லண்டனில் சிலுவைராஜ் Quotes
லண்டனில் சிலுவைராஜ்
by
ராஜ் கௌதமன்3 ratings, 3.67 average rating, 0 reviews
லண்டனில் சிலுவைராஜ் Quotes
Showing 1-21 of 21
“விண்ட்ஸர் அரண்மனையைப் பார்க்க வந்த கூட்டத்தில் சேலை, சுடிதார் அணிந்த பெண்களையும் இந்தி பேசிய ஆண்களையும் காண நேரிட்டது. பார்த்ததும் இவர்கள் எல்லாரும் இந்தியர்கள் என்று சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் சட்டென்று தெரிந்தபோதிலும் வெள்ளைக்காரர்களைப் போலவே நடந்து கொண்டார்கள். குறிப்பாகத் தமிழ் பேசியவர்கள் சமீபத்தில் நடந்து போய்க் கொண்டிருந்ததைப் பார்த்ததுமே சிலுவை தானும் தமிழன்தான் என்று அவர்களிடம் அறிமுகமாவதைத் தவிர்த்து வந்தான். ஏனெனில் தமிழன் என்றறிருந்ததும் அடுத்து அறிய விரும்புகின்ற அடையாளம் எதுவாக இருக்கும் என்பது சிலுவைக்கு நன்கு தெரியும்.”
― லண்டனில் சிலுவைராஜ்
― லண்டனில் சிலுவைராஜ்
“நெடுஞ்சாலையில் பஸ் பாரீஸை நோக்கிப் பறந்தது. சாலையின் இரு புறங்களிலும் மக்கள் குடியிருக்கும் பகுதிகள் வரும்போது நெடுஞ்சாலையில் ஓடும் வாகனங்களின் இரைச்சலைத் தடுப்பதற்கு உயரமான சுவர்கள் அமைக்கப்பட்டிருந்தன. தங்கள் மனிர்களுக்குத் தொந்தரவு வராமல் பார்த்துக்கொள்ளுவதில் பணக்கார நாடுகள் மிகுந்த எச்சரிக்கையோடு செயல்படுகின்றன. உலகத்தில் தாங்களே உயர்ந்த நாகரிகம் மிக்கவர்கள் என்பது அந்த நாடுகளைச் சேர்ந்த வெள்ளையர்களின் நம்பிக்கை. அதை மறுப்பதற்குச் சிலுவை தயாராக இல்லை; அவர்களிடையே ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் அவற்றுக்கிடையில் தனிமனிதர்களின் வசதியையும் சுதந்திரத்தையும் நாகரீகமான முறைகளில் வளர்த்துக் கொள்ளுகிறார்கள். ஒவ்வொருவனும் இங்கே தன்னுடைய சுதந்திரத்தை விட்டுக் கொடுக்கவும் மாட்டான்; பிறத்தியானுடைய சுதந்திரத்தில் அத்துமீறி மூக்கை நுழைக்கவும் மாட்டான். இந்தியாவில் இது தலைகீழ் விகிதத்தில் இருக்கிறது. அங்கே ஒருவன் தன்னுடைய சுதந்திரத்தை விட்டுக்கொடுப்பது தியாகம்; விட்டுக்கொடுக்காதது சுயநலம். இந்த தியாகம், சுயநலம் என்ற இரண்டு ஆயுதங்களால் யாருடைய சுதந்திரத்திலும் யாரும் தலையிடலாம்; தாக்கலாம்; நெருக்கடி செய்யலாம்; தீர்ப்புக் கூறலாம்; தண்டனை வழங்கலாம்.
