இரா. முருகன்'s Blog, page 48

August 14, 2022

விஷ்ணுபுரம் தேர்தல் குறுநாவலில் இருந்து

‘ராமு.. இன்னமா எழுந்திருக்கலே.. எட்டு மணியாறதே..’

 

‘அவனுக்கு எவனோ வேலை மெனக்கெட்டு டெல்லியிலிருந்து ஒரு மூட்டை புஸ்தகம் அனுப்பியிருக்கான்..’

 

ஆபீசுக்குப் போகிற அவசரத்தில் அப்பா. ரசம் மணக்கிற கை படுக்கைக்குப் பக்கத்தில் எதையோ போட்டது.

 

‘பாக்கு டப்பா எங்கே?’

 

‘ராமுதான் நேத்து அதுலே வெள்ளரிக்கா விதை தேடித் தேடித் தின்னுட்டிருந்தான்..’

 

இனியும் படுத்துக் கிடந்தால் டின் கட்டி விடுவார்கள்.

 

ஓடியே போய் சைக்கிள் பின்னாலிருந்து பாக்கு டப்பாவை எடுத்துக் கொடுத்துவிட்டு, எனக்கு வந்த பொக்கிஷத்தைப் பார்த்தேன்.

 

கலர் கரலாக ஏழெட்டுப் புத்தகங்கள் சிதறிக் கிடந்தன. நாலு வரியில் ஒரு கடிதம்.

 

செக்கோஸ்லோவாகியா தூதரகத்திலிருந்து அனுப்பி இருந்தார்கள்.

 

’மிஸ்டர் ராமு’என்று ஆரம்பித்தது. எனக்குத்தான் எழுதியிருக்கிறார்கள்.

 

சாவகாசமாகப் படித்துக் கொள்ளலாம். முதல் புத்தகத்தைப் பிரித்தேன். சுகமான காகித வாசனை. இதெல்லாம் படிக்கவா, முகர்ந்து பார்க்கவா?

 

பக்கத்துக்குப் பக்கம் ஏகப்பட்ட படங்கள். தொழிற்சாலையில் வேலை செய்கிறார்கள். கிழவிகள் ஆரஞ்சுப் பழம் உரித்துச் சாப்பிடுகிறார்கள். கிராப்புத் தலையோடு புவனா மாதிரிப் பெண்கள் சைக்கிளில் போகிறார்கள். பெரிய வயலிலிருந்து உருளைக் கிழங்கை லாரியில் ஏற்றுகிறார்கள். தொப்பி போட்ட கிழவர்கள் டிராக்டர் ஓட்டுகிறார்கள்.

 

இவர்கள் எல்லோரும் ஏதாவது ஒரு குறிப்பிட்ட பாட்டைப் பாடிக்கொண்டே இதை எல்லாம் செய்வார்கள் என்று தோன்றியது. ஆகாசவாணியில் அடிக்கடி இந்தியில் வரும் தேசபக்திப் பாடல் மாதிரி.

 

நாலு புத்தகத்துக்கு அப்புறம் படமே மருந்துக்குக் கூட இல்லாமல் ஒரு புத்தகம். புரட்டிப் பார்த்தேன். ஒரு இழவும் புரியவில்லை. இந்தப் புத்தகம் தான் மற்றதை விட வழுவழுப்பு. வாசனையும் இதற்குத்தான் அதிகம். என்ன பிரயோஜனம்? மிஸ்டர் ராமு இதெல்லாம் படிக்க மாட்டார்.

 

உள்ளே எட்டிப் பார்த்தேன். அம்மா சமையல்கட்டில்.

 

ஒரே ஓட்டம் வெளியே.

 

வக்கீல் மோகனதாசன் வாசல் படிக்கட்டில் உட்கார்ந்தபடி ஒரு கூட்டம் பொறாமையோடும் வயிற்றெரிச்சலோடும் என் புத்தகங்களைப் பார்வையிட்டது.

 

’நீ மொதல்லே தபால் பெட்டியிலே போட்டியே.. அதான் உனக்கு வந்திருக்கு.. எனக்கு மத்யானம் வரும் பாரு..’

 

கிருபாகரன் சொன்னான்.

 

அவனை யார் வாடகை சைக்கிளில் போய்த் தபாலில் போட வேண்டாம் என்று கையைப் பிடித்து இழுத்தது? இருக்கிற கைக்காசில் தனக்கு மட்டும் இல்லாமல், ராமானுஜ நாயுடு, மங்கத் தாயாரம்மாள், பங்காருசாமி நாயுடு என்று வீட்டில் இருக்கிற எல்லோர் பெயரிலும் புத்தகம் கேட்டு அனுப்பியிருக்கிறான்.

 

‘இந்த செக்கோஸ்லோவாகியா எங்கேடா இருக்கு?’

 

கிரி கேட்டான்.

 

‘படிச்சுத் தெரிஞ்சுக்கத்தானேடா அனுப்பியிருக்காங்க..’

 

‘தடிப்புத்தகம் என்னடா?’

 

‘அவங்க ஊர்லே பாடப்புத்தகம் போல இருக்கு…சாம்பிளுக்கு அனுப்பியிருப்பாங்க..’

 

‘சகாக்களே… சத்தம் போட வேணாம்..’

 

வக்கீல் மோகனதாசனின் குமாஸ்தா ஜீவராசன் தோளில் சிவப்புத் துண்டோடு, திண்ணையில் ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறார்.

 

‘அவனுக்கு இருக்கற அறிவுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரியா வந்திருக்க வேண்டியவன்.. கட்சி கிட்சின்னு அலஞ்சு இப்படி உருப்படாம போய்ட்டான்..’

 

அப்பா அடிக்கடி சொல்கிறதுபோல ஜீவராசன் உருப்படாமல் போயிருந்தால் ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை வெடிச் சிரிப்பு சிரித்துக்கொண்டு எப்படி இருக்க முடியும்?

 

ஜீவராசன் ஒரு புத்தகத்தைப் பிரித்துப் பார்த்தார்.

 

’பாத்தியா.. உங்க வயசுதான் இருக்கும் இந்தப் புள்ளைக்கு.. என்ன சிநேகிதமா சிரிக்கிறான் பாரு.’

 

அவர் காட்டிய படத்தில் ஒரு பையன், லாரி மாதிரி ஒரு வாகனத்தில் இருந்த பட்டாளக்காரனோடு கை குலுக்கிக் கொண்டிருந்தான்.

 

‘யார் அண்ணே அது?’

 

பட்டாளக்காரனைக் காட்டிக் கேட்டோம்.

 

‘சோவியத் போர்வீரன்..’

 

ஜீவராசன் நரைத்துக் கொண்டிருக்கிற மீசையைத் தடவிக்கொண்டே சிரித்தார்.

 

‘இந்தப் பையன் என்னத்துக்குக் கை கொடுக்கிறான்?’

 

’அவன் நாட்டில் வந்து அமைதியை நிலைநாட்டினதுக்காக சந்தோஷப்படறான்..’

 

அவன் முகத்தில் அப்படி ஒன்றும் சந்தோஷம் தெரியவில்லை. ஒரு வேளை செக்கோஸ்லோவேகியாவில் சிரிக்காமலேயே சந்தோஷப்படுவார்கள் போலிருக்கிறது.

 

‘இது என்ன அண்ணாச்சி?’

