமா”

”பாவா கேட்டீங்களா?”என்றார் நயினார் முகம்மது

“பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்”என்றார் பாவா

”எதுக்காக வெட்டினீங்க?”என்றார் மஸ்தான்

“நான் ஊரிலே இரந்து உண்டு வாழுறவன். ராத்திரி சிவன்கோயில் சன்னிதியிலே படுப்பேன். அப்டி அந்த ஊரிலே ஒரு சிவன்கோயில் சன்னிதியிலே படுத்திட்டிருந்தேன். ராத்திரி ஒரு ஏழெட்டுபேரு அந்தப்பக்கமா வந்தானுக. எல்லாரும் ஈட்டி வச்சிருந்தானுக. உள்ளூர் பாளையக்காரனோட ஆளுங்க…கோயிலை பாத்ததும் உள்ள பூந்துட்டானுக. கதவை உடைச்சு உள்ளபோயி சாமிக்கு வச்சிருந்த சாமான்களை திருடினானுங்க”

“எங்காளுங்களா?”என்று நயினார் கேட்டார்

“இல்ல, எங்காளுங்கதான். இப்பதான் அந்த பேதமே இல்லாம கெடக்கே”

“நீரு தடுத்தீரா?”

“இல்ல, திருடினா திருடுறான்னு நான் பேசாம படுத்திருந்தேன். அப்ப ஒருத்தன் கருவறைக்கு மேலே ஏதாவது சின்ன அறை இருக்கான்னு பாக்க சிவலிங்கம் மேலே காலைவைச்சு ஏறி நின்னுட்டிருந்தான்… என்னாலே பொறுக்க முடியல்லை. அப்டியே பாய்ஞ்சு எந்திரிச்சு அங்க நின்ன ஒருத்தன் கையிலே இருந்த ஈட்டியை பிடுங்கி ஓங்கி ஒரே போடு…அப்டியே செத்து விழுந்துட்டான்”

“பிறகு?”

“நான் அங்க நிக்கலை… அப்டியே ஓடிட்டேன். என்னைய துரத்திட்டு வந்தாங்க. நான் ஓடி உயிரோட தப்பிட்டேன்”என்றார் சிவனடியார் “ஆனா அதோட என் மனசு மாறிட்டுது. சிவநாமம் ஒரு கணம்கூட மனசிலே நிக்கல்லே. என்னை யாரோ கொல்ல வாறாங்கன்னு நினைப்பு வந்துபோட்டுது. எப்ப பாத்தாலும் மரணபயம். யாரைப்பாத்தாலும் கிலி… ஓடிட்டே இருந்தேன். ஊரூரா ஓடினேன். எங்க போனாலும் நிலைக்கமுடியல்லை… ”

“அப்ப ஒருத்தர் கிட்டே கேட்டேன். பெரியவரு… அணைக்குடிங்கிற ஊரிலே ஒரு மண்டபத்திலே இருக்காரு. இந்தா இந்தமாதிரித்தான் இருப்பாரு… மெலிஞ்சு சின்னப்பையனாட்டமா… நான் காலிலே விளுந்து கேட்டேன். சாமி அம்பதுவருசம் அலைஞ்சு சேத்த எல்லாத்தையும் இழந்துட்டேன். உசிருக்குப் பயந்த கோழையா ஆயிட்டேன். எனக்கு கதிமோட்சம் உண்டான்னுட்டு”

“என்ன சொன்னாரு?’என்று மஸ்தான் ஆவலாக கேட்டார்.

“அவரு சிரிச்சாரு. ‘நீ சாமிக்கே காவலு ந

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 06, 2021 10:35

கதையின் அகமும் புறமும்

சாந்தாரம்- சிறுகதை

பொதுவாக சிற்றிதழ் சார்ந்த எழுத்தாளர்கள் கதைக்களம், கதைக்கரு ஆகியவற்றுக்காக வெளியே பார்ப்பது குறைவு. காரணம் அனுபவத்தையே எழுதவேண்டும் என்று ஆரம்பகட்ட இலக்கியவாதிகளில் சிலர் முணுமுணுத்து முணுமுணுத்து உருவாக்கிக்கொண்ட சோகையான இலக்கியக்கருத்து.

நடுத்தரவர்க்க இந்தியனுக்கு மூன்றுநான்கு கதைகளுக்குமேல் எழுத அனுபவமிருக்காது. ஆகவே திரும்பத்திரும்ப சின்னச்சின்ன விஷயங்களையே எழுதுவார்கள். ‘ரொம்பச் சின்ன விஷயம்தான். ஆனா பிரம்மாதமா எழுதியிருக்காரு’ என்று அதையே ஒரு பாராட்டாக சொல்வார்கள்

நான் எழுதவந்தபோது ‘சின்னவிஷயங்களை எதுக்கு எழுதணும்.யானையை வைச்சு ஊசியை எடுக்கவைக்கிறது மாதிரி அது. யானையோட பிரம்மாண்டத்தை ஊசியளவுக்கு சின்னதா ஆக்க மாட்டேன்’ என்று சொன்னேன். தமிழின் தன்னனுபவச் சூம்பல்கதைகள்தான் நம் நவீன இலக்கியத்தின் மிகப்பெரிய நோய்க்கூறு.

இலக்கியம் புறவுலகில்லாமல் உருவாவதில்லை. வெறும் அகவுலகை எழுதுகிறேன் என்பவர்கள்கூட புறவுலகைக்கொண்டுதான் அகத்தைச் சொல்ல முடியும். அந்தப் புறவுலகு எளியதாக, அன்றாடமானதாக, பழகிப்போனதாக இருக்கும் அவ்வளவுதான். புறவுலகம் மட்டும் கலையாவதில்லை. அதில் அகம் சென்று படியுமிடமே கலையை உருவாக்குகிறது

இலக்கியவாதியின் கற்பனை புறவுலகை துழாவிக்கொண்டே இருக்கிறது. சட்டென்று ஒரு பொருள், ஒரு நிகழ்வு, ஓர் இடம் அவன் கற்பனையை சீண்டி துடிப்பை உருவாக்குகிறது. அந்த புறத்தின் துளி அவன் அகத்தை சென்று தொடுவதனால்தான் அவ்வாறு நிகழ்கிறது. அவன் அகத்தில் வெளிப்பாடுகொள்ள தவித்திருக்கும் ஒன்று தன்னை ஏற்றிக்காட்ட ஒரு புறவிஷயத்தைக் கண்டுகொண்டிருக்கிறது என்று அர்த்தம். அதுதான் கலைத்தருணம்

ஆகவே, திரும்பத்திரும்ப தன்வயக்குறிப்புகளை கதையென எழுதுபவர்களை நான் ஓரிரு படைப்புகளுக்குமேல் வாசிக்கமாட்டேன். நேரவிரயம். புறவுலகின் அலகிலாப் பிரம்மாண்டம் கலைஞனை சீண்டிக்கொண்டே இருக்கவேண்டும். வரலாறு, அறிவியல், பண்பாட்டுக்களம், சமூகச்சூழல், அன்றாடக் குடும்பவாழ்க்கை, தொழிற்சூழல் எதுவானாலும். அங்கிருந்து ஒரு புதியவிஷயம் எழுந்து வருகையில் அது கலையாகும் வாய்ப்பு மிக அதிகம்

மயிலன் சின்னப்பன் தமிழினி இதழில் எழுதிய சாந்தாகாரம் அப்படிப்பட்ட ஒரு கலைமுயற்சி. தஞ்சை கோயிலின் ரகசியக் கலைக்கூடம் பற்றிய கதை. மானுட மனதின் ரகசியக்கூடம் ஒன்றின் வெளிப்பாடாக அது கதையில் மாறியிருக்கிறது.

