இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 23
August 13, 2024
பீஹார் மாதிரி தமிழ்நாட்டுக் கல்வியை ...
திரு ரவி அவர்களுக்கு,
வணக்கம்
தமிழ்நாடு ஏதோ கல்வியில் அதல பாதாளத்தில் இருப்பது போலவும்
ஏதோ இந்தியாவிலேயே நீங்கள்தான் நான்காவது அறிவாளி போலவும் பாவித்துக் கொண்டு
எங்களுக்கு ஞான உபதேசம் செய்வதாக உளறிக்கொண்டிருப்பதையே வைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்
விஷேஷம் என்னவெனில்,
உளறுகிறபோதுகூட தவறியும் ஒரு துண்டு உண்மையையும் உளறிவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறீர்கள்
உண்மையை சொன்னால்
உண்மையோ ஞானமோ துளியும் இல்லாதவர் நீங்கள்
இப்போது ஒரு தகவல் கிடைத்திருக்கிறது
இந்தியாவில் உள்ள 100 சிறந்த கல்லூரிகளில் 37 தமிழ்நாட்டில் உள்ளதாக அந்த தகவல் கூறுகிறது
அந்தப் பட்டியலில் மன்னர் பிறந்த குஜராத் இல்லை, நீங்கள் பிறந்த பீஹார் இல்லை, யோகி பிறந்த உத்திரப் பிரதேசம் இல்லை
இந்த நிலையில் நீங்கள் தமிழ்நாடு குறித்து தொடர்ந்து இப்படி உளறிக்கொண்டே இருப்பதற்கும்
தமிழ்நாட்டு பல்கலைக் கழகங்களின் நடைமுறைகளில் அசிங்கமாக தலையிடுவதற்கும்
கொண்டுவந்துவிட வேண்டும் என்பதுதான் உங்கள் செயல் திட்டமோ என்ற அச்சம் வருகிறது
உங்கள் ஞானத்தைப் பயன்படுத்தி பீஹாரை வெளிச்சப் படுத்த முயற்சி செய்யக் கிளம்புங்கள்
August 11, 2024
ராஜாஜியை வீட்டிற்கு அனுப்பியதுபோல்…
மனம்போன போக்கில், தனக்கு சரி என்று தோன்றியவற்றை எல்லாம் தந்தை பெரியார்செய்துகொண்டிருந்த காலம். ”மைனர் கணக்காக” தான் திரிந்து கொண்டிருந்த காலம் என்று அவரே அந்தக் காலம்குறித்து பலமுறை வெளிப்படையாகக் கூறி இருக்கிறார்.
சிறிது காலத்திற்குள்ளாகவே அவரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக்கியும்அழகு பார்க்கிறார்.
பெரியார் குறித்த ராஜாஜியின் மதிப்பீடும் அதை மற்றவர்களிடத்தில் கொண்டுபோய்சேர்த்த விதமும் பெரியாரை நெகிழச் செய்திருக்கிறது என்பதில் துளியும் அய்யம் இல்லை.
ஆகஸ்ட் 2024
கடின உழைப்பிற்கு ஊதியமும் இல்லை என்றால் எப்படி?
கீழே காணும் ஏழு அரசுக் கல்லூரிகளில் பணியாற்றும் 83 கௌரவ மற்றும் மணிநேர விரிவுரையாளர்களும் 33 அலுவலகப் பணியாளர்களும் ஆக 116பேர் கடந்த 14 நாட்களாக உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகிறார்கள் என்ற செய்தி நெஞ்சை அறுக்கிறது.
2) அரசு கல்லூரி, லால்குடி
3) அரசு கல்லூரி,ஒரத்தநாடு
4) அரசு கல்லூரி, இனாம்குளத்தூர்
5) அரசு கல்லூரி, வேப்பூர்
6) அரசு கல்லூரி, அறந்தாங்கி
7) அரசு கல்லூரி, நன்னிலம்
2) கௌரவ விரிவுரையாளர்கள்
3) மணிநேர விரிவுரையாளர்கள்
1) கல்லூரிகளின் நடத்தப்படும் பாடப் பிரிவுகள்
2) பிரிவுகள் வாரியாக பணியாற்றும் விரிவுரையாளர்கள் பட்டியல்
3) பிரிவு வாரியாகப் பணியாற்றும் ஊழியர்களின் பட்டியல்
தீக்கதிர்10.08.2024
August 7, 2024
கவிதை 086
கவிதை 085
கவிதை 084
கவிதை 083
அம்மாவிற்குமுதுகு வலி என்பதற்காகஒட்டடை அடித்துவீட்டைசுத்தம் செய்ய வந்தலட்சுமிப் பாட்டிக்கும்முதுகு வலிதான்
July 27, 2024
மருத்துவர் அனிதா… மருத்துவர் ஜெகதீஷ்… மருத்துவர் கீர்த்தனா…
தீட்டென்றான்
மீறிப் படித்தேன்
நீட்டென்கிறான்”
என்ற கபிலனின் கவிதையைக் கொண்டு உரையாடல்களையும் கட்டுரைகளையும் நாம் தொடர்ந்து கட்டமைப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது.