 

கிரி பொம்மை போடாத புத்தகத்தை இரண்டு விரலால் தூக்கிக் காண்பித்தது, எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. என் புத்தகம். வீட்டுக்குப் போனதும் முதல் காரியமாக அட்டை போட வேண்டும். ராமகிருஷ்ணா மிஷனிலிருந்து வரும் தர்ம சக்கரம் பத்திரிகை சரியாக இருக்கும்.. ஒரு அலமாரி நிறைய இருக்கிறது.. தாத்தா அடுக்கி வைத்திருக்கிறார்..

 

ஜீவராசன் புத்தகத் தலைப்பைப் படித்தார். அர்த்தம் சொன்னார்.

 

’SPRING IN PRAGUE… சோவியத் நட்புறவு கலந்த பிரேக்கு வசந்தம்.’

 

பெரியவனானதும் ‘பிரேக்கு வசந்தம்’ படிக்க வேண்டும்.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 14, 2022 20:01

August 13, 2022

எலிசபெத் டெய்லர் வந்த விஷ்ணுபுரம் தேர்தல்

விஷ்ணுபுரம் தேர்தல்   இரா.முருகன்  பகுதி – 2

 

அந்த ஆள் பார்க்க வினோதமாக இருந்தான். வயது கிருபாகரன் அண்ணன் புருஷோத்தமனை விட கொஞ்சம் கூட இருக்கலாம். இவனுக்குப் பெரிய மீசை இருந்தது. பட்டையாக நெற்றியில் வீபுதி பூசி இருந்தான். சந்தனம், குங்குமம், ஜெமினி கணேசன் போல தொளதொள பேண்ட். கோயிலுக்குப் போய்விட்டு, ‘காலங்களில் அவள் வசந்தம்’ பாடத் தயாராக நிற்கிற ஜெமினி. கோயில் வாசலிலேயே நிற்கிறான். ஒரு கையில் தொப்பி. கையில் ஏதோ காகிதம். கோபுரத்தை அண்ணாந்து பார்க்கிறான். எழுதுகிறான்.

 

பக்கத்தில் போனோம்.

 

‘தம்பிகளா.. நீங்க இந்தத் தெருவா?’

 

‘ஆமா’

 

‘இங்கே…டாக்டர் சச்சிதானந்தம் வீடு இருக்குன்னு சொன்னாங்க.. உங்களுக்கு..’

 

‘சதானந்தம்னு ஒரு டாக்டர் இருக்கார் இந்தத் தெருவிலே..’

 

‘அவரே தான்.. மாத்திச் சொல்றேன்..அவரே தான்.. எந்த வீடு தம்பி?’

 

காட்டினோம்.

 

‘நீங்க எங்கே இருந்து வரீங்க?’

 

‘இலங்கை தெரியுமா?’

 

தெரியாமல் என்ன? அங்கே நாள் முழுக்க சினிமா பாட்டு வைத்துவிட்டு, சாயந்திரம் ஆறு மணியானதும், ‘வணக்கம் கூறி விடை பெறுவது மயில்வாகனம்’ என்று முடிப்பார்கள். ‘சொக்கா.. ஆயிரமும் பொன்னாச்சே..’ என்று ரெண்டு வரி டயலாக் ஒலிபரப்பி, யாருடைய குரல் என்று அடையாளம் கண்டு பிடித்த அதிர்ஷ்டசாலிக்கு ப்ரவுன்சன் அண்ட் போல்ஸன் கஸ்டர்டும் – இது என்னமோ தெரியாது- கோபால் பல்பொடியும் மற்றதும் காலக்கிரமத்தில் அனுப்பி வைப்பார்கள். ‘ஸ்ரீலங்கா பத்திரிகையை ஒழுங்காக வாசியுங்கள்’ என்று பாடத்தை ஒழுங்கா படியுங்கடா சத்தம் போடும் சயின்ஸ் வாத்தியார் போல் மணிக்கொரு தடவை அறிவிப்பார்கள். அதை மட்டும் தவிர்த்து விட்டால், ஏறக்குறைய சந்தோஷமான ஊராக இருக்கும்.

 

’நான் இலங்கையிலிருந்து வரேன்..’

 

‘இங்கே என்ன பண்றீங்க?’

 

‘கோயில்கள் பற்றி, சைவ சமயம் பற்றி ஆராய்ச்சி பண்றேன்..’

 

‘அப்படீன்னா?’

 

‘அதாண்டா.. வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி..’

 

சீதரன் முந்திரிக்கொட்டை மாதிரி நடுவிலே வெட்டினான்.

 

‘சபாஷ்.. திருவாசகம் எல்லாம் தெரிஞ்சிருக்கே..’

 

எப்படித் தெரியாமல் போகும்? நாலு வருஷமாகத் தமிழ்ப் புத்தகத்தைத் திறந்தால் அதுதான் முதல் பாட்டு.

 

‘தம்பி..’

 

அவன் குரலை ரகசியம் பேசுகிறதுபோல தாழ்த்தினான்/

 

‘என்ன அண்ணே?’

 

நாங்களும் அதே அளவுக்குத் தாழ்த்தி கோஷ்டியாகக் கேட்டோம்.

 

‘டாக்டர் வீட்டுலே புவனலோசனின்னு ஒரு அம்மா இருக்குதா?’

 

‘புவனலோசனி வேலுப்பிள்ளைன்னா.. உங்க ஊர் ரேடியோவிலே தானே..’

 

சதானந்தம் பெயரைத் தப்பாகச் சொன்ன மாதிரி இதுவும் ஆகியிருக்கும் என்ற நம்பிக்கையோடு கிரி கேட்டான். அதானே..

 

‘இல்லே தம்பி.. அவங்க இல்லே..இது குமரு..’

 

என்ன குமாரோ.. குமார் இல்லையாம்.. குமரு என்றால் சின்ன வயசுப் பெண்ணாம்.

 

டாக்டர் சதானந்தம் வீட்டில் குமரு உண்டுதான். புவனா இருக்கிறாள். எங்களுக்கு அக்கா வயசு. டாக்டர் வீட்டு மாமிக்குத் தங்கை. மாமி வயசான குமரு.

 

இரண்டு வருஷம் முன்னால் புவனாவும், அவள் அப்பாவும் இலங்கையிலிருந்து வந்தார்கள். அப்பா இப்போது உயிரோடு இல்லை.

 

புவனா காலேஜில் படிக்கிறாள். சாயந்திரம் கிருஷ்ணசாமி வாத்தியாரிடம் பாட்டு சொல்லிக் கொள்கிறாள்.

 

‘பரிபாலய.. பரிபாலய.. பரிபாலய ரகுராமா…’

 

’உட்காருகிற இடத்தில் சிரங்கு வந்தால் குப்பை மேனி இலையை விழுதாக அரைத்துப் பத்துப் போடணும்’  என்று பக்கத்தில் யாரிடமோ சொல்லிவிட்டு, அதே குரலில் வாத்தியார் பாட்டு சொல்லித் தருகிறார்,

 

‘அந்தக் குமருவுக்கு லெட்டர் கொடுக்கணுமா?’

 

சீதரன் கேட்டான்.

 

இந்த லெட்டர் கொடுப்பது விவகாரமான சங்கதி.

 

தெருவில் எங்களுக்கு கிட்டத்தட்ட ஏழெட்டு வருஷம் மூத்த செட் ஒன்று உண்டு. கிருபாகரனின் அண்ணன், சீதரனின் மாமா, கிரியுடைய சித்தப்பா என்று .. கஷ்டப்பட்டு மீசை வளர்த்துக் கொண்டிருக்கிறவர்கள் எல்லோரும்.. பக்கத்துத் தெருவிலிருந்து எல்லாம் இவர்களைப் பார்க்க சைக்கிளில் இவர்கள் வயது சிநேகிதர்கள் யாராவது எப்பவும் வருவது வழக்கம்.