சிலுவையின் இத்தகைய சிந்தனைகளை இந்தியாவில் யாரும் அறிய நேர்ந்தால் அவனுக்கு நாட்டுப் பற்று இல்லை; இக்கரைக்கு அக்கரை பச்சை என்று அலைகிறான்; இந்திய நாகரிகத்தையும் பண்பாட்டையும் சரியா அறியாத கபோதி; நமது முன்னோர்கள் என்ன முட்டாள்களா? லௌகீக நாகரிகத்தை வெறுத்து இந்திய ஆன்மீக ஒளியை நாடி வெள்ளையர்கள் இங்கே வருவது சும்மாவா? நமது தொன்மை வாய்ந்த கலாச்சாரத்தில் வேர் பிடிக்காத வீணர்களின் பிரதிநிதியாகச் சிலுவை மாறிவிட்டான் என்று விமர்சனங்கள் வரும். வந்தால் வரட்டும் என்று சிலுவை தனக்குள் பேசினான்.”
― லண்டனில் சிலுவைராஜ்
சிலுவையின் இத்தகைய சிந்தனைகளை இந்தியாவில் யாரும் அறிய நேர்ந்தால் அவனுக்கு நாட்டுப் பற்று இல்லை; இக்கரைக்கு அக்கரை பச்சை என்று அலைகிறான்; இந்திய நாகரிகத்தையும் பண்பாட்டையும் சரியா அறியாத கபோதி; நமது முன்னோர்கள் என்ன முட்டாள்களா? லௌகீக நாகரிகத்தை வெறுத்து இந்திய ஆன்மீக ஒளியை நாடி வெள்ளையர்கள் இங்கே வருவது சும்மாவா? நமது தொன்மை வாய்ந்த கலாச்சாரத்தில் வேர் பிடிக்காத வீணர்களின் பிரதிநிதியாகச் சிலுவை மாறிவிட்டான் என்று விமர்சனங்கள் வரும். வந்தால் வரட்டும் என்று சிலுவை தனக்குள் பேசினான்.”
― லண்டனில் சிலுவைராஜ்
“விலங்குகளோடு விலங்காய் வாழ்ந்தபோது கடிபட்டதைவிட விலங்குகளிலிருந்து விலகியபோது பட்ட கடிகளே அதிகம்!”
― லண்டனில் சிலுவைராஜ்
― லண்டனில் சிலுவைராஜ்
“லண்டன் போய் வந்ததைப் பற்றிச் சிலுவை அவனுக்குத் தெரிந்தவர்களிடம் பேசுவதைப் பெரும்பாலும் தவிர்த்து வந்தான். சிலபேர், அவன் போய்வந்ததை அறிந்திருந்தாலும் அதைப்பற்றி மட்டும் அவனிடம் பேசுவதில்லை. ஏதோ ஒரு புழுக்கம். இன்னும் சிலர் வெளிநாடு போய்வந்தது ஒன்றும் பெருமைப்படத்தக்க விசயமல்ல என்றும், நமது பண்பாட்டைவிட ஐரோப்பியர் பண்பாடு ஒன்றும் உயர்ந்ததல்ல என்றும் வலிந்து கட்டி அவனை விவாதத்துக்கு இழுத்தார்கள். என்னதான் வெள்ளைக்கார நாடுகள் வசதியாக இருந்தாலும், அந்நாட்டு மக்களின் பண்பாடு சதையை மையமாகக் கொண்டதால் சீக்கிரம் அழிந்துவிடும்; நமது நாடு ஆன்மீக பலம் கொண்டது; பழமையானது; பல தடைகளைக் கடந்து அழியாமல் நீடித்துள்ளது; பொருளாதாரத்தில் இங்கே வறுமை நீடித்தாலும் ஆன்மீகப் பண்பாடு செல்வச்செழிப்பு மிக்கது என்று மிகுந்த வன்மத்தோடு விவாதிப்பார்கள். பதிலுக்குச் சிலுவை விவாதிப்பதில்லை. குளத்தோடு கோபித்துக் கொண்டு குண்டி கழுவாமல் போகிறவர்களின் பேச்சாக அவர்களது விவாதம் இருப்பதாகச் சிலுவை நினைத்துக் கொள்வான்.”