நீட் குறித்தான, அதன் கார்பரேட் குணங்களைக் குறித்தான மிகக் கனமான விஷயங்களையே பேசியும், எழுதியும், கேட்டும், வாசித்தபடியுமாகவே இருக்கிற நமக்கு இந்த ஐந்தாறு சொற்கள் ”நீட்” தரும் வலியை எந்தப் பூச்சுமற்று தருகிறது.
நீயெல்லாம் படிப்பதற்கே தகுதி இல்லை, காரணம் நீ பிறந்த பிறப்பு அப்படி. என்று தடுக்கப்படுகிறார்கள். அந்தக் குழந்தை அந்தத் தடைகளை உடைத்து படித்து நல்ல மதிபெண்ணோடு வந்தால் இந்த மதிபெண்ணெல்லாம் பத்தாது நீட் வேண்டும் என்கிறார்கள்.
அந்தக் குழந்தையின் குரல்தான் கபிலனின் இந்தக் குரல். அதனால்தான் இதை ஒருபோதும் நம்மால் கைநழுவவிட முடியவில்லை.
இவ்வளவு மதிப்பெண் பெற முடிந்த குழந்தையால் நீட்டில் போதுமான மதிப்பெண் பெற முடியவில்லை என்றால் இந்த மதிபெண்ணில் ஊறு இருக்கிறது என்றுதானே கேட்டார்கள்.
குழந்தை அனிதா +2 பொதுத் தேர்வில் 1176/1200 எடுத்திருந்தாள். ஆனால் அவளால் நீட்டில் தேர்ச்சிக்குரிய மதிப்பெண் எடுக்க முடியவில்லை.
எனக்கு நினைவு பிசகாமல் இருக்குமென்றால் சகோதரி தமிழிசையே இதை நக்கல் செய்திருந்தார்.
நீட்டில் நல்ல மதிப்பெண் எடுக்கும் குழந்தையால் பொதுத் தேர்வில் 1176 எடுக்க முடியவில்லை என்றால் நீட்டில் குறைபாடு இல்லையா என்று நாம் திருப்பிக் கேட்டோம்.
நமது குரலை அவர்களது அதிகாரம் பழைய அலுமினியப் பாத்திரத்தை பழைய பாத்திரம் வாங்குபவர் நசுக்கி தனது கூடைக்குள் எறிவதுபோல் எறிந்தது.
அப்போதுதான் நமது கோவத்தை, ஆற்றாமையை இந்த ஐந்தாறு வார்த்தைகளுக்குள் கொண்டு வந்தார்.
1176 மதிப்பெண் எடுக்கும் நம் குழந்தைகளால் ஏன் நீட்டில் சோபிக்க வாய்க்காமல் போனது? நிறைய காரணங்கள் உண்டு. இரண்டை மட்டும் பார்ப்போம்
1) நம் குழந்தைகள் மாநில பாடத் திட்டத்தில் படிப்பவர்கள். நீட் வினாத்தாள் CBSE பாடத்திட்டத்தில் இருந்து எடுக்கப்படுகிறது
2) நீட் வினாத்தாள் OBJECTIVE TYPE முறையில் வடிவமைக்கப்பட்டிருக்கும்
இவற்றில் முதல் கூறே போதும் நம் குழந்தைகள் ஏன் நீட்டில் சோபிக்க முடியவில்லை என்று.
ஆனால் இரண்டாவது கூறுதான் மிக முக்கியமானது. நீட்டில் ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு மதிப்பெண். மொத்தம் 180 கேள்விகள். ஆக, 720 மதிப்பெண்.
ஏதேனும் ஒரு கேள்விக்கு தவறான விடை தந்தால் குழந்தை ஒரு மதிப்பெண்ணை இழக்க நேரிடும்.