 

இரண்டு மாதம் முன்பு வரை தினசரி சாயந்திரம் கோயில் பக்கத்தில் சைக்கிள் சகிதம் எல்லோரும் ஆஜர்.

 

புவனா கோயிலுக்குப் போவாள். அப்புறம் அக்பரின் அக்கா மெஹருன்னிசா மஜீத் தெருவில் அத்தை வீட்டுக்குப் போவாள்.

 

இவர்கள் இரண்டு பேரையும் பார்த்த பிறகு தான் சபை கலையும்.

 

புவனா தாட்தாட்டென்று தனியாகப் போகும்போது பின்னால் இருந்து சிரிப்பு கேட்கும். மெஹர் கூட அக்பரோ, நானோ போவோம்.

 

‘அந்தப் பக்கம் பாக்காம வாடா..’

 

அவள் முக்காட்டைக் கடித்துக் கொண்டு வேகமாக நடப்பாள்.

 

இரண்டு மாதம் முன்னால், பக்கத்துத் தெருவில் இருந்து வந்த சபையின் கவுரவ உறுப்பினன் எவனோ புவனாவுக்கு ‘லெட்டர்’ கொடுத்தானாம்.  போஸ்ட்மேன் வேல்சாமி தான் வழக்கமாக எல்லோருக்கும் லெட்டர் தருவார். இது என்ன ஸ்பெஷலோ?

 

போலீஸ்.. சத்தம்.. சமாதானம்.. தெருவே ஒரு வாரம் லோல்பட்டது.

 

கிருபாகரன் அணன் மெட்ராஸில் அவன் சின்னாயினா வீட்டுக்குப் போனான். மற்றவர்களும் உறவுக்காரர்களின் அட்ரஸைத் தேடி எடுத்துப் போனார்கள். சாயந்திர சபையின் கௌரவ உறுப்பினர்கள் தலை மட்டும் அவ்வப்போது தட்டுப்படுகிறது.

 

இந்த ஆள் லெட்டர் கொடுக்க வந்தவன் என்றான் உஷாராக இருக்க வேண்டும்.

 

இல்லையாம்.. சும்மா தான் கேட்டானாம்.

 

‘ஆராய்ச்சி பண்ணி என்ன செய்வீங்க?’

 

பழைய வம்புக்குத் தாவினோம்.

 

‘புத்தகம் போடுவேன்..’

 

’போஸ்ட் கார்ட் போட்டா அனுப்புவீங்களா?’

 

’பார்க்கலாம்..’

 

அவன் நடந்தான்.

 

காலக்கிரமத்தில் அனுப்புவான்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 13, 2022 20:38

August 11, 2022

தினை பெருநாவலும் Recherche PostModernism-ம்

அடுத்த நாவல் ‘தினை’ ஏழு அத்தியாயங்கள் நிறைவடைந்து எட்டாவது அத்தியாயம் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது.

என்ன ழானர்?

 

No Magical Realism, surrealism, historical fantasy … Not plain vanilla post modernistic by any stretch of imagination..

 

Let us categorize it as Hysterical Realism -recherché postmodernism.

 

This is how the novel begins –

நாவல் தினை பூர்வாங்கம்

 

மலைப் பிரதேசம் பறவைக் கூச்சலில் விழித்தெழுந்த பொழுதில் மிருகங்கள் பறக்கத் தொடங்கின. இது வழக்கம்தான். முக்கியமாகக் காட்டுப் போத்துகளும் எறும்பு தின்னிகளும் முதலில் பறக்கும். அடுத்து நரிகள் ஊளையிட்டபடி தெற்கு வடக்காகப் பறந்து போகும். முயல்கள்? கிழக்கிலிருந்து மேற்காகப் பறக்கும். எலிகள்? அவை பறந்தால் என்ன பறக்காவிட்டால் என்ன? யானைகள்? அவை பறந்து நிறைய சேதம் விளைவித்ததால் அவற்றுக்கு அந்தத் திறன் இல்லாதபடி செய்யப்பட்டு விட்டது. என்றாலும் மதம் பிடித்து மதநீர் வாயில் கசியும்போது அவை தரைக்கு சற்றே உயரமாக, அதாவது ஒரு ஐந்து வயதுச் சிறுவன் உயரத்தில் பறப்பதாகச் சொல்லப்படுகிறது.

//

எது எழுதினாலும் புரியும்படியாக இருக்கும். இதுவும்.

 

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.

 

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 11, 2022 20:14

என் முதல் குறுநாவல் ‘விஷ்ணுபுரம் தேர்தல்’

விஷ்ணுபுரம் தேர்தல் – குறுநாவல் (இரா.முருகன்) – அத்தியாயம் 1

 

 

’கணையாழி’யில் தி.ஜானகிராமன் நினைவுக் குறுநாவல் போட்டியில் தேர்வாகி, செப்டம்பர் 1993-ல் பிரசுரமானபோது இந்தக் குறுநாவலின் தலைப்பு – விஷ்ணுபுரம். பிறகு ‘விஷ்ணுபுரம் தேர்தல்’.

 

இந்தக் குறுநாவலே  ’பயோபிக்‌ஷன்’ வாழ்க்கை வரலாற்று நாவலாக 2005-ல் வாராவாரம் தினமணி கதிரில் வெளியாகிப் பின்னர் நூல் வடிவமும், குறும்பட வடிவமும் பெற்ற ‘நெம்பர் 40, ரெட்டைத் தெரு’வுக்கு ஊற்றுக்கண்.

 

என் ‘தகவல்காரர்’ குறுநாவல் தொகுப்பில் (அட்சரா வெளியீடு – 1995) இடம்பெற்ற படைப்பு இந்த விஷ்ணுபுரம்.

——————————————————————-

 

விஷ்ணுபுரம் தேர்தல்   இரா.முருகன்  பகுதி – 1

 

‘மதிப்புக்குரிய ஐயா, வணக்கம். நான் எட்டாவது வகுப்பில் படிக்கும் மாணவன். பள்ளியில் ஆண்டு இறுதித் தேர்வு முடிந்து விடுமுறை இப்போது. விஷ்ணுபுரம் என்ற ஊரில் இருக்கிறேன். விஷ்ணுபுரம் சிறிய, அழகான ஊர். தமிழ்நாட்டின் தெற்குக் கோடியில் உள்ளது. இங்கே அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கிறேன். உலகில் உள்ள எல்லா நாடுகளையும், மக்களையும் பற்றித் தெரிந்து கொள்வது என் அறிவு வளர்ச்சிக்கு இன்றியமையாதது என்று ஆசிரியப் பெருமக்கள் கூறுகிறார்கள். விடுமுறை நாட்களே இதற்கு உகந்தவையாம். உங்கள் நாட்டைப் பற்றி நிறையக் கேள்விப் பட்டிருக்கிறேன். உழைப்பால் உயர்ந்த மக்கள். தேச பக்தியில் சிறந்தவர்கள். ஜனநாயகத்தைப் பேணிக் காப்பவர்கள். அவர்களைப் பற்றி இன்னும் சிறப்பாக அறிந்து கொள்ள உதவும் வகையில் உங்களிடம் புத்தகங்களும், பத்திரிகைகளும் இருக்கும் என்று நம்புகிறேன். அவற்றை எனக்கு அனுப்பி வைத்தால் மிகவும் நன்றியுடையவனாவேன். என் அறிவுத் தாகத்தைத் தீர்த்து வைப்பது உங்கள் பொறுப்பு’.