― லண்டனில் சிலுவைராஜ்
― லண்டனில் சிலுவைராஜ்
“பிரஸ்ஸல்ஸ் நகரில் புகழ்பெற்ற ஒரு பெரிய சதுக்கத்துக்கு நடந்துபோனார்கள். சதுக்கத்துக்கு வருகிற வழியில் பெல்ஜியத்தின் சுதந்திர சின்னத்தை ஸோனல் காட்டி விளக்கினாள். அம்மணக் குண்டியாக நிற்கும் ஒரு பொடியன் தன் குஞ்சானைப் பிடித்து ஒண்ணுக்குப் போகிறமாதிரி அமைக்கப்பட்ட சின்னஞ்சிறிய சிலைதான் பெல்ஜியத்தின் சுதந்திரச் சின்னம். வரலாறு நெடுகிலும் பெல்ஜிய மக்கள் தங்களை மாறி மாறி அடிமைப்படுத்திய நாடுகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடிப் பெற்ற சுதந்திரத்தை, தெருவில் சுயேச்சையாக ஒண்ணுக்கிருப்பதில் அடையாளப்படுத்தியுள்ளார்கள். பெல்ஜிய நாடு வித்தியாசமான நாடுதான்.”
― லண்டனில் சிலுவைராஜ்
― லண்டனில் சிலுவைராஜ்
“விவசாயமும் கால்நடை வளர்ப்பும் தான் பெல்ஜியத்தின் பொருளாதாரமாக இருக்கும்போல. ஸோனல் அப்படித்தான் சொன்னாள். பெல்ஜியம் ரொம்பச் சின்ன தேசம். மக்கள் தொகை ரொம்பவும் குறைவு. ரெண்டு மணி நேரத்தில் அந்த நாட்டின் ஒரு எல்லையிலிருந்து மறு எல்லையைக் காரில் கடந்துவிடலாம், வரலாறு முழுவதும் பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி நாடுகளால் மாறி மாறி ஆளப்பட்டு வந்துள்ளது. விவசாயப் பொருட்களும், மாட்டின் பாலிலிருந்து தயாரிக்கும் சாக்லெட்களும் உலகப் புகழ் பெற்றவை. இதன் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் சர்வதேச நாடுகளின் ஸ்தாபனங்களும், யூரோ நாடுகளின் மையநிர்வாகமும், நேட்டோ நாடுகளின் தலைமையகமும் இருப்பதால் இவற்றின் பராமரிப்புக்களுக்காக ஆகும் செலவினங்களுக்காக பில்லியன் டாலர் கணக்கில் வழங்கப்படுவதாக ஸோனல் சொன்னாள்.”
― லண்டனில் சிலுவைராஜ்
― லண்டனில் சிலுவைராஜ்
“கேலெயிலிருந்து புறப்பட்ட பஸ் ரோட்டின் வலதுபுறமாக ஓடியது; இங்கிலாந்தைத் தவிர மற்றபடி ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் வாகனங்கள் வலது புறமாகத்தான் ஓடும். இங்கிலாந்து மட்டும் இப்படி ஐரோப்பிய நாடுகளிலிருந்து சில விசயங்களில் பிடிவாதமாக வித்தியாசப்பட்டு நின்றது; நிற்கிறது. ஐரோப்பிய நாடுகளின் யூனியனில் இங்கிலாந்து சேர்ந்தாலும், மற்ற நாடுகள் தங்கள் தங்கள் நாணயங்களை யூரோவுக்கு மாற்றிக்கொண்ட மாதிரி இங்கிலாந்து தனது பவுண்டை யூரோவுக்கு மாற்றவில்லை; அடம்பிடிக்கிறதாக பிரான்ஸ் கருதுகிறது.”