எனவே நீட்டை எதிர்கொள்வதற்கு குழந்தைகள் கோச்சிங் வகுப்புகளுக்கு செல்ல வேண்டும். கோச்சிங் வகுப்புகளுக்கு லட்சக் கணக்கில் அழவேண்டியது இருக்கிறது. இதனால் நன்கு படிக்கக் கூடிய நமது ஏழைக் குழந்தைகளுக்கு கோச்சிங்கில் சேர இயலவில்லை. மிகச் சுமாராகப் படிக்கும் குழந்தைகள் பள்ளிகளுக்குப் போகாமல் கோச்சிங் சென்று நல்ல மதிப்பெண் எடுத்துவிடுகின்றனர்.
பல தனியார் பள்ளிகளே கோச்சிங் வகுப்புகளை நடத்துகின்றன. நீட் கோச்சிங்கில் சேரும் குழந்தைகள் பள்ளி வகுப்புகளுக்கு வரத் தேவை இல்லை. நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பெண்ணோடு தேர்ச்சி பெறுவதற்கு அவர்களுக்கு ஏற்பாடு செய்யப்படும்.
இதன் விளைவாகத்தான் இந்த ஆண்டு நீட்டில் ஒன்றிய அளவில் சிறந்த இடத்தைப் பெற்றுள்ள ஒரு குழந்தை +2 பொதுத் தேர்வில் இரண்டு பாடங்களில் தேர்ச்சி பெறாமல் போயிருக்கிறார்.
அதாவது, +2 வில் தேர்ச்சி பெறாத ஒரு குழந்தையால் ஒன்றிய ரேங்க்கோடு நீட் தேர்வில் வெற்றிபெற முடிகிறது.
இதன் பின்னணியில் தில்லுமுல்லுகள் உள்ளனவா என்றால் நிச்சயம் உண்டு.
இந்த ஆண்டு ஒன்றியத்தில் பெரும்பான்மையற்ற ஒரு அரசு அமைந்திருக்கிற காரணத்தினால் சில நீட் அட்டூழியங்களை நம்மால் வெளிக்கொணர முடிந்திருக்கிறது.
இந்த ஆண்டு நீட் தேர்வில் 67 குழந்தைகள் 720/720 எடுத்திருக்கின்றனர். இவர்களில் ஆறேழு குழந்தைகள் ஒரே மையத்தில் எழுதிய குழந்தைகள் என்பது நிச்சயமாக தற்செயலானது அல்ல.
அதிலும் சிலர் அடுத்தடுத்து அமர்ந்து தேர்வு எழுதியவர்கள்.
சில பிள்ளைகள் 717, 719 என்றெல்லாம் மதிப்பெண் எடுத்திருக்கிறார்கள். இதற்கு வாய்ப்பே இல்லை.
ஒன்று 720 எடுக்கலாம். அல்லது 716 எடுக்கலாம். இல்லை ஒரு கேள்விக்கு தவறான விடை எழுதி இருந்தால் 715 எடுக்கலாம். இரண்டு கேள்விகளுக்கு தவறான விடை அளித்திருப்பின் 710 தான் எடுக்க முடியும்.
அது எப்படி 719 ,718 எல்லாம் எடுக்க வாய்க்கும்?
உச்ச நீதிமன்றத்திற்கு போனால் ஏதோ சில கோளாறுகள் நடந்திருக்கின்றன சரி செய்கிறோம் என்று நிர்வாகம் கூறுகிறது.
கொஞ்ச நேரம் கழித்து இந்த மதிப்பெண் குளறுபடிகள் நாங்கள் சில மாணவர்களுக்குக் கொடுத்த கருணை மதிப்பெண் காரணமாக நிகழ்ந்து விட்டது என்று கூறுகிறது.
இன்னும் கொஞ்சம் நேரத்தில் தாங்கள் கருணை மதிப்பெண் கொடுத்த 1563 குழந்தைகளுக்கும் மறு தேர்வு வைத்து விடுகிறோம் என்கிறார்கள்.
தேர்வுத்தாள் சில இடங்களில் கசிந்திருக்கிறது என்றும் ஏறத்தாழ ஒப்புக் கொள்கிறார்கள்.