ஆனால் கதைத்தொழில்நுட்பம் என நோக்கினால் இக்கதையில் அந்தக் கலைக்கூடத்தின் எந்தக் குறிப்பிட்ட அம்சம் அகவெளிப்பாட்டின் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறது என அழுத்தப்பட்டிருக்கவேண்டும். இக்கதையின் கோணத்தில் என்றால் மாபெரும் ஆலயத்தின் பார்க்கப்படாத ரகசிய அறை என்பதே அந்த அம்சம். அந்த ரகசியத்தன்மை, இருள், மர்மம் மேலும் அழுத்திச் சொல்லப்பட்டிருக்கவேண்டும்

அகவுலகை புறவுலகுடன் இணைக்கும் இத்தகைய கதைகளில் அவ்விணைப்பை வாசகன் நிகழ்த்துவதே கலை. இதில் ஆசிரியர் கதைத்தலைவனின் சொற்கள் வழியாகச் சொல்லிவிடுகிறார். காமிரா லென்ஸ்கள் ஃபோகஸ் ஆகி காட்சி தெளிவதுபோல இரு உலகங்களும் இணையும் மாயப்புள்ளியை வாசகன் அடையமுடியாமலாகிறது

கதையில் கதைத்தலைவன், கதைசொல்லி ஆகியோருக்கு அப்பாலுள்ள கதாபாத்திரங்கள் [வங்கப்பேராசிரியர், கைடு போன்றவர்கள்] கதையை சிதறடிக்கிறார்கள். கதையின் ஒருமை அதன் மையம்நோக்கிச் செல்ல தடையாக ஆகிறார்கள். அவர்கள் எந்தப் பங்களிப்பையும் ஆற்றவில்லை.

ஆனாலும் சுவாரசியமான ஒரு கதை. மயிலன் சின்னப்பனின் கதைகளை தொடர்ச்சியாக வாசித்துவருகிறேன். இவருடைய பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம் என்னும் நாவல் பரவலாக வாசிக்கப்பட்டது. நூறு ரூபிள்கள் என்னும் சிறுகதைத் தொகுதி வெளியாகியிருக்கிறது. கூர்ந்த வாசிப்புக்குரிய படைப்பாளி.

மயிலன் சின்னப்பன் நூல்கள்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 06, 2021 10:34

நாஞ்சில்நிலத்தின் நாக்கு

ராம் தங்கம்

ஒரு நிலத்தின் அக யதார்த்தம் என ஒன்று உண்டு. புறத்தே காணும் செய்திகளால் ஆனது அல்ல அது. ஓர் எழுத்தாளன் தன்னை ஒரு நிலத்துக்கு ஒப்புக்கொடுத்து, அதில் வாழ்ந்து, தனக்குள் அந்த அக யதார்த்தத்தைக் கண்டடைகிறான். அதை அவன் இலக்கியமாக ஆக்குகிறான். அதன் வழியாகவே பிறர் மட்டுமல்ல, அந்நிலத்தவரே அந்நிலத்தை அடையாளம் கண்டுகொள்கிறார்கள்.

ஆகவேதான் எழுதப்பட்ட நிலமே வரலாற்றில் நிலைகொள்கிறது, எழுதப்படாத நிலம் வெறும் பருப்பொருள் மட்டுமே எனப்படுகிறது. நிலம் என நாமுணரும் பண்பாட்டு வெளி எழுதி எழுதி உருவாக்கப்பட்டது மட்டுமே.

தமிழில் நாஞ்சில்நாடே மிக அதிகமாக எழுதப்பட்ட நிலம். தஞ்சைதான் தொடக்ககாலத்தில் நிறைய எழுதப்பட்டது. ஆனால் ஒரு தலைமுறைக்காலமே அது நீடித்தது. அதுவும் தஞ்சையின் ஒரு சிறுபகுதி, பெரும்பாலும் பழைய அக்ரஹாரங்கள். தஞ்சையின் மாபெரும் வேளாண்மையுலகம் இன்னமும் கூட எழுதப்படவில்லை. அதை எழுதிய சி.எம்.முத்து, சோலை சுந்தரப்பெருமாள் போன்றவர்களால் அதன் அகத்தை முழுமையாகக் கொண்டுவர முடியவில்லை.

குமரிநிலத்தின் அகம் முதலில் வெளிப்பட்ட படைப்பு கவிமணியின் ’நாஞ்சில்நாட்டு மருமக்கள் வழிமான்மியம்’. அபாரமான புனைகதை எழுத்தாளராக கவிமணியை அந்நூல் இன்று அடையாளம் காட்டுகிறது. அதன்பின்னர் சுந்தர ராமசாமி, கிருஷ்ணன் நம்பி, ஹெப்சிபா ஜேசுதாசன்,நீல பத்மநாபன்,பொன்னீலன் தலைமுறை. அதன்பின் நாஞ்சில்நாடனின் தலைமுறை. அதன்பின் என்னுடைய, குமாரசெல்வாவின் தலைமுறை. அதன்பின் லக்ஷ்மி மணிவண்ணனின் போகனின் தலைமுறை.

அதற்குமடுத்த தலைமுறையில் நாஞ்சில்மண்ணை எழுதுபவர்கள் வந்திருக்கிறார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் ராம் தங்கம். திருக்கார்த்தியல் என்னும் தொகுதி அவரை நாஞ்சில்நாடனின் மிகச்சரியான வாரிசு என அடையாளம் காட்டியது.

ராம் தங்கத்தின் தனிச்சிறப்பு என்பது அவர் உடலால் உணர்வால் மொழியால் நாஞ்சில்நாட்டவர் என்பது. திரும்பத்திரும்ப இந்நிலத்தில் அலைகிறார். இந்நிலத்தின் இயல்பான இருமொழிப் பண்பாட்டில் ஈடுபாடுகொண்டிருக்கிறார். இதன் வரலாறு, தொன்மம் ஆகியவற்றில் திளைக்கிறார். அ.கா.பெருமாள் முதலிய ஆய்வாளர்களுடன் அணுக்கமான உறவுகொண்டிருக்கிறார். சலிப்பின்றி இலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கிறார். நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கிறார்.

ஆகவேதான் அவருடைய கதைகள் நாஞ்சில்நாட்டின் இயல்பான வெளிப்பாடுகளாக உள்ளன. எல்லாக் கதைகளையுமே சுவாரசியமாக எழுதுவதென்பது ஒரு அருங்கலை. ராம் தங்கம் அவ்வகையிலும் நாஞ்சில்நாடனின் வழித்தோன்றல்.