― லண்டனில் சிலுவைராஜ்
― லண்டனில் சிலுவைராஜ்
“வேதனைகளை மறந்து சிரிப்பதற்கும் லண்டனில் பல விசயங்கள் இருந்தன. மேடம் துஸ்ஸாத் என்ற பிரெஞ்சுப் பெண்மணி, பிரெஞ்சுப் புரட்சி காலத்தில் கில்லட்டின் எந்திரத்தால் வெட்டிக் குவிக்கப்பட்ட சீமான்களின் முகங்களை மெழுகால் தத்ரூபமாக வடித்து வைத்தாளாம்; நெருக்கடி தாங்க முடியாமல் பிரான்ஸிலிருந்து லண்டனுக்கு வந்து நிஜமான ஆட்களுடைய மெழுகு பொம்மைகளைச் செய்து வைத்த வழக்கத்தை அவளது சந்ததியார்கள் தொடர்ந்து கண்காட்சியாக நடத்த ஆரம்பித்து இன்றைக்கு உலகப் புகழ்பெற்ற இடமாக அதை மாற்றிவிட்டார்களாம். சினிமாப் புகழ் நடிகர், நடிகைகள், நடனக்காரிகள், உலக அரசியல் தலைவர்கள், அழகிகள், இங்கிலாந்தின் தற்போதைய ராணி, ராஜா, இளவரசர், விளையாட்டு வீரர்கள், சூப்பர் ஸ்டார்கள்... இப்படிப்பட்டவர்களை உயிரோடு பார்ப்பதுபோல அங்கே மெழுகுச்சிலைகள்! நல்ல வியாபாரம். நுழைவுக் கட்டணமே ஒரு நபருக்கு இருபத்தி ஐந்து பவுண்டுகள். எண்பதால் பெருக்கினால் நம் நாட்டு ரூபாய் எவ்வளவு என்று தெரியும்! அப்படியிருந்தும் அந்த பொம்மைக் கண்காட்சிக் கூட்டத்தில் டூரிஸ்ட் வெள்ளம் அலைமோதும்.”
― லண்டனில் சிலுவைராஜ்
― லண்டனில் சிலுவைராஜ்
“லண்டனுக்குச் சிலுவை போக உடன்பட்டதற்கு இன்னொரு முக்கியமான காரணம் இருந்தது. அதுதான் அந்த பிரிட்டிஷ் நூலகம். பிரிட்டிஷ்காரன் இந்தியாவை ஆண்டபோது அடித்துச் சென்ற கலைச் செல்வங்களை பிரிட்டிஷ் மியூஸியத்திலும், அறிவுச் செல்வங்களை பிரிட்டிஷ் லைப்ரேரியிலும் பத்திரப்படுத்தி வைத்திருந்தான். அவன் அடித்துச் சென்றாலும் பரவாயில்லை; நம்ம ஆட்களைப் போல சுவடிகளை எரிக்கவும் இல்லை; கறையானுக்குத் தீனியாகப் போடவும் இல்லை; ஆடி பதினெட்டாம் பெருக்கில் எடுத்துக் கொட்டவும் இல்லை.”
― லண்டனில் சிலுவைராஜ்
― லண்டனில் சிலுவைராஜ்
“ஒரு மூலையில் ரோட்டைக் கடந்து அடுத்த வீதிக்குள் பிரவேசித்தபோது, ஒரு ஆங்கிலேயே மாது தனது ஐந்து வயதுச் சிறுவனைக் கயிற்றில் கட்டி நடத்திக் கொண்டு போனதைச் சிலுவை பார்த்தபோது அவனது பிரக்ஞை அவனிடம் திரும்பி வந்தது. இந்த மாதிரி காட்சியை லண்டன் தெருக்களில் வைத்து ஏற்கனவே பார்த்ததுதான். அந்தச் சிறுவனின் பாதுகாப்புக் கருதி இந்த ஏற்பாடாம். தன்னையும் இப்படித்தான் தனது மனைவி நடத்திக் கொண்டிருப்பதாகச் சிலுவைக்குச் சுளீர் எனப் புரிந்தது. தான் எங்கே போனாலும் எங்கே இருந்தாலும் தன் இடுப்பில் கட்டப்பட்ட அந்தக் கயிற்றின் மறுமுனை தனது மனைவியின் கையில் இருப்பதாகச் சிலுவைக்குப் பட்டது.”