தமிழ்நாட்டில் நீட் தேர்வு நடக்கும்போது சட்டையை வெட்டுகிறார்கள், முடியை வெட்டுகிறார்கள், தாலியைக் கழற்றுகிறார்கள். ஏதோ நடக்க இருக்கும் கொலையைத் தடுப்பதற்காக கெடுபிடிகளைக் கட்டவிழ்த்து விடுவதைப்போல் நடந்து கொள்கிறார்கள்.
ஆனால், வடக்கில் என்றால் இவ்வளவு அசட்டை எப்படி.
திராவிடப் பிள்ளைகள் மருத்துவர்களாகிவிடக் கூடாது என்பதுதானா என்ற அய்யம் இயற்கையாகவே ஏற்படுகிறது.
அது சரி, அந்தக் கருணை மதிப்பெண் யார் யாருக்கு வழங்கப் பட்டது?
எவ்வளவு வழங்கப் பட்டது? என்று கேட்டால், விடுங்கள் அதுதான் கொடுத்தவர்களுக்கு மறுதேர்வு வைக்கிறோமே என்கிறார்கள்.
720/720 எடுத்த 67 பேரில் 50 பேருக்கு கருணை மதிப்பெண் வழங்கப் பட்டிருக்கிறது. ஆகவே இப்போது முழு மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை 17 ஆகக் குறைந்துள்ளது.
அய்யத்தைக் கிளப்பாமல் போயிருந்தால் அந்த 50 பேரும் மிகச் சிறந்த கல்லூரிகளுக்குப் போயிருப்பார்கள். அப்படிப் போயிருந்தால் தகுதி வாய்ந்த 50 பேருக்கு உரிய இடம் மறுக்கப் பட்டிருக்கும்.
அந்த 50 பேர் யார்? அவர்கள் குடும்பங்களின் அரசியல் அல்லது சமூகப் பின்னணி என்ன? அவர்கள் எந்தெந்த கோச்சிங் மையங்களில் பயிற்சி பெற்றார்கள்? அந்த கோச்சிங் மையங்களின் அரசியல் மற்றும் சமூகப் பின்னணி என்ன? போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல மறுக்கிறார்கள்.
இப்படி எடுத்ததெற்கெல்லாம் சந்தேகப் படாதீர்கள். கொஞ்சம் நம்புங்கள் என்று சொல்கிறார்கள்.
இதுவே இந்த அரசு முழுப் பலத்துடன் இருந்திருக்குமானால் இந்தக் குழறுபடிகள் குறித்து நம்மால் கேள்வி கூட கேட்டிருக்க முடியாது. ஆமாம் அப்படித்தான் என்ன செய்துவிட முடியும் என்றுகூட கேட்டிருப்பார்கள்.
கோச்சிங் மையம் என்பது தனிப்பயிற்சி செண்டர்தான். ஒரு தனிப்பயிற்சி மையம் கிரிக்கெட் போட்டிக்கு 5000 கோடி ஸ்பான்சர் செய்திருப்பதாக பிரபலமான பத்திரிக்கையாளர் திரு உமாபதி கூறுகிறார்.
ஒரு தனிப்பயிற்சி மையம் 5000 கோடி ரூபாயை ஒரு விளையாட்டிற்கு ஸ்பான்சர் செய்ய முடிகிறது என்று சொன்னால் அதன் வருட வருமானம் எவ்வளவு? அந்த மையத்தின் பின்புலத்தில் இருப்பவர்கள் யார் யார்? அவர்களது அரசியல் பின்னணி என்ன?
ஒரே நாடு ஒரே தனிப்பயிற்சி மையம் என்கிற நிலைக்கு மாறுவதற்கான முயற்சிகள் நடப்பதாகவும் அவர் ஒரு நேர்காணலில் கூறுகிரார்.
இப்படியான, மபியாத்தனமான கட்டமைப்பு உருவாகிக் கொண்டிருப்பது உண்மை எனில் அதன் லாபத்தில் பங்கெடுக்கும் அரசியல் சக்திகள் எவை?
அத்தனையும் வெளி வரும்.
கருணை மதிப்பெண் பெற்றவர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் மீண்டும் தேர்வு நடத்தப்பட வேண்டும் வேண்டும் என்று எழும் கோரிக்கையில் நமக்கு இடைக்கால உடன்பாடுதான்.
நம்மைப் பொறுத்தவரை நீட் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்.
பலமற்ற ஒன்றிய அரசு,
பீஹார், கர்நாடகா, மத்தியபிரதேசம், போன்ற மாநிலங்களும் அகிலேஷ் யாதவ் போன்ற தலைவர்களும் இப்போது நீட்டை எதிர்க்கிறார்கள்.