 

மொத்தம் பனிரெண்டு பிரதிகள் எடுக்க வேணும். பக்கத்துத் தெருவில் யாரிடமிருந்தோ வாங்கி வந்த கசங்கிய காகிதத்தை சீதரன் எனக்குக் கொடுத்திருக்கிறான். என் கையெழுத்து கொஞ்சம் சொல்லிக் கொள்கிறார்போல் இருக்கும் என்பதால் வேலை என் தலையில்.

 

நாராயணன் கடையில் வாங்கி வந்த வெள்ளைக் காகிதமும் பேனாவுமாக அவனவன் காத்திருக்கிறான்.

 

‘எப்படிடா முடிக்கறது?’

 

கிரி சந்தேகத்தைக் கிளப்பினான்.

 

‘யுவர்ஸ் ஒபீட்னு ஏதோ லீவ் லெட்டர்லே எழுதுவோமேடா…’

 

வார்த்தை மறந்துவிட்டது. முழுப்பரீட்சை லீவில் அவனவன் பெயர் நினைவில் இருந்தாலே அதிகம்.

 

’ஒபீடியண்ட்லிடா..’

 

கண்ணன் ஸ்பெல்லிங்கோடு சொன்னான். வயிற்றுவலி என்று அடிக்கடி பள்ளிக்கூடத்துக்கு மட்டம் போட்டிருக்கிறான் பயல்.

 

டெல்லியில் இருக்கிற கானா, செக்கோஸ்லோவேகியா, ஹங்கேரி, பிரான்ஸ், இன்னும் ஏதேதோ தூதரகங்களுக்கு கீழ்ப்படிதலுள்ள பனிரெண்டு பேரின் கடிதங்கள் தபாலில் சேர்க்கப் பட்டன.

**************************************

 

மாதவன் விந்தி விந்தி நடந்து வந்தான்.

 

பகல் வெப்பத்தில் நடமாட்டம் குறைவான தெரு. வக்கீல் மோகனதாசன் வீட்டுப் பக்கம், புருஷன், பெண்சாதி மாதிரி தெரிந்த இரண்டு பேர் தரையில் உட்கார்ந்து புஸ்புஸ்ஸென்று எதையோ அமுக்கி கலாய் பூசுகிறதை ஒரு மணி நேரமாக வேடிக்கை பார்க்கிறோம். அலுக்கிற நேரம் பார்த்து மாதவன் வந்தான்.

 

தோளில் பருப்புத் தேங்காய்க் கூடு மாதிரி தகரக் குவளை ஒலிபெருக்கி. சணலில் கட்டி அது தோளில் தொங்குகிறது. மாலை போட்ட மாதிரி ஒரு தமுக்கையும் மாட்டியிருக்கிறான்.  டமடமவென்று கொட்டி முழக்கிக் கொண்டு வருகிறான்.

 

பெருமாள் கோயில் தெருவும் எங்கள் தெருவும் சந்திக்கும் இடத்தில் ‘சாலாச்சி வருகடலை நிலையம். எங்கள் ஸ்கூல் தமிழ் வாத்தியார் நீலமேகம் வறுகடலை நிலையம் என்று திருத்தச் சொல்லியும் கடைக்காரர் மாட்டேன் என்று தீர்மானமாக மறுத்து விட்டார்.

 

’வருகடலைன்னு போட்டா வருமானம் வரும்.. மத்த மாதிரி போட்டா சொத்தக் கடலையை வறுத்து நானும் வாத்தியாரும் தான் வாயிலே அடச்சுக்கணும்’.

 

அவரோ, வாத்தியாரோ சொத்தைக் கடலை தின்ன வேண்டிய அவசியமில்லாதபடி வழக்கமாக போர்டில் வருகடலை நிலையம் தான் இருக்கிறது. அந்த போர்ட் பக்கத்தில் பெரிய வேப்பமரத்தில் செல்லமாக இடித்துக் கொண்டு நிற்கிறது. வேப்ப மர நிழல்.. மாதவன் அங்கே நிற்கிறான்.

 

அவனுக்கு முன் நாங்கள் ஆஜர்.

 

இதுதானா கூட்டம் என்பது போல எங்களை ஒரு பார்வை. சட்டைப் பையிலிருந்து நாலாக மடித்த காகிதத்தை எடுக்கிறான்.

 

இனிமேல்தான் நாங்கள் எதிர்பார்க்கிற சுவாரசியமான காரியம். தவற விடக்கூடாது. இன்னும் நெருக்கமாகப்போய் அவனுக்கு முன்னால் நின்று கொண்டோம்.

 

மாதவன் காகிதத்தைத் தலைகீழாகப் பிடித்தான். அதாவது அவனுக்கு எதிர்த்தாற்போல் நிற்கிற நாங்கள் படிக்க வசதியாக. பருப்புத் தேங்காய்க்கூடு வாய்ப் பக்கம் நகர்ந்தது.

 

’இதனால் யாவருக்கும் அறிவிப்பது என்ன என்றால்.. விஷ்ணுபுரம் நகரசபையாக அறிவிக்கப்பட்டது தெரிந்ததே.. நம் நகராட்சிக்கான தேர்தல் வரும் மே மாதம் இருபத்தெட்டாம் தேதி நடைபெறும் என்று இதனால் அறிவிக்கப்படுகிறது. மொத்தம் பதிமூன்று வார்டுகளுக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது. போட்டியிட விருப்பமுடையவர்கள் பஞ்சாயத்து ஆபீஸில் நகல் படிவம் முப்பத்தேழு.. நமூனா எண்..’

 

ரொம்ப ஜோராகக் கை தட்டினோம். இப்படி திடுதிப்பென்று ஒரு எலக்‌ஷன்.. அதுவும் பரீட்சை லீவில் பார்த்து..

 

‘யாரெல்லாம் நிப்பாங்க, மாதவன்?’

 

அவன் காதிலிருந்து பீடி எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டு வெறுமனே சிரித்தான்.

 

அவனே நிற்கப் போகிறானோ என்னமோ.

 

****************************

தொடரும்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 11, 2022 05:30

July 31, 2022

‘தினை’ என் அடுத்த நாவல் ஆரம்பமாகிறது

ஒரு வழியாக அடுத்த நாவல் (பெரு நாவல்?) ‘தினை’ எழுதத் தொடங்கி விட்டேன்.வடக்கே போகும் நதி என்று ஒரு இந்துஸ்தானி இசைக் கலைஞர் பற்றி எழுத உத்தேசித்திருந்தேன். நான் சந்தித்த எழுத்தாள நண்பர்களில் குறைந்தது ஐந்து பேராவது இந்துஸ்தானி இசை பற்றி எழுத உத்தேசித்திருப்பதாகத் தெரிவித்திருப்பதால், என் எழுத்து நதி வடக்கே ஓடாது,அம்பலப்புழை ஸ்ரீகிருஷ்ணன் அருளால் தினை மளமளவென்று விளையட்டும்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 31, 2022 20:39

July 28, 2022

காராபூந்தி வந்த இலக்கியக் கூட்டம்

இது 15 வருடம் முன் நடந்தது. என் ‘ராயர் காப்பி கிளப்’ கட்டுரைத் தொகுதியில் இடம் பெற்ற கட்டுரை.