― லண்டனில் சிலுவைராஜ்
― லண்டனில் சிலுவைராஜ்
“எல்லாப் பொருள்களின் விலைகளும் லண்டனில் கடைக்குக் கடை ஏறும்; இறங்கும்; வாங்கும் பொருள் மீது விலை குறிக்கவே மாட்டார்கள்; விலை குறிப்பது அந்தந்தக் கடைக்காரர்கள்தான். இதனால்தான் இங்கே ஷாப்பிங் அதிக நேரம் பிடிக்கும். பத்துக் கடைகள் ஏறி இறங்கிய எந்தக் கடையில் விலை மலிவு; எங்கே அதிக டிஸ்கவுண்ட், ஆஃபர் என்று சரிபார்த்து மீண்டும் ஒரு தடவை அந்தக் கடைக்கு வந்து பொருளை வாங்க வேண்டும். அந்தக் கடையைப் பார்த்து வைத்துக்கொண்டு ரெண்டு நாள் கழிச்சு வாங்கிக்கிடலாமென்று போனால் விலை மாறியிருக்கும்.”
― லண்டனில் சிலுவைராஜ்
― லண்டனில் சிலுவைராஜ்
“புறப்படும் போது அந்த பிராமணர், லண்டனில் வாழும் தமிழ்க் குடும்பங்கள் சேர்ந்து ஒரு தமிழ்ச் சங்கம் அமைத்துக் கொண்டிருப்பதாகச் சொன்னார். 'நல்ல முயற்சிதான்' என்று சொல்லிய சிலுவை, அந்தத் தமிழ்ச்சங்கம் பிராமணாள் சங்கமாக இருந்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டான். இந்தியர்கள் எங்கே போய் வாழ்ந்தாலும் தங்களுடைய சாதி அடையாளங்களை அவர்களால் இழக்கவே முடியாது என்பதைச் சிலுவை தெரிந்து கொண்டான். எத்தனையோ பாரம்பரிய நோய்களில் இவர்களுக்குச் சாதியும் ஒரு நோயாக இருக்கலாம். வெளிநாடுகளில் தங்கி வேலை பார்க்கிற தலித் இளைஞர்கள் இந்தியர்களைக் காண்பதைத் தவிர்த்துவிடுவது ஏனென இப்போது விளங்கியது.”
― லண்டனில் சிலுவைராஜ்
― லண்டனில் சிலுவைராஜ்
“ஹாலில் சிறுவர்களுடைய உற்சாகம் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. அந்த வெள்ளத்தில் குதித்து அடித்துச் செல்லப்படுவதற்குச் சிலுவை தயார்தான். தன்னுடைய பாலகப் பருவத்தை நினைத்து பெருமூச்செறிந்தான். பாம்பு பிடித்தது, தவளை, ஓணான், மீன் பிடித்தது, நாய்களோடு வேட்டைக்கு அலைந்தது, மரமேறியது, குளம் கிணறுகளில் நீச்சலடித்து விளையாடியது... இதெல்லாம் எங்கே? இதோ வீட்டில் வளரும் செல்லப் பிராணிகளைப் போல கொஞ்ச நேரம் சேட்டைகள் பண்ணிய பிறகு அவரவர் வீடுகளுக்குப் போய் தங்கள் அறைகளில் கரடி பொம்மைகளை அணைத்துக் கொண்டு தூங்கிவிடும் இவர்கள் எங்கே? ஏதோ ஒரு ஏக்கம் திடீரென்று சிலுவையைப் பற்றிப் பிடித்துக் கொண்டதை உணர்ந்ததும் கொஞ்ச நேரம் தனிமையிலிருந்து மௌனமாக அழவேண்டும் போலிருந்தது.”