இந்த நிலையில் நீட்டிற்கு எதிரான ஒன்றுபட்ட போராட்டம் நிச்சயமாக வெற்றி பெறும்.
அனிதாக்களும், ஜெகதீஷ்களும், கீர்த்தனாக்களும் மருத்துவர்கள் ஆவார்கள்.
மருத்துவம் மக்களுக்கானதாக மாறும்.
_ புதிய ஆசிரியன் ஜூலை 2024
July 24, 2024
உங்கள் ஆணவத்திற்கான கடிவாளம் எங்கள் நாற்பது
இந்திய நாடாளுமன்றத்திற்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடந்து முடிவுகளும் வந்து விட்டன. இந்த முடிவுகளுக்குப் பிறகு இந்தியா கொஞ்சம் விநோதமாக மாறி இருக்கிறது.
காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இடையேதான் போட்டி நிகழ்ந்தது. நம்மைப் பொறுத்தவரை மக்கள் மிகத் தெளிவானதொரு தீர்ப்பினை வழங்கி இருக்கிறார்கள்.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆட்சியை கொடுத்திருக்கிறார்கள் மக்கள். அவர்களும் ஆட்சியை அமைத்து விட்டார்கள். வென்றவர்கள் ஆட்சி அமைத்திருக்கிறார்கள். இதில் என்ன விநோதம் வந்துவிட்டது என்ற கேள்வி இயல்பாகவே எழும்.
வேறொன்றும் இல்லை,
தோற்றுப் போனவர்கள் சோர்ந்து போவதும் வெற்றி பெற்றவர்கள் மகிழ்ந்து கொண்டாடுவதும்தான் வாடிக்கை. இந்தத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தோற்றுப் போனவர்கள் மகிழ்ச்சியாகவும் வெற்றி பெற்றவர்கள் மிகுந்த சோர்வோடும் இருக்கிறார்கள்.
எண்கள் என்ன செய்து விடும் என்றுதான் பொதுவாகப் பேசுவோம். சில சுயேச்சைகள் காங்கிரசில் சேர்ந்த பிறகு “இந்தியா” கூட்டணியின் எண்ணிக்கை 240 என்ற அளவைக் கடந்திருக்கிறது. இது அசுர பலத்திலான எதிர்க் கட்சியின் எண்ணிக்கை.
ஆளும் தேசிய ஜனநாயக் கூட்டணிக்கு 290 இடங்கள் கிடைத்துள்ளன. ஆட்சி அமைப்பதற்கு குறைந்த பட்சம் 272 இடங்கள் தேவை என்கிற நிலையில் இந்த 290 என்பது போதுமானது என்றாலும் ஒரு பலவீனமான எண்.
ஆக, மிகவும் அசுர பலத்தோடு கூடிய எதிர் வரிசையையும் மிகவும் பலவீனமானதொரு ஆளும் வரிசையையும் நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்திருக்கிறார்கள் மக்கள்.
ஆளும் கூட்டணியில் இப்போதே தள்ளுமுள்ளுகளைப் பார்க்க முடிகிறது. மாறாக நாளுக்கு நாள் எதிர் வரிசை கெட்டிப்பட்டுக் கொண்டே போவதையும் பார்க்க முடிகிறது. இந்த மண்ணை நேசிக்கும் எவரொருவரும் மகிழ்ந்து கொண்டாட வேண்டிய அம்சம் இது.
இது இப்படி இருக்க, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் உள்ள நாற்பது நாடாளுமன்றத் தொகுதிகளையும் திமுக தலைமையிலான “இந்தியா” கூட்டணி அமோகமாக வென்றிருக்கிறது.
23 உறுப்பினர்களை கையில் வைத்திருக்கக் கூடிய திமுக நினைத்திருந்தால் நிச்சயமாக அதிகார பேரத்தில் இறங்கி இருக்கவும் வாய்ப்புகளைப் பெற்றிருக்கவும் முடியும். அதன் மூலம் எஞ்சிய தங்களது ஆட்சிக் காலத்தை இலகுவாகவும் சொகுசாகவும் நகர்த்தி இருக்க முடியும்.
எதிர்ப்பது என்பது அவர்களுக்கு இன்னும் மேலதிகமான குடைச்சல்களைக் கொண்டுவரக் கூடும். இவற்றை நன்கு அறிந்திருந்தாலும் கொண்ட கொள்கையில் திமுக உறுதியோடு நிற்கிறது. கட்சித் தலைமை மட்டுமல்ல அடிமட்டத் தொண்டனும் சலனமே இல்லாமல் உறுதியோடு நிற்பதையும் பார்க்க முடிகிறது.