காராபூந்தி வந்த இலக்கியக் கூட்டம்

 

சனிக்கிழமை சாயங்காலம் ஒரு நிகழ்ச்சி. புதுக்கவிதைத் தந்தை பிச்சமூர்த்தியின் நூற்று மூன்றாவது ஆண்டு விழா. விழாவைப் பற்றி அப்புறம் எழுதுகிறேன்.

இங்கே எழுத வந்தது ஒரு அவஸ்தையைப் பற்றி.

வெங்கடசாமிநாதன் பேச வந்தார். க.நா.சு, அமிதாப்பச்சன், ஜோதிபாசு, மிதுன் சக்கரவர்த்தி, வண்ணநிலவன், சிமெண்ட் டால்மியா, சோ என்று அவர் பேசிக்கொண்டிருந்தபோதே லேசாகத் தொடங்கியது. (இவர்கள் எல்லாம் எப்படி ஒரே கோட்டில் வருகிறார்கள் என்று எல்லோரும் ஒரு வாரம் தலைமுடியைப் பிய்த்துக் கொள்ளலாம். அடுத்த வாரம் சொல்கிறேன்).

எழுத்தாளர் ஐராவதம் பேசும்போது சுத்தமாக ஒன்றுமே கேட்காமல் போனது. நான் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஸ்டெல்லா புரூஸையும் ஞானக்கூத்தனையும் பார்க்க அவர்களும் சங்கடத்தோடு என்னைப் பார்த்தார்கள். அவ்வளவுதான் அவர்களால் செய்யமுடிந்தது.

மேடையில் உட்கார்ந்திருந்த  எழுத்தாளர் சி•பிடாட் காம் வெங்கடேஷ¤க்கு மொபைலில் குறுஞ்செய்தி அனுப்பி ‘எத்தனை பக்கம் பேசப் போகிறீர்’ என்று விசாரித்தேன். ஒன்பது பக்கம் ஏ•போர் சைசில் என்று பதில் கொடுத்தார்.

வெங்கடேஷ் பேச எழுந்து வந்தார்.

இவர் பேசுவதாவது முழுசும் காதில் விழ வேணுமே என்று எழுத்தாளர் விட்டல்ராவைத் தள்ளிக் கொண்டு நான் முன் வரிசையில் போய் உட்கார, இன்னும் பலமாகப் பின்னால் இருந்து மழைக்காலக் கடல் போல் சத்தம்.

இது பொறுப்பதில்லை என்று நண்பர் விருட்சம் அழகியசிங்கரிடமும், ழ ராஜகோபாலனிடமும் முறையிட, ஞானக்கூத்தன் பரிந்துரைக்க, அவர்கள் விழுந்தடித்துக் கொண்டு பின்னால் ஓடினார்கள். ஊஹூம், சத்தம் கூடியதே ஒழியக் குறைந்ததாகத் தெரியவில்லை.

வெங்கடேஷுக்குத் தொண்டுள்ளமும் அதிகம். தொண்டை வளமும் அதிகம். கொண்டு வந்த காகிதத்தை போடியத்தில் வைத்து விட்டுச் சுபாவமாகக் குரலை உயர்த்திப் பேச ஆரம்பித்தார். இப்படிப் பேசினால்தான் எடுபடும் என்றார் விட்டல்ராவ்.

தட்டில் காராசேவையும், பிஸ்கட்டையும் வைத்துக் கொண்டு ஒருத்தர் மேடைக்கு ஓடி எல்லோருக்கும் கொடுத்து, பேசிக் கொண்டிருந்த வெங்கடேஷுக்கும் தட்டை நீட்ட, நானும் ஞா.கூ சாரும் ரசித்துச் சிரித்தோம். வெங்கடேஷுக்கும் சிரிப்பு வந்திருக்கும். அத்தனையையும் மீறி அவர் நன்றாகப் பேசினார்.

ஆனாலும் இந்த மாதிரி இலக்கிய விழாக்களில் நான் பேசுவதாக இல்லை – விழா நடந்து கொண்டிருக்கும்போதே சிற்றுண்டி வினியோகம் செய்வது தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என்று யாராவது அவசரச்சட்டம் பிறப்பிக்கும் வரை.

அதுவும் பாரதி வசித்த திருவல்லிக்கேணி வீடு போன்ற இலக்கியப் புனிதத் தலங்களில் பொதுக்கூட்டம் நடைபெறும்போது சாப்பாடு, சிற்றுண்டி விநியோகத்தை அறவே விட்டொழிக்க வேண்டும்.

சுற்றி நூறு வாய்கள் காராபூந்தி கொறித்துக் கொண்டு இருக்கும்போது கவிதையில் மரபுத் தொடர்ச்சி பற்றிப் பேசச் சொல்வது போல் அபத்தமான விஷயம் ஏதுமில்லை.

பிச்சமூர்த்தி புகழ் வாழ்க. கிருஷ்ணா ஸ்வீட் காராபூந்தியும் அது பாட்டுக்கு வாழ்க.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 28, 2022 19:46

July 27, 2022

பாரதியாரும் ராய்ட்டர் செய்தியாக ருஷ்யப் புரட்சியும்

ருஷியாவிலே  ராஜாங்கப்  புரட்சி

என் ராயர் காப்பி கிளப் கட்டுரைத் தொகுதியில் இருந்து

ருஷிய – ஜப்பானிய யுத்தத்தின் ஆரம்ப முதலாகவே ருஷியாவில் உள்நாட்டுக்  குழப்பங்கள் தொடங்கி விட்டன. அது முதல் ராஜாங்கப் புரட்சிக் கட்சியாருக்கு  நாள்தோறும் பலமதிகரித்துக் கொண்டு வருகிறது.

அப்பால், மேற்படி யுத்தத்திலே ருஷியா தோற்றுப் போய்விட்ட பிறகு ருஷிய ராஜ  விரோதிகள் துணிவு மிகுந்தவர்களாகி, வெட்ட வெளியாகக் கலகம் செய்யத்   தொடங்கி விட்டார்கள். இதுவரை பெருங் கலகங்களும், சிறு குழப்பங்களுமாக  எத்தனையோ நடந்தன. அதிலெல்லாம் ராஜாங்கத்தாரே வெற்றியடைந்து  வந்திருக்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு தடவைக்கப்பாலும் ராஜ விரோதிகளுக்கு  வல்லமை மிகுதி உண்டாய் வருகிறது.

இப்போது மறுபடியும் பெருங் கலகம் தொடங்கிவிட்டது. ருஷிய  சக்கரவர்த்தியின்  சிங்காதனம் இதுவரை எந்தக் காலத்திலும் ஆடாதவாறு அத்தனை பலமாக இருக்க,  இப்போது ஆடத் தொடங்கிவிட்டது. பிரதம மந்திரியின் வீட்டு விருந்தின்போது  வெடிகுண்டெறியப்பட்டது, சைநியத் தலைவர்கள் கொலையுண்டாவதும், ராஜ  விரோதிகள் பகிரங்கமாக விளம்பரங்கள் பிரசுரிப்பதும், எங்கே பார்த்தாலும்  தொழில்கள் நிறுத்தப்படுவதும், துருப்புகளுக்கும், ஜனங்களுக்கும் சண்டை  நடப்பதும், துருப்புகளிலே ராஜாங்கத்துக்கு விரோதமாகக் கலகமெழுப்புவதும்,  நாள்தோறும் ஆயிரக்கணக்கான உயிர்கள் மாய்வதும் ஆகிய கொடூர விஷயங்களைப்  பற்றித் தந்திகள் வந்தவண்ணமாகவே யிருக்கின்றன.