― லண்டனில் சிலுவைராஜ்
― லண்டனில் சிலுவைராஜ்
“வயோதிகர்கள் தங்களுடைய வயோதிக மனைவிகளுடன் வெகு நேர்த்தியாக டிரஸ் பண்ணி நிதானமாக நடந்து போகிறார்கள். அவர்கள் எதையும் யாரையும் பற்றி அலுத்துக் கொள்ளுவதில்லை. உடலின் தள்ளாமையை அவர்கள் ஏற்றுக்கொண்ட போதிலும் அதனை ஒரு காரணமாகக் கொண்டு அடைந்து கிடக்கத் தயாராக இல்லை. தங்களுக்குரிய எஞ்சிய நாட்களை முடிந்த மட்டும் சந்தோஷமாகக் கழித்திடவே பிரயாசைப்படுகிறார்கள். பொது இயக்கத்திலிருந்து அவர்கள் ஆயாசப்பட்டு ஒதுங்குகிற மாதிரி தெரியவில்லை. தேவாலயங்களில் இவர்களை அதிக எண்ணிக்கையில் காணமுடியும். சிலுவையும் அவன் மனைவியும் சுற்றிப் பார்த்த வெஸ்ட்மினிஸ்டர் அபேயிலும், சென். பால்ஸ் கதீட்ரலிலும் போடப்பட்டிருந்த இருக்கைகளில் இத்தகைய வயோதிகத் தம்பதிகளைக் கணிசமாகக் கண்டார்கள். இவர்களது நல வாழ்வுக்காக, மக்களிடம் அதிக அளவில் பெறும் வரிப்பணத்தில் பெரும்பகுதியை அரசாங்கம் செலவழிப்பதாகச் சிலுவை கேள்வியுற்றான். லண்டன் நகரில் மாதச் சம்பளம் வாங்குபவர்களிடமிருந்து நாற்பது சதவிகிதம் வரியாகப் பிடிக்கும் முறை பற்றி முறையிடாத இந்திய டாக்டர்களும் இஞ்சினியர்களும் இல்லை என்றே சொல்லலாம். அந்த வரிப்பணத்தை சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சாரம், பொது போக்குவரத்து வசதி, இலவச மருத்துவம், சிகிச்சை வசதி, கல்வி வசதி... இப்படிச் சமூக நல வாழ்விற்காக அரசு வாரி இறைக்கிறது. வயோதிகர்கள் தங்களுடைய பிள்ளைகளால் சுகம் பெறுகிறார்களோ இல்லையோ, அரசாங்கத்தின் சமூக நலப் பணிகளால் பௌதீக அளவில் லௌகீக சுகம் பெறுகிறார்கள் என்று அடித்துச் சொல்லலாம். லட்சக்கணக்கில் செலவாகும் சிக்கலான பெரும் அறுவை சிகிச்சைகள் கூட இங்கே இவர்களுக்கு இலவசம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! ஆனால் நீங்கள் இங்கே நிரந்தரக் குடியுரிமை பெற்ற பிரிட்டிஷ் குடிமக்களாக இருக்க வேண்டும்.”