இதற்காக திமுகவிற்கும் அதன் தலைவர் ஸ்டாலினுக்கும் ஒரு வணக்கத்தையாவது சொல்லாவிட்டால் இந்தக் கட்டுரை நிறைவு பெறாது.
இந்தத் தேர்தல் இந்திய மண்ணிற்கு சலனமற்று களமாடுகிற சில தலைவர்களை அடையாளம் காட்டி இருக்கிறது. பல காலம் ”பப்பு” என்று பகடி செய்யப்பட்ட ராகுல் இந்தியாவின் ஆகப் பெரும் இளம் தலைவராக எழுந்து நிற்கிறார். இதை அமித்ஷாவே உள்ளுக்குள் ஒத்துக் கொள்வார்.
அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி, பிரியங்கா போன்ற இளைய தலைவர்களின் வரவு நமக்கு தெம்பைத் தருகிறது. இவர்கள் அனைவரும் தங்களது கூட்டணியின் தலைவராக, மூத்த சகோதரனாக ஸ்டாலின் அவர்களை உச்சி முகர்வதும், இடதுசாரிகளின் பங்களிப்பை உணர்ந்தவர்களாகவும் மதிப்பவர்களகவும் இருப்பதும், தன் உயரம் உணர்ந்தவராக ஸ்டாலின் இருப்பதும் இந்த மண்ணை நேசிப்பவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்திகள்.
இவ்வளவு புளங்காகிதம் அடைவதற்கு கொஞ்சம் இருக்கவே செய்கிறது. இன்னும் ஒரு 25 இடங்களை கூடுதலாக மக்கள் பாஜகவிற்கு வழங்கி இருந்தால் என்ன நடந்திருக்கும்?
சுயேச்சைகளையும் சில அரசியல் சிதறல்களையும் இலகுவாக கொள்முதல் செய்திருப்பார்கள். நினைத்ததை எல்லாம் செய்திருப்பார்கள். என்ன செய்ய நினைத்தார்கள் என்பதை முன்னாள் ஆளுநர் சகோதரி தமிழிசை அவர்களின் தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் குறித்த ஆதங்கத்தில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்.
நாற்பது இடங்களையும் திமுக கூட்டணிக்கு அளித்ததன் மூலம் தமிழ்நாட்டு மக்கள் ஒரு மிகப் பெரிய தவறை செய்து விட்டதாக முதலில் கூறினார். ஆட்சி அமைக்க முடியாத ஒரு கூட்டணிக்கு வாக்களித்து விட்டார்கள் என்றார்.
எப்போது பார்த்தாலும் எதிர் நிலையை எடுக்கிற தவறையே செய்வதாக ஸ்டாலினை குறை சொன்னார்.
அதற்கு அடுத்ததாக இந்த நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்களும் கேண்டீனில் வடை சாப்பிடுவதைத் தவிர என்ன செய்துவிட முடியும் என்று புலம்பினார்.
தமிழ்நாட்டின் உறுப்பினர்கள் கடந்த காலத்தில் என்னவெல்லாம் செய்தார்கள் என்பதை கோவையில் நடந்த வெற்றி விழா பொதுக் கூட்டத்தில் பட்டியலிட்டார் ஸ்டாலின். உங்கள் ஆணவத்தை அடக்க அவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை “Wait and see” என்று அவர் சொன்னபோது நமக்கே கொஞ்சம் சிலிர்க்கத்தான் செய்தது.
தேர்தலுக்கு முன்பு, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ”ஜெய் ஸ்ரீராம்” சொன்னால் நம்மைத் தாக்குவார்கள். உயிருக்கு உயிராக நாம் மதிக்கும் “ஜெய் ஸ்ரீராம்” நாம் உச்சரிக்க வேண்டும் என்றால் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று தனது தகுதிக்கு மிகக் கீழே இறங்கி பரப்புரை செய்தார் மோடி.
அயோத்தியே அவர்கள் கையைவிட்டுப் போனதும் அவர் ராமரை உறவு துறப்பு செய்துவிட்டு “ஜெய் ஜெகனாத்” என்று முழங்க ஆரம்பித்து விட்டார். நாளை ஒடிசா அவர்கள் கையை விட்டுப் போனால் ஜெகநாதரையும் அவர் உறவு துறப்பு செய்வார்.