திருக்கார்த்தியல்

ராஜவனம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 06, 2021 10:32

கந்தர்வன், யட்சன் – கடிதங்கள்

கந்தர்வன் [சிறுகதை]

அன்பிற்கும் வணக்கத்திற்குரிய ஜெயமோகன்,

கந்தர்வன் சிறுகதை ஆழமான ஒன்று. தன்னலம் பாராது ஊர் உலக நன்மைக்காக தன்னை அளிப்பவர்கள் ஏழு குதிரை சூரியன் மற்றும் அவனுக்கும் மேலுள்ள தேவர்கள் தலை மீது ஏறி கந்தர்வன் ஆக பறக்கிறார்கள்தான். தேசமெங்கும் எழுந்து கிடக்கின்ற எத்தனையோ பல ஆலயங்கள் இத்தகைய தற்கொடையாளர்களின் தெய்வ வடிவங்கள் தானே.

இந்தக்கதையில் தற்கொடை தந்து கந்தர்வனான அனஞ்ச பெருமாளை விட மிகவும் போற்றத்தக்கவள், ஒரே கணத்தில் அனைத்தையும் புரிந்து கொண்டு ஊர் மக்களுக்காக, அவர்களின் நலனுக்காக, வரி துன்பத்திலிருந்து விடுபட அவர்கள் போட்ட திட்டம் வெற்றி பெறுவதற்காக தன்னைச் சிதை ஏற்றிய வள்ளியம்மைதான். அவளே கந்தர்வனுக்கு ஏற்ற கந்தர்வி.

அவள் புத்திசாலி, ஒரு இயல்பான பெண், அவள் களவு ஒழுக்க குற்றமிழைத்தவளாகவும் இருக்க சாத்தியமே இல்லை. அவள் கணவன் அவன் தன் இயல்புப்படி அவளை ஐயப்படுகிறான். இந்தப் பின்புலத்தில் வைத்துப் பார்த்தால் சட்டென்று முடிவெடுத்து தன்னை அளித்த வள்ளியம்மை மிக உயர்ந்து நிற்கிறாள். ஒருவகையில் பார்த்தால் எல்லாவற்றையும் யோசித்து நிகழ இருப்பதையும் அறிந்து முருகேசனின் உயிரை இவள் காப்பாற்றி உள்ளாள்தானே. தற்காத்து தற்கொண்டான் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண் என முன்பு நீங்கள் எழுதியவளொரு மலையரசி இப்பொழுது நீங்கள் எழுதியவள் ஒரு மங்கையர்க்கரசி. ஆலயம் கொண்டு அன்னையாய் கந்தர்வனோடு தேவியாக நிற்கப் போகின்றவள். எத்தனையோ இப்படிப்பட்ட தன்னையே அளித்த குடிகாத்த பெண் தெய்வங்கள் எல்லாவற்றையும் இணைத்து தானே பராசக்தி என்ற பெருந்தெய்வம் ஆக்கியுள்ளது நமது இந்து மரபு.

பதினேழாம் நூற்றாண்டு வாழ்க்கைச் சித்திரங்கள், மன்னராட்சி கொடுமைகள், மனிதர்கள், அவர்களின் எண்ணப் போக்குகள், குறைகள், மேன்மைகள், பேச்சு வழக்கு முறைகள், பஞ்சங்கள்,பட்டினிகள், பத்தினிகள் என எல்லாவற்றையும் மிக அழகாக வெளிப்படுத்திய ஒரு கதை.

ஒரு உன்னதமான கதை தந்த உங்களுக்கு உளம் கனிந்த அன்பும் நன்றியும்.

அன்புள்ள

ஆனந்த் சுவாமி

 

அன்புள்ள ஜெ

கந்தர்வன் ஒரு கதைநிகழ்வு என்றுதான் சொல்லவேண்டும். இத்தனை கூர்மையான ஒரு கதை உங்கள் படைப்புக்களில்கூட சமீபத்தில் வாசித்ததில்லை. கதை என்றால் அது வாள்வீச்சு போல எந்த வகையான முயற்சியும் தெரியாமல் நடக்கவேண்டும். மொழி, சூழல் எல்லாமே இயல்பாகவே ஒன்றாக இருக்கவேண்டும். அதோடு அந்தக்கதைக்கு நிலமும் பண்பாடும் இருக்கவேண்டும்.

கந்தர்வன் நான் பிறந்த நெல்லைப்பகுதியின் கதை. ஆகவே அதை நான் ஒரு பெரிய கண்டடைதலாகவே வாசித்தேன். எத்தனை மனிதர்கள் என்ற ஆச்சரியம்தான் ஏற்பட்டது. உரையாடல்கள் வழியாகவே ஒவ்வொருவரின் இயல்பும் மனநிலையும் வெளிப்படுகிறது. அதில் உச்சம் என்றால் செய்வதெல்லாம் செய்துவிட்டு நியாயவான்களைப் போல நடிப்பவர்களின் பேச்சுக்கள்தான்.

சிவ.கதிர்வேல்

யட்சன் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

கந்தர்வன் கதையையும் யட்சன் கதையையும் இணைத்து வாசித்தேன். கந்தர்வன் மேலிருந்து கீழே வந்தவன். இவன் கீழிருந்து மேலே செல்பவன். கந்தர்வனிடம் எந்த தீங்கும் அழுக்கும் இருட்டும் இல்லை. இவன் எல்லா தீங்கிலும் சிறுமையிலும் நீந்தி நோயாளியாகி அங்கே சென்றவன். இரண்டுபேரும் இரண்டு எல்லைகள். இரண்டுவகையான சாத்தியக்கூறுகள். இரண்டுபேரையும் இணைக்கும் அம்சமாக உடன்நின்றநங்கை.

இரண்டு கதைகளையும் வாசிக்கும்போது ஆன்மிகத்தின் இரண்டு வாய்ப்புகள் கண்முன் தெரிகின்றன. அணைஞ்சபெருமாள் தெய்வமாக ஆவது புரிந்துகொள்ள முடிகிறது. முருகப்பனும் அவனருகே அதேபோல தெய்வமாக அமர்ந்திருப்பதுதான் ஆன்மிகத்தின் விந்தை. அன்பு தியாகம் மட்டுமல்ல பொறாமை காழ்ப்பு எல்லாமும்கூட ஆன்மிகத்துக்கான வழியாக ஆகலாம் என்று நினைத்துக்கொண்டேன்

ஆனந்த்குமார்

அன்புள்ள ஜெ

யட்சன் கந்தர்வன் கதையின் அழகான நீட்சி. கந்தர்வன் கதையில் ஒரு மின்வெட்டுபோல வந்த கதையை அப்படியே விரித்து விரித்து எழுதப்பட்ட வாழ்க்கைச் சித்திரம். முருகப்பன் எங்கே செல்கிறான்? அவனுக்கு இலக்கே இல்லை. ஆனால் அவனால் வள்ளியம்மையிலிருந்து விலகமுடியவில்லை. வள்ளியம்மையிடமிருந்து அல்ல அவள் நிகழ்த்திய அந்தச் செயலில் இருந்த மர்மம்தான் அவனை ஈர்த்தது. அந்த மர்மத்தை அவன் தேடிச்செல்லச்செல்ல சித்தன் ஆனான்

அந்த மர்மத்தை சித்தனாகி தெய்வமாக ஆனபிறகும் கண்டுபிடிக்கவில்லை. கண்விழித்து வெறித்துப்பார்த்தபடி அமர்ந்திருக்கிறான். முடிவிலாக்காலம் அப்படித்தான் அமர்ந்திருப்பான்

என் . ஆர் . ராஜ்குமார்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 06, 2021 10:31