― லண்டனில் சிலுவைராஜ்
― லண்டனில் சிலுவைராஜ்
“எட்டாம் ஹென்றி பற்றி சரித்திரப் புஸ்தகத்தில் சிலுவை படித்தது நினைவுக்கு வந்தது. முதல் சம்சாரம் இருக்கும் போதே ரெண்டாவது மனைவி வேண்டுமென்று இவன் அடம்பிடிக்க, ரோமன் கத்தோலிக்கத் தலைவர் போப்பாண்டவர் அது முடியாதென்று ஆணையிட்டாராம். ஐரோப்பிய அரசர்களுக்கு மேலே கிறிஸ்தவ மதத் தலைவராக போப்பாண்டவர் அதிகாரம் பண்ணிக்கொண்டிருந்த காலம் அது. எட்டாம் ஹென்றியின் அவசரத்தை போப் புரிந்து கொள்ளாததால் 'நீயும் வேண்டாம் உன் ஆர்.ஸி. மதமும் வேண்டாம்' என்று ரெண்டாங் கல்யாணம் பண்ணிய கையோடு இங்கிலாந்து தேசத்தை புராட்டஸ்டண்டு தேசமாக்கி விட்டானாம். ரெண்டாம் மனைவியாக வந்த இளவரசி பெரிய சதிகாரி என்றும், புருஷனைக் கொன்று, தனது வம்சத்தை இங்கிலாந்து தேசத்தின் அரசவம்சமாக ஆக்கிடத் துணிந்தாள் என்றும் சரித்திரம் கூறுகிறது. இங்கிலாந்து, வேல்ஸ், அயர்லாந்து, ஸ்காட்லாந்து ராஜ்யங்களைச் சேர்ந்த அரசவம்சங்களின் குடும்பக் கதைகள் ஒவ்வொன்றும் ஒரு திகில் கதைதான். பொதுவாகவே அரசவம்சங்களின் குடும்பக் கதைகளே இப்படித்தான் இருக்கும். இதில் விதிவிலக்கில்லை.”
― லண்டனில் சிலுவைராஜ்
― லண்டனில் சிலுவைராஜ்
“இவ்வளவு பெரிய அரண்மனைக்குள் அந்தக் கிழட்டு ராணி என்ன செய்கிறாளோ? அந்த நாட்டில் பழைய கால ராஜா, ராணி ராயல் வம்சத்துக்கு ஏன் இத்தனை செல்வம்? மரியாதை? ஈர்ப்பு? கவர்ச்சி? என்பது தெரியவில்லை. அந்த ஜனநாயக நாட்டில் பாராளுமன்றம்தான் ஆட்சி செய்கிறது. ராயல் குடும்பத்துக்கு என்ன வேலை? இந்தியாவிலிருக்கும் போதே சிலுவைக்கு இந்தக் கேள்விகள் இருந்தன. இந்திய ஜனாதிபதியின் அதிகார லட்சணம் தெரிந்த இந்தியர்களுக்கு பிரித்தானிய அரச குடும்பத்திற்கு இருந்த செல்வாக்கு புரியாத புதிராகத்தான் இருக்கும்.”
― லண்டனில் சிலுவைராஜ்
― லண்டனில் சிலுவைராஜ்
“மணலைப் பார்க்க முடியாத ரோட்டோரங்களில் செஸ்நட் மரங்கள். அந்த மரங்களுக்கு யாரும் தண்ணீர் ஊற்றத் தேவையில்லை. நட்டு வைத்தால் போதும். வேலி தேவையில்லை. அவற்றை மேய்வதற்கு ரோடுகளில் ஆடு மாடுகள் கிடையாதே! லண்டன் நகரத்தில் குப்பைகளே இல்லை என்ற பெருமையைக் குறைப்பதற்கு இந்த மரங்களிலிருந்து விழுகின்ற இலைகளே போதும். கனடா நாட்டுக் கொடியிலுள்ள இலைமாதிரி இலைகள் இவை. லண்டனில் மட்டுமின்றி, ஐரோப்பா நகரங்களில் எல்லாவற்றிலும் இந்த மரங்கள்தான்.”
― லண்டனில் சிலுவைராஜ்
― லண்டனில் சிலுவைராஜ்
“இங்கிலாந்து ராஜ்யத்தில் லண்டன் இருந்தது. இங்கிலாந்தைத் தவிர மற்ற வேல்ஸ் ராஜ்யம், ஸ்காட்லாந்து, அயர்லாந்து என்று நாலு ராஜ்யங்களும் சேர்ந்ததுதான் ஐக்கிய அரசுகள் - அதாவது யுனைட்டட் கிங்டம், அல்லது கிரேட் பிரிட்டன்.”