ராய்டர் தந்திகள் மொழிபெயர்ப்பை மற்றொரு பக்கத்திலே பதிப்பித்திருக்கிறோம்.  அதிலே விவரங்கள் தெரிந்து கொள்ளலாம். சுயாதீனத்தின் பொருட்டும்,  கொடுங்கோன்மை நாசத்தின் பொருட்டும், நமது ருஷியத் தோழர்கள் செய்து வரும்  உத்தமமான முயற்சிகளின்மீது ஈசன் பேரருள் செலுத்துவாராக!

(‘இந்தியா’ – 1.9.1906 – சுப்பிரமணிய பாரதியார்)

நான் தொடர்வது

1) காம்ரேட் என்பதற்கு ஒப்பான தமிழ்ச் சொல்லான ‘தோழர்’ என்பதை முதலில்  பயன்படுத்தியவர் தோழர் பாரதியாக இருக்கலாம். ருஷ்யப் புரட்சியை  யுகப்புரட்சியாகக் கண்ட அவர் கதைகளிலும் விளாதிமிர் இலியிச் லெனின் கடந்து  வருவதைக் காணலாம்.

2) கடந்து போன நூற்றாண்டின் தொடக்கத்தில் வெளிநாட்டுச் செய்திகள் ராய்ட்டர்  செய்தி நிறுவனம் அனுப்பும் தந்திகள் மூலமே பெரும்பாலும் இந்தியப் பத்திரிகைகளை வந்தடைந்திருக்கின்றன.  தந்தி என்பதால் சுருக்கமாகவே  இருக்கும் என்பதால், பத்திரிகை ஆசிரியர்களும் துணை ஆசிரியர்களும்  தாங்களாகவே வளர்த்துக் கொண்ட கடந்த, நிகழ்கால வரலாறு, புவியியல், அரசியல்  அறிவு சார்ந்தே அச் செய்திகளை விரித்து எழுத வேண்டிய கட்டாயம்.

எல்லாவற்ற்கும் மேல் ‘நியூஸ் சென்ஸ்’ என்ற, முக்கியத்துவம் வாய்ந்த செய்தியைத்  தகவல் குப்பையிலிருந்து பிரித்தறிந்து வெளியிட வேண்டிய அவசியமும் இப்போது  போலவே அன்றும் உண்டு. பாரதி என்ற மகாகவிஞன், எப்படி ஒரு தலை சிறந்த பத்திரிகையாளனாகவும் இருந்தான் என்பதை என்பதை இந்தியா பத்திரிகை வழங்கிய செய்திகளே சொல்லும்.

3) ராய்ட்டர் நிறுவனம் 1851-ல் லண்டனுக்கும் பாரீஸ¤க்கும் இடையே பங்குச்  சந்தை விலை விவரங்களைத் தந்தி மூலம் செய்தியாக அனுப்புவதற்காகத்  தொடங்கப்பட்டது. அதற்கு இரண்டு வருடம் முன்னாலேயே அது பங்குச் சந்தை  விலைவிவரங்களைச் செய்திகளாக அனுப்பத் தொடங்கியிருந்தது – புறாக்காலில்  கட்டி!

விவரங்களுக்கு : ராய்ட்டர் நிறுவனத்தின் இணையத் தளம்

http://about.reuters.com/aboutus/hist...

4) இந்தியாவில் முதல் இந்திய விடுதலைப் போராட்டம் நிகழ்ந்த காலத்தை (1857)  அடுத்துப் புகைவண்டியும், தந்தியும் வந்ததாக வரலாறு சொல்கிறது.  தந்தி தமிழகத்தில் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது என்று தெரியவில்லை.

ரயில் தமிழகத்தில் இன்னும் இருபது வருடம் கழித்தே வந்தது என்று தெரிகிறது –

தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர் ‘என் சரித்திரம்’ நூலில் தான் 1878ஆம் ஆண்டு  மேற்கொண்ட ஒரு புகைவண்டிப் பயணம் பற்றிக் குறிப்பிடுவது  :

“பகல் பனிரெண்டு மணிக்கு (திருவாவடுதுறையில் இருந்து சிதம்பரத்துக்கு) ரெயில்  வண்டியிலேறிச் சென்றோம்.  ரெயில் வண்டி புதிதாக வந்த காலமாதலின் அதில்  ஏறிச் செல்வது விநோதமாக இருந்தது. அதிகக் கூட்டமே இராது. வண்டிக்கு  இரண்டு பேர்களுக்கு மேல் இருப்பது அருமை. நாங்கள் சிறிது நேரம் எங்கள்  இஷ்டம் போல் தனித்தனி வண்டிகளில் ஏறிச் சிரம பரிகாரம் செய்துகொண்டோம்.

பிறகு ஒன்றாகக் கூடி ஓரிடத்தில் இருந்து பேசிக் கொண்டிருந்தோம். யாவரும்  ஒன்றாகப் படித்தவர்களாதலால்  வேடிக்கையாகப் பல விஷயங்களைப் பற்றிப்  பேசினோம்.  ரெயில் வண்டியில் பிரயாணம் செய்வதைப் பற்றி ஒவ்வொருவரும்  ஒவ்வொரு பாடல் செய்ய வேண்டுமென்று செய்யத் தொடங்கினோம். எல்லோரும்  செய்யுள் இயற்றத் தெரிந்தவர்கள். ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் அபிப்பிராயத்தை  வைத்துப் பாடல் இயற்றிச் சொன்னார்கள். ஒரே பொருளைப் பற்றிப் பலவகையான   கருத்துக்களமைந்த பாடல்களாதனின் அவை ரஸமாக இருந்தன. நான் இரண்டு  மூன்று செய்யுட்களை இயற்றிச் சொன்னேன். அவற்றில் ஒரு வெண்பாவின் முற்பகுதி  மாத்திரம் இப்போது ஞாபகத்தில் இருக்கிறது.

“உண்ணலாம் தூசும் உடுக்கலாம் நித்திரையும்

பண்ணலாம் நூல்கள் படிக்கலாம்….”

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 27, 2022 20:17

July 26, 2022

’சக்கர பொங்கலும்’ கவிமணி கவிதையும்

உச்சி வெய்யில் பட்டை உரிக்காத அபூர்வமான ஒரு மத்தியானப் பொழுதில் வடக்கு உஸ்மான் வீதிப் போக்குவரத்துக்குக் குறுக்கே நீந்திக் கடந்து போனால் இரண்டு பெயர்ப் பலகைகள் அருகருகே இருந்து வா, வா என்று காலைப் பிடித்து இழுக்கின்றன.

மோர்க்கூழும், கொழுக்கட்டையும், புளி உப்புமாவும் மணக்க மணக்க விருந்து படைக்கும் ‘சக்கரப் பொங்கல்’ உணவு விடுதி ஒரு பக்கம். பா.ராகவன் குமுதம் ஜங்ஷன் ஆசிரியராக இருந்தபோது இந்த ஓட்டலைப் பற்றி முதல் பக்கத்தில் நேர்த்தியான வாழையிலை லே-அவுட்டோடு எழுதி இப்போது அதற்கு cult status வந்து, சதா நெரியும் கூட்டம். உள்ளே போகவே முடியவில்லை.

வயிற்றுக்குணவு இல்லாதபோது படிக்கவாவது ஏதாவது வாங்கலாம் என்று அருகே உள்ள ந்யூ புக்லேண்ட்ஸில் நுழைந்தபோது சட்டென்று கண்ணில் பட்டது ‘கவிமணியின் கவிதைகள்’.

கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையின் கவிதைகள் முழுவதும்  அடங்கிய ஆய்வுப் பதிப்பு. வெளியீடு ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும், இருபதின் தொடக்கத்திலும் எழுதப்பட்ட கவிதைகளைக் கொண்ட இந்தப் புத்தகம் தரும் மனநிறைவை இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டின்  எந்தப் படைப்பும் தரமுடியும் என்று தோன்றவில்லை.

காகம் கரைதல் கேளீரோ?

கதவைச் சற்றே திறவீரோ?

ஆகஇரண்டு கணப்பொழுதுக்கு

அப்பால் இங்கே தங்கோமோ.

தேகம் அலுத்துச் செல்வோமோ.

சென்றால் மீண்டும் வாரோமோ.

வாகின் அமைந்த சாலைஇதன்

வாயில் காக்கும் காவலரே.

 

கவிமணியின் எளிமையும் சந்தமும் குழந்தைமையும்  கண்ணைக் குளமாக்குகின்றன. மினிமலிசம், டீகன்ற்ஸ்டர்க்ஷன், ரீடர்லி டெக்ஸ்ட், ரைட்டர்லி டெக்ஸ்ட் –   போங்கப்பா.

எத்தனை பெரியவர்கள் நம்மிடையே உலவிப் போயிருக்கிறார்கள். நாம் அவர்களைக் காலம் கடந்தாவது புரிந்து கொண்டு மதிக்கிறோமா?

இன்னும் ஒரே ஒரு பாட்டு. ஆம், பாட்டுத்தான். கீர்த்தனை. கவிமணி எழுதியது.

கதிரைக் காண்பதெப்போ?

இராகம் நாதநாமக்ரிய – தாளம் திச்ர ஏகம்

பல்லவி

களை பறிப்ப தெப்போ? – கண்ணில்

கதிரைக் காண்ப தெப்போ?

அநுபல்லவி

விளைநில முழுதும் – அடர்ந்து

மீறிமே லோங்கும்       (களைபறிப்ப)

சரணம்

உள்ள உரத்தையெல்லாம் – ஊரை

உறிஞ்சு கின்றதையோ!

கொள்ள உணவின்றிப் – பயிரும்

குறுகிப் போகுதையோ!

குறுகும் பயிரினைக் – காணில்

கும்பி எரியுதையோ!

அறு கணிந்தவனே! – சிவனே!

ஆதி பராபரனே!     (களைபறிப்ப)

(சக்கர பொங்கல் ஹோட்டலை வடக்கு உஸ்மான் வீதியில் தேட வேண்டாம். அது இழுத்து மூடப்பட்டு ஏகப்பட்ட காலம் ஆகிறது)

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 26, 2022 19:30

July 25, 2022

இடாகினி பேயும் இதர பேய்களும்

 

இடாகினிப் பேய்

 

இது பகுதியாக முன்னர் வெளியானது. அஃது படியா நின்றோர், கூறியது கூறற்றுயர் நீங்கவே தொடக்கத்தில் சில பத்திகள் கடந்து தொடர வேண்டுகிறேன்.

‘இடாகினிப் பேய்களும்..’ என்ற பெயரில் என் (அண்மையில் காலம் சென்ற) நண்பர் கோபிகிருஷ்ணன் எழுதிய கதைத்தொகுப்பு பற்றிப் படித்தபோது எனக்கு இந்த இடாகினிப் பேயை எங்கேயோ பார்த்த நினைவு.

சிலப்பதிகாரத்தைப் புரட்டிக் கொண்டிருந்தபோது அது வசமாகப் பிடிபட்டது.

மாலதி என்ற பார்ப்பனி, மாற்றாள் மகவுக்குப் பால் தரும்போது பால் விக்கி, அந்தக் குழந்தை மரித்தது.  அது கண்டு துயருற்ற அவள் எல்லாக் கடவுள் கோவில்களிலும் ஏறி இறங்கி, குழந்தையை உயிர்ப்பிக்கு படி வேண்டுகிறாள்.

அவள் பாசாண்டச் சாத்தன் கோவிலுக்கு வரும்போது அங்கே இருந்த இடாகினிப் பேய் – இது சக்ரவாளக் கோட்டத்து இடுகாட்டில் பிணங்களை உண்ணுவது  – ஒரு பெண் வடிவில் அங்கே வருகிறது. அதுவும், பிறரை எப்போதும் குற்றம் சொல்லும் பெண்ணாக.

மாலதியிடம் ‘நீ தவம் செய்திருக்காவிட்டால் உனக்குத் தெய்வம் வரம் கொடுக்காது’ என்று சொல்லி, அவள் கையில் வைத்திருந்த மகவை எடுத்துப் போய் இருட்டில் வைத்து உண்டு விடுகிறது.

பாசாண்டச் சாத்தன் அந்த மகவாகப் பிறப்பதாகக் கதை நீளுகிறது.

சிலம்பின் ‘கனாத்திறம் உரைத்த காதை’யில் வரும் நிகழ்வு இது.

‘ஐம்பெருங்காப்பியங்களில் இயற்கையிறந்த கூறுகள்’ என்ற பெயரில் முனைவர் மகரிபா எழுதிய புத்தகத்தைப் படிக்க எடுத்ததும் இந்த இடாகினிப் பேய் தூண்டித்தான்.

சிலம்பிலும், மணிமேகலையிலும் காவியச் சுவைக்காகவும், முற்குறிப்பு, பின்னோக்கு உத்தி சார்ந்தும், இன்றைய மாந்திரீக யதார்த்தத்தின் பண்டைத் தமிழ் வெளிப்பாடாகவும் எத்தனையோ தெய்வங்களும், பூதங்களும், வானவர்களும் மனிதர்களோடு ஊடாடிப் போகிறார்கள் –  கந்திற்பாவை, நாளங்காடிப் பூதம், சதுக்க பூதம், இடாகினிப் பேய், எரியங்கி வானவன், குரங்குக்கை வானவன், காயசண்டிகை போன்றவர்கள் இவர்கள்.

இந்திரன், பாசாண்டச் சாத்தன், மதுராபதி தெய்வம், மணிமேகலா தெய்வம், தீவதிலகை, சம்பாபதித் தெய்வம் போன்ற தெய்வங்கள் அங்கங்கே தட்டுப்படுகின்றன.

இந்திரனையும், பாசாண்டச் சாத்தனையும் தவிரக் காப்பியங்களில் வரும் தெய்வங்கள் எல்லாம் பெண்களே. இது ஏனென்று யாராவது ஆராயலாம்.

‘சம்பாபதித் தெய்வம் முதியோள், மூதாட்டி என்றெல்லாம் குறிப்பிடப் படுகிறது. தெய்வங்களுக்கு முதுமையுண்டா என்பது தெரியவில்லை’ என்பது போல், தன்னால் அறுதியிட்டு நிறுவ முடியாததை எல்லாம் தெரியவில்லை என்று அடக்கமாகச் சொல்லும் மகரிபா போன்ற முனைவர்கள் அரிதாகவே கண்ணில் படுகிறார்கள். (மகரிபா குறிப்பிட்ட சம்பாபதி, ‘மன்ற அராஅத்த பேஎம் முதிர் கடவுள்’ என்று சங்க இலக்கியத்தில் வருகிற வயசான கடவுளை எனக்கு நினைவுபடுத்துகிறது.)