வலம் இடம்,கொதி- கடிதங்கள்

வலம் இடம் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

வலம் இடம் ஒரு மிஸ்டிக் கதை. அந்த மிஸ்டிசிசத்தை தக்கவைத்துக்கொள்ளும் வாசிப்புகளுக்கே அது இடமளிக்கிறது. ஆனால் வழக்கமான மிஸ்டிக் கதைகள் அந்த புதிர்த்தன்மையை மட்டுமே உருவாக்கி நிலைநிறுத்திக்கொண்டு செல்லும். அதைத்தவிர எல்லாமே சுருக்கப்பட்டிருக்கும். இந்தக்கதை அந்த மிஸ்டிக் அம்சம் இல்லாமலேயே ஒரு கிராமிய யதார்த்தச் சித்திரமாகவே வாசிக்கத்தக்கதாக உள்ளது. வீட்டில் ஒருவராக இருக்கும் எருமையின் சாவு, அது உருவாக்கும் உளவியல் அழுத்தம், சாவிலிருந்து மீள்வது என்று ஒரு அழகான வாழ்க்கைச்சித்திரம் இந்தக் கதையில் இருக்கிறது

கி.ராஜநாராயணன் குடும்பத்தில் ஒருவர் என்று ஒரு கதை எழுதியிருக்கிறார். குடும்பத்தில் ஒருவராக இருக்கும் மாட்டின் சாவும், அக்குடும்பம் அடையும் துயரும் மட்டும்தான் அந்தக்கதை. அந்த அனுபவம் விவசாயக்குடும்பங்களில் எல்லாம் இருப்பதுதான். இந்தக்கதையில் அதிலிருந்து மீள்வதும் உள்ளது. அகத்திலிருந்து ஒரு மீட்பும் புறத்திலிருந்து ஒரு மீட்பும் உருவாகிறது

ராம்குமார்

அன்புள்ள ஜெ

வலம் இடம் கதையில் ஓர் இரட்டைத்தன்மை உள்ளது. பைனரிதான் இந்தக்கதை. முதலில் சொல்லவேண்டிய பைனரி வாழ்வும் சாவும்தான். இரண்டு எருமைகளும் அவற்றைத்தான் சொல்கின்றன. வாழ்வும் சாவும் சென்றும் வந்தும் ஆடுகிற ஓர் ஆட்டமாக உள்ளது அந்தக்கதை. எருமையுடன் கூடவே இருப்பது சாவுதான். அவன் வாழ்க்கையை தேர்வுசெய்தான். ஆகவே எருமையுடன் திரும்ப வாழ்க்கைக்கு வருகிறான்

எஸ்.ஞானசேகர்

கொதி[ சிறுகதை]

அன்புள்ள ஜெயமோகன்,

உங்களை முதன்முதலாக சென்னை புத்தக கண்காட்சியில் 2003 அல்லது 2004 ஆண்டில் சந்தித்தேன் என நினைவு. விஷ்ணுபுரம் கொற்றவை இரண்டு புத்தகங்களிலும் கையொப்பமிட்டு தந்தீர்கள்.அப்போதிலிருந்தே உங்களை தொடர்ந்து வாசித்தும் கவனித்தும் வந்திருக்கிறேன்..

2008ஆம் ஆண்டில் துறவு பாதையை தேர்ந்து ஐந்து ஆண்டுகள் உத்தரகாசி கங்கோத்திரி போன்ற இடங்களில் சாதனை செய்து கொண்டிருந்தேன். கடந்த 8 ஆண்டுகளாக திருவண்ணாமலையில் ஒரு சிற்றறையில் தனிமை வாழ்வு.

புத்தரும் ரமணரும் எனது பெருமதிப்பிற்குரிய உள்முகப் பாதைக்கான பயண வழிகாட்டிகள். யோகி ராம்சுரத்குமார் இருபத்தொரு வயதில் என்னை பதப்படுத்தி துறவு நெறியில் ஆற்றுப்படுத்தியவர். அவர் திரும்பிப்போ காலம் வரும் என்று சொன்ன ஒரே காரணத்தினால் திரும்பிச் சென்று 14 ஆண்டுகள் வனவாசம் போல் கார்ப்பரேட் காடுகளில் வெந்து பதப்பட்டு துறவில் நுழைந்தேன். பதப்பட்ட காலத்தில் வேதாத்திரி மகரிஷி அவர்களுடனான நெருங்கிய தொடர்பு மிகமிக பயன்பட்டது.

வெளியுலகத் தொடர்புகளை முடிந்தவரை தவிர்த்து வந்துள்ளேன். உள்ளுணர்வின் உந்துதலின் காரணமாக உள்ளேயும் வெளியேயும் சமநிலையோடு இருக்க முடிகிறதா என்று என்னை நானே சீர்தூக்கிப் பார்க்க இந்நாட்களில் முயன்று கொண்டிருக்கிறேன். என்னால் தர முடிந்த மிகச் சிறந்த ஒன்றை முடிந்தவரை சமூகத்திற்கு தந்து விடவும் முயன்று கொண்டிருக்கிறேன். அது கொடுத்தலின் நிறைவிற்காக மட்டுமே தவிர வேறொன்றிற்காகவும் அல்ல

இன்று தளத்தில் வந்த கொதி சிறுகதை என்னை இந்தக் கடிதத்தை எழுதத் தூண்டியது.

அலேக்பாபா என ஒருவர் அயனா தேவி என்ற மலைமீது வசித்து வந்தார். எப்போதாவது இறங்கிக் கீழே நான் தங்கியிருந்த கவானா உத்தரகாசி சிவானந்த ஆசிரமத்திற்கு வருவார். மிகவும் விசித்திரமான ஒரு துறவி. ஒரே முறையில் என்பது சப்பாத்திகள் சாப்பிடக் கூடியவர்.சொன்னால் யாரும் நம்பக்கூட மாட்டார்கள். உங்கள் கதையில் வந்த ஞானையா எனக்கு அவரின் ஞாபகம் ஊட்டினார். அவரைப்போல அதீத அளவு உணவு உண்ணும் மற்றும் உண்டுகொண்டே இருக்கும் அல்லது அநேக நாட்களுக்கு எதையுமே உண்ணாமல் பட்டினி கிடக்கும் துறவிகளை நான் பார்த்திருக்கிறேன்.

ஏதோ ஒன்றில் அதிதீவிரமாக ஈடுபட்டு எல்லையை முட்டி உள்முகமாக திரும்புபவர்களே ஞானத் தேடலில் ஆழ்ந்து ஆழ்ந்து உன்னதப் படுவதை பலமுறை நான் கண்டிருக்கிறேன். அந்த ஏதோ ஒன்று பசியாக காமமாக பணமாக தொழிலாக புகழாக எதுவாக வேண்டுமானாலும் இருந்தபோதும் அந்த அதி உன்னத முமுட்சுக்கள் தாங்கள் எடுத்துக்கொண்ட ஒன்றில் மிகத்தீவிரமானவர்களாகவே இருக்கிறார்கள். உங்கள் பரிவ்ராஜக வாழ்வில் எத்தனை உன்னிப்பாக இவர்களையெல்லாம் கவனித்திருப்பீர்கள் என வியக்கிறேன்.