― லண்டனில் சிலுவைராஜ்
― லண்டனில் சிலுவைராஜ்
“லண்டனில் வேலை தேடி நண்பர்கள் ரூம்களை முற்றுகையிட்டுத் திரியும் இந்திய இளைஞர்கள் சேர்ந்து கிங்ஸ்பரி, வெம்ளி, அல்லது ஹுஸ்டன் போன்ற ஏரியாக்களில் வாடகைக்கு ரூம் எடுத்துத் தங்கி வேலை தேடி அலைவார்களாம். இவர்கள் டாக்டர்கள் என்பதால் இங்கிலாந்து நாட்டுச் சட்டப்படி இவர்களுடைய படிப்புக்குக் குறைந்த வேலைகளில் சேர்ந்து சம்பாதிக்க முடியாது. இல்லாவிட்டால் இலங்கைத் தமிழர்களைப் போலக் கடைகளில் சேல்ஸ் நபர்களாகச் சேர்ந்து சம்பாதிக்க முடியும்தான்.”
― லண்டனில் சிலுவைராஜ்
― லண்டனில் சிலுவைராஜ்
“சரி, தோல் வைத்தியரிடம் காட்டி மருந்து வாங்கலாம் என்றால், அதற்கென்று உள்ள ஜி.பி.யை டூரிஸ்ட் விசாவில் வந்தவர்கள் பார்க்க முடியாதாம். தனியாக மருத்துவத்திற்கென்றே இந்தியாவில் இன்ஷுர் செய்து வந்திருக்கணுமாம். சிலுவைக்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை.
'இது என்ன நாடு? இது என்ன சட்டம்? அவன் நாட்டைப் பார்க்க வந்தவன் நோயுற்றால் எந்த டாக்டரிடமும் காட்ட முடியாதாம். இந்தியாவுக்கு வருகிற வெள்ளைக்காரங்க அவசரத்துக்கு இந்திய டாக்டர்களிடம் காட்டி மருந்து வாங்குவதில்லையா? ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றுக்கொள்ளத் தடை இல்லையே! ரத்த கொதிப்பு, தும்மல், ஜலதோஷம், சளி, காய்ச்சல்... இப்பிடி எல்லா நோய்களுக்கும் இந்தியாவிலிருந்து மருந்து மாத்திரைகளை முன்யோசனையோடு வாங்கிவந்த சிலுவை, தோலில் அலர்ஜி வந்து உயிரை வாங்கும் சொறியைக் குணப்படுத்த மாத்திரை வாங்காமல் போனதற்காகப் பெரிதும் வேதனையடைந்தான்.”
― லண்டனில் சிலுவைராஜ்
'இது என்ன நாடு? இது என்ன சட்டம்? அவன் நாட்டைப் பார்க்க வந்தவன் நோயுற்றால் எந்த டாக்டரிடமும் காட்ட முடியாதாம். இந்தியாவுக்கு வருகிற வெள்ளைக்காரங்க அவசரத்துக்கு இந்திய டாக்டர்களிடம் காட்டி மருந்து வாங்குவதில்லையா? ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றுக்கொள்ளத் தடை இல்லையே! ரத்த கொதிப்பு, தும்மல், ஜலதோஷம், சளி, காய்ச்சல்... இப்பிடி எல்லா நோய்களுக்கும் இந்தியாவிலிருந்து மருந்து மாத்திரைகளை முன்யோசனையோடு வாங்கிவந்த சிலுவை, தோலில் அலர்ஜி வந்து உயிரை வாங்கும் சொறியைக் குணப்படுத்த மாத்திரை வாங்காமல் போனதற்காகப் பெரிதும் வேதனையடைந்தான்.”
― லண்டனில் சிலுவைராஜ்
“அந்தக் கோடை காலத்தில் அங்கெல்லாம் பிற்பகல் ஒன்பது மணிக்குப் பிறகுதான் இருளத் தொடங்கும் என்ற தகவல் சிலுவைக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது.”
― லண்டனில் சிலுவைராஜ்
― லண்டனில் சிலுவைராஜ்