இதன் மூலம் கடவுளும் மதமும்கூட இவர்களது வாக்கிற்கான கருவிகள்தான் என்பது இப்போது வெட்ட வெளிச்சமாக அம்பலப்பட்டு நிற்கிறது.
அனைத்து மதங்களையும் தாங்கள் சமமாகப் பார்ப்பதாக மோடி இப்போது கூறி இருக்கிறார். இந்த மாற்றத்தைக் கொண்டு வந்ததில் ”நாற்பதற்கு நாற்பதின்” பங்கு அதிகம் என்பதை சகோதரி தமிழிசைக்கும் மக்களுக்கும் நாம் தொடர்ந்து எடுத்து சொல்ல கடமைப் பட்டிருக்கிறோம்.
”இந்திய அரசமைப்பு சட்டப் புத்தகத்தை” பயபக்தியோடு மோடி வணங்கி முத்தமிடுகிற மாதிரி ஒரு புகைப்படம் சமீபத்தில் வைரலானது.
400 இடங்களில் பாஜக வெற்றி பெற்றால் இந்திய அரசமைப்பு சட்டத்தை மாற்றுவோம் என்று அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கூறினார்.
ஆனால் அதே சட்டப் புத்தகத்தை மோடி பணிந்து வணங்கினார். அப்படி அவரைப் பணிய வைத்தது இந்த நாற்பதுக்கு நாற்பது.
பாங்குச் சத்தம் குறைந்திருக்கிறது. வெற்றி பெற்றதும் பாங்குச் சத்தமே இல்லாமல் பார்த்துக் கொள்வோம் என்றார் யோகி.
இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவோம் என்று தமது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுத்திருக்கிற சந்திரபாபு நாயுடு ஆதரவோடுதான் இவர்களால் ஆட்சியை அமைக்க முடிந்திருக்கிறது. இந்த நெருக்கடியை பாஜவிற்கு கொடுத்திருப்பது இந்த “நாற்பதுக்கு நாற்பது”
இந்த நாற்பதுக்கு இன்னும் நிறைய வேலை இருக்கிறது.
2010 வாக்கில் அருந்ததி ராய் அவர்கள் மீது போடப்பட்ட ஒரு வழக்கினை தூசு தட்டி கையில் எடுத்திருக்கிறது ஒன்றிய அரசு. இன்னும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம்கூட எடுக்கவில்லை. அதற்குள் தனது ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறது அரசு.
நாங்கள் மாறவில்லை, மாற மாட்டோம். எங்கள் ஆட்டத்தை தொடர்ந்து ஆடிக்கொண்டே இருப்போம் என்று அவர்கள் உணர்த்தத் தொடங்கி இருக்கிறார்கள்.
கருத்துரிமையின் குரல்வளையில் கையை வைத்து விட்டார்கள். இந்தியா கூட்டணி இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
குஜராத்தில் ஒரு தொழிற்சாலையை அமெரிக்காவின் நிறுவனத்தோடு இணைந்து நிறுவ இருக்கிறார்கள். 2.5 பில்லியன் டாலர் மதிப்பீடு. இதில் இரண்டு பில்லியன் டாலரை ஒன்றிய அரசும் மாநில அரசும் மானியமாக வழங்கும். எஞ்சிய அரை பில்லியன் டாலரை அந்த அமெரிக்க நிறுவனம் முதலீடு செய்யும்.
ஒரு பில்லியன் என்பது நூறு கோடி. எனில், 250 கோடி டாலர் மதிப்பீட்டில் ஒரு தொழிற்சாலை அமைகிறது. அதில் 200 கோடியை மாநில அரசும் ஒன்றிய அரசும் மானியமாக வழங்குகிறது. 50 கோடியை அமெரிக்க நிறுவனம் முதலீடு செய்கிறது.
அமெரிக்க நிறுவனம் முதலீடு செய்கிறது. நமது அரசுகள் கூட்டாக முதலீடு செய்ய வில்லை. 50 கோடி முதலீட்டிற்கு நாம் கொடுக்கும் நன்கொடை 200 கோடி.
கேட்டால் 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்கிறார்கள்.