இந்தக்கதையின் தரிசனமாக நீங்கள் முன்வைக்கின்ற பசியாற்றல் மற்றும் நோய் தீர்த்தல் என்பவை இன்றைக்கும் எத்தனையோ உன்னத துறவிகளின் மற்றும் ஞானிகளின் அன்றாட செயல்பாடுகளாக  இன்று வரைக்கும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

நான் உத்திர காசியில் தங்கியிருந்த சிவானந்த ஆசிரமத்தின் கவானா கிளையின் ஸ்தாபகர் சுவாமி பிரேமானந்த சரஸ்வதி அவர்கள் அன்பே உருவானவர். சுவாமி சிவானந்தரின் நேரடி சீடர். தினந்தோறும் காலை 9 மணி முதல் 12 மணி வரை யோக வாசிஷ்டம் வகுப்பு ஐந்து ஆண்டுகளுக்கு அவரிடம் படித்துள்ளேன். மூன்று மணி நேரம் வேதாந்தம் பேசிக் கொண்டிருக்கின்ற அவர் அந்த வகுப்பு முடிந்த உடனே கிராம மக்களுக்கான பொதுச் சேவையில் ஆழ்ந்து விடுவார்.

ஒரு இலவச மருத்துவமனையை அந்த மலைக் கிராமத்தில் அவர் உருவாக்கியுள்ளார். தினந்தோறும் நூற்றுக்கணக்கான ஏழைகளுக்கு அந்த மருத்துவமனை இன்றைக்கும் அவருடைய மேற்பார்வையின் கீழ் அடித்தட்டு மக்களுக்கு சேவையாற்றி கொண்டிருக்கிறது. 82 வயது ஞானப்பழம் அவர்.

நான் சொல்ல வந்த விஷயம் இனிதான். மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரை சந்தித்த பிறகு அந்த ஏழை மக்கள் அவரை வந்து சந்தித்து அவர் அவர்களுக்கு “த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டி வர்தனம்…..”என்ற மந்திரத்தை உச்சரித்து அவர்கள் தலையில் கை வைத்து ஆசி அளிக்க வேண்டும் என்று காத்து நிற்பார்கள். அவரும் மந்திரத்தை உச்சரித்து விபூதியும் இல்லை ஏதோ ஒரு கயிறு இல்லை ஏதோ ஒரு பிரசாதமோ கொடுத்து அவர்களுக்கு உணவும் அளித்து அனுப்புவார். பல நேரங்களில் அந்த ஏழைகளுக்கு உணவளித்த பிறகு அங்கே தங்கியுள்ள துறவிகளாகிய எங்களுக்கு போதிய உணவு கிடைக்காமல் போய்விடும். மேலும் சில பொழுதுகளில் வேண்டிய பணம் இன்றி கடன் வாங்கி மருத்துவமனையை நடத்துவதையும் உணவு வழங்குவதையும் விடாமல் செய்வார். பலமுறை எனக்கும் அவருக்கும் இந்த செயல் குறித்து சூடான விவாதங்கள் நடைபெற்றுள்ளது. நீங்கள் பேசுவது வேதாந்தம் ஆனால் இந்த ஆசீர்வாத விஷயமெல்லாம் மிகவும் வேடிக்கையாக உள்ளது என்பேன். சேவைக்காக கடன் வாங்குவது ஒரு துறவிக்கு அவசியமே இல்லை என வாதிடுவேன். ஒவ்வொரு முறையும் பேரன்போடு இதன் அவசியத்தை தாத்பரியத்தை அவர் விளக்குவார்.

மதங்கள் எதுவானால் என்ன மகான்கள் எல்லாம் ஒன்று போலவே தான் இருக்கிறார்கள். மகான்கள் ஆகாதவரை நம்மால் அவர்களை முற்றாக புரிந்துகொள்ள முடிவதில்லை.

உண்மை ஞானிகள் உபதேசங்களை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு பஞ்சப் பரதேசிகளின் பசி ஆற்றுவதில் நோய் போக்குவதில் எப்பொழுதுமே முனிந்தும் முனைந்தும் செயலாற்றுவதை பார்த்துக் கொண்டே தான் இருக்கிறோம். இன்றைக்கும் திருவண்ணாமலையில் ஆயிரக்கணக்கான வீடு துறந்தோரின், கிரிவலப்பாதை வாழ் எழைகளின் பசியை அத்தகைய மகான்கள் துவக்கி வைத்த அன்னதான கட்டளைகள் விடாது உணவளித்து போக்கிக் கொண்டிருப்பதை கண்கூடாக காணலாம்.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை என சும்மாவா சொன்னான் நம் முப்பாட்டன் வள்ளுவப்பெருந்தகை.

வினைத் தத்துவத்தை மறுபிறப்புக் கொள்கையை சொர்க நரகத்தை இறைவனை அல்லது இறையாற்றலை நம்பமுடியாத இன்றைய  சமூகத்திற்கு அற வாழ்வு வாழ வேண்டியதின் அவசியத்தை மேலே சொன்ன எவற்றைப் பற்றியும் பேசாமல் எப்படித்தான் புரியவைப்பது என்று சிந்திக்கும் தோறும் உங்களைப் போன்ற இலக்கிய ஆளுமைகளின் இதுபோன்ற உன்னத ஆக்கங்களே எப்போதும் தீர்வாக எனக்கு முன் வந்து நிற்பதை காண்கிறேன்.

நீங்கள் எழுதுகின்ற ஒவ்வொரு கதையும் அற விழுமியங்களை வளர்ப்பதிலும் அதை உணர்வுபூர்வமாக இதயத்தின் ஆழத்தில் பதிப்பதிலும் மிகப்பெரிய பங்களிப்பை செய்கின்றன.

இனிவரும் காலங்களில் உங்களைப் போன்றவர்களால் மட்டுமே அற விழுமியங்களால் மேம்பட்ட சமூகத்தை உருவாக்குவதில் மிகச் சிறப்பாக பங்களிக்க முடியும்.

எல்லாம் வல்ல பேராற்றலின் பெருங்கருணையினால் உங்களின் இந்தப் பெரும் பணி மேலும் மேலும் தொடர்ந்து நடக்க வேண்டுமென உள்ளன்போடு விழைகிறேன்.

தங்களன்புள்ள

ஆனந்த் ஸ்வாமி

திருவண்ணாமலை.

ஜெ,

கொதி சிறுகதை வாசித்தேன்,  என் பள்ளிக்காலங்களில் அம்மா கொதி ஓதுவதை போல ஒரு சடங்கை வயிறு பிரச்னை சமயங்களில் ( குடல் மறைஞ்சது(தலைகீழாக)-அப்படி அம்மா சொல்வாங்க ) செய்வாங்க,  உழிஞ்சு எடுக்கறது என அதை சொல்வாங்க, சொம்பு போல இருக்கும் குழாய்ப்புட்டு வைக்கும் பாத்திரத்தின் கீழ் பகுதி எடுத்து ( நீர் இருக்கும் பகுதி ) அதில் எண்ணையில் முக்கிய திரியை தீ பற்ற வைத்து அதை தலையிலிருந்து கீழிறக்கி வயிற்றில் அழுத்தி கீழிறக்குவாங்க, இப்படி 21 முறை செய்வாங்க, பிறகு அதை மஞ்சள் மற்றும் வரமிளகாய் கொண்ட  நீர் இருக்கும் தட்டில் அப்படியே கவிழ்த்து வைப்பார்கள்,  நீர் உள்ளிழுக்கும் னு சொல்வாங்க, இந்த கொதி என்கிற வார்த்தை அம்மா சொன்னதில்லை, ஆனா கிட்டத்தட்ட அதை செய்தாங்க (உழிஞ்சு எடுத்தல்) வேறு பெயரில், இந்த கதை படித்த போது மறந்து போன இந்த விஷயம் ஞாபகம் வந்தது :)

இந்த கதை பற்றி இன்று மீண்டும் ஒரு கடிதம் எழுதிடுவேன், கதை எனக்கு மிக பிடித்தது,  ஒருவகையில் ஞானாயா காப்பனின் இன்னொரு வடிவமாக தோன்றினார்,

ராதாகிருஷ்ணன்,கோவை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 06, 2021 10:31

குமிழிகள்- கடிதங்கள்

குமிழிகள் [சிறுகதை]

அன்பின் ஜெ,

‘குமிழிகள்’ வெளியான அன்று இரவே (நடுநிசி!) படித்த பின் பல இருத்தலியல் கேள்விகள் அலைக்கழிக்கின்றன.