கண்ணகி மதுரையை எரியூட்டுவதை விவரிக்கும்  மதுரைக் காண்டம் – அழற்படு காதையில் அரச பூதம், அந்தண பூதம், வணிக பூதம், வேளாண் பூதம் என்ற நான்கு பூதங்கள் நகர் நீங்குவதாகக் குறிப்பிடப்படுவது இடைச் செருகல் என்கிறார் மகரிபா.  இப்பகுதிகள் ‘கந்தியார் போலும் ஒருவரால் பாடி இடைமடுக்கப் பட்டன’ என்கிறார் ந.மு.வெங்கடசாமி நாட்டாரும், தம் சிலப்பதிகார உரையில் (கழகப் பதிப்பு).

பாசாண்டச் சாத்தனைப் பற்றிச் சொல்லும்போது முனைவர் குறிப்பிடுவது –

“(சாத்தன்) சாதாரண மானுடன் போன்றே ஒரு குடும்பத்தில் மகனாக வளர்கிறான். திருமண உறவிலும் ஈடுபடுகிறான்.  எட்டாண்டு வாழ்க்கை நடத்துகிறான். அதன் பின் அந்த வாழ்க்கையைத் துண்டித்துக் கொண்டு கோயில் கொண்டாலும், அந்தக் கோயிலுக்கு தேவந்தியை (மனைவி) வரச்சொல்லி அவளோடு கொண்ட தொடர்பைத் தொடர்கிறான்.”

‘கோட்டத்து நீ வா எனவுரைத்து நீங்குதலும்’ என்ற அடியைத் தனியே பார்க்காமல், பின்னால் வரும்

‘ஆர்த்த கணவன் அகன்றனன் போயெங்கும்

தீர்த்தத் துறைபடிவே னென்றவளைப் பேர்த்திங்ஙன்

மீட்டுத் தருவா யெனவொன்றன் மேலிட்டுக்

கோட்டம் வழிபாடு கொண்டிருப்பாள்’

என்பதோடு சேர்த்துப் பார்த்தால் தேவந்தி மணவாழ்க்கையைத் தொடரக் கோவிலுக்குப் போகவில்லை என்பது புலனாகும்.

(‘ஐம்பெரும் காப்பியங்களில் இயற்கையிறந்த கூறுகள்’ – முனைவர் எஸ்.கே.எம்.மகரிபா – வெளியீடு : முப்புள்ளிப் பதிப்பகம், 24, கிரிநகர், இராமாபுரம், சென்னை 600 089).

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 25, 2022 19:52

July 24, 2022

தகழி எழுதாத ஆத்ம கதா – சுஜாதா எழுதிய புதுக் கட்டுரை

தகழியின் ஆத்மகதை

தகழியின் ‘ஆத்மகத’ படிக்கக் கிடைத்தது. சொல்லப் போனால் தகழி இப்படி ஒரு புத்தகத்தை எழுதவே இல்லை. ‘பால்யகாலம்’, ‘வக்கீல் ஜீவிதம்’, ஓர்மயுடெ தீரங்ஙளில்’ என்ற அவருடைய மூன்று வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரைத் தொகுப்புகளை ஒட்டு மொத்தமாக ஆத்மகதையாக்கி இருக்கிறார்கள். 1959 வரையான தன் வாழ்க்கைச் சரிதத்தைக் கால வரிசை மீறிய கட்டுரைகளாக அதுவும் பத்திரிகைத் தொடர்களாக எழுதியிருக்கிறார் தகழி. வாழ்ந்த காலத்திலேயே சர்வதேச அளவில் மிகப் பிரபலமான எழுத்துக்காரனாக ஆனதால் கடைசி நாற்பது வருடங்கள் திறந்த புத்தகமாகி இருக்குமோ என்னமோ.  என்றாலும் ஆத்மகதையில் சொல்லப்பட்ட பாதி வாழ்க்கையே அலாதி சுவை.

நூறு வருடத்துக்கு முந்திய அம்பலப்புழை பகுதி எப்படி எல்லாம் இருந்தது என்று கற்பனை செய்தேனோ அப்படியே, அதற்கு மேல் அழகாக தகழியின் எழுத்தில் விரிகிறது. முக்கியமாகப் பசுமை மணக்கிற தகழி கிராமம். இப்போது இருப்பதை விட இன்னும் பசுமையாக, இன்னும் மழை பெய்து கொண்டு, ஓலைக் குடையைச் ‘சூடி’க்கொண்டு, கொதும்பு வள்ளத்திலும் வஞ்சியிலும் பயணம் செய்து கொண்டு.

அம்பலப்புழை பள்ளிக்கூடத்துக்கு மதிய உணவாகச் சோறு அடைத்த தூக்குச் சட்டியோடு நடந்து தனியான ஒரு இடத்தில் அதை வைத்து விட்டுப் பிள்ளைகள் பாடம் படிக்க உட்கார்ந்த மழைக்காலம் அது. மதியம் சாப்பிட எடுத்த பாத்திரங்களில் சோறை மறைத்து அடை அடையாக ஊரும் எறும்புகள். மேலோட்டமாக அப்படியே வழித்து எறிந்து விட்டு மீந்ததை அவர்கள் சாப்பிட உட்கார்கிறார்கள்.  பள்ளிப் பிள்ளைகள் ஜன்னல் வழியே வீசி எறிந்த எறும்புச் சோற்றுக்காக வெளியே இன்னும் சில குழந்தைகள் காத்து நிற்கின்றன. கையில் வாங்கி வாயில் எறும்பு கடிக்கக் கடிக்கத் திணித்துக் கொண்டு மெல்லுகின்றன. கடல்புரம் செம்படவர்களின் குழந்தைகள் அவை. மழைக்காலத்தில் கடலில் மீன் பிடிக்க முடியாமல் கரையில் பட்டினி கிடக்கும் குடும்பங்களைச் சேர்ந்தவை.

தகழியில் 1920களில் புதிதாக முளைத்த ஒரு கடையை ஊரே முன் நின்று எதிர்த்து அடைக்க வைத்த கதையைச் சொல்கிறார் தகழி. இது கள்ளுக்கடை இல்லை. கள்ளுக்கடை எந்தக் காலத்திலும் கேரளத்தில் அடைக்கப்பட்டதாக  நினைவு இல்லை. தகழி கிராமத்தில் தோன்றி மறைந்தது வெறும் தோசைக் கடை. தோசை சாப்பிட வீட்டில் காசு திருடிக் கொண்டு வருகிற பிள்ளைகள் காரணமாக ஊரில் சிறு திருட்டு அதிகரித்ததால் கடையை இழுத்துப் பூட்ட  வைத்திருக்கிறார்கள்.

‘அரையணாவில் நாலில் ஒரு பாகத்துக்குக் கொஞ்சம் கூடுதலான’ அந்தக் கால நாலு காசுக்கு ஒரு தோசை, ஒரு குவளை சுக்கு மல்லிக் காப்பி’ என்று கணக்குச் சொல்கிறார் தகழி. அவர் கட்டுரை எழுதிய காலத்துக்கு அப்புறம் அரையணாவும் காலமாகி விட்டது. அம்பலப்புழையும், கட(ல்)புரமும், முக்குவர்களும், கடலும் கூட மாறியாகி விட்டது.

வாட்ஸ் அப்பில் நாலைந்து பேர் ‘சுஜாதா மாயவரம் காளியாகுடி ஓட்டலைப் பற்றி எழுதியது’ என்று நீளமான ஒரு கட்டுரையை அனுப்பியிருக்கிறார்கள். வரவர சுஜாதா புதியதாக நிறைய எழுத ஆரம்பித்து விட்டார்…

 

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 24, 2022 19:57

இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.