இதைக் கேள்வி கேட்பவர் இன்றைய ஒன்றிய கனரக தொழிற்சாலைகள் துறை அமைச்சர் குமாரசாமி. நன்கொடையாக நாம் தரும் அந்த 200 கோடி டாலரை மட்டும் நாம் முதலீடு செய்தாலே 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு தரலாமே என்று கேட்கிறார்.
ஆட்சிப் பொறுப்பேற்று அவைக்குள் செல்வதற்கு முன்னமே தொழிலாளிகளின் அடிவயிற்றில் காலை வைத்திருக்கிறது அரசு.
தொழிலாளிகளிடம் பிடிக்கும் பி.எப் தொகையைக் கட்டாமல் வைத்திருந்தால் முதலாளி கட்ட வேண்டிய அபராதத் தொகையை கணிசமாகக் குறைத்திருக்கிறது அரசு. அப்போதுதான் முதலாளிகள் இலகுவாக தொழில் நடத்த முடியும் என்று அரசு கூறுகிறது.
மாதா மாதம் ஒவ்வொரு ஊழியரிடம் இருந்தும் ஒரு குறிப்பிட்டத் தொகையை அவரது சம்பளத்தில் இருந்து பிடிப்பார்கள். எவ்வளவு பிடிக்கிறார்களோ அதே அளவு தொகையை நிர்வாகம் போடும். அதை பி.எப் அலுவலகத்தில் ஊழியரின் கணக்கில் செலுத்த வேண்டும்.
அதாவது 1,000 ரூபாய் ஊழியரிடம் இருந்து பிடித்தால் 1,000 ரூபாய் நிர்வாகம் போட்டு 2,000 ரூபாயை ஊழியரின் கணக்கில் கட்ட வேண்டும். ஆனால் நடைமுறையில் பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியரின் சம்பளத்தில் இருந்தே எடுத்துக் கொள்ளும். இந்தத் தொகையை மாதா மாதம் ஊழியரின் கணக்கில் கட்டிவிட வேண்டும்.
இனி இப்படி மாதா மாதம் கட்டத் தேவை இல்லை என்று சட்டம் கொண்டு வந்திருக்கிறது. அதாவது ஊழியனின் பணத்தை வேண்டுமளவிற்கு உருட்டிக் கொள்ளலாம் என்று வாய்ப்பளித்திருக்கிறது.
என்ன செய்துவிட முடியும் என்று கேட்கிறார் சகோதரி தமிழிசை.
உங்களது ஆணவத்திற்கு எங்களது உறுப்பினர்கள் கடிவாளம் போடுவார்கள் என்கிறார் ஸ்டாலின்.
மேற்சொன்னவை அனைத்தும் அவர்களது ஆணவத்தின் தெறிப்புகள்தான் என்பதை ஸ்டாலின் அவர்களுக்கும் இந்தியா கூட்டணி உறுப்பினர்களுக்கும் சொல்லிக் கொள்கிறோம்.
அவர்களைக் கொஞ்சம் பதட்டத்தோடே வைத்திருங்கள். இல்லாது போனால் அவர்கள் மக்களை பதட்டத்தோடு இருக்குமாறு பார்த்துக் கொள்வார்கள்
July 22, 2024
கவிதை 82
அதிகாலை
உழவர் சந்தைக்கு வந்தவள்
வெண்டைக்காயை
உடைத்துப் பார்த்தும்
ஒவ்வொரு
கத்திரிக்காயையும்
ஏழெட்டுமுறையேனும்
சுத்திப் பார்த்து
சொத்தையற்று பொறுக்கினாள்
சுண்டிப் பார்த்தும்
காதோரமாய் வைத்து
ஆட்டிப் பார்த்து
தேங்காய் வாங்கினாள்
பூச்சியில்லாத
கீரைக்கட்டை எடுத்தாள்
முடித்துவிட்டு
உழவர் சந்தைக்கு எதிரே உள்ள
சாப்பாட்டுக் கடையில்
இடியாப்பம் பாயா வாங்கினாள்
காய்களை
சுவரோரமாக வைத்துவிட்டு
இடியாப்பம் பாயாவை
சாப்பாடு மேசையில் வைத்துவிட்டு வந்தவளிடத்தில்
பழையசோறு பாத்திரத்தை நீட்டினாள்
முதலாளியம்மா
#கவிதை2024edn
இரா. எட்வின் [R.Edwin]'s Blog
- இரா. எட்வின் [R.Edwin]'s profile
- 1 follower
![Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.](https://s.gr-assets.com/assets/links/rss-d17345b73ab0388f7a23933239a75efb.gif)