இதில் ஒரு ஆணாக, அதிலும் (இந்தியக்) கணவனாக, எனக்கு லிலியின் கனவுகள், குறிக்கோள்கள் குமிழிகளாகத் தோன்றுகின்றன – தனக்குரிய புற அங்கீகாரத்திற்கு அவள் தரும் முக்கியத்துவம் (‘அப்படியே இன்ஷுரன்ஸ் மேனேஜராகவே இருந்திருக்க வேண்டியதுதான்’) மட்டுமே அவளை ஊக்குவதாகத் தெரிகிறது. ஆனால் மிகவும் ஆணித்தரமாக முன்வைக்கப்படும் அவளது வாதங்கள் ஒரு தேர்ந்த புத்திசாலி கணவனால் கூட புறந்தள்ளமுடியாதவை.

அவள் கணவன் வாயிலாகவே அவளது வாதத் திறமை சொல்லப்படுகிறது (‘வழக்கம்போல, சொல்லி சொல்லி அவளால் தன்னைத் திரட்டிக் கொள்ள முடிகிறது’), அவன் வாய்விட்டும் ஒத்துக் கொள்கிறான் – “என்னால் உன்னை மாதிரி கோவையாக, கூர்மையாய்ச் சொல்ல முடியலை” என்று மூன்று முறை சொல்லிச்சொல்லி தன் வாதங்களைச் முவைத்தபிறகும் தனக்கு திருப்தியளிக்கும் வகையில் அவனால் சொல்லமுடிவதில்லை. மாறாக லிலியின் வாதத்திறமை அபாரமாக வெளிப்படுகிறது – முக்கியமாக சமூகஊடகங்களில் மனிதர்களின் செயல்பாடுகள் உள்ளிட்ட விஷயங்களின் அவளது கூர்மையான அவதாங்கள், தன் நிறைகளை, கனவுகளை (மட்டுமே) தனக்குத்தானே சொல்லி தான் அதுவாகவே ஆகிவிடுவதும், ‘என் குறைகளை என்னால் முன்னிலைப்படுத்தப்படாததனாலேயே அவை மெல்ல என்னிடமிருந்து விலகிவிடும்’ போன்ற வாதங்களுக்கு ஆணிடம் எந்த பதிலுமில்லை. ஆனால் அவனது நியாயமான மௌனங்களை கூட அவனது எரிச்சலின் வெளிப்பாடாகவே அவள் பார்க்கிறாள். இது போன்ற அவளது செய்கைகள் (அவன் கவனித்துக் கேட்கும் அவளது எளிதில் பொதுமைக்குத் தாவும் மனோபாவம்…) ஏதோவொரு வகையில் அவளது நிச்சயமின்மையை வெளிப்படுத்துவதாகவே நினைக்கிறேன்.

இக்கதையின் வாசகியருக்கு மரபு, வரலாறு. எதிர்காலம் குறித்தான ஆணின் கேள்விகள் குமிழிகளாகத் தெரியலாம். இமைக்கணத்தில் கூட திரௌபதி இதை கேள்விகேட்கும் ஒரு இடம் நினைவிலிருக்கிறது (‘இவ்வினிமைகளை மறுக்கும் மெய்ம்மையினை நான் எவ்வாறு ஏற்க முடியும்’). நீங்களே கூட பலமுறை பெண்களின் நடைமுறைவாதம் குறித்து பேசியும் எழுதியுமிருக்கிறீர்கள்; அவர்கள் கோட்பாட்டுச்சிக்கல் போன்ற சிடுக்குகளையெல்லாம் போட்டு தேவையில்லாமல் குழப்பிக்கொள்வதில்லை. மாறாக ‘இன்று’ குறித்தான பிரக்ஞை பெண்களை வலுவாக முன்னடத்துகிறது

லிலி, அவள் கணவன் இருவரின் பாத்திரவார்ப்பும், தர்க்கபுத்தி முன்னோங்கியிருக்கும், இன்றைய (திருமணமான) நகர இளைஞர்களை மிகச்சரியாக பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அதிலும் பாலியல் போன்ற சங்கதிகளையும் அறிவார்த்தமாக விவாதிக்கும் சூழல் (அவர்களின் பாலியல் சார்ந்த உரையாடல்கள் எந்தவொரு கிளர்ச்சியையும் தருவதில்லை என்பது மிக முக்கியம்) அவர்களை அறிவுத்தளத்தின் ஒரு உச்சத்தில் காட்டுகிறது. இதனாலேயே அவர்களுக்குள் எழும் இச்சிக்கல்கள் பெரும்பாலான நகரத்து இளைஞ இளைஞிகளின் (இவ்வளவு கூர்மையாக இல்லாவிட்டாலும், ஏதோவொரு விகிதத்தில்) சிக்கல்களாகவே படுகிறது. நவீன கல்வி கற்று, அறிவு சார்ந்த பணிகளில் பெரும்பான்மையாக ஈடுபடும் ஒரு தலைமுறைப் பெண்கள் மிகவேகமாக அதிகரித்துவரும் இத்தருணத்தில் இந்தக்கதை முன்வைக்கும் கேள்விகள், அதன் சமகாலப் பொருத்தப்பாடு இதெல்லாம் தனியே விவாதிக்க வேண்டிய விஷயங்கள்.

தொடரும் மற்றுமொரு சிறுகதைப் பருவத்திற்கு நன்றிகள் பல.

அன்புடன்
வெங்கட்ரமணன்.

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். குமிழிகள் கதை வாசித்ததும் எனக்கு நினைவில் வருவது  பன்னாட்டு நிறுவங்களின் அலுவலகச்  சூழல். இங்கு  வேலை பார்ப்பதில் முன்னேற்றம் என்பதின் அடிப்படை – எலிப் பந்தயம்.முன்னேற்ற இலக்கு எனக்  காட்டப்படுவது பொருள் வெற்றி அடைந்த முன்னுதாரணங்கள். தலைமைப் பண்பு என காட்டப்படுவது   அமெரிக்க/மேற்கத்திய  முறைமை.

இத்தனை  பெண்கள் தலைமைப்  பதவிகளில் அமர்த்தப் பட வேண்டும் என்று இலக்குகளும் உள்ளன. இந்தச் சூழலில் எளிதில்  காணக்  கிடைப்பது லிலி போன்ற போராளிகளே. பொருள் ரீதியாக அல்லது பதவி ரீதியாக இவர்கள் முன்னுள்ள  மாதிரிகள் மேற்கத்தியப்  பெண்கள். இவர்கள் முன்னால் இருப்பது  Individualistic மனப்பாங்கு உடையவர்கள். இவர்களின் குடும்ப அமைப்போ இன்னும் நம் வழியில்.

லிலிகள்  கொள்ளும் உணவு வழக்கங்கள் CEO என்ன செய்கிறாரோ அது! உடை, நடை, பேச்சும் அத் திக்கிலேதான்! லிலிகளைத்  தொடரும் அல்லிகள், அல்லிகளைத்  தொடரும் வள்ளிகள்  எனப்  பல பேர்கள் ‘கான  மயிலாடக்  கண்டிருந்த வான் கோழி போல’ ஆடுவது கேலிக் கூத்தாவதுண்டு. லிலியை மாதிரியாகக் கொண்டு  அது போல உயர  எண்ணும்  பெண்கள் திரிசங்கு  போல சிக்கி கொள்ளும் குடும்பச் சிக்கல்களும் நொய்மை தருபவை. .

என் ஒன்பதாம் வகுப்பில் ஒரு உயிரியல் பாடம் இருந்தது – போலச்  செய்தலும் வண்ணம் ஏற்றலும் (mimicrying  and  colouration  என்பதின் மொழிபெயர்ப்புத்  தலைப்பு!). எல்லாம் சர்வைவலுக்கும் த்ரைவலுக்கும்! கொடுக்கும் விலை மனதிற்கு உகந்ததாக இருந்தால் ஒன்றும்  துன்பம்  இல்லைதான்! லிலி போல ஒற்றைப்  போக்கு கொண்டு தான் எண்ணுவதில் சந்தேகம் இன்றி செல்வோர் மிகக் சிலர், அவர்களுக்கு அவர்கள் எண்ணம் மாறாத வரை மனத்தொல்லை  இல்லை. ஆனால்  லிலியை ‘போலச் செய்யும்’ அல்லிகள், அவர்களைப்  போலச்  செய்யும் வள்ளிகளின் மனக் / மணக் குழப்பங்கள் மிக பெரிய துன்பமே – அவருக்கும், அவர் குடும்பத்திற்கும், குட்டிகளுக்கும் – குழுமத்திற்கும்  கூட.

ஆனந்தா ராஜ்குமார்

 

வணக்கம் ஜெ

முலைகள்- தொட்டால் உடையும் குமிழ்கள்; போலிகள்; போலிகளே இங்கு அனைத்தையும் கைப்பற்றிவிட்ட காலம். நாம் என்னதான் போலிகள், அபத்தங்கள் என்று கத்திக்கொண்டிருந்தாலும் அது மேலும் செல்வாக்கு பெற்று ஆதிக்கம் செலுத்தியே வருகிறது. இன்று வென்றவர்களை நோக்கிச் செல்கிறது உலகம். தென்னிந்தியர்கள் வடஇந்தியர்களாகவும், வடஇந்தியர்கள் வெள்ளையர்களாகவும் ஆகிக்கொண்டிருக்கிறார்கள். அப்படியெனில் தோற்றுக்கொண்டிருக்கும் (கிட்டத்தட்ட தோற்றுவிட்ட) பண்பாட்டின் பிரதிநிதியா நான் ? நாம் பேசிக்கொண்டிருக்கும் பெருமிதங்களுக்கு எந்த மதிப்பும் இல்லை. உலகம் வேறுதிசையில் செல்கிறது.

எது வெல்கிறதோ அதையே தம் சுயமாகக் கொள்ளும் காலம். ‘மனிதனுக்கு சுயம் என்பதே இல்லை; அவன் எவ்வாறு தன்னை முன்னிறுத்துகிறானோ அதுவே அப்போதைக்கு அவனுடைய சுயம்’. கிழக்குக்கும் மேற்குக்கும் எவ்வளவு பெரிய வேறுபாடு. அதுவே வென்ற தரப்பு என்று நாம் எண்ணும் கணம்தான் நம் தோல்வி. அது வெல்லவில்லை. வெற்றிபெற்றதாக எல்லோரையும் நம்ப வைக்கிறது. கிட்டத்தட்ட ஒரு சர்வாதிகாரச் சூழல். அதை எதிர்கொள்ள நாம் பேச வேண்டும்; செயலாற்ற வேண்டும். ஆனால் நம்மிடம் பெரிய தயக்கம் இருக்கிறது. அதுவே நம் தோல்வி.

உரிமை கொள்வதற்கும் அதிகாரம் செலுத்துவதற்கும் எவ்வளவு பெரிய வேறுபாடு உள்ளது ? அல்லது வேறுபாடு இல்லை ? உணர்வுபூர்வமாகவும், உடல்பூர்வமாகவும் ‘உரிமை கொள்வதில்’ தான் உறவுகள் சாத்தியமாகின்றன. அது இல்லையெனில் எல்லோரும் தனித் தீவுதான். ‘கணவன் மனைவி’ உறவுகூட பாலியல் தொழிலாளிக்கும் வாடிக்கையாளருக்கும் உள்ள உறவைப்போல ஆகிவிடும். தனி மனிதர்களே இல்லாத காலத்தில் ‘தனிமனிதவாதம்’ தேவையாயிருந்தது. ஆனால் அதீத தனிமனிதவாதமே இன்று முதன்மையான சிக்கலாகிவிட்டது. ‘அந்தரங்கம் புனிதமானது’தான்;  அதே அளவுக்கு உறவுகளும் புனிதமானதே என்பதைப் பேச வேண்டிய தருணமிது.

உடலை அழகுபடுத்துவது என்பது ஆரோக்கியத்தின் வெளிப்பாடு, தன்னம்பிக்கையின் வெளிப்பாடு என்று நான் எண்ணுவதுண்டு. ஆனால் எப்படி அதுவும் கூட அந்நியப்பட்டுப் போய்விட்டது ? இன்று ஆண்கள் சிக்ஸ் பேக்குக்காக ஏன் இப்படி அலைகிறார்கள் ? வரலாற்று மனிதர்களையும் உருமாற்றிவிட்டார்கள். மருது பாண்டியர்களும், வீரபாண்டியக் கட்டபொம்மனும் சிக்ஸ் பேக்குடன் காட்சியளிக்கிறார்கள். இன்னும் கொஞ்ச நாளில் லெட்சுமி, சரஸ்வதி, காளி, மாரி அனைவரும் மேற்கத்திய ஓவியங்களைப் போல ஆகிவிடுவார்கள். உடல் குறித்த நம் அதீதப் பேச்சுக்களை கவனித்தால் தெரியும். ‘என் உடல் என் உரிமை’, ‘I Love Myself’ என்று. யார் உன்னை love பன்ன வேணாம்னு சொன்னது ? அதை என் இப்படி லூசு மாதிரி பெரிய கோட்பாடு மாதிரி பேசிக்கிட்டு இருக்க ? ஒருவித பதற்றத்தின் வெளிப்பாடாகவே உள்ளது.

எளிய கதையாக இருந்தாலும் பல்வேறு சிக்கல்களை பேசக்கூடிய கதை.

விவேக் ராஜ்

 

அன்பு ஜெ,

லிலியைப் போலவே இங்கு பெரும்பாலான பெண்கள் தன் உடல் அழகை ஆராதிப்பவர்கள் தான். எந்த ஒரு பெண்ணும் ஏதோ ஓர் உணர்வான பால்ய காலத்தில் உடலை உற்று நோக்காமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. அதன் நிலையாத்தன்மையை புரிந்தொழுகும் வயது வரையுமே இந்த ஆடி ஒத்திகை நடந்து கொண்டுதானிருக்கும். ஒவ்வொரு பெண்ணையும் கணக்கெடுத்தால் தன் உடல் சார்ந்த ஏதோவோர் போதாமையை அவர்கள் சொல்வார்கள். பற்களின் வரிசை சீராக இருக்க வேண்டும், மூக்கு கூர்மையாக இருக்க வேண்டும். இப்படி ஏகத்துக்கு அவர்களிடம் பட்டியலுண்டு.

என் பால்யத்திலிருந்தே என் பற்களின் தெற்றின் மேல் வருத்தமிருந்தது. அந்தத் தெற்று தெரியாமல் இருக்கவே வாயை ஒவ்வொரு கோணத்திலும் வைத்துப் பேசுவேன். பால்யத்தில் அந்தப் பல்லில் துணிக் கிளிப்பைப் போட்டு உந்தித் தள்ளிக் கொண்டிருப்பேன். அது முன்னகர்ந்ததா எனத் தெரியவில்லை. ஆனால் மிகச் சரியாக காலப்போக்கில் பின் நகர்ந்தது. எனக்கு மிகவும் பிடித்தவர்களை முதல் முறை பார்க்கும் போது அவர்களுக்கு என்னைப் பிடிக்க வேண்டும் என்பதைவிட என் பல்லைப் பிடிக்குமா என்று நினைப்பதுண்டு. அதுவே என்னை அவர்களிடம் சரியாக பேசவிடாமல் முதலில் தடுப்பது. அது போலவே என் சுருட்டை முடியின் மேலான ஒவ்வாமையும் பால்யத்தில் இருந்தது. குறிப்பாக ஊரில் என் கூட்டுப் பிள்ளைகள் என்னை “சூம்பிப்போட்ட பனங்கொட்ட மண்ட” என்ற கூப்பிடும் போது ஒவ்வாமையின் உச்சத்திற்கு சென்றுவிடுவேன். பெரிதானதும் பல்லை சீர்செய்ய வேண்டும், முடியை குச்சிகுச்சியாக நீட்டியிருப்பது போல மாற்ற வேண்டும் என நினைத்தேன். ஆனால் அந்த இரண்டுமே என் அடையாளங்களாக இன்று மாறிப்போயின.

லிலிக்கு தன் மூக்கின் மீதான ஒவ்வாமை கூட அப்படியான ஒரு காலகட்டத்தில் ஆரம்பித்து மேலும் மேலும் அது பெருகி திராவிட மூக்கு என்ற சொல்லில் உச்சமடைந்திருக்கும். அவள் உதிர்த்த ஒவ்வொரு வாதமும் தன்னையே அவள் திருப்தி கொள்ளச் செய்வதற்கே. அவளுக்கு அதற்கான வாய்ப்பும் அதற்கான தேவையுமிருப்பதே அவளுக்கான நிறைவான சாக்குபோக்குகள் தான்.

இதைத் தாண்டி அவளின் வாதத்திலிருந்த இந்த வரிகள் என்னை மேலும் சிந்திக்கத் தூண்டியது.

‘என்னோட எக்ஸ்பிரஷன்தான் நான். அதுக்கு அப்பாலே உண்மையிலே நான் யார்னு யாருக்கும் தெரியாது’; சோஷியல் மீடியால எதை முன்வைக்கிறானோ அதான் அவன்… அதுக்குமேலே அவனுக்கு எந்த செல்ஃபும் இல்லை. அப்டி ஒரு மாறாத செல்ஃப் இருக்குன்னு சொல்றது பொய். அப்பப்ப எப்டி முன்வைச்சுகிடறோமோ அதுதான் நாம…’

ஒட்டு மொத்தமாக ஒருவருடைய சோஷியல் மீடியா பக்கத்தை புரட்டினாலே அவர் தன்னை எப்படி முன் நிறுத்துகிறார் என்பதை அறிந்துவிடலாம் தான். இது மட்டும் இவர் இல்லை என்று எப்போதும் தோன்றுமெனக்கு. ஆனால் இன்று வோறொன்றை யோசித்தேன். ஒவ்வொருவரும் தன்னை இந்த சமூக நீரோட்டத்தில் முன்னிறுத்திக் கொள்ள அந்தந்த காலகட்டத்தைக்குத் தேவையான பதிவைப் போடுகிறார்கள். ஒவ்வொரு நாளுமென அவர்கள் அந்த லைக்குகள் போடும் ஆயிரம் பேருக்காகவே அவர்களை முன்னிருத்தியே  தங்கள் வாழ்வை முன்னிருத்துகிறார்கள்.

இவர்களை நினைக்கும்போதே வாசகர் சக்திவேல் அவர்கள் புகழையும் பாராட்டையும் ஒதுக்கி அவர் எழுதுவதும் வாசிப்பதும் மகிழ்ச்சிக்காக என்று சொன்னது நினைவிற்கு வர லிலி போன்றவர்களுக்கான ஆன்ம திருப்தி என்பது எது? என்ற கேள்வி எழுந்தது. கண்ணுக்குத் தெரியாத, நம் வாழ்வின் அருகிராத,  ஓர் சந்தை உலகம் முன் வைக்கும் ஒரு பிம்பத்தை நோக்கி நம் இயற்கை உடலை செலுத்தி வேறொன்றாக மாறி அடைவதென்பது எதை? நம்மை நம் திறமையை எந்தவித புறத்தோற்ற அளவுகோளின்றி ஏற்றுக் கொள்ளும் சாமிநாதன் போன்றோர்களிடமிருந்து விலகியபின் ஏற்படும் மகிழ்ச்சி/வெற்றி என்பதன் நிறைவு நிறைவாகுமா? நுண் உணர்வுகளினின்று விலகி சந்தையின் ஓட்டத்திற்கேற்ப நம்மை நம் வாழ்வை கட்டமைத்து அந்த தொடரோட்டத்தில் அடைவதென்பது எதை என்பதை நானுமே தன் மூக்கம்மாவை இழந்த சாமிநாதன் போல் குழப்ப நிலையில் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

அப்பட்டமாக நம் கண்ணால் காணும் உடலை நம் இயற்கையான உடல்மொழியை வெறுக்கச் செய்து வேறொன்றாக மாற்ற எத்தனிக்கும் சந்தை மனநிலையின் வழி நான் இறுதியில் தரிசித்தது காந்தியைத் தான். சந்தை மனநிலையினின்று நம்மை மீட்டெடுக்க அவர் விட்டுச்சென்ற காலடித்தடங்களே நமக்குப் போதும். அவரே அந்த காலகட்டத்தின் உண்மையான புரட்சியாளர். குமிழியின் சிறுகதையின் இறுதியில் நான் தரிசித்தது காந்தி தன்னை முன்னிருத்திக் கொண்ட பிம்பத்தைத்தான். நன்றி ஜெ.

அன்புடன்

இரம்யா.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 06, 2021 10:31

